பாசிசத்தின் மீதான சோவியத் வெற்றியின் விளைவு

என்.சங்கரய்யா

(பாசிச ஹிட்லரை, சோவியத் செஞ்சேனை வீழ்த்தியதை போற்றும் வகையில் 30.04.1985 அன்று வெளியான “தீக்கதிர்” சிறப்பிதழில் தோழர் என்.சங்கரய்யா எழுதிய கட்டுரை)

1942 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 22 ம் தேதி வேலூர் மத்திய சிறை; அரசியல் பாதுகாப்பு கைதிகள் அடைக்கப்பட்டிருந்த பகுதி; சோவியத் யூனியன் மீது ஹிட்லரின் நாஜிப் படைகள் திடீரென்று தாக்குதலைத் தொடுத்துவிட்டன என்று வானொலி அறிவித்தது. பாதுகாப்புக் கைதிகள் வாழ்ந்த பகுதியில் காங்கிரஸ் தலைவர்கள் திரு பட்டாபி சீத்தாராமையா, காமராஜ், சாம்பமூர்த்தி போன்றவர்களும் தோழர் ஏ.கே. கோபாலன், டாக்டர் கே.பி.கிருஷ்ணா மற்றும் பல கம்யூனிஸ்ட் தோழர்களும் சேர்ந்து இருந்தனர். அந்தத் தோழர்களில் நானும் ஒருவன்.

அச்செய்தியைக் கேட்டவுடனேயே, ஹிட்லரின் படைகள் இன்னும் ஆறு வார காலத்தில் ரஷ்யாவின் கிழக்கு எல்லையான விளாடிவாஸ்டாக் நகரத்தை கைப்பற்றிவிடும் என்று பட்டாபி சீத்தராமையா படபடவென்று பொரிந்து தள்ளினர். டாக்டர் பட்டாபி சீத்தாராமையா தான் காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை எழுதிய ஆசிரியராவார். அவர், வரலாற்றை அறிந்து கொள்ள முடிந்த மேதாவித்தனம் அவ்வளவுதான்!

பொன்மொழிகள் பொய்மொழியானது

கம்யூனிஸ்டுகளான நாங்கள் கூடினோம். அதில் மார்க்சிஸ்ட் தத்துவ ஆசிரியர் கே.பி.கிருஷ்ணா பேசினார். டாக்டர் பட்டாபி போன்ற  ‘பெரியவர்கள்’ என்ன சொன்னபோதிலும், சோவியத் செஞ்சேனை தனது ராட்சசக் கால்களைக் கொண்டு நாஜிப் படைகளை மிதித்து அழித்துவிடும்: இது உறுதி என்று தோழர் கே.பி கிருஷ்ணா முழங்கினார். பலத்த கைதட்டல் எங்களிடமிருந்து கிளம்பியது.  ‘பூர்ஷ்வா வரலாற்று ஆசிரியர்’  பட்டாபியின்  ‘பொன்மொழிகள்’ பொய்மொழிகளாகின.

மெய்யான விஞ்ஞானமாம் மார்க்சிசம் – லெனினிசத்தின் வெளிச்சத்தில் தோழர் கே.பி.கிருஷ்ணா வெளியிட்ட சொற்களை வரவாறு உண்மை என நிரூபித்துக் காட்டியது.

சோவியத்- ஜெர்மன் யுத்தத்தைப் போல் பிரம்மாண்டமானதொரு யுத்தத்தை உலகம் இதுவரை கண்டதில்லை. சோவியத் கம்யூனிசம் அழிந்துவிடும் என்றும் அதேசமயத்தில் தங்களுடைய போட்டியாளனாகவும் எதிரியாகவுமிருந்த ஹிட்லர் ஜெர்மனியும் சோவியத் யூனியன் பிடியில் சிக்கி அடிபட்டுப்போவான் என்றும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் எகாதிபத்திய நாடுகள் திட்டமிட்டு செயலாற்றின.

பாசிசம் அனைத்து மக்களையும் அழிக்கும் என்று சோவியத் யூனியன் மேற்கத்திய நாடுகளை எச்சரித்தது. ஹிட்லருக்கு எதிராக பாசிஸ்ட் எதிர்ப்பு முன்னணியை அமைக்க முன்வருமாறு சோவியத் யூனியன் மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளையும் அழைத்தது.

ஆனால், மேலை நாடுகள் அதை ஏற்க மறுத்துவிட்டன. செக்கோஸ்லாவாகியா, போலந்து போன்ற பல ஐரோப்பிய நாடுகளை ஹிட்லர் ஆக்கிரமித்து அடிமைப்படுத்தினான். இந்த நாடுகளை ஹிட்லருக்கு பலியாக கொடுத்தன மேலை நாடுகள். இந்த நாடுகளை பிடித்தபின் ஹிட்லர் அடுத்தாற்போல் சோவியத் யூனியன் மீது பாய்வான் என்று அவை எதிர்பார்த்தன. மேலை நாடுகளின் நயவஞ்சகத் திட்டத்தை முறியடிக்கும் வகையிலும், தன்னுடைய பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்வதற்கு அவசியமான அவகாசத்தை தேடிக் கொள்வதற்காகவும், சோவியத் ராஜதந்திரம் முயற்சித்தது. சூழ்ச்சியை சூழ்ச்சியால் முறியடிக்க பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ஆக்ரமித்துக் கொள்வதில்லை என்றதொரு ஒப்பந்தத்தை சோவியத் யூனியன் ஹிட்லர்ஜெர்மனியுடன்செய்துகொள்ள வேண்டியதாயிற்று.

 இது, பாசிஸ்ட் ஜெர்மனிக்கு துணை போவதாகும் என்று மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் கதறின. பாஸிசத்தை முறியடிக்க முன்னணி அமைக்க வாருங்கள் என்று சோவியத் யூனியன் பன்முறை வற்புறுத்தி அழைத்தபோது மறுத்து விட்ட மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளின் கொள்கையே, இந்த உடன்பாட்டை செய்துகொள்ள வேண்டிய நிர்பந்தத்தை சோவியத் யூனியனுக்குத் ஏற்படுத்தியது என்பதை உலக பாட்டாளி மக்கள் தெளிவாக உணர்ந்தனர்.

சோவியத் நாட்டைத் தாக்குவதற்கு ஏகாதிபத்திய நாடுகளினால் வளர்க்கப்பட்ட ஹிட்லர், தன்னை வளர்த்த பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் மீதும் யுத்தப் பிரகடனம் செய்தான். வளர்த்த கடா அவர்கள் மார்பிலேயே பாய்ந்தது. இதனால் இரண்டாவது உலகப் போர் 1938இல் ஆரம்பித்து விட்டது. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய ஏகாதிபத்திய நாடுகள் ஒருபுறமும், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய பாசிஸ்டு நாடுகள் மறுபுறமும் போரில் குதித்தன.

உலக முதலாளித்துவ அமைப்பு, ஏகாதிபத்திய பகுதியாகவும், பாசிஸ பகுதியாகவும் போரில் இறங்கின. தனக்குச் சாதகமான தருணம் பார்த்து ஹிட்லர் சோவியத் பூமியைத் தாக்குவான் என்று சோவியத் தலைமைக்கு நிச்சயமாக தெரியும். எனவே கிடைத்த அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டு சோவியத் யூனியன் தன் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியது.

சோவியத் மீது பாய்ந்தான்

எதிர்பார்த்தபடியே ஹிட்லர், சோவியத் யூனியன் மீது திடீரென்று மாபெரும் தாக்குதலைத் தொடுத்தான். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி, தோழர் ஸ்டாலின் தலைமையில், இந்த ஜீவ மரணைப் போராட்டத்தை உறுதியாகச் சந்தித்தது. முதல் கட்டத்தில், பின்வாங்கிக் கொண்டே எதிரியை மேலும் மேலும் உள்ளே இழுத்து, அவனுக்கு பலத்த சேதத்தை உண்டுபண்ணியது. ஹிட்லரால்  ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில், சோவியத் தேச பக்தர்கள் சக்திவாய்ந்த கொரில்லாப் போராட்டங்களை நடத்தி, எதிரியை நிலைகொள்ள விடாமல் தவிக்க வைத்தனர். சோவியத் மக்களின் வீரஞ்செறிந்த போராட்டம் உலக மக்களின் ஆதரவையும் பாராட்டுக்களையும் பெற்றது. 

ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள அபாயம் நமக்கு ஏற்படும் அபாயமாகும் என்று பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் அறிவித்தார். ஜெர்மனியை எதிர்ப்பதற்கு முன்வர மறுத்த மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் இப்பொழுது தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே  சோவியத் யூனியனுடன் சேர்ந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சோவியத் யூனியன் முன்பிருந்தே விரும்பிய பாசிஸ்ட் எதிர்ப்பு முன்னணி இப்பொழுதுதான் உருவானது. கோரமான போர்களில் சோவியத் படைகள் பாசிஸ்ட் ஜெர்மனியை பலவீனப்படுத்தின. லெனின்கிராட், ஸ்டாலின்கிராட், மாஸ்கோ மற்றும் இதர போர் முனைகளில் லட்சக்கணக்கான சோவியத் வீரர்கள் தங்களின் உயிர்களைத் தியாகம் செய்து எதிரியை தடுத்து நிறுத்தினர். லட்சக்கணக்கில் எதிரிப்படைகளை அழித்தனர்.

சோவியத்தின் சாதனை

சோவியத்தின் பிரம்மாண்டமான யுத்த நடவடிக்கைகள் உலகத்தை வியக்கச் செய்தன. விடுதலைபெற்றுவிட்ட உழைப்பாளி மக்களின் பொதுவுடைமை சமுதாயமும், அரசும் மட்டுமே இத்தகைய சாதனைகளை புரியமுடிந்தது என்பதை மனித வர்க்கம் கண்டது. சோவியத் யூனியன் மீது ஜெர்மனியின் வெறித் தாக்குதலின் வேகத்தை மட்டுப்படுத்த, ஜொமனியின் மேற்குப் பகுதியில், சோவியத்தின் நேச நாடுகளாகிய அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை ஐரோப்பாவின் மேற்குப் பகுதியில் தங்களின் துருப்புகளை இறக்கி, எதிரிக்கு எதிராக இரண்டாவதுபோர்முனையைத் துவக்க வேண்டுமென்று சோவியத்யூனியனும் முற்போக்கு சக்திகளும் கோரின.

ஆனால் இரண்டாவது போர் முன்னயைத் துவக்குவதற்கு அமெரிக்கா, பிரிட் டன் அக்கறை காட்டவிலை. காரணம் என்னவென்றல், அவர்களின் பழைய நோக்கம்தான். அதாவது ஜெர்மனி, சோவித் யூனியனை அடித்து நொறுக்கி  பலவீனப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் சோவியத் யூனியன், ஜெர்மனியை சக்தி இழக்கும்படி செய்துவிட வேண்டும். அப்படிப்பட்ட நிலைமை ஏற்படும்பொழுது, அமெரிக்காவும் பிரிட்டனும் தமது படைகளை இறக்கி ஐரோப்பா முழுவதையும் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வந்துவிடவேண்டும் என்பதுதான் அந்த நோக்கம். ஆனால், உள்ளதற்கே  ஆபத்து வந்துவிட்டது.

இரண்டு பக்க தாக்குதலுக்கு ஆளான ஹிட்லரின் ஜெர்மனி வீழ்ந்தது. இதுவே ஏகாதிபத்திய நேச நாடுகளின் நேச பார்வையாக நேச பாதையாக இருந்தது. நாளை சோவியத் தலைமை இவர்களின் இந்த சூழ்ச்சியையும் முறியடித்தது. பலமான எதிர் தாக்குதல்களை தொடுத்து ஜெர்மன் படைகளை சோவியத் பூமியிலிருந்து விரட்டியது ஜெர்மனியின் மூல பலத்தை அழித்தது. 

அதைத் தொடர்ந்து சோவியத் பூமி முழுவதையும் விடுவித்துவிட்டு ஜெர்மனியால் அடிமைப்படுத்தப்பட்டிருந்த போலந்து, ருமேனியா, செக்கோஸ்லோவாக்கியா, யூகோஸ்லோவியா, பல்கேரியா, ஹங்கேரி, அல்பேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளை செஞ்சேனை ஹிட்லரின் கொடுமையில் இருந்து விடுவித்தது.

வென்றது கம்யூனிசம்

இந்த நாடுகளின் மக்கள் சோவியத் யூனியனுக்கு நன்றி செலுத்தினார்கள். இந்த நாடுகளில் எல்லாம் தொழிலாளர்களும் ஜனநாயகவாதிகளும் கம்யூனிச கட்சியின் தலைமையின் கீழ் விடுதலை அரசுகளை ஏற்படுத்தி, நாளடைவில் அவற்றை கம்யூனிஸ்ட் அரசுகளாக அமைத்தார்கள். சோவியத் செஞ்சேனை ஜெர்மனியை நோக்கி முன்னேறியது. இதைக்கண்ட மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் பயந்து அலறின. சோவியத் யூனியனை பலவீனப்படுத்தவே இரண்டாம் போர்முனையை அவர்கள் துவக்காமல் இருந்தனர். சோவியத் செஞ்சேனையோ ஜெர்மனியின் தலைநகரான பெர்லினை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. சோவியத் படைகளால் விடுதலை செய்யப்பட்ட ஜெர்மன் பிரதேசம்தான் இன்று ஜெர்மன் ஜனநாயக குடியரசாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் இயங்குகிறது. எந்த ஜெர்மன் பூமி கம்யூனிஸ்ட் எதிர்ப்புக்கு பாசிசத்தை உருவாக்கியதோ அதே ஜெர்மன் பூமியின் ஒரு பகுதியில் இன்று கம்யூனிசம் வெற்றிவாகை சூடிவிட்டது. ஜெர்மனியை தோற்கடித்த பின் சோவியத் யூனியன் பாசிஸ்ட் ஜப்பானுக்கு எதிராக யுத்த பிரகடனம் செய்தது. ஆசியாவின் தூரக் கிழக்கு பகுதிகளான சீனாவிலும் கொரியாவிலும் இருந்த ஜப்பானின் படைகள் அனைத்தும் களமிறங்கின.

இதன்மூலம் மகத்தான சீன தேசமும் கொரிய நாடும் தங்களது தேச விடுதலையை பெறுவதற்கு சோவியத் யூனியன் உதவி செய்தது. இதன் விளைவாகவே பின்னர் சீன மக்களின் போராட்டம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் வெற்றி பெற்றது. 1949 அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி அன்று சீன மக்கள் குடியரசை அமைத்தது. வடகொரியாவும் விடுதலை அடைந்தது.

சோசலிச அமைப்பு 

எனவே, இந்த யுத்தத்தில் சோவியத் யூனியனின் வெற்றியின் காரணமாக ஒரு நாட்டில் இருந்த சோசியலிசம் பல நாடுகளுக்கும் பரவியது. ஒரே ஒரு சோசலிச நாடாக இருந்த சோவியத் யூனியனுக்கு பதிலாக, பல்வேறு சோசலிச நாடுகள் அடங்கிய ஒரு உலக சோசலிச அமைப்பு வரலாற்று ரீதியில் உருவெடுத்தது.

1917 இல் சோசலிச புரட்சி ரஷ்யாவில் வெற்றி பெற்ற பொழுது, உலக முதலாளித்துவ அமைப்பின் பொது நெருக்கடியின் முதல் கட்டம் துவங்கியது. பல நாடுகளை கொண்ட சோசலிச அமைப்பு உருவானதை தொடர்ந்து, உலக முதலாளித்துவ அமைப்பின் பொது நெருக்கடியின் இரண்டாவது கட்டம் ஆரம்பமானது. சோவியத் வெற்றியினால் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் தங்களை அடக்கி ஆண்ட ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராக தேச விடுதலை புரட்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். சோவியத் யூனியனின் உதவியினாலும் இதர சோசலிச நாடுகளின் ஆதரவாலும், 100 கோடி ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க மக்கள் ஏகாதிபத்திய நுகத்தடியில் இருந்து அரசியல் விடுதலை பெற்று, இன்று தங்கள் சுதந்திரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், பொருளாதார சுதந்திரத்தை அடைவதற்கும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நூறு கோடி மக்களின் விடுதலையை தொடர்ந்து, உலக ஏகாதிபத்திய அமைப்பு மேலும் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக உலக முதலாளித்துவ அமைப்பில் பொருளாதார நெருக்கடியின் மூன்றாவது கட்டம் ஆரம்பமாகிவிட்டது. மேலும், சோவியத் யூனியனின் பாசிஸ்ட் எதிர்ப்பு வெற்றியின் காரணமாக, முதலாளித்துவ உலகம் முழுவதிலும் தொழிலாளி வர்க்க இயக்கங்களும், கம்யூனிஸ்ட் இயக்கங்களும் ஆழமாக வேரூன்றி வளர்ந்து வருகின்றன.

செங்கொடி இல்லாத நாடு இன்று உலகத்தில் இல்லை. இந்த வளர்ச்சி மனித வர்க்கத்தை எல்லா பாதைகளும் கம்யூனிசத்திற்கே இட்டு செல்கின்றன என்ற நிலையை உலகத்தில் ஏற்படுத்தி விட்டது. பாசிஸ்ட் எதிர்ப்பு யுத்தத்தில் சோவியத் யூனியன் பெற்ற மகத்தான வெற்றியின் காரணமாக ஏற்பட்ட இந்த விளைவுகள் இன்றைய சகாப்தத்தின் எதிர்காலத்தை நிர்ணயித்து வருகின்றன.

போர் முனையில் கலைஞர்கள்

நாஜி ஜெர்மனிக்கு எதிரான சோவியத் மக்களின் மாபெரும் தேசபக்தி யுத்த வரலாற்றில் கலைஞர்களுக்கும், கலாச்சார துறை ஊழியர்களுக்கும் முக்கியமான இடம் உண்டு. பாடகர்களும், இசைவாணர்களும், கவிஞர்களும், புகழ்பெற்ற நாடக, சினிமா நடிகை, நடிகர்களும் போர்முனைகளுக்கு சென்று போர் வீரர்களுக்கும், காயமுற்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த போர் வீரர்களுக்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்ச்சியூட்டி வந்தனர்.

மார்ஷல் ஆந்திரி ஏரெமென்கோ பின்னர் எழுதிய நினைவு குறிப்புகளில், இதுபற்றிக் குறிப்பிட்டிருப்பதாவது; “யுத்தத்தின் போது பத்து முனைகளில் நான் கமாண்டராக இருந்தேன். அவை ஒவ்வொன்றிலும் கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதைக் கண்டேன். போர் வீரர்களுக்கு உற்சாகமூட்டி அவர்களுடைய மன உறுதியை உயர்த்துவதில் கலைஞர்கள் பெரும் தொண்டு ஆற்றினர்” என்று ஏரெமென்கோ குறிப்பிட்டு இருக்கிறார். போர்முனையில் இவ்விதம் தொண்டாற்றிய கலைஞர்களில் புகழ்பெற்ற “ராஸ்கோ ஆர்ட் தியேட்டர்” நாடக நடிகர்களும் இருந்தனர். மாபெரும் தேசபக்த யுத்தத்தின் போது சோவியத் போர்முனைகளில் 1500க்கும் அதிகமான நாடகம், இசை முதலிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

புஷ்கின், டால்ஸ்டாய், செக்காவ், ஆஸ்த்ரோவஸ்கி, மாயாகோவ்ஸ்கி, த்வார் தோவ்ஸ்கி, ஸ்பார் தோவாஸ்கி முதலியவர்களின் படைப்புகள் இந்த கலை நிகழ்ச்சிகளில் இடம்பெற்றன. முன்னணி போர் வீரர்கள் எங்கும் கலைஞர்களை உற்சாகத்துடன் வரவேற்றதாக ஆர்ட் தியேட்டரின் பிரபல நடிகையான அல்வா தரசோவா தம் நினைவு குறிப்புகளில் எழுதி உள்ளார். போர்முனைகளுக்கு சென்ற இந்த தியேட்டரின் மற்றொரு கலைஞரான அனஸ் தாஸ்யாஜ் யோர்கியோகி மேவ்ஸ்காயா, யுத்தத்தில் தாம் ஆற்றிய தொண்டு பற்றி எழுதுகையில், துப்பாக்கி சுடக் கற்றுக்கொண்டு, போர்முனைக்கு சென்று நாஜிகளை எதிர்த்து போராடத் தாம் விரும்பியதாகவும், ஆனால் அதற்கு அனுமதி கிடைக்காததால், கலை நிகழ்ச்சிகள் மூலம் போர் முனையில் வீரர்களுக்கு உற்சாகமூட்டவாவது முடிந்தது பற்றி மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். 

மனித குலத்தின் பாதுகாவலன்

சோவியத் யூனியனின் வெற்றிதான் இன்று சோசலிச முகாமும், உலக தொழிலாளி வர்க்க இயக்கமும், தேச விடுதலைப் புரட்சியும் இன்றைய உலகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்திகளாக ஆகிக்கொண்டு வருகின்றன என்ற பேருண்மைக்கு அடித்தளமாகும். பாசிஸ்ட் அபாயத்திலிருந்து மனித குலத்தை பாதுகாத்த பெருமை சோவியத் யூனியனையே சாரும். சோசலிச உலக அமைப்பின் வெற்றிகளை கண்டு மூர்க்கத்தனமான கோபத்துடன் சோவியத் யூனியனையும் இதர சோசலிச நாடுகளையும் அழிப்பதற்கும், உலக மக்கள் மீது மீண்டும் தன் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கும், அணு ஆயுத யுத்தத்திற்கு தீவிரமாக தயாரிப்பு செய்து வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த சதி திட்டங்களை முறியடிப்பதிலும், உலக சமாதானத்தை பாதுகாப்பதிலும் சோவியத் யூனியனும் இதர சோசலிச நாடுகளும் இன்று முன்னணியில் இருக்கின்றன. சோவியத் யூனியனுடன் ஒன்றுபட்டு நின்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த சதிகளை முறியடிப்பதும், உலக சமாதானத்தை பாதுகாப்பதும் இந்திய மக்கள் அனைவரின் பிரதான கடமையாகும்.

(ச. லெனின் தொகுத்துள்ள “என். சங்கரய்யா – தேர்ந்தெடுக்கப்பட்ட உரை, பேட்டி, கட்டுரை, ஆவணம்” எனும் புத்தகத்தில் இக்கட்டுரை வெளியாகியுள்ளது.)

அரசமைப்புச் சட்டங்களின் வழியே சோவியத் தரிசனம் !

நவம்பர் புரட்சி நூற்றாண்டு கட்டுரை

இரா.சிந்தன்

பொதுவாக ஒருநாடு தன்னை ‘ஜனநாயக’ நாடென அழைத்துக் கொண்டாலும் அந்த நாட்டின் அரசு எந்த வர்க்கத்தின் கருவியாகவுள்ளது என்பதை வைத்தே, அதைப் பற்றிய மதிப்பீட்டுக்கு வரமுடியும். முதலாளித்துவ நாடுகளில், நாடாளுமன்ற ஜனநாயகம் இயங்குகிறது. குடிமக்களுக்கு சிலஉரிமைகளும் வழங்கப்படுகின்றன. இருப்பினும், அந்த சமூகத்தில் நிலவும் முதலாளித்துவ உற்பத்தி முறையில், சுரண்டல் தொடர்கிறது. எனவே பொருளாதார நெருக்கடிகளும், வேலையின்மையும் தவிர்க்க இயலாததாகின்றன.

மிகச் சிறு எண்ணிக்கையிலான முதலாளித்துவ வர்க்கம் ஒரு ஆட்சிக்குத் தலைமையேற்கும்போது – எப்போது அது தன்னுடைய நலன்களை மட்டுமே முதன்மையாகக் கருதுகிறது. நெருக்கடிகள் எழுந்தால், அதன் பாதகமான விளைவுகளை பெரும்பகுதி மக்களின் மீது சுமத்த ஆளும்வர்க்கம் தயங்குவதில்லை. அத்தகைய சுரண்டலுக்கான கருவியாகவே அரசும் பிறநிறுவனங்களும் தொடர்கின்றன.

சோவியத்துகளின் இரண்டாவது காங்கிரஸ்:

சோவியத் ஒன்றிய அரசானது – பாட்டாளிகள், விவசாயிகளின் அரசுதான் என்பதை அவர்களின் அரசமைப்புச் சட்டம் அறுதியிட்டுக் கூறியது.

1917, நவம்பர் 7 ஆம் தேதியில் குளிர்கால அரண்மனை கைப்பற்றப்பட்டது. நவம்பர் 8ஆம் தேதி சோவியத்துகளின் இரண்டாவது காங்கிரஸ் நடைபெற்றது. அதில் உலக சமாதானத்திற்கான அழுத்தமான குரல் எழுந்தது. மேலும், அப்போது நிறைவேற்றப்பட்ட முடிவுகளின் மூலம் 40 கோடி ஏக்கர்களுக்கும் அதிகமான நிலம் விவசாயி வர்க்கத்தின் ஆளுகையின்கீழ் வந்தது. குத்தகைச் சுரண்டல்களுக்கு முடிவுகட்டப்பட்டது.

’மனிதனை மனிதன் சுரண்டும் முறை இனி இங்கில்லை, சோசலிசப் பொருளாதார அமைப்பில் பொருளாதார நெருக்கடிக்கும், வேலையின்மைக்கும் பொருளில்லை’ என்று பெருமையோடு அறிவித்தது சோவியத் யூனியன். அதைநோக்கிய பயணத்திற்கு லெனின் தலைமையேற்று பாதை வகுத்தார். ரஷ்யாவின் காலனிநாடுகள் விடுவிக்கப்பட்டன.

1918ஆம் ஆண்டில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டம் பாலினம், இனம், மொழி உள்ளிட்ட பாகுபாடுகளுக்கு முடிவுகட்டியது. பெண்கள் மீதான பிற்போக்குத்தனமான கட்டுப்பாடுகளை சட்டவிரோதமாக்கியது சோவியத் அரசேயாகும். ஆண் – பெண்திருமணம், விவாகரத்து, வேலை, குழந்தைப்பேறு போன்ற தேர்வுகளை அது சாத்தியமாக்கியது.

1930களில் உலகமும் சோவியத்தும்:

1930களில் உலகம் முழுவதுமே மிகக்கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வந்தது. அமெரிக்காவில் 25% வேலையின்மை நிலவியது. பல நாடுகளில் 33% வரை வேலையின்மை அதிகரித்தது. விவசாய விளைபொருட்களுக்கு 60 சதவீதத்திற்கும் அதிகமாக விலை வீழ்ச்சி ஏற்பட்டது. உலகப் போர்களின் வழியாகவும், போருக்குப் பிறகும் அந்த நெருக்கடியின் சுமைகள் முழுமையாக குடிமக்கள் தலையிலேயே சுமத்தப்பட்டன. ஆனால் சோவியத் பொருளாதாரம் நெருக்கடிகளையோ, விலையேற்றங்களையோ காணாத பேரதிசயமாக இயங்கியது.

1920களில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமலில் இருந்தன. அதாவது அங்கே முதலாளித்துவ உற்பத்தி முறைகளும் நிலவின. முதலாளிகள் இருந்தார்கள். கூட்டுப்பண்ணைகள் முழுமையாக வளர்ந்திருக்கவில்லை. குலாக்குகள் இருந்தார்கள்.

1936 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றிய அரசமைப்புச்சட்டம் திருத்தப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் முதலாளித்துவ உற்பத்திமுறை முழுமையாக ஒழிக்கப்பட்டு, விவசாயத்தில் குலாக்குகள் என்ற பிரிவின் தேவை ஒழிக்கப்பட்டது. கூட்டுப் பண்ணைகள் வெற்றிகரமாக, பிரம்மாண்டமாக இயங்கின.

1936 ஆம் ஆண்டு திருத்தங்கள்:

சோவியத் அரசமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும் என்று 7 வது காங்கிரசில் முடிவு செய்தவுடன், ஸ்டாலின் தலைமையில் 31 பேர் கொண்ட அரசமைப்புச் சட்ட ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஆணையம் எழுதிய வரைவு அரசமைப்புச் சட்டம், நாடு முழுவதும் அனுப்பப்பட்டது. மக்கள் அந்த திருத்தங்களை விவாதித்தார்கள். சுமார் 160 நாட்கள் இந்த விவாதங்கள் நடைபெற்றன; திருத்தங்கள் பெறப்பட்டன. பிறகு எட்டாவது மாநாட்டில் இறுதி வடிவத்தை நிறைவேற்றினார்கள். உலக முதலாளித்துவ நாடுகளின் விமர்சனங்களும், அவை எத்தனை கொச்சையாக இருப்பினும், மாநாட்டின் விவாதத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அரசமைப்புச் சட்டத்தை வடிவமைப்பதற்கான இந்த விவாதமே மிகப்பெரிய ஜநாயக நடவடிக்கை என்பதை கவனிக்கவேண்டும்.

புதியதோர் சமூகச் சூழல்:

புதிய அரசமைப்புச் சட்டத்தை முன்வைத்து, ஸ்டாலின் உரையாற்றியபோது மிகுந்த உற்சாகம் நிலவியது. அவர் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள பிரம்மாண்ட மாற்றங்களைக் குறிப்பிட்டார். கூட்டுப்பண்ணை உற்பத்தியும், புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சியும் பிரம்மாண்ட மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தன. ‘3,16,000 டிராக்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் குதிரைத் திறன் 57,00,000. அரசின் பண்ணைகளையும் சேர்த்துக் கணக்கிட்டால் 4,00,000 டிரேக்டர்கள் 75,80,000 குதிரைத் திறனோடு செயல்பட்டுவருகின்றன’ என்றார்.

வர்க்கங்களின் புதிய நிலைமைகள்:

தொழிலாளர்கள், விவசாயிகள், அறிவுஜீவிகள் இருந்தார்கள். ஆனால் சுரண்டும் வர்க்கங்கள் இல்லை. உற்பத்திக் கருவிகளும், நிலம் உள்ளிட்ட வளங்களும், பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் செயல்படும் சோசலிச அரசுடையதாக இருந்தன. இவ்வாறு பாட்டாளிவர்க்கம் ஒரு புதிய நிலையை எட்டியது. முதலாளித்துவ நாடுகளில் இருப்பதுபோன்ற நிலையில் அது இல்லை. இனியும் அது சுரண்டப்படும் வர்க்கமில்லை. விவசாயிகளும் கூட, கூட்டுப்பண்ணை முறையால் புதிய வளர்ச்சியை எட்டியிருந்தார்கள். விவசாயத்தில் புதிய நுட்பங்கள் புகுத்தப்பட்டிருந்தன. அறிவுஜீவிகளின் நிலையிலும் மாற்றம் ஏற்பட்டிருந்தது. எனவே அவர்கள், சோசலிசத்தில் இருந்து கம்யூனிசத்தை நோக்கி மாறிச் செல்லும் கட்டத்திற்கு பாதை வகுப்போராக இருந்தார்கள். இதையெல்லாம் ஸ்டாலின் பெருமையுடன் குறிப்பிட்டார்.

தேர்தல், வாக்களித்தல், திரும்பப் பெறுதல்:

பொதுப்புத்தியில் ஜனநாயகம் என்பது ஒரு தேர்தல் நடைமுறையாக மட்டுமே கருதப்படுகிறது. தேர்தல், நாடாளுமன்றங்களில் ஜனநாயகம் நிலவுவது மிக முக்கியமே என்ற போதிலும், அவற்றையும் தாண்டிய ஜனநாயக உரிமைகளை சோவியத் அரசமைப்புச் சட்டம் உறுதி செய்தது.

சோவியத் அரசாங்க அமைப்பில் உச்ச அதிகாரம் பெற்றது ‘சுப்ரீம் சோவியத்’ ஆகும். அதில் இரண்டு அவைகள் இருந்தன. ஒன்று சோவியத் ஒன்றிய அவை; மற்றொன்று, தேசிய இனங்களின் சோவியத் அவை. இந்த அவைகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்கள் நடப்பதை அரசமைப்புச் சட்டம் உறுதி செய்தது. 18 வயது வந்த அனைவருக்கும் சம மதிப்பிலான வாக்கும், மறைமுகமான தேர்தல் முறையும் உறுதி செய்யப்பட்டன. (இக்காலகட்டத்தில் பல முதலாளித்துவ நாடுகளில் வாக்குரிமை அனைவருக்குமானதாக இல்லை. வசதி, பாலினம், கல்வியறிவு, இனம், மொழி, வாழிடம் சார்ந்து உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன) சோவியத் ஒன்றிய அவை உறுப்பினரை தேர்வு செய்ய – ஒவ்வொரு 3 லட்சம் பேருக்கும், ஒரு பிரதிநிதி என்ற வகையில் மறைமுக வாக்கெடுப்பு நடைபெற்றது.

தேசிய இனங்களின் சோவியத் அவைக்கான பிரதிநிதிகள் -ஒவ்வொரு ஒன்றியக் குடியரசிலிருந்தும் தலா 25 , தன்னாட்சிக் குடியரசிலிருந்து 11, தன்னாட்சிப் பிரதேசங்களில் இருந்தும், தேசியப் பகுதிகளில் இருந்தும் தலா ஒருவர் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். இரண்டு அவைகளும் சமஅதிகாரம் கொண்டவையாக இருந்தன. அனைவரும் தேர்தலில் வாக்களிப்பதை உறுதிசெய்த அமைப்புச் சட்டம், போட்டியிடும் உரிமையையும் உறுதி செய்தது. அதே சமயம், சோசலிசக் கட்டமைப்பை பாதுகாத்து கம்யூனிசத்திற்கு பாதையமைக்கும் லட்சியத்தை வென்றெடுக்கும் நோக்கில், பாட்டாளிவர்க்க அமைப்புகளே வேட்பாளர்களை நிறுத்த முடியும் என அரசமைப்புச் சட்டம் வரையறுக்கிறது. தனியுடைமையை ஆதரிக்கும் கட்சிகள், அமைப்புகளுக்கு அதிகாரம் மறுக்கப்பட்டது – இதைத்தான் முதலாளித்துவ நாடுகள் ஜனநாயக விரோத நடவடிக்கையாக வர்ணித்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை திரும்ப அழைப்பதற்கான உரிமையும் அத்தியாயம் 11இல் பிரிவு 142 உறுதி செய்தது. குடியரசுகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல்கள் நடைபெற்றன.

நீதிபதிகளுக்கான தேர்தல்:

மேலும்,சுவாரசியம் தரும் வகையில் சோவியத் ஒன்றியத்தில் மாவட்ட நீதிமன்றங்களுக்கு தேர்தல் நடத்துவது உறுதி செய்யப்பட்டது. இந்தத் தேர்தலிலும் அனைவருக்கும் நேரடியான, சம வாக்கு உறுதிசெய்யப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தத் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

1977ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தில், குடிமக்கள் அரசாங்க நிர்வாகப் பணிகளில் பங்கேற்கவும், அரசு நிறுவனங்களுக்கு முன்மொழிவுகளை அனுப்புதல், அரசுப்பணிகளில் நிலவும் தொய்வுகளைக் கேள்வி கேட்பதற்கான உரிமைகளும், அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக வழக்குத் தொடுக்கும் உரிமையும் உறுதி செய்யப்பட்டன. ஊழல் முறைகேடுகளைத் தடுத்திடும் நடவடிக்கைகளாக இவை அமைந்தன.

குடிமக்கள் உரிமைகள்:

முதலாளித்துவ சமூகத்தில் ஒரு பாட்டாளிக்கு உழைப்பு என்பது அவளின்/அவனின் இயல்பிலிருந்து துண்டிக்கப்பட்ட ஒன்றாக அமைந்துள்ளது. அவள்/அவன் உற்பத்தி நடவடிக்கையை மகிழ்ச்சியுடன் மேற்கொள்வதாக அமைவதில்லை. வேலைசெய்யாத போதுதான் ஒரு பாட்டாளி மகிழ்ச்சியடைவதாகக் கருதும் நிலை உள்ளது. இதனை மார்க்ஸ் அன்னியமாதல் (alienation) என்று குறிப்பிடுகிறார். உற்பத்திப் பொருளில் இருந்து உழைப்பு நடவடிக்கையை அன்னியப்படுத்துவதானது ஒரு மனிதனை அவரது வாழ்க்கை நடவடிக்கைகளில் இருந்தும், சமூக இயல்பிலிருந்தும் தனிமைப்படுத்தி, துண்டிக்கிறது.

சோசலிச சமூகத்தில் உழைப்பு வயிற்றுத்தேவைக்கான ஒரு உயிரற்ற நடவடிக்கையாக இல்லை. மாறாக அது, சொந்த வாழ்க்கைக்கும், சமூகத்தின் நலனுக்குமான சேவையாகிறது. எனவே, ஒரு உழைப்பாளி தன் உழைப்பை மதிப்புமிக்கதொரு பணியாக மேற்கொள்கிறார். இந்தப் பின்னணியில்தான். முதலாளித்துவ நாடுகளில் ஏட்டளவில்கூட வழங்கப்படாத உரிமைகளை, சோவியத் ஒன்றிய அரசமைப்புச் சட்டம் தனது குடிமக்களுக்கு உறுதி செய்தது.

உழைப்பும், ஓய்வும் உரிமைகள்:

ஒவ்வொரு குடிமகனுக்கும் உழைப்பு உரிமையாக்கப்பட்டது. அதன்படிவேலை வழங்குவதும், உழைப்புக்கேற்ற ஊதியத்தை உறுதிசெய்வதும் அரசின் கடமையாகும். ஓய்வெடுத்தலும், புதுப்பித்துக் கொள்வதும் குடிமக்களின் உரிமையாக்கப்பட்டது. 7 மணி நேர வேலை, ஆண்டுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை மற்றும் விடுமுறைக் காலத்தில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதும் அரசின் கடமையாக ஏற்றது.

ஓய்வுக் காலத்தில், உடல் நலம் குன்றிய சூழலில் சோவியத் குடிமக்களைப் பாதுகாப்பதும் உரிமைகளாக்கப்பட்டன. கல்வி உரிமையும், பெண்களுக்கான சம உரிமையும் சட்டப்படி உறுதி செய்யப்பட்டன. இனம், மொழி, பண்பாடு, சமூகம் சார்ந்த எந்த வகையிலான வெறுப்பும் கண்டனத்திற்குரியவை மட்டுமல்ல; தண்டமைக்குரியதாகவும் ஆக்கப்பட்டன.

மத வழிபாடுகளும், பிரச்சாரமும், நாத்திகப் பிரச்சாரமும் அனைத்து மனிதர்களுக்கும் உறுதி செய்யப்பட்டன. பேச்சுரிமை, கூட்டம் கூடுவது, போராடும் உரிமைகள் உறுதி செய்யப்பட்டன.

1977ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில் மேலும் பல புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஒருவர் தன் வேலையைத் தேர்வு செய்வதற்கான உரிமையும், சுகாதாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமையும் உறுதி செய்யப்பட்டன. தனிநபர் சுதந்திரத்தின் எல்லைகள் விரிவாக்கப்பட்டன. தனிநபர்களின் விருப்பத் தேர்வுகள் அங்கீகரிக்கப்பட்டன. அவற்றில் தலையீடு செய்வது குற்றமாக்கப்பட்டது.

தஞ்சம் புகுவதற்கான உரிமை வழங்கியது சோவியத் ஒன்றியம். பிறநாடுகளில் இருந்த உழைக்கும் மக்களின் நலன்களுக்காக போராடியவர்கள், தேசிய விடுதலைக்காக போராடியவர்கள், அறிவியல்ஆய்வுகளைத் தொடர முடியாமல் அபயம் கேட்டு வருவோருக்கு, தஞ்சம் புகுவதற்கான உரிமை வழங்கியது சோவியத் யூனியன்.

சோவியத் ஒன்றிய கூட்டாட்சி:

சோவியத் ஒன்றியத்தோடு இணைந்த குடியரசுகள் 14 வது பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளன. தேசிய இனங்களின் அவைக்கு முக்கியத்துவம் தரப்பட்டதுடன், அதிகாரப் பரவலாக்கம் பற்றியும் அரசமைப்புச் சட்டம் விவரிக்கிறது. அந்தந்தப் பிராந்திய நீதிமன்ற நடவடிக்கைகள் அந்தந்தப் பகுதிகளுக்கான மொழியில் நடப்பது உறுதி செய்யப்பட்டன. 1944 ஆம் ஆண்டில் ஒவ்வொரு சோவியத் குடியரசிலும் செம்படைக் கிளைகள் ஏற்படுத்தவும், வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சகம் ஏற்படுத்திக்கொள்ளவும் உரிமைகள் வழங்கி திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. கூட்டாட்சி குறித்த பகுதிகளும், அனுபவமும் வேறொரு முழுநீளக் கட்டுரைக்கானவை.

இதுபற்றி பெருமிதம் பொங்க குறிப்பிடும் தோழர் ஸ்டாலின், ’தேசியங்களும், இனங்களும் சமஉரிமையோடு வாழமுடியாது என்பது மட்டுமல்ல தங்களுக்கு கீழே பல காலனி நாடுகளை வைத்திருக்கும் முதலாளித்துவ நாடுகள், ஆளும் ‘தேசியங்களின்’ சாசனமாகவே அரசமைப்புச் சட்டத்தை வடிக்கிறார்கள். இதிலிருந்து மாறுபட்டது சோவியத் ஒன்றியம்.’ என்கிறார்.

மேலும், ‘சர்வதேசத் தன்மையோடும், அனைத்து தேசியங்களுக்கும் இனங்களுக்கும் சமஉரிமையை உறுதி செய்வதாகவும், நிறம், மொழி, கலாச்சாரம், அரசியல் முன்னேற்றம் என ஆதிக்கத்திற்கு வக்காலத்து வாங்கும் எந்தப் பிரிவும் அமையப் பெறாத ஒன்றாக சோவியத் அரசமைப்புச் சட்டம் உள்ளது.’ என்கிறார். அரசியல் வலிமையோ, கடந்த கால நிலைமைகளோ ஒரு குடியரசின் சம அந்தஸ்தை மறுக்கும் காரணியாக அமைய முடியாது என்கிறார் அவர்.

மறக்கவியலாச் சுவை:

சுரண்டுவோரும், சுரண்டப்படுவோரும் இருக்கையிலே அனைவரும் சமம் என்று இறுமாப்புக் கொள்வதன் பொருள்தான் என்ன? என்ற கேள்விக்கு முதலாளித்துவ நாடுகளில் பதில் இல்லை. சோவியத் ஒன்றியம் அந்த நிலைமையிலிருந்தே மாற்றத்தை தொடங்கியது. அங்கு நிலவிய உற்பத்தி முறையும், உற்பத்தி சக்திகளின் உடைமையும் தனியொரு வர்க்கத்தின் ஆதிக்கத்திலிருந்து அகற்றப்பட்டன. இதன் விளைவாகவே முதலாளித்துவ நாடுகளிலும் இல்லாத பல உரிமைகளை சோவியத் உறுதி செய்தது. இது குறித்து உலகத் தொழிலாளி வர்க்கமே பிரமிப்போடு நோக்கியது. சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வராமல், இத்தகைய வாழ்க்கைச்சூழல் சாத்தியமில்லை என்ற நிலையில்தான் விமர்சனங்களை முதலாளித்துவ அறிவுஜீவிகள் முன்வைத்தனர். அவர்கள் இதனை ஒரு விளம்பர நடவடிக்கையாக மட்டுமே சுருக்க விரும்பினார்கள்.

ஆனால், சோவியத் தனது லட்சியப்பாதையில் நடைபோட்டது. அதன் அரசமைப்புச் சட்டம் பலமுறை திருத்தப்பட்டுள்ளது. அது தனக்குத்தானே வரித்துக் கொண்ட உயர்ந்த லட்சியங்களை அமலாக்கும் போராட்டத்தில் ‘உலகப் பாட்டாளிகளுக்கு இன்றுவரை கனவாக அமைந்திருக்கும் உரிமைகளை, அது சாத்தியமாக்கிக் காட்டியதென்பதை’ யாரும் மறுக்கமுடியாது. ஒவ்வொரு முறை திருத்தத்தின் போதும் சோவியத் ஜனநாயகம் மெருகூட்டப்பட்டது. “நாங்கள் பெற்ற வெற்றிகளின் கனிகளைத் தருகிறோம்” என்ற மகிழ்ச்சியோடு ஸ்டாலின் அதனை வர்ணித்தார். உலகமே அந்தக் கனிகளைச் சுவைத்தது. பின்னடைவுக்குப் பிறகும் தன் கனிகளின் சுவையை சோவியத் வரலாறு நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது.