ஊடகம், விளம்பரம், தேர்தல் : உலகமயமாக்கலுக்கு இரையாகிப்போன நம்பகத்தன்மை

சுகுமார் முரளிதரன்

தமிழில்: வீ. பா. கணேசன்

சில காலத்திற்கு முன்பு வரையிலும் கூட பணம் கொடுத்து சாதகமான செய்திகளை வெளியிடச் செய்வது அல்லது யார் அதிக விலை தருகிறார்களோ அவர்களுக்கு ஊடகம் இடமளிக்கும் என்பது இந்திய ஜனநாயக அமைப்பில் இருந்த கண்காணிப்பு அமைப்புகளுக்கு மிகப்பெரும் சவாலான ஒரு விஷயமாக இருந்தது. நீண்ட காலமாகவே நீடித்து வரும் ஒரு விஷயமாக இருந்தபோதிலும், 2008-ம் ஆண்டில் நடைபெற்ற பல மாநில சட்டமன்றத் தேர்தல்களின் போதுதான் இது ஆழமாக வேரூன்றியிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இதைத் தொடர்ந்து இந்திய பத்திரிக்கை கவுன்சில் அப்போது விரிவானதொரு விசாரணையை மேற்கொண்ட போதிலும் இந்த ஊடகத் தொழிலுக்கேயுரிய ‘திறமை’ காரணமாக அதன் அறிக்கை வெளிச்சத்திற்கு வராமலே போனது.

ஆனால் இந்நாட்களில் முன்னுரிமைகள் மிக வேகமாக மாறி வருகின்றன. நாடு முழுவதிலும் நடக்கவுள்ள தேர்தல் காலஅட்டவணையை வெளியிட்ட தேர்தல் ஆணையம் போலிச் செய்திகள் எதிரணியின் மீதான அவதூறான பேச்சுக்கள் ஆகிய இரண்டு அபாயங்களை குறிப்பாகச் சுட்டிக் காட்டியது. ஆணையத்தின் அவசர அழைப்பை ஏற்ற சமூக ஊடக நிறுவனங்கள், இணையதள சேவை நிறுவனங்கள் தங்களது செயல் தளங்களின் உள்ளடக்கங்களை கடுமையாகத் தணிக்கை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகத் தெரவித்தன.

தேர்தல் ஆணையத்திற்கு ஒரே ஒரு வாரத்திற்குள் பதிலளித்த இவை அரசியல் ரீதியான விளம்பரங்களை வெளியிட இதற்கென அதிகாரம் பெற்ற அமைப்பிடம் முன்பாகவே சமர்ப்பித்து உரிய சான்றிதழைப் பெற்றே வெளியிடுவோம் என்றும் இந்த விஷயத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவோம் என்றும் உறுதி கூறின.

இத்தகைய உறுதிமொழியை எழுத்துபூர்வமாக அளிப்பதற்கு முன் மிகுந்த எச்சரிக்கையுடன் தங்களது தளங்களில் வெளியாகும் செய்திகளையும் தகவல்களையும் உருவாக்கி, பதிப்பிடுவது தங்களின் நுகர்வோரின் கைகளில்தான் உள்ளது என்ற நிலையில் இவ்வாறு பங்கேற்பவர்கள் இந்த விதிமுறைகளுக்கு கீழ்ப்படிந்து நடப்பது வெவ்வேறு வகையில்தான் இருக்கும் என்றும், எனவே தங்களின் தளங்களில் வெளியாகும் செய்திகளுக்கு தாங்கள் எவ்வகையிலும் பொறுப்பாக முடியாது என்பதையும் குறிப்பிட்டிருந்தன.

2019 மக்களவைத் தேர்தல் ஒரு ‘வாட்சப்’ தேர்தல் என்ற நிபுணர்களின் கருத்தையே குறுஞ் செய்தி செயலிகளின் அதீதமான செல்வாக்கு அங்கீகரிப்பதாக அமைகிறது. குறுகிய வட்டத்திற்குள் பரிமாறிக் கொள்ளப்படும் செய்திகளின் மீது செல்வாக்கு செலுத்தும் வகையில் வாட்சப் குழுக்களில் இணைந்து கொள்ள பாஜகவின் தொண்டர்கள் பல்வேறு வழிகளைக் கடைப்பிடித்ததாகவும் தெரிய வந்தது. ஒவ்வொரு தொலைபேசி எண்ணையும் ஆதார் எண்ணுடன் இணைத்ததன் மூலம் அவற்றைப் பயன்படுத்துவோர் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டுஅவர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட விளம்பரங்களைக் கொண்டு வலைவீசப்பட்டது.

இதற்கிடையில் ஊரோடு ஒத்துப்போகும் போக்கு நிலவிவரும் சூழலில் செய்திகளை விமர்சன ரீதியாக வழங்கும் ஒரு சிலவற்றில் ஒன்றான இணைய தளத்தின் பதிப்பாளர் ஓர் எச்சரிக்கையைச் செய்தார். “குறுஞ்செய்திகளை அனுப்ப உதவும் செயலிகளின் சேவை மூலமாக திகைப்பூட்டும் அளவிற்கு திருத்தப்பட்ட படங்கள், வீடியோக்கள், செய்திகள் பெருமளவிற்குப் பரப்பப்படுகின்றன. இந்தியாவில் தங்களது ஸ்மார்ட் ஃபோன்களில் வரும் செய்திகளைப் படித்து வருவோரின் மீது இவை செல்வாக்கு செலுத்தி வருகின்றன.”

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி “64 சதவீத இந்தியர்கள் இணையத்தில் போலிச் செய்திகளையே எதிர்கொள்கின்றனர். இது ஆய்வு மேற்கொள்ளப்
பட்ட 22 நாடுகளிலேயே மிக அதிகமானது” என்று தெரிவித்திருந்தது. 2018 நவம்பரில் பிபிசி உலக சேவை நிறுவனம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. குறுஞ்செய்தி சேவைகளின் மூலமாக தீவிரமாக சமூக ஊடகங்களில் தாங்களாகவே விரும்பி செயல்பட்டு வருவோரின் செய்திகளில் வெளிப்படும் ‘தேசியவாதம்’ என்று அவர்கள் கூறிக் கொள்வதுதான் போலிச் செய்திகளை அதிக அளவில் பரப்பும் சாதனமாக உள்ளது என்று அது தெரிவித்தது. “தேசிய அடையாளத்தை உணர்வு பூர்வமாக வலுப்படுத்த முனையும்போது உண்மைகளுக்கு மிகக் குறைவான முக்கியத்துவம்தான் கிடைக்கும்” என இந்த ஆய்வில் பங்கேற்ற ஒருவர் குறிப்பிட்டார்.

“தேசியவாத உணர்வுகளைத் தூண்டும் வகையிலான போலிச் செய்திகளை மேலும் மேலும் தள்ளிவிடும் வேலையை இடதுசாரிகளை விட வலதுசாரிகள்தான் திட்டமிட்ட வகையில் செய்து வருகின்றனர்” எனவும் சமூக ஊடகம் குறித்த ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ‘தேசவிரோதிகள்’ எனக் கருதப்படும் சமூக குழுவினரை தீவிரமாக எதிர்ப்பது; கூட்டு வன்முறை, கும்பலாகச் சேர்ந்து கொண்டு அடித்து உதைப்பது போன்ற வன்முறைச் சம்பவங்களை நியாயப்படுத்துவது போன்றவற்றின் மூலம் இத்தகைய தேசியவாத உணர்வு வலுப்படுத்தப்படுகிறது. பரவலாகச் சுற்றுக்கு விடப்படும் போலிச் செய்திகளின் அளவு, சமூக ஊடகங்களில் அவை ஏற்படுத்தும் வன்முறையைத் தூண்டிவிடும் வகையிலான வாதப் பிரதிவாதங்கள் ஆகியவற்றில் இருந்தே இந்தப் பிரச்சனையின் தீவிரம் தெளிவாகிறது. எனினும் வாக்குப்பதிவில் இதன் தாக்கத்தை மதிப்பிடுவது கடினமாகும்.

2014 மக்களவைத் தேர்தலில் சமூக ஊடகங்கள் மூலமான பிரச்சாரங்கள் பெருமளவு செல்வாக்கு செலுத்தின என்று பெரிதும் நம்பப்பட்டது. எனினும் 2013 ஜூன் முதல் 2014 மே வரை மேற்கொள்ளப்பட்ட தேர்தல்கள் குறித்த தேசிய ஆய்வு (என் இ எஸ்) முடிவுகள் இந்தவாதத்திற்கு வலுச் சேர்ப்பதாக இல்லை. “இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் செய்திகளைத் தெரிந்து கொள்ள இணையத்தைப் பயன்படுத்தவில்லை; 5 சதவீதம் பேர் மட்டுமே செய்திக்காக தினமும் இணையத்தை அணுகுபவர்களாக இருக்கின்றனர்” என்பது அந்த ஆய்விலிருந்து தெரிய வந்தது. சமூக ஊடகங்களைப் பொறுத்தவரையில் 10 சதவீதம் பேரிடம் மட்டுமே முகநூல் கணக்கு இருந்தது. 3 சதவீதம் பேர் மட்டுமே ட்விட்டரை பயன்படுத்தி வந்தனர்.

இவர்களிலும் கூட மூன்றில் ஒருவர் மட்டுமே தினமும் முகநூலை பயன்படுத்துபவராகவும், ஐந்தில் ஒருவர் மட்டுமே தினமும் ட்விட்டரை அணுகுபவராகவும் இருந்தனர். சமூக ஊடகங்களின் மூலம் அரசியல் தொடர்பான செய்திகளை தெரிந்து கொள்வதைப் பொறுத்தவரையில் மூன்றில் ஒருவரே இதற்கென சமூக ஊடகங்களைப் பயன்படுத்தினர் என்பதோடு பாதிக்கும் மேற்பட்டோர் செய்திகளைத் தெரிந்து கொள்ள அவற்றைப் பயன்படுத்துவதில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.

இவை அனைத்தோடு கூடவே அரசியல் செய்திகளை பாரபட்சத்தோடு வெளியிடுகின்ற பாரம்பரிய ஊடகம் மூலமே பாஜக பயனடைந்துள்ளதாகத் தெரிகிறது. 1996க்கும் 2014க்கும் இடைப்பட்ட காலத்தில் தொலைக்காட்சி மூலம் செய்திகளை பின்பற்றும் வாக்காளர்களின் எண்ணிக்கை 19 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயர்ந்தது என்பதையும், 1996க்கும் 2009க்கும் இடைப்
பட்ட காலத்தில் அச்சு ஊடகங்கள் மூலம் செய்திகளை தெரிந்து கொள்ளும் வாக்காளர்களின் எண்ணிக்கை 12 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக உயர்ந்தது; இந்தப் போக்கு 2014 வரை தொடர்ந்தது என்பதையும், 1996 முதல் 2004 வரையிலான காலத்தில் வானொலி மூலம் செய்திகளை தெரிந்து கொள்ளும் வாக்காளர்களின் எண்ணிக்கை 12 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக மட்டுமே உயர்ந்த போதிலும் 2014-ம் ஆண்டில் இது 9 சதவீதமாகக் குறைந்தது என்பதையும் இந்தத் தேர்தல் குறித்த தேசிய ஆய்வு தெரிவித்தது.

எனினும் இதற்கு முன் எப்போதும் கண்டிராத வகையில் ஊடக வெறியாட்டம் 2014ம் ஆண்டில் வெளிப்பட்டது. கட்சிப் பிரச்சார விளம்பரத்திற்காக மட்டுமே பாஜக அத்தேர்தலில் ரூ. 5000 கோடியை ஒதுக்கியது. இது மேலும் கூடுதலாகவும் இருக்கக் கூடும். இந்தியா முழுவதிலும் மூன்று மாத காலத்திற்கு 15,000 விளம்பரப் பலகைகளை பாஜக பதிவு செய்திருந்தது. நாடு தழுவிய அளவிலும், பிரதேச அளவிலும், உள்ளூர் மொழிகளிலும் வெளிவரும் பத்திரிக்கைகளில் பளிச்சென்று தெரியக் கூடிய இடத்தில் விளம்பரங்களை 40 நாட்களுக்கு அக்கட்சி வெளியிட்டது. மேலும் இந்தி, ஆங்கில, உள்ளூர் மொழிகளில் வெளிவரும் செய்தி, பொழுதுபோக்கு, விளையாட்டு தொலைக்காட்சிகளில் நாளொன்றுக்கு 2,000 விளம்பரங்
களையும் அது விலைக்கு வாங்கியிருந்தது.

ஊடகங்களில் மோடிதான் எங்கும் இருந்தார் என்பதோடு அவரது பிரச்சாரமும் தொடர்ந்து நீடித்த ஒன்றாக, சிறப்பானதாக இருந்தது. தொலைக்காட்சி செய்திகள் ஒருதலைப்பட்சமாக இருக்கின்றன என்று நினைத்தவர்களும் கூட பாஜகவிற்கு வாக்களிக்கத் தயாராக இருந்தனர். உண்மை எப்படியானதாக இருந்தபோதிலும், நாடு முழுவதும் பின்பற்றப்பட வேண்டிய முன் உதாரணமாக குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி உள்ளது என்ற செய்தியும் ஊடகங்களில் தொடர்ந்து சித்தரிக்கப்பட்டது. ஊடகங்களை பெருமளவு பின்பற்றும் வாக்காளர்கள் “எல்லா மாநிலங்களையும் ஒப்பிடும்போது குஜராத் மாநிலம்தான் சிறப்பாகச் செயல்படுகிறது” என நான்கு மடங்கு சொல்லக் கூடிய அளவிற்கு இந்தப் பிரச்சாரம் அமைந்திருந்தது.

இத்தகைய பிரச்சாரம் தொடர்ந்து நடைபெறுகையில் ஊடகங்களை பெருமளவு பின்பற்றுவோர் இடையே பாஜகவிற்கான ஆதரவு மிக வேகமாக அதிகரித்தது. தொலைக்காட்சிச் செய்திகளை தொடர்ந்து கவனிப்பவர்களிடையே 2013 ஜூலைக்கும் 2014 மே மாதத்திற்கும் இடையே இந்த சதவீதம் 3 லிருந்து 20 புள்ளிகள் என அதிகரித்தது. பாரம்பரியமான அச்சு ஊடகங்களின் மூலம் செய்திகளை தெரிந்து கொள்வோரிடையே இது 7 லிருந்து 20 புள்ளிகளாகவும், இணையம் மூலமாக செய்திகளைத் தெரிந்து கொள்வோரிடையே 13லிருந்து 26 புள்ளிகளாகவும் பாஜகவின் ஆதரவு அதிகரித்தது.

2014 தேர்தலுக்குப் பிறகு ஊடகத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது போலிச் செய்திகள், அப்பட்டமான பிரச்சாரம் ஆகியவற்றின் செல்வாக்கு கணிசமாக அதிகரித்துள்ளது. 2014-ல் பயன்பாட்டில் இருந்த கைபேசிகளின் எண்ணிக்கை 90 கோடி எனில் அதில் 14.3 கோடி கைபேசிகள் இணைய வசதி கொண்ட ஸ்மார்ட்ஃபோன்கள் ஆகும். 2017-ல் இது 120 கோடியாக, அதாவது மொத்த மக்கள் தொகையில் 87 சதவீதம் பேர் பயன்படுத்தும் கைபேசிகளாக உயர்ந்தது. அடுத்த ஆண்டில் இதில் பெரும் உயர்வு ஏற்படவில்லை எனினும் 42 கோடியாக இருந்த ஸ்மார்ட்ஃபோன்களின் எண்ணிக்கை 56 கோடியாக அதிகரித்தது. ஒவ்வொரு ஸ்மார்ட்ஃபோனும் பயன்படுத்தும் இணைய வசதியின் அளவும் அதற்கேற்ப அதிகரித்துக் கொண்டே போனது. 2017 தொடக்கத்தில் மாதம் 4.3 ஜி.பி.ஆக இருந்த இணையப் பயன்பாடு அந்த ஆண்டு இறுதியில் மாதம் 5.4 ஜி.பி.ஆகவும் 2018-ல் 6.8 ஜி.பி. ஆகவும் உயர்ந்தது.

இந்த உயர்விற்குப் பின்னால் ஒரு காரணமும் இருந்தது. மிகச் சிறிய, பெரிதாக யாருக்கும் தெரியாத ஒரு நிறுவனத்தை பயன்படுத்திக் கொண்டு தொலைத்தொடர்புத் துறையில் கால் பதித்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவசமாக இணைய வசதியை வழங்கியதும் இதற்குக் காரண மாகும். ஊடகத் தளத்தில் ஏகபோக அதிகாரம் அதிகரிக்கும் போக்கை இது கணிசமான அளவில் தீவிரப்படுத்தியதோடு வாக்காளர்களின் முடிவுகள் மீது செல்வாக்கு செலுத்தும் வகையில் செய்திகளின் உள்ளடக்கத்தை திருத்தி அமைக்க வும் வழிவகுத்தது.

இன்று பாரம்பரிய ஊடகமானது போலிச் செய்திகள் பரவுவதை தடுக்க இயலாத நிலையில் உள்ளது. தத்துவார்த்த ரீதியில் செயல்படும் போக்கிற்கும் இதில் ஓரளவிற்குப் பங்குண்டு. கடந்த ஐந்து ஆண்டுகளில் மோடி ஆட்சியில் தோல்வி கள் ஏற்பட்ட போதிலும் ஊடக அதிபர்கள் அடிமைத்தனமான ஓர்மையுடன் தான் இருந்து வருகின்றனர். அப்பட்டமாகச் சொல்வதெனில் பெரும் வர்த்தக நிறுவனங்களின் நலன்களுக்கு சேவை செய்வதாகவே மோடியின் ஆட்சி அமைந் துள்ளது. முன் எப்போதும் இல்லாத வகையில் உலகளாவிய மூலதனத்தின் வழிவகைகளோடு ஒன்றிணைந்ததாக, அதன் உத்தரவுகளை நிறை வேற்றும் அடிமையாகவே இந்த ஊடகத் துறை உருவெடுத்துள்ளது.

தொலைக்காட்சிகளில் விளம்பரங்களை வெளியிடுவதற்கான வருமானம் 2018-ல் 19.2 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் இது கொஞ்சம் குறையுமென்றாலும் 18 சதவீத அதிகரிப்பாக ஆவது இருக்கும். டிஜிட்டல் ஊடகத்தைப் பொறுத் தவரையில் விளம்பரத்தின் மூலம் வருமானம் மிக வேகமானதாக உள்ளது. இப்போது 25.8 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ள இது 2019ல் 33.4 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது. மொத்த விளம்பர வருமானத்தில் டிஜிட்டல் ஊடகத்தின் பங்கு 22 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொலைக்காட்சி, அச்சு ஊடகங்களை விட பின்தங்கியிருந்த போதிலும்கூட டிஜிட்டல் ஊடகம் மிக வேகமாக முன்னேறி வருகிறது.

ஊடகங்களுக்கான விளம்பரங்களைத் தருவதற்கான பட்ஜெட்களில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றமானது பழைய வகைப்பட்ட செய்தி ஊடகங்களின் உள்ளடக்கத்தின் மீது செல்வாக்கு செலுத்து
கிறது. வாசகர்களை பெருமளவிற்குக் கவர்ந்திழுக்கும் வகையில் குறிப்பிட்ட சில வாசகங்களைக் கொண்டு சமூக ஊடகங்களில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்வது போன்ற வகையில் டிஜிட்டல் ரீதியான மேடைகளுக்கு இத்தகைய விளம்பரங்கள் மடைமாறிச் செல்வதைத் தடுக்கும் வகையில் அச்சு, தொலைக்காட்சி ஊடகங்கள் பல்வேறு வகையான வியாபார உத்திகளைக் கையாளுகின்றன.

வாசகர்களின் ஆர்வத்தோடு கூடவே குறிப்பிட்ட வாசகர் பிரிவின் வாங்கும் சக்தி எவ்வளவு உள்ளது என்பதை விளம்பரதாரர்கள் மதிப்பிடுவதும் இதோடு சேர்ந்து கொள்கிறது. தங்கள் ஊடக வாசகர்களின் ஆர்வத்தை லாபகரமாக்கிக் கொள்ள விளம்பரதாரர் விற்பனை செய்ய முயலும் பொருளை உண்மையிலேயே வாங்கக் கூடிய வகையில் மக்களில் ஒரு பகுதியினரை தங்கள் பக்கம் கவர்ந்திழுத்து வைத்துள்ளோம் என ஊடகங்கள் நிரூபிக்க வேண்டியுள்ளது.

இத்தகைய வியாபார உத்திகள் புதிய வகைப்பட்ட ஊடகங்களைப் போன்றே நடந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தை பழைய வகைப்பட்ட ஊடகங்களின் மீது திணிக்கிறது. மோடியும் பாஜகவும் வழங்குகின்ற காரண காரியமற்ற அதீத தேசிய வாதத்தை தூக்கிப் பிடிக்கும் வகையில் புதிய ஊடகம் வெகு வேகமாக இயங்குகின்ற போது இந்த டிஜிட்டல் தளத்தின் குரலை எதிரொலிப்பதன் மூலம் அங்கு வந்து குவியும் விளம்பரத்தில் ஒரு பகுதியாவது நமக்குக் கிடைக்காதா என்று பழைய ஊடகங்கள் ஏங்கி நிற்கின்றன. இந்த அதீத தேசியவாதம் மேலாதிக்கம் செலுத்துவதற்கு ஏகபோக ஊடகங்களின் வளர்ச்சியும் கூட உதவி செய்கிறது. தனியார் லாபத்திற்காகவும் அரசியல் பிம்பங்களை வளர்த்தெடுக்கவும் உதவும் வகையில் பொது ஆதாரவளமான ஒளிபரப்பு அலைக்கற்றையின் மீதான கட்டுப்பாடுகளும் மிக மேலோட்டமானதாகவே இருக்கின்றன.
கட்டுக்குள் இல்லாத ஒழுங்குமுறை – வளர்ந்து வரும் ஏகபோகம்
17வது மக்களவை தேர்தலுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்ட உடனேயே கேபிள் டிவி, நேரடி அலைவசதி (டிடிஎச்) ஆகியவற்றை செயல்படுத்தி வருவோர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மோடியின் பெயரைத் தாங்கிய நமோ டிவி என்ற ஒரு தொலைக்காட்சியை ஒளிபரப்பத் தொடங்கினர். ஒளிபரப்புக்கான உரிய அனுமதியைப் பெறாமல் அல்லது சட்டபூர்வமான பாதுகாப்பு சோதனை
களுக்கு உட்படாமல் ஒரு வாரத்திற்கும் மேலாகவே இந்த தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நடந்து வருகிறது என ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே செய்திகளை வழங்கிவரும் இணைய தளங்கள் தெரிவித்தன. “இடைவெளி ஏதுமின்றி நரேந்திர மோடி
யின் உரைகளையும் பாஜகவிற்கு ஆதரவான செய்திகளையும் மட்டுமே இந்த தொலைக்காட்சி தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது” என ஸ்க்ரோல் இணைய தளம் தெரிவித்தது. “செய்திகளை வழங்கி வரும் மற்ற தொலைக்காட்சிகலைப் போல் இது இல்லை” என்றும் அந்த இணையதளம் குறிப்பிட்டது.

இதில் முக்கிய வேறுபாடு என்னவெனில் கேபிள் டிவி அல்லது நேரடி அலைவரிசை சேவையைப் பெறுகின்ற எந்தவொரு நுகர்வோரும் தனது விருப்பப்பட்டியலில் இருந்து இந்த நமோடிவி தொலைக் காட்சியை நீக்கவேமுடியாது என்பதாகும். இதுகுறித்து எதிர்க்கட்சிகள் பலவற்றின் விசாரிப்புகளுக்குப் பிறகு மத்திய அரசின் செய்தி-ஒலிபரப்புத் துறை அமைச்சகம் இந்த தொலைக்
காட்சியின் தகுதி குறித்து ஆய்வு செய்தபோது கேபிள் டிவி மற்றும் நேரடி அலைவரிசை சேவையை வழங்குவோர் வழக்கமாக தங்கள் நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களை தெரிவிக்கும் அலைவரிசையைப் போன்ற ஒன்றுதான் இந்த நமோடிவி என்றும் அது தனியொரு தொலைக்காட்சியே அல்ல என்பதையும் கண்டறிந்தது.

தனிநபர் துதிபாடலை உருவாக்க பொது ஆதாரவளத்தை இவ்வாறு கபளீகரம் செய்வது குறித்து விரிவான அளவில் கவலை தெரிவிக்கப் பட்டபோது, சுனில் அரோரா தலைமையிலான இந்திய தேர்தல் ஆணையம் அதன் வழக்கமான சஞ்சல புத்தியோடு இந்தப் புகாரை கணக்கில் எடுத்துக் கொள்ளவே தயாராக இல்லை.
ஒழுங்கமைவு விஷயங்களை கையாளுவதில் வேண்டுமென்றே கண்டும் காணாத போக்கை கடைப்பிடிப்பது என்ற கொள்கை கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே பின்பற்றப்பட்டு வந்துள்ள நிலையில் உரிமை குறித்த விஷயங்கள், குறிப்பாக ஒருமுகப்போக்கை கட்டுப்படுத்தி, பன்முகத்தன்மையை உறுதிப்படுத்துவது என்ற மிக முக்கியமான, முன்னுரிமையான விஷயங்கள் தொடர்ந்து கவனிக்கப்படாமலே இருந்து வருகிறது. சாட்டிலைட் மூலமாகவும், கேபிள் மூலமாகவும் ஒளிபரப்புகளை மேற்கொள்ளும் ஹாத்வே, டிஜிட்டல் எண்டெர்டெயின்மெண்ட் நெட்வொர்க் ஆகிய இரு முக்கியமான நிறுவனங்களை கட்டுப்படுத்தும் உரிமையை பெற்றுள்ளதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் தனது செல்வாக்கை மேலும் விரிவுபடுத்திக் கொண்டுள்ளது. பெயரளவிற்கே வெளியில் தெரிவிக்கப்பட்ட இந்த முதலீட்டின் மூலம் பல்வேறு ஊடக உள்ளடக்கங்களில் தீர்மானகரமான அதிகாரத்தையும் அது பெற்றுள்ளது.

தன்னிடமுள்ள பல்வேறு முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றின் மூலம் 2018 நவம்பரில் ரிலையன்ஸ் நிறுவனம் நியூ எமர்ஜிங் வேர்ல்ட் ஆஃப் ஜர்னலிசம் என்ற புத்தம்புது நிறுவனத்தை கட்டுப்படுத்தும் உரிமையை விலைக்கு வாங்கியுள்ளது. கைபேசி மூலமாக செய்திக்கான உள்ளடக்கங்களை பல்வேறு வடிவங்களில் இந்த நிறுவனம் உருவாக்கும் திறமை கொண்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வளரும் நாடுகள் உள்ளிட்ட இதர பெரும்பாலான சந்தைகளை விட இந்தியாவில் கைபேசி சந்தையே தற்போது உச்சத்தில் உள்ளது. இதழி
யல் ஆய்விற்கான ராய்ட்டர்ஸ் நிறுவனம் மேற்கொண்ட ஓர் ஆய்வில் பங்கேற்றவர்களில் 68 சதவீதம் பேர் செய்திகளை தெரிந்து கொள்ள தங்கள் ஸ்மார்ட்ஃபோனையே நம்பியிருப்பதாகத் தெரிவித்திருந்தனர். தங்கள் கைபேசியைத் தவிர வேறெந்த வசதியும் தங்களிடம் இல்லை என 31 சதவீதத்திற்கும் குறையாதவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு மிக நீண்ட காலமாகவே நாட்டிலுள்ள ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் தொழிலை ஒழுங்குபடுத்தி பெரும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மரியாதையை உருவாக்க வேண்டும் என முயற்சித்து வந்துள்ளது. பரம்பரை குடும்பச் சொத்தை மிக கவனமாகப் பாதுகாத்து வருவதும், இலைமறை காயான முதலீட்டு முறையே அதன் வழக்கமான செயல்பாடாக இருப்பதுமான ஓர் உலகத்தில், இந்திய தொழில் கூட்டமைப்பின் இத்தகைய முயற்சியில் ஆண்டுதோறும் ஃப்ரேம்ஸ் மாநாடு என்ற நிகழ்வில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த பெரும்புள்ளிகள் ஒன்று கூடி தங்களுக்கென தனிப்பட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுப்புவது வழக்கமாக இருந்தது.

கையிலுள்ள புள்ளிவிவரங்களை எல்லாம் ஒன்றுதிரட்டி இத்தொழிலைப் பற்றிய அறிக்கை ஒன்றும், எதிர்காலம் குறித்த முன்னறிவிப்பும் இந்த நிகழ்வில் வெளியாவது வழக்கம். எனினும் இந்த நிகழ்வு இத்தொழில் குறித்த தீவிர மான அல்லது சவாலான சிந்தனைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு தருணமாக இருந்ததில்லை. மாறாக, எரிச்சலூட்டும் சில தொழிலாளர் நலச் சட்டங்கள், அரசின் ஒழுங்குமுறை விதிகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்புவதைத் தவிர எல்லாமே நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது என்ற கூட்டு ணர்வை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளும் ஒரு நிகழ்வாகவே அது இருந்து வந்துள்ளது.

வேறு எதைப்பற்றியும் பேசாமல் மவுனமாக இருப்பது என்ற இவர்களின் ஒப்பந்தம் 2013 மார்ச் மாதத்தில் மிகவும் அரிதான வகையில் மீறப்பட்டது. ரூபர்ட் முர்டாஷூக்கு சொந்தமான, இந்தியாவில் செயல்பட்டு வரும் ஸ்டார் டிவி குழுமத்தின் தலைமை செயல் அலுவலரான உதய் சங்கர் இந்த நிலையின் மற்றொரு பக்கத்தைக் காண முற்பட்டார். மிகுந்த கவனத்துடன் ஆராயத் தக்கதாக அவரது வார்த்தைகள் இருந்தன. இந்திய ஊடகத் தொழிலில் நம்பத்தகுந்த புள்ளி விவரங்கள் பெருமளவிற்கு இல்லவே இல்லை என்றே கூறலாம். எந்தவொரு வர்த்தகத்திலும் ஈடுபடும் ஒரு தலைவர் இடையூறுகளில் இருந்து விடுபடுவதற்கான ஒரு பாதையை கண்டறிய வேண்டுமெனில் புள்ளி விவரங்களில் ஓரளவிற்கு நம்பிக்கை வைத்தே அதைச் செய்ய முடியும். இந்த வகையில் மிகுந்த கவலைதரத்தக்க சூழலையே உதய் சங்கர் சந்திக்க வேண்டியிருந்தது.

“பகுத்தறிவு பூர்வமான வர்த்தக முடிவுகளை எடுக்க வேண்டு
மெனில் அதற்கு எண்கள்தான் அடித்தளமாக அமைய வேண்டும். எண்களை அடிப்படையாகக் கொண்ட வர்த்தக நிபுணர்களாகிய நாங்கள் இந்த எண்களை சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை எனில் எப்படி முடிவுகளை எடுக்க முடியும்? ஒரு தொலைக்காட்சி நிர்வாகி என்ற முறையில் எப்படி என்னால் செயல்பட முடிகிறது என்று சில நேரங்களில் நானே ஆச்சரியப்படுவேன். எனது பார்வையாளர்கள் பற்றி எனக்குப் போதுமான விவரம் தெரியாது. அவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற விவரம் கூட எனக்குத் தெரியாது. இந்தியாவில் 14 கோடி குடும்பங்கள் கேபிள்- சாட்டிலைட் மூலம் இணைக்கப்பட்டு இருக்கின்றன என்றாலும் 6.2 கோடி குடும்பங்கள் மட்டுமே இந்தக் கணக்கில் தென்படுகின்றன. விளம்பரச் சந்தையின் அளவு என்ற அடிப்படையான விஷயத்தில் ஒத்துப்போகாத நிலையில்தான் இந்தியாவின் முக்கிய விளம்பர நிறுவனங்கள் இருக்கின்றன.”

உள்ளார்ந்த பொருளாதார வரம்புகளை எல்லாம் கடந்து விரிவடைந்து கொண்டே செல்ல முயன்ற இந்திய ஊடகத்தின் இருபது ஆண்டுக்கால செயல்பாட்டை நினைவு கூர்வதாகவும் இந்த உரை அமைந்திருந்தது. 1990களை அடுத்து வந்த தசாப்தங்களில் நடுத்தர வர்க்கத்தின் எதிர்பார்ப்புகள் அதிகரித்ததன் விளைவாக விளம்பரத் துறை விரிவடைந்ததோடு ஊடகங்கள் விரிவடையவும் தூண்டுதலாக இருந்தது. இத்துறையின் வருவாய்க்கான திட்டமும் கூட வாசகர்கள்-பார்வையாளர்களின் நலனுக்கு உகந்த நிலையில் இருந்து விளம்பரதாரர்களின் நலனைத் திருப்திப்படுத்துவதாகவும் மாறியது.
தொலைக்காட்சித் துறையின் மொத்தவருவாயில் கிட்டத்தட்ட 67.5 சதவீதமாக இருக்கும் பார்வையாளர்களின் சந்தாவில் பெரும்பகுதியை சந்தாதாரர்களின் வீட்டுக்கு தொலைக்காட்சி சேவையை கொண்டு செல்லும் கடைசிக் கண்ணியாக விளங்கும் கேபிள் நடத்துநர்களே எடுத்துக் கொள்கின்றனர்.

அச்சு ஊடகத்தைப் பொறுத்தவரையில் மொத்தவருவாயில் 65 சதவீதம் விளம்பரங்களின் மூலமே பெறப்படுகிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியா, `ஹிந்துஸ்தான் டைம்ஸ், தி இந்து போன்ற நாடு தழுவிய பெரும் பத்திரிக்கைகளைப் பொறுத்தவரையில் மொத்த வருவாயில் 85 அல்லது அதற்கும் மேலான சதவீதத் தொகை விளம்பரங்களில் இருந்தே பெறப்படுகிறது. தொலைக்காட்சி- அச்சு ஊடகம் ஆகிய இரு துறைகளிலும் அவற்றின் வருவாயில் சந்தாதாரர்களின் பங்கு குறைந்து கொண்டு வரும் நிலையில் வாசகர்களுக்கு இது
வரை வழங்கப்பட்டு வந்த முன்னுரிமை மாற்றப்பட்டு, விளம்பரதாரர்களுக்கு சிறந்தவகையில் சேவை செய்வதாக மாறியது.
1980களில் இருந்து தொடங்கி, அதையடுத்து வந்த பத்தாண்டுகளில் உலகளாவிய விளம்பரத் தொழிலானது தொடர்ந்து வேகமாக ஒருமுகப்படுத்தப்பட்டு வருவதைக் கண்டது. இந்தப் போக்கு இன்றுவரை தொடர்கிறது.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நான்கு மாபெரும் நிறுவனங்கள் – அதாவது பிரிட்டனின் டபிள்யூ ப்பி ப்பி, அமெரிக்காவின் இண்டர் பப்ளிக் மற்றும் ஓம்னிகாம், பிரான்சின் பப்ளிசிஸ் ஆகியவை- தான் உலகத்தில் உள்ள விளம்பர நிறுவனங்களில் பாதியை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இந்த வர்த்தகத்தில் அவற்றின் பங்கு அதைவிடவே அதிகமாக இருக்கும். இவற்றோடு ஜப்பானின் டெண்ட்ஸூ குழுவையும் சேர்த்துக் கொண்டால் இந்த ஐந்து பெரு நிறுவனங்களும்தான் உலகளா விய விளம்பரத் தொழிலை மேலாதிக்கம் செய்து வருகின்றன. டபிள்யூ ப்பி ப்பி நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு அனுப்பிய 2017-ம் ஆண்டிற்கான வர்த்தகம் குறித்த விவரக் குறிப்பில் இந்திய விளம்பர சந்தையில் 50 சதவீதம் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிவித்திருந்தது.

இந்தப் பெரும் நிறுவனங்கள் இத்தொழில் தொடர்புடைய நிறுவனங்களை – குறிப்பாக சந்தை குறித்த ஆய்வு, வாசகர்களை அளவீடு செய்வது போன்றவற்றில் ஈடுபடும் நிறுவனங்
களை – கைப்பற்றுவதன் மூலம் ஊடகங்கள் மீதான தங்கள் வலிமையை மேலும் வலுப்படுத்திக் கொள்கின்றன. தனது சுய அதிகாரத்திற்கு ஏற்படக் கூடிய – அது உண்மையானதோ அல்லது கற்பனையானதோ – எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் உடனடியாக எதிர்வினை புரியும் ஊடகத் தொழில் தனது சொந்த வர்த்தகத்திற்கான முக்கிய திறவுகோலை தன் கையில் வைத்திருக்கும் தொழிலான விளம்பரத்துறையில் அதிகரித்துக் கொண்டே வரும் ஒருமுகப்படுத்தலின் தாக்கங்கள் குறித்து வாய் திறவாமல் இருப்பது மிகுந்த வியப்பிற்குரியதே ஆகும்.

இதுபற்றிய நெடியதொரு கருத்தோட்டத்தை உருவாக்கிக் கொள்ள இந்த நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளுக்கு நாம் மீண்டும் பயணம் செய்தோமெனில், இத்தொழிலின் மிக வேகமான வளர்ச்சிக்குப் பிறகு மற்றொரு துரித வளர்ச்சிக் கட்டத்தை நோக்கி அது நகர்ந்து கொண்டிருந்ததைப் பார்ப்போம். தேசியம் என்ற கோட்டைக் கொத்தளத்தின் மீது அது நின்று கொண்டிருந்த கடைசிக் காலமும் அதுவே. 2001 ஜனவரியில் தகவல் தொழில்நுட்பம் குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு அச்சு ஊடகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை தடை செய்து வந்த நீண்ட நாள் கொள்கை பற்றிய கருத்துக்களை செவிமடுக்கத் தொடங்கியது. 2001 ஜனவரி தொடங்கி இந்த நிலைக்குழு 13 முறை கூடி மூத்த பத்திரிக்கை ஆசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள், ஊடகத் துறை நிபுணர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்டது.

அந்நிய முதலீடு குறித்த முக்கிய முடிவு

2001 டிசம்பர் மாத வாக்கில் இது குறித்த விவாதங்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு தொடர்ச்சியான ஒரு பிரச்சாரத்தை எதிர்கொள்ளத் தொடங்கியது. குறிப்பாக, பரவலான அளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் இந்தி நாளிதழான தைனிக் ஜாக்ரன் இதழின் உரிமையாளரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன நரேந்திர மோகன் -ஐச் சார்ந்த பிரிவினர் அச்சு ஊடகத்தில் 26 சதவீதம் வரை நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்தனர். 2002 பிப்ரவரியில் நாடாளுமன்ற நிலைக்குழு மீண்டும் கூடியபோது அதன் முன்னால் ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு ஆலோசனைகள் இருக்குமளவிற்கு மோகனின் பிரச்சாரம் வெற்றி பெற்றிருந்தது. அதில் ஒரு ஆலோசனை மோகனின் நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாக இருந்தது எனில் மற்றொரு ஆலோசனை அச்சு ஊடகம் இந்தியர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்று ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை 1955-ல் நிறைவேற்றிய தீர்மானத்தை உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என்று கூறியது.

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற நிலைப்பாடு பெருமளவிற்கு ஆதரவைப் பெறத் தவறியது. 2002 பிப்ரவரியில் நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் மோகன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஒரு சில நடைமுறை உத்திகளும் கூட தோல்வியுற்றன. இடதுசாரி கட்சிகளோடு சேர்ந்து காங்கிரஸ் கட்சியும் 1955-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நிலைபாட்டையே ஆதரித்தது. எனினும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் முடிவுகள் இக்கொள்கையின் தொடர்ந்த செயல்பாட்டில் பெரிய மாற்றம் எதை
யும் கொண்டு வரவில்லை. இந்திய ஊடகத் தொழில் மிக ஆழமான வகையில் பிளவுபட்டிருந்ததே அதற்குக் காரணமாகும். அந்நிய முதலீட்டுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த ஜாக்ரன் குழுவிற்கு இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்தியா டுடே, ஆனந்த பஜார் பத்ரிகா ஆகிய குழுக்களின் ஆதரவு இருந்தது. எனினும் 1990களின் தொடக்கத்திலிருந்தே நடைபெற்று வந்த இந்தப் பிரச்சாரம் பெருமளவிற்கு முன்னேறவில்லை. கணிசமான அளவிற்கு தேசிய உணர்வை முன்வைத்த வலுவான ஒரு குழுவின் எதிர்ப்பே இதற்குக் காரணமாக இருந்தது. இந்தக் குழுவில் டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்துஸ்தான் டைம்ஸ், தி இந்து ஆகிய செல்வாக்கு மிக்க மூன்று ஆங்கில நாளிதழ்கள் முறைப்படுத்தப்படாத கூட்டணியாக இருந்தன.
இந்தக் குழுவின் அபரிமிதமான வலிமைக்குப் பின்னால் பிரதேசரீதியான, குறிப்பாக தென் மாநிலங்களைச் சேர்ந்த நாளிதழ்கள் பலவற்றின் ஆதரவும் இருந்தது. இவை சிறப்பாக ஒழுங்கமைந்தவையாக இருந்ததோடு, புதுமைத் தன்மையும் நிதியளவில் பலமும் கொண்டவையாகவும் இருந்தன.

தாராளமயமாக்கல் கொள்கையில் பரவலான வீச்சினை அச்சு ஊடகம் எதிர்ப்பது அல்லது விலகி நிற்பது என்பதற்கு நியாயமான காரணம் எதுவுமில்லை என்ற வாதத்திற்கு பதிலடியாக இந்தக் குழு வலுவான பதிலையும் முன்வைத்தது. தொலைக்காட்சி ஊடகத்தை விட அதிகமான அளவில் மக்களின் உணர்வுகளின் மீதும் அரசியல் நிகழ்வுகளின் மீதும் ஆழமான செல்வாக்கு செலுத்துகின்ற, பிரத்தியேகமானதொரு கலாச்சார அம்சம்தான் நாளிதழ்கள் என்பதே இக்குழுவின் பதிலாகும்.

இத்தகையதொரு துறையை வெளிநாட்டு முதலீட்டிற்கு திறந்துவிடுவதென்பது முற்றிலும் அந்நியமான, அரசியல் செயல்பாட்டை அரித்துப் போகச் செய்யும் வகையில் செல்வாக்கு செலுத்த வழிவகுப்பதே ஆகும். இந்தியர்களின் கைகளில் பத்திரிக்கையின் கட்டுப்பாட்டு உரிமையை வைத்திருப்பது என்பது செயல்படத்தக்க ஒன்றாக இருக்காது என்பதோடு பெரியதொரு வெளிநாட்டு முதலீட்டாளர் நுழைவதன் மூலம் சமநிலையற்ற அதிகாரமும் அதிலிருந்து உருவாகும்.

எனினும் 2000களின் தொடக்கத்தில் ஊடகத்துறைக்குள் செயல்பட்டு வந்த சக்திகளின் நிலைபாட்டில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் அதுவரையிலான தனது நிலைபாட்டில் இருந்து மாறியது இந்தச் சமநிலையில் முக்கிய திருப்பத்தைக் கொண்டு வந்தது. டெல்லியில் முன்னணி நாளிதழாக இருந்த அது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் வரவுக்குப் பின் போட்டி போட்டுக் கொண்டு விலையைக் குறைப்பதில் ஏற்பட்ட இழப்பே அந்த நாளிதழ் நேரடி அந்நிய முதலீட்டிற்கு ஆதரவான குழுவுடன் இடம் பெயர்வதற்குக் காரணமாக இருந்தது. அந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசு அச்சு ஊடகத்தொழிலுக்குள் இருந்த வலுவான பிரிவினரின் கோபத்தையும் எதிர்கொள்ளும் அளவிற்கு முதலீட்டுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டுவர போதுமான ஆதரவு அத்தொழிலில் நிலவுகிறது என்ற உத்தரவாதத்தை பெற்றது. அதன் விளைவாக அச்சு ஊடகத்தில் மொத்த பங்குத் தொகையில் 26 சதவீதம் அளவிற்கு நேரடி அந்நிய முதலீட்டை அனுமதித்து அரசு உத்தரவிட்டது. இதன்படி ஆசிரியர் பொறுப்பு இந்தியர்களிடமே இருக்கும் என்பதோடு செய்திக்கான திட்டங்களில் செல்வாக்கு செலுத்துமளவிற்கு அனைத்து முக்கிய பதவிகளிலும் நான்கில் மூன்று பங்கு பதவிகளில் இந்தியர்களே இருக்க வேண்டும் என்றும் இந்த உத்தரவு குறிப்பிட்டது.

இதற்கு எதிர்வினை ஆற்றுவதில் இந்திய அச்சு ஊடகத் தொழில் இரண்டாகப் பிளவுபட்டது. இத்தொழிலின் உச்ச அமைப்பான இந்திய பத்திரிக்கை கழகம் ( ஐஎன்எஸ் ) இந்த முடிவு சிறு மற்றும் நடுத்தர நாளிதழ்களின் அழிவிற்கு இட்டுச் செல்லும் என்று சற்று கவலையுடன் கருத்து தெரிவித்தது. பிசினெஸ் ஸ்டாண்டர்ட், இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்தியா டுடே போன்ற தனிப்பட்ட பத்திரிக்கை குழுக்கள் இத்தொழிலுக்குத் தேவைப்படுகின்ற கூடுதல் மூலதனம், நவீன தொழில்நுட்ப செயல்பாடுகள் ஆகியவற்றை கொண்டுவர இது வழிவகுக்கும் என்றும் மிகுந்த கால தாமதத்திற்குப் பிறகே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டன.

கபளீகரமான விளம்பரப் பகுதி

நேரடி அந்நிய முதலீடு குறித்து தொடர்ச்சியான வாதப் பிரதிவாதங்களில் அச்சு ஊடகம் ஈடுபட்டு வந்த அதே நேரத்தில் மறுபுறத்தில் அத்தொழில் வெளிநாட்டு நலன்களால் முற்றிலு மாகச் சூழப்படுவதற்கான வழியேற்படுத்தும் வகையில் முக்கிய நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. விளம்பர நிறுவனங்கள், சந்தை குறித்த ஆய்வு நிறுவனங்களில் 100 சதவீதம் வரை நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கான கொள்கையை மேற்கொள்வதற்கான முயற்சி எவ்வித விவாதமும் இன்றி 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்டபோது இந்திய நாளிதழ்கள் இந்தக் கொள்கையின் அறிகுறியை உணர்ந்து கொள்ளத் தவறின. அச்சு ஊடகமானது விளம்பரத்தின் மூலமான வருவாயை பெரிதும் நம்பியிருந்த ஒரு சூழலில், சந்தை குறித்த ஆய்வு நிறுவனங்
களின் முடிவுகளைச் சார்ந்தே விளம்பரத்தை வெளியிடுவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இந்தக் கொள்கை முடிவு எவ்வித தீவிரமான எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்பட்டது. இன்னும் சொல்வதெனில் அதன் நீண்ட கால தாக்கங்கள் குறித்து மேலோட்டமான அலசல் கூட மேற்கொள்ளப்படவில்லை.

ஊடகத்தில் வெளிநாட்டு முதலீடு குறித்து நடைபெற்று வந்த விவாதங்கள் பயனற்றவை என்பது மட்டுமின்றி மேலோட்டமானதும் கூட என்று 2002-ம் ஆண்டில் சந்தை குறித்த ஆய்வு நிபுணரும் ஊடக ஆய்வாளருமான என். பாஸ்கர ராவ் எழுதியிருந்தார். “இந்திய, வெளிநாட்டு பெருநிறுவனங்களின் ஊடகம் குறித்த திட்டங்கள் சந்தை குறித்த ஆய்வையே நம்பியுள்ளநிலையில், அதனடிப்படையில் வெளியிடப்படும் விளம்பரங்களே ஊடகத்தின் செயல்வேகத்தையும் வழியையும் தீர்மானிக்கும் நிலையில், அச்சு ஊடகத்தில் நேரடி அந்நிய முதலீடு குறித்த பொதுவிவாதம் முழுவதுமே இந்த உண்மையைக் காணத் தவறிவிட்டது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
அச்சு ஊடகமும், பத்திரிக்கை அதிபர்களும் நேரடி அந்நிய முதலீடு குறித்த போலிச் சண்டையில் ஈடுபட்டு உயரிய கருத்துக்களை முன்வைத்த அதே நேரத்தில் அதைச் சுற்றியிருந்த பகுதி முழுவதும் இந்திய, வெளிநாட்டு பெருநிறுவனங்களின் நலன்களால் முற்றிலுமாகவும், மிக வேகமாகவும் கைப்பற்றப்பட்டிருந்தது. இந்திய விளம்பர உலகத்தை மேலாதிக்கம் செய்து வரும் டபிள்யூ ப்பி ப்பி குழுவின் வளர்ச்சிப் பாதையைக் கொண்டே இதை விளக்கிவிட முடியும். 1990களில் உலகம் முழுவதிலும் அது ஆதிக்கம் செலுத்தி வந்த போதிலும் இந்தியாவில் முழுமையான கட்டுப்பாட்டை கொண்டதாக அது இருக்கவில்லை. அந்த நேரத்தில் இந்தியன் மார்க்கெட் ரிசெர்ச் பீரோ (ஐ எம் ஆர் பி) என்ற நிறுவனத்தின் மூலமும் தனது துணை நிறுவனங்களின் மூலமுமே அது கணிசமான செல்வாக்கை செலுத்தி வந்தது.

1993-ல் டபிள்யூ ப்பி ப்பி நிறுவனம் உலகம் முழுவதிலும் உள்ள தனது சிக்கலான வலைப்பின்னலுக்குள் கந்த்தார் குழு என்ற சந்தை ஆய்வுக்கான பிரிவை உருவாக்கியது. 1998-ல் இந்த கந்த்தார் குழு இத்துறையில் முன்னோடியாக இருந்த ஏசி நீல் சன் என்ற நிறுவனத்துடன் இணைந்து தொலைக்காட்சி நேயர்கள் குறித்த அளவீட்டுப் பிரிவை (டாம்) உருவாக்கியது. அப்போது வேகமாக வளர்ந்து வரும் இந்திய ஒளிபரப்பு தொழிலுக்கு மிகவும் தேவையான திறனை வழங்கும் என்றும் அது உறுதியளித்தது. இத்தகைய அளவீட்டு முறையில் அதன் போட்டி அமைப்பாக இருந்தது அதன் போட்டி நிறுவனமான ஓஆர்ஜி-மார்க்- இன் ஒரு பிரிவாக இருந்த இண்டாம் ஆகும்.

2000-ம் ஆண்டில் டபிள்யூ ப்பி ப்பியும் வேறு சில கூட்டாளிகளும் சேர்ந்து உருவாக்கிய நிறுவனத்தின் மூலம் இந்த ஓஆர்ஜி-மார்க் கையகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து டாம் மற்றும் இண்டாம் ஆகிய இரண்டும் ஒன்று சேர்ந்தன. இதன் மூலம் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களில் விளம்பரம் செய்வதை தீர்மானிக்கும் தர
வரிசை முறையை கட்டுப்படுத்தும் நிறுவனமாக டபிள்யூ ப்பி ப்பி உருமாறியது.

உலகமயமாக்கல் பத்திரிக்கை வாசகர்கள் குறித்த ஆய்வுலகத்தில் மிகத் தீவிரமான மாற்றத்தைக் கொண்டு வந்தது. 1990கள் முழுவதிலும் பத்திரிக்கை தொழில், விளம்பர நிறுவனங்களின் கழகம், பத்திரிக்கை விநியோகம் குறித்த தணிக்கை அமைப்பு ஆகியவற்றின் முயற்சியால் உருவாக்கப்பட்ட தேசிய வாசகர் ஆய்வு (என் ஆர் எஸ்) அமைப்பு என்பதே இத்தொழில் குறித்த தர மதிப்பீட்டு அளவையாக நீடித்து வந்தது. 1995-ல் விளம்பரம் மற்றும் ஊடக நிறுவனங்கள் உருவாக்கிய புதியதொரு கூட்டணி இதற்கு மாற்றாக இந்திய வாசகர் ஆய்வு (ஐ ஆர் எஸ்) என்ற அமைப்பை தொடங்கியது. என் ஆர் எஸ்-ஐ எதிர்த்து நேரடியாக மோதிய ஐ ஆர் எஸ் பெருநிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கும் கால அட்டவணைக்கு உகந்த வகையில் காலாண்டு ஆய்வுகளை வழங்க உறுதியளித்தது.
இந்தப் போட்டியின் விளைவாக தங்களுக்குப் பயனேதும் தராத நிலையில் இத்தொழிலில் உள்ள முக்கிய நிறுவனங்கள் வாசகர் குறித்த அளவீட்டு முறையையே சந்தேகிக்கத் தொடங்கின. பல்வேறு பத்திரிக்கை நிறுவனங்களின் கடுமையான எதிர்ப்பை சந்தித்த நிலையில் என்ஆர்எஸ் அமைப்பு 2004-ல் தனது செயல்பாட்டை நிறுத்தியதும் ஐஆர் எஸ் இத்துறையில் ஏகபோகமானது. அதைத் தொடர்ந்த ஆண்டுகளில் ஐஆர் எஸ் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் கேள்விகள் தொடர்ந்து எழுந்தன. இந்த அமைப்போடு இணைந்திருந்த பல பத்திரிக்கைகளும் இதன் மூலம் தங்களுக்கு எவ்வித பலனும் இல்லை என்று கூறி ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று அச்சுறுத்திய நிலையில் அதன் வாசகர் எண்ணிக்கை குறித்த துவக்க நிலை மதிப்பீடுகளை கணிசமாகத் திருத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஐஆர் எஸ் ஆளானது.

உலகளாவிய அதிகாரத்தைப் பொறுத்தவரையில் பத்திரிக்கைகளுக்கான விளம்பரங்களை வழங்குவது குறித்து ஆலோசனை கூறுவதில் பங்கு வகித்து வந்த என் ஆர் எஸ் செயல்பாட்டை நிறுத்திய நிலையில் அதனை மேலாதிக்கம் செய்து வந்த டபிள்யூ ப்பி ப்பி நிறுவனத்தின் வலிமை ஆம்னிகாம் குழுவின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டது. தனது இந்திய துணைநிறுவனமான ஹன்சா ஆய்வு நிறுவனத்தின் மூலம் போட்டி பத்திரிக்கை நிறுவனங்களின் கூட்டணியின் உதவியுடன் 1990களின் இறுதியில் ஐஆர் எஸ் இதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றது. 2008-ல் டபிள்யூ ப்பி ப்பி குழுவின் ஒரு பகுதியான ஐஎம் ஆர் பியின் தொழில்நுட்ப மேற்பார்வையில் என் ஆர் எஸ் மீண்டும் தனது செயல்பாட்டை தொடர முயற்சித்தது. அந்த முயற்சி தோல்வியடைந்த போதிலும் தொலைக்காட்சிக்கான தரவரிசையில் டபிள்யூ ப்பி ப்பி நிறுவனம் தொடர்ந்து வலுவோடு இருந்து வருகிறது.
ஊடக உரிமை, விளம்பரத் தொழில், சந்தை குறித்த ஆய்வு ஆகிய துறைகளில் ஒருமுகத் தன்மை அதிகரித்துக் கொண்டே வரும் இன்றைய நிலையோடு கூடவே மற்றொரு அம்சமும் வெளிப்படுகிறது. அதுதான் அரசியல் ரீதியான விளம்பரத்தில் மிகப் பெரும் விளம்பர நிறுவனங்களின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே போவதாகும். 2014 தேர்தல் காலத்தில் பாஜக இண்டர் பப்ளிக் மற்றும் டபிள்யூ ப்பி ப்பி ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த விளம்பர நிறுவனங்களை மாறிமாறி பயன்படுத்திக் கொண்டது. இறுதியில் இத்தொழிலைச் சார்ந்த நிபுணர்களையே தனிப்பட்ட வகையில் தனது ஆலோசகர்களாக அது நியமித்துக் கொண்டது. செயல்திட்டங்களை உருவாக்குவதில் கருத்துக் கணிப்புகள் உதவி செய்வதோடு மக்களின் உணர்வுகளிலும் அவை செல்வாக்கு செலுத்துகின்றன. இவை டபிள்யூ ப்பி ப்பி மற்றும் ஆம்னிகாம் குழுக்களுடன் இணைந்த நிறுவனங்களால் மேற்கொள்ள ப்படுகின்றன.

பொது நோக்கத்திற்கு சேவை செய்யும் ஒரு நிறுவனம் என்ற வகையில் அதை ஆழமாக அரிக்கும் சக்தியாக உலகமயமாக்கல் விளங்குகிறது. உலகளாவிய அளவில் செயல்பட்டு வரும் விளம்பர நிறுவனங்களுக்கு அடிபணிந்து நிற்பதென்பது ஊடகத்திற்கும் அதன் வாசகர்களுக்கும் இடையே இருந்துவந்த உறவு சீர்குலையவும் காரணமாகியுள்ளது.

இதன் விளைவாக, இந்திய சூழல் உலகமயமானதாக அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு முக்கியமான தேர்வுகளும் அதற்குப் போட்டியாக எழுந்து வருகின்றன. மோசமான வகையில் கரைந்து போன நம்பிக்கை, மூழ்கடிக்கும் வகையில் திரண்டு வரும் போலிச் செய்திகள் ஆகிய சூழலில்தான் இன்றைய ஊடகம் உள்ளது.

17வது மக்களவை தேர்தல் முடிவுகள்: உறுதிப்படுத்தப்பட்ட வலதுசாரி திருப்பம்

உ.வாசுகி

நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தீர்மானகரமான வெற்றியை ஈட்டி ஆட்சியை அமைத்திருக்கிறது. பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் தனியாக 37.4ரூ,  கூட்டணியாக 45ரூ பெற்றிருக்கிறது. 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அது 50ரூ வாக்கு சத வீதத்தைத் தாண்டியுள்ளது. இமாசல பிரதேசத் தில் 69.11ரூ, உத்தராகண்டில் 61ரூ பெற்றுள்ளது. தமிழகம், கேரளா, ஆந்திரா, ஓரளவு தெலுங் கானாவில் இந்தப் போக்கு பிரதிபலிக்கவில்லை. மறுபக்கம் இடதுசாரிகள் பெரும் தோல்வியை சந்தித்துள்ளனர். அவர்களின் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது. இவை குறித்துப் பரிசீலித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு, இந்தச் சரிவைத் தடுத்து நிறுத்தி, நிலைமைகளில் முன்னேற்றம் காணவும், அடுத்து மக்கள் மீது வரவிருக்கும் கடும் தாக்குதல்களை எதிர்கொள்ள வும் சில கடமைகளை முன்மொழிந்திருக்கிறது.

உலக அளவில் முதலாளித்துவத்தின் தொடர் நெருக்கடி  பல்வேறு நாடுகளில் அரசியலில் வலதுசாரி திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் இதைப் பட்டியலிட்டுள்ளார். இஸ்ரே லின் நேதன்யாகு மீண்டும் தேர்வு,  துருக்கியில் எர்டோகன் மீண்டும் தேர்வு, ஆஸ்திரேலியாவில் கன்சர்வேட்டிவ் கட்சி அமோக வெற்றி. லத்தீன் அமெரிக்காவின் பல நாடுகளில் வலதுசாரிகள் முன்னேறி வருகிறார்கள். பிரேசிலில் போல் சனோரோ இதற்கு மோசமான ஓர் உதாரணம். ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களில் பிரான்சில் லே பென் தலைமையிலான  தீவிர வலதுசாரி கட்சி மிகப்பெரும் கட்சியாகவும், இத்தாலியில் மாட்டியோ சால்வினியின் மிக மோசமான பிற்போக்கான கட்சி அந்நாட்டின் ஆகப்பெரும் கட்சியாகவும் தேர்வாகியுள்ளன. ஜெர்மனியில் ஆல்டர்னேடிவ் ஃபார் ஜெர்மனி என்ற வலதுசாரி கட்சி 10ரூ வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றிருக் கிறது. ஹங்கேரியில் விக்டர் ஓப்ரான் தலைமை யிலான வலதுசாரி கட்சி வெற்றிபெறும் நிலை யில் உள்ளது. இங்கெல்லாம் நவீன தாராளமய கொள்கைகளின் தொடர் விளைவுகளால் அனைத்துப் பகுதி மக்களும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். வலதுசாரி சக்திகள், பிரச்னைகளை மறைப்பது என்பதை விட, பிரச்னைகளுக்குக் காரணம் புலம்பெயர் தொழிலாளி கள், கறுப்பின மக்கள், இசுலாமியர்கள் என்று கைகாட்டி பெரும்பான்மை மத/இன/உள்நாட்டு மக்களின் ஆதரவைப் பெறுகின்றனர்.

வெகுமக்கள் அதிருப்தியை சரியான அரசியல் பாதையில் கொண்டு செல்ல இடதுசாரிகள் வலுவாக இல்லாத போது, மாயத்தோற்றங் களால், வார்த்தை ஜாலங்களால், இன, மத, தேசிய வெறியைக் கிளப்பும் வலதுசாரிகள் அதை அறுவடை செய்கிறார்கள் என்ற மதிப்பீடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடந்த அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானத்திலும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. எந்த நவீன தாராளமயப் பாதை மக்களுக்குக் கொடுமையான பிரச்னைகளை ஏற்படுத்துகிறதோ, அதே கொள் கைகளைத்தான் வலதுசாரி கட்சிகளும் கடைப் பிடிக்கிறார்கள் என்பது பல்வேறு காரணிகளால் மறைக்கப்படுகிறது. இந்த சர்வதேச போக்கினைப் போலவே இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வலதுசாரி அரசியல் திருப்பம் தற்போது வலுவாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

பாஜகவின் தீவிர மதவெறி, தேசியவாதப் பிரச்சாரம்  

செல்லா நோட்டு, ஜிஎஸ்டி, வேலையின்மை, விவசாயிகள் நெருக்கடி உள்ளிட்ட ஏராளமான வாழ்வுரிமை பிரச்னைகளில் பாஜக அரசுக்கு எதிராக மக்களின் கடும் அதிருப்தி தலை தூக்கி யிருந்ததை வெளிப்படையாகக் காண முடிந்த போதும், அது ஏன் தேர்தலில் பிரதிபலிக்கவில்லை? பாஜகவுக்கும், அதன் கூட்டணிக்கும் வாக்குகள் எப்படி குவிந்தன? என்பது முக்கியமான கேள்வி.  ஆர்.எஸ்.எஸ்.சின் வழிகாட்டுதலில் தேர்தலை சந்தித்த பாஜக, 2014 தேர்தலைப் போல் வளர்ச் சியை மையப்படுத்தி பிரச்சாரத்தைக் கட்டமைக்க வில்லை. ஐந்தாண்டுகளில் அனைத்து துறைகளி லும் பெரும் தோல்வியை அடைந்துள்ள சூழலில்  அது சாத்தியமும் இல்லை. எனவே 2019ல் தேசத் தின் பாதுகாப்பு, பாகிஸ்தானுக்கு பதிலடி, அதை  மோடியால்தான் செய்ய முடியும் என்கிற ரீதியில் ‘இந்து’ இந்தியாவைப் பாதுகாக்க ‘இசுலாமிய’ பாகிஸ்தானை முறியடிக்க வேண்டும் என்று எழுப்பப்பட்ட பாஜகவின் தீவிர மதவெறி, தேசியவாத குரல் வலுவாக எடுபட்டுள்ளது. 5 ஆண்டுகளில் நடந்த  சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்களும், பசு பாதுகாப்பு, கர் வாப்சி, லவ் ஜிகாத் கருத்தியல் பிரச்சாரங்களும் இதற்குக் களம் அமைத்துக் கொடுத்துள்ளன. 

தேசம், தேசிய அரசு, தேசிய உணர்வு போன் றவை முதலாளித்துவ வளர்ச்சியின்போது முழு மைப்பட்ட கருத்தியல்கள். இவற்றுக்கு வர்க்க பரிமாணம் உண்டு. ஆளும் வர்க்கம் தனது நலனுக்காக இவற்றைப் பயன்படுத்தும். எனவே தொழிலாளி வர்க்கத்தின் கண்ணோட்டத்தி லிருந்து இவற்றின் உள்ளடக்கத்தை வரையறை செய்ய வேண்டும். இந்த வித்தியாசத்தைக் கணக்கில் எடுக்காமல் தேசியம் என்ற ஆளும் வர்க்கத்தின் ஒற்றை வார்த்தையில் வீழ்ந்து விட முடியாது. தீவிர தேசியம், தேசிய வெறி, மதவெறி யின் அடிப்படையிலான கலாச்சார தேசியம் போன்ற கருத்தியல்கள் இந்துத்வ கோட்பாட்டின் அம்சங்கள் என்பதைப் பார்க்கத் தவறக் கூடாது.

புல்வாமா தீவிரவாதத் தாக்குதல் அதன் அனைத் துப் பரிமாணங்களிலும் தேசிய வெறியை ஏற்ற பயன்படுத்தப்பட்டது. பாலாகோட்டில் இந்திய விமானப்படை கொடுத்த பதிலடி பெருமிதம் ஏற்படுத்த உதவியது. இதோடு சேர்த்து, இதனை எதிர்கொள்ள, பலமற்ற காங்கிரஸ் உதவாது,  தேசத்துக்கு வலுவான தலைவர், பாதுகாவலர் தேவை, அது மோடி தான் என்ற வகையில் பிரச்சாரம் முன்வைக்கப்பட்டது. தொகுதி வேட்பாளர் யாராக இருந்தாலும் பரவாயில்லை. மோடிக்கு வாக்களியுங்கள் என்பதே ஜனாதிபதி தேர்வு போல பிரச்சார உத்தியாக அமைந்தது. சவுகிதார் என்று பெயர் சூட்டிக் கொண்டதோ, பாலாகோட்டில் தாக்குதல் தொடுக்க இந்திய விமானப்படையே தயங்கிய போது, எனது அடிப்படை அறிவில் பட்டதை அதிகாரிகளுக் குச் சொல்லி தாக்குதல் நடத்த வழி காட்டினேன் என்று மோடி கூறியது, ஒரு புறம் கேலிக்கு உரிய தாக இருந்தாலும்,  கவனமாகத் திட்டமிடப்பட்ட பிரச்சாரம் என்பது தெளிவாகிறது. பாஜகவின் ஒட்டுமொத்த பிரச்சாரம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் பரிவாரங்களின் கதை வசனம் இயக்கம் தயாரிப்புதான். உதாரணமாக, இமாச்சல பிரதேசத் தில் 4 தொகுதிகளிலும் லட்சக்கணக்கான வாக்கு கள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றிருக் கிறது. அநேகமாக ஒவ்வொரு குடும்பத்திலும் ஆயுத படையில் பணியாற்றுபவர்கள் அல்லது ஓய்வு பெற்றவர்கள் அல்லது போரில் கணவனை இழந்த பெண்கள் உள்ளனர். இப்பிரச்சாரம் அவர்கள் மத்தியில் வெகுவாக எடுபட்டிருக்கிறது. இத்தகைய நிலைமை வாழ்வுரிமை பிரச்னை களைப் பின்னுக்குத்தள்ளியிருக்கிறது.

இது சமூக வலைத்தளத்தின் மூலம் நுட்பமாக மக்கள் மத்தியில், இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி யும், புதிய தகவல்-தொடர்பு சாதனங்களும் பயன்படுத்தப்பட்டு, 25 கோடி பேருக்கு அவரவர் மொழியில், தனிப்பட்ட முறையில் செய்தி அனுப் பப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய அளவிலான, சிக்கலான புள்ளிவிவரங்களை படு வேகத்தில் ஒழுங்குபடுத்தி, ஆய்வு செய்து கொடுக்கும் பிக் டேட்டா அனலிட்டிக்ஸ் (அதிக அளவிலான புள்ளிவிவரங்களை அலசி ஆராயும்) முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

உயர் கல்வி நிறுவனங்கள், அரசியல் சாசன அடிப்படையில் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள், நீதித்துறை, தேர்தல் ஆணையம், மத்திய புலனாய்வு பிரிவு, ரிசர்வ் வங்கி என பல்வேறு இடங்களில் தலைமைப் பொறுப்புகளில் ஆர்.எஸ்.எஸ். நபர் கள் அமர்த்தி வைக்கப்பட்டார்கள். தீவிர மத வெறி, தேசிய வெறி உணர்வுகளை உருவாக்கித் தக்க வைப்பதில் இந்நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்தன. 

கார்ப்பரேட்டுகளின் ஆதரவும், பணப் பயன்பாடும்

இந்திய கார்ப்பரேட்டுகளும், பெரும் தொழில் நிறுவனங்களும் மிகப்பெரும் அளவில் பாஜக வுக்கும், மோடிக்கும் ஆதரவு அளித்துள்ளனர். மொத்த தேர்தல் செலவில் 45ரூ (சுமார் ரூ.27,000 கோடி) பாஜகவால் மட்டுமே செலவழிக்கப் பட்டிருக்கிறது. தேர்தல் செலவினங்களை தேர்தல் ஆணையமே செய்திட வேண்டும். அதுவரை வேட்பாளர் செலவுக்கு மட்டுமல்ல; கட்சிகளின் தேர்தல் செலவுக்கும் உச்சவரம்பு வைக்க வேண் டும் என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், பொருளாதாரத்தில் ஓரளவு சம தளத்தில் நின்று கட்சிகள் போட்டியிட முடியும். ஆளும் கட்சி என்ற அடிப்படையிலும், மிக வெளிப்படையான ஆளும் அரசியல்வாதி கள்- அதிகார வர்க்கம்- கார்ப்பரேட்டுகளின் கள்ளக் கூட்டணி (குரோனி கேபிடலிசம்) காரண மாகவும், கடந்த 5 ஆண்டுகளில் மிகப் பெரும் நிதியாதாரம் பாஜகவின் கைக்கு வந்திருக்கிறது.

மோடியின் ஆட்சியில் முகேஷ் அம்பானியின் தொழில் சாம்ராஜ்யம் 23 பில்லியன் டாலர் மதிப்பிலிருந்து 55 பில்லியன் டாலராக உயர்ந் திருக்கிறது. அதாவது, அம்பானியின் வாழ்நாள் காலத்தில் சேர்த்த சொத்தை விட, மோடியின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சி அவருக்கு அதிக சொத்தைக் கொடுத்திருக்கிறது. மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போதே கவுதம் அதானி யின் சொத்து 5000ரூ உயர்ந்தது. 2014-18ல் அது 4 மடங்குக்கு மேலாக அதிகரித்து 2.6 பில்லியன் டாலராக உள்ளது. பாபா ராம்தேவின் பதஞ்சலி சாதாரணமாக ஆரம்பித்து, தற்போது 2018ல் 6 பில்லியன் டாலர் பிசினசாக மாறி, இந்தியாவின் முதல் 20 பணக்காரர்களில் ஒருவராக ராம்தேவ் ஆகிவிட்டார்.  தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்த ரூ.4,794 கோடி நன்கொடையில் சுமார் 95ரூ பாஜகவுக்கே சென்றிருக்கிறது.

சமூக ஊடகத்துக்கு, விளம்பரத்துக்கு, நமோ டிவி துவங்கி நடத்துவதற்கு, ஊழியர்களும், பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களும் தங்கிப் பணியாற்றவும், கட்டமைப்பு வசதிகளுக்கும், உப கரணங்களுக்கும்,  ஊடகங்களுக்கும் என கோடிக் கணக்கில்  பாஜகவால் பணம் செலவிடப்பட்டிருக் கிறது. பல மாநிலங்களில் இதர கட்சியின் முன்னணி ஊழியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர் கள் விலைக்கு வாங்கப்பட்டிருக்கின்றனர். மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் ஸ்லீப்பர் செல்லாகப் பணியாற்ற பாஜக ஊழியர்களை அனுப்பியுள்ளனர்.

வாக்காளர் பட்டியலில், ஒரு பக்கத்துக்கு ஒருவர் பொறுப்பு, அதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாக்காளர்களின் ஆதரவைப் பெற செயல்படு வதற்கு ஒருவர் பொறுப்பு எனப் போடப்பட்ட னர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வேட் பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளுக்கு இறுதி செய்யப்பட்டு, அவர்களை வெற்றி பெற வைக்க, ஓராண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் வரை ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் வெவ்வேறு மாநிலங்களிலிருந்து வந்து தங்கிப் பணியாற்றிய உதாரணங்கள் உண்டு.  குடும்பங்களை நேரிலும் சந்தித்தனர். வாக்களித்தால் அந்தக் குடும்பத்துக்கு வேண்டிய அரசு நலத் திட்டங்களை வாங்கிக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். சில தொகுதிகளில் எதிர்கட்சியினரின் போட்டி வேட்பாளரை நிறுத்த பாஜக நிதி செலவழித் திருக்கிறது. மஹாராஷ்டிராவில் ஓவைசியின் எம்.ஐ.எம். கட்சியும், பிரகாஷ் அம்பேத்கரின் பகுஜன் மஹாசங் கட்சியும் சேர்ந்து  வாஞ்சித் பகுஜன் அஹாதி என்ற அணியாக நின்று தேர்தலை சந்தித்தனர். இது மதச்சார்பற்ற கட்சிகளின் வாக்குகளைப் பிரித்தது. ஹெலிகாப்டரில் பறந்து பறந்து இவர்கள் பிரச்சாரம் செய்ய பாஜக நிதி கொடுத்திருப்பார்கள் என்ற ஊகங்கள் நிலவு கின்றன.

மேற்கு வங்கத்தில்  ராய்கஞ்ச் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்ததை ஒட்டி, நீண்ட கால காங்கிரஸ் தலை வர் மறைந்த  பிரியரஞ்சன் தாஸ் முன்ஷியின் மனைவி தீபா தாஸ் முன்ஷியைத் தாங்கள் ஆதரிப்ப தாகக் கூறி பாஜக போட்டியிட வைத்தது.  அதே போல் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற அம்பரீஷின் தொகுதியான மாண்டியாவை மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு விட்டுக் கொடுத்த சூழலில், அம்பரீஷின் மனைவி சுமலதாவை சுயேச்சை வேட்பாளராக நிற்க வைத்துத் தன் ஆதரவைத் தெரிவித்தது. அவரை வெற்றி பெறவும் வைத்தது. இவ்வாறு பல்வேறு தளங்களில் ஆர்.எஸ்.எஸ்./பாஜகவின் உத்திகள் அமல்படுத்தப்பட்டன. 

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு

நேர்மையான, நியாயமான தேர்தலை நடத் தும் வகையில் தேர்தல் ஆணையத்தின் செயல் பாடுகள் இருக்கவில்லை. பாஜக தரப்பில், குறிப்பாக மோடி, அமித் ஷா போன்றவர்கள், தீவிரவாத தாக்குதல்களை அரசியலாகப் பயன்படுத்தியது; சட்ட விரோதமாக நமோ டிவியைத் துவக்கியது; மத வெறியை எழுப்பும் வகையில் பேசியது போன்றவை குறித்து எதிர்க்கட்சிகள் அளித்த புகார்களை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இத்தகைய அனுபவத்தை வைத்துப் பார்க்கும் போது இனியும் பதவியில் இருக்கும் அரசாங்கம் மட்டுமே தேர்தல் ஆணைய உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் முறை நீடிக்கக் கூடாது. லோக் பால் உறுப்பினர்களைத் தேர்வு செய்ய ஒரு குழு (கொலிஜியம்) இருப்பதைப் போல்,  தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் தேர்வுக்கும் ஒரு குழு அமைக்க வேண்டும். பதவிக் காலம் முடிந்த பின், தேர்தல் ஆணைய உறுப்பினர்களுக்கு வேறு பொறுப்பு/பதவிகள் அளிப்பதைத் தடை செய்ய வேண்டும்.  மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்வதற் கான அனுமதி தேர்தல் ஆணையத்திடம் பெறுவ தும் கடினமாக இருந்தது. டயமண்ட் ஹார்பர் தொகுதியில் தேர்தல் காலத்தில் 90 நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரிய போது 18க்குத்தான் அனுமதி கிடைத்தது.

இதர காரணிகள்

அரசு நலத் திட்டங்கள், குறிப்பாக உஜ்வாலா இலவச எரிவாயு இணைப்பு திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டம் போன்றவை பல ஏழை குடும்பங்களுக்கு நம்பிக்கை ஊட்டியிருக் கிறது. பெண்களின் வாக்குகள் கடந்த தேர்தலை விட அகில இந்திய அளவில் பாஜகவுக்கு 7ரூ அதிகரித்திருப்பது இதன் விளைவாக இருக்கக் கூடும். தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பாக அல்லது தேர்தல் அன்று பலரின் வங்கிக் கணக்குக்கு மானியங்கள் நேரடி பணப்பலனாக சேர்க்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் பயிர் காப் பீடு, உதவி தொகை, பல்வேறு விஷயங்களுக் கான  மானிய தொகை கொடுக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் 86ரூ சிறு குறு விவசாயி களுக்கு 4 ஆண்டு கால நிலுவை மானிய தொகை ஒரேயடியாக தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் வழங்கப்பட்டிருக்கிறது.

இதர கட்சிகளின் சாதிய அணி திரட்டலை முறியடித்து, தமக்கு சாதகமாக அதனை மாற்ற பல நுட்பமான திட்டமிடல் (மைக்ரோ சோஷி யல் என்ஜினியரிங்) பாஜக தரப்பில் செய்யப் பட்டிருக்கிறது. உதாரணமாக, உபி மாநிலத்தில், பகுஜன் சமாஜ் கட்சி, தலித் வகுப்பினரில் ஜாதவ் என்ற பிரிவினரைத் தன் செல்வாக்கில் வைத்துக் கொண்டபோது,  ஜாதவ் அல்லாத தலித் பிரி வினரை பாஜக தன் வசமாக்கியது. சமஜ்வாதி கட்சி யாதவ சமூகத்தில் செல்வாக்கு செலுத்திய பின்னணியில், யாதவ் அல்லாத பிற்பட்ட வகுப் பினரை பாஜக அணி திரட்டியது. அதே போல் பல்வேறு பழங்குடியின சமூகங்களை ஒருங்கிணைத்தது. ‘இந்துக்கள்’ என்ற அடையாளம் கொடுத்து பல்வேறு சாதிகளை  திரட்டியது.

மின்னணு வாக்கு இயந்திரங்கள்

இந்த இயந்திரங்களைப் பயன்படுத்தி, தவறான முறையில் வாக்குகளை பாஜக பெற்றதாக ஊடகச் செய்திகள் வருகின்றன. ஃபிரண்ட்லைன் பத்திரிகை, மஹாராஷ்டிராவில் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டப்படி பெற்ற விவரங்களைப் பயன்படுத்தி, தேர்தல் ஆணையம் வாங்கிய இயந்திரங்களுக் கும், பயன்படுத்திய இயந்திரங்களுக்கும் இடையே 19 லட்சம் இயந்திரங்கள்  இடைவெளியாக இருந்தன; அப்படியானால் அவை எங்கே என்ற கேள்வியை எழுப்பியது. 370 தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும், மின்னணு இயந்திரத்தில் எண்ணப் பட்ட வாக்குகளுக்கும் இடையே வேறுபாடு இருந்தது என்று ஊடகச் செய்திகள் வந்துள்ளன. உதாரணமாக, பீஹாரில் பாட்னாசாஹிப் தொகுதியில் 65,000 வாக்குகளும், குஜராத்தில் ஆனந்த் தொகுதியில் 1,32,000 வாக்குகளும் பதிவான வாக்குளைவிட எண்ணப்பட்ட வாக்குகள் அதிகமாக இருந்துள்ளன. இப்பிரச்னை காரணமாகத் தேர்தல் ஆணையத் தால் இதுவரை அகில இந்திய அளவில் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த வாக்கு சதவீதத்தை அறிவிக்க முடியவில்லை. மின்னணு வாக்கு இயந்திரம் பற்றி இவ்வாறு எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்து ஆய்வு செய்வது  என்று  மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு முடிவு செய்துள்ளது.

காங்கிரசின் தோல்வி

2014 தேர்தலை விட 8 தொகுதிகளில் கூடுதலாக 52ல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. வாக்கு சதவீதத்தையும் அது தக்க வைத்துக் கொண் டுள்ளது. பாஜகவைத் தோற்கடிக்க மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை, செல் வாக்கு சரிந்துள்ள நிலையில் இடதுசாரி கட்சி களால்  செய்ய இயலவில்லை. அடுத்து ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்துடன் செயல்பட்ட காங்கிரஸ் அப்பணியை செய்திருக்க வேண்டும். ஆனால் அதில் மிகுந்த பலவீனம் இருந்தது. உதாரணமாக, டெல்லியில் ஆம் ஆத்மியுடனும், உபியில் பகுஜன் சமாஜ், மற்றும் சமஜ்வாதி கட்சிகளுடனும் காங்கிரஸ் கூட்டு வைத்திருந்தால் சில தொகுதிகளிலாவது பாஜகவை முறியடிக்க முடிந்திருக்கும்.  அவர்கள் சமீபத்தில் சட்டமன்றத்தில் வெற்றி பெற்ற ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசத்திலும் இதர கட்சிகளை ஒருங்கிணைக்கவில்லை. மேற்கு வங்கத்தில் ஏற்கனவே அவரவர் வெற்றி பெற்ற 6 தொகுதிகளில் பரஸ்பரம் போட்டி வேண்டாம் என்ற இடது முன்னணியின் குறைந்தபட்ச வேண்டுகோளைக் கூட அக்கட்சி நிராகரித்து விட்டது. கேரளாவில் வயநாட்டில் அதன் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி இடது ஜனநாயக முன்னணியை எதிர்த்துப் போட்டியிட்டார். பாஜக எதிர்ப்பைக் காட்டிலும் இடதுசாரிகளுக்கு எதிரான போட்டிக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் கொடுத்ததான தோற்றமே ஏற்பட்டது.

பாஜகவின் மதவெறி நடவடிக்கைகளைத் தேர்தலுக்கு முன்னும், தேர்தல் பிரச்சாரத்தின் போதும் தேவையான அளவு அம்பலப்படுத்த காங்கிரஸ் தவறி விட்டது. மென்மையான இந்துத்வாவைக் கடைப்பிடித்தது. முரண்பாடு இந்துத்வாவுக்கும் மதச்சார்பின்மைக்கும் தானே தவிர, மென்மையான இந்துத்வாவுக்கும், கடுமை யான இந்துத்வாவுக்கும் அல்ல.  இதர கட்சிகளும் இது குறித்த திறன் மிக்க பிரச்சாரத்தை நடத்த வில்லை.

மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் உத்தி

பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும்; நாடாளு மன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள் கூடுதலாக இடம் பெற வேண்டும்; மத்தியில் ஒரு மதச்சார்பற்ற அரசை அமைக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் உத்தியின் உள்ளடக்கமாக இருந்தது. மாநிலத்துக்கு மாநிலம் நிலைமைகள் வித்தியாசமாக இருந்த பின்னணி யில், அகில இந்திய அளவில் ஒரு கூட்டணி சாத்தியம் இல்லை என்ற புரிதலோடு, பாஜக எதிர்ப்பு வாக்குகளை ஒருமுகப்படுத்தி குவிக்க வேண்டும் என்ற அளவில், மாநிலங்களில் இந்த உத்தியை அமல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பாஜக தோற்கடிக்கப் பட்டது. பொதுவாக உத்தியின் 3 அம்சங்களும் நிறைவேறவில்லை என்பதே தேர்தல் முடிவுகள் காட்டும் செய்தியாகும்.

கேரளாவைப் பொறுத்தவரை இடது ஜனநாயக முன்னணிக்கு 5.1ரூ வாக்குகள் குறைந்துள்ளன. காங்கிரசுக்கு 5.10ரூம், பாஜகவுக்கு 4.76ரூம் அதிகரித்துள்ளன. பொதுவாக சட்டமன்றத்துக் கும் நாடாளுமன்றத்துக்கும் வித்தியாசமாக வாக்களிப்பது கேரளாவின் அனுபவம்.  மேலும், இடது ஜனநாயக முன்னணி 1977ல் ஒரு தொகுதி கூட வெற்றி பெறாததும், 2004ல் 20க்கு 18ல் வெற்றி பெற்றதும் நிகழ்ந்திருக்கிறது. பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்த சிறுபான்மை வகுப்பினரும் (மக்கள் தொகையில் இவர்கள் சுமார் 45ரூ), இதர சக்திகளும் மத்தியில் ஆட்சி அமைக்க காங்கிரசால் முடியும் என்ற நம்பிக்கையோடு அவர்களுக்கு வாக்களித்தனர். மேலும், சபரிமலை பிரச்னையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியும், மாநில அரசும் எடுத்த நிலைபாடு சரியானது, இதைத் தவிர வேறு நிலைபாட்டை எடுத்திருக்க முடியாது. ஆனால், துவக்கத்தில் நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்த காங்கிரஸ், பாஜக கட்சிகள், மாநில அரசுக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் எதிராக இதனை மாற்ற முடியும் என்ற நிலையில், எதிர் நிலை எடுத்து, கடுமையான பிரச்சாரம் செய்ததில், மத நம்பிக்கை உள்ளவர்கள் மத்தியில் ஒரு குழப்பம் ஏற்பட்டது. அதில் ஒரு பகுதியினர், பாரம்பர்யமாக மார்க் சிஸ்ட் கட்சிக்கு வாக்களிப்பவர்கள், மாற்றி வாக்களித்துள்ளனர். இவர்களை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. சபரிமலை பிரச்னையில் சரியான நிலைபாடு எடுத்திருந்தாலும், வெவ் வேறு அளவில் பல்வேறு பகுதிகளில் இதனால் பாதிப்பு நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும் மாநில அரசின் நடவடிக்கைகள் மீது பொதுவாக இருக் கும் நன்மதிப்பு வாக்குகளாக ஏன் மாறவில்லை என்று பரிசீலிக்க வேண்டும். பாஜக ஒரு தொகுதி யில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும், வாக்கு சதவீதம் 15ரூக்கு மேல் என்பது ஒரு அபாய எச்சரிக்கையே. பல்வேறு தொகுதிகளில் பாஜக, தன் ஒரு பகுதி வாக்குகளை காங்கிரசுக்கு மடை மாற்றம் செய்யும் வழக்கமான வேலை இந்தத் தேர்தலிலும் நடந்தது.

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி அடைந் திருக்கும் படு தோல்வி, கட்சியின் வரலாற்றிலேயே இதுவரை காணாதது. இடது முன்னணிக்கு 7.44ரூ மட்டுமே வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. கடும்  வன் முறை, அச்சுறுத்தல்கள், வாக்குச்சாவடி கைப் பற்றல் ஆகிய பிரச்னைகளுக்கு மத்தியில் தேர்தல் நடந்தது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் மீதான எதிர்ப்புணர்வு வலுவாக இருந்தது. அவர்களின் வன்முறையை முறியடிக்க இடது சாரிகளை விட பாஜகவால்தான் முடியும் என்ற உணர்வு இருந்தது. அதேபோல் பாஜகவைத் தோற்கடிக்க நினைத்தவர்கள், திரிணமூல் காங் கிரசையே மாற்றாகப் பார்த்தார்கள். பாரம்பரிய மாக இடதுசாரிகளுக்கு வாக்களிக்கும் ஒரு பகுதியினர் திரிணமூல் மீதான வெறுப்பின் காரணமாக பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். இது மதவெறியைக் குறைத்து மதிப்பிடுவதாகும். மக்கள் பிரச்னைகளில் போராட்டங்களை உருவாக் கும்போது இடது முன்னணிக்கு ஆதரவாக வரும் மக்கள், தேர்தலில் அதே அளவு ஆதரிக்கவில்லை.

பொதுவாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக இடது முன்னணியின் சரிந்து வரும் வாக்கு சதவீ தம், அதிக அளவு வன்முறையை சந்திக்க வேண்டிய நிலை போன்றவையும் இதற்கு ஒரு காரணம்.  சிறுபான்மை மத அடிப்படைவாதிகளை திரிண மூல் காங்கிரஸ் தாஜா செய்யும் முறையானது, பெரும்பான்மை மதவாதத்தை தூண்டி விட பாஜகவுக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு மத வெறியைக் கிளப்பி விடும் சூழலில், ஜனநாயகத் துக்கான இடதுசாரிகளுக்கான வெளி குறைகிறது. தேர்தல் களத்தில் திரிணமூல், பாஜக இரண்டு கட்சிகள்தான் நிற்கின்றன; மற்ற கட்சிகள் அருகில் கூட இல்லை என்ற திட்டமிட்ட பிரச் சாரத்தை ஊடகங்கள் செய்தன. கடந்த 50 ஆண்டு களில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவ முடியாத மேற்கு வங்கத்தில் திரிணமூல் ஆட்சியில் ஷாகாக்கள் அதிகரித்துள்ளன. 47 மதவெறி தாக்குதல்கள் நடந்துள்ளன. கடந்த 8 ஆண்டுகளில் 209 மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் சேர்த்து சுமார் 40,000 பேர் குடியிருப்பிலிருந்து வெளி யேற்றப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில்தான் கட்சி உறுப்பினர்கள் செயல்படுகின்றனர். மத வெறிக்கு எதிரான வலுவான, சித்தாந்த ரீதியான போராட்டத்தை மக்கள் மத்தியில் செய்வதன் மூலமாகத்தான் இந்த இரு கட்சிகளின் போட்டி மதவெறி அபாயத்தைக் குறைக்க முடியும். இடது சாரிகளின் அரசியல் செல்வாக்கிலிருந்து விலகிச் சென்றவர்களை மீட்டெடுப்பது முன்னுரிமை கடமையாக இருக்கிறது.

திரிபுராவில் வன்முறை, அச்சுறுத்தல், நிர்வாகம் மற்றும் காவல்துறையின் முழு உதவி, தேர்தல் ஆணையத்தின் பாராமுகம் போன்றவை பாஜக வெற்றி பெற உதவி செய்தன. திரிபுரா மேற்கு தொகுதியில் மொத்த வாக்குச்சாவடிகளில் 50ரூக்கும் மேல் கள்ள ஓட்டு, வாக்குச்சாவடி கைப் பற்றல் நடந்த பின்னணியில் மறு வாக்குப்பதிவு கேட்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் ஒரு குழுவும் விசாரணை செய்து, பிரச்னை நடந் தாகவே அறிக்கை கொடுத்தது. ஆனாலும் 168 வாக்குச்சாவடிகளில், அதாவது நாம் கோரியதில் 20ரூ வாக்குச்சாவடிகளில் மட்டுமே மறு வாக்குப் பதிவு நடத்தப்பட்டது. இந்த 168 வாக்குச்சாவடி களில் மறுவாக்குப்பதிவு என்பதும் கூட, இந்தியாவிலேயே மிக அதிகமான ஒன்றாகும். கிழக்கு தொகுதியிலும் பல பிரச்னைகள் நடந்தன. பெரும்பாலான இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சி யின் ஊழியர்கள் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்யவே போக முடியவில்லை. தொடர்ச்சி யான வன்முறைக்கு மத்தியில் கட்சி கிளைகளில் பெரும்பகுதியை கூட்டவே முடியவில்லை.

பொதுவாக

மார்க்சிஸ்ட் கட்சியின் சொந்த பலமும், மக்கள் பிரச்னைகளில் தலையீடு செய்யும் திறனும் பல வீனமடைந்துள்ளது. வாக்கு சதவீதம் தொடர்ந்து சரிகிறது. வர்க்க, வெகுஜன அமைப்புகள் மூலமாகக் கிடைக்கும் தொடர்புகளை அரசியல்படுத்துவ தில் குறைபாடு உள்ளது. போராட்டங்களில் வருபவர்களை அரசியல்படுத்தத் தவறும்போது, வெகுஜன தளம் உருவாகாது; தேர்தல் வாக்குகளி லும் அது பிரதிபலிக்காது. இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்க வேண்டியிருக்கிறது. அடிப் படை வர்க்கங்களின் வாக்குகள் கிடைப்பதில்லை. இவற்றை சரி செய்வதற்கு கூடுதல் கவனத்தோடு அரசியல் ஸ்தாபன பணிகளை ஆற்ற வேண்டும். இழந்த தளங்களை மீட்க வேண்டும். ஸ்தாபன பிளீனம் எடுத்த முடிவுகளை அமல்படுத்தியது பற்றி பரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக, மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு என்ற ஸ்தாபன பிளீனத்தின் சாராம்சத்தை உள்வாங்க வேண்டும்.

வரவிருக்கும் 5 ஆண்டுகளில், பாஜக அரசு உழைக்கும் மக்களின் வாழ்வுரிமை மீது கூடுதல் தாக்குதல்களைத் தொடுக்கும். மத அடிப்படை யில் மக்களைப் பிரிக்கும் வேலையைக் கடுமை யாக முன்னெடுக்கும். கருத்துச் சுதந்திரம் பறிப்பு, போராட்டங்கள் ஒடுக்கப்படுவது போன்ற நட வடிக்கைகள் அதிகரிக்கும். பொதுத்துறை தனி யார்மயமாக்கப்படுவது விரைவாகும். கார்ப் பரேட்டுகளுக்கு சாதகமாக நிலங்கள் பறிக்கப் படும். தலித், சிறுபான்மை, பெண்கள் மீதான  ஒடுக்குமுறை அதிகரிக்கும். மதச்சார்பின்மை மீது பெரும் தாக்குதல் வரும். மதச்சார்பற்ற, ஜனநாயக பூர்வமான இந்திய கட்டமைப்பு இந்து ராஷ்டிர மாக மாற்றப்பட திட்டமிட்ட முயற்சிகள் தீவிர மாக மேற்கொள்ளப்படும். திரிபுரா, மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளைப் பின்னுக்குத் தள்ளிய பின், கேரளாதான் அடுத்த குறி. பரந்து பட்ட மக்களைத் திரட்டியே நம்மால் இவற்றை எதிர்கொள்ள முடியும்.

இது சோர்வடையும் தருணமல்ல; பரிசீலனை செய்து, படிப்பினைகளைப் பெற்று, துணிச் சலாக முன்னேற வேண்டிய நேரம். சவால்களை எழுச்சியோடு சந்திக்க வேண்டிய நேரம். தேர்தல் வெற்றி தோல்விகளைத் தாண்டிய கண்ணோட்டம் இடதுசாரிகளுக்கு உண்டு. சமூக மாற்றத்தை ஏற்படுத்த, அரசியல் மாற்றை முன்னெடுக்க, சோஷலிசத்தை நோக்கி முன்னேற உறுதி பூண்டுள்ள இயக்கம் இது. இடதுசாரிகள் எதிர்ப்பது இந்த அல்லது அந்த அரசியல் கட்சி மட்டுமல்ல. ஏகாதி பத்திய, ஏகபோக, நிலப்பிரபுத்துவ சக்திகள், சாதியம், மத வெறி, பணபலம் உள்ளிட்ட எதிரி களை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் உண்டு. இடதுசாரிகள் வீழ்ந்து விட்டனர் என்று பிரச் சாரம் செய்யப்படுகிறது. உலக அளவிலும், இந்தியாவிலும் இதை விட மோசமான நிலைக் குத் தள்ளப்பட்டபோதெல்லாம் மீண்டு வந்திருக் கும் இயக்கம்தான் மார்க்சிய இயக்கம். அரசியலில் வலதுசாரி திருப்பத்துக்கு ஒரே பதில் இடதுசாரி திருப்பம்தான். இதை அடைய குறுக்கு வழி எதுவும் கிடையாது. இடை விடாத அரசியல், ஸ்தாபன, சித்தாந்த செயல்பாடு கள் இதற்குத் தேவைப்படுகின்றன.