சோவியத் புரட்சியும் தமிழகமும்

– இரா.சிசுபாலன்

உலக வரலாற்றில் நவம்பர் புரட்சி ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கி வைத்தது. இதற்கு முன் நடைபெற்ற புரட்சிகள் – சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என முழங்கிய பிரெஞ்சு புரட்சி உட்பட – அனைத்துமே ஒரு சுரண்டல் வர்க்கத்தின் ஆட்சியை அகற்றிவிட்டு பிறிதொரு சுரண்டல் வர்க்கத்தின் ஆட்சியை நிலைநாட்டுவனவாகவே அமைந்தன. மகத்தான சோவியத் புரட்சியே முதன்முறையாக சுரண்டல் சமூக அமைப்பை வீழ்த்தி, சுரண்டலற்ற சமுதாயத்தைப் படைத்தது.

நவம்பர் புரட்சி உலகம் முழுவதும் விடுதலைப் போராட்ட சக்திகளுக்கு பெரும் ஆதர்சமாய் விளங்கியது. இந்திய விடுதலையின் உள்ளடக்கம் என்னவாக அமைய வேண்டும் என்ற சாரத்தை சோவியத் புரட்சியில் இருந்தே விடுதலைப் போராட்ட வீரர்கள் பெற்றனர்.

தமிழகத்தில் மகாகவி பாரதி ,சுப்பிரமணியம் சிவா, வ.உ.சிதம்பரம், திரு. வி.க, சக்கரைச் செட்டியார், ம.சிங்காரவேலர், ஜீவானந்தம்,பி.ராமமூர்த்தி உள்ளிட்ட பல விடுதலைப் போராட்ட தலைவர்கள் நவம்பர் புரட்சியால் ஈர்க்கப்பட்டு இந்தியாவிலும் அதே போன்ற மாற்றம் ஏற்பட வேண்டும் எனப் போராடினர். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அற்ற, சமூக நீதியை நிலைநாட்டும் சுதந்திரமே தமது லட்சியம் என விடுதலை இயக்க வீரர்கள் முழக்கமிட்டனர்.

ரஷ்யப் புரட்சியை உச்சி மீது வைத்துக் கொண்டாடிய மகாகவி பாரதி, ‘ஆஹா வென்று எழுந்தது பார் யுகப் புரட்சி’  எனப் பாடினார். நவம்பர் புரட்சி வெற்றி பெற்ற சில தினங்களில் (29.11.17) சுதேசமித்திரன் பத்திரிகையில்,’ ரஷ்யாவில் சோசிலிஸ்ட் கட்சியார் ஏறக்குறைய தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றி விடக் கூடுமென்று தோன்றுகிறது… இக்கொள்கை மேன்மேலும் பலமடைந்து வருகிறது. ஏற்கனவே ரஷ்யாவில் ஸ்ரீமான் லெனின்… முதலியவர்களின் அதிகாரத்தின் கீழ் ஏற்பட்டிருக்கும் குடியரசில் தேசத்து விளை நிலமும் பிற செல்வங்களும் தேசத்தில் பிறந்த அனைத்து ஜனங்களுக்கும் பொது உடமையாகி விட்டது. ருஷ்யாவிலிருந்து இது (இக்கொள்கை) ஆசியாவிலும் தாண்டி விட்டது’ என எழுதுகிறார்.

ரஷ்யாவில் புரட்சிக்குப் பின் ஏற்பட்ட ஆண் – பெண் சமத்துவம் குறித்து தமது உரைநடையில் மகாகவி  எழுதுகிறார்:

‘சில தினங்களுக்கு முன்பு இங்கிலாந்து தேசத்தில் மான்செஸ்டர் நகரத்தில் பிரசுரம் செய்யப்படும் ‘மான்செஸ்டர் கார்டியன்’ என்ற பத்திரிக்கை நவீன ருசியாவின் விவாக விதிகளைப் பற்றிய உண்மையான விவரங்களை பிரசுரம் செய்திருக்கிறது. அது கூறுவதாவது: ‘தெற்கு சோவியத் (போல்ஷிவிஸ்ட்) ரஷ்யாவில் இதுவரையில் இருந்து வந்த வீண் நிர்பந்தங்கள் இனி விவாக விஷயத்தில் இல்லாதபடி ஒழித்து விடப்படும். அதாவது வேற்றுமைகள் முதலியன விவாகங்களுக்கு தடையாகக் கணிக்கப்பட மாட்டா. இப்போது உள்ள சட்டப்படி ஸ்திரீகளுக்கும் புருஷர்களுக்கும் எவ்விதத்திலும் வேற்றுமை கிடையாது. இருபாலாரும் சமானமாகவே கருதப்படுவர். எல்லாக் குழந்தைகளும் சமூகச் சட்டப்படி பரிபூரண சமத்துவம் உடையனவாம். பாதுகாப்பில்லாத குழந்தைகள் யாருக்கு பிறந்த போதிலும் அவற்றைப் பாதுகாக்க ஒரு தனி இலாகா ஏற்பட்டிருக்கிறது. இந்த சட்டம் ராஜாங்க சாசனப்படி நடைபெறும்  விவாகங்களையே அங்கீகாரம் செய்யும். பெண்கள் 14 வயதுக்குள்ளும், ஆண்கள் 18 வயதுக்குள்ளும் விவாகம் செய்து கொள்ள வேண்டும். இருதிறத்தாரும் மனமொத்தால்தான் விவாகம் செய்யலாம். விவாகம் முடிந்ததும் புருஷன் அல்லது ஸ்திரியின் பெயரைக் குடும்பத்தின் பெயராக வைத்துக் கொள்ளலாம். விவாகத்துக்குப் பிறகு தம்பதிகள் பரஸ்பரம் உதவியாக வாழ கடமைப்பட்டிருக்கிறார்கள். புருஷனேனும், ஸ்திரீயேனும் விவாக பந்தத்தை நீக்கிக் கொள்ள விரும்பினால் அங்ஙனமே நீக்கிக் கொள்ள சட்டம் இடம் கொடுக்கிறது’ என்ற மேற்கோளை முன்வைத்து இந்திய நிலைமைகளில், பெண்கள் அடிமைகளாக வாழ்வதைச் சுட்டிக்காட்டி பெண் விடுதலைக்காக குரல் கொடுக்கிறார்.

1918-19 ம் ஆண்டிலேயே பக்கிங்ஹாம் அண்ட் கர்னாடிக் (பி அண்ட் சி) மில் தொழிலாளர் சங்கத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர் திரு.வி.க., அவர் சென்னையில் தொழிலாளி வர்க்கப் போராட்டங்களுக்கு தலைமை ஏற்றார். அப்போராட்டங்களில் உரையாற்றுகையில்,

‘பொருளாதார உரிமையற்ற வெறும் அரசியல் உரிமை என்பது பணக்காரர் ஆட்சியாய் சாதி, மதப் பூசல்களைப் பெருக்கி விரிப்பதாகும். நமது நாட்டுக்கு அரசியல் விடுதலையும் வேண்டும்;அதனூடே பொருளாதார விடுதலையும் விரவி நிற்றல் வேண்டும். பொருளாதார விடுதலை என்பது அன்னிய முதலாளிகளிடமிருந்து மாத்திரமல்ல, உள்நாட்டு முதலாளிகளின் பிடியிலிருந்தும் விடுதலை பெற்று சமதர்ம ஆட்சி மலர வேண்டும்’ என்றார்.

 ‘திரு.வி.க., சமூகத் துறையில் காந்தியத்தையும், மார்க்சியத்தையும் இயைவிப்பதற்கு முயன்று வந்தார். காந்தியத்தின் அடிப்படையான அகிம்சையும், மார்க்சியத்தின் லட்சியமான பொதுவுடமைக் கொள்கையும் திருவிக – வைக்  கவர்ந்தன. எனவே அன்பு நெறியைக் கடைபிடித்து பொதுவுடமைச் சமுதாயத்தை அமைக்கும் வகையைப் பற்றி இடைவிடாது சிந்தித்தும், பேசியும், எழுதியும் வந்தார்’ என நவசக்தியில் கல்கி எழுதினார்.

இந்திய விடுதலை இயக்கத்துடன் தொழிலாளி வர்க்கத்தின் பாத்திரத்தை இணைக்கும் நோக்குடன் வ.உ.சிதம்பரமும்,சுப்பிரமணியம் சிவாவும் செயல்பட்டனர். தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர் போராட்டத்திற்கு அவர்கள் தலைமையேற்றனர். போராட்டத்தில் வ.உ.சி., க்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சிவாவுக்கு பத்தாண்டு கடுங்காவல் தண்டனையும் கிடைத்தது. வ.உ.சி., தொடங்கிய சுதேசிக் கப்பல் நிறுவனம் ஆங்கிலேயரின் வணிகத்தை பெரிதும் பாதிக்கும் என்பதால் ஆங்கிலேயர்கள் வ.உ.சி., மீது கடும் ஆத்திரம் கொண்டனர்.

1920 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ட்ராம்வே தொழிலாளர் வேலை நிறுத்தம், மதுரை தொழிலாளர் வேலை நிறுத்தம் ஆகிய தொழிலாளி வர்க்கப் போராட்டங்களில் சுப்பிரமணியம் சிவா தீவிரமாகப் பங்கேற்றார். கம்யூனிஸ்ட் தலைவர் சிங்காரவேலரோடு மிக நெருங்கிய நட்பு பாராட்டினார்.

1920 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரசுக்கு சென்னை சோசலிஸ்டுகள் சார்பாக சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் ஒரு தந்தி அனுப்பினார். அதில் அரசியல், சமூக, பொருளாதார இலட்சியங்களை தொடருவதே தேசிய சோசலிசத்தின் பிரதான ஸ்வரம்… தனது சமுதாயப் புணரமைப்பு என்ற இலட்சியத்துக்கு பொருந்த அரைகுறை சீர்திருத்தங்களோடு சமாதானம் ஆகிப்போகும் முயற்சிகளால் மட்டுமே எந்த நன்மையும் விளையாது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதே ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இந்தியாவுக்கு முழு விடுதலை என்ற தீர்மானத்தை கம்யூனிஸ்டான ஹஸ்ரத் மோகானி முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்காரவேலர்  தொழிலாளர்- விவசாயிகள்  கட்சி ஒன்றை நிறுவினார். அதன் சார்பில் 1923 ஆம் ஆண்டு சென்னை கடற்கரையில் இந்தியாவிலேயே முதன் முறையாக  மே தினத்தைக் கொண்டாடினார். அந்த மே தின பொதுக்கூட்டத்தில் சுப்பிரமணியம் சிவா வீர உரையாற்றினார்.

ஆங்கிலேயருக்குச் சொந்தமான ‘மெட்ராஸ் மெயில்’ என்ற பத்திரிகை ‘தேசிய இயக்கத்தில்  போல்ஷெவிக்குகளின் தங்கம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தது. அதை மறுத்து, ‘எங்கே இருக்கிறது போல்ஷெவிக்குகளின்  தங்கம்’ ?என்ற தலைப்பில் 1922 ஜூன் மாதம் சிங்காரவேலர் ஒரு கட்டுரை எழுதினார். அதில், ‘அப்படியே அதை வாங்கி மக்களின் நன்மைக்கு உபயோகப்படுத்துவதில்தான் என்ன தவறு ?என்றும் கேட்டிருந்தார்.

சென்னை  மாமன்ற உறுப்பினராக சிங்காரவேலர் செயல்பட்ட காலத்தில்தான் அவரது முன் முயற்சியில் தமிழகத்தில் முதன்முறையாக பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சாதிமுறையை, வருணாசிரம தருமத்தை இந்தியப் புரட்சியின் அடிப்படையான பிரச்சனைகளில் ஒன்றாகவே சிங்காரவேலர் பார்த்தார். 1931ஆம் ஆண்டு விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வரவேற்று 30.8.1931  தேதியிட்ட குடியரசு பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் காங்கிரஸ் கட்சியைப் பின்வருமாறு சாடினார்:

 ‘ஜாதி என்பது நமது இந்திய தேசத்தில் மட்டும் பிறந்த ஒரு ஸ்தாபனம்.இதை ஒழிக்காமல் சகோதரத்துவம் வெறும் சொல்லே. காங்கிரஸ்காரர்கள் ஆயினும் இதை ஒழிக்காத வரை இவர்கள் நடிப்பெல்லாம் வேஷம் எனக் கொள்ளல் வேண்டும். தீண்டாமை ஒழிய வேண்டும் என சொல்லிக்கொண்டு, பூணூலையும், சந்தியா வந்தனத்தையும் வைத்துக்கொண்டிருத்தல் வஞ்சனை அல்லாது வேறில்லை.இந்தக் கபட நாடக சூஸ்திரம் போகாமல் காங்கிரஸ்காரர்கள் பொதுஜனத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்வது பெரும் பித்தலாட்டம். இதனை சுயமரியாதையோர் வற்புறுத்துவது உண்மையே. தீண்டாமையை விட்டவர்கள் ஏன் ஆச்சாரியார்கள் எனவும், ஐயர், ஐயங்கார் எனவும் அழைக்க சம்மதிக்க வேண்டும்?ஜாதியை உண்மையில் ஒழித்தார்கள் என்பார்களாயின் ஜப்பான் தேசத்தில் சாமுரே பிரபுக்கள் தங்கள் ஜாதியை பகிரங்கமாக ஒழித்தெறிந்த விதமாக பூணூலையும், அர்த்தமில்லா வர்ணாசிரமங்களையும் ஏன் ஒழித்தெறியல் ஆகாது? இதைச் செய்யும் வரை தீண்டாமை நீங்க வேண்டும் என்பது மதி மயக்கே’ என்றார்.

சுயமரியாதைக்காரர்களின் கருத்தோட்டத்தில் உள்ள சிக்கல்களையும் சுட்டிக்காட்டிய அவர்,’அறிவுமிக்க ஆதாரமாகிய விஷயங்களைக் குறித்து நமது சுயமரியாதைக்காரர் எவ்வளவு ஊக்கத்துடன் உழைத்து வருகின்றாரோ, அவ்வளவு மனவிசாலத்துடன் சீல ஆசாரம், பொருளாதாரம் முதலிய முக்கிய விஷயங்கள் குறித்து பாடுபட வேண்டுமாய் நமது தோழர்களைக் வேண்டிக் கொள்கிறோம். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்றதையும் கவனித்தல் வேண்டும். அறிவை அந்தகார இருளில் இருந்து நீக்குவதைப்போல், உயிரையும் தாங்கொணா பசிப்பிணியிலிருந்து காக்க வேண்டும். உணவு இன்றி அறிவு விளங்காது. ஆகையால் உணவே உயிருக்கும் அதில் தோன்றும் அறிவுக்கும் ஆதாரம். ஆதலின் 35 கோடி மக்கள்  இனிது உண்டு, உடுத்தி, வாழ்வதற்கு வேண்டிய ஆதாரங்களை சுயமரியாதைப் பெரியோர் கண்டெடுத்து அளிப்பார்கள் என்று நம்புகிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தந்தை பெரியார் சோவியத் யூனியன் உள்ளிட்ட பல மேலை நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பி சோசலிச பிரச்சாரத்தை வலுவாக முன்னெடுத்தார். சுயமரியாதை இயக்கத்தை சமுதாய சீர்திருத்த இயக்கமாக மட்டுமின்றி அரசியல் குறிக்கோள்களைக் கொண்ட ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற விருப்பம் அவர்களிடத்தில் ஏற்பட்டது அதைத் தொடர்ந்து தந்தை பெரியார் சிங்காரவேலரைக் கலந்து இயக்கத்தின் நோக்கத்தையும் அதற்கான திட்டத்தையும் தயாரித்தார். ஈரோட்டில் ஈவெரா வீட்டில் 1932 டிசம்பர் 28 ,29 தேதிகளில் நடைபெற்ற கூட்டத்தில் தென்னிந்திய சம தர்மக் கட்சி என்ற ஒரு பிரிவை சுயமரியாதை இயக்கத்தில் அமைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. தந்தை பெரியார், சிங்காரவேலர், ஜீவா ஆகியோர் ஈரோட்டு திட்டத்தை விளக்கி தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டனர். தமிழகத்தில் 154க்கும் மேற்பட்ட கிளைகள் அமைக்கப்பட்டன. 1933 ஆம் ஆண்டு குடியரசு பத்திரிகையின் ஒவ்வொரு இதழிலும் ரஷ்யாவின் சாதனைகளைப் பற்றிய கட்டுரைகள் வெளியிடப்பட்டன. மதத்தைப் பற்றி லெனின் எழுதிய கட்டுரைகள் தொடராக வெளிவந்தன. பகத்சிங் எழுதிய ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’என்ற நூலை 1934 இல் அரசாங்கம் தடை செய்தது. அதனைத் தமிழில்

ப. ஜீவானந்தம் மொழிபெயர்த்தார். அது ஈவெரா- வின் சகோதரர் ஈ வெ கிருஷ்ணசாமி அவர்களுடைய உண்மை விளக்கம் அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதனால் அரசாங்கம் ஜீவாவையும், ஈ வெ கிருஷ்ணசாமியையும் கைது செய்தது. கம்யூனிசக் கருத்துக்கள் பரவுவதைத் தடுப்பதில் ஆங்கிலேய அரசு குறியாக இருந்தது.

புதுச்சேரியில் பிரெஞ்சுக் காலனி ஆதிக்கத்தை வீழ்த்தும் போராட்டத்தில் முன்னணியில் நின்ற கம்யூனிஸ்ட் தலைவர் வ.சுப்பையாவின் தலைமையில் 1935ஆம் ஆண்டு தொழிலாளர் வேலை நிறுத்தம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன் வைத்தனர்:

  • நாள் ஒன்றுக்கு பத்து மணி நேர வேலை
  • தினக்கூலி 3 அணாவிலிருந்து 6 அணா
  • பெண்களுக்கு இரவு வேலை கூடாது
  • குழந்தைத் தொழிலாளர்களை வேலையில் பங்கேற்க வைக்கக் கூடாது
  • பெண் தொழிலாளியின் மகப்பேறு காலத்தில் சம்பளத்தோடு கூடிய ஒரு மாத விடுமுறை
  • பிள்ளை பேறுக்காக அரை மாதச் சம்பளம்.

84 நாட்களுக்கு போராட்டம் தொடர்ந்தது. தொழிலாளர்களின் விடாப்பிடியான போராட்டத்தின் விளைவாக கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. 1936 ஜூலை 23 அன்று புதுவைத் தொழிலாளர் வர்க்கம் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரம் செறிந்த போராட்டத்தில் ஈடுபட்டது. இப்போராட்டத்தின் விளைவாக ஆசியாவிலேயே முதன்முறையாக 8 மணி நேர வேலையை புதுவைத் தொழிலாளர் சங்கம் உறுதிப்படுத்தியது.

பொருளாதார சமத்துவம் மட்டும் இல்லாமல் சமூக சமத்துவத்துக்கான போராட்டங்களிலும் கம்யூனிஸ்டுகள் முன்னோடிகளாக விளங்கினர். 1930 களில் காங்கிரசும் காந்தியும் விடுத்த அழைப்பை ஏற்று பி. இராமமூர்த்தி அரிசன சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு அருகே வசித்து வந்த தாழ்த்தப்பட்ட மக்கள் 200 பேருக்கு சில மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்து,தோள்பட்டையில் சங்கு சக்கர அடையாளமிட்டு அக் கோயிலின் தர்மகர்த்தா தேர்தலில் வாக்களிக்க ஏற்பாடுகளைச் செய்தார். கோயில் நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நீதிமன்றம் வரை சென்று அம்மக்களின் வாக்குரிமையை நிலைநாட்டினார்.

நவம்பர் புரட்சியும், சோவியத் இலக்கியங்களும், சோவியத் மக்களும் அரசும் சாதித்த சாதனைகள் தமிழக இலக்கியப் பரப்பில் பெரும் செல்வாக்கு செலுத்தின. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதுகிறார்: ‘இரஷ்ய ஆட்சி பொதுமக்கள் ஆட்சி. பொதுவுடமை ஆட்சி. அதனைச் சர்வாதிகாரம் என்பது தவறு. இரஷ்யர்கள் கூட்டாக உழைக்கிறார்கள். உழைப்பின் பயனை அனுபவிக்கிறார்கள். தம்மைத் தாமே ஆண்டு கொள்கிறார்கள். அதற்கேற்ற சமூக அமைப்பை அமைத்து அதன் வழியிலே செல்கின்றார்கள். அங்கே இரப்பாரும் இல்லை. புரப்பாரும் இல்லை. ஆண்டியும் இல்லை. ஆண்டையும் இல்லை. வயிற்றை எக்கி திரிவோரையும், வயிற்றை உப்ப வைத்துத் திரிவோரையும் காண முடியாது. தன்னலம் பேணாமல் பொதுநலம் பேணி உயர்கின்றது நாடு. இப்படி ஒரு நாடு இருந்தால் அதுவே ஒரு பூகோள சுவர்க்கம் என்பதற்கு ஐயமென்ன ?’என்கிறார்.

நவம்பர் புரட்சி ஏற்படுத்திய தாக்கம் தமிழக மண்ணில் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை தீவிரப்படுத்தியதுடன், எதிர்கால இந்தியா எத்தகைய திசைவழியில் பயணிக்க வேண்டும் என்பதற்கான பார்வையையும் அளிப்பதாக அமைந்தது. புதியதோர் உலகம் காண போராடும் அனைவருக்கும் நவம்பர் புரட்சியே தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்.

தேவை தீவிர வெகுமக்கள் இயக்கம்: நோக்கியா சொல்லும் பாடம்

உலகமயமாக்கலின் தீவிர அமலாக்கம் துவங்கி 20 ஆண்டுகள் முடிந்து விட்டது. 1990களின் துவக்கத்தில் மேற்படி நவதாராளமயக் கொள்கைகளின் முதல் கட்டத் தாக்குதலாக, விருப்ப ஓய்வுத் திட்டம் இருந்தது. அன்றைக்கு பணி ஓய்விற்கு மேலும் 10 ஆண்டுகள் இருந்த நிலையில், விருப்ப ஓய்வுத் திட்டத்தை, அரசுப் பொதுத் துறை நிறுவனங்களில் அறிமுகம் செய்த போது, இடதுசாரிகளின் எதிர்ப்பிற்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தரவில்லை. மாறாக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை வேறு எந்த வடிவில் உருவாக்குவது, என வினா தொடுத்தனர். இன்று தலைகீழ் மாற்றம் உருவாகியுள்ளது. பணி ஓய்விற்கு 10 ஆண்டுகள் இருந்த நிலையில் விருப்ப ஓய்வு என்பது, பணியில் சேர்ந்து 10 ஆண்டுகள் முடிந்தாலே விருப்ப ஓய்வு என்பதாக, வளர்ச்சி பெற்று உள்ளது. 50 வயது நிரம்பியவர்களிடம் அமலான விருப்ப ஓய்வுத் திட்டம், 23 26 வயது இளைஞர்களிடம் அமலாகி வருகிறது. வேலை வாய்ப்பு உருவாக்கம் குறித்து விவாதிக்க முடிந்த அரசுகளால், இத்தகைய விருப்ப ஓய்வுத் திட்டத்தைத் தடுக்கும் செயலில் இறங்க முடியவில்லை. தொழிலாளர்களுக்காகப் பரிந்து பேசும் உணர்வும் அற்ற நிலையில் அரசுகள் உள்ளன. உலகமயக் கொள்கைகளின் வளர்ச்சி என்பது, படிப்படியாக அரசுகள் தங்களின் இறையாண் மையை பன்னாட்டு முதலாளிகளிடம் இழந்து வருகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது. முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங், மிக அன்மை தினங்கள் வரையிலும், வேலை வாய்ப்பிற்காக மூலதனத்திடம் வளைந்து கொடுப்பது அவசியம், என்றும், தேவைப்படின் இந்தியத் தொழிற் சங்கச் சட்டங்களின் வீரியத்தை குறைப்பது தவறல்ல, என்றும் நீட்டி முழங்கி வந்தார். இதன் மூலம் இந்தியத் தொழிலாளர் களை நிராயுதபாணியாக மாற்றும் நடவடிக்கை களிலும் இறங்கினார். அதற்கு பல மாநில அரசுகளும் துணை நின்று சேவகம் செய்தன. அதன் ஒரு பகுதி தான் நோக்கியா இந்தியா நிறுவனம் பெற்ற சலுகைகளும் ஆகும்.

நோக்கியாவும் புரிந்துணர்வு ஒப்பந்தமும்:

2005 ஆம் ஆண்டு அதிமுக அரசுடன் நோக்கியா செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான சிறப்புப் பொருளாதார மண்டலம் தான், நோக்கியா சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகும். 1200 நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும் பல ஆயிரம் இளைஞர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பும் வழங்குவதாக புரிந்து உணர்வு ஒப்பந்தம் தெரிவிக் கிறது. மறைமுக வேலை வாய்ப்பு பட்டிலில் காண்ட்ராக்ட் தொழிலாளர் துவங்கி, நிறுவனம் அருகில் டீக்கடை நடத்தும் தொழிலாளர் வரை அடக்கம். நோக்கியா தனது உற்பத்தியை இந்தியாவில் துவக்கும் போது, கூடவே சில உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் உருவாகும் என அறிவிக்கப் பட்டது. அந்த நிறுவ னங்களும் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. அப்படி ஃபாக்ஸ்கான், பி.ஒய்.டி, சால்காம்ப், லைட் ஆன் மொபைல், ஆர்.ஆர். டொனால்டி போன்ற நிறுவனங்கள் உருவானது. இவைகளில் சுமார் 5000 தொழி லாளர்கள் நிரந்தரத் தன்மையிலும், 10000 ஆயிரத் திற்கும் மேல் காண்ட்ராக்ட் அடிப்படையிலும் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். நோக்கியாவின் சந்தை விரிவாக்கம் பெற்றதைத் தொடர்ந்து, நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நோக்கியாவிற்குள் மட்டும் 5000 ஐத் தாண்டியது. பயிற்சி மற்றும் காண்ட்ராக்ட் அனைத்தும் சேர்ந்து சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் நோக்கியாவிற்குள் மட்டும் வேலை செய்தனர். எல்லாம் சேர்ந்து 22 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் மேற்குறிப்பிட்ட ஆலைகளில் பணிபுரிந்தனர்.

2005 ஏப்ரல் 29 அன்று, தமிழ் நாடு அரசு தொழில்துறை அரசாணை எண் 59ஐ வெளியிட்டது. அதில், நோக்கியா நிறுவனத்தின் கைபேசி, உலக அளவில் 32 சதம் சந்தையையும், இந்தியாவில் 50 சதம் சந்தையையும் கொண்டிருக் கிறது. இந்தியாவில் 675 கோடி ரூபாயில் துவங்கப் படும் உற்பத்தி துவக்க கட்டத்தில் 1200 நபர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும். இதற்காக சிப்காட் மூலம் 200 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்து ஏக்கர் ஒன்றுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு 99 வருட குத்தகைக்கு கொடுக்கப்படும், என்பது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத் திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கிறது, எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. சில நாள்களிலேயே புரிந்துணர்வு ஒப்பந்தம் திருத்தம் செய்யப்பட்டது. ஒரு ஏக்கருக்கு 4.5 லட்சம் ரூபாய் என்றும், பத்திரப்பதிவு கட்டணம் 4 என்பதை 0 எனவும் மாற்றம் செய்து விற்றனர், என்பதை இறுதி செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அறியலாம். புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது சலுகைகளை ஒரு நிறுவனத்திற்கு உத்திரவாதம் செய்கிற ஏற்பாடு, என்பதை பொது மக்களோ, வேலை செய்யும் தொழிலாளர்களோ அறிந்திருக்க நியாயம் இல்லை. மின்சாரம், தண்ணீர், சாலை, ஆகிய உள்கட்டமைப்பு வசதிகள் அவசியம். இதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் இதை எல்லாம் செய்வதற்கு நிறுவன உரிமையாளர்களும், அதிகமாக வருவாய் ஈட்டு பவர்களும், நடுத்தர மக்கள் மற்றும் தொழிலாளர் ஆகியோர், அரசுக்கு வரி செலுத்துவது மிக மிக அவசியம். அரசுகளோ கண்களை விற்று சித்திரம் வாங்குவது போல், நிறுவ னங்களிடம் இருந்து பெறு கிற வரிகளைத் தள்ளுபடி செய்து, நிறுவனங்களுக்கான உள்கட்டமைப்பை உறுதி செய்து கொடுத் துள்ளது. அதேநேரம் தொழிலாளர்களிடம் இருந்து வசூல் செய்கிற வரியை, நிறுவனங்கள் மூலம் பிடித்தம் செய்து கறாராகப் பெற்றுள்ளது.

குறிப்பாக மாநில அரசு தனது வரி வருவாய் பங்கினை, உயர்த்த மத்திய அரசுடன் போராடுகிற இதே காலத்தில் தான் வணிக வரி, விற்பனை வரி, ஆகியவற்றை 10 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டி யதில்லை என எழுதிக் கொடுத்துள்ளது. வேலை ஒப்பந்த வரி, குத்தகை வரி, நுழைவு வரி ஆகிய வற்றில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவை தவிர்த்து மேலும் ஊக்கமளிக்கிற வகையில், தொழிலாளர் குறித்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் பேசுகிறது.

தொழிலாளர் குறித்து 10 அம்சங்கள் புரிந் துணர்வு ஒப்பந்தத்தில் இடம் பெற்று உள்ளன. அதில் 6 வதாகக் குறிப்பிட்டுள்ள, தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தைக் கட்டுபடுத்தப் பொதுப் பயன்பாட்டு நிறுவனம் என அறிவிப்பது (The state shall declare the SEZ site to be a “Public Utility” to curb labour indiscipline) என்பதாகும். இந்த பூதத்தைக் காட்டி, நோக்கியா நிறுவனம் தொழிலாளர்களை மிரட்ட முடிந்துள்ளது. கைபேசி உற்பத்தி எந்த வகையில் பொதுப்பயன் பாட்டுக்கானது? இன்று வரை புரியாத புதிராக நீடித்து வருகிறது, இந்த கேள்வி. அரசு கொடுத்த வாக்குறுதி அடிப்படையில் தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தைக் கட்டுப்படுத்துவதே பொதுப் பயன்பாடு என்பதாகும். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற வணிக தந்திரம் போல், கம்பெனி துவங்கினால் தொழிலாளர்களின் உரிமைகள் பறிப்பு இலவசம் என்று கூவி விற்றுள்ளது தமிழக அரசு.

உலகமயக் கொள்கை என்பது காலணி ஆதிக்க காலத்தில் இருந்து அமலாகி வருகிறது. அன்றைய உலகமயக் கொள்கை என்பது நேரடி காலணி ஆதிக்கம் எனக் கொண்டால் இன்றைய உலகமயக் கொள்கை நவ காலணியாதிக்கம் என்பதாக உள்ளது. அதாவது அன்று போல் நேரடி ஆட்சி அதிகாரம் என்பதாக இல்லாமல், சட்டத்தின் மூலம் மூலதனச் சுரண்டலை, இயற்கை வளச் சுரண்டலை உறுதி செய்வதற்கான கொள் கையாக உள்ளது. 1696ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியினர் வங்கா ளத்தின் ஹூக்ளி நதிக்கரையில் முதல் தொழிற் சாலையை உருவாக்கி உள்ளனர். அதோடு கூடவே சேர்ந்து பொருள் களுக்கான சேமிப்புக் கிடங்குகளும் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து படிப்படியாக வளர்ந்த கிழக்கிந்தியக் கம்பெனி, அவுரங்க சீப் அரசிடம் இருந்து, வரிசெலுத்தாமல் விற்பனை களை விரிவாக்கம் செய்து கொள்வதற்கான உத்தரவையும் பெற்றுள்ளது. அப்போதே இன்றைய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போன்ற ஏற்பாடுகள் விதைக்கப் பட்டுள்ளன. (ஆதாரம்: 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகம், மத்திய அரசு பாடத் திட்டம்) உலக மயமாக்கலுக்கான அடித்தளமாக இதை எடுத்துக் கொள்ள முடியும். முதலில் இடம் பின் சலுகை, அதன்பின் ஆதிக்கம் என்ற வரலாறை இன்றைய தலைமுறை நோக்கியா போன்ற நிறுவனங்கள் மூலம் அறிய முடியும்.

அமர்த்து பின் துரத்து கொள்கை:

உபரி மதிப்பு என்கிற லாபத்தின் பங்கு உழைப்பில் இருந்து வெளிப்படுகிறது, என்பது மார்க்சீயத்தின் கண்டுபிடிப்பு. இன்றைய நவீன முதலாளித்துவம் அதனுடைய, தொழில் நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, வேலையாள்களின் எண்ணிக்கையை குறைப்பது, அதன் மூலம் உபரி மதிப்பை அதிகரிப்பது, என்ற தன்மையில் செயல் படுகிறது. அதோடு கூடவே நிரந்தர தன்மை கொண்ட, தொழிலாளர் எண்ணிக்கையையும் கட்டுக்குள் வைப்பது, உபரியை பன்மடங்கு உயர்த்த உதவி செய்யும் பேராயுதம், என்பதைக் கண்டறிந்து செயல்படுகிறது. இந்த தேவைக்காக முதலாளித்துவத்தின் கொள்கை அமர்த்து பின் துரத்து என்பதாகும். நோக்கியாவில் மட்டுமல்ல. தமிழகத்தில் பஞ்சாலைத் தொழிலில் அமலான, விருப்ப ஓய்வுத் திட்ட அனுபவம் மிக முக்கியமான உதாரணமாகும். 1990 களின் இறுதியில் கோவை மாவட்டத்தில் பஞ்சாலைகளில் விருப்ப ஓய்வுத் திட்டம் தீவிரமாக அமலான காலம். இன்றைய நோக்கியாவைப் போல், 25 முதல் 28 வயது இளைஞர்களும் விருப்ப ஓய்வு என்ற பெயரில் வெளியேற்றப்பட்டனர். சில தொழிற்சங்க இயக்கங்கள் மற்றும் இடதுசாரிகள் தவிர வேறு யாரும் குரல் கொடுக்கவோ, போராட்டங்கள் நடத்தவோ தயாரில்லை. பஞ்சாலைத் தொழில் நசிவைச் சந்தித்து வருகிறது, மீட்பதற்கு விருப்ப ஓய்வு தவிர சிறந்த அணுகுமுறை வேறு இல்லை, என்ற முதலாளித்துவத்தின் கூச்சல் அதிகரித்தது.

இன்று வரை பஞ்சாலைத் தொழில் நசிவைச் சந்திக்கவில்லை என்பதை நம்மால் உணர முடியும். சுமங்கலி, மாங்கல்யம் போன்ற பல்வேறு நாமகரணங்களில் கேம்ப் கூலி முறை அறிமுக மாகி, கடந்த 15 ஆண்டுகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அநேகமாக பஞ்சாலைத் தொழிலில் நிரந்தர வேலை வாய்ப்புப் பறிக்கப் பட்டு விட்டது. சமூக பாதுகாப்பு என்ற அடிப் படையில் தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளை நிர்மூலமாக்கும் பணியை விருப்ப ஓய்வுத் திட்டம் வெற்றி கரமாக செய்து முடித்தது. சமூகவியல் அறிஞர்கள் சமூகவயமாதல் (Socialization) என்பதை விவாதிக்கிற போது, தொடர் பழக்க வழக்கம் முக்கியமானது எனக் குறிப்பிடுகின்றனர். இந்தக் கருத்தை இன்றைய முதலாளித்துவம் விருப்ப ஓய்வுத் திட்டத்தில் செயலாக்கி வருகிறது. குறிப்பிட்ட நாட்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வது, அங்கு வேலை இல்லை என்றால் வேறு நிறுவனங்களுக்குச் செல்வது, என்பதை இந்தியா போன்ற நாடுகளில் தொழிலாளர்கள் பழக்கமாகக் கொண்டு உள்ளனர். ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளைப் போல், சமூகப் பாதுகாப்பு குறித்தோ, முதுமையில் ஓய்வு மற்றும் ஓய்வூதியம் ஆகியவை குறித்தோ, இந்தியா போன்ற நாடுகளின் பெரும்பான்மையானத் தொழிலா ளர்கள் உணரவில்லை.

மாறாக ஆளும் வர்க்க சிந்தனைக்கு தொழிலாளர்கள் ஆட்பட்டு உள்ளனர். குறிப்பாக சோவியத் யூனியன் போன்ற கம்யூனிஸ்ட் நாடுகள் சந்த்தித்த அரசியல் வீழ்ச்சி, முதலாளித்துவத்திற்கு சாதகமாக மாறி விட்டது. எந்த ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டத்த்தையும் இன்றைய இளம் தொழிலாளி வர்க்கம் அனுப விக்கவில்லை. அதற்கான தியாகம், போராட்டம் ஆகியவைக் குறிந்தும் அறிந்திருக்கவில்லை. உலகமயமாக்கலின் மற்றொரு ஆதிக்கம், சிறிய நிறுவனங்களைப் பெரிய நிறுவனங்கள் விலை பேசி ஆக்கிரமிப்பது ஆகும். இது உலகில் பல நாடுகளில் சாதாரணமாக அமலாகி வருகிறது. ஒரு தொழிலில் ஆதிக்கம் செலுத்துகிற உற்பத்திப் பிரிவு யார் கையில் இருக்கிறதோ, அந்தப் பிரிவு உரிமையாளர் படிப்படியாக, இதர பிராண்ட் களின் உற்பத்தியை விலைக்கு வாங்கிவிட முடியும். இதற்கு சிறந்த உதாரணம் நோக்கியாவை, மைக்ரோசாஃப்ட் விலைக்கு வாங்கியது. இது போன்று நிறுவனங்கள் இணைகிற போது, வேலை இழப்பு தவிர்க்க முடியாது, என்ற கருத்தை மிக வலுவாக, முதலாளித்துவம் தொழிலாளி வர்க்கத்திடம் உளவியல் ரீதியில் ஏற்படுத்தி உள்ளது.

இத்தகைய கருத்தாக்கம் அமர்த்து பின் துரத்து என்ற கொள்கைக்கு உதவி செய்யும், என்பது கவணிக்கத் தக்கது. பேரா. பிரபாத் பட்நாயக் கூறுகையில், முதலாளித்துவம் உருவாக்கி வளர்க்கும் கருத்தாக்கங்களில் மிக முக்கியமானது, வறுமையும், பெருந்துன்பமும் எல்லாக் காலங்களிலும் உள்ளது, அதை எதிர்த்து போராடுவதை விட, ஒவ்வொரு தொழிலாளியையும் தனக்கான தேவை என்ற சிந்தனை மூலம், தனிமைப் படுத்தி அதை சகித்துக் கொள்ளப் பழக்குவது எனக் குறிப்பிடுகிறார். வேலையில்லாப் பட்டாளம் என்ற ரிசர்வ் ஆர்மி, வேலையில் இருப்போரை தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது, என்ற மனநிலையுடன் வேலை செய்ய வைக்கிறது. எதிர்ப்புணர்வை மழுங்கச் செய்கிறது. இது முதலாளித்துவத்திற்கு சாதகமான நிலையை நீடித்துச் செல்ல உதவுகிறது, என்றும் பிரபாத் பட்நாயக் கூறுகிறார்.

இதையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடுகிற போது, இந்தக் கருத்தாக்கங்கள் காரணமாக, சர்வதேச அளவில் வர்க்க சக்திகளின் பலாபலன்கள் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக மாறியுள்ளது. முன்னுக்கு வந்துள்ள உலகமய மாக்கலின் காலகட்டம் மூலதனத்தின் லாபத்தை மிக அதிக அளவில் உயர்த்துவதற்கான தேடலைத் தொடர அனுமதிக்கிறது, எனக் குறிப்பிடுகிறது. அரசுகளின் இயலாமை:

உலகமயக் கொள்கைகள் அமலாகத் துவங்கியபின் சந்தைக் கொள்கை தீவிரம் பெற்று இருப்பதைக் காண முடியும். சர்வதேச எல்லை களைக் கடந்ததாக சந்தை இருக்கிறது. எனவே சந்தைக்காக அரசுகள் பன்னாட்டு நிறுவனங் களிடம் தனது இறையாண்மையை விட்டுக் கொடுக்கும் போக்கும் வளரும் நாடுகளில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தேச பொருளா தாரத்தை நிர்வகிப்பது அரசின் கடமை என்பதை விட, நாட்டின் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கக் கூடியதாக அரசு இருந்தால் போதும் என்ற வாதம் தற்போது முதலாளித்துவத்தால் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதைப் பார்க்க முடியும். வேலைவாய்ப்பை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெரு நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட்டு, அங்குள்ள தொழிலாளர் உரிமைகளை எழுதி அடமானம் வைத்து விட்டபின், அரசு வேறு என்ன விதமான நிர்வாகத்தை மேற்கொள்ள முடியும்? எனவே தான் இக்காலத்தில் மிக அதிகமான தலையீடுகள் தொழிலாளர் போராட் டங்களில் இருந்துள்ளதைப் பார்க்க முடியும். அதே நேரத்தில் அரசுகள் வேலை வாய்ப்பை பாதுகாப்பதிலும், தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், வேடிக்கைப் பார்த்து இருப்பதையும் குறிப்பிட முடியும்.

வர்த்தக தாராளமயக் கொள்கை, உள்நாட்டு உற்பத்தியாளர்களை அகற்றி விட்டு வளர்முக நாடுகளில் தொழில் அழிவை ஏற்படுத்துகிறது. உற்பத்தியையும், தொழிற்துறை வணிக செயல் பாடுகளையும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நாடுகளுக்கு எடுத்துச் செல்லும் போது, வளரும் நாடுகளில் இத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது. வளரும் நாட்டின் உற்பத்தித் திறனுள்ள சொத்துக்களை, வெளிநாட்டின் பன்னாட்டு நிறுவனங்கள் வசப்படுத்திக் கொள்வதற்கு அனுமதிக்கிறது. இவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சியின் 20 வது அகில இந்திய மாநாட்டு தத்துவார்த்த தீர்மானங்கள் அறிக்கை குறிப்பிடுகிறது.

நோக்கியா நிறுவனம் தற்போது மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்த நிகழ்வு மற்றும் மத்திய அரசுக்குத் தர வேண்டிய 21 ஆயிரம் கோடி வரி ஆகியவற்றை நீதிமன்றம் தலையீடு செய்து, குறிப்பிட்ட சதம் தொகையைச் செலுத்த வேண்டும் என உத்திரவிட்ட பின்னரும், அதைச் செலுத்தாமல், வேலைவாய்ப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது, மார்க்சிஸ்ட் கட்சி மதிப்பீடு செய்த நிலையைத்தான் வெளிப் படுத்துகிறது. தமிழ் நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் நோக்கியா நிறுவனத்திற்கு வழங்கிய வரிச் சலுகைகளுக்குப் பின்னரும், குறைந்த பட்ச வரியை செலுத்த மறுத்து வருவதும் கூட, அரசுகளை பன்னாட்டு நிறுவனங்கள் மீறிச் செல்லும் ஆதிக்கம் கொண்டதாக இருப்பதை உணர முடியும். எனவே தொழிற்சங்க போராட் டங்களைக் கடந்த அரசியல் நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. தொழிற்சங்களின் கூட்டுப் போராட்டம், வேலைநிறுத்தம் ஆகியவற்றைக் கடந்த தீவிர பிரச்சாரம் அரசியல் ரீதியில் தேவைப்படுகிறது. ஏனென்றால் இதைத் தவிர வேறு வழியில்லை, என்ற கருத்து ரீதியாக ஏற்றுக் கொண்டுள்ள மனநிலையை மாற்ற அரசியல் பிரச்சாரமும், அரசியல் போராட்டமும் தான் தீர்வாக இருக்க முடியும். பலவீனப் பட்டுள்ள அரசுகளை, பெரும் மக்கள் திரள் மூலமான கூட்டு செயல்பாடுகள் மூலம் (வெகுமக்கள் அமைப்பு களின் கூட்டு செயல்பாடு) அம்பலப்படுத்தும் போது, உரிமைகளை நிலைநாட்டும் நடவடிக் கையில் வெற்றி பெற முடியும். அந்த வகையில் நோக்கியா அனுபவம் புதிய போராட்டத்திற்கான திசை வழியை நிர்மானித்துள்ளது.

குறிப்பாக ஒரு ஆலைத் தொழிலாளர்கள் 4 அல்லது 5 மாவட்டங்களில் குடியிருந்து பணிக்கு வரும் நிலையில், ஏரத்தாள சிதறிக் கிடக்கும் தொழிலாளர் கூட்டமாக, அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் உள்ள நிலையில் அதன் உதிரிபாக உற்பத்தி ஆலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், பல பன்னாட்டு மூலதனத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இங்கு கோரிக்கைகளாக, ஒன்று வேலை வாய்ப்பைப் பாதுகாப்பது. இரண்டு அரசு தனது சமூகக் கட்டுப்பாட்டை உறுதி செய்வது. மூன்று அந்நிய மூலதனத்திற்கான வரிச் சலுகைகளை வரைமுறைப்படுத்துவது. நான்கு மத்திய மாநில அரசுகள் நம்நாட்டின் இயற்கை வளம் மற்றும் மனிதவளத்தை முறை யாகப் பயன்படுத்த திட்டமிடுவது ஆகியவை ஆகும். இதற்கான தீவிரமான பிரச்சாரமும் அதைத் தொடர்ந்த போராட்டங்களும் உருவாகும் போது, நோக்கியா உதாரணங்களைத் தடுக்க முடியும். இளம் தலைமுறையின் எதிர் காலத்தைப் பாதுகாக்க முடியும். வலுவான எதிர்ப்பு இயக்கங்கள் உள்ள நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்களைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது, என்ற அனுபவத்தில் இருந்து இத்தேவையைத் தொழிலாளி வர்க்கம் உணர வேண்டும்.

புரட்சிகர எழுச்சிக்கான புறச்சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அகக்காரணிகளை வலுப்படுத்திடுவோம்

ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சி 2012 டிசம்பர் 15-16 தேதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சர்வதேச சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம்-இன்றும் நாளையும் என்ற தலைப்பில் இச்சந்திப்பு நடைபெற்றது. இதன் மீது தங்கள் கட்சியின் நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு உலகில் தெரிவு செய்யப்பட்ட சில கம்யூனிஸ்ட் கட்சிகள் அழைக்கப்பட்டிருந்தன. உலக நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில்  உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிரச்சனைகளும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளும் குறித்து விவாதிப்பதற்காக இச்சந்திப்பு நடைபெறுவதாக ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சியால் மிகவும் ஐயந்திரிபறத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசு உதயமானதின் 90 ஆவது ஆண்டு விழாவும் (சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசு 1922 டிசம்பரில் உதயமானது.) இதனுடன் சேர்ந்து கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளில் முக்கியமானவை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி, கியூபா கம்யூனிஸ்ட் கட்சி, பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி, போர்த்துக்கீஸ் கம்யூனிஸ்ட் கட்சி, கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி, உக்ரேன் கம்யூனிஸ்ட் கட்சி, பொஹிமியா மற்றும் மொராவியா கம்யூனிஸ்ட் கட்சி, லெபனீஸ் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் ரஷ்யன் சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சியும்  (சிபிஆர்எப்-CPRF-Communist Party of Russia Federation) ஆகும்.

ரஷ்யாவில் சமீபத்தில் நடைபெற்றத் தேர்தல்களில் ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சி கணிசமான அளவிற்கு முன்னேறியுள்ள பின்னணியில் இச்சந்திப்பு நடைபெற்றது. நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் 20 விழுக்காடு வாக்குகளை ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சி பெற்று, டூமா என்கிற ரஷ்ய நாடாளுமன்றத்தின் மக்களவையில் தன்னுடைய பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக் கொண்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் உள்ள 30 நாடாளுமன்ற நிலைக் குழுக்களில் ஆறு நிலைக்குழுவின் தலைமைப் பொறுப்பிற்கு சிபிஆர்எப் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சந்திப்பினைத் தொடங்கி வைத்த ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுத் தலைவரான கெனடி ஜுகா னோவ், மாஸ்கோவில் நீண்ட காலத்திற்குப் பின்னர் உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சந்திப்பு நடைபெறுவதாகக் குறிப்பிட்டார். மேலும் இந்த ஆண்டானது, சோவியத் யூனியன் உதயமான 90 ஆம் ஆண்டுடன், இரண்டாவது உலக யுத்தத்தில் திருப்பு முனையாக அமைந்த, ஹிட்லரின் பாசிஸ்ட் ராணுவம் நிர்மூலமாக்கப்பட்டு, 27 ஜெனரல்களுடன் மூன்று லட்சம் பாசிஸ்ட் படையினர் சரண் அடைந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்டாலின்கிராடு வெற்றியின் 70 ஆம் ஆண்டு தினமுமாகும்.  இதன் பின்னர், பாசிஸ்ட் படையினர் பின்வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்த மூன்றாண்டுகளில், பெர்லினில் ஹிட்லரின் தலைமையகமான ரெய்ச்ஸ்டாக்கில் செங்கொடியை உயர்த்தியதை அடுத்து அவர்கள் முழுமையாக முறியடிக்கப்பட்ட செய்தி உலகுக்குப் பறைசாட்டப்பட்டது.

ஜுகானோவ் பேசுகையில், உலகப் பொருளாதார நெருக்கடி குறித்தும் வரவிருக்கும் காலங்களில் அது மேலும் மோசமாகும் என்றும் தெரிவித்தார். இந்த வட்டமேசை சந்திப்பில் பங்கேற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்தும் பொதுவாக இரு அம்சங்களில் ஒத்துப்போகின்றன என்று அவர் தெரிவித்தார். அதாவது,  அனைத்துக் கட்சிகளும் மார்க்சிசம்-லெனினிசத்தில் நம்பிக்கை கொண்டுள்ளவை என்பதோடு, முதலாளித்துவத்தைத் தூக்கி எறிந்து, சோசலிசத்தை நிறுவி உண்மையான மனிதகுல விடுதலையை எய்துவதன் மூலம் மட்டுமே தற்போதுள்ள முதலாளித்துவ நெருக்கடிக்குத் தீர்வு காண முடியும் என்பதிலும் நம்பிக்கை கொண்டவைகளாகும் என்றும் அவர் தெரிவித்தார்.  அதன் அடிப்படையில், எதிர்காலத்தில் புதியதொரு சோசலிச சமுதாயத்தைக் கட்டிட,  வரலாற்றிலிருந்தும் அதன் அனுபவங்களிலிருந்தும்  நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  சீத்தாராம் யெச்சூரி இச்சந்திப்பில் பங்கேற்று உரை நிகழ்த்தினார். இச்சந்திப்பில் ஒவ்வொரு கட்சி சார்பாகவும் இரு சுற்றுக்கள் பேசுவதற்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டது.  முதல் சுற்றில் ஒவ்வொரு வருக்கும் இருபது நிமிடங்கள் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. முதல் சுற்றில் அனைவரும் பேசிய பின்னர் அவர்கள் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் இரண்டாவது சுற்றில் அனைவரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தார்கள். சர்வதேச நிலை குறித்து அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாடுகளையும் அனைத்துக் கட்சியினரும் புரிந்துகொள்ள விவாதங்கள் உதவின. அதேபோன்று தங்கள் நாடுகளில் தாங்கள் மேற்கொண்டு வரும் உத்திகள் மற்றும் போராட்டங்கள் குறித்தும் அனைவரும் விளக்கினார்கள்.

இக்கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:

இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  ஜுகானோவ் கூறியதைப் போல, உண்மையில் நீண்ட காலத்திற்குப் பின் நாம் மாஸ்கோவில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.  கம்யூனிஸ்ட் கட்சிகளின் இதுபோன்றதொரு கூட்டத்தில் நான் 1987 இல், சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மாபெரும் அக்டோபர் புரட்சியின் 70 ஆம் ஆண்டு தினத்தில் கலந்து கொண்டேன். அதன் பின் நடைபெற்ற நிகழ்வுகள் சோவியத் யூனியன் தகர்விற்கும், எதிர்ப்புரட்சி வெற்றி பெறவும் இட்டுச் சென்றதை நாம் அனைவரும் அறிவோம்.

தாங்கள் விடுத்திருந்த அழைப்பில், அனைத்துக் கட்சியினரும் சுதந்திரமாகத் தங்கள் கருத்துக்களைக் கூறலாம் என்று ஐயந்திரிபறக் குறிப்பிட்டிருந்ததால் நான் என் உரையைத் தயார் செய்து எடுத்து வரவில்லை. அதற்காக மொழிமாற்றுநர்கள் அருள்கூர்ந்து என்னை மன்னித்தருள வேண்டுகிறேன். ஜுகானோவ்  கூறிய கருத்துக்களின் மீது ஒருசிலவற்றை மட்டும் கூற விரும்புகிறேன். அவர் கூறியதைப் போல, வரலாற்றின் அனுபவங்களிலிருந்து முறையாகப் படிப்பினைகளை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசில் சோசலிசம் வீழ்ச்சியடைந்தது குறித்து உலகில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளில் பல,  தங்களுக்குள் பகுப்பாய் வினைச் செய்து, சொந்த முடிவுகளுக்கு வந்துள்ளன.

1992 ஜனவரியில் நடைபெற்ற எங்கள் கட்சியின் 14 ஆவது கட்சிக் காங்கிரசில் எங்கள் பகுப்பாய்வினை நாங்களும் செய்திருக்கிறோம்.  ஆயினும் இதன் ஒரு பகுதியாக இருந்த ரஷ்யக் கம்யூனிஸ்ட்டுகள் இதுகுறித்து அலசி ஆராய்ந்து ஒரு மதிப்பீட்டிற்கு வரும் வரை, நாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் அனைத்தும் முழுமையடைந்தது என்றோ போதுமானதென்றோ இயற்கையான முறையில் சொல்ல முடியாது. கடந்த இருபதாண்டு காலமாக அத்தகையதொரு மதிப்பீட்டினை உங்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆயினும் துரதிர்ஷ்டவசமாக  அத்தகையதொரு ஆய்வு தங்களிடமிருந்து  இதுவரை வரவில்லை. இப்போதாவது ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சி   இந்த இடைவெளியை – மிக முக்கியமான இந்த இடைவெளியை – நிரப்பிட முன்வரும் என்று நாங்கள் நம்புகிறோம். அவ்வாறு அது மேற்கொள்ளும் ஆய்வு சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசில் சோசலிசத்தின் எழுபதாண்டு கால அனுபவங்களை முறையாகப் புரிந்து கொள்ளவும் மதிப்பீடு செய்யவும் உதவிடும். மனிதகுல வரலாற்றில் முதன்முறையாக  மனிதனை மனிதன் சுரண்டுவதற்கு முற்றுப்புள்ளி வைத்து ஒரு சோசலிச சமூகத்தை உருவாக்கிய காலம் அது, பாசிசத்தின் தோல்விக்கு அதனுடைய பங்களிப்பு, அதனைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளிலிருந்து காலனியாதிக்கங்கள் முடிவுக்கு வந்தமை, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மிகவும் குறுகிய காலத்திலேயே வலுவானதொரு அரணாக மாறியது அனைத்தும் இக்காலகட்டத்தில் தான் நடைபெற்றது. இவ்வளர்ச்சிப் போக்குகள் அனைத்தும் இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியவைகளாகும். எதிர்கால மனிதகுல நாகரிகத்தினை வடிவமைத் திட்டவைகளாகும். ஆயினும் துரதிர்ஷ்டவசமாக இவை அனைத்தும் இப்போது  கடந்த காலமாகிப்போனது. கடந்த கால அனுபவங்களிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் ஐந்து அம்சங்களை நான் முன்வைக்க விரும்புகிறேன்.

முதலாவது, மார்க்சிசத்தின் சாராம்சம், லெனின் கூறியதைப் போன்று துல்லியமான நிலைமைகளிலிருந்து துல்லியமான பகுப்பாய்வினை மேற் கொள்ளவேண்டும் (‘concrete analysis of concrete conditions’) என்பதில் அடங்கியிருக்கிறது என்கிற உண்மை இந்த அனுபவங்களிலிருந்து உறுதியாகி இருக்கிறது.

இரண்டாவதாக, சோவியத் யூனியன் தகர்வு எந்த விதத்திலும் மார்க்சிச-லெனினிசத்தின் ஆக்கபூர்வமான அறிவியலை மறுதலித்திடவில்லை. அதேபோன்று சோசலிச சமுதாயத்தை அமைத்திட வேண்டும் என்கிற மனிதகுலத்தின் தூண்டுதலையும் அது மறுதலித்திடவில்லை.

மூன்றாவதாக, நாம் முன்பு தவறாகக் கருதிக் கொண்டிருந்ததைப் போன்று, முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறிச் செல்லும் இடைப்பட்ட காலம் அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. இது, வர்க்கப் போராட்டம் உக்கிரமாக நடைபெற்ற, ஏற்றத் தாழ்வுகளும், முன்னோக்கிச் செல்லுதலும் அதே போன்று பின்னோக்கிச் செல்லுதலும் மாறி மாறி நடைபெற்ற காலமுமாகும். இருபதாம் நூற்றாண்டு முன்னோக்கிச் சென்ற காலமாக இருந்த அதே சமயத்தில், நூற்றாண்டு முடியும் தருவாயிலும், இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பின்னோக்கிச் செல்லும் காலமாக இருந்தது.

நான்காவதாக, முதலாளித்துவம் என்பது அது என்னதான் கடும் நெருக்கடிக்கு உள்ளான போதிலும் தானாக நிர்மூலமாகிவிடாது. இறுதியாக, வரலாற்றின் குறிப்பிட்ட எந்தக் காலத்திலும், முன்னேறிவரும் சோசலிச சக்திகளின் இடைமாற்றக் காலத்தின் போது, அடிப்படைத் தீர்மானிக்கும் சக்தி, வர்க்க சக்திகளின் சமநிலை வலிமையை சரியாக மதிப்பீடு செய்வதையும் மற்றும் துல்லியமான முறையில் அரசியல் கொள்கைகளை உருவாக்குவதையும் சார்ந்தே இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில், இத்தகைய வர்க்க சக்திகளின் சமநிலை வலிமை  ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாகவே இருக்கிறது.

தற்போதைய அரசியல் நிலைமை

தற்போதைய அரசியல் நிலைமை குறித்து ஆறு அம்சங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.

முதலாவதாக, இன்றைய நிலைமைகளைப் பயன்படுத்திக் கொண்டு, ஏகாதிபத்தியம்  உலகின் மீது தன்னுடைய ஒரு துருவக் கோட்பாட்டை அரக்கத்தனமாகத் திணித்திட விரும்புகிறது. பொருளாதாரம், அரசியல், ராணுவம், சமூகம், கலாச்சாரம் என்று அனைத்துத் துறைகளிலும் அவ்வாறு திணித்திட வேண்டும் என்று அது விரும்புகிறது.

இரண்டாவதாக இது சர்வதேச நிதி மூலதனத்தின் தலைமையின் கீழ் உலக மூலதனமானது பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு உச்சபட்ச லாபம் (profit maximization) என்கிற தன்னுடைய கருணையற்ற குறிக்கோளை அடைந்திட நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கும் காலமாகும். ஆயினும், சர்வதேச நிதிமூலதனத்தின்  வெளிப்பாடு   ஏகாதிபத்தியம் தொடர்பாக லெனினது புரிதலை எந்த விதத்திலும் மறுதலித்திடவில்லை. தொழில் துறையினருக்கும் வங்கிகள் மூலதனத்திற்கும் இடையிலான பிணைப்பு நிதி ஆதிக்கத்திற்கு இட்டுச் செல்லும் (nexus between industrial and banking capital leading to financial oligarchies) என்கிற லெனினது புரிதல் எவ்விதத்திலும் மறுதலிக்கப்படவில்லை.  உச்சபட்ச லாபம் என்கிற தங்கள் வெறியைத் தீர்த்துக் கொள்வதற்காக உலகையே தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர அவர்கள் முயன்று கொண்டே இருப்பார்கள்.  ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகள் தவிர்க்க முடியாத வகையில் யுத்தங்களுக்கு இட்டுச் செல்கின்றன. லெனின் ஏகாதிபத்தியம் தொடர்பாகக் கூறிய கருத்துக்கள் அவ்வாறு அவர் கூறி பத்தாண்டுகள் முடிவதற்கு முன்னாலேயே முதல் உலகப் போர் எழுந்ததன் மூலம் மெய்ப்பிக்கப்பட்டது. இது இரண்டாம் உலகப் போரின் மூலம் மீளவும் உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வாறு ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல்களை உள்நாட்டு யுத்தமாக – அதாவது ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் ஒரு வர்க்கப் போராக  மாற்றி அதனுடைய சங்கிலியில் எங்கு பலவீனமான கொக்கி இருக்கிறதோ அதனை உடைத்தெறிய வேண்டும் என்கிற லெனினது புரட்சிகர தந்திரோபாய புரிதலையும்  மிகச்சரி என்று மீளவும் உறுதிப்படுத்தி இருக்கிறது.  ரஷ்யப் புரட்சி லெனினது இந்தப் புரிதலை மிகவும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியது.

இன்றைய தினம், சர்வதேச நிதி மூலதனம் என்பது குறிப்பிட்ட ஒரு ஏகாதிபத்திய மையத்தில் மட்டும் சுருங்கிக் கொண்டிருக்கவில்லை. மாறாக அது உலகம் முழுதும்  உச்சபட்ச லாபம் என்கிற குறிக்கோளை எய்திட வேண்டும் என்ற வெறித்தன்மையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் இன்றைய தினம் மறுதலிக்கப்பட்டிருக்கிறதா? இல்லை. மாறாக,  அதிகரித்துக் கொண்டிருக்கும் உலக முதலாளித்துவம் ஏகாதிபத்தியக் காலகட்டத்தில்  நிதிமூல தனத்தால் ஆதிக்கம் செலுத்தப்படும், தொழில்துறை, வணிகத்துறை போன்ற மற்ற அனைத்து வகையான மூலதனங்களும் அதன் வலைக்குள் சிக்கிக் கொள்ளும் மற்றும் அதன் தலைமையின் கீழ் கொண்டு வரப்படும் என்கிற ஏகாதிபத்தியம் குறித்த லெனினது கணிப்பினை மிகச்சரி என்று இன்றைய நிகழ்ச்சிப் போக்குகள் மெய்ப்பித்திருக்கின்றன. இன்றைய தினம் லெனின் சொல்லி வைத்தாற் போன்று இவை மிகவும் சரியாக நடந்து கொண்டிருக்கின்றன. லெனின்,  அவருடைய கால கட்டத்திலிருந்த துல்லியமான நிலைமைகளை மிகவும் துல்லியமாகப் பரிசீலித்து ஏகாதிபத்தியம் குறித்த  அவரது புரிதலை பிரயோகித்து, ரஷ்யப் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். அந்தக் காலகட்டம்தான் இன்றைய தினம் மாறியிருக்கிறதேயொழிய, லெனினது பகுப்பாய்வு அல்ல.

மூன்றாவதாக, இன்றைய தினம் சர்வதேச நிதி மூலதனத்தின் உலகளாவிய ஆதிக்கம் சுரண்டலை மேலும் பல்வேறு துறைகளுக்கு விரிவுபடுத்தியிருக்கிறது. சுகாதாரம், கல்வி, மின்சாரம் போன்று எண்ணற்ற துறைகள் அதன் கொள்ளை லாப வேட்டைக்கு இன்றைய தினம் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நான்காவதாக,  கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்பதையேக் குறியாகக் கொண்ட  அதனுடைய தங்குதடையற்ற சுரண்டல்தான் இன்றைய உலகப் பொருளாதார நெருக்கடிக்கு முதற்காரணமாகும். இந்நெருக்கடி இன்றைய தினம் அதன் ஐந்தாவது கட்டத்தில் இருக்கிறது. உலக மக்களில் பெரும்பான்மையோரின் வாங்கும் சக்தி குறைந்ததன் காரணமாகவே கூர்மையான வீழ்ச்சியுடன் இது தொடங்கியது. அதீத உற்பத்தி நெருக்கடியை எதிர்பார்த்து உலக முதலாளித்துவம் அதிலிருந்து மீண்டுவிட வேண்டும் என்பதற்காக மக்களுக்கு மிக எளிதான விதத்தில் கடன்கள் அளிக்க முன்வந்தன. இவ்வாறு கடன் வாங்கிய மக்கள் அதனைச் செலவழிப்பதன் மூலம் தாங்கள் பெறும் கொள்ளை லாபம் தொடரும் என்று அது கருதியது. ஆனால் கடன் வாங்கிய மக்கள், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து நெருக்கடியின் மூன்றாவது கட்டம் ஏற்பட்டது. அது, 2008 ஆம் ஆண்டைய உலக நிதி மந்தநிலைக்கு (global financial meltdown) இட்டுச் சென்றது. இந்நெருக்கடியிலிருந்து மீள வேண்டும் என்பதற்காக வளர்ந்த நாடுகள் என்று கூறப்படும் முதலாளித்துவ நாடுகள் தங்கள் நாடுகளில் உள்ள முதலாளிகளுக்கும், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய அளவில் நிவாரணங்கள் (urge bail-out packages) வழங்கின. இவ்வாறு கார்ப்பரேட் திவால் நிலைமைகள் அந்தந்த நாடுகளின் அரசுகளின் திவால் நிலைமைகளாக மாற்றப்பட்டதை அடுத்து நெருக்கடியின் நான்காவது கட்டம் ஏற்பட்டது. பின்னர் முதலாளித்துவ நாடுகள் தங்கள் திவால் நிலைமையைச் சமாளிப்பதற்காகத் தாங்கள் தங்கள் நாட்டு மக்களுக்கு அளித்து வந்த சமூகநலத் திட்டங்கள் அனைத்தையும் வெட்டிச் சுருக்கின. இது நெருக்கடியின் ஐந்தாவது கட்டமாகும்.

அரசுகளின் இந்நடவடிக்கைகளினால் மக்களின் வாங்கும் சக்தி மீண்டும் குறிப்பிடத்தக்க அளவிற்கு வெட்டிக் குறைக்கப்பட்டது. இது நெருக்கடியின் ஆறாவது கட்டத்திற்கு இட்டுச் செல்வதற்கான காரணங்களாகும். எனவேதான் வரவிருக்கும் ஆண்டு மிகவும் மோசமாக இருக்கும் என்று ஜுகானோவ் கூறியதை நானும் ஒப்புக் கொள்கிறேன். உண்மையில், 2014 ஆம் ஆண்டும் இந்த ஆண்டை விட மேலும் மோசமாக இருக்கும் என்று அவர் கூறியதை விரிவுபடுத்தி நான் கூற விரும்புகிறேன். ஏனெனில் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தாங்கள் வாங்கியுள்ள அபரிமிதமான கடன்களை மீண்டும் செலுத்த முடியா நிலை ஏற்பட்டு அவை மீண்டும் திவால் நிலைக்கு வரும்போது நிலைமைகள் மிகவும் மோசமாக இருக்கும். இந்நெருக்கடி தீர முதலாளித்துவ அமைப்பினால் விடை காண முடியாது. அதனுடைய அரசியல் மாற்றான, சோசலிசத்தால் மட்டுமே அதற்கு விடை காண முடியும்.

ஐந்தாவதாக, உலகம் முழுதும் முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் எதிர்ப்பு அலைகள். லத்தீன் அமெரிக்க நாடுகள் ஓர் உத்வேகமூட்டும் உதாரணமாக முன்னிற்கின்றன. ஆயினும், இங்கும் கூட, சோசலிச கியூபாவைத் தவிர மற்ற நாடுகள் அனைத்தும் முதலாளித்துவ அமைப்பிற்குள்ளாகவே நவீன தாராளமயத்திற்கு மாற்றினை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நாடுகளில் நடைபெறும் போராட்டங்கள் முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்றினை அளிக்கக் கூடிய விதத்தில் முன்னேறும் என்று நாம் நம்புவோமாக.

பிரதான கடமை

இறுதியாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகம் முழுதும் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வரும் எதிர்ப்பலைகளை ஒருங்கிணைத்திட வேண்டியது அவசியமாகும். உலகப் பொருளாதார நெருக்கடிக்கும் நவீன தாராளமயத்திற்கும் எதிராக உலகளாவிய வகையில் எதிர்ப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஏகாதி பத்தியம் கட்டவிழ்த்துவிட்டுள்ள யுத்தங்களுக்கு எதிராகவும் உலக அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூமி வெப்பமயமாதல் (climate change) போன்றவற்றிற்கு எதிராகவும் உலகளாவிய வகையில் எதிர்ப்புகள் நடைபெற்று வருகின்றன. இவை அனைத்தும். உலகளாவிய வகையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமாக  ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.   இவ்வியக்கத்தின் அச்சாணியாக கம்யூனிஸ்ட்டுகள் நிற்க வேண்டும்.

இதனை எப்படிச் செய்யப் போகிறோம் என்பதே இன்றைய தினம் நம்முன் விவாதத்திற்கு வந்துள்ள முக்கிய அம்சம். இங்கு பங்கேற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒவ்வொன்றுமே  தங்கள் தங்கள் நாடுகளில் உள்ள வர்க்க சக்திகளின் சேர்மானங்களை புரட்சிகரமான முறையில் மாற்றி இருக்கின்றன என்பதில் ஐயமில்லை. புறச்சூழல் தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்பை புரட்சிகரமாகத் தூக்கி எறியக் கூடிய அளவிற்கு  மிகவும் கனிந்துள்ளது என்ற போதிலும், லெனினிஸ்ட் அகக்காரணி, அதாவது மார்க்சிச-லெனினிசத்தின் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கக் கட்சிகளின் தலைமையின் கீழ் சுரண்டப்படும் அனைத்துப் பிரிவினரின் வர்க்கப் போராட்டங்களின் வலு,  பலவீனமாகவே  இருப்பது தொடர் கிறது.  தற்போதுள்ள அகக்காரணி,  புறச்சூழலை ஒரு புரட்சிகரமான எழுச்சிக்குப் பயன்படுத்தக் கூடிய அளவில் சக்திபடைத்ததாக இல்லை. அவ்வாறு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இங்கு கூடியுள்ள அனைத்து நாடுகளி லும் இருந்து வந்துள்ள அனைத்துக் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் முன் உள்ள பிரதானக் கடமையாகும்.

இந்தியாவில் எங்களுடைய அனுபவங்கள் என்ன என்பது குறித்து சுருக்கமாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் உள்ள இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் நடைபெற்ற மத்திய அரசாங்கத்தின் மூலம் தங்களுடைய நிகழ்ச்சி நிரலை அமல்படுத்திட அனுமதிக்காது என்பதைப் புரிந்து கொண்ட ஏகாதிபத்தியமும் இந்திய ஆளும் வர்க்கங்களும் இடதுசாரி சக்திகள் வலுவாகவுள்ள இடங்களில் அதனைப் பலவீனமாக்குவதற்காகவும் அதனைத் தாக்குவதற்காகவும் ஒன்று சேர்ந்தன. இவர்களின் அரசியல் கூட்டணி மாமேதைகளான காரல் மார்க்சும் பிரடெரிக் ஏங்கல்சும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் முதல் வரிகளில் கூறியுள்ள வாசகங்களை நினைவூட்டும் விதத்தில், இடது சாரிகளின் கோட்டையாகத் திகழ்ந்த மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டனர். இம்மாநிலத்தில் கடந்த முப்பதாண்டுகளாக  தொடர்ந்து ஏழு தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியிலிருந்தோம். 2009 இல் நடைபெற்ற பொதுத் தேர்தல்களுக்குப் பின் 600-க்கும் மேற்பட்ட நம் தோழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் நம்மீது தொடுத்துள்ள தாக்குதல்களை எதிர்த்து வரும் அதே சமயத்தில், நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்களைக் கூர்மைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இத்தகைய பகுதிப் போராட்டங்களின் மூலமாகத்தான் வலுவான வர்க்கப் போராட்டங்களைக் கட்டிட முடியும். எங்களுடைய அனுபவத்தில், இவ்வாறான போராட்டங்கள் மூலமாகவே, அகக்காரணியை  வலுப்படுத்திட முடியும் என்று கருதுகிறோம். இதே போன்று மற்ற தோழர்களின் கருத்துக்களையும் அவர்கள் பெற்ற படிப்பினைகளையும் தெரிந்து கொள்வதில் ஆவலாக இருக்கிறேன்.

இறுதியாக, இந்த ஆண்டு மாஸ்கோ மிகவும் குளிராக இருக்கிறது. இத்தகைய கடும் குளிர் காலத்தின்போது தான் லெனின் தலைமையில் அக்டோபர் புரட்சி மகத்தான வெற்றி பெற்றது என்கிற உண்மையும், இதேபோன்ற நிலைமைகளின் கீழ்தான் ஸ்டாலின் தலைமையில் பாசிசம் முறியடிக்கப்பட்டது  என்கிற உண்மையும் நம் அனைவருக்கும் உத்வேகம் ஊட்டக் கூடிய மூலக் கூறுகளாகும்.   தத்துவார்த்த உறுதியுடன் தீர்மானகரமான முறையில் செயல்பட்டால் அனைத்து விதமான தடைகளையும் தகர்த்தெறிந்து புரட்சிகர இயக்கம் முன்னேற முடியும் என்பதனை இவை நமக்கு எப்போதும் நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன.  இதுவரை என் உரையைக் கவனமாகக் கேட்ட உங்கள் அனைவருக்கும் நன்றி தோழர்களே.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

(தமிழில்: ச.வீரமணி)

மீட்சியுற்ற அணி சேரா இயக்கம்!

உலக அரசியலில் ராணுவக் கூட்டுக்களை வைத்து தலையீடு செய்யும் ஏகாதிபத்திய அரசியலுக்கு எதிராக கூட்டுச் சேரா இயக்கம் பிறந்தது. பல காரணங்களால் அணி சேரா நாடுகளின் இயக்கம் படுத்த படுக்கையானது. இப்பொழுது நாம் (NAM) என்று அழைக்கப்படும் இயக்கம் முன்னைவிட பலத்தோடும், எழுச்சியோடும் மீட்சியுற்று ஏழை நாடுகளின் பாதுகாவலனாக நிமிர்ந்து நிற்கிறது.

இன்று உலகம் முழுவதும், அமெரிக்காவின் போர்வெறியை எதிர்த்து மக்கள் இயக்கம் நடைபெற்று வருகிறது. வளர்ந்த நாடுகளின் பன்னாட்டு மூலதனம் மேலும் வளருவதற்காகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிற WTO உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய உலகச் சூழலில் மூன்றாம் உலக நாடுகளின் வலிமையான கூட்டு தேவைப்படுகிறது.

கியூபா தலைநகர் ஹவானாவில் 116 நாடுகள் பங்கேற்ற அணிசேரா இயக்கத்தின் 14வது மாநாடு இந்தக் கடமையை நிறைவேற்றுவதாக அமைந்துள்ளது. இந்த மாநாடு கியூபாவில் நடைபெற்றதும், எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் அணிசேரா இயக்கத்திற்கு கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ தலைமைப் பொறுப்பை பெற்றதும், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள்.

இந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட 92 பக்க அரசியல் பிரகடனம், ஏராளமான உலகப் பிரச்சனைகளில் தெளிவாக நிலைபாடுகளை கொண்டதாக உள்ளது. சமீபத்தில் இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய தாக்குதல், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள், ஐக்கிய நாட்டுச் சபையை ஜனநாயகப்படுத்துவது, ஜனநாயகத்தை பரப்புவது எனும் பெயரில் அமெரிக்கா பல நாடுகளின் சுயாதிபத் தியத்தை பறிக்க முயல்வது உள்ளிட்ட பல பிரச்சனைகளை இந்தப் பிரகடனம் உள்ளடக்கியுள்ளது.

இஸ்ரேலின் ஆதிக்கப் போக்கையும், அமெரிக்காவின் தலையீடுகளையும் பெயர் சொல்லாமல் கண்டிக்கிறது இந்தப் பிரகடனம். வெளிநாட்டு சக்திகள் ஒரு நாட்டை ஆக்கிரமித்து மக்கள் மீது தாக்குதல் நடத்துவதுதான் மிக மோசமான பயங்கர வாதம் என்று பிரகடனம் குறிப்பிடுகிறது.

குறிப்பிட்ட ஒரு மதம், இனத்தை சார்ந்தவர்களை பயங்கர வாதிகள் என்று கூறுவது கூடாது என்று பிரகடனம் கூறுகிறது. அதே போன்று ஒரு அந்நிய நாட்டின் ஆக்கிரமிப்பு இருக்கும் போது, விடுதலைக்காக மக்கள் நடத்தும் போராட்டத்தை பயங்கரவாதம் என்று சொல்லக் கூடாது என பிரகடனம் வலியுறுத்துகிறது.

ஈரானிடம் அமெரிக்கா கடைபிடிக்கும் அணுகு முறையையும் பிரகடனம் கண்டிக்கிறது. ஈரான் நாட்டை உலக சமாதானத்திற்கு எதிரியாக சித்தரிக்கும் அமெரிக்காவின் போக்கையும் பிரகடனம் கண்டிக்கிறது. அணுசக்தியை அமைதியான நோக்கங்களுக்காக பயன்படுத்தும் உரிமை அனைத்து நாடுகளுக்கும் உண்டு என்பதை பிரகடனம் தெளிவுபடுத்துகிறது.

ஈரானுக்கு ஆதரவுக்குரல்கள் மாநாட்டில் ஒலித்தன. ஈரான் தாக்கப்பட்டால் எந்த நாட்டிற்கும் இனி எண்ணை கிடையாது என்று அறிவிப்போம் என்றார் வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ். ஐக்கிய நாட்டின் பாதுகாப்பு சபையின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டுமென மாநாடு கோரி யுள்ளது. 5 நாடுகளின் வீடோ (Veto) அதிகாரத்தை அகற்றுவது அல்லது கட்டுப்படுத்த வேண்டுமென மாநாட்டுப் பிரகடனம் கோரியுள்ளது. ஐ.நா. பொதுச்சபையில் மூன்றில் இரண்டு பங்கினர் சேர்ந்து வாக்களித்தால் வீடோ ரத்து செய்யப்படும் என்ற வகையில் திருத்தம் செய்ய பிரகடனம் வலியுறுத்துகிறது.

இந்த மாநாட்டை துவக்கி வைப்பதற்கு பிடல் காஸ்ட்ரோ வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் பூரண உடல் நலம் பெறும் வரை ஓய்வெடுக்க வேண்டுமென மருத்துவர்கள் வலியுறுத் தியதால், அவர் மாநாட்டில் நேரடியாக கலந்து கொள்ளவில்லை. எனினும், இந்த மாநாட்டின் ஆதார சுருதியாக அந்த மாமனிதர் திகழ்ந்தார். கியூப கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் உள்ள அவரது அறையிலிருந்து மாநாட்டு நிகழ்ச்சிகளை அவர் கவனித்து வந்தார். ஒரு சில உலகத் தலைவர்களை மட்டும் சந்தித்து உரையாடினார். அவர் சந்தித்து உரையாடிய தலைவர்களில் ஒருவர் நமது பிரதமர் மன்மோகன் சிங். எப்போதும் இந்தியாவின் உற்ற தோழனாய், இந்திய நிலைமைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக பிடல் காஸ்ட்ரோ இருந்து வந்துள்ளார்.

விடுதலைக்குப் பிறகு, முப்பதாண்டு காலம் (1989 வரை) இந்தியா பின்பற்றிய பரந்த வெளியுறவுக் கொள்கையாக இருந்து வந்துள்ளது அணிசேராக் கொள்கை. இந்தக் கொள்கை அமெரிக்க அனுதாபிகளுக்கு தொடர்ந்து ஆத்திரத்தை ஏற்படுத்தி வந்தது. பா.ஜ.க. தலைவர் ஜஸ்வந்த் சிங் இந்த ஆண்டுகள் அனைத்தும் வீணாக்கப்பட்ட காலங்கள் என்று வர்ணித்தார். பா.ஜ.க ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

அதாவது, எந்த வல்லரசு அணியிலும் சேராமல், தனித்தன்மையோடு சுதந்திரமாக செயல்பட்டது வீண் என்பது அவரது கருத்து. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கீழ் அணி சேர்ந்து அமெரிக்காவிற்கு தாளம் போட்டிருந்தால் எத்தனையோ பலன் களை ஈட்டியிருக்கலாம் என்பது பா.ஜ.க. வில் உள்ள அமெரிக்க ஆதரவாளர்கள் பலரின் கருத்து. அணிசேராக் கொள்கை என்றா லே பல அறிவுஜீவிகள் எரிந்து விழுகிற காட்சியை தொலைக் காட்சி விவாதங்களில் பல நேரங்களில் நாம் கண்டிருக்கிறோம். ஏறத்தாழ 30 ஆண்டுகாலம் அணிசேரா பதாகையை உயர்த்திப் பிடித்து வந்த நிலை 1990 ம் ஆண்டுகளில் மாறியது. அணிசேரா இயக்கம், இந்த காலக்கட்டத்தில் சரிவை சந்திக்கத் துவங்கியது. அப்போது அமெரிக்க ஆதரவு முகாம் சந்தோசக் களிப்பில் மூழ்கியது.

எனினும், அணிசேரா இயக்கத்தின் இந்த சரிவுக் காலத்தில் உலக நிலைமைகளில் நல்ல மாறுதல்கள் ஏதாவது ஏற்பட்டுள்ளதா? உலகின் பல நாடுகளில் பல்வேறுபட்ட நிலைமைகள் இருந்தாலும், ஒரு உண்மை மறுக்க முடியாதது.

இன்றைய உலகில் ஒரு பாதுகாப்பற்ற தன்மை நிலவுகிறது. ஆப்கானிஸ்தான், ஈராக் மீது தாக்குதல் நடத்தி, அந்த நாடுகளை அமெரிக்கா கைப்பற்றியது ஒரு கொடூரமான நிகழ்வு. இது போன்ற அமெரிக்காவின் நடவடிக்கைகள் தான் பாதுகாப்பற்ற தன்மை உலகில் அதிகரிக்க முக்கிய காரணம்.

இதுவே பல தீமைகளுக்கு ஊற்றுக்கண். பல நாடுகள் அவர்களுக்கு உகந்த பாதையை தேர்ந்தெடுக்க முடியவில்லை. தங்களது நாட்டு மக்களின் நலன்களுக்காக சுதந்திரமாக எதையும் செய்ய முடியாத நிலையை அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது.

இதன் விளைவு தான் பயங்கரவாதம் எனப்படும் போக்கு தற்போது அதிகரித்துள்ளது. அதிக அளவில் பயங்கரவாதக் குழுக்கள் மதத்தின் பெயரால் செயல்படுவதும், பயங்கரவாத செயல்கள் அதிகரிப்பதும் நிகழ்கின்றன.

ஹவானா மாநாட்டில் உரையாற்றிய நமது நாட்டு பிரதமர், பயங்கரவாதம் பற்றி கடுமையாக கண்டித்துப் பேசினார். இதனை கண்டிப்பது வரவேற்கத்தக்கது தான். ஆனால் பிரதமர், தனது உரையில் பயங்கரவாதத்திற்கு மூலகாரணம் யார் காரணம் என்பதை குறிப்பிடவில்லை.

ஒரு பயங்கரவாத குழு வெடிகுண்டு வீசி மக்களை அழிப்பது மட்டும்தான் பயங்கரவாதமா? ஒரு நாடே மற்றொரு நாட்டின் மீது குண்டு வீசி தகர்ப்பது பயங்கரவாதம் இல்லையா? இந்த அரசு பயங்கரவாதம் பற்றி பிரதமர் மன்மோகன் சிங் மூச்சுவிடவில்லை. இதைப்பற்றி பேசத் துவங்கினால், அவர் அமெரிக்காவைத்தான் குற்றம் சாட்டிப் பேச வேண்டியிருக்கும் என்பதால், அவர் அந்த எல்லைக்குச் செல்லவில்லை.

அவர் அமெரிக்காவை குறிப்பிடாததற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய உடனடி காரணம் ஒன்று இருந்தது. ஹவானா மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் தான், அமெரிக்க செனட் சபையில், இந்திய அமெரிக்க அணுசக்தி மசோதா விவாதத்தில் இருந்தது. அதற்கு பாதிப்பு எதுவும் வந்து விடக்கூடாது. இந்த மசோதா சட்டமாக செனட்டில் நிறைவேற்றப் பட வேண்டும் என்ற கவலை பிரதமர் பேச்சில் இருந்தது.

ஏற்கனவே இந்திய அரசோடு அமெரிக்கா கையெழுத் திட்டிருந்த இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தங்களுக்கு மாறாக, இந்திய நலன்களுக்கு விரோதமான ஏராளமான அம்சங்கள் இந்த மசோதாவில் இருந்தது.

இவ்வாறு அமெரிக்கா பல வகைகளில் இந்திய நலனுக்கு துரோகம் இழைத்திருந்தாலும், இந்திய ஆட்சியாளர்கள் உறுதியாக அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலை எடுத்து, அணி சேரா நாடுகளோடு இணைந்து நிற்க தயாராக இல்லை.

இதற்கு அடிப்படைக்காரணம், இந்திய ஆட்சியாளர்களின் வர்க்கத் தன்மைதான். இந்தியப் பெரு முதலாளித்துவம், எப்போதும் ஏகாதிபத்திய மூலதனத்தோடு முரண்படுவதை விரும்புவதில்லை. அப்படியே முரண்படும் நிலை வந்தாலும், முற்றான எதிர்ப்பு நிலை எடுப்பதில்லை. ஏனெனில், இந்திய பெரு முதலாளித்துவ, ஏகபோகங் களின் வளர்ச்சிக்கு, உலக ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் கூட்டு அவசியமானது.

அணிசேரா நாடுகளின் இயக்க வரலாறே இதற்கு சான்றாக உள்ளது. இரு துருவ உலகம் என்று அழைக்கப்பட்டு வந்த காலத்தில், அணி சேரா நாடுகளின் இயக்கம் ஒரு முக்கிய உலக இயக்கமாகத் திகழ்ந்தது.

சோவியத் யூனியன் ஒரு புறம், அமெரிக்கா மறுபுறம் என்று உலகம் இரு கூறாகப் பிரிந்து, இரு முகாம்கள் எதிரும் புதிருமாக இருந்த நிலையில், எந்த வல்லரசோடும் சேர மாட்டோம் என்று உறுதியான குரலோடு 1955 ம் ஆண்டில் மூன்றாம் உலக நாடுகள் சேர்ந்து உருவாக்கிய இந்த அணிசேரா இயக்கம் மலர்ந்தது.

எந்த வல்லரசோடும் சேர்ந்து ராணுவக் கூட்டணி கிடையாது என்று இந்த நாடுகள் அறிவித்தாலும், அவ்வப்போது, தேவைக்கு ஏற்றாற்போல வல்லரசுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டன. இந்திய ஆளும் வர்க்கம், தொழில் நுட்பம் வளராத நிலையில், கனரக தொழில்கள் உருவாக்க அமெரிக்க உதவியை நாடியது. ஆனால் அமெரிக்கா, இந்தியா சொந்தக்காலில் நிமிர்ந்து நின்றிட விரும்ப வில்லை, தனது வர்த்தக வாடிக்கையாளராக மட்டும் இந்தியா இருந்தால் போதும் என்று கருதியது.

இதனால் வெறுப்புற்ற இந்திய முதலாளித்துவம், பிறகு தான் சோவியத் யூனியன் உதவியை நாடியது. சோவியத் உதவியோடு தான் இந்தியாவின் சுயமான தொழில் வளர்ச்சி சாத்தியமாகியது.

இந்தக் காலக்கட்டத்தில்தான், இந்தியா அணிசேரா நாடுகளோடு நின்று, இந்த இயக்கத்தின் முன்னணி பாத்திரத்தை ஆற்றியது. காலனியாதிக்கம், நொறுங்கி, பல நாடுகள் விடுதலை பெற இந்த இயக்கத்தின் வலுவான குரல் காரணமாக அமைந்தது.

தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சி முடிவுக்கு வர அணிசேரா இயக்கம் செயலாற்றி வெற்றி கண்டது. 1955ம் ஆண்டு பாண்டுங்கில் நடைபெற்ற மாநாட்டில் பஞ்சசீலக் கொள்கைகள் என்று அழைக்கப்படும் 5 கோட்பாடுகள் உருவாக்கப்பட்டது. இவ்வாறு துவங்கிய இந்த இயக்கத்தில் முக்கிய பங்காற்றிய இந்தியா தனது வர்க்கத் தேவைகளையொட்டி, ஏகாதிபத்தியங்களோடு முரண்படுதலும், கூட்டு சேருவதும் என இரண்டு எதிர் எதிரான கொள்கையை கடைபிடித்து வந்துள்ளது.

1955 முதல் பத்தாண்டுகளுக்கு மேலாக ஏகாதிபத்தியங்களோடு எதிர்நிலை எடுத்தது போன்ற தோற்றம் இருந்தது. எனினும், ஏகாதிபத்தியத்தோடு இருந்த பிணைப்பை இந்தியா முற்றாக கைவிடவில்லை.

1980 ம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும், 1990 ம் ஆண்டுகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்தியா, ஏகாதிபத்தியங்க ளோடு, குறிப்பாக, அமெரிக்காவோடு அதிக நெருக்கம் காண முயன்றது.

இதற்கு முக்கியக்காரணம், உள்நாட்டு பொருளாதாரத்தில் துவக்கப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகள். புதிய தாராளமயக் கொள்கைகள் என்ற ஒரு புதிய சகாப்தத்தில் இந்தியா நுழைந்தது. தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் கோலோச்சத் துவங்கின. இது இயல்பாகவே, அந்நிய நிதி மூலதனம், அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களோடு உறவினை பலப்படுத்த வேண்டிய தேவையை இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு ஏற்படுத்தியது. வளர்ச்சியடைந்த இந்திய முதலாளித்துவம், தனது துரித வளர்ச்சிக்கான சுரண்டல் கொள்கையை நிகழ்த்த அந்நிய நிதி மூலதனத்திற்கும் துணை தேவைப்பட்டது. அந்நிய மூலதனத்திற்கும், இந்திய சந்தையை ஆக்கிரமிக்க இந்திய அரசு, ஆளும் வர்க்கங்களின் துணை தேவைப்பட்டது.

ஆக, இந்த நிகழ்வுப் போக்கு இயல்பாகவே இந்திய அரசுக்கு அணி சேரா இயக்கத்தின் மீது இருந்த நாட்டத்தைக் குறைத்தது. இதே போன்ற போக்குகள் மற்ற மூன்றாம் உலக நாடுகளிலும் ஏற்பட்டது. உலகமயம் எனும் பெயரால் உலகவங்கி, சர்வதேவ நிதி நிறுவனத்தின் பிடி இறுகியது.

இந்த நிகழ்வின் இணையான போக்காக, சோவியத் யூனியனின் வீழ்ச்சி அமைந்தது. இரு துருவ உலகம் என்று சொல்லப்பட்ட நிலை மாறியது. சோவியத் யூனியன், அமெரிக்கா என்ற இரு துருவங்களில் ஒன்று தகர்ந்த பிறகு இயல்பாக என்ன நிகழ்ந்திருக்க வேண்டும்? பல துருவங்கள் நிரம்பியதாக இந்த உலகம் மாறியிருக்க வேண்டும். ஆனால், என்ன நடந்தது? ஒரு துருவ உலகமாக, அமெரிக்கா ஏகமாக ஆதிக்கம் செலுத்தும் உலகமாக இந்த பூவுலகம் மாற்றப்பட்டது.

சோவியத் யூனியன் சிதைவு, அணிசேரா இயக்கம் நீர்த்துப் போனது ஆகிய இரண்டும் ஒரு சேர நிகழ்ந்தது. இது எதைக் காட்டுகிறது? சோவியத் யூனியன் எனும் மகத்தான சக்தி இருந்தபோது தான், அணிசேரா இயக்கம் எழுச்சியோடு செயல்படுவதற்கான உலகச் சூழலும், வாய்ப்பும் பிரகாசமாக இருந்தது. சோவியத் யூனியனின் வல்லமை தான் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தது. இந்த உலக நிலை காரணமாகத்தான், மூன்றாம் உலக நாடுகள் தங்களது வளர்ச்சிக்காக அணிசேரா இயக்கம் அமைத்து ஓரளவு சுதந்திரமாக செயல்பட வாய்ப்பு ஏற்பட்டது.

அணிசேரா இயக்கத்தில் இருந்த தலைவர்கள் பல நேரங்களில் எந்த வல்லரசோடும் கூட்டு இல்லை என்று பிரகடனப்படுத்துகிற போது, சோவியத்தையும், அமெரிக்காவையும் சமமாக பார்ப்ப துண்டு. உண்மை என்னவெனில், சோவியத் யூனியன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்ற நிலை காரணமாகத்தான், அமெரிக்காவிடம் சரணடையாமல், ஓரளவு எதிர்ப்பு காட்டும் தைரியத்தை அணி சேரா இயக்க நாடுகள் பெற முடிந்தது. இதை உணர்ந்தே, பிடல் காஸ்ட்ரோ அன்று சோவியத் யூனியனை அணி சேரா இயக்கத்தின் இயல்பான கூட்டணி நாடு என்று வர்ணித்தார்.

இதனால் தான் சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு அணி சேரா நாடுகளின் இயக்கமும் பலவீனப்பட்டது. பல நாடுகள் அமெரிக்கா விடம் ஒட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உலகம் ஒரு துருவ உலகம் ஆனது.

இத்தகு பின்னணியில், இனி வரும் காலங்களில் அணி சேரா இயக்கத்தின் திசைவழி எதுவாக இருக்க வேண்டும்? மாநாட்டு துவக்க உரையில், கியூப பொறுப்பு அதிபர் ரால் காஸ்ட்ரோ இதைப் பற்றி குறிப்பிட்டார். அணிசேரா இயக்கம், சர்வதேச சட்டங்களை காப்பதிலும், 1955-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பஞ்சசீலக் கோட்பாடுகளை பாதுகாப்பதிலும் உறுதியாகப் போராட வேண்டும்.

தற்போதுள்ள, சுரண்டல், கொள்ளை அடிப்படையிலான உலகப் பொருளாதார அமைப்பினை மாற்றிட அணிசேரா இயக்கம் உறுதியுடன் போராட வேண்டும். மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ், இன்றைய உலகமய பொருளாதாரம் இயங்கி வருவதால், சுதந்திர வர்த்தகம் என்பதெல்லாம் வெறும் ஏமாற்று என குறிப்பிட்டார் ரால் காஸ்ட்ரோ. ஒரு சில பணக்கார நாடுகளைக் கொண்டே ஒரு குழுவிற்கும், 80 சதம் மக்களைக் கொண்ட நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வை ஒழிப்பது அணிசேரா இயக்கத்தின் முக்கிய கடமை. இவையே பிரதான அணி சேரா இயக்கத்தின் முக்கிய பணிகளாக உள்ளன.

எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தின் மூலம் ரஷ்யா இன்று பெரும் வருமானத்தை ஈட்டியுள்ளது. இதனால், ரஷ்யா மத்திய ஆசியாவில் செல்வாக்கு பெற்ற நாடாக மீண்டும் உருவாகியுள்ளது.

சீனா உலகில் மிகப் பெரும் பொருளாதார வல்லரசாக மாறியுள்ளது. ரஷ்யாவும், சீனாவும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பினை வலுவான அமைப்பாக மாற்றியுள்ளன. இதில் ஈரானும் சேர்க்கப்பட்டுள்ளது.

லத்தின் அமெரிக்காவில் இடதுசாரிகள் மீண்டும் பலம் பெற்றுள்ளனர். காஸ்ட்ரோவும், சாவேசும் லத்தின் அமெரிக்க ஒற்றுமையை உருவாக்கி வருகின்றனர். இந்த நிலையில் அணிசேரா இயக்கமும் வலுப்பெற்றால், ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் மகத்தான எழுச்சி மலரும்.

வெல்வதற்கோர் பொன்னுலகம்!

சமுதாய வாழ்க்கையெனும் அரங்கினையும் தன்னுள் கொண்டு முரணற்றதாய் அமைந்த பொருள்முதல்வாதம்; வளர்ச்சி பற்றிய மிக விரிவான, மிக ஆழமான போதனையாகிய இயக்கவியல்; வர்க்கப் போராட்டத்தையும், ஒரு புதிய, கம்யூனிச சமுதாயத்தின் படைப்பாளனாகிய பாட்டாளி வர்க்கத்திற்குள்ள உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரட்சிகர பாத்திரத்தையும் பற்றிய தத்துவம் – இவையாவும் அடங்கிய ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை இந்த நூல் மாமேதைக்குரிய தெளிவோடும், ஒளிச்சுடரோடும் எடுத்துரைக்கிறது. மாமேதை லெனின் அவர்கள் மார்க்சும், ஏங்கல்சும் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பற்றி தெரிவித்துள்ள கருத்தாகும்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியாகி ஒன்றரை நூற்றாண்டு கடந்துவிட்ட போதிலும், இன்றைய சூழலுடன் பொருத்திப் பார்த்து, படித்து பயன்பெற வேண்டிய நூல் என்றால் மிகையாகாது. ஆங்கிலத்தில் A World to Win என்று லெப்ட் வேர்டு பதிப்பகம் வெளியிட்ட நூலை பாரதி புத்தகாலயம் தமிழில் வெளியிட்டுள்ளது. கடினமான அரசியல், பொருளாதார கருத்துக்களை, எளிமையான, அழகான நடையில் மொழி பெயர்த்துள்ள கி.இலக்குவன் அவர்கள் பாராட்டுக்குரியவர். தமிழில் இதை வெளியிட்ட பாரதி புத்தகாலயத்திற்கு பாராட்டுக்கள். இதில் மூன்று முக்கிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மார்க்சீய அறிஞர்களான பிரபாத் பட்நாயக், இர்பான் ஹபீப் மற்றும் அய்ஜாஸ் அகமது ஆகியோரின் கட்டுரைகளுக்கு தோழர் பிரகாஷ் காரத் அறிமுக உரை எழுதியுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மீண்டும் படிக்கத் தூண்டும் வகையில் அறிமுக உரை அமைந்துள்ளது. இந்நூலை படித்து விட்டு, கம்யூனிஸ்ட்டு கட்சி அறிக்கையை, அதன் பல பதிப்புகள், அவற்றிற்கு மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுதியுள்ள முகவுரையை படிப்பது சிறந்த அனுபவமாக அமையும். (இந்த கட்டுரையாளர் அப்படி வாசித்தது பயனுள்ளது என குறிப்பிட விரும்புகிறார்.) பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பாவில் நிலவியசூ ழல், பாரீஸ் கம்யூன் புரட்சி, பிரஞ்சு புரட்சி பற்றி தோழர். பிரகாஷ் காரத் குறிப்பிடுகிறார். 1864 ல் உழைக்கும் மக்கள் சங்கம், மார்க்சீய சிந்தனைகள் வளர்ச்சி பற்றி குறிப்பிடும் அவர், 1948 ல் கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவின் போது, உலகம் எந்த அளவு மாறியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். சோவியத் யூனியன், மக்கள் சீனம், வியட்நாம், கொரியா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் என மக்கள் ஜனநாயக அரசுகள் ஏற்பட்ட காலம் அது. ஆனால், சோவியத் யூனியன் உடைந்த பின் சோசலிசம் செத்துப் போய் விட்டது என்ற புலம்பலும், முதலாளித்துவத்திற்கு மாற்று இல்லை என்ற ஏகாதிபத்திய நாடுகளின் கொக்கரிப்பும், சோசலிசத் தின் சாத்தியப்பாடு பற்றி சிந்தனையாளர்களின் கவனத்தை திருப்பியது.

சோவியத் யூனியன் வீழ்ந்த பின், உலக நாடுகளுக்கு தலைவனாக, தட்டிக் கேட்க ஆளில்லாதது போன்று ஏகாதிபத்திய அமெரிக்கா செயல்படத் துவங்கிய உடனேயே தொண்ணூறுகளின் பின் பகுதியில், வளர்ந்த நாடுகளில் வெடித்த உழைக்கும் மக்களின் போராட்டம், குறிப்பாக, பிரெஞ்சு நாட்டுத் தொழிலாளர் போராட்டம் முதலாளித்துவம் நிரந்தரமானது அல்ல என்ற கருத்தை மீண்டும் வலுவாக நிலை நிறுத்தியது.

தனது அறிமுக உரையின் இரண்டாவது பகுதியில் கம்யூனிஸ்டு பிரகடனத்தில் முதலாளித்துவம் பற்றிய மார்க்சின் ஆய்வு முழுமை பெறவில்லை என்றும் மூலதனம் என்ற நூல் தான் முழுமையாக அப்பணியைச் செய்துள்ளது என்று தோழர்.காரத் குறிப்பிடுகிறார். மேலும், இன்றைய சூழலில், நிதி மூலதனத்தின் வளர்ச்சி,  அதனால் ஏற்படும் பிரச்சனைகள், பொருளாதார சீர்குலைவுகள் பற்றி தெளிவாக விளக்கியுள்ளார். முதலாளித்துவம் உலகளாவிய அளவில் செயல்பட்டாலும், தேசிய எல்லைக்குள் வர்க்கப் போராட்டம் நடத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை கம்யூனிஸ்டு பிரகடனம் வலியுறுத்துவது, இன்றும் பொருத்தமாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். இன்றைய சந்தை சார் பொருளா தாரத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ள ஆளும் வர்க்கங்கள் அதை நிலையானதாக கருத இயலாது என்றும், தங்கள் நிலை பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டி இருக்குமென்றும் கூறுகிறார்.

மேலும், சுயாதிபத்தியத்தை ஒரு நாடு இழக்கும் போது, அந்நாட்டு மக்கள் தங்களை தாங்களே ஆளும் உரிமையை இழக்கின்றனர் என்பதை இன்றைய இந்திய சூழலுடன் பொருத்தி விளக்கியுள்ளார். வர்க்கப் போராட்டத்தை நாம் திறமையாக கையாள வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. தோழர்.காரத்தின் அறிமுக உரையின் மூன்றாவது பாகத்தில், இன, குழுவாதம், மதம் மற்றும் தேசிய அடிப்படையில் பல்வேறு சிக்கல்கள் தோன்றியுள்ளதையும், இவற்றினால் ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டங்களுக்குத் தடைகள் ஏற்படுகின்றன என்பதை வலியுறுத்தியுள்ளார். சாதி, மத, இன அடிப்படையில் எவ்வளவு மோதல்கள்? ஆப்கனில் தாலிபன், பாகிஸ்தானில் உள்ள மத அடிப்படைவாதிகள், இந்தியாவில் இந்து மத வெறியர்கள் ஆகியவற்றுடன் அமெரிக்க ஏகாதிபத்தியம் சேர்ந்து செயல்படுகிறது. இதனால் மக்கள் ஒற்றுமை பாதிக்கப்படுகிறது. சோவியத் யூனியன் மற்றும் யூகோஸ்லாவியாவில் நடைபெற்ற நிகழ்வுகள், பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடுகளின் பிரச்சனைப் பற்றி மார்க்சீய தத்துவம் மற்றும் நடைமுறைகள் காட்டும் வழிகாட்டுதல் குறித்த ஒரு புதிய பார்வையின் அவசியத்தை உணர்த்துகின்றன என்று கூறுகிறார்.

நான்காம் பகுதியில், சோசலிசம் சந்தித்த பின்னடைவுகள் காரணமாகத் தோன்றியுள்ள திரிபுவாத போக்குகள் குறித்து கவனத்தை ஈர்க்கும் அதே சமயம், தொழிலாளி வர்க்கம் மட்டுமே ஏகாதிபத்திய தாக்குதலை தொடர்ந்து எதிர்த்து வருகிறதென்ப தையும் சுட்டிக்காட்டியுள்ளார். கம்யூனிஸ்டு பிரகடனத்திலிருந்து மேற்கோள் காட்டி, ஆண்களின் உழைப்பு அகற்றப்பட்டு, பெண் தொழிலாளர்கள் அமர்த்தப்படுவதைக் குறிப்பிட்டு, 20 – ம் நூற்றாண்டு இறுதிக் கணக்கின் படி, வளர்ந்துள்ள முதலாளித்துவ நாடுகளில் உழைப்பாளர் படையில் 60 சதம் பெண்கள் உள்ளனர் என்பதை குறிப்பிடுகிறார். உழைக்கும் வர்க்கத்தின் ஒரு அங்கமாக பெண் தொழிலாளர்கள் மாற்றப்படாவிட்டால், பிரகடனத்தின் நோக்கத்தை நிறைவேற்ற இயலாதென எச்சரிக்கிறார். அனைத்து நாடுகளிலுமுள்ள தொழிலாளி வர்க்க கட்சிகளுக்குள்ளே கம்யூனிஸ்டுகள் தான், மிகவும் முன்னேறிய, மிகவும் நெஞ்சுறுதி படைத்தவர் என பிரகடனத்தில் கூறியுள்ளது மிகவும் சரியான நிலை என்று வலியுறுத்தியுள்ளார். இப்பகுதியின் இறுதியில், இருபதாம் நூற்றாண்டில் சோவியத் யூனியன் மற்றும் இதர சோசலிச நாடுகள் சந்தித்த அனுபவங்களின் அடிப்படையில் கட்சி பற்றியும், வர்க்கம் பற்றியும், அரசு பற்றியும், பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இன்றளவும் விடை காணப்படாதவையாகவும் நீடிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

அறிமுக உரையின் இறுதிப் பகுதியில் இன்று கட்சியின் செல்வாக்கு, பணிகள், பலம், பலவீனம் பற்றி பொதுச் செயலாளர் சுருக்கமாக தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

கம்யூனிஸ்ட் பிரகடனம் – அன்றும் இன்றும் என்ற அய்ஜாஸ் அகமதுவின் கட்டுரை மிகவும் சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது. துவக்கத்திலேயே, பைபிள், குரானுக்கு அடுத்தபடியாக விரிவான முறையில்  அறியப்பட்ட நூல் கம்யூனிஸ்ட் பிரகடனம் என்கிறார் ஆசிரியர். போல்ஷ்விக் புரட்சிக்கு முன்பு 35 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது என்பதும், அக்காலத்திலேயே 544 பதிப்புகள் வெளிவந்தன என்பதும் அதன் சிறப்பை வெளிப்படுத்து கின்றன. 1917 நவம்பர் புரட்சிக்குப் பின்னர் மேலும் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, எண்ணற்ற பதிப்புகள் வெளியாகின என்பதும் இந்நூலின் செல்வாக்கு எந்த அளவுக்கு இருந்ததென்பதை காட்டுகிறது பைபிள், குரான் போலின்றி, வெளியிட்டு 150 ஆண்டுகளுக்குள் இந்நூல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிக அதிகம். இது ஒரு இளமை ததும்பும் நூல் என்கிறார் கட்டுரையாளர், மற்ற நூல்களைக் காட்டிலும், இந்நூல் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தக் காரணம் அதன் அரசியல் வலிமை என்று குறிப்பிடப் பட்டுள்ளது மிகவும் பொருத்தமானதாகும். அதேபோல, இந்த நூலின் உரைநடை வீச்சின் கம்பீரம், சமூகங்களை பீடித்துள்ள நோய் பற்றிய நிர்ணயிப்பையும், எதிர்கால நிகழ்வுகளைப் பற்றிய கணிப்பும்….. பிரகடனத்தின் சிறப்புக்குக் காரணம் என்கிறார் அகமது.

மார்க்சும், ஏங்கெல்சும் இணைந்தும், மார்க்ஸ் தனியாகவும் ஏராளமான நூல்களை எழுதிய போதிலும், 30 வயது கூட நிரம்பாத இளைஞரான ஒருவரின் அறிவு முதிர்ச்சி மிக்க நூல்தான் பிரகடனம் என்கிறார் கட்டுரையாளர் அகமது. மார்க்சின் மற்றநூல்களை மேற்கோள் காட்டி, அவை அன்று நிலவிய அரசியல் சிந்தனை போக்குகளுக்கெதிராக அவரது தத்துவ மோதல்களின் அடையா ளங்கள் என்று குறிப்பிடுகிறார், அவை குறிப்பிட்ட நூலாசிரியர் களுக்கெதிராக, அச்சிந்தனைகளுக்கு எதிராக எழுதப்பட்டவை என்றும் விளக்குகிறார். ஆனால், பிரகடனத்தின் மறக்க முடியாத முற்பகுதி எந்த ஒரு சிந்தனையாளருக்கோ, சிந்தனைப்போக்கு களுக்கோ எதிரான விமர்சனமாக இது அமையவில்லை. மாறாக, அதுவரை மார்க்ஸ் எழுதிய நூல்களுக்குள்ளேயே முதன் முறையாக தனது கருத்துக்களை அழுத்தந்திருத்தமாக விவரிக்கக்கூடிய ஒரு பகுதியாகவே உள்ளது என்றும், இந்நூல் அரசியல், பொருளா தாரம், வரலாறு, தத்துவம் ஆகியவற்றுக்கிடையே ஒரு புதிய உறவு முறைக்கான இலக்கணத்தை வகுக்கும் நூல் என்றும் நூலின் அம்சங்களைப் பற்றி விளக்குகையில் கூறுகிறார், இந்நூல் ஒரே நேரத்தில் இரண்டு விதமான அசைவுகளைச் சுட்டிக்காட்டியது. ஒன்று பொருளியல் உலகில் நடைபெறும் அசைவு அதாவது பல்வேறு உற்பத்தி முறைகளைப் பொதுவான முறையில் விளக்கு வதன் மூலம் தத்துவம் என்ற அறிவியல் ஆய்வை உறுதிப்படுத்தக் கூடிய ஒரு வரலாற்றுக் கோட்பாடு……. இரண்டாவது – நீதிநெறி முறைகளுக்கு முரணான, பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு உலகத்தை புரட்சிகரமான மாற்றங்கள் மூலம் மாற்றியமைக்கும் நெறிமுறை சார்ந்த திட்டம். இரண்டுவிதமான அம்சங்கள் குறித்தும் மார்க்சியம் கவனம் செலுத்தியுள்ளது என்றும் நூலின் முக்கியத் துவம் பற்றி நிறைய விளக்கியுள்ளார். முதலாளித்துவத்தை எப்படிப் பார்க்க வேண்டும்?

முதலாளித்துவத்தின் சாரத்தைப் புரிந்து கொள்ள வேண்டு மென்றால் அதனை ஆடாமல் அசையாமல் இருக்கும் ஒரு சமூக அமைப்பாக பார்க்கக்கூடாது (பக்கம் 30) என்பதே மார்க்சின் பதில். மேலும், மார்க்சின் அனைத்து படைப்புகளிலும் உள்ள மூன்று முக்கிய அம்சங்களாக கட்டுரையாளர் குறிப்பிடுபவை:

  1. முதலாளித்துவ உற்பத்தி முறையைப் பற்றி மிகவும் கூர்மையான முறையிலும், மிகவும் விரிவான முறையிலும் விளக்குவதற்கான முயற்சி……….
  2. அவர் காலத்திலும், அவரைச் சுற்றியும் உருவாகி வந்த வரலாறு மற்றும் அரசியல் பற்றிய விரிவான பரிசீலனை………
  3. தொழிலாளர் இயக்கம் பரிசீலிக்க வேண்டிய பிரச்சனைகள் ஆகும்.

பிரகடனம் பற்றிய பல்வேறு அணுகுமுறைகளை கட்டுரையாளர் விளக்கியுள்ளார், ஹெகலின் கருத்துக்கு எதிராக மார்க்ஸ் தனது கருத்துக்களை வெளிப்படுத்த ஆரம்பித்தார் என்றும், உணர்வு என்பதை கருப்பொருளாகக் கொண்டு பல கட்டுரைகளை எழுதினார் மார்க்ஸ் என்றும் கூறுகிறார், உணர்வு பற்றிய மார்க்சின் மிகவும் பிரபலமான வாசகமும் மேற்கோளாகக் காட்டப் பட்டுள்ளது. மனிதனுடைய உணர்வு அவனது வாழ்நிலையை தீர்மானிக்கவில்லை. மாறாக, அவனது சமூக வாழ்க்கைத்தான் அவனது உணர்வை தீர்மானிக்கிறது (பக்கம் 33).

கட்டுரை ஆசிரியர் பிரகடனத்தை எப்படி பரிசீலிக்கலாம் என்று விளக்கியுள்ளார்.

  1. காலச் சூழலுக்கேற்ப பரிசீலிக்கலாம். (உ.ம் கம்யூனிஸ்ட் லீக், பிளவுபட்டுக் கிடந்த உழைக்கும் வர்க்கம் – வர்க்க ஒற்றுமை……)
  2. சித்தாந்த அடிப்படையில் பரிசீலிக்கலாம். (ஹெகல், ஃபாயர்பாக்….) இப்படி கூறிவிட்டு, பிரகடனத்தை பரிசீலிப்பது என்பது முடிவே இல்லாத ஒன்று என கருதும் அளவுக்கு ஆழமானது சிக்கல் நிறைந்தது, புரிந்து கொள்வதற்கு கடினமானது என்ற தன் கருத்தை முன்வைக்கிறார் பிரகடனத்திலுள்ள அரசியல், பொருளாதார அம்சங்களை ஆராய்ந்து, ஐரோப்பிய சூழல், முதலாளி-தொழிலாளி வர்க்கத் தன்மைகளை விரிவாக எழுதி யுள்ளார். மேலும், முதலாளித்துவ வர்க்கம் ஒரு புரட்சிகரமான வர்க்கம் என்ற தன்மையை எப்போது இழக்கும்? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். தனது கருத்துக்களுக்கு வலுவூட்ட கிராம்சியின் கருத்துக்களை மேற்கோள்காட்டி விளக்குகிறார். இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் தன்மைகளையும் கட்டுரையாளர் பரிசீலனை செய்துள்ளார். முதலாளித்துவத்தின் விதிகளையும் விளக்கமாக எழுதியுள்ளார்.

அய்ஜாஸ் அகமது கட்டுரையின் கடைசி பகுதியான உலகமயமாக்கல், பொருளாதாரம் பண்பாடு, தற்போதைய சூழலை தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. அதில் ஊடே நூலிழை போன்று ஹெகல் மற்றும் மார்க்சின் கருத்துக்கள் ஆராயப் பட்டுள்ளன. உலகளாவிய வர்க்கம் என்று அதிகாரவர்க்கத்தை ஹெகல் குறிப்பிட்டாலும், மார்க்ஸ் அதற்கெதிரான விளக்கத்தை அளித்துள்ளதை எழுதியுள்ள கட்டுரையாளர் அச்சொல்லிற்கு நீண்ட விளக்கம் தந்துள்ளார். பாட்டாளி வர்க்க நிலைமைகளை விளக்கி கட்டுரையை நிறைவு செய்துள்ளார் அகமது அவர்கள். கட்டுரைக்கு பின் 6 பக்கங்களுக்கு கொடுத்துள்ள குறிப்புகள் சில சொற்களை சரியாக புரிந்து கொள்ள உதவும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

நூலில் இரண்டாவது கட்டுரை மிகச்சிறந்த வரலாற்று அறிஞர் இர்பான் ஹபீப் அவர்களால் எழுதப்பட்டதாகும். தலைப்பு கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் பொதிந்துள்ள வரலாற்றை வாசிப்பது என்பதாகும் பிரகடனம் பற்றிய எதிர்பார்ப்பு எவ்வாறு இருந்தது என்ற முன்னுரையுடன் கட்டுரை துவங்குகிறது. முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போன்று ஹெகல், ஃபாயர்பாக் பற்றிய மார்க்சின் ஆய்வுரைகள் தொடர்பான மேற்கோள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உணர்வு பற்றிய மார்க்சின் நிலைப்பாட்டை இவரும் குறிப்பிடுகிறார். பொருளியல் வாழ்வு, உற்பத்தி, மனித உழைப்பு பற்றிய கருத்துக்களை முன்வைக்கும் போது, மனிதகுலம் தன்னால் நிறைவேற்றக் கூடிய கடமைகளைத்தான் தனக்கு நிர்ணயித்து கொள்கிறது என்ற மார்க்சின் கூற்று எவ்வளவு பொருத்தமானது என்பதை எடுத்துக் காட்டுகிறார். வரலாற்று சூழல்களின் பின்னணியில் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய செயல் முறைகளின் எல்லைப் பற்றி மார்க்சும், ஏங்கெல்சும் அறிந்திருந்தனர். ஆனால், சிந்தனைகள் மூலமும் அவற்றை புரட்சிகரமான செயல்பாடுகள் நிலைக்கு உயர்த்துவதன் மூலம்தான் உலகையே மாற்றி அமைக்க முடியும் என நம்பினார்கள். பிரகடனம் இதை வெளிப்படுத்துவதாக உள்ளது.

மார்க்சிய ஆய்வு முறை வரலாற்று இயக்கவியல் அடிப் படையில் இருந்தது. முரண்பாடுகளின் தாக்கங்களினால் ஏற்படும் விளைவுகள் வரலாற்று மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்ற பார்வை மிகவும் முக்கியமானது. கொள்கைதான் புரட்சிகரமான நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும் என்ற மார்க்ஸ்-ஏங்கெல்சின் நம்பிக்கை மிகவும் முக்கியமான ஒன்றாகும். சமுதாய வரலாற்றை. மனிதகுல வளர்ச்சியை மார்க்சீய அடிப்படையில் புரிந்து கொள்ள பிரகடனத்தை படிப்பது அவசியமாகும். ஒவ்வொரு காலகட்டத்திலும் பொருள் உற்பத்தி நடைபெற்ற விதம், வர்க்கங்கள் உருவான விதம் ஆகியவற்றை புரிந்து கொண்டால்தான் வர்க்கப் போராட்டம் இடையறாமல் நடப்பதை புரிந்துகொள்ள முடியும். வர்க்கப் போராட்டம் சில நேரங்களில் வெளிப்படையாகவும், சில நேரங்களில் மறைமுகமாகவும் நடப்பதை பிரகடனம் சுட்டிக்காட்டுகிறது. மார்க்சின் ஜெர்மன் சித்தாந்தம் என்ற நூல் இதைப்பற்றி விரிவாகவே விளக்கமளிக்கிறது.

இர்பான் ஹபீபின் கட்டுரையில், பிரகடனத்தில் உற்பத்தி முறை என்ற சொல் பயன்படுத்தவில்லை என குறிப்பிடப்படுகிறது. ஆனால், பின்னர் எழுதப்பட்ட நூல்களில் அது பயன்படுத்தப் படுகிறது. இது மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்ய மிகவும் அடிப்படையான ஒன்றாகும். கரிண்ட்ரிஸ் (1857-58) என்ற நூலில் ஆசிய பாணி உற்பத்தி முறை பற்றியும், இந்திய சமூகம் பற்றியும் மார்க்ஸ் நிறைய எழுதியுள்ளார். அப்போது இந்தியாவுக்கு வரலாறு என்ற ஒன்றே இல்லை என மார்க்ஸ் கூறினார். ஆனால் பின்னர் அந்த கருத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர் எழுதவில்லை என்பது கவனிக்கத்தக்கது. பிரகடனத்திலும் அது சேர்க்கப்படவில்லையென கட்டுரையாளர் தெரிவிக்கிறார். பிரகடனம் முதலாளித்துவ வர்க்கத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றி குறிப்பிடுகிறது. ஆனால் முதலாளித்துவ வர்க்கத்தினர் என்ற சொல்லும் மூலதன உடமையாளர்கள் என்ற சொல்லும் ஒரே பொருளில் பயன்படுத்த வில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மூலதனம் ? சுரண்டல் பற்றிய தனது கருத்துக்களில் மூலதன திரட்சி உருவான விதம் மார்க்சின் புகழ்வாய்ந்த கண்டுபிடிப்பு என கட்டுரையாளர் மார்க்சை பாராட்டுகிறார். ஆடம்ஸ்மித், ரிக்கார் டோ போன்ற தொன்மை பொருளாதார நிபுணர்களின் கருத்துக்களிலிருந்து மாறுபட்டு, முக்கியமான பங்கை மார்க்ஸ் பொருளாதாரம் என்ற சமூக அறிவியலுக்கு ஆற்றியுள்ளார் என மார்க்சை பாராட்டுகிறார்.

இறுதியாக, கம்யூனிஸ்ட் பிரகடனம் என்பது ஒரு குறிப்பிட்ட தேவையை நிறைவேற்ற வடிவமைக்கப்பட்டது என்றும், முக்கியமான கருத்துக்களை மிகச்சரியாக எழுதியுள்ளானர் என்பதும் பிரகடனத்திற்கு கிடைத்த வெற்றி கட்டுரையாளர் பிரகடனத்தை மட்டுமின்றி அதுவெளிவந்த பின் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் எழுதிய வற்றை படிப்பது பிரகடனத்தின் நோக்கத்தை புரிந்து கொள்ள உதவும் என்று எழுதியிருப்பது வரவேற்கத்தக் கதாகும். அது மட்டுமல்ல ஏராளமான நூல்களை மேற்கோள் காட்டி, வாசிக்கும் உணர்வை தூண்டி இருப்பதும் பாராட்டுக்குரியது.

நூலின் கடைசி கட்டுரையான 150 ஆண்டுகளுக்குப்பிறகு கம்யூனிஸ்ட் அறிக்கை என்பதை பிரபல பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக் அவர்கள் எழுதியுள்ளார். இந்த கட்டுரையை விஜயராகவன் என்பவர் மொழிபெயர்த்துள்ளார். கம்யூனிஸ்ட் அறிக்கை மார்க்சிய உலக கண்ணோட்டத்தை எழுத்துவடிவில் கொணர்ந்த முதல் முயற்சி என கட்டுரையாளர் பாராட்டுகிறார். ஜெர்மன் தத்துவ ஞானம் என்று மார்க்சும், ஏங்கெல்சும் எழுதியது அப்போது அச்சில் வரவில்லையென்ற போதும் பிரகடனத்தின் அடித்தளமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிரகடனம் வரலாற்றை பொருள்முதல்வாத பார்வையில் விளக்கி இருப்பது அதன் சிறப்பம்சமாகும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

கம்யூனிஸ்ட் அறிக்கையின் 4 சிறப்பு அம்சங்களை கட்டுரையாளர் கீழ்க் கண்டவாறு சுட்டிக்காட்டுகிறார்.

  1. வரலாற்றின் உள் இயக்கங்களை இனங்கண்டு, சமூக உற்பத்தி சக்திகளுக்கும், உற்பத்தி முறையின் சமூக உறவுகளுக்குமிடையேயான தொடர்பு.
  2. சமூகம் வர்க்க வடிவிலும், வர்க்கப் போராட்ட வடிவிலும் செயல்படுதலை விளக்குதல்.
  3. முதலாளித்துவ உற்பத்தி முறையைப் பற்றிய சிறப்பான, சுருக்கமான ஆய்வு.
  4. முதலாளித்துவம் ஏன் இருக்கிறது என்றும், முதலாளித்துவ மற்றும் அனைத்து வகை சுரண்டல்களிலிருந்தும் மனித குலத்தை எப்படி பாட்டாளி வர்க்கம் விடுவித்து வரலாறு படைக்கும் என்ற விளக்கம் ஆகியவை பிரகடனத்தின் முக்கிய அம்சங்களாகும்.

இவை மட்டுமின்றி, வரலாறு என்பது ஏதோ தனிநபர் வாழ்வின் சம்பவத் தொகுப்பு என்ற பார்வையை அகற்றி, பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் பார்க்க பிரகடனம் உதவியுள்ளது. அதேபோல், முதலாளித்துவ அமைப்பில் உள்ள முரண்பாடுகள், சமூக போக்குகளை விளக்குகிறது என்கிறார் பட்நாயக். கம்யூனிஸ்ட் அறிக்கை புரட்சியை நடைமுறைப்படுத்த முயற்சித்தது. ஐரோப்பிய அரசியல் பொருளாதார நிகழ்வுகளை விளக்கியதுடன் உலகப் புரட்சி பற்றிய போக்குகளையும் பிரகடனம் வரையறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்க்சீயம் இன்றும் உயிரோட்டமாக இருப்பதற்கான காரணங்களை எடுத்துக் காட்டுகளுடன் விளக்கும் கட்டுரையாளர் பட்நாயக், மார்க்சின் எழுத்துக்களை முழுமையாக படித்துவிட்டால் மட்டும் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டுவிட்டதாகக் கூற இயலாது என்றும், மார்க்சியத்தை மறு கட்டமைப்பு செய்வதன் மூலம், செய்யப்பட்ட மறு கட்டமைப்பின் வேர்களை மார்க்சினுடைய எழுத்துக்களில் அடையாளம் காணுவது அவசியம் என்றும் கூறுகிறார். ஹார்க் லுக்காசை மேற்கோள் காட்டுகிறார்.

தொண்ணுறுகளில் சோசலிச நாடுகளில் ஏற்பட்ட நிகழ்வுகளையும், உலகமயமாதல், நிதி மூலதனத்தின் ஆதிக்கம், அதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஆகியவற்றை விரிவாக கட்டுரையாளர் எழுதியுள்ளார்.

இன்றயை உலகப் பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட்டு, முன்னேற்றப் பாதையில் செல்ல சோசலிச திட்டத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்றும், அதற்குப் புதிய ஒருங்கிணைக்கப் பட்ட கோட்பாடுகளை உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதென்றும், கம்யூனிஸ்ட் அறிக்கை அடித்தளமாக அமையும் என்றும் கூறியுள்ளதன் மூலம் சோசலிசம் சாத்தியமே என்பதையும், மனித குல விடுதலைக்கு அதுவே தேவை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார். மூன்று அருமையான கட்டுரைகளையும், சிறந்த அறிமுக உரையும் கொண்ட இந்நூல் கட்சியில் உள்ள ஒவ்வொருவரும் படித்து பயன்பெற வேண்டியவையாகும். இந்த நூலை படித்துவிட்டு, கம்யூனிஸ்ட் அறிக்கையை மீண்டும் வாசித்தால், மார்க்சிய கோட்பாடுகளை எளிதாகப் புரிந்து கொள்ள இயலும்.

சிறந்த மொழி பெயர்ப்பைச் செய்துள்ள கி.இலக்குவன், விஜயராகவன் மற்றும் பாரதி புத்தகாலயத்துக்கு மீண்டும் பாராட்டுகள். கட்டுரையாளர்கள் அனைவருமே மார்க்சின் அசாத்திய புத்திக் கூர்மையையும், சமூக, அரசியல், பொருளா தாரத்தை தீர்க்கதரிசனத்துடன் அலசி ஆராய்ந்திருப்பதைப் பாராட்டியுள்ளனர். விடுபட்ட விசயங்களைச் சுட்டிக்காட்டி யுள்ளனர். ஏராளமான எடுத்துக்காட்டுகள், மேற்கோள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த நூல்களையும் வாசிப்பது மேலும் மார்க்சியத்தை நன்கு புரிந்து கொள்ள சிறந்த வாய்ப்பாக இருக்குமென்பதில் ஐயமில்லை.

லெனின் வாழ்வும் – சிந்தனையும்!

மாமேதை லெனின் பற்றி ஏராளமான நூல்கள் வெளிவந்துவிட்டன.  இப்போதும் அவரைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர் சொன்னதைக் கோடிட்டுக் காட்டியும், எழுதியும் வருகிறார்கள். அவைகளில் இப்போது ஒரு புதிய வரவு தோழர் அருணன் எழுதிய லெனின் – வாழ்வும் சிந்தனையும் என்பதாகும். அண்மையில்தான் இவர் மார்க்ஸ் பற்றி அரிய நூல் ஒன்று எழுதி முடித்தார். அடுத்து இப்போது லெனின் பற்றி 356 பக்கங்கள் கொண்ட நூல் எழுதியுள்ளார். வால்கா நிதி தீரத்தின் வசந்தம் என்ற தலைப்பில் ஆரம்பித்து, அவர் காலம் ஆனார் என்ற தலைப்பில் முடித்துள்ளார்! மொத்தம் 38 தலைப்புகள்!!

இந்த நூலை படித்து முடித்ததோடு, எனக்கு ஏற்பட்ட உணர்வு, தோழர் அருணன் இந்த நூலை எழுதி முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்காக எழுதவில்லை, சம்பிரதாய பூர்வமாக எழுதவில்லை. உணர்வு பூர்வமாக உத்வேகத்தால், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அக்கறையோடு, பொறுப்போடு எழுதியுள்ளார் என்றே தோன்றியது.

லெனினை மாபெரும் சிந்தனையாளர், புரட்சியாளர்! – அவரின் வாழ்க்கை பற்றி எழுதுகிறபோது, அது வெறும் வாழ்க்கைக் குறிப்பாக மட்டும் இருந்திடாது, அவர் காலத்திய வரலாற்று நிகழ்ச்சிகளோடு, அவரின் தத்துவார்த்த கருத்துக்களோடு பின்னிப் பிணைத்துதான் அவருடைய வாழ்க்கை வரலாற்றை வரைய முடியும். அந்த வாழ்க்கையில் ஓர் ஆய்வாளராக அருணன் தன் எழுத்துப் பணியை நேர்மையோடு செய்து முடித்திருக்கிறார். லெனின் வாழ்க்கைப் பற்றி – அவரின் வீரம், சாகசம், அறிவுக் கூர்மை, சிரமங்கள், நெருக்கடிகள், துன்பத் துயரங்கள் – இவைகளைப் பற்றியெல்லாம் உணர்ச்சி வயப்பட்டு எழுதிய அருணன் லெனின் கூறிய, எழுதிய பல அரசியல் கருத்துக்களை, தத்துவார்த்தப் பிரச்சினைகளை கோடிட்டு காட்டியதோடு, வாசகர்கள் அதை எளிமையாகப் புரிந்து கொள்ளுவதற்கு, அந்தக் கருத்துக்களை உள்வாங்கி, தன் மொழியில் வியாக்கியானம் செய்து விளக்கியிருப்பது பாராட்டும்படியாக இருக்கிறது.

ஓர் உதாரணம் ரஷ்ய இளம் கம்யூனிஸ்டு கழகத்தின் மூன்றாவது மாநாடு 1920 அக்டோபர் 2ல் துவங்கியது. அந்த மாநாட்டில் தோழர். லெனின் இளைஞர்களிடம் பேசுகிறார். மனித குலம் சேகரித்து வைத்துள்ள அறிவுச் செல்வத்தை எல்லாம் ஜீரணிக்காமல் ஒருவர் கம்யூனிஸ்டாகி விடலாம் என நினைப்பது மிகப் பெரும் தவறாகும். கம்யூனிச கோஷங்களையும், கம்யூனிச விஞ்ஞானத்தின் முடிவுகளையும் பற்றி மட்டும் அறிவது போதுமானது. கம்யூனிசத்தை தந்த அறிவு மூலத் தொகுப்பை அறிய வேண்டிதில்லை என நினைப்பது தவறாகும். மனித குல அறிவுத் தொகுப்பிலிருந்தே கம்யூனிசம் பிறக்கிறது என்பதற்கு மார்க்சியமே நல்ல உதாரணம் ஆகும்.

மார்க்சின் போதனைகள் ஏன் கோடிக்கணக்கான வாலிபர்களின் இதயங்களையும், மனங்களையும் வென்றிருக்கிறது என்று கேட்டால் உங்களுக்கான விடை இதுதான்:-

முதலாளித்துவத்தின் கீழ் மனித குலம்  அடைந்த ஞானத்தை மார்க்ஸ் அஸ்திவாரமாகக் கொண்டதுதான்.

இந்த அரிய கருத்தை, அற்புத கொள்கையை ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் புரிந்து கொள்ள வேண்டும். வெறும் வரட்டு வாதம், புனிதத்துவம் பயன்படாது. இதற்கு நுலாசிரியர் அருணன் தன் மொழியில் எப்படி விளக்கம் தருகிறார். வாசகர்கள் புரியும் படி எப்படி வியாக்கியானம் செய்கிறார் என்று பார்ப்போம். மார்க்சியம் என்கிற ஞானக் கொழுந்து பழைய வேரிலிருந்து முகிழ்ந்த்ததுதான். ஆனால், புத்தம் புதியது. அப்படியே கம்யூனிசமும் பழைய சமுதாயத்தின் வயிற்றைக் கிழித்தே வெளிக்கிளம்பும். ஆனால் புத்தம் புதியது. பழையதை காலுக்கடியில் போட்டு அதன் மீது நின்று நர்த்தனம் புரிவது. இது வரை மனித குலம் கண்ட சமுதாய ஞானம், இயற்கை ஞானம் சகலத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும். அதிலிருந்து கொள்ள வேண்டியதைக் கொண்டு, தள்ள வேண்டியதைத் தள்ளி கம்யூனிசத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்  – என்கிறார்.

இப்படி லெனினின் ஏராளமான கருத்துக்களுக்கு நுலாசிரியர் அருணன் எளிய முறையில் விளக்கங்கள் தந்து வாசகர்களின் வாசிப்பு வேகத்தை துரிதப்படுத்துகிறார், உற்சாகப்படுத்துகிறார்.

அவரின் எளிய நடை – ஆனால், இலக்கிய நடை சலிப்பின்றி இந்தப் புத்தத்தை படிக்கத் துண்டுகிறது. ஒரு நல்ல நாவலை உற்சாகத்தோடு படிப்பது போல, ஒரு அரசியல்வாதியின் வாழ்க்கையை – தத்துவங்களாய், கொள்கைகளாய் நிரம்பி வழிந்தோடும் ஒரு புரட்சியாளரின் வாழ்க்கையை இவ்வளவு  உற்சாகத்தோடு இடைவிடாது படிக்க முடிகிறது என்றால், தோழர் அருணனின் கை வண்ணம்தான் இதைச் சாதித்தது என்று சொல்லலாம்.

ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் லெனின் வாழ்க்கையிலிருந்து எவ்வளவோ பாடங்களை கற்றுக் கொள்ளலாம். ரஷ்யாவில் எந்த விதமான புரட்சி நடத்த வேண்டும், மார்க்சிய தத்துவத்தை இங்கு எப்படி அமுல்படுத்த வேண்டும் என்பதை ஆய்வு நடத்தி அதில் முழுமையாகத் தேறினார். மார்க்சிய தத்துவத்தை அப்படியே எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியாக அமுல்படுத்திட முடியாது என்பதில் அவர் உறுதியாக நின்றார்.

ரஷ்யாவில் ஆரம்ப நிலையில் சமூக – ஜனநாயகக்கட்சியின் நிலைபாட்டில் உள்ள சில குறைபாடுகளை அவர் குறிப்பிட்டு சொல்லுவதைப் பார்ப்போம். ரஷ்யாவில் நிலவும் சிறப்பு சூழ்நிலைகளுக்கு ஏற்ப மார்க்சின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக (தங்களின் கொள்கை ஒரு வேதமல்ல, மாறாக செயலுக்கான வழிகாட்டி என்றே மார்க்சும், ஏங்கல்சும் சொல்லித் தந்திருகிறார்கள்) வேறொரு சகாப்தத்தில் வெளிநாட்டுச் சூழல்களில் அமுல்படுத்தப்பட்ட அனுபவத்திலிருந்து கிடைத்த முடிவுகளை விமர்சன பூர்வமற்ற முறையில் அப்படியே இங்கே எதிரொலித்தார்கள்.

ரஷ்யாவில் முதலாளித்துவப் புரட்சியின் அடிப்படை விவசாயப் புரட்சியே, அதுவே இந்தப் புரட்சியின் குறிப்பான தேசியத் தன்மையைத் தீர்மானிக்கிறது. இந்தப் பிரச்சனையின் சாரம் நிலப்பிரபுத்துவத்தையும், ரஷ்ய விவசாய முறையிலும் அதன் விளைவாக சமூக மற்றும் அரசியல் நிறுவனங்களிலும் நிலவும் பண்ணை அடிமைத்தனத்தின் மிச்ச சொச்சங்களையும் ஒழிக்க விவசாயிகள் நடத்தும் போராட்டமே.

இந்தியாவிலேயும் மார்க்சிய தத்துவத்தை அமுல்படுத்துகிற போது, உலகமயம், தாரளமய, தனியார்மயம் என புதிய சூழல் இந்தியாவை கவ்வியுள்ளபோது, ஏகாதிபத்திய நாடுகளின் இந்த புதுவித தாக்குதல்களையும் எதிர்த்துக்கொண்டு, உள்நாட்டு முதலாளிகளும் பன்பமடங்கு தங்கள் மூலதனத்தைப் பெருக்கிக் கொண்டு இந்திய மக்களை சாடுகின்ற சூழலில், கிராமங்களிலும் முதலாளித்துவ நிலச்சுவான்தார்கள் உருவாகிவிட்ட சூழலில், கிராம மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகிற போது, அன்னிய மூலதனமும், விவசாயத்தின் மீது தாக்குதல் தொடுக்கிற சூழ்நிலையில், இதற்கு ஏற்ற வகையில் மார்க்சியத்தை அமுல்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது என்கிற பாடத்தையும் நாம் புரிய வேண்டும்.

மார்க்சியத்தை நன்கு கற்றுத் தேர்ந்த லெனின், தான் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்று என்றும் இருந்ததே இல்லை. மிக அடக்கத்தோடு சாதாரண, ஏழை எளிய மக்களிடம் கூட அவர் கேட்டு தெரிந்து கொண்டு அவர் தன் ஞானத்தை கூர்மைப்படுத்திக் கொண்டார். ஞானத்திமிர் அவருக்கு இருந்ததே இல்லை. இதற்கும் ஓர் உதாரணம் :-

ஒரு அமெரிக்க பத்திரிக்கையாளர் – ஆல்பெர்ட் ரைஸ் வில்லியம்ஸ் என்பவர் லெனினை பேட்டி காணச் சென்றார். 1 1/2 மணி நேரம் ஆகியும் லெனின் இவரைக் கூப்பிட வில்லை. நேரம் அதிகமாகிவிட்டது. அமெரிக்க பத்திரிக்கையாளர் நினைத்தது:-

லெனின் நேரத்தைக் கடை பிடிப்பவர். ஆனால், ஏன் என்னைக் குறித்த நேரத்தில் அழைக்கவில்லை. ஒருவேளை வெளிநாட்டு துதுவர் பேசிக் கொண்டிருக்கிறார் போலும் என நினைத்துக் கொண்டார். ஆனால், ஆச்சர்யம் என்னவென்றால், ஒரு கிராம விவசாயி பரட்டைத்தலை அரைகோட்டு அணிந்தவர் லெனின் அறையிலிருந்து வெளியே வந்தார். அவரை அடுத்து அமெரிக்க பத்திரிக்கையாளர் உள்ளே சென்றார். அவரிடம் லெனின் சொன்னது :

மன்னித்துக் கொள்ளுங்கள். இவர் தம்போவ் விவசாயி. மின்மயமாக்கல், கூட்டுப் பண்ணைகள் அமைத்தல், பொருளாதாரக் கொள்கை ஆகியவை பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அவரோடு பேசுவது சுவாரசியமாக இருந்ததால் நேரத்தை கவனிக்க மறந்து விட்டேன் என்றார். அவருக்கிருந்த மேதாவிலாசம், ஏழை விவசாயியோடும் பொருளாதாரம் பேச அதிலும், அக்கறையோடு பேச பணித்தது.

பொதுவாக கம்யூனிஸ்ட்டுகள் கமிட்டி கூட்டங்களில் மணிக்கணக்காக பேசுவார்கள். காலத்தை வீணடிப்பார்கள் என்று மற்றவர்கள் கூறுவது வழக்கம், நமக்குள்ளாகவே பேசுவதும் வழக்கம்.

இப்படி தோழர் லெனினுக்கும் ஒரு சோதனை ஏற்பட்டது:

ரஷ்ய கவிஞர் மாயகோவ்ஸ்கி விடாமல் கூட்டத்தில் உட்கார்ந்திருப்போர் என்ற தலைப்பில் அன்றைய ரஷ்ய புரட்சியாளர்களிடமும், குறிப்பாக போல்ஸ்விக் கட்சியினரிடமும் மலிந்திருந்த ஒரு பழக்கத்தை நையாண்டி செய்து கவிதை எழுதியிருந்தார்.  இந்தக் கவிதையை லெனின் படித்திருக்கிறார். சினம் கொள்ள வில்லை. மாறாக மகிழ்ந்தார். அவர் ஒரு   ஞசயஉவஉயட ஞநசளடியேடவைல. ஆக இதில் அவர் அணுகுமுறையைப் பார்ப்போம்.

மாயகோவஸ்கியின் கவித்துவ ஆற்றலின் ரசிகனல்ல நான் – அது பற்றி தீர்ப்பு சொல்ல நான் தகுதி படைத்தவன் அல்ல. என்றபோதிலும், இந்த கவிதையைப் படித்து நான் ரசித்தது போல அண்மைக்காலத்தில் வேறு எந்த அரசியல் மற்றும் நிர்வாகம் சம்பந்தப்பட்டதைப் ரசித்ததில்லை. தனது கவிதையில் அவர் இந்தக் கூட்டம் நடத்தும் பழக்கத்தை விமர்சித்திருக்கிறார். கூட்டங்களில் விடாமல் உட்கார்ந்திருக்கும் கம்யூனிஸ்ட்டுகளை அவர் ஒரு பிடி பிடித்திருக்கிறார் – கவிதை பற்றி என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், அத அரசியலைப் பொறுத்த வரையில் முற்றிலும் சரிதான் என்பேன். கூட்டங்களில் மனிதர்கள் முடிவற்று உட்கார்ந்திருக்கிறார்கள். குழுக்களைப் போட்ட வண்ணம் இருக்கிறார்கள். முடிவற்ற திட்டங்களைத் தீட்டிய வண்ணம் இருக்கிறார்கள் – என்றார்.

கமிட்டி கூட்டங்கள் பிரசங்க மேடையாகிவிடுவதை, செயல்பட வேண்டிய நேரத்தைக் குறைத்துவிட்டு, கமிட்டி கூட்டங்களை மணிக்கணக்கில் நடத்துவதை லெனின் குறை கூறுகிறார். மாயகோவ்ஸ்கியின் அந்த கிண்டல் கவிதை வரிகளை ஏற்கிறார். கவிஞர் சொன்னதை மறுக்கவில்லை. மறைக்கவில்லை. மாறாக, அதை வெகுவாக ரசித்தேன் என்கிறார். இதுதான் லெனின் சிறப்பு.

இன்னும் அவரின் குணமேன்மையை அறிய ஓர் உதாரணம்: நான் ஒரு நுலில் படித்த ஒரு அரிய செய்தி.

லெனின் பாரிசில் குடியேறி வாழ்ந்த காலத்தில், அவர் வீட்டில் ஒரு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாது பணியாளராக இருந்தார். அவர் ஒரு பாட்டு பாடிக்கொண்டே வேலை செய்து கொண்டு இருந்தார். அந்தப்பாட்டைக் கேட்ட லெனின் மிக ஆர்வத்தோடு, மீண்டும் ஒருமுறை அந்தப் பாட்டைப் பாடச் சொல்லி கேட்டு அவர் மனப்பாடம் செய்து கொண்டார். தலை சிறந்த அறிவாளி – எனவே ஒரு வீட்டு வேலைக்காரி பாடிய பாட்டை மீண்டும் பாடக் கேட்டு, அதை மனதில் பதிய வைத்துக் கொண்டு, இவர் பாட ஆரம்பித்து விட்டார். இவர் பாடுவதா? இங்கே தான் அவரின் மகத்தான பெருமை பளிச்சிடுகிறது. யார் பாடினால் என்ன? அந்தப்பாடலில் பொருள் இருந்தால் சரி, அது நமக்கும் பயன்படும் என்பதை ஏற்றுக் கொண்டார். உழைப்பாளி மக்களின் தலைவருக்கு நான் என்னும் முனைப்பு (நுபடி) தலை துக்கக்கூடாது அல்லவா? அதுதான்இது. சரி, அந்தப் பாடலில் அப்படி என்னதான் பொருள் இருந்தது?

அந்தப் பணியாளர் பாடியது தாய்நாட்டைப் பற்றிய பாடல், ஜெர்மன் ஆதிக்கத்தை எதிர்த்து, அந்த உழைப்பாளிப் பெண் வீரத்தோடு பாடிய பாடல்.

ஓ ஜெர்மானியர்களே, நீங்கள் எங்களின் ஆஸ்சேஸ், லோரன் பகுதிகளைப் பிடித்துக் கொண்டுட்டீர்கள். எனினும், உங்களையும், மீறி சுயமான பிரஞ்சுக்காரர்களாகவே வாழ்வோம். எங்களுடைய வயல்களை எல்லாம் உங்கள் வசம் ஆக்கிக் கொண்டீர்கள். ஆனாலும், எங்களுடைய இதயங்கள் உங்களுக்கு எப்போதும் கிடைக்காது- என்ற தாய் நாட்டுப் பற்றிக் கூறும் வீரமான பாடல். இதைக் கேட்டுத்தான் லெனின் பரவசமானார். மனப்பாடம் செய்து அவரும் பாடினார்.

தேசிய இனப்பிரச்சனையில் லெனின் மார்க்சிய சித்தாந்தத்தின் அடிப்படையில் பூரணமாக சமநிலை கொண்டு செயல்பட்டார்.

சோவியத் குடியரசுகளின் ஒருங்கிணைப்பில் சிறிய நாடோ, பெரிய நாடோ யாவற்றிற்கும் சம உரிமை பரிபாலிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார். இங்கே இந்திய ஆட்சியாளர்களுக்கு இந்த உணர்வு இருக்க முடியாது. முதலாளித்துவ ஆளுமைக் கொள்கை அதற்கு இடம் கொடுக்காது.

இது சம்பந்தமாக பரிசீலனை செய்ய ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையில் ஒரு தவறு இருந்தது. அதை லெனின் ஏற்கவில்லை.

ரஷ்யா உள்ளிட்ட அனைத்து குடியரசுகளும் சமநிலையில் இணைந்து ஒன்றியம் உருவாக்கப்படுதல் என்பதற்கு பதிலாக ரஷ்யாவின் தலைமையை இதர குடியரசுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்- என்ற பொருள்பட அந்தப்பரிந்துரை இருந்தது.

இதைக்கண்ட லெனின் ஸ்டாலினை விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார்.

நுலாசிரியர் அருணன் இந்த நுண்ணிய பிரச்சனையில், லெனின் எந்த உணர்வோடு எழுதினாரோ, அதே அர்த்தத்தில் பொருள் கெடாமல் மொழி பெயர்த்துள்ளார். லெனின் கூறுவது:-

உரோனிய குடியரசு மற்றும் இதரர்களோடு நம்மையும் நாம் சமமாகப் பாவிக்கிறோம். பிறருடன், பிறருக்கு சமமாக நாமும் (ரஷ்யாவும்) புதிய ஒன்றியத்தில், புதிய சம்மேளனத்தில் சேருகிறோம்.

ரஷ்யர்களிடம் பெரிய அண்ணன் போக்கு வந்து விடக் கூடாது என்பதில் லெனின் கறாராக இருந்தார். மேலும் அவர் கூறுவதைக் கேளுங்கள்:

ஆதிக்க தேச இனவாதத்திற்கு எதிராகச் சாகும் வரை போராடுவேன் என்று அறிவிக்கிறேன். இந்த சொத்தைப் பல்லைப் பிடுங்கிவிட்டு எனது நல்ல பற்களை வைத்தே உண்பேன். ரஷ்யர், உக்ரேனியர், ஜார்ஜியா இப்படி முன்வைத்தே ஒன்றியத்தின் மத்தியக்குழுவிற்கு தலைவர் தேர்ந் தெடுக்கப்பட வேண்டியது முற்றிலும் அவசியமாகும். முற்றிலும் – என்கிறார்.

எத்தகைய மகத்தான ஜனநாயகவாதியாக, பேரினவாதத்திற்கு எந்த வகையிலும் இடம் கொடுக்காத சமத்துவாதியாக லெனின் திகழ்ந்தார் என்பதற்கு இது அழியா சாட்சியமாகும். ஒன்றியத்தின் தலைவராக ஒரு இனத்தைச் சேர்ந்தவரே வந்து விடக் கூடாது. மக்கள் தொகையில் மிக அதிகமானவர்கள்தான் வருவார்கள். எனவே, சுழற்சி முறையில் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிறார் – என நுலாசிரியர் அருணன் கூடுதல் விளக்கம் கொடுத்து வாசகர்களுக்கு அதன் முக்கியத்துவத்தை உணர வைக்கிறார்.

இப்படியெல்லாம் லெனின் நடத்திய போராட்டத்தின் விளைவுதான் அந்த மகத்தான அமைப்பு – சோவியத் சோசியலிசக் குடியரசுகளின் ஒன்றியம் (USSR) கம்பீரமாக உருவானது.

தேசங்களின் சுயநிர்ணய உரிமை என்பது மிக நுணுக்கமான ஏற்பாடு. இதை லெனின் மிகத் திறமையாக வகுத்தார். ஒரு தனி புத்தகமும் எழுதினார்.

தேசங்களின் சுயநிர்ணய உரிமை என்பது – இந்த பிரிந்து போகும் உரிமை என்பது ஆமாம், இல்லை என்று சொல்லுவது நடைமுறையில் மிக எளிதாக இருக்கலாம். ஆனால், பாட்டாளிகளைப் பொறுத்த வரையில் இந்தக் கோரிக்கை வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்கு உட்பட்டவை. அதாவது தேசங்களது உரிமைகளுக்குமிடையே முழு சமத்துவம் வேண்டும், அனைத்து தேசங்களது தொழிலாளர்களின் ஒற்றுமையும் வேண்டும். இதுவே மார்க்சியத்தின் தேசியத்திட்டம். அனைத்துலக அனுபவமும், ரஷ்ய அனுபவமும்  இதையே தொழிலாளர்களுக்குப் போதிக்கிறது என்றார்.

இந்த மூன்று கூறுகளில் எந்த ஒன்யும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்றார்.

சுயநிர்ணய உரிமை என்பது கால தேச வர்த்தமானத்துக்கு ஏற்ப திட்டவட்டமாக முன்வைக்கப்பட்டு, திட்டவட்டமான தீர்வுகள் காணப்பட வேண்டும் என்றார். இதில் லெனின் அதிக பட்ச எச்சரிக்கையோடு இருந்தார்.

லெனின் மொழிப்பிரச்சனைக் கொள்கை இந்தியாவுக்கும் அப்படியே பொருந்தும். இந்தியாவில் மத்திய அரசு – ஆளும் வர்க்கம் மொழிக் கொள்கையில் பெரிய தவறு செய்து வருகிறது. பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மொழியை – இந்தியக் கட்டாயப்படுத்தி, பிற மாநில மக்களின் கோபத்துக்கு ஆளாகிவிட்டது.

லெனின் சோவியத் குடியரசில், அந்தந்த குடியரசின் தாய்மொழி எதுவோ, அதுதான் நிர்வாக மொழியாக, போதனா மொழியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ரஷ்யர்கள் பெரும்பான்மையராக இருப்பதால், ரஷ்ய மொழியைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்றார். எந்த ரூபத்திலும் இது கட்டாயமாக்கப்படக்கூடாது என்றார். அவர் ஒரு ரஷ்யர் ஆனால், பேரினவாதத்தை அறவே வெறுத்தார். மொழி விசயத்தில் மிகத் தெளிவான கொள்கை கொண்டிருந்தார். எந்த தேசிய இனமும் இதில் அதிருப்தி அடைந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். லெனின் தன் இளமைப் பருவத்திலிருந்தே புரட்சி என்றால் அது தனிநபர் கொலை என்கிற சித்தாந்தத்தை அறவே வெறுத்தார். எதிர்த்தார். தன் மூத்த சகோதரர் அந்த நிலைபாட்டை எடுத்தவர், தண்டனையாக துக்கு மேடைக்குப் போனவர். இந்த அனுபவம் லெனினுக்கு உண்டு. கம்யூனிஸ்ட இயக்கத்தில் அதிதீவிரவாதம் என்பது ஒரு நோயாக தொடர்ந்து வந்திருக்கிறது. சர்வதேச ரீதியில் ஜெர்மனி, இத்தாலி, ஹாலந்து போன்ற நாடுகளில் அதிதீவிரவாதம் தலை துக்கியது. அந்த நாடுகளில் உள்ள அதிதீவிரவாதிகள் ரஷ்யாவில் நடந்த புரட்சியை  அவர்களுக்கு சாதகமாகத் திரித்துத் தங்கள் சொந்த நாட்டில் பிரச்சாரம் செய்தார்கள். இந்தியாவில் உள்ள அதிதீவிரவாதிகள் சீனப் புரட்சியை இந்தியாவில் தவறாக ஒத்திடுவது போல.

இந்த அதிதீவிரப் போக்கை  எதிர்த்து இடதுசாரி கம்யூனிஸ்ட்டும் –  ஓர் இளம் பருவக் கோளாறும் என்ற நுல் எழுதி இடதுசாரி தீவிரவாதிகளின் தவறான போக்குகளைத் தோல் உரித்துக்காட்டினார்.

லெனின் அவ்வப்போது வரும் நாவல்களை, தத்துவார்த்த நுல்களை, அரசியல் சார்ந்த ஏடுகளை, கவிதைகளை விடாப்பிடியாக படிக்கும் திறமையுள்ளவர்: அவர் வேகமாக படிக்கும் இயல்புள்ளவர் என்றும் கூறுவார்கள். 400 பக்கங்கள் கொண்ட புத்தகமானாலும் ஒரே இரவில் படித்து முடித்து விட்டாராம். வெளியாகும் புத்தகங்களை உடனுக்குடன் படிக்கும் ஆர்வமுள்ளவர் என்பதற்கு ஒரு சுவையான நிகழ்வை நுலாசிரியர் அருணன் குறிப்பிடுகிறார்.

இந்தியப் புரட்சியாளர்களில் சிலர் குழுவாகச் சென்று லெனினைச் சந்தித்திருக்கிறார்கள்.

எம்.பி.ப.தி. ஆச்சாரியா, நாளு மகேந்திர பிரதாப், எம்.பர்கத் துல்லா, அப்துல்ராய், திலிப் சிங்கில், இப்ராகிம் ஆகியோர் சந்தித்துள்ளார்கள். இந்தச் சந்திப்பு கிரெம்ளினில் நடந்துள்ளது. எம்.பி.ப.தி. ஆச்சாரியா அதாவது மண்டையம் பிரதிவாதி பயங்கர திருமலை ஆச்சாரியா தமிழகத்தைச் சார்ந்தவர். சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்தவர். தமிழர். இவரின் குடும்பத்தார்தான் இந்தியா பத்திரிக்கைக்கு பாரதியாரை ஆசிரியர் ஆக ஆக்கியவர்கள்.

இந்தக்குழுவின் தலைவராகச் சென்ற மகேந்திர பிரதாப் லெனின் அறைக்குள் சென்றவுடன், லெனினே எழுந்து மூலையில் இருந்த நாற்காலி ஒன்றை எடுத்து வந்து அவருக்குப் போட்டது பெரிய ஆச்சரியமாகிப் போனது.

மகேந்திர பிரதாப்புக்கு மேலும் ஓர் ஆச்சர்யம் காத்துக் கிடந்தது. இவர் எழுதிய அன்புமதம் என்ற புத்தகத்தை லெனினிடம் வழங்கினார். உடனே லெனின் நான் அதை ஏற்கனவே படித்து முடித்துவிட்டேன் என்றார்.

அதோடு அந்தப் புத்தகம் பற்றிய தன் அபிப்பிராயத்தையும் அவரிடம் சொன்னார்.

எங்கள் நாட்டில் கூட டால்ஸ்டாய் போன்றவர்கள் மதத்தைப் பரப்புவதின் மூலம் மக்களது விடுதலைக்கு வழி காணலாம் என நினைக்கிறார்கள். அதெல்லாம் நடக்கவில்லை. இந்தியா திரும்பிய பிறகு நீங்கள் வர்க்கப் போராட்டத்தை பிரச்சாரம் செய்யுங்கள். அதுதான் விடுதலைக்காண வழி – என்று சொல்லியனுப்பினார்.

டால்ஸ்டாய் மதப்பிரச்சாரத்தின் மூலம் விடுதலை பெற முடியும்- என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்ன லெனின் டால்ஸ்டாய் பற்றி பொதுவாக என்ன கணிப்பு கொண்டிருந்தார் என்பது மிகத் தலைசிறந்த மதிப்பீடு.

எப்பேர்பட்ட மலை (டால்ஸ்டாய்). ஊம். எத்தகைய மாண்பு மிக்க மனிதர். கலைஞர் என்றால் நண்பரே, இவர்தான் கலைஞர். இன்னும் ஆச்சரியம் என்ன தெரியுமா? இந்தப் பிரபு எழுதத் தொடங்கும் முன் உண்மையான ரஷ்யக் குடியானவன் இலக்கியத்தில் இடம் பெறவில்லை…

ஐரோப்பாவில் இவருக்கு இணையக யாரைச் சொல்ல முடியும். ஒருவரையும் சொல்ல முடியாது – இப்படி கார்க்கியிடம்தான் டால்ஸ்டாய் பற்றி லெனின் பேசினார்.

அதே நேரத்தில் அவருடைய திறமைகள் அனைத்தையும் பாராட்டிய லெனின் அவரிடம் உள்ள குறைபாடுகளையும் கறாராகவே சுட்டிக்காட்டினார்.

டால்டாய் ஆவேசமான கண்டனக்காரர். உணர்ச்சிமிகு குற்றச்சாட்டாளர். மாபெரும் விமர்சகர். அதேபொழுதில் தமது நுல்களில் சுரண்டலுக்கான காரணங்களையும், அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளையும் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார்.

புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கியோடு, லெனின் மிக நெருக்கமாக இருந்தவர். அவருடைய படைப்புகளை விரும்பி படிக்கிறவர். ஆனால், அவரின் படைப்பில் அரசியல் தவறுகள் ஏற்பட்டு விட்டால் அவைகளையும் கட்டாயம் விமர்சனம் செய்யாமல் விடமாட்டார்; நட்பையும் விடமாட்டார்.

அவர் எழுதிய நுலைப் படித்துவிட்டு உடனே அவருக்குக் கடிதம் எழுதிவிடுவார்; நல்லவைகளைப் போற்றுவார். அல்லவைகளைச் சாடுவார். இருவரும் நேரில் சந்திக்கிறபோது நிறைய விவாதிப்பார்கள்.

எவ்வளவு அரசியல் பணிகளில் இருந்தாலும், படைப்பாளிகளோடு தொடர்பு கொள்ளுவதை விடாது கடைபிடித்தார்.

லெனின் ஓர் இலக்கிய ரசிகர். இலக்கிய விமர்சகர். இலக்கியம் பற்றிய கலையைப்பற்றிய  லெனின் கொள்கை மிகத் தெளிவானது.

கலையானது மக்களுக்கு உரியதாகும். உழைப்பாளி மக்கள் திரளிடையே அதன் வேர்கள் ஆழப்பதிந்திருக்க  வேண்டும். அது அவர்களுக்கு புரியக் கூடியதாய் இருக்க வேண்டும். எந்த நேரமும் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். தொழிலாளி விவசாயிக்கு சாதாரண கறுப்பு ரொட்டி அவசர தேவையாய் இருக்கிற போது, சொற்ப சிறுபான்மை யோருக்கு அருஞ்சுவை விருந்து தயாரிக்க முடியுமா? இது கலை பண்பாட்டுத்துறைக்கும் பொருந்தும்- என்றார்.

உண்மைதான். கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கே என்பதன் மெய்யான அர்த்தத்தில் லெனின் பேசினார். டால்டாய் வெறுத்த பழைய உலகினை அழிக்கும் ஆற்றல் படைத்த வர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்பதை அதே டால்ஸ்டாய் புரிந்து கொள்ளவில்லை என்றார்.

எழுத்தாளர்களை, கலைஞர்களை ஒரு கம்யூனிட் எப்படிப்பார்க்க வேண்டும்; கட்சிக்கு அப்பாற்பட்ட கலைஞர்களை, அதே நேரத்தில் கட்சிக் கலைஞர்களை எடைபோடும் அளவுகோல் எது என்பது பற்றியெல்லாம் புரிந்து கொள்ள லெனினுடைய நேர்த்தியான அணுகுமுறையை படைப்பாளி அருணன் நிறைய இடங்களில் சுட்டிக்காட்டுகிறார்.

மாதர் விடுதலை பற்றி ஜெர்மன் கம்யூனிட் கட்சித் தலைவர்களுள் ஒருவரான, புரட்சிப் பெண்மணி கிளாரா செத்கின் என்பவருடன் லெனின் நடத்திய விவாதம் அற்புதமான ஒன்று! அந்தப் பகுதியை நுலாசிரியர் அருணன் சிறப்பாகவே எடுத்துக் காட்டியுள்ளார். அவரின் கருத்து பெண் விடுதலை வேட்கைக் கொண்டோருக்கு வெளிச்சம் காட்டுகிறது.

கிளாராவிடம் லெனின் ஒரு கட்டத்தில் கீழ்க்கண்ட கருத்தை அழுத்தமாகச் சொல்லுகிறார்.

மார்க்சியத்துக்குப் புறம்பான முறையில் விவாதிப்பதால் முடிவில் ஏற்படக் கூடிய நிலை என்ன? பாலுறுவு – திருமணப் பிரச்சனைகள் யாவும் பிரதான சமுதாயப் பிரச்சனைகளைச் சேர்ந்த கூறுகளே என்பதை மாற்றக் கூடிய நிலைக்கு இட்டுச் சென்றுவிடும். மாபெரும் சமுதாயப் பிரச்சனையே பாலுறவுப் பிரச்சனையின் ஒரு கூறாக, அதன் வாலாகக் கருதப்படும் – என்கிறார்.

இப்படிப் பெண்கள் உரிமைப்பற்றி பல முக்கியமான கூறுகளை பல கோணங்களில் விளக்கிப் பேசுகிறார்.

கம்யூனிடுகள் கனவு காண்பார்கள் என்பதே உண்மை. அது யதார்த்தத்திலிருந்து உதயமாகிற கனவு.

ஆங்கில எழுத்தாளர் எச்.ஜி. வெல் – விஞ்ஞான கற்பனைக்கதைகளை எழுதியவர். இவர் 1920 ஆம் ஆண்டு லெனினைச் சந்தித்தார். அப்போது லெனின் ரஷ்யா முழுவதும் மின்சாரமயமாகும் திட்டத்தை அவரிடம் சொன்னார்.

எச்.ஜி.வெல் அன்று ரஷ்யா இருந்த பின்தங்கிய நிலையைக்கண்டு, லெனின் முடியாத விசயத்தை கனவு காண்கிறார் என்று சொன்னார், எழுதினார். இதை ஆசிரியர் அருணன் சுட்டிக்காட்டி ரஷ்யக் கிராம மக்கள் லெனின் விளக்குகள் என்று கொண்டாடியதைக் கேள்விப்பட்டிருந்தால் கனவு-மின்சாரக்கனவு-காண வேண்டியதன் அவசியத்தை எச்.இ.வெனி உணர்ந்திருப்பார் என்று எழுதுகிறார். ஆனால் வரலாறு அப்படித்தான் நடந்து விட்டது. ஒருபத்தாண்டுகள் கழித்து அதே எழுத்தாளர் எச்.இ.வெல் ரஷ்யா வந்தார். ரஷ்யாவை சுற்றிப்பார்க்க பல இடங்களுக்குப் பயணம் செய்தார். அதன் பிரமாண்டமான வளர்ச்சியைக்கண்டு ஆச்சரியப்படார். லெனின் கனவு மெய்பட்டுவிட்டது – என்று தன் நினைவுக்குறிப்பில் எழுத வேண்டியதாயிற்று, ஆனால் அதுபோது லெனின் இல்லை. மரித்துப்போனார்.

கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்கள் தங்களோடு கருத்து வேறுபாடு கொள்ளுகிற மற்ற சக தோழர்களிடம் எப்படி தோழமை உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதில் லெனின் வாழ்க்கை ஒரு பெரிய எடுத்துக்காட்டு.

டிராட்ஸ்கி, புகாரின், மார்ட்டோவ், காமனோவ், ஹினோஜீவ் போன்றோர் லெனினோடு கருத்து மோதல் நடத்தினார்கள். முடிவுக்கு மாறாக செயல்பட்டார்கள். காட்டியும் கொடுத்தார்கள். அப்படி இருந்தும் அவரவருக்கு இருந்த சில திறமைகளைக் கணக்கில் கொண்டு, அதோடு திருந்துவார்கள் என்ற நம்பிக்கையில் எத்தனையோ சந்தர்ப்பங்களை வழங்கினார். முக்கிய பொறுப்புக்களையும் கொடுத்தார். இப்படிப் பட்டவர்களில் சிலர் கடைசி வரை திருந்தாமல் போனவர்களும் உண்டு.

லெனின் கட்சித் தலைவர்கள் பற்றி உயில் எழுதி வைத்தார். அவர் இறந்த பிறகு தான் அதை கட்சி மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அந்த உயில் சில தலைவர்களின் குணாம்சம் பற்றி எழுதி இருந்தாலும், ஸ்டாலின் பற்றி எழுதியது தான் பெரும் பிரச்சனையாகிவிட்டது. தனிநபர் துதி எங்கு கொண்டு போய்விடும் என்பதை உணர வைத்த இந்த குறிப்புகள் இன்று வரலாற்று ஆவணமாக நம்மை எச்சரிக்கிறது.

லெனின் மறைவு பற்றி எழுதும் கடைசி அத்தியாயத்திற்கு அருணன் அவர் காலம் ஆனார் என தலைப்புக் கொடுத்துள்ளார். அவர் காலமாகிவிட்டார் என்பது வேறு. அவர் காலம் ஆனார் என்று பிரித்து எழுதுவதில் ஒரு பொருள் அடங்கி உள்ளது. அவர் ஒரு சகாப்தம் (EPOCH) ஆனார் என்பது போல் அவர் ஒரு காலம் ஆனார் என்ற பொருளில் எழுதுகிறார்.

கடைசி அத்தியாயம், கடைசி பத்தி

அவர் காலமாகவில்லை; காலம் ஆனார். வால்கா எனும் ஜீவ நதியின் ஓட்டத்தில் அவர் கலந்து நிற்கிறார். உலகத்தின் ஜீவநதிகளோ கம்யூனிசம் எனும் மகா சமுத்திரத்தில் கலக்க ஓடிய வண்ணம் உள்ளன – என்று முடிக்கிறார்.

லெனின் என்கிற அந்தச்சொல், அந்த ஒலி – ஒரு காந்த சக்தி கொண்டது. ஒரு ஈர்ப்பு சக்தி கொண்டது. ரஷ்ய மக்கள் மட்டுமல்ல, சோவியத் ஒன்றயத்தில் இணைந்த அத்தனை குடியரசுகளைச் சேர்ந்த மக்களும் லெனின் என்ற ஒலியைக் கேட்கிற வினாடியிலேயே ஒருவித ஆக்ரஷ்ன சக்தியால் உசிப்பிவிடப்பட்டு நிமிர்ந்து எழுவார்கள். லெனின் என்ற சொல் கோடானு கோடி மக்கள் தினமும் உச்சரிக்கும் சொல்லாக மாறிப்போனது. அது சோவியத் யூனியன் எல்லையைக்கடந்து உலகம் பூராவும் உள்ள உழைப்பாளி மக்களின் உள்ளத்தை ஆட்சி கொண்டது.

அவரின் இயற்பெயர் விளாதிமிர் இலியாவிச் உல்யனவ் என்பது. விளாதிமிர் என்பதற்குப் பொருள் உலகு ஆள்பவர் என்பதாம். உலக மக்களின் உள்ளத்தை – அதிலும் உழைப்பாளி மக்களின் உள்ளத்தை லெனின் என்ற பெயரில் இன்னும் ஆளுகிறார். இனியும் ஆளுவார்.

லெனின் வாழ்வும் – சிந்தனையும்
அருணன்
வசந்தம் வெளியீட்டகம்
69/24ஏ, அனுமார் கோவில் படித்துறை,
சிம்மக்கல், மதுரை
விலை-200/-

லெனின் வாழ்வும் சிந்தனையும்

மாமேதை லெனின் பற்றி ஏராளமான நூல்கள் வெளிவந்துவிட்டன. அரசியல்வாதிகள், சமூகவியலார், புரட்சியாளர்கள், இலக்கியவாதிகள், சரித்திர ஆய்வாளர்கள், பத்திரிகை நிருபர்கள் என பன்முகத்தினர் அவரைப் பற்றி பக்கம், பக்கமாக எழுதிவிட்டனர். இதில் சோவியத் யூனியனின் பங்கு மகத்தானது. பல மொழிகளில் அவை மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன.

அதோடு அந்தச் சிந்தனைச் சிற்பி எழுதிய, பேசிய, கலந்துரையாடிய அனைத்தும் சேர்க்கப்பட்டு, கோர்வைபடுத்தப்பட்டு 45 பாகங்களாக வெளிவந்து விட்டன. பெரிய சாதனை! இந்த மாமனிதர் காலைக் கடன்களைக் கழிக்கின்ற போது கூட பேப்பரும், பேனாவோடும்தான் இருந்திருப்பாரோ என யூகிக்க வேண்டியுள்ளது.

ஓயாத படிப்பு – தீராத பயணம் தலைமறைவு வாழ்க்கை, நாடு கடத்தப்படல், சிறை வாழ்க்கை, காவல்துறையினரின் கழுகுப்பார்வை, எதிரிகளின் நோட்டம், இவ்வளவுக்கும் இடையில் எப்படி இவரால் இவ்வளவையும் எழுத முடிந்தது. நமக்கு மலைப்பாய் இருக்கிறது. இந்த மாமனிதர் அவர் வாழ்வில் எந்த ஒரு நிமிடத்தையும் வீணாக்கவில்லை போலும், நேரம் அவருக்கு விலை மதிப்பற்றது.

அவரின் ஒவ்வொரு நாள் வாழ்க்கையிலும், ஒவ்வொரு நிமிட வாழ்க்கையிலும் அவர் எப்படி இந்த நேரங்களைப் பயன்படுத்தினார் என்று கூட ஆய்வாளர்கள் விவரங்கள் சேகரித்து எழுதிவிட்டார்கள். அவர் கடைசி காலத்தில் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்த நேரத்தில், டாக்டர்களின் அறிவுரைகளையும் மீறி அவர் எப்படியெல்லாம் செயல்பட்டார் என்பது கூட பதிவு செய்யப்பட்டுள்ளன; அவையெல்லாம் சுவையான விஷயங்கள்.

என் அறிவுக்கு எட்டிய வரையில் கடந்த நூற்றாண்டுகளில் உலகில் பைபிலுக்குப் பிறகு, இவர் எழுதிய நூல்கள், இவரைப் பற்றி எழுதிய நூல்கள் தான் உலக மக்களால் அதிகமாகப் படிக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். இப்போதும் அவரைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர் சொன்னதைக் கோடிட்டுக் காட்டியும், எழுதியும் வருகிறார்கள். அவைகளில் இப்போது ஒரு புதிய வரவு தோழர் அருணன் எழுதிய லெனின் – வாழ்வும் சிந்தனையும் என்பதாகும். அண்மையில்தான் இவர் மார்க்ஸ் பற்றி அரிய நூல் ஒன்று எழுதி முடித்தார். அடுத்து இப்போது லெனின் பற்றி 356 பக்கங்கள் கொண்ட நூல் எழுதியுள்ளார். வால்கா நிதி தீரத்தின் வசந்தம் என்ற தலைப்பில் ஆரம்பித்து, அவர் காலம் ஆனால் என்ற தலைப்பில் முடித்துள்ளார்! மொத்தம் 38 தலைப்புகள்!!

இந்த நூலைப் படித்து முடித்ததோடு, எனக்கு ஏற்பட்ட உணர்வு, தோழர் அருணன் எழுதி முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்காக எழுதவில்லை, சம்ரதாயப் பூர்வமாக எழுதவில்லை. உணர்வு பூர்வமாக உத்வேகத்தால், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அக்கறையோடு, பொறுப்போடு எழுதியுள்ளார் என்றே தோன்றியது.

லெனினை மாபெரும் சிந்தனையாளர், புரட்சியாளர் – அவரின் வாழ்க்கைப் பற்றி எழுதுகிறபோது, அது வெறும் வாழ்க்கைக் குறிப்பாக மட்டும் இருந்திடாது. அவர் காலத்திய வரலாற்று நிகழ்ச்சிகளோடு, அவரின் தத்துவார்த்த கருத்துக்களோடு பின்னிப் பிணைந்துதான் அவருடைய வாழ்க்கை வரலாற்றை வரைய முடியும். அந்த வாழ்க்கையில் ஓர் ஆய்வாளனாக அருணன் தன் எழுத்து பணியை நேர்மையோடு செய்து முடித்திருக்கிறார். லெனின் வாழ்க்கைப் பற்றி – அவரின் வீரம், சாகசம், அறிவுக் கூர்மை, சிரமங்கள், நெருக்கடிகள், துன்பத் துயரங்கள் – இவைகளைப் பற்றியெல்லாம் உணர்ச்சி வயப்பட்டு எழுதிய அருணன் லெனின் கூறிய, எழுதிய பல அரசியல் கருத்துக்களை, தத்துவார்த்தப் பிரச்சினைகளை கோடிட்டு காட்டியதோடு, வாசகர்கள் அதை எளிமையாகப் புரிந்து கொள்ளுவதற்கு, அந்தக் கருத்துக்களை உள்வாங்கி, தன் மொழியில் வியாக்கியானம் செய்வது பாராட்டும்படியாக இருக்கிறது.

– தே. இலட்சுமணன்