இலங்கையும் – தேசிய இனப்பிரச்சனையும்!

இலங்கைத் தமிழர் பிரச்சனை இந்த நூற்றாண்டின் துயரம். அரசியல் அதிகாரம், மொழி, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் சிங்கள மேலாதிக்க ஆட்சியாளர்களால் தமிழ் மக்களுக்கு உரிமை மறுக்கப்பட்டது.

முப்பது ஆண்டுகளுக்கு மேல் அமைதியான வழியில் உரிமைக்காகப் போராடியவர்கள் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலை உருவானதற்கு சிங்கள மேலாதிக்கம் தான் காரணம் என்பது மறுக்க முடியாத ஒன்று.

“சமரசம் என்பது கெட்ட சொல் என்று கருதக் கூடாது” என்று “மாவீரன் பகத்சிங்” ஒருமுறை குறிப்பிட்டார். புலிகளுக்கும் அரசுக்கும் உருவான சமரசத் தீர்வுகள் ஒவ்வொரு முறையும் தட்டி விடப்பட்ட உண்மையை மறைக்க முடியாது. அதுவும் இன்றைய துயரத்திற்கு முக்கியமான காரணமாகும்.

நேபாள மாவோயிஸ்ட், இதே காலத்தில் உலக சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கணக்கில் எடுத்து ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு, தேர்தலில் வெற்றி பெற்று – நேபாள மன்னனை நீக்கி ஜனநாயகத்தை உருவாக்கினார் கள்.

தமிழ் ஈழ வரலாறு, பண்டைய மன்னர்கள் பெருமை, சிங்களத்தை வென்ற பெருமைகள் இப்போதும் பேசப்பட்டு, எழுதப்பட்டு அதன் பின்னணியில் ஈழம் தவிர எந்த யோசனையையும் ஏற்காத இயக்கங்கள், அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தத்துவார்த்த ரீதியாக கடுமையாக விமர்சிக்கிறார்கள். நய்யாண்டி செய்கிறார்கள். இந்திய வர லாற்றில், தமிழக வரலாற்றில் அதிகமாக துப் பாக்கி ரவைகளை தாங்கிய கட்சி, சித்திரவதை களை சந்தித்த கட்சி. இதை விமர்சிக்கும் சாய்வு நாற்காலி அரசியல்வாதிகள் சற்று நிதானமாக உண்மைகளை பார்க்க வேண்டும். இலங்கைத் தமிழர் நலனில் சிபிஐ(எம்)-க்கு மற்றவர்களுக்கு உள்ள அக்கறை உண்டு என்பது அவர்களுக்கும் தெரியும். கடந்த 30 ஆண்டுகளில் தனக்குரிய பங்கை சிபிஐ(எம்) நிறைவேற்றியுள்ளது. மற்ற இயக்கங்கள் பேசுவது போல் சிபிஐ(எம்) பேசவில்லை என்பது உண்மை. எங்கள் எழுத்துக்கள், நாடாளுமன்ற விவாதங்களை கேட்டவர்கள், படித்தவர்கள் எந்த இடத்தில் தவறு என்று இன்று வரை சுட்டிக் காட்டவில்லை.

கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் காலத்து வரலாறுகளையும் தத்துவார்த்த விளக்கங்களையும் தாராளமாக எடுத்து வைக்கிறார்கள்.

“மார்க்சியத்தின் பால் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை நம்மை புல்லரிக்க செய்கிறது”. அவர்களுடைய மார்க்சிய பக்தி சுயநிர்ணய உரிமை பற்றி மட்டுமே என்பதும் நமக்குத் தெரியும். தங்களுக்கு உதவும் வார்த்தை களை பெருத்த நம்பிக்கையுடன் அள்ளி வீசுவார்கள்.

இந்த பிரச்சனையின் உண்மையான ஆர்வம் உள்ளவர்களுக்கு சில உண்மைகளை எடுத் துரைக்க வேண்டியுள்ளது:

அரசியல் போராட்டங்களில் வரலாறு ஓர் ஆயுதமாக பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. பலர் இதுகுறித்து தங்கள் கவலைகளை தெரிவித்துள்ளனர்.

பிரபல வரலாற்று அறிஞராகிய பேராசிரியர் ஏரிக் ஹோப்ஸ்பாம் தெரிவித்துள்ள கருத்து மிகவும் கவனிக்கத்தக்கது.

“ஹெராயின் என்ற போதைப் பொருளுக்குப் பொப்பி மலர் மூலப்பொருள். அதுபோல தேசியவாதக் கருத்துக்கள், இனக்குழு சார்ந்த கருத்துக்கள் மற்றும் அடிப்படை வாதங்கள் ஆகியவற்றிற்கு வரலாறு மூலப் பொருளாக அமைகிறது. இப்படியுமான கருத்துக்கு கடந்த காலம் என்பது ஓர் அத்தியாவசியமான கூறு. இக்கருத்துக்கு பொருத்தமான கடந்த காலம் இல்லை என்றால், அதனை வேண்டிய வகையில் ஆக்கிக் கொள்ள முடியும். எதையும் நியாயப்படுத்த கடந்த காலம் உதவுகின்றது. மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு அதிகம் இல்லாத நிகழ்காலத்துக்கு ஒரு புகழ் பூத்த பின்னணியை கடந்த காலம் வழங்குகிறது”.

அவர் மேலும் கூறுகிறார்,

“வரலாறு எழுதும் தொழிலானது அணு ஆய்வுப் பௌதீகவியல் போல அல்லாது யாருக்கும் தீங்கு விளைவிக்காத ஒரு தொழில் என நான் எண்ணிப் பார்த்தேன். ஆனால், இத்தொழில் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதை இப்போது உணர்கிறேன்”. பிரித்தானியாவில் ஐரிஷ் குடியரசுப் படையினர் ரசாயன உரத்தை வெடிகுண்டாக மாற்றுவதற்குப் பயன்படுத்திய தொழிற்சாலைகள் போல் எங்கள் படிப்பறைகள் குண்டு தொழிற்சாலைகளாக மாறக்கூடியவை. இந்நிலை எங்களை (வரலாறு எழுதுவோரை) இருவகையில் பாதிக்கிறது.

ஒன்று, வரலாற்று உண்மைகளை எடுத்துரைக்கும் பொறுப்பு எமக்கு இருப்பதைப் பொதுவாக உணர்ந்து கொள்வது.

இரண்டாவதாக, அரசியல் தத்துவ நோக்கங்களுக்காக வரலாறு தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டிக்கும் பொறுப்பு எமக்கு இருப்பதை சிறப்பாக உணர்ந்து கொள்வது.

“உலகம் இன்றைய நிலையை எப்படி அடைந்தது என்பதை விளங்க வைப்பதில் வரலாறு முன்னேற்றம் கண்டுள்ளது என்பது பேராசிரியர் ஏரிக் ஹோப்ஸ்பாம் கருத்தாகும்”.

தற்போது காணப்படும் அரசியல் நிலைக்கு அடிகோலிய தமிழர் உரிமைப் போராட்டம் இன்றைய உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித உரிமைகளின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டியது. இது அவர் அவர் வரலாற்றின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை ஆகாது.

இரண்டாவது உலக யுத்தத்திற்கு பின் உலகின் விடுதலை அடைந்த நாடுகளில் இன்று இனப்பிரச்சனை, மொழிப் பிரச்சனை, மதப் பிரச்சனை, ஏற்றத்தாழ்வுகள் போன்ற ஏராளமான பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளது.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானை பிரித்தது ஒரு விபத்து. இதை அன்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் ஆதரித்தது உண்மை.

பாகிஸ்தான் கோரிக்கை பலம் பெற்றவுடன் சீக்கியர்கள் தனிநாடு கோரினர், இந்து மகாசபை இந்துராஷ்புரா என்ற கோஷத்தை முன்வைத்தன. தெற்கே திராவிட நாடு என்கிற கோரிக்கை உருவானது. பல மொழிகள், பல இனங்கள் கொண்ட மக்கள் மத்தியில் ஒற்றுமையை உருவாக்குவது என்பது கம்யூனிஸ்ட்டுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது. 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் மீண்டும் உருவாவது வளர்ச் சிக்கு உதவாது. இதுகுறித்து ,

கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் வலுவான வாதங்கள், பிரதிவாதங்கள் உருவானது மார்க்சிய ஆதாரங்கள் கொடுக்கப்பட்டது.

தென்னகத்தைப் பொருத்தவரை மொழியால் பிரிந்து (திராவிடம்) இனம் நாடு உருவாக்குவது.

சுயநிர்ணய உரிமை குறித்து திமுக தலைவர்கள் இன்று வைக்கும் வாதங்களை விட ஆயிரம் மடங்கு வாதங்கள், தத்துவார்த்த சான்றுகள், வரலாறு போன்றவற்றை திராவிட இயக்கம் வைத்தது. அன்று திமுக விடம் 60-க்கு மேற்பட்ட வார இதழ்கள் இருந்தது. ஒரு ஜனசக்தி அதற்கு எதிரானப் போராட்டத்தை நடத்தியது.

சோவியத் ஒன்றியம் உருவானபோது இதர சிறிய இன மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டிய தேவை அன்றைய ரஷ்ய கம்யூனிஸ்டுகளுக்கு இருந்தது. அந்த சிறிய இன மக்கள் சாரிஸ்ட ரஷ்ய மேலாதிக்கத்தினால் ஒடுக்கப்பட்டு இருந்தனர். ஆகவே தான், தோழர் லெனின் சோவியத் அரசியல் சட்டத்தின் பிரிவு 17-ல் தேசிய குடியரசுகளுக்கு பிரிந்து போகும் உரிமை உண்டு என்று வடிவமைக்கப்பட்டது: சிலகாலம் யூகோஸ்லாவியாவின் அரசியல் சட்டத்தில் இருந்து பிறகு அது நீக்கப்பட்டுவிட்டது.

“சுயநிர்ணய உரிமை குறித்து குரல் கொடுக்கும் நண்பர்கள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் என்று முடித்து விடுகிறார்கள். அவர்கள் வாதத்திற்கு அது உதவுகிறது”.

“1948 மக்கள் சீனத்தில் மாவோ தலைமையில் ஆட்சி அமைத்த கம்யூனிஸ்டுகள் தங்கள் அரசியல் சட்டத்தில் லெனின் பாதையை பின்பற்றவில்லை. திபெத்தியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற தலாய் லாமா-வின் கோரிக்கையை மக்கள் சீனம் ஏற்கவில்லை. அவருடைய மடத்தை சார்ந்த பஞ்சன் லாமா சீன நிலை சரி என்று சீனாவில் இருந்துவிட்டார்”.

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இதுகுறித்து 1942 காலங்களில் விவாதம் தொடங்கிவிட்டது. பல பிரச்சனைகளுக்கு மார்க்ஸ், லெனின் உரைகளில் இருந்து மேற்கோள் காட்டி பல தோழர்கள் பேசினர்.

அந்த விவாதத்திற்கு பதில் உரைக்கும் போது தோழர் மாவோ கூறுகிறார்:

இப்போதும் கூட சிலர் மார்க்சிய-லெனினிய எழுத்தாளர்கள் அவையிலிருந்து சில மேற்கோள்களை எடுத்துச் சொல்லி அவைகளே அனைத்து தீங்குகளையும் எளிதாக தீர்க்கவல்லது என்று கருதுகின்றனர். அறியாமையில் உழலும் அத்தகையோர் தான் மார்க்சிசம்-லெனினிசத்தை ஒரு வகையான சமயகோட்பாடாக கருதுகின்றனர். அவர்களிடம் மழுப்பல் எதுவுமில்லாமல் தெளிவாகச் சொல்லிட வேண்டும்.

“உங்கள் கோட்பாடு எந்தப் பயனுமற்றது நம்முடைய கொள்கை வறட்டுச் சிந்தாந்தமல்ல; செயலுக்கான வழிகாட்டி என மார்க்ஸ், லெனின் மற்றும் ஸ்டாலின் திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளனர். அத்தகைய சிறப்புமிக்க மிகமிக முக்கியமான வழிகாட்டுதலை இந்த மனிதர்கள் மறந்துவிடுகிறார்கள்”.

சுயநிர்ணய உரிமைக்காக வாதாடுகிறவர்கள் மார்க்ஸ், லெனின், ஸ்டாலினுடன் நின்றுவிடு வார்கள். தோழர் மாவோவிடம் நெருங்கமாட் டார்கள். இந்த வியாபாரிகள் தேவைப்பட்டால் மாவோ – கம்யூனிஸ்ட் அல்ல என்றும் எழுதுவார் கள். உலக வரலாற்றில் இயற்கையை புரிந்து கொள்ள  நிக்கோலஸ் கோபர்நிக்கஸ், கலிலியோ போன்றவர்கள் எடுத்த முயற்சிக்கு மேல் புதிய கண்டுபிடிப்புக்களை ஐசக் நியூட்டன் கண்டு பிடித்தவுடன், மற்றவர்களை ஐசக் நியூட்டன் நிராகரிக்கவில்லை. மாறாக 1676-ல் ஐசக் நியூட்டன் ராபர்ட் ஹீக்குக்கு எழுதிய கடிதத்தில்  எனக்கு முன்னோடியாக இருந்த பேரறி வாளர்களின் தோள்களின் மீது நின்று தான் என்னால் முன்னோக்கி பார்க்க முடிகிறது என்று கூறினார்.  இன்றைய உலக நிலைகளை புரிந்து கொள்ள திட்டவட்டமான நிலைமைகள் குறித்து திட்ட வட்டமான பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும் மார்க்சிய-லெனி னியத்தின் மீற முடியாத கருவியாக இக்கோட் பாடு கருதப்படுகிறது. இதைத்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பின்பற்றுகிறது.

எந்த அரசும், முதலாளித்துவ அரசாகவோ, சோசலிச அரசாகவோ இருந்தாலும், பிரிவினையை கொண்டுவரும் வழிமுறைகளுக்கான அடிப்படை விதியினை எடுத்து விளம்பியதில்லை: அப்படிச் செய்யும் என எதிர்பார்க்கவும் இயலாது. ஆப்ரகாம் லிங்கன் சொன்னது போல் எந்த அரசும் தானே கலைந்து (கரைந்து) போவதற்கான வழி வகுப்பதில்லை.

எதற்காக இந்த நண்பர்கள் சிபிஐ (எம்) ஐ தாக்குகிறார்கள். இந்தியாவில் சிபிஐ, சிபிஐ(எம்-எல்), சிபிஐ(எம்) ஆகிய அனைவரும் இலங்கை இனப்பிரச்சனை குறித்து ஒரே நிலை எடுத்துள்ளது. உலகில் எந்த கம்யூனிஸ்ட் கட்சியும் இலங்கையில் பிரிவினை கோருவதும் ஈழம் அமைவதும் தேவை என்று கூறவில்லை என்பது புரிந்தும், சிபிஐ(எம்) கட்சியை விமர்சிக்கும் இவர்களுக்கு ஓர் அரசியல் நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கம் நிறைவேறாது…

“தொழிலாளிகளிடையே சமூக-ஜனநாயகவாத (கம்யூனிச) உணர்வு இருந்திருக்க முடியாது என்று சொன்னோம். அது வெளியிலிருந்துதான் அவர்களுக்கு கொண்டுவரப்பட வேண்டும். பாட்டாளி வர்க்கம் தனது சொந்த முயற்சிகள் மூலமாகத் தொழிற்சங்க உணர்வு மட்டுமே அதாவது தொழிற் சங்கங்களில் ஒன்றுபடுவது, முதலாளிகளை எதிர்த்துப் போராடுவது, இன்றியமையாமையாத தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்த முயல்வது, முதலியவற்றின் இன்றியமையாமைப் பற்றிய துணிவு மட்டுமே – வளர்த்துக்கொள்ள முடிகிறது என்று எல்லா நாடுகளின் வரலாறு புலப்படுத்துகிறது. ஆனால் சோஷலிசத்தின் கொள்கை, மெய்யறிவுவகைப்பட்ட, வரலாறு வழிப்பட்ட, பொருளாதார வகைப்பட்ட கொள்கைகளிலிருந்து வளர்ந்ததாகும். சொத்துள்ள வர்க்கங்களின் பிரதி நிதிகள், அறிவுத்துறையினர், அவற்றை வகுத்து விளக்கினர். நவீன விஞ்ஞான சோசலிஸத்தின் மூலவர்களான மார்க்சும், எங்கெல்சும் முதலாளி வர்க்கப் போக்கான படிப்பாளிப் பகுதியினரைச் சேர்ந்தவர்கள்” – லெனின் – என்ன செய்ய வேண்டும் என்ற நூலிலிருந்து.

மாவோயிசம்-அராஜகத்திற்கான ஒரு பயிற்சி!

அனில் பிஸ்வாஸ்

தமிழில்: எஸ்.ஏ.மாணிக்கம்

மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் மாவோயிஸ்ட்  குழுக்களின் நடவடிக்கைகளை சமீப காலமாகக் காண முடிகிறது.  பயங்கர கொலைகள் மற்றும் வெடிகுண்டு வீச்சு நடவடிக்கைகள் மூலம் தங்களின் மீது கவனத்தை திருப்ப இந்த அமைப்பு  முயலுகிறது.  பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களையொட்டியுள்ள மேற்கு மாநிலத்தின் எல்லையோர தொலைதூரப் பகுதிகளை தங்களது தளங்களாக உருவாக்க முயற்சித்து வருகிறார்கள். இதேபோன்றே, மாநிலத்தின்  ஒரு சில மாவட்டங்களிலும் காலூன்ற விரும்புகிறார்கள். பான்குரா, புருளியா, மேற்கு மித்னாப்பூர் மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களையும், முன்னணி ஊழியர்களையும் மாவோயிஸ்ட்  ஆட்களால் படுகொலை செய்யப்படுவதை நியாயப்படுத்துவதன் மூலம் ஒரு  பிரிவு மீடியா நிறுவனங்கள் இவர்களுக்கு ஊக்கமளிக்கின்றன.

சிபிஐ(எம்.எல்), மக்கள் யுத்தக்குழு, மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர், நக்சலைட் குழுவின்  இரு பிரிவுகள் ஆகியன ஒன்றாகச் சேர்ந்து 2004ம் ஆண்டு செப்டம்பர் 21 அன்று  சிபிஐ (மாவேயிஸ்ட்) என்ற ஒரு புதிய கட்சியினை அமைத்தனர்.  ஆந்திரப் பிரதேசம், ஒரிசா, சத்திஸ்கர், பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட  பகுதிகளில்  நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.  இரகசிய முறையிலான இவர்களுடைய அரசியல் பார்வை,  நடவடிக்கைகளின் காரணமாக பெரும்பான்மையான மக்களுக்கு இவர்களைப் பற்றி  தெரியாது.  சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பானது வன்முறை நடவடிக்கைகளுடன் பயங்கர வாதத்தையும் கொண்டதாகும். அவர்களுடன் திட்டத்தையும், தத்துவார்த்த நிலையினையும் பார்க்கும்போது அவர்கள் பயங்கரவாத அமைப்பாகவே காண முடியும்.  இத்தகைய பயங்கரவாதமானது ஜனநாயகப் போராட்டத்திற்கும், இடதுசாரி இயக்கங்களுக்கும் தீங்கானதாகும்.  இக் கட்சியினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் மற்றும் தத்துவார்த்த ரீதியாக எதிர்கொள்ளும்.

நீண்ட  தத்துவார்த்த விவாதங்களுக்கு பின்னரே 1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. அத்துடன்  ஒரு புதிய கட்சி திட்டத்தையும்  உருவாக்கியது.  சீர்திருத்த வாதம் மற்றும் திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தில்  குறுகிய வாதமும், அதிதீவிர இடதுசாரி போக்கும் இக்காலங்களில் முன்னுக்கு வந்தன. அந்த ஆண்டுகளில் நாடு முழுவதும் குறிப்பாக, மேற்கு வங்கத்தில்  மக்கள் விரோத  ஆளும் கட்சிக்கு எதிராக பொதுமக்கள் வெகுண்டனர்.  குறிப்பாக மேற்கு வங்கத்தில்  வெகுஜன எழுச்சியால் அலைஅலையான  இயக்கங்களை காண முடிந்தது.

1967ல் ஐக்கிய முன்னணி அரசாங்கம் அமையப்பெற்றதற்குப் பிறகு நிலப் போராட்டத்துடன், தொழிலாளர்கள், மத்திய தர ஊழியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், என அனைத்து தரப்பாரின் போராட்டங்களும்  மேலும் அதிகரித்தன.  நக்சல்பாரி வட்டாரத்தில்    நிலத்திற்கான போராட்டத்தை நடத்தப்பட்டு அதன் மூலமாக மாநில அதிகாரத்தைப் பிடிப்பது என  ஒருபகுதி  விவசாயிகள் இயக்கம் திரட்டுவதில் இறங்கியது. 1969 மே மாதத்தில்  சிபிஐ(எம்எல்) ஆரம்பிக்கப்பட்டது. விடுதலைபெற்ற மண்டலங் களை  உருவாக்குவதும்  1970 களின் பத்தாண்டு காலத்தை   விடுதலைக்கான பத்தாண்டு காலமாக மாற்றுவது என நோக்கமாக அறிவித்து இறங்கியது.  இதன் மிகப் பிரதான தாக்குதலுக்கு  சிபிஐ(எம்) யைத்தான் தேர்ந்தெடுத்தது.  சிபிஐ(எம்)ஐ பொறுத்த வரையில், ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் நக்சலைட்டு களின் நேரடித் தாக்குதல்களை சந்தித்துக் கொண்டே  அரசியல் தத்துவார்த்தப் போராட்டத்தை நடத்த வேண்டிய கடினமான பணியினை மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொண்டது.

துவக்கப்பட்ட ஐந்தாண்டு காலத்திற்குள்ளேயே  நக்சலைட் இயக்கம் பிளவுண்டது.  நக்ஸலைட்டுகள் எண்ணற்ற  சிறு சிறு குழுக்களாகப் பிரிந்தனர். பிளவும் அதில் மீண்டும் பிளவு ஏற்படுவதுமானது கிட்டத்தட்ட  முப்பதாண்டுகளுக்கும் மேலாக நடந்தது.  இத்தகைய நிலையில்  ஆந்திரப் பிரதேசத்தில்  கொண்டப்பள்ளி சீதாராமையா தலைமையில் மக்கள் யுத்த குழு (Peoples War Group)  துவங்கப்பட்டது.  நக்சலைட் தலைவர் சாரு மஜூம்தாரின் பாதையே எங்கள் பாதை என முழங்கினர்.  சாரு மஜூம்தாருக்கு எதிரான குழுவின் தலைவர்களான கனைய் சட்டர்ஜி, அமுல்யா சென், சந்திரசேகர் தாஸ் ஆகியோர் தலைமையில்  மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் (MCC)  என்ற அமைப்பை உருவாக்கினர்.  புதியதாக உருவான சிபிஐ (மாவோயிஸ்ட்) கட்சியானது சட்டர்ஜி, மஜூம்தார் ஆகிய  இருவரையும் மகத்தான தலைவர்கள் எனவும்  அவர்களையே  தாங்கள் மதிக்கும் தலைவர்களாகவும்  தேர்ந்தெடுத்துக் கொண்டனர். தற்போது இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந் துள்ளது  தவிர்க்கவியலாத நிலை என்றாலும், இவர்களுடைய 1980 முதல் 2000 இறுதி வரையிலான  காலத்தில் இவர்களுக்குள் எவ்வாறு ஒருவர் மீது ஒருவர் தொடுக்கப்பட்ட தாக்குதல்களும், அதனால் இரு பக்கங்களிலும் ஏற்பட்ட தேய்வையும்  ஆவணங்களிலிருந்து காண முடிகிறது.

சிபிஐ (மாவோயிஸ்ட்)-ன் வரைவுத் திட்டம் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் பாரம்பரியத்தை கேவலப்படுத்தி குறிப்பட்டு வருகிறது. இதைப் பொறுத்தளவில்  ஆர்எஸ்எஸ்ஸின் பிரச்சாரத்துடன் இவர்கள் ஒன்று சேருகிறார்கள். இந்தியாவில் பூரண சுதந்திரத்திற்கான  கோரிக்கையினை முதலில் முன் வைத்தது கம்யூனிஸ்ட்டுகள் தான் என்பதை மறந்துவிட்டார்கள். சுதந்திரத் திற்கான கோரிக்கையின் போதே சமூக-பொருளாதாரத்திற்கான உள்ளடக்கத்துடன் கம்யூனிஸ்ட் இயக்கம் போராடியது. மேலும் மக்கள் பெருந்திரளிலிருந்து வெகுஜன தளத்தை கட்டுவதிலும் கம்யூனிஸ்ட்டுகள் தீவிரமாக ஈடுபட்டனர். இதன் காரணமாக கம்யூனிஸ்ட் இயக்கம் கடுமையான அடக்குமுறைகளுக்கு உள்ளானது. மீரட், கான்பூர், மற்றும் பெஷாவர் போன்ற சதிவழக்குகளும் தொடர்ச்சியாக  பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கம்யூனிஸ்ட்டுகள் மேல் சுமத்தினர். மேலும்  இந்தியாவில்  ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை கட்டுவதிலும் முன்னணி படையாக கம்யூனிஸ்ட்  கட்சி திகழ்ந்தது.

பிரிட்டிஷ் இந்தியாவில் புரட்சிகர நிலைமை இருந்ததாகவும், கம்யூனிஸ்ட்டுகள் காட்டிக் கொடுத்துவிட்டதால் மாற்றம் தடுக்கப்பட்டதாகவும் எழுதி நம்மை நம்பச் சொல்கிறார்கள். இதன் மூலம் இந்தியாவில் உருவான கம்யூனிச இயக்கத்தின் பகுதியாக தாங்கள் இல்லை என்பதை பிரகடனப்படுத்தி சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார்கள் எனலாம். இந்த ஒன்றே அவர்களின் பார்வை எந்தளவிற்கு தெளிவில்லாதது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

எதனை  மாவோயிசம் என அழைக்கிறார்கள்?

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த புரட்சிகரத் தலைவர்களில் மாசேதுங் ஒருவராவார் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை.  இவரின் தலைமையின் கீழ் தான்  சீன கம்யூனிஸ்ட் கட்சி மிகவும் பின்தங்கிய அந்த  நாட்டில் மக்களைத் திரட்டி ஜனநாயகப் புரட்சியை நடத்தி சோசலிசத்தைக் கட்டும் பணி துவங்கப்பட்டது.  புதிய ஜனநாயகம் அல்லது மக்கள் ஜனநாயகம் என்பது  தொழிலாளர்கள், விவசாயிகள் ஒற்றுமையின் அடிப்படையில்  ஜனநாயகத்திற்கும்   சோசலிச புரட்சிக்கும் இடையே இணைப்பை உருவாக்குவதாகும்.  சீனப் புரட்சியின் வெவ்வேறான கட்டங்களின் வளர்ச்சியின்போதும் சீனத் தன்மைக்கேற்ற மார்க்சிசம், லெனினிசத்தை விசேஷமான முறையில் வெற்றிகரமாக அமுலாக்கினார். குறிப்பாக  மார்க்சின் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் ஆய்வினை விளக்கியும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியோடும்,  சீனப் புரட்சியின் ஒவ்வொரு கட்டங்களின் போதும் சரியான நிலையினை மாவோ மேற்கொண்டார்.

“முன்னேற்றத்தை நோக்கி  மாபெரும் பாய்ச்சலில்” ஏற்பட்ட தவறுகளை ஏற்றுக்கொண்ட  போதிலும் கூட சீனாவின் சோசலிசத்தை கட்டமைப்பு எனும் கடுமையான பணியில் முன்வரிசையில் மாவோ இருந்தார்.

மாவோயிசம் என்றால் என்ன? 

அது உள்நோக்கம் மலிந்த முழுமையாக,  தவறான கோட்பாடாகும். மார்க்சிஸம் – லெனினிசம் என்ற மாபெரும் தத்துவ வளர்ச்சிப் பாதையிலிருந்து, மாவோவின், கோட்பாட்டையும், நடை முறையையும்  தனியாகப் பிரித்தெடுக்கும் முயற்சியாகும்.

மாவோயிசம் என்ற சொல் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்ப்பவர்கள் பயன்படுத்தும் சொல். ஸ்டாலினிசம் என்ற சொல்லை இதே அளவு எள்ளி நகையாட பயன்படுத்திய பூர்சுவா மார்க்சிய ஆய்வாளர்களின் சொல்லின் பியாவோ காங்கிரஸ் என்று அழைக்கப்படும் அல்லது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 9வது காங்கிரஸ் (1969 ஏப்ரல்) மாவோயிஸ்ட்டுக்களின் உரைகல்லாகும். ஏனெனில் அந்த மாநாடு  மார்க்சியம் – லெனினியம் மற்றும் மா-சே-துங் சிந்தனை ஆகியவற்றையே சீன கம்யூனிஸ்ட் கட்சி  தனது  தத்துவார்த்த மற்றும்  வழிகாட்டி, அடிப்படையாக நம்புகிறது என பிரகடனப்படுத்தியது.  மாவோ புகழ் பாடிய லின்பியா கூட மாவோயிசம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. அவர் மாவோவின் சிந்தனை என்று தான் குறிப்பிட்டதை  புரிந்து கொள்ள வேண்டும்.

மா-சே-துங் சிந்தனை பற்றி சீனக்கம்யூனிஸ்ட் கட்சி விளக்குகிறபோது; சீனாவின் எதார்த்த நிலைக்கும், சீனப் புரட்சியின் நடைமுறைக்கும் மார்க்சிஸம் – லெனினிசம் என்ற பொதுவான கோட்பாட்டையும் கோட்பாடு ரீதியாக இணைக்கிற சிந்தனை என்று குறிப்பிடுகிறது.

இது ஒரு தவறான கோட்பாட்டை அடிப்படையாக கொண்ட கருத்தாகும். ஏகாதிபத்தியம் அழிந்து சோசலிசம் உலகளாவிய முறையில் பரவிவிட்ட ஒரு சகாப்தத்தின் மார்க்சிஸ – லெனினிசமாக, மாவோவின் சிந்தனையை சித்தரிக்கப்படுகிறது.

உண்மையில், இந்த சகாப்தம் ஏகாதிபத்தியம் அழிந்து, சோசலிசம் உலகளவில் பரவும் சகாப்தம் என்பது சரியான மதிப்பீடல்ல. மேலும், சீன சோசலிச நிர்மாண அனுபவங்களை உலகத்தின் மீது திணிக்கிற இன்னொரு முயற்சியையும் இது செய்தது.

உண்மையில் இம்மாதியான முயற்சிகள் மாவோவின் சொந்த சிந்தனைகளையும், அவருடைய  செயல்பாட்டின் மிகவும்   குறிப்பிடத்தக்க அம்சங்களையும் மறுப்பதாகும். மார்க்சிய  லெனினியத்தை  மாவோ தனது சிந்தனையாலும், நடை முறையாலும் நிச்சயமாக மேலும் உயர்த்தினார். ஆனால் அதேசமயம் மார்க்சியம் – லெனினியத்தை அவரது சிந்தனையால்  ஒரு முழுமையான புதிய கட்டத்திற்கு கொண்டு சென்றார் என்று சொல்வது சரியானதாக இருக்காது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக லின் இருந்த காலத்தில் மாவோவின்  கோட்பாடுகளை  தத்துவங்களாக பூசனைக் குறியதாக ஆக்கப்பட்டது. மாவோவின் கீழ் இருந்த மத்தியக்குழு லின்னை அவருடைய நடவடிக்கைகளுக்காக பின்னர் விமர்சனம் செய்தது.  சீன மக்கள் குடியரசின் 30வது ஆண்டு விழாவின்போது, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத் தலைவர் மார்ஷல் ஜியானிங் தனது துவக்கவுரையில் 9வது கட்சி காங்கிரசின் நடத்தையினை கடுமையாக தாக்கியதிலிருந்து உறுதிப்படுத்த முடிகிறது.  சீனப் புரட்சியில் மார்க்சிய – லெனினியத்தின்  வளர்ச்சியும் அமுலாக்கமும்,  மா-சே-துங் சிந்தனையாகவே இருந்தன என இரண்டையும் ஒன்றோடு ஒன்றை இணைத்தே சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், சீன மக்களும் பார்த்தனர் என மார்ஷல் தெரிவித்தார். மேலும் அவர் குறிப்பிடும்போது, மா-சே-துங் சிந்தனை என்பது மாவேவின் தனிப்பட்ட  தயாரிப்பல்ல அது சீனாவின் 50 ஆண்டு கால புரட்சிகர போராட்ட அனுபவத்தின் தெளிவிலிருந்தும் மேலும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின்பொதுவான அனுபவ தெளிவிலிருந்தும் உருவானதாகும் என்கிறார்.

கலாச்சாரப் புரட்சி நடந்த பொழுது, அவர்கள், எல்லாவற்றையும் தலைகீழாக்கிப் பார்த்தார்கள்; எதார்த்தத்தையும், மனப்பிரதிபலிப்பையும், தலை கீழாகப் பார்த்தார்கள். அதாவது எதார்த்தத்தை மனப்பிரதிபலிப்பாகவும், மனப் பிரதிபலிப்பை எதார்த்தமாகவும் பார்த்தார்கள்.

அதேபோல், கருத்து முதல்வாதத்தையும், யாந்திரீக பொருள் முதல் வாதத்தையும், இயக்க இயலாகவும், பொருள் முதல்வாதமாகவும் சித்தரித்தனர். வரலாற்றுக் கருத்து முதல் தத்துவத்தை, வரலாற்று பொருள் முதல் வாதக்கருத்தாக சித்தரித்தனர். அவர்களது கேடு கெட்ட போலி சோசலிசத்தை, விஞ்ஞான சோசலிசமாக நம்பவைக்க முயற்சித்தனர்.

11வது மத்தியக் கமிட்டியின் 6வது விசேசக் கூட்டம் மா-சே -துங் சிந்தனை பற்றி குறிப்பிடுவதாவது  கட்சியின் தத்துவார்த்த வழிகாட்டுதலோடு கட்சியின் கூட்டுப் போராட்டம்  சீன மக்கள் மூலமாக உருவானதாகும். மேலும் மார்க்சியம் -லெனினியம் என்ற சர்வதேச கோட்பாட்டிற்கும் சீனப் புரட்சியின் ஸ்தூலனமான நடைமுறைக்கும் மா-சே-துங் சிந்தனை இணைப்பு கொண்டதாகும். மா-சே-துங் சிந்தனையை பொதுமைபடுத்துவதை இந்த ஆவணம் மிகக் கடுமையாக  எதிர்க்கிறது. சீன சூழ்நிலைமையையும்  சீன அனுபவமும் விசேசமானது என இந்த ஆவணம் திரும்பத் திரும்ப குறிப்பிடுகிறது. ஆனால் பெரு நாட்டிலோ, நேபாளம்  அல்லது இந்தியாவில் எங்கெங்கு மாவோயிஸ்ட்டுகள் உள்ளார்களோ அவர்கள் மாவோவின் சொற்களை, பொதுக் கோட்பாடாக்கி  ஒட்டுமொத்தமாக சேர்ந்து குரல் கொடுப்பதையே பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். சீனாவின் தலைவரே எங்கள் தலைவர் என்று கூறுவோரிடம் ஒன்று சேர்கிறார்கள். மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரை மாவோயிசம்  குறித்து மா-சே-துங்கின் வரலாற்றுப் பங்கிலிருந்து சரியான பாடத்தை பெற வேண்டிய தேவையினை அங்கீகரிக்கிறது.

எம்.சி.சி துவக்கப்பட்டு 31 ஆண்டுகள் கழித்துத்தான் சிபிஐ(மாவோயிஸ்ட்) கட்சியால் மிகுந்த விவாதங்களுக்குப் பிறகு முரண்பாடுகளுடன் மாவோயிசம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று சிபிஐ (மாவோயிஸ்ட்) கட்சியின் தலைவரான கிசன் தெரிவிக்கிறார். ( பீப்பிள்ஸ் மார்ச் – நவம்பர் 7, 2004)

மார்க்சியத்தின் வளர்ச்சியில் மாவோயிசம் என்பது மூன்றாவது உயர்கட்ட தத்துவம் என நம்புகிறார்.

மாவோயிசம் பற்றி புஷ்ப குமார் தஹால் (ஏ.கே.ஏ. பிரசந்தா)  என்ன சொல்கிறார் என்பதை இப்போது  பார்ப்போம். மாசேதுங் சிந்தனை குழப்பமானது, மாவோயிசம்  விஞ்ஞானப்பூர்வமானது என்கிறார்.

இதோடு பிரசாந்தா கூறுகிற அபத்தங்களையும், சேர்த்துப்பார்க்க வேண்டும். மா-சே-துங் தான் வர்க்கப் போராட்டத்தை அடையாளம் கண்டதாகவும், உற்பத்திக்கான போராட்டம், விஞ்ஞான ரீதியான சோதனை முறைகளைப் புகுத்தியதாகவும் பிரசாந்தா பேசுகிறார். பிரசாந்தாவின் கூற்றுப்படி, மா-சே-துங், தத்துவ ஞானிகளின் படிப்பறையிலிருந்த தத்துவத்தை, வெளியே கொண்டு வந்தார்; அவர் தான் தத்துவத்தை மக்களின் சக்தியாக ஆக்கியவர். அப்படியெனில், மார்க்சின் புகழ்பெற்ற பயர்பாக் பற்றிய 11வது ஆய்வு அறிக்கையுடன் பிரசாந்தாவிற்கு உடன்பாடில்லையா? லெனினும் படிப்பறையை விட்டு வெளியே வராதவரா?

பிரசாந்தா மேலும் மா-சே-துங்கை சிறப்பிக்க கூறுவதாவது, மா-சே-துங் தான் முதன் முதலாகவும்,  சிறப்பாகவும் நிலப்பிரபுத்துவத்தை ஒழித்துக்கட்ட, விவசாயிகளுக்கு நிலம் வழங்கினார். வெளிநாட்டு ஏகபோக நிதி நிறுவனங்களை தேசியமயமாக்கி, தனியார் மூலதனத்தின் மீது கட்டுப்பாடு கொண்டு வந்தார் என்கிறார். “துப்பாக்கியின் ரவைகளே அதிகாரத்திற்கான ஆதாரம்”.

ஏகாதிபத்தியம் ஒரு காகிதப் புலி போன்ற மாவோவின் கோஷங்களுடன் மக்கள் யுத்தத்திற்கான கருத்தும் மாவோவின் விஞ்ஞான சோசலிசத்திற்கான  உண்மையான பங்களிப்பாகும் என பிரசந்தா குறிப்பிடுகிறார். இவைகளிலிருந்து இந்த நபர் மாவோவின் சிந்தனையின் நடைமுறையையோ அல்லது அதன் ஆழத்தையோ புரிந்து கொள்ளவில்லை என்பதையே தெளிவாகக்  காட்டுகிறது.

உண்மையில்  மாவோயிஸ்டுகளை  ஆட்டிப்படைக்கும்  ஆயுதமேந்திய நடவடிக்கைகள், தனிநபர் பயங்கரம் மற்றும் நிர்மூலமாக்குதல் என்பவை தவிர்க்க முடியாத விளைவுகளாகின்றன.  மக்கள் யுத்தம் என்ற கோஷம் வாய்வீச்சான வாதங்களைத் தான் அதிகமாக உருவாக்குகிறதே தவிர சமூகப் பொருளாதார ஆய்வுகளையும், அரசியல் நடவடிக்கைகளையும் புறக்கணிக்கிறது. எந்தவிதமான ஆய்வுகள் இல்லாமல்  மாவோ தெரிவித்துள்ள சில குறிப்பிட்ட இராணுவ  விஞ்ஞானங்களையும் கொரிலலா தாக்குதல்களையும் மாவோயிசம் உருவாக்கப்படுவதை அனுமதிக்கிறது.

உலக சூழ்நிலைகள் பற்றிய குழப்பான பார்வை  ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் முன் உள்ள  மிக முக்கியமான விசயமானது அதன்  அரசியல்  யுக்திகளை உருவாக்குவதற்கு உலகச் சூழ்நிலை குறித்த அதன் பார்வை தான். இதில் மாவோயிஸ்டுகள் மிகவும் பரிதாபகரமாக உள்ளனர். இவர்களுடைய 2005 பிப்ரவரி  நகல் ஆவணத்தில் அவர்களுடைய உலகச் சூழ்நிலை பற்றி  குழப்பமான ஆய்வுகளால் குழப்பமடையச்செய்யும் சில வரிகள் மட்டும் ஒதுக்கியிருந்தார்கள்.

முதலாளித்துவ நாடாக சோவியத் யூனியன் தேய்ந்து விட்டதாக அவர்கள் சோவியத்தை கேவலப்படுத்திவிட்டு, அமெரிக்காவுடன் நடத்திய போலியுத்தத்தால் பல பில்லியன் மக்களை அரசு  காவு கொடுத்ததாக உலக நிலையை விளக்குகின்றனர்.

மார்க்சிஸ்ட்  கட்சி 1960 களிலும் 1970 களிலும் முன்னாள் சோவியத் யூனியனின் முழுமையான நிலைமைகளை கண்டறிந்தது. குறிப்பாக, 14வது அகில இந்திய மாநாட்டில் சோவியத் கட்டமைப்பில் ஏற்பட்ட பாதிப்புக்களைப் பற்றி விவாதித்தது. எவ்வாறாயினும் 1960 களில் சோவியத் யூனியன் முதலாளித்துவ நாடாக மாறிச் சென்று விட்டது என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதவில்லை. புதிதாக விடுதலை பெற்ற நாடுகளுக்கு சோவியத் யூனியன் பாதுகாவலனாக இருந்தது. தன்னுடைய அணு ஆயுத வலிமையை அமைதிக்காகவே பயன்படுத்தியது. போருக்காகப் பயன்படுத்தவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியமானது மூன்றாம் உலக நாடுகளின் மேல்  தொடுக்கப்பட்ட  கெடுபிடி யுத்தத்தால் தனது மேலாதிக்கத்தினை கெட்டிப்படுத்தியது. சோவியத் யூனியனில் ஏற்பட்ட சோசலித்தின் பின்னடைவை தனது  புதிய உலக ஒழுங்கிற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் பயன்படுத்திக் கொண்டது. சோவியத் யூனியன் மீதான தார்மீகமற்ற  எதிர்ப்பால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பாதுகாப்பதை மாவோயிஸ்ட்டுகள் விரும்புகிறார்களா?

இன்னும் விசேடமான விசயம் என்னவென்றால்  சோசலிச சக்திகளுக்கும், ஏகாதிபத்தியத்திற்கும் இடையேயான முரண்பாடு பிரதானமானது என்பதைக் கூட மாவோயிஸ்ட்டுகள் கருதுவதில்லை.  இதன் காரணமாக முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கான மாறுதல் கட்டத்தை நிராகரித்தும் புறக்கணிக்கவும் செய்கிறார்கள். மாவோவின் மறைவிற்கு பிறகு மக்கள் சீனக் குடியரசு முதலாளித்துவ நாடாக மாறிவிட்டது என எந்தவொரு விவாதத்திற்கும் ஒத்துவராத வகையில் வகைப்படுத்துகிறார்கள்.

இதேபோன்று வியாட்நாம், கியூபா மற்றும் ஜனநாயக கொரியா ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் சோசலிச கட்டுமானத்தைக் கூட கண்டுகொள்வதில்லை.  உலகச் சூழல் குறித்த மாவோயிஸ்ட்டுகளின் ஆய்வுகள் எந்தளவிற்கு சிறுபிள்ளைத் தனமானது என்பதை அவர்களது ஆவணங்கள் தெளிவாகக் காட்டுகிறது.  முன்னெப்போதும் இல்லாத அளவில் புரட்சிகர நடவடிக்கைகளுக்கு சாதகமான உலகச் சூழல் உள்ளது என்றும், ஏகாதிபத்தியம் கடினமான சிக்கலில் உள்ளதாலும் உலகின் முன்னேறிடும் சக்தியாக புரட்சியே உள்ளது என கிசன் எழுதுகிறார்.

ஏகாதிபத்தியம் எப்போதுமே சிக்கலில் சிக்கித் தவிப்பதும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்கள் உலகம் முழுவதும் வளர்ந்து வருவதும் உண்மையானதே.  எவ்வாறாயினும் 1970 களில்  விரும்பத்தகாத அராஜகத்தினால் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தினை மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையினை புறக்கணித்தனர். முன்பு நக்ஸலைட்டுகளால் சொல்லப்பட்ட அதே வழியைத்தான் அவர்களுடைய சீடர்களான மாவோயிஸ்ட்டுகளும்  இன்று பயன்படுத்துகிறார்கள்.

இந்திய அரசின்  வர்க்க குணாம்சத்தை தவறாக மதிப்பீடு செய்தல்

இந்திய அரசின் வர்க்க குணாம்சம் குறித்து மாவோயிஸ்ட்டுகள் கீழ்கண்டவாறு பார்க்கிறார்கள். 1947ல்  ஒரு போலியான  சுதந்திரத்தை பெற்றுள்ளதும், அரை காலனி மற்றும் அரை நிலபிரபுத்துவத்துடன் ஏகாதிபத்திய சக்திகளினால் அரசு கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் அவர்கள் பெரும் முதலாளிகளை  தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவம் என்றும் இவர்கள் கிராமப்புறத்தில் ஆதிக்கம் வகிக்கும் பெரும் நிலப்பிரபுத்துவ வர்க்கத்துடன் உறவு வைத்துள்ளார்கள் என்கிறார்கள்.

மாவோயிஸ்ட்டுகளின்  கூற்றுப்படி, இந்தியப் புரட்சியை அவர்கள் புதிய ஜனநாயகப் புரட்சியாக இருக்கும் எனவும், இந்திய புரட்சியை தேசியப் புரட்சியாகவும் அவர்கள்  சித்தரித்தாலும், இந்தியாவில் சுதந்திரம் சுயசார்பு மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம் என்கின்றனர். இந்த விளக்கத்தை குழப்பத்தின் உச்சி எனலாம்.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் 6வது  காங்கிரஸ் தரகு முதலாளித்துவம் பற்றி விளக்கும்போது ஏகாதிபத்திய நாடுகளுக்கு மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்தும், பின்னர் அங்கிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களாக  இறக்குமதி செய்து ஏகாதிபத் தியத்திற்கு துணைபோகும் வேலைகளில் ஈடுபடுவோரையே தரகு முதலாளிகள் எனக் குறிப்பிடுகிறது.

மேற்கண்ட விளக்கத்தின்படி இந்தியப் பெரும் முதலாளிகளின் வர்க்கத்தை தரகு முதலாளித்துவம் என்று ஒப்பிட முடியாது.  இந்திய  மூலதன பெருக்கமும், நாட்டின் தொழிற்துறை அடித்தளத்தை மாவோயிஸ்ட்டுகள் தங்களது வசதிக்காக மறந்து அவசரகதியாக இந்தியா ஒரு சார்பு நாடாக தொடர்கிறது என்கிறார்கள்.

சீன முதலாளித்துவம் நேரடியாக ஏகாதிபத்தியத்திற்கு துணைபோனதோடு ஏகாதிபத்தியத்தால் வளர்க்கப்பட்ட  காரணத்தினால் அதைத் தரகு முதலாளித்துவ வர்க்கமாக மா-சே -துங் வகைப்படுத்தினார். இந்த விளக்கப்படியும்,  இந்தியப் பெரு முதலாளிகள் தரகர்களாக கருத முடியாது.

இந்தியப் பெருமுதலாளித்துவம் தனது வர்க்க நலனுக்கு ஏற்ற வகையில் ஏகாதிபத்தியத்துடன் முரண்பட்டும் இணக்கத்துடனும் இரட்டைத் தன்மையிலான போராட்டத்தை மேற்கொள்கிறது என மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது. அரசுத் துறையினை சோசலிச உள்ளடக்கத்தோடு இல்லையெனினும்  அதன் தொழில்நுட்ப மற்றும் தொழிற்துறை வளர்ச்சியானது ஏகாதிபத்திய சார்பை குறைத்துக் கொள்வதற்கு  துணையாக இருந்தது.

பின்னர் குறிப்பாக  1980களில் தாராளமயத்தின் பலன்களை பெரும் முதலாளித்துவம் பயன்படுத்திக் கொண்டது. கேந்திரமான அரசுத் துறைகளைக் கூட கைப்பற்றும் வேலைகளில் துவங்கிவிட்டனர்.

இந்தியப் பெருமுதலாளித்துவம் தரகர்கள் என்ற காரணத்தினால் தான் தாராளமயத்தின் கொள்கைகளுக்கு இடமளித்தனர் என்பதும் தவறானதாகும்.  இந்தியப் பெரும் முதலாளிகள்  ஏகாதிபத்தியத்துடன், பன்னாட்டு நிதி மூலதனத் துடன் அவர்களின் பலத்திலிருந்து கைகோர்த்துக் கொள்கிறதே  தவிர பலவீனத்தினால் அல்ல.

இந்திய ஜனநாயகப் புரட்சியின் தன்மையே பெருமுதலாளிகளை குறிவைத்துதான் இருக்கும். பெருமுதலாளிகளை எதிர்க்க மாவோயிஸ்ட்டுகள் மேற்கொள்ளும் நிலைபாடு, தடையாக இருக்குமே தவிர பெருமுதலாளிகளை எதிர்த்த போராட்டத்திற்கு உதவாது.

இந்தியா இன்னும் விடுதலை பெற வேண்டியுள்ளது என்றும் நவீன காலனியாதிக்கதில் உள்ள அரை காலனி அரசை பெற்றுள்ளோம் என்றும் மாவோயிஸ்ட்டுகள்  சிந்திக்கின்றனர். அவர்களுடைய தத்துவங்களில் இந்திய அரசு என்று குறிப்பிடுவதை மிகக் கவனமாக தவிர்க்கிறார்கள். ஏகாதிபத்திய சக்திகள் இந்திய பொருளாதாரத்தையும், நிர்வாகத்தையும் கட்டுப்படுத்துகிறது என்பதை தற்போதைய நடைமுறையில் மார்க்சிஸ்ட் கட்சி நம்பவில்லை. அதேவேளையில்  இந்தியப் பெருமுதலாளிகள் தரகு முதலாளிகளிடமிருந்து வெகு தொலைவிற்கு தள்ளி நிற்கிறார்கள் என்ற வாதங்களும் தற்சமயம் முன்னுக்கு வருகிறது.

மாவோயிஸ்ட்டுகளின் வாதத்தை நம்பினால் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதில் மாவோயிஸ்ட்டுகள் மட்டும்  விதிவிலக்காக எப்போதும் இருப்பார்கள்.

இவர்களின் இன்னொரு தவறான புரிதல் என்பது இந்தியா இன்னும் சுதந்திரமடையவில்லை என்பதாகும்.  ஏகாதிபத்திய சக்திகள் மூன்றாம் உலக நாடுகளின் கொள்கைகளை தீர்மானிக்க தலையீடுவதில் தொடர்ந்து அவர்கள் முயற்சிகளில் இறங்கி வருகின்றனர். இருந்தபோதிலும்  இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் புதிதாக விடுதலையடைந்த மூன்றாம் உலக நாடுகள் இன்னும் சுதந்திரம் பெறவில்லை என்று மிகச் சுலபப்படுத்துவது தவறான முடிவிற்கு வருவதாகும். இந்த நாடுகளில் அரசியல் சுதந்திரமானது விரிவான அரசியல் அதிகாரமாக  மக்கள் பகுதிக்கு  மாறாததற்கு அந்த நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கம் தான் காரணம்.  எவ்வாறாயினும் மூன்றாம் உலக நாடுகள் இன்னும் சுதந்திரம் அடையவில்லை என்று எளிதாக்கி பார்க்கும் போக்கு கூடாது.  இது மாவோயிஸ்ட்டுகளின்  தவறான வறையறுப்பின் ஒரு பகுதியாகும்.

சீனப் பாதை  – ஒரு செயற்கைத்தனமான கட்டுமானம்

சீனாவின் எதர்த்தமான மதிப்பீட்டுடன், மார்க்சிய மற்றும் லெனினிய கோட்பாடுகளுடன் இணைந்தது தான் சீனாவின் புரட்சி என்ற மாவோவின் அடிப்படையான நிலையை புறக்கணித்துவிட்டு, சீன பாதையின் வழியே இந்திய புரட்சி என்று மாவோயிஸ்ட்டுகள் பேசுகிறார்கள்.  சீனப் புரட்சிக்கு முன்னர் கையாண்ட  வழியையே  இங்கும் வற்புறுத்துகிறார்கள். சீனப் புரட்சிக்கு முந்தைய நிலைமையின் வரலாற்றை மட்டுமல்ல இந்தியாவின் எதார்த்த நிலைமையையும் மாவோயிஸ்ட்டுகள் கற்க வேண்டிய தேவை உள்ளது.  புரட்சியின் தன்மையானது நாட்டுக்கு நாடு வேறுபடும். நடைமுறை இல்லாத தத்துவம் எவ்வாறு பயன்படாது என்பதை ஸ்டாலின் விளக்கியுள்ளார்.

சில திருத்தல்வாதங்களைப் பற்றி மாவோ சொல்லும்போது கண்ணை மூடிக்கொண்டு சிட்டுக் குருவியை பிடிக்க விரும்புவது போல இருக்கும் என்கிறார். சீன நிலைமைக்கும் இந்திய எதார்த்தத்திற்கும் வித்தியாசம் உள்ளன. இரு நாடுகளின்  வெளிப்படையான காலனிய பாரம்பரியத்தின் வித்தியாசங்கள் முதல், பொருளாதாரம், அரசியல் அமைப்பு மற்றும் வளர்ச்சி ஆகிய பகுதிகள் வரையிலும் வித்தியாசங்கள்  உள்ளன. சீனப் புரட்சிக்கு முந்தைய நிலைமையினை இந்திய மாதிரிக்காக உதவிக்கு அழைப்பதன் மூலம் மாவோயிஸ்ட்டுகள் வரலாற்றைப் புறக்கணிக்கிறார்கள். கட்சிகளிடையேயான விவாதம் உச்ச கட்டத்தில் இருந்த போது மா-சே-துங் வாதிட்ட  கருத்துக்களையும் கூட அலட்சியம் செய்கின்றனர். இது அவர்கள் செய்யும் மோசமான தவறு.

கட்சியானது  அதன் சொந்த நாட்டின் சூழ்நிலைகளை மதிப்பீடுகளின் அடிப்படையில் ஆய்வு செய்யாமல் மற்றொரு நாட்டின் அனுபவங்களை இரவல் பெறுமானால் அது திருத்தல் வாதம் மற்றும் அராஜக வாதிகளிடம் சிக்கிக் கொள்வதோடு  மார்க்சிய  லெனினிய  கோட்பாடுகளின்படி ஒருபோதும் அது வழிநடத்தப்படாது என்று மாவோ மிக அழுத்தமான கேள்வியெழுப்புகிறார்.

மாவோயிஸ்ட்டுகள் தற்போது செய்வதைப்போல் மற்றொரு நாட்டின் அனுபவத்தை எந்தவொரு ஆய்வுக்கும் உட்படுத்தாமல் இயந்திரத்தனமாக பயன்படுத்துவதில் மார்க்சிஸ்ட் கட்சி  நம்பிக்கை கொள்வதில்லை.

1970களில் நக்ஸலைட்டுகள் சீனாவின் தலைவரே எங்கள் தலைவர் என்ற கோஷத்திலும், எந்தவிதமான சிந்தனையுமின்றி இந்திய சூழலுக்கு பொருந்தாத விடுதலைப் பிரதேசம் என்று பேசுவதையும், சீன கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம் செய்தது. மாவோயிஸ்ட்டுகள் வரலாற்றிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்வதில்லை, மாவோவின் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்தும்  கூட கற்றுக் கொள்வதில்லை.

நாடாளுமன்ற அமைப்பில் வர்க்கப் போராட்டத்தின் கூறுகள் பற்றிய அறியாமை

லெனின்  வெகு ஆண்டுகளுக்கு முன்பே  பாராளுமன்ற முறையின் தன்மை பற்றி தெரிவிக்கையில்,  அது வர்க்கப் போராட்டத்தின் ஒருபகுதியே என்கிறார்.  இடதுசாரி கம்யூனிசம் பற்றி லெனின் தெரிவித்த கருத்து வலைக்குள் சிக்கிக் கொண்டவர்களைப் போலவே  மாவோயிஸ்ட்டுகளும் இந்திய ஜனநாயகம் மற்றும் பாராளுமன்றம், சட்டமன்றம், பஞ்சாயத்துக்கள் உள்ளிட்ட தேர்தல் முறைகளை மாயை அளிக்கும் நிறுவனங்கள் என்று பெயர் சூட்டி அதைப் புறக்கணிக்கிறார்கள். அவர்களுடைய கண்ணோட் டமானது தவறானதும், ஏற்றத் தாழ்வுகள் மற்றும் சுய முரண்பாடுகளைக் கொண்டதாகும். ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் குணாம்சத்தை நிர்ணயிப்பது அரசும் அதன் அரசியல் குணத்தாலேயே என்பதை மார்க்சிஸ்ட்டுகள் அறிவர்.  மார்க்சிஸ்ட் கட்சி தனது கட்சித் திட்டத்தில்  பெருமுதலாளித்துவம் மற்றும் நிலபிரபுத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியும்,  பன்னாட்டு நிதி மூலதனத்தின் ஒத்துழைப்புடன் இந்திய அரசானது பெருமுதலாளித்துவ வர்க்கத்தின் தலைமையில்  செயல்படுகிறது என்று வரையறுக்கிறது.

இந்தியாவில்  முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முழுமையாக பூர்த்தியடையாததால் உண்மையான ஜனநாயகத்தை ஏற்படுத்தும் கடமை நீடிக்கிறது. இந்த அடிப்படையில் மக்களின் முன்னேற்றத்திற்கான அடையாளமாகவும், மக்களின் ஜனநாயக உரிமைகளை பெற்றுத் தரும் ஆயுதமாகவும் பாராளுமன்ற அமைப்பு உள்ளது என்ற உண்மையை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது.  இடைவிடாத போராட்டங்களின் மூலமாக ஜனநாயக உரிமைகள் பெறப்பட்டவையே  தவிர  மேற்கண்ட வர்க்கங்களினால் இலவசமாக அளிக்கப்பட்டது அல்ல.

1970 களில் முன்னுக்கு வந்த ஏதேச்சதிகாரத்தினால் ஜனநாயக அரசுகள் கவிழ்க்கப்பட்டன, உள்நாட்டு அவசர நிலைமை அமுலாக்கப்பட்டது, அரசாங்கத்தில் வகுப்புவாத சக்திகள் ஊடுருவின. பிரம்மாண்டமான போராட்டங்களினால் ஏதேச்சதி காரம் தோல்வியடைந்தது.

மாவோயிஸ்ட்டுகளின் தவறான வாதமானது பாராளுமன்ற அமைப்பு முழுக்க முழுக்க மாயை என்பதாகும்.  முதலாளித்துவ அமைப்பினை அம்பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக பாராளுமன்றத்தை கம்யூனிஸ்ட்டுகள் பயன்படுத்த வேண்டும் என முதலாளித்துவ அமைப்புக்குள் பாராளுமன்றத்தின் அவசியத்தை  லெனின் வரையறுக்கிறார்.  பாராளுமன்றத்திற்கு உள்ளேயும்  வெளியேயும்  நடக்கும் போராட்டத்தை பலப்படுத்த பாராளுமன்ற அமைப்பு வழங்கும் முழுப் பயன்களையும் பயன்படுத்தாமல் இருப்பது அசட்டுத்தனமானதாகவே இருக்கும்.  அரசாங்கம், முதலாளித்துவ அரசியல் மற்றும் முதலாளித்துவ கட்சிகளின் பங்குகளைப் பற்றி  அம்பலப்படுத்தக் கிடைக்கும் சந்தர்ப்பம் என்பதோடு, தேர்தல்  நடவடிக்கைகளில்  பல லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கிற காரணத்தினால்    வாக்காளர்களின் போராட்டமாகவே தேர்தல் பார்க்கப்படுகிறது. முதலாளித்துவ கட்சிகளின் செல்வாக்கிலிருந்து மக்களை வெளியே கொண்டு வரும் சந்தர்ப்பத்தையும் உருவாக்குகிறது. எவ்வாறாயினும் மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் பாராளுமன்ற தேர்தல் முறையினை, பாராளுமன்றப் போராட்டத்தினை  அப்பாற்பட்டு நடக்கும் போராட்டத்திற்கு  பதிலாக இல்லாமல் அதற்கு துணையான பகுதியாக உறுதியாக மேற்கொண்டு வருகிறது.

பாராளுமன்ற போராட்டக் களத்தில் பெருவாரியான மக்கள் அசைவற்று காணப்படும் நிலைமை தொடர்கிறது என்பதை எந்த அடிப்படையில் மாவோயிஸ்ட்டுகள் கருதுகிறார்கள்?  முதலாளித்துவ பாராளுமன்ற முறைக்குள் பங்கேற்று  அதன் செயல்பாட்டு முறை பற்றியும், அந்த அமைப்பை அம்பலப்படுத்தவும் அதனை அப்புறப்படுத்துவதற்காக மக்களைத் தயார்படுத்தவும் மிக நீண்ட காலம் ஆகும் என்று லெனின் சொல்லியுள்ளதை மாவோ யிஸ்ட்டுகள் ஏன் நினைவு கொள்வதில்லை?  வரலாற்றிலிருந்து மாவோயிஸ்ட்டுகள் பாடம் கற்றுக் கொள்வார்களா?

மக்களின் அன்றாட போராட்டங்களிலிருந்து விலகி  நிற்பது

நீடித்த ஆயுத மேந்திய விவசாயிகள் போராட்டம் நடத்துவதன் மூலம் விவசாயப் புரட்சியை நோக்கி செல்வதைத் தவிர புரட்சிகர கட்சிக்கு முன் வேறு மாற்று இல்லை என்று அறிவிக்கிறார்கள்.  கொரில்லா யுத்தம்,  மண்டலங்களை விடுவிப்பது, தலைமை நிலையங்கள், நகரங்களை கைப்பற்றுவது மற்றும் இந்த கடமைகளை அடையாளம் காண்பது மட்டுமே புரட்சிகர கடமை என்ற ஒன்றை மட்டுமே மாவோயிஸ்ட்டுகள் பேசி வருகிறார்கள்.  இந்த கடமைகளை வளர்த்தெடுப்பதன் மூலம் அரசு அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது அவர்கள் நோக்கம்.  இராணுவ யுத்திகளுக்கும், இராணுவ தந்திரோபாயங்களுக்கு மட்டுமே மாவோயிஸ்ட்டுகள் பிரதான கவனத்தை அளிக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில் மக்களின் அரசியல் உணர்வு மட்டத்தை வளர்த்தெடுப்பதற்கோ, அரசியல், சமூகப் பிரச்சனைகளில் அவர்களை ஒன்றுபடுத்த நேரம் ஒதுக்குவதற்கு அவர்களுக்கு நேரம் இல்லை.  தொழிற்சங்க இயக்கத்தின் முக்கியத்துவத்தையும் தொழிலாளர்களை வர்க்க உணர்வு பெற்றவர்களாக உருவாக்குவதற்கான பங்களிப்பையும் மாவோயிஸ்ட்டுகள் புறக்கணிக்கிறார்கள்.  ஜனநாயக புரட்சி முழுமை பெறாமல் சிற்சில இயக்கங்களால் விரிவான நிலச் சீர்திருத்தத்திற்கு அழைத்துச் செல்லுமா? என்ற கேள்வியை எழுப்பி நிலப் போராட்டத்திலிருந்து தங்களுடைய முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள்.

அடிப்படையான மாறுதல்களுக்கு தேவையான முதலாளித்துவ  நிலப்பிரபுத்துவ கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு லட்சக்கணக்கான மக்களை எவ்வாறு அவர்கள் தயார்படுத்தப் போகிறார்கள்?  ஆயுதங்களைச் சார்ந்து நிற்கும் மக்கள் குழுவின் ஒரு சிறு பகுதி மிக மோசமான குணத்தைக் கொண்டதாகவே இருக்கும். பெருவாரியான மக்கள் திரளிடமிருந்து கம்யூனிஸ்ட் டுக்கள் ஒருபோதும் தனிமைப்படக்கூடாது என்றும்  ஒட்டுமொத்த சூழ்நிலைகள் குறித்து போதுமான சிந்தனையை பெற்றிருக்க வேண்டும் என மாவோ எழுதியுள்ளார்.

மாவோயிஸ்ட்டுகள் பன்னாட்டு நிதி மூலதனத்திற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஆனால் நாடு முழுவதும் நடைபெறும் உண்மையான போராட்டங்களில் அவர்கள் பங்கேற்பதில்லை. இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியும் இதர இடதுசாரி கட்சிகளும், தொழிற்சங்கங்களும்  நம்பிக்கைக்கு பாத்திரமாக பங்காற்றுகிறார்கள். இத்தகைய அன்றாடப் போராட்டங் களிலிருந்து மாவோயிஸ்ட்டுகள் விலகி நிற்பது என்ன காரணத்திற்காக?  கிராமப்புறங்களிலோ அல்லது நகரங்களிலோ மாவோயிஸ்ட்டுகளால் ஏகாதிபத்திய சக்திகளை எதிர்த்து  போராட்டங்களை கட்டமுடியாது  என்பதை அவர்களின் தலைவர் கிசன்  பீப்பிள்ஸ் மார்ச் பத்திரிக்கையில் ஒத்துக்கொள்கிறார்.  மேலும் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் சாரு மஜூம்தார் வாயிலாக நமக்கு கிடைக்கிறது. 1972ல் அவர் தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் பாதித்து விட்டது என்று மிகவும் கவலையுடன் குறிப்பிடுகிறார். இதேபோல வகுப்புவாத சக்திகளின் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத் திற்கு திரட்டுவதற்கு போதுமான அக்கறையினை மாவோயிஸ்ட் டுகள் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் இந்தப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் ஒரு வெற்றிகரமான பங்கினை வகித்தனர் என்றும் கிசன் குறிப்பிடுகிறார்.

கொரில்லா யுத்தம் பற்றி தவறான விளக்கம்

மாவோயிஸ்ட்டுகளின் உலகப் பார்வையில் ஜனநாயகப் போராட்டத்திற்கும், வெகுஜன அரசியல் திட்டத்திற்கும் இடமில்லை. கொரில்லாப் படையினரால் கிராமங்கள் கட்டப்பட்டு சிவப்புத் தளங்களுடன் ஆயுதமேந்திய போராட்டமே புதிய ஜனநாயகத் திற்கான முழுமையான போராட்டமாக அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் தங்களுடைய ஆவணங்களில் பெரும் பகுதியை இந்தியப் புரட்சியில் கொரில்லா யுத்த தந்திரங்களுக்கான நடவடிக்கை களுக்காகவே ஒதுக்கியுள்ளனர்.

மதிப்பிழந்துபோன சீனத் தலைவர் லின்பியோ தான் முதலில் இந்த கொரில்லா கோட்பாட்டை முன்வைத்தார். அதைத்தான் இந்த மாவோயிஸ்ட்டுகள் இப்பொழுது தழுவி நிற்கின்றனர்.

கிராமங்களினால் (வளரும் நாடுகளால்) நகரங்களை (வளர்ந்த நாடுகள்) சுற்றிவளைப்பது பற்றி லின் பேசியுள்ளார். ஜப்பான்  முற்றுகை இராணுவத்திற்கு எதிராக மாவோவின் பூண்டோடு ஒழித்தல் கோட்பாடு பற்றி விளக்கும்போது லின்பியாவோ  இதுபோன்ற நடவடிக்கைகள் மூன்றாம் உலகத்தின் ஆயுதம் தாங்கிய விவசாயப் போராட்டத்தின் வெற்றிக்குத் தேவையானது என்கிறார்.  நக்சலைட்டுகள் இந்தக் கோட்பாட்டை தங்கள் மடியில் வைத்துக் கொண்டனர்.

மாவோவின் அழித்தொழிக்கும் கோட்பாட்டை லின்பியோ வோ தவறாக வியாக்கியானம் செய்துள்ளார் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்தது. (இதைப் பல்வேறு நக்சலைட்டு தலைவர்கள் ஏற்றுக்கொண்டதாக 1970 களில் வெளியான ஆவணங்களில் உள்ளது)

புரட்சிகரமான பாதையானது, அகச்சூழல், புறச் சூழல் ஆகியவைகளை கணக்கில் கொள்ளாத ஒரு ரகசிய திட்டமாக இருக்கவே முடியாது. புரட்சி நடத்துவதற்கு எந்தவொரு இரசவாதமும் இல்லை. (1850ல் மார்க்ஸ் குறிப்பிட்டது போல்) புரட்சியை நடத்துவதற்கு பிரதான அமலாக்கத்தின் இரகசியத் திட்டம் ஏற்படுத்துவது என்பது வறட்டுத்தனமானதும், சுய தோல்வியைக் கொண்ட கருத்தாகும். இந்தக் கருத்திற்கு மாவோயிஸ்ட்டுகள் விடாப்பிடியான நடவடிக்கையுடன் உண்மையாக உட்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

எந்த நாட்டில் புரட்சியை நடத்த வேண்டுமோ  அந்த நாட்டின் அப்போதைய நிலைமைகள் அனைத்தையும் சிக்கலானவை களையும்  திறமையாகக் கையாண்டு தனது ஆளுமைக்குள் கொண்டு வரவேண்டியது  தொழிலாளி வர்க்கக் கட்சியின் பொறுப்பாகும். அதேபோல  எவ்வளவு சாத்தியமோ அந்தளவிற்கு நேச சக்திகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும். ஐக்கிய முன்னணியோ அல்லது  கூட்டணியையோ உருவாக்கும்போது இந்த அடிப்படையில் இருத்தல் வேண்டும்.

லெனின் இது குறித்து விளக்கும்போது ஒரு புரட்சிகர கட்சிக்கு வெகுஜன கூட்டணியை தழுவும்போது அது முதலாளித்துவத்தின் கீழ் திரண்டிருப்பார்கள், கூட்டணியின் சிலர் அமைதியற்ற வர்களாக,  நம்பிக்கைக்கு உரியவர்களாக இல்லாதவர்களாகவும், நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆதரவு கேட்பவர்களாகவும் இருப்பார்கள் என்கிறார்.  இதை புறக்கணிப்பது என்பது  விஞ்ஞான சோசலித்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு மிகுந்த நஷ்டத்தை ஏற்படுத்தும் என லெனின் தெரிவிக்கிறார்.  இந்த கருத்தின்படி மாவோயிஸ்ட்டுகள் நிச்சயமாக பாதிக்கப்படுவார்கள். புரட்சிகர பாதையினை  இம்மியளவு கூட அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.

English Version

– தொடரும்…..