தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்… அரசியல் போராட்டமே!!!

எஸ். கண்ணன்

நவதாராளமயம் சிறுபான்மை பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகவும், பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது. இந்தியாவில் இடதுசாரி கட்சிகள் தவிர்த்து, அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் மேற்படி நவதாராளமய கொள்கைகளை ஆதரிக்கின்றன. அதேநேரம் தொழிற்சங்கம் என்ற முறையில் செங்கொடி சங்கங்கள் மட்டுமல்லாமல், முதலாளித்துவ கட்சிகளின் தொழிற்சங்கங்களும், சீர்திருத்த தலைமை கொண்ட தொழிற்சங்கங்களும் கூட, நவதாராளமய பொருளாதார கொள்கைகளின் தாக்குதலை எதிர்த்த போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஏனென்றால், நவதாராளமய கொள்கை பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரத்தை, கண்ணியமான வாழ்க்கை மற்றும் வேலையை அழித்து நாசம் செய்து வருகிறது. இது மேற்குறிப்பிட்ட முதலாளித்துவ கட்சிகளின் தொழிற்சங்க இயக்கங்களுக்கு, எதிர்ப்பு இயக்கத்தில் பங்கெடுக்கும் நிர்ப்பந்தம் அளிக்கிறது. 

ஆர்.எஸ்.எஸ் சங்க பரிவாரங்களில் ஒன்றான பி.எம்.எஸ்-உம் இதேபோல், கடந்த காலங்களில் நவதாராளமய பொருளாதார கொள்கைகளை எதிர்த்த போராட்டங்களின் கூட்டு நடவடிக்கைகளில் பங்கெடுத்தது. 2014இ ல் பாஜக தலைமையில் ஒன்றிய அரசு அமைக்கப்பட்ட பின், 2015 செப்டம்பர் 2 அன்று நடந்த அகில இந்திய வேலை நிறுத்தமாகும். அதில் துவக்கத்தில் பங்கெடுத்த பி.எம்.எஸ்., ஆர்.எஸ்.எஸ் அல்லது, பாஜக தலைமையின் உத்தரவைத் தொடர்ந்து போராட்ட நடவடிக்கைகளில் இருந்தும், வேலைநிறுத்த நடவடிக்கைகளில் இருந்தும் விலகியது. அதன் பின் நடைபெற்றுவரும் வேலை நிறுத்தங்களிலும் பங்கெடுக்கவில்லை. இதேபோல் மேற்படி நவதாராளமயம் என்ற கொள்கையை எதிர்க்காமல், சங் பரிவாரத்தின் மற்றொரு அமைப்பான சுதேசி ஜாக்ரான் மஞ்ச், இடதுசாரிகளை விடவும் அதிதீவிரமாக அந்நிய பொருள்களை எதிர்த்த போராட்டங்களில் ஈடுபட்டது. அது தற்போது அமைதியாகயைக் இருப்பது, சுதேசி ஜாக்ரான் மஞ்ச் மற்றும் பாஜக சங் பரிவார் அமைப்புகளின் போலித்தனத்தை வெளிப்படுத்த கூடியதாகும்.

அரசின் பொருளாதார கொள்கையை எதிர்த்த போராட்டத்தில், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சொந்த அடையாளங்களை கடந்து, தொழிலாளி என்ற முறையில், தொழிலாளர்கள் பங்கேற்றனர். தொழிலாளர்களுக்கு ஆதரவாக விவசாயிகளும் போராடுவது என்ற முடிவை விவசாயிகளும் அமலாக்கினர். இது வர்க்க அரசியலாக பிரதிபலித்தது. வர்க்க ஒற்றுமை மேம்பட்ட இந்த பின்னணியில் தான், நவதாராளமயத்தின் கொள்கைகளை எதிர்த்த, பொது வேலை நிறுத்தம் அகில இந்திய அளவில் நடந்தது. 1992இ ல் நடந்த பொது வேலை நிறுத்தமும், அதைத் தொடர்ந்த சில பொது வேலை நிறுத்தங்களும் வெற்றிகரமாக நடந்தது. இதில் பல இடதுசாரி வெகுமக்கள் அமைப்புகளும் பங்கேற்றன. இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து முழுஅடைப்பாக மாறி, முதலாளித்துவ கட்சிகளுக்கு நெருக்கடியாக அமைந்தது என்றால் மிகை அல்ல. அரசியல் மாற்றாகவும், இடதுசாரி தொழிற்சங்கம் மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளின் மேற்படி கூட்டு நடவடிக்கைகள், நிர்பந்தத்தை உருவாக்கியது. இதன் தொடர்ச்சியாகவே, முதலாளித்துவ கட்சிகளின் தொழிற்சங்கங்களும் அகில இந்திய பொது வேலை நிறுத்தங்களில் பங்கெடுத்தன.

பொது வேலைநிறுத்தங்கள் என்ன சாதித்தன?

முதலாளித்துவ உற்பத்தி முறையில், சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களை, தொழிலாளி வர்க்கம் அந்தந்த வளர்ச்சிக்கு ஏற்ப நடத்தியுள்ளது. வேலை நேர குறைப்பு உள்ளிட்ட, பல உரிமைகளை வென்றிட உதவியது. 1838 – 1848 காலங்களில் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் தொழிலாளர் மீதான வேலை நேரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து போராட்டங்கள் நடந்தன. பிரிட்டிஷ் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வாக இது கருதப்படுகிறது. இந்த போராட்டங்கள், புரட்சிகர சக்திகளின் முன்னெடுப்பால் நடந்தது என அரசியல் ஆய்வாளர்கள் இன்றளவும் கூறுகின்றனர். இந்த வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்கள் தொழிலாளர்களின் வேலைநேரத்தை 10 மணி நேரமாக வரையறை செய்தது. 

வேலைநேரத்தை குறைக்கும் போராட்டம் தீவிரமாகும் போது, கூலி குறைக்கப்படுவதும் நடக்கிறது. அன்றைய ரஷ்யாவில் லெனின் இது குறித்து விவாதித்து உள்ளார். 1885 முதல் 1900 வரை மிக அதிகமான வேலை நிறுத்தங்களை தொழிலாளர்கள் நடத்தியுள்ளனர். ஜார் மன்னனின் ஆட்சியும், முதலாளித்துவ வளர்ச்சியும் தொழிலாளர் மீது நடத்திய தாக்குதல்களே இந்த வேலை நிறுத்தத்திற்கு காரணம், என கூறுகிறார். குறிப்பாக, முதலாளித்துவத்தின் மூலதனம் மேலும் மேலும் அதிகரிப்பது என்பது, தொழிலாளருக்கு கிடைக்க வேண்டிய நியாயமான கூலி அளிக்கப்படாததால் ஏற்படுகிறது. கூலியை குறைக்க முதலாளித்துவ அரசுகள், முதலாளிகளுக்கு ஆதரவான சட்டங்களை இயற்றுகின்றன. இந்த பின்னணியில் தொழிலாளர்களின் போராட்டங்களும், வேலை நிறுத்தங்களும், தனிப்பட்ட ஆலை முதலாளிகளுக்கு எதிரான ஒன்றாக மட்டும் இல்லாமல், முதலாளிகளைப் பாதுகாக்கும் அரசுக்கு எதிரான உணர்வாகவும் வளர்ச்சி பெறுகிறது. 

உணர்வு ரீதியிலான மேற்படி வளர்ச்சி, தொழிலாளர்களுக்கு, தனிப்பட்ட முதலாளிகளை கேள்வி கேட்கும் வலிமை, தனி ஒரு நபருரூக்கு இல்லை. அவ்வாறு கேட்டால். வேலையில் இருந்து வெளியேற்றப்படுவோம், என்ற நிலையில் தான் தொழிலாளி சங்கமாக ஒன்றிணைனைகிறார். அந்த ஒன்றிணைனைவு, தொழிற்சங்கங்களின் ஒற்றுமையாகவும், தொடர்ந்து வர்க்க ஒற்றுமையாகவும், வலுப்பெறுவதைக் காணமுடிகிறது. இந்த வர்க்க ஒற்றுமையே, பொது வேலை நிறுத்தங்களுக்கு அனைத்து தொழிலாளர்களையும், அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்துச் செல்கிறது. 

இந்தியாவில் நவதாராளமய பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக, தொழிற்சங்கங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள, இந்த ஒற்றுமை முக்கியமான ஒன்றாகும். தலைமை மட்டத்தில் உள்ள, இந்த கொள்கை சார்ந்த உணர்வு, தொழிலாளர் மட்டத்திலும் பிரதிபலிக்க செய்ய வேண்டியுள்ளது. அதை செய்வதே உண்மையான வர்க்க உணர்வாகவும், கொள்கை மாற்றத்தினை வலியுறுத்தும் உணர்வாகவும் வளர்ச்சி பெறும். 

கொரோரானா பெரும் தொற்றும் சுரண்டல் கொள்ளை அதிகரிப்பும்: 

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதார பாதிப்பு, கொரோரானா பொது முடக்கம் காராணமாக ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த பொது முடக்க காலத்திலும், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, மருந்து உற்பத்தி நிறுவனங்கள், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆகியோர் பொது மக்களுக்கு சேவை என்ற பெயரில் கொள்ளை லாபம் ஈட்டி உள்ளது. இதை ஆக்ஸ்ஃபேம் போன்ற அமைப்புகளே உறுதி செய்துள்ளன. அதாவது, அரசு தொழில் நுட்ப வசதிகளை பயன்படுத்தி, தடுப்பூசி உற்பத்தி செய்த 9 நிறுவனங்கள், ஒரு லட்சம் கோடிக்கும் மேல் சம்பாதித்துள்ளனர். இந்தியாவில் 142 பேர் பில்லியனர்கள் (ரூ7,500 கோடிக்கும் மேல் சொத்துடையவர்கள்) உருவாகியுள்ளனர். இவர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 53 லட்சம் கோடி. இது போல் உலக அளவிலும் நிலைமை உருவாகியுள்ளது. 

அன்று படைபலத்தில் வலிமை பெற்ற மன்னர்கள் உலகை ஆட்சி செய்ய முயற்சித்தது போல், இன்று பணபலத்தில் வலிமையானோர், உலகை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டோராக மாறியுள்ளதை பார்க்க முடிகிறது. ஏங்கெல்ஸ், “எங்கெல்லாம் பெருவீத கார்ப்பரேட் தொழில்கள் பட்டறை தொழில்களை இல்லாமல் செய்ததோ, அங்கு முதலாளி வர்க்கம் செல்வம் மற்றும் அதிகாரத்தின் காரணமாக உயர்ந்த நிலைக்கு வந்து, அரசியல் அதிகாரத்தை கையில் எடுத்து கொண்டுள்ளது”, எனக் கூறுகிறார். பெரும்பான்மை மக்கள், மேற்குறிப்பிட்ட சில நூறு பேரின் தயவில் வாழும் சூழலை உருவாக்குகின்றனர், எனவும் விளக்குகிறார். இப்போது இந்த உண்மை நிலையை நம் சமகாலத்தில் காண முடிகிறது.  

எனவே தான் கடந்த காலங்களை விட அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் நடைபெறுருவது உலகின் பல நாடுகளிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. அமெரிக்காவில் அமேசான், வால்மார்ட் போன்ற பெரும் நிறுவனங்கள் தொழிற்சங்கம் அமைத்தலை விரும்பவில்லை. நிர்வாகங்களுக்கு எதிரான போராட்டங்கள் கூடுதல் கவனத்தை ஈர்த்து, வலிமையாக நடைபெறுகின்றன. சங்கம் வைத்த தொழிலாளர்களை பழிவாங்குவது, வேலை நீக்கம் செய்வது போன்ற ஜனநாயக விரோத,  சட்ட விரோத செயல்கள் முன் எப்போதையும் விட அதிகளவில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்களால் அம்பலமாகின்றன. 

இந்தியாவை பொறுருத்த அளவில், தொழில் வளர்ச்சி என்ற பெயரில் உரிமைகளற்ற, நாகரீகமான வேலை வாய்ப்பை நாசம் செய்து, ஒப்பந்தம், பயிற்சி என்ற பெயரில் பெரும் கொள்ளையை கார்ப்பரேட்டுகள் அரங்கேற்ற, பாஜக ஆட்சி சட்டங்களை மாற்றி வருகிறது. பாஜகவின் செயல்கள் அனைத்தும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சிந்தாந்தத்தில் இருந்து வெளிப்படுவதாகும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டாவது தலைவர் மாதவ சிங் கோல்வாக்கர், எழுதிய பஞ்ச் ஆப் தாட்ஸ் எனும் நூல், அவர்களின் நோக்கத்தை தெளிவு படுத்துகிறது. இன்றைய நவதாராளமய கொள்கைகள் அமலாக்கத்தின் தீவிரம், அன்று எழுதப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியே ஆகும். அதாவது, ஒரு முதலாளி லாப நோக்கமில்லாமல் எப்படி செயல்படுவார்?. அதற்காக தொழிலாளி சுரண்டப்படுவது நியாயமே. தொழிலாளர் உரிமை என்ற பெயரில் பல, முழக்கங்கள் முன் வைப்பது, ஏற்க முடியாதது. சமூகத்தில் கடந்த கால மோதல்களை மறைக்கவே வர்க்கம் என்ற பெயரில் முழக்கங்கள் வைக்கப் படுகிறது, என எழுதப்பட்டுள்ளது. 

மேற்படி கோல்வாக்கர் எழுத்துகளுக்கும், இன்றைய பாஜக அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்குமான தொடர்பை நன்கறிய முடியும். உலகில் வளர்ச்சி பெற்ற நாடுகளில் கார்ப்பரேட் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையிலான மோதலாக வலுப்பெற்று வருகிறது. அங்கு உள்ள வலதுசாரி, இடதுசாரி கொள்கைகளுக்கு இடையிலான முரண் தீவிரம் பெற்று இருப்பதை காண முடிகிறது. பாஜக சமூக மோதலை தீவிரப் படுத்தி, கார்ப்பரேட் மூலதனத்திற்கு உதவி செய்கிறது. சமூக பதட்டத்தை தணினிக்கவும், மூலதன சுரண்டலுக்கு எதிராகவும், தொழிலாளர்களை சிந்திக்கவும், செயல்படுத்தவும் வேலைநிறுத்தம் என்ற ஒன்றுபட்ட உணர்வு மிக அவசிய தேவையாக உள்ளது. 

தொழிலாளர் – விவசாயி ஒற்றுமை:

கடந்த நவம்பர் 26, 2020 நடந்த 20 வது அகில இந்திய பொது வேலை நிறுத்தம் அன்று, விவசாய சங்கங்களும் தலைநகர் டில்லியை முற்றுகை இடுவது என முடிவெடுத்தது. அதன் படி டில்லிக்கு செல்லும் சாலைகள் முற்றுகை இடப்பட்டது. தொடர்ந்து நடந்த அரசின் தாக்குதல்களும், போராட்டக் காரர்களின் எதிர்வினையும், அவர்களுக்கு ஆதரவான தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டு போராட்டமும், மதசார்பற்ற ஜனநாயக இயக்கங்களின் தொடர் நிர்ப்பந்தம் காரணமாக, ஓராண்டு கழித்து மாபெரும் வெற்றியை பெற்றது. பாஜக தலைமையிலான மோடி அரசு, முதல் முறையாக வேளாண் சட்ட திருத்தங்களை திரும்ப பெறுவது என முடிவெடுத்தது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய மாநாட்டில் முன் மொழிய இருக்கும் அரசியல் தீர்மானத்தின் நகல், இது குறித்து விவாதிக்கிறது. நீடித்து நடந்த விவசாயிகள் போராட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. 2018ஆ ம் ஆண்டில் நடந்த தொழிலாளர், விவசாயி, விவசாயத் தொழிலாளர்களின் கூட்டு பேரணி டில்லியில் பெரும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியது, எனக் கூறுகிறது. கோவிட் பாதிப்பு காலத்தில், இந்திய மற்றும் சர்வதேச பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக பாஜகவின் சட்ட திருத்த நடவடிக்கைகள் கொதித்தெழும் போராட்டமாக விவசாயி மற்றும் தொழிலாளர்களிடம் உருவாக, மேற்படி கூட்டு அரசியல் நிர்ப்பந்தங்கள் அடித்தளம் அமைத்து கொடுத்தது. 

பொருளாதார கோரிக்கைகளுக்கான வேலைநிறுத்தங்களில் துவங்கி, பொருளாதார கொள்கைகளை எதிர்க்கும் போராட்டங்கள் அதிகரிப்பது, ஆளும் வர்க்க எதிர்ப்பு நடவடிக்கையே ஆகும். இது ஒரு அரசியல் போராட்டமே ஆகும். எனவே தான், மார்க்சிஸ்ட் கட்சி அதன் அறிக்கைகளில் இது போராட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், இப்போராட்டங்களின் வெற்றிக்கு களத்தில் அளப்பரிய பணிகளைச் செய்கிறது. ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் இயக்க வளர்ச்சிக்கும், பின் புரட்சியின் வெற்றிக்கும் அரசியல் வேலைநிறுத்தங்கள் பங்களிப்பு செய்த விவரங்களை, லெனின் எழுதிய வேலைநிறுத்தங்கள் பற்றி என்ற கட்டுரை குறிப்பிடுகிறது. 

மார்க்சிஸ்ட் கட்சியின் 23 வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் நகல் தீர்மானம், “பெரும் பணக்காரர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், சிறு, குறு உற்பத்தியாளர்களுக்குமான முரண்பாடு வலுப்பெற்றுள்ளது. பணக்கார விவசாயிகள் உள்ளிட்டு, பாஜக ஆட்சியின் நவதாராளமய ஆதரவு சட்ட திருத்தங்களை எதிர்த்த, விவசாயிகளின் ஆதரவு போராட்டத்தை ஆதரிக்கும் நிலை உருவானது” எனக் கூறுகிறது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மேற்படி சட்டத் திருத்தங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றிணைனைந்து ஈடுபட்டது, பெரும் வர்க்க ஒற்றுமைக்கான வாய்ப்புகளின் வெளிப்பாடாகும்.

பேராசிரியர் பிரபாத் பட்நாயக் விவசாயிகளின் போராட்டம், தொழிலாளர் ஆதரவு நடவடிக்கைகளை மட்டும் உருவாக்கவில்லை. கூடவே, சமூக நல்லிணக்க வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்தது, எனக் கூறுகிறார். குறிப்பாக சிறு, குறு நில உடமை வர்க்கமாக உள்ள சாதியினருக்கும், உடமையற்ற ஒடுக்கப்பட்ட சாதியினராக உள்ள தொழிலாளர்களுக்கும் இடையில்  உருவான போராட்ட ஒற்றுமை, வர்க்க அரசியலுக்கான அடிப்படை, என அவர் எழுதியுள்ளது, முக்கியமான படிப்பினை ஆகும். 

இந்தியாவை பொறுருத்த அளவில், ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக 1982 ஜனவரி 19 இல் முதல் அகில இந்திய வேலை நிறுத்தத்தை இடதுசாரி தொழிற்சங்கங்களும்ள் மற்றும் தொழில்வாரி சம்மேளனங்களும் இணைந்து அறைகூவல் விடுத்தன. அன்றைய வேலை நிறுத்தம் மிக சிறப்பாக நடந்தது. அன்றும் விவசாயிகள் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை ஆதரித்து, சாலை மறியல் உள்ளிட்ட நடவவ்டிக்கைகளில் இறங்கினர். ஒன்று பட்ட தஞ்சை மாவட்டத்தின் ஆப்பூர் மற்றும் மன்னார்குடி ஆகிய இடங்களில் நடந்த துப்பாக்கி சூடு காரணமாக விவசாய சங்கத்தின் தோழர்கள், நாகூரான், அஞ்சான், ஞானசேகரன் ஆகியோர் படுகொலையானார்கள். நாடு முழுவதும் 10 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலியானார்கள்.  அந்த நிகழ்வு நடந்து 40 ஆண்டுகள் முடிந்துள்ளது. தொழிலாளர் விவசாயிகள் ஒற்றுமை முன்னை விட அதிகமாக தேவைப் படும் காலமாக உள்ளது. 

இப்போது, இந்தியாவில் தேசிய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக 21வது பொது வேலை நிறுத்தத்திற்கு அறை கூவல் விடுத்துள்ளன. தொழிலாளர்கள் தங்களின் தனிப்பட்ட கூலி உயர்வு, வேறு பிரச்சனைகளுக்காக, தனி சங்கமாக நடத்திய போராட்டங்களில் இருந்து மாறுபட்டதாக பொது வேலை நிறுத்தம் உள்ளது. பொது கோரிக்கைகள் ஏற்கனவே கூறியபடி, அரசியல் கொள்கைகளுக்கு எதிரானது. இதை ஓரளவு அறிந்து தான் வேலை நிறுத்தங்களில் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக அரசியல் உணர்வு மேம்படுகிறது, என்ற லெனினின் அனுபவம் உண்மையாகிறது. அன்றைய ரஷ்யாவில் ஒரு அரசியல் முழக்கத்துடன் வேலை நிறுத்தங்கள் நடந்தது. ஆனால் இந்தியாவின் சூழலில் பல அரசியல் அமைப்புகளின், தொழிற்சங்க தலைவர்களும், இந்த வேலை நிறுத்தத்தை ஆதரிக்கின்றனர், என்பது மாறுபட்ட அனுபவம் ஆகும். தொழிற்சங்கங்களின் இந்த ஒற்றுமை, வர்க்க ஒற்றுமையாக மாறுவதற்கான பங்களிப்பே, கொள்கை மாற்றத்திற்கான வேலை நிறுத்தமாக மாறும். அதை நோக்கி பயணிப்பதே கம்யூனிஸ்டுகளின் பணியாகும். 

கருத்தியல் களமும், அரசியல் அதிகாரமும்

(தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய பயிற்சிமுகாமில் ஆற்றிய உரையின் வரிவடிவம். நன்றி: அணையா வெண்மணி)

என்.குணசேகரன்

கருத்தியல் களமும் அரசியல் அதிகாரமும் என்கிற இந்தத் தலைப்பு மிக முக்கியமான தலைப்பு. இது நாம் ஆற்றவேண்டிய மிக முக்கியமான பணிகளை நினைவூட்டுவதாக கருதுகிறேன். கருத்தியல் களத்திற்கும் அரசியல் அதிகாரத்திற்கும் ஒரு இணைப்பு உள்ளது என்பதை சொல்லுவதே ஒரு முக்கியமான விஷயம் என்பது மட்டுமல்ல காலம் காலமாக மறைத்துவைக்கப்பட்டிருக்கிற அல்லது மறக்கப்பட்டிருக்கிற செய்தியை இந்தத் தலைப்பு தெரியப்படுத்துகிறது.

சிறிய கூட்டத்தின் ஆட்சி

அரசியல் அதிகாரம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக சமூகத்தின் ஒரு மேல்தட்டு, ஒரு சிறு கூட்டத்துக்குத்தான் சொந்தமாக இருந்திருக்கிறது. அதிகாரம், ஆட்சி, நிர்வாகம் என்கிற இவையெல்லாம் செழுமைப்படுத்தப்பட்டிருக்கிற ஒரு மேம்பட்ட வடிவத்தை பெற்றுள்ள இப்போதைய சமூகம் முதற்கொண்டு, இதற்கு முந்தைய காலங்களிலே மன்னர்களுடைய அரசாட்சி என்கிற முறையில் முடியாட்சி நடைபெற்ற காலம் வரைக்கும், ஆட்சி அதிகாரம் என்பது பெரும்பான்மையான மக்களை ஆள்கிற இடத்தில் ஒரு சிறு கூட்டம் தான் இருந்துவந்திருக்கிறது. உடமை வர்க்கங்கள் என்று சொல்லப்படுகிற ஒரு சிறு கூட்டம் தான் ஆளுகிற இடத்தில் இருந்திருக்கிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள் நிலவுடைமைச் சக்திகளாக இருந்திருக்கலாம். அதற்கு முன், சாதியக் கட்டமைப்பு இந்திய சமூகத்தில் வேறூன்றத் தொடங்கிய காலத்தில், கிட்டத்தட்ட அடிமைகள் எஜமானர்கள் என்று இருந்த காலத்திலேயே கூட நிர்வாகம் என ஒரு அமைப்பு இருந்திருக்கிறது. ஓரளவுக்கு அரசு என்ற வடிவம் தோன்றியிருக்கிறது. அப்படிப்பட்ட காலத்திலும் ஒரு சிறு கூட்டம்தான் பெரும்பான்மையினரை அடிமைப்படுத்தியிருந்தது.

ஆனால், சாதாரண மக்களுக்கு இது வெளிப்படையாக தெரியவில்லை. உலகில் கிட்டத்தட்ட 800 கோடி மக்கள் வாழ்கிறார்கள், இதில் 99 % உழைக்கும் மக்கள் ஆவர். இந்த மக்களின் உழைப்பைச் சுரண்டி வாழ்ந்து கொண்டிருக்கிற கூட்டம், ஒப்பீட்டளவில் மிக மிகச் சிரியது. அமெரிக்காவில் வால்ஸ்டீரீட்டைக் கைப்பற்றுவோம் என்ற ஒரு இயக்கம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. நாங்கள் 99 சதவீதம், நீங்கள் 1 சதவீதம் என்று அவர்கள் முன்வைத்த முழக்கத்திலேயே ஒரு செய்தியை முன்வைத்தார்கள். 1% என்பதுதான் ஆளுகின்ற கூட்டம்.

இப்படி காலம் காலமாக ஒரு சிறு கூட்டம் தான் பெரும்பான்மையை அடக்கி ஒடுக்கி வந்திருக்கிறது.

அதிகாரம் செலுத்தும் வழிமுறை

இந்திய நாட்டை எடுத்துக்கொண்டால், மக்கள் தொகை 130 கோடி. இதில் ஒரு சிறு கூட்டம், ஒரு 250 கம்பெனிகள் இருக்கலாம் (அதில் 10 லிருந்து 12 கம்பெனிகள் அதானி அம்பானி போன்ற பெரும் கார்ப்ரேட் கம்பெனிகள்) இப்படிப்பட்ட ஒரு சிறு கூட்டம், மிகப் பெரும்பான்மையை அடக்கி ஆள்கிறது, நினைத்தை சாதிக்கிறது. கொரோனா பெருந்தொற்றின் காலத்திலும் சாதித்துக்கொண்டிருக்கிறது. அது எப்படி நடக்கிறது?

காலம்காலமாக இது எப்படி சாத்தியமாகிறது என்றால், அடக்குமுறைக்கான, வெகுமக்களை அடக்கி ஆள்வதற்கான இரண்டு கருவிகள் அவர்களுக்கு பயன்பட்டு வந்திருக்கிறது. ஒன்று, நேரடிடையாக அடக்குமுறையை ஏவிவிடக்கூடிய கருவிகள் அவர்களிடம் உள்ளன. ஒரு வலுவான காவல்துறை, ஒரு வலுவான இராணுவம் உள்ளது.  

மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைந்துகொண்டேயிருக்கிறது. அதே நேரத்தில், அடக்குமுறைக் கருவிகளைப் பலப்படுத்துவதற்கான நிதி உள்ளிட்ட எல்லாவிதமான ஏற்பாடுகளையும் அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். இது இந்திய நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கிற விஷயம்.

உழைக்கும் மக்கள் மீது, இராணுவத்தை ஏவிவிட்டு படுகொலை செய்வது காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. 1940களில் தெலுங்கானாவில் விவாசிகள் தங்கள் நிலத்துக்காக செங்கொடி ஏந்திப் போராடியபோது, அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக இந்திய இராணுவம், (அப்போது தான் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்திருந்தது) பயன்படுத்தப்பட்டது. மக்களை அழித்தொழித்தது. பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள். எனவே அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை இராணுவம் காவல்துறை உள்ளிட்டவை உழைக்கும் மக்களின் போராட்டங்களை நேரிடையாக ஒடுக்குவதற்கும் தாக்குவதற்கும் இருந்துகொண்டிருக்கிறது. சிறைகூட அதற்காகத்தான் இருந்துகொண்டிருக்கிறது.

ஆனால் இதைவிட பலமான அடக்குமுறைக் கருவி அவர்களிடம் இருக்கிறது. அதன் வழியாக உழைக்கும் மக்களுடைய ஆதரவான கருத்தைப் பெற்றே அவர்களை அடக்கிஒடுக்குகிறார்கள்.

கருத்தியல் எனும் தளம்

கருத்தியல் தளத்தில், ஆளும் வர்க்கங்களுக்கு, ஆள்வதற்கான ஒப்புதலை உருவாக்குகிறார்கள். மன்னர் தெய்வத்தின் அடையாளம் (இங்கிலாந்தில் ஒருகாலத்தில் இந்தக் கருத்து வலுவாக இருந்தது) அதாவது மன்னருக்கும் தெய்வத்துக்கும் வித்தியாசம் இல்லை என்கிற கருத்து. எனவே, தன்னை அடக்கி ஒடுக்குபவரை மன்னருக்கு சமமாக வைத்துப் பார்க்கிற அந்தக் கருத்து, அது மதத்தின் பெயரால் பதியவைக்கப்பட்டது. இந்தியாவைப் பொருத்தவரை கருத்தியல் என்கிற கோட்டையை ஆளும் வர்க்கம் பலமாகக் கட்டுவதற்கு, ஒரு அடித்தளமாக சாதியக் கட்டமைப்பு என்பது பயன்பட்டிருக்கிறது, பயன்பட்டுவருகிறது.

அதாவது கருத்தியல் தளம் என்பது அடக்கி ஒடுக்கப்படுகிற மக்கள் தன்னை அடக்கி ஒடுக்குகிற கூட்டத்துக்கு எதிராகத் திரும்பிடாமல் பார்த்துக்கொள்கிறது. அவர்கள் எல்லாவிதமான உழைப்பையும் சுரண்டி ஊதியத்தைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள், உழைப்புக்கான ஊதியம் கிடைப்பதில்லை. ஆனாலும் அவர்களுக்கு எதிராக உழைக்கும் மக்கள் திரும்பிடாமல் இருப்பதற்கு எதிர்ப்புக் களத்துக்கு போகாமல் இருப்பதற்கு கருத்தியல் தளம் பயன்படுத்தப்படுகிறது.  

அது கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் நடக்கிறது. இவையெல்லாம் நேரடியாகத் தெரியக்கூடியவை. இன்னொரு பக்கம் அது கல்வியின் பெயரால் நடக்கிறது. ஊருக்கு ஊர் இருக்கக்கூடிய பேச்சு வழக்குகளின் ஊடாக அது நடக்கிறது. இந்த ஆளும் வர்க்கத்துக்கும் அதனால் ஆளப்படுகிற, சுரண்டப்படுகிற வர்க்கத்துக்குமான முரண்பாட்டை, வேறுபாடுகளை மட்டுப்படுத்துவதற்கு, அது வெடித்திடாமல் தடுப்பதற்கு இந்தக் கருத்தியல் களம் ஆளும் வர்க்கத்துக்கு பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தக் கருத்தியல் களமும் அரசியல் அதிகாரமும் பிணைந்த ஒன்று.

கருத்தியல் களத்தில் நாம் செயல்படுகிற போது தீண்டாமை ஒழிப்பு முன்னணி இப்படிப்பட்ட பணியைத் துவங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சிகரமான ஒன்று. இப்போதுதான் ஏதோ கருத்தியல் களத்தில் பணியாற்றுவதாக நான் நினைக்கவில்லை. நீண்டகாலமாக அந்தப் பணி நடந்துகொண்டிருக்கிறது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையிடுகிற எல்லா இடங்களிலேயும் செயல்கள் மூலமாக, தலையீடுகள் மூலமாக அந்தக் குறிப்பிட்ட கிராமத்துக்கு அந்தக் குறிப்பிட்ட பகுதிக்கு ஒரு செய்தியை, ஒரு கருத்தைப் பதியவைக்கிற வேலையும் கூடவே நடந்துகொண்டிருக்கிறது. ஒரு தீண்டாமைக் கொடுமைக்கு எதிர்த்து  வினையாற்றும்போதே கருத்தியல் தளத்திலும் அது வினையாற்றுகிறது. தீண்டாமை ஒழிப்பு என்கிறபோது சாதி ஒழிப்பு என்கிற கருத்தும் பதிகிறது. சாதி ஒழிப்பு என்றால் சாதிக் கட்டமைப்புக்கான எதிர்ப்புக் குரலாக ஆகும். இவ்வாறு அது சமூக சமத்துவம் என்கிற கருத்தியலுக்கான தளத்தினை உருவாக்குகிறது.

சுரண்டலுக்கான கருத்தியல்

இன்று கருத்தியல் களத்தை தன்கைவசம் வைத்துக்கொண்டு ஆளுகிற வர்க்கம், தன்னுடைய அதிகாரத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது. பெருமபான்மையான மக்கள் மீது தன்னுடைய அதிகாரத்தை அடக்குமுறைக் கருவிகளைவைத்து மட்டுமல்ல, கருத்தியல் என்ற களத்தையும் வைத்துக்கொண்டு அடக்குமுறையையும் சுரண்டலையும் அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை செயல்பாட்டாளர்களாகிய நாம் உணரவேண்டியிருக்கிறது. எனவே, கருத்தியல் களம் என்பது மிக முக்கியமானது. இது ஒரு பொதுவான அறிவியல் கோட்பாடு என்றே நாம் சொல்லமுடியும். யார் இதைக் கையில் எடுக்கிறார்களோ, யார் இதை சரியாகப் பயன்படுத்துகிறார்களோ அவர்கள் அதில் முன்னேற்றம் காண்கிறார்கள். அந்த வகையில் கடந்த காலங்களில் இதற்கு பல உதாரணங்களைப் பார்க்கலாம்.

உலக முதலாளித்துவம் ஏற்கனவே இதை உணர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் 1970களிலேயே இதை உணர்ந்திருக்கிறது. அதனால்தான் அவர்கள் தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் போன்றிருக்கக்கூடிய ஊடகங்கள் அத்தனையும் கொண்டு, எந்தச் செய்தியை மக்களிடத்தில் கொண்டு செல்லவேண்டும், எப்படிக் கொண்டு செல்லவேண்டும் என்று வரையறுத்திருக்கிறார்கள். சோவியத் யூனியன் பற்றிய பொய்களை, உண்மை போன்று சொல்லி, சோசலிசமும் கம்யூனிசமும் மோசமானது என்கிற செய்தியை அவர்கள் கொடுப்பது என்கிற முறையில் 1970களிலேயே பக்குவப்பட்டு வந்திருக்கிறார்கள்.

அதே போன்று சின்னங்களைப் பயன்படுத்துவது. சின்னங்களைப் பயன்படுத்துவது என்றால், இந்தியாவிலேயும் தமிழ்நாட்டிலேயும் அதற்கு நிபுணர்கள் பலர் இருக்கிறார்கள். மோடி பெரிய நிபுணர். அவர் அவருடைய படங்களை எல்லா இடத்திலும் வைத்திருப்பது போன்றவை இதில் அடங்கும். இதெல்லாம் ஹிட்லர் காலத்திலேயே நடந்திருக்கிறது.   கருத்தியல் தளத்தில் ‘அவர் ஒரு பிரம்மாண்டமான மனிதர்’, ‘சரித்திரத்தை மாற்ற வந்த மகா புருஷர்’ என்கிற முறையில் சாதாரண மக்கள் மத்தியில் பதியவைப்பது. இப்படிச் சின்னங்கள் மூலமாக தங்களுடைய மேலாதிக்கத்தை பதியவைப்பது என்கிற முறையிலும் ஆளுகிற வர்க்கம் கருத்தியல் மேலாதிக்கத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு சமூக ஊடகங்கள் போன்றவை அதற்கு பயன்படுகின்றன.

பாரதிய ஜனதா கட்சியும் ஆர்எஸ்எஸ்சும் பிரம்மாண்டமாக ஐ.டி., செல் (தகவல் தொழில்நுட்பம் பிரிவு) வைத்துக்கொண்டு செய்யும் வேலைகளைஎல்லாம் நாம் அறிவோம். முதலாளித்துவமும் உலக ஏகாதிபத்தியமும் இதை செய்துகொண்டிருக்கிறது. கருத்தியல் களம் என்பது அவர்கள் மேலாதிக்கம் செய்து கொண்டிருக்கிற ஒரு முக்கயமான தளமாக இருந்துகொண்டிருக்கிறது.

மேலாண்மையும், மேலாதிக்கமும்

இப்போது நம்முடைய நோக்கம் என்பது காலம் காலமாக இருந்துகொண்டிருக்கிற பிற்போக்குக் கருத்தியலுக்கு மாறாக முற்போக்குக் கருத்தியலைக் கொண்டு செல்வது என்பதுதான். முற்போக்குக் கருத்தியலைக் கொண்டு செல்வது என்பதற்கு பதில் நான் ஒரு சின்ன மாற்றத்தை, (உண்மையில் அது பெரிய மாற்றம்) சொல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. முற்போக்குக் கருத்தியல் மேலாண்மை செலுத்துகிற ஒரு நிலையை உருவாக்க வேண்டும்.  நீங்கள் கொஞ்சம் சரியாகக் கவனித்தீர்கள் என்று சொன்னால், ஆளுகிற வர்க்கம் கருத்தியல் தளத்தில் செலுத்துகிற அந்த அடக்குமுறையை நான் மேலாதிக்கம் என்று சொல்கிறேன். அவர்கள் மேலாதிக்கம் செலுத்துகிறார்கள். தவறான விஷயங்களுக்கு மக்களை ஆட்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மக்களை தவறான, மிகப் பொய்யான, கட்டுக் கதைகளை நம்ப வைக்கிறார்கள். இந்தக் கட்டுக் கதைகள் பொய்கள் எல்லாமே அவர்கள் கருத்தியல் தளத்தில், மேலாதிக்கம் செய்ய உதவுகிற மிக முக்கியமான விஷயங்கள். எனவே, ஆளுகிற வர்க்கம், ஒரு சிறு கூட்டம், பெருங்கூட்டத்தை தங்களுடைய கருத்துக்கு, தங்களுடைய கொள்கைக்கு தங்களுடைய அடக்குமுறைக்கு ஆதரவாக அவர்களுடைய சம்மதத்தைப் பெறுவதற்கும் அவர்களைத் தங்களுடைய கொள்கைக்குக் கொண்டுவருவதற்கும் செய்வது மேலாதிக்கம். அவர்கள் செய்வது கருத்தியல் மேலாதிக்கம். சிறு கூட்டம் கருத்தியல் தளத்தில் பெரும்பான்மை மக்களை தன்வயப்படுத்துகிறது என்று சொன்னால் அது மேலாதிக்கம்.

காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கிற பெரும்பான்மை மக்களுக்காக, சுரண்டப்பட்டிருக்கிற பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்காக கருத்தியல் தளத்தில், முற்போக்குக் கருத்தியலைக் கொண்டு சென்று, அதில் மேலாண்மை செலுத்தவேண்டும் என்பதுதான் இன்றைக்கு நம் முன்னர் இருக்கக்கூடிய பணி. உழைக்கும் மக்களின் தரப்பு பெரும்பான்மை என்கிற காரணத்தால் அதை மேலாண்மை என்று சொல்கிறோம். இது சரியான காரணத்துக்காக, சரியான லட்சியத்துக்காக, மனித விடுதலைக்கான மேலாண்மை.

3 தளங்களில் போராட்டம்

இந்த வகையில் நம்முடைய பணி என்பது சாதியம், மதவாதம் இதையெல்லாம் எதிர்க்கிற எதிர்ப்புப் பணி மட்டும் அல்ல. அதே நேரத்தில் இது எதிர்மறை நிகழ்ச்சி நிரல் அல்ல, இது நேர்மறையான நிகழ்ச்சி நிரல்.

மூன்று தளங்களில் இதை செய்யவேண்டும் என்று நான் கருதுகிறேன். ஒன்று, இந்த சாதியம் என்கிற ஒரு மிக முக்கியமான பிற்போக்குக் கருத்தியல் தளம், அதில் செயலாற்றவேண்டிய அவசியம் இருக்கிறது. அதை முறியடிக்க வேண்டிய அவசியம இருக்கிறது. அதேபோன்று மதவாதம். வகுப்புவாதம் என்றும் மதவெறி என்றும் வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிப்பொருள் இருக்கிறது என்று சொன்னாலும் கூட, இன்றைக்கு நாம் விவாதிக்கிற சூழலில், மதவாதம் என்றே வைத்துக்கொள்ளலாம். அந்த மதவாத அல்லது வகுப்புவாதக் கருத்தியல் முறியடிக்க வேண்டிய ஒரு இடத்தில் இருக்கிறது. 

மூன்றாவது, நவீன தாராளமய கருத்தியல். இந்த நவீன தாராளமயம் என்று சொல்லும்போது உடனடியாக நம்முடைய மனத்திரைக்கு முன் வருவது என்பது பொருளாதாரம் பற்றியது. நிச்சயமாக நவீன தாராளமயம் என்பது பொருளாதாரத்தோடு இணைந்தது தான். உயிர் காக்கும் மருந்து என்கிற விஷயத்தில் கூட, லாபம், மூலதனக்குவியல் என்பதற்காக அது எந்த வகையில் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்கிற கொள்கைகள் அடங்கியிருக்கிற ஒரு விஷயம்தான் நவீன தாராளமயம் என்பது.

நவீன தாராளமய கருத்தியல்

அதே சமயம் நவீன தாராளமயம் ஒரு கருத்தியலோடு தான் வந்தது. தனியார் மயம் என்ற கருத்து மக்கள் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒரு விஷயமாக இருந்த நிலை இருந்தது. குறிப்பாக 1960களில் 70 வரைக்கும் கூட தனியாரிடம் ஒப்படைத்தால் அவர்கள் லாபம் பார்ப்பார்கள், மக்களைப் பார்க்கமாட்டார்கள் என்கிற நிலை இருந்தது. அதனால் தான் தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் அதிகமான அளவுக்கு பொது முதலீட்டில் சுகாதார நிலையங்கள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. போக்குவரத்து உட்பட எல்லாமே அரசுத் துறையில் செயல்படுகிற ஒரு நிலை என்பது இருந்தது. இது இந்தியா முழுக்க இருந்தது. இதற்கு பல காரணங்கள் உண்டு.

1950 காலகட்டத்தில் சோவியத் யூனியனில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அங்கே ஏற்பட்டிருக்கிறக்கூடிய வளர்ச்சி, அது பொதுத் துறை மூலமாக ஏற்பட்டிருக்கிற ஒரு வளர்ச்சி இங்கே சாத்தியம் என்ற நிலையை உருவாக்கியது. அதனுடைய விளைவாகவும் இந்தக் கருத்து என்பது மக்கள் மத்தியில் நிலவியது. ஆனாலும் ஆளுகிற வர்க்கம் தனியார் துறையை விட்டுவிடவில்லை. அதை வளர்ப்பதற்கான முயற்சிகளை திரைமறைவிலும் சிலநேரங்களில் வெளிப்படையாக வெகுவேகமாக செய்து கொண்டிருந்தார்கள். அதே சமயம், இந்த நேரத்தில் தான் பொதுத் துறையையும் கட்டமைக்கிற வேலை நடந்தது. நவீன தாராளமயம் வருகிறபோது அரசுத் தரப்பிலிருந்தே ஒரு கருத்தை அவர்கள் பதியவைத்துக்கொண்டேயிருந்தார்கள். பொதுத்துறையிடம் இருந்தால் என்றால் அங்கே ஒரு மெத்தனப்போக்கு இருக்கும், நிர்வாகத் திறன் இருக்காது, ஊழல் நிறைந்திருக்கும் என்பதை எல்லாம் சொல்லி பொதுத் துறை என்பது சரியல்ல, தனியார் துறை தான் வெகுவேகமாக செயல்படுவார்கள் என்ற ஒரு கருத்து தொடர்ந்து பதியவைக்கப்பட்டது.

இவ்வாறு கருத்தியல் தளத்தில் செயல்பட்டுக்கொண்டேதான் பொருளாதாரத் தளத்தில் நகர்ந்தார்கள். அதே போல தனிமனித உணர்வில் நவீன தாராளமயம் ஒரு கருத்தை முன்வைத்தது. அதாவது விடுதலைப்போராட்டக் காலத்தில், இளைஞர்களுக்கு சமுதாயத்துக்காக ஏதாவது செய்யவேண்டும் என்கிற சமூக அக்கறை இருந்தது. அது விடுதலைக்கு பிறகும் தொடர்ந்தது. ஒரு மனிதன் என்று பிறந்தால், சமூகத்துக்கு என்ன செய்தான் என்பதுதான் முக்கியமானது. எனவே, தன்னுடைய நலத்தைத் தாண்டி பொதுநலத்தைப் பார்க்கிற அந்த மனப்பாங்கு இருந்தது. 

தனியார்மயம் வரவேண்டும், தனியார் கொள்ளையடிக்க வேண்டும் என்றால், தனியாருக்கு ஒரு மதிப்பு ஏற்படுத்தவேண்டும் என்றால், மேற்சொன்ன தனிமனித உணர்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நீ பணக்காரனாக வேண்டும், நீ மேலும் மேலும் பணம் சேர்க்க வேண்டும், நீ கோடிஸ்வரனாக மாறவேண்டும். அது உன்னுடைய திறமை. நீ திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும், அதற்கேற்ற தொழில்நுட்பம், அதற்கேற்ற படிப்பு, அதற்கேற்ற முயற்சி, விடாமுயற்சி, பில்கேட்சைப் பார், அவரைப் பார், இவரைப் பார் என்று அது பற்றிய நூல்கள் என்ற முறையில் ஒரு தனிமனித சுயநலத்தை வலுப்படுத்துகிற கருத்தியல் என்பது பதியப்பட்டது. அந்தக் கருத்தியலைப் பதியவைத்துத் தான் ஆளும் வர்க்கம் நவீன தாராளமயத்தை கொண்டுபோனார்கள்.

முதலாளித்துவமும் சாதியும்

இந்த நவீன தாராளமயம் பல தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஆணாதிக்க கருத்தியலை அது வலுப்படுத்தியிருக்கிறது.  ஆதிக்கக் கருத்தியலை மேலும் கிளர்ந்து எழச் செய்ததில் முக்கிய காரணியாக நவீன தாராளமயக் கொள்கைகள் இருந்தன. பிற்போக்கான கருத்தியல் என்பதில் ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகிறது சாதியக் கருத்தியலும் மதவாதக் கருத்தியலும் அதே போல நவீன தாராளமயக் கருத்தியல். இதற்குள் எல்லா விஷயங்களையும் அடக்கிவிடலாம். பெண்ணடிமைத்தனம் இதற்குள்ளேயே வருகிறது. சாதியம் என்று சொல்லுகிறபோது, சாதியம் என்கிற சித்தாந்தம் என்பது பெண்ணடிமைத்தனத்தை உள்ளடக்கியதுதான். முதலாளித்துவ சமூக அமைப்பில்கூட சாதியம் தன்னை புதுவடிவம் எடுத்து நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.

முதலாளித்துவமும் நிலப்பிரபுத்துவமும் கூடிகுலாவுகிற, ஒன்றிணைந்திருக்கிற ஒரு சமூகமாக இந்திய சமூகம் இருக்கிறது. முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசாக இந்த அரசு இருக்கிறது என்று சொல்வது சதாரண ஒரு வரி விஷயம் இல்லை. நிலப்பிரபுத்துவம் சேர்ந்திருக்கிறது என்று சொன்னால், நிலப்பிரபுத்துவத்தின் கருத்தியல் என்பதும் அதன் பொருளாகும். 

முதலாளித்துவமும் நிலப்பிரபுத்துவமும் இணைந்துவிட்டது என்று சொன்னால், நவீன காலமாற்றத்துக்கேற்ப சாதியமும் புது வடிவம் பெற்றிருக்கிறது என்பதுதான் அதன் பொருள். இதை முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள், இந்திய சமுதாயத்தை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்தவர்களே.

ஒரு சாதியை இன்னொரு சாதி வெறுப்பது, எல்லா சாதிகளும் அடித்தட்டிலிருக்கக்கூடிய உழைக்கும் மக்களான அருந்ததியர் உள்ளிட்ட தலித் மக்கள் மீது ஒடுக்குமுறையை பிரயோகிப்பது, ஒடுக்குமுறை மனநிலையோடு அவர்களை அணுகுவது அது நகர்புறமாக இருந்தாலும் சரி, கிராமப்புறமாக இருந்தாலும் சரி. எனவே முதலாளித்துவத்தில் அது நவீன வடிவம் பெற்று அந்த ஒடுக்குமுறையே தொடர்கிறது என்கிறபோது முதலாளித்துவத்துக்கு அது மிகப் பெரும் பயன்படுகிற ஒரு கருவியாக இருக்கிறது.

காந்தியுடைய கருத்தியலில் பல குறைபாடுகள் இருக்கலாம், ஆனால் அவர் செய்த போதனைகள் அன்றைய சாதி சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதைவிட ஒரு முக்கியமான தாக்கம், இந்த சாதி அமைப்புக்கே மிகப் பெரும் ஒரு புரட்சிகரமான எதிர்ப்பை உருவாக்கி, ஒரு மாற்றுக் கருத்தியலை உருவாக்கியது என்பது டாக்டர் அம்பேத்கர் அவருடைய சிந்தனைகள்.

ஆனால், இந்த சமூகத்துக்குள்ளே சாதியத்துக்கு எதிரான இந்தக் குரல்களும் அனுமதிக்கப்பட்டு அதுவும் நடந்தகொண்டு, அதே நேரத்தில் சாதியம் என்பதை முதலாளித்துவத்துவத்துக்கு பயன்படக்கூடிய விதத்தில் அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். முதலாளித்துவம் எப்படி சாதியத்தை பயன்படுத்திக்கொண்டது என்பது ஒரு நீண்ட பெரிய ஆய்வுக்குரிய விஷயம்.

உதாரணமாக, இன்றைய காலகட்டத்தில், வாக்கு அரசியலில் முதலாளித்துவ கட்சிகள் சாதியக் குழுக்களை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், சாதியப் படிநிலையை எப்படி தங்களுக்கு ஆதரவாகப் பயன்படுததிக்கொள்கிறார்கள் என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. எனவே முதலாளித்துவக் கட்சி, முதலாளித்துவப் பொருளாதாரம் இது அத்தனையிலும் சாதியம் என்பது அந்த முதலாளித்துவத்தை வளர்ப்பதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

சாதியும் மதமும்

முற்போக்குக் கருத்தியலை கொண்டு செல்லவேண்டும் என்பதன் முதல் படி, இந்த சாதியக் கருத்தியலை எதிர்த்துப் போராடவேண்டும் என்பது. சாதியம் என்று சொல்லுகிறபோது, சாதியை அழித்தொழித்தல் என்கிற நிகழ்ச்சி நிரல் முக்கியமானது. அந்த நிகழ்ச்சி நிரலை எப்படி கொண்டுசெல்லவேண்டும் என்பதை நாம் விவாதிக்க வேண்டியிருக்கிறது. அதே போன்று, மதவாதம் என்று சொல்லுகிறபோது, இந்து சமயத்தில் மதமும் சாதியையும் பிரித்துப் பார்க்கமுடியாது. சாதியின் இருப்புக்கு ஒரு ஆன்மீக நியாயத்தைக் கற்பித்து வழங்குவது மதம். கடவுளின் பெயரால்தான் நால்வருணம் படைக்கப்பட்டிருக்கிறது. கடவுளின் பெயரால்தான் சடங்கு சம்பிரதாயங்கள் உள்ளன. இந்து சமயம் என்று சொல்லுகிறபோது சாதி என்பதை அதிலிருந்து பிரிக்கமுடியாது. தனித்தனியாகப் பார்க்க முடியாது.

அதே சமயம் மதவாதம் என்று சொல்லுகிறபோது, பிரித்துப்பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது. மத நம்பிக்கையாளர்கள் என்கிற ஒரு பிரிவு இருக்கிறார்கள். அவர்கள்தான் கோடான கோடி, ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட உழைக்கும் மக்களில் மத நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மதத்தை நம்புவதும் கூட, மத நம்பிக்கையாளர்களாக இருப்பதும் கூட இன்றைய ஆளும் வர்க்கத்துக்கு சாதகமானதுதான். ஏனென்றால் ஆளும் வர்க்கத்தின் சுரண்டலை மறைப்பதற்கு, மத நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவரவர் படுகிற கஷ்டங்களுக்கு முந்தைய பிறப்பில் அவர் செய்திருக்கக்கூடிய பாவங்கள் தான் காரணம் என்று எளிதாக சொல்லிவிட்டுப் போய்விடலாம். எனவே, மதநம்பிக்கையாளர்களாக இருப்பதும் ஆளும் வர்க்கத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் சாதகமானதே. அந்த மத நம்பிக்கை என்பதும் மதம் சார்ந்த கருத்துக்கள் என்பதும் நாம் எதிர்நோக்க வேண்டிய முக்கியமான விஷயம்.

மதத்தை எதிர்த்த போராட்டம் என்பதில் இருக்கும் ஒரு சங்கடம் என்னவென்றால், தன்னுடைய வாழ்நிலை, வாழ்வாதாரச் சிக்கல்கள் இதற்கெல்லாம் ஒரு நிம்மதியைத் தருகிற ஒரு புகலிடமாக கோவில்களும் மத நம்பிக்கையும் அவர்களுக்குப் பயன்படுகிற காரணத்தால், நேரிடையாக மதத்தின் மீதான தாக்குதல் என்பது, மத நம்பிக்கையோடு இருக்கிற பெரும்பான்மை மக்களை அந்நியப்படுத்துகிற வேலையைத்தான் செய்கிறது என்பது அனுபவம். எனவே, அனைத்தையும் கணக்கிலெடுத்த அணுகுமுறை தேவை.

அடக்கப்பட்டவர்களின் பெருமூச்சாக மதம் இருக்கிறது. வாழ்க்கைச்சுமையிலிருந்து சிறிது நிம்மதி தருவதற்கான இடத்தில் மதம் இருக்கிறது என்று மார்க்ஸ் மதத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில் சுரண்டுகிற கூட்டத்துடைய கருவியாகவும் மதம் என்றும் மார்க்ஸ் சுட்டிக்காட்டியிருக்கிறார். மதத்துடைய பயன்பாடு பற்றிய பொதுவான நிர்ணயிப்பு இது. எனவே, மத நம்பிக்கை என்பதை இந்த அடிப்படையில் அணுகவேண்டும்.

நாம் ஒரு பிரச்சனையை / இயக்கத்தை எடுக்கிறபோது, அது குறித்து அந்த ஊரில் ஊர் கூட்டம் போடுகிறோம். அப்போது பல விஷயங்களைப் பேசுவோம். அதில் அறிவியலைப் பேசவேண்டும்.  பொருள்முதல்வாதக் கருத்தியலை மக்களுக்கு மனதில் பதிய வைப்பதற்கான வாய்ப்பாக அது அமையும். சாதி ஒழிப்பு பற்றி பேசலாம், சாதியக் கருத்தியல் பற்றி பேசலாம். பிரச்சாரத்திலேயேயும், நேரடியாகவும் கொண்டுபோகலாம். மககளிடம் நெருக்கமாகி விவாதிப்பதன்  மூலமும் கொண்டுபோகலாம்.

இந்துத்துவத்தின் நோக்கம்

அதே நேரத்தில் மதவாதம், வகுப்புவாதம், இந்துத்வாவினை நாம் எதிர்க்க வேண்டியுள்ளது. முதலில் இவைகளுக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை, மதநம்பிக்கைக்கும் இந்துத்வா சொல்கிற விஷயங்களுக்கும் சம்மந்தமில்லை, மதத்தை அவர்கள் அரசியல் அதிகாரத்துக்குப் பயன்படுத்துகிறார்கள் என்கிற விஷயத்தை மக்கள் மனங்களில் பதியவைப்பது அவசியம். ஒருவரியில்/ வாக்கியத்தில் இதை நான் சொல்லிவிட்டேன், ஆனால் அதைப் பதிய வைப்பது சாதாரண விஷயம் அல்ல. ஏனென்றால் இந்துத்வாவின் மிஷினரி என்பது இந்தியா முழுவதும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அவர்களின் செயல்பாடுகள் குறித்து ஏராளமான விவரங்கள் இருக்கிறது. நிறைய அமைப்புக்கள் இருக்கிறது. வரலாறு, தொல்லியல், சமூகவியல், தத்துவம் உள்ளிட்ட 70 துறைகளில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  ஒவ்வொன்றுக்கும் ஒரு பார்வை வைத்து அவர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்துத்வா என்று சொல்லுகிறபோது, முதலில் மத அடையாளம் கொண்டிருக்கிற ஒருவருக்கு படிப்படியாக மதப் பிடிமானத்தை அவர்கள் ஏற்படுத்துகிறார்கள். இது இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. மதநம்பிக்கை என்று சொல்லுவது எப்போதாவது நினைவுக்கு வரும். அன்றாடம் 8லிருந்து 16 மணிநேரம் வேலைசெய்துகொண்டிருக்கும் உழைக்கும் மக்கள் மத்தியில் ஒருவருக்கு மத நம்பிக்கை என்பது ஏதாவது ஒரு நேரத்தில் வர வாய்ப்பிருக்கிறது. வாரம் ஒருமுறை கோவிலுக்கு செல்வது போன்ற வகையில் இருக்கிறது. உழைப்பாளி மக்கள் உழைப்பை செலுத்தவேண்டியிருப்பதால் எப்போதும் மதத்தைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்க நேரமில்லை. எந்த மதம் என்று கேட்டாலோ, வழிபாடு நடத்தும்போதோ ஒருவர் தன்னுடைய மதத்தை சொல்வார். மத அடையாளத்துடன் தன்னை இணைத்துக்கொள்வார். ஆனால் இந்துத்வாவாதிகள் செய்வது மதம் தான் எப்போதும் என்று உணர வைப்பது, மதப் பிடிமானத்தை ஏற்படுத்துவது.

கொரோனா காலத்திலேயும் இராமர் கோவில் கட்டுவதற்கான பணியில் இந்துத்வாவாதிகள் இறங்கினார்கள். கொரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் சூழலில் அடிக்கல் நாட்டுவிழாவை அவர்கள் நடத்தினார்கள். அந்த விழா தொற்றை அதிகரித்தது. இராமர் கோவில் கட்டுவது இப்போது தேவைப்படும் நிகழ்ச்சி நிரலா? இந்தியாவின் பொருளாதாரம் அதள பாதளத்தில் போய்க்கொண்டிருக்கிறது, கோடிக்கணக்கான மக்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டனர். இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் இருக்கின்றபோது, இராமர் கோவில் கட்டுகிறார்கள் என்று சொன்னால், ஒரு மத நம்பிக்கை இருக்கிறவருக்கு இந்த செய்தி போய் சேருகிறபோது நம்முடைய இராமருக்கு கோவில் கட்டுகிறார்கள் என்று மதப்பிடிமானம் வலுக்கிறது. சிறுபான்மை மதங்களுக்கு எதிராக இந்து மதப்பிடிமானத்தைக் கெட்டிப்படுத்துகிற வேலை நடந்துகொண்டிருக்கிறது. இதர மதத்தை வெறுக்கும் போது மத உணர்வு வகுப்புவாதமாக, மதவாத வடிவம் எடுக்கிறது. டெல்லியில் இந்த சூழலிலும் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவது தொடர்ந்துகொண்டிருக்கிறது. அது நீண்டகாலமாக இவர்கள் செய்துகொண்டிருக்கும் வேலை. எனவே கலவரங்களை செய்வதன் மூலம் இந்துக்களை ஐக்கியப்படுத்தும் வேலையை இந்துத்வாவாதிகள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இதில் இன்னொரு அம்சத்தையும் நாம் பார்கக வேண்டியிருக்கிறது. இந்துத்வா என்று சொல்லுகிறபோது இந்து மதம் சார்ந்தவர்களை அவர்கள் வகுப்புவாதக் கருத்தியலுக்கு கொண்டுசெல்கிறபோது, ஏதோ இந்துக்களுக்காக பாடுபடுகிற ஒரு இயக்கமாக ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார இயக்கத்தை அவர்கள் முன்னிறுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் கட்டமைக்க நினைக்கிற இந்து ராஷ்டராவின் கட்டமைப்பு முழுக்க முழுக்க சாதியக் கட்டமைப்பு தான், சாதியப் படிநிலைதான், சாதிய ஒடுக்குமுறைதான். பட்டியல் சாதியினர், பிற்படுத்தப்பட்டோர், ஆதிவாசி உள்ளிட்ட பெருமபான்மை ஒடுக்கப்பட்ட மக்களை ஒரு சிறு கூட்டம் அடித்தட்டில் வைத்து அவர்களை ஒடுக்குகிற முறைதான். பிராமணியம் என்ற கருத்தியல் இந்த ஏற்பாட்டுக்கு உதவுகிறது. அதே நேரத்தில் ஆளுகிற, ஆதிக்கம் செலுத்துகிற பிராமணியம் என்று சொல்லுகிறவர்களின் இன்னொரு முகம், பெருமுதலாளித்துவ கார்ப்பரேட் முகம்.

எனவே, அவர்களின் நிகழ்ச்சிநிரல் என்பது, இந்து ஒற்றுமை என்ற பெயரால் சாதிப் படிநிலையை கெட்டிப்படுத்துவது. இதற்கு சிறுபான்மை எதிர்ப்பு உதவுகிறது. இதுதான் வகுப்புவாதம். இந்த நிகழ்ச்சி நிரலை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் அம்பலப்படுத்துகிறோம் என்ற பெயரில் எல்லோரையும் திட்டிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. இதுதான் அவர்கள் கட்டமைக்க விருப்புகிற சமூக அமைப்பு என்று சொல்லுகிறபோது அந்தக் கருத்தியல் அம்பலப்படும்.

சமத்துவக் கருத்தியல்

நவீன தாரளமயக் கருத்தியல், மதவாதக் கருத்தியல், சாதியக் கருத்தியல் இவை மூன்றும் ஒன்றோடொன்று பிணைந்திருக்கிறது. இந்தப் பிற்போக்குக் கருத்தியலுக்கு மாறாக சமத்துவக் கருத்தியலை – சமத்துவ, மதச்சார்பற்ற, ஜனநாயக கருத்தியல் என்பதை கொண்டு செல்லவேண்டியிருக்கிறது.

சமத்துவம் என்று சொல்லுகிறபோது சாதி நீங்கிய, சாதிவேறுபாடுகள் களையப்பட்ட, சாதி ஒழிந்த அனைத்து மத நம்பிக்கை கொண்டவர்களும் ஒற்றுமையாக, இதர மத நம்பிக்கை கொண்டவர்களை மதிப்புமிக்கவர்களாகக் கருதுகிற, அப்படிப்பட்ட மத நம்பிக்கையாளர்களைக் கொண்டிருக்கிற ஒரு சமூகம். அதே நேரத்தில், இந்த சமூகம் இப்படிப்பட்ட முற்போக்குக் கருத்தியலை முன்னெடுக்கக்கூடிய ஒரு சமூகம், முழுக்க முழுக்க பொருளாதாரத்தை தன் கையில் எடுத்திருக்கும். பொருளாதாரத்தை பெரும்பான்மை மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில், பொருளாதார உற்பத்தி, அதனுடைய பலன், விநியோகம் இந்த மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் அது மாற்றும். முற்போக்குக் கருத்தியலை விதைக்கிற போது அது உடனடியாக இந்த மாற்றங்களை ஏற்படுத்திவிடாது. பொருளாதார அமைப்பில் சமத்துவம் என்று சொல்லுகிறபோது, உழைக்கும் மக்கள் பொருளாதாரத்தைக் கட்டுக்குள் கொண்டுவருகிற அந்த நிலை ஏற்படும். முற்போக்குக் கருத்தியல் அந்த மாற்றத்தைக் ஏற்படுத்தும். அப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறபோது, முற்போக்கு கருத்தியல் மக்களின் மனங்களைக் கவ்விப்பிடித்து, அந்த உழைக்கும் மக்கள் தங்களுக்கான அரசியல் அதிகாரத்தைக் கட்டமைப்பார்கள். இதுதான் வழி.

இதை நான் சொல்லுகிறபோது, உடனே பலருக்கு இது சாத்தியப்படுமா என்கிற அந்தக் கேள்வி வரும்.  அதற்கு வரலாறுதான் ஒரே பதில். பிற்போக்குக் கருத்தியலுக்கும் முற்போக்கு கருத்தியலுக்குமான அந்தப் போராட்டம் இன்று நேற்றல்ல, பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. அதில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இன்றைக்கு பல சட்டங்கள், முன்னேற்றங்களைப் பார்க்கிறோம். ஏராளமான போராட்டங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது என்பதே ஒரு நம்பிக்கைக்குரிய விஷயம். முற்போக்குக் கருத்தியல் என்பது பல ஆண்டு காலமாக, இன்னும் சொல்லப்போனால் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கடவுள் இல்லை என்று நாத்திக்கருத்துக்களை பரப்பியவர்கள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் அடக்கி ஒடுக்குகிற ஆதிக்க நிலையில் இருக்கக்கூடிய பிராமணியம் என்கிற கருத்தியலை எதிர்த்து, பிராமணர்களை எதிர்த்து இந்தக் கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். இன்றைக்கு வரையில் அதனுடைய தொடர்ச்சி என்பது இருந்து கொண்டிருக்கிறது. எனவே நிச்சயமாக முன்னேற்றம், சாதனைகளைச் செய்யமுடியும்.

இன்றைக்கு சீனாவில், உழைக்கும் மக்களிடம் தான் பொருளாதாரக் கட்டுப்பாடு என்பது இருக்கிறது. நிறைய சாதனைகள், வெற்றிகள் இந்தப் போராட்டப் பயணத்தில் இருக்கிறது. அந்த வகையில், முற்போக்குக் கருத்தியலுக்கும் பிற்போக்குக் கருத்தியலுக்குமான போராட்டத்தை நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் வரலாற்றில் வெற்றி என்பது முற்போக்குக் கருத்தியலுக்குத்தான். நாம் வெற்றிக்கான பயணத்துக்குத்தான் வரலாற்றைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கையோடு அதை செய்யவேண்டியிருக்கிறது.

உள்ளூர் சமூகங்கள்

இந்த முற்போக்குக் கருத்தியலை மிக முக்கியமாக உள்ளூர் சமூகங்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதை நான் வலியுறுத்திச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். உள்ளூர் மட்டத்தில் தனிநபர்களை அணுகக்கூடிய  வாய்ப்புக்களை முதலாளித்துவம் பெற்றிருக்கிறது. தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகங்கள் அனைத்தும் தனிநபர்களை எட்டியிருக்கிறது. பிற்போக்குக் கருத்தியல் தனிநபர்களை சென்றடைந்திருக்கிறது. அது மதவாதம், சாதியவாதம், நவீன தாராளமயம் இவை எதுவாக இருந்தாலும் அது தனிநபர்களை சென்றடைந்திருக்கிறது.

அதே போன்று முற்போக்குக் கருத்தியல் தனிநபர்கள், தனிநபர்கள் வாழுகிற உள்ளூர் சமூகம், தெரு, நகர வார்டு, கிராமம் என்கிற உள்ளூர் சமூகத்தை நோக்கிச் செல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. உள்ளூர் சமூக மக்களிடம் உரையாடுவது அவசியம். உரையாடுவதன் மூலமாக மட்டும் மாற்றம் வந்துவிடாது. செயல் முக்கியமானது. ஒரு செயல் பல கருத்துக்களை, பல பாடங்களை மக்களுக்கு இயல்பாக அனுபவங்கள் மூலமாகக் கற்றுத் தருகிறது. மக்கள் அனுபவங்கள் மூலமாக கற்றுக்கொள்கிறார்கள் என்பதை மாவோ சொல்லியிருக்கிறார். அவர்கள் அனுபவங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்தவேண்டும்.

முற்போக்குக் கருத்தியலை கொண்டு செல்வதற்கு, உள்ளூர் மட்டத்திலான மதச்சார்பற்ற, அறிவியலான சமூகங்களை நாம் எங்கெங்கெல்லாம் செல்கிறோமோ அங்கெல்லாம் உருவாக்க வேண்டும். உள்ளூர் மட்டத்திலான முற்போக்கு சமூகங்களை பல்லாயிரக்கணக்கில் தமிழகத்தல் நாம் உருவாக்குகிறபோது அது மேலும் மேலும் பரவும். ஒரு அறிவியல் விதியைச் சொல்வார்கள், இயக்கவியல் விதி என்று ‘அளவு மாறுபாடு அடைய குணமாறுபாடு அடையும்’. ஒரு 10 ஊர்களில் செய்தோமென்றால் அடுத்து 11, 12 என்று போகாது, 10 நூறாகும், ஆயிரம் ஆகும், பத்தாயிரம் ஆகும், லட்சமாகும். இப்படிப்பட்ட உள்ளூர் சமூகங்களைக் கட்டி அமைத்தல் என்பது, டெல்லியின் ஆட்சி அதிகாரத்தை உழைக்கும் மக்கள் கைப்பற்றுகிற ஒரு நிலைக்கு அது கொண்டுசெல்லும். ஏனென்றால் மத்தியில் ஆட்சி என்பதுதான் இந்த முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அதிகாரம் கோலோச்சிய ஆட்சி. எனவே உள்ளூர் சமூகங்கள் வலுவாகக் கட்டமைக்கப்படுவது என்பது முற்போக்கு கருத்தியலைக் கொண்ட கோடிக்கணக்கான உள்ளூர் சமூகங்களை நாம் உருவாக்குகிறபோது, அரசியல் அதிகாரம் முற்போக்காளர்கள் கையில், உழைக்கும் மக்கள் கையில் கைவர வாய்ப்பிருக்கிறது.