தேர்தல்களும், மார்க்சியவாதிகளும் …

பிரகாஷ் காரத்

(சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்களை ஒட்டி, மார்க்சிஸ்ட் இதழில் ஆசிரியர் குழு முன்வைத்த கேள்விகளுக்கு, கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பதில்கள்)

  • இன்றைய காலகட்டத்தில் தேர்தல்களில் பணபலம் முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது.  இந்நிலையில் தேர்தல்களில் தங்களது இருப்பை காட்டுவது என்பது இடதுசாரிகளுக்கு மிகுந்த சிரமமான ஒன்றாக ஆகிவிடுகிறது.  இந்நிலையை எப்படிக் கையாள்வது? தேர்தல் பணிகளில் ஈடுபடுவதற்கு பணம் கொடுப்பது என்ற நடைமுறைக்கு அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் பழகிவிட்டனர்.  இதன் காரணமாக பணம் கொடுக்காமல் அவர்களை தேர்தல் வேலைகளில் நடைமுறையில் ஈடுபடுத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையை எவ்வாறு கையாள்வது?

முதலாளித்துவ சமூக அமைப்பில் தேர்தல்களில் எப்போதும் பணம் பெரும் பங்கை ஆற்றிடும்.  எனவேதான், மக்களின் அரசியல் புரிதலை உயர்த்துவது அவசியமாகிறது.  தேர்தல்களில் பணத்தை பயன்படுத்துவது தொடர்பாக விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் உள்ளன என்பதை நாம் வற்புறுத்த வேண்டும்.  சில வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் இத்தகைய கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.  முழுமையாக இல்லை என்றாலும் கூட அவை ஓரளவிற்கு பலனளிக்கின்றன.  பூர்ஷ்வா கட்சிகளின், குறிப்பாக ஆளும் கட்சிகளின் பணபலத்தை எதிர்கொள்வது என்பது இடதுசாரிக் கட்சிகளைப் பொறுத்தவரை மிகக் கடினமான காரியமாகும்.  வலுவான அரசியல் பிரச்சாரத்தை மக்களிடையே நடத்துவதற்கான வழிமுறைகளை நாம் கண்டறிந்திட வேண்டும்.  இத்தகைய பிரச்சாரங்களுக்கு நிதியாதாரம் தேவையாகும்.  கம்யூனிஸ்ட் கட்சியானது தனது நிதியாதாரத்தை மக்களிடமிருந்தே திரட்டிட வேண்டும்.  இவ்வாறு திரட்டிய நிதியைக் கொண்டே நம்மால் பிரச்சாரத்தை நடத்த இயலும்.  இதைத் தவிர வேறு வழி ஒன்றும் இல்லை.  பூர்ஷ்வா கட்சிகளைப் பொறுத்தவரை, அவர்கள் பிரச்சாரங்களுக்கு பணம் கொடுத்து மக்களை/ஊழியர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.  இப்படி கம்யூனிஸ்ட் கட்சியால் செய்யமுடியாது,  அது அப்படி செய்யவும் செய்யாது. மக்களிடையே அரசியல் வேலைகளில் ஈடுபடுவது என்ற கருத்துக்கு எதிரானது என்பதால் கம்யூனிஸ்ட் கட்சி இத்தகைய செயல்களில் ஈடுபடாது.  எனவே, தேர்தல் நேரங்களில் மக்களிடையே செயல்படுவதை நிறைவேற்ற வேண்டிய அரசியல் கடமையாக எண்ணி அரசியல் அர்ப்பணிப்போடும், உணர்வுமட்டத்தோடும் செயல்படும் தொண்டர்களைக் கொண்டிருக்க வேண்டும்.  பிரதானமான அரசியல் பிரச்சனைகளை எழுப்பி, அதன் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நம்மால் முடிகிறபோதே இது சாத்தியமாகும்.  அப்போதுதான் கட்சிகளோ அல்லது தொண்டர்களோ பணம் கொடுத்தால்தான் வேலை செய்வது என்றில்லாமல் தாமாக முன் வந்து வேலை செய்யும் கலாச்சாரம் உருவாகும். 

தமிழகத்தில் இன்றைக்கு இக்கேள்வி முன்னுக்கு வந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம், இன்றைக்கு நாட்டில் வேறெந்த பகுதியிலும் இல்லாத அளவிற்கு பணபலம் இங்கு பயன்படுத்தப்படுகிறது.  ஆந்திராவிலும், வேறு சில இடங்களிலும் மட்டும்தான் இவ்வாறு பணபலம் பயன்படுத்தப்படுகிறது.  வாக்காளர்களுக்கே பணம் பட்டுவாடா செய்யப்படுவது என்பது ஊழலின் சில்லறை வடிவமாகும். சமீபத்திய சட்டமன்ற தேர்தல்களின்போது சில பிரதான கட்சிகள் தங்களது பொதுக்கூட்டங்களிலும், ஊர்வலங்களிலும் மக்கள் கலந்து கொள்ள எவ்வாறு பணத்தை மக்களுக்கு விநியோகித்தது என்று பார்த்தோம்.  எனவே, இத்தகைய பிரச்சனையை இடதுசாரி கட்சிகள் தமிழகத்தில் சந்தித்து வருகின்றன.  தன்னலம் பாராது மக்களிடையே செயல்படுவதோடு, அரசியல் பிரச்சனைகளை எழுப்பி, அவற்றின்பால் மக்களை ஈர்த்து அல்லது இத்தகைய அரசியல் பிரச்சனைகளில் மக்களை ஈடுபடுத்துவதன் மூலம் தேர்தல்களின் போது இலக்கை உயர்த்துவதன் மூலம் மட்டுமே இது சாத்தியம் என நான் கருதுகிறேன். 

மேலும், பணபலத்தைக் கொண்டு வரம்பிற்கு உட்பட்ட செல்வாக்கினையே  மக்கள் மீது செலுத்த இயலும்.  ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக பல கோடிக்கணக்கான ரூபாய்களை சட்டமன்ற தேர்தல்களில் செலவு செய்தது.  இருந்தபோதும், அவர்கள் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.

  • வழக்கமான பிரச்சார வடிவங்கள் மூலம் தொகுதியில் வாக்காளர்களை சென்றடைவது சிரமமாகிறது.  நவீன வடிவங்களில் பிரச்சாரங்களை மேற்கொள்ள ஏராளமான வளங்கள் தேவைப்படுகின்றன.  இத்தகைய மாற்றங்களுக்கு இடதுசாரிகள் ஈடுகொடுக்க வேண்டியுள்ளது.  இதனை எவ்வாறு செயல்படுத்துவது?

ஆம். இன்றைய தகவல் தொழில்நுட்ப, இணைய தள, சமூக ஊடக யுகத்தில் வழக்கமான வடிவங்களிலான பிரச்சாரங்கள் போதுமானவையல்ல.  எனவே, நாம் நம்மை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.  மேலும், சமூக ஊடகங்களை பயனுள்ள வகையில் உபயோகித்திட வேண்டும்.  தொழில்நுட்பத்தையும், தகவல் தொழில்நுட்பத்தையும் பெரிய அளவிற்கு பயன்படுத்திட வேண்டும்.  இவற்றை ஜனநாயக ரீதியாக, கூட்டாக செயல்படுத்தினோமேயானால்,  அதிக அளவில் பணத்தை கொடுத்து தனியார் நிறுவனங்களைச் சார்ந்திருந்து உங்களது பிரச்சாரத்தை நடத்திட வேண்டியிருக்காது.  இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தக் கூடிய, மக்களிடையே பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடிய வகையில் புதுமையான உள்ளடக்கத்தை உருவாக்கிடும் குழுக்களை நாம் உருவாக்கிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பிரச்சாரங்களுக்கு ஊழல் பணத்தையும், வாக்காளர்களுக்கு பணத்தை அளிக்க வேண்டியும் இருக்காது.

  • தேர்தல் ஆணையம் அதிகாரம் இல்லாது இருக்கிறது.  அவர்கள் மேற்கொள்ளும் ஒரு சில நடவடிக்கைகளுமே கூட, பிரச்சாரம் செய்யும் இடங்கள், பிரச்சார வடிவங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளையே ஏற்படுத்துகின்றன.  அடிப்படை பிரச்சனைகளுக்கு உரிய தீர்வை அவர்கள் அளிப்பதில்லை.  இந்நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன?

தேர்தல் பிரச்சாரங்களை நடத்துவது, மட்டுப்படுத்துவது, கட்டுப்படுத்துவது ஆகியனவற்றை செய்வதில் தேர்தல் ஆணையத்தின் பங்கு என்பதை பரந்துபட்ட கோணத்தில் பார்க்க வேண்டும்.  தேர்தல் செலவுகளுக்கான நிதியை அரசு அளிப்பது என்பது குறித்து நாம் பேசி வருகிறோம்.  இன்றைய சூழலில் தேர்தல்களில் பணம் கோலோச்சி வருவதை தடுப்பதில் தேர்தல் ஆணையத்தால் அதிகளவில் செயல்பட முடியாது. ஆனால், தேர்தலுக்கான நிதியை அரசு அளித்தால் அதன் மூலம் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளத் தேவையான வளங்களையும்ம், ஆதரவையும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அளித்திட இயலும்.  இவ்வாறு செய்வதன் மூலம் தேர்தல்களில் பணம் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதை பெருமளவில் தடுத்திடலாம்.  அதே நேரத்தில், தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தையும், தன்னாட்சியையும் பாதுகாத்திடவும், அரசியலமைப்புச் சட்டம் அதற்கு அளித்துள்ள கடமைகளை நிறைவேற்றிடவும் சில விதிகளில் மாற்றங்களை கொண்டு வருவது மட்டும் போதாது.  மாறாக, தேர்தல் ஆணையத்தின் கட்டமைப்பில் சீர்திருத்தங்களும், மாற்றங்களும் செய்யப்பட வேண்டும்.  உதாரணமாக, தலைமைத் தேர்தல் ஆணையரும், இதர இரண்டு தேர்தல் ஆணையர்களும் அதிகாரத்தில் இருக்கும் அரசாலேயே நியமிக்கப்படுகிறார்கள்.  இதனாலேயே அவர்கள் அரசுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்கிறார்கள்.  தேர்தல் ஆணையரை நியமிப்பதில் கூடுதல் சுயேச்சையான வழிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும்.  சீர்திருத்தம் என்பது தேர்தல் ஆணையத்திலிருந்தே துவங்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

  • வேட்பாளரின் குற்றப் பின்னணி குறித்த விவரங்களை வெளியிடுவது என்பது ஒரு நல்ல நோக்கமே.  ஆனால், அதனை பத்திரிகைகள்/ஊடகங்களில் வெளியிடுவதற்கான செலவுகளை அவர்களே ஏற்க வேண்டுமென்பது அடித்தட்டு மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகளுக்கு மிகப் பெருஞ்சுமையாக ஆகிவிடுகிறதே.  இதற்கு நம் தரப்பிலிருந்து எத்தகைய ஆலோசனைனை முன்வைத்திடலாம்?

இது ஒன்றும் மிக முக்கியமான விஷயமல்ல.  வேட்பாளரின் குற்றப் பின்னணி எனும் சொற்றொடரே தவறான புரிதலுக்கு இட்டுச் செல்லக் கூடிய ஒன்றாகும்.  குற்ற வழக்குகள் எனக் கருதப்படக் கூடிய வழக்குகள் எந்தவொரு அரசியல் செயல்பாட்டாளர் அல்லது தலைவரின் மீதும் இருக்கும்.  நீங்கள் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்து, பிரிவு 144ஐ மீறியிருந்தால், உங்களுக்கு எதிராக குற்ற வழக்கு இருக்கும்.  பல்வேறு வடிவங்களிலான போராட்ட இயக்கங்களை நடத்தும் போது நீங்கள் சட்டத்தை மீறியிருந்தால் உங்களுக்கு எதிராக வழக்குகள் இருக்கும்.  எனவே, இது தவறான புரிதலுக்கு இட்டுச் செல்லும் சொற்றொடராகும்.  குற்ற வழக்குகள் என்றால் எத்தகைய குற்றங்கள் என்று குறிப்பிடப்பட வேண்டும்.  பாலியல் வல்லுறவு, கொலை அல்லது இதர மிகக் கொடூரமான குற்றங்கள், பெருமளவில் பணமோசடியில் ஈடுபட்டது போன்ற குற்றங்கள் ஏதேனும் செய்துள்ளாரா?  எனவே, உச்சநீதிமன்றம் மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து வேட்பாளரின் குற்றப்பின்னணியை வெளியிட வேண்டும் என்று மட்டும் சொல்வது அர்த்தமற்றது என நான் கருதுகிறேன். ஆனால் அப்படி வெளியிடும்போது, அதற்கான செலவுகளை வேட்பாளரின் மீது திணிக்கப்படக் கூடாது என்பது சரியானதே.  இதற்கான செலவுகளை அரசு ஏற்பதற்கான வழிமுறைகள் கண்டறியப்பட வேண்டும்.

  • மின்னணு வாக்கு இயந்திரங்கள் பற்றி சந்தேகங்கள் உள்ளன.  விவிபேட் இயந்திரங்கள் மூலம் சரிபார்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தேர்தல் ஆணையத்தால் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.  நாடாளுமன்ற தேர்தல்களின்போது பதிவான வாக்குகளின் எண்ணிக்கை குறித்து சர்ச்சை ஏற்பட்டது.  அது இன்னமும் தீர்க்கப்படாமலும் உள்ளது.  தேர்தல்களில் வாக்குச் சீட்டு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாம் ஏன் முன்வைக்கக் கூடாது?

என்னைப் பொறுத்தவரை மின்னணு வாக்கு இயந்திரம் என்பது முந்தைய வாக்குச் சீட்டு முறையிலிருந்து ஒரு படி முன்னேற்றம் ஆகும்.  அது ஒரு சிறந்த முறையாக இருக்கக் கூடும்.  அதே நேரத்தில், மின்னணு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து சந்தேகங்கள் உள்ளன.  ஒரு சில ஆண்டு காலமாக, மின்னணு வாக்கு இயந்திரங்களிலும், அவற்றின் செயல்பாடுகளிலும் முன்னேற்றங்களை நாம் கோரி வருகிறோம்.  இத்தகைய விவாதங்களின் அடிப்படையிலேயே வாக்காளர் இயந்திரத்தின் பொத்தானை அழுத்தி எந்த வேட்பாளருக்கு வாக்களித்தார் என்பதை தாளில் பதிவு செய்யும் விவிபேட் நடைமுறை ஒரு சில ஆண்டுகளுக்கு முன் வடிவமைக்கப்பட்டது.  ஆனால் தற்போதும் வாக்கு இயந்திரத்தின் தொழில்நுட்ப நடைமுறையின் வரிசைக்கிரமம், அதாவது முதலில் வாக்காளர் இயந்திரத்தில் பொத்தானை அழுத்துவது, பின்னர் விவிபேட் வழியாக தாளில் அதை பதிவு செய்வது, அதன் பின்னர் இறுதியாக அவரது வாக்கு திரையில் பதிவது என்று உள்ளது.  நம்மைப் பொறுத்தவரை இந்த வரிசைக்கிரம் மாற்றப்பட வேண்டும்.   அதாவது இந்த வரிசைக்கிரமத்தில் மத்தியில் உள்ள விவிபேட் பதிவு இறுதியில் இருந்திட வேண்டும்.  இதன் மூலம் வாக்காளர் பொத்தானை அழுத்தியவுடன், அவரது வாக்கு திரையில் பதிவு செய்யப்பட்ட வின்னர், விவிபேட் இயந்திரத்தில் தோன்றி அதன் பின்னர் அவரது வாக்கு பதிவு செய்யப்பட்ட தாள் முத்திரையிடப்பட்ட வாக்குப் பெட்டிக்குள் செல்கிறது.  மின்னணு வாக்குப் பதிவின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பது இரண்டாவது அம்சமாகும்.  இது குறித்தே பெரும்பாலான அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பின.  ஒரு குறிப்பிட்ட தொகுதியில் 10 சதவீத வாக்கு சாவடிகளை மாதிரியாக எடுத்துக் கொண்டுஅவற்றின் 10 சதவீத வாக்குகளை சரிபார்க்க வேண்டும் என்று கோரப்பட்டது.  பதிவான வாக்குகளின் எண்ணிக்கைக்கும் இயந்திரத்தில் உள்ள எண்ணிக்கைக்கும் இடையே வித்தியாசம் காணப்பட்டால் அந்த குறிப்பிட்ட வாக்கு சாவடியில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.  ஆக, மின்னணு வாக்கு இயந்திர நடைமுறையில் இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.  அவ்வாறின்றி மீண்டும் வாக்குச் சீட்டு நடைமுறைக்கே திரும்புவது என்பது தீர்வாகாது.  இப்பிரச்சனைக்கு தீர்வென்பது மின்னணு வாக்கு இயந்திரத்தில் வாக்களிப்பது என்ற தொழில்நுட்ப நடைமுறையை குறைபாடுகள் இல்லாததாக செய்வதிலேயே உள்ளது.  துரதிர்ஷ்டவசமாக, மின்னணு வாக்கு இயந்திர செயல்பாடுகளின் வரிசைக்கிரமத்தில் மாற்றத்தைக் கொண்டு வர தேர்தல் ஆணையம் ஒப்புக் கொள்ளவில்லை.  இத்தகைய நடவடிக்கைகளுக்கான கோரிக்கை அதிகளவில் முன்னுக்கு வரும் என்றே நான் நினைக்கிறேன்.  மின்னணு வாக்கு இயந்திர நடைமுறையில் முன்னேற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.

  • ஒவ்வொரு முறை தேர்தல் முடிந்த பிறகும் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து நாம் பேசுகிறோம்.  ஆனால், இது மக்களிடையே இன்னமும் வேகம் பெறவில்லை.  இப்பிரச்சனையில் குறிப்பிட்ட வடிவங்களில், அறைகூவல்களில் நாம் ஏன் இயக்கங்களை மேற்கொண்டு மக்களின் கருத்தைத் திரட்டிடக் கூடாது?

விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்பது நல்ல கருத்தாகும்.  இது தொடர்பாக உலக அரங்கில் ஏதேனும் சிறந்த முன்னுதாரணங்களைக் குறிப்பிட இயலுமா?

நம்மைப் பொறுத்தவரை தேர்தல் சீர்திருத்தங்கள் என்பது அடிப்படையான ஒன்றாகும்.  தேர்தல்கள் நடைபெற்று முடிந்த பின்னர் மட்டுமே நாம் இப்பிரச்சனையை எழுப்புவதில்லை.  இதன் அடிப்படை அம்சமாக இருப்பது தேர்தல் நடைமுறையிலேயே மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதாகும்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் பகுதி பட்டியல் நடைமுறையோடு (partial list system) கூடிய விகிதாச்சார பிரதிநிதித்துவத்தையே எப்போதும் பரிந்துரைத்து வருகின்றன.  விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்றால் என்ன பொருள்?  அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடும்.  அதன் பின்னர் மக்கள் சம்பந்தப்பட்ட கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்பதே அதன் பொருளாகும்.  மக்கள் கட்சிக்கே வாக்களிப்பார்களேயன்றி, தனிப்பட்ட வேட்பாளர்களுக்கல்ல.  ஒரு கட்சிக்கு கிடைத்த வாக்குகளின் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலிலிருந்து உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  உதாரணத்திற்கு, ஒரு மாநில சட்டசபையில் 100 இடங்கள் உள்ளன.  இந்த 100 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நடந்த சட்டசபை தேர்தல்களில் ஒரு கட்சிக்கு 10 சதவீத வாக்குகள் கிடைத்தன என்றால், மொத்த 100 இடங்களிலிருந்து அக்கட்சிக்கு 10 இடங்கள் கிடைக்கும்.  விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் அடிப்படை அம்சம் இதுவேயாகும்.  ஆனால், பகுதி பட்டியல் நடைமுறையோடு கூடிய விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்று நாம் குறிப்பிடுவதன் பொருள், விகிதாச்சார பிரதிநிதித்துவம் மற்றும் பிராந்திய அடிப்படையிலான பிரதிநிதித்துவம் ஆகியவற்றின் கலவையாகும்.  அதாவது,  பிராந்திய அடிப்படையிலான தொகுதிகள் இருக்கும்.  இத்தொகுதிகளுக்கான பிரதிநிதிகள் அத்தொகுதிகளின் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  அதனுடன் கட்சியின் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சட்டமன்ற இடங்களும் இருக்கும்.  ஆக, மொத்த இடங்களில் 50% இடங்களுக்கு பிராந்திய அடிப்படையிலான தொகுதிகளிலிருந்தும், மீதி 50% இடங்களுக்கு கட்சியின் பட்டியலிலிருந்து தேர்வு செய்யும் நடைமுறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.  இந்நடைமுறையின் கீழ், வாக்காளர் ஒருவர் இரண்டு வாக்குகளை அளிப்பார்.  ஒரு வாக்கை பிராந்திய அடிப்படையிலான தொகுதியின் வேட்பாளருக்கும், மற்றொரு வாக்கை கட்சிக்கும் அளிப்பார்.  இது ஒரு வகையான கணக்கீடாகும்.  இது போன்ற பல்வேறு வகையிலான விகிதாச்சார பிரதிநிதித்துவ நடைமுறையின் சேர்க்கைகள் உள்ளன.  தற்போது, இதுபோன்ற விகிதாச்சார பிரதிநிதித்துவ நடைமுறை பல்வேறு நாடுகளில் நடைமுறையில் உள்ளதோடு, சிறந்த முறையில் செயல்பட்டும் வருகிறது. உலக நாடுகளில் கிட்டத்தட்ட 60 நாடுகளில் விகிதாச்சார பிரதிநிதித்துவ நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய நாடுகளில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை முழுமையாகச் செயல்படுத்துவது சுலபமான ஒன்றாகும்.  ஆனால் பெரிய நாடுகளுக்கு, கட்சியின் பட்டியல் மற்றும் பிராந்திய அடிப்படையிலான தொகுதிகள் என சேர்த்து செயல்படுத்துவது சரியானதாக இருக்கும்.  நமது அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம் போன்றவற்றில் கூட பலதரப்பட்ட விகிதாச்சார பிரதிநிதித்துவ நடைமுறை தற்போது செயல்பாட்டில் உள்ளது.

  • நம்பகமான மாற்று இல்லாததே அரசியலில் வலதுசாரி சாய்மானத்திற்கு பிரதானமான காரணமாகும்.  தேர்தலின் போது நமது கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் இத்தகைய மோசமான நடைமுறைகளில் ஈடுபடுவதால், நமது ஐக்கிய முன்னணி தந்திரம் நமது நம்பகத்தன்மையில் அரிப்பை ஏற்படுத்தி விடாதா?

நம்பகமான மாற்று இல்லாததே அரசியலில் வலதுசாரி சாய்மானத்திற்கு பிரதான காரணம் என்று சல்வது சரியல்ல என நான் கருதுகிறேன்.  அரசியலில் வலதுசாரி சாய்மானம் என்பது மிகவும் சிக்கலானதொரு நிகழ்வாகும்.  உலகம் முழுவதிலும் அதிதீவிர வலதுசாரி மற்றும் வலதுசாரி சக்திகளும், தத்துவங்களும் எழுச்சி பெற்றதை நாம் கண்டோம்.  குறிப்பாக சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகும், சோசலிசத்திலிருந்து பின்வாங்கிய பிறகும் இதனை நாம் கண்டோம். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு முன்னரே கூட, அதாவது 1980களில் முதலாளித்துவ சமூக அமைப்பின் உள்ளேயே நவீன தாராளவாத முதலாளித்துவம் வளர்ச்சியடைந்தது.  இதுவே அரசியலில் வலதுசாரி சாய்மானத்திற்கு கட்டியம் கூறுவதாக இருந்தது.  ஏனெனில், இது மிகவும் வலதுசாரி சாய்மானம் கொண்ட முதலாளித்துவ வளர்ச்சிப் போக்காகும்.  மேலும், இது வலதுசாரி அரசியலில் பிரதிபலித்தது.  ஆனால், சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் இது வேகம் பிடித்தது.  அத்தோடு உலகம் முழுவதிலும், வலதுசாரி சக்திகளின் தத்துவங்கள் வேரூன்றி, வலதுசாரி அரசியலும் வேரூன்றி, வர்க்க அரசியலின் இடத்தில் அடையாள அரசியல் தோன்றுவது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்தியாவிலும் கூட, இதன் பிரதிபலிப்பை நாம் பார்த்தோம்.  குறிப்பாக 1990களிலிருந்து, முதலாளித்துவத்தின் தாராளமயமாக்கல் அல்லது நவீன தாராளவாத கொள்கைகள் வளர்ச்சியடைந்ததைக் கண்டோம்.  அதோடு அடையாள அரசியலின் ஒரு பகுதியான இந்துத்துவா மதவாதமும் வளர்ச்சியடைந்ததைக் கண்டோம்.  இவ்விரு காரணிகளே இந்தியாவில் அதிதீவிர வலதுசாரி அரசு – தற்போது ஆட்சியதிகாரத்தில் உள்ள மோடி அரசு வருவதற்கு காரணமாக அமைந்தன.  எனவே, வலதுசாரி சக்திகள் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன என்பது உண்மையாகும்.  மேலும், இந்துத்துவா தத்துவம் ஆளும் வர்க்கங்களின் மேலாதிக்க சித்தாந்தமாக மாறி வருகிறது.  இவர்களுக்கு எதிரானதொரு மாற்றே தேவைப்படுகிறது.  அந்த மாற்று என்பது, தத்துவார்த்த அடிப்படையில், அரசியல் அடிப்படையில், கொள்கைகள் மற்றும் திட்டங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்.  எனவே, இடதுசாரிகளைப் பொறுத்தவரையில், இது மிக முக்கியமான விஷயமாகும்.  அன்றாட அரசியலான அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் தேர்தல் உத்திகளைக் கொண்டு மட்டுமே வலதுசாரி சாய்மானத்தையும், இந்துத்துவா தத்துவத்தையும் எதிர்த்திட முடியாது.  ஒத்திசைவானதொரு கருத்தியல் மாற்றை முன் வைக்க வேண்டும்.  மேலும், அதனைச் சுற்றி மாற்று கொள்கையை, மாற்று திட்டத்தை, மாற்று மேடையை கட்டமைக்க வேண்டும்.  இத்தகைய மாற்று கொள்கையை கொண்ட மேடையை ஒட்டி வர்க்கப் போராட்டங்களை நடத்துவது, வெகுமக்கள் இயக்கங்களை கட்டுவது, மக்களைத் திரட்டுவது என்பதன் மூலமே ஒத்திசைவானதொரு கருத்தியல் மாற்றத்தை உருவாக்கிட இயலும்.  இதன் வாயிலாக இடதுசாரி, ஜனநாயக மாற்று மக்களிடையே வலுப்பெறும்.  எனவே, இன்று நம்முன் உள்ள பிரதானமான இயக்கம் இதுவேயாகும்.  ஐக்கிய முன்னணி தந்திரத்தைப் பொறுத்தவரை, வலதுசாரி இந்துத்துவா சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாஜக-ஆர்எஸ்எஸ் எனும் பொதுவான எதிரி நம்முன் உள்ளது.  அவர்களை எதிர்த்துப் போராட, நமக்கு ஐக்கிய முன்னணி தந்திரம் தேவைப்படுகிறது.  அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து, அணி திரட்டி, மோடி அரசு மற்றும் ஆர்எஸ்எஸ் பாஜக சக்திகள் விடுக்கும் யதேச்சதிகார அபாயத்திற்கு எதிரான பரந்துபட்ட ஒற்றுமையைக் கட்ட வேண்டும்.  இதற்கு ஐக்கிய முன்னணி தந்திரம் மிகவும் அவசியமான ஒன்றாகும்.  இப்போராட்ட இயக்கத்தில் நமது கூட்டாளிகளை அணி திரட்டிட வேண்டும்.  ஆனால் இந்த முன்னணி என்பது தேர்தல்களுக்காக மட்டும் உருவாக்கப்படுவது அல்ல.  ஐக்கிய முன்னணி என்பது தேர்தல் சமயங்களில் மட்டுமே தேவைப்படுகிற ஒன்று என்ற கருத்து கேள்வியில் பிரதிபலிக்கிறது.  ஆனால், ஐக்கிய முன்னணி என்பது மாற்று அரசியல் மேடைக்கு தேவைப்படுகிற ஒன்றாகும்.  வலதுசாரி சக்திகளுக்கான மாற்றாகும்.  வெகுமக்கள் இயக்கங்கள் மற்றும் போராட்டங்கள் மூலம் இத்தகைய மாற்று உருவாக்கப்பட்டு, அது தேர்தல்களிலும், தேர்தல் அரசியலிலும் தானாகவே பிரதிபலித்திடும். இவ்வாறாக, அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளைக் கொண்டு நாம் உருவாக்கும் ஐக்கிய முன்னணியானது, தேர்தல் நடைபெறும்போது நாம் நிறைவேற்றிடும் ஐக்கிய முன்னணி தேர்தல் உத்திகளிலும் பிரதிபலிக்கும்.  அந்தந்த மாநிலத்தின் அரசியல் அணி சேர்க்கைக்கு ஏற்ப இத்தகைய ஐக்கிய முன்னணி தந்திரம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.  அகில இந்திய அளவிலான அரசியல் சக்திகளின் அணிசேர்க்கையைப் பொறுத்து அகில இந்திய அளவில் இந்த ஐக்கிய முன்ணனியின் தன்மை அமைந்திடும்.  ஆனால், தேர்தல் உத்தியானது ஒட்டு மொத்த அரசியல் உத்தியாகிய, நமது நாட்டிலுள்ள வலதுசாரி யதேச்சதிகார பாஜக அரசுக்கு எதிராக அனைத்து இடதுசாரி, ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளை அணி திரட்டி ஒற்றுமையைக் கட்டுவது என்பதற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.  எனவே, ஐக்கிய முன்னணியை நாம் அமைக்கும்போது அல்லது தேர்தல் கூட்டணி அல்லது முன்னணியை நாம் ஏற்படுத்தும்போது, அது ஓர் குறைந்தபட்ச புரிதலின் அடிப்படையிலானதாக இருக்க வேண்டும். எல்லா விஷயங்களிலும் நாம் ஒத்த கருத்துடன் இருக்க இயலாது.  தேர்தலை எதிர்கொள்ளவோ அல்லது பரந்த இயக்கத்தை கட்டவோ நாம் அணி திரட்டும் கட்சிகள் சிலவற்றின் கொள்கை நிலைபாடுகளோ அல்லது இதர அம்சங்களோ நமக்கு உகந்ததாகவோ அல்லது எதிர்மறையானதாகவோ இருக்கக் கூடும்.  ஆனால், பொதுவான கடமையை முன்னிறுத்தி, இத்தகைய வேறுபாடுகளை பின்னுக்கு வைத்து, அரசியல் ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் நமது சுயேட்சையான நிலைபாட்டை பராமரித்துக் கொண்டே செயல்பட வேண்டும்.  இது மிக முக்கியமான விஷயமாகும்.

  • நமது பிரதான எதிரியை எதிர்கொள்ள நமது அணியிலுள்ள அரசியல் கட்சிகளோடு தொகுதிப் பங்கீடு செய்து கொள்வது என்பது தவிர்க்க இயலாததாகிறது.  அப்போது தேர்தல் களத்தில் நமது மாண்புகள் நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொண்டு, மற்றவர்களிடமிருந்து இடதுசாரிகள் தங்களை எவ்வாறு வேறுபடுத்திக் காட்ட என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறீர்கள்?

ஐக்கிய முன்னணியின் அனைத்து நடவடிக்கைகளின்போதும், கூட்டாக இயக்கங்களை மேற்கொள்கிற அதே நேரத்தில் நாம் நமது சுயேட்சையான நிலைபாடுகளையும், செயல்பாடுகளையும் விட்டுவிடுவதில்லை என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள்.  போராட்டங்களிலும் இயக்கங்களிலும் கூட, ஒத்த கருத்து கொண்டுள்ள விஷயங்களில் கூட்டுப் போராட்டங்கள், கூட்டியக்கங்களை நடத்துகிறோம்.  நமக்கு இதர முக்கியமான அரசியல் நிலைபாடுகளும், பிரச்சனைகளும் இருப்பதால், அவற்றை நாம் சுயேட்சையாக கையிலெடுக்கிறோம்.  இவற்றில் நமது நிலைபாட்டை நாம் அணிதிரட்டியுள்ள இதர கட்சிகள் உடன்படாது போகலாம் அல்லது அவற்றை கையிலெடுக்காதும் இருக்கலாம்.  எல்லாவற்றிற்கும் மேலாக, கம்யூனிஸ்ட் கட்சியாகிய நாம், உழைக்கும் வர்க்கத்தின், விவசாயிகளின் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள்.  இதர வர்க்கங்களின் நலன் சார்ந்திருக்கும் இதர சில கட்சிகளையும் நாம் அணி திரட்டுகிறோம்.  எனவே, நமக்கிடையே பொதுவாக உள்ள விஷயங்களை நாம் அதிகப்படுத்தி, ஒன்றிணைந்து செயல்படுகிறோம்.  அதே நேரத்தில் நாம் நமது அரசியல் நிலைபாடுகளை, நமது வர்க்க நிலைபாடுகளை, தத்துவார்த்த நிலைபாடுகளை வேறுபடுத்திக் காட்டி, அதனைத் தொடர்ந்து வலியுறுத்துவதோடு அத்தகைய நிலைபாட்டின் பால் மக்களை அணிதிரட்ட வேண்டும்.  எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் சுயேட்சையான செயல்பாடுகளும், இயக்கங்களும் போராட்டங்களும் இன்றியமையாதவையாகும்.  இவற்றைச் செய்யாது நாம் நம்மை வலுப்படுத்திக் கொள்ள முடியாது.  ஐக்கிய முன்னணி தந்திரத்தின் மூலம் மட்டுமே நாம் நம்மை வலுப்படுத்திக் கொள்ள இயலாது.  நமது சுயேட்சையான அரசியல், தத்துவார்த்த, ஸ்தாபன நடவடிக்கைளை, நமது சுயேட்சையான இயக்கங்களை முன்னெடுத்துச் செல்லாமல், ஐக்கிய முன்னணி தேர்தல் நடவடிக்கைகளை மட்டும் நாம் செயல்படுத்தினால், இடதுசாரி சக்திகள் வளர்ச்சியடைய முடியாது.  இடதுசாரிகள் வளர்ச்சியடையாமல், மாற்றுக் கொள்கையையும் வளர்த்தெடுக்க இயலாது.  இத்தகைய அணுகுமுறையையே நாம் கையாள வேண்டும். 

ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒரு குறிப்பிட்ட அணி சேர்க்கை ஏற்படும்.  இவையெல்லம் நிலையானவை அல்ல.  ஆனால், நமது சுயேட்சையான வேலைகள், செயல்பாடுகள் மற்றும் இடதுசாரி, ஜனநாயக மாற்றை கட்டமைக்க செயல்படும் வர்க்க அடிப்படையிலான நமது ஐக்கிய முன்னணி ஆகியவையே நமது அடிப்படை நோக்கமாக, செயல்பாடாக இருக்க வேண்டும்.  தேர்தல் கூட்டணி மற்றும் ஐக்கிய முன்னணியை உருவாக்குவது என்பது முழுக்க முழுக்க தேர்தல் நேரத்தில் செய்யப்படும் தற்காலிக நடவடிக்கையாகவே இருக்க வேண்டும்.  நமது கட்சியின் சுயேட்சையான நடவடிக்கைகளையும், வர்க்க மற்றும் வெகுமக்கள் அமைப்புகளின் கூட்டியக்கங்களையும், வர்க்க அடிப்படையிலான நமது அரசியல் மற்றும் தத்துவார்த்த போராட்டங்களையும் நாம் கைவிடவோ அல்லது பின்னுக்குத் தள்ளவோ இயலாது.

தமிழில்: கிரிஜா

ஊடகம், விளம்பரம், தேர்தல் : உலகமயமாக்கலுக்கு இரையாகிப்போன நம்பகத்தன்மை

சுகுமார் முரளிதரன்

தமிழில்: வீ. பா. கணேசன்

சில காலத்திற்கு முன்பு வரையிலும் கூட பணம் கொடுத்து சாதகமான செய்திகளை வெளியிடச் செய்வது அல்லது யார் அதிக விலை தருகிறார்களோ அவர்களுக்கு ஊடகம் இடமளிக்கும் என்பது இந்திய ஜனநாயக அமைப்பில் இருந்த கண்காணிப்பு அமைப்புகளுக்கு மிகப்பெரும் சவாலான ஒரு விஷயமாக இருந்தது. நீண்ட காலமாகவே நீடித்து வரும் ஒரு விஷயமாக இருந்தபோதிலும், 2008-ம் ஆண்டில் நடைபெற்ற பல மாநில சட்டமன்றத் தேர்தல்களின் போதுதான் இது ஆழமாக வேரூன்றியிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இதைத் தொடர்ந்து இந்திய பத்திரிக்கை கவுன்சில் அப்போது விரிவானதொரு விசாரணையை மேற்கொண்ட போதிலும் இந்த ஊடகத் தொழிலுக்கேயுரிய ‘திறமை’ காரணமாக அதன் அறிக்கை வெளிச்சத்திற்கு வராமலே போனது.

ஆனால் இந்நாட்களில் முன்னுரிமைகள் மிக வேகமாக மாறி வருகின்றன. நாடு முழுவதிலும் நடக்கவுள்ள தேர்தல் காலஅட்டவணையை வெளியிட்ட தேர்தல் ஆணையம் போலிச் செய்திகள் எதிரணியின் மீதான அவதூறான பேச்சுக்கள் ஆகிய இரண்டு அபாயங்களை குறிப்பாகச் சுட்டிக் காட்டியது. ஆணையத்தின் அவசர அழைப்பை ஏற்ற சமூக ஊடக நிறுவனங்கள், இணையதள சேவை நிறுவனங்கள் தங்களது செயல் தளங்களின் உள்ளடக்கங்களை கடுமையாகத் தணிக்கை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகத் தெரவித்தன.

தேர்தல் ஆணையத்திற்கு ஒரே ஒரு வாரத்திற்குள் பதிலளித்த இவை அரசியல் ரீதியான விளம்பரங்களை வெளியிட இதற்கென அதிகாரம் பெற்ற அமைப்பிடம் முன்பாகவே சமர்ப்பித்து உரிய சான்றிதழைப் பெற்றே வெளியிடுவோம் என்றும் இந்த விஷயத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவோம் என்றும் உறுதி கூறின.

இத்தகைய உறுதிமொழியை எழுத்துபூர்வமாக அளிப்பதற்கு முன் மிகுந்த எச்சரிக்கையுடன் தங்களது தளங்களில் வெளியாகும் செய்திகளையும் தகவல்களையும் உருவாக்கி, பதிப்பிடுவது தங்களின் நுகர்வோரின் கைகளில்தான் உள்ளது என்ற நிலையில் இவ்வாறு பங்கேற்பவர்கள் இந்த விதிமுறைகளுக்கு கீழ்ப்படிந்து நடப்பது வெவ்வேறு வகையில்தான் இருக்கும் என்றும், எனவே தங்களின் தளங்களில் வெளியாகும் செய்திகளுக்கு தாங்கள் எவ்வகையிலும் பொறுப்பாக முடியாது என்பதையும் குறிப்பிட்டிருந்தன.

2019 மக்களவைத் தேர்தல் ஒரு ‘வாட்சப்’ தேர்தல் என்ற நிபுணர்களின் கருத்தையே குறுஞ் செய்தி செயலிகளின் அதீதமான செல்வாக்கு அங்கீகரிப்பதாக அமைகிறது. குறுகிய வட்டத்திற்குள் பரிமாறிக் கொள்ளப்படும் செய்திகளின் மீது செல்வாக்கு செலுத்தும் வகையில் வாட்சப் குழுக்களில் இணைந்து கொள்ள பாஜகவின் தொண்டர்கள் பல்வேறு வழிகளைக் கடைப்பிடித்ததாகவும் தெரிய வந்தது. ஒவ்வொரு தொலைபேசி எண்ணையும் ஆதார் எண்ணுடன் இணைத்ததன் மூலம் அவற்றைப் பயன்படுத்துவோர் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டுஅவர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட விளம்பரங்களைக் கொண்டு வலைவீசப்பட்டது.

இதற்கிடையில் ஊரோடு ஒத்துப்போகும் போக்கு நிலவிவரும் சூழலில் செய்திகளை விமர்சன ரீதியாக வழங்கும் ஒரு சிலவற்றில் ஒன்றான இணைய தளத்தின் பதிப்பாளர் ஓர் எச்சரிக்கையைச் செய்தார். “குறுஞ்செய்திகளை அனுப்ப உதவும் செயலிகளின் சேவை மூலமாக திகைப்பூட்டும் அளவிற்கு திருத்தப்பட்ட படங்கள், வீடியோக்கள், செய்திகள் பெருமளவிற்குப் பரப்பப்படுகின்றன. இந்தியாவில் தங்களது ஸ்மார்ட் ஃபோன்களில் வரும் செய்திகளைப் படித்து வருவோரின் மீது இவை செல்வாக்கு செலுத்தி வருகின்றன.”

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி “64 சதவீத இந்தியர்கள் இணையத்தில் போலிச் செய்திகளையே எதிர்கொள்கின்றனர். இது ஆய்வு மேற்கொள்ளப்
பட்ட 22 நாடுகளிலேயே மிக அதிகமானது” என்று தெரிவித்திருந்தது. 2018 நவம்பரில் பிபிசி உலக சேவை நிறுவனம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. குறுஞ்செய்தி சேவைகளின் மூலமாக தீவிரமாக சமூக ஊடகங்களில் தாங்களாகவே விரும்பி செயல்பட்டு வருவோரின் செய்திகளில் வெளிப்படும் ‘தேசியவாதம்’ என்று அவர்கள் கூறிக் கொள்வதுதான் போலிச் செய்திகளை அதிக அளவில் பரப்பும் சாதனமாக உள்ளது என்று அது தெரிவித்தது. “தேசிய அடையாளத்தை உணர்வு பூர்வமாக வலுப்படுத்த முனையும்போது உண்மைகளுக்கு மிகக் குறைவான முக்கியத்துவம்தான் கிடைக்கும்” என இந்த ஆய்வில் பங்கேற்ற ஒருவர் குறிப்பிட்டார்.

“தேசியவாத உணர்வுகளைத் தூண்டும் வகையிலான போலிச் செய்திகளை மேலும் மேலும் தள்ளிவிடும் வேலையை இடதுசாரிகளை விட வலதுசாரிகள்தான் திட்டமிட்ட வகையில் செய்து வருகின்றனர்” எனவும் சமூக ஊடகம் குறித்த ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ‘தேசவிரோதிகள்’ எனக் கருதப்படும் சமூக குழுவினரை தீவிரமாக எதிர்ப்பது; கூட்டு வன்முறை, கும்பலாகச் சேர்ந்து கொண்டு அடித்து உதைப்பது போன்ற வன்முறைச் சம்பவங்களை நியாயப்படுத்துவது போன்றவற்றின் மூலம் இத்தகைய தேசியவாத உணர்வு வலுப்படுத்தப்படுகிறது. பரவலாகச் சுற்றுக்கு விடப்படும் போலிச் செய்திகளின் அளவு, சமூக ஊடகங்களில் அவை ஏற்படுத்தும் வன்முறையைத் தூண்டிவிடும் வகையிலான வாதப் பிரதிவாதங்கள் ஆகியவற்றில் இருந்தே இந்தப் பிரச்சனையின் தீவிரம் தெளிவாகிறது. எனினும் வாக்குப்பதிவில் இதன் தாக்கத்தை மதிப்பிடுவது கடினமாகும்.

2014 மக்களவைத் தேர்தலில் சமூக ஊடகங்கள் மூலமான பிரச்சாரங்கள் பெருமளவு செல்வாக்கு செலுத்தின என்று பெரிதும் நம்பப்பட்டது. எனினும் 2013 ஜூன் முதல் 2014 மே வரை மேற்கொள்ளப்பட்ட தேர்தல்கள் குறித்த தேசிய ஆய்வு (என் இ எஸ்) முடிவுகள் இந்தவாதத்திற்கு வலுச் சேர்ப்பதாக இல்லை. “இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் செய்திகளைத் தெரிந்து கொள்ள இணையத்தைப் பயன்படுத்தவில்லை; 5 சதவீதம் பேர் மட்டுமே செய்திக்காக தினமும் இணையத்தை அணுகுபவர்களாக இருக்கின்றனர்” என்பது அந்த ஆய்விலிருந்து தெரிய வந்தது. சமூக ஊடகங்களைப் பொறுத்தவரையில் 10 சதவீதம் பேரிடம் மட்டுமே முகநூல் கணக்கு இருந்தது. 3 சதவீதம் பேர் மட்டுமே ட்விட்டரை பயன்படுத்தி வந்தனர்.

இவர்களிலும் கூட மூன்றில் ஒருவர் மட்டுமே தினமும் முகநூலை பயன்படுத்துபவராகவும், ஐந்தில் ஒருவர் மட்டுமே தினமும் ட்விட்டரை அணுகுபவராகவும் இருந்தனர். சமூக ஊடகங்களின் மூலம் அரசியல் தொடர்பான செய்திகளை தெரிந்து கொள்வதைப் பொறுத்தவரையில் மூன்றில் ஒருவரே இதற்கென சமூக ஊடகங்களைப் பயன்படுத்தினர் என்பதோடு பாதிக்கும் மேற்பட்டோர் செய்திகளைத் தெரிந்து கொள்ள அவற்றைப் பயன்படுத்துவதில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.

இவை அனைத்தோடு கூடவே அரசியல் செய்திகளை பாரபட்சத்தோடு வெளியிடுகின்ற பாரம்பரிய ஊடகம் மூலமே பாஜக பயனடைந்துள்ளதாகத் தெரிகிறது. 1996க்கும் 2014க்கும் இடைப்பட்ட காலத்தில் தொலைக்காட்சி மூலம் செய்திகளை பின்பற்றும் வாக்காளர்களின் எண்ணிக்கை 19 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயர்ந்தது என்பதையும், 1996க்கும் 2009க்கும் இடைப்
பட்ட காலத்தில் அச்சு ஊடகங்கள் மூலம் செய்திகளை தெரிந்து கொள்ளும் வாக்காளர்களின் எண்ணிக்கை 12 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக உயர்ந்தது; இந்தப் போக்கு 2014 வரை தொடர்ந்தது என்பதையும், 1996 முதல் 2004 வரையிலான காலத்தில் வானொலி மூலம் செய்திகளை தெரிந்து கொள்ளும் வாக்காளர்களின் எண்ணிக்கை 12 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக மட்டுமே உயர்ந்த போதிலும் 2014-ம் ஆண்டில் இது 9 சதவீதமாகக் குறைந்தது என்பதையும் இந்தத் தேர்தல் குறித்த தேசிய ஆய்வு தெரிவித்தது.

எனினும் இதற்கு முன் எப்போதும் கண்டிராத வகையில் ஊடக வெறியாட்டம் 2014ம் ஆண்டில் வெளிப்பட்டது. கட்சிப் பிரச்சார விளம்பரத்திற்காக மட்டுமே பாஜக அத்தேர்தலில் ரூ. 5000 கோடியை ஒதுக்கியது. இது மேலும் கூடுதலாகவும் இருக்கக் கூடும். இந்தியா முழுவதிலும் மூன்று மாத காலத்திற்கு 15,000 விளம்பரப் பலகைகளை பாஜக பதிவு செய்திருந்தது. நாடு தழுவிய அளவிலும், பிரதேச அளவிலும், உள்ளூர் மொழிகளிலும் வெளிவரும் பத்திரிக்கைகளில் பளிச்சென்று தெரியக் கூடிய இடத்தில் விளம்பரங்களை 40 நாட்களுக்கு அக்கட்சி வெளியிட்டது. மேலும் இந்தி, ஆங்கில, உள்ளூர் மொழிகளில் வெளிவரும் செய்தி, பொழுதுபோக்கு, விளையாட்டு தொலைக்காட்சிகளில் நாளொன்றுக்கு 2,000 விளம்பரங்
களையும் அது விலைக்கு வாங்கியிருந்தது.

ஊடகங்களில் மோடிதான் எங்கும் இருந்தார் என்பதோடு அவரது பிரச்சாரமும் தொடர்ந்து நீடித்த ஒன்றாக, சிறப்பானதாக இருந்தது. தொலைக்காட்சி செய்திகள் ஒருதலைப்பட்சமாக இருக்கின்றன என்று நினைத்தவர்களும் கூட பாஜகவிற்கு வாக்களிக்கத் தயாராக இருந்தனர். உண்மை எப்படியானதாக இருந்தபோதிலும், நாடு முழுவதும் பின்பற்றப்பட வேண்டிய முன் உதாரணமாக குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி உள்ளது என்ற செய்தியும் ஊடகங்களில் தொடர்ந்து சித்தரிக்கப்பட்டது. ஊடகங்களை பெருமளவு பின்பற்றும் வாக்காளர்கள் “எல்லா மாநிலங்களையும் ஒப்பிடும்போது குஜராத் மாநிலம்தான் சிறப்பாகச் செயல்படுகிறது” என நான்கு மடங்கு சொல்லக் கூடிய அளவிற்கு இந்தப் பிரச்சாரம் அமைந்திருந்தது.

இத்தகைய பிரச்சாரம் தொடர்ந்து நடைபெறுகையில் ஊடகங்களை பெருமளவு பின்பற்றுவோர் இடையே பாஜகவிற்கான ஆதரவு மிக வேகமாக அதிகரித்தது. தொலைக்காட்சிச் செய்திகளை தொடர்ந்து கவனிப்பவர்களிடையே 2013 ஜூலைக்கும் 2014 மே மாதத்திற்கும் இடையே இந்த சதவீதம் 3 லிருந்து 20 புள்ளிகள் என அதிகரித்தது. பாரம்பரியமான அச்சு ஊடகங்களின் மூலம் செய்திகளை தெரிந்து கொள்வோரிடையே இது 7 லிருந்து 20 புள்ளிகளாகவும், இணையம் மூலமாக செய்திகளைத் தெரிந்து கொள்வோரிடையே 13லிருந்து 26 புள்ளிகளாகவும் பாஜகவின் ஆதரவு அதிகரித்தது.

2014 தேர்தலுக்குப் பிறகு ஊடகத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது போலிச் செய்திகள், அப்பட்டமான பிரச்சாரம் ஆகியவற்றின் செல்வாக்கு கணிசமாக அதிகரித்துள்ளது. 2014-ல் பயன்பாட்டில் இருந்த கைபேசிகளின் எண்ணிக்கை 90 கோடி எனில் அதில் 14.3 கோடி கைபேசிகள் இணைய வசதி கொண்ட ஸ்மார்ட்ஃபோன்கள் ஆகும். 2017-ல் இது 120 கோடியாக, அதாவது மொத்த மக்கள் தொகையில் 87 சதவீதம் பேர் பயன்படுத்தும் கைபேசிகளாக உயர்ந்தது. அடுத்த ஆண்டில் இதில் பெரும் உயர்வு ஏற்படவில்லை எனினும் 42 கோடியாக இருந்த ஸ்மார்ட்ஃபோன்களின் எண்ணிக்கை 56 கோடியாக அதிகரித்தது. ஒவ்வொரு ஸ்மார்ட்ஃபோனும் பயன்படுத்தும் இணைய வசதியின் அளவும் அதற்கேற்ப அதிகரித்துக் கொண்டே போனது. 2017 தொடக்கத்தில் மாதம் 4.3 ஜி.பி.ஆக இருந்த இணையப் பயன்பாடு அந்த ஆண்டு இறுதியில் மாதம் 5.4 ஜி.பி.ஆகவும் 2018-ல் 6.8 ஜி.பி. ஆகவும் உயர்ந்தது.

இந்த உயர்விற்குப் பின்னால் ஒரு காரணமும் இருந்தது. மிகச் சிறிய, பெரிதாக யாருக்கும் தெரியாத ஒரு நிறுவனத்தை பயன்படுத்திக் கொண்டு தொலைத்தொடர்புத் துறையில் கால் பதித்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவசமாக இணைய வசதியை வழங்கியதும் இதற்குக் காரண மாகும். ஊடகத் தளத்தில் ஏகபோக அதிகாரம் அதிகரிக்கும் போக்கை இது கணிசமான அளவில் தீவிரப்படுத்தியதோடு வாக்காளர்களின் முடிவுகள் மீது செல்வாக்கு செலுத்தும் வகையில் செய்திகளின் உள்ளடக்கத்தை திருத்தி அமைக்க வும் வழிவகுத்தது.

இன்று பாரம்பரிய ஊடகமானது போலிச் செய்திகள் பரவுவதை தடுக்க இயலாத நிலையில் உள்ளது. தத்துவார்த்த ரீதியில் செயல்படும் போக்கிற்கும் இதில் ஓரளவிற்குப் பங்குண்டு. கடந்த ஐந்து ஆண்டுகளில் மோடி ஆட்சியில் தோல்வி கள் ஏற்பட்ட போதிலும் ஊடக அதிபர்கள் அடிமைத்தனமான ஓர்மையுடன் தான் இருந்து வருகின்றனர். அப்பட்டமாகச் சொல்வதெனில் பெரும் வர்த்தக நிறுவனங்களின் நலன்களுக்கு சேவை செய்வதாகவே மோடியின் ஆட்சி அமைந் துள்ளது. முன் எப்போதும் இல்லாத வகையில் உலகளாவிய மூலதனத்தின் வழிவகைகளோடு ஒன்றிணைந்ததாக, அதன் உத்தரவுகளை நிறை வேற்றும் அடிமையாகவே இந்த ஊடகத் துறை உருவெடுத்துள்ளது.

தொலைக்காட்சிகளில் விளம்பரங்களை வெளியிடுவதற்கான வருமானம் 2018-ல் 19.2 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் இது கொஞ்சம் குறையுமென்றாலும் 18 சதவீத அதிகரிப்பாக ஆவது இருக்கும். டிஜிட்டல் ஊடகத்தைப் பொறுத் தவரையில் விளம்பரத்தின் மூலம் வருமானம் மிக வேகமானதாக உள்ளது. இப்போது 25.8 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ள இது 2019ல் 33.4 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது. மொத்த விளம்பர வருமானத்தில் டிஜிட்டல் ஊடகத்தின் பங்கு 22 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொலைக்காட்சி, அச்சு ஊடகங்களை விட பின்தங்கியிருந்த போதிலும்கூட டிஜிட்டல் ஊடகம் மிக வேகமாக முன்னேறி வருகிறது.

ஊடகங்களுக்கான விளம்பரங்களைத் தருவதற்கான பட்ஜெட்களில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றமானது பழைய வகைப்பட்ட செய்தி ஊடகங்களின் உள்ளடக்கத்தின் மீது செல்வாக்கு செலுத்து
கிறது. வாசகர்களை பெருமளவிற்குக் கவர்ந்திழுக்கும் வகையில் குறிப்பிட்ட சில வாசகங்களைக் கொண்டு சமூக ஊடகங்களில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்வது போன்ற வகையில் டிஜிட்டல் ரீதியான மேடைகளுக்கு இத்தகைய விளம்பரங்கள் மடைமாறிச் செல்வதைத் தடுக்கும் வகையில் அச்சு, தொலைக்காட்சி ஊடகங்கள் பல்வேறு வகையான வியாபார உத்திகளைக் கையாளுகின்றன.

வாசகர்களின் ஆர்வத்தோடு கூடவே குறிப்பிட்ட வாசகர் பிரிவின் வாங்கும் சக்தி எவ்வளவு உள்ளது என்பதை விளம்பரதாரர்கள் மதிப்பிடுவதும் இதோடு சேர்ந்து கொள்கிறது. தங்கள் ஊடக வாசகர்களின் ஆர்வத்தை லாபகரமாக்கிக் கொள்ள விளம்பரதாரர் விற்பனை செய்ய முயலும் பொருளை உண்மையிலேயே வாங்கக் கூடிய வகையில் மக்களில் ஒரு பகுதியினரை தங்கள் பக்கம் கவர்ந்திழுத்து வைத்துள்ளோம் என ஊடகங்கள் நிரூபிக்க வேண்டியுள்ளது.

இத்தகைய வியாபார உத்திகள் புதிய வகைப்பட்ட ஊடகங்களைப் போன்றே நடந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தை பழைய வகைப்பட்ட ஊடகங்களின் மீது திணிக்கிறது. மோடியும் பாஜகவும் வழங்குகின்ற காரண காரியமற்ற அதீத தேசிய வாதத்தை தூக்கிப் பிடிக்கும் வகையில் புதிய ஊடகம் வெகு வேகமாக இயங்குகின்ற போது இந்த டிஜிட்டல் தளத்தின் குரலை எதிரொலிப்பதன் மூலம் அங்கு வந்து குவியும் விளம்பரத்தில் ஒரு பகுதியாவது நமக்குக் கிடைக்காதா என்று பழைய ஊடகங்கள் ஏங்கி நிற்கின்றன. இந்த அதீத தேசியவாதம் மேலாதிக்கம் செலுத்துவதற்கு ஏகபோக ஊடகங்களின் வளர்ச்சியும் கூட உதவி செய்கிறது. தனியார் லாபத்திற்காகவும் அரசியல் பிம்பங்களை வளர்த்தெடுக்கவும் உதவும் வகையில் பொது ஆதாரவளமான ஒளிபரப்பு அலைக்கற்றையின் மீதான கட்டுப்பாடுகளும் மிக மேலோட்டமானதாகவே இருக்கின்றன.
கட்டுக்குள் இல்லாத ஒழுங்குமுறை – வளர்ந்து வரும் ஏகபோகம்
17வது மக்களவை தேர்தலுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்ட உடனேயே கேபிள் டிவி, நேரடி அலைவசதி (டிடிஎச்) ஆகியவற்றை செயல்படுத்தி வருவோர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மோடியின் பெயரைத் தாங்கிய நமோ டிவி என்ற ஒரு தொலைக்காட்சியை ஒளிபரப்பத் தொடங்கினர். ஒளிபரப்புக்கான உரிய அனுமதியைப் பெறாமல் அல்லது சட்டபூர்வமான பாதுகாப்பு சோதனை
களுக்கு உட்படாமல் ஒரு வாரத்திற்கும் மேலாகவே இந்த தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நடந்து வருகிறது என ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே செய்திகளை வழங்கிவரும் இணைய தளங்கள் தெரிவித்தன. “இடைவெளி ஏதுமின்றி நரேந்திர மோடி
யின் உரைகளையும் பாஜகவிற்கு ஆதரவான செய்திகளையும் மட்டுமே இந்த தொலைக்காட்சி தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது” என ஸ்க்ரோல் இணைய தளம் தெரிவித்தது. “செய்திகளை வழங்கி வரும் மற்ற தொலைக்காட்சிகலைப் போல் இது இல்லை” என்றும் அந்த இணையதளம் குறிப்பிட்டது.

இதில் முக்கிய வேறுபாடு என்னவெனில் கேபிள் டிவி அல்லது நேரடி அலைவரிசை சேவையைப் பெறுகின்ற எந்தவொரு நுகர்வோரும் தனது விருப்பப்பட்டியலில் இருந்து இந்த நமோடிவி தொலைக் காட்சியை நீக்கவேமுடியாது என்பதாகும். இதுகுறித்து எதிர்க்கட்சிகள் பலவற்றின் விசாரிப்புகளுக்குப் பிறகு மத்திய அரசின் செய்தி-ஒலிபரப்புத் துறை அமைச்சகம் இந்த தொலைக்
காட்சியின் தகுதி குறித்து ஆய்வு செய்தபோது கேபிள் டிவி மற்றும் நேரடி அலைவரிசை சேவையை வழங்குவோர் வழக்கமாக தங்கள் நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களை தெரிவிக்கும் அலைவரிசையைப் போன்ற ஒன்றுதான் இந்த நமோடிவி என்றும் அது தனியொரு தொலைக்காட்சியே அல்ல என்பதையும் கண்டறிந்தது.

தனிநபர் துதிபாடலை உருவாக்க பொது ஆதாரவளத்தை இவ்வாறு கபளீகரம் செய்வது குறித்து விரிவான அளவில் கவலை தெரிவிக்கப் பட்டபோது, சுனில் அரோரா தலைமையிலான இந்திய தேர்தல் ஆணையம் அதன் வழக்கமான சஞ்சல புத்தியோடு இந்தப் புகாரை கணக்கில் எடுத்துக் கொள்ளவே தயாராக இல்லை.
ஒழுங்கமைவு விஷயங்களை கையாளுவதில் வேண்டுமென்றே கண்டும் காணாத போக்கை கடைப்பிடிப்பது என்ற கொள்கை கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே பின்பற்றப்பட்டு வந்துள்ள நிலையில் உரிமை குறித்த விஷயங்கள், குறிப்பாக ஒருமுகப்போக்கை கட்டுப்படுத்தி, பன்முகத்தன்மையை உறுதிப்படுத்துவது என்ற மிக முக்கியமான, முன்னுரிமையான விஷயங்கள் தொடர்ந்து கவனிக்கப்படாமலே இருந்து வருகிறது. சாட்டிலைட் மூலமாகவும், கேபிள் மூலமாகவும் ஒளிபரப்புகளை மேற்கொள்ளும் ஹாத்வே, டிஜிட்டல் எண்டெர்டெயின்மெண்ட் நெட்வொர்க் ஆகிய இரு முக்கியமான நிறுவனங்களை கட்டுப்படுத்தும் உரிமையை பெற்றுள்ளதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் தனது செல்வாக்கை மேலும் விரிவுபடுத்திக் கொண்டுள்ளது. பெயரளவிற்கே வெளியில் தெரிவிக்கப்பட்ட இந்த முதலீட்டின் மூலம் பல்வேறு ஊடக உள்ளடக்கங்களில் தீர்மானகரமான அதிகாரத்தையும் அது பெற்றுள்ளது.

தன்னிடமுள்ள பல்வேறு முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றின் மூலம் 2018 நவம்பரில் ரிலையன்ஸ் நிறுவனம் நியூ எமர்ஜிங் வேர்ல்ட் ஆஃப் ஜர்னலிசம் என்ற புத்தம்புது நிறுவனத்தை கட்டுப்படுத்தும் உரிமையை விலைக்கு வாங்கியுள்ளது. கைபேசி மூலமாக செய்திக்கான உள்ளடக்கங்களை பல்வேறு வடிவங்களில் இந்த நிறுவனம் உருவாக்கும் திறமை கொண்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வளரும் நாடுகள் உள்ளிட்ட இதர பெரும்பாலான சந்தைகளை விட இந்தியாவில் கைபேசி சந்தையே தற்போது உச்சத்தில் உள்ளது. இதழி
யல் ஆய்விற்கான ராய்ட்டர்ஸ் நிறுவனம் மேற்கொண்ட ஓர் ஆய்வில் பங்கேற்றவர்களில் 68 சதவீதம் பேர் செய்திகளை தெரிந்து கொள்ள தங்கள் ஸ்மார்ட்ஃபோனையே நம்பியிருப்பதாகத் தெரிவித்திருந்தனர். தங்கள் கைபேசியைத் தவிர வேறெந்த வசதியும் தங்களிடம் இல்லை என 31 சதவீதத்திற்கும் குறையாதவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு மிக நீண்ட காலமாகவே நாட்டிலுள்ள ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் தொழிலை ஒழுங்குபடுத்தி பெரும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மரியாதையை உருவாக்க வேண்டும் என முயற்சித்து வந்துள்ளது. பரம்பரை குடும்பச் சொத்தை மிக கவனமாகப் பாதுகாத்து வருவதும், இலைமறை காயான முதலீட்டு முறையே அதன் வழக்கமான செயல்பாடாக இருப்பதுமான ஓர் உலகத்தில், இந்திய தொழில் கூட்டமைப்பின் இத்தகைய முயற்சியில் ஆண்டுதோறும் ஃப்ரேம்ஸ் மாநாடு என்ற நிகழ்வில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த பெரும்புள்ளிகள் ஒன்று கூடி தங்களுக்கென தனிப்பட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுப்புவது வழக்கமாக இருந்தது.

கையிலுள்ள புள்ளிவிவரங்களை எல்லாம் ஒன்றுதிரட்டி இத்தொழிலைப் பற்றிய அறிக்கை ஒன்றும், எதிர்காலம் குறித்த முன்னறிவிப்பும் இந்த நிகழ்வில் வெளியாவது வழக்கம். எனினும் இந்த நிகழ்வு இத்தொழில் குறித்த தீவிர மான அல்லது சவாலான சிந்தனைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு தருணமாக இருந்ததில்லை. மாறாக, எரிச்சலூட்டும் சில தொழிலாளர் நலச் சட்டங்கள், அரசின் ஒழுங்குமுறை விதிகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்புவதைத் தவிர எல்லாமே நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது என்ற கூட்டு ணர்வை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளும் ஒரு நிகழ்வாகவே அது இருந்து வந்துள்ளது.

வேறு எதைப்பற்றியும் பேசாமல் மவுனமாக இருப்பது என்ற இவர்களின் ஒப்பந்தம் 2013 மார்ச் மாதத்தில் மிகவும் அரிதான வகையில் மீறப்பட்டது. ரூபர்ட் முர்டாஷூக்கு சொந்தமான, இந்தியாவில் செயல்பட்டு வரும் ஸ்டார் டிவி குழுமத்தின் தலைமை செயல் அலுவலரான உதய் சங்கர் இந்த நிலையின் மற்றொரு பக்கத்தைக் காண முற்பட்டார். மிகுந்த கவனத்துடன் ஆராயத் தக்கதாக அவரது வார்த்தைகள் இருந்தன. இந்திய ஊடகத் தொழிலில் நம்பத்தகுந்த புள்ளி விவரங்கள் பெருமளவிற்கு இல்லவே இல்லை என்றே கூறலாம். எந்தவொரு வர்த்தகத்திலும் ஈடுபடும் ஒரு தலைவர் இடையூறுகளில் இருந்து விடுபடுவதற்கான ஒரு பாதையை கண்டறிய வேண்டுமெனில் புள்ளி விவரங்களில் ஓரளவிற்கு நம்பிக்கை வைத்தே அதைச் செய்ய முடியும். இந்த வகையில் மிகுந்த கவலைதரத்தக்க சூழலையே உதய் சங்கர் சந்திக்க வேண்டியிருந்தது.

“பகுத்தறிவு பூர்வமான வர்த்தக முடிவுகளை எடுக்க வேண்டு
மெனில் அதற்கு எண்கள்தான் அடித்தளமாக அமைய வேண்டும். எண்களை அடிப்படையாகக் கொண்ட வர்த்தக நிபுணர்களாகிய நாங்கள் இந்த எண்களை சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை எனில் எப்படி முடிவுகளை எடுக்க முடியும்? ஒரு தொலைக்காட்சி நிர்வாகி என்ற முறையில் எப்படி என்னால் செயல்பட முடிகிறது என்று சில நேரங்களில் நானே ஆச்சரியப்படுவேன். எனது பார்வையாளர்கள் பற்றி எனக்குப் போதுமான விவரம் தெரியாது. அவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற விவரம் கூட எனக்குத் தெரியாது. இந்தியாவில் 14 கோடி குடும்பங்கள் கேபிள்- சாட்டிலைட் மூலம் இணைக்கப்பட்டு இருக்கின்றன என்றாலும் 6.2 கோடி குடும்பங்கள் மட்டுமே இந்தக் கணக்கில் தென்படுகின்றன. விளம்பரச் சந்தையின் அளவு என்ற அடிப்படையான விஷயத்தில் ஒத்துப்போகாத நிலையில்தான் இந்தியாவின் முக்கிய விளம்பர நிறுவனங்கள் இருக்கின்றன.”

உள்ளார்ந்த பொருளாதார வரம்புகளை எல்லாம் கடந்து விரிவடைந்து கொண்டே செல்ல முயன்ற இந்திய ஊடகத்தின் இருபது ஆண்டுக்கால செயல்பாட்டை நினைவு கூர்வதாகவும் இந்த உரை அமைந்திருந்தது. 1990களை அடுத்து வந்த தசாப்தங்களில் நடுத்தர வர்க்கத்தின் எதிர்பார்ப்புகள் அதிகரித்ததன் விளைவாக விளம்பரத் துறை விரிவடைந்ததோடு ஊடகங்கள் விரிவடையவும் தூண்டுதலாக இருந்தது. இத்துறையின் வருவாய்க்கான திட்டமும் கூட வாசகர்கள்-பார்வையாளர்களின் நலனுக்கு உகந்த நிலையில் இருந்து விளம்பரதாரர்களின் நலனைத் திருப்திப்படுத்துவதாகவும் மாறியது.
தொலைக்காட்சித் துறையின் மொத்தவருவாயில் கிட்டத்தட்ட 67.5 சதவீதமாக இருக்கும் பார்வையாளர்களின் சந்தாவில் பெரும்பகுதியை சந்தாதாரர்களின் வீட்டுக்கு தொலைக்காட்சி சேவையை கொண்டு செல்லும் கடைசிக் கண்ணியாக விளங்கும் கேபிள் நடத்துநர்களே எடுத்துக் கொள்கின்றனர்.

அச்சு ஊடகத்தைப் பொறுத்தவரையில் மொத்தவருவாயில் 65 சதவீதம் விளம்பரங்களின் மூலமே பெறப்படுகிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியா, `ஹிந்துஸ்தான் டைம்ஸ், தி இந்து போன்ற நாடு தழுவிய பெரும் பத்திரிக்கைகளைப் பொறுத்தவரையில் மொத்த வருவாயில் 85 அல்லது அதற்கும் மேலான சதவீதத் தொகை விளம்பரங்களில் இருந்தே பெறப்படுகிறது. தொலைக்காட்சி- அச்சு ஊடகம் ஆகிய இரு துறைகளிலும் அவற்றின் வருவாயில் சந்தாதாரர்களின் பங்கு குறைந்து கொண்டு வரும் நிலையில் வாசகர்களுக்கு இது
வரை வழங்கப்பட்டு வந்த முன்னுரிமை மாற்றப்பட்டு, விளம்பரதாரர்களுக்கு சிறந்தவகையில் சேவை செய்வதாக மாறியது.
1980களில் இருந்து தொடங்கி, அதையடுத்து வந்த பத்தாண்டுகளில் உலகளாவிய விளம்பரத் தொழிலானது தொடர்ந்து வேகமாக ஒருமுகப்படுத்தப்பட்டு வருவதைக் கண்டது. இந்தப் போக்கு இன்றுவரை தொடர்கிறது.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நான்கு மாபெரும் நிறுவனங்கள் – அதாவது பிரிட்டனின் டபிள்யூ ப்பி ப்பி, அமெரிக்காவின் இண்டர் பப்ளிக் மற்றும் ஓம்னிகாம், பிரான்சின் பப்ளிசிஸ் ஆகியவை- தான் உலகத்தில் உள்ள விளம்பர நிறுவனங்களில் பாதியை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இந்த வர்த்தகத்தில் அவற்றின் பங்கு அதைவிடவே அதிகமாக இருக்கும். இவற்றோடு ஜப்பானின் டெண்ட்ஸூ குழுவையும் சேர்த்துக் கொண்டால் இந்த ஐந்து பெரு நிறுவனங்களும்தான் உலகளா விய விளம்பரத் தொழிலை மேலாதிக்கம் செய்து வருகின்றன. டபிள்யூ ப்பி ப்பி நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு அனுப்பிய 2017-ம் ஆண்டிற்கான வர்த்தகம் குறித்த விவரக் குறிப்பில் இந்திய விளம்பர சந்தையில் 50 சதவீதம் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிவித்திருந்தது.

இந்தப் பெரும் நிறுவனங்கள் இத்தொழில் தொடர்புடைய நிறுவனங்களை – குறிப்பாக சந்தை குறித்த ஆய்வு, வாசகர்களை அளவீடு செய்வது போன்றவற்றில் ஈடுபடும் நிறுவனங்
களை – கைப்பற்றுவதன் மூலம் ஊடகங்கள் மீதான தங்கள் வலிமையை மேலும் வலுப்படுத்திக் கொள்கின்றன. தனது சுய அதிகாரத்திற்கு ஏற்படக் கூடிய – அது உண்மையானதோ அல்லது கற்பனையானதோ – எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் உடனடியாக எதிர்வினை புரியும் ஊடகத் தொழில் தனது சொந்த வர்த்தகத்திற்கான முக்கிய திறவுகோலை தன் கையில் வைத்திருக்கும் தொழிலான விளம்பரத்துறையில் அதிகரித்துக் கொண்டே வரும் ஒருமுகப்படுத்தலின் தாக்கங்கள் குறித்து வாய் திறவாமல் இருப்பது மிகுந்த வியப்பிற்குரியதே ஆகும்.

இதுபற்றிய நெடியதொரு கருத்தோட்டத்தை உருவாக்கிக் கொள்ள இந்த நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளுக்கு நாம் மீண்டும் பயணம் செய்தோமெனில், இத்தொழிலின் மிக வேகமான வளர்ச்சிக்குப் பிறகு மற்றொரு துரித வளர்ச்சிக் கட்டத்தை நோக்கி அது நகர்ந்து கொண்டிருந்ததைப் பார்ப்போம். தேசியம் என்ற கோட்டைக் கொத்தளத்தின் மீது அது நின்று கொண்டிருந்த கடைசிக் காலமும் அதுவே. 2001 ஜனவரியில் தகவல் தொழில்நுட்பம் குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு அச்சு ஊடகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை தடை செய்து வந்த நீண்ட நாள் கொள்கை பற்றிய கருத்துக்களை செவிமடுக்கத் தொடங்கியது. 2001 ஜனவரி தொடங்கி இந்த நிலைக்குழு 13 முறை கூடி மூத்த பத்திரிக்கை ஆசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள், ஊடகத் துறை நிபுணர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்டது.

அந்நிய முதலீடு குறித்த முக்கிய முடிவு

2001 டிசம்பர் மாத வாக்கில் இது குறித்த விவாதங்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு தொடர்ச்சியான ஒரு பிரச்சாரத்தை எதிர்கொள்ளத் தொடங்கியது. குறிப்பாக, பரவலான அளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் இந்தி நாளிதழான தைனிக் ஜாக்ரன் இதழின் உரிமையாளரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன நரேந்திர மோகன் -ஐச் சார்ந்த பிரிவினர் அச்சு ஊடகத்தில் 26 சதவீதம் வரை நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்தனர். 2002 பிப்ரவரியில் நாடாளுமன்ற நிலைக்குழு மீண்டும் கூடியபோது அதன் முன்னால் ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு ஆலோசனைகள் இருக்குமளவிற்கு மோகனின் பிரச்சாரம் வெற்றி பெற்றிருந்தது. அதில் ஒரு ஆலோசனை மோகனின் நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாக இருந்தது எனில் மற்றொரு ஆலோசனை அச்சு ஊடகம் இந்தியர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்று ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை 1955-ல் நிறைவேற்றிய தீர்மானத்தை உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என்று கூறியது.

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற நிலைப்பாடு பெருமளவிற்கு ஆதரவைப் பெறத் தவறியது. 2002 பிப்ரவரியில் நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் மோகன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஒரு சில நடைமுறை உத்திகளும் கூட தோல்வியுற்றன. இடதுசாரி கட்சிகளோடு சேர்ந்து காங்கிரஸ் கட்சியும் 1955-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நிலைபாட்டையே ஆதரித்தது. எனினும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் முடிவுகள் இக்கொள்கையின் தொடர்ந்த செயல்பாட்டில் பெரிய மாற்றம் எதை
யும் கொண்டு வரவில்லை. இந்திய ஊடகத் தொழில் மிக ஆழமான வகையில் பிளவுபட்டிருந்ததே அதற்குக் காரணமாகும். அந்நிய முதலீட்டுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த ஜாக்ரன் குழுவிற்கு இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்தியா டுடே, ஆனந்த பஜார் பத்ரிகா ஆகிய குழுக்களின் ஆதரவு இருந்தது. எனினும் 1990களின் தொடக்கத்திலிருந்தே நடைபெற்று வந்த இந்தப் பிரச்சாரம் பெருமளவிற்கு முன்னேறவில்லை. கணிசமான அளவிற்கு தேசிய உணர்வை முன்வைத்த வலுவான ஒரு குழுவின் எதிர்ப்பே இதற்குக் காரணமாக இருந்தது. இந்தக் குழுவில் டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்துஸ்தான் டைம்ஸ், தி இந்து ஆகிய செல்வாக்கு மிக்க மூன்று ஆங்கில நாளிதழ்கள் முறைப்படுத்தப்படாத கூட்டணியாக இருந்தன.
இந்தக் குழுவின் அபரிமிதமான வலிமைக்குப் பின்னால் பிரதேசரீதியான, குறிப்பாக தென் மாநிலங்களைச் சேர்ந்த நாளிதழ்கள் பலவற்றின் ஆதரவும் இருந்தது. இவை சிறப்பாக ஒழுங்கமைந்தவையாக இருந்ததோடு, புதுமைத் தன்மையும் நிதியளவில் பலமும் கொண்டவையாகவும் இருந்தன.

தாராளமயமாக்கல் கொள்கையில் பரவலான வீச்சினை அச்சு ஊடகம் எதிர்ப்பது அல்லது விலகி நிற்பது என்பதற்கு நியாயமான காரணம் எதுவுமில்லை என்ற வாதத்திற்கு பதிலடியாக இந்தக் குழு வலுவான பதிலையும் முன்வைத்தது. தொலைக்காட்சி ஊடகத்தை விட அதிகமான அளவில் மக்களின் உணர்வுகளின் மீதும் அரசியல் நிகழ்வுகளின் மீதும் ஆழமான செல்வாக்கு செலுத்துகின்ற, பிரத்தியேகமானதொரு கலாச்சார அம்சம்தான் நாளிதழ்கள் என்பதே இக்குழுவின் பதிலாகும்.

இத்தகையதொரு துறையை வெளிநாட்டு முதலீட்டிற்கு திறந்துவிடுவதென்பது முற்றிலும் அந்நியமான, அரசியல் செயல்பாட்டை அரித்துப் போகச் செய்யும் வகையில் செல்வாக்கு செலுத்த வழிவகுப்பதே ஆகும். இந்தியர்களின் கைகளில் பத்திரிக்கையின் கட்டுப்பாட்டு உரிமையை வைத்திருப்பது என்பது செயல்படத்தக்க ஒன்றாக இருக்காது என்பதோடு பெரியதொரு வெளிநாட்டு முதலீட்டாளர் நுழைவதன் மூலம் சமநிலையற்ற அதிகாரமும் அதிலிருந்து உருவாகும்.

எனினும் 2000களின் தொடக்கத்தில் ஊடகத்துறைக்குள் செயல்பட்டு வந்த சக்திகளின் நிலைபாட்டில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் அதுவரையிலான தனது நிலைபாட்டில் இருந்து மாறியது இந்தச் சமநிலையில் முக்கிய திருப்பத்தைக் கொண்டு வந்தது. டெல்லியில் முன்னணி நாளிதழாக இருந்த அது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் வரவுக்குப் பின் போட்டி போட்டுக் கொண்டு விலையைக் குறைப்பதில் ஏற்பட்ட இழப்பே அந்த நாளிதழ் நேரடி அந்நிய முதலீட்டிற்கு ஆதரவான குழுவுடன் இடம் பெயர்வதற்குக் காரணமாக இருந்தது. அந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசு அச்சு ஊடகத்தொழிலுக்குள் இருந்த வலுவான பிரிவினரின் கோபத்தையும் எதிர்கொள்ளும் அளவிற்கு முதலீட்டுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டுவர போதுமான ஆதரவு அத்தொழிலில் நிலவுகிறது என்ற உத்தரவாதத்தை பெற்றது. அதன் விளைவாக அச்சு ஊடகத்தில் மொத்த பங்குத் தொகையில் 26 சதவீதம் அளவிற்கு நேரடி அந்நிய முதலீட்டை அனுமதித்து அரசு உத்தரவிட்டது. இதன்படி ஆசிரியர் பொறுப்பு இந்தியர்களிடமே இருக்கும் என்பதோடு செய்திக்கான திட்டங்களில் செல்வாக்கு செலுத்துமளவிற்கு அனைத்து முக்கிய பதவிகளிலும் நான்கில் மூன்று பங்கு பதவிகளில் இந்தியர்களே இருக்க வேண்டும் என்றும் இந்த உத்தரவு குறிப்பிட்டது.

இதற்கு எதிர்வினை ஆற்றுவதில் இந்திய அச்சு ஊடகத் தொழில் இரண்டாகப் பிளவுபட்டது. இத்தொழிலின் உச்ச அமைப்பான இந்திய பத்திரிக்கை கழகம் ( ஐஎன்எஸ் ) இந்த முடிவு சிறு மற்றும் நடுத்தர நாளிதழ்களின் அழிவிற்கு இட்டுச் செல்லும் என்று சற்று கவலையுடன் கருத்து தெரிவித்தது. பிசினெஸ் ஸ்டாண்டர்ட், இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்தியா டுடே போன்ற தனிப்பட்ட பத்திரிக்கை குழுக்கள் இத்தொழிலுக்குத் தேவைப்படுகின்ற கூடுதல் மூலதனம், நவீன தொழில்நுட்ப செயல்பாடுகள் ஆகியவற்றை கொண்டுவர இது வழிவகுக்கும் என்றும் மிகுந்த கால தாமதத்திற்குப் பிறகே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டன.

கபளீகரமான விளம்பரப் பகுதி

நேரடி அந்நிய முதலீடு குறித்து தொடர்ச்சியான வாதப் பிரதிவாதங்களில் அச்சு ஊடகம் ஈடுபட்டு வந்த அதே நேரத்தில் மறுபுறத்தில் அத்தொழில் வெளிநாட்டு நலன்களால் முற்றிலு மாகச் சூழப்படுவதற்கான வழியேற்படுத்தும் வகையில் முக்கிய நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. விளம்பர நிறுவனங்கள், சந்தை குறித்த ஆய்வு நிறுவனங்களில் 100 சதவீதம் வரை நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கான கொள்கையை மேற்கொள்வதற்கான முயற்சி எவ்வித விவாதமும் இன்றி 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்டபோது இந்திய நாளிதழ்கள் இந்தக் கொள்கையின் அறிகுறியை உணர்ந்து கொள்ளத் தவறின. அச்சு ஊடகமானது விளம்பரத்தின் மூலமான வருவாயை பெரிதும் நம்பியிருந்த ஒரு சூழலில், சந்தை குறித்த ஆய்வு நிறுவனங்
களின் முடிவுகளைச் சார்ந்தே விளம்பரத்தை வெளியிடுவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இந்தக் கொள்கை முடிவு எவ்வித தீவிரமான எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்பட்டது. இன்னும் சொல்வதெனில் அதன் நீண்ட கால தாக்கங்கள் குறித்து மேலோட்டமான அலசல் கூட மேற்கொள்ளப்படவில்லை.

ஊடகத்தில் வெளிநாட்டு முதலீடு குறித்து நடைபெற்று வந்த விவாதங்கள் பயனற்றவை என்பது மட்டுமின்றி மேலோட்டமானதும் கூட என்று 2002-ம் ஆண்டில் சந்தை குறித்த ஆய்வு நிபுணரும் ஊடக ஆய்வாளருமான என். பாஸ்கர ராவ் எழுதியிருந்தார். “இந்திய, வெளிநாட்டு பெருநிறுவனங்களின் ஊடகம் குறித்த திட்டங்கள் சந்தை குறித்த ஆய்வையே நம்பியுள்ளநிலையில், அதனடிப்படையில் வெளியிடப்படும் விளம்பரங்களே ஊடகத்தின் செயல்வேகத்தையும் வழியையும் தீர்மானிக்கும் நிலையில், அச்சு ஊடகத்தில் நேரடி அந்நிய முதலீடு குறித்த பொதுவிவாதம் முழுவதுமே இந்த உண்மையைக் காணத் தவறிவிட்டது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
அச்சு ஊடகமும், பத்திரிக்கை அதிபர்களும் நேரடி அந்நிய முதலீடு குறித்த போலிச் சண்டையில் ஈடுபட்டு உயரிய கருத்துக்களை முன்வைத்த அதே நேரத்தில் அதைச் சுற்றியிருந்த பகுதி முழுவதும் இந்திய, வெளிநாட்டு பெருநிறுவனங்களின் நலன்களால் முற்றிலுமாகவும், மிக வேகமாகவும் கைப்பற்றப்பட்டிருந்தது. இந்திய விளம்பர உலகத்தை மேலாதிக்கம் செய்து வரும் டபிள்யூ ப்பி ப்பி குழுவின் வளர்ச்சிப் பாதையைக் கொண்டே இதை விளக்கிவிட முடியும். 1990களில் உலகம் முழுவதிலும் அது ஆதிக்கம் செலுத்தி வந்த போதிலும் இந்தியாவில் முழுமையான கட்டுப்பாட்டை கொண்டதாக அது இருக்கவில்லை. அந்த நேரத்தில் இந்தியன் மார்க்கெட் ரிசெர்ச் பீரோ (ஐ எம் ஆர் பி) என்ற நிறுவனத்தின் மூலமும் தனது துணை நிறுவனங்களின் மூலமுமே அது கணிசமான செல்வாக்கை செலுத்தி வந்தது.

1993-ல் டபிள்யூ ப்பி ப்பி நிறுவனம் உலகம் முழுவதிலும் உள்ள தனது சிக்கலான வலைப்பின்னலுக்குள் கந்த்தார் குழு என்ற சந்தை ஆய்வுக்கான பிரிவை உருவாக்கியது. 1998-ல் இந்த கந்த்தார் குழு இத்துறையில் முன்னோடியாக இருந்த ஏசி நீல் சன் என்ற நிறுவனத்துடன் இணைந்து தொலைக்காட்சி நேயர்கள் குறித்த அளவீட்டுப் பிரிவை (டாம்) உருவாக்கியது. அப்போது வேகமாக வளர்ந்து வரும் இந்திய ஒளிபரப்பு தொழிலுக்கு மிகவும் தேவையான திறனை வழங்கும் என்றும் அது உறுதியளித்தது. இத்தகைய அளவீட்டு முறையில் அதன் போட்டி அமைப்பாக இருந்தது அதன் போட்டி நிறுவனமான ஓஆர்ஜி-மார்க்- இன் ஒரு பிரிவாக இருந்த இண்டாம் ஆகும்.

2000-ம் ஆண்டில் டபிள்யூ ப்பி ப்பியும் வேறு சில கூட்டாளிகளும் சேர்ந்து உருவாக்கிய நிறுவனத்தின் மூலம் இந்த ஓஆர்ஜி-மார்க் கையகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து டாம் மற்றும் இண்டாம் ஆகிய இரண்டும் ஒன்று சேர்ந்தன. இதன் மூலம் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களில் விளம்பரம் செய்வதை தீர்மானிக்கும் தர
வரிசை முறையை கட்டுப்படுத்தும் நிறுவனமாக டபிள்யூ ப்பி ப்பி உருமாறியது.

உலகமயமாக்கல் பத்திரிக்கை வாசகர்கள் குறித்த ஆய்வுலகத்தில் மிகத் தீவிரமான மாற்றத்தைக் கொண்டு வந்தது. 1990கள் முழுவதிலும் பத்திரிக்கை தொழில், விளம்பர நிறுவனங்களின் கழகம், பத்திரிக்கை விநியோகம் குறித்த தணிக்கை அமைப்பு ஆகியவற்றின் முயற்சியால் உருவாக்கப்பட்ட தேசிய வாசகர் ஆய்வு (என் ஆர் எஸ்) அமைப்பு என்பதே இத்தொழில் குறித்த தர மதிப்பீட்டு அளவையாக நீடித்து வந்தது. 1995-ல் விளம்பரம் மற்றும் ஊடக நிறுவனங்கள் உருவாக்கிய புதியதொரு கூட்டணி இதற்கு மாற்றாக இந்திய வாசகர் ஆய்வு (ஐ ஆர் எஸ்) என்ற அமைப்பை தொடங்கியது. என் ஆர் எஸ்-ஐ எதிர்த்து நேரடியாக மோதிய ஐ ஆர் எஸ் பெருநிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கும் கால அட்டவணைக்கு உகந்த வகையில் காலாண்டு ஆய்வுகளை வழங்க உறுதியளித்தது.
இந்தப் போட்டியின் விளைவாக தங்களுக்குப் பயனேதும் தராத நிலையில் இத்தொழிலில் உள்ள முக்கிய நிறுவனங்கள் வாசகர் குறித்த அளவீட்டு முறையையே சந்தேகிக்கத் தொடங்கின. பல்வேறு பத்திரிக்கை நிறுவனங்களின் கடுமையான எதிர்ப்பை சந்தித்த நிலையில் என்ஆர்எஸ் அமைப்பு 2004-ல் தனது செயல்பாட்டை நிறுத்தியதும் ஐஆர் எஸ் இத்துறையில் ஏகபோகமானது. அதைத் தொடர்ந்த ஆண்டுகளில் ஐஆர் எஸ் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் கேள்விகள் தொடர்ந்து எழுந்தன. இந்த அமைப்போடு இணைந்திருந்த பல பத்திரிக்கைகளும் இதன் மூலம் தங்களுக்கு எவ்வித பலனும் இல்லை என்று கூறி ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று அச்சுறுத்திய நிலையில் அதன் வாசகர் எண்ணிக்கை குறித்த துவக்க நிலை மதிப்பீடுகளை கணிசமாகத் திருத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஐஆர் எஸ் ஆளானது.

உலகளாவிய அதிகாரத்தைப் பொறுத்தவரையில் பத்திரிக்கைகளுக்கான விளம்பரங்களை வழங்குவது குறித்து ஆலோசனை கூறுவதில் பங்கு வகித்து வந்த என் ஆர் எஸ் செயல்பாட்டை நிறுத்திய நிலையில் அதனை மேலாதிக்கம் செய்து வந்த டபிள்யூ ப்பி ப்பி நிறுவனத்தின் வலிமை ஆம்னிகாம் குழுவின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டது. தனது இந்திய துணைநிறுவனமான ஹன்சா ஆய்வு நிறுவனத்தின் மூலம் போட்டி பத்திரிக்கை நிறுவனங்களின் கூட்டணியின் உதவியுடன் 1990களின் இறுதியில் ஐஆர் எஸ் இதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றது. 2008-ல் டபிள்யூ ப்பி ப்பி குழுவின் ஒரு பகுதியான ஐஎம் ஆர் பியின் தொழில்நுட்ப மேற்பார்வையில் என் ஆர் எஸ் மீண்டும் தனது செயல்பாட்டை தொடர முயற்சித்தது. அந்த முயற்சி தோல்வியடைந்த போதிலும் தொலைக்காட்சிக்கான தரவரிசையில் டபிள்யூ ப்பி ப்பி நிறுவனம் தொடர்ந்து வலுவோடு இருந்து வருகிறது.
ஊடக உரிமை, விளம்பரத் தொழில், சந்தை குறித்த ஆய்வு ஆகிய துறைகளில் ஒருமுகத் தன்மை அதிகரித்துக் கொண்டே வரும் இன்றைய நிலையோடு கூடவே மற்றொரு அம்சமும் வெளிப்படுகிறது. அதுதான் அரசியல் ரீதியான விளம்பரத்தில் மிகப் பெரும் விளம்பர நிறுவனங்களின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே போவதாகும். 2014 தேர்தல் காலத்தில் பாஜக இண்டர் பப்ளிக் மற்றும் டபிள்யூ ப்பி ப்பி ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த விளம்பர நிறுவனங்களை மாறிமாறி பயன்படுத்திக் கொண்டது. இறுதியில் இத்தொழிலைச் சார்ந்த நிபுணர்களையே தனிப்பட்ட வகையில் தனது ஆலோசகர்களாக அது நியமித்துக் கொண்டது. செயல்திட்டங்களை உருவாக்குவதில் கருத்துக் கணிப்புகள் உதவி செய்வதோடு மக்களின் உணர்வுகளிலும் அவை செல்வாக்கு செலுத்துகின்றன. இவை டபிள்யூ ப்பி ப்பி மற்றும் ஆம்னிகாம் குழுக்களுடன் இணைந்த நிறுவனங்களால் மேற்கொள்ள ப்படுகின்றன.

பொது நோக்கத்திற்கு சேவை செய்யும் ஒரு நிறுவனம் என்ற வகையில் அதை ஆழமாக அரிக்கும் சக்தியாக உலகமயமாக்கல் விளங்குகிறது. உலகளாவிய அளவில் செயல்பட்டு வரும் விளம்பர நிறுவனங்களுக்கு அடிபணிந்து நிற்பதென்பது ஊடகத்திற்கும் அதன் வாசகர்களுக்கும் இடையே இருந்துவந்த உறவு சீர்குலையவும் காரணமாகியுள்ளது.

இதன் விளைவாக, இந்திய சூழல் உலகமயமானதாக அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு முக்கியமான தேர்வுகளும் அதற்குப் போட்டியாக எழுந்து வருகின்றன. மோசமான வகையில் கரைந்து போன நம்பிக்கை, மூழ்கடிக்கும் வகையில் திரண்டு வரும் போலிச் செய்திகள் ஆகிய சூழலில்தான் இன்றைய ஊடகம் உள்ளது.

தேர்தல்கள் பற்றி மார்க்சும் எங்கெல்சும்

வீ. பா. கணேசன்

இன்று இந்திய சமூகத்தில் அதிகரித்து வரும் அனைத்து வகையான அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார சிக்கல்களை இன்றைய அரசியலை அவதானிக்கும் ஒவ்வொருவருமே எதிர்நோக்கி வருகின்றனர். ஓர் எதிர்க்கட்சியின் வேலை என்பது ஆளும் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் குறைகூறுவது மட்டுமே என்பதற்கு மாறாக கம்யூனிஸ்ட் இயக்கம் சுயமாக பரிசீலித்து, நாட்டை எதிர்நோக்கி வரும் பிரச் சனைகளை எதிர்கொள்வதற்கான தனது செயல் பாட்டிற்கான அணுகுமுறையை உருவாக்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகும். தொழிற் புரட்சி தலையெடுத்த காலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்த எண்ணற்ற பிரச்சனைகளை மார்க்சிய ஆசான்கள் அன்று எதிர்கொண்டார் களெனில், இன்றைக்குத் தலையெடுத்துள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்ற, இன்றைய காலப்பகுதியில் நாம் சந்திக்கின்ற, சந்திக்கவிருக் கும் பிரச்சனைகளும் கணக்கில் அடங்காதவையே.

அவ்வகையில் இந்த ஆண்டு மே மாதம் நடை பெற்ற  இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நாட்டில் உருவாகியுள்ள கடினமானதொரு சூழ்நிலை மார்க்சிய ஆதரவாளர்கள் மத்தியில் பல பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. உலகின் பல நாடுகளைப் போன்றே இந்தியாவும் வலதுசாரிப் பாதையை நோக்கித் திரும்பியுள்ளதா என்ற கேள்வியும் நம்மிடையே எழுந்துள்ளது.  இத்தகைய பின்னணியில் அரசு, நாடாளுமன்றம், தேர்தல் ஆகியவை குறித்தும் ஒரு தொழிலாளி வர்க்கக் கட்சியின் இலக்குகள் பற்றியும் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் சீரிய கருத்துக்கள் இந்த விஷயத்தில் தற்கால நடப்புகளை ஆய்வு செய்வதற்கு வழிகாட்டுகின்றன.

ஒரு வர்க்கம் என்ற வகையில் அதன் அளவு எவ்வளவு சிறியதாக இருப்பினும் சரி, அதன் வளர்ச்சி எவ்வளவு குறைவாக இருந்தபோதிலும் சரி, பாட்டாளி வர்க்கம் தன்னை முதலில் ஓர் அமைப்பாகவும், பின்னர் ஓர் அரசியல் கட்சியாக வும் அணிதிரட்டிக் கொள்ள வேண்டும் என்று பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாத்திரம் குறித்து உறுதிப்பட எடுத்துக் கூறியது மார்க்ஸ்-எங்கெல்ஸின் கம்யூனிஸ்ட் அறிக்கை.

1848-ம் ஆண்டில் ஜெர்மனியில் உருவான கிளர்ச்சிக்குப் பிந்தைய சூழலில், ஒரு நாடாளு மன்றம் உருவாகும் வாய்ப்பு இருக்குமானால் தொழிலாளர்களின் கட்சி தன் வேட்பாளர்களை முன்நிறுத்த வேண்டும் என்றும், அக்கட்சியின் தனிப்பட்ட நடவடிக்கையின் மூலம் வெற்றி பெறும் ஒரு சில வேட்பாளர்களின் இருப்பு அத்தகைய அவையில் மிக முக்கியமானதாகும் என்றும் ஜெர்மன் தொழிலாளர் கட்சியின் மத்தியக் குழுவிற்கு மார்க்ஸ் அறிவுரை வழங்கி யிருந்தார்.

ஜெர்மனியில் புரட்சிகர சூழ்நிலை தணிந்த நிலையில் மார்க்சின் இந்த 1848 மார்ச் மாத கடிதம் கட்சியின் பொதுக் கவனத்திற்கு வைக்கப் படவில்லை என்றபோதிலும், ஜெர்மனியில் முதலாவது வெகுஜன சோஷலிச தொழிலாளர் கட்சி உருவாக்கப்படுவதையும், தனது வர்க்க நலன்களை முன்னெடுத்துச் செல்ல ஜெர்மன் நாடாளுமன்றத்தை அது பயன்படுத்திக் கொள் வதையும் மார்க்ஸ்- எங்கெல்ஸ் ஆகியோரால் தங்கள் வாழ்நாளிலேயே காண முடிந்தது.

அதைப் போன்றே அன்றைய ஜெர்மானிய சமூக ஜனநாயக கட்சியின் தலைவரும், புரட்சிகர கோட்பாடுகளை திருத்தி செயல்பட்டு வந்தவரும் நாடாளுமன்ற வாதத்தில் மூழ்கிப் போனவரு மான பெர்ன்ஸ்டைன் போன்றவர்களின் சந்தர்ப்ப வாதப் போக்கை எதிர்த்து மார்க்சும் எங்கெல்சும் தங்கள் கருத்துக்களை சுட்டிக் காட்டுகையில், நவீன சமூகப் புரட்சியின் மிகப்பெரும் உந்து சக்தியாக விளங்கும் முதலாளி வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையிலான  வர்க்கப் போராட்டத்தை இயக்கத்திலிருந்து ஒருபோதும் அகற்றலாகாது. தொழிலாளி வர்க்கம் தனது சொந்த வர்க்கப் போராட்டத்தின் மூலமாகவே தனது வர்க்கத்தின் விடுதலையை வென்றடைய முடியும் என்பதையும் அவர்கள் ஆழமாக வலியுறுத்தினர்.

ஜெர்மனியில் 1871-ல் வலிவு பெற்ற பிஸ்மார்க் கின் ஆட்சிக் காலத்தில் 1878 முதல் 1891 வரை நடைமுறையில் இருந்த சோஷலிசத்தைத் தடை செய்யும் சட்டங்களுக்கு மத்தியிலும் 1884-ல் 5 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்த ஜெர்மன் தொழிலாளர் கட்சியின் செல்வாக்கு 1890-ல் இரண்டு மடங்கானது. அது மீண்டும் 1898-ல் மேலும் இரண்டு மடங்காக உயர்ந்தது. (1912-ல் அக்கட்சி 40 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்கு களைப் பெற்றது.) இந்தப் பின்னணியில் கட்சி யின் வளர்ச்சியை சுட்டிக்காட்டிய எங்கெல்ஸ் ப்ரான்சில் வர்க்கப் போராட்டங்கள் என்ற மார்க்சின் நூலுக்கு 1895-ல் எழுதிய முன்னுரை யில் ஜெர்மன் நாடாளுமன்றத்தைப் பயன்படுத்து வதன் முக்கியத்துவம் குறித்து கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்:

“அனைவருக்குமான வாக்குரிமை என்பது வேறெந்த பயனையும் அளிக்கவில்லை என்றாலும் ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கும் நமது ஆதரவாளர் களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்க நமக்கு வாய்ப்பளிக்கிறது. தொடர்ச்சியாகவும் துரிதமாக வும் நமக்கு அதிகரித்து வரும் ஆதரவு என்பது நமது வெற்றியை உறுதிப்படுத்தும் அதே நேரத் தில் நம் எதிரிகளுக்கு கலக்கத்தையும் ஏற்படுத்து கிறது. அவ்வகையில் பிரச்சாரத்திற்கான ஒரு கருவியாகவும் அது மாறுகிறது. நமது சொந்த வலிமையையும், நம்மை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளின் வலிமையையும் அது நமக்கு உணர்த்துவதோடு நம்மை விட்டு விலகி நிற்கும் விரிவான பகுதி மக்களிடையே தேர்தல் நேரத்தில் சென்று நமது கருத்துக்களை பரப்புவதற்கான வாய்ப்பையும் இவை நமக்கு வழங்குகின்றன. நாடாளுமன்றத்தில் நமது உறுப்பினர்கள் மக்களின் பிரச்சனைகளைப் பேசுவது போலவே, நமக்கு எதிரான தாக்குதல்கள் குறித்தும் மக்களிடையே உரக்கப் பேச முடிகிறது. நமது பொதுக் கூட்டங் கள், பத்திரிக்கைகள் ஆகியவற்றின் மூலமாக மக்களிடம் நாம் பேசுவதை விட மேலும் அதிக மான சுதந்திரத்துடன் நம்மால் பேச முடிகிறது. இந்த விஷயத்தில் நாடாளுமன்றத்திலும் பொது வெளியிலும் சோஷலிச கருத்தோட்டங்களுக்கு எதிரான சட்டங்கள் பயனற்றவை என்பதை நம்மால் தொடர்ந்து நிரூபிக்கவும் முடிந்துள்ளது.” (மார்க்ஸ்-எங்கெல்ஸ் தொகுப்பு நூல்கள் தொகுதி 27, பக். 516)

எனினும் இத்தகைய தேர்தல் வெற்றிகளின் விளைவாக கட்சியின் நீண்ட கால இலக்குகளை கட்சித் தலைவர்கள் ஒதுக்கித் தள்ளும் போக்கை மேற்கொள்வதை உணர்ந்து கொண்ட எங்கெல்ஸ் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியில் தலையெடுத்துள்ள இந்தப் போக்கிற்கு எதிராகவும் குரல் கொடுத்தார். 1891-ம் ஆண்டின் கட்சித் திட்டத்திற்கான நகல் குறித்த தனது விமர்சனத்தில் இதைச் சுட்டிக் காட்டிய எங்கெல்ஸ் இத்தகைய சந்தர்ப்ப வாதம் மிகவும் அபாயகரமானது என்றும் குறிப்பிட்டார்.

1871-ம் ஆண்டில் பிரெஞ்சு பாட்டாளி வர்க்கம் மிகக் குறுகிய காலத்திற்கு பாரீஸ் நகரைக் கைப்பற்றியிருந்த போதிலும் இறுதியில் பெரும் அழிவுக்கு வழிவகுத்த பாரீஸ் கம்யூன் நிகழ்வில் கிடைத்த அனுபவத்தைக் கணக்கில் கொண்ட மார்க்சும் எங்கெல்சும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் ஒரே ஒரு முக்கிய திருத்தத்தை மேற்கொண்டனர். “ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் அரசு இயந்திரத்தை தனக்கு ஆதரவாகவும், தனது நோக்கங்களுக்காகவும் பாட்டாளி வர்க்கத்தால் பயன்படுத்த இயலாது. பொருளாதார ரீதியாக வலிமைமிக்க ஆளும் வர்க்கத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட அரசை புதியதொரு சோஷலிச சமூகத்தைப் படைக்க விழையும் தொழிலாளர்கள் கையி லெடுத்து அப்படியே பயன்படுத்திக் கொண்டு விட முடியாது” என்றும் அவர்கள் குறிப்பிட்ட னர்.

மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட நவீன அரசு என்பது கூலி உழைப்பை மூலதனம் பயன்படுத்திக் கொள்வதற்கான ஒரு கருவியே என குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற தனது நூலில் குறிப்பிடும் எங்கெல்ஸ்  “அனைவருக்குமான வாக்குரிமை என்பது தொழிலாளி வர்க்கம் எந்த அளவிற்கு முதிர்ச்சி அடைந்துள்ளது என்பதைக் காட்டும் ஓர் அளவுமானியே ஆகும். நவீன உலகில் அதுவே போதுமானது. பொதுமக்களின் கருத்தை வெளிப் படுத்தும் இந்த அளவுமானி தொழிலாளர் களிடையே கொதிநிலை அதிகரித்துள்ளதை சுட்டிக் காட்டும்போது, அவர்களும் சரி, முதலாளி களும் சரி, தாங்கள் எங்கே நிற்கிறோம் என்பதை உணர்ந்து கொள்வார்கள்” என்றும் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

மார்க்சிய ஆசான்களின் தெளிவான இந்தக் கருத்துக்களை உள்வாங்கி தொழிலாளி வர்க்கத் தின் வலிமையை அதிகரிக்கும் வகையிலான வர்க்கப் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தும் கடமையை மேற்கொள்வதே இன்றைய தேவை யாகும். அதே நேரத்தில் சோஷலிச சமூகம் குறித்த சிந்தனையை பெரும்பகுதி உழைக்கும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான அனைத்து வகையான வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசான்களின் அறிவுரை யையும் நாம் முழுமையாக கையகப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது. கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியாகி 170 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, உலகெங்கிலும் பல்வேறு பரிசோதனைகளுக்கும், சோதனை களுக்கும் பிறகும் கூட, சமூகத்தின் அவலங்களுக் கான மாமருந்தாக சோஷலிச கருத்தாக்கம் செயலூக்கம் மிக்கதொரு தத்துவமாக இன்றள வும் தொடர்ந்து நீடித்து வருகிறது. சமகாலப் பிரச்சனைகளை இணையற்ற உத்வேகத்துடன் எதிர்கொண்ட மார்க்சும் எங்கெல்சும் வழங்கி யுள்ள அறிவுரைகள் நமக்கு உரிய வழிகாட்டும் கலங்கரை விளக்கங்கள் என்பதை உணர்ந்து செயல்படுவதே இக்காலப் பகுதியின் தேவையாகும்.

தேர்தலுக்கு முன்னும் பின்னும் கலவரங்கள் !

வாக்கு வங்கி  உருவாக்கத்தில், அரசியல், சேவை ஆகியவற்றைப் போல் கலவரமும் முக்கிய இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது. மதத்தின் பெயரில், சாதியின் பெயரில், இனத்தின் பெயரில், மொழியின் பெயரில் இந்தக் கலவரங்கள் தூண்டப்படுகின்றன. வகுப்புவாதம் இதைத் தீவிரமாக செயலாற்றும் நோக்கம் கொண்டது. வகுப்புவாதம் ஒரு அடையாளத்தை முன்னிறுத்தி மற்றொரு அடையாளத்தின் மீது வெறுப்பை உருவாக்குகிறது.

இத்தகைய குணம் கொண்ட, ஃபாசிசத் தன்மையை நோக்கி செல்லும் ஒரு அரசை கட்டமைக்க, இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் அமைப்புகள் இயங்கி வருகின்றன. பாபர் மசூதி, ராமர் பிறந்த இடத்தில் செயல்பட்டு வந்த ராமர் கோவிலை அழித்து அதன் மீது, கட்டப்பட்டதாகும், என பிரச்சாரம் செய்தது. இதன்மூலம் பாஜக தனது நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டது. சில மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றுதலும் நடந்தது. வாக்குவங்கி உருவாக்கத்தில், பாபர் மசூதி மற்றும் ராமருக்கு கோவில் கட்டுவது என்ற பிரச்சாரம், முக்கியப் பங்கு வகித்தது.

பாபர் மசூதியை இடித்து, ராமர் கோவிலைக் கட்டுவோம், என்ற முழக்கத்துடன், கிராமத்திற்கு ஒரு செங்கல் சேகரிக்கும் நிகழ்ச்சியும், பாபர் மசூதியை நோக்கி ரத யாத்திரை என்ற அணிவகுப்பும், சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கியது. பதட்டம் ஒவ்வொரு தனிநபருக்குள்ளும் அச்சமாக வடிவெடுக்கிறபோது, தன் அடையாளம் சார்ந்த மக்களுடன் ஐக்கியமாவது என்பதை பெரும்பான்மை வகுப்புவாதமும், அதைத் தொடர்ந்து சிறுபான்மை வகுப்புவாதமும் வளர்ச்சி பெறுவதை உறுதி செய்தது. இந்த அனுபவத்தை இந்தியாவில் உள்ள பாஜக வும், இந்துத்துவ அமைப்புகளும் தொடர்ந்து பின்பற்றி வருகின்றன.

கலவரங்கள் செய்த காரியங்கள்:

வகுப்பு வாத சக்திகளின் வளர்ச்சிக்கு, எப்போதுமே, மதவாதப் பதற்றங்கள் வழிவகை செய்து வந்துள்ளன. 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரை வகுப்புவாதக் கலவரங்கள் இந்தியாவில் அநேகமாக இல்லை. 20ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் பசுவதை எதிர்ப்பு, பன்றிக்கறி உண்ணுதல், முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களின் வழியாக செல்லும் இந்து ஊர்வலங்களில் ஒலி எழுப்புதல் ஆகிய காரணங்களால் மதக்கலவரங்கள் எழுந்தன. 1945 – 46 ஆண்டில் 72 கலவரங்கள் நடந்ததாக விவரங்கள் உள்ளன.

இந்த மதக் கலவரங்கள், மதவாத அரசியலின் வெளிப்பாடாக மட்டும் அல்லாமல், பெரும்பான்மை வகுப்புவாதத்தை நோக்கி, நகர்புற ஏழைகள் மற்றும் தலித் மக்களை ஈர்க்கப் பயன்பட்டுள்ளது, என்று, ’நம்மை சூழும் அபாயத்தை எதிர் கொள்ள’ என்ற பிரசுரத்தில், முனைவர். த. செந்தில்பாபு கூறுகிறார். இந்தியாவைப் பொறுத்த அளவில் பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் மதமாக இந்துமதம் குறிப்பிடப்படுவதால், இந்து மதத்தின் வளர்ச்சியைக் காட்டுவதற்காக ஒரு எதிரி தேவைப்படுகிறது. நமது நாட்டில் அந்த எதிரிகளாக முஸ்லீம்களும், கிறித்துவர்களும் அடையாளம் காட்டப்படுகின்றனர்.

அண்மைக் கால உதாரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள், சிலைகளுடன் பெரும் ஊர்வலங்களாக வளர்ச்சி பெற்றுள்ளதை குறிப்பிடலாம். சிறிய கோவில் விழாக்கள் கூட பிரமாண்ட செலவில் நடத்தப்படுவதும் இந்தப்பின்னணியில்தான். இந்துத்துவா என்ற சொல்லை உருவாக்கிய, விநாயக் தாமோதர் சவர்க்கார், “இந்துத்துவா என்பது இந்துயிசத்துடன் எவ்விதத்திலும் சம்மந்தப்பட்டதில்லை” எனக் கூறியுள்ளார். இந்துத்துவா என்பது அரசியல் திட்டம், அதனடிப்படையில் அரசியல் ஒழுங்கை எப்படிக் கட்டியமைப்பது, என்பதை கோல்வாக்கர் கூறியுள்ளார் என சீத்தாராம் யெச்சூரி தனது புத்தகமான, ’மோடி மோடி அரசாங்கம் வகுப்பு வாதத்தின் புதிய அலை’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசியல் திட்டம் இந்து மத மக்களிடையே முழுமையாக ஏற்புடையதாக அமையவில்லை. கலவரங்களை அரங்கேற்றுவதன் மூலம், துவக்க கட்டமாக அரசியல் திட்டத்திற்குள், வளைக்கப்படுகின்றனர்.

கலவரங்கள் மூலம் ஆட்சியை பிடித்த பின் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற, பாஜக கடந்த காலத்தில் குஜராத் மாநிலத்தில், மேலும் கலவரங்களை உருவாக்கியதையும், அம்மாநிலத்தின் சிறுபான்மையினரை அச்சம் கொள்ளச் செய்ததையும், நம் சமகால வரலாற்றில் கண்டிருக்கிறோம். இந்துத்துவாவை தங்களின் அடையாள அடிப்படையில் அறவே வெறுக்கும், இஸ்லாமியர்களின் ஒரு பகுதியினர் கூட பாஜகவிற்கு வாக்களிக்கும் அளவிற்கு அச்சம் ஊட்டப்பட்டனர், என்பதை இந்தியாவின் தேர்தல் ஆணையம் குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் நடத்திய தேர்தலின்போது குறிப்பிட்டுள்ளது.

2002 பிப்ரவரி இறுதியில் நடந்த கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு நிகழ்வைத் தொடர்ந்து, நடந்த கலவரத்தில் பல ஆயிரம் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். மாநிலத்தில் 6 மாதங்களுக்குப் பிறகும் இயல்பு நிலை திரும்பவில்லை. ஆனால் மாநில அரசு, சட்டமன்றத்தைக் கலைத்து விட்டு உடனடியாகத் தேர்தல் நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது.  தேர்தல் மற்றும் மனித உரிமை ஆணையங்கள், ”இன்னும் இஸ்லாமியர்கள் பலர் நிவாரண முகாம்களில் தங்கி உள்ள நிலையில், இயல்பு நிலை திரும்பியதாக எதை வைத்து கூறுகிறீர்கள்?”, என்ற கேள்வியை, எழுப்பியது. ஆனாலும் மத்திய பாஜக அரசில், தனக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, தேர்தலை சில மாதங்களுக்கு முன்னதாகவே நடத்தியது. அத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது.

இதேபோன்ற ஒரு அனுபவம்  உ.பி யில் முசாபர்பூர் பகுதியில் நடைபெற்ற கலவரத்தில், 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இஸ்லாமியர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அச்சூழலில் நடந்த தேர்தலில், பாஜக அதிக எண்ணிக்கையிலான, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றது. கலவரங்களுக்கான பிரச்சாரம் மூலம் ஆட்சிக்கு வருவதும், ஆட்சியில் அமர்ந்தபின், வகுப்புவாத உணர்வுகளை தூண்டி, தனக்கான செல்வாக்கை உறுதி செய்து கொள்வதும், இந்துத்துவா அமைப்பினரின், நிகழ்ச்சி நிரலாக உள்ளது.

2014 நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னதாக, 2013இல், வகுப்புவாத வன்முறையின் கீழ் 823 நிகழ்வுகள் நாடுமுழுவதும் நடந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 247 வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது. தேர்தலில் பாஜக வெற்றி பெற்றபின் மகராஷ்ட்ரா மாநிலம் உள்ளிட்ட சில பகுதிகளில், 2014 ஏப்ரல் – ஜூன் காலகட்டத்தில், 149 வகுப்புவாத மோதல்கள் நடைபெற்றுள்ளன. உ.பி.யில் 605 நிகழ்வுகள் இந்த இரண்டு ஆண்டுகளில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இவை ஒருபுறம் தேர்தலை மையப்படுத்தியும், மற்றொரு புறம் தனது வகுப்புவாத அரசியலை அரங்கேற்றும் வகையிலும், இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் பிரிவு மக்களை தனக்கு சாதகமாக உறுதி செய்து கொள்வதையும், உள்ளடக்கி உள்ளது.

மதுரா, கைரானா நிகழ்வுகள்:

இப்போது மதுரா பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினரின் மையமாக மாறியுள்ளது. அங்குள்ள கிருஷ்ணன் கோவில், மற்றும் மசூதிக்கு இடையில் புனைந்த மத அடிப்படையிலான சிக்கல், மற்றும் பதட்ட உணர்வு, தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது. அண்மையில் மதுரா ஜவஹர் பாக்-இல் உள்ள 288 ஏக்கர் நிலம், இரண்டு ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு, ஜெய்குரு தேவ் அறக்கட்டளை அமைப்பை சார்ந்தோர் இந்த ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளனர். தர்ணா போராட்டம் நடத்த அனுமதி பெற்ற இந்தக் கூட்டம், காவல்துறையினருடன் துப்பாக்கி சூட்டில் ஈடுபடும் அளவிற்கு பயிற்சி பெற்றுள்ளனர்.

இந்தக் கூட்டம் ஆர்.எஸ்.எஸ் ஐச் சார்ந்த ராஜீவர் என்ற குருஜி என்பவரால் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் என்பது வெளி வந்து கொண்டிருக்கும் உண்மை ஆகும். ஜூன் 30 இந்தியன் எக்ஸ்பிரஸ், இது குறித்து விரிவான கட்டுரை எழுதியுள்ளது. ஜவஹர் பாக் ஆக்கிரமிப்பாளர்களுக்கு தலைமை தாங்கிய, வீரேஷ் யாதவ் ஒரு மாதம் கழித்துதான் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் காவல் துறைக்கு அளித்து வரும் வாக்குமூலத்தில், கொள்ளைக்கார கும்பலின் செயல் வடிவங்களும், அவர்கள் தங்களுடைய குழுவை நிர்வாகம் செய்யும் நடைமுறையும் சொல்லப்பட்டு இருக்கிறது.

அரசுக்கு சொந்தமான பொது இடத்தை ஆக்கிரமிக்க மத்திய பிரதேசத்தில் இருந்து வந்தது. அதன் பின் ஆக்கிரமித்த பகுதிகளுக்குள் செக்போஸ்ட் அமைப்பது, குழுக்கள் மூலம் பராமரிப்பது, குடியிருப்புகள் உருவாக்கி அனைத்து அடிப்படை வசதிகளும் உருவாக்கப்பட்டது, நகரில் அல்லது வேறுபல இடங்களில் நடந்த வன்முறை நிகழ்வுகளில், தாக்குதல் நடத்தும் கும்பலாக பயன்படுத்தப்பட்டது ஆகியவை, பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு குழுவினரால் மட்டும்தான், முடியும்.

ஐ.எஸ் அமைப்பின் செயல்பாடுகள், நக்ஸல் அமைப்பின் செயல்பாடுகள் ஆகியவை, பொது மக்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு ஊடகங்களில் முக்கியத்துவம் தரப்பட்டது. ஆனால் வீரேஷ் யாதவ் மற்றும் அவர் குழுவினரின் செயல்பாடுகள், ஒரு நாள் செய்தியாக முடிக்கப்படும் நிலை உள்ளது. இதுவே திட்டமிட்ட ஒன்றாக கருத இடமளிக்கிறது. 15 முதல் 20 வயது மதிக்கத் தக்க இளைஞர்கள் இந்தக் குழுக்களில் பயன் படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பயிற்சி அளித்தது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்ற வாக்குமூலத்தை, இந்திய ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்து வெளியிடவில்லை.

உ.பி.யில், எதிர்வரும் தேர்தலை தன் வசப்படுத்த, தொடர்ந்து பல ஆண்டுகளாக பாஜக செயலாற்றி வருகிறது. முசாபர் நகர் கலவரங்கள் குறிப்பிடத்தக்கது. இந்துத்துவா அமைப்பினர் வைத்துள்ள பட்டியலில், கைரானா இப்போது முக்கிய இடம் பிடித்துள்ளது. ஹூகும் சிங், பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர். இவர் வெளியிட்ட ஆதாரமற்ற செய்தியை, அமித் ஷா மற்றும் மோடி இருவரும் அலகாபாத் பாஜக கூட்டத்தில் பேசுகின்றனர். காஷ்மீரில் இருந்து இந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டது போல், கைரானாவில் இருந்து இந்துக்கள் முஸ்லீம்களால் வெளியேற்றப் படுகின்றனர் என்பதே அந்த விஷம் கக்கும் செய்தியாகும்.

தமிழ் நாளேடுகளும் இந்த செய்திகளை வெளியிட்டனர். இது உண்மையற்ற செய்தி என்பதை, உ.பி. அரசு அமைத்த விசாரணைக்குழு மூலம் அறியலாம்.  பாஜக வெளியிட்ட 119 நபர்கள் கொண்ட பட்டியலில், 10 ஆண்டுகளுக்கு முன், கைரானா நகரத்தை விட வேறு நல்ல வேலை தேடி சென்ற, இடம்பெயர்ந்த 66 மனிதர்கள் உள்ளனர். ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டு ஜெயிலில் உள்ளவர் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்திகளுக்கு முக்கிய இடத்தை ஊடகங்களும், மத்திய அரசும் வழங்கவில்லை. பிரதமர் உள்ளிட்ட, அரசின் முக்கியப் பிரமுகர்கள், தங்களது அரசியல் உரையில், இப்படி எந்த ஒரு ஆதாரமும் இல்லாத அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைப்பது, ஃபாசிச நிகழ்ச்சி நிரலின் பகுதியே என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இத்தகைய அனுகுமுறை காரணமாக, உ.பி.யின் பல கிராமங்கள், முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டு, முஸ்லீம்கள் இல்லாத கிராமங்களாக உருவெடுக்கின்றன. நகருக்கு வெளியே புதிய குடியிருப்புகளை கட்டமைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகின்றனர். அதையும் லிட்டில் பாகிஸ்தான் என நக்கலடிக்கும் பிரச்சாரமும் நடந்து வருகிறது. இவை அனைத்துமே இந்துத்துவா என்ற அரசியல் திட்டத்தை அரங்கேற்றும் நோக்கத்தில் செய்யப்படுகிற ஒன்று. இதில் மத அடையாளம் காரணமாக அப்பாவிகளும் ஈடுபடுத்தப்படுகின்றனர். சிவில் சமூகத்தினர் உள்ளிட்டு படிப்படியாக இந்த வளையத்திற்குள் வளைக்கப்படுகின்றனர் என்பதை, முசோலினி ஆட்சியை விமர்சனம் செய்த, கிராம்சியும், இந்தியாவில் கே.என். பணிக்கர் போன்ற அறிஞர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

கலவரங்களும்கார்ப்பரேட்டுகளும்:

மதுராவில் ஜவஹர் பாக்-இன் 288 ஏக்கர் நிலத்தை மீட்கும் போராட்டத்தில், காவல் துறையின் ஒரு மாவட்ட கண்காணிப்பாளர் கொல்லப்பட்டுள்ளார். இதற்கான துணிச்சல், சாதாரண ஆக்கிரமிப்பாளர்களுக்கு இருக்க முடியாது. நன்கு பயிற்சி பெற்ற, ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்ட ஒரு குழுவினரால் தான் இது சாத்தியம். வீரேஷ் யாதவ் தலைமையிலான அந்தக் குழு, 47 துப்பாக்கிகள், 6 ரைஃபிள் துப்பாக்கிகள், நூற்றுக்கணக்கான கிரேனேடுகள் என சகலவித தாக்குதலையும் எதிர் கொள்ளும் ஆயுதங்கள், கலவரத்திற்குப்பின், கைப்பற்றப்பட்டுள்ளது.

சொகுசு கார்கள், பல ஆயிரம் கோடி சொத்து மதிப்பு கொண்ட ஜெய் குருதேவ் ஆசிரமம் ஆகியவை திடீரென உருவாக முடியாது. டில்லி – மதுரா நெடுஞ்சாலையில் பிரமாண்டமாக காட்சியளிக்கும் இந்த ஆசிரமம், பல கருத்துக்களைப் பிரச்சாரம் செய்து வருகிறது. சைவ உணவையே உண்ணுங்கள், இந்த ஆசிரமத்திற்கு, புலால், மீன், முட்டை போன்ற உணவு உட்கொள்ளூவோர் நன்கொடை அளிக்க வேண்டாம். முல்லா, மௌல்வி போன்றோர் சரியான பாதையில் சென்றால், பிரச்சனை இல்லை, என பல வடிவத்தில் அசைவ உணவு உண்போருக்கு எதிரான கருத்துக்களை பரப்புகின்றனர். 1000 பசுக்களுக்கும் மேலான, கோசல்யா, இந்த டிரஸ்ட் மூலம் நடத்தப்படுகிறது. இதற்கான பராமரிப்பு என்பது, ஒரு சில நன்கொடைகளில் மட்டும் சாத்தியமல்ல.

”பகுத்தறிவின்மையே தற்காலத்திய போக்காக மாறியுள்ளது. ஏனெனில் சந்தையில் உள்ள பகுத்தறிவின்மையோடு, மனிதர்களும் பகுத்தறிவின்மை உடன் ஒத்துப்போக வேண்டியுள்ளது. முதலாளித்துவ உலகமயமாக்கல் பொருளாதார கொள்கை, சந்தைகளை ஒருங்கிணைக்கும் போது, மனிதர்களைப் பிரிக்கிறது. தனது உலகச் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப, பயன்படுத்திக் கொள்வதற்கு மக்கள் ஓரணியாக, இணைந்திருப்பதை விட, தனித்தனியாக பிரிந்திருப்பது அனுகூலமாக இருக்கும். சமத்துவத்திற்கான அரசியலை, வேறுபாட்டிற்கான அரசியலாக மாற்றவும், கூட்டுறவோடு வாழவேண்டிய சமூகத்தை முடிவில்லா போட்டியின் அடிப்படையிலான சமூகமாக மாற்றவும், வர்க்க உணர்ச்சியை வகுப்புவாத உணர்ச்சியாக மாற்றவும் நடக்கும் இந்தப்போரின் முக்கிய ஆயுதமாக நவகாலனியாதிக்க தத்துவம் உள்ளது”, என்று அய்ஜாஸ் அகமது கூறுகிறார்.

ஃபாசிசம் பற்றி பேசுகிற போது முதலாளித்துவத்தின், செயலாக்க வடிவமாக அரங்கேறி வருகிற ஒரு கொள்கை கார்ப்பரேட் (பெரு நிறுவனமயமாதல்). இங்கு கார்ப்பரேட்டிசத்திற்கும், ஃபாசிசத்திற்கும் தொடர்பு இருந்தது, என்பதை, பேரா. பல்மிரோ டோக்ளியாட்டி, தனது உரைகளில் குறிப்பிட்டு உள்ளார். “கார்ப்பரேட்டிசம் என்பது பாசிச அரசு அமைப்பின் ஒரு வடிவம் என்று கருதப்பட வேண்டும். ஜெர்மனி, ஆஸ்த்திரியா ஆகிய நாடுகளில் கார்ப்பரேட் அரசை நிறுவுவதற்கு முயற்சி நடைபெற்று வருகிறது. இன்னமும் ஆட்சியைக் கைப்பற்றாத நாடுகளிலும், சிந்தாந்த பிரச்சார அம்சங்களில் ஒன்றாக கார்ப்பரேட்டிசம் இருப்பதைக் காணமுடியும். இந்த முழக்கம், அரசு கட்டமைப்பிற்கும், நடப்பு பொருளாதார முறைமைக்கும் ஒரு மாற்றாக முன்வைக்கப் படுகிறது.” இந்த வரிகள் பேரா. பல்மிரா டோக்ளியாட்டி, 1935ம் ஆண்டில், ஃபாசிசம் குறித்து, நிகழ்த்திய 15 உரைகளில் கார்ப்பரேட்டிசம் என்ற தலைப்பில் பேசியது.

இன்றைக்கு பிரதமர் மோடியும், பாஜக அரசும் முழங்கி வரும் எண்ணற்ற முழக்கங்களில், கார்ப்பரேட்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். பல இந்துத்துவா அமைப்புகளுக்கு, கார்ப்பரேட்கள் வாரி வழங்கியுள்ள நன்கொடைகளுக்கும், அரசின் முழக்கங்களுக்கும் தொடர்பு இருப்பது, டோக்ளியாட்டி குறிப்பிட்ட பொருளில் அரங்கேறி வரும் உண்மை என்பதை அறியமுடியும். கலவரங்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் கார்ப்பரேட்டுகள் குறித்து, மத வழிபாடுகளில் ஈடுபடுபவர்கள் உணர்ந்திருப்பது இல்லை என்பது இந்துத்துவாவிற்கு சாதகமாக உள்ளது.

ஜனநாயகத்திற்கு எதிரான எதேச்சதிகார அனுகுமுறை:

ஃபாசிச சக்திகளின் வளர்ச்சியில் எதேச்சதிகாரம் படைத்த தலைமை முக்கிய பங்கு வகிக்கிறது. உள்கட்சி தேர்தல் நடத்தப்படுவதில்லை. படிப்படியாக அது ஒரு சிவிலியன் ராணுவமாக மாறும் நிலையை உருவாக்கிக் கொள்கிறது. ஆர்.எஸ்.எஸ் குறித்து மதிப்பீடு செய்கிற இந்தியாவின் பணிக்கர் போன்ற ஆய்வாளர்கள் கூற்று இதை உறுதி செய்கிறது. வரலாற்றின் அடிப்படையிலும், முசோலினியின் செயல்பாடுகள் இன்றைய இந்துத்துவா பின்பற்றும் செயல்பாடுகளுடன் ஒத்துப் போகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு ஜூன் 18-20 தேதிகளில் கூடியபோது மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீட்டில், இந்தியாவில் மாநிலங்களுக்கான அதிகாரத்தை பறிக்கிற, தனக்கு எதிர்ப்பு அதிகம் இருக்கிற ராஜ்ய சபாவை புறக்கணிப்பது போன்ற செயல்களில், மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கை, வகுப்புவாத நடவடிக்கை ஆகியவற்றுடன் எதேச்சதிகாரம் ஆகிய பரிமாணங்களில் மத்திய அரசின் செயல்பாடு உள்ளது என மதிப்பீடு செய்துள்ளது.

மேலே குறிப்பிட்ட உலக ஃபாசிச சக்திகளின் அனுபவமும், இந்தியாவில் தற்போது நடைமுறைப் படுத்தபடும் இந்துத்துவா அரசியலும் ஒத்துப் போவதை உணரமுடியும். எனவே உ.பி. போன்று, இந்தியா முழுமைக்கும் கலவரங்களை உருவாக்குவதும், அதற்கு தேவைப்படும் வன்முறையாளர்களை சிந்தாந்த ரீதியிலும், போராட்டப் பயிற்சி ரீதியிலும் உருவாக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் போதுமான துணை அமைப்புகள் உள்ளன. கார்ப்பரேட் களும் தீணி போடுவதற்கு தயாராக உள்ளனர்.

மதுராவில் வீரேஷ் யாதவ் போன்ற நபர்கள், ஆர்.எஸ்.எஸ் ஐச் சார்ந்த ராஜீவர் என்ற குருஜியின் மூலம் சண்டைப் பயிற்சி, கலவரப் பயிற்சி மட்டும் பெற்று இருக்கப்போவதில்லை. சாகா போன்ற சில நடவடிக்கைகள் வெளிப்படையானவை. வெளியே தெரியாத திட்டமிட்ட அரசியல் செயல்பாடுகளை ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் விரிவாக்கி வருகின்றன. சிந்தாந்தப் பயிற்சியும் பெற்று இருப்பர்.

அதன் காரணமாகவே, ஜவஹர் பாக் -இல், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து வித அரசு நெருக்கடிகளையும் எதிர் கொண்டு ஆக்கிரமிப்பைத் தொடர முடிந்துள்ளது. ஆசீமானந்தாவைப் போல் இந்த வாக்குமூலம் பரபரப்பாக பேசப்பட வில்லை. அதேநேரத்தில் பிரக்யாசிங் தாகூர் போல், பின்னாளில் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட முடியும். அதற்கான வலிமையை, இந்துத்துவா அரசியல், தனது செயல் திட்டம் மூலம் படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. ஜெயகுருதேவ் உருவாக்கிய போஸ் சேனா என்ற அமைப்புக் கூட அத்தகைய பின்னணி கொண்டதாக இருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே மதுரா நிகழ்வுகளை வெறும் கலவரமாக மட்டும் எண்ணி விட முடியாது. கைரானா போன்ற பிரச்சாரங்களை, ஒரு உளறுவாய் நாடாளுமன்ற உறுப்பினரின் அறியாத செயல் என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. இவை தெளிவான இந்துத்துவா அரசியலின் நிகழ்ச்சி நிரல், முதலில் வாக்கு வங்கி பின்னர் ஃபாசிச அடக்குமுறைக்கான, ஆயுதம் என்பதே உண்மை.