கருத்தியல் களமும், அரசியல் அதிகாரமும்

(தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய பயிற்சிமுகாமில் ஆற்றிய உரையின் வரிவடிவம். நன்றி: அணையா வெண்மணி)

என்.குணசேகரன்

கருத்தியல் களமும் அரசியல் அதிகாரமும் என்கிற இந்தத் தலைப்பு மிக முக்கியமான தலைப்பு. இது நாம் ஆற்றவேண்டிய மிக முக்கியமான பணிகளை நினைவூட்டுவதாக கருதுகிறேன். கருத்தியல் களத்திற்கும் அரசியல் அதிகாரத்திற்கும் ஒரு இணைப்பு உள்ளது என்பதை சொல்லுவதே ஒரு முக்கியமான விஷயம் என்பது மட்டுமல்ல காலம் காலமாக மறைத்துவைக்கப்பட்டிருக்கிற அல்லது மறக்கப்பட்டிருக்கிற செய்தியை இந்தத் தலைப்பு தெரியப்படுத்துகிறது.

சிறிய கூட்டத்தின் ஆட்சி

அரசியல் அதிகாரம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக சமூகத்தின் ஒரு மேல்தட்டு, ஒரு சிறு கூட்டத்துக்குத்தான் சொந்தமாக இருந்திருக்கிறது. அதிகாரம், ஆட்சி, நிர்வாகம் என்கிற இவையெல்லாம் செழுமைப்படுத்தப்பட்டிருக்கிற ஒரு மேம்பட்ட வடிவத்தை பெற்றுள்ள இப்போதைய சமூகம் முதற்கொண்டு, இதற்கு முந்தைய காலங்களிலே மன்னர்களுடைய அரசாட்சி என்கிற முறையில் முடியாட்சி நடைபெற்ற காலம் வரைக்கும், ஆட்சி அதிகாரம் என்பது பெரும்பான்மையான மக்களை ஆள்கிற இடத்தில் ஒரு சிறு கூட்டம் தான் இருந்துவந்திருக்கிறது. உடமை வர்க்கங்கள் என்று சொல்லப்படுகிற ஒரு சிறு கூட்டம் தான் ஆளுகிற இடத்தில் இருந்திருக்கிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள் நிலவுடைமைச் சக்திகளாக இருந்திருக்கலாம். அதற்கு முன், சாதியக் கட்டமைப்பு இந்திய சமூகத்தில் வேறூன்றத் தொடங்கிய காலத்தில், கிட்டத்தட்ட அடிமைகள் எஜமானர்கள் என்று இருந்த காலத்திலேயே கூட நிர்வாகம் என ஒரு அமைப்பு இருந்திருக்கிறது. ஓரளவுக்கு அரசு என்ற வடிவம் தோன்றியிருக்கிறது. அப்படிப்பட்ட காலத்திலும் ஒரு சிறு கூட்டம்தான் பெரும்பான்மையினரை அடிமைப்படுத்தியிருந்தது.

ஆனால், சாதாரண மக்களுக்கு இது வெளிப்படையாக தெரியவில்லை. உலகில் கிட்டத்தட்ட 800 கோடி மக்கள் வாழ்கிறார்கள், இதில் 99 % உழைக்கும் மக்கள் ஆவர். இந்த மக்களின் உழைப்பைச் சுரண்டி வாழ்ந்து கொண்டிருக்கிற கூட்டம், ஒப்பீட்டளவில் மிக மிகச் சிரியது. அமெரிக்காவில் வால்ஸ்டீரீட்டைக் கைப்பற்றுவோம் என்ற ஒரு இயக்கம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. நாங்கள் 99 சதவீதம், நீங்கள் 1 சதவீதம் என்று அவர்கள் முன்வைத்த முழக்கத்திலேயே ஒரு செய்தியை முன்வைத்தார்கள். 1% என்பதுதான் ஆளுகின்ற கூட்டம்.

இப்படி காலம் காலமாக ஒரு சிறு கூட்டம் தான் பெரும்பான்மையை அடக்கி ஒடுக்கி வந்திருக்கிறது.

அதிகாரம் செலுத்தும் வழிமுறை

இந்திய நாட்டை எடுத்துக்கொண்டால், மக்கள் தொகை 130 கோடி. இதில் ஒரு சிறு கூட்டம், ஒரு 250 கம்பெனிகள் இருக்கலாம் (அதில் 10 லிருந்து 12 கம்பெனிகள் அதானி அம்பானி போன்ற பெரும் கார்ப்ரேட் கம்பெனிகள்) இப்படிப்பட்ட ஒரு சிறு கூட்டம், மிகப் பெரும்பான்மையை அடக்கி ஆள்கிறது, நினைத்தை சாதிக்கிறது. கொரோனா பெருந்தொற்றின் காலத்திலும் சாதித்துக்கொண்டிருக்கிறது. அது எப்படி நடக்கிறது?

காலம்காலமாக இது எப்படி சாத்தியமாகிறது என்றால், அடக்குமுறைக்கான, வெகுமக்களை அடக்கி ஆள்வதற்கான இரண்டு கருவிகள் அவர்களுக்கு பயன்பட்டு வந்திருக்கிறது. ஒன்று, நேரடிடையாக அடக்குமுறையை ஏவிவிடக்கூடிய கருவிகள் அவர்களிடம் உள்ளன. ஒரு வலுவான காவல்துறை, ஒரு வலுவான இராணுவம் உள்ளது.  

மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைந்துகொண்டேயிருக்கிறது. அதே நேரத்தில், அடக்குமுறைக் கருவிகளைப் பலப்படுத்துவதற்கான நிதி உள்ளிட்ட எல்லாவிதமான ஏற்பாடுகளையும் அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். இது இந்திய நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கிற விஷயம்.

உழைக்கும் மக்கள் மீது, இராணுவத்தை ஏவிவிட்டு படுகொலை செய்வது காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. 1940களில் தெலுங்கானாவில் விவாசிகள் தங்கள் நிலத்துக்காக செங்கொடி ஏந்திப் போராடியபோது, அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக இந்திய இராணுவம், (அப்போது தான் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்திருந்தது) பயன்படுத்தப்பட்டது. மக்களை அழித்தொழித்தது. பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள். எனவே அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை இராணுவம் காவல்துறை உள்ளிட்டவை உழைக்கும் மக்களின் போராட்டங்களை நேரிடையாக ஒடுக்குவதற்கும் தாக்குவதற்கும் இருந்துகொண்டிருக்கிறது. சிறைகூட அதற்காகத்தான் இருந்துகொண்டிருக்கிறது.

ஆனால் இதைவிட பலமான அடக்குமுறைக் கருவி அவர்களிடம் இருக்கிறது. அதன் வழியாக உழைக்கும் மக்களுடைய ஆதரவான கருத்தைப் பெற்றே அவர்களை அடக்கிஒடுக்குகிறார்கள்.

கருத்தியல் எனும் தளம்

கருத்தியல் தளத்தில், ஆளும் வர்க்கங்களுக்கு, ஆள்வதற்கான ஒப்புதலை உருவாக்குகிறார்கள். மன்னர் தெய்வத்தின் அடையாளம் (இங்கிலாந்தில் ஒருகாலத்தில் இந்தக் கருத்து வலுவாக இருந்தது) அதாவது மன்னருக்கும் தெய்வத்துக்கும் வித்தியாசம் இல்லை என்கிற கருத்து. எனவே, தன்னை அடக்கி ஒடுக்குபவரை மன்னருக்கு சமமாக வைத்துப் பார்க்கிற அந்தக் கருத்து, அது மதத்தின் பெயரால் பதியவைக்கப்பட்டது. இந்தியாவைப் பொருத்தவரை கருத்தியல் என்கிற கோட்டையை ஆளும் வர்க்கம் பலமாகக் கட்டுவதற்கு, ஒரு அடித்தளமாக சாதியக் கட்டமைப்பு என்பது பயன்பட்டிருக்கிறது, பயன்பட்டுவருகிறது.

அதாவது கருத்தியல் தளம் என்பது அடக்கி ஒடுக்கப்படுகிற மக்கள் தன்னை அடக்கி ஒடுக்குகிற கூட்டத்துக்கு எதிராகத் திரும்பிடாமல் பார்த்துக்கொள்கிறது. அவர்கள் எல்லாவிதமான உழைப்பையும் சுரண்டி ஊதியத்தைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள், உழைப்புக்கான ஊதியம் கிடைப்பதில்லை. ஆனாலும் அவர்களுக்கு எதிராக உழைக்கும் மக்கள் திரும்பிடாமல் இருப்பதற்கு எதிர்ப்புக் களத்துக்கு போகாமல் இருப்பதற்கு கருத்தியல் தளம் பயன்படுத்தப்படுகிறது.  

அது கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் நடக்கிறது. இவையெல்லாம் நேரடியாகத் தெரியக்கூடியவை. இன்னொரு பக்கம் அது கல்வியின் பெயரால் நடக்கிறது. ஊருக்கு ஊர் இருக்கக்கூடிய பேச்சு வழக்குகளின் ஊடாக அது நடக்கிறது. இந்த ஆளும் வர்க்கத்துக்கும் அதனால் ஆளப்படுகிற, சுரண்டப்படுகிற வர்க்கத்துக்குமான முரண்பாட்டை, வேறுபாடுகளை மட்டுப்படுத்துவதற்கு, அது வெடித்திடாமல் தடுப்பதற்கு இந்தக் கருத்தியல் களம் ஆளும் வர்க்கத்துக்கு பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தக் கருத்தியல் களமும் அரசியல் அதிகாரமும் பிணைந்த ஒன்று.

கருத்தியல் களத்தில் நாம் செயல்படுகிற போது தீண்டாமை ஒழிப்பு முன்னணி இப்படிப்பட்ட பணியைத் துவங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சிகரமான ஒன்று. இப்போதுதான் ஏதோ கருத்தியல் களத்தில் பணியாற்றுவதாக நான் நினைக்கவில்லை. நீண்டகாலமாக அந்தப் பணி நடந்துகொண்டிருக்கிறது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையிடுகிற எல்லா இடங்களிலேயும் செயல்கள் மூலமாக, தலையீடுகள் மூலமாக அந்தக் குறிப்பிட்ட கிராமத்துக்கு அந்தக் குறிப்பிட்ட பகுதிக்கு ஒரு செய்தியை, ஒரு கருத்தைப் பதியவைக்கிற வேலையும் கூடவே நடந்துகொண்டிருக்கிறது. ஒரு தீண்டாமைக் கொடுமைக்கு எதிர்த்து  வினையாற்றும்போதே கருத்தியல் தளத்திலும் அது வினையாற்றுகிறது. தீண்டாமை ஒழிப்பு என்கிறபோது சாதி ஒழிப்பு என்கிற கருத்தும் பதிகிறது. சாதி ஒழிப்பு என்றால் சாதிக் கட்டமைப்புக்கான எதிர்ப்புக் குரலாக ஆகும். இவ்வாறு அது சமூக சமத்துவம் என்கிற கருத்தியலுக்கான தளத்தினை உருவாக்குகிறது.

சுரண்டலுக்கான கருத்தியல்

இன்று கருத்தியல் களத்தை தன்கைவசம் வைத்துக்கொண்டு ஆளுகிற வர்க்கம், தன்னுடைய அதிகாரத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது. பெருமபான்மையான மக்கள் மீது தன்னுடைய அதிகாரத்தை அடக்குமுறைக் கருவிகளைவைத்து மட்டுமல்ல, கருத்தியல் என்ற களத்தையும் வைத்துக்கொண்டு அடக்குமுறையையும் சுரண்டலையும் அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை செயல்பாட்டாளர்களாகிய நாம் உணரவேண்டியிருக்கிறது. எனவே, கருத்தியல் களம் என்பது மிக முக்கியமானது. இது ஒரு பொதுவான அறிவியல் கோட்பாடு என்றே நாம் சொல்லமுடியும். யார் இதைக் கையில் எடுக்கிறார்களோ, யார் இதை சரியாகப் பயன்படுத்துகிறார்களோ அவர்கள் அதில் முன்னேற்றம் காண்கிறார்கள். அந்த வகையில் கடந்த காலங்களில் இதற்கு பல உதாரணங்களைப் பார்க்கலாம்.

உலக முதலாளித்துவம் ஏற்கனவே இதை உணர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் 1970களிலேயே இதை உணர்ந்திருக்கிறது. அதனால்தான் அவர்கள் தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் போன்றிருக்கக்கூடிய ஊடகங்கள் அத்தனையும் கொண்டு, எந்தச் செய்தியை மக்களிடத்தில் கொண்டு செல்லவேண்டும், எப்படிக் கொண்டு செல்லவேண்டும் என்று வரையறுத்திருக்கிறார்கள். சோவியத் யூனியன் பற்றிய பொய்களை, உண்மை போன்று சொல்லி, சோசலிசமும் கம்யூனிசமும் மோசமானது என்கிற செய்தியை அவர்கள் கொடுப்பது என்கிற முறையில் 1970களிலேயே பக்குவப்பட்டு வந்திருக்கிறார்கள்.

அதே போன்று சின்னங்களைப் பயன்படுத்துவது. சின்னங்களைப் பயன்படுத்துவது என்றால், இந்தியாவிலேயும் தமிழ்நாட்டிலேயும் அதற்கு நிபுணர்கள் பலர் இருக்கிறார்கள். மோடி பெரிய நிபுணர். அவர் அவருடைய படங்களை எல்லா இடத்திலும் வைத்திருப்பது போன்றவை இதில் அடங்கும். இதெல்லாம் ஹிட்லர் காலத்திலேயே நடந்திருக்கிறது.   கருத்தியல் தளத்தில் ‘அவர் ஒரு பிரம்மாண்டமான மனிதர்’, ‘சரித்திரத்தை மாற்ற வந்த மகா புருஷர்’ என்கிற முறையில் சாதாரண மக்கள் மத்தியில் பதியவைப்பது. இப்படிச் சின்னங்கள் மூலமாக தங்களுடைய மேலாதிக்கத்தை பதியவைப்பது என்கிற முறையிலும் ஆளுகிற வர்க்கம் கருத்தியல் மேலாதிக்கத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு சமூக ஊடகங்கள் போன்றவை அதற்கு பயன்படுகின்றன.

பாரதிய ஜனதா கட்சியும் ஆர்எஸ்எஸ்சும் பிரம்மாண்டமாக ஐ.டி., செல் (தகவல் தொழில்நுட்பம் பிரிவு) வைத்துக்கொண்டு செய்யும் வேலைகளைஎல்லாம் நாம் அறிவோம். முதலாளித்துவமும் உலக ஏகாதிபத்தியமும் இதை செய்துகொண்டிருக்கிறது. கருத்தியல் களம் என்பது அவர்கள் மேலாதிக்கம் செய்து கொண்டிருக்கிற ஒரு முக்கயமான தளமாக இருந்துகொண்டிருக்கிறது.

மேலாண்மையும், மேலாதிக்கமும்

இப்போது நம்முடைய நோக்கம் என்பது காலம் காலமாக இருந்துகொண்டிருக்கிற பிற்போக்குக் கருத்தியலுக்கு மாறாக முற்போக்குக் கருத்தியலைக் கொண்டு செல்வது என்பதுதான். முற்போக்குக் கருத்தியலைக் கொண்டு செல்வது என்பதற்கு பதில் நான் ஒரு சின்ன மாற்றத்தை, (உண்மையில் அது பெரிய மாற்றம்) சொல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. முற்போக்குக் கருத்தியல் மேலாண்மை செலுத்துகிற ஒரு நிலையை உருவாக்க வேண்டும்.  நீங்கள் கொஞ்சம் சரியாகக் கவனித்தீர்கள் என்று சொன்னால், ஆளுகிற வர்க்கம் கருத்தியல் தளத்தில் செலுத்துகிற அந்த அடக்குமுறையை நான் மேலாதிக்கம் என்று சொல்கிறேன். அவர்கள் மேலாதிக்கம் செலுத்துகிறார்கள். தவறான விஷயங்களுக்கு மக்களை ஆட்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மக்களை தவறான, மிகப் பொய்யான, கட்டுக் கதைகளை நம்ப வைக்கிறார்கள். இந்தக் கட்டுக் கதைகள் பொய்கள் எல்லாமே அவர்கள் கருத்தியல் தளத்தில், மேலாதிக்கம் செய்ய உதவுகிற மிக முக்கியமான விஷயங்கள். எனவே, ஆளுகிற வர்க்கம், ஒரு சிறு கூட்டம், பெருங்கூட்டத்தை தங்களுடைய கருத்துக்கு, தங்களுடைய கொள்கைக்கு தங்களுடைய அடக்குமுறைக்கு ஆதரவாக அவர்களுடைய சம்மதத்தைப் பெறுவதற்கும் அவர்களைத் தங்களுடைய கொள்கைக்குக் கொண்டுவருவதற்கும் செய்வது மேலாதிக்கம். அவர்கள் செய்வது கருத்தியல் மேலாதிக்கம். சிறு கூட்டம் கருத்தியல் தளத்தில் பெரும்பான்மை மக்களை தன்வயப்படுத்துகிறது என்று சொன்னால் அது மேலாதிக்கம்.

காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கிற பெரும்பான்மை மக்களுக்காக, சுரண்டப்பட்டிருக்கிற பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்காக கருத்தியல் தளத்தில், முற்போக்குக் கருத்தியலைக் கொண்டு சென்று, அதில் மேலாண்மை செலுத்தவேண்டும் என்பதுதான் இன்றைக்கு நம் முன்னர் இருக்கக்கூடிய பணி. உழைக்கும் மக்களின் தரப்பு பெரும்பான்மை என்கிற காரணத்தால் அதை மேலாண்மை என்று சொல்கிறோம். இது சரியான காரணத்துக்காக, சரியான லட்சியத்துக்காக, மனித விடுதலைக்கான மேலாண்மை.

3 தளங்களில் போராட்டம்

இந்த வகையில் நம்முடைய பணி என்பது சாதியம், மதவாதம் இதையெல்லாம் எதிர்க்கிற எதிர்ப்புப் பணி மட்டும் அல்ல. அதே நேரத்தில் இது எதிர்மறை நிகழ்ச்சி நிரல் அல்ல, இது நேர்மறையான நிகழ்ச்சி நிரல்.

மூன்று தளங்களில் இதை செய்யவேண்டும் என்று நான் கருதுகிறேன். ஒன்று, இந்த சாதியம் என்கிற ஒரு மிக முக்கியமான பிற்போக்குக் கருத்தியல் தளம், அதில் செயலாற்றவேண்டிய அவசியம் இருக்கிறது. அதை முறியடிக்க வேண்டிய அவசியம இருக்கிறது. அதேபோன்று மதவாதம். வகுப்புவாதம் என்றும் மதவெறி என்றும் வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிப்பொருள் இருக்கிறது என்று சொன்னாலும் கூட, இன்றைக்கு நாம் விவாதிக்கிற சூழலில், மதவாதம் என்றே வைத்துக்கொள்ளலாம். அந்த மதவாத அல்லது வகுப்புவாதக் கருத்தியல் முறியடிக்க வேண்டிய ஒரு இடத்தில் இருக்கிறது. 

மூன்றாவது, நவீன தாராளமய கருத்தியல். இந்த நவீன தாராளமயம் என்று சொல்லும்போது உடனடியாக நம்முடைய மனத்திரைக்கு முன் வருவது என்பது பொருளாதாரம் பற்றியது. நிச்சயமாக நவீன தாராளமயம் என்பது பொருளாதாரத்தோடு இணைந்தது தான். உயிர் காக்கும் மருந்து என்கிற விஷயத்தில் கூட, லாபம், மூலதனக்குவியல் என்பதற்காக அது எந்த வகையில் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்கிற கொள்கைகள் அடங்கியிருக்கிற ஒரு விஷயம்தான் நவீன தாராளமயம் என்பது.

நவீன தாராளமய கருத்தியல்

அதே சமயம் நவீன தாராளமயம் ஒரு கருத்தியலோடு தான் வந்தது. தனியார் மயம் என்ற கருத்து மக்கள் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒரு விஷயமாக இருந்த நிலை இருந்தது. குறிப்பாக 1960களில் 70 வரைக்கும் கூட தனியாரிடம் ஒப்படைத்தால் அவர்கள் லாபம் பார்ப்பார்கள், மக்களைப் பார்க்கமாட்டார்கள் என்கிற நிலை இருந்தது. அதனால் தான் தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் அதிகமான அளவுக்கு பொது முதலீட்டில் சுகாதார நிலையங்கள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. போக்குவரத்து உட்பட எல்லாமே அரசுத் துறையில் செயல்படுகிற ஒரு நிலை என்பது இருந்தது. இது இந்தியா முழுக்க இருந்தது. இதற்கு பல காரணங்கள் உண்டு.

1950 காலகட்டத்தில் சோவியத் யூனியனில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அங்கே ஏற்பட்டிருக்கிறக்கூடிய வளர்ச்சி, அது பொதுத் துறை மூலமாக ஏற்பட்டிருக்கிற ஒரு வளர்ச்சி இங்கே சாத்தியம் என்ற நிலையை உருவாக்கியது. அதனுடைய விளைவாகவும் இந்தக் கருத்து என்பது மக்கள் மத்தியில் நிலவியது. ஆனாலும் ஆளுகிற வர்க்கம் தனியார் துறையை விட்டுவிடவில்லை. அதை வளர்ப்பதற்கான முயற்சிகளை திரைமறைவிலும் சிலநேரங்களில் வெளிப்படையாக வெகுவேகமாக செய்து கொண்டிருந்தார்கள். அதே சமயம், இந்த நேரத்தில் தான் பொதுத் துறையையும் கட்டமைக்கிற வேலை நடந்தது. நவீன தாராளமயம் வருகிறபோது அரசுத் தரப்பிலிருந்தே ஒரு கருத்தை அவர்கள் பதியவைத்துக்கொண்டேயிருந்தார்கள். பொதுத்துறையிடம் இருந்தால் என்றால் அங்கே ஒரு மெத்தனப்போக்கு இருக்கும், நிர்வாகத் திறன் இருக்காது, ஊழல் நிறைந்திருக்கும் என்பதை எல்லாம் சொல்லி பொதுத் துறை என்பது சரியல்ல, தனியார் துறை தான் வெகுவேகமாக செயல்படுவார்கள் என்ற ஒரு கருத்து தொடர்ந்து பதியவைக்கப்பட்டது.

இவ்வாறு கருத்தியல் தளத்தில் செயல்பட்டுக்கொண்டேதான் பொருளாதாரத் தளத்தில் நகர்ந்தார்கள். அதே போல தனிமனித உணர்வில் நவீன தாராளமயம் ஒரு கருத்தை முன்வைத்தது. அதாவது விடுதலைப்போராட்டக் காலத்தில், இளைஞர்களுக்கு சமுதாயத்துக்காக ஏதாவது செய்யவேண்டும் என்கிற சமூக அக்கறை இருந்தது. அது விடுதலைக்கு பிறகும் தொடர்ந்தது. ஒரு மனிதன் என்று பிறந்தால், சமூகத்துக்கு என்ன செய்தான் என்பதுதான் முக்கியமானது. எனவே, தன்னுடைய நலத்தைத் தாண்டி பொதுநலத்தைப் பார்க்கிற அந்த மனப்பாங்கு இருந்தது. 

தனியார்மயம் வரவேண்டும், தனியார் கொள்ளையடிக்க வேண்டும் என்றால், தனியாருக்கு ஒரு மதிப்பு ஏற்படுத்தவேண்டும் என்றால், மேற்சொன்ன தனிமனித உணர்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நீ பணக்காரனாக வேண்டும், நீ மேலும் மேலும் பணம் சேர்க்க வேண்டும், நீ கோடிஸ்வரனாக மாறவேண்டும். அது உன்னுடைய திறமை. நீ திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும், அதற்கேற்ற தொழில்நுட்பம், அதற்கேற்ற படிப்பு, அதற்கேற்ற முயற்சி, விடாமுயற்சி, பில்கேட்சைப் பார், அவரைப் பார், இவரைப் பார் என்று அது பற்றிய நூல்கள் என்ற முறையில் ஒரு தனிமனித சுயநலத்தை வலுப்படுத்துகிற கருத்தியல் என்பது பதியப்பட்டது. அந்தக் கருத்தியலைப் பதியவைத்துத் தான் ஆளும் வர்க்கம் நவீன தாராளமயத்தை கொண்டுபோனார்கள்.

முதலாளித்துவமும் சாதியும்

இந்த நவீன தாராளமயம் பல தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஆணாதிக்க கருத்தியலை அது வலுப்படுத்தியிருக்கிறது.  ஆதிக்கக் கருத்தியலை மேலும் கிளர்ந்து எழச் செய்ததில் முக்கிய காரணியாக நவீன தாராளமயக் கொள்கைகள் இருந்தன. பிற்போக்கான கருத்தியல் என்பதில் ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகிறது சாதியக் கருத்தியலும் மதவாதக் கருத்தியலும் அதே போல நவீன தாராளமயக் கருத்தியல். இதற்குள் எல்லா விஷயங்களையும் அடக்கிவிடலாம். பெண்ணடிமைத்தனம் இதற்குள்ளேயே வருகிறது. சாதியம் என்று சொல்லுகிறபோது, சாதியம் என்கிற சித்தாந்தம் என்பது பெண்ணடிமைத்தனத்தை உள்ளடக்கியதுதான். முதலாளித்துவ சமூக அமைப்பில்கூட சாதியம் தன்னை புதுவடிவம் எடுத்து நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.

முதலாளித்துவமும் நிலப்பிரபுத்துவமும் கூடிகுலாவுகிற, ஒன்றிணைந்திருக்கிற ஒரு சமூகமாக இந்திய சமூகம் இருக்கிறது. முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசாக இந்த அரசு இருக்கிறது என்று சொல்வது சதாரண ஒரு வரி விஷயம் இல்லை. நிலப்பிரபுத்துவம் சேர்ந்திருக்கிறது என்று சொன்னால், நிலப்பிரபுத்துவத்தின் கருத்தியல் என்பதும் அதன் பொருளாகும். 

முதலாளித்துவமும் நிலப்பிரபுத்துவமும் இணைந்துவிட்டது என்று சொன்னால், நவீன காலமாற்றத்துக்கேற்ப சாதியமும் புது வடிவம் பெற்றிருக்கிறது என்பதுதான் அதன் பொருள். இதை முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள், இந்திய சமுதாயத்தை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்தவர்களே.

ஒரு சாதியை இன்னொரு சாதி வெறுப்பது, எல்லா சாதிகளும் அடித்தட்டிலிருக்கக்கூடிய உழைக்கும் மக்களான அருந்ததியர் உள்ளிட்ட தலித் மக்கள் மீது ஒடுக்குமுறையை பிரயோகிப்பது, ஒடுக்குமுறை மனநிலையோடு அவர்களை அணுகுவது அது நகர்புறமாக இருந்தாலும் சரி, கிராமப்புறமாக இருந்தாலும் சரி. எனவே முதலாளித்துவத்தில் அது நவீன வடிவம் பெற்று அந்த ஒடுக்குமுறையே தொடர்கிறது என்கிறபோது முதலாளித்துவத்துக்கு அது மிகப் பெரும் பயன்படுகிற ஒரு கருவியாக இருக்கிறது.

காந்தியுடைய கருத்தியலில் பல குறைபாடுகள் இருக்கலாம், ஆனால் அவர் செய்த போதனைகள் அன்றைய சாதி சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதைவிட ஒரு முக்கியமான தாக்கம், இந்த சாதி அமைப்புக்கே மிகப் பெரும் ஒரு புரட்சிகரமான எதிர்ப்பை உருவாக்கி, ஒரு மாற்றுக் கருத்தியலை உருவாக்கியது என்பது டாக்டர் அம்பேத்கர் அவருடைய சிந்தனைகள்.

ஆனால், இந்த சமூகத்துக்குள்ளே சாதியத்துக்கு எதிரான இந்தக் குரல்களும் அனுமதிக்கப்பட்டு அதுவும் நடந்தகொண்டு, அதே நேரத்தில் சாதியம் என்பதை முதலாளித்துவத்துவத்துக்கு பயன்படக்கூடிய விதத்தில் அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். முதலாளித்துவம் எப்படி சாதியத்தை பயன்படுத்திக்கொண்டது என்பது ஒரு நீண்ட பெரிய ஆய்வுக்குரிய விஷயம்.

உதாரணமாக, இன்றைய காலகட்டத்தில், வாக்கு அரசியலில் முதலாளித்துவ கட்சிகள் சாதியக் குழுக்களை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், சாதியப் படிநிலையை எப்படி தங்களுக்கு ஆதரவாகப் பயன்படுததிக்கொள்கிறார்கள் என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. எனவே முதலாளித்துவக் கட்சி, முதலாளித்துவப் பொருளாதாரம் இது அத்தனையிலும் சாதியம் என்பது அந்த முதலாளித்துவத்தை வளர்ப்பதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

சாதியும் மதமும்

முற்போக்குக் கருத்தியலை கொண்டு செல்லவேண்டும் என்பதன் முதல் படி, இந்த சாதியக் கருத்தியலை எதிர்த்துப் போராடவேண்டும் என்பது. சாதியம் என்று சொல்லுகிறபோது, சாதியை அழித்தொழித்தல் என்கிற நிகழ்ச்சி நிரல் முக்கியமானது. அந்த நிகழ்ச்சி நிரலை எப்படி கொண்டுசெல்லவேண்டும் என்பதை நாம் விவாதிக்க வேண்டியிருக்கிறது. அதே போன்று, மதவாதம் என்று சொல்லுகிறபோது, இந்து சமயத்தில் மதமும் சாதியையும் பிரித்துப் பார்க்கமுடியாது. சாதியின் இருப்புக்கு ஒரு ஆன்மீக நியாயத்தைக் கற்பித்து வழங்குவது மதம். கடவுளின் பெயரால்தான் நால்வருணம் படைக்கப்பட்டிருக்கிறது. கடவுளின் பெயரால்தான் சடங்கு சம்பிரதாயங்கள் உள்ளன. இந்து சமயம் என்று சொல்லுகிறபோது சாதி என்பதை அதிலிருந்து பிரிக்கமுடியாது. தனித்தனியாகப் பார்க்க முடியாது.

அதே சமயம் மதவாதம் என்று சொல்லுகிறபோது, பிரித்துப்பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது. மத நம்பிக்கையாளர்கள் என்கிற ஒரு பிரிவு இருக்கிறார்கள். அவர்கள்தான் கோடான கோடி, ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட உழைக்கும் மக்களில் மத நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மதத்தை நம்புவதும் கூட, மத நம்பிக்கையாளர்களாக இருப்பதும் கூட இன்றைய ஆளும் வர்க்கத்துக்கு சாதகமானதுதான். ஏனென்றால் ஆளும் வர்க்கத்தின் சுரண்டலை மறைப்பதற்கு, மத நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவரவர் படுகிற கஷ்டங்களுக்கு முந்தைய பிறப்பில் அவர் செய்திருக்கக்கூடிய பாவங்கள் தான் காரணம் என்று எளிதாக சொல்லிவிட்டுப் போய்விடலாம். எனவே, மதநம்பிக்கையாளர்களாக இருப்பதும் ஆளும் வர்க்கத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் சாதகமானதே. அந்த மத நம்பிக்கை என்பதும் மதம் சார்ந்த கருத்துக்கள் என்பதும் நாம் எதிர்நோக்க வேண்டிய முக்கியமான விஷயம்.

மதத்தை எதிர்த்த போராட்டம் என்பதில் இருக்கும் ஒரு சங்கடம் என்னவென்றால், தன்னுடைய வாழ்நிலை, வாழ்வாதாரச் சிக்கல்கள் இதற்கெல்லாம் ஒரு நிம்மதியைத் தருகிற ஒரு புகலிடமாக கோவில்களும் மத நம்பிக்கையும் அவர்களுக்குப் பயன்படுகிற காரணத்தால், நேரிடையாக மதத்தின் மீதான தாக்குதல் என்பது, மத நம்பிக்கையோடு இருக்கிற பெரும்பான்மை மக்களை அந்நியப்படுத்துகிற வேலையைத்தான் செய்கிறது என்பது அனுபவம். எனவே, அனைத்தையும் கணக்கிலெடுத்த அணுகுமுறை தேவை.

அடக்கப்பட்டவர்களின் பெருமூச்சாக மதம் இருக்கிறது. வாழ்க்கைச்சுமையிலிருந்து சிறிது நிம்மதி தருவதற்கான இடத்தில் மதம் இருக்கிறது என்று மார்க்ஸ் மதத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில் சுரண்டுகிற கூட்டத்துடைய கருவியாகவும் மதம் என்றும் மார்க்ஸ் சுட்டிக்காட்டியிருக்கிறார். மதத்துடைய பயன்பாடு பற்றிய பொதுவான நிர்ணயிப்பு இது. எனவே, மத நம்பிக்கை என்பதை இந்த அடிப்படையில் அணுகவேண்டும்.

நாம் ஒரு பிரச்சனையை / இயக்கத்தை எடுக்கிறபோது, அது குறித்து அந்த ஊரில் ஊர் கூட்டம் போடுகிறோம். அப்போது பல விஷயங்களைப் பேசுவோம். அதில் அறிவியலைப் பேசவேண்டும்.  பொருள்முதல்வாதக் கருத்தியலை மக்களுக்கு மனதில் பதிய வைப்பதற்கான வாய்ப்பாக அது அமையும். சாதி ஒழிப்பு பற்றி பேசலாம், சாதியக் கருத்தியல் பற்றி பேசலாம். பிரச்சாரத்திலேயேயும், நேரடியாகவும் கொண்டுபோகலாம். மககளிடம் நெருக்கமாகி விவாதிப்பதன்  மூலமும் கொண்டுபோகலாம்.

இந்துத்துவத்தின் நோக்கம்

அதே நேரத்தில் மதவாதம், வகுப்புவாதம், இந்துத்வாவினை நாம் எதிர்க்க வேண்டியுள்ளது. முதலில் இவைகளுக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை, மதநம்பிக்கைக்கும் இந்துத்வா சொல்கிற விஷயங்களுக்கும் சம்மந்தமில்லை, மதத்தை அவர்கள் அரசியல் அதிகாரத்துக்குப் பயன்படுத்துகிறார்கள் என்கிற விஷயத்தை மக்கள் மனங்களில் பதியவைப்பது அவசியம். ஒருவரியில்/ வாக்கியத்தில் இதை நான் சொல்லிவிட்டேன், ஆனால் அதைப் பதிய வைப்பது சாதாரண விஷயம் அல்ல. ஏனென்றால் இந்துத்வாவின் மிஷினரி என்பது இந்தியா முழுவதும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அவர்களின் செயல்பாடுகள் குறித்து ஏராளமான விவரங்கள் இருக்கிறது. நிறைய அமைப்புக்கள் இருக்கிறது. வரலாறு, தொல்லியல், சமூகவியல், தத்துவம் உள்ளிட்ட 70 துறைகளில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  ஒவ்வொன்றுக்கும் ஒரு பார்வை வைத்து அவர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்துத்வா என்று சொல்லுகிறபோது, முதலில் மத அடையாளம் கொண்டிருக்கிற ஒருவருக்கு படிப்படியாக மதப் பிடிமானத்தை அவர்கள் ஏற்படுத்துகிறார்கள். இது இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. மதநம்பிக்கை என்று சொல்லுவது எப்போதாவது நினைவுக்கு வரும். அன்றாடம் 8லிருந்து 16 மணிநேரம் வேலைசெய்துகொண்டிருக்கும் உழைக்கும் மக்கள் மத்தியில் ஒருவருக்கு மத நம்பிக்கை என்பது ஏதாவது ஒரு நேரத்தில் வர வாய்ப்பிருக்கிறது. வாரம் ஒருமுறை கோவிலுக்கு செல்வது போன்ற வகையில் இருக்கிறது. உழைப்பாளி மக்கள் உழைப்பை செலுத்தவேண்டியிருப்பதால் எப்போதும் மதத்தைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்க நேரமில்லை. எந்த மதம் என்று கேட்டாலோ, வழிபாடு நடத்தும்போதோ ஒருவர் தன்னுடைய மதத்தை சொல்வார். மத அடையாளத்துடன் தன்னை இணைத்துக்கொள்வார். ஆனால் இந்துத்வாவாதிகள் செய்வது மதம் தான் எப்போதும் என்று உணர வைப்பது, மதப் பிடிமானத்தை ஏற்படுத்துவது.

கொரோனா காலத்திலேயும் இராமர் கோவில் கட்டுவதற்கான பணியில் இந்துத்வாவாதிகள் இறங்கினார்கள். கொரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் சூழலில் அடிக்கல் நாட்டுவிழாவை அவர்கள் நடத்தினார்கள். அந்த விழா தொற்றை அதிகரித்தது. இராமர் கோவில் கட்டுவது இப்போது தேவைப்படும் நிகழ்ச்சி நிரலா? இந்தியாவின் பொருளாதாரம் அதள பாதளத்தில் போய்க்கொண்டிருக்கிறது, கோடிக்கணக்கான மக்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டனர். இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் இருக்கின்றபோது, இராமர் கோவில் கட்டுகிறார்கள் என்று சொன்னால், ஒரு மத நம்பிக்கை இருக்கிறவருக்கு இந்த செய்தி போய் சேருகிறபோது நம்முடைய இராமருக்கு கோவில் கட்டுகிறார்கள் என்று மதப்பிடிமானம் வலுக்கிறது. சிறுபான்மை மதங்களுக்கு எதிராக இந்து மதப்பிடிமானத்தைக் கெட்டிப்படுத்துகிற வேலை நடந்துகொண்டிருக்கிறது. இதர மதத்தை வெறுக்கும் போது மத உணர்வு வகுப்புவாதமாக, மதவாத வடிவம் எடுக்கிறது. டெல்லியில் இந்த சூழலிலும் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவது தொடர்ந்துகொண்டிருக்கிறது. அது நீண்டகாலமாக இவர்கள் செய்துகொண்டிருக்கும் வேலை. எனவே கலவரங்களை செய்வதன் மூலம் இந்துக்களை ஐக்கியப்படுத்தும் வேலையை இந்துத்வாவாதிகள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இதில் இன்னொரு அம்சத்தையும் நாம் பார்கக வேண்டியிருக்கிறது. இந்துத்வா என்று சொல்லுகிறபோது இந்து மதம் சார்ந்தவர்களை அவர்கள் வகுப்புவாதக் கருத்தியலுக்கு கொண்டுசெல்கிறபோது, ஏதோ இந்துக்களுக்காக பாடுபடுகிற ஒரு இயக்கமாக ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார இயக்கத்தை அவர்கள் முன்னிறுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் கட்டமைக்க நினைக்கிற இந்து ராஷ்டராவின் கட்டமைப்பு முழுக்க முழுக்க சாதியக் கட்டமைப்பு தான், சாதியப் படிநிலைதான், சாதிய ஒடுக்குமுறைதான். பட்டியல் சாதியினர், பிற்படுத்தப்பட்டோர், ஆதிவாசி உள்ளிட்ட பெருமபான்மை ஒடுக்கப்பட்ட மக்களை ஒரு சிறு கூட்டம் அடித்தட்டில் வைத்து அவர்களை ஒடுக்குகிற முறைதான். பிராமணியம் என்ற கருத்தியல் இந்த ஏற்பாட்டுக்கு உதவுகிறது. அதே நேரத்தில் ஆளுகிற, ஆதிக்கம் செலுத்துகிற பிராமணியம் என்று சொல்லுகிறவர்களின் இன்னொரு முகம், பெருமுதலாளித்துவ கார்ப்பரேட் முகம்.

எனவே, அவர்களின் நிகழ்ச்சிநிரல் என்பது, இந்து ஒற்றுமை என்ற பெயரால் சாதிப் படிநிலையை கெட்டிப்படுத்துவது. இதற்கு சிறுபான்மை எதிர்ப்பு உதவுகிறது. இதுதான் வகுப்புவாதம். இந்த நிகழ்ச்சி நிரலை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் அம்பலப்படுத்துகிறோம் என்ற பெயரில் எல்லோரையும் திட்டிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. இதுதான் அவர்கள் கட்டமைக்க விருப்புகிற சமூக அமைப்பு என்று சொல்லுகிறபோது அந்தக் கருத்தியல் அம்பலப்படும்.

சமத்துவக் கருத்தியல்

நவீன தாரளமயக் கருத்தியல், மதவாதக் கருத்தியல், சாதியக் கருத்தியல் இவை மூன்றும் ஒன்றோடொன்று பிணைந்திருக்கிறது. இந்தப் பிற்போக்குக் கருத்தியலுக்கு மாறாக சமத்துவக் கருத்தியலை – சமத்துவ, மதச்சார்பற்ற, ஜனநாயக கருத்தியல் என்பதை கொண்டு செல்லவேண்டியிருக்கிறது.

சமத்துவம் என்று சொல்லுகிறபோது சாதி நீங்கிய, சாதிவேறுபாடுகள் களையப்பட்ட, சாதி ஒழிந்த அனைத்து மத நம்பிக்கை கொண்டவர்களும் ஒற்றுமையாக, இதர மத நம்பிக்கை கொண்டவர்களை மதிப்புமிக்கவர்களாகக் கருதுகிற, அப்படிப்பட்ட மத நம்பிக்கையாளர்களைக் கொண்டிருக்கிற ஒரு சமூகம். அதே நேரத்தில், இந்த சமூகம் இப்படிப்பட்ட முற்போக்குக் கருத்தியலை முன்னெடுக்கக்கூடிய ஒரு சமூகம், முழுக்க முழுக்க பொருளாதாரத்தை தன் கையில் எடுத்திருக்கும். பொருளாதாரத்தை பெரும்பான்மை மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில், பொருளாதார உற்பத்தி, அதனுடைய பலன், விநியோகம் இந்த மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் அது மாற்றும். முற்போக்குக் கருத்தியலை விதைக்கிற போது அது உடனடியாக இந்த மாற்றங்களை ஏற்படுத்திவிடாது. பொருளாதார அமைப்பில் சமத்துவம் என்று சொல்லுகிறபோது, உழைக்கும் மக்கள் பொருளாதாரத்தைக் கட்டுக்குள் கொண்டுவருகிற அந்த நிலை ஏற்படும். முற்போக்குக் கருத்தியல் அந்த மாற்றத்தைக் ஏற்படுத்தும். அப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறபோது, முற்போக்கு கருத்தியல் மக்களின் மனங்களைக் கவ்விப்பிடித்து, அந்த உழைக்கும் மக்கள் தங்களுக்கான அரசியல் அதிகாரத்தைக் கட்டமைப்பார்கள். இதுதான் வழி.

இதை நான் சொல்லுகிறபோது, உடனே பலருக்கு இது சாத்தியப்படுமா என்கிற அந்தக் கேள்வி வரும்.  அதற்கு வரலாறுதான் ஒரே பதில். பிற்போக்குக் கருத்தியலுக்கும் முற்போக்கு கருத்தியலுக்குமான அந்தப் போராட்டம் இன்று நேற்றல்ல, பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. அதில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இன்றைக்கு பல சட்டங்கள், முன்னேற்றங்களைப் பார்க்கிறோம். ஏராளமான போராட்டங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது என்பதே ஒரு நம்பிக்கைக்குரிய விஷயம். முற்போக்குக் கருத்தியல் என்பது பல ஆண்டு காலமாக, இன்னும் சொல்லப்போனால் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கடவுள் இல்லை என்று நாத்திக்கருத்துக்களை பரப்பியவர்கள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் அடக்கி ஒடுக்குகிற ஆதிக்க நிலையில் இருக்கக்கூடிய பிராமணியம் என்கிற கருத்தியலை எதிர்த்து, பிராமணர்களை எதிர்த்து இந்தக் கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். இன்றைக்கு வரையில் அதனுடைய தொடர்ச்சி என்பது இருந்து கொண்டிருக்கிறது. எனவே நிச்சயமாக முன்னேற்றம், சாதனைகளைச் செய்யமுடியும்.

இன்றைக்கு சீனாவில், உழைக்கும் மக்களிடம் தான் பொருளாதாரக் கட்டுப்பாடு என்பது இருக்கிறது. நிறைய சாதனைகள், வெற்றிகள் இந்தப் போராட்டப் பயணத்தில் இருக்கிறது. அந்த வகையில், முற்போக்குக் கருத்தியலுக்கும் பிற்போக்குக் கருத்தியலுக்குமான போராட்டத்தை நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் வரலாற்றில் வெற்றி என்பது முற்போக்குக் கருத்தியலுக்குத்தான். நாம் வெற்றிக்கான பயணத்துக்குத்தான் வரலாற்றைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கையோடு அதை செய்யவேண்டியிருக்கிறது.

உள்ளூர் சமூகங்கள்

இந்த முற்போக்குக் கருத்தியலை மிக முக்கியமாக உள்ளூர் சமூகங்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதை நான் வலியுறுத்திச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். உள்ளூர் மட்டத்தில் தனிநபர்களை அணுகக்கூடிய  வாய்ப்புக்களை முதலாளித்துவம் பெற்றிருக்கிறது. தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகங்கள் அனைத்தும் தனிநபர்களை எட்டியிருக்கிறது. பிற்போக்குக் கருத்தியல் தனிநபர்களை சென்றடைந்திருக்கிறது. அது மதவாதம், சாதியவாதம், நவீன தாராளமயம் இவை எதுவாக இருந்தாலும் அது தனிநபர்களை சென்றடைந்திருக்கிறது.

அதே போன்று முற்போக்குக் கருத்தியல் தனிநபர்கள், தனிநபர்கள் வாழுகிற உள்ளூர் சமூகம், தெரு, நகர வார்டு, கிராமம் என்கிற உள்ளூர் சமூகத்தை நோக்கிச் செல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. உள்ளூர் சமூக மக்களிடம் உரையாடுவது அவசியம். உரையாடுவதன் மூலமாக மட்டும் மாற்றம் வந்துவிடாது. செயல் முக்கியமானது. ஒரு செயல் பல கருத்துக்களை, பல பாடங்களை மக்களுக்கு இயல்பாக அனுபவங்கள் மூலமாகக் கற்றுத் தருகிறது. மக்கள் அனுபவங்கள் மூலமாக கற்றுக்கொள்கிறார்கள் என்பதை மாவோ சொல்லியிருக்கிறார். அவர்கள் அனுபவங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்தவேண்டும்.

முற்போக்குக் கருத்தியலை கொண்டு செல்வதற்கு, உள்ளூர் மட்டத்திலான மதச்சார்பற்ற, அறிவியலான சமூகங்களை நாம் எங்கெங்கெல்லாம் செல்கிறோமோ அங்கெல்லாம் உருவாக்க வேண்டும். உள்ளூர் மட்டத்திலான முற்போக்கு சமூகங்களை பல்லாயிரக்கணக்கில் தமிழகத்தல் நாம் உருவாக்குகிறபோது அது மேலும் மேலும் பரவும். ஒரு அறிவியல் விதியைச் சொல்வார்கள், இயக்கவியல் விதி என்று ‘அளவு மாறுபாடு அடைய குணமாறுபாடு அடையும்’. ஒரு 10 ஊர்களில் செய்தோமென்றால் அடுத்து 11, 12 என்று போகாது, 10 நூறாகும், ஆயிரம் ஆகும், பத்தாயிரம் ஆகும், லட்சமாகும். இப்படிப்பட்ட உள்ளூர் சமூகங்களைக் கட்டி அமைத்தல் என்பது, டெல்லியின் ஆட்சி அதிகாரத்தை உழைக்கும் மக்கள் கைப்பற்றுகிற ஒரு நிலைக்கு அது கொண்டுசெல்லும். ஏனென்றால் மத்தியில் ஆட்சி என்பதுதான் இந்த முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அதிகாரம் கோலோச்சிய ஆட்சி. எனவே உள்ளூர் சமூகங்கள் வலுவாகக் கட்டமைக்கப்படுவது என்பது முற்போக்கு கருத்தியலைக் கொண்ட கோடிக்கணக்கான உள்ளூர் சமூகங்களை நாம் உருவாக்குகிறபோது, அரசியல் அதிகாரம் முற்போக்காளர்கள் கையில், உழைக்கும் மக்கள் கையில் கைவர வாய்ப்பிருக்கிறது.

இர்பான் ஹபீப்

இந்திய வரலாற்றில் சாதி

பேரா. இர்ஃபான் ஹபீப்

தமிழில்: வீ.பா.கணேசன்

இந்தியாவின் புகழ்பெற்ற மார்க்சிய வரலாற்றாசியரான பேரா. இர்ஃபான் ஹபீப் எழுதியுள்ள ‘இந்திய வரலாற்றில் சாதி’ என்ற இக்கட்டுரை இந்தியாவில் சாதி வளர்ந்தெழுந்த விதம் குறித்து விவரிக்கும் மிகச் சிறந்த கட்டுரை ஆகும். 1985-ம் ஆண்டு மார்ச் மாதம் டி.டி. கோசாம்பி அவர்களின் முதலாம் நினைவு சொற்பொழிவாக இக்கட்டுரை முன்வைக்கப்பட்டு, பின்னர் 1987-ம் ஆண்டில் வெளியான ‘இந்திய வரலாற்றில் சாதியும் பணமும்’ என்ற அவரது நூலில் இடம்பெற்றது. பின்னர் 1995-ம் ஆண்டில் டெல்லி துளிகா புக்ஸ் நிறுவனம் வெளியிட்ட பேராசிரியர் ஹபீப் அவர்களின் ‘இந்திய வரலாறு குறித்த கட்டுரைகள்: ஒரு மார்க்சிய கருத்தோட்டத்தை நோக்கி’ என்ற தொகுப்பு நூலிலும் இக்கட்டுரை மறுபதிப்பு செய்யப்பட்டது. அதன் தமிழாக்கத்தை மார்க்சிஸ்ட் வாசகர்களுக்கு வழங்குவதில் பெருமையடைகிறோம்.

சாதி என்பது – பலரும் குறிப்பிடுவதைப் போல் வேறு எவற்றோடும் ஒப்பிட இயலாத – இந்திய சமூகத்தின் பண்பியல்பு. நமது வரலாறு, கலாச்சாரம் ஆகியவை குறித்த எந்தவொரு விளக்கமும் சாதி அமைப்பை உள்ளடக்காதபோது, கவனத்தைக் கோர முடியாது. பேராசிரியர் டி.டி. கோசாம்பியின் அறிவுத் திறனின் நீடித்த சாதனைகளில் ஒன்று மானுடவியல் சார்ந்த ஆய்வின் உயிரோட்டமான உணர்வுடன் வரலாற்று ரீதியான வளர்ச்சி குறித்த கூராய்வை இணைக்க அவரால் முடிந்ததாகும். இந்திய வரலாற்றில் சாதியின் பங்கை இந்த உரையின் மையக் கருத்தாக தேர்ந்தெடுத்ததன் மூலம் கோசாம்பியின் மிகவும் மதிப்பிடத்தக்க நுண்ணறிவு அம்சங்களில் சிலவற்றை என்னால் தொட்டுக் காட்ட முடியும் என்றும் நம்புகிறேன்.

சாதி பற்றிய விளக்கங்கள்:

இத்தகைய முயற்சி எதுவுமே முதலில் அது பற்றிய விளக்கம் என்ற பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அது மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கும் என்பதிலும் வியப்பேதுமில்லை. என்றாலும் கூட, ஒரு துவக்க முயற்சியாக, நடைமுறைக்கான ஒரு விளக்கத்தைத் தர நாம் முயற்சிக்கலாம். சாதி என்பது ஓரளவிற்கு நன்கு வரையறுக்கப்பட்ட, தனிப்பட்ட ஒரு குழுவாகும். அதன் உறுப்பினர்கள் குறிப்பிட்ட குழுவினருக்குள், அல்லது சம அந்தஸ்துள்ள குழுவுடன் திருமணம் செய்து கொள்வதன் மூலமும், பெரும்பாலான நேரங்களில் பரம்பரை தொழில் அல்லது கடமைகளின் மூலமும், அது நடைமுறையில் இருந்தாலும் சரி அல்லது அவ்வாறு செய்ய வேண்டுமென்ற வரைமுறை இருந்தாலும் சரி, ஒருவரோடு ஒருவர் இணைக்கப்பட்டவர்களாக விளங்குகின்றனர்.

எனினும் சமூகவியல் அறிஞர்கள் பலரும் இந்த விளக்கம் போதுமானதல்ல என்றே கருதுகின்றனர். மற்ற சாதிகளை ஒப்பிடுகையில் ஒரு சாதியின் தரவரிசை பற்றிய கருத்து நிலவுவதையும் நாம் வரையறுக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். இந்த தரவரிசை என்பது ஒருவரது சொந்த சாதியை ஒப்பிடும்போது மற்ற சாதிகளின்  ‘தூய்மை’ அல்லது ‘தூய்மையின்மை’ யின் அளவு, ஒவ்வொரு சாதிக்கும் என ஒதுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சடங்குகள், பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் ஆகியவற்றை  வெளிப்படுத்துவதாக இருக்கும்.1 சமூகவியல் அறிஞர் லூயிஸ் டூமாண்ட் தனது ஹோமோ ஹியரார்க்கியஸ் 2  என்ற நூலில், அந்த நூலின் தலைப்பு சுட்டிக் காட்டுவது போலவே, (ஒன்றின்மேல் ஒன்றான) படிநிலை வரிசை என்பது சாதி அமைப்பின் அடித்தளமாக, அதன் உயிரோட்டமாகவே விளங்குகிறது; அத்தகைய ஓர் ஏற்பாடு இல்லாமல் சாதி என்பதே இருக்காது என்றே குறிப்பிடுகிறார்.  

நாம் முதலில் குறிப்பிட்ட எளிமையான விளக்கத்தை பின்பற்றுவதா? அல்லது டூமாண்ட் ஏற்றுக்கொண்டுள்ளது போன்ற விளக்கத்தைப் பின்பற்றுவதா? என்ற கேள்வி வெறும் வார்த்தை விளையாட்டல்ல. நம் நாகரீகத்தின் வரலாற்றைப் புரிந்து கொள்ள மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இது அமைகிறது. எனவே டூமாண்ட் அவர்களின் கருத்துக்களை சற்று விரிவாகவே வாசகர்களுக்கு எடுத்துக் கூற விழைகிறேன்.

டூமாண்ட்-ஐப் பொறுத்தவரையில் சாதிய முறை என்பதை அதன் (‘இந்து’) மதரீதியான அத்தியாவசியமான தத்துவத்தைக் கொண்டுதான் புரிந்து கொள்ள வேண்டும். அதில் வெளிப்படுகின்ற எண்ணற்ற வகைகளிலும் அது பரவியிருக்கிறது. முடிவேயில்லாத, சிக்கலான, பல நேரங்களில் ஒன்றுக்கொன்று முரண்பாடான, தரவரிசை ஏற்பாட்டை கொண்ட, இதில் மிக உயரிய பீடமானது “மிகுந்த தூய்மை மிக்க”வர்களும் அதன் சடங்குகளில் பெரும்பாலானவற்றிற்கு தலைமை தாங்குபவர்களுமான பிராமணர்களுக்கே உரித்தாக இருக்கிறது.3 இந்த தரவரிசை என்பது அதிகாரம் அல்லது செல்வத்தில் இருந்தோ அல்லது அதை ஒட்டியதாகவோ உண்மையில் இருப்பதில்லை. மாறாக தூய்மை அல்லது மாசு என்ற அடிப்படைக் குறிக்கோளின் விரிவான விளக்கத்தில் இருந்தே அது வெளிப்படுகிறது. எனவே சாதிகள் என்பவை வர்க்கங்களின் ‘ஒரு தீவிர’ வடிவமோ அல்லது சாதிய அமைப்பு என்பது சாதிய அடிப்படையிலான சமூக வகைப்படுத்தலோ அல்ல.4 செல்வம் அல்லது அதிகாரப் பங்கீட்டிற்கு தொடர்புடையதாகவும் அது இருப்பதில்லை; இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.5 சாதி என்பதை ‘முழுமையின் ஒரு பகுதி’ என்பதாகவே (இது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒரு சொற்றொடர்) புரிந்து கொள்ள வேண்டும் என்று டூமாண்ட் வற்புறுத்துகிறார். அதாவது சமூகம் முழுவதுமே சாதிகளைக் கொண்டு பிரிக்கப்பட வேண்டும்; குறிப்பிடத்தக்க எச்சம் எதுவும் இருக்கக் கூடாது என்பதே அதன் பொருள். இவ்வகையில் நடைமுறையில் சாதி என்பது சமூக அமைப்பின் ஒரே அல்லது மேலாதிக்கமான வடிவமாக இருக்கும். அப்படி இல்லையெனில், அத்தகைய ஒரு வடிவம் இல்லாமலே போகும்6 என்பதே அவரது வாதமாக இருந்தது.

தூய்மையே அடித்தளமாய்

மேற்கூறிய இவை அனைத்தும் ஏற்கப்படுமானால், சாதி என்பது ‘தூய்மை’ என்ற தத்துவத்திலிருந்து வெளிப்படுகிறது; ஒப்புமை அளவிலான பரஸ்பர ‘தூய்மை’யின் அடிப்படையில் அமைந்த விரிவானதொரு படிநிலையாக அது வெளிப்படுகிறது. எந்தவித பொருளாதார அம்சங்களையும் அது எடுத்துக் கூறாத நிலையில் இந்திய சமூகத்திற்குள் பொருளாதாரத்தின் தாக்கம் என்பது மிகவும் பலவீனமானதாகவே இருந்திருக்க வேண்டும். மேலும் சாதி அமைப்பு என்பது மாறவே மாறாத படிநிலை அமைப்பை இந்தியாவிற்குக் கொடுத்திருக்கும் நிலையில் அங்கீகரிக்கப்படக் கூடிய வகையிலான வரலாறு என்ற எதுவும் இந்தியாவிற்கு இருந்திருக்காது. மேற்கண்ட இந்த இரண்டு நிலைப்பாடுகளையும் டூமாண்ட் உடனடியாக முன்வைக்கிறார்.

“பொருளாதாரம் என்ற வகை பாரம்பரியமான இந்தியாவிற்குப் பொருந்துமா? என்ற கேள்வியை நான் எழுப்ப விரும்புகிறேன்” என்று அவர் குறிப்பிடுகிறார். அதை நியாயப்படுத்தும் வகையில், “நமது (மேற்கத்திய) சமூகத்திலும் கூட 18-ம் நூற்றாண்டின் இறுதியில்தான் பொருளாதாரம் என்பது தனித்துவமான ஒரு வகையாக, அரசியலில் இருந்து விடுபட்ட ஒன்றாக, தோன்றியது”7 என்ற ‘அடிப்படையான’ உண்மையை அவர் சுட்டிக் காட்டுகிறார்.

பொருத்தமற்றவாதம்:

இந்த வாதம் எந்தவித தர்க்கத்திற்கும் பொருத்தமற்ற ஒன்றே ஆகும். இதன் விளைவாக டூமாண்ட் சொல்வதை நாம் சரியாகத்தான் புரிந்து கொண்டோமா? என்ற தயக்கமும் நமக்கு ஏற்படக் கூடும். ஒருகாலத்தில் சமூகவியல் என்ற அறிவியல் இருக்கவில்லை என்பதாலேயே அந்த அறிவியல் வருவதற்கு முன் சமூகங்கள் எதுவும் இல்லை என்று பொருளாகி விடாது. அதைப் போலவே 18-ம் நூற்றாண்டிற்கு முன்பாக பொருளாதாரம் ஓர் அறிவியலாக இருக்கவில்லை என்பதாலேயே ஆங்கிலேயே உள்நாட்டுப் போருக்குப் பின்னால் இருந்த பொருளாதார காரணிகளைப் பற்றியோ அல்லது அதற்கு முந்தைய வரலாற்று செயல்பாடுகள் அல்லது நிகழ்வு பற்றியோ யாரும் பேசக் கூடாது என தடுக்கப்படுவதில்லை.

எனவே இந்தியாவும் கூட வரலாறு என்பதே இல்லாத நிலைக்கு ஆட்பட வேண்டும்:

இந்திய இலக்கியத்திலும், பொதுவாக இந்திய நாகரீகத்திலும், காலம், நிகழ்வுகள், வரலாறு ஆகியவை குறித்து சற்றும் பொருட்படுத்தாத போக்கு வரலாற்று ஆய்வாளர்களின் பணியை மேலும் கடினமானதாக மாற்றி விடுகிறது. என்றாலும் இத்தகைய நிலைமைகளில் ஒரு வகையில் பார்த்தோமானால் கிறித்துவ நாகரீகத்தின் வரலாறு அல்லது சீனாவின் வரலாற்றுடனும் கூட ஒப்பிடக் கூடியதாக இந்தியாவிற்கு வரலாறு இருக்கிறதா?8

வேறு வகையில் கூறுவதானால், தன் வாழ்க்கையைப் பற்றிய சுயசரிதையை எழுதாத எவரைப் பற்றியும் ஒரு வாழ்க்கை வரலாற்றை யாரும் எழுதமுடியாது என்று நம்மால் கூற முடியுமா?

வரலாறு அற்றதா இந்தியா?

அங்குமிங்குமாக டூமாண்ட் வழங்குகின்ற உதாரணங்களைக் கொண்டு இந்தியாவின் ‘வரலாறு அற்ற தன்மை’ குறித்து எவரொருவராலும் விளக்கம் கூறிவிட முடியும். அவற்றில் மிகவும் கவனத்திற்குரிய உதாரணம் புத்த சமயத்தின் எழுச்சி – வீழ்ச்சி குறித்த அவரது விளக்கமாகும். சாதி அமைப்பின் தத்துவமானது தனிநபர்கள் சமூகத்தைத் துறக்க வேண்டிய தேவையை ஏற்படுத்துகிறது9 என்று அவர் கூறுகிறார். இத்தகைய ‘துறவி’களில் சிலர் பிராமணர்களுடன் போட்டியிடத்  தொடங்குகின்றனர். அந்தப் போட்டியில் இருந்தே புத்த, சமண சமயத்தவர்கள் அஹிம்சை என்ற கோட்பாட்டை முன்வைத்ததோடு, மிருகங்களைக் கொல்வதை கண்டித்து, மாமிசம் உண்பது மாசுபடுத்தும் செயல் என்ற கருத்தாக்கத்தையும் முன்வைத்தனர். இது பிராமணர்கள் விலங்குகளை பலியிடுவதைக் கைவிட வழிவகுத்ததோடு, தங்கள் போட்டியாளர்களை விட அதிகமான அளவிற்கு சைவ உணவுப் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை வற்புறுத்தவும் அவர்களை கொண்டு சென்றது.10இவ்வாறு புத்த சமயத்தினரின் முன்னேற்றம் தடுக்கப்பட்டது; சைவ உணவுப் பழக்கம் என்பது தூய்மையின் மற்றுமொரு அறிகுறியாக மாறியது; அடுத்த சுற்றில் (லிங்காயத்துகளைப் போன்ற) துறவிகள் மேலும் விசித்திரமான போட்டிக்கருத்துக்களை முன்வைத்து களத்திற்கு வரும்வரையில் பிராமணர்கள் மிகவும் நிம்மதியாகத் தூங்கினர். மேய்ச்சல் வாழ்க்கை முறையிலிருந்து விவசாயத்திற்கு மாறியது என கோசாம்பியும், நகரங்களின் எழுச்சியும் வர்த்தகத்தின் வளர்ச்சியும் என ஆர். எஸ். சர்மாவும் புத்த சமயத்தின் தொடக்க கால வெற்றிக்குக் காரணமாக இருந்தன என்று கூறுகின்றனர். எனினும், பிராமணர்களது முயற்சிகள் பலனற்றதாகவே இருந்தன. அந்த வெற்றிக்குப் பின்னால் இருந்த ஒரே அம்சம் ‘தூய்மை குறித்த அதன் விளக்கம்’ மேலும் வெற்றிகரமான முறையில் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டதே ஆகும். ‘துறவு’ என்ற அம்சம்தான் இவ்வாறு அது ஏற்றுக் கொள்ளப்படுவதற்குக் காரணமாக அமைந்திருந்தது.

உழைப்பு பிரிவினை:

சாதி அமைப்பு குறித்து இன்றைய மேற்கத்திய சமூகவியல் நிபுணரின் சித்திரத்திற்குப் பொருந்தும் வகையில் இந்தியாவின் வரலாறு இப்படித்தான் இருந்திருக்கும் என்றால், தவறு இந்திய வரலாற்றில் அல்ல; மாறாக அந்தச் சித்திரத்தில்தான் இருக்க வேண்டும். சாதியைக் குறித்து டூமாண்ட்-இன் மிகவும் குறுகிய பார்வைக்கு வரலாற்று ரீதியான சிறந்ததொரு விளக்கமும் இருக்கக் கூடும். கடந்த நூறாண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் பரம்பரை வழிப்பட்ட உழைப்புப் பிரிவினை முற்றிலுமாக உடைத்து நொறுக்கப்படவில்லை என்றபோதிலும் பெருமளவிற்கு அசைக்கப்பட்டுள்ளது.11 இதன் விளைவாக இந்த அம்சமானது இப்போதும் தொடர்ந்து நீடித்து வரும் சாதி வரம்புக்குள் பெருமளவிற்குப் பின்னுக்கு இழுத்துச் சென்று விட்டது.12எனினும் முற்றிலும் மதரீதியான, தனிப்பட்ட வகையிலான அம்சங்கள் இதனால் மிகக் குறைவாகவே பாதிக்கப்பட்டன. (இது இந்தியாவிற்கு மட்டுமே உரியதல்ல என்பதையும் ஒருவரால் காண முடியும். ஒரு குறிப்பிட்ட மதம் தோன்றுவதற்கான நியாயமான காரணமாக இருந்த ஒரு சமூகம் மறைந்த பிறகும் கூட அது தொடர்ந்து நீடித்தே வருகிறது.) இது சாதி அமைப்பு நீடித்திருப்பதற்கான அம்சங்களையே (முக்கியமாக மதரீதியான அம்சங்களை) அதன் ஒரே அல்லது மிக முக்கியமான அம்சமாகவும், (பொருளாதாரம் போன்ற) குறைந்து வரும் அம்சங்களை இரண்டாம் பட்சமான, ஏன் மேலோட்டமான அம்சங்களாகவும் கருதுவதற்கான உந்துதலை அளிக்கிறது என்பதும் வெளிப்படையாகவே தெரிகிறது. இத்தகைய உந்துதலுக்கு டூமாண்ட் பலியாகிறார் என்பது மட்டுமின்றி, இந்தியாவைப் பற்றி விளக்குவதற்கு என முழுமையானதொரு தத்துவார்த்த கட்டமைப்பையும் தவறான ஒரு கருத்தாக்கத்தின் மீது அவர் உருவாக்குகிறார். எப்படி இன்றைய மேற்கத்திய சமூகம் ‘சமநோக்கு’ கொண்டது என்ற அவரது மற்றொரு நம்பிக்கையைப் போலவே, இந்தியாவில் நிலவும் படிநிலை வழிப்பட்ட மனிதரைப் பற்றி அவர் முன்வைப்பதையும் நாம் ஏற்றுக் கொள்வது மிகக் கடினமான ஒன்றே ஆகும்.

II

இவ்வாறு, அவரது ஹோமோ ஹியரார்க்கியஸ் சாதி குறித்த நமது கருத்தை மாற்றியமைக்கத் தவறியது எனில், பின் நாம் எங்கிருந்து தொடங்குவது? கோசாம்பி அவர்கள் மிகவும் வெளிப்படையாகவும் தொடர்ச்சியாகவும் பின்பற்றி வந்த அணுகுமுறையை, அதாவது கார்ல் மார்க்ஸ் அறிமுகப்படுத்திய அணுகுமுறையைப் பயன்படுத்துவதே இங்கு மிக முக்கியமானது என்று நான் கருதுகிறேன். தொடர்ந்த செயல்பாட்டில் உருவாகும் பல்வேறு சமூக ஏற்பாடுகளில் அதன் பங்கினை அடிப்படையாகக் கொண்டே சாதியை நாம் நோக்க வேண்டும். ‘உழைப்புச் செயல்பாடு’ என்ற வடிவத்தின் அடிப்படையில் அமைந்தது என்ற வகையில், சமூக ரீதியான ஓர் ஏற்பாடு என்பது ஒரு சமூகத்தின் உற்பத்தியாளர்கள் ஓர் ‘உபரி’யை வழங்க முடிந்ததற்குப் பின்பே எழுகிறது. இந்தக் கட்டம் வருவதற்கு முன்பாகவே சாதியைப் போன்ற ஒரு சமூக ரீதியான நிறுவனம் இருந்து வந்தது என்று எதிர்பார்ப்பது வேண்டாத ஒரு வேலையே ஆகும். உண்மையில் டூமாண்ட் கூட இதை ஒப்புக் கொண்டிருக்கிறார். புராதன சமூகங்களில் நாம் காண முடியாத வேலைப் பிரிவினையை அடுத்தே சாதி தோன்றுகிறது என்பதை அவர் ஒப்புக் கொள்கிறார்.13 நால் வர்ணங்களைப் பற்றிய முதலும் மூலமுமான அறிவிப்பாக விளங்கும் ரிக் வேதத்தில் இடம் பெறும் புருஷசுக்தம் சித்தரிப்பது சாதிகளைப் பற்றி என்பதை விட அன்றைய சமூகத்தில் இருந்த வர்க்கங்களைப் பற்றியதாகவே பெரிதும் உள்ளது. ராஜன்யாஸ் – பிரபு வர்க்கம், பிராமணர்கள் – பூசாரிகள், வைஸ் – பொதுவான மக்கள் (குறிப்பாக விவசாயிகள்) மற்றும் தஸ்யூக்களில் இருந்து வெளிப்பட்ட, அடிமைக் குழுக்களான சூத்திரர்கள் என்பதாகவே இந்தப் பிரிவினை இருந்தது. பரம்பரை வழிப்பட்ட வேலைப் பிரிவினை என்பதோ அல்லது ஒரே குழுவிற்குள் திருமணம் செய்து கொள்வது (அகமணமுறை) என்பதோ வேத காலத்தில் இருந்ததற்கான அறிகுறி எதுவுமே இல்லை. எனவே வர்ண முறை என்பது மிகச் சிறிய அளவிலான சாதிய அமைப்புக்கு முந்தையதாகவே அது இருந்து பின்னர் வளர்ந்தது.

பழங்குடிகளின் பங்களிப்பு

வேதகால சமூகத்தில் சாதி என்பது வர்ணங்களுக்கு உள்ளேயிருந்த வேறுபாடுகளின் விளைவாகத் தோன்றவில்லை; மாறாக முற்றிலும் வெளிப்புறச் செயல்பாடுகளில் இருந்தே தோன்றியது என்றதொரு கருத்தை கோசாம்பி தனது ‘இந்திய வரலாற்று ஆய்விற்கான ஓர் அறிமுகம்’ என்ற நூலில் வெளிப்படுத்தியிருந்தார். “பொதுச் சமூகத்திற்குள் பழங்குடிகளின் அம்சங்கள் உள்ளிழுக்கப்படுவதை இந்திய வரலாற்றுச் செயல்பாடு முழுவதுமே எடுத்துக் காட்டுகிறது. இந்திய சமூகத்தின் மிகவும் கவரத்தக்க அம்சமான சாதியின் அடித்தளத்தில்தான் இந்த அம்சம் புதைந்து கிடக்கிறது”14 இந்த உள்ளுணர்வின் விளைவாகவே சாதி என்ற வார்த்தையின் பயன்பாட்டிலிருந்து ஒருவரால் இதை உறுதிப்படுத்திக்கொண்டுவிட முடியும். சாக்கிய சாதியைச் சேர்ந்தவர் என்று புத்தர் கூறும்போது, அந்த வார்த்தை புராதன இனக்குழுவையே சுட்டிக் காட்டுகிறது. அதே இலக்கியத்தில் ‘மிகச் சிறந்த, தாழ்ந்த’ சாதிகளைப் பற்றியும் நாம் படிக்கிறோம். இது சாதிகளையே தெளிவாகக் குறிப்பிடுகிறது. 15 பெரும்பாலான நேரங்களில் புராதன இனக்குழுக்கள் ஒரே இனக்குழுவிற்குள் திருமணம் செய்து கொள்வதை (அகமண முறை) கண்டிப்பாகப் பின்பற்றுகின்றன. இனக்குழுவிற்கு வெளியே தங்கள் சகோதரிகளை திருமணம் செய்து தருவதை தவிர்ப்பதற்காக அவர்களின் சகோதரர்களே திருமணம் செய்து கொண்டது பற்றி புத்தர் சொன்ன கதை இப்படித்தான் வெளிப்பட்டது.16 இந்த இனக்குழுக்கள் ‘பொதுச் சமூகத்திற்குள்’ நுழைந்தபோது தங்களின் அகமண முறையை அந்த சமூகத்திற்கும் எடுத்துச் சென்றிருப்பார்கள் என்று நாம் இதை எடுத்துக் கொள்ளலாமா? அந்த இனக்குழு ஏற்கனவே விவசாயத்தில் ஈடுபட்டு வருவதாக இருப்பின், அந்தப் பகுதியில் அது விவசாயத்தில் ஈடுபடும் சாதியாக மாறிவிடும்.

பொருளாதார உண்மை:

எனினும் ‘பொதுச் சமூகத்திற்குள் நுழைகின்ற’ புராதன இனக் குழுக்களிடையே காடுகளில் வாழ்கின்ற, வேட்டையை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்ட அல்லது உற்பத்தி எதிலும் ஈடுபடாது உணவு சேகரிக்கும் இனக் குழுக்களும் பெருமளவில் இருக்கும். விவசாயத்தில் முன்னேறிய இனங்கள் இவற்றை தங்களின் ஆதிக்கத்தின் கீழே வைத்திருக்கும். சாக்கியர்களுக்கும் கோலி இனத்தவருக்கும் இடையே நடைபெற்ற போராட்டம் இதை சிறப்பாக வெளிப்படுத்துவதாக அமைகிறது. 17

ஆரியர்கள் இந்த நாட்டிற்குள் வருவதற்கு முன்னால் காட்டுக்குள் பின்வாங்கி, அங்கேயே வசித்து வந்த, பிராமணர்களின் வாய்மொழிக் கதைகளிலும், பின்னர் வேத முறையிலான சடங்குகளிலும் தங்கள் அடையாளங்களை விட்டுச் சென்ற நாகர்களைப் பற்றி கோசாம்பி மிக நீண்டதொரு பத்தியை எழுதியிருந்தார்.18 உணவைத் தேடி சேகரித்து உண்பதை வாழ்க்கை முறையாகக் கொண்டிருந்தவர்கள் அடக்கி வைக்கப்பட்டு, மிகவும் கீழ்த்தட்டில் உள்ள சாதிகளாக, இன்னும் சொல்லப்போனால் நால் வர்ணங்களுக்கு வெளியே நிறுத்தப்பட்டு, மிகவும் கீழான நிலையில் வைக்கப்பட்டனர்.19 மனுஸ்மிருதியில் விவரிக்கப்படும் ‘கலப்பு சாதியினர்’ என்பது இத்தகைய பிரிவினரையே பெரிதும் கொண்டிருப்பதையும் காண முடிந்தது. விலங்குகளைக் கவர்ந்திழுக்கும் சாய்ர் ஆந்திரர்கள், படகோட்டிகளான கவர்த்தாக்கள், மீன்பிடி தொழில் செய்யும் நிஷாதாக்கள், வனவிலங்குகளை வேட்டையாடி உண்ணும் மேடாக்கள், ஆந்திரர்கள், சுஞ்ச்சுக்கள், மட்குகள், ‘வளைகளில் வாழும் விலங்குகளைப் பிடித்து உண்ணும் ஷாத்திரிக்கள், உக்ராக்கள், புக்காசாக்கள், தோல்தொழில் செய்யும் கரவாராக்கள், திக்வானாக்கள், மூங்கிலைப் பயன்படுத்தி வாழும் பாண்டுசோபகாக்கள் ஆகியோரைப் பற்றி மனுஸ்மிருதி குறிப்பிடுகிறது. (மனுஸ்மிருதி, பாகம் 10, பாடல்கள் 32, 34, 36-37, 48-49 ஆகியவை) சண்டாளர்கள், நிஷாதர்கள் ஆகிய இருபிரிவினருமே புத்த சமய நூல்களில் வேட்டையாடும் பிரிவினராக சுட்டிக் காட்டப்படுகின்றனர். இவர்களே முதன் முதலில் இருந்த ‘தீண்டப்படாத’ சாதியினர் ஆகும்.20 இவர்கள் விவசாயத்தில் ஈடுபடுவதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் சொந்த, உண்மையான அல்லது மாற்றி அமைக்கப்பட்ட தொழில்கள் மிகச் சிறிய அளவிற்கே அல்லது  குறிப்பிட்ட பருவகாலத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் உள்ளவை என்ற நிலையில் விவசாயிகளுக்கும் உயர்மட்டத்தில் உள்ள நிலப்பிரபுக்களுக்கும் மிகக் குறைந்த செலவில் வேலை செய்யத் தயாராக உள்ள, சுதந்திரமற்ற, கீழ்ப்படிதல் மிக்க நிலமற்ற உழைப்பாளிகளாக, மிகப்பெரும் சேமிப்புத் தளங்களாக அவர்கள் மாறினர். சமூகத்தின் இதர பிரிவினரிடையே இந்த கீழ்த்தட்டு சாதிகளின் மீது வெளிப்படும் கடுமையான வெறுப்பு இந்த அடிப்படையான நலன்களில் நிலவிய முரண்பாடுகளில் இருந்தே தோன்றுகிறது என்ற கருத்தை தவிர்ப்பதும் கடினமாகும். இந்த அடிப்படையான பொருளாதார உண்மையை நியாயப்படுத்தவே ‘தூய்மை’, ‘மாசு’ போன்ற கருத்தோட்டங்கள் உருவாயின.

விவசாய மற்றும் கீழ்த்தட்டு சாதிகளின் பிரிவினை என்பது மிகவும் பொதுவான வடிவத்தில் உள்ள ஒரு வேலைப் பிரிவினையையே குறிக்கிறது. எனினும் புத்த சமயத்தின் எழுச்சியைத் தொடர்ந்து உருவான இரண்டாவது நகர்ப்புறப் புரட்சியை (முதல் புரட்சி ஹரப்பா கலாச்சாரத்தை பிரதிநிதித்துவப் படுத்துவதாகும்) பேரா. ஆர்.எஸ். சர்மா நம் கவனத்திற்குக் கொண்டு வருகிறார். 21 பல்வேறு வகைப்பட்ட உற்பத்தித் திறன்கள் வளர்ச்சி அடைந்ததையே இது சுட்டிக் காட்டுகிறது. ‘எண்ணற்ற, புதிய முழுநேர திறனாளிகள்’ உருப்பெற கிடுக்கி, கத்தரி, அரிவாள், அரவை இயந்திரம் போன்ற ‘புதிய, வேலையை சுலபமாக்கும் கருவி’களின் முக்கியத்துவத்தை கார்டன் சில்டே வலியுறுத்துகிறார்.22 இத்தகைய கருவிகளில் சில (கத்தரி, அரவை இயந்திரம் போன்றவை) கி.பி. முதல் நூற்றாண்டில் தக்‌ஷசீலத்தில் முதன்முதலாக வெளிப்பட்டன.23 கொல்லர்கள், தச்சர்கள் ஆகியோர் நிரம்பிய  ‘உற்பத்தியாளர்களைக் கொண்ட கிராம’ங்களை ஜாதகக் கதைகள் நமக்கு அறிமுகப்படுத்துகின்றன.24 பொதுச் சமூகத்திற்குள் ஒட்டுமொத்தமாகக் கொண்டுவரப்பட்ட புராதன இனக்குழுக்கள் அப்போது உருப்பெற்று வந்த வேலைப்பிரிவினையின் நெருக்கடியில் சிதறல்களை உருவாக்கத் தொடங்கின. மூல இனக் குழுக்களில் இருந்து தனிமைப்பட்ட பல்வேறு கைவினையாளர்களும் குறிப்பிட்ட சாதிகளாக மாறினர். எனவேதான் மனுஸ்மிருதி (பாகம் 10, செய்யுள் 47-48-ல்) தச்சர்கள், தேரோட்டிகள், மருத்துவர்கள் ஆகியோரை ‘கலப்பு சாதி’யினரிடையே சேர்த்து விட்டது. வர்த்தகத்தின் வளர்ச்சியின் அடிப்படையில் இதே போன்று உருவான வேறுபடுத்தும் செயல்முறையானது (புத்தர்) ஜாதகக் கதைகளில் பிரபலமாக விளங்கும் வணிக சாதியினர் என்ற பிரிவு உருவாக வழிவகுத்தது. காலப்போக்கில் நால் வர்ணங்களில் ஒன்றான ‘வைஸ்ய’ வர்ணத்தை இவர்கள் தங்களுக்கு மட்டுமேயானதாக மாற்றிக் கொண்டனர்.

சாதியக் கட்டமைப்பில் பிராமணர்களின் நிலை என்பது மிகவும் இயற்கையாகவே அவர்களின் பூசாரி செயல்பாடுகள், சாதிய அமைப்பை பாதுகாப்பதற்கான ‘தர்ம’த்தைக் காப்பாற்றுபவர்கள் என்ற வகையில் பெறப்பட்டதாகும். அவர்களது இத்தகைய (உயரிய) நிலையின் ஒரு பகுதி விவசாய செயல்பாடுகளை ஒழுங்கமைக்க மிகவும் அவசியமாக விளங்கும் பருவ கால அட்டவணை பற்றிய அவர்களது கூரறிவில் இருந்து பெறப்படுகிறது என கோசாம்பி கருத்துத் தெரிவிக்கிறார்.25

இத்தகைய சாதியக் கட்டமைப்பில் பெரிதும் பாதிப்பிற்கு ஆளாகும் நிலையில் உள்ள ஒரு பிரிவினர் நாட்டை ஆள்கின்ற, போர் வீரர்களாக விளங்கும் சத்திரிய வர்ணத்தவர் ஆவர். படையெடுப்புகள், கலகங்கள் போன்றவை ஆயுத பலத்தை பரம்பரை பரம்பரையாக தங்களுக்கு மட்டுமே ஆனதாக ஆக்கிக் கொள்வதை மிகவும் கடினமானதாக ஆக்கி விடுகின்றன. புராணங்கள் இவற்றுக்கு மிகவும் தெளிவான சாட்சிகளாக அமைகின்றன. எனவே சாதியக் கட்டமைப்பு எங்கே மிகவும் வலுவாக இருக்க வேண்டுமோ, (அதாவது ஆளும் பிரிவின் நிலைத்தன்மையானது) அங்கேதான் உண்மையில் அது மிகவும் பலவீனமானதாக இருக்கிறது. இவ்வகையில் சாதியக் கட்டமைப்பு முழுவதுமே சுரண்டலுக்கான ஓர் அமைப்பாகவே விளங்குகிறது. அதன் சொந்த வார்த்தைகளிலே கூறுவதெனில், இதனால் பெரிதும் பயன் அடைபவர்கள் பெரும்பாலான நேரங்களில் தகாத வழியில் பறித்துச் செல்பவர்களும் வெளியாட்களாகவுமே உள்ளனர்.

III

இந்தியாவிலுள்ள அனைவருக்கும் பொருந்துவதாக சாதிய அமைப்பை மாற்றுவதிலும், சாதி என்ற கருத்தாக்கத்தை தர்மத்துடன் ஒன்றிணைப்பதிலும் பிராமணர்கள் மிக முக்கியமான பங்கினை வகித்தனர் என்பதை கிட்டத்தட்ட அனைவருமே ஒப்புக் கொள்வதாகவே தோன்றுகிறது. இவ்வகையில் சாதிய அமைப்பையும் பிராமணீயத்தையும் பிரிக்க முடியாத ஒன்றாக பிராமணர்கள் ஆக்கினர். இத்தகைய சிந்தனைகளின் ஒரு விளைவு என்னவெனில், சாதி உருவாக்கத்திற்கான செயல்பாட்டில் புத்த சமயத்தின் பங்கு பெரும்பாலும் கண்ணுக்குத் தென்படாமலேயே போய்விடுகிறது என்பதே ஆகும்.

வர்ண அமைப்பை பெருமளவிற்கு வற்புறுத்திக் கூறும் கவுடில்யரின் அர்த்த சாஸ்திரம் நூலைப் படிக்கும் எவர் ஒருவரும் பின்பு அசோகரின் கட்டளைகள் அடங்கிய கல்வெட்டுக்களை படித்தார்களெனில், இவை இரண்டின் முற்றிலும் வேறுவேறான தன்மை வெளிப்படையாகவே தெரியும். அசோகரின் கல்வெட்டு வாசகங்களில் வர்ணம் (அல்லது சாதி) என்ற வார்த்தையே தென்படாது. அசோகர் பிரச்சாரம் செய்த, அதன் குறிக்கோள்களை பாறைகளிலும் தூண்களிலும் அவர் செதுக்கி வைத்த, தர்மத்தின் ஒரு பகுதியாகக் கூட வர்ண விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பது இருக்கவில்லை. பிராமணர்களின் மதரீதியான மேலாதிக்கத்தை புத்த சமயம் மறுதலித்திருந்த நிலையில் வேதங்களில் இருந்து பாரம்பரியமாகப் பெற்றிருந்த வர்ண பாகுபாட்டின் நியாயத் தன்மைக்கு எதிராகவும் அது கேள்வி எழுப்பியது.

எனினும் சாதிய அமைப்பின் வளர்ச்சிக்கு புத்த சமயம் அதற்கேயுரிய பங்களிப்பை செய்யவில்லையா? என்ற கேள்வியும் எழுப்பப்படலாம். புத்த சமய தத்துவத்தின் அடிநாதமாக அமைந்துள்ள கர்மவினை என்ற கருத்தோட்டம் அல்லது ஆத்மா என்பது மறுபிறவியாக மாற்றம் பெறுவது குறித்த நம்பிக்கை என்பது சாதிய அமைப்பை நியாயப்படுத்த மிகவும் பொருத்தமான ஒரு தத்துவமாக அமைந்து விடுகிறது. இந்த அமைப்பினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுவோர் மத்தியிலும் கூட அதன் நியாயத் தன்மை குறித்த ஒரு நம்பிக்கையை உருவாக்குவதாகவும் அது அமைகிறது. மனுஸ்மிருதியில் (பாகம் 11, செய்யுள் 24-26) சாதி குறித்த கோட்பாட்டின் உறுதியானதொரு பகுதியாக இது ஏற்கனவே வெளிப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, புத்த சமயத்தில் அகிம்சைக்குத் தரப்படும் அழுத்தமாகும். மேய்ச்சல் வழிப்பட்ட வாழ்க்கைக்குப் பதிலாக ஓரிடத்தில் நிலைபெற்று விவசாயத்தை மேற்கொள்ளும் வாழ்க்கை உருவானபிறகு, பிராமணர்களால் மேற்கொள்ளப்படும் பலி/ யாகங்கள் போன்றவற்றுக்காக கால்நடைகளை பெருமளவில் கொன்று குவிப்பதன் நியாயமற்ற நிலையின் அடிப்படையில்தான் புத்த சமயமானது விலங்குகளை கொல்வதை தவிர்க்க வேண்டும் என்று அழுத்தம் தருவதாக கோசாம்பி விவரிக்கிறார். 26 புத்தர் வன்முறையை அல்லது குரூரத்தை ஏற்றுக் கொள்ள மறுத்ததன் உண்மைத் தன்மையை (என்ன இருந்தாலும் கலிங்கப் போரில் தன் ராணுவம் நிகழ்த்திய படுகொலைகளை அசோகர் கண்டனம் செய்யவே செய்தார்) அவதூறு செய்யும் நோக்கம் எதுவும் கோசாம்பிக்கு இருக்கவில்லை.27 அவர் வலியுறுத்த நினைத்தது என்னவென்றால், மிருகங்களை பலியிடுவதை எதிர்த்து எழும் எந்தவொரு விமர்சனமும் கால்நடைகளை வளர்க்கும் வைசியர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பைப் பெற்றிருக்கும் என்பதே ஆகும். அனைவரும் விரும்பி ஏற்கும் ஒரு கோட்பாடாக அகிம்சை எவ்வாறு மாறியிருக்க முடியும் என்பதற்கு மிகவும் பொருத்தமான ஒரு காரணத்தை மிகுந்த மரியாதையுடன் உங்கள் முன் வைக்க நான் விரும்புகிறேன். உணவைத் தேடி உண்ணும் இனக் குழுக்களை அடிமைப்படுத்தவும், அவமானப்படுத்தவுமான காரணத்தை அது தருகிறது. வேட்டையாடுதல், மீன்பிடித்தல் ஆகியவற்றுக்கு எதிராக தடைகளை விதிப்பதாக அசோகரின் கட்டளைக் கல்வெட்டுக்கள் அமைந்துள்ளன.28 பிராமணீய சாத்திரங்களைப்போலவே புத்த சமய சாத்திரங்களும் ‘விலங்குகளை கொன்று தின்னும் ஜாதி’களை மிகுந்த தரக்குறைவான நிலையிலேயே காண்கின்றன.

வர்ண கட்டமைப்பில் விவசாயக் குடிகளை இறுதியில் தரங்குறைப்பதிலும் கூட இங்கே புத்த சமயம் பங்களித்துள்ளது. விவசாயிகள் வர்ணக் கட்டமைப்பில் வைசியர்களாக அல்லாமல் சூத்திரர்களாக இருக்க வேண்டும் என்று கருதுவது குறித்த ஆர்.எஸ். சர்மாவின் விளக்கம் நடைமுறையில் மிகவும் தெளிவான ஒன்றாகவே உள்ளது. 29 இவ்வாறு தரம் இறக்குவதில் அகிம்சை கோட்பாடும் ஒரு பங்கினை வகித்துள்ளது. மனுஸ்மிருதி (பாகம் 10, செய்யுள் 84) கலப்பையின் இரும்பு முனை உயிரினங்களுக்கு ஊறுவிளைவிப்பதால் அதைப் பயன்படுத்துவதை கண்டிக்கிறது. பிற்கால புத்த சமயத்திலும் இது எதிரொலித்தது.  ‘உழுவதையும் (வயலுக்கு) நீர் பாய்ச்சுவதையும் உள்ளடக்கிய விவசாயத் தொழிலில் புத்த பிக்குகள் ஈடுபடுவதை புத்தர் தடை செய்தார் என்று சீன நாட்டைச் சேர்ந்த புத்த சமய யாத்திரிகரான ஐ சிங் கூறுகிறார்.30

எனவே, சாதியக் கட்டமைப்பின் வளர்ச்சிப் போக்கு முற்றிலும் பிராமணீயத்தை மட்டுமே சார்ந்தது எனக் கருதுவது தவறானதாகும்.

IV

புத்த சமயம் உயிர்த்தெழுந்த (கி.மு. 500) காலத்திற்கும் குப்தர்கள் ஆட்சி செய்த காலத்திற்கும் (கி.பி 4-5 நூற்றாண்டு) இடைப்பட்ட காலத்தை, சாதிய முறை, அதனை ஆதரிக்கும் ‘தத்துவம்’ ஆகியவை படிப்படியாக உருவான காலமாகக் கொள்ளலாம். வெளிநாடுகளைச் சேர்ந்த பயணிகள் இந்திய சாதிய முறையில் நிலவிய ‘படிநிலை’ அமைப்பைக் கண்டல்ல; அதன் வம்சாவளி முறையிலான தொழில் முறையைக் கண்டுதான் வியப்படைந்தனர் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. இந்த விஷயத்தில் ஏழு சாதிகளை தனது நூலில் பட்டியல் இட்டிருந்த மெகஸ்தனிஸ்(கி.மு. 300), சீனப் பயணியான யுவான் சாங் ஆகிய இருவருமே இந்த அம்சம் குறித்து மிகத் தெளிவான கருத்தை வெளியிட்டிருந்தனர். அதைப் போலவேதான் வெளிநாட்டைச் சேர்ந்த பயணிகளான பாபரும் பெர்னியரும். 31 

ஒப்பீட்டளவில் வேலைப் பிரிவினையானது கட்டுத்திட்டமான வடிவில் அமைந்துள்ள நிலையில், சாதிய அமைப்பானது உற்பத்தி உறவுகளின் ஒரு பகுதியாகவே அமைந்துள்ளது. எனினும் சாதிய அமைப்பு உழைப்பின் இரண்டு வேறுபட்ட உலகங்களில் செயல்படுகிறது; சாதிய அமைப்பு, அதன் ஒரு பகுதியாகவே அமைந்துள்ள சமூக ஏற்பாடு ஆகிய இரண்டையும் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால் இந்த இரண்டு உலகத்தையும் வேறுபடுத்திக் கொள்ள வேண்டும். கிராமத்தினால் பராமரிக்கப்படும் கைவினைக் கலைஞர்கள், சந்தையின் ஏற்றத் தாழ்வுகளையே பெரிதும் நம்பியுள்ள நகரத்தைச் சேர்ந்த கைவினைஞர்கள் ஆகியோரைப் பற்றிய வேறுபாடுகளைக் கண்டறிந்த போது கார்ல் மார்க்ஸ், ரிச்சர்ட் ஜோன்ஸிடமிருந்து மிக முக்கியமான ஒரு சிந்தனை ஓட்டத்தை உள்வாங்கிக் கொள்கிறார். ஒரு புறத்தில் சாதி அடிப்படையிலான உழைப்பாளி இயற்கையான பொருளாதாரத்தை சேர்ந்தவராக இருக்கும் நிலையில், மறுபுறத்தில் சரக்கு அல்லது பண மயமாக்கப்பட்ட துறையைச் சேர்ந்தவராக இருக்கிறார். 32

இந்திய கிராமப்புற இனக்குழுவைப் பற்றிய மார்க்ஸின் எழுத்துக்களோடு பரிச்சயமுள்ளவர் இதை நினைவு கூர முடியும். அருகருகே இருந்து வரும் எதிரெதிரான இரண்டு அம்சங்களின்மீது அதன் பொருளாதார அடித்தளத்தை அவர் பொருத்துகிறார்: “விவசாயம் மற்றும் பொருட்களின் உற்பத்தியில் பங்கேற்போரின் உள்ளூர் அளவிலான ஒன்றிப்பு – அதன் விளைவாக பண்டமாற்று என்பதை கிராமத்திற்குள்ளாகவே இருத்திக் கொள்வது; மறுபுறத்தில் கிராமம் முழுவதற்குமே சேவகர்களாக இருக்கின்ற, பொருளாகவோ அல்லது நில ஒதுக்கீட்டின் மூலமாகவோ வழக்கமாகச் சேர வேண்டிய தொகையைப் பெறும் வகையில் கிராமத்தினால் பராமரிக்கப்படுகின்ற, சரக்கு பரிவர்த்தனை மூலம் செயல்படுகின்ற, குறிப்பிட்ட சாதிகளைச் சேர்ந்த கைவினைஞர்கள், கீழ்மட்ட உழைப்பாளிகள் என்பதாக அவை இரண்டும் அமைகின்றன. 33 சாதியை அடிப்படையாகக் கொண்டு உழைப்பைத் தீர்மானிக்கும் இத்தகையோரை மாக்ஸ் வெபர் டெமியர்ஜிகல் உழைப்பாளிகள் என்று பெயரிட்டு அழைத்தார்.

டபிள்யூ.எச். வைசரிலிருந்து நவீன சமூக விஞ்ஞானிகள் பலரும் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். அவர்களைப் பொறுத்தவரையில் உண்மையில் இந்த ஏற்பாடு என்பது டெமியர்ஜிகல் உழைப்பு முறையல்ல; மாறாக, இது ஜஜ்மானி முறையே ஆகும். அதாவது, குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கு மட்டுமே சேவை செய்கின்ற கைவினைஞர்களைக் கொண்ட அமைப்பாகும் இது. அனைவரும் எதிர்பார்த்ததைப் போலவே லூயிஸ் டூமாண்டிற்கு மேல்தட்டு சாதிகளைச் சேர்ந்த, தூய்மையின் நிபுணர்களான சில குறிப்பிட்ட குடும்பங்களுக்கிடையே நிலவிய சடங்கு ரீதியான ஒரு வகை உறவாகவே இது தோன்றியது. அதாவது பிராமணர்களும் நாவிதர்களும் என்று உதாரணமாகக் கூறலாம். பின்பு அது மற்ற கைவினைஞர்கள், உழைப்பை மையமாகக் கொண்ட சாதிகளுடனான உறவாகவும் விரிவுபடுத்தப்பட்டது. இவ்வாறுதான் நமக்குச் சொல்லப்பட்டது: “இறுதி ஆய்வில் வேலைப் பிரிவினை என்பது மதரீதியான, மதமற்ற அல்லது  ‘பொருளாதார’ கடமைகளை ஓரளவிற்கு வெளிப்படுத்துவதல்ல; மாறாக, மத ரீதியான மற்றும் ஒன்றையொன்று சார்ந்த வகையிலான, மதரீதியான வெளிப்பாடாகவே அது உள்ளது. மேலும் மதத்திலிருந்து ஒன்றையொன்று சார்ந்த நிலையை உருவாக்குகிறது. 34 இன்றைய வரலாற்று ரீதியான பணிகளின்மீது எந்தவித கவனமும் செலுத்தாமலேயே தனது நூலை டூமாண்ட் வெளியிட்டு விட்டார் என்றே இதிலிருந்து தெரிகிறது. 18-ம் நூற்றாண்டின் ஆவணங்கள் குறித்த தனது ஆய்வின் முடிவுகளை ஹிரோஷி ஃபுகசாவா 1972-ம் ஆண்டில் பதிப்பித்தார். இந்த ஆவணங்களைப் பொறுத்தவரையில் மகாராஷ்ட்ரா மிகவும் செழிப்பான ஒன்றாகவே இருந்தது. ஆவணச் சான்றுகளின் அடிப்படையிலான அவரது உறுதியான முடிவு என்பது ஜாஜ்மனி கொள்கையானது குடும்ப பூசாரி முறைக்கு மட்டுமே பொருத்தமானதாகும். (தச்சர், கருமார், குயவர், சக்கிலியர், நாவிதர் போன்ற) பாரம்பரியமான தொழில்களைச் செய்யும் 12 இனப்பிரிவினருமே அடிப்படையில் கிராமத்தின் ஊழியர்களே. இவர்களுக்கான ஊதியம் என்பது நில ஒதுக்கீட்டின் மூலமாகவும் விவசாயிகளின் மகசூல் மூலமாகவுமே வழங்கப்படுகிறது. ஃபுகாசவாவின் ஆதாரம்35 மிகவும் வலுவானது. எனவேதான் நவீன கிராம கைவினைஞர்கள் குறிப்பிட்ட சில குடும்பத்தினருக்கு மட்டுமே சேவை செய்பவர்களாகத் தோற்றமளிக்கிறார்களெனில், அது நவீன சமூக நிலைமைகளின் கீழ் பழைய அமைப்பானது நசிந்து போனதன் விளைவாகவே என்ற தெளிவான கருத்தை வெளிப்படுத்த அவருக்கு உதவியது.

கிராமப்புற சேவகர்களுக்கான வரலாற்று ரீதியான சான்றுகள் உண்மையில் அதை மிகவும் முந்தைய காலத்திற்கு கொண்டு செல்கிறது. வட இந்திய கிராமங்களில் தச்சர்களுக்கு சொந்தமான நிலங்களை உறுதிப்படுத்தும் கல்வெட்டு ஆதாரங்கள் கி.பி. 5-ம் நூற்றாண்டை சேர்ந்தவை என்று கோசாம்பி சுட்டிக் காட்டுகிறார். 36 அதைப் போலவே தச்சர், கருமார், குயவர், நாவிதர், வண்ணார் போன்ற ஐந்து கிராமப்புறக் கைவினைஞர்களைப் பற்றிக் கூறும் (கி.பி. 1000 ஆண்டை ஒட்டிய குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த) லேகபத்ததி ஆவணங்கள் விவசாயிகளிடமிருந்து கையளவு தானியங்களை வாங்குவதற்கான உரிமை பெற்றவர்களாக இருந்தனர் என்று குறிப்பிடுவதையும் பி.என்.எஸ். யாதவா நம் கவனத்திற்குக் கொண்டுவருகிறார்.37  வரிவிதிப்பு நடவடிக்கைகளைப் பற்றிய அலாவுதீன் கல்ஜியின் (கி.பி. 14-ம் நூற்றாண்டின் துவக்க காலம்) எழுத்துக்களைச் சுட்டிக் காட்டும் பரணியின் விவரிப்பும் கூட கிராமத்தின் கடைநிலை ஊழியரான பலஹார்தான் மிகவும் குறைந்த அளவு நிலத்தின் உடமையாளராக இருந்தார் என்பதை எடுத்துக் கூறுகிறது. 38

எனவே கிராமத்தின் சுயச்சார்பையும் அதன் உள்ளார்ந்த இயற்கைப் பொருளாதாரத்தையும் நிலைநிறுத்த பாரம்பரிய வகைப்பட்ட கைவினைஞர்கள், ஊழியர்கள் ஆகியோர் மிகுந்த முக்கியத்துவம் உடையவராகின்றனர். இத்தகைய சுயச்சார்பு கிராமத்தை தனித்து நிறுத்துவதோடு, உபரியின் பெரும்பகுதியை ஆளும் வர்க்கங்களுக்கு வழங்கும் வகையில் அதன் கொள்திறனையும் விரிவுபடுத்துகிறது. ஏனெனில் அதன் சொந்த இறக்குமதிக்காக கூடுதலாக உற்பத்தி செய்ய வேண்டிய அவசியம் அதற்கு இருப்பதில்லை.

இந்திய கிராமத்தைப் பற்றியும் அதன் மக்களைப் பற்றியும் மார்க்ஸ் ஏற்கனவே தனது மூலதனம் நூலின் முதல் தொகுதியில் குறிப்பாகச் சுட்டிக் காட்டிய பிரசித்திபெற்ற பத்தியில் கூறியது போல இந்த உபரியானது கிராமத்திற்கு வெளியே எடுத்துச் செல்லப்படும் நிலையில் அது சரக்குப் பரிமாற்றம் என்ற வரம்பிற்குள் நுழைகிறது. கிராமத்திற்கு வெளியே கைவினைஞர் தன் பொருட்களை ஒரு தனிநபராக சந்தையில் விற்கிறார். ‘தலைமுறை தலைமுறையாக சேர்த்து வைத்த சிறப்புத் திறனைப் பெறுவதற்கு’ சாதியை அடித்தளமாகக் கொண்ட பாரம்பரியத் தொழில் அவசியமாக உள்ளது. 39 மேல்நோக்கி முன்னேறுவதற்கான வாய்ப்பைத் தடுக்கும் அதே நேரத்தில் பரம்பரை வழிப்பட்ட பரிமாற்றம் என்பது திறமையை நிலைநிறுத்துகிறது. மேலும் கைவினைஞர் சாதிகளுக்குக் கீழான அந்தஸ்தைக் கொடுப்பதன் மூலம் சாதி அமைப்பானது ஆளும் வர்க்கங்களுக்கு மற்றுமொரு சாதகமான அம்சத்தையும் உருவாக்கியிருக்கக் கூடும். கைவினைஞர் சாதிகள் ஏற்கனவே மனுவின் சாதியமைப்பில் கலப்பு சாதியினரிடையே வைக்கப்பட்டுள்ளனர். 11-ம் நூற்றாண்டில் அல்பரூனி நெசவாளர்கள், தோல் கைவினைஞர்கள் உள்ளிட்ட எட்டு தொழில்களை சாதிக்கு அப்பாற்பட்ட அந்த்யஜாஸ்களாக வகைப்படுத்துகிறார். 40 அவர்களின் கட்டுப்படுத்தப்பட்ட நிலையும் சாதியப் படிநிலையில் மேல்நோக்கிச் செல்வதற்கான வாய்ப்பின்மையும் கைவினைஞர்களின் எதிர்ப்புணர்வுக்கான திறனைத் தடுக்க நிச்சயமாக உதவியுள்ளது. இதன் விளைவாக கூலிக்கான செலவையும் குறைவாக வைக்கிறது.

எனவே, சாதி அமைப்பானது, அதன் தனிச்சிறப்பான வடிவத்தில், சந்தையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்த்தில் செயல்படுவதைப் போன்றே இயற்கையான பொருளாதாரத்திலும் மிக எளிதாகச் செயல்படுகிறது. இந்த இரண்டு வகையிலுமே கற்பனையான தூய்மையை நிலைநிறுத்துவதற்காக அன்றி (அவ்வாறு அது செய்யுமானால் அதுவும் தற்செயலான ஒன்றேயாகும்) மற்ற விஷயங்களைப் போலவே கடுமையான வகையில் வர்க்கச் சுரண்டலுக்கான ஒரு வடிவம் என்ற வகையில்தான் அது உதவி செய்கிறது.

V

பல வகைகளிலும் 13-ம் நூற்றாண்டின் தொடக்கமானது இந்திய வரலாற்ரில் ‘ஒரு தடங்கலை’ குறிப்பதாகவே அமைகிறது. இஸ்லாம் மதம் நாட்டிற்குள் ஊடுருவியதன் விளைவாக இந்தத் தடங்கல் எழவில்லை. கோசாம்பி, ஆர்.எஸ். சர்மா போன்றோரால் விரிவாக எடுத்துச் சொல்லப்பட்ட ‘இந்திய நிலப்பிரபுத்துவம்’ என்ற முந்தைய காலத்திற்கு மாறாக, ‘கீழ்த்திசை எதேச்சாதிகாரம்’ என்ற மார்க்ஸின் கருதுகோளுக்கு மிகவும் நெருக்கமான வகையிலான ஒரு சமூக அமைப்பை நாம் அப்போது காணத் தொடங்குகிறோம். காலனியாதிக்கத்திற்கு முந்தைய இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் சித்தரிக்க முயன்றதை விட பெருமளவிலான சரக்கு உற்பத்தி, நகரமயமாக்கம் ஆகியவற்றுக்கும் நாம் இங்கு இடமளிக்க வேண்டும்.

சாதிய கட்டமைப்பானது அதற்கு முன்பிருந்த காலப்பகுதியைப் போலவே கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் அதே போன்று தொடர்ந்து நிலவி வந்தது. இதற்கு முந்தைய பகுதியில் நாம் குறிப்பிட்டதைப் போலவே கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் பாரம்பரியமான, சாதி அடிப்படையிலான உழைப்பிற்கான ஆதாரம் இந்தியாவின் புராதன காலத்திலிருந்து 18-ம் நூற்றாண்டு வரை தொடர்ந்து இருந்து வந்துள்ளது. இஸ்லாமிய சட்டத்தில் சுதந்திர மனிதன் மற்றும் (ஆண்-பெண் உள்ளிட்ட) அடிமைகள் என்ற அடிப்படையில்தான் வேறுபாடுகள் அங்கீகரிக்கப்படுகின்றன. எனவே அதன் சட்டபூர்வமான அமைப்பில் சாதி என்பது அந்நியமான ஒன்றே ஆகும். எனினும் சாதி அமைப்பு குறித்த முஸ்லீம்களின் எண்ணப் போக்கு எந்தவகையிலும் பாராட்டிற்குரிய ஒன்றாக இருந்ததில்லை. கி.பி. 711-14 காலப்பகுதியில் அரேபியர்கள் சிந்து பகுதியை கைப்பற்றியபோது அவர்களது படைத்தளபதி முகம்மது இபின் காசிம் அதற்கு முந்தைய ஆட்சியில் ஜாட்களின் மீது சுமத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்திற்கும், அதாவது மனுஸ்மிருதியில் சண்டாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்ததைப் போன்ற கட்டுப்பாடுகளுக்கு, உடனடியாக ஒப்புதல் அளித்தார். 41

நடுக்காலப் பகுதி முழுவதிலுமே பல தெய்வங்கள், சிலை வழிபாடு ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்து மதத்தை முஸ்லீம்கள் கண்டித்து வந்தனர். எனினும் சாதி ஏற்றத்தாழ்வு என்பதை அவர்கள் தொடவேயில்லை. ஓரளவிற்கு மெலிதாக விமர்சனம் எழுப்பிய ஒரே நபர் (கி.பி. 1030-ம் ஆண்டைச் சேர்ந்த) விஞ்ஞானியான அல்பரூனி (தத்துவஞானியல்ல). அவர் கூறினார்:  “இறை நம்பிக்கையைத் தவிர அனைத்து மனிதர்களும் சமமானவர்கள் என்று கருதும் நிலையில் முஸ்லீம்களாகிய நாம் இந்தப் பிரச்சனையின் மறுபக்கத்தையே முற்றிலுமாக சார்ந்து நிற்கிறோம்.”42 எனினும் இத்தகைய மனித நேயமிக்க அறிவிப்பு என்பது கிட்டத்தட்ட புதுமையானதே ஆகும். 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றாசிரியரான பரணி தனது தாரிக் இ இருஸ் ஷாஹி என்ற நூலில் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட படிநிலை ஏற்பாடு வேண்டுமென்று வாதிட்டார். எனினும் அவரது சிந்தனை சாதிகளை விட வர்க்கத்தையே அடிப்படையாகக் கொண்டிருந்தது மட்டுமின்றி இந்து மதத்தில் நிலவி வந்த அமைப்பு பொருத்தமானதோர் உதாரணமாக அவருக்குத் தென்படவில்லை.

நாம் ஏற்கனவே பார்த்ததுபோல, சாதிய அமைப்பானது கிராமப்புறத்திலிருந்து பெருமளவிற்கு வருவாயை உருவாக்கவும், நகரங்களில் ஊதியத்திற்கான செலவை குறைக்கவும் உதவி வந்த நிலையில், சிலை வழிபாட்டில் முக்கிய பங்கு வகித்த பிராமணர்களை வெறுப்பவர்களாக இருந்தபோதிலும், அதைப் பெரிதும் பொருட்படுத்தாதவர்களாக, இந்தியாவின் முஸ்லீம் ஆட்சியாளர்கள் அத்தகைய அமைப்பைப் பாதுகாப்பதற்கான நியாயம் இருந்தது. (சாதிய அமைப்பு தொடர்ந்து நீடிப்பதற்கு பிராமணர்களின் மேலாதிக்கம் அனைத்து வகையிலும் அவசியமானது என்பதும் இதிலிருந்து தெரிய வருகிறதல்லவா?) எனினும் சாதிய அமைப்பு ஒரு சில குறிப்பிட்ட சரிகட்டல்களையும் மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்த போதிலும் – இதை முக்கியமானதாக நாம் அங்கீகரிக்கவும் வேண்டும் – இவை அனைத்தும் ஆட்சி செய்து வந்த சுல்தான்களின் கொள்கைகளின் விளைவாக ஏற்படவில்லை; மாறாக புதிய சூழ்நிலைகளின் விளைவாகவே ஏற்பட்டன என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

முதலாவதாக, இந்த புதிய ஆளும் வர்க்கத்தினரும், அவரைச் சார்ந்திருந்தவர்களும் தங்கலது மத்திய, மேற்கு ஆசிய பின்னணியின் விளைவாக புதிய வகையான பொருட்கள், புதிய வகைப்பட்ட சேவைகள் ஆகியவற்றுக்கான தேவையையும் கொண்டு வந்தனர். அதனோடு கூடவே கணிசமான அளவிற்கு விரிவான வகையில் புதிய கைவினை தொழில்நுட்பத்தையும் தங்களோடு கொண்டுவந்தனர். கோசாம்பி அவருக்கேயுரிய உற்றுநோக்கல் திறமையைக் கொண்டு  ‘புதிய தொழில்நுட்பங்களை கைக்கொள்வது, மற்றவர்களுக்கு அதைக் கடத்துவது ஆகியவற்றின் மூலம் இதுவரை குறிப்பிட்ட கைவினைஞர் சாதிகளுக்குள்ளேயே கட்டுப்பாடாக மறைபொருளாக இருந்து வந்த பழக்க வழக்கங்களை உடைத்து நொறுக்கினர்’ என்பதை சுட்டிக் காட்டினார்.43 தொடக்கத்தில் (13-14-ம் நூற்றாண்டுகளில்) அறிமுகமான தொழில்நுட்பக் கருவிகள் என்பவை (பாரசீக சக்கரத்தின் இறுதி வடிவமான) வலது புறம் நோக்கித் திரும்பிய வண்ணம் உள்ள பற்சக்கரம், நூற்புச் சக்கரம், பேப்பர் தயாரிப்பு, சுரங்க கட்டுமானம், சுண்ணாம்பு கலவை, இரும்பு லாடம் போன்றவை ஆகும்.44 சில நேரங்களில் இவை (பேப்பர் தயாரிப்பாளர்கள், சுண்ணாம்புக் கலவை செய்வோர் போன்ற) புதிய தொழில்களை உருவாக்கியதோடு, மற்ற சிலருக்கு புதிய கருவிகளைப் பயன்படுத்துவதை தெரிந்து கொள்ள வழிவகுத்தது. கைவினைஞர்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிப்பதன் தேவையை இது சுட்டிக் காட்டியது என்றும் பொதுவாகக் கூறலாம். அதனோடு கூடவே, இந்திய வரலாற்றில் மூன்றாவது ‘நகர மயமாக்கல் புரட்சி’யையும் கொண்டு வந்தது என்றும் குறிப்பிடலாம்.

இந்தப் புதிய சூழ்நிலைகளின் அழுத்தத்தின் விளைவாக தொடக்கத்தில்  அடிமை வியாபாரம் பெருக வழிவகுத்தது. அதைப் போன்றே 13-14-ம் நூற்றாண்டுகளில் நகர்ப்புற உழைப்பாளிகளில் கணிசமான எண்ணிக்கையினர் அடிமைத்தொழிலாளிகளாக தோன்றவும் வழி வகுத்தது. (அலாவுதீன் கில்ஜியின் கீழ் 50,000 பேர், ஃபிரூஸ் துக்ளக்கின் கீழ் 1,80,000 என) சுல்தான்களின் நிர்வாகத்தில் அடிமைகளின் எண்ணிக்கை கணிசமாக இருந்தது. அடிமைகளின் விலையை குறிப்பிடுவதன் மூலம் விலைவாசியின் அளவை பரணி மதிப்பிடுகின்றார். அடிமைகள் நீக்கமற எங்கும் நிறைந்தவர்களாக இருந்தனர். நடைமுறையில் அடிமைகள் சாதியற்றவர்களாக, இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டவர்களாக, எந்தவித வேலையையும் செய்யப் பணிக்கப்பட்டவர்களாகவும், எந்தத் தொழிலையும் கற்றுக் கொள்ள கடமைப்பட்டவர்களாகவும் இருந்தனர். காலப்போக்கில் இவர்களே குடியேறிய கைவினைஞர்களோடு கூடவே, முஸ்லீம் கைவினைஞர்கள், உழைப்பாளி பிரிவினரையும் உருவாக்கியிருக்க வாய்ப்புண்டு. அதே போன்று காலம் செல்லச் செல்ல சுதந்திரமானவர்களும் கூட குறிப்பாக சாதிப் பிரிவுகளில் சில பகுதியினர் உயர்ந்த அந்தஸ்தை நாடியோ அல்லது அதற்கு முன்பு அவர்கள் செய்வதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்த தொழில்களை மேற்கொள்ள விரும்பியும் தங்களின் சொந்த அமைப்பிலிருந்து விலகி மதம் மாறினர். இவ்வாறுதான் காலப்போக்கில் கணிசமான முஸ்லீம் மக்கள் தொகை நாட்டில் அதிகரித்தது.45

எனினும் இந்த இனத்தவர்களின் மீதும் சாதியானது தனது செல்வாக்கை தொடர்ந்து செலுத்தி வந்தது. 19-ம் நூற்றாண்டிலிருந்து பெறப்பட்ட அவர்களின் நடைமுறைகளை பரிசீலித்தோமெனில், நெசவாளர்கள், இறைச்சி வியாபாரிகள், நாவிதர்கள் மற்றும் இதர வகுப்பினரிடையே தங்கள் இனக்குழுவிற்கு உள்ளேயே திருமணம் செய்து கொள்ளும் போக்கு வலுவாக இருந்ததைக் காண முடிகிறது. அடிமட்டத்தில் உள்ள சாதியினர் முஸ்லீம்களிடையே காமின் வகுப்பினராக தங்களை மாற்றிக் கொள்கின்றனர். இவர்கள் தீண்டத் தகாதவர்களாக கருதப்படவில்லை எனினும் தனியாக வைக்கப்பட்டு வெறுப்புடன் நோக்கப்பட்டனர். இருந்தபோதிலும் சாதிய கட்டமைப்பின் மிக அடிப்படையான வடிவத்திற்கு அப்பாற்பட்டவர்களாகவே முஸ்லீம் மக்கள் பிரிவினர் இருந்து வந்தனர் என்று கூறுவது சரியாகவே இருக்கும். இருந்தபோதிலும் இந்தக் கட்டமைப்பு மிகவும் பலவீனமானதாகவே இருந்தது. ஏனெனில் மேற்கொள்ளும் தொழிலில் மாற்றங்கள், ஒரே இனக்குழுவிற்குள் திருமணம் செய்து கொள்வது என்ற முறையிலிருந்து பிறழ்வது ஆகியவையும் நடைபெற்று வந்தன. 46 வேறு வகையில் சொல்வதெனில், கணிசமான அளவிற்கு இடம் மாறுவதென்பது தொடர்ந்து இருந்து வந்தது.

இவ்வாறு சாதியற்றவர்களாக இருந்த கணிசமான மக்கள் தொகையினர் சாதிய அமைப்பை வலுவிழக்கச் செய்தார் என்று கூறி விட முடியாது. உண்மையில் நிலவி வந்த சாதி அமைப்பிற்கு ஊறு விளைவிக்காத வகையிலான தொழில்களுக்கும் இத்தகைய புதிய தொழில்களுக்கும் தேவையான தொழிலாளர்களை தயார் நிலையில் வைத்திருப்பதன் மூலமே இந்த மக்கள் பிரிவினர் வலுப்பெற்றிருக்க வாய்ப்புண்டு. எனினும் மாக்ஸ் வெபர் கருதுவது போல இடம் மாற முற்றிலும் திறனற்றதாக சாதிய அமைப்பு இருந்ததா என்பது சந்தேகத்திற்குரியதே. நடைமுறையில் சாதிய அமைப்பானது (மனுவின்) சட்ட நூலின் அடிப்படையில் எப்படி செயல்பட்டிருக்க வேண்டும் என்று ஒருவர் நினைக்கிறாரோ அதிலிருந்து பெருமளவிற்கு வேறுபட்ட வகையில்தான் அல்லது டுமாண்ட் கூறுகின்ற அதன்  ‘தத்துவார்த்த’ நிலையிலிருந்து வேறுபட்ட வகையில்தான் இருந்தது என மோரிஸ் டி மோரிஸ் குறிப்பிடத்தக்க ஓர் ஆய்வுரையில் வாதிட்டிருந்தார்.47 ஒரு பிரிவினர் புதிய தொழில்களை மேற்கொள்வதற்கு ஏற்றவகையில் சாதி பிரிக்கப்பட்டது. புகுசாவா 18-ம் நூற்றாண்டு மகாராஷ்ட்ராவில் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட ஒரு சாதி என்ற வகையில் தையல் கலைஞர்கள் சாயத்தொழிலை மேற்கொண்டதையும் மற்றொரு பிரிவினர் நீலச் சாயத்தொழிலை மேற்கொண்டதையும்  அவர்கள் தங்கள் இனக்குழுவிற்குள்ளேயே திருமண உறவுகளை மேற்கொண்டதையும்  சுட்டிக் காட்டியிருந்தார்.48 வரலாற்று ரீதியான ஒரே உதாரணமாக விளங்குவது 8-ம் நூற்றாண்டில் சிந்து பகுதியில் சண்டாளர்களைப் போன்ற இனமாக கருதப்பட்டு வந்த ஜாட் இனப்பிரிவினர் (அல்பரூனி குறிப்பிடுவதைப் போல) 11-ம் நூற்றாண்டில் சூத்திர சாதியினராக உயர்த்தப்பட்டு, 17-ம் நூற்றாண்டில் (வைசிய அந்தஸ்து பெற்ற) தனிச்சிறப்பான விவசாய குடிமக்களாக மாற்றம் பெற்றனர். (தபிஸ்தானி –இ- மஸாஹிப்)49 இவர்களின் விவசாயத்தை நோக்கிய இந்த மாற்றம் என்பது சமஸ்கிருத மயமாக்கல் என்ற செயல்முறையோடு இணைந்ததாக இருக்கக் கூடும். இந்தச் செயல்பாடு தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. ஏனெனில் 17-ம் நூற்றாண்டில் ஜாட்களில் ஒரு பிரிவினர் ஜமீன்தார்களாக உருமாறத் தொடங்கியதோடு, ராஜபுத்திரர்கள் என்ற அந்தஸ்தையும் பெறத் தொடங்கினர்.

மேலும் இத்தகைய சமஸ்கிருத மயமாக்கல் தோல்வியுற்றபோதோ அல்லது அது மிக மெதுவாக செயல்பட்டு வந்தபோதோ, ஒரே கடவுளுக்கான இயக்கங்கள் பற்றி நாம் கேள்வியுறத் தொடங்குகிறோம். இந்த இயக்கங்கள் சாதிய அமைப்பு என்ற தத்துவத்தை பழிப்பவையாகவும் அமைகின்றன. இஸ்லாம் மதத்தின்  ஒரே கடவுள் என்ற நம்பிக்கை மற்றும் முஸ்லீம் இனத்தவரின் சட்டபூர்வமான சமத்துவம் ஆகியவை இத்தகைய இயக்கங்களின் மீது குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்தியிருக்கவும் கூடும். எனினும் அதே காலத்தில் நிலவிய இஸ்லாமிய பரப்புரைகளில் காணப்படுவதை விட அதிகமான அளவில் சமத்துவத்தை வலியுறுத்துவதாகவும், சாதி அமைப்பு, சடங்குகள் ஆகியவற்றை பின்பற்றுவதை கண்டனம் செய்வது ஆகியவற்றுக்கு அழுத்தம் தருவதாக இந்த இயக்கங்கள் அமைந்திருந்தன. இத்தகைய முழக்கங்களை பரப்பியவர்கள் பெரும்பாலும் கீழ்த்தட்டு சாதிகளைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். நாமதேவ் ஒரு அச்சுக் கலைஞராகவும், கபீர் ஒரு நெசவாளியாகவும், ரவிதாஸ் கழிவுகளை அகற்றுபவராகவும், செயின் ஒரு நாவிதராகவும், தாது ஒரு பருத்திவிதைகளை அகற்றுபவராகவும், தன்னா ஒரு ஜாட் இன விவசாயியாகவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய கீழ்நிலை சாதிகளை சேர்ந்த பக்தர்களுக்கு கடவுளின் தனிச்சிறப்பான அருள் இருப்பதாக சீக்கியர்களின் ஐந்தாவது குருவான அர்ஜுன் தன்னா ஜாட் என்ற பெயரில் இயற்றப்பட்ட அழகானதொரு கவிதையில் வலியுறுத்துகிறார். (பாந்த் என்று அழைக்கப்படும்) இத்தகைய பிரிவிற்கான கதவுகள் அனைத்து சாதியினருக்கும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. (கபீர் தாஸை ஓரளவிற்குப் பின்பற்றி வந்த குழுவாக 17-ம் நூற்றாண்டில் எழுச்சி பெற்ற) சத்னாமி பிரிவில் ஒரு விவரிப்பின்படி பொற்கொல்லர்கள், தச்சர்கள், தூய்மைப்பணியாளர்கள், தோல் தொழில் செய்வோர் ஆகியோரும், 50 மற்றொரு விவரிப்பின்படி விவசாயிகளும், சிறுமூலதனம் உடைய வியாபாரிகளும்51இருந்தனர். 17-ம் நூற்றாண்டில் சீக்கிய வகுப்பில் பெரும்பாலும் ஜாட் இன விவசாயிகள் இருந்தனர். அடுத்த நூற்றாண்டின் தொடக்கத்தில்  ‘இந்துஸ்தானத்தில் இதை விட அழுக்கான இனத்தவர் என்று இல்லாத வகையில் மிகவும் கீழ் நிலையில் உள்ள தூய்மைப் பணியாளர், தோல் பணியாளர் போன்றவர்களுக்கு’ அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டது.52 இந்த சீக்கியப் பிரிவினரின் நடைமுறைகள் இனக்குழுவிற்கு எவ்வித சாதி வேறுபாடுகளையும் முற்றிலுமாக தடை செய்தன. சத்னாமி பிரிவினரிடையே நிலவி வந்ததைப் போலவே இந்த இனக்குழுக்களில் அறநூல்களில் வகுக்கப்பட்டதைப் போல ஒரே இனத்திற்குள் திருமணம் செய்து கொள்ளும் முறையைப் பின்பற்றும் போக்கு உருவானது.53 இதன் ஒட்டுமொத்த விளைவு என்னவெனில் சாதியக் கட்டமைப்பில் இருந்து தங்களைப் பின்பற்றுவோரை கவர்ந்திழுத்து வந்த மத ரீதியான இனக்குழுக்கள் உருவாக்கப்பட்டதே ஆகும். எனினும் இந்தப் பிரிவினர் மீண்டும் அந்தக் கட்டமைப்பிற்குத் திரும்பியபோது அதிலிருந்து வெளியேறியபோது இருந்ததை விட உயர்ந்த ‘படிநிலை’யை அடைந்தனர். கர்நாடகாவில் லிங்காயத்துகளுக்கு ஏற்பட்டதைப் போல இத்தகைய செயல்கள் ஏற்கனவே நடைபெற்றுள்ளன. 16,17-ம் நூற்றாண்டில் உருவான இத்தகைய இயக்கங்கள் சாதிய அமைப்பை ஒழிக்காத போதிலும் அதில் இத்தகைய சரிகட்டல்களை ஏற்படுத்தின. 

எனவே இடைக்கால இந்தியாவில் வர்க்கச் சுரண்டலுக்கான அமைப்பின் முக்கியமானதொரு தூணாக சாதிய அமைப்பு தொடர்ந்து நீடித்து வந்தது. நாம் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று, இதில் பெரிதும் பயனடைந்தவர்கள் ஆளும் வர்க்கங்களாகவே இருந்தனர். இடைக்காலத்தைப் பொறுத்தவரையில் முதலில் பிரபுக்களும், அடுத்து கிராமப்புற மேல்தட்டு வர்க்கத்தினரான ஜமீன்தார்களுமே இதனால் பயனடைந்தனர். இந்த ஜமீன்தார்களால் அரசியல் கட்டமைப்பு எந்த அளவிற்கு நிலைத்திருக்கிறதோ அந்த அளவிற்கு சாதி என்பதும் முக்கியமானதாக இருந்தது. ஏனெனில் வலிமையின் மூலம் தங்கள் நிலையை நீடித்து வந்த ‘மேலாதிக்க சாதியினராகவே’ இந்த ஜமீன்தார்கள் பெருமளவில் இருந்தனர்.  ‘அயினி அக்பரி’  (1595-96) நூலில் முகலாய பேரரசு குறித்த விரிவான புள்ளிவிவரப் பட்டியலை அளிக்கும்போது அபுல் பாசல் ஒவ்வொரு பகுதியின் ஜமீன்தார்களின் சாதியை குறிப்பிட்டிருந்தார். இந்தத் தகவலைத் தொடர்ந்து அவர்கள் எவ்வளவு பெரிய பரப்பளவை வைத்திருந்தார்கள் என்பதற்குப் பதிலாக அவர்களிடம் இருந்த படைவீரர்கள், குதிரைகள், காலாட்படையினர் ஆகியோரின் எண்ணிக்கையையே குறிப்பிட்டிருந்தார்.54 எனவே ராணுவல் வலிமைக்கும் சாதிய மேலாதிக்கத்திற்கும் இடையே சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் தொடர்பு இருந்தது.

மொகலாய இந்தியப் பொருளாதாரம் குறித்த விரிவான விளக்கங்களை அளித்த டபிள்யூ.எச். மோர்லேண்ட் சாதியைப் பற்றி மிகக் குறைவாக குறிப்பிட்டிருப்பது பற்றி பாரிங்க்டன் மூர் ஜூனியர் வியப்பைத் தெரிவித்திருந்தார்.55 இது எனது சொந்த நூலுக்கும் பொருந்துவதே ஆகும். வரியை வசூலிப்பவருக்கும் விவசாயி அல்லது  சிறு உற்பத்தியாளர், வர்த்தகர் போன்றோருக்கும் இடையேயான சிறப்பான உறவு போன்ற விஷயங்களை ஒருவர் காணும்போது சாதி உடனடியாக கண்ணுக்குத் தென்படுவதில்லை. இந்த உறவுகளுக்கான களத்தில் பெரும்பகுதியை வழங்குவதாகவே அவை விளங்குகின்றன. விவசாயத்தின் அடிப்படையிலான வர்க்கங்களை அது ஒன்றுக்கொன்று முரணான இரண்டு முகாம்களாகப் பிரிக்கிறது. அதாவது சாதி அடிப்படையிலான விவசாயிகள் மற்றும் அடித்தட்டு தொழிலாளிகள். சிறு உற்பத்தியில் வேலைப் பிரிவினையை அது நிலைநிறுத்துகிறது. எனினும் இந்தச் செயல்பாடுகள் இடைக்கால இந்தியாவில் (1200-1750) உழைப்புச் செயல்முறையின் வடிவத்தை சாதி வரையறுத்தது என்ற முடிவுக்கு நாம் வர முக்கியமானதாக அமைகின்றதா என்பது கேள்விக்குரியதே. நாம் ஏற்கனவே பார்த்ததைப் போல, இடம் பெயர்வது, போட்டித்தன்மை போன்ற அம்சங்கள் ஓரளவிற்கு இருந்தன. இடைக்காலப் பகுதியில் பொருளாதார, அரசியல் அமைப்புகளில் ஈரான் இந்தியாவை ஒத்ததாக இருந்த போதிலும் சாதி அமைப்பு என்ற ஏற்பாடு இல்லாததாகவே இருந்தது. ஒன்றில் சாதியும் மற்றொன்றில் அது இல்லாத நிலையின் காரணமாகவே மொகலாய இந்தியாவும் சஃபாவிட் தலைமையிலான ஈரானும் இரண்டு வேறுபட்ட சமூக ஏற்பாடுகளைக் கொண்டவை என்று நம்மால் கூறிவிட முடியுமா? இந்த விஷயம் குறித்த எந்தவொரு கருத்தும் மேலோட்டமானதாகவே தற்போது இருக்க முடியும். இந்த விஷயம் குறித்து மேலும் விவாதங்கள் எழும் என்று நாம் நம்பலாம்.

இடைக்கால இந்தியாவில் சாதி என்ற கேள்வியிலிருந்து நாம் போவதற்கு முன்பாக ஒரே ஒரு வார்த்தை. இடைக்கால இந்திய சமூகத்தைப் போன்ற எந்தவொரு வர்க்க அமைப்பும் உள்ளீட்டான ;நெருக்கடியை உருவாக்கியே தீரும்; குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டங்களில் அது வெளிப்படும். 11-ம் நூற்றாண்டில் வங்காள எருமைகளின் மீது சவாரி செய்யும் கைவர்த்தாக்களின் எழுச்சி முதல் பல்வேறு விவசாயிகளின் எழுச்சிகளை உள்ளடக்கிய வரலாற்றைக் கொண்டதாகவே இந்தியா இருக்கிறது.56 எனினும் இத்தகைய விவசாயிகளின் எழுச்சிகளுக்கான செழுமையான ஆதாரங்களை நாம் 17-ம் நூற்றாண்டிலிருந்தே பெறுகிறோம். ஐரோப்பா அல்லது சீனாவில் நடைபெற்ற இதே போன்ற எழுச்சிகளை ஒப்பிடும்போது இந்த எழுச்சிகளின் மிகப்பெரிய பலவீனம் என்பது கலகக்காரர்களின் மிகவும் பின் தங்கிய வர்க்க உணர்வே ஆகும். இத்தகைய விவசாய கலகக்காரர்கள் ஜமீன்தார்களின் சேவகர்களாக அல்லது (சீக்கியர்கள், சத்னாமிகள் போன்ற) மதரீதியான குழு உறுப்பினர்களாக அல்லது (ஜாட்கள், ஆஃப்கன்கள் போன்ற) சாதிப் பிரிவினராக, இனக்குழுவினராகவே உள்ளனர். அவர்கள் தங்களை விவசாயிகளாக காண்பதில்லை; அல்லது விவசாயிகளின் எந்தவொரு பிரிவினருக்குமான பொருளாதார அல்லது சமூக கோரிக்கைகளை எழுப்பத் தவறுகின்றனர். இத்தகைய தவறுக்கான காரணத்தின் ஒரு பகுதியாக சாதி அமைகிறது என்றே எனக்குத் தோன்றுகிறது. ஒரு சாதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றொரு சாதியைச் சேர்ந்த விவசாயியுடன் பொதுவான தளத்திற்கு வருவதை அது தடுக்கிறது. இதன் விளைவாக விவசாயிகள் ஒரு வர்க்கத்தினர் என்ற சுய புரிதல் வளர்ச்சி பெறுவதை எல்லா நேரங்களிலும் அது குறைத்துவிடுகிறது.

VI

இதற்கு முந்தைய பக்கங்களில் தரப்பட்ட சாதியின் வரலாறு ஓரளவிற்கு நவீன காலத்திற்கு நெருக்கமாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதை மேலும் நீட்டிக்க விரும்பவில்லை. எனினும் முடிவாக சில கருத்துக்களை கூறலாம் என நினைக்கிறேன்.

பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவுகளைப் பற்றி விவாதிக்கும்போது 1853-ம் ஆண்டில் “இந்தியாவின் முன்னேற்றத்தையும், இந்தியாவின் வலிமையையும் தடுப்பதில் தீர்மானகரமானவையாக செயல்படுகின்ற இந்திய சாதிகளின் மீது நிலைநின்றுள்ள பாரம்பரியமான வேலைப்பிரிவினையை ரயில்வே அமைப்பிலிருந்து உருவாகவிருக்கும் நவீன தொழில்துறை கரைத்துவிடும்” என்று மார்க்ஸ் முன்னறிந்து கூறியிருந்தார். மிகுந்த நம்பிக்கையுடைய வார்த்தைகள் என்ற வகையில் (லூயிஸ் டூமாண்ட் போன்றவர்கள்) இந்த கருத்தை கேலி செய்வது வழக்கமாக மாறிவிட்டது.57 எனினும் சாதி அமைப்பின் பொருளாதார அடித்தளத்தை நவீன கால நிலைமைகள் பெருமளவிற்கு அசைத்துள்ளன என்பதை மறுப்பது ஒரு வீண் வேலையே ஆகும். தொழிற்சாலை தளத்தில் பல்வேறு சாதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒன்றாக இணைகின்றனர் என்பதால் மட்டுமல்ல; இது நடைபெறத் தொடங்கியவுடனேயே பாரம்பரியமான வேலைப்பிரிவினை என்பது சரியத் தொடங்கி விடுகிறது. இதைவிடவும் முக்கியமானது என்னவெனில் தொழில் முறையிலான, அல்லது கைவினைஞர் சாதிகளின் கைவேலைப்பாடுகள் அனைத்தையும் தொழிற்சாலை உற்பத்தி முறை முற்றிலுமாக அழித்து விட்டது. மார்க்ஸ் இதைப் பற்றி எழுதத் தொடங்குவதற்கு முன்பாகவே, லங்காஷயர் துணியை இந்தியா இறக்குமதி செய்யத் தொடங்கியதில் இருந்தே இந்தச் செயல்முறை தொடங்கி விட்டது. மற்றொரு அம்சத்தின் விளைவாகவும் சாதிய அடிப்படையிலான வேலைப்பிரிவினை வலுவிழந்தது. சுரேந்திர ஜே. பட்டேல் சுட்டிக் காட்டியதைப் போல, விவசாயம் வணிகமயமானது பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகளை நிலமற்ற தொழிலாளிகளாக மாற்றியுள்ளது. இதன் விளைவாக நிலமற்ற நிலை என்பது பெரும்பாலான பகுதிகளில் அடித்தட்டு சாதியினரே இத்தகு பிரிவினரில் பெரும் எண்ணிக்கையானவர்களாக இருந்தபோதிலும், அத்தகைய சாதியினருக்கு மட்டுமே சொந்தமான ஒரு நிலையாக, நிலமற்ற நிலை இப்போது இல்லை.58

எனினும் சாதிய அமைப்பின் பொருளாதார அடித்தளம் உலுக்கப்பட்டுள்ளது என்ற போதிலும், அதன் தத்துவம் குறித்தும் அதே போன்று நம்மால் கூறமுடியுமா? ஒரே இனத்திற்குள் திருமணம் செய்து கொள்ளும் முறை சாதியை தக்கவைப்பதாக தொடர்ந்து நீடிக்கிறது. பரஸ்பர அடையாளங்கள், உள்வாங்கல்கள் ஆகியவற்றின் மூலம் சாதிகள் பகுதிவாரியாக விரிவடைந்து கொண்டே போகும் செயல்முறையும் இருந்து வருகிறது. ஒரு வகையில் நவீனப்படுத்தப்பட்ட சமஸ்கிருதமயமாக்கலானது இந்த சாதி அமைப்பில் முன்பு பாதிக்கப்பட்டவர்களையே அதற்கு ஆதரவாகப் பேசுபவர்களாக மாற்றியுள்ளது. நிலமற்ற உழைப்பாளிகளுக்கும் நிலத்தை சொந்தமாகக் கொண்ட வர்க்கங்களுக்கும் இடையே அவர்களின் நலன்கள் குறித்த மோதல்கள் தொடர்ந்து நீடிக்கும் வரை, பட்டியல் இனத்தவர் என்று பெயரளவில் நாம் அழைக்கின்ற தீண்டத் தகாதவர்களுக்கு எதிராக அனைத்து சாதிகளையும் ஒன்றிணைப்பதற்கான ஊக்கம் நிலவுகிறது. நமது நாட்டில் மிகவும் முக்கியமான தீர்மானகரமான அம்சமாக சாதியே தொடர்ந்து நீடிக்கிறது என்றே கூறலாம்.

தங்கள் பொருளாயத, ஆன்மீக விடுதலைக்கான போராட்டத்தில் இந்திய மக்களை ஒன்றுபடுத்த வேண்டும் என்று விரும்பும் அனைவருக்கும். நமது மக்களின் மனங்களை தொடர்ந்து ஆட்டிப் படைத்து வரும் சாதியின் வீச்சை முற்றிலுமாக அகற்றுவதற்கு மேலும் அதிகமாக முயற்சிக்க வேண்டும் என்பதே மிக முக்கியமானதாக அமைகிறது. எனவே இந்தியாவின் முன்னேற்றத்திற்குத் தீர்மானகரமான தடையாக உள்ளதாக மார்க்ஸ் குறிப்பிட்ட சாதியை, அதன் பிறகே நம்மால் அகற்றவும், அது இருக்க வேண்டிய இடமான வரலாற்றின் ஒரு பக்கமாக அதைத் தள்ளிவிடவும் முடியும்.  

(நிறைவுற்றது)

அடிக்குறிப்புகள்:

  • பார்க்க ஜே.எச். ஹட்டன், இந்தியாவில் சாதி, நான்காம் பதிப்பு, பம்பாய், 1969 (மறுபதிப்பு), பக். 71. தொடர்ந்து வரும் கருத்து.
  • எனது மேற்கோள்கள் அனைத்துமே 1972-ம் ஆண்டு லண்டனில் வெளியான பலாடின் பதிப்பில் இருந்து தரப்பட்டவை.
  • ஹோமோ ஹியார்க்கியஸ், பக். 300 (‘படிநிலை அமைப்பு பிராமணர்களில்தான் முடிவடைகிறது’)
  • மேற்குறித்த நூல், பக். 288.
  • மேற்குறித்த நூல், பக். 300.
  • மேற்குறித்த நூல், பக். 262, 274. இதன்படி, டூமாண்ட்-ஐப் பொறுத்த வரையில் ‘இந்துக்களும் முஸ்லீம்களும் இரண்டு முற்றிலும் வேறுபட்ட சமூகங்களை உருவாக்கியுள்ளனர். (பக். 257)
  • மேற்குறித்த நூல், பக். 209.
  • மேற்குறித்த நூல், பக். 242.
  • மேற்குறித்த நூல், பக். 230-231.
  • மேற்குறித்த நூல், பக். 192-195.
  • மாற்றங்கள் ஏதுமற்ற சாதியக் கட்டமைப்பு குறித்த தன் கருத்துரையில் இந்த வளர்ச்சிப் போக்கு குறித்து அறிந்தவராக டூமாண்ட் தோற்றமளிக்கவில்லை. மேற்குறித்த நூல், பக். 265-66.
  • எனவே டூமாண்ட் இப்போது சொல்லலாம்: ‘சாதிய அமைப்பில் அரசியல்-பொருளாதார அம்சங்கள் ஒப்பீட்டளவில் இரண்டாம் பட்சமானதாக, தனித்தவையாகவே உள்ளன.’ மேற்குறித்த நூல், பக். 283.
  • மேற்குறித்த நூல், பக். 260, 331-332. ஒப்பிடுக கோசாம்பியின் ‘சாதி என்பது உற்பத்தியின் தொடக்க நிலையில் அமைந்த ஒரு வர்க்கமே’ என்ற கருத்துரை. பண்டைய இந்தியாவின் கலாச்சாரமும் நாகரீகமும் – வரலாற்றுபூர்வமான ஒரு சித்திரம், லண்டன், 1965, பக். 50.
  • இந்திய வரலாற்று ஆய்வுக்கான ஓர் அறிமுகம் நூலில் கோசாம்பி. பம்பாய், 1956, பக். 25.
  • நரேந்திர வாக்லே, புத்தரின் காலத்தில் சமூகம், பம்பாய், 1966, பக். 122-123.
  • மேற்குறித்த நூல், பக். 103-104.
  • கோசாம்பி, இந்திய வரலாற்று ஆய்வுக்கான ஓர் அறிமுகம், பக். 122.
  • மேற்குறித்த நூல், பக். 121-123.
  • பார்க்க கோசாம்பி, பண்டைய இந்தியாவில் கலாச்சாரமும் நாகரீகமும், பக். 15.
  • பார்க்க விவேகானந்த ஜா, இந்திய வரலாற்று பரிசீலனை (இந்திய வரலாற்று ஆய்வு கழகம்), தொகுதி 2 (1), பக். 22-23.
  • ஏ. கோஷ் அவர்களின் தொடக்க கால இந்திய வரலாற்றில் நகரம் (சிம்லா, 1973) என்ற நூல் பற்றி பேரா. ஆர்.எஸ். சர்மாவின் விமர்சனம்(இந்திய வரலாற்று ஆய்வு கழகம்), தொகுதி 1 (1), பக். 98-103.
  • வி. கார்டன் சில்டே, சமூக பரிணாமம், சர் மோர்டிமர் வீலர் அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. 1963, பக். 110.
  • பார்க்க சர் ஜான் மார்ஷல், தக்‌ஷ சீலா, தொகுதி 2, கேம்ப்ரிட்ஜ், 1952, பக். 486 (அரவை இயந்திரம் பற்றி) மற்றும் பக். 555 (கத்தரிக்கோல்)
  • ஆர். ஃபிக், புத்தரின் காலத்தில் வடகிழக்கு இந்தியாவில் சமூக அமைப்பு, ஆங்கில மொழிபெயர்ப்பு, கல்கத்தா, 1920, பக். 280-285.
  • கோசாம்பி, இந்திய வரலாற்று ஆய்வுக்கான ஓர் அறிமுகம், பக். 236-237.

[42] அல்பரூனியின் இந்தியா, முதல் தொகுதி, பக். 100.

[43] கோசாம்பி, அறிமுகம், பக். 370.

[44] பார்க்க இர்ஃபான் ஹபீப்-இன் இடைக்கால இந்தியாவில் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், வரலாறு குறித்த ஆய்வுகள், தொகுதி 2, எண். 1 (1980) பக். 15-39.

[45] இந்தப் பத்தி கேம்ப்ரிட்ஜ் எகனாமிக் ஹிஸ்டரி ஆஃப் இந்தியா என்ற 1982- கேம்ப்ரிட்ஜ் வெளியிட்ட நூலின் முதல் தொகுதியில் பக். 89-93-ல் என்னால் ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்த சான்றுகளை அடிப்படையாகக் கொண்டது.  அதில் இதற்கான ஆதாரங்களுக்கான பார்வைநூல்கள் பற்றி விவரமாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

[46]  ‘ பிராமணியத்தை பெருமளவிற்கு இஸ்லாம் முந்திச் சென்ற’ மேற்குப் பகுதி பஞ்சாபில் உள்ள நிலைமைகள் குறித்து டி. இப்பெர்சென் வெளியிட்ட கருத்துக்களைப் பார்க்க. பஞ்சாப் சாதிகள், லாகூர், 1916, பக். 10-11.

[47] மோரிஸ் டி மோரிஸ், தெற்காசியாவில் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருந்த மதிப்பீடுகள், ஜர்னல் ஆஃப் எகனாமிக் ஹிஸ்டரி, தொகுதி XXVII, பக். 588-607.

[48] ஜர்னல் ஆஃப் எகனாமிக் ஹிஸ்டரி, தொகுதி IX(1), (1968), பக். 39 அடிக்குறிப்பு.

[49] ஹர்பன்ஸ் சிங் மற்றும் என்.ஜி. பேரியர் ஆகியோர் தொகுத்த பஞ்சாப் நேற்றும் இன்றும் – டாக்டர் கண்டா சிங் நினைவாக எழுதப்பட்ட கட்டுரைத் தொகுப்பு, பாட்டியாலா, 1976, இதில் பக்கம் 92-103-ல் பஞ்சாப் மற்றும் சிந்து பகுதியில் ஜாட்கள் என்ற எனது ஆய்வுக் கட்டுரையில் இந்த சான்று விரிவாக ஆராயப்பட்டிருந்தது.  

[50] சாகி முஷ்டாதிட் கான், மாசிர் அலாம்கிரி, தொகுப்பு ஆகா அகமத் அலி, கல்கத்தா, 1870-73, பக். 14-15.

[51] காஃபி கான், முண்டகாபுல் லுபாப், தொகுப்பு கபிருதீன் அகமதி, கல்கத்தா, 1860-70, தொகுதி 2, பக். 252.

[52] முகம்மத் ஷஃபி வாரித், மிராதுல் வாரிதாட், பிரிட்டிஷ் நூலகம்,(லண்டன்), கையெழுத்துப் பிரதி, எண்: 6579, அடிக்குறிப்பு எண். 117b.

[53] இந்தக் கட்டுப்பாடுகளை உள்ளடக்கிய சத்னாமி அறநூலான போதி கியான் பானி சத் சத்னாமி லண்டனில் உள்ள ராயல் ஏசியாடிக் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கையெழுத்துப் பிரதி ஹிந்தியில். வேறு பிரதி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

[54]  ஜாரெட் மொழிபெயர்த்த அயினி அக்பரியில் இந்தக் கருத்து விடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர் வகைப்படுத்தலுக்கான ஏற்பாட்டை மாற்றியதன் விளைவாக இத்தவறு நிகழ்ந்துள்ளது. முகலாய இந்தியாவில் விவசாய அமைப்பு என்ற எனது நூலின் பக். 139-ஐ காண்க.

[55] சர்வாதிகாரம், ஜனநாயகம் ஆகியவற்றின் சமூகத் தோற்றங்கள், 1977, பக். 317-18.

[56] ஆர்.எஸ். சர்மா, இந்திய நிலப்பிரபுத்துவம், இரண்டாம் பதிப்பு, டெல்லி, 1980, பக். 220.

[57] ஹோமா ஹிரார்கஸ், பக். 265.

[58]சுரேந்திர ஜே. பட்டேல், இந்தியா- பாகிஸ்தானில் விவசாயத் தொழிலாளர்கள், பம்பாய், 1952, குறிப்பாக பக். 9-20, 63-65-ஐப் பார்க்கவும்.

சமகாலத்தில் சாதியும், இட ஒதுக்கீடும்…

என். குணசேகரன்

(ஆனந்த் டெல்டும்டே நூலை முன்வைத்து)

இந்திய நாட்டின் முக்கிய சிந்தனையாளராகத் பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே இயங்கி வருகின்றார். அவரது “சாதிக் குடியரசு”என்ற நூல் அதிக விவாதங்களையும் விமர்சனங்களையும் எழுப்பியது சமகால சாதி அடுக்கின் இயங்கு முறை, இட ஒதுக்கீடு, தலித் இயக்கம், இடதுசாரி இயக்கம் என பரந்த தளத்தில் தனது கருத்துக்களை முன்வைத்து விவாதிக்கின்றார்.

மார்க்சிய ஆய்வு முறையை கையாள்கிற சிந்தனையாளர் என்பதால் அவருடைய கருத்துக்கள் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்களின் விடுதலை என்ற நோக்கில் அமைந்துள்ளன.
இந்த நூலின் உள்ளடக்கத்தில் நவீன தாராளமயம், சாதிக்கும் வர்க்கத்திற்கும் உள்ள உறவு, மதச்சார்பின்மை கோட்பாட்டின் உண்மையான பொருள், இந்திய அரசின் சில தன்மைகள், இந்துத்துவ நிகழ்ச்சி நிரல் போன்ற பல சமகாலப் பிரச்சினைகளை புதிய கோணங்களில் டெல்டும்டே விளக்குகிறார்.
அவரது கருத்துக்கள் மிக நுட்பமானவை, உயர்ந்த தரம் கொண்டவை; எனவே அவை மார்க்சிய இயக்கச் செயல்பாட்டுக்கு தேவையானவை. மார்க்சிய நடைமுறை நோக்கில் அவரது கருத்துக்களை ஆய்வு செய்வது அவசியமாகிறது.

சாதி -இட ஒதுக்கீடு

நூலின் முதல் தலைப்பாக இட ஒதுக்கீடு பிரச்சினை பேசப்படுகிறது. இட ஒதுக்கீடு குறித்த டெல்டும்டேவின் கருத்துக்கள் ஆழமாக பரிசீலிக்கத் தக்கன. சாதி, இடஒதுக்கீடு எனும் இரண்டு சொற்களும் பொது விவாதத்தில் பின்னி பிணைந்திருக்கின்றன என்று ஆசிரியர் தனது விளக்கத்தை துவக்குகிறார்.

இட ஒதுக்கீட்டு முறையே சமூக நீதியின் உயர்ந்த இலக்கு என்பது போன்றும், அனைத்துக்கும் அதுவே நிரந்தரமான தீர்வு என்றும், பல முதலாளித்துவ அரசியல் கட்சிகள் தலைதெறிக்க பேசுகின்றனர்.
இந்த போலித்தனத்தையும், சுயநல அரசியலையும் தகர்க்கிற வகையில் தனது கருத்துக்களை அடுக்கடுக்காக முன்வைக்கிறார் ஆசிரியர்.

இன்றைய நிலையில் இட ஒதுக்கீட்டு முறை ஒரு பெரும் இடியாப்பசிக்கலாக மாறி விட்டது என்று கருதுகிறார் டெல்டும்டே. இந்தத் திட்டம் தவறான முறையில் உருவாக்கப்பட்டு, விளைவுகளைப்பற்றி கவலைப்படாமல் மனம்போன போக்கில் அமலாக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடும் டெல்டும்டே, இது ஆளும் வர்க்கங்களுக்குத்தான் அதிகம் பயன்பட்டுள்ளது என்கிறார். குறிப்பாக, தலித் மக்களில் ஒரு பிரிவினர் தவிர, பெரும்பகுதி தலித் மக்களுக்கு அது பயன்படவில்லை என்று ஆதாரங்களுடன் டெல்டும்டே முடிவுக்கு வருகிறார்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தினராகவும் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பகுதியினராகவும் உள்ள அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் இட ஒதுக்கீட்டு முறை இருந்திருக்க வேண்டும்; இந்த அடிப்படையில் அது வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, சாதி ஒழிப்பு என்கிற இலக்கை நோக்கிய பயணமாக அது இருந்திருக்க வேண்டும்.

ஆனால் தற்போது அது பெருமளவிற்கு சாதி அடையாளங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதனால், இந்தியாவில் சாதியும் இட ஒதுக்கீடும் என்றென்றும் நிரந்தரம் என்கிற முடிவுக்கு வருகிற சூழல் ஏற்பட்டுள்ளதாக டெல்டும்டே கருதுகிறார்.

சாதி அடையாளம் சமூக சமத்துவம் ஏற்படுத்தவும், சாதி ஒழிப்பை நோக்கி சமூகத்தை முன்னெடுத்துச் செல்லவும் தேவையான நிகழ்ச்சி நிரல் பற்றி எதுவும் சிந்திக்காமல் இட ஒதுக்கீட்டினையே முதன்மைப் பிரச்சனையாக்குவது நாட்டின் அடித்தட்டு மக்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும். டெல்டும்டே குறிப்பிடும் அத்தகைய மாற்று நிகழ்ச்சி நிரல் கம்யூனிஸ்டுகளிடம் மட்டுமே உள்ளது. அதனை கம்யூனிஸ்ட்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

நவீன தாராளமய சீர்திருத்தங்கள் இட ஒதுக்கீட்டினால் கிடைக்கும் பலன்களை குறைத்துள்ள நிலையில்் இட ஒதுக்கீட்டு கோரிக்கைகளும் தீவிரமாக எழுப்படுகின்றன. பல்வேறு மாநிலங்களில் எழுப்பப்படும் கோரிக்கைகள் குறித்தும் அவற்றை சந்தர்ப்பவாத நோக்கில் பயன்படுத்துகிற அரசியல் சக்திகளையும் டெல்டும்டே விரிவாக விளக்குகின்றார்.

பல்வேறு மாநிலங்களில் எழுப்பப்படும் இடஒதுக்கீட்டு கோரிக்கைகள் குறித்தும், அவற்றை சந்தர்ப்பவாத நோக்கோடு பயன்படுத்தும் அரசியல் இயக்கங்கள் குறித்தும், இதன் விளைவாக, பல்வேறு பிரிவினரிடம் சாதி அடையாளம் கெட்டிப்படுகிற நிலை தொடர்ந்து வருவதையும் டெல்டும்டே தனது நூலில் சுட்டிக்காட்டுகிறார்.

மதமும் சாதியும் உழைக்கும் வர்க்கத்தை பிளவுபடுத்துகிற வரலாறு கொண்டவை என்பதை குறிப்பிடுகிற டெல்டும்டே, அவற்றால். பயனடை வது முதலாளிகள் மற்றும் அவர்களோடு இணைந்து நிற்கும் அரசியல் சக்திகள்தான் என்பதை எடுத்துரைக்கின்றார். மக்கள் சிந்தனையிலிருந்து வாழ்வாதாரப் பிரச்சினைகளை விலக்கி வைத்திட மதமும் சாதியும் நல்ல கருவிகளாகப் பயன்படுகின்றன என்பதனை அனுபவ அடிப்படையில் அவர் விளக்குகிறார்.

குழப்பமான சொற்றொடர்

சமூக ரீதியிலும், கல்வி அடிப்படையிலும் பின்தங்கிய வகுப்பாருக்கு இட ஒதுக்கீடு அளித்திட அரசியலமைப்புச் சட்டம் வழிவகுக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு340-ல் பின்தங்கிய வகுப்பினர் (Backward classes) என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. ஆங்கிலத்தில் classes என்ற சொல்லுக்கு சாதி என்று பொருள் கொள்ள இயலாது. ஆனால் இந்த சொற்றொடர் “பிற்பட்ட சாதியினர்” என்கிற பொருளில்தான் பயன்பாட்டில் உள்ளது. இது ஒரு பெரும் குழப்பத்தை விளைவித்ததாக டெல்டும்டே கூறுகிறார் . இந்த குழப்பத்தை அரசியல் சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர் என்று கூறுகிறார்(பக்கம் 52).

இந்திய நாட்டைப் போன்ற மிகுந்த அசமத்துவ சமூக அமைப்பு கொண்டிருக்கின்ற நாட்டில் பின்தங்கிய நிலைமை என்பதனை வரையறுப்பது சிரமம். அனைத்து மக்களும் தாங்கள் பின் தங்கிய நிலையில் இருப்பதாக கூறிக் கொள்ள இயலும். சாதியம், மக்களை தலித், தலித் அல்லாதவர்கள் என்று கூறு போட்டு அரசியல் சுயநலமிகள் பலனடைய வாய்ப்பினை ஏற்படுத்துகிறது. பல பகுதிகளில் தலித்துகள், ஆதிவாசிகள்எந்த அளவிற்கு பின்தங்கிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ, அதே நிலைமைகளில்
தான் பிற்படுத்தப்பட்டோர் என்று வரையறுக்கப்படுகிற பிரிவினர் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட ஒரு சாதி என்கிற கருத்தாக்கம் அந்தப் பிரிவினரில் வறிய நிலையிலுள்ள மக்களையும்கூட, அதே சாதிக்
குள் இருக்கிற செல்வாக்கு மிக்க சக்திகளோடு ‘நமது சொந்தங்கள்” என்று ஒருங்கிணைய வழிவகுக்கிறது. அது மட்டுமல்லாது தலித் மக்களை எதிரிகளாகப் பார்க்கவும் அவர்களைத் தூண்டுகிறது.
எனவே, வாழ்வாதார சூழலை குறிப்பிடும் போது பின்தங்கிய நிலைமை என்று குறிப்பிட்டால் அது வர்க்க தன்மை குறித்து பேசுவ
தாகவே அமையும். வர்க்கம் என்பது மிக நாசுக்காக சாதி என்று அடையாளப்படுத்தப்பட்டுவிட்டது என்கிறார் டெல்டும்டே. வர்க்க ஒற்றுமையை கட்டுவதற்கு முயல்கிற அனைவரும் எதிர்கொள்ள வேண்டிய சவாலாக இது உள்ளது.

இட ஒதுக்கீட்டின் மூன்று வடிவங்கள்

தற்போதைய வடிவத்திலான இட ஒதுக்கீட்டு முறை எங்கிருந்து தொடங்கியது? வேலை, கல்வி ஆகியவற்றில் முன்னுரிமை அளிப்பதன் வழியாக ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பிரதி
நிதித்துவத்தை வளர்ப்பது என்கிற நோக்கத்திலிருந்து இட ஒதுக்கீட்டு முறை துவங்கியது. மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற பாராளுமன்ற அவைகள், கல்வித்துறை,
வேலைவாய்ப்பு என மூன்று வடிவங்களில் இட ஒதுக்கீடு அமலாக்கப்பட்டு வருகிறது. மூன்றிலும் அது எத்தகைய தாக்கத்தையும், சிக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை டெல்டும்டே விளக்குகிறார்.

சட்டமன்ற நாடாளுமன்ற இடங்களில் தலித் மக்களுக்கு இட ஒதுக்கீடு என்கிற முறை உள்ளது. தலித் அல்லாத இதர சாதிகளைச் சேர்ந்தவர்
களின் வாக்குகளை சார்ந்து தலித் உறுப்பினர் கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இயல்பாகவே தேர்ந்தெடுக்கப்படுகிற தலித் உறுப்பினர் பெரும்பான்மை சமூகத்தையும் அவர்கள் சார்ந்திருக்கிற கட்சியையும் சார்ந்தே செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இந்த நிலையில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் என்பதற்கான தர்க்க நியாயங்கள் தகர்ந்து போகின்றன என்கிறார் டெல்டும்டே. முதலில் இந்த ஒதுக்கீடு 10 ஆண்டுகள் வரை இருக்கும் என்று நிச்சயிக்கப்பட்டது .அதற்குப் பிறகு முறையான பரிசோதனை நடத்தி முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது தொடர்ந்து இயல்பாகவே அது நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையினால் பலன் பெற்றது ஆளுகிறவர்களே தவிர தலித் மக்கள் அல்ல என்று டெல்டும்டே வாதிடுகிறார். இந்தக் கருத்தில் பலருக்கு உடன்பாடு இல்லாமல் போகலாம் .

ஆனால் அரசியல் பிரதிநிதித்துவம் என்பதில் அனைவருக்கும் சம வாய்ப்பு என்கிற லட்சியத்தை அடைய சட்டமன்ற பாராளுமன்ற இடங்களில் சில இடங்களை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒதுக்கினாலே போதும் என்கிற கருத்து குறைபாடு கொண்டது. அடுத்து கல்வித் துறையில் நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீடு எந்த அளவிற்கு பயன்
பட்டிருக்கிறது என்பதிலும் டெல்டும்டே தனது கருத்துக்களை வெளிப்படுத்துகிறார். சமமான தரமான கல்வி வாய்ப்புகள் அனை
வருக்கும் கிடைப்பதற்கான ஒரு நிலை ஏற்படுகிறபோது இட ஒதுக்கீடு அர்த்தமற்றதாக ஆகிவிடும் என்று டெல்டும்டே அழுத்தமாக குறிப்பிடுகிறார்.

கார்ல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிட்டபோதே கல்வியில் சமமான வாய்ப்புகளை ஏற்படுத்தி, கல்வி அனைவருக்கும் கிடைக்கிற சமூகத்தை உருவாக்கும் கருத்தினை வெளிப்படுத்தி இருந்தார். கம்யூனிஸ்டுகளின் கல்வி குறித்த பார்வை இதிலிருந்தே துவங்குகிறது. டெல்டும்டேவும் இதனை வலியுறுத்துகிறார். கல்வியில் தனியார்மயம் அதிகரித்து வரும் நிலையில் இட ஒதுக்கீட்டினைப் புறக்கணிக்கிற போக்கும் தற்போது உள்ளது
வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என்கிற பிரச் சினை இந்தியாவின் தற்போதைய தொழிலாளர்கள் நிலைமைகளிலிருந்து ஆராயப்பட வேண்டும். நாட்டின் அமைப்பு ரீதியான துறைகளில் உள்ள தொழிலாளர்கள் மொத்தத் தொழிலாளர்களில் 6 சதவீதம் ஆகும். குறுகிய அளவில் உள்ள இந்த வாய்ப்பும் சுருங்கிக் கொண்டே வருகிறது. தொடர்ந்து அரசு மற்றும் அரசுத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில்தான் எல்லா சாதியினரும் தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று பெரும் கூச்சல் எழுப்பி போராடி வருகின்றனர்.

இதனையொட்டி டெல்டும்டே விரும்பத்தகாத ஒரு நிகழ்வு போக்கினைக் குறிப்பிடுகிறார். இட ஒதுக்கீட்டினால் ஒரு சில தலித்துகள் அல்லது ஒரு சில தலித் குடும்பங்கள் பலன் பெறுவதை காரணம் காட்டி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிராக வெறுப்புணர்வு தூண்டப்படுகிறது. காலம் காலமாக சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டு வரும் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் கொடுமைகள் மேலும் அதிகரித்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட தனி நபருக்கு அல்லது அவர் சார்ந்திருக்கும், அவரோடு தொடர்புடைய குடும்பத்தினர் பலன் பெற்றதற்கு. அவரது முழு சாதி சமூகமும் விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தலித்துக்கள் அனைவருக்கும் இட ஒதுக்கீட்டுப் பலன் கிடைப்பதில்லை. ஆனால், தலித் மக்களுக்கு எதிரான உணர்வு, தலித் அல்லாத மக்கள் மீது தீவிரமாகும் நிலை உருவாகி, கூடுதலான சாதிக் கொடுமைகள், தாக்குதல்கள் என அது தீவிர வடிவம் எடுக்கிறது இவ்வாறான வாதங்களை டெல்டும்டே அடுக்கு
கிற நிலையில் அவர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசுகிறாரோ என்ற எண்ணம் ஏற்படக்கூடும். ஆனால், அவரது நோக்கம் அதுவல்ல. இட ஒதுக்கீடு என்பது அனைத்துக்குமான சர்வரோக நிவாரணி என்ற தன்மையில் சாதி உணர்வுகளையும் அடையாள அரசியலையும் மேலோங்கச் செய்கிற சிக்கல்களைதான் அவர் வெளிப்படுத்துகிறார். இவை அனைத்தும் ஆழமாக சிந்திக்க தகுந்தது மட்டுமல்ல, சமூக சமத்துவம் நோக்கி உரிய பாதையை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியத்தை இன்றைய நிலை ஏற்படுத்துகிறது. இந்த முடிவிற்கு வருவதற்கே டெல்டும்டே எழுத்துக்கள் நம்மை இட்டுச் செல்கின்றன.

தகுதி, திறமை..

தகுதி, திறமை ஆகியவற்றின் பெயரால் இட ஒதுக்கீடு கூடாது என்று பேசுகிறவர்களுக்கும் டெல்டும்டே சரியான பதிலடி அளிக்கின்றார். கடந்த காலங்களில் தகுதி திறமையுடன் வாழ்ந்தவர்கள் இந்தியாவை வழிநடத்திய நிலையில்தான் மனித வளர்ச்சியில் இந்தியா அதலபாதாளத்தில் இருந்து வருகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். கல்வியறிவு, வறுமை, ஊட்டச்சத்து குறைவு, நோய், குழந்தை இறப்பு உள்ளிட்ட அனைத்திலும் மிக மோசமான நிலையில் இந்தியா இருப்பது தகுதி திறமை வாய்ந்தவர்களது மோசமான நிர்வாகத்தினால் தான் எனச்சாடுகிறார் ஆசிரியர்.
அதே நேரத்தில் தலித் மக்கள் இட ஒதுக்கீட்டினால் பெரும் பலனை பெற்றுவிடுகிறார்கள் என்று கருத இயலாது. இட ஒதுக்கீடு என்பது இதுகாறும் புறக்கணிக்கப்பட்ட தலித் மக்கள் சமூகவாழ்வில் பங்கேற்பதற்கான ஒரு வழிமுறையே தவிர அது அவர்களுக்கான சமூகநீதியின் அளவுகோலாக மாறிடாது என்று டெல்டும்டே சரியாகவே குறிப்பிடுகிறார்.

அடையாள பூர்வமான ஒரு முன்னேற்ற நடவடிக்கை என்கிற நிலையிலிருந்து மாறி ஒடுக்கப்படுகிற சாதியினரின் பின்தங்கிய நிலையை மாற்றுவதற்கான ஒரே தீர்வு என்கிற இடத்திற்கு இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டுள்ளது.அத்துடன், இட ஒதுக்கீடு தலித் மக்களுக்கு சமூகம் தருகிற பெருந்தன்மையான கொடை என்கிற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இட ஒதுக்கீடு சாதி நெறியை மறுபதிப்பு செய்து தலித் மக்கள் இந்த சமூகத்துக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்கச் செய்கிறது. இந்த கருத்துக்கள் அனைத்தும் டெல்டும்டேவினால் ஆணித்தரமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு ஏற்படுத்தியிருக்கிற விளைவுகளை பாரபட்சமின்றி அவர் அணுகுகிற முறை முக்கியமானது.

நவீன தாராளமய மாற்றம்

நவீன தாராளமயம் 1991 -ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டபோது அது முதலாளித்துவத்தின் தீவிர வடிவமாக இயங்கியது. உலகம் முழுவ
தும் வெவ்வேறு வடிவங்களில் கொண்டுவரப்பட்ட நவீன தாராளமயம், அரசை மேலும் தீவிரமான ஒரு ஒடுக்குமுறைக் கருவியாக மாற்றியது. இதன் விளைவாக, மக்கள் வெவ்வேறு வகையில் தங்களது விரக்தியையும் அதிருப்தியையும் வெளிப் படுத்தினர். அடிப்படைவாதமும் மதவாதமும் மக்களிடையே தலைதூக்கியது. இந்தியாவில் இந்துத்துவ இயக்கமாக அது வடிவம் எடுத்தது.

நவீன தாராளமய காலத்தில் பொதுத்துறை வேலை வாய்ப்புகள் சுருங்கிய சூழல் ஏற்பட்டது. .அதேபோன்று கல்வியிலும் வாய்ப்புகள் குறைந்து வணிகமயம் தீவிரமாகியது. வேடிக்கை என்னவென்றால் அனைத்து வாய்ப்புக்களும் சுருங்கிய நிலையில்தான், இடஒதுக்கீட்டுக்கான கோரிக்கைகள் வீறு கொண்டு எழுந்தன!. அவற்றை பல்வேறு சமூக, சாதிப் பிரிவினர் எழுப்பினர். அவற்றை பல அரசியல் சக்திகள் தங்களது போட்டி அரசியல் லாபத்திற்கு பயன்படுத்திக் கொண்டனர்.

தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்கிற கோரிக்கை கோட்பாட்டு அளவில் சரியாக இருந்தாலும் தனியார் துறை நிர்வாகங்கள் இட ஒதுக் கீட்டினை அமலாக்குமா என்கிற கேள்வியை டெல்டும்டே எழுப்புகிறார். இவை அனைத்தும் எடுத்துக்காட்டுவது என்னவென்றால் அரசுத்துறை வேலைவாய்ப்புகளும், பொதுத்துறை வேலைவாய்ப்புகளும் சுருங்கியுள்ள சூழலில் இட ஒதுக்கீடு என்பது வேலைக்கான ஒரு வழி முறையாக நீடிக்குமா? அரசியலமைப்
புச் சட்டம் இட ஒதுக்கீடு முறை நமது சாதிய சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அளித்த உறுதி நிறைவேறியதா? இட ஒதுக்கீடு முறை அதன் குறிக்கோளை எட்டியதா? இந்தக் கேள்விகள் வலுவாக எழுகின்றன என்று டெல்டும்டே குறிப்பிடுகிறார்.

உள்ளாட்சி, நாடாளுமன்றம், ஜனநாயகம் மொத்த தலித் மக்கள் தொகையில் 80 சதவீதம் தலித் மக்கள் கிராமங்களில் வாழுகிற நிலையில் உள்ளாட்சி மன்றங்களில் தலித் இட ஒதுக்கீடு முறையினால் எத்தகைய பலன் கிட்டியிருக்கிறது இதனையும் டெல்டும்டே விவரிக்கின்றார். பெண்களுக்கான இட ஒதுக்கீடாக இருந்தாலும் பழைய அதிகாரமிக்க கிராம ஊராட்சித் தலைவர்களே தங்களது மனைவி அல்லது மருமகளைத் தேர்ந்தெடுக்கப்படுமாறு செய்துவிட்டு ஊராட்சி விவகாரங்கள் அனைத்தையும் அவர்களே கவனித்துக் கொள்கிற நிலை நீடிப்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டுகின்றார். அதே போன்று எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடாக இருந்தாலும் கூட கிராமப்புற அதிகாரமிக்க வர்க்கத்தினரும் சாதியினரும் ஆதிக்கம் செலுத்துவதை சுட்டிக்காட்டுகின்றார். ஆக, உள்ளூர் மட்டத்தில் ஆதிக்கம் சாதியினர் பணக்கார விவசாயிகள், நிலப்பிரபுக்கள் அதிகார மையமாக செயல்படுவதில் இட ஒதுக்கீடு பெரிய மாற்றத்தை கொண்டுவரவில்லை. இதற்கு தமிழகத்தில் நடந்த மேலவளவு உள்ளிட்ட பல சம்பவங்களை எடுத்துரைக்
கின்றார் டெல்டும்டே தற்போதுள்ள இட ஒதுக்கீடு முறை இதே நிலையில் நீடித்தால் இட ஒதுக்கீட்டு பலன் கிடைக்க வேண்டியவர்களுக்கு பதிலாக அந்த குறிப்பிட்ட வகுப்பினரின், குறிப்பிட்ட பகுதியினரின் நலன்களையே அது பாதுகாப்பதாக இருக்கிறது என்பதை டெல்டும்டே குறிப்பிடுகின்றார் இட ஒதுக்கீட்டு முறை அமலாகத் துவங்கிய காலங்களில் இந்த குறிப்பிட்ட வகுப்பினரின் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே பலன் பெற்ற
தாக கூற இயலாது ஆனால் இன்று இட ஒதுக்கீட்டின் பலனை மூன்றாவது அல்லது நான்காவது தலைமுறை அனுபவிக்க துவங்கிய நிலையில் இட ஒதுக்கீட்டு முறையில் உள்ள பிரச்சனைகள் தலைதூக்கி வருகின்றன.

சட்டமன்றம் நாடாளுமன்றங்களில் ஜனநாயக பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேறு வழிமுறைகளை நாடுவது அவசியம். இதற்கு இட ஒதுக்கீடு ஒன்றே தீர்வல்ல. விகிதாச்சார பிரதிநிதித்துவம் போன்ற தேர்தல் முறைகளில்அதனை சாதிக்க இயலும் என்று டெல்டும்டே கருதுகின்றார். உண்மையான ஜனநாயகத்தை நோக்கிச் செல்ல விகிதாச்சார பிரதிநிதித்துவம் போன்ற சீர்திருத்தங்கள் தேவை என்று கம்யூனிஸ்ட்கள் நீண்ட காலமாக பேசி வருகின்றனர். தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிற பொருளாதார கொள்கைகளால் ஒதுக்கீட்டுக்கு உரிய மொத்த இடங்கள் குறைந்து வருகிற நிலையில், மக்கள் தங்களுடைய சமூக பொருளாதாரம் பின்தங்கிய நிலைமையை போக்குவதற்கு சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுதான் முழுமையான தீர்வு என்று நம்புகிற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்தான் இட ஒதுக்கீடு கோரிக்கைகளுக்கான போராட்டங்களில் சம்பந்தப்பட்ட மக்கள் அதிக அளவில் பங்கேற்கின்றனர்.

ஆனால், பல்வேறு சாதிப் பிரிவினர் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்துவதற்கான கோரிக்கைகளை வைப்பதில் போட்டிபோட்டு வருகின்ற நிலையில் இட ஒதுக்கீட்டில் உள்ள சிக்கல்
களை பகுத்தறிவுடன் விவாதிப்பதற்கான இடமில்லாமல் போகிறது. இன்றைய பாராளுமன்ற ஜனநாயகத்தையே சுயநல சக்திகள் தங்களுக்கு சாதகமாக வளைத்துக்கொள்ள இட ஒதுக்கீட்டு முறையில் உள்ள கோளாறுகள் வாய்ப்பை தருகின்றன. இட ஒதுக்கீடு கோரிக்கைகள் அதிகரிக்கிற நிலையில் சமூகப் பிளவுகள் தீவிரமடைந்து வருவதனை தடுக்க இயலாது.

இங்கு கம்யூனிஸ்டுகளின் மாற்றுப்பார்வை முக்கியத்துவம் பெறுகிறது. சுயநல அரசியல், சாதிய சக்திகள் இட ஒதுக்கீட்டு முறையை சாதிய திரட்டலுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மைதான். எனினும், நீண்ட கால சமூக ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒரு சிறு வாய்ப்பாக உள்ளது இட ஒதுக்கீடு நீடிக்க வேண்டும் என்பதில் கம்யூனிஸ்டுகள் உறுதியாக உள்ளனர்.

அதே சமயத்தில், டெல்டும்டே குறிப்பிடுகிற கிராமப்புற அதிகார ஆதிக்க நிலையை மாற்றிட வேண்டும். உண்மையான நிலச்சீர்திருத்தம், மக்கள் பங்கேற்புடன் விவசாய, தொழில் விரிவாக்கம் அவசியம். பெரும் கார்ப்பரேட் பெருமுதலாளித்துவ மூலதனத்தைப் பெருக்குகிற கொள்கைகளை கைவிட்டுவிட்டு, விரிவான வேலைவாய்ப்பினை ஏற்படுத்துகிற வளர்ச்சி தேவை.
இத்தகு மாற்றம் வர வேண்டும் என்றால் உழைக்கும் வர்க்கங்களின் பலமான ஒற்றுமை கட்டப்பட வேண்டும்.அப்போதுதான் அரசு அதிகாரம் உழைக்கும் மக்களிடம் என்கிற நிலை உருவாகும். இன்றைய சிக்கல்களை தீர்க்க இதுவே சரியான பாதை.

(சாதி-வர்க்க உறவு,இந்துத்துவா போன்றவை பற்றிய டெல்டும்டே கருத்துக்கள்-அடுத்த இதழில் …)

மீண்டுமொருமுறை சாதிகள், வர்க்கங்கள் குறித்து…

இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்

தமிழில்: அசோகன் முத்துசாமி

பொதுவாழ்வில் நேரடியாகப் பங்கேற்ற போது நான் பதின்பருவத்தில் இருந்தேன். நவீன ஜனநாயக இயக்கம் எனது மாநிலத்தில் பரவிய போது அதன் இருவிதமான போக்குகளின் ஆழ மான செல்வாக்கிற்கு நான் ஆட்பட்டிருந்தேன். முதலாவது, கேரளாவின் சாதி ஆதிக்கம் மிகுந்த சமூக வாழ்விற்கு எதிராக வளர்ந்து வந்த எதிர்ப்பியக்கம். குறிப்பாக மாநிலத்தின் மிக உயர்ந்த சாதியான நம்பூதிரிகளின் காலாவதியா கிப் போன சடங்கு சம்பிரதாயங்கள், மூடநம்பிக் கைகள், குடும்ப அமைப்புகள் மற்றும் இவை போன்றவற்றிற்கு எதிரானது. இரண்டாவது, விடுதலை இயக்கம்; அந்த காலகட்டத்தில் காந்தியின் தலைமையில் நடந்த வெகுமக்கள் போராட்ட அலை பல நூற்றாயிரக்கணக்கான இளம் ஆண்களையும் பெண்களையும் தன்னுள் ஈர்த்து இழுத்துக் கொண்டிருந்தது.

ஆரம்பத்தில் நான் இந்த இரண்டு நீரோட்டங் களிலும் உருவாகி வந்த  வளர்ச்சிகளையும் கூர்ந்து நோக்குவதில் ஆர்வம் காட்டினேன்; 1920களின் பின்பாதியில் அந்த இரண்டிற்குள் நானும் படிப்படியாக ஈர்க்கப்பட்டேன். 1930ஆம் ஆண்டின் சத்தியாகிரகப் போராட்ட, ஏகாதிபத் திய எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் அடுத்த அலை வீசத் துவங்கியபோது-1930ம் ஆண்டு உப்பு சத்தியாகிரகம்- சமூகக் கலாச்சார, அரசியல் வாழ்வில் நான் ஏற்கனவே தீவிர கொள்கை கொண்டவனாக ஆகிவிட்டிருந்தேன்.

சமூக தளத்தில், நம்பூதிரி சமூகத்தின் குடும்ப வாழ்வில், ஓரளவு சீர்திருத்தங்களுக்கான முயற்சி கள் என்பதிலிருந்து சாதிப் படிநிலையின் உச்சத் தில் சமூக வாழ்வைப் புரட்சிகரமாக மறுசீரமைப் பதற்கான போராட்டம் என்கிற நிலைக்கு முன்னேறினேன். இது கேரள சமுதாயத்தின் தாழ்ந்த சாதிகளின்உயர்சாதி எதிர்ப்பு இயக்கத் திற்கு உணர்வுபூர்வமாக என்னைக் கொண்டு சென்றது; குறிப்பாக, ஒடுக்கப்பட்ட சாதிகளில் மிகவும் புரட்சிகரமான சமூக எதிர்ப்பியக்கத்தை வளர்த்திருந்த ஈழவர்களிடம் கொண்டு சென்றது. ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் தலைமையில் தமிழ் நாட்டில் நடந்த சமூகக் கலாச்சார இயக்கத்துடன் இந்த ஒடுக்கப்பட்ட சாதித் தலைவர்கள் தொடர்பு கொண்டிருந்ததனால், பகுத்தறிவு மற்றும் நாத்திகம் ஆகிய கருத்துக்களை நான் உட்கிரகித் துக் கொள்ளத் துவங்கினேன். காந்தியிசத்திலிருந்து என்னை நான் முறித்துக் கொள்ளவில்லை என்ற போதிலும், அரசியல் ரீதியாக நான் ஜவகர்லால் நேரு மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரின் தலைமையிலான காங்கிரசின் இடதுசாரித் தலைவர்களின் தீவிர ஆதரவாளராக ஆனேன்.

உப்பு சத்தியாகிரக வருடங்களும், அதைத் தொடர்ந்த அரசியல் வளர்ச்சிப்போக்குகளும் தீவிரமான சமூகக் கலாச்சார மற்றும் அரசியல் இயக்கங்களில் என்னை மூழ்கச் செய்தன. விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதாக நான் கருதிய அனைத்து அரசியல் நடவடிக்கைகளிலும் கல்லூரி மாணவன் என்கிற முறையில் முழுமை யாக பங்கேற்றேன். அதே வேளையில், தீவிரமான சமூகக் கலாச்சார இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்காகவும் என்னுடைய நேரத்தை அர்ப்பணித்தேன். 1930-31 ஆண்டுகளில் நான் ஆசிரியராக இருந்து செயல்பட்ட ஒரு வாரப் பத்திரிகையின் பத்திகள் சமூகக் கலாச்சார மற்றும் தேசிய அரசியல் தளங்களில் இடதுசாரிக் கருத்துக் களைப் பரப்புவதற்காகப் பயன்படுத்தப்பட்டது.

மாணவன் என்கிற முறையிலான என்னுடைய செயல்பாடுகள் அடுத்து என்னை  ஒத்துழையாமை இயக்கத்தின் செயலூக்கமுள்ள தொண்டர் என்கிற வகையில் சிறைக்கு கொண்டு போய்ச் சேர்த்தது. அன்றிலிருந்து ஒரு சாதாரண சமூக சீர்திருத்தவாதி மற்றும் விடுதலைப் போராட்ட வீரன் என்பதிலிருந்து மொத்த சமுதாயத்தையும் புரட்சிகரமாக மறுகட்டமைக்கப் போராடும் இளைஞனாக என்னை மாற்றிக்கொண்டேன். துவக்கத்தில் ஒரு சோசலிசவாதியாகவும், அதை அடுத்து ஒரு கம்யூனிஸ்டாகவும் ஆனேன். ‘நான் எப்படி ஒரு கம்யூனிஸ்டாக ஆனேன்’ என்கிற என்னுடைய நூலில் இது கூறப்பட்டிருக்கிறது.

என்னுடைய அரசியல் ஆளுமையின் இந்த இரு குறிப்பிட்ட வகையான வளர்ச்சி என்னுடைய அரசியல் சிந்தனைக்கு இரண்டு வெவ்வேறு விதமான போக்குகளை அளித்தது. விடுதலைப் போராளி மற்றும் புரட்சிகரமான தேசியவாதி என்கிற வகையிலும் சாதி, மத அரசியலுக்கு எதி ரானவனாக நான் இருந்ததுடன் புரட்சிகரமான சமூக சீர்திருத்தவாதி என்கிற வகையிலும், சாதி, மத அடிப்படையிலான அனைத்து வேறுபாடு களும் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை ஆதரித்து வந்தேன்.

எனினும், நாம் அடைய விரும்பும் இறுதி இலக்கு என்னவாக இருந்தபோதும், யதார்த்தத் தில் நிலவிவரும் சாதி மற்றும் மதச் சமூக அடிப்படையிலான வேறுபாடுகளையும், வித்தி யாசங்களையும் ஒதுக்கித் தள்ளி விட முடியாது. ஆதலால்தான் ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் நலனுக்காகவும், ஆதிக்கசாதியினரின் சமூக அமைப்பு  மற்றும் குடும்ப அமைப்பிற்கு எதிராகப் போராடு வதற்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண் டுள்ள சமூக அரசியல் இயக்கங்களின் மீது இரக்கம் கொண்டவனாக இருந்தேன். சாதியை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகளில் சில, ஒடுக்கப்பட்ட சாதிகளின் சமூகநீதிக் கோரிக்கை யையும், அரசியல் ஜனநாயகத்திற்கான இயக்கத் தையும் ஒன்றிணைத்து அரசியல் கோரிக்கை களுக்காகப் போராடத் துவங்கியபோது என்னு டைய ஆதரவு மேலும் கூடுதலானது.

1930ம் ஆண்டுகளின் முதல் பாதியில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியான,  ஒடுக்கப் பட்ட ஈழவ சாதித் தலைவர்கள் சிலரால் தொடங்கப்பட்ட தனிச்சிறப்பான தீவிர சமூக அரசியல் இயக்கத்தின் தோற்றம் என் மீது செல்வாக்கு செலுத்தியது. திருவாங்கூரைச் சேர்ந்த காலஞ்சென்ற சி.கேசவன் அவர்களால் தொடங்கப்பட்ட அந்த இயக்கம் பொறுப்புள்ள ஒரு அரசாங்கம் வேண்டுமெனக் கோரும் திருவாங்கூர் மக்களின் ஜனநாயக விருப்பங் களையும், ஒடுக்கப்பட்டசாதிகள் மற்றும் மதச் சமூகங்களின் சமூக நீதிக் கோரிக்கையையும், அந்த சமஸ்தானத்தின் அன்றைய மேல்சாதி ஆதிக்கத்திற்குட்பட்ட எதேச்சதிகார ஆட்சியில் ஒன்றிணைக்க முயற்சித்தது. பெரும்பான்மை யான தேசியவாதிகள் அவரையும் அவரது இயக்கத்தையும் ‘சாதிவாதம்’ என்றும், ‘வகுப்பு வாதம்’ என்றும் கண்டித்ததுடன் ‘தேசவிரோ தம்’ என்றும் குற்றம் சாட்டினர். கேசவனின் தலை மையில் நடைபெற்ற இயக்கத்திற்கு முழு ஆதரவு அளித்த தேசியவாத மலையாள பத்திரிக்கை களில் நான் ஆசிரியராக இருந்த வாரப் பத்திரிகை யும் ஒன்று (மலையாள பத்திரிகை உலகின் மறைந்த பெரியவர் ஏ.பாலகிருஷ்ண பிள்ளை அவர்களை ஆசிரியராகக் கொண்ட பத்திரிகை மற்றொன்று).

அதன் பின்னர் அந்த இயக்கம் கூட்டு அரசியல் காங்கிரஸ் (தடிiவே யீடிடவைiஉயட உடிபேசநளள) என்றழைக்கப் பட்ட, மேல்சாதி ஆதிக்கத்திற்கு எதிரான சில சாதிகள் மற்றும் சமூகங்களின் அரசியல் கூட்ட ணியாக வளர்ச்சி பெற்றது. இந்த ‘சாதி மற்றும் சமூகக் கூட்டணி’ சமஸ்தானத்தில் இருந்த அனைத்து ஜனநாயக சக்திகளையும் உள்ளடக்கிய ‘திருவாங் கூர் மாநில காங்கிரஸ்’ என தன்னை மேலும் விரிவுபடுத்திக் கொண்டது. ‘வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமையும், பிற்படுத்தப் பட்ட சமூகங்களுக்கு இடஒதுக்கீடும் கொண்ட பொறுப்புள்ள ஒரு அரசாங்கம்’ என்பதே அந்த இயக்கத்தின் மையமான முழக்கமாக ஆனது.

பக்கத்திலிருந்த கொச்சி சமஸ்தானத்திலும் இதே மாதிரியான வளர்ச்சிப் போக்குகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. சமஸ்தானத்தில் ஒரு பொறுப் புள்ள அரசாங்கத்திற்காகப் போராடிய முதல் அமைப்பு, திருவாங்கூர் மாநில காங்கிரசைப் போலவே, பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் சமூகங்களுக்கு இடஒதுக்கீடு என்பதையும் தன்னு டைய அடிப்படையான அரசியல் கோரிக்கையில் இணைத்துக் கொண்டது. இடதுசாரிகளாகிய நாங்கள் இரண்டு மாநிலங்களிலும் இந்தக் கோரிக்கைக்கு எங்களுடைய முழுமையான ஆதரவை அளித்தோம். மலையாளம் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதிய கட்டுரைகளில், கேரளாவிலும் உள்ள உண்மையான நிலைமை களில், ஜனநாயக இயக்கத்தின் வளர்ச்சியென்பது சாதி இந்து ஆதிக்கத்திற்கு எதிரான ஒழுங்கமைக் கப்பட்ட போராட்டத்துடன் இணைக்கப்படுவ தென்பது எப்படி கட்டாயமாக நிகழும் என்பதை விளக்க  முயற்சித்தேன்.

இதற்கிடையே, சோசலிச மற்றும் கம்யூனிச இயக்கங்களைச் சேர்ந்த நாங்கள் தொழிலாளர்க ளையும், விவசாயிகளையும், மாணவர்களையும், ஆசிரியர்களையும், மற்றவர்களையும் அணிதிரட் டும் பணியில் முழுமையாக இறங்கினோம். இந்த செயல்பாட்டிற்காக நடத்தப்பட்ட இயக்கங் களும்,  உருவாக்கப்பட்ட அமைப்புகளும் அனைத்து சாதிகளையும், அனைத்து மதங்களையும் உள்ளடக்கியதாக இருந்தன என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ‘உலகத்தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்’ என்கிற மார்க்சிய அறைகூவல் எங்கள் அனைவருக்கும் உத்வேகமளித்தது. ஆதலால், சாதி, மதம் அல்லது இதர அது போன்ற எண்ணங்கள், முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளிகளின் ஒற்றுமை, நிலப்பிரபுக் களுக்கு எதிராக விவசாயிகளின் ஒற்றுமை மற்றும் தங்களது கோரிக்கைகளுக்காக மற்ற உழைக்கும் மக்களின் ஒற்றுமை, மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத் தியத்திற்கு எதிராக, சமஸ்தானங்களின் எதேச்சதி காரஆட்சிகளுக்கு எதிராக இவர்கள் அனைவரின் ஒற்றுமை ஆகியவற்றுக்குக் குறுக்கே வருவதற்கு நாங்கள் அனுமதிக்கவில்லை. ஆதலால், ஒடுக்கப் பட்ட சாதிகளின் நலன்களைப் பாதுகாப்பது, சமூகநீதிக்காகக் குரல் கொடுப்பது போன்றவை ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் ஒற்றுமை மற்றும் தேச ஒற்றுமை ஆகியவற்றிற்கு உட்பட்டதாக ஆக்கப்பட்டன.

அன்றும் சரி இன்றும் சரி, ஒடுக்கப்பட்ட சாதி மற்றும் மதச் சமூகங்களின் நலன்களுக்காகப் போராடுவதால் ‘தேசியவாதம் மற்றும் சோசலி சம் ஆகிய கொள்கைகளிலிருந்து விலகிச் செல்வ தாக எங்களைக் குற்றம் சாட்டுவோருடன் ஒரு பக்கமும்  ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்க ளைப் பாதுகாக்கிறோம் என்கிற பெயரில், உண்மையில் அம்மக்களை, சாதி மத வேறுபாடின்றி உழைக்கும் மக்கள் நடத்தும் ஒன்றுபட்ட போராட்ட பொது நீரோட்டத்திலிருந்து தனிமைப் படுத்துவோருடன் மறு பக்கமும் என இரண்டு முனைகளில் நாங்கள் போராட வேண்டியிருந்தது.

சுதந்திரத்திற்குப் பிந்தைய வருடங்களில் குறிப்பாக, கேரளாவிலிருந்த இரண்டு சமஸ்தானங் களின் பொறுப்பற்ற திவான்களின் ஆட்சிகள் நீக்கப்பட்டு, அவற்றினிடத்தில் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசாங்கங்கள் அமைக்கப்பட்டு, பின்னர் அவை கேரளாவுடன் இணைக்கப்பட்ட பிறகு, இந்த இரு முனைப் போராட்டமானது மேலும் கடுமையானது.

இந்த வளர்ச்சிப் போக்குகள் ஒடுக்கப்பட்ட சாதிகளையும், சமூகங்களையும் சேர்ந்த சாமான்ய மக்களின் வாழ்நிலைமைகளிலும், பணி நிலைமைகளிலும் எந்த உருப்படியான மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்ற போதிலும், ஒரு சிறிய மேல் வர்க்கத்தினர் அவர்களிலிருந்து தோன்றி, ஆண்டுகள் செல்லச் செல்ல செல்வாக்கிலும், அதிகாரத்திலும் வளரத் துவங்கினர். வளர்ச்சிப் போக்கின் இறுதியில் மேல்சாதியினர் மற்றும் பெரும்பான்மை சமூகத் தினர் உள்ளிட்ட அனைத்து சாதிகளையும் சமூகங்களையும் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்கள் என்கிற தரத்திற்குத் தாழ்த்தப்பட்டனர். ஒடுக்கப் பட்ட சாதியினரையும், மதச் சமூகத்தினரையும் பாதுகாக்க உறுதி ஏற்றுக் கொண்ட, அதே வேளையில் அனைத்து சாதி மற்றும் சமூகங் களைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட பிரிவினருடன் எங்களை அடையாளப்படுத்திக் கொண்ட நாங் கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பழங்குடி யினருக்கும், பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கும் அளிக்கப்படும் இடஒதுக்கீடு என்பது முற்படுத்தப் பட்ட சமூகங்களைச் சேர்ந்த ஏழைகளின் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கம் பற்றியும் சிந்திக்க வேண்டியிருந்தது. மேல்சாதிகளையும், பெரும் பான்மை மதத்தையும் சேர்ந்தவர்களிலும் மேலும் மேலும் அதிகமான பிரிவினர் தாங்கள் முன்னர் அனுபவித்து வந்த பழைய அந்தஸ்தையும், செழிப்பையும், சிறப்புரிமைகளையும் இப்போது அனுபவிப்பதில்லை என்கிற யதார்த்தத்திற்கேற்ற வேகமூட்டும் வகையில் தாழ்த்தப்பட்ட சாதி களுக்கும், பழங்குடியினருக்கும், பிற்படுத்தப் பட்ட சமூகங்களுக்கும் நிபந்தனையற்ற இடஒதுக் கீடு என்று இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்ட தீர்வில் மாற்றங்கள் செய் யப்பட வேண்டும்;  சாதியை அடிப்படையாகக் கொண்டு அல்லாமல், பொருளாதார நிலை மையை அடிப்படையாகக் கொண்ட இடஒதுக் கீடு செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலியுறுத்தப்படலானது.

இந்தக் கோரிக்கையை எழுப்பியவர்களின் மீது நாங்கள் அனுதாபம் கொண்டிருந்த போதிலும் அப்போதும் சரி, இப்போதும் சரி எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை; ஏனெனில், சாதிய ஒடுக்குமுறை  மற்றும் அந்த ஒடுக்கு முறையின் சமூக கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகள், இன்னமும் அகற்றப்பட வில்லை என்றே நாங்கள் கருதுகிறோம். ஆதலால், என்னுடைய 1977-ம் ஆண்டு கட்டுரையில் நான் விளக்கியதைப் போல, நாங்கள் பின்வரும் முடி வுக்கு வந்தோம். (1) தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு இப்போது இருப்பது போலவே எந்த மாற்றமுமின்றி தொடர வேண்டும். (2) இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் சமூகங்களின் விஷயத்திலும், சம்பந்தப்பட்ட சாதி அல்லது சமூகம் தன்னுடைய பிற்பட்ட நிலையைக் கடக்கின்ற வரையில், சாதி மற்றும் சமூக அடிப்படையிலான இடஒதுக்கீடு தொடர வேண்டும் (3) இந்த பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் சமூகங்களில் சிறு பிரிவுகள் இப்போது தாங்கள் அனுபவித்து வரும் சலுகை களால் ஆதாயம் அடைந்திருப்பதால், அவர் களில் நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பிற்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் இடஒதுக்கீட்டின் பலன்களிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்.

இதை முற்படுத்தப்பட்டவர்கள் பிற்படுத்தப் பட்டவர்கள் ஆகிய இருவருமே கண்டித்தனர். சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை இது கைவிடுவதாக பிற்படுத்தப்பட்டவர்கள் கண்டித்த னர். முற்படுத்தப்பட்டவர்களோ நேரெதிரான காரணத்திற்காகக் கொந்தளித்தனர். இரு தரப் பினரும் பெரும் போராட்டங்களை நடத்தினர். ஆனால், நாங்கள் எங்கள் நிலையில் உறுதியாக இருந்தோம்.

கேரளாவில் என்னால் பிரதிநிதித்துவப்படுத் தப்படும் கட்சியும், இயக்கமும் சாதி மற்றும் வகுப்புவாத அமைப்புகள் குறித்த பிரச்சனையை அம்மாநில உழைக்கும் மக்களின் அரசியல் மற்றும் மக்கள் இயக்கத்தின் வளர்ச்சியில் அவை என்ன பாத்திரம் வகிக்கின்றன என்கிற கண் ணோட்டத்திலிருந்தே கையாள்கின்றோம் என்பதை மேலே கூறப்பட்டவற்றிலிருந்து காணலாம். நான் சில தத்துவார்த்த ரீதியிலான ஆய்வுகளை மேற் கொண்டு, சில முடிவுகளுக்கு வர வேண்டி யிருந்தது. அது குறித்து இப்போது பார்க்கலாம்.

தொழிற்சங்கமும், விவசாயிகள் இயக்கமும்

காங்கிரஸ் சோசலிசவாதிகளாகத் துவங்கி, பின்னர் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள், தொழிற் சங்கம் மற்றும் விவசாயிகள் இயக்கத்தை வளர்க்க இயல்பாகவே கடுமையாக உழைத்தோம். இரண் டிலுமே முன்னேற்றம் மிக விரைவாக இருந்தது. அன்றைய சென்னை ராஜதானியின் மலபார் மாவட்டம் முழுவதிலும் பற்பல தொழிற்சங்கங் களை எங்களால் ஒரு ஐந்தாண்டுகளுக்குள்ளாகவே உருவாக்க முடிந்தது. கொச்சி மற்றும் திருவாங் கூர் பகுதிகளிலும் கூட, ஏற்கனவே இருந்த தொழிற் சங்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், பல புதிய சங்கங்களை உருவாக்க வும் முடிந்தது. விவசாய இயக்கத்தைப் பொறுத்த வரையில், அதனுடைய வளர்ச்சி பெரும்பாலும் மலபார் பகுதிக்கு உட்பட்டதாக மட்டுமே இருந் தது; ஏனெனில், குத்தகை சீர்திருத்தச் சட்டம் மலபாரைவிட கொச்சி மற்றும் திருவாங்கூரில் பெருமளவிற்கு முன்னேறியிருந்தது. வேறு வார்த் தைகளில் கூறினால், நிலப்பிரபுத்துவ (ஜென்மி) ஆதிக்கம் மலபார் பகுதியில் மிக வலுவாக இருந்தது.

அன்றைய சென்னை ராஜதானியின் முதல் காங்கிரஸ் அரசாங்கம் நானும் உறுப்பினராக அங்கம் வகித்த மலபார் குத்தகை சீர்திருத்தக் குழுவை அமைத்தாக வேண்டிய நிர்பந்தம் கொடுக்கும் அளவு மலபார் பகுதியின் விவசாய இயக்கத்தின் வளர்ச்சி அவ்வளவு வேகமாக இருந்தது; என்னைத் தவிர, நிலச்சீர்திருத்தப் பிரச் சனையில் இடதுசாரிப் பார்வை கொண்டிருந்த மேலும் இருவர் அதில் உறுப்பினர்களாக இருந் தனர். அந்தக் குழுவின் ஒரு டஜனுக்கு மேற்பட்ட எஞ்சிய உறுப்பினர்கள் வலதுசாரி அரசியல் எண்ணம் கொண்டவர்கள். ஆதலால், நாங்கள் மூவரும் எங்களது அதிருப்தியை எழுத்து மூலம் தனியே தெரிவிக்க வேண்டியிருந்தது.

குத்தகைச் சட்டங்களில் உடனடியாக திருத் தங்கள் செய்யப்பட வேண்டும் என்கிற ஆலோ சனைகள் எங்களது தனித்தனி குறிப்புகளில் ஏறத் தாழ ஒரே மாதிரி இருந்தபோதும், என்னுடைய குறிப்பு, நிலப்பிரபுத்துவத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றியும், அதன் சமூகப் பொருளாதார தாக்கம் பற்றியும் விவாதிப்பதாக மிக விரிவான தாகவும், மிக நீண்டதாகவும் இருந்தது. முந்தைய குழுக்கள் மற்றும் ஆணையங்களின் ஆய்வுகளை அடிப்படையாக வைத்துக் கொண்டும், குத்தகை விவசாயிகளின் வாடகைச் சுமை பற்றிய சில கணக்கீடுகளுடன், ஜென்மி முறையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று வலுவாக நான் வாதாடினேன்; இந்த முறை ரத்து செய்யப்பட்டால் தான் மக்களின் பொருளாதார, சமூகக் கலாச் சார, மற்றும் அரசியல்-நிர்வாக பின்தங்கிய நிலை மையை அகற்ற முடியும் என்றும்  கூறினேன். இது உடனடியாக அடைய முடியாத அடிப்படை யான குறிக்கோள். ஆதலால், தற்போதுள்ள சட்டங்களில் சில குறிப்பிட்ட உடனடி சீர்திருத் தங்கள், அதாவது, சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்ற ஆலோசனையை முன்வைத்தேன்.

இது, தங்களது உடனடிக் கோரிக்கைகளை அடைவதற்காக விவசாயிகள் நடத்திய அன்றாடப் போராட்டங்களை, மலபார் பகுதியில் நிலமான்ய -ஜென்மி முறைக்கு முடிவு கட்ட வேண்டுமென்கிற அடிப்படையான பிரச்சனையின் மட்டத்திற்கு உயர்த்துவதற்கு நான் எடுத்த முதல் முயற்சியா கும். இந்த ஆய்வும், அதே நேரத்தில் கேரளாவில் அரசியல் இயக்கத்தில் ஏற்பட்ட வளர்ச்சியும், குறிப்பாக கொச்சி மற்றும் திருவாங்கூர் சமஸ் தானங்களில் ஒரு பொறுப்புள்ள அரசாங்கத்திற் காக நடந்த ஜனநாயக இயக்கம் ஆகியவை நில மான்ய முறையை அதன் சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் நிர்வாக வடிவில் ஆராய்வதற்கு என்னை இட்டுச் சென்றது. மலபார் பகுதியின் ஜென்மி முறையும், கொச்சி மற்றும் திருவாங்கூர் சமஸ்தானங்களில் மன்னராட்சியும் ஒரே நாண யத்தின் இரு பக்கங்களாகப் பார்க்கப்பட்டன. மலபார் பகுதியின் குத்தகை விவசாயிகள் இயக் கமும் மற்றும் சமஸ்தானங்களில் பொறுப்புள்ள அரசாங்கத்திற்காக நடந்த ஜனநாயக இயக்கமும் ஒரு பொதுவான நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு இயக்கத்தில் ஒன்றிணைக்கப்பட வேண்டியிருந்தது.

இது சென்னை ராஜதானியின் மூன்று நிர்வாக மாவட்டங்களிலும், கொச்சி மற்றும் திருவாங் கூர் பகுதிகளிலும் வசிக்கும் மலையாளம் பேசும் மக்கள் மறுபடியும் ஒன்றிணைக்கப்பட வேண்டு மென்கிற அரசியல் கோரிக்கையை எங்கள் கட்சி எழுப்புவதற்கு இட்டுச் சென்றது. மலபாரின் ஜென்மி ஆதிக்க ஒழிப்புடன் ‘ஐக்கிய கேரள’ கோரிக்கையும் சேர்க்கப்பட்டது. யுத்தத்தின் ஆரம்பத்திலும், யுத்தத்தின் போதும் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளை கொச்சி மற்றும் திருவாங்கூர் பகுதிகளுக்கும் நீட்டிப்பதற்கு இது உதவி செய்தது.

இது என்னை மற்றொரு போராட்ட -தத்து வார்த்தப் பணியை மேற்கொள்ளச் செய்தது. ‘ஒண்ணே கால் கோடி மலையாளிகள்’ (ஹ ஊசடிசந யனே ய ணுரயசவநச ஆயடயலயடநநள) என்கிற தலைப்பில் ஒரு பிரசுரம் 1945-ல்வெளியிடப்பட்டது; அது ஐக்கிய கேரளக் கோரிக்கைக்காக வாதாடியது. அதில் இனங்காணப்பட்ட புதிய மாநிலம் ஜனநாயகத் தன்மையும், மதச்சார்பற்ற தன்மையும், நவீன தன்மையும் கொண்டதாக இருக்கும். மலபார் குத்தகை சீர்திருத்தக் குழுவின் அறிக்கையில் உள்ள என்னுடைய அதிருப்தி குறிப்பின் மைய ஆலோசனையாக முன்வைக்கப்பட்ட ‘உழுபவனுக் கே நிலம் சொந்தம்’ என்கிற முழக்கம் இப்போது அடையப்பட்டுள்ள ஐக்கிய கேரளத்தின் ஒரு முக்கியமான அம்சமாகும். அத்துடன், மொத்த தேசத்திற்கும் என கம்யூனிஸ்ட் கட்சி வகுத்துள்ள திட்டப்படி, உழைக்கும் மக்களின் நலனுக்காகச் செயல்படும் நவீன ஜனநாயக, மதச்சார்பற்ற அரசு என்கிற மற்ற அம்சங்களும் இதனுடன் சேர்க்கப்பட்டது.

கிட்டத்தட்ட அதே சமயத்தில் சுந்தரய்யா வின்’ விசாலாந்திரா’ மற்றும் பவானி சென்னின் ‘நதூன் பங்களா’ ஆகிய இதே போன்ற பிரசுரங் கள் ஆந்திராவிலும், வங்கத்திலும் வெளியிடப் பட்டன; கேரளா, ஆந்திரா, வங்கம் ஆகிய மாநிலங் களில் வெகுஜன அரசியல் தளம் கொண்டதாக, கம்யூனிஸ்ட் கட்சி அன்று வலுவாக இருந்தது. ஆதலால், சுதந்திர, ஜனநாயக, மதச்சார்பற்ற இந்தியா என்று கட்சி கருதியிருந்த இந்தியாவின் ஒரு பகுதியாக தொழிலாளி வர்க்கம், விவசாயி கள் மற்றும் இதர உழைக்கும் மக்கள் பிரிவினரின் நலன்கள் பாதுகாக்கப்படுவது உத்திரவாதப்படுத் தப்படும். தங்களது சொந்த மொழி வழி மாநிலம் என்கிற கோரிக்கையை இம்மாநிலங்களில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் எழுப்பியதும் இயற்கையானதே.

எதிர்கால சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதி யாக புதிய ஜனநாயக, மதச்சார்பற்ற கேரள மாநிலத்தின் பொதுவான வடிவமைப்பை இவ்வி தம் வகுத்த பின்னர், கேரளாவின் மற்றும் கேரள மக்களின் கடந்த கால வரலாற்றை ஆராய்வதற்கு எனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பைப் பயன்படுத் திக் கொண்டேன். அதன் பலனாக மலையாள மொழியில் கேரளாவின் சுருக்கமான வரலாறு 1947-ல்எழுதப்பட்டு, அதற்கடுத்த வருடத்தில் அது வெளியிடப்பட்டது.

கேரளாவின் மத்தியகால சமுதாயத்தை வர்ணிக்க அந்தப் பிரசுரத்தில் பயன்படுத்தப் பட்ட சொல் நிலப்புரபுத்துவம்என்பதல்ல என்பதும், மேல்சாதிகள், ஜென்மிக்கள் உள்ளூர் குலபதிகள்’ என்கிற பொருள்படும்’சாதி-ஜென்மி-நடுவழி மேதாவித்வம்’ என்பது. ‘பிராமணர்களை சமூகரீதியாக உயர்த்துவதும், ஜென்மிக்களை பொருளாதார ரீதியாக உயர்த்துவதும், சமந்தா-நாயர் சாதிகளை நிர்வாக ரீதியாக உயர்த்துவ தும்’, மிகப் பெரும்பான்மையான மக்களின் நிலையை சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதி யாகவும், அரசியல் ரீதியாகவும்தாழ்த்துகின்றது எனவும் மேற்குறிப்பிட்ட உயர் பிரிவினரிலிருந்து விரல் விட்டு எண்ணத்தக்க மாபெரும் அறிஞர் கள், மற்றும் கவிஞர்கள், கலைஞர்கள் தோன்று வதற்கு வழிவகுத்ததானது மிகப் பெரும்பான் மையான மக்களின் கலாச்சார ரீதியாகப் பின் தங்கிய நிலைமைக்கு இட்டுச் சென்றது இப்படித் தான் எனவும் நான் அதை விவரித்திருந்தேன்.

அப்போது வெளிக் கொணரப்பட்ட அந்தப் பிரசுரம் கேரள வரலாற்றிற்கு மார்க்சிய வர்க்கப் போராட்ட கோட்பாட்டைப் பொருத்திப் பார்க்கும் என்னுடைய முதல் முயற்சியாகும். முதல் முயற்சி என்பதால், இயல்பாகவே அதில் குறைகளும் இருந்தன. பெரும் எண்ணிக்கையிலான விமர்சனங்கள் வரப்பெற்று அவற்றிலிருந்து பலனும் பெற்றேன். அந்த நூல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை திருத்தி எழுதப்பட்டது. அதன் பலனாக ‘கேரளாவில் தேசியப் பிரச்சனை’ (1952) என்கிற தலைப்பில் என்னுடைய முதல் ஆங்கில நூல் வெளிவந்தது; அதன் மேம்படுத்தப்பட்ட வடிவம் ‘கேரளா-நேற்று, இன்று, நாளை’ (1967) என்கிற தலைப்பில் வெளிவந்தது. இந்த இரண்டு நூல் களிலிருந்து விரிவாக மேற்கோள் காட்டாமல், பிந்தைய நூலில் ‘நிலப்பிரபுத்துவ முறையின் தோற்றம்’ என்கிற தலைப்பில் ஒரு அத்தியாயம் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகின்றேன். அதில் பின்வருமாறு கூறியிருந்தேன்:

‘சேரப்பேரரசின் காலத்திலோ அல்லது அதற்கும் முன்பாகவோ…வர்க்கப் பிரிவினைகள் தோன்றிக் கொண்டிருந்தன….என்றாலும், வர்க்கப் பிரிவினைகள் சாதிப்பிரிவினைகளின் வடிவத்தை எடுத்தன. பெருமளவில் செல்வம் குவிக்கும் நிலையில் இருந்தவர்கள் உயர்சாதியினராகக் கருதப்பட்டனர்; செல்வக் குவிப்பில் அடுத்த நிலையில் இருந்தவர்கள் அடுத்த நிலை உயர் சாதியினராகக் கருதப்பட்டனர்; அப்படியே படிப்படியாக இறங்கி, செல்வம் எதுவும் குவிக்கவே முடியாத நிலையில் இருக்கும் வர்க்கத்தவர் தாழ்ந்த சாதியினராயினர்’.4

அடுத்து, ‘ஒவ்வொரு சாதிக்கூட்டத்திற்கும் சொந்தமான கோவில் இருந்தது; மொத்த சாதி யின் கூட்டு அமைப்பின் பிரதிநிதியாகயும், அதன் பிரதிபலிப்பாகவும் அக்கோவிலின் தெய்வம் இருந்தது. அந்தக் கோவிலின் பெயரிலும், அதன் தெய்வத்தின் பெயரிலும் தலைமுறை தலைமுறை யாகச் சேர்க்கப்பட்ட செல்வம் வைக்கப்பட் டிருந்தது. இருப்பினும் படிப்படியாகக் கோவிலின் கட்டுப்பாடும், ஆதலால் அதன் சொத்தும், முதலில் மொத்த சாதிக் கூட்டத்திடமிருந்து கூட்டு அமைப்பிற்கும் (உதாரணமாக, பஞ்சாயத்துக்கு-), பின்னர் குடும்பங்களின் தலைவர்களுக்கும், அதற்குப் பின்னர் ஒரு குடும்பத்தின் தலைவருக் கும் உரியதாகச் சுருங்கியது. அது அந்தக் கட்டத்தை அடைந்தவுடன், கோவிலின் தர்மகர்த்தா என்கிற முறையில் கோவிலின் சொத்துரிமை கொண்டிருந்த குடும்பத் தலைவரிடமிருந்து, அதன் மூலமாக மொத்த சாதியினுடையதாக இருந்த சொத் துரிமை, அந்தக் குடும்பத் தலைவருக்கு உரியதாக உரிமையுடன் மாற்றப்படுவதற்காக மட்டுமே இருந்தது.’

ஆதலால், ஜென்மி ஆதிக்கத்தின் தோற்று வாயும், வளர்ச்சியும் பிரிக்க முடியாத வகையில் சாதிப் படிநிலையின் இருப்பு மற்றும் வளர்ச்சி யுடன் தொடர்புடையதாக இருக்கின்றது. உண்மையில், மலையாளத்தில் நான் எழுதிய கேரள வரலாறு குறித்த நூலில் நான் புள்ளிவி வரங்களுடன் பின்வருவதை நிரூபித்திருக்கின்றேன்:

1) சொத்துடமை விஷயத்தில் புலையர்களும், பறையர்களும், கணக்கர்களும் மற்ற ஒடுக்கப்பட்ட சாதிகளும் மிகவும் கீழானவர்கள். மறுபுறமோ, மிக உயர்ந்த சாதியினரான நம்பூதிரிகள், சொத்துடமை விசயத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றார்கள். நான் வந்தடைந்த முடிவு களுக்கு அடிப்படையாக உள்ள கொச்சியைச் சேர்ந்த நான்கு கிராமங்களில் எந்த ஒரு சாதியும்  நம்பூதிரிகளைவிட அதிகமான சொத்துள்ளவர் களாகவோ அல்லது ஒடுக்கப்பட்ட சாதிகளை விட குறைவான சொத்துள்ளவர்களாகவோ இருக்கவில்லை.

2) நம்பூதிரிகளுக்கு அடுத்தபடியாக மற்ற சாதி இந்துக்கள் வருகின்றனர். அவர்களில் சொத்துட மை விசயத்திலும், சாதிப் படிநிலையிலும் மிகக் கீழானவர்களாக இருப்பவர்கள் நாயர்கள்.

3) மிக மிக ஏழைகளான ஒடுக்கப்பட்ட சாதி களுக்கு அடுத்த படியாக ஈழவர்களும் முஸ்லிம் களும் வருகின்றனர்; அதே வேளையில், கிறித்து வர்கள் நாயர்களை விட தாழ்வானவர்களாகவும், ஆனால் ஈழவர்கள் மற்றும் முஸ்லிம்களைவிட மேலானவர்களாகவும் இருக்கின்றனர்.

ஆதலால், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட காலகட்டத்தில் (1930) சாதியப் படிநிலையின் அந்தஸ்திற்கும் சொத்துடமைக்குமிடையில் தெளி வான ஒன்றுடன் ஒன்று உறவு இருக்கின்றது என்பது என் முடிவுகளுக்கு அடிப்படையாக அமைந்தது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள உண்மைத் தரவு கள் மத்தியகால கேரளா தொடர்பானவை. எந்த வகையிலும் முக்கியத்துவமற்றதாகக் கருதப்படும் மாற்றங்கள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன; குறிப்பாக முதலாம் உலகப்போருக்குப் பின்னரும் இன்னும் கூடுதலாக நாடு விடுதலை அடைந்த பின்னர். தலைமுறைகள் கடந்து மேல்சாதிகளைச் சேர்ந்த குடும்பங்கள் தரித்திரமாக்கப்பட்டு, மென்மேலும் பெரிய அளவில் பாட்டாளிகளின் கூட்டத்திற்கு தூக்கி வீசப்படுகின்றன. கீழ்சாதிகளைப் பொறுத்த வரையில், மொத்த தாழ்த்தப்பட்ட சாதியினர் உள்பட, முன்பு போலவே அதே சமூகப் பொருளா தார குறைபாடுகளால் தொடர்ந்து பாதிக்கப் பட்டு வருகின்றனர். தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாத, ஆனால் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த சிறு குழுக்கள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலிருந்து ஏற்பட்டு வரும் முதலாளித்துவ வளர்ச்சியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தங்களை முன்னேற்றிக் கொண்டிருக்கின்றன. தரித்திரமாக்கப்பட்ட மேல்சாதி மற்றும் பிற்படுத் தப்பட்ட சாதிகளில் பெரும்பான்மையானோர் மற்றும் ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட சாதியினர் ஆகியோருக்கிடையில் ஓரளவிற்கான இணைப்பு இவ்விதமாக ஏற்படுகின்றது.

வேறு வார்த்தைகளில்கூறினால், இந்தியாவின் எஞ்சியுள்ள பகுதிகளைப் போலவே, கேரளா வின் அரசியல் வாழ்வில் இன்னமும் சாதி ஒரு முக்கிய காரணியாக இருப்பதால், செயல்படுவ தால், சாதி மற்றும் சமூகங்களுக்கு அப்பாற்பட்டு, வர்க்கங்களின் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் அரசியல் கட்சிகள் மற்றும் வெகுஜன அமைப்புகள், மென்மேலும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. ஆதலால், பொது வாழ்வில் உள்ள முற்போக்கு சக்திகள் சாதிய ஒடுக்குமுறைகள் நிலவுவதை கவனிக்கும் அதே நேரத்தில் வளர்ந்து வரும் வர்க்கங்களைத் தங்களது அடிப்படையாகக் கொள்ள வேண்டும்; ஆதலால், வர்க்கச் சுரண்டலுக்கும், ஒடுக்கு முறைக்கும் எதிரான போராட்டத்தில் அனைத்து சாதிகளையும் சமூகங்களையும் சேர்ந்த மக்களை ஒன்றிணைப்பது இன்னும் முடிக்கப்படாத பணியான ‘சாதி-ஜென்மி-நடுவழி மேதாவித்வத்தை’ முடிவிற்கு கொண்டு வருவதற்கு அதிஅவசிய மான முன்நிபந்தனையாகும். மேல்சாதிகளைச் சேர்ந்த முற்போக்கு சக்திகள் தங்கள் பங்கிற்கு கீழ்சாதிகளின் விருப்பத் தேர்வுகளின் விஷயத்தில் எதிர்மறையான அணுகுமுறையை மேற்கொள்ள முடியாது.

இவ்வாறாக, எங்களது கட்சியும் அதன் தொண்டனாகிய நானும் வர்க்கப் போராட்டம் எனும் மார்க்சியக் கோட்பாட்டை எங்களது அடிப்படையாகக் கொண்டிருக்கின்றோம்; சுரண்டும் வர்க்கங்களுக்கு எதிராக சாதி மத வேறுபாடின்றி  சுரண்டப்படுபவர்களை ஒற்று மைப்படுத்த வேண்டிய தேவைகளுக்காக சாதி ஒடுக்குமுறைப் பிரச்சனையை அதற்கு உட்பட்ட தாகக் கொண்டிருக் கின்றோம்.

அகில இந்திய அளவில்

மேலே விவரிக்கப்பட்டபடி ஆரம்பத்தில் கேரளாவிற்கு மட்டுமே உட்பட்டதாக இருந்த என்னுடைய செயல்பாடுகள் படிப்படியாக அகில இந்திய அரசியலுக்கு விரிவடைந்தன. அதனால் நான் 1940 மற்றும் 1950களில் அன்றாடப் போராட்டங்களிலும், பிரச்சாரத்திலும், தத்து வார்த்த அடிப்படையிலும் அகில இந்திய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்சனை களைக் கையாள வேண்டியிருந்தது. கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு நிர்வாகியாகவும், கட்சியின் அகில இந்திய மையத்தில் சில பொறுப்பு களை எடுத்துக் கொண்டவனாகவும் நான் பணியாற்றிக் கொண்டிருந்த நாட்கள் அவை.

1950களின் இறுதியிலும், 1960களின் துவக்கத் திலும் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான உட்கட்சிக் கருத்து வேறுபாடுகள் நிலவிய காலகட்டத் திற்குள் நுழைந்ததென்பது அனைவருக்கும் தெரி யும். இந்திய சமுதாயத்தின் தன்மை,  இந்தியப் புரட்சியின் சமூகப் பொருளாதார உள்ளடக்கம், மற்றும் கொள்கை, உத்தி, மூலஉத்தி தொடர் பான எண்ணற்ற பிரச்சனைகள் இயல்பாகவே எழுந்தன. என்னுடைய பங்கிற்கு, இந்திய சமுதா யம் மற்றும் புரட்சியின் பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் பிரச்சனைகள் குறித்து தீவிரமான ஆய்வு மேற்கொள்வது என்று நான் தீர்மானித்தேன்.  அதன் பலனாக’இந்திய வடிவ சோசலிசத்தின் பொருளாதாரம் மற்றும் அரசியல்’ என்கிற தலைப்புடைய நூல் 1963-64ல் எழுதப்பட்டு அது ஆகஸ்ட் 1966ல் பதிப்பிக்கப் பட்டது. உண்மையில், அது இந்தியப் புரட்சியின் அடிப்படைத் திட்டத்தின் பரிணாம வளர்ச்சிக்கு என்னுடைய பங்களிப்பாகும்; அதன் அடிப்படை யில் கம்யூனிசஇயக்கத்திற்குள் இருந்த வேறு பாடுகளைத் தீர்ப்பதற்கு முயற்சிக்கப்பட்டது.

1964ல் வகுக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் திட்டம் இந்த வேறு பாடுகளைத் தீர்த்ததென்பது தெரிந்ததென்கிற போதிலும்; ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவு அதை ஏற்கவில்லை. மற்ற பல பிரச் சனைகளுடன், தற்போதைய இந்திய சமுதாயத் தில் முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாயத் தின் செல்வாக்குகள் எந்த அளவிற்கு இருக்கின்றது என்பது பற்றியும் அந்த திட்டம் பரிசீலிக்க வேண்டியிருந்தது. பிரச்சனையும், அதன் தீர்வும் கட்சித் திட்டத்தில் பின்வரும் வார்த்தைகளில் விளக்கப்பட்டிருக்கின்றன: 

‘மேற்கு ஐரோப்பாவிலும், இதர முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலும் நிகழ்ந்தது மாதிரி யான முதலாளித்துவ வளர்ச்சி இந்தியாவில் நிகழவில்லை. இந்திய சமுதாயம் முதலாளித் துவப் பாதையில் வளர்ந்து கொண்டிருந்த போதி லும், அது முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாயத் தின் பலமான கூறுகளை இன்னமும் தன்னுள் கொண்டுள்ளது. முதலாளிகளால் அழிக்கப்பட்ட, முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாயங்களின் சாம்பலின் மீது வளர்ந்த முன்னேறிய முதலாளித் துவ நாடுகள் போலல்லாது, இந்தியாவில் முதலாளித் துவம் அதற்கு முந்தைய சமுதாயத்தின் மேலே அப்படியே பொருத்தப்பட்டது. ஒரு நூற்றாண்டுக் கும் மேலாக ஆட்சி புரிந்த பிரிட்டிஷ் ஆட்சி யாளர்களோ அல்லது 1947ல் அதிகாரத்தைப் பெற்ற இந்திய முதலாளிகளோ, முதலாளித்துவ சமுதாயத்தின் தடையற்ற வளர்ச்சிக்கும், பின்னர் அது சோசலிச சமுதாயத்தால் நீக்கப்படுவதற்கும் இன்றியமையாத செயலான முதலாளித்துவத் திற்கு முந்தைய சமுதாயங்களுக்கு மரண அடி கொடுக்கும் வேலையைச் செய்யவில்லை.

ஆதலால், இன்றைய இந்திய சமுதாயமானது, ஏகபோக முதலாளித்துவம் சாதி, மத, இனக்குழு நிறுவனங்களுடன் இணைந்திருக்கும் ஒரு விசித் திரமான கலவையாகும். இவ்வாறாக, முதலாளித் துவத்திற்கு முந்தைய சமுதாயத்தின் அழிவில் நாட்டம் கொண்ட முற்போக்கு சக்திகளை ஒன்று படுத்தும் கடமையும், ஜனநாயகப் புரட்சியை மிக விரைவாக பூர்த்தி செய்வதற்காக அதற்குள்ளேயே இருக்கின்ற புரட்சிகர சக்திகளை உறுதிப்படுத் தும் கடமையும், சோசலிசத்திற்கு மாறிச் செல்வ தற்காக தளத்தைத் தயார்படுத்தும் கடமையும் தொழிலாளி வர்க்கத்தின்மீதும், அதன் கட்சியின் மீதும் விழுந்துள்ளது.’

கட்சியின் இந்தப்புரிதலின் அடிப்படையில், நான் மேலே குறிப்பிட்ட நூலில் சாதிப் பிரச் சனையை விவாதித்திருக்கின்றேன். அதிலிருந்து சில பொருத்தமான பகுதிகளை இங்கு கொடுப் பது பயனுள்ளதாக இருக்கும்:

‘மக்களின் சமூக வாழ்வின் மீது சாதியம் மற்றும் வகுப்புவாதம் ஆகியவற்றின் பிடி பலவீனமடைந்து கொண்டிருக்கும்போது, அவை அரசியல் ரீதி யாக மேலும் மேலும் வலுவடைந்து வருகின்றன என்பதென்னவோ முரண்பாடாகத் தோன்றலாம். ஆனால், அதுதான் உண்மை. தங்களது சாதியால் மற்றும் மதத்தால் விதிக்கப்பட்ட பாரம்பரிய சடங்குகள் மற்றும் பழக்க வழக்கங்களை மீறுகிற அனைத்து சாதிகளையும், மதக் குழுக்களையும் சேர்ந்த மக்களின் எண்ணிக்கை இடைவிடாமல் அதிகரித்துக் கொண்டிருக்கும் நாட்கள் இவை. பழைய புனிதத் தடைகள் முந்தைய தலைமுறை யினரை விட இன்று குறைவாகவே கடைப் பிடிக்கப்படுகின்றது. முந்தைய தலைமுறையே தன்னுடைய முன்னோர்களைவிடக் குறைவான அளவே கடைப்பிடித்தது. சாதி மற்றும் மதத்தால் விதிக்கப்பட்ட புனிதத் தடைகளைக் கடைப்பிடிக் காத ஒரு போக்கு குறைந்தபட்சம் ஒன்றரை நூற்றாண்டுகளாக நிகழ்ந்து கொண்டிருக்கின் றது. தீட்டு மற்றும் தீண்டாமை, சமபந்தி போஜனம் மற்றும் சாதிகளுக்கு இடையிலான திருமணம் போன்றவை சம்பந்தமான விதிகள் மக்கள் மீதான தங்களுடைய பிடிமானத்தை மென்மேலும் இழந்து வருகின்றன.

அதே சமயம் சாதி, மதச் சமூகம், இனம் ஆகியவை நாட்டின் அரசியல் வாழ்வில் மென்மேலும் சக்தி மிக்கவையாக ஆகி வருகின்றன. ஒரு சமூக அமைப்பு என்கிற முறையில் சாதியின் விதிகளையும், தடை களையும் கடைப்பிடிக்க மறுக்கும் அதே நபர்கள் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை வசீகரிப்பதற் காகவும், வேலைகளைப் பெறுவதற்காக அல்லது ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக சரியான இடத் தில் இருக்கும் சரியான நபர்களின் மீது செல் வாக்கு செலுத்துவதற்காகவும் சாதி இறுக்கத் தைப் பயன்படுத்துகின்றனர்.’

இந்த முரண்பட்ட நிகழ்வை முறையாகப் புரிந்து கொள்வதற்கு இரண்டு உண்மைகளைக் கவனிப்பது அவசியம்.

முதலாவதாக, நவீன முதலாளித்துவம், ‘முதலில் பிரிட்டிஷ் மேலாதிக்கவாதிகளின் மூலமாகவும், பின்னர் தேசிய முதலாளி வர்க்கத்தின் மூலமாக வும் இந்தியாவின் சமூகப் பொருளாதார, கலாச் சார, அரசியல் வாழ்வின் பல்வேறு பக்கங்களில் புரட்சிகரமான மாறுதல்களை நிகழ்த்தியது…. ஆதலால், தங்களது குறுகிய சுயநலன்களுக்காகச் செயல்பட்ட போதும், பிரிட்டிஷ் ஆட்சியாளர் கள்’ இந்தியாவின் ஆன்மா’ என்றழைக்கப்படு வதின் வேர்களை வெட்டினர்; நூற்றாண்டு கால பழமையான இந்திய சமுதாயத்தில் புரட்சிகர மான மாறுதல்களை அவர்கள் கொண்டு வந்தனர்.’

இரண்டாவதாக, ‘தாங்கள் அன்னிய ஆட்சி யாளர்கள் என்கிற உண்மை நிலையே பிரிட்டி ஷார்களை அன்னிய ஆட்சியாளர் தங்களுடைய நலன்களை பாதுகாக்கவே உள்ளார்கள் என்று கருதிய இந்திய சமுதாயத்தின் சில வர்க்கங்களை யும், பிரிவினைரையும் சார்ந்திருக்கச் செய்தது; உழைக்கும் மக்கள் திரளையோ அல்லது எழுந்து கொண்டிருந்த முதலாளித்துவ வர்க்கத்தையோ தங்களது அன்னிய ஆட்சியை ஆதரிப்பதற்காகச் சார்ந்திருக்க முடியாது என்பதால், பிரிட்டி ஷாருக்கு முந்தைய பழைய ஆட்சியின் பிரதிநிதி களான- மன்னர்கள் மற்றும் நிலப்பிரபுக்கள், காலாவதியாகிப் போன சாதிப்பிரிவினைகள் நிறைந்த பழைய சமுதாயத்தின் பூசாரிகள் மற்றும் அவர்களைப் போன்றவர்கள், மத அதிகார பீடத்தின் பிரதிநிதிகள், கிராம சமுதாயங்கள் மற்றும் இனக்குழுத் தலைவர்கள், இதரர்கள் ஆகியோரின் ஆதரவைத் திரட்ட வேண்டியிருந்தது. ஆதலால், பழைய சமுதாயத்தின் பிரதிநிதிகளான இந்தப் பிரிவைச் சேர்ந்த ஒவ்வொருவரிடமும் அவர்கள் சமரசம் செய்து கொள்ள வேண்டி யிருந்தது. அவர்கள் மக்கள் திரளின் பிற்படுத்தப் பட்ட (சாதி, மதம், இனம் இத்தியாதி) உணர்வை யும் பயன்படுத்த வேண்டியிருந்தது.

அன்னிய ஆட்சியாளர்களுக்கும், சாதி உள்ளிட்ட காலாவதியாகிப் போன சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான இந்த சமரசம் சுதந்திரப் போராட்டத் தலைமையிலும் பிரதி பலித்தது. அரசியல் ரீதியான முற்போக்குத் தன்மையுடன், சமூகக் கலாச்சார பிற்போக்குத் தன்மையும் இணைந்திருந்ததென்பது எழுந்து கொண்டிருந்த முதலாளித்துவ ஜனநாயக இயக் கத்தின் ஒரு முகமாகும். சமூகக் கலாச்சார முற் போக்குத் தன்மை அன்னிய ஆட்சியாளர்களுக்கு அரசியல் ஆதரவளித்ததென்பது அதே நாணயத் தின் மறுபக்கமாகும்.

வர்ண தர்மம் அல்லது இஸ்லாமியச் சட்டம் ஆகியவற்றை பாதுகாப்போம் என்கிற உறுதி யேற்றுக் கொண்ட, இந்து அல்லது முஸ்லிம் மறுமலர்ச்சியை ஆதரிக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்கள்; சுதந்திரப் போராட்டத்தை எதிர்த்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் கைகோர்த்துக் கொண்ட முற்போக்குவாதிகள் மட்டுமின்றி ‘சோசலிஸ்டுகளும்’ – ஆகிய இரண்டு மாற்றுக் களை எழுந்து கொண்டிருந்த முதலாளி வர்க்கத் தின் அரசியல் தலைமை முன் வைத்தது.

இந்த இரண்டு போக்குகளும் இறுதியில் ‘ஒரே, பிரிக்க முடியாத இந்தியா (அகண்ட பாரதம்)’ மற்றும் ‘இந்து மற்றும் முஸ்லிம் ஆகிய இரண்டு தேசங்களைக் கொண்ட இந்தியா’ ஆகிய இரு கோட்பாடுகளில் தங்களை பலப்படுத்திக் கொண் டன. விடுதலை இயக்கத்தின் முதலாளித்துவ தலைமையின் போற்றப்பட்ட லட்சியம் நிறை வேறியபோது அது பழைய, ஒன்றுபட்ட, பிரிட் டிஷ் ஆளுகைக்குட்பட்ட இந்தியா இரண்டு சுதந்திர தேசங்களாகப் பிரிக்கப்படும்வடிவத்தை எடுத்ததென்பது அந்தத் தலைமையின் தோல்வியே ஆகும்.

அந்த நிலைமையை உண்டாக்கிய முதலாளித் துவ தலைமையின் பிரிவுகளுக்கெதிராகப் போராட்டப் பதாகையை உயர்த்திப் பிடித்தது நாங்கள்தான் என்று கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த எங்களால் பெருமையுடன் கூறிக் கொள்ள முடியும். எங்களது முயற்சியில் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்பதென்னவோ உண்மைதான்; அத்துடன் அந்த முயற்சி எடுக்கும் போதும் சில பெரும் பிழைகளைச் செய்தோம் என்பதும் உண்மைதான் என்றபோதும், விடுதலை இயக்கத்தில் பங்கேற்ற மற்ற ஒவ்வொரு அரசியல் கட்சியும், அமைப்பும், குழுவும் முதலாளித்துத் தலைமையின் இந்த அல்லது அந்தப் பிரிவின் பின்னால் அணிதிரண்டபோது, கம்யூனிஸ்டு களாகிய நாங்கள் இரு பிரிவுகளையும் எதிர்த்துப் போராடினோம் என்பதும் உண்மை. நாட்டி லிருந்த அரசியல் கட்சிகள், குழுக்கள், அமைப்பு கள் ஆகியவற்றில், இந்தியாவில் வாழும் பல்வேறு தேசிய இனங்களை ஒன்றுபடுத்துவதற்காகவும், ஒரு தன்னார்வக் கூட்டமைப்பை அமைப்பதன் மூலம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங் களின் பலன்களை உறுதிப்படுத்தவும், மக்களின் புதிய இந்தியாவை நிர்மாணிக்கவும் போராடியது நாங்கள் மட்டுமே. மொத்த அரசியல் நிலைமை யில் உடனடியாகத் தாக்கத்தை ஏற்படுத்த முடி யாத அளவு நாங்கள் மிகச் சிறிய சக்தியாக இருந் தோம் என்பதும், ஆதலால் நாடு பிரிக்கப்பட்ட தும், அது துயரம் மிக்க வகுப்புக் கலவரங்களுக்கு இட்டுச் சென்றது என்பதும் உண்மை. ஆனால் நாங்கள் முயற்சித்தோம் என்பதே திருப்திக்கும் பெருமிதத்திற்கும் உரிய விசயமாகும்.

1930களின்  பின்பாதியில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தன்னை ஒன்றுபடுத்திக் கொண்டு, நாட்டின் அரசியல் நிலைமையில் நேரடியாகத் தலையிட ஆரம்பித்த நாளிலிருந்து, அதன் தலை மையும், தொண்டர்களும், அதைப் பின்பற்றும் மக்களும் காங்கிரஸ், முஸ்லிம்லீக் ,மற்றிதர அரசியல் கட்சிகளில் தங்களைப் பலப்படுத்திக் கொண்ட முதலாளித்துவ –நிலப்பிரபுத்துவ              வர்க்கங்களின்  தத்துவத்திற்கு எதிராக இடைய றாத போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. 1940களில், வெள்ளையனே வெளியேறு இயக்கத் திலிருந்து ஒதுங்கியிருந்த அதே வேளையில், விடுதலை இயக்கத்தின் மீது அடக்குமுறையை ஏவும் பிரிட்டிஷ் கொள்கையை எதிர்த்தும். சோவியத் யூனியன் மற்றும் இதர உலகப் புரட்சி கர சக்திகளின் பின்னாலும் அதே வேளையில் அத்தருணத்தில் பாசிஸ எதிர்ப்பு முகாமில் இருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வும் போராடினோம்; காங்கிரஸ் வகை அகண்ட பாரதத்திற்கும், முஸ்லிம்லீகின் இரு தேசக்கொள் கைக்கும் எதிராக ஏககாலத்தில் நாங்கள் நடத்திய போராட்டம், சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் நவீனமயமாக்கல் ஆகியவற்றிக்கான இந்தியா வின் போராட்டத்தை வெற்றிகரமான முடிவை நோக்கி எடுத்துச் செல்லும் முயற்சியிலிருந்து பிரிக்க முடியாததாகும்.

இந்தப் போராட்டம் எங்களைப் பெரும்பா லும் விடுதலைப் போராட்டத்தின் பொது நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்தியது என்கிற போதிலும், இந்தியாவிலும், அயல்நாடுகளிலும் முதலாளி வர்க்கத்தையும் அதன் கூட்டாளிகளை யும் எதிர்த்துப் போராடுவதற்காக பாட்டாளி வர்க்கப் புரட்சி எனும் பதாகையின் கீழ் மென்மே லும் பெரிய எண்ணிக்கையில் உழைக்கும் மக்களை, எங்களது மனஉறுதியை அது பதப்படுத்தியது. அதனால்தான், நாட்டிலுள்ள இடதுசாரி சக்தி களில் தனியொருசக்தியாக, வங்கத்தின் தெபாகா இயக்கம், ஆந்திராவின் தெலுங்கானா இயக்கம், மலபார், மராட்டியத்தின் வொர்லி பகுதி மற்றும் இதர பிரம்மாண்டமான போர்க்குணமிக்க  இயக் கங்களை, யுத்தத்திற்குப் பிந்தைய வருடங்களி லும், விடுதலைக்குப் பிந்தைய வருடங்களிலும் எங்களால் நடத்த முடிந்தது. அந்தப் போக்கில் சில பெரும் பிழைகளை நாங்கள் செய்தோம் என்கிற உண்மை இன்னும் பெருமளவிலான மக்களின் ஆதரவைப் பெறுவதிலிருந்து எங்களைத் தடுத்துவிடவில்லை.

விடுதலைக்குப் பின் இயற்றப்பட்ட புதிய அரசியல் சட்டத்தின் கீழ் நடந்த முதல் பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தி லும், நான்கு மாநிலங்களிலும் முக்கிய எதிர்க்கட் சியாக ஆனதிலிருந்து இது தெளிவானது. அந்த நான்கில் இரண்டு மாநிலங்களில் கட்சி, தன் தோழமைக் கட்சிகளுடன் சேர்ந்து சட்டமன்றத் தில் கிட்டத்தட்ட பெரும்பான்மை பெற்று, கூட்டணி அரசாங்கம் அமைக்கும் நிலை வரை வந்தது. ஐந்து வருடங்களுக்கு பின்னர் கட்சி உள்ளபடியே பெரும்பான்மை பெற்றது; அதைத் தொடர்ந்து அது தானே தன்னுடைய சொந்த மாநில அரசாங்கத்தை அமைத்தது.

இது கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமே உரித் தான பெருமை. பின்வந்த ஆண்டுகளில் கட்சியில் பிளவு ஏற்பட்டபோது பிளவுபட்ட இரண்டில் வலுவானதாக இருந்த கட்சி இடதுசாரி மற்றும் இதர எதிர்க்கட்சிகளைக் கொண்ட ஆட்சிகள் அமைக்கப்பட்டபோது அந்த கூட்டணியின் முக்கிய அங்கமாக ஆனது. இன்றும் கூட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மூன்று மாநிலங் களில் கூட்டணிக்கும், அரசாங்கத்திற்கும் தலைமை தாங்குகின்றது. வேறு எந்தக்கட்சியோ, குழுவோ அல்லது அமைப்போ இத்தகைய ஒரு நிலையை வகித்ததில்லை.

1980ம்ஆண்டின் அரசியல் நிகழ்வுகள் மேலே கூறப்பட்டது எவ்வளவு உண்மை என்பதை மீண்டுமொரு முறை அடிக்கோடிட்டுக் காட்டின. முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ ஆளும் வர்க்கங் களின் கட்சிகள் அனைத்தும் உடைந்து சிதறி யதை அந்த வருடம் கண்டதுடன் அவற்றில் மிக வும் வலுமிக்க கட்சி, மத்தியிலும், பெரும்பாலான மாநிலங்களிலும் அதிகாரத்தில் இருந்தபோதும், அது உள்கட்சி மோதல்களால் பிளவுண்டு கிடந்த துடன் மக்களின் மீதான தனது பிடிமானத்தை அது மிக வேகமாக இழந்து கொண்டிருந்தது. ஜனநாயகத்திற்காகப் போராடுவது, உழைக்கும் மக்களின் நலன்களைப் பாதுகாப்பது என்கிற கொள்கை வழிப்பட்ட நிலை எடுக்கவும், அதற் காக இடதுசாரிகளுடன் ஒத்துழைக்கவும் மறுத்த அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அதே கதிதான் ஏற்பட்டுக்கொண்டிருந்தது. ஆதலால், மக்களுக் குச் சேவை செய்யும், ஆளும் வர்க்கங்களை எதிர்த்துப் போராடும் ஒரு எளிய திட்டத்தின் அடிப்படையில் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் இதர எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் ஒரு இயக்கம் நடந்து கொண்டிருக்கின்றது.

ஆளும் வர்க்கங்களை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உள்ள ஒரே தத்துவம், இந்தியாவின் பிரச்சனை களுக்கு நியாயமான,  நீடித்திருக்கும் தீர்வுகளைக் கண்டுபிடிக்கக் கூடிய தத்துவம், மார்க்சியம்-லெனினியம்தான். கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த நாங்கள் இந்த தத்துவத்தை இந்தியாவின் பிரத்தியேக நிலைமைகளுக்குப் பிரயோகிக்க முயற்சிப்பதால் தான் 1964 வரை ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்க மும், அதற்குப் பின்னர் சிபிஐ(எம்)-மும் அரசியல் தளத்தில் மிதமான வெற்றிகளைப் பெற்று வந்துள்ளோம்.

இட ஒதுக்கீடு ஏன் எவ்வாறு?

(1990களில் தோழர் இ.எம்.எஸ் எழுதிய சிறு பிரசுரத்தின் சுருக்கம்)

காலங்காலமாக சாதியமைப்பு “சூத்திரனுடைய நடவடிக்கை கள், அது தனிப்பட்டதோ, சமூக ரீதியானதோ அல்லது பொருளாதார ரீதியானதோ இப்படி எந்த நடவடிக்கையாயினும் அவற்றின் முக்கிய அம்சங்கள் மீது அவனுடைய தாழ்ந்த சமூக அந்தஸ்து கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தியிருந்ததது. இயல்பாகவே பிராமணர்களுக்கு மிக உயர்ந்த ஸ்தானத்தையும், சூத்திரர்களுக்கு கீழ்மட்ட அந்தஸ்தையும் உறுதிப்படுத்துகின்ற வகையில் பழங்கதைகளும், வேதங்களும் பயன்படுத்தப்பட்டன. தனி மனித வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தின்மீதும் சாதிகள் கட்டுப்பாடு வகித்ததால் சரிசமானமில்லாத சமுதாய அமைப்பு உருவாவதற்கே இது இட்டுச் சென்றது. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால் இந்த கீழ்த்தட்டு மக்கள் சமூக ரீதியாக மட்டுமல்லாது, கல்வி அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய நிலையிலிருந்தார்கள். மறுபுறத்தில், மற்ற உயர் சாதியினர் மேற்குறிப்பிட்ட அனைத்துத்துறைகளிலும் முன்னேறியிருந்தனர். இந்த சம்பிரதாயபூர்வமான சமுதாய அடுக்கில் எந்தவொரு சாதியும் எத்தகைய – அதாவது உயர்ந்த அல்லது தாழ்ந்த இடத்தை வகித்ததோ அந்த அந்தஸ்துதான் அச்சாதியின் முன்னேற்றத்தையோ அல்லது பின்தங்கிய நிலையினையோ தீர்மானித்தது” (பக்கம் 14.17) என்கிறது மண்டல் கமிஷன் அறிக்கை.

1957-ஆம் ஆண்டு, சட்டக்கல்லூரியில் பட்டம் பெற்ற பின்பு, இந்தியாவில் தீண்டாமையை ஒழிப்பதற்கு எடுத்து வரும் முயற்சிகள் குறித்து ஆய்வு நடத்தும் நோக்கத்துடன், ஃபுல் பிரைட் ஸ்காலர்ஷிப் பெற்றுக் கொண்டேன்.  எனக்கு பழகிப்போயிருந்த அமெரிக்க சிவில் உரிமைகள் என்ற கண்ணாடி மூலம் ஆராய்ச்சி நடத்திய எனக்கு, இந்தியாவில் சிவில் உரிமைகளை அமுல்படுத்தும் வகையில் சிலருக்கு அதிகப்படியான சலுகைககள் அளிக்கும் திட்டம் திகைப்பூட்டுவதாக இருந்தது. சட்டத்திற்குமுன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தும் வேளையிலேயே வரலாற்று ரீதியாக சுரண்டப்பட்ட மக்களுக்கு திட்டமிட்ட சலுகைகள் அரசியல் சாசனத்தின் மூலம் உறுதி செய்ததும் எனக்கு திகைப்பூட்டுவதாக இருந்தது. பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்கிற கொள்கையினை தொடர்ந்து இந்திய நாட்டின் நீண்ட கால விரிந்த அனுபவம் அமெரிக்கக் கொள்கைகளுக்கு ஒரு பாடமாக அமையக்கூடும்

(மார் காலாந்தர் எழுதிய “போட்டியிடும் சமத்துவங்கள்” – பக் .17)

வேறு நாடுகளைப்போல் அல்லாமல், அத்தகைய நலிந்தவர்களின் பிரச்சினை முற்பட்டவர்கள்என்றும் அவர்களுக்கு எதிராக பிற்படுத்தப்பட்டவர்கள் என்றும் இந்தியாவில் உருவாகியிருக்கிறது. மீண்டும் மண்டல் கமிஷனின் வார்த்தைகளிலேயே கூறுவது என்றால், “பாரம்பரியமான இந்திய சமுதாயத்தில் சமூக ரீதியான பின்தங்கியநிலைமை என்பதே சாதி அந்தஸ்தின் நேரடி
விளைவாகும். மேலும் வேறு பல பின்தங்கிய
நிலைமைகளும் இத்தகைய தடைகளிலிருந்துநேரடியாக பிறப்பெடுத்தவையேயாகும். (பக்.17)

மண்டல் கமிஷன் பின்வருமாறு குறிப்பிடுகிறது. “ஒடுக்கப்பட்ட அல்லது உரிமைகள் பறிக்கப்பட்ட மக்களுடைய நலன்களுக்கானபல்வேறு சிறப்பு திட்டங்களை கடந்த சுமார் நூறு ஆண்டுகளாக இந்தியாவிலுள்ள மாநிலஅரசாங்கங்கள் பல நிறைவேற்றி வந்திருக்கின்றன. இந்த வகையில் முதல் நடவடிக்கை 1885-ஆம்ஆண்டில் சென்னை மாகாணத்தில் எடுக்கப்பட்டதாகும். ஒடுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்தமாணவர்களுக்கு கல்வி நிலையங்களில் பிரத்தியேக சலுகைகளை வழங்குவதற்கான நிதி மானியவிதிமுறை ஒன்றை சென்னைமாகாண அரசாங்கம் உருவாக்கியது.

அடுத்தது 1921-ஆம் ஆண்டில் சென்னை மாகாணசட்டமன்றத் தில் ஏற்கப்பட்ட தீர்மானம் ஒன்றின் அடிப்படையில், அரசுப் பணிகளில் பிராமணரல்லாதவர்களுக்கு அதிகப்படியான பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கும் சென்னை மாகாண அரசாங்கத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மீண்டும் 1927-ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டுக்கான எல்லை மேலும் விரிவுபடுத்தப்பட்டது. மாகாணத்திலுள்ள சாதிகள் அனைத்தையும் ஐந்து பரந்தபிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும், இவ்வளவு இடஒதுக்கீடு என்று வரையறைசெய்யப்பட்டது.” (பக்.5)

அரசியல் சட்டம்அரசியல் சட்டத்தில் இரண்டு வகையான இடஒதுக்கீட்டிற்கு வகை செய்யப்பட்டுள்ளது. ஒன்று நாடு முழுவதும் செல்லத்தக்க வகையில்,தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீடு; இரண்டாவது, தாழ்த்தப்பட்டமற்றும் பழங்குடி மக்கள் தவிர சமூக ரீதியாகவும்கல்வி ரீதியாகவும் பின்தங்கிய பிரிவு மக்களுக்கான இட ஒதுக்கீடு. இந்த இரண்டாவது வகைஒதுக்கீட்டின் அடிப்படையில்தான், ஆந்திரபிரதேசம், பீகார், குஜராத், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், பஞ்சாப் , உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஏனைய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு வகைசெய்யப் பட்டிருக்கிறது. சில மாநிலங்களில்இத்தகைய இட ஒதுக்கீடுகள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இருந்துவருகின்றன.

இருப்பினும் இந்த மாநிலங்களில் (தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு தவிர) மத்தியஅரசாங்கப் பணிகளில் இட ஒதுக்கீடு என்பதுகிடையாது. நாடு முழுவதுமுள்ள, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்களுக்கு 27சதவீத இட ஒதுக்கீடு செய்வது என்ற வி.பி.சிங் அரசாங்கத்தின் முடிவு இந்த வெற்றிடத்தை இட்டு நிரப்பியருக்கிறது. இவ்வாறு இட ஒதுக்கீடு விரிவுபடுத்தப்பட்டதை இயல்பாகவே சமூகமற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியவர்கள் வரவேற்கிறார்கள்; மாறாக, பல நூற்றாண்டுகளாக அதிகாரத்ததை ஏகபோகமாக அனுபவித்தவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

வேறுவார்த்தைகளால் கூறுவதென்றால் சாதி அமைப்பு முறையின் காரணமாக ஏற்பட்ட அசமத்துவ நிலையினை போக்குவதுதான் விஷயம். பாரபட்சத்திற்கு உள்ளாகியிருந்த பிரிவினர் மட்டுமல்லாது, பல நூற்றாண்டு காலமாக அதிகாரத்தை ஏகபோகமாக அனுபவித்த பிரிவினருக்குள்ளிருக்கும் முற்போக்கு சிந்தனை கொண்டவரும், இதனை ஆதரித்து நிற்க வேண்டும்.தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர் மற்றும்ஏனைய பிற்படுத்தப்பட்டசாதியினர்தான் இரண்டுவகையான ஒடுக்குமுறையினால் பாதிக்கப்பட்டவர்கள். அதாவது அவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினர் மட்டுமல்லாமல் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களையும் சேர்ந்தவர்கள்.

வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால் இட ஒதுக்கீடு முன்னேறியசாதியிலுள்ள ஏழைகளின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்படவில்லை; மாறாக முன்னேறியசாதியினர் எட்டியிருக்கும் சமூக, பொருளாதார, கலாச்சார மட்டத்தின் அளவிற்கு ஒடுக்கப்பட்ட சாதியினரையும் முன்னேற்றுவதுதான் இடஒதுக்கீட்டின் நோக்கம். மண்டல் குழு அறிக்கை குறிப்பிடுவது யாதெனில்சமூக, கல்வி அடிப்படைக்கான குறியீடுகளுடன், பொருளாதார அடிப்படைக்கான குறியீடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டன. சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியிருக்கிறார்கள் என்றவிஷயத்தை அழுத்தமாக எடுத்துச் சொல்வதற்குஇது உதவியது.

காலேல்கர் கமிஷன், மண்டல் கமிஷன் ஆகியஇரண்டுமே, சமூக (சாதி) ஒடுக்குமுறையின் காரணமாக ஏற்பட்ட சமூக மற்றும் கல்விரீதியான பின்தங்கிய நிலைமையை ஒரு தொடக்க நிலையாகக் கொண்டு அத்துடன் பொருளாதாரநிலையையும் இணைத்துப் பார்த்தன. அதன் காரணமாகத்தான், காலேல்கர் கமிஷன் பரந்தஅளவில் ஒட்டுமொத்தமான பரிந்துரைகளை வழங்கியது. “தீவிரமான நிலச்சீர்த்திருத்தம்,கிராமப் பொருளாதார மறுசீரமைப்பு, பூதான இயக்கம், கால்நடை மற்றும் பால்பண்ணைவளர்ச்சி, கால்நடை இன்சூரன்ஸ், தேனீ வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கிராமப்புற மற்றும் குடிசைத்தொழில் வளர்ச்சி, கிராம வீட்டு வசதி, பொது சுகாதாரம், கிராமப்புற குடிநீர் விநியோகம்,முதியோர் கல்வி, பல்கலைக் கழக கல்வி,அரசாங்கப் பணிகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பிரதிநிதித்துவம் முதலிய பல்வேறுதுறைகளை உள்ளடக்கிய  பரிந்துரைகள் அவை” (மண்டல் அறிக்கை பக்கம் 1)

மண்டல் கமிஷனும் இடஒதுக்கீட்டுப்பிரச்சினையை சமூக பொருளாதார கலாச்சாரமுன்னேற்றத்தின் பிற அம்சங்களுடன் இணைத்தேபரிசீலித்தது. அறிக்கை கூறுகிறது. “பின்தங்கியநிலைமையின் வேர்கள் வெட்டப்படாதவரை அரசாங்கப்பணிகளிலும், கல்வி நிலையங்களிலும் இட ஒதுக்கீடு, அதே போன்று முடிந்தஅளவிலான நிதி உதவி என்பதெல்லாம் அவ்வப்போது சுகமளிக்கும் மருந்தாகத்தான் இருக்கும்.சிறுநில உடமையாளர்கள், குத்தகை விவசாயிகள், விவசாயக் கூலிகள், வறுமையிலாழ்த்தப்பட்ட கிராம கைவினைஞர்கள், தொழில் தேர்ச்சி பெறாத உழைப்பாளிகள் முதலியவர்களில் பெரும்பகுதியினர் தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர் மற்றும் ஏனைய பிற்படுத்தப்பட்ட வர்க்கங்களேயாவர்.” ( பக்.60)

“அரசாங்க அதிகாரிகள் பலரும் பெருநிலச்சுவான்தார் குடும்பங்களிலிருந்து செல்கிறவர்கள்என்பதால், அரசு அதிகாரிகளுக்கும் பெருநிலச்சுவான்தார்களுக்கும் இடையிலான வர்க்க மற்றும்சாதி இணைப்பு உறுதியாக தொடர்கிறது. இந்தஇணைப்பு சமூக – அரசியல் பலாபலங்களை பெருநிலைச்சுவான்தார்களுக்கு அனுகூலமாக மாற்றி மற்றவர்கள் மீது அவர்களுக்கிருக்கும் மேலாதிக்கத்திற்கு துணைபுரிகிறது.” (பக்.60)

வர்க்கப் பார்வை தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர் மற்றும் ஏனைய பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றம் என்பது விவசாயப் புரட்சிக்கான அடிப்படைக் கடமைகளுடன் தொடர்புடையது என்றும் அத்தகைய புரட்சியின் மூலம்தான், நிலப்பிரபுக்கள், கந்துவட்டிக்காரர்கள், வியாபாரிகள் மற்றும் கிராமப்புறத்திலுள்ள ஒடுக்குமுறையாளர் அனைவரின் கோரப்பிடியிலிருந்து பெரும்பான்மையான கிராமப்புற மக்களை விடுதலை செய்யமுடியும் என்ற மார்க்சிய வரையறைக்கு மண்டல் அறிக்கையின் நிர்ணயிப்புகள் இசைவானதாக அமைந்துள்ளன.

விவசாயப்புரட்சி வெற்றி பெற வேண்டுமென்றால், முன்னேறிய சாதிகளையும் பிற்படுத்தப்பட்டசாதிகளையும் சேர்ந்த கிராமப்புறம் முழுவதுமுள்ள ஏழை மக்களின் போர்க்குணமிக்க வர்க்கஒற்றுமை மிகவும் அவசியம். முன்னேறிய சாதிகளைச் சேர்ந்த கிராமப்புறநகர்புற ஏழைமக்கள் அனைவரும் தங்களது வர்க்கசகோதர, சகோதரிகளே என்பதையும், நெருக்கமாக அவர்களுடன் இணைந்து நிலச்சீர்த்திருத்தங்கள்,அனைவருக்கும் வேலை; அனைவர்க்கும் கல்விமற்றும் உடனடிக் கோரிக்கைகளுக்கான போராட்டத்தில், கிராமப்புறத்தையும் நகரங்களையும் சேர்ந்தசுரண்டல்காரர்களுக்கு எதிராக, போர்க்குணமிக்க ஒற்றுமையை உருவாக்க வேண்டுமென்றும் தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர் மற்றும் ஏனைய பிற்படுத்தப்பட்டட சாதிகளைச் சேர்ந்தவர்களை உணரச் செய்தல் வேண்டும்.

ஆகவேதான், இந்து – முஸ்லீம் ஒற்றுமைக்காக போராடுவது போலவே, முன்னேறிய சாதிகள் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் ஒற்றுமைக்களும், இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயகசக்திகள் போராடுகின்றன. தகுதியும் திறமையும் இடஒதுக்கீடு காரணமாக தகுதியும் திறமையும் குறைந்து விடும் என்று வாதிடும்போது, பல நூற்றாண்டுகளாக பெரும்பான்மை மக்கள் சமூகரீதியாகவும் வலாச்சார ரீதியாகவும் பின்தங்கியநிலையிலேயே வைக்கப்பட்டிருந்தனர் என்பதையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். (சுதந்திரத்திற்கு கால் நூற்றாண்டுக்கு முன்பாகவே இடஒதுக்கீடு அமலில் இருந்து வரும்) தென்மாநிலங்கள் முழுவதிலுமிருந்து இடஒதுக்கீடு அடிப்படையில் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்களின் தகுதி, இடஒதுக்கீடு இல்லாத இந்தியாவின் மற்ற மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்படுவர்களின் தகுதியை விடகுறைவானது என எவரும் கூறிவிடமுடியாது.

இன்னும் சொல்லப் போனால், நாட்டின் மற்ற மாநிலங்களைவிட இடஒதுக்கீடு உள்ள மாநிலங்களின் நிர்வாகம் சிறந்ததாகவும் அதிக திறமையுடனுமிருக்கிறது. இடஒதுக்கீடு அடிப்படையில் இம்மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகளும், ஊழியர்களும் நடைமுறைப் பணிகளில் எவரையும் விட இளைத்தவர்கள் அல்லர். தேசிய ஒற்றுமை முன்னேறிய சாதிக்காரர்கள் நடத்திய மண்டல் எதிர்ப்பு போராட்டங்களுக்கு எதிர்ப்பாக பிற்படுத்தப்பட்டவர்கள் போராட்டத்தை தொடங்க வேண்டும் என்று சில வட்டாரங்கள் வேண்டுகோள் விடுத்ததை இங்கு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இது முன்னேறிய சாதிக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குமிடையில் சாதியுத்தம் நடத்த வேண்டும் என்பதற்காக விடப்பட்ட வேண்டுகோளே தவிர வேறொன்றில்லை. இது கண்டிப்பாக இந்தியமக்களை பிளவுபடுத்தி, சமூக அரசியல் அமைப்பை நிலைகுலையச் செய்யும்.

ஆகவே, தேசிய ஒற்றுமையைக் காப்பதில் அக்கறைகொண்ட அனைவர்க்கும் இந்த யுத்தத்தை தவிர்ப்பது அவசியமாகிறது. முன்னேறிய சாதிகளைச் சேர்ந்த நியாய உணர்வு படைத்தவர்களுக்கு மன நிறைவு அளிக்கும் வகையிலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும். ஏனெனில், முன்னேறிய சாதிகளிலிருந்து தான் ஆண்களும் பெண்களும் இட ஒதுக்கீட்டுக்கெதிராக கிளர்ச்சி செய்து வருகின்றனர்.

இடஒதுக்கீட்டை ஏற்கமுடியாது என்ற அவர்களின் வாதத்தை நிராகரிக்கும்போதே, இருக்கும் இடஒதுக்கீடு மாநிலத்திலிருந்து மத்திய அரசுப் பணிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தம் போதே, முன்னேறிய சாதியினரின் நியாயமான அச்சங்களையும் போக்குவதற்கு தேவையான கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். சாதியுடன் இணைந்த பொருளாதார அடிப்படை இடஒதுக்கீட்டிற்கு சாதிதான் முக்கிய அடிப்படை என்றாலும், சாதியுடன் பொருளாதார அடிப்படையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கம்யூனிஸ்டுகளும் மற்ற இடதுசாரிகளும் கூறி வருகின்றனர்.

பீகாரில் இடஒதுக்கீட்டிற்கான போராட்டம் கடுமையானபோது, இடஒதுக்கீட்டை ஆதரித்தும், எதிர்த்தும் லட்சக்கணக்கானோர் தெருவில் இறங்கி போராடத்தொடங்கினர். அன்று முதலமைச்சராக இருந்த காலஞ்சென்ற கர்ப்பூரி தாக்கூர் இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது எனதீவிரமாக சிந்தித்தார். இயல்பாகவே, கேரளத்தில் இத்தகைய போராட்டங்களின் போது கிடைத்த அனுபவத்தையெல்லாம் பரிசீலனை செய்து, அதில் மேலும் சில முன்னேற்றங்கள் செய்தார்.

சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களை பிற்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர் என இரண்டு பிரிவுகளாகப் பிரித்தார். மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சாதி அடிப்படையில் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மற்ற பிற்படுத்தரப்பட்டவர்களுக்கு சாதி அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், அச்சாதிகளிலுள்ள பணக்காரர்களுக்கு அந்தச்சலுகை கிடையாது என முடிவு  செய்யப்பட்டது. இடஒதுக்கீடு மிக அதிகமாக தேவைப்படுகின்ற பகுதியினருக்கு, அதாவது மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் எனப்படும் ஏழை எளிய மக்களுக்கு இடஒதுக்கீட்டின் பலன்கள் சென்றடையும் பிற்படுத்தப்பட்டவர்களிலே வசதி படைத்தவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் இடஒதுக்கீட்டின் பலன்கள் கிட்டாது.

நீதிபதி சின்னப்பரெட்டி தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன்கர்நாடக மாநிலத்திற்கும் இதே போன்றதொருதிட்டத்தை பரிந்துரை செய்தது. வி.பி.சிங் அரசாங்கம் அனைவரின் கருத்தையும் கேட்டறிந்த பின்பு பீகார் பாணியிலேயே, சிறிது முன்னேற்றங்களுடன் ஒரு அடிப்படையைஉருவாக்கியிருந்தால், அரசாங்க பணிகளுக்கான வாய்ப்பு போய் விடுமோ என்று அச்சம் கொண்டிருக்கும் உயர்சாதிகளைச் சேர்ந்த நியாய உணர்வு படைத்தவர்களின் இடஒதுக்கீடு எதிர்ப்பினை கூர்மழுங்க செய்திருக்க முடியும். மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமுல்படுத்துவதில் வி.பி.சிங் அரசாங்கம் நடந்து கொண்ட முறை குறித்துகோட்பாடு ரீதியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) முன்வைக்கும் விமர்சனம் இதுதான்.

இந்தி திணிப்பும் தமிழ் ஆட்சி மொழியும் 2

கே.பாலகிருஷ்ணன்

ஒரு மாநிலத்தின் மக்களோடு தொடர் புடைய நிர்வாகம் நடத்திட வேண்டுமெனில் அந்த மாநிலத்தின் மொழியினை ஆட்சி மொழி யாக கொள்வதே உகந்ததாகும். அந்த வகையில் தான் 1924 கான்பூர் மாநாட்டில் காந்தி முன் மொழிந்த ஆட்சி மொழி சம்பந்தமான தீர்மானத் தில் மாநில அளவில் அந்தந்த வட்டார மொழி கள் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதிலும் இந்தி திணிப்பை எதிர்த்து பெரும் போராட்டம் தமிழ கத்தில் நடைபெற்றது. ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ், இங்கும் தமிழ், எங்கும் தமிழ்’ என்ற முழக்கங்கள் எழுந்தன.

இந்திய விடுதலைக்குப் பின் மொழிவழி மாநிலங்கள் ஏற்படுத்துவதற்காக மக்கள் போராட்டங் கள் வெடித்தன. 1956 ஆம் ஆண்டு மாநிலங்களின் எல்லை மறுவரையறைச் சட்டம் நிறைவேற்றப் பட்டது. அரசியல் சட்டத்தின் பிரிவு 345 மாநிலங் களில் வட்டார ஆட்சி மொழியை உருவாக்கு வதற்கான வாய்ப்புகளை அளித்துள்ளது. 1955 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கேர் தலைமை யிலான ஆட்சிமொழிக்குழு மொழி அடிப்படை யில் மாநிலங்கள் அமைக்கப்பட்டால் மாநில மொழிகளை ஆட்சி மொழியாக்கிக் கொள்ள லாம் என பரிந்துரைத்திருந்தது. அதன்படி 1956-ல் சென்னை மாநிலம் அமைக்கப்பட்ட பின்னர், தமிழ்நாடு ஆட்சி மொழிச்சட்டம் சட்டமன்றத் தில் நிறைவேற்றப்பட்டது. இதில் தமிழ் மொழியே தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக இருக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கென பயிற்சி வகுப்புகள், இதனை நடைமுறைப்படுத்த ஆட்சி மொழி குழுக்கள் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் கடந்த ஆட்சிமொழி சட்டம் நிறை வேற்றப்பட்ட 1956 முதல் தற்போது 2017 வரை தமிழ் ஆட்சிமொழி மற்றும் பயிற்று மொழியின் செயலாக்கம் பற்றி ஆய்வு செய்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆர்ப்பாட்டமான அறிவிப்புகளை யும், அவை நிறைவேற்றப்பட்ட விதம் குறித்தும் ஒப்புநோக்கினால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாட்டை காண முடியும். இன்றைக்கும் தமிழக அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டம் செயல்படுத்தப்படுவதாக சொன்னாலும், அது 40 விழுக்காட்டுக்கும் குறைவாகவே செயல் படுத்தப்படுகிறது. ஆனால் அண்டை மாநிலங் களான கேரளம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம் ஆகியவற்றில் அவர்களின் ஆட்சி மொழித் திட்டம் 75 சதவிகித அளவுக்குச் செயல்படுவதாக பத்திரிகையாளர் ஞாநி கூறியுள்ளார்.

தமிழ் ஆட்சிமொழி – சட்டம்
இந்நிலை ஏற்படுவதற்கான காரணங்களை பரிசீலிக்க வேண்டும். அரசியல் சட்டத்தின் பிரிவு 345 அந்தந்த மாநிலத்தில் அந்தந்த மாநில மொழியை ஆட்சி மொழியாக்கிக் கொள்ள வகை செய்கிறது. அதேசமயம், மாநிலங்களுக்கு இடையிலோ, இந்திய ஒன்றியத்துடனோ தொடர்பு கொள்ள ஒன்றிய மொழியே இருக்க வேண்டும் என்ற பிரிவு உள்ளது. அதாவது அந்தந்த மாநில மொழிகளில் தொடர்பு கொள்ள முடியாது. மாறாக, இந்தி (அல்லது) ஆங்கிலத்தில்தான் தொடர்பு கொள்ள முடியும். அடுத்தடுத்த பிரிவுகளில் உள்ளவை அதை விட மோசமானது. சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும் அனைத்து மசோதாக்கள், அவற்றுக்கான திருத்தங்கள், அனைத்து சட்ட முன் வரைவுடன், ஆளுநர் பிறப்பிக்கும் அவசர சட்டங்கள், மாநில சட்டமன்றம் வெளியிடும் ஆணைகள், ஒழுங்குமுறைகள், விதிமுறைகள் ஆகிய அனைத்துக்குமான அதிகாரபூர்வமான பிரதிகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என (348(1)ஏ)என்ற பிரிவு) குறிப்பிட்டுள்ளது. இவை அனைத்தும் மாநில மொழியில் கொண்டு வந்தா லும், இதற்கான ஆங்கில மொழி பெயர்ப்புகளே அதிகாரப்பூர்வமான பகுதிகளாக கருதப்படும். தமிழ்ப் பிரதிகளை புறந்தள்ளி ஆங்கில பிரதிகள் தான் அதிகாரப்பூர்வமானவை என்று கூறுவதன் மூலம் அதிகாரபூர்வமான ஆட்சி மொழி ஆங்கில மாகத்தான் இருக்கும் என்பதற்கு மேலும் விளக் கம் தேவையில்லை.
மேலும் 1956-ம் ஆண்டு தமிழ்நாடு சட்ட மன்றத் தில் நிறைவேற்றப்பட்ட தமிழ் ஆட்சிமொழி சட்டத்தின் மூன்றாம் பிரிவு கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.

“2-ம் பிரிவில் என்ன கூறப்பட்டு இருப்பினும், அரசியலமைப்பு சட்டத்தின் 346, 347 பிரிவுகட்கு ஊறின்றி இந்த சட்டத்தின் தொடர்புக்கு முன்பு ஆங்கிலம் பயன்பட்டு வந்த அலுவல்முறை காரியங் கள் அனைத்துக்கும் ஆங்கிலத்தை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.” இதே சட்டத்தின் 2வது விதி தமிழ்நாட்டில் தமிழே ஆட்சிமொழியாக இருக்கும் என அறிவிக்கிறது. அதற்கு மாறாக 3வது விதி ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட அனைத்து காரியங்களுக்கும் ஆங்கிலத்தையே பயன்படுத்த வேண்டும் என திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. ஆம்! வலதுகையால் தமிழ்மொழிக்கு வழங்கப் பட்ட உரிமை இடதுகையால் தட்டி பறிக்கப் பட்டு விட்டது.

இதேசட்டத்தின் 4வது பிரிவு ‘மாநில அரசு அவ்வப்போது வெளியிடுகிற அறிவிக்கையின் மூலமாக, அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்படு கின்ற அலுவலக நடைமுறை செயல்களுக்கு தமிழை பயன்படுத்த வேண்டும் என கட்டளையிடலாம்’ என கூறுகிறது. அதாவது, ஆங்கிலத்தை நிரந்தர மாக வைத்துக் கொண்டு அவ்வப்போது தமிழை பயன்படுத்தலாம் என கட்டளையிடலாம். அவ்வளவு தான். இந்த சட்டத்தை வைத்துக் கொண்டுதான் தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழி என நாம் மார் தட்டிக் கொள்கிறோம்.
மேற்கண்ட இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அடிப்படையில் காங்கிரஸ் கட்சி இந்திக்கு வக்காலத்து வாங்குபவர்கள் என்பது அறிந்ததே. ஆனால் தமிழ்நாட்டில் தமிழுக்கு ’போர் முரசு’ கொட்டி 1967-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக இந்த நிலைமையில் ஏதும் மாற்றம் கொண்டு வந்ததா? மேற்கண்ட சட்டத்தில் தமிழ் தான் ஆட்சி மொழி என வற்புறுத்தும் வகையில் உரிய திருத்தங்களை மத்திய அரசின் அனுமதி யின்றி திமுக நிறைவேற்றி இருக்க அனைத்து வாய்ப்புகளும் இருந்தன. ஆனால் அவர்கள் சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லை.

தாய்மொழிக் கல்வி
தாய்மொழிக் கல்வியே சிந்தனை திறனை வளர்ப்பதற்கு அடிப்படையானது. 1949-ம் ஆண்டு அமைக்கப்பட்ட பல்கலைக்கழக கல்விக் கமிஷன் தாய்மொழிக் கல்வியின் அவசியம் பற்றி “கல்வி கண்ணோட்டத்தைக் கொண்டு பார்த்தாலும் சரி, ஜனநாயக சமூகத்தின் பொது நலனைக் கொண்டு பார்த்தாலும் சரி, கல்வி பிரதேச மொழியில் இருக்க வேண்டியது அவசியமா கும். இவ்வாறு கல்வி பயிலுவதுதான் அவர்களுடைய இலக்கியத்தை செழுமைப்படுத்தவும், கலாச் சாரத்தை வளர்க்கவும் உதவும். இவ்வாறு இயற் கையாக கல்வி பயின்ற மக்கள் கல்வியிலும், கற்பனையிலும் உயர்ந்த மட்டங்களை எட்டுவது சாத்தியமாகும். ஆராய்ச்சிக்கும் அறிவின் எல்லையை விஸ்தரிப்பதற்கும் பலமான ஆதிக்கத்தை இது அவர்களுக்குக் கொடுக்கும்” என குறிப்பிட்டது.

யுனெஸ்கோ போன்ற சர்வதேச நிறுவனங் களே தாய் மொழிக் கல்வியையே வற்புறுத்துகின் றன. ஆங்கில ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகள் அனைத்திலும் அந்நிய மொழியை தூக்கி எறிந்து விட்டு உடனடியாக சொந்த மொழியை ஆட்சி மொழியாகவும், தாய்மொழிக் கல்வியை நிலைநிறுத்தும் பணியை நிறைவேற்றியுள்ளதை பெரும்பாலான நாடுகளில் பார்க்க முடிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இந்த நிலை ஏற்படவில்லை.

தற்போது தமிழ் பயிற்று மொழி பெருமளவு குறைந்து வருகிறது. உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்த ஆங்கில பயிற்றுமொழி என்பது தற்போது ஆரம்பக் கல்வியிலும் புகுத் தப்பட்டு விட்டது. புற்றீசல் போல் ஆங்கில மழலையர் பள்ளிகள் தமிழ்நாட்டில் நடத்தப் பட்டு வருகின்றன. தமிழ்வழி கல்வி பயில்வதற்கு மாணவர்கள், பெற்றோர்கள் ஆர்வம் காட்டுவ தில்லை. தமிழ்வழிக்கல்வி வகுப்புகளில் மாணவர் கள் சேர்வதில்லை என கருத்து தெரிவிக்கப்படு கிறது. வேலை வாய்ப்புக்கும், நவீன வாழ்க்கைத் தேவைக்கும் அடிப்படையாக உள்ள பொறியி யல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் இப்போது வரை தமிழ் வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட வில்லை. இதற்கான தமிழ் புத்தகங்கள் உருவாக் கப்படவில்லை. இலங்கையில் கூட இப்பிரிவு வகுப்புகளை தமிழ் வழிக்கல்வியில் படிக்க வாய்ப்பு உள்ள போது தமிழ்நாட்டில் இதற்கான வாய்ப்பு கள் இல்லாதது யாருடைய குற்றம்?

மேலும், வேலைவாய்ப்புக்கு உகந்த கல்வி ஆங்கில வழிக்கல்வி என்ற எண்ணம் ஊட்டி வளர்க்கப்பட்டுள்ளது. ஆங்கில வழியில் படித்த பல லட்சம் பேர் வேலையின்றி தவித்துக் கொண் டுள்ளார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

தமிழ்மொழிக் கல்வியை கட்டாயமாக்கி விட்டு மாற்று மொழிகளில் கல்வி பெறுவோர் விதிவிலக்கு அல்லது அனுமதி பெற்று படிக்க வேண்டும் என்ற நிலையை ஆரம்பத்திலேயே உருவாக்கி இருந்தால் நிச்சயம் தமிழ் வழிக்கல்வி பலமடைந்திருக்கும்.

தற்போது தாராளமய பொருளாதார கொள் கையின் விளைவாக கல்வி என்பது வியாபார மாக்கப்பட்ட சூழலில் கல்வி வியாபாரிகள் தங்களது லாப வேட்டைக்கு ஆங்கில வழிக் கல்வியை திணிப்பது அசுர வேகத்தில் நடந்து கொண்டுள்ளது. தமிழ் பயிற்று மொழியாக மாறாதவரை தமிழ் ஆட்சி மொழியாவது கற்பனையாகவே இருக்கும்.

நீதிமன்ற மொழி
அரசியல் சட்டம் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதின்றங்களில் ஆங்கிலமே நீதிமன்ற மொழி யாக இருக்க வகை செய்துள்ளது. உயர்நீதிமன்றங் களுக்கு கீழ் உள்ள கீழமை நீதிமன்றங்கள், தீர்ப் பாயங்கள் அனைத்திலும் தமிழே நீதிமன்ற மொழியாக இருக்க வேண்டுமென பல அரசாணை கள் வெளியிடப்பட்டுள்ளன. தீர்ப்புரைகள் தமிழிலேயே வழங்கிட வேண்டுமென வற்புறுத்தப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில், இது சொற்ப அளவே நடந்து வந்தது. ஆங்கிலத்தில் தீர்ப்புரை எழுதிட வேண்டுமாயின் உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்றிட வேண்டுமென விதி வகுக்கப்பட்டிருந் தது. ஆனால் அடிக்கடி அனுமதி கேட்டு நீதிமன்ற நடுவர்கள் விண்ணப்பிப்பதால் அந்த ஆணையை மாற்றி தமிழில் (அ) ஆங்கிலத்தில் தீர்ப்புரை எழுதலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு விட்டது. அதைதொடர்ந்து பெரும்பாலான தீர்ப்பு களும் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டு வருகின்றன.

அரசியல் சட்டப்பிரிவு 348 (1) உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களில் ஆங்கிலம் நீதிமன்ற மொழியாக இருக்க வேண்டுமென குறிப்பிட் டுள்ளது. அதேசமயம் 348(2) பிரிவும் 1963-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அலுவல் மொழிச் சட்டம் பிரிவு 7-ன்படி உயர்நீதிமன்ற தீர்ப்புரைகள் மற்றும் உத்தரவுகள் இந்தி (அ) அந்த மாநிலத் தின் ஆட்சி மொழியில் வெளியிடுவதற்கு, சம்பந் தப்பட்ட மாநில ஆளுநர், குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று வழங்கிட உத்தரவிடலாம் எனவும், அவ்வாறு அந்த மொழிகளில் வழங்கப்படும் தீர்ப்புரைகள் அல்லது உத்தரவுகளின் ஆங்கில மொழி பெயர்ப்பும் இருக்க வேண்டும் என தெளி வாக கூறப்பட்டுள்ளது.

இந்த பிரிவுகளை பயன்படுத்தியே பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிர தேசம் ஆகிய மாநிலங்களில் இந்தியில் தீர்ப் புரைகள் மற்றும் உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழ்நாடு, குஜராத், சட்டீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு இதே உரிமை மறுக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தமிழக ஆளும் கட்சிகள் மத்திய அரசில் கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றிருந் தன. இக்கட்சி தலைவர்கள் நினைத்திருந்தால், மத்திய அரசிடம் வற்புறுத்தி மேற்கண்ட அனு மதியை பெற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் தீர்ப்புரைகள் மற்றும் உத்தரவுகளை வழங்குவதற்கான வரலாற்று சிறப்பு மிக்க ஏற் பாட்டினை செய்து முடித்திருக்க முடியும். இதன் மூலம் கீழமை நீதிமன்றங்களில் தமிழ் முழுமை யான நீதிமன்ற மொழியாக உயர்த்தப்பட்டிருக் கும். ஆனால் இக்கட்சித் தலைவர்கள் இந்தப் பிரச் சனையில் கொஞ்சமும் அக்கறை செலுத்தவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

தமிழும் திமுக – அதிமுகவும்
தமிழ்நாட்டில் 1967 முதல் தொடர்ந்து ஆட்சி யில் நீடித்து வரும் திமுக, அதிமுக அரசுகள் மேற்கண்ட நிலைமைக்கு முக்கிய காரணமாகும். “இந்திக்கு ஒரு இந்தியத் தகுதியை தேடிக் கொடுக் கும் காங்கிரஸ் இயக்கமும், இந்தி எதிர்ப்பை கேடயமாக்கி ஆங்கிலத்தை ஆதரிக்கும் திராவிட இயக்கமும் தமிழுக்கு ஒரு தனி இடத்தை மறுக் கின்றன” என பேராசிரியர் கோ. கேசவன் கூறி யுள்ளார். துவக்க காலம் முதலே இந்தி திணிப்பை எதிர்த்த திராவிட இயக்கம், அந்த இடத்தில் தமிழை அரங்கேற்றுவதற்கு மாறாக ஆங்கிலத்தை வழிமொழிந்தார்கள்.

நாடு விடுதலையடைந்த பின்னர், தமிழ் பிர தேசங்களை கொண்டு தமிழ்நாடு மாநிலத்தை உருவாக்கிட வேண்டுமென கம்யூனிஸ்ட்டுகள், ம.பொ.சி. போன்றோர் போராடியபோது மொழி வழி மாநிலம் அமையக்கூடாது என குரல் கொடுத்த வர்கள் தந்தை பெரியாரும், ராஜாஜியும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போராட்டம் எழுச்சி யுடன் நடைபெற்ற காலத்தில் திராவிட முன் னேற்றக் கழகம் உதயமாகி இருந்தது. ஆனால் இப்போராட்டங்களில் இடம்பெறாமல் திமுக ஒதுங்கியே இருந்தது கவனிக்கத்தக்கது. அப்போ தெல்லாம் திமுக திராவிட நாடு எண்ணத் திலேயே மிதந்து கொண்டிருந்தது.

இந்த காலம் முழுவதும் திமுக என்ன நிலை மேற்கொண்டது எழுத்தாளர் தோழர். சு. வெங்கடேசன் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

“தமிழே இன்றி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு நிர்வாகத்துக்கு எதிராக திமுக மௌனம் சாதித்தது. ரயில் நிலையங்களில் இந்தியை அழித்தும், டால்மியாபுரத்திற்கு தமிழ்ப்பெயர் வைக்கப்பட வேண்டுமென்றும் கோரி போராட்டம் நடத்திய திமுக கன்னித் தமிழை ஆட்சி மொழி யாக்கவோ, பயிற்று மொழியாக்கவோ வலி யுறுத்தி எந்த போராட்டத்தையும் நடத்தவில்லை. குறிப்பிட்ட சில மாவட்டங்களிலாவது தாய் மொழியில் நிர்வாகம் நடைபெற வேண்டும்; பயிற்று மொழியாக தாய்மொழி இருக்க வேண் டும்; குறைந்தபட்சம் சட்டமன்ற உறுப்பினர் களுக்கு மொழி பெயர்ப்பு வசதியாவது செய்து தரப்பட வேண்டும் என ஐந்தாண்டு காலம் சட்ட மன்றத்திலேயே எழுப்பப்பட்ட குரலை திமுக கண்டுகொள்ளவில்லை. காரணம், அன்றைய சென்னை மாகாணத்தின் ஆட்சி மொழியாக ஆங்கிலம் தான் இருக்க வேண்டுமென்பதே திமுகவின் நிலைப்பாடு.”

தமிழ் மொழியும் கம்யூனிஸ்டுகளும்
சென்னை மாநில சட்டசபையில் நீண்டகால மாகவே மாநில மொழிகளை ஆட்சி மொழியாக்க வேண்டும்; மற்றமொழிகளில் பேசுபவர்களது உரையை மாநில மொழியில் மொழிபெயர்க்க மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டு மென தீர்மானம் முன்மொழியப்பட்டது. அதனை ஆதரித்து பேசிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான பி. ராமமூர்த்தி – விடு தலைபெற்று ஐந்தாண்டு காலம் கடந்த பின்னரும் நாம் இன்றும் இந்த அந்நிய பாஷையை வைத்துக் கொண்டு, அந்த பாஷையில் பேசுவது, வேடிக் கையிலும் வேடிக்கையாக இருக்கிறது. உலகில் வேறு எந்த நாட்டிலும் சுதந்திரம் வந்த பின்னர் இப்படிப்பட்ட ஒரு காட்சியை காண முடியாது” என தீர்மானத்தை ஆதரித்து, வரலாற்றில் முதன் முறையாக தமிழில் பேசினார். அதனை தொடர்ந்து பேசிய ஜீவானந்தம் அவர்களும் சென்னை மாநில சபையில் தமிழ் குரல், கன்னட குரல், தெலுங்கு குரல், மலையாள குரல் தான் ஒலிக்க வேண்டும் என வாதிட்டார்.

அதன் பின்னர் ஆளுநர் உரையின் மீது பேசிய ஜீவானந்தம் அந்தந்த மாநிலத்தில் அந்தந்த மாநில மொழியே அரசு மொழியாக இருக்க வேண்டும். இந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக தமிழ்தான் இருக்க வேண்டுமென வற்புறுத்தினார். ஆங்கிலத் தில் மட்டுமே பேச முடியும் என்ற சென்னை மாநில சட்டசபையில், நிதிநிலை அறிக்கையின் மீது தோழர் பி.ராமமூர்த்தி தமிழில் நீண்ட உரை யாற்றி புதிய வரலாறு படைத்தார். இவரது தமிழ் உரையை நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் வெகு வாக பாராட்டினார். அதன் பின்னர் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் பேசிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தமிழ் ஆட்சிமொழியாக இருக்க வேண்டுமென அனல் பறக்க சட்டமன்றத்தில் வாதாடினார்கள். தமிழக வரலாற்றில் தமிழுக் காக சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் அழுத்தமான குரல் கொடுத்தவர்கள் கம்யூனி ஸ்ட்டுகள் என்பது வரலாற்று உண்மையாகும்.

தீவிர போராட்டத்தின் விளைவாக 1956-ல் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப் பெற்று 1956 டிசம்பர் அன்று தமிழ் ஆட்சி மொழி மசோதாவை, சென்னை மாகாண சட்டமன்றத்தில் அமைச்சர் திரு. சி. சுப்பிரமணியம் முன்மொழிந்தபோது, அதனை வரவேற்று பேசியதுடன் இதனை படிப்படியாக கிராமங்கள் வரை விரிவுபடுத்திட வேண்டுமென கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அழுத்தமாக வாதாடினார்கள்.

ஒட்டுமொத்தத்தில், பலமொழி பேசும் இந்திய நாட்டில் இந்தியை திணிப்பதும், அதை எதிர்த்து நியாயமாக குரல் கொடுத்த திமுக மறுபக்கத்தில் ஆங்கிலத்தை திணிப்பதும் நடைமுறையாகி விட்டது. இந்நிலையில், இந்தியாவின் மொழிப் பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதில் தெளிவான சிந்தனையுடன் செயல்பட்டவர்கள் கம்யூனிஸ்ட்டுகளே. நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற விவாதங்களை சற்று சீர்தூக்கி பார்த்தாலே இதனை புரிந்து கொள்ள முடியும்.

1968-ம் ஆண்டு மத்திய அரசு, ஆட்சிமொழி சட்ட திருத்தத்தையும் தீர்மானத்தையும் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றியதை முன்பு குறிப்பிட் டிருந்தோம். இம்மசோதா நிறைவேற்றப்பட்டதை யொட்டி தமிழ்நாட்டில் மாணவர்கள் மீண்டும் இந்தி திணிப்பை எதிர்த்து போராடத் துவங் கினார்கள். போராட்டக் களத்திலே இருந்த மாண வர்களை முதலமைச்சர் அண்ணாதுரை நேரில் சந்தித்து பேசினார். மேற்கண்ட சட்டதிருத்தத்தை யும் – தீர்மானத்தையும் எதிர்த்து சட்டமன்றத் திலே தீர்மானத்தை நிறைவேற்றுவேன் என மாண வர்களிடம் வாக்குறுதியளித்தார். அந்த வாக்குறு தியின் அடிப்படையில் தமிழ்நாடு சட்டப்பேரவை யின் சிறப்புக் கூட்டம் 23.1.1968 அன்று நடை பெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானத் தின் மீது முதலமைச்சர் அண்ணாதுரை உட் பட பல கட்சித் தலைவர்கள் திருத்தங்களை முன்மொழிந்ததுடன் சட்டப்பேரவையில் உரையாற்றினார்கள்.

ஏ.பாலசுப்ரமணியம் உரை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சட்டமன்ற கட்சித் தலைவர் தோழர் ஏ. பாலசுப் பிரமணியம் விரிவான திருத்தங்களை முன்மொழிந்து நீண்ட உரையாற்றினார். இதனை வழிமொழிந்து தோழர் என். சங்கரய்யா உரையாற்றினார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்மொழிந்த திருத் தங்களும், தோழர்கள் ஏ. பாலசுப்பிரமணியம், தோழர் என். சங்கரய்யா ஆகியோரது உரைகளும் மிகச் சிறந்த ஆவணங்களாகவும் இந்தியாவின் மொழிச்சிக்கலுக்கு தீர்வுகளை முன்மொழியும் வழிகாட்டிகளாகவும் சட்டப்பேரவை ஆவணங் களில் உள்ளன. அதன் முக்கிய பகுதிகள் கீழே: தோழர் ஏ.பாலசுப்ரமணியம் அவர்கள் முன்மொழிந்த திருத்தத்தின் முக்கிய பகுதிகள் வருமாறு:-

“பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்ட இந்நாட்டில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்த சுதந்திரப் போராட்டத்தில் உருவான நாட்டின் ஒற்றுமையை பேணிப் பாதுகாத்து, மேலும் உறுதிப் படுத்துவதற்கு இந்நாட்டில் வழங்கும் எல்லா மொழிகளுக்கும் சம அந்தஸ்தை எல்லா மட்டங் களிலும் நல்குவது இன்றியமையாதது என்பதே இச்சபையின் திடமான கருத்து”.

இதற்கென கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண் டும் என்றும் இச்சபை வலியுறுத்துகிறது:-
1. அரசியல் சட்டத்தில் இந்திக்கு பிரத்யேக மான அந்தஸ்து அளித்திருப்பது அகற்றப்பட்டு, நாட்டின் பிற மொழிகளுக்கு கீழ்நிலையை அளிக்கும் பிரிவுகளையெல்லாம் நீக்கி, எல்லா இந்திய மொழிகளுக்கும் சம அந்தஸ்து நல்கும் வகையில் திருத்தப்பட வேண்டும்.
2. அரசியல் ஷரத்தின் 8வது ஷெட்யூலில் குறிப் பிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தும் மத்திய அரசின் அலுவல்மொழிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
3. பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் அரசி யல் சட்டத்தின் 8வது ஷெட்யூலில் உள்ள மொழி களில் நடப்பதற்கும், ஏககாலத்தில் மொழி பெயர்ப்புக்கும் ஏற்பாடு செய்திட வேண்டும்.
4. மத்திய அரசின் மசோதாக்கள், சட்டங்கள், உத்தரவுகள் போன்றவை அனைத்தும் 8வது ஷெட்யூலில் குறிப்பிட்டுள்ள மொழிகளில் பிரசுரிக்க வேண்டும்.
5. மத்திய அரசின் பணிமனைகள் (அலுவலகங்கள்) இருக்கும் மாநிலங்களில் அந்தந்த மாநில மொழி களிலேயே மக்களுடன் தொடர்பு வைத்து பணி யாற்ற வேண்டும்.
6. மாநில அரசுகள் மத்திய அரசுக்கு தத்தம் மாநில மொழியிலேயே கடிதம் எழுதுவதற்கும் அம்மொழியிலேயே பதில் பெறுவதற்கும் உரிமை வழங்கிட வேண்டும்.
7. ஒவ்வொரு பிரiஜைக்கும் தன் தாய் மொழி யிலேயே மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதற்கும் பதில் பெறுவதற்கும் உரிமை வழங்கிட வேண்டும்.
8. எட்டாவது ஷெட்யூலில் உள்ள எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு சமமாக நிதிவசதிகளை வழங்கிட வேண்டும்.
9. எல்லா மாநிலங்களிலும் கல்வி நிலையங் களில் உயர்நிலை வரையிலும் அந்தந்த மாநில மொழிகளே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.
10. அதேபோன்று அந்தந்த மாநிலத்தின் மொழியே மாநிலங்களில் நிர்வாக மொழியாகவும், உயர்நீதி மன்றம் வரை நீதிமன்ற மொழியாகவும் இருக்க வேண்டும். இவை யாவும் அடுத்த பத்தாண்டுகளில் முழுமையாக அமலாக துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
11. மொழிவழி சிறுபான்மையினருக்கு உயர் கல்வி வரை தங்கள் தாய்மொழியிலேயே கல்வி பயிலுவதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
12. மும்மொழித் திட்டம் என்பது பயனற்றது. அதேசமயத்தில் உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தாய்மொழியைத் தவிர இதர இந்திய மொழிகளையும், ஆங்கிலம் அல்லது வேறு அந்நிய மொழிகளையும் மாணவர்கள் இஷ்டம் போல் கற்பதற்கு வசதியளிக்கப்பட வேண்டும்.

இத்தகைய விரிவான திருத்தத்தை சட்டமன்றத் தில் மொழிந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே. முதலமைச்சர் அண்ணாதுரை அவர்கள் முன்மொழிந்த திருத்தத்தில் கூட மத்தியில் ஆட்சி மொழி குறித்து குறிப்பிடப்பட்டதே தவிர, மாநிலத் தில் அந்தந்த மாநில ஆட்சி மொழியே இருக்க வேண்டுமென்றோ, அந்தந்த மாநிலங்களில் கல்வி நிலையங்களில், அந்தந்த மாநிலத்து மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென்றோ குறிப்பிடப்படவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசும் போது “இந்தியாவில் இருக்கிற எல்லா தரப்பு மொழிகளுக்கும் சம அந்தஸ்து அளிக்கும் கொள் கையை எல்லோருக்கும் முழு உரிமையை வழங் கும் கொள்கையை முன்வைத்தால் கட்டாயமாக அதன் அடிப்படையில் எல்லா தரப்பு மக்களை யும் ஒருமித்த கருத்துக்கு கொண்டு வர முடியும்….” எந்த நாடும் சுதந்திரம் அடைந்தவுடன் அந்நிய மொழியை தூக்கி எறிந்து விட்டு தன்மொழிக்கு உரிய இடத்தை கொடுப்பதைத்தான் பார்க் கிறோம். அதற்கு மாறாக, எந்த மொழியில் சொல்வது, எந்த மொழியை நீதிமன்ற மொழியாக கொள் வது, எந்த மொழியை நிர்வாக மொழியாக கொள்வது என்பதை கேள்விக்குரிய விஷயமாக வைத்திருப்பதற்கு காங்கிரஸ்தான் பிரதானமாக பொறுப்பேற்க வேண்டும்.
“இந்த விசயத்தில், இங்கு பேசும்போது, சிலர் ஆங்கிலமே நீடிக்க வேண்டுமென்று விரும்புகிறார் கள். ஆங்கிலத்தை அதை விரும்பாத மக்கள் மீது கட்டாயமாக திணிக்கப்படும் ஏற்பாடு இருந்தால், அந்த ஏற்பாடு இந்தியாவின் ஒற்றுமையை குலைக்கும்.”

நமது அரசியல் சட்டத்தில் இந்திக்கு தனி சிறப்பு இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதை மாற்ற வேண்டும் என எங்கள் திருத்தம் வற்புறுத்து கிறது. இந்திக்கு தனி உயர்ந்த இடம் அளிக்கப்பட் டுள்ளதை ஏற்க முடியாது. எந்த ஒரு மொழிக்கும் தனிச்சலுகை இருக்கக்கூடாது; அந்த நிலைமையை மாற்றுவதற்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்பது அவசியமானதாகும்.

எங்களைப் பொறுத்தவரையில் 14 மொழிகளும் (தற்போது 22 மொழிகள்) சம அந்தஸ்து பெற வேணடும் என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட ஏற்பாடு வரும் வகையில் இடைக்காலத்தில் ஆங்கிலம் துணை அலுவல் மொழியாக நீடிக்கலாம் என்பது தான் கருத்து. கடந்த காலத்தில் கட்டாயமாக ஒரு ஆட்சி மொழி வேண்டுமா என்ற கேள்வி கேட்கப் பட்டுள்ளது. ஏறத்தாழ 55 ஆண்டுகளுக்கு முன்பு உலகத்தின் சகல பிரச்சனைகளுக்கும் வழிகாட்டிய லெனின் இதற்கும் வழி கூறியிருக்கிறார். கட்டாய ஆட்சி மொழி தேவையா என்பது கேள்வி. தேவையில்லை என்று அவரே எழுதியுள்ளார். தடியால் அடித்து சொர்க்கத்துக்கு எவரையும் அனுப்ப முடியாது என கூறியுள்ளார். இணைப்பு மொழி எப்படி உருவாகும் என்பதற்கும் அவரே பதில் சொல்கிறார் “ஜனநாயகம் வளர வளர, தொழில்கள் பெருகப் பெருக, மக்கள் போக்குவரத்து அதிகரிக்க அதிகரிக்க, தானாகவே வரலாற்றுப் போக்கில் எந்த மொழி பயனுள்ளதாக உள்ளதோ அது இணைப்பு மொழியாக அமையும்”. அது தான் சரி. அதற்கு மாறாக, ஏதாவது ஒரு மொழிக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து அது கட்டாயமாக ஆக்கப்பட்டால், அது இந்தியாவிற்கு ஆபத்தாகவே முடியும்.

இதனை தொடர்ந்து பேசிய தோழர் என்.சங்கரய்யா அவர்கள் முதலமைச்சர் அவர்கள் 14 மொழிகளும் மத்திய ஆட்சி மொழியாக வேண்டும். அதற்கு அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டுமென்ற திருத்தத்தை நாங்கள் ஆமோதிக்கிறோம். அதே போல் முதலமைச்சர் கொண்டு வந்துள்ள திருத் தத்தில் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வை தமிழில் எழுதுகிறவர்கள் இந்திய தேசிய மொழி களான 14 மொழிகளிலும் எழுதலாம் என சேர்த்துக் கொள்வது ஒரு முன்னேற்றமாக இருக்கும்.

மும்மொழித் திட்டம்
மும்மொழி திட்டம் நிச்சயமாக தேவையில்லை. தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் தமிழை தவிர வேறு மொழியை கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டுமென்று சொல்ல நமக்கு உரிமையில்லை. அண்டை மாநில மொழிகளைக் கூட கற்றுக் கொள்ள சொல்ல நமக்கு உரிமை இல்லை. அப்படியிருக்க 6,000 மைல்களுக்கு அப்பால் உள்ள ஆங்கில மொழியை நம்முடைய மாணவர் கள் கட்டாயமாக படிக்க வேண்டுமென நாம் ஏன் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்? அவரவர் களின் தாய் மொழியைத் தவிர வேறு ஏதாவது ஒரு மொழியை படிக்கலாம் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, ஆங்கிலம்தான் படிக்க வேண் டும்; இந்திதான் படிக்க வேண்டுமென்று சொல்லக் கூடாது. மற்ற மொழிகளை படிப்பதை அவரவர் விருப்பத்திற்கு விட்டுவிட வேண்டும். இதற்கு அரசாங்கமும், கல்வித்துறையும் எந்த அளவுக்கு ஏற்பாடு செய்ய முடியுமோ அந்த அளவு ஏற்பாடு களை செய்து தர வேண்டும்’ என ஆணித்தரமாக சட்டமன்றத்தில் கருத்தினை பதிவு செய்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் ஜனநாயகம் குறித்து செயல்பாட்டை விவரித்த கட்சித் திட்டம் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது:
நாடாளுமன்றம், மத்திய நிர்வாகத்தில் அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம் என்பது அங்கீகரிக்கப்படும். நாடாளுமன்ற உறுப்பினர் கள் அவரவர் தேசிய மொழியில் பேசும் உரிமை வழங்கப்படுவதோடு, மற்ற அனைத்து மொழிகளி லும் அதே நேரத்தில் மொழிபெயர்க்கவும் ஏற் பாடு செய்யப்படும். அனைத்துச் சட்டங்கள், அரசு உத்தரவுகள், தீர்மானங்கள் அனைத்து தேசிய மொழிகளிலும் கிடைக்கும். மற்ற மொழிகளை விலக்கி விட்டு, இந்தி மொழியை மட்டுமே ஆட்சி மொழியாக ஆக்குவது என்பது கட்டாயப்படுத் தப்பட மாட்டாது.

கல்வி நிலையங்களில் உயர்நிலை வரை தாய் மொழியில் பயிலும் உரிமை உத்தரவாதப்படுத்தப் படும். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில மொழியிலேயே அனைத்து பொதுத்துறை, அரசு நிறுவனங்களில் நிர்வாகம் நடைபெறுவது உறுதி செய்யப்படும். மாநிலத்தில் மாநில மொழியின் தேவையை ஒட்டி ஒரு பகுதியிலுள்ள சிறுபான்மை அல்லது சிறுபான்மையினரின் மொழியையும் இணைத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.

மிக நீண்ட காலமாகவே தந்தி, மணி ஆர்டர் போன்றவற்றுக்கான படிவங்களை ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுத வேண்டிய நிலையில் இருந்ததை மாற்றி, ஆங்கிலம் அறிந்தவர்களின் உதவியை நாடாமல், தமிழிலேயே இந்தப் படிவங் களை எழுதுவதற்கான உரிமையை தமிழ் மக்களுக் குப் போராடிப் பெற்றுத் தந்தவர் மார்க்சிஸ்ட் கட்சியின் அந்நாள் செயலாளரான தோழர் ஏ. நல்லசிவன்.
அதைப் போன்றே தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கோரி தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கம் தொடர்ச்சியான போராட்டங்களை தில்லி வரை சென்று நடத்திய தன் விளைவாகவே இந்தப் பெருமை தமிழுக்கு வந்து சேர்ந்தது. இப்போதும் கூட கீழடி அகழ் வாராய்ச் சிக்கான போராட்டத்தை அது நடத்தி வருகிறது.

நாட்டின் மொழிப்பிரச்சனைக்கு தீர்வு காண எத்தகைய அணுகுமுறையினை கையாள வேண் டும் என்ற விவாதத்தில் ஏராளமான கருத்து முரண்பாடுகள், வேறுபாடுகள் இருந்த போதி லும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் முன்மொழிந்துள்ள தீர்வே இந்தியாவின் பன்முகத் தன்மையை பாதுகாத்திடவும், பல மொழி பேசும் மக்கள் இரண்டற இணைந்து வாழ்ந்திடவும், இந்திய நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்திடவும் அடியுரமாக அமையும் என்பது தெளிவு. இதற்கு மாறாக தற்போது பாஜக முன்மொழிந்துள்ள இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பு இந்தியாவின் ஒற்றுமைக்கும், பன்முக கலாச்சாரத்திற்கும் விடப்பட்டுள்ள சவாலாகும்.

இந்தியாவில் சாதி முறை : ஒரு மார்க்சிய பார்வை

பிரகாஷ் காரத்

வீடியோ: https://youtu.be/EAy2-71_oh8

தோழர்களே! இன்று இந்தியாவின் சாதிய சமூக அமைப்பு பற்றி விவாதிக்கவுள்ளோம். சாதிய சமூக அமைப்புமுறை, இந்திய துணைக் கண்டத்தில் (இந்தியா, பாகிஸ்தான், பங்களா தேஷ், இலங்கை, நேபாளம்) மட்டுமே காணப் படுகிறது.

வேறெங்கும் காணாத சாதிச் சமூகம்
எல்லா சமூகத்திலும் அதிகாரப் படிநிலை களும், அடுக்கமைவுகளும் இருக்கின்றன. பொது வாக அவை வர்க்கம் சார்ந்ததாக இருக்கும். அதற் குள்ளாக வேறு சமூகப் பிரிவுகளும், அடுக்கு களும் காணப்படுகின்றன. இந்தியச் சமூக அமைப்பு முறையில் காணப்படும் விசித்திரம் என்ன வென்றால், வேலைப்பிரிவினையாகத் தொடங் கிய சமூகப் படிநிலைகள், பல நூற்றாண்டு களாக வடிவமைவு பெற்று, ஒரு அதிகாரப் படிநிலை அமைப்பாக கெட்டிப்பட்டன. சந்தேகத்திற்கிடமின்றி அவை பிறப்பின் அடிப் படையிலானது. சாதிய அமைப்பு, சமூகவியலா ளர்கள் குறிப்பிடும் அகமண முறையைக் கொண்டு பராமரிக்கப்படுகிறது. கண்டிப்பான விதத்தில் கடைப்பிடிக்கப்படும் இந்த சமூக அமைப்பு முறையினை மத நிறுவனம் அங்கீகரித்து வளர்த் தெடுக்கிறது. இதுதான் சாதி அமைப்புமுறை என்று அழைக்கப்படுகிறது.
தங்கள் சொந்த சமூகங்களோடு ஒப்பிட்டு, இந்திய சாதிச் சமூக அமைப்பினைப் புரிந்து கொள்ள இந்தியாவுக்கு வெளியிலிருந்து பலரும் முயன்றுள்ளனர். அவர்கள் அனைவருமே இந்தச் சமூக அமைப்புமுறை இந்தியாவில் மட்டுமே காணப்படுவதை அங்கீகரிக்கின்றனர். உலகின் பலபகுதிகளிலும் வெவ்வேறு பழங்குடி சமூக அமைப்புக்கள் காணப்படுகின்றன. எனினும், சாதி அமைப்பு, இந்தியா தவிர வேறெங்கும் காணாத ஒன்றாகும்.

சாதி எங்கிருந்து உருவாகி, நூற்றாண்டுகளாகப் பரிணமித்தது என்பது பற்றி பல விவாதங்களும், ஆய்வுகளும் நடைபெற்றுவருகின்றன. சிலர் 2000 முதல் 2500 ஆண்டுகள் பழமையானதென்கின்ற னர். வேதகால இலக்கியங்களில் ஆதாரங்களைத் தேடுகின்றனர். நாம் இங்கே அதை குறித்துப் பேசவில்லை. சாதியையும், சாதி அமைப்புமுறை யினை மார்க்சிய நோக்கில் புரிந்துகொள்ள வேண்டும். அந்தப் புரிதலின் அடிப்படையில் அதனை எதிர்கொள்வதற்கான அணுகுமுறையை வகுத்துக்கொள்ள வேண்டும்.

மார்க்சிய ஆய்வின் அவசியம்:
சாதியை, மார்க்சிய நோக்கில் புரிந்துகொள்வ தும், மார்க்சிய அடிப்படையில் எதிர்கொள்வதும் ஏன் அவசியமாகிறது?.
நாம் இந்தியாவில் மக்கள் ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்பதற்காக செயல்படுகிறோம். அதற் காக தொழிலாளி, விவசாயி, விவசாயத் தொழி லாளி மற்றும் இதர பகுதி உழைக்கும் மக்களைத் திரட்ட வேண்டும். அவர்கள் நமது சமூகத்தில் வர்க்கமாக மட்டும் வாழவில்லை. வர்க்க மூலங் களையும், வர்க்க பண்பு நலன்களையும் தாண்டி சாதிய அடையாளத்தையும் கொண்டுள்ளார் கள். அதனையும் கணக்கிக் கொண்டுதான், சரியான உத்தியை வந்தடைய முடியும்.

உதாரணமாக விவசாயத் தொழிலாளர் பிரிவினரை, அதாவது கிராமப்புற பாட்டாளிவர்க்கத்தினரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் பெரும்பாலும் தலித் அல்லது மிகவும் பிற்பட்ட சாதியினராகவும் உள்ளனர். அவர்களின் சமூக பொருளாதார நிலைமைகளை கணக்கில் கொள்ளாமல், நம்மால் அவர்களைத் திரட்ட முடியாது. அவர்கள் மக்கள் ஜனநாயக முன்னணியின் அடிப்படை வர்க்கங்களாவர். சாதி மற்றும் சாதிய அமைப்பு முறை குறித்த அறிவியல்பூர்வமான புரிதலொடு செயல்பட்டு அவர்களைத் திரட்ட வேண்டும்.

அடித்தளமா, மேல்கட்டுமானமா?
இந்தியாவில் சாதியைப் பற்றி விவாதிக்கும் போது, கடந்தகால அனுபவங்களையும் கணக்கி லெடுக்க வேண்டும். மார்க்சிய ஆய்வு முறையில் கடந்த காலத்தில் காணப்பட்ட ஒரு போக்கு, புரிதல் – சமூக அடித்தளத்தின் மேல்கட்டு மானத்தில் ஒன்றே சாதி என்பதாகும். அடித்தளம் – மேல்கட்டுமானம் ஆகிய கருத்தாக்கங்களை நீங்கள் அறிவீர்கள். அடித்தளம் என்பது உற் பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் உள்ளிட்ட பொருள்முதல்வாத அஸ்திவாரமாகும். அதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு மேல் கட்டுமானங்கள் இயங்குகின்றன. உதாரணமாக ஒரு நிலப்பிரபுத்துவ அமைப்பில் அதற்கே உரித் தான நீதியமைப்பும், கலாச்சார உறவுகளும், அரசியல் அமைப்பும் இயங்குகின்றன. முதலாளித்துவ உற்பத்தி முறை ஒரு சமூகத்தில் ஆதிக்கம் பெறுகின்ற போது, அதற்கேற்ப மேல்கட்டுமானத்திலும் மாற்றம் ஏற்படுகிறது. அடித்தளமும் மேற்கட்டு மானமும் ஒன்றை ஒன்று இயங்கியல் அடிப்படை யில் சார்ந்திருக்கிறது. அடித்தளத்தில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து, மேல்கட்டுமானத்தில் மாற்றங்கள் ஏற்படும். சிலசமயம், மேற்கட்டு மானத்தில் காணப்படும் நகர்வுகள், அடித்தளத் தில் ஏற்படும் மாற்றங்களுக்கு தூண்டுகோலாக அமைந்திடும்.

அடித்தளத்தை மாற்றியமைப்பதன் மூலம் தான் – அதாவது உற்பத்தியின் பொருள்முதல் அடித்தளங்களை மாற்றியமைக்கும்போதுதான் – மேல்கட்டுமானத்தை மாற்றியமைக்க முடியும் என்ற பொதுவான புரிதல் அடிப்படையில் சாதி பார்க்கப்பட்டது. அதாவது, பொருள்முதல்வாத அடித்தளத்தில் மாற்றம் ஏற்பட்ட பின்னர், சாதி சமூகத்திலிருந்து தானாக மறைந்துவிடும் என்ற மதிப்பீடு நிலவியது. இந்தியாவில் மார்க்சிய நோக்கிலிருந்து சாதிகுறித்து எழுதப்பட்ட பல ஆய்வுகளில் இந்த போக்கு காணப்பட்டது.

பொதுவான அந்தப் புரிதல் எங்கிருந்து எழுந்ததெனப் பார்க்க வேண்டும். சாதியும் சாதிய உறவு களும் முந்தைய சமூகத்தின் மிச்ச சொச்சங்கள். அதாவது நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகத்தின் அரை நிலப்பிரபுத்துவ மிச்சங்கள். நாம் முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக உற்பத்திமுறைகளை ஒழித்திட உழைக்கிறோம். அரை நிலப்பிரபுத்துவ உறவுகளை ஒழித்து சோசலிசத்தை நோக்கியும் பயணப்பட வேண் டும். அதில், ஜனநாயக புரட்சியை நிறைவேற்றுவ தானது – சாதி உட்பட நிலப்பிரபுத்துவ எச்ச சொச்சங்கள் அனைத்தையும் முடிவுகட்டுவதற்கு இட்டுச்செல்லும். எனவே, நாம் விவசாயப் புரட்சியில் கவனம் செலுத்தலாம். இவ்வாறு சொல்வதன் பொருள் நிலப்பிரபுத்துவத்தை ஒழிப்பது; தீவிரமான நிலச்சீர்திருத்தம் செய்வது. அவற்றைச் செய்துவிட்டால், கிராமப்புற சமூக அமைப்பை அது மாற்றிவிடும். எனவே அது சாதி அமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற பொருள்வருகிறது.

இவ்வாறான புரிதல் ஒரு நிர்ணயவாத (deterministic) அணுகுமுறையை நோக்கித் தள்ளியது. அது முடிந்தால், இதுவும் முடிந்துவிடும் என நினைக்கச் செய்தது. சாதி ஒழிப்பு இயக்கத்தை வளர்த்தெடுப்பதையும், சாதி ஒழிப்பு உணர்வை மக்களிடம் உருவாக்குவதையும், சாதி ஒழிப்புக் கான குறிப்பான தலையீட்டைச் செய்வதையும் – தாமதிக்கச் செய்தது அல்லது தள்ளிவைக்கச் செய்தது. முதலில் அடிப்படையான பணிகளை முடித்தோமானால், சாதி ஒழிந்துவிடும் என் கிற சிந்தனைக்கு சென்றதால், அது புரிதலி லேயே போதாமையை உருவாக்கியது. ஜனநாயகப் புரட்சியின் தன்மையையும், சாதி அமைப்புமுறையின் இயல்பையும் புரிந்துகொள்வதில் சிக்கலை ஏற் படுத்தியது.
சாதி என்பது முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக அமைப்பின் எச்சம் என்ற கருத்து, மார்க் சிஸ்டுகள் மத்தியில் பரவலாக நிலவிவருகிறது. நமது போராட்டங்களிலும், பிரச்சாரங்களிலும் ‘அனைத்து நிலப்பிரபுத்துவ எச்சங்களும் அகற்றப் படவேண்டும்’ என்று பேசுவோம். ஆனால், சாதி நிலப்பிரபுத்துவ எச்சம் என்ற புரிதல் சரியான தல்ல. முதலாளித்துவத்தால் ஆட்கொள்ளப் பட்ட ஒரு சமூக அமைப்பாக சாதி இருக்கிறது. அதாவது அது நிலப்பிரபுத்துவ சமூகத்தில் நிலவியது, முதலாளித்துவ சமூக அமைப்பிலும் நிலவுகிறது. எனவே, சாதியின் பாத்திரம் என்ன என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்.

அடித்தளத்திலும் சாதி
மார்க்சிய சிந்தனையாளர்கள் மத்தியில் இந்த விவாதம் நடந்துவருகிறது. சாதி மேல்கட்டுமானத் தின் பகுதி மட்டுமே என்று சொல்ல மாட்டேன். அது மேல்கட்டுமானத்தின் பகுதியாக இருப்ப துடன் அடித்தளத்திலும் ஒரு பகுதியாக உள்ளது. அது உற்பத்தி உறவுகளின் ஒரு பகுதியாக இருக் கிறது. இதனை புரிந்துகொள்ளாமல் சாதி குறித்த சரியான வரையறைக்கு வர முடியாது.

சாதி பற்றி டி.டி.கோசாம்பி குறிப்பிடும் பின் வரும் மேற்கோள், அதன் சாரத்தைப் புரிந்து கொள்ள உதவுகிறது: ”ஆதி உற்பத்தி முறையில் நிலவிய வர்க்கம்தான், சாதியாகும். ஒரு சமூக ஒழுங்கை உருவாக்குவதற்கான மத வழிமுறை. அவ்வழியில், ஒரு சமூகத்தின் முதன்மை உற்பத்தி யாளரிடமிருந்து, மிகக் குறைந்த எதிர்ப்புணர் வுடன், அவரின் உபரி உற்பத்தியை கையகப்படுத் தும் ஒப்புதலை அது பெறுகிறது.”

எளிமையாக விவரித்தால், சாதி என்பது ஆதியில் அமைந்த வர்க்க அமைப்பின் வடிவமாகும். அதற்கு மத அங்கீகாரம் இருக்கிறது. எனவே, மக்களின் உணர்வு நிலையில், நான் இவ்வாறு பிறந்தேன், எனவே இந்த சமூக ஒழுங்கை நான் ஏற்றுக்கொண்டாக வேண்டும், அது கடவுள்/மதம் எனக்கு பணித்துள்ள கடமை என்ற ஒப்புதலை உருவாக்குகிறது. இதன் உதவியோடு, ஒரு உற்பத்தியாளரை நிர்ப்பந்திக்காமலே அவர் படைக்கும் உபரியைச் சுரண்டமுடிகிறது. சுரண்டப் படும் ஒருவர் தனது உழைப்பின் உற்பத்தி, தன்னுடைய சொத்து அல்ல என நம்புகிறார். தான் வாழும் சமுதாய ஒழுங்கில், எனது உழைப்பால் உருவாக்கப்படும் உற்பத்தி, என்னுடையது அல்ல என நம்புகிறார். எனவே, அதில் வர்க்கத்தின் அம்சம் இடம்பெறுகிறது, சமூக அதிகாரப் படிநிலை அம்சமும் உள்ளது, மத அம்சமும் இருக்கிறது. இந்த மூன்றின் பிணைப்பில்தான் சாதி அமைப்புமுறை பரிணமித்தது.
பண்டைய இந்தியாவில் இவ்வாறான சூழல் நிலவிவந்தது. பிற்காலத்தில் அது இந்தியாவின் பல்வேறு மண்டலங்களிலும், பல்வேறு பகுதி களிலும் ஆங்காங்கு நிலவிய சமூக சூழல்களுக்கு தக்க வகையில் ஏற்கப்பட்டது, மாறுதல்களுக்கு உட்பட்டது, விரிவடைந்தது.

வர்க்க உருவாக்கத்தில் சாதியின் பங்கு
இன்று, இந்தியாவின் ஆதிக்கம் செலுத்தும் பிரதான உற்பத்திமுறையாக முதலாளித்துவ உற்பத்திமுறை வளர்ந்திருக்கிறது. சாதி, உற்பத்தி உறவுகளில் சந்தேகமின்றி தொடர்ந்து நீடிக்கிறது. இந்தச் சிக்கல் குறித்த அணுகுமுறையே மார்க் சிஸ்டுகளின் அணுகுமுறையை மற்றவர்களுடையதி லிருந்து தனித்துக் காட்டுகிறது. நாம் சாதியும், வர்க்கமும் ஒன்றோடொன்று உள்ளார்ந்த தொடர் புடையவை என்கிறோம். முன்னர் சாதியின் மறைபொருளாக அமைந்தது வர்க்கம் என்று சொல்லப்பட்டது. அதாவது, சாதியின் உள்ளடக் கமாக அமைந்தது வர்க்கம்தான் என்ற பொருளில் சொல்லிவந்தார்கள். மாறா நிலையில் அமைந்த தல்ல சாதியும், வர்க்கமும். முதலாளித் துவ வளர்ச்சிக்கு ஏற்ப அவற்றில் மாற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன.

சாதியும் வர்க்கமும் ஒன்றுக்கொன்று இயைந்தவை. முதலாளித்துவம் வளர்ச்சியடையும்போது, சாதி அமைப்புக்குள்ளேயே வேறுபாடுகளும் வளர்ச்சியடைகின்றன. சாதியும் வர்க்கமும் பிணைந் திருக்கின்றன. சிலசமயம் அவை ஒன்றின்மேல் ஒன்று படிந்துள்ளன, சிலசமயம் அவற்றிற் கிடையே முரண்களும், பிரிவுகளும் மேலெழுகின்றன.

பல பத்தாண்டுகள் முதலாளித்துவ வளர்ச்சிக் குப் பிறகு, இன்று சாதி – வர்க்க ஒத்துழைப்பு, மாறா நிலையில் இல்லை. சாதிப் படிநிலையில் கீழ் அமைந்த சாதிப் பிரிவுகளில் ஒரு பகுதி, முதலாளித்துவ வர்க்கமாக – விவசாயம் சார்ந்த முதலாளிகளாகவோ அல்லது நகர்ப்புற முதலாளி களாகவோ – வளர்ச்சியடைந்துள்ளனர். உயர் சாதி என தங்களை அழைத்துக்கொள்ளும் பிரிவின் ஒரு பகுதியினர், பாட்டாளிவர்க்கத்தின் பகுதியாக வும் மாறியுள்ளனர். இப்படி பலவிதமான மாற்றங்கள் நடந்திருக்கின்றன.

அதே சமயம், சாதியின் அதிகாரப் படிநிலை இயல்பும், சமூக முன்னேற்றத்தை பின்னுக்கு இழுக்கும் அதன் தன்மையும், பிற்போக்குத்தன மும் அப்படியே தொடர்கின்றன. எனவே நமது போராட்டம் இந்த இரண்டையும் கணக்கில் கொண்டதாக அமைவதை உறுதி செய்யவேண்டும்.
சாதி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள மார்க்சியர் அல்லாதவர்களும் சாதியை ஒழிப்போம் என்கின்றனர். சாதிக்கும் – வர்க்கத்திற்குமான பிணைப்பை யும், இணைப்பையும் அறியாத, கண்டுணராத ஒருவரால் சாதியை ஒழிக்க முடியாது. சாதி எதிர்ப்பின் சமூக அம்சத்தையும் உள்ளடக்கிய வர்க்கப் போராட்டத்தைக் கட்டமைக்காமல் நாம் விரும்புகிற சமூக மாற்றத்தைச் சாத்தியமாக்க முடியாது. வர்க்கச் சுரண்டலையும், சாதி ஒடுக்கு முறையையும் முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலமே அது சாத்தியமாகும்.

சாதிச் சமூகத்தில் வர்க்கங்கள்
சுருங்கச் சொன்னால், இந்திய முதலாளித்துவ அமைப்பில் வர்க்கங்களின் வளர்ச்சியானது, சாதீய அடுக்கமைவும், பிரிவுகளும் கொண்ட சமூக நிலைமைகளுக்கு உட்பட்டே நிகழ்கிறது. எனவே, இங்கே உருவாகும் வர்க்கங்கள் சாதீயக் காரணிகளுக்கேற்ப வடிவமெடுக்கின்றன; வண்ணம் பெறுகின்றன.

எனவே இந்தியாவின் முதலாளித்துவத்தை, தனித்த இந்திய இயல்புகளுடன் கூடிய முதலாளித்துவமாகப் பார்க்கவேண்டும். பொதுவாக முதலாளித் துவம் என்று மட்டும் பார்க்கும்போது, நமது இலக்கையும், உத்தியையும் தீர்மானிக்க அவசிய மான சிலவற்றை விட்டுவிடுகிறோம். அவற்றில் முதலாவது, இந்திய விடுதலைக்குப் பின், இங்கே வளர்ச்சியடைந்த முதலாளிகள், நிலப்பிரபுத் துவத்துடனும் அரை நிலப்பிரபுத்துவ உறவு களோடும் சமரசம் செய்துகொண்டனர். இரண்டா வது, இந்தியாவில் விவசாயப் புரட்சி முழுமை யடைந்து, உற்பத்தி உறவுகளில் ஜனநாயக மாறு தல்கள் நடக்கவில்லை. மூன்றாவது, வளர்ந்து வரும் முதலாளித்துவ அமைப்பின் ஒரு பகுதியாக சாதீய அதிகாரப் படிநிலைகளும், சாதீய சமூக வடிவங்களும் தொடர்ந்து நீடிக்கின்றன. மேற்கண்ட மூன்று அம்சங்களும் மனதில் கொள்ள வேண்டியவை.

இந்தியாவில் முதலாளி வர்க்கம் உருவான வழிமுறையையும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பாட்டாளிவர்க்கம் உருவான வழிமுறைகளையும் ஆராய்ந்தால் அவற்றின் சாதீய வேர்களை கண்டு கொள்ள முடிகிறது. அதுகுறித்து இப்போது விரிவாகப் பேசவில்லை. ஆனால், இந்திய முதலாளிகளில் பெரும்பகுதியினர், சில குறிப் பிட்ட சாதிகளில் இருந்துதான் வந்திருக்கின்றனர். பொதுவாக நால்வருண அமைப்பு குறிப்பிடும் வைசியர்களாக உள்ளனர். அவர்கள் வியாபாரி களாகவும், வட்டித்தொழில் செய்வோராகவும் உள்ளனர். இந்திய முதலாளிகள் யாரென்று பார்த்தால் அம்பானி, சிங்காலியா, பிர்லா என அனைத்து முதலாளிகளும் பனியா சாதியி லிருந்து (வைசியர்) வந்தவர்கள். விடுதலைக்குப் பின் டாட்டா ( பார்சி) தவிர பெரும்பாலான முதலாளிகள் பனியாக்களே. தென்னிந்தியாவை எடுத்துக்கொண்டாலும் ஆரம்பகாலத்தில் செட்டி யார்கள் முன்வந்தார்கள். வர்க்கங்களின் உருவாக் கத்திற்கு பின்னணியாக உள்ள சாதீய அம்சங் களைக் கணக்கில் கொள்ள வேண்டும். அந்த முதலாளிகளே, இந்துத்துவத்தின் ஈர்ப்புக்கு இரையாகிறார்கள். சாதீயப் பின்புலம் அதற்கு காரணியாக இருக்கிறது. மறுபக்கம், பாட்டாளி வர்க்கத்தை எடுத்துக்கொண்டால், இந்தியா வில் எட்டரை கோடி ஆதிவாசி மக்கள் உள்ளனர். பெரும்பாலான கொத்தடிமைகளா கவும், ஒட்டச் சுரண்டப்படும் தொழிலாளர் களாகவும் ஆதிவாசிகளும், தலித் மக்களுமே உள்ளனர். அவர்கள் தங்கள் வாழ்விடங்களி லிருந்து வெளியேற்றப்பட்டு கனிமச் சுரங்கங்கள், கட்டுமானத் தொழில்களிலும், அமைப்புசாராத் தொழில்களிலும் அமர்த்தப்படுகின்றனர். முதலா ளித்துவ சமூகத்தில் உருவாகியுள்ள வர்க்கங்களின் சாதிய மூலங்களையும், வேர்களையும் அறிந்து கொள்ள வேண்டும். இவைகளைப் புரிந்து கொள்ளாமல் இலக்கையும், உத்தியையும் வகுக்க முடியாது.

– தமிழில்: இரா.சிந்தன்

(சாதிய சவாலை எதிர்கொள்ளுதல் அடுத்த இதழில்…..)

தமிழக அரசியலும், திராவிடக் கட்சிகளின் நிலையும் !

  • பிரகாஷ் காரத்

இந்தியாவின் சமூகப் பொருளாதார நிலைமைகள் நவீன தாராளமய முதலாளித்துவத்தின் தாக்கத்தால் பெரும் மாற்றங்களுக்கு ஆட்பட்டு வருகின்றன. மார்க்சியவாதிகள் என்ற முறையில், அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், மேல் கட்டுமானத்திலும் (Superstructure) மாற்றங்களை ஏற்படுத்துமென்பதை நாம் உணர்ந்தேயுள்ளோம். பொருளியல் நிலைமைகளிலும், பொருளாதார அடித்தளத்திலும் மாற்றம் நடக்கும் போது அது சித்தாந்தம், அரசியல், பண்பாடு மற்றும் சமூக உறவுகளில் தாக்கம் செலுத்தும்.

நிதி மூலதன ஆதிக்கம்:

நிதி மூலதனம் உலகமயமாகி முன்னுக்கு வரும் சூழலின் காரணமாக நவீன தாராளமயக் கட்டம்வந்துள்ளது. இந்த நிதி மூலதனத்திற்கு, உலகெங்கும் தங்குதடையற்று பாய்வதற்கேற்ற சூழல் தேவைப் படுகிறது. அது தேசிய எல்லைகளையோ தேச இறையாண்மையையோ மதிப்பதில்லை. நிதி மூலதனத்தின் இந்த ஆதிக்கத்தின் விளைவாக தேசிய அரசுகளும் அவற்றின் இறையாண்மையும் பலவீனமடைகின்றன.
மேலும் மேலும், ஒரு நாட்டின் எல்லைக்குட்பட்ட அரசும், ஆளும் வர்க்கங்களும் உலக நிதி மூலதனத்தின் தேவைகளை நிறைவேற்றி அதனோடு கூட்டுச் சேருகின்றன. இந்திய அரசின் மீதும், அரசியலின் மீதும் இது நேரடிவிளைவுகளை ஏற்படுத்துகிறது. பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்படும் அரசும், ஆளும் வர்க்கங் களும் ஒட்டு மொத்தமாக நவீன தாராளமய அணுகு முறையை பின்பற்றுகின்றனர். அவர்களோடு பெருமுதலாளி அல்லாதவர்களும், மாநில முதலாளிகளும் கூட சேருகின்றனர். மாநில முதலாளிகளின் மூலதன திரட்டலுக்கும், வளர்ச்சிக்கும், நவீன தாரளமயம் புதியவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அந்நிய மூலதனத்துடன் நெருங்கிக் கைகோர்க்க வழி வகுத்துள்ளது.

மாநில முதலாளிகளின் நலன்களை முதன்மையாக பிரதிபலிக்கும் மாநிலக் கட்சிகள், நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான உறுதியான நிலையெடுப்பதில்லை என்பதுடன் மாறுபட்ட விகிதங்களில் நவீன தாராளமயத்தினை ஏற்றுக்கொள்ளவும் செய்வது ஏனென்பது இதன் மூலம் புரிகிறது. மாநிலங்களில் அரசமைத்து அவ்வப்போது மத்திய அரசில் பங்குபெற் றுள்ள பிரதான மாநிலக் கட்சிகளுக்கு – பெருமுதலாளித்துவ முக்கியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜகவால் அமலாக்கப்படும் நவீன தாராளமயக் கொள்கை களுடன் எந்த முரண்பாடும் இல்லை.

கைவிடப்படும் கொள்கைகள்:

குறைந்த அளவே ஜனநாயக உள்ளடக்கத்துடன் இயங்கும் மாநிலக் கட்சிகளின் கண்ணோட்டத்திலும், திட்டங்களிலும் மேற்கண்டவை வெளிப்படுகின்றன. இருபது அல்லது முப்பது ஆண்டுகள் முன்பிருந்த நிலையுடன் ஒப்பிட்டால் – இத்தகைய கட்சிகளின் கொள்கைகளிலுள்ள ஜனநாயக உள்ளடக்கத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவையும், கூட்டாட்சிக் கோட்பாட்டையும் எடுத்துக் கொள்வோம். மாநில சுயாட்சிக் காகவும், மாநிலங்களின் கூடுதல் உரிமைக்காகவும் குரல் கொடுத்த மாநிலக் கட்சிகள் – இன்று தங்கள் கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டுள்ளன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியாக இருந் தாலும் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியாக இருந்தாலும் மத்திய அரசில் அங்கம் வகித்துள்ளன. கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளுக்கும் மாநில உரிமைகளை வெட்டிச் சுருக்கும் நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தருபவர்களாக உள்ளனர்.

மாநில கட்சிகளால் வழி நடத்தப்படும் மாநில அரசுகள் சில திட்டங்களையும், கூடுதல் நிதியையும் -கூடுதல் அதிகாரம் உரிமைகள் வேண்டுமென்ற கொள்கை அடிப்படையில் அல்லாமல், சலுகை அடிப்படையிலேயே கோருகின்றன. அகில இந்திய அளவிலான பெருமுதலாளிகளுடன், மாநில முதலாளிகளுக்கு பிணைப்பு அதிகரித்திருப்பதையே இது காட்டுகிறது. நவீன தாராளமயக் காலத்தில் இந்த இரண்டு பிரிவினருக்கும் இடைப்பட்ட முரண்பாடுகள், மங்கலாகியுள்ளன அல்லது மட்டுப்பட்டுள்ளன. காலம் செல்லச் செல்ல, இத்தகைய மாநிலக் கட்சிகள் தங்கள் அதிகாரத்தை உறுதி செய்து கொண்டு, அரசின் பங்காளிகளாகிவிட்டன, தாங்கள் அதுவரை குரல் கொடுத்து வந்த ஜன நாயக, சமூக உள்ளடக்கங்களைக் கைவிடத் தொடங்கிவிட்டனர். உதாரணமாக, சாதி ஒடுக்கு முறைக்கும், வகுப்புவாதத்திற்கும் எதிர்ப்பென்று வருகிறபோது, தேர்தல் வெற்றியே முக்கியமாகக் கருதப்படுகிறது, அரசாங்கத்தில் நீடித்திருப்பதற்காக மாநிலக் கட்சிகள் எல்லா விதமான சாதி, வகுப்பு வாதசக்திகளோடு சமரசம் செய்துகொள்கிறது.

கிளறப்படும் அடையாளங்கள்

பல்வேறு குறுங்குழுவாத, இனவாத அடையாளங்களுக்கும் ஊக்கம் கொடுப்பது, ஏகாதிபத்திய உலகமயம் தாராளமயத்தின் மற்றொரு குணாம்சமாகும். நிதி மூலதனத்தின் சூறையாடல் தேசிய அரசுகளையும் அவற்றின் இறையாண்மையையும் பலவீனப் படுத்துகிறபோது, சாதி, மதம் மற்றும் இன அடிப்படையிலான அடையாளங்களின் வளர்ச்சியை ஊக்குவிக் கிறது. இந்திய சூழலில் தாராளமயமும், சந்தைப் பொருளாதாரமும் சாதி, வகுப்புவாத, மாநில அடையாளங்களை கிளறிவிட்டுள்ளன. சோவியத் யூனியன் சிதறுண்டதன் விளைவாக, சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கான கருத்தியலுக்கு ஏற்பட்டபின்னடைவும் இந்த பலவீனத்திற்கான காரணமாகும்.

மேலும், குறுங்குழுவாத, வகுப்புவாரி, சாதி வாரிதிரட்டல்களுக்கு காரணமாக , நவீன தாராளமயத்தால் உந்தப்பட்டு கூர்மையாக அதிகரிக்கிறது. சமூகப் பொருளாதார சமத்துவமற்ற நிலைமை. பாகுபாடான வளர்ச்சியும், மிகப்பெரும் அளவிலான செல்வக் குவிப்பும் போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்கிட வில்லை. வேலையற்றோரும், பொருளாதாரத்தில் பின்தங்கியோரும், அவர்களின் துன்ப துயரங்களுக்கு மற்ற மதக் குழு அல்லது மற்ற சாதிதான் காரணம் என்ற சாதிய, மதவாத முழக்கங்களுக்கு எளிதில் அகப்படுகின் றனர். நவீன தாராளமய கொள்கைகளுக்கும், அதன் அரசியல் ஆதிக்கத்திற்கும், மத, சாதி மற்றும் இனக் குழுக்களுக்கிடையிலான முரண்பாடுகள் உகந்தவையாக அமைந்துள்ளன.

இந்துத்துவப் பரவலின் பின்னணி

பெரும்பான்மை வகுப்புவாதத்தின் அதாவது இந்துத் துவத்தின் வளர்ச்சியை இந்தப் பின்னணியில்தான் பார்க்கப்பட வேண்டும். ஆளும் வர்க்கங்களின் ஆட்சியதிகாரத்தை உறுதி செய்யவும், மக்களுக்கு சொந்தமாக இருக்கும் மிக மிகக் குறைந்த நிலம் உள்ளிட்ட வளங்களில் இருந்து அவர்களை அகற்றி, நவீன தாராளமய நடவடிக்கைகளை தொடரவும், இந்துத்துவ வகுப்புவாதத்தின் நடவடிக்கைகள் நேரடியாக பலன் கொடுக்கின்றன. மக்களை மதவாத அரசியலுக்கும், அணி திரட்டலுக்கும் திசைதிருப்புவது அரசுக்கோ அதன் கொள்கைகளுக்கோ எவ்விதத்திலும் அச்சுறுத்தலாக இல்லை, ஆனால் மக்களைத்தான் பிளவுபடுத்துகிறது.

தேர்தல் நோக்கில் மக்களை சாதி எல்லைகளுக் குட்பட்டு பிரிக்கும் சாதி அரசியலும் மேற்சொன்ன அதே பாத்திரத்தையே வகிக்கிறது. நவீன தாராளமய அரசாட்சியின் கீழ், இந்த வகையான முதலாளித்துவ அரசை உறுதி செய்திடும் ஆயுதமாக வகுப்புவாதம் செயல்படுகிறது. எங்கெல்லாம் வகுப்புவாதம் முன்னேறுகிறதோ, அங்கு ஜனநாயக அரசியல் பின்தள்ளப்படுவதுடன், வர்க்க அடிப்படையிலான இயக்கங்கள் பின்னடைவைச் சந்திக்கின்றன. மத்தியில், பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் அரசமைத்துள்ள நிலையில், இந்துத்துவ சக்திகளுக்கு பெரும் ஊக்கம் கிடைத்துள்ளது. அவர்கள் பலவீனமாக உள்ள மாநிலங்களில் காலூன்றவும், தங்கள் தளத்தை விரிவாக்கவும் பார்க்கின்றனர். தமிழ்நாடு அந்த மாநிலங்களில் ஒன்று.

தமிழக முதலாளித்துவம்

தேசிய அளவிலான வலதுசாரித் தாக்குதலின் இரண்டு முனைகளாக அமைந்த நவீன தாராளமயமும், வகுப்புவாதமும் தமிழகத்தின் அரசியல், பொருளாதார நிலைகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிற தென்பதை நாம் பார்க்க வேண்டும். முதலாளித்துவ வளர்ச்சி இன்று உயர்நிலையில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தொழிற்சாலைகளில் மிகப்பெரும் தனியார் முதலீடுகள், விவசாயத்தில் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ உறவுகள், முன்னேறிய முதலாளித்துவ வர்க்கம் என்ற வகைகளில் இந்த வளர்ச்சி அமைந்திருக் கிறது. நவீன தாராளமயக் கொள்கைகளின் பாதிப்பு காரணமாக, மாநிலத்தில் நிலவும் பொருளாதார சமத்துவமற்ற நிலை பெருமளவில் அதிகரித்துள்ளது. 73 சதவீதம் கிராமப்புறக் குடும்பங்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை; 78 சதவீதம் குடும்பங்கள் மாதம் ரூ.5000 க்கும்குறைவாகவே சம்பாதிக்கும் நிலை உள்ளது. இந்தசூழலில் ஏழை விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள் மற்றும் விவசாயிகளைத் திரட்டி நிலப்பிரத் துவத்துக்கு எதிராகவும் மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு எதிராகவும் போராட மிகப்பெரும் வாய்ப்பு உள்ளது. நகர்ப்புற தொழிலாளர்களான ஆலைப்பாட்டாளிகள் மற்றும் அமைப்புசாராத் துறைகளில் அதிகரித்துவரும் வர்க்க உணர்வு பெற்ற பாட்டாளி களை திரட்ட வேண்டும்.
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மிக வேகமான தனியார்மயத்தின் மூலம் நவீன தாராளமயக் கொள்கைகள் பெரும் தாக்கம் செலுத்துகின் றன. கல்வியும், மருத்துவமும் மக்களுக்கு முக்கியப் பிரச்சனையாகியுள்ளது. நவீன தாராளமயத்துக்கு எதிரான போராட்டம் பொருளாதார தளத்தில் மட்டும் நிற்பதல்ல. அது ஒட்டுமொத்த சமூகத்திலும், அரசியலிலும் தாக்கம் செலுத்துகிறது.

தமிழகத்தின் அரசியல் சூழல்

வேறுபட்ட அரசியல் அம்சத்தைக் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. 1960களின் பிற்பகுதியில் திமுகவும் பின்னர் அதிமுகவும் என மாநில முதலாளித்துவ கட்சிகள்தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன. திமுகவிலிருந்து 1972 ஆம் ஆண்டில் பிரிந்து உருவானதுதான் அதிமுக. இந்த இரண்டு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சியில் இருந்துவருகின்றன. தமிழ் நாட்டில் வேறெந்தக் கட்சியும் கூட்டணி ஆட்சியில் கூடஇருந்ததில்லை. இதுதான் தமிழகத்தை மற்ற மாநிலங் களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது, அதாவது சுமார் ஐம்பது ஆண்டுகளாக ஒருவருக்கு ஒருவர் எதிராக செயல்படும் இரண்டு பிரதான மாநிலக் கட்சிகளும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தினாலும், அவர் களிடையே கொள்கையளவில் அடிப்படை வேறுபாடு இல்லை. கடந்த 50 ஆண்டுகளில் எந்த அகில இந்திய முதலாளித்துவக் கட்சியும் மாநில அதிகாரத்தில் இருந்ததில்லை என்பது மாறுபட்ட மற்றொரு அம்சமாகும். தமிழகத்தின் அரசியல் போக்கு எந்த மாற்றமும் இல்லாமல் உறைந்துவிட்டதென்பது இதன் பொருளல்ல.

திமுக-அதிமுக

திமுகவும் அதிமுகவும் திராவிட இயக்கத்தின் வாரிசுரிமை கோருகின்றன. இந்தக் கட்சிகள் மாநில முதலாளிகள் மற்றும் ஊரக பணக்காரர்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ளன.
மாநிலத்தில் நடந்துவரும் முதலாளித்துவ விரிவாக்கத்துடன் இணைந்து இக்கட்சிகளும் வளர்ந்துள்ளன.

சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் திராவிட இயக்கம் வேறுபட்ட அரசியல் வடிவத்தையும் சமூக சீர்திருத்தக் கொள்கைகளையும் கொண்டிருந்தது. முதலில் அது பிராமணரல்லாதோர் இயக்கமாக அறியப்பட்டது, அதன் அரசியல் பிரதிநிதியாக அமைந்த நீதிக்கட்சி பிராமண சாதி அல்லாதவர்களிடையே உள்ள நிலவுடைமையாளர்கள் மற்றும் வசதிபடைத்த பகுதியினரின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தியது. அது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும், தேச விடுதலை இயக்கத்திற்கு எதிராகவும் அமைந்தது. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் சாதி எதிர்ப்பு மத எதிர்ப்பு மேடைகளில் முற்போக்கான பங்கு வகித்து. பிராமணிய இந்துத்துவத்தையும் அதன் வர்ணாசிரம தர்மத்தையும் உறுதியுடன் எதிர்த்தது.

இந்த மரபில் வந்த திமுக 1967 ஆம் ஆண்டு ஆளும் கட்சியானது. 1972 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அதிமுக 1977 ஆம் ஆண்டில் தனது முதல் தேர்தலை வென்றது. இரண்டு கட்சிகளும் தமிழக முதலாளிகளின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தி வளர்ந்தன. இந்த நிகழ்வுப்போக்கில், பெரியாரால் பிரச்சாரம் செய்யப்பட்ட முற்போக்கான சமூகக் கருத்துக்களை கைவிட்டன. சமூக, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மேலோட்டமான அளவிலேயே நிறுத்தப்பட்டது. தமிழ் மொழியையும் பண்பாட்டையும் முன்னெடுப்பதென்ற முழக்கம் நடப்பில் உள்ளது. ஆனால் அதன் உள்ளடக்கமும், மதிப்பும் மாறியுள்ளது. குறுகிய தமிழ்த் தேசியம் மற்றும் இனவெறிப் பார்வை ஆகியவை இந்த மாற்றத்தின் உப விளைவுகளாக அமைந்திருக்கின்றன.

தமிழகத்தின் அரசியலில் காங்கிரஸ்-பாஜக இடையிலான இருமுனைப் போட்டியோ அல்லது காங்கிரஸ் – மாநிலக் கட்சி இடையிலான இருமுனைப் போட்டியோ ஆதிக்கம் செலுத்தவில்லை. இந்த நிலையில் இடது ஜனநாயக மாற்றை கட்டமைப்ப தற்கான போராட்டம் இன்னும் சிக்கலாகிறது. இரண்டு திராவிடக் கட்சிகளும் அரசியல் தளத்தில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளன. அகில இந்தியமுதலாளித்துவக் கட்சிகள் உள்ளிட்டு மற்ற கட்சிகள் தேர்தல் கூட்டணியில் அவர்களின் ஜூனியர் பங்காளிகளாகவே இணைந்து கொள்கின்றனர்.

சித்தாந்தப் போராட்டம்

எனவே, இடது ஜனநாயக அணியையும், மாற்றையும் கட்டமைப்பதற்கு காங்கிரஸ் பாஜக-வை எதிர்த்து மட்டுமல்லாமல், பிரதான மாநிலக் கட்சிகள் இரண்டின் அரசியல் மற்றும் சித்தாந்தத்தையும் எதிர்த்த அரசியல் போராட்டம் தேவைப்படுகிறது. உலகமயமாக்கத்தின் தாக்கம் காரணமாக சாதி, மதம் மற்றும் இனம் போன்ற குறுகிய அடையாளங்களின் பிரச்சனைகள் உலகம் முழுவதும் அதிகப்படுத்தப்படுகின்றன. இந்தியாவிலும் அடையாளம் சார்ந்த அரசியலின் கூர்மையான அதிகரிப்பில் அதன் தாக்கம் உணரப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த காலத்தில் பிரதானமாக இருந்த திராவிட இயக்க கருத்தியல் பிரச்சாரம் தளர்வடைந் துள்ளது. நவீன தாராளமயமாக்கல் அந்த கருத்தியலின் மதிப்பீடுகளை நீர்த்துப் போகச் செய்வதில் பங்காற்றி யுள்ளது. சாதி அடிப்படையிலான போட்டி அரசியல் கூர்மையாக வளர்ந்துள்ளது. வன்னியர் சாதி ஓட்டுக்களை திரட்ட முயலும் பாட்டாளிமக்கள் கட்சி தன்னை தலித் விரோத அரசியலின் மூலம் வெளிப்படுத்துகிறது. இன்னும் பல்வேறு சாதி அடிப்படையிலான கொங்கு நாடு மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி போன்ற அரசியல் கட்சிகளும் எழுந்துள்ளன.

இந்துத்வ திட்டம்

இந்துத்வ வகுப்புவாத அரசியல் இத்தகைய சாதி அரசியலின் உடன்பிறப்பாகும். ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய சமூகத் தளத்தை இத்தகைய ‘சமூகக் கட்டமைத்தலின்‘ (Social Engineering) மூலம் விரிவாக்கிட முயற்சிக்கிறது. சாதி அடிப்படையிலான குறுங் குழுக்களை ஆர்.எஸ்.எஸ் பாஜக ஆதரிக்கின்றன. அதன் மூலம் தங்கள் இந்துத்துவ தத்துவத்திற்கான சமூகத் தளத்தை விரிவுபடுத்த விரும்புகின்றன. மத்தியில் பாஜக அதிகாரத்திற்கு வந்துள்ள நிலையில், வி.ஹெச்.பி மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட பிற இந்துத்துவ அமைப்புகள் சிறுபான்மையோரைக் குறிவைத்து, மத அடிப்படையிலான பிளவுகளை ஏற்படுத்தி தங்களின் செல்வாக்கை அதிகரிக்கவிரும்புகின்றனர். இது கன்னியாகுமரி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. இந்த நடவடிக்கைகள் மற்ற இடங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. கடந்த காலத்தின் பல கட்டங்களில் பாஜகவானது பிரதான மாநிலக் கட்சிகளுடன் கைகோர்த்ததும், கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் தேமுதிக, பாமக மற்றும் மதிமுக போன்ற சிறு கட்சிகளுடன் கைகோர்த்ததும் ஒரு அரசியல் ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது. திராவிட இயக்கமும் அதன் சித்தாந்தமும் வலுவிழந்திருப்பதும் மதச்சார்பற்ற-ஜனநாயக மாண்புகளை பின்பற்றுவதில் செய்யப்படும் சந்தர்ப்பவாதமும் கவலைக்குரியவை.

இடது ஜனநாயக மாற்று

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரி ஜன நாயக சக்திகளுக்கும் இதுவொரு மிகப்பெரும் சவாலை முன் நிறுத்துகிறது. அதிமுக மற்றும் திமுக கட்சிகளுடன் கைகோர்த்துக் கொண்டு நவீன தாராளமயத்தையோ அல்லது மதவாத சக்திகளையோ எதிர்த்துப் போராடுவது சாத்தியம் இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் தனிப்பட்ட வலிமையை அதிகரிப்பதின் மூலம்தான் திராவிடக் கட்சிகளில் உள்ள ஜனநாயக சக்திகளும், சிறு மாநிலக் கட்சிகளும் ஒரு மாற்று அரசியல், பொருளாதார, சமூக மேடைக்கு ஈர்க்கப்படும். உழைக்கும் மக்கள் பிரச்சனைகளில் நீடித்த போராட்டங்களையும், தொடர் இயக்கங்களையும் நடத்துவதன் மூலமே இது சாத்தியமாகும்.

திராவிட இயக்கம் மற்றும் அதன் கருத்தியல் மரபை விமர்சன ரீதியாக ஆய்வு செய்து விவாதம் நடத்துவது தமிழக சமூக அரசியல் சூழலில் அவசியமான ஒன்றாகும். துவக்ககால சமூக நீதி இயக்கத்தின் ஜனநாயக மரபினை மீட்டெடுக்க வேண்டும், அதே நேரத்தில் திராவிடக் கட்சிகளின் முதலாளித்துவ முகத்தையும், பிற்போக்கான சமூகப் பார்வையையும், சந்தர்ப்பவாதத்தையும் அம்பலப்படுத்தி அவற்றை எதிர்த்துப் போரிட வேண்டும். சமூக நீதியின் காவலராக முன்னின்று அதற்கானபோராட்டங்களை முன்னெடுத்துச் செல்வது என்பது இடது ஜனநாயக மேடையின் முக்கியப்பணியாகும்; தீண்டாமைக்கு எதிராகவும், தலித் மக்கள் மீதான சமூக ஒடுக்கு முறைக்கு எதிராகவும் போராடுவதுதான் அதன் முக்கியத் திசை வழியாகும். பாலின ஒடுக்குமுறைக்கு எதிராகவும், பெண் சமத்துவத்தை வலியுறுத்தியும் நடத்த வேண்டிய போராட்டங்கள் பிரதான இடத்தைப் பெற வேண்டும்.

தமிழ் மக்களின் தாய்மொழியும், இந்தியாவின் பிரதான தேசிய மொழிகளில் ஒன்றுமான தமிழின் முன்னேற்றத்திற்கும், செழுமைக்கும் பாடுபடுவதாக இடதுஜனநாயக நிலைப்பாடு அமைய வேண்டும். அனைத்து இந்திய மொழிகளுக்கும் இடையே சமத்துவமும், கல்வி நிர்வாகம் உள்ளிட்டு சமூகத்தின் எல்லாப் பகுதிகளிலும் அந்தந்த மொழியின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டுக்காகவும் இடது ஜன நாயக அணி முன்நிற்க வேண்டும். இத்துடன், வரலாற்று வளமிக்க தமிழர் பண்பாட்டின், மதச்சார்பற்ற ஜனநாயக அடிப்படையிலான விழுமியங்கள் தொடர்ந்து வளர்த்தெடுக்கப்பட வேண்டும். நுகர்வுக் கலாச்சார, கார்ப்பரேட் மதிப்பீடுகள் தமிழகத்தின் அத்தகைய பண்பாட்டுக்கு அச்சுறுத்த லாக அமைந்துள்ளன. தமிழகத்தில் இடதுஜனநாயக மாற்று இடது ஜனநாயகத் திட்டத்தின் அடிப்படையில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அண்மையில் அத்தகைய திட் டத்தின் வரையறைகளை வகுத்துள்ளது.

இந்தத் திட்டத்தை தொடர்ந்து வளர்த்தெடுத்து தமிழக மக்களுக்கு ஒரு மெய்யான, முழுமையான – அரசியல், சமூக, பண் பாட்டு மற்றும் சித்தாந்த மாற்றை வழங்குவது அவசியம்.

  • தமிழில்: சிந்தன்

சாதிய சமூகத்தை எதிர்ப்பது புரட்சிகர கடமை

 

-கே. வரதராசன்

“நமது நாட்டை நவீன ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற நாடாக உருவாக்க வேண்டுமானால், இந்து சமூகம் மற்றும் அதன் கலாச்சாரத்தின் அடிப்படையில் அமைந்துள்ள சாதியத்திற்கு எதிராக சமரசமற்ற போராட்டத்தை நடத்த வேண்டியது அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டும். சோசலிச சமுதாயத்தை உருவாக்குவது இருக்கட்டும், ஆண்டாண்டு காலமாய் இருந்துவரும் உயர்சாதி – தாழ்ந்த சாதி என்கிற இத்தகைய சாதிய அடுக்கினை அடித்து நொறுக்காது, மதச்சார்பற்ற ஜனநாயகத்தைக் கூட அமைத்திட முடியாது. வேறு வார்த்தைகளில் சொல்வதனால், புரட்சிகர ஜனநாயகம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் என்பதை சாதிய சமூகத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்து தனியே பிரித்திட முடியாது.’’

தோழர் இ.எம்.எஸ். 1979இல் எழுதிய புகழ்பெற்ற வார்த்தைகள் இவை. இவ்வாறு தோழர் இ.எம்.எஸ். கூறி முப்பத்தாறு ஆண்டுகள் கழிந்த பின்னரும், புரட்சிகர இயக்கத்தின் முக்கிய பணியாக இது இன்னமும் தொடர்கிறது.

நாடு சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் கடந்த பின்பும், நாட்டின் பல பகுதிகளிலும், அடித்தட்டு மக்களின் வாழ்வில், சாதிய அமைப்புமுறை ஏவியுள்ள தீண்டாமைக் கொடுமைகள் தொடர்வதை இன்னமும் காண முடியும். `தொட்டால் தீட்டு’, `நிழல் பட்டால் தீட்டு’, ஏன், `தீண்டத்தகாதவர்களின் குரலைக் கேட்டாலே தீட்டு’ என்று கூறும் கொடுமை இன்னமும் நாட்டின் பல பாகங்களில் காணப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் கிராமங்களுக்கு வெளியே சுகாதாரமற்ற சேரிகளில் வாழும் முறை தொடர்கிறது. தாழ்த்தப்பட்டவர்கள் பொதுக் கிணறுகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப் படுவதில்லை. அவர்களது குழந்தைகள் சாதி இந்துக்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் படிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. கோவில்கள் அவர்களுக்குத் திறக்காது. கிராமங்களில் உள்ள முடிதிருத்துவோர் மற்றும் சலவைத் தொழிலாளர்களை இவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியாது. நாட்டின் பல பாகங்களில் இதுதான் இன்றைக்கும் நிலையாகும்.

தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக நாட்டில் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும், நடைமுறையில்அது இன்னமும் நீடிக்கிறது என்பதே யதார்த்தஉண்மையாகும். பலநூறு ஆண்டு காலமாக இத்தகையசாதியப் பாகுபாடுகள் மற்றும் சாதியின் பெயரால்கொடுமைகள் நீடிப்பது, ஏன்? இன்றளவும் ஆதிக்கம் செலுத்தும் மனுதர்மசாஸ்திரம், பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நால்வகை வர்ணங்களை நியாயப்படுத்தி, நால் வருணத்தாரிலும் சிறந்தவன் பிராமணனே என்றும், ஏனென்றால் அவன் பிரம்மாவின் மிக்க தூயதான முகத்திலிருந்து வெளிப்பட்டவன் என்றும், இவர்களில் சூத்திரர்கள் தாழ்ந்தவனாகவே பிரம்மாவால் பாதத்திலிருந்து படைக்கப்பட்டவன் என்றும் கூறி, சூத்திரன் மற்ற மூவர்ணத்தாருக்கும் பொறாமையின்றி பணி புரிதல் ஒன்றையே முதன்மையாகக் கொள்ளக் கடமைப்பட்டவர்கள் என்றும் கூறுகிறது.

உயர் வர்க்கத்தினருக்கு பிரத்யேக உரிமைகள் என்பதும், ஒடுக்கப்பட்டோருக்கு துன்ப துயரங்களே என்பதும் வர்க்க சமுதாயத்தில் உலகம் முழுதும் உள்ள நிலைமைதான். ஆயினும் சாதீய ரீதியாக மக்களைப் பிரித்து தீண்டாமைக்கொடுமை என்னும் கொடிய சமூக அமைப்பு முறை ஏற்பட்டிருப்பது இந்தியாவில் உள்ள இந்து சமூக முறையில்தான். தீண்டாமைக் கொடுமையும், சாதீயப் பிரிவுகளும் கடவுளால் உண்டாக்கப்பட்டது என்று நாட்டின் பல பகுதிகளில் பாமர மக்கள் இன்னமும் நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்து மத சாஸ்திரங்களின்படி நால்வர்ணம் அல்லது சாதியப் பிரிவுகள் என்பவை கடவுளால் உண்டாக்கப்பட்டவை. கீதையில் கிருஷ்ணர்என்ன சொல்கிறார்?

‘‘சதுர்வர்ணயம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகச’’

இதன் பொருள், நான்கு வர்ணங்கள் என்னால் அதாவது கடவுளால் உண்டாக்கப்பட்டது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதைக்கூறிய ஆண்டவனுக்கு. அடித்தட்டைச் சேர்ந்த பக்தன் யாரேனும் சாதியமைப்பை உருவாக்கிய ஆண்டவனே அதை நீங்களே மாற்றித் தரவேண்டும், எங்களை அடிமை நிலையிலிருந்துகாக்க வேண்டும் என வரம் கேட்டு விடுவானோஎன்ற பயம் ஏற்பட்டிருக்கும் போலும். அடுத்தஇரண்டு வரிகளிலும் அதற்கும் வழிகாட்டிவிடுகிறார்.

‘தஸ்ய கர்த்தாரம மாம்

வித்ய கர்த்தார மன்யம்’

அதாவது, நான்கு வர்ணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டதுதான் என்றாலும் அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ண தர்ம உற்பத்தியாளனாகிய என்னால்கூட முடியாது என்று கூறிவிடுகிறார்.

அதாவது, ஒவ்வொருவரும் தான் சார்ந்த வர்ணத்தின் கடமைகளைச் செவ்வனே செய்து வர வேண்டும். அதுவே அவர்களது `கர்மா’ – அதாவது கடமை.

சந்தோக உபநிஷத் வெளிப்படையாகவே கூறுகிறது: “நீ பிறப்பால் உண்டான உன் வர்ணத்தின் கடமைகளைச் செய்யவில்லை என்றால், பின் நீ அடுத்த பிறவியில் ஒரு `சண்டாளனாக’ (தலித்தாக) அல்லது ஒரு பன்றியாக அல்லது ஒரு நாயாக பிறப்பாய் என்கிறது. அதேபோன்று, நீ உன் வர்ணக் கடமைகளைச் செவ்வனே செய்து வந்தால் அடுத்த பிறவியில் அடுத்த உயர் வர்ணமான வைசியனாகவோ அல்லது சத்திரியனாகவோ அல்லது பிராமாணனாகவோ பிறப்பாய் என்கிறது.

இவ்வாறு பிறப்பால் உருவான உன் கடமைகளைச் செவ்வனே செய்ய வேண்டும்   என்று மனுதர்மம் மிரட்டுகிறது.

அதனால்தான் தோழர் இ.எம்.எஸ். குறிப்பிடுகிறார். “கிரீஸில் அடிமை உறவு முறை என்ன செய்ததோ அதையேதான் இந்தியாவில் வருண வேறுபாடு செய்தது. ஆனால் கிரிஸில் நடந்தது பேகால் நேரிடையான அடிமை – அடிமை எஜமான் என்பதற்குப் பதிலாக இந்தியாவில் வருண (சாதி) பிரிவினையில் சுரண்டலும் ஒடுக்குமுறையும் மூடி வைக்கப்பட்டுள்ளது.’’

“எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவில் வருண (சாதி) முறையைச் சுற்றி மத ரீதியான ஒரு திரையும், வருணம் அல்லது சாதி என்பது கடவுளின் உருவாக்கம் என்ற நம்பிக்கையும் ஏற்படுத்தப்பட்டது.’’

“இவைகள் மூலமாக கீழ்சாதிக்காரர்கள் தாங்கள் சுமக்க வேண்டிய அடிமை நுகத்தடியை சந்தோஷமாக சுமக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டது.’’

பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில் ரயில்கள், பேருந்துகள் மற்றும் தொழிற்சாலைகள் அறிமுகப்படுத்தப்பட்டதும் அவற்றில் தீண்டத்தக்கவர் மற்றும் தீண்டத்தகாதவர் என இரு தரப்பிலிருந்தும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டதும், அவற்றில் பயணம் செய்ததும் சமூகத்தின் நிலைமைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தன. ஆயினும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சமூகத்தில் புரையோடிப் போயிருந்த சாதியக் கொடுமைகளுக்கு எதிராக அடிப்படை மாற்றம் எதையும் கொண்டுவர வில்லை. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், அவற்றின் மூலமாக “பிரித்தாளும் சூழ்ச்சி’’யையே அது பயன்படுத்தியது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நாட்டில் நிலவும் சமூக மற்றும் மத சம்பந்தமான பிரச்சனைகளில் தலையிட மாட்டோம் என்று அறிவித்தது. ஆயினும் கூட, அந்த சமயத்தில் கல்வி என்பது உயர்சாதியினரின் ஏகபோகமாக இருந்ததால், அதன் செயல்பாடுகள் என்பவை உயர்சாதியினருக்கு உதவிடக்கூடிய வகையிலேயே இருந்தன.

1928 ஜூனில் மாவீரன் பகத்சிங் நடத்தி வந்த `கீர்த்தி’ ஏட்டில் தீண்டாமைக் கொடுமை தொடர்பாக இரு கட்டுரைகள் எழுதியுள்ளார்.

“நம்முடைய நாடு உன்னதமானது என்று பீற்றிக்கொள்கிறோம். ஆனால் இந்த நாட்டில்தான் ஆறு கோடி பேரை தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கிறோம். அவர்கள் தொட்டாலே உயர்சாதியினர் தீட்டாகிவிடுவார்களாம். அவர்கள் கோவிலுக்குள் நுழைந்தால் கடவுள் கூட சீற்றமடைந்து விடுவார். இருபதாம் நூற்றாண்டில்கூட இத்தகு விஷயங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது வெட்கக் கேடாகும். நம் நாடு ஓர் உன்னதமான ஆன்மீக நாடு என்று பெருமைப்பட்டுக்கொள்கிறோம். ஆனால் அனைத்து மக்களும் சமம் என்பதை ஏற்கத் தயங்குகிறோம். அதே சமயத்தில், ஐரோப்பிய கண்டமோ புரட்சி குறித்து பேசிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க மற்றும் பிரெஞ்சுப் புரட்சிகளின்போது அவை சமத்துவத்தை பிரகடனம் செய்துவிட்டன. ஆயினும் நாம், தீண்டத்தகாதோர் பூணுhல் அணிந்து கொள்ளலாமா கூடாதா என்றும், அவர்கள் வேதங்களைப் படிக்கலாமா, கூடாதா என்றும் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். வெளிநாடுகளில் இந்தியர்கள் மீது பாகுபாடு காட்டினால் நமக்கு ஆத்திரம் வருகிறது. அவர்கள் நம் நாட்டிலும் இந்தியர்களுக்கு சம உரிமைகள் கொடுக்கவில்லை என்று புலம்புகிறோம். இத்தகைய விஷயங்களில் முறையிடுவதற்கு உண்மையிலேயே நமக்கு ஏதாவது உரிமை இருக்கிறதா?’’ என்று பகத்சிங் ஆச்சர்யப்படுகிறார்.

பிரிட்டிஷ் ஆட்சியில் மட்டுமல்ல, சுதந்திரம் பெற்றபின் கடந்த 67 ஆண்டு காலத்திலும் அதுதான் நிலைமை. தலித்துகளில் வாக்கு வங்கியைப் பெறுவதற்காக மேலெழுந்தவாரியாக சிற்சில சலுகைகளை ஆட்சியாளர்கள் மேற்கொண்டபோதிலும் அவர்களின் வாழ்வில் அடிப்படை மாற்றங்களைச் செய்யக்கூடிய வகையில் எந்தக் கொள்கையையும் ஆட்சியாளர்கள் அமல்படுத்தவில்லை. சாதியப் பிரச்சனையில் அனைத்து முதலாளித்தவக் கட்சிகளின் அணுகுமுறையும் இதுதான்.

“ஏகாதிபத்தியவாதிகள், நிலப்பிரபுக்கள் மற்றும் பெருமுதலாளிகள் இயற்கையாகவே தங்கள் வர்க்க நலன்களைக் காத்திட வேண்டும் என்பதற்காக சமூகத்தில் நிலவிவரும் சாதிய அமைப்புமுறை, நிலப்பிரபுத்துவம் மற்றும் முதலாளித்துவத்திற்கு முந்தைய நிலவுடைமை அமைப்புமுறை, நிலப்பிரபுத்துவம் மற்றும் முதலாளித்துவத்திற்கு முந்தைய நிலவுடைமை ஆகியவற்றைப் பாதுகாப்பவர்களாக செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள்,’’ என்று பி.டி. ரணதிவே சுட்டிக்காட்டுகிறார்.

தங்கள் சுரண்டல் அமைப்புமுறையை மிக வலுவான வகையில் தக்க வைத்துக் கொள்வதற்காக, சாதீய ரீதியிலான மற்றும் வர்க்க ரீதியிலான ஒடுக்குமுறைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். நாட்டின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்து ஆய்வு செய்த அமைப்புகள் அனைத்துமே, நாட்டில் தலித்துகள் நிலைமை என்பது மிக மோசமாக இருப்பதாகவே குறிப்பிட்டிருக்கின்றன. கிராமப்புரங்களில் உள்ள தலித்துகளில் 70 சதவீதத்தினர் நிலம் இல்லாதவர்கள் அல்லது பெயரளவில் சிறிது வைத்திருப்பவர்களாவர். இதுவே அனைத்துப் பாகுபாடுகளுக்கும் ஆணிவேராகும். இவ்வாறான சமூகக் கட்டுமானத்தின் மீதுதான் ஒட்டுமொத்த சமூக சுரண்டல் அமைப்பே கட்டப்பட்டிருக்கிறது.

2000 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, தலித் மக்களில் கிராமப்புரங்களில் 35.4 சதவீதத்தினரும், நகர்ப்புரங்களில் 39 சதவீதத்தினரும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். கிராமப்புரங்களில் உள்ள தினக் கூலிகளில் 61.4 சதவீதத்தினர் தலித்துகள். இது நகர்ப்புரங்களில் 26 சதவீதமாகும்.

மத்திய அரசுப் பணியிடங்களில் தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு முறையே 15 சதவீதமும், 7.5 சதவீதமும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆயினும் முதல் நிலை (குரூப் `ஏ’)யில், தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட பணியிடங்களில் 10.15 சதவீதமே நிரப்பப்பட்டிருக்கிறது. இரண்டாம் நிலை (குரூப் `பி’) பணியிடங்களில் இது 12.67 சதவீதமாகும். மூன்றாம் நிலை (குரூப் `சி’) பணியிடங்களில் இது 16.15 சதவீதமாகும். நான்காம் நிலை (குரூப் `டி’) பணியிடங்களில் இது 21.26 சதவீதமாகும். பழங்குடியினர் நிலை இன்னும் மோசம். அதாவது, அவர்களின் நிலை முறையே 2.89, 2.68, 5.69 மற்றும் 6.48 சதவீதமாக இருக்கிறது.

2001இல் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிவரத்தின்படி தலித்துகளில் எழுத்தறிவு விகிதம் 47.1 சதவீதமாகும். இதர பிரிவினரில் 68.8 சதவீதமாகும். பெண்களுக்கிடையில் தலித்துகளில் 41.9 சதவீதத்தினரும், பழங்குடியினரில் 34.8 சதவீதத்தினரும், இதரர்களில் 58.2 சதவீதத்தினரும் எழுத்தறிவுபெற்றிருக்கிறார்கள்.

தலித் பெண்கள் மூன்று விதமானஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகிறார்கள்.தலித்துகள் என்ற முறையிலும், பெண்கள் என்றமுறையிலும் மற்றும் அவர்களில்பெரும்பாலானவர்கள் நாட்கூலிகள் என்றமுறையிலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறார்கள்.மிகமோசமான பாலியல் துன்புறுத்தல்கள்,வசவுகள், அவமதிப்புக்கு அவர்கள்ஆளாகிறார்கள். இவர்கள் பிரச்சனைகளைமட்டுமே கையிலெடுத்துப் போராட்டங்களைநடத்திட வேண்டிய நிலையில் உள்ளோம்.தலித்துகளின் பொருளாதார நிலைமைகள்இவ்வாறிருக்கக்கூடிய அதே சமயத்தில் அவர்கள்மீதான சமூக ஒடுக்குமுறைகள்எவ்வாறிருக்கின்றன? தமிழகத்தில்மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்று,தமிழகத்தில் உள்ள கிராமங்களில் 40சதவீதத்திற்கும் அதிகமான அளவில்தீண்டாமைக்கொடுமைகள் இன்னமும்நீடிக்கின்றன.1981க்கும் 2000க்கும் இடைப்பட்ட 16ஆண்டுகளில் தலித்துகளுக்கு எதிராகமேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறைகள் மற்றும்குற்றச்செயல்கள் குறித்து 3 லட்சத்து 57 ஆயிரத்து945 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால்இவற்றில் எத்தனையில் குற்றமிழைத்தவர்கள்தண்டிக்கப்பட்டார்கள் என்பது தெரியவில்லை.சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே,நாட்டில் நிலவும் சமூகக்கொடுமைகளுக்கு எதிராக,

சாதீயப் பாகுபாடுகளால் ஏற்பட்டுள்ளசமத்துவமின்மைக்கு எதிராக, சமூகசீர்திருத்தவாதிகள், சாதி எதிர்ப்புப் போராளிகள்பலர் தோன்றியிருக்கின்றனர். தந்தை பெரியார்,டாக்டர் அம்பேத்கர், ஜோதிபாய்புலே,ஸ்ரீநாராயணகுரு என் எண்ணற்றவர்கள் தங்கள்வாழ்நாள் முழுதும் இதற்காகப்போராடியிருக்கின்றனர். ஆயினும் கூட, நாட்டில்தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் மற்றும்ஒடுக்குமுறைகள் இன்னமும் தொடர்கின்றனஎன்பதும், அவர்களின் பொருளாதார மற்றும் சமூகஅந்தஸ்து இன்னமும் அடித்தட்டிலேயேஇருக்கின்றன என்பதுமே இன்றைய நிலையாகும்.எனவே, இதனை ஒழித்திட வேண்டுமானால் நாம்மேற்கொள்ளும் போராட்டங்கள் சாதியஒடுக்குமுறை மற்றும் வர்க்க ஒடுக்குமுறை ஆகியஇரண்டுக்கும் எதிரான போராட்டங்கள்இணைக்கப்பட வேண்டும்.‘‘வெகுஜன ஸ்தாபனங்கள், தங்கள்பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகப் போராடும்அதே சமயத்தில் தீண்டத்தகாதவர்கள்,பழங்குடியினர், மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியினர்ஆகியோரின் பிரச்சனைகள் மீதும் தனிக் கவனம்செலுத்தி, அவற்றையும் தங்கள்கோரிக்கைகளுடன் இணைத்துக்கொண்டுபோராட்ட வடிவங்களைத் தயார் செய்து கொள்ளவேண்டும். அவ்வாறு ஒன்றிணைக்கப்பட்டஉழைக்கும் வர்க்கத்தின் மகத்தான படை மூலமாக,சாதிய பாகுபாட்டின் அடித்தளத்தை அடித்துநொறுக்கி, தீண்டத்தகாதவர்களின்அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து,விவசாயப் புரட்சியை தீர்மானகரமான முறையில்முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

அப்போதுதான் ஜனநாயக சக்திகளுக்கு அரசியல்அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வழிதிறந்திடும், அனைத்து உற்பத்திச் சாதனங்களின்சோசலிசமயமாக்கத்தின் அடிப்படையில் மிகவேகமான முறையில் தொழில்மயம் ஏற்பட்டு,சாதியற்ற வர்க்கமற்ற சமுதாயத்தை நோக்கிமுன்னேற முடியும்’’ என்று தோழர் பி.டி.ஆர்.தன்னுடைய வர்க்கம், சாதி மற்றும் சொத்துஎன்னும் நூலில் தெரிவித்துள்ளார்.இவ்வாறு வர்க்கப் போராட்டத்தை இருமுனைகளில் நாம் நடத்திட வேண்டியுள்ளது.ஒன்று சமூக சுரண்டலுக்கு எதிராக, மற்றொன்றுபொருளாதார சுரண்டலுக்கு எதிராக. வர்க்கப்போராட்டத்தை இவ்வாறு இரு கால்களின்மூலமாகத்தான் முன்னெடுத்துச் செல்ல முடியும்.ஏதாவது ஒரு காலை மட்டும்தான் எடுத்துவைப்போம் என்றால், போராட்டம் நொண்டவே செய்திடும். அதனை வீர்யத்துடன் முன்னெடுத்துச்செல்வது என்பது சாத்தியமில்லை. வரவிருக்கும்காலங்களில் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டம் மற்றும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்னும் இரு கால்களில் நின்று போராட்டங்களை முன்னெடுத்துச் சென்று, மாபெரும் வெற்றிகளை எய்திடுவோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தினத்தின் ஐம்பதாம் ஆண்டு

சீத்தாராம் யெச்சூரி

தமிழில்: ச. வீரமணி

மாபெரும் அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி வெற்றி பெற்று சாதனை படைத்த நவம்பர் 7 ஆம் தேதியன்றுதான் 1964 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரபூர்வமான முறையில் தன் அமைப்பை அதனுடைய 7ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட புரட்சி திட்டத்துடன் அறிவித்தது.

1920 இல் தாஸ்கண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது. அதனையே கட்சி தொடங்கிய நாளாக எடுத்துக் கொண்டுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தன் பயணத்தைத் தொடர்கிறது. அதனால்தான் 1964 இல் இந்திய புரட்சி இயக்கத்தின் உண்மையான வாரிசு என்ற முறையிலும், புரட்சியின் முன்னணிப் படை என்ற முறையிலும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய அமைப்பு அகில இந்திய மாநாட்டையே 7ஆவது அகில இந்திய மாநாடு என்று எண்ணிட்டது. இவ்வாறு, 2014 ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்ட 94 ஆம் ஆண்டு தினமாகும்.

1982 ஜனவரி, 11 ஆவது அகில இந்திய மாநாட்டின் அரசியல் – ஸ்தாபன அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

“ஒரு சரியான அரசியல் தத்துவார்த்த நிலைப்பாட்டிற்காக, 1955-62 ஆம் ஆண்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடைபெற்ற உள்கட்சிப் போராட்டம், கட்சி பிளவுபடுவதிலும் 1963-64 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்படுவதிலும் முடிந்தது. அரசியல் நிலைப்பாடு, தத்துவார்த்த நிலைபாடு, தேசிய நிலை மற்றும் சர்வதேசிய நிலை எனப் பல்வேறு பிரச்சனைகளிலும் வித்தியாசங்கள் கூர்மையாக முன்வந்து, இரு தரப்பினரையும் பிரித்தது.’’

மேலும், அதில் கூறப்பட்டிருப்பதாவது:

“இந்திய அரசு குறித்தும் இந்திய அரசாங்கம் குறித்தும் முற்றிலும் வெவ்வேறான இரு மதிப்பீடுகள் இரு வெவ்வேறான திட்டங்கள் மற்றும் அரசியல் நடைமுறை உத்திகளைப் பின்பற்ற வேண்டியதற்கு இட்டுச் சென்றன. அவை பிந்தைய ஆண்டுகளில் வெளிப்படுத்தப்பட்டன.’’

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 7 ஆவது அகில இந்திய மாநாட்டின் 20 ஆம் ஆண்டு தினத்தைக் கொண்டாடிய சமயத்தில், பி.டி.ரணதிவே, பீப்பிள்ஸ் டெமாக்ரசி (நவம்பர் 7, 1984) இதழுக்காக எழுதிய சிறப்புக் கட்டுரையில் கூறியிருந்ததாவது:

“புதிய இந்திய அரசு மற்றும் அரசாங்கத்தின் வர்க்கக் குணாம்சம் என்ன என்பது குறித்தும்,   புரட்சியில் உழைக்கும் வர்க்கத்திற்காக ஆற்ற வேண்டிய பணிகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் உள்ளார்ந்த மதிப்பீடு சம்பந்தமாக கேந்திரமான கேள்வி எழுந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசானது, பெருமுதலாளிகளால் தலைமை தாங்கப்படக்கூடிய, அந்நிய நிதி மூலதனத்துக்கு உடந்தையாக இருந்து ஒத்து செயல்படுகிற முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அரசு என்றே அரசின் வர்க்கக் குணாம்சம் குறித்து வரையறுத்தது.”

இதன் பொருள், மக்கள் ஜனநாயக அரசைக் கட்டுவதற்காக, அதிகாரத்திற்கான போராட்டத்தில், அரசு மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக எவ்வித சமரசத்திற்கும் இடமில்லாத வகையில் போராட வேண்டும் என்பதாகும். எனவேதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் மேற்கு வங்கத்தில் அரைப் பாசிசத் தாக்குதல், கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் கொடூரமான பிரச்சாரம் ஆகியவற்றையும் துணிவுடன் எதிர்த்து நின்று அரசாங்கத்திற்கு எதிராக உறுதியான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடிந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடதுசாரி மற்றும் வெகுஜன இயக்கத்திற்கு எதிராக ஏவப்பட்ட ஒடுக்குமுறையைத் தாங்கிக் கொண்டு, இத்தனை ஆண்டு காலமும் எதிர்ப்புத் தீப்பந்தத்தை, சில சமயங்களில் அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் கைவிட்ட சமயங்களிலும் கூட, தனியாகவும், உயர்த்திப் பிடித்து வந்திருக்கிறது.

“இந்திய அரசின் குணம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எப்படி புரிந்து கொண்டது? அது ஒட்டுமொத்தத்தில் பெரிய மற்றும் பெரிதல்லாத முதலாளிகளால் தலைமை தாங்கப்படுகிற அரசு என்று அதனைப் புரிந்து கொண்டது. எதார்த்தத்தில் அரசும் அரசாங்கமும் பெரிதல்லாத முதலாளிகளால் தலைமை தாங்கப்பட்டது என்றே பொருளாகும்.’’

புரட்சியின் ஜனநாயகக் கட்டம் சம்பந்தமாக வித்தியாசம் இல்லை என்ற போதிலும், அரசின் வர்க்க குணம், இந்திய முதலாளிகளின் இரட்டைத் தன்மை கொண்ட குணம் மற்றும் அதன் விளைவாக நாம் மிகச்சரியான முறையில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை உத்தி குறித்த பிரச்சனைகளிலும், கூர்மையான அளவில் வித்தியாசங்கள் இருந்தன.

இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வுகளை வைத்தே, இப்பிரச்சனைகள் பலவற்றைக் குறித்து ஏராளமாக எழுத முடியும். ஏற்கனவே பலவற்றைக் குறித்து எழுதி இருக்கிறோம். கடந்த ஐம்பதாண்டுகளில் இப்பிரச்சனைகள் குறித்து நிறையவே எழுதி இருக்கிறோம்.   இன்றைய சூழ்நிலையிலும் மிகவும் முக்கியமாகத் தொடரும் சில தத்துவார்த்த அடித்தளங்கள் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டதற்கான வரையறை மற்றும் அதனைத் தொடர்ந்து அது நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் சக்திகளில் எழுச்சியுடன் முன்னேறிச் சென்றது குறித்தும் கவனம் செலுத்திட விரும்புகிறேன்.

ஆயினும், இந்தப் பிரச்சனை குறித்து ஆய்வு செய்வதற்கு முன்பு, கட்சி ஆதரவாளர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது பரிவு காட்டுவோர் அடிக்கடி எழுப்பும் சிலவற்றைக் குறித்து கருத்துக் கூறுவது அவசியமாகும். கம்யூனிஸ்ட் கட்சி பிரியாமலும் உடைபடாமலும் தவிர்க்கப்பட்டிருப்பின், கம்யூனிஸ்ட் இயக்கம் பதிவு செய்துள்ள முன்னேற்றம் இப்போதிருப்பதை விட மேலும் பன்மடங்கு கூடுதலாக இருந்திருக்கக் கூடும் என்பதே அவர்கள் மத்தியில் காணப்படும் உணர்வாகும்.

மேலே நாம் குறிப்பிட்ட பி.டி.ரணதிவேயின் கட்டுரையில் இதுகுறித்தும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருப்பதாவது:

“கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முட்டாள்தனமான முறையில் ஏதேனும் உடைப்பு ஏற்பட்டிருப்பின் அது கிரிமினல்தனமான ஒன்றேயாகும். சரியானதொரு நிலைப்பாட்டிற்கு எதிராக இவ்வாறு கட்சியை உடைப்பதில் ஈடுபடுவோர், மக்களிடமிருந்து தனிமைப்படுவார்கள். அவர்கள் தங்கள் தவறான போக்கைத் திருத்திக் கொள்ளவில்லை என்றால் ஓர் அரசியல் சக்தியாக இருப்பதிலிருந்து துடைத்தெறியப்பட்டு விடுவார்கள். அதே சமயத்தில், கட்சியில் ஆதிக்கம் செலுத்தும் தலைமை தவறான நிலைப்பாட்டைத் தொடரும்போது, தன்னுடைய தவறான நிலைப்பாட்டைத் திருத்திக் கொள்ள மறுக்கும்போது, வர்க்க சமரசப் பாதையிலேயே கட்சி முழுவதையும் கொண்டு செல்வதற்கான உறுதியைக் காட்டுகிறபோது, கட்சிக்குள் மோதல்களும் பிளவுகளும் அடிக்கடி நிகழும். அத்தகைய நிலைப்பாட்டின் காரணமாக எழும் தீய விளைவுகளை நடைமுறையில் பார்க்கலாம்.’’

பின்னர் நடைபெற்ற நிகழ்வுகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடே மிகவும் சரியான நிலைப்பாடு என்று உறுதி செய்ததுடன், நாட்டில் இடதுசாரி சக்திகளில் தலைமை தாங்கும் பாத்திரத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளித்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் 50 ஆம் ஆண்டு தினத்தை அனுசரிக்கக்கூடிய தருணத்தில் சமீபத்திய தேர்தல்களில் பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் ஆளும் வர்க்கங்களும் ஊடகங்களும் அதன்மீது தொடுத்திடும் தாக்குதல்கள் குறித்தும் கையாள்வது அவசியமாகும். 1964 ஏப்ரல் 11 இல் அன்றைக்கு இருந்த ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கவுன்சில் கூட்டத்திலிருந்து 32 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து, அதன் பின்னர் சில நாட்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அமைத்தது தொடர்பாக, இப்போது சில ஏடுகள் கிண்டலாகக் கருத்துக்களை வெளியிட்டுள்ளன. இது குறித்துக் கையாள்வதும் அவசியம்.

ஒரு முன்னணி மலையாள நாளிதழ், இது தொடர்பாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறது. “கொள்கைகளும் தோல்விகளும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 50 ஆண்டுகளை வீணடித்துவிட்டது.’’ (2014 ஏப்ரல் 12) என்று தலைப்பிட்டு மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக மிகவும் விரிவான முறையில் கதை புனைந்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வீழ்ச்சிக்கான காரணங்கள் குறித்து பல்வேறு கதைகளை அது அளந்துவிட்டு, கடைசியாக அது மார்க்சிஸ்ட் கட்சி வர்க்கங்களின் இயற்கை குணம் மாற்றங்கள் அடைந்திருப்பதை கணக்கில் கொள்ளாததால் அதனால் முன்னேறிச் செல்ல முடியாமல் இருக்கிறது, என்று குறிப்பிட்டிருக்கிறது.

இந்தியாவில் பொருளாதாரம் சம்பந்தமாக வெளியாகும் `இளஞ்சிவப்பு முன்னணி செய்தித் தாள்களில் ஒன்று தன்னுடைய தலையங்கத்தில், “வரலாற்றை எதிர் கொள்ளல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய 50 ஆம் ஆண்டு விழாவைத் தொடங்குகையில் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது’’ என்று குறிப்பிட்டிருக்கிறது. சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்வது வரவேற்கத்தக்க ஒன்றுதான். உண்மையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதைத்தான் துல்லியமாகக் கோருகிறது. புதிய சவால்களை அடையாளம் கண்டு அவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழைவு. ஆயினும் அந்நாளேடு தன் தலையங்கத்தில் மேலும் அடிக்கோடிட்டுக் கூறியிருப்பது என்ன தெரியுமா? “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதனுடைய வரலாற்றில் மாபெரும் சவாலை எதிர்நோக்கி இருக்கிறது. அதாவது, இன்றைய காலகட்டத்திற்குப் பொருத்தமற்ற ஒன்று என்கிற அச்சுறுத்தலை அது எதிர்கொண்டிருக்கிறது. ஏன்?… ஏனெனில், அதன் தலைமை இன்றைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பம் மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் குணாம்சங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அது கண்டுகொள்ளவில்லை.’’

இவ்வாறு நம்மீது விமர்சனம் செய்துள்ளவர்கள் எழுப்பியுள்ள பிரச்சனைகளின் சாராம்சத்தை எடுத்துக் கொள்வதற்கு முன்பு, ஒன்றை அடிக்கோடிட்டுச் சொல்வது அவசியமாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது எப்போதுமே காலந்தோறும் மாறி வரும் ஒவ்வொரு அம்சத்தையும் உன்னிப்பாகக் கவனித்து அதற்கேற்ற விதத்தில் தன் கொள்கைகளை கோட்பாடுகளை அமைத்து, அதன் அடிப்படையில்தான் கொள்கைகளை நடைமுறையில் பின்பற்றி வந்திருக்கிறது. மார்க்சிய லெனினியத்தின் உயிரோட்டமான சாராம்சம் என்பதே துல்லியமான நிலைமைகளின் துல்லியமான ஆய்வுதான். அதன் அடிப்படையில்தான் அது செயல்பட்டுக் கொண்டு வந்திருக்கிறது. நிலைமைகள் தொடர்ச்சியாக மாறுவதால், அதற்கேற்ற விதத்தில் மார்க்சிய நுண்ணாய்வையும் மாற்ற வேண்டியிருக்கிறது. அவ்வாறு செய்யத் தவறுமேயானால், உண்மையில், நாம் மார்க்சியத்தையே – அதன் புரட்சிகர உள்ளடக்கத்தையும், அதனுடைய விஞ்ஞானப்பூர்வமான ஆய்வுக் கோட்பாட்டையுமே – மறுதலித்தவர்களாகிறோம். மார்க்சியம் மிகவும் விஞ்ஞானப்பூர்வமானது என்பதையும், எனவே, ஓர் ஆக்கப்பூர்வமான விஞ்ஞானம் எப்போதுமே வறட்டுத்தனமின்றி இயல்பானதாகவும், இயற்கையானதாகவும், மெய்யானதாகவும் இருந்திடும் என்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் உயர்த்திப் பிடித்தே வந்திருக்கிறது.

ஆம். இந்த அடிப்படையில், நம்முடைய சமூகக் கட்டமைப்பில் பல்வேறு வர்க்கங்களின் இயக்கத்தில் ஏற்படும் துல்லியமான மாற்றங்களை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, முதலாளித்துவத்தின் வளர்ச்சியானது, முழுமையாக முதலாளித்துவக் கட்டமைப்புக்குள் இன்னமும் மாறாத பல்வேறு சமூக அடுக்குகளைக் கொண்ட நம்முடைய அமைப்பின் மீது – அதாவது சாதிய அடுக்குகளும் மற்றும் அதன் தொடர்ச்சியாக சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒடுக்குமுறையை ஏவி, அதீதமான அளவில் ஆதிக்கம் செலுத்த முன்வருகையில், இது மிகவும் அவசியமாகிறது. ஆனால் இந்த விமர்சகர்கள் முன்வைக்கும் விஷயம் அப்படியானதல்ல. அவர்கள் கூறும் விமர்சனங்கள் வேறானவைகளாகும்.

நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்கும் மேதைகள் இப்போது சொல்வது என்ன? காரல் மார்க்ஸ் காலத்தில் இருந்த முதலாளித்துவத்தின் கீழ் இருந்த தொழிலாளி வர்க்கத்தின் குணாம்சம் இன்றுள்ள தொழிலாளி வர்க்கத்துக்குக் கிடையாதாம். அன்றைக்கு இருந்ததுபோல் கரத்தால் உழைக்கும் தொழிலாளர்கள் (manual labour) அளவிலும் மற்றும் பல்வேறு வகையினர் கலந்து பணியாற்றுவதிலும் இன்றைக்குக் குறைந்துவிட்டார்களாம். எனவே, காரல் மார்க்சும் ஏங்கெல்சும் உலகை மாற்றிட, முதலாளித்துவத்தை புரட்சிகரமான முறையில் தூக்கி எறிய, தங்களுடைய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் முன்வைத்த, “உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள், நீங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை, உங்கள் அடிமைச் சங்கிலியைத் தவிர,’’ என்கிற முழக்கம் இனிப் பொருந்தாதாம். ஏனெனில் தொழிலாளர் வர்க்கத்தில் பெரும்பகுதியினர் முதலாளித்துவ அமைப்பின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டார்களாம், முதலாளித்துவச் சுரண்டலின் அடிமைத்தளையிலிருந்து வெளியேறி அவர்கள் செய்ய வேண்டியது நிறையவே இருக்கிறதாம்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், இவ்வாறு விமர்சிப்பவர்கள் கூறவரும் கருத்து இதுதான்: “மார்க்ஸ் காலத்திலிருந்த தொழிலாளி வர்க்கத்தின் குணம் இன்றையதினம் மாறிவிட்டதால், நவீன தாராளமய உலகமயக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படும் இன்றைய சூழ்நிலைக்கு மார்க்சியம் பொருந்தாது. இந்த `எதார்த்தத்தை’ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்க மறுப்பதால், அக்கட்சியும் இன்றைய காலகட்டத்திற்கு பொருந்தாத ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது. எனவே, இதுதான் அக்கட்சி இன்றைய தினம் எதிர்கொள்ளும் மாபெரும் சவாலாகும்.’’

ஆனால் உண்மை நிலைமை என்ன? உலக முதலாளித்துவம் கடந்த ஆறு ஆண்டு காலமாக தொடர்ந்து நெருக்கடிக்குள் சிக்கி வெளிவர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது மார்க்சியம் இன்றைக்கும் பொருத்தமுடையதே என்று உரத்தகுரலில் பிரகடனம் செய்கிறது. உலகப் பொருளாதாரத்தையே சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கும் தற்போதைய நெருக்கடியைப் புரிந்து கொள்ளவும் ஆய்வு செய்யவும் காரல் மார்க்சின் மூலதனத்தின் பிரதிகள் வேண்டும் என்று வாடிகனிலிருந்து தகைசான்ற போப் ஆணை பிறப்பித்தாரே, அது ஒன்றும் தற்செயலாக ஏற்பட்ட விபத்தல்ல.

ஆயினும், இன்றைய நெருக்கடிக்கான காரணத்தை ஆய்வு செய்ய வேண்டுமானால் மார்க்சியத்தை நன்கு கற்ற ஒருவராலேயே அதனைச் செய்திட முடியும். தொடர்ந்து இருந்து வரும் உலகப் பொருளாதார நெருக்கடியும், உண்மையில் அத்தகைய நெருக்கடிக்கான ஆணிவேர் எது என்பதையும், சர்வதேச நிதி மூலதனத்தின் உயர்வையும், இன்றைய உலக நாடுகள் பலவற்றிலும் நவீன தாராளமயப் பொருளாதார ஒழுங்கை நிலைநிறுத்துவதில் அது மேற்கொள்ளும் மேலாதிக்கப் பங்களிப்பினையும் மார்க்சியத்தால் மட்டுமே புரிந்து கொள்ளப்பட்டு விளக்கப்பட முடியும். அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற வால்ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கம் கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று அல்ல. எனினும் தன்னெழுச்சியாக நடைபெற்ற இந்த இயக்கத்தின் இறுதியில் சுயேச்சையாக எடுக்கப்பட்ட முடிவு என்ன? இந்தக் கிளர்ச்சிகள் `அமைப்புக்குள் உள்ள கோளாறுக்கு எதிராக அல்ல, மாறாக இந்த அமைப்பே கோளாறானது அதாவது முதலாளித்துவ அமைப்பே கோளாறானது என்றும் அதற்கு எதிராகவே இது நடைபெற்றுள்ளது என்றும் முடிவுக்கு வந்தது. இதே மாதிரி புரட்சிகரமான முடிவுக்குத்தான் மார்க்சியமும் வருகிறது. இந்தக் கோளாறான அமைப்புமுறை தூக்கி எறியப்படும்போது மட்டுமே மனித சமூகம் ஒட்டுமொத்தமாக விடுதலை அடைய முடியும். ஆனால் நவீன தாராளமயக் கொள்கையை பூஜிப்போருக்கு இது வெறும் தெய்வ நிந்தனையாகவே தோன்றும். எனவேதான் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இன்றைய தினம் `பொருந்தாத, `பொருத்தமற்றதான கட்சியாக இகழ்ந்துரைக்கிறார்கள்.

மேலும், தொழிலாளர் வர்க்கத்தின் சேர்மானத்தில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்த போதிலும், கரத்தால் உழைப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து, அந்த இடத்தை கருத்தால் உழைப்பவர்கள் நிரப்பியிருந்த போதிலும், (மனிதகுல நாகரிகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுகையில் இது சாத்தியமே) முதலாளித் துவத்தின் இயல்பான குணம் – அதாவது மனிதனை மனிதன் சுரண்டும் குணம் – அதன் முதுகெலும்பாகத் தொடர்ந்து இருந்து வருவது இன்றைக்கும் மாறாததோர் உண்மை அல்லவா? ஏனெனில், சுரண்டல் என்பது முதலாளித்துவ உற்பத்தியுடன் இணைபிரியா ஒன்றல்லவா? இது ஏன்? ஏனெனில், முதலாளித்துவ உற்பத்தி நடைமுறையின் அடிப்படையே சுரண்டல்தான்.

உற்பத்தி செய்யப்படும் பொருளின் மதிப்பில், அந்தப் பொருளை உற்பத்தி செய்த தொழிலாளியின் பங்களிப்பு எப்போதுமே அவருக்குக் கொடுக்கப்படும் ஊதியத்தின் மதிப்பைவிட அதிகமாகத்தான் இருக்கும். இந்த வித்தியாசம்தான் முதலாளித்துவ உற்பத்தி முறையில், தொடர்ந்து உபரி மதிப்பை உற்பத்தி செய்கிறது. இந்த உபரிமதிப்பைத்தான் முதலாளிகள் லாபம் என்ற பெயரில் தமதாக்கிக் கொள்கிறார்கள். எனவே, தொழிலாளி, `கருத்தால் உழைப்பவரா’ அல்லது `கரத்தால் உழைப்பவரா’ என்பதே இங்கே பிரச்சனை இல்லை. எவராயிருந்தாலும் அவரைச் சுரண்டுவது என்பதே முதலாளித்துவத்தின் குணம். எனவே, இந்த முதலாளித்துவ அமைப்பு முறையை முற்றிலுமாகத் தூக்கி எறிவதன் மூலம் மட்டுமே, இத்தகைய சுரண்டலிலிருந்து, மனிதகுலத்திற்கு விடுதலை யைக் கொண்டு வர முடியும். இத்தகைய அறிவியல்பூர்வமான உண்மையை நவீன தாராள மயத்திற்கு வக்காலத்து வாங்கும் `மேதைகள்’ ஒப்புக் கொள்ள மனம் வராது, வெறுப்பார்கள். எனவேதான் அதனை மறைப்பதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்றைய தினம் பொருத்தமற்றதாக மாறிவிட்டது என்று நம்மீது பாய்கிறார்கள்.

இத்தகைய விமர்சகர்களின் மற்றொரு வகையான செயல்பாடு என்பது, முதலாளித்துவ சுரண்டல் அமைப்பின் அடித்தளங்களைப் பாதிக்காத விதத்தில் பல்வேறு அரசு சாரா அமைப்புகள் நடத்தக்கூடிய இயக்கங்களை ஊக்குவிப்பதும் மற்றும் ஆதரிப்பதுமாகும். அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் அல்லது ஆம் ஆத்மி கட்சிக்கு கார்ப்பரேட் ஊடகங்கள் அளித்த அளவுக்கு மீறிய விளம்பரம், ஆகியவற்றிலிருந்தே இதனை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் நடைபெற்ற அதேசமயத்தில்தான் இடதுசாரிக் கட்சிகள் அவர் முன்வைத்த அதே கோரிக்கைகளுக்காக பிரம்மாண்டமான முறையில் மக்கள் இயக்கங்களை நடத்தின. ஆனால் அவை குறித்து அநேகமாக எதையுமே அவை கூறவில்லை. அல்லது பெயரளவில் ஒரு சில நொடிகள் கூறும். காரணம் என்ன? ஏனெனில், இடதுசாரிக் கட்சிகளைப்போல அல்லாமல், முதலாளித்துவ அமைப்பின் அடித்தளங்களான சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை ஆகியவற்றின் மீது அவை கை வைப்பதில்லை. முதலாளித்துவத்திற்கு, அதனுடைய அடித்தளத்தின் மீது கைவைக்காமல் இயங்கும் அனைவருமே உன்னதமான வர்கள் தான், அவர்களை தூக்கி வைத்து அது கொண்டாடும். எனவேதான், அது, `ஊழலை ஒழிப்போம்’, `நேர்மையான அரசியல்’ போன்று இயக்கம் நடத்தும் அனைத்து அமைப்புகளையுமே அவை வரவேற்கும். ஆனால், அதே சமயத்தில், இடதுசாரிகளைத் தனிமைப்படுத்திட வேண்டும் என்பதில் அவை குறியாக இருக்கும். ஏனெனில், இடதுசாரிகள் இந்த அமைப்பையே கேள்விக்குறியாக்குவது தொடர்வதும், இந்த அமைப்புக்கு மாற்று ஏதும் இல்லை என்று கூறுவதை இடதுசாரிகள் ஏற்க மறுப்பதும்தான் காரணங்களாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரை, இந்த முதலாளித்துவ அமைப்புக்கு மாற்று உண்டு என்றும், சோசலிச அமைப்பே அதற்கு மாற்று என்றும் பிரகடனம் செய்கிறது.

நம் வளர்ச்சியில் அக்கறையுடன் நம் கொள்கைகளையும் நம் செயல்பாடுகளையும் நடுநிலையுடன் விமர்சிப்பவர்களை நாம் வரவேற்கிறோம். ஆனால் அதே சமயத்தில், குழந்தை அழுக்காகிவிட்டதே என்று தண்ணீர் தொட்டிக்குள்ளே குழந்தையைத் தூக்கி எறிவது போன்று விமர்சிப்பவர்களுக்கு நாம் கூறும் பதில், அத்தகைய விமர்சனங்களை ஏற்க முடியாது என்பதும் அவற்றிற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்பதுமேயாகும்.

உலக முதலாளித்துவ அமைப்பைத் தூக்கி எறிவதன் மூலம் மட்டுமே, உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையோரைத் துன்பத்திலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ள வறுமையின் கோரப்பிடியிலிருந்து விடுவித்திட முடியும் என்கிற சித்தாந்தம் மற்றும் தத்துவார்த்த அடித்தளங்களையும் அதேபோன்று அதன் நடைமுறைகளையும்தான் மார்க்சியமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ந்து கூறி வருகிறது. எனவே, முதலாளித்துவத்தைத் தூக்கி எறிவது என்பது ஓர் அறநெறி சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல. ஒரு விதத்தில் இது அறநெறி சார்ந்த விஷயமே என்ற போதிலும், முக்கியமாக அதனைத் தூக்கி எறிவதன் மூலம் மட்டுமே, ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் விடுதலையை அளித்திட முடியும் என்கிற அறிவியல் உண்மையுமாகும்.

ஆயினும் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் இத்தகைய குறிக்கோளை எய்தக் கூடிய விதத்தில் புரட்சிகர சக்திகள் மற்றும் இயக்கங்கள் வலுப்பெற்று வெற்றி பெறுவதன் மூலம் மட்டுமே இதனை எய்திட முடியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ‘சில தத்துவார்த்தப் பிரச்சனைகள் மீதான தீர்மானத்தில்’, இத்தகைய முயற்சிகளை வலுப்படுத்திடுவதற்காக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய துல்லியமான பிரச்சனைகள் என்ன வென்று குறிப்பிட்டிக்கிறது. “இந்திய நிலை மைகள்: சில துல்லியமான பிரச்சனைகள்’’ என்ற பிரிவில் கூறப்பட்டிருப்பதாவது:

“இந்திய நிலைமைகளில், நம் பணி இந்த இடைப் பரிவர்த்தனை (transition) காலத்தில், நம்முடைய புரட்சிகர முன்னேற்றத்தை வலுப்படுத்திட நம் பணி, ஏகாதிபத் தியத்திற்கு ஆதரவாக சில சக்திகள் மாறியிருக்கக்கூடிய சூழ்நிலையில், நம்முடைய லட்சியக் குறிக்கோளை முன்னெடுத்துச் சென்றிட, இந்திய மக்கள் மத்தியில் வர்க்க சக்திகளின் சேர்மானத்தில் மாற்றத்திற்காக வேலை செய்வதில் துல்லியமான முயற்சிகள் தேவை. இதற்கு, நாம் நம் சமூகத்தில் இன்றுள்ள துல்லியமான நிலைமைகளில் வர்க்கப் போராட்டத்தைக் கூர் மைப்படுத்தி வலுமிக்க மற்றும் வெகுஜன போராட்டங்களைக் கட்டவிழ்த்துவிட வேண்டியது அவசியமாகும்.’’

நாடாளுமன்ற மற்றும் நாடாளுமன்றத்திற்கு அப்பால் உள்ள வடிவங்கள்: இந்தப் பணியை எய்திட, மேம்படுத்தப்பட்ட கட்சித் திட்டம் குறிப்பிடுவதாவது:

“மக்கள் ஜனநாயகம் மற்றும் சோசலிச சமூக மாற்றத்தை அமைதியான வழியில் அடையவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விழைகிறது. வலிமையான வெகுஜன புரட்சிகர இயக்கத்தை வளர்த்தெடுப்பதன் மூலமும், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நடைபெறுகிற போராட்டங்களை இணைப்பதன் மூலமும் பிற்போக்கு சக்திகளின் எதிர்ப்பை முறியடிக்க தொழிலாளி வர்க்கமும், அதன் கூட்டாளிகளும் முயல்வதோடு, அமைதியான வழிமுறையில் இத்தகைய மாற்றங்களை கொண்டுவர பாடுபடுவர். எனினும், ஆளும் வர்க்கங்கள் தங்களது அதிகாரத்தை ஒருபோதும் தாமாக விட்டுத்தர மாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக, சட்டத்திற்கு புறம்பாகவும், வன்முறை மூலமாகவும் இதைப் பின்னுக்குத் தள்ள முயல்வார்கள். எனவே, நாட்டின் அரசியல் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய திருப்பங்கள், திருகல்களையும் கவனத்தில் கொண்டு அனைத்து சூழ்நிலைகளையும் சந்திக்கின்ற வகையில் விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும்.’’

இவ்வாறு நாடாளுமன்றப் பணியையும் நாடாளுமன்றத்திற்கு வெளியேயான பணியையும் நடைமுறையில் முறையாக இணைப்பது நடப்பு சூழ்நிலையில் கட்சிக்கு முன் உள்ள முக்கியமான பணியாகும். நம் கட்சித் திட்டம் கூறுவதாவது:

“இந்தியாவில் தற்போதுள்ள நாடாளுமன்ற முறை முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் வடிவமாக இருந்தாலும், மக்களின் முன்னேற்றத்திற்கான ஓர் அங்கமாக உள்ளது. மக்கள் தங்களின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், அரசு விவகாரங்களில் ஓரளவு தலையிடுவதற்கும், ஜனநாயக மற்றும் சமூக வளர்ச்சிக்கான போராட்டங்களை நடத்துவதற் கும் தற்போதுள்ள நாடாளுமன்ற முறை சில வாய்ப்புகளை வழங்குகிறது.’’ (பத்தி 5.22)

ஆனாலும் பெரும் மூலதனத்தின் அதிகாரம் அதிகரித்திருப்பதும், அரசியலில் பெருமளவில் பணம் நுழைந்திருப்பதும், அரசியலில் கிரிமினல்மயம் அதிகரித்திருப்பதும் ஜனநாயக நடைமுறைகளைத் திரித்து, கீழறுத்து, வீழ்த்திக் கொண்டிருக்கிறது.

“(2010 ஆகஸ்ட் 7-10 தேதிகளில்) விஜயவாடாவில் நடைபெற்ற விரிவடைந்த மத்தியக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தில் சுட்டிக்காட்டி இருப்பதாவது:

“நாடாளுமன்ற ஜனநாயகமே நவீன தாராளமயத்தாலும், உலக நிதி மூலதனத்தின் தாக்கத்தாலும் அரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசியலில் பணம் மற்றும் கிரிமினல்மயம் மூலம் ஜனநாயகம் களங்கப்படுத் தப்படுவதுடன் ஜனநாயக உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரிப்பதும் இணைந்து கொண்டுள்ளன. ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்கள் செய்வதற்கான உரிமைகள் நிர்வாக நடவடிக் கைகள் மூலமும், நீதித்துறை தலையீடுகள் மூலமும் கட்டுப்படுத்தப்படுகின்றன. கார்ப்பரேட் ஊடகங்களோ இவ்வாறு மக்களின் உரிமைகள் கட்டுப்படுத்தப்படுவது நியாயம்தான் என்கிற முறையில் கருத்துக்களைப் பரப்பிட, பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன”. (பத்தி 2.35)

“ஜனநாயக அமைப்பு மற்றும் பிரஜைகளின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து விரிவாக்குவதற்கான போராட்டம் முதலாளித் துவ – நிலப்பிரபுத்துவ அரசுக்கெதிரான உழைக் கும் மக்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். இதனை மக்கள் ஜனநாயகத்தின் கீழ் ஜனநாயகத்தின் உயர் வடிவத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். நம் கட்சித் திட்டத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

“மக்கள் நலனைப் பாதுகாக்க நாடாளுமன்ற ஜனநாயக முறை மற்றும் ஜனநாயக அமைப்புகளுக்கு எதிராக விடப்பட்டுள்ள இத்தகைய மிரட்டல்களை முறியடிக்க வேண்டியது ஆகப் பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இத்தகைய நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புகளை நாடாளுமன்றத்திற்கு வெளியிலான நடவடிக்கைகளோடு இணைத்து, கவனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.’’ (பத்தி 5.23)

“இத்தகைய தொலைநோக்குப் பார்வையுடன், நாடாளுமன்ற அமைப்புகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை, வெகுஜன இயக்கங்களை வலுப்படுத்திடப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போதைய முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு மாற்றாக ஒரு வலுவான இயக்கத்தைக் கட்டக்கூடிய விதத்தில், நாடாளுமன்றப் பணி, நாடாளுமன்றத்திற்கு அப்பால் உள்ள நடவடிக்கைகளோடும், போராட்டங்களோடும் இணைக்கப்பட வேண்டும்.

“ஆயினும், நாடாளுமன்றப் பணியில் ஈடுபடும் சமயத்தில் கம்யூனிஸ்ட் நெறிமுறையிலிருந்து விலகிச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமான அளவில் வரலாம். அப்போதெல்லாம் அத்தகைய கம்யூனிஸ்ட் நெறிபிறழ்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடாது எச்சரிக்கையாக நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இத்தகைய போக்குகள் பல வடிவங்களில் வர முடியும். நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பே பல மாயைகளை உருவாக்கிடும். போராடவே வேண்டியதில்லை. அரசாங்கத்தின் ஆதரவுடன் அனைத்தையும் சாதித்துக் கொள்ளலாம் என்கிற உணர்வு சர்வசாதாரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிடும். குறிப்பாக அரசு நம் ஆதரவில் இயங்கும்போது இப்போக்கு மக்கள் மத்தியில் அதிகமாகக் காணப்படும். இத்தகைய மாயைகளை போராடி முறியடித்திட வேண்டும். தங்கள் வர்க்க ஆட்சிக்கு மக்கள் பணிந்து செல்ல வேண்டும் என்பதுபோன்ற மாயைகளைப் பயன்படுத்தி ஆளும் வர்க்கங்கள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளை தோலுரித்துக் காட்டிட வேண்டும். சுரண்டப்படும் மக்களை சரியான நடைமுறை உத்திகள் மூலம் தட்டி எழுப்பி, புரட்சி நடவடிக்கைக்குத் தயார்படுத்த வேண்டியது அவசியமாகும்.

“மேலும், அமைதியாகவே இடைப் பரிவர்த்தனை ஏற்படும் என்கிற மாயைகளும் வலுப்படும். இதனை நம் மேம்படுத்தப்பட்ட திட்டத்தில் சரி செய்திருக்கிறோம். கட்சியில் அவ்வப்போது முறையாக நாம் மேற்கொள்ளும் நெறிப்படுத்தும் இயக்கங்களில் நாடாளுமன்ற சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டியதை வலியுறுத்தி வருகிறோம்.

“இன்றைய நடப்பு சூழ்நிலையில், இடது அதிதீவிரவாதத் திரிபை வெளிப்படுத்தும் மாவோயிசம் இந்திய மக்களின் புரட்சிகர வர்க்கப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு தத்துவார்த்த சவால்களாக தொடர்ந்து இருந்து வருகிறது. அதன் புரிதல் தவறானது என்று மெய்ப்பிக்கப்பட்ட போதிலும், இந்திய ஆளும் வர்க்கங்களை தரகு முதலாளிகள்/அதிகாரவர்க்கத்தினர் என்று முத்திரை குத்துவதும், அரசுக்கு எதிராக உடனடி ஆயுதந்தாங்கிய போராட்டத்தை நடத்த வேண்டும் என்கிற தந்திரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுவதும் தொடர்கிறது. குறிப்பாக அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை குறி வைக்கிறது. அது முதலாளித்துவ பிற்போக்கு அரசியல் கட்சிகளுடனும், சக்திகளுடனும் சேர்ந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிராக கொலை பாதகத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய இடது அதிதீவிரப் போக்கிற்கு எதிராகத் தத்துவார்த்தப் போராட்டங்களை வலுப்படுத்தி, அதனை அரசியல் ரீதியாகவும், ஸ்தாபன ரீதியாகவும் முறியடிக்க வேண்டியதும் அவசியம். சோசலிசத்திற்காக இந்திய மக்களின் போராட்டத்தை அறிவியல் பூர்வமாகவும் புரட்சி அடித்தளங்களின் கீழ் நின்று முன்னெடுத்துச் செல்வதற்கு இது மிகவும் முக்கியமாகும்.

“இத்தகைய திரிபுகளில் ஏதேனும் ஒன்றிற்கு இரையாவது, மக்களைத் திரட்டி வர்க்கப் போராட்டங்களை நடத்துவதை உதாசீனப்படுத்தி, நாடாளுமன்ற நடவடிக்கைகளை மட்டுமே சார்ந்திருக்கக்கூடிய திருத்தல்வாத வலைக்குள் சிக்கிக் கொள்ளக்கூடிய ஆபத்து ஏற்படும். மற்றொன்று, நாடாளுமன்ற ஜனநாயகத்தையே மறுதலிக்கும் இடது அதிதீவிர திரிபு என்னும் சிறுபருவக் கோளாறு வலைக்குள் நம்மைத் தள்ளிவிடக் கூடிய ஆபத்தினை ஏற்படுத்திடும். `அனைத்து நடைமுறை உத்திகளும் மற்றும் போர்த் தந்திரம் இல்லாமையும்’ (All tactics and no strategy) திருத்தல் வாதத்திற்கு இட்டுச் செல்லும். `அனைத்து போர்த் தந்திரங்கள் மற்றும் நடைமுறை உத்திகள் இல்லாமை’ அதிதீவிரவாதத்திற்கு இட்டுச் செல்லும். இவ்விரண்டிற்கும் எதிராக நாம் உறுதியுடன் போராடி நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அது துவக்கப்பட்ட காலத்திலிருந்தே, இந்திய புரட்சியை சரியான அரசியல் நிலைப்பாட்டில் முன்னெடுத்துச் செல்வதற்காக, மற்ற பல்வேறு பிரச்சனைகளுடன் இவ்விரு திரிபுகளுக்கு எதிராகவும் வலுவுடனும், உறுதியுடனும் போராடி வந்திருக்கிறது. இந்தப் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானதுடன் முடிந்துவிடவில்லை மற்றும் இந்திய புரட்சி வெற்றிபெற்ற பின்னரும் முடிந்திடாது.

“மார்க்சிய லெனினியத்தின் புரட்சிகர உள்ளடக்கத்திலிருந்து விடுபட்டு அனைத்துத் திரிபுகளுக்கும் பலியாவதற்கு எதிராக மிகுந்த விழிப்புடனிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதை சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் அனுபவம் நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. அவ்வாறு செய்யத் தவறியமைதான் சோவியத் யூனியனில் சோசலிசம் விழுங்கப்பட்டு, அதன் வடிவமும் உள்ளடக்கமும் 21 ஆவது நூற்றாண்டில் கூட மீளவும் நிறுவமுடியாத நிலை உருவாகி இருக்கிறது.

தொழிலாளர் – விவசாயிகள் கூட்டணி: இந்தியாவின் நிலைமைகளில் `அகக்காரணிகளை’ (‘subjective factor’) வலுப்படுத்துவது என்பது முக்கியமாக நம் போர்த்தந்திர லட்சியத்தை முன்னெடுத்துச் சென்றிட தொழிலாளர் – விவசாயிகள் வர்க்கக் கூட்டணியை வலுப்படுத்துவதையே பெரிதும் சார்ந்திருக்கிறது. தற்போதைய நிலைமைகளில், வர்க்கப் போராட்டங்களை வலுப்படுத்துவதற்காக, இந்தக் கூட்டணியை எய்துவதில் உள்ள பலவீனங்களைக் களைவது அவசரத் தேவையாகும். நம்முடைய நாட்டில் புறச்சூழ்நிலை (objective situation) இத்தகைய முயற்சிக்கு மிகவும் சாதகமாக இருக்கிறது. அக பலவீனங்கள் (subjective weaknesses) சமாளித்து கடந்து செல்ல வேண்டியதாக இருக்கிறது. இதில் மிகவும் முக்கியமான மூலக்கூறு மிகவும் சுரண்டப்படும் பகுதியினராகவும், நம் விவசாயிகள் வர்க்கத்தில் புரட்சிகரமான பிரிவினராகவும் விளங்கும் விவசாயத் தொழிலாளர்கள் – ஏழை விவசா யிகள் ஒற்றுமையை உருவாக்குவதாகும்.

தொழிலாளர் வர்க்க ஒற்றுமை: தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின் கீழ் இந்திய மக்களின் விடுதலையை எய்திட தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ள ஒரு கட்சி என்ற முறையில், வர்க்க ஒற்றுமையும், புரட்சிகர உணர்வும் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தை, இந்தியாவில் மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக தாக்குதலைத் தொடுக்கக்கூடிய விதத்தில் இதர சுரண்டப்படும் வர்க்கப் பிரிவினரை இணைத்துக் கொண்டு வர்க்கத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கக்கூடிய அளவிற்கு, வலுப்படுத்துவது மிகவும் முக்கியமாகும்.

“ஆயினும் இந்தப் பணி ஏகாதிபத்திய உலகமயத்தின் தற்போதைய நிலைமைகளில் மிகவும் சிக்கலான ஒன்றாக மாறி இருக்கிறது. நவீன தாராளமய சீர்திருத்தங்கள் காரணமாக தொழிலாளர் வர்க்கத்தினரில் அதிகமான அளவில் அணிதிரட்டப்படாத பிரிவினராக மாறிக் கொண்டிருக்கின்றனர். முதலாளிகளுக்கு அதிக லாபத்தை ஈட்டித் தரக்கூடிய விதத்தில் நிரந்தர வேலைகளே கேசுவல் வேலையாகவும், ஒப்பந்த வேலையாகவும் மாறிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு ஆளும் வர்க்கங்கள் ஈட்டக்கூடிய அதே சமயத்தில் தொழிலாளர்கள் ஒற்றுமையையும் உடைத்து, சீர்குலைக்கும் வேலைகளில் இறங்கி இருக்கிறது. கேசுவல், தற்காலிக மற்றும் சுயவேலைவாய்ப்பு தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய சவால்களை சமாளித்து முன்னேறவும், பெரும் திரளாக மாறியிருக்கும் முறைசாராத் தொழிலாளர்களை புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக்கூடிய வகையில் உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையை வலுப்படுத்திடவும், பொருத்தமான நடைமுறை உத்திகள் வகுக்கப்பட வேண்டும்.

“தொழிற்சங்க நடவடிக்கைகளின்போது பொருளாதாரவாதத்தை (economism) முறியடிக்கும் பணியையும் எப்போதும் புரட்சி இயக்கங்கள் மேற்கொண்டு வந்திருக்கின்றன. இது தொடர்பாக, சோசலிசத்திற்கான இருபதாம் நூற்றாண்டு போராட்டங்களின் அனுபவங்கள் கற்றுணரப்பட்டு, இன்றைய நிலைமைகளில் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டியது அவசியம்.

அடையாள அரசியல்: முதலாளித்துவம் தோன்றுவதற்கு முன்னரேயே ஆளும் வர்க்கங்கள் அடையாள அரசியலைப் பயன்படுத்தி வந்திருக்கின்றன. இன உணர்வு போன்ற பல்வேறு அடையாளங்களை தங்கள் வர்க்க ஆட்சியைத் தூக்கி நிறுத்துவதற்காகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கின்றன. பல்வேறு விதமான தேசியவாதங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுச்சி பெற்ற யூத இனம், சமீப காலங்களில், இஸ்ரேல் அமைவதற்கு இட்டுச் சென்றுள்ளமை, இதுபோன்றவற்றுள் ஒன்று. சோவியத் யூனியன் தகர்ந்து கொண்டிருந்த சமயத்தில் அதனுடன் இணைந்திருந்த முந்தைய குடியரசுகள் பலவற்றில் இருந்த பிற்போக்கு சக்திகள் தங்கள் ஆட்சியை ஒருமுகப்படுத்துவதற்காக அடையாளங்களைப் பயன்படுத்திக் கொண்டன. முந்தைய யுகோஸ்லேவியா இன்று இந்த அடிப்படையில்தான் சிதறுண்டு போயிருக்கிறது. இந்திய துணைக் கண்டத்தைப் பிளவுபடுத்திட, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தாலும், நம் நாட்டிலிருந்த ஆளும் வர்க்கங்களாலும் மத அடையாளங்கள் மிகவும் வலுவான முறையில் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. இன்றும் கூட சுரண்டப்படும் பிரிவினர் மத்தியில் உள்ள வர்க்க ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் விதத்தில் மதரீதியாகவும், சாதிய ரீதியாகவும் மக்கள் திரட்டப்படுவது தொடர்கிறது. இன்றைய நிலைமைகளில், முதலாளித்துவம் ஒரு பக்கத்தில் அடையாள அரசியலைப் பயன்படுத்திக் கொண்டு, வர்க்க ஒருமைப்பாட்டை சீர்குலைக்கிறது, மறுபக்கத்தில் அத்தகைய அடையாள அரசியலை மேம்படுத்தி, மக்களை அரசியலற்றவர்களாகவும் மாற்றுகிறது.

“மார்க்சிய எதிர்ப்பு சித்தாந்தப் புனைவான, பின்நவீனத்துவம், அரசியலுக்கு பெரிய அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது, அது மிகவும் “நுண்ணிய’’ ஒன்று அல்லது வட்டாரம் சார்ந்தது என்றும், அரசியல் என்பதை “வித்தியாசங்கள்’’ மற்றும் “அடையாளங்கள்’’ ஆகியவற்றின் அடிப்படையில்தான் இருக்க முடியும் என்றும் விவாதிக்கிறது. இவ்வாறு, இது நடப்பு சூழ்நிலையில் ஒரு புதிய அடிப்படையை அடையாள அரசியலுக்கு அளிக்கிறது.

“அடையாள அரசியலில், பின் நவீனத்துவ ஆதரவாளர்கள் நடைமுறைப்படுத்துவது போன்று, இன்றைய சூழ்நிலைமைகளில் இனம், மதம், சாதி, பழங்குடி அல்லது பாலினம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டப்படும் அடையாளங்கள் அரசியலுக்கும் அரசியல் ரீதியாக ஒன்றுதிரட்டுவதற்கும் அடிப்படைகளாக மிகவும் அதிகமான அளவில் மாறிக் கொண்டிருக்கிறது. வர்க்கம் என்பது அடையாளத்தின் ஒரு சிதறிய துண்டு என்றே கருதப்படுகிறது. இவ்வாறு அடையாள அரசியல் தொழிலாளர் வர்க்கத்தின் கருத்தாக்கத்தையே மறுதலிக்கிறது. இதன் இயற்கைத் தன்மையே, அடையாள அரசியல் ஒரு அடையாளத்தினரை பிறிதொரு அடையாளத்தினரிடமிருந்து ஒதுக்கி வைக்கிறது மற்றும் எல்லையை வரையறுக்கிறது. எங்கெல்லாம் அடையாள அரசியல் பிடிப்புடன் காணப்படுகிறதோ அங்கெல்லாம் அது மக்களை தனித்தனிக் குழுக்களாகப் பிரித்து, குழுக்களுக்கிடையே மோதலையும் போட்டியையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

“அடையாள அரசியல் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு கருத்தியல் ரீதியாகப் பொருத்தமான ஒன்று. அடையாளம் சிதறுண்டு போவதை சந்தையால் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. உண்மையில், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில், பல்வேறு வாழ்க்கைப் பாணிகள் கொண்டாடப்படுகின்றன, நுகர்வோர் சமூகத்தின் ஓர் அங்கம் என்ற முறையில் அவர்களைக் கவரக்கூடிய விதத்தில், நாகரிகங்களும், நாகரிக வடிவங்களும் உருவாக்கப்படுகின்றன. முன்னேற்றம் குறைவாகவுள்ள முதலாளித்துவ நாடுகளில் அடையாள அரசியல் உலக நிதி மூலதனம் ஊடுருவவும், சந்தையை அது கைப்பற்றித் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் வசதிசெய்து தருகிறது. அடையாளக் குழுக்களுக்கிடையேயான “வித்தியாசம்’’, சந்தையின் ஒரே சீரான தன்மையையும் அதன் நடைமுறைகளையும் பாதிப்பதில்லை. அடையாள அரசியல் வர்க்க ஒற்றுமையை மறுதலிப்பதில் தலையிட்டு, மக்களின் ஒன்றுபட்ட இயக்கங்களைக் கட்டுவதில் தடையாகச் செயல்படுகிறது. அடையாள அரசியல் சிவில் சமூகம் என்று அழைக்கப்படுகின்ற அரசு சாரா நிறுவனங்கள் மூலமும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமும் மிகவும் சாதுரியமாக மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய அரசு சாரா நிறுவனங்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தனித் தனியே துண்டு துண்டான பிரிவுகளாகச் செயல்பட்டு தனித்தனி அடையாளக் கருத்துக்களை சுமந்து செல்லும் கருத்தியல் வாகனங்களாக செயல்படுகின்றன.

சமூக ஒடுக்குமுறைக்கான போராட்டமும், சாதிய ரீதியில் திரட்டப்படுவதற்கு இருக்கின்ற பிரதிபலிப்பும்: சாதி, பழங்குடி போன்ற முறைகளில் அரசியல் ரீதியாகத் திரட்டப்படும் அடையாள அரசியல் சமூகத்தின் அனைத்து சுரண்டப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் ஒற்றுமையைக் கட்டி எழுப்பிட முயல்வோருக்கு மிகவும் ஆழமான சவாலாக முன்வந்துள்ளது. தொழிலாளர் வர்க்கத்தின் கட்சி சமூக ஒடுக்குமுறை மற்றும் சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராக இயக்கங்களில் ஈடுபடும் அதேசமயத்தில், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சாதியினர் ஆகியோருக்கு நிலம், ஊதியம் மற்றும் வாழ்வாதாரங்களுக்கான பிரச்சனைகளைத் துல்லியமாகக் கையிலெடுத்துப் போராட வேண்டும். வர்க்கப் பிரச்சனைகளையும், சமூகப் பிரச்சனைகளையும் ஒருசேர எடுத்துக் கொள்வதன் மூலம், பெருங்கேட்டினை உருவாக்கும் அடையாள அரசியலையும், சாதிய ரீதியிலாக மக்கள் திரட்டப்படுதலையும் வெற்றிகரமான முறையில் முறியடித்திட முடியும். எப்படி வர்க்கச் சுரண்டல் மற்றும் சமூக ஒடுக்குமுறை பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை மார்க்சியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் ஆராய்ந்தால் இதனை வெற்றிகரமாகச் செய்திட முடியும்.

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு, சமூகத்தில் வர்க்க சுரண்டலும், சமூக ஒடுக்குமுறையும் இருக்கிறது என்பதை அங்கீகரிப்பதன் அடிப்படையில் அமைந்திருக்கிறது. நம் நாட்டின் சமூகப் பொருளாதார அமைப்பில், முதலாளித்துவ மற்றும் அரை நிலப்பிரபுத்துவ வர்க்கச் சுரண்டல் நடைபெறுவதுடன், சாதி, பழங்குடியினம், பாலினம் அடிப்படையிலான சமூக ஒடுக்குமுறையில் பல்வேறு வடிவங்களும் நடைமுறையில் இருந்து வருகின்றன. ஆளும் வர்க்கங்கள் வர்க்கச் சுரண்டலின் மூலம் உபரியை உறிஞ்சி எடுத்துக் கொள்வதுடன், தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அவர்கள் சமூக ஒடுக்குமுறையின் பல்வேறு வடிவங்களையும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பாலினப் பிரச்சனை: சாதிய அமைப்பின் சமூக ஒடுக்குமுறையுடன் என்றென்றும் நிலவவரும் நிலப்பிரபுத்துவ சிந்தனை செல்வாக்கும் சேர்ந்து கொண்டு ஆணாதிக்க சித்தாந்தத்தின் குணக்கேடுகளை வலுவான முறையில் ஊட்டி வளர்க்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகள் இதனை மேலும் ஊக்குவிக்கிறது. பாலின அடிப்படையிலான பாகுபாடு நிலப்பிரபுத்துவத்தின் பழமை சிந்தனை மட்டுமல்ல, வர்க்க அடிப்படையிலான சமூகத்தில் புரையோடியிருக்கிற சமூகக்கேடுமாகும். சமத்துவமற்ற முறையில் வேலைப் பிரிவினையும், குடும்பப் பொருளாதாரத்தில் பெண்கள் மீதான தாங்க முடியாத சுமைகளும் நவீன தாராளமயக் கொள்கைகளினால் மேலும் உக்கிரப்படுத்தப்பட்டிருப்பதுடன், அரசு தான் அளித்து வந்த சமூகப் பொறுப்புக்களிலிருந்து கழண்டு கொள்வதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பாலின சமத்துவமின்மைக்கு எதிராகவும் மற்றும் அதனையொட்டி எழும் அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். தொழிலாளர் வர்க்கத்தின் கட்சி என்ற முறையில் வர்க்கப் போராட்டங்களை வலுப்படுத்துவதன் ஒரு பகுதியாக பாலின ஒடுக்குமுறைக்கு எதிராகவும் மக்கள் மத்தியில் தேவையான அளவிற்கு சமூக உணர்வினை வளர்த்தெடுக்க, தொடர்ந்து செயலாற்றிட வேண்டும்.

வகுப்புவாதம்: இந்தப் பின்னணியில் பெரும்பான்மை வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டமும், சிறுபான்மை மத அடிப்படைவாதத்தின் அனைத்து விதமான வெளிப்பாடுகளும் பார்க்கப்பட வேண்டும். வகுப்புவாத சக்திகள், (ஆர்எஸ்எஸ் கொள்கையான ஒரு வெறிபிடித்த சகிப்புத் தன்மையற்ற பாசிஸ்ட் `இந்து ராஷ்ட்ரம்’ போன்று) நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்கள் சீர்குலைக்கப்படுவது மற்றும் பலவீனப்படுத்தப்படுவதல்லாமல், நம் வர்க்க சேர்மானத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு முக்கியமான முன்நிபந்தனையாக விளங்கும் ஜனநாயக உரிமைகளை செயல்படுத்துவதற்கு வசதி செய்து தரும் அடித்தளங்களையும், வர்க்க ஒற்றுமையை முன்னெடுத்துச் செல்வதற்கான நிலைமைகளையும் மக்கள் மத்தியில் மதவெறியூட்டி, அவர்களின் மதவுணர்வுகளை வெறித்தனமாக ஏற்றி, சிதைக்கின்றன. எனவே, வகுப்புவாதத்தை முறியடித்திட ஓர் உறுதியான போராட்டம் இல்லாமல், நம் நாட்டில் புரட்சியை முன்னெடுத்துச் செல்வது சாத்தியமில்லை.

தேசியவாதம்: நவீன தேசியவாதம் முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சியுடனும் அது நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக தேசிய உணர்வினைப் பயன்படுத்துவதுடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டில், தேசியவாதம், காலனியாதிக்க மற்றும் அரைக் காலனியாதிக்க நாடுகளில், காலனிய மற்றும் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் எழுச்சி பெற்றது. ஏகாதிபத்தியத்தின் ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கம் இக்காலனியாதிக்க நாடுகளில் ஆளும் வர்க்கங்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்பு நீர்த்துப்போயின. இன்றைய ஏகாதிபத்திய உலகமயச் சூழலில், தேசிய இறையாண்மைக்கு எதிராக மிகவும் திட்டமிட்ட முறையில் தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. ஏகாதிபத்திய நிதி மூலதனம் அனைத்து நாடுகளில் உள்ள அரசுகளிடமும் தங்களுடைய கட்டளைக்கு தேசிய இறையாண்மை இணங்கிட வேண்டும் என்று கோருகிறது.

“எண்ணற்ற பிராந்திய மற்றும் இன அடையாளங்களின் அடிப்படையில் மக்கள் அணிதிரட்டப்படுவதன் மூலமாக புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.   தெலுங்கானா, டார்ஜிலிங் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் தனி மாநிலங்களுக்கான இயக்கங்கள் இன்றைய தினம் உருவாகி இந்திய அரசின் மொழிவாரி மாநிலங்களின் அடித்தளங்களையே சீர்குலைப்பது மட்டுமல்ல, சுரண்டப்படும் வர்க்கங்களின் ஒற்றுமையையும் சீர்குலைத்துக் கொண்டிருக்கின்றன.

“சர்வதேச நிதிமூலதனம், நாடுகளின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பலவீனப்படுத்துவதற்காக, இன தேசியவாதத்தையும் ((ethnic nationalism), பிரிவினைவாதத்தையும் ஊக்குவிக்கிறது. மக்களை குறுகிய குழுவாத அடிப்படையில் பிரிப்பதற்கு வகை செய்யும் இத்தகைய பிற்போக்குத்தனமான இன தேசியவாதம் எதிர்த்து முறியடிக்கப் பட்டாக வேண்டும். மாறாக அம்மக்களின் ஜனநாயக அபிலாசைகளை அவர்கள் வென்றெடுத்திட முன்னின்று போராட வேண்டும். அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். அதேசமயத்தில், தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பது மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியவாதம் ஆகியவை சுரண்டப்படும் வர்க்கங்களை ஒன்று திரட்டிடவும், ஏகாதிபத்திய உலகமயத்திற்கு எதிரான போராட்டத்தில் வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்திடவும் ஒரு முக்கியமான அம்சமாகும்.

“இந்தியா போன்ற பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாட்டில், உலகில் வேறெந்த நாடுகளுடனும் ஒப்பிடமுடியாத அளவிற்கு, சமூக-கலாச்சாரப் பன்முகத்தன்மை கொண்டு நம் நாட்டில், இத்தகைய போக்குகளில் ஈடுபடுவதற்கான நாட்டம் எண்ணிலடங்காத வகையில் தொடர்கிறது. அவை சுரண்டும் வர்க்கங்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதுடன், நம் இறுதி லட்சியத்தை எய்துவதற்காக நாம் நம் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதையும் பலவீனப்படுத்துகின்றன. வர்க்கப் பிரச்சனைகளின் மீது வெகுஜனப் போராட்டங்களை வலுவான முறையில் கட்டி எழுப்புவதன் மூலமும் அனைத்து சுரண்டப்பட்ட பிரிவினரின் வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்துவதன் மூலமும் மட்டுமே இதனை எதிர்த்து முறியடித்திட முடியும். ஏற்கனவே மொழிவாரி மாநிலங்களாகப் பிரிந்திருக்கக்கூடிய இந்திய மாநிலங்களை மாற்றி அமைப்பதற்காக நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களுக்கு எதிராக இத்தகைய புரிந்துணர்வின் அடிப்படையில்தான் நாம் நம் நடைமுறை உத்திகளை வகுத்திருக்கிறோம்.’’

எனவே, இன்றைய சூழ்நிலையின் கீழ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்ட ஐம்பதாம் ஆண்டு தினத்தைக் கொண்டாடக்கூடிய இந்த சமயத்தில், இந்திய புரட்சிக்கான “அகக் காரணிகளை’’ (“subjective factor”) வலுப்படுத்திட, அதாவது, தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர தத்துவார்த்தப் போராட்டத்தை வலுப்படுத்திட, மார்க்சிய லெனினியத்தைக் கடைப்பிடிக்கும் கட்சியின் தலைமையின் கீழ் தொழிலாளர் வர்க்கத்தின் தீர்மானகரமான தலையீட்டை ஏற்படுத்திட, வர்க்க சக்திகளின் தற்போதைய சேர்மானங்களில் மாற்றத்தைக் கொண்டுவந்து, நாட்டு மக்களின் அனைத்து சுரண்டப்படும் பிரிவினரையும் தொழிலாளர் வர்க்கத்தின் கீழ் ஒன்றுபடுத்திட, மக்கள் ஜனநாயகத்தை நிறுவுவதற்கான புரட்சிகரமான தாக்குதலைத் தொடுத்திடவும், அதன் மூலம் சோசலிசத்திற்கான அடித்தளங்களை அமைத்திட, நம் உறுதியை இரட்டிப்பாக்கிக் கொள்ள வேண்டும்.

சோசலிசத்தின் எதிர்காலம் என்ன? என்ற கேள்விக்குப் பதில் இதுதான்:

“சோசலிசம் மட்டுமே எதிர்காலம்.’’ இல்லையேல், மனித நாகரிக முன்னேற்றம் என்னும் காலக் கடிகாரத்தில் எதிர்காலம் என்னும் முள் மீளவும் காட்டுமிராண்டித்தனம் என்னும் இருண்ட காலத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும்.