பாஜக அரசின் ஓராண்டு: பொருளாதார ‘சாதனை’ அல்ல வேதனை

மோ(ச)டி பிரச்சாரம்

கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் மோடியும் பாஜகவும் வாக்குறுதிகளை அள்ளிவீசினர். அவர்கள் ஆட்சிக்கு வந்து விட்டால், பொருளாதாரம் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறும் என்றார்கள். வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவது மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியக் குடிமகனு(ளு)க்கும் அவர் வங்கிகணக்கில் பல லட்சம் ரூபாய் ஏற்றப்படும் என்றார்கள். விவசாய நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவோம் என்றார்கள். விவசாயிகளின் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்றார்கள். ஆனால் தங்கள் பொருளாதாரக்கொள்கைகள் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி அதிகம் பேசவில்லை. எனினும் காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் பொருளாதாரக் கொள்கைகளில் வேறுபாடு இல்லை என்பதும் இருவருமே தாராளமய தனியார்மய உலகமய நாசகர கொள்கைகளைத்தான் பின்பற்றுவார்கள் என்பதும் நாம் அறிந்ததே.

மோடி அரசின் ஓராண்டு ஆட்சியில் என்ன நடந்துள்ளது என்பதை காண்போம்.

நிதி நிலை அறிக்கைகள்

பாஜக அரசின் இரண்டு பட்ஜெட்டுகள் அவர்களின் வர்க்கப் பாசத்தை தெளிவாக்குகின்றன. 2014-15 பட்ஜெட்டும் சரி,2015-16 பட்ஜெட்டும் சரி, முழுக்க முழுக்க அந்நிய நிதி மூலதனத்திற்கும் இந்திய பெருமுதலாளிகளுக்கும் என்றே போடப்பட்டவை தான்.

2014-15 பட்ஜெட்பாதுகாப்புத்துறையில் அந்நிய நேரடி மூலதனத்தின் பங்கின் வரம்பை 26% இலிருந்து 49% ஆக உயர்த்தியது.. அதேபோல், காப்பீட்டு துறையிலும் இந்த காரியத்தை செய்தது. இவ்விரு துறைகளும் நாட்டின் தற்சார்பிற்கு மிக கேந்திரமான துறைகள். இதில் பாதிப்பங்கு அன்னியமூலதனத்தின் கையில் தரப்படுவது என்பது நாட்டின் இறையாண்மையைக் காவு கொடுப்பதாகும்.அது மட்டுமின்றி, இப்படி செய்வதற்கு எந்தப் பொருளாதார காரணமும் கிடையாது.காப்பீட்டு துறையில் அந்நிய மூலதனம் வெறும் பணமாக வருகிறது. எந்த புதிய தொழில்நுட்பத்தையும் அது கொண்டு வரப்போவதில்லை.மூன்றாவது அபாயகரமான முன்மொழிவு ஒன்றும் 2014-15 பட்ஜெட்டில் உள்ளது. பொதுத்துறை வங்கிகளின் மொத்த மூலதன அஸ்திவாரத்தை உயர்த்திட, அரசு இந்த வங்கிகளுக்குள் கூடுதல் மூலதனம் செலுத்தி இப்பணியை செய்ய தயாராக இல்லை. மாறாக, புதிய பங்குகள் சிறு முதலீட்டாளர்களுக்கு விற்கப்படும் என்றும் அதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் மூலதன அஸ்திவாரம் பலப்படுத்தப்படும் என்றும் இந்த பட்ஜெட் கூறுகிறது. இதன் பொருள் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது என்பதே.2014-15 பட்ஜெட்டைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, உரம் உள்ளிட்ட அனைத்து முக்கிய சரக்குகளின் விலைகள் பாஜக அரசின் கொள்கைகள் காரணமாக அதிகரித்துள்ளன. பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்த பொழுதும் அதன் பயன் மக்களுக்குப் போய்ச்சேராமல் இருக்க கலால் வரிகளை மீண்டும் மீண்டும் உயர்த்தியது அரசு. உணவுப் பாதுகாப்பு சட்ட அமலாக்கத்தைத் தொடர்ந்து ஒத்திவைத்துள்ளது. பாதுகாப்பு மற்றும் காப்பீட்டு துறைகளில் அந்நிய நேரடி முதலீடு வரம்பை உயர்த்தவும், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சட்டத்தை பெருமுதலாளிகளுக்கு சாதகமாகத் திருத்தியும் அவசரச் சட்டங்களை பிறப்பித்து நாடாளுமன்ற ஜனநாயகத்தை அவமதித்து தனது மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்கிறது. ரயில்வே சரக்கு கட்டணங்களை உயர்த்தி விலைவாசி உயர்வை தீவிரப்படுத்தியுள்ளது.

2015-16பட்ஜெட்செல்வந்தர்களுக்கும் இந்திய மற்றும் பன்னாட்டு பெரு முதலாளிகளுக்கும் மேலும் பல சலுகைகளை வழங்கியுள்ளது. சொத்துவரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. சொல்லப்படும் காரணம் என்ன? “ஆயிரம் கோடி ரூபாய் கூட வசூலாவதில்லை, இதை வசூலிப்பதற்கு நிறைய செலவாகிறது, எனவே நீக்கிவிடலாம்” என்பது அரசின் வாதம். இது என்ன வாதம்? திருடனைப் பிடிக்க முடியாவிட்டால் திருட்டை சட்டப் பூர்வமாக ஆக்கி விடலாமா? அது மட்டுமல்ல. இது எந்த சூழலில் சொல்லப்படுகிறது? நூற்று இருபத்தைந்து கோடி மக்கள் வசிக்கும் நமது நாட்டில் நூறு செல்வந்தர்கள் வசம் தலா ஆறாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன. இவர்கள் வசம் உள்ள சொத்துக்களின் மொத்த மதிப்பு தேச உற்பத்தி மதிப்பில் நான்கில் ஒரு பங்கு என்று கணக்கிடப்பட்டுள்ளது. மறுபுறம் பல கோடி மக்கள் – குறைந்த பட்சம் நாற்பது கோடிக்கும் அதிகமானோர் – அரசு கணக்குப்படியே வறுமை கோட்டின் கீழ் உள்ளனர். இத்தகைய ஏற்றத்தாழ்வு நிலவும் நாட்டில் சொத்து வரியும் வாரிசு வரியும் இல்லை என்பது பெரும் கொடுமை அல்லவா?2015-16 பட்ஜெட்டில் கலால் வரி, சுங்க வரி, சேவை வரி என்ற மறைமுக வரிகள் மூலம் 23,568 கோடி ரூபாய் வரிப்பளு மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. மறுபுறம் தனி நபர் மற்றும் கார்ப்பரேட் வருமானவரி சலுகைகளால் அரசுக்கு 8000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று பட்ஜெட்கூறுகிறது. மக்களுக்கு வரிச்சுமை, செல்வந்தர்களுக்கு வரிச்சலுகை, இது தான் பாஜக பட்ஜெட்டுகளின் வர்க்க அரசியல்.விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால்மோடி அரசின் இரண்டு பட்ஜட்டுகளிலுமே விவசாயம், கல்வி, ஆரோக்கியம், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த துறைகளுக்கான அரசின் திட்ட ஒதுக்கீடுகள் உண்மை அளவில் சரிந்து வருகின்றன.கணக்குகளின் பொது கட்டுப்பாட்டு அதிகாரி (Controller General of Accounts) தரும் விவரப்படி, 2012-13 இல் மத்திய அரசின் மொத்த செலவு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 14.1% ஆக இருந்தது. 2014-15 இல் 13% ஆக குறைந்துள்ளது. மக்கள் நலத் திட்டங்கள் கடுமையாக வெட்டி சுருக்கப்படுவதை இந்த புள்ளி விவரங்கள் தெளிவாக்குகின்றன.

மக்களை வஞ்சிக்கும் “வளர்ச்சி”

மத்திய அரசின் நிதி அமைச்சகம் 2014-15க்கான நடு ஆண்டு பரிசீலனை அறிக்கை (Mid Year Review) ஒன்றை தனது இணைய தளத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் போட்டது. அதில்பண வீக்கம் குறைந்திருப்பதாக தன்னைத்தானே மெச்சிக் கொண்டது. அரசின் பணவீக்க கணக்கில் உள்ள மோசடிகளை விட்டுவிடுவோம். விலைவாசி உயர்வின் வேகம் குறைந்தது என்று கூறிய அந்த அறிக்கை அதற்கான் காரணங்களை பட்டியல் இட்டது. பன்னாட்டு சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை சரிந்ததை ஒரு காரணம் என்று ஏற்றுக்கொண்டது. (அரசு வரிகளை உயர்த்தியதால் இதன் பலன்கள் மக்களை சென்று அடையவில்லை என்ற செய்தியை அது கூறவில்லை). மேலும் அது விவசாயிகளின் விளைபொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை அரசு உயர்த்த மறுத்ததும் ஒரு காரணம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறது. அது மட்டுமல்ல. ஊரக வேலை உறுதி சட்டத்திற்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டதால் கிராமப்புறங்களில் கூலி உயர்வு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் முக்கிய காரணம் என்று பகிரங்கமாகவே கூறுகிறது. பாடுபடும் விவசாயிகளையும் கிராமப்புற கூலித் தொழிலாளிகளையும் வஞ்சித்துத்தான் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு முனைகிறது என்பது தான் இதன் பொருள். “தொழில் மந்த நிலையும் வேலை இன்மையும் கூலி முடக்கமும் விவசாயிகளுக்கு உரிய விலை மறுக்கப்படுவதும் தான் வளர்ச்சியின் லட்சணமா?” என்ற கேள்வி இயல்பாக எழுகிறதல்லவா?

அண்மையில் ஒரு கார்ப்பரேட் வணிக பத்திரிகை ஒரு ஆண்டு மோடி ஆட்சியில் யாருக்கு நலன், யாருக்கு தீது என்று ஒரு பட்டியல் தந்துள்ளது. லைவ்மின்ட் என்ற இப்பத்திரிகையில் மே மாதம் பத்தொன்பதாம் தேதி இதில் வெளியான கட்டுரை தரும் விவரப்படி:

  • சென்செக்ஸ் புள்ளிகள் பல ஆயிரம் உயர்ந்துள்ளதாலும் கடந்த ஒரு ஆண்டில் தினசரி பங்குச்சந்தையில் மொத்த விற்பனை மதிப்பு இரட்டிப்பானதாலும் பங்கு சந்தை சூதாடிகள் பயனடைந்துள்ளனர்.
  • பங்கு முதலீடுகள் தொகை 2013-14 இருந்ததைப்போல் இரண்டு மடங்காக 2014-15இல் இருந்தது. இதனால் முதலீட்டு வங்கிகள் பெரும் லாபம் ஈட்டின.
  • பெரிய கம்பனிகளின் லாபமும் லாப விகிதமும் பெருகியது. ஆனால் சிறு நடுத்தர முதலாளிகள் நட்டத்தை சந்தித்தனர்.
  • கார், வீடு போன்ற அதிக மதிப்பு கொண்ட பொருட்கள் விற்பனை அதிகரித்தது.
  • விவசாயிகள் இடுபொருள் விலை உயர்வு, விலை பொருள் விலை வீழ்ச்சி, கொள்முதல் விலை தேக்கம் ஆகிய காரணங்களால் நட்டமடைந்தனர்.
  • கிராமப்புற கூலித் தொழிலாளிகள் கூலி தேக்கம் அடைந்ததால் இழப்புகளை எதிர்கொண்டனர். நகர்ப்புற தொழிலாளிகள் நிலையும் அப்படித்தான்.
  • கட்டமைப்பு பணிகள் நடைபெறாததால் காண்ட்ராக்டர்கள் கூட லாப இழப்பை சந்தித்தனர்.

ஒரு கார்ப்பரேட் நிறுவன பத்திரிக்கையே கூட சாதாரண உழைப்பாளி மக்களுக்கும் விவசாயிகளுக்கும் சிறு நடுத்தர தொழில்முனைவோருக்கும் மோடி அரசின் ஓராண்டு ஆட்சியில் பயன் கிடைக்கவில்லை என்று ஒத்துக்கொள்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

ரேகாவை குழி தோண்டி புதைக்கும் மோடி அரசு

ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான ஒதுக்கீட்டை கடந்த ஆண்டும் அரசு வெட்டியது. இந்த ஆண்டிலும் வெட்டியுள்ளது. 2009 முதல் 2012 வரை ஓரளவு செயல்பட்ட இத்திட்டத்திற்கு முந்தைய அரசு அடுத்த இரண்டு ஆண்டுகளில் குறைத்தது. மோடி அரசோ இத்திட்டத்தை மொத்தமாக ஒழிக்கும் பணியில் இறங்கியுள்ளது. ஒதுக்கீட்டை குறைத்தது மட்டுமல்ல. கூலியே கொடுக்காமல் பல மாதங்கள் இழுத்தடிப்பது, வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கே வாய்ப்பு மறுப்பது என்று பல யுக்திகளை பயன்படுத்தி கிராமப்புற கூலி தொழிலாளிகளை திட்டத்தை விட்டு விரட்டும் வேலை நடந்து வருகிறது. 2012-13 இல் நூறு நாள் வேலை பெற்ற குடும்பங்கள் கிட்டத்தட்ட ஐம்பத்திரண்டு லட்சம். அடுத்த ஆண்டில் –முந்தைய அரசின் கடைசி ஆண்டில் – இது சுமார் நாற்பத்தேழு லட்சமாக குறைந்தது. பாஜக ஆட்சியின் முதலாண்டில் அதிலும் பாதியாக, இருபத்திமூன்று லட்சமாக குறைந்துள்ளது. 2013-14 இல் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 27.48 ஆயிரம் கோடியாக இருந்தது.2014-15 இல் இது 17.07 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. சட்டப் பூர்வமான உரிமையையே காலில் போட்டு மிதிக்கிறது மோடி அரசு என்றால் எந்த அளவிற்கு சட்டத்தை அது மதிக்கிறது என்பது தெளிவாகிறது.

எதையும் ஏலம் போடும் அரசு

முந்தைய யு.பி.ஏ அரசு நிலக்கரி மற்றும் அலைக்கற்றை ஊழல்களில் “சாதனை” படைத்தது என்றால், மோடி அரசு தனது பாணியில் நாட்டின் இயற்கை வளங்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் ஏலம் போடுவதில் மிகுந்த முனைப்பு காட்டுகிறது. நிலக்கரி துறையை தனியார்மயம், இந்த ஆண்டில் அறுபத்து எட்டாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பொதுத் துறை நிறுவன பங்குகளை விற்று விடுவது, இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணை வளங்களை தனியாருக்கு தாரை வார்த்து, அவர்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து நுகர்வோரை வாங்க வைப்பது என்று பல தளங்களில் நாட்டின் வளங்களை பன்னாட்டு இந்நாட்டு ஏகபோகங்களுக்கு வாரி வழங்கும் விதேசி அரசாக மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

தொழிலாளர் விரோத அரசு

ஆட்சிக்கு வந்த நாள் முதல் பெருமுதலாளிகளுக்கு சேவகம் செய்யும் அரசாகவே மோடி அரசு செயல்பட்டுள்ளது. இந்திய நாட்டின் உழைப்புப் படையில் 95 சதமானோர் எந்த சட்டப் பாதுகாப்புமின்றி முறைசாரா நிலையில் உள்ளனர். இத்தகைய நாட்டில் தொழிலாளர் நல சட்டங்கள் தான் வளர்ச்சிக்கு தடையாக உள்ளன என்று வாதாடுவது அபத்தம் மட்டுமல்ல, அப்பட்டமான முதலாளித்வ விசுவாசம். இருக்கும் ஓரிரு சட்டப் பாதுகாப்புகளையும் நீக்க வேண்டும் என்பதில் பெருமுதலாளிகளும் மோடி அரசும் மிகவும் தீவிரமாக உள்ளன. இத்திருப்பணியை துவக்கி வைத்தது ராஜஸ்தான் பாஜக அரசு. இப்பொழுது மோடி அரசு ஒரு படி மேலே சென்று குழந்தை உழைப்பை முதலாளிகள் சுரண்டுவதற்கு வழி வகுக்கும் சட்ட முன்வரைவைக் கொண்டுவந்துள்ளது, கடந்த மாதம் மே 13 அன்று மோடியின் அமைச்சரவை 19 ஆம் ஆண்டு குழந்தை உழைப்புத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டத்தில் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் உழைப்பை வயல்வெளியிலும் இதர குடும்ப தொழில்களிலும் வனப் பகுதிப் பணிகளிலும் ஈடுபடுத்தலாம் என்ற மிக மோசமான பகுதியைச் சேர்க்க ஒப்புதல் அளித்துள்ளது. பீடி, தீப்பெட்டி, கண்ணாடி, நெசவு, காட்டு வேலை, தோட்ட வேலை உள்ளிட்ட துறைகளில் பெற்றோர்களையே மேற்பார்வையாளர்களாக மாற்றி குழந்தை உழைப்பை முதலாளிகள் சுரண்ட இத்திருத்தம் வழி தரும். பாஜகவின் தேர்தல் செலவுகளையும் அவர்களுக்கு என்று ஊடகங்களில் ஏராளமான நேரத்தையும் தங்கள் செலவில் செய்து கொடுத்த பெருமுதலாளிகளுக்கு மிகவும் ஆர்வத்துடன் மோடி அரசு சேவை செய்வதாக இதை கொள்ளலாமா?

2013 நிலம் கையகப்படுத்தும் சட்டமும்

நிலம் கைப்பற்றும் அவசரச் சட்டங்களும்

பாஜக சென்ற நாடாளுமன்றத்தின் இறுதி காலத்தில் நிறைவேற்றப்பட்ட 2013 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ஆதரித்து வாக்களித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடனேயே மோடி அரசு இச்சட்டத்தில் பல திருத்தங்களை கொண்டுவந்து அவற்றை மக்களவையில் தனது பெரும்பான்மையை வைத்து நிறைவேற்றி விட்டது. இத்திருத்தங்கள் அனைத்துமே விவசாயிகளின் உரிமைகளை பறிப்பதானவை. இவற்றின் முக்கிய அம்சங்கள் இவை தான்:

  • நிலங்களை கையகப்படுத்தும்முன் திட்டத்தின் சமூக தாக்கத்தை மதிப்பீடு செய்ய வேண்டியதில்லை.
  • “பொது நோக்கம்” என்ற பெயரில் நிலம் கையகப்படுத்த அரசு விரும்பினால், விவசாயிகளின் ஒப்புதல் தேவையில்லை. இந்த ஷரத்தை பொது-தனியார் பங்கேற்பு திட்டங்களுக்கும் பொருத்தலாம். ‘பொதுநோக்கம்’ என்பது பெருமுதலாளிகளுக்கு சாதகமாக வரையறுக்கப்பட்டுள்ளது.
  • விவசாயிகளுக்கு மட்டுமே நட்ட ஈடு தரப்படும் என்ற ஷரத்தும் உள்ளது.
  • இருப்புப்பாதை, தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றின் இருமருங்கிலும் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தொழில் வழி அமைவு (Industrial corridor) என்ற பெயரில் அரசு விரும்பினால் விவசாயிகளின் ஒப்புதல்இன்றி அரசு கையகப்படுத்தலாம்.

இதுபோன்று இன்னும்பல மோசமான, விவசாயிகளுக்கும் கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கும் விரோதமான அம்சங்கள் உள்ளன.மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் பலவும் ஒன்றிணைந்து செயலாற்றியதாலும் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளில் சிலவும் இத்திருத்தங்களை எதிர்ப்பதாலும் இவை நிறைவேறவில்லை. எனவேதான் தொடர்ந்து மூன்றாம் முறையாக அவசரச் சட்டத்தை பிறப்பித்து தனது கார்ப்பரேட் எஜமான விசுவாசத்தை மோடி அரசு வெளிப்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் குழுவிடம் மசோதா உள்ள பொழுதே அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது நாடாளுமன்ற ஜனநாயகம் பற்றிய பாஜகவின் பார்வையைக் கோடிட்டுக் காட்டுகிறது. விவசாயிகள் தற்கொலை தொடரும் நிலையில், விவசாயம் அரசின் கொள்கைகளாலும் பன்னாட்டு நிலவரங்களாலும் பருவநிலையாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில் மோடி அரசின் இந்த நடவடிக்கை இந்த அரசு விவசாயிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் எதிரான அரசு என்பதை உறுதி செய்கிறது.

வளர்ச்சியின் தன்மையும்வளர்ச்சி விகித மோசடியும்

தனது தேர்தல் பிரச்சாரத்தில் மோடிய ‘வளர்ச்சி’ என்ற முழக்கத்தை முன்வைத்தார். அவரது பாஜக சகாக்கள் அப்பட்டமான இந்துத்வா மதவெறி பிரச்சாரத்தில் அன்றாடம் ஈடுபட்டனர். மோடியும் மேற்கு வங்கம் சென்ற பொழுது தனது பிரச்சாரத்தில் அகதிகள் பிரச்சனையை மதவெறி கண்ணோட்டத்தில் தேர்தல் ஆதாயத்திற்கு பயன்படுத்தினார். ஆட்சிக்கு வந்தபின்பும் இந்த இரட்டை வேடம் தொடர்கிறது. அண்மையில் பொருளாதார வளர்ச்சி பற்றி மோடியும் மத்திய அமைச்சர்களும் அதிகமாக பேசுகின்றனர். அரசின் புள்ளி விவரக்கணக்கில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இந்திய உலகிலேயே மிக வேகமாக வளரும் நாடாக இந்த ஆண்டு இருக்கும் என்று மத்திய அரசு தம்பட்டம் அசித்து வருகிறது. உண்மை என்ன? இதுவரை நாட்டின் உற்பத்தி மதிப்பை உற்பத்திக் காரணிகளுக்கான மொத்தச்செலவு என்ற அடிப்படையில் (GDP at factor cost) கணக்க்கிட்டு வந்தனர் ஆனால் இப்பொழுது உற்பத்திக்குப் பின் அரசு வசூலிக்கின்ற சரக்குவரிகளையும் (இதில் கலால் வரி, சுங்கவரி, விற்பனை வரி, சேவை வரி உள்ளிட்டு அனைத்து மறைமுக வரிகளும் அடங்கும்) சேர்த்து உருவாகும் சந்தை விலை அடிப்படையில் மொத்த உற்பத்தியை கணக்கிடுகிறது. இதன் பொருள், ஒரு ஆண்டில் உற்பத்தியில் எந்த மார்ரமும் இல்லாமல், ஆனால் சரகுகள் மீதான வரிகள் உயர்த்தப்பட்டால், நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு அந்த வரிகள் அளவிற்கு அதிகரிக்கும். ஆகவே வளர்ச்சி ஏற்பட்டதாக தோற்றம் உண்டாகும். இது ஒருமாற்றம். அரசு செய்துள்ள மற்றொரு மாற்றம் என்பது, உற்பத்தி மதிப்பை 2004-05 விலைவாசிகளுக்குப்பதிலாக 2011-12 விலைவாசிகள் அடிப்படையில் கணக்கிடுவது என்பதாகும். இவ்விரண்டு அண்மை ஆண்டுகளின் வளர்ச்சி விகிதங்களை உயர்த்திக் காட்டும். உதாரணமாக, புதிய கணக்கிடும் அடைப்படையில், ஏற்கெனவே 4.7 % என்று கணக்கிடப்பட்ட 2012-13 வளர்ச்சி விகிதம் 5.0 % என்று திருத்தப்பட்டுள்ளது.5.1 % என்று கணக்கிடப்பட்ட 2013-14 வளர்ச்சி விகிதம் 6.9 % என்று திருத்தப்பட்டுள்ளது. ஆனால் இவ்விரண்டாண்டுகளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த ஆண்டுகள். எனவே இந்த உயர்வுகள் மோடி அரசு கணக்கில் சேர்க்க முடியாது. 2014-15 ஆண்டில் புதிய கணக்குப்படி வளர்ச்சிவிகிதம் 7.5 % என்று அரசு அனுமானித்தது. ஆனால் ரிசர்வ் வங்கி 7.3 % தான் இருக்கும் என்று அறிவித்துள்ளது.ஆகவே சென்ற ஆண்டு வளர்ச்சி விகிதத்திற்கும் இந்த ஆண்டு விகிதத்திற்கும் மிக குறைவான வேறுபாடு தான் இருக்கும். மோடி அரசால் வளர்ச்சியை வேகப்படுத்த முடியவில்லை என்பது தெளிவு. இந்த அதிகப்படியான வளர்ச்சி விகிதக் கணக்கும் வரையறை மாற்றப்பட்டதாலும் அடிப்படை ஆண்டு 2004-05 இலிருந்து 2011-12 என்று மாற்றப்பட்டதாலும் அரசு சரக்குவரிகளையும் சேவை வரிகளையும் உயர்த்தியதாலும் தான் பெரும்பாலும் நிகழ்ந்துள்ளது.

வளர்ச்சி கணக்கு பற்றிய சர்ச்சையைவிட முக்கியமானது வளர்ச்சியின் தன்மை. இது கடந்த ஒரு ஆண்டில் எப்படி உள்ளது என்று பார்த்தால் நிலைமை புரியும். வேளாண் துறை வளர்ச்சி 1%ஐக்கூட எட்டாது. உணவுதானியங்களின் மொத்த உற்பத்தி2013-14இல் 26.5 கோடி டன்களாக இருந்தது.2014-15 இல் 25.1 கோடியாக சரிந்துள்ளது.இது அண்மைகாலங்களில் மிகப் பெரிய சரிவாகும். மோடி அரசின்முதல் ஆறு மாதங்களில் தொழில் உற்பத்தி கிட்டத்தட்ட 5.6 % குறைந்தது. அடுத்த ஆறு மாதங்களில் சுமார் 2.2 % என்ற அளவிற்குத்தான் அதிகரித்துள்ளது.

நெருங்கி வரும் பேராபத்துகள்

மோடி அரசு நமது நாட்டின் அந்நியச்செலாவணி கையிருப்பு கூடியுள்ளதையும் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளதையும் சாதனைகளாக சித்தரிக்கிறது. உண்மை என்ன? கடந்த ஆறுமாதங்களாக ஏற்றுமதி குறைந்து வருகிறது. மேலை நாடுகளில் பொருளாதாரம் மந்தமாகவே நீடிக்கிறது. கச்சா எண்ணெய் விலை சரிந்தும் பிரசர்க்குகளின் இறக்குமதி மதிப்பு பெரிதும் கூடியுள்ளது. அமெரிக்க அரசு தனது பணக்கொள்கையை மாற்றி அங்கே வட்டி விகிதம் உயர உள்ளது. அது நிகழும்பொழுது அந்நிய நிதி மூலதனம் நம் நாட்டை விட்டு அங்கே செல்லும். இதுவெல்லாம் சேர்ந்து அந்நிய செலாவணி நெருக்கடியை ஏற்படுத்தும். ஏற்கெனவே ஒரு அமெரிக்க டாலருக்கு 64 ரூபாய் என்ற அளவிற்கு ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. மேலும் சரியலாம். இது பணவீக்கத்தை அதிகரிக்கும். வேளாண்மை, தொழில் இரண்டுமே மந்தமாக உள்ள நிலையில் வேலை வாய்ப்புகளும் முடங்கியே உள்ளன. கடும் நெருக்கடியை நோக்கி மோடி அரசு நாட்டை இட்டுச்செல்கிறது.

மோடி அரசின் அரசியல் பொருளாதாரம்

மோடி அரசின் பொருளாதார கொள்கைகளுக்கும் முந்தைய ஐக்கிய முற்போக்கு முன்னணியின் கொள்கைகளுக்கும் அடிப்படையில் வேறுபாடு கிடையாது. எனினும், தனது பெரும்பான்மை பலத்தை வைத்து முந்தைய அரசைவிட மிகத்தீவிரமாக அதே கொள்கைகளை மோடி அரசு கடந்த ஓராண்டாக அமலாக்கி வருகிறது. எதிர்கட்சிகள் சிதறுண்டு இருப்பதும் இடது சாரிகள் பலவீனம் அடைந்துள்ளதும் இந்தத்தன்மையில் பயணிக்க மோடி அரசுக்கு இடமளித்துள்ளன.இக்கொள்கையின் சில அடிப்படை அம்சங்கள் வருமாறு:

  • தனியார் மூலதனத்தை மையமாக வைத்து வளர்ச்சியை சாதிப்பது.
  • அந்நிய நிதி மூலதனத்திற்கு கட்டுப்பாடுகளின்றி செயல்பட அனுமதி அளிப்பது
  • அந்நிய, இந்திய பெருமுதலாளிகளுக்கு அனைத்துச் சலுகைகளையும் அளிப்பதன் மூலம் அவர்களை “குஷி”ப்படுத்தி முதலீடுகளை மேற்கொள்ள ஊக்குவிப்பது.
  • இதன் பகுதியாக, வரிச்சலுகைகள் அளிப்பது, உழைப்பாளர் உரிமைகளை பறிப்பது, பெருமுதலாளிகளின் மீதான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்குவது, கல்வி, ஆரோக்கியம், கட்டமைப்பு உள்ளிட்டு அனைத்துத் துறைகளையும் பெரும் கம்பனிகள் லாபம் ஈட்டும் வேட்டைக்காடாக மாற்றுவது, ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி, பரந்த சந்தையை பெருமுதலாளிகளுக்கு உருவாக்கிக் கொடுப்பது, இதற்கென இந்தியாவிற்கு உள்ளேயும் ஒரே சந்தையைவரி அமைப்பு மாற்றங்கள் மூலம் ஏற்படுத்திக் கொடுப்பது (இது தான் GST – பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி என்ற முயற்சி) ஆகிய நடவடிக்கைகள்
  • அந்நிய நிதி மூலதனம் நாட்டை விட்டு வெளியே சென்றுவிடாமல் இருக்க வேண்டும் என்றால் இந்திய பொருளாதாரத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். இதற்கு பணவீக்கம் கட்டுக்குள் இருக்க வேண்டும். அரசு பொருளாதாரத்தில் குறைந்த பங்கே ஆற்ற வேண்டும். அரசின் வரவு-செலவு சிக்கனமாக இருக்கவேண்டும். வரவு செலவு இடைவெளியை குறைக்கவேண்டும். மேலும் இதை பணக்காரர்கள் மீது வரிகள் போட்டு வளங்களை திரட்டி செய்யக் கூடாது. அப்படி செய்தால் “முதலீட்டாளர்கள்” என்று செல்லமாக அழைக்கப்படும் செல்வந்தர்கள் உற்சாகம் இழந்து வேறு எங்கேனும் சென்றுவிடுவார்கள். ஆகவே, அரசின் செலவுகளை குறைத்துதான் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும்.இந்த எல்லைகள் தான் அரசின் பட்ஜெட்டுகளை நிர்ணயிக்கின்றன.[1]

இந்த கோணத்திலிருந்து பார்த்தால் மோடி அரசின் கொள்கைகள் புரியும். சமூக நலத்துறை ஒதுக்கீடுகள், அறிவியல் தொழில்நுட்பத்திற்கான ஒதுக்கீடுகள், வேளாண் மற்றும் கட்டமைப்பு துறைகளில் அரசு முதலீடுகள் இவை அனைத்தும் ஏன் வெட்டப்படுகின்றன என்றால் நாட்டையே இந்திய அந்நிய பெருமுதலாளிகளின் வேட்டைக்காடாக ஆக்கிட இதையெல்லாம் செய்தாக வேண்டும்.

ஆனாலும், இதில் பல முரண்பாடுகளும் உள்ளன. உலக முதலாளித்துவம் தொடர்ந்து கடும் நெருக்கடியில் உள்ளது. இது இந்தியாவின் ஏற்றுமதி வரவை உயர்த்துவதை கடினமாக்குகிறது. இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால், இறக்குமதி கூடுகிறது. அந்நியச்செலாவணி பிரச்சனை ஏற்படுகிறது. இதை எதிர்கொள்ள எப்படியாவது அந்நிய மூலதனத்தை இந்தியாவிற்கு கொண்டுவர வேண்டும் என்று அரசு முனைகிறது. இதற்காக அந்நிய நிதி மூலதனத்தை கட்டுப்பாடின்றி உள்ளே வரவும் வெள்யே செல்லவும் அரசு அனுமதிக்கிறது. வரிச்சலுகைகளையும் அளிக்கிறது. இதனால் அரசு வரி வருமானம் சரிகிறது. இது அரசின் செலவுகளை வெட்டும் திசைவழியில் செல்லவைக்கிறது. ஏற்றுமதியும் பலவீனமாகி, அரசின் செலவும் வெட்டப்பட்டு மக்களின் வாங்கும் சக்தியும் நாட்டின் ஏற்றத்தாழ்வு, நிறைவு பெறாத ஜனநாயகப் புரட்சி, தொடரும் நில ஏகபோகம் ஆகிய நிலைமைகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உள்நாட்டு சந்தை விரிவடைவதில்லை. எனவே எவ்வளவு சலுகைகளை மூலதனத்திற்கு அளித்தாலும் வண்டி வேகமாக செல்வதில்லை. உலக முதலாளித்வத்தில் ஏற்படும் மீட்சியையும் உள்நாட்டில் ஒரு சிறிய பகுதி செல்வந்தர்களின் வாங்கும் சக்தியை சார்ந்தும் உள்ள இந்தியப் பொருளாதாரத்தை தாராளமய கொள்கைகள் மூலம் பாய்ச்சல் வேகத்தில் வளர்ச்சி அடைய வைக்க இயலும் என்ற ஆளும் வர்க்க கனவு கனவு தான். அவ்வப்பொழுது இவை நிகழலாம், சில ஆண்டுகள் பன்னாட்டு சூழலாலும் உந்தப்பட்டு வண்டி சற்று வேகமாக ஓடலாம். ஆனால் இவை அதே வேகத்தில் தொடர்வது கடினம் என்பது மட்டுமல்ல. அத்தகைய வளர்ச்சி பல ஆண்டுகள் ஏற்பட்டாலும் பெரும்பகுதி மக்களுக்கு – உழைப்பாளி மக்களுக்கு – வழ்வாதாரப் பிரச்சனைகள் தொடரும் என்பது தான் நமது அனுபவம்.

நிறைவாக

லட்சக்கணக்கான விவசாயிகளின் தற்கொலைகள் வேளாண் நெருக்கடியின் துயரமான வடிவமாக இருக்கலாம். ஆனால் நெருக்கடி அது மட்டுமல்ல. அதை விட ஆழமானது. அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்காத, சேவைத்துறை சார்ந்த வளர்ச்சி தான் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் இருந்துள்ளது. தொழில் வளர்ச்சி என்பதும் வேலை வாய்ப்பு விரிவாக்கம் என்பதும் விவசாய உறவுகளில் மாற்றம் ஏற்படாவிட்டால் எளிதில் நிகழாது. மக்கள் சீனத்திற்கும் இந்தியாவிற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளில் இதுவும் ஒன்று.

விவசாய உறவுகளை முற்றிலும் மாற்றி அமைக்காமல், நில ஏகபோகத்தை தகர்க்காமல், விவசாய மலர்ச்சி சாத்தியமில்லை. ஆனால் அது மட்டும் போதாது. அதைத்தொடர்ந்து அரசு முன்முயற்சியில், திட்டமிட்ட வேளாண் மற்றும் தொழில் வளர்ச்சி நடக்க வேண்டும். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இது பற்றி இன்னும் விவரமாக பார்க்கலாம். இங்கே நாம் கோடிட்டுக் காட்டியிருப்பது நமது இடது ஜனநாயக மாற்றின் ஒரு அம்சம் என்பதை மட்டும் பதிவு செய்து இக்கட்டுரையை முடிக்கலாம்.

 

 

 

[1]நிதி மூலதனத்தின் சுழற்சி மீது கட்டுப்பாடுகள் விதிப்பது என்பது இயலாத காரியமாகக் கருதப்படுகிறது. அப்படி ஒரு நாடு செய்தால் அந்நிய நிதி மூலதனம் வேறு நாட்டுக்கு ஓடி விடும் என்று தாராளமயவாதிகள் மிரட்டுகின்றனர். உண்மையில் இதை எதிர்கொள்ளமுடியும். சொந்தக்காலில் நின்று நமது உபரிகளையும் வளங்களையும் தக்க வகையில் திட்டமிட்டு பயன்படுத்தினால், நாடு வளரும். நாட்டை நோக்கி உள்நாட்டு வெளிநாட்டு நிதி மூலதனம் அல்ல, உற்பத்தி மூலதனமே வரும் என்பது சீன சோசலிச அனுபவம் தரும் பாடம்.அதற்கு நிதி அமைப்பு அரசின் கையில் இருக்கவேண்டும். இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். உற்பத்தி சொத்துக்கள் பயன்படும் விதங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அரசிடம் இருக்க வேண்டும். அரசின் வர்க்கத்தன்மை     உழைக்கும் மக்களுக்கு சாதகமாக இருக்கவேண்டும்! சுருங்கச் சொன்னாள் சோசலிசம் நோக்கி நாடு பயணிக்க வேண்டும்!

 

முதலாளித்துவத்தின் கோர வடிவம் = நரேந்திர மோடி

பின்னணி:

மக்கள் கவி பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் இல்லையே என்ற ஏக்கம் தற்போது எழுகிறது. ஏனெனில் மக்களை பிடிக்கும் நவீன பேய்களுக்கு தாயத்து விற்றவன் ஆயிற்றே. இப்பொழுது இந்திய முதலாளி வரக்கம் நமது மக்களின் இரண்டு பேய்களை முன்னிருத்துகிறது. இரண்டு பேரும் மக்களின் வாழ்வை சூறையாடும் கொள்கைகளை கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி அமல்படுத்தும் எத்தரகள். நம்மூரில் மக்களை ஏமாற்றி வித்தை காட்டினால் அதற்கு பொதுவாக வைக்கப்பட்டுள்ள பெயர் மோடி மஸ்தான் வேலை. தற்போது இந்திய அரசிலுக்கு இதைவிட கணக் கச்சிதமாக பொருந்தும் வேறு பெயர் இல்லை.

பத்திரிக்கைகள் மற்றும் காட்சி ஊடகம் ஆகிய இரண்டுமே தொடர்ந்து கடந்த சில வருடங்களாக மோடி குறித்து முழு உண்மையைத் தெரிவிக்காமல் பெரிய பாதி உண்மைப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு வந்து கொண்டிருக்கின்றன. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அதிர்ச்சி தோல்வி அடைந்தது. பா.ஜ.க-வின் இரட்டை அடையாளங்களில் ஒருவரான அத்வானியை (இரும்பு மனிதராம்- இவர் உள்துறை அமைச்சராக இருந்தபோது தான் பாராளுமன்றத் தாக்குதல் முதல் காண்டகார சரணாகதி வரை நடைபெற்றது) முன்னிருத்தி தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற கற்பனையில் இருந்த மதவாத பா.ஜ.கவிற்கும் அதன் மூல இயக்கு விசையைக் கட்டுப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும் இது சொல்ல முடியாத பேரிடியாக இருந்தது.

ஒரு புறம் அயோத்தியில் பாபர் மசூதியை இடித்ததில் முன்னின்று நடத்தியவர நாடு முழுவதும் ரதயாத்திரை நடத்தி இரத்த ஆறுகளை ஓட வைத்தவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக கடுமையாக நடந்து கொள்ளக் கூடிய வர இந்திய-பாகிஸ்தான் ஒப்பந்தம் (முஷாரப் -வாஜ்பாய்) கையெழுத்தாவதை தடுத்து நிறுத்தியவர் வாஜ்பாய்க்கு அடுத்தபடியான மிக மிக உயரமான தலைவர் என்ற முறையில் வெற்றி நிச்சயம் என்று முன்னிருத்தினர். தோல்வியின் சோர்வுடன் பா.ஜ.க.வில் அடுத்த மாற்றாக யாரை முன்னிருத்துவது என்பது மிகப்பெரிய வெற்றிடமாகியது.

இந்த நிலையில் மிக அதிக காலம் முதல் மந்திரியாக (சொந்தக் கட்சிக் காரர்களாலேயே வழக்கமாக காலை வாரிப்படுவது காங்கிரசிலும் பா.ஜ.க.விலும் வாடிக்கைதானே) மக்களால் அறியப்படும் மோடி மட்டுமே அவர்கள் முன்னிருந்த ஒரே தேர்வு. ஆனால் 2002 குஜராத் கலவரம் மற்றும் அதற்குப் பின் முஸ்லீம் மக்களை குறிவைத்து போலி என்கவுண்டர் மூலம் தீர்த்துக் கட்டியது போன்ற எதிர்மறையான உருவகம்தான் அவர் குறித்த கருத்தாக நாட்டு மக்களிடையேவும் உலகத்தின் பார்வையிலும் இருந்தது. இதர இரண்டாம் தரத் தலைவர்கள் எல்லாருக்கும் (ஜேட்லி, சுஷ்மா, சௌகான், ராஜ்நாத், கட்கரி போன்றவர்கள்) பிரதமர் பதவி ஆசை இருந்தாலும் அவர்களுக்கு கட்சியை தலைமை தாங்கி வெற்றிக்கு இட்டு செல்லக் கூடிய வாய்ப்பில்லை என்ற எண்ணமும் மறுபுறம் ஆர்.எஸ்.எஸ். சொல்வதை அப்படியே அமலாக்கக் கூடிய ஒருவரும் தேவை என்று ஆர்.எஸ்.எஸ். கருதியதால் மோடியே அவர்களின் ஒரே தேரவாக ஆக வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

இதனால் பத்திரிக்கைகளில் அவரைப் பற்றியிருந்த மதவாத கறைகளை கழுவ வேண்டிய கட்டாயம் பா.ஜ.விற்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் ஏற்பட்டது. ஆகவே அவர் ஆட்சி செய்கிற மாநிலத்தில் பாலாறும் தேனாறும் கட்டற்று ஓடுவதாகவும் அங்கு மக்களுக்கு எந்த இலவசமும் இல்லை என்றும் அதற்கு தேவையே இல்லாமல் மக்கள் உழைத்து முன்னேற வாய்ப்பு அளிக்கும் மாநிலம் என்ற பிரச்சாரம் செய்வது மட்டுமே அவர் மீதிருந்த கறைகளை அப்புறப்படுத்த உதவும் என்று  வலது சாரி அரசியல் அமைப்புகள் முடிவெடுத்து ஊடகங்களில் தங்களின் உயர்சாதி பின்புலத்தை பயன்படுத்தி இலகுவாக அமல்படுத்தியது.

அதே சமயம் நாட்டு அரசியல் தளத்தில் இடதுசாரிகளை பாராளுமன்றத்திலிருந்தும் அவர்கள் ஆட்சியிலிருந்து மே.வங்கம் மற்றும் கேரளாவில் கணிசமான தோல்விகளை அளித்ததில் வெற்றியடைந்த முதலாளித்துவம் (ஏகாதிபத்தியத்தின் அனைத்து கருவிகளின் உதவியோடு) விரைவாக தன்னுடைய நிகழ்ச்சி நிரலை தனக்கு சாதகமான பாராளுமன்ற அமைப்பின் உதவியோடு அமல்படுத்தத் தொடங்கியது.

நாட்டின் வளங்களை எந்தெந்த வழிகளில் எல்லாம் கொள்ளையடிக்க முடியுமோ அந்த வழிகளிலெல்லாம் கொள்ளைகள் ஆரம்பிக்கப்பட்டன. சட்ட ரீதியான கொள்ளைகளும் சட்டத்திற்கு புறம்பான சூறையாடல்களும் எந்தத் தடையும் இன்றி ஆரம்பிக்கப்பட்டது. ஆளும் வர்க்கம் மற்றும் அதன் கூட்டாளியான ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான கொள்கைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டது. அதற்கான எதிர்ப்புகள் உதாசீனப்படுத்தப்பட்டது.

அதே சமயம் ஏகாதிபத்திய அமெரிக்காவில் ஏகாதிபத்தியத்திற்கும் அதனை தலைமை தாங்கும் நிதி மூலதனத்திற்கும் ஏற்பட்ட மிகப்பெரிய அடி அதன் பிழைத்திருத்தலுக்கும் இந்தியா போன்ற வளமான சந்தைகளில் தீவிரமாக செயல்பட தேவையும் அதற்கான தடைகளை உடைத்தெறிவது அவசியம் என்ற நிலையும் உருவாகியது. பொருளாதார மந்த நிலையைப் பயன்படுத்தி தொழில் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க மக்களின் வாழ்வோ வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருந்தது. விலைவாசி உயர்வு வேலை இழப்பு கல்வி, மருத்துவம், தண்ணீர், சாலை என மக்களின் அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளைக்காடாக மாற்றியதால் மக்களின் அன்றாட வாழ்க்கை நசிந்தும் வாழக்கைத் தரம் வீழ்ச்சியடைந்ததும் வந்தது.

இதற்கிடையே மத்தியிலும் மாநிலங்களிலும் புதிய தாரளமயக் கொள்கையின் விளைவாக சுதந்திர வரலாற்றில் மக்களின் அறிவுக்கு எட்டாத எண்களில் லட்சம் கோடிகள் என்ற முறையில் ஊழல்கள் வெடித்து வெளிவரத் தொடங்கின. இரண்டாம் அலைக்கற்றை ஊழல் இஸ்ரோ ஊழல் நிலக்கரி ஊழல் இயற்கை எரிவாயு ஊழல் ஹெலிகாப்டர் ஊழல் என ஒவ்வொரு நாளும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆட்சியாளர்களோடு இணைந்து அடித்த ஊழல்கள் அம்பலமாயின. அதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு பற்றிய விமரசனத்தை அடக்கியும் அதே சமயம் ஆட்சியில் இருப்பவர்கள் பற்றி அதிகமாகவும் (அவர்களே முக்கிய குற்றவாளிகள் என்றாலும்) ஊடகங்கள் ஊதிக் கொண்டிருந்தன.

இதற்கிடையே மக்களிடையே இருந்த அதிருப்தியின் வெளிப்படாகக் காங்கிரஸ் கட்சி பல மாநிலத் தேர்தல்களில் தனது இளவரசர் ராகுல் தலைமையில் பிரச்சாரம் செய்தும் படுதோல்விகளை தழுவத் தொடங்கியது. மேலும் பல ஊழல் வழக்குகளில் மத்திய புலனாய்வுக் கழகம் விசாரிக்காமல் அமைதி காத்தும் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் வழக்கு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அரசியல் தலைவர்கள் சிறைக்கு தள்ளப்பட்டவுடன் அடுத்த கட்டமாக முதலாளிகள் விசாரணை என்ற நிலை. அதேசமயம் மக்களிடையே அதிருப்தி மிக அதிகமான எழுச்சியுடன் மேலெழும்பியது. அதுவே ஊழலுக்கு எதிரான இயக்கத்திற்கு நாடு முழுவதும் கிடைத்த அங்கீகாரம். மேலும் சுமார் எட்டு கோடி தொழிலாளர்கள் கலந்து கொண்ட நாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்தமும் ஆளும் வர்க்கத்தை அச்சமுறச் செய்தது. இந்த நிலையில் தங்களின் கொள்கைகளை தொடரவும் தொடர்ந்து தங்களின் கொள்ளைகளை அனுமதிக்க யார் சிறந்தவரோ அவரையே மக்கள் முன் வலுவான மாற்றாக வைக்க முதல்முறையாக ஆளும் வரக்க அமைப்புகளான சி.ஐ.ஐ. மற்றும் பிக்கி (எப்.ஐ.சி.சி.ஐ) களம் இறங்கியுள்ளன. ஆளும் வர்க்கத்தின் ஊதுகுழல்களான 24 X 7 தொலைக் காட்சி ஊடகங்கள் அதனை நேரடியாக ஒளிபரப்புகின்றன.

ராகுல் Vs மோடி

காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தப்படும் ராகுல் காந்தி இந்திய தொழில்  கூட்டமைப்பிலும் (சி.ஐ.ஐ) அதற்கு பதிலடியாக மோடி பிக்கி இந்திய தொழில் வர்த்தக அமைப்பின் மேடையிலும் தங்களது பிரதமர் வேட்பாளர் பேச்சை துவங்கியுள்ளதாக ஊடகங்கள் கூத்தாடுகின்றன. இவர்கள் இரண்டு பேரும் கனவுகளை விற்பதாக மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது. இந்தக் கனவுகள் மூலம் மக்களை தேனாறும் பாலாறும் ஓடும் கற்பனை தேசத்திற்கு அழைத்து செல்ல இருவரும் முயற்சிக்கிறார்கள். வைரமுத்து எழுதிய பட்டு வேட்டி பற்றிய கனாவில் கட்டியிருந்த கோவணமும் பறிபோய் விட்டது என்ற நிலைமை வரக்கூடாது என்று ஆம் ஆத்மி இந்தியன் நினைக்கிறான்.

மக்களின் தேவைகள் அவரகளின் நிஜவாழ்க்கையின் நிலைமைகள் மாற வேண்டும் என்பதுதான். பல நேரம் கனவு பயங்கரக் கனவாக முடியும் என்று பீப்பிள்ஸ் டிமாக்ரசி தலையங்கம் எச்சரிக்கிறது.

மோடி ஒரு பாசிசவாதி:

பாசிசத்தின் தன்மை பற்றி பிரபல இடது அறிவுஜீவி பிரபாத் பட்நாயக் சில வரையரைகளை தருகிறார்.

பாசிசத்தின் தன்மை:

பாசிசம் இரண்டு முக்கிய கூறுகளைக் கொண்டது. ஒன்று அதன் வர்க்கத் தன்மை,  இரண்டு அதன் வெகுஜனத் தன்மை. அதன் வர்க்கத் தன்மை குட்டி பூர்ஷ்வா இயக்கமாக ஆரம்பித்து பின்னர் அது ஏகபோகங்களோடு ஐக்கியமாகி, அதன் வக்கிலாக மாறிவிடும். அதன் வெகுஜனத் தன்மை அதிதீவிர தேசீய வாதம், இன அல்லது மத வாதம் இவைகளின் அடிப்படையில் பெரும்பான்மையைப் பிரேயாகித்து அந்த சமூகத்தின் அனைத்து நோய்களுக்கும் சிறுபான்மை சமூகமே காரணம் என்று பெரும்பான்மை அரசியலில் நிலை கொள்ளும். சுதந்திர இந்தியாவில் இதுவரை ஒரு பாசிசவாதி கூட பிரதமர் பதவிக்கு முன்னிருத்தப்பட வில்லை.

பொதுவாக குஜராத்தில் பி.ஜே.பி.யும் குறிப்பாக மோடியும் வியாபர வர்க்கத்தின் துணையுடன் அவர்களின் பிரநிதிப்படுத்திய இயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இன்று கார்ப்பரேட்களின் வெறி கொண்ட வக்கீலாக மாறியுள்ளதைக் காண்கிறோம். இன்று குஜராத் என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தங்கத் தாம்பாலத்தில் அனைத்து சலுகைகளையும் அள்ளி வழங்கும் காமதேனு மாநிலமாகும். டாட்டா நேனோ நிறுவனத்திற்கு குஜராத் விவசாயப் பல்கலைக் கழகத்தின் 20,000 ஏக்கர் நிலத்தை தானமாக அள்ளிக் கொடுத்ததை நினைவில் கொள்ளவும்.  இன்று பிக்கி மேடையில் கார்ப்பரேட் துணையுடன் தன்னை இந்த நாட்டின் பிரதம வேட்பாளராக முன்னிருத்துகிறார். நவீன தாரளமயக் கொள்கைகளை இன்னமும் தீவிரமாக கார்ப்பரேட் நிறுவனங்களின் விருப்பத்திற்கு இணங்க செயல்படுத்த வேண்டும் என்று வாதாடுகிறார். அதன் ஒரு பகுதியாகத்தான் இரயில்வேயை தனியார்மயம், பாதுகாப்புத் துறையில் தனியார்மயம், நாட்டின் கேந்திரமான அனைத்து துறைகளையும் தனியார் மயம் என்று குரல் எழுப்புகிறார்.

சர்வதேச நிதி மூலதனத்தின் ஆசிகளைப் பெறவே அவர் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய ஏகாதிபத்திய நாடுகளை தாஜா செய்ய காரணம் போட்டு வித்தை காட்டுகிறார். நவீன தாராளமயத்தில் கொஞ்சம் கூட மனித முகத்துடன் இருப்பதாக பாவலா கூட செய்யத் தயராக இல்லை. இதற்கிடையே பெண்கள் பொருளாதார ரீதியில் தன்னுடைய காலில் நிற்க தனது அரசு தான்  நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து அதற்கு அவர் தரும் விளக்கம் சொத்துக்களை பெண்கள் பெயரில் பதிவு செய்தால் அதற்கு பத்திர பதிவு வரியிலிருந்து விலக்கு அளிப்பதாகவும் இதன் காரணமாக தனது அரசின் வருவாய் 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார் (குமுதம் ரிப்போர்ட்டர்). ஆனால் தமிழ்நாட்டில் உள்ளது போன்று சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என்பதை அளிக்க வில்லை என்பதை கவனிக்கவும். இதுவும் பாசிசத்தின் ஒரு தன்மையே.

குஜராத் உண்மை நிலை:

பொதுவாக வலதுசாரி சார்புடைய இந்திய ஊடகங்கள் சமீப காலமாக தொடர்ந்து செய்து வரும் பிரச்சாரம் குஜராத் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக ஒளிர்கிறது என்றும் குஜராத் வளர்ச்சி மாதிரியை இந்தியாவெங்கும் நீட்டிக்கலாம் என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. மோடியும் அதனை செய்கிறார். இந்தியாவின் திட்டமிட்ட வளர்ச்சியை அவர் பிக்கி கூட்டத்தில் கடுமையாக விமர்சனம் செய்கிறார். மகாத்மா காந்தி ஊராக வேலை வாய்ப்பு திட்டத்தைப் பற்றி விமர்சனம் செய்து தனது வர்க்கத் தன்மையை வெளிப்படுத்தும் அவர் அதன் பெயரில் உள்ள மகாத்மா என்பதை நீக்க வேண்டும் என்ற கோரி தனது இந்துத்வா வெறித் தன்மையை வெளிப்படுத்துகிறார். உண்மையில் குஜராத் ஒளிர்கிறதா? புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்ப்போம். இந்த புள்ளி விவரங்களை எள்ளி நகையாடுகிறார் என்பது வேறு விஷயம்.

விவசாயிகளுக்கு எதிரானவர்:

தனது அரசின் சாதனையாக கடந்த மிகக் குறைந்த காலத்தில் விவசாயக் கால்வாய் வெட்டியதாக மாரதட்டுகிறார் மோடி. உண்மையில் ஊடகங்கள் மறைத்த மிகப் பெரிய கொடூரம் அங்கு 2003- முதல் 2007 வரை சவுராஷ்ட்ரா பகுதியில் 489 விவசாயிகள் தற்கொலை செய்த கொண்டனர் என்ற விவரத்தை மறைத்ததுதான். இந்த புள்ளி விவரங்களை அரசு மறைத்த வைத்திருந்தது. ஊடகங்களும் அமைதி காத்தன. இந்நிலையில் மிகவும் சிரமப்பட்டு தகவலறியும் சட்டத்தின் துணை கொண்டு இந்தத் தகவல் பெறப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால் அது அசாதாரண இறப்பாக மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

2007-லிருந்து இரண்டு ஆண்டுகள் மழை பொய்த்தது இந்த இறப்புகளுக்கு காரணமாகும். மிகவும் ஔ மயமான குஜராத்தில் பல விவசாயிகள் தாங்கள் வாங்கிய 50,000-70,000 கடனை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலனவர்களுக்கு 2 ஹெக்டேர் வரை நிலம் உள்ளது. இங்கு விவசாயி தற்கொலை செய்து கொண்டால் அரசு அதிகாரிகளோ அல்லது ஆளும் அரசியல் பிரமுகரகளோ எட்டிப் பார்ப்பது கூட கிடையாது. இந்தப் போக்கை எதிரத்து பா.ஜ.க.வின் கன்னுபாய் கன்சாரியா கண்டனக் குரலெழுப்ப அவரை மோடி கட்சியை விட்டே துரத்தி அடித்தார். கிராமப்புறத்தில் மொத்தம் 10 மணி நேரம் கூட மின்சாரம் கிடையாது. அதிலும் 6 மணி நேரம் இரவு நேரத்தில்தான் வழங்கப்படும். 26.25 லட்சம் ஹெக்டேர் நிலம் பருத்தி விவசாயத்தில் உள்ளது. அரசின் கவனமின்மை காரணமாக உற்பத்தி தொடர்ந்து வீழ்ச்சியடைந்த வருகிறது.

பருத்தி உற்பத்தி

ஆண்டு

உற்பத்தி (ஹெக்டேருக்கு)

2007-08

775 கி.கி

2008-09

650 கி.கி

2009-10

635 கி.கி

2011-12

611 கி.கி

ஆதாராம்: காட்டன் அட்வைசரி போரடு

குஜராத் அரசு மோடியின் தலைமையின் கீழ் மாநிலத்தின் வருவாயை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளாக அள்ளிக் கொடுப்பதன் விளைவாக விவசாயம் மிக மோசமாக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. ஆண்டு தோறும் 12 மில்லியன் பேல் பஞ்சு உற்பத்தி செய்யும் குஜராத் இந்த ஆண்டு வெறும் 7 மில்லியன் பேல்கள் மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. விவசாய நெருக்கடி எந்தளவுக்கு மோசமாக உள்ளது என்பதற்கு இதுவே அத்தாட்சி. அன்னிய மூலதனம்:

தொடர்ந்து ஊடகங்கள் ஊதிக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சாரம் நமது நாட்டிலேயே அன்னிய முதலீடும் மூலதனமும் குவியும் முதல் மாநிலம் குஜராத் என்பதாகும். ஆனால் 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2012 ஜூன் வரை உள்ள கிட்டதட்ட 12 வருட காலத்திற்கு ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் புள்ளி விவரம் இது முற்றிலும் தவறு என்பதை நிரூபிக்கிறது. குஜராத் முதல் இடத்திலும் இல்லை முதல் மூன்று இடத்திலும் இல்லை என்பதை கீழே கண்ட அட்டவணை அம்பலப்படுத்தும். மகாராஷ்ட்ராதான் இந்தியாவில்  முதல் மாநிலமாகும். தமிழ்நாடு கூட குஜராத்தை விட முன்னனியில் உள்ளது.

அன்னிய நேரடி மூலதனம் ஏப் 2000- ஜூன் 2012 வரை (ரூ கோடியில்)

மகராஷ்ட்ரா

254624

டெல்லி

155722

கர்னாடகா

45021

தமிழ்நாடு

40297

குஜராத்

36913

வைப்பரண்ட் குஜராத்:

ரஜினி பாணியில் சொன்னால் குஜராத் என்றாலே சும்மா அதிருதில்ல என்ற பெயரில் ஆண்டு தோறும் மிகவும் படோடோபமாக விளம்பரப்படுத்தப்படும் விழா குஜராத்தில் அந்த விழாவின் மூலமாக அன்னிய மூலதனம் திரட்டப்படுவதாக தம்பட்டம் அடிக்கிறது. இதிலும் எவ்வுளவு பொய் புரட்டு என்பது புள்ளி விவரத்தை பார்த்தலே தெரியும். குஜராத் அரசின் சமூக பொருளாதார அறிக்கை 2011 வெளியிடும் புள்ளி விவரமே மிகவும் சுவாரசியத் தகவல்களை தருகிறது. 2011-ல் முதலீடு செய்யப்படும் தொகை என்று அறிவிக்கப்பட்டது 20 லட்சம் கோடி ருபாய். ஆனால் உண்மையில் முதலீடு செய்யப்பட்ட தொகை வெறும் ரூ.29,813 கோடி மட்டுமே. அந்த ஆண்டிலேயே கையெழுத்தான மொத்த 8,300 புரிதல் ஒப்பந்தங்களில் வெறும் 250 மட்டுமே அமலாகியது. குஜராத் வளரச்சி மாடல்  தொழிற்சாலை விரிவாக்கத்தின் மூலமாக மட்டுமே பொருளாதார வளர்ச்சி என்பதில் மட்டுமே குறியாக உள்ளது. இந்த அணுகுமுறை வெற்றிபெற வேண்டுமானால் அரசு தனியார் மூலதனத்தை பெறுவது அவசியமாகிறது. 2003 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வைப்பரண்ட் குஜராத் மாநாடுகளில் வாக்குறுதி அளிக்கப்பட்ட முதலீடும் உண்மையில் செய்யப்பட்ட முதலீட்டையும் பார்த்தாலே முதலீட்டாளர்கள் தங்களால் நிறைவேற்ற முடியும் முதலீடுகளை விட அதிகமாக வாக்குறுதி அளிப்பது தெரியும்.

வைப்பரண்ட் குஜராத் சம்மேளன் மூலம் திரட்டப்பட்ட நிதி (ரூ கோடியில்)

ஆண்டு

வாக்குறுதி

நிறைவேற்றப்பட்டது

2003

66068

37746

2005

106160

37939

2007

465309

107897

2009

1239562

104590

2011

2083049

29813

தனிநபர் வருமானம்:

குஜராத்தில் பொருளாதாரம் மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் அங்கு ஜி.டி.பி. வளர்ச்சி என்பது மிகவும் அதிகம் என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆகவே பொது மக்கள் அங்கு தனிநபர் வருமானம் மிகவும் என்று நினைக்கத் தூண்டப்படுகின்றனர். ஆனால் உண்மை இதற்கு மாறாக உள்ளது. தனிநபர் வருமானத்தில் குஜராத் முதல் 5 இடங்களில் கூட கிடையாது. டெல்லி தான் முதலிடத்தில் உள்ளது. இது மக்களின் உண்மையான வருமானத்தை கணக்கிட சரியான அளவில்லை என இடதுசாரிகளின் கருத்து முற்றிலும் உண்மை என்றாலும் முதலாளித்துவக் கணக்குப்படியே கூட குஜராத் கதை வேறாகத்தான் உள்ளது.

தனிநபர் வருமானம் 2010-11   (ரூபாயில் வருடத்திற்கு)

டெல்லி

108876

மகாராஷ்ட்ரா

62729

கோவா

102844

ஹரியானா

59221

சண்டிகர்

99487

அந்தமான்

54765

பாண்டி

79333

குஜராத்

52708

ஆதாரம்: திட்ட கமிஷன்
தொழிலாளர் ஊதியத்தில் நிலைமை:

தனிநபர் வருமானம் ஒரு புறம் இருந்தாலும் உண்மையில் அங்கு தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் ஊதியத்தை ஒரு அளவு கோளாக எடுத்துப் பார்த்தாலும் மிகவும் மோசமாக உள்ளது. குஜராத் முழுவதும் தொழிற்சாலைகளில் பெரும்பாலும் நிரந்தரமற்ற தினக் கூலிகளை வைத்தே தொழிற்சாலைகள் இயங்குகின்றன. அங்கு தொழிலாளர்கள் ஊதியம் பணி நிலைமைகள் போன்றவற்றிற்கு சங்கம் அமைத்து கோரிக்கை வைப்பது கிட்டதட்ட முடியாது என்பதே நிலைமை. அதற்கு முக்கிய காரணம் பணிகளில் பயன்படுத்தப்படும் தொழிலாளர்கள் வேறு மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள். தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான தொழிலாளர்கள் அங்கு ஆண்டுக் கணக்காக பதலிகளாக தொழிற்சாலைகளில் பணி புரிகின்றனர். இந்நிலையில் மிக அதிகமான ஜி.டி.பி. உள்ள மாநிலத்தில் தொழிலாளர்கள் கூலி மிகக் குறைவாகும். அது நகர்ப்புற தொழிலாளர்கள் கூலி நாட்டிலேயே கேரளாவில் தான் அதிகம்.

2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தேசீய மாதிரி சர்வேயின் புள்ளி விவரப்படி அங்கு நாளொன்றுக்கு கூலி ரூ.218/- குஜராத்திலோ நகரப்புறத்தில் ஒரு நாள் கூலி வெறும் ரூ.106/- தான். கிராமப்புறத்திலும் ஒரு நாள் கூலி இந்தியாவிலேயே அதிகம் பஞ்சாப்பில் தான். இங்கு ஒரு நாள் கூலி ரூ.152/- குஜராத் நாட்டில் 12 வது இடத்தில் உள்ளது அங்கு ஒரு நாள் கூலி (கிராமப்புறத்தில்) வெறும் ரூ.83/- ஆகும். மிக அதிக ஜி.டி.பி. மிகக் குறைந்த ஒரு நாள் ஊதியம் என்பது சுரண்டலின் அளவைக் காட்டுகிறது. வேலைவாய்ப்பு விகிதம்

தொழில்துறையில் மிகவும் அதிகமான வளர்ச்சி அடைந்தால் அதற்கேற்ப வேலை வாய்ப்புகள் பெருக வேண்டுமே. ஆனால் வேலை வாய்ப்பு விகிதம் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக எந்த வளர்ச்சியும் இன்றி குஜராத் இருந்து வருகிறது. கிராமப்புறத்தில் உள்ள வளர்ச்சி நிலங்களை விவசாயம் செய்யாமல் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்று விடுவதால் தற்போது நிதி இருந்தாலும் மேலும் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு இது இட்டு செல்கிறது. வாங்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இடங்களை தங்கள் வீட்டுப் பெண்களின் பெயரில் பதிவு செய்தால் பத்திரப் பதிவு கட்டணமும் கிடையாது. மோடியின் வர்க்க அரசியல் செயல்படும் விதம் இதுதான். குழந்தைகள் ஊட்டச்சத்து  மிக மோசமான மாநிலங்களில் ஒன்று

தொழிலாளர்களின் குறைவான ஊதியம் மற்றும் மிக மோசமான வாங்கும் திறன் ஆகியவற்றின் காரணமாக மால்நியுட்ரிஷன் என அழைக்கப்படும் ஊட்டச்சத்து குறைபாடு தொழிலாளர்களிடமும் அவர்தம் குழந்தைகளிடமும் ஏற்பட்டுள்ளது. புள்ளி விவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்திலிருந்து வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தின் அடிப்படையில் இந்தியாவில் குழந்தைகள் 2012 புள்ளவிவர மதிப்பீடு என்ற தலைப்பில் ஓர் அறிக்கை வெளிவந்துள்ளது.

  1. இந்த அறிக்கையின் படி குஜராத்தில் 40 முதல் 50 சதவீத குழந்தைகள் எடை குறைவாக உள்ளது என்று தெரிவிக்கிறது. இது ஒன்றே குஜராத் வளரச்சி என்ற மாயையை வெடித்து சிதற வைக்க போதுமானது. இவ்வாறான மிகக் குறைவான எடையுள்ள குழந்தைகள் மிக அதிகமாக உள்ள இதர மாநிலங்கள் மேகாலாயா, சட்டீஸ்கர், உ.பி. மற்றும் ஒடிசா. ஐ.நா.வின் மனித வளர்ச்சி அறிக்கை 2011 குஜராத்தில் கிட்டதட்ட பாதி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பீடிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கிறது. எடை குறைவான குழந்தைகள் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் எடை குறைவான குழந்தைகள் மிகமிகக் குறைவாக உள்ள மாநிலம் மேகாலயா.
  2. இங்கு 19.9 சதவீதம் குழந்தைகள் எடைகுறைவாக உள்ளது. 50 சதவீதம் மற்றும் அதற்கு மேல் எடைகுறைவாக உள்ள மாநிலங்கள்: ம.பி.(60), ஜார்க்கண்ட்(56) மற்றும் பீகார் (55.9)
  3. 40 சதவீதத்திற்கு மேல் 50 சதவீதத்திற்குள் உள்ள மாநிலங்கள்: குஜராத் மேகாலயா சட்டீஸ்கர உத்திர பிரதேசம் மற்றும் ஒடிசா. (இந்தியாவில் குழந்தைகள் 2012- ஒரு புள்ளிவிவர அளசல் -மத்திய புள்ளிவிவர மற்றும் திட்டமிடல் அமலாக்க அமைச்சகம்)

குழந்தை இறப்பு விகிதம்:

குழந்தை இறப்பு விகிதம் குஜராத்தில் மிகவும் அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் குழந்தை இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தும் விகிதத்தின் அடிப்படையிலான பட்டியலில் குஜராத் 11-வது இடத்தில் தான் உள்ளது. அதாவது 1,000 குழந்தைகள் பிறப்பிற்கு 44 குழந்தைகள் இறக்கின்றன. கிராமப்புறத்தில் மிகக் குறைவான மருத்துவ வசதிகள் உள்ள நிலையில் பட்டியல் இன மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் அடித்தட்டில் வைக்கப்பட்டிருப்பதனால் இவர்களின் குழந்தை இறப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது. 2012 ஆம் ஆண்டு யுனிசெஃப் நிறுவனம் மாநில வாரியாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதல் குஜராத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் இரண்டில் ஒன்று (ஐம்பது சதவீதம்) ஊட்ட சத்தின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. நான்கில் மூன்று குழந்தைகள் இரத்த சோகையால் பீடிக்கப்பட்டள்ளன.  குழந்தை மற்றும் தாய் இறப்பு விகிதம் கடந்த பத்தாண்டில் மிகவும் குறைவாகவே குறைந்துள்ளது… குஜராத்தில் மூன்றிலொரு தாய்மார்கள் மிக மிக குறைவான ஊட்டசத்துடன் தவித்துக் கொண்டிருக்கின்றனர் என்கிறது.

குழந்தை இறப்பு விகிதம் (ஆயிரம் குழந்தைப் பிறப்பிற்கு) 2010

மத்திய பிரதேசம்

62

மேகலயா

55

உத்திரபிரதேசம்

61

சட்டீஸ்கர்

51

அஸ்ஸாம்

58

பீகார்

48

ராஜஸ்தான்

55

ஆந்திரா

46

மகராஷ்ட்ரா

55

ஹரியானா

48

குஜராத்

44

ஆதாரம்: (இந்தியாவில் குழந்தைகள் 2012- ஒரு புள்ளிவிவர அளசல் – மத்திய புள்ளிவிவர மற்றும் திட்டமிடல் அமலாக்க அமைச்சகம்)

குழந்தைகள் கல்வி:

ஆர்.எஸ்.எஸ். தனது நாசகார மதவெறிப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தும் கேந்திரமான துறை கல்வித் துறையாகும். இருப்பினும் இங்கும் பாசிச மோடியின் கார்ப்பரேட் கலாச்சாரமே மேலோங்கி உள்ளது. உயர் கல்வியில் அன்னியப் பல்கலைக் கழகங்களோடு பங்குதாரர்களாக செயல்பட வேண்டும் என்று மோடி தனது அரசின் கல்விக் கொள்கையில் தெரிவித்துள்ளார். பள்ளியில் சேறும் குழந்தைகளை தொடர்ந்து தக்க வைக்கும்  நாடு தழுவிய பட்டியலில் குஜராத் 18 வது இடத்தில் உள்ளது. ஒரு குழந்தை சாராசரியாக பள்ளியில் செலவிடும் ஆண்டு குஜராத்தில் 8.79 (8-வது இடம்) கேரளா முதலிடம் 11.33 ஆண்டுகள். நமது நாட்டில் மிக அதிக கல்வி பெற்ற மாநிலங்களின் வரிசையில் குஜராத் 7 வது இடத்தில் உள்ளது. குஜராத்தில் கல்வியின் தரம் மிகவும் மோசமாக இருப்பதா யுனிசெப் நிறுவனம் தெரிவிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மோடி அரசு தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் செயல்திட்டத்தில் பயணிப்பதுதான்.

பள்ளிக் கல்வியில் தொடரும் ஆண்டுகள்

1

கேரளா

11.33

10

ஆந்திரா

9.66

2

ஹிமாச்சல் பிரதேசம்

11.05

11

பீகார்

9.58

3

தமிழ்நாடு

10.57

12

அஸ்ஸாம்

9.54

4

உத்தரகாண்ட்

10.23

13

சட்டீஸ்கர்

9.31

5

மகராஷ்ட்ரா

9.86

14

ராஜஸ்தான்

9.19

6

பஞ்சாப்

9.80

15

உத்திரபிரதேசம்

9.19

7

ஜார்கண்ட்

9.68

16

மத்திய பிரதேசம்

8.95

8

ஹரியானா

9.68

17

மே.வங்கம்

8.87

9

கர்னாடகா

9.75

18

குஜராத்

8.79

ஆதாரம் : யு.என்.டி.பி.

வறுமை ஒழிப்பில் ஒடிசாவைவிட பின்தங்கிய மாநிலம்

தேசீய மாதிரி கணக்கெடுப்பு 2004 முதல் 2010 ஆண்டு வரைக்கான காலக் கட்டத்தில் ஒடிசா மாநிலமே 20.2 சதவீதத்துடன் வறுமைக் குறைப்பு திட்டத்தில் முதலிடத்தில் உள்ளது. குஜராத்தோ 8.6 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. ஒடிசா மாநிலம் குஜராத் மாநிலத்துடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவான ஜி.டி.பி வளரச்சியைக் கொண்டுள்ள மாநிலமாகும். கரிப் கல்யாண் மேளா என்பன போன்று மோடியின் கடந்த ஆட்சிக் காலத்தின் இறுதியில்தான் மிகவும் அதிகமாக நடைபெற்றன என்றாலும் உண்மையில் வறுமை ஒழிப்பிற்கான கறாரான திட்டமிடல் ஏதுமில்லை.

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் எண்ணிக்கையில் 2004-க்கும் 2010-க்கும் இடையே வீழ்ச்சி (சதவீதத்தில்)

மாநிலம்

சதவீதம்

மாகாராஷ்ட்ரா

13.7

தமிழ்நாடு

12.3

கர்னாடகா

9.7

ராஜஸ்தான்

9.6

குஜராத்

8.6

ஆந்திரா

8.5

ஆதாரம்: தேசீய மாதிரி கணக்கெடுப்பு இருப்பிடம்

குடிநீர் மற்றும் சுகாதாரம்:

குஜராத்தில் இருப்பிடம் உணவு துணி ஆகியவற்றின் விலை கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் மிகவும் அதிகமாக உள்ளது. அத்தியாவசியப் தேவைகளுக்காக செலவுகள் நாட்டிலேயே குஜராத் 8 வது இடத்தில் உள்ளது. குஜராத்தின் கிராமப்புறத்தில் 16.7 வீடுகள் பொது குழாய்களையே பயன்படுத்துகின்றனர். தண்ணீர் வசதி இல்லாத கிராமம் மிக அதிகமாக உள்ளது. அதே போன்று கிராமப்புறத்தில் 67 சதவீதம் பேர்களும் நகர்ப்புறத்தில் 69 சதவீதம் பேர்களும் பொது இடங்களையே கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நீர் ஆதாரங்கள் மிகவும் மோசமான பாதிப்பிற்குள்ளாகின்றன.

மாசுக்கட்டுப்பாடு:

குஜராத்தில் ஒரு தொழில் செய்பவருக்கு அளிக்கப்படும் முழு சுதந்திரமே அவர் நிலம் நீர் காற்று என எதை வேண்டுமானாலும் தான் விரும்புகிறவரை மாசுபடுத்தலாம். எந்த கட்டுப்பாடும் கிடையாது (புத்தகத்தில் இருந்தாலும் மோடியின் மாநிலத்தில் அவை எள்ளவும் பயன்படுத்தப்பட மாட்டாது). சில ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தின் ஆலங் துறைமுகத்தில் பிரான்சு தேசத்தின் விமானந்தாங்கி கப்பல் கிளமன்சு உடைப்பதற்காக வந்ததே ஞாபகம் உள்ளதா? அதனை தடுத்த நிறுத்த சமூக ஆர்வலர்கள்தான் முயன்றார்களே தவிர, கடைசி வரை குஜராத் அரசு அந்தக் கப்பலை உடைப்பதற்கு அனுமதி அளித்திருந்தது. இறுதியில் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் அந்த கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது. பொதுவாக நிலம், நீர், காற்று ஆகியவை எந்தளவுக்கு மாசுபட்டுள்ளது என்பதை அளக்க சி.இ.பி.ஐ (Comprehensive Environmental Pollution Index) பயன்படுத்தப்படுகிறது. இதில் 70 புள்ளிகளுக்கு மேல் இருந்தால் அந்தப் பகுதி மனிதர்கள் வாழ்வதற்கு லாயக்கற்ற பகுதியாகும். இதன் அர்த்தம் அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள மாசுவை அந்த நிலம் தானாக சரிசெய்யும் அளவைத் தாண்டிவிட்டது என்பதாகும். மத்திய மாசு கட்டுபாட்டு வாரியத்தின் புள்ளி விவரத்தின் படி குஜராத்தின் அங்கிலேஷ்வர் மற்றும் வேப்பி பகுதிகள் நாட்டின் மிக அதிகமான மாசுபட்ட 88 நகரங்களில் முதலிடங்களில் உள்ளன. அங்கிலேஷ்வர் பெற்றுள்ள குறியீட்டெண் 88.50. வெப்பி 88.09 புள்ளிகள் பெற்றுள்ளன. முதல் 88 நகரங்களில் 8 நகரங்கள் குஜராத் மாநிலத்தில் உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் பகுதி நீண்ட காலமாக நிலக்கரி சுரங்கங்களால் மிகவும் மாசுபட்ட பகுதியாக அறியப்படும் பகுதியாகும். அந்தப் பகுதி 13 வது இடத்தில்தான் உள்ளது.

முடிவுரை:

மோடி முதல்வாரன பிறகு குஜராத்தில் நடைபெறும் சமூக அரசியல் மற்றும் பொருளாதார பரிசோதனைகள் இந்தியாவை ஒரு மதவாத பாசிச அரசிற்கான முன்னோட்டமாகும். இங்கு ஜெர்மனியின் ஹிட்லரைப் போன்று தொழில் வளர்ச்சி இருக்கும். ஜி.டி.பி. வளர்ச்சி இருக்கும் ஆனால் மனித வளர்ச்சி குறியீடு மிக மோசமாக இருக்கும். குஜராத்தின் மோசமான மனித வளர்ச்சிக் குறியீடுகளுக்கு அதன் சமூகப் பார்வையான மிக ஏழ்மையில் உள்ள தலித் பழங்குடியினர் மற்றும் இஸ்லாமிய சிறுபான்மையினர் ஆகியோர்களை உதாசீனப்படுத்தும் போக்கின் நேரடி விளைவாகும். அவர்கள் பயன்படுத்தும் பொது கல்வி, சுகாதாரம் மருத்துவம், வேலைவாய்ப்பு உரிமை, குறைந்தபட்ச ஊதியம் போன்றவற்றில் அரசு விலகிவருவதனால் ஏற்படும் ஏற்ற தாழ்வு நிலையே புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பிரன்ட்லைன் மார்ச் 8 2013 வந்த கட்டுரைகளை தழுவி எழுதியது.