தமிழக பொருளாதார வளர்ச்சியும் தாராளமயமும் – பகுதி 1

அறிமுகம்

இந்தியா விடுதலை பெற்று இன்றைய தமிழகம் தனி மாநிலமாக உருவான பொழுது தமிழகம் பொருளாதார ரீதியாக பின்தங்கியே இருந்தது.காலனி ஆட்சியில் வேளாண் துறை பெரும்பாலும் தேக்க நிலையில் தான் இருந்தது.ஐம்பதுகளின் துவக்கத்தில் மாநிலத்தின் நெல் உற்பத்தி 20 லட்சம் டன் என்ற அளவில் தான் இருந்தது. மகசூலும் ஏக்கருக்கு ஏழு க்விண்டால்(700 கிலோ) என்று குறைவாகவே இருந்தது. தொழில் துறையிலும் பெரும் முன்னேற்றம் காலனி ஆட்சிக்காலத்தில் நிகழவில்லை. ஜவுளி, சிமெண்ட், சர்க்கரை என்று சில துறைகளில் நவீன ஆலை உற்பத்தி துவங்கியது. ஆனால் ஆமை வேகத்தில் தான் அதிகரித்தது.தொழில்துறையின் பெரும்பகுதி ஆலை அல்லாத முறைசாரா உற்பத்தியாகவே இருந்தது. தொழில்துறை உழைப்பாளர்களில் பெரும் பகுதியினர் முறைசாரா உற்பத்தியில் தான் இருந்தனர். கட்டமைப்பு துறைகளில் காலனீய அரசு மிகக் குறைவான அளவில் தான் முதலீடுகளை மேற்கொண்டது. 1950 இல் தமிழகத்தின் மின் உற்பத்தித்திறன் 160 மெகாவாட் என்ற அளவில் மிகவும் சொற்பமாக இருந்தது. சமூக குறியீடுகளிலும் நிலைமை மோசம் தான். தமிழகத்தின் எழுத்தறிவு விகிதம்1950களின் துவக்கத்தில் சுமார் 20%என்ற அளவில் தான் இருந்தது. உயிருடன் பிறக்கும் ஆயரம் சிசுக்களில் ஏறத்தாழ நூற்றைம்பது சிசுக்கள் ஒரு ஆண்டு நிறைவடையும் முன்பே இறக்கும் நிலை இருந்தது.

இந்திய விடுதலைக்குப் பின்னான கடந்த அறுபத்தியெட்டு ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி நிகழ்ந்துள்ளது. 1951இல் (5 வயதிற்கு மேற்பட்ட மக்கள் மத்தியில்) 20 % ஆக இருந்த எழுத்தறிவு விகிதம் 2011 மக்கள்தொகை கணக்குப்படி (7வயதிற்கு மேற்பட்ட)ஆண்கள் மத்தியில் 87 %, பெண்கள் மத்தியில் 74 %. 1950 இல் 150 ஆக இருந்த சிசு இறப்பு விகிதம்  2012 ஆம் ஆண்டுகணக்குப்படி 21 ஆகக் குறைந்துள்ளது. மின் உற்பத்தி திறன் 22,000 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.1950களின் துவக்கத்தில் 20 லட்சம் டன்னாக இருந்த நெல் உற்பத்தி தற்சமயம் ஏறத்தாழ மூன்று மடங்காக 60 லட்சம் டன் என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.

அகில இந்திய அளவில் தேச உற்பத்தி மதிப்பு ஆண்டொன்றுக்கு சுமார் 3 சதவிகிதம் என்ற அளவில் 1950 முதல் 1966 வரையிலான காலத்தில் அதிகரித்துவந்தது. அக்காலகட்டத்தில் தமிழக மாநில உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் இதை விட குறைவாக இருந்தது. 1970-71 முதல் 1982-83 வரையிலான காலத்திலும் அகில இந்திய வளர்ச்சி விகிதத்தை விட தமிழக வளர்ச்சி விகிதம் குறைவாகவே இருந்தது. 1980-81 முதல் 1990-91 காலத்தில் தமிழக வளர்ச்சி விகிதம்5.38 %ஆக இருந்தது (இந்தியா 5.47%).1990-911998-99 களில் இது 6.02 % ஐ எட்டியது(இந்தியா 6.50%). தமிழக மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1980-1990களில் கணிசமாக குறைந்தது. இதனால் தமிழக தலா உற்பத்தி மதிப்பு இவ்விரு காலகட்டங்களில் ஆண்டுக்கு முறையே3.87 % மற்றும் 4.78 % அதிகரித்தது. பத்தாம் ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2002-2007) தமிழக உற்பத்தி வளர்ச்சி விகிதம் ஆண்டு சராசரி கணக்கில் கிட்டத்தட்ட 9.7 % ஐ எட்டியது.அடுத்த பதினொன்றாவது திட்ட காலத்தில் (2007-12) இது 7.7 % ஆக குறைந்தது.

இவ்வாறு அரசு புள்ளி விவரங்களை வைத்துப் பார்த்தால், தாராளமய காலத்தில் – அதாவது, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் – தமிழக பெருளாதார வளர்ச்சி, அகில இந்திய அளவை விட சற்று குறைவாக இருந்தாலும், பொதுவாக வேகமாகவே இருந்துள்ளது எனலாம். மேலும் அதற்கு முந்தைய காலத்தை விட அதிகம் என்றும் கூறலாம். ஆனால் இதை வைத்து தமிழக வளர்ச்சி பாராட்டுக்குரியது என்ற முடிவுக்கு செல்ல இயலாது. வளர்ச்சியின் துறைவாரி தன்மை, அதன் பலன்கள் யாரை சென்று அடைந்துள்ளன ஆகிய விஷயங்களையும் நாம் பரிசீலிக்க வேண்டும்.வேறு வகையில் சொன்னால், தமிழக பொருளாதார வளர்ச்சியின் வர்க்கத்தன்மையை ஆராய வேண்டும்.

 

வளர்ச்சியின் துறைசார் கட்டமைப்பு

அட்டவணை 1 தமிழக மாநில உற்பத்தியின் துறைசார் விகிதங்களை தருகிறது:

Untitled-1

நாம் முதலில் கவனிக்க வேண்டியது, கடந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் பயிர் மற்றும் கால்நடை வேளாண்மை, வனம் மற்றும் மீன்பிடி ஆகியவையை உள்ளடக்கிய முதல் நிலைத்துறையின் பங்கு மொத்த மாநில உற்பத்தி மதிப்பில் 43.5% இலிருந்து செங்குத்தாக 7.8%ஆக குறைந்துள்ளது என்பதாகும். குறிப்பாக தாராளமய காலகட்டத்தில் –அதாவது, கடந்த 20-25 ஆண்டுகளில் – 23.42% இலிருந்து 7.81% ஆக மிக வேகமாக குறைந்துள்ளது. ஆனால் தமிழக உழைப்பாளி மக்களில் வேளாண்மை துறையில் இருப்பவர்கள் சதவிகிதம் இன்றளவும் கிட்டத்தட்ட 40%ஆக உள்ளது. கிராமப்புறத்தில் இந்த சதவிகிதம் 51% ஆக உள்ளது. நவீன பொருளாதார வளர்ச்சியில் மொத்த உற்பத்தியில் வேளாண்மை துறையின் பங்கு கணிசமாக குறைவது வியப்பிற்குரிய விசயமல்ல. ஆனால், உழைப்பாளி மக்களுக்கு வேளாண் அல்லாத துறைகளில் வேலைவாய்ப்புகள் மிக மந்தமாகத்தான் அதிகரித்துள்ளன என்பது தமிழக வளர்ச்சியின் ஒரு முக்கிய ஊனம் ஆகும். அகில இந்திய நிலையும் இது தான். அகில இந்திய அளவில் கிராமப்புறங்களில் 2011-12 இல் உழைப்புப் படையில் 64% வேளாண் மற்றும் வேளாண்சார் துறைகளில் தான் இருந்தனர்.

இரண்டாவதாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் தொழில்துறை வளர்ச்சியில் பெரும் வேகம் இல்லை.சொல்லப்போனால், தாராளமய காலத்தில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் தொழில்துறையின் பங்கு குறைந்துள்ளது. 1960-61 இல் இந்த பங்கு 20.27% ஆக இருந்தது. 1980-81இல் 33.49% ஆக உயர்ந்தது. அடுத்த பத்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட அதேநிலையில் தொடர்ந்தது. ஆனால் தாராளமய கட்டமான கடந்த இருபது-இருபத்தைந்து ஆண்டுகளில் இப்பங்கு சரிந்து 2012-13 இல் 29% க்கும் கீழே சென்றுவிட்டது. அது மட்டுமல்ல. மொத்த மாநில உற்பத்தி மதிப்பில் பதிவுசெய்யப்பட்ட ஆலை உற்பத்தி (registered manufacturing) யின் பங்கு 1960-61 இல் 6.85% ஆக இருந்தது.இது 1990-91 இல் 16.22% ஆக உயர்ந்தது. ஆனால் தாராளமய காலத்தில் 2012-13 இல் கணிசமாக குறைந்து 11.56% ஆக உள்ளது. பதிவு செய்யப்படாத ஆலைத்துறை உற்பத்தியும் 5.17% ஆக சரிந்து 1960-61 இல் இருந்த 7.91% ஐயும் விட கீழே சென்றுள்ளது.

இந்த விவரங்கள் சொல்லும் செய்தி என்ன? தாராளமய கால வளர்ச்சி என்பது வேளாண்துறையிலோ, தொழில்துறையிலோ சாதிக்கப்படவில்லை. நவீன கால வளர்ச்சியின் இலக்கணமாக இருந்த தொழில்மயமாக்கல் இங்கே நிகழவில்லை. ஒருசில தொழில்கள் தமிழகத்தில் கடந்த இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் விரிவடைந்துள்ளன என்பது உண்மை. மோட்டார் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை, துணி மற்றும் பின்னலாடை துறை ஆகியவற்றை இவ்வாறு குறிப்பிடலாம். அனால் பொதுவான பலதுறை தொழில்மயம் இங்கே நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியானால் எங்கிருந்து வந்துள்ளது வளர்ச்சி? மூன்றாம் நிலைத்துறை – இது சேவைத்துறை என்றும் அழைக்கப்படுகிறது – தான் அதிகமாக வளர்ந்துள்ளது. இத்துறையின் பங்கு 1960-61 இல் 36.22% ஆக இருந்தது. 1990-91 இல் 43.4 % என்ற அளவிற்குத்தான் உயர்ந்தது. ஆனால் அடுத்துவந்த தாராளமய காலத்தில் சுமார் இருபது ஆண்டுகளில் 63.65% என்றார் அளவிற்கு அதிகரித்துள்ளது. இதன் உள்ளடக்கம் என்ன? உற்பத்தி மதிப்பு அடிப்படையில் சேவைத்துறையின் மிகப் பெரிய பகுதி என்பது நிதி மற்றும் ரியல் எஸ்டேட்தான். இது 2012-13 இல் சேவைத்துறை உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான மதிப்பைக் கொண்டுள்ளது. 2012-13 இல் மாநில மொத்த உற்பத்தியில் நிதி மற்றும் ரியல் எஸ்டேட்டின் பங்கு 23.13% ஆக உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சி என்பது மாபெரும் தொழில் வளர்ச்சி, தகவல் தொழில்நுட்ப புரட்சி என்றெல்லாம் சித்தரிப்பது மிகையானது என்பது தெளிவு.

வளர்ச்சியின் வர்க்கத்தன்மை

துறைவாரி உற்பத்தி பெருக்கம், அதில் அதிகரித்துவரும் சேவைத்துறையின் பங்கு, தொழில்துறையின் மந்தமான வளர்ச்சி, வேளாண்துறையின் தேக்கம்/துயரம் இவை ஒருபுறம் இருக்க, தமிழக வளர்ச்சி பல்வேறு வர்க்கங்களின் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன என்பதை பார்ப்போம்.

பொதுவாக காங்கிரஸ் ஆட்சியிலும் திராவிடக்கட்சிகளின் ஆட்சியிலும் முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் பெரும் ஆதாயம் பெற்றுள்ளனர் என்பது உண்மை. தமிழக கிராமப்புற மாற்றங்களை 197௦களின் இறுதியில் ஆய்வு செய்த பேராசிரியர் குரியன் 1961-62 முதல் 1971-72 வரையிலான காலத்தில் நிலச்சீர்திருத்தம் பற்றி பரவலாக பேசப்பட்டிருந்தாலும், கிராமப்புறக்குடும்பங்களில் 1 சதமாக இருந்த பெரும் செல்வந்தர்களின் கையில் குவிந்திருந்த சொத்து மதிப்பு 1961-62 இல் 33% ஆக இருந்தது, 1971-72 இல் 39%ஆக உயர்ந்தது. இதே காலத்தில் உயர்மட்ட 10% நீங்கலாக மீதம் 90% குடும்பங்களிடம் இருந்த சொத்துப்பங்கு 27.43% இல் இருந்து 22.36% ஆக குறைந்தது. 1970களிலும் அதன் பின்பும் நில மறுவிநியோகம் என்பது இடதுசாரிகள் அஜண்டாவில் மட்டுமே இருந்தது. அரசுகள் இப்பிரச்சினையில் செயல்பட மறுத்துவிட்டன. 1990களிலும் அதன் பின்பும் எதிர்மறையான நிலச்சீர்திருத்தம் – அதாவது, உச்சவரம்பை உயர்த்துவது, உச்சவரம்பு சட்டங்களை செயலற்றதாக ஆக்குவது, செல்வந்தர்களுக்கும் கார்ப்ப்ரேட்டுகளுக்கும் சாதகமாக விதிமுறைகளை மாற்றி விலக்குகளையும் அளித்து நில ஏகபோகத்தை தக்கவைப்பது, வலுப்படுத்துவது என்பதே அரசின்கொள்கையாக இருந்துவந்துள்ளது. இது இரு திராவிட கட்சிகளின் ஆட்சிகளுக்கும் பொருந்தும். 2001-2006 காலத்தில் அரசின் வசம் இருந்த நிலங்களை ஏகபோக முதலாளிகளுக்கு அற்ப குத்தகைக்கு அளிக்க மாநில அ.இ.அ.தி.மு.க. அரசு முனைந்ததும் அதை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்டதும் இங்கே நினைவில் கொள்ளவேண்டும். அதேபோல், ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் என்று 2006 இல் தேர்தல் வாக்குறுதி அளித்து, பின்னர் வழங்க அரசிடம் நிலம் இல்லை என்று தி,மு,க. அரசு நிலை எடுத்ததும் நினைவில் கொள்ளத்தக்கதே. ஆக பல நிலா உச்சவரம்பு சட்டங்கள் தமிழகத்தில் இயற்றப்பட்டுள்ள போதிலும் நிலா ஏகபோகம் என்பது பெருமளவில் தகர்க்கப்படவில்லை.

அதேசமயம், வேளாண்வளர்ச்சிக்கு என்று அரசு நடைமுறைப் படுத்தியுள்ள, நடைமுறைப் படுத்திவரும் திட்டங்களாலும் மானியங்களாலும் மிக அதிகமாக அபயன் அடைந்திருப்பது நிலப்பிரபுக்கள், பெருமுதலாளித்துவ விவசாயிகள் மற்றும் பணக்கார விவசாயிகள்தான் என்று கள ஆய்வுகள் கூறுகின்றன. சில நஞ்சை பகுதிகளில் பாரம்பர்ய நிலப்பிரபுக்கள் நிலங்களை விற்று காசாக்கி வேறுதுறைகளில் முதலீடு செய்துள்ளனர். இது அப்பகுதிகளில் உள்ள குடியானவ சாதியினருக்கு நிலபலத்தை கூட்டியுள்ளது. இவ்வாறு உருவாகியுள்ள பணக்கார விவசாயிகளில் ஒருபகுதியினர் நவீன உற்பத்திமுறைகளில் முதலீடு செய்துள்ளனர். வங்கி, கூட்டுறவு அமைப்புகள் அரசின் விரிவாக்கப்பணி அமைப்பு, அரசு மான்யங்கள் மற்றும் அனைத்து வேளாண்சார் திட்டங்களையும் ஏற்கெனவே இருந்த நிலப்பிரபுக்களும் இவ்வாறு வளர்ந்துள்ள பெரிய முதலளித்வ விவசாயிகள்/ பணக்கார விவசாயிகள் ஆகியோரும் பயன்படுத்தியுள்ளனர். விவசாயத்தில் கடந்த இருபது ஆண்டுகளில் இந்திய மற்றும் அந்நிய கம்பனிகளும் நுழைந்துள்ளன. இவர்கள் நேரடி விவசாயத்தில் ஈடுபடுவது குறைவு தான். ஆனால், அனைத்து இடுபொருள் சந்தைகளிலும் நுழைந்துள்ளனர். விதை, உரம், பூச்சிமருந்து, இயந்திரங்கள், தொழில் நுட்பங்கள், என்று அனைத்தும் இன்று கார்ப்பரேட்டுகளின் கைகளில் உள்ளது. தாராளமய கொள்கைகளின் பகுதி யாக அரசின் வேளாண் ஆராய்ச்சி அமைப்பும் விரிவாக்க அமைப்பும் பலவீனமடைந்துள்ளதால் விவசாயிகள் கார்ப்பரேட்டுகளை கூடுதலாக சார்ந்துநிற்கும் நிலை உருவாகியுள்ளது. நிறுவனக்கடன் வசதிகளும் சிதைந்துள்ளதால் லேவாதேவிகள், வர்த்தகர்கள், மற்றும் கார்ப்பரேட்டுகளின் முக்கியத்துவம் தமிழக வேளாண்மையில் அதிகரித்துள்ளது. 1970களில் இருந்தே பொதுப் பாசன வசதிகளை மேம்படுத்துவதில் அரசின் பங்கு குறையத்துவங்கியது. அரசு அளித்த மானியங்களை பயன்படுத்தி கிணற்று பாசனத்தை பம்புசெட்டுகள் வைத்தும் ஆழ்குழாய்கிணறுகள் அமைத்தும் பயன்படுத்தும் வாய்ப்புகள் சிறு குறு விவசாயிகளுக்கு ஏற்கெனவே குறைவாக இருந்தது. தாராளமய காலத்தில் இது கிட்டத்தட்ட எட்டாக்கனியாக ஆகிவருகிறது. நவீன பாசன முறைகள், நவீன வேளாண் இயந்திரங்கள், தொழில் நுட்பங்கள் அனைத்துமே ஒருசிறிய பகுதி பெருமுதலாளித்துவ விவசாயிகள், முதலாளித்துவ நிலப்பிரபுக்கள் கைகளில் தான் குவிந்துள்ளன.

சுருங்கச்சொன்னால், விவசாயிகள் மத்தியில் வர்க்க வேறுபாடு பெரிதும் அதிகரித்து ஒருபுறம் முதலாளிதத்துவ நிலப்பிரபுக்கள் மற்றும் (பாரம்பர்யமாக ஊரின் நிலக்குவியலில் இடம் பெறாதிருந்தாலும் காலப்போக்கில் அரசின் திட்டங்களையும் மானியங்களையும் பயன்படுத்தி பணக்கார விவசாயி நிலையில் இருந்து) பெரிய முதலாளித்வ விவசாயிகளாக மாறியுள்ளவர்களுமே கடந்த முப்பது ஆண்டுகளில் தமிழக கிராமங்களில் ஆளும் வர்க்கமாக உருவாகியுள்ளனர். பெரும் பகுதி ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளை பொருத்தவரையில், தாராளமய கொள்கைகளால் பயிர் சாகுபடி விவசாயம் கட்டுபடியாகாததாக மாறியுள்ளது. இடுபொருள் விலைகள் உயர்வு, விளைபொருள் விலைகளின் வீழ்ச்சி மற்றும் உத்தரவாதமின்மை, உள்ளிட்ட அரசுகொள்கைகளின் விளைவுகளால் இந்நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இன்று தமிழக கிராமங்களில் விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தை மட்டும் வைத்து குடும்பம் நடத்துவது என்பது பெரும்பாலான நடுத்தர விவசாயிகளுக்குக் கூட சாத்தியம் இல்லை.ஒரு சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ள “சமூக-பொருளாதார –சாதிவாரி கணக்கெடுப்பு” (SECC) தரும் விவரங்கள்படி, தமிழக கிராமப்புறங்களில் நூறு குடும்பங்களை எடுத்துக் கொண்டால், அதில் சாகுபடியை பிரதான வருவாயாக கொண்டிருப்பது 19 குடும்பங்களுக்கும் குறைவானவை தான் (18.63%). மறுபுறம், ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு குடும்பங்கள் (65.77%) பிரதான வருவாய் ஆதாரமாக கொண்டுள்ளது உடல் உழைப்பைத்தான். மேலும், சாகுபடிசெய்யும் குடும்பங்களை எடுத்துக் கொண்டால், ஒரு ஹெக்டேருக்கு (2.47 ஏக்கர்) குறைவாக சாகுபடி செய்வோர் மொத்த சாகுபடிசெய்யும் குடும்பங்களில் 77%. ஆனால் இவர்கள் வசம் உள்ள சாகுபடி நிலப்பரப்பு மொத்த சாகுபடி நிலப்பரப்பில் 35.4% தான். இது தான் தாராளமய காலத்தில் தமிழக கிராமப்புற வர்க்க கட்டமைப்பின் தன்மை.

தொடரும்

இடது முன்னணி அரசும், தொழில் மயமாகும் மேற்கு வங்கமும்

மேற்குவங்கம் தொழில் வளர்ச்சி காணும் சாத்தியக் கூறு தோன்றியிருக்கிறது. எந்தப் பின்னணியில்? ஏகாதிபத்திய உலகமயம், தாராளமயத்தின் தாக்குதல், இந்திய ஆளும் வர்க்கங்கள் ஏகாதி பத்திய நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து செயல்படுதல், அதன் விளைவாக பாரம்பரிய தொழில்கள் மூடப்படுதல் – ஆகிய இந்தப் பின்னணியில் தான் மேற்கு வங்க மாநிலம் தொழில் வளர்ச்சியினைக் காண வேண்டியிருக்கிறது. வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் தொழிற் புரட்சியினைக் கண்டன; ஆனால் அது காலனி நாடுகளை சுரண்டு வதன் மூலமும், சந்தையினை தங்கள் நலனுக்கு ஏற்ப இயக்கிய முறையிலும்தான் அதைக்காண முடிந்தது. தொழிற் புரட்சியின் தேவைக்கு இந்தியாவின் நூல் மற்றும் பருத்தி துணி உற்பத்தித் தொழில் நசுக்கப்பட்டது. அதற்கோர் உதாரணம் : 1840 ல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சார்லஸ் டிரிவ்லென் ஆணவத்தோடு சொன்னார். இந்தியாவின் தொழில் மற்றும் பட்டறை உற்பத்தியினை துடைத் தெறிந்து விட்டோம்.

தொழிற்புரட்சி விவசாயத் துறையிலும், முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கினை வேகப்படுத்தியது. அறிவியல் மற்றும் தொழில் நுணுக்க அம்சங்கள் இத்துறையில் பயன்படுத்தப்பட்டன; அதன் மூலம் முதலாளித்துவ போட்டிச் சந்தையின் விதிகளின் வழியே இராட்சச முதலாளித்துவ பண்ணைகள் சிறு விவசாயத்தின் இடத்தைப் பிடித்துக்கொண்டன. நிலத்திலிருந்து வெளியேற்றப் பட்ட விவசாயிகளை வளர்ந்து வரும் தொழில் துறை உள்வாங்கிக் கொண்டது. அவர்கள் தங்களுடைய போராட்டங்கள் மூலம் தங்கள் வாழ்க்கைத் தரத்தை கடந்த கால (விவசாயிகளாக இருந்த) நிலையிருந்து கொஞ்சம் உயர்த்திக் கொள்ள முடிந்தது.

அமெரிக்காவில் அபரிமிதமான விவசாய நிலம் உண்டு; ஆனால் அந்தத்துறையில் மொத்த மக்கள் தொகையில் 1.5 சதம் தான் ஈடுபட்டுள்ளனர்; மொத்த தேசிய வருமானத்தில் 1.5 சதம் தான் அந்தத் துறையிலிருந்து வருகிறது. நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் விவசாயப் பண்ணைகள் மிகவும் குறைந்த அளவிலேயே மனித உழைப்பைப் பயன்படுத்துகின்றன. அதில் உழைக்கும் விவசாயத் தொழிலாளிக்கும், நம்நாட்டு விவசாயத் தொழிலாளிக்கும் நிறைய வேறுபாடு உண்டு, வெற்றுக்காலுடன் திறந்த உடம்போடு சேற்றில் இறங்கி அமெரிக்க விவசாயத் தொழிலாளி வேலை செய்வதில்லை; மாறாக, நல்ல உடையணிந்து பண்ணைகளில் வேலையில் ஈடுபடுகின்றனர்; அவரவர்கள் திறமைக் கேற்ப ஒரு மணிக்கு 7.5 டாலரிலிருந்து (சுமார் ரூ.344/-) 9 டாலர் வரை (சுமார் ரூ.414/-) ஊதியமாகப் பெறுகின்றனர், அவர்களின் வேலை நேரமும் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தான்; ஒரு மாதத்தில் 26 நாட்கள் வேலை செய்கின்றனர், ஆக அவர்கள் மாத வருமானம் ரூ.55000 லிருந்து ரூ.70000 வரை இருக்கும். அமெரிக்காவில் வாழ்க்கைச் செலவு அதிகம் என்று இருந்த போதிலும், அவர்களை நம்நாட்டு விவசாயத் தொழிலாளியோடு எந்த வகையிலும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. பண்ணை முதலாளிகள் இந்த அளவு ஊதியம் கொடுக்க முடிகிறது என்பதற்கு இரண்டு பிரதானமான காரணங்கள் உண்டு. ஒன்று, வளர்ந்த அறிவியல் மற்றும் தொழில் நுணுக்க அம்சங்களின் உதவியோடு ஒரு தொழிலாளியின் உற்பத்தித் திறனை அதிகரிக்க முடிகிறது; இரண்டாவது உற்பத்திக்கு அரசு கொடுக்கும் மானியம் பண்ணை முதலாளிகளுக்கு உதவுகிறது. இதன் காரணமாக உயர் ஊதியம் கிடைத்தாலும் விவசாயத் தொழிலாளர் கள் சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டே வேலை செய்கிறார்கள். அதிக வருமானம் பெறும் பகுதியினருக்கும், மிகக் குறைந்த வருமானம் பெறும் பகுதியினருக்கும் இடையே உள்ள இடைவெளி நம் நாட்டில் இருப்பதைக் காட்டிலும் அதிகம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சனைக்கான தீர்வு என்பது பெரிய பண்ணைகளை சிறு சிறு உடமைகளாக மாற்று வதில் இல்லை; மார்க்ஸ் சொன்னபடி அந்த நிலங்களை சமூகமயமாக்குவதில் தான் உள்ளது.

நம்நாட்டில் மேலே குறிப்பிட்ட முறையில் தொழிற் புரட்சி ஏதும் நடக்கவில்லை. ஏனெனில் ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் மற்றும் ஏகபோக மூலதனத்திற்கு எதிராக மக்களைப் பல்வேறு போராட்டங்களில் திரட்டும் போது தான் அது நிகழும். தொழில் துறை கூட முழுமையற்ற தனித் தனிப்பகுதிகளாகத் தான் வளர்ந்தி ருக்கின்றன. விவசாயத் துறையில் நிலப்பிரபுத்துவ அடிப்படையில் தான் முதலாளித்துவ உறவுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நம் நாட்டில் சிறு விவசாயம் தான் பிரதானமான அம்சமாக இருந்த போதிலும், போட்டி என்ற அம்சம் நுழைந்த பிறகு அதன் இடம் மாறுகிறது. ஏகாதிபத்திய உலகமயம் அந்த மாற்றத்தை வேகப்படுத்துகிறது. சமச் சீரற்ற போட்டியின் விளைவாக கடந்த 10 ஆண்டுகளில் 30000 விவசாயிகள் வாழ்க்கை சீரழிந்து தற்கொலை செய்து கொண்டனர் என மத்திய விவசாய கமிஷன் சொல்லுகிறது. மந்தமான தொழில் வளர்ச்சிக்கு மக்கள் தொகை உயர்வோடு அதிகரித்து வரும் உழைப்பு சக்தியினைப் பயன்படுத்தும் வலுவும் இல்லை. பாரம்பரிய தொழில்களும் இதை எதிர் கொள்ள முடியவில்லை. அவைகளும் மூடப்படுகின்றன. மக்கள் தொகையின் தாக்கம் விவசாயத்தின் மீது அதிகரித்துக்கொண்டு வருகிறது. தேசிய வருமானத்தில் 21 சதம் விவசாயத் துறையிலிருந்து வருகிறது; அதே சமயம் 60 சதம் மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சராசரியாக ஒரு ஆண்டில் 130 நாட்களுக்கும் மேல் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. பெறும் கூலியும் மிகவும் குறைவு; பணி நிலைமைகளும் மனிதாபி மானமற்ற நிலையில் உள்ளன.

வங்காளத்தில் நாம் காண்பது

மேற்கு வங்கம் இந்தப் பொதுவான அகில இந்திய நிலைமையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கே விவசாயிகளின் எழுச்சி மிக்க போராட்டங்களின் விளைவாக நிலச் சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன. அது ஒரு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசின் வடிவத்திற்குள் நின்று முடிந்த அளவுக்கு நிறைவேற்றப் பட்டன. நிலப்பிரபுத்துவ பிடிப்பு என்பது கரைந்து போனது. பஞ்சாயத்துகளில் விவசாயிகளின் உற்சாகமான பங்கேற்பின் விளைவாக நீர்ப்பாசன விஸ்தரிப்பும் விளைவினை பெருக்கும் வகையில் பயிரிடுதலும் மேற்கொள்ளப்பட்டன. விவசாய உற்பத்தி யின் உயர்வு விகிதத்தில் மேற்கு வங்கம் முன்னிலை வகிக்கிறது. கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்திருக்கிறது. தகவல் தொடர்பு வசதிகள் பெருகியிருக்கின்றன. தொழில் முறை வணிகம் மற்றும் விவசாயமல்லாத துறைகளில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. விவசாயமல்லாத துறைகளில் ஈடுபட்டோர் எண்ணிக்கை 1991 – 2001 ஆண்டு கால இடைவெளியில் 12.3 சதம் உயர்ந்தது. அதே விகிதத்தில் விவசாயத்தில் ஈடுபட்டோர் எண்ணிக்கை குறைந்தது. மேற்கு வங்கத்தில் மக்கள் தொகையின் அழுத்தம் அதிகம். அகில இந்திய சராசரி கணக்கில் ஒரு சதுர கிலோ மீட்டரில் 223 பேர் வாழ்கிறார்கள்.

ஆனால், மேற்கு வங்கத்தில் 948 பேர் வாழ்கிறார்கள். ஆகவே தான் வேலையின்மை என்பது இம்மாநிலத்தில் கடுமையான பிரச்சனை யாக உள்ளது. விவசாய குடும்பங்களில் ஓரளவு படித்த இளைஞர்கள் சேற்றிலும், சகதியிலும் பாடுபட வேண்டிய விவசாயத் தொழிலாளி யின் மோசமான நிலைமைகளை ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. இதைப்புரிந்து கொள்ள யாரும் பெரிய பொருளாதார நிபுணராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தொழில் நுட்பங்களின் வளர்ச்சியினை விவசாயத் துறையில் நுழைக்கிற போது அது அந்தத் துறையில் படிப்படியாக வேலை வாய்ப்பினை குறைக்கும் என்றும், ஒரு சமூகத்தின் முன்னேற்றம் அதன் தொழில் துறை வளர்ச்சியினைச் சார்ந்தது என்றும் புரிந்து கொள்வதற்கு பொருளாதார அரிச்சுவடிப் பாடங்களை படித்திருந்தாலே போதுமானது. ஏன், விவசாய வளர்ச்சி கூட நவீன தொழில் துறை வளர்ச்சியினைச் சார்ந்தது தான்.

இந்தப் புரிதலின் அடிப்படையில் தான் மேற்கு வங்க இடது முன்னணி அரசு 80 களில் மாநிலத்தை தொழில் மயமாக்கும் முயற்சியினை மேற்கொண்டது. ஆனால், உரிமம் வழங்குவது மற்றும் சரக்குகளை கொண்டு செல்ல விதிக்கப்படும் கட்டணங்களை சமச் சீராக்குவது போன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசின் கொள்கை களால் அந்த முயற்சியில் முன்னேற்றம் காண முடியவில்லை. பக்ரேஷ்வர் மின் நிலையம் துவங்குவதற்கும், ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கும் மேற்கு வங்கம் தாண்டிய தடைகள், அதற்காக மேற்கு வங்க மக்கள் நடத்திய போராட்டங்கள் யாவரும் அறிந்தது தான். தடைகள் நீக்கப்பட்டவுடன் மேற்கு வங்க அரசு தனது முயற்சியினை மேற்கொண்டது. 1994 ல் அன்றைய முதல்வர் ஜோதிபாசு அரசின் தொழிற் கொள்கையினை அறிவித்தார். இன்றைய இடது முன்னணி அரசும் அதே பாரம்பரியத்தில் தான் செயல்பட்டுக் கொண்டிருக் கிறது. அதன் பலனாக விவசாய சந்தை விரிவாக்கம் பெற்றது துணைக் கட்டுமான அமைப்புகளும், மின் உற்பத்தியும் அதன் பயன்பாடும் முன்னேற்றம் பெற்றன. திறமையாகவும், கட்டுப்பாட்டுடனும், விழிப்புடனும் செயல்படும் உழைப்பாளி மக்களையும் அறிவுசார் மக்கட் பகுதியினையும் மேற்கு வங்கம் பெற்றது. அரசியல் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்டது. நாணயத்துடன் செயல்படும் அமைச்சரவை அங்கே பணியாற்றுகிறது. மேற்கு வங்கம்தான் கிழக்காசியாவின் நுழைவாயில். ஆகவே தொழில் ரீதியில் செயல்படும் மூலதனம் உள்ளே வரத் துவங்கியது.

ஆனால் தொழில் துவங்க நிலம் வேண்டும். அதை மேற்கு வங்க அரசு தெரிந்தெடுக்க முயற்சி எடுக்கும் போது திடீரென்று நிலத்தைக் காக்க புதிய புரவலர்கள் தோன்றுகிறார்கள். இவர்கள் யார்? கடந்த காலத்தில் விவசாயிகளின் எதிரிகளாக இருந்தவர்கள். விவசாயிகளுக்கு சொல்லொண்ணாத் துன்பத்தை தந்து நிலத்திற்கான இயக்கங்களை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த நிலப்பிரபுக்களோடு கைகோர்த்து நின்றவர்கள். அரைபாசிச பயங்கர அடக்குமுறை ஆட்சியினை அந்த இயக்கங்களில் பங்கு பெற்ற விவசாயிகள் மீது கட்டவிழ்த்து விட்டவர்கள் – இவர்கள்தான் இன்று விவசாயிகளின் நலம் மற்றும் அவர்களின் நிலம் காக்கும் நண்பர்கள் தாங்கள்தானென்றும் தொண்டை கிழிய கூக்குரல் இட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் மாற்றுத் திட்டம் ஏதுமில்லை. நிலச் சீர்திருத்தங்கள் இவர்களது முதுகெலும்பை முறித்தது. அதைப் போலவே தொழில் மயமாக்குதலும் செய்யும் என்று அச்சமுற்று  நிற்கின்றனர். அவர்களது எதிர்ப்பின் நோக்கத்தினை மேற்கு வங்க மக்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்.

தத்துவார்த்த மயக்கத்தில் எதிர்ப்பியக்கம்

இடது முன்னணி அரசின் தொழிற் கொள்கையினை, மார்க்சிஸ் டுகள் எனத் தங்களை அழைத்துக் கொள்ளும் சிலர் எதிர்த்து நிற்பது என்பது சற்றே கவலை தரும் நிகழ்வாகும். இவர்களின் கேள்வி இது தான் – மார்க்சிஸ்டுகள் ஏகாதிபத்திய உலகமயமாக்கலை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் போது, சந்தைக்கு இணக்கமான உற்பத் திக் கொள்கைகளை மேற்கு வங்க அரசு ஏன் கடைப்பிடிக்கிறது? மேற்கு வங்க அரசின் நிலையில் எந்தக் குழப்பமும் இல்லை. ஏகாதிபத் திய உலகமயம் புகுத்தும் சந்தைப் பொருளாதாரம் இடது முன்னணி அரசுக்கு உடன்பாடானதல்ல. இங்கே சந்தைப் பொருளாதாரம் என்பதை எப்படிப் பார்க்கிறோம்? உலகமயம் புகுத்தும் சந்தைப் பொருளாதாரத்தில், ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் அந்த நாட்டின் அரசு எந்த கட்டுப்பாட்டையும் எந்த ஒரு வடிவத்திலும் செயல்படுத்த முடியாது; நலிந்த மக்கட் பிரிவின் நலன்களைப் பாதுகாக்க முடியாது; உணவு, கல்வி, உடல்நலம், குடிநீர் மற்றும் வீடு போன்ற சில அடிப்படைத் தேவைகளை மக்களுக்கு கொடுக்க அரசுக்கு எந்தப் பொறுப்பும் இருக்க முடியாது. அத்தகைய சந்தைப் பொருளாதாரம் மேற்கு வங்க அரசுக்கு ஏற்புடையதல்ல. ஆனாலும், மேற்கு வங்க அரசு கபட வேடம் போடுவதாக மீண்டும் மீண்டும் அந்த மார்க்சிஸ்ட் நண்பர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

முதலாளிகள் மேற்கு வங்கம் வந்து உற்பத்தி செய்யும் பொருட்கள் சந்தையில் விலை போகாது என்று அவர்கள் நம்புகிறார்கள். கம்யூனிஸ்ட்டுகள் சோசலிச அமைப்பு உருவாக்கப் போராடுகிறார்கள். ஆனால், முதலாளித்துவ அமைப்பில் தொழிற்சங்க போராட்டங்களின் மூலம் கூட்டு பேர உரிமைக்கும் போராடுகிறார்கள். கம்யூனிஸ்டுகள் தனிச் சொத்து ஒழிக்கப்பட வேண்டும் என்று பிரகடனம் செய்கிறார்கள். ஆனால் நிலச் சீர்திருத்தங்கள் என்று வரும் போது விவசாயிகளுக்கு நிலம் சொந்தமாக வேண்டும் என்று சொல்கிறார்கள். இதையும் கபடவேடம் என்று சொல்லிவிட முடியுமா? இவர்களின் கூற்றுப் படி, மார்க்ஸ், ஏங்கெல்ஸ் மற்றும் லெனின் கூட கபட வேடம் போடுபவர்கள் தானோ? அந்த மார்க்சீய ஆசான்கள் இன்று உயிருடன் இருந்தால் தங்கள் வழிகாட்டுதலின் விளைவு இப்படி அவலச் சுவை கொண்டதாக இருப்பதைப் பார்த்து கண்ணீர் வடிப்பார்கள்.

மார்க்சியம் ஒரு வறட்டு சூத்திரமோ திரும்ப திரும்பச் சொல்லும் மந்திரங்களோ அல்ல. பிரபஞ்சம் மற்றும் சமூக இயக்கங்களின் தோற்றம், வளர்ச்சி, மாற்றம் பற்றிய மூலக் கூறுகளை அதன் இயக்கப் போக்கிலேயே தர்க்க ரீதியில் ஆய்வு செய்து கண்டறியும் முறைதான் மார்க்சியம். வளர்ச்சிப் போக்கின் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி முழுமையும், எங்கே போக வேண்டும் என்ற அதன் இலக்கும் செயல்படுத்தும் வழிமுறையும் மாறாதிருக்கும். ஆனால் ஒரு குறிப்பிட்ட சூழலில், அன்றைய வளர்ச்சியின் கட்டத்தையும் வர்க்க சக்திகளின் பலாபலத்தையும் கணக்கில் கொண்டு நிலைமைகளுக்கேற்ப பொருத்தமான முடிவுகளை எடுக்க வழிகாட்டுவதுதான் மார்க்சியம் ஆகும். லெனின் குறிப்பிடுகிறார்  பொதுவாக, சோசலிசம் அல்லது கம்யூனிசத்தின் மீது பற்று கொண்டவர்களாக இருப்பது மட்டும் போதாது. குறிப்பிட்ட காலத்தில் சமூக இணைப்பின் ஒவ்வொரு கண்ணியின் தன்மையினைப் புரிந்து கொள்ள வேண்டும். எந்தக் கண்ணியினை அழுத்திப் பிடித்தால் சங்கிலி இணைப்பையே கைக்கொள்ள முடியும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதுதான் அடுத்த முன்னேறிய சமூக அமைப்புக்கு மாறிச் செல்ல ஒரு உறுதியான தயாரிப்பு வடிவத்தைக் கொடுக்கும். இணைப்புகளின் வரிசை, அதன் வடிவங்கள், அவைகள் ஒன்றோடொன்று இணைக்கப்படும் முறை, வரலாற்று நிகழ்வுகளின் சங்கிலிப் பிணைப்பில் அவைகளிடையே உள்ள மாறுபட்ட அம்சங்கள் – இவையாவும் கொல்லன் செய்யும் சங்கிலி இணைப் பைப் போல் அவ்வளவு எளிதானதல்ல. (லெனின் நூல்கள் தொகுப்பு – தொகுதி 33 பக்கம் 112 – 113).  அந்த விமர்சகர்கள், சந்தைக்கு இணக்கமான தொழில்கள் உருவாக்கப்படுவதை ஏற்றுக் கொள்வ தாகச் சொல்கிறார்கள். ஆனால், டாடா போன்ற தனிமுதலாளிகளை அழைத்து தொழில் துவங்க அனுமதிப்பது என்பது முழுமையாக முதலாளித்துவத்தை வளர்க்கும் என்று வாதிடுகிறார்கள்.

இடது முன்னணி அரசு முதலாளித்துவத்தை கட்டுகிறதே என்று அதிர்ச்சி யடைந்துள்ளனர். சோசலிசம் சந்தித்த பின்னடைவுக்குப் பிறகு இடது முன்னணி அரசு சோசலிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை அழித்துவிட்டது என்றும் கவலைப்படுகிறார்கள். தனது மூலதனம் என்ற நூலில் முதலாளித்துவ மூலதனச் சேர்க்கையின் வரலாற்று ரீதியான போக்கு என்ற பகுதியில் சோசலிசத்தின் தத்துவார்த்த அடிப்படையினை மார்க்ஸ் விளக்கிச் சொல்கிறார். விவசாயம் மற்றும் தொழில் துறையில் சிறு உற்பத்தியாளர்கள் துடைத்தெறியப் படும்போது, அபரிமிதமான உற்பத்தியினை விஞ்ஞானம் மற்றும் தொழில் நுணுக்க உதவியுடன் கையில் வைத்திருக்கும் பெரிய முதலாளிகள் எண்ணிலடங்கா சிறு உற்பத்தியாளர்களின் இடத் தைப் பிடித்துக் கொள்ளும் போது, சமூகச் சொத்து முழுமையும் ஒரு சிலர் கையில் குவியும்போது, உற்பத்தி முழுவதும் சமூக உற்பத்தியாக மாறும் போது, உற்பத்தி சாதனங்களின் வளர்ச்சி அவைகளை கூட்டு உழைப்புக்கு உட்படுத்தாமல் பயன்படுத்தவே முடியாது என்ற நிலை எழுகிறபோது, உற்பத்திச் சக்திகள் உற்பத்தி உறவுகளைத் தாண்டிச் செல்லுகிறபோது, சமூக சொத்தைப் பறிப்பவர்கள் பறிக்கப்படு வார்கள். இந்த நிலை அடைய வேண்டுமானால் தொழிலாளி வர்க்க அரசு முதலாளித்துவ அரசை தூக்கி எறிய வேண்டும். அப்படி யென்றால் அதற்கு என்ன பொருள்? வளர்ந்த நாடுகளில் தொழிலாளி வர்க்கம், புரட்சியின் மூலம் அரசு அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு தனியார் சொத்தாக இருக்கும் அளப்பரிய சமூக உற்பத்தியினை சமூகத்தின் பொதுச் சொத்தாக மாற்றி சோசலிசத்தை உருவாக்கும் என்று பொருள். அந்த நிலை தான் மேற்கு வங்கத்தில் நிலவுகிறதா? ஆகவே, மார்க்ஸியத்திலிருந்து விலகிச் செல்வதாகச் சொல்ல முடியுமா?

அவர்களின் தோற்ற மயக்கத்தில் இ.மு. அரசு

இடது முன்னணி அரசு பற்றி மாயைகள் நிறைந்த ஒரு தோற்ற மயக்கத்தினை அவர்கள் உருவாக்குகிறார்கள். மக்களைக் குழப்ப அது அவர்களுக்குத் தேவைப்படுகிறது. மேற்கு வங்கம் முழு ஆட்சி உரிமை பெற்ற தனிநாடு அல்ல. நிலப்பிரபுத்துவ – முதலாளித்துவ அரசில் அது ஒரு மாநிலம். மேற்கு வங்கம் புரட்சியில் விளைந்ததல்ல. அது சோசலிச அரசையோ மக்கள் ஜனநாயக அரசையோ பெற்றிருக்கவில்லை. நிலப்பிரபுத்துவ – முதலாளித்துவ அரசின் சமூகப் பொருளாதார வடிவத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஓரு ஜனநாயக அரசினைப் பெற்றிருக்கிறது. அதன் செயல்முறை மற்றும் திட்டங்கள் சில உடனடி நோக்கங்களை கொண்டவை. விவசாயம் மற்றும் தொழில் துறை உற்பத்தியினை அதன் முழு உற்பத்தித் திறனுக்கேற்ப வளர்ப்பதும், உழைக்கும் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதும், சில உடனடி நிவாரணங்களை மக்களுக்கு வழங்கு வதும், ஜனநாயகத்தை விரிவுபடுத்துவதும், மக்களின் அன்றாட வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் மக்கள் விரோத சமூகப் பொருளாதார அமைப்பின் உள்ளார்ந்த தன்மையினை அவர்கள் புரிந்து கொள்ள வைப்பதும், ஒரு மாற்றுக் கொள்கையினை மக்கள் முன்பு வைப்பதும் – அதன் நோக்கங்களாக உள்ளன.

இடது முன்னணி அரசின் அனுபவம் ஒரு புறம் இருக்கட்டும். முதலாளித் துவ  வளர்ச்சி பற்றி நவம்பர் புரட்சியின் அனுபவங்களை நினைவில் கொள்வது இன்றைய நிலையில் பொருத்தமாக இருக்கும். அதனை சோசலிச புரட்சி என்று குறிப்பிட்ட போதிலும், உண்மையில் அது தொழிலாளி வர்க்க – விவசாயப் புரட்சி என்றுதான் லெனின் குறிப்பிட்டார். அதன் பொருள் என்ன? தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் நடந்த ஒரு ஜனநாயகப் புரட்சி என்று பொருள். முதலாளி வர்க்க – ஜனநாயகப் புரட்சியின் கடமையினை முடித்துவிட்டு, சோசலிசத்தை சென்றடைவது என்பது தான் அதன் பிரதானமான கடமையாகும். சீனாவில் இது புதிய ஜனநாயகப் புரட்சி என்றழைக்கப்பட்டது. நம்முடைய கட்சித் திட்டத்தில் இதை மக்கள் ஜனநாயகப் புரட்சி என்று குறிப்பிடுகிறோம். வரலாற்று இயல் பொருள் முதல்வாதக் கண்ணோட்டம் பற்றி விளக்கும்போது ஏங்கல்ஸ் எழுதுகிறார், சமூக மாற்றங்களையும், அரசியல் புரட்சியினையும் முடிவாகத் தீர்மானிக்கும் காரணங்களை, மனிதர்களின் மூளையிலோ நிரந்தர உண்மையினையும் நீதியினையும் புரிந்து கொள்ளும் மனிதனின் நுண்ணறிவுத் திறனிலோ தேடிக் கொண்டிருக்க முடியாது. மாறாக, சமூகத்தின் பொருள் உற்பத்தி மற்றும் பரிவர்த்தனையில் ஏற்படும் மாற்றங்களில் அவைகளைக் காண வேண்டும். அவைகளைத் தத்துவ விளக்கங்களில் தேட முடியாது. குறிப்பிட்ட சகாப்தத்தின் பொருளாதாரத்தில் தேட வேண்டும். (கற்பனாவாத மற்றும் விஞ்ஞான சோசலிசம் –  ஏங்கல்ஸ் அழுத்தம் கொடுத்து இதைப் பதிவு செய்கிறார்.)

இதே கருத்தினை லெனினும் வெளியிடுகிறார். எழுச்சி அலை உயர்ந்து எழுந்தது, அதன் உச்சிப் பரப்பில் முதலில் மக்களின் அரசியல் எழுச்சியும், பின்பு ராணுவ எழுச்சியும் இடம் பெற்றன. அரசியல் மற்றும் ராணுவக் கடமைகளை அந்த எழுச்சியின் வேகத்தில் எப்படி நாம் நிறைவேற்றினோமா, அதே வேகத்தில் அதே அளவு மிகப் பெரிய பொருளாதாரக் கடமைகளையும் நிறைவேற்ற வேண்டுமென்று எதிர்பார்த்தோம். நாம் எதிர்பார்த்தோம். இன்னும் சொல்லப்போனால், போதுமான கவனம் செலுத்தாமல், அதுதான்  மெய்யெனக் கருதினோம். அதாவது கம்யூனிச வழியில் ஒரு சிறிய விவசாய நாட்டில் தொழிலாளி வர்க்க அரசு நேரடியாக உற்பத்தியினையும், விநியோகத்தையும் மேற்கொள்ளும் என நாம் எதிர்பார்த்தோம். நமது அனுபவம் அந்த எதிர்பார்ப்பு தவறு என்று நிருபித்துக்காட்டியிருக்கிறது. (லெனின் தொகுப்பு நூல்கள் – தொகுப்பு 33, பக்கம் 58)

மேலும், கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் லெனின் எழுதுகிறார், நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் அடிப்படை யில் பெரிய அளவிலான முதலாளித்துவ தொழில் நுணுக்கத் திறனை எடுத்து கையாளாமல், சோசலிசம் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ஒருங்கிணைக்கப்பட்ட அளவில் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் கோடிக்கணக்கான மக்களை ஈடுபடுத்தி திட்டமிட்டு செயல்படும் அரசு அமைப்பு இன்றி சோசலிசம் பற்றி எண்ணிக் கூடப் பார்க்க முடியாது. மார்க்சிஸ்ட்டுகளாகிய நாம் இதைப் பற்றி ஏற்கனவே பேசி இருக்கிறோம். இதைப் புரிந்து கொள்ளாதவர் களிடம் இரண்டு விநாடிகள் கூட நாம் பேசிக் காலத்தை வீணாக்க வேண்டாம். (அராஜகவாதிகள் மற்றும் இடது சோசலிசப் புரட்சியாளர்களில் பாதிக்கு மேல் உள்ளவர்களைப் பற்றித் தான் புரிந்து கொள்ளாதவர்கள் என லெனின் குறிப்பிடுகிறார். லெனின் தொகுப்பு நூல்கள் – தொகுப்பு 32, பக்கம் 334). லெனின் இதைச் சொல்லி 85 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும், அதே மாதிரி புரிந்து கொள்ளாத குழுக்களை நாம் மீண்டும் சந்திக்க வேண்டியி ருக்கிறது. சோவியத் யூனியன் புதிய பொருளாதாரக் கொள்கையினை தேர்ந்ததெடுத்த போது, லெனின் குறிப்பிடுகிற அந்த உண்மையான மார்க்சிஸ்டுகள் லெனின் முதலாளித்துவத் தோடு சமரசம் செய்து கொள்கிறார் என்று குற்றம் சாட்டினார்கள். ஆம், நாங்கள் சமரசம் தான் செய்து கொள்கிறோம் என்று பதில் சொல்லி, ஒரு வரலாற்று நிகழ்வினைச் சுட்டிக் காட்டினார்.

உலகின் மிகச் சிறந்த போர்த் தளபதி என்று கருதப்பட்ட ஜப்பானைச் சேர்ந்த நோகி, ஆர்தர் துறைமுகத்தை விடுவிக்க வலிமை பொருந்திய எதிரியோடு நேரே மோதும் போது மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப் பட்டார். ஆனால்,வளைத்து முற்றுகையிடும் நீண்ட காலப் போர்த் தந்திரத்தை கடைப்பிடித்தபோது வெற்றி பெற்றார். அதைப் போலவே, நம்மை விட வலிமை படைத்த முதலாளித்துவ சக்திகளை நேரடியாக எதிர்த்து மோதும் தவறினை நாம் செய்திருக்கிறோம். நாம் சமரசம் செய்து கொள்ள வேண்டும், பொறுமை காத்திட வேண்டும், வெற்றி யினை ஈட்டுவதற்கு தேவையான வலிமையை பெருக்கிக் கொள்ள வேண்டும். நமக்கு மாற்று வழி ஏதும் இல்லை என்று லெனின் பதிலுரைத்தார். இதுதான் நமது கடைசிப் போராட்டம் என்று மக்கள் பாடும் பாடலைக் குறிப்பிட்டு லெனின், இதை நாம் பாடினாலும் கூட, அது உண்மையல்ல. பல கட்டங்களில் நாம் போராட வேண்டிய தேவை இருக்கிறது என்று சுட்டிக் காட்டினார். இதனால், லெனின் ஒரு மார்க்சிஸ்ட் அல்ல என்று கூறிவிட முடியுமா?

மார்க்சியத்தின் புனிதம்

மாநிலத்தில் தொழில் வளர்ச்சி கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு சில திட்டங்களை முன் வைக்கிறது. ஒப்பந்தம் காண உறுதியான பேச்சு வார்த்தைகளை நடத்துகிறது. இதைப்பற்றி இந்த இடது விமர்சகர்கள் கேட்கிறார்கள். எதற்காக அவர்களை (முதலாளிகளை) திருப்திப்படுத்தி உள்ளே கொண்டு வர முயற்சிக்க வேண்டும்?. அந்த நண்பர்களின்ஆசை, எதிர்பார்ப்பு எல்லாம் இப்படித் தான் இருக்கிறது. புத்ததேவ் பட்டார்சார்ஜி அரசுக் கட்டிலில் கவலையற்று வீற்றிருக்க வேண்டும். அவர்முன் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அரசினை தங்கள் கையில் வைத்திருக்கும் முதலாளிகள் கடவுளிடம் மண்டியிட்டு வேண்டும் பக்தர்களைப் போல், முழந்தால் மண்டியிட்டு ஆசி பெற வேண்டும். இந்த ஆசையில் தான் அவர்களின் மார்க்சிய புனிதம் தொங்கிக் கொண்டிருக்கிறது. புரட்சி முடிந்த பிறகு லெனின் கூறியவைகளை இங்கே நினைவு கூறுவது சரியாக இருக்கும். வெளிநாட்டு முதலாளிகளுக்கு சலுகைகளும் (நாம் நிறையப் பேருக்கு சலுகை வழங்கியும், ஒரு சிலரே ஏற்றுக் கொண்டார்கள் என்பதும் உண்மை) தொழில் நிறுவனங்களை ஒப்பந்தக் கட்டுப்பாட்டு முறையில் (டுநயளபே) தனி முதலாளிகளுக்கு கொடுப்பதும், நிச்சயமாக முதலாளித் துவத்தை மீண்டும் கொண்டு வரும் செயல்தான். அது புதிய பொருளாதாரக் கொள்கையின் பகுதிதான். (தொகுப்பு 33, பக்கம் 64).

உங்களுக்குப் பக்கத்தில் முதலாளிகள், அந்நிய முதலாளிகள், சலுகைகளை பெற்றவர்கள், ஒப்பந்தக் கட்டுப்பாட்டினில் நிறுவனங்களின் பொறுப்பை ஏற்றவர்களும் இருப்பார்கள். 100 சதம் லாபத்தினை உங்களிடமிருந்து பிழிந்தெடுப்பார்கள். அவர்கள் உங்கள் பக்கத்திலிருந்து செயல்பட்டே பணம் படைத்தவர்களாக மாறுவார்கள். அவர்கள் அப்படியே இருக்கட்டும். அதற்கிடையில் பொருளாதாரத்தை எப்படி நடத்துவது என்பதை நீங்கள் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வீர்கள். அப்படிச் செய்யும் போது தான் ஒரு கம்யூனிசக் குடியரசைக் கட்டுவதற்கு உங்களால் இயலும். நாம் வெகு விரைவில் கற்றுக் கொள்ள வேண்டும். அதில் தயக்கம் காட்டினால் கடுமையான குற்றம் புரிந்தவர்களாக இருப்போம். நாம் இந்தப் பயிற்சியினை – மேற்கொண்டே ஆக வேண்டும். ஏனெனில் இருக்கும் நிலைகளினின்று வெளியே வர வேறு வழியேதும் இல்லை. (தொகுப்பு 33, பக்கம் 72). முதலாளிகளின் திறமையினைப் பயன்படுத்துவதில் நாம் வெற்றி பெற்றால் நமது பொருளாதா ரத்தைச் சரியான வழியில் நடத்திச் செல்ல முடியும். இடைப்பட்ட காலத்தில் நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்கிறோம். அவர்கள் எந்தப் பாதையில் பயணம் செய்ய வேண்டுமென நாம் விரும்பு கிறோமோ அதற்கு வழிகாட்டுகிறோம்  என்றும் லெனின் எழுதுகிறார்.

ஆகவே, மார்க்சிஸ்ட் என்று அழைக்கப்படும் இவர்கள் அப்படி ஒன்றும் நிலை குலைந்து நிற்க வேண்டிய அவசியமில்லை. வேறுசில கேள்விகளும் எழுகின்றன. டாடாவுக்கு என்பது சரிதான். ஏன் இந்தோனேசியாவின் சலிம் குழுமத்திற்கு வரவேற்பு? இந்த நிறுவனம் கம்யூனிஸ்டுகளின் ரத்தத்தில் குளித்த சுகார்தோவின் நண்பனாயிற்றே என்பது தான் அவர்கள் கவலை? முதலாளித் துவத்தின் குணாம்சங்கள் பற்றி மார்க்ஸ் பரிசீலித்தாரே தவிர மூலதனச் சொந்தக் காரர்களான முதலாளிகளைப் பற்றி அல்ல. மூலதனம் என்பது உறைந்து மாண்டு கிடக்கும் உழைப்பு. அந்த ரத்தக் காட்டேரி உயிருள்ள மனித உழைப்பை உறிஞ்சித்தான் வாழ்கிறது. எவ்வளவுக்கெவ்வளவு அதிக உழைப்பை உறிஞ்சு கிறதோ, அவ்வளவு அதிகம் அது வாழும் என தன்னுடைய மூலதனம்என்ற நூலில் மார்க்ஸ் எழுதுகிறார். லாபத்தின் சதவீதம் உயர உயர மூலதனத்தின் செயல் எப்படி இருக்கும் என்பதை டி.ஜே. டன்னிங் என்பவரின் வார்த்தைகளை மேற்கோள்காட்டி, மார்க்ஸ் … 300 சதம் லாபத்தை பெறும்போது, அது செய்யத் தயங்கும் குற்றம் ஏதும் இல்லை. அதன் உரிமையாளனை தூக்கில் தொங்கவைக்கும் ஆபத்து மிக்க வேலை உட்பட எதையும் எடுக்கத் தயங்குவதில்லை என்று குறிப்பிடுகிறார். சியாங்கை ஷேக் லட்சக்கணக்கில் கம்யூனிஸ் டுகளை படுகொலை செய்யவில்லையா? இருந்த போதிலும் ஜப்பானை எதிர்த்து நடந்த இயக்கத்தில் கம்யூனிஸ்டுகளோடு கைகோர்த்துச் செல்ல வேண்டும் என்ற நிலைக்கு அவர் வர வேண்டியிருந்தது அல்லவா?

சரி, இங்கே இருக்கும் காங்கிரஸ்காரர்களைப் பற்றிய நமது நிலைதான் என்ன? படுகொலை செய்யப்பட்ட நம்முடைய தோழர்களின் ரத்தத்தில் கறையான கைகள் தான் அவர்களின் கைகள். அதற்காக அவர்கள் தலைமையில் செயல்படும் மத்திய அரசைக் கவிழ்த்து விட்டு பி.ஜே.பி. மீண்டும் ஆட்சிக்கு வர அனுமதிக்கலாமா? உயரிய நோக்கங்களுக்காக அண்மையில் இருக்கும் எதிரியோடு சேரும் அரசியலை மார்க்சிசம் ஏற்றுக் கொள்கிறது என்றால், பொருளாதாரத்தில் ஏன் அது கூடாது? ஒன்றுமறியா லட்சக்கணக்கான சீனா மற்றும் வியட்நாம் மக்களைக் கொன்று குவித்தது அமெரிக்கா. ஆனால், அமெரிக்க மூலதனத்தை அவர்கள் நிராகரிக்கிறார்களா? கியூபா அமெரிக்க முதலீட்டை விரும்பவில்லையா? மீண்டும் நாம் லெனினிடம் வருவோம். பிரிட்டிஷ் முதலாளியும், எதிர்ப் புரட்சிக்காரருமான உர்டு ஹார்ட் என்பவரைக் குறிப்பிட்டு, மீண்டும் கற்றுத் தெளிய வேண்டி, நாம் ஒவ்வொருவருக்கும் ஒன்றை உறுதியளிக்க வேண்டும். புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில், புதியது எதையும் கைவிட்டு விட வேண்டி நாம் பின்னோக்கிப் பார்க்கவில்லை. முதலாளிகளுக்கு சில வாய்ப்புகளைக் கொடுக்கிறோம். அது நம்மைக் கடுமையாக எதிர்க்கும் நாடு கூட நம்மோடு உறவு கொண்டு ஒப்பந்தம் காண அவர்களை நிர்பந்திக்கும். தோழர் கிராசின், நமது நாட்டிற்குள் எதிர்மறையான தலையீட்டிற்கு (எதிர்ப் புரட்சிக்கு) முதுகெலும்பாக இருந்து செயல்பட்ட உர்டு ஹார்டுடன் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார். (நவம்பர் 20, 1922 அன்று மாஸ்கோ சோவியத் நிறைவுக் கூட்டத்தில்  பேசியது)

ரத்தம் சிந்தி நடந்து முடிந்த புரட்சிக்குப் பிறகு தொழிலாளி வர்க்க அரசு உருவான பின் தான் லெனின் இந்தக் கருத்தைச் சொன்னார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேற்கு வங்கம் என்பது முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ சக்திகள் ஆளும் வர்க்கங் களாக உள்ள நாட்டில் கூட்டாட்சி அடிப்படையில் செயல்பட வேண்டிய மாநிலம். இங்கே இடது முன்னணி எடுத்திருப்பது, லெனின் தவிர்க்க இயலாமல் மேற்கொண்ட செயல்களின் தன்மை யோடு  ஒப்பிடும் போது ஒரு சிறிய நடவடிக்கை தான். இதுவே இந்த உண்மையான மார்க்சிஸ்டுகளை நிலை குலையச் செய்யுமானால், நாம் அவர்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டியது ஒன்று உண்டு. தயவு செய்து உங்கள் கற்பனை உலகிலிருந்து வெளியே வந்து யதார்த்த உலகில் காலடி எடுத்து வையுங்கள்.

அக்டோபர் 8, 2006 பிப்பிள்ஸ் டெமாக்கரசி வார இதழில் தோழர். பினாய் கோனார் எழுதிய கட்டுரையினைத் தழுவியது.

அக்டோபர் 8, 2006 பிப்பிள்ஸ் டெமாக்கரசி