சர்வதேச மகளிர் தினம் பற்றி அலெக்சாண்ட்ரா கொலந்தாய்

[ரஷ்யாவில் முதன்முதலாக 1913ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று (பழைய நாட்காட்டி அடிப்படையில் பிப்ரவரி 23) உழைக்கும் மகளிரின் சர்வதேச ஒற்றுமையின் வெளிப்பாடாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வை முன்னிட்டு கொண்டாட்டத்திற்கு ஒருவார காலத்திற்கு முன்பு அலெக்சாண்ட்ரா கொலந்தாயின் இக்கட்டுரை ரஷ்ய போல்ஷ்விக் கட்சியின் இதழான பிராவ்தாவில் வெளியானது. அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தியும், பிரச்சாரங்களை முன் வைத்தும், உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையிலும், உழைக்கும் மகளிரின் உணர்வு நிலையை உயர்த்தும் நோக்குடனும் புனித பீட்டர்ஸ்பர்க் நகரில் இத்தினம் கொண்டாடப்பட்டது.]


மகளிர் தினம் என்பது என்ன? அப்படியான ஒரு தினம் அவசியம்தானா? பெண்களுக்கு வாக்குரிமை கேட்டுப் போராடுபவர்களுக்கும் பெண்ணியவாதிகளுக்கும் முதலாளித்துவ வர்க்கத்தைச் சார்ந்த பெண்களுக்கும் கொடுக்கப்படும் சலுகைதானே அது? அது தொழிலாளி வர்க்க இயக்கத்தின் ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிக்காதா? இப்படியான கேள்விகளை இப்போதும் ரஷ்யாவில் கேட்க முடிகிறது. இக்கேள்விகளுக்கான தெளிவான பதிலை  வாழ்க்கை நமக்கு முன்பே வழங்கியுள்ளது.


மகளிர் தினம் என்பது உழைக்கும் மகளிர் இயக்கத்தின் வலுவான, நீளமான சங்கிலியின் இணைப்புக் கண்ணியாகும். ஒவ்வொரு ஆண்டும் உழைக்கும் மகளிரின் திரட்டப்பட்ட அணி வளர்ந்து வருகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்சங்கங்களில் உழைக்கும் மகளிர் சிறு எண்ணிக்கையில்தான் இருந்தனர். தொழிலாளர் கட்சியிலும் மிகச் சில பெண்களே இருந்தனர். தற்போது பிரிட்டனில் 2,92,000 பெண்கள் தொழிற்சங்கங்களில் உள்ளனர். ஜெர்மனியில் 2,00,000 பேர் தொழிற்சங்கங்களிலும், 1,50,000 பேர்  தொழிலாளர் கட்சியிலும் உள்ளனர். ஆஸ்திரியாவில் 47,000 பேர் தொழிற்சங்கத்திலும், 20,000 பேர் கட்சியிலும் உள்ளனர்.


இத்தாலி, ஹங்கேரி, டென்மார்க், ஸ்வீடன், நார்வே, சுவிட்சர்லாண்ட் என எங்கும் உழைக்கும் மகளிர் தங்களை தாங்களே அணிதிரட்டி வருகின்றனர். சோஷலிச பெண்கள் படையில் சுமார் பத்து லட்சம் பேர் உள்ளனர்.  இது ஒரு சக்திமிக்க படையாகும். விலைவாசி உயர்வு, குழந்தை தொழிலாளர்கள், மகப்பேறு காப்பீடு, உழைக்கும் மகளிரைக் காப்பதற்கான சட்டம் என எல்லாம் கேள்விக்குள்ளாகும் இன்றைய நிலையில், உலகின் சக்திவாய்ந்த உழைக்கும் மகளிரைத் திரட்டுவதில் ஏற்பட்டுள்ள உயர்வு கவனிக்கத்தக்கதாகும்.


மூலதனத்திற்கு எதிரான போராட்டத்தின் சுமையை தாங்கள் மட்டுமே சுமக்க வேண்டுமென்று ஆண் தொழிலாளர்கள் நினைப்பதும், பெண்களின் உதவியில்லாமல் இந்த ‘பழைய உலகின்’ மீது தலையீடு செய்ய வேண்டும் என்று அவர்கள் கருதிய காலமும் இருந்தது. தங்களது கணவன, தந்தையோ வேலையிழந்த சூழலில், தவிர்க்க முடியாத காரணங்களால், பெண்கள் உழைக்கும் மகளிராக உழைப்புச் சந்தைக்கு வருகின்றனர். பெண்களை வர்க்க உணர்வு அடையவிடாமல் தடுப்பதன் மூலமாகவே தங்களின் சுயநலனை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை ஆண் தொழிலாளர்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.


எந்த அளவிற்கு வர்க்க உணர்வு பெற்ற போராளிகள் அதிகரிக்கின்றனரோ அந்த அளவிற்கு வெற்றிக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. குடும்பம், சமூகம், அரசு என எங்கும் அதிகாரம் மறுக்கப்பட்ட நிலையில், அடுப்படியில் அமர வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் என்ன அளவிலான உணர்வைப் பெற்றிருக்க முடியும்? அவர்களுக்கென்று ‘சொந்த சிந்தனை’ எதுவுமின்றி, அவர்களது கணவனோ, தந்தையோ சொல்வதைக் கேட்டு, அதற்கேற்ற வகையில் கீழ்ப்படிந்து செயல்படுவதே அவர்களுக்கு வழக்கமாகிவிடுகிறது. எவ்வித உரிமைகளுமின்றி பின்தங்கிய நிலையில் பெண்களை வதைப்பதும், அவர்களை அலட்சியமாகவும் அடிமை போலவும் நடத்துவது உழைக்கும் வர்க்கத்திற்கு எவ்வித பலனையும் தராது. இன்னும் சொல்வதெனில் அது வர்க்க நலன்களுக்கு எதிரானதாகும். அதேநேரம் பெண் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை இயக்கத்திற்குள் எவ்வாறு இணைப்பது? எனும் கேள்வியும் எழுகிறது.


வெளிநாடுகளில் உள்ள சமூக ஜனநாயகவாதிகளால் உடனடியாக இதற்கான தீர்வினை கண்டடைய முடியவில்லை. அங்கு தொழிலாளர் இயக்கங்களில் பெண் தொழிலாளர்கள் இணைவதற்கான வாசல்கள் திறந்திருந்தபோதும் மிகச்சிலரே அதில் சேர்ந்துள்ளனர். ஏனெனில், தொழிலாளி வர்க்கத்தில் உள்ள பெண் தொழிலாளர்களே சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் கடுமையான இழப்புகளைச் சந்திக்கிறார்கள் என்கிற புரிதலை உழைக்கும் வர்க்கம் அங்குப் பெறவில்லை. நூற்றாண்டுகளுக்கு மேலாகப் பெண்களை அடித்துத் துன்புறுத்துவது, அச்சுறுத்துவது என்பது நிகழ்ந்து வருகிறது. எனவே, அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையிலும், அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியிலும் பேசி, அவர்களை மன ரீதியாகவும் இதய பூர்வமாகவும் இணைக்கும் வகையிலான சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

சுரண்டல் நிறைந்த, உரிமைகளற்ற இந்த உலகில் தொழிலாளர்கள் உடனடியாக சில முன்முயற்சிகளை வரவேற்க மாட்டார்கள். பெண்கள் உழைப்பை விற்பவர் என்கிற முறையில் (பொருளாதார ரீதியாக) சுரண்டப்படுவதோடு, தாய், பெண் என்கிற வகையில் (சமூக ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும்) ஒடுக்கப்படுகிறார்கள். உழைக்கும் மக்களின் சோஷலிஸ்ட் கட்சி இவற்றை  புரிந்து கொண்டுள்ளது. உழைப்பாளி என்ற வகையிலும் தாய், பெண் எனப் பெண்கள் ஒடுக்கப்படும் அனைத்து நிலைகளிலும், மிகத்துணிவோடு அவர்களுக்கு ஆதரவாக சோஷலிஸ்ட் கட்சி நிற்கிறது.


பெண்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்கு! பெண் தொழிலாளர்களுக்குச் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடு! தாய் மற்றும் குழந்தைகளுக்குக் காப்பீடு வழங்கு! என்பன உள்ளிட்ட பெண்களுக்கு ஆதரவான கோரிக்கைகளை அனைத்து நாடுகளிலும் சோஷலிஸ்டுகள் முன்வைக்கின்றனர். தொழிலாளர்களின் கட்சி மிகத்தெளிவாக இக்கோரிக்கைகளை முன்னெடுத்தது. அதேபோல், பெண் தொழிலாளர்களும் மிகுந்த விருப்பத்துடன் கட்சியில் இணைந்தனர். பெண்களுக்கான தனித்துவமான, அத்தியாவசியமான கோரிக்கைகளை முன்னெடுப்பதில் தொழிலாளர்களின் கட்சியே முதன்மை பாத்திரம் வகிக்கிறது என்றும் வரவேற்றனர். உழைக்கும் மகளிர் தங்களை அமைப்பாக ஒருங்கிணைத்துக் கொண்டதும், அதன்மூலம் வர்க்க உணர்வு பெற்றதுமே, இந்த இலக்குகளைத் தெளிவுபடுத்துவதற்கான மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

சோஷலிச இயக்கத்தின்பால் உழைக்கும் மகளிரை ஈர்க்கும் கடினமான பணி தற்போது நம்முன் உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் பெண்களுக்கான செயற்குழு மற்றும் தலைமைக் குழுக்கள் உள்ளன. இக்குழுக்கள் அரசியல் உணர்வு பெறாத பெண்கள் மத்தியில் பணியாற்றி, அவர்களை அணி திரட்டி, அவர்கள் மத்தியில் வர்க்க உணர்வை வளர்க்கின்றனர். பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்சனைகளையும் அடையாளம் காண்கின்றனர். விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், குடியிருப்புகளை மேம்படுத்துவதற்கான கோரிக்கைகளை முன்வைத்தும், பெண்களுக்கான அரசியல் உரிமைகளுக்காகவும், பெண் தொழிலாளர்களுக்கான சட்ட பாதுகாப்பிற்காகவும், பாலூட்டும் தாய்மார்களுக்கான உணவு மற்றும் பாதுகாப்பிற்காகவும், குழந்தை இறப்பு மற்றும் விபச்சாரத்திற்கு எதிரான பிரச்சாரம் என்பன உள்ளிட்டவற்றை அவர்கள் முன்னெடுக்கின்றனர்.


கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் பொதுவான வர்க்க நலன்களுக்காகப் போராடுவதோடு, தாய், குடும்பத் தலைவி, பெண் என்கிற வகையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், அவர்களுக்கான தேவைகளையும், பெண் தொழிலாளர்கள் முன்வைக்கின்றனர். கட்சியும், இக்கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துப் போராடுகிறது. பொதுவான தொழிலாளர் நல அம்சங்களின் ஒருபகுதியே  உழைக்கும் மகளிரின் இக்கோரிக்கைகளுமாகும். மகளிர் தினத்தன்று தங்களுக்கு மறுக்கப்பட்டுள்ள உரிமைகளை வென்றெடுக்க அணி திரட்டப்பட்ட பெண்கள் போராடுகின்றனர்.

எதற்காகப் பெண் தொழிலாளர்களைத் தனியாக அணிதிரட்ட வேண்டும்? தொழிலாளி வர்க்கத்தைச் சார்ந்த பெண்களுக்கு தனியான துண்டுப் பிரசுரங்கள், கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை ஏன் நடத்த வேண்டும்? இது இறுதியில் முதலாளித்துவ பெண்ணியவாதமாகவோ, முதலாளித்துவ ஜனநாயகம் முன்வைக்கும் வெறும் வாக்குரிமைக்கான விஷயமாகவோ ஆகிவிடாதா? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். வாக்குரிமைக்கான போராட்டத்தை மட்டும் முன்வைக்கும் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும், தீவிரமான சோஷலிச பெண் இயக்கத்திற்குமான வித்தியாசத்தை அறியாதவர்கள்தான் இப்படியான கேள்விகளை எழுப்புவர்.


முதலாளித்துவ சமூக அமைப்பில் அவர்களின் தந்தையும், கணவரும் மற்றும் சகோதரர்களும் பெறும் உரிமைகளை தாங்களும் அடைவது மட்டுமே முதலாளித்துவ பெண்ணியவாதிகளின் இலக்காகும். பிறப்பின் அடிப்படையிலோ, செல்வ வளத்தின் அடிப்படையிலோ நிலவும் அனைத்து சலுகைகளையும் ஒழிப்பதே உழைக்கும் மகளிரின் இலக்காகும். தங்களை ஆளுகைக்கு உட்படுத்துவது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், உழைக்கும் மகளிர் அதை எதிர்ப்பதில் எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை. ஏனெனில், ஒரு தொழிலாளி என்கிற வகையில் இந்நிலையை அவர் மிக எளிதில் அடைகிறார்.


எங்கும் எப்போதும் முதலாளித்துவ பெண்ணியவாதிகள் சம உரிமை என்று கோருகின்றனர். உழைக்கும் மகளிரோ, ஆண், பெண் என அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை கோருகிறோம். அதே நேரம் குடிமக்கள், தொழிலாளி என்பதாக மட்டுமல்லாமல், பெண்கள் தாய்மார்களாகவும் உள்ளனர் என்பதை நாங்கள் மறப்பதற்கில்லை. ஒரு தாய் என்கிற வகையில் எதிர்காலத்திற்கான தலைமுறையை உருவாக்குபவர்கள் பெண்கள்தான். எனவே, அரசும் சமூகமும் அவர்களையும், அவர்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளையும், பாதுகாப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்கிறோம்.


முதலாளித்துவ பெண்ணியவாதிகள் அரசியல் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்றனர். உழைக்கும் மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் இவ்வுலக அமைப்பிற்குள்ளேயே அவர்கள் வசதியாக செயல்படுவதற்கான சூழலையே அவர்கள் முன்வைக்கும் அரசியல் உரிமைகள் கூறுகின்றன. (உழைக்கும் மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் இவ்வுலக அமைப்பையே தூக்கியெறிந்துவிட்டு) உழைக்கும் மக்களின் அரசைப் படைக்கும் மிகக் கடினமான பாதையை உள்ளடக்கியதே உழைக்கும் மகளிர் முன்வைக்கும் அரசியல் உரிமையாகும்.


உழைக்கும் மகளிருக்கும் முதலாளித்துவ வாக்குரிமையை மட்டும் கோருவோருக்குமான பாதைகள் வெவ்வேறானவை. வாழ்க்கை அவர்களுக்கிடையில் அவர்களின் இலக்குகளை தீர்மானிப்பதில் ஒரு பெரிய வித்தியாசத்தைக் கொடுத்துள்ளது. எஜமானருக்கும் சேவகனுக்கும் இருப்பது போன்ற ஒரு முரண்பாடு, முதலாளித்துவ பெண்ணுரிமையாளர்களுக்கும், உழைக்கும் மகளிருக்குமிடையே உள்ளது. இவர்களுக்கிடையில் எவ்வித தொடர்போ, சமரசமோ இல்லை. எனவே, உழைக்கும் வர்க்க பெண்களுக்கான சிறப்பு மாநாடு குறித்தோ, தனியான மகளிர் தினம் குறித்தோ, ஆண் தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.
ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கான போராட்டத்தில் பங்கேற்கச் செய்வதற்கான உணர்வினை பெண் தொழிலாளர்கள் மத்தியில் உருவாக்குவதே உழைக்கும் வர்க்க பெண்கள் மத்தியில் ஆற்ற வேண்டிய தனித்துவமான பணியாகும். மகளிர் தினம், பெண் தொழிலாளர்கள் மத்தியில் நிதானமாகவும், அதேநேரம் கவனமாகவும், ஒரு சுய விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்துகிறது. அது தொழிலாளி வர்க்கத்தை பிரிக்கவில்லை; மாறாக ஒன்றிணைக்கிறது.


உழைக்கும் மகளிர், வர்க்க விடுதலைக்கான போராட்டத்தோடு பெண் விடுதலை என்பதையும் இணைத்து  மகளிர் தினக் கொண்டாட்டத்தில் இணைய வேண்டும்.

தமிழில்: ச. லெனின்

பிப்ரவரி  1913, லெக்சாண்ட்ரா கொலந்தாய், தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள், முன்னேற்றப் பதிப்பகம்,1984 மற்றும் marxist.org (2000)

முதலில் வெளியானது: பிராவ்தா,  No. 40(244), 17 பிப்ரவரி 1913, புனித பீட்டர்ஸ்பர்க்



தமிழகத்தில் நிலப்பிரபுத்துவம்; சீர்திருத்தமும் எதார்த்தமும்

ச.லெனின்

தமிழ்நாடு அரசின் மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவரும் பொருளாதார ஆய்வாளருமான ஜெ.ஜெயரஞ்சன் எழுதியுள்ள “தமிழகத்தில் நிலபிரபுத்துவம் வீழ்ந்த கதை” எனும் நூல் குறித்த சில விமர்சனங்களை முன்வைத்தே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

ஜெயரஞ்சன் அவர்களே குறிப்பிடுவதுபோல், கடந்த முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தில் நிகழ்ந்துவரும் பொருளாதார சமூக மாற்றங்களின் பல கூறுகளை அவர் ஆராய்ந்துள்ளார். இந்நூலுக்கான ஆக்கம், இரண்டாண்டு கால ஆய்வில் திரட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். காவிரிப் படுகையின் மேற்கு டெல்டா பகுதியான பேட்டை என்கிற கிராமமும், கிழக்கு டெல்டா பகுதியில் குறிச்சி என்கிற கிராமமும் ஆய்வுக்கான பகுதியாக தேர்வு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நூல் உள்ளடக்கியுள்ள ஆய்வின் நோக்கத்தை ஜெயரஞ்சன் தனது நூலின் முன்னுரையிலேயே தெளிவாக குறிப்பிட்டுள்ளார். “காவேரிப் படுகையில் நிலச்சீர்திருத்தம் தோல்வியைத் தழுவியதைப் பலரும் பலவாறாக ஆராய்ந்து ஆவணப்படுத்தியுள்ளனர். அப்படியானால் முன்பு நிலவிய நிலப்பிரபுத்துவம் அப்படியே தொடர வேண்டும் அல்லது வேறு வடிவத்திலாவது தொடர வேண்டும். …… களத்திற்கும் ஆய்விற்குமான பெருத்த இடைவெளி எனக்கு அவமானமாக இருந்தது. இதனை ஓரளவேனும் நிரப்ப முயற்சி செய்தேன்” என்கிறார். அந்த முயற்சியின் விளைபயனே இந்த நூல்.

அதேபோல் “இது மிகச் சிறிய முயற்சி. எழுதப்படாத வரலாறுகள் ஏராளம் உள்ளன என்பதை நாளும் உணர்கிறேன்’‘ என்று குறிப்பிட்டுள்ளார். முந்தைய முயற்சிகளில் உள்ள போதாமைகளையும், தவறான அவதானிப்புகளையும், அடுத்தடுத்த ஆய்வுகள் சீர்செய்யும் என்பதுதான் அறிவியல் பூர்வமான ஆய்வுப் பணிகளின் அடிப்படையாகும். அந்த வகையில் மேலும் பல ஆய்வுகள் இந்த கருத்தோட்டத்தில் நடந்திட இம்முயற்சி அடித்தளம் அமைக்கட்டும்.

இந்நூல் பல்வேறு சிறப்பான தகவல்களையும் நிர்ணயிப்புகளையும் ஆய்வு புலத்திற்கு வழங்கியுள்ளது. நேர்மறையாக எடுத்துக்கொள்ள நிறைய தகவல்களும் நிர்ணயிப்புகளும் இந்நூலில் கொட்டிக் கிடக்கிறது. தஞ்சையில், இடதுசாரி இயக்கங்கள் செய்த பங்களிப்பை பல இடங்களில் சிறப்பாகவே குறிப்பிட்டுள்ளார். தோழர் கோ.வீரய்யன் எழுதிய “செங்கொடியுடன் ஒரு நீண்ட பயணம்” என்னும் நூலில் உள்ள தகவல்களும், கேத்தலின் கஃப் எழுதிய தகவல்களும், இடதுசாரிகளின் பங்களிப்பை எடுத்துக்காட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் ஆய்வின் முடிவில் ஜெயரஞ்சன் முன்வைக்கும் முடிவுகளை மறுக்கும் வகையிலான தகவல்கள் இந்த நூலிலேயே உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் நிலப்பிரபுத்துவம் வீழ்ந்த கதையில், சாதிக் கொடுமைகள் இன்னும் ஒழியவில்லை என்பதும் குறிப்பாகவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொள்கையும் கோட்பாடுகளும்

திமுக அரசிற்கு, குறிப்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்திற்கு, சார்பு தன்மையுடன் எழுதப்பட்ட இடங்களிலும், அதன்பொருட்டு பொதுவுடைமை கட்சியினர் – குறிப்பாக சிபிஐ(எம்) கட்சியை குற்றம் சாட்ட முனையும் இடத்திலும், நிர்ணயிப்புக்களில் தடுமாற்றம் தெரிகிறது. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் பேராசிரியர் கே.நாகராஜ் அவர்கள் வழிகாட்டுதலில், 2007 ஆம் ஆண்டு “ஸ்லேட்டர் கிராமங்கள்” (திருநெல்வேலி – கங்கைகொண்டான் கிராமம் மற்றும் விழுப்புரம் – இருவேல்பட்டு கிராமம்) குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் ஜெயரஞ்சன் முக்கியமான பங்காற்றினார். நான் கள ஆய்வை மேற்கொள்ளும் ஆய்வு உதவியாளராக பணியாற்றினேன். “ஆய்வு மேற்கொள்ளும்போது உனது கொள்கை கோட்பாடுகளை ஓரமாக வைத்துவிட்டு, கிடைக்கும் கள எதார்த்ததிலிறுந்து உனது கொள்கைகளை உரசிப் பார்க்க வேண்டும்.” என்று அவர் அப்போது என்னிடம் கூறினார். இன்றும் அது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. ஆனால், கருணாநிதிக்கு சார்பாக எழுதும் சில இடங்களில் எனக்கு கூறிய வரிகளை ஜெயரஞ்சன் மறந்துவிட்டாரோ? என்று எண்ணத் தோன்றியது.

சமூக சீர்திருத்தம் என்பதே இறுதி என்கிற நிலையில் இருந்துதான் திராவிட சிந்தனை முன்னெழும். அது இயல்பாகவே சமூக மாற்றம் என்று முழங்கும். கம்யூனிஸ்டுகளை முழுமையாக ஏற்க மறுக்கும். தஞ்சையில் சர்வோதயா தொண்டு நிறுவனமான லாஃப்டி (உழுபவருக்கே நிலம் சொந்தம்) கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் பங்களிப்பு குறித்த பகுதிகளிலும் இதைக் காண முடியும்.

“நிலப்பிரபுக்களிடம் நம்பிக்கையான முறையில் பேசி அவர்களிடம் மிகுதியாக இருக்கும் நிலங்களை குத்தகைதாரர்களக்கு மற்றும் வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கவைப்பதற்கு ஒரு இயக்கத்தை (கிருஷ்ணம்மாள் – ஜெகன்னாதன்) முன்னெடுத்தார்கள்.” நிலம் உழுபவர்களுக்குதான் உடைமையாக இருக்க வேண்டும் என்பது சரி. ஆனால், அது எப்படி நடைபெற வேண்டும் என்பதுதான் இங்கு மாறுபடுகிறது. சமரச பேச்சுவார்த்தைகள் எதுவும் வர்க்கபேதத்தை ஒழிக்காது. நிலவுடைமையாளர்களும் குணமாக பேசினால் நல்லவர்களாக மாறப்போவதில்லை.

அடித்தால் திருப்பி அடி

ஏழை கூலி விவசாயியின் வாயில் சாணியை கரைத்து ஊற்றுவதும், தோல் பிய்ந்து தொங்கும் அளவிற்கு சவுக்கால் அடிப்பதும், பாலூட்டும் மார்பகம் கனத்து வலித்தாலும், பால் வேண்டி குழந்தை களத்து மேட்டில் அழுதாலும், வேலை முடியும்வரை வரப்பே பால் கொடுக்க அனுமதிக்காத, ஆதிக்க சாதி நிலப்பிரபுவிடம் எப்படி குணமாக பேசுமுடியும் என்று எதிர்பார்க்கிறார்கள்? கணுக்கால் தெரிய வேட்டி கட்டக்கூடாது; கக்கத்தில்தான் துண்டு; செருப்பு போடக்கூடாது; மணப்பெண்ணின் முதலிரவு பண்ணையோடுதான்; வீட்டு வாசலுக்கு கூட அனுமதிக்கப்படாத நிலையில் அவர்களுடன் எப்படி நம்பிக்கையோடு பேசுவது?

செங்கொடியின் போராட்டம்தான் பண்ணைகளின் அடாவடித்தனத்தை நிறுத்தியது. “அடித்தால் திருப்பி அடி” என்று தோழர். பி. சீனிவாசராவ் செங்கொடி ஏந்தி முழங்கியதுதானே ஆண்டைகளை கதிகலங்க வைத்தது? செங்கொடியின் போராட்டம்தான், குழந்தை அழுதால் எந்தநேரமும் பால் கொடுக்கும் உரிமையை பெற்றுத் தந்தது. தோளில் துண்டு போடக்கூடாது என்பதை எதிர்த்த போராட்டத்தின் வெற்றியின் அடையாளமாகத்தானே இன்றும் தஞ்சை விவசாய தோழர்களின் தோள்களில் சிவப்பு துண்டாக ஜொலிக்கிறது. இவை எதுவும் குணமாக பேசி வாங்கியதல்ல; அடிபணிந்து நின்றவரை இவை எதுவும் கிடைக்கவில்லை.

”1968 இல் நடைபெற்ற கீழ்வெண்மணி படுகொலைக்கு பிறகு கிழக்கு தஞ்சாவூரில் சர்வோதயா மிகவும் துடிப்பாக செய்ல்பட்டது” என்று புத்தகத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. கிருஷ்ணம்மாள் – ஜெகன்நாதன் இருவரும் காந்தியவாதிகள். எப்போதெல்லாம் இந்திய விடுதலை போராட்டம் எழுச்சி பெற்று, ஆளும் வர்க்கத்தை அச்சமூட்டுகிறதோ, அப்போதெல்லாம் இந்த சாத்வீகம் மக்களை இடைமறித்து போராட்ட கனலை வெட்டிச் சுருக்கும். அப்படியான பார்வையோடுதான் சர்வோதயா அமைப்பின் செயல்பாடுகள் அமைந்தன. அதுவே, கீழ்வெண்மணி எனும் போராட்டக் கனல், மற்ற இடங்களில் பரவிவிடும் என்ற அச்சமே கிருஷ்ணம்மாள் – ஜெகன்னாதன் இணையரை இந்த தளத்தில் தள்ளியது. பெரும்பான்மையான தொண்டு நிறுவனங்களின் நோக்கமே மக்களின் போராட்ட அலையை முடக்குவதுதான். சட்டம் சொல்வதுபோல் செய்வோம் என்பது பொதுவான வாய்மொழியாக இருக்கும். இங்கு பிரச்சனை சட்டம் யாருக்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதுதானே?

அரசியல் உள்நோக்கமும் வர்க்க சார்பும்

“அவர்கள் கிழக்கு தஞ்சாவூரின் மிகப்பெரிய நிலவுடைமையாளரான வலிவலம் தேசிகருக்கு சொந்தமான நிலங்களை பினாமிகளாக வைத்திருந்தவர்களை சுட்டிக்காட்டினார்கள். தேசிகர் 16 அறக்கட்டளைகளை உருவாக்கி, அதன் மூலம் 350 ஏக்கர் நிலங்களை அவரின் கட்டுப்பாட்டில் தக்கவைத்துக் கொண்டார். 1971 இல் ஜெகன்னாதன் மற்றும் கிருஷ்ணம்மாள் தலைமையில் இயங்கும் சர்வோதயா ஒரு சத்தியாகிரக போராட்டத்தை அறிவித்தது. இந்த இயக்கத்திற்கு சிபிஐ மற்றும் திமுக ஆதரவு அளித்தன. ஆனால், சிபிஎம் ஆதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மாநிலத்தை ஆட்சி செய்யும் கட்சியான திமுக இந்த இயக்கத்திற்கு ஆதரவு தந்ததனால், சர்வோதயா பினாமி நிலங்களை கைப்பற்றி அதனை கிராமத்தில் இருந்த 300 நிலமற்ற குடும்பங்களுக்கு வழங்கியது. அதே போல, சர்வோதயா கீழவெண்மணியில் நிலங்களை விலைக்கு வாங்கி அதனை நிலமற்றவர்களுக்கு பகிர்ந்து அளித்தது.”

நூலில் உள்ள மேற்கண்ட பகுதி பல கேள்விகளை எழுப்புகிறது. சர்வோதய இயக்கம் தேசிகரை எதிர்த்த போராட்டத்தை சிபிஎம் எதிர்த்தது என்று ஒற்றை வரியில் முடிப்பது, ஏதோ தேசிகருக்கு சிபிஎம் ஆதரவு தெரிவித்து, சர்வோதயா இயக்கத்தை எதிர்த்தது போன்ற பொருள்படும்படியே அது எழுதப்பட்டுள்ளது. நிலவுடைமையை முற்றாக உடைத்து, தேசிகர் மட்டுமல்லாது, வாண்டையார், மூப்பனார் என அனைவரது நிலத்தையும் அரசு கைப்பற்றி, ஏழை உழைக்கும் மக்களுக்கு நிலத்தை பகிர்ந்து கொடுக்கவேண்டும் என்பதே சிபிஎம் நிலை என்பதை அறியாதவர் அல்ல ஜெயரஞ்சன். ஆனால் இங்கு விஷயம் வேறொன்றை உள்ளடக்கியுள்ளது. இந்த சர்வோதயா இயக்கம் மிதவாதத்தை பேசும் ஆளும்வர்க்க சார்புடைய அமைப்பு என்பது நாம் அறிந்ததே. திமுக உள்ளிட்ட அரசுகள் அனைத்தும் நிலவுடைமை வர்க்கத்திற்கு ஆதரவானவைதான். இயல்பிலேயே நிலவுடைமை வர்க்கத்தை எவ்வித சமரசமும் இன்றி எதிர்த்து போராடும் மார்க்சிஸ்ட்டுகளை எதிர்க்கும் அதே நேரத்தில், திரளான உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்பதை அறிவிக்கும் நோக்கோடு சர்வோதய இயக்கத்தை திமுக ஆதரித்ததில் வியப்பேதும் இல்லை. சிபிஐ உடைந்து சிபிஎம் உருவான துவக்க காலத்தில் சிபிஐ, எதிர் அணியோடு இருந்ததற்கு கூடுதல் விளக்கம் நமக்கு இங்கு தேவையில்லை. மேலும் சர்வோதயா இயக்கம் பினாமி நிலத்தை மீட்டு, நிலமற்ற மக்களுக்கு கொடுத்ததை ஆதரித்த திமுக, ஏன் அதே ஆதரவை மார்க்சிஸ்டுகள் நடத்திய போராட்டத்திற்கு வழங்கவில்லை? அரசியல் உள்நோக்கமும் வர்க்க சார்புமே அதற்கான அடிப்படை காரணமாகும்.

இதையும் நூலின் வேறு ஒரு பகுதியில் ஜெயரஞ்சன் குறிப்பிடுவதில் இருந்தே நாம் புரிந்துகொள்ள முடியும். “வேளாண் கொந்தளிப்பு அலைகள் 1968 க்கும் 1972 க்கும் (இரண்டாம் அலை) இடையில் அமைந்தது. 1967 ஆம் ஆண்டில் ஆட்சி அதிகாரத்தை கைபற்றி திமுக, தஞ்சாவூர் மாவட்டத்தில் குறிப்பாக கீழ் தஞ்சாவூரின் வேளாண் தொழிலாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் மத்தியில் கட்சியை வலுவாக்க் கட்ட முயன்றது. கருணாநிதி கிழக்கு தஞ்சாவூரின் மையப் பகுதியான திருவாரூரிலிருந்து வந்தவர். அவர் பின்னாளில் திமுக வின் தலைவராகவும் மாநிலத்தின் முதல்வராகவும் 1969 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட்களின் பிடியை உடைப்பதற்கு பல முயற்சிகளை எடுத்தார். காங்கிரஸ் வலுவாக இருந்த பகுதிகளை திமுக கைப்பற்றி இருந்தாலும், அவர்களால் கம்யூனிஸ்ட்களின் இடங்களை அவ்வளவு எளிதாகக் கைப்பற்ற முடியவில்லை. கருணாநிதி இதை ஒரு முக்கியமான சவாலாகவே எடுத்துக்கொண்டார்.”

யாருக்கும் வலிக்காத அணுகுமுறை

சர்வோதயா இயக்கம், கீழவெண்மணியில் நிலங்களை விலைக்கு வாங்கி நிலமற்றவர்களுக்கு அதை கொடுத்தது. நிலவுடைமையாளர்களிடமிருந்து நிலத்தை இழப்பீடு இன்றி மீட்பதுதானே நில உச்சரம்பு சட்டம். இங்கு நிலத்தை மீட்டு விநியோகிப்பது என்பதற்கு மாறாக நிலத்தை வாங்கி விநியோகிப்பது நிலவுடைமையாளருக்கு ஏதுவான, யாருக்கும் வலிக்காத அணுகுமுறைதான். வங்கியில் கடன் பெற்று, பல நிலங்கள் அவர்களது தொண்டு நிறுவனம் சார்பில் வாங்கி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கடன் திரும்ப செலுத்தப்படாததால் அவை நின்றும் போயுள்ளது. இது கைகூடவில்லை என்பதால் வங்கிகளில் கடன் பெற்று வீடு கட்டி அதை தவணை தொகை பெற்று விற்றுள்ளது. “நிலத்தின் விலை உயர்ந்துவிட்டது. எனவே லாஃப்டி அமைப்பு அதன் பழைய நடவடிக்கைகளை நடைமுறை செய்வதிலிருக்கும் பிரச்சினையை உணர்ந்துகொண்டது. மேலும், அது தன்னுடைய கவனத்தை, நிலம் வாங்கி நிலமற்றவர்களுக்கு கொடுப்பதிலிருந்து, வீடற்றவர்களக்கு வீட்டு வசதி செய்து கொடுப்பதை நோக்கி மாற்றிவிட்டது. அந்த வீடுகளுக்கான தொகையில் தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு 50 சதத்தை மாநில திமுக அரசு மானியமாக வழங்கியுள்ளது. இவை எல்லாம் இருக்கும் அமைப்பு முறைக்குளாகவே எதையாவது மாற்றி வைப்பதுதான். வங்கி கடன் அதன்பேரில் நிலம் என்று துவங்கி, அது சாத்தியமாகவில்லை. எனவே வங்கி கடன், அதற்கு வீடு என்று மாறிவிட்டது. இதில் நிலவுடைமை ஒழிப்பு, உழுபவனுக்கு நிலம் என்பதெல்லாம் எங்கே போனது? இதற்கு திமுக மற்றும் சிபிஐ ஆதரவு என்று நிறைவு செய்யலாமா?.

”கபிஸ்தலத்தை சேர்ந்த மூப்பனார்கள், பூண்டியைச் சேர்ந்த வாண்டையார்கள் தற்போது தங்களுடைய நிலங்களை தக்க வைத்துக்கொண்டுள்ளனர்.” மூப்பனார் தனது அரசியல் செல்வாக்கினால் தனது நிலங்களை பாதுகாத்துக் கொண்டதாகவும், செல்வாக்கு மற்றும் பண பலம் வாண்டையார்களின் நிலவுடைமையை தக்கவைக்க உதவியதா என தெரியவில்லை என்கிறார் ஜெயரஞ்சன். நிலப்பிரபுத்துவமும் நிலவுடைமையும் ஒழியவில்லை என்பதை இதுவும் எடுத்துக்காட்டுகிறது. நிச்சயம் பல இடங்களில் நிலவுடைமை முறை, பல மாற்றங்களை கண்டுள்ளது. ஆனபோதும் நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்படவில்லை. இதனால் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளுக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்படவில்லை. திமுக எடுத்த நடவடிக்கைகள் அனேகமாக தேர்தல் ஆதாயம் மற்றும் தனது செல்வாக்கை உயர்த்த எடுக்கப்பட்டதே அன்றி, நிலவுடைமையை ஒழிப்பதற்கான உள்ளீடு எதுவும் அதில் கிடையாது.

புதிய மரபுத்தொடர்

”முன்பு கம்யூனிஸ்ட் கட்சிகள், தலித் தொழிலாளர்களை அமைப்பாக திரட்டி வைத்திருந்த்து. அதனால் அவை பள்ளர், பறையர் கட்சி என்று அழைக்கப்பட்டது. கருணாநிதி கிழக்கு காவேரி படுகைப் பகுதியில் திமுக செயலாளராக எப்போதும் ஒரு தலித்தையே வைத்திருந்தார்” என்று மிக எதார்த்தமாக அன்றைய நிலையை ஜெயரஞ்சன் விளக்கியுள்ளார். ஆனால், திமுக ஆட்சியின் பலன்கள், தலித் மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதையும், அவரே பின்னர் ஓரிரு இடங்களில் குறிப்பிடுகிறார். நிலப்பிரபுத்துவம் ஒழிந்ததாகவும், குத்த்கைதாரர்களுக்கு ஆதாயம் கிடைத்ததாகவும் நூல் விவரித்தாலும், அதனால் பலனடைந்தவர்களில் தலித் மக்கள் மிகமிக குறைவுதான். திக மற்றும் திமுக வின் செயல்பாடுகள் ”பார்ப்பனர் எதிர்ப்பு இயக்கம் பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தை கேள்விக்குட்படுத்திய அளவுக்கு வெற்றியடைந்ததே ஒழிய ஒட்டுமொத்தமாக சாதி எனும் கருத்தியலை ஒழிக்க முடியவில்லை.” என்பதையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ”பார்ப்பனிய ஒழுங்கினால் வடிவமைக்கப்பட்ட வேளாண் உறவுகள், இப்போது பிற்படுத்தப்பட்ட சாதிகள் எனும் புதிய மரபுத்தொடரில் இயங்க வேண்டிய நிலை வந்தது” என்றும் பதிவு செய்துள்ளார்.

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கிராமங்களில் கிடைக்கப்பெற்ற புள்ளி விபரங்களின் அடிப்படையிலும் தலித் மக்களுக்கு குத்தகைக்கு கூட நிலங்கள் வழங்கப்படவில்லை. “தலித் அல்லாத சாதிகள் பெற்ற நன்மைகயை காட்டிலும் தலித்கள் குறைவாகவே நன்மை அடைந்தார்கள். … மாநில அரசாங்கம் தலித்துகளின் பக்கம் அதிகமாக சாய்வு கொண்டு இருந்தால், அவர்கள் இன்னும் நன்மையடைந்திருக்கலாம்.’‘ ஆனால் திமுக மற்றும் அதிமுக அரசின் தன்மையும், அதன் உள்ளடக்கமும், அவ்வாறு செய்வதற்கான வாய்ப்பை தரவில்லை. குறிச்சி கிராமத்தில் சுர்ஜித் என்பவர் மேற்கொண்ட ஆய்வின்படி “குத்தகை நிலங்களில் 80 சதமான நிலங்களை தலித் அல்லாத சாதிகளுக்கே குத்தகைக்கு விடப்பட்டு இருக்கிறது. … தலித் அல்லாத குத்தகைதாரர்களை காட்டிலும் தலித் குத்தகைதார்கள் செலுத்தும் வாரத்தின் அளவு இரு மடங்கு அதிகமாக உள்ளது” என்பதையும அவர் நிறுவியுள்ளதை ஜெயரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.

பெரியார் மண்ணில் தொடரும் தீண்டாமை

பெரியார் மண் என்று கூறினாலும், சாதி ஆணவப் படுகொலைகளும், தீண்டாமை கொடுமைகளும் இன்றும் இங்கு தொடர்கிறது. இந்தியாவில் சாதியும் வர்க்கமும் பின்னிப் பிணைந்துள்ளது என்கிறது மார்க்சிஸ்ட் கட்சி. சாதியும் சொத்துடைமையும் எவ்வாறு இணைந்துள்ளது என்பதை குத்தகைகு நிலம் பகிரப்பட்டுள்ள விபரங்கள் தெளிவுபடுத்துகிறது.

“கீழ்த்தஞ்சையில் நடந்த பெரும் போராட்டங்கறது பொருளாதார உரிமைக்காகவும் அதைவிட மனித உரிமைக்காக நடந்த போராட்டம். சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இணைஞ்சு நடத்தப்பட்ட இயக்கம்.”

“கேரளாவில் மேற்கொள்ளப்பட்ட தீவிர நிலச்சீர்திருத்தம் ஆதிக்க சாதியினரின் ஆதிக்கத்தை வெகுவாகக் குறைத்துவிட்டது. பொதுவாக, ஆதிக்க சாதியினர்தான் நிலப்பிரபுக்களாகவும், குத்தகை விடுபவர்களாகவும் இருப்பார்கள். நில சீர்திருத்தத்தின் காரணமாக இந்த நிலவுடைமையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. இது சாதிய பாகுபாடுகளையும், தீண்டாமை கொடுமைகளையும், பொதுவெளியில் இல்லாமல் ஆக்கிவிட்டது. ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் சமூக ரீதியாக மேல்நோக்கி வர, நில சீர்திருத்தம் வழி அமைத்துள்ளது” என்று முன்னாள் கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தனது “கேரளா- மற்றொரு உலகம் சாத்தியம்’‘ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இது ஏன் தமிழ்நாட்டில் சாத்தியப்படவில்லை? என்பதற்கான பதில் யாதெனில், இங்கு நில சீர்திருத்தம் சரியாக அமலாக்கப்படவில்லை என்பதுதான்.

“ஒரு அரசியல் அமைப்பினர் உரிமைகளுக்காக போராடினார்கள்; இன்னொரு கட்சி தன் அதிகாரத்தை கொண்டு, குத்தகைதாரர்களின் நலன்களைக் காக்க சட்டம் இயற்றியது” என்று முடிவுரையில் எழுதியுள்ளார். கம்யூனிஸ்ட்கள் உரிமைகளுக்காக போராடினார்கள்; இன்றளவும் போராடுகிறார்கள். சட்டங்களை இயற்றிய திமுக மற்றும் அதிமுகவால், சில பலன்கள் சிலருக்கு கிடைத்தாலும், முந்தைய அரசுகளை போலவே நிலப்பிரபுத்துவத்தை முற்றாக ஒழிக்க, அது போதுமானதாக இல்லை. குத்தகை விவசாயிகள், அதுசார்ந்த சில நடவடிக்கைகளே பிரதானமானதாக இருந்துள்ளது. மாறாக, நிலசீர்திருத்தம் என்பதற்கான ஏற்பாட்டிற்குள்ளாகவே தமிழ்நாடு அரசு செல்லவில்லை. அப்படியான சட்டங்களை இயற்றுவதோ, அதை அமலாக்குவதோ அவர்களின் நோக்கமும் அல்ல. வெண்மணி வரதராஜ நாயுடு துவங்கி தற்போது வாண்டையார், மூப்பனார் வரை நிலவுடைமையும் நிலப்பிரபுத்துவமும் காலத்திற்கு ஏற்ற சில மாற்றங்களுடன் அரசின் ஆதரவுடன் நிலைபெற்று நிற்கிறது.

திமுக ஆட்சியின்போது நிகழ்ந்த வெண்மணி சம்பவத்திற்கு பிறகு அந்த அரசு கணபதியாபிள்ளை கமிஷன் அமைத்தது. 1969 ல் செயல்படத் துவங்கிய இந்த கமிஷன் கூலி விவசாயிகளின் கோரிக்கைகளை பிரிசீலித்தது. கோரிக்கையின் மீதிருந்த நியாயத்தை கருத்தில் கொண்டு “மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலிய ஏத்தணும்னு பரிந்துரை செஞ்சாங்க. அதுவும் தஞ்சை மாவட்டம் முழுவதுக்கும் கூட பொருந்துறமாதிரி இல்லாமல், கீழ்த்தஞ்சை மாவட்டத்துக்கு மட்டும் நியாய கூலிச்சட்டம்னு போட்டங்க” என்று தோழர் ஜி.வீரையன் குறிப்பிடுகிறார். போராட்டங்களுக்கு பயந்துதான் அரசு சில சமரச நடவடிக்கைகளுக்கு வந்ததே அன்றி மற்றபடி அது எப்போதும் வர்க்க சார்புடன்தான் இயங்குகிறது. போராட்டம் தீவிரமாக நடைபெற்ற கீழ்த்தஞ்சைக்கு மட்டும்தான் நியாய கூலி என்பதே அதை எடுத்துக்காட்டும் சிறு உதாரனமாகும்.

தலித் மற்றும் பழங்குடி மக்கள் நலன் சார்ந்து இறுதிவரை பனியாற்றிய பி.எஸ் கிருஷ்ணன் அவர்கள் மேற்கு வங்கத்தில் அரசு பொறுப்பில் பணியாற்றியபோது அவருக்கு கிடைத்த அனுபவத்தை பதிவு செய்துள்ளார். நிலவுடைமையை குத்தகைதாரர்கள் முறையாக வைத்திருப்பதால் பயனில்லை என்பதோடு நில விநியோகம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சென்றுசேர்வது அவசியம் என்பதை பதிவு செய்கிறார்.

உண்மையான நிலச்சீர்திருத்தம்

“குத்தகை விவசாயிகளுக்கு பர்கா சீர்திருத்தம் நிரந்தரமான அனுபோகத்தை அந்த நிலத்தின் மீது அளித்தது. ஆனால், நிலத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளும் உரிமையை அது வழங்கவில்லை.

1987இல் இருந்து 1989 வரை, நான், பட்டியல் சாதியினருக்கான சிறப்பு ஆணையராகவும், அதில் சில காலம் பழங்குடியினருக்கான ஆணையராகவும், பணியில் இருந்தேன். அந்தப் பதவியின் காரணமாக, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடிகள் தொடர்பான பிரச்சனைகளுக்காக, மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்குச் செல்வேன். அப்போது மேற்கு வங்க சமூகநலத் துறை அமைச்சராக இருந்த திரு. தாகுவாவிடம், குத்தகை விவசாயிகளுக்கு அனுபோக உரிமையை மட்டும் கொடுப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டுமா? என்று ஒரு கேள்வி கேட்டேன்.

அனுபோக உரிமையையும் தாண்டி, நிலத்தை அவர்களுக்கே சொந்தமாக்கிக்கொள்வதாக அதை நீட்டிக்க முடியுமா? என்று அவர் வினவினார்.

உழுபவருக்கே நிலம் என்பதுதான் நியாயம். கூடுதல் விளைச்சலும் இதனால் ஏற்படும் என்றேன். தாகுவா என்னுடைய ஆலோசனையை உடனே புரிந்துகொண்டார். ஏற்றுக்கொண்டார். உடனே அதை சரி செய்தார். (இந்தியாவின் மற்ற பகுதிகளும் மேற்கு வங்கமும் வேறுபாடானவை. மேற்கு வங்கக் குத்தகை விவசாயிகளில் 46 சதவீதம் பேர் பட்டியல் சாதியினர், 6 சதவீதம் பேர் பழங்குடிகள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில் சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட சமூக வர்க்கங்களிலேயே அடித்தளத்தில் இருக்கிற சாதிகள்தான் குத்தகையாளர்களாக இருக்கிறார்கள்)”

இந்த நடவடிக்கையை சாத்தியப்படுத்த 1955 இல் காங்கிரஸ் ஆட்சியின்போது, இயற்றப்பட்ட மேற்கு வங்க நில சீர்திருத்த சட்டத்தில் மூன்று முறை சில முக்கியமான திருத்தங்களை மேற்கு வங்க இடது ஜனநாயக அரசு செய்தது. நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதுவெல்லாம் தடையாக இருந்ததோ, அதையெல்லாம் களை எடுத்தது. பினாமி நிலங்கள் குறித்த விசாரணையை வருவாய் அதிகாரியே மேற்கொள்ள அதிகாரம் கொடுத்தது. விவசாயத்தோடு சம்மந்தமில்லாதவர்களிடம் இருந்த குத்தகை நிலங்கள் கையப்படுத்தப்பட்டது. தானே ஒரு டிரஸ்டை உருவாக்கி நிலத்தை அதன் பெயருக்கு மாற்றிவிட்டு, அதை அனுபவிப்பதை தடுக்கும் வகையில், அதன் டரஸ்டியின் நிலமாகவே அந்த நிலங்கள் கருதப்பட்டு நில உச்சவரம்பின் அடிப்படையில் நிலங்கள் கையகப்படுத்த வழிவகை செய்யப்பட்டது. இதைத்தான் வலிவலம் தேசிகர் விஷயத்தில் திமுக அரசு செய்திருக்க வேண்டும். ஆனால், திமுக அரசோ, கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதனுக்கு ஆதரவு கொடுப்பதோடு தனது கடமையை முடித்துக்கொண்டது.

மார்க்சிஸ்ட கட்சி என்ன செய்தது என்பதை “தென்பரை முதல் வெண்மணி வரை” எனும் நூலில் வலிவலம் எஸ்.தியாகராஜன் பதிவு செய்துள்ளார். “1970 ல் பொடிகாளத்தூர்ல வலிவலம் பண்ணைட்ட கணக்கப்பிள்ளையா இருந்தேன். வலிவலம் பண்ணை மனத்துணை நாத தேசிகர். அங்க அவருக்கு 30 வேலி நிலம் இருந்துச்சு. இந்த சமயத்துல ஜீ.வி (ஜி.வீரய்யன்) கிட்டவும் நெருக்கம் ஏற்பட்டுச்சு. அந்த சமயத்துலதான் நமச்சியவாயபுரத்துல 110 ஏக்கர் எடுத்தாங்க. இதை 90 ஏழை விவசாய தொழிலாளிகளுக்குப் பிரிச்சுக் கொடுத்தோம்.

அப்புறம் வலிவலம் பண்ணைக்கு நிறைய டிரெஸ்டுல நிலம் இருந்துச்சு அதுல 400 ஏக்கர் வரைக்கும் நிலத்த பிரிச்சுக் கொடுத்தோம். இது சுந்தரபாண்டியம், கீழ்வேலி, வலிவலம், நெய்வில் நாலு கிராமத்தில் இருந்து எடுத்த நிலம். … வலிவலம் தேசிகர்கிட்ட வேல பாத்த பண்ணையாள்தான் எம்.எஸ் (எம்.செல்லமுத்து). அப்புறம் அவர் எம்.எல்.ஏ ஆனார்.” இதுதான் செங்கொடியின் தடம்.

முதலாளித்துவ ஜனநாயக அமைப்பு முறைக்குள் ஒரு மாநில அரசு செயல்படுவதற்கான வரம்புகளும் உரிமைகளும் மிகக்குறைவே. நவதாரளமயம் இதை மேலும் வெட்டி சுருக்கியுள்ளது. இதற்குள்ளாக, மக்கள் நலன் சார்ந்து தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. ஒரு சேமநல அரசாக தன்னை தகவமைத்துக்கொண்டு செயலாற்ற அது தொடர்ந்து போராடுகிறது. முதலாளித்துவ நவதாரளமய கொள்கைகளின் விசை அதை பல நேரங்களில் உலுக்கி எடுக்கிறது. சேமநல அரசு – சமூக சீர்திருத்தம் என்பதாக மட்டும் அது நின்றுபோகும்போது, அதன் வர்க்க சார்பு இந்த நெருக்கடியின் காரணமாக அதை சுவீகரித்துக்கொள்கிறது. எனவேதான், நில சீர்திருத்தம் போன்ற அவசியமான நடவடிக்கைகளை அரசியல் ஆயுதம்போல் ஆகாயத்தில் வேகமாக வீசிவிட்டு போர் முடிந்துவிட்டதாக அதுவே கூறிக்கொள்கிறது. சுரண்டல் நிறைந்த இந்த சமூக அமைப்பிற்குள்ளாகவே சில சீர்திருத்தங்களில் திருப்தி அடைந்துகொள்ளாமல் ஒரு முழுமையான சமூக மாற்றத்தை படைப்பது என்ற லட்சியத்தையே இடது ஜனநாயக அரசுகள் மேற்கொள்கின்றன. சீர்திருத்தங்கள், சமூக மாற்றத்திற்கான பயணத்திற்கு படிக்கட்டுக்கள் என்கிற வகையில் அவசியமே. சீர்திருத்தங்களோடு திருப்தியடைவதும் அதுவே புரட்சிகர மாற்றம் என்பதாக புளகாங்கிதம் அடைவதும் அற்தமற்றதாகும்.

நகர்ப்புற உள்ளாட்சிகளில் நம்முடைய பணி …

  • அருண்குமார்

அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 74வது திருத்தத்தின்படி உள்ளாட்சி தேர்தல்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். ஆனாலும், பல மாநிலங்களில் அது முறையாக நடப்பதில்லை.

புதிய பொருளாதார கொள்கை அமலாக்கப்பட்ட பிறகு உள்ளாட்சி அமைப்புகள் மீதான பொருளாதார தாக்குதலோடு கலாச்சார அரசியல் ரீதியான தாக்குதல்களும்  நிகழ்கிறது. மக்களின் பங்கேற்போடு, மக்கள் நலன் சார்ந்து செயல்படுவதற்காகவே, விரிவான ஜனநாயகத்தை கொண்டதாக, உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பு உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், அவை மக்கள் சார்ந்ததாக இல்லாமல் மையப்படுத்தப்பட்ட  அதிகாரத்தை நோக்கி மெல்ல மெல்ல நகர்த்தப்பட்டுள்ளது. மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தையே தனது கொள்கையாக கொண்டுள்ள பா.ஜ.க அரசு, உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து விதமான ஜனநாயக உள்ளடக்கங்களையும் நசுக்கி வருகிறது.

74வது சட்ட திருத்தத்தின்படி 18 வகையான பணிகளை உள்ளாட்சி அமைப்புகள்தான் மேற்கொள்ளவேண்டும். கல்வி, சாலை அமைத்தல், குடிநீர் விநியோகம், சுகாதாரம், கழிவுநீர் அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும். ஆனால், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த 18 பணிகளில் 5 க்கும் குறைவான பணிகளே மாநகராட்சிகள் மூலம் நடத்தப்படுகின்றன. அதிகபட்சமாக 7 பணிகள் மும்பை மாநகராட்சியில் மட்டுமே நடக்கிறது.

உள்ளாட்சி அமைப்புகள் எப்படி செயல்படவேண்டும் என்பது குறித்து பல ஆவணங்களும் அரசாணைகளும் சிறப்பாக உள்ளன. ஆனால், உண்மை நிலவரம் அவ்வாறு இல்லை என்பதையே மேற்கண்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏன் இவ்வாறு உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் முடக்கப்படுகிறது? 13 வது நிதிக்குழு, உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் சொந்த நிதியிலிருந்துதான் செயல்படவேண்டும் என்று தெரிவித்தது. மத்திய, மாநில அரசுகளிடமிருந்து நிதியை எதிர்பார்க்கக்கூடாது என்றது. மத்திய, மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கும் நிதியை குறைக்கவேண்டும் என்று வலியுறுத்தியது.

ஜி.எஸ்.டி போன்ற மத்தியப்படுத்தப்பட்ட வரி விதிப்பு முறைகளால் உள்ளாட்சி அமைப்புகள் தங்களுக்கான வரி வருவாயை அதிகமாக இழக்க நேரிட்டது. நிதிக்குழு கூறியதுபோல், நிதியை உருவாக்க சொத்து வரியை உயர்த்துவது, குடிநீர் கட்டணத்தை உயர்த்துவது, கழிவு நீர் மற்றும் குப்பைகளை அகற்றுவதற்கான  சேவை கட்டணத்தை உயர்த்துவதென மக்கள் மீதான சுமை கூடுதலாக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சிகள் மீது நிதிச்சுமை

தற்போது 15வது நிதிக்குழு மேலும் இக்கட்டணங்களை உயர்த்த சில வழிமுறைகளை சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட அனைத்து வகையான சொத்துக்களையும் பட்டியலிட்டு சிறு பகுதியையும் விடாமல் வரி தீர்மானிக்க வேண்டும் என்கிறது. அதேபோல், சொத்தின் சந்தை மதிப்பிற்கு ஏற்றவகையில் சொத்து வரியை உயர்த்தவேண்டும் என்கிறது. மேலும், தீர்மானிக்கப்பட்ட சொத்து வரியை முழுமையாக வசூலிக்க வேண்டும் என்கிறது.

சொத்துவரியை முறைப்படுத்துவதில் என்ன தவறு? என்று சிலர் கேட்கக் கூடும். எங்கு சிக்கல் உள்ளதோ அங்கு அதை முறைபடுத்துவது தவறல்ல.  ஆனால், அதை பொதுமைப்படுத்தி ஏழை எளிய மக்களை பாதிக்கும் விதமாக வடிவமைப்பதில்தான் சிக்கல் உள்ளது. வர்த்தக பயன்பாடு நிறைந்த பகுதியில் வரி தீர்மானிக்கும்போது, அப்பகுதியில்  உள்ள குடியிருப்புகளுக்கும்  வர்த்தக நிலங்களுக்கு உள்ளதுபோல், குடியிருப்புக்களுக்கும் வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வால் உயர் நடுத்தர மக்களும், நடுத்தர மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

குடிசை பகுதிகளையும் சொத்துவரிக்கு உட்படுத்தி ஏழை மக்களையும் நசுக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த வரி உயர்வு, வாடகைதாரர்கள் மீது சுமத்தப்படுகிறது. இது வாடகைதாரர்களை மேலும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.

சொத்து வரி உயர்வின் மூலம் ஒரு பகுதி நிதியை உள்ளாட்சி அமைப்புகள் திரட்டுகின்றன. மற்றொரு பகுதி நிதியை மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் வழங்க வேண்டிய குடிநீர், குப்பை மற்றும் கழிவு நீர் அகற்றுதல் போன்ற சேவைகளுக்கான கட்டணத்தை உயத்துவதன் மூலம் திரட்டுகின்றன.

15வது நிதிக்குழுவின் வலியுறுத்தலோடு, கரோனா காலத்தில் மாநில அரசுக்கு ஒன்றிய அரசு கொடுத்த அழுத்தமும், சொத்து வரி மற்றும் சேவை கட்டண உயர்வாக நம்மீது திணிக்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்ய 5வது முறையாக பொருளாதார நிதி ஒதுக்கீட்டை அறிவித்த ஒன்றிய அரசு, இந்த நிதி மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டுமெனில், உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் சொத்து வரியையும் சேவைகளுக்கான கட்டணத்தையும் உயர்த்தவேண்டும் என்றது. மேலும் 2021 – 22 க்குள் அனைவருக்கும் இந்த கட்டண உயர்வை அறிவிக்கவேண்டும். 2022 -23க்குள் இந்த கட்டண உயர்வுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.  2023 – 24க்குள் இந்த கட்டண உயர்வை முழுமையாக அமுலாக்க வேண்டும் என்று கட்டளையிட்டது. அதுவே தற்போது அரங்கேறி வருகிறது. நிதி தேவையின் காரணமாக அனைத்து மாநிலங்களும் இந்த கட்டண உயர்வை அமலாக்குகின்றன.

முன்பு குப்பைகளை பெறுவதற்கு கட்டணம் தீர்மானிக்கப்பட்டது. குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்காவிட்டால் தண்டம் விதிக்கப்படும் என்றனர். மலைபோல் குப்பைகளை குவிக்கும் வேலையைதான் மாநகராட்சிகள் மேற்கொண்டன. அது பல சுற்றுச்சூழல் கேட்டிற்கும் உயிர் சேதத்திற்கும்  வழிவகுத்தது. தற்போது குப்பைகளை மறுசுழற்சி செய்வதாக கூறினாலும், அதற்கும் கூடுதலாக கட்டணம் தீர்மானித்து மக்களிடம் வசூலிக்கப்படுகிறது.

சொத்து வரி உயர்வும் உலக வங்கியின் தலையீடும்

சொத்து வரி உயர்வு, சேவை கட்டண உயர்வு என மக்கள் மீது இந்த அழுத்தம் ஏன் சுமத்தப்படுகிறது? அதற்கான காரணம் என்ன? என்பதை நாம் ஆராய்ந்தால் அது உலக வங்கியிடம் போய் நிற்கிறது. 2010 முதல் 2015 ஆண்டு வரை இந்த கட்டண உயர்வுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. சுயமான நிதி திரட்டலின் மூலம்தான் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படவேண்டும் என்பது இங்கிருந்து வந்த முன்மொழிவேயாகும். உலகம் முழுக்க எங்கும் உள்ளாட்சி அமைப்புகளால் சுயமான நிதி திரட்டுதல் மூலம் செயலாற்ற முடியாது. இது அவர்களுக்கும் தெரியும். மும்பை மாநகராட்சிதான் அதிகபட்சமாக தனக்கு தேவையான நிதியில் 60 சதத்தை சுயமாக திரட்டுவது சாத்தியமாகியுள்ளது.

பிறகு ஏன் இத்தகைய விஷயத்திற்கு மீண்டும் மீண்டும் அழுத்தம் தரப்படுகிறது என்பதை 2008இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பிறகு, சர்வதேச நிதி மூலதனத்தினால் அதன் பாதிப்பில் இருந்து வெளிவர இயலவில்லை. எனவே, சர்வதேச அளவில் அதன் நிதி மூலதனத்தை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் முதலீடு செய்து லாபம் ஈட்ட முனைகிறது. நாம் இதை புரிந்துகொண்டு மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

கோவையில் சூயஸ் நிறுவனம் தண்ணீர் விநியோகத்தில் ஈடுபட மாநகராட்சி அனுமதித்ததை எதிர்த்து போராடினோம். அந்த நிறுவனம் டில்லி மாநகராட்சியில் இப்பணியை மேற்கொண்டது. அது நிர்ணயித்த அதிகமான கட்டணத்தை டில்லி மாநகராட்சியால் வசூல் செய்து கட்ட முடியாமல் போனது. இந்த தொகைக்கு ஈடாக தில்லி மாநகராட்சியின் மையப்பகுதியில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை சூயஸ் நிறுவனத்திற்கு கொடுக்கும்படி உலக வங்கி கூறியது. இதுதான் அதன் நோக்கமும். நிலம் தற்போது பணம் கொழிக்கும் சொத்தாக மாற்றப்பட்டுவிட்டது. நகர்ப்புறங்களில் உள்ள இடங்கள் தற்போது இவர்களின் இலக்காக மாறியுள்ளன. அரசுகளும் அதற்கு ஏற்ற வகையில்தான் செயல்படுகின்றன.

ஒன்றிய அரசு டில்லியில் உள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தையும் நிர்வாக வசதிக்காக புதிய நாடாளுமன்றம் அமையவுள்ள சென்ட்ரல் விஸ்தாவிற்குள் கொண்டுவரவுள்ளது. உண்மையில், பல பகுதிகளில் உள்ள அலுவலகங்களை இங்கு மாற்றும்போது டில்லியின் முக்கியமான இடங்களில் உள்ள அதன் பழைய அலுவலகங்களை தனியாருக்கு கைமாற்றும் திட்டம் அதில் உள்ளது. சட்டிஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் இந்துஸ்தான் எலக்ட்ரிக்கல் நிறுவனம் ஆதிவாசி மக்களின் நிலத்தில் முன்பு உருவாக்கப்பட்டது. தேசத்தின் வளர்ச்சிக்காக அம்மக்கள் அந்த நிலத்தை தானமாக வழங்கினர். 1990களுக்கு பிறகான பொருளாதார கொள்கையின் அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்கள் நாசமாக்கப்பட்டு அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு கொடுக்கப்படுகிறது.  அப்படித்தான் இந்த நிறுவனமும் ஆக்கப்பட்டது.

மக்களை திரட்டுதல்

நம்மை சுற்றி இவ்வளவு நடந்தாலும், மக்களை திரட்டாமல், இதில் எவ்வித மாற்றத்தையும் உருவாக்க முடியாது. உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதன் மூலம், அதன் பிரதிநிதிகளுக்கான உரிமைகளும் மறுக்கப்படுகிறது. மன்றங்களில் பேசுவதற்கு கூட அனுமதி இல்லாமல் போகிறது. நிதிநிலை அறிக்கைகளை அதிகாரிகளே தயார் செய்கின்றனர். அதை மன்றம் ஏற்காவிட்டாலும், மாநில அரசு ஏற்காவிட்டாலும், நிதிநிலை அறிக்கை மேல் நடவடிக்கைக்கு சென்றுவிடும். மக்களின் பங்கேற்போடே அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்கிறது 74 வது சட்ட திருத்தம். ஆனால், அவை மக்களை புறக்கணித்து அதிகாரிகளை கொண்டே செயல்படுத்தப்படுகிறது.

மக்கள் நலன் சார்ந்து செயல்படும் நம்மைப் போன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் உரிய தலையீடு செய்யமுடியாத நிலை உள்ளது. ஆனால் மக்கள் நேரடியாகத் தொடர்பு கொண்டு கேள்வி கேட்கும் முதல் நபராக உள்ளாட்சி பிரதிநிதிகளே உள்ளனர். எனவே, மக்கள் நலனுக்கு எதிராக உள்ளாட்சி அமைப்புகளின் நடவடிக்கைகள் அமையும்போது, உள்ளாட்சி அமைப்பின் மீதான நம்பிக்கையும் நம்போன்ற கட்சிகளின் மீதான நம்பிக்கையையும் அவர்கள் இழக்க நேரிடுகிறது. எப்படியும் நீங்கள் எங்களுக்காக போராட்டம் போகிறீர்கள்.  உள்ளாட்சி அமைப்பின் பிரதிநியாக உங்களை அமர வைத்தாலும் அங்கு எதையும் செய்வதற்கான வாய்ப்பு உங்களுக்கு இல்லை. பிறகு உங்களை தேர்ந்தெடுப்பதைவிட, எனது சாதி, மதத்தை சார்ந்தவர்களை தேர்வு செய்வது எனக்கு வேறு வகையில் உதவக்கூடும் என்கிற குறுகிய மனநிலைக்கும் அவர்கள் செல்லும் நிலை ஏற்படுகிறது. மக்களை முற்போக்கு அரசியலில் இருந்து, குறுகிய பிற்போக்கு அரசியலுக்கு அவை அழைத்து செல்வது நம்போன்ற கட்சிகளுக்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தும். அதேநேரம் மக்களை ஓரணியில் திரட்டி போராட்டங்களை முன்னெடுக்கவும் இது தடையாக அமையும். 

மக்களிடம் உண்மை நிலவரத்தை விளக்காமல் நம்மால் அவர்களை நமது அரசியலின்பால் ஈர்க்க முடியது. இதை ஒருநாளில் செய்துவிட முடியாது. சொத்துவரி உயர்த்தப்படும்போது மட்டும் வாருங்கள் போராடலாம் என்று கூறி பெரும் பகுதி மக்களை திரட்டிட முடியாது. இது ஒரு தொடர் நிகழ்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து மக்களுடன் உரையாடுவதற்கான வேலைகளை திட்டமிட்டு மேற்கொள்ளவேண்டும். அவர்களுக்கு புரியும்படி பேசிடவேண்டும்.

உள்ளாட்சி பிரதிநிதிகளாக

74 வது சட்ட திருத்தம் வார்டு கமிட்டி அமைக்கப்பட்டு மக்களின் பங்கேற்போடுதான் அனைத்து‌ முடிவுகளும் எடுக்கப்பட வேண்டும் என்கிறது. ஆனால், கேரளாவில் மட்டும்தான் வார்டு கமிட்டி நல்ல முறையில் செயல்படுகிறது. மற்ற இடங்களில் பெயர் அளவிற்கு வார்டு கமிட்டிகள் அமைக்கப்பட்ட போதும் அவை செயல்படுவதில்லை. அவர்களுக்கு தேவையானவர்களை கொண்ட கமிட்டி போலவும் அவை அமைக்கப்படுகிறது. 

நகர்புற உள்ளாட்சி மன்ற உறுப்பினர் என்கிற வகையில் வார்டு கமிட்டிகள் போன்ற அமைப்பை நாம் உருவாக்க வேண்டும். அரசு இதுபோன்ற அமைப்பை உருவாக்கியிருக்க வேண்டும். அரசு அதை செய்யாததால் நாங்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதுபோன்ற கூட்டங்களை கூடுதலாக நடத்தி மக்களிடம் கருத்துக்களை பெற்று, எது சாத்தியம் என்பதையும், எது சாத்தியமற்றதாக உள்ளது என்பதையும் பேசுவதோடு ஏன் இது சாத்தியமாகவில்லை என்பதற்கான காரணங்களையும், அதன் பின்புலத்ததையும் நாம் மக்களோடு பேசவேண்டும். வழக்கமாக நாம் வீதியில் செல்லும்போது இதுபோன்று பேசுவோம். அது போதுமானதல்ல. நாம் பேசும் அந்த நபரை தவிர மற்றவர்களுக்கு அது தெரியாது. மேலும் ஓரிடத்தில் மக்களை கூடச் செய்து அவர்களோடு உரையாடுவதுதான் அவர்களை அரசியல்படுத்தவும். நம்மோடு அவர்களை இணைக்கவும் உதவும். பெண்கள், இளைஞர்கள் என பலரை இணைப்பதும் சாத்தியப்படும்.

சமூக வானொலி மூலம் நமது வார்டுக்கு உட்பட்ட இடங்களில் குறிப்பிட்ட அலைவரிசையில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு கேட்கும் வகையில் வானொலியில் நமது செயல்பாடுகளையும் பிரச்சினைகளையும் குறிப்பிட்ட நேரத்தில் மக்கள் பிரதிநிதிகள் பேசவேண்டும்.

மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு

வர்க்க, வெகுமக்கள் இயக்கங்களின் செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பு அவசியம். அந்தந்த அமைப்புகள் அதன் வர்க்க வெகுஜன பணிகளை மேற்கொள்வது அவசியம்தான். அதேநேரம் குடியிருப்புகளில் களத்தில் செயலாற்றும் தொழிற்சங்கம், மாதர், வாலிபர் அமைப்புகள் ஒருங்கிணைந்த சில கோரிக்கைகளை தீர்மானித்து, மக்களை விழிப்படைய செய்து போராட்டங்களில் இணைக்கவேண்டும். அந்தந்த அமைப்புகள் குறுகிய எண்ணிக்கையில் சில போராட்டங்களை அடையாளபூர்வமாக மட்டும் நடத்துவது பயன்தராது. குறிப்பிட்ட மக்கள் கோரிக்கையை தீர்மானித்து, அதில் வர்க்க, வெகுமக்கள் இயக்கங்களை ஒருங்கிணைத்து  உடனடி கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.

மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கைகளை மாவட்ட குழுக்கள் படித்து அதில் உள்ள விஷயங்களை ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். மக்களுக்கு பாதகமான விஷயங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

நாட்டிலே அதிகமான காலிப்பணியிடங்கள் கோவை மாநகராட்சியில்தான் உள்ளது என்கிறது ஒரு புள்ளிவிவரம். 35 சதவீத  இடங்கள் காலியாக உள்ளது என்கிறது அவ்வறிக்கை. இது தொழிற்சங்க கோரிக்கை மட்டுமல்ல; மக்களுக்கு மாநகராட்சி வழங்க வேண்டிய  அன்றாட பணிகளை இந்த காலிப்பணியிடங்கள் எவ்வாறு பாதிக்கிறது என்பதை பேசவேண்டும். சுகாதாரம், குடிநீர், கழிவு குப்பைகள் அகற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஊழியர் இல்லாதது மக்களின் உடனடி பிரச்சினையோடு இணைந்தது. தொழிற்சங்கம் உள்ளிட்ட வெகுமக்கள் இயக்கங்கள் இதை பொது கோரிக்கையாக மாற்றி மக்களை போராட்டத்தில் இணைக்க வேண்டும்.

குடியிருப்புகளில் நமது பணிகளை விரைவுபடுத்த வேண்டும். அவர்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்து பங்கேற்க வேண்டும். பொங்கல் போன்ற பண்டிகைகளை குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் பங்கேற்கும் வகையிலும், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலும், மேலும் வலுவாக நடத்திடவேண்டும். விசாகப்பட்டினத்தில் மே தினத்தை ஒரு நாள் நிகழ்வாக, கொடியேற்றி பேசி முடிக்கும் வழக்கமான நடைமுறையாக அல்லாமல், குடியிருப்பு பகுதியில் உள்ள அனைவரும் பங்கேற்கும் வகையில் நடத்தப்பட்டது. அது மே வாரம் போல் ஒரு வாரம் நடைபெற்றது. மகளிர் தினம் மூன்று நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.

மக்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தினால் அவர்கள் நம்மோடு வருவார்கள். பிரச்சாரம், அறைகூவல்கள், போராட்டங்கள் இவைகளுக்கிடையேயான தொடர்பையும் புரிந்து செயலாற்ற வேண்டும். கொல்கத்தா பிளீனத்தில் குறிப்பிட்டதுபோல் மக்களுடன் உயிரோட்டமான தொடர்பை ஏற்படுத்தும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

 தமிழில்: ச. லெனின்

பாசிசத்தின் மீதான சோவியத் வெற்றியின் விளைவு

என்.சங்கரய்யா

(பாசிச ஹிட்லரை, சோவியத் செஞ்சேனை வீழ்த்தியதை போற்றும் வகையில் 30.04.1985 அன்று வெளியான “தீக்கதிர்” சிறப்பிதழில் தோழர் என்.சங்கரய்யா எழுதிய கட்டுரை)

1942 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 22 ம் தேதி வேலூர் மத்திய சிறை; அரசியல் பாதுகாப்பு கைதிகள் அடைக்கப்பட்டிருந்த பகுதி; சோவியத் யூனியன் மீது ஹிட்லரின் நாஜிப் படைகள் திடீரென்று தாக்குதலைத் தொடுத்துவிட்டன என்று வானொலி அறிவித்தது. பாதுகாப்புக் கைதிகள் வாழ்ந்த பகுதியில் காங்கிரஸ் தலைவர்கள் திரு பட்டாபி சீத்தாராமையா, காமராஜ், சாம்பமூர்த்தி போன்றவர்களும் தோழர் ஏ.கே. கோபாலன், டாக்டர் கே.பி.கிருஷ்ணா மற்றும் பல கம்யூனிஸ்ட் தோழர்களும் சேர்ந்து இருந்தனர். அந்தத் தோழர்களில் நானும் ஒருவன்.

அச்செய்தியைக் கேட்டவுடனேயே, ஹிட்லரின் படைகள் இன்னும் ஆறு வார காலத்தில் ரஷ்யாவின் கிழக்கு எல்லையான விளாடிவாஸ்டாக் நகரத்தை கைப்பற்றிவிடும் என்று பட்டாபி சீத்தராமையா படபடவென்று பொரிந்து தள்ளினர். டாக்டர் பட்டாபி சீத்தாராமையா தான் காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை எழுதிய ஆசிரியராவார். அவர், வரலாற்றை அறிந்து கொள்ள முடிந்த மேதாவித்தனம் அவ்வளவுதான்!

பொன்மொழிகள் பொய்மொழியானது

கம்யூனிஸ்டுகளான நாங்கள் கூடினோம். அதில் மார்க்சிஸ்ட் தத்துவ ஆசிரியர் கே.பி.கிருஷ்ணா பேசினார். டாக்டர் பட்டாபி போன்ற  ‘பெரியவர்கள்’ என்ன சொன்னபோதிலும், சோவியத் செஞ்சேனை தனது ராட்சசக் கால்களைக் கொண்டு நாஜிப் படைகளை மிதித்து அழித்துவிடும்: இது உறுதி என்று தோழர் கே.பி கிருஷ்ணா முழங்கினார். பலத்த கைதட்டல் எங்களிடமிருந்து கிளம்பியது.  ‘பூர்ஷ்வா வரலாற்று ஆசிரியர்’  பட்டாபியின்  ‘பொன்மொழிகள்’ பொய்மொழிகளாகின.

மெய்யான விஞ்ஞானமாம் மார்க்சிசம் – லெனினிசத்தின் வெளிச்சத்தில் தோழர் கே.பி.கிருஷ்ணா வெளியிட்ட சொற்களை வரவாறு உண்மை என நிரூபித்துக் காட்டியது.

சோவியத்- ஜெர்மன் யுத்தத்தைப் போல் பிரம்மாண்டமானதொரு யுத்தத்தை உலகம் இதுவரை கண்டதில்லை. சோவியத் கம்யூனிசம் அழிந்துவிடும் என்றும் அதேசமயத்தில் தங்களுடைய போட்டியாளனாகவும் எதிரியாகவுமிருந்த ஹிட்லர் ஜெர்மனியும் சோவியத் யூனியன் பிடியில் சிக்கி அடிபட்டுப்போவான் என்றும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் எகாதிபத்திய நாடுகள் திட்டமிட்டு செயலாற்றின.

பாசிசம் அனைத்து மக்களையும் அழிக்கும் என்று சோவியத் யூனியன் மேற்கத்திய நாடுகளை எச்சரித்தது. ஹிட்லருக்கு எதிராக பாசிஸ்ட் எதிர்ப்பு முன்னணியை அமைக்க முன்வருமாறு சோவியத் யூனியன் மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளையும் அழைத்தது.

ஆனால், மேலை நாடுகள் அதை ஏற்க மறுத்துவிட்டன. செக்கோஸ்லாவாகியா, போலந்து போன்ற பல ஐரோப்பிய நாடுகளை ஹிட்லர் ஆக்கிரமித்து அடிமைப்படுத்தினான். இந்த நாடுகளை ஹிட்லருக்கு பலியாக கொடுத்தன மேலை நாடுகள். இந்த நாடுகளை பிடித்தபின் ஹிட்லர் அடுத்தாற்போல் சோவியத் யூனியன் மீது பாய்வான் என்று அவை எதிர்பார்த்தன. மேலை நாடுகளின் நயவஞ்சகத் திட்டத்தை முறியடிக்கும் வகையிலும், தன்னுடைய பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்வதற்கு அவசியமான அவகாசத்தை தேடிக் கொள்வதற்காகவும், சோவியத் ராஜதந்திரம் முயற்சித்தது. சூழ்ச்சியை சூழ்ச்சியால் முறியடிக்க பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ஆக்ரமித்துக் கொள்வதில்லை என்றதொரு ஒப்பந்தத்தை சோவியத் யூனியன் ஹிட்லர்ஜெர்மனியுடன்செய்துகொள்ள வேண்டியதாயிற்று.

 இது, பாசிஸ்ட் ஜெர்மனிக்கு துணை போவதாகும் என்று மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் கதறின. பாஸிசத்தை முறியடிக்க முன்னணி அமைக்க வாருங்கள் என்று சோவியத் யூனியன் பன்முறை வற்புறுத்தி அழைத்தபோது மறுத்து விட்ட மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளின் கொள்கையே, இந்த உடன்பாட்டை செய்துகொள்ள வேண்டிய நிர்பந்தத்தை சோவியத் யூனியனுக்குத் ஏற்படுத்தியது என்பதை உலக பாட்டாளி மக்கள் தெளிவாக உணர்ந்தனர்.

சோவியத் நாட்டைத் தாக்குவதற்கு ஏகாதிபத்திய நாடுகளினால் வளர்க்கப்பட்ட ஹிட்லர், தன்னை வளர்த்த பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் மீதும் யுத்தப் பிரகடனம் செய்தான். வளர்த்த கடா அவர்கள் மார்பிலேயே பாய்ந்தது. இதனால் இரண்டாவது உலகப் போர் 1938இல் ஆரம்பித்து விட்டது. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய ஏகாதிபத்திய நாடுகள் ஒருபுறமும், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய பாசிஸ்டு நாடுகள் மறுபுறமும் போரில் குதித்தன.

உலக முதலாளித்துவ அமைப்பு, ஏகாதிபத்திய பகுதியாகவும், பாசிஸ பகுதியாகவும் போரில் இறங்கின. தனக்குச் சாதகமான தருணம் பார்த்து ஹிட்லர் சோவியத் பூமியைத் தாக்குவான் என்று சோவியத் தலைமைக்கு நிச்சயமாக தெரியும். எனவே கிடைத்த அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டு சோவியத் யூனியன் தன் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியது.

சோவியத் மீது பாய்ந்தான்

எதிர்பார்த்தபடியே ஹிட்லர், சோவியத் யூனியன் மீது திடீரென்று மாபெரும் தாக்குதலைத் தொடுத்தான். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி, தோழர் ஸ்டாலின் தலைமையில், இந்த ஜீவ மரணைப் போராட்டத்தை உறுதியாகச் சந்தித்தது. முதல் கட்டத்தில், பின்வாங்கிக் கொண்டே எதிரியை மேலும் மேலும் உள்ளே இழுத்து, அவனுக்கு பலத்த சேதத்தை உண்டுபண்ணியது. ஹிட்லரால்  ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில், சோவியத் தேச பக்தர்கள் சக்திவாய்ந்த கொரில்லாப் போராட்டங்களை நடத்தி, எதிரியை நிலைகொள்ள விடாமல் தவிக்க வைத்தனர். சோவியத் மக்களின் வீரஞ்செறிந்த போராட்டம் உலக மக்களின் ஆதரவையும் பாராட்டுக்களையும் பெற்றது. 

ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள அபாயம் நமக்கு ஏற்படும் அபாயமாகும் என்று பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் அறிவித்தார். ஜெர்மனியை எதிர்ப்பதற்கு முன்வர மறுத்த மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் இப்பொழுது தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே  சோவியத் யூனியனுடன் சேர்ந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சோவியத் யூனியன் முன்பிருந்தே விரும்பிய பாசிஸ்ட் எதிர்ப்பு முன்னணி இப்பொழுதுதான் உருவானது. கோரமான போர்களில் சோவியத் படைகள் பாசிஸ்ட் ஜெர்மனியை பலவீனப்படுத்தின. லெனின்கிராட், ஸ்டாலின்கிராட், மாஸ்கோ மற்றும் இதர போர் முனைகளில் லட்சக்கணக்கான சோவியத் வீரர்கள் தங்களின் உயிர்களைத் தியாகம் செய்து எதிரியை தடுத்து நிறுத்தினர். லட்சக்கணக்கில் எதிரிப்படைகளை அழித்தனர்.

சோவியத்தின் சாதனை

சோவியத்தின் பிரம்மாண்டமான யுத்த நடவடிக்கைகள் உலகத்தை வியக்கச் செய்தன. விடுதலைபெற்றுவிட்ட உழைப்பாளி மக்களின் பொதுவுடைமை சமுதாயமும், அரசும் மட்டுமே இத்தகைய சாதனைகளை புரியமுடிந்தது என்பதை மனித வர்க்கம் கண்டது. சோவியத் யூனியன் மீது ஜெர்மனியின் வெறித் தாக்குதலின் வேகத்தை மட்டுப்படுத்த, ஜொமனியின் மேற்குப் பகுதியில், சோவியத்தின் நேச நாடுகளாகிய அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை ஐரோப்பாவின் மேற்குப் பகுதியில் தங்களின் துருப்புகளை இறக்கி, எதிரிக்கு எதிராக இரண்டாவதுபோர்முனையைத் துவக்க வேண்டுமென்று சோவியத்யூனியனும் முற்போக்கு சக்திகளும் கோரின.

ஆனால் இரண்டாவது போர் முன்னயைத் துவக்குவதற்கு அமெரிக்கா, பிரிட் டன் அக்கறை காட்டவிலை. காரணம் என்னவென்றல், அவர்களின் பழைய நோக்கம்தான். அதாவது ஜெர்மனி, சோவித் யூனியனை அடித்து நொறுக்கி  பலவீனப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் சோவியத் யூனியன், ஜெர்மனியை சக்தி இழக்கும்படி செய்துவிட வேண்டும். அப்படிப்பட்ட நிலைமை ஏற்படும்பொழுது, அமெரிக்காவும் பிரிட்டனும் தமது படைகளை இறக்கி ஐரோப்பா முழுவதையும் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வந்துவிடவேண்டும் என்பதுதான் அந்த நோக்கம். ஆனால், உள்ளதற்கே  ஆபத்து வந்துவிட்டது.

இரண்டு பக்க தாக்குதலுக்கு ஆளான ஹிட்லரின் ஜெர்மனி வீழ்ந்தது. இதுவே ஏகாதிபத்திய நேச நாடுகளின் நேச பார்வையாக நேச பாதையாக இருந்தது. நாளை சோவியத் தலைமை இவர்களின் இந்த சூழ்ச்சியையும் முறியடித்தது. பலமான எதிர் தாக்குதல்களை தொடுத்து ஜெர்மன் படைகளை சோவியத் பூமியிலிருந்து விரட்டியது ஜெர்மனியின் மூல பலத்தை அழித்தது. 

அதைத் தொடர்ந்து சோவியத் பூமி முழுவதையும் விடுவித்துவிட்டு ஜெர்மனியால் அடிமைப்படுத்தப்பட்டிருந்த போலந்து, ருமேனியா, செக்கோஸ்லோவாக்கியா, யூகோஸ்லோவியா, பல்கேரியா, ஹங்கேரி, அல்பேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளை செஞ்சேனை ஹிட்லரின் கொடுமையில் இருந்து விடுவித்தது.

வென்றது கம்யூனிசம்

இந்த நாடுகளின் மக்கள் சோவியத் யூனியனுக்கு நன்றி செலுத்தினார்கள். இந்த நாடுகளில் எல்லாம் தொழிலாளர்களும் ஜனநாயகவாதிகளும் கம்யூனிச கட்சியின் தலைமையின் கீழ் விடுதலை அரசுகளை ஏற்படுத்தி, நாளடைவில் அவற்றை கம்யூனிஸ்ட் அரசுகளாக அமைத்தார்கள். சோவியத் செஞ்சேனை ஜெர்மனியை நோக்கி முன்னேறியது. இதைக்கண்ட மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் பயந்து அலறின. சோவியத் யூனியனை பலவீனப்படுத்தவே இரண்டாம் போர்முனையை அவர்கள் துவக்காமல் இருந்தனர். சோவியத் செஞ்சேனையோ ஜெர்மனியின் தலைநகரான பெர்லினை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. சோவியத் படைகளால் விடுதலை செய்யப்பட்ட ஜெர்மன் பிரதேசம்தான் இன்று ஜெர்மன் ஜனநாயக குடியரசாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் இயங்குகிறது. எந்த ஜெர்மன் பூமி கம்யூனிஸ்ட் எதிர்ப்புக்கு பாசிசத்தை உருவாக்கியதோ அதே ஜெர்மன் பூமியின் ஒரு பகுதியில் இன்று கம்யூனிசம் வெற்றிவாகை சூடிவிட்டது. ஜெர்மனியை தோற்கடித்த பின் சோவியத் யூனியன் பாசிஸ்ட் ஜப்பானுக்கு எதிராக யுத்த பிரகடனம் செய்தது. ஆசியாவின் தூரக் கிழக்கு பகுதிகளான சீனாவிலும் கொரியாவிலும் இருந்த ஜப்பானின் படைகள் அனைத்தும் களமிறங்கின.

இதன்மூலம் மகத்தான சீன தேசமும் கொரிய நாடும் தங்களது தேச விடுதலையை பெறுவதற்கு சோவியத் யூனியன் உதவி செய்தது. இதன் விளைவாகவே பின்னர் சீன மக்களின் போராட்டம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் வெற்றி பெற்றது. 1949 அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி அன்று சீன மக்கள் குடியரசை அமைத்தது. வடகொரியாவும் விடுதலை அடைந்தது.

சோசலிச அமைப்பு 

எனவே, இந்த யுத்தத்தில் சோவியத் யூனியனின் வெற்றியின் காரணமாக ஒரு நாட்டில் இருந்த சோசியலிசம் பல நாடுகளுக்கும் பரவியது. ஒரே ஒரு சோசலிச நாடாக இருந்த சோவியத் யூனியனுக்கு பதிலாக, பல்வேறு சோசலிச நாடுகள் அடங்கிய ஒரு உலக சோசலிச அமைப்பு வரலாற்று ரீதியில் உருவெடுத்தது.

1917 இல் சோசலிச புரட்சி ரஷ்யாவில் வெற்றி பெற்ற பொழுது, உலக முதலாளித்துவ அமைப்பின் பொது நெருக்கடியின் முதல் கட்டம் துவங்கியது. பல நாடுகளை கொண்ட சோசலிச அமைப்பு உருவானதை தொடர்ந்து, உலக முதலாளித்துவ அமைப்பின் பொது நெருக்கடியின் இரண்டாவது கட்டம் ஆரம்பமானது. சோவியத் வெற்றியினால் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் தங்களை அடக்கி ஆண்ட ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராக தேச விடுதலை புரட்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். சோவியத் யூனியனின் உதவியினாலும் இதர சோசலிச நாடுகளின் ஆதரவாலும், 100 கோடி ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க மக்கள் ஏகாதிபத்திய நுகத்தடியில் இருந்து அரசியல் விடுதலை பெற்று, இன்று தங்கள் சுதந்திரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், பொருளாதார சுதந்திரத்தை அடைவதற்கும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நூறு கோடி மக்களின் விடுதலையை தொடர்ந்து, உலக ஏகாதிபத்திய அமைப்பு மேலும் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக உலக முதலாளித்துவ அமைப்பில் பொருளாதார நெருக்கடியின் மூன்றாவது கட்டம் ஆரம்பமாகிவிட்டது. மேலும், சோவியத் யூனியனின் பாசிஸ்ட் எதிர்ப்பு வெற்றியின் காரணமாக, முதலாளித்துவ உலகம் முழுவதிலும் தொழிலாளி வர்க்க இயக்கங்களும், கம்யூனிஸ்ட் இயக்கங்களும் ஆழமாக வேரூன்றி வளர்ந்து வருகின்றன.

செங்கொடி இல்லாத நாடு இன்று உலகத்தில் இல்லை. இந்த வளர்ச்சி மனித வர்க்கத்தை எல்லா பாதைகளும் கம்யூனிசத்திற்கே இட்டு செல்கின்றன என்ற நிலையை உலகத்தில் ஏற்படுத்தி விட்டது. பாசிஸ்ட் எதிர்ப்பு யுத்தத்தில் சோவியத் யூனியன் பெற்ற மகத்தான வெற்றியின் காரணமாக ஏற்பட்ட இந்த விளைவுகள் இன்றைய சகாப்தத்தின் எதிர்காலத்தை நிர்ணயித்து வருகின்றன.

போர் முனையில் கலைஞர்கள்

நாஜி ஜெர்மனிக்கு எதிரான சோவியத் மக்களின் மாபெரும் தேசபக்தி யுத்த வரலாற்றில் கலைஞர்களுக்கும், கலாச்சார துறை ஊழியர்களுக்கும் முக்கியமான இடம் உண்டு. பாடகர்களும், இசைவாணர்களும், கவிஞர்களும், புகழ்பெற்ற நாடக, சினிமா நடிகை, நடிகர்களும் போர்முனைகளுக்கு சென்று போர் வீரர்களுக்கும், காயமுற்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த போர் வீரர்களுக்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்ச்சியூட்டி வந்தனர்.

மார்ஷல் ஆந்திரி ஏரெமென்கோ பின்னர் எழுதிய நினைவு குறிப்புகளில், இதுபற்றிக் குறிப்பிட்டிருப்பதாவது; “யுத்தத்தின் போது பத்து முனைகளில் நான் கமாண்டராக இருந்தேன். அவை ஒவ்வொன்றிலும் கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதைக் கண்டேன். போர் வீரர்களுக்கு உற்சாகமூட்டி அவர்களுடைய மன உறுதியை உயர்த்துவதில் கலைஞர்கள் பெரும் தொண்டு ஆற்றினர்” என்று ஏரெமென்கோ குறிப்பிட்டு இருக்கிறார். போர்முனையில் இவ்விதம் தொண்டாற்றிய கலைஞர்களில் புகழ்பெற்ற “ராஸ்கோ ஆர்ட் தியேட்டர்” நாடக நடிகர்களும் இருந்தனர். மாபெரும் தேசபக்த யுத்தத்தின் போது சோவியத் போர்முனைகளில் 1500க்கும் அதிகமான நாடகம், இசை முதலிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

புஷ்கின், டால்ஸ்டாய், செக்காவ், ஆஸ்த்ரோவஸ்கி, மாயாகோவ்ஸ்கி, த்வார் தோவ்ஸ்கி, ஸ்பார் தோவாஸ்கி முதலியவர்களின் படைப்புகள் இந்த கலை நிகழ்ச்சிகளில் இடம்பெற்றன. முன்னணி போர் வீரர்கள் எங்கும் கலைஞர்களை உற்சாகத்துடன் வரவேற்றதாக ஆர்ட் தியேட்டரின் பிரபல நடிகையான அல்வா தரசோவா தம் நினைவு குறிப்புகளில் எழுதி உள்ளார். போர்முனைகளுக்கு சென்ற இந்த தியேட்டரின் மற்றொரு கலைஞரான அனஸ் தாஸ்யாஜ் யோர்கியோகி மேவ்ஸ்காயா, யுத்தத்தில் தாம் ஆற்றிய தொண்டு பற்றி எழுதுகையில், துப்பாக்கி சுடக் கற்றுக்கொண்டு, போர்முனைக்கு சென்று நாஜிகளை எதிர்த்து போராடத் தாம் விரும்பியதாகவும், ஆனால் அதற்கு அனுமதி கிடைக்காததால், கலை நிகழ்ச்சிகள் மூலம் போர் முனையில் வீரர்களுக்கு உற்சாகமூட்டவாவது முடிந்தது பற்றி மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். 

மனித குலத்தின் பாதுகாவலன்

சோவியத் யூனியனின் வெற்றிதான் இன்று சோசலிச முகாமும், உலக தொழிலாளி வர்க்க இயக்கமும், தேச விடுதலைப் புரட்சியும் இன்றைய உலகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்திகளாக ஆகிக்கொண்டு வருகின்றன என்ற பேருண்மைக்கு அடித்தளமாகும். பாசிஸ்ட் அபாயத்திலிருந்து மனித குலத்தை பாதுகாத்த பெருமை சோவியத் யூனியனையே சாரும். சோசலிச உலக அமைப்பின் வெற்றிகளை கண்டு மூர்க்கத்தனமான கோபத்துடன் சோவியத் யூனியனையும் இதர சோசலிச நாடுகளையும் அழிப்பதற்கும், உலக மக்கள் மீது மீண்டும் தன் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கும், அணு ஆயுத யுத்தத்திற்கு தீவிரமாக தயாரிப்பு செய்து வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த சதி திட்டங்களை முறியடிப்பதிலும், உலக சமாதானத்தை பாதுகாப்பதிலும் சோவியத் யூனியனும் இதர சோசலிச நாடுகளும் இன்று முன்னணியில் இருக்கின்றன. சோவியத் யூனியனுடன் ஒன்றுபட்டு நின்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த சதிகளை முறியடிப்பதும், உலக சமாதானத்தை பாதுகாப்பதும் இந்திய மக்கள் அனைவரின் பிரதான கடமையாகும்.

(ச. லெனின் தொகுத்துள்ள “என். சங்கரய்யா – தேர்ந்தெடுக்கப்பட்ட உரை, பேட்டி, கட்டுரை, ஆவணம்” எனும் புத்தகத்தில் இக்கட்டுரை வெளியாகியுள்ளது.)

உலகமய காலத்தில் வாழ்விட உத்தரவாதமும் சமூக நீதியும்

ச. லெனின்

குரல்: தோழர் பீமன்

சென்னை உள்ளிட்டு தமிழகத்தின் பல இடங்களில் வாழ்விட பாதுகாப்பிற்கான போராட்டங்கள் முன்னுக்கு வந்துள்ளது. குறிப்பாக, நீர்நிலைப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மேம்பட்ட வாழ்விடம் வழங்குதல் என்ற பெயரில் ஏழை எளிய மக்களின் குடியிருப்புக்கள் அகற்றப்படுவதும், அதை எதிர்த்த மக்களின் போராட்டங்களும் தொடர்கின்றன. நகர்ப்புறங்களின் மையத்திலிருந்து, உழைக்கும் மக்களின் பெரும்பகுதியினர் நகரங்களின் விளிம்பிற்கு துரத்தப்படுகின்றனர். இதுபோன்ற நிலைகள் எதுவும் திடீர் நிகழ்வுகளோ, தவிர்க்க முடியாத விஷயங்களோ அல்ல. இதன் பின்னால் உள்ள அரசியல் பொருளாதாரத்தை விளக்கிடும்  சிறு முயற்சியை இக்கட்டுரை மேற்கொள்கிறது.

சென்னை (மெட்ராஸ்), கல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்கள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே துறைமுகம், வர்த்தகம் சார்ந்து வளர்ச்சிபெற்று வந்தன. இந்திய விடுதலைக்கு பிறகான காலப்பகுதியில் புதிய வளர்ச்சிப் போக்குகளின் விளைவாக நகரங்கள் விரிவடைந்தது. அதன் முக்கிய விளைவாக, நகரத்தின் வளர்ச்சிக்கான அடித்தளமாக விளங்கிய உழைக்கும் மக்களும் நகரங்களில் குவிந்தனர். அதேநேரம் சுரண்டல் நிறைந்த முதலாளித்துவ அமைப்பு முறையில் அவர்களுக்கு கிடைத்த குறைந்த கூலியில் குடிசை பகுதிகளில்தான் குடியிருக்க முடிகிறது. கூவம் ஆற்றங்கரையிலும், நெருக்கடி நிறைந்த, காற்றோட்டம் இல்லாத, குடிநீர், கழிப்பிடம், அடிப்படைகள் வசதிகள் ஏதுமற்ற, குறுகிய சந்துகளையே சாலைகளாக கொண்ட, மழை / வெயில் என எந்த காலத்திலும் வாழ தகுதியற்ற மூச்சுத்திணறும் சிறு அறைகளை கொண்ட அல்லது அறைகளற்ற வீடுகளில், அங்கு நிலவும் சுகாதாரமற்ற சூழலில் வாழவேண்டும் என்பது அவர்களது விருப்பமல்ல. உழைப்பாளிகளின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கொடுக்கப்படாத சூழலே அவர்களை ஏழ்மையில் தள்ளியது. அதுவே மோசமான வாழ்நிலையிலும் குடியிருப்புக்களிலும் அவர்களை வாழவைக்கிறது. ஆனால், முதலாளித்துவமும் அதன் கண்ணோட்டம் கொண்ட மேட்டிமை சிந்தனையுடையவர்களும், ஏதோ குடிசை பகுதி மக்களின் தவறான போக்கின் விளைவாகவே அவர்கள் அங்கு இருப்பதுபோன்ற கருத்துக்களை பதிவு செய்கின்றனர். முதலாளித்துவம்தான் அவர்களின் அப்படியான வாழ்நிலைக்கு காரணம் என்பதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் அரசியலும் அதில் உள்ளது.  இன்று நேற்றல்ல; மார்க்ஸ், எங்கெல்ஸ் காலத்திலேயே இப்படியான கருத்துக்களை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

“வாடகையில் சிறிதளவு பணத்தை மிச்சப்படுத்த முடியுமென்றால், அவர்கள் இருண்ட, ஈரப்பதமான, போதுமானதாக இல்லாத, சுருக்கமாகச் சொல்வதென்றால் சுகாதார நிபந்தனைகள் அனைத்தையும் கேலிக்கூத்தாக்குகின்ற குடியிருப்புக்களை வாடகைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். பெரும்பாலானவற்றில் சில குடும்பங்கள் ஓர் அறைக்கட்டை, ஒரு சிறு அறையைகூட எடுத்துக் கொள்கிறார்கள். வாடகையை இயன்ற அளவுக்குக் குறைக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறார்கள். ஆனால், மறு பக்கத்தில் அவர்கள் தம்முடைய வருமானத்தை உண்மையிலேயே பாபகரமான வழியில் குடிப்பதிலும் எல்லா விதமான சிற்றின்பங்களிலும் விரயம் செய்கிறார்கள்.” என்று ஸாக்ஸ் என்பவர் பதிவு செய்கிறார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் “சாதாரண மக்கள் மதுக்கடைக்குப் போகிறார்கள். அந்தஸ்துடையவர்கள் மனமகிழ் மன்றங்களுக்குப் போகிறார்கள்” என்று தனது ஆசிரியர் இவ்வாறு கூறுவார் என்று எங்கெல்ஸ் அதை நையாண்டி செய்கிறார். மேலும் “முதலாளிகளை பொறுத்தமட்டில், குற்றம் அறியாமையாகக் குறைந்துவிடுகிறது; ஆனால் தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில், அறியாமையே அவர்களுடைய குற்றத்திற்குக் காரணமாகிவிடுகிறது” என்கிறார் எங்கெல்ஸ்.

துவக்கத்தில் குடிசை பகுதிகள் இருந்த இடங்களிலேயே அதை மேம்படுத்திடும் திட்டங்களை ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர். புதிய பொருளாதார வளர்ச்சிப் போக்குகள் உழைக்கும் மக்கள் குடியிருக்கும் நிலத்தின் மதிப்பின் மீது தனது பார்வையை செலுத்தியது. அதன் விளைவாக, குடிசை பகுதிகளை மேம்படுத்துவது என்பதிலிருந்து குடிசை பகுதிகளை அகற்றுவது  என்கிற நிலைக்கு அரசும் ஆட்சியாளர்களும் வந்தனர். அதற்கு தேவையான காரணங்களையும் கட்டமைத்தனர். தற்போது குடிசை பகுதிகளை அகற்றுவது என்பதை கடந்து இது ‘ஆக்கிரமிப்பு’ பகுதி, நீர்நிலைகள், மேய்ச்சல் நிலம் என அதன் கைகள் நீள்கிறது. அதுவும் சாஸ்தா பல்கலைக் கழகம் போன்ற பெருநிறுவனங்களின் மீது அவை நீள்வதில்லை. இருக்க இடமின்றி ஒண்டிக்குடித்தனம் செய்யும் எளிய மக்களின் வீடுகள் மீதே அரசின் புல்டோசர்களின் கைகள் நீள்கிறது. இதுவே குடியிருப்புக்கள் மீதான அரசின் வர்க்க கண்ணோட்டத்தை வெளிப்படுத்திவிடுகிறது.

குடியிருப்புகள் குறித்த அரசின் கொள்கைகள்

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் குடியிருப்புகள் குறித்த ஒரு விரிவான அணுகுமுறைகள் எதுவும் உருவாக்கப்படவில்லை. விடுதலை இந்தியாவில் தமிழகம் சார்ந்த கொள்கை ஆவணங்களில் 1956ஆம் ஆண்டுதான் முதன் முதலாக குடிசை பகுதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1956இல் “குடிசை பகுதி (மேம்பாடு மற்றும் அகற்றுதல்) சட்டம்” இயற்றப்பட்டுள்ளது. மனிதர்கள் வாழ தகுதியற்ற நிலையில்தான் குடிசை பகுதிகள் இருக்கிறது என்று சட்டம் கூறுகிறது. ஒன்று குடிசை பகுதி மக்களை அவர்கள் வசிக்கும் இடத்திலேயே மேம்பாட்டு பணிகளை செய்து கொடுத்து குடியிருக்க அனுமதிப்பது அல்லது அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு இடத்தில் குடியமர்த்துவது என்பதே அதன் முன்னால் இருக்கும் இரண்டு வழிகளாக அமைந்திருந்தது. இந்த இரண்டு வழிகளில் எதை அமலாக்குவது என்பதை அவ்வப்போது இருந்த சமூக, அரசியல், பொருளாதார சூழல்களே தீர்மானித்துள்ளன.

தேசிய திட்டக் குழுவின் மூலம் 1960களுக்கு முந்தைய இரண்டு தேசிய திட்டங்களிலும் குடிசை பகுதிகளை வேறு இடங்களுக்கு மாற்றுவது குறித்து பரிந்துரைகளை வழங்கியுள்ளன. குறிப்பாக, மும்பை மற்றும் கல்கத்தா சார்ந்து அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், நகர்ப்புறங்களின் விளிம்பில் அவர்களை மறு குடியமர்வு செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இதற்கு கூடுதல் செலவுகளை மேற்கொள்ள வேண்டி வரும் என்பதோடு, அவர்களின் வேலை, சமூகத் தொடர்பு, கல்வி உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், அப்போது அது முன்னெடுக்கப்படவில்லை என்று டில்லி குடிசை பகுதி அகற்றம் குறித்த கட்டுரையில் கெர்ட்னர்தெரிவித்துள்ளார். 1960 முதல் 1970கள் வரை மறுகுடியமர்வு என்பதை விட அவர்கள் குடியிருக்கும் இடத்தை மேம்படுத்துவது என்பதாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், தற்போது உலக வங்கியின் கடன் மூலம் நிதி கிடைக்கிறது. மக்களின் வேலை, சமூக தொடர்பு, கல்வி குறித்த எவ்வித அக்கறையுமின்றி அரசு மக்களை நகரத்தின் விளிம்பிற்கு துரத்துகிறது.

விடுதலைக்கு பிந்தைய காலப்பகுதியில் சென்னையை நோக்கி வரும் மக்கள் கூட்டம் அதிகரித்தது. இது குடியிருப்பு குறித்த பிரச்சினைகளின்பால் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. போதுமான அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் உள்ள குடிசை பகுதிகளை மேம்படுத்தி வழங்கிடும் வேலைகளை அரசு மேற்கொள்ளும் என்று ஆட்சியாளர்கள் தெரிவித்தனர். குடியிருப்பு பிரச்சினைக்கான அரசின் தலையீடு என்பது சமூக நிர்ப்பந்தத்தால் விளைந்ததே அன்றி அது யாருடைய கனவு திட்டமாகவும் எழவில்லை. குறைந்த வருமானமுடைய ஏழை எளிய புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் குடிசை பகுதி மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட குடியிருப்புக்களை வழங்குவோம் என்று காங்கிரஸ் கட்சியினரை வாக்குறுதி வழங்க வைத்தது. இதன் தொடர்ச்சியாகவே, குடிநீர் வசதி, கழிப்பறைகள், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை கொண்ட குடியிருப்புகளை உருவாக்குதல் என்கிற வகையிலேயே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் “மெட்ராஸ் மாகாண வீட்டு வசதி வாரிய சட்டம் 1961” உருவாக்கப்பட்டது. இதுவே தற்போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் என்றுள்ளது. குடிசை பகுதிகளை மேம்படுத்தி வாழ்வதற்கு தகுதியான அடிப்படை வசதிகளை கட்டமைப்பது என்கிற வகையில் இது துவங்கப்பட்டது. ஆனபோதும் அதில் போதுமான முன்னேற்றத்தை அதனால் ஏற்படுத்த முடியவில்லை.

1967இல் திமுக தமிழகத்தின் ஆட்சி பொறுப்பிற்கு வந்தது. திமுக-விற்கு சென்னையின் குடிசைபகுதி மக்களிடம் வலுவான செல்வாக்கு இருந்தது.  அவர்களை உள்ளடக்கி திட்டமிடும் நோக்கில் 1970ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது. இது தமிழகம் முழுவதும் உள்ள குடிசை பகுதிகளின் பிரச்சினைகளை மாநில அளவிளான நோக்கோடு அணுகிட வழி செய்தது. “தமிழ்நாடு குடிசை பகுதிகள் மேம்படுத்துதல் மற்றும் அகற்றுதல் சட்டம் 1971” இயற்றப்பட்டது. குடிசை பகுதிகளில் அதிகமான செல்வாக்கையும் கூடுதல் வாக்கு வங்கியையும் பெற்றிருந்த திமுக-விற்கு அப்பகுதி மக்களை அங்கிருந்து அகற்றி நகரத்தின் விளிம்பிற்கு துரத்துவது என்பது அப்போது விருப்பமானதாக இல்லை. எனவே, குடிசை பகுதிகளை கண்டறிதல், வரைமுறைப் படுத்துதல், மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலேயே புதிய கட்டிடங்களை கட்டுதல், பொதுக்கழிப்பிடங்கள் அமைத்தல், குடிநீர் விநியோகம் என்பனவற்றை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் செய்தது. பொதுவாக சமூக நல திட்டங்களை அமலாக்குதல், பொது செலவீனங்களுக்கான நிதி ஒதுக்குவது என்பதெல்லாம் எளிய மக்களுக்கு குறைந்தபட்ச ஆதாரங்களை உருவாக்கும் நோக்கம் கொண்டதாக அமைந்தது. முழுக்க வர்க்க நோக்கோடு உழைக்கும் மக்களை மையப்படுத்தி அமலாக்கப்படாத போதும், பிரபலமான வகையில் சமூக நீதி என்கிற நோக்கோடு எளிய மக்களின் ஒரு பகுதியை அது ஆசுவாசப்படுத்தியது. “ஒவ்வொரு லிபரல் அரசாங்கமும் நிர்பந்திக்கப்படும்போது மட்டுமே சமூக சீர்திருத்தச் சட்டங்களை அவை கொண்டு வரும்…..”. உழைக்கும் மக்களின் அப்படியான போராட்டங்களும் எதிர்வினைகளுமே இன்றுவரை எளிய மக்களை பாதுகாக்கின்ற சட்டங்களையும் ஆணைகளையும் சாத்தியமாக்கியுள்ளன.

மாநில அரசின் கொள்கை மாற்றம்

“ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்” என்பதாகவே ஆரம்பக்கால நடவடிக்கைகள் துவங்கின. கொள்கை ரீதியாக ஏற்பட்ட மாற்றங்கள் ஏழைகளின் சிரிப்பை பறித்தது. குறிப்பாக 1970களின் மத்தியில் சர்வதேச நிதியத்தின் நிதி பங்களிப்பு குடிசை பகுதிகள் மேம்பாடு குறித்த கொள்கை திட்டங்களில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. 1975இல் தமிழகத்திற்கு உலக வங்கி நிதி பங்களிப்பு செய்தது. குடிசை பகுதிகள் மேம்பாட்டிற்காக 240 லட்சம் டாலரை நிபந்தனைக்குட்பட்ட கடனாக உலக வங்கி வழங்கியது. நிபந்தனையின் பகுதியாக அரசு கட்டிக் கொடுக்கும் வீடுகளுக்கு பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கும்படி கூறியது. தற்போது வரை இந்த உலக வங்கியின் கைகள் மக்களின் பாக்கெட்டில் உள்ள பணத்தை எடுப்பதற்கான துவக்கப் புள்ளியாக அமைந்தது. “மெட்ராஸ் நகர்புற மேம்பாட்டு திட்டம் 1இல் (1971) கொள்கை ரீதியான ஒரு மாற்றத்தை உட்கொண்டது. இதில் பயன்பாட்டாளர் பங்களிப்பு என்கிற வகையில் பணத்தை திரும்பப் பெறுதல் என்பது அறிமுகப்படுத்தப்பட்டது” என்கிறது 1982இல் வெளியான உலக வங்கி அறிக்கை. இதன் விளைவாக ஏழை எளிய மக்கள் வாடகை என்பதாகவோ, மேம்பாட்டிற்கான கட்டணம் என்றோ, பயன்பாட்டு கட்டணம் என்கிற வகையிலோ, பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் உருவானது. இது மக்கள் மத்தியில் எதிர்வினையை உருவாக்கக்கூடும். அது ஆட்சிக்கு எதிராக திரும்பும் என்கிற சிறு அச்சம் ஆட்சியாளர்களுக்கும் உண்டு. ஆனால், இவ்வாறான கட்டணங்களை வசூலிக்காவிட்டால், தங்களின் நிதி பங்களிப்பை இழக்க வேண்டிவரும் என்றும், பணத்தை வசூலிக்க தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கூடுதல் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்றும், உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. கட்டணமில்லா குடியிருப்பு வசதி மற்றும் மேம்பாடு என்பதாக இருந்த குடிசை பகுதி கொள்கை நிலையை உலக வங்கியின் தலையீடு மாற்றியமைத்தது. பல்வேறு நேரடியான மற்றும் மறைமுக காரணங்களால் அதை ஏற்று, ஆட்சியாளர்களும் அதற்கேற்ற வகையில் கொள்கை திட்டங்களை மாற்றி அமைத்தனர். எளிய மக்களிடம் கட்டணம் வசூலிப்பதும் அரசின் பங்களிப்பை குறைப்பதும் அவர்கள் பேசிய சமூக நீதிக்கும் எதிரானது என்பது வெளிப்படை.

இதற்கு பிறகு வந்த எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு புதிய கொள்கை திட்டத்திற்கு தன்னை முழுமையாக உட்படுத்திக் கொண்டது. திமுக ஆட்சியில் இருந்தபோது, அதனை எதிர்ப்பதற்கும், அந்த ஆட்சியை வீழ்த்தும் செயல்பாட்டிற்கும், ஒன்றிய அரசுடன் இணக்கம் பாராட்டிய அதிமுக, ஆட்சிக்கு வந்தவுடன் ஒன்றிய அரசின் கொள்கை திட்டத்திலும் தன்னை இணைத்துக் கொண்டது. மாநில நலன், தமிழ் நிலம் என்றெல்லாம் பேசிவந்த தமிழக அரசியல் களம் இந்த காலகட்டத்தில் மேலும் அமைதியானது. 1980களில் சர்வதேசிய நிதியத்தின் நிதியை ஏற்றுக் கொண்டது. உலக வங்கி கூறியபடி குடியிருப்புக்களை மேம்படுத்த அரசு செய்த செலவீனங்களை குறைத்துக் கொண்டு, மக்கள் செலுத்த வேண்டிய பயன்பாட்டு கட்டணத்தை அதிகரித்தது. ஏழைகளுக்காகவே வாழ்வதாக தனது படங்களில் நடித்ததின் விளைவாக மக்கள் மத்தியில் பெரிய பிம்பத்தை ஏற்படுத்திய எம்ஜிஆர் ஆட்சி காலத்தில்தான் இவையெல்லாம் நிகழ்ந்தது. உலக வங்கியின் பரிந்துரைகள்படி தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் செயல்பட துவங்கியது. இக்காலத்தில்தான் முந்தைய 240 லட்சம் டாலர் கடன் என்பதை கடந்து 3,000 லட்சம் டாலர் கடனை சர்வதேச நிதியம் வழங்கியது. இதுவும் நிபந்தனைக்குட்பட்ட கடன் என்பதை தனியாக சொல்ல வேண்டியதில்லை. இதைத்தொடர்ந்து 1990களில் தாராளமயத்தை உள்ளடக்கிய புதிய பொருளாதார கொள்கையை இந்திய அரசு அமலாக்கியது, மேலும் உழைக்கும் மக்களின் குடியிருப்பு பிரச்சினையை சிக்கலாக்கியது. தற்போது தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் என்பது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என பெயர் மாற்றம் கண்டுள்ளது. அது பெயர் மாற்றம் மட்டுமல்ல; அதன் உள்ளடக்கமும் மாறிவிட்டது. தனியார் பங்களிப்பு, அரசின் பங்களிப்பு குறைப்பு, பராமரிப்பு பணியிலிருந்து வாரியம் வெளியேறுவது, மக்களிடம் பயன்பாட்டு கட்டணத்தை கூடுதலாக பெறுவது என்று அதன் முழுமையான சமூக நோக்கு சிதைக்கப்பட்டுள்ளது. சமூக நீதி எனும் திராவிட சித்தாந்தம் இங்கு கடுமையாக பாதிக்கப்படுகிறது. தனியார்மயத்தை ஆதரிப்பதும், அதனை அமலாக்குவதும், எளிய மக்களை சிக்கலுக்கு உள்ளாக்கும். அது சமூகநீதிக்கு எதிரான அப்பட்டமான செயல்பாடுதான் என்பதை அனுபவங்கள் நிருபிக்கின்றன.

புதிய பொருளாதார கொள்கை அமலாக்கப்பட்ட காலத்திலும், அதற்கு பின்னரும், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகள்தான் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் மாறி மாறி இருந்துள்ளன. இதே காலக்கட்டத்தில் ஒன்றிய அரசுடன் இரு கட்சிகளும் உறவு பாராட்டி வந்துள்ளன. திமுக கணிசமான காலம் ஒன்றிய ஆட்சியில், அமைச்சரவையிலும் பங்கேற்றுள்ளது. பொதுத்துறையை விற்க நேரும் தருணங்களில், சில எதிர்ப்புகளை தெரிவித்ததை தவிர, தனியார்மயத்தையும், தாராளமயத்தையும் உள்ளடக்கிய உலகமயமாக்கலின் புதிய பொருளாதார கொள்கைகளை இவ்வரசுகள் எதிர்த்ததில்லை. இது மாநில அரசில் அவர்கள் மேற்கொண்ட கொள்கை மாற்றங்களிலும் வெளிப்பட்டது. அது குடியிருப்பு பிரச்சினையிலும் தாக்கத்தை செலுத்தியது.

வளர்ச்சித் திட்டங்கள் அனைத்திலும் தனியார் பங்களிப்பு பிரதானமாக்கப்பட்டுள்ளது. அரசின் பங்களிப்பு வெட்டி சுருக்கப்பட்டது. இக்காலத்தில் குடிசை பகுதிகள் மேம்படுத்துவதற்கு பதிலாக அம்மக்களை நகரத்தை விட்டு அகற்றுவதற்கே ஏற்பாடுகள் செய்யப்பட்டன. குறிப்பிட்ட கட்சியின் கோட்டை, இங்குள்ள வாக்குகள் இன்னாருக்குத்தான் என்றில்லாமல் இம்மக்களின் வாக்கு செலுத்தும்முறை மாற்றம் கண்டு விட்டதும், எனவே, அவர்கள் மீதான கவனமும், அவர்களை அங்கேயே தக்க வைக்க வேண்டும் என்கிற தேவையும், ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போனது.

குடிசை மக்கள் குடியிருக்கும் இடம் சுகாதாரமாக இல்லை; குடிநீர் சுத்தமாக இல்லை; கழிப்பறை இல்லை; வீடுகள் காற்றோட்டத்துடன் வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை என்று பிரதானமாக பேசப்பட்டது. எனவே, இவற்றை அங்கு ஏற்படுத்திக் கொடுப்பது முதன்மையாக பேசப்பட்டது. அப்புறப்படுத்துதல் என்பது இரண்டாவதாக இருந்தது. இன்று தனியார் பங்களிப்பு அதிகரித்தவுடன் புதிய வகையில் இந்த விவாதங்கள் திட்டமிட்ட வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படியான சூழலில், அவர்கள் அங்கு வாழ்வது ஆபத்தானது என்பதாக இருந்த விவாதம், கூவம் கரையோரம் அவர்கள் வாழ்வது அந்த ஆற்றை சீரழிக்கிறது என்றும், அந்த ‘ஆக்கிரமிப்பே’ சுற்றுச்சூழலை சீர்கெடுக்கிறது; இது சமூகத்திற்கே ஆபத்து என்று மாற்றப்பட்டது. கொசஸ்தலை ஆறும், அடையாறு ஆறும், கூவம் ஆறும் மாசு அடைந்ததற்கு அந்த மக்கள் எந்த வகையிலும் காரணம் இல்லை. மோசமான நகர்ப்புற திட்டமிடல், எவ்வித சுத்திகரிப்பும் செய்யாமல் கழிவுகளை கலப்பது போன்ற ‘வளர்ச்சிப் போக்குகளே’ காரணமாகும். ஆனால், கரையோரம் வாழும் மக்கள் மீது மிக எளிதாக பழி சுமத்தி மக்களின் பொதுப்புத்தியில் நச்சுக் கருத்தை புகுத்தி, சமூக ஒப்புதலுடன் அவர்களை நகரை விட்டே விரட்டியடிக்கிறது அரசு. இப்படியான பகுதிகளில் இருந்த மக்களை அகற்றிவிட்டு, அவை எதுவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கோடு பராமரிக்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனம். அவ்விடங்கள் தனியாரின் கைகளுக்கு மாற்றப்படுவதும், பொழுதுபோக்கு பூங்காக்கள், வணிகவளாகங்கள் (மால்கள்) என கட்டிடங்களின் தொகுப்பாகவே மாறுகிறது. சென்னையில் பங்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று கூறி கரையோரம் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால், அரசின் ஆக்கிரமிப்பில் அந்த கால்வாயில் தூண்கள் போட்டுதான் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கூவம் ஆற்றங்கரையில் வாழ்ந்து வந்த மக்கள் இதேபோல் அப்புறப்படுத்தப்பட்டனர். அதே கூவத்தின் இடையில் தூண்களைர் அமைத்துதான் மதுரவாயல் முதல் துறைமுகம் வரையிலான பறக்கும் சாலை திட்டம் அமையவுள்ளது. இதே கூவம் மற்றும் பக்கிங்காம் கரையோரம் இருந்த குடிசைகள் இடிக்கப்பட்ட நிலையில், பெரிய பெரிய தனியார் கட்டிடங்கள் இடிக்கப்படவில்லை. இப்படியான நிலையில் இவர்கள் முன்வைத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்னவானது?

குடிசை பகுதிகள்தான் அனைத்து குற்றச் செயல்களுக்கும் ஆதாரமான இடம் என்று குறிப்பிடப்பட்டு, இது சுற்றுப்புற மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது என்கிற கருத்தும் பரவலாக்கப்பட்டது. சாராயம் காய்ச்சுவதை பார்க்கும் பார்வையோடு பீர் தொழிற்சாலை மற்றும் மது உற்பத்தி செய்யும் உரிமையாளரை பார்ப்பதில்லை. கஞ்சா உற்பத்தி எந்த குடிசை பகுதிகளிலும் நடக்கவில்லை. கப்பல்கள் மூலமாகவும், விமானம் மூலமாகவுமே கடத்தல்கள் நடக்கிறது. இந்த கனவான்கள்தானே உண்மையில் குற்றவாளிகள். ஆனால் பழி என்னவோ குடிசை பகுதி மக்கள் மீதுதானே?

நகரத்தைவிட்டு விரட்டப்பட்டவர்கள்

இயற்கை பேரிடர்களை காரணம் காட்டியும், குடிசைபகுதி மக்கள் தங்களது குடியிருப்புகளிலிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். குறிப்பாக, சுனாமி காலத்தில் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்புகிறோம் என்கிற பெயரில், கடற்புற மக்கள் நிரந்தரமாகவே வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். சென்னை துரைப்பாக்கத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வரிய குடியிருப்பு பகுதியில் சுனாமி குடியிருப்பு என்ற பெயரில் குடியிருப்புகள் உள்ளது. சென்னையின் மைய பகுதியிலிருந்து நகரத்தின் விளிம்பிற்கு துரத்தப்பட்ட மக்களின் வாழ்விட பிரச்சனை மேலும் கூடுதலான சிரமத்திற்குள் அவர்களை தள்ளியுள்ளது. துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியில் மட்டும் சுமார் 20ஆயிரம் வீடுகள் ஒரே இடத்தில் குவியலாக உள்ளது. இக்குடியிருப்பு சென்னையின் மையத்திலிருந்து பல பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  அங்கிருந்து மேலும்  10 கிலோ மீட்டர் தெலைவில் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதியில் சுமார் 27,000 குடியிருப்புக்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் அனைவரும் சென்னையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விரட்டப்பட்டவர்களே. இவர்களுக்கான வேலை, கல்வி, சுகாதாரம் வாழ்வாதாரம் என எல்லாமும் கேள்விக்குறியாகவே உள்ளது. எந்த சுகாதார சீர்கேட்டிலிருந்து இம்மக்களை பாதுகாக்கப் போவதாக கூறி அரசு இவர்களை இவ்வளவு தெலைவில் விரட்டியடித்த்தோ அங்கு எவ்வித நலமும், சமூக பாதுகாப்பும் இல்லாமல் வசிக்கின்றனர்.

“முதலாளித்துவ வர்க்கம் நடைமுறையில் குடியிருப்பு பிரச்சினைகளை எப்படி தீர்க்கிறது என்பதற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க உதாரணமாகும். முதலாளித்துவ உற்பத்தி முறையில் நம்முடைய தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்புக்கள் நோயின் பிறப்பிடங்களாக விளங்குகிறது. அத்தகைய கேவலமான பொந்துகள் மற்றும் நிலவறைகளை முதலாளித்துவ உற்பத்தி முறையில் ஒழிக்கப்படுவதில்லை. அவை வேறெங்காவது மாற்றப்படுபடுகிறது.” என்கிற எங்கெல்சின் வார்த்தைகளின் உண்மையை, சென்னையை விட்டு விரட்டப்பட்டுள்ள மக்களின் தற்போதைய குடியிருப்புகள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

சென்னை வெள்ளதின்போதும் அதை தொடர்ந்தும் பல்வேறு குடியிருப்புக்கள் அகற்றப்பட்டன. இங்குதான் குடிசை பகுதிகளை கடந்து அடுத்த நிலையில் உள்ள பட்டா இல்லாத குடியிருப்புகளில் வாழும் மக்கள் குடியிருப்புக்களின் மீது அரசின் கைகள் நீள்கிறது. மயிலாப்பூர் கோவிந்தசாமி நகர் குடிசைமாற்று வாரியத்தால் குடியிருப்பு பகுதி என வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு பொதுநல வழக்கை பயன்படுத்தி அரசு நிர்வாகம் குடியிருப்புகளை அகற்றுகிறது. ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் உள்ள குடியிருப்புகளுக்கு ஆட்சியர் பரிந்துரைத்த பிறகும், மேய்ச்சல் புறம்போக்கு நிலம் என்று கூறி குடியிருப்புகளை அகற்ற துடிக்கின்றனர். பயன்பாடற்ற நீர்நிலை பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் குடியிருந்து வருகின்றனர். அரசு நீர்நிலை என வரையறுத்து கரைகளை கட்டிய பிறகும், பொதுப்பயன்பாட்டில் உள்ள நிலங்களை நீர்நிலை என வகைப்படுத்தி நீதிமன்றங்களின் துணையோடு அகற்ற முயற்சிக்கின்றனர். அடுத்தகட்டமா அரசே ஒதுக்கிய நிலம், குடிசைமாற்று வாரியத்தால் குடியிருப்பு பகுதி என வரையறுக்கப்பட்ட நிலத்தில் வசிப்போரையும் அகற்ற முயற்சிக்கின்றனர். இதற்கு சாதகமாக நீதிமன்றங்களை பயன்படுத்திக் கொள்ளும் ஆட்சியாளர்கள் தங்களின் வர்க்க நிலையை எடுத்துக் காட்டுகின்றனர்.

“முதலளித்துவ உற்பத்தி முறை நீடிக்கின்ற வரை குடியிருப்பு பிரச்சினை, அல்லது தொழிலாளர்களை பாதிக்கின்ற, வேறு சமூகப் பிரச்சினைனையை தனியாக தீர்க்க முடியும் என்று நம்புவது முட்டாள்தனமே.” “பாட்டாளி வர்க்கம், அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்த உடனே பொதுநன்மையைப் பற்றிய அக்கறையினால் தூண்டப்பட்டுகின்ற நடவடிக்கைகள்  நிறைவேற்றப்படும். (உடைமை வர்க்கத்திடமிருந்து சொத்துக்கள் பறிக்கப்பட்டு உழைக்கும் மக்களுக்கு வழங்கும் நடவடிக்கைகள்) இன்றைய அரசு செய்கின்ற உடைமை பறித்தல்கள், தங்குமிட ஆணைகளைப் போல், அதுவும் சுலபமாக நிறைவேறும்.” என்கிற எங்கெல்சின் வார்த்தைகளே உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதற்கான போர்குரலாகும்.

——————————————————————————————————————–

CITY and Community என்கிற ஆங்கில இதழில் டிசம்பர் 2019இல் Pranath Diwakar எழுதியுள்ள A Recipe for Disaster: Framing Risk and Vulnerability in Slum Relocation Policies In Chennai, India. எனும் கட்டுரையில் உள்ள தரவுகளை அடிப்படையாக கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

#RedBooksDay2022 : செயலுக்கான நோக்கத்தை தெளிவுபடுத்திய விஞ்ஞான சோசலிசம்

ஆசாத்

(தமிழ்நாட்டில் சிவப்பு புத்தக தின கொண்டாட்டத்திற்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள ‘கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும்’ நூலை வாசிக்க உதவியாக மார்க்சிஸ்ட் இதழில் இந்த கட்டுரையை வெளியிடுகிறோம்.)

”பகுத்தறிவின் தீர்ப்பு மேடை முன்னே தன் இருப்பை நியாயப்படுத்தியாக வேண்டும்; அல்லது இல்லாது ஒழிந்தாக வேண்டும். பகுத்தறிவுக்கு உகந்தது என்கின்ற ஒன்றே அனைத்துக்கும் அளவுகோல் ஆயிற்று”

18 ஆம் நூற்றாண்டின் போது வளர்ச்சி பெற்றுவந்த பிரெஞ்சு தத்துவத்தின் வளர்ச்சி குறித்து பேசும்போது எங்கெல்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார். நவீன அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகளின் வழிவந்த பகுத்தறிவின் வரலாற்று வளர்ச்சிப்போக்கில் கருத்துமுதல்வாதத்தின் வாதங்கள் நிற்கமுடியாமல் காணாமல் போனது.

“புதிய சூழலின் நிலைமைகள், முந்தைய நிலைமைகளுடன் ஒப்பிடுகையில், போதுமான அளவு பகுத்தறிவுக்கு உகந்ததாக இருந்த போதிலும், எந்த வகையிலும் முற்றிலும் பகுத்தறிவுக்கு உகந்த ஒன்றாக இல்லை.” பகுத்தறிவின் ஆட்சி என்று முதலாளித்துவம் கூறியது, முதலாளித்துவ வர்க்கம் மிகைப்படுத்திக் கூறிக்கொண்ட ஆட்சியே அன்றி வேறொன்றுமில்லை. நித்தியமான நீதி என்று அவர்கள் கூறியது முதலாளித்துவத்தின் நீதியே ஆகும். சமத்துவம் என்பதும் சட்டத்தின் முன்பான குறுகிய முதலாளித்துவ சமத்துவமாகவே இருந்தது.

“நவீன தொழில் துறை ஒருபுறம் மோதல்களை வளர்க்கிறது. உற்பத்தி முறையில் ஒரு புரட்சியையும், உற்பத்தி முறையின் முதலாளித்துவ தன்மைக்கு முடிவு கட்டுவதையும் அவசியமாக்கும் மோதல்களை வளர்க்கிறது.”
முதலாளித்துவத்தின் வளர்ச்சி தவிர்க்க முடியாத வகையில் பாட்டாளிகளின் எண்ணிக்கையையும் உயர்த்தியது. பாட்டாளிகளான உழைக்கும் மக்களும் அவர்களின் உழைப்பு சக்தியும் இல்லாமல் முதலாளித்துவம் நிலவ முடியாது. தொழிலாளர்களின் உழைப்பின் பலனை கொண்டு வளர்ச்சி பெற்ற முதலாளித்துவம், உழைக்கும் அம்மக்களுக்கு வறுமை மற்றும் துயரத்தையும் சமூகத்தின் வாழ்க்கை நிலைமையாக மாற்றியது. “பாட்டாளி வர்க்கமானது, ‘ஏதும் இல்லாத’ இந்தச் சாதாரண மக்களிடமிருந்து, அப்போதுதான் முதன் முதலாக ஒரு புதிய வர்க்கத்தின் உட்கருவாய் தானாகவே பரிணமித்தது. இன்னமும் சுயேச்சையான அரசியல் நடவடிக்கைக்கு சற்றும் திறனற்றிருந்த அவ்வர்க்கம் ஒடுக்கப்பட்ட, துயருறும் பகுதியாகவே தோற்றமளித்தது.

இந்த வரலாற்று சூழலே சோசலிசம் குறித்த துவக்ககால சிந்தனையை கொண்டவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தியது. ”முதலாளித்துவ முறையிலான உற்பத்தியின் முதிர்ச்சியுறாத நிலைமைகளுக்கும், முதிர்ச்சியுறாத வர்க்க நிலைமைகளுக்கும் ஒத்திசைவாக முதிர்ச்சியுறாத கொள்கைகளே முன்வைக்கப்பட்டன. சமூகப் பிரச்சினைகளுக்குரிய தீர்வினை, வளர்ச்சியுறாத பொருளாதார நிலைமைகளில் இன்னமும் மறைந்துகிடந்த அந்தத் தீர்வினை, கற்பனாவாதிகள் மனித மூளையிலிருந்து உருவாக்க முயன்றனர்.”

சான் சிமோன், பூரியே, ஓவன் ஆகியோரை அக்காலத்திய மூன்று மிகப்பெரிய கற்பனாவாதிகள் என்கிறார் எங்கெல்ஸ். மனிதனின் சிந்தனையில் உதித்த கடவுள் எனும் கருத்தே உலகை படைத்தது எனும் கருத்துமுதல்வாதத்தைபோல், இந்த கற்பனாவாதிகள் சமூக வளர்ச்சியின் அடிப்படைகளை கருத்தில் கொள்ளாமல் மனித மூளையின் சிந்தனையைக் கொண்டே அவற்றை கண்டறிய முனைந்தனர். முரண்பாட்டிற்குள் ஒற்றுமை என்கிற வகையில் “வரலாற்று ரீதியான வளர்ச்சியின் விளைவாய் தோன்றிய பாட்டாளி வர்க்கத்தினுடைய நலன்களின் பரதிநிதியாக (கற்பனாவதிகள்) தோன்றவில்லை.” அனைத்து மனிதர்களும் வேலை செய்ய வேண்டும். பயங்கர ஆட்சி உடைமையற்ற சாதாரண மக்களின் ஆட்சியே. அரசியல் என்பது உற்பத்தியைப் பற்றிய விஞ்ஞானமாகும். அரசியலானது பொருளாதாரத்தால் முழு அளவுக்கு உட்கவரப்பட்டுவிடும். என்கிற சான் சிமோனின் கருத்து, பொருளாதார நிலைமைகளே அரசியல் நிறுவனங்களின் அடித்தளம் என்கிற அரசியல் அறிவு கரு வடிவில்தான் இருந்தது என்பதை எடுத்துரைத்தது.
கடைசி முடிவாக பூமி அழிந்துபோகும் என்னும் கருத்தை இயற்கை விஞ்ஞானத்தில் எவ்வாறு கான்ட் புகுத்தினாரோ, அதேபோல், மனிதகுலத்தின் இறுதி அழிவெனும் கருத்தை வரலாற்று விஞ்ஞானத்தில் பூரியே புகுத்தினார்.

எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் எடுத்துக்காட்டான முன்மாதிரி பரிசோதனைகள் மூலம் அந்த அமைப்புகளை வெளியிலிருந்து சமுதாயத்தின் மீது திணிப்பது அவசியம் என கற்பனாவாதிகள் கருதினர். அந்த வகையில் ஓவன் சில முயற்சிகளை தான் சார்ந்த நிறுவனத்தில் செய்து வெற்றி கண்டார். தொழிலாளர்களின் வேலை நேரத்தை குறைப்பது, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது என பலவற்றை செய்தார். ஆனபோதும் நிறுவனத்தின் வளர்ச்சி வெற்றிகரமாக இருந்ததை நிரூபித்தார். ஆனால், இம்மக்கள் (அவரது நிறுவனத்தில் பணியாற்றியவர்கள்) என் தயவில் அடிமைகளாகவே இருந்தனர்” என்கிறார் ஓவன். ஏனெனில் “தன்னுடைய தொழிலாளர்களுக்கு வழங்கியிருந்த வாழ்க்கை நிலைமைகள் ஒப்பீட்டளவில் அனுகூலமானவை என்றாலும், அவர்களின் பண்பியல்பும், அறிவுத்திறனும் அனைத்துத் திசைகளிலும் நியாயமான வளர்ச்சிபெற அனுமதிக்கும் நிலைக்கு இன்னமும் எட்டாத தொலைவிலேயே இருந்தன. அவர்களுடைய வினையாற்றல்கள் அனைத்தையும் சுதந்திரமாக செயல்படுத்த மிகவும் குறைவான வாய்ப்புகளை வழங்கும் வாழ்க்கை நிலைமைகளே இருந்தன.

” புறச்சூழலே ஒரு முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தவல்லதே அன்றி, அது வெளியிலிருந்து திட்டமிட்டு புகுத்தப்படுவதன் மூலம் சாத்தியப்படுத்தக் கூடியதல்ல. “சோசலிசத்தை ஒரு விஞ்ஞானமாக்க முதலில் அதை கற்பனை அல்லாத ஓர் உண்மையான அடித்தளத்தின் மீது இருத்த வேண்டியிருந்தது” கற்பனை அல்லாத ஓர் உண்மையின் அடித்தளத்தின் மீது சோசலிசத்தை இருத்த மார்க்சின் இரண்டு கண்டுபிடிப்புகளே வழி செய்தன. “வரலாறு பற்றிய பொருள் முதல்வாதக் கருத்துரு, உபரி மதிப்பு மூலமாக முதலாளித்துவ முறையிலான உற்பத்தி பற்றிய இரகசியத்தை வெளிப்படுத்தியது” எனும் மார்க்சின் இவ்விரண்டு கண்டுபிடிப்புகளுமே விஞ்ஞான சோசலிசத்தின் அடித்தளமாகியது.

இயற்கை அறிவியலையும் சமூக அறிவியலையும் இணைத்த, இயக்கவியல் வரலாற்றுப் பொருள் முதல்வாத நோக்குகொண்ட ஒரு தனிச்சிறப்புமிக்க பார்வையுடன் விஞ்ஞான சோசலிசம் வளர்ச்சி பெற்றது. இயற்கை அறிவியலிலும் சமூக அறிவியலிலும் கிடைக்கப்பெற்ற புதிய தரவுகளும் புதிய கண்டுபிடிப்புகளும் இவற்றை சாத்தியப்படுத்தியது. நவீன தொழில் வளர்ச்சி வர்க்கப் பிரிவினையை கூர்மைப்படுத்தியது. மேலும் வர்க்கங்களுக்கிடையேயான நட்பையும் முரணையும் மேலும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. முந்தைய சிந்தனை போக்குகள் எல்லாம் அதற்கே உரிய குறுகிய இயக்க மறுப்பியல் தன்மையை கெண்டிருந்தன. அவற்றின் “அறிவுணர்வானது அதற்குரிய நான்கு சுவர்களின் எளிய ஆட்சி எல்லைக்குள் இருக்கும்போது மதிக்கத் தக்கதாக திகழ்ந்தது. (இயற்கை அறிவியலின் வள்ர்ச்சியின்போது) ஆராய்ச்சி என்னும் பரந்த உலகினுள் ஆபத்தான பயணத்தில் அடியெடுத்து வைக்கும்போது, அது விந்தைமிகு அபாயங்களை நேரடியாக எதிர்கொண்டது.”

“மனிதனின் உணர்வைக் கொண்டு அவனுடைய இருப்பை விளக்குவதற்குப் பதிலாக, மனிதனின் இருப்பை கொண்டு அவனுடைய உணர்வை விளக்குவதற்கான வழிமுறை கண்டறியப்பட்டது.“ சோசலிசம் என்பது வரலாற்று ரீதியாக வளர்ச்சி பெற்ற இரு வர்க்கங்களான பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்கும் இடையே நிகழும் போராட்டத்தின் தவிர்க்க முடியாத நிகழ்வு என்று நிறுவப்பட்டது. இதற்கு முந்தைய சோசலிச கருத்துரு இந்த இயக்கவியல் வரலாற்று பொருள்முதல்வாதப் பார்வை அற்றதாக இருந்தது.

முந்தைய சோசலிச கருத்துரு “முதலாளித்துவ உற்பத்தி முறையையும் அதன் பின்விளைவுகளையும் கண்டித்தது உண்மைதான்.’‘ ஆனால், அவை எந்த வகையில் தீயவையாக உள்ளது? அத்தீமை எதன் பொருட்டு, எதன் அடிப்படையில் நடைபெறுகிறது? என்பதை விளக்க அதனால் முடியவில்லை. அதன் முழுவடிவத்தை விளக்கிட முடியாமல் அது தீயவை என நிராகரிக்க மட்டுமே அதனால் முடிந்தது. “முதலாளித்துவத்தில் தவிர்க்க முடியாதபடி தொழிலாளி வர்க்கம் சுரண்டப்படுவதை எந்த அளவுக்கு முந்தைய சோசலிசம் வெளிப்படையாக கண்டித்ததோ, அந்த அளவுக்குத் தெளிவாக இந்தச் சுரண்டல் எதில் அடங்கியிருந்தது, அது எவ்வாறு தோன்றியது என்பதை அதனால் விளக்கிட முடியவில்லை.

இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் “(1) முதலாளித்துவ உற்பத்தி முறையை அதன் வரலாற்றுத் தொடர்பில் விளக்கி, ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தில் அது தவிர்க்க முடியாதது என்பதை எடுத்துரைப்பதோடு, அதன் காரணமாக நிகழும் தவிர்க்க முடியாதபடியான அதன் வீழ்ச்சியையும் எடுத்துரைப்பது (2) இதுநாள்வரை இரகசியமாக இருந்து வந்த, முதலாளித்துவத்தின் சாராம்சத் தன்மையை தோலுரித்துக் காட்டுவதும், அவசியமாக இருந்தது.” உபரி மதிப்பை மார்க்ஸ் கண்டுணர்ந்ததன் மூலம் இது நிறைவேற்றப்பட்டது.

“ஊதியம் தரப்படாத உழைப்பை உறிஞ்சிக் கொள்வதுதான் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும், அதன்கீழ் தொழிலாளி சுரண்டப்படுவதற்கும் அடிப்படையாக அமைகிறதென்று எடுத்துக்காட்டப்பட்டது.” அந்த வகையில், இயக்கவியல் வரலாற்று பொருள்முதல்வாத கருத்துரு மற்றும் உபரி மதிப்பை கண்டறிந்து முதலாளித்துவ உற்பத்தியின் ரகசியத்தை மார்க்ஸ் கண்டறிந்ததின் மூலம் சோசலிசம் விஞ்ஞானமானது என்கிறார் எங்கெல்ஸ்.

விஞ்ஞான சோசலிசம்

“சமூக மாற்றங்களுக்கும் அரசியல் புரட்சிகளுக்குமான முடிவான காரணங்களை, உற்பத்தி, விநியோக முறைகளில் ஏற்படும் மாற்றங்களில் கண்டறிய முயல வேண்டுமே அல்லாது, மனிதர்களின் சிந்தனைகளிலோ, நித்தியமான உண்மை, நித்தியமான நீதி குறித்த மனிதனுடைய முன்னிலும் சிறப்பான உள்ளுணர்வுகளிலோ அல்ல. அத்தகைய காரணங்களை அந்தந்தக் குறிப்பிட்ட சகாப்தத்தின் பொருளாதார அமைப்புமுறையில் கண்டறிய முயல வேண்டுமே அல்லாது தத்துவத்தில் அல்ல.” சோசலிசம் என்பது மனிதர்களின் சிந்தனையில் திடீரென முகிழ்ந்த ஒன்றல்ல. “எதார்த்தத்தில் நிலவும் (வர்க்கங்களுக்கு இடையேயான) மோதலினால் சிந்தனையில் ஏற்படும் எதிர்வினையே அன்றி வேறல்ல. இம்மோதலால் நேரடியாக பாதிக்கப்படும் வர்க்கமாகிய தொழிலாளி வர்க்கத்தின் மனங்களில் ஏற்படும் இயல்பான பிரதிபலிப்பே சோசலிசமாகும்.”

“மூலதனத் திரட்சிக்கு இணையாகத் துயரமும் திரண்டு பெருகுவதை இந்த விதி உறுதி செய்கிறது. எனவே, ஒரு முனையில் செல்வம் திரள்வதும் எதிர்முனையில் மூலதனத்தின் வடிவில் தன் சொந்தப் பொருளை உற்பத்தி செய்யும் வர்க்கம் துயரமும், உழைப்பின் வேதனையும் அடிமைத்தனமும் அறியாமையும் கொடுமையும் மனச் சீரழிவும் திரண்டு பெருகுவதை குறிக்கிறது.“ (மூலதனம்)

முதலாளித்துவ அமைப்பு முறையில், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாகவும் கூடுதலான உழைப்புச் சுரண்டலின் காரணமாகவும் உற்பத்தி அதிகரிக்கிறது. உற்பத்தி அதிகரிக்கிறது என்றால் சுரண்டலின் அளவும் அதிகரித்துள்ளது என்பதே அதன் உள்ளீடு. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியே உற்பத்தியின் அளவை உயர்த்துகிறது. நவீன தொழில் நுட்ப வளர்ச்சியால் கிடைக்கப்பெறும் இயந்திரங்களோடு நவீன பாட்டாளிகளின் மேம்பட்ட உழைப்பு சக்தியின் பங்களிப்புமே உற்பத்தியை அதிகரித்துள்ளது. உற்பத்தி அதிகரிக்கும் அதே நேரம் தொழிலாளி அதிக அளவில் சுரண்டப்படுவதும் நிகழ்கிறது. உழைப்புக்கேற்ற கூலி கிடைக்கப்பெறாமல் அவர்களின் வாங்கும் சக்தி குறைகிறது. வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது. கிராக்கி வீழ்ச்சி அடைகிறது. இதன் விளைவே உற்பத்தியாகியுள்ள அதிகமான பொருட்கள் சந்தையில் தேங்குகிறது. தொடர்ந்து வர்க்கங்களுக்கிடையே ஏற்படும் மோதலை தணிக்க ஆளும் வர்க்கத்தின் சார்பில் அரசு நிற்கிறது. “இறுதியில், முதலாளித்துவச் சமுதாயத்தின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக உற்பத்தியின் நெறியாண்மையை அரசு மேற்கொள்ள வேண்டியிருக்கும்.’‘

புரட்சியின் மூலம் “பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு உற்பத்திச் சாதனங்களை அரசின் உடைமையாக மாற்றுகிறது. இதைச் செய்வதன் மூலம், அது பாட்டாளி வர்க்கம் என்ற தன் வர்க்க நிலைக்கே முடிவு கட்டுகிறது. அனைத்து வர்க்க வேறுபாடுகளுக்கும் வர்க்க பகைமைகளுக்கும் முடிவுகட்டுகிறது. அரசு அரசாக இருக்கும் நிலைக்கும் முடிவு கட்டுகிறது.”அரசு ஒழிக்கப்படுவதில்லை. அது உலர்ந்து உதிர்ந்துவிடுகிறது என்கிறார் எங்கெல்ஸ்.

“தற்போது ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு இந்த நிலைமைகளைப் பற்றியும், அது நிறைவேற்றப் பணிக்கப்பட்டுள்ள மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த செயலின் நோக்கத்தைப் பற்றியும், முழுமையான அறிவை ஊட்ட வேண்டும். இதுவே பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தத்துவார்த்த வெளிப்பாடான விஞ்ஞான சோசலிசத்தின் பணியாகும்” என்கிற வாக்கியத்துடன் இந்நூலை எங்கெல்ஸ் நிறைவு செய்கிறார். இந்த இறுதி வரிகளை பற்றிக் கொண்டு உழைக்கும் வர்க்கத்தை அணிதிரட்டும் கடமையை நிறைவேற்றுவதே சிவப்பு புத்தக தினத்தின் குறியிலக்காகும்.

மார்க்சிய நோக்கில்இயற்கை அறிவியலும் சமூக அறிவியலும்:ஒரு பொருத்தப்பாடு

ச. லெனின்

இயற்கை மீதான இயற்கையின் ஒரு பகுதியான உயிரினங்களின்  தலையீடு, உயிரினங்கள்  தோன்றிய காலந்தொட்டே உள்ளது. புலிகள் தங்களின் உணவிற்காக மான்களை வேடையாடுகின்றன. பாம்பு தவளையையும் பூனை எலியையும் உண்கின்றன. இதுவே இயற்கையின் விதியாகும். இங்கு விதி என்பது அதனதன் தலைவிதியல்ல. அதுவே உணவுச் சங்கிலியின் விதி (Rule). பலர்  இதை தக்கன பிழைக்கும் (survival of the fittest – தகுதியுடையது பிழைக்கும்) என்ற ஹெர்பெட் ஸ்பென்சரின் வார்த்தைகளோடு  இணைத்துப் பேசுகின்றனர். இதை டார்வினின் தத்துவம் என்றும் வாதிடுகின்றனர். உண்மையில் இதை இயற்கைத் தேர்வு (Natural selection)  என்றே டார்வின் விளக்கினார்.

இயற்கைத் தேர்வு – தக்கன பிழைக்கும்

1859இல் வெளியான டார்வினுடைய சிறந்த படைப்பான ‘உயிரினங்களின் தோற்றம்’ என்கிற  நூலில் டார்வின் ‘இயற்கைத் தேர்வு’ எனும் பதத்தையே பயன்படுத்தியுள்ளார். அதன் எளிமையான மாற்றுப் பதமாகவே ‘தக்கன பிழைக்கும்’ என்கிற பதத்தைத் தனது ‘உயிரியலின் கோட்பாடுகள்’ என்கிற நூலில் (1864இல்) முதன் முதலில்  ஸ்பென்சர் பயன்படுத்தியுள்ளதாக அவர் கூறுகிறார். தனது கருத்துருவுக்கு இப்படியான ஒரு வார்த்தை பிரயோகம் இருப்பதையே ஆல்ஃப்பிரெட் ரசூல் என்கிற தனது  நண்பர் ஒருவர் 1866இல் எழுதிய  கடிதத்தின் மூலம்தான் டார்வினே அறிந்துகொள்கிறார்.

எளிமையாக இது இருப்பதால் இவ்வார்த்தை  பிரயோகத்தை  டார்வின் ஏற்றுக்கொண்டதாகவும் பதிவாகியுள்ளது. ஆனபோதும்  fit –  தக்கன என்கிற வார்த்தைக்கு வலிமையான என்கிற பொருளில்  டார்வின் பயன்படுத்தவில்லை. மாறாகச் சூழல் மற்றும் அதன் தேவைக்கேற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளும் ஆற்றலையே தகுதியுடையது என்றார் டார்வின். அதாவது டைனோசர்கள் வலிமையுடையவைதான். ஆனால் அவை இயற்கைத் தேர்வில் மறைந்து போயின. அதேசமயம் சிறிய கரப்பான் பூச்சிக்கள் வெகுகாலமாக உயிர் வாழ்கின்றன. இங்கு தகுதியுடையது கரப்பான் பூச்சிதானே அன்றி டைனோசர்கள் அல்ல.

‘பருவகால மாற்றத்தால் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பு அடையும் மாற்றத்தை முன்வைத்து இயற்கைத் தேர்வு என்ன வழியில் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். இம்மாற்றத்தின்போது அவ்விடத்தில் வாழ்பவை உடனடியாக ஒரு மாற்றத்தைப் பெறுகின்றன. சில உயிரினங்கள் மறைந்தும் போகலாம்’ என்கிறார் டார்வின். டார்வின், ஸ்பென்சர் பயன்படுத்திய ‘தக்கன’ என்ற பதத்தை கையாண்டது வலுசார்ந்த  என்கிற பொருளில் அல்ல. மாறாக அதன் உள்ளடக்கம் சார்ந்தே பயன்படுத்தினார். மாற்றத்திற்கேற்ப அதன் தகவமைவையே அவர் சுட்டினார்.

ஆதிக்கம் நிறைந்த கோட்பாடுகள்

‘தக்கன பிழைக்கும்’ என்கிற பதம்  எப்போது கூடுதலான விவாதப் பொருளானதென்றால், ஆதிக்க சக்திகள் (ஆளும் வர்க்கம்) டார்வினுடைய இயற்கை சார்ந்த கோட்பாடுகளை சமூகத்திற்கான கோட்பாடுகளுடன் பொருத்தினர். ஆனால் டார்வின் உண்மையில் கூறிய ‘இயற்கைத் தேர்வு’ என்பதை விடுத்து ஸ்பென்சரின் தக்கன பிழைக்கும் என்பதாக அதைக் கையாண்டனர். ஆதிக்கம் செலுத்தும் வலிமையானவர்களே தகுதியுடையவர்கள் என்றும், எனவே அது நிலைத்து நிற்கிறது;  அது நிலைத்து நிற்கும் என்றும் வாதிட்டனர். ஆரியமே சிறந்தது; அதுவே உலகை ஆளும் தகுதியுடையது என்று பேசிய நாசிசத்தின் வீழ்ச்சியோடு ஸ்பென்சரின் கோட்பாடுகளை சமூக கோட்பாடுகளாகப் பொருத்தும் ஆதிக்க சக்திகளின் இப்போக்கு ஓரளவிற்கு முடிவுக்கு வந்தது. ஆனால், இன்றும் ஆதிக்க கருத்து நிலையை வலியுறுத்த நினைக்கும் பலரும், தக்கன பிழைக்கும் என்கிற ஸ்பென்சரின் வாதத்தை டார்வினின் வாதமாக முன்வைப்பது வாடிக்கையாகவுள்ளது.

இந்த தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கும் வகையிலும் டார்வின் உண்மையில் சொன்ன அர்த்தத்தில் அதை வெளிப்படுத்தும் நோக்கிலும் தற்போது ‘தக்கன பிழைக்கும்’ என்கிற பதமே உயிரியல் துறையில் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக, டார்வின் உண்மையில் பயன்படுத்திய ‘இயற்கைத் தேர்வு’ என்கிற பதமே இப்போது நிலைத்து நிற்கிறது.

இயற்கை அறிவியலும் சமூக அறிவியலும்

இயற்கை விதிகளை சமூக விதிகளோடு தக்கன பிழைக்கும் என்கிற நோக்கோடு பொருத்திப் பார்ப்பதில் ஆளும் வர்க்கம் எவ்வாறு தோல்வியைத் தழுவியது என்று மேலே குறிப்பிட்டிருந்தோம். அதையே உழைக்கும் வர்க்கம் எவ்வாறு இயற்கைத் தேர்வு என்கிற அடிப்படையில் சமூக விதிகளோடு பொருத்தியது?

மார்க்சியம் இயற்கை   அறிவியலும்  சமூக அறிவியலும்  இணைத்தே  அதன் கோட்பாடுகளை நிலை நிறுத்தியது.   எல்.எச்.மார்கன்  எழுதிய ‘பண்டைய சமூகம்’  என்கிற  பண்டைய  சமூக வளர்ச்சியின் போக்குகளையும், டார்வின் எழுதிய மனித பரிணாமத்தின் படிமலர்ச்சி குறித்து பேசும் ‘உயிரினங்களின் தோற்றம்’ என்கிற இயற்கை விஞ்ஞானத்தையும் மார்க்சியம் தனது கண்டுபிடிப்புகளுக்கான ஆதாரமாக்கிக்கொண்டது.

டார்வினின் ‘உயிரினங்களின் தோற்றம்’ என்கிற புத்தகத்தின் முதல் பதிப்பு 1,250 பிரதிகள்தான்  அச்சிடப்பட்டது. அந்த முதல் பிரதியை வாங்கி வாசித்தவர்களில் எங்கெல்சும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.  எல்.எச்.மார்கனின் நூலை அடிப்படையாகக் கொண்டே எங்கெல்ஸ் தனது ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ எனும் படைப்பை உருவாக்கினர். மார்க்ஸ் தனது தலைசிறந்த மூலதனம் நூலின் முதல் தொகுதியை டார்வினுக்கு சமர்ப்பிக்க விரும்பினார்.

மார்க்சியத்தின் பிரிக்கமுடியாத பகுதியாக இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றியல் பொருள்முதல்வாதமும் விளங்குகின்றன.

இயற்கை பற்றிய பொருள்முதல்வாத பார்வையே இயக்கவியல் பொருள்முதல்வாதமாகும். ஏதோ ஒரு சக்திதான் (கடவுள் எனும் கருத்து) இயற்கையைப் படைத்தது என்பதை சொல்வது கருத்து முதல்வாதமாகும். இயற்கை அண்டத்தில் உள்ள உலகம் என்கிற பொருளில், மனிதன் ஒரு உயிருள்ள பொருள். அவன் தலையிலுள்ள மூளை என்கிற பொருளில் உதித்த ஒன்றே கடவுள் என்ற கருத்து பொருள்முதல்வாதம்.

மனிதன் என்ற உயிரினம் உருவாவதற்கு முன்பே, அவன் மூளை உலகம் குறித்துச் சிந்திக்கத் தொடங்குவதற்கு முன்பே உலகம் இருந்தது. அந்த உலகத்தின் பிரதிபலிப்பே மனித சமூகத்தின் சிந்தனையாகும். இதை உறுதிப்படுத்தும் விதமாகவே டார்வினின் கண்டறிதல் அமைந்தது.

இயக்கமும் மாற்றமும்

‘சிந்தனையின்றி பொருள் இருக்க முடியும். ஆனால் பொருளின்றி சிந்தனை ஏதும் இருக்க முடியாது.’ அந்தப் பொருள் இடைவிடாது இயங்கிக்கொண்டுள்ளது. இவ்வியக்கம் பொருளில் இடைவிடாமல் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இயக்கம் எப்படிப் பொருளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ, அதேபோல் பொருளில் ஏற்படுகிற மாற்றம் அதன் இயக்கத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

‘ஒவ்வொன்றும் ஒவ்வொரு கணமும் அதுவாகவும் அது அல்லாததாகவும் இருக்கிறது… இயக்கம் இல்லாத பொருள் எங்குமே ஒருபோதும் இருப்பதில்லை. அப்படி இருக்கவும் முடியாது. உலகிலுள்ள பொருளின் ஒவ்வொரு தனித்தனி அணுவும் மேற்சொன்ன இயக்க வடிவங்களில் ஏதோவொன்றிலோ அல்லது ஒரே வேளையில் பல வடிவங்களிலோ இருக்கிறது. ஒரு பருப்பொருள் ஓய்வு நிலையில் (Rest)  உள்ளது; சமநிலையில் (Equilibrium) உள்ளது என்பதெல்லாம் ஒப்பீட்டு அளவில்தான். ஏதோவொரு திட்டவட்டமான இயக்க வடிவத்துடன் தொடர்புபடுத்தித்தான் அது ஓய்வு நிலையில் அல்லது சமநிலையில் உள்ளது என்றே கூறமுடியும்.’’ என்கிறார் எங்கெல்ஸ்.

அனைத்து உயிரினங்களும் ஒரு சில தினங்களில் உருவாக்கப்பட்டவையல்ல. கோடிக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்ற இடையறாத மாற்றங்களின் வழியே பொருளின் உள்ளியல்பில் ஏற்பட்ட மாற்றங்களாலும் அதன் மீதான புறநிலைகளின் தாக்கத்தின் விளைவாகவுமே உயிரினம் உருவானது. இப்படியான தொடர் நிகழ்வுகளாலும் தொடர் இயக்கத்தாலும் ஏற்பட்ட மாற்றங்களே இன்றைய மனித இனமாகப் பரிணமித்துள்ளது என்று டார்வின் நிறுவினார்.

இயற்கைத் தேர்வின் அடிப்படையில் ‘ஒவ்வொரு உயிரினமும் தனித்தனியாக, அநாதியாகப் படைக்கப்படவில்லை. மாறாக, உயிரினங்கள் அனைத்தும், மற்ற உயிரினங்களின் வழித்தோன்றல்களே என்பது தெரியவரும்’ என்று தனது விரிவான உயிரியல் ஆராய்ச்சியின் மூலம் டார்வின் விளக்கினார். உலகமும் உயிரினங்களும் ஏதோவொரு ஆற்றலால் (கடவுளால்) படைக்கப்பட்டது என்கிற கருத்து முதல்வாதத்திற்கு எதிரான பொருள்முதல்வாத கோட்பாட்டிற்கு டார்வினுடைய கண்டறிதல் வலுசேர்த்தது. ‘இயற்கைத் தேர்வினை, நாள்தோறும் மணிக்கணக்கில் ஆழ்ந்து நோக்கும் செயலாகக் கருதலாம். நம்மால் மிக மெதுவாக நடக்கும் மாற்றங்களைக் காணமுடிவதில்லை’ என்று கூறுகிறார் டார்வின். இதை எங்கெல்ஸ் விவாதித்த ஓய்வு நிலை, சமநிலை (Rest, Equilibrium) என்பதோடு ஒப்புநோக்க வேண்டிய ஒன்றாகும்.

ஆதிக்கத்தின் மொழியல்ல இயற்கைத் தேர்வு

மார்க்சியம் இயற்கை அறிவியலை சமூக அறிவியலோடு இணைத்துப் பொருத்தியது ஆதிக்க சிந்தனையோடு அல்ல. ஆகவேதான் தக்கன பிழைக்கும் என்று அதை முன்வைக்காமல், இயற்கைத் தேர்வு என்கிற வகையிலேயே அதை அணுகியது.

‘இயற்கைத் தேர்வுதான் உயிர்களிடையே நிலவும் மாறுபாடுகளுக்கான மையமான வழிமுறை. ஆனால், அது மட்டுமே வழிமுறையன்று.’ ‘மாறிய நிலைமைகளுக்கு உயிரினங்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளுகிறபோது, அம்மாறுபாடு பத்திரப்படுத்தப்படுகிறது. இயற்கைத் தேர்வு இவ்வாறாக உயிரினங்களின் முன்னேற்றத்திற்குரிய வசதியை உண்டாக்கித் தருகிறது.’ அவ்வாறே சமூகத்திலும் பழைய சமூக அமைப்பு, அடுத்தகட்ட சமூக வளர்ச்சிக்கான கருவைச் சுமந்தே நிற்கும். புதிய சமூக அமைப்பே இயற்கைத் தேர்வாக இருக்குமானாலும், மாற்றத்திற்கு ஏற்றவகையில் அதன் உறுப்பினர்கள் செயலாற்றவேண்டியது அவசியமாகும். இல்லையேல் அதன் வளர்ச்சிப்போக்கில் சிதைவையே சந்திக்க நேரிடும். அது படிப்பினையாக அமையுமேயன்றி, படிக்கட்டாக அமையாது.

எப்படி இயற்கையின் எல்லா நடவடிக்கைகளுக்கும் இயக்கவியல் அடிப்படையாக அமைகிறதோ, அதேபோல் வரலாற்றின் எல்லா நடவடிக்கைகளுக்கும், அந்தந்த காலத்தில் நிலவிய பொருளுற்பத்தி முறையும் அதன் இயக்கப்போக்குமே முதன்மைக் காரணமாகும். இதையே மார்க்சும் எங்கெல்சும்  வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்றனர். சோஷலிச சமூகம் அமைவது என்பது சமூகம் வந்தடைய வேண்டிய  இயல்பான படிநிலை (இயற்கைத் தேர்வு) என்று மார்க்சும் எங்கெல்சும் கூறினர். அது வலிந்து திணிக்கப்படுவதல்ல; மாறாக, சமூக வளர்ச்சி விதியின் அடிப்படையில், அது வந்தடையும் இடமே சோஷலிசம் என்று விளக்கினர்.

மனித உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் தாய்ப்பாலைத் தவிர வேறெந்த உணவிலும் இல்லை என்கிறது அறிவியல். ஆனால் அனைத்து ஊட்டச்சத்துக்களும் எங்கள் தயாரிப்பில் நிறைந்துள்ளது என்று நிறுவனங்கள், தங்களின் பொருட்களுக்கான விளம்பரத்தை மேற்கொள்கின்றன. இதில் எது உண்மை என்பதை அனைவரும் அறிவர். சத்துபானங்கள் வலிந்து திணிக்கப்படுபவை. ஆனால், இயல்பாகக் குழந்தைகள் தேடிச்சென்று அருந்துவது தாய்ப்பால்.

மாற்றமெனும் உயிர் விதி

‘இயங்கியல் என்பது இயற்கை, மானுட சமுதாயம், சிந்தனை ஆகியவற்றின் இயக்கம், வளர்ச்சி ஆகியன குறித்த பொதுவிதிகளைப் பற்றிய அறிவியலே தவிர வேறொன்றுமல்ல’ என இயற்கை அறிவியலில் ஏற்படும் வளர்ச்சிப்போக்கை சமூகத்தின் வளர்ச்சிப்போக்குடன் இணைத்து முன்வைக்கிறார் எங்கெல்ஸ்.

இயக்கமும் அதன் விளைவான மாற்றமும் தவிர்க்கமுடியாத ஒரு உயிர் விதியாகும். மனித சமூக விதியும் இத்தகையதே. மனித சமூகத்தின் வரலாறும் மாற்றங்களோடே வளர்ந்துவந்துள்ளது. இதையே எல்.எச்.மார்கனின் ‘பண்டைய சமூகம்‘ நூல் விளக்கியது. மார்க்சியத்தின் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்திற்கு இந்நூல் கூடுதல் சான்றாதாரமாக அமைந்தது. எந்தப் பொருளும் எப்படி நிலையானதாக இல்லையோ, அதேபோல் எந்த சமூக அமைப்பும் நிலையானதாக இல்லை. உயிரினங்கள் எவ்வாறு மாற்றங்களுக்கு உட்பட்டு வளர்ந்து, மனிதனின் நிலைக்கு உயர்ந்துள்ளனவோ, அதேபோல் மனித சமூகமும் மாற்றங்களுக்கு உட்பட்டதே. அந்த மாற்றங்களின் வழியே அது ஒரு மேம்பட்ட சமத்துவ சமூகத்தை வந்தடையும் என்கிறது மார்க்சியம்.

ஆளும் வர்க்கமோ, சமூகம் நிலையானது என்றும், எல்லாம் மாயை என்றும் வாதிடுகின்றன. மதம் எனும் வழியில் சிந்திப்பதை நிறுத்தும்போதே தெளிவான மனத்தை கண்டடைவீர்கள் என்றும், அந்த நிலையில்தான் பிரபஞ்சத்தோடு ஒன்றிணைகிறீர்கள் என்கிறது. சிந்திப்பதால்தான் நாம் மனிதன் என்ற நிலையில் இருக்கிறோம். சிந்திப்பதை நிறுத்தினால்தான் பிரபஞ்சத்தோடு ஒன்றிணைகிறீர்கள் என்றால் அது மனிதனின் மரணத்தையே குறிப்பதாகும். ஆளும் வர்க்கம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள எதுவும் மாற்றம் இல்லாமல் நிலைத்திருக்கிறது என்ற கருத்தை மக்கள் மத்தியில் விதைக்கிறது. எல்லாம் ஒருவனின் ஆட்டுவித்தலுக்கு இணங்க ஆடுகிறோம் என்கிறது. ஏனெனில் மாற்றம் இவர்களையும் மாற்றி, புதியனவற்றுக்கு பாதை போடும் என்ற அவர்களின் அச்சமே இதற்குக் காரணம். பழையனவற்றின் போதாமைதான், புதிய ஒன்றின் தேவையை உருவாக்குகிறது. போதாமைகளை நிவர்த்திசெய்ய, புதியது பூப்பதை யாரும் தடுத்திட முடியாது. நீங்கள் மலர்களைக் கொய்யலாம் ஆனால், வசந்தங்களைத் தடுக்கமுடியாது என்கிற நெருடாவின் வார்த்தைகளைப் போல், மாற்றங்களுக்கு அணை கட்ட முடியாது.

சடுதி மாற்றம்

இந்த உலகம் மாயை அல்ல; அது உண்மை. அது எப்போதும்  மாறிக்கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த சமூகமும் மாறிக் கொண்டுள்ளது என்றார் மார்க்ஸ்.

இயக்கம் அல்லது மாற்றம் இரண்டு வகையாக இருக்கும். ஒன்று படிப்படியாக மாறி பொருள் உருமாற்றமடைவது. இரண்டாவது முழுமையாக புதிய ஒன்றாக திடீரென ஒரு மாற்றத்தைப் பெறுவது. தற்போது நாம் வாழும் இந்த சமூக அமைப்பும் நிலையாக இருப்பதுபோல் தோன்றினாலும், அது பல்வேறு மாற்றங்களை தன்னகத்தே நிகழ்த்திக்கொண்டேதான் உள்ளது. உயிர்மலர்ச்சியும் சாதாரணமாக மந்தமாகவும் பரந்த வடிவில் மாற்றங்களுடனும் வளர்ந்துகொண்டுள்ளது. ஒரு வெடிப்புபோல் சமூகப்புரட்சி பாய்ச்சல் வேகத்தில் அடுத்த சமூகநிலைக்கு உந்தித்தள்ளப்பட்டு மாற்றத்தை சந்திக்கிறது. இதை உயிரியலில் சடுதிமாற்றம் (Mutation) என்பர். உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியிலும் இப்படியான திடீர் வடிவமாற்றம் காலந்தோறும் நிகழ்ந்துவருகிறது.

சிறிதுசிறிதாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் மாற்றங்கள் அளவு ரீதியான ஒரு மாற்றத்தை உருவாக்கிக்கொண்டேயிருக்கும். இது ஒரு முதன்மைக் கட்டத்தை எட்டும்போது, அது பொருளின் முழு வடிவத்தையுமே மாற்றிவிடுகிறது. இதையே அளவு மாற்றம் குணமாற்றத்தை உருவாக்கும் என்கிறது இயக்கவியல் விதி.

எதிர்மறைகளிடம் நிலவும் ஒற்றுமையும் மோதலுமே, இயக்கம் மற்றும் மாற்றத்திற்கான அடிப்படையாக திகழ்கிறது. ‘உயிர் உலகைச் சார்ந்த ஒவ்வொரு செல்லிலும்கூட இணைப்பு, பிளவு எனும் எதிர்மறை இயக்கங்கள் பரந்த வடிவில் பணியாற்றிக்கொண்டிருக்கும்.’ மனித சமூகத்தில் ஆளும் வர்க்கத்திற்கும் ஆளப்படுகிற வர்க்கத்திற்குமிடையே மோதலும் இருக்கும் இணக்கமும் இருக்கும். தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கம் ஆகியோரிடையே இருக்கும் இணக்கமே உற்பத்தி, முரண்பாடு தொழிலாளர்களின் போராட்டங்களாக வெடிக்கும். முரண்பாடுகள் முற்றும்போது அது சமூகப்புரட்சியாக மலரும். அதுவே முன்பு நாம் விவாதித்த சடுதிமாற்றத்தை நோக்கி இட்டுச்செல்லும்.

‘இந்த மோதல்களில் சிறிது காலம் அமைதி நிலைக்கும். (ஓய்வு நிலை, சம நிலை / Rest, Equilibrium) அப்போது நாம் பொருள் நிலையாக உள்ளதெனப் பிரமிப்போம். ஆனால் ஓய்வு நிலையும் சமநிலையும் தற்காலிகமானவையே…. பிரபஞ்சம் இயக்க மயமானது; மாற்ற மயமானது. சமூகமும் இயக்க மயமானது; மாற்ற மயமானது. மனித சமூகம் நிரந்தரமாக மாறிக்கொண்டே இருக்கும். … சமூகத்தை மாற்ற வேண்டுமென்பது உத்தேசமோ கனவோ அல்ல. அதுவே எதார்த்தம்.’ என்று ஆளும் வர்க்கத்திற்கு நேரெதிரான கருத்தை இயற்கை அறிவியலின் துணைகொண்டு முன்வைக்கிறது மார்க்சியம்.

பின்னோக்கியல்ல, முன்னோக்கியே…

இயற்கையும் சமூகமும் எப்போதும் முன்னோக்கியே பயணிக்கின்றன. இயற்கைத் தேர்வில் அது ‘கெடுதலானவற்றை ஒதுக்கி நல்லவற்றைச் சேர்த்துவைக்கிறது’ என்கிறார் டார்வின். எப்படி இயற்கைத் தேர்வில் பல உயிரினங்கள் அழிந்து மறைகின்றனவோ, அதேபோல் சமூக அமைப்பும் காலத்திற்கேற்ற புதிய அமைப்புமுறையைக் கண்டடைகிறது. சமூகமும் அதன் வளர்ச்சிக்கு கேடானவற்றைத் தூக்கிச் சுமப்பதில்லை. மனித சமூகத்திற்கு கேடானவற்றை இயற்கையின் விதி போலவே, சமூக விதியும் தூக்கியெறிகிறது. அது வலிந்து திணிக்கப்படுவதில்லை. இயல்பாக உருவாகிறது. ஆனால் முரண்பாடுகளின் வெளிப்பாடாக மேல் எழும் புதிய அமைப்பு, பழைய அமைப்புமுறையை வீழ்த்தியே பரிணமிக்கும்.

‘உயிரினங்கள் மறைவதும் இயற்கைத் தேர்வும் நாம் பார்த்தவரை இரண்டும் கைகோர்த்து செல்லுகின்றன. இயற்கைத் தேர்வு உயிருக்கு ஆதாரமான மாற்றங்களைப் பேணும் பணியைச் செய்கிறது. இவ்வாறு இயற்கைத் தேர்வின்வழி உருவான ஒவ்வொரு புதிய உயிர் வடிவமும் போராட்டத்தில் வெற்றிகொள்கின்றன’ என்று டார்வின் குறிப்பிடுகிறார்.

இயற்கைத் தேர்வைப் போலவே பழைய சமூகத்தின் மறைவிலிருந்தே, புதிய சமூக அமைப்பு உதித்தெழுகிறது. ஆளும் வர்க்கத்தினர் முன்வைப்பதுபோல் அவர்கள் ’தகுதியுடையவர்கள்‘ என்று கூறிக் கொள்வதால் நிலைக்கப் போவதில்லை. இயக்கம், மாற்றம் என்கிற சமூக வளர்ச்சியின் விதி, நிலையானவர்கள் என்று தங்களை பிரகடனப்படுத்திக் கொள்பவர்களையும் நிலைகுலையச்செய்யும். சமூகத்தின் தேர்வாக முற்போக்கான ஒரு சமத்துவ சமூகம், உழைக்கும் வர்க்கத்தின் உன்னதத்திலிருந்து உதித்தெழும்.

  • உதவிய நூல்கள்
  • 1.   ஜார்ஜ் தாம்சன், மனித சாரம் (தமிழில்- எஸ்.வி.ராஜதுரை), விடியல் பதிப்பகம், கோவை, 2005.
  • 2.   சார்லஸ் டார்வின், உயிரினங்களின் தோற்றம், (தமிழில் சுருக்கம்- ராஜ்கௌதமன்), விடியல் பதிப்பகம், கோவை, 2010.
  • 3.   பிரபாகர் சான்ஸ்கிரி, மனிதக் கதை (தமிழில்- க.மாதவ்), பாரதி புத்தகாலயம், சென்னை, 2008)
  • 4.   ஜார்ஜ் பொலிட்சர், மார்க்சிய மெய்ஞ்ஞானம், (தமிழில்- ஆர்.கே.கண்ணன்), என்.சி.பி.எச் பதிப்பகம், சென்னை, 2004 (மூன்றாம் பதிப்பு).
  • 5.   வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1987.

விவசாயிகளின் போராட்டமும் அதன் வர்க்க அடித்தளமும்

நிலோத்பல் பாசு

ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தலைமையிலான ஓராண்டு கால போராட்டம், நினைத்துப் பார்க்க முடியாத வெற்றியை சாதித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மோடி அரசு முதன் முறையாக ஒரு மக்கள் போராட்டத்திற்கு முன் அடிபணிந்துள்ளது. விவசாயிகளின் ஒருங்கிணைந்த இப்போராட்டம் நாடு முழுவதின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு, நவ தாராளமயத்தின் சர்வதேச நிதி மூலதனத்தின் கீழ் இயங்கும் வலதுசாரி அரசியல் சித்தாந்தத்திற்கு எதிராக உலகம் முழுவதும் போராடி வரும் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

விவசாயிகளின் போராட்டம் அரசாங்கத்திற்கு அதிர்ச்சியை  ஏற்படுத்தி இருப்பதோடு அவர்களுக்குப் பெரும் சங்கடத்தையும்  ஏற்படுத்தியுள்ளது. மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் அறிவித்தார். பெரும் பகுதி விவசாயிகளின் ஒன்றுபட்ட  போராட்டத்தின் முன் தனது முந்தைய நிலைபாட்டில் அவரால் உறுதியாக நிற்க முடியாமல் போனதே அந்த அதிர்ச்சியின் வெளிப்பாடாகும்.

விவசாயிகள் போராட்டம் நடந்த இக்காலம் முழுவதும் அரசாங்கத்தின் கொள்கையே சரி என்று வழிமொழிந்த பிரதான ஊடகங்கள், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்கிற முடிவை மோடியின் கச்சிதமான ஆட்டம் என்று முன்னிறுத்துகின்றன. இது விவசாயிகளின் பிரம்மாண்டமான போராட்டத்தை மறுக்கும் செயலாகும். அதனால்தான், விரைவில் வரவிருக்கும் சில மாநில தேர்தல்களை மனத்தில் கொண்டே சட்டங்கள் திரும்பப் பெறப்படுவதாக அவை தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், பூனை கூடையை விட்டு வெளியே வந்துவிட்டது. மூன்று வேளாண் சட்டங்களையும் ஏன் திரும்பப் பெறுகிறோம்? என்பதற்கான காரணங்கள் மற்றும் நோக்கங்கள் நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது. அக்குறிப்பே, எவ்வாறு இச்சட்டங்கள், விவசாயம் மற்றும் வேளாண் பணிகள் அனைத்தும் கார்ப்பரேட் பெரு முதலாளிகளிடம் கையளிக்கும் உள்நோக்கத்தைக் கொண்டது என்பதை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

சட்டங்களை  திரும்பப் பெறும்போதும் அரசாங்கம் தனது பொய்களையும் ’நியாயங்களையும்’  மீண்டும் மீண்டும் கூறியுள்ளது. அதில் ”வல்லுநர் குழுக்களின் பல ஆண்டுகால பரிந்துரைகள், விவசாயிகள், துறைசார் வல்லுநர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள்,  விவசாய பொருளாதார அறிஞர்கள் உள்ளிட்டவர்களின் ஆலோசனைகள், விவசாய அமைப்புகள் முன்வைத்த கோரிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையிலும் விவசாயிகள் மற்றும் ஊரக அமைப்புகளின் அனைத்துவிதமான சமூக பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டும் இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. முப்பதாண்டுகளாக பல அரசாங்கங்கள் இச்சீர்திருத்தங்களை செய்ய முயற்சித்தபோதும் தற்போதைய அரசைபோல் விரிவான அளவில் அதற்கான முன்முயற்சிகளை அவை மேற்கொள்ளவில்லை. மேலும் இக்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியும் நிகழ்ந்துள்ளது.” என்று அக்குறிப்பில் அரசு தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்துவதும் அவற்றை ஏளனமாக கருதும் போக்கும் இதிலும் தொடர்வதைக் காணலாம். “குறிப்பிட்ட சில விவசாய குழுக்களே இச்சட்டங்களை எதிர்த்து போராடுகின்றபோதும், பல்வேறு கூட்டங்களிலும் பல்வேறு முறைகளிலும் வேளாண் சட்டங்களின் அவசியத்தை விவசாயிகளிடம் எடுத்துரைக்க அரசாங்கம் கடுமையாக முயற்சித்தது.” என்று நாடாளுமன்றத்தில் அரசு கூறியுள்ளது. இதில் எள் அளவும் உண்மை இல்லை.

சர்வதேச நிதியம் & நவ தாராளமயத்தின் கூட்டு தான் வேளாண் சட்டத்தின் உள்ளடக்கம்

துவக்கத்திலேயே அரசாங்கத்தின் வர்க்க சார்பு இதில் வெளிப்படையாக தெரிவதை கவனத்தில் கொள்வது அவசியமாகும். கரோனா பெரும்தொற்றுக் காலத்தை கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான சீர்திருத்தங்களை மேற்கொள்ள சாதகமாக பயன்படுத்தப்படுவதே அருவருக்கத்தக்க செயலாகும். கரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த இந்த கடுமையான ஊரடங்கு அமலாக்கப்படுவதாக கூறினாலும்,  விவசாயத்தை கார்ப்பரேட்களுக்கு, குறிப்பாக அரசாங்கத்தோடு நெருக்கமானவர்களுக்கு, கையளிக்கவே ஊரடங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. விவசாய பொருட்களை கொள்முதல் செய்வதற்கும், அவற்றை சேமிப்பதற்கான சேமிப்பு கிடங்குகளை அமைப்பதற்கும்,  விநியோக ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இக்காலத்தில் செய்துள்ள முதலீடுகளின் அளவே இதனை அப்பட்டமாக வெளிப்படுத்தும்.

இது அரசாங்கத்தின் செயல்பாட்டில் உள்ள வர்க்க உள்ளடக்கத்தை வெளிப்படுத்துகிறது. வர்க்க உணர்வுடன் அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்த்து நிற்காமல் போனால், சொந்தமாக விவசாயம் செய்வதற்கும், எதை விதைப்பது? என்பதை சுயமாக முடிவு செய்வதற்கும், விற்பனைக்கான முறைகளை தீர்மானிப்பதற்கும், பல்வேறு வேளாண் நடவடிக்கைகளில் விவசாயிகளின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும் முடியாமல் போகும்.

சர்வதேச நிதியத்தின் விவசாய பொருட்களின் உலகளாவிய சந்தையின் தேவைகளை நிறைவேற்றும் போக்குடைய செயல்பாட்டின் ஒரு பகுதியாக தங்களை நிறுத்திக்கொள்ள விவசாயிகள் இயக்கம் உறுதியாக மறுத்துள்ளது. கார்ப்பரேட் பெருமுதலாளிகள் அரசாங்கத்தை அதை நோக்கியே தள்ளுகின்றனர். இது உலகளாவிய போக்காகவே உள்ளது. அதன் அடிப்படையிலான உலகளாவிய சட்டகத்தின் ஒரு பகுதியாக இந்தியாவிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடனேதான் வேளாண் சட்டங்கள் அவசரகதியில் கொண்டுவரப்பட்டன.

இந்த சட்டகத்தின் முக்கியமான கூறு என்னவெனில், விவசாய நிலத்தில் பயிரிடப்படும் பொருளை மாற்றுவதாகும். மற்ற வளர்முக நாடுகளைபோல் அல்லாமல் சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு, நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருப்பது நமது அரசியல் மற்றும் பொருளாதார இறையாண்மை பாதுகாப்பதற்கான முக்கியமான அரணாக உள்ளது. உணவு உற்பத்தி எவ்வாறு இந்திய மக்களுக்கு அவசியமோ, அதேபோல் கார்ப்பரேட் தலைமையிலான விவசாய சந்தைக்கு வர்த்தகப் பயிர்கள் அவசியமாக உள்ளது. மேலும் இந்த வர்த்தகப் பயிர்கள் இந்தியாவின் பல்வேறு காலச்சூழலில் நன்றாக விளைய கூடியதாகவும் உள்ளது.  எனவே  வேளாண் சட்டங்கள், எதை விதைப்பது? எதை விவசாயம் செய்வது? எனும் சுதந்திரத்தை பாதிக்கும். விவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட இத்தாக்குதலை பூகோள எல்லைகளை கடந்து விவசாயிகள் இயக்கம் வென்றுள்ளது.

எதிர்ப்பாற்றலின் விரிந்த தன்மை

“தொடர்ந்து நிலவும் சர்வதேச முதலாளித்துவ நெருக்கடி, கொரோனா பெருந்தொற்று மற்றும் அதை தொடர்ந்த ஊரடங்கின் காரணமாக  இந்திய பொருளாதாரம் சந்திக்கும் நெருக்கடிகளின் பின்னணியில், விவசாயம் மற்றும் அதன் வர்த்தகத்தை முழுமையாக கார்ப்பரேட்டுகளின்  கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்ல இந்திய ஆளும் வர்க்கத்தின் தலைமை எடுத்த முயற்சிகளை விவசாயிகளின் இந்தப் போராட்டம் தடுத்துள்ளது” என்று விவசாயிகளின் இப்போராட்டத்தை அங்கீகரிக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நிறைவேற்றிய தீர்மானம் சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத அளவிலான எதிர்ப்புணர்வின் விரிந்த தன்மையையும் அதன் வர்க்க இயங்கு தன்மையையும் தெளிவாக விளக்குவது எளிதானதல்ல. கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான அரசாங்கம்  இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு அதன் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து ஆங்காங்கே எழுந்த எதிர்ப்பு இயக்கங்களுக்கு சரியான பலன் கிடைக்கவில்லை. தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்கச் சொன்ன அச்சுறுத்தல் நிறைந்த காலத்தில் பொதுவான கொள்கை பிரச்சினைகளுக்காக பிரம்மாண்டமான மக்கள் திரள் போராட்டங்களை நடத்துவதில் உள்ள சிரமமே நம்ப முடியாத அளவிலான இப்போராட்டத்தை புரிந்து கொள்ள போதுமானதாகும்.

இப்போராட்டம் மேலும் பல சிக்கல்களை கொண்டதாகும். ஏனெனில், இந்திய விவசாயிகளிடம் நிலவும் வர்க்க வேறுபாடுகளால் கடந்த காலத்தில் அனைத்து தரப்பு விவசாயிகளையும் ஒன்றிணைத்து ஒரு போராட்டத்தை நடத்த முடிந்ததில்லை. ஆனால், இப்போராட்டத்தில் வசதிபடைத்த விவசாயிகள், சிறிய மற்றும் மத்திய தர விவசாயிகளும் பங்கேற்றனர். அதேநேரம் சாதிய படிநிலையின் படி கடந்த காலங்களில் தனித்து ஒதுங்கியிருந்த நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளர்களை அணிதிரட்டுவது பெரும் சவாலாக இருந்தது.

அரசாங்கமும் அதன் அரசியல் இயந்திரமான பிஜேபி – ஆர் எஸ் எஸ் –உம் இந்த சமூகக் குறைபாட்டைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த முனைந்தனர். மத அடையாளங்களை பயன்படுத்தியும் அரசியல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. போராட்டத்தில் பங்கேற்ற பெரும்பகுதியினர் பஞ்சாப் மாநிலத்தவர்கள் என்பதால் இப்போராட்டம் காலிஸ்தான் தீவிரவாதத்தின் சதி என்றும் கொச்சைப்படுத்தினர். ஆனால், அரசின் அத்தனை முயற்சிகளும் தோல்வியையே தழுவியது. வேற்றுமைகளை கடந்த ஒற்றுமையின் பலத்துடன் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தலைமையில் சுமார் 500 அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு அரசாங்கத்தின் பல்வேறு  தாக்குதல்களை எதிர்கொள்ளும் கேடயமாக இருந்தது. இவ்வொற்றுமையே அதன் தனித்தன்மையாக விளங்கியது.

இந்த விரிந்து பரந்த வர்க்க – வெகுஜன ஒருங்கிணைவு ஏற்படுவதற்கான அடிப்படையான அம்சங்களை பிரதான ஆய்வாளர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர்; அல்லது தெரிந்தே அதை மறுத்து, சிதைக்கப் பார்க்கின்றனர். இப்போராட்டம் நீண்டகால வளர்ச்சிப்போக்கின் அடித்தளத்தில் எழுந்துள்ளது. நிச்சயம் திரும்ப பெற வேண்டிய சட்டமான கட்டாய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்த போராட்டத்திலிருந்து இது துவங்கியது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது; பணப்புழக்கம் குறைந்தது ஆகியவற்றுக்கு எதிராக நடந்த போராட்டங்கள் இப்போராட்டத்தின் இரண்டாம் கட்டமாகும். அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு (AIKSCC) ஒரு விரிந்த மேடையின் துவக்கமாகும். அதுவே பின்னர் வேளாண் சட்டங்களுக்கு எதிரான ஐக்கிய விவசாயிகள் முன்னணியாக எழுந்து நின்றது. இது, வர்க்கம், சாதி என்கிற வேற்றுமைகளை கடந்த ஒருங்கிணைவை வழங்கியது.

“சர்வதேச நிதி மூலதனத்துடன் இணைந்த பெரு முதலாளிகளுக்கும் பணக்கார விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் இடையே இந்த வேளாண் சட்டம் ஒரு மோதலை உருவாக்கியுள்ளது. இம்மோதல் உழைக்கும் வர்க்கம், ஏழை விவசாயி மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களை ஒருங்கிணைத்து முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்க அமைப்பிற்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதற்கு உதவும் சாத்தியக்கூறுகள் உள்ளன’‘ என்ற மத்திய குழுவின் அறிக்கையை கொண்டு நாம் இதை சுருக்கமான கூறலாம்.

விவசாயிகளின் இப்போராட்டத்தின் துவக்கத்திலிருந்தே தொழிற்சங்கங்களின் உடனடியான ஆதரவு செயல்பாடுகளை உள்வாங்காமல், இயற்கையாக உள்ள விரிவான வர்க்க இணைவு முழுமை பெறாது. மோடி அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத செயல்பாடுகளையும், அது கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்தும், இயற்கை வளங்களை கண்மூடித்தனமாக விற்பதை கண்டித்தும் உழைக்கும் வர்க்கம் கனன்று கொண்டிருந்தது. இது விவசாயிகளின் ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு தொழிலாளி வர்க்கத்தையும் தெழிற்சங்கங்களையும் தங்களது உறுதியான ஆதரவை நல்கிட வழிவகுத்தது. சமீபகாலங்களில் திட்டமிட்ட அடிப்படையில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளின் ஒருங்கிணைவு பல முட்டுக்கட்டைகளை தகர்த்துள்ளது. அதுவே ஒரு விரிவான ஒருங்கிணைவை கட்டியமைக்க வழிகோலியது.

“தேசத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்கும்  நவ தாராளமய பொருளாதார சீர்திருத்தங்களின் தீவிரத்தன்மை பெரு முதலாளிகளுக்கும் சிறு,குறு மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் முதலாளிகளுக்கும் இடையே ஒரு மோதலை உருவாக்கியுள்ளது. பெரு முதலாளிகள் மற்றும் இதர முதலாளிகள் மத்தியில் உருவாகியுள்ள இம்மோதல், பிஜேபி மற்றும் அதன் கொள்கைகளுக்கு எதிரான வலுவான விரிந்த ஒருங்கிணைவை கட்டியமைக்கும் சாத்தியக்கூறுகளை உருவாக்கியுள்ளது.” (மத்திய குழு அறிக்கை)

புதிய அரசியல் விழிப்புணர்வு: ஜனநாயகத்தையும் அரசியல் அமைப்பு சட்டத்தின் மாண்புகளை பாதுகாத்தல்

திரும்பிப் பார்க்கையில், வாழ்நிலையைப் பாதுகாப்பதற்கான வர்க்கப் போராட்டமானது, அடிப்படையாகவும், பெருமளவிலும் பொருளாதாரரீதியான தன்மை கொண்டதாக அமைந்திருந்த இந்தப் போராட்டத்தினை புதியதொரு அரசியல் மட்டத்திற்குக் கொண்டு சென்று, அதை உண்மையானதொரு மக்கள் இயக்கமாக உருமாற்றி அமைத்தது என்பது தெளிவாகிறது. “விவசாயிகளுக்கு ஆதரவான சீர்திருத்தம்” என்று சொல்லப்பட்ட இச்சட்டங்களை எதிர்த்து போராடுவதற்கான விழிப்புணர்வை மூவர்ணக் கொடியின் பின்னணியில் இந்திய அரசியல் அமைப்பு சட்டமே ஏற்படுத்தியது என்பது தற்செயல் நிகழ்வே.

அரசாங்கத்தின் இந்த சட்ட நடைமுறைகள் முழுக்க முழுக்க இந்திய அரசியல் சாசனத்திற்கும் அதன் ஜனநாயக விழுமியங்களுக்கும் எதிரானதாகும். அதுவே இந்த நீடித்த போராட்டத்திற்கு அடித்தளமாக அமைந்தது. இவ்வேளாண் சட்டங்களை அரசாங்கம் மிருக பலத்துடன்  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய போதும், அது நாடாளுமன்ற மரபுகளையும் நடைமுறைகளையும் காலில் போட்டு மிதித்தது. அதுவும் இந்த வீரியமிக்க போராட்டத்திற்கு உரமிட்டது.

தேச விடுதலை போராட்டத்தின் போது அது உத்தரவாதப்படுத்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் உள்ளடக்கமான ஜனநாயகம் மற்றும் மாநில உரிமைகளை இவ்வரசு குறைத்து மதிப்பிட்டதன் விளைவாக அது தற்போது அம்பலப்பட்டு நிற்கிறது. இறுதியாக, தேசத்தின் தலைநகரின் வீதிகளில் நடந்த இப்போராட்டம் அரசாங்கத்தின் அருவருக்கத்தக்க வடிவத்தை தோலுரித்து காட்டியுள்ளது. இதில் முரண்பாடு என்னவெனில், வேளாண் சட்டங்களை அரசாங்கம் திரும்பப் பெற்றிருப்பது, நீதி நியாயங்களை நிலைநாட்டுவதற்கான போராட்டங்கள் சரியானதுதான் என்று நிருபித்துள்ளது.

அரசாங்கம்தான் வன்முறையை கையாளும் என்பதை உருவகமாக மட்டுமல்லாமல் நிஜத்திலும் எடுத்துக்காட்டியுள்ளது. எழுநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் போராட்ட களத்தில் தியாகிகளாக மரணித்திருந்தாலும் அரசின் தாக்குதலுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் உள்ளது. தடுப்பு வேலிகள் போடுவது, சாலைகளில் பள்ளம் வெட்டி வைப்பது, கூர்மையான கம்பிகளை சாலையில் பதிப்பது போன்ற அரசின் நடவடிக்கைகள் மேலெழும் மக்கள் திரள் போராட்டங்களை தடுத்துவிட முடியாது. வன்முறையற்ற மக்கள் திரள் போராட்டங்கள் பெரிய அளவில் ஆதரவை பெற்றிருப்பதோடு வருங்கால போராட்ட முறையாகவும் காட்சி தருகிறது.

வெற்றிகளின் பலன்களை முன்னோக்கிய பயணத்திற்கு பயன்படுத்துவோம்

இவ்வரசு வீழ்த்த முடியாத சக்தியல்ல; ஒன்றிணைந்த போராட்டத்தால் அதை முறியடிக்க முடியும் என்கிற உணர்வு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. அனைத்து விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய பொருட்களுக்கு போதுமான கொள்முதல் விலை, விவசாய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வகையில் அமைப்பு ரீதியான அடிப்படை மாற்றங்கள் உள்ளிட்டவைகளுக்கான போராட்டம் தொடரும் என்பது தெளிவு.

ஐக்கிய விவசாயிகள் முன்னணி தொடர்ந்து செயலாற்றும் என்றும், மேற்கண்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள அது புதிய முன்னெடுப்புகளை செய்யும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனநாயக இயக்கங்களுக்கான புதிய சாத்தியக்கூறுகளை இப்போராட்டத்தின் வெற்றி உருவாக்கியுள்ளது என்பது தெளிவு. முன்னோக்கிய பயணத்திற்கான விரிவான ஒருங்கிணைவை இந்த வெற்றி விட்டுச் சென்றுள்ளது.

தமிழில்: ச.லெனின்

எங்கெல்ஸ் 125: மார்க்சியத்தின் அடித்தளம் எங்கெல்ஸ்

ச. லெனின்

பொதுவாக, மார்க்ஸ் என்றோ, எங்கெல்ஸ் என்றோ, தனித்தனியாக அறியப்படுவதைவிட மார்க்ஸ்-எங்கெல்ஸ் என்று இணைந்தே அவர்கள் அறியப்பட்டனர். ஆனால் எங்கெல்ஸ் குறித்து எழுதும் பலர் எங்கெல்ஸ் மார்க்சின் மறு பாதி மட்டுமல்ல; எங்கெல்சுக்கு என்று தனித்த அடையாளம் உண்டு என்று வேண்டுமென்றே எழுதுகின்றனர். நிச்சயம் அவரின் தனித்த படைப்புகள், அவருக்கேயான தனித்த அடையாளத்தை கொடுக்கும். ஆனால் அதுவும் மார்க்சியம் என்கிற வரையறைக்குள்தான் அடங்கும் என்பதை தெரிந்தே அவர்கள் கதையாடுகின்றனர். உண்மையில் சொல்லப்போனால் எங்கெல்ஸ் தான் முதல் மார்க்சிஸ்ட். மார்க்சின் எழுத்துக்கள் மீதான முதல் விமர்சகரும், அந்த எழுத்தை கவனமாக மேம்படுத்துபவரும் அவரே.

தங்களுக்கான தனித்த அடையாளம் என்று அவர்களுக்குள் எந்த தன்முனைப்பும் மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் இருந்ததில்லை. மார்க்சின் எழுத்துக்களுக்கு ஒரு தனி வாசகர் கூட்டமே இருந்தது. மூலதனம் எழுதும் பணியில் மார்க்ஸ் தீவிரமாக ஈடுபட்டிருந்தபோது, பல பத்திரிக்கைகளில் மார்க்சின் ஒப்புதலுடன் மார்க்சின் பெயரில் வந்த கட்டுரைகளை எழுதியது எங்கெல்ஸ்தான். இதை எங்குமே எங்கெல்ஸ் குறிப்பிட்டது கிடையாது. ரஷ்ய புரட்சிக்கு பிறகு மார்க்ஸ், எங்கெல்ஸ் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் போது மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் இடையே நடைபெற்ற கடிதப் போக்குவரத்தே இந்த தகவலை வெளிக்கொண்டு வந்தது.

முதலாளித்துவ சிந்தனைப் போக்குதான் தனி மனிதர்களை முன்னிறுத்தி சமூகத்தை பின்னால் தள்ளும். இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாத அணுகுமுறை குறித்து மார்க்சும் எங்கெல்சும் கூறும் போது கூட, இது தங்களது தனித்த கண்டுபிடிப்பல்ல என்றும், எங்களுக்கு முந்தையவர்களின் பங்களிப்புகளை சற்று மேம்படுத்தி நாங்கள் வழங்கியுள்ளோம் என்றே குறிப்பிடுகின்றனர்.

மார்க்ஸ் – எங்கெல்ஸ் இருவருக்கும் தனிப்பட்ட திறமைகளும், ஆளுமைகளும் உண்டு. அதில் யாருக்கும் இருவேறு கருத்து கிடையாது. மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோரின் ஒருங்கிணைவுக்கு பிறகுதான் வர்க்கம், வர்க்கப் போராட்டம் என்கிற புரிதலும், கற்பனாவாத சோஷலிசம் என்பதிலிருந்து விஞ்ஞான சோஷலிசம் என்கிற வளர்ச்சியும், இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்கிற ஆய்வு கண்ணோட்டமும் சாத்தியப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த ஒருங்கிணைவு இல்லாமல் போயிருந்தால் இருவரும் தனித்தனியே பெரிய ஆளுமைகளாக இருந்திருக்கலாமே அன்றி, மக்களுக்கான செழுமைப்படுத்தப்பட்ட ஒரு தத்துவம் கிடைத்திருக்குமா? என்பது மிகப் பெரிய கேள்வியே.

அரசியல் பொருளாதாரம்

1859-ம் ஆண்டு வெளியான “அரசியல் பொருளாதாரம் குறித்த விமர்சனம்” என்கிற நூல் மார்க்சின் ஆகச் சிறந்த பங்களிப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக அந்த நூலின் இரண்டாம் பாகத்தை மார்க்ஸ் எழுதத் துவங்கினார். அதுவே “மூலதனம்” நூலாக வடிவம் எடுத்தது.

அரசியல் பொருளாதாரம் குறித்த ஒரு துவக்கப் புள்ளியை முதலில் வைத்தவர் எங்கெல்ஸ் தான். 1843-ம் ஆண்டின் இறுதியில் அவர் எழுதிய “அரசியல் பொருளாதாரம் குறித்த விமர்சனம் பற்றிய ஒரு பார்வை (outline)” என்ற சிறு கட்டுரை மூலம் முதலில் அதை துவக்கி வைக்கிறார். அக்கட்டுரையின் முதல் வரியிலேயே “வர்த்தகம் விரிவானதன் ஒரு இயற்கை நிகழ்வு போக்காகவே அரசியல் பொருளாதாரம் நிலைபெற்றது. துவக்க நிலையில் உள்ள, அறிவியல் பூர்வமற்ற, சிறு வர்த்தகத்தை அறிவியல் தன்மையோடு, விரிந்து பரந்த அங்கீகாரம் பெற்ற, பித்தலாட்ட வேலைகளை செய்வதற்கான முறையாக மாற்றி அமைத்துள்ளது” என்று முதலாளித்துவ முறையை எங்கெல்ஸ் விமர்சிக்கிறார்.

மேலும் தனிச் சொத்துடமை இருக்கும் வரை “தேச வளம்” (national wealth) என்கிற வார்த்தையே அர்த்தமற்றதாகும் என்றும், பொதுச் சொத்து என்பதே தனிச் சொத்துடையோரின் நலன்களை பேணுவதற்காக இருப்பதுதான் என்கிறார் எங்கெல்ஸ்.

மார்க்சும் எங்கல்சும் மேஜை புரட்சியாளர்கள் அல்ல. 1848-49 ஆண்டுகளில் ஜெர்மனியில் நடந்த புரட்சியில் அவர்கள் இருவரும் நேரடியாக பங்கேற்றனர். 1849-ம் ஆண்டு ப்ரஷ்ய முடியாட்சிக்கு எதிரான ஆயுதம் தங்கிய புரட்சியில் எங்கெல்ஸ் பங்கேற்றார். அதோடு ப்ரசில்ஸ்-இல் கம்யூனிஸ்ட் இயக்க அமைப்பை உருவாக்குதல், ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் அமைப்பை கட்டுதல், ஜெர்மன் தொழிலாளர் அமைப்பு, கம்யூனிச புரட்சிக்கான சர்வதேச அமைப்பு, முதல் சர்வதேச அகிலம், இரண்டாம் சர்வதேச அகிலம் (எங்கல்ஸ்) உள்ளிட்டவைகளை கட்டியமைப்பதில் மார்க்சும் எங்கெல்சும் தீவிரமாக பங்கேற்றனர்.

கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்

எங்கல்ஸின் “கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்” என்ற நூல் 1880-ம் ஆண்டு வெளியானது. இதில் வர்க்கப் போராட்டத்தையும், இயக்கவியல் வரலாற்று பொருள்முதல் வாதத்தையும் தெளிவாக விளக்கி, சோஷலிசம் என்பது கற்பனையல்ல; அது வரலாற்று வளர்ச்சிப் போக்கில் தவிர்க்கமுடியாத கட்டம் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைப்பார்.

“முதலாளித்துவ முறையிலான உற்பத்தியின் முதிர்ச்சியுறாத நிலைமைகளுக்கும் முதிர்ச்சியுறாத வர்க்க நிலைமைகளுக்கும் ஒத்திசைவான முதிர்ச்சியுறாத கொள்கைகளே முன்வைக்கப்பட்டன. சமூகப் பிரச்சினைகளுக்குரிய தீர்வினை, வளர்ச்சியுறாத பொருளாதார நிலைமைகளில் இன்னமும் மறைந்து கிடந்த அந்தத் தீர்வினை கற்பனாவாதிகள் மனித மூளையிலிருந்து உருவாக்க முயன்றார்கள்”. (அதேபோல்)”அந்தக் காலகட்டத்தில் முதலாளித்துவ உற்பத்தி முறையும், அதோடுகூட, முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையேயான பகைமையும் இன்னமும் அரைகுறை வளர்ச்சியையே கண்டிருந்தன. இங்கிலாந்தில் அப்போதுதான் தோன்றியிருந்த நவீனத் தொழில்துறை, ஃபிரான்சில் இன்னமும் அறியப்படாததாகவே இருந்தது. ஆனால், நவீன தொழில்துறை ஒருபுறம் மோதல்களை வளர்க்கிறது. உற்பத்தி முறையில் ஒரு புரட்சியையும், உற்பத்தி முறையின் முதலாளித்துவத் தன்மைக்கு முடிவு கட்டுதலையும் அவசியமாக்கும் மோதல்களை வளர்க்கிறது. தான் தோற்றுவித்த வர்க்கங்களுக்கு இடையேயான மோதல்களை மட்டுமின்றி, தான் உருவாக்கிய அதே உற்பத்தி சக்திகளுக்கும் பரிவர்த்தனை வடிவங்களுக்கும் இடையேயான மோதல் களையும் வளர்க்கிறது.” என்கிறார்.

முதலாளித்துவத்தின் ஆரம்பக்கட்டத்தில் “சுயேச்சையான அரசியல் நடவடிக்கைக்குச் சற்றும் திறனற்றிருந்த அந்த தொழிலாளி வர்க்கம் ஒடுக்கப்பட்ட, துயருறும் பகுதியாகவே தோற்றமளித்தது. தனக்குத் தானே உதவிக் கொள்ளும் திறனற்றிருந்த அந்நிலையில், அதிகம் போனால் வெளியிலிருந்தோ அல்லது மேலிடத்திலிருந்தோதான் தனக்குத் தேவையான உதவியைப் பெற்றிட முடியும். இந்த வரலாற்றுச் சூழ்நிலை சோஷலிசத்தின் நிறுவனர்கள் மீதும் செல்வாக்குச் செலுத்தியது. முதலாளித்துவ முறையிலான உற்பத்தியின் முதிர்ச்சியுறாத நிலைமைகளுக்கும் முதிர்ச்சியுறாத வர்க்க நிலைமைகளுக்கும் ஒத்திசைவான முதிர்ச்சியுறாத கொள்கைகளே (கற்பனாவாத சோஷலி

ஸ்டுகளால்) முன்வைக்கப்பட்டன.”

வளர்ச்சியடையாத முதலாளித்துவ காலத்தில், முதிர்ச்சியடையாத பாட்டாளி வர்க்கத்தின் காலத்தில் கற்பனாவாத சோஷலிஸ்டுகள் மனித மூளையின் சிந்தனையின் மூலமே உருவாக்கிட முடியும் என்று முயன்றனர். உண்மையில் சமூக மாற்றத்திற்கான தத்துவத்தை ஒருவரின் அகவய புரிதலால் மட்டுமே உருவாக்கிட முடியாது. சமூக எதார்த்தமும், வரலாற்று ரீதியான வளர்ச்சிப்போக்கும் அதற்கு மிக மிக அவசியம். சமூகம் உடைமைகளை மொத்தமாக கொண்ட பெரு முதலாளிகளாகவும், உடைமையற்ற பாட்டாளிகளாகவும் பிளவுற்ற சூழலையும், பிரம்மாண்ட உற்பத்திச் சக்திகள் இதுநாள் வரை தனிநபர்களைச் செழிப்பாக்கவும், சாதாரண மக்களை அடிமையாக்கவுமே பயன்படுத்தி வந்தன என்ற சமூக எதார்த்தத்தை வரலாற்று ரீதியாக ஆய்வு செய்து மார்க்சும் எங்கல்சும் விஞ்ஞான சோஷலிசத்தை முன்வைத்தனர். அதுவரை யாரும் மேற்கொள்ளாத இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அதை வகுத்தளித்தனர்.

இனிமேலும் சோஷலிசம் என்பது ஏதோவொரு அறிவுசார்ந்த மூளையின் தற்செயலான கண்டுபிடிப்பில்லை. வரலாற்று ரீதியாக வளர்ச்சி பெற்ற இரு வர்க்கங்களான பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையே நிகழும் போராட்டத்தின் தவிர்க்க முடியாத விளைவு ஆகும். சாத்தியமான அளவுக்குக் குறைகளற்ற, முழுநிறைவான, ஒரு சமுதாய அமைப்பை உற்பத்தி செய்வது சோஷலிசத்தின் பணியாக இனியென்றும் இருக்கப் போவதில்லை; இந்த வர்க்கங்களும் அவற்றுக்கு இடையேயான பகைமையும் தவிர்க்க முடியாதவாறு உதித்தெழக் காரணமாக இருக்கும் நிகழ்வுகளின் வரலாற்று-பொருளாதாரத் தொடர்ச்சியை நுணுகி ஆய்வதும், இவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட பொருளாதார நிலைமைகளில் இந்த மோதலுக்கு முடிவு கட்டுவதற்கான சாதனங்களைக் கண்டறிவதும்தான் சோஷலிசத்தின் பணியாகும்.

முந்தைய கால சோஷலிசம் நடப்பிலுள்ள முதலாளித்துவ உற்பத்தி முறையையும் அதன் பின்விளைவுகளையும் கண்டித்தது உண்மை தான். ஆனால், அவற்றை விளக்கிட, அதனால் முடியவில்லை. முதலாளித்துவத்தில் தவிர்க்க முடியாதபடி தொழிலாளி வர்க்கம் சுரண்டப்படுவதை, எந்த அளவுக்குக் கடுமையாக கண்டித்ததோ, அந்த அளவுக்குத் தெளிவாக, இச்சுரண்டல் எதில் அடங்கியிருந்தது, அது எவ்வாறு தோன்றியது என்பதை அதனால் எடுத்துக்காட்ட முடியவில்லை. ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தில் முதலாளித்துவம் தவிர்க்க முடியாதது என்பதை போலவே, அதன் வீழ்ச்சியும் தவிர்க்க முடியாதது என்பதை சுட்டிக்காட்டியதோடு, உபரி மதிப்பு என்ற மார்க்சின் கண்டுபிடிப்பு மூலம் இதுநாள்வரை இரகசியமாக இருந்து வந்த, முதலாளித்துவத்தின் சாராம்சத் தன்மை தோலுரித்துக் காட்டப்பட்டது என்கிறார் எங்கெல்ஸ் .

கற்பனாவாத சோஷலிஸ்டுகள் முயன்றது போல் சோஷலிசம் என்பது அறிவுசார் சிந்தனையின் தற்செயல் கண்டுபிடிப்பு அல்ல. மாறாக அது சுரண்டப்படும் வர்க்கமான பாட்டாளி ( தொழிலாளி ) வர்க்கத்திற்கும், அவர்களை சுரண்டும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையே நிகழும் போராட்டத்தின் தவிர்க்க முடியாத விளைவாகவே சோஷலிசம் பிறக்கும் என்று மார்க்சும் எங்கல்சும் கூறினர்.

வேலைப் பிரிவினை

மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் இடையே ஒரு வேலைப்பிரிவினை இருந்தது என்றும், மார்க்ஸ் முதலாளித்துவ பொருளாதாரத்தின் முழு வடிவத்தையும் அதன் சுரண்டலையும் பற்றி எழுத தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டார் என்றும், எங்கெல்ஸ் மார்க்சியத்தின் அடிப்படைகளான இயக்கவியல் குறித்தும், விஞ்ஞான சோஷலிசம் பற்றியும், வரலாற்றியல் பொருள்முதல்வாதம் குறித்தும் எழுதினார் என்று சிலர் கூறுகின்றனர். மார்க்ஸ் எது குறித்து எழுதுகிறார் என்று எங்கெல்சுக்கும், எங்கெல்ஸ் எதில் கவனம் செலுத்துகிறார் என்று மார்க்சுக்கும் நன்றாகவே தெரியும். இருவரும் இணைந்து எது பற்றி எழுதுவது என்றும் முடிவு செய்து எழுதியுள்ளனர். அவர்களின் எழுத்துக்களை பார்த்தால் இருவரும் தத்துவம், பொருளாதாரம், இயக்கவியல் என பல தளங்களில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர் என்பது புரியும். மார்க்ஸ் தனது மூலதனம் நூலுக்கான வேலையை 1859-ல் வெளியான “அரசியல் பொருளாதாரம் குறித்த விமர்சனம்” எனும் நூலுக்கு முன்பிருந்தே துவங்கிவிட்டார். மூலதனம் நூலுக்கான வேலைக்கு மார்க்ஸ் கூடுதல் நேரம் ஒதுக்கினார் என்ற போதும், ஃபாயர்பாக் பற்றிய ஆய்வறிக்கை, தத்துவத்தின் வறுமை, பாரிசில் ஜூன் புரட்சி, பிரான்சில் வர்க்கப் போராட்டம், லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமெர் என வரலாற்று பொருள்முதல்வாதம் குறித்தும், தத்துவம் இயக்கவியல் பற்றியும் மார்க்ஸ் இக்காலத்தில் எழுதியுள்ளார். இங்கிலாந்தின் நிலைமை, இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலை, கம்யூனிஸத்தின் கோட்பாடுகள், ஜெர்மனியில் விவசாயிகள் புரட்சி, ஜெர்மனியில் புரட்சியும் எதிர் புரட்சியும் ஆகிய நூல்களை எங்கெல்ஸ் இதே காலத்தில் எழுதியுள்ளார். இக்காலத்தில்தான் புனிதக் குடும்பம், ஜெர்மன் தத்துவம், கம்யூனிஸ்ட் அறிக்கை போன்றவற்றை மார்க்சும் எங்கெல்சும் இணைந்து எழுதியுள்ளனர். இவை தவிர பல்வேறு இதழ்களில் கட்டுரைகளும், மாநாட்டு அறிக்கைகளும் முன்மொழிவுகளும் என இன்னும் எத்தனையோ முக்கியமான அம்சங்களை மூலதனம் முதல் தொகுதி வெளிவருவதற்கு முன்பே எழுதியுள்ளனர்.

1883-ல் மார்க்ஸ் மறைந்த பிறகு மார்க்சின் கையெழுத்தை அறிந்தவரும், மார்க்சின் கருத்துக்களை மற்ற எவரைவிடவும் நன்கு அறிந்திருந்த ஒரே நபர் எங்கெல்ஸ்தான். எங்கெல்ஸிடம் தான் தனது அனைத்து குறிப்புக்களையும் ஒப்படைக்குமாறு மார்க்ஸ் தனது மகளிடம் கேட்டுக் கொண்டார். மூலதனம் நூலின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தொகுதிகள் எங்கெல்ஸ் இல்லையெனில் வெளிவந்திருப்பதற்கான வாய்ப்பே இல்லை.

தனது உடல் நலம் பாதிக்கப்பட்ட போது கூட எங்கு மூலதனம் நூலின் பணிகளை முடிக்காமல் போய்விடுவோமோ என்றே எங்கெல்ஸ் கவலைப்பட்டுள்ளார். ஆனால் இதே கால கட்டத்தில்தான் எங்கல்சின் சிறந்த படைப்புகளான “குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” “ லுத்விக் ஃபாயர்பாக் மற்றும் மூலச் சிறப்புமிக்க ஜெர்மன் தத்துவத்தின் முடிவு” ஆகிய நூல்களை எழுதினார். தான் இறப் பதற்கு ஓராண்டுக்கு முன் மூலதனம் நூலின் இறுதி பகுதியான மூன்றாம் தொகுதியையும் வெளியிட்டு, தான் தீர்மானித்த பணியையும் சிறப்பாக செய்து முடித்தார் எங்கெல்ஸ்.

“மார்க்சும் அவர் குடும்பத்தினரும் கொடிய வறுமையில் சிக்கித் துன்பப்பட்டார்கள். எங்கெல்ஸ் மட்டும் தன்னல மறுப்புடன் எப்போதும் பண உதவி செய்து கொண்டே இருந்திராவிட்டால் மார்க்ஸ் மூலதனம் என்ற நூலை எழுதி முடித்திருக்க முடியாது என்பது மட்டுமல்ல; தவிர்க்க முடியாதபடி அவர் வறுமையால் மடிந்திருப்பார்” என்று லெனின் குறிப்பிடுகிறார்.

மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் அவர் வாழ்வதற்கும், காலத்தை வென்று மார்க்ஸ் என்றும் நிலைத்து நிற்பதற்கும், மார்க்சிய தத்துவம் வலுவான அடித்தளம் பெறுவதற்கும் எங்கெல்சின் அயராத பங்களிப்பே அனைத்திற்கும் அடிப்படையாக திகழ்ந்தது என்பதே உண்மை.

கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 7

– ச.லெனின்

இந்தியாவின் 1 சதவீத பெருமுதலாளிகள் நாட்டின் 58.4 சதவீத சொத்துகளை வைத் துள்ளனர். கடந்த 2000 ஆம் ஆண்டு 34 சதவீ தமாக இருந்த இவர்களின் இந்த சொத்து மதிப்பு தற்போது 58 சதவீதத்தை கடந்துள்ளது. உலக சராசரி விகிதமே 50 சதவீதம் தான் என்பது கூடுதல் தகவல் ஆகும்.
அதே நேரம், ஏழ்மை நிலையில் உள்ள 70 சதவீத மக்களின் சொத்து மதிப்பு வெறும் 7 சதவீதம் தான் உள்ளது. இதில் குறிப்பிட வேண் டிய அம்சம் என்னவெனில் 2000 ஆம் ஆண்டு 14 சதவீதமாக இருந்தது இவர்களின் சொத்து மதிப்பு இடைப்பட்ட இக்கலத்தில் சரிபாதியாக சுரண்டப்பட்டுபட்டுள்ளது.

நாட்டின் முதல் 84 பெருமுதலாளிகளிடம் மட்டும் 248 பில்லியன் டாலர் சொத்து உள்ளது. (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி) அடுத்த இருபது ஆண்டுகளுக்குள் இது 2.1 ட்ரில்லி யனாக (ஒரு டிரில்லியன் என்பது பில்லியனின் ஆயிரம் மடங்கு) உயரும் என்றும் அது நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட அதிகமாகும் என்று கணிக்கிறது ஆப்ஸ்போர்ம் அறிக்கை.

கடந்த இருபது ஆண்டுகளில் முதலாளி களின் வருமானம் 15 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துவந்துள்ளது. ஏழைகளின் வருமானமோ 15 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது அவ்வறிக்கை.
இந்திய அரசின் பொருளாதார நடவடிக்கை களின் வெளிப்பாடே இந்த சமமின்மையாகும். சுதந்திர இந்தியாவின் நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளிகளுக்கு ஆதரவான அரசு கட்டுப் பாடுடைய அரசு முதலாளித்துவம் 1980 களில் முட்டுச் சந்திற்கு வந்து நின்றது. முதலாளித்துவ வளர்ச்சிக்கான நிதி ஆதாரங்களை திரட்டு வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை யினால் ஏற்பட்ட கடன் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் தீவிர தாக்குதல்கள் இந்திய பெரு முதலாளிகளிடத்தில் குணாம்ச ரீதியான பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. இது அரசின் பொருளாதார திட்டமிடல்களிலும் மாற்றங் களை மேற்கொள்ள செய்தது.1991 க்கு பிறகான புதிய பொருளாதார கொள்கை என்று அறியப் பட்ட நவீன தாராளமய கொள்கையை இந்திய பொருளாதாரம் தழுவியது. இது தொடர்ந்து நிலவி வந்த சமமின்மையை, ஏற்றத் தாழ்வை மேலும் அதிகபடுத் தியது. அதன் வெளிப்பாடே மேல நாம் பார்த்த புள்ளிவிபரங்கள்.
தாராளமயமாக்குதல் காரண மாக சமூக பொருளாதார பிராந் திய ஏற்றத்தாழ்வுகள் தீவிர மடைந்துள்ளன என்று நமது மேம்படுத்தப்பட்ட கட்சித் திட்டம் சுட்டிக்காட்டுகிறது. இன்றைய சமூக பொருளாதார நிலைமைகள், நமது கட்சித் திட்டம் முவைத்துள்ள இக் கருத்தையே இன்றும் வழிமொழி யும் வண்ணம் உள்ளது.

இந்திய பொருளாதாரம் வேகமாக வளர் கிறது, இந்திய உள்நாட்டு மொத்த உற்பத்தி (ழுனுஞ) உயர்ந்துள்ளது என்று அரசு பல புள்ளி விபரங்களை கொடுத்தாலும், இது யாருக்கான வளர்ச்சி ? யாருக்கான லாபம் ? என்பதை ஏனைய பல புள்ளிவிபரங்கள் காட்டி கொடுத்து விடு கிறது. தொழிலாளர்கள், பெண்கள், ஒடுக்கப் படும் சமூக மக்கள், சிறுபான்மையினர், தலித்து கள் என அனைத்து பகுதி மக்கள் மீதும் கடுமை யான சமூக பொருளாதார தாக்குதல்களும், பெருமுதலாளிகளுக்கு சலுகைகளும், கரிசனம் மிக்க அணுகுமுறையும் அரசின் செயல் திட்ட மாக தொடர்கிறது.
15 வயதிலிருந்து 29 வயதிற்குட்பட்ட இளம் இந்தியர்களில் 30 சதவீதத்தினர் வேலையின்றி வீதியில் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் வெறும் 1.36 லட்சம் வேலைகள் மட்டுமே புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. அமைப்பு சாரா தொழில் களிலேதான் அதிகப்படியான வேலைகள் இன்று உள்ளது. இதில் இன்னும் கொடுமை என்ன வெனில் அமைப்பு சார்ந்த தொழில்களிலும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பெருகிவருகின்றன .

பணியாற்றும் பெண்களில் 22 சதவீதம் பேர் மட்டுமே நிலையான பணிகளில் உள்ளனர். ஆண் செய்யும் அதே வேலையை பெண்கள் செய் தாலும் ஊதியத்தில் வேறுபாடு நிலவுகிறது. அதிகப்படியான பாலியல் பாகுபாடு பார்க்கும் நாடுகளின் பட்டியலில் இந்திய 145 நாடுகளில் 136 வது இடத்தில உள்ளது. பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர் மீதான சமூக பொருளாதார ரீதியான தாக்குதல்கள் அதிகரித்து வருவதையே அரசின் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

மாநிலங்களுக்குக்கிடையே முதலீடுகளிலும், வளர்ச்சியிலும் பல்வேறு ஏற்றத்தாழ்வை தாராள மய கொள்கை உயர்த்தியுள்ளது. மேலும், மேலும் சலுகை எங்கு கிடைக்கிறதோ அங்கே தான் முதலீடு செய்வது என்பதும், முதலாளிகளுக்கு ஆதரவான அரசுகளின் செயல்பாடே நிறுவனத் தின் தொடர் இருப்புக்கான அடிப்படையாகவும் மாற்ற பட்டிருப்பது, மாநிலங்கள் முதலீடுகளை பெறுவதிலும், தக்கவைத்து கொள்வதிலும் சமமின்மையை உயர்த்தியுள்ளது.
2015-16 நிதியாண்டில் கூட இரண்டு லட்சம் கோடி வரை பொதுத்துறை நிறுவனங்கள் அரசுக்கு நிதி ஆதாரத்தினை வழங்கியுள்ள போதும், தனி யாருக்கு பொதுத்துறை நிறுவனங்களை அடி மாட்டு விலைக்கு விற்கவே அரசு தீவிரம் காட்டு கிறது. தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை விற்றும் வருகிறது. பொதுத்துறையை விற்பது என்பது பொருளாதார ரீதியான பாதிப்பு என்ப தோடு, சமூக ரீதியான இட ஒதுக்கீடு உள்ளிட்ட வைகளையும் சேர்த்தே பாதிப்புக்குள்ளாக்கு கிறது. தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்பதை கேட்கும் திறன் அற்றவர் காதில் ஊதும் சங்காகவே அரசு பாவிக்கிறது.

முதலாளிகளுக்கு ஆதரவான அரசின் விசு வாசம் என்பது, தொழிலாளர் நல சட்டங்களை முதலாளிகள் நல சட்டமாக மாற்றும் வகையில் திருத்தங்களை மேற்கொள்கிறது. 15% தொழி லாளர்கள் ஆதரவு இருந்தால் தொழிற்சங்கள் அங்கீகரிக்க படலாம் என்பதை 30% உயர்த்தி யுள்ளது. 20 தொழிலாளர்கள் இருந்தால் தொழிற் சங்க உரிமை என்பதை மாற்றி 50 தொழிலாளர்கள் இருந்தால் தான் தொழிற்சங்க உரிமை என்கிறது.

விவசாயிகளின் தற்கொலை தொடர்ந்து அதி கரித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 40000 விவசாயிகள் தற்கொலை நடந்துள்ளது. 1951 ல் ஒரு நபர் சராசரியாக 61கிராம் வரை பருப்பு உட்கொண்டு வந்த நிலை 2015-ல் 44 கிராமாக குறைந்துள்ளது. உணவு பாதுகாப்பு என்பதையே கேள்விக்குறியாக்கி யுள்ளது.

நாட்டின் மொத்த விவசாய கடனே 75,000 கோடி தான். அதே சமயம் அதானியின் நிறுவனத் தின் கடன் மட்டும் 72,000 கோடியாகும். மாணவர் களின் கல்வி கடனை வசூலிக்க அரசு வாங்கி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு காண்ட்ராக்ட் கொடுத்து மாணவர்களின் கழுதை பிடிக்கிறது. பல கார்ப்பரேட் நிறுவனங்களோ தங்களின் வங்கி கடன்களை வராக்கடன் பட்டியலில் சேர்க்க வைக்கிறது.

பொதுத்துறை வங்கிகளில் தற்போதைய வராக் கடன் என்பது 6.8 லட்சம் கோடிகளாகும். இக்கடனில் 70% கடன் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுடையதாகும். ரிசர்வ் வங்கியின் தகவல்படி கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 3.5 லட்சம் கோடி மோசமான கடன் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. அதாவது கார்ப்பரேட் நிறுவங்கள் கட்டாத கடன்களுக்கு பதிலாக புதிதாக அவர்களுக்கு கடன் கொடுக்கப் பட்டு பழைய கடன்கள் வசூலிக்க பட்டதாக மாற்றப்படும். இப்புதிய கடன் கார்ப்பரேட் முதலாளிகளின் வசதிக்கு ஏற்ப தவணை முறை யில் மாற்றம், வட்டி குறைப்பு என பல்வேறு சலுகைகளும் வழங்கப்படும்.

சமீபத்தில் அதானியின் இரண்டு நிறுவனங் களுக்கு 15,000 கோடி வரை கடன் வழங்கப் பட்டது. அந்த இரண்டு நிறுவனங்களின் மொத்த வருமானமே அந்நிறுவத்திற்கு வழங்கப்பட்ட கடனுக்கான வட்டியை கட்ட கூட போது மானதாக இல்லை. ஆனால் விவசாய கடனுக் கும், கல்விக்கடனுக்கும் சூரிட்டியும், சொத்து பத்திரமும் இல்லாமல் ஒன்றும் நடக்காது.

வங்கியில் இருப்பது யாருடைய பணம்? 60% மான பணம் சாதாரண குடியானவர்களின் சேமிப்பு பணம், 15% அரசின் பணம். சுமார் 75% மக்களின் பணமே வங்கியில் உள்ள போதும் அதன் பலன் கள் எல்லாம் பெருமுதலாளிகளுக்கும், நஷ்டங் கள் மட்டுமே மக்களுக்குமாக மாற்றபடுகிறது.
2015-16 நிதியாண்டில் மட்டும் கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு ரூ 6.59 லட்சம் கோடி வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் நாடாளுமன்றத்தை கூட்டி நிகழ்த்தப்பட்ட சமீ பத்திய நள்ளிரவு கொள்ளையன சரக்கு மற்றும் சேவை வரியும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனை மையப்படுத்தியதே. மாநில உரிமைகளை பறிப்பதும் கூட. பாதுகாப்பு துறை, ரயில்வே, தகவல் தொடர்பு, பெட்ரோலியம் என அரசின் கேந்திரமான அணைத்து தொழிலிலும் 100ர% அந்நிய நேரடி முதலீட்டை தற்போதைய மத்திய அரசு அனுமதித்துள்ளது.

இது போன்ற அரசின் நடவடிக்கைகள் இருவேறு இந்தியாவிற்கிடையே தீவிரமான இடைவெளியை அதிகப்படுத்துகிறது. ஏழை இந்தியா மேலும் ஏழையாகவும், பணக்கார இந்தியா மேலும், மேலும் வசதி வாய்ப்புகளை பெற்று வளர்ச்சியுறவும் வழிவகை செய்கிறது.
மேற்கண்ட தகவல்களோடு கட்சி திட்டத்தின் அத்தியாயம் மூன்றில் உள்ள பத்திகள் 3.11 முதல் 3.14 வரையிலான அம்சங்களின் தற்கால பொருத் தப்பாடு சற்று புரிபடும். தாராளமயமாக்கலின் விளைவாக இந்திய சமூகத்தில் வளர்ந்துள்ள சமமின்மையை மேற்கண்ட புள்ளிவிபரங்கள் எடுத்துரைக்கும்.