சங் பரிவாரத்தின் உத்திகள்!

ஜி.ராமகிருஷ்ணன்

அரசியல் தலைமைக்குழு  உறுப்பினர், சிபிஐ(எம்)

(ஆர்.எஸ்.எஸ். செயல்படுத்தி வரும் உத்திகளை எதிர்கொள்வது தொடர்பாக கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்ட கட்சி முன்னணி தோழர்கள் பங்கேற்ற பயிற்சி பட்டறையில் முன்வைக்கப்பட்ட குறிப்பின் சில பகுதிகள் இங்கு கட்டுரை வடிவில் தரப்பட்டுள்ளது – ஆசிரியர் குழு)

 “இந்துத்துவா சித்தாந்தம் பழமையை மீட்டெடுக்கும் வாதத்தை முன்னெடுப்பதாக இருப்பதோடு, இந்து ராஷ்ட்ராவை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தியாவின் பன்முகத்தன்மை மிக்க கலாச்சாரத்தை மறுதலிப்பதாகவும் இருக்கிறது” என நமது கட்சித் திட்டம் குறிப்பிடுகிறது.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவார அமைப்புகள் தொடக்க காலத்தில் இருந்தே இந்துத்துவா – இந்து ராஷ்ட்டிராவை நோக்கிய பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 2014 ஆம் ஆண்டு பாஜக ஒன்றிய ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களுடைய இந்த நோக்கத்தில் வேகமாக செயல்படுகின்றனர்.

கடந்த எட்டு ஆண்டு காலமாக “சமூக, இன பிளவுகளைத் தாண்டி, அனைத்தையும் உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க இந்து அடையாளத்தை உருவாக்குவதில் கணிசமான வெற்றியை பாஜக பெற்றுள்ளது. அதோடு சேர்ந்து நுண்ணிய நிலையில் (Micro Level) சாதியத் திரட்டலையும் அது மேற்கொள்கிறது” என்று 23 வது அகில இந்திய மாநாட்டின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும், “இந்துத்துவாவையும் அதன் பல்வேறு வகையான வகுப்புவாத அமைப்புகளையும் எதிர்த்துப் போராடுவதென்பதை அரசியல், தத்துவம், கலாச்சாரம் மற்றும் சமூகத் தளங்களில் நீடித்த வகையில் மேற்கொள்ள வேண்டும். இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை வலுப்படுத்த, உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” எனவும் அது குறிப்பிடுகிறது.

கட்சித்திட்டம் மற்றும் 23வது கட்சி காங்கிரஸ் சுட்டிக்காட்டிய அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு கோவை மற்றும் திருப்பூரில் பாஜக பின்பற்றிவரும் சில உத்திகளை காண்போம்.

கோவை – திருப்பூரில் எதிர்ப்பு உணர்வும், வகுப்புவாதமும்

கோவை மாவட்டம் தொழில்கள் நிறைந்த பகுதி. பஞ்சாலை மற்றும் இன்ஜினியரிங் துறையில் சில கார்ப்பரேட் நிறுவனங்களை தவிர்த்து பெரும்பான்மையாக சிறு-குறு தொழில் நிறுவனங்களே இயங்கி வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 1,200 ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளன. கோவை, திருப்பூருக்கு தேவையான முக்கிய கச்சா பொருட்களில் ஒன்று பருத்தி. பருத்தி பதுக்கலுக்கு சாதகமான கொள்கைகளால் நூல் விலை சென்ற 2020 அக்டோபர் மாதம் கிலோவுக்கு ரூ.237 என்பதிலிருந்து, 2022 மே மாதம் ரூ.474 என இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கோவை, திருப்பூரில் ஜவுளி, விசைத்தறி மற்றும்  பின்னலாடைத் தொழில்கள் பாதிக்கப்படுகின்றன.

மூலதனம் சுருங்குவதாலும், வங்கிகளிலிருந்து கடன் பெற இயலாததாலும் சிறு – குறு நிறுவனங்கள் நெருக்கடியில் உள்ளன. தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். வெளிநாடுகளிலிருந்து திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு கிடைத்த ஆர்டர்களில் மூன்றில் இரண்டு பங்கு குறைந்துவிட்டது. சம்பந்தப்பட்ட நாடுகள் ஆர்டர்களை பங்களாதேஷூக்கும், வியட்நாமுக்கும் மாற்றி கொடுக்கின்றன. உள்நாட்டில் பஞ்சு விலையை சீராக்கவும், ஜவுளித் துறையை தடங்கலின்றிச் செயல்பட வைப்பதற்கும் முதலாளிகள் சங்கத்தினர் தங்களின் கோரிக்கைகளை ஒன்றிய அரசிடம் தெரிவித்தும் அரசின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கவில்லை.

பொதுத்துறை நிறுவனமான இந்திய பருத்திக் கழகம் (சிசிஐ) விவசாயிகளிடமிருந்து பருத்தியைக் கொள்முதல் செய்ய ஜவுளித் துறையினர் ஒன்றிய அரசிடம் கேட்டபோது,  துறைக்கான அமைச்சர் பியூஸ் கோயல், “அரசை தலையிடச் சொல்லி யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. சந்தை சக்திகள் சுதந்திரமாக செயல்படட்டும்” என (19.11.2021) கூறிவிட்டார்.

கடந்த காலத்தில் பாஜக எதிர்க்கட்சியாக இருந்தபோது, இந்து முன்னணியைச் சார்ந்தவர்கள் திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழு என்ற ஒரு அமைப்பை உருவாக்கி கடையடைப்பு உள்ளிட்ட போராட்டத்தை நடத்தினர். அதன் மூலம் சிறு குறுந்தொழில்முனைவோர் மத்தியில் ஆதரவை பெற்றனர். ஆனால், இப்போது மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ளது. எனவே, பின்னலாடைத் தொழிலை பாதுகாக்க மகா யாகம் ஒன்றை நடத்தினர். யாகம் நடத்துவதன் வழியாக, அரசியல் சார்ந்த பிரச்சனைக்கு, நம்பிக்கை சார்ந்த ‘தீர்வை’ முன்னிறுத்துகின்றனர்.

1984களில் திருப்பூர் மாவட்டத்தில், பஞ்சப்படி கோரி வீறுகொண்ட வேலை நிறுத்த போராட்டம் நடந்த போது, அதனை முறியடிப்பதற்காக, முதலாளிகளோடு கைகோர்த்து, சங் பரிவாரத்தினர் ஆலைகளை இயக்க முயன்றனர். ஆனால், ஒன்றுபட்ட தொழிலாளர் படையின் எதிர்ப்பின் முன்னால் சரணடைந்து ஓட்டம் எடுத்தனர். இப்போதும், இந்தப் பகுதிகளில், தொழில் மற்றும் தொழிலாளர் நலன் காக்க இடதுசாரி இயக்கமும், தொழிற்சங்க இயக்கமும் தொடர்ந்து வலுவாக இயங்குவதற்கான தேவை உள்ளது. இந்த சூழலில் பாஜகவும், சங் பரிவாரமும் பலமடைந்தால், அது இடதுசாரி இயக்கத்தையும், தொழிற்சங்க இயக்கத்தையும் பலவீனப்படுத்தும்.

கோவை, திருப்பூரில் ஜவுளித் தொழிலில் மட்டும் நெருக்கடி ஏற்படவில்லை. கோவை மாவட்டத்தில் உள்ள இஞ்சினியரிங் தொழில்களில் லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு/குறு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை நெருக்கடியில் உள்ளன. கடந்த 20.12.2021 அன்று அகில இந்திய சிறு – குறு நிறுவனங்களின் 170 கூட்டமைப்புகள் இணைந்து நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தின. இப்போராட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டன.

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., கச்சா பொருட்கள் விலையேற்றம் என அடுத்தடுத்து நெருக்கடியை உருவாக்கும் கொள்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொள்கிறது. இருப்பினும், அண்மையில் நடைபெற்ற திருப்பூர் மற்றும் கோவை மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜக கடந்த காலத்தைவிட சற்று கூடுதலாகவே வாக்குகளை பெற்றுள்ளது. தொழில்கள் பாதிப்பதற்கும், தொழிலாளர்களின் வேலையிழப்பிற்கும் காரணம்  பாஜக அரசின் கடைப்பிடிக்கும் கொள்கைகளே என்ற போதிலும் கூட, பாஜகவிற்கு வாக்கு அதிகமாவது வகுப்புவாத உணர்வு வலுப்படுவதை காட்டுகிறது.

வகுப்புவாதத்தின் பல முகங்கள்

வகுப்புவாதத்திற்கு முக்கியக் காரணம் மதம்தான் என சிலர் கருதுகிறார்கள். அப்படி அல்ல. மதநம்பிக்கையும் மதத்தின் மீது பற்றுகொண்டவர்கள் அனைவரும் வகுப்புவாதிகளாக மாறுவதில்லை. மதநம்பிக்கை கொண்ட மக்கள் பலர் இதர மதத்தைச் சார்ந்தவர்களோடு சகோதரத்துவத்தோடும் நேயத்தோடும் வாழ்ந்து வருவதைக் காண்கிறோம். வகுப்புவாதத்திற்கு மதம் அடிப்படை காரணம் அல்ல. அதே நேரத்தில் மத நம்பிக்கையாளர்களைத்தான் வகுப்புவாதிகளாக மாற்றுகிறார்கள்.

வகுப்புவாத உணர்வை உருவாக்கும் நடைமுறைக்கு பேராசிரியர் கே.என்.பணிக்கர் ஒரு கேரளப் பெண்மணியை உதாரணம் காட்டி தனது நூலில் குறிப்பிடுகிறார். (மதச்சார்பற்ற நடவடிக்கைக்கான கையேடு)

”அந்தப் பெண்மணிக்கு ராமர் மீது பக்தி உண்டு. தினமும் கோவிலுக்கு செல்வதில்லை என்றாலும் ராமாயணத்தில் ஒன்றிரண்டு பக்கங்களை தினமும் காலையில் படிக்கும் பழக்கமுண்டு, இப்படிப் பட்டவர் அயோத்தியில் ராமர் கோவிலை பாஜக மேற்கொண்டபோது அதன் ஆதரவாளராக மாறினார்.

அயோத்தியா இயக்கத்தை எதிர்க்கும் முஸ்லீம் சிறுபான்மையினர் மீது அந்தப் பெண்மணிக்கு பகையுணர்வு ஏற்பட்டிருக்கக்கூடும். சாதாரண பக்தி/மத உணர்வு வகுப்புவாத உணர்வாக மாற்றப்பட்டது.

எனவே வகுப்புவாத உணர்வு நிலைக்கு கொண்டு வர மதநம்பிக்கை பயன்படுத்தப்படுகிறது. சாதாரண மக்களிடம் இந்த வகுப்புவாத உணர்வை உருவாக்கிட ராமர் கோவில் பிரச்சனை, முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் நடத்துவது, கிறிஸ்தவர்கள் மீது பொய்ப் பிரச்சாரம் செய்து அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு உதவுகின்றன.

வகுப்புவாத உணர்வினை உருவாக்கிய பிறகு, வதந்தி மற்றும் பொய்களை கட்டமைத்து, மத மோதல்களையும், கலவரங்களையும் உருவாக்குகிறார்கள். இதுபோன்ற வன்முறைகள் அவர்களின் அடுத்தகட்ட பாய்ச்சல் வேக வளர்ச்சிக்கு பயன்பட்டிருக்கின்றன.

கோவை – திருப்பூரில் சங் பரிவார அமைப்புகள்:

1940களில் தமிழகத்தில் கன்னியாகுமரி, சேலம், கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். சாகாக்கள் நடக்கத் துவங்கின. 1949 ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உருவானது. கோவை மற்றும் திருப்பூர் என்ற இரண்டு வருவாய் மாவட்டங்களை மாநில அரசு 2009ல் தான் உருவாக்கியது.

இந்து வியாபாரிகள் சங்கம்

கோவை நகரில் உள்ள திருப்பூர் குமரன் மார்க்கெட்டில் கடன் வசூல் செய்வதில் வியாபாரிகளுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டது. கடன் கொடுத்தல், வசூலில் ஏற்பட்ட முரண்பாட்டை இந்து வியாபாரிகள், இஸ்லாமிய வியாபாரிகளுக்கிடையிலான முரண்பாடாக மாற்றி இந்து முன்னணி அங்கே இந்து வியாபாரிகள் சங்கத்தை துவக்கியது. மத ரீதியில் துவங்கப்பட்ட முதல் சங்கம் இது ஆகும்.

கோவையில் ஜவுளி விற்பனை துறையிலும், எலக்ட்ரானிக் துறையிலும் இஸ்லாமிய வியாபாரிகளுக்கும் மார்வாடிகளுக்கும் போட்டி ஏற்பட்டது. பெரியார் திராவிட கழகம் சார்பில் மார்வாடிகளை தமிழகத்திலிருந்து விரட்டுவோம் என துண்டு பிரசுரம் வெளியிட்டனர். இந்து முன்னணி மார்வாடிகளுக்கு ஆதரவாக நின்றது. மார்வாடிகளும் இந்து முன்னணிக்கு நிதி உதவி செய்தார்கள். இச்சூழலில் கோவை நகரில் 1981ல் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பேச்சாளர் திருக்கோவிலூர் சுந்தரம் நபிகள் நாயகத்தை தாக்கி பேசியிருக்கிறார். அவரை இஸ்லாமிய பழமைவாதிகள் தாக்கியிருக்கிறார்கள். அடுத்தடுத்து திருக்கோவிலூர் சுந்தரம், ராமகோபாலன் போன்றோரின் வெறுப்பு பேச்சு நகரில் பதட்டத்தை உருவாக்கியது. 1982இல் ஹக்கிம் என்ற மாணவர் திராவிடர் கழக கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய போது படுகொலை செய்யப்பட்டார்.

கலவரமும், குண்டு வெடிப்பும்

1997ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று கான்ஸ்டபிள் செல்வராஜ் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, பதட்டம் விசிறிவிடப்பட்டது. நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் கலவரம் வெடித்தது. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு, படுகொலையில் 19 பேர் கொல்லப்பட்டனர். இவர்களுக்கும் செல்வராஜ் படுகொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

1998 பிப்ரவரி மாதத்தில், கோவைக்கு அத்வானி தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்தார். அப்போது அல்-உம்மா பயங்கரவாதிகள் ரயில் நிலையத்திலும், மருத்துவமனையிலும், மக்கள் கூடும் இடங்களிலும் குண்டு வைத்தார்கள். இதிலும் அப்பாவி மக்களே கொல்லப்பட்டார்கள். மேலும் இந்த சம்பவம் இந்து முன்னணியின் கொலைபாதகங்களுக்கு நியாயம் கற்பிக்க உதவியது. இஸ்லாமியர் மீதான வெறுப்பு பிரச்சாரமும், தாக்குதல்களும் அதிகரித்தன.

திருப்பூர் தொழில்முனைவோர் மத்தியில்

திருப்பூரில் தொழில் முனைவோர் மத்தியில் தனது செல்வாக்கை அதிகரிப்பதற்காக சங் பரிவாரம் மேற்கொண்ட முயற்சிகள் முக்கியமானவை. 2011 ஆம் ஆண்டு சாய ஆலைகளுக்கு உயர்நீதிமன்றம் சாயக்கழிவுநீரை வெளியேற்றும் பிரச்சனையில் முழுத் தடை விதித்தது. இதனால் மொத்த பின்னலாடை தொழிலும் நின்று போகும் நிலை ஏற்பட்டது. அப்போது “தொழில் பாதுகாப்புக் குழு” என்ற பெயரில் ஒரு அமைப்பை இந்து முன்னணியினர் உருவாக்கினர். ஏற்கனவே செயல்பட்டு வரும் வழக்கமான தொழில் அமைப்புகளைத் தாண்டி இந்த அமைப்பு சிறப்பாக செயல்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றனர். சாயஆலைப் பிரச்சனை, நூல் விலைப் பிரச்சனை ஆகியவற்றில் பிரம்மாண்ட இயக்கங்களை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் தேர்தல் வந்தபோது ஆர்எஸ்எஸ் குழுவினர் மாற்றத்துக்கான அணி என்ற பெயரில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றனர். இந்த வெற்றியை பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் கருத்தியலைப் பரப்ப முயற்சி மேற்கொண்டு, அதில் கணிசமான அளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளனர்.

ஆடிட்டர்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தியும், “ஸ்ரீபுரம் அறக்கட்டளை” போன்ற தன்னார்வ அமைப்புகளை உருவாக்கியும் இயங்குகிறார்கள். கடந்த காலத்தில் தொழில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் கூட்டாக சேர்ந்து அரசின் கொள்கை சார்ந்த பிரச்சனைகளில் கருத்து தெரிவிப்பது, இயக்கம் நடத்துவது ஆகியவற்றில் புகுந்து, சீர்குலைக்கும் வேலையை தற்போது நுட்பமாக செய்து வருகின்றனர். சமீபத்தில் தொழிற்சங்கங்கள் நடத்திய அகில இந்திய வேலை நிறுத்தம் மோசமாக சீர்குலைக்கப்பட்டது.

கல்வித்தளத்தில்

பெரும்பான்மையான தனியார் பள்ளிகள் தற்போது சிபிஎஸ்இ பாடத் திட்டத்திற்கு மாறிவிட்டன. இப்பள்ளி நிர்வாகங்களே ஆர்.எஸ்.எஸ். மாணவர்களை திரட்டுவதற்கு உதவி செய்கின்றன. தற்போது கோவையில் சில அரசு பள்ளிகளிலும், பள்ளி மைதானங்களிலும் சாகாக்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

திருப்பூரில் ஜெய்வாபாய் அரசுப் பள்ளி தமிழகத்தில் 6ஆயிரம் மாணவிகள் படிக்கக்கூடிய பெரிய மாநகராட்சிப் பள்ளியாகும். அப்பள்ளியில் பெண் ஏன் அடிமையானாள்? என்ற பெரியாரின் புத்தகத்தை விநியோகித்ததை பிரச்சனை செய்தனர். அந்த சம்பவத்தில் இருந்து தொடர்ந்து இப்பள்ளியைக் குறி வைத்து வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவியை ஆசிரியர்கள் மதமாற்றம் செய்வதாக சமீபத்தில் பிரச்சனையை தூண்டி சமூக ஊடகங்களில் பரப்பினர். ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்வித் துறை விசாரித்து அது உண்மையில்லை என்று கூறியது.

இந்து முன்னணியின் திட்டம்

இந்து முன்னணி அமைப்பு விநாயகர் சதுர்த்தி விழாவை நான்கு நாள் நிகழ்வாக நடத்துகிறது. இந்த நிகழ்வை பயன்படுத்தி உள்ளூர் குடியிருப்புகள் மட்டத்தில் மிக இளவயது (15 – 20 வயதுடையோர்) இளைஞர்களை அணிதிரட்டுவது நடந்து வருகிறது. இதில் வெளியூரில் இருந்து இங்கு வந்து குடியிருக்கும் சமூகங்களின் பாதுகாப்பின்மை உணர்வை பயன்படுத்தி, தங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்கின்றனர்.

சிலைகளை ஆற்றில், குளத்தில் அல்லது கடலில் கரைக்கும் ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த ஊர்வலத்தை இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலான மோதலை உருவாக்குவதற்கும் பயன்படுத்துகிறார்கள்.

ஏன் விநாயகர் சதுர்த்தியை தேர்ந்தெடுத்தார்கள்?

தமிழகத்தில் இந்து மதத்தில் உள்ள சைவர்களும், வைணவர்களும் வெவ்வேறு கடவுள்களை வழிபடுகிறார்கள். இரண்டு பகுதிகளை சார்ந்தவர்களும் சங் பரிவார அமைப்புகளில் உறுப்பினர்களாக சேருகிறார்கள். சைவ, வைணவ அடையாளங்களுக்கு அப்பாலும், சாதி வேறுபாட்டிற்கு அப்பாலும் கிராமங்களிலும் நகரங்களிலும் விநாயகரை இந்துக்கள் வழிபடுகிறார்கள். எனவே, விநாயகரை கையில் எடுத்தால் சைவ, வைணவ வேறுபாட்டு பிரச்சனை வராது என்று ஆழமாக பரிசீலித்து முடிவெடுத்திருக்கிறார்கள்.

இ.மு. நிர்வாகிகளாக இருப்போர் கம்பெனி கொடுக்கல், வாங்கல் வரவு செலவு பிரச்சனைகள், நிலப் பிரச்சனைகளில் கட்டப்பஞ்சாயத்து செய்வதும், சட்டரீதியாக காவல் துறையை நாடி நீண்ட காலதாமதத்தைச் சந்திப்பதை விட, இவர்களிடம் போனால் விரைவில் பிரச்சனை முடியும் என்ற தொழில் செய்வோர் மனநிலையும் இ.மு.வுக்கு ஒரு பிடியை உருவாக்கி உள்ளது. இதனால் அவர்கள் பொருளாதார ஆதாயமும் அடைகின்றனர்.

யாகம் – நம்பிக்கை, வியாபாரம்:

இந்து முன்னணி அமைப்பின் சார்பில் மகா யாகம் நடத்தப்பட்டதை முன்பே குறிப்பிட்டோம். அதில் மூட நம்பிக்கை மட்டுமல்லாது வியாபார நோக்கமும் இணைந்துள்ளது. திருப்பூரை அடுத்த  பொங்கலூரில் சோடஷ மகாலட்சுமி மகா யாகம் நடத்தி அதில் சுமார் 10 ஆயிரம் பேரை திரட்டினார்கள். பிறகு யாகம் நடத்திய இடத்தை ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து விட்டனர்.

ஆர்.எஸ்.எஸ். நடத்தும் சாகாக்கள்

கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் சுமார் 250 சாகாக்கள் நடந்து வருகின்றன. இப்படிப்பட்ட சாகாக்கள் சில அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பெரும்பாலும் தனியார் பள்ளி வளாகங்களில் நடந்து வருகின்றன. சங் பரிவார நடவடிக்கைகளில் இது முக்கியமானது. இதில் பயிற்சி பெறுபவர்களைத்தான் முழுநேர ஊழியர்களாக்குகிறார்கள். வெறுப்பு பிரச்சாரம் செய்வது, மத மோதலை உருவாக்குவது, சிறுபான்மை மக்களை தாக்குவது போன்ற நடவடிக்கைகளுக்கு வகுப்புவாத அரசியல் பயிற்சியோடு ஆயுதப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் சாகா என்பது, கம்பு, வாள், குண்டெறிதல் போன்ற பயிற்சிகளை உள்ளடக்கியது. உடற்பயிற்சி விளையாட்டுகள், வில்கள், அணிவகுப்புகள் போன்றவை மைதானங்களிலும் பிற பொது இடங்களிலும் நடத்தப்படுகின்றன. உடற்பயிற்சி என்கிற பெயரில்தான் இவை அனைத்தும் நடத்தப்படுகின்றன. ஒரு தீவிரவாத அணுகுமுறையையும், குடிமைச் சமூகத்தில் எவ்விதமான தாக்குதலையும், நடத்துவதற்கான மனநிலையையும் உருவாக்குவதே, இந்த நடவடிக்கைகளின் நோக்கம். இவை சிறுபான்மையினரின் மனதில் சந்தேகத்தையும் அச்சத்தையும், பாதுகாப்பற்ற உணர்வுகளையும் அடிக்கடி ஏற்படுத்துகின்றன.

மதக்கலவரத்தை ஆர்.எஸ்.எஸ். உருவாக்கும் முறை இதுதான்.

1. சிறுபான்மையினர் இந்த நாட்டுக்கு விசுவாசமான குடிமகன்கள் அல்ல என்று பிரச்சாரம் செய்து, பெரும்பான்மை சமூகத்தின் மத உணர்வைத் தூண்டுவது.

2. சிறுபான்மையினரின் எண்ணிக்கை கூடுகிறது, இந்துக்கள் எண்ணிக்கை குறைகிறது என்று தந்திரமாக பிரச்சாரம் செய்து பெரும்பான்மையினரிடம் அச்சத்தை ஆழமாக்குவது.

3. நிர்வாகத்தில் ஊடுருவி, ஆட்சிப் பணியிலும், காவல் பணியிலும் இருக்கும்  அதிகாரிகளுக்கு மதவாத கண்ணோட்டத்தை ஏற்படுத்தி, மதவாத அணுகுமுறையை மேற்கொள்ளத் தூண்டுவது.

4. பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு கத்தி, வாள், ஈட்டி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்த பயிற்சியளிப்பது.

5. எந்த ஒரு சிறு சம்பவத்திற்கும், மதச்சாயம் பூசி, மத ரீதியிலான பிளவை அதிகரித்து, மத வெறுப்பு உணர்வுகளை ஆழமாக்குவது.

சாதி வாரியாக மக்களை திரட்டும் முயற்சி

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக அமைப்புகளின் தலைமையில் பிராமணர்களே இருக்கிறார்கள் என்ற தோற்றத்தை மாற்றுவதற்காக சங் பரிவார அமைப்புகளின் தலைமை பொறுப்பில் பிராமணர் அல்லாதவர்களை திட்டமிட்டு கொண்டு வருகிறார்கள். எல்லா மாவட்டங்களிலும் இந்து முன்னணி அமைப்பிற்கு பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின பகுதியிலிருந்து தலைமைப் பொறுப்பிற்கு நியமனம் செய்கிறார்கள். மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் பகுதியில் பிரதானமான சாதி எது என்று கண்டறிந்து, அம்மக்களை சாதி ரீதியில் திரட்டுவதை சங் பரிவார அமைப்புகள் அணுகுமுறையாக கடைப்பிடித்து வருகிறார்கள்.  கோவை மாவட்டத்தில் உள்ள தேவாங்க செட்டியார் சாதியில் உள்ள சில பிரமுகர்களை பிடித்து அவர்கள் மூலமாக அந்த சாதியில் உள்ள கணிசமான மக்களை சென்றடைந்துள்ளார்கள். இதே போல சாதிய பெருமித உணர்வைத் தூண்டிவிட்டு கவுண்டர் சமூகத்தினரிடம் கணிசமாக ஊடுருவி உள்ளனர். சாதிய அணி திரட்டலுக்காக சமூக ஊடகங்களை நுட்பமாகவும், திறம்படவும் பயன்படுத்துகின்றனர். கோவை, திருப்பூர் பகுதிகளில் அருந்ததியர் சமூக மக்களையும் தங்கள் வளையத்திற்குள் கொண்டு வர பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊடக வலிமை

வாட்சாப், சமூக ஊடகங்களை பாஜக திறமையாக பயன்படுத்துவதை அறிவோம். அத்துடன் பாரம்பரிய ஊடகங்களையும் அவர்கள் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள். கோவை, திருப்பூர் இரண்டு மாவட்டங்களிலும் தினமலர் பத்திரிக்கை கூடுதலாக விற்பனையாகிறது. இந்த இதழில் பாஜகவுக்கு ஆதரவாகவும், இடதுசாரிகளுக்கு எதிராகவும் செய்திகள் வெளியாகின்றன. குறிப்பாக கேரளாவில் தோழர் பினராயி விஜயன் தலைமையிலான அரசை பற்றி அங்குவரும் அவதூறுகளை அப்படியே தினமலர் பரப்புகிறது.

சங் பரிவார உத்திகளை எதிர்கொள்ள

                பாஜக தலைமையிலான ஒன்றிய அரசாங்கமும், சங் பரிவார அமைப்புகளும் இந்துத்துவ வகுப்புவாத திட்டத்தை அமலாக்கிட அனைத்து வழிகளிலும் முயற்சிக்கிறார்கள். இந்த முயற்சிகள் மேக்ரோ (நாடு தழுவிய அளவிலும், மாநில மற்றும் மாவட்ட அளவிலும்) மற்றும் மைக்ரோ (உள்ளூர் சமூக) அளவிலும் மேற்கொள்ளப்படுகின்றன. இரண்டு தளத்திலும் இதனை நாம் எதிர்கொள்ள வேண்டும்.

மேக்ரோ அளவில்

நாடு தழுவிய அளவில் பாஜக ஒன்றிய அரசும், சங் பரிவாரமும் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கிறது. (உ.ம்., குடியுரிமை திருத்தச் சட்டம், ராமர் கோவில், அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவு நீக்கம், பொது சிவில் சட்டம்). இதே போல மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல்வேறு பிரச்சனைகளை கிளப்புகிறார்கள்.

நமது அரசமைப்பு சட்டத்தின் மதச்சார்பற்ற ஜனநாயக உள்ளடக்கத்திற்கு எதிராக இந்த செயல்பாடுகள் உள்ளன. மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துகின்றன. இந்த திட்டங்களுக்கு எதிராக கட்சியும், வர்க்க வெகுஜன அமைப்புகளும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். எதிர் செயல்பாடுகளை கட்டமைக்க வேண்டும்.

மக்களிடையே ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாக்கும் திட்டத்தை சுயேட்சையான முறையில் முன்னெடுப்பதுடன், ஒத்த கருத்துள்ள கட்சிகள் மற்றும் அமைப்புகளோடு கைகோர்க்க வேண்டும்.

மைக்ரோ அளவில்

                வகுப்புவாத சக்திகள், தனிநபர்களை அணுகும் தன்மையோடு மைக்ரோ செயல்பாடுகளை வகுத்துக் கொண்டுள்ளார்கள். வெளிப்படையாகத் தெரியும் அரசியல் நிகழ்வுகளில் இருந்து இவை மாறுபட்டுள்ளன. அதிகம் வெளியே தெரிவதில்லை.

மதச் சார்பின்மைக்காக இந்தத் தளத்தில் நாம் மேற்கொள்ளும் போராட்டம், மனித மனங்களை வென்றெடுப்பதற்கான ஒன்றாகும். அதற்கு ஏற்ப செயல்திட்டத்தை வகுத்துக்கொள்ள வேண்டும். மத நம்பிக்கையாளர்களை அணுகுகிறபோது அவர்களுடைய மத நம்பிக்கையை புண்படுத்திவிடக் கூடாது.

குழந்தைகளுக்கான மழலையர் பள்ளிகளை சங் பரிவாரத்தினர் பலர் தொடங்கி நடத்துகிறார்கள். அந்த நிலையிலேயே, வகுப்புவாத செயல்பாடுகளை தொடங்குகிறார்கள். ஆங்கில எழுத்துக்களை கற்பிக்கும்போதும் கூட, ஏ எனில் அர்ஜூனன், பி எனில் பீமன் என்பதாக கற்பிக்கிறார்கள். கோயில் வளாகங்களையும் கைப்பற்றுகிறார்கள்.

மேக்ரோ அளவில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை, மைக்ரோ அளவில் மத நம்பிக்கையுள்ள மக்களிடம் எடுத்துச் சென்று மெல்ல மெல்ல அவர்களை வகுப்புவாதிகளாக மாற்றும் விதத்தில் சங்க பரிவாரம் இயங்குகிறது.

எனவே, வகுப்புவாத திட்டத்தை முன் உணர்ந்து தலையீடு மேற்கொள்வது அவசியமாகும். மதச்சார்பற்ற, ஜனநாயக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். கூர்மையாக கவனம் செலுத்தி, வகுப்புவாத நடவடிக்கைகளை கண்டறிந்து, உரிய தலையீடு மேற்கொண்டு தடுக்கவும் வேண்டும். (உ.ம்., அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளாகங்களில் ஆர் எஸ் எஸ் சாகாக்கள் நடத்துவதை தடுத்து நிறுத்திட அரசு நிர்வாகத்தை அணுக வேண்டும்)

மதச்சார்பற்ற/ஜனநாயக நடவடிக்கைகள்:

கட்சியின் 23 வது அகில இந்திய மாநாடு, இந்துத்துவாவை எதிர்த்து போராடுவதற்கான 7 வழிமுறைகளை பட்டியலிட்டுள்ளது.

  1. கருத்தியல் அடிப்படையில் இந்துத்துவா கொள்கையை தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும். 2) வெறுப்பு/பயங்கரவாத தாக்குதல்களை எதிர்த்து முன்நிற்க வேண்டும். பொது இடங்களை வகுப்புவாதமயமாக்கும் முயற்சிகளை எதிர்க்க வேண்டும். 3) பழமைவாத, மூடநம்பிக்கை, கண்மூடித்தனமான போக்குகள், பகுத்தறிவின்மை போக்குகளை எதிர்த்து – அறிவியல் அடிப்படையிலான, பகுத்தறிவின் பார்ப்பட்ட கருத்துக்களை முன்னெடுக்க வேண்டும். 4) சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக, பாலின சமத்துவத்தை முன்னெடுக்க வேண்டும். பட்டியல் சாதி/பட்டியல் பழங்குடி மக்கள் மத்தியில் வகுப்புவாத சித்தாந்தம் பரவுவதை எதிர்கொள்ள வேண்டும். 5) பன்மைக் கலச்சாரத்தை முன்னிறுத்தும் நிகழ்வுகளில் சிறப்பு கவனம், செலுத்திட வேண்டும். 6) சமூக சேவை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். 7) கல்வித் துறையில் மதச் சார்பற்ற, ஜனநாயகப்பூர்வமான, ஒன்றிணைப்பு நிரம்பிய உள்ளடக்கத்தை உருவாக்கி பரப்பும் விதத்தில் முன்முயற்சி எடுக்க வேண்டும்.

நம்முடைய நடவடிக்கைகளும் உள்ளூர் சமூக தளத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

குழந்தைகள்

குழந்தைகளுக்காக துளிர் இல்லங்கள், பாலர் சங்கங்களை உருவாக்க வேண்டும். கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள பள்ளிகளை (குறிப்பாக அரசுப் பள்ளிகளை) மேம்படுத்திட முயற்சி எடுக்க வேண்டும். இரவு பள்ளிகளை நடத்தலாம். மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க திட்டமிட்டு பயிற்சிகள் தர வேண்டும். அதே போல மாணவர் மன்றங்களை ஏற்படுத்தி, சேவைப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.

இளைஞர்

பொதுவாகவே இளம் வயதில் வீர விளையாட்டுக்கள் மீது ஆர்வம் ஏற்படுகிறது. எனவே நாம் விளையாட்டு பயிற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். பொங்கல் திருவிழாவை ஒட்டி நாம் விளையாட்டு போட்டிகளை நடத்திவருகிறோம். அதில் கண்டறியப்படும் திறன்களை மேலும் மேம்படுத்தும் விதத்தில் ஒன்றிய, நகர, மாவட்ட/மாநில அளவில் போட்டிகளை நடத்திட வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பான பயிற்சிகளையும் வழங்க வேண்டும்.

சமூக செயல்பாடுகள்

யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகள் ஆரோக்கிய நோக்கில் மிக உதவிகரமான நடவடிக்கைகளாகும். அது ஆன்மீகச் செயல்பாடு அல்ல. கேரளாவில் ஒன்றிய நகர அளவிலும் கிராம மற்றும் வார்டு அளவிலும் நமது கட்சியின் சார்பில் யோகா பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை தயார் செய்து, அனைத்து மக்களுக்குமே பயிற்சி அளிக்கிறார்கள். இதே போல, நலவாழ்வுக்கான நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டும்.

படிப்பகங்கள், நூலகங்களை உருவாக்குவதுடன், கலை/இலக்கிய பயிற்சிகள், , குறும்படம்/பாடல் போன்ற நவீன கலை செயல்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும். ஈர்ப்பான விதத்தில் கலைக்குழுக்கள், நாடகக் குழுக்களை உருவாக்கி நிகழ்ச்சிகள் நடத்துவது, அதன் மூலம் மத நல்லிணக்க கருத்துக்களை பரப்புவது உதவி செய்யும்.

மரங்கள் நடுவது, ஏரி/குளங்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாப்பது என நடவடிக்கைகளை உருவாக்கி சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மக்களை இணைத்திட முடியும்.

கோயில் நிர்வாகத்தில் பங்கேற்பு

                இந்து கோயில்கள், உள்ளூர் அளவில் பண்பாட்டு மையங்களாகத் திகழ்கின்றன. அவற்றை கைப்பற்றும் சங் பரிவார அமைப்புகள், கோயில்களை பயன்படுத்தி தங்களுடைய நோக்கங்களை முன்னெடுக்கிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில கோயில் நிர்வாகத்தில் நமது தோழர்கள் பங்கேற்று நிர்வாகத்தை ஊழலற்ற, தூய்மையான சிறப்பான முறையில் நடத்திட பங்களிக்கிறார்கள். நாம் கோயில் நிர்வாக நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும்.  கோயில்/ மத நிகழ்ச்சிகள்  நடைபெறும் சூழல்களில் வகுப்புவாதிகளின் தலையீட்டை தடுக்க நம்முடைய செல்வாக்கை பயன்படுத்த வேண்டும்.

                வெறுப்பு பிரச்சாரம்/வகுப்புவாத சூழல் உருவாக்கப்பட்டு, வன்முறையோ கலவரமோ வெடிப்பதற்கு ஏதுவான நிலைமை உருவானால் – அந்த நிலைமையை மாற்றிட தீவிரமான திட்டமிட்ட தலையீடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

இதைப்போலவே, மசூதி, சர்ச் ஆகிய வழிபாட்டுத்தலங்களுடைய நிர்வாகத்திலும் பங்கேற்று, வகுப்புவாத நடவடிக்கைக்கு பயன்படுத்தாமல் தடுக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.

இந்துத்துவா நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க பல்வேறு துறைகளில் மேடைகளை உருவாக்குவதுடன் தேவைக்கு ஏற்ப முழு நேர ஊழியர்களை உருவாக்கிட வேண்டும்.

மேலே குறிப்பிட்ட பண்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தனியாக ஒரு அரங்கத்தின் பணி அல்ல. நம்முடைய அனைத்து அமைப்புகளும் மேற்சொன்ன விதத்தில் செயல்பட வேண்டும். வாய்ப்புள்ள மதச்சார்பற்ற சக்திகளோடு, அமைப்புகளோடு, தொண்டு நிறுவனங்களோடு கைகோர்க்க வேண்டும். தனி நபர்களும் கூட உள்ளூர் அளவில் பல்வேறு நடவடிக்கைகளை உருவாக்கி முன்னெடுக்க முயற்சிக்க வேண்டும்.

23வது கட்சி காங்கிரஸ்: முடிவுகளும் – அறைகூவல்களும்!

ஜி. ராமகிருஷ்ணன்

வீரம் விளைந்த கண்ணூர் மாவட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் 23 வது அகில இந்திய மாநாடு, 2022 ஏப்ரல் 6 முதல் 10 வரை நடந்தது.  கேரள மாநிலத்தின் வலிமை வாய்ந்த கம்யூனிஸ்ட் இயக்கம் வேர் பிடித்த இடம் கண்ணூர் மாவட்டம்தான். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் ரகசியமாக இயங்கிய கம்யூனிஸ்ட் குழு,  பரப்ரம் என்ற பகுதியில் 1937 ஆம் ஆண்டில் கூடி, முதல் கட்சிக் கிளையை அமைத்தது. இப்போது கண்ணூர் மாவட்டத்தில் மட்டும் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் உள்ளார்கள்.

கண்ணூரில், வெகு சிறப்பாக நடந்த அகில இந்திய மாநாட்டில், நாடு முழுவதும் இருந்து 729 பிரதிநிகளும், 78 பார்வையாளர்களும் பங்கேற்றார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டு, கட்சியின் அனைத்து மட்டங்களிலும் விவாதிக்கப்பட்ட அரசியல் நகல் தீர்மானம், மாநாட்டு பிரதிநிதிகளாலும் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது. மாநாட்டுக்கு முன்பாக … திருத்தங்கள் வரப் பெற்றன. மாநாட்டு பிரதிநிதிகள் தங்கள் விவாதத்தில் … திருத்தங்கள் முன்வைத்தார்கள்.

அரசியல் – ஸ்தாபன அறிக்கையின் மீது பிரதிநிதிகள் விவாதம் நடந்தது. அதில் … திருத்தங்கள் பெறப்பட்டன. இவை தவிர, அமைப்புச் சட்ட திருத்தம் முன்வைக்கப்பட்டது, மத்தியக்குழு, அரசியல் தலைமைக்குழு, பொதுச் செயலாளர் தேர்வு மற்றும் மத்திய கட்டுப்பாட்டுக் குழு தேர்வு ஆகியவை நடைபெற்றன. மொத்தத்தில் இந்த மாநாடு ஒற்றுமையையும், உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.

உலக நிலைமைகள்:

உலக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் தீர்வு இல்லை என்பதை இந்த காலகட்டம் மீண்டும் நிரூபித்துள்ளது. அதேசமயம், சோசலிச நாடுகளின் செயல்பாடுகள், மக்களை பாதுகாத்தபடியே முன்னேற்றம் சாத்தியம் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்தன.

குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று காலத்திலும் கூட, அமெரிக்க ஏகாதிபத்தியமும், பிற முதலாளித்துவ நாடுகளும் மக்கள் நலனை பின்னுக்குத் தள்ளி லாப வெறியோடு செயல்பட்டன. சோசலிச நாடுகள் அதற்கு நேர்மாறாக, களத்தில் முன்நின்று மக்களை பாதுகாத்தார்கள்.

இப்போது உலக பொருளாதார மந்தநிலை இன்னமும் ஆழமாகியுள்ளது. மறுபக்கம், மூலதன குவிப்பு நடவடிக்கை தொடர்கிறது. நிதி மூலதனத்தின் ஆதிக்கப் பிடி அதிகரிக்கிறது. நவதாராளமய கொள்கைகள் இந்த போக்கினை தீவிரப்படுத்துகின்றனவே தவிர, தீர்வு தருவதில்லை. இதனால் உலக மக்களிடையே வறுமையும், வேலையின்மையும் அதிகரிக்கிறது.

கடந்த மாநாட்டின் காலத்தில், உலகம் முழுவதும் வலதுசாரி திருப்பம் நடந்துவரும் போக்கினை கண்ணுற்றோம். இப்போதும் அந்த நிலைமைகள் தொடர்ந்தாலும், எதிர்ப்பு போராட்டங்கள் வலிமையடைந்துள்ளன. லத்தீன் அமெரிக்காவில் சிலி, வெனிசுவெலா, பொலீவியா மற்றும் ஹோண்டுரஸ் ஆகிய நாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் வலிமையடைந்துள்ளன. முற்போக்கு சக்திகளும், இடதுசாரிகளும் தேர்தல் வெற்றிகளை அடைந்துள்ளார்கள்.

உலக அரங்கில், சோசலிச நாடான சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக ஆகியிருப்பதுடன், வறுமை ஒழிப்பில் சாதனை புரிந்துள்ளது. இருந்தாலும், அமெரிக்கா தன்னுடைய உலக மேலாதிக்கத்தை பல வழிகளிலும் தொடர்கிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளில், வலதுசாரி அரசியல் சக்திகளை அமெரிக்கா ஆதரித்து ஊக்கமளிக்கிறது. மேற்கு ஆசியாவில் தொடர்ந்து தலையிடுவதுடன், ஆப்ரிக்காவில் ராணுவ தலையீடுகளை கூடுதலாக்கி வருகிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவின் தலைமையிலான  நேட்டோ படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. அதே சமயத்தில் கிழக்கு நோக்கி நேட்டோவை விரிவாக்கம் செய்ய முயற்சிக்கிறார்கள். அதன் காரணமாக எழுந்த  ரஷ்யா – உக்ரைன் இடையிலான முரண்பாடும், அதன் தொடர்ச்சியாக, டாலர் பரிவர்த்தனை வளையத்தை பயன்படுத்துவதில் ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும், ரூபிள் பயன்பாட்டின் மூலமே எரிபொருள் வர்த்தகத்தை மேற்கொள்ளும் ரஷ்யாவின் அறிவிப்பும் உலக நிதி பரிவர்த்தனை மீது தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

சோசலிச நாடுகளான கியூபா மற்றும் வட கொரியாவை  ‘அரச பயங்கரவாத’ நாடுகள் என்று அமெரிக்கா வகைப்படுத்தியுள்ளது. கியூபாவின் மீதான பொருளாதார தடைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்விதத்தில், ஏகாதிபத்தியத்திற்கும், சோசலிசத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் கூர்மையடைந்து வருகின்றன. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளும் பல்வேறு தளங்களில் தொடர்கின்றன. வளரும் நாடுகளின் மீது அமெரிக்காவின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலைமை, வளரும் நாடுகளுக்கும், ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான முரண்பாட்டினை வெளிப்படுத்துகிறது. மூலதனத்திற்கும், உழைப்புக்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடைந்து வருகிறது.

நமது அண்டை நாடுகளை பொறுத்தமட்டில், தெற்காசியாவில்  வகுப்புவாத சக்திகளின் வளர்ச்சியும், எதேச்சதிகார போக்கு அதிகரிப்பதையும் 22வது மாநாட்டு அறிக்கை எடுத்துக் காட்டியது. இந்தியாவின் பெரும்பான்மை அண்டை நாடுகளில் மதவழி, இனவழி சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

புவி வெப்பமாதல் காரணமாக, பருவநிலையில் அதிக தீவிரமான தாக்கங்கள் ஏற்பட்டுவருகின்றன. இதனால் ஏற்படும் உற்பத்தி சக்திகளின் நெருக்கடி, பல நூறு கோடி மக்களுடைய நலவாழ்விற்கு ஆபத்தாகி விடக் கூடாது என்றால் – வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையில் சமநீதி அடிப்படையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இந்த போராட்டம், நீடித்த ஒன்றாக அமைந்திடும்.

மேற்சொன்ன நிலைமைகளை விரிவாக ஆய்வு செய்த அகில இந்திய மாநாட்டில், அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பினை வலுப்படுத்துவதுடன், இந்தியாவை அமெரிக்காவிடம் சரணாகதி அடையச் செய்திடும் பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராக மக்களை திரட்டுவது என்று முடிவு செய்துள்ளது.

உலக சோசலிச சக்திகளோடு ஒற்றுமைப்பாட்டை அதிகரிப்பதுடன். தெற்கு ஆசியாவில் அமெரிக்க தலையீட்டை தொடர்ந்து எதிர்ப்பது, பாலஸ்தீன மக்களின் உரிமைகளோடு உடன் நிற்பது, அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டில் இந்தியாவையும் சேர்த்துப் பிணைக்கும் பாஜகவின் போக்கினை வலுவாக எதிர்ப்பது, ஏகாதிபத்திய தாக்குதலுக்கு எதிராக போராடும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும், வளர்முக நாடுகளுக்கும், சோசலிச நாடுகளுக்கும் ஆதரவினை நல்குவது என்று மாநாடு தீர்மானித்துள்ளது.

தேச நிலைமைகள்:

பாசிச வகைப்பட்ட, ஆர்.எஸ்.எஸ்.  வழிகாட்டுதலில் இயங்கும் பாஜக, நாட்டில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது அவர்களால் வகுப்புவாத – தேச வெறியை சுற்றி, உணர்ச்சித் தூண்டல் பிரச்சாரத்தை கட்டமைக்க முடிந்தது. மக்களின் துயரங்கள் அதிகரிக்கும் பின்னணியிலும் கூட, தேர்தல் வெற்றியினை சாதித்திட அவர்களால் முடிந்துள்ளது.

வேறுபட்ட பல இன அடையாளங்களையும், சமூக நிலைமைகளையும் கொண்டுள்ள மக்களிடையே ‘இந்து அடையாளத்தை’ உருவாக்குவதில் அவர்கள் வெற்றியடைந்துள்ளனர். பாசிச போக்குகளும், வலதுசாரி அரசியல் போக்கும் தீவிரமடைந்துள்ளன.

கொரோனா பெருந்தொற்றினை மிக மோசமாக எதிர்கொண்டு, கோடிக்கணக்கான மக்களை துயரத்தில் தள்ளியது மோடி அரசாங்கம். கடந்த 4 ஆண்டுகளில் இந்திய அரசமைப்பின் மீதும், அரசமைப்பு நிறுவனங்களின் சுயேட்சைத் தன்மையின் மீதும் திட்டமிட்ட விதத்தில் தாக்குதல் நடக்கிறது. மதச்சார்பற்ற ஜனநாயகம், கூட்டாட்சி, சமூக நீதி, பொருளாதார சுயச்சார்பு என அனைத்தையும் சிதைக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

மறுபக்கத்தில், நவதாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள் வேகமெடுக்கின்றன. ஆயுத தளவாட உற்பத்தி உள்ளிட்டு அனைத்து துறைகளிலும் நாட்டின் சுய சார்பு அழிக்கப்படுகிறது. மேற்சொன்ன போக்குகளால் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மோசமான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. சமூக நீதி ஏற்பாடுகள் சிதைக்கப்படுகின்றன. பெண்களின் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன.

ஆனால், மோடி அரசாங்கம் தனிநபர் அந்தரங்கத்தை உளவு பார்ப்பது, ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்துவது, பத்திரிக்கையாளர்களை கைது செய்வது, அரசு நிறுவனங்களை ஏவிவிடுவது என்று எதேச்சாதிகார பாதையில் வேகமாக பயணிக்கிறது.

கட்சிகளின் நிலை:

பெருமுதலாளிகளுக்கும் – வகுப்புவாத சக்திகளுக்கும் இடையிலான கூட்டு வலுப்பட்டுள்ளது (Corporate – Communal Nexus) . நவதாராளமய சீர்திருத்தங்களை பாஜக மூர்க்கமாக முன்னெடுக்கிறது. இதனால் நெருக்கடி சூழலிலும், பெரும்பணக்காரர்களின் செல்வ வளம் பல மடங்கு அதிகரித்து வருவதை நாம் பார்க்கிறோம்.

பாஜக – ஆர்.எஸ்.எஸ் வலைப்பின்னல் வேகமாக விரிவடைகிறது. அதன் பின்னணியுடன், பாஜக நாடு முழுவதும் தனது செல்வாக்கை பரப்பியுள்ளது. ஆளும் வர்க்கங்களுடைய பிரதான அரசியல் கட்சியாக உருவெடுத்திருக்கிறது.

12 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. 6 மாநிலங்களில் கூட்டணி ஆட்சி நடத்துகிறது. நாடாளுமன்றத்தில் 2 அவைகளையும் கட்டுப்படுத்துகிறது.

காங்கிரஸ் கட்சி – இந்திய ஆளும் வர்க்கங்களின் நலனை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சியின் அரசியல் செல்வாக்கும், அமைப்பு வலுவும் சரிந்து வருகிறது. மதச்சார்பின்மையை பறைசாற்றினாலும், இந்துத்துவா முன்னிறுத்தும் சவாலை திறம்பட எதிர்கொள்வதாக இல்லை. காங்கிரசால் எதிர்க் கட்சிகளை ஓரணியில் திரட்ட முடியாது. பாஜக – காங்கிரஸ் இரண்டு கட்சிகளையும் சம தூரத்தில் வைக்க முடியாது. அதே சமயம் நாம் காங்கிரஸ் கட்சியோடு அரசியல் கூட்டணியை ஏற்படுத்த முடியாது.

பிராந்திய கட்சிகள் – தொடக்கத்தில் பிராந்திய முதலாளித்துவ-நிலப்பிரபு வர்க்கங்களின் நலன்களுக்காக தங்களை நிலைநிறுத்திக் கொண்ட பிராந்தியக் கட்சிகள், பின்னர் மொத்தமாக, நவ-தாராளமயப் பாதையை ஏற்றுக்கொண்டன. கூட்டாட்சியின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், மாநில அரசுகளை வழிநடத்தும் பல பிராந்தியக் கட்சிகளுக்கும் பாஜகவுக்குமான மோதல் கூர்மையடைகிறது.

தமிழ்நாட்டில் திமுக, பீகாரில் ராஷ்ட்ரியா ஜனதாதளம், உ.பி., மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி ஆகியவை பாஜகவை எதிர்த்து முன்னணியில் உள்ளன. மகாராஷ்ட்டிராவில் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் – சிவசேனா அணியுடன் ஆட்சி அமைப்பதில் தேசியவாத காங்கிரஸ் கட்சி பங்கு வகிக்கிறது. ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப்பில் ஆட்சி அமைத்திருப்பதன் மூலம் முக்கியமான பிராந்திய கட்சியாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் வி.சி.க  போன்ற சில கட்சிகள் மதச்சார்பற்ற ஜனநாயக நிலைப்பாட்டை மேற்கொள்கின்றன.

அதே சமயம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பிஜூ ஜனதாதளம், தெலங்கானா ராஷ்ட்டிரிய சமிதி, திர்ணாமுல் காங்கிரஸ், ஏ.ஜி.பி., அ.இ.அ.தி.மு.க, தெலுங்குதேசம், அகாலிதளம் ஆகிய கட்சிகளின் நிலைப்பாட்டையும் அரசியல் தீர்மானம் விளக்குகிறது.

சிறுபான்மை அடிப்படைவாத சக்திகளின் வளர்ச்சியை பின்னுக்கு தள்ளுவதில் மதச்சார்பற்ற – ஜனநாயக சக்திகளின் செயல்பாடுகளுக்கு உள்ள முக்கியத்துவம் பற்றியும் தீர்மானம் கவனப்படுத்துகிறது.

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசாங்கத்தின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும், மதச்சார்பின்மையை பாதுகாக்கவுமான போராட்டங்களை நாம் விரிந்த ஒற்றுமையுடன் முன்னெடுக்க வேண்டும். பிராந்திய கட்சிகளோடு அதற்கான ஒத்துழைப்பை கொடுக்கும் அதே சமயத்தில் மாநிலத்தின் அரசியல் சூழ்நிலைமையை கருத்தில் கொள்ள வேண்டும்.

பிராந்திய கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், மக்களுக்கு பாதகமான நடவடிக்கைகளை, தனியாகவும், இடதுசாரி கட்சிகளோடு இணைந்தும் எதிர்க்கும் அதே சமயத்தில் – இந்த அரசாங்கங்களை பாஜக வழிநடத்தும் ஒன்றிய/மாநில அரசாங்கங்களுக்கு சமமாக ஒப்பிடக் கூடாது.

இந்துத்துவாவை வீழ்த்திட

மார்க்சிஸ்ட் கட்சியை பலப்படுத்துவது, இந்துத்துவா சக்திகளை தனிமைப்படுத்தி வீழ்த்துவதற்கான அடிப்படைத்தேவையாகும். அரசியல், கருத்தியல், பண்பாடு மற்றும் சமூக தளங்களில், நிலையான போராட்டத்தை நடத்திட வேண்டும். அதற்கான உறுதியான வழிமுறைகளை அரசியல் தீர்மானம் விவரிக்கிறது.

  1. கட்சியின் வலிமையும், இடதுசாரி சக்திகளின் வலிமையும் அதிகரிப்பது அவசியம். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை பரந்த அளவில் திரட்டுவதற்கு கட்சி உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
  2. நவ-தாராளமய கொள்கைகளுக்கு எதிராக கட்சி முன்னணியில் நின்று போராட வேண்டும். நாட்டின் சொத்துக்கள் அப்பட்டமாக கொள்ளையடிக்கப்படுவதற்கு எதிராக, அண்மையில் நடந்த, வரலாற்று சிறப்பு மிக்க விவசாயிகள் போராட்டத்தைப் போலவே தீவிரமான போராட்டங்களை நடத்துவதன் மூலமாகத்தான் பெருநிறுவன-வகுப்புவாத கூட்டணியை முறியடிக்க முடியும்.
  3. ஒப்புக்கொள்ளப்பட்ட பிரச்சனைகளில், மதச்சார்பற்ற எதிர்க் கட்சிகளோடு நாடாளுமன்றத்தில் கட்சி ஒத்துழைப்பு தரும்.
  4. நாடாளுமன்றத்திற்கு வெளியே, வகுப்புவாத நிகழ்ச்சி நிரலிற்கு எதிராக, அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் பரந்துபட்ட அளவில் அணி திரட்டுவதற்காக கட்சி நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
  5. நவ தாரளமய கொள்கைகளுக்கு எதிராகவும், எதேச்சாதிகார போக்கிற்கு எதிராகவும் கட்சி தனியாகவும், இடதுசாரி – ஜனநாயக சக்திகளோடு கைகோர்த்தும் போராடும்.
  6. வர்க்க – வெகுமக்கள் அமைப்புக்களின் ஒன்றுபட்ட நடவடிக்கைக்கான கூட்டுத் தளங்களை கட்சி ஆதரிக்கும். தொழிலாளர் – விவசாயிகள் – விவசாயத் தொழிலாளர்கள் இடையிலான ஒன்றுபட்ட நடவடிக்கைகளை வலுப்படுத்துவதை கட்சி ஆதரிக்கும்.
  7. கட்சியின் சொந்த பலத்தை அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
  8. முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்கங்களுடைய கொள்கைக்கு மாற்றான கொள்கைகளை முன்னிலைப்படுத்த வேண்டும்.
  9. அத்தகைய, இடதுசாரி ஜனநாயக திட்டத்தை முன்னிலைப்படுத்தி கூட்டுப் போராட்டங்களையும், இயக்கங்களையும் நடத்த வேண்டும்.
  10. தேர்தல்கள் நடக்கும்போது பாஜக எதிர்ப்பு வாக்குகளை ஒருமுகப்படுத்தும் விதத்தில் பொருத்தமான தேர்தல் உத்திகள், மேற்கூறிய அரசியல் கொள்கையின் அடிப்படையில் பின்பற்ற வேண்டும்.

நாட்டில் உள்ள அகில இந்திய கட்சிகளும், பிராந்திய முதலாளித்துவ கட்சிகளும் கடைப்பிடிக்கும் கொள்கைகளுக்கும், திட்டங்களுக்கும் மாறுபட்டதுதான் இடதுசாரி மாற்றுக் கொள்கை. அதன் அடிப்படையில் நாம் ஏற்படுத்த வேண்டியதே இடது ஜனநாயக அணி. இவை நம்முடைய உடனடி அரசியல் ஸ்தாபன பணியாகும். அதனை மேற்கொள்வதன் மூலம், வர்க்க பலாபலனில் மாற்றத்தை உருவாக்கிட வேண்டும்.

அதிகரிக்கும் எதிர்ப்புணர்வு:

மோடி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான உணர்வு மக்களிடையே அதிகரித்துவருகிறது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக, நாடு முழுவதும் போராட்டங்கள் எழுந்தன. தொழிற்சங்கங்களுக்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு இந்த காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. இரண்டு நாட்கள் நடைபெற்ற நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் தொடர்ச்சியாகவே, வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டம் எழுந்தது.

விவசாயிகளின் துயரங்கள் ஆழமடைந்துவரும் பின்னணியில் எழுந்த பொதுவான கோரிக்கைகளின் அடிப்படையில், விவசாய சங்கங்களின் ஒற்றுமை ஏற்பட்டது. 500க்கும் அதிகமான விவசாய சங்கங்களின் மாநாட்டை, விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு நடத்தியது. அதிலிருந்துதான் ஐக்கிய விவசாயிகள் முன்னணி உருவானது. விவசாயிகள் போராட்டத்தின் வரலாற்றுச்சிறப்பு மிக்க வெற்றியை இதுவே சாத்தியமாக்கியது. ஒன்றிய அரசாங்கத்தை பணிய செய்தது.

ஆனால் அதே சமயத்தில், மேற்கு உத்திர பிரதேசத்தில் பாஜகவினால் வாக்குகளை பெற்று வெற்றிபெற முடிந்துள்ளது. மத அடிப்படையிலான உணர்வினை உருவாக்குவதன் மூலமே இது  சாத்தியமானது என்பதை நாம் மாநாட்டின் வெளிச்சத்தில் புரிந்துகொள்ள முடியும்.

இடது ஜனநாயக திட்டம்

முதலாளித்துவநிலப்பிரபுத்துவ கொள்கைகளுக்கு மாற்றான இடது ஜனநாயக திட்டம் பின்வரும் அடிப்படையில் அமைய வேண்டும்.

  1. பொருளாதார இறையாண்மையை பாதுகாத்தல்
  2. அரசமைப்பு சட்டத்தை பாதுகாத்தல்
  3. குடிமை சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளை காத்தல்
  4. கூட்டாட்சி
  5. விவசாயி – தொழிலாளர் நலன்
  6. சமூக நீதி (சாதி, பாலினம், மாற்றுத்திறனாளிகள் பிரச்சனை மற்றும் குழந்தைகள் நலன்)
  7. மக்கள் நல திட்டங்கள்
  8. அனைவருக்கும் மருத்துவம்
  9. சுற்றுச்சூழல்
  10. பண்பாடு – ஊடகம்
  11. வெளியுறவுக் கொள்கை

பொருளாதாரஇறையாண்மை எனும்போது, பொதுத்துறைகளை பாதுகாப்பது மட்டுமல்லாமல் – குடிநீர், மின்சாரம், பொதுப் போக்குவரத்து, கல்வி மற்றும் மருத்துவத்தை அனைவருக்கும் உறுதி செய்வது. ஆயுத தளவாட உற்பத்தியை பொதுத்துறையில் பாதுகாப்பது. சிறு குறு தொழில் நிறுவனங்களை வளர்த்தெடுப்பது. பெரும்பணக்காரர்கள் மீது வரி விதிப்பது. வேளாண் துறையை பாதுகாப்பது, கூட்டுறவு ஏற்படுத்துவது. மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவையும் அடங்கும்.

விவசாயி – தொழிலாளர் பிரச்சனைகளில், குறைந்தபட்ச கூலி மாதத்திற்கு ரூ. 26 ஆயிரத்திற்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும். விலைவாசி புள்ளிக்கு தக்க உயர்ந்திட வேண்டும் என்பதும் சேரும். இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு, விவசாய தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டங்களை உறுதி செய்வதும் அதில் உள்ளடங்கும்.

இந்தியாவில், சாதிய படிநிலை நீடித்துவரும் நிலையில் சமூக நீதிக்கான போராட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதே நேரத்தில் சமூக நீதிக்கான நம்முடைய கவனம்பெண்கள், குழந்தைகள், பால் சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் என்ற அடிப்படையிலும் செலுத்தப்பட வேண்டும்.

அனைவருக்கும் நியாய விலையில் உணவுப் பொருட்களை உறுதி செய்வதுடன், அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்குதல். ஊரக – நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டங்கள். வேலையில்லாக் காலத்திற்கு நிவாரணம். இவை தவிர அனைவருக்கும் அறிவியல் அடிப்படையிலான கல்வியை உறுதி செய்வதும், தனியார் கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்துதல் மற்றும் இணைய இடைவெளிக்கு தீர்வுகாண்பதும் இதில் அடங்கும்.

பண்பாட்டுத் தளத்தில் நமது போராட்டம் வகுப்புவாத தாக்கத்திற்கு எதிரானதாக அமைய வேண்டும். 8வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளுக்கும் சமமான வாய்ப்புகளை உறுதி செய்வதை முன்னிறுத்திட வேண்டும். ஊடகச் சுதந்திரத்தை பாதுகாப்பது, ஊடகத் துறையில் ஏகபோகத்தை எதிர்ப்பது, சுயேட்சையான கட்டுப்பாட்டு அமைப்புகளை ஏற்படுத்துவது ஆகியவை இதில் உள்ளடங்கும்.

இவ்வாறு, இடது-ஜனநாயக திட்டத்தை முன்நிறுத்திய போராட்டங்களின் வழியாக ஒற்றுமையை கட்டுவதன் மூலமும், மக்களுக்கு நிவாரணம் அளிக்கக் கூடிய மாற்று திட்டங்களை செயல்படுத்துவதன் வழியாகவுமே இந்த போராட்டத்தில் முன்னேற முடியும். தத்துவ, அரசியல், பண்பாடு மற்றும் சமூக தளங்களில் போராட்டங்களை இணைத்து முன்னெடுக்க வேண்டும்.

ஸ்தாபன கடமைகள்:

கட்சியின் அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள ஸ்தாபன கடமைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

  • வரும் ஓராண்டு காலத்திற்குள் அனைத்து மாநிலக் குழுக்களும், இடது ஜனநாயக அணி குறித்த  திட்டத்தை விவாதித்து இறுதி செய்வதுடன் அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் அணி திரட்டும் சாத்தியமுள்ள சக்திகளை அடையாளம் காண வேண்டும்.
  • மாநிலங்களில் இடது ஜனநாயக மேடையை உருவாக்குவது பற்றி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பொதுவான புரிதலுக்கு வர வேண்டும்.
  • கேரளா, மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவில் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள இடது – ஜனநாயக முன்னணியை வலுப்படுத்துவது பற்றி விவாதிக்க வேண்டும்.
  • வெகுமக்கள் பாதையில் (மாஸ் லைன் ) கட்சி முழுமையான கவனம் செலுத்திட வேண்டும்.
  • வர்க்க அடிப்படையிலான பிரச்சனைகளிலும், வெகுமக்கள் பிரச்சனைகளிலும் (சமூக பிரச்சனைகளிலும்)  உள்ளூர் அளவில் நீடித்த போராட்டங்களை வளர்த்தெடுக்க வேண்டும்.
  • கட்சி உறுப்பினர்களின் தரத்தை மேம்படுத்துவது: 2023 ஆம் ஆண்டு கட்சி உறுப்பினர் பதிவு பரிசீலனையின் போது, ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ள 5 வழிகாட்டுதல்களை கண்டிப்பாக அமலாக்கிட வேண்டும்.
  • கட்சியின் கிளைகளை செயல்படுத்துவது: 6 மாத கால வரையறைக்குள் எத்தனை கிளைகளை செயல்படுத்துவது என்ற ஒரு இலக்கினை ஒவ்வொரு மாநிலக் குழுவும் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். கிளைச் செயலாளர்களுக்கான பயிற்சியும் வழங்கப்பட வேண்டும்.
  • 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் உறுப்பினர் பதிவு பரிசீலனை மற்றும் புதுப்பித்தலில், இளைஞர்கள், பெண்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதத்தில் திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
  • புதிய, இளம் முழுநேர ஊழியர்களை தேர்வு செய்வதற்கு திட்டமிட்ட முயற்சிகள் வேண்டும். தத்துவ, அரசியல் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். அதே போல தற்போதுள்ள முழு நேர ஊழியர்களுக்கு மறு கல்வியும், பயிற்சியும் வழங்குவதில் கவனம் தேவை.
  • ஆர்.எஸ்.எஸ் வகுப்புவாத அரசியலின் செயல்முறை பற்றிய குறிப்பினை இறுதி செய்து, கட்சி அரசியல் கல்விக்கான பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும்.
  • ஊரக தொழிலாளர்களுக்கான சங்கங்களும், கூட்டமைப்புகளும் ஏற்படுத்த வேண்டும்.
  • கட்சி ஸ்தாபனத்துடன், சமூக வலைத்தளங்களை ஒருங்கிணைத்து பயன்படுத்துவதற்கான திட்டத்தை மாநிலக் குழுக்கள் வடிவமைத்திட வேண்டும். இதற்காக வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை அமலாக்கும் விதத்தில் பயிலரங்குகள் நடத்திட வேண்டும்.
  • வெகுமக்கள் அமைப்புக்கள் சுயேட்சையாக செயல்பட வேண்டும். வழிகாட்டும் குழுக்களின் செயல்பாடுகளும், கட்சியை வளர்த்தெடுப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

முடிவுரை

கட்சி உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து, மிக அதிகமான சவால்கள் நிரம்பிய சூழலை கட்சி இப்போது சந்தித்துக் கொண்டுள்ளது. இந்திய குடியரசின் தன்மையையே மாற்றியமைக்க முயலும் பாஜக – ஆர் எஸ் எஸ் ஆட்சிக்கு எதிராக நமது கட்சியும், இடதுசாரிகளும், ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு போராட வேண்டியுள்ளது.

இடதுசாரி  – ஜனநாயக மாற்றினை வளர்த்தெடுக்கும் விதத்தில், வெகுமக்களை அணிதிரட்டும் புரட்சிகர கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் வர்க்க சக்திகளின் பலாபலனில், சாதகமான மாற்றத்தை கொண்டுவர முடியும்.

  • வலிமையான கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதற்கும் வலுப்படுத்துவதற்குமான நம் உறுதிப்பாட்டை இரட்டிப்பாக்குவோம் !
  • வெகுஜன நிலையுடன் கூடிய புரட்சிகரமான கட்சியை நோக்கி முன்னேறுவோம் !
  • இந்தியா முழுவதும், வெகுஜன அடித்தளத்தைக் கொண்ட வலுவான மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்குவதை நோக்கி முன்னேறுவோம் !

மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நகல் தீர்மானம் சொல்வது என்ன?

(மார்க்சிஸ்ட் கட்சியின் 23 வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் நகல் தீர்மானம் குறித்து : முழுமையாக வாசிக்க | ஆங்கிலம் (பி.டி.எப்) | Link )

  • ஜி. ராமகிருஷ்ணன்

2022 ஏப்ரல் மாதத்தில் நடக்கவுள்ள, நமது கட்சியின் 23 வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ள அரசியல் தீர்மானத்தின் நகலினை தற்போது கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ளது. (மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கவேண்டிய மாநாடு, கொரோனா பாதிப்பினால் 4 ஆண்டுகளுக்கு பின் நடக்கவுள்ளது) நகல் தீர்மானத்தை படிக்க உதவியாக ஒரு சுருக்கமான அறிமுகம் வழங்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

நாடு முழுவதும் உள்ள கட்சி அமைப்புகள் இந்த நகல் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தியும், தனியாகவும் திருத்தங்களை அனுப்புவார்கள். வரப்பெற்ற திருத்தங்களையும், மாநாடு நடக்கும்போது விவாதத்தில் முன்வைக்கப்படும் திருத்தங்களையும் கணக்கிலெடுத்துக்கொண்டு, அரசியல் தீர்மானம் இறுதிப்படுத்தப்படும். கட்சியின் கொள்கையை உருவாக்குவதில் கட்சியின் அணிகள் முழுவதையும் ஈடுபடுத்தும் இந்த நடவடிக்கை நமது கட்சியில் பின்பற்றும் உட்கட்சி ஜனநாயகத்தின் உயர்ந்த வெளிப்பாடு ஆகும்.

நகல் அரசியல் தீர்மானத்தை 3 பகுதிகளாக பகுத்துப் பார்க்கலாம். முதலாவது, உலகளாவிய நிலைமை. இரண்டாவது தேசிய நிலைமைகள். மூன்றாவது எதிர்கால அரசியல் கடமைகள்.

 உலக நிலைமைகள்:

 “நவீன தொழில் துறை, உலகச் சந்தையை உருவாக்கியுள்ளது… நவீன முதலாளித்துவ வர்க்கம் என்பதே நீண்டதொரு வளர்ச்சிப்போக்கின் விளைவு – உற்பத்தி முறைகளிலும், பரிவர்த்தனை முறைகளிலும் தொடர்ச்சியாக நிகழ்ந்த மாற்றங்களின் விளைவு” என்று 1848 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை குறிப்பிடுகிறது. இப்போது முன்னைக்காட்டிலும்  உலகச் சந்தை விரிந்து பரந்ததாக இருக்கிறது. அறிக்கை எழுதப்பட்ட 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்த நிலைமைகளில் இருந்து 20 ஆம் நூற்றாண்டிலும், தற்போதும் தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட வளர்ச்சி உலகச் சந்தையில் பெரும் தாக்கம் செலுத்துகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இந்தியா உள்ளிட்டு பல காலனி நாடுகள் விடுதலை அடைந்தன. எனவே, ஏகாதிபத்திய ஆதிக்கம் முந்தைய வடிவத்தில் தொடரமுடியவில்லை. இருந்தாலும் நவீன-தாராளமய பொருளாதாரக் கொள்கையின் மூலம், அறிவியல் தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட வளர்ச்சியைப் பயன்படுத்தி, தமது ஆதிக்கத்தை ஏகாதிபத்திய நாடுகள் வலுப்படுத்திக்கொண்டன. பொருளாதார ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக, உலகெங்கிலும் ராணுவத் தலையீட்டையும், அரசியல் தலையீட்டையும் தொடர்ந்து மேற்கொள்கிறார்கள்.

அதே நேரத்தில், பொருளாதாரத்தில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா, கொரோனா மரணங்களிலும் முதலிடத்தில் இருக்கிறது. இவ்வாறு, முதலாளித்துவத்தால் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி வருகிறது.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே, உலக முதலாளித்துவம் நெருக்கடியில் இருந்துவருகிறது. இதனைப் பற்றி நகல் தீர்மானத்தில் பத்தி 1.6 “உலக முதலாளித்துவம் மீட்சியடைந்து பழைய நிலைக்கு வருவது சாத்தியமாகவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) கணக்கீட்டின்படி உலக மொத்த உற்பத்தி வளர்ச்சி 2009 ஆம் ஆண்டில் 5.4 சதவீதமாக இருந்தது 2019 ஆம் ஆண்டில் 2.8 சதவீதம் என்ற நிலைக்கு தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது” என்பதை சுட்டிக்காட்டுவதுடன் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் நாட்டடங்கு விதிக்கப்பட்டதால் மொத்த உற்பத்தி மைனஸ் 4.4 சதவீதமானதையும் எடுத்துக் காட்டுகிறது.

வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளிலும், பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்துவருகிறது. அதனை பத்தி 1.8 விளக்குகிறது. வேலையின்மையும் வறுமையும் அதிகரித்து வருவதுடன் சுரண்டல் தீவிரமாகியிருப்பதையும் அது விளக்குகிறது.

வலதுசாரி திருப்பத்தில் மாற்றம்:

மேற்சொன்ன பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்களிடம் அதிருப்தி அதிகரிக்கிறது. அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டிருக்கும் தீவிர வலதுசாரி சக்திகள், கடந்த பத்து ஆண்டுகளில், பல நாடுகளில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தார்கள். ஆனால் அந்த நிலையில் இருந்து இப்போது மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

2018 ஆம் ஆண்டுக்கு பின், லத்தீன் அமெரிக்க நாடுகளில் வலதுசாரி சக்திகளுக்கு எதிரான எழுச்சி நடைபெற்றுவருவதை நகல் தீர்மானத்தின் பத்தி 1.36 முதல் 1.39 வரை விளக்குகிறது. 2019 ஆம் ஆண்டில், அமெரிக்கா மேற்கொண்ட தலையீட்டின் காரணமாக பொலிவியாவில் ஈவோ மொரேல்ஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதற்கு எதிராக வலுவான மக்கள் இயக்கத்தைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் இடதுசாரிகள் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்கள். பிரேசில் நாட்டில் 2018 ஆம் ஆண்டில் வலதுசாரிகள் ஆட்சியைப் பிடித்தார்கள். இப்போது அந்த ஆட்சிக்கு எதிரான மக்கள் எழுச்சி உருவாகி போராட்டங்கள் நடந்துவருகின்றன. தேர்தல் நடைபெற்றால், தொழிலாளர் கட்சியின் தலைவர் லூலா ஆட்சியைக் கைப்பற்றுவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

சிலி நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியையும் உள்ளடக்கிய இடதுசாரி ஆட்சி ஏற்பாட்டுள்ளது. மேலும் சர்வாதிகார ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் போலவே பெரு, ஹோண்டுராஸ், அர்ஜண்டைனா, நிகரகுவா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி சக்திகள் அதிகாரத்திற்கு வந்துள்ளன. வெனிசுவேலாவில் அமெரிக்காவின் நேரடித் தலையீட்டினை எதிர்த்த வலுவான மக்கள் இயக்கம் நடந்த பின்னணியில் மீண்டும் நிகோலஸ் மதுராவின் தலைமையிலான ஆட்சி அமைந்து இயங்கிவருகிறது.

ஐரோப்பிய நாடுகளிலும் ஆலைத் தொழிலாளர்கள், சேவைத்துறைகளில் பணியாற்றும் மருத்துவர், செவிலியர், சுகாரார பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட இதர உழைக்கும் மக்களும் பல வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். பிரான்ஸ், போர்ச்சுகல், கிரீஸ் போன்ற நாடுகளில், தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கக்கூடிய சட்டத் திருத்தங்களை எதிர்த்து போராட்டங்கள் நடந்துள்ளது. போர்ச்சுக்கல் போன்ற நாடுகளில் கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களுக்கான சலுகைகள் கோரி, போராட்டத்தை முன்னெடுத்து, சட்டத்தையும் நிறைவேற்றச் செய்துள்ளார்கள்.

கொரோனா நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு கியூபா, வடகொரியா போன்ற நாடுகளில் உள்ள சோசலிச அரசாங்கங்களை பலவீனப்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சிக்கிறது. ஏற்கனவே முன்னெடுத்துவரும் பொருளாதார தடைகளை தீவிரமாக்குகிறது. 

வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகள் உட்பட பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளார்கள். மறுபக்கம் மக்கள் சீனத்தின் சோசலிச அரசாங்கம் கொரோனா பெருந்தொற்றினை வெற்றிகரமாக எதிர்கொண்டிருப்பதுடன் உலகின் இரண்டாவது பொருளாதாரமாகவும் வலிமையடைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில், அதீத வறுமையை முற்றாக ஒழித்துள்ள சீனாவின் பிரகடனம் கவனிக்கத்தக்கதாகும். உலக அரங்கில் மக்கள் சீனத்தின் செல்வாக்கு உயர்ந்துள்ளது.

உலகின் பிரதான முரண்பாடுகள்:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள உலக நிலைமைகளையும், தேசிய நிலைமைகளையும் புரிந்துகொள்ள கீழ்க்காணும் பிரதான முரண்பாடுகளை மனதில் நிறுத்துவது அவசியமாகும்.

1)   சீனா, கியூபா, வடகொரியா உள்ளிட்ட சோசலிச நாடுகளுக்கு எதிரான ஏகாதிபத்திய நிலைப்பாடுகளும். சீனாவுடன் அமெரிக்கா கடைப்பிடிக்கின்ற மோதல் போக்கும் – ஏகாதிபத்தியத்திற்கும், சோசலிசத்திற்கும் இடையிலான முரண்பாட்டின் வெளிப்பாடுகளாக உள்ளன.

2)   அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையில் சலசலப்பு ஏற்பட்டதை கட்சியின் சென்ற மாநாடு சுட்டிக்காட்டியது. தற்போது ஜோ பைடன் ஆட்சிக்கு வந்துள்ளார். சில திட்டவட்டமான நடவடிக்கைகளை எடுத்து ரஷ்யாவிற்கும், சீனாவிற்கும் எதிரான அணிச்சேர்க்கையை உருவாக்கிட முயற்சி நடக்கிறது. இருப்பினும் ஏகாதிபத்திய நாடுகளுக்குள் ஏற்பட்ட சலசலப்புகள் தொடர்கின்றன.

3)   உலகம் வெப்பமாதலும், வளரும் நாடுகளின் மீதான கடன் சுமையும் முக்கிய பிரச்சனைகளாக உள்ளன. எனவே, ஏகாதிபத்திய நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரிக்கின்றன. லத்தீன் அமெரிக்கா, மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில் அதன் வெளிப்பாடுகளைப் பார்க்கிறோம்.

4)   உழைப்புக்கும் மூலதனம் மற்றும் முதலாளித்துவத்திற்கும் அமைப்பிற்கும் இடையிலான அடிப்படை முரண்பாடு தீவிரமடைந்துவருகிறது. தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன. வேலை இழப்பும், நவீன தொழில்நுட்பங்களின் வருகையால் வேலைச் சூழலில் மாற்றங்களும் தொடர்கின்றன. இவைகளை எதிர்த்து தொழிலாளி வர்க்கம் போராடி வருகிறது.

இத்தகைய பின்னணியில், உலகில் நடக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களை ஆதரிப்பதுடன், இந்தியாவிலும் அதனை வலுப்படுத்திட வேண்டும் என்று நகல் அறிக்கையில் பத்தி 1.65 தொடங்கி 1.75 விளக்கியுள்ளது. உலக அளவில் இடதுசாரி சக்திகளோடு கைகோர்ப்பதுடன், இந்தியாவிலும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிரான மக்கள் இயக்கங்களை வலுப்படுத்த கட்சி தனது உறுதிப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளது.

புவி வெப்பமாதல்:

புவி வெப்பமாதல் பிரச்சனை தீவிரமடைந்துவருகிறது. இதனால் ஏற்படும் பருவநிலை மாற்றம் உலக மக்களை பாதிக்கிறது. பருவநிலை மாற்றத்தை ஒரு வர்க்கப் பிரச்சனையாக பார்க்க வேண்டும் என்கிறது நகல் அறிக்கை. ‘உலக சமநீதிக்கான போராட்டம் தீவிரமடைந்து வருவதை சி.ஓ.பி 26 மாநாடு காட்டுகிறது, இந்த போராட்டம் மிக நீண்டதாக இருக்கும்’ என்று பத்தி 1.53 குறிப்பிடுவது முக்கியமானதாகும்.

இப்படியான சூழலில், உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையில் நடக்கும் ஆண்டுக் கூட்டங்கள் முக்கியத்துவம் பெருகின்றன. முக்கியமான சமூக பொருளாதார சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்கிற அனுபவப் பகிர்விற்கும், கருத்துப் பரிமாற்றத்திற்கும் அவசியம் உள்ளது. இந்த ஒத்துழைப்பை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்கிறது நகல் அறிக்கை.

தேசிய நிலைமைகள்:

ஆங்கிலத்தில் 63 பக்கங்கள் உள்ள நகல் அறிக்கையில், 19 பக்கங்கள் உலக நிலைமைகளும், 44 பக்கங்கள் தேசிய நிலைமைகளையும், எதிர்கால கடமைகளையும் கட்சி விவரித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கூடுதலான தொகுதிகளில் வென்றதுடன், கூடுதலான வாக்குகளையும் பெற்று அதிகாரத்திற்கு வந்திருக்கும் மோடி அரசாங்கம், தனது பாசிச வகைப்பட்ட இந்து ராஷ்ட்ரா திட்டத்தை தீவிரமாக முன்னெடுக்கிறது. பாஜகவைப் பற்றி கட்சி திட்டத்தில் 3 பத்திகள் நகல் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்படுகின்றன. அவற்றிலிருந்து கீழ்க்காணும் பகுதிகள் வாசிக்க:

“பாஜக அதிகாரத்திற்கு வருகிறபோது, அரசின் அதிகாரத்திலும், அரசு இயந்திரத்திலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவ வாய்ப்புக் கிடைக்கிறது. இந்துத்துவா தத்துவம் பழமைவாதத்தை வளர்க்கிறது, இந்து ராஷ்டிரத்தை நிறுவும் நோக்குடன் இந்தியாவின் பன்முகப் பண்பாட்டை நிராகரிக்கிறது.”

“மதவெறி அடிப்படையிலான பாசிச போக்குகளின் ஆபத்து வலுப்பெற்று வருவதை எதிர்த்து அனைத்து நிலைகளிலும் (கட்சி) உறுதியாகப் போராடும்”

இப்போதுள்ள மோடி தலைமையிலான ஒன்றிய அரசை, ‘வகுப்புவாத-பெருமுதலாளித்துவ கூட்டு’ (Communal-corporate nexus) என்று நகல் தீர்மானம் குறிப்பிடுகிறது. தனது பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் இந்த தன்மையை மோடி அரசு வெளிப்படுத்திவருகிறது.

மதச்சார்பற்ற ஜனநாயகம், கூட்டாட்சி, சமூக நீதி மற்றும் பொருளாதார இறையாண்மை ஆகிய நமது அரசமைப்பின் 4 தூண்களையும் தகர்த்து, இந்திய குடியரசின் தன்மையையே மாற்றிவருகிறது.

தேர்தல் பிரச்சாரத்தினை வகுப்புவாத தேசியவாத வெறியைச் சுற்றி அமைத்துக்கொண்டதன் மூலம், மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகள் தேர்தலில் எதிரொலிக்காமல் செய்ய முடிந்திருப்பதுடன், உள்ளூர் அளவில் சாதி அடிப்படையிலான திரட்டல்களை மேற்கொண்டு அதனைக் கொண்டு ‘இந்து அடையாளம்’ உருவாக்குவதையும் செய்துள்ளார்கள். ஊடகங்களையும், சமூக ஊடகத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள். பெருமளவில் பணம் தேர்தல் களத்தில் பயன்படுத்தப்படுகிறது.

பொருளாதார இறையாண்மையின் மீதான தாக்குதல்:

2019 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின், மோடி அரசாங்கம், நவ தாராளமய பொருளாதாரக் கொள்கையை மேலும் தீவிரமாக அமலாக்குகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை அளிப்பதும், பொதுத்துறைகளை தனியார்மயம் ஆக்குவதுமான நடவடிக்கைகளோடு வேறு பல வடிவங்களிலும் பொருளாதார இறையாண்மையின் மீது தாக்குதல் நடக்கிறது. பாதுகாப்புத்துறை உட்பட இந்தியாவின் அனைத்து பொதுத்துறைகளிலும் தனியார்மயத்தை முன்னெடுக்கிறார்கள். இவ்வாறு இந்திய சுயச்சார்பின் அடிப்படைகள் தகர்க்கப்படுகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களை சார்ந்திருக்கும் நிலையை நோக்கி நாடு நகர்கிறது.

கொரோனா பரவலுக்கு முன்பே இந்திய பொருளாதார வளர்ச்சி குறையத் தொடங்கியிருந்தது. இப்படியான சூழலில் அரசாங்கம் பொதுச் செலவினங்களை அதிகரிக்க வேண்டும். ஆனால் பொதுச் செலவினங்கள் வெட்டிச் சுருக்கப்பட்டன.  இப்போது அது மந்தநிலையை எட்டியுள்ளது.

வேளாண் துறையில் செலவினங்கள் அதிகரித்திருப்பதுடன், அதீத வட்டியும், மானியக் குறைப்பும் நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது. கொரோனா பரவலின் காரணமாக ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான அவசியம் அதிகரித்தது ஆனால் அரசின் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கவில்லை. மறுபக்கத்தில், பெருமுதலாளிகளின் ரூ.10.72 லட்சம் கோடி அளவிலான வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 13 நிறுவனங்களின் ரூ.4.5 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களை திரும்ப செலுத்துவதில் இருந்து 64% தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் பொதுச் சொத்துக்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்படுகின்றன.

இந்தியாவின் 10 பெரும் பணக்காரர்களிடம் நாட்டின் சொத்துக்களில் 57% உள்ளது. 50 சதவீதம் இந்திய ஏழைகளிடம் மொத்தச் சொத்துக்களில் 13% மட்டுமே உள்ளது. இதே காலகட்டத்தில் சட்டப்படியான ஊழல் முலம் பாஜக பல ஆயிரம் கோடி பணம் திரட்டுவது  முன்னெடுக்கப்படுவதையும் நகல் ஆவணம் விளக்குகிறது.

இவ்வாறாக, கொரோனா பெருந்தொற்று காலத்திலும் கூட நவ-தாராளமயக் கொள்கைகளே வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. கொரோனா தொற்றினையும் அறிவியலற்ற முறைகளில் கையாண்டதுடன், ஜி-20 நாடுகளோடு ஒப்பிட்டால் மிகக் குறைவான பொதுச் செலவினத்தை மேற்கொண்டு, அவசியமான பொருளாதார ஊக்க நடவடிக்கைகளையும் புறந்தள்ளியது பாஜக அரசாங்கம்.

எதேச்சதிகார திசைவழியில்:

யு.ஏ.பி.ஏ., / என்.எஸ்.ஏ மற்றும் தேசத்துரோக வழக்குகளைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மிக மோசமான இந்தச் சட்டங்கள் மதவழி சிறுபான்மையினர் மீது குறிவைத்து செயல்படுத்தப்படுகின்றன. சொந்த மக்களையே வேவுபார்க்கும் போக்கும் அதிகரித்துள்ளது.

நாட்டின் கூட்டாட்சி அமைப்பின் மீது தாக்குதல் முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பாஜகவின் அரசியல் திட்டங்களை முன்னெடுக்க ஆளுநர் பயன்படுத்தப்படுகிறார். பொதுப் பட்டியலில் உள்ள விவகாரங்களில் ஒன்றிய அரசு தன்னிச்சையான முடிவுகளை தொடர்ந்து திணிக்கிறது. நிதிப் பகிர்வு செய்வதிலும், வரிக் கொள்கைகளும் மாநிலங்களுக்கான வாய்ப்புகள் சுருக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமைகளை நகல் அறிக்கை உதாரணங்களுடன் விளக்குகிறது.

நாடாளுமன்றம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் மற்றும் ஊடகங்களின் சுயேட்சையான தன்மையின் மீது தாக்குதல் நடக்கிறது. விசாரணை அமைப்புகள், அரசியல் நோக்கத்தோடு ஏவிவிடப்படுவதும் தொடர்கிறது. இவை அனைத்தையும் விளக்கும் நகல் அறிக்கை, ஜம்மு காஷ்மீர் மீது நடத்தப்படும் தாக்குதல்களைப் பற்றியும் விரிவாக விளக்கியுள்ளது.

சமூக நீதியின் மீது தாக்குதல்:

பாசிச தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் கருவியாக செயல்படும் பாஜக, அரசாங்கத்தை பயன்படுத்தி அதன் கொள்கைகளை தீவிரமாக முன்னெடுக்கிறது. இதனால் சமூக நீதி ஏற்பாடுகள் சிதைக்கப்படுகின்றன. பெண்கள், சிறுபான்மையினர், பட்டியலினத்தார், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோர், பாலியல் சிறுபான்மையினர் என அனைத்து தரப்பின் மீதும் ஒடுக்குமுறைகள் அதிகரித்துள்ளன.

புதிய கல்விக் கொள்கை, மாநிலங்களிடம் கலந்து ஆலோசிக்காமலே முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் அடிப்படையில், அறிவியல் விரோதமாகவும், வரலாற்றின் இடத்தில் நம்பிக்கையை புகுத்துவதுடன், இந்தியாவின் பன்முகத்தன்மை மீதான தாக்குதலாகவும் அமைந்திருக்கிறது. இந்திய தத்துவங்களுக்கு மாறாக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை திணிப்பதாகவும் உள்ளது.

வெளியுறவுக் கொள்கை:

இந்தியா பின்பற்றிவந்த கூட்டு சேராக் கொள்கை கைவிடப்பட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக அதை மாற்றும் போக்கில் பாஜக செயல்படுவதை நகல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பருவநிலை மாற்றம், அதிகரிக்கும் கடன் போன்ற உலகு தழுவிய பிரச்சனைகளிலும், உள்நாட்டுக் கொள்கைகளிலும் இது இந்திய நலன்களை பாதிக்கும். அண்டை நாடுகளுடனான உறவிலும் இது பாதிப்பை உருவாக்குகிறது.

அதே போல, அறிக்கையின் பருவநிலை மாற்றம் மற்றும் சூழலியல் தொடர்பான பகுதி, நாம் சந்தித்துவரும் பிரச்சனைகளை விளக்குகிறது. நமக்கென்று சுயேட்சையான அணுகுமுறையின் அவசியத்தை அந்தப் பகுதி சுட்டிக்காட்டுகிறது.

நம்பிக்கை தரும் மக்கள் போராட்டங்கள்:

கடந்த 4 ஆண்டுகளில், நாடு முழுவதுமே மக்கள் போராட்டங்கள் அதிகரித்துள்ளன. குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டங்களும், அதனை தொடர்ந்து நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவையாகும்.

அன்னிய மூலதனத்தோடு கைகோர்த்துக் கொண்டுள்ள இந்திய பெருமுதலாளிகளின் திட்டங்களுக்கும், இந்திய விவசாயிகள் மற்றும் ஒரு பகுதி பணக்கார விவசாயிகளுக்கும் இடையிலான மோதலாக விவசாயிகள் போராட்டத்தை பார்க்க வேண்டும். பெரிய முதலாளிகளின் நலன்களுக்கும், பெருமுதலாளி அல்லாத கோடிக்கணக்கான சிறு/குறு தொழில்முனைவோர் மற்றும் ஒரு பகுதி நடுத்தர முதலாளிகளின் நலன்களுக்கும் இடையிலான மோதலும் போராட்டங்களில் வெளிப்படுகிறது.

நகல் அறிக்கை குறிப்பிடும் மேற்சொன்ன வர்க்கங்களின் மீதான தாக்கத்தை கணக்கில் கொண்டு, தொழிலாளர் இயக்கமும், விவசாயிகள் இயக்கமும் முன்னேறிட வேண்டும். ஆளும் வர்க்கத்தின் கூட்டாளிகளிடையே எழக்கூடிய முரண்பாடுகளை பயன்படுத்தி சுரண்டப்படும் வர்க்கங்கள் தங்களுடைய வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என நகல் அறிக்கை பணிக்கிறது.

அரசியல் கட்சிகளைப் பற்றி:

அரசியல் கட்சிகளைப் பற்றிய நகல் அறிக்கையின் மதிப்பீடு கவனமாக வாசிக்க வேண்டியதாகும். “இந்திய ஆளும் வர்க்கங்களுடைய பிரதானமான கட்சியாக பாஜக உருவெடுத்திருக்கிறது. இதன் துணையோடு ஆர்.எஸ்.எஸ். தனது வலைப்பின்னலை விரிவாக்குகிறது. இந்தியாவின் பெரிய கட்சியாகவும் பாஜக மாறியுள்ளது.” அதே சமயத்தில் பல மாநில தேர்தல்களில் பாஜக தன்னுடைய இலக்குகளை எட்டமுடியாத நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது. பாஜக  தற்போது இந்தியாவின் 12 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது, நாடாளுமன்றத்தில் 2 அவைகளிலும் பெரும்பான்மை பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி, இந்திய ஆளும் வர்க்கங்களின் நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. தான் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் நவ-தாராளமய கொள்கைகளை முன்னெடுக்கிறது. காங்கிரசின் பலமும் செல்வாக்கும் குறைந்துவருகிறது. உட்கட்சி பூசலின் காரணமாக காங்கிரசில் இருந்து விலகிய பலரும் பாஜகவில் இணைகிறார்கள். மதச்சார்பின்மையை தமது கொள்கையாக கூறினாலும், இந்துத்துவா கொள்கையுடன் சில சமயங்களில் சமரசம் செய்துகொள்கிறது. இதர மதச்சார்பற்ற கட்சிகளை திரட்டும் திறனையும் அது இழந்துள்ளது.

கடந்த மாநாடு, ‘ஆர்.எஸ்.எஸ். பின்புலத்துடன் செயல்படும் பாஜக, பிரதான ஆபத்து’ என்பதை சுட்டிக்காட்டியது. எனவே பாஜகவையும், காங்கிரசையும் ஒரே தட்டில் வைக்க முடியாது. இருப்பினும், காங்கிரஸ் கட்சியுடன் அரசியல் அணிச்சேர்க்கையை கட்சி ஏற்படுத்திக்கொள்ள கூடாது என்பதை நகல் அறிக்கை தெரிவிக்கிறது.

மாநில கட்சிகளைப் பொருத்தமட்டில், அவை  நவ-தாராளமய கொள்கைகளையே முன்னெடுக்கின்றன. அரசியல் சந்தர்ப்பவாத போக்கினை அவ்வப்போது கடைப்பிடித்து வந்துள்ளார்கள். எனினும் கூட்டாட்சியின் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவரும் சூழலில் மாநில கட்சிகள் பலவும் பாஜகவுடன் கூர்மையாக முரண்படுகின்றன.

பொதுவான பிரச்சனைகளில் கரம் கோர்க்க முன்வரும் மாநில கட்சிகளுடன் ஒத்துழைப்பதுடன், மாநிலங்களின் தன்மைக்கு ஏற்ப உத்திகளை வகுத்திட வேண்டும். அதே சமயத்தில் மாநில கட்சிகளின் தலைமையிலான அரசாங்கங்கள் முன்னெடுக்கும் கொள்கைகள் மக்களை பாதிக்கும்போது, தனியாகவும், இடதுசாரி கட்சிகளோடு இணைந்தும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். மாநில ஆட்சிகளை, ஒன்றிய அரசோடு இணைவைத்து பார்க்கக் கூடாது. (விரிவாக வாசிக்க : நகல் அறிக்கை பிரிவு 2.139 – 2.143)

அதே போல, இஸ்லாமியர்களிடையே செயல்படும் தீவிரவாத மற்றும் அடிப்படைவாத அமைப்புகளைப் பற்றி குறிப்பிடும்போது, ஆர்.எஸ்.எஸ். முன்னெடுக்கும் அரசியலுக்கு இது சாதகமாக அமைவவதை சுட்டிக்காட்டும் நகல் அறிக்கை, சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக உறுதியாக நின்று, மதச்சார்பற்ற மேடைகளில் திரட்டிட வேண்டும்  என்று பணிக்கிறது.

வலிமையான மார்க்சிஸ்ட் கட்சி:

ஆர்.எஸ்.எஸ். வலைப்பின்னல் வேகமாக வளர்ந்துவரும் சூழலில், மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவுத்தளத்தில் ஏற்பட்டிருக்கும் அரிமானத்தை நகல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கேரளத்தில் நமது ஆட்சியை பலவீனப்படுத்தும் விதத்தில் பாஜக அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுகிறது. முன்னணி ஊழியர்களின் மீதான தாக்குதலும் முன்னெடுக்கப்படுகிறது.

மேற்கு வங்கத்தில், கட்சி எதிர்கொண்டுள்ள பின்னடைவை சுய விமர்சனப் பார்வையுடன் ஆய்வு செய்து, அதிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ள முடிவுகளை, சிரத்தையுடன் அமலாக்கிட வேண்டும் என்று நகல் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. திரிபுராவிலும் நம் மீதான பாசிச வகைப்பட்ட தாக்குதல்கள் தொடர்கின்றன.  இந்த மாநிலங்களில் நமது ஆதரவுத்தளத்தில் சரிவும் ஏற்பட்டு வருகிறது.

நமது கட்சியின் ஆதரவுத்தளம் பாதிக்கப்பட்டால் அது மக்கள் நலனை முன்னிறுத்தி நாம் மேற்கொள்ள வேண்டிய தலையீடுகளை பலவீனப்படுத்தும். எனவே, கட்சியை வலுப்படுத்த வேண்டியது நம் முன் உள்ள முக்கியமான கடமையாகும். கொல்கத்தா பிளீனம் எடுத்த முடிவுகளை சிரத்தையுடன் அமலாக்க வேண்டும். அரசியல், தத்துவ, ஸ்தாபன பணிகளை முன்னெடுக்க வேண்டும். தொடர்ச்சியாக மக்கள் கோரிக்கைகள் மீது இயக்கத்தை நடத்த வேண்டும். அவர்கள் மத்தியில் செல்வாக்கை உயர்த்த வேண்டும். உள்ளூர் அளவில் இயக்கங்களை கட்டமைத்து மக்களைத் திரட்ட வேண்டும்.

நவ-தாராளமய கொள்கைகளின் அமலாக்கத்தினால் மக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரங்களும் கேள்விக்குறியாகியுள்ளது. வேலையின்மை, வறுமை உள்ளிட்ட துன்ப துயரங்கள் அதிகரிக்கின்றன. இந்த சூழலில், மக்களுக்கு மதவெறியூட்டி, சாதிவெறியூட்டி, இனவெறியூட்டி இயங்கும் அதீத வலதுசாரி கட்சிகள் அதிகாரத்திற்கு வருகிறார்கள்; அல்லது  போராட்டங்களை சீர்குலைக்கிறார்கள். இப்படியான நிலைமைகளில் தலையீடு செய்து மக்களை வென்றெடுக்கக் கூடிய முயற்சியில் பல நேர்மறையான அனுபவங்களும் உலகத்தில் உள்ளது. அவைகளை நகல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இடது ஜனநாயக திட்டம்:

நகல் அறிக்கையின் பத்தி 1.17 – 1.19 சுட்டுவது போல செயல்பட்டு இந்தியாவில் நமது இயக்கத்தை முன்னேற்றுவதே ‘இடது ஜனநாயக திட்டம்’.

மக்கள் ஜனநாயக அணியில் இடம்பெற வேண்டிய வர்க்கங்களை திரட்டுவதே இடது ஜனநாயக திட்டத்தின் நோக்கம். இடது ஜனநாயக அணியை கட்டுவதை பலரும் தொலைநோக்கு திட்டமாகவே கருதுகிறார்கள். அவ்வாறு அல்ல. இடது ஜனநாயக அணியை கட்டுவதை கட்சியின் அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாக மேற்கொள்ள வேண்டும் என்பதே நம் முடிவு.

துன்ப துயரங்களில் உள்ள மக்களின் தேவைகளையே நாம் இடது ஜனநாயக திட்டத்தில் முன்னெடுக்கிறோம். நம் திட்டங்களும் கோரிக்கைகளும் தான் முதலாளித்துவ கட்சிகளின் திட்டங்களுக்கு மாற்று. 

இடது ஜனநாயக அணியின் திட்டம், “பொருளாதார இறையாண்மையை பாதுகாத்தல், அரசமைப்புச் சட்டத்தை பாதுகாத்தல், ஜனநாயக உரிமைகளை, குடிமக்கள் உரிமைகளை காத்தல், கூட்டாட்சியை பாதுகாப்பது, பாட்டாளி வர்க்கம் மற்றும் விவசாயிகள், சமூக நீதி, மக்கள் நலத்திட்டங்கள்” என்ற தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளது. இவைதான் பாதிக்கப்படும் மக்களின் பெரும்பான்மையான கோரிக்கைகள்.

இடதுசாரி கட்சிகளும், அவர்களின் வர்க்க வெகுஜன அமைப்புகளும், இடதுசாரிகள் குழுக்கள் மற்றும் தனிநபர்களும், பல்வேறு கட்சிகளில் உள்ள சோசலிஸ்டுகளும், ஜனநாயக பிரிவினரும், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை முன்னெடுக்கும் பட்டியலினத்தார், பழங்குடியினர், பெண்கள், சிறுபான்மையோர் மற்றும் சமூக இயக்கங்கள் ஆகியவை   – நாம் அமைக்க வேண்டிய இடது ஜனநாயக அணியின் தொடக்கமாக அமைந்திடுவார்கள். இந்த சக்திகளை ஒருங்கிணைப்பதன் மூலமே இடது ஜனநாயக அணிக்கு ஒரு திட்டவட்டமான வடிவம் கிடைக்கும் என்று 22 வது மாநாட்டின் அரசியல் தீர்மானம் குறிப்பிடுகிறது.

எனவே இந்தப் பணிகளை வேகப்படுத்த வேண்டும்.  தில்லி விவசாயிகள் போராட்டக் களத்தில் ஒன்றிணைந்த பல்வேறு இயக்கங்களும், ஆதரவாக நின்ற அறிவு ஜீவிகளையும் ஒருங்கிணைத்திட வேண்டும் என நகல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்துத்துவாவை எதிர்கொள்வது:

வலிமையான மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்குவதே இந்துத்துவ சக்திகளை எதிர்கொள்வதற்கான அடிப்படையான தேவையாகும்.

கட்சியும், வெகுஜன அமைப்புக்களும் வகுப்புவாத சக்திகளின் பிற்போக்கு கருத்துக்களுக்கு எதிராக அயராத பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். இந்துத்துவ குழுக்களின் தாக்குதல் போக்குக்கும், வெறுப்பு பிரச்சாரத்திற்கும் பதிலடி தர வேண்டும். சமூக அமைப்புகள், பண்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் மக்கள் அறிவியல் இயக்கங்களை முன்னெடுப்பதன் வழியாக அறிவியல் சிந்தனையை பரவலாக்கிட வேண்டும். சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராடுவதும், இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். கொரோனா காலத்தில் முன்னெடுத்த சமூக நல நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ். முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் தலையீடு செய்து எதிர்கொள்வது அவசியம்.

மேற்சொன்ன நடவடிக்கைகள் இல்லாததன் விளைவாகவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது ஆதரவுத்தளத்தை விரிவாக்க முடிகிறது.

அரசியல் நிலைப்பாடு:

நமது கட்சி மேற்கொள்ள வேண்டிய அரசியல் நிலைப்பாடு, நகல் அறிக்கையின் பத்தி 2.171 இல் விளக்கப்பட்டுள்ளது.

கட்சியை வலுப்படுத்துவதும், இடதுசாரி ஒற்றுமையை பலப்படுத்துவதும் ஒரு மாற்றுக் கொள்கையை முன்னெடுக்க அவசியம் ஆகும்.

நவ-தாராளமய கொள்கைகளால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்களுக்கு வடிவம் கொடுப்பதும் அவசியமாகும். இந்துத்துவா-கார்ப்பரேட் ஆட்சி அதிகாரத்திற்கு எதிராக இருமுனைப் போராட்டம் தேவைப்படுகிறது.

நாடாளுமன்றத்திற்குள் நாம் மதச்சார்பற்ற சக்திகளோடு ஒத்துழைப்புடன் இயங்கிட வேண்டும். நாடாளுமன்றத்திற்கு வெளியே அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் திரட்டி வகுப்புவாத நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும். வர்க்க – வெகுஜன அமைப்புகளின் மேடையை உருவாக்க வேண்டும். இவ்வகையிலேயே நாம் இடது ஜனநாயக அணியை ஏற்படுத்த முடியும்.

மேற்சொன்ன சூழலை விளக்கும் நகல் அறிக்கையின் பத்தி 2.172, கட்சியின் தற்போதைய கடமைகளை விளக்குகிறது.

நகல் அறிக்கையை, கட்சியின் ஒவ்வொரு அமைப்பும் ஊன்றிப் படித்து, அமைப்பிற்குள் விவாதித்து, அதனை மேம்படுத்துவதற்கான திருத்தங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் அனுப்பிட வேண்டும். அறிக்கையை முழுமையாக புரிந்துகொள்வதே, அதனை அமல்படுத்துவதற்கான முதல் கட்ட நடவடிக்கை ஆகும்.

எங்கெல்ஸ் 200: இணையவழி தொடர் உரைகள் – நிகழ்ச்சிநிரல்

மார்க்சிஸ்ட் இதழ் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து, மாமேதை எங்கெல்ஸ் தொடர்பான இணைவழி தொடர் உரைகளை ஒளிபரப்பவுள்ளோம். எங்கெல்சின் எழுத்துக்களை தமிழ் வாசகப் பரப்பிற்கும் அறிமுகம் செய்வதாகவும், பரவலாக்குவதாகவும் இந்த முயற்சி அமைகிறது. இந்நிகழ்வுகளின் இறுதியில், நவம்பர் 28, 2020 அன்று, சிவப்பு புத்தக தினம் நிகழவுள்ளது. தமிழகமெங்கும் 10 ஆயிரம் இடங்களில் ‘கம்யூனிசத்தின் கோட்பாடுகள்’ நூல் வாசிக்கப்படவுள்ளது. இதற்காக 1 லட்சம் புத்தக பிரதிகள் அச்சிடும் பணிகள் நடந்துவருகின்றன. மேலும், ஒலி வடிவில் இந்த புத்தகத்தை மார்க்சிஸ்ட் செயலி வழியே கேட்கலாம்.

கீழ்க்காணும் உரைகள், குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் மாலை 7 மணிக்கு நேரலையாக கேட்கலாம். (Youtube I Facebook )

28.09.2020 – கம்யூனிசத்தின் கோட்பாடுகள் – சீத்தாராம் யெச்சூரி (தொடக்க நிகழ்வு)

5.10.2020 – 21 ஆம் நூற்றாண்டிற்கு எங்கெல்ஸ் – என்.குணசேகரன்

12.10.2020 – கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் – ஜி.ராமகிருஷ்ணன்

19.10.2020 – குடியிருப்புப் பிரச்சினை – அ.பாக்கியம்

26.10.2020 – டூரிங்குக்கு மறுப்பு – மு.சிவலிங்கம்

2.11.2020 – இயற்கையின் இயக்கவியல் – டாக்டர் த வி.வெங்கடேஸ்வரன்

9.11.2020 ஜெர்மன் சித்தாந்தம் – பேரா.முத்துமோகன்

15.11.2020 – மனிதக்குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைக் கட்டத்தில் உழைப்பு வகிக்கும் பாத்திரம் – சகஸ்ரநாமம்

16.11.2020 – இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமைகள் – அ.சவுந்தரராசன்

17.11.2020 – குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் – பேரா.வீ.அரசு

18.11.2020 – எங்கெல்ஸ் முன்னுரைகள் – இரா.சிந்தன்

19.11.2020 – அரசு பற்றிய எங்கெல்ஸின் எழுத்துக்கள் – ச.லெனின்

20.11.2020 – எங்கெல்ஸின் எழுத்துக்களில் தொழிலாளி வர்க்கம் – எஸ்.கண்ணன்

21.11.2020 – ஜெர்மனியில் விவசாயப் புரட்சி – வி.மீனாட்சி சுந்தரம்

22.11.2020 – எங்கெல்சும் மார்க்சின் மூலதனமும் – டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா

23.11.2020 – புனிதக் குடும்பம் – வீ.பா.கணேசன்

24.11.2020 – எங்கெல்சும் அறிவியலும் – டாக்டர் டி.ஜெயராமன்

25.11.2020 – எங்கெல்ஸ் கடிதங்கள் – உ.வாசுகி

26.11.2020 – ஜெர்மனியில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும் – ஆர்.பத்ரி

27.11.2020 – வரலாற்றில் பலப்பிரயோகம் வகிக்கும் பாத்திரம் – ச.தமிழ்ச்செல்வன்

28.11.2020 – லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவத்தின் முடிவும் – டி.கே.ரங்கராஜன்

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை காட்டும் பாதை

ஜி.ராமகிருஷ்ணன்

“முதலாளித்துவ வர்க்கத்தின் வீழ்ச்சியும், பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் தவிர்க்கவியலாதவை” என மார்க்சும், ஏங்கெல்சும் இணைந்து வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் உறுதிபடக் கூறினார்கள்.

1848-ம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று லண்டனில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முதல் பிரதி (ஜெர்மன் மொழியில்) வெளியிடப்பட்டது. தீப்பொறி வேகத்தில் அடுத்தடுத்து பல மொழிகளில், பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியானது. இவ்வாறு வெளியான அறிக்கைக்கு மார்க்சும், ஏங்கெல்சும் இணைந்து இரண்டு முன்னுரைகளும், மார்க்சின் மறைவிற்குப் பிறகு ஏங்கெல்ஸ் தனியாக ஐந்து முன்னுரைகளும் எழுதியுள்ளனர். ஒவ்வொரு முன்னுரையிலும் வரலாற்று வளர்ச்சிப் போக்குடன் தாங்கள் வெளியிட்ட அறிக்கையின் நிர்ணயிப்புகளை ஒப்பிட்டு, பொருத்திப் பார்த்து சரியாக மதிப்பீடும் செய்துள்ளனர்.

முதலாளித்துவம் வீழ்ச்சியுறும் என்ற நிர்ணயிப்பின்படியே 1871-ம் ஆண்டு ஃபிரெஞ்சு நாட்டில் தொழிலாளி வர்க்கம் அந்நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரத்தை புரட்சியின் மூலம் கைப்பற்றியது. இரண்டு மாதங்களுக்கு மேல் அதனால் தக்க வைக்க முடியவில்லை என்றாலும் மார்க்சும், ஏங்கெல்சும் கூறிய அடிப்படையில் தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்பதற்கான முன்னுதாரணமான முதல் புரட்சிதான் பாரீஸ் கம்யூன்.  

1872-ம் ஆண்டு இருவரும் இணைந்து எழுதிய ஒரு முன்னுரையில் மேற்கண்ட பாரீஸ் கம்யூன் புரட்சியைப் பற்றி குறிப்பிட்டதோடு, 1882-ம் ஆண்டு இருவரும் இணைந்து எழுதிய முன்னுரையில் ரஷ்யாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை மதிப்பீடு செய்து “ரஷ்யப் புரட்சியானது மேற்கு நாடுகளில் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு முன்னோடியாகி … கம்யூனிச வளர்ச்சிக்கான தொடக்கப்புள்ளியாக பயன்படக் கூடும்” எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

1917-ம் ஆண்டு நவம்பர் 7 அன்று லெனின் தலைமையிலான ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து 1949-ல் சீனாவிலும், இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், 1950களில் வியட்நாம், கொரியா, 1959-ம் ஆண்டு கியூபா என அடுத்தடுத்து கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. இது எவ்வாறு சாத்தியமானது?  உலகு தழுவிய பாட்டாளி வர்க்கத்திற்கு அவரவர் வாழும் நாடுகளில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒரு பொதுச் செயல்திட்டமாக அமைந்தது.

“பாட்டாளி வர்க்கத்தின் வெற்றி தவிர்க்க முடியாதது” என்ற முடிவுக்கு மார்க்சும், ஏங்கெல்சும் வந்தது யூகத்தினால் அல்ல. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடுவதற்கு முந்தைய பத்தாண்டுகளில் மார்க்சும், ஏங்கெல்சும் தனியாகவும், இணைந்தும், அக்காலத்தில் நிலவிய தத்துவ,  பொருளாதார, அரசியல் சூழலை ஆய்வு செய்து அதனடிப்படையில் மாற்றம் தவிர்க்க முடியாதது என்ற முடிவுக்கு வந்தனர். வேறுவகையில் சொல்வதானால், கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடுவதற்கு முந்தைய ஆண்டுகளில் இருவரும் இணைந்து உருவாக்கிய இயக்க இயல், வரலாற்றியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தினை நடைமுறைப்படுத்திட (Application) உருவாக்கப்பட்டதுதான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்ற செயல்திட்டம்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைப் பற்றி லெனின் கூறியதை இங்கு மேற்கோள் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

“மனித வாழ்க்கையின் உண்மைகளைச் சார்ந்த, சீரான பொருள்முதல் வாதம்; வளர்ச்சி பற்றிய விரிவான கோட்பாடாகிய இயக்கவியல்; கம்யூனிச சமூகத்தைப் படைக்கும் வல்லமை கொண்ட பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர வரலாற்று பாத்திரம், வர்க்கப் போராட்ட கருத்தியல்;  இவை யாவும் அடங்கிய ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை இந்த நூல் மாமேதைகளுக்கேயுரிய தெளிவோடு எடுத்துரைக்கிறது.”

அக்கால அரசியல், பொருளாதார, தத்துவ வளர்ச்சிப் போக்குகளை இயக்க இயல், வரலாற்று இயல் அணுகுமுறை அடிப்படையில் அறிக்கையின் பல பகுதிகளில் அவர்களுக்கே உரிய பாணியில் விளக்கியிருக்கிறார்கள்.

சுதந்திரமானவனும் – அடிமையும், உயர்குலச் சீமானும் – பாமர குடிமகனும், நிலப்பிரபுவும் – பண்ணை அடிமையும், முதலாளியும் – தொழிலாளியும் சுருங்கக் கூறின் ஒடுக்குவோரும் – ஒடுக்கப்படுவோரும் தீரா பகைமைக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு கட்டத்திலும் ஒடுக்கும் வர்க்கத்திற்கும் – ஒடுக்கப்படும் வர்க்கத்திற்கும் இடையறாத போராட்டம் வரலாற்று நெடுகிலும் நடந்து வந்தது என்பதைத்தான் “இதுநாள் வரையில் நிலவி வந்துள்ள சமுதாய வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே ஆகும்” என  கூறுகிறார்கள்.

மனித குல வரலாற்றை மேற்கண்டவாறு இயக்கவியல் முறையில் ஆய்வு செய்த மார்க்சும், ஏங்கெல்சும் டார்வினுடைய பரிணாம வளர்ச்சித் தத்துவத்தை தங்களுடைய நிர்ணயிப்புக்கு ஆதாரமாக கருதினார்கள். மார்க்ஸ் தனது உற்றத் தோழன் ஏங்கெல்ஸ்சுக்கு எழுதிய கடிதத்தில், இயற்கையில் ஏற்படும் மாற்றத்தை விளக்கிடும் டார்வினின் பரிணாம வளர்ச்சித் தத்துவம் (உயிரின் தோற்றம்), மனித சமுதாயத்தில் ஏற்படும் மாற்றம் பற்றிய தங்களது ஆய்வை நிரூபிப்பதற்கு துணையாக இருப்பதாக   எழுதினார்.

“டார்வினுடைய கொள்கை உயிரியலுக்கு ஆற்றிய அதே பங்கினை இந்த வரையறைப்பு வரலாற்று இயலுக்கு ஆற்றப்போவது நிச்சயம். நாங்கள் இருவரும் 1845க்கு சில ஆண்டுகள் முன்பிருந்தே இந்த வரையறையை நோக்கி படிப்படியாக நெருங்கி வந்து கொண்டிருந்தோம்” என ஏங்கெல்சும் குறிப்பிட்டிருக்கிறார்.

சமூகத்தின் சகல அம்சங்களையும் தனித்தனியாக ஆய்வு செய்து கொண்டிருந்த இந்த இரண்டு மேதைகளின் சந்திப்பு மார்க்சியத் தத்துவத்தை உருவாக்குவதில் மிகப் பெரிய பாத்திரத்தை வகித்துள்ளது.

1844 ஆகஸ்ட் கடைசியில் பாரிஸில் மார்க்சை ஏங்கல்ஸ் சந்தித்தார். அவர் இங்கிலாந்திலிருந்து ஜெர்மனிக்கு திரும்பும் வழியில் பாரிசுக்கு வந்தார். அவர் அப்போது பாரிஸ் நகரத்தில் பத்து தினங்கள் தங்கியிருந்தார். அப்போது இருவரும் அநேகமாக எல்லா நேரத்தையும் ஒன்றாகவே கழித்தனர். அவர்களுடைய நேரடியான நாள்தோறும் நிகழ்ந்த கலந்துரையாடல் அவர்களுடைய கருத்தோட்டங்கள் அநேகமாக அத்தனை பிரச்சனைகள் மீதும் தத்துவம் நடைமுறை ஆகியவற்றின் ஒவ்வொரு அம்சத்திலும் முழுவதும் ஒன்றுபோல் இருந்தன. முழு கருத்தொற்றுமை நிலவியது.

“1844 கோடைக்காலத்தில் பாரிஸில் நான் மார்க்ஸிடம் சென்று அவரை சந்தித்துப் பேசியபோது எல்லா தத்துவத் துறைகளிலும் எங்கள் இருவருக்கிடையில் இருந்த முழுமையான உடன்பாடு தெளிவாகத் தெரிந்தது. எங்களுடைய கூட்டுப்பணி அன்றிலிருந்தே தொடங்கியது” என ஏங்கெல்ஸ் எழுதியிருக்கிறார்.

1840களின் துவக்கத்திலேயே இருவரும் தனியாகவும், கூட்டாகவும் பொருளாதாரம், தத்துவம், சோசலிசம் ஆகிய அம்சங்கள் குறித்து விரிவான ஆய்வுகளில் இறங்கினர். “இங்கிலாந்தில் தொழிலாளர்களின் வாழ்நிலை” என்ற நூலில் இங்கிலாந்தில் தொழிலாளர்களின் உழைப்பு முதலாளிகளால் ஒட்டச் சுரண்டப்படுவதும், இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருவதும்,  தங்களுடைய வாழ்க்கையைப் பாதுகாக்க ஆலை முதலாளிகளுக்கு எதிராக போராடுவதும் ஆகிய பல்வேறு அம்சங்களை ஏங்கெல்ஸ் தனது நூலில் விளக்குகிறார். மேலும், முதலாளித்துவத்தை வீழ்த்தி சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு பாட்டாளி வர்க்கம்தான் தலைமை தாங்கும் தகுதியுள்ளது எனவும் ஏங்கெல்ஸ் பதிவு செய்திருக்கிறார். மேலும், ‘அரசியல், பொருளாதாரம் பற்றிய விமர்சனக் குறிப்பு என்ற ஏங்கெல்சினுடைய கட்டுரையையும், இங்கிலாந்தில் தொழிலாளர்களின் வாழ்நிலை என்ற நூலையும் படித்த மார்க்ஸ் தன்னுடைய பல கட்டுரைகளில் அவற்றை எடுத்தாண்டிருக்கிறார்.

1843லிருந்து 1845 வரை மார்க்ஸ் பாரீஸில் இருந்தார். இக்காலத்தில் சில இதழ்களுக்கு கட்டுரைகள் எழுதியதோடு அக்கால பொருளாதார, தத்துவ பிரச்சனைகள் குறித்து பல குறிப்புகளை தயார் செய்தார். இந்த கையெழுத்து பிரதிகள் பிற்காலத்தில் ‘பாரீஸ் கையெழுத்து பிரதிகள்’ என அழைக்கப்பட்டது. இதில் தொழிலாளர்களின் ஊதியம், முதலாளிகளின் லாபம் உள்ளிட்ட பல அம்சங்களை ஆய்வு செய்தார். தொழிலாளர்களின் உழைப்பால் உருவாகும் மூலதனமே அவர்களை ஒடுக்குகிறது என்ற முடிவுக்கு வருகிறார். பிற்காலத்தில் மூலதனம் நூலை எழுதுகிற போது பாரிஸ் கையெழுத்து குறிப்பில் உள்ள பல அம்சங்களை விளக்கமாக பதிவு செய்திருக்கிறார். மூலதனத்திற்கும் (முதலாளித்துவம்) உழைப்பிற்குமான முரண்பாடு இரண்டு வர்க்கங்களுக்கிடையிலான முரண்பாடு என்று வர்ணித்ததோடு இந்த மோதல் முதலாளித்துவ வர்க்கத்தின் வீழ்ச்சிக்கும், தொழிலாளி வர்க்கத்தின் வெற்றிக்கு இட்டுச் செல்லும்; இதுவே சோசலிச சமூகம் உருவாவதற்கு வழிவகுக்கும் என்ற முடிவுக்கு வருகிறார். இத்தகைய முடிவு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலும் பிரதிபலித்துள்ளது.

1844-ம் ஆண்டு மார்க்சும், ஏங்கெல்சும் சந்தித்த பிறகு அப்போது ஜெர்மனியில் இளம் ஹெகலியர்களில் ஒரு பிரிவினர் மத்தியில் நிலவிய திரிபுவாதப் போக்குகள் குறித்து விமர்சனப் பூர்வமான பார்வையில் இருவரும் இணைந்து எழுதிய முதல் நூல் ‘புனிதக் குடும்பம்’ (Holy Family). வரலாற்றியல் பொருள்முதல்வாத தத்துவத்திற்கான அடிப்படை அம்சங்களை இந்நூலில் அவர்கள் விளக்கினர்.

“வரலாற்றை உருவாக்குவதும், உள்வாங்குவதும் என அனைத்து மனித செயல்பாடுகளுக்கும் அடிப்படை மனிதனே. “வரலாறு தானே எதையும்  செய்யாது. அது அபரிமிதமான வளங்களைக் கொண்டிருக்கவில்லை”. அது “எந்த போராட்டத்தையும் நடத்துவதில்லை”. அவற்றையெல்லாம் செய்கிறவன் மனிதன். உயிருள்ள மனிதனே; மோதுவதும் கைப்பற்றுவதும் மனிதனே; இவற்றை ‘வரலாறு’ செய்வதில்லை; வரலாறு ஒரு நபர் அல்ல; அது தன் சொந்த இலக்குகளை அடைவதற்காக மனிதனை பயன்படுத்திக் கொள்கிறது. வரலாறு என்பது மனிதர்கள் தங்கள் இலக்குகளை அடைவதற்காக கைக்கொள்ளும் வழிமுறைகள் தவிர வேறல்ல.”

புனிதக் குடும்பம் என்ற நூலுக்கு அடுத்ததாக இருவரும் இணைந்து இயக்கவியல், வரலாற்றியல் பார்வையில் அக்கால  தத்துவ, பொருளாதாரச் சூழலை ஆய்வு செய்து ஜெர்மன் தத்துவம் என்ற நூலை எழுதினார்கள். எதிர்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மட்டுமல்ல, மூலதனம் உள்ளிட்டு மார்க்ஸ் – எங்கெல்சின் பல படைப்புகளில் ‘ஜெர்மன் தத்துவம்’ நூலின் நிர்ணயிப்புகளின் அடிப்படையில் பல கோட்பாடுகளை வலியுறுத்தினார்கள். சொல்லப் போனால், மார்க்சிய தத்துவத்தினுடைய அடிப்படை கோட்பாடுகள் பலவற்றினுடைய துவக்கம் ‘ஜெர்மன் தத்துவம்’ என்ற நூலில் சொல்லப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில்தான் அமைந்துள்ளது.

முதல் பகுதி என்பது, அனைத்து சிந்தனைகள் மற்றும் அனைத்து வரலாறுகளின் நிலைமைகளைச் சொல்வதிலிருந்து தொடங்குகிறது, மார்க்சியத்தின் தத்துவ அடிப்படையை நேர்மறையாகவும் தெளிவாகவும் விளக்குகிறது. மார்க்சும் எங்கெல்சும் தனியார் சொத்துடைமையின் வளர்ச்சியையும், ஒவ்வொரு கட்டத்திலும் பொருளாதார கட்டமைப்பும் அதனோடு தொடர்புடைய, அதன் கீழ்ப்பட்ட அரசியல் மற்றும் தத்துவ வடிவங்கள் குறித்த வரையறுப்பை தருவதிலிருந்து தொடங்குகின்றனர். 

முதலாளித்துவ அமைப்பில் சொத்துக்கள் ஒரு சிலர் கையில் குவிகிறது. முதலாளித்துவ வர்க்கம் எந்தளவுக்கு வளர்கிறதோ, அதே அளவுக்கு நவீன பாட்டாளி வர்க்கமும் எண்ணிக்கையில் வளர்கிறது. அதேநேரத்தில் பாட்டாளிகள் தம்மைத் தாமே கொஞ்சம், கொஞ்சமாக விலைக்கு விற்றாக வேண்டிய கட்டாயத்தில்  சரக்காகவே இருக்கிறார்கள். ஆம். அவர்களின் உழைப்புச் சக்தி சந்தையில் விற்கப்படும் சரக்கைப் போன்று ஆகிறது. முதலாளிகள் உள்ளிட்ட ஆலைகள், இயந்திரங்கள், நிறுவனங்கள் ஆகிய முதலாளித்துவ உற்பத்தி சக்திகளுக்கும் உழைப்பு சக்தியை விற்கும் நிலைக்கு ஒட்டச் சுரண்டப்படும் தொழிலாளர்களுக்கும் இடையிலான மோதலே உற்பத்தி சக்திகளுக்கும்,உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான  வர்க்கப் போராட்டமாக உருவாகிறது. இதனைத்தான் “ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஒரு அரசியல் போராட்டமே ஆகும்” என கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

“நவீன கால அரசின் நிர்வாக அமைப்பானது, ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தின் பொது விவகாரங்களை நிர்வகிப்பதற்கான ஒரு குழுவே அன்றி வேறல்ல” என முதலாளிகளின் நலன்களை பாதுகாக்கக் கூடிய நிர்வாகமாகத்தான் அரசு உள்ளது என்பதை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.

மார்க்சும், ஏங்கெல்சும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு தவறான கருத்து வெளியானால் அதனை எதிர்க்காமல் ஓயமாட்டார்கள். “தவறான கருத்தை மறுக்காமல் விடுவது அறிவுலகில் ஒழுக்கக் கேட்டை ஊக்குவிப்பதாகும்” என மார்க்ஸ் கூறினார். குறிப்பாக, வறுமையின் தத்துவம் என்று புரூதோன் எழுதிய நூலில் வெளிப்பட்ட இயக்க இயலுக்கு மாறான கருத்துக்களை மறுத்து தத்துவத்தின் வறுமை என்ற நூலை 1847-ம் ஆண்டில் மார்க்ஸ் எழுதினார். அன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பை மாற்றத் தேவையில்லை,அதில் உள்ள தவறான அம்சங்களை மட்டும் நீக்கிட வேண்டும் என்பதுதான் புரூதோன் முன்வைத்த கருத்து. அது தவறு. அக்கருத்தை மறுத்த போராட்டத்தின் விளைவாக உருவாக்கப்பட்டதே சரியான கருத்து (Thesis –Anti-thesis- Synthesis) என்ற இயக்க இயல் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே வறுமையின் தத்துவம் என்ற நூல்.

பொருளாதாரம், தத்துவம், அரசியல் ஆகிய சூழல்களை ஆய்வு செய்து இயக்க இயல், வரலாற்றியல் கோட்பாட்டின் அடிப்படையில் அணுகுமுறையை உருவாக்கிட முயற்சித்த அதேநேரத்தில் நேரடி நடவடிக்கையில் ஈடுபட பாட்டாளிகளைத் திரட்டும் அமைப்பையும் உருவாக்கினார்கள். 1847-ம் ஆண்டு ‘கம்யூனிஸ்ட் லீக்’ என்ற அமைப்பில் அவர்கள் செயல்பட்டனர். பல மேலை நாடுகளில் இதனடிப்படையில் போராட்டங்களும் நடைபெற்றன.

இரண்டு தளங்களில் – கருத்தியல் ரீதியிலும் நேரடி நடவடிக்கைகளிலும் – கம்யூனிஸ்டுகள் மேற்கொள்ள வேண்டிய  புரட்சிகர பணிகளையும் அவர்கள் வலியுறுத்தினர்.

ஒவ்வொரு சமூக அமைப்பிலும் ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தமே மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும். பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமெனில் ஆளும் வர்க்க சித்தாந்தத்தை எதிர்த்த போராட்டத்தை நடத்திட வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தினர்.

ஜெர்மன் தத்துவம் என்ற நூலில் “ஏற்கெனவே நிலவி வரும் பழைய தத்துவ நோக்கங்களுடன் கணக்குத் தீர்க்க வேண்டும்” (To settle accounts with our erstwhile Philosophical conscience) என்கின்றனர். மேலும் “இதுவரை வந்த தத்துவ ஞானிகள் உலகைப் பற்றி விளக்க மட்டுமே செய்தார்கள். ஆனால் உலகை மாற்றுவது என்பதே முக்கியமானது” என அந்த நூலிலேயே குறிப்பிட்டிருந்தார்கள் மார்க்சும் எங்கெல்சும். ஆம். சரியான திட்டமும், நடைமுறையும் சேர்ந்தால்தான் மாற்றத்தை உருவாக்க முடியும்.

இப்போதும் இந்தியாவில் ஆளும் வர்க்கம் நவீன தாராளமயக் கொள்கைளை அமலாக்கி வருகிறது, மேலும் மத்திய பாஜக அரசு தனது இந்துத்துவா சித்தாந்தத்தை இணைத்து முன்னெடுக்கிறது. இவைகளை எதிர்த்த போராட்டம், வர்க்கக் கண்ணோட்டத்தோடு எழ வேண்டும். அப்போதுதான் ஆளும் வர்க்கத்தை முறியடிப்பதுடன் ஒரு சுரண்டலற்ற சமூகத்தை நோக்கி முன் நகர முடியும். இத்தகைய வரலாற்றுக் கடமையைக் கொண்டிருக்கும் பாட்டாளி வர்க்கத்தின் ஆயுதமாக கம்யூனிஸ்ட் அறிக்கை திகழும். இந்தியத் தொழிலாளி வர்க்கத்திற்கும் அது உயிர்ப்போடு கூடிய உற்ற துணையாக இருக்கும் என்பது நிச்சயம்.

பிப்ரவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் … (இடது ஜனநாயக அணி சிறப்பிதழ்)

மார்க்சிஸ்ட் கட்சியின் 22 வது மாநில மாநாட்டை ஒட்டி, இவ்விதழ் ‘இடது ஜனநாயக முன்னணி’ சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. மக்கள் ஜனநாயக புரட்சியை நோக்கிய பயணத்தில், நடைமுறை உத்தியாக ‘இடது ஜனநாயக அணி’ என்ற முழக்கத்தை மார்க்சிஸ்ட் கட்சி முன்வைத்தது.

மார்க்சிய சமூக விஞ்ஞானத்தின் வழியில் நடைபோடும் மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த முழக்கம், தேர்தல் அணிச் சேர்க்கையாகப் புரிந்துகொள்ளப்படும் குறுகிய முழக்கமல்ல. பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் அதிகாரம், சுரண்டலுக்கு முடிவுகட்டிய சமூகம் என்ற இலக்கை சாதிப்பதற்கான வர்க்கச் சேர்க்கையை ஏற்படுத்துதலுக்கான முழக்கம்.

தோழர் பிரகாஷ் காரத், இடது ஜனநாயக அணியைக் குறித்த சிறப்புக் கட்டுரையை தமிழ் மார்க்சிஸ்ட் வாசகர்களுக்கு வழங்கியிருக்கிறார். அகில இந்திய அளவில் அதன் முக்கியத்துவத்தை விளக்கியிருப்பதோடு, தமிழகத்திலும் இடதுசாரிகள் முன்னெடுக்கவேண்டிய கடமைகளை அவர் நினைவூட்டுகிறார்.

தமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளுடன் சேர்த்து, இடது ஜனநாயக அணி கருத்தாக்கங்களை விளக்கியுள்ளார் தோழர் ஜி.ராமகிருஷ்ணன்.
இடது ஜனநாயக அணிக்கான வர்க்கங்களைத் திரட்டுவ து குறித்தான கட்டுரையை தோழர் என்.குணசேகரன் எழுதியிருக்கிறார். கருத்து, செயல் என இரண்டு தளங்களிலும் நாம் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளைக் குறிப்பிடும் அக்கட்டுரை, உள்ளூர் மட்டத்தில் ஒரு சமூக நிலைமையை கவனித்து அதனை மாற்றியமைக்க எப்படியான தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வழிகாட்டுகிறது.
இடது ஜனநாயக அணியில் அமையப்பெறும் வர்க்கங்களை கவனிப்பதைப் போலவே, ஒடுக்கப்பட்ட சமூக அடையாளங்களைத் திரட்டுவது எத்தனை முக்கியம், அதில் ஏன் கவனம் செலுத்தவேண்டும் என்பதை தோழர் உ.வாசுகி எழுதியிருக்கிறார்.

இந்தியாவில் நாம் முன்னெடுக்கவுள்ள எந்தவொரு உத்தியிலும் வேளாண் சமூகத்தின் மீது தனித்த கவனம் செலுத்தப்பட வேண்டும். நவின தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்திற்குப் பின் இந்திய சமூகங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கட்சி கூர்ந்து கவனித்தே வருகிறது. மாறிவரும் சூழ்நிலைமைகளில் நாம் எவ்வாறு செயல்படவேண்டும் என்று தோழர் விஜூ கிருஷ்ணன் விளக்கியிருக்கிறார்.
இடது ஜனநாயக அணியின் மாற்று பொருளாதாரப் பார்வையை தெளிவாக்கிற வகையில் ஆத்ரேயா கட்டுரை அமைந்துள்ளது.

மார்க்சிய இயக்கத்திற்கு, உத்திகளை வகுப்பதன் தேவையையும், திட்டவட்டமான ஆய்வு எப்படி திட்டவட்டமான மாற்றங்களுக்கு அடிப்படையாக அமையும் என்பதையும் ஜி.செல்வா எழுதியுள்ள ஏப்ரல் கருத்தாய்வு குறித்ததான கட்டுரை நமக்கு விளக்குகிறது.

கடைசி நேரத்தில் என்றாலும், கவனமுடனும் அக்கறையுடனும் தோழர் ஆர்.எஸ்.செண்பகம், சமூக நேசன் எழில் ராஜூ ஆகியோர் மொழியாக்க பணிகளை மேற்கொண்டுள்ளனர். அட்டை வடிவமைத்துள்ளார் ஆனந்த் காஸ்ட்ரோ. அவர்களுக்கு பாராட்டுக்கள்.

ஜனவரி 28 ஆம் தேதி முதல் மார்க்சிஸ்ட் செயலி அப்டேட் செய்யப்பட்டு ஒலி இதழாக வெளிவருகிறது. சந்தா சேர்ப்பும், வாசகர் வட்டங்களும் துணையாக இல்லாமல் புதிய முயற்சிகளைத் தொடர்வது சாத்தியமில்லை. மார்க்சிஸ்ட் வாசகர் வட்ட தோழர்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறோம்.

  • ஆசிரியர் குழு

தீவிரமாகும் கிராமப்புற முரண்பாடுகள்

 

டாக்டர். விஜூ கிருஷ்ணன்
தேசிய இணை செயலாளர், அகில இந்திய விவசாயிகள் சங்கம்

இந்திய வேளாண்மை அமைப்பின் திட்டவட்டமானதொரு பகுப்பாய்வின் மையப்புள்ளி நமக்கு உணர்த்தும் உண்மை என்னவென்றால், நம்  கிராமப்புறத்தில் அதிகரித்து வரும் முதலாளித்துவ அமைப்பின் வளர்ச்சிப் போக்கேயாகும். இது பிராந்தியங்களுக்கேற்ப வேறுபடும் தன்மையோடும் சமநிலையற்றதொரு முதலாளித்துவ வளர்ச்சிப்போக்குடனும் காலப்போக்கில் அதிகரித்து  வந்துள்ளது. நிலப்பிரபுத்துவச் சுவடுகள்,  பழமைவாத  சமூக உருவாக்கம் ஆகியவையே சுரண்டலுக்கும் வழிவகுக்கின்றன.  நாட்டின் பெரும்பகுதியில் முழுமை பெறாத நிலச்சீர்திருத்தம் மேற்குறிப்பிட்ட நிலப்பிரபுத்துவச் சுவடுகள், நியாயத்திற்கு முரணான நிலவுடைமைச் சமூகம் ஆகியவை தொடர்வதற்கும் அதிமுக்கியமான காரணங்களில் ஒன்றாக அமைகிறது.

நவீன தாராளமய ஆட்சி தாக்கம்:
கால் நூற்றாண்டுகால நவீன தாராளமய பொருளாதார கொள்கைகள் நாட்டை கடுமையான விவசாய நெருக்கடிக்கு இட்டுச்சென்றதோடு  முரண்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது. ஏழை – பணக்காரச் சக்திகளுக்கு இடையிலான இடைவெளி நீண்டுள்ளதோடு சமத்துவமின்மை அதிகரித்தே வருகிறது. இத்தகைய சுரண்டல் அமைப்பின் பலன் என்பது மக்கள் மீதான கடும் பொருளாதாரச் சுமைகளை திணித்து, வருமானத்தை ஒடுக்கி வேலைவாய்ப்புகளை சுருக்கியதைத் தவிர வேறொன்றும் இல்லை. மேலும் இதுவே மக்களின் பஞ்சம், பட்டினி, ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கும் முழுமுதற்காரணமாகும்.

நிலக்குவியலும் விவசாய மற்றும் விவசாயம் சாராத இதர வருமானமும் இதன் மூலம் சொத்துகளும் பெருக்கமடைகிறன. முதலாளித்துவ சக்திகளின் வளர்ச்சி முடுக்கி விடப்படுவதாலும், விரிவடைவதாலும் விவசாயிகளின் வறுமை அதிகரித்து நிலங்கள் பறிக்கப்பட்டு, அவர்கள்  பாட்டாளி வர்க்கமாக உருமாறியுள்ளனர். பரந்துபட்ட புதிய பகுதி ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள் விவசாயம் சார்ந்தோ அல்லது சாராத அத்துக்கூலி தொழிலாளிகளாக மாற்றப்பட்டுள்ளனர். இவர்களே பெரும்பகுதி கிராமப்புற தொழிலாளி வர்க்கத்தை சார்ந்தவர்கள். கந்துவட்டிக்கடன் என்னும் சுருக்கு கயிற்றால் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் நிலம் பிடுங்கப்பட்டு, வறுமைக்குள்ளாகி இன்று சிறு, குறு நிலத்தை சொந்தமாக வைத்துள்ள விவசாயி, நாளை நிலமற்ற குத்தகை விவசாயியாகவோ விவசாயக்கூலி தொழிலாளியாகவோ மாறி, விரைவில்  பாதுகாப்பற்ற கிராமப்புற முறைசாராத் தொழிலாளியாகவோ அல்லது நகர்ப்புறத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளியாகவோ தள்ளப்படுவார். இக்காரணிதான் நமது வர்க்க வெகுஜன அமைப்புகளின் தேவையான, வெகுவாக ஒருங்கிணைக்கப்பட்ட, போராட்ட நடவடிக்கைக்கான சாத்தியக்கூறுகளை நமக்கு உணர்த்துகிறது.

பணக்காரச் சக்திகளின் ஆதிக்கம்
ஊரக பணக்கார சக்திகளுக்கிடையேயான  கூட்டு-உறவுநிலை ஒருபுறமும் நிலமற்ற அத்துக்கூலித்தொழிலாளர்கள், கைவினைஞர்கள் உள்ளிட்ட வெகுஜன ஏழை விவசாயிகள் மறு புறமும் இருப்பது நாட்டின் பெரும்பகுதிகளில் நிலவும் கூர்மையான பிரிவினை வெளிப்படையாகவே தெரிவதை நாம் பார்க்கிறோம். குறிப்பாக நிலப்பிரபுக்கள், பெரிய முதலாளித்துவ விவசாயிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பெருவணிகர்கள் அடங்கிய ஊரக பணக்காரர்களுக்கிடையான நெருக்கமான கூட்டு-உறவுநிலைதான் கிராமப்புறங்களில் ஆதிக்க சக்தியாக உருவெடுத்துள்ளது. இச்சக்திகளின் அடிப்படை அதிகாரம் என்னவெனில் நிலங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதே ஆகும்.

இவர்களே கந்துவட்டிக்கு கடன் கொடுப்பது, தானிய அரவை செய்வது, பால்பண்ணை, வணிகம் செய்வது , உணவு தானியங்கள் மற்றும்  விதை, உரம், செயற்கை மற்றும் இயற்கை உரம் உள்ளிட்ட  வேளாண் இடுபொருள்களில்  ஊகவணிகம் செய்வது, உற்பத்தித்துறை, வீட்டுமனைப் பிரிவு, கட்டுமானம், சினிமா தியேட்டர், பெட்ரோல் மற்றும் டீசல் நிலையங்கள், போக்குவரத்து, விவசாய இயந்திரங்களைக் குத்தகைக்குவிடுவது மற்றும் பெரும் பணம் கொழிக்கும் கல்வி நிலையங்கள் உள்ளிட்ட கிராமப்புறங்களில் பெரிதும் வருமானம் தரக்கூடிய தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் விளைவாக இவர்களின் செல்வாக்கும் தாக்கமும் கிராமப்புறத்தின் மூலை முடுக்கெங்கும் பரவிக்கிடக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயிகள், விவசாயக் கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு கிராமப்புற பாட்டாளி வர்க்கத்தினரும் பல்வேறு வழிகளில் மேற்குறிப்பிட்ட ஊரக பணக்காரர்களிடம் கட்டுப்பட்டு இருக்கிறார்கள். ஒடுக்கும் வர்க்கத்தினருக்கும் ஒடுக்கப்படும் வர்க்கத்தினருக்கும் இடையே, சுரண்டல்காரர்களுக்கும் சுரண்டலுக்குள்ளாபவர்களுக்குமிடையே பல்வேறு இணைப்புகள் தொடர்ந்து இங்கே நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.

கிராமப்புற அளவிலான சுரண்டல், ஒடுக்குமுறை மற்றும் கிராமப்புற பணக்காரச் சக்திகளுக்கிடையேயான நெருக்கமான கூட்டு –உறவு நிலை ஆகியவற்றின் அளவு பிராந்தியங்களுக்கேற்ப கடுமையாகவோ அல்லது சற்று குறைவாகவோ மாறுபடக்கூடும்.

மார்க்சிஸ்ட் கட்சியின் ஆய்வு அறிக்கை

நவீன தாராளமய ஆட்சிக்காலத்தில் விவசாய வர்க்கத்தினர் மத்தியில் வேளாண்சார் உறவுகளுக்கிடையே ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு  அறிக்கையில் (பத்தி 3.21) பின்வருமாறு குறிப்பிடுகிறது:

பெரும்பாலான கிராமப்பகுதிகளில்  நிலப்பிரபுக்களுக்கும் பணக்கார விவசாயிகளுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் பெரும் வர்த்தகர்களுக்கும் இடையே அதிகாரம்மிக்க நெருக்கமான கூட்டு-உறவு உயர்ந்துள்ளது. அவர்கள் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள், கூட்டுறவு நிறுவனங்கள், ஊரக வங்கிகள் மற்றும் கடன் நிறுவனங்களின் (இடதுசாரிகள் வலுவாகவுள்ள மாநிலங்கள் தவிர்த்து) ஆதிக்கம் செலுத்துவது மட்டுமின்றி பூர்ஷ்வா (நிலப்பிரபுத்துவ –முதலாளித்துவ) அரசியல் கட்சிகளின் கிராம அளவிலான அனைத்து தலைமைப்பொறுப்புகளையும் தங்கள்  கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

இத்தகைய பிரிவினரால் மேற்கண்ட அமைப்புக்களில் இருந்து சுரண்டப்படும் உபரி கொள்ளை லாபமே கிராமப்புறங்களில் கந்து வட்டி, ஊகவணிக செயல்பாடு,  வீட்டுமனைப் பெருக்கம் மற்றும் வேளாண்சார் தொழிற்சாலைகளில் மூலதனமாக விதைக்கப்படுகிறது. கிராமப் பகுதியிலிருக்கும் மேலாதிக்க வர்க்கத்தினர் அங்கிருக்கும் ஏழைவர்க்கத்தினருக்கு எதிராக ஆதரவைத்திரட்டி வன்முறை மூலம் அச்சுறுத்துவதற்கு தங்கள் மேலாதிக்க வர்க்க–சாதியச் சேர்க்கை அடையாள உத்தியை கையாண்டு ஏழைவர்க்கத்தினரை ஒடுக்குமுறைக்கு ஆளாக்குகின்றனர்.

பழங்குடி சமூக ஒடுக்குமுறைக்கெதிராக

மேல்குறிப்பிட்ட கூட்டு உறவு நிலை ஏழைப்பகுதியினரை குறைந்த கூலி கொடுப்பது; குறைந்த விலை நிர்ணயம் செய்வது; அதிகமான வாடகை வசூலிப்பது; வட்டி வாங்குவது; குடிநீர் கட்டணம்; டிராக்டர்- பயிர் அறுவடை இயந்திரம் வாடகை; மற்றும் இதர வேளாண் இயந்திரங்கள், சேமிப்பு கிட்டங்கிகளுக்கு கட்டணம் போன்று பல்வேறு வகை சுரண்டல்களுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு சென்று சேரவேண்டிய அரசு திட்டங்களின் சலுகைகளை பெரிய பணக்காரர்களே அனுபவித்து வருகின்றனர். இந்த சூழலில் வர்க்க போராட்ட, வேளாண் வர்க்க இயக்கங்களின் வளர்ச்சி என்பது அடிப்படையில் நிலப்பிரபுத்துவ சுரண்டல் சக்திகளுடன் இணைந்த ஊரக பணக்கார கூட்டு சக்திகளை எதிர்த்த போராட்டமாக அமையவேண்டும்.

இங்கே விவாதிக்கப்படும் கிராமப்புற பணக்காரக் கூட்டுக்காரர்களுக்கும் அப்பகுதி ஏழை விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் அடங்கிய ஏழைகளுக்கும் இடையேயான முரண்பாடு, அவர்களின் விவசாயம் மற்றும் விவசாயம் சாரா முதலாளித்துவ நடவடிக்கைகளிலிருந்தே தோற்றம் பெறுகிறது.  அனைத்து வகையான சுரண்டல் பிரச்சினைகளுக்கு எதிராக உறுதியோடு போராடாதவரை வலுவான ஒன்றுபட்ட இயக்கங்கள் சாத்தியமற்றதாக ஆகிவிடும். இத்தகைய ஊரக பணக்கார கூட்டு சக்திகளை எதிர்த்துப் போராட கிராமப்புற நிலமற்ற அத்துக்கூலித்தொழிலாளர்கள், ஏழை சிறு, குறு விவசாயிகள், விவசாயம் சாரா கைத்தொழிலாளர்கள், கைவினைஞர்கள் உள்ளிட்ட அனைத்துவகை வெகுஜன கிராமப்புற ஏழைகள் சேர்ந்து  பரந்துபட்ட ஒற்றுமையை கட்டமைக்க வேண்டியது மிகவும் தேவையான செயல்திட்டமாகும். இத்தகைய ஒற்றுமை, சமூக (சாதிய) ஒடுக்குமுறைக்கெதிராகவும் பழங்குடிகள் மீது தொடுக்கப்படும் சுரண்டலுக்கெதிராகவும் கட்டி எழுப்பியதாக அமைய வேண்டும். இந்த திரட்டல்கள் மாநிலங்களுக்கேற்ப மாறுபடும் தன்மையோடு இருக்கும். அதேநேரத்தில் வளர்ச்சிப்போக்கின் முக்கிய நோக்கத்தில் மாற்றமிருக்காது. பிரச்சினைகளை கண்டறிந்து, நுட்பமாக உத்திகளை உருவாக்கி, கோரிக்கை முழக்கங்கள், போராட்ட இயக்கங்களின் பாதைகளை அந்தந்த மாநிலங்கள் மாவட்ட நிலைமைகளின் தன்மைக்களுக்கேற்ப அலசி ஆராய்ந்து, திட்டவட்டமான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும்.

வழிகாட்டும் போராட்டங்கள்
கேரளம், மேற்கு வங்காளம், தமிழகம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் இதர பகுதிகளில் நடைபெற்ற சட்டக்கூலிக்கான கோரிக்கை இயக்க போராட்டங்கள் கிராமப்புற ஏழை வர்க்கத்தினை இங்கே விவாதித்த கிராமப்புற பணக்காரக் கூட்டுசக்திகளை எதிர்த்து ஒன்றுதிரட்டுவதற்கு  வரலாற்று ரீதியாக உதவியது. கிராமப்புற பணக்காரக் கூட்டுசக்திகளை எதிர்த்த போராட்டத்தில் ஏழை விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் கடுமையான சமூக, வர்க்க ஒடுக்குமுறை தாக்குதலுக்கு ஆளாயினர்.

தங்களது இன்னுயிரை செங்கொடி இயக்கத்திற்காகவும், விவசாயிகள் – விவசாயத்தொழிலாளர்கள் உரிமைகளுக்காகவும் மிகப்பெரிய தியாகம் செய்த தஞ்சை- கீழ்வெண்மணி தியாகிகள் நம் போற்றுதலுக்குரிய  விவசாயிகள் – விவசாயத்தொழிலாளர்கள் (இவர்களில் பெரும்பான்மை தலித் பிரிவினர் என்பது குறிப்பிடத்தக்கது) . குத்தகை வாடகை விவசாயிகள் மீது அளவுகடந்த வாடகை வசூல் சுரண்டலை எதிர்த்து மேற்குவங்கத்தில் நடைபெற்ற தெபாகா எழுச்சி (1946-47) , தெலுங்கானா போர் (1946-51) மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் நன்கு அறியப்பட்டவை. மேற்கண்ட ஆய்வுகளின் அடிப்படையிலும், இடதுசாரிகளின் புகழ்பெற்ற போராட்ட இயக்கங்களின் உத்வேகத்தின் விளைவாகவும் தற்போதைய சூழ்நிலைக்கு தகுந்த வகையில் போராட்ட இயக்கங்களின் தொடர் திட்டங்களை நாம் திட்டமிடவேண்டும். விவசாய தொழிலாளர்கள், ஏழை சிறு, குறு, நடுத்தர விவசாயிகள், மற்றும் நலிவுற்ற வெகுஜன வர்க்கத்தின் நலன்களை மையப்படுத்தி பாட்டாளி விவசாய வர்க்கத்தினை ஒன்றுதிரட்டி கட்டியமைத்து கிராமப்புற பணக்காரக் கூட்டுசக்திகளின் சுரண்டலை எதிர்த்து கோரிக்கைகளை உருவாக்கி வலுவான  போராட்ட இயக்க முழக்கங்களை முழங்கிட வேண்டும்.

பிரத்தியேகமான கோரிக்கை முழக்கம்
நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ வர்க்கங்களுக்கு எதிரான விவசாயிகளின் கோரிக்கை மட்டுமல்லாமல், அவர்களால் எதிர்க்கப்படும் கோரிக்கைகள் குறித்தும் தெளிவான வரையறையுடன் நமது கோரிக்கைகள் வடித்தெடுக்கப்பட வேண்டும். ஏழை சிறு குறு / நடுத்தர விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், கைத்தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய கடன் தள்ளுபடி , கடன் வசதிகள், வேளாண் இடுபொருள்களுக்கான மானியங்களின் பயன்களை கிராமப்புற  பணக்காரக் கூட்டு சக்திகள் சுரண்டுவதைத் தடுக்கும் வகையில் கோரிக்கைகள் அமைய வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர விவசாய வர்க்கத்தினருக்கென  போனஸ் வகையிலான கூடுதல் ஊக்கத்தொகை, தானிய சேமிப்பு வசதிகளில்  சலுகை மற்றும் போக்குவரத்து மானியங்கள் போன்ற சிறப்பு கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டும். இதுபோல் இவர்களுக்கான கடன்களில் மிகக் குறைந்த வட்டிமுறை, வட்டியில்லா அல்லது  பிரத்தியேகமான வட்டி மானியத்தை உறுதிப்படுத்தும் வகையில் போராட்ட கோரிக்கைகள் ஒன்றுபட்டு உயரும்பொழுது பலன்கள் கிடைக்க கிராமப்புறத்தில் சிறப்புகளம் காண்போம்.

தீவிரமடையும் கிராமப்புற பணக்காரக்கூட்டு சக்திகளுக்கும் ஏழை பாட்டாளிக்குமான முரண்பாடுகளின் மதிப்பீட்டில் நமது தலையீடுகளின் கள அனுபவங்கள் என்ன ?

ஆந்திரப்பிரதேசத்தில் குத்தகை விவசாயிகளை ஒன்றுதிரட்டி ‘ஆந்திரப்பிரதேச குத்தகை விவசாய சங்கம்’ தோற்றுவிக்கப்பட்டது. இச்சங்கம் பணக்காரக் கூட்டுச்சக்திகளோடு நேரடியாக முரண்படக்கூடிய பிரச்சினைகளை கோரிக்கைகளாகக் கொண்டு போராடி வருகிறது.

ஒன்றுபட்ட ஆந்திரப்பிரதேசத்தில், அகில இந்திய விவசாயிகள் சங்கம் (ஏ.ஐ.கே.எஸ்), அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் (ஏ.ஐ.ஏ.டபிள்யூ.யு) மற்றும் இதர இயக்கங்களின்  தலைமையில் நடைபெற்ற கூட்டுப்போராட்டத்தின் பலனாக உழவுத்தொழிலில் ஈடுபடும் பெரும்பான்மை குத்தகை விவசாயிகளுக்கு கடன் பெறும் தகுதி அட்டை வழங்குவதற்கு வழிவகுக்கும் விவசாய உற்பத்தியாளர் அங்கீகாரச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. குத்தகை விவசாயிகள் தாங்கள் பயிரிடும் பயிர் செலவினத்துக்கு அது நாள் வரை கந்து வட்டிக்கு கிராமப்புற பணக்கார கூட்டுச் சக்திகளிடம் சிக்கித்தவித்து வந்த நிலையிலிருந்து மேற்கண்ட போராட்டத்தினாலும் அதன் நிர்ப்பந்தத்தினாலும் இயற்றப்பட்ட சட்டத்தின் பயனால் சற்று மீண்டு எழுந்து வருவது பணக்காரக்கூட்டு சக்திகளுக்கு சற்று பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கே பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் நிலமற்ற மற்றும் ஏழை விவசாய குடும்பத்தினரிடமிருந்து நிலப்பிரபுக்கள் வாடகைக்கு வாடகை விடும் கொடுமை பொதுவான நடைமுறையாக உள்ளது.

வாடகை குறைப்பு கோரிக்கை, மானியங்கள் கிடைக்க வழிவகை செய்வது, போலியான இடுபொருள்கள் விற்பனை செய்வதோடு விவசாயிகளின் விளைபொருளுக்கு மிகக்குறைந்த விலை நிர்ணயம் செய்வது போன்ற விவசாய விரோத செயல்களில் ஈடுபடும் பெரிய வர்த்தகர்களை எதிர்த்த இயக்கம், கண்மூடித்தனமாக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராகவும் மற்றும் நிலத்தை விட்டு வெளியேறிய நிலப்பிரபுக்கள் தாங்கள் பயிர் செய்யாமல் நிலத்தை தரிசாக விட்டு வைப்பார்களேயொழிய காலம் காலமாக உழுதுவரும் நிலமற்ற ஏழை குத்தகை விவசாயிக்கு நிலத்தை குத்தகை வாடகைக்குக்கூட பயிரிட மறுக்கும் சூழலை எதிர்த்த பல்வேறு கோரிக்கை முழக்கங்கள் போராட்டங்களாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நமது அகில இந்திய விவசாயிகள் சங்கம் (அ.இ.வி.ச) மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்துடன் (அ.இ.வி.தொ.ச) தலித் மற்றும் ஆதிவாசி சங்கங்கள் இணைந்த ஒன்றுபட்ட கூட்டுப்போராட்டத்தினை முன்னெடுக்கும் பொழுது அப்பகுதியில் பிரதான முன்னேற்றத்தை அடைய வழிவகுக்கும் என்பது திண்ணம்.

எழுச்சிகரமான ராஜஸ்தான், மகாராஷ்டிர விவசாயிகளின் கூட்டுப்போராட்டங்கள்…

சமீபத்திய ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிர மாநில விவசாயிகளின் போராட்டங்களில் கிராமப்புற பணக்கார விவசாயி கூட்டுச்சக்திகளின் வழக்கமான கோரிக்கைகளிலிருந்து நம் கட்டுரையின் முற்பகுதியில் முன்வைத்த ஏழை எளிய பாட்டாளி வர்க்க விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து ஓர் தெளிவான வரையறை கொண்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது ஏழை விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், கிராமப்புற இதர தொழிலாளர்கள், கைவினை கலைஞர்கள் மற்றும் இதர பாட்டாளிகள் கொண்ட விரிவடைந்த ஒற்றுமையை கட்டுவதில் வெற்றியடைந்துள்ளது.

கர்நாடகம், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா மாநிலங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டம் (பரவலாக ரேகா இது என்று அழைக்கப்படுகிறது / 100 நாள் வேலைத்திட்டம் என  அழைக்கப்படுகிறது) தொழிலாளர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட பிரிவினர். நமது அ.இ.வி.ச, அ.இ.வி.தொ.ச மற்றும் பழங்குடி மக்களுக்கான தேசிய மேடை (ஏ.ஏ.ஆர்.எம்) ஆகிய அமைப்புகளின் தலைமையில் ஒன்றிணைந்து, காண்ட்ராக்ட் ஒப்பந்தக்காரர்கள் கிராமப்புற பணக்காரக் கூட்டுசக்திகளோடு சேர்ந்து தேசிய ஊரக வேலைவாய்ப்பு தொழிலாளர்களின் உணவில் மண்ணை அள்ளிப்போடுவதற்கு ஒப்பான பெரிய இயந்திரங்களை பயன்படுத்துதல் என்ற போர்வையில் ஊழல் செய்து மக்கள் வரிப்பணத்தை உண்டு கொழுப்பது, தொழிலாளர்களின் கூலிப் பணத்தை கொள்ளையடிப்பது, ஜாப் கார்டு என்று அழைக்கப்படும் ரேகா அட்டையை கைப்பற்றி பிணையம் போன்று வைத்து கொண்டு கூலிப்பணத்தை தராமல் இருப்பது உள்ளிட்ட அநியாயங்களை எதிர்த்த போராட்டத்தின் மூலம் ஒன்று திரண்டுள்ளனர்.

இத்தகைய ஒன்றுபட்ட பரந்த மேடை சுரண்டும் வர்க்கத்திற்கு எதிராக சுரண்டலுக்குள்ளாகும் வர்க்கத்தினரை திரட்டுவதில் நல்ல பலனை ஈட்டியுள்ளது. அவர்கள் பரவலாக நடைபெறும் அரசு திட்டங்களின் ஊழலுக்கெதிராகவும், ஏழை விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு திட்டத்தின் பலன்களை கிடைக்க செய்யாமல் , கிராமப்புற பெரிய பணக்காரக்கூட்டுச்சக்திகள் அனுபவிக்கும் ஏற்பாடுகளை செய்யும் நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ கட்சிகளின் உள்ளூர் தலைவர்களின் அநீதியான செயல்பாடுகளுக்கு எதிராகவும் கடும் போராட்டக்குரலை எழுப்பினர்.

தொழிலாளர்களும் விவசாயிகளும் இணைந்த வர்க்க போராட்டங்கள்…

மற்றுமொரு போராட்டக்களம் என்பது கட்டுமானத்துறையில் தொழிலாளர்களை சுரண்டலுக்குள்ளாக்கும் பெரிய காண்டிராக்டர் மற்றும் இடைத்தரகர்களை எதிர்த்த போராட்டமாகும். அத்தகைய கிராமப்புற பாட்டாளி தொழிலாளி வர்க்கத்தினரை குறிப்பாக கட்டுமான தொழிலாளர்களை தொழிற்சங்கத்தின் அங்கத்தினராக மாற்றும் களச்செயல்பாட்டை சிஐடியூ தொழிற்சங்கம் வலியுறுத்தியதன் விளைவாக தொழிலாளர்கள் பலனடைந்துள்ளனர்.

இதேபோல் பீடி சுற்றும் தொழிலாளர்கள், தலை சுமைப்பணி தொழிலாளர்கள், ஊராட்சி தூய்மைப்பணி ஊழியர்கள் மற்றும் தொழிலாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கெதிரான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஊழியர்கள் (ஆஷா ஊழியர்கள்) போன்றோர்கள் தான் சமீபத்திய ஆண்டுகளில் மிகப்பிரமாண்டமான தொழிற்சங்க போராட்டங்களை நடத்தியவர்களில் முக்கியமானவர்கள். இத்தகைய சங்கங்கள் தங்களுடைய போராட்டங்களில் மட்டும் நின்றுவிடாமல் கிராமப்புற ஏழைகள் மற்றும் விவசாய வர்க்கத்தினரின் போராட்டங்களுக்கு ஆதரவாகவும் போராடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கத.

நவீன தாராளமய மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிரான பூமி அதிகார அந்தோலன் இயக்கம்

குறிப்பிட்ட பிரச்சினைகளின் மீதான ஒன்றுபட்ட போராட்டங்களை கட்டும்போது சில சமீபத்திய அனுபவங்கள் கசப்பான ருசிகரம். பூமி அதிகார அந்தோலன் என்று அழைக்கப்படுகின்ற நில உரிமை மீட்புக்குழு கூட்டமைப்புடனான இயக்கத்தில் நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிரான போராட்டத்தில் வெறும் நிலம் கையகப்படுத்துதல் பிரச்சினைக்கு எதிராக திரள்வது  மட்டுமின்றி நில உரிமைக்கான போராட்டமாக அதனை மாற்றி முன்னெடுக்க வேண்டும் என்று அ.இ.வி.ச மற்றும் அ.இ.வி.தொ.ச முன்வைத்தபோது கிராமப்புற பணக்கார கூட்டுச்சக்திகளுக்கு விசுவாசமான சில அமைப்புகள் வெளியேறிவிட்டன.

கடன் தள்ளுபடி மற்றும் கட்டுப்படியான விலை நிர்ணயம் என்ற இரு பிரதானமான கோரிக்கைகளை முன்வைத்து ஜூன் 2017 ல் துவக்கப்பட்ட அகில இந்திய கிசான் சங்கர்ஷ் கோ-ஆர்டினேஷன் கமிட்டி எனப்படும் விவசாயிகளின் கூட்டுப்போராட்ட ஒருங்கிணைப்புக்குழு இந்தியா முழுவதும் உள்ள 187 சங்கங்கள் மற்றும் அமைப்புகளை உள்ளடக்கிய மிகப்பரந்துபட்ட விரிவடைந்த மேடையாகும். பணக்கார விவசாயக்கூட்டுச்சக்திகள் மட்டுமே பலன்பெறும் வகையில் வழக்கமான கடன் தள்ளுபடி திட்டம் போல் அமைந்து விடாமல் ஏழை எளிய விவசாயிகள் நேரடியாக பலன்பெறுகின்ற வகையில் நாம் முன்னர் விவாதித்த கடன் தள்ளுபடி திட்டம் குறித்த வரையறைகளுடன் கோரிக்கை வைக்க வேண்டும் எனும் முழக்கத்திற்கு இதில் உள்ள சில அமைப்புகள் உடன்பட மறுக்கும் சிக்கல் ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ,தமிழகம் மற்றும் இன்னபிற மாநிலங்களிலும் நிலவி வருகிறது.

தமிழகத்தில் ருசிகரமோ மிகவும் வினோதமானது. நாம் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் கடன் தள்ளுபடி திட்டத்தை எதிர்த்து கிராமப்புற பணக்காரக் கூட்டுச்சக்திகளின் நலனை பாதுகாக்க நினைக்கும் அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பாட்டாளி வர்க்க விவசாயிகளின் நலன்களுக்கெதிராக சவால் விடுக்கிறது.

பூமி அதிகார அந்தோலன் என்று அழைக்கப்படுகின்ற நில உரிமை மீட்புக்குழுவானது மக்கள் விரோத நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வண்ணம் மதவாத சக்திகளுக்கு எதிரான போராட்ட நிலைப்பாட்டில் தெளிவான முடிவெடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் இத்தகைய இரண்டு முக்கிய போராட்ட குணாம்சம் 187 சங்கங்கள் அடங்கிய அகில இந்திய கிசான் சங்கர்ஷ் கோ-ஆர்டினேஷன் கமிட்டி எனப்படும் விவசாயிகளின் கூட்டுப்போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் வேலைத்திட்டத்தில் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சமூக ஒடுக்குமுறைக்கெதிராக
தீண்டாமைக் கொடுமை, நில உரிமை, கல்வி உரிமை , பொது சுகாதாரம், அடிப்படையாக குடியிருக்கும் வீடு போன்றவை மறுக்கப்படுவது, பலிகடாவாக்கப்பட்ட சமூகக் குழுக்களின் மனிதர்களை அவர்கள் தொழிலாளியாக வேலைசெய்யும் பகுதியில் தொழிலாளர்களுக்குள் சமூகப் பிளவை ஏற்படுத்துவது, அவர்களை ஒதுக்குப்புறத்தில் தனிமைப்படுத்தி தங்கவைப்பது போன்ற சமூக ஒடுக்குமுறைகள் மற்றும் சமூக இழப்புக்கும் எதிரான போராட்டங்கள் சில மாநிலங்களில் நடந்தாலும் இன்னும் கூர்மையான அதிக அளவிலான இயக்கங்கள் கட்டாய தேவையாகும்.

எங்கெல்லாம் மேற்கண்ட திட்டம் திறம்பட நடந்தேறுமோ அங்கெல்லாம் சமூக ஒடுக்குமுறைக்குள்ளான பகுதியினர் வர்க்கப்போராட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் அனைத்து வர்க்கமும் ஒன்று சேரவும் தயக்கமின்றி அனைவரும் சாதிய ஒடுக்குமுறைக்கெதிராக போராடவும் இயலும்.

பீகார் , கர்நாடகா நில உரிமை மற்றும் தலித் ஆலய நுழைவு வெற்றி போராட்டங்களும்
பீகார் மாநிலத்தில் உபரி நிலத்தினை அனுபவித்து வரும் நிலமற்ற ஏழைகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த போராட்டத்திலும், கர்நாடகா மாநிலம் ஹசன் மாவட்டத்தில் கிராமப்புற பெரும்பணக்காரக் கூட்டுச்சக்திகளுக்கு எதிரான பரந்துபட்ட ஒற்றுமையை கட்டியதன்  பலனாக நில உரிமை மற்றும் தலித் ஆலய நுழைவு போராட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளோம்.

பெரும்பணக்கார கூட்டுச்சக்திகள் ஆதிக்கம் செலுத்தி அவர்களின் நலன்களுக்காகவே அரசு மற்றும் இதர அனைத்து வகையிலான பலன்களை ருசிபார்த்து வரும் மாநிலங்களில் கூட்டுறவுத்துறையை ஜனநாயகப்படுத்துவது என்பது மிக முக்கியமான பிரச்சினையை சரிசெய்யும் பணியாகும்.

கேரளம், திரிபுராவில் நாம் கூட்டுறவுத்துறையை ஜனநாயகப்படுத்துவதில் நல்ல முன்னேற்றத்தை அடைந்ததன் விளைவாக இன்ன பிற மாநிலங்களும் இதில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளன. கர்நாடகாவின் பெல்தங்காடி கூட்டுறவுச்சங்கத்தின் மூலம் குறைந்த / நியாயமான வாடகை விலையில் விவசாய இயந்திரங்கள் வாங்கி பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டதால், பெரும்பணக்கார கூட்டுச்சக்திகளிடம் அளவுக்கதிகமான வாடகையில் விவசாய இயந்திரங்கள் வாங்கி பயன்படுத்த வேண்டிய அவல நிலை தடுக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவின் தன்டேவாடா அடுத்த மாவோயிஸ்ட்களின் கோட்டையான நபராங்பூர் மாவட்டத்தில் ஆதிவாசிகளை திரட்டி ஐயாயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்களை உரிமைப்போராட்டத்தில் பெற்று தற்பொழுது ஆதிவாசிகள் உழுது விவசாயம் செய்து வருகிறார்கள். அங்கு மக்காச்சோளம் தான் பிரதானமான பயிர்.

மத்திய பாஜக – நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தேர்தல் அறிக்கையில் அளித்த விவசாய விளைபொருள் உற்பத்தி செலவில் ஒன்றரை மடங்கு விலைகொடுப்போம்   வாக்குறுதியை நிறைவேற்ற மறுக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்படியாகாத குறைந்தபட்ச ஆதார விலையைக்கூட தர மறுக்கிறார்கள் வர்த்தகர்கள்.

விளைபொருட்களை பதப்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்  செய்யும் கட்டமைப்பு முறைகள் பெரும்பணக்காரக்கூட்டுச்சக்திகளின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஒரு சிலரிடம் மட்டுமே உள்ளது. நாம் உழவர் கூட்டுறவு அமைப்பை உருவாக்கி மேற்கண்ட பிரச்சினைகளின் சாத்தியக்கூறுகளை கள ஆய்வு செய்து தீர்வு காணும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். பரந்த ஒற்றுமையை கட்டியதன் பயனாக மக்கள் தற்பொழுது நெருக்கமாக ஒன்றிணைந்து ஏழை எளிய மக்களின் பயன்பாட்டிற்காக, சிறந்த பள்ளி கல்வி நிலையங்களை ஏற்படுத்தி,  நன்கு கற்றறிந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பது, ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டமைத்து பொது சுகாதாரம் பேணி காப்பது போன்ற மக்கள் நல பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இறுதியாக..

கிராமப்புற பெரும்பணக்கார கூட்டுச்சக்திகளின் சுரண்டலை எதிர்த்த போராட்ட முயற்சிகளை ஆங்காங்கே எடுத்த போதிலும், இதுகுறித்து நாம் விவாதித்த பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான கிராமப்புற நிலமற்ற அத்துக்கூலித்தொழிலாளர்கள், ஏழை சிறு , குறு விவசாயிகள், விவசாயம் சாரா கைத்தொழிலாளர்கள், கைவினைஞர்கள் உள்ளிட்ட இதர தொழிலாளர்கள் , அனைத்துவகை வெகுஜன கிராமப்புற ஏழைகள் சேர்ந்த பரந்துபட்ட ஒற்றுமையை கட்டி, அவர்கள் அனைவரையும் ஒன்றுத்திரட்டி இன்னும் அதிகப்படியான போராட்ட புரட்சிப்போரினை முன்னெடுத்து நாம் விவாதித்த  தீவிரமாகி வரும் கிராமப்புற முரண்பாடுகளை களைந்திட களம் காண்பதே அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதற்கும், இறுதியாக எதிர்கொள்ள இருக்கும் ”மக்கள் ஜனநாயக புரட்சிக்கு” முன் இன்றைக்கு நம் முன்னேயுள்ள மிகவும் அடிப்படையான சவால் இதுவென்றால் மிகையாகாது.

தமிழில்: சமூகநேசன் எழில்ராஜூ

இடது ஜனநாயக முன்னணி – பிரகாஷ் காரத்

பிரகாஷ் காரத்

இடது ஜனநாயக மாற்றினை நோக்கி முன்னேறுவோம் என்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வகுத்துக்கொண்ட நடைமுறை உத்தியாக அமையப்பெற்ற அறைகூவலாகும். இதற்காக நமது கட்சி, அனைத்து இடது மற்றும் ஜனநாயக சக்திகளை அணிதிரட்டி வலுவான இடது ஜனநாயக அணியினை கட்ட வேண்டும். முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆட்சிமுறைக்கு (bourgeois-landlord order) உண்மையான மாற்றாக இந்த அணி இருக்கும் என்று கட்சி கருதுகிறது.

திரட்டவேண்டிய வர்க்கப் பிரிவுகள்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை தொலைநோக்குத் திட்டத்துடன் இந்த இடது ஜனநாயக மாற்றுக்கு உள்ள பொருத்தப்பாடு என்ன?  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொலைநோக்குத் திட்டம் மக்கள் ஜனநாயகப் புரட்சியை நோக்கியதாகும்.  இதற்காக முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அமைப்பினால் சுரண்டப்படும் வர்க்கத்தின் அனைத்து பிரிவினரையும் ஒன்றிணைத்து, மக்கள் ஜனநாயக முன்னணி அமைக்கவேண்டும் என்கிறது கட்சியின் திட்ட ஆவணம். தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், விவசாயக்கூலிகள், மத்தியதர வர்க்கத்தினர் மற்றும் சிறு முதலாளிகள் ஆகியோரே அந்த சுரண்டப்படும் வர்க்கப் பிரிவினர் ஆவர்.

மக்கள் ஜனநாயக அணியை கட்டுவதை நோக்கி முன்னேறும்போது, தேவைப்படும் நேரங்களில் இடைக்கால நிலைமைகளுக்கேற்ப இடைக்கால முழக்கங்களை உருவாக்கிக் கொள்ளலாம் என்று கட்சியின் திட்டம் விளக்குகிறது.

இடது ஜனநாயக முன்னணி என்பது அப்படிப்பட்ட இடைக்கால முழக்கமாகும்.  அது முதலில் 10வது கட்சிக்  காங்கிரஸ் ஜலந்தரில் 1978 ஆம் ஆண்டு நடந்தபோது உருவாக்கப்பட்டது. 10வது கட்சிக் காங்கிரஸ் இடது ஜனநாயக முன்னணியின் கருதுகோளைக் குறித்து பின்வருமாறு விளக்குகிறது;-

”இடது ஜனநாயக அணியைக் கட்டுவதற்கான நமது போராட்டம் என்பது வர்க்க சக்திகளுக்கிடையேயான சமன்பாட்டில் ஒரு மாற்றத்தினை உருவாக்கும் நமது போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.  அதே போல, இரண்டு நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ கட்சிகளில் ஏதேனும் ஒன்றைத்தான் மக்கள் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்ற நிலையில், தற்போதுள்ள அமைப்பு முறையின் சட்டகத்திற்குள்ளேயே கட்டுண்டு கிடக்கும் நிலையினை மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாகும் அது.  அனைத்து இடது மற்றும் ஜனநாயக சக்திகளையும் அணி திரட்டுவதன் மூலம் இந்த முன்னணியின் முன்னேற்றத்தினை நோக்கி நகர முடியும்.  அவ்வாறு நகரும்போது, கட்சி இந்த சக்திகளை  அணி திரட்டத் தொடங்குவதன் காரணமாக, எதிர்காலத்தில், தொழிலாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் மக்கள் ஜனநாயக அணியினை நாம் கட்ட முனையும்போது இந்த சக்திகள் அந்த அணியில் பங்கேற்க முடியும்.  இடது ஜனநாயக அணியினை வெறும் தேர்தலுக்கான அணியாகவோ அல்லது அமைச்சரவைக்கான முன்னணியாகவோ புரிந்து கொள்ளக்கூடாது.  மாறாக, பொருளாதாரத்தை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கும் பிற்போக்கு சக்திகளை தனிமைப்படுத்துவதற்கும், பொருளாதார மற்றும் அரசியல் தளங்களில் உடனடி முன்னேற்றத்திற்குமான போர்ப்படையாக இதனை புரிந்து கொள்ள வேண்டும்.”

இதன் தொடர்ச்சியாக, மக்கள் ஜனநாயக அணியில் இடம் பெற வேண்டிய வர்க்கங்கள்தான் இடது மற்றும் ஜனநாயக முன்னணியில் இடம் பெறுவார்கள் என்று விளக்கமளித்துள்ளோம்.  இருந்தபோதும், இதில் உள்ள ஒரே வேறுபாடு தலைமை குறித்தானது.  மக்கள் ஜனநாயக முன்னணிக்கான தலைமை தொழிலாளி வர்க்கமாக  இருக்க வேண்டும் என்ற அவசிய தேவை இடது ஜனநாயக அணிக்கான அவசியத்தேவையாக இருக்க வேண்டுமென்பதில்லை.  10வது கட்சிக் காங்கிரசில் இருந்து இந்தக் காலம் முழுவதும் இடது ஜனநாயக அணி என்ற நடைமுறை உத்திக்கான அறைகூவலை விடுத்துவந்த போதிலும், ஒவ்வொரு கட்சி காங்கிரசிலும், இந்த இடைக்கால முழக்கத்தின் நோக்கத்தில் எந்த முன்னேற்றத்தையும்  எட்ட முடியவில்லை.

மேற்குவங்கம், கேரளா மற்றும் திரிபுராவில் மட்டுமே இந்த அரசியல் மற்றும் வர்க்க சக்திகளை கொண்ட முன்னணிகளையும் கூட்டணிகளையும் நம்மால் உருவாக்க முடிந்துள்ளது.  உதாரணமாக, மேற்குவங்கத்தில் கடந்த இரு பத்தாண்டுகளில் பல்வேறு வர்க்கப் போராட்டங்கள் மற்றும் இயக்கங்களின் வாயிலாக இடது முன்னணி கட்டப்பட்டுள்ளது.  ஆனால், இந்த மூன்று மாநிலங்களிலும் இந்த கூட்டணிகளை உருவாக்கியுள்ளது என்பது நமது நோக்கத்தின் ஒரு பகுதி வெற்றிதான்.  இது அகில இந்திய அளவில் உருவாக்கப்பட வேண்டும்.

நடைமுறை உத்தி குறித்த பரிசீலனை:

ஏப்ரல் 2015ம் ஆண்டில் நடந்த 21வது கட்சி காங்கிரஸ் கடந்த 25 ஆண்டுகளாக நாம் கடைபிடித்து வந்துள்ள அரசியல் நடைமுறை உத்தி குறித்த மிக ஆழமான பரிசீலனையை நடத்தியது.  ஏன் நம்மால் இடது ஜனநாயக மாற்றினை கட்ட முடியவில்லை என்பதை பற்றித் தெரிந்து கொள்ள விமர்சனப் பூர்வமான ஆழ்ந்த பரிசீலனை தேவைப்பட்டது.

இந்த ஆழ்ந்த பரிசீலனையின்போது இக்காலக்கட்டத்தில் கட்சியின் சொந்த பலம் அதிகரிக்கப்படவில்லை என்பது தெளிவாகியது.  சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், மேற்குவங்கம், கேரளா மற்றும் திரிபுராவைத் தவிர்த்த நாட்டின் பிற பகுதிகளில் கட்சியின் சொந்த பலம் குறைந்துள்ளது.  காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதா கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்பதே உடனடிநோக்கமாக இருந்ததன் காரணமாக  அதற்குப் பொருத்தமான தந்திரங்களை உருவாக்குவற்கே முதன்மை கவனம் செலுத்தப்பட்டு வந்துள்ளது. இடது ஜனநாயக சக்திகளை அணிதிரட்டும் நோக்கில் கவனம் குவித்து பொதுத் திட்டத்தின் அடிப்படையில் வர்க்க, வெகுமக்கள் போராட்டங்களைக் கட்டமைத்து வளர்ப்பதற்கன முக்கியத்துவம், அவசியமான அளவுக்கு தரப்படவில்லை.

21 வது மாநாட்டின் விவரிப்பு:

எனவே, கட்சிக் காங்கிரஸ் இந்த பலவீனத்தைக் களைவது என்ற முடிவிற்கு வந்தது.  அந்த கட்சிக் காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம் இடது ஜனநாயகஅணியினை கட்டுவதற்கு மீண்டும் முதன்மை இடத்தை வழங்க வேண்டும் என்று முடிவெடுத்தது.  இதற்காக கட்சியின் சொந்த பலத்தை அதிகரிப்பதற்கு மிக அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.  இதற்கு நவீன தாராளமயத்தின் தாக்கத்தின் காரணமாக சமூகப் பொருளாதார சூழ்நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஒரு தீர்க்கமான ஆய்வினை நடத்த வேண்டுமென்றும், அந்த ஆய்வின் அடிப்படையில் நமது நடைமுறை உத்திக்கேற்ற முழக்கங்களை  உருவாக்க வேண்டும் என்றும், வர்க்க மற்றும் வெகுமக்கள் போராட்டங்களை நடத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

21வது கட்சி காங்கிரசும், 10வது கட்சிக் காங்கிரஸ் விவரித்தது போலவே, இடது ஜனநாயக அணியை ஒரு தேர்தல் கூட்டணியாகப் பார்க்கக்கூடாது என்றும்,  அது வெறுமனே அரசியல் கட்சிகளின் கூட்டணி அல்ல என்றும், மாறாக, பல்வேறு வர்க்க மற்றும் மக்கள் ஜனநாயக அமைப்புகள் மற்றும் சமூக இயக்கங்களின் கூட்டணியாகும் என்றும் விவரித்தது.

21வது கட்சி காங்கிரசின் விளக்கம் பின்வருமாறு:-

”இடதுசாரிக் கட்சிகள், அவற்றின் வர்க்க வெகுஜன அமைப்புகள், இடதுசாரி குழுக்கள் மற்றும் இடது அறிவுஜீவிகள், பல்வேறு கட்சிகளில் பரவிக் கிடக்கும்  சமூகவியலாளர்கள், மதச்சார்பற்ற முதலாளித்துவ கட்சிகளில் உள்ள ஜனநாயகப் பிரிவினர், ஆதிவாசி, தலித், பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் ஜனநாயக அமைப்புகள், ஒடுக்கப்படும் மக்கள் பிரிவினரின் பிரச்சினைகளை கையிலெடுத்து போராடும் சமூக இயக்கங்கள் போன்றவை இடது ஜனநாயக அணியில் இடம்பெற வேண்டும்.  இந்த சக்திகள் அனைத்தையும் ஒரு கூட்டு மேடையின் கீழ், முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளின் கொள்கைகளுக்கு எதிரான, ஒரு தனித்துவமான, பொதுத்திட்டத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே, இடது ஜனநாயக அணியினை உருவாக்குவதற்கான திட்டவட்டமான வடிவத்தை நாம் பெறமுடியும்”.

மாநிலங்களுக்கான திட்டம்:

இந்தப் புரிதலின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு இடது ஜனநாயகத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.  அந்தத் திட்டத்தில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் உள்ளடங்கியிருக்கும்.  இந்தத்திட்டத்தின் கீழ் எந்தெந்த மக்கள் சக்திகள் இடது ஜனநாயக அணியின் கீழ் கொண்டு வரப்பட வேண்டுமோ அந்தப் பிரிவினர் அனைவரும் அணி திரட்டப்பட வேண்டும்.  இந்த கூட்டுமேடையிலிருந்து பல்வேறு கட்சிகள், வர்க்கங்கள், வெகுஜன அமைப்புகள் மற்றும் சமூக இயக்கங்கள் கட்டவிழ்த்துவிடும் ஒன்றுபட்ட போராட்டங்கள் மற்றும் இயக்கங்களின் மூலம், ஒரு குறிப்பிட்ட அரசியல் திசைவழியுடன் கூடிய திட்டவட்டமான இடது ஜனநாயக அணி உருவாக்கப்பட வேண்டும்.

அப்படி ஒரு முன்னணி உருவாக்கப்படும்போது, அந்த முன்னணியினால் பிற முதலாளித்துவ கட்சிகளின் கொள்கைகளில் இருந்தும், அரசியலில் இருந்தும் முற்றிலும் வேறான அரசியல் – தத்துவப் பார்வையினை கொண்டு செயல்படமுடியும்.

தமிழகத்தில் இடதுஜனநாயக திட்டம்:
தமிழ் நாட்டில், 21வது கட்சிக் காங்கிரசிற்குப் பிறகு இடது ஜனநாயக திட்டத்தினை உருவாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.  பல்வேறு இடதுசாரி கட்சிகளின் வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகள் ஒரு பொது மேடையின் கீழ் ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்தவும், இயக்கங்களை நடத்தவும் அணிதிரட்டப்பட்டன.  இது தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.

இதோடு கூட, முக்கிய திராவிட கட்சிகள் மற்றும் பிற முதலாளித்துவ கட்சிகளின் அரசியல் மற்றும் தத்துவார்த்தப் பார்வையிலிருந்து தனித்துவமான தத்துவார்த்தப் பார்வையுடன் கூடிய  ஒரு அரசியல் கொள்கை திட்டம் இந்த கூட்டு மேடையில் இருந்து உருவாக்கப்பட வேண்டும் என்ற தேவை உள்ளது.  நவீன தாராளவாதக் கொள்கைகளுக்கு மாற்றான, மக்கள் முன்னேற்றத்திற்கான, மற்றும் இந்த சமூகத்தில் நிலவும் பொருளாதார சமூக ஏற்றத்தாழ்வுகளுக்குக் கடிவாளமிடக்கூடியதுமான ஒரு மாற்றுக்கொள்கைச் சட்டகம் அங்கு உருவாக்கப்படவேண்டும்.

கருத்தியல் போராட்டம்:

இந்தத் திசைவழியில் எடுக்க வேண்டிய மற்றொரு நடவடிக்கை திராவிடக் கருத்தியலுக்கும், இயக்கங்களுக்கும் இசைவான ஒரு இடதுசாரி கருத்தியல் பார்வை உருவாக்கப்பட வேண்டும்.  இந்த இடதுசாரிக் கருத்தியல், திராவிடக் கருத்தியலுடனும் இயக்கங்களுடனும் விமர்சனப்பூர்வ தலையிடல் மேற்கொண்டு அதன் பாரம்பரியத்தில் அமைந்த நேர்மறை அம்சங்களை இணைத்துக் கொள்வதாகவும், எதிர்மறை அம்சங்களைக் கழித்துக்கட்டுவதாகவும் அமைந்து, அதன் போதாமைகளை மிஞ்சுவதாக அமையவேண்டும். மேலும் குறிப்பாக புதிய தாராளவாதத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட கேடுவிளைவிக்கும் கருத்தியல் தலையீட்டையும், சீர்குலைவையும் புரிந்துகொள்ளவேண்டும்.

மேலும், இந்த இடது ஜனநாயகத் திட்டம் என்பது மக்களை பிரித்தாளும் இந்துத்துவா வகுப்புவாதக் கொள்கைகளை எதிர் கொள்ளக் கூடிய வகையில் ஒரு தெளிவான திசைவழியினை காட்ட வேண்டும்.

கட்சியின் அனைத்து மட்டங்களுக்கும் இடது ஜனநாயக அணி குறித்தும் அதனுடைய மாற்று குறித்தும் அதன் அடிப்படைக் கரு குறித்தும் தெளிவாக விளக்கி அவர்கள் புரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும்.  இதனை தேர்தல் கூட்டணிகளுடனோ அல்லது தேர்தல் உடன்பாட்டுடனோ குழப்பிக் கொள்ளக்கூடாது என்பது தெளிவாக அவர்களுக்குப் புரியச் செய்யப்பட வேண்டும்.  இடது ஜனநாயக அணியினை கட்டுவது என்பதனை நமது பிரதானமான நோக்கமாக தக்க வைத்துக் கொண்டு, எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் அதற்குப் பொருத்தமான தேர்தல் உத்திகளை உருவாக்கிக் கொள்ளலாம். கட்சியின் நலன்களை நோக்கி முன்னேறுவதன் அவசர அவசியத்திற்கும், இடது ஜனநாயக சக்திகளை அணி திரட்டுவதன் உடனடி அவசர அவசியத்திற்கும் நன்றாகப் பொருந்தும்படி இந்த தேர்தல் உத்திகள் வடிவமைக்கப்பட வேண்டும்.

  • தமிழில்: ஆர்.எஸ்.செண்பகம்

இடது ஜனநாயக அணியில் ஒடுக்கப்பட்ட சமூக பிரிவினரின் பங்கு

. வாசுகி

கொள்கை குறித்த கேள்வியையே நையாண்டி செய்வோர், எதிரும் புதிருமான அத்தனை தத்துவங்களையும் வரிசைப்படுத்தி, இதுதான் எங்கள் கட்சியின் இசம் என்று சொல்வோர்,

இதுவரை கொள்கை குறித்து எவ்வித முன்மொழிவும் இன்றியே ஆட்சிக்கு வந்து விட்டோர்,

சுரண்டும் வர்க்கத்துக்குத் துணை போகும் கொள்கைகளை, தேன் தடவிய சொல்லாடல்களால் மறைப்போர்

எனப் பலரையும் இச்சமூகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, இந்திய மக்கள் விடுதலைக்காக நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற மும்முனைகள் கொண்ட மக்கள் ஜனநாயக புரட்சி செய்வதை இலக்காக வைத்து, அதற்கான திட்டத்தையும் மக்கள் முன் வைத்திருக்கிறது. புரட்சியின் படையாக மக்கள் ஜனநாயக அணி உருவாக்கப்பட வேண்டும் என்பதுடன், இதை அடைய, இடது ஜனநாயக அணி என்பதை இடைக்கால நோக்கமாகவும் முன்வைக்கிறது. இந்த இதழின் மற்ற கட்டுரைகளில், இடது ஜனநாயக அணி குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

இது வர்க்கங்களால் கட்டமைக்கப்படும் அணி என்று கூறும் அதே சமயத்தில்,  ஒடுக்கப்படும் சமூக பிரிவினர் இதில் இடம் பெறும் அவசியம் குறித்தும் இடது ஜனநாயக திட்டம் பேசுகிறது.

இந்திய சமூக அமைப்பில் சாதியும் வர்க்கமும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. சாதிய அமைப்பின் மீதே, இன்றைய முதலாளித்துவ வர்க்கமும், தொழிலாளி வர்க்கமும் பிறந்திருக்கின்றன என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புரிதலாகும். கட்சி திட்டத்தின் பிரிவு 3.15, சாதிய மற்றும் பாலின ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை என்பதை புரட்சிகர மாற்றத்தின் ஒரு முக்கிய பகுதியாக முன்னிறுத்துகிறது. இந்திய சூழலில், வகுப்புவாத நடவடிக்கைகளால் சிறுபான்மை மக்கள் பாகுபடுத்தப்படுகின்றனர் என்ற அடிப்படையில், விடுதலை என்பதில், சாதியம், மதவெறி போன்றவற்றிலிருந்து விடுதலை என்பதும் உள்ளடங்கும் எனவும் அது விளக்குகிறது.

சாதியம், வகுப்புவாதம், ஆணாதிக்கம் என்ற மூன்றுக்கும் எதிரான சமரசமற்ற போராட்டம், சுரண்டலை எதிர்த்த வர்க்க போராட்டத்தின் முக்கிய பரிமாணமாக விளங்குகிறது. ஒரு சமூகப் பகுதி என்ற முறையில் தலித், பழங்குடியின மக்கள், மத வழி சிறுபான்மையினர்,  பெண்கள் ஆகியோர் பிரத்தியேக ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர். ஒருவர் பெண்ணாக, தலித்தாக/பழங்குடியினராக, தொழிலாளி/விவசாயியாக இருந்தால் பாலினம், சாதியம், வர்க்கம் என்கிற மூன்று அடிப்படையிலும் ஒடுக்கப்படுகிறார். இசுலாமியராக, கிறித்துவராக இருந்தால் இந்துத்துவ அடக்குமுறைக்கு உள்ளாகிறார்.  இத்தகைய சமூக ஒடுக்குமுறை பிரச்னைகளைக் கையிலெடுக்காமல், வர்க்க ஒற்றுமையையும் கட்ட முடியாது.

சமூக ஒடுக்குமுறையும் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளும்:

முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ கட்சிகள், கவனமாக, சமூக ஒடுக்குமுறையை அரசியல் படுத்தி, வாக்கு வங்கியாக மாற்றுகின்றன. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்ற அடிப்படையில் தேர்தல் அரசியலை மையப்படுத்தியே பிரச்னைகளில் தலையீடுகள் செய்யப்படுகின்றன. உடுமலை சங்கர் படுகொலையில் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை கிடைத்தது குறித்து அதிமுக உள்ளிட்ட பல மாநில முதலாளித்துவ கட்சிகள் கருத்து கூற விரும்பவில்லை என்பது மட்டுமல்ல, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுக, அச்செய்தியை முரசொலியில் வெளியிடவில்லை என்பதும்,  எங்கள் கட்சி உறுப்பினர்களில் 70% இந்துக்கள் என்று ஒரு கட்டத்தில் கூறியதும்  இதற்கு ஒரு சான்று.

அதேபோல், சமீபத்தில் நடந்த குஜராத் தேர்தலில் காங்கிரஸ் பிரச்சாரம் செய்த ஓர் இடத்தில் கூட, மோடி  முதல்வராக இருந்தபோது  இசுலாமியர்கள் கொன்று குவிக்கப்பட்ட சம்பவத்தைப் பேசவில்லை. அதன் பொது செயலாளர் ராகுல் காந்தி, நான் ஒரு பிராமணன், சிவ பக்தன் என்று பேசியதும் தற்செயலானதல்ல. ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில், பசு பாதுகாப்பு என்ற பெயரால் இசுலாமியர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவங்களில், ஒரு கண்டன அறிக்கை கொடுப்பதற்குக் கூட  காங்கிரஸ் முன்வரவில்லை.

ராம நவமி போன்ற விழாக்களை, மேற்கு வங்கத்தில், பாஜகவுடன் போட்டி போட்டுக் கொண்டு காங்கிரஸ் நடத்தியது. ஒரு சில இடங்களில் விழா மேடையில் இரு கட்சிகளின் உள்ளூர் தலைவர்களும் இடம் பெற்றனர்.  அதாவது, இங்கு, சமூக பிரச்னைகளில் தன் கொள்கையை சொன்னால் பெரும்பான்மை மதத்தினரின் வாக்குகள் வராது என்று மதிப்பீடு செய்து, பாஜக நிகழ்ச்சி நிரலின் சில பகுதிகளைத் தமதாக்கிக் கொள்ள காங்கிரஸ் முயற்சிக்கிறது.

பாஜகவோ, சாதிய படிநிலையை நியாயப்படுத்திக் கொண்டே, இந்து என்கிற பெயரில் தலித்துகளை  அணி திரட்ட முயற்சிக்கிறது. சில இடங்களில் இசுலாமியர்களுக்கு எதிர் நிலையில் அவர்களை நிறுத்தியதும் நடந்திருக்கிறது.  கர் வாபசி என்ற அவர்கள் முழக்கத்தின் போது, முற்போக்காளர்கள் கேட்டனர், மீண்டும் இந்து மதத்துக்கு வந்த பிறகு, அவர்களை எந்த சாதியில் வைப்பீர்கள்,  அவரவர் ஏற்கனவே இருந்த சாதிய படிநிலையில் தானே? என்று.  வர்ணாசிரம தர்மம் உழைக்கும் வர்க்கத்தின் பகுதிகளான தலித், பழங்குடியின மக்கள், பெண்களை சமூக ஏணிப்படியின் கீழ் படியில்தான் வைத்திருக்கிறது. எனவே, இந்துத்துவத்தின்  உள்ளடக்கத்தில் சாதி வெறியும், ஆணாதிக்கமும் உண்டு என்பதைப் பார்க்கத் தவறி விடக்கூடாது.

இந்திய முதலாளித்துவம் சாதிய பாகுபாடுகளை வளர்க்கிறது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.  அதாவது சமூக ஒடுக்குமுறை, குறிப்பாக சாதிய, பாலின ரீதியான ஒடுக்குமுறை, மலிவு உழைப்பை உறுதி செய்கிறது.  முதலாளித்துவத்தின் அடித்தளமான உழைப்பு சுரண்டலை நியாயப்படுத்தும் ஏற்பாடே இது. ஏகாதிபத்தியத்தின் தற்கால முகத்தோற்றமான நவீன தாராளமயம் இச்சுரண்டலைத் தீவிரமாக்குகிறது. திமுக, அதிமுக போன்ற மாநில முதலாளித்துவ கட்சிகளும் கூட அவர்கள் வர்க்க நலனிலிருந்து நவீன தாராளமய ஆதரவாளர்களாக, அவற்றை நிறைவேற்றுபவர்களாக மாறியுள்ளனர். சமூக நீதி என்ற திராவிட கருத்தியலின் முக்கிய கூறு, இக்கட்சிகளின் குணாம்சம் மாறுபட்டுள்ள சூழலில், நீர்த்துப் போய்க்கொண்டிருக்கிறது. எனவே சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான அவர்களின் குரல் ஏட்டளவிலேயே நிற்பதைக் காண முடிகிறது.

மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு:

மார்க்சிஸ்ட் கட்சி சமூக ஒடுக்குமுறை தொடர்வதற்குக் காரணமாக உள்ள பொருளியல் தளத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. வேலை, நிலம், கூலி உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைக்கிறது. தீண்டாமை பிரச்னையை ஜனநாயக பிரச்னையாகப் பார்த்து, பாதிக்கப்பட்ட பகுதியினர் மட்டுமல்ல; ஜனநாயக எண்ணம் கொண்ட அனைவரும் சேர்ந்து போராட வேண்டிய அவசியத்தைப் பேசுகிறது.

அனைத்தையும் சாதி அமைப்புகள் என்று   வகைப்படுத்துவது தவறு  எனவும், சாதிய ஒடுக்குமுறையிலிருந்து விடுபட வேண்டும் என்று போராடும் தலித், பழங்குடியின அமைப்புகளின் செயல்பாட்டில், நிகழ்ச்சி நிரலில் விடுதலைக்கான வேட்கையும், ஜனநாயக உள்ளடக்கமும் இருக்கின்றன என்பதையும் விளக்குகிறது. சில தலித் இயக்கங்கள்  ஒடுக்கப்பட்ட மக்களை சாதிய வரம்புக்குள் நிறுத்துகிற அடையாள அரசியலைப் பின்பற்றுகின்றன. இத்தகைய அடையாள அரசியலை நிராகரித்து,  மேற்கூறிய ஜனநாயக உள்ளடக்கத்தை வலுப்படுத்த வேண்டும்.

வர்க்க போராட்டம் வலுப்பெற வேண்டுமானால், கடும் உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாகும் தலித் பழங்குடியின பகுதியினர் அதில் இடம் பெற வேண்டும். அவர்கள் மீதான பொருளாதார சுரண்டலுடன், அவர்கள் சந்திக்கும் பிரத்தியேக சமூக ஒடுக்குமுறை ஒழிக்கப்படுவதற்கான போராட்டத்தையும் சேர்த்துக் கையில் எடுக்க வேண்டும். அதே போல்தான், பாகுபாடுகளுக்கு எதிரான பெண்கள் இயக்கங்களின் போராட்டம், ஜனநாயக போராட்டத்தின் ஒரு பகுதி. சமத்துவத்துக்கான அவர்களின் குரல் சமூக விடுதலைக்கான குரல். எனவே மேற்கூறிய சமூகப்பகுதியினர், ஜனநாயக புரட்சியை முன்னெடுக்க முதல் கட்டமாகத் தேவைப்படும்  இடது ஜனநாயக அணியின் பிரிக்க முடியாத பகுதியினராக இடம் பெறுவர்.

மேலும், கிராமப்புற பணக்கார வர்க்கங்கள், சாதியிலும், பொருளாதாரத்திலும், வளங்களின் மீதும் அதிகாரம் செலுத்துபவர்களாக செயல்படுவதையும், மாநில முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகள் இவர்களின் நலனைப் பிரதிபலிப்பதையும், வாக்குகளுக்காகவும், நிதிக்காகவும் இவர்களை சார்ந்து இருப்பதையும், கிராமப்புற உழைப்பாளி மக்கள் மீதான சுரண்டல் வலை இந்தக் கொள்ளை கூட்டணியால் பின்னப்படுவதையும்  மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டமும், ஸ்தாபன சிறப்பு மாநாட்டு ஆவணமும் சுட்டிக்காட்டுகின்றன.  கிராமப்புறங்களில் நிலவும் இத்தகைய முரண்பாடுகளை முன்னிறுத்திப் போராடாமல் இடதுசாரி இயக்கத்தை வளர்த்துவிட முடியாது. இத்தகைய போராட்டத்திலும், அடிப்படை வர்க்கங்களுடன், தலித், பழங்குடியினத்தவர், பெண்கள் இணைக்கப்பட வேண்டும்.

முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில், மத வழி சிறுபான்மை மக்களின் உரிமைகள் நிலைநாட்டப் படுவதில்லை என்று சுட்டிக்காட்டும் மார்க்சிஸ்ட் கட்சி, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையை வலுப்படுத்தும் போராட்டமாகும் என உறுதிபடக் கருதுகிறது. ஜனநாயக புரட்சியை நோக்கிய பயணத்தில் இடது முன்னணி மேடையில் இவர்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

ஊனமுற்றோர், இச்சமூகத்தில் பிரத்தியேக பிரச்னைகளை சந்திக்கின்றனர். இவர்களில் பெரும் பகுதியினர் ஏழைகளாக உள்ளனர். இவர்களும், இடது ஜனநாயக அணியில் இடம் பெற வேண்டிய சக்திகளே.

21வது அகில இந்திய மாநாட்டில் முன்வைக்கப்பட்ட இடது ஜனநாயக திட்டம்:

தலித்:

சாதி ஒழிப்பு, அனைத்து வித சாதிய ஒடுக்குமுறைகள் ஒழிப்பு, தீண்டாமை மற்றும் சாதிய பாகுபாடுகளைக் கடைப்பிடிப்போருக்குக் கடும் தண்டனை,  காலி பணியிடங்களை நிரப்புதல்,  தலித் கிறித்துவர்களையும் தலித் என வகைப்படுத்துவது,  தனியார் துறையில் இட ஒதுக்கீடு.

பழங்குடியினத்தவர்:

பழங்குடியின மக்களின் நில உரிமையைப் பாதுகாப்பது; அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீட்பது;  வன உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது; சிறு வன பொருட்களுக்கு ஆதரவு விலை நிர்ணயிப்பது; பழங்குடி மொழிகள் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது.

சிறுபான்மை மக்கள்:

சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாப்பது; கல்வி, வேலை வாய்ப்பு, சமூக நல நடவடிக்கைகள் போன்றவற்றில் இசுலாமியர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்.

பெண்கள்:

சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு, பெண்கள், குழந்தைகள் மீதான அனைத்து வித வன்முறைகளையும் தடுக்க, நிறுத்த, குற்றவாளிகளைத் தண்டிக்க கறாரான நடவடிக்கைகள்; சம வேலைக்கு சம ஊதியம்.

ஊனமுற்றோர்:

உரிமை அடிப்படையிலான ஏற்பாடுகள், ஊனத்தை அடிப்படையாக வைத்து பாகுபாடு பார்ப்பதைத் தடுக்க அரசியல் சட்டத்தைத் திருத்துவது;  சம வாய்ப்புகள், சம தளத்தில் செயல்பட உகந்த ஏற்பாடுகள், அனைத்துப் பொது இடங்களுக்கும் தடையின்றிப் போவதற்கான ஏற்பாடு.

செய்ய வேண்டியது என்ன?

21வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானத்தின் 2.87 பிரிவு, பழங்குடி, தலித், பெண்கள், சிறுபான்மையினரின் ஜனநாயக தன்மை கொண்ட அமைப்புகள், ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பிரச்னைகளை எடுத்து செயல்படும் சமூக அமைப்புகள் இடது ஜனநாயக அணியின் ஓர் அம்சம் என்று குறிப்பிடுகிறது. முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளின் கொள்கைகளுக்கும் முற்றிலும் மாறுபட்ட திட்டத்தின் அடிப்படையில் இவர்களை அணி திரட்டுவது முக்கிய கடமை என்றும் முன் வைக்கிறது.

இந்த அடிப்படையில்தான், கட்சியின் மத்திய குழு, தலித், பழங்குடியின அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு, சிறுபான்மை மக்களின் நலனுக்காக செயல்படும் அமைப்புகள், ஒடுக்கப்பட்ட சமூக பிரிவினருக்காக நேர்மையுடன் போராடும் அமைப்புகள், பெண்கள் அமைப்புகளுடன் கூட்டுப் போராட்டங்கள் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்துகிறது. தத்துவார்த்த ரீதியான தலையீடுகள் செய்வதையும் வற்புறுத்துகிறது.

அரசின் கொள்கைகள் வர்க்கச் சுரண்டலைத் தீவிரப்படுத்துகிறது. ஏற்கனவே சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பகுதியினர், இதற்குக் கூடுதல் இலக்காகின்றனர். மறுபுறம் நிலம், வேலை, கூலியில், பொருளாதாரத்தில் கீழ்மட்டத்தில் இருப்பதால் இவர்களை சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவது எளிதாகிறது.  உதாரணமாக, நிலமற்றவர்களுக்காக நில சீர்திருத்தம் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்ட கோரிக்கையாக இருக்கும் போது, நிலங்களிலிருந்து தலித் மற்றும் பழங்குடியினரை மேலும் அந்நியப்படுத்தி, கார்ப்பரேட் மற்றும் முதலாளிகளுக்கு ஆதரவாக நிலக்குவியலை உறுதி செய்ய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. நிலத்தின் மீது, வளங்களின் மீது அதிகாரம் மறுக்கப்படுவது பாகுபாடுகளை அதிகப்படுத்துகிறது. எனவே, ஒடுக்கப்பட்ட சமூக பகுதியினரின் நலனுக்கான மாற்று திட்டத்தை முன் வைத்து, வலுவான போராட்டங்களை சுயேச்சையாகவும், அவர்கள் மத்தியில் பணியாற்றும் அமைப்புகளுடன் இணைந்து நடத்துவதன் மூலம் இடதுசாரி அரசியல் நோக்கி அவர்களை ஈர்க்க முடியும். இப்பகுதியினர் மத்தியில் பணியாற்றும் இடதுசாரி அமைப்புகள் இத்தகைய கண்ணோட்டத்துடன் இயங்க வேண்டும்.

புரட்சியை உந்தித்தள்ளிய தோழர் லெனினின் ‘ஏப்ரல் ஆய்வுரைகள்’

ஜி. செல்வா

“லெனின்மட்டும் தான் புரட்சிக்கு வெளியே தனியாக நிற்பார். நாம் எல்லோரும் நம் சொந்த வழியில் செல்வோம்” இது லெனின் முன்மொழிந்து பேசிய ஏப்ரல்ஆய்வுரைகள் குறித்து பிளக்கனோவ் சொன்னது. இன்னும் ஒரு படி மேலே சென்று இவை அனைத்தும் “வெறும் பிதற்றல்” என்றார். இப்படியாய் புரட்சியின் திட்டம்குறித்து, நடைமுறை உத்தி குறித்து பழங்கருத்துக்களைக் கையாண்டவர்களை மார்க்சிய தத்துவ வெளியில் சித்தாந்த ரீதியாக அடித்து நொறுக்கி “புரட்சியினை நடைமுறையில் எதார்த்தமாக்கினார்” லெனின்.

இது எப்படிசாத்தியமாயிற்று?
சூழல் புரட்சிகரமாக மாறிவிட்டது என்பதை எப்படி உணர்வது?
ஒரு மார்க்சியவாதி நெருக்கடியான சூழல்களை எப்படி எதிர்கொள்வது?
கட்சியை, மக்களை புரட்சிகர இயக்கத்தில் எப்படி பங்கேற்கவைப்பது?

இப்படியாய் பல்வேறு வினாக்களை எழுப்பி தெளிவுபெற உலகப் புரட்சிகர சக்திகளுக்கு இன்றும் தோழர் லெனின்தான் ஆசானாகத் திகழ்கிறார். அவர் எழுதிய எழுத்துக்களை, நூல்களை நிதானமாகப் படித்து புரிந்து கொள்வது காலத்தின் தேவை. அதிலும் உலக அளவில் மார்க்சிய அறிஞர்கள் லெனினது எழுத்துக்களை இன்று பல்வேறு காலகட்டங்களாகத் தொகுத்து ஆய்வு செய்து வருகின்றனர். அப்படி பார்க்கும்போது 1917 பிப்ரவரி முதல் அக்டோபர் வரையிலான எழுத்துக்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.இவ்வெழுத்துக்கள் தொகுக்கப்பட்டு பிரகாஷ் காரத் முன்னுரையோடு “லெனின் 1917” என்ற புத்தகத்தை லெப்ட்வேர்டு பதிப்பகம் வெளியிடுகிறது.

இக்காலகட்டத்தை அதாவது புரட்சிகரமான காலகட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் லெனினது எழுத்துக்களில் மிக முக்கியமானது ஏப்ரல் ஆய்வுரைகள் (April Thesis). இந்த ஆய்வுரைகளின் சாராம்சத்தை லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தபோதே கடிதங்கள் வாயிலாக கட்சி அணிகளுக்கு தெரிவித்தவண்ணம் இருந்தார். அது “தூரதேசத்திலிருந்து லெனினது கடிதங்கள்” (Letters from Afar) என தொகுக்கப்பட்டுள்ளது. ஆனால், லெனின் அனுப்பிய முதல் கடிதம் மட்டும்தான் அப்போது கட்சிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டது. மற்ற கடிதங்கள் அக்டோபர் புரட்சிக்குப் பின்புதான் அச்சாகியது. எனவே, ரஷ்யப் புரட்சியை உந்தித் தள்ளும் வினையூக்கியாக செயலாற்றியது ‘ஏப்ரல் ஆய்வுரைகள்’தான்.

ஆய்வுரைகள் உருவானதன் பின்னணி

ஒருநாள் மதிய உணவுக்குப் பிறகு லெனின் அவரது புகழ் பெற்ற நூல் ஒன்றினை எழுதுவதற்கான விவரங்களை சேகரிக்க நூலகம் நோக்கி செல்லத் தயாராகிறார். அப்போது அங்கு வந்த போலந்து நாட்டு இளம் புரட்சியாளர் மிஷிஸ்லா பிரான்ஸ்கி (Mieczyslaw Bronski) “உங்களுக்கு செய்தி தெரியாதா? ரஷ்யாவில் புரட்சி தொடங்கி விட்டது” என்கிறார். அப்போது லெனின் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜூரிச் தலைநகரத்தில் இருந்தார். இச்செய்தி லெனினை உற்சாகம் கொள்ள வைத்துவிட்டது. உடனே ரஷ்யா செல்லத் தயாராகிறார். சுமார் 1981 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த லெனின் அடுத்த சில தினங்களிலேயே பல்வேறு கட்டுப்பாடுகளையும், தடைகளையும் மீறி ரஷ்யா செல்கிறார். இப்பயணம் குறித்து பல்வேறு ஆய்வாளர்கள் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க முக்கியமான கட்டுரையை ரஷ்யப் புரட்சி நூற்றாண்டு சிறப்பிதழில் ஃப்ரண்ட்லைன் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இந்தப் பயணத்தின்போதுதான் லெனின் தனது ஆய்வுரைகளை வளர்த்தெடுக்கிறார். ஏப்ரல் மாதத்தில் அது முன்மொழியப்பட்டதால் ஏப்ரல் ஆய்வுரைகள் என அழைக்கப்படுகிறது. அப்போது முதல் உலக யுத்தம் (1914-1918) நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த யுத்தம் குறித்து எத்தகைய நிலைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென முடிவெடுப்பதற்காக 1912-ல் சோசலிஸ்ட் கட்சிகளின் சர்வதேச காங்கிரஸ் விவாதிக்கிறது. அம்மாநாட்டின் முடிவாக முதலாம் உலக யுத்தம் ஏகாதிபத்தியங்களுக்கிடையே நாடு பிடிப்பதற்கான போட்டிதான். எனவே, சோசலிஸ்டுகள் இந்த யுத்தத்தைஆதரிக்கக் கூடாது. மேலும், உள்நாட்டில் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்காகப் பயன்படுத்த வேண்டும் என முடிவெடுக்கின்றனர்.

இம்மாநாட்டில் பங்கெடுத்த சோசலிஸ்ட் சக்திகள் தங்களது நாட்டுக்குத் திரும்பியவுடன், தங்களது நாட்டின் முதலாளித்துவ அரசியலுக்குப் பின்னால் போருக்கு ஆதரவாக அணிதிரண்டு நின்றனர். குறிப்பாக, அக்காலகட்டத்தில் மிகப்பெரும் செல்வாக்கு கொண்ட கட்சியாக ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சி இருந்தது. 1906ஆம் ஆண்டு ஒரு லட்சம் உறுப்பினர்களைக் கொண்டிருந்த அக்கட்சி 1914 ஆம் ஆண்டில் 3 லட்சத்து 85 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டு பரந்துபட்ட செல்வாக்கைக் கொண்டிருந்தது. ஆனால், கார்ல் காவுட்ஸ்கி தலைமையிலான இக்கட்சிதான் முதலாம் உலக யுத்தத்தின்போது மிகத் துரோகமான முடிவினை எடுத்தது. ஜெர்மனி நாட்டு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு யுத்தத்தின் நெருக்கடியை பயன்படுத்தாமல் அந்நாட்டு முதலாளி அரசுக்கு சாதகமாக முதலாம் உலகப் போரை ஆதரித்தது. இது சர்வதேச சோசலிச சக்திகளுக்கு பெரும் பின்னடைவை உருவாக்கியது. இத்தகைய கருத்துக்கள்தான் அன்று ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களிடமும் இருந்தது.

ஏகாதிபத்திய போரை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தின்படி லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகள் மட்டுமே செயலாற்றத் தொடங்கினர். ரஷ்யாவில் தொழிலாளர் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பின. தொழிலாளர்களின் எழுச்சியை நசுக்க பெத்ரோகிராடிற்கு அனுப்பப்பட்ட ராணுவம் தொழிலாளர்களோடு கரம் கோர்த்துக் கொண்டது. புரட்சித் தீ பற்றி எரியத் தொடங்கியது. 300 ஆண்டுகள் அசைக்க முடியாத ஜார் ஆட்சியின் அதிகாரம் அகற்றப்பட்டது. போல்ஷ்விக்குகள் தெருவில் இணைந்து மக்களோடு போராடிக் கொண்டிருந்தபோதே 1917 பிப்ரவரி மாதம் ரஷ்ய முதலாளிகளின் தலைமையில் இடைக்கால அரசு அமைக்க மென்ஷ்விக்குகளும், சோசலிஸ்ட் புரட்சியாளர்களும் மிதவாத முதலாளிகளுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டனர். “சமாதானம், உணவு, சுதந்திரத்திற்கான மக்களின் கோரிக்கைகளை புறந்தள்ளி தனக்கு சாதகமாக, அதாவது புரட்சிக்கு எதிரான பாதையில் இடைக்கால அரசு செயல்படத் தொடங்கியது”.

இத்தருணத்தில்தான் 1917 பிப்ரவரி மாதத்தில் வெடித்த புரட்சி செய்திதான் தொலைதூர தேசத்தில் இருந்த லெனினை ரஷ்யா நோக்கி உந்தித் தள்ளியது. 1917 ஏப்ரல் 16 நள்ளிரவில் பெட்ரோகிராட் நகரத்திற்கு வந்து சேர்கிறார். லெனின் வந்ததும் புரட்சியின்முன்னேற்றம் முக்கியத்துவம் பெறத் தொடங்கி விட்டது. ரயில் பயணத்தின்போதே தயாரித்து வைத்திருந்த “இன்றைய புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்”ஆய்வுரைகளை போல்ஷ்விக்குகள் இருந்த கூட்டத்திலும், போல்ஷ்விக்குகள் மற்றும் மென்ஷ்விக்குகள் இருந்த கூட்டத்திலும் முன்மொழிந்து அவர் பேசுகிறார். இந்த உரைதான் பின்னர் ஏப்ரல் ஆய்வுரைகள் என அழைக்கப்பட்டது. அடுத்த சில தினங்களில் எழுதிய “செயல் தந்திரம்” பற்றிய கடிதங்கள் “புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்” ஆகியவற்றை இணைத்துத்தான் ஏப்ரல் ஆய்வுரைகள் என்ற நூல் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுரைகளைத்தான் பிளக்கனோவ் முதல் டிராட்ஸ்கி வரை எதிர்த்தனர். ஜெர்மன் ராணுவ அதிகார வர்க்கத்துடன் லெனினுக்கு தொடர்பு இருக்கிறது என ரஷ்ய முதலாளித்துவ கட்சிகள் அவதூறு பிரச்சாரம் செய்தன. லெனினையும் அவரது தோழர்களையும் உறுதியாக எதிர்க்க வேண்டுமென மென்ஷ்விக்குகள் கூப்பாடு போட்டனர். ஆனால், நடந்தது என்ன? லெனினது கருத்துக்கள் பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறை எதார்த்தமாக்கப்பட்டது.

இந்த ஆய்வுரைகள் புரட்சியின் தற்போதைய கட்டம், இடைக்கால அரசு குறித்த நிர்ணயிப்பு, சோசலிச புரட்சிக்கான வழிகாட்டுதல், அதற்காக மக்களை வென்றெடுக்கவும் விவசாயிகளை அணிதிரட்டுவதற்குமான வழிமுறைகள், கட்சி அமைப்பில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என பல்வேறு முக்கிய அம்சங்களை, கருதுகோள்களைக் கொண்டுள்ளது.

உலக யுத்தமும், புரட்சிகரமான தற்காப்புவாதமும்

முதலாம் உலக யுத்தம் குறித்த நிர்ணயிப்பின்படி செயல்படாததால் பல்வேறு நாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பின்னடைவுக்குள்ளானது வரலாறு. ஆனால், லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகள் மட்டுமே இந்த யுத்தத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டனர். அது அவ்வளவு எளிதாக இருந்ததா? “யுத்தம் அவசியமானது”, “நாடு பிடிப்பதற்கான வழிமுறை அல்ல யுத்தம்” என்று பெரும்பான்மையான ரஷ்ய மக்கள் கருதினர்; கருத வைக்கப்பட்டனர்.

எனவே, இதற்கேற்றாற்போல் யுத்தத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் “புரட்சிகரமான தற்காப்பு” (Revolutionary Defense) என்ற நிலைப்பாட்டை இடைக்கால அரசாங்கம் எடுத்தது. இதை கடுமையாக எதிர்த்தார் லெனின். இந்த யுத்தமானது சந்தேகத்திற்கிடமின்றி கொள்ளைக்கார ஏகாதிபத்திய யுத்தம்தான் எனக் கூறினார். மூலதனத்திற்கும், யுத்தத்திற்குமுள்ள பிரிக்க முடியாத பிணைப்பைஎடுத்துரைத்து மூலதனத்தை தூக்கி எறியாமல் யுத்தத்திற்கு முடிவு கட்டாமல், உண்மையில் ஜனநாயக பூர்வமான சமாதானத்தை ஏற்படுத்துவது சாத்தியமல்ல என்பதை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டுமென லெனின் வற்புறுத்தினார்.

‘புரட்சிகரமான தற்காப்பில்’ நம்பிக்கை கொண்டுள்ள வெகு மக்களின் நேர்மையை சந்தேகம்கொள்ளாமல் அவர்களை முதலாளிகள் ஏமாற்றுகிறார்கள் என்பதை மிகத் தீர்க்கமாக, விடாப்பிடியாக, பொறுமையாக மக்களிடம் எடுத்துக் காட்ட வேண்டியது அவசியம்.மேலும், இது போன்ற பிரச்சாரங்களை யுத்தத்தில் பணியாற்றிவரும் ரஷ்ய ராணுவவீரர்கள் மத்தியிலும் விரிவான முறையில் கொண்டு செல்ல வேண்டுமென்றார். ஏனெனில், அப்போது ரஷ்ய ராணுவத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போர் வீரர்கள் பெரும்பாலும் கிராமப்புற விவசாயம் சீரழிக்கப்பட்டதால் பிழைப்பு தேடி ராணுவத்தில் சேர்க்கப்பட்டவர்களே. தற்காப்பு வாதத்திற்கு எதிரான இத்தகைய போராட்டம்தான் திட்டவட்டமான வெற்றியை கொடுக்கும் எனக் கூறும் லெனின், “ஒரு வேளை வேகமாக வெற்றி கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், வெற்றி எதார்த்தமாகவும், நீடித்ததாகவும் இருக்கும்” என்கிறார்.

புரட்சியின் தற்போதைய கட்டம்
நீண்ட, உதறியெறியப்பட்ட சந்தமாய்
சமகாலக் கவிஞர் கூட்டத்தால்
எள்ளி நகையாடப்படும் நான்
காலமெனும் மலைகளைத் தாண்டி வருகின்ற ஒன்றை
யாரும் காணாததைக் காண்கிறேன்
பட்டினிப் பட்டாளத்தால் மனிதனின் பார்வை
குறுக்கப்படும் அவ்விடத்தில்
புரட்சியின் முட்கிரீடம் தரித்த
1916ஐப் பார்க்கிறேன் நான்

புரட்சியை எதிர்பார்த்து அக்காலத்தின் சூழலை தனது கவிதையில் பிரதிபலிக்கிறார் கவிஞர் மயாகோவ்ஸ்கி. கலைஞனின் எதிர்பார்ப்பை கச்சிதமாக களத்தில் நிறைவேற்றுகிறார் புரட்சியாளர் லெனின்.

எப்படி?

மாறிவரும் சூழலையும், மக்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு புரட்சிக்கான கட்டத்தை தீர்மானிப்பது மிக முக்கியமானது. அதைத்தான் லெனின் செய்தார். “ரஷ்யாவில் இன்றைய நிலைமையின் சிறப்பம்சம் புரட்சி ஆரம்ப கட்டத்திலிருந்து இரண்டாம் கட்டத்திற்கு மாற்றமடைய வேண்டி இருக்கிறது” என்கிறார் லெனின். அதாவது 1917 பிப்ரவரி மாதம் நடைபெற்ற புரட்சியில் அதிகாரத்திற்கு வந்த இடைக்கால அரசு புரட்சியின் முதற்கட்டமாகவும், சோசலிசத்தை நோக்கி மாறுவது இரண்டாவது கட்டம் எனவும் லெனின் வரையறுக்கிறார். “உழைக்கும் வர்க்கத்திற்கு இருக்க வேண்டிய வர்க்க விழிப்புணர்வு, ஸ்தாபன வலிமை இல்லாததால் புரட்சியின் முதல் கட்டம் முதலாளி வர்க்கத்தின் கைகளில் அதிகாரத்தை கொடுத்தது. இரண்டாவது கட்டத்திலோ அதிகாரம் உழைக்கும் வர்க்கம்மற்றும் ஏழை விவசாயி கைகளுக்கு வரவேண்டும்” என்கிறார் லெனின். இத்தகைய முடிவுக்கு லெனின் வந்ததற்கான காரணங்களை புரிந்து கொள்வதன் மூலமாக உலகப் புரட்சிகர சக்திகள் தங்களது நாடுகளில் மார்க்சிய தத்துவத்தை சூழலுக்கு ஏற்றாற்போல் எப்படி பயன்படுத்துவது என்பதை புரிந்துகொள்ள முடியும். “ஒரு மார்க்சியவாதி சாத்தியப்பாடுகளிலிருந்து ஆரம்பிக்காமல் எதார்த்த நிலையிலிருந்து பார்க்க வேண்டும்” என்கிறார்.

மறுக்க முடியாத உண்மை என்ன வெனில், உண்மை நிகழ்ச்சிகளையும், எதார்த்தத்தின் கறாரான விபரங்களையும் ஒரு மார்க்சியவாதி கணக்கில் எடுக்க வேண்டும். நேற்றைய தத்துவங்களை பிடித்துக் கொண்டு தொங்கக் கூடாது. இந்தத் தத்துவத்தையும் மற்ற தத்துவங்களைப் போலவே பிரதானமாகவும், பொதுவாகவும்தான் கூற முடியும். வாழ்க்கையின் சிக்கலான அம்சங்களை ஸ்தூலமாக பரிசீ லிப்பது போலன்றி இது ஏறக்குறையத்தான் பரிசீலிக்கும்”. இவ்வாறு சொல்லும் லெனின், கத்தேயின் ஒரு மேற்கோளை சுட்டிக் காட்டுகிறார். “எனது நண்பனே! தத்துவம் நரைத்துப்போனது. ஆனால், வாழ்க்கை எனும் விருட்சம் பசுமையானது. சாகாவரமான வாழ்க்கை மரம்தான் பசுமையானது”. இதன்மூலம் வாழ்க்கை அனுபவத்தை, நடைமுறையை, தத்துவத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டும் என சொல்லித் தருகிறார்.

புரட்சிக்கான பாதை

போல்ஷ்விக்குகளைத் தவிர அன்றிருந்த மற்ற அனைத்து சக்திகளும் இடைக்கால அரசான முதலாளித்துவ அரசின் மீது மாயையை உருவாக்கியவண்ணம் இருந்தன. இதை தகர்க்க வேண்டும் என்கிறார் லெனின். அதே நேரத்தில் இந்த அரசுக்கு மாற்றாக தொழிலாளர்கள்-விவசாயிகள் அடங்கிய சோவியத்துகள்தான் புரட்சிகரமான அரசு என வரையறைசெய்கிறார். இங்கு மிக முக்கியமான விஷயம் என்னவெனில், தொழிலாளர்-விவசாயிகள் அடங்கிய சோவியத்துகளில் அப்பொழுது பெரும்பான்மையாக இருந்தவர்கள் ‘சோசலிஸ்ட் புரட்சியாளர்கள்’ தான். போல்ஷ்விக்குகள் எண்ணிக்கையில் மிகக் குறைவாகவே இருந்தனர். ஆனாலும், லெனின் இந்த தொழிலாளர்களின் பிரதிநிதிகள் அடங்கிய சோவியத்துகள்தான் புரட்சிகரமான அரசாங்கத்தின் சாத்தியமான ஒரே ரூபமாகும் என்பதை வெகுஜனங்களுக்கு விளக்கிக்கூற வேண்டும் என்கிறார். ‘நாம் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் வரை தவறுகளை விமர்சித்து அம்பலப்படுத்துவதை மேற்கொள்ள வேண்டும். அரசாங்க அதிகாரம் அனைத்தும் தொழிலாளர் பிரதிநிதிகள் அடங்கிய சோவியத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்பதையும் கற்பிப்போம். அப்போதுதான் அனுபவத்தின்பேரில் மக்கள் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்வர்’. அதாவது முதலாளித்துவ அரசின் செல்வாக்கிலிருந்து மக்கள் விடுபடுவர் என லெனின் கூறுகிறார்.

அதேபோன்று தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் இவர்களின் பிரதிநிதிகள் கொண்ட சோவியத்துகளை மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை நாடெங்கிலும் கொண்ட குடியரசு அமைய வேண்டும். தற்போதுள்ள இடைக்கால அரசின் போலீஸ், ராணுவம், அதிகார வர்க்கம் ஒழிக்கப்பட வேண்டும். அதிகாரிகள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவசியம் ஏற்பட்டால் அவர்களை அப்பதவியிலிருந்து நீக்க உரிமை வேண்டும். அதுமட்டுமல்ல, லெனின் சொல்கிறார் அதிகாரிகளின் சம்பளம் ஒரு திறமையான தொழிலாளியின் சம்பளத்தை விட அதிகமாக இருக்கக் கூடாது.

உடனடியாக அனைத்து வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளோடு இணைக்கப்பட்டு அது தொழிலாளர்களின் பிரதிநிதிகளின் அதாவது சோவியத்துகளின் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் எனக் கூறுகிறார் லெனின், அதே நேரத்தில் நமது உடனடி கடமை “சோசலிசத்தை புகுத்துவது அல்ல. சமூக உற்பத்திகளையும், உற்பத்தியாகும் பொருட்களின் விநியோகத்தையும் தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்தின் நிர்வாகத்தின்கீழ் கொண்டுவருவதுதான்” என மிகப் பொருள்பொதிந்த கடமையை வரையறுக்கிறார்.

புரட்சிகர சக்தியான விவசாய வர்க்கம்

மார்க்சிய தத்துவத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பை லெனின் வழங்கியுள்ளார். அதில் மிக முக்கியமானது விவசாய வர்க்கத்தை புரட்சியின் அச்சாணியாக மாற்றியது. விவசாயப் போராட்டங்கள், கலகங்கள் பிரெஞ்சு புரட்சியின்போதும் நடைபெற்றது. ஆனால், போல்ஷ்விக் தலைமையிலான ரஷ்ய புரட்சியில்தான் அது மைய சக்தியாகமாறியது. அது லெனினால்தான் சாத்தியமானது. எப்படி?

ஜார் ஆண்ட ரஷ்ய அரசானது மிகப் பெரிய தேசம். அதன் ஒரு முனையானது ஜெர்மனியை ஒட்டி இருந்தது. தொழில் வளர்ச்சியடைந்த தொழிலாளர்களை மையப்படுத்திய பகுதியாக இருந்தது. மறுபகுதியானது பெரும்பாலும் விவசாயிகளை உள்ளடக்கி இருந்தது. இப்பகுதியானது ஆசிய கண்டத்தின் எல்லையை நோக்கி இருந்தது. இவ்விடத்தில்தான் லெனின் ஒரு பெரிய தேசத்தில் புரட்சியை உருவாக்க வேண்டுமெனில் ஏகாதிபத்திய-முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவசக்திகளால் சிக்கி சின்னாபின்னமாகி வரும் மக்களை புரட்சியின் அச்சாணியாக மாற்றுவதற்கான கருதுகோளை வளர்த்தெடுக்கிறார். “தொழிலாளர் கட்சி என்பதால் விவசாய (நில)திட்டத்தை முன்வைப்பதோடு மட்டுமின்றி ரஷ்யாவில் விவசாய புரட்சியின் நலன்களுக்கு உகந்த உடனடியாக நிறைவேற்றக்கூடிய நடைமுறைகளையும் முன்வைக்கவேண்டியது நமது கடமை” என கட்சி அணிகளுக்கு, கட்சிக்கு அறிவுறுத்துகிறார். “அசல் அதிகார வர்க்க புத்திமதிகளை முறியடிப்பதற்காக ஸ்தலங்களில் உள்ள விவசாய பிரதிநிதிகள் சோவியத்துகளின் முடிவுகள் பேரில் தாங்களாகவே விவசாய சீர்திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென்றும், உடனடியாக நில எஸ்டேட்டுகளை பறிமுதல் செய்ய வேண்டுமென்றும் விவசாயிகளை கட்சி வற்புறுத்தவேண்டும்” எனக் கோருகிறார் லெனின். இதை அப்போது லெனின் மட்டும்தான் சொன்னார். மற்றவர்கள் எல்லாம் இப்போது நிலத்தை கைப்பற்ற வேண்டுமா? நிலச் சீர்திருத்தத்தை ஆரம்பிக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். ஆனால், களமோ லெனின் சொன்னதை சாத்தியமாக்கியது.

விவசாய வர்க்கத்தை ரஷ்யப் புரட்சியின் அடிப்படையாக மாற்றியதன் மூலம் லெனின் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு வற்றாத பங்களிப்பை செய்துள்ளார். அது மட்டுமல்ல, ஆசிய நாடுகளின் காலனியாதிக்கத்திற்கு முடிவு கட்டுவதற்கான உந்து சக்தியாகவும் மாறினார் தோழர் லெனின்.

சமூக ஜனநாயக கட்சி கம்யூனிஸ்ட் கட்சியாக மாறியதன் பின்னணி

தனதுஏப்ரல் ஆய்வுரைகளில் கட்சியின் கடமைகளாக லெனின் சுட்டிக்காட்டியதில் ஓர் அம்சம் கட்சியின் பெயரை மாற்றுவது. அதுவரை சமூக ஜனநாயகவாதிகளாக கம்யூனிஸ்டுகள் தங்களை அழைத்து வந்தனர். எனவே, அன்று சமூக ஜனநாயக கட்சி என்பது கம்யூனிஸ்ட் கட்சியாக கருதப்பட்டது. முதல் உலக யுத்தத்தின்போது சமூக ஜனநாயகத்தின் அதிகாரப்பூர்வமான தலைவர்கள் உலகெங்கிலும் சோசலிசத்திற்கு துரோகம் இழைத்துவிட்டு அந்தந்த நாட்டு முதலாளிகளின் பின்னால் அணிதிரண்டு விட்டனர். எனவே, சமூக ஜனநாயகம் என்ற வார்த்தை ‘நடுநிலையானவர்கள்’ என்ற பெயரில் அதிகார வர்க்கத்தின் சார்பானவர்களாக மாறியவர்களை குறிப்பிடும் தரம் தாழ்ந்த வார்த்தையாக மாறிவிட்டது. எனவே, “கம்யூனிஸ்ட் என்னும் பெயர் கட்சியின் இறுதி லட்சியத்தை சரியாக குறிப்பிடுவதால் சந்தர்ப்பவாதத்திற்கும், குறுகிய தேச வெறிக்கும் இடமளிக்காத வகையில் கட்சியின் பெயரை கம்யூனிஸ்ட் கட்சி என்றும், மேலும் புதிய அகிலத்தை அதாவது கம்யூனிஸ்ட் அகிலத்தை நிறுவ வேண்டும்” என்றும் லெனின் வழிகாட்டினார்.

நிறைவாக

இன்று உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கும் ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை சாத்தியமாக்கி மனிதகுல வரலாற்றில் மிக முக்கிய மைல்கல்லாக மாறிய புரட்சியை சாத்தியமாக்கியதற்கான கருதுகோள்களை உருவாக்கியது ஏப்ரல் ஆய்வுரைகள் என்றால் அது மிகையல்ல. 1917 ஏப்ரல் 24 முதல் 29 வரை பெட்ரோகிரேடில் நடைபெற்ற ரஷ்ய போல்ஷ்விக் கட்சியின் மாநாட்டில் லெனின் முன்மொழிந்த ஆய்வுரைகள் ஏற்கப்பட்டது. இதில் 80 ஆயிரம் கட்சி உறுப்பினர்கள் சார்பாக 150 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இம்மாநாடு கட்சியின் அரசியல் ஒற்றுமைக்கும், ஒன்றுபட்ட சக்தியாவதற்கும் உதவி செய்தது மட்டுமின்றி ஒரு நாட்டில் சோசலிசம் வெற்றியடையும் வாய்ப்பு இருக்கிறது எனும் கூற்றையும் உறுதிபடுத்தியது.

லெனினது ஆய்வுரைகளை பிதற்றல் என்று பிளக்கனோவ் கூறியபோது லெனின் கூறினார்: “பாரிஸ் கம்யூன் அனுபவத்தை பற்றியும், தொழிலாளி வர்க்கத்திற்கு எத்தகைய அரசாங்க அமைப்பு தேவை என்பது குறித்தும் மார்க்சும், ஏங்கெல்சும் 1871, 1872, 1875 வருடங்களில் என்ன கூறினார்கள் என்பதை நினைவுபடுத்தி இணைத்து விளக்கிக் கூறுவதைவிட கூச்சலிடுவதும், திட்டுவதும் மிகவும் எளிதானது என்பதில் சந்தேகமில்லை”.

மேலும், நாம் உலகை மாற்றுவதற்காக நிற்கிறோம். கோடானுகோடி மக்களை இழுத்துள்ள கோடானகோடி மூலதனத்தின் நலன் சம்பந்தப்பட்ட ஏகாதிபத்திய உலக யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நிற்கிறோம். மனித சமுதாயத்தின் சரித்திரம் கண்டிராத மிகப்பெரிய பாட்டாளி வர்க்க புரட்சியால்தான் இந்த யுத்தத்திற்கு முடிவு கட்டி உண்மையான ஜனநாயக சமாதானத்தை ஏற்படுத்த முடியும்.

இருந்தாலும், நம்மைக் கண்டு நாமே பயப்படுகிறோம். “அன்பான பழைய” சட்டையை தூக்கி எறிய கஷ்டப்படுகிறோம். கறை படிந்த சட்டையை தூக்கி எறிந்துவிட்டு லினன் சட்டை அணிவோம்” என்கிறார் லெனினது துணைவியும், தோழருமான குரூப்ஸ்கயா தனது நினைவுக் குறிப்புகளில். “நெருக்கடியான காலகட்டங்களில் ஆலோசனை தேவைப்படும் தருணத்தில் எப்போதும் லெனின் மார்க்ஸ், ஏங்கெல்சிடமே செல்வார். தான் எதிர்நோக்கும் சூழலில் மார்க்ஸ் இருந்தால் என்ன செய்வார்? எத்தகைய நிலைபாடு எடுப்பார்? என்ற அடிப்படையிலேயே லெனினும் செயல்படுவார். மார்க்சின் உண்மையான சீடன் லெனின்” என்கிறார்.

இப்படியாய் மார்க்சியத்தை தனது காலத்திற்கும், சூழலுக்கும் ஏற்றாற் போல் வளர்த்தெடுத்து ரஷ்ய புரட்சியை சாதித்தார் லெனின்.

இந்தியாவில் பெரும்பகட்டோடு உருவாக்கப்பட்ட நவீன தாராளமயமாக்கல் கொள்கையின் கொடூரங்களும், பலவீனங்களும் பளிச்செனத் தெரிய ஆரம்பித்து விட்டன. இதைப்பார்த்து உருவான இளைய தலைமுறை இக்கொள்கையின் விளைவுகளுக்கெதிராக எழுச்சியுடன் போராடிவருகிறது. சர்வதேச நிதி நிறுவனத்தால் திட்டமிட்ட சூறையாடல்களுக்கு எதிராக லட்சக்கணக்கான மக்களின் ஆதரவை அடித்தளமாகக் கொண்ட புரட்சிகர கட்சியை கட்டுவதன் மூலம், இந்திய மண்ணில் புரட்சியை சாதிக்க மார்க்சிடம் மார்க்சியம் பயில்வதும், லெனினிடம் லெனினியம் கற்பதும் நம் காலத்தின் அவசிய தேவை.