திராவிட மாடல் நூல்: தொடரும் விவாதம்

பேரா. வி. முருகன்

 “ திராவிட மாடல்-தமிழ்நாட்டின் அரசியல் பொருளாதரத்திற்கான ஒரு விளக்கம்” என்ற புத்தகத்தை  கேம்ப்ரிரிட்ஜ் பல்கலைக் கழக பிரஸ் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது. திரு கலையரசன் அவர்களும் திரு விஜய பாஸ்கரும் இதன் ஆசிரியர்கள். பொருளாதாரம், அரசியல் அறிவியல் மற்றும் சமூகவியல் ஆகிய துறைகளில் சிறந்த ஆராய்ச்சி வல்லுனர்கள் என்று அறியப்படுபவர்கள்.

இந்தப் புத்தகம் அரசியல் அறிவியல்(Political Science) மற்றும் சமூகவியல் (Sociology) துறையில் உள்ள ஆராய்ச்சி வல்லுனர்களுக்காக எழுதப்பட்ட ஓர் ஆராய்ச்சி நூல்.

அமெரிக்காவில் உள்ள பிரௌன் பல்கலைக் கழகத்தில் உள்ள Watson Institute for International and Public Affairs என்ற துறையின் சார்பாக இந்தப் புத்தகத்தைப் பற்றிய விவாதம் நடந்தது. அதை பாட்ரிக் ஹெல்லர்  தலைமை தாங்கி நடத்தினார்.  புத்தகத்தின் ஆசிரியர்கள் என்ற முறையில் விஜய பாஸ்கரும் கலையரசனும் கலந்து கொண்டார்கள். அந்த விவாதத்தில் பார்த்தா சாட்டர்ஜி, ரீனா அகர்வாலா, பார்பரா ஹாரிஸ் ஒய்ட் போன்ற அறிஞர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

இவர்கள் அனைவரும் சமூகவியல் வல்லுனர்கள். மார்க்சீயம் நன்கு தெரிந்தவர்கள். ஆனாலும் அவர்கள் மார்க்சீய சிந்தனையாளர்கள் அல்ல. அவர்கள் முற்போக்கு சிந்தனையாளர்கள். அதனால் இந்த நூலைப் பற்றிய அவர்களது விமர்சனங்கள் மார்க்சிய பார்வையில் சொல்லப்பட்டவை அல்ல. இந்த விவாதம் முற்றிலும் சமூகவியல் பார்வையில் நடந்தவை. அவர்கள் அனைவரும் இந்தியாவில் கள ஆய்வு செய்த அனுபவம் உள்ளவர்கள்.  உதாரணத்திற்கு பாட்ரிக் ஹெல்லர் கேரளத்தைப் பற்றி நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்பவர்.

இந்தத் தொகுப்பிற்குள் போகும் முன் ஒரு குறிப்பைத் தர வேண்டும். இதில் பல சொல்லாடல்கள் வருகின்றன. Hegemony, Historic block என்ற சொல்லாடல்கள் கி்ராம்ஸி சொல்லும் கருத்துக்கள். Model, Solidarity, Status based inequality, Populism, Social Popular, Economic Popular போன்ற சொல்லாடல்கள் நமக்குப் பரிச்சயமானவைதான். ஆனாலும் இங்கு சமூகவியலுக்குரிய கலைச் சொற்கள் என்ற அர்த்தத்தில் இவை பயன்படுத்தப் பட்டுள்ளன. இந்தியாவைப் பற்றி பேசும் போது Status based inequality என்பது ஜாதீய அமைப்பின் காரணமாக எழும் ஏற்றத்தாழ்வுகளைக் குறிக்கிறது. Model என்ற சொல் நமக்கு மிகவும் பரிச்சயமான சொல். ஆனாலும் சமூகவியலில் இன்னும் நுணுக்கமான விஷயங்களோடு தொடர்புடையவை.  பாட்ரிக் ஹெல்லர் மற்றும் பார்பரா ஹாரிஸ் வொய்ட் ஆகிய இருவரும் திராவிட மாடல் என்ற சொல்லாடலில் வரும் மாடல் என்ற கருத்தை மறுக்கிறார்கள். அதன் பொருள் சமூகவியலுக்குரிய கலைச்சொல்லாக மாடல் என்ற சொல்லைப் பார்க்கும்போது திராவிட மாடல் என்ற சொல்லாடலில் அது பொருந்தாது என்பதாகும்.  

 Solidarity என்பது பல வேறுபாடுகளைத் தாண்டி சில அடையாளங்களின் அடிப்படையில் ஒரு அணியாகத் திரள்வது. பிராம்மண எதிர்ப்பு, இந்தி/ சமஸ்கிருத எதிர்ப்பு போன்ற அடையாளங்களின் அடிப்படயில் இங்கு ஒன்று திரள்வது.  தங்களுடையேயுள்ள முரண்பாடுகளைக் கடந்து ஒரே அணியில் திரள்வது. உதாரணத்திற்கு,  பிராமாணரல்லாத முதலாளிகளும் தொழிலாளர்களும் ஒரே அணியில் திரள்வது. முதலாளிகளால் பாதிக்கப்பட்டாலும்  முதலாளிகளோடு போவதற்கு  தொழிலாளர்கள் இசைவு தெரிவிப்பது.  கலையரசனும் விஜய பாஸ்கரும் இந்த சொல்லைப் பயன்படுத்தவில்லை. அவர்கள் கிராம்ஸியின் Historic Block சொற்களைத்தான் பயன்படுத்துகின்றனர்.

 இணைய தளத்தில் இவற்றைப் பற்றி தேடினால் சமூகவியல் துறையிலேயே இந்தக் கலைச்சொற்களைப் பற்றிய ஒருமித்த கருத்துக்கள் இல்லை. இது இயற்பியல், உயிரியல் போன்ற இயற்கை அறிவியலுக்கு மாறானது.

இந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்தி அதன் நோக்கம், அவர்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட பொருள், அவர்களது ஆய்வு முறைகள், அவர்களுடைய ஆய்வு முடிவுகள் ஆகியவற்றை சுருக்கமாக வழங்கினார்கள்.

ஆசிரியர்கள் வழங்கிய அறிமுகம்.

  1. உலகில்  சில பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் அதே வேளையில் மனித வளத்தில் வளர்ச்சியில்லை. அதே போல் மனித வளர்ச்சி ஏற்படும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதில்லை. இது ஏன்?
  2. ஒரு சமூகத்தில் சமூக அந்தஸ்துகள் (இந்தியாவில் இது ஜாதிய அமைப்பைக் குறிக்கிறது) காரணமாக ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து வெற்றி பெரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதில்லை. அதே போல் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் நாடுகளில் சமூக அந்தஸ்துகள் (இந்தியாவில் இது ஜாதிய அமைப்பைக் குறிக்கிறது) காரணமாக ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவதில்லை. இது ஏன்?

இந்த நிலைதான், பொதுவாக,  பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகளில் உள்ளது.  அரசியல் அறிவியலில் மற்றும் சமூகவியலிலும் இந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடும் வகையில் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறுகின்றன.  அதில் ஒரு பகுதியாகத்தான் இந்தத் புத்தகத்தையும் பார்க்க வேண்டும்.

 இந்தப் புத்தகத்தில் வலியுறுத்தப்படும் முக்கியமான கருத்து:   தமிழ் நாட்டில் பொருளாதார வளர்ச்சி, மனித வளத்தில் வளர்ச்சி, (சமூக அந்தஸ்துகள் காரணமாக) ஜாதிய அமைப்பு காரணமாக ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி ஆகிய மூன்று விஷயங்களையும் தமிழ்நாட்டில்   திராவிட  இயக்கம்  சாதித்துள்ளது. இதையே திராவிட மாடல் என்று இந்நூலின் ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.  (இதன் பொருள் திராவிட மாடல் என்ற ஒரு மாடல் இருக்கிறது என்றும், அது  மற்ற மாடல்களில் இருந்து வேறுபடுகின்றது  என்றும் கூறுவதாகும்) இந்த மாடலை மற்ற தென் உலக நாடுகளிலும் செயல் படுத்தலாம்..

(தென் உலக நாடுகள் என்பது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தெற்கே உள்ள நாடுகள் என்பவையாகும். மூன்றாவது உலக நாடுகள் என்று எடுத்துக் கொள்ளலாம்)

இதுதான் இந்த புத்தகத்தின் சாராம்சம்.

அரசியல் அறிவியல் என்ற துறைக்குரிய ஆய்வு என்ற முறையில் இதற்கு முதலில்  செய்ய வேண்டியது:  தமிழ் நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதையும்,   மனித வளத்தில்  வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதையும், ஜாதீய அமைப்பின் காரணமாக இருந்த ஏற்றத் தாழ்வுகள் குறைந்துள்ளன என்பதையும், போதிய தரவுகள் மூலம் நிறுவதல் செய்ய வேண்டும் . அப்படி தமிழ்நாட்டில் நடந்துள்ளது என்று தரவுகளைக் கொடுத்து நிரூபிக்க முயற்சித்துள்ளார்கள்.

 இரண்டாவதாக, எப்படி இது நடந்தது என்பதற்கான விளக்கத்தை தர வேண்டும்.  அவர்கள் தரும் விளக்கத்தின்படி, திராவிட மாடல் என்ற ஒன்று உள்ளது என்றும், அதன் மூலம் இந்த சாதனைகள் நடந்துள்ளன என்றும் வாதிடுகிறார்கள்.

மூன்றாவதாக, இந்த மாடலில் உள்ள குறைகள், அதன் வரம்புகள் இது எதிர்காலத்தில் எப்படி மேற்கொண்டு செல்லக்கூடும்  என்று சொல்கிறார்கள். அவர்களின் வாதங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

தமிழ்நாட்டில்  எழுந்த ஒரு தனித்துவம் வாய்ந்த சமூக நீதி பற்றிய கருத்தோட்டம் இந்த வளர்ச்சிப் பாதைக்கான முக்கியமான காரணமாகும்.  இது சில அடையாளங்களை அடி்ப்படையாகக் கொண்டு இயங்கிய இயக்கத்தில் இருந்து அரசியல் இயக்கமாக மாற உதவியது. 

 பலவித வேறுபாடுகள் கொண்ட கீழ்நிலை ஜாதிகளில் உள்ள அனைவரையும் சமஸ்கிருதத்தை மையமாகக் கொண்ட உயரடுக்கினரை எதிர்த்து,  கிராம்ஸி கூறும் historic block என்ற கருத்தாக்கத்தின் கீழ், ஒரு அணியாக  திரட்டப்பட்டதுதான் தமிழ்நாட்டின் வெற்றிக்கு முக்கியமான காரணம். தேர்தலுக்கு அப்பாற்பட்டு சமூக அமைப்பு விமர்சிக்கப் பட்டது.  திட்டமிட்டு  தொடர்ந்து நடத்தப்பட்ட அரசு தலையீடுகள் மூலம் ஜாதியின் அடிப்படியில் அமைந்த தொழில் உறவுகள் தகர்க்கப்பட்டதாக உரையில் சொல்லப்பட்டது.

கல்வி, சுகாதாரம், மூலதனம் மற்றும் உழைப்பாளர்கள் ஆகிய நான்கு தளங்களில் தமிழ்நாட்டில் நடந்தவைகளைப் பற்றி சுருக்கமாக ஆசிரியர்களின் உரையில் கூறப்பட்டது.

தேசிய அளவில் கல்வி உயரடுக்கினரை மையப்படுத்தி வளர்ந்தது. அதனால் பள்ளிக் கல்விக்குப் பதிலாக உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் தமில்நாட்டில், இதற்கு மாறாக, பள்ளிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் உயர்கல்வி விரிவாக்கப்பட்டது. இடஒதுக்கீடு மூலமாக உயரடுக்கினருக்கு பாரபட்சமாக இருந்த கல்வியை ஜனநாயகப்படுத்தியது.

 சுகாதாரத்தில் வலுவான ஆரம்ப சுகாதார அமைப்புகள் செயல்பட்டன என்று சுட்டிக் காட்டப் பட்டது.

ஜாதிய அமைப்பின் காரணமாக பிறப்பின் அடிப்படையாலே சிலர் முதலாளிகளாகவும் சிலர் தொழிலாளர்களாகவும் உருவாகிய சூழ்நிலையில், உற்பத்தி தொழில்துறையின் வளர்ச்சியின் மூலம்தான் சமூகநீதி கிடைக்கும் என்று கணிக்கப்பட்டது. ஜாதிகளின் அடிப்படையில் அமையும் தொழில் வளர்ச்சி, நவீனத்துவத்தை தராது என்று கணிக்கப்பட்டது. கிராமங்களில் இருந்து நகர்ப்புறத்திற்கு மக்கள் புலம்பெயர்வது ஊக்குவிக்கப்பட்டது.  

மூலதனத் திரட்டலுக்கு எதிராக இல்லாமல், மூலதனக் குவியல் ஊக்குவிக்கப்பட்டது மூலதனக் குவியல் தொடர்ந்து நடந்தது. மூலதனக் குவியல் ஜனநாயகப்படுத்தப் பட்டது. தாழ்த்தப் பட்ட ஜாதியினரும் மூலதனக்குவியலில் பங்கேற்றனர். இந்தியாவில் உள்ள பட்டியல் இனத்தைச் சேர்ந்த தொழில்முனைவர்களில் நான்கில் ஒரு பங்கினர் தமிழ்நாட்டில் உள்ளார்கள் என்று சுட்டிக் காட்டப்பட்டது.

பணியிடங்களில் உழைப்பவர்களின்  நிலை சரியாக இல்லாவிட்டாலும், பணியிடங்களுக்கு வெளியே அரசு செய்த பல பொதுநலத்திட்டங்கள் ( உதாரணத்திற்கு பொது விநியோக அமைப்பு) மூலமாக அவர்கள் வாழ்வு மேம்படுத்தப்பட்டது. மொத்தத்தில், இதை இடது பாப்புலிசம் என்று  ஆசிரியர்கள் கூறினார்கள்.

உரையாடலில் கலந்துகொண்ட ஆய்வாளர்களின் கருத்தை சுருக்கமாக காண்போம்.

பார்த்தா சாட்டர்ஜி:

இந்தப் புத்தகம் முக்கியமாக சொல்வது பாபுலிஸம் வளர்ச்சியைக் கொடுக்கும் என்பதாகும். பல மாடல்கள் உள்ளன. இதோடு  திராவிட மாடல் என்று மற்றொரு மாடல் உள்ளது என்று இந்தப் புத்தகம் கூறுகிறது. மற்ற இடங்களில் இதை செயல் படுத்தலாம் என்று கூறுகிறார்கள்.  பண்பாட்டுத் துறைகளில்  நடக்கும் சில இயக்கங்களை அடித்தளமாக கொண்டு ஏற்படும் வளர்ச்சிப் போக்கு சில ஜனநாயக விளைவுகளை தர வாய்ப்புகள் உண்டு என்று இந்தப் புத்தகம் கூறுகிறது.

 இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டிருப்பவைகளின் அர்த்தம் என்ன? சொத்துடைமைகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளுக்குப் பதிலாக சமூக அந்தஸ்த்துகளில் ( இங்கு ஜாதி அடிப்படையில்)  உள்ள ஏற்றத்தாழ்வுகளை முக்கியமானவையாக எடுத்துக்கொள்வது விளிம்புநிலை மக்களுக்கு வளர்ச்சியை தரும். ஐரோப்பாவில் உள்ள அனைவருக்குமான பொதுநலத்திட்டங்களுக்குப் பதிலாக, குறிப்பிட்ட பகுதி மக்களை மையப்படுத்தி பொது நலத்திட்டங்களை அமுல்படுத்தலாம்.

 திராவிடம் மற்றும் தமிழர்களின் கலாசாரம் என்ற அடிப்படையிலும், பிரமாணியம் மற்றும் சமஸ்கிருதம் ஆகியவற்றை உள்ளடக்கிய கலசாரம் என்ற அடிப்படையிலும், சமுதாயம் இரண்டாக  எதிரெதிராகப் பிளவுபட்டுள்ளது. இந்த  எதிர்நிலை பொதுவான இயல்பறிவாக ( Dravidan common sense) உருவாகிவிட்டது. வளர்ச்சிக்கான செயல்திட்டம் இந்த எதிர்நிலைகளின் அடிப்படையில் கட்டப்படுகிறது. முடிவில், இதை இடது பாப்புலிசம் என்று கூறுகிறார்கள்.

 இது எப்படி இடது பாப்புலிசம் ஆகும்? (பார்த்தா சாட்டர்ஜியின் கேள்வி) கம்யூனிஸ்டுகள் மூலதன திரட்டலை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இங்கு தரப்படும்  மொத்த வாதமும் மூலதனத் திரட்டலுக்கு வசதி செய்து தருவோம் என்பதுதான். நிலச்சீர்திருத்திற்குப் பதிலாக கல்வியை அனைவரும் அடையக்கூடியதாக்குவது என்பதும், ஜாதி  அமைப்பின் காரணமாக எழும் ஏற்றத்தாழ்வுகளைத் தாக்குவது என்பதும் செய்தால் போதும். மற்ற ஏற்றதாழ்வுகளும் மற்ற பிரச்சனைகளும் அப்படியே இருக்கும். தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்திற்கு அப்பால் வெளியே அவர்களுக்கு தேவையான அளவிற்கு தகுந்தாற் போல் அரசு சில திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு  உதவுவது. இது மேற்கு வங்ககத்தயோ அல்லது கேரளாவையோ போன்றதல்ல. அந்த மாடல்களில் நிலச்சீர்திருத்தின் மூலம் உற்பத்தி பொருளாதாரத்தை மாற்றுவது. ஆனால் இவர்கள்  வேறு திசையினைக் காட்டுகிறார்கள்.  இந்த மாடலின் வரம்புகள் என்ன? எந்த அளவிற்கு மற்ற இடங்களில் இந்த மாடலை அமுல்படுத்த முடியும்? அவர்களே இந்த மாடலின் வரம்புகளையும், அது எதிர்காலத்தில் செல்லக் கூடிய சாத்தியக்கூறுகளையும்  இந்தப் புத்தகத்தில் விவாதித்துள்ளார்கள்.

அதிமுக பிரிந்து வந்த பிறகு அவர்கள் மதத்தையும் கலாச்சாரத்தையும்  விமர்சிக்கும் பகுத்தறிவு இயக்கத்தை கைவிட்டார்கள். இது பற்றிய விவாதம் இந்தப் புத்தகத்தில் இல்லை. இறுதியான கேள்வி: கலாச்சாரத்தை அடிப்படையாக இந்தப் பரிசோதனை தீர்ந்து விட்டதா? திராவிட மாடலில்  வளர்ச்சி தொடருமா?

ஒவ்வொரு இடத்திற்குத் தகுந்தாற் போல் வளர்ச்சி தரும் மாடல் இருக்க வேண்டும். அது அந்த இடத்தின் கலாச்சாரத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதுதான்,  இந்தப் புத்தகம் தரும் பாடம்.

ரீனா அகர்வாலா:

திராவிட மாடல் என்று ஏதோ ஒன்று இருக்கக் கூடும் என்று நினத்தாலும், இந்தப் புத்தகத்தை படித்து முடித்த பிறகு, திராவிட மாடல் என்றால் என்ன என்று  புரியவில்லை. தமிழ்நாட்டில் மேலிருந்து நடந்ததிற்கும்,  கீழிருந்து நடந்ததிற்கும், மாறி மாறி இந்தப் புத்தகம் விவாதிக்கிறது. மேலிருந்து அரசு செய்த தலையீடுகள் மிகவும் பாராட்டப்படுகிறது.  தலைவர்கள் தந்த சில கருத்துக்கள், பல்வேறு நலவாரியங்களை அமைத்தது;  இட ஒதுக்கீட்டில்  செய்தது; சுகாதாரத்தில் செயல்பட்டது; அடிப்படை கட்டமைப்பினை நன்கு உருவாக்கியது போன்ற விஷயங்கள் அதிகமாகப் பாராட்டப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் விளிம்பு நிலை மக்களுக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளன என்பதை ரீனா அகர்வாலா ஒப்புக் கொள்கிறார். ஆனால் தமிழ்நாட்டின் பாப்புலிஸம் இந்தப் புத்தகத்தில் பாராட்டப்படும் அளவைப் பார்க்கும்போது, அது என்ன அப்படிப்பட்ட பாப்புலிஸம் என்று கேட்கத் தோன்றுகிறது. நிச்சயமாக அது கம்யூனிசம் இல்லை. புத்தகத்தின் ஆசிரியர்கள்  மூலதனத்தை தாக்க மறுக்கிறார்கள் என்பதை ரீனா அகர்வாலா சுட்டிக் காண்பிக்கிறார்.   இது ஒரு வகையான சமூக ஜனநாயகம்தானே.  ஆனாலும் தமிழ்நாட்டின் பாப்புலிசம் சமூக ஜனநாயகமில்லை என்று  கூறப்பட்டுள்ளது. . அது எப்படி? இன்றிருக்கும் பிரச்சனைகளுக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கும், எந்த சமூகக் கட்டமைப்புகள் காரணமோ, அந்த கட்டமைப்புகளை மாற்ற முயற்சிக்காமல், அவற்றிற்குள்ளேயே செயல்படுவதுதான் அனைத்து சமூக ஜனநாயகங்களுக்கும் பொதுவானது.  கருணாநிதியின் ஆட்சியில்  தொழிலாளர்கள் மீது  தி,மு.க, அடக்குமுறையை ஏவி விட்ட வரலாறு உள்ளது என்று ரீனா அகர்வாலா சுட்டிக் காண்பிக்கிறார்.

 தமிழ்நாட்டில் எப்படி பாப்புலிசம் அமுல்படுத்தப் பட்டது? அரசியல் தலைவர்கள் எதற்காக ஜாதிய அமைப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு   விடுதலை பெற்று தர வேண்டும்? தேர்தலில் வெற்றி பெறுவதுதான் முக்கியமான தூண்டுகோலாக இருக்க வேண்டும். அ.தி.மு.க வை  பாப்புலிச அரசு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அது ஏன்? சொல்லப் போனால் இரு இயக்கங்களும், போட்டி போட்டுக் கொண்டு, பாப்புலிசத்தை அமுல் படுத்தின. தேர்தலின் பங்களிப்பை ஆசிரியர்கள்  குறைத்து மதிப்பிடுகிறார்கள். அதற்குப் பதிலாக, பல்வேறு பிரிவினரின் பிரதிநிதிகளும் அரசில் பங்கெடுப்பதன் மூலம் பாப்புலிசம் அமுல்படுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால்  அடையாள பிரதிநிதித்துவ மாடலில் இருந்து திராவிட மாடல் எப்படி வேறுபடுகிறது?

 தமிழ் நாட்டின் பாப்புலிசத்தின் மற்றொரு அம்சம், கீழிருந்து நடக்கும் இயக்கம் ஆகும்.. சமூக நீதியின் எந்த அம்சம்  தமிழ்நாட்டின் பாபுலிசத்திற்கு முக்கிய பங்களித்துள்ளது? வர்க்க ரீதியான முரண்பாடுகளைத் தாண்டி, அனைத்து வர்க்கங்களின் இசைவை, சில அடையாளங்களின் அடிப்படையில் உள்ள, கூட்டொருமைப்பாடு ( solidarity) வழியாகப்  பெறுவது அவசியமானது என்று வாதிடப்படுவது  போல் தெரிகிறது. வளர்ச்சிக்கு கூட்டொருமைப்பாடு முக்கியமானதா? வர்க்கரீதியாக ஒன்றிணப்பதை விட ஜாதிய ரீதியாக ஒன்றிணப்பது முக்கியமான யுக்தியா?

நவீன கல்வியை எல்லோருக்கும் வழங்குவதும், அரசு வேலைகளில் அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதும், நிலசீர்திருத்தத்தை விட முக்கியமானது என்று கூறப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில் சரியாக இல்லாததை, பணியிடங்களுக்கு அப்பால் வெளியில் வலுவான நலத்திட்டங்கள் மூலம் தொழிலாளர்களின் வாழ்வு மேம்படுத்தப்பட்டுள்ளது என்று  கூறப்பட்டுள்ளது..

 இந்த மாடல் மற்ற இடங்களில் பின்பற்ற முடியுமா? அப்படி பின்பற்ற வேண்டுமா?

பார்பரா ஹாரிஸ் ஒயிட்:

 இந்தப் புத்தகம் எழுப்பும் மையக் கருத்து:  கலாசாரம் எப்படி ஒரு சமுதாயத்தின் பொருளாதாரத்தை பாதிக்கும்?  அரசியல் ரீதியாக  கடுமையாக உழைத்து பிராமணர்கள் அல்லாதவர்களால் ஒரு சமூகத் தொகுதி (block) உருவாக்கப்பட்டது. ஒரு கருத்தியலின் ஆதிக்கம் (hegemony) மூலம் பொருளாதார  மேம்பாடும், அரசு தலையீடுகள் மூலம் மூலதன திரட்டலையும், அமைப்பு ரீதியான மாற்றங்களையும் அடைய முடியும் என்று இந்தப் புத்தகம் கூறுகிறது. கீழ்நிலைப்படியில் உள்ள ஜாதியினரிடம்   ஏற்படும் மூலதனம் திரட்டல் மூலம் சமுதாய அமைப்பில் மாற்றங்கள் ஏற்படும்.  தொழிலாளர்களின் போராட்டங்கள் பொருளாதார வளர்ச்சியை நிர்மாணிக்கும் இயந்திரம் என்ற கருத்து திட்டமிட்டு மறைக்கப்பட்டு அதற்குப் பதிலாக திராவிடக் கூட்டணியைப் மையப்படுத்திய விளக்கத்தை  முன்னிலைப்படுத்தப்படுகிறது.

பாப்புலிசம் சிறு உற்பத்தியை (petty production) ஊகுவிக்கிறது. அது மூலதன திரட்டலையும் உருவாக்குகிறது. முதலாளித்துவத்தால் பாதிக்கப்படுவோருக்கு ஏதோ ஒரு வகையில் நிவாரணத்தைக் கொடுத்து முதலாளித்துவத்திற்கு ஆதரவு கொடுகிறது. உரிமைகளின் அடிப்படையில் உருவாகும் பாப்புலிசமும், அரசின் தலையீட்டால் உருவாகும் பாப்புலிசமும்,  முற்போக்கான இடது பாப்புலிசத்தைக் கொடுக்கிறது என்று புத்தகம் சொல்கிறது. தமிழ்நாட்டில் நிலவும் ஊழலோடு திராவிட மாடல் எப்படி இணைந்து இருக்க முடியும்? 

பாட்ரிக் ஹெல்லர்:

இது ஒரு மாடல் அல்ல. இது ஒரு வளர்ச்சிப் பாதை. இதில் வேறு எங்கும் காணமுடியாது என்று சொல்லக்கூடிய தனித்துவம் இல்லை. இது போன்று பல இடங்களில் நடந்துள்ளது. குறிப்பாக, பிரேசிலுக்கும் தமிழ்நாட்டிற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. பிராமணர் அல்லாதவர்களிடம் உள்ள வர்க்கங்களிடம் உள்ள முரண்பாடுகளைத் தாண்டி  கலாச்சாரத்தின் ஒரு சமூகத் தொகுதி கட்டப்பட்டுள்ளது. இதே யுக்தியை வலதுசாரிகளும் செய்ய முடியும்.

இந்த நான்கு அறிஞர்களும் சமூக அறிவியலின்படி இந்தப் புத்தகத்தை விமர்சித்துள்ளார்கள்.  மிக விரிவான முறையில் எல்லாத் துறைகளிலும் கொடுக்கப் பட்டுள்ள தரவுகளுக்காக இந்த புத்தகத்தை அனைவரும் பாராட்டியுள்ளனர். தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியும் மனித வள வளர்ச்சியும் நடந்துள்ளது என்று இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதை இவர்கள் யாரும் மறுக்கவில்லை.   இந்த புத்தகம் மிக சாதுரியத்துடன் எழுதப்பட்ட புத்தகம் என்றுதான் நான் கருதுகிறேன். இது ஒரு வகையில்  அரசியல் அறிவியல்( political science) மற்றும் சமூகவியல் (sociology) வல்லுனர்களுகாக எழுதப்பட்ட ஆராய்ச்சி என்ற தோற்றமளிக்கிறது. அதே சமயத்தில் தி.மு.க. விற்கு  அரசியல் ரீதியாக நல்ல லாபம் தரும் நூலாகவும் அமைந்துள்ளது. அவர்களின் பிராச்சாரத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிராசாதம். குறிப்பாக முதலாளித்துவத்தின் வளர்ச்சியை, சாதனையாக, கருத்தியல் ரீதியாக காட்டும் நூல். இடதுசாரி சித்தாந்தத்திற்கு மாற்றாக, இது திராவிட மாடலை முன்னிறுத்துகிறது.

திராவிட கட்சி அரசுகளுடைய பொருளாதார கொள்கைகள் பற்றி

பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா

காங்கிரஸ் ஆட்சிக்காலம்

இந்தியா விடுதலை பெற்ற பின் இருபது ஆண்டுகள் (1947 -1967) தமிழ் நாட்டில்  காங்கிரஸ் ஆட்சி செய்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழக பொருளாதாரத்தில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன.

ஒன்றிய ஆட்சியும் மாநில ஆட்சியும் ஒரே கட்சியின் கையில் இருந்த அக்கால கட்டத்தில் கிராமப்புறங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடந்துவந்த தொடர் போராட்டங்களின் விளைவாக சில மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, பழைய ஜமீந்தாரி மற்றும் இனாம் நில உறவுகள் பலவீனம் அடைந்தன. குத்தகை விவசாயிகள் நிலைமையில் சில முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. கம்யூனிஸ்டுகளின் தலைமையில் குத்தகை விவசாயிகள் நடத்திய பெரும் போராட்டங்களின் விளைவாக குத்தகை விவசாயிகள் நில வெளியேற்றம் என்பது ஓரளவிற்கு தடுக்கப்பட்டது. பங்கு சாகுபடி முறையில் குத்தகை விவசாயி பங்கு கணிசமாக உயர்ந்தது. வலுவான போராட்டங்கள் நீண்ட காலம் நடந்த கீழத்தஞ்சை பகுதிகளில் நிலங்களின் உடமை குத்தகை விவசாயிகளுக்கு கிடைத்தது. ஆனால் நில உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு அதன் அடிப்படையில் நிலமற்ற மற்றும் ஏழை விவசாயிகளுக்கு நிலம் பகிர்ந்தளிப்பது   தொடர்பாக விவசாய இயக்கம் போராடியும் சிறிதளவு முன்னேற்றம் தான் காணமுடிந்தது. காங்கிரஸ் அரசு பெரும் நில உடமையாளர்களை ஊக்குவித்து முதலாளித்துவ அடிப்படையில் விவசாய வளர்ச்சி காண முயற்சித்தது. ஒன்றிய அரசு அளவிலும் நவீன விவசாயமும் மகசூலில் உயர்வும் வேளாண் பொருட்கள், குறிப்பாக உணவு தானியங்கள், சந்தைபடுத்தப்படுவதும் முதலாளித்துவ வளர்ச்சிக்கு அவசியம் என்பது உணரப்பட்டது. பலநோக்கு பாசன திட்டங்கள் மூலம் அணைகள் கட்டப்பட்டு பாசன விரிவாக்கம் நிகழ்ந்தது. கிராமப்புறங்களில் மின்சார வசதி விரிவாக்கப்பட்டது. இது நிலத்தடி நீர் பயன்பாட்டை அதிகப்படுத்தியது. இவை ஓரளவு வேளாண் உற்பத்தி வளர்ச்சியை சாத்தியப்படுத்தின. தொழில் துறையில் ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் அரசு முதலீடுகளும் தனியார் பெருமுதலாளிகளை ஊக்குவித்து தனியார் துறை முதலீடுகளும் நிகழ்ந்தன. தமிழகத் தொழில் வளர்ச்சிக்கு கம்யூனிஸ்ட் இயக்கம் குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றியது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், பாரத மிகுமின் நிறுவனம் போன்றவை இந்த முயற்சிகளுக்கு சான்றாக இன்றும் உள்ளன. முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. கல்வி மற்றும் பொது சுகாதாரம் ஆகிய துறைகளிலும் மாநில காங்கிரஸ் அரசு சில முயற்சிகளை மேற்கொண்டது.   எனினும், மாநிலத்தை காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் தமிழக பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் அகில இந்திய விகிதத்தை விட சற்று குறைவாகத்தான் இருந்தது. (இதற்கு நாட்டின் பல பிறபகுதிகள் நாடு விடுதலை அடைந்தபொழுது மிகவும் பின்தங்கிய நிலையில்  இருந்ததால் அவற்றின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது என்பதும் ஒரு காரணம்)   

 1967இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தி மு க தலைமையிலான தேர்தல் கூட்டணி காங்கிரஸ் கட்சியை வீழ்த்தியது. அறுதி பெரும்பான்மையுடன் திமுக ஆட்சிக்கு வந்தது. அந்த வெற்றியில் கம்யூனிஸ்ட் இயக்கம் உட்பட பல அரசியல் கட்சிகள் திமுகவுடன் இருந்தன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழ் நாட்டில் திராவிட இயக்க பின்புலம் கொண்ட கட்சிகள் 1967 ஆம் ஆண்டில் இருந்து ஐம்பத்து ஐந்து ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இக்காலத்தில் தமிழகம் பல துறைகளில் பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பது உண்மை. இந்த வளர்ச்சியின் தன்மையையும் வேகத்தையும் நிர்ணயிப்பதில் ஒன்றிய, மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. இந்த 55 ஆண்டு காலத்தில் நிகழ்ந்த பல அரசியல் மாற்றங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். காங்கிரஸ் எதிர்ப்பு வியூகம் அமைத்து 1967இல் ஆட்சிக்கு வந்த திமுக 1971இல் காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் உடன்பாடு அமைத்து மீண்டும் ஆட்சிக்கு வந்தது. பின்னர் 1975இல் நெருக்கடிநிலை பிரகடனம் செய்யப்பட்டது. 1976ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் ஒன்றிய அரசு திமுக ஆட்சியை கலைத்தது. இதனால் காங்கிரஸ் கட்சியுடன் திமுகவிற்கு முரண் உருவான போதிலும், 1980 இல் நடந்த மாநில மற்றும் மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு கண்டு தேர்தலை திமுக சந்தித்தது. இரு திராவிட கட்சிகளுமே உறுதியான காங்கிரஸ் எதிர்ப்பு நிலையையோ, ஒன்றிய அரசின் முதலாளித்துவ வளர்ச்சிக்கான கொள்கைகளை எதிர்க்கும் நிலையையோ கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக எடுக்கவில்லை. இந்த அரசியல் பின்னணியை நாம் நினைவில் கொள்ள வேண்டும். திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகத்தில் நிகழ்ந்துள்ள பொருளாதார வளர்ச்சியின் வர்க்கத்தன்மை குறித்த சில அம்சங்களை நாம் பரிசீலிப்போம்.

நில உறவுகள்

1950கள், 60களில் திராவிட இயக்கம் மிகப் பெரிய அளவிற்கு சிறுதொழில் முனைவோர், வியாபாரிகள், உழைப்பாளி மக்கள், விவசாயிகள் இவர்களை மையப்படுத்திய இயக்கமாக வளர்ந்தது. நிலச்சீர்திருத்தம் உட்பட திமுகவில் பேசப்பட்ட காலகட்டம் அது. இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சியினுடைய நிலச்சீர் திருத்தங்களை ஏளனம் செய்து, “உச்சவரம்பா? மிச்சவரம்பா?” என்று கேட்ட கட்சி திமுக. ஆட்சிக்கு வந்தவுடனேயே சில சீர்திருத்தங்களையும் அக்கட்சி சட்டரீதியாக மேற்கொண்டது. அது அப்படி செய்திருந்தாலும்கூட, உச்ச வரம்பை 30 ஸ்டாண்டர்ட் ஏக்கர் என்பதிலிருந்து 15 ஆக குறைத்து சட்டம் இயற்றினாலும், தமிழகத்தில் பெருமளவுக்கு நில மறுவிநியோகம் இன்றும் நடக்கவில்லை என்ற ஒரு உண்மையை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். திமுக இயற்றிய நிலஉறவுகள் தொடர்பான சட்டங்களில் இருந்த விதிவிலக்குகளும், இச்சட்டங்கள் களத்தில் அமலாக்கப்பட்டதில் இருந்த பலவீனங்களும் இந்த நிலைமைக்கு முக்கிய பங்கு அளித்துள்ளன.

நிலச்சீர்திருத்தம் தொடர்பாக காங்கிரசை விமர்சித்த திமுகவும், அதிலிருந்து தோன்றிய அதிமுகவும் நிலச்சீர்திருத்தப் பிரச்சினையில் ஜனநாயகரீதியான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவில்லை. 1984  பிப்ரவரி கணக்குப்படி தமிழகத்தில் மொத்தம் 2 லட்சத்து நாலாயிரம் ஏக்கர் நிலம் மட்டுமே உபரியாக இருப்பதாக அரசு மதிப்பீடு செய்துள்ளதாகவும், அதில் 89,000 ஏக்கர் மட்டுமே உபரி என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதிலும் 71,000 ஏக்கர் நிலம் மட்டுமே விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. 1979இல் சிதம்பரத்தில் நடைபெற்ற அகில இந்திய விவசாய சங்கத்தின் தமிழக மாநில மாநாடு 20 லட்சம் ஏக்கர் தமிழகத்தில் உபரியாக உள்ளன என்ற உண்மையை வெளிக்கொணர்ந்து, அவற்றை அரசு கையகப்படுத்தவேண்டும் என்று கோரி, பல போராட்டங்களை அடுத்த பல ஆண்டுகளில் மேற்கொண்டது. ஆனால் இன்றுவரை நில உச்ச வரம்பு சட்டங்களில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்படவில்லை. பல நியாயமற்ற விதிவிலக்குகள் தொடர்கின்றன. குறிப்பாக கோயில் மற்றும் அறக்கட்டளைகள் என்ற பெயரில் பழைய, புதிய நிலப்பிரபுக்கள் குவித்து வைத்துள்ள நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லை. 1961-62இல் தமிழகத்தில் ஒரு ஹெக்டேருக்கு குறைவாக நிலம் வைத்திருந்தோர் மொத்த நில உடமையாளர்களில் கிட்டத்தட்ட 80%. இவர்களிடம் 20% நிலப்பரப்புதான் இருந்தது. 1981-82இல் இந்த நிலைமையில் மிகச்சிறிய மாறுதலே ஏற்பட்டிருந்தது.

1985 மார்ச் 13 அன்று சட்டப்பேரவையில் ஆற்றிய தனது உரையில் தோழர் கோ. வீரையன் அவர்கள்  தமிழகத்தில் ஒரு விவசாயக் குடும்பத்திற்கு 25 சாதாரண ஏக்கர் புஞ்சை, 15 ஏக்கர் நஞ்சை நிலம் என்ற உச்சவரம்பை நிர்ணயித்து விதிவிலக்குகளை எல்லாம் நீக்கிவிட்டால், சுமார் 20 லட்சம் ஏக்கர் உபரி நிலம் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்றுவரை தமிழக அரசு உபரி நிலம் என்று கையகப்படுத்தி விநியோகம் செய்துள்ளது சுமார் 2 லட்சம் ஏக்கர் என்றுதான் ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. அண்மையில் அரசு இணைய தளம் தரும் தகவல் என்னவெனில் 2016 பிப்ரவரி முடிய 2,08,442 ஏக்கர்  நிலம் உபரியாக அறிவிக்கப்பட்டு, 1,90, 723  ஏக்கர் விநியோகம் செய்யபட்டிருந்தது.

(இதற்கு நேர் மாறாக இந்திய நாட்டின் நிகர சாகுபடி பரப்பில் 3 சதவீதம் மட்டுமே கொண்டுள்ள மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஆட்சி மூலம் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்ட உச்ச வரம்புக்கு அதிகமான நிலப்பரப்பில் 23 சதவீதம் நிலமற்றோருக்கும் ஏழை விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த நில சீர்திருத்தப் பயனாளிகள் 1.5 லட்சம். மேற்கு வங்கத்தில் உச்சவரம்பு நிலம் பெற்ற பயனாளிகள் 15 லட்சம், பங்கு சாகுபடி சீர்திருத்தங்கள் (Operation Barga)  மூலம் பயனடைந்தோர் மேலும் 15 லட்சம், ஆக மொத்தம் 3௦ லட்சம்.)

2010-11இல் தமிழகத்தின் மொத்த கிராம குடும்பங்களில் எழுபது சதத்திற்கும் மேல் நிலம் அற்றவை. நிலம் சாகுபடி செய்வோரை எடுத்துக்கொண்டால், இவர்களில் 78% ஒரு ஹெக்டேர் மற்றும் அதற்கும் குறைவாக சாகுபடி செய்வோர். இவர்களிடம் மொத்த சாகுபடி நிலங்களில் 35% உள்ளது. மறுமுனையில், பத்து ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்வோர் மொத்த சாகுபடியாளர்களில் 2.3% தான். ஆனால் இவர்களிடம் மொத்த சாகுபடி நிலப்பரப்பில் 18.5 சதம் உள்ளது. நிலம் மட்டுமல்ல. நவீன உற்பத்திக்கருவிகளும் ஒரு சிலரிடமே தமிழகத்தில் குவிந்துள்ளன. திராவிட கட்சிகள் தமது ஆட்சி காலங்களில் கிராமப்புறங்களில் முதலாளித்துவ நிலப்பிரபுக்களுக்கும் பணக்கார விவசாயிகளுக்கும் ஏனைய செல்வந்தர்களுக்கும் ஆதரவாகவே செயல்பட்டு வந்துள்ளனர்.

நிலக்குவியல் என்பதைப் பொருத்தவரையில் தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சியில்  பெரிய மாற்றமில்லை என்று மட்டும் சொன்னால் அது பொருத்தமாக இருக்காது. ஏனெனில் அதன் சமூகக் கட்டமைப்பில் முக்கியமான மாற்றமிருக்கிறது. பாரம்பரியமான மேல்சாதி நிலவுடைமையாளர்கள் ஆதிக்கம் குறைந்துள்ளது. இடைச்சாதிகள் கையில் முன்பைவிடக் கூடுதலாக நிலம் உள்ளது. இது குறிப்பிடத்தக்க, ஜனநாயக தன்மை கொண்ட மாற்றம். ஆனால், இது தலித்துகளுக்குப் பொருந்தாது என்பதும் உண்மை. தலித்துகளைப் பொருத்தவரை பெருமளவுக்கு அவர்கள் நிலம் பெறவில்லை என்பதும், தமிழகத்தின் ஒரு எதார்த்தமான உண்மை. திராவிட கட்சிகள் நில உறவுகளை மாற்ற பெரும் முயற்சி எடுக்கவில்லை. இதற்கு ஒரு காரணம் அன்றைய திமுக வின் கிராமப்புற தலைமை என்பது பணக்கார விவசாயிகளிடமும் முதலாளித்துவ விவசாயிகளிடமும் இருந்தது என்பதாகும். இன்றைக்கும் கிராமப்புறங்களில் சாதிஒடுக்குமுறை தொடர்வதற்கு நில ஏகபோகமும் ஒரு காரணம். கிராமப்புறங்களில் அதிகாரங்களை நிர்ணயம் செய்வதில் நிலவுடைமை தொடர்ந்து பங்கு ஆற்றுகிறது.

முதலாளித்துவ வளர்ச்சி

1950கள், 60களில் உற்பத்தி முறைகளில் மாற்றமில்லாமல், பாசனப் பெருக்கம், ஒரு எல்லைக்குட்பட்ட  நிலச்சீர்திருத்தத்தின் காரணமாக கிடைத்திருக்கக்கூடிய கூடுதல் சாகுபடி நிலம் என்ற வகையில், வேளாண் உற்பத்தி பெருகியது. 60களின் நடுப்பகுதிக்குப் பிறகு, வேளாண் உற்பத்தியின் வளர்ச்சி என்பது பிரதானமாக பசுமைப் புரட்சி என்ற ஒரு பதாகையின் கீழ் அது இன்றைக்கு பேசப்பட்டாலும், முக்கியமாக சில தொழில்நுட்ப மாற்றங்களை மையப்படுத்தியதாக இருந்தது. ஒன்றிய அரசினுடைய பெரிய பங்கும் அதில் இருந்தது. நவீன உற்பத்தி முறைகள் புகுத்தப்பட்டன. அதற்கு முக்கியமாக நீர்வளம் தேவைப்பட்டது. ரசாயன உரங்கள், உயர் மகசூல் விதைகள், உத்தரவாதமான பாசன மேலாண்மை ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு அது தமிழகத்திலும் தனது பங்கை ஆற்றியது. வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டன; வேளாண் விரிவாக்கப்பணி அமைப்பு வலுப்படுத்தப்பட்டது; தேசீய வேளாண் ஆய்வு அமைப்பு வலுப்பெற்றது; இடுபொருட்களுக்கு மானியம் வழங்கப்பட்டது; அரசு உத்தரவாத விலை கொடுத்து நெல் மற்றும் கோதுமை பயிர்களை கொள்முதல் செய்தது ஆகிய நடவடிக்கைகள் ‘பசுமை புரட்சியின் பகுதியாக இருந்தன. தமிழகத்தில் வேளாண்துறையில் மகசூல் அதற்குப் பிறகு உயர்ந்தது என்பது உண்மை.

இன்றைக்கு கிராமப்புறங்களில் விவசாயம் அல்லாத துறைகளில் பணிகள் உருவாகி இருக்கின்றன. அவை அதிகரித்துக்கொண்டும் வருகின்றன. தமிழகத்தில், குறிப்பாக மற்ற பல்வேறு துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக நகர கிராம இணைப்பு முன்னேறி இருக்கிறது. இது திராவிட இயக்கங்களின்  ஆட்சியில் மட்டும் நிகழவில்லை, முன்பும் நிகழ்ந்தது. போக்குவரத்து, கல்வி, பொதுவிநியோகம் எல்லாம் உழைப்பாளி மக்கள் மீது நிலச்சுவான்தார்களின் அதிகார பலத்தைக் குறைத்திருக்கின்றன. ஆனால், அது அறவே மறைந்துவிட்டது என்றோ, அல்லது இந்த அதிகார பலம் குறைக்கப்பட்டதனால், கிராமப்புற செல்வங்களை உருவாக்கும் உழைப்பாளி மக்களை சுரண்டுவதில் நிலவுடைமையாளர்களுக்குப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றோ சொல்ல முடியாது. இன்னும் சொல்லப்போனால் அரசினுடைய பல்வேறு திட்டங்களையும் பயன்படுத்தி கிராமங்களில் நிலவுடைமையாளர்களால் பெருமளவுக்கு முன்னேற முடிந்துள்ளது. தமிழகத்து கிராமங்களில் பெரும் நிலக்குவியல், பீகார், ஜார்கண்ட், சட்டிஷ்கர், மத்திய பிரதேச  பாணியில் இல்லாவிட்டாலும், இன்றைக்குப் பல நூறு ஏக்கர்கள் வைத்திருக்கும் நிலப்பிரபுக்கள் தமிழகத்தில் இல்லை என சொல்ல முடியாது.

அகில இந்திய முதலாளித்துவ வளர்ச்சியில் பங்கு

தமிழகத்தை வளர்ச்சி விகிதத்தை ஒட்டுமொத்தமாகப் பார்த்தோமானால் குஜராத், மகாராஷ்டிரா, மாநிலங்களுக்கு அடுத்தபடியாக மாநிலத்தினுடைய மொத்த உற்பத்தி மதிப்பு அதிகரித்து வந்துள்ளது. ஆனால் உற்பத்தி வளர்ச்சியின் தன்மை எவ்வாறு இருக்கிறது? காங்கிரஸ் ஆட்சியிலும், திராவிடக் கட்சிகளின் ஆட்சியிலும் முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் ஆதாயம் பெற்றுள்ளார்கள் என்பதுதான் பொதுவான உண்மை.

திராவிட கட்சிகளின் ஆட்சிகள் ஒன்றிய அரசின் தாராளமய கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டது இல்லை. ஏனெனில் அவர்கள் அந்தக் கொள்கையினுடைய பல அம்சங்களை ஏற்றுக் கொண்டவர்களாக மாறியுள்ளனர். தொடர்ந்து பல பத்தாண்டுகளாக திராவிட கட்சிகள் மாறி மாறி ஒன்றிய அரசில் அங்கம் வகித்தும் உள்ளனர்.

தாராளமய காலத்தில் ஊரக வர்க்க உறவுகள்

இந்தியாவின் பிற பகுதிகளைப் போலவே தமிழகத்திலும் கிராமப்புறங்களில், கடந்த 30 ஆண்டுகளில், தனியார்மய, தாராளமய, உலகமய காலகட்டத்தில் வேளாண்துறையில் கிராமப்புறங்களில் உள்ள வர்க்க உள்முரண்பாடுகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கிராமப்புறங்களில் இன்றைக்கு பழைய பாரம்பரிய பத்தாம்பசலி நிலப்பிரபுக்கள் கிட்டத்தட்ட இல்லை எனச் சொல்லலாம். முதலாளித்துவ நிலப்பிரபுக்கள் இருக்கிறார்கள். அதோடு சேர்ந்து பாரம்பரியமாக கிராமப்புற நில ஏகபோகத்தில் பங்கேற்காத, ஆனால், பிறகு அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி வளர்ந்துள்ள, விவசாயம் சார்ந்த, விவசாயம் சாராத பல குடும்பங்கள் உள்ளே வந்துள்ளார்கள். அவர்கள் நவீன உற்பத்தி முறைகளைப் பயன்படுத்தி வலுவான முதலாளித்துவ விவசாயிகளாக இடம் பெற்றிருக்கிறார்கள். அதைப்போலவே, பணக்கார விவசாயிகளும் இருக்கிறார்கள்.

தற்சமயம் விவசாயத்தில் அநேகமான செயல்பாடுகள் இயந்திரமயமாகிவிட்டது. விவசாயத்தில் கூலி வேலை என்பது குறைவாகத்தான் உள்ளது. இன்றைய கிராமங்களில் விவசாயக்கூலித் தொழிலாளி என்ற பிரிவை வரையறுக்க முடியவில்லை. ஏனெனில் கிராமப்புற உடல் உழைப்பு தொழிலாளிகள் பல வேலைகளை செய்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. 2011 சமூகப் பொருளாதார கணக்கெடுப்பின்படி கிராமப்புற மொத்த உழைப்பாளிகளில் 65 சதவிகிதம் பிரதானமாக  விவசாயத்தை சார்ந்திருப்பவர்கள். அதில் ஒரு 20 சதம்தான் சாகுபடியாளர்கள். மீதம் 45 சதம் விவசாயத் தொழிலாளி என்ற கணக்கு வருகிறது. இவர்கள் அனைவரும் விவசாயத் தொழிலாளிகளாக மட்டும் இல்லை. உண்மை என்னவென்றால் நிலமற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களது வருமானம் கூலிக்கான உடல் உழைப்பை சார்ந்துள்ளது. கிராமப்புறங்களில் நிகழ்ந்துள்ள நில இழப்பு வலுவான வர்க்க வேறுபாடுகளை உருவாக்கியுள்ளது. தாராளமய வளர்ச்சி வேலையின்மை பிரச்சினையை தீவிரமாக்கியுள்ளது.  குஜராத், மகாராஷ்டிரா அளவிற்கு இல்லாவிட்டாலும் தமிழகத்திற்கும் இது பொருந்தும்..

தமிழக கிராமங்களில் தமிழக நகரங்களில் தொழில்வளர்ச்சி தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதைவிட அதிகமாக இந்த மூன்றாம் நிலைத் தொழில்கள் வளர்ந்துள்ளன. இதனால் இரண்டாம் நிலையின் பங்கு குறைந்துள்ளது. 1960-61இல் தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் தொழில்துறையின் பங்கு 20.47 சதமாக இருந்தது. ஐந்தில் ஒரு பங்காக இருந்தது. இது வேகமாக அதிகரித்து 90-91ல் மூன்றில் ஒரு பங்கானது. 33.1 சதம். 1995-96 வரும்போது, 35 சதமாக உயர்ந்தது. ஆனால், அதற்குப்பிறகு, தொடர்ந்து அது குறைந்துகொண்டே வருகிறது.

.தமிழக அரசின் முதலீட்டுக் கொள்கைகள் பற்றி பார்ப்போம். இந்தியாவில் தாராளமய கொள்கைகளின் பகுதியாக  உழைப்பாளி மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இது தமிழகத்திற்கும் பொருந்தும். தமிழகத்தின் திராவிட கட்சிகளின் அரசுகள் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டவில்லை. பெரும் கம்பனிகளை ஊக்குவித்து முதலீடுகளை கொண்டு வருவது மட்டுமே அரசுகளின் கவனத்தில் இருந்துள்ளது. இதன் பொருள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகள் அளிக்கப்படுவது என்பதாகும்.

தமிழகத்தில் கிராமங்களில் வசிக்கின்ற மக்களின் சதவிகிதம்  பிற மாநிலங்களை ஒப்பிடும்போது நிச்சயமாக குறைந்துள்ளது. ஆனால், இன்றும் 50 சதவிகிதம் மக்கள்  கிராமப்புறங்களில் இருக்கிறார்கள். விவசாயத்தையும் சேர்ந்துதான் அவர்கள் வாழ்வாதாரம் இருக்கிறது. விவசாயம் மட்டுமல்ல. விவசாயக் குடும்பங்கள்கூட, விவசாயத்தில் கூலி வேலை, வெளியே கூலி வேலை, சில சிறுசிறு தொழில்கள் நடத்துவது என்று பலவகைகளில் கடுமையாக உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் கிராமப்புற உழைக்கும் மக்களுக்கு உள்ளது. மிகக் கடுமையான உழைப்பை செலுத்திய பிறகுதான்  வறுமைக்கோட்டையே எட்டுகிறார்கள். சில ஆண்டுகளுக்குமுன் நடத்தப்பட்ட, ஊரக வேளாண் குடும்பங்கள் தொடர்பான ஒன்றிய அரசின் ஆய்வும் இதனை தெளிவுபடுத்துகிறது.

தொழில் வளர்ச்சியின் வர்க்கத்தன்மை

தொழில் வளர்ச்சியில் முக்கிய அம்சம் என்னவெனில் தமிழக தொழில் வளர்ச்சி வேலை வாய்ப்புகளை வேகமாக அதிகரிக்கும் தன்மையில் இல்லை. ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே திராவிட கட்சிகள் காங்கிரசைப் போலவே பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டனர். 1970களின் துவக்கத்தில் வெடித்த சிம்சன் போராட்டத்திலேயே இதைக் காண முடிந்தது. வால்பாறையில் தேயிலை தொழிலாளர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டது, நெய்வேலியில் இரும்புக்கரம் என்பதெல்லாம் நாம் சந்தித்த சம்பவங்கள். பின்னர் 1977இல் வந்த எம் ஜி ஆர் அரசு டி வி எஸ் முதலாளிகளுக்கு அளித்த ஆதரவும் இதே வகையானதே. அடுத்துவந்த காலங்களில் ஸ்பிக், ஸ்டெர்லைட் என்று பொதுவான பெருமுதலாளி ஆதரவு நிலையை திராவிட கட்சிகளின் தலைமையிலான மாநில அரசுகள் தொடர்ந்து எடுத்துவந்துள்ளன. தாராளமய கொள்கைகள் அமலாக்கத்திற்கு வந்த பிறகு பெயரளவிற்குக் கூட பொதுத்துறை பாதுகாப்பு, தொழிலாளர் நலன், தொழிலாளர் உரிமைகள் போன்றவற்றிற்கு ஆதரவாக மாநில அரசுகள் செயல்படவில்லை. அதற்கு நேர்எதிராக, தொழில் ஊக்குவிப்பு என்ற பெயரில் வெளிப்படைத்தன்மை எதுவும் இல்லாத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுவது, அதன் அடிப்படையில் நிலம்,  நீர், மின்சாரம் உள்ளிட்ட எல்லா வசதிகளையும் சலுகை கட்டணத்தில் இந்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கு அளிப்பது என்பது இரு கழக ஆட்சிகளிலும் தொடர்கிறது. இந்த ஒப்பந்தங்களும் சரி, அவற்றின் மூலம் நிகழ்ந்துள்ள முதலீடுகளும் சரி, வேலை வாய்ப்புகளை பெருக்குவதில் மிகச்சிறிய பங்களிப்பே செய்துள்ளன. தி.மு.க ஆட்சியில் (2007 வாக்கில் என்று நினைவு) ஒரு முறை சட்ட சபையில் 6,000 கோடி ரூபாய் முதலீடு அளவிற்கு போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் 20,000 வேலைகள் என்று அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. கணக்குப் பார்த்தால் இது ஒரு கோடி ரூபாய் முதலீட்டுக்கு மூன்று பணியிடங்கள் என்று வருகிறது! 2015 செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாட்டில் இரண்டு  லட்சத்து  நாற்பத்தி இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக சொல்லப்பட்டது. 2016 தமிழ்நாடு பட்ஜெட் உரையில் இந்த முதலீடுகள் மூலம் இரண்டு லட்சத்து எண்பதாயிரம் பணியிடங்கள் உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் ஒரு கோடி ரூபாய் முதலீட்டிற்கு ஒரு பணியிடம் என்று ஆகிறது! ஆக. நாட்டின் இயற்கை வளங்களை தாரை வார்த்துக் கொடுத்து, அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, வரிச்சலுகைகளையும் அளித்து பன்னாட்டு இந்நாட்டு பெருமுதலாளிகளை முதலீடு செய்ய அழைப்பது எந்த விதத்திலும் வேலை வாய்ப்பை உருவாக்கிட பயன் தராது என்பது தெளிவு.  ஆனால் சிறு குறு மூலதனங்கள் மூலமும் அரசு முதலீடுகள் மூலமும் வேலை வாய்ப்பை பெருக்கும் வகையிலான தொழில் கொள்கைகளை திராவிட கட்சிகளின் அரசுகள் பின்பற்றவில்லை என்பது தெளிவாகிறது. இவர்கள் மாறி மாறி பங்கேற்ற மத்திய அரசு கூட்டணி அரசாங்கங்களிலும் இந்த பிரச்சனைகளை திராவிட கட்சிகள் எழுப்பவில்லை என்பது மட்டுமல்ல. மத்தியில் கூட்டணி ஆட்சிகளில் பங்கேற்ற பொழுது பொதுத்துறை நிறுவனங்களை பலவீனப்படுத்தும் மத்திய அரசுகளின் தாராளமய கொள்கைகளை எதிர்த்து குரல் எழுப்பவும் இல்லை. எனினும் மக்களின் வலுவான போராட்டங்களின் விளைவாக சில நலத்திட்ட நடவடிக்கைகளை இந்த அரசுகள் மேற்கொண்டு வந்துள்ளன.

இறுதியாக

இன்று நாட்டின் அரசியல் நிலைமைகளை கணக்கில் கொண்டு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டிய பெரும் கடமை நம் முன் உள்ளது. கடந்த காலம் எப்படி இருந்தாலும், சமகால தேவைகளையும் இன்று உலகளவிலும் இந்தியாவிலும் அம்பலப்பட்டு நிற்கும் ஏகபோக கார்ப்பரேட் ஆதரவு வளர்ச்சிப்பாதையை நிராகரிக்க வேண்டியதன் அவசியத்தையும், மதவெறி அரசியலைக் கையாளும் சக்திகளை முறியடிக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்து இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து செயல்பட திராவிட கட்சிகளுக்கு வாய்ப்பு உள்ளது.  இது நடக்குமா என்பதை நிர்ணயிப்பதில் வர்க்க, வெகுஜன இயக்கங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

நூல் விமர்சனம்: திராவிட மாடல் (2021)

குரல்: தோழர் பீமன்

என்.ராகுல்

தமிழில்: அபிநவ் சூர்யா

இந்த புத்தகத்தின் ஆய்வு, இன்று ஆய்வு வட்டங்களில் தமிழகத்தின் மக்கள் நல மற்றும் ஜனரஞ்சக அரசியலின் நிர்ணய காரணிகள் குறித்து நிலவும் பரவலான விளக்கங்களை எதிர்க்கும்படியான வாதங்களை முன்வைக்கிறது. இந்த விளக்கங்கள் இரு வகையான ஜனரஞ்சகவாதத்தை சுற்றியே உள்ளன – பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, சற்றே மேல் தட்டுகளில் உள்ள, குறிப்பாக இடைநிலை சாதியினரை முன் நிறுத்தும் “உரிமை கோரும்” ஜனரஞ்சகவாதம், மற்றும் இந்த “உரிமை கோரும்” ஜனரஞ்சகவாதத்தால் பயன் அடையாத சாதி-வர்க்கங்களை உள்ளடக்கிய “இரட்சிப்பாளர்” ஜனரஞ்சகவாதம்.

திராவிட அரசியல் நோக்கிய மற்றொரு விமர்சனம் அதை “மேல்தட்டுக்கு குவியல்; ஆனால் ஏழைகளுக்கு நலத்திட்டம்” என வரையறுக்கிறது. ஆனால் இப்புத்தகத்தின் ஆசிரியர்கள், பெரும்பாலான ஆய்வுகள் தமிழகத்தின் நலத்திட்டம் மற்றும் மூலதன குவியல் இடையேயான தொடர்பை புரிந்துகொள்ளவில்லை என வாதிடுகின்றனர். பொருளாதார மற்றும் சமூக, இரு தளங்களிலும் ஜனநாயகத்துவம் நடந்திருப்பதாகவும், இந்த இரண்டிற்குமான தொடர்பு திராவிட கோட்பாட்டிலிருந்து எழுவதாகவும் இவர்கள் வாதிடுகின்றனர்.

“அவர்களின் (திராவிட இயக்கங்களின்) அணிதிரட்டல் சாதி-அடிப்படையிலான சமூக அநீதியின் வடிவத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. சாதிவாரி இட ஒதுக்கீடு மூலம் சமூக நீதியை வெல்வது, தொழில்துறை திறன் பெருக்கல் பண்பின் மீதான நம்பிக்கை, வலுவான மாநில சுயாட்சியின் அவசியம்,  அனைவரையும் உள்ளடக்கிய நவீனத்துவத்தை கட்டமைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதே “திராவிட பொது புத்தி”” என ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

நரேந்திர சுப்பிரமணியம் போன்ற ஆய்வாளர்களின் திராவிட அரசியலுக்கான “இரு வகை ஜனரஞ்சகவாதம்” என்ற  விளக்கத்திற்கு மாற்றை இவர்கள் முன் வைக்கும் பொழுதும், நிலவும் பிரபல ஆய்வுகள் திராவிட கட்சிகள் மற்றும் இயக்கத்தை “இடதுசாரி ஜனரஞ்சகவாதம்” என வரையறுப்பதோடு இவர்களும் ஒத்து போகின்றனர்.

“பலதரப்பட்ட கோரிக்கைகள் இடையே சமத்தன்மையை உருவாக்குவதன் மூலம் அரசியல் ஒருங்கிணைப்பை கட்டமைப்பது, ஓரளவு நுணுக்கமான கோரிக்கைகளை கைவிட்டு, நுணுக்கங்களுக்கு இடையேயான பொதுத்தன்மை மற்றும்  சமத்தன்மையை முன் நிறுத்துவது, புதிதாய் எழும் கோரிக்கைகள் மற்றும் முரண்பாடுகளை உள்ளடக்கிக் கொள்வது” என்பதே இடதுசாரி ஜனரஞ்சகவாதம் என்கின்றனர்.

திராவிட தமிழியம் என்ற அடையாளத்தின் கீழான பிரபல ஒருங்கிணைப்பானது உள்-வகுப்புக்களான ஆதி-திராவிடர்கள், சூத்திரர்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், விவசாய மற்றும் ஆலை தொழிலாளர்கள், சிறு விவசாயிகள், பெண்கள் போன்றோரின் நுணுக்கமான கோரிக்கைகளை உள்வாங்கிக்கொண்டு, அவற்றையெல்லாம் மேல் சாதியினருக்கும், தேசிய அளவில் அரசியல்-பொருளாதார சக்தி படைத்தோருக்கும் எதிரான ஒரு தமிழ்/திராவிட அரசியல் கட்டமைப்பிற்குள் கொண்டு வந்ததாக இவர்கள் வாதிடுகின்றனர்.

நீதிக்கட்சி காலத்திலிருந்து இந்த இயக்கத்தின் தாக்கத்தை விவரிக்கின்றனர். காமராஜர் காலத்தில் கூட ஏற்பட்ட முன்னேற்றங்கள் திராவிட அரசியலின் அழுத்தத்தின் விளைவே என வாதிடுகின்றனர். ஆனால் இப்படிப்பட்ட ஜனரஞ்சக அரசியலின் பின்னடைவுகளை இவர்கள் உணராமல் இல்லை. இப்படிப்பட்ட அரசியலால் ஒரு சிலரை விட வேறு சிலர் மட்டுமே பயன் பெற வாய்ப்புண்டு. மேலும் இது நிரந்தரமாக மக்களை “நாங்கள்” “நீங்கள்” என பிரித்து, வலதுசாரி அரசியல் பயன்படுத்திக்கொள்ள வழி வகுக்கலாம்.

இப்புத்தக ஆசிரியர்கள் தமிழக  ஜனரஞ்சகவாதத்தின் இரு அம்சங்களை கண்டறிகின்றனர் – சமூக ஜனரஞ்சகவாதம் மற்றும் பொருளாதார ஜனரஞ்சகவாதம். நீண்ட காலத்தில் நவீன வளர்ச்சிகள் மற்றும் பொது சொத்துக்கள் அனைவரும் பெறுவதை உறுதி செய்வது சமூக ஜனரஞ்சகவாதம். இக்காலத்தில் “அளித்தல்” வகையிலான, குறிப்பாக சில முக்கிய சமூக குழுக்களை நோக்கிய பொருளாதார முன்னெடுப்புகள் பொருளாதார ஜனரஞ்சகவாதம்.

இந்த இரு ஜனரஞ்சகவாதத்தையும் மாநிலத்தில் நிறுவனத்துவம் ஆக்கியதன் காரணமாக மூன்று தளங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக வாதிடுகின்றனர் – 1) சமூக-பொருளாதார கட்டமைப்பில் முதலீடு செய்ததன் விளைவாக அடித்தளம் உருவாக்கியது 2) அரசாங்கத்துறை, நவீன பொருளாதாரம் போன்ற மாநில கட்டமைப்புகளை ஜனநாயகத்துவமாக்கியது 3) கனவு கண்டு, அதை அடையக்கூடிய நம்பிக்கையுள்ள மக்களை உருவாக்கியது.

அரசியல் ரீதியில் திமுக சமூக ஜனரஞ்சக அரசியலின் பிரதிநிதியாகவும், அதிமுக பொருளாதார ஜனரஞ்சக அரசியலின் பிரதிநிதியாகவும் இருந்தாலும், இதில் கலவைகளும் உள்ளன என கூறுகின்றனர். மேலும் தேசிய, சர்வதேச தளத்தில் சமூக ஜனரஞ்சக அரசியலின் வறட்சியின் காரணமாகவே, பொருளாதார ஜனரஞ்சக அரசியலின் மேல் மேலும் அழுத்தம் அதிகரிப்பதாக வாதிடுகின்றனர்.

இந்த நூல் குறிப்பாக சமூக பொருளாதார நலத்திட்டங்களால் உந்தப்படும் தமிழகத்தின் திராவிட வளர்ச்சி முன்மாதிரியை குஜராத், மகாராஷ்ட்ரா மாநிலங்களில் பின்பற்றப்படும் வளர்ச்சிப் பாதைக்கு எதிராக முன் நிறுத்துகிறது. வரும் பகுதிகளில் இந்த நூலின் விமர்சனப் பார்வையை முன் வைக்கிறேன்.

கல்வி:

துவக்கநிலை, இடைநிலை, மேல்நிலை கல்வியில் மற்ற மாநிலங்களை விட ஒப்பீட்டளவிலான சாதனைகளை ஆசிரியர்கள் விவரிக்கின்றனர். மற்ற மாநிலங்களை விட பிற்படுத்தப்பட்ட/தாழத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்தை அழுத்தமாக விவரிக்கின்றனர்.  இருபதாம் நூற்றாண்டில் துவங்கிய கடைநிலை சாதியினரின் ஒருங்கிணைப்பே இந்த வளர்ச்சியின் ஆணிவேராக கண்டறிகின்றனர். மாணவர் சேர்க்கை, கட்டமைப்பு போன்ற பல தளங்களில் சிறந்து விளங்கும்போதும், கல்வியின் தரத்தில் கவலைகள் இருப்பதை ஆசிரியர்கள் அங்கீகரிக்கின்றனர்.

தமிழக கல்வியில் அதீத தனியார்மயத்தை பற்றி பேசும் பொழுது, மத்திய அரசின் நிர்ப்பந்தத்தால்தான் மாநில அரசு தனியார்மயப் படுத்தியது போல குறிப்பிடுகின்றனர். ஆனால் வரலாறு முழுவதிலும் இரண்டு திராவிட கட்சிகளும் மத்திய அரசில் கூட்டணி பங்கு வகித்ததை இது மறைக்கிறது. மேலும் இரண்டு திராவிட கட்சிகளும் தனியார் கல்வி “பிரபு”-க்களோடு கை கோர்த்துக் கொண்டதையும், நிலங்களை மலிவு விலையில் விற்றதையும், அதன் மூலமான நிதியை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதையும் மறந்துவிட்டனர்.

மேலும் கட்டுமான தளத்தில், பெரும்பாலும் 1970களில் துவங்கப்பட்டு அரசால் நடத்தப்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும்  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் வகுப்பினருக்கான பல விடுதிகள் பற்றி குறிப்பிடுகின்றனர். ஆனால் இந்த விடுதிகளின் வாழ்விட தரத்தைப் பற்றியோ, பல சமயங்களில் கவனிப்பின்மை மற்றும் பராமரிப்பின்மை காரணத்தால் நலிந்து, போராட்டங்களுக்கு காரணமாகி உள்ள நிலை பற்றியோ பேசவில்லை. இதே போன்ற விமர்சனம் துவக்க நிலை பள்ளிகள் கட்டமைப்பு குறித்தும் கூட வைக்கலாம். ஏனெனில் ஆசிரியர்கள் அளித்துள்ள தரவுகளை வைத்தே பார்த்தால் கூட, பொதுக் கல்விக்கு கட்டமைப்பு வழங்குவதில் தமிழகத்தை விட குஜராத் சற்றே நன்றாகக் கூட செயல்படுகிறது.

ஜனநாயகத்துவமாக்கப்பட்ட சுகாதாரம்:

சுகாதாரத் துறையிலும், பொது கட்டமைப்பு மற்றும் பிரதிநிதித்துவம் மூலம் தமிழகம் முக்கிய முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆரம்பநிலை மற்றும் நோய் தடுப்பு சுகாதாரம் குறித்த தரவுகள் ஒரு புறம் கேரளாவை விட தமிழகம் பின் தங்கி இருப்பதை காட்டினாலும், மறு புறம் இதர மாநிலங்கள் தமிழகத்தை விட பல மடங்கு பின் தங்கி இருப்பதை காட்டுகிறது. ஆனால் இந்த சாதனைகளுக்கு சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்குவதை விட, இருக்கும் வளங்களை திறம்பட பயன்படுத்தியதே  காரணம் என நூல் ஆசிரியர்கள் வாதிடுகின்றனர்.

அரசு கல்லூரி மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் மருத்துவ துறையின் முதுகலை படிப்பில் உள்ள இட ஒதுக்கீடு மூலம் சுகாதாரத் துறை, அரசுப்பணி கட்டமைப்பு ஆகியவை ஜனநாயகத்துவம் ஆக்கப்பட்டிருப்பதை ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்கள் பொது சுகாதார கட்டமைப்பில் மூன்று ஆண்டுகள் கண்டிப்பாக பணி புரிய வேண்டும். 

சுகாதாரத் துறை அரசுப்பணி கட்டமைப்பு ஜனநாயகத்துவம் ஆக்கப்பட்டிருப்பதன் விளைவாக விளிம்பு நிலை மக்களிடையே நம்பிக்கை பெருகி, மருத்துவ சேவையை நாடுவது அதிகரித்திருப்பதை குறிப்பிடுகின்றனர். கிராமப்புற செவிலியர் ஊக்கத் திட்டமும் குறிப்பிடப்படுகிறது. நிரந்தர பொது சுகாதார துறை உருவாக்கப்பட்டது பற்றியும், முற்போக்கான மருந்து கொள்கை பற்றியும் குறிப்பிடப்படுகிறது.

கல்வி தரவுகள் போலவே, சுகாதார துறை தரவுகளையும் ஆராயும் தேவை உள்ளது. குறிப்பாக ஆரம்ப சுகாதார மையங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ள தரவுகள். பிரசவ அறை உள்ள மையங்கள் (95.4), இரண்டு மருத்துவர்கள் உள்ள மையங்கள் (73.5%), 24 மணி நேரமும் செயல்படும் மையங்கள் (89.3%) விகிதம் எல்லாம் தேசிய அளவை (69%, 26.9%, 39.2%)  விட மிக அதிகமாக உள்ளது என்றாலும், இந்த தரவுகளை சந்தேகத்துடனே தான் பார்க்க வேண்டி உள்ளது.

மேலும் இந்த மையங்களின் சேவை அளிக்கும் திறனையும் கேள்விக்குள்ளாக்க வேண்டி உள்ளது. கோவிட்-19 தொற்று காலத்தில் உண்மை எண்ணிக்கையை விட மிகக் குறைந்த தொற்று எண்ணிக்கை மட்டுமே கணக்கில் காட்டப்பட்டது என்ற உண்மை, இந்த வாதங்கள் மேல் சந்தேகத்தை எழுப்புகின்றன. வெறும் சுகாதார மையங்களை துவங்காமல், அதற்கு கட்டமைப்பு மற்றும் பணியாட்களை அளித்துள்ளதாக ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் திராவிட ஆட்சி வரலாறு முழுமையிலும், “ஜனநாயகத்துவப் படுத்துதல்” என்பது இடைநிலை அரசியல் செயல்பாட்டாளர்கள் மூலமும், நலிவான அதிகாரப் பகிர்வு கொண்ட அரசுப் பணி கட்டமைப்பு மூலமும், கள அளவில் ஒருங்கிணைந்த அரசியல் முன்னெடுப்புகள் மிக நலிவாக உள்ள சூழலிலும் தான் செயல்பட்டு வந்துள்ளது என்பதை மறக்கக் கூடாது. இப்படிப்பட்ட கட்டமைப்பானது தினசரி தேவைகளுக்கு எந்த அளவிற்கு திறம்பட செயல்படுகிறது என்பதை மேலும் ஆய்வு செய்து தான் கண்டறிய வேண்டும்.

ஊரக உற்பத்தி உறவுகளில் மாற்றம்:

இதர பகுதிகள் போல் இல்லாமல், ஊரக பகுதி வளர்ச்சிக்கு நீதிக் கட்சியையோ, பெரியார் இயக்கத்தையோ கூட காரணியாக குறிப்பிடவில்லை. திமுக ஆட்சிக்கு முன்பு 1952ல் திராவிட விவசாய தொழிலாளர் சங்கம் துவங்கப்பட்டது மட்டுமே குறிப்பிடத்தக்க முயற்சியாகும். முனைவர் ஜெயரஞ்சன் அவர்களின் ஆய்வை தழுவி, திராவிட ஆட்சியின் கீழ் நில உறவுகள் கடைநிலை சாதியினர், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு சாதகமாக மாறியுள்ளதாக வாதிடுகின்றனர். குறிப்பாக, 1969இல் இயற்றப்பட்ட விவசாய குத்தகைதாரர்  உரிமை சட்டம் மூலம் அருகாமையில் வசிப்போரின் வாய்வழி சாட்சியம் மூலம் குத்தகைதாரர் உரிமை சட்டமானதையும், மற்றும் 1971இல் இயற்றப்பட்ட வீட்டுமனை பட்டா வழங்கும் சட்டம் குறித்தும் குறிப்பிடுகின்றனர்.

மேலும் ஜெயரஞ்சன்-நாராயணன் ஆய்வை தழுவி, தமிழகத்தில் பாரம்பரிய கிராம அரசு அதிகாரிகளை ஒழித்து, சாதி-வாரி இட ஒதுக்கீடு மூலம் தேர்வாகும் அதிகாரிகளை நியமித்ததனால் குத்தகைதாரர்கள் உரிமை கோரி அரசு அலுவலகங்களை நாடுவது ஜனநாயகத்துவப் படுத்தப்பட்டதாகவும், மேலும் அரசியல் அதிகாரம் மூலம் நிலத்தின் மீதான அதிகாரம் உறுதி அடைந்ததாகவும் வாதிடப்படுகிறது.

ஊரக தொழிலாளர்கள் வேளாண் பணி தவிர இதர பணிகளில் ஈடுபடும் விதம் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மிக அதிகமாக இருப்பது முன்னேற்றத்தின் சின்னமாக முன் நிறுத்தப்படுகிறது. மேலும் பொது விநியோக (நியாய விலை) கட்டமைப்பு மூலம் மக்களின் அன்றாட தேவைகள் திறம்பட பூர்த்தி செய்யப்பட்டதை அழுத்தமாக குறிப்பிடுகின்றனர். இவை பட்டியல் சமூகத்தினருக்கும் சம நீதி பெற்று தந்திருப்பதை குறிப்பிடுகின்றனர்.

ஆனால் திராவிட ஆட்சியில் தலித் மக்களுக்கு எவ்வளவு நிலம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடாமல், இதற்கும் திராவிட நவீனத்துவத்திற்கும் தொடர்பு இல்லை என கோரப்படுகிறது. பெரும்பாலும் விவசாய தொழிலாளர்களாக இருந்த தலித் மக்களை விட, பெரும்பாலும் குத்தகைதாரர்களாக இருந்த பிற்படுத்தப்பட்ட சாதி மக்களே நில முன்னெடுப்புகள் மூலம் பெரிதும் பயன் பெற்றதை ஆசிரியர்கள் குறிப்பிடவில்லை.

ஜெயரஞ்சன் ஆய்வில் கூட, காவிரி டெல்டா பகுதியில் அரசு அதிகாரிகளால் வழிநடத்தப்பட்ட குத்தகைதாரர் சீர்திருத்தத்தால் தலித் மக்கள் பெரிதும் பயன் பெறவில்லை என குறிப்பிடுகிறார். தமிழகத்தின் இதர பகுதிகளில் நில உறவுகள், மேல்மட்ட பிற்படுத்தப்பட்ட சாதியினர், இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர் மற்றும் தலித்களின் பங்கு ஆகியவற்றை ஆய்வு செய்தால் திராவிட ஆட்சி “இடதுசாரி ஜனரஞ்சக” ஆட்சியா என ஆசிரியர்கள் சோதிக்கலாம்.

உண்மையில் திராவிட இயக்கம் புரட்சிகர கோரிக்கைகளுக்கு செவிசாயக்கும் இடதுசாரி ஜனரஞ்சக இயக்கம் எனில் கீழவெண்மணி தலித் விவசாய தொழிலாளர் கோரிக்கைக்கு திறம்பட செயல்பட்டிருக்கும். ஆனால் அதன் “சீர்திருத்த” திட்டத்தில் தலித் மக்களுக்கு கடைசி இடமே.

ஆனால் பேரா. விஜயபாஸ்கரே 2018இல் எழுதிய கட்டுரையில், தமிழக அரசானது தொழில் மூலதனம் மற்றும் சூதாடும் நில வியாபார மூலதனத்திற்கு தன் ஆதரவை மடை மாற்றி, முனைப்புடன் வேளாண் பொருளாதாரத்தை அழிக்கும் அரசு என குறிப்பிட்டார். தலித் மக்களில் ஒரு சிறு பகுதியினர் விளைச்சல்தாரர்கள் ஆகியுள்ளது “ஜனநாயகத்துவம் “என கோருவது தமிழகத்தில் சிறு-குறு விவசாயம் என்பது லாபமாற்ற, கடனில் மூழ்கடிக்கும் தொழிலாக மாறியதை கணக்கில் கொள்ளாத வெற்று வாதமாகும்.

தமிழகத்தின் நிலமின்மை சூழலை விவாதிக்காமல் இருப்பதன் மூலம், ஆசிரியர்கள், ஊரக தொழிலாளர்கள் மட்டுமல்லாமல், ஏதுமின்றி தவிக்கும் நகர்ப்புற இடம்பெயர் தொழிலாளர்களின் அவல நிலையையும் மறைக்கின்றனர்.

மூலதன திரட்சி

2019இல் ஹாரிஸ்-வயட் ஆய்வில் திராவிட அரசியல் நலத்திட்டத்தில் கவனம் செலுத்தி மூலதன திரட்சியை மேல்தட்டு மக்களிடம் விட்டுவிட்டதாக குறிப்பிடுவதற்கு எதிராக ஆசிரியர்கள் வாதிடுகின்றனர். அரசு தலையீடும், அரசியல் ஒருங்கிணைப்பும் மூலதன திரட்சியை ஜனநாயகத்துவப்படுத்தி இருப்பதாக வாதிடுகின்றனர்.

இதில் அவர்கள் மூன்று வழிமுறைகளை கண்டறிகின்றனர் – 1) தொழில்துறை திறன் பெருக்கல் பண்பு பரவலாதல் மற்றும் தொழில்துறை வளர்ச்சியே சமூக கட்டமைப்புகளை உடைக்கும் வழி என்ற நம்பிக்கை 2) சமூக மற்றும் கள கட்டமைப்புகளில் முதலீடு 3) தொழில்/சேவை துறை  வளர்ச்சி நோக்கிய முனைப்பான கொள்கைகள்.

தமிழக தொழில் நிறுவனங்கள் குஜராத்/ மகாராஷ்ட்ரா ஒப்பிடுகையில் பல்வேறு இடங்களிலும், பலதரப்பட்ட துறைகளிலும் பரந்து விரிந்து இருப்பதை குறிப்பிடுகின்றனர். இது தமிழக தொழில் வளர்ச்சியானது எந்திர சார்பை விட மனித உழைப்பு சார்ந்ததாக இருப்பதை காட்டுகிறது. கட்டமைப்பு வசதிகள், குறிப்பாக சாலைகள், பொது போக்குவரத்து, மின் ஆற்றல் (குறிப்பாக புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றல்) போன்றவற்றில் தமிழகம் அடைந்த முன்னேற்றங்களை விவரிக்கின்றனர்.

சாதிவாரி நிறுவன உடமை தமிழகத்தில், குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் பரந்துபட்டு இருப்பது குறிப்பிடப்படுகிறது. 100 தொழிலாளர் மேல் உள்ள ஆலைகளின் உடமையாளர்களில் தமிழகத்தில் 68% பிற்படுத்தப்பட்டோர். இது குஜராத் (11%), மகாராஷ்ட்ரா(8%)-வை விட பன்மடங்கு அதிகம். ஆனால் தலித் வகுப்பினர் மத்தியில் உடமை தமிழகம் (5.8%) குஜராத் (6%) இரண்டிலும் மிகக் குறைவாக உள்ளது. மகாராஷ்ட்ராவில் சற்றே அதிகம் (12.1%).

DICCI தொழிலதிபர் கூட்டமைப்பின்படி தமிழகத்தில் தான் தலித் தொழில் முனைவோர் விகிதம் மிக அதிகம் என ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இது தாராளமயமாக்கல் காலத்தின் பின் நிகழ்ந்த வளர்ச்சியாக இருக்கக் கூடும். தரவுகள் அளிக்காமல், ஓரு சில ஆதாரங்கள் மூலம், பாரம்பரியமாக வர்த்தகத்தில் ஈடுபடாத இடைநிலை சாதியினர் பலர் தொழில் துறையில் தடம் பதிப்பதாக ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். 

ஆனால் இந்த பகுதியில் ஆசிரியர்களின் ஆய்வு முறையில் ஒரு பெரும் சிக்கல் காணப்படுகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் காந்திய வழி கிராமப்புற தொழில்களுக்காக குரல் கொடுத்ததாகவும், நீதிக் கட்சி மற்றும் பிராமணர் அல்லாதோர் இயக்கமே தொழில் பயிற்சி மற்றும் தொழில்மயமாக்கலுக்கு வாதிட்டதாகவும் குறிப்பிடுகின்றனர். ஆனால் இதை உறுதி செய்ய மேலும் ஆதாரங்கள் வேண்டும். ஏனெனில் காங்கிரஸ் சொல்வதற்கும் செய்வதற்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளது. மேலும் மேல்தட்டு சாதி தொழிலதிபர்கள் மட்டுமன்றி, நாடார் தொழிலதிபர்கள் கூட காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்துள்ளனர். குறிப்பாக காங்கிரஸ் காந்தியிசம் மேலோங்கி இருந்த குஜராத்-மகாராஷ்ட்ராவில் தொழில் துறை வளர்ச்சி காங்கிரஸ் செயல்பாட்டை தெளிவாக காட்டுகிறது. மேலும் தமிழகத்தில் மூலதன குவியலை வெகுவாக ஆதரித்த ராஜாஜி தான் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கட்சியை வழி நடத்தியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 நகர்ப்புற உழைப்பு

நகர்ப்புற உழைப்பு பற்றிய பகுதி நகர்ப்புற உழைப்புச் சந்தையில் நேர்ந்த அமைப்புசார் மாற்றங்கள் மற்றும் உடன் நிகழ்ந்த வறுமை ஒழிப்பு பற்றி தெளிவாக விவரிக்கின்றது. பெண்கள் உழைப்புச் சந்தையில் பங்கேற்கும் விகிதம், வேலைவாய்ப்பின் திறன் ஆகியவை குஜராத்/மகாராஷ்ட்ரா மாநிலங்களை விட அதிகமாக இருப்பதை குறிப்பிடும் அதே வேளையில், முறைசாரா நிலைத்தன்மையற்ற, வேலைவாய்ப்பு ஆதிக்கம் செலுத்துவதை ஒப்புக்கொள்கிறது.1990 களுக்கு பிறகு சேவைத் துறை தனியார்மயம் விரிவடைந்து, தனியார் வேலைவாய்ப்பு அதிகரித்த போதும், உயர்கல்வியில் கடைப்பிடிக்கப்பட்ட பிரதிநிதித்துவம் தனியார் வேலைவாய்ப்பில் பரந்துபட்ட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை குறிப்பிடுகிறது. எனினும் மேல்தட்டு சாதியினர் ஆதிக்கம் தொடரவதையும் உரைக்கிறது.

தகவல் தொழிற்நுட்ப துறையின் ஒரு எடுத்துக்காட்டைக் கொண்டு, இந்த துறையில் கடைநிலை சாதியினர் பங்கேற்பு அதிகரிப்பதை விவரிக்கின்றது. இந்த துறையில் தலித் மக்கள் நிலை குறித்து பெரிதும் பேசாத போதும், இந்நிலை மிக மோசமாக இருக்க வாய்ப்பில்லை என வாதிடப்படுகிறது.

தொழிற்சங்கங்களின் பங்கெடுப்பு, மற்றும் அவர்களுக்கு செவி கொடுக்கும் அரசின் தன்மையையும் ஆசிரியர்கள் விவரிக்கின்றனர். தொழிற்சங்க தலைவர்களுடனான நேர்காணல் மூலம், தொழிலாளர்கள் நிர்வாகத்தை ஆலையில் எதிர்கொள்வதை விட, அரசிடம் கோரிக்கை வைப்பதையும், மூலதனத்தை நீதிமன்றத்தில் எதிர்ப்பதையுமே விரும்புவது தெரிகிறது. தொழில் தகராறு சட்டத்தில் உட்பிரிவு 10B-ஐ தமிழக அரசு சேர்த்துள்ளதன் மூலம் தொழில் தகராறுகளில் அரசு தற்காலிக நிவாரணம் அளிக்கவும், குறிப்பாக சூழ்நிலை நிவர்த்தி அடையும் வரை தொழிலாளர்களுக்கு நிவாரண ஆதரவு வழங்கவும் அரசிற்கு அதிகாரம் அளிக்கிறது.

மேலும் ஆலைகளில் கூலியில்லா பயிற்சியாளர்களை நியமிப்பதை கட்டுப்படுத்தும் சட்டமும் இயற்றப்பட்டுள்ளது. தொழில் தகராறுகளில் நிஜத்தில் அரசு எவ்வாறு நடந்து கொண்டுள்ளது என்பதை மேலும் ஆய்வு செய்தால் தான் தொழிலாளர்-முதலாளி உறவில் தமிழக அரசின் பங்கு முழுமையாக புரியும். 

எனினும் இங்கு ஆசிரியர்கள் தமிழகத்தில் LPF தொழிற்சங்கத்தை இடதுசாரி தொழிற்சங்கங்களுடன் சேர்த்து அதன் பங்கை கள்ளத்தனமாக மிகைப்படுத்தி காட்டுகின்றனர். இடதுசாரி தொழிற்சங்ககள் திராவிட ஆட்சி காலத்தில் சமரசமின்றி பல போர்க்குணம் மிக்க போராட்டங்களை முன்னெடுத்தும், அதனால் திராவிட கட்சிகளுடனான கூட்டணியை முறித்துக் கொண்டும் போராடியதை போதுமான அளவு குறிப்பிடவில்லை. தேர்தல் வெற்றியை பொறுத்தே திமுக-அதிமுக தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கை மாறும் என்பதையும் விட்டு விட்டனர்.

அரசு இந்த துறையில் தலையிடுவது சிரமமாக கருதுவதால், வேலையிடத்தின் வெளியே மக்கள் நலத்திட்டங்களில் கவனம் செலுத்துவதாக வாதிடுகின்றனர். 1975இல் திமுக ஆட்சியில் முறைசாரா தொழிலாளர் குறித்த ஒரு குழு அமைத்த பின் முறைசாரா தொழிலாளர்களுக்கு நல்வாழ்வு ஆணையம் துவங்கப்பட்டது குறித்தும், பல்வேறு நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது குறித்தும் விவரிக்கின்றனர்.

ஆனால் இந்த நலத்திட்டங்கள் எல்லாம் திராவிட இயக்கத்தின் குறிப்பட்ட பாணி ஒருங்கிணைப்பால் தான் சாத்தியமானது என வாதிடுகின்றனர். பாரம்பரிய இடதுசாரி கட்சிகள், தொழிற்சங்கங்களின் “அரசியல்” இடதுசாரி அணிதிரட்டலுக்கு மாறாக, அனைத்து ஏழை மக்கள் இடையே ஒற்றுமை பாராட்டும் திராவிட இயக்கத்தின் “சமூக” இடதுசாரி அணிதிரட்டல் தான் இதைச் சாத்தியமாக்கியதாக வாதிடுகின்றனர்.

ஆனால் பணியிட நடைமுறைகள் பற்றி அசிரியர்கள் பேசவில்லை. “சுமங்கலி” தொழிலாளர் என்ற பெயரில் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் போன்ற மேற்கு மாவட்டங்களில் பெண்கள் பின்னலாடை ஆலைகளில் பணியமர்த்தப்படுவது குறித்து பேசவில்லை. புறநகர், ஊரக பகுதிகளில் பணியமர்த்தப்படும் இளம் பெண்கள் இந்த வேலை முறை மூலம் கடுமையாக சுரண்டப்படுவதோடு, கொத்தடிமை போன்ற நிலையில் வாழ்கின்றனர்.

இந்த முறை குறித்த தரவுகள் பல ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் வெளி கொண்டுவரப்பட்டாலும், இதில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அளவிடும் வழிகள் ஏதும் இல்லை. இத்துறையில் இது போன்ற விமர்சனங்கள் எழும்போது நிறுவனங்கள் சில ஆலைகளில் மாற்றங்கள் செய்து, NGO-க்கள் பார்வையிட அனுமதித்தாலும், உண்மை நிலையை விமர்சிக்க பொதுமக்களுக்கோ தொழிற்சங்கங்களுக்கோ வழிகள் இல்லை.

மேற்கு மாவட்டங்கள் மற்றும் இருளர் சமூகம் மத்தியில் பல பன்னாட்டு ஆய்வாளர்களின் ஆய்வு, பல அடிமை நிலை போன்ற, கொடுமையான கொத்தடிமை நிலை போன்று கூட, தமிழக பணியிடங்களில் நிலவும் அவல நிலை வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் திராவிட ஆட்சி காலத்தில், மனிதக் கழிவை மனிதனே அள்ளும் அவல நிலையில் தமிழகமே பெரும்பாலும் மோசமான நிலையில் இருப்பதை ஆசிரியர்கள் மறக்கின்றனர்.

மேலும் “குடிசை மாற்று” குறித்த வாதங்களும் சிக்கலானவையே. பெரும்பாலும் இந்த மக்கள் சுகாதாரமற்ற, கால்வாய்க்கு அருகாமை இடங்களுக்கோ, பொது கட்டுமான வசதியின்றி நகரின் விளிம்பு பகுதிகளுக்கோ மற்றப்படுவது தொடர் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்த புத்தகத்தில் ஆசிரியர்கள் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தின் சாதனைகளை குறிப்பிடும் அதே வேளையில், இந்த அரசியல்-பொருளாதார பாதையின் குறைபாடுகளை முன்வைக்கவும் தவறவில்லை. புத்தகத்தின் கடைசி பகுதியில் திராவிட முன்மாதிரியின் பிழைகள், குறைபாடுகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் விவாதிக்கப்படுகிறது.

கல்வியின் தரம் தாழ்ந்து இருப்பதன் காரணத்தால் குறைந்த ஊதியம் ஈட்டும் வேலைவாய்ப்புகளே கிடைத்து, இதனால் ஊதிய ஏற்றத்தாழ்வு அதிகரித்து, வருமான ஏற்றத்தாழ்வை கூர்மை படுத்துவதை அங்கீகரிக்கின்றனர். மேலும் தனியார் கல்வி, மருத்துவ சேவைகள் மக்களின் கைக்காசை கரைப்பதையும், கடனில் ஆழ்த்துவதையும் குறிப்பிடுகின்றனர்.சுகாதார துறையில், NEET முறை புகுத்தல் அரசு பள்ளி மாணவர்களை விளிம்பு நிலைக்கு தள்ளும் ஆபத்தை குறிப்பிடுகின்றனர்.

உழைப்பு உறவுகளை பொறுத்த வரையில், வேளாண்மைக்கு வெளியே உள்ள கணிசமான அளவு வேலைவாய்ப்பு மோசமான தரத்தில் இருப்பதையும், பணியிடத்தில் பாலின  பாகுபாடு திகழ்வதையும் ஒப்புக்கொள்கின்றனர்.

தமிழக ஊரக பகுதிகளில் பொருளாதார ஏற்றத்தாழ்வு குறைந்தாலும், நகர்ப்புற பகுதிகள் சாதிய பாகுபாடுகளை மறு புதுப்பிப்பு செய்வதை பற்றி கூறுகின்றனர். இதற்கு இரண்டு காரணங்களை கண்டறிகின்றனர் – சேவைத்துறையில் கல்வியின் தரம் குறைவாக இருப்பது மற்றும் மேல் தட்டு சாதியினர் வாய்ப்புகளை “பதுக்கி” வைத்துக்கொள்வது. மேலும் பட்டதாரிகள் மத்தியில் வேலையின்மை அதிகரிப்பது குறித்தும் குறிப்பிடுகின்றனர்.

மேலும் ஊழல், மணல் சுரண்டும் மற்றும் நில-கட்டட தொழில்களில் ஈடுபடும் ரவுடி கும்பல்களின் அரசியல் நிதி போன்றவற்றின் தாக்கத்தையும் ஆசிரியர்கள் உணர்கின்றனர். ஆனால் முக்கியமாக, பொருளாதாரத்தில் “உபரி தொழிலாளர்கள்” காலப்போக்கில் வளரும் தொழில் துறையில் உள் வாங்கிக்கொள்ளப்படுவார்கள் என்ற அனுமானத்துடன் தமிழகம் முன்னெடுக்கும் வளர்ச்சிப் பாதை நிறைவேறாமலே போக வாய்ப்புள்ளதையும் ஆசிரியர்கள் அங்கீகரிக்கின்றனர்.

இறுதியாக

நரேந்திரா சுப்பிரமணியம் அவர்களின் திராவிட ஆட்சி கால ஜனநாயகம் குறித்த புத்தகத்திற்கு பிறகு, இப்புத்தகம் திராவிட நலத்திட்டம், அரசியல் குறித்த ஒரு முக்கியமான முன்னெடுப்பு. பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட சாதியினரை அடிப்படையாகக் கொண்ட அணிதிரட்டல், சமூக-பொருளாதார வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்தல்,  குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை உறுதி செய்தல் ஆகியவை முதலாளித்துவ திரட்சி முறைக்குள்ளும் சாத்தியம் என வாதிடுகிறது.

வளர்ச்சி குறித்த ஆய்வில் இந்த புத்தகம் பல விவாதங்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த புத்தகத்தின் ஆய்வில் பல குறைபாடுகள் இருப்பது இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

நூறு ஆண்டு கால திராவிட அரசியலையும், சமகால தாக்கத்தையும் ஒரு இயக்கத்தின் கீழ் இந்த புத்தகம் அளிக்கின்றது. இதன் மூலம் தமிழகம் கடந்த பத்து ஆண்டுகளில் அடைந்த முன்னேற்றம் அனைத்திற்கும் மொத்த திராவிட இயக்க வரலாற்றையும் காரணி ஆக்குகின்றது. ஆனால், சமூக மாற்றத்தை கொள்கையாக கொண்ட திராவிட இயக்கம், பரந்துபட்ட நில சீர்திருத்தத்திற்கு பல முறை வாக்குறுதி அளித்த போதும் அதை நிறைவேற்றாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

நில சீர்திருத்தம் வெறும் இடதுசாரி புரட்சிகர செயல்பாடு அல்ல. பல கிழக்கு, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இது செயல் படுத்தப்பட்டுள்ளது. சொத்து அடிப்படையிலான ஏற்றத்தாழ்வை சாதிய பாகுபாட்டின் முக்கிய அம்சமாக திராவிட இயக்கம் கருதவில்லை என வாதிட முடியாது. அவர்கள் கருதாததால் சொத்துடமை தமிழகத்தில் சமூக அதிகாரத்தை நிர்ணயிப்பது பொய்யாகி விடாது.

இந்த புத்தகத்தின் தரவுகளின்படி கூட, 1990களுக்கு முன்பிருந்தே பல குறியீடுகளில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் 1990களுக்கு பின்னர் மாநிலத்தின் வளர்ச்சி வேறு பரிமாணத்தை அடைந்தது. இங்கு தான் அந்த கால கட்டத்தின் அரசியல் நிதர்சனத்தை ஆராய வேண்டும். 1990-கள் துவக்கம் முதல் மத்திய பகுதி வரை இந்த இரு கட்சிகளின் தலைவர்களின் நாணயம் கேள்விக்கு ஆளானது. ராஜீவ் காந்தி மரணத்தின் பின் திமுக நம்பகத்தன்மையை இழக்க, ஊழல் மற்றும் சுயநலத்தின் சின்னமானார் ஜெயலலிதா.

1996 தேர்தலுக்கு முன் ஜெயலலிதா அவர்கள் பெரும் ஊழல் வழக்கில் சிக்கிய போதும், கலைஞர் அவர்கள் மக்களின் ஆதரவை வென்றெடுக்க ரஜினிகாந்த் துணை தேவையாக இருந்தது. 2000களில் திமுக மீது ஊழல் வழக்குகளும், வளர்ச்சி திட்டங்களில் உள்ளூர் திமுக பிரமுகர்கள் கொள்ளை அடித்த குற்றச்சாட்டுகளும் எழுந்தன. “பொருளாதார” ஜனரஞ்சக அதிமுக தான் 20ஆம் நூற்றாண்டின் திராவிட காலத்தின் பெரும் பகுதியை ஆண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலதன திரட்சியில் இதர இரண்டு மாநிலங்களை விட தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர்-தாழ்த்தப்பட்டோர் முன்னேறி உள்ளதாக சொல்லும் வாதமும் ஆராய வேண்டி உள்ளது. “மராத்தா” மற்றும் “படேல்” வகுப்பினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதில் குளறுபடி உள்ளதால், அவர்களை புறந்தள்ளி இந்த தரவை பார்க்க முடியாது.

இதே போல் “கவுண்டர்” போல சில சாதிகள் தமிழக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதும் குளறுபடி உண்டாக்குகிறது. ஆனால் இதுவும் கூட முழு உண்மையை கூறாது. எண்ணிக்கை அளவில் குறைவாக உள்ள பிற்படுத்தப்பட்ட-தாழ்த்தப்பட்ட சாதியினர் எவ்வளவு முன்னேறி உள்ளனர் என ஆய்வு செய்தால் தான் மனிதத்தன்மையாற்ற சாதிய உறவுகளை மாற்ற எடுக்கப்பட்ட முனைப்பான முன்னெடுப்புகள் தெரிய வரும்.

அப்படிப்பட்ட ஆய்வு தான் ஒடுக்கப்பட்ட சாதியினர் நோக்கிய திராவிட அரசுகளின் நடவடிக்கைகள் கடைநிலையில் இருந்து வந்த அழுத்தத்தால் நேர்ந்ததா இல்லை “இடைநிலை”, மேல்மட்ட சாதியினர் மேலே செல்லும் விருப்பத்தால் நேர்ந்ததா என தெரியவரும். இல்லையென்றால் திராவிட இயக்கமானது பிரிவினைவாத கோஷங்களுடன் வந்த சிறு முதலாளிகளின் இயக்கமாக வந்து, பின் நவீன தாராளமய ஆட்சியாக மாறி, அதன் அதிகாரத்தை தக்க வைக்க நலத்திட்டங்களையும், 90 கள்-2000-களில் கிடைத்த கூட்டணி தேர்தல் அரசியலின் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்ட இயக்கம் எனவே வரையறுக்க முடியும்.

முக்கியமாக, நவீன தாராளமய காலத்தில் ஏற்பட்ட பல நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிகளின் மொத்த திராவிட அரசியலை சுட்டிக் காட்டியதே இந்த புத்தகத்தின் மீதான மிகப்பெரும் விமர்சனம்.இரு கட்சிகளுமே மாநிலத்தின் முதலாளி-அரசியல்வாதிகளின் நலனை முன்னெடுத்து செல்லும் வாகனங்கள் என்பதை மக்கள் உணர்வது அவசியம்.

குறிப்பாக இட ஒதுக்கீடு 69%-ற்கு நீட்டிக்கப்பட்ட பின் இட ஒதுக்கீடு அரசியல் வறட்சி அடைந்த காலத்தில் இது முற்றிலும் உண்மை. மேலும் தலித் மக்கள் வாழ்நிலை முன்னேற்றங்களுக்கு மாநில அரசியலில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களும் காரணம். இந்த காலம் “கனவு காணக் கூடிய” காலமாக மட்டும் இல்லாமல், திராவிட கட்சிகளுடன் “பேரம் பேசக் கூடிய” காலமாகவும் இருந்தது.

திராவிட அரசியல் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு சமமாக தலித் மக்களை பாவித்தது என ஆசிரியர்கள் விடாப்பிடியாக கூறுகின்றனர். ஆக, தலித் மக்கள் மீதான அநீதியை விவரிக்கையில், தலித் மக்களால் இவை அநீதியாக பாவிக்கப்பட்டதாக விவரிக்கின்றனர். இது குறித்த விமர்சனத்தை நாம் கூறியுள்ளளோம்.

பெரும்பாலும் தலித் மக்கள் இரண்டில் ஒரு கட்சியுடன் (பெரும்பாலும் குறைந்தபட்ச திராவிடமாக இருக்கும் அதிமுக) தங்களை இணைத்துக் கொண்டதால், திராவிட ஆட்சி “இடதுசாரி ஜனரஞ்சக” தன்மையை அடைந்ததாக ஆசிரியர்கள் அனுமானித்துக் கொள்கின்றனர். தமிழக அரசு நிச்சயம் ஜனரஞ்சகவாத அரசு தான். ஆனால் “இடதுசாரி” என வரையறுக்க கோஷங்கள் மட்டுமின்றி செயலிலும் நிறுவ வேண்டும். 1980-90 களில் ஆய்வாளர்கள் திராவிடம் தலித் மக்களுக்கு எதிரானது என வாதிட்டதை எதிர்க்க இங்கு ஆசிரியர்கள் வெறும் தலித் விடுதலைக்கு ஆதரவாக பெரியார் சொன்ன கூற்றுக்களை மேற்கோள் காட்டுகின்றனர். தலித் மக்கள் தேவையை பூர்த்தி செய்வதில் குறைகள் இருந்தால் அதற்கு மத்திய-மாநில உறவுகளும், நவீன தாராளமயமும் தான் காரணம் என்கின்றனர். ஆனால் திராவிட அரசியல் தலித் மக்களை சமமாக பாவித்தது என காட்ட எந்த ஆதாரமும் இல்லை என்பது தான் உண்மை.

மேலும் உண்மையிலேயே திமுக 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் “இடது ஜனரஞ்சக” அரசியல் தான் கட்டி அமைத்ததென்றால், எம். ஜி. ஆர் அதீத அநியாயம் இழைத்த பின்னும் “ஜனம்” திமுக-வை ஏன் ஆட்சி பொறுப்பிலிருந்து பெரும்பாலும் வெளியே வைத்தது என்ற கேள்வியும் எழுகிறது. எம். ஜி. ஆர் காலத்தில் எதிர்க்கட்சியான திமுக தன் “இடதுசாரி” பண்பை எவ்வாறு வெளிப்படுத்தியது?

திராவிட பொதுபுத்தி என்பது அரசியலின் பொதுவான அம்சங்கள் தான், தனி கட்சிகளின் பண்புகள் அல்ல என்று சொல்லி ஆசிரியர்கள் தப்பித்து கொள்ள முடியும். ஆனால் இந்த புத்தகத்தில் பெரும்பாலும் திமுக-வை “சமூக இடது ஜனரஞ்சக” கட்சியாக காட்டவே ஆசிரியர்கள் பெரிதும் முயற்சி செய்துள்ளனர்.  ஆனால் இதே பாணியில் அணுகி அவர்களோ, நாமோ நிச்சயம் அதிமுக-வை  “பொருளாதார இடது ஜனரஞ்சக” கட்சியாக பாவிக்கவே மாட்டோம்.

நூலின் பெயர்: திராவிட   முன்மாதிரி (2021)

எழுதியோர்: கலையரசன், விஜயபாஸ்கர்

(கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக வெளியீடு)