வெனிசுலா தேர்தலும் – வர்க்கப் போராட்டமும்

உலகமே ஆவலோடு எதிர்பார்த்த வெனிசுலா நாட்டு ஜனாதிபதி தேர்தல் ஏப்ரல், 14, 2013 அன்று நடந்து முடிந்தது. இந்த உலகளாவிய ஆவல் டி.வி சீறியல் தொடரின் முடிவை அறிகிற ஆவல் ரகமல்ல! ஆவலில் ஒரு அதிசயம் அடங்கியிருந்தது. அமெரிக்கா உட்பட எல்லா உலக நாடு களிலும் மக்கள், இரு கூறாக நின்று எதிரும் புதிருமான தேர்தல் முடிவிற்கு ஆசைப்பட்டது தான் இந்த ஆவலில்லிருந்த அதிசயமாகும்.

அமெரிக்கா, ஜப்பான் முதல் இந்தியா வரை உள்ள மக்களில் பணக்கார பகுதியினர்  டெமாகிரட்டிக் யுனிட்டி ரவுண்ட் டேபிள் அணியின் வேட்பாளர் ஹென்றிக் கேப்பிரிலெஸ் ராடோன்ஸ்கி வெற்றி பெற வேண்டுமென ஆசைப்பட்டனர். அவர் நாட்டு மேட்டுக் குடியினரின் அந்தஸ்தை காட்டும் தாம் தூம் நுகர்விற்கு பலியாகும் பெரும் பகுதி ஏழை  மக்கள் கிரேட் பேட்டிரியாட் போல் என்ற அணியின் வேட்பாளர் நிக்கோலாஸ் மதுரோ என்பவர் வெற்றி பெற வேண்டுமென ஆசைப்பட்டனர். எப்படி இந்த உலகளாவிய ஆர்வம் ஏற்பட்டது என்பதை அறிய ஒருவர் சிரமப்பட வேண்டியதே இல்லை!  வெனிசுலா நாட்டு தேர்தலை ஒட்டி ஒபாமா அரசும், மேலை நாட்டு ஊடகங்களும் சாவேஸ் கொள்கைக்கு எதிராக உருவாக்கிய பரபரப்பு பிரச்சாரங்கள் உலக மக்களின் கவனத்தை ஈர்த்து விட்டன. கேப்பிரிலெஸ்சிற்கு உலகளவில் பொருளும், விளம்பரமும் ஏராளமாக கிடைத்தன. மதுரோவிற்கு ஊடகங்களின் அவதூறுகள் குவிந்தன. ஆனால் ஏழை மக்களின் தார்மீக ஆதரவு குவிந்தன. வெனிசுலா நாட்டிற்கு யார் ஜனாதிபதி ஆக வேண்டும் என்று தீர்மானிப்பதில் உலகம் பிளவுபட்டது போலவே வெனிசுலா மக்களும் பிளவுபட்டு நின்றனர்.

கேப்பிரிலெஸ் ஜெயிக்கவில்லை என்றால் அதை கோல்மால் தேர்தலாக கருதி வெற்றி பெற்றவரை ஜனாதிபதியாக ஏற்ககூடாது என்று ஒபாமா அரசு தேர்தலுக்கு முன்னரே முடிவு எடுத்தது இப்பொழுது தெறிய வருகிறது. அதன் அடையாளமாக அமெரிக்க அரசு வாக்குப்பதிவு முறையை குறை கூறி மதுரோ வெற்றியை ஏற்க மறுத்து வருகிறது. கேப்பிரிலெஸ் அணியினர் தேர்தல் முடிவை ஏற்காமல் வெனிசுலாவை கலவர பூமியாக ஆக்கி  மதுரோவின் ஆட்சிக்கு நெருக்கடியை கொடுத்து வருகின்றனர்.

தேர்தலுக்கு முன்னரோ, தேர்தல் நடந்து வாக்கு என்னுகிறவரை எந்தப் புகாரும் எதிர் அணியினரோ, அந்நிய நாட்டு பார்வையாளர் களோ பதிவு செய்யவில்லை. தேர்தல் ஆணையம் எதிர் கட்சிகள் பின்னர் கிளப்பிய குறைகளை ஆய்வு செய்து கோல்மால் எதுவும் நடக்கவில்லை என்று அறிவித்த பின்னரும் எதிர் அணியினர் வம்பு செய்வதிலே குறியாக இருக்கின்றனர். முன்காலத்தில் சிலி, நிகராகுவா நாடுகளில் மேட்டுக் குடியினரின் உதவியோடு அமெரிக்காவின் செல்வாக்கை நீடிக்க எடுத்த யுக்திகள் இங்கே அரங்கேற்றபடுகின்றன.

2012 அக்டோபரில் நடந்த தேர்தலில் சாவேசை எதிர்த்து போட்டியிட்ட  இதே கேப்பிரிலெஸ் விட 10 சத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2013 ஏப்ரலில் நடந்த தேர்தலில் அவரது கட்சியின் வேட்பாளர் மதுரோ சுமார் ஒரு சத வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. புற்று நோயிக்கு ஆட்பட்ட சவேசின் அகால மரணம் அணுதாப அலைகளை அடிக்க வைத்து. முன்னை விட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூட வைக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு இந்த மயிரிழை வித்தியாசத்தில் பெற்ற வெற்றி அதிர்ச்சியை கொடுத்தது. 2006-ல் நடந்த தேர்தலில் சவேஸ் 15 சத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த வாக்குகளை அடுத்த தேர்தலில் சவேசால் கூட பெற முடியவில்லை. இதை விளக்குவது எப்படி?

மிகுயெல் டிங்கர் ஸ்லாஸ் என்ற அமெரிக்க போராசிரியர் லத்தீன் அமெரிக்க வரலாற்றையும் அரசியலையும் ஆய்வு செய்பவர். ஒரு கருத்தைக் கூறி நம்மை சிந்திக்க தூண்டுகிறார்.

அமெரிக்காவின் ஆளும் வாட்டாரம் எல்லா வகையான உதவிகளையும் கையூட்டாக கொடுத்தே சாவேஸ் கட்சியினரை  எதிர்க்க கேப்பிரிலெஸ்சை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்:

நான் நினைக்கிறேன் மதுரோவையும் சவேசின் திட்டத்தையும் எதிர் அணி எதிர்ப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. வெனிசுலாவில் எதிரணி அரசியலை கலக்குவதில் முன்னணியில் இருப்பதாக எப்பொழுதுமே நான் நம்புகிறவன். அவர்களுக்கு வெளியிலிருந்து உதவிகளும் கிடைக்கலாம். வெளியில் இருப்பவர்களிடம் ஆலோசனைகளும் பெறலாம், ஆதரவும் கிடைக்கலாம். ஆனால் எதிரணியினர் வெனிசுலா மண்ணின் தன்மையினர், வெனிசுலா பண்பாட்டினர்  என்பதே எதார்த்தம். அமெரிக்க நாட்டு ஏஜென்ட் என்ற தோற்றத்திற்கு அமெரிக்காவும் விடுவதில்லை. வெனிசுலா நாட்டு மத்தியதர வர்க்கப் பகுதியும் மேட்டுக் குடியினரும் சமூக மாற்றத்தால் தங்களது படாடோப வாழ்விற்கு இழப்பு ஏற்படக் கூடாது. தங்களது உயர்ந்த அந்தஸ்திற்கு தனி உரிமைக்கும் பங்கம் வராமல் சமூக மாற்றம் நிகழ வேண்டுமென விரும்புகிறார்கள். எண்ணையை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதின் மூலம் கிடைக்கிற வருவாயைக் கடந்த காலத்தில் அனுபவித்தது போல் அனுபவிக்க ஆசைப்படுகின்றனர். ஏற்றுமதி மூலம் வருகிற அந்த பணத்தில் 60 சதத்தை சமூக நலனுக்கு திருப்பிவிடும்  சாவேசின் கொள்கையை அந்த பிரிவினர் விரும்பவில்லை. அதனால் எந்தப் பலனும் இல்லை என்று கருதுகிறார்கள். அமெரிக்காவின் ஆப்த நண்பனாக இருக்கவே ஆசைப்படுகின்றனர். அங்கே அமெரிக்கா நேரடியாக இருப்பதாக நான் கருதவில்லை, வெனிசுலா நாட்டு மேட்டுக் குடியினர் அமெரிக்க  வாழ்வு முறையை ஆதர்சமாக கொள்கின்றனர். அமெரிக்காவின் விசுவாசமான நண்பனாக இருப்பது அவசியம் என்று கருதுகின்றனர். எண்ணையை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நாடாக வெனிசுலா இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். மேட்டுக் குடியினர் மனதில் அமெரிக்கா குடியிருக்கிறது என்ற வகையில் அங்கே அமெரிக்க இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

பேராசிரியர் கூறுவதை வைத்து வெனிசுலா தேர்தலை வர்க்க போராட்டமாக பார்க்கும் பொழுதுதான் வாக்குகளில் ஏற்பட்ட மாற்றங்களை புரிந்து கொள்ள முடியும். இயந்திரத்தனமான முறையில் வர்க்கப் போராட்டத்தை புரிந்தாலும் வாக்குச் சரிவை புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படும். வெனிசுலாவில் மேட்டுக் குடியினரும் மேட்டுக்குடி சித்தாந்த பிடிப்பில் இருக்கும் ஏழைகளும் கூட எதிரணிக்கு வாக்களித்தனர். அந்த மக்கள் சுரண்டும் வர்க்க சித்தாந்த பிடியிலிருந்து விடுபட வேண்டும். நிகராகுவாவில் 90-களில் அந்த பக்கம் போனவர்கள் சமீபத்தில்தான் அமெரிக்க பாணியிலிருந்து விடுபட்டு மீண்டும் பாட்டாளி வர்க்க சித்தாந்த அணுகுமுறையே ஏழைகளுக்கு உகந்தது என்று டேனியல் ஓர்டேகாவை தேர்ந்தெடுத்துள்ளனர். ஒவ்வொரு தேர்தலையும் வர்க்கப் போராட்டக் களமாக பார்க்கும் பொழுதுதான் உண்மைகள் புலப்படும்.

வெனிசுலாவில் வறுமை, அறியாமை , உணவுத் தட்டுப்பாடு, கிரிமினல் குற்றங்கள் மலிந்து கிடந்தன. சாவேஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகே, இவைகள் குறையத் தொடங்கின. நில சீர்திருத்தத்தால் விவசாயிகளிடையே இருந்த வறுமை அகன்று வருகிறது. அண்டை நாடுகளிலிருந்து இறக்குமதி மூலம் உணவுத் தட்டுப்பாட்டை அரசு சாமாளித்து வருகிறது. இதனால் மேட்டுக்குடியினர் நுகரும் அமெரிக்க நுகர் பொருள்கள் கடையிலே கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க நுகர்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த சில்லறை வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் பிரேசில், அர்ஜெண்டினாவிலிருந்து இறக்குமதியாகும் இறைச்சி முதல் இதர உணவுப் பொருட்கள் வரை அரசு கடைகளிலும் தனியார் சில்லறை கடைகளிலும்  கிடைக்கின்றன. வெனிசுலா நாட்டின் 30 மாநிலங்களில். 7 மாநிலங்களில் தான் அமெரிக்கா ஆதரிக்கும் அணிக்கு  சற்று கூடுதல் வாக்கு மற்ற இடங்களில் மதுரோவே முன்னணி. மக்கள் தங்கள் கையில் அதிகாரமிருப்பதை சமீபத்தில் தான் உணரத் தொடங்கியுள்ளனர். இந்த வெற்றியை தோல்வியாக்க சிறுமைப்படுத்த பல முயற்சிகள் நடக்கின்றன. அதற்கு காரணம், வெனிசுலாவில்   சவேஸ் கட்சியின் வெற்றி அமெரிக்காவும் மேலை நாடுகளும் திணிக்கும் தாராளமயத்திற்கு கொடுக்கப்பட்ட முதல் அடியாகும். வர்க்கப் போராட்டத்தில் சுரண்டும் வர்க்க கருத்திற்கு அடிமைப்பட்டு கிடக்கும் இதர வர்க்கப் பிரிவினரை விடுவிக்கும் சித்தாந்தப் போரின் முக்கியத்துவத்தை உணரவைக்கும் வெற்றியாகும்.

வடகொரியாவின் அணுச்சோதனை!

பலமிக்க அமெரிக்காவின் ராணுவத்தளம் மற்றும் ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் சுற்றி வளைத்து பொருளாதார, ராணுவ தாக்குதல் நடத்துகிற சூழல் வடகொரியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இதனால், கடந்த அக்டோபர் 9 ம் தேதியன்று வடகொரியா அணுச் சோதனையை நடத்தியது. இந்தச் சோதனை உலகின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

முனனாள் சோவியத் யூனியனோடு வடகொரியா போட்டுள்ள ஒப்பந்தத்தில் அணு ஆயுத தயாரிப்பு முயற்சிகளை மேற்கொள்ள மாட்டோம் என்று உறுதியளித்திருந்தது. இது மீறப்பட்டுள்ள நிலையில் வடகொரியாவின் நட்பு நாடான சீனாவும் இச்சோதனை யை கண்டிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தொழிலாளி வர்க்க நாடுகள் உலக ஒப்பந்தங்களை ஏற்று நடப்பது தான் கடந்த கால வரலாறு. ஏராளமான பிராந்திய மோதல்கள், கருத்து மோதல்கள் நிரம்பிய பகுதியாக இந்த வடகிழக்கு ஆசியா உள்ளது. இந்நிலையில் மேலும் அணு ஆயுதங்கள் அதிகரிப்பது ஆபத்தானது. அந்த வகையில் வடகொரிய அணுச் சோதனை கவலைக்குரிய நிகழ்வு; மிகவும் துரதிருஷ்டமான விளைவு.

அணு ஒப்பந்தங்கள் அணு ஆயுதங்களைக் குறைத்ததா?

அணு ஆயுதம் பயன்படுத்துவது குற்றம் என்பது சர்வதேச சட்டமாக ஆக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்களை ஒழிக்க அரசுகள் பல்வேறு பேச்சுவார்த்தைகளில் இறங்கின. நாட்டாமை செய்து உலகைச் சுரண்டி வரும் ஏகாதி பத்தியங்கள் இருக்கும் வரை, அணு ஆயுதங்களற்ற உலகம் சாத்தியமாகுமா? ஏகாதிபத்தியங்கள் தங்களது பொருளாதாரச் சுரண்டல் மேலாதிக்கத்தை மற்ற நாடுகள் மீது நிலை நிறுத்த, நிச்சயமாக ஆயுதங்கள் தேவை. அதிலும் சாதாரண ஆயுதங்களை விட பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் தேவை. இதற்கு அவர்களுக்கு சரியான வழி, அணு ஆயுதத் தயாரிப்பு தான்.

இந்த எண்ணத்தின் அடிப்படையில் தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அணு ஆயுதங்களை விடாப்பிடியாக, உலக மக்களின் விருப்பத்திற்கு விரோதமாக தங்களிடம் சேர்த்து வைத்துள்ளன.

அமெரிக்காவும், சோவியத் யூனியனும் அணு ஆயுத குறைப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தின.  தற்போது அணு ஆயுதம் வைத்திருப்போர் வைத்திருக்கட்டும். ஆனால், புதிதாக யாரும் தயாரிக்க வேண்டியதில்லை என்கிற நிலைபாட்டில் போடப்பட்ட ஒப்பந்தம்  அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் (NPT – Non – Proliferation Treaty). இந்த நிலைபாட்டை இந்தியா உள்ளிட்ட நாடுகள் மிகச் சரியாகவே எதிர்த்தன. பாரபட்சமான ஒப்பந்தம் என்றும், முற்றாக அணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டுமே தவிர அணு ஆயுதம் கொண்ட நாடு,  அணு ஆயுதமில்லாத நாடு என்று இருவகையாகப் பிரித்து ஒரு அணுகு முறையை உருவாக்கிடக் கூடாது என்று இந்தியா கருதியது. இதனால் இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

ஆக, இன்றைய உலகில் ஒப்பந்தங்கள் பல உருவானாலும், அணு ஆயுதங்களை ஒழிப்போம் என்ற முழக்கங்கள் விடாது ஒலித்தாலும், கொடூரங்களை நிகழ்த்தக் கூடிய அணு ஆயுதங்கள் இன்று உலகில் பலரிடம் உள்ளன என்பதே உண்மை.

உலகத்திற்கே ஆபத்தா?

இந்தப் பின்னணியில் வடகொரியா நடத்திய சோதனை பெரும் அச்சுறுத்தல் என்று பூதாகரமாக சித்தரிக்கப்படுகிறது. வட கொரியா அணுச்சோதனை செய்ததால் உலகமே இன்று ஆபத்தில் மூழ்கி இருப்பது போன்று பேசப்படுகிறது.

வடகொரிய அணுச்சோதனை, அளவுக்கு அதிகமாக ஊதிவிடப்படுகிறது. ஆனாலும், இந்தச் சோதனை பல எதிர் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தென்கிழக்கு ஆசிய மக்களுக்குப் பாதகமான பல நிகழ்வுப் போக்குகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.

முதன்மையாக, அணு ஆயுதங்களற்ற உலகை உருவாக்க விழையும் லட்சியத்திற்கு வடகொரியச் சோதனை ஊறு விளைவித்துள்ளது. வடகொரியச் சோதனையின் விளைவாக பதட்டம் அதிகரித்துள்ளது. கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் நாடுகள் அச் சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. ஆனால், இதற்கு வடகொரியாவை மட்டுமே குறைசொல்ல முடியுமா? இந்த நிலைமைகளுக்கு உண்மையில் யார் காரணம்? நிச்சயமாக, அமெரிக்காவின் அடாவடித்தனமான ஆதிக்கப் போக்குதான், அடிப்படைக் காரணம். கொரியத் தீபகற்பத்தில் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அமெரிக்காவே முக்கிய காரணம்.

தீமைகளின் அச்சு – புஷ்ஷா? வடகொரியாவா?

2002 ம் ஆண்டு தீமைகளின் அச்சு என்று புஷ் குறிப்பிட்ட நாடுகள் இராக், இரான், வடகொரியா ஆகியன. பிறகு இராக் போருக்குப் பிறகு, சதாம் உசேனை வீழ்த்திய பிறகு, இராக்கினை அந்த பட்டியலிலிருந்து எடுத்துவிட்டனர். அதற்குப் பதிலாக சிரியாவை 2005 ம் ஆண்டிலிருந்து இணைத்து விட்டனர். ஆக, தீமைகளின் அச்சு நாடுகள் என்ற கொள்கை தொடருகிறது. இந்தக் கொள்கை அடிப்படையிலான ஆத்திரமூட்டல் மோதல் நடவடிக்கைகளை புஷ் நிர்வாகம் செய்து வந்துள்ளது. உலக வரலாற்றில் இல்லாத ஒரு அரக்கத்தனமான கொள்கையை புஷ் நிர்வாகம் தனது வெளியுறவு கொள்கையாக அறிவித்தது.

ஒரு நாடு தன்னைத் தாக்க முனைந்தால், பதிலடியாக யுத்தத்தில் இறங்குவதுதான் நாடுகளின் இயல்பான செயல்பாடாக இருந்து வந்துள்ளது. இதற்கு மாறாக ஒரு நாடு தன்னை தாக்கவில்லை என்றாலும் கூட, அது தாக்கக்கூடும் என்று முடிவுக்கு வந்து அந்த நாட்டின் மீது தாக்குதல் தொடுப்பது என்ற வித்தியாசமான கொள்கையை புஷ் அறிவித்தார்.  இதற்குப் பெயர் “Pre Emptive War” என்பது.

இத்தகைய போர்களை தூண்டுகிற, அழிவை ஆராதிக்கிற கொள்கையை அதிபர் புஷ், துணை அதிபர் டிக் செனேய் ஆகியோர் கொண்ட வெறிக்கூட்டம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.

இதன் விளைவாக பல நாடுகள் நிரந்தர அச்சுறுத்தலுக்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அடிபணியாத நாடுகள் மீது யுத்தம் நடத்தினர். இந்த நிலைதான் வடகொரியா தன்னை ஆயுத பாணியாக்கிக் கொள்ள காரணமாக அமைந்தது. தற்கால உலக அரசியல் உறவுகளை ஆய்வு செய்யும் எந்த ஒரு மாணவனும் இதனை ஏற்றுக் கொள்வான்.

புஷ் கூட்டம் வடகொரியாவை மட்டும் தீமைகளின் அச்சு என்று குறிப்பிட்டதோடு நிற்கவில்லை. அந்த நாட்டின் அதிபரான கிம் – ஜாங் – இல் லின் மீது பொய்யான அவதூறுகளைப் பொழிந்து வருகின்றனர். அவரை சுகவாசி, மனநோயாளி, ஆடம்பரப் பொருளின் பிரியர் என்றெல்லாம் தூற்றுகின்றனர். புஷ்கூட அவரை குள்ளன் என்றும், அதிக செல்லம் கொடுத்ததால் கெட்டுப் போன குழந்தை என்றெல்லாம் தரம் தாழ்ந்து வர்ணித்துள்ளார்.

உண்மையில், ஆசியாவிற்கு அணு ஆயுத ஆபத்து வடகொரியாவினால் மட்டும் ஏற்படவில்லை. அமெரிக்கா அவ்வப்போது இரான் மூலம் ஆசியாவிற்கு ஆபத்து, லிபியாவினால் அணு ஆபத்து, ஈராக்கினால் ஆபத்து என்று சொல்லியே ஆசியாக் கண்டத்தில் தனது தலையீட்டையும், செல்வாக்கையும் அதிகரித்து வந்துள்ளது. ஆனால், வேடிக்கை என்னவென்றால், இதுவரை அணு ஆயுதத்தைப் பயன்படுத்தி அப்பாவி மக்களை அழித்த ஒரே நாடு அமெரிக்காதான். ஆபத்து எனில், அது அமெரிக்காவினால் தான் ஆசியாவிற்கு ஏற்படும்.

வடகொரியச் சோதனை பற்றி பெரும் கூச்சல் எழுப்பு கிறவர்கள் அமெரிக்கா தான் உலகிலேயே அதிக அணுச்சோதனை செய்த  நாடு என்பதை மறக்க, மறைக்கப் பார்க்கின்றனர். அது மட்டுமல்லாது, ஆசியாவில் வடகொரியாவை விட இஸ்ரேல் மூலம் தான் அதிக அணு ஆபத்து உள்ளது. ஏனெனில் 200 க்கும் மேற்பட்ட பயங்கரமான அணு ஆயுதங்களைக் கொண்ட நாடு இஸ்ரேல். கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களுக்கு இடமில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். கொரிய தீபகற்பம் அணு ஆயுதங்களின் களமாக மாறுவது, தென் கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் மட்டுமல்ல, ஆசியக் கண்டத்தின் பாதுகாப்பிற்கே ஆபத்தானது.

இதை வடகொரியா உணர்ந்திருக்கிறது. முற்றிலும் அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான பேச்சுவார்த்தை அவசியம் என்ற கொள்கை நிலைபாட்டிலிருந்து தான் இப்பிரச்சனையை வடகொரியா அணுகுகிறது. இதனை பாரபட்சமின்றி சிந்திக்கும் ஆய்வாளர்கள் ஒத்துக் கொள்கின்றனர்.

பேச்சுவார்த்தையை வெறுத்து ஒதுக்கும் புஷ்

2002 ம் ஆண்டு தீமைகளின் அச்சு நாடு என்று வடகொரியாவைக் குறிப்பிட்ட பிறகு பேச்சுவார்த்தைக்கான கதவுகளை மூடினார் புஷ். அது மட்டுமல்லாது ஆத்திரமூட்டல் நடவடிக்கைகள் வேகம் பெற்றன. அமெரிக்கா, வடகொரியாவை ஆக்கிரமித்து, அச்சுறுத்தி வருகிற வரலாறு 1950 லிருந்து நடைபெற்று வருகிறது. எனினும், புஷ் நிர்வாகத்தின் கீழ் போர் வெறி அதிகரித்தது. இன்றைக்கும் கூட 40000 அமெரிக்கத் துருப்புகள் தென் கொரிய எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. அணு ஆயுதங்களும் தென்கொரியாவிடம் உள்ளன. தொடர்ந்து அமெரிக்க – தென் கொரிய கூட்டு ராணுவப் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.

புஷ் நிர்வாகத்தின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் உலகம் முழுவதும் கண்டனத்திற்கு ஆளாயின. இதைவிட முக்கியமானது, அமெரிக்காவிலேயே புஷ் நிர்வாகத்தின் அடாவடித்தனத்தை எதிர்த்துக் கண்டனக் குரல்கள் கடுமையாக எழுந்தன. அமெரிக்க அச்சுறுத்தலின் தன்மையை முழுவதும் உணர்ந்த பல ஆய்வாளர்கள் வடகொரியாவிற்கு வேறு வழியில்லாத சூழலில் வடகொரியா செய்தது நியாயமானது என வாதிடுகின்றனர்.

இடதுசாரி சிந்தனையாளரான நோம் சாம்ஸ்கி கூறினார்: அந்த பிராந்தியத்தில் அமெரிக்கா ஏராளமான அணு ஆயுதங்களை குவித்துள்ளது. இதனால் வடகொரியா அச்சுறுத் தலுக்கு ஆளாகியுள்ளது. எனவே, வடகொரியா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்றார் அவர்.

முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், ஒரு நாட்டோடு பிரச்சனை இருக்கிறதென்றால், பேச்சுவார்த்தை நடத்திடாமல் இருப்பது முட்டாள்தனம் என்று புஷ்ஷைக் கண்டித்தார். ஜனநாயகக் கட்சியின் வளர்ந்து வரும் செல்வாக்கு மிக்க தலைவரான செனட்டர் பராக் ஓபமா (Barack Obama of Illinois) கூறினார்.

பனிப்போர் தீவிரமாக இருந்த காலத்தில் கூட-  அமெரிக்காவின் ஒவ்வொரு நகரத்தையும் குறிவைத்து அணு ஏவுகணைகள் நிறுத்தப்பட்ட சூழலிலும் கூட, வெள்ளை மாளிகைக்கும், கிரெம்ளினுக்கும் நேரடித் தொடர்பு இருந்தது எனக் குறிப்பிட்டு வடகொரியாவோடு புஷ் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தாமல் இருக்கின்ற மூடத்தனத்தையும் எதிர்த்துள்ளார்.

எந்த முரண்பாடான பிரச்சனைகளையும் சுமுகமாக முடிக்காமல், பேச்சுவார்த்தையை அறவே வெறுக்கிற போக்கும், தான் சொல்வதையே மற்ற நாடுகள் ஏற்க வேண்டுமென்ற ஜனநாயக விரோதத் தன்மையும் கொண்டதாக புஷ் கூட்டம் இருந்து வந்துள்ளது.

இதோ அதற்கு ஓர் உதாரணம்.

சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜார்ஜ் புஷ்ஷிடம் பத்திரிக்கையாளர்கள் ஒரு கேள்வி கேட்டனர். அண்டை நாடுகளான இரானும், சிரியாவும் இராக்கில் அமைதி திரும்ப ஒத்துக்கொண்டால், அவர்களோடு சேர்ந்து செயல்பட அமெரிக்கா தயாராக இருக்கிறதா? இராக்கில் தற்போதுள்ள நிலையில் அண்டை நாடுகளின் ஒத்துழைப்பை, அறிவுள்ள யாரும் நிராகரிக்க மாட்டார்கள். ஆனால் புஷ் என்ன கூறினார்?

இந்தக் கேள்விக்குப் புஷ் கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்.

இரானும், சிரியாவும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இராக்கிற்கு அவர்கள் உதவ வேண்டுமென்று உலகம் எதிர் பார்க்கிறது. இப்படி ஆணவத்தோடு கூறிவிட்டு, சரமாரியாக பல நிபந்தனைகளைப் போட்டு, தொடர்பில்லாத பல பிரச்சனைகளை இத்துடன் இணைக்கிறார் புஷ்.

இரானியர்கள் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரிப்பதை நிறுத்த வேண்டும். அப்படிச் செய்தால் தான் அமெரிக்க வெளியுறவு அதிகாரிகள் அவர்களோடு பேசுவார்கள். பிறகு, அமெரிக்காவின் கடைக்கண் பார்வை கிடைக்க வேண்டுமென்றால், சிரியா என்னென்ன செய்ய வேண்டு மென்ற ஒரு பெரிய பட்டியலை புஷ் தெரிவித்தார். அத்துடன் லெபனான் அரசு இஸ்ரேல் தனது பிணைக் கைதிகளை திரும்பப் பெற ஹமாசினை நிர்பந்தப்படுத்த வேண்டும். ஹமாஸ், ஹிஸ்புல்லா இயக்கங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு எதிராக சதி செய்வதை கைவிட வேண்டும். என்றெல்லாம் புஷ் அடுக்குகிறார். இப்படிப்பட்ட போக்கு, எந்த உலகப் பிரச்சனையையாவது தீர்த்திட உதவிடுமா? சட்டாம் பிள்ளைத் தனம், அதிகார ஆணவம் எல்லாம் சேர்ந்து இன்று உலகின் பல நாடுகளில் மோசமான விளைவுகளை உருவாக்கியுள்ளது. இதுவே அணு ஆயுதங்களைத் தயாரித்தால்தான் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற துரதிருஷ்டமான முடிவுக்கு வடகொரியாவைத் தள்ளியது.

வடகொரிய அணுப் பிரச்சனையைத் தீர்க்க ஆறு நாடுகள் கொண்ட ஒரு அமைப்பு நிறுவப்பட்டது. சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, ரஷ்யா, வடகொரியா என்ற ஆறு நாடுகள் கொண்ட அமைப்பில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன. பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகள் மீதான தொடர் நடவடிக்கைகள் இல்லை. உதாரணமாக 1994ம் ஆண்டு அமெரிக்கா அங்கீகரிக்கப் பட்ட வரையறை என்ற ஒப்பந்தத்தில் வடகொரியாவுடன் சேர்ந்து கையெழுத்திட்டது.

இதன்படி வடகொரியாவின் அணு கிராபைட் உலைகளுக்கு மாற்றாக லைட் வாட்டர் (Light Water) உலைகளை நிறுவ அமெரிக்கா ஒத்துக் கொண்டது. அதாவது, அணுசக்தி மூலம் மின் , எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள வடகொரியாவிற்கு அமெரிக்கா உதவிட வேண்டுமென்றும், பதிலாக வடகொரியா அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சிகளை கைவிடுவது எனவும் முடிவாக்கப்பட்டது. ஆனால், தான் ஏற்றுக் கொண்ட  எந்த வாக்குறுதியையும், அமெரிக்கா நடைமுறைப்படுத்தவில்லை. இவை அனைத்தும் சேர்ந்துதான் தற்போதைய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அச்சுறுத்தல் வரலாறு

அணு ஆயுத மிரட்டல் என்ற பாணத்தை வடகொரியா இப்போதுதான் கையிலெடுத்திருக்கிறது. ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அமெரிக்கா செய்து வருகிறது. கொரியப் போர் நடந்து கொண்டிருந்த போது அன்றைய அமெரிக்க அதிபர் ட்ரூமென்னை ஒரு பத்திரிகை நிருபர், நீங்கள் இந்த யுத்தத்தில் அணு குண்டை பயன்படுத்துவீர்களா? என்று கேட்டனர். அதற்கு ட்ரூமென், எங்களிடம் இருக்கும் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்துவோம் என்றார். இப்படி அவர் பதிலளிக்கும் போது ஹிரோஷிமா, நாகாசாகி அழிவு ஏற்பட்டு ஐந்து ஆண்டு காலம்தான் முடிந்திருக்கிறது.

இதே போன்று 1953ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர் இவ்வாறு கூறினார். வடகொரியா சரியாக நடந்து கொள்ளவில்லை என்றால், ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு உள்ள கட்டுப்பாடுகள் அனைத்தையும் அகற்றுவோம் என்றார்.

இதைவிட அதிர்ச்சியான ஒரு தகவல் தற்போது வெளி வந்துள்ளது. பின்கஸ் என்ற பத்திரிக்கையாளர் வாஷிங்டன் போஸ்டில் எழுதியுள்ளார். 1957ஆம் ஆண்டு முதல் இரண்டு கொரியாவையும் பிரிக்கும் இடத்தில் அணு ஆயுத வல்லமை கொண்ட ஏவுகணைகளை அமெரிக்கா நீண்ட காலமாக நிறுத்தியிருந்தது. கடுமையான நிர்ப்பந்தத்திற்குப் பிறகு 1970ஆம் ஆண்டில் தான் அதிபர் ஜிம்மி கார்ட்டர் அதனை விலக்கிக் கொண்டனர்.

ஆக, வடகொரியா அமெரிக்காவின் அரை நூற்றாண்டு அச்சுறுத்தலுக்கு ஆளான நாடு. இந்த வரலாறு தெரியாதவர்கள்தான் இன்று வடகொரிய அணுச் சோதனை மனித குலத்துக்கே அழிவு என்று எழுதி வருகின்றனர். வடகொரியா, அணு ஆயுத முயற்சிகளை கைவிட வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து இருந்திட முடியாது. ஆனால் இதற்கு அமெரிக்காவின் அச்சுறுத்தல் ஆரவாரங்கள் முற்றாக கைவிடப்பட வேண்டும்.

தென்கொரியா மூலம் அச்சுறுத்தல்

தென் கொரியாவில், அமெரிக்க தலையீட்டிற்கு எதிராக பெரும் போராட்டம் நடைபெறுகிறது. அங்கு அமெரிக்கா தனது ராணுவ தளத்தை விரிவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

தென்கொரியாவில் வலுவான ராணுவ தளம் என்பது வெறும் வடகொரியாவை மிரட்டுவதற்கு மட்டுமல்ல; அமெரிக்காவிற்கு பெரும் சவாலாகவும், உலகப் பொருளாதாரத்தில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் சீனாவின் ஆதிக்கம் வளராமல் தடுப்பதற்கும் வலுவான ராணுவ தளம் தென் கொரியாவில் இருப்பது அவசியம் என அமெரிக்கா கருதுகிறது.
ஏற்கெனவே வலுவான தளம் இருந்த போதிலும், மேலும் அதனை விரிவுபடுத்தி விரிவாக்கிட அமெரிக்கா முயற்சித்து வருகின்றது.

இதற்கென அங்குள்ள விவசாயிகளின் நிலங்களை அபகரிக்க முயற்சிகள் நடந்தது. உடனே விவசாயிகள் ஆர்ப்பரித்து எழுந்து போராட்டத்தில் குதித்தனர். கடந்த ஜூலை மாதம் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் மேற்கொண்டனர்.

ஏற்கனவே உலக வர்த்தக நிறுவனம் மூலம் தென்கொரிய விவசாயிகளை அமெரிக்கா பழிவாங்கி வருகின்றது. இதனை யொட்டி பிரம்மாண்டமான போராட்டங்களும் நடைபெற்றன. தற்போது அமெரிக்க ராணுவதள விரிவாக்கம் கூடாது என்ற கோரிக்கையை எதிர்த்தும் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்தியாவின் கண்டனம்

இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வடகொரியா அணுச் சோதனையை கண்டித்து கடுமையான அறிக்கையை வெளியிட்டனர். இந்தச் சோதனை மூலம் வடகொரியா உலகிற்கு அளித்த வாக்குறுதிகளை மீறி விட்டதாக கண்டித்தார்.

1994ஆம் ஆண்டே அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொண்டதாக வடகொரியா அறிவித்து விட்ட நிலையில், அணுச் சோதனை செய்வதன் மூலம் எந்த ஒப்பந்த வாக்குறுதிகளையும் அது மீறவில்லை. எனவே, இந்தியா இவ்வாறு கண்டிப்பது அர்த்தமற்றதாகும்.

வடகொரியாவின் அணுச்சோதனையை இந்தியா கண்டிப்பது வேடிக்கையானது. இரண்டு முறை அணு வெடிச் சோதனை நடத்திய நாடு இந்தியா. இந்திய நாட்டு மக்களிடம் நீண்ட காலமாக அணு ஆயுதமற்ற உலகம் என்ற லட்சியத்திற்கு பெரும் ஆதரவு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் தான் அணு ஆயுதத் தயாரிப்பு சோதனையில் ஈடுபடுத்திக் கொண்டவர்கள் இந்திய ஆட்சியாளர்கள். எனவே, இந்தியாவிற்கு வடகொரியச் சோதனையை கண்டிக்க என்ன உரிமை இருக்கிறது? அமெரிக்கா கண்டிப்பதால், தானும் கண்டிக்க வேண்டும் என்று முனைகிறது இந்திய ஆளும் வர்க்கம்.

இந்திய ஆட்சியாளர்களுக்கு உள்ள பயம் என்னவென்றால், வடகொரிய சோதனை ஏற்படுத்தியுள்ள ஆரவாரத்தில், இந்திய – அமெரிக்க அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா கை கழுவி விட்டால் என்ன செய்வது என்பதுதான். இதனால்தான் அவசர அவசரமாக வடகொரியாவை கண்டித்தனர்.

பிறகு, அமெரிக்க ஆதரவு செயலாளர் நிக்கோலஸ் பார்ன்ஸ் இந்தியா, பாகிஸ்தான் செய்த அணுச் சோதனைகளோடு, வடகொரியச் சோதனையை ஒப்பிட முடியாது என்ற தத்துவ முத்தினை உதிர்த்தார். இது எப்படி என்றெல்லாம் தலையை பிய்த்து கொள்ளாமல் இந்திய அரசு நிம்மதிப் பெரு மூச்சு விட்டது.

தீர்வு என்ன?

அக்டோபர் 14ஆம் தேதி ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் 1718 எண் கொண்ட தீர்மானத்தை நிறைவேற்றியது. இதன்படி எல்லா அரசாங்கங்களும் வடகொரியாவுடன் ஏவுகணை உள்ளிட்ட பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை வாங்குவதோ, விற்பதோ கூடாது. அதே போன்று சில பொருட்களின் வர்த்தகமும் தடை செய்யப்பட்டது. இப்படிப்பட்ட தடைகள் பிரச்சனையை தீர்க்கப் போவதில்லை. மாறாக, பதட்டத்தை மேலும் அதிகரிக்கவே செய்திடும்.

அமெரிக்கப் பத்திரிக்கைகளும், ஆளுகிற வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் வடகொரியா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், ராணுவத் தலையீடு உடன் தேவை என்றும் போர் வெறியோடு கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர்.

வடகொரியாவுடன் கடந்த பல ஆண்டுகளாக நெருக்கமாக இருந்து வந்துள்ளது சீனா. எனவே, சீனா அமைதியாக இருக்கக் கூடாது; வடகொரியாவிற்கு அனுப்புகிற உணவு, மருந்து சப்ளை எல்லாவற்றையும் நிறுத்திட வேண்டுமென கூக்குரலிட்டனர் அமெரிக்கர்கள். இதே போன்று தான் இராக் மீது 1980 களில் உணவு மருந்து சப்ளைக்கு ஐ.நா. சபை மூலம் தடை விதித்தது அமெரிக்கா. அதனால் சொல்லொண்ணாக் கொடுமையை இராக்கின் சாதாரண பொதுமக்கள் அனுபவித்தனர். 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் உணவின்றி, பட்டினியால் மடிந்து போயினர்.

இதே போன்ற கொடூரம், வடகொரியாவிலும் நிகழ வேண்டும் என்பது புஷ் கூட்டத்தினரின் ஆசை. ஆகையால், அவர்கள் சீனா விடம் நிர்பந்தம் செய்கின்றனர்.  ஆனால், சீனா அறிவுப் பூர்வமாகச் செயல்பட்டது.

முதலில் வடகொரியாவின் அணுச் சோதனையை கண்டித் தனர்.  பிறகு ஐ.நா. சபையில் கடும் பொருளாதாரத் தடையை விதிக்க அமெரிக்கா முயற்சித்த போது, அதைச் சீனா ஏற்றுக் கொள்ளவில்லை. இதர வீட்டோ நாடுகளைச் சேர்த்துக் கொண்டு இதை எதிர்த்தது. குறிப்பாக, ரஷ்யாவோடு கைகோர்த்து அமெரிக்க முயற்சியை தடுத்து நிறுத்தியது.

பிறகு அணு ஆயுத மூலப் பொருட்களுக்கும், சில குறிப்பிட்ட பொருட்களுக்கும் தடை என்று ஐ.நா. சபையில் முடிவு எடுக்கப்பட்டது. வடகொரியாவுடன் பேச்சுவார்த்தையைத் தொடருவது எனும் வகையில் சீன வெளியுறவு அமைச்சர் வடகொரியா சென்றார். வடகொரிய அதிபர் கிம் – ஜாங் – இல் லுடன் பேச்சுவார்த்தை நடத்தியது சீனக்குழு. தொடர்ந்து பலமுறை இத்தகைய தொடர்பு களை சீனா வடகொரியாவுடன் ஏற்படுத்திக் கொண்டது.

கடைசியாக, சீனாவின் கடும் முயற்சிக்கு வெற்றி கிட்டியது. வடகொரியா ஆறு நாடுகள் சேர்ந்து நடத்தி வந்த பேச்சுவார்த்தை தொடருவதற்கும் அதில் தாங்கள் கலந்து கொள்வதற்கும் சம்மதித்தது.

இந்தப் பிரச்சனைக்கு மிரட்டல், யுத்தம் ஆகிய வழிமுறை களைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டு மென்பது தான் ஜனநாயக எண்ணம் கொண்டோர் அனைவரின் விருப்பம். இந்தக் கோட்பாடே சிறந்தது என்பதற்கான எடுத்துக் காட்டாக, சீனாவின் முன்முயற்சியும், அதற்கான வெற்றியும் சான்றாக அமைந்தன.

பாசிசமும் திரிக்கப்படும் வரலாறும்!

வரலாற்றை மறைப்பது, திரிப்பது என்பது இன்று ஒரு பெரிய தொழிலாக கருதப்படுகிறது. முன் எப்பொழுதையும் விட செய்திகளை கொண்டு செல்லும் வேகம் ஒளி வேகத்தை நெருங்கி விட்டதால் இந்த புதிய தொழில் பிறந்து விட்டது. மக்களின் அபிப்பிராயங்களை வழிநடத்தும் சுக்கானாக இது சில காலம் கெட்டிகாரன் புளுகுபோல் பயன்படுவதால், பெருமளவு முதலீடுகள் இதில் போடப்படுகின்றன. இதற்கென பல்கலைக் கழகங்கள் நிபுனர்களை தயாரிக்கின்றன. அவர்களது தொழில் காசு கொடுப்போரின் அரசியலுக்கேற்ப வரலாற்றை மடித்து பொய்யர்களின் மெய்களாக்குவதுதான். உண்மைகளை அறிய ஒருவன் விரும்பினால் அவன் பெரும்பாடு பட வேண்டும்; வைக்கோல் போரில் ஊசி தேடும் கதைதான். சாதுர்யமிக்க நிபுனர்களின் திறமை முதலில் வரலாற்றை எதிர்பாரா நிகழ்வுகளின் தொகுப்பாக மக்களை சென்றடைய வைப்பதில் காட்டப்படுகிறது. மானுட மனம் இயற்கையானாலும், சமூக நிகழ்வானாலும், அதனுள் மறைந்து கிடக்கும் ஒழுங்கமைவை, காரண காரியங்களை நாடும் அந்த நாட்டத்தை தள்ளி வைத்து விட்டு, பங்கு சந்தையில் அல்லாடும் சில்லரை முதலீட்டாளர்கள் போல் எதையும் அணுக வைத்து விடுவது. இதுதான் அந்த நிபுனர்களின் சாதுர்யமாகும்.

ஜின்னா என்பவர் இல்லை என்றால் பாகிஸ்தான் உருவாகி இருக்காது. சாராயக் கடையில் நடந்த மோதலில் ஹிட்லர் கொலை செய்த குற்றத்திற்காக தூக்கிலே போட்டிருந்தால் இரண்டாம் உலகப் போரே நடந்திருக்காது. ஆஸ்திரியா, ஹங்கேரி நாட்டின் இளவரசரை சிராஜிவோவாவில் நகர் வலம் வரும் பொழுது துருக்கி நாட்டு பயங்கரவாதி சுட்டுத் தள்ள முயன்று குறிதவறியது. இளவரசரை காப்பாற்ற மாற்று வழியில் வாகனத்தை ஓட்டிச் சென்ற பொழுது ஏற்கனவே முயன்று தோற்ற பயங்கரவாதி தோல்வியை தழுவியதால் விரக்தியில் அவ்வழியே வர இம்முறை குறி தவறாமல் சுட்டுத் தள்ள வாய்ப்பு கிடைக்காமலிருந்தால், அதாவது வாகன ஓட்டி, வழி தவறாமல் இருந்திருந்தால் முதல் உலகப் போரே மூண்டிருக்காது.

அமெரிக்க ஜனாதிபதி கென்னடியை சுட்டு வீழ்த்தியதால் முடிவிற்கு வர வேண்டிய வியட்நாம் போர் விரிந்தது. ஜெர்மன் படை வீரனை போலந்து எல்லையில் சுடாமல் இருந்திருந்தால், இரண்டாம் உலகப் போர் மூண்டிருக்காது. இப்படியாக வரலாற்றை, தனித்தனி நிகழ்வுகளின் தொகுப்பாக சித்தரிக்கப்படுமானால், எதிர்பாரா நிகழ்வுகளாக பதிவு செய்யப்படுமானால், மாயங்களை உருவாக்குவது எளிது என முதலாளித்துவ முகாம் கருதுகிறது. இன்று வரலாற்றை இவ்வாறு திருகி, பாசிசத்தை விட பயங்கரமானது கம்யூனிசம் என்ற மாயத்தை சமதர்ம எதிர்ப்பு நஞ்சை, இளம் பிராயத்தினரிடையே பரப்ப ஒரு பெரும் முயற்சி நடக்கிறது.

இன்று ஜார்ஜ் புஷ் பாசிசத்தை வென்ற அறுபதாம் ஆண்டு நிறைவையொட்டி, பழைய பனிப்போர் காலத்து கதையை கூறி வருகிறார். பனிப்போர் காலத்தில்தான் கம்யூனிச எதிர்ப்பு என்பது, அமெரிக்க நாகரீகத்தின் அடையாளமாக்கப்பட்ட காலம், இரண்டாம் உலகப் போருக்கு பிறகு சாம்ராஜ்யவாதிகள் ஒன்றுபட்டு இந்த கம்யூனிச எதிர்ப்பை உலகளவில் உருவாக்கினர். இக்காலத்தில் தான் சமதர்ம எதிர்ப்பு பிள்ளை கதைகளின் மூலம் கல்லின் மேல் எழுதிய எழுத்தாக ஆக்கப்பட்டது. அமைதிக்காக, சமதர்ம உறவிற்காக பாடுபடுகிற யாரானாலும், மாஸ்கோ ஏஜென்டுகள் என்று முத்திரையிடப்பட்ட காலம். இக்காலத்தில் உருவான வரலாற்று திருகல்களை இடியட் பாக்ஸ் மூலம் அறிந்த ஜார்ஜ் புஷ் பாசிசத்தை உறுதியாக எதிர்த்த கம்யூனிஸ்ட்டுகளையும், சோவியத் யூனியனையும் தாக்கி பேசி 60 ஆண்டு நிறைவை கொண்டாடுகிறார்.

இன்று உலகமய பொருளாதாரத்தில் சுரண்டல் முறை ஆதிக்கத்தால், குறிப்பாக அமெரிக்காவின் அடாவடித்தனங்களால் முதலாளித்துவ உற்பத்தி முறை மீது மக்களின் அதிருப்தி பெருகுகிறது. இந்த நேரத்தில், பாசிசத்தை எதிர்த்த போரில், கம்யூனிஸ்ட்டு களையும், சோவியத்தையும் பாராட்டுவது சாம்ராஜ்யவாதங் களுக்கு குழிதோண்டுவதாகும். புஷ் பாராட்டினால் அவருக்கு சாம்ராஜ்ய வெறி போய் விட்டது என்று ஆகும். எனவே பழைய கதையை அவிழ்த்து விடுகிறர். புஷ் வகையறாக்களின் பொய்களை முறியடிக்கும் முறையில் உண்மையான வரலாற்றை மக்கள் உணரும் படி செய்ய ஒரே வழி பொய்களை எதிர்த்து எல்லா வகையிலும் போரிடுவதுதான்.

முதலாவதாக, இரண்டாம் உலகப்போர் எதிர்பாரா நிகழ்வுகளால் மூளவில்லை. மாறாக பச்சையான சாம்ராஜ்ய விரிவாக்க வெறியால், ஜெர்மன், இத்தாலி, ஜப்பான் கூட்டணி அமைத்து முதல் உலப் போரின் வெற்றியாளர்களான, பிரான்சு, பிரிட்டன் வகையறாக்கள் திணித்த காலனி ஆதிக்க பங்கீடு முறையை மாற்றி அமைக்கவே இரண்டாம் உலகப் போரை தொடுத்தன. மார்க்சிஸ்ட்டுகளின் வார்த்தைகளில் சொல்வதென்றால், காலனி நாடுகளை மறுபங்கீடு செய்வது என்ற உண்மையை சொந்த நாட்டு மக்களிடமிருந்து மறைக்க, தேசமான பிரச்சினையாக சித்தரித்துக் கூறப்படும் காரணங்களையே புஷ் வகையாறாக்கள் வரலாறாகக் குறிப்பிடுகிறார்கள்.

இரண்டாவதாக சோவியத் யூனியன், பிரான்சு, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரான்சு,பிரிட்டனின் காலனி நாடுகள் முரண்பட்ட தேச நலன்களை கொண்டதாக இருந்தாலும், பொதுவான பாசிச ஆபத்தை சந்திக்க ராணுவ நடவடிக்கைகளையும், ராணுவ யுத்திகளையும் ஒன்றினைத்து நடத்திய போர் ராணுவ வெற்றியை ஈட்டியதே தவிர பாசிசத்தை புதைத்த நடவடிக்கையாகாது.

மூன்றாவதாக, சமதர்ம சித்தாந்த பரவலும், காலனி ஆதிக்க எதிர்ப்பும், உலக அரசியலின் தொடர்ச்சியாக ராணுவ நடவடிக்கை அமையக் கூடாது என்ற உலக அமைதிக்கான தாகமும் இரண்டாம் உலகப் போரின் தலைவிதியை நிர்ணயித்தது.இதனால் தான் சாம்ராஜ்யவாதிகளின் யுத்த தளமாக உலகம் மாறுவது தடுக்கப்பட்டு, நாடுகளுக்கிடையே உருவாகும், தகராறுகளை தீர்க்கும் நோக்கம் கொண்ட ஐக்கிய நாடுகளின் சபை தோன்ற வழிவகுத்தது.

நான்காவதாக இரண்டாம் உலகப் போரில் சோவியத் மக்களும், சோவியத் செஞ்சேனையும் போர் முனைகளாக இருந்த இதர நாடுகளை விட மிகஅதிகமாக குறுதியை சிந்தினர், போரில் மிக அதிகமான மக்களை இழந்தனர். குண்டு வீச்சுகளினாலும், முற்றுகைகளினாலும், மிக அதிகமான பொருட் சேதங்கள், உற்பத்தி அமைப்புகள் இழப்புகளும் ஏற்பட்டன. ஆனாலும், பிற நாடுகளில் காண முடியாத உலைவிலா உறுதியை காட்டினர், லட்சிய பிடிப்போடு போர் முனையில் நின்றனர்; அதனால் வெற்றிக் கொடியை நாட்டும் வாய்ப்பு கிட்டியது.

பாசிச வெறிக்கு பலியாகாமல் உலகம் தப்பியது. சோவியத் நாட்டு மக்களும், செஞ்சேனையும் காட்டிய உறுதியும் உலகமே விஷவாயு கூடமாக மாறாமல் தப்பிட வழிவகுத்தது. அந்த உன்னத உறுதியை நினைவில் கொள்ள கடமைப்பட்டுள்ளோம். குறைந்தபட்சம் அவதூறுகளையாவது பொழியாமல் இருக்க மேற்கத்திய ஜனநாயகவாதிகளுக்கு கடமை உண்டு.

அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு அன்று நிகழ்ந்தவைகளை இன்று பரிசீலிக்கிற பொழுது, பனிப்போர் காலத்து பொய்ப் பிரச்சாரங்களை தாண்டி சில உண்மைகளை நாம் உணர முடிகிறது.

பாசிச ஆபத்தை வெறும் ராணுவ யுத்திகளால் வென்றோம் என்று யார் கூறினாலும் அது வெத்து வேட்டு, மனித குலத்தின் பெரும் பகுதியை புல் பூண்டாக கருதி அழிக்க நினைத்த பாசிசத்தை அரசியல் ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும், எதிர்த்திட உலக நாடுகளின் கம்யூனிஸ்ட்டுகள் காட்டிய உறுதியும், சாதுர்யமும், ஐ.மு. யுத்திகளை பின்பற்றுவதில் காட்டி விவேகமும், ஒரு காவியம் எனலாம். ராணுவ ரீதியான வெற்றிக்கு இவைகள் அடிப்படை போட்டன.

கம்யூனிஸ்ட்டுகளின் தத்துவார்த்த விளக்கத்தினால் ஜெர்மன் மக்கள் தன்னை விட்டு வெகு தூரம் போய் விட்டனர் என்று தெரிந்ததாலேயே, மேற்கத்திய ஜனநாயக நாடுகளிடம் சரனடையாமல் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டான். இந்த உண்மைகளையெல்லாம் மறைக்கலாம், பூசி மெழுகலாம் ஆனால் மறுக்க முடியாது. அன்று ஹிட்லரும் மேற்கத்திய ஜனநாயக வாதிகளும் சமரசம் செய்து மீண்டும் உலகயுத்தத்தை சோவியத்திற்கு எதிராக திரும்பி விடும் அபாயம் இருப்பதை உணர்ந்தே, ஹிட்லரை கைது செய்வதில் செஞ்சேனை உறுதி காட்டியது. ஆனால் நடந்தது வேறு. ஜெர்மன் அதிபரின் மாளிகை தோட்டத்தில் இருந்த அறையில் ஹிட்லரின் சடலத்தை செஞ்சேனை வீரன் ஐவான் சுரத்கோவ் கண்டு பிடிக்கிறார். ஏற்கனவே அவரது சடலம் கிடைத்து விட்டதாக தகவல் வந்ததால் அங்கேயே சடலம் புதைக்கப்படுகிறது. பின்னர் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு, இதுதான் ஹிட்லரின் சடலம் என்று உறுதி செய்ய சோவியத் அரசு ஹிட்லரின் சடலத்தை 8 முறை எடுத்தும், புதைத்தும் இறுதியில் அதுதான் ஹிட்லரின் சடலம் என்று உறுதி செய்யப்பட்டபின் ஏப்ரல் 5ஆம் தேதி சடலம் கரியுடன் சேர்த்து எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவெனில் 1938இல் ஹிட்லரே தனது இறுதிப் பயனம், புதைக்கப்படுகிற விதம் பற்றி எழுதி வைத்துள்ளான். தனது சடலத்தை லின்ட்ஸ் நகரில், தேசிய சோசலிஸ்ட் காங்கிரசின் கட்சியின் சார்பில் ஒரு மாபெரும் சவப்பெட்டியில் அடக்கம் செய்து அதன் மீது தங்கத்திலான சிலுவையில் யூரல் மலையிலிருந்து கொண்டு வரப்பட்ட வைரங்கள் பதிக்கப்பட்டு நிறுத்தப்பட வேண்டும் என்று அந்த கடைசி விருப்ப ஆவணத்தில் ஆசைப்பட்டான் இதனை என்னவென்று சொல்வது? முதலாளித்துவ பேராசையின் கலை வடிவம் என்பதா, கோர சொரூபம் என்பதா? செத்த பின்பும் தங்கமும், வைரமும் தன் சவப்பெட்டியை அலங்கரிக்க வேண்டும் என்ற பேராசை எதனை காட்டுகிறது! மனிதனை மனிதன் சுரண்டுவது மானுட இயல்பு என்று கருதுகிற அடித்து சாப்பிடும் பண்பாட்டின் கலை அம்சம் இப்படித்தான் வெளிப்படுமா?

இரண்டாம் உலகப் போருக்கு முன் முதல் உலகப் போர் முடிந்த பிறகு இடைப்பட்ட காலத்தில் ஜெர்மனியின் பெரு முதலாளி வர்க்க அரசியல் ஆதிக்கத்தினால் வளர்க்கப்பட்ட கலை, இலக்கியங் களையும், அதனை எதிர்த்த கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட் அல்லாத ஜனநாயகவாதிகளும் உருவாக்கிய கலை, ஓவியம், இலக்கியங் களையும் ஒருவர் ஒப்பிட முடிந்தால் இத்துறையிலும் இரண்டு முகாம்கள் மோதுவதையும் காணமுடியும். மனித மனத்தை மேம்படுத்தும் கலை எது என்பதையும் உணர முடியும். அங்கே முதலாளித்துவ முகாம் பாசிச வெறிபிடித்து அலைந்ததை பார்க்க முடியும்.

இந்த பாசிச வெறிக்கு ஜெர்மன் மொழியில் லெபன் சராம் என்று பெயர். வாழ இடம் விடு என்பது இதன் பொருள். மானுட சமூகம் அழியாமல் இருக்கவும், அறிவிலும், ஆற்றலிலும் சிறக்கவும் வேண்டுமானால், தூய்மையான ஆரிய இனம் தவிர மற்ற தரக்குறைவான இனங்களை களையெடுக்கப்பட்டு இப்பூமி முழுவதும் கலப்படமில்லாத தூய்மையான ஆரிய இனம் பரவ வேண்டும் என்பதே லெபன் சாரம் என்ற சொல்லின் சாரம்சமாகும்.

அன்று பிற சாம்ராஜ்யவாதிகளுக்கும் (அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு மற்றும் மேற்கத்திய ஜனநயக நாடுகள்) பாசிசவாதிகளுக்கும் வேறுபாடுகளை தேடினால் அதிகமிருக்காது. அவர்கள் பிற நாடுகளிலே குடியேற்றம் செய்து அங்குள்ள வளங்களை கைப்பற்றுவது, மக்களை அடிமைப்படுத்துவது என்பதாகும். பாசிசவாதிகளோ இனத் துய்மையை காக்க பிற நாடுகளில் மக்களை பூண்டோடு அழித்து விட்டு பூமியை ஆரிய இனம் மட்டுமே வளரும் சொர்க்கமாக்குவது என்ற முடிவில் இருந்தனர். இன்றும் கொஞ்சம் பேர் அப்படி இருக்கின்றனர்.

இந்த லெவன் சாரம் கோட்பாட்டை ஹிட்லர் உருவாக்கவில்லை. அன்றைய முதலாளித்துவ விஞ்ஞான உலகில் இருந்த சில பிரபல விஞ்ஞானிகள் டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை வைத்து உருவாக்கிய அரசியல் தத்துவமாகும்.

இந்த விஞ்ஞானிகள் டார்வினின் பரிணாம வளர்ச்சி ஏனிப்படிகளில் மனித சமூகம் மட்டும் ஒரே இனமாக இல்லாமல் பல இனங்களாக உயிரியல் அமைப்பிலே இருப்பதாக சில ஆய்வுகளின் முடிவுகளாகக் காட்டினர். மனித குரங்கிற்கும், மனிதனுக்கும் இடையில் இந்த இனங்கள் உள்ளன. அதில் ஆரிய இனம் மட்டுமே முழுமையான மனித இனம், மற்றவைகள், பாதி மனிதன் பாதி குரங்கு ரகங்களாகும். இந்த இனங்களோடு ஆரிய இனம் கலந்தால் அறிவாற்றல் அற்ற கலப்பினம் பெருகி மனித குலமே அழிந்து விடும். நல்ல ரக நெல் வளர கலப்பின ரகங்களை அழிப்பது போல்மற்ற இனங்களை அழித்து விட வேண்டும் என்றனர்.

இந்த இனத் துய்மை ஆய்வுகளை ஹிட்லர் தனது அரசியலுக்கு அடிப்படையாக்கிக் கொண்டான். ஜெர்மன் மக்களிடையே தங்களது இனமே உசந்தது. மற்றது இழிவானது என்ற ஆணவம் பரவ வழி செய்து கொண்டான்.

அன்று பாசிசத்தை உறுதியாக எதிர்ப்பதில் மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் கம்யூனிஸ்ட்டுகளும், சில விஞ்ஞானிகளும், சில ஜனநாயகவாதிகளும் உறுதி காட்டினர். பிரபலமான அரசியல் தலைவர்கள் எல்லோருமே ஊசலாடினர். கம்யூனிசம் பரவாமல் தடுக்கும் மாமருந்தாக பாசிசத்தை பெரு முதலாளிகள் கூட்டம் பார்த்தது.

இவைகளெல்லாவற்றையும் யாரும் மனதிலே கொள்ளக் கூடாது என்ற நோக்கில்தான் புஷ் வகையறாக்கள், சோவியத்தை ஆக்கிரமிப்பு தன்மை கொண்ட சாத்தானின் நாடு என்று சித்தரிப்பை புதுப்பிக்கிறார்கள். அவர்கள் பரப்புவதென்ன?

ஸ்டாலினும், ஹிட்லரும் 1939இல் செய்து கொண்ட ஒப்பந்தமே, ஹிட்லருக்கு போர் தொடுக்க தெம்பு ஏற்பட்டது.

உலக நாடுகளின் கம்யூனிஸ்ட்டுகள் எல்ம் மாஸ்கோ ஏஜெண்டுகளாக செயல்பட்டனர்.

1940இல் சோவியத் பால்டிக் கடலோர நாடுகளை ஆக்கிரமித்தது.

போருக்குப் பிறகு கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சோவியத் கைப்பற்றியது.

சோவியத்தும் ஒரு சாத்தானின் நாடு.

ஜார்ஜ் புஷ்ஷூம் அவரது வகையறாக்களும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிபுணர்களும் வரலாற்றின் ஒரு பகுதியை மறைத்து, ஒரு பகுதியை திருத்தி மெய்போன்ற பொய்களாக்கி மானுட சமூகத்தின் இயல்பான சமதர்மம், அனைவரும் சமம் என்ற உணர்வினை பிடுங்கி எறியலாம் என்று கருதுகின்றனர். ஆனால் வரலாற்றை அவ்வளவு எளிதாக புதைத்து விட முடியாது. மக்களின் சமதர்ம உணர்வும் அகன்றிடாது.

முதலில் குறிப்பிட வேண்டியது உயிரியல் அடிப்படையில் உயர்ந்த இனம், தாழ்ந்த இனம் என்று மானுடத்தை பிரிக்க முடியாது என்பதை இன்று விஞ்ஞானம் நீருபித்து விட்டது. இன்று மேற்கத்திய அறிவுலகம் இதை ஏற்றுக் கொண்டாலும், பண்பாட்டு ரீதியில் இன ஆணவம் ஊறிபோய் உள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

1938 செப்டம்பர் மாதத்தில் பிரிட்டன் நாட்டு பிரதமர் நெவில் சேம்பர்லின் ஜெர்மன் நாட்டு அதிபர் ஹிட்லரை அவரது வீடான பெர்க்டஸ் தோட்டத்தில் சந்தித்து அளவளாவினார். உரையாடிக் கொண்டிருந்த பொழுதே ஹிட்லர், அன்றையத் தேதிகளில் சாம்ராஜ்யவாதிகளின் தலைமை பீடமான பிரிட்டிஷ் பிரதமரை மிரட்டுகிற தொணியில் ஒன்றை சொன்னார். செக்கோஸ்லோவியா என்ற முதல் உலக யுத்த முடிவில் பிறந்த குட்டி நாட்டின் பகுதியான சடட்டன் லாண்ட் என்ற பகுதியை ஜெர்மனியோடு இணைக்க மறுத்தால், செகோஸ்லோவியா மீது படையெடுத்து கைப்பற்று வோம் என்றார். இதன் பொருள் முதல் உலக யுத்த முடிவில் ஏற்பட்ட வெர்செல்ஸ் ஒப்பந்தத்தை மீறுவதாகும்.

பின்னர் அதே மாத இறுதியில் (1938) ஹிட்லர், பிரிட்டன் நாட்டு பிரதமர் சேம்பர்லின் பிரெஞ்சு அதிபர் டால்டியர், இத்தாலி நாட்டு அதிபர் முசோலினி, முனிச் என்ற இடத்தில் கூட சுடட்டன் லேண்ட்டை ஜெர்மனியோடு இணைக்க சம்மதித்து ஹிட்லரின் விரிவாக்க வெறியோடு சமரசம் செய்கின்றனர். ஒப்பந்தம் செய்கிறார்கள். ஒரு காலத்தில் ஆஸ்திரியா – ஹங்கேரி என்ற நாட்டின் பகுதியாக இருந்த செக்கோஸ்லோவகியா, முதல் உலக யுத்த முடிவில் ஏகாதிபத்தியவாதிகள், இதனை குட்டி நாடாக பிரித்தனர். இதில் வேதனை என்ன வென்றால், தனிநாடாக அறிவிக்கப்பட்ட போதும் சரி, பின்னர் ஒரு பகுதியை ஹிட்லர் ஆக்கிரமிக்க அனுமதித்தபோதும் சரி, இந்த ஏகாதிபத்தியவாதிகள், ஜனநாயகம் பற்றி அதிகம் பேசுபவர்கள், எந்த காலத்திலும் செக்கோஸ்லோவகியா நாட்டு மக்களையோ, அரசையோ மதித்ததும் இல்லை; ஆலோசனை கேட்டதும் இல்லை.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகே சோவியத் உதவியினால், அது சுயநிர்ணய உரிமை பெற்ற சுதந்திர நாடானது.

முனிக் ஒப்பந்தம் ஆபத்தானது. ஹிட்லர் எந்த நாட்டை தாக்கினாலும், நாம் ஒன்றினைந்து தடுக்க ஒப்பந்தம் செய்து கொள்வோம் என்று சோவியத் அரசு மேற்கத்திய நாடுகளை எவ்வளவோ வேண்டியும் அவர்கள் சம்மதிக்கவில்லை. முனிச் ஒப்பந்தத்தின் மூலம், ஹிட்லர் சோவியத்தை முதலில் தாக்குவான், பின்னர் தான் நம்மிடம் வருவான் என எதிர்பார்த்தனர்.

ஹிட்லரின் ராணுவ யுத்திகளை மேற்கத்திய அரசுகள் சரியாக கணிக்க தவறி விட்டன. இந்நிலையில் ஹிட்லர், சோவியத்தோடு, ஆனாக்கிரமிப்பு ஒப்பந்தம் செய்ய முன்வந்தான். அன்றைய சோவியத் அரசு இதனை நம்பாவிட்டாலும், ஒப்பந்தம் செய்வதால் பாதகம் ஏற்படாது, மாறாக தற்காலிகமாகவாது யுத்த பீதியின்றி மக்கள் வாழ்வர் என்று கருதி ஒப்பந்தம் செய்தனர். உலகில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிற சோவியத் அழிவது நல்லது என்று கருதிய மேற்கத்திய ஜனநாயகவாதிகள், ஜெர்மனியின் யுத்த வெறிக்கு கொம்பு சீவி விட்டதை மறைக்கவே 1939 ஹிட்லர் – ஸ்டாலின் ஒப்பந்தத்தை காட்டுகின்றனர். ஹிட்லரின் அடாவடித்தனங்களை என்றுமே மேற்கத்திய ஜனநாயக நாடுகள் கண்டித்து வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம் மூலம் கேட்க கடமைப்பட்டவர்கள். ஆனால், அன்று ஹிட்லரின் படைகள் பாசிஸ்ட் ஆட்சியை கொணர ஸ்பெயினை தாக்கியபொழுது, இந்த மேற்கத்திய ஜனநாயக நாடுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்பெயின் அரசிற்கு எவ்வளவோ வேண்டியும் உதவ மறுத்து விட்டன. கம்யூனிஸ்ட்டுகளே உறுதியாக எதிர்த்தனர். ஹிட்லர் ஆஸ்திரியாவை கைப்பற்றிய பொழுது இவர்கள் வேடிக்கை பார்த்தனர்.

வொர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தை அமுலாக்க வற்புறுத்தாமல் ஜெர்மனிக்கு விட்டுக் கொடுத்தனர். முதல் உலக யுத்த முடிவில் உருவான இந்த ஒப்பந்தப்படி, ஜெர்மன் ராணுவம் பிற நாடுகளி லிருந்து வெளியேற வேண்டும் என்பதையும் வற்புறுத்தவில்லை. முதல் உலக யுத்த முடிவில் ரஷ்யாவின் பகுதிகளில் போல்ஷிவிக் கட்சியினர் ஆட்சியைப் பிடிக்காமல் இருக்க, தங்களது படைகளை அனுப்பியதோடு, பால்டிக் கடல் பகுதியில் புகுந்த ஜெர்மன் ராணுவத்தை பின்வாங்க வேண்டாம் என்று கூறி விட்டனர். புதிதாக உருவாகிய போல்ஷிவிக் இயக்க தலைவர்களை ஜெர்மன் ராணுவம் வெட்டி சாய்த்தது. 1721லிருந்து, 1917 வரை ரஷ்யாவின் பகுதியாக இருந்த ஈஸ்ட்டோனியா, லாட்வியா, லிதுவேனியா நாடுகள் போல்ஷிவிக் ஆட்சியின் போதுதான், சுயநிர்ணய உரிமை பெற்று தனி நாடுகளாகின.

ரஷ்ய புரட்சிக்குப் பிறகு இந்த ஜனநாயகவாதிகளும், பாசிஸ்ட்டுகளும், படையெடுத்ததை மறைக்கவே புஷ் வகையறாக்கள் விரும்புகின்றனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகே, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட்டுகள் அரசமைக்க வாய்ப்பு ஏற்பட்டது. அந்த நாடுகளில் சோவியத்தின் கவர்னர்கள் அனுப்பப்டவில்லை. அங்குள்ள மக்களே அரசை தேர்ந்தெடுத்தனர். அந்தந்த நாடுகளின் மொழிகள், ஆட்சி மொழி, பயிற்று மொழிகளானது. அனைவருக்கும் வேலை, திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் மேம்பட்டது. அதுவரை இந்த நாடுகள் சுரண்டலாலும், மிகவும் பின் தங்கிய நாடுகளாக  இருந்தன. சோவியத் உதவியால் மேற்கத்திய ஜனநாயக நாடுகளோடு போட்டியிடுகிற அளவிற்கு பொருளாதாரம் முன்னேறியது.

ஆனால் இக்காலங்களில் மேற்கத்திய ஜனநாயக நாடுகள் புகுந்த காலனி நாடுகளானலும், ராணுவ கூட்டில் இருந்த நாடுகளானாலும், அவைகளின் கதி என்ன! கடன் சுமைகளால் தவித்தன; முட்டாள்களாக்கும் கல்வியும், பணப்பித்து பிடித்தலையும் பண்பாட்டை வளர்த்தன. பங்கு சந்தை ஊகவாணிபத்தை நம்பி வாழும் சோம்பேறி வாழ்வே உயர்வானது என்ற பண்பாட்டை பரப்பி வருகின்றன. அவர்கள் பொழுது போக்கிற்கு காம விகார இலக்கியங்களை உற்பத்தி செய்ய வைத்தன. ஒரு அமெரிக்க எழுத்தாளன் குறிப்பிட்டதைப் போல வார விடுமுறை நாளில் அடுத்தவன் சொத்தை அழிக்கும் விளையாட்டுக்களில் ஈடுபடும் பண்பாட்டை புகுத்தின.

இன்று ஈராக்கில் புகுந்து அந்த நாட்டை காலனியாக்கி விட்ட இந்த ஏகாதிபத்தியவாதிகள், யூகோஸ்லோவியா என்ற நாட்டை துண்டு துண்டாக்கி, துவம்சம் செய்தவர்கள். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிக் கொண்டவர்கள் சோவியத்தை அவதூறு செய்ய விடுவது, அதற்காக வரலாற்றை மறைப்பது என்பதை அனுமதித்தால் உலக அமைதிக்கும், உலக நாடுகளின் ஒத்துழைப்புக்கும் சாதாரண மக்களின் முன்னேற்றத்திற்கும் அக்கறையுள்ள எந்த மனிதனும் சம்மதிக்க மாட்டான்!

ஸ்டாலின் செய்த தவறுகளை சரியாக மதிப்பீடு செய்வது அவசியம், கிழக்கு ஜெர்மனியிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் ஆட்சி பொறுப்பேற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் குறைபாடுகளை மதிப்பீடு செய்வது அவசியம். ஆனால் பாசிசத்தை விட கம்யூனிசம் மோசமானது என்று சித்தரிப்பதை சமூகம் ஏற்குமானால் சாம்ராஜ்யவாதிகளின் பேராசைகளுக்கு மக்கள் பலியாவதை தடுத்திட இயலாது.