ஜார்ஜ் டிமிட்ரோவும் ஐக்கிய முன்னணியும்

கே.ஜி. பாஸ்கரன்

ரஷ்யாவில் மொங்கோ நகரில் உள்ள லெனின் சமாதி போன்று, பல்கேரியாவில் சமாதி ஒன்று கட்டப்பட்டு டிமிட்ரோவின் பூத உடல் வைக்கப்பட்டு இருந்தது. 1999இல் பல்கேரியா முதலாளித்துவ நாடான பின்னர், சமாதியை இடிப்பதற்கு முடிவு செய்தனர். பல்கேரிய நாட்டின் மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் சமாதி இடிக்கப்படுவதை விரும்பவில்லை. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் டிமிட்ரோவ் நினைவாலயத்தை 4 முறை குண்டு வைத்து தகர்த்தனர். டிமிட்ரோவின் பூத உடலை எரித்தனர். தற்போது அந்த இடத்தில் நினைவாலயம் இருந்ததற்கான எந்த சுவடும் இல்லை.

பல்கேரியாவின் சோஃபியாவில் முன்பிருந்த கம்யூனிச காலத்து சிலைகளை எல்லாம் அகற்றி விட்டார்கள். அவற்றில் சிலவற்றை ஓரிடத்தில் குவித்து வைத்து மியூசியமாக்கி விட்டார்கள். மியூசியத்திற்கு அருகில் சோசலிஸ்ட் ஆர்ட் மியூசியம் என்ற பெயரில் கம்யூனிச எதிர்ப்பு ஓவியங்களை காட்சிக்கு வைத்து இருக்கிறார்கள். அந்த ஓவியங்கள் 1989ஆம் ஆண்டு, பல்கேரியா முதலாளித்துவத்திற்கு திரும்பியதை கொண்டாடுகின்றன.  அந்த வருடத்திற்கு முந்திய வரலாற்றை அழித்துவிட முதலாளித்துவ சக்திகள் விரும்புகிறது.

முதலாளித்துவத்தின் வளர்ச்சியும் முதலாம் அகிலமும்

18ஆம் நூற்றாண்டின் நடுவில் இங்கிலாந்தில் தொழிற்புரட்சி துவங்கியது. 1776இல் அமெரிக்கா, 1789இல் பிரான்ஸ், பிரேசில், அமெரிக்க ஸ்பானிஷ் காலனி நாடுகள், ஜெர்மன், ஆஸ்திரியா, ஹங்கேரி, இத்தாலி என மேற்கு ஐரோப்பியா மற்றும் வட அமெரிக்க நாடுகள் முழுவதும் முதலாளித்துவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. உலகம் தழுவிய முறையில் முதலாளித்துவ அமைப்பு முறை நிலை பெற்றது. வேகமாக வளர்ந்து வந்த முதலாளித்துவ அமைப்பு மக்கள் மீது அளவற்ற செல்வாக்கு செலுத்தியது. 1844இல் இங்கிலாந்தில் தொழிலாளர் நிலை எனும் நூலில் ஏங்கெல்ஸ் எழுதினார்: “நவீன முதலாளித்துவ சமூகத்தில் ஒவ்வொரு நபரும் பிற நபர்களுடன் போராடாமல் வாழ முடியாது. இதுவே முதலாளித்துவத்தின் பிரதான பண்பு”. 1819இல் இங்கிலாந்தில் தேசிய உரிமைகள் சாசன அமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவே சாசன இயக்கம் என்ற பெயரால் தோன்றிய தொழிலாளர்களின் முதல் அரசியல் கட்சியாகும். 1847இல் கம்யூனிஸ்ட் லீக் உருவானது. இதுவே சர்வதேச முதல் கம்யூனிஸ்ட் அமைப்பு. இந்த அமைப்புதான், 17 ஆண்டுகளுக்கு பின் 1864இல் நிறுவப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அகிலத்துக்கு அடிப்படையாக இருந்தது. 1848 பிப்ரவரியில் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியானது. 1864இல் துவக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அகிலம் 1876 வரை செயல்பட்டது. முதலாம் அகிலம் சித்தாந்த ரீதியாகவும், ஸ்தாபன ரீதியாகவும் நவீன தொழிலாளர் இயக்கத்திற்கு அடித்தளமிட்டது. மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரின் அபாரமான பணியின் மூலம் தொழிலாளி வர்க்க தத்துவ இயலை, உலகக் கண்ணோட்டத்தை, விஞ்ஞான சோசலிசத்தை பிரச்சாரம் செய்வதிலும், நடைமுறைக்கு பொருத்துவதிலும் முதல் அகிலம் பிரதானமான வெற்றியை பெற்றது.

முதல் உலகப்போரும் இரண்டாம் அகிலமும்

 1914 முதல் 1917 வரை நடைபெற்ற உலகப்போரை ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான போர் என லெனின் கூறினார். தொழிலாளி வர்க்கம் ஏகாதிபத்திய நலனுக்கு எதிராகவும், புரட்சிக்காகவும் போராட வேண்டுமென கூறினார். ரஷ்யாவில் புரட்சி வெற்றி பெற்றது. ஆனால் பல நாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்க தலைமை தேசியவாதம் பேசி, ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக நின்று, யுத்தத்திற்கு ஆதரவான நடவடிக்கைகளை எடுத்தன. “இரண்டாம் அகிலம் சந்தர்ப்பவாதத்துடன் போராடுவதற்கு தயாராகவில்லை. சந்தர்ப்பவாதத்துடன் சமாதானமாக வாழ்வதற்கு தயாரானது. சந்தர்ப்பவாதத்தை வலுப்படுத்தியது. சந்தர்ப்பவாதத்துடன் சமரசமாக துவங்கிய இரண்டாம் அகிலம் இறுதியில் அதுவே சந்தர்ப்பவாதத்தின் உருவமாக மாறிற்று”. என ஸ்டாலின் கூறினார்.

மூன்றாம் அகிலத்தின் ஆறாவது மாநாடும் உலகச்சூழலும்

1919இல் துவக்கப்பட்ட மூன்றாவது அகிலம் 1943 வரை செயல்பட்டது. மூன்றாம் அகிலம் புரட்சிகர மார்க்சிய சித்தாந்தத்தை தொழிலாளி வர்க்க இயக்கத்தில் நிலைநிறுத்தியது. இந்த காலகட்டத்தில் உலக தொழிலாளர் இயக்கமும், தேசிய இயக்கங்களும் எதிர்கொண்ட பல சித்தாந்த பிரச்சனைகளுக்கு தீர்வினை சுட்டிக்காட்டி லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோர் மார்க்சியத்தை ஆக்கபூர்வமாக வளர்த்தெடுத்தனர். பல்வேறு நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சியடைந்தது. கம்யூனிஸ்ட் இயக்கம் உலக புரட்சிகர சக்தியாக வடிவமெடுத்தது. மூன்றாவது அகிலத்தின் முதல் மாநாடு 1919 மார்ச் மாதம் மாஸ்கோவில் நடைபெற்றது. முதல் மாநாட்டில் தோழர் லெனின், “இந்த மாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. முதலாளி வர்க்கம் எவ்வளவு வேண்டுமானாலும் எரிச்சல் அடையட்டும். லட்சக்கணக்கான தொழிலாளர்களை கொலை செய்யட்டும். இறுதி வெற்றி நமதே. உலக புரட்சியின் வெற்றியை தவிர்க்க முடியாது” என பேசினார். மூன்றாவது அகிலத்தின் 6வது மாநாடு 1928இல் மாஸ்கோவில் நடந்தது.

மூன்றாவது அகிலத்தின் 6வது மாநாடு உலக நிலைமைகளை கீழ்கண்டவாறு மதிப்பீடு செய்தது. ”ஏகாதிபத்திய தலையீட்டை தோற்கடித்ததோடு மட்டுமில்லாமல் உள்நாட்டு எதிர்ப்பு சக்திகளையும் தோற்கடித்து சோவியத் யூனியன் வெற்றிகரமாக முன்னேறியது. முதலாளித்துவ அமைப்பு கடுமையான நெருக்கடிக்கு ஆளாயிற்று. தொழிலாளர்கள் நேரடியாக புரட்சிகரப் போராட்டங்களுக்கு முற்பட்டார்கள். முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தின் மீது கடும் தாக்குதலை துவக்கியது. முதலாளித்துவ வர்க்க தாக்குதல் தீவிரமானதால், தொழிலாளி வர்க்கம் தன்னைத்தானே தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. பொருளாதார மறு கட்டமைப்புக்கு சோவியத் யூனியன் முயன்றது. இதர நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செல்வாக்கு பரவியது. 1928 கால கட்டத்தில் முதலாளித்துவ உலக தொழில் உற்பத்தி அதிகரித்தது. அதே சமயம், முதலாளித்துவ உலகத்தின் முரண்பாடுகளும் தீவிரமாகியது. மறுபுறம் சோவியத் யூனியன் தொழில்ரீதியாக வளர்ச்சி அடைந்தது.

முதலாளித்துவ உலகத்தில் உற்பத்தி சக்திகள் வளர்ந்தன. மறுபுறம் அவற்றின் சந்தைகளின் பரப்பு குறைந்தது. இந்த நிலைமை ஏகாதிபத்திய நாடுகளிடையே யுத்த சூழலை ஏற்படுத்தியது. தேசிய விடுதலை இயக்கங்களின் மீதும், சோவியத் யூனியன் மீதும் ஏகாதிபத்திய தாக்குதல் நிகழும் அபாயம் அதிகரித்தது. முதலாளித்துவ அமைப்பில் ஏற்பட்டு வந்த தற்காலிக மீட்சி முடிவுக்கு வந்தது. மீண்டும் கடுமையான நெருக்கடி தவிர்க்க முடியாதபடி உருவானது. ஒரு பக்கம் நெருக்கடி. மறுபக்கம் வர்க்கப் போராட்டங்கள்  தீவிரமடைந்தன. சோவியத் யூனியனுக்கு எதிரான யுத்தமாக இது மாறும் என மாநாடு எச்சரித்தது. 1929இல்  முதலாளித்துவத்தைக் கவ்விய நெருக்கடி ஜெர்மனியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வருவதற்கு வழி அமைத்தது. இரண்டாம் உலக யுத்தம் துவங்குவதற்கான சூழல் உருவாகி வருவதை அகிலத்தின் ஆறாவது மாநாடு மிகச் சரியாகவே மதிப்பீடு செய்தது”.

அகிலத்தின் ஏழாவது மாநாடும் உலகைச் சூழ்ந்த பாசிசமும்

1935இல் நடந்த கம்யூனிஸ்ட் அகிலத்தின் 7வது மாநாட்டில் பொதுச்செயலாளராக ஜார்ஜ் டிமிட்ரோவ் தேர்வு செய்யப்பட்டார். அம்மாநாட்டில் ஐக்கிய முன்னணி தந்திர கோட்பாட்டை அவர் முன்வைத்தார். பாசிச இருள் உலகை சூழ்ந்து கொண்டிருந்த காலமது. ஏகாதிபத்திய கட்டத்தில் பாசிசம் என்பது முதலாளித்துவத்தின் தன்மையும் விளைவுமாகும். ஏகாதிபத்தியம் என்பது ஏகபோக மூலதனம் என்றார் லெனின். இதில் நிதி மூலதனத்தின் இயல்பே பிற்போக்கானதாகி விடுகிறது. ஐரோப்பிய முதலாளித்துவத்தில், முதல் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட நெருக்கடி பிற்போக்கின் கோர வடிவமான பாசிசத்தை பிரசவித்தது. அரசு ஏகபோக ஒழுங்குமுறையை மேற்கொள்ளுமாறு கீன்ஸ் யோசனை கூறினார். முதலாளித்துவ நாடுகளில் அத்தகைய புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் அதே சமயம்,  தொழிலாளர்கள் சுரண்டப்படுவது மேலும் அதிகரித்தது. உழைக்கும் வர்க்கத்தின் போராட்டத்தை ஈவு இரக்கமின்றி நசுக்குவதன் மூலம், புரட்சிகர சக்திகள் வளருவதை தடுக்கும் ஒரே சாதனம் என்ற வகையில், பாசிசத்தை ஏகாதிபத்திய நாடுகள் பின்பற்றத் தொடங்கின.

பிரான்சில் பாசிசம் வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு டிமிட்ரோவ் பின்வருமாறு பதிலளித்தார்: “பாசிசத்தின் வெற்றிக்கு பிரான்சும் விதிவிலக்கல்ல. 1830, 1848 புரட்சிகள் மற்றும் பாரிஸ் கம்யூன் போன்ற ஆழமான புரட்சிகர பாரம்பரியம் அம்மண்ணில் இருப்பதால், இத்தாலி, ஜெர்மனியைப் போல வெகு எளிதில் பாசிசம் வேரூன்றிவிட முடியாது. ஆனாலும், இங்கு ஹிட்லர்கள் உருவாவதற்கான அடிப்படையை மறந்து விட இயலாது. வறுமை, வேலையின்மையை எதிர்த்தும், நெருக்கடியில் இருந்து மக்களை காக்கவும், புரட்சிகர இயக்கம் மக்களைத் திரட்டி போராட வேண்டும். இப்போராட்டம் தற்காப்புக்கானதாக இல்லாமல் தாக்கும் தன்மையில் இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி சாத்தியமாகும். பிற்போக்கு சக்திகளும், பாசிசமும், சமூகத்தில் அதிருப்திக்கு ஆளான மக்களை கவருவதை தடுத்து நிறுத்தினால்தான் வெற்றியை உறுதிப்படுத்த இயலும். பாசிஸ்டுகளின் தேசியவெறி, இனவெறி சித்தாந்தத்தையும், அவர்களை பின்னணியில் இருந்து இயக்கும் நிதி மூலதனத்தையும், மக்களிடம் தோலுரித்து காட்டுவதின் மூலமே வெற்றி இலக்கை அடைய முடியும். பாசிச எதிர்ப்பு போராட்டத்தில் இருந்து மக்களை திசை திருப்பும் சக்திகளிடம் இருந்து, தொழிலாளி வர்க்கம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட, விடாப்பிடியான போராட்டத்தின் மூலமே பாசிசத்தை வீழ்த்த முடியும்”.

பாசிசத்தின் தன்மைகளை டிமிட்ரோவ் அம்பலப்படுத்தினார்.  முதலாளித்துவ பொது நெருக்கடி அதிகரித்து வருகையில், அதற்கு எதிரான, புரட்சியை தவிர்ப்பதற்காக முதலாளித்துவம் பாசிசத்தில் புகலிடம் தேடுகிறது என்றார். சோசலிசப் புரட்சியை நெருங்கும்போதுதான் பாசிசம் தாக்குதலை தொடங்கும் என நினைப்பது தவறு. உண்மையில் அதற்கு முன்பே தொழிலாளி வர்க்க ஸ்தாபனங்களை தாக்கி அழித்து விட பாசிசம் முயல்கிறது என்றார் டிமிட்ரோவ். நிதி மூலதனத்தின் கடைக்கோடி பிற்போக்கும், கடைக்கோடி இனவெறியும், கடைக்கோடி ஏகாதிபத்திய தன்மையும் கொண்ட பகுதிகளின், பகிரங்கமான, பயங்கரவாத, சர்வாதிகார முறையே பாசிசம் என்றார். பாசிசம், ரத்தவெறி பிடித்த ஏகாதிபத்திய வேட்டை விலங்கு; மிகக்கொடிய பகைவன் என்றார். பாசிசம் முதலாளித்துவ ஜனநாயகத்தை தாக்குகிறது. உழைக்கும் மக்கள் மீதான அநாகரிகமான சுரண்டல் ஆதிக்கத்தை நிலைநாட்டவும், உழைக்கும் மக்களை நசுக்கவும் முயல்கிறது. எனவே, முதலாளித்துவ நாடுகளில் உள்ள உழைக்கும் மக்கள் இன்றைய தினம் உறுதியாக தேர்ந்தெடுக்க வேண்டியது, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அல்லது முதலாளித்துவ ஜனநாயகம், இரண்டில் ஒன்றை அல்ல. முதலாளித்துவ ஜனநாயகம் அல்லது பாசிசம், இரண்டில் ஒன்றைத்தான் என்றார்.

பாசிசம் எவ்வாறு மக்களை கவருகிறது என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார்: “மக்களின் கோரிக்கை, தேவைகளை பற்றி வாய்ச்சவடால் அடிப்பது, தேசத்தின் கெளரவத்தை காப்பாற்ற தேசியவெறி உணர்வுகளை தூண்டுவது, முந்தைய முதலாளித்துவ ஆட்சியாளர்கள் மீது மக்களுக்குள்ள வெறுப்பை பாசிசம் பயன்படுத்திக் கொள்கிறது” என்றார். முதலாளித்துவ சமூகத்தில் அரசியல் அமைப்புகள் படிப்படியாக பாசிச மயமாவதையும், பாசிசத்தின் நேரடி தாக்குதலையும் கம்யூனிஸ்டுகள் கவனத்தில் கொள்ள வேண்டுமென எச்சரிக்கை செய்தார்.  பாசிசத்தை முறியடிக்க பரந்துபட்ட ஐக்கிய முன்னணியை கட்ட வேண்டிய அவசியத்தையும் டிமிட்ரோவ் வலியுறுத்தினார்.

முரண்பாடுகளும் ஐக்கிய முன்னணியும்

இயற்கையும், சமூகமும் முரண்பாடுகளின் தொகுப்பு என்பதே இயக்கவியல் பொருள்முதல்வாத கண்ணோட்டம் என்கிறார் மாவோ. முரண்பாட்டின் பிரதான அம்சத்திற்கும், பிரதானமற்ற அம்சத்திற்கும் இடையிலான வேறுபாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் மாவோ. கட்சியின் 23வது காங்கிரசின் நகல் அரசியல் தீர்மானம், தீவிரமாகி வரும் நான்கு முரண்பாடுகளையும் கோடிட்டு காட்டுகிறது. இந்திய அரசியலில் முன்னுக்கு வந்துள்ள முரண்பாடுகளையும் தீர்மானம் விரிவாக விளக்குகிறது. இந்துத்துவா – கார்ப்பரேட் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின் வெற்றிக்கு இந்துத்துவா வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும், நவதாராளவாத கொள்கைகளுக்கு எதிராகவும், ஒரே நேரத்தில் போராட்டங்களை முன் எடுக்க வேண்டும் என தீர்மானம் வலியுறுத்துகிறது.

கட்சியை வலுப்படுத்துவதற்கு ஐக்கிய முன்னணி உத்தி அவசியமானவை. பொதுவான பிரச்சனைகளில் வெகுஜன இயக்கங்களை கட்டி எழுப்புவதற்கு முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் ஒன்றுபட்ட நடவடிக்கைகளை முன் எடுப்பதற்கு ஐக்கிய முன்னணி உத்தியை பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட அரசியல் பிரச்சனைகளில் பிரச்சாரங்களையும், போராட்டங்களையும், மக்களைத் திரட்டவும் அரசியல் கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட வேண்டும். தேர்தல் களத்தில் நமது உடனடி நோக்கங்களை அடைவதற்கோ, அரசியல் சூழ்நிலையில் மாற்றத்தை உருவாக்கவோ முதலாளித்துவ கட்சிகளுடன் பொதுவான உடன்பாட்டை உருவாக்குவதும் ஓர் ஐக்கிய முன்னணி உத்தியே. ஆயினும், ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு தனது சுயேட்சையான செயல்பாட்டிற்கு பங்கம் ஏற்படாத வண்ணம் ஐக்கிய முன்னணி உத்தி உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும். முதலாளித்துவ கட்சிகளுடன் கூட்டு மேடைகள் உருவாக்கப்பட்டாலும், கட்சி தனது சொந்த அரசியல் நிலைபாட்டை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் தொய்வின்றி செயல்பட வேண்டும். முதலாளித்துவ கட்சிகளின் அரசியல் நிலைபாட்டிலிருந்து கட்சியின் வேறுபட்ட நிலைபாடுகளை சமரசமின்றி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஐக்கிய முன்னணி உத்தியின் மற்றொரு பிரதான அம்சம் என்னவெனில், இதர முதலாளித்துவ கட்சிகளுக்கு பின்னால் திரண்டுள்ள மக்களை அணுகுவதற்கும், நம் பக்கம் திரட்டுவதற்கும் உதவுகிறது என்பதாகும்.  முதலாளித்துவக் கட்சிகளின் செல்வாக்கின் பிடியில் உள்ள மக்களை வெல்வதன் மூலமும், கட்சி மற்றும் ஜனநாயக சக்திகளின் செல்வாக்கின் கீழ் அவர்களைக் கொண்டுவருவதன் மூலமும், வர்க்க சக்திகளின் பலாபலனில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஐக்கிய முன்னணியின் அவசியத்தையும், அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள குறைபாடுகளையும் 17வது கட்சி காங்கிரசின் அரசியல் – ஸ்தாபன அறிக்கை விரிவாக ஆய்வு செய்துள்ளது.

                  பாசிசத்திற்கு எதிராக கட்டப்படும் ஐக்கிய முன்னணியில் தொழிலாளர்களை ஒன்றுபடுத்த வேண்டியதின் அவசியத்தை டிமிட்ரோவ் விரிவாக எடுத்துரைக்கிறார். 1982 முதல் நடைபெற்று வரும் தொழிற்சங்க வேலைநிறுத்த போராட்டங்களின் மூலம் தொழிலாளர் ஒற்றுமை மேம்பட்டு வருவதை தோழர் தபன் சின்ஹா தனது 2022 மார்ச் மாத வேலைநிறுத்தம் குறித்த கட்டுரையில் குறிப்பிடுகிறார். தொழிலாளி வர்க்கம் தனது நேச சக்தியான விவசாய வர்க்கத்தை அணி திரட்டுவதில் அக்கறையோடு செயல்பட வேண்டுமென்பதையும் வலியுறுத்துகிறார். குறிப்பாக பாசிசத்திற்கு எதிரான ஐக்கிய முன்னணியில் இளைஞர்களையும், பெண்களையும் திரட்டாமல் அப்போராட்டம் வெற்றியடையாது என்கிறார்.

முறியடிக்க வேண்டிய ‘இந்துத்துவ’ நிகழ்ச்சிநிரல்!

Modi Government: New Surge of Communalismஆர்.எஸ்.எஸ் கூறும் இந்து ராஷ்டிரம் என்றரால் என்ன? என்ற தலலைப்பில் தோழர். சீத்தாராம் யெச்சூரி மேற்கொண்ட ஆய்வு, பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ‘மோடி அரசாங்கம்; வகுப்புவாதத்தின் புதிய அலை’ என்ற புத்தகத்தில் முதல் அத்தியாயமாக இடம் பெற்றுள்ளது. இந்துத்துவத்தை களத்தில் எதிர்கொண்டு முறியடிக்கும் பணியில் தோழர்களுக்கு உதவிடும் அந்த ஆய்வின் சுருக்கத் தழுவலை இங்கே வழங்குகிறோம்.


ஆர்எஸ்எஸ் இயக்கத்தினுடைய ‘இந்துத்துவ’ சித்தாந்தம் இந்து மதத்தை மேம்படுத்தும் எந்த சேவையையும் செய்ததில்லை. மாறாக மத அடையாளத்தைக் கொண்டு தன் அரசியல் குறிக்கோளை சாதுர்யமாக நிறைவேற்றிக் கொள்ள விரும்புகிறது. அப்பட்டமாக அதுவொரு வகுப்பு வாதமாகும். இந்த உண்மையை வெளிப்படுத்துவோர் மீது அந்த சித்தாந்தத்திற்காக வக்காலத்து வாங்குவோர் விஷத்தை உமிழ்கிறார்கள். இருப்பினும் இவர்களின் சித்தாந்தத்திற்கு எதிராக மிகவும் வலுவான பதில்கள் இந்து மதத் தலைவர்கள் பலரிடமிருந்தே வந்திருக்கின்றன.

“மக்களின் மத உணர்வுகள் தங்கள் அரசியல் லட்சியத்தை அடைவதற்கான பிரதான வழியாக அவர்களால் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன.   இவ்வாறு மதத்தைத் துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் அவர்கள் இந்து மதத்தின் மனிதாபிமான சாராம்சத்தின் எதிரிகளாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்”.

(குன்றக்குடி அடிகளார் நேர்காணல், ப்ரண்ட்லைன், மார்ச் 12, 1993).

களத்தை தயார் செய்தல்:

முதலில் அவர்கள் தங்கள் நோக்கத்தை அடைவதற்காக வரலாற்றையும் அறிவியலையும் கெட்டிக்காரத்தனமாக திரிக்கின்றனர். பாஜக ஆளும் பல மாநிலங்களில் பள்ளிப் பாடத்திட்டங்கள் மிகவும் அற்பமான விதத்திலும், அறிவியல் அடிப்படையற்றும் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

முதலாவதாக அவர்கள் நாட்டில் பல நூறு ஆண்டுகளாக மக்கள் மத்தியில் இருந்துவரும் பல்வகைப்பட்ட கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், மொழிகள் மற்றும் பழக்க வழக்கங்களை எல்லாம் `இந்துயிசம்’ என்கிற ஒரே பையில் திணிக்க முயல்கின்றனர். இரண்டாவதாக, அயலான எதிரி (external enemy) ஒருவரை உருவாக்குகின்றனர். அதாவது `அயலான’ என்பதன் பொருள் இந்துக்களுக்கு `அயலானவர்’ என்பதாகும். `இந்து’க்களை ஒருமுகப்படுத்திட இத்தகைய `அயலானவர்களுக்கு’ எதிராகத்தான் வெறிச் செயல்கள் விசிறிவிடப்படுகின்றன.

ஏகாதிபத்திய சேவகம்:

இந்த சமயத்தில் ஒன்றை நாம் குறித்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆர்எஸ்எஸ் இயக்கத்தவரால் அயலக எதிரியாக அந்தக் காலத்தில் நம்மை ஆட்சி செய்த பிரிட்டிஷார் அடையாளப்படுத்தப்படவில்லை. உண்மையில் அந்த சமயத்தில் மக்கள், பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தார்கள். ஆர்எஸ்எஸ் இயக்கம் பிரிட்டிஷாருக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்ததைவிட முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்ததுதான் அதிகம். அவ்வாறு முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புதான் பரப்பப்பட வேண்டும் என்று அது தன் அமைப்புகளைக் கோரியது. ஏனெனில் பிரிட்டி ஷாருக்கு எதிராகப் போராடிய இந்திய மக்கள் அனைவரையும் `இந்து ராஷ்ட்ரம்’ என்ற தங்கள் குறிக்கோளை அடைந்திட ஒன்றுபடுத்திட முடியாது என்பதை ஆர்எஸ்எஸ் அறிந்திருந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உணர்வுகள் ஒன்றுபட்ட விடுதலை இயக்கத்தின் வல்லமை அதிகரித்து வருவதன் வெளிப்பாடாகும். இதன் காரணமாக ஆர்எஸ்எஸ் இயக்கம் எப்போதுமே பிரிட்டிஷாரைத் தங்கள் எதிரியாகப் பாவிக்கவில்லை. பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டங்கள் பலவற்றை பகிஷ்கரித்தது. சில சமயங்களில் விடுதலைப் போராட்டத்தை எதிர்க்கவும் செய்தது.

சர்வதேச தொழிலாளர் வர்க்கத்திற்காக சளையாது பாசிஸ்ட் எதிர்ப்புப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஜார்ஜி டிமிட்ரோவ் கூறியதனை இங்கே குறிப்பிடலாம்: “பாசிசம் அதிதீவிர ஏகாதிபத்தியவாதிகளின் நலன்களுக்கே சேவகம் செய்கிறது. ஆயினும் மக்கள் மத்தியில் முந்தைய மோசமான ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டுவிட்டார்கள் என்று நாடகமாடி, எனவே நாட்டுப்பற்று மிக்கோர் அவர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறது.”

(டிமிட்ரோவ், 1972, ப. 11).

பன்மையை வெறுத்தல்:

மதம், அரசியலிலிருந்தும் அரசின் கட்டுப்பாட்டிலிருந்தும் தனியே பிரிக்கப்பட வேண்டும் என்றும் அதனை தனிப்பட்டவரின் பிரச்சனையாகக் கருத வேண்டும் என்கிற மதச்சார்பின்மை குறித்த நவீன சித்தாந்தத்தை கோல்வால்கர் தள்ளுபடி செய்கிறார். பல்வேறு தேசங்கள், ஒரே மதத்தை அரசு மதமாகக் கொண்டிருக்கிறது என்பதையோ, அல்லது எந்த மதத்தையும் ஏற்றுக் கொள்ளாது மதச்சார்பற்ற தேசங்களும் இருப்பதையோ மற்றும் பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட தேசங்களும் இருப்பதையோ, நாட்டின் ஒற்றுமையைக் கட்டிக்காத்திட மதத்திற்கு இடமில்லை என்று அறிவியல் பூர்வமாக மெய்ப்பிக்கப்பட்டிருக்கிற உண்மையையோ, அவர் மறுதலிக்கிறார்.

நம் நாட்டில் புழக்கத்திலிருக்கும் ஏராளமான மொழிகளையும், அவை ஒவ்வொன்றுக்குமே தனி வரலாறு, பண்பாடு மற்றும் பாரம்பர்யம் இருப்பதையும், பரஸ்பரம் தொடர்ந்து கலந்துறவாடுவதன் மூலமே தேசிய இனங்கள் உருவாகி இருக்கின்றன என்பதும் அவர்களால் ஏளனத்துடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. “கடவுள்களால் பேசப்பட்ட சமஸ்கிருத மொழி இமயமலையிலிருந்து தெற்கேயுள்ள பெருங்கடல் வரையும், கிழக்கிலிருந்து மேற்கு வரை பரவியுள்ள அனைவருக்கும் பொதுவான மொழி. மற்றும் நவீன அனைத்து சகோதர மொழிகளும் அதிலிருந்துதான் வந்திருக்கின்றன.”

(கோல்வால்கர், 1939, ப.43)

தமிழும் காஷ்மீரியும் மொழிகளில் சமஸ்கிருதக் குழு அல்லாத மூலங்களைக் கொண்டவை என்பது குறித்து அவர்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது. அல்லது அதற்காகவாவது, சமஸ்கிருத மொழியே இந்தோ ஐரோப்பிய மொழிகளின் ஒரு கிளைதான் என்றும், அது உலகத்தின் இந்தப் பகுதியில் மலர்ந்து வளர்ந்தது என்றும் கூறவேண்டும். இந்தியாவிலேயே முழுமையாகவும் பூரணமாகவும் மலர்ந்த மொழி உருது. அதனைக் காவிப் படையினர் எதிர்க்கிறார்கள் மற்றும் இந்தியைத் திணிக்க முயற்சிக்கிறார்கள்.

பாசிசத்துக்கான தத்துவ நியாயம்:

இத்தகைய திரிபு வேலைகளைச் செய்த பிறகு – தன்னுடைய ‘இந்து தேசத்தின்‘ அடிப்படையாக அமையும் சகிப்பின்மைக்கான தத்துவ அடிப்படையை விதைக்கத் தொடங்குகிறது. “அந்நியர்களாக இருப்பவர்களுக்கு இரு மார்க்கங்கள் மட்டும்தான் வெளிப்படையாக இருக்கிறது. ஒன்று அவர்கள் தேசிய இனத்துடன் முழுமையாக இணைந்து, அவர்களின் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும், அல்லது தேசிய இனம் அவ்வாறு அவர்கள் தொடர்ந்து இருப்பதற்கு அனுமதிக்கும் வரையில்  மற்றும் தேசிய இனத்தவரால் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறிட வேண்டும் என்று சொல்லும் வரை, அவர்களது கருணையின் கீழ் வாழ்ந்து கொள்ள வேண்டும்….”

“ஜெர்மனி தன்னுடைய இனம் மற்றும் கலாச் சாரத்தின் தூய்மையை அழியாமல் காப்பதற்காக, தங்கள் நாட்டில் இருந்த யூத இனத்தை அழிக்கும் வேலையில் இறங்கியதன் மூலம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இனத்தைப் பற்றிப் பெருமை கொள்வது இங்கே தெளிவாய்ப் புலப்படுகிறது. இனங்கள் மற்றும் கலாச்சாரங்கள் ஆழமாக வேரூன்றும்போது ஒன்று போலாவதைத் தடுப்பது எந்த அளவுக்கு சாத்தியமில்லை என்பதை ஜெர்மனி காட்டியிருக்கிறது. இது இந்துஸ்தானில் உள்ள நமக்கு ஒரு சரியான படிப்பினை. இதனை நாம் கற்றுக்கொண்டு ஆதாயம் அடைய வேண்டும்.”

(கோல்வால்கர், 1939, ப. 35).

`ஹிட்லர், இவ்வாறு, ‘குருஜியினுடைய குரு’ வாக வெளிப்படுகிறார். உண்மையில், இது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் திட்டத்தின் கொடூரமான குணத்தை வெளிப்படுத்துகிறது. பாசிசம் என்னும் பரிபூரணமான நவீன மற்றும் மேற்கத்திய சித்தாந்தத்தைக் கடன் வாங்கிக் கொள்வதில் இந்துத்துவாவிற்கு எவ்விதமான மனஉறுத்தலும் இல்லை. ஆனால், வெளித்தோற்றத்தில் இந்து மதத்தினை உயர்த்திப் பிடிப்பதற்கும், அனைத்துமே புராதனமானவை என்று காட்டுவதற்கும் அதனை வெகு சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. பாசிசம் தவிர மற்ற அனைத்து மேற்கத்திய சித்தாந்தங்களும் நாகரிக முன்னேற்றங்களும் `அந்நியமானவை’ என்று கண்டனத்திற்குரியவைகளாகின்றன.

மனுவை மீட்டெடுத்தல்:

கோல்வால்கர் முன்வைக்கும் இந்து ராஷ்ட்ரத்தின் சமூக ஒழுங்கைப் பற்றியும் குறிப்பிடுகிறார். அவர் மனுவை “உலகின் முதலாவதும், மாபெரும் சட்ட வல்லுநருமாவார்’’ என்று போற்றிப் பாராட்டியிருப்பதுடன், “அவர்தான் தன்னுடைய மனுதர்மத்தில் உலகில் உள்ள அனைத்து மக்களும் இந்துஸ்தானுக்குச் சென்று அந்நாட்டிலுள்ள `முதலில் பிறந்த’ பிராமணர்களின் புனிதக் காலில் விழுந்து வணங்கி, தங்களுடைய கடமைகள் என்ன என்பதைக் கற்றுத் தெளிய வேண் டும்,’’ என்றும் கட்டளையிட்டிருக்கிறார்.

(கோல்வால்கர், 1939, பக். 55-56).

மனுஸ்மிருதி என்ன கூறுகிறது? “சூத்திரனுக்கு மிகவும் சிறந்த இயற்கையாய் அமைந்த செயல் பிராமணர்களுக்குப் பணிவிடை செய்வதுதான் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இதைத் தவிர அவன் வேறு எதைச்செய்தாலும் அவனுக்குப் பலனளிக்காது”. (123, அத்தியாயம் 10).

“பெண்களுக்கு என்று தனியே வேத சுலோகங்கள், சடங்குகள் இல்லை. இது மிகவும் உறுதியாக நிறுவப்பட்டுள்ள சட்டமாகும். பெண்களைப் பொறுத்த வரை, அவர்கள் ஆண்களைப் போன்று பலம் உள்ளவர்கள் அல்ல, பொய்யைப் போல் மாசு வடிவினர். இது நன்கு நிறுவப்பட்டிருக்கிறது.’’ (19, அத்தியாயம் 9)

இன்னும் ஆணாதிக்க, சாதி ஆதிக்க அடித்தளங்கள் கொண்ட சமூகத்தை நிறுவனமயமாக்கும் சட்டங்களை வகுத்துள்ளது மனுஷ் மிருதி.

இந்தப் புரிதலின் காரணமாகத்தான் ஆர்எஸ்எஸ், சுதந்திரத்திற்குப் பின் இந்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமுன்வடிவை (Hindu Code Bill) உடனடியாக எதிர்த்தது. இன்று மனுஸ் மிருதியை உயர்த்திப் பிடிக்கும் வேலைகளில் காவிப்படையினர் உறுதியாக இறங்கியுள்ளனர். உயர்சாதி மகாராஷ்ட்ர பிராமணர்கள் ஆர்எஸ்எஸ் தலைவர்களாக இதுநாள் வரை இருந்து வருவதன் முக்கியத்துவமும் இங்கே கவனிக்கத்தக்கது.

பொய் முழக்கங்களும், மெய்யான குறிக்கோளும்:

இந்த வழிகளிலெல்லாம் காவிப்படையினர் தங்கள் தாக்குதலை எதற்கு எதிராக அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நோக்கினால் – அவர்கள் சுதந்திர இந்தியாவின் அரசியலை வரையறுத்த மதச்சார்பின்மையையும் மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்களையும் தாக்குகிறார்கள் என்பதும் தெளிவாகிறது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குத் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள்தான் காரணம் என்றும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அரசமைப்புச் சட்டத்தையும் நாட்டின் நடைமுறையில் இருந்துவரும் சட்டங்களையும் மிக மோசமான முறையில் மீறியதால் அல்ல மாறாக தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளின் காரணமாக என்கின்றனர் காவிப்படையினர்.

இத்தகைய இவர்களது உத்திகள் குறித்தும் டிமிட்ரோவ் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

“பாசிசம் மிகவும் லஞ்சம் மற்றும் கைக்கூலி வாங்குகிற பேர்வழிகளின் கருணையில் இருக்கும்படி மக்களை வைக்கிறது. ஆனால் அதேசமயத்தில் மிகவும் விரக்தியில் ஊசலாடிக் கொண்டிருக்கும் மக்களிடம் `ஒரு நேர்மையான மற்றும் லஞ்சத்திற்கு ஆட்படாத அரசாங்கத்தை’ அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன்வைக்கிறது… பாசிசம் மக்கள் மத்தியில் வெறியைக் கிளப்புவதற்கு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பிரத்தியேகமான சிறப்பியல் புகளைப் பயன்படுத்திக் கொள்கிறது. பாசிசம் மக்கள் உணர்ச்சியை வெறித்தனமாகக் கிளப்பிடும் பேச்சுக்களுக்கு, சிறு முதலாளிய வர்க்கத்தினரும், ஏன், தேவையாலும், வேலையின்மையாலும், பாதுகாப்பற்ற சூழலில் வசித்து வருவதாலும் விரக்தியினால் பீடிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களும்கூட, மிக எளிதாக பலியாகிவிடுகிறார்கள்.”

(டிமிட்ரோவ், 1972, ப. 12).

தங்களின் ஒரே நிகழ்ச்சிநிரல் ராம ஜன்ம பூமி கோவில் கட்டுவதுதான் என்று மக்கள் முன்வைத்துள்ள காவிப்படையினர், உண்மையில் ஏழை எளியோரைச் சுரண்டும் மக்கள் விரோத சட்டங்களையும், நடவடிக்கைகளையும் சுரண்டும் அமைப்புகளையும்தான் வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய குறிக்கோளுக்காக ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவு அளித்திட வெளிப்படையாகவே உதவி வரும் இவர்களின் நடவடிக்கைகள் நாட்டு மக்களுக்கு மிகவும் பாதகமான நிலைமைகளைத்தான் ஏற்படுத்தும்.

ஒட்டிப் பிறந்த முஸ்லீம் அடிப்படைவாதம்:

இந்துத்துவத்தின் திசைவழியைக் கோடிட்டுக் காட்டிய கோல்வால்கரின் புத்தகம் வெளிவந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ஜமாத்-இ-இஸ்லாமி என்னும் அமைப்பு உருவானது. 1941 ஆகஸ்ட் 26 அன்று, மௌலானா அபுல் அலா மௌடுடி என்பவர் தலைமையில் பதான் கோட்டில் அந்த அமைப்பின் முதல் மாநாடு நடைபெற்றது. ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு கோல்வால்கர் எப்படியோ அதேபோன்று ஜமாத் இயக்கத்திற்கு மௌடுடி. அவர்களுடைய அரசியல் திட்டங்களிலும், வேலைமுறைகளிலும் உள்ள ஒத்தத்தன்மை உண்மையிலேயே பிரமிக்கத்தக்கது. எப்படி `ஹிட்லர் கோல்வால்கருக்கு `ஹீரோவாக இருந்தாரோ, மௌடுடிக்கும் அவர்தான் `ஹீரோ. எப்படி கோல்வால்கர் நவீன மனித சமூக நாகரிகத்தின் அனைத்து அம்சங்களையும் – அதாவது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் நாடாளுமன்ற அமைப்புகள் அனைத்தையும் – `அந்நிய கருத்தாக்கங்கள்’ (`alien concepts’) என நிராகரிக்கிறாரோ அதேபோன்றுதான் மௌடுடியும் முஸ்லீம் அடிப்படைவாதமும் நிராகரிக்கின்றன.

மௌடுடி, 1947 மே மாதத்தில் பதான் கோட்டில் உரையாற்றிய சமயத்தில், நாடு விரைவில் இரண்டாகப் பிரிந்துவிடும் என்ற நிலை ஏற்பட்டபோது, தாங்கள் எப்படி பாகிஸ்தானில் `அல்லா’வால் வடித்துத்தரப்பட்டுள்ள சட்டங்களின் அடிப்படையில் பாகிஸ்தானை அமைக்க இருக்கிறோமோ அதேபோன்று, இந்தியர்கள் தங்கள் அரசையும் சமூகத்தையும் இந்து சுவடிகள் மற்றும் சட்டங்களின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

முறியடிக்கப்பட வேண்டிய நிகழ்ச்சிநிரல்:

வகுப்புவாதத்தின் வளர்ச்சி நிச்சயமாக இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கக்கூடிய விதத்தில் தொடர்ந்து மோதலை உருவாக்குவதற்கான ஒன்று என்பதில் ஐயமில்லை. ஆயினும், கோல்வால்கர் மற்றும் காவிப்படையினர், “இவ்வளவு கேடுகளுக்கும் நாங்கள் காரணம் அல்ல, தேசிய உணர்வு செயலற்று இருப்பதுதான் காரணம்….’’ என்று கூறுவார்கள். (கோல்வால்கர், 1939, ப. 62)

காவிப்படையினர் நாட்டு மக்கள் முன் வைத்திருக்கும் நிகழ்ச்சி நிரலும், அதனை நிறைவேற்ற தாங்கள் பின்பற்றும் நடைமுறைகளும், தங்களுடைய குறிக்கோளை அடைவதற்காக, பாசிஸ்ட் ஆட்சியாளர்கள் பின்பற்றும் வடிவம்தான். ஆனால் அதன் வடிவத்தை அவர்கள் இந்தியாவிற்கு ஏற்ற விதத்தில் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அரசின் வடிவமும், அது பின்பற்றும் சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கைகளும், பாஜக ஆளும் வர்க்கங்களிலேயே மிகவும் பிற்போக்குத்தனமான ஒரு பிரிவு என்பதை தோலுரித்துக்காட்டி இருக்கிறது.

காவிப்படையினர் ஆட்சிக்கு வருவது என்பது, மத்தியில் ஒரு கட்சிக்குப் பதிலாக பிறிதோர் கட்சி ஆட்சியை அமைக்கிறது என்பது போன்ற வழக்கமான ஒன்று அல்ல. மதச்சார்பின்மை அடிப்படையிலான நாடாளுமன்ற ஜனநாயகம் என்னும் அமைப்பு, சகிப்புத் தன்மையற்ற குருமார்களின் சித்தாந்தத்தின் அடிப்படையில் அமைந்துள்ள வெளிப்படையான பயங்கரவாத சர்வாதிகார அமைப்பு ஒன்றால் மாற்றி அமைக்கப்படுகிறது என்பது இதன் பொருளாகும். இது ஒரு வடிவ மாற்றம் மட்டும் அல்ல. மாறாக, மிகவும் நச்சுத்தன்மை கொண்ட சாராம்ச மாற்றமும் ஆகும். நவீன இந்தியாவைப் பாதுகாத்திட வேண்டுமானால், காவிப்படையினரின் இத்தகைய நிகழ்ச்சி நிரல் முறியடிக்கப்பட்டாக வேண்டும். இவர்களிடமிருந்து இந்தியா பாதுகாக்கப்படவில்லை என்றால், பின்னர் அது சிறந்ததோர் இந்தியாவாக மாற்றப்பட முடியாது.