இந்துத்துவா: உருவாக்கம், திட்டம், பரவல் …

ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல் நூல் விமர்சனம்

வெறுப்பின் வேர்கள்

சிந்தன்

ஏ.ஜி. நூரானி எழுதிய, ‘ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்’ என்ற நூல் அண்மையில் தமிழில் வெளியானது. ஃபிரண்ட்லைன் ஆங்கில இருவார இதழின் ஆசிரியராக இருந்த ஆர். விஜயசங்கர், தன் பணிக் காலத்திலேயே சுமார் 2 ஆண்டுகள் கடுமையான உழைப்பைச் செலுத்தி இந்த நூலை தமிழில் கொடுத்திருக்கிறார். பாரதி புத்தகாலயம் இந்த நூலை நேர்த்தியாக வடிவமைத்து, அச்சிட்டுள்ளது.

நேர்கோட்டில் எழுதப்பட்ட வரலாற்றுச் சித்திரமாக இது இல்லை. அதேசமயம், கடந்தகால வரலாற்றில் தொடங்கி சமகால அரசியல் வரையிலும் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படும் பல்வேறு வாதங்களை, நுணுக்கமாகப் புரிந்துகொள்ள அவசியமான ஒரு கையேடாக இது பயன்படுகிறது. 824 பக்கங்களில் 25 கட்டுரைகளும், பின்இணைப்புகளும், ஆதாரங்களின் பட்டியலும் கொண்டு, கடுமையான உழைப்பில் வழங்கப்பட்டிருக்கும் ஆவணத் தொகுப்பாக இது உள்ளது.

புத்தகத்தின் ஊடாக, ஏ.ஜி. நூரானி இவ்வாறு கேள்வி எழுப்புகிறார்: ”நவீனத்தின் சவால்களை  சந்திக்கும் திறன் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கோ அதன் அரசியல்பிரிவான பிஜேபிக்கோ இருக்கிறதா? என்று கேட்டால் இல்லை என்பது நிதர்சனம். ஆனால் இந்தக் கேள்வியுடன் நின்றுவிடக் கூடாது. பொதுவாழ்வில் இதுபோன்ற தீயசக்தி எழுகிற அளவுக்கு நம்வரலாற்றில் என்னதான் நடந்தது என்று நம்மைநாமே கேட்டுக்கொள்ள வேண்டும். ஏன் சில நவீனத்துவவாதிகளான இந்துக்கள் உட்பட அவர்களை ஆதரிக்கிறார்கள்? அவர்களுடைய கவலைகளை உதாசீனம் செய்வது தவறாகும். நம் அரசியலின் அமைப்பு குறித்த அறிவார்ந்த ஆய்வுகள் நடத்தி இந்தப் பிரச்சினையின் வேர்களைக் கண்டறிவது அவசியம்.”

அது இந்தியாவை பாதுகாக்கும் அனைவருக்கும் முன்கடமை. அதற்கு உதவி செய்யும் நூல்களில் இந்த நூலும் முக்கியமான இடம் பெறும்.

இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் தொடங்கி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சமீபகால செயல்பாடுகள் வரையிலும் பின்தொடர்ந்து அதன் உள்அம்சங்களை இந்தநூல் விவரிக்கிறது. இந்த விமர்சன கட்டுரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தம் உருப்பெற்றதிலிருந்து, அதன் மோசடியான உத்திகளின் வழியாக அதிகாரத்தை சுவைக்க வழிவகுத்த ‘ராமஜென்மபூமி’ இயக்கம் வரையிலான காலகட்டம் பற்றியது. (முதல் 16 அத்தியாயங்கள், 386 பக்கங்கள்)

சமரசத்தில் பிறந்த ‘இந்துத்துவா’

முதல் சுதந்திரப் போராட்டத்திற்கு பின் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவை நேரடியாக நிர்வகிக்கத் தொடங்கியது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எழுச்சி நாடு தழுவிய அளவில் வளரத் தொடங்கியது. அதே காலகட்டத்தில்தான், ‘இந்துத்துவா’ கருத்தியலும் உருவானது.

அந்தமான் சிறையில் கைதியாக இருந்த விநாயக் தாமோதர் சாவர்க்கர் இழிபுகழ்பெற்ற பல மன்னிப்புக் கடிதங்களை எழுதினார். அவைகளில் ஏகாதிபத்தியத்தோடு சமரசரத்திற்கு தூதுவிட்டார். அதில்   அவரின் வகுப்புவாத கண்ணோட்டமும் கெட்டிப்பட்டது. ‘இந்துத்துவா’ கருத்தியலாக வடிவம் எடுத்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் அரசியல்திட்டத்திற்கு அது உகந்ததாகவும் அமைந்தது.

இந்துத்துவா பழைய சமூகத்தின் பிற்போக்கு அம்சங்களை மீட்டமைக்க விரும்பும் ‘இந்து மீட்புவாதத்தில்’ இருந்து எழுந்த ‘இந்துதேசியவாத’ கண்ணோட்டத்தை உள்ளடக்கியது. அதற்கு முன்பிருந்த மதவாதத்தில் இருந்து வேறுபட்டது. அதற்கான பல ஆதாரங்களை ஏ.ஜி.நூரானி தருகிறார்.

“இந்தியாவைத் தந்தைநாடாகவும் (பித்ருபூமி) புண்ணியபூமியாகவும் கருதுபவனே ஓர் இந்து” என்கிறார் சாவர்க்கர். இது ஆன்மீக வகைப்பட்ட விளக்கம் அல்ல. நேரடியாகவே மக்களை பிளவுபடுத்தும் அரசியல் திட்டம். அதன்படி யார் இந்து என்று அறிவதற்கான சோதனையை இன்னும் தெளிவாக பின்வருமாறு விளக்குகிறார்: “சந்தால் பழங்குடியினர் முதல் சாதுக்கள் வரையில், ஒவ்வொரு இந்துவுக்கும் இந்த பாரதபூமி பித்ருபூவாகவும் புண்ணியபூவாகவும் இருக்கிறது. அதாவது ‘தந்தைபூமியாகவும்’, ‘புண்ணியபூமியாகவும்’ இருக்கிறது.”

மேலும், “நம் நாட்டுக்காரர்களாகிய முகமதியர்களோ, கிறிஸ்துவர்களோ, இந்துக்களுடன் சேர்ந்து ஒரே தந்தைநாட்டையும் ஒரு பொதுவான கலாச்சாரத்தின் சொத்துகளையும் – மொழி, சட்டம், வழக்கங்கள், நாட்டார்கதைகள், வரலாறு போன்றவற்றையும் வரித்துக் கொண்டிருந்தாலும், அவர்களை இந்துக்களாக அங்கீகரிக்க முடியாது; அங்கீகரிக்கக் கூடாது” என்கிறார் சாவர்க்கர்.

“இந்த வரையறையைச் செய்த விதத்தில் சாவர்க்கரின் இரு நோக்கங்கள் வெளிப்படுகின்றன” என்கிறார் அம்பேத்கர். முதல் நோக்கம்: முஸ்லிம்களையும், கிறிஸ்துவர்களையும், பார்சிகளையும், யூதர்களையும் விலக்கி வைப்பது. இரண்டாவது நோக்கம்: இந்துவாக இருப்பதற்கு வேதங்களின் புனிதத்தில் நம்பிக்கை இருப்பது அவசியமில்லை என்று வலியுறுத்திக் கூறுவதன் மூலம் பவுத்தர்களையும், சமணர்களையும், சீக்கியர்களையும் சேர்த்துக் கொள்வது. இப்படி செய்வதன் மூலம், ஒரே நிலத்தில் ஆயிரம் ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்தாலும்கூட, மதத்தின் அடிப்படையிலும், நம்பிக்கை அடிப்படையிலும் மக்களை கூறுபோடுவதுதான் ’இந்துத்துவா’ என்பதை அம்பேத்கர் தெளிவாக்கினார்.

இப்படிப்பட்ட புரிதலின் காரணமாகத்தான் 1924 ஆம் ஆண்டிலேயே, முதல் முறையாக நாட்டுப்பிரிவினைக்கான முழக்கத்தை சாவர்க்கர் முன்வைத்தார்.

உள்ளுக்குள்ளேயே எதிரிகள்

ஜூன் 21, 1940 வரை ஹெட்கேவாரும், அவரின் மறைவுக்குபின் கோல்வால்கரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சர்சங்சாலக் ஆக இருந்தார்கள். கோல்வால்கர்  ‘இந்துத்துவா’ கருத்தியலை மேலும் விரிவாக்கினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வெறுப்பு அரசியலுக்கும், வன்முறைக்கும் தோதான ’உள்நாட்டு எதிரிகளை’ வகைப்படுத்தினார்.

கோல்வால்கரின் ‘சிந்தனைக்கொத்து’ என்ற நூலில்  ‘உள்நாட்டு அபாயங்கள்’ என்று தலைப்பிடப்பட்ட 12ஆம் அத்தியாயம் ”முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள்” ஆகியோரை உள்நாட்டு எதிரிகளாக சுட்டுகிறது. “அன்னிய சக்திகளுக்கு இரண்டே வழிகள்தான் உள்ளன: அவர்கள் தேசிய இனத்தில் ஐக்கியமாகி அதன் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்; அல்லது தேசியஇனம் அனுமதிக்கும்வரை அவர்கள் அந்த இனத்தின் கருணையில் வாழ்ந்து அது விரும்பும்போது வெளியேற வேண்டும்” என்கிறார் கோல்வால்கர். ”குடிமக்களின் உரிமைகள்கூட இல்லாமல் இந்துதேசத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிவதாக இருந்தால், நாட்டில் அவர்கள் தொடர்ந்து தங்கியிருக்கலாம். அவர்களுக்கு வேறுவழி ஏதுமில்லை;இருக்கவும் கூடாது” என்றும் கூறுகிறார்.

மேலேகுறிப்பிட்டுள்ள பத்திகளில் ‘அன்னியர்கள்’ என்பது, இந்தியாவிலேயே பிறந்து வாழ்ந்துவரும் மக்களேஅன்றி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமோ பிற சுரண்டல் சக்திகளோ அல்ல. அதனால்தான் பிரிட்டிஷ் அரசின் உள்துறைச் செயலகம் 1943இல் தயாரித்த அறிக்கை, “ஆர்எஸ்எஸ், சட்டம் ஒழுங்கு நிலைமைக்கு உடனடி அபாயம் என்று வாதிடுவது கடினம்” என்றது.

பாசிச விருப்பங்கள்

     பிறந்தநாடு எதுவாக இருந்தாலும், புனிதபூமி எது என்பதை வைத்தே ‘அன்னியர்’ என்று வகைப்படுத்தும் அறிவியலற்ற விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘பித்ருபூமியாக’ பிரிட்டிஷ் ஏகாதியத்தியமும், ‘புனித பூமியாக’ ஜெர்மனியும், இத்தாலியும் உள்ளன. பாசிச அமைப்புகளுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் உள்ள நெருக்கமான பிணைப்பை இந்த நூல் ஆதாரங்களுடன் விளக்குகிறது.ஜெர்மனியின் ஃப்யூரர் கோட்பாடு அதனுள் பதிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புச் சட்டத்தின் 12வதுபிரிவில் இது இடம்பெற்றுள்ளது.1931 மார்ச் 19 ஆம்தேதி மூஞ்சே, இத்தாலிக்குச் சென்று முசோலினியிடம் கூறியது இதுதான்: “இதேபோன்ற நோக்கங்களைக் கொண்ட ஓர் அமைப்பை நான் ஏற்கெனவே இந்தியாவில் தொடங்கிவிட்டேன். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் உள்ள பொதுமேடைகளில் உங்களுடைய பலில்லா போன்ற ஃபாசிஸ்டு அமைப்புகளைப் புகழ்ந்துபேசத் தயங்க மாட்டேன்.”

இப்போதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஜகத்குரு (உலகிற்கே வழிகாட்டி) என்ற பேராசையினை தனக்குள் அடைகாக்கிறது. அந்த விருப்பத்துடனே அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நேசிக்கிறது. இஸ்ரேல் முன்னெடுக்கும் ஜியோனிச ராணுவ தாக்குதலை ஆதரிக்கிறது. இஸ்ரேலின் தாக்குதலை பற்றி ஆர்கனைசர் இதழில் 1967, ஜூன் 18 ஆம்தேதி இவ்வாறு எழுதியது: “உலகில் நமக்குரிய இடத்தை மீண்டும் அடைய வேத கலாச்சாரம் என்ன செய்யமுடியும் என்கிற சிறிய சிந்தனைப்பொறி இந்தப் போரில் இஸ்ரேலின் ஆயுதங்கள் பெற்ற வெற்றி நமக்கு அளித்திருக்கிறது.”

சிறுபான்மையை மறுத்தல்

‘சிறுபான்மை’ என்ற கருத்தாக்கத்தை ஆர்.எஸ்.எஸ் முற்றாக மறுக்கிறது. ஆனால் தேன் தடவிய சொற்களில் அதனை முன்வைக்கிறது. “இந்தியர்கள் அனைவருமே இந்துக்கள்” என்று பலமுறை ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேசியதாக ஊடகங்களில் படித்திருப்போம்.அது சாதாரண பொருளில் சொல்லப்படுவது அல்ல; ‘கலாச்சார தேசியம்’ என்ற பழுதுபட்ட பார்வையின் வெளிப்பாடு. சிறுபான்மையினர் என்ற நிலையையே மறுதலிப்பதன் அபாயத்தை நூரானி விரிவாக விளக்குகிறார்.

கோல்வால்கர் பவுத்த, சமண சிறுபான்மையினர்களையும் கூட பின்வருமாறு சிறுமைப்படுத்துகிறார்: “பவுத்தம், சமணம் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் அவர்கள் சமூக, அரசியல் சிந்தனைகளுக்கு எந்தப் பங்கையும் அளிக்கவில்லை; அவற்றிலிருந்து நாம் எந்த அர்த்தசாஸ்திரத்தையும் (அரசியல், பொருளாதாரஞானம்) அல்லது தர்மசாஸ்திரத்தையும் (சமூகவிதிகள்) வரித்துக் கொள்ளவில்லை”.

தேசிய இயக்கத்தின் வலிமை

     தேசிய விடுதலை இயக்கத்தினூடாக எழுந்த மதச்சார்பின்மை கண்ணோட்டத்தின் காரணமாக,  ஆர்.எஸ்.எஸ் தன்னுடைய திட்டத்திற்கு மக்கள் ஆதரவை பெற முடியவில்லை. தேசிய இயக்கம் மதவாத கண்ணோட்டத்தை நிராகரித்தது என்பதற்கான ஏராளமான ஆதாரங்களை இந்த நூல் தருகிறது. நாட்டுப் பிரிவினைக்கான திட்டம் ஜூன் 3, 1947 அன்று அறிவிக்கப்பட்டது. ஜூன் 10ஆம் தேதி சர்தார் வல்லபாய் பட்டேல், பிர்லாவிற்கு பதில் கடிதம் ஒன்றை எழுதுகிறார். அவர் எழுதியது இதுதான்: “இந்துமதத்தை அரசின் மதமாகக் கொண்ட இந்துநாடாக இந்துஸ்தானைக் கருதுவதற்கு இயலாது என்று நினைக்கிறேன். வேறுசில சிறுபான்மையினர் இந்தியாவில் இருக்கின்றனர். அவர்களைப் பாதுகாப்பது நம் முதன்மையான பொறுப்பு என்பதை நாம் மறக்கக் கூடாது. அரசு என்பது ஜாதி, மதங்களைக் கடந்து அனைவருக்குமானதாக இருக்க வேண்டும்.”

ஆனால் ஆர்.எஸ்.எஸ். இதை ஏற்கவில்லை.1946-47இல் பிரிவினையின்போது நடந்த மதக்கலவரங்களில் அது தீவிரமாகப் பங்கெடுத்தது. அதன் நச்சுக் கருத்தியலை செயல்படுத்தியது. பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைப்பு என்ற உத்தியை தொடர்ந்ததுடன், பிரிட்டிஷார் நாட்டைவிட்டு வெளியேறுகிறார்கள்; முஸ்லிம்களை எதிர்கொள்ளத் தயாராகுங்கள் என்று பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது.

இவ்வாறாக நூரானி பட்டியலிடும் 4 வரலாற்று உண்மைகள்:

 1. 1885 முதலே இந்தியா மதச்சார்பின்மைக் கொள்கையைத் தழுவிக் கொண்டது.

2. பழமையை மீட்டமைக்க விரும்பிய ‘இந்துமீட்புவாதம்’ இந்துமகாசபையும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் உருவாகக் காரணமாக இருந்தது.

3. இந்த இயக்கங்கள் அவை பிறந்தபோதிலிருந்தே இந்தியாவின் மதச்சார்பற்ற தேசியத்துடன் போர்புரியத் துவங்கிவிட்டன.

4. அவை விடுதலைப்போரில் பங்கேற்கவில்லை. மாறாக, காங்கிரசை ஓரங்கட்ட அல்லது ஒழிப்பதற்காக, பிரிட்டிஷ் அரசுடன் இணைந்து செயல்பட்டது.

காந்தியின்படுகொலை

     காந்தி படுகொலையில் ஆர்.எஸ்.எஸ் கொண்டிருந்த தொடர்பினை இந்த நூல் விரிவாக விவரிக்கிறது. உத்திரபிரதேசத்தின் பிரதம அமைச்சராக இருந்த கோவிந்த் வல்லப பந்த், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராக பெறப்பட்ட ஒரு டிரங்க் பெட்டி நிரம்ப சாட்சியங்கள் இருந்தபோதும் அந்த அமைப்பை ஏன் தப்பவிட்டார் என்ற கேள்வியையும் இந்தநூல் பலமுறை முன்வைக்கிறது.

வழக்கில் இருந்து சாவர்க்கர் தப்பித்தார். அப்ரூவராக மாறிய பாட்கேயின் சாட்சியம் உண்மையானதாக இருந்தாலும், அது தெளிவற்றது; போதுமானதாக இல்லை என்று சொல்லியே நீதிபதி ஆத்மசரண் சாவர்க்கரை விடுதலை செய்தார்.

ஆனால், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி கொலைவழக்கினை விசாரிக்க சுப்ரீம்கோர்ட் நீதிபதி ஜீவன்லால் கபூரின் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதற்குள் சாவர்க்கர் மரணமடைந்து விட்டார் (1966) சாட்சியங்களைத் தீர விசாரித்த கபூர் செப்டம்பர் 30, 1969 அன்று, “இந்த விவரங்கள் அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது அவை சாவர்க்கரும் அவரது குழுவும் செய்த சதி காந்தியின் படுகொலைக்குக் காரணமில்லை என்கிற வாதத்தைத் தகர்க்கின்றன” என்றார்.

அப்படியானால், ஆத்மசரண் ஏன் வேறுவிதமாக தீர்ப்புக் கொடுத்தார்? என்ற கேள்விக்கும் இந்த நூல் விடைகொடுக்கிறது. சாவர்க்கரின் இரு உதவியாளர்கள் நீதிமன்றத்தில் ஏன் ஆஜராக்கப்படவில்லை? என நூரானி கேட்கிறார். அரசுக்கு உள்ளிருந்தே கோல்வால்கருக்கு கிடைத்துவந்த ஆதரவினை விவரிக்கிறார்.

ஒருவேளை ஆர்.எஸ்.எஸ். சதிச்செயல் பற்றிய ஆதாரங்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் அது காந்தியை காப்பாற்றியிருக்கும். அல்லது சதிச்செயலை முற்றாக அம்பலப்படுத்தி, மொத்தமாக அந்த அமைப்பையே முடக்கியிருக்க முடியும் என்பது நூரானி வெளிப்படுத்தும் ஆதங்கம்.

காந்தி படுகொலை நிகழ்ந்த இரண்டுநாட்களுக்குள்ளாகவே, பிப்ரவரி 1, 1948 அன்று கோல்வால்கர் கைதுசெய்யப்பட்டார். பிப்ரவரி 4 அன்று, ஆர்எஸ்எஸ். ‘ஒரு சட்டவிரோத அமைப்பு’ என்று அறிவித்து அதனைத் தடைசெய்தது அரசு. இருப்பினும் தடைக்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய செயல்பாட்டை நிறுத்தி வைக்கவில்லை. அது மாணவர்களை திரட்டத் துவங்கியது.

தன்னுடைய அமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் செய்ய ஒப்புக்கொண்டு, அது இந்திய தேசத்துக்கு விசுவாசமானதாகவும், தேசியக்கொடியை மதிப்பதாகவும், ரகசிய முறைகளைத் தவிர்த்தும், வன்முறையைக் கைவிட்டும் நடக்கும் ஒரு ஜனநாயக, கலாச்சார இயக்கமாகச் செயல்படும் என்ற உறுதியைக் கொடுத்த அடிப்படையில் அதன் மீதான தடை விலக்கப்பட்டது.

காந்தியின் படுகொலைக்கு பின் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியலுக்கு பின்னடைவு ஏற்பட்டது. 1954இலிருந்து 1960 வரை மதக்கலவரங்களின் எண்ணிக்கை தெளிவாகவும் சீராகவும் குறைந்து வந்தது; 1960 இல் குறிப்பிடத்தக்க வகையில் 26 மதக்கலவரங்களே நாட்டில் நடந்தன.

அரசியலில் ஆர்.எஸ்.எஸ்.

     ஆர்.எஸ்.எஸ். தன்னை ஒரு ‘கலாச்சார’ அமைப்பு என்றும், ‘ஆன்மீக’ அமைப்பு என்றும், ‘சேவை’ அமைப்பு என்றும் அவ்வப்போது கூறிவந்தாலும், அது ஒரு அரசியல் இயக்கமே. அது முன்வைத்த மதவகைப்பட்ட தேசியம் என்ற பார்வையை மக்கள் நிராகரித்தபோதிலும், பெரும் தொழில் அதிபர்களுடைய ஆதரவை அது தொடர்ந்து பெற்று வந்துள்ளது. அதன் வழியாக தான் பெற்ற பண பலத்தையும், உறுப்பினர்களின் பலத்தையும் பயன்படுத்தி பல்வேறு கட்சிகளின்மீது செல்வாக்கு செலுத்தியது. அதில் அதற்குப் பலனும் கிடைத்தது.

அப்போது தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சிக்குள்ளும், அரசு நிர்வாகத்திலும், நீதித்துறையிலும் அந்த அமைப்புக்கு இருந்த பிடிமானத்தை இந்த நூலின்மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. உதாரணமாக ஒரு நிகழ்வினை குறிப்பிடலாம். 1949 அக்டோபர் 7 ஆம் தேதி கூடிய காங்கிரஸ் செயற்குழு ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் காங்கிரசின் அடிப்படை உறுப்பினர்களாக இணையலாம் என்ற தீர்மானத்தினை நிறைவேற்றியது. அப்போது நேரு அமெரிக்கா சென்றிருந்தார். அவர் நாடு திரும்பியபின் அன்று கூடிய காங்கிரஸ் செயற்குழு தன் முந்தைய தீர்மானத்தைத் திரும்பப் பெற்றது. ஆர்எஸ்எஸ் உறுப்பினர் பதவியைக் கைவிட்டால் மட்டுமே ஒருவர் காங்கிரசில் சேரலாம் என்று முடிவெடுத்தது.

ஜனசங்கத்தின் உருவாக்கம்

ஷ்யாமா பிரசாத் முகர்ஜி இந்துத்துவா ஆதரவாளராகவும், கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதியாகவும் இருந்தார். அவரைப் பற்றிய விரிவான பல தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.அவர் 1920 களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வங்க மாகாணத்தின் சட்டமேலவை உறுப்பினராக இருந்தார்.1939 ஆம் ஆண்டில் இந்துமகாசபையில் சேர்ந்தார்.1941 ஆம் ஆண்டில் வங்க மாகாணத்தின் ஃபஸ்லூல் ஹக் தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெற்றார். அந்த ஃபஸ்லூல் ஹக் யார் என்று பார்த்தால், லாகூரில் மார்ச் 23, 1940 அன்று நடந்த முஸ்லிம்லீக் மாநாட்டில் பாகிஸ்தான் தீர்மானத்தை முன்வைத்தவர்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்துகொண்டிருந்தபோது (1942) காங்கிரசை எப்படி நசுக்குவது என்று வங்க மாநில ஆளுநருக்கு ஆலோசனை வழங்கினார். அதிகாரத்திற்காக எப்படிப்பட்ட சமரசத்தையும் கொள்ளும் முகர்ஜியை, பாசிச இத்தாலி ஆட்சியின் துணை தூதரகம் ‘கூட்டாளி’ என்ற அங்கீகாரத்தை வழங்கியிருந்தது.

அவரை முன்னிறுத்தி தனக்காக ஒரு ‘அரசியல் இயக்கத்தை’ தொடங்கிட ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்தது. அந்த ஒப்பந்தத்தில் பிறந்ததுதான் ‘ஜனசங்கம்’. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொண்டர்களும், பணமும் இதில் பயன்பட்டன.

மரணமும், அம்பலப்பட்ட சதியும்

ஜன சங்கத்தின் தலைவராக இருந்த தீன்தயாள் உபாத்யாயா மரணமும், அதை ஒட்டி ஆர்.எஸ்.எஸ். மேற்கொண்ட இழிவான அரசியலையும் இந்த நூல் விவரிக்கிறது.

பிப்ரவரி 11, 1968 அன்று முகல்சராய் ரயில்நிலையத்தில் ஒரு முனையிலிருந்து 748 அடி தொலைவில் உபாத்யாயாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த மரணத்தை பயன்படுத்தி முஸ்லிம்கள்மீதும் கம்யூனிஸ்டுகள்மீதும் குற்றம்சாட்டியது ஜனசங்கம்.

இந்த வழக்கை விசாரிக்க சந்திரசூட் ஆணையம் அமைக்கப்பட்டது. உண்மையை துல்லியமாக வெளிப்படுத்தியது விசாரணை அறிக்கை. இந்த மரணத்தில் கம்யூனிஸ்டுகளுக்கோ அல்லது,  முஸ்லிம் மஜ்லிஸ் அமைப்பைச் சேர்ந்த டாக்டர் ஏ.ஜெ. ஃபாரிதிக்கோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பில்லை என நிரூபணமானது. அதுமட்டும் அல்லாமல், “ஆதாரமாகக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக ஒரு போலிஆவணத்தை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டது சரியல்ல என்று நான் அழுத்திக் கூறுகிறேன்” என சந்திரசூட் ஆணையம் தெரிவிக்கிறது.

தன்னுடய சொந்த தலைவரின் மரணத்தையும் கூட, கீழ்த்தரமான விதத்தில் பயன்படுத்தி தன்னுடைய வன்முறை, வெறுப்பு திட்டத்தை ஆர்.எஸ்.எஸ். முன்னெடுக்கும் என்பது இந்த முறையும் வெளிப்பட்டது.

அவசரநிலையும், மன்னிப்புக் கடிதங்களும்

1974ஆம் ஆண்டில் ஜெயப்பிரகாஷ் நாராயண் துவக்கிய முழுப்புரட்சி இயக்கத்தில் ஆர்எஸ்எஸ் இணைந்தது. மறுபுறத்தில், ஆர்எஸ்எஸ் தலைவர் தேவரஸ் தன்னை சிறையிலிருந்து விடுவிக்கவும், ஆர்எஸ்எஸ் மீதிருந்த தடையை நீக்கவும் கோரி ரகசியக் கடிதங்களை இந்திரா காந்திக்கு எழுதிக் கொண்டிருந்தார். அந்தக் கடிதங்களில் அவசரநிலைக்கால அறிவிப்பைப் பின்வாங்குவது குறித்தும், பிற அரசியல் கைதிகளை விடுதலை செய்வது பற்றியும் ஒன்றும் இல்லை.

தேவரஸ் 6 மாத காலத்தில் 10 மன்னிப்புக் கடிதங்களை எழுதினார். அதில் மிக மோசமான ஒன்றை நவம்பர் 10, 1975 அன்று எழுதினார். அதில் தேவரஸ் கூறுகிறார் “உங்களுடைய தேர்தல் செல்லும் என்று ஐந்துநீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்ததற்காக உங்களைப் பாராட்டுகிறேன்” அந்த கடிதத்தில் மேலும், “ஆர்எஸ்எஸ்ஸின் பெயர் காரணமேதுமின்றி குஜராத், பீஹார் மாநிலங்களில் நடக்கும் இயக்கங்களுடன் திரும்பத் திரும்ப இணைத்துப் பேசப்படுகிறது. இந்த இயக்கங்களுடன் சங் அமைப்பிற்கு எவ்விதத் தொடர்பும் இல்லை” என்றார். ஆம் அவர் அதில் ஜெயபிரகாஷ் நாராயணனை கைவிட்டார். சிறையில் நடந்த பவுதிக் என்கிற கூட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் இன்னும் மோசமாக பேசினார்கள்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ் தன்னுடைய விஷக் கொடுக்குகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர்கள் எதார்த்தத்திற்கு புறம்பாக எதிர்பார்த்தார்கள். அவர்களிடம் ஆர்.எஸ்.எஸ். எப்படியெல்லாம் போக்குக் காட்டியது, இரட்டை வேடம் போட்டது என்பதை இந்த நூல் விரிவாக எடுத்துக் காட்டுகிறது. 1951இல் ஜனசங்கம் பிறந்தது முதல் 1977இல் அது கலைக்கப்பட்டு ஜனதா கட்சியுடன் ஐக்கியமானது. பிறகு அதிலிருந்து உடைத்துக்கொண்டு புதிய அரசியல் கட்சியை தொடங்கியது.

வழிக்கு வந்தது பாஜக

     ஜனதா கட்சியோடு நெருங்கி தன்னை சற்று வலுப்படுத்திக்கொண்ட ஆர்.எஸ்.எஸ்., பின் பாஜகவை உருவாக்கியது. பாஜகவின் தலைவர்கள் முதலில் ‘காந்திய சோசலிசம்’ பேசினார்கள். அத்வானியும், வாஜ்பாயும் ஆர்.எஸ்.எஸ். வழியில் இருந்து மாறி நடப்பது போல போக்குக் காட்டினார்கள். ஆனால் ஆர்.எஸ்.எஸ் தனது நிலைப்பாடுகளை வெளிப்படையாக எழுதி வந்தது. அது பழைய ஜனசங்கத்தையே மீளுருவாக்க விரும்பியது என்கிறார் நூரானி.

“1985 மார்ச் 17,18 தேதிகளில் கூடிய பாஜகவின் தேசிய நிர்வாகக் குழு ஜனசங்கத்திற்கு புத்துயிர் கொடுப்பது குறித்து விவாதித்தது. பாஜக தோற்றுவிக்கப்பட்டு (ஏப்ரல் 5, 1980) ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னும்கூட ஜனசங்கத்தினை மீளுருவாக்கம் செய்வது குறித்து பேச்சு நிலவியது என்பதே புதிதாகத் தோன்றிய பாஜக வேரூன்றவில்லை என்பதையே காட்டுகிறது” என்கிறார். இறுதியாக, பாஜகவின் தேசிய நிர்வாகக்குழு தவிர்க்கமுடியாத வகையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அழுத்தத்திற்கு தலைவணங்கியது. காந்திய சோசலிசம் என்கிற தன் சந்தர்ப்பவாத முழக்கத்தை கைவிட்டது.

ராமர் கோயிலும்ஆர்.எஸ்.எஸ். திட்டமும் !

‘ராமஜென்ம பூமி’ பிரச்சாரம்தான் அதற்கு முதல்முறையாக வெகுஜன பரப்பில் ஊடுருவுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியது.

பாபர்மசூதி குறித்த ஆர்எஸ்எஸ்ஸின் கோரிக்கைக்கு நியாயமே இல்லை என்பதை வரலாற்றுப்பூர்வமான காரணங்களோடு நூரானி பட்டியலிடுகிறார்.

1. 19ஆம் நூற்றாண்டில் பாபர்மசூதி குறித்து ஒரு மஹாந்த் தொடர்ந்த வழக்கில் மசூதிக்கு வெளியே இருந்த ராம்ச புத்ரா எனப்படும் பகுதிதான் ராமர் பிறந்த இடம் எனக் கூறப்பட்டது; மசூதி இருக்குமிடம் என்று எப்போதுமே கூறப்படவில்லை.

2. ராமர் எங்கு பிறந்தார் என்று குறிப்பாகச் சொல்லமுடியாதென்றே பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஒப்புக்கொண்டனர். இந்தப் பிரச்சினைக்கு நீதிமன்றத்தினால் தீர்வு சொல்ல முடியாது என்றும் அவை கூறின.

3. திலகர், லஜபதிராய், காந்தி, மதன்மோஹன் மாளவியா போன்றோர் அந்தக் கோரிக்கையை வைக்கவே இல்லை.

ராமர்கோயில் இயக்கம் முழுக்க அரசியல் தன்மை கொண்டது. அதனை அத்வானியே பகிரங்கமாக பேசினார். “1985இல் இரண்டு பாராளுமன்ற இடங்களையே பெற்றிருந்த நாங்கள், 1991இல் 117 இடங்கள் என்கிற நிலையை அடைந்தோம். அயோத்திப் பிரச்சினையை நாங்கள் கையிலெடுத்ததே இதற்கு பிரதான காரணம்” என்றார்.

பாஜகவிற்கு முன்பு, ஆர்.எஸ்.எஸ்.தான் ராம ஜென்ம பூமி என்ற பிரச்சாரத்தை கையில் எடுத்தது. அது பலன் கொடுத்தது. அதனை பயன்படுத்தி வளர்ச்சி கண்டது. 38 முன்னணி அமைப்புகளின் வழியாக 50 லட்சம் பேரோடு தொடர்பினை உருவாக்கியது. தென்னிந்தியாவிலும் வளர்ச்சியடைந்தது.

ராமர்கோவிலைக் கட்டுவதற்காக 2,000க்கும் மேற்பட்ட ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ‘ராம்ஷிலா’ என்கிற பெயரில் பூஜையால் புனிதப்படுத்தப்பட்ட செங்கற்களை அயோத்தி நோக்கி சுமந்துசெல்லும் இந்த இயக்கத்தை விஎச்பி நடத்தியது. மிகவும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட இந்த இயக்கம் பரவலான கவனத்தையும் ஆதரவையும் பெற்றுக் கொடுத்தது. இவ்வாறு, ஆர்.எஸ்.எஸ். எழுச்சிபெற்றதும் பாஜகவின்மீது பிடிமானத்தை கூடுதலாக்கியது.

ஆர்.எஸ்.எஸ்., செயல்பாட்டுமுறை இதுதான்… முதலில் அது இந்துக்களிடையே ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது; பிறகு அதைப் பயன்படுத்தி அவர்கள் மேலாதிக்கம் பெறவேண்டும் என்கிற உணர்வைத் தூண்டுகிறது. வரலாற்று ரீதியாக இழைக்கப்பட்ட ‘கொடுமைகளுக்கு’ பழிதீர்க்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து உணர்ச்சியை கிளப்பியது.

இவ்வாறு அது மேற்கொண்ட அரசியல் விளையாட்டுகளின் உயிர்ப்பலி ஏராளம். இந்தப் பலிகள் 1993இல் இன்னும் அதிகரித்தன. 1990இல் நடந்த கலவரங்களில் 693 பேர் கொல்லப்பட்டதாகவும், 2773 பேர் காயமடைந்ததாகவும், மத்திய உள்துறை விபரங்கள் காட்டின.

.எம்.எஸ் செய்த எச்சரிக்கை

காங்கிரஸ் பலவீனமடைந்தபோது, நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது சிபிஐ(எம்) முன்வைத்த காலப்பொருத்தமான எச்சரிக்கையை இந்தநூல் எடுத்துக் காட்டுகிறது. சி.பி.ஐ.(எம்) பொதுச்செயலாளராகஇருந்த  இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் எழுதிய ஒரு விரிவான கட்டுரையை நூரானி மேற்கோள் காட்டுகிறார். 

அதில், “ஆர்எஸ்எஸ்- பாஜகவின் கருத்தாக்கங்களான இந்துத்துவம், இந்துராஷ்டிரம் ஆகியவை மார்க்சிஸ்ட்கட்சியும் பிற இடதுசாரி கட்சிகளும் ஆதரிக்கும் உறுதியான  மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கு எதிரானது. மேலும், ஜனதாதளம், தேசியமுன்னணி போன்ற கூட்டமைப்புகளில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகளின் தார்மீக அரசியல் மதிப்பீடுகளும், பாஜக – ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் மதிப்பீடுகளுக்கு எதிரானவை. “எனவேதான் கம்யூனிஸ்டுகளான நாங்கள், ஆர்எஸ்எஸ், பிஜேபி போன்ற மதவாத, பிளவுசக்திகளுடனும், அவர்கள் எழுப்பும் மூன்று பிரச்சினைகள் (அரசியல்சட்டப்பிரிவு 370, பாபர்மசூதி, பொதுசிவில்சட்டம்) பற்றியும்  -அவர்களுடன் எந்தவித கூட்டணியையோ, தேர்தல் ஒப்பந்தத்தையோ அல்லது தொகுதி உடன்பாடுகளையோ செய்துகொள்வதனால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்தும் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளில் இருக்கும் எங்கள் நண்பர்களை எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளோம். இந்த சக்திகளுடன் மதச்சார்பற்ற சக்திகள் ஒத்துப்போகவே முடியாது என்றும் சொல்கிறோம்.”

“இந்த இந்துப் பேரினவாத அமைப்புடன் கூட்டணி வைத்துக்கொள்வதோ அல்லது தொகுதிஉடன்பாடுகள் செய்துகொள்வதோ தேசஒற்றுமைக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு உடன்படுவது போன்றதாகும்” என இ.எம்.எஸ். எச்சரித்தார். பழமைக்குத் திரும்பும் ‘மீட்புவாதம்’ என்பது பெரும்பான்மையினரின் அடிப்படைவாதமென்றும் அதைச் சுமந்துசெல்லும் வாகனம் ஆர்எஸ்எஸ் என்கிற அரைப்பாசிச அமைப்பு என்றும் எழுதிய அவர், “எந்தவிதப் பதட்டத்திலும் தலையிட்டு அதனை மதக்கலவரமாக மாற்ற ஆர்எஸ்எஸ் தீவிரமாகச் செயல்படும்” என்றும் சுட்டிக் காட்டினார். பிஜேபியை தனியான ஒரு ஆளுங்கட்சியாகவோ அல்லது ஒரு கூட்டணிஅரசின் வலுமிக்க அங்கமாகவோ ஆக அனுமதிப்பது தேசத்தின் சிதைவின் தொடக்கமாக இருக்கும் என்றும் அவர் தெளிவாக எச்சரித்தார். இஎம்எஸ் அவர்களின் எச்சரிக்கையை  பலரும் ஏற்கவில்லை. இதுதான் ஆர்.எஸ்.எஸ்/பாஜக வளர்ச்சிக்கு சாதகமாக இருந்தது.

மதச்சார்பின்மைக்கான அவசியம்

     ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கருத்தியலை வீழ்த்துவதற்கு முக்கியமான ஆயுதம் ‘உறுதியான மதச்சார்பின்மையே’. இந்த கருத்தியல் வலிமை சி.பி.ஐ(எம்) உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகளிடம் மட்டுமே இருந்தது என்கிறார் நூரானி. கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள் போன்ற அறிவுஜீவிகள், ஆர்.எஸ்.எஸ். முன்வைத்த புனைசுருட்டுக்களை எதிர்த்தார்கள். அவர்கள் ராமஜென்மபூமி என்கிற புனைவினை அம்பலப்படுத்தினார்கள்.  இந்தியப் பண்பின் மதச்சார்பற்ற அடித்தளத்தில் இருந்து எழுந்த எதிர்ப்பு இது.

     ஆர்.எஸ்.எஸ். அமைப்பினை அரசியல் களத்தில் எதிர்கொண்ட பிராந்திய கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பின்மை விசயத்தில் உறுதியற்று இயங்கினார்கள். முஸ்லிம் அமைப்புகள் சூழலை மிகமோசமாக கையாண்டார்கள். ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் முஸ்லிம் ‘செயல்’ குழுக்களை அமைத்தனர்.  ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு எதிராக ஒரு மதச்சார்பற்ற அணுகுமுறையும் தேசம்தழுவிய இயக்கமும்தான் தேவையாக இருந்தது. ஆனால் அந்த அமைப்பிற்கு  ‘உண்மையான சவால் ஏதும் ஏற்படவே இல்லை’ என்று இந்த நூல் கவலையுடன் பதிவு செய்கிறது.

சில விமர்சனங்கள்:

ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கும் பெருமுதலாளிகளுக்கும் இடையிலான உறவுகுறித்து இந்த நூலில் குறைவான தகவல்களே இருப்பது பெரும் குறையாகும். அதன் காரணமாக, இந்த நூல் ஒரு காலில் மட்டும் நடக்கிறது. காங்கிரஸ் கட்சிக்குள் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் இருந்தார்கள் என்பதை சில தனிநபர் சார்ந்த பிரச்சனையாகவே எழுத்தாளர் கருதுவதாக அய்யம் எழுகிறது. இந்திய ஆளும் வர்க்கத்தின் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் இருந்து வந்தது. இப்போதும் அதன் வர்க்கச்சார்பு தொடர்கிறது என்ற மார்க்சிய புரிதல், இந்தச் சிக்கலை அவிழ்ப்பதற்கு அவசியமான ஒன்றாகும்.

பாஜக கடைப்பிடிக்க வேண்டிய ‘வெகுஜன’ அணுகுமுறை பற்றிய கருத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வெளிப்படுத்தி வந்த அதிருப்தி மற்றும் சமரசத்தை விளக்குவதற்கான ஏராளமான உழைப்பை நூல் ஆசிரியர் செலுத்தியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் தனக்கான வாகனங்களில் ஒன்றாகவே பாஜகவை உருவாக்கியது என்பதை அது நிறுவினாலும் சற்று குறைவான விபரங்களிலேயே அதனை சொல்லியிருக்க முடியும் என்று தோன்றுகிறது.

‘ராமஜென்மபூமி’ இயக்கம் பற்றிய பகுதிகள் முக்கியமானவை. அதற்கு வெகுஜன ஆதரவு கிடைத்ததற்கான காரணங்களில் ஒன்று ஆளும் வர்க்கங்கள் கொடுத்த ஒத்துழைப்பு. அதனையும் வர்க்கக் கண்ணோட்டத்துடன் அணுகியிருக்க வேண்டும்.

பாஜக/ஆர்.எஸ்.எஸ் வலுப்பட்ட காலத்தில் காங்கிரஸ் சரிவை எதிர்கொண்டு வந்தது. இதே காலகட்டத்தில் முன்னுக்கு வந்த பிற இயக்கங்களை பற்றி குறைவாகவே பேசுகிறார். விடுதலைக்குப்பின், காங்கிரசுக்கு மாற்றாக இடதுசாரி மாற்றுக் கொள்கைகள் எழுந்தன. மாநில கட்சிகள் முன்னுக்கு வந்தார்கள். சமூகநீதிக்கான முழக்கங்களும் எழுந்தன. 1980களுக்குப் பின் நாட்டின் பொருளாதார கட்டமைப்பில் தீவிரமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.1991 ஆம் ஆண்டில் உலகமய கொள்கைகளை இந்தியா ஏற்றது. இவையெல்லாம் ஒன்றுக்கொன்று ஊடாடிய நிகழ்வுகள் என்பதால் அதற்காக ஒரு அத்தியாயம் எழுதப்பட்டிருந்தால், சிக்கலான இந்த காலகட்டத்தைப் பற்றிய ஒரு பருந்துப்பார்வை கிடைத்திருக்கும்.

அமெரிக்கா எப்படி ‘ஏகாதிபத்தியமாக’ நிலவுகிறது?

குரல்: தோழர் பீமன்

இரா. சிந்தன்

முக்கண்ட சமூக ஆய்வுக் கழகத்தின் செயல் இயக்குனரும்,லெஃப்ட்வேர்ட் பதிப்பகத்தின் ஆசிரியருமான விஜய் பிரசாத் எழுதிய ‘வாஷிங்டன் தோட்டாக்கள்’ என்ற புத்தகம், அமெரிக்கா எப்படி ‘ஏகாதிபத்தியமாக’ தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்பதை விளக்குகிறது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த புத்தகத்தை பேராசிரியர் பொன்ராஜ் தமிழில் கொடுத்துள்ளார்.

‘புரட்சியை கட்டமைக்கிற இடதுசாரிகளின் சொற்களை கொண்டதாகவும், அதனை அடக்குகிற அரசு ஆவணங்களை அடிப்படையாக கொண்டும்’ எழுதப்பட்டிருக்கும் இந்த நூல், விஜய் பிரசாத் அவர்களுடைய பல ஆண்டு பணிகளின் விளைவாகும். இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கும் பல சதி வேலைகள், அந்த வேலைகளை கருவியாக இருந்து முன்னெடுத்த ‘உளவாளிகளுடனான’ நேர்காணல்களில் இருந்தும் பெறப்பட்டுள்ளன. ஏராளமான அரசு ஆவணங்களில் இருந்து விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இருப்பினும், ரத்தினச் சுருக்கமாகவும், புரிந்துகொள்ள எளிதான மொழியிலும் எழுதியிருக்கிறார்.

இந்த புத்தகம் 3 பகுதிகளைக் கொண்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு முன் நிலவிய காலனி ஆதிக்க சூழலும், பிறகு அமெரிக்கா உலகின் முதன்மை சக்தியாக ஆனதுடன், அமெரிக்காவை மையமாக கொண்டு, பழைய ஏகாதிபத்திய நாடுகளை தனது ஆரமாக மாற்றிக் கொண்டது எப்படி?. அந்த ஆபத்தான சக்கரங்கள், உலகம் முழுவதும் பறந்து, மக்களின் இயல்பான விடுதலை வேட்கையினை சிதைக்கும் வழிமுறைகள் என்னென்ன?. சோவியத் ஒன்றியம் சிதைந்ததற்கு பிறகு இந்த உத்திகள் ‘கலப்பு யுத்தம்’ என்ற வடிவத்தை கூடுதலாக மேற்கொண்டது எப்படி? என்பதையும் இந்த நூல் விளக்குகிறது.

2021 ஆம் ஆண்டின் மத்தியில் பெண்டகன் வெளியிட்ட விபரங்களின்படி, உலகின் 80 நாடுகளில், 750 ராணுவத் தளங்களை அமெரிக்கா வைத்துள்ளது.ஆனால் உண்மையில்  சிறிதும், பெரிதுமாக ராணுவம் நிலை கொண்டிருக்கும் நாடுகளின் எண்ணிக்கை 183 ஆகும். கண்களுக்கு முன் எந்த எதிரியும் தென்படாத நிலையில், உலகம் முழுவதும் அவர்கள் யாரை எதிர்த்து போர் செய்கிறார்கள்?

அமெரிக்காவின் ராணுவ தளங்களை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்று, ஜப்பான். ஜப்பான் நாட்டின் ஒக்கினாவா தீவில் அமையப்பெற்ற ராணுவ தளங்கள், பெண்கள் மீதான வன்முறையின் மையமாக இருக்கின்றன. அந்த தளங்களுக்கு எதிராக மக்களின் கோபம் குவிந்தது. இப்பிரச்சனை பேசிய ஹடோயாமா புகியோகத், 2009ஆம் ஆண்டு தேர்தலில் பெரும் வெற்றி பெற்றார். பிறகு அவர் அமெரிக்காவின் ராணுவ தளங்களுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்தார்.

அதன் பின்னர், ஒபாமாவின் நிர்வாகம் ஜப்பானிடம் மிகக் கடுமையாக நடந்துகொண்டது. சில ஆண்டுகளில் ஹடோயாமா புகியோகத் தனது கட்சியாலேயே தனிமைப்படுத்தப்பட்டார்.

கேள்விகளுக்கு அப்பாற்பட்ட இந்த அதிகாரம் எப்படி நிறுவப்பட்டது? எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது? உலக மக்களின் மிக இயல்பான, ஜனநாயக விருப்பங்களை அது எப்படி நசுக்கி அழிக்கிறது என்பதைத்தான் இந்த நூல் ஏராளமான உதாரணங்களின் வழியாக விளக்குகிறது.

அமெரிக்காவின் பிறப்பு

அமெரிக்கா எப்படி உருவாக்கப்பட்டது என்பதில் இருந்துதான் அதன் அதிகாரம் தொடங்குகிறது. 1776 ஆம் ஆண்டில் நடந்த அமெரிக்க புரட்சியை, விஜய் பிரசாத் விளக்குகிறார். “முதலில் அது ஒரு புரட்சியா” என கேள்வி எழுப்பும் அவர். “அதில் வர்க்கப் போராட்டம் எதுவும் இல்லை. புரட்சிகர நடவடிக்கை என்ற வரையறைக்கு உட்பட்ட தொழிலாளர் இயக்கம் எதுவும் மக்களிடமிருந்து எழவில்லை. அந்த போராட்டத்தில் பல்வேறு தரப்பட்ட மக்களின் சமூக ஒற்றுமை வெளிப்படவில்லை. மாறாக பூர்வ குடி மக்களை இனப்படுகொலை செய்யும் உணர்வு இருந்தது. அடிமையாக்கப்பட்ட ஆப்பிரிக்கர்களின் கலகம் பற்றிய பெரும் அச்சம் இருந்தது.”

ஆம்!. அமெரிக்கா பிறந்த போதே அது தனது காலனி ஆதிக்கத்தை உறுதி செய்துகொள்ளும் பூர்வகுடி மக்கள் மீதான தாக்குதலையும், அண்டை நாடுகளின் மீதான ஆக்கிரமிப்பையும் நடத்தி முடித்திருந்தது.இரண்டாம் உலகப்போர் நடந்து முடிந்த பின்னர், உலகின் யதார்த்தங்கள் மாறியிருந்தன. அதனை ஏற்க மறுத்த இங்கிலாந்தும் ஃபிரான்சும் தங்களுடைய பிரதான இடத்தை மீண்டும் அடைந்துவிட முடியும் என்று நம்பினார்கள்.

அல்ஜீரியா முதல் மலாயா வரை, வியட்நாம் முதல் கயானாவரை அவர்கள் காலனி ஆதிக்க போர்களை முன்னெடுத்தார்கள். ஆனால் அவை தேசிய எழுச்சிகளை எதிர்கொள்ள முடியாமல் பலவீனமடைந்தன. 1956 ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாய் மீதான தங்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்த, இஸ்ரேலின் உதவியோடு பல தந்திரங்களை முன்னெடுத்தார்கள், ஆனால் அவை தோல்வியில் முடிந்தன.

சோசலிச முகாமாக அமைந்த சோவியத் ஒன்றியமும் தனது தொழில் தளங்களை இழந்திருந்தது. அந்த நாட்டில் 52 ஆயிரம் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி நின்று போயிருந்தது. மூலதன பங்கு 30% வீழ்ச்சியை சந்தித்தது. 2 கோடியே 70 லட்சம் பேர்களை போர்க்களத்தில் அது இழந்திருந்தது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் இரண்டாம் உலகப்போரின் காரணமாக சோவியத் ஒன்றியத்தின் குடிமக்கள் தங்கள் 25 வருட வருமானத்தை, போரின் விலையாக கொடுத்திருந்தார்கள்.

அதே சமயத்தில், அமெரிக்கா மிகவும் குறைவான சேதங்களை மட்டுமே எதிர்கொண்டிருந்தது. 4 லட்சத்திற்கும் சற்று அதிகமானவர்களை போரில் இழந்திருந்தாலும், அதன் உற்பத்தி திறனும், பண்பாட்டு வளர்ச்சியும் தடைபடவில்லை. இவை அமெரிக்காவிற்கு சாதகமாக அமைந்தது. இப்படித்தான் உலகத்தின் மைய இடத்திற்கு அமெரிக்கா வந்து சேர்ந்தது.

அமெரிக்கா மையமாக இருக்கிறது. ஃபிரான்சும், இங்கிலாந்தும் இன்ன பிற நாடுகளும் ஆரங்களாக உள்ளன. 1946, 49 மற்றும் 1952 காலகட்டத்தில் ஜப்பானில் நடந்த தேர்தல்களில் அமெரிக்கா தலையிட்டது. லிபரல் கட்சிக்கும், ஜனநாயக கட்சிக்கும் இடையில் கூட்டணி உருவாக்க, அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகள் அரும்பாடுபட்டன. இதன் மூலம் சோசலிஸ்ட் கட்சி பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஜப்பான் அமெரிக்காவின் ஆரமாக ஆனது. இத்தாலியின் பிரதமர் அல்சைட் டி காஸ்பரி, பிரான்சு பிரதமர் பால் ராமடியர் ஆகிய இருவருடைய அரசிலும் கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து இடம்பெற்றால் அந்த நாடுகளுக்கு நிதி எதுவும் வழங்கப்படாது என்று அமெரிக்கா மிரட்டியது. 1963 முதல் 1972 வரை இதனை சாதித்திட பெரும்பணம் செலவிடப்பட்டது. பின் அந்த நாடுகளும் அமெரிக்காவிற்கு ஆரமாகின.

ஒரு மோசமான ‘சக்கர வியூகம்’ செயல்படுகிறது. அது ஏராளமான படுகொலைகளையும், அதிகாரப் பறிப்பையும் செய்துள்ளது, செய்து வருகிறது.

புதிய ஒழுங்கு

உலகப்போர் முடிந்த பின், 1944 ஆம் ஆண்டில் பிரெட்டன்வுட்ஸ் நகரில் அமெரிக்கா கூட்டிய மாநாடு, உலக அரங்கில் அதன் முதன்மை விருப்பத்தை பறைசாற்றியது. 1948 ஆம் ஆண்டில் ஐரோப்பிய பொருளாதார கூட்டுறவு அமைப்பு பிறந்தது. இதற்காக அமெரிக்கா 12 பில்லியன் டாலர்கள் கடனாக கொடுத்தது. 1949ஆம் ஆண்டில் நேட்டோ பிறப்பெடுத்தது. நேட்டோவில் அதன் உறுப்பினர்களுக்கு பங்கு எதுவும் கிடையாது. அமெரிக்காதான் அதன் விதிகளை முடிவு செய்தது.அமெரிக்க கண்ட நாடுகளின் அமைப்பு 1948ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு லத்தீன் அமெரிக்காவில், அமெரிக்காவின் செல்வாக்கை உறுதி செய்யும் விதமாக ஏற்படுத்தப்பட்டதாகும்.

இந்த அமைப்பின் முதல் கூட்டம் கொலம்பியாவில் நடைபெற்ற அதே சமயத்தில், கொலம்பியா நாட்டில் ஏழை மக்களின் விருப்பத்திற்குரிய தலைவராக இருந்த ஜார்ஜ் கெய்டான் சுட்டுக்கொல்லப்பட்டார். அதனை ஒட்டி எழுந்த மக்கள் எழுச்சி ‘கம்யூனிசமாக’ அடையாளப்படுத்தப்பட்டு, வன்முறையில் வீழ்த்தப்பட்டது.  பொகாட்டாவில் நடந்த மாநாட்டின் முடிவில், கம்யூனிஸ்டுகளை ‘அழித்து ஒழிப்பது’ ஒரு சட்டமாகவே ஆக்கப்பட்டது.1954ஆம் ஆண்டில் இதே போல தெற்காசிய ஒப்பந்த அமைப்பு, மணிலா ஒப்பந்தம், 1955ஆம் ஆண்டில் மத்திய ஒப்பந்த அமைப்பு – பாக்தாத் ஒப்பந்தம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டன.

ஐரோப்பிய பகுதிகளில் நேட்டோ விரிவாக்கம் செய்யப்பட்டதன் மூலம் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மீது நிர்ப்பந்தம் செலுத்தப்பட்டது. லத்தீன் அமெரிக்காவில் நடந்த எழுச்சிகள் வீழ்த்தப்பட்டன. இவ்வாறு மாற்று அதிகாரத் தளங்கள் உருவாவதற்கான எந்த சிறு முயற்சியையும் தடுக்க அமெரிக்கா தொடர்ந்து முயன்றது.

ராணுவ கூட்டு பயிற்சிகள் என்ற பெயரால், வலுக்குறைந்த நாடுகளின் படைகள் அமெரிக்க கட்டமைப்பாக மாற்றப்பட்டன. மேலும் இந்த ராணுவங்கள், நவீன தளவாடங்களை வாங்கிச் சேர்க்கவும் வற்புறுத்தப்பட்டன. இப்போதுள்ள அமைப்பின் வலிமையைக் கொண்டு, உலகத்தின் எந்தவொரு பகுதியிலும் அமெரிக்க தாக்குதலை முன்னெடுப்பதற்கு ஒரு மணி நேர அவகாசமே தேவைப்படும்.

ஐ.நாவும், காலனிய நீக்கமும்

இரண்டாம் உலகப் போருக்கு பிறகான ஆண்டுகளில் உலகின் முதன்மையான முரண்பாடாக அமைந்தது வடக்கு – தெற்கு முரண்பாடே. அதாவது காலனி நாடுகளின் மீதான ஆதிக்கத்தை கைவிட மறுத்த ஏகாதிபத்தியத்தின் போர்களே அந்த காலகட்டத்தின் முதன்மையான முரண்பாடாக அமைந்தது என்கிறார் விஜய் பிரசாத்.

1945ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை உருவானது. உலகளாவிய சட்ட வரையறைகளுக்கும், காலனி நாடுகளின் யதார்த்த நிலைமைகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை தீர்ப்பதில் ஐ.நா செய்ய முடிந்தது என்ன?அது மேலை நாடுகள் மேற்கொள்ளும் வரன்முறையற்ற தலையீடுகளை சட்டப்பூர்வமாக்கியது. ஆம். சுதந்திர நாடுகளுக்குள் தலையீடு செய்யும் அதிகாரத்தை பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுப்பினர்களான ஐந்து நாடுகள் மட்டும் பெற்றார்கள்.

இந்த ஏற்பாட்டினை சோவியத் ஒன்றியம் எதிர்த்தது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களை புறக்கணிப்பு செய்தது. இந்த புறக்கணிப்பை பயன்படுத்திக் கொண்டு, வட கொரியாவை நிலைகுலையச் செய்திடும் தலையீடுகளை வேகப்படுத்த முயன்றன ஏகாதிபத்திய நாடுகள். அதன் பின் சோவியத் ஒன்றியம் தனது புறக்கணிப்பு முடிவுகளை மாற்றிக் கொண்டது. ஐ.நா பாதுகாப்புக்குழுவில் பயன்படுத்தப்பட்ட முதல் 56 தடுப்பு அதிகாரங்கள் (வீட்டோ பவர்) சோவியத் ஒன்றியத்தினால், தேச விடுதலை இயக்கங்களை பாதுகாக்கும் நோக்கில் செய்யப்பட்டன.

ஐ.நாவின் செயல்பாடுகள் முதல் பார்வையிலேயே பாரபட்சமாக தோன்றுகின்றன. அதற்கு முன் நிலவிய ஏற்பாடுகளின் தொடர்ச்சியாகவே இதுவும் அமைந்திருப்பதை இந்த புத்தகம் விளக்குகிறது.

சுக்கா மிளகா சுதந்திரம்?

1864 ஆம் ஆண்டில் ‘ஜெனீவா மாநாடு’ நடந்தபோது, காலனி ஆதிக்க போர்களை பற்றி எதுவும் பேசப்படவில்லை. இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் அந்த மண்ணின் பூர்வ குடிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூர வன்முறைகளைப் பற்றி எதுவுமே பேசப்படவில்லை.1943 ஆம் ஆண்டில் ரூஸ்வெல்ட் மிக வெளிப்படையாகவே பேசினார். “காலனி ஆதிக்க அமைப்பு என்பதன் பொருள் போர்” என்ற அவர், “இந்தியா, பர்மா, ஜாவா ஆகிய நாடுகளின் வளங்களைச் சுரண்டி, அந்த நாடுகளின் வளங்களை அங்கிருந்து அகற்ற வேண்டும்” என்பதை தெளிவுபடுத்தினார் அதே சமயத்தில் “கல்வி, தரமான வாழ்நிலை மற்றும் குறைந்தபட்ச உடல்நலம் ஆகிய அடிப்படை தேவைகளை அவர்களுக்கு ஒருபோதும் கொடுத்துவிடக் கூடாது” என்று வெளிப்படையாக முன்வைத்தார்.

ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்ட பின்னரும் இனப்படுகொலைகளுக்கு முடிவு ஏற்படவில்லை. 1952 முதல் 1960 வரை கென்யாவில் இனப்படுகொலைகளை முன்னெடுத்தது இங்கிலாந்து. ‘விடுதலை விருட்சத்திற்கு என் குருதி நீராகப் பாயட்டும்’ என்று முழங்கிவிட்டு மரணித்தார் கென்ய புரட்சியாளர் கிமாதி.

1945ஆம் ஆண்டில் இந்தோ சீனாவின் விடுதலையை ஹோசிமின் அறிவித்த உடனே அப்பகுதியை கைப்பற்ற பிரெஞ்சுப் படைகள் மீண்டும் வந்தன. காலனிய நீக்கத்திற்கான உலக மக்களின் விருப்பங்கள் ஏராளமான உயிர்த் தியாகங்களைக் கொண்டே சாதிக்கப்பட்டன.

காலனி நீக்கம் ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வுப்போக்கு என்பதை அமெரிக்கா புரிந்து கொண்டது.மேற்கு நாடுகளில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பயன் கொடுக்கும் முதலாளித்துவ சமூக அமைப்பினை பாதுகாத்து நீடிக்கச் செய்யும் பணியை அமெரிக்கா முன்னெடுக்கும் என்பதை அவர் பிரகடனம் செய்தார். இதனை அவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடே மேற்கொண்டார்கள்.

“அமெரிக்கா மறைவாக, பின்னணியில் இயங்க வேண்டியது முக்கியம். அதே நேரத்தில் தேவைப்படும் இடங்களில் தளவாடங்களையும், ஆலோசனைகளையும், பயிற்சியையும் வழங்குவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். உள்ளூர் அரசில் தலையிடும் முயற்சிகள் மீது வெறுப்பு வராமல் தலையீடு செய்வதும், காலனி ஆதிக்கம் என்ற புகார்கள் தேவையின்றி எழாமல் பார்த்துக்கொள்வதும் அமெரிக்காவுக்கு முக்கியம்” என்று சி.ஐ.ஏ துணை இயக்குனர் பிஸ்ஸல் எழுதினார். அவர்கள் உருவாக்கிய உத்திகளில் ஒன்றுதான் ‘கலப்பு யுத்தம்’.

கலப்பு யுத்தங்கள்

சீரழிவு வேலைகள், பொருளாதாரத் தடைகள், திரிக்கப்பட்ட உண்மைகளைக் கொண்ட ஊடக பிரச்சாரம், பண்பாட்டுத் தலையீடுகள் ஆகியவை உள்ளடங்கியதே ‘கலப்பு யுத்தம்’ ஆகும். சமூக மற்றும் அரசியல் தளங்களில் செயல்படும் அரசுப் பணியாளர்களையும், அரசு சாரா பணியாளர்களையும் கொண்டு, மரபு வழிமுறைகளிலும், மரபு அல்லாத வழிகளிலும் இந்த போர் முன்னெடுக்கப்படுகிறது. கருத்தியல் மேலாதிக்கம் இந்த போரின் ஒரு பகுதியாக அமைகிறது.

அமெரிக்காவும், சுயநலம் மிக்க அதன் கூட்டாளிகளும்  முதலில் ஒரு நாட்டின் மீது பொருளாதார தாக்குதலை முன்னெடுக்கிறார்கள். பிறகு அந்த நாட்டு மக்களிடையே கலகங்கள் தூண்டப்படுகின்றன. ஆட்சி மாற்றங்கள் இவ்வாறு திணிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு நாட்டிலும், பழைய மேட்டுக்குடிகளும், நிலம்படைத்த சுய நலமிகளும் அமெரிக்காவின் ஆரங்களை வலுப்படுத்த விரும்பினார்கள். சோசலிசமும், கம்யூனிசமும் தங்களை ஓரங்கட்டிவிடும் என்று அஞ்சி நடுங்கினார்கள். அவர்களுக்கு சி.ஐ.ஏ உதவி செய்கிறது. ஆலை முதலாளிகளும், மதகுருமார்களும் துணையாக நிற்கிறார்கள்.

இந்த கலப்பு யுத்தத்தில், வங்கிகளின் பங்கு மிக முக்கியமான ஒன்றாகும். ‘தற்காலத்தில்ஆட்சிக் கவிழ்ப்புகள் இராணுவ டாங்கிகளைக் கொண்டு ஏற்படுத்தப்படும் அவசியம் கிடையாது; பல சமயங்களில் அது வங்கிகளின் வழியாகவே நடக்கிறது’ என்று கிரேக்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்து கச்சிதமான எடுத்தாளப்பட்டுள்ளது.

காட் ஒப்பந்தம், உலக வர்த்தக அமைப்பு, சர்வதேச நாணய நிதியம் ஆகிய அமைப்புகளும் இந்த நோக்கத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அவை வெறுமனே வர்த்தக ஏற்பாடுகளாக இல்லை.

சில உதாரணங்களை பார்க்கலாம்!

பெரு என்ற நாட்டில் அலைன் கார்சியா என்ற சோசலிச தலைவர் இருந்தார். அவருக்கு மக்களிடையே செல்வாக்கு இருந்தது. அவர் நிகரகுவா, சோவியத் ஒன்றியம் மற்றும் கியூபாவிற்கு ஆதரவாக பேசிவந்தார். உடனே அந்த நாட்டின் மீது ஐ.எம்.எஃப் நடவடிக்கை ஏவியது. கடன் வாய்ப்புக்கள் அத்தனையும் அடைக்கப்பட்டன. இதனால் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் அந்த நாடு சிக்கியது. கார்சியாவின் அரசியல் செல்வாக்கு சரிந்தது. அவர் பதவியிலிருந்து விலக, ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் அதிகாரத்தை பிடித்தார்கள்.

அப்பர் வோல்ட்டா என்ற நாட்டின் தலைவராக தாமஸ் சங்கரா என்ற இளைஞர் பதவிக்கு வந்தார். தங்கள் நாட்டின் பெயரை ‘நேர்மையான மனிதர்களின் நாடு’ என்று (பர்கினோ பாசோ) மாற்றினார். அப்போது அந்த நாட்டின் மீது ஐ.எம்.எப் கடன் வலை மிக மோசமான நெருக்கடிகளை உருவாக்கியிருந்தது. இந்த கடன்களுக்கு எதிரான ஆப்ரிக்க நாடுகளின் ஒன்றுபட்ட அமைப்பை உருவாக்க முயன்றார். ஏகாதிபத்தியம் அவருக்கு எதிராக குண்டுகளை குறிபார்த்தது. சங்கரா கொல்லப்பட்டார்.

ஏழ்மைப்படுத்தப்பட்ட நாடான குவாதேமாலாவில், ஜனநாயக விருப்பங்களைக் கொண்ட, ஜாக்கப் அர்பென்ஸ் ஆட்சிக்கு வந்தார். அந்த நாட்டின் வளமான நிலங்கள் அமெரிக்காவின் யுனைடெட் ஃபுரூட்ஸ் என்ற நிறுவனத்தின் வசம் இருந்தன. அந்த நிலங்களில் ஒரு பகுதியை எடுத்து, மக்களுக்கு வழங்கும் உறுதியோடு அவர் இருந்தார். நிறுவனத்தின் வசம் இருந்த 2 லட்சம் ஏக்கர் நிலங்களை அவர் கையகப்படுத்தினார். உடனே அர்பென்ஸ் ஆட்சிக்கு எதிராக சி.ஐ.ஏ. களத்தில் குதித்தது.

1990, ஈராக் மீது ஐநா சபை விதித்த தடைகளினால் 5 லட்சத்து 67 ஆயிரம் குழந்தைகள் மரணமடைந்தார்கள். அணுகுண்டு வீச்சால் இறந்த குழந்தைகளை விடவும் அதிகமான எண்ணிக்கை இது. ஆனால் இந்த விலை அவசியமானது என்று அமெரிக்கா தயக்கமின்றி முன்வைத்தது.

உலகமயத்தை ஒழுங்காற்றும் விதிகள் அனைத்தையுமே அமெரிக்கா உருவாக்கியது, அமெரிக்க டாலர் அதன் மைய செலாவணியாக இருந்தது. அமெரிக்க மேலாதிக்கம் கொண்ட ‘சர்வதேச நாணய நிதியம்’ (ஐஎம்எஃப்) மற்றும் அமெரிக்க தரவரிசை முகமைகள் உலக நாடுகளின் பொருளாதார வலிமையை மதிப்பீடு செய்யும் நிறுவனங்களாக ஆகின. நாடுகளுக்கிடையில் பண வர்த்தகத்தை மேற்கொள்ளும் சேவை நிறுவனமான ‘ஸ்விஃப்ட்’ என்ற ஐரோப்பிய நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த அனைத்து ஏற்பாடுகளும், அமெரிக்காவின் விதிகளுக்கு இணங்காத நாடுகளின் மீது தாக்குதல் தொடுப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன.

அரசு சாரா அமைப்புகள்

சர்வதேச நாணய நிதியம் செய்கிற வற்புறுத்தல்களுக்கு கட்டுப்பட்டு பல நாடுகளும் தங்கள் மக்கள் நலத்திட்டங்களை சுருக்கிக் கொள்கிறார்கள். அப்போது உருவாகும் சூழலை பயன்படுத்தி என்.ஜி.ஓ (அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகள் தொடங்குகின்றன. இந்த அமைப்புகளும் ஏகாதிபத்திய திட்டத்தின் ஒரு பகுதியாக அமைகின்றன. அவர்கள் அரசுகளை சாராதவர்கள். ஆனால் தங்களுக்கு நிதி கொடுக்கும் ஏற்பாடுகளைச் சார்ந்தவர்கள். என்.ஜி.ஓ அமைப்புகளுக்கான நிதி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்தே வருகின்றன.

என்.ஜி.ஓ அமைப்புகளின் ஏகாதிபத்திய ஆதரவு செயல்பாடுகளின் உதாரணத்தை உணர்த்த, ஹெய்ட்டி என்ற நாட்டின் 200 ஆண்டுகால வரலாறு இந்த நூலில் சுருக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பொருளாதார தடைகள் ஏற்படுத்தும் கொடூரமான விளைவுகளையும், உயிர் காக்கும் சிகிச்சைகளைக் கூட பெற முடியாத ஆபத்தான நிலைமையையும் புரிந்துகொள்ள ஈரான் பற்றிய விவரிப்புகள் உதவுகின்றன.

பிரேசில் நாட்டில் ‘பசிஅழிப்புத்திட்டம்’ கொண்டுவந்த உலகப் புகழ்பெற்ற தலைவரான லூலாவிற்கு 86% மக்கள் ஆதரவு இருந்தது. ஆனால், அந்த நாட்டிலும் அமெரிக்க வல்லூறு நுழைந்தது. லூலாவிற்கு எதிராகஅந்த நாட்டின் ‘சட்டமே’ ஒரு கருவியாகப் பயன்படுத்தப் பட்டது.

அதே சமயத்தில், இந்தக் கலப்பு யுத்தங்கள் மக்கள் சக்தியினால் முறியடிக்கப்பட்ட உதாரணங்களையும் பார்க்கிறோம். வெனிசுவேலா என்ற நாட்டில் மதுரோவின் அரசுக்கு எதிராக அமெரிக்க ஆதரவுடன் ஒரு முற்றுகை முன்னெடுக்கப்பட்டது. இந்த முற்றுகையை மக்கள் ஆதரவே முறியடித்தது.

பொலீவியா நாட்டில், ஈவோ மொரேல்ஸ் ஆய்மா ஆட்சிக்கு வந்தார். பொலிவிய குடியரசின் வரலாற்றில், உள்ளூர் இனக்குழுவைச் சேர்ந்த முதல் ஆட்சியாளர் ஈவோதான். அவருடைய இயக்கத்தின் பெயர் ‘சோசலிசத்திற்கானஇயக்கம்’. இயற்கை வளங்களை வரன்முறையற்று சுரண்டும் சக்திகளுக்கு எதிராக அவர் உறுதி காட்டினார். அவருடைய முன்னெடுப்புகள் மக்களிடையே ஆதரவினை விரிவாக்கின. அவருக்கு எதிரான சதிகள் மக்கள் சக்தியின் மூலம் முறியடிக்கப்பட்டன.

ஆதிக்கத்தின் செயல் திட்டம்

‘கிரெனெடா’ ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நாடு.அந்த நாட்டின் மக்கள் ‘புதியஅணிகலன்இயக்கத்தின்’ மூலமாக, தங்கள் நாட்டுக்கு ஏற்ற சோசலிச அமைப்பை உருவாக்க முயன்றது. 1983ஆம் ஆண்டில் அமெரிக்க படையெடுப்பினால் நசுக்கப்பட்டது.

இப்படி எந்தவொரு நாட்டிலும், உழைப்பாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் அதிகாரம் கிடைக்கும் சூழல் ஏற்படுமானால் ஏகாதிபத்தியம் அதற்கு எதிராக களத்தில் இறங்குகிறது. ஏகாதிபத்தியத்தின் ஆணைகளை மறுப்பதற்கு ஏதாவதொரு நாடு முயற்சி செய்யும் என்றால், அங்கே தலையீடுகள் செய்யப்படுகின்றன. தேர்தல்களில் தலையீடு அல்லது ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்படுகிறது.

அந்த நடைமுறைகளை விஜய் பிரசாத் விரிவாக விளக்கியுள்ளார். செயல் திட்டம் இதுதான்.

  1. பொதுக் கருத்தை உருவாக்குதல் – உண்மைக்கு மாறான, அச்சமூட்டும் கதைகளை செய்திகளாக திரித்து பரப்புதல்.
  2. ஆட்சிக் கவிழ்ப்பின் திறமை வாய்ந்த உளவாளியை களத்தில் இறக்குதல்.
  3. கூலிப்படை, ராணுவத்தை தயார் செய்தல்
  4. பொருளாதார வாய்ப்புகளை முடக்கி முற்றுகையிடுவது
  5. பிற நாடுகளிடம் இருந்து துண்டித்தல்
  6. பெருந்திரள் போராட்டங்களை ‘உருவாக்குதல்’
  7. அமெரிக்காவின் பங்கை மறுத்தல் (அச்சத்தை பரவவிடல்)
  8.  மறக்கச் செய்தல்
  9. முற்போக்கான குருமார்களை கொலை செய்தல்

பல நாடுகளிலும் பரிசோதிக்கப்பட்ட மேலே குறிப்பிட்ட வழிமுறைகளை படிக்கும்போது, இந்தியாவில் நடக்கும் பல்வேறு மாற்றங்களையும் கூட நம்மால் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. உண்மையில், பாசிச – நாஜி சக்திகளோடு கைகோர்ப்பதில் அமெரிக்காவிற்கு எந்த வெட்கமும் இருக்கவில்லை என்பதை இந்த புத்தகம் ஆதாரத்துடன் விளக்குகிறது.

மேலும், இஸ்லாமை மையப்படுத்தி, கம்யூனிச வெறுப்பினை கட்டமைப்பதற்காக ‘ஹாஜி யூசுப் சங்’முன்வைத்த திட்டம் இந்த நூலில் உள்ளது.

  1. இஸ்லாமிய பண்பாட்டு சங்கம் ஒன்றை தொடங்கி, சீனா மற்றும் மத்திய கிழக்கு இஸ்லாமியத்தோடும், உலகம் முழுவதும் தொடர்புகளை அதிகமாக்க வேண்டும்.
  2. அமெரிக்கர்களையும், இஸ்லாமியர்களையும் கம்யூனிசத்திற்கு எதிராக திரட்டும் விதமான பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும்.
  3. அந்த அமைப்புகளுக்கு சீனா அல்லது பிற இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களே தலைவர்களாக இருக்க வேண்டும். அமெரிக்காவின் பின்புலம் மறைவாகவே இருக்க வேண்டும்.

இதுதான் அவர் அனுப்பிய ஆவணத்தின் சாரமாக அமைந்த கருத்துக்கள்.

இந்த திட்டம் அரேபிய மன்னர்களாலும், சி.ஐ.ஏ.வினாலும் 1951ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முன்னெடுக்கப்பட்டதை புத்தகத்தின் மூலம் விரிவாக அறிந்துகொள்கிறோம்.

கியூபாவில் எழுந்த நம்பிக்கை

எத்தனை அதிகாரம் மிக்கதாக இருந்தாலும், மக்கள் சக்தியின் துணையைக் கொண்டு ஏகாதிபத்தியத்தை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கையை வழங்கும் ஊற்றாக இருப்பது கியூபாவே ஆகும். கியூப நாடு தனது நாட்டு மக்களின் விடுதலையை சாதித்ததுடன் போராட்டத்தை முடித்துக்கொள்ளவில்லை. எப்போதும் அது உலக மக்களுடன் தனது பிணைப்பை வலுப்படுத்திக் கொண்டுள்ளது.

1966 ஆம் ஆண்டில், தேச விடுதலை இயக்கங்களை, ஃபிடல் காஸ்ட்ரோ ஹவானாவிற்கு அழைத்தார். முக்கண்ட மாநாட்டில், “காலனி உலகெங்கிலும் புரட்சிகர விடுதலைப் போர்களுக்கான ஆதரவையும் ஒத்துழைப்பையும் இந்த அமைப்பு வழங்கிடும். விடுதலை இயக்கங்கள் எங்கே நடைபெற்றாலும் அவை அனைத்திற்கும் கியூப அரசும், மக்களும் தங்கள் சக்திக்கு உட்பட்டு பொருள் உதவியையும், அனைத்து உதவிகளையும் வழங்கிடும்’ என காஸ்ட்ரோ அறிவித்தார்.

இந்த மாநாட்டுக்கான அவசியம், அதற்கு முந்தைய ஆண்டுகளில் தொடங்கிய வன்முறை தாக்குதல்களில் இருந்து எழுந்தது.

1960 களிலும், 1970 களிலும் நடந்த விடுதலை போராட்டங்களுக்கு எதிராக கொடூர வன்முறையை ஏகாதிபத்தியம் முன்னெடுத்தது. மலாய அவசர நிலை (1948-1960), கென்ய அவசர நிலை (1952), அல்ஜீரியா மீது ஃபிரெஞ்சு போர் (1954-1962), வியட்நாம் மீதான ஃபிரெஞ்சு போர் (1946-1954), அமெரிக்கா – வியட்நாம் போர் (1954-1975), கியூபா மீதான அமெரிக்க படையெடுப்பு (1961), காங்கோவில் பேட்ரிஸ் லுமூம்பாவின் படுகொலை (1961), குவட்டமாலா மீது படையெடுப்பு (1954), டொமினியன் குடியரசு மீது அமெரிக்க படையெடுப்பு (1965), இந்தோனேசியாவில் கம்யூனிஸ்டுகள் மீதான இனப்படுகொலை (1965) என அடுத்தடுத்து முன்னெடுக்கப்பட்ட ஆதிக்க வன்முறைகளும், கொத்துக்கொத்தான மரணங்களுமே திரிகண்ட மாநாட்டில் கூடிய விடுதலைப் படைகளின் உத்திகளை வடிவமைத்தன. வன்முறை அவர்கள் மீது திணிக்கப்பட்டது.

1979 டிசம்பர் 31 ஆம் தேதி என்ற மலைமுகட்டின் மேல் நின்று அதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் உலகில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களை நமக்கு எடுத்துக் காட்டுகிறார் விஜய் பிரசாத். காலனி ஆதிக்கங்களில் இருந்து அங்கோபா, கேபோ வெர்டே, கினியா பிசாவ் மற்றும் மொசாம்பி ஆகிய நாடுகள் போர்த்துகீசியர்களுக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றன. ரொடீசியாவில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்தன. 1980ஆம் ஆண்டில் ஜிம்பாவே விடுதலை பெற்றது. வியட்நாம் போர் 1975ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. ஆனால் அந்த நாட்டின் நிலம் வேதியல் குண்டு வீச்சுகளினால் நச்சுத் தன்மை அடைந்திருந்தது. ஆப்கானிஸ்தான், நிகரகுவா மற்றும் கிரனடா ஆகிய மூன்று ஏழை நாடுகளில் புரட்சிகள் நடந்தன. ஆனால் அவை நிலைப்பெற்றிடும் முன்பாக முறியடிக்கப்பட்டன. வங்க தேசத்திலும், சாட், பாகிஸ்தான், ஈராக், தென் கொரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் ஆட்சிகள் கவிழ்க்கப்பட்டன. இந்த எல்லா இடங்களிலும் அமெரிக்காவின் கொடும் கரங்கள் இருந்தன.

1946 – 1949 ஆண்டுகளில் கிரேக்க நாட்டில் பாசிஸ்டுகள் இடதுசாரிகளை ஒடுக்கினார்கள். இந்த அழித்தொழிப்பினை அமெரிக்கா தனது ஊடகங்களின் பலத்தைக் கொண்டு மறைத்தது. இந்தோனேசியாவில் இடதுசாரிகளும், இடதுசாரி ஆதரவாளர்களும் 1965 ஆம் ஆண்டில் தொடங்கி பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டார்கள். ஆம். இந்த இன அழிப்பில் 10 லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள். இந்த காலகட்டம் தொடர்பான ஆவணங்களை முழுமையாக வெளியிட அமெரிக்கா மறுப்பு தெரிவிக்கிறது. இருப்பினும், ஜகார்த்தாவில் இருந்த அமெரிக்க தூதரகத்திற்கு நடப்பவை தெரிந்தே இருந்தன என்பதை இந்த நூல் எடுத்துக்காட்டுகிறது.

குவாடேமலாவிலோ அல்லது இந்தோனேசியாவிலோ அல்லது தெற்கு வியட்நாமில் செயல்படுத்தப்பட்ட ஃபீனிக்ஸ் முன்னெடுப்புகளோ, இடதுசாரிகளை அழித்தொழிப்பதற்கு உள்ளூர் சுயநல சக்திகளையும், ராணுவ கூட்டாளிகளையும் அமெரிக்காவே தூண்டியது.

உலகம் தழுவிய வர்க்கப்போர்

ஆம்!. நடந்துகொண்டிருப்பது தெள்ளத் தெளிவாகவே ஒரு வர்க்கப் போர் தான். உலகம் முழுவதுமே அது உழைக்கும் மக்களுக்கு எதிராக தனது துப்பாக்கியை நீட்டிக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் நடக்கும் கனிம வளச் சுரண்டல்களை எதிர்த்து போரிடும் மக்களை  போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய பெயர்களில் முத்திரையிடுவதன் மூலம் தங்கள் சுரண்டலுக்கு எவ்வித ஆபத்தும் இல்லாமல் தடுத்துக் கொள்கிறார்கள்.

மன்னர்கள், தங்கள் விருப்பப்படி எதையும் செய்துகொள்வதற்கான ‘புனித உரிமையை’ கடவுள் வழங்கியிருப்பதாக பழங்கால கோட்பாடு ஒன்று உண்டு. அப்படிப்பட்ட ‘புனித உரிமை’ கொண்டிருப்பவர்களாகவே ஏகாதிபத்தியம் தன்னை கருதிக் கொண்டு இயங்குகிறது என்பதை ‘வாசிங்டன் தோட்டாக்கள்’ விளக்குகிறது.அவர்களுடைய தாரக மந்திரம் இதுதான்,‘கம்யூனிசத்தைக் காட்டிலும் பிற்போக்குத்தனம் சிறந்தது.’

சில விமர்சனங்கள்

கடும் உழைப்பின் பலனாக வெளிவந்திருக்கும் இந்த நூல் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் அவசியத்தை விளக்குகிறது. அதே சமயத்தில், வீழ்த்தப்பட்ட புரட்சிகளின் கதையையே மையப்படுத்தி இருப்பது ஒரு குறையாகும். இந்தியா போன்ற நாடுகளிலும் ஏகாதிபத்திய திட்டங்கள் செயல்படுவதை இந்த நூலின் ஒரு பகுதியாக கொண்டுவந்திருக்க வேண்டும். அது இந்திய வாசகர்களுக்கு நூலை கூடுதலாக நெருக்கமாக்கியிருக்கும். சோசலிச சக்திகளின் தவிர்க்க முடியாத பாத்திரத்தை விளக்கும் இந்த நூலில் அதற்கென தனியாக ஒரு பகுதி இல்லாததும், கட்டுரையாளரின் பார்வையில் குறைகளாக படுகின்றன. இவ்வளவு சிறப்பான நூலை நமக்கு கொடுத்திருக்கும் விஜய் பிரசாத் பாராட்டுக்குரியவர். தமிழில் அதன் பொருள் குன்றாமல் நமக்கு அளித்துள்ள மொழிபெயர்ப்பாளர் பணியும், பாரதி புத்தகாலயத்தின் பணியும் பாராட்டுக்குரியது.

வழிகாட்டும் கேரளம் : கூட்டுறவின் மூலம் ஒரு மாற்று !

ஆசிக் அலி, அங்சுமன் சர்மா

(ஜாகோபின் இதழில்வெளியான ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்)

குரல்: தேவி பிரியா

இந்திய பொருளாதாரத்தினை, நவ-தாராளமய திசை வழியில், செலுத்திய கடந்த 30 ஆண்டுகளில் வேளாண் சமூகங்களும், ஊரக ஏழைகளும் அதன் கடுமையான உடன் விளைவுகளை எதிர்கொண்டுவருகிறார்கள். நமது நாட்டை ஆளும் கோமான்கள், தாராள வர்த்தக கொள்கைகளை திணித்ததுடன், வேளாண்துறைக்கான அரசு செலவினங்களையும்,மனியங்களையும் குறைத்தார்கள் மேலும் பொதுக் கொள்முதல் அமைப்பை பலவீனப்படுத்தியுள்ளார்கள். வேளாண் வர்த்தகத்தில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள், இடுபொருட்களின் விலைகளையும், விளைபொருட்களின் விலைகளையும் தீர்மானிப்பதுடன் ஒட்டுமொத்த உற்பத்தியையும், மதிப்புக் கூட்டல் மற்றும் சந்தைப்படுத்துவதையும் மேற்கொள்கின்றன. இவ்வகையில், கார்ப்பரேட் மயமாதல் போக்கு வேளாண் துறையில் பொதுவாக நிலவுகிறது.

நவ-தாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள் 1991 ஆம் ஆண்டில் தொடங்கின. அப்போதிருந்தே வேளாண்மையை சார்ந்து வாழும் சமூகங்கள் தொடர்ந்து இழப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. இந்திய மக்கள் தொகையில் வேளாண்மையை சார்ந்து வாழும் மக்களின் சதவீதம் 1991ஆம் ஆண்டில் 59 ஆக இருந்தது, 2011ஆம் ஆண்டில் அது 54.6 ஆகியது. 2019-2020 காலகட்டத்தில் இது 45.6 சதவீதமாகியுள்ளது. வேளாண்மை சார்ந்த, மேற்குறிப்பிட்ட மக்கள் தொகையிலும் கூட,சாகுபடியாளர்களின் சதவீதம் 59.7 (1991ஆம்ஆண்டில்) என்பதிலிருந்து 45.1 என்பதாக (2011ஆம் ஆண்டில்) குறைந்துவிட்டது.

பெருந்தொற்றிற்கு முன்பே:

கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்குவதற்கு முன், 2019ஆம் ஆண்டிலேயே, வேளாண்மை சார்ந்த ஒரு குடும்பத்தின் சராசரி கடன் ரூ.74 ஆயிரத்து 121 என இருந்தது. விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகளின் வருமானத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கும் இப்போதைய பின்னணியில் நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. தீவிரமான வேளாண் நெருக்கடி அதிகரித்துள்ளதனால், வேளாண்மை சார்ந்த குடும்பங்களில் ஒரு நாளைக்கு குறைந்தது 30 தற்கொலைகள் நடக்கின்றன. ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு விவசாயி வேளாண்மையைக் கைவிட்டு வெளியேறுகிறார்.

பணப்பயிர் விவசாயிகளிடையே தற்கொலை விகிதங்கள் அதிகமாக உள்ளன. அவர்கள்தான் நவதாரளமய பொருளாதார சூழலில் மோசமான இடர்களை எதிர்கொள்கிறார்கள். உலகமயமான சந்தைச் சூழல் காரணமாக ஏற்படும் தாறுமாறான விலை நிர்ணயம், உற்பத்தி பொருட்களின் விலையேற்றம், கடுமையான கடன் நிலைமைகள் என அனைத்தும் ஒன்றாக அவர்களின் வாழ்க்கைநிலையை தாழ்த்துகின்றன.

காற்றில் பறந்த வாக்குறுதி:

நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக அரசாங்கத்தின் கொள்கைகளால், 2014 ஆம் ஆண்டு முதல் வேளாண் நெருக்கடி மேலும் தீவிரமடைகிறது. அதிகாரத்தில் உள்ள இந்த இந்துத்துவக் கட்சி,குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவோம் என்ற தனது தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டுவிட்டது. (உற்பத்திச் செலவில் இருந்து குறைந்தபட்சம் 50 சதவீதம் கூடுதலான விலையை கொடுப்போம் என்று அவர்கள் வாக்குறுதியளித்திருந்தனர்). மேலும், ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் வேளாண்மைத் துறைக்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்படுகின்றன.

2016ஆம் ஆண்டில் மோடி அரசாங்கம் திடீரென,நோட்டுக்கள் செல்லாமல் ஆக்கும் திட்டத்தை முன்னெடுத்து, புழக்கத்தில் இருந்த நோட்டுக்களை திரும்பப் பெற்றார்கள். இதன் காரணமாக உள்ளூர் சந்தைகளும்,வேளாண் கடன் பின்னல்களும் மோசமான தாக்கம் பெற்றன. பொதுத்துறை வங்கிகளில் இருந்து கிடைக்கக் கூடிய நிறுவனக் கடன்களும் கூட வேளாண்மை சார்ந்த ‘தொழில்களை’ நோக்கி சாயத்தொடங்கின. மோடியின் தலைமையை பின்பற்றி, பாஜக ஆட்சி நடத்தும் மாநில அரசாங்கங்களும், லாபத்தைக் குவிக்கும், ஊக நில வணிகத்தில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள், வேளாண் நிலங்களை கைப்பற்றுவதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

இந்திய தொழிலாளர் சட்டங்களை அரசாங்கம் மாற்றியமைத்தது; சங்கமாகச் சேர்வதற்கான தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்பட்டன; 8 மணி நேர வேலை என்பது 12 மணி நேரமாக உயர்த்தப்பட்டது; தொழிலாளர்களுக்கு இதுவரை இருந்த பாதுகாப்புகளும் உரிமைகளும் பறிக்கப்பட்டன. மேலும், 2020ஆம் ஆண்டில் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான மூன்று வேளாண்சட்டங்களை அரசாங்கம் வேக வேகமாக கொண்டுவந்தது. இப்போது அந்த சட்டங்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்ட இயக்கம், விவசாயிகளை ஓட்டாண்டிகள் ஆக்கி, கார்ப்பரேட்டுகள் கையில் விவசாயத்தைக் கொடுக்கும் போக்கிற்கு எதிரான எழுச்சியாகும். இப்படியான பின்னணியில்,கேரளாவின் அனுபவங்கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை பெறுகின்றன.

கேரள முன்மாதிரி:

இந்திய ஒன்றிய அரசின் எதிர்ப்பையும், நாடு முழுவதும் நடந்துவரும் வலதுசாரி திருப்பத்தையும் எதிர்கொண்டு, இடதுசாரிகள் அதிகாரத்தை பிடித்துள்ள ஒரே மாநிலமாக கேரளம் உள்ளது. இந்த மாநிலம் வெகுமக்கள் செயல்பாடுகளாகும், தொழிலாளர் ஒற்றுமையினாலும், வலுவான சமூக-ஜனநாயக வளர்ச்சி நெறிமுறைகளினாலும் செழித்த மாநிலம் ஆகும்.

மக்களை உள்ளடக்கிய இந்த மாநிலத்தின் கூட்டுறவு இயக்கமானது, தொழிலாளர் இயக்கத்துடனும், பிற சமூக சீர்திருத்த இயக்கங்களுடனும் வலுவான பிணைப்புக் கொண்டதாக, சமுதாய ரீதியான முயற்சிகளை முன்னெடுப்பதில் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்துள்ளது. பிரம்மகிரி மேம்பாட்டு சங்கம் அப்படிப்பட்ட முயற்சிகளில் ஒன்று. நவ தாராளமயத்தினால் உருவாகிய வேளாண் நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தில் கருப்பெற்றது இந்த முயற்சி.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட நவ தாராளமய திருப்பத்தின் காரணமாக, பணப்பயிர்கள் சர்வதேச சந்தையுடன் இணைக்கப்பட்டன. அவற்றின் விலை தாறுமாறாகியது. இதனால் கேரளாவின் வேளாண் பொருளாதாரத்தில் பாரதூரமான தாக்கங்கள் ஏற்பட்டன. ஏற்றுமதி சார்ந்த பணப்பயிர்களான காபி, தேயிலை, மிளகு, ஏலக்காய், பாக்கு கொட்டை மற்றும் ரப்பர் ஆகியவைதான் கேரளாவின் மொத்த சாகுபடிப் பரப்பில் 60 சதவீதத்தில் பயிர் செய்யப்படுகின்றன. வயநாடு மாவட்டத்தில் சாகுபடியாகும் முக்கிய பயிர்கள் மிளகும்,காபியும் ஆகும். 1997-98 முதல் 2003-04 வரையிலான காலகட்டத்தில் காபியின் விலை 59 சதவீதமும் மிளகின் விலை 69 சதவீதமும் வீழ்ச்சியை சந்தித்தது. இந்த விலை வீழ்ச்சிகளின் காரணமாக விவசாயிகள் வட்டிக்காரர்களிடம் பெற்றிருந்த கடன்களை திரும்ப செலுத்த முடியவில்லை. இந்த கடன் வலையில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய மதிப்புமிக்க நிலங்களை இழந்தார்கள்.

10 ஆயிரம் தற்கொலைகள்:

வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட வறட்சி சூழலும், பயிர் நோய்களும், அங்கே இந்த நிலைமையை மேலும் மோசமாக்கின. துயரம் சூழ்ந்த கடுமையான இந்த சூழலின் காரணமாக அந்த மாவட்டத்தில் விவசாயிகள் தற்கொலை ஒரு துயரஅலையாக எழத் தொடங்கியது. 1996-2005 காலகட்டத்தில் 10 ஆயிரம் தற்கொலைகள் நடந்திருந்தன.

இந்தப்பின்னணியில்தான் சுல்த்தான்பத்தேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வர்க்கீஸ் வைத்தியர் (கம்யூனிஸ்ட்), உள்ளாட்சி நிர்வாகங்களின் பிரதிநிதிகளின் கூட்டத்தை வயநாடு மாவட்ட அளவில் கூட்டி, இந்த நெருக்கடியை எதிர்கொள்ள சாத்தியமான வழிமுறைகளைப் பற்றி விவாதித்தார். அதே நேரத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கமும், குடிமைச் சமூக அமைப்புகளும் ஒன்றிணைந்து தன்னார்வலர் குழு ஒன்றை ஏற்படுத்தினார்கள். அவர்கள்,வயநாடுமாவட்டத்தின் விவசாய சமூகங்களோடு உரையாடி பொருத்தமான திட்டத்தை வகுத்தார்கள்.

விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்குமான சந்தை:

இந்த கூட்டு முயற்சியில் விளைந்ததுதான் பிரம்மகிரி பண்ணை திட்ட அறிக்கை. வர்க்கீஸ் வைத்தியர், இந்த அறிக்கையை சட்டமன்றத்தில் முன்வைத்தார். வயநாடு மாவட்டத்தில் உள்ள பண்ணைகளுக்கு உதவி செய்வதும், பதப்படுத்தும் அமைப்பைக் கொண்ட ஒரு இறைச்சிக் கூடத்தை ஏற்படுத்துவதும் அந்த அறிக்கையில் முன்மொழியப்பட்டது. இடது ஜனநாயக முன்னணி அமைச்சரவை, இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டதுடன் ரூ.25 லட்சம் நிதி கொடுத்தது. 1999, மார்ச் 31 ஆம் தேதியன்று இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

வேளாண்-தொழில்துறை நடவடிக்கைகளை நவீனப்படுத்தும் முறைகளைப் பின்பற்றி, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் பிரம்மகிரி மேம்பாட்டு சங்கம் இயங்கியது. கேரளத்திலும்,அருகமை மாநிலங்களிலும் இனப்பெருக்க பண்ணைகள், கால்நடை பண்ணைகள், தீவன ஆலைகள் ஆகியவைகளைத் தொடர்புகொண்டு ஒருங்கிணைத்ததன் வழியாக தங்களுடைய சங்க உறுப்பினர்களுக்கு குறைந்த செலவில் மூலப்பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்தது. கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கியதுடன் அவை இறந்து போனால் காப்பீட்டிற்கும் வழி செய்யப்பட்டது.

விவசாயிகளிடமிருந்து கோழிகளையும், கால்நடைகளையும் நியாயமான விலையில் கொள்முதல் செய்தார்கள். கொள்முதல் செய்யப்பட்ட வேளாண் பொருட்களைக் கொண்டு உறையவைத்த இறைச்சி, உலர்த்திய இறைச்சி, கோழிக்கறியில் செய்த கட்லெட், மாட்டிறைச்சியில் செய்த கட்லெட், ஊறுகாய், பஜ்ஜி, நக்கெட், சாசேஜ் மற்றும் வேஃபர் ஆகியவைகளை பலவகை இறைச்சிக் கூடத்தில் தயாரித்து சந்தைப்படுத்தினார்கள். இந்த கூட்டுறவு சங்கத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள், ஒரு முறைக்கு தலா 2,500 முதல் 3,000 கோழிகளை வளர்க்கிறார்கள். இப்படி ஆண்டுக்கு ஆறுமுறை கோழிகள் கொள்முதல் நடக்கிறது. கிலோ ரூ.11 என்ற விலையில் அவற்றை சங்கம் வாங்கிக் கொள்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.31,500 முதல் 37,000 வரை வருமானத்தை உறுதி செய்கிறார்கள்.

தேயிலை, காபிக் கொட்டை மற்றும் சமுதாய வேளாண்மையில் விளைவிக்கப்படும் பொருட்களை கூட்டுறவு சங்கம் கொள்முதல் செய்கிறது. ஏராளமான விவசாயிகள் இதில் ஒரு சங்கிலித்தொடராக இணைந்துள்ளார்கள். விவசாயிகளும், விவசாயதொழிலாளர்களும் கூட்டான உரிமை பெற்ற விரிவான சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, பிரம்மகிரி மேம்பாட்டு சங்கத்தின் மலபார் இறைச்சிப் பிரிவு மட்டும் 110 விற்பனைக் கூடங்களை வைத்திருக்கிறது.

போட்டிக்கு மாற்றாக கூட்டுறவு:

பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் விலை உறுதி செய்யப்படுகிறது. இடைத்தரகர்களின் சுரண்டல் ஒழிக்கப்படுகிறது. விற்பனைச்சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து தப்ப முடிகிறது. பெருந்தொற்று காலத்தில், ஆன்லைன் விற்பனை வாய்ப்புக்களையும் அவர்கள் பயன்படுத்தினார்கள். விவசாயிகள் வர்த்தக சந்தை (எஃப்.டி.எம்) ஒன்றை உருவாக்கியதன் மூலம் பிரம்மகிரி மேம்பாட்டு சங்கத்திற்கு சொந்தமான கடைகளில் இருந்து வயநாடு மாவட்டத்தில் உள்ள வீடுகளுக்கு பொருட்கள் நேரடி விநியோகம் செய்யப்பட்டன.

பிரம்மகிரி மேம்பாட்டு சங்கத்தின் பின்னணியாக அமைந்த கம்யூனிஸ்ட் விவசாய சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடைய தலைவர்கள், இந்த முயற்சியினை வர்க்கப் போராட்டத்தோடு பின்னிப் பிணைந்த சமூகக் கூட்டுறவாக முன்னெடுத்தார்கள். எனவே விவசாய சமூகங்களின் நலனே லாபத்தை விடவும் முதன்மை பெற்றது. மூலப் பொருட்கள் வாங்கவும், கட்டமைப்பு வசதிகளுக்கும், சந்தைப்படுத்துவதற்கும் ஆகும் செலவுகள் போக, மீதமுள்ள உபரியைக் கொண்டு விவசாயத்தை நவீனப்படுத்தவும், கூட்டுறவு சந்தையை விரிவாக்கவும் எடுக்கப்படும் முடிவுகள் ஜனநாயக முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. வேளாண் உற்பத்தியாளர்களும், தங்களிடம் உள்ள உபரியினை நல்ல ஊதியமாகவும், கூடுதல் விலை கொடுப்பதன் மூலமும் பகிர்ந்துகொள்கிறார்கள்.

அனுபவங்களில் கற்ற பாடம்:

இந்திய கூட்டுறவுச் சங்கங்களின் கடந்த கால அனுபவங்களை பார்க்கும்போது, அவை அரசின் கட்டுப்பாட்டினாலும், அதிகாரத்துவம் காரணமாகவும் – கூட்டுறவு சங்கங்களின் தலைமைப் பொருப்பினை ஆதிக்க சாதியினரும், உள்ளூர் பணக்காரர்களும், அரசியல் மேட்டுக்குடியினரும் கைப்பற்றியதன் காரணமாகவும் சீரழிவைச் சந்தித்தன. இவைகளில் இருந்து பிரம்மகிரி சங்கம் பாடங்களைக் கற்றுக் கொண்டது. பணியாளர்களின் சுய மேலாண்மையை அடிப்படையாகக் கொண்டதாக இயங்குகிறது. முடிவெடுப்பதில் குறுக்கு வெட்டு வழிமுறையை முன்னெடுக்கிறது. இவ்விதத்தில் உறுப்பினர்கள் தங்கள் அன்றாட செயல்பாடுகளை முடிவு செய்கிறார்கள். கொள்கை முடிவுகளையும் மேர்கொள்கிறார்கள். இது உற்பத்தி உறவுகளில் நேர்மறையான மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது. மேலும் பணியிடங்களில் வர்க்கங்களிடையே ஒருமைப்பாட்டு உணர்வை மேம்படுத்துகிறது.

அரசின் தலையீட்டில் சிக்காத வகையில் தன்னாட்சியை உறுதி செய்வதற்காக இந்த சங்கம் தொண்டு நிறுவன சட்டங்களின் விதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை. இதன் மூலம் பிரம்மகிரி மேம்பாட்டு சங்கமானது சமூக இயக்கங்களோடும், கூட்டுறவு சங்கங்களோடும், உள்ளாட்சி நிர்வாகங்களோடும் அணி சேர்ந்து ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்துவதற்கான நெகிழ்வுத்தன்மைப் பெற்றுள்ளது. அதே சமயம் தனது தனித்தன்மையையும் பாதுகாத்துக்கொள்கிறது.

வயநாடு மாவட்டத்தில்,குடும்பஸ்ரீ சுய உதவிக் குழுக்களோடும், பிற அரசு திட்டங்களோடும் இணைந்து பிரம்மகிரி மேம்பாட்டு சங்கமும் பணியாற்றுகிறது. இப்பணிகளை வறுமை ஒழிப்புத்திட்டத்தின் ஒரு பகுதியாக 1998 ஆம் ஆண்டில் கேரள இடது ஜனநாய முன்னணி அரசு தொடங்கியது. 2017-18 ஆண்டுகளில், குடும்பஸ்ரீ சுய உதவிக் குழுக்களின் மூலம் 60 ஆயிரம் காய்கனி விதைப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன. 557 கூடுதல் வேலை நாட்கள் உருவாக்கப்பட்டன. 2018-19 ஆண்டில், பிரம்மகிரி சங்கம் 5 லட்சம் காய்கனி விதைநாற்றுக்களை வயநாடு மாவட்டத்தின் உள்ளாட்சிகளுக்கு வழங்கியுள்ளது.

இடைத்தரகர்கள் இல்லை:

இந்த கூட்டுறவின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது, மாநிலத்தில் உள்ள இடதுசாரி அரசின் தொடக்க கால ஆதரவாகும். 2.7 கோடி ரூபாய் நிதி உதவியை அரசாங்கம் வழங்கியது. பிரம்மகிரி சங்கம் தனது உறுப்பினர்களிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் 6.3 கோடி ரூபாய் நிதியை திரட்டியது. இப்போது, இந்த சங்கத்திற்கு கூடுதலாக நிதி வழங்குவதாக அரசாங்கம் உறுதி கொடுத்துள்ளது.

2018 ஆம் ஆண்டில்,பிரம்மகிரி சங்கமும் இடது ஜனநாயக முன்னணியின் அமைச்சரவையும் ‘கேரளா கோழிக்கறி’ திட்டத்தை உருவாக்கினார்கள். கறி உற்பத்தியில் தன்நிறைவை எட்டுவதுதான் அந்த திட்டத்தின் நோக்கம். கோழிப்பண்ணைகளை ஊக்கப்படுத்துவது, விரிவான கூட்டுறவு பண்ணைகளை உருவாக்குவது என திட்டமிட்டார்கள். விரிவான கூட்டுறவு பண்ணைகளை உருவாக்கும் புதிய நவீன வடிவிலான பரிசோதனை முயற்சியாக அது அமைந்தது. உயிருடன் கோழிக்கறி ரூ.180 முதல் 210 வரை விற்பனையாகிறது. பிரம்மகிரி கேரளா கோழிக்கறி ரூ.140 முதல் 155 வரை விலையில் விற்கப்படுகிறது. சந்தையில் இடைத்தரகர்கள் இல்லாததால் இது சாத்தியமாகிறது.

சுரண்டலுக்கு எதிராக:

பிரம்மகிரி மேம்பாட்டு சங்கத்தில் 13 ஆயிரத்து 500 உறுப்பினர்கள் உள்ளார்கள். அவர்களில் 19 சதவீதம் பேர் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ஆவர். சமூக கூட்டுறவின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் இணைக்கப்பட்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்தது ஒரு லட்சம் ஆகும். 2020-21 ஆண்டு காலத்தில் இதன் உறுப்பினர்களுடைய மொத்த வரவு செலவு ரூ.32.5 கோடிகளாக இருந்தது. இவ்வகையில் விவசாயிகள் மீதான சுரண்டலை பண்ணை அளவில் மட்டுமல்லாது இடை நிலை நிறுவனங்களிலும் (mid-level institutions) எதிர்கொள்கிறார்கள். சில்லறை வணிகம், மாநிலம் முழுவதும் விநியோகித்தல் மற்றும் சந்தைப்படுத்துதலின் மூலம் – முதலாளித்துவ சந்தை உறவுகளால் எழும் அநீதிகளை எதிர்கொள்கிறார்கள்.

பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விவசாய நிலங்களை இழப்பதற்கு வழிவகுக்கும் நவ தாராளமயத்தின் ஒப்பந்த விவசாய முறையிலிருந்து மாறுபட்டதும், நடைமுறைச் சாத்தியமானதுமான ஒரு முன்னுதாரணத்தை பிரம்மகிரி மேம்பாட்டுச் சங்கம் வழங்குகிறது. இருப்பினும், இந்திய விவசாய-முதலாளித்துவத்தின் சமனற்ற வளர்ச்சியை கவனத்தில் கொண்டிருக்கும் விவசாயிகள் இயக்கம், இப்போதுள்ள விவசாய நெருக்கடிக்கான ஒரே தீர்வாக சமூக கூட்டுறவுகளை மட்டுமே முன்வைக்கவில்லை. வேளாண் துறையில் நடக்கும் கார்ப்பரேட் பெரு நிறுவனங்களின் சுரண்டலுக்கு எதிர்ப்பை கட்டமைக்கும் வழிமுறைகளில் இதுவும் ஒன்று என்று பார்க்கிறார்கள். இவ்வகையில், முதலாளித்துவ அமைப்பிற்குள், அதற்கு எதிராக முன்னெடுக்கும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சமூக கூட்டுறவுகள் அமைகின்றன. விவசாயிகளுக்கும், சிறு உற்பத்தியாளர்களுக்கும் இந்த ஏற்பாட்டினால் உடனடி நிவாரணம் கிடைக்கிறது. மேலும் இது, முதலாளித்துவத்தை வீழ்த்தி மேற்கொள்ளவிருக்கும் பொருளாதார மறுகட்டுமானத்தின் (post-capitalist economic restructuring – என்பதை) முக்கியமான பகுதியாகவும்அமைகிறது.

முடிவாக:

ஒட்டுமொத்தத்தில், பிரம்மகிரி மேம்பாட்டு சங்கத்தின் வழியாக விவசாயிகளைத் திரட்டுவதுடன் உற்பத்தியிலும், கொள்முதலிலும், சரக்கு உற்பத்தியிலும் பணியாற்றும் வேளாண்மை சார்ந்த தொழிலாளர்களைத் திரட்டுவதும் சாத்தியமாகியுள்ளது. இந்திய வேளாண் துறையில் இடைத்தரகர்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் அமைத்துள்ள சுரண்டல் ஆதிக்க வலைப்பின்னலுக்கு இது சவால் விடுக்கிறது. தினக்கூலி தொழிலாளர்கள் என்ற நிலையில் இருக்கும் வேளாண் தொழிலாளர்களை, நிரந்தர மாத வருமானம் கொண்ட நவீன விவசாயிகளாக ஆக்குகிறது. நவதாராளமய கொள்கைகளின் காரணமாக, ஊரக இந்தியாவில் விவசாயிகள் ஓட்டாண்டியாக்கப்படும் போக்கினை இது சிறப்பாக எதிர்கொண்டுள்ளதுடன், வயநாடு மாவட்டத்தில் வேளாண்மையை நவீனப்படுத்தவும், நவீன வேளாண்மை சார்ந்த தொழிலாளி வர்க்கம் உருவாகவும் வழிவகுத்துள்ளது.

முற்போக்கு இயக்கங்களுடைய அரசியல் போராட்டங்களின் பிரிக்க முடியாத பகுதியாக இருப்பது தொழிலாளி-விவசாயி ஒத்துழைப்பும், ஒருமைப்பாடும் ஆகும். தற்போதிருக்கும் கொடுமையான வேளாண் நெருக்கடி சூழலிலும் கூட, மேற்சொன்ன அந்த ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் முன்னெடுப்பதன் மூலம், மக்களின் வாழ்வாதாரத்திற்கான வருவாயை உறுதி செய்யும் சாத்தியம் கொண்டதாக, விவசாயத்தை மாற்றியமைக்க முடியும் என்பதை பிரம்மகிரி மேம்பாட்டு சங்கம் உதாரணமாக காட்டியுள்ளது.

இந்திய சமூகத்திலும், அரசியலிலும் காணப்படும் பிற்போக்குத் தனங்களின் காரணமாக, நமது நாட்டின் பெரும்பான்மை வர்க்கங்கள் ஒரு கடுமையான கால சூழலுக்குள் நுழைந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், போட்டியும், சுரண்டலும் அதிகரித்த நிலைமைக்கு மாற்றான – ஒருமைப்பாட்டையும் ஒத்துழைப்பையும் கொண்ட ஒரு கட்டமைப்பை உருவாக்க முடியும் என்ற – நம்பிக்கையை சமுதாய சிந்தனையில் விதைப்பதற்கு இந்த கேராள முன்மாதிரி உதவும். முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் நம்பிக்கையையும், ஊக்கத்தையும் வளர்த்துக் கொள்ள இந்த முயற்சி துணை செய்யும்.

தமிழில்: இரா.சிந்தன்

கியூபா: புரட்சியைப் பாதுகாக்கும் புதிய தலைமுறை

சிந்தன்

கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின்  8 வதுமாநாட்டினை ‘தொடர்ச்சியின் மாநாடு’ என்று அழைக்கிறார்கள். உலக முதலாளித்துவ ஊடகங்களெல்லாம், ‘காஸ்ட்ரோக்களின் காலம் முடிந்தது’ என்று செய்தி போட்டு மகிழ்ந்தபோது, ‘தொடர்ச்சி’ என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்தியதன் நோக்கம், மிக நன்றாகவே புரிகிறது. சோசலிச லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுக்கிறோம் என்று பெருமிதத்துடனே அவர்கள் அறிவித்துள்ளனர்.

2021 ஏப்ரல் 16 தொடங்கிய மாநாடு 19 அன்று நிறைவடைந்தது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, கட்சியின் முதன்மைச் செயலாளர் மிகுவெல்டியாஸ்-கேனல் இவ்வாறு பேசினார். “தயங்காமல் சொல்வேன். உண்மையான புரட்சிகர போராட்டத்தில், வெற்றி என்பது கற்றுக் கொண்டே இருப்பதுதான். முன்பே பரிசோதிக்கப்படாத ஒரு பாதையை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். புதியவைகளை கண்டறிந்து கொண்டே இருக்க வேண்டும். கொள்கை உறுதியை எவ்வகையிலும் கைவிட்டுவிடக் கூடாது. அதே சமயம், மாற வேண்டியவைகளை மாற்றியமைக்க வேண்டும். வீழ்த்த முடியாத நம் தலைவர் (ஃபிடல் காஸ்ட்ரோ) நமக்கு கொடுத்துச் சென்றிருக்கும் புரட்சியின் கருதுகோளில் இருந்து மாறாமல் பயணிக்க வேண்டும். இந்த சவால் நம் முன் உள்ளது. கட்டுப்பெட்டியான சிந்தனைப் போக்குகளையும், தவறிழைத்துவிடாது இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வையும் சற்று தளர்த்திக் கொண்டு, நமது பாதையில் முன்னேறுவோம்.”

காஸ்ட்ரோக்களின் காலம் தொடர்கிறது. இன்னும் இளமைத் துடிப்புடன், புதுமைகளைக் கைக்கொண்டு என்பதுதான் இந்த மாநாடு வெளிப்படுத்தியிருக்கும் தெளிவான அறிவிப்பு.

புதிய தலைமுறை தலைவர்கள்:

கியூபாவில் புரட்சி நடைபெற்றபோது பிறந்திருக்காத  தலைமுறையைச் சார்ந்தவர் மிகுவெல் டியாஸ்-கேனல். மின்னணுவியல் பொறியாளர். இளம் கம்யூனிஸ்ட் லீக் மூலமாக வளர்ந்தார். நிகரகுவா படைத்தலைவராக இயங்கியுள்ளார். ஒவ்வொரு இளைஞரும் ராணுவ கடமையாற்ற வேண்டும் என்பதை பின்பற்றி 3 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். கியூபாவின் இரண்டு பிராந்தியங்களில் முதன்மைச் செயலாளராக செயல்பட்டுள்ளார். உயர்கல்வித்துறைக்கு அமைச்சராக இருந்துள்ளார். கடந்த 2003ஆம் ஆண்டு அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக தேர்வானார். மூன்று ஆண்டுகளுக்கு முன் கியூப சோசலிச குடியரசின் தலைவராக தேர்வானார். இப்போது கட்சியின் முதன்மைச் செயலாளராகவும் தேர்வாகியுள்ளார். புதிய அரசியல் தலைமைக்குழுவில் 3 பெண்கள் உட்பட 14 பேர் உள்ளனர்.

இளைஞர்களும் புதிய மாற்றமும்:

முன்பு ஃபிடல் காஸ்ட்ரோ செய்ததைப் போலவே, இந்த மாநாட்டில் ரால் காஸ்ட்ரோவும் தனது ஓய்வினை அறிவித்தார். வேறு எந்த கூடுதல் பொறுப்பையும் எடுக்கவில்லை. ‘ஒரு சாதாரண புரட்சிகரப்போராளியைப் போலவே நானும் ஓய்வு பெறுகிறேன். நான் உயிரோடு வாழும் காலம் வரையில் என் கால்களில் வாழ்வேன். தந்தை நாட்டையும்,புரட்சியையும்,சோசலிசத்தையும் முன்னணியில் நின்று காப்பேன்’ என அவர் அறிவித்தார்.

திட்டமிட்ட வகையில் இளைஞர்களை வளர்த்தெடுத்து உரிய பணிகளில்  அமர்த்திவிட்டே அவர்கள் இதைச் செய்துள்ளனர்.

கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இளைஞர்களை அமர்த்துவது ஒரு தொடர் பணியாகும். இதற்காக அமைப்பு ரீதியாக சில ஏற்பாடுகளும் அவசியம். கியூப கம்யூனிஸ்ட் கட்சி தனது மத்தியக்குழுவிற்கு அதிகபட்ச வயது 60 என நிர்ணயித்தது. அதே போல  அரசியல் தலைமைக்குழுவிற்கு வயது வரம்பு 70 ஆகும். கட்சியின் மத்தியக்குழுவில் பெண் பிரதிநிதிகளின் சதவீதம் கிட்டத்தட்ட 50 ஆகும்.

இந்த மாநாட்டில், கொரோனா கட்டுப்பாட்டிற்காக 300 பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொண்டனர். 58 ஆயிரம் கிளைகளில் உள்ள 7 லட்சம் கட்சி உறுப்பினர்களை அவர்கள் பிரதிநிதித்துவம் செய்தனர். கியூப கம்யூனிஸ்ட் கட்சியில் இப்போது 27 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். 2006ஆம் ஆண்டு வாக்கில் கட்சி உறுப்பினர்கள் குறையக் கூடிய சூழலை கட்சி கண்டுணர்ந்தது. இப்போது அந்த நிலைமை முடிவிற்கு வந்துவிட்டது. அதே சமயம், கட்சி உறுப்பினர்களின் சராசாரி வயது உயர்ந்துள்ளது. 42.6% கட்சி உறுப்பினர்களின் வயது 55க்கும் அதிகமாகும். அதே சமயம் கட்சியின் முழுநேர ஊழியர்களுடைய சராசரி வயது 42.5 ஆக உள்ளது என்கிறது மாநாட்டு அறிக்கை.

8வது மாநாடு 4 நாட்கள் நடந்தது. மாநாட்டு ஆவணங்கள் முன்கூட்டியே விநியோகிக்கப்பட்டன. மண்டல அளவில் பிரதிநிதிகளால் விவாதிக்கப்பட்டன. இந்த ஆவணங்கள் தத்துவத்தளத்திலும், மக்களின் சமூக பொருளாதார நிலை குறித்தும், கட்சியின் முன்னணி பணியாளர்கள் கொள்கை குறித்தும், பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வது மற்றும் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வது ஆகியவைகளை உள்ளடக்கியிருந்தன.

அரசமைப்பில் மாற்றங்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் கியூபா தன்னுடைய அரசமைப்புச் சட்டத்தை மாற்றியமைத்தது. அரசமைப்பின் புதிய மாற்றங்கள், அப்போதே பொது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டன. அரசியல் கட்டமைப்பிலும், பொருளாதார கட்டமைப்பிலும் செய்ய வேண்டிய இந்த மாற்றங்களை மக்கள் பரவலாக விவாதித்தார்கள். கட்சிக்குள்ளும் அனைத்து நிலைகளிலும் விவாதிக்கப்பட்டது. திருத்தங்கள் பெறப்பட்டன.

பிரதமர் என்ற பதவி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. குடியரசின் தலைவராக ஒருவர் இரண்டு ஐந்தாண்டுகள் மட்டுமே அதிகபட்சமாக தேர்ந்தெடுக்கப்பட முடியும். மக்கள் அதிகார தேசிய அவையின் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் இணைந்து கூட்டாக தலைமை தருவார்கள் என்பதாகஅரசமைப்புச் சட்டம் கூறுகிறது.

தனியார் முதலீடுகளுக்கு ஊக்கம்

கியூபா திட்டமிட்ட சோசலிச பொருளாதாரத்தை அடிப்படைக் கட்டமைப்பாக கொண்டுள்ளது. அதே சமயத்தில்,அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அரசியல் ரீதியாகவும்,பொருளாதாரத்திலும் தொடர்ந்து கியூபாவை தாக்கி வருகிறார்கள். சுமார் 60 ஆண்டுகளாக தொடரும் இத்தகைய தாக்குதலை எதிர்கொள்ள படைப்பூக்கம் மிக்க புதிய வழிமுறைகளை கியூபா பின்பற்ற வேண்டியுள்ளது. அதுதான் ஒரு குறிப்பிட்ட நாட்டில், குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் சோசலிசத்தை கட்டமைப்பதன் சவால் ஆகும்.

சோவியத் ரஷ்யா தனது நாட்டின் புதிய பொருளாதார கொள்கையை அமலாக்கி பரிசோதித்தது. இப்போதும் மக்கள் சீனமும், வியட்நாமும் பல்வேறு பரிசோதனைகளை தங்கள் நாடுகளில் மேற்கொள்கிறார்கள். கியூபாவும் அந்த அனுபவங்களை பரிசீலித்து, தனது நாட்டில் தனியார் முதலீடுகள் மற்றும் அன்னிய முதலீடுகளை சில பகுதிகளில் அனுமதிக்கிறது.

பல ஆண்டுகள் பொது விவாதத்திற்கு பிறகு 2016 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டன. 2030 வரையிலான கியூப சமூக பொருளாதார மேம்பாட்டு திட்ட கருதுகோள் உருவாக்கப்பட்டது.

உற்பத்திக்கு உதவும் வகையில் வேலை முறைகளை மாற்றியமைத்தல் அல்லது அழித்தல், அரசு அல்லாத துறைகளை விரிவாக்குவது, சுய வேலைவாய்ப்பு, கூட்டுறவு உட்பட விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத தொழில்களில் அதிகரிப்பது என்ற முடிவுகளை எடுத்தனர். அதே சமயம் மூலதன குவியல் உருவாகாமல் தடுக்க தொழில் உடைமையானது எண்ணிக்கை மற்றும் அளவுக் கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது. பயன்பாட்டில் இல்லாத காலியிடங்களை குத்தகைக்கு விடுவது, குத்தகைதாரர்களுக்கு நுண் கடன்களை வழங்குவது, உற்பத்தி பொருட்களை உணவு விடுதிகளுக்கும், தங்கும் விடுதிகளுக்கும் விற்க அனுமதிப்பது, போன்றவை சமீபத்தில் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளில் ஒன்றாகும்.

நலவாழ்வு, கல்வி, பாதுகாப்பு மற்று ஆயுதம் தொடர்பான நிறுவனங்கள், எவ்விதமான தனியார்மயம் அல்லது அந்நிய மூலதனத்திலிருந்தும் விலக்கியே வைக்கப்பட்டுள்ளன. கியூபாவின் அந்நிய வர்த்தகத்திற்கு ஒரு செலவாணி, உள்நாட்டு வர்த்தகத்திற்கு ஒரு செலவாணி என்று இருந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, இரண்டும் ஒன்றாக்கப்பட்டுள்ளது. இந்த எல்லா மாற்றங்களையும் ‘சோசலிச திட்டமிடல் அமைப்பே வழிநடத்துகிறது.’

இந்த மாற்றங்களைத் தொடர்ந்து நடந்திருக்கும் மாநாடு, கிடைத்த அனுபவங்களை பரிசீலித்துள்ளது. பொருளாதார வகைப்பட்ட 52 கொள்கை முடிவுகள் நினைத்த பலன்களை கொடுத்துள்ளன. 41 கொள்கை முடிவுகள் ஓரளவு பலன் கொடுத்துள்ளன. 12 கொள்கைகள் முடிவுகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்று மாநாட்டு அறிக்கை கூறுகிறது. கொரோனா பெருதொற்றுக்கு நடுவிலும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதை அறிக்கை காட்டுகிறது. அடிப்படைத் தேவைகள் மற்றும் சேவைகளுக்கு அதிக செலவு என்கிற நிலைமையை மாற்ற இன்னும் முன்னேற வேண்டியுள்ளது என்று சுயவிமர்சனமாகவும்  அது கூறுகிறது.

பொருளாதார நிலைமைகளை பரிசீலித்த மாநாட்டின் முதல் ஆணையத்திற்கு, பிரதமர் இம்மானுவல் மரி ரோக்ரஸ் தலைமையேற்றார். இதில்  319 செயல்முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. 2016 முதல் 2020 வரையிலான பணிகளை பரிசீலித்ததுடன், 2026 வரையிலான செயல்திட்டமும் நிறைவேற்றப்பட்டது.

முன்னணியினர் குறித்த கொள்கை

“ஒரு முன்னணி ஊழியருக்கு எப்படி தலைமையேற்பது என்பது மட்டும் தெரிந்தால் போதாது; நீடித்திருக்கும் சிக்கலான சூழலை எதிர்கொண்டு முறியடிக்கவும் தெரியவேண்டும். அதற்கான தைரியமும், அற்பணிப்பும், திட்டமிடலும் தீர்வும் இருக்க வேண்டும்.”

புரட்சிக்கு பின்னர் பிறந்தவர்கள் தலைமையேற்றிருக்கும் இந்தக் காலகட்டத்தில் முன்னணி பணியாற்றும் கம்யூனிஸ்ட் ஊழியர்களைக் குறித்த கொள்கையை இந்த மாநாடு விவாதித்திருக்கிறது. மிகுவெல் டியாஸ் கானல் அந்த அவைக்கு தலைமையேற்றார். ‘முன்னணிச் செயலாட்டாளராக வரக்கூடியவர் நல்லவராக மட்டும் இருக்கக் கூடாது, சிறந்தவர்களாக, மிகச் சிறந்தவர்களாக இருக்க வேண்டும்’ என்கிறார்.

கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர் கொள்கை அறிவியல் பூர்வமாக தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது. இன்னொரு தருணத்தில், அதனை விரிவாக பார்ப்போம்.

கியூப மக்களின் உயிரோட்டம் மிக்க கட்சியாக தொடர்ந்து வைத்திருக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்திருப்பதை புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. கட்சியில் 40 வயதுக்கு குறைவான முழுநேர ஊழியர்கள் 1,501 பேர் உள்ளனர். 54.2 % ஊழியர்கள் பெண்கள், 47.7 % பேர் கருப்பின அல்லது கலப்பு மண குழந்தைகள். நகராட்சி மற்றும் மாவட்ட செயலாளர்களில் 75 பேர் பெண்கள் (42%). 81 சதவீதம் கட்சி ஊழியர்கள் பல்கலைக்கழக படிப்பை முடித்தவர்கள். இளம் கம்யூனிஸ்ட் லீக் மூலமாக கட்சிக்கு வரும் ஊழியர்கள் தொடர்ந்து படிப்பது உறுதி செய்யப்படுகிறது. சிறப்புத் திறன் கொண்ட (புரொபசனல்) கட்சி ஊழியர்களில் குறிப்பிட்ட பகுதி (23.5%) இளம் கம்யூனிஸ்ட் லீக் மூலமாக வருகிறார்கள். கட்சி, அரசு மற்றும் நிர்வாக பொறுப்புகளில் கட்சியின் ஊழியர்கள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படுவதில்லை, 76.5% பேர் ஒரே பொறுப்பில் 5 ஆண்டுகளுக்கு மேல் தொடரவில்லை. 6.9% பேர் மட்டுமே ஒரு குறிப்பிட்ட பொறுப்பில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கின்றனர்.

கியூபாவின் கடந்த காலம்

கியூபா, தனது வரலாற்றில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்திருக்கிறது. சோசலிச சோவியத் யூனியன் தகர்ந்தபோது, இரண்டு நாடுகளுக்குமான பொருளாதார ஒத்துழைப்பு தகர்ந்தது. இதனால் 20 ஆண்டுகளாக கியூபா பெற்றுவந்த நன்மைகளை இழந்தது. அன்னிய வர்த்தகம் 80 சதவீதம் வரை விழுந்தது. உற்பத்தி திறனை பயன்படுத்திக் கொள்வதில் 85% வீழ்ச்சி ஏற்பட்டது. அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 35% சரிந்தது.

1992 தொடங்கி 1996 வரையில் அமெரிக்கா தனது பொருளாதாரத் தடைகளை தீவிரமாக்கியது. இதனால் வர்த்தகமும், டாலர் பரிவர்த்தனையும் பாதிக்கப்பட்டது, நிரந்தரமாக கியூபாவின் 10 சதவீத உள்நாட்டு உற்பத்தி பாதிப்பிற்கு ஆளானது. ஆனால், இந்த நெருக்கடிக்கு கியூப கட்சி முன்கூட்டியே தயாராகியிருந்தது.

சோவியத் அரசின் ‘பெரெஸ்றோய்க்கா’ திட்டத்தை, கியூப தலைமை 1985களிலேயே நிராகரித்துவிட்டிருந்தது. கட்சிக்குள் நெறிப்படுத்தும் இயக்கத்தை வலிமையாக முன்னெடுத்திருந்தது. இது, அடுத்தடுத்த காலங்களில் வந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதில் கியூபாவிற்கு உதவியது. பொருளாதார முடிவுகள் அதீத மையப்படுத்துதலை மாற்றியமைத்திருந்ததும், நாட்டின் நிர்வாக கட்டமைப்பின் அளவு மற்றும் தோற்றத்தை மாற்றியமைத்தலையும் கியூபா முன்கூட்டியே செய்திருந்தது.

உள்ளூர் குழுக்களுக்கு புத்துயிர் கொடுத்ததுடன், பிராந்திய அளவிலும், தேசிய அளவிலும் பிரதிநிதிகளுக்கு நேரடி தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. சமூக, பொருளாதார கொள்கைகளை உருவாக்குவதில் மக்களின் பங்கேற்பு  உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக ஆற்றல் உற்பத்தியும் விநியோகமும் பரவலாகியது. உயர் தொழில்நுட்பம், நகர்ப்புற வேளாண்மை, அடிப்படை உணவுப் பொருள் உற்பத்தி ஆகியவை மேம்பட்டன. 1993-94களில், செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, பல கட்ட விவாதங்களுக்கு பின் கியூபா தனது பொருளாதாரம் அந்நிய மூலதனத்திற்குத் திறக்கப்பட்டது. பாதிக்கும் அதிகமான அரசு நிலங்கள் கூட்டுறவு உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டன. நிலம் கொடுத்து முடிவெடுப்பதற்கான அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டது. சுற்றுலாத் துறையில் நுழைந்த அன்னிய மூலதனத்திற்கு, உள்ளூர் வள ஆதாரமும் குறிப்பிடத்தக்க அளவில் கிடைத்ததை ஒட்டி, பொருளாதார மீட்சி வேகமெடுத்தது. நிக்கல் சுரங்கங்களை நோக்கி சீனா, பிரேசில் மற்றும் வெனிசுலா நாட்டு நிறுவனங்களும் முதலீடு செய்தன.

இவ்வாறாக, தனது சொந்த பலத்தையும், பலவீனங்களையும் கணக்கில் கொண்டு கியூபா சோசலிச பாதையில் முன் நோக்கி பயணிக்கிறது.

கட்சியே வழிநடத்துகிறது

கட்சிதான் மக்களின் பாதுகாவலன்; மக்களின் துணை; மக்களின் நம்பிக்கை. பாதுகாவலர்களை கொண்ட அமைப்பு என்பது அடிப்படையானது. புரட்சிக்கு எது பாதுகாப்பை தருகிறது? கட்சிதான். புரட்சியை நிரந்தரப்படுத்துவது எது? புரட்சிக்கு எதிர்காலம் தருவதும், புரட்சிக்கு உயிர் கொடுப்பதும், புரட்சிக்கு எதிர்காலத்தை உறுதி செய்வதும் கட்சியே. கட்சி இல்லாமல் புரட்சி இருக்காது. என்றார் ஃபிடல் காஸ்ட்ரோ (1974).

கியூபாவில் ஒரு சமூக அமைதியின்மையை உருவாக்கிட எதிரிகள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள் என்ற எச்சரிக்கை உணர்வு அவசியம் என்று நினைவூட்டியுள்ளது இந்த மாநாடு. கியூபா ஒரு மிகச் சிறிய பொருளாதாரம். தனக்கென எந்த உற்பத்தியை மேற்கொண்டாலும், அதற்காக அது பல நாடுகளில் இருந்து தொழில்நுட்பமும், கச்சாப் பொருட்களும் பெற்றாக வேண்டும். மேலும், தன் நாட்டின் தேவை போக அதிகமான உற்பத்தியை வேறு நாட்டு சந்தைக்கு அனுப்பியாக வேண்டும். எனவே நிதி மூலதனமும், உலகச்சந்தையும் தவிர்க்கக்கூடியவை அல்ல. சுற்றுலாவும், நவீன தொழில்நுட்பத்தின் பெருக்கமும் அதிகரிக்கும்போது, அது கியூப குடிமக்களுடைய வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும். அதற்கேற்ப மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் கடமையும் கட்சியிடம் உள்ளது.

இதையெல்லாம் உணர்ந்த மாநாடாகத்தான், ‘தொடர்ச்சியின்’ மாநாடு அமைந்திருப்பதை காண்கிறோம். சமூக ஊடகங்களின் வளர்ச்சி வரைக்கும் அனைத்தும் அங்கே விவாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் ஒற்றுமையை சீர்குழைத்து, அமைதியின்மையை உருவாக்க முன்னெடுக்கும் ஏகாதிபத்திய முயற்சிகள் வீழ்த்தப்படும் என்பதை இந்த மாநாடு மிகத் தெளிவாகவே அறிவித்தது.

மிகுவேல் டியாஸ் கேனல் இவ்வாறு பேசினார், “கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை இரண்டே வரிகளில் சுருங்கக் கூறுவதானால், ‘மக்களும் ஒற்றுமையும்’ எனலாம். அதனால்தான் கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் கட்சியாக இருந்ததே இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியானது… பெரும் அநீதியும், ஏற்றத்தாழ்வும் நிலவிய நாட்டின் நிலைமையை மாற்றியமைக்க விரும்பிய மனித நேயசக்திகளின் அனைவரின் ஒற்றுமையில்தான் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. ஒரு கட்சியின் உறுதிப்பாடு என்பது நாட்டின் சக்தியை வளர்ச்சியை நோக்கி திரட்டி செலுத்தும் தன்மையே ஆகும்.

“அவர்கள் தொடர்ந்து முன் செல்கின்றார்கள்.”

***

நூற்றாண்டு கண்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் சாதித்தது என்ன?

(டிரைகாண்டினெண்டல் இணைய இதழிற்காக விஜய் பிரசாத் தயாரித்த ஆவணப் பதிவின் சுருக்கம், தமிழில் – சிந்தன்)

2020, அக்டோபர் 17 அன்று, இந்திய கம்யூனிச இயக்கம், தனது நூறாண்டு வரலாற்றை நிறைவுசெய்கிறது. ஒடுக்குமுறைகளுக்கும், கொடுங்கோன்மைக்கும், சுரண்டலுக்கும் எதிராக தீரம்மிக்க போராட்டங்களை முன்னெடுத்துள்ள கம்யூனிஸ்டுகள் என்ன சாதித்திருக்கிறார்கள் என்பதை வரலாற்றின் கழுகுப் பார்வையில் அறிந்துகொள்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

கம்யூனிஸ்டுகள் எப்போதுமே நாட்டுப்பற்றோடு இயங்கினார்கள். இந்தியாவின் சமூக – பொருளாதார, பண்பாட்டு நிலைமைகளில், அவர்களின் நடவடிக்கைகள் வேர்விட்டிருக்கின்றன. அதே நேரத்தில், உலகின் ஒட்டுமொத்த மேம்பாட்டையும், உலக மக்களின் விடுதலையையும் தங்கள் சிந்தனையில் பிரிக்க முடியாத அங்கமாக கொண்டே செயல்பட்டார்கள். இவ்வாறு செயல்படுவதால் உடனடி அரசியலில் பலன் கொடுக்காது என்றபோதிலும் அவர்கள் இந்த கண்ணோட்டத்தை எப்போதும் கடைப்பிடித்து வந்துள்ளனர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்கம்:

சோவியத் ஒன்றியத்தை உருவாக்கிய அக்டோபர் புரட்சி, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு பெரும் ஊக்கத்தைக் கொடுத்த நிகழ்வாகும். ஏனென்றால் அது சோவியத் தொழிலாளர்களுக்கு மட்டும் விடுதலையை பெற்றுத்தரவில்லை; உலகம் முழுவதுமே ஒடுக்கப்பட்ட தேசங்களுக்கு திசைவழி காட்டுவதாகவும் இருந்தது.

இந்திய புரட்சியாளர்கள் சிலர், பிரிட்டிஷ் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்துடன், சோவியத் ஒன்றியத்தின் (இப்போதைய ரஷ்யாவின்) தாஷ்கெண்ட் பகுதியில் சந்தித்தார்கள். அவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை 1920 அக்டோபர் 17 ஆம் தேதியன்று உருவாக்கினார்கள். இதற்கு இந்தியரும், மெக்சிக்கோ கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவரும், கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற்குழு உறுப்பினருமான எம்.என்.ராய் உதவி செய்தார்.

1920 காலகட்டத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் கம்யூனிஸ்ட் குழுக்கள் உருவாகி இயங்கின. பம்பாயில் எஸ்.ஏ.டாங்கே, கல்கத்தாவில் முசாபர் அகமது, மதராஸ் மாகாணத்தில் சிங்காரவேலர், லாகூரில் குலாம் உசேன் ஆகியவர்களை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இப்படி உருவான குழுக்களுக்கு மார்க்சிய-லெனினிய தத்துவக் கல்வியும், அரசியல் கல்வியும் வழங்குவதில் முனைப்புக் காட்டி செயல்பட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

எம்.என்.ராயுடன் தொடர்பில் இருந்த இந்திய கம்யூனிஸ்டுகள் , இப்போதைய உத்திர பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் கான்பூர் நகரத்தில் ஒரு மாநாடு கூட்டினார்கள். 1925 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 25 முதல் 28 வரை 3 நாட்கள் அந்த மாநாடு நடந்தது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்படுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்தியாவில் ஒரு பகுதி கம்யூனிஸ்டுகள் கான்பூர் மாநாட்டினை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தொடக்கமாக பார்க்கிறார்கள்.

தடைக் கற்களே படிக்கட்டாக:

பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து முழுவிடுதலை வேண்டும் என்ற குரலை இந்திய கம்யூனிஸ்டுகள் தொடக்கம் முதலே எழுப்பினார்கள். இந்திய மக்கள் தம்மை தாமே ஆண்டுகொள்ள முடியும் என்பதற்கு சோவியத் ஒன்றியம் முன்னுதாரணமாக  அமைந்தது. இந்திய தேசிய காங்கிரசின் அகமதாபாத் கூட்டத்தில் மவுலானா ஹஸ்ரத் மொஹானி, சுவாமி குமரானந்தா ஆகிய இரு கம்யூனிஸ்டுகள் முழு விடுதலைக்கான தீர்மானத்தை முன்வைத்தார்கள். அந்த தீர்மானம் ஏற்கப்படவில்லை என்றபோதிலும் தேசிய இயக்கத்தில் கம்யூனிஸ்டுகளின் தாக்கம் அதிகரித்தது.

1920களில் கம்யூனிஸ்டுகள் மேற்கொண்ட கடும் முயற்சிகளால் தொழிற்சங்கங்கள் உதயமாகின. 1928-29 காலகட்டத்தில் நாடு முழுவதும் தொழிலாளர் போராட்டங்கள் அலையடித்தன. வங்கத்தின் ரயில்வே தொழிலாளர் போராட்டங்களும், பம்பாயில் நூற்பாலைத் தொழிலாளர் போராட்டங்களும் தீரம் மிகுந்த உதாரணமாக அமைந்தன.

பிரிட்டிஷ் அரசாங்கம் சதி வழக்குகளை புனைந்து கம்யூனிஸ்டுகளை முடக்க முயன்றது. 1929 முதல் 1933 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் நடைபெற்ற மீரட் சதிவழக்கு அவற்றில் முக்கியமானதாகும். குற்றம்சாட்டப்பட்ட 33 பேரில் 27 பேருக்கு தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம். அவர்கள் இந்த வழக்கு விசாரணையை மேடையாக்கி, தங்களின் நோக்கங்களை பிரச்சாரம் செய்தார்கள்.

1934 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியானது கம்யூனிஸ்ட் கட்சியையும் அதனோடு தொடர்புடைய அமைப்புகளையும் தடை செய்தது. உறுப்பினராக ஆவதே குற்ற நடவடிக்கை என அறிவித்தது. இதனாலெல்லாம் கம்யூனிச லட்சியங்கள் பரவுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. பொருளாதார பெருமந்தத்திற்கு (Great Depression) இடையிலும் சோவியத் ஒன்றியம் நிகழ்த்திவந்த சாதனைகள், கம்யூனிசத்தை நோக்கிய ஈர்ப்பை அதிகப்படுத்தின.

பிரிட்டிஷ் ஆட்சியின் நிர்வாக இயந்திரத்தையே, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சியினால் முடக்கிப் போட முடியும் என்பதை கம்யூனிஸ்டுகள் நிரூபித்துக் காட்டினார்கள். 1937 ஆம் ஆண்டில் நடைபெற்ற வேலை நிறுத்தங்களில் மட்டும் 6 லட்சத்து 6 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கெடுத்தனர். அதே சமயம் 80 சதவீதம் வேளாண் சமுகமாக அமைந்த இந்தியாவின் விடுதலை, விவசாயிகளைத் திரட்டாமல் சாத்தியமாகாது என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தனர். தொடக்க காலத்தில் நகர்ப்புறங்களில் குவிமையமாக வளர்ந்த கம்யூனிஸ்ட் இயக்கம், ஊரகப் பகுதிகளுக்கும் தன் வேர்களைப் பரப்பியது.

விவசாயிகள் சங்கம் 1936 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. விவசாயத் தொழிலாளர்களுக்கான முதல் சங்கத்தை உருவாக்கியதும் கம்யூனிஸ்டுகளே. மாணவர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள், நாடகக் கலைஞர்கள் என பல்வேறு வழிமுறைகளில் மக்களை திரட்டி, புரட்சிகர உணர்வை வளர்த்தெடுத்தனர் கம்யூனிஸ்டுகள்.

நிலவுடைமைக்கும் சாதிக்கும் எதிராக:

சாதியும் – வர்க்கமும் கலவையாக இயங்கிய ஊரக இந்தியாவின் பிரச்சனைகளை அவர்கள் எதிர்த்து நின்றார்கள். நிலவுடைமை சக்திகள், வட்டிக்காரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் சுரண்டலுக்கு ஆளாகிவந்த விவசாயிகளை திரட்டினார்கள். கடன் சுழலில் சிக்கி, தங்கள் நிலத்தை இழந்த விவசாயிகளையும், தீண்டாமையை எதிர்கொண்டதுடன், கட்டாய உழைப்பைச் செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்ட நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களையும் திரட்டி கொடூர அடக்குமுறைகளுக்கு எதிராகப்  போராடினார்கள்.

கம்யூனிஸ்டுகள் தலைமையின் காரணமாக விவசாயிகள் இயக்கம் வலுவடைந்தது. 1938 ஆம் ஆண்டில் விவசாயிகள் சங்கத்தில் 60 லட்சம் பேர் சேர்ந்திருந்தனர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 80 லட்சமாக உயர்ந்தது.

நிலவுடைமை சமூகத்தில் நிலவிய கொடுங்கோன்மைக்கு எதிராகவும், நில உரிமைகளுக்காகவும் கம்யூனிஸ்டுகள் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சி நில உடைமையாளர்களோடு வெளிப்படையாக கூட்டு சேர்ந்து செயல்பட்டது. இந்தியத் தொழில் முதலாளிகளும் காங்கிரஸ் கட்சியை ஆதரித்தார்கள். இதன் விளைவாக காங்கிரஸ் கட்சியின் வலதுசாரி பிரிவுகளுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே மோதல்கள் எழுந்தன. காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இயங்கிய மாகாண அரசுகள் வெளிப்படையாகவே நில உடைமையாளர்களையும், தொழில் முதலாளிகளையும் ஆதரித்தன. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலிருந்து கம்யூனிஸ்டுகள் வெளியேற்றப்பட்டனர். இதனை நினைவுகூரும்போது, இ.எம்.எஸ் ‘காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் மாநில, மாவட்ட மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் சிலரும், ஒட்டுமொத்த உறுப்பினர்களும் வெளியேறி தங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டார்கள்’ என்று கூறினார்.

இரண்டாவது உலகப்போர் :

1939 ஆம் ஆண்டில் இரண்டாவது உலகப்போர் தொடங்கியது. இந்திய பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்யாமலே, இந்திய வீரர்களை போர் முனைக்கு அனுப்பியது பிரிட்டிஷ் அரசாங்கம். மேலும், இக்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்தன. போருக்கு எதிரான போராட்டங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. இதனால், 1941 ஆம் ஆண்டில் பெரும்பாலான கட்சி நிர்வாகிகளை கைது செய்து சிறைப்படுத்தியது பிரிட்டிஷ் ஆட்சி.

1942 ஆம் ஆண்டில்தான் கம்யூனிஸ்ட் அமைப்பின் மீதான தடை விலக்கப்பட்டது. தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். போர் ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தது, வங்கத்தை பஞ்சம் சூழ்ந்தது. மாபெரும் இந்தப் பஞ்சத்தினால் வங்கம், ஒரிஸா, அசாம், பீகார் பகுதிகளில் 30 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பலியானார்கள்.

லாப நோக்கில் விலையை அதிகரிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கொள்கையே இந்தப் பெரும் பஞ்சத்தினை விளைவித்தது என்கிறார் பொருளாதார அறிஞர் உத்சா பட்நாயக். உணவு தானியங்களை பதுக்கி வைத்து விலையேற்றிய வணிகர்களில் ஒரு பகுதியினர் மற்றும் நிலவுடைமையாளர்களுக்கு எதிரான பிரச்சாரத்தையும் இயக்கத்தையும் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. பெண்கள் தற்காப்புக் குழு அமைக்கப்பட்டு இளம் பெண்கள் கடத்தப்படுவதை தடுத்தார்கள். தன்னார்வலர்களும், மருத்துவக் குழுக்களும் ஏற்படுத்தி நிவாரண பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அயர்வில்லாத இந்தப் பணிகள், கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்குத்தளத்தை விரிவாக்கின.

போருக்குப் பிறகான எழுச்சி:

இரண்டாவது உலகப் போருக்கு பின் இந்தியாவில் வெகுமக்கள் போராட்ட எழுச்சி ஏற்பட்டது. அவற்றில் பல போராட்டங்களுக்கு கம்யூனிஸ்டுகள் தலைமைதாங்கினார்கள். 1946 ஆம் ஆண்டில் தபால் ஊழியர்கள், ரயில்வே பணியாளர்கள், தந்தி பணியாளர்கள் உள்ளிட்டு போராட்டக் களத்திற்கு வந்தனர்.

1946 பிப்ரவரி மாதத்தில் நடந்த கப்பல் படை கிளர்ச்சி தீரம்மிக்க ஒரு போராட்டமாக இருந்தது. பொது வேலை நிறுத்த அறிவிப்பை ஒட்டி, கிளர்ச்சியை தொடங்கிய கப்பல் படையினருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவை வழங்கியது. தொழிலாளர்கள் இக்கிளர்ச்சிக்கு ஆதரவாக வேலை நிறுத்தம் செய்தார்கள். வணிகர்கள் கடையடைப்புச் செய்தார்கள், மாணவர்கள் கல்விநிலையங்களை புறக்கணித்தார்கள். கடைசியாக, கப்பல்படை வீரர்கள் சரணடைய நேர்ந்தபோதிலும், நாடு முழுவதிலும் அவர்களுக்கு ஆதரவாக எழுந்த கிளர்ச்சியே அவர்களை அழித்தொழிப்பதில் இருந்து காத்துநின்றது.

தெபாகா இயக்கம்:

தெபாகா இயக்கம், வங்கத்தில் கம்யூனிஸ்டுகள் தலைமையேற்று நடத்திய மாபெரும் விவசாய எழுச்சியாகும். தெபாகா என்றால் மூன்று பங்கு என்று பொருள். விளைச்சளினை மூன்றாக பங்கிட்டு அதில் 2 பங்குகள் குத்தகை விவசாயிகளுக்கு சொந்தமாக வேண்டும் என்ற கோரிக்கையே அதில் பிரதானமாக இருந்தது. 1946 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் போராட்டம்  4 ஆண்டுகள் இடைவிடாமல்  நடைபெற்றது.

அந்தக் காலத்தில் கல்கத்தாவில் வகுப்புவாத வன்முறைகள் நடந்துகொண்டிருந்தன. அதே சமயத்தில் மதங்களைக் கடந்த மக்கள் ஒற்றுமையின் அடையாளமாக தெபாகா எழுச்சி அமைந்தது. மேற்குவங்கத்தில் அமைந்திருந்த முஸ்லீம் லீக் அரசாங்கம் இப்போராட்டத்தை ஒடுக்குவதற்காக காவல்துறையை  ஏவியது. அடக்குமுறைகளை எதிர்கொண்டு முன்னணியில் போராடிய இந்து, முஸ்லிம், பழங்குடி ஆண்களும், பெண்களுமாக 73 பேர் கொல்லப்பட்டார்கள். இறுதியில் இந்தப் போராட்டம் வெற்றிபெற்றது.

தெலங்கானா ஆயுதப்போராட்டம்:

தெலங்கானா ஆயுதப் போராட்டம், இந்தியாவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் எழுச்சிகளிலேயே மிகப்பெரியதாகும். ‘வெட்டி’என்று அழைக்கப்பட்ட கட்டாய உழைப்பு, நியாயப்படுத்த முடியாத வரி முறைமை ஆகியவைகளை எதிர்த்தும், நில உரிமையை முன்நிறுத்தியும் இந்த போராட்டம் தொடங்கியது. 1946 ஆம் ஆண்டில் தொடங்கிய போராட்டம் 5 ஆண்டுகள் தொடர்ந்தது. ஹைதராபாத்தினை ஆண்ட நிஜாம் மன்னன் ரசாக்கர்கள் என்ற குண்டர் படையையும், காவல்துறையையும் ஏவி, அடக்குமுறை செய்தபோது, ஆயுதங்களை ஏந்தி தங்களை தற்காத்தபடி விவசாயிகள் போராடினார்கள். 30 லட்சம் மக்கள் தொகை இருந்த 3 ஆயிரம் கிராமங்கள் கம்யூனிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் வந்தன. 10 லட்சம் ஏக்கர் நிலங்கள் விவசாயிகளுக்கே விநியோகம் செய்யப்பட்டன. கட்டாய உழைப்பு ஒழிக்கப்பட்டு, குறைந்தபட்ச கூலி முறை அமலாக்கப்பட்டது. அடிப்படை வசதிகளை ஏற்படுத்த சுய நிர்வாகக் குழுக்கள் ஏற்படுத்தினார்கள்.

நிஜாமின் ஆளுகைப் பகுதியை இந்திய ஒன்றியத்துடன் இணைக்கும் விதமாக 1948, செப்டம்பர் 13 ஆம் தேதி தனது நடவடிக்கையை தொடங்கியது இந்திய ஒன்றிய அரசு. இதற்கு நிஜாம் மன்னன் ஒப்புக்கொண்டதும் இந்திய ராணுவமும், காவல்துறையும் நுழைந்தன. தற்காப்பு போராட்டம் நடந்தது என்றாலும் – 4 ஆயிரம் கம்யூனிஸ்டுகளும், விவசாய போராளிகளும் கொல்லப்பட்ட நிலையில், 10 ஆயிரம் பேர் தடுப்புமுகாம்களில் அடைக்கப்பட்டனர். அவர்கள் 3 – 4 ஆண்டுகள் துன்புறுத்தப்பட்டார்கள். விவசாயிகளிடமிருந்து நிலத்தை பிடுங்கி, நிலவுடைமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைத்தது இந்திய அரசு.

புன்னப்புரா வயலார் எழுச்சி :

1946 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானம் மன்னராட்சியில் இருந்தது. சமஸ்தானத்திற்கென்று பிரதமர் இருந்தார். அவர்கள் இந்தியாவின் நாடாளுமன்ற முறையை ஏற்கவில்லை. மாறாக அமெரிக்காவைப் போன்ற ஏற்பாட்டை வலியுறுத்தினார்கள். இப்போதைய ஆலப்புழா மாவட்டத்தில் அமைந்த புன்னப்புரா – வயலார் ஆகிய இரு கிராமங்கள் மன்னராட்சிக்கு எதிரான போராட்டத்தின் மையப்புள்ளியாக அமைந்தன. போராட்டக் களத்தில் பல தொழிலாளர்களை சுட்டுக் கொல்லவும் காவல்துறை தயங்கவில்லை. இருப்பினும் திருவிதாங்கூர் விரைவில் இந்தியாவின் பகுதியானது. மொழிவழி மாநிலத்திற்கான அடித்தளத்தை இப்போராட்டமே கொடுத்தது. கொச்சி, திருவிதாங்கூர் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த மலபார் மாவட்டம் (மதராஸ் மாகாணத்தின் ஒரு பகுதி) ஆகியவை இணைந்து கேரள மாநிலம் உருவானது. தமிழ்நாடு உட்பட மொழி வழி மாநிலங்கள் உருவாக்கத்திற்கான அவசியத்தினை வலியுறுத்தி, சாத்தியமாக்கியதில் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் பங்களிப்பைச் செய்தது.

கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கருத்து மோதல்கள் :

இந்தியாவின் விடுதலையை எப்படிப் புரிந்துகொள்வது என்ற கேள்வி, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கருத்து மோதல்களை உருவாக்கியது. அதுவரை அவர்கள் தீவிரமாக எதிர்த்துவந்த பிரிட்டிஷ் ஆதிக்கம் அகன்றுவிட்டது. இப்போது இந்தியர்கள் நாட்டை ஆள்கிறார்கள்.

இந்த  அரசின் தன்மை என்ன? ஆட்சியாளர்கள் யார்? இது காலனி ஆதிக்க அரசாங்கத்தின் கைப்பாவைதானா? அல்லது இந்திய ஆளும் வர்க்கங்களின் ஆதரவைப் பெற்ற சுதந்திர அரசாங்கமா? புதிய அரசையும், ஆளும் வர்க்கங்களையும் கம்யூனிஸ்டுகள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? ஆட்சியாளர்களோடு இணைந்து நிற்க வேண்டுமா? அல்லது அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பதா? ‘ரஷ்ய’ வழிமுறையா அல்லது ‘சீன’ வழிமுறையா? இந்திய வழிமுறை என ஏதாவது உள்ளதா? இவையெல்லாம் அந்த காலகட்டத்தில் எழுந்த மிக முக்கியமான கேள்விகள் ஆகும். இந்த கருத்துமோதல் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பல்வேறு போக்குகள் உருவாக்கத்திற்கு காரணமாக அமைந்தது.

1950களின் மத்தியில் இருந்தே கருத்து மோதல்கள் தீவிரமாகின. விடுதலைக்கு பிறகான இந்திய அரசாங்கத்தை எப்படி மதிப்பீடு செய்வது என்பதுதான் முதல் கேள்வியாக இருந்தது. புதிய அரசாங்கம் ஒப்பீட்டளவில் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடித்தது; பொருளாதார திட்டமிடலுக்கு முயன்றது; தனது இலக்கு சோசலிச வகைப்பட்ட சமுதாயத்தைக் கட்டமைப்பதே என்று கூட காங்கிரஸ் கட்சி சொல்லியது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பகுதியினர் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் இடது தன்மை கொண்ட சக்திகளோடு இணைந்து செயல்பட வேண்டுமென நினைத்தனர். அவர்கள் காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவு நிலவுடைமைக்கு எதிரான, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தேசிய முதலாளிகளை பிரதிநிதித்துவம் செய்வதாகவும் வாதிட்டனர். இந்த விவாதங்களின் தொடர்ச்சியாக 1964 ஆம் ஆண்டில் கட்சியின் பிளவு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியுடன் ஒத்துழைப்பதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த பிரிவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என உருவானது. 1969 ஆம் ஆண்டில், ஆயுதப் போராட்டம் அவசியம் என நம்பிய கம்யூனிஸ்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) ஏற்படுத்தினார்கள். 

இடதுசாரி மாநில அரசாங்கங்கள் :

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் மிக முக்கியமான காலமாக, கம்யூனிஸ்டுகளின் தலைமையில் மாநில அரசுகள் அமைந்ததைப் பார்க்கலாம். பல்வேறு மொழிவழி தேசிய இனங்களைக் கொண்ட இந்தியாவில், அதன்  அரசியலும் மொழிவழி மாநிலங்களின் அடிப்படையிலேயே பெரும்பாலும் வடிவம் பெற்றுள்ளது.

மொழிவழி மாநிலங்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய கம்யூனிஸ்ட் இயக்கம், விடுதலைப் போராட்ட காலத்தை போலவே, விடுதலைக்கு பின்னரும் வெற்றிகரமான மக்கள் போராட்டங்களை வழிநடத்தியது. இதனால் திரண்ட மக்கள் செல்வாக்கினால்தான் சில மாநிலங்களின் ஆட்சியையும் பிடிக்க முடிந்தது. தேர்தல்களில் வெற்றி பெறுவதோ, மாநில ஆட்சிகளை வழிநடத்துவதோ, தொழிலாளிகள்-விவசாயிகளின் கையில் அரசு அதிகாரத்தை கொண்டு சேர்ப்பதற்கான வழிமுறை இல்லை என்றபோதிலும், இத்தகைய  ஆட்சிகளை நடத்துவதன் மூலம் கம்யூனிஸ்டுகளால் மாற்றுக் கொள்கைகளை அமலாக்கி ஒரு சில நிவாரணங்களைக் கொடுக்க முடிந்தது.

கேரளா: ஆந்திர மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதற்கான முயற்சி பின்னுக்குத் தள்ளப்பட்ட சமயத்தில், கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு வரலாற்று வெற்றி சாத்தியமானது. 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கேரளத்தில்  1957 ஆம் ஆண்டு முதல்  சட்டமன்ற தேர்தல் நடந்தது.   1957 ஏப்ரல் 5 ஆம் தேதி, இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் முதலமைச்சராக பதவியேற்றார்.

ஆட்சி உருவான ஆறாவது நாளில், அவசர சட்டத்தின் மூலம் விவசாயிகளை அவர்களுடைய குத்தகை நிலங்களில் இருந்து வெளியேற்றத் தடை செய்தது கம்யூனிஸ்ட் அரசு. நிலச் சீர்திருத்த சட்டத்தையும் அறிமுகம் செய்தது. சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கே நில உரிமை, நியாயமான வாடகை நிர்ணயம், நில உடைமைக்கு உச்ச வரம்பு மற்றும் விவசாயிகளே தாங்கள் சாகுபடி செய்யும் நிலத்தை விலைக்கு வாங்குவதற்கான உரிமையை வழங்குதல் ஆகியவற்றிற்காக சட்டமாக இது கொண்டுவரப்பட்டது. கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தியது, கல்வித்தளத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஜனநாயகப்படுத்தினார்கள். பொது சுகாதார கட்டமைப்பை விரிவாக்கினார்கள். நியாய விலைக் கடைகளின் வழியாக அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் நியாய விலையில் ஏழை மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்தார்கள்.

நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் நிலவுடைமையாளர்களை  கலகலக்கச் செய்தது. கல்விச் சீர்திருத்தங்களுக்கு கத்தோலிக்க திருச்சபைகளில் இருந்து எதிர்ப்பு வந்தது. ‘விமோசன சமரம்’ என்ற பெயரில் தொடர் போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்தார்கள். காங்கிரஸ் கட்சி இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கம்யூனிஸ்ட் ஆட்சியினை கலைத்தது. தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தது. அவர்கள் நிலச்சீர்திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்தார்கள். இதற்கு எதிராக இடதுசாரிகள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்தார்கள் என்பதையோ, அடுத்து ஆட்சிக்குவந்த பிறகு சீர்திருத்தங்களை முன்னெடுத்தார்கள் என்பதையோ தனித்து குறிப்பிடுவது அவசியமில்லை.

1993 ஆம் ஆண்டில் 28 லட்சம் குத்தகை விவசாயிகளுக்கு உரிமைகள் உறுதி செய்யப்பட்டது. 60 லட்சம் ஹெக்டேர் நிலம் மறுவிநியோகம் செய்யப்பட்டது. 1996 ஆம் ஆண்டுவாக்கில்  5 லட்சத்து 28 ஆயிரம் நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. கேரளத்தில் நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் நிலவுடைமைக் கட்டமைப்பின் முதுகெலும்பினை தாக்குவதாக அமைந்தன. கம்யூனிஸ்டுகளின் கொள்கைளால் கல்வியறிவும், மனிதவளமும் மேம்பட்டன. இந்த மேம்பாடுகளை  1970 ஆம் ஆண்டு முதலே பல்வேறு ஆய்வுகளில் அறிய முடிந்தது.

1) மக்களின் பொருளாயத வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துதல், ஒரு நாடு அல்லது மாநிலம் செல்வச் செழிப்போடு வளர்ந்தபிறகே சாத்தியம் என்பது உண்மையில்லை.

2) மக்களால் முன்னெடுக்கப்படும் பொது நடவடிக்கைகள் வழியாக மறுபங்கீட்டை சாத்தியப்படுத்திட முடியும் – என்ற இரு படிப்பினைகளை கேரள முன்மாதிரி நமக்கு வழங்குகிறது.

மேற்கு வங்கம் :

வங்கம், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தினால் மிகக் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட மாகாணம் ஆகும். வங்கப் பஞ்சம் பற்றி ஏற்கனவே பார்த்தோம். இந்திய விடுதலையின் போது பிரிவினையும், அதையொட்டி எழுந்த வகுப்புவாத வன்முறைகளும், அந்த மாகாணத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தின. ஏராளமான மக்கள் அகதிகளானார்கள். அகதிகளின் வாழ்விட உரிமைக்காகவும், அரசியல் உரிமைக்காகவும் கம்யூனிஸ்டுகளே முன்னணியில் நின்றார்கள்.

வங்க பஞ்சத்தின்போது நிவாரண நடவடிக்கைகளை கம்யூனிஸ்டுகள் முன்னெடுத்தார்கள். 1950  ஆம் ஆண்டு வாக்கில் கல்கத்தாவின் தெருக்களில்  ‘பட்டினிப் பேரணிகள்’ நடைபெற்றன. ஏழைகள் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் திரண்டார்கள். நிலச்சீர்திருத்தத்திற்கான முழக்கம் ‘தெபாகா’ இயக்கத்தின் பகுதியாக ஆனது. விவசாயிகள் சங்கம் குத்தகைதாரர்களின் உரிமைக்காக போராடியது. இவற்றால் கம்யூனிஸ்டுகள் வலிமைபெற்றார்கள்.

குறுகிய காலமே செயல்பட்ட ஐக்கிய முன்னணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டில் இடது முன்னணி அமைந்தது. தேர்தல் வெற்றியின் மூலம் மாநிலத்தில் ஆட்சியமைத்தது. ஜோதிபாசு முதலமைச்சரானார். 34 ஆண்டுகள் தொடர்ச்சியான ஆட்சியை இடது முன்னணி வழங்கியது.

இடதுமுன்னணி அரசு நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தது. குத்தகை விவசாயிகளின் உரிமைகளைக் காக்கும் வகையில் ஆபரேசன் பர்க்கா முன்னெடுக்கப்பட்டது. நில உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு, அதிகப்படியான நிலங்கள் மறுவிநியோகிக்கப்பட்டன. இந்தியாவில் நிலச்சீர்திருத்தம் மூலம் பலனடைந்த பயனாளிகளில் 50% மேற்குவங்கத்திலேயே உள்ளார்கள் என்ற புள்ளிவிபரத்தின் வழியாக நாம் அங்கு நடைபெற்ற நிலச்சீர்திருத்தத்தின் அளவினை உணரலாம்.

2008 ஆம் ஆண்டு வாக்கில் 29 லட்சம் விவசாயிகள் சாகுபடிக்கான நிலங்களை மறுவிநியோக திட்டங்களின் வழியாக பெற்றிருந்தனர். 15 லட்சம் விவசாயிகள் குத்தகை பதிவு பெற்றார்கள். 55 லட்சம்பேருக்கு வீட்டுமனைகள் வழங்கப்பட்டிருந்தன. இவ்வாறு பயனடைந்தவர்களில் 55% பேர் தலித் மற்றும் பழங்குடிகள் ஆவர்.

மேற்கு வங்கத்தின் வேளாண்மையை மறுகட்டமைத்து, அதன் வழியாக  ஊரக ஏழை மக்களின் வாழ்க்கையை உயர்த்தியதுதான் கம்யூனிஸ்ட் தலைமையிலான அரசாங்கத்தின் முக்கியமான சாதனையாகும். ஊரக வளர்ச்சியில் பொது முதலீடு அதிகரித்ததன் வழியாக பாசன திட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவில் விரிவாக்கப்பட்டன. இதன் வழியாக மூன்று போக விவசாயம் சாத்தியமானது. நாட்டிலேயே அரிசி சாகுபடியில் முன்னணி மாநிலமாக மேற்கு வங்கம் உருவானது.

அதிகார பரவலாக்கல் நடவடிக்கை மேற்கு வங்கத்தின் ஊரக வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியது. நிலச்சீர்திருத்தம் உட்பட உள்ளூர் முடிவுகளை திறம்பட மேற்கொள்வதில் பஞ்சாயத்து அமைப்புகள் முக்கியமான பங்குவகித்தன. இந்த சீர்திருத்தங்களால், மேற்கு வங்கத்தின் ஊரக பகுதிகளில் பெரும் நிலவுடைமையாளர்கள், வட்டிக்காரர்கள், சாதி ஆதிக்க சக்திகள் பலவீனமடைந்தன. தலித், பழங்குடி மக்களின் உள்ளாட்சி பிரதிநிதித்துவம் மக்கள் தொகையில் அவர்களின் பங்கினை விட அதிகமாக உயர்ந்தது. இது உழைக்கும் வர்க்கத்திற்கு சாதகமாக வர்க்க பலம் அதிகரிக்கச் செய்தது.

திரிபுரா :

திரிபுராவில் , 1948 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்டுகளின் தலைமையிலான மக்கள் விடுதலைக் குழு உருவாக்கப்பட்டது. அது பழங்குடி மக்களின் பிரச்சனைகளில் போராட்டங்களை முன்னெடுத்தது. கந்துவட்டிக் கும்பல்களின் ஆதிக்கத்திற்கு எதிராக கம்யூனிஸ்டுகள் போராடினார்கள். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டி அகதிகள் பல்லாயிரக் கணக்கில் அலை அலையாக வரும் சிக்கலை திரிபுரா எதிர்கொண்டது. அகதிகள் தஞ்சம் அடைவது 1960 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற்றது.

இந்த சூழலில் பழங்குடி மக்களின் நில உரிமையை பாதுகாப்பது, பழங்குடிகளை குத்தகைய நிலங்களில் இருந்து வெளியேற்றுவதை தடுப்பது, அகதிகளுக்கு முறையான மறுவாழ்வு என கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் விடுதலைக் குழு போராட்டங்களை முன்னெடுத்தது. விவசாயிகள் – பழங்குடிகள் இடையிலான ஒற்றுமையை இந்தப் போராட்டங்கள் அதிகரித்தன.

1978 ஆம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது முன்னணி ஆட்சிக்குவந்தது. நிருபன் சக்ரபர்த்தி முதலமைச்சராக தேர்வானார். நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. சட்ட விரோதமாக பழங்குடி மக்களின் நிலங்களை உரிமை மாற்றம் செய்வதை தடுத்ததுடன், பழங்குடி நிலங்கள் மீட்டுத் தரப்பட்டன, குத்தகை விவசாயிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. இதற்காக நிலச்சீர்திருத்த சட்டத்தில்  திருத்தம் செய்யப்பட்டது. 

மாவட்ட கவுன்சில் தன்னாட்சி சட்டம் மூலமாக, பழங்குடி மக்களுக்கு பிராந்திய அளவில் தன்னாட்சி அதிகாரம் உறுதி செய்யப்பட்டது. கோக்பொரோக் என்ற பழங்குடி மொழி அலுவல் மொழியாக சேர்க்கப்பட்டது.

1980 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரையில் பிரிவினைவாத கிளர்ச்சிகளை திரிபுரா எதிர்கொண்டது. இடது முன்னணி அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகள் வழியாக இந்த வன்முறைகள் மட்டுப்படுத்தப்பட்டன. கல்வியறிவு, நலவாழ்வு, தனிநபர் வருமானம் மற்றும் அதிகாரப் பரவல் ஆகியவற்றில் திரிபுரா தனித்துவமான சாதனைகளை எட்டியது.

1978 முதல் 1988 வரையிலும், 1993 முதல் 2018 வரையிலும் இடது முன்னணி மாநில ஆட்சியில் இருந்துள்ளது. இப்போது மிகப்பெரும் அளவில் பணத்தைக் கொட்டியும், சமூக ஊடகங்களின் வழி மோசடிப் பிரச்சாரம் செய்தும் பாஜக தேர்தல் வெற்றியை சாதித்திருக்கிறது. இருப்பினும் தேர்தல் தோல்வியைக் கடந்தும் களத்தில் முன்னணியில் நிற்கின்றது கம்யூனிஸ்ட் இயக்கம்.

நவ தாராளமய காலகட்டமும், ஒன்றிய ஆட்சிகளும்:

1991 ஆம் ஆண்டில் இந்தியாவில் நவதாராளமய கொள்கைகள் அதிகாரப்பூர்வமாக அமலாகத் தொடங்கின. இந்தக் கொள்கைகள் பெருமுதலாளிகளுக்கு சாதகமாக இருப்பதை கண்டுணர்ந்துவருகிறோம். சோவியத் ஒன்றியத்தின் பின்னடைவும் தகர்வும், இந்திய அரசின் முரட்டுத்தனமான முதலாளித்துவப் போக்கிற்கு உதவி செய்தது. மேலும், நவதாராளமய கொள்கைகள் வலதுசாரி அரசியல் எழுச்சிக்கு வழிவகுத்துள்ளன. இந்த சூழலை பயன்படுத்தி பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான சக்திகள் இந்தியாவை ஒரு இந்துத்துவ அரசாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இந்திய கம்யூனிஸ்டுகள் நவ தாராளமய கொள்கைகளுக்கு எதிராக இடைவிடமல் போராடுவதுடன், பாசிச சக்திகளையும் இடைவிடாமல் எதிர்க்கின்றனர்.

1990 ஆம் ஆண்டிற்கு பிறகு மாநில கட்சிகளின் பங்களிப்பைக் கொண்டு அமைந்த கூட்டணி அரசுகளுக்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவளித்தார்கள். மத்திய ஆட்சியின் கொள்கைகளில் கம்யூனிஸ்டுகளின் தாக்கம் மிக அதிகமான காணப்பட்ட ஆண்டு 2004-07 வரையிலான காலம் ஆகும். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு இடதுசாரி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவளித்தார்கள். இதனால் பாரதிய ஜனதா கட்சி,மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்து தொலைவில் வைக்கப்பட்டது. மேலும் ஊரக வேலை உறுதி திட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம், வனத்தில் வசிக்கும் பழங்குடிகளுக்கான நில உரிமைச் சட்டம் போன்ற முற்போக்கான முடிவுகள் எடுக்கப்பட்டன. இருந்தாலும் நவதாராளமய கொள்கைகளில் மாற்றம் ஏற்படவில்லை என்பதை கவனிக்க வேண்டும். அதனால்தான் 2008 ஆம் ஆண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு தனது நெருக்கத்தை இந்திய அரசு அதிகரித்தது. இதனை ஒட்டி இடதுசாரிகளும் மத்திய அரசாங்கத்திற்கு அளித்துவந்த ஆதரவினை விலக்கிக் கொண்டார்கள்.

மேற்கு வங்கத்தில் பின்னடைவு:

மேற்கு வங்க மாநிலத்தில், கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இடது முன்னணி மாபெரும் வெற்றியை சாதித்தது. ஆனால் பொருளாதாரத்தில் நவ தாராளமயத்தின் தாக்கம் அதிகரித்த பின்னணியில் மாநிலங்கள் தங்கள் சுயாட்சியை இழந்துகொண்டிருந்தன. மாநிலங்களுக்கிடையே போட்டிச் சூழல் ஏற்படுத்தப்பட்டு தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கும் மாநிலங்களுக்கு முதலீடுகள் கிடைக்காத நிலைமை ஏற்படுத்தப்பட்டது. மேற்கு வங்கத்தில் பொது முதலீட்டுக்கான வாய்ப்புக்களை ஒன்றிய அரசாங்கங்கள் தொடர்ந்து புறக்கணித்து வந்தன, தொழிலாளர் உரிமைகளில் சலுகை கொடுத்து, வரிச் சலுகைகளை அள்ளி வழங்கும் மாநிலங்களை நோக்கி அந்நிய முதலீடுகள் சென்றன. இந்தப் போட்டியில்  மேற்கு வங்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. நிலச்சீர்திருத்தம் மூலம் சாதித்திருந்த வளர்ச்சி மிதமாகிய நிலையில், மாற்று வழிமுறைகளை இடது முன்னணி நாட வேண்டி வந்தது.

தனியார் முதலீடுகளை ஈர்க்க முயற்சியெடுத்த இடதுமுன்னணி அதற்காக நிலம் கையகப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டபோது சர்ச்சைகள் வெடித்தன. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்ட எதிர்க் கட்சிகள் விவசாயிகளில் ஒரு பகுதியை இடது முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக திருப்பினார்கள். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் இடதுமுன்னணி தோல்வியைத் தழுவியது. அடுத்தடுத்த ஆண்டுகளில் வலதுசாரிகளின் மோசடிப் பிரச்சாரங்களும், தாக்குதல்களும் தொடர்கின்றன. இக்காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆதரவாளர்கள் 250க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை விட்டு விரட்டப்பட்டார்கள்.

இவற்றையெல்லாம் எதிர்கொண்டு வங்கத்திலும் நாடு முழுவதும் இடதுசாரிகள் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்தே வருகிறார்கள். அமைப்புசாராதவர்களை அமைப்பாக்கவும், ஒப்பந்தத் தொழிலாளர்களை ஒருங்கிணைக்கவும் முன்கையெடுக்கிறார்கள். அரசின் திட்டப்பணிகள் மற்றும் ஜவுளி ஆலைகளில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களை வெற்றிகரமாக திரட்டியுள்ளார்கள். வீட்டு வேலைகளில் ஈடுபடும் பெண்கள், விவசாயத் தொழிலாளர்கள் என பல்வேறு வேலை சூழலில் இருப்பவர்களையும் திரட்டுவது மிகவும் சவாலான பணியாகவே உள்ளது. இந்த அனைத்துப் போராட்டங்களின் பிரிக்க முடியாத பகுதியாக சாதிக்கும், சாதி ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டமும் அமைந்துள்ளது. இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் உருவான காலத்திலிருந்தே நடந்துவரும் இந்த போராட்டம் இப்போதும் தொடர்கிறது. சாதி ஒழிப்பை முன்வைத்து பல்வேறு அமைப்புகளை இணைத்த மேடையை கம்யூனிஸ்டுகள் உருவாக்கியுள்ளனர்.

இந்துத்துவ சக்திகளின் எழுச்சியின் காரணமாக வகுப்புவாத திரட்டல் அதிகரிக்கிறது. இது கம்யூனிஸ்டுகள் கட்டமைக்கும் போராட்ட ஒற்றுமைக்கு ஆபத்தாக எழுகிறது. ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான அமைப்புகளின் பாசிச வகைப்பட்ட திரட்சியும், பிரச்சாரமும் நவ தாராளமய கொள்கைகளால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்துகின்றன. இத்தகைய முயற்சியை எதிர்கொள்ள பரந்துபட்ட மதச்சார்பற்ற, முற்போக்கு சக்திகளின் கூட்டணியை உருவாக்க கம்யூனிஸ்டுகள் முயல்கின்றனர். இதற்கான போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறார்கள்.

நவ தாராளமய காலகட்டத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்திய முதலாளிகளும் அரசியல் தலையீடுகளை பல வடிவங்களில் மேற்கொண்டு வருகிறார்கள். அடையாள அரசியலும், தனிப்பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்ட அரசு சாரா அமைப்புகளும் அதற்கான கருவிகளாக இருக்கின்றன.

முடிவாக:

இப்படியான சூழலில்தான், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அவசியம் முன்னைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. நூற்றாண்டுகால தீரம் மிக்க வரலாற்றினை திரும்பிப் பார்க்கும் இந்த சமயத்தில், நவ தாராளமய காலகட்டம் குறித்தும், இந்த காலத்தில் ஏற்பட்ட பலவீனங்களையும் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன் உள்ள சாத்தியங்களையும், வாய்ப்புகளையும் புரிந்துகொள்ள வேண்டும். ஆத்திரமோ, கசப்புணர்வோ உதவாது. திறந்த மனதுடன் சாத்தியங்களை ஆய்வு செய்வதன் வழியாகவே கம்யூனிஸ்டுகள் முன்னேற முடியும். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சி, இந்திய மக்கள் நலன்களை பாதுகாக்க மிக மிக அவசியமாகும். நாடு, அநாகரீக நிலைமைக்கு பின் தள்ளப்படாமல் தடுப்பதில், கம்யூனிஸ்டுகள் தங்கள் கடமையை வீரியமாக ஆற்றிட வேண்டும்.

உழைக்கும் கோடிக்கணக்கான மக்களின் நலன்களையே தங்கள் லட்சிய இலக்காக கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகள், அயர்வில்லாத போராட்டங்களுக்கான உற்சாகத்தை, தங்கள் சொந்த வரலாற்றிலிருந்தே பெற்றிட வேண்டும்.

எங்கெல்ஸ் 200: இணையவழி தொடர் உரைகள் – நிகழ்ச்சிநிரல்

மார்க்சிஸ்ட் இதழ் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து, மாமேதை எங்கெல்ஸ் தொடர்பான இணைவழி தொடர் உரைகளை ஒளிபரப்பவுள்ளோம். எங்கெல்சின் எழுத்துக்களை தமிழ் வாசகப் பரப்பிற்கும் அறிமுகம் செய்வதாகவும், பரவலாக்குவதாகவும் இந்த முயற்சி அமைகிறது. இந்நிகழ்வுகளின் இறுதியில், நவம்பர் 28, 2020 அன்று, சிவப்பு புத்தக தினம் நிகழவுள்ளது. தமிழகமெங்கும் 10 ஆயிரம் இடங்களில் ‘கம்யூனிசத்தின் கோட்பாடுகள்’ நூல் வாசிக்கப்படவுள்ளது. இதற்காக 1 லட்சம் புத்தக பிரதிகள் அச்சிடும் பணிகள் நடந்துவருகின்றன. மேலும், ஒலி வடிவில் இந்த புத்தகத்தை மார்க்சிஸ்ட் செயலி வழியே கேட்கலாம்.

கீழ்க்காணும் உரைகள், குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் மாலை 7 மணிக்கு நேரலையாக கேட்கலாம். (Youtube I Facebook )

28.09.2020 – கம்யூனிசத்தின் கோட்பாடுகள் – சீத்தாராம் யெச்சூரி (தொடக்க நிகழ்வு)

5.10.2020 – 21 ஆம் நூற்றாண்டிற்கு எங்கெல்ஸ் – என்.குணசேகரன்

12.10.2020 – கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் – ஜி.ராமகிருஷ்ணன்

19.10.2020 – குடியிருப்புப் பிரச்சினை – அ.பாக்கியம்

26.10.2020 – டூரிங்குக்கு மறுப்பு – மு.சிவலிங்கம்

2.11.2020 – இயற்கையின் இயக்கவியல் – டாக்டர் த வி.வெங்கடேஸ்வரன்

9.11.2020 ஜெர்மன் சித்தாந்தம் – பேரா.முத்துமோகன்

15.11.2020 – மனிதக்குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைக் கட்டத்தில் உழைப்பு வகிக்கும் பாத்திரம் – சகஸ்ரநாமம்

16.11.2020 – இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமைகள் – அ.சவுந்தரராசன்

17.11.2020 – குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் – பேரா.வீ.அரசு

18.11.2020 – எங்கெல்ஸ் முன்னுரைகள் – இரா.சிந்தன்

19.11.2020 – அரசு பற்றிய எங்கெல்ஸின் எழுத்துக்கள் – ச.லெனின்

20.11.2020 – எங்கெல்ஸின் எழுத்துக்களில் தொழிலாளி வர்க்கம் – எஸ்.கண்ணன்

21.11.2020 – ஜெர்மனியில் விவசாயப் புரட்சி – வி.மீனாட்சி சுந்தரம்

22.11.2020 – எங்கெல்சும் மார்க்சின் மூலதனமும் – டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா

23.11.2020 – புனிதக் குடும்பம் – வீ.பா.கணேசன்

24.11.2020 – எங்கெல்சும் அறிவியலும் – டாக்டர் டி.ஜெயராமன்

25.11.2020 – எங்கெல்ஸ் கடிதங்கள் – உ.வாசுகி

26.11.2020 – ஜெர்மனியில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும் – ஆர்.பத்ரி

27.11.2020 – வரலாற்றில் பலப்பிரயோகம் வகிக்கும் பாத்திரம் – ச.தமிழ்ச்செல்வன்

28.11.2020 – லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவத்தின் முடிவும் – டி.கே.ரங்கராஜன்

பெருந்தொற்றை வீழ்த்திய சீனாவின் சோசலிசம்!

இரா.சிந்தன்

உலகம் இதற்கு முன்பு பார்த்திருக்காத ஒரு புதிய கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை 2019 டிசம்பர் இறுதியில் சீனா முதன் முதலில் எதிர்கொண்டது. பிறகு அது உலகம் முழுவதும் பெருந்தொற்றாக பரவியது.

கொரோனா வைரசை முதன் முதலாக எதிர்கொண்ட நாடு என்ற வகையிலும்,  குறிப்பிடத்தக்க வெற்றியை சாதித்திருக்கும் நாடு என்ற வகையிலும் சீன அனுபவங்கள் தனித்துவமானவை. அடுத்தடுத்து புதிய கிருமிகளால் ஏற்படும்  கொள்ளை நோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அறிவியலாளர்களின் எச்சரிக்கையை மனதில் கொண்டால் சீனாவின் உடனடி செயல்பாட்டின் படிப்பினைகள் உலக மக்களுக்கு முக்கியமானவை என்பது புரியும்.  மேலும் இது சோசலிசத்தின் மேன்மையையும் உணர்த்துகிறது.

சோசலிசமும் பொது சுகாதாரமும்:

1918 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்று நோய் பரவியது. முதல் உலகப்போரைத் தொடர்ந்து இந்த தொற்று கோடிக்கணக்கான உயிர்களை குடித்தது. அப்போதுதான் உருவாகியிருந்த சோசலிச சோவியத் குடியரசிலும் நோய் பாதிப்பு இருந்தது. வி.இ.லெனின் இதற்கென பொது சுகாதார அமைச்சகத்தை ஏற்படுத்தினார். மேலும் அவர் ”உள்நாட்டு யுத்தத்தை எதிர்கொள்வதில் பெற்ற  அனுபவம் அனைத்தையும் தொற்று நோய்களை எதிர்கொள்வதில் பயன்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டார்.

உலகில் முதன் முறையாக  மையப்படுத்தப்பட்ட, பொது சுகாதார அமைப்பை ஏற்படுத்தியது சோவியத் ஒன்றியத்தில் அமைந்த சோசலிச அரசாங்கமே ஆகும். ஊரக பகுதிகளுக்கும் அது பின்னர் விரிவுபடுத்தப்பட்டது. இது அன்றைய காலத்தின் மிகப்பெரும் சாதனை என ஸ்பானிஷ் ஃப்ளூ பரவல் பற்றிய ‘பேல் ரைடர்’ என்ற புத்தகத்தில் லாரா ஸ்பிண்டி என்ற பத்திரிக்கையாளர் எழுதியுள்ளார்.

அனைத்திலும் முதன்மையானது மனிதர்களின் நலவாழ்வுதான் என்ற  அணுகுமுறைதான் முதலாளித்துவ கட்டமைப்பில் இருந்து சோசலிசத்தை வேறுபடுத்துகிறது. கியூபா மருத்துவத்துறையில் ஆற்றியிருக்கும் மகத்தான சாதனைகளை நாம் அறிவோம். சீனாவின் கள சூழல் வேறுபட்ட ஒன்று. கொரோனா நோய் எதிர்ப்பில் அவர்களுடைய போராட்டத்தைக் குறித்து பார்ப்போம்.

சீனாவில் பொது சுகாதாரம்:

1949 இல் மாவோவின் தலைமையில் மக்கள்சீன புரட்சி அரசாங்கம் அமைந்தது. 1950 நடைபெற்ற தேசிய சுகாதார மாநாட்டில் உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் இப்போதும் கவனிக்கத் தக்கவை. 

1) விவசாயிகள், தொழிலாளர்களாகிய வெகுமக்கள் நலனுக்கு பணியாற்றுவதே சுகாதாரப் பணியாளர்களின் முதன்மையான கடமை. 
2) நோய்களை முன் தடுப்பதுதான் முதன்மை இலக்கு.
3) நவீன மருத்துவத்தையும் பாரம்பரிய மருத்துவத்தையும் சமமாக வளர்த்தெடுக்க வேண்டும்.
4) மருத்துவ பணியாளர்களுடைய செயலூக்கம் மிக்க பங்களிப்புடன் மக்களுக்கு விழிப்புணர்வை கொண்டு சேர்ப்பது முக்கியமானது.

இப்போது சீனாவின் மக்கள் தொகை 140 கோடியாக உள்ளது.  உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது. ஆனாலும் சீனா ஒரு வளரும் நாடுதான். எனவே பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், ஊரகங்கள் மற்றும் நகரங்களுக்கான இடைவெளியும் அதிகமாக உள்ளன. சீனா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை பொது சுகாதாரத்திற்காக செலவிடுகிறது. ஆயிரம் பேருக்கு 2 மருத்துவர்கள் உள்ளார்கள். 2.7 செவிலியர்கள் உள்ளனர். 4.34 படுக்கைகள் உள்ளன. இதிலிருந்தே சீனாவின் கட்டமைப்பு இன்னும் மேம்பட வேண்டியிருப்பதை அறிய முடியும்.

சமீபத்தில் புதிய சகாப்தத்தில் சீன சமூகத்தில் வெளிப்படும் முரண்பாடுகளை கம்யூனிஸ்ட் கட்சி ஆய்வு செய்தது. முக்கிய முரண்பாட்டை அடையாளமும் கண்டது. சீன மக்களிடையே பொருளாயத தேவைகள் அதிகரித்துள்ளன, உணவு, உறைவிடம் என்பதோடு கூடுதலான புதிய தேவைகள் உருவாகியுள்ளன, நலவாழ்வுக்கான விருப்பம் அதிகரித்துள்ளது. பண்பாட்டு வாழ்க்கையில் புதிய தேவைகள் உருவாகியுள்ளன. இவையெல்லாம் சமனற்ற, போதாக்குறையான வளர்ச்சியோடு முரண்படுகின்றன என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் கணிப்பாகும். இதனை மனதில் கொண்டுதான் சீன கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது.

கொரோனா எதிர்ப்பு மக்கள் யுத்தம்:

சீனாவின் ஊகான் நகரத்தில் நோய்த்தொற்று கண்டறியப்பட்ட ஒரு சில வாரங்களிலேயே பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு நோய் பரவியிருந்தது. அந்த நகரத்தில் மருத்துவமனை, மருத்துவர் மற்றும் மருந்து பொருட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டது. இதே வேகத்தில் நோய் பரவினால் பொது சுகாதார கட்டமைப்பே பெரும் சுமைக்கு ஆளாகி, சமூக நெருக்கடியாகிவிடும்.

ஜனவரி 7 ஆம் தேதி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை நிலைக்குழு கூடியது. நோய்த்தொற்று நிலைமைகளை அது ஆய்வு செய்தது. உடனடியாகவும், அதிவிரைவாகவும் செயல்படுவதுதான் அவர்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு.  அப்போதிருந்தே சீன கம்யூனிஸ்ட் கட்சி இதனை ஒரு மக்கள் யுத்தமாக வழிநடத்தியது. 

“புரட்சிகர யுத்தம் என்பது மக்கள் நடத்துகின்ற ஒன்றாகும். மக்கள் சக்தியை திரட்டுவதன் மூலம் மட்டுமே நாம் அந்த போரினை நடத்த முடியும், மக்களை சார்ந்திருப்பதன் மூலமே அந்த போரை முன்னெடுக்க முடியும்” என்கிறார் தோழர் மாவோ. இந்த போராட்டம் நீண்ட ஒன்று, உத்திகளை மாற்றியமைத்து, உள்ளூர் நிலைமைகளை சரியாக கணக்கிட்டு மெல்ல மெல்ல முன்னேற வேண்டும். சீனாவில் வெற்றிபெற்ற சோசலிச புரட்சி அந்த கருத்தாக்கத்தின் நல்ல உதாரணமாகும். 

மக்கள் யுத்த கருத்தாக்கத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் ஜி ஜின்பிங் வலியுறுத்திவந்த கருத்து. கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் அந்த கருத்தாக்கம் பயன்பட்டது. மக்கள் நலவாழ்வே முதன்மையானது என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நாட்டின் அனைத்து வளங்களும் இந்த போராட்டத்திற்காக திருப்பிவிடப்பட்டன. சீன குடியரசுத்தலைவர் ஜி ஜின்பிங், ஒவ்வொரு கட்டத்திலும் இப்போராட்டத்தை வழிநடத்தினார். சீன பிரதமர் லி கெகியாங் கொரோனா எதிர்ப்பு குழுவிற்கு தலைமையேற்று ஒருங்கிணைத்தார்.

இந்த ’யுத்தம்’ இரண்டு முனைகளில் முன்னெடுக்கப்பட்டது. முதலாவது மருத்துவமனைகள். அங்கு வரும் நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவது முக்கியம். இரண்டாவது நோய் பரவல் தடுப்பு  நோயால் பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து தனிமைப்படுத்துதல். அதற்கு தேவையான வழிமுறைகளை வகுத்து விரைவாக செயல்படுவது.

ஜனவரி 23 ஆம் தேதி ஊகான் நகரமும் ஹுபே மாகாணமும் உலகம் கண்டிராத மிகப்பெரும் ஊரடங்கினை தொடங்கியிருந்தன. நாட்டின் அனைத்து மாகாணங்களில் இருந்தும் மருத்துவர்கள், நவீன உபகரணங்கள் மற்றும் இதர வளங்களை திரட்டி அங்கே அனுப்பினார்கள். 330 மருத்துவக் குழுக்களும் 41600 மருத்துவ பணியாளர்களும் ஊகானில் குவிக்கப்பட்டார்கள். 

தொற்றுநோய் தடுப்பு சிறப்புக் குழுவினர் 1800 பேர்  ஊகானிற்கு அனுப்பப்பட்டார்கள்.  ஐந்தைந்து பேர் ஒரு குழுவாக இணைந்து ஒவ்வொரு வீட்டிலும் நேரில் சென்று ஆய்வு செய்தார்கள்.  

முதலில் ஊகானிலும் அதை தொடர்ந்து சீனா முழுவதும் பின்பற்றப்பட்ட சில நடவடிக்கைகள் இங்கே குறிப்பிடத்தக்கன. தொற்றாளர்களின் தொடர்புகளை தடமறிய பழைய முறைகளுடன் சேர்த்து டிஜிட்டல் முறைகளும் பின்பற்றப்பட்டன. தொற்றாளர்கள் பயணித்த இடங்களுக்கு மற்றவர்கள் செல்லாமல் தவிர்க்கும் வகையில் எச்சரிக்கை பகிரப்பட்டது. 3 வார காலத்தில் 14 கோடி முறை இதற்காக இணையதள வசதி பயன்படுத்தப்பட்டதாகவும், அக்காலகட்டத்தில் 80 ஆயிரம் பேர் மட்டுமே பயணங்களை மேற்கொண்டதாகவும் அந்த நாட்டின் விபரங்கள் தெரிவிக்கின்றன. ஜெஜியாங் போல சில பகுதிகளில் சாலையில் சிக்னல் வைப்பது போல உடல்நிலையை பரிசீலித்து அடையாளம் காட்டும் சிக்னல்கள் அமைக்கப்பட்டன. சீனாதான் உலகிலேயே மிக அதிகமான இணைய பயன்பாட்டாளர்களை கொண்ட நாடு. அதன் காரணமாக அரசின் சுகாதார கண்காணிப்பு வசதிகளை இணையம் வழியாக சுமார் 90 கோடிப்பேர் பயன்படுத்த முடிந்துள்ளது. 

மருத்துவக் கழிவுகளை கையாள்வதற்காக 13 மாகாணங்களில் இருந்து 140 சிறப்பு நிபுணர்கள் வந்தனர்.  ஒரு நாளைக்கு 1220 டன்கள் மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பாக கையாளும் வகையில் தகுதி படிப்படியாக உயர்த்தப்பட்டது.

ஷாங்காய் நகரத்திலிருந்து ஊகானுக்கு சென்று செவிலியர் பயிற்சிக்காக தன்னை இணைத்துக் கொண்ட செவிலியர் ஹு நானா தனது கடிதத்தில் இவ்வாறு எழுதியிருந்தார். “எல்லோரும் நலமாக இருந்தால் மட்டுமே எங்களின் சிறு குடும்பமும் பாதுகாப்பாக இருக்க முடியும். பல குடும்பங்கள் தங்கள் குடும்பத்தோடு வாழவேண்டும் என்பதற்காக நான் எனது வீட்டை விட்டு வெளியே செல்லும் முடிவை எடுத்தேன். என்னுடைய தேசம் நடத்துகிற போராட்டத்தில் என்னுடைய பங்களிப்பு அவசியம். முன்னேறிய மருத்துவ தொழில்நுட்பங்கள் எங்களிடம் இருக்கின்றன. எனவே எனக்கு ஏதும் அச்சமில்லை. நான் கற்றுக்கொண்ட அனைத்தையும் என் திறமைகளையும் கொண்டு இந்த போராட்டத்திற்கு உதவி செய்வதென முடிவு செய்தேன்.

முதல் கட்ட போராட்டம் அடுத்தடுத்த நிலைகளை எட்டியது. ஜி ஜின்பிங் இவ்வாறு விவரிக்கிறார் “தொற்றுநோய் நாடுமுழுவதும் பரவுதலை  கட்டுப்படுத்த ஒருமாதம் எடுத்தது, தினசரி கண்டறியப்படும் உள்நாட்டு தொற்று எண்ணிக்கை இரண்டாவது மாதத்தில்தான் ஒற்றை இலக்கத்தை எட்டியது. ஊகான் நகரம் அமைந்துள்ள ஹுபெ மாகாணத்தில் போராட்டம் குறிப்பிடத்தக்க வெற்றியை சாதிக்க மூன்றாவது மாதம் ஆகியது”.

ஏப்ரல் 26 ஆம் தேதி ஊகானில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தொற்றாளர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆகியது. ஹுபே மாகாணத்தில் சிகிச்சை பெற்று நலமடைந்தவர்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தீவிர சிகிச்சை பெற்று குணமடைந்தார்கள் என்பதையும், இதில் 3 ஆயிரத்து 600 பேர் 80 வயதுக்கும் அதிகமான முதியவர்கள் ஆவார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த போராட்டத்தில் வேதனை தரும் வகையில் மருத்துவப் பணியாளர்கள் 46 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தார்கள். முதல் முனையில் போராட்டத்தின் தீவிரம் குறைந்துள்ளது. இரண்டாவது முனை எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டியுள்ளது.

இந்தப் போராட்டம் முடிந்துவிடவில்லை என்பதை சீனா அறிந்தே வைத்திருக்கிறது. மேலும் தடுப்பு மருந்துகள் மற்றும் சிகிச்சை வழிமுறைகளில் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. 

நோயுடன் ஒரு சதுரங்கம்:

தொற்றுநோய் தடுப்பு போராட்டத்தை விவரிக்கும்போது அதனை ஒரு சதுரங்க விளையாட்டாக ஒப்பிட்டார் ஜி ஜின்பிங். சீன தேசமே அந்த சதுரங்கத்தை ஆடியது.  மருத்துவப் பணியாளர்களும், அறிவியல் அறிஞர்களும் ஒரு அணியாக நின்றார்கள் எனில், அந்த நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியும், சோசலிச அரசாங்கமும், அரசு நிறுவனங்களும் பின்பலமாக நின்றார்கள். 90களுக்கு பிறகு பிறந்த இளைஞர்களின் பங்களிப்பு இதில் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. 

அனைவருக்கும் இலவச சிகிச்சை:

ஊகான் நகரத்தில் ஊரடங்கு அறிவிப்பதற்கு ஒரு நாள் முன்பாகவே, பணம் இல்லாத காரணத்தால் குடிமக்களின் ஒருவருக்கும் கூட கொரோனா பரிசோதனையோ அல்லது சிகிச்சையோ மறுக்கப்படக் கூடாது என்பதை அரசு தெளிவுபடுத்தியது.

சீன மருத்துவ காப்பீட்டு ஆணையத்தின் கணக்கீட்டின் படி கொரோனா தொற்று கண்டறியப்பட்ட உள்நோயாளிகளுக்கான செலவு தலா 2லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும். தீவிர சிகிச்சை தேவைப்பட்டவர்களுக்கான செலவு 15 லட்சத்தை தாண்டியது.  70 வயதாகிய கொரோனா நோயாளி ஒருவருக்கு 3 மாதங்கள் சிகிச்சை தொடர்ந்து தரப்பட்டது, அவருக்கு எக்மோ கருவி இரு முறை பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அவரை குணப்படுத்துவதற்கான செலவு சுமார் 1 கோடியே 40 லட்சமாக ஆகியது. 

இந்த செலவுகளில் ஒரு பகுதி இன்சூரன்ஸ் மூலமாகவும், பெரும்பகுதி அரசு நிதியாகவும் ஈடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இக்காலத்தில் செயல்பட்ட அத்தியாவசிய நிறுவனங்களில் பணியாளர்களுடைய பாதுகாப்பை அரசே உறுதி செய்தது. தனியார் நிறுவனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்கான நிதி உதவியை அரசு மேற்கொண்டது. 

அதிவிரைவான அறிவியல் ஆய்வுகள்:

தொற்று நோய் தடுப்புக்காக அமைக்கப்பட்ட்ட குழுக்களின் அதி முக்கியத்துவம் வாய்ந்தது பல துறை அறிவியல் அறிஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்ட குழுவாகும். உலகம் பல தொற்றுநோய்களை எதிர்கொண்டிருக்கிறது காலரா, பிளேக், சின்னம்மை மற்றும் தொழுநோய் ஆகியவை பரவுவதை அறிந்து கொள்ளவும், தடுப்பதற்கும் நீண்டகால ஆராய்ச்சிகள் தேவைப்பட்டன. சமீபத்தில் நாம் எதிர்கொண்ட பெருந்தொற்றாகிய ஹெச் 1 என் 1  வைரசை அறிவதற்கு ஒருமாத கால ஆய்வு தேவைப்பட்டது. கொரோனா வைரசின் ஜீன் சீக்குவன்ஸ் ஒரு வார காலத்தில் தனிமைப்படுத்தப்பட்டதும், அது உலக நாடுகளோடு பகிரப்பட்டதும் மருத்துவத் துறைக்கு பெரும் உதவியாக அமைந்தது. 

வைரசின் பாதிப்புகள் அது பரவும் விதம் குறித்து அறிந்து தொற்றுநோய் தடுப்பு உத்திகள் வகுக்கப்பட்டன. சிகிச்சை முறை உருவாக்கப்பட்டது. பலன் கொடுக்கும் மருந்துகள் உலகின் பல நாடுகளில் இருந்தும் பெறப்பட்டன. 16 நாட்களில் டெஸ்டிங் கிட்டுகள் உருவாக்கப்பட்டது, அவைகளை போதுமான எண்ணிக்கையில் தயாரித்து அனுப்பும் பணி தொடங்கியது.

அறிவியல் நிபுணர்களுக்கு வேறு ஒரு வேலையும் இருந்தது. அவர்கள் சீன மக்களிடையே தொலைக்காட்சிகளில் உரையாற்றினார்கள். தொலைபேசி வழி கேள்விகளுக்கு பதில் சொன்னார்கள். இவ்வாறு வதந்திகளுக்கு எதிரான அறிவியல் பிரச்சாரமும் முக்கிய பங்கு வகித்தது.

அரசு நிறுவனங்களின் பங்களிப்பு:

சீனாவின் தனியார் தொழில்நுட்ப நிறுவனங்கள் கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் செய்த பங்களிப்பு அப்போதே பல செய்திகளில் வெளிவந்தது. அலிபாபா, டென்செண்ட், பைடூ, சென்ஸ் டைம் ஆகிய நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை வழங்கின. இணையதள நேரலை சேவைகளின் மூலம் பள்ளி வகுப்புகள் தொடரப்பட்டன. மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. தொற்றாளர்கள் மற்றும் நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் உணவு விநியோகத்திற்காக  ரோபோட்டுகளை பயன்படுத்தினார்கள். ஆனால் அரசு நிறுவனங்களுடைய மாபெரும் பங்களிப்பு இல்லாமல் கொரோனா போராட்டத்தை அவர்கள் நடத்தியிருக்க முடியாது.

சீன அரசு நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து கூடுதலாக குறிப்பிட வேண்டும்.   சாளரம் அமைப்பதற்கு 10 நொடிகள்,  சுவர் எழுப்ப 2நிமிடங்கள் என அதிவேகமாக,   இரவும் பகலும் உழைத்து மருத்துவமனைகளை கட்டியது சீன அரசுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்களே ஆகும்.  4000 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்கள் இரவு பகலாக உழைத்தார்கள்.  இந்த கட்டுமான பணிகளுக்கு தேவையான மின்சாரம், எரிசக்தி மற்றும் தகவல் தொடர்பினை அரசு நிறுவனங்களே வழங்கின.

மருத்துவ உபகரண உற்பத்தியை அரசு நிறுவனங்களின் விரைவான உதவியின் காரணமாகவே உடனடியாக அதிகரிக்க முடிந்தது.தொற்றுநோய் தடுப்பு உபகரணங்களான கவச உடைகள் முதல் அனைத்து உபகரணங்களின் உற்பத்தியும் விரைவாக அதிகரிக்கப்பட்டது. எரிசக்தி, தானிய உற்பத்தி, எண்ணெய், உணவுப்பொருட்கள் மற்றும் மருந்து உற்பத்தியில் அரசு நிறுவனங்கள் பெரும் பங்களிப்பை செய்தன. சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுக்குள் வைக்கப்பட்டது. விலையை உயர்த்தி விற்ற வணிகர்கள் மீது குற்றவழக்கு பதியப்பட்டது, செயற்கை விலையேற்றம் கட்டுப்படுத்தப்பட்டது.

சீன அரசின் எண்ணெய் மற்றும் உணவுப்பொருள் கழகம், சீன தானிய சேமிப்புக் குழுமம், சீன உப்பு தொழிற்சாலை அனைத்தும் தங்கள் வழங்கலை அதிகப்படுத்தின. சீனாவின் வழங்கல் மற்றும் சந்தைப்படுத்துதல் கூட்டுறவு நிறுவனங்கள் முயற்சியெடுத்து விவசாய கூட்டுறவு சங்கங்களை நேரடியாக தொடர்பு கொண்டு காய் கனிகள் மற்றும் தேவையான பொருட்கள் சரியான விலையில் தடையில்லாமல் கிடைப்பதை உறுதி செய்தன.

மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு, அதிலும் குறிப்பாக மருத்துவர்களுக்கான பாதுகாப்பு கவச கருவிகள் தயாரிக்கும் பணி புயல் வேகத்தில் முடுக்கிவிடப்பட்டது. ஜனவரி 28 ஆம் தேதி அன்று சீனாவின் ஒரு நாளில் 10 ஆயிரம் சோடி கருவிகளை தயாரிக்க முடிந்தது. பிப்ரவரி 24 ஆம் தேதி அவர்களின் தயாரிப்பு வேகம் ஒரு நாளைக்கு 2 லட்சத்தை தாண்டியது. பிப்ரவரி 1 ஆம் தேதி என்ற அளவில்  7 லட்சத்து 73 ஆயிரம் பரிசோதனைக் கருவிகளை சீன அரசு தயாரித்தது பிப்ரவரி 25 ஆம் தேதியன்று ஒரு நாளில் 17 லட்சம் என்ற அளவில் அதன் எண்ணிக்கை உயர்ந்தது. மார்ச் 31 ஆம் தேதி இந்த எண்ணிக்கை 42 லட்சமாகியது. தொழிற்சாலை நிர்வாகங்களை மருத்துவ உபகரண தயாரிப்பை நோக்கி உந்தித் தள்ளியது அரசு நிர்வாகம். ஆம்புலன்சு வாகனங்கள், வெண்டிலேட்டர்கள், இ.சி.ஜி இயந்திரங்கள், கிருமி நாசினி இயந்திரங்கள் உள்ளிட்டு தேவையான அனைத்து கருவிகளும் உள்நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

முன்னணிப் படையாக கம்யூனிஸ்டுகள்:

மார்க்சியவாதிகள் என்போர் ஆரூடம் சொல்பவர்கள் அல்ல. எதிர்கால வளர்ச்சிப் போக்குகளையும் மாற்றங்களையும் மனதில் கொண்ட பொதுவான வழிகாட்டுதல்கலையே அவர்களால் உருவாக்க முடியும், இயந்திர கதியாக ஒரு காலத்தை நிர்ணயிக்க முடியாது என்றார் மாவோ. சீனாவின் 46 லட்சம் கட்சி கிளைகளும் இப்போராட்டத்தில் ஈடுபட்டார்கள். போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் இயக்கவியல் பார்வையோடு வழிநடத்தினார்கள்.

மக்களிடமிருந்து மக்களுக்கு என்ற மாஸ்லைனை நீண்ட காலமாக கடைப்பிடிக்கும் அனுபவம் கொண்டது சீன கம்யூனிஸ்ட் கட்சி.  கட்சியின் அனைத்து நிலைகளிலும் உள்ள கமிட்டிகள் உடனடியாக ஒரு அவசர நிலையை எதிர்கொள்ள தயாரானார்கள். தங்களிடமுள்ள அனைத்து வளங்களையும் திரட்டினார்கள்.  மக்களுக்கு தலைமையேற்க வேண்டும், மக்களிடம் இருந்து ஆலோசனைகளை பெற்று செயல்பாடுகளை பட்டை தீட்ட வேண்டும். 

யாரும் செய்வதற்கு தயங்கும் ஒரு பணியாக இருந்தால் அதில் கம்யூனிஸ்டுகளே முதல் ஆளாக ஈடுபட வேண்டும். தயக்கம் என்பது ஒருபோதும் கூடாது என்றது  கட்சி.

1) முன் கை எடு,
2) அறிவியல் அடிப்படையில் நோயின் தன்மையை அறிந்து கொண்டு செயல்படு
3)  திட்டமிடுதலை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்க, ஒட்டுமொத்த திட்டத்தின் பகுதியாகவும், உள்ளூர் நிலைமைகளை மனதில் கொண்டும் திட்டம் இருக்க வேண்டும்,
4) திட்டமிட்ட பணிகளை அமைப்பின் வலிமையைக் கொண்டு செயலாக்குக. நடைமுறை அனுபவங்களை உள்வாங்கி செயல்பாட்டினை கூர்மைப்படுத்துக என வழிகாட்டியது.

ஜி ஜின்பிங், “பொத்தாம் பொதுவான உத்தரவுகளைக் கொண்டோ, அதிகாரத்துவத்தைக் கொண்டோ அல்லது பெயருக்கு வேலை செய்வதாலோஇந்த சவாலை எதிர்கொள்ள முடியாது.” என தெளிவாகவே குறிப்பிட்டார். உத்தரவுகளை கேட்டு வேலை செய்யும் பணியாளராக அல்ல, உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப உத்திகளை வகுத்து செயல்படும் தளபதியாக செயல்பட்டார்கள் முரண்பாடுகளை ஆய்வு செய்து முறையாக கையாண்டார்கள்.

மருத்துவர், செவிலியர் என மருத்துவ சிகிச்சை முனையில் பணியாற்றிய குழுக்களில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் முன் நின்றார்கள். உதாரணமாக ஹுபே மாகாணத்திற்கு வந்த சீன ராணுவ மருத்துவக் குழுவினர் 450 பேரிலும் 60 சதவீதம் கட்சி உறுப்பினர்கள் ஆவார்கள்.

பீக்கிங் பல்கலைகழகத்திலிருந்து மட்டும் ஊகானுக்கு 405 மருத்துவ பணியாளர்கள் வந்திருந்தனர்.  அதில் 171 பேர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள். “ஒவ்வொரு பத்து நிமிடத்திலும் 5 நோயாளிகளை பரிசோதிக்க வேண்டியிருந்தது. ” வாங் பென் என்ற மருத்துவர் இவ்வாறு குறிப்பிட்டார் “ஊகானில் ஒவ்வொரு நாளும் மக்கள் எங்களை அன்பில் நனைத்தார்கள், கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்ததற்கான பொருளை இந்த போராட்டம் எங்களுக்கு உணர்த்தியது”.

ஹெய்லாங்ஜியாங் உள்ளிட்ட சில இடங்களில் கட்சியினரும், அரசு அதிகாரிகளும் தளர்வோடு நடந்து கொண்டார்கள். உடனடியாக தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு கட்டுப்பாட்டை கூடுதலாக்கினார்கள். மேலும் களத்தில் ஒவ்வொரு வீடாக சென்று உதவி செய்த கட்சி தோழர்களின் பணியை ஒழுக்க ஆய்வு மற்றும் மேற்பார்வை குழு கண்காணித்தது. இந்தக் குழுவுக்கென தனியாக ஒரு பத்திரிக்கை இயங்குகிறது நோய் தடுப்புக் குழுக்களின் அர்ப்பணிப்பு மிக்க பணிகள் ஏராளமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமுதாய குழுக்களின் பங்களிப்பு:

மாகாண அரசுகளும், உள்ளாட்சிகளும் அவரவர் சூழல் குறித்து ஆய்வு செய்து படைப்பாக்கத்துடன் செயல்பட்டார்கள். மக்களுடன் நேரடி தொடர்பை உறுதி செய்யும்  6 லட்சத்து 50 ஆயிரம் சமுதாய குழுக்கள் சீனா முழுவதும் உள்ளன. இவையே சீன அதிகாரப்பரவல் கட்டமைப்பின் கடைசி கண்ணிகள். நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள இந்தக் குழுக்களின் 40 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் கொரோனா விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டார்கள். ஒவ்வொரு சமுதாய குழு உறுப்பினரும் 350 பேரை நேரில் சந்திக்க வேண்டியிருந்தது. ஊரடங்கு தீவிரமாக அமலாக்கப்பட்ட ஹூபே மாகாணத்தில் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் உணவுப்பொருள் மற்றும் மருந்து விநியோகத்தில் பணியாற்றினார்கள்.  அதாவது ஊரடங்கு காலத்தில் மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்கான பணியில் இவர்களின் உழைப்பு மிகப்பெரும் பங்கு வகித்தது.

கரடுமுரடான சாலைகளில், பாதுகாப்பில்லாத பகுதிகளில் பயணித்து ஒவ்வொரு குடிமகனையும் அவர்கள் சந்தித்தார்கள். குடிமக்கள் நல அமைச்சகத்தின் தகவலின்படி இந்த பணியாளர்களில் 53 பேர் பணியின்போது மரணமடைந்துள்ளனர். இவ்வாறு மரணமடைந்தவர்களில் 92.5 சதவீதம் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஆவார்கள்.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் போய் என்ற மாவட்டத்தில் நடந்தவைகளை சென் சென் என்பவர் பீப்பிள்ஸ் டெய்லி இதழில் எழுதியுள்ளார்.

மாகாணத்தின் திறன் வாய்ந்த தோழர்களை தேர்வு செய்து முன்னணிக்கு அனுப்பினார்கள்.  மொத்தம் 523 பேர். அவர்களின் பணி ஆளுக்கு ஒரு குழுவை வழி நடத்துவதாகும்.

இந்த குழுக்களின் கட்சி உறுப்பினர்கள் சிறப்பாக செயல்பட்டால் அவர்கள் சிவப்பு பட்டியலில் இடம் பெற்றார்கள். தொய்வாக இருந்தால் நீல பட்டியலில் இடம்பெற்றார்கள். போய் மாவட்டத்தில் 76 பேர் சிவப்பு பட்டியலிலும், 2 பேர் நீல பட்டியலிலும் இடம் பிடித்தார்கள்.  முன்னணியில் பணியாற்றும் குழுக்களுக்கு சரியான நேரத்தில் உணவு, குடிநீர் கொடுப்பது. ஆட்களை மாற்றிவிடுவது. முக கவசம், கை உறைகள் கிடைக்கச் செய்வது தனியாக ஒரு குழுவால் கவனிக்கப்பட்டது. இந்த பணியாளர்களுக்கு ஆன்லைன் வழி உளவியல் ஆலோசனைகளும் உறுதி செய்யப்பட்டன. இந்த போராட்டத்தின் வழியே ஏராளமான புதிய உறுப்பினர்கள் கட்சியை நோக்கி ஈர்க்கப்பட்டனர்.

இளைஞர்களின் பெரும் பங்கேற்பு:

கொரோனா நோய் தடுப்பு பணிகளின் இளைஞர்களை அதிக அளவில் ஈடுபடத் தூண்டியது சீன அரசும், கம்யூனிஸ்ட் கட்சியும்.  1990 களுக்கு பின் பிறந்த இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றார்கள். ஆண் செவிலியரான ஜியான் யாங், “நாங்கள் இளைஞர்கள், நாங்களே முன் வரிசையில் நிற்போம்” என உற்சாகமாக குறிப்பிடுகிறார்.  இளைஞர்களின் பங்கு தனித்து குறிப்பிட வேண்டிய அளவில் தனிச்சிறப்பானதாக இருந்தது.

இப்போது சீன ஊடகங்களில் 90களுக்கு பின் பிறந்தோர் என்பதே அவர்களை குறிப்பிட பொதுவான பெயராகிப்போனது. ஊகானில் குவிக்கப்பட்ட மருத்துவப் படையணியில் 12 ஆயிரம் பேர் 90களுக்கு பின் பிறந்தவர்கள் ஆவர். 

ஒரு வேளை இந்த போராட்டத்தில் நான் மரணிக்க நேர்ந்தால் வைரஸ் குறித்த ஆராய்ச்சிக்காக என்னுடைய உடல் பயன்படும் என லி ஹு என்ற பெண் செவிலியர் தெரிவித்தார்.  அவர் 1995க்கு பின் பிறந்தவர்.

95 க்கு பின் பிறந்த காவல் அதிகாரியான யாங் குயுச்செங். தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.  பல நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வரச் செல்லும்போது நாய்களை எதிர்கொள்வது சவாலாக இருந்தது. சில காவலர்கள் நாய் கடிக்கு ஆளானார்கள். நோயாளிகளுக்கு ஏற்படும் அச்சத்தை போக்குவதுடன் அவர்களுடன் நிதானமாக உரையாடியே மருத்துவமனைகளுக்கு அழைத்துவர வேண்டும் என்கிறார் அவர். இந்தப் போராட்டத்தின் போக்கில் அவர் கம்யூனிஸ்ட் கட்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டார். 

வாகனங்களை பரிசோதிக்கும் பணியில் ஈட்டுபட்ட்டவர் சோவ் போஜியான். “தியாஞ்சின் பகுதியை கடந்த ஒவ்வொரு ஓட்டுனரையும் பரிசோதித்தேன். அவருடைய உடல்நலனை விசாரித்து பதிவு செய்தேன். கைகள் குளிரில் உறைந்தன. எனினும் ஒருவரைக் கூட விசாரிக்காமல் விடவில்லை.” என்கிறார் அவர். 

கூட்டுறவு மற்றும் பகிர்மான அலுவலகத்தின் பணியாளரான லியூ போ, 40 நாட்கள் முன்னணி பணிகளை மேற்கொண்டார். தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு தேவையான உபகரணங்களை வாங்கி வழங்குவது அவருடைய பணி. 10 விதமான பொருட்களை தினமும் 550 செட்டுகள் வாங்கி அவற்றை தனிமைப்படுத்தல் அறைகளில் வைக்க வேண்டும். 40 நாட்கள் இடைவெளியில்லாமல் செய்து முடித்துள்ளார் அந்த இளைஞர். 

இவ்வாறு கொரோனா நோய் தடுப்பில் குறிப்பிடத்தக்க வெற்றியை சீனா சாதித்திருக்கிறது. ஒருங்கிணைந்த விரைவான செயல்பாடுகளே அவர்களை காத்துள்ளன.  

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து சொந்த மக்களை பாதுகாப்பதில் அரசாங்கங்கள், பெரு நிறுவனங்கள், உள்ளூர் சமூகம் மற்றும் ஊடகங்களுடைய செயல்பாடுகளை பற்றிய ஆய்வினை சிங்கப்பூரின் இரண்டு முன்னணி ஆய்வு நிறுவனங்கள் நடத்தினார்கள். (Singapore’s leading social research agency Blackbox Research and technology company Toluna) 23 நாடுகளிலிருந்து பொதுமக்கள் பங்கேற்ற இந்த ஆய்வில் முதல் இடத்தினை சீனமும், இரண்டாம் இடத்தை வியட்நாமும் பிடித்திருந்தன. ஏகாதிபத்திய நாடுகள் இந்த பட்டியலில் 50 புள்ளிகளைக் கூட பெற முடியாமல் பின் தங்கியிருக்கிறார்கள்.

சில படிப்பினைகள்:

அவசரகாலத்தில் முடிவுகளை உள்ளூர் அளவிலேயே மேற்கொள்வதற்கு உதவி செய்யும் வகையில் சட்ட திருத்தம் விவாதிக்கப்பட்டுவருகிறது.  உயர்மட்ட நிர்வாகங்களின் முடிவுகளுக்காக காத்திருந்து அதனால் கால விரையமாதல் மற்றும் பல்வேறு துறைகளுக்கு இடையிலான தகவல் தொடர்பு மற்றும் நிர்வாக முடிவுகளை மேற்கொள்வதன் சிரமங்களை பரிசீலித்து இந்த முடிவுக்கு அவர்கள் வந்துள்ளார்கள்.

மேலும்பொது சுகாதாரம் மற்றும் காப்பீட்டுக்கான சட்டங்களின் செய்ய வேண்டிய திருத்தங்களை அவர்கள் விவாதிக்கிறார்கள், உயிரி பாதுகாப்பு என்பதை தேச பாதுகாப்பின் ஒரு பகுதியாக இணைக்க வேண்டும் என்ற முடிவுக்கும் வந்துள்ளார்கள். வன உயிரிகளை பாதுகாப்பது மற்றும் கழிவுகளை மேலாண்மை செய்யும் வழிமுறைகளை சீர்திருத்துவது மற்றும் நவீனப்படுத்துவது என்பதாக அவர்களின் அடுத்தகட்ட திட்டங்கள் அமைந்திருக்கின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து மற்றும் சிகிச்சை முறையை வளர்த்தெடுப்பதற்கான ஆய்வுகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மீண்டும் தொற்று பரவல் எங்கிருந்து வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு மட்டுமே இந்த போராட்டத்தில் முடிவான ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும். 

பொருளாதார தாக்கம் குறித்து:

பொது சுகாதாரத்திற்கும், உற்பத்திக்கும் இடையிலான இயக்கவியல் உறவினை புரிந்து கொண்டவர்கள் மார்க்சியவாதிகள். உற்பத்தியில் தற்காலிக முடக்கம் இருக்கும் என்பதை அறிந்தே அவர்கள் செயல்பட்டார்கள். உலக முதலாளித்துவ நாடுகள் பலவற்றிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை சாதிக்கும் முன்பே பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அது நோய் பரவலில் கேடான விளைவுகளை ஏற்படுத்தியது. சீனாவை பொருத்தமட்டில் தற்காலிக முடக்கத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டிருப்பது சோசலிச கட்டமைப்பால் கிடைத்த பெரும் நன்மை ஆகும்.

இருவகையான பொருளாதார திட்டங்கள் தேவைப்படுகின்றன. முதலாவது ஊரடங்கு காலத்தில் மக்களின் உயிர் காக்கவும், வருமான இழப்பை ஈடுகட்டவும் செய்யவேண்டிய உதவிகள். இரண்டாவது ஊரடங்கு முடிந்த பிறகாக தேவைப்படுகிற பொருளாதார நடவடிக்கைகள்.

ஊரடங்கு காலத்தில் வேலையில்லாக்கால நிவாரணம் கோரி விண்ணப்பிப்போருக்கு 6 மாதங்களுக்கு ஊதிய காப்பீடு மற்றும் கூடுதலாக விலைவாசி மானியம் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. 13 லட்சம் நிறுவனங்கள் இக்காலத்தில் வேலையில்லாக்கால இன்சூரன்ஸ் தொகை பெற்றுள்ளன. அவற்றில் பணியாற்றும் 4கோடியே 20 லட்சம் தொழிலாளர்கள் உதவிபெற்றுள்ளார்கள். 

தற்காலிக உதவிக்காக விண்ணப்பிப்போருக்கு தற்காலிக உதவி அறிவிக்கப்பட்டது அவர்களுக்காக 24 மணி நேர தொலைபேசி அழைப்பு அறிவித்து அதன் மூலம் உதவியை கொண்டு சேர்த்தார்கள். குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தாருக்கு பண உதவித்திட்டம் அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு நிதியமைச்சகத்தின் சமூக பாதுகாப்புத் துறையின் சார்பில் 15 ஆயிரத்து 600 கோடி யுவான்கள் (ரூபாயில் 1 லட்சத்து 66 ஆயிரம் கோடிகள்) ஒதுக்கப்பட்டதாக அந்த துறையின் துணை இயக்குனர் வாங் ஜிக்ஜியாங் தெரிவிக்கிறார்.  இது சீனாவின் மத்திய அரசு ஒதுக்கிய தொகையாகும். மாகாணங்களின் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப அவர்கள் பங்கும் சேர்த்து உதவிகள் தரப்பட்டுள்ளன. மேலும் உள்ளாட்சி நிர்வாகங்களும் மக்களுக்கு நேரடி நிதி உதவி செய்கிறார்கள். உதாரணமாக மே மாதத்தில் குவாங்க்டாங் மாகாணத்தில் பைஷலோங் என்ற கிராம கமிட்டி தனது கிராமத்தில் வசிக்கும் அனைவருக்கும் தலா ஆயிரம் யுவான்கள் (குழந்தைகள், சிறுவர்கள் உட்பட)  வழங்குவதாக அறிவித்தது. விவசாய வேலைகள் முடங்கியுள்ளதை அடுத்து அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.

ஊரடங்கு முடிந்த பிறகு மக்கள் கடைவீதிகளுக்கு செல்வதற்காக சிறப்பு கூப்பன்களை உள்ளூர் நிர்வாகங்கள் அறிவித்து வருகின்றனர். 

நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான செலவு தவிர உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வரித் தள்ளுபடியும், மானியக் கடனும் தரப்பட்டது. சிறு, குறுந்தொழில்கள் மற்றும் கிராமப்புற நிறுவனங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டது. 

பொருளாதார மீட்சிக்கான நீண்ட கால திட்டங்கள்:

2008 ஆம் ஆண்டு எதிர்கொண்ட உலக பொருளாதார நெருக்கடியை விடவும் பெரிய பாதிப்பை இப்போது எதிர்கொள்ள நேரிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இக்காலத்தில் (2020 ஜனவரி மற்றும் பிப்ரவரி) சீனாவின் தொழில்துறை உற்பத்தியானது  13.5 சதவீதமாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நகர்ப்புற வேலையின்மை விகிதம் 6.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்கள் சில்லறை வணிகம் 20.5 சதவீதம் குறைந்திருந்தது. இவையெல்லாம் கடுமையாக விளைவுகளே ஆகும்.

ஏப்ரல் மாத கடைசியில் சீனாவின் வேலையின்மை விகிதம் 20.5% ஆக இருக்கலாம் என ஜோங்டான் செக்யூரிட்டீஸ் என்ற தரகு நிறுவனம் தெரிவிக்கிறது. அவர்கள் எதிர்பார்ப்பின்படி 7 கோடிப்பேர் வேலையில்லாமல் இருக்கலாம் என்கிறார்கள். 

வேலையின்மையை எதிர்கொள்வதை தனது அவசர அவசியமுள்ள நடவடிக்கையாக சீனா எடுத்துக் கொண்டுள்ளது. முக்கிய தொழில்துறைகளில் 10 ஆயிரம் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் முக்கிய நிறுவனங்களில் 4 லட்சம் தொழிலாளர் பணியிடங்களுக்கான தேவை கண்டறியப்பட்டு தொழிலாளர்களை அமர்த்த முன்கை எடுத்திருக்கிறார்கள். 

முதலாளித்துவ நாடுகளின் திறனுள்ள தொழிலாளர்கள் பசியிலும் வேதனையிலும் அச்சத்திலும் செய்வதறியாது திகைக்கிறார்கள். இது உற்பத்தியை மீட்டமைப்பதில் சிக்கலான விளைவுகளை ஏற்படுத்து.

சீன அரசானது இடம்பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்களுக்கு பாதுகாப்பாக திரும்புவது முக்கியம். அதற்காக 1 லட்சத்து 92 ஆயிரம் சிறப்பு வாகனங்கள், 367 சிறப்பு ரயில்கள், 1462 கார்கள் மற்றும் 551 விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இதன் மூலம் 5.03 மில்லியன் தொழிலாளர்களை அவர்கள் பணியிடங்களுக்கு நேரடியாக சேர்க்கவிருக்கிறது.

ஏற்றுமதி வர்த்தகத்தை பொருத்தமட்டில் சீனாவின் எதிர்காலம் உலக சூழலை பொருத்தே அமையும். 

மே மாத இறுதியில் சீனாவின் ’இரண்டு பேரவைகள்’ கூடி விவாதிக்கவுள்ளன. கொரோனா நோய் பரவலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அந்த நிகழ்வு எதிர்வரவுள்ள பொருளாதார சவால்களைக் குறித்து விவாதிக்கவிருக்கிறது. பொருளாதார முனையில் சீனாவின் போராட்டம் அதன் பிறகு தெளிவாகலாம். 

சீனாவின் பொருளாதார நடவடிக்கைகள் கீழ்க்கண்டவாறு இருக்கும் என சீனாவின் ஏடுகள் தெரிவிக்கின்றன.

  • மக்களுக்கு பணம் சென்று சேரும் வகையிலான ஊக்கத்திட்டம் அறிவிக்கப்படும். (வேலையில்லாக்கால நிவாரணத்தை உயர்த்துதல் உள்ளிட்டு) 
  • கட்டமைப்பு திட்டங்களுக்கான ஊக்கத்தை கவனத்தில் கொண்ட நிதிச் செலவினங்கள் மேற்கொள்ளப்படும்.
  • சிறு குறுந்தொழில்களுக்கு சிறப்பு கடன்கள் வழங்கப்படும், அவர்களின் வரிகள் தள்ளுபடி செய்யப்படும்.
  • ஒவ்வொரு உள்ளூர் அரசு நிர்வாகமும் தங்கள் சூழலுக்கு ஏற்ற முடிவுகளை மேற்கொள்வதற்கான சுதந்திரம் உள்ளது. (இது பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் சலுகைகளை அள்ளிக் கொடுக்கும் முதலாளித்துவ அணுகுமுறைக்கு நேர்மாறானதாகும்)
  • உற்பத்தி பழைய நிலைமைக்கு திரும்பியவுடன் வழங்கல் தொடர்பும் சீராக்கப்படும்.
  • தனது சந்தையை உலகிற்கு திறப்பது மற்றும் உள்நாட்டு சந்தை சார்ந்த சீர்திருத்தங்களை தொடர்ந்து மேற்கொள்ளும்.
  • பொருளாதாரத் திட்டங்கள் அனைத்தின் முதன்மை நோக்கம் வேலைவாய்ப்பை மீட்டமைப்பதாகவும், ஏழை மக்களை பாதுகாப்பதாகவும் இருக்கும்.

முதலாளித்துவ ஊடகங்கள் இந்தியாவைப் போலவே சீனாவிலும் தொழிலாளர்கள் நலத்திட்டங்களை வெட்டுமாறு ஆலோசனைகள் வைக்காமல் இல்லை. முதலாளிகள் தொழிலாளர்களுக்கு தரும் சம்பளம் அல்லாது 30 சதவீத தொகையை நலத்திட்டங்களுக்கு செலுத்த வேண்டும். ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு, வேலையில்லாக் கால காப்பீடு, பணிக்கால விபத்துக் காப்பீடு மற்றும் பேறுகால காப்பீட்டு தொகைகளை ரத்து செய்ய வேண்டும் என்பது முதலாளித்துவ அறிஞர்களின் எதிர்பார்ப்பாகும். பொருளாதார தளத்தில் எழக்கூடிய சவால்களை அந்த நாடு எப்படி எதிர்கொள்ளவுள்ளது என்பதை வரும் நாட்களில் பார்க்கலாம்.

இந்த நெருக்கடிகளை சமாளித்துக் கொண்டே வறுமை ஒழிப்பு இலக்கை நோக்கியும் சீனா நடைபோடத் தொடங்கியுள்ளது. உலகம் நிர்ணயித்திருக்கும் வறுமைக்கோட்டு அளவுகோலுக்கு கீழே ஒருவரும் வாழாத நாடாக சீனத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பது அந்த கட்சி வகுத்துக்கொண்ட மிக முக்கியமான இலக்கு. வைரசை எதிர்கொள்வதில் கிடைத்த வெற்றியைப் போலவே இதிலும் வெல்வோம் என்கிறார்கள்.

வறுமையும், நோயும் மனித குலத்தின் பொது எதிரி. இவைகளுக்கு எதிரான போராட்டத்தில் சோசலிசமே உற்ற துணையாகும் என்பதை சீனா எடுத்துக் காட்டட்டும்.

இந்தியாவுக்கு எதிரான ‘குடியுரிமை’ கூராயுதம்!

இரா. சிந்தன்

Download : Marxist Reader (android)

(டிசம்பர் 2019 மார்க்சிஸ்ட் இதழில் இடம்பெறும் இக்கட்டுரை, முன்னுக்கு வந்துள்ள குடியுரிமை சிக்கலை ஒட்டி இணைய வாசிப்புக்காக பகிரப்படுகிறது)

குடியுரிமை என்பதை தன் அரசியலுக்கான புதிய ஆயுதமாக தீட்டத் தொடங்கியிருக்கிறது பாஜக. குடியுரிமை சட்டத் திருத்தத்தை கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவும் செய்தது. அதில் மத அடிப்படையில் இந்தியக் குடியுரிமையை தீர்மானிக்கும் தன் நோக்கத்தை அப்பட்டமாகவே வெளிப்படுத்தியுள்ளது.

அசாமில்,  ‘இந்திய குடிமக்களின் தேசிய பதிவேடு’ பட்டியல் வெளியிடப்பட்டதும், அது ஒரு புதிய குழப்பத்தை ஏற்படுத்தியதையும் நாம் அறிவோம். இப்பட்டியலில் இடம் பெறாத 19 லட்சம் பேர் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டனர். பாஜக இப்படியொரு பதிவேடு இந்தியா முழுவதுமே கொண்டு வரப்பட வேண்டும் என்ற வாதத்தை முன்வைக்கிறது. அசாம் மாநில பட்டியல் வெளியான சில நாட்களுக்குப் பின் அவர்கள் கூச்சலை சற்று குறைத்துக்கொண்டார்கள். அதற்கு காரணம், 40 லட்சம் பேர் அதுவும் ‘வந்தேறிகள்’ வெளியேற்றப்படுவார்கள் என்ற தங்கள் பிரச்சாரம் பொய்த்துப்போனதே ஆகும். அசாம் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மக்களில் முஸ்லிம்கள்  பெரும்பான்மையாக இல்லை. 

அவர்களுக்கு இது சிறிய ஏமாற்றம்தான். உத்திரப் பிரதேச மாநிலத்தில், மீரட் கண்டோன்மென்ட் தொகுதியின் எம்.எல்.ஏவான சத்ய பிரகாஷ் அகர்வால் ‘வடிகட்டும் வேலையை’ நாடு முழுவதும் செய்வோம் என திமிராகவே இப்போதும்  பேசுகிறார்.பாஜகவின் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா, ‘முஸ்லிம்களை’ மட்டும் குறிவைத்து தங்கள் திட்டத்தை மாறுதலுக்கு உள்ளாக்கி செயல்படுத்துவோம் என்கிறார். அசாமில் கணக்கெடுப்பை மீண்டும் நடத்துவோம் என்கிறார். (அந்த மாநிலத்தில் ஏற்கனவே மேற்கொண்ட கணக்கெடுப்பிற்கே சுமார் ரூ.1,600 கோடி செலவு ஆகியிருக்கிறது). அமித் ஷா பேச்சின் ஒரு பகுதி ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பாஜக ‘தயவு’  உண்டு என்பதாகும்’. இது முஸ்லிம் அல்லாத வாக்கு வங்கியை நோக்கிய தூண்டில். மற்றொரு பகுதி, அவர்களுடைய திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு முன் நகர்த்துவது. இந்திய நாட்டின் குடியுரிமையையே மத அடிப்படையிலானதாக மாற்றியமைக்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். செயல் திட்டமாகும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் முகமான பாஜக இந்த முயற்சியை வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்திலேயே தொடங்கியது.

அசாம் ஒப்பந்தம் – வரலாற்று சுருக்கம்

ஆர்.எஸ்.எஸ்/பாஜக திட்டம் குறித்து பேசுவதற்கு முன், அசாம் மாநிலத்தின் சூழலை சுருக்கமாக பார்ப்போம். 1970களின் இறுதியில் அசாம் மாநிலத்தில் மாணவர் இயக்கம் எழுந்தது. இந்த இயக்கத்தின் முழக்கங்களில் ஒன்று அசாம் மாநிலத்தில் குடியேறியவர்களை (வங்க தேசத்தவர்களை) வெளியேற்ற வேண்டும் என்பதாகும். இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசாங்கம் 1985 ஆம் ஆண்டில் ஒரு ஒப்பந்தம் (அசாம் அக்கார்ட்) ஏற்படுத்திக் கொண்டது. அதன்படி ஒருவருடைய குடும்பத்தாரின் பெயர் 1951 அசாமில் ஏற்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற்றிருக்க வேண்டும். அல்லது 1971 மார்ச் 24 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். இவை அல்லாமல் வேறு சான்றுகளையும் கொடுக்கலாம். இப்பிரச்சனையில் உச்ச நீதிமன்றமும் தலையிட்டு நெறிப்படுத்தியது.

இந்திய குடிமக்களின் தேசியப் பதிவேடு ஏற்படுத்தப்பட்ட வரலாற்றை படிக்கும் எவருக்கும் அது அசாம் மாநிலத்துக்கு மட்டுமேயான தனித்துவமான சூழலில் எழுந்தது என்பதை புரிந்துகொள்ள முடியும். மேலும், 1951 ஆம் ஆண்டிலேயே அந்த மாநிலத்தில் இவ்வாறான ஒரு பதிவேடு ஏற்படுத்தப்பட்டிருந்தது என்பதால், அதனை அடிப்படையாகக் கொள்ள முடிந்தது என்பதையும் பார்க்க வேண்டும். (புதுவை 1963 ஆம் ஆண்டில்தான் யூனியன் பிரதேசமானது என்பதையும்,கோவா 1974 ஆம் ஆண்டில்தான் இந்தியாவுடன் இணைந்தது என்பதையும் பார்க்கும்போது குடியுரிமை என்பதற்கு ஆண்டு அளவுகோல் போதுமா என்ற கேள்வியும் எழுகிறது)

ஆனால், அறிவியல் பூர்வமான வரையறை எது என்ற கேள்வியையே பாஜக விரும்பவில்லை. அசாமின் சூழலில் எழுந்த ஒரு முடிவை வைத்துக்கொண்டு நாடு முழுவதும் குடியுரிமை குறித்த வரையரையை மாற்றியமைப்பதே அவர்களின் நோக்கமாகும்.

ஏக காலத்தில் அவர்களுடைய செயல் திட்டத்தை பல்வேறு முனைகளில் முன்னெடுக்கின்றனர்.  இந்தக் கட்டுரையில்   ‘குடியுரிமை’ பிரச்சனையை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

இந்தியக் குடியுரிமை பற்றிய ஆர்.எஸ்.எஸ். நிலைப்பாடு

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் குருஜி கோல்வால்கர் 1939 ஆம் ஆண்டில் ‘நாம் அல்லது நமது தேசியம் – ஒரு விளக்கம்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அதில் ஆர்.எஸ்.எஸ். ஏற்படுத்த விரும்புகிற தேசம் குறித்து பின்வருமாறு விளக்குகிறார். “இந்து இனம் தனது இந்து மத கலாச்சாரம் மற்றும் மொழியுடன் (சமஸ்கிருதம் மற்றும் அதிலிருந்த பிறந்த மொழிகளுடன்) அதன் தேசிய கருதுகோள் முழுமையடைகிறது” என்பதே அவரது விளக்கமாகும். மேலும், மேற்சொன்ன வரம்பிற்குள் வராத குடிமக்களை இரண்டாந்தர குடிமக்களாகவே நடத்தவேண்டும் என்கிறது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தம்.

மேலும் 1923இல் வி.டி. சாவர்க்கர் ’இந்துத்துவா’ என்ற புத்தகத்தை வெளியிடும்போது ‘இந்துத்துவா’-விற்கும் இந்து மதத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்று தெளிவுபடக் கூறியுள்ளார். ஏனென்றால் அது ஒரு அரசியல் திட்டமே ஆகும். மதத்திற்கும், ஆன்மீகத்திற்குமான சொல் அல்ல. ‘இராணுவத்தை இந்துமயமாக்கு; இந்துதேசத்தை இராணுவமயமாக்கு’ (`Hinduise the military, militariseHindudom’) என்ற முழக்கத்தையும் அவர் முன்வைத்ததை இத்தோடு இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறாக அவர்கள் கட்டமைக்கும் ‘தேசத்தில்’ மற்றவர்கள் எப்படி நடத்தப்படுவார்கள்?. இதுபற்றி கோல்வால்கர் தனது புத்தகத்தில் குறிப்பிடும்போது “இந்துஸ்தானத்தில் அந்நிய இனங்கள் இந்து கலாச்சாரத்தையும், மொழியையும் ஏற்க வேண்டும்” என சொல்வதுடன் அவ்வாறு ஏற்காதவர்கள் இந்து தேசத்திற்கு அடிபணிந்து வாழ வேண்டும்; அவர்கள் எதையும் எதிர்பார்க்கக் கூடாது; எந்த முன்னுரிமையையும் பெற முடியாது; மிகக் குறைவான முன்னுரிமையைக் கூட –குடியுரிமையைக் கூட பெற முடியாது” (பக்கம் 104-105) என்கிறார்.

இப்போதுள்ள ‘அனைவருக்குமான இந்தியா’ என்ற நிலையை மாற்றி சொந்த குடிமக்களுக்குள்ளேயே மோதலை தீவிரப்படுத்துவதுதான் ஆர்.எஸ்.எஸ். தத்துவமும் செயல்திட்டமும் ஆகும். இந்த முடிவுக்கு அவர்கள் வருவதற்கு உதவியாக அமைந்தது ஜெர்மனியில் அமைந்த நாஜி அரசாங்கம். கோல்வால்கர் தன்னுடைய புத்தகத்தில் நாஜி அரசு யூதர்களுக்கு இழைத்துக் கொண்டிருந்த கொடுமைகளைக் குறிப்பிட்டு அவைகளை வரவேற்று எழுதியிருக்கிறார். அதுபற்றி கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுகிறார் ‘செமிட்டிக் மொழிகள் பேசுகிற – யூதர் – இனத்தை வெளியேற்றியதன் மூலம் ஜெர்மனி உலகை அதிரச் செய்தாள். அதன் மூலமே ஒரு இனத்தின் பெருமை உச்சம் தொட வைக்கப்பட்டது.” என்றதுடன் அந்த கொடூரத்தில் இருந்து ‘இந்துஸ்தான்’ கற்றுக் கொள்ள வேண்டும்;  லாபமடைய வேண்டும் என்றார். எழுதியது மட்டுமல்ல; ஜெர்மனியிலும், இத்தாலியிலும் செயல்பட்ட அமைப்புகளுடன் தொடர்பும் ஏற்படுத்திக் கொண்டார்கள்.

இந்துத்துவா எதற்காக உருவாக்கப்பட்டது?

சாவர்க்கர் 1907 ஆம் ஆண்டில் ஒரு புத்தகம் எழுதினார்.அந்த புத்தகம் 1857 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் சுதந்திரப் போராட்டத்தை பற்றியது. இந்தப் போராட்டக் களத்தில்தான் “இந்துக்களும் முஸ்லிம்களும் முதல் முறையாக இணைந்தார்கள்” என்று குறிப்பிட்டதுடன், அவ்வாறு நடந்திருக்காவிட்டால் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்த மோதல் போக்கு முடிவுக்கு வந்திருக்காது என எழுதியிருக்கிறார். 1913 ஆம் ஆண்டில்  சவார்க்கர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் அந்தமான் சிறையில் அடைக்கப்படுகிறார்.

அந்தமான் சிறையில்,அடுக்கடுக்கான துன்பங்களுக்கு பிறகும் விடுதலைப் போரைக் காட்டிக் கொடுக்காத வீரத் தியாகிகளைப் போன்றவர் அல்ல சவார்க்கர். அவர் மன்னிப்புக் கடிதங்களை எழுதுகிறார். 6 முறை மனுப் போடுகிறார். அதில் ஒரு கடிதத்தில்,“(பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு) பெருந்தன்மையுடன், கருணையுடன் என்னை சிறையிலிருந்து விடுவிக்குமானால், நான் (பிரிட்டிஷ் காலனி) அரசின் அரசியல் சட்டத்தை உயர்த்திப் பிடிப்பவனாக இருப்பேன். பிரிட்டிஷ் அரசின் விசுவாசத்திற்கு உரியவனாக இருப்பேன்’ என்று இறைஞ்சிக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மாற்றத்தின் பிறகே அவர் ‘இந்த்துவா” என்ற அரசியல் சித்தாந்தத்தை வடிவமைக்கிறார்.

அது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்களுடைய பிரித்தாளும் சூழ்ச்சியை செயல்படுத்தத் தொடங்கியிருந்த காலகட்டமாகும். அந்த திட்டத்திற்கு உதவியாகவே ‘இந்துத்துவா’ கருத்தியல் வடிவமைக்கப்பட்டது. மேலும், இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு அடிப்படையாக அமைந்த ‘இரு தேசக்கொள்கையையும்’ சவார்க்கரே முதலில் முன்வைத்தார் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். சுமார் 10 லட்சம் மரணங்களையும், மிகப்பெரும் எண்ணிக்கையில் மத அடிப்படையிலான இடப்பெயர்வையும் ஏற்படுத்திய அந்த பிரிவினை, வரலாற்றின் ஆறாத வடுவாக அமைந்தது. இவ்வகையில், பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் நலன்களைக் காக்கும் விதமாகவே ‘இந்துத்துவா’ உருவானது; செயல்பட்டது.

இதன் காரணமாகவே, பாஜக முன்வைக்கும் தேசியமும், குடியுரிமையும் ‘காலனி ஆதிக்க எதிர்ப்பை’ அடிப்படையாக கொண்டிருக்கவில்லை. காலனி ஆதிக்க எதிர்ப்பின் மூலம் வடிவம் பெற்ற இந்திய தேசியத்தையும், மக்களிடையே வலுப்பட்ட மத நல்லிணக்கம், மதச்சார்பற்ற அரசியல் என அனைத்தையும் நிராகரிப்பதுடன், அதனைச் சிதைத்து அழிக்கவே திட்டமிட்டது. இப்போதும் அது கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் தன் பாசிச செயல்திட்டத்தை முன்னெடுக்கிறது.

பாசிசம்: உருவாக்கம் – வளர்ச்சி

முதல் உலகப் போருக்குப் பின் சில காலம் உலகப் பொருளாதாரம் வளர்ச்சியடைவது போல் தோன்றினாலும் மீண்டும் நெருக்கடிக்குச் சென்றது. இத்தகைய பொருளாதார சூழலில்தான் பாசிச அரசியல் பிறப்பெடுத்தது என்பது வரலாறு.

பாசிச அரசியலானது தானாகவே ஒரு பெரும் சக்தியாக வளர முடியாது. “முதலாளித்துவ வர்க்கம் தனது ஆதரவையும், ஊக்கத்தையும் வழங்குகிறபோதே பாசிசமானது தன்னை ஒரு இயக்கமாக அமைத்துக் கொள்ள முடியும், கீழ் நடுத்தர வர்க்கத்தின் பிற்போக்கு சக்திகளை திரட்டி அமைப்பின் பின் படை சேர்ப்பது இவ்வாறுதான் சாத்தியமாகும்” என்கிறார் மார்க்சிய சிந்தனையாளர் ஜான் பெல்லோமி போஸ்டர். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் தயவோடு உருவாகி வளர்ந்த பாசிச கருத்தியல் மக்களிடையே வேர் விடவோ, வலிமை பெறவோ முடியவில்லை. இந்திய முதலாளித்துவ சக்திகளுக்கு பாசிசம் தேவைப்பட்டிருக்கவில்லை. 

இப்போது, உலக முதலாளித்துவ உற்பத்தி அமைப்புசார் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. பொருளாதாரத்தில் பெரும் தேக்கம் நிலவுகிறபோது அது லாபத்தில் சரிவை ஏற்படுத்தும். குறைந்த பலன்களே கிடைக்கும்போதும் அதில் பெரும் பகுதியை தன் வசமாக்க விரும்புகிறது முதலாளித்துவம். எனவே அது பழைய ‘தாராளவாத ஜனநாயக’ அரசாங்கமும், அரசியலும் போதாது என நினைக்கிறது. தன்னுடைய வெளிப்படையான கொள்ளை நடவடிக்கைகளுக்கும், வரன்முறையற்ற சுரண்டலுக்கும் யார் சேவையாற்ற முடியும் என தேடுகிறது. இதற்காகத்தான் பாசிச சக்திகளுக்கு பெரும் பணமும், ஆதரவும் கொடுத்து ஊக்கப்படுத்துகிறது.

இரண்டு உலகப் போர்களுக்கு இடையிலான காலகட்டத்தைப் போல் அல்லாமல் இப்போதைய பாசிச அரசியல் சக்திகளின் செயல்பாடு சற்று வேறுபடுகின்றன. ‘நவ-பாசிசத்தின்’ கூறுகள் நாட்டுக்கு நாடு, சூழலைப் பொறுத்து மாறுபடும். அதன் அடிப்படையான கூறு வெகுமக்களிடையே ஒற்றுமையைச் சிதைத்து, வரன்முறையற்ற சுரண்டலுக்கு வழிவகுப்பதுதான்.

உள்ளிருக்கும் எதிரிகளும், உண்மை குடிமக்களும்:

பாசிசம் தன்னை உயிரோடு வைத்திருப்பதற்காக தொடர்ந்து முயற்சிகளை முன்னெடுக்கிறது. அது திட்டமிட்ட வகையில் ‘உள்ளிருக்கும் எதிரிகளைக்’ கற்பனையாகக் கட்டமைக்கிறது. வன்முறைகளை தூபம் போட்டு வளர்க்கிறது. காலனி ஆதிக்க காலத்திலும் சரி, விடுதலைக்கு பிறகும் சரி ஹைதராபாத், ஜம்மு, ஆல்வார்-பாரத்பூர்-மிவாட், பாட்டியாலா என எங்கெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு மோதல்கள் நடந்தனவோ அங்கெல்லாம் இந்து மஹாசபாவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பங்கெடுத்தன என்பதை பல்வேறு ஆய்வறிக்கைகள் காட்டுகின்றன. பிரிவினையின்போது நடைபெற்ற வன்முறைகளிலும்  இவர்களின் கை இருந்தது.

‘உள்ளிருக்கும் எதிரிகளை’ கட்டமைத்து அதன் உதவியுடன் ஒரு நாட்டின் ‘உண்மையான’ உறுப்பினர்கள் என்ற மாய நம்பிக்கையையும் அது ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்ட ‘உண்மையான’ உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தேசம் உருவாகிறபோது, அது அந்த நாட்டுக்கே ‘மறு பிறவியாக’ அமையும் என்ற நம்பிக்கையை தன் ஆதரவுத்தளத்தில் விதைக்கிறது. இந்த மாற்றம் நடந்துவிட்டால் அரசியலும், கலாச்சாரமும் மாற்றம் பெற்றுவிடும்; நெருக்கடிகள் தீரும்; ஊழல் முடைநாற்றங்கள் முடிவுக்கு வரும் என்று பிரச்சாரம் செய்கிறது. அடிப்படையை மாற்றாமலே எல்லாவற்றையும் மாற்ற முடியும் என்கிற போலியான இந்த ‘நம்பிக்கை’யே பாசிசத்தின் தத்துவம், பிரச்சாரம், அரசியல் மற்றும் நடவடிக்கைகளின் அடிநாதமாகும். இன்றும் பாசிச சக்திகளின் செயல்பாட்டில் இதை நாம் உணர்கிறோம். மேலும்,அதே பாஜக-வானது மற்றொரு பக்கம் கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு அப்பட்டமான சலுகைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருப்பதையும் நாம் அறிவோம்.

குடியுரிமை சிக்கலின் அடுத்த கட்டம் என்ன?:

இந்திய குடிமக்களின் தேசிய பதிவேட்டை நாடு முழுவதும் விரிவாக்க நினைக்கும் பாஜகவின் செயல் திட்டம், நாஜிக்களின் வரலாற்றில் இருந்து ஊக்கம் பெற்றது என்பதைப் பார்த்தோம். நாஜிக்களின் சட்ட நிபுணரான கார்ல் ஸ்மிட் இந்த திட்டம் குறித்து மேலும் விரிவாக கூறியிருக்கிறார். ஆரியர் அல்லாதவர்களை நீக்குவது,  தலைவரை சட்டத்திற்கு மேலானவராக நிறுத்துதல் என இரண்டு வழிமுறைகளை  ஆளுகை செலுத்துவதற்கான உத்திகளாக அவர் முன்வைத்தார். ‘ஒற்றைத்தன்மை மற்றும் தூய்மை ஆகிய லட்சியங்களை ‘பன்மைத்துவத்தை அழிப்பதன்” மூலமே அடைய முடியும் என்கிறார்.

உலகம் முழுவதுமே வலதுசாரிகள் இந்த நிலைப்பாட்டினை எடுத்து வருகிறார்கள். அந்தந்த நாடுகளின் சிறுபான்மையினரை ‘இரண்டாந்தரக் குடிமக்கள்’ என்ற நிலைக்கு தாழ்த்துகின்றனர். மோடியின் இரண்டாவது ஆட்சிக்காலம் அந்தப் பாதையில் சற்று வேகமாகவே பயணிக்கிறது. இதுவரையிலும் அவர்கள் மேற்கொண்டுவந்த ஒடுக்குமுறைகளை இப்போது நிறுவனமயப் படுத்துகிறார்கள்.

அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகள் இதனை எளிதாக அனுமதிப்பதில்லை என்பது அவர்களுக்கு சில சிரமங்களை ஏற்படுத்துகிறது. ‘பாஜக விரும்புகிற’ குடியுரிமையை முன்வைக்கும் மசோதாவும் அரசமைப்புச் சட்ட வரம்புக்கு உட்பட்டது அல்ல. ஆனால், சில அண்டை நாடுகளில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிப்பதனை முன்வைத்து, ‘முஸ்லிம் அல்லாத’ அளவுகோலை, குடியுரிமைக்கு பொருத்துகிற தன் வாதத்தினை பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறது பாஜக.

இன்றைக்கு நடந்துகொண்டிருக்கும் குழப்பங்களுடன் சேர்த்து, இந்தி மொழியை திணிப்பது மற்றும் மும்மொழித் திட்டம் ஆகியவற்றிற்கு எழுந்திருக்கும் எதிர்ப்புகள் என பல்வேறு நிகழ்வுகள் அவர்களுடைய செயல்திட்டத்திற்கு சில தடைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. முதலில் அவர்கள் ‘முஸ்லிம்களை’ மட்டும் குறி வைக்கிறார்கள். அதே சமயம் “முதலில் முஸ்லிம்கள், அடுத்தது கிறுத்துவர்கள்” என்ற வி.எச்.பி. முழக்கத்தைப் போல படிப்படியாக நகர்வோம் என்கிறார்கள் சங்க பரிவாரங்கள். குடியுரிமை சட்டம் மற்றும் பதிவேடு ஏற்படுத்துகிற முயற்சியின் அடுத்தடுத்த கட்டங்கள் இப்படித்தான் இருக்கும். அந்நிய குடியேற்றத்தை நீக்குவதல்ல; இந்தியாவிலேயே காலம் காலமாக வசித்துவரும் பலவகைப்பட்ட மத, இன, மொழி அடையாளம் கொண்டிருக்கும் மக்களிடையே  ‘உயர்ந்த’ மற்றும் ‘இரண்டாந்தர’ என்ற எண்ணத்தை உருவாக்கி மோதச் செய்வதுதான் அந்த செயல்திட்டத்தின் மெய்யான நோக்கம்.

ஆதாவது, கும்பல் கொலைகள், பசுக்காப்புபடையினர், லவ் ஜிகாத் என்ற பெயரால் ‘உதிரிகளை’ உருவாக்கி நிகழ்த்தப்பட்டு வந்த வன்முறைகளை இனி சட்டத்தின் பேரால் நடத்த விரும்புகிறார்கள். அந்த தாக்குதல்கள், அரசின் நலத் திட்டங்களை மறுப்பு, வேலைவாய்ப்பு மறுப்பது, சட்ட உரிமைகளை மறுப்பது என வளர்த்தெடுக்கப்படும்.

பாசிசமும், முதலாளித்துவ நெருக்கடியும்:

உலகம் முழுவதுமே சூழல்கள் மாறிவருவது பற்றி மார்க்சிஸ்ட் கட்சி தனது 22வது மாநாட்டில் விவாதித்தது. உலக முதலாளித்துவம் மீள முடியாத அமைப்பு நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதன் விளைவுகள் பல வழிகளில் வெளிப்படுகின்றன. “இனவாதம், இனவெறுப்பு மற்றும் வலது அதிதீவிர நவ-பாசிச போக்குகள்” வளர்கின்றன. நிதி மூலதனத்தின் நலன்களைக் காக்கும் விதமாகவே இந்தியாவிலும் வலதுசாரி அரசியல் வலுவடைகிறது. அதன் விளைவுகளில் ஒன்றாக மக்களுடைய ஜனநாயக உரிமைகளும், நாடாளுமன்ற ஜனநாயக கட்டமைப்பும், ஜனநாயக நிறுவனங்களும் தாக்கப்பட்டு எதேச்சதிகாரம் மேலோங்குகிறது.

பாசிசம் என்பது “வெளித்தோற்றத்தில் அது பிற்போக்கு சக்திகளின் பயங்கரவாத சர்வாதிகாரம், பெருமளவில் ஆதிக்கத் தன்மையுடையது. மேலும் நிதி மூலதனத்தின் அனைத்து ஏகாதிபத்திய வடிவங்களையும் உள்ளடக்கிய ஒன்று” என்கிறார் மார்க்சிய அறிஞர் ஜார்ஜ் டிமிட்ரோவ். மேலும், முதலாளித்துவத்தின் துணை இல்லாமல் பாசிச அரசியல் சக்திகள் அதிகாரத்தில் அமர்ந்திருக்கவில்லை. ஏகாதிபத்தியத்தின் நலன்களை உச்ச அளவில் அமலாக்கக்கூடியதே பாசிசம். அதற்கு ‘அந்நியச் சுரண்டல்’ மீது ‘அளவுகடந்த பாசமே’ உண்டு. அதே சமயம் மக்களிடையே “அவமதிக்கப்பட்ட தேசத்தின் மேலங்கியாகவும்,  வெடித்துக் கிளம்பும் ‘தேசிய’ உணர்வுகளின் முறையீடாகவும் தன்னைக் காட்டிக் கொள்வதில் வெற்றியடைகிறது. அதற்கு முகம் ஒன்று; முகமூடி வேரொன்று.

முதலாளித்துவம் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் சூழலில், வரன்முறையற்ற சுரண்டலை கட்டவிழ்த்து விடுகிறது. அதனால்தான், வேலையின்மையும், உற்பத்தி நெருக்கடியும் தீவிரமடைகின்றன. ஆனால், இந்த நிலைமையை மாற்றியமைக்க பாசிச அரசியலில் தீர்வு எதுவும் கிடையாது. பாசிசத்தின் பொருளாதாரக் கொள்கை முதலாளித்துவ அமைப்பை பாதுகாப்பதுதான்.

இத்தாலியின் முசோலினி பேசும்போது, ‘முதலாளித்துவ அமைப்பை மாற்றியமைக்கும் திட்டம் எதுவும் தங்களிடம் இல்லை’ என வெளிப்படையாக அறிவித்தார். ஹிட்லர் தனது ஆட்சியில் தனிச்சொத்துடைமையை பாதுகாத்ததுடன், தனியார்மயத்தை வேகமாக முன்னெடுத்தார். உழைக்கும் மக்களின் கூலியை வெட்டிச் சுறுக்கப்பட்டது. கீனிசியன் பொருளாதார கோட்பாடுகளை அமலாக்கி அதன் வழியாகவும் முதலாளித்துவத்தையே ஊக்கப்படுத்தினார். இவ்வகையில் முதலாளித்துவத்தின் வேட்டை நாயாகவே வளரும் பாசிசத்தை வீழ்த்துவது, முதலாளித்துவத்தை அம்பலப்படுத்தாமல் சாத்தியமில்லை.

ஜனநாயக உரிமைகளை காப்போம்:

குடியுரிமை மட்டுமல்ல, இந்திய மக்களின் ஜனநாயக உரிமைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பறிக்கப்படுகின்றன. முதலாளித்துவ ஜனநாயகக் கட்டமைப்பிற்குள்ளாகவே போராடிப் பெறப்பட்ட பல உரிமைகளை அழித்தொழிக்க முயல்கிறது பாஜக அரசு. குடியுரிமையின் பேரால் மதவழி சிறுபான்மையினரை குறிவைக்கும் அவர்களின் இந்தப் போக்கு உண்மையில் ‘ஒற்றை இந்தியா’ என்ற ஆதிக்கப் போக்கின் வெளிப்பாடாகும். அவர்கள் முன்வைக்கும் ‘இந்து’ மதம், சாதிப்படிநிலை ஏற்றத்தாழ்வை நிலைநாட்டுகிற ஒன்றாகும். அவர்கள் முன்வைக்கும் மொழி ஆதிக்கம், தேசிய இனங்களுக்கு எதிரானதாகும். அவர்களுடைய அரசாங்கக் கட்டமைப்பு ‘கூட்டாட்சி’க்கும் சவால் விடுப்பது. முஸ்லிம்கள், கிறித்துவர்கள், பழங்குடிகள், பட்டியலினத்தார் மற்றும் பெண்கள், தேசிய இனங்கள் என பாதிக்கப்படும் மக்கள் திரளே பெரும்பான்மையிலும் பெரும்பான்மையாகும்.

மேலும், பாசிச செயல் திட்டத்தின் அங்கமாகிய ‘வரன்முறையற்ற சுரண்டலும், முதலாளித்துவக் கொள்ளையும்’ நேரடியாகவே அனைத்து தரப்பு மக்களையும் சிக்கலுக்கு ஆளாக்குகிறது. அது ஏகாதிபத்திய நலன்களோடு கைகோர்த்துக் கொள்வதால் உலக அமைதிக்கும் ஆபத்தாக எழுகிறது. இந்த சூழலை மாற்றியமைப்பது இடது – ஜனநாயக சக்திகளின் ஒன்றுபட்ட போராட்டத்தாலேயே சாத்தியமாகும்.

சீனத்தில் நடந்து வரும் மாற்றங்கள் குறித்து …

இரா.சிந்தன்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19 வது மாநாடு குறித்து மார்க்சிஸ்ட் இதழில் ஏற்கனவே எழுதியிருந்தோம். அந்த மாநாட்டில், ‘சீனப் பண்புகளுடன் கூடிய சோசலிசம் ஒரு புதிய வரலாற்றுக் கட்டத் தை எட்டியிருப்பதாக’ அக்கட்சி அறிவித்தது. மாநாட்டைத் தொடர்ந்து மார்ச் 3 முதல் 20 தேதி வரையில் நடைபெற்ற ‘இரண்டு அமர்வுகள்’ (சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு, தேசிய மக்கள் மாநாடு) பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளன. இந்த முடிவுகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.

இந்தியாவுக்கு அண்டைநாடு: மிகப்பெரிய வளரும் நாடு; நம்மையொத்த மக்கள்தொகை கொண்ட நாடு என்ற காரணங்கள் மட்டுமல்லாமல், உலகின் புதிய மாற்றங்களை உள்வாங்கி முன் செல்லும் சோசலிச நாடு என்பதன் காரணமாகவும் சீனா நமது கவனத்தை ஈர்க்கிறது. சோசலிச நோக்கிலான திட்டமிடுதலும், திட்டத்தின் அடிப்படையில் உறுதியான செயல்பாடும்தான் சீனாவின் வளர்ச்சிக்கான அடிப்படைகளாகும். அந்த வளர்ச்சியின் காரணமாக சீன சமூகத்தில் ஏற்பட்டு வரும் சில மாற்றங்களையும், பன்னாட்டு அரங்கில் ஏற்பட்டுவரும் மாற்றங்களையும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

நூற்றாண்டின் இரண்டு இலக்குகள்:

கார்ல் மார்க்ஸ் மெய்யறிவின் வறுமை புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘பாட்டாளி வர்க்கம் தன் அரசியல் மேலாண்மையைப் பயன்படுத்தி முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து படிப்படியாக மூலதனம் முழுவதையும் கைப்பற்றும். உற்பத்திக் கருவிகள் யாவற்றையும் அரசின் கைகளில் அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் ஒருசேர மையப்படுத்தும்; மற்றும் உற்பத்தி சக்திகளது ஒட்டுமொத்த தொகையை முழு வேகத்தில் அதிகமாக்கும்.’ சீன கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் புரிதலை உள்வாங்கியே செயல்படுகிறது.

1980களில் டெங் சியோ பிங் பேசும்போது “சோசலிசத்தின் மீது நம்பிக்கையில்லாதவர்களை நம்பிக்கை கொள்ளச் செய்வதற்கு, பொருளாதார மேம்பாட்டில் நாம் மேற்கொள்ளும் சாதனைகளாலேயே முடியும். இந்த நூற்றாண்டின் இறுதியில், ஒப்பீட்டளவில் செழிப்பான நிலையை நம்மால் எட்ட முடிந்தால் அவர்கள்  ஓரளவு நம்பிக்கை கொள்வார்கள். அடுத்த நூற்றாண்டின் மத்திம காலத்திற்குள் சீனத்தை மிதமாக வளர்ச்சியுற்ற சோசலிச நாடாக மாற்றியமைத்துவிட்டோமானால் அவர்கள் முழுமையான நம்பிக்கை பெற்றவர்களாக ஆகிவிடுவார்கள்” என்று கூறினார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி தமக்கென வகுத்துக் கொண்ட இலக்குகளை சுருக்கமாக, ‘நூற்றாண்டின் இரண்டு இலக்குகள்’ எனக் குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு மாநாட்டிலும் திட்டம் நோக்கிய தனது பயணத்தை ஆய்வுசெய்து சரிப்படுத்திக் கொண்டே கட்சி முன்னேறியிருக்கிறது. சீனத்தை மிதமான செழிப்புடன் கூடிய சமூகமாக (moderately prosperous society) வளர்த்தெடுப்பதுதான் அவர்களின் முதல் இலக்கு. 2020 ஆம் ஆண்டில் சீனா இந்த இலக்கை எட்டிவிடும். முதல் இலக்கின் சாதனைகளை அடித்தளமாகக் கொண்டு அடுத்த இலக்கை, அதாவது ‘சிறப்பான நவீன சோசலிச சமூகம்’ என்ற இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்” என்கிறது சீன கம்யூனிஸ்ட் கட்சி.

19வது மாநாட்டின் முடிவில், இரண்டாவது இலக்கினை, இருவேறு நிலைகளாகப் பகுத்திருக்கிறார்கள். அதன்படி 2020 முதலான 15 ஆண்டுகளில் அடிப்படையான சோசலிச நவீனமயத்தை நிறுவ வேண்டும் என்றும் அடுத்த  15 ஆண்டுகளில் செழிப்பான, வலிமையான, ஜனநாயகப் பண்புகள்கொண்ட, முன்னேறிய பண்பாட்டுச் சூழலை உடைய, நல்லிணக்கம் கொண்ட (harmonious),  அழகிய நாடாக நவீன சீனத்தை கட்டமைக்க வேண்டும். அதாவது அவர்கள் ஏற்கனவே வரித்துக்கொண்ட கால அளவிலிருந்து 15 ஆண்டுகள் முன்கூட்டியே இதனைச் சாதிக்கமுடியும் என்கிறார்கள்.

சோசலிசத்தின் தொடக்க நிலை:

ஜி ஜின்பிங் பேசும்போது, ‘சீனா இன்னும் சோசலிசத்தின் தொடக்க நிலையிலேயே (primary stage of socialism) உள்ளது. உலகின் மிகப்பெரிய வளரும்நாடு என்ற அதன் நிலையில் மாற்றம் ஏதும் இல்லை’ எனக் குறிப்பிடுகிறார். எனவே முதலில் சோசலிசத்தின் தொடக்கநிலை என்றால் என்ன என்பதை சுருக்கமாக பார்த்து விடுவோம்.

முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்தை நோக்கி மாறிச் செல்லும் இடைநிலைக் கட்டமே சோசலிசம் என மார்க்சும் எங்கல்சும் கூறுகின்றனர். அதாவது சோசலிசத்தின் வழியாகவே, கம்யூனிச சமூகத்தின் முதல் கட்டம் உருவாகிறது. இந்தப் புரிதலில் இருந்துதான் ‘சோசலிசத்தின் தொடக்கநிலை’ என்ற கருத்துரு உருவானது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிக் காலகட்டத்தில் நிலவுகின்ற உற்பத்திச்சக்திகளின் வளர்ச்சிநிலையைப் பொறுத்து பல இடைக்கால நிலைகளை உருவாக்கியது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 13 வது மாநாட்டில் இருந்து இது படிப்படியாக தெளிவுபடுத்தப்பட்டது. சீனப் புரட்சியின்போது, சீனா அரை நிலவுடமை-அரைக்காலனிய நாடாக இருந்தது. எனவே அதன் காரணமாக சீனத்தின் பொருளாதாரத்தை சோசலிசத்தை நோக்கி எடுத்துச் செல்லுதல் மிகக் குறைந்த அளவிலேயே மேற்கொள்ளப்பட முடியும். 1952 ஆம் ஆண்டில் சீனத்தின் தனிநபர் உற்பத்தி (per capita GNP) இந்தியாவை விடவும் குறைவாக இருந்தது. சோவியத் ஒன்றியம் 1928 ஆம் ஆண்டில் கொண்டிருந்த தனிநபர் உற்பத்தியில் ஐந்தில் ஒருபங்குக்கு அது சற்றே அதிகமாகும். எனவே, ஒரு நவீன சோசலிச சமூகமாக சீனாவை வளர்த்தெடுக்க குறைந்தது நூறு ஆண்டுகள் பிடிக்கும் என சீன கம்யூனிஸ்ட் கட்சி மதிப்பிட்டது. இவ்வாறு மாறிச் செல்வதற்கான நடைமுறையையே ‘சீனப் பண்புகளுடன் கூடிய சோசலிசத்தைக் கட்டமைத்தல்’ என அவர்கள் அழைத்தனர்.

பரிணமித்து எழுந்துள்ள முதன்மை முரண்பாடு:

சீனத்தில் நிலவும் முரண்பாடுகளைப் சீர்தூக்கிப்பார்த்தே கம்யூனிஸ்ட் கட்சி தனது உத்திகளை வகுத்துக் கொண்டிருக்கிறது. 1949 ஆம் ஆண்டுகளில் “மக்களுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும், நிலவுடைமைக்கும், கோமிண்டாங் சக்திகளின் மிச்சசொச்சங்களுக்கும் இடையிலான முரண்பாடு” முதன்மையானதாக மதிப்பிடப்பட்டது. 1981 ஆம் ஆண்டுகளில் “மக்களின் பொருளியல், பண்பாட்டு தேவைகளுக்கும் பின்தங்கிய சமூக உற்பத்திக்கும் இடையிலான முரண்பாடு” முதன்மையாக எழுந்தது.

தற்போது சீன சமூகத்தில் பரிணமித்திருக்கும் முதன்மை முரண்பாடு குறித்து கட்சி சீர்தூக்கிப்பார்த்துள்ளது. சீன மக்களுடைய அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்துவரும் போதிலும், அந்த நாட்டின் மக்களிடையே புதிய தேவைகள் உருவாகி வருகின்றன.  மக்களின் பொருளியல் மற்றும் பண்பாட்டுத் தேவைகள் மட்டுமல்லாமல்,  ‘மக்களாட்சி, சட்டத்தின் ஆளுகை, நீதி – நேர்மை, பாதுகாப்புணர்வு மற்றும் சூழலியல்’ என தேவைகள் வளர்ந்து வருகின்றன. எனவே அவற்றையும் நிறைவேற்றிட வேண்டும்.

கடந்த ஆண்டுகளின் திட்டமிட்ட வளர்ச்சியின் காரணமாக சீனத்தின் உற்பத்தி சக்திகள் குறிப்பிடத்தக்க அளவு மேம்பட்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால் சீனத்தின் பல பகுதிகள் உற்பத்தியில்  உலகிற்கே முன்னோடியாக உள்ளன. எனினும், வட்டாரங்களுக்கு இடையிலும், சமூகப் பிரிவுகளுக்கு இடையிலும் வளர்ச்சியின் ஏற்றத்தாழ்வுகளும், போதாமையும் நிலவுகின்றன.

எடுத்துக்காட்டாக குசோவ் பகுதியில் ஆண்டு சராசரி வருமானம் 15,121 யுவான். இந்தத் தொகை ஷாங்காயில் நிலவும் சராசரி வருமானத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகும். மக்கள் சமூகக் குழுக்களுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும். நகரங்களுக்கும், ஊர்களுக்கும் இடையிலான வேறுபாடுகள், போக்குவரத்து வசதிகளில் முன்னேற்றம் என தேவைகள் ஒருபக்கம் எழும்போது – மற்றொரு பக்கம் தேவைகள் நிறைவடைந்த மக்களிடையே ஏற்கனவே குறிப்பிட்ட புதிய வேட்கைகள் உருவாகியுள்ளன. இவ்வாறு சீன சமூகத்தில் எழுந்துள்ள முதன்மை முரண்பாடு, சீனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் தாக்கம் செலுத்தும்.

சீனாவை கட்டுப்படுத்த விரும்பும் சக்திகள்:

அதேபோல பன்னாட்டுச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். உலகின் மிகப்பெரிய நாடான சீனா தற்போது பல அளவுகோல்களில் வலிமையடைந்து வருகிறது. சீனா வலிமையடைவதனால் எழுகின்ற சவால்கள் முக்கியமானவை. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழு உறுப்பினரான லீ ஷன்சூ இதுபற்றிக் குறிப்பிடும்போது, “பன்னாட்டுச் சக்திகள் பலவும் சீனாவைக் கண்டு கிலியடைகிறார்கள், (சீனாவை) கட்டுப்படுத்தி (contain) அல்லது கட்டாயப்படுத்தி நிறுத்த வேண்டும் என்கிற முடிவை அவர்கள் மேற்கொள்கின்றனர்” எனக் கூறுகிறார். அவர் குறிப்பிடுவது அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் பயன்படுத்திய சொற்களைத்தான்.

சீனப் பொருட்கள்மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த சில கட்டுப்பாடுகளும், அதற்கு பதிலடியாக சீனா விதித்த கட்டுப்பாடுகளையும் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளலாம். அமெரிக்காவின் பங்குச்சந்தையில் கடும் விளைவுகளை இந்த முடிவு ஏற்படுத்தியது. இதுவொரு வணிக யுத்தமாக மாறிவிடக் கூடாது என்ற கருத்து சர்வதேச தளத்தில் எழுகிறது. 2008 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பிறகான உலகமய சூழலில், சீனா மெல்ல மைய அரங்கை நோக்கி நகர்வது புலப்படுகிறது.

எனவே சீனத்தின் உள்நாட்டு சூழலில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், பன்னாட்டுச் சூழலை எதிர்கொண்டு நிற்கவேண்டிய தேவை, நூற்றாண்டின் அடுத்த இலக்கினை நோக்கி மாறிச்செல்ல வேண்டிய தேவையும் – கட்சியின் இலக்குகளில் பகுப்பாய்வு மேற்கொண்டு மாற்றங்களைச் செய்வதற்கு அடித்தளமாக அமைந்திருக்கின்றன.

நவீன மயமான சீன சமூகத்தை நோக்கி:

2020 ஆம் ஆண்டிலிருந்து, அடுத்த இலக்குக்கான பயணம் தொடங்குகிறது.  சோசலிச நவீனமயத்தை நோக்கி சீனா முன்னேற வேண்டியுள்ளது. அதன் வழியே மக்கள் மத்தியில் உருவாகியிருக்கும் புதிய வேட்கைகளை நிறைவு செய்ய வேண்டியிருக்கிறது. ஏற்றத்தாழ்வான வளர்ச்சியை எதிர்கொள்ளவும் வேண்டும். இதுபற்றி அக்கட்சியின் தலைவர்கள் குறிப்பிடும்போது, “இன்றுள்ள வளர்ந்த முதலாளித்துவ நாடுகள், நவீனமயத்தை எட்டுவதற்கு தொழிற்புரட்சிக்குப் பின்னர் 300 ஆண்டுகள் தேவைப்பட்டன. அதோடு ஒப்பிடுகையில் சீனா அளவிலும் வே கத்திலும் அளப்பரிய மாற்றத்தை சாதிக்க வேண்டியுள்ளது. பொருளாதாரம், அரசியல் விசயங்கள், பண்பாடு, சமூகம் மற்றும் சூழலியல் துறைகளின் முன்னேற்றங்கள் தேவைப்படுகின்றன. இவை சமூகத்தை முன்னோக்கி செலுத்தும். மேலும் உத்தி அடிப்படையிலான முக்கியத்துவம் வாய்ந்தவை – இந்த வெற்றியை சாதிக்க தத்துவ, அரசியல் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் தேவை” என்கின்றனர்.

உற்பத்தி சக்திகளை வளர்த்தெடுப்பதும், அடிமைத் தளைகளில் இருந்து மக்களை விடுவிப்பதும், சுரண்டலை, பிரிவினைகளை ஒழிப்பதும் சோசலிசத்தின் அடிப்படைகளாகும். அதன் மூலமே வளர்ச்சியை அனைவருக்குமானதாக்க முடியும். இவ்விசயத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி அடையும் முன்னேற்றம் ஒரு நாட்டின் சாதனையாக மட்டும் முடிந்து விடாது. மார்க்சிய – லெனினிய அடிப்படையில் அடைகிற வெற்றி என்ற வகையில் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் அது முக்கியமானது. உலக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் அது அமைகிறது. விஞ்ஞான சோசலிசத்தின் உயிர்த்துடிப்பான முன்னுதாரணமாகவே சோசலிச நாடுகளின் வெற்றிகளைக் கருத வேண்டும்.

வலிமையான கம்யூனிஸ்ட் கட்சியின் தேவை:

அரசும் புரட்சியும் என்ற நூலில் தோழர் லெனின் குறிப்பிடும்போது, பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் மேலாண்மை ‘முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்தி விட்ட பாட்டாளி வர்க்கத்துக்கு மட்டுமல்ல; முதலாளித்துவத்தை வர்க்கங்களில்லாத சமுதாயத்திலிருந்து கம்யூனிசத்திலிருந்து பிரித்திடும் வரலாற்றுக் காலகட்டம் முழுமைக்கும் தேவைப்படுகிறது’ என்கிறார். மேலும் அவர் அந்த இடைக்காலத்தில் உருவாகும் பலதரப்பட்ட அரசியல் வடிவங்களின் சாராம்சம் ‘பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமாகவே’ அதாவது மெய்யான ஜனநாயகமாகவே இருக்கும் என்கிறார்.

வலிமையானதும், மார்க்சியத்தில் பற்றுறுதி கொண்டதும், ஜனநாயக மத்தியத்துவ நெறிகளின் அடிப்படையில் இயங்குவதுமான கட்சி இல்லாமல் இது சாத்தியமில்லை. மாறிவரும் சூழல்களுக்கு ஏற்ப கட்சியைத் தகவமைத்து, சோசலிச காலகட்டம் முழுமைக்கும் இடைவெளியில்லாத போராட்டங்களை நடத்த வேண்டும். அதில் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருக்கிறது.

‘கட்சி நிறுவப்பட்ட தொடக்ககால இலக்குகளுக்கு உண்மையாக இருப்பது’ குறித்த பிரச்சாரத்தை, கட்சிக்குள் முன்னெடுக்க உத்தி வகுத்துள்ளனர். அதாவது அவர்கள் சோசலிச லட்சியங்களைக் குறித்த பிரச்சாரத்தினை உட்கட்சி முழுவதும் நடத்தவுள்ளனர். மேலும் பொருளாதார வளர்ச்சிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், அசமத்துவ வளர்ச்சி என்ற சிக்கலை எதிர்கொள்வதில் குவிக்கப்படவுள்ளது. புதிய சவால்களை எதிர்கொள்ள புதிய சிந்தனைகளையும், புதிய அளவுகோல்களையும் கைக்கொள்ள வேண்டும் என உணர்ந்துள்ளனர்.

கட்சிக்குள் முன்னெடுக்கப்படும் மாற்றங்கள்:

சீன மக்களிடையே அதிகரித்து வரும் தேவைகளை நிறைவேற்றுவது ஒரு உயிர்த்துடிப்பான கட்சி இல்லாதபோது சாத்தியமில்லை. மக்களாட்சி, சட்டத்தின் ஆளுகை, நீதி – நேர்மை, பாதுகாப்புணர்வு மற்றும் சூழலியல் ஆகிய வேட்கைகளை கட்சி நிறைவேற்றியாக வேண்டும். அதற்கேற்ற வகையில், மார்க்சிய நோக்கில்,காலத்தில் முந்திச் செயல்படும் கட்சியாக சீன கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட வேண்டியுள்ளது. மக்கள் ஆதரவுடன், தன்னைத்தானே சீர்திருத்திக் கொள்ளும் தகுதியுடன், சோதனைகளை எதிர்கொண்டு அக்கட்சி முன்செல்ல வேண்டும். ஜனநாயக மத்தியத்துவத்தை உயர்த்திப் பிடித்து, கட்சிக்குள் நேர்மறையான, ஆரோக்கியமான அரசியல் பண்பாட்டை வளர்த்தெடுக்கவும், ஒருங்கிணைப்பை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.

அதேசமயம் சீன கட்சி மேற்கொண்டுள்ள சில மாற்றங்கள் உலக அரங்கில் விவாதத்தை கிளப்புவதாகவும் அமைந்திருக்கின்றன.

சீன கட்சியின் அமைப்புச் சட்டத்தில் ‘புதிய காலகட்டத்திற்கான சீன பண்புகளுடன் கூடிய சோசலிசம் குறித்த ஜி ஜின்பிங் சிந்தனைகள்’ என்ற வரிகளை இணைத்துள்ளனர். அது பற்றி லி ஷான்சு குறிப்பிடும்போது, “18வது தேசிய மாநாட்டிக்குப் பின்னர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவினால் கடைப்பிடிக்கப்பட்ட புதிய கருத்துகள், புதிய சிந்தனை மற்றும் தேசிய ஆளுகைக்கான புதிய உத்திகளையே அவ்வாறு குறிப்பிடுவதாக கூறுகிறார். மேலும் ஏற்கனவே அந்த நாட்டு கட்சியின் தலைமை ஜி ஜின்பிங் தலைமைக்கு ‘கோர்’ எனப்படும் முக்கிய தலைவர்களுக்கான இடத்தைக் கொடுத்தது. இதற்கு முன்பாக தோழர்கள் மாவோ, டெங் சியோபிங் ஆகியோர் கோர் என்ற இடத்தைப் பெற்றுள்ளனர்.

நூற்றாண்டுக்கான இரண்டு இலக்குகளில் இது மாறிச்செல்லும் காலகட்டம் என்பதால், ஒருவர் நாட்டின் தலைவராக நீடிக்கும் பதவிக்காலத்திற்கு இருந்த கட்டுப்பாடுகளை அகற்றியிருக்கின்றனர். இது தனிநபரிடம் அதிகாரக் குவிப்புக்கு வழிவகுக்குமா? என்ற கேள்விகளும் எழும்புகின்றன.

“இத்திருத்தங்கள், அரசமைப்பிலும் கட்சியிலும் செயல்படும் தலைவர்களுக்கு ஓய்வுகொடுக்கும் முறைமையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஆயுள் காலத்திற்கும் பதவியில் நீடிக்கலாம் என்ற பொருளையும் தராது” என சீன பத்திரிக்கையான பீப்பிள்ஸ் டெய்லி தெரிவிக்கிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி தனக்கு முன் உள்ள நான்கு பரிசோதனைகள் மற்றும் நான்கு பேராபத்துகளைப் பட்டியலிட்டிருக்கிறது. ஆளுகை, பொருளாதார சீர்திருத்தம், சந்தைப் பொருளாதாரம் மற்றும் வெளியில் உள்ள சூழல் ஆகியவை கம்யூனிஸ்ட் கட்சிக்கு முன்னுள்ள நான்கு பரிசோதனைகள். தூண்டுகோல் இல்லாதது, திறமைக் குறைவு, மக்களின் ஈடுபாடின்மை, செயலின்மை/ஊழல் ஆகிவை நான்கும் பேராபத்துகளாகும்.

சீனத்தில் சோசலிசத்தை தக்கவைக்கும் சக்திககளின் போராட்டமாகத்தான் சீன கம்யூனிஸ்ட் கட்சி தன் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குறிப்பிடுவதைப் போல, “சோசலிசத்தை வலிமைப்படுத்தி உறுதிப்படுத்த முன்நிற்கும் சக்திகளுக்கு உலகெங்கிலும் உள்ள கம்யூனிஸ்டுகளின் ஆதரவு என்றென்றைக்கும் இருக்கும். சீன கம்யூனிஸ்ட் கட்சி, சோசலிசத்தை வலிமைப்படுத்துவதில் எட்டும் ஒவ்வொரு சாதனையும், சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தை முன்னேற்றுவதற்கான பங்களிப்புகளாகும்.”

 

இந்தியாவில் சாதி முறை : ஒரு மார்க்சிய பார்வை

பிரகாஷ் காரத்

வீடியோ: https://youtu.be/EAy2-71_oh8

தோழர்களே! இன்று இந்தியாவின் சாதிய சமூக அமைப்பு பற்றி விவாதிக்கவுள்ளோம். சாதிய சமூக அமைப்புமுறை, இந்திய துணைக் கண்டத்தில் (இந்தியா, பாகிஸ்தான், பங்களா தேஷ், இலங்கை, நேபாளம்) மட்டுமே காணப் படுகிறது.

வேறெங்கும் காணாத சாதிச் சமூகம்
எல்லா சமூகத்திலும் அதிகாரப் படிநிலை களும், அடுக்கமைவுகளும் இருக்கின்றன. பொது வாக அவை வர்க்கம் சார்ந்ததாக இருக்கும். அதற் குள்ளாக வேறு சமூகப் பிரிவுகளும், அடுக்கு களும் காணப்படுகின்றன. இந்தியச் சமூக அமைப்பு முறையில் காணப்படும் விசித்திரம் என்ன வென்றால், வேலைப்பிரிவினையாகத் தொடங் கிய சமூகப் படிநிலைகள், பல நூற்றாண்டு களாக வடிவமைவு பெற்று, ஒரு அதிகாரப் படிநிலை அமைப்பாக கெட்டிப்பட்டன. சந்தேகத்திற்கிடமின்றி அவை பிறப்பின் அடிப் படையிலானது. சாதிய அமைப்பு, சமூகவியலா ளர்கள் குறிப்பிடும் அகமண முறையைக் கொண்டு பராமரிக்கப்படுகிறது. கண்டிப்பான விதத்தில் கடைப்பிடிக்கப்படும் இந்த சமூக அமைப்பு முறையினை மத நிறுவனம் அங்கீகரித்து வளர்த் தெடுக்கிறது. இதுதான் சாதி அமைப்புமுறை என்று அழைக்கப்படுகிறது.
தங்கள் சொந்த சமூகங்களோடு ஒப்பிட்டு, இந்திய சாதிச் சமூக அமைப்பினைப் புரிந்து கொள்ள இந்தியாவுக்கு வெளியிலிருந்து பலரும் முயன்றுள்ளனர். அவர்கள் அனைவருமே இந்தச் சமூக அமைப்புமுறை இந்தியாவில் மட்டுமே காணப்படுவதை அங்கீகரிக்கின்றனர். உலகின் பலபகுதிகளிலும் வெவ்வேறு பழங்குடி சமூக அமைப்புக்கள் காணப்படுகின்றன. எனினும், சாதி அமைப்பு, இந்தியா தவிர வேறெங்கும் காணாத ஒன்றாகும்.

சாதி எங்கிருந்து உருவாகி, நூற்றாண்டுகளாகப் பரிணமித்தது என்பது பற்றி பல விவாதங்களும், ஆய்வுகளும் நடைபெற்றுவருகின்றன. சிலர் 2000 முதல் 2500 ஆண்டுகள் பழமையானதென்கின்ற னர். வேதகால இலக்கியங்களில் ஆதாரங்களைத் தேடுகின்றனர். நாம் இங்கே அதை குறித்துப் பேசவில்லை. சாதியையும், சாதி அமைப்புமுறை யினை மார்க்சிய நோக்கில் புரிந்துகொள்ள வேண்டும். அந்தப் புரிதலின் அடிப்படையில் அதனை எதிர்கொள்வதற்கான அணுகுமுறையை வகுத்துக்கொள்ள வேண்டும்.

மார்க்சிய ஆய்வின் அவசியம்:
சாதியை, மார்க்சிய நோக்கில் புரிந்துகொள்வ தும், மார்க்சிய அடிப்படையில் எதிர்கொள்வதும் ஏன் அவசியமாகிறது?.
நாம் இந்தியாவில் மக்கள் ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்பதற்காக செயல்படுகிறோம். அதற் காக தொழிலாளி, விவசாயி, விவசாயத் தொழி லாளி மற்றும் இதர பகுதி உழைக்கும் மக்களைத் திரட்ட வேண்டும். அவர்கள் நமது சமூகத்தில் வர்க்கமாக மட்டும் வாழவில்லை. வர்க்க மூலங் களையும், வர்க்க பண்பு நலன்களையும் தாண்டி சாதிய அடையாளத்தையும் கொண்டுள்ளார் கள். அதனையும் கணக்கிக் கொண்டுதான், சரியான உத்தியை வந்தடைய முடியும்.

உதாரணமாக விவசாயத் தொழிலாளர் பிரிவினரை, அதாவது கிராமப்புற பாட்டாளிவர்க்கத்தினரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் பெரும்பாலும் தலித் அல்லது மிகவும் பிற்பட்ட சாதியினராகவும் உள்ளனர். அவர்களின் சமூக பொருளாதார நிலைமைகளை கணக்கில் கொள்ளாமல், நம்மால் அவர்களைத் திரட்ட முடியாது. அவர்கள் மக்கள் ஜனநாயக முன்னணியின் அடிப்படை வர்க்கங்களாவர். சாதி மற்றும் சாதிய அமைப்பு முறை குறித்த அறிவியல்பூர்வமான புரிதலொடு செயல்பட்டு அவர்களைத் திரட்ட வேண்டும்.

அடித்தளமா, மேல்கட்டுமானமா?
இந்தியாவில் சாதியைப் பற்றி விவாதிக்கும் போது, கடந்தகால அனுபவங்களையும் கணக்கி லெடுக்க வேண்டும். மார்க்சிய ஆய்வு முறையில் கடந்த காலத்தில் காணப்பட்ட ஒரு போக்கு, புரிதல் – சமூக அடித்தளத்தின் மேல்கட்டு மானத்தில் ஒன்றே சாதி என்பதாகும். அடித்தளம் – மேல்கட்டுமானம் ஆகிய கருத்தாக்கங்களை நீங்கள் அறிவீர்கள். அடித்தளம் என்பது உற் பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் உள்ளிட்ட பொருள்முதல்வாத அஸ்திவாரமாகும். அதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு மேல் கட்டுமானங்கள் இயங்குகின்றன. உதாரணமாக ஒரு நிலப்பிரபுத்துவ அமைப்பில் அதற்கே உரித் தான நீதியமைப்பும், கலாச்சார உறவுகளும், அரசியல் அமைப்பும் இயங்குகின்றன. முதலாளித்துவ உற்பத்தி முறை ஒரு சமூகத்தில் ஆதிக்கம் பெறுகின்ற போது, அதற்கேற்ப மேல்கட்டுமானத்திலும் மாற்றம் ஏற்படுகிறது. அடித்தளமும் மேற்கட்டு மானமும் ஒன்றை ஒன்று இயங்கியல் அடிப்படை யில் சார்ந்திருக்கிறது. அடித்தளத்தில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து, மேல்கட்டுமானத்தில் மாற்றங்கள் ஏற்படும். சிலசமயம், மேற்கட்டு மானத்தில் காணப்படும் நகர்வுகள், அடித்தளத் தில் ஏற்படும் மாற்றங்களுக்கு தூண்டுகோலாக அமைந்திடும்.

அடித்தளத்தை மாற்றியமைப்பதன் மூலம் தான் – அதாவது உற்பத்தியின் பொருள்முதல் அடித்தளங்களை மாற்றியமைக்கும்போதுதான் – மேல்கட்டுமானத்தை மாற்றியமைக்க முடியும் என்ற பொதுவான புரிதல் அடிப்படையில் சாதி பார்க்கப்பட்டது. அதாவது, பொருள்முதல்வாத அடித்தளத்தில் மாற்றம் ஏற்பட்ட பின்னர், சாதி சமூகத்திலிருந்து தானாக மறைந்துவிடும் என்ற மதிப்பீடு நிலவியது. இந்தியாவில் மார்க்சிய நோக்கிலிருந்து சாதிகுறித்து எழுதப்பட்ட பல ஆய்வுகளில் இந்த போக்கு காணப்பட்டது.

பொதுவான அந்தப் புரிதல் எங்கிருந்து எழுந்ததெனப் பார்க்க வேண்டும். சாதியும் சாதிய உறவு களும் முந்தைய சமூகத்தின் மிச்ச சொச்சங்கள். அதாவது நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகத்தின் அரை நிலப்பிரபுத்துவ மிச்சங்கள். நாம் முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக உற்பத்திமுறைகளை ஒழித்திட உழைக்கிறோம். அரை நிலப்பிரபுத்துவ உறவுகளை ஒழித்து சோசலிசத்தை நோக்கியும் பயணப்பட வேண் டும். அதில், ஜனநாயக புரட்சியை நிறைவேற்றுவ தானது – சாதி உட்பட நிலப்பிரபுத்துவ எச்ச சொச்சங்கள் அனைத்தையும் முடிவுகட்டுவதற்கு இட்டுச்செல்லும். எனவே, நாம் விவசாயப் புரட்சியில் கவனம் செலுத்தலாம். இவ்வாறு சொல்வதன் பொருள் நிலப்பிரபுத்துவத்தை ஒழிப்பது; தீவிரமான நிலச்சீர்திருத்தம் செய்வது. அவற்றைச் செய்துவிட்டால், கிராமப்புற சமூக அமைப்பை அது மாற்றிவிடும். எனவே அது சாதி அமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற பொருள்வருகிறது.

இவ்வாறான புரிதல் ஒரு நிர்ணயவாத (deterministic) அணுகுமுறையை நோக்கித் தள்ளியது. அது முடிந்தால், இதுவும் முடிந்துவிடும் என நினைக்கச் செய்தது. சாதி ஒழிப்பு இயக்கத்தை வளர்த்தெடுப்பதையும், சாதி ஒழிப்பு உணர்வை மக்களிடம் உருவாக்குவதையும், சாதி ஒழிப்புக் கான குறிப்பான தலையீட்டைச் செய்வதையும் – தாமதிக்கச் செய்தது அல்லது தள்ளிவைக்கச் செய்தது. முதலில் அடிப்படையான பணிகளை முடித்தோமானால், சாதி ஒழிந்துவிடும் என் கிற சிந்தனைக்கு சென்றதால், அது புரிதலி லேயே போதாமையை உருவாக்கியது. ஜனநாயகப் புரட்சியின் தன்மையையும், சாதி அமைப்புமுறையின் இயல்பையும் புரிந்துகொள்வதில் சிக்கலை ஏற் படுத்தியது.
சாதி என்பது முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக அமைப்பின் எச்சம் என்ற கருத்து, மார்க் சிஸ்டுகள் மத்தியில் பரவலாக நிலவிவருகிறது. நமது போராட்டங்களிலும், பிரச்சாரங்களிலும் ‘அனைத்து நிலப்பிரபுத்துவ எச்சங்களும் அகற்றப் படவேண்டும்’ என்று பேசுவோம். ஆனால், சாதி நிலப்பிரபுத்துவ எச்சம் என்ற புரிதல் சரியான தல்ல. முதலாளித்துவத்தால் ஆட்கொள்ளப் பட்ட ஒரு சமூக அமைப்பாக சாதி இருக்கிறது. அதாவது அது நிலப்பிரபுத்துவ சமூகத்தில் நிலவியது, முதலாளித்துவ சமூக அமைப்பிலும் நிலவுகிறது. எனவே, சாதியின் பாத்திரம் என்ன என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்.

அடித்தளத்திலும் சாதி
மார்க்சிய சிந்தனையாளர்கள் மத்தியில் இந்த விவாதம் நடந்துவருகிறது. சாதி மேல்கட்டுமானத் தின் பகுதி மட்டுமே என்று சொல்ல மாட்டேன். அது மேல்கட்டுமானத்தின் பகுதியாக இருப்ப துடன் அடித்தளத்திலும் ஒரு பகுதியாக உள்ளது. அது உற்பத்தி உறவுகளின் ஒரு பகுதியாக இருக் கிறது. இதனை புரிந்துகொள்ளாமல் சாதி குறித்த சரியான வரையறைக்கு வர முடியாது.

சாதி பற்றி டி.டி.கோசாம்பி குறிப்பிடும் பின் வரும் மேற்கோள், அதன் சாரத்தைப் புரிந்து கொள்ள உதவுகிறது: ”ஆதி உற்பத்தி முறையில் நிலவிய வர்க்கம்தான், சாதியாகும். ஒரு சமூக ஒழுங்கை உருவாக்குவதற்கான மத வழிமுறை. அவ்வழியில், ஒரு சமூகத்தின் முதன்மை உற்பத்தி யாளரிடமிருந்து, மிகக் குறைந்த எதிர்ப்புணர் வுடன், அவரின் உபரி உற்பத்தியை கையகப்படுத் தும் ஒப்புதலை அது பெறுகிறது.”

எளிமையாக விவரித்தால், சாதி என்பது ஆதியில் அமைந்த வர்க்க அமைப்பின் வடிவமாகும். அதற்கு மத அங்கீகாரம் இருக்கிறது. எனவே, மக்களின் உணர்வு நிலையில், நான் இவ்வாறு பிறந்தேன், எனவே இந்த சமூக ஒழுங்கை நான் ஏற்றுக்கொண்டாக வேண்டும், அது கடவுள்/மதம் எனக்கு பணித்துள்ள கடமை என்ற ஒப்புதலை உருவாக்குகிறது. இதன் உதவியோடு, ஒரு உற்பத்தியாளரை நிர்ப்பந்திக்காமலே அவர் படைக்கும் உபரியைச் சுரண்டமுடிகிறது. சுரண்டப் படும் ஒருவர் தனது உழைப்பின் உற்பத்தி, தன்னுடைய சொத்து அல்ல என நம்புகிறார். தான் வாழும் சமுதாய ஒழுங்கில், எனது உழைப்பால் உருவாக்கப்படும் உற்பத்தி, என்னுடையது அல்ல என நம்புகிறார். எனவே, அதில் வர்க்கத்தின் அம்சம் இடம்பெறுகிறது, சமூக அதிகாரப் படிநிலை அம்சமும் உள்ளது, மத அம்சமும் இருக்கிறது. இந்த மூன்றின் பிணைப்பில்தான் சாதி அமைப்புமுறை பரிணமித்தது.
பண்டைய இந்தியாவில் இவ்வாறான சூழல் நிலவிவந்தது. பிற்காலத்தில் அது இந்தியாவின் பல்வேறு மண்டலங்களிலும், பல்வேறு பகுதி களிலும் ஆங்காங்கு நிலவிய சமூக சூழல்களுக்கு தக்க வகையில் ஏற்கப்பட்டது, மாறுதல்களுக்கு உட்பட்டது, விரிவடைந்தது.

வர்க்க உருவாக்கத்தில் சாதியின் பங்கு
இன்று, இந்தியாவின் ஆதிக்கம் செலுத்தும் பிரதான உற்பத்திமுறையாக முதலாளித்துவ உற்பத்திமுறை வளர்ந்திருக்கிறது. சாதி, உற்பத்தி உறவுகளில் சந்தேகமின்றி தொடர்ந்து நீடிக்கிறது. இந்தச் சிக்கல் குறித்த அணுகுமுறையே மார்க் சிஸ்டுகளின் அணுகுமுறையை மற்றவர்களுடையதி லிருந்து தனித்துக் காட்டுகிறது. நாம் சாதியும், வர்க்கமும் ஒன்றோடொன்று உள்ளார்ந்த தொடர் புடையவை என்கிறோம். முன்னர் சாதியின் மறைபொருளாக அமைந்தது வர்க்கம் என்று சொல்லப்பட்டது. அதாவது, சாதியின் உள்ளடக் கமாக அமைந்தது வர்க்கம்தான் என்ற பொருளில் சொல்லிவந்தார்கள். மாறா நிலையில் அமைந்த தல்ல சாதியும், வர்க்கமும். முதலாளித் துவ வளர்ச்சிக்கு ஏற்ப அவற்றில் மாற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன.

சாதியும் வர்க்கமும் ஒன்றுக்கொன்று இயைந்தவை. முதலாளித்துவம் வளர்ச்சியடையும்போது, சாதி அமைப்புக்குள்ளேயே வேறுபாடுகளும் வளர்ச்சியடைகின்றன. சாதியும் வர்க்கமும் பிணைந் திருக்கின்றன. சிலசமயம் அவை ஒன்றின்மேல் ஒன்று படிந்துள்ளன, சிலசமயம் அவற்றிற் கிடையே முரண்களும், பிரிவுகளும் மேலெழுகின்றன.

பல பத்தாண்டுகள் முதலாளித்துவ வளர்ச்சிக் குப் பிறகு, இன்று சாதி – வர்க்க ஒத்துழைப்பு, மாறா நிலையில் இல்லை. சாதிப் படிநிலையில் கீழ் அமைந்த சாதிப் பிரிவுகளில் ஒரு பகுதி, முதலாளித்துவ வர்க்கமாக – விவசாயம் சார்ந்த முதலாளிகளாகவோ அல்லது நகர்ப்புற முதலாளி களாகவோ – வளர்ச்சியடைந்துள்ளனர். உயர் சாதி என தங்களை அழைத்துக்கொள்ளும் பிரிவின் ஒரு பகுதியினர், பாட்டாளிவர்க்கத்தின் பகுதியாக வும் மாறியுள்ளனர். இப்படி பலவிதமான மாற்றங்கள் நடந்திருக்கின்றன.

அதே சமயம், சாதியின் அதிகாரப் படிநிலை இயல்பும், சமூக முன்னேற்றத்தை பின்னுக்கு இழுக்கும் அதன் தன்மையும், பிற்போக்குத்தன மும் அப்படியே தொடர்கின்றன. எனவே நமது போராட்டம் இந்த இரண்டையும் கணக்கில் கொண்டதாக அமைவதை உறுதி செய்யவேண்டும்.
சாதி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள மார்க்சியர் அல்லாதவர்களும் சாதியை ஒழிப்போம் என்கின்றனர். சாதிக்கும் – வர்க்கத்திற்குமான பிணைப்பை யும், இணைப்பையும் அறியாத, கண்டுணராத ஒருவரால் சாதியை ஒழிக்க முடியாது. சாதி எதிர்ப்பின் சமூக அம்சத்தையும் உள்ளடக்கிய வர்க்கப் போராட்டத்தைக் கட்டமைக்காமல் நாம் விரும்புகிற சமூக மாற்றத்தைச் சாத்தியமாக்க முடியாது. வர்க்கச் சுரண்டலையும், சாதி ஒடுக்கு முறையையும் முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலமே அது சாத்தியமாகும்.

சாதிச் சமூகத்தில் வர்க்கங்கள்
சுருங்கச் சொன்னால், இந்திய முதலாளித்துவ அமைப்பில் வர்க்கங்களின் வளர்ச்சியானது, சாதீய அடுக்கமைவும், பிரிவுகளும் கொண்ட சமூக நிலைமைகளுக்கு உட்பட்டே நிகழ்கிறது. எனவே, இங்கே உருவாகும் வர்க்கங்கள் சாதீயக் காரணிகளுக்கேற்ப வடிவமெடுக்கின்றன; வண்ணம் பெறுகின்றன.

எனவே இந்தியாவின் முதலாளித்துவத்தை, தனித்த இந்திய இயல்புகளுடன் கூடிய முதலாளித்துவமாகப் பார்க்கவேண்டும். பொதுவாக முதலாளித் துவம் என்று மட்டும் பார்க்கும்போது, நமது இலக்கையும், உத்தியையும் தீர்மானிக்க அவசிய மான சிலவற்றை விட்டுவிடுகிறோம். அவற்றில் முதலாவது, இந்திய விடுதலைக்குப் பின், இங்கே வளர்ச்சியடைந்த முதலாளிகள், நிலப்பிரபுத் துவத்துடனும் அரை நிலப்பிரபுத்துவ உறவு களோடும் சமரசம் செய்துகொண்டனர். இரண்டா வது, இந்தியாவில் விவசாயப் புரட்சி முழுமை யடைந்து, உற்பத்தி உறவுகளில் ஜனநாயக மாறு தல்கள் நடக்கவில்லை. மூன்றாவது, வளர்ந்து வரும் முதலாளித்துவ அமைப்பின் ஒரு பகுதியாக சாதீய அதிகாரப் படிநிலைகளும், சாதீய சமூக வடிவங்களும் தொடர்ந்து நீடிக்கின்றன. மேற்கண்ட மூன்று அம்சங்களும் மனதில் கொள்ள வேண்டியவை.

இந்தியாவில் முதலாளி வர்க்கம் உருவான வழிமுறையையும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பாட்டாளிவர்க்கம் உருவான வழிமுறைகளையும் ஆராய்ந்தால் அவற்றின் சாதீய வேர்களை கண்டு கொள்ள முடிகிறது. அதுகுறித்து இப்போது விரிவாகப் பேசவில்லை. ஆனால், இந்திய முதலாளிகளில் பெரும்பகுதியினர், சில குறிப் பிட்ட சாதிகளில் இருந்துதான் வந்திருக்கின்றனர். பொதுவாக நால்வருண அமைப்பு குறிப்பிடும் வைசியர்களாக உள்ளனர். அவர்கள் வியாபாரி களாகவும், வட்டித்தொழில் செய்வோராகவும் உள்ளனர். இந்திய முதலாளிகள் யாரென்று பார்த்தால் அம்பானி, சிங்காலியா, பிர்லா என அனைத்து முதலாளிகளும் பனியா சாதியி லிருந்து (வைசியர்) வந்தவர்கள். விடுதலைக்குப் பின் டாட்டா ( பார்சி) தவிர பெரும்பாலான முதலாளிகள் பனியாக்களே. தென்னிந்தியாவை எடுத்துக்கொண்டாலும் ஆரம்பகாலத்தில் செட்டி யார்கள் முன்வந்தார்கள். வர்க்கங்களின் உருவாக் கத்திற்கு பின்னணியாக உள்ள சாதீய அம்சங் களைக் கணக்கில் கொள்ள வேண்டும். அந்த முதலாளிகளே, இந்துத்துவத்தின் ஈர்ப்புக்கு இரையாகிறார்கள். சாதீயப் பின்புலம் அதற்கு காரணியாக இருக்கிறது. மறுபக்கம், பாட்டாளி வர்க்கத்தை எடுத்துக்கொண்டால், இந்தியா வில் எட்டரை கோடி ஆதிவாசி மக்கள் உள்ளனர். பெரும்பாலான கொத்தடிமைகளா கவும், ஒட்டச் சுரண்டப்படும் தொழிலாளர் களாகவும் ஆதிவாசிகளும், தலித் மக்களுமே உள்ளனர். அவர்கள் தங்கள் வாழ்விடங்களி லிருந்து வெளியேற்றப்பட்டு கனிமச் சுரங்கங்கள், கட்டுமானத் தொழில்களிலும், அமைப்புசாராத் தொழில்களிலும் அமர்த்தப்படுகின்றனர். முதலா ளித்துவ சமூகத்தில் உருவாகியுள்ள வர்க்கங்களின் சாதிய மூலங்களையும், வேர்களையும் அறிந்து கொள்ள வேண்டும். இவைகளைப் புரிந்து கொள்ளாமல் இலக்கையும், உத்தியையும் வகுக்க முடியாது.

– தமிழில்: இரா.சிந்தன்

(சாதிய சவாலை எதிர்கொள்ளுதல் அடுத்த இதழில்…..)