மதமும் வகுப்புவாதமும்

சீத்தாராம் யெச்சூரி

(2002 நவம்பரில் சேவியர் சமூக சேவை கல்வி நிறுவனத்தில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்)

தமிழில்: கே. ராமசுப்பிரமணியன்

இன்றைய சூழல், அச்சுறுத்துவதாகவும், வகுப்புவாத பாசிச கருமேகங்கள் சூழ்ந்துள்ளதாகவும் இருக்கிறது. நவீன இந்தியாவின் அடித்தளத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசின் தன்மையை, சகிப்புத் தன்மையற்ற பாசிச சமூகமாக மாற்றிட அனைத்து நடவடிக்கைகளும் மிக வேகமாக எடுக்கப்படுகின்றன. சமீபத்தில் அரசின் ஆதரவுடனே குஜராத் மாநிலத்தில் நடந்த உறைய வைக்கும் வகுப்புவாத படுகொலைகள், வகுப்புவாத அரக்கனின் கோர முகத்தை வெளிக்காட்டியது. இதற்கு முன்பு குஜராத்திலுள்ள கிறிஸ்துவர்களுக்கு எதிரான மத வன்முறைகள் மற்றும் ஒடிசா போன்ற பல இடங்களில் நடந்துள்ள வகுப்புவாத வெறியாட்டங்களும், கிரஹாம் ஸ்டெயின்ஸ் குழந்தைகளோடு எரித்துக் கொல்லப்பட்டதும் – இவை அனைத்தும் சகிப்புத் தன்மையற்ற பாசிச முகத்தை வெளிக்காட்டுகிறது.

இன்று இந்திய நாட்டுப்பற்றாளர்கள் முன் உள்ள மிகப் பெரிய சவால் என்பது நாம் அறிந்த இந்தியாவை பாதுகாப்பதே ஆகும்.

எனக்களித்த தலைப்பிற்குள்ளே செல்வதற்கு முன்,  சமகால இந்திய அரசியலில், சமூக, பொருளாதார வாழ்வில் ஏன் இத்தகைய அபாயகரமான பண்பு மாற்றம் ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

வகுப்புவாத வன்முறைகளுக்கான காரணங்கள்

இந்திய சமூக, அரசியல் நிகழ்வுகளில் வகுப்புவாத மோதல்களும், விரோதங்களும், ஒரு பகுதியாக கடந்த ஒரு நூற்றாண்டாகவே இருந்து வந்துள்ளன. இன்றைக்கு புதிய பண்புகளோடு எழுந்து வருகிற தாக்குதல்களை ஊக்குவித்து, பதட்டத்தை தொடரச் செய்திடும் மூல காரணங்கள் யாவை?

இதனை ஆராய முற்படுகையில், சுதந்திர இந்தியாவில் இதுவரை நடந்து வந்துள்ள வர்க்க ஆட்சி நடைமுறைகளின் விளைவுகளை பரிசீலித்துப் பார்க்க வேண்டும்.

இந்தியப் பெருமுதலாளிகளும், அதன் தலைமையும், இந்திய ஏகபோக மூலதனமும் தங்களுடைய சமூக அடித்தளம் குறுகியதாக இருக்கும் காரணத்தால், தனது வர்க்க அதிகாரத்தை தொடர்வதற்கு, நிலப்பிரபுக்களின் பகுதியுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டார்கள். இக்கூட்டுச் சேர்க்கையே இந்திய சமூக அரசியலின் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் உள்ளடக்கத்தையும், வழியையும் தீர்மானிக்கக் கூடிய புதிய முரண்பாடுகளின் தொகுப்பை செயல்படுத்தத் தொடங்கியது.

மேற்சொன்ன கூட்டுச் சேர்க்கையின் காரணமாக ஒருபக்கம் ஆளும் வர்க்கத்தினால் ஏகாதிபத்தியத்தின் பிடியை தீர்க்கமாக உடைத்தெறிய முடியவில்லை. மறுபக்கம் நிலப்பிரபுத்துவம் இந்திய மக்களிடையேயும், பொருளாதாரத்தின் மீதும் கொண்டுள்ள ஆதிக்கத்தைக் களையவும் முடியவில்லை.

இக்கால கட்டத்தில், நடுத்தர வர்க்கம் விரிவடைந்துள்ளது என்றபோதிலும், நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தினால் உள்நாட்டு சந்தை மேலும் குறுகியிருப்பதையும்  பார்க்க முடிகிறது.

வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்த்தால் நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளை திட்டவட்டமாக முறியடிக்காமல், உலகில் எங்கும் முதலாளித்துவம் வளர்ச்சியடையவில்லை. அவ்வாறே இங்கும், ஒரு பக்கம் ஏகாதிபத்தியத்துடன் சமரசமும், மறுபக்கம் நிலப்பிரபுத்துவத்துடன் சமரசமும் செய்து கொண்டதால் இந்திய பெரு முதலாளிகளால் தாங்கள் விரும்பியது போல் சுதந்திர இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சிக்கான அடித்தளத்தை உருவாக்க முடியவில்லை.

நிலப்பிரபுத்துவ கட்டமைப்பின் மேல் முதலாளித்துவத்தை திணிப்பதன் மூலம்  நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை அகற்றி விடலாம் என்ற இந்தியப் பெருமுதலாளிகளின் முயற்சி பயனற்று போனது.

இந்த காலகட்டத்தில், பெருவாரியான இந்திய மக்கள் வருமானம் இல்லாமல்,  வாங்கும் சக்தியை இழந்த நிலையில், உள்நாட்டுச் சந்தை மேலும் குறுகத் தொடங்கியது. ஆளும் வர்க்கமோ, வாங்கும் சக்தியை பெருக்கும் விதத்தில்  முழுமையான நிலச் சீர்திருத்தம் எதையும் செய்திட முன்வரவில்லை. இந்த நிலையில், தனது முதலாளித்துவ வளர்ச்சிப் பாதைக்கு தடங்கல் ஏதும் ஏற்படாமலிருக்க அந்நிய சந்தையை நாட வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய முதலாளிகள் தள்ளப்பட்டனர்.

இப்போக்கின் காரணமாக, ஏகாதிபத்திய நாடுகளின் மூலதனத்தையும் தொழில்நுட்பங்களையும் கூடுதலாக சார்ந்திருக்கும் நிலைக்கு இந்தியப் பொருளாதாரம் தள்ளப்பட்டதுடன், அந்நிய நாட்டு சந்தையோடு போட்டிபோடும் நிலையும் ஏற்பட்டது. இதன் விளைவுதான் புதிய பொருளாதாரக் கொள்கையும், இந்திய மக்களின் மீதான அதனுடைய பேரழிவுத் தாக்குதல்களும் ஆகும்.

மேற்சொன்ன விதத்தில், நிலப்பிரபுத்துவத்துடன் செய்துகொண்ட சமரசம், இந்திய பெருமுதலாளிகளுக்கு பெரும் முரண்பாட்டை ஏற்படுத்தியது. அந்த முரண்பாட்டில் இருந்து விடுபடுவதற்கு, அபாயகரமான வகையில் ஏகாதிபத்தியத்தினை சார்ந்திருக்க வேண்டிய நிலைமையும், மறுபுறம் இதனால் ஏற்பட்ட நெருக்கடியினை பொதுமக்களின் தோள்களில் மாற்ற வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. முரண்பாட்டின் ஒரு வெளிப்பாடாக இது இருக்கையில், அதற்கு ஈடான, இன்னும் முக்கியத்துவம் வாய்ந்த, மற்றொரு வெளிப்பாடும் உள்ளது. நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை, தனது கட்டமைப்பில் இருந்து நீக்க முடியாத காரணத்தால் நிலப்பிரபுத்துவத்தோடு இணைந்த சமூக உணர்வுநிலை இன்றும் நிலைத்து நிற்கிறது’. இந்த நிலைமையினுடைய தாக்கத்தினால் வகுப்புவாதமும், சாதீயமும் சமூக ஒழுக்கத்தின் மீது ஆதிக்கத்தை தொடர்ந்தன. எனவே நிலப்பிரபுத்துவத்தின் மீது முதலாளித்துவத்தை திணிக்கும் இந்த முயற்சியினால், நிலப்பிரபுத்துவத்துடன் இணைந்த பிற்போக்கு உணர்வுடன் கூடவே, சீரழிந்த போட்டி உணர்வுடன் கூடிய முதலாளித்துவமும் உருவானது.

இந்நிலையில் முதலாளித்துவ வளர்ச்சியில் விளைவான வர்க்கங்களின் உருவாக்கம் (தொழிலாளி வர்க்கம் போன்றவை), ஏற்கனவே உள்ள, சாதிப்பிரிவு சமூக நிலைகளின் உள்ளாகவே உருவாகியது. முதலாளித்துவத்திற்கு முன்பு இருந்த சமூக உறவுகளை மாற்றி அமைக்காமலேயே, அதனுடன் முதலாளித்துவம் சமரசம் செய்து கொண்டதால் இந்திய சமூகத்தில் ஏற்பட்டிருக்கிற மிகச் சிக்கலான இப்பிரச்சனையின் காரணத்தையும், அதனால் ஏற்பட்டு இருக்கிற விளைவுகளையும் இந்த போக்கு மிகத் துல்லியமாக விளக்குகிறது.

ஆகவே, வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி என்பது ஏற்கனவே உயிரோட்டமாக உள்ள சாதியத்தையும், சாதிய ஒடுக்குமுறைகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. சமகால இந்தியாவில் சுரண்டப்படும் வர்க்கத்திற்கும், ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கும் இடையே ஒட்டிக் கொண்டுள்ள பொதுத்தன்மையை இது துல்லியமாக காட்டுகிறது.

இவ்வாறு தரம் மலிந்த நிலப்பிரபுத்துவமும், சீரழிந்த முதலாளித்துவமும் இணைந்து, சமூகத்தின் மேல்கட்டுமானத்தில் குற்றமயமாக்கல் பெருக வழிவகுக்கின்றன. அத்துடன், சாதிய வகுப்புவாத சக்திகள் ஒன்றாக ‘வளரவும் வழிவகை செய்கின்றன. இந்த நிலைமையை ஆளும் வர்க்கங்கள் தங்களது அரசியல் மற்றும் தேர்தல் வாய்ப்புகளுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன.

மேலே குறிப்பிடப்பட்ட முரண்பாடுகளின் வெளிப்பாட்டின் அடிப்படையில், விடுதலை இந்தியாவில் மதவாத வன்முறைகளை வகுப்புவாத சக்திகள் அரங்கேற்றுகிறார்கள். நாட்டில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள நெருக்கடி, இந்திய மக்களின் மனதில் பல வருடங்களாக சேர்ந்துள்ள அதிருப்தியை மேலும் வளர்த்துள்ளது. பரபரவென்று  வளர்ந்து வருகிற நடுத்தர வர்க்க மக்களிடையேயும் இந்த அதிருப்தி வளர்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடுத்தர வர்க்கம் இன்றும் சுரண்டலுக்கு ஆளாகிற பகுதியிலிருந்து நடுத்தர வர்க்கமாக வந்தவர்களே ஆவர். சுரண்டும் வர்க்கத்தினுடைய உணர்வுகளின் ஆதிக்கத்துடன், நடுத்தர வர்க்கத்தினரின் அதிருப்தியும் இணைவதால் வகுப்புவாத சக்திகள் வளர்வதற்கு ஒரு வளமான தளம் அமைகிறது.

சமூகத்தில், பிற்போக்கு உணர்வுகள் நிலைத்து இருக்கையில், வகுப்புவாத சக்திகள் நிலவுகின்ற அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, வகுப்புவாதத்திற்கு மடை திறந்துவிட்டு, தங்களது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

அதற்காக அவர்கள் இருமுனைத் தந்திரங்களை கையாளுகின்றனர். ஒருபக்கம் இந்தியாவிலுள்ள பல தரப்பட்ட சமூகங்களாகப் பிரிந்து கிடக்கிற – ஆனால் இந்து மதத்தை தழுவக் கூடியவர்களாக உள்ள அனைவரையும் ஒன்றாகக் கட்டி இணைப்பது. மற்றொரு பக்கம், இந்து அல்லாதவருக்கு எதிராக வெறுப்புணர்ச்சியைத் தூண்டி எதிரிகளாக்குவது – உதாரணமாக முஸ்லீம், கிறிஸ்துவர் இவர்களுக்கு எதிராக –  இந்த இரண்டு முனைகளிலும் தங்களது நோக்கத்தை அடைவதற்காக அவர்கள் கையாளும் பிரச்சார இயந்திரங்கள் பாசிச வெறியோடும், நவீன தொழில்நுட்பங்களோடும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

பார்க்கப் போனால், இந்து ராஜ்யம் என்பதற்கான அடித்தளம் 1920களில் வி.டி. சாவர்க்கர் என்பவரால் போடப்பட்டது. பின்பு 1925இல் தோன்றிய ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இக்கொள்கையை தனதாக்கிக் கொண்டது. 1930 பின்பகுதி காலங்களில் ஆங்கிலேய அரசு இந்த மதப்பிரிவு நிலையினை கண்டுகொண்டு அதனை தனது சுயலாபத்திற்காகப் பயன்படுத்தியது.

இந்நோக்கத்தை வெளிப்படுத்தியவர் ஆர்.எஸ்.எஸ்.சின் தலைவராக பணியாற்றிய எம்.எஸ். கோல்வால்கர் தான். 1939இல் அவர் எழுதிய, நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நமது தேசம் என்ற அவரது நூலில், விளக்கப்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கத் திட்டத்தில், உறைய வைக்கக் கூடிய அளவுக்கு வெளிப்படுத்திய பாசிச எண்ணங்களே இன்றும் காவிக்கும்பலுக்கு ஊக்கமளிக்கிறது.

இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே தேசிய இனம் என்ற ஆதாரமற்ற கூற்றை பொறுப்பற்று அறிவித்து விட்டு அவர் சொல்வது “(இந்த நாட்டில்) அந்நியர்களாக உள்ளவர்களுக்கு இரண்டே வழிகள் உள்ளன. ஒன்று (இந்து) தேசிய இனத்துடன் ஒன்றரக்கலந்து அதன் கலாச்சாரத்தை ஏற்று வாழ வேண்டும்; அல்லது அந்த தேசிய இனத்தின் கருணையில் அவர்கள் எவ்வளவு நாட்கள் வாழ விடுகிறார்களோ அதுவரையில் வாழ்வது. (அவர்கள் கூறும்போது) அந்த தேசிய இனத்தின் அன்பு கோரிக்கைக்கு இணங்க நாட்டை விட்டு வெளியேற வேண்டும்”.

இந்த நிலைபாட்டிலிருந்து, புத்திசாலித்தனமாக நடந்து கொண்ட முந்தைய நாடுகளின் அனுபவத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது – இந்துஸ்தானில் உள்ள அந்நிய இனங்கள் இந்து கலாச்சாரத்தையும், மொழியையும் கட்டாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மற்றும் இந்து மதத்திற்கு மரியாதையாக இருப்பதுடன், அந்த மதத்தை பய பக்தியுடன் அணுகிட வேண்டும். இந்து இனத்தையும், அதன் கலாச்சாரத்தையும் மகிமைப்படுத்துவது தவிர வேறு எந்த எண்ணத்திற்கும் இடம் கொடுக்கலாகாது – இது இந்த தேசத்திற்கும் சேர்த்து தான். அவர்களுக்கான தனித்துவமாக உள்ள வாழ்க்கையை விட்டு விட்டு இந்து இனத்துடன் ஒன்றிணைந்து விட வேண்டும். மற்றும் இந்து தேசத்திற்கு அடிபணிந்து வாழ வேண்டும். அவர்கள் எந்த உரிமையையும் கேட்கக் கூடாது. அவர்களுக்கு எந்த சலுகையும் கிடையாது. முன்னுரிமை அளிக்கக் கூடிய நடவடிக்கைகள் எதனையும் நினைக்கவே கூடாது. குடிமக்கள் உரிமை என்பது கூடவே கூடாது. அவர்கள் பின்பற்ற வேறு மார்க்கம் எதுவும் இருக்கக் கூடாது. நாம் ஒரு புராதான நாடு. புராதான நாடுகள் அந்நிய இனத்தை எவ்வாறு நடத்துமோ அதேபோன்று நம் நாட்டை தேர்ந்தெடுத்துள்ள அந்நிய இனத்தை நடத்துவோம்”.

புரதான அரசுகள் எப்படி நடத்தின. இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை பாதுகாத்திட ஜெர்மனி தனது நாட்டிலுள்ள யூதர் இனத்தை கொன்று குவித்தது. இனப் பெருமை மிக உயர்ந்து இருப்பதை இது வெளிக்காட்டியது. ஜெர்மனி நமக்கு காட்டுவதெல்லாம் இனத்திலும், கலாச்சாரத்திலும் அடிப்படையில் வேறுபடுகிற நிலையில் உள்ளவை ஒருங்கிணைந்து ஒன்றாக மாறுவது என்பது முடியாதது ஆகும். இதை இந்துஸ்தான் ஒரு படிப்பினையாக ஏற்று நாம் பலனடைந்திட வேண்டும்.

இதே கோல்வால்கர்தான் மகாத்மா காந்தி சுட்டு கொலை செய்யப்பட்ட போது, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்பட்டதை அடுத்து, அன்றிருந்த உள்துறை அமைச்சர் சர்த்தார் பட்டேல் அவர்களிடம் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை நீக்கக் கோரினார், “ஆர்.எஸ்.எஸ். இனி கலாச்சார அமைப்பாக மாத்திரம் செயல்படும்” என்றும் உறுதி அளித்தார். இதன் பிறகு மாற்றாக ஒரு அரசியல் அமைப்பை தேடிக் கொண்டிருந்த கோல்வால்கர், அன்றைய ஜவஹர்லால் நேரு மீது அதிருப்தியை வெளியிட்டு, மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறிய ஸ்யாம பிரசாத் முகர்ஜியை வைத்து 1951இல் ஒரு புதிய அரசியல் கட்சியை ஸ்தாபிக்க சில பிரச்சாரகர்களை அனுப்பினார். அன்றைக்கு ஸ்யாம பிரசாத் முகர்ஜியை சந்தித்துப் பேச அனுப்பப்பட்ட இரண்டு பேரில் ஒருவர் இன்றைய பிரதமர் (வாஜ்பாய்), மற்றொருவர் இன்றைய உள்துறை அமைச்சர் (அத்வானி). ஆக இன்றைக்கு அவதாரம் எடுத்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் முன் அவதாரமான ஜனசங்கம் இவ்வாறு தான் தொடங்கப்பட்டது.

எனவே, இன்றைக்குள்ள பாரதிய ஜனதா கட்சி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் உறுப்பு என்பதை யாரேனும் மறுப்பார்களேயானால் அவர்கள் முட்டாள்களின் கூடாரத்தில்தான் இருப்பார்கள் என்று சொல்லலாம்.

மேலும், பிறகு கோல்வால்கர் எழுதிய சிந்தனைக் கொத்து என்ற நூலில், ஒரு தனி அத்தியாயத்தில் இவ்வாறு எழுதினார்: இந்திய நாட்டு மதச்சார்பின்மையை அழிப்பதை மூன்று உள்நாட்டு எதிரிகள் தான் தடுத்து நிறுத்துகின்றன. அவை தான் ஆர்.எஸ்.எஸ். பாசிச இந்து ராஜ்யத்தை நோக்கி நடைபோடுவதையும் தடுத்து நிறுத்துகின்றன. ஆர்.எஸ்.எஸ்.சின் கண்ணோட்டத்தில் அவைகள் ஒன்று முஸ்லீம் மதத்தினர், இரண்டாவது கிறிஸ்துவ மதத்தினர். மூன்றாவது கம்யூனிஸ்ட்டுகள். ஆகவே பால் ரோப்ஸன் சொன்னது போல் “நாம் அனைவரும் ஒரே படகில் தான் சகோதரரே” (என்று அங்கு திரண்டு இருந்தவர்களைப் பார்த்துக் கூறினார்)

இதன் பிறகு கிடைத்துள்ள அனுபவங்கள் ஒரு உண்மையை கோடிட்டு காட்டுகிறது.  அதாவது இந்து மதவாத அடிப்படைவாதிகளும், முஸ்லீம் மதவாத அடிப்படைவாதிகளும் (எந்த மதத்தைச் சார்ந்த அடிப்படைவாதிகளாக இருந்தாலும்) அவர்களது இன்றைய நடவடிக்கை என்பது நமது இன்றைய நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற, ஜனநாயக ஆட்சி முறை பெற்றிருக்கும் சுதந்திரத்தையும், இறையான்மையையும் நேரடியாக தாக்குவதாகவே அமைகிறது. இந்த இரண்டு சக்திகளுமே ஒன்றுக்கொன்று ஊட்டத்தை கொடுத்துக் கொள்கிறார்கள். இந்த இரண்டு சக்திகளும், மதச்சார்பின்மை, ஜனநாயகம், நாட்டுப் பற்று போன்ற நவீன கருத்துக்கள் மீது முன்னெடுக்கும் தாக்குதல்கள் ஒரேமாதிரி உள்ளன. அவர்கள் மதத்தை மையமாகக் கொண்ட ஒரு சிதைந்த தேசியத்திற்குள் தங்களை வரையறுத்துக் கொண்டுள்ளார்கள். எந்த ஒரு தேசியத்தின் உருவாக்கத்திலும், ஒற்றுமைப்படுத்தும் காரணியாக மதம் என்றைக்கும் இருந்ததில்லை; இருக்கப் போவதும் இல்லை என்ற வரலாற்று படிப்பினைகளை ஏற்க மறுக்கின்றனர். (உதாரணமாக பாகிஸ்தானிடமிருந்து பங்களாதேஷ் பிரிந்தது) மாறாக, அரசியலிலும், சமூக அமைப்பிலும் மதம் தான் ஆதிக்கம் செலுத்திட வேண்டுமென்று வாதாடுகின்றனர். இவ்வாறு அவர்கள் வரலாற்றில் விளைந்த, விஞ்ஞான அடிப்படையிலான தேசியத்தை மறுக்கின்றனர்.

வகுப்புவாதமோ அல்லது அதன் அடிப்படைவாதிகளின் தத்துவமோ மதத்தை உயர்த்திப் பிடிப்பதாகவும் இல்லை; அதை பாதுகாக்கவும் இல்லை. மாறாக, மக்களிடையே நிலவுகிற மதப் பிளவுகளைப் பயன்படுத்தி, தனது குறிப்பிட்ட அரசியல் நோக்கத்திற்காக பிளவுகளை தீவிரமாக்கவும், நிலைநிறுத்தவும் செய்கின்றனர். அவர்களது இந்த தத்துவம் மதங்களிடையே மோதலை உருவாக்கி குறிப்பிட்ட அரசியலுக்கு பயன்படுத்துவதற்கு மட்டுமே உதவுகிறது. ஆங்கிலேயர்கள் மதங்களிடையே உள்ள வெறுப்பை தங்களது காலனி ஆதிக்கத்தை நிலைநிறுத்திட பயன்படுத்தினர். பின்பு இந்த மத மோதல்கள் கட்டுக் கடங்காமல் போகவே நமது தேசத்தை இரண்டாகப் பிரிப்பதில் வெற்றி கண்டனர். இன்றும் இக்கசப்பான நிகழ்வுப்போக்கு எண்ணற்ற உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே, வகுப்புவாதம் என்பது மதங்களிலிருந்து தன்னை நீக்கிக் கொண்டு தள்ளி இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. வகுப்புவாதம் பிற மதத்தினரின் பால் வெறுப்பை உண்டாக்கியும், நீடிக்கச் செய்தும், தான் இருப்பதற்கும், வளர்வதற்கும் அடித்தளத்தை அமைத்துக் கொள்கிறது.

மதமும் – மார்க்சியமும்

இப்படிப்பட்ட சூழலில், மார்க்சிஸ்ட்டுகளுக்கு மதம் பற்றி உள்ள புரிதலைக் குறித்து சர்ச்சைகள் அதிகமாக எழுப்பப்படுகின்றன. இதில் மிகப் பிரபலமான கருத்தாக இருப்பதும், கூறப்பட்ட சூழலில் இருந்து விலக்கி எடுத்தாளப்படுவதுமான மதம் என்பது மக்களுக்கு அபின் போன்றது என்ற மார்க்சின் கூற்று ஆகும்.

அந்த மேற்கோள் எந்த பகுதியில் இடம் பெறுகிறதோ அது, வேண்டுமென்றே,  முழுவதுமாக வெளியிடப்படவில்லை. உண்மையில் மார்க்ஸ் கூறியது மத (நம்பிக்கையோடு கூடிய) துயரம் என்பது அதே நேரத்தில் உண்மையான துயரத்தின் வெளிப்பாடே ஆகும். அது உண்மையான துயரத்திற்கு எதிர்ப்பை தெரிவிப்பதும் ஆகும். மதம் (மத நம்பிக்கை) ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சு. இதயமற்ற உலகில் (அரவணைக்கும்) இதயம். ஊக்கமற்ற நிலையில் ஊக்கமளிப்பதும் ஆகும். இது மக்களுக்கு அபின் போன்றது. (அக்காலத்தில் காயத்தினால் ஏற்படும் வலியை  மறந்திட அபின் கொடுக்கப்பட்டது – மொழி பெயர்ப்பாளர்)

மதத்தை அபினுடன் ஒப்பிடுவதற்கான காரணம் அபினுக்கு உள்ள குணத்தை ஒத்த விதத்தில் மதமும் ஒரு மாயையை ஏற்படுத்துவதால் தான். துயரம் தாங்க முடியாமல் இருக்கும் மனிதனுக்கு அதிலிருந்து நீக்கம் அளிக்கிறது. இதயமற்ற உலகில் (அரவணைக்கும்) இதயத்தையும், ஊக்கம் அற்ற நிலையில் ஊக்கத்தையும் அளிக்கிறது.

(அவர்களது துன்பமானது) அவர்களது உணர்வு நிலைக்கும், கட்டுப்பாட்டுக்கும் அப்பால் இருக்கும் நிலைப்பாடாகத் தொடர்கிறது என்ற துல்லியமான காரணத்தால் அவர்களை செயலற்ற தன்மைக்கு இட்டுச் சென்று மந்தப்படுத்த இந்த அபின் மக்களுக்கு தேவையாகிறது.

மதங்கள் குறித்து, மார்க்சிஸ்டுகள் கொண்டுள்ள புரிதல், அந்த மதம் ஒரு தத்துவத்தின் அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒருங்கிணைக்கப்பட்டு இருப்பதை புரிந்து கொள்வதே ஆகும். மார்க்ஸ் தான் வாழ்ந்த காலத்தில் மனிதர்களுடைய உண்மையான சுதந்திரத்தையும், அவர்களுடைய முழுமையான விடுதலையையும் எது தீர்மானிக்கிறது என்ற கேள்விக்கு விடை தேடுகையில், ஹெகலின் தத்துவமான மனதின் புரட்சி என்ற தத்துவத்தை – அதை ஃப்யூயர்பாக் அவர்களும் பரிந்துரைத்ததை – மறுத்து எதிர்கால வளர்ச்சிக்கு அவசியமான விளக்கத்தை அளித்தார்.

அது என்னவென்றால்; மனிதர்களுடைய உணர்வுகளை சமூக நிலைமைகளே தீர்மானிக்கிறதே தவிர அதற்கு மாறான  வகையில்  அல்ல. அதாவது, “மனிதர்களின் உணர்வுகள் அவர்கள் இருக்கும் நிலையை தீர்மானிக்கவில்லை. மாறாக, அவர்களது சமூக நிலைகளே அவர்களது உணர்வுகளை தீர்மானிக்கிறது. (Introduction to Critique of Political economy)

மேற்கண்ட முக்கியமானதும், மூல ஆதாரமான முடிவின் அடிப்படையில் மார்க்ஸ் கூறியது, “சமயப் பற்றற்ற இந்த விமர்சனத்திற்கான அடிப்படை. மனிதனே மதத்தினை உருவாக்கினான். மதம் மனிதனை உருவாக்கவில்லை.” வேறு சொற்களில் சொல்வதென்றால், மனிதர்களின் உணர்வுகள் பல விதங்களில் வெளிப்படுவது போல், உதாரணமாக, அவனது சிந்தனையும், அதன் விளைவாக ஏற்படுகிற அறிவுசார் நடவடிக்கைகளும் போல், மதமும் மனிதனுடைய சமூக வாழ்க்கையின் ஒரு விளைவுதானே அன்றி, மதம் தான் சமூக வாழ்க்கைக்கு காரணம் என்றோ, சமூக வாழ்க்கையை உண்டாக்கியது என்றோ கூறுவதற்கில்லை.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது, மதம் என்பது சமூக வரலாற்றின் உந்து சக்தியில் இருந்து விலகி தன்னைத் தானே ஆட்கொண்டதும் அல்ல; தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டதும் அல்ல. ஆகவேதான், மார்க்சிய தத்துவம் கோபர்நிகஸூக்கு கொடுத்த இடருக்காகவோ அல்லது ஏகலைவனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகவோ மதத்தின் மீது குற்றம் சாட்டவில்லை. ஏனெனில் இந்நிகழ்ச்சிகள் அனைத்துமே மதம் ஒரு தத்துவமாக ஆதிக்கம் செலுத்துகிற காலகட்டத்தில் நிகழ்ந்துள்ளது என்பதை பதிவு செய்யப்பட்ட வரலாறு தெளிவாக்குகிறது.

மதம் என்பது ஒரு ஆதிக்கம் செலுத்தும் தத்துவமாக இருக்கும் நிலையில் முற்போக்காளர், பிற்போக்காளர், சொந்த நலன்களையே நோக்கும் அதிகார வர்க்கம் அல்லது சுரண்டப்படுகிற வர்க்கங்களின் கோரிக்கைகள் – இப்படி அனைத்து மனிதர்களின் உணர்வுகளில் மதப் பற்று வேறுபாடில்லாமல் வியாபித்திருக்கிறது. ஆனால், மார்க்சிய தத்துவம் ஆக்கப்பூர்வமான முற்போக்கு கருத்துக்களையும், சீர்திருத்த இயக்கங்களையும் உள்ளடக்கிய மதப் பழக்கவழக்கங்களை கவனத்தில் கொள்கிறது. உதாரணமாக, சுஃபி மற்றும் பக்தி இயக்கங்கள். அதே சமயத்தில் இந்த இயக்கங்கள் தங்களை மதப்பிடிப்புக்குள் இருத்திக் கொண்டதால், சமூகத்தில் தேவையான மாற்றங்களை செய்வதற்கு சாத்தியமில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. எந்த சமூக நிலைமைகளின் காரணமாக, குறிப்பிட்ட வடிவிலான மத நடவடிக்கைகள் ஆதிக்கம் பெற்றனவோ, அந்த சமூக நிலைமைகளை மாற்றினாலொழிய இந்த குறிப்பிட்ட மதத்துடன் இணைந்த ஒடுக்குமுறைகளை அகற்றிவிட முடியாது. இவ்வாறு மார்க்சியமானது மதங்களின் ஆக்கப்பூர்வமான உள்ளடக்கத்தை அங்கீகரிக்கிறது, அவற்றின் சீர்திருத்தக் கருத்துக்களுடைய வரம்பை அறிந்துள்ளது. மனித நாகரீகத்தின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக, மனித உணர்விற்குள் பொருந்தி இருக்கும் பகுதியாக மதங்களின் வரலாற்று வளர்ச்சியைப் பார்க்கிறது.

ஆகவே மார்க்சிச தத்துவம் வரலாற்று நிகழ்வுகளுக்கு அறிவியல் விளக்கங்களை தருகிற நிலையிலும், சமூகப் போராட்டங்களில் மதங்கள் ஆற்றியுள்ள சிக்கலான பாத்திரங்களையும் கவனத்தில் கொள்கிறது.

ரோமப் பேரரசின் சிதைவுக்கு காரணமான மக்களின் பேரெழுச்சியின் விளைவாக கிறிஸ்துவ மதம் தோன்றியதை பார்த்திடலாம். அதேபோல் அரேபிய பாலைவனத்தில் வாழ்ந்த நாடோடிகளுக்கும், நகர மக்களுக்கும் நடந்த போராட்ட விளைவுகளாலும், அபிசீனிய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நாட்டை மீட்டிட எழுந்த அரேபிய தேசிய உணர்ச்சியும், அதன் மூலம் பல காலமாக உபயோகப்படாமல் இருந்த வர்த்தக வழிகளை மீட்டெடுப்பதுமே இஸ்லாம் மதம் தோன்றக் காரணம் என்பதை மார்க்சும், ஏங்கல்சும் சுட்டிக் காட்டுகின்றனர். இதுபோலவே சிதையும் நிலப்பிரபுத்துவத்திற்கும், வளரும் முதலாளித்துவத்திற்கும் நடந்த போராட்டத்தின் விளைவே பிராட்டஸ்டென்ட் சீர்திருத்தம் தோன்றக் காரணம். அழிக்க முடியாத பிராட்டெஸ்டென்டுகளின் எதிர்ப்புக் கொள்கைகளே வெல்ல முடியாத முதலாளித்துவத்தின் உதயத்திற்கு காரணமானது. (ஏங்கெல்ஸ் – ஃபயர்பாக்)

ஆகவே, மார்க்சுக்கும், மார்க்சிய தத்துவவாதிகளுக்கும், மதம் என்பது சமூக நிலைமைகளினால் ஏற்பட்ட விளைபொருளே; அதில் மனிதர்கள் வாழ்ந்தனர் என்பதும், வாழ்கின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்கிறோம். மதங்களின் வரலாறு என்பது ஒரு விதத்தில் பார்த்தால் மனித பரிணாம வளர்ச்சியின் பிரதிபலிப்பே ஆகும். இவ்வகையில் மதம் என்பது யதார்த்த உலகின் பிரதிபலிப்பு ஆகும். இயற்கையின் வலிமையும், சமூக நிகழ்வுப்போக்குகளுமே வாழ்வின் வழிகாட்டும் விதி.தால் புரிந்துகொள்ள முடியாத நிலைமையில் இயற்கையினைக் கடந்த வேற்று கிரக சக்தி ஒன்றை கற்பித்துக் கொள்வது அவர்களுக்கு அவசியமாகிறது. ஆகவே மதம் என்பது மனித குலத்திற்கு ஆறுதலையும், வாழ்வின் மீதான ஈர்ப்பையும், நிம்மதியையும் தருகிறது. அதேசமயத்தில், ஆதிக்கம் செலுத்தக்கூடிய தத்துவமாக மதம் அமைகின்றபோது, அந்த காலகட்டத்தில் ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்துடைய வெளிப்பாடாகிறது.

மார்க்சும், மார்க்சிய தத்துவமும் மாத்திரமே மதங்களின் பிறப்பு, தோற்றம் மற்றும் மனித மனங்களில் அவை செலுத்தும் தாக்கம் இவைகளை அறிவியல் பூர்வமாக புரிந்து கொண்டுள்ளதால், மதங்கள் வகிக்கும் பங்கினை வழிப்படுத்துவதும், தீர்மானிப்பதும், அரசின் சமூக அமைப்புகளே என்று அடித்துச் சொல்கிறார்கள். துல்லியமான இந்தக் காரணத்தினால்தான் மார்க்சிய தத்துவம் மதங்களை குறிப்பிட்டு தாக்குவது கிடையாது. மாறாக, மதங்களின் தோற்றங்களுக்கு காரணமான சமூக நிலைகளையும் மற்றும் மனித குலத்தின் மேல் மதம் தொடர்ந்து வைத்து வருகிற பிடிமானத்திற்கான நிலைகளையுமே தாக்குகிறது. மார்க்சிய தத்துவம் மதங்களை நிலைத்திருக்கச் செய்வதற்காக உதவும் நிலைகளை, அதாவது வர்க்கத்தை ஒடுக்கும் ஒரு கருவியாக மதம் இயங்குவதை முற்றிலுமாக மாற்றிட முயல்கிறது.

மார்க்சிஸ்டுகள் பொருள்முதல்வாதிகள். பொருள்முதல்வாதிகளாக இருப்பதினால், வர்க்கமாக பிரிந்து கிடக்கும் சமூகத்தில் சிக்கலான பாத்திரமேற்று மதம் நடத்தும் விளையாட்டின் முழுமையையும் புரிந்து கொண்டுள்ளனர். மதம் என்பது சமூகத்தின் மேல் கட்டுமானமாக தொடர்கிறது. ஒரு வர்க்கமற்ற சமுதாயத்தை நிறுவினாலும் அதிலும் நீண்ட காலத்திற்கு மதம் தொடர்ந்து இருக்கும். மார்க்சிய தத்துவம் மதத்தை குறியிட்டு தாக்குவதில்லை. ஆனால் மதத்தினை தோற்றுவிக்க காரணமான சமூக நிலைகளை தாக்குவதால், இதன் அடிப்படையிலேயே மார்க்சிய தத்துவத்தின் திசைவழி அமைகிறது.

இதுவே பொருள்முதல்வாதிகளான மார்க்சிஸ்ட்டுகளின் மதத்தைப் பற்றிய புரிதலும் சிந்தனையும் ஆகும். மதத்தில் மனித நேய உள்ளடக்கமும் உள்ளது, அதே நேரத்தில் அது ஒரு வர்க்கத்தின் ஆட்சி அதிகாரத்திற்காக உபயோகப்படுத்தப்படும் கருவியாகவும் உள்ளது என்பதை ஒட்டுமொத்தமாகப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. மதத்தின் பிடிமானம் தொடர்வதற்காக உள்ள சமூக நிலைகளை மாற்ற ஒரு கம்யூனிஸ்ட் முயற்சிக்க வேண்டுமே அல்லாது மதத்தை குறியிட்டு தாக்கக் கூடாது.

வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டம்

மதத்தை உயர்த்திப்பிடிக்கும் ஏகபோக உரிமையாக்கிக் கொண்ட வகுப்புவாதிகளையும், மத அடிப்படைவாத சக்திகளையும் அம்பலப்படுத்துவதும், மேற்சொன்னவாறு இன்றைக்கு நிலவும் சமூக நிலைகளுக்கு எதிராக நடத்தப்படும் ஒருங்கிணைந்த போராட்டத்தோடு இணைந்த செயல்பாடு ஆகும். இவ்வாறான மாற்றத்தை இந்தியாவில் ஏற்படுத்திட மார்க்சிஸ்டுகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யும் விழைகின்றனர்.

பார்க்கப் போனால், அடிமை இந்தியாவில், ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சி நிலைத்திருப்பதற்கான கருவியாக வகுப்புவாதத்தை உருவாக்கியும், பயன்படுத்தியும், கீழ்த்தரமானதொரு பிரித்தாளும் கொகையைக் கையாண்டார்கள்.

1857 முதல் சுதந்திரப் போரில் இந்துக்களும், முஸ்லீம்களும் இணைந்து வெளிப்படுத்திய உருக்குப்போன்ற ஒற்றுமையை கண்ட ஆங்கிலேயர்கள், அந்த ஒற்றுமையை சிதைத்தழிப்பதற்காக வகுப்புவாத அரசியலை திட்டமிட்டு கையாண்டனர். வாக்காளர்களை இந்து – முஸ்லீம் என்று பிரித்தார்கள். வங்காளத்தை இரண்டாகப் பிரித்தனர். முஸ்லீம் லீக் அமைப்பிற்கு தனித்த ஆதரவு காட்டினார்கள். இவையெல்லாம் காலனி ஆதிக்கத்தை தொடர்வதற்கான நிகழ்ச்சி நிரலாக மேற்கொள்ளப்பட்டன.

சுதந்திரத்திற்கு பிந்தைய ஆண்டுகளில், (கட்டுரையின் முன் பகுதியில் குறிப்பிட்ட)  நெருக்கடி நிலை மக்களிடையே அதிருப்தியை அதிகப்படுத்தியது. ஆளும் வர்க்கங்கள் இந்த அதிருப்தியில் இருந்து தற்காத்துக்கொள்ள, வகுப்புவாத பிரிவினையை பயன்படுத்தினார்கள். நாட்டுப் பிரிவினையைத் தொடர்ந்து, ஆழமாக வேரூன்றி நிலைத்துவிட்ட வகுப்புவாதத்தை ஒழிப்பதற்கு உணர்வுப்பூர்வமான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. குறுகிய அரசியல் நோக்கத்துடன், ஊசலாட்டமும் வகுப்புவாத சக்திகளுடனான சமரசமும் செய்துகொள்ளப்பட்டது.

இன்று இந்தியாவில் நடந்துகொண்டிருப்பது, பாசிசத்திற்கான முன் நடவடிக்கை என்று ஒரு புகழ்பெற்ற அறிஞர் கூறினார். இன்று நம் பொதுவாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் அது தென்படத் தொடங்கிவிட்டது. மதத்தின் பெயரால் மக்களை திரட்டும் அருவருக்கத்தக்க முயற்சிகள் தொடர்கின்றன. ஆர்.எஸ்.எஸ் வகைப்பட்ட ‘இந்து ராஷ்ட்டிராவை’ எதிர்க்கும் ஒவ்வொரு நிகழ்வின் மீதும், ஒவ்வொரு குடிமகனின் மீதும் பாசிச வெறுப்பு உமிழப்படுகிறது. நமது ஜனநாயக சமூகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவுகிறது. நம் குடியரசின் அரசமைப்புச் சட்டத்தை இழிவுபடுத்துகிறது. நிர்வாகத்தில் நேர்மையற்ற குறுக்கீடுகளைச் செய்கிறது. தன் விருப்பங்களை அடைவதற்காக சூழ்ச்சிகளைக் கையாள்கிறது. விதிகளை மீறியும், நடைமுறைகளை மீறியும், தரக்குறைவான பேரங்களைப் பேசுகிறது. இதுவரை நிகழ்ந்திராத அளவுக்கு மக்களின் மேல் பொருளாதாரச் சுமைகள் குவிக்கப்படுகின்றன. அனைத்து இடங்களிலும் ஊழல் மலிந்திருக்கிறது – என அனைத்தும் நன்றாக தென்படுகின்றன.

பாஜக ஆட்சியில் இருக்கிற இச்சில வருடங்களில், இந்த அரசின் கொள்கைகள் ஏகாதிபத்தியத்திற்கு துணை போவதாகவும், பிற்போக்கான இந்திய ஏகபோக மூலதனத்தின் நோக்கங்களுக்கு துணை செய்வதாகவும் இருக்கிறது. பார்க்கப் போனால், இந்த வாஜ்பாய் அரசு தான் அமெரிக்க அரசிற்கு, இதுவரை சுதந்திர இந்தியாவில் நடந்திராத அளவிற்கு அணுசரணையாக நடந்து கொள்கிறது. அதனுடைய பொருளாதாரக் கொள்கைகள் ஒருபக்கம் இந்தியாவின் இறையாண்மையை அடகு வைத்து விட்டது. மறுபக்கம் பெருவாரியான மக்களை வறுமை நிலைக்கு தள்ளி விட்டுள்ளது. அமெரிக்கா முன்னெடுக்கும் யுத்த நடவடிக்கைகளுக்கு இந்தியாவை கூட்டாளியாக ஆக்கியிருக்கும் அளவு அயல்நாட்டு கொள்கை வளைக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் ஆட்சியில் உள்ள இச்சில வருடங்களில் நமது நாட்டில் உள்ள கல்வி முறை மீது ஒரே கண்ணோட்டத்துடன் தாக்குதல்கள் ஏவப்படுகின்றன. இந்து மத நம்பிக்கை வைத்துள்ள மக்களிடையே நிலவும் பன்முக கலாச்சாரத்தை மாற்றி,  கட்டுண்ட ஒரே இந்து கலாச்சாரமாக மாற்றும் ஆர்.எஸ்.எஸ் முயற்சிகளும், வகுப்புவாத பிரிவினை விஷத்தை ஆழமாக பரப்பி, சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக, முக்கியமாக கிறிஸ்துவர், முஸ்லீம்களுக்கு எதிராக, வன்முறையை விதைத்து, நமது பள்ளி மாணவர்களின் பாடத் திட்டத்தை மாற்றுகின்றனர். இவ்வாறு நமது கல்வித் துறையை சீரமைப்பதன் மூலம், வகுப்புவாத, மத வெறுப்பு எண்ணங்களை புகுத்தி அதை வலுவடையச் செய்து, காவிக் கும்பல் தங்களது பாசிச நோக்கத்திற்கான பயணத்தை எளிதாக்கிட நினைக்கின்றனர்.

இதைப்போலவே, இவ்வருடங்களில் இந்திய வரலாற்றை மாற்றியெழுதும் இடைவிடாத முயற்சிகளையும் பார்க்க முடிகிறது. தாங்கள் தான் இந்தியாவின் மறுக்க முடியாத முன்னோர்கள் என்று நிறுவிட, வரலாற்று உண்மைகளையும், ஆதாரங்களையும் திரித்துக் கூறுவது என்பது சங்க பரிவாரத்திற்கு அவசியமாகிறது. அவர்களுடைய, “இந்து ராஷ்ட்டிரா”விற்கு இந்துக்கள், இந்துக்கள் மாத்திரமே உண்மையான முன்னோர்கள் என நிரூபிக்க இந்த வரலாற்று திருத்தல் அவசியமாகிறது. எனவே, இந்துக்கள் வேறெங்கும் இருந்து இங்கு வரவில்லை என்று நிறுவிட வேண்டியுள்ளது. ஏனெனில், அவர்களும் வெளியில் இருந்து வந்தவர்கள் என்றாகி விட்டால், பிறகு இந்நாட்டின் மீதான அவர்களது உரிமை கோரல் என்பது, அனைத்து மற்ற மதம் சார்ந்தவர்கள் இந்நாட்டிற்கு வந்து குடியேறிய நிலையோடு ஒப்பிட்டு, வேறுபாடு காட்ட முடியாத கோரிக்கையாகி விடும்.

அன்றைய கோல்வால்கருக்கும், இன்றைய ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் இந்து என்றால் ஆரியர்கள் என்றே பொருள். இந்து மதத் தலைவர்கள் ஆர்யவர்த்தா என்றே அழைக்கப்படுகிறார்கள்.

ஒரு பாசிச வெறுப்புடன் தமக்கு எதிராக உள்ள அனைத்து வரலாற்று ஆதாரங்களையும் நிராகரித்து, இந்திய வரலாற்றை மாற்றி எழுதி, இந்தியா தான் ஆரியர்கள் அவதரித்த பூமி என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தின் உந்துதலில், அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது. ஆரியர்கள் தான் இந்தியாவிலிருந்து உலகைச் சுற்றி வந்தவர்கள் என்று நம்மையே நம்ப வைக்க முயற்சிப்பார்கள். ஆரிய இனம் தான் உயர்ந்தது என்ற கொள்கையோடு ஜெர்மனியில் பாசிச ஆட்சியை நிலை நாட்டிய ஹிட்லர் உண்மையில், இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்தவரே என்று கூட நம்மை நம்ப வைக்க இந்தக் கூட்டம் முயலும்.

அண்மை வருடங்களில், ஆர்.எஸ்.எஸ். தனது பாசிச குறிக்கோளை முன்னெடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மதவெறியைத் தூண்டி கலவரங்களை ஏற்படுத்துவதே அதன் பிரதான நடவடிக்கையாக உள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் நடந்த வகுப்புவாத கலவரங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதி விசாரணைக் கமிஷன்கள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். தான் முக்கிய குற்றவாளி என தீர்ப்பு வழங்கியிருக்கின்றன. தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு வகுப்புவாத நடவடிக்கைகள் மிக, மிக, முனைப்பாக பெருகியுள்ளது.

குஜராத்தில் அரசே முன்னின்று முஸ்லீம் மதத்தினருக்கு எதிராக நடத்திய வகுப்புவாத படுகொலை என்பது இதுவரை நடந்தவற்றை எல்லாம் விட நடத்தப்பட்ட கீழ்த்தரமான நடவடிக்கையாகும். குஜராத்தில் நடந்துள்ளது ஒரு இன அழிப்பிற்கு ஒப்பாகும். ஆர்.எஸ்.எஸ்.-உம் அதன் பரிவாரங்களும் குற்ற உணர்வோடு வருந்துவதற்கு பதிலாக, சுரணையற்று பச்சைப் படுகொலைகளை மகிழ்வுடன் வரவேற்று இந்துக்கள் புகழ் ஓங்குக என்று பறைசாற்றினர்.

சாதி, மத, மொழி போன்ற அனைத்து வேறுபாடுகளையும் கொண்ட மக்களை ஒற்றுமைப்படுத்தும் இந்திய நாட்டுப்பற்றினை மாற்றியமைத்து, தேசிய வெறியை உண்டாக்கிட ஆர்.எஸ்.எஸ். முயல்கிறது.

நமது நாடு ஒற்றுமையும், பண்பும் மிகப் பரந்த பன்முகத் தன்மையும் கொண்ட நாடு. மதத்தில், மொழியில், பாரம்பரியத்தில், பழக்க வழக்கங்களில், பன்முகத் தன்மை கொண்ட இந்த நாட்டை பராமரிக்க வேண்டுமானால், பன்முகத் தன்மையின் இடையிலான ஒற்றுமையை வலுவாக்குவதன் மூலமே முடியும். அதற்குப் பதிலாக ஒற்றைத்தன்மையை  திணிக்க முற்பட்டால், அந்தப் போக்கு நம் நாட்டின் ஒற்றுமையையும், பண்பையும் நொறுக்கி விடும். இதைத்தான் வகுப்புவாத பாசிச சக்திகள் துல்லியமாக நிறைவேற்றிடத் துடிக்கின்றன.

வகுப்புவாத விஷத்தை தூவுவதும், மதத்தின் பேரால் திரட்டுவதும் – எதிர் வரும் நாட்களில் நாட்டை பிளவுபடுத்தி, “உள்நாட்டுப் போர்” மூள்வதற்கான ஆபத்தான அடித்தளத்தை உருவாக்குகின்றன. மேலும் மக்கள் ஜனநாயகத்தை நோக்கி முன்னேறுவதற்கு அடிப்படையாக உள்ள உழைக்கும் பகுதி மக்களின் ஒற்றுமையையும் வகுப்புவாதம் சீர்குலைக்கிறது. எந்த அடிப்படை வர்க்கங்களின் ஒற்றுமையைக் கொண்டு, தற்போதுள்ள ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை நடத்த வேண்டுமோ, அந்த அடிப்படை வர்க்கங்களின் ஒற்றுமையை இன்றைக்கு எழுந்துள்ள வகுப்புவாதம் பலவீனப்படுத்தியுள்ளது என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது. ஆகவே, வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான போராட்டம் என்பது நமது வர்க்கத்தின் ஒற்றுமையை வலுப்படுத்திக் கொண்டு அதே நேரத்தில், நமது நாட்டை பாதுகாப்பதற்கும், முன்னேற்றுவதற்குமான போராட்டத்தோடு ஒன்றிணைந்ததும் ஆகும்.

இன்றைய இந்தியாவின் சூழலில் உழைக்கும் மக்கள் தங்களது வாழ்க்கை ஆதாரங்களை உயர்த்திக் கொள்ளவும், நேர்மையான சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் பெற்றிடவும் கையிலெடுக்கும் போராட்டங்கள் சிதைக்கப்பட்டு வகுப்புவாத பதட்டங்களுக்கும், சண்டைகளுக்கும் இப்போராட்டங்களை திசை திருப்பி விட்டுள்ளன. இப்போராட்டங்களுக்கு வலிமை ஊட்டி, வகுப்புவாத அச்சுறுத்தலை தோல்வி அடையச் செய்யாவிடில் மக்கள் விடுதலைக்கான முன்னேற்றங்கள் முறியடிக்கப்படும்.

இப்படிப்பட்ட சூழலில் வருத்தத்தை அளிக்கக் கூடிய, கொழுந்துவிட்டு எரியும் வகுப்புவாத விரோதங்களினால், தொடர்ந்து கொண்டிருக்கும் துயரங்கள் பெருகிவிடாமல் இருக்க இவ்விசயத்தில் தீவிரமாகத் தலையிடுவது நமது கடமையாகும். தெளிவான மனசாட்சியுள்ள எவரும் இப்போராட்டத்திலிருந்து விலகி நிற்க முடியாது. பொன்மொழிகள் சொல்வது போல் தீயவர்கள் வெற்றி பெற நல்லவர்கள் மௌனமாக இருப்பது ஒன்றே போதுமானது”.

இந்திய நாட்டை சிறந்த நாடாக மாற்றிட நாம் அதை பாதுகாக்க வேண்டியுள்ளது. 1947இல் அரசியல் சுதந்திரம் அடைந்த பிறகு பெறப்பட்ட சிறிய, சிறிய நன்மைகளைக் கூட அகற்றிட வகுப்புவாத சக்திகள் தாக்குதல்களை தொடுக்கின்றனர். இன்றைக்கு அனைத்து இந்திய தேச பக்தர்களின் கடமை என்பது இதுவரை கிடைத்தவற்றைப் பாதுகாத்து சிறப்பான எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவதேயாகும்.

1857 ஆம் ஆண்டும் நல்லிணக்க முகிழ்தலும் – சீத்தாராம் யெச்சூரி

 
1857 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்து
நடந்த கிளர்ச்சியின் 150 வது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகள்
நாடு முழுமையும் கொண்டாடப்படுகின்றன. இந்த நிகழ்வு முதல் விடுதலைப்போர் என குறிப்பிடப்படுகிறது. அதன் முக்கியத்துவம் யாதெனில் அதில் பெறப்பட்ட படிப்பினைகள் யாவும் இன்றைய தினத்தில் அறிவார்ந்த விவாத மேடைகளில் அலசப்படும் விஷயங்களாக மாறியிருக்கின்றன என்பது தான். அதிகாரப் பூர்வமான நிகழ்ச்சிகள் பல நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. அனால், அதை விட முக்கியமானது என்னவென்றால் அந்த நிகழ்வு பற்றி புகழ்பெற்ற ஆய்வு மையங்களும், வரலாற்று ஆய்வினை மேற் கொண்டவர்களும் அதன் மீது திருப்பிய புதிய பார்வைதான். இதுவரை வெளிக்கொணராத ஆனால் விரவிக் கிடக்கும் பல்வேறு ஆதாரங்களை ஒன்று திரட்டி பல பண்பாட்டு மற்றும் இலக்கிய அமைப்புகளும் அந்த முயற்சியில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து நடத்தப்படும் இந்த விவாதங் களும் அதையொட்டிய செயல்பாடுகளும் நம் நாட்டுக்கும் நமக்கும் பயன்தரத்தக்க நடவடிக்கைகள் தான். இதில் கிடைக்கும் அனுபவத்திலிருந்து சரியான முடிவுகளை பெற்றால் அது இன்னும் சிறப்பாக இருக்கும்.
அந்த எழுச்சி குறித்த பல்வேறு விவரங்களையும் தாண்டி நாம் பரிசீலித்ததால் 1857 க்குப் பிறகு அதிகாரப் பொறுப்பேற்ற பிரிட்டிஷ் அரசு இந்திய நாகரீகத்தில் எழுந்த நல்லிணக்க முகிழ்தலுக்கு தடையாக இருந்திருக்கிறது என்பது தெரியும். பிரிட்டிஷ் அரசு தங்கள் ஆட்சியினைத் தொடரவும் ஒருங்கிணைத்துக் கொள்ளவும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டனர். உள்நாட்டு வகுப்புவாத சக்திகள் அதற்கு துணையாக இருந்தன. இந்த நிகழ்வு நடைபெறாமல் இருந்திருந்தால் இந்திய நாகரீகத்தின் சிறப்பு பண்பாக மக்கள் சமூகத்தில் எழுந்த நல்லிணக்க முகிழ்வு ஒரு உயர்ந்த ஒளி வீசும் நிலையினை அடைந்திருக்கும். அந்த உன்னத நிலையின் வழித் தோன்றலாக நாம் இருப்பதற்கு மாறாக, நம் வரலாற்றினையும், சமூகப் பண்புகளையும் மறு தேடலுக்கு உட்படுத்தும் இரங்கத்தக்க நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று எரிந்து கொண்டிருக்கும் வகுப்பு வாத மோதல்களில் மூழ்கி விடாமல் அந்த சிறப்பான வரலாற்று மற்றும் பண்பாட்டுக் கூறுகளை எடுத்துக் கோர்ப்பது சிறப்பாக இருக்கும். அது தான் 1857 யை நினைவு கூர்வதன் நோக்கத்தை அர்த்தமுள்ளதாக்கும்.
இந்த சிந்தனை ஓட்டத்திலிருந்து சற்றே மாறுபட்ட எனது அனுபவத்தை விவரிப்பது இங்கு பொருத்தமாக இருக்கும். அண்மையில் நான் அந்தமான் சென்றிருந்த போது ஒரு விஷயம் எனக்குத் தெரிந்தது. பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு போன்ற பிரச்சனையில் இங்கே நாம் உழன்று கொண்டிருக்கிறோம். அந்தத் தீவுகளில் கணிசமாக உள்ள (பெரும் பான்மையாக இல்லையென்றாலும்) உள்ளூர் பிறப்பு சமூகத்தினர் (டுடிஉயடடல க்ஷடிசn ஊடிஅஅரnவைநைள) என்று குறிப்பிடப்படும் மக்கள் பிரிவினர் இருக்கிறார்கள். கொடுமையான அந்தமான் சிறைக் கொட்டியில் தொடர்ச்சியாக சிறைவைக்கப்பட் டோரிடையே பிறந்தவர்கள் தான் அவர்கள். பிரிட்டிஷ் நிர்வாகம் ஆண் – பெண் கைதிகளை வரிசையாக நிறுத்தி அவரவர் விரும்புகிற துணையினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வழி வகுத்தனர். ஏனெனில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு தங்கள் காலனியாதிக்க விரிவாக்கத்திற்காக நடத்திக் கொண்டிருந்த போர்களுக்கும், இந்திய துணைக்கண்டத் திற்குள் தங்களின் அடக்குமுறை அட்சியை நிலைநிறுத்தவும் மனிதர்கள் தேவைப்பட்டனர். நான் பார்த்த அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராக இருந்த பெண் அப்படிப் பிறந்தவர்தான். 1857 க்குப் பிறகு அங்கு கொண்டு வரப்பட்ட பட்டானிய (ஞயவாடிn) கைதிக்கும் கேரளாவிலிருந்து மோப்பலா எழுச்சி (ஆடிbநெடயா சுநநெடடவiடிn) க்குப் பிறகு அங்கு வந்த பெண்ணுக்கும் பிறந்த ஒரு வம்சாவளியில் வந்தவர் தான். மேற்சொன்ன இரண்டு நிகழ்வுகளும் காலத்தால் வேறுபட்டவை. எனினும் முந்தைய பாரம்பரியத்தின் பிள்ளைகள் பிந்தைய நாளின் கைதிகளை மணம் செய்த கொண்டார்கள். அப்படி உருவான சந்ததி காலனி அதிகாரத்தின் நிர்பந்தத்தால் உருவான நல்லிணக்க முகிழ்வின் ஒரு சமரச இணைப்பின் பிரதிபலிப்பு தான். 1857 க்குப் பிறகு பிரிட்டிஷ் அரசு நிறுவனமாக்கப்ட்ட பிரித்தாளும் கொள்கை செயல்படுவதற்கு முன்பே இயற்கையாகவே சக்தி மிக்க சமரச நல்லிணக்கம் கொண்ட பண்பாடு இங்கே முகிழ்ந்திருந்தது.
1857 க்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே மதங்களிடையேயும் இந்தியாவில் பல்வேறு நாகரீகங்களிடையேயும் எழுச்சி மிக்க அறிவார்ந்த பரஸ்பர உறவு நிலை இருந்திருக்கிறது. எல்லோரும் மறந்து போன புத்தகம் ஒன்று என் கையில் கிடைத்தது. அது முகலாய இளவரசன் தாராஷிக்கோவால் எழுதப்பட்ட கருத்துச் செறிவினை உள்ளடக்கிய புத்தகம் ( தாரா ஷிக்கோ முகலாய மன்னர் ஷாஜகானின் மூத்த புதல்வர். அரியாசனத்தைப் பிடிக்கும் போட்டியில் அவுரங்கசீப்பால் படுகொலை செய்யப்பட்டார். 1654 – 55 இல் பாரசீக மொழியில் எழுதப்பட்ட அந்த புத்தகத்தின் பெயர் “மஜிமா – உல் – பக்ரெய்ன்” (இரு சமுத்திரங்களின் சங்கமம்) தாரா ஷிக்கோ சமஸ்கிருத மொழியினைக் கற்றுத் தேர்ந்தவர். உபநிஷத்துக்களைப் பாரசீக மொழியில் மொழிபெயர்த்தார். அதில் மறைந்துள்ள இணைக்கும் மாண்புகளை கண்டறிய இந்த முயற்சி மேற்கொண்டார். வேதநூல்களைப் பற்றிய வெளிப்படையான விவாதங்கள் நடைபெறவில்லையே என வருத்தமுற்றார். (ஆனால் வேதங்களைக் கற்பதிலிருந்து கீழ்சாதி மக்களைத் தடுக்கும் சாதி அமைப்பினைப் பற்றி அவர் ஏதும் குறிப்பிடவில்லை) அந்த நிலை “உபநிஷத்துக்கள் கூறும் உண்மைகளை இந்துக்களிடமிருந்தும், இஸ்லாமியர் களிடமிருந்தும் மறைத்தது’. அந்த குறிப்பிட்ட ஆய்வுக் கட்டுரையில் இஸ்லாமிய சுஃபி கோட்பாடுகளுக்கும் இந்துமத ஆத்ம விளக்கத்திற்கும் ஒன்றுக்கொன்று பொருந்துபவை என்ற முடிவுக்கு வந்தார். தாரா ஷிக்கோவின் அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. ஆனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சம் ஒன்று உண்டு. அந்த காலக்கட்டத்திலேயே நாகரீக அறிவுத் தெளிவினை உயர்நிலைக்கு உயர்த்தும் தன்மை வாய்ந்த தத்துவார்த்த மற்றும் அறிவுசார் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த என்பது தான் அது.
தாராஷிககோ தன்னுடைய சமயச் சொற்பொழிவுகளில், அக்பர் முன்வைத்த நல்லிணக்க பாரம்பரியத்தினை முன்னெடுத்துச் சென்றார். அதோடு மட்டுமல்லாமல் அவர், பரந்த முற்போக்கான விஷயங்களை மத்தியகால இந்திய மக்களின் சிந்தனையில் நுழைத்து இந்திய சிந்தனை மரபின் எல்லையினை விரிவுபடுத்தினார். 1857 இல் அதன் தாக்கம் இருந்தது. அந்த எழுச்சி வெடித்த பொழுது, மிகப் பிரபலமான தினத்தாளான ‘தில்லி உருது அக்பார்’ எழுதியது, “இந்திய மதங்களை அழித்துவிட நினைக்கும் மத விரோதிகளின் அகங்காரத்தை ஒடுக்குவதற்காக கடவுளர்களால் உருவாக்கப்பட்ட நிகழ்வுதான் அந்த எழுச்சி”.
கோபால் காந்தி (தற்போது மேற்கு வங்க ஆளுநர்) தன்னுடைய சிறந்த நாடகமான “தாரா ஷிகோ” வை பெரிமஹால் என்ற அரண்மனைக்கு அர்ப்பணித்தார். ஸ்ரீநகரின் தால் ஏரியின் கரையில் தாரா ஷிகோவால் கட்டப்பட்ட தேவதைகளின் அரண்மனை என்று சொல்லப்பட்ட மயக்கும் மாளிகை அது. கோளங்களைப் பற்றிய ஆய்வுக்கான ஒரு மையம் காணும் நோக்கோடு தாரா ஷிக்கோவால் படைக்கப்பட்ட மிகவும் நேர்த்தியான கட்டிட அமைப்பு. இன்று அந்த உன்னத லட்சியம் நலிந்து கொண்டு வருவதை நினைவூட்டும் வகையில் அந்தக் கட்டிடம் மிகவும் சிதலமடைந்து இருக்கிறது.
அந்த லட்சியப்பார்வை தாரா ஷிக்கோவின் கீழ்க்கண்ட வார்த்தைகளில் பிரதிபலிக்கிறது.
பாபர் தேசத்திற்கு அடிக்கல் அமைத்தார். ஹூமாயூன் கொள்ளையர்களிடமிருந்து தேசத்தைக் காத்தார். முற்றுகை, புயல், நில நடுக்கம் எல்லாவற்றையும் தாங்கும் கடவுளரால் மட்டும் அசைக்கக் கூடிய, வலுவான அரண் கட்டி தேசத்தை நிர்மாணம் செய்தார் அக்பர். தேசத்தின் பலம் அந்த பாதுகாப்பிலிருந்து வரவில்லை. இந்துஸ்தானத்தின் பல்துறை சிறப்பிலிருந்து எழும் பன்முகத்தன்மையிலிருந்து வருகிறது. ஜஹாங்கீரும் என் தந்தையும் தேசத்தின் அரியாசனத்தின் கௌரவத்தை உயர்த்தி முறையான அரசாட்சி நடத்தினர். இந்தியாவின் மயிலாசனத்திற்கு ஒரு சிந்தனையாளர் தேவை. அவர் இயற்கையில் படைப்போடு இந்த நாட்டை இணைப்பார். நாட்டின் கௌரவத்தை மேலெடுத்துச் செல்வார். மன்னரைப் பாதுகாக்க அல்ல, சாம்ராஜ்யத்தை மறு உருவாக்கத்திற்கு உட்படுத்த. அப்போது தான் ஊசலாட்டத்திலும் கேளிக்கையிலும் திளைக்கும் தில்லி மன்னர் இந்தியாவின் முதல் தர்மகர்த்தாவாக மாறுவார் ( இது கருத்துச் சுருக்கம் தான் – மொழி பெயர்ப்பல்ல)
தாராஷக்கோ மேலும் எழுதுகிறார் “இந்தியாவிற்குஅதன் மயிலாசனத்திற்கு ஒரு அறிவாளி தேவை. அதற்கு பொருத்த மில்லாதவரை, அது ஏற்றுக் கொள்ளாது”. ஆனால் அந்த மயிலாசனம் அவுரங்கசீப்பை தள்ளிவிடவில்லை. அதையே நாதீர்ஷா கொள்ளையடித்து துருக்கி ஓட்டோமான் பேரரசின் சுல்தான் காலிஃப்க்கு கப்பம் கட்டினார். இன்று அது இஸ்தான்புல் நகரின் டாப்காபி அரண்மனையின் கண்காட்சி சாலையில் அரிய பொக்கிஷமாக வைக்கப்பட்டிருக்கிறது.
ஊகங்களின் தளமாக வரலாறு இருக்க முடியாது. அவுரங்கசீப் முகலாய அரியாசனத்தை கைப்பற்றாது இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது வேறு விஷயம். இங்கே வரலாற்று ரீதியான மதிப்பீடு எதையும் செய்ய நாம் முயற்சிக்கவில்லை. இந்தத் தகவல்களை சேகரிப்பதன் நோக்கம், 1857 க்கு முன் இந்திய சமுகம் கண்ட நல்லிணக்க முகிழ்வின் அம்சங்கள் அதற்குபிறகு வந்த பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் மங்கி மறைந்து போய்விட்டன என்று குறிப்பிடுவதற்குத்தான்.
சமீபத்தில் நடந்து முடிந்த உத்திரப்பிரதேசத் தேர்தல் பிரச்சாரத்தைப் பார்போம். பிரச்சாரத்தின் வீச்சளவு நம்மை கடுமையாக உலுக்கி விடுகிறது. பா.ஜ.க. வின் மூர்க்கத்தனமான இந்துத்துவா, இந்தியாவில் உள்ள பாபரின் குழந்தைகளை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று (தீவிர இந்து மத பக்தையான ராணி லட்சுமிபாய் பாபரின் குழந்தையான பகதூர் ஷா ஜாபரை, பிரிட்டிஷாரை தில்லி அதிகாரத்திருந்து விரட்டிய பிறகு இந்தியாவின் பேரரசராக பொறுப்பில் ஏற்றினார் என்று இருந்த போதிலும்) கூக்குரல் எழுப்பியது. வெறுக்கத்தக்க சி.டி. ஒன்று பா.ஜ.க. வினரால் மக்களிடம் சுற்றுக்கு விடப்பட்டது. அந்த நடவடிக்கைகள் அரசியல் மற்றும் தேர்தல் ஆதாயங்களுக்காக வெறித்தனமாக வகுப்புவாத உணர்வை ஒருமுகப்படுத்தும் வேலை நடப்பதை தெளிவாகக் காட்டின. “ உன்னத நோக்கங்கள் சிதிலமடைவது” என்பது நம்மை மீண்டும் கவ்விப்பிடிக்கிறது. நிலப்பிரபுத்துவ மன்னர் வம்சாவளிமுறையிலிருந்து இந்தியா, இரண்டு நூற்றாண்டுகள் காலனி ஆதிக்கத்தையும் தாண்டி, அதன் இறையாண்மை மக்களிடம் பற்றி நிற்கும் வகையில் ஒரு நவீன அரசு அமைப்பை பெற்றிருக்கிறது. சக்தி வாய்ந்த விடுதலைப் போராட்டம் மக்கள் புரிந்த எண்ணிலடங்கா தியாகங்கள், நம் நாட்டினை ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என அறிவிக்கும் அந்தஸ்தை நமக்குக் கொடுத்தது. கருத்து மோதல்களை ஒரு நல்லிணக்க கருத்துத் தெளிவின் உயர் மட்டத்திற்கு கொண்டு செல்லும் ஒரு கட்டமைப் பினையும் செயல் வடிவத்தினையும் நாம் உருவாக்கியிருக்கிறோம்.
நிச்சயமாக அந்த வாய்ப்பினை, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்ற கோட்பாட்டிற்கு எதிர்மறையான தத்துவார்த்த நிலையினை மேற்கொள்ளும் வகுப்புவாத சக்திகள் களவாடிச் செல்ல அனுமதிக்கக் கூடாது. அதுபோலவே, இந்த வாய்ப்பினை சிதறடிக்கவும் அனுமதிக்கக் கூடாது. 1857-ஐ நினைவு கொள்வது என்பது அந்த வாய்ப்பினை ஒருங்கிணைத்து கெட்டிப்படுத்தி நமது நவீன மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை மேலும் வலுவானதாகக் காட்டுவது தான்.
உண்மையில், இந்தியாவில் நமக்கு மதச்சகிப்புத் தன்மை என்பது நவீன காலத்தில் மேலை நாடுகளிடமிருந்து கடனாகப் பெற்ற கோட்பாட அல்ல. வரலாற்றை சற்றே பின்னோக்கிப் பார்த்தால், கிறிஸ்து பிறப்புக்கு முந்தைய மூன்றாம் நூற்றாண்டி லேயே பேரரசர் அசோகர் தன் அதிகாரத்தைக் கொண்டு வெளியிட்ட செய்தி சொல்லுகிறது, “ ஒரு குறிப்பிட்ட சமயப் பிரிவினைச்சார்ந்த எவரேனும் அதன் மீது கொண்ட பக்தியின் அடிப்படையிர் மற்ற சமயப் பிரிவினரை இகழ்வாரேயானால், அப்படிச் செய்வது அவர் நம்பும் சமயப் பிரிவிற்கே அதிக கேட்டினை விளைவிக்கும்”.
1857 க்குப் பல ஆண்டுகளுக்குப் பின், எதிர்கால இந்தியா எப்படி இருக்கும் என்ற கற்பனை உருவாக்கத்தில் சுவாமி விவேகானந்தர் அது “இஸ்லாமிய உடம்பில் வேதாந்த சிந்தனை”கொண்டதாக இருக்குமென்றார். மதச்சகிப்புத் தன்மை பற்றி பகவத் கீதை கூட இப்படித்தான் சொல்லுகிறது. “இறை நம்பிக்கை கொண்ட ஒருவர் வழிபாட்டுக்கு எந்த தெய்வீக வடிவத்தை மேற்கொண்டாலும் அவர் அந்த வடிவத்தின் மேல்கொண்ட நம்பிக்கையிளை நான் நிலை நிறுத்துகிறேன்” ( அத்தியாயம் 3 (21)). 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்ற மாநாட்டில் விவேகானந்தர் ஆற்றிய உரை புகழ்பெற்ற ஒன்றாகும். அப்பேச்சின் இறுதியில் அவர் குறிப்பிட்டார். “எவரேனும் தன்னுடைய மதம் மட்டும் தனித்து வாழும் மற்ற மதங்களெல்லாம் அழிந்து போகும் என கனவு காண்பவராக இருந்தால் என் அடிமனதில் அவர் மேல் நான் கழிவிரக்கம் கொள்கிறேன். நான் ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒவ்வொரு மதத்தின் பதாகையிலும், எதிர்ப்பு இருந்தாலும் கூட, உதவி என்று எழுதப்படுமே தவிர, மோதல் என்றல்ல, தன் வயப்படுதல் என்று இருக்குமே தவிர அழிவு என்றல்ல, நல்லிணக்கம் மற்றும் அமைதி என்று எழுதப்பட்டிருக்குமே தவிர மற்ற சமய எதிர்ப்பல்ல”.
அந்த நல்லிணக்க முகிழ்தலின் அறுந்துபோன இழைகளை மீண்டும் எடுப்பதே நாம் ஆற்ற வேண்டிய பணியாக இருக்க வேண்டும் என்று தான் 1857 இன் 150 வது ஆண்டு கால நினைவுகள் நம்மைக் கோருகின்றன. சொந்த உடன் பிறப்புகள் போல் வாழ்வோரை பலிவாங்கும் நஞ்சுகலந்த வகுப்புவாத வெறியால் அழிந்து போகாமல் இழந்த அந்த இழைகளை ஒருங்கிணைப்பதில்தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது.