அடையாள அரசியல் எங்கிருந்து வந்தது?

தமிழக அடையாள அரசியல் பற்றி ஏராள மான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது 20-வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றிய அரசியல், தத்துவார்த்தத் தீர்மானங்களில் அடை யாள அரசியல் எவ்வாறு உழைக்கும் மக்கள் ஒற்றுமையை குலைத்து வருகிறது என்பதை விரிவாக எடுத்துரைத்துள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி பல நேரங்களில் அடையாளப் பிரச்சனைகளை உள்ளடக்கியதாக இருக்கின்றன. அனைத்து அடையாள அரசியல் சார்ந்த மக்கள் திரட்டல்கள் வர்க்க ஒற்றுமையை குலைத்தாலும் ஒடுக்குமுறைக்கு ஆளான மக்கள் உருவாக்கும் இயக்கங்களை வேறுபடுத்தி பார்க்க வேண்டியுள்ளது. எனினும், அத்தகு ஒடுக்கப் பட்ட மக்களின் எழுச்சிகளும் வர்க்க ஒற்றுமை எழுச்சியோடு இணைக்க வேண்டிய அவசிய முள்ளது. இதுவே, பெரும்பான்மையான உழைப் பாளி மக்கள் சுரண்டல் வாழ்க்கையிலிருந்து விடுதலை பெறுவதற்கான வழியாக அமைந் துள்ளது. சோசலிசம் நோக்கிய பாதையும் இதுவே.

தமிழக அடையாள அரசியல் விவாதத்தில் ஒரு முக்கியப் பங்கினை பேராசியர் ந.முத்து மோகன் ஆற்றியுள்ளார். அவரது தமிழ் அடை யாள அரசியலின் இயங்கியல் என்ற நூல் அடை யாள அரசியலின் பல பரிமாணங்களை விளக்கு கிறது. மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல் வாத அடிப்படையில் தமிழக அடையாள இயக் கங்களின் வரலாற்றை ஆராய்வதற்கு பேராசிரி யர் கடுமையாக முயற்சித்துள்ளார். ஆனால், அடையாள அரசியலுக்கு ஆதரவான அவ ருடைய அணுகுமுறை இடதுசாரி இயக்கங்களை கட்டுவதற்கு உதவிகரமாக அமையாது என்ற விமர்சனத்தை அழுத்தமாக குறிப்பிட வேண்டியுள்ளது.

அவரது நூலில் பொதுவான சில கருத்துக்கள் ஏற்கனவே அடையாள அரசியல் தமிழக நல னுக்கு உகந்ததா? என்ற இக்கட்டுரை ஆசிரியரின் கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளது (தீக்கதிர், ஜனவரி 09, 2013). பின்வரும் கட்டுரையில் நூலில் பேராசிரியர் விவாதிக்கத் தவறிய அல்லது ஏற்றுக் கொள்ளாத ஒரு கருத்து விவாதிக்கப்படுகிறது.

தாராளமயம், அடையாள அரசியல்

அடையாள அரசியல் ஒரு வீச்சாக உரு வெடுத்தது, இருபதாம் நூற்றாண்டு காலத்தில் தான். குறிப்பாக, புதிய தாராளமயம், உலகம் முழுவதும் வேகமாக அமலாகத் துவங்கிய காலகட்டத்தோடு இணையான ஒரு நிகழ்வுப் போக்காக அடையாள இயக்கங்களின் வளர்ச்சி ஏற்பட்டது. பின் நவீனத்துவம் என்கிற தத்து வார்த்தக் கருத்துக்களும் இதையொட்டி வேக மாகப் பரவின. புதிய தாராளமயம், அடையாள அரசியல், பின் நவீனத்துவம் ஆகியவற்றின் இணைப்பை பேராசிரியர் கவனம் செலுத்த தவறியிருக்கிறார். மேலும். புதிய தாராளமயம் உழைக்கும் மக்களின் வாழ்வினை அழித் தொழிப்பு செய்கிற போது, அடையாள அர சியல் இயக்கங்கள் உழைக்கும் மக்களை ஒன்று பட்ட போராட்டத்தில் ஈடுபடுவதை தடுப்பதற்கு உறுதுணையாக அமைந்தன. ஆனால், பேராசிரியர் அடையாள இயக்கங் கள் ஒரு மீள் பார்வை என்ற கட்டுரையில் கீழ்க் கண்டவாறு குறிப்பிடுகிறார். அடையாள இயக் கங்கள் தோற்றம் பெற்றதே பின்னை நவீனத் துவத்திற்கு பிறகுதான் என்பது மிகவும் குறுக்கப் பட்ட சித்திரமாகத் தெரிகிறது (பக்கம் 2). இதில் பின் நவீனத்துவத்திற்கும் அடையாள அரசிய லுக்குமான வலுவான தொடர்பினை குறைத்து மதிப்பிடுகிறார் பேராசிரியர். புதிய தாராளமயம் தான் அடையாள அரசியல் மற்றும் பின் நவீ னத்துவ ஆதிக்கத்திற்கு உந்து சக்தியாக இருந் துள்ளது.

உலகமயம், தாராளமயம் ஏற்படுத்திய பொரு ளாதார சீரழிவுகள் அதிகம் பேசப்படுகின்றன. வர்க்க ஒற்றுமையை சீரழிக்க அது அடையாள அரசியலின் பெயரால் ஏற்படுத்தியிருக்கிற சேதாரம் அதிகம். ஆனால், பேராசிரியர்  உலக மய நிகழ்வோடு உருவான அடையாள இயக்க எழுச்சியை உயர்த்திப் பேசுகிறார்.

இன்று உலகமயமாக்கச் சூழலில் உலக மெங்கும் ஒவ்வொரு சிறு கூட்டமும் தன்னைத் தன் சொந்த மொழியிலேயே எடுத்துரைக்க  முன் வருகிறது. இது ஒரு மாபெரும் ஜனநாயக அசைவு, மக்கள் அரசியல் (பக்கம் – 26). அத் துடன் இடதுசாரி இயக்கங்கள் மீதும் குறை பட்டுக் கொள்கிறார்.

20-வது நூற்றாண்டு முழுவதிலும் சோச லிசம்/முதலாளியம் என்ற மிகப்பெரிய சர்வதேச முரண்பாட்டின் உக்கிரத்துனுள் சிக்கிக் கொண்ட நாம் நமது காலுக்கடியில் மிக அண் மையில் கொந்தளித்த எண்ணிலடங்காத நுண் முரண்பாடுகளை காணத் தவறிப் போனோம் (பக்கம் -25) என்று துயரத்தில் ஆழ்ந்து போகி றார். இதன் அர்த்தம் என்ன? இடதுசாரி இயக் கங்களும் தங்களது வர்க்கப் பார்வைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அடையாள அடிப்படையில் மக்களை கூறுபோடுகிற பணி யில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது தான்.

பேராசிரியரின் பல வாதங்கள் ஆழ்ந்த விமர் சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியவை. அதற்கு முன்னர் இந்தியாவில் பின் நவீனத்துவ தத்துவார்த்த கருத்துக்களும் அடையாள அரசி யலும் எப்படி ஒரு பகுதி மக்களை கவ்விப் பிடித் துள்ளது என்று சற்று ஆராய வேண்டியுள்ளது. இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர்களில் முக்கியமானவர் மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அகமது. இந்திய அடையாள அரசியலின் உண் மையான முகத்தை அறிந்து கொள்ள அவரது ஆய்வு உதவுகிறது.

விடுதலைக்குப் பிறகான இந்திய வரலாற்றை மூன்றுக் கட்டங்களாகப் பிரித்து மூன்றாவது கட்டத்தில் அடையாள அரசியல் ஊடுருவுவதற் கான வாய்ப்பு எப்படி ஏற்பட்டது என்று விளக்கு கிறார்.

இந்திய அரசியல் மூன்று சட்டங்கள்:

முதல்கட்டம் என்பது 1947-லிருந்து 1970-களின் முற்பகுதி வரை. நேருவின் மாடல் என்றழைக்கப் படும் நடைமுறை கடைபிடிக்கப்பட்ட காலமாக இது இருந்தது. பல துறைகளில் தேசியமயம், வறுமை ஒழிப்போம் என்ற கோஷங்கள் போன் றவை எழுந்த காலமிது. இந்த காலகட்டத்தில், ஆட்சியிலிருந்த முதலாளித்துவ நிலப்பிரபுத் துவக் கூட்டணி வலுப்பெற்றது. முதலாளித்துவ மூலதனம் மெதுவாக வளர்ச்சி கண்டுவந்தது. வலுவான பொதுத்துறை, அரசு நிதி உதவியோடு அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, அரசு நிதி ஒடுக்கீடு செய்த கல்விமுறை, அரசின் உடைமை யான வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊட கங்கள் என அரசு தலைமை தாங்கிய முதலாளித் துவ வளர்ச்சி ஏற்பட்டது. இவையனைத்துமே முதலாளித்துவ மூலதன வளர்ச்சிக்கு உதவின. இந்த காலகட்டத்தில் மொழி, உள்ளூர் மரபு கள், சாதி, உப சாதி பிரிவுகள் மாறுபட்ட  கலாச் சார நடைமுறைகள் என பல வகையில் இந்திய மக்கள் பிரிந்திருந்தனர். இது வேற்றுமையில் ஒற்றுமை என்று விளக்கப்பட்டது. மதச்சார் பின்மை, சமூக நீதிக் கருத்துக்கள் பரவலாக இந்திய சமூகத்தில் நிலவியிருந்தன. கூடவே, ஆர்.எஸ்.எஸ், சாதி அடிப்படையிலான இயக்கங் கள் போன்ற பல பிளவுபடுத்தும் இயக்கங்களும் செயல்பட்டு வந்தன. பிற்காலத்தில் அடையாள அரசியல் எழுச்சிக்கு இவை ஏற்கனவே களம் அமைத்திருந்தன. விடுதலைக்குப் பிறகான இந்திய வரலாற்றில் இரண்டாவது கட்டம் நெருக்கடி நிலை பிர கடனம் செய்யப்பட்ட காலத்தில் (1975-ஆம் ஆண்டுகளில்) துவங்குகிறது. காங்கிரஸின் ஏக போகம் ஆட்டம் காண்கிற நிலை ஏற்படுகிறது. இந்திய அரசியலில் ஒரு நிலையற்ற தன்மை ஏற்படத் துவங்கியது. நரசிம்மராவ்-மன்மோகன் சிங் கூட்டணி 1990-ஆம் ஆண்டு துவக்கத்தில் புதிய தாராளமய சீர்திருத்தங்களை வேகமாக அமலாக்க துவங்கினார்கள். அவை ஏற்படுத்திய அதிருப்தி மற்றும் பல நெருக்கடிகள் எல்லாம் சேர்ந்து, 1990-களின் இறுதியில் வகுப்புவாத பாரதிய ஜனதா கட்சி ஆளுங்கட்சியாக உரு வெடுக்க வழிவகுத்தது.

இந்த காலகட்டத்தில் தான் நவீன இந்தியா வின் தூண்களாகப் போற்றப்பட்ட பொதுத் துறை, சுயசார்பு, மதச்சார்பின்மை, சுயேட்சை யான வெளியுறவுக் கொள்கை ஆகியன அனைத் தும் தாக்குதலுக்கு உள்ளாகின. 21-ஆம் நூற் றாண்டு துவக்கத்தில் காங்கிரஸ் கூட்டணியும் அதற்கு போட்டியாக வகுப்புவாதக் கொள்கை கொண்ட சங்பரிவாரும் ஆட்சி அதிகார போட்டிக்கான மையங்களாக மாறின. ஆனால், இந்த இரண்டுமே புதிய தாராளமயம், ஏகாதி பத்திய ஆதரவு ஆகிய இரண்டிலும் ஒருமித்த கருத்து கொண்டவையாக இருந்தன. 1975-1990 என்கிற காலகட்டம் நேருவின் காலத் திலிருந்து புதிய தாராளமயம் என்கிற கட்டத் திற்கு மாறிய காலகட்டமாகும். 1991-க்குப் பிறகு இன்று வரையிலான இந்த மூன்றாவது கட்டம் புதிய தாராளமயம் வலுவாக உறுதிப்பட்ட காலமாகும். 20 ஆண்டு கால புதிய தாராளமயம் உண்மையில் பின் நவீனத்துவ கருத்துக்கள் உள்ளே வருவதற்கான காலமாக அமைந்தது. பின் நவீனத்துவ கருத்துக்களில் மக்கள் அடையாள அடிப்படையில் தனித்தனி கூறுகளாக பிரிந்திட வேண்டும் என்கிற அந்த நிகழ்வு மிக ஆழமாக இந்த மூன்றாவது காலகட்டத்தில் உருவெடுத் தது. பெரும் ஏகபோக பணக்காரர்கள் ஒருபுறம் வறிய வாழ்க்கையில் அல்லாடிக் கொண்டிருக் கும் கோடானு கோடி மக்கள் மறுபுறம் என்கிற சமூக நிலை இந்த பின் நவீனத்துவ போக்கு களுக்கு அடித்தளமாக அமைந்தது.

அரசியல் மீது வெறுப்பு:

உயர் நடுத்தர வர்க்கம் மட்டுமல்லாது சாதா ரண நடுத்தர வசதிபடைத்தவர்களிடம் மேலோங் கியது. இதில் விவசாயம் சார்ந்த மேட்டுக்குடி மக்களும் அடங்குவர். புதிய நுகர்வு கடன் வசதி முறைகளால் சேமிப்பிற்கான முக்கியத்துவம் குறைந்து செலவு செய்வது ஒரு கலாச்சாரமாக மாறும் போக்கு வளர்ந்தது. மின்னணு ஊடகங் களின் வளர்ச்சி, சூறாவளி போன்ற தனியார் மயம், தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி போன்றவை அனைத்தும் இளைய மற்றும் வளர்ந்த தலைமுறை பிரிவினரிடம் மாறுபட்ட சமூக பார்வைகளை உருவாக்கின. அரசு அதிகாரிகள், கார்ப்பரேட் மூலதன சக்திகள், சட்ட விரோதமான செயல்களில் ஈடு படுவோர் என ஒரு பெரும் கூட்டுப் படையே உரு வாகத் துவங்கியது. இது அரசியலின் மீது கணிச மான பகுதியினரிடம் வெறுப்பு ஏற்படுத்தியது. இவ்வாறான முக்கியமான மாற்றங்கள் பின் நவீனத்துவ கருத்துக்களையும், அடையாள அரசி யலையும் கணிசமான பகுதியினர் வரவேற்பதற் கும் ஏற்றுக் கொள்வதற்கும் களம் அமைத்தன.

இந்திய பின் நவீனத்துவ அரசியல் வடிவங்கள் ஐரோப்பிய வடிவங்களிலிருந்து வேறுபட்டவை. பேராசிரியர் ந.முத்துமோகன் ஐரோப்பிய வகை அடையாள அரசியலையும் இந்திய அடையாள அரசியலையும் வேறுபடுத்தித்தான் ஆராய்கி றார். ஆனால், இந்திய அடையாள அரசியலின் தனித்த இயல்புகள் அவர் கருதுவது போன்று மெச்சத்தக்க விளைவுகளை ஏற்படுத்தவில்லை. சமூக இயக்கங்கள், சிவில் சமூக அமைப்புகள் என்கிற பெயர்களில் ஏராளமான மக்கள் திரட் டப்பட்டார்கள். இப்படிப்பட்ட அமைப்புகள் அரசு சாரா அமைப்புகளின் நிதி உதவியோடு செயல்பட்டன. இந்த வார்த்தைகளை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். சமூக இயக்கம் என்று சொல்லுகிற போது அது அர சியல் இயக்கம் என்கிற கருத்தாக்கத்திலிருந்து மாறுபட்டது. அரசியல் அதிகாரம், அரசு ஆகிய அனைத்தும் ஊழல், நேர்மையற்ற நடைமுறைகள் நிறைந்ததாக  அவை ஒதுக்கப்பட வேண்டும்; அரசியல் கட்சிகளே தேவை இல்லை.

அரசியல் பார்வை கொண்ட தொழிலாளர் இயக்கங்களும் தேவை இல்லை என்கிற இந்தப் பார்வையி லிருந்துதான் அரசியல் என்கிற வார்த்தை அகற்றப்பட்டு சமூக என்கிற வார்த்தை சேர்க்கப் பட்டு சமூக இயக்கம் என பரவலாக பேசப்பட்டது.

அரசியல் அதிகாரம் என்கிற பிரச்சனையைத் தவிர்த்து தனிநபர்கள், உள்ளூர் சமூகக்குழுக்கள் ஆகியவற்றை பலப்படுத்துவதும் அவர்களின் அன்றாடப் பிரச்சனைகளில் செலுத்துவதுதான் முக்கியமானதாக வலியுறுத்தப்பட்டது. சிவில் சமூகம் என்கிற வார்த்தை இடையறாமல் பயன் படுத்தப்படுகிறது. இதன் அர்த்தம் அரசு, அரசின் பொறுப்புகள் என்பன பற்றி அதிக முக்கியத் துவம் கொடுக்காமல் சிவில் சமூகத்திலுள்ள மக்களைப் பற்றியும் அவர்களின் பிரச்சனை களைப் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இவையனைத்தும் அரசு சாரா தன்னார்வ அமைப்புகளால் ஊக்கமளிக்கப்படுகிறது. இத்தகைய பல அமைப்புகள் அரசிடமிருந்து சுயேட்சைத் தன்மையோடு இருக்க வேண்டு மென்பதற்காக அரசிடம் நிதி பெறுவதில்லை. மாறாக வெளிநாட்டு அரசுகளின் நிதி, ஜெர்மன் பவுண்டேசன்கள், ஐ.நா.வின் பல நிறுவனங்கள், பிரிட்டிஷ் அரசின் ஆக்ஷன் எய்டு அமைப்பு, உலக வங்கி, போர்டு பவுண்டேசன் போன்ற அமைப்புகளிடமிருந்து பல தன்னார்வ நிறுவ னங்கள் நிதி பெற்று வந்தன. சமீப காலங்களில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களும் அரசு சாரா அமைப்புகளுக்கு நிதியளித்து அவற்றை வளர்த் திட பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இந்த செயல்பாடுகளுக்கு இந்திய அரசு தேவை இல்லை. அரசுக்கு வெளியிலிருந்து நிதி பெறுவது தான் சரியானது என்ற கண்ணோட்டம் பின்பற்றப்பட்டு வந்துள்ளது.

உள்ளூர் செயல்பாடு:

உள்ளூர் மட்டத்திலான பணி, பிரச்சனைகள் அடிப்படையில் உள்ளூர் சமூகங்களைத் திரட்டு வது இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் புதிதல்ல. கம்யூனிஸ்ட்டு கட்சிகள் உள்பட பல அமைப்பு கள் நீடித்த உள்ளூர் மட்ட மக்கள் திரட்டல் களில் இயக்கங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இவை தேசிய அளவில் விவசாயிகளை யும் உழைக்கும் வர்க்கங்களையும் சுரண்டலி லிருந்து விடுதலை செய்வதற்கான தேசம் தழுவிய இயக்கத்தின் பகுதியாகத்தான் உள்ளூர் இயக் கங்கள் அமைந்தன.

தற்போதைய அரசு சாரா அமைப்புகளின் தன்மை என்னவென்றால் அவர்கள் முழுவதும் உள்ளூர் செயல்பாடு, சிறு சிறு குழு என்பன வற்றை மையமாக வைத்து செயல்படுகின்றன. தேர்தல் அரசியல் மீது வெறுப்பு உருவாக்கப் படுகிறது. வர்க்கங்கள், சுரண்டலிலிருந்து விடு தலை, தொழிற்சங்கப் பணி என அனைத்தும் வெறுத்து ஒதுக்கப்படுகிறது. கம்யூனிச எதிர்ப்பு இதில் ஒரு முக்கியமான அங்கமாக இருக்கிறது. இடதுசாரி போர்வையில் செயல்படும் பல குழுக்கள் கம்யூனிஸ்ட்டு கட்சிகளை குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்ப்பவை யாக செயல்பட்டு வருகின்றனர். கம்யூனிஸ்ட்டு எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு நீண்ட காலமாக தன்னார்வ குழுக்களுக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்க சிஐஏ-வின் பணம் இத்தகு செயல்பாடுகளுக்கு ஆசிய நாடுகளுக்கும் ஆப்ரிக்க நாடுகளுக்கும் தொடர்ந்து அனுப்பப் பட்டு செலவிடப்படுகிறது.

புதிய தாராளமயத்தில் கல்வி, சுகாதாரம் போன்ற சமூக நல நடவடிக்கைகளிலிருந்து அரசு விலகுவது முக்கியமானது. அந்த இடத்தில் தன்னார்வ குழுக்கள் முக்கியப் பங்கினை வகிக் கின்றன. சமூக நல நடவடிக்கைகளை மேற் கொள்வது என்ற பெயரில் ஒரு சிறு பகுதி யினருக்கு சில நன்மைகளை ஏற்படுத்தி மக்கள் துண்டு துண்டான இயக்கங்களில் அணி சேர்க் கப்படுகின்றனர். இப்படி அரசியலே துண்டு துண்டாக சிதறடிப்பது, அமைப்பு ரீதியான வலுவான ஆளும் வர்க்கத்தையும் அரசையும் எதிர்க்கிற மாற்று அரசியல் உருவாவது தடுக்கப் படுகிறது. இத்தகு நிலை உலக மூலதனத்தின் நலன்களைப் பாதுகாக்க ஏற்றதாக அமைந் திருக்கிறது. இந்தப் பின்னணியில் பேராசிரியர் ந.முத்துமோகன் கம்யூனிஸ்ட்டுகளுக்கு வழங்கியிருக்கிற அறிவுரையை பரிசீலிக்க வேண்டும். இன்று திராவிட அரசியல் அம்மணமாகி நிற்கிறது…. ஆயின் அடையாள அரசியலுக்கு இன்னும் ஆற்றல்கள் உள்ளன. இவ்வேளையில் கீழிருந்து தமிழ் அடையாளத்தை கட்டியெழுப்பும் வேலை களை கம்யூனிஸ்ட்டுகள் செய்ய வேண்டியுள்ளது. கீழிருந்து தமிழ் அடையாளம் என்பது விவசாயிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. நிலம், சுற்றுச் சூழல், நீராதாரங்கள், நாட்டுப்புற மக்கட் பண்பாட்டு, போர்க்குணம் சார்ந்த தமிழ் அடையாளம் கட்டியெழுப்பப்பட வேண்டும். (பக்கம் – 28) இந்த அறிவுரை தெரிந்தோ தெரியாமலோ உலக மூலதன சக்திகளின் நலனை பாதுகாக்கிற முயற்சிகளுக்கு வலுசேர்ப்பதாக அமைந்திடும்.

உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாது காக்க நடத்தப்படும் போராட்டங்கள் அவசியம். ஒடுக்கப்பட்ட மக்களின் தனித்த அடையாளங் கள், முற்போக்கான பண்பாட்டு கூறுகள் ஆகிய வற்றிற்கான போராட்டங்கள் வலுவடைய வேண் டும். ஆனால், இவை நாடு தழுவிய தொழிலாளி-விவசாயி வர்க்கக் கூட்டணியை பலப்படுத்தும் நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும். இந்த வர்க்கத் திரட்டல்தான் சமூக ஒடுக்குமுறைகளை ஒழிப்பதோடு சோசலிச சமூக மாற்ற கடமை யையும் நிறைவேற்றிடும்.

அநாகரிகப் பொருளாதாரத்தின் அதிரடித் தாக்குதல்..

நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நவீன முதலாளித்துவ அமைப்பு முறையை மிகவும் கவனமாக கார்ல் மார்க்ஸ் ஆய்வு செய்துள்ளார். முதலாளித்துவ அமைப்பு முறையின் தரம் தாழ்ந்த பண்பைப் புரிந்து கொண்ட அவர் – அதற்கு அநாகரிகப் பொருளாதாரம் என்று பெயர் சூட்டினார். அந்த அநாகரிகப் பொருளாதார அமைப்பு முறையால் மீண்டும் மூழ்கடிக்கப்படும் நிலையில் இன்றைய தினம் இந்தியா இருக்கிறது.

– பிரபாத் பட்நாயக்

செப். 11 – 17 பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் அநாகரிகப் பொருளாதாரத்தின் அதிரடித் தாக்குதல் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள ஒரு கட்டுரையில் பொருளாதார வல்லுநரான பிரபாத் பட்நாயக் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இக்கட்டுரையைப் படித்த எனது நண்பர் ஒருவர் என்னுடன் விவாதத்தில் ஈடுபட்டார். அவர் எழுப்பிய வினாக்களும், அதற்கு நான் அளித்த பதில்களும் ஒரு சுவையான விவாதமாக இருந்தது. இதனை மார்க்சிஸ்ட் இதழின் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அந்த விவாதத்தை எழுத்தில் வடிக்க முயற்சித்தேன்.  அதன் விளைவாக வந்தது இக்கட்டுரை.

உலக வரலாற்றிலேயே மிகவும் நாகரிகமான சமுதாய அமைப்பு முதலாளித்துவ அமைப்பு முறைதான் என்று அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் கூறிக் கொள்கிறார்கள். கருப்பு மனிதர்களை நாகரிகப்படுத்த வேண்டிய பெரிய பணி வெள்ளை மனிதர்களின் தோள்களில் ஏற்றப்பட்ட பெரும் சுமையாக உள்ளது என்று கூறினான் பிரட்டன் நாட்டு நோபல் பரிசு பெற்ற கவிஞான ருட்யார்டு கிப்ளிங். அப்படி இருக்க முதலாளித்து பொருளா தாரமே அநாகரிகப் பொருளாதாரம் என்று மார்க்ஸ் வருணித்தது எந்த அடிப்படையில்? என்பது எனது நண்பர் எழுப்பிய முதல் கேள்வி.

பொருளாதார வாழ்க்கை முறையில் சமூக உறவுகள் அடிப்படையானவை. அந்த சமூக உறவுகளை முதலாளித்துவ பொருளாதார முறை கண்டு கொள்வதில்லை. அவற்றை அது புறக் கணிக்கிறது. பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு இந்த சூத்திரம் சரியானதா அல்லது வேறொரு விதிமுறை சரியானதா? என்பதைவிட இது முதலாளித்துவத்துக்கு பயன்  அளிப்பதாக இருக்கிறதா? அல்லது தீங்கு விளைவிப்பதாக இருக்கிறதா? அரசியல் ரீதியாக அபாயகரமானதாக இருக்கிறதா? அல்லது வசதியானதாக இருக்கிறதா? நடைமுறைச் சாத்தியமானதாக இருக்கிறதா? இல்லை யா? என்பதையே முதலாளித்துவ பொருளாதார அமைப்பு முறை கவனத்தில் கொள்கிறது. தேர்ந்தெடுக்கப்படும் பாதை முறையற்றதா கவும் நெறியற்றதாகவும் இருந்தாலும் கூட அதைப்பற்றிஅது கவலைப் படுவதில்லை எனவே தான் அதனை அநாகரிகப் பொருளாதாரம் என்று மார்க்ஸ் வருணித்தார்.

சமூக உறவுகள் என்றால் என்ன?  – இது நண்பரின் கேள்வி.

பொருள் உற்பத்தியில் ஈடுபடும் போது மக்கள் தங்களுக்குள்ளே ஒருவொருக்கொருவர் சில திட்டவட்டமான உறவுகளையும், தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இதனைச் சற்று புரியும் படி உதாரணத்துடன் விளக்குங்கள்.

ஆதிகாலத்தில் மனிதர்கள் வேட்டையாடுவதே உயிர் வாழ முக்கியமான வழியாகக் கொண்டிருந்தனர். அப்பொழுது சிறு சிறு குழுக்களாக வேட்டைக்கு சென்று இருப்பர். கிடைத்ததை தங்களுக்குள் பகிர்ந்திருப்பர். பின்னர் விவசாயம், தொழில் என்று வந்தவுடன் சமூகத்தில் வேலை பிரிவினை ஏற்பட்டு இவர்களுக் கிடையே பரிவத்தன உறவு உருவாகிறது. இதை உற்பத்தி உறவுகளின் என்கிறோம்.

இரண்டு விதத் தன்மை என்று பிரபாத் பட்நாயக் குறிப்பிடுகிறாரே – அது இது தொடர்பானது தானே?

ஆம் – அதனைப்பற்றி அவர் தனது கட்டுரையில் எடுத்த எடுப்பிலேயே விளக்கியுள்ளார். முதலாளித்துவ அமைப்பு முறையின் கீழ் உள்ள பொருளாதார வகைகளின் இரட்டைத்  தன்மையை அவர் சுட்டிக் காட்டுகிறார்.

உற்பத்தி செய்யப்படும் ஒரு பொருளுக்கு

பொருள் என்ற வகையில் பயன் மதிப்பு;

சரக்கு என்ற வகையில் பரிவர்த்தனை மதிப்பு;

என்ற இரட்டைத் தன்மை கொண்டதைத்தான் சரக்கு என்கிறோம்.

உழைப்பு என்பது

ஒன்று – உழைப்பு சக்தி என்ற பொதுமையானது –

மற்றொன்று – ஒரு பொருளில் அடங்கியிருக்கும் ஸ்தூலமான

உழைப்பு –

உற்பத்தி சாதனம் என்பது

உற்பத்திக் கருவிகளும், உழைப்பும் சேர்ந்தது.

ஆக அனைத்துப் பொருளாதாரக் கூறுகளுக்கும் இரட்டைத் தன்மை உண்டு. ஒன்று பொருள்களைப் பற்றிய புலனறிவு. மற்றது அவற்றின் அடிப்படையாக அமைந்த சமூக உறவு.

காணக் கூடிய அல்லது புலன்களால் உணரக் கூடிய பொருட் களின் தன்மையை மட்டும் தனியாகப் பார்த்து விட்டு அவற்றின் பின்னணியில் உள்ள சமூக உறவுகளை முதலாளித்துவ அமைப்பு முறை புறக்கணிக்கிறது. எனவே தான் இதனை அசிங்கமான – மட்டரகமான – அநாகரிகப் பொருளாதாரம் என்று கார்ல் மார்க்ஸ் வருணித்தார்.

உற்பத்தி சாதனங்கள் என்பது பற்றிய விளக்கம், நிலம், கனிமப் பொருட்கள், காடுகள், நீர்நிலைகள், கச்சாப் பொருட்கள், தொழிற்சாலைகள், உழைப்பதற்கான கருவிகள், உபகரணங்கள் போன்றவை உற்பத்திச் சாதனங்கள் மற்றும் உழைப்பு ஆகும்.

அநாகரிகப் பொருளாதாரத்தால் மூழ்கடிக்கப்படும் நிலையில் இன்றைய தினம் இந்தியா இருக்கிறது என்று பிரபாத் பட்நாயக் குறிப்பிட்டுள்ளாரே? ஆம்! பொருட்களை அவற்றின் பிரத்தியேகத் தன்மையின் அடிப்படையில் மட்டும் பார்ப்பது – சமூக உறவுகளை புறக் கணிப்பது தான் முதலாளித்துவ அநாகரிகப் பொருளாதாரத்தின் தன்மை என்று குறிப்பிட்டார் மார்க்ஸ்.

உலகமயமாக்கல் தான் முதலாளித்துவத்தின் இன்றைய வடிவம் என்று மார்க்சிஸ்ட்டுகள் கணித்துள்ளனர். அது இன்றைய தினம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. உலகமயமாக்கல் கோட்பாட்டின் அடிப்படையில் முன்மொழியப்படும் திட்டங்கள் விஞ்ஞான ரீதியாக சரியானவையா?என்பதைப் பற்றி நமது ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை. சர்வதேச நிதி மூலதனத் துக்கும், அதற்கு உடந்தையாக செயல்பட்டு வரும் உள்நாட்டு முதலாளி வர்க்கத்திற்கு அது பயனளிக்கிறதா என்பதைப் பற்றி மட்டுமே அவர்கள் அக்கறை எடுத்துக் கொள்கின்றனர். அவர்களின் இதயத்திற்கு நெருக்கமாக உள்ள உலகமயமாக்கல் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதிலேயே அவர்கள் முழுமையான கவனத்தைச் செலுத்துகின்றனர். சமூக உறவுகளுக்கு அவற்றால் ஏற்படும் பாதிப்பைப் பற்றிக் கவலைப்பட்டால் உலகமயமாக்கல் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதால், அவற்றை ஒதுக்கித் தள்ளி விடுகிறார்கள். சர்வதேச அளவில் மூலதனம் தன்னை வலுப்படுத்திக் கொள்வதற்கு உருவாக்கக் கூடிய தடைகளின் குரல் வளையை நெறித்துக் கொல்வதற்கு அவர்கள் துடிக்கின்றனர். அநாகரிகப் பொருளாதாரம் இந்தியாவைத் தாக்கி வருகிறது என்பதற்கு மூன்று உதாரணங்களை பிரபாத் பட்நாயக் கவனப்படுத்தியுள்ளார்.

முதல் உதாரணம்

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக நாட்டின் பல பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்த கொண்டுள்ளனர். அண்மைக் காலத்தில் ஏற்பட்ட சமூக ரீதியாக மிகவும் முக்கியத் துவம் வாய்ந்த பிரச்சனை இது. முதலாளித்துவ ஊடகங்கள், அறிவுஜீவிகள், திட்டக்கமிஷன் போன்ற சிந்தனையாளர்கள் குழுக்கள் போன்றவை இப்பிரச்சனையை எவ்வாறு அணுகுகின்றன? விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி என்று இதனைக் குறிப்பிடும் இவர்கள் இதனை சரி செய்வதற்குக் கூறும் ஆலோசனைகள் என்ன?

தொழில் நுட்ப முன்னேற்றங்கள் பயன்படுத்தப்படவில்லை. போதுமான முதலீடு செய்யப்படவில்லை. இதனால் தான் விவசாயத் துறையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயத்துறையில் இந்திய நாட்டு தொழில்நிறுவனங்களையும், பன்னாட்டு நிறுவனங் களையும் முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். அது தான் விவசாயத் துறை நெருக்கடிக்கான தீர்வாக அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த தற்கொலைகளின் பின்னணியாக அமைந்த சமூக உறவுகளை மூடி மறைக்கின்றன. சர்வதேச மூலதனத்தின் தாக்குதலால் விவசாயிகளின் வேளாண்மையும், சிறு விவசாய உற்பத்தி முறையும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. எனவே, மூலதனத்தின் தாக்கு தலிலிருந்து அவைகளைக் காப்பாற்ற வேண்டியுள்ளது. ஆனால், அதற்குப் பதிலாக மூலதனத்தின் வருகைக்கு தடை ஏற்பட்டதால் தான் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று கூறி, உள்ளூர் முதலாளி களுக்கும், அன்னிய முதலாளிகளுக்கும் விவசாயத் துறையை திறந்து விட வேண்டும் என்று அவர்கள் ஆலோசனை கூறி வருகின்றனர்.

உலகமயமாக்கல் கொள்கை அமலாக்கப்பட்டதைத் தொடர்ந்து விவசாய விளை பொருட்களின் இறக்குமதிக்கான தடை கள் விலக்கப்பட்டன. சுங்கவரிகள் குறைக்கப்பட்டன. அதே நேரத்தில் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் விவசாய விளைபொருட்களுக்கு ஏராளமான மானியங்களை அளித்து வருகின்றன. அந்த நாடுகளின் விவசாய விளை பொருட்களை அடக்க விலையை விடக் குறைவான விலைக்கு இந்திய சந்தையில் விற்பனை செய்ய முடிகிறது. அதே நேரத்தில் இந்திய அரசு விவசாய விளை பொருட்களுக்கு ஆதரவு விலை அளிப்பதையோ அல்லது அரசே கொள்முதல் செய்வதையோ நிறுத்தி விட்டது அல்லது குறைத்து விட்டது. கட்டுபடியாகும் விலை கிடைக்காததால் விவசாயிகள் நட்டமடைகின்றனர். அவர்களுக்கு கடன் வசதிகள் செய்து தரப்படாததால் அநியாய வட்டி வசூலிக்கும் கந்து வட்டிக் காரர்களிடம் மாட்டிக் கொள்கின்றனர். வாங்கிய கடனையும், வட்டியையும் திருப்பிச்செலுத்த இயலாத நிலையில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இப்பிரச்சனையில் அரசு தலையிட்டு உதவி செய்வதற்கு உலகமயமாக்கல் கொள்கைகள் தடை விதிக்கின்றன. இச்சூழலில் நோய்க்கும் காரணமான உலகமயக் கொள்கையையே மேலும் தீவிரமாக அமல் படுத்த வேண்டுமென்று முதலாளித்துவ அறிவு ஜீவிகள் வலியுறுத்துகின்றனர். இத்தகைய முதலாளித்துவ பாதையை அநாகரிகப் பொருளாதாரம் என்று மார்க்ஸ வருணித்ததை தவறு என்று கூற முடியுமா?

இரண்டாவது உதாரணம்

மொத்த உள்நாட்டு உற்பத்திப் புள்ளி 7 முதல் 8 சதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளதாம். பிரதமரும், நிதி அமைச்சரும் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்கின்றனர். ஊடகங்களும், அறிவு ஜீவிகளும் அரசாங்கத்தைப் பாராட்டி மகிழ்கின்றன. 11 வது திட்ட அணுகுமுறையில் 8.5 சதத்துக்கு இதனை உயர்த்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அது அவ்வாறு உயர்த்தப்பட்டால் வறுமை தானாக ஒழிந்துவிடுமாம். வறுமையை முற்றிலும் ஒழிக்க  வேண்டும் என்றால், வளர்ச்சி விகிதம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமாம்! அதற்குச் செய்ய வேண்டியது என்ன? அன்னிய மூலதனம் உள்ளிட்ட மூலதன வருகைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் அதற்கு உள்ள தடைகளை அகற்ற வேண்டும்.

அன்னிய மூலதன வருகையால் இந்திய நாட்டின் சமூக உறவு நிலைகளில் ஏற்படக் கூடிய மாற்றங்களைப் பற்றி அவர்கள் விவாதிப்பதில்லை. மூலதனத்தின் அமைப்பியல் சார்ந்த சேர்மானத் தில் ஏற்படக் கூடிய மாற்றங்கள், வேலை வாய்ப்புகள், வேலையற்ற பட்டாளத்தின் எண்ணிக்கை, உபரி மதிப்பின் அளவு, உழைப்புச் சக்தியின் மதிப்பு, வேலை நாள், நேரம், வேலையின் கடுமை போன்ற வற்றில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் பரிசீலிக்கப் படுவதில்லை. சிறு உற்பத்தியாளர்களை விழுங்குவதன் மூலம் ஏற்படக்கூடிய புராதன மூலதன சேர்க்கை, விவசாய உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் போன்ற எண்ணற்ற பிரச்சனைகள் பரிசீலிக்கப்படுவதில்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் அதிகரித்தால் போதும். வறுமை ஒழிந்து விடும் என்று கூறப்படுகிறது. உண்மையில் வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதா? என்பதே விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். அது ஒரு புறமிருக்கட்டும்.

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் – என்பது போல ரொட்டியின் அளவு பெரிதாக மாற மாற அனைவருக்கும் நல்லது தானே என்ற முறையில் வாதிடப்படுகிறது. ஆனால், ரொட்டியை பகிர்ந்து கொள்ளும் முறையை சமூக உறவுகள் தானே தீர்மானிக் கின்றன. சட்டியில் இருந்தாலும் தானாக அகப்பையில் வந்து விடுமா?

ஒரு முனையில் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும் போது மறுமுனையில் துன்பதுயரங்கள், கடும் உழைப்பினால் ஏற்படும் வலி, அடிமைத்தனம், அறியாமை, மிருகத்தனம், மனோ ரீதியாக கீழ் நிலைப்படுத்துதல் போன்றவைதான் வளரும் என்று மார்க்ஸ் வலியுறுத்திக் கூறியுள்ளார். உற்பத்தியில் ஈடுபடும் வர்க்கத்துக்கு இவைகள் தான் பரிசாகக் கிடைக்கும் என்று மார்க்ஸ் குறிப்பிட் டுள்ளார். இன்றைய தினம் செயல்படுத்தப்படும் அநாகரிகப் பொருளாதார அமைப்பு முறையினால் சமூக உறவுகளை மீறி வறுமையை ஒழிப்பது சாத்தியமல்ல. மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து அதிகரிக்கலாம். ஆனால், அதனால் வறுமை நிலையிலுள்ள மக்களுக்கு வேண்டிய தேவைகளைத் தானாக பூர்த்தி செய்யப்படாது என்பதே உண்மை.

மூன்றாவது உதாரணம்

நெகிழ்வான தொழிலாளர் சந்தை பற்றி இன்றைய தினம் அதிகமாகப் பேசப்படுகிறது. தொழிலாளர்களின் உரிமைகள் மீது தாக்குதல் தொடுப்பதற்கு கொடுக்கப்பட்ட ஒரு அழகான சொற்றொடர் தான் நெகிழ்வான தொழிலாளர் சந்தை என்பது, விளக்கு மாற்றுக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சம் என்பார்களே அது போன்றது தான் இது.  மூலதனத்திற்கு ஆதரவாக சமூக உறவுகளை மாற்றியமைப்பதற்கான நேரடி முயற்சி இது. இதனை எவ்வாறு நியாயப் படுத்துகின்றனர்? நெகிழ்வான தொழிலாளர் சந்தை உருவாக்கப்பட்டால் அன்னிய முதலீட்டை ஈர்க்கக் கூடிய சுற்றுச் சூழல் உருவாகுமாம்!  அதன் தொடர்ச்சியாக வறுமை ஒழிந்து விடுமாம்! ஒர முதலாளித்துவ நாட்டில் மூலதனத்தின் தாக்குதலி லிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான வாய்ப்பு வசதிகளை தொழிலாளர்களுக்கு அளிக்கக் கூடியவை அவர்களுக்கு சட்ட ரீதியாக அளிக்கப்படும் உரிமைகளே. அந்த உரிமைகளைக் குறைத்து விட்டால், மூலதனம் தடையின்றி நுழையுமாம். வறுமை ஒழிந்து விடுமாம். தொழிலாளர்களின் பாதுகாப்புக் கேடயத்தை அவர்களிடமிருந்து பறித்து விட்டால் சர்வதேச மூலதனம் கொடுக்கக் கூடிய தாக்குதல்களை அவர்களால் எளிதாக எதிர் கொள்ள முடியுமாம்! மலை உச்சியிலிருந்து கீழே குதித்தால் நூறுஆண்டுகள் வாழ முடியும் என்று சொல்வது போல இருக்கிறது இவர்களது ஆலோசனைகள். முதலாளித்துவ சமூக அமைப்பில் நடைபெறும் வர்க்கப் போராட்டத்தில் இந்த அநாகரிகப் பொருளாதார முறை என்பது மூலதனத்தின் கையில் உள்ள ஒரு கருவி. இது இந்தமுறையிலான ஆலோசனைகளைத் தான் வழங்கும். எனவே, இதை நாம் பொருட்படுத்தக் கூடாது.

ஆனால், இன்றைய சூழலில் கவலை அளிக்கக் கூடிய ஒர அம்சம் உருவாகியுள்ளது. அநாகரிகப் பொருளாதாரத்தின் இன்றைய தாக்குதலுக்கு பின்புலமாக இருப்பது உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற ஏபாதிபத்திய நிதி அமைப்புகள். அவை இந்த முயற்சிக்காக ஏராளமான பணத்தை செலவிட்டு வருகிறது. அந்த அமைப்புகள் அது தொடுத்துள்ள பிரச்சாரத்துக்கு இடதுசாரி களிடம் அனுதாபம் காட்டக்கூடிய அறிவு ஜீவிகளும், முற்போக் கான அறிவாளிகளும் கூட பலியாகி இருப்பது கவலை அளிக்கும் விஷயமாகும். வளர்ச்சி என்ற ஒரு சொல்லை பன்னாட்டு கம்பெனிகளுக்கும், உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கும் தொழிலாளர்களைக் காலில் போட்டு மிதிக்கும் உரிமையை அளித்து விட்டால் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து விடுமாம். உரிமை பறிக்கப்பட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு உற்பத்தியாளர்கள் நிலைமை முன்னேற்றமடையுமாம். இடதுசாரி சாய்மானம் உள்வர்கள் முதல் நரேந்திர மோடி போன்ற வலதுசாரிகள் அனைவரும் வளர்ச்சி வளர்ச்சி என்று கூக்குரலிடுகின்றனர். தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறுபவர்களை வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்றுமுத்திரை குத்தி விடுகின்றனர்.

150 ஆண்டுகளுக்கு முன்னர் கார்ல் மார்க்ஸ் தனது மகத்தான படைப்பாகிய மூலதனம் நூலில் விளக்கியுள்ள அநாகரிகப் பொருளாதாரம் என்ற கோட்பாடு இன்றும் அமல்படுத்தப் படுகிறது. எதிர்பாராத அளவுக்கு வெற்றியும் பெற்று வருகிறது. இந்த அநாகரிகப் பொருளாதாரத்தின் அருவருப் பூட்டும் தன்மையை, அசிங்கத்தை அம்பலப்படுத்த வேண்டியது கார்ல் மார்க்ஸ்க்கு நாம் செலுத்த வேண்டிய கடமையாகும். இப்படிப்பட்ட அநாகரிகப் பொருளாதாரத்தை ஆதரித்து குரல் கொடுப்பவர் நாம் ஆதரிக்கக் கூடிய பிரதமர் என்றாலும் அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

நில உடமையின் இன்றைய பிரச்சினைகள்

பணப்புழக்க பண்பாடு எங்கெனும் பரவி விட்ட 21ஆம் நூற்றாண்டில் நிலம், உணவு, வேலை என்ற பழைய முழக்கங்களை, மீண்டும், மீண்டும் மூச்சு விடாமல் ஜெபிக்கும் மார்க்சிஸ்ட்டுகள் உருப்படமாட்டார்கள் என்று தாராளமய பாடங்களால் பயிற்றுவிக்கப்பட்ட படிப்பாளிகள் கூட்டம் நம்மை ஏகடியம் செய்யலாம்.

உலகமய நாகரீகத்தின் கதாநாயகனாக காட்சி தரும் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷிலிருந்து, அதிரடி அறிவிப்பு முதலிட நாயகி தமிழக முதல்வர் வரை வாரி வழங்குகிற அறிவுரைகளை மண்டையில் ஏற்றிக் கொள்ளாத மரமண்டை மார்க்சிஸ்ட்டுகள் என்று பத்திரிகைகளில் கைவலிக்க எழுதும் மேதைகள் நம்மை ஏசலாம். அந்த மாண்புமிகுகளின் அறிவுரைகள் என்ன?

வறுமை, வறுமை என்று புலம்பாதே பணம் பண்ணு வறுமை ஓடிவிடும்:! பணம் பண்ணுகிற சுதந்திரத்தை உலகளவில் காக்கவே, அணுகுண்டுகளும், அதிரடிப் படைகளும் உலகளவில் சுற்றிவரச் செய்துள்ளேன் என்று ஜார்ஜ் புஷ் கூட்டம் தோறும் பேசுவதை டி.வி.யில் கேட்கலாம்.

தமிழக முதல்வர் அடிக்கடி வலியுறுத்தி பேசுவதென்ன?

உணவுப் பயிர் செய்து வறுமையில் வாடாதே பணப் பயிர் செய்து பணக்காரனாக ஆகு. (அம்மாவிற்கு வரலாறு தெரியாது. பிரிட்டீஷ் வியாபாரிகள்தான் நமது விவசாயிகளைப் பார்த்து உணவுப் பயிர் செய்யாதே, கஞ்சா, அவுரி போன்ற பணப்பயிர் செய் என்று அறிவுரை வழங்கினார்கள். அதன் பிறகு நாம் வேகமாக அடிமையாக ஆனோம்.)

இந்த அறிவுரைகளுக்கும் ரொட்டி கிடைக்கவில்லையா? கேக் சாப்பிடுங்கள் என்று 216 ஆண்டுகளுக்கு முன் உப்பரிகையிலே நின்ற பிரான்சு நாட்டு மகாராணி வீசியெறிந்த அறிவுரைக்கும், ஏகப்பட்ட வேற்றுமைகள் உண்டு என்றாலும் யாரும் மறுக்க முடியாத ஒரு ஒற்றுமை உண்டு. இந்த அறிவுரைகள் எல்லாம், அதிகார போதை தலைக்கேறியதால் ஏற்பட்ட மமதையில் வெளிவந்த உளறல்கள்.

பணம் பண்ணுவதால் வறுமை ஓடிவிடும் என்றால் வங்கிகளிலே புழுத்துக் கிடக்கும் பணம் என்றோ வறுமையை ஓட்டியிருக்க வேண்டும். பணப் பெருக்கத்தை, பணவீக்க வியாதி என்று நிபுணர்கள் கூறமாட்டார்கள். இந்த அறிவுரையின் உள்ளார்ந்த பொருள் என்னவெனில்; நிலத்தையும், தொழிலையும் பயன்படுத்தி உழைப்பாளர்கள் உற்பத்தி செய்யட்டும். அவர்கள் உணவிற்கே அல்லாடட்டும். நீ பணம் பண்ணுவதிலேயே குறியாக இரு என்பதுதான். இந்த உளறல்கள் எதை உணர்த்துகின்றன! நிலம், உணவு, வேலை என்பது  மிக அடிப்படையான சமூக பிரச்சினைகள்.  நிலம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் உயிர் மூச்சு என்பதை உணர்வதற்கே ஒரு ஞானம் தேவைப்படுகிறது.

அதற்கு மேல் இப்பிரச்சினையில் தெளிவைப் பெற வேண்டியிருக்கிறது. தெளிவு இருந்தால்தான் தீர்வுகளை தேட முடியும், அந்த தீர்வும் மக்களின் பங்கெடுப்பில்லாமல் நடைமுறைக்கு வராது. இதையெல்லாம் அதிகார மமதையில் உளறுகிற புஷ்ஷூகளும், அம்மாக்களும் அவர்களது பரிவாரங்களும் புரிந்து கொள்ள மறுக்கிறார்களே என்ற கவலை நமக்கில்லை. ஆனால், பொருளாதார வளர்ச்சியையும், மானுட சமத்துவத்தையும் பிரிக்க கூடாது என்று ஏற்றுக் கொள்ளும் நமது பிரதமர் போன்ற அரசியல் செல்வாக்குள்ள பொருளாதார நிபுணர்கள் கூட மார்க்சிஸ்ட்டுகளை அவதூறு செய்வதில் முனைப்புக் காட்டுகிறார்களே தவிர புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. போதுமான அரசியல் ஆதரவு இல்லையென்றாலும், உலகளவில் அங்கீகாரம் பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் போன்றவர்கள் கூறுவதைக் கூட இவர்கள் செவி மடுப்பதில்லை என்ற கவலை நமக்குண்டு.

பிரதமரானாலும், மார்க்சிஸ்ட்டுகளானாலும் அனைவரும் மக்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். நிலம், உணவு, வேலை ஆகியவைகளின் இன்றைய பிரச்சினைகளையும், அதற்கான தீர்வு தேடும் முயற்சிகளையும் மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது அவசியம் என்று மார்க்சிஸ்ட்டுகளாகிய நாம் கருதியதாலேயே ஒரு பிரச்சார இயக்கம் நடத்த மாநாட்டிலே முடிவு செய்தோம்.

இன்று மனம் விட்டு பேசுகிறபொழுது மக்கள் என்ன பேசு கிறார்கள், பொது இடங்களில் அவர்கள் எதை அலசுகிறார்கள், வம்பளப்புகளில் அதிகமாக அடிபடும் பிரச்சினைகள் என்ன? சங்கடங்களை மறக்க எதைச் சார்ந்து நிற்க தள்ளப்படுகிறார்கள். இவைகளை கவனியுங்கள் எண்ணிக்கையில் பல, பல கோடிகள் இருக்கும். கிராமப்புற ஏழைகளும், நகர்ப்புற ஏழைகளும் ஒன்றுக்காக ஏங்குவது தெரியும்.

தங்களது ஒற்றுமையின் வலிமையை காட்டவல்ல அமைப்பிற்காக ஏங்குகிறார்கள். இன்றைய அரசியல் தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்து நிற்கிறார்கள். சுயநலமிகளும், ஒழுக்கங்கெட்டவர்களும் அரசியலிலே ஆதிக்கம் செய்வதைக் கண்டு குமுறுகிறார்கள். அந்த ஏழைகள் நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம், ஒழுக்கத்தையும் சமத்துவத்தையும் வாய்வீச்சுகளை தாண்டி செயல்படுத்தவல்ல ஒரு அரசியல் கட்சியையே.

அத்தகைய கட்சியைத் தாருங்கள், எங்களது ஒற்றுமை பலத்தால், பொருளாதார வளர்ச்சியையும், சமத்துவத்தையும் இணைக்கும் அற்புதங்களை செய்வோம் என்று அவர்கள் வழியிலே நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.

I

நிலம், உணவு, வேலை இம்மூன்றின் நிலவரங்கள் என்ன? பிரச்சினைகள் என்ன? வரலாற்று ரீதியாக தீராமல் இருக்கும் மூத்த பிரச்சினைகள், புதிய சூழலால் ஏற்படும் புதிய பிரச்சினைகள் எவை, எவை இவைகளை சற்று சிரமப்பட்டு புரிய வேண்டியதிருக்கிறது.

நிலம் என்பது சமூக உழைப்பால் சொத்துக்களை உருவாக்க இயற்கை தந்த சொத்தாகும். ஒரு சமூகத்தில் அதாவது இந்தியாவில் நிலம் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பது மிக அடிப்படையான கேள்வி.

  1. பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களிடையே ஏற்றத் தாழ்வை போக்கி சமத்துவத்தை அடைவதற்கும் உரிய கருவியாக நிலம் பயன்படுத்தப்படுகிறதா? அல்லது
  2. சிலர் சொத்துக்களை சேர்க்க, மக்களின் உழைப்பை சுரண்டும் கருவியாக நிலம் உள்ளதா? அல்லது
  3. சுதந்திரத்தை பறிக்கவும், நாட்டு மக்களின் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைப்பதற்கும் நிலம் ஒரு கருவியாகப் போகும் நிலை உள்ளதா?

இக்கேள்விகளுக்கு பதில் வரலாற்று ரீதியாக அலசினால்தான் கிடைக்கும். இந்தியாவின் வரலாறு கூறுவதென்ன?

வரலாற்றின் ஒரு கட்டத்தில் நிலத்தின் மீது ஆதிக்கம் செலுத்த ஒரு கூட்டம், நிலத்தில் பாடுபடும் விவசாயினர் என வர்க்கப் பிரிவினை எழுந்தது. மக்களின் கூட்டு உழைப்பால் நிலத்தில் விளைபவைகளை வர்ணாஸ்ரம தர்ம அடிப்படையில் மக்களிடையே பகிர்ந்து கொள்ளும் அசமத்துவ பகிர்வு முறை நுழைக்கப்பட்டது.

இந்த வர்ணாஸ்ரம தர்மம், பாவம், புண்ணியம் என்ற மத நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இம்மண்ணில் பிறந்த மனிதர்கள் அனைவரும் சமஉரிமை படைத்தவர்கள் என்பதை மறுக்கும் தர்மம். இந்த தர்மத்தின் மூலம் சொத்துக்களை உருவாக்கும் நிலம் பொதுவானதாக இருந்தாலும், அதில் உருவாகும் விளைச்சல் உழைப்பவனுக்கு இல்லை என்றது. சுரண்டல் தர்மம் தெய்வாம்ச விளக்கங்களால் நிலை நிறுத்தப்பட்டிருந்தது. அன்று நிலம் பொதுவுடைமையாக இருந்ததாக பழைமைவாதிகள் கூறுவர்.

ஆனால் மார்க்சிஸ்ட்டுகள் அந்த வாதத்தை மறுக்கிறார்கள். அன்று மக்கள் தொகை குறைவு; நிலப்பரப்பு முழுவதும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை, நிலவுடைமை என்ற பிரச்சினையே எழவில்லை. வர்னாஸ்ரம தர்மம் சமூக வாழ்வில் புகுந்த பிறகு விவசாயம், ஆடு, மாடு வளர்த்தல், கிராம சுகாதாரம் பேனல் ஆகியவற்றில் நேரடியாக ஈடுபடும் ஆணும், பெண்ணும் பட்டி மாடுகளாக கருதப்பட்டனர். இவர்கள் உணவைப் பெறும் உரிமை இருந்தாலும், விருப்பப்படி செயல்பட முடியாதவர்களாக, சுயமரியாதை அற்றவர்களாக, உழைப்பிற்குரிய பங்கை பெற முடியாதவர்களாக இருந்தனர். எல்லா வகையிலும் உழைக்கும் பெண்கள் நிலை ஆண்களை விட மோசமாக இருந்தது. இந்த பகிர்வுமுறை ஒரு தேக்கத்தை, விளைவித்தது.

வரலாறு இப்படியே நகரவில்லை; வர்னாஸ்ரம தர்மத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் குமுறல்கள் எழுச்சிகள் ஏட்டிலே இடம் பெறாமல் போயிருக்கலாம். ஆனால், வரலாற்றை இழுக்கும் சக்தியாக அவைகள் இருந்தன. அவர்கள் விரும்புகிற திசையில் வரலாறு நகரவில்லை என்றாலும், மார்க்ஸ் குறிப்பிட்டது போல் வரலாற்றில் மாற்றங்காண அவர்கள்தான் காரணமாய் இருந்தனர்.

II

வரலாற்றின் அடுத்த கட்டத்தில் வியாபாரம் செய்ய வந்தவர்கள், நம்மை அடிமையாக்க நிலத்தை கருவியாக்கினர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் நமது சுதந்திரத்தை பறிக்கவும், நமது பொருளாதார வளர்ச்சியை சீர்குலைக்கவும் நிலம் பயன்படுத்தப் பட்டது.

1793 இல் நிரந்தர குடியிருப்புச் சட்டம் என்ற சட்டத்தின் மூலம், நிலவுடைமையை உருவாக்கினர். இதன் மூலம் ஜமீந்தாரி முறையை புகுத்தினர். சில இடங்களில் நிலவுடைமையாளர்களையும் அனுமதித்தனர். நேரடியாக வரி செலுத்தும் உடைமையாளர்கள் என்ற ரயத்துவாரி முறையையும் புகுத்தினர். இதன் விளைவாக வர்னாஸ்ரம தர்ம அடிப்படையில் விளைச்சலில் உள்ள கொஞ்ச நஞ்ச பகிர்வு உரிமையையும் விவசாயத்தில் நேரடியாக ஈடுபடுபவர்கள் இழந்தனர். பண்ணை அடிமைகளாகவும், குத்தகை விவசாயிகளாகவும், உழைப்பாளர்கள் மாற்றப்பட்டனர். ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற கதைபோல் விவசாயிகள் வாழ்வு ஆனது. வர்னாஸ்ரம தர்மம் ஒழிய போராடியவர்கள், அதை விட நிச்சயமற்ற வாழ்விற்கும் உரிமைகள் இல்லாத உழைப்பிற்கும் தள்ளப்பட்டனர். வர்ணாஸ்ரம தர்மம் புகுத்திய ஏற்றத் தாழ்வும் அப்படியே நீடித்தது.

வர்ணாஸ்ரம தர்ம அடிப்படையிலான பகிர்வு முறையே நம்மை பிரிட்டன் நாட்டு ஏகாதிபத்தியவாதிகள் அடிமைப்படுத்திட வழிவகுத்தது. தமிழ்நாட்டில் மூவேந்தர்கள் ஆட்சி காலத்திலிருந்து, பின்னர் வந்த மராட்டிய மன்னர்கள், கிருஷ்ணதேவராயர், நாயக்கர்கள், நவாப்புகள் ஆட்சி காலம் வரை இந்த தர்மமே ஆட்சி செய்தது. இவர்கள் காலங்களில் ஏரி, குளங்கள் மற்றும் மராமத்துப்பணிகள் மற்றும் விவசாயத்திற்குரிய அடிப்படைகள், சமூக உழைப்பால் வீட்டுக்கொரு ஆள் வீதம் பங்கெடுத்து பாதுகாக்கப்பட்டன. ஆனால், நிலத்தில் விளைந்தது மானுட சமத்துவ தர்மத்தை நிராகரித்தே பகிர்வு செய்யப்பட்டன. விவசாயிகள் மற்றும் உழைப்பாளர்கள் ஆட்சியாளர்களால் துன்புறுத்தப்பட்டனர். வெள்ளை ஏகாதிபத்தியம் இந்த நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டது. பெரும்பான்மை உழைப்பாளி மக்களின் ஆதரவு பெறா மன்னர்களை எவ்வளவு விசுவாச படையிருந்தாலும் வெல்வது எளிது என்று கண்டு கொண்டனர். பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகள் கொண்டு வந்த 1793 நிரந்தர குடியிருப்புச் சட்டம் கொண்டு வந்த கொடுமைகள் பல. நிலம் சிலர் கையில் குவிந்தது. சுதந்திரத்திற்கு சற்று முன்னால் உள்ள புள்ளி விபரப்படி கிராமப்புறத்தில் நிலமற்ற விவசாயிகளின் எண்ணிக்கை 70 சதத்தை எட்டியது. 10 சதம் பேர் கையில் நிலம் குவிந்தது.

அந்நிய நிறுவனங்களான ரயில்வே, தேயிலை தோட்டம் போன்ற பங்குதாரர் நிறுவனங்களின் கையில் கையில் பல கோடி ஏக்கர் நிலங்கள் சிக்கின. நிலபிரபுக்களோ, ஜமீந்தார்களோ ஏரி, குளம் மராமத்து ஆகிய பொது வேலைகளை செய்யாமல் கைவிட்டனர். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கிராமப்புற மக்களின் கூட்டுழைப்பால் உருவான விவசாயஅடிப்படைக்குரிய மராமத்து வனப்பாதுகாப்பு எல்லாம் சிதறின. இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் எழுதும் பொழுது நிலத்திற்கு ஏற்பட்ட சீரழிவை குறிப்பிடுகிறார். பிரிட்டீஷ் வருவதற்கு முன்னால் இந்திய மன்னர்கள் மூன்று இலாக்காக்களை கொண்டிருந்தனர். ஒன்று வெளிநாட்டுக் கொள்ளை இலாகா, அதாவது அண்டை நாட்டின் மீது படையெடுத்து அங்கிருப்பதை கொள்ளை அடிக்கும் இலாகா இரண்டாவது உள்நாட்டு கொள்ளை இலாகா, அதாவது நிலத்தில் விளைவதை அபகரிக்கும் இலாகா மூன்றாவது மராமத்து இலாகா அதாவது ஏரி, குளம், கால்வாய் போன்ற பாசன வசதிகள், சாலை வசதிகள் செய்கிற இலாகா.

வெள்ளையர்கள் ஆட்சி புகுந்தவுடன் உள்நாட்டு கொள்ளை, வெளிநாட்டு கொள்ளை ஆகிய இரண்டு இலாக்காக்களை வைத்துக் கொண்டு மூன்றாவது மராமத்து இலாகாவை மூடிவிட்டனர் அல்லது கைகழுவி விட்டனர் என்கிறார்.

பிரிட்டீஷ் அரசு புகுத்திய நிலவுடைமை சட்டத்தாலும், உணவுப் உற்பத்தியை விட பணப்பயிருக்கு முக்கியத்துவம் கொடுக்க தள்ளப்பட்டதாலும், பாசனப் பாதுகாப்பு விரிவாக்கம் செய்யப்படாமல் விடப்பட்டதாலும் பெரும்பான்மையான கிராமப்புற மக்கள் விவசாயத்தை நம்பி நிற்கிற நிலையில் பஞ்சங்கள் வந்தன. பிரிட்டீஷ் வரலாற்று ஆசிரியர்கள், மக்கள் தொகை பெருக்கமே அன்றைய பஞ்சங்களுக்கு காரணங்கள் என்கின்றனர். பஞ்சம் என்பது இயற்கையின் சாபங்களில் ஒன்று என்ற மால்தூசின் கருத்து பரப்பப்பட்டது. இது எதார்த்தமல்ல; இன்றும் வெள்ளமும் வறட்சியும் இயற்கையின் சாபங்கள் என்றே வலியுறுத்துகின்றனர்.

1932-33 வருட புள்ளி விவரப்படி பிரிட்டீஷ் இந்தியாவின் மொத்த பரப்பு 67 கோடி ஏக்கர் ஆகும். இதில் விவசாய உற்பத்திக்கு 23 கோடி ஏக்கர் நிலம் தான் பயன்பட்டது. மீதி 44 கோடி ஏக்கர் கன்னி நிலமாக இருந்தது. விவசாய உற்பத்தி நடந்த 23 கேடி ஏக்கரில் சுமார் ஐந்து கோடி ஏக்கர் நிலம் தான் பாசன வசதி பெற்று இருந்தது. மீதி 18 கோடி ஏக்கர் நிலம் மழையை நம்பி இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் கடைசி காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் யுத்தத்தின் கொடுமையாகும். முதலாளித்துவ உலகமய பொருளாதார தன்மைகளின் விளைவாகும். 1943 இல் இந்த வங்க பஞ்சம் உலகளவு அறிந்த பஞ்சமாக இருந்தது. 30 லட்சம் மக்கள் பட்டினியில் செத்தனர். இக்காலத்தில் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தி கள்ள மார்க்கெட்காரர்கள் பெரும் பணக்காரர்களாயினர்.

பிரிட்டீஷ் வியாபாரிகள் உணவை சண்டையிடும் நட்பு நாடுகளின் ராணுவத்திற்கு ஏற்றுமதி செய்து கொள்ளை லாபம் ஈட்டினர். அவர்களைப் பொறுத்தவரை பஞ்சமும் யுத்தமும், பணம் குவிக்க கிடைத்த வரப்பிரசாதம். மக்களுக்கோ, மரண வேதனை. இந்தப் பஞ்சத்திற்கு முக்கிய காரணம் அரிசி ஏற்றுமதியும் பணவீக்கமும் ஆகும். வங்கப் பஞ்சம் மக்கள் நினைவிலிருந்து அகலக் கூடாது என்று கருதிய வங்க எழுத்தாளர்கள் நெஞ்சை உருக்கும் நாவல்களை எழுதினர். 1973ல் சத்தியஜித்ரே தூரத்து இடி என்ற படத்தின் மூலம் வங்கப் பஞ்சத்தை கண்முன் நிறுத்தினார். மிருனாள் சென் பஞ்சத்தை தேடி என்ற படம் எடுத்தார். மேற்குவங்க மக்களின் புரட்சிகர பண்பாட்டிற்கு இவைகள் வலுவான அடிப்படை போட்டன.

III

பிரிட்டீஷ் அரசின் நிலஉடமை சட்டம், கொண்டு வந்த அவலங்கள் பல வீரம் செறிந்த விவசாயிகளின் போராட்டத்தை தூண்டின. உழுபவனுக்கு நிலம், குத்தகை பாதுகாப்பு ஆகிய இரண்டும் சுதந்திரப் போரின் முழக்கமானது. நாடு விடுதலை பெறாமல், நில உடமையில் மாற்றம் ஏற்படாது என்பதால் சுதந்திரத்திற்காக மக்கள் எழுச்சியுற்றனர். விடுதலை கிடைத்தது ஆனால் வர்ணாஸ்ரம் தர்மத்தை எதிர்த்த போர் எப்படி தோல்வியில் முடிந்ததோ அதுபோல் நிலத்திற்கான எழுச்சியும் தோல்வியில் முடிந்தது. கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையில் விவசாயிகள் நடத்திய இயக்கங்களை பிரிட்டீஷ் அரசைப் போலவே, ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ்காரர்கள் அடக்கினர். அந்த வீரம் செறிந்த வரலாறு ஏழை விவசாயிகளின் குறுதியால் எழுதப்பட்டன. ஏட்டளவில் மறைக்கப்பட்டன. திரித்துக் கூறப்பட்டன.

தெலுங்கானா பகுதி விவசாயிகள் இயக்கம் நாட்டுக்கே முன்உதாரணமாக இருந்தது. உழுபவனுக்கு நிலம், குத்தகை பாதுகாப்பு என்ற சுதந்திரப் போரின் முழக்கத்தை வெற்றிகரமாக அவர்கள் நிறைவேற்றினர். கிராமம் தோறும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்பு உருவாக்கப்பட்டது. நிலப்பிரபுக்களின் நிலம், கோட்பாட்டின் அடிப்படையில் பகிர்வு செய்யப்பட்டது. தவறு செய்யும் உறுப்பினரை கிராம சபை நீக்கி வேறு ஒருவரை நியமித்தது. இந்த நியாயமான, நேர்மையான ஜனநாயக அமைப்பை உருவாக்குவதற்காக அவர்கள் சிந்திய ரத்தம் ஏராளம். உழுபவனுக்கு நிலம் என்ற சுதந்திர முழக்கம். நேர்மையாகவே காங்கிரஸ் தலைவர்களால் முன்வைக்கப் பட்டிருந்தால் தெலுங்கானா விவசாயிகள் செய்ததை நேரு அரசு ஏற்று சட்டப் வடிவம் கொடுத்து நாடு தழுவிய முறையில் கொண்டு வர முயற்சித்திருக்கும். ஆனால் முதல் சுதந்திர அரசு ராணுவத்தை ஏவி தெலுங்கான அமைப்பை குலைத்தது. பல ஆயிரம் கம்யூனிஸ்ட்டு களை கொன்றது. கம்யூனிஸ்ட்டுகளையும், விவசாய சங்க தலைவர்களையும் சமூக விரோதிகளாக வன்முறையளர்களாக சித்தரித்து வரலாற்றையும் எழுதியது. அது நிலச் சீர்திருத்தத்தை வன்முறையில்லாமல் கொண்டுவரப் போவதாக பசப்பியது. பூதான இயக்கம் நடத்தியது.

1951-55 முதல் ஐந்தாண்டு திட்டம் முழுவதும் காங்கிரஸ் அரசு நில உடமை பற்றி ஆய்வு செய்ய கழித்தது. பிரிட்டீஷ் ஆட்சியால் கைவிடப்பட்ட பாசன வசதியை செய்ய திட்டங்கள் அறிவித்தன. இதன் மூலம் அரசே எல்லாம் செய்யும் என்ற பிரமையை ஊட்டினர். மத்திய அரசு நடத்திய ஆய்வின்படி நிலமற்ற விவசாயிகள் பல்கி பெருகிக் கொண்டிருந்தனர். 10 சதம் பேரிடம் நிலம் குவிந்து கிடந்தது. பாசன வசதி திட்டங்களை நிறைவேற்றிய விதம் கள்ளிக்காட்டு இதிகாசமானது! அணை கட்ட பல ஏழை விவசாயிகளின் வாழ்வை பறித்தனர். இதுவும் ஏடறியா வரலறாக ஆக்கப்பட்டது. இரண்டாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் உச்சவரம்பு சட்டம் மாநில அரசுகளால் கொண்டுவர மத்திய அரசு வழிகாட்டியது. ஆறு ஹெக்டரிலிலிருந்து 132 ஹெக்டர் வரை நில உச்சவரம்பு என்று சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதே நேரம் கிராமப்புற ஏழை விவசாயிகளின் சங்க அமைப்புகள் அடக்கப்பட்டன. இவர்களுக்கு தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட்டுகள் வேட்டையாடப்பட்டனர். கட்சியை தடை செய்யாமல் கூட்டம் கூடும் உரிமையை தடை செய்வது, பொய் வழக்கு ஜோடிப்பது, தடுப்புக்காவல் சட்டத்தை பிரயோகிப்பது, விசாரணையில்லாமம் சிறையில் வைப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் சட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இது தவிர நிலப்பிரபுக்களின் எதிர்ப்பு, நிலத்தை கையகப்படுத்து வதற்கான நிதிப்பற்றாக்குறை, நில உடமை ஆவணங்களில் தில்லு முல்லு. ஊழல் நிர்வாகம், போலி சொத்து விற்பனை, போலிப்பங்கீடு, குடும்பத்திற்குள்ளேயே நன்கொடை போன்ற ஆயிரத்தெட்டு தில்லுமுல்லுகள் சட்டத்தை புதைத்து விட்டது. இதைவிட கொடுமை சட்டமே விதிவிலக்கு அளித்தது. தோட்டம், மேய்ச்சல் தளம், பால்பண்ணை இதற்கு விதிவிலக்கு உண்டு என்று சட்டம் கூறியதால் பலகோடி ஹெக்டர் நிலங்கள் விதிவிலக்கு பெற்று நிலப்பிரபுக்கள் கையிலே சிக்கின.

1970ல் நில உச்சவரம்பு சட்டத்தை மேலும் காட்டமாக்கப் போவதாக மத்திய அரசு ஒரு அரசியல் சாகஸம் நடத்தியது. பல மாநிலங்களில் காங்கிரஸ் அரசு பதவி இழந்ததால் இந்த நிலை வந்தது. விதிவிலக்கை வைத்துக் கொண்டே உச்சவரம்பை 10 ஹெக்டர் பாசன வசதி, 22 ஹெக்டர் பாசன வசதியற்ற நிலம் என உச்சவரம்பு நிர்ணயிக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழிகாட்டியது.

1974ல் நீதிமன்றங்கள் மூலம், நிலபிரபுக்கள் உச்சவரம்பு சட்டத்திற்கு தடைபெற்று விடுகிறார்கள்; நீதிமன்றங்களே நிலப் பகிர்வு சட்டப்படி நடப்பதை தடுக்கிறது என அரசு பெரிதாக ஊதி இச்சட்டத்தை அரசியல் நிர்ணய சட்டத்தின் 9வது பிரிவில் சேர்த்து, நீதிமன்றங்கள் சட்டத்தின் ஷரத்துக்களை கேள்வி கேட்க முடியாதவாறு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒரு பக்கம் விவசாயிகளின் இயக்கத்தை சீர்குலைத்துக் கொண்டே மறுபக்கம் நில உச்சவரம்பை அமுலாக்குவதில் அக்கறை இருப்பதாக சாகசம் செய்தது. இதற்கிடையில் விவசாயிகளை சாதி அரசியல், வகுப்புவாத அரசியலில் திருப்பி விடும் முயற்சிகளும் நடந்தன. வெற்றியும் பெற்றனர். உழுபவனுக்கு நிலம் என்ற அரசியல், பொருளாதார அடிப்படை மறக்கடிக்கப்பட்டது.

1980ல் வனப் பாதுகாப்பு சட்டத்தை அரசு கொணர்ந்தது. இதன் மூலம் காலம் காலமாய் வன விளைச்சலை அனுபவித்து வந்த மக்கள் அதிகாரிகளாலும், தொழில் அதிபர்களாலும் விரட்டப்பட்டனர்.

கம்யூனிஸ்ட் கட்சி, பின்னர் அதன் பராம்பரியத்தை உயர்த்திப் பிடித்த மார்க்சிஸ்ட் கட்சி, நில உச்சவரம்பு சட்டத்தின் இரண்டு அணுகுமுறைகளை கொள்கை ரீதியாக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.

உழுபவனுக்கே நிலம் என்ற கோட்பாட்டை இச்சட்டம் வரையறை செய்யாததால்; நேரடியாக விவசாயத்தில் ஈடுபடாத பணக்காரர் களும் நில உடமையாளர்களாக ஆகிறார்கள். இதன் விளைவாக நிலபிரபுக்கள் என்ற நிலத்தை சுரண்டும் கருவியாக்க வழி விடுகிறது. இதனை தடுக்க சட்டம் வழி செய்யவில்லை.

இரண்டாவது குறை கண்மூடித்தனமான விதிவிலக்குகள். சட்டத்தை கேலிக்கூத்தாக்கிவிட்டது. வனப்பாதுகாப்புச் சட்டம் ஆதிவாசிகளை வெளியேற்றும் நோக்கம் கொண்டது. வாழ்வு ரிமையை மறுக்கிறது.

மேற்குவங்கம், கேரளம், திரிபுரா போன்ற மாநிலங்களில் இடதுசாரி அரசுகளின் கைகளை சட்டங்கள் கட்டிப்போட்டன. அவர்கள்சட்டமன்றத்திலே நிறைவேற்றி கொடுக்கிற, திருத்தங்களை மத்திய அரசு ஏற்காமல் கிடப்பில் போட்டன. ஆளுகிற கட்சியாக இருந்தாலும் சட்டத்தை ஏழைகளுக்கு ஆதரவாக அமுலாக்குகிற பொழுது, விவசாய சங்கத் தலைவர்கள், நிலப்பிரபுக்களின் கொடுமைக்கு ஆளாயினர்.

IV

கடைசியாக உலக வங்கி நடத்திய ஆய்வில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளி வந்தன. இந்தியா தான் ஏழைகளின் எண்ணிக்கையில் முதலிடம். 25 கோடி விவசாயிகள், .2 (சுமார் 20 சென்ட்) ஹெக்டேர் நிலத்திற்கும் குறைவான துண்டு துக்காணி நில உடமையாளர்களாக வறுமையில் உழல் கின்றனர். விவசாய உற்பத்தி தேசமொத்த உற்பத்தியின் பங்களிப்பில் குறைந்து கொண்டே போனாலும் நாட்டின் 58 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி இருக்கின்றனர். உழுபவனுக்கு நிலமும் இல்லை; குத்தகை பாதுகாப்புமில்லை. நில உச்சவரம்புச் சட்டங்களால் யாதொரு பயனுமில்லை. கிராமப்புற பெண்கள் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு பண்பாட்டு ரீதியாக உடமை கொள்ளும் உரிமை கிடையாது. சட்டமும் வழங்கவில்லை. கிராமப்புற பெண்களில் 10க்கு ஆறுபேர் கல்வியறிவு பெறாதவர்கள். அந்த உலக வங்கி அறிக்கை கிராமத்தில் இருக்கும் விவசாய குடும்பங்களுக்கு வீட்டுமனையும் அதோடு இணைத்து 2 ஆயிரம் சதுர அடி தோட்டமும், உத்தரவாதம் செய்யப்படுமானால் வறுமையிலிருந்து விடுபட வழிபிறக்கும் என்று கூறியது. எடுத்ததற்கெல்லாம் உலகவங்கி நிபந்தனைகளை காட்டுவார்கள் இதைக்கண்டு கொள்ளவில்லை. உலகவங்கியும் இதனை நிபந்தனையாக வற்புறுத்துவதில்லை.

உலகிலேயே மிகவும் மக்கள் தொகை உள்ள ஒரு நாட்டில் அநியாயமான ஊழல் மலிந்த நில உடமை அமைப்பு உள்ளது. நில உடமையில் நேர்மையான அமைப்பு தான். வன்முறை நிறைந்த சமூக நிலைக்கு மாற்று என்றும் அந்த அறிக்கை கண்ணீரும் வடித்தது. ஆனால் அது முன்வைத்த முக்கிய ஆலோசனை தான் வியாதியை விட கொடூரமான மருந்தாக உள்ளது.

இன்றைய அவல நிலைக்கு காரணம் நில உச்சவரம்பு குத்தகை பாதுகாப்பு சட்டங்களே, அவைகளை நீக்கிவிட வேண்டும்; நிலம் சுதந்திர சந்தையில் விற்கவும், வாங்கவும் வல்ல சரக்காக ஆக்கிவிட வேண்டும். சுதந்திரமான சந்தையே உழுபவன் கையில் நிலத்தை ஒப்படைக்கும் என்கிறது.

மார்க்சிஸ்ட்டுகள் உலகவங்கியின் சந்தைமய கொள்கையை எதிர்க்கிறார்கள். இந்த ஆலோசனைகள் நிலத்தை பொருளாதார வளர்ச்சியையும், மானுட சமத்துவத்தையும் இணைக்கும் கருவி ஆக்காது. மாறாக சிலர் சொத்துச் சேர்க்கவும், நமது சுதந்திரத்தை பறிக்கும் ஏகாதிபத்தியவாதிகளின் கைக் கருவியாக நிலம்போய்விடும். அதற்குப் பதிலாக கிராமப்புற விவசாயிகளின் சங்கங்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் அச்சங்கங்களை அரசு அங்கீகரித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்பு மூலம், தெலுங்கானா விவசாயிகள் உருவாக்கிய அமைப்பை முன்னு தாரணமாக கொண்டு இடதுசாரி அரசுகள் செயல்படுவதுபோல் செயல்பட வேண்டும். அது தான் கலவரமற்ற அமைதியான நிலையான ஆட்சி முறைக்கு வழிவகுக்கும்.

ஒரு முறை மத்திய திட்டக்குழு உறுப்பினர் டாக்டர் கே. வெங்கட சுப்பிரமணியம் ஒன்றை சுட்டிக்காட்டினார். அதனை இங்கே நினைவு கொள்ளலாம்.

மக்கள் தொகை பெருக்கம் அழிவின் அடையாளம் என்ற உயிரியல் விதியை மீறி மக்கள் தொகைமிக்க சீன நிலையாக இருப்பதற்கு காரணம் எது என்பதை சீனாவை ஆய்வு செய்பவர்கள் கூறுவது நில சீர்திருத்தம், இந்தியாவில் நில சீர்திருத்தம் பற்றி நிறையப் பேசி இப்பொழுது எதுவும் செய்ய முடியாது என்று பின்னுக்குத் தள்ளிவிட்டோம் என்கிறார்.

நிலச் சீர்திருத்தத்தை சுதந்திர சந்தை கவனிக்கட்டும் என்ற ஆலோசனைகள் இன்று நடைமுறையில் வந்து கொண்டிருக்கிறது. உலக வங்கி இந்தியாவின் நிலப்பிரச்சினையின் வியாதிகளை சரியாக கணித்தாலும், சுதந்திர சந்தை தான் அதற்கு தீர்வு என்பது நடைமுறையில் அபாயகரமான விளைவை கொண்டு வரும். அது ஏகாதிபத்தியவாதிகளின் ராணுவ தலையீட்டிற்கும், நில உடமையில் ஏகபோக ஆதிக்கத்திற்கும் இட்டுச் சென்றுள்ளது என்பதை தென்அமெரிக்க பாலஸ்தீன அனுபவங்கள் கூறுகின்றன. நடைமுறையில் சரியென்று நிரூபிக்கப்பட்ட வழி என்பது தெலுங்கானா விவசாயிகள் உருவாக்கிய கிராம பஞ்சாயத்து முறையே என்பதை இடதுசாரி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அனுபவங்கள் கூறுகின்றன. அவ்வழிக்கு மக்களை திரட்டுகிற ஒரே கடமை தான் இன்று நம் முன் உள்ளது.

ஏழை விவசாயிகளை சங்கங்களிலே திரட்டிட வேண்டும். வலுவான இயக்கங்கள் மூலம் அரசு அச்சங்கங்களை அங்கீகரிக்க வைக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்பு மூலம் சட்டங்கள் நிறைவேற உத்தரவாதம் செய்ய அரசை வற்புறுத்த வேண்டும்.

சுற்றுச் சூழல் பாதுகாப்பில் பெண்களின் பங்கு!

சுற்றுச் சூழல் பற்றிய ஞானம் இன்றையத் தேவையாகும். ஆண், பெண் சமத்துவத்திற்கு இந்த ஞானம் மிக அவசியமான ஒன்று. ஆணும், பெண்ணும் இணைந்து இந்த ஞானத்தோடு செயல்படும் பொழுதுதான் இயற்கை நமக்கு உதவுகிறது. இல்லையெனில் அதுவே நமக்கு எமனாகிறது. குறிப்பாக பெண்களை கடுமையாகத் தாக்குகிறது. இன்று சுற்றுப்புற சூழல் பற்றி இரண்டு விதமான பார்வைகள் மோதுகின்றன. ஒரு சாரார் கூறுகின்றனர். மனிதன் அறிவியல் தொழில் நுட்பத்தால் இயற்கையை கெடுக்கிறான். இயற்கையை மாற்றுகிற எந்த நடவடிக்கையிலும் மனித சமூகம் ஈடுபடக் கூடாது என்கின்றனர். இவர்களை சுற்றுப்புறச் சூழல்வாதிகள் என அழைப்பர். இன்னொரு சாரார் இது தவறு, மானுட அறிவியல் வளர்ச்சியால் தான் இயற்கையை பாதுகாக்க முடியும், புதிய புதிய தொழில்நுட்பங்களால் மட்டுமே மானுடமும், இயற்கையும் அழியாமல் பாதுகாத்திட முடியும்.

கண் மூடித்தனமான தொழில் உற்பத்தி முறையும் லாபவெறியுமே இன்று இயற்கையை கெடுக்கிறது. மானுட வாழ்விற்கு எமனாகிறது என்கிறார்கள். சுற்றுப்புற சூழல் பற்றிய இரண்டு அம்சங்களை முதலில் மனதில் கொள்ள வேண்டும். இதில் ஏற்படும் மாற்றங்கள் இருவகைப்படும்.

  1. இயற்கையின் உயிரியல், வேதியியல் விதிகளின்படி ஏற்படுகிற மாற்றங்கள்.
  2. மனித சமூகத்தின் செயலால் ஏற்படும் மாற்றங்கள்.

இயற்கை விதிப்படி ஏற்படுகிற மாற்றங்களைத் தவிர மற்றவைகளை ஒழுங்குப்படுத்தும் ஆற்றல் இயற்கைக்கு உண்டு. இந்த மாற்றங்கள் எவ்வாறு நமது வாழ்வை மாற்றுகிறது, எவை, எவை கெடுதலான மாற்றங்கள், அவைகளை சரி செய்ய நாம் என்ன செய்ய வேண்டும் அதிலும் குறிப்பாக பெண்களின் பங்கு என்ன என்பதை இங்கே விவாதிப்போம்.

சுற்றுச் சூழலும், பெண்களும்

மனித குல வரலாற்றின் ஆரம்ப காலத்தில் இருந்தே, சுற்றுச்சூழலுக்கும், பெண்களுக்கும் நெருக்கமான தொடர்பு இருந்து வந்துள்ளது. விவசாயத்தைக் கண்டு பிடித்தவர்கள் பெண்கள். மூல வளங்களை பாதுகாத்து, பராமரிப்பவர்களாகவும், இருப்பவர்கள் பெண்கள். சமையல் செய்வது யார்? பெண்கள் வீட்டைச் சுத்தப்படுத்துவது யார்? பெண்கள் வயல்களில் நாற்று நடுவது, களைபறிப்பது என வேலைகள் செய்வது யார்? பெண்கள், குடிநிர் கொண்டு வருவது யார்? பெண்கள், சுள்ளி, விறகு சேகரிப்பது யார்? பெண்கள், வேதங்களில் கூட இயற்கை பெண்ணாக, சக்தியாக, அதீதியாக, அள்ள, அள்ள குறையா செல்வமாக கருதப்படுகிறாள். இயற்கை வளங்கள் அழியும் போது, பெண் ஓரங்கட்டப்படுகிறாள். (வந்தனாசிவா) பெண்களின் வாழ்க்கை, நீர், காடுகள், நிலம், உயிரினங்களுடன் பின்னிப் பிணைந்தது. ஆனால், பல்வேறு வரலாற்று காரணங்களால், ஆண்களுக்கும், பெண்களுக்கும், சுற்றுச் சூழலுடன் உள்ள உறவுகள் சமமில்லாத வகையில் நிர்ணயிக்கப்பட்டு விட்டன. உற்பத்தி வளங்கள் மேலுள்ள உரிமை, வேலைகளில் தரப்படும் பங்கு, வேலைச் சுமைகள், பிழைப்புக்கான மூலங்கள், உணவு, சுகாதாரம் ஆகிய எல்லாமே பெண்களுக்கு சாதகமாக இல்லை.

சுற்றுச் சூழல் பற்றி பெண்களுக்கு நல்ல அறிவும், திறனும், உழைப்பின் மூலம் பெற்ற அனுபவத்தால் கைவரப்பற்றவர்கள் என்பதை வலியுறுத்த பல சான்றுகள் உள்ளன. உணவுத் தாவரங்களை பயிரிடும் பெண்களுக்கு விதை தயாரிக்க, அவற்றை பாதுகாக்க, தட்ப வெப்ப நிலையின் தன்மையை அறிய முடியும். கிராமப்புற பெண், கால்நடை பராமரிப்பு குறித்த (பசு, எருமை, ஆடு, கோழி, வாத்து வளர்த்தல்) அனுபவமும் அறிவும் நிறைந்தவர்கள். பல்வேறு வகையான எரி பொருட்கள் தரம் குறித்த அறிவு படைத்தவர்கள் பெண்கள். சேகரித்த தாவரங்களின் உணவு மற்றும் மருத்துவத்தன்மை பற்றி அறிந்தவர்கள். இவ்வமையான அறிவும், அனுபவமும் பெண்களின் வாழ்வோடும், கலாச்சாரத்தோடும் இணைந்தவைகளாகவே உள்ளன. இத்தகைய சுற்றுச்சூழல் பராமரிப்பு குறித்த பெண்களின் ஞானம் விரிவுபடுமானால் சமுதாயத்தையும் பாதுகாக்கின்றது. இன்று கண்மூடித்தனமான உற்பத்தி முறைகள் இயற்கையை வெகுவாக பாதித்துள்ளது. இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு இல்லாதவர்களாக முதலாளிகளும், அரசுகளும் இருப்பதால் விஞ்ஞான தொழில்நுட்பம் வளர்ந்தும் நமக்கு உதவவில்லை. இதனால் பலவிதமான பாதிப்புகள் நமது வாழ்வை பாதிக்கின்றன.

சுற்றுச் சூழல் பாதிப்பினால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது யார் என்ற கேள்விக்கு, கோடிக்கணக்கான எழை கிராமப்பற பெண்களும் சேரிகளில் வசிக்கும் நகர்ப்புற பெண்களும் என எந்த தயக்கமுமின்றி பதிலளிக்க முடியும். அந்தப் பெண் இளவயதுடையவரா, முதியவரா கர்ப்பிணிப் பெண்ணா என்று எந்த வித்தியாசமும் இன்றி ஒவ்வொரு நாளும் காலை எழுந்தவுடன் எரி பொருளுக்கும், மாட்டு தீவனத்திற்கும், குடிநீருக்கும் என்ன செய்வதென நடையாய் நடக்க வேண்டியுள்ளது.

உலகமயமாதலும், சுற்றுச் சூழலும்

பெட்ரோல், டீசல் போன்றவற்றை பயன்படுத்துவது அரசியல் பொருளாதார காரணங்களால் தவிர்க்க இயலாமல் போய்விட்டது. இதனால் காற்று மண்டலத்தின் சராசரி வெப்ப நிலை 1.47 செல்சியஸ் உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக பனி உருகி கடல் மட்டம் 9.88 செ.மீ. உயருமென்று கணித்துள்ளன. இது பல நாடுகளின் நிலப்பரப்பை அழிக்கும் தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகள் இந்தியா போன்ற நாடுகளை தங்கள் கழிவுகளைக் கொட்டும் கொல்லைப் புறங்களாகவே பார்க்கின்றன. பசுமைக்குழல் வாயுக்களை அதிகமாக வெளிப்படுத்துகின்றன. 1997இல் ஜப்பானில் உள்ள கியோடோ நகரில் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி பசுமைக்குழல் வாயுவை வெளியிடுவதை குறைத்துக் கொள்வதாக ஏற்றுக் கொண்டும், அதை இன்னும் அமுலுக்கு கொண்டு வராமல் பல தடைகள் உள்ளன. இது போன்றே நீடித்த நிலைத்த காடுகள் பற்றி விவாதம் எழுந்தபோதிலும் முடிவுகள் எட்டப்படவில்லை. காற்றை கெடமால் பாதுகாக்கும் விஞ்ஞானம் தெரிந்தும் அரசியல் பொருளாதார காரணங்களால் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. என்பதையே இது காட்டுகிறது.

சுகாதாரமும், சுற்றுச் சூழலும்

சுற்றுச் சூழல் மாசுபட்டு கெட்டுப் போகும் போது, சுகாதார கேடுகள் விளைகின்றன. நிலங்கள்: நமது நிலங்களில் சுமார் 50 சதம் நிலங்கள் பயிர்விக்கும் சக்தியை இழந்து நிற்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் வளமிழந்த பூமிகளாகிக் கொண்டிருக்கின்றன.

விளைச்சலை அதிகரிக்க ரசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லி மருந்துகளையும் அதிக அளவில் பயன்படுத்துவதால், அதிலிருந்து பயிராகும் பொருட்களை நுகர்வதால் உடலில் நச்சுசேருகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கிறது. இன்று உணவு உற்பத்தியை பெருக்க பூச்சி கொல்லி மருந்து இல்லாத தொழில்நுட்பம் வந்துள்ளது. நீரை சிக்கனமாக பயன்படுத்தும் முறையும் வந்துள்ளது. அதனை புகுத்திட அரசுகள் உதவிட வேண்டும்.

காடுகள் அழிக்கப்படும் போது போதிய அளவு எரிபொருள் கிடைப்பதில்லை. விறகடுப்பு எரிப்பதால் வருகின்ற புகை மூச்சுத் திணறல், ஆஸ்துமா, நுரையீரல் தொடர்பான பல நோய்களுக்கு காரணமாகிறது. ப்ராங்காய்ட்டீஸ் மற்றும் நிமோகோநோய்சிஸ் போன்றவை கிராமத்துப் பெண்களை தாக்குகிறது. நுரையீரல் புற்று நோய்க்கு இந்த புகை மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இண்டர்மீடியர் டெக்னாலஜி டெவலப்மென்ட் க்ரூப் என்ற அமைப்பு வளரும் நாடுகளில் சமைக்கப் பயன்படுத்தும் பொருட்களால் ஏற்படும் புகை 20 நிமிடங்களுக்கு ஒருவர் இறக்க காரணமாக உள்ளது. என தன் ஆய்வு மூலமாக தெரிவித்துள்ளது.

மொத்தம் இறக்கின்றவர்களின் எண்ணிக்கையில் 25 சதம் வீட்டிற்குள் ஏற்படும் மாசு காரணமாக இறக்கின்றனர் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. ஆண்டொண்றுக்கு ஏழை நாடுகளில் 1.6 மில்லின் மக்கள் சமையல் புகையால் அகால மரணமடைகின்றனர். இவர்களில் 1 மில்லியன் குழந்தைகள் என்றும், மலேரியா போன்ற நோய்களால் இறப்பவர்களைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிலக்கரி அடுப்பு காரணமாக நுரையீரல் புற்றுநோய் பெண்களை அதிகம் தாக்குகிறது. ஆஸ்துமா, காசநோய்க்கு இது முக்கிய காரணம்.

கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் வசிக்கும் ஏழைகளின் வீடுகளிலும், மாசு ஏற்படுத்தாத எரிபொருளை பயன்படுத்த இயலாமல் இருப்பது மட்டுமின்றி, காற்று வீசும்படியான நல்ல அறைகளும் இருப்பதில்லை. வயது வந்த பெண்களிடையே, நுரையீரல் தாக்கம் தவிர கார்பல்மோனேல் என்னும் இதய நோய் வருவதற்கு புகை காரணம்.

நவீன எரிபொருட்களான காஸ் மற்றும் மண்ணெண்ணெயுடன் ஒப்பிடுகையில், ஒரு வேளை உணவு தயாரிப்பில் விறகு, சுற்றி போன்றவை கிட்டத்தட்ட 100 மடங்கு மூச்சை தாக்கும் துகள்களை பரப்புகின்றன. சுள்ளி, விறகுகளை பயன்படுத்துவதால், சல்பர்டையாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்றவை வெளிவந்து மாசுபடுத்துகின்றன. சிகரெட் பிடிப்பதனால் ஏற்படும் சுகாதார கேடுகள் இந்த புகையாலும் ஏற்படுகின்றன.

நவீன எரிபொருளை பயன்படுத்தாத குடும்பங்களில் பெண்களுக்கு கர்ப்பகால சிக்கல்களும் ஏற்படுகின்றன. (குறைந்த எடையில் குழந்தைகள் பிறப்பது, இறந்தே குழந்தைகள் பிறப்பது, பிறந்த உடனேயே இறப்பது போன்றவை) கார்பன் மோனாக்சைடுதான் ரத்தக்குழாய்களை பாதித்து பின் தாய் குழந்தை இருவரையும் பாதிக்கிறது.

எரிபொருளை புகை, கண்களை பெரிதும் பாதிக்கிறது. ஊதுகுழலை பயன்படுத்துவதால், கண்களில் நீர் வழிதல், கண்ணெரிச்சல் என ஆரம்பித்து நாட்கள் சென்று கண்பார்வை மங்கத் துவங்குகிறது.

எரிபொருள் பயன்பாடு எப்படி உள்ளது என நோக்கும் போது, கிரமப்புறங்களில் 70 சதம் விறகு மற்றும் சுள்ளியும் 18 சதம் சாணமும், 5 சதத்திற்கு குறைவான குடும்பங்கள் கரி மற்றும் கெரசின் பயன்படுத்துகின்றன. 2 சதம் குடும்பங்கள் காஸ் வைத்துள்ளன. நகர்ப்புறங்களை பொறுத்தவரை விறகு, சுள்ளி 30 சதம். சாணம், 5 சதம் மண்ணெண்ணெய் 26 சதம், காஸ் 30 சதம், மின்சார அடுப்புகளை 9 சதம் குடும்பங்களும் பயன்படுத்துகின்றன. (சௌபர்ண முகர்ஜி).

இன்று புகை மண்டா அடுப்புகள் வந்து விட்டன. ஆனால், அது ஏழைகள் வாங்கும் நிலையில் இல்லை. எரிபொருளில் எண்ணெய் நிலக்கரி போன்றவை விட, விறகு சிறந்த எரி பொருளே. அவைகள் மீண்டும், மீண்டும் உற்பத்தி செய்ய இயலும். காடுகளை பாதுகாப்பது என்பது மரங்களை வளர்ப்பதோடு மட்டுமல்ல அவைகளை மரங்களை பயன்படுத்தவும் வேண்டும். இன்று இலை, தழை மற்றும் காய்கறி கழிவு மீதமான உணவு கூட எரிபொருளாகும் தொழில்நுட்பம் வந்துவிட்டது. இவைகளை வைத்து மின்சார உற்பத்தி செய்ய முடியும்.

வாகனப் புகை

வாகனங்களிலிருந்து வெளிவரும் புகை நம்மை அச்சுருத்தும் ஒரு மாசு என்றால் மிகையாகாது. ஆடம்பரம், பாட்டு, போட்டி, வியாபாரம் என மாறி வரும் காலகட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இயந்திரத்தனமான வாழ்க்கையில் எதிர்கால சந்ததிக்கம் பொருள் சேர்த்து வைக்கும் மனிதர்கள் கொஞ்சம் சுத்தமான காற்றையும் விட்டுச் செல்ல எண்ண வேண்டும்.

வேலைக்குச் செல்லும் நேரத்தில் வாகனங்கள், (இரண்டு, நான்கு சக்கர) சிற்றெரும்புகள் போல ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து செல்வது மட்டுமின்றி அரக்கனைப் போல புகையையும் உமிழ்ந்து கொண்டு போவதால், சுகாதார கேடுகள் விளைகின்றன. இந்தியாவின் பெரிய நகரங்களில் தினமும் 800 – 1000 டன் மாசு காற்று வெளிக்குள் செல்கின்றன. சரக்கு வாகனங்கள் 64 சதவீதம் கார்பன் மோனாக்சைட் வெளியிட்டு மாசுபடுத்துதளில் முதலிடத்தை பெறுகின்றன. சாலை சந்திப்பில் சிகப்பு விளக்க எரியும் போது, என்ஜின்கள் மட்டும் ஓடிக் கொண்டிருக்கும். அவை வெளியிடும் நச்சுப்புகை சுற்றுப்புறத்தை மாசுபடுத்துவதுடன், பச்சை விளக்குக்காக காத்து நிற்போரின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

வாகனப்புகை மனிதனுக்குப் பகை வாகனப் புகையால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்குகின்றன. கண் எரிச்சல், தலைவலி, தொண்டை எரிச்சல் மற்றும் புற்றுநோய் ஏற்படுகின்றன. சுகாதாரமற்ற காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் செயலிழக்கிறது. அது மட்டுமல்ல. பெரும் நகரங்களில் வசிப்போருக்கு தலைமுடி உதிர்தல், தோலில் அரிப்பு போன்றவை எற்படவும் இந்த நச்சுப்புகை காரணமாக உள்ளது. சிலருக்கு வாந்தி, பித்தம் அதிகரிக்கிறது. பெரு நகரங்களில் முகமூடி பயன்படுத்துவது வாகன ஓட்டிகளிடையே அதிகரித்து வருவது என்பது தற்காப்புக்கான நடவடிக்கையே.

தற்போது போக்குவரத்தை சரிசெய்யும் காவலர்களுக்குத் தூய காற்றை பெறுவதற்கு அக்சிஜன் உருளை வழங்க வேண்டும் என்ற ஆலோசனை உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலும், வாகனப் புகையும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் புத்தக பைகளை தோளில் சுமந்து செல்வது போல, ஆக்சிஜன் உருளையை நாம் அனைவரும் சுமக்க நேரிடும் மேலை நாடுகளில் களைப்பை போக்க, உற்சாகம் பெற ஆக்சிஜன் மையங்களுக்கு சென்று சிறிது நேரம் தூய காற்றை சுவாசித்து வருகின்றனர். இந்தியாவிலும், இது போன்ற மையங்கள் துவக்கப்பட்டள்ளன. ஆனால், சாதாரண மக்கள் அங்கு செல்வதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஒரு மணி நேரம் அந்த மையத்தில் இருக்க 500 ரூபாய்க்கும் மேல் வாங்கப்படுகிறது. ஏற்கனவே, சுத்தமான காற்றை சுவாசிக்கும் பகுதிகளில் ஏழை மக்கள் வசிக்க முடிவதில்லை. கையில் காசில்லையெனில் இன்று சுத்த காற்றை சுவாசிக்க இயலாது.

நிரந்தர தீர்வு உண்டு

வாகனப் புகையை கட்டுப்படுத்த வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். பெரும் திரள் மக்கள் போக்குவரத்தை புகுத்த வேண்டும். கார், இரண்டு சக்கர வாகனம் இன்று ஆடம்பரப் பொருளாக இருப்பதால், பல சங்கடங்கள் நேருகின்றன. இது பண்பாட்டு பிரச்சினை. சுற்றுப்புறச் சூழல் பிரச்சினையல்ல! அதாவது கார் இருந்தால் தான் அந்தஸ்து உயரும் என்று கருதக் கூடாது.

கமழி அடுக்கு (ஓசோன் படலம்)

உயிரைக் கொல்லும் சூரிய கதிர்வீச்சுகளில் ஒருவகையான புற ஊதாக் கதிர்கள் பூமியை நோக்கிப் பாய்வதை கமழி அடுக்கு தடுக்கிற்து. இந்த அடுக்கு மட்டும் இல்லையெனில் புறப்பரப்பை அடையும் புறஊதாக்கதிர்கள் வெப்பத்தை அதிகரிக்கும். இதனால் மனித இனமே அழிந்து போகும். ஓசோன் அடுக்கு பூமிக்கு ஒரு குடை போன்று இருந்து நம்மை காக்கிறது. உயிர்களின் மரபுக்கூறான டி.என்.ஏ.யைப் பிளக்கும் வலிமை கதிர்வீச்சுக்கு உண்டு. மனிதர்களின் பேராசையால் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு, கமழி அடுக்கில் ஓட்டைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் 50 ஆண்டுகளில் சுமார் 2 லட்சம் மக்கள் சரும புற்று நோய்க்கு ஆட்படுபவர் என அமெரிக்க சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. பனிமலைகள் உருகி கடற்கரை பகுதிகளில் வெள்ளம், மற்ற பகுதிகளில் வறட்சி, வெப்பம் அதிகரித்தல் ஆகியவை கூடுதலாகும். இதனால் பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்படுமென நாசா நிபுனர்கள் கூறுகின்றனர்.

ஓசோன் அடுக்கில் ஒரு சதம் இழப்பு ஏற்பட்டால் தோல் புற்று நோய் பல மடங்கு அதிகரிக்குமென உலக சுகாதார நிறுவனமும் எச்சரித்துள்ளது. கண்பார்வை இழப்பு வெப்ப நிலை அதிகரிப்பால் ஏற்படும் மற்றொரு அபாயகர விளைவாகும்.

ஓசோன் படலத்தை கெடுக்கும் குளோரா, புளோரா, கார்பன் வேதியல் பொருட்களை குறைவாக பயன்படுத்தும் தொழில்நுட்பம் உள்ளது. இதைப் புகுத்த அரசுகள் தயாராய் இல்லை. இந்து பொருளை தயாரிக்கும் பகாசூர நிறுவனங்களின் லாப வெறியே இன்று ஓசோன் படலத்தை கெடுக்கிறது. இரசாயனத் தொழிற்சாலைகள் அமில ஆவியை காற்று வெளிக்குள் செலுத்துகின்றன.

கடந்த பத்தாண்டுகளில் டெல்லியை சுற்றி ஏற்படுத்தப்பட்ட 40,000 தொழிற்சாலைகளில் 30,00 ஆலைகள் மக்கள் வசிக்குமிடத்திலேயே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6000 டன் கரியமல வாயுவை இந்த ஆலைகள் வெளியேற்றி சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளன.

நச்சுப் புகை மனித உடலில் மூச்செடுப்பின் மூலம் புகுந்து, நுரையீரலைக் கடந்து இரத்த ஓட்ட மண்டலத்தை அடைகிறது. இதனால் கருத்தரிப்பு கோளாறு, குறை பிரசவம், தானாக கரு சிதைதல், உருக்குலைந்த குழந்தை பிறப்பு ஆகிய பிரச்சினைகள் தோன்றுகின்றன.  ஊடி என்ற வாயு கடுமையான எரிச்சலை தருகிறது. மனித உடலில் பெரும் பாதிப்பை உண்டாக்கும் வாயு இது என்றால் மிகையாகாது. இந்த வாயுவின் அடர்வு அதிகரிப்பதற்கேற்றார்போல் விளைவுகளும் அபாயகரமானவை. பார்வை கோளாறு, தலைவலி, கிறுகிறுப்பு, சுயநினைவு இழப்பு, பதைபதைப்பு, மனக்கோளாறு, வாந்தி, ஆகியவை அதிக அளவில் ஏற்படும்.
பெட்ரோல், நிலக்கரியினால் ளுடி2 என்ற வாயு வெளிப்படுகிறது. அமில மழைக்கும் இந்த வாயு காரணம். இந்த வாயு கெட்ட நெடியுடன் கூறியது. ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற சுவாச நோய்களும் இம்பஸிமா என்ற நுரையீரல் நோய் நெஞ்சு சளி, இருமல் ஆகியவை தவிர கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட காரணமாக உள்ளது.

உலோகம் பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகள், காகித ஆலைகள் அருகேயுள்ள சாகுபடியாகும். பயிர்களின் மகசூல் பாதிப்பிற்கு இந்த ஆலைகள் வெளியிடும் ளுடி2 வாயு காரணமாக இருப்பதை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

பல தொழிற்சாலைகள் வெளிவிடும் ழ2ளு என்ற நிறமற்றவாயு  நச்சு நிறைந்தது. அழுகிய முட்டை நாற்றம் உடையது. மூச்சிழுக்கும் போது, அதிக அளவில் சென்றால், கோமா நிலையும், வயதானவர்களுக்கு இறப்பையும் ஏற்படுத்துகிறது. விஷக்கழிவுகளை சுத்தப்படுத்தும் தொழில் நுட்பங்கள் வந்து விட்டன. லாப நோக்கத்தால் முதலாளிகள் புகுத்த மறுக்கின்றனர். அரசும் தலையிட தயாரில்லை.

அமில மழை

வளிமண்டல மாசுகளுடன் நீர்த்துளிகள் சேர்ந்து ரசாயன விளைவுகளை ஏற்படுத்துவதால் அமில மழை பொழிகிறது. இது தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளின் பிரச்சினை என நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். தாவர, விலங்கினங்கள். ஐரோப்பாவில் கடும் பேரழிவுக்கு ஆளானதற்கு காரணம் அமில மழை. இந்தியாவில் டெல்லி, கான்பூர், பூனா, மும்பை, கல்கத்தா, சென்னை ஆகிய பெருநகரங்களில் மேற்கொண்ட ஆய்வுகள் அமில மழை பதிவுகளை தெளிவுபடுத்துகின்றன. அமில மழையால் மண்ணில் உள்ள பல ஊட்டச் சத்துக்கள் (மு, ஊய, ஆப) போன்றவை இழக்கப்படுகின்றன. இதனால், மண் மலட்டுத்தன்மை பெறுகிறது. விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

சுற்றுச் சூழல் பாதிப்பால் சுகாதாரம் பாதிக்கப்படுவதைப் பற்றி கூறும் போது, இந்திய நாட்டின் வரலாற்றில் கரைபடிந்த போபால் விஷவாயு சம்பவத்தை நினைவு கூறாமல் இருக்க முடியாது. இது விபத்தல்ல; ஒரு அமெரிக்க நிறுவனம் விஷவாயுவை போதுமான பாதுகாப்பு இல்லாமல் கூடுதலாக ஒரே இடத்தில் சேமித்து வைத்ததால் வந்த வினை. குளிர்பதனம் செய்யாமல் விடப்பட்டதால் வாயு வெளிக்கிளம்பி நகரையே நாசமாக்கியது.

யூனியன் கார்பைட் பூச்சி மருந்து தொழிற்சாலையிலிருந்து 1984ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி மிதைல் ஐசோசயனைட் என்ற விஷவாயு கசிவு ஏற்பட்டது. இந்த விஷசாயுக் கசிவால் சுமார் 2 லட்சம் போபால் மக்கள் பாதிக்கப்பட்டனர். 5000 பேர் மரணமடைந்தனர். பல ஆயிரம் பேர் பார்வையிழந்தனர். அப்போது கர்ப்பிணிகளாக இருந்தவர்களுக்குப் பிறந்த குழந்தைகளில் மூன்றில் இரண்டு இறந்து விட்டன. இந்த விபத்திற்கு பின் பிறந்த 1350 குழந்தைகளில் 16 குழந்தைகளுக்கு உடல் உறுப்புக்கள் குறைந்தும், 60 குழந்தைகள் முழு வளர்ச்சி அடையாமலும் இருந்ததென மருத்துவர்கள் தெரிவித்தனர். போபாலைச் சுற்றி 3.5 சதுர கிலோ மீட்டர் பரப்பில் தாவரங்கள் மடிந்தன. பயிர்களில் விஷவாயு பாதிப்பு தெரிந்தது. பழ மரங்களிலிருந்து அறுவடை செய்த பழங்களை உண்ண முடியவில்லை. 1985இல் மொத்தம் 2584 நோயாளிகள் விஷவாயு தாக்கி மருத்துவமனைக்கு வந்தனர். 2002ல் இந்த எண்ணிக்கை 4230 என்று உயர்ந்தது.

12 விதமான ரசாயன கலவைகள் பாதிப்புகளை நீண்ட கால அடிப்படையில் ஏற்படுத்தியுள்ளன. இந்த விஷத்தன்மை போக்க தொழில்நுட்பங்கள் இருந்தும் அரசு எதுவும் செய்யவில்லை.

26 ஆய்வறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் மூலம், வலி, மரத்து போதல், வாந்தி, தலைவலி, வயிற்று வலி, வீங்குதல், பைத்தியமாதல் என போபால் மக்கள் மீதான தாக்கம் விளக்கப் பட்டுள்ளது. இதில் கொடுமை என்னவெனில் லாப வெறியால் பாதுகாப்பு ஏற்பாட்டை புகுத்த மறுத்த முதலாளியை இந்திய அரசால் கைது செய்ய முடியவில்லை. அமெரிக்க அரசு அவனை பாதுகாத்தது. இன்று அம்மக்களுக்கு நட்ட ஈடும் போய் சேரவில்லை.

(ஆதாரம் : வரதராஜன் குழு அறிக்கை 1987)

நீர் மாசும், சுகாதாரமும்

தண்ணீர் மிகச் சிறந்த உணவுதான். உணவின்றி மனிதன் 60 நாட்கள் வாழலாம். நீர் மட்டும் அருந்தினால் போதும். ஒருவருக்கு ஒரு நாளில் சராசரியாக 900 மில்லி லிட்டர் வியர்வை வெளியாகிறது. குளிர்காலத்தில், இது குறையலாம். உடல் எடையில் மூன்றில் இரு பங்கு தண்ணீர் வடிவம்தான்.

மனித உடலின் ஆரோக்கியத்திற்கு அடிப்படை தண்ணீர், போதுமான தண்ணீர் அருந்தாவிட்டால் உடல் செல்கள் அனைத்தும் வாழ விடுகின்றன. டாக்டர் பார்டின் என்பவர் உங்கள் உடலுப்புகள் தண்ணீருக்காக அழுகின்றன என்று ஒரு நூலே எழுதியுள்ளார். நெஞ்செரிச்சல், தலைவலி, மூட்டுவலி, முதுகுவலி, உடல் சோர்பு முதலியன பல நேரங்களில் உடலில் நீர்கூறு அகன்றதன் விளைவான பிரச்சினைகளே என்கிறார்.

தண்ணிர் மிகச் சிறந்த கரைப்பான். உடலின் கழிப்பு பொருட்களை வெளியேற்ற தண்ணீர் அவசியம். மருந்து – மாத்திரை போன்ற ரசாயன சிசுக்களையும், செத்துப்போன உடல் செல்களையும் வெளியேற்ற நீர் அவசியம்.

இரத்தத்தில் போதிய அளவு நீர் இருந்தால்தான் மூளைக்கும், உடலின் எல்லா உறுப்புகளுக்கும் போதுமான அளவு ஆக்சிஜனை எடுத்துச் செல்ல முடியும். நீர் வறட்சியால், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்த்துமா ஒற்றைத் தலைவலி, சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படும். முறையாக நீர் அருந்தி வந்தால் நமக்கு ஏற்படும் 75 சதவீத நோய்களை எளிதில் எதிர் கொள்ளலாம்.

பெண்கள் மாதவிடாய் காலங்களில் நன்கு நீர் அருந்த வேண்டும். உடல் தசை நார்கள் நன்கு விரிய போதுமான நீர் வேண்டும். மாத விலக்கு சமயத்தில் கழிவுப் பொருட்களை வெளியேற்றும் உறுப்பாக கருப்பை செயல்படுகிறது.

இப்படி அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ அடிப்படையாக உள்ள நீர் இன்று மாசுபட்டு வணிகப் பொருளாகி விட்டது. நீர் மாசு காரணமாக ஏற்படும் நோய்கள் ஏராளம்.

1947இல் 8 லட்சம் பேர் மலேரியாவால் இறந்தனர். 1965இல் மலேரியாவால் யாரும் இறக்கவில்லை. அது கட்டுப்படுத்தப்பட்டது. மீண்டும் 1985க்குப் பிறகு மலேரியா தாக்குதல் அதிகரித்துள்ளது. மலேரியா நகர்ப்புறங்களில் கூடுதலாக பாதிக்கத் துவங்கியுள்ளது. முன்பு மலேரியாவே இல்லாத இடங்களில் கூட மலேரியா கேசுக்கள் பதிவாகியுள்ளன. 50 சதம் மலேரியா கேசுகள் தமிழகத்தில்தான் என்பது கவலையளிக்கும் விஷயம்.

முன்பு உ.பி. போன்ற மாநிலங்களில் நீரில் ஆர்சனிக் அமிலர் பல மாநிலங்களிலும் இதே நிலை. தோல் புற்றுநோய் வெகுவாக பாதிப்பதற்கு இது காரணம். டெல்லியிலுள்ள அகில இந்திய மருத்துவ நிறுவனத்தின் டாக்டர் நீனா கன்னா இது தொடர்பாக நிறைய ஆய்வுகள் மேற்கொண்டிருக்கிறார். தன்னிடம் வருகின்ற நோயாளிகளை  ரத்த பரிசோதனை செய்த அவர் அதிர்ச்சி அடைந்தார். மற்ற சில மாநிலங்களிலும் இதே நிலை. கைபம்பு தண்ணீரால் தனக்கு புற்றுநோய் வருமென யார் தான் நினைப்பார்கள்?

நீரிலுள்ள நச்சு உடலில் இறங்குவது உடனடியாகத் தெரியாது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இந்த நீரை அருந்தினால் உடலில் மார்பின் மேல், பின்புறம், கைகளில் கருப்பு புள்ளிகள் தோன்றும், டாக்டர்கள் இதை மெலனோசிஸ் (Melanosie) என்கின்றனர். உள்ளங்கைகள், பாதங்கள் சொரசொரவென கடினமாகி, உணர்வற்று போகும். இதற்கு கெரடோசிஸ் (Keratosie) என்று பெயர். தவிர, நோயாளிகளுக்கு கண் சிவந்து போதல், ப்ராங்காயிடிஸ், நுரையீரல் பாதிப்பு, வயிற்று போக்கு. வயிற்று வலி ஆகியவை இருக்கும்.

இரண்டாம் கட்டத்தில் கருப்பு புள்ளிகளுடன் வெள்ளை புள்ளிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. கால்கள் வீங்க ஆரம்பித்து, பாதம் வெடித்து, ரத்தம் கூட வர ஆரம்பிக்கின்றன. இந்த புண்கள் அதிகரித்து, நடக்கவோ, வேலை செய்யவோ இயலாமல் செய்து விடுகின்றன. கைகள் மற்றும் கால்களில் நரம்பு தொடர்பான பிரச்சனைகள் வர ஆரம்பிக்கின்றன.

மூன்றாவது கட்டத்தில் காலை வெட்டி எடுக்குமளவு புண்கள் மோசமாகி, சிறு நீரகம் கல்லீரல் ஆகியவற்றை பாதிக்கின்றன. இறுதியில் புற்று நோயாக மாறுகிறது. ஆர்சனிக் டாக்சிடிசி எனப்படும் நச்சினால் புற்றுநோய்க்கு மருந்து இல்லை. (நீனா கண்ணா AIIMS)

2004ல் நடத்தப்பட்ட ஆய்வு மூலம், கங்கை, பிரம்மபுத்திரா நதிகளை ஒட்டிய பல கிராமங்கள் இப்படி பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ப்ளோரைட் கலந்துள்ள நீரை தொடர்ந்து அருந்துவதால் ப்ளுரோசிஸ் என்ற நோய் தாக்குகிறது. முதல் முதலில் 1937ல் ஆந்திராவில் இந்நோய் தாக்கம் பற்றி தெரிய வந்தது. தற்போது தமிழகம் உட்பட 17 மாநிலங்களில் ப்ளுரோசிஸ் தாக்கம் உள்ளது. முட்டுகள் வீங்குதல், ஈறு வீங்குதல், தோல் தடித்தல் என பல பிரச்சனைகள் எழுகின்றன.

2003ம் ஆண்டு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 979 காலரா கேசுகள் பதிவாகின. இதே போல கடலூர் மாவட்டத்தில் 1981ல் சிப்காட் அமைக்கப் பட்டு, 1990லிருந்து கடலூர் கடுமையாக குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நீர் வளம் அதிகம் கடந்த 10 ஆண்களில் நிலத்தடி நீர் விஷமாக மாறியுள்ளது. ஷாசன் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனம் தான் முக்கிய காரணம்.

இதுபோல காவிரி நீர் மிகவும் மோசமாக மாசுபட்டுள்ளது. க்ளோரினை மிக அதிக அளவில் கலந்து, குடிநீராக விநியோகம் செய்யப்படுகின்றது. க்ளோரின் நீரை தொடர்ந்து உட்கொள்வதால், முடி உதிர்தல், தோலில் வெடிப்பு ஏற்படுதல் போன்ற விளைவுகளை சந்திக்க வேண்டியுள்ளது. குளோரின் நீரிலிருந்து வெளியேறும் தன்மை கொண்டது குளோரின் கலந்த நீரை அகண்டபாத்திரம் சில மணி நேரம் விவாதித்திருக்கலாம். சமீபத்தில் நொய்யல், பவாணி ஆறுகளில் திருப்பூர் சாய ஆலைகளின் கழிவுகள் வெளியே விடப்பட்டு காவிரி நீர் குடிக்க லாயக்கற்றதாகி விட்டது. திண்டுக்கல், திருச்சி தோல் பதனிடும் ஆலைகள், கரூர் சாயப்பட்டறைகள் என ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலத்தடி நீர் மோசமாக பாதிக்கப் பட்டுள்ளது.

உணவும், சுகாதாரமும்

உணவும், சுகாதாரமும் பற்றிய நிபுணர்குழு, கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவில் மக்கள் நுகரும் உணவுப் பொருட்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 57 இந்திய கம்பெனிகளும், 10 பன்னாட்டு கம்பெனிகளும் பூச்சிக் கொல்லி மருந்துகளை தயாரிக்கின்றன. இதற்கான மொத்த சந்தை மதிப்பு 3800 கோடி முதல் 4100 கோடி ரூபாய் வரையாகும். தவிர, 400 சிறு தொழில் யூனிட்டுகளும் பூச்சி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.

அரிசியில் 56 சதம், கோதுமையில் 43 சதம் அன்று பூச்சிக்கொல்லி மருந்து தங்குவதை ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. மாசுபட்ட நிலம், மாசுபட்ட நீர், மாசுபட்ட காற்று இப்படிப்பட்ட பின்னணியில் பயிராகும் தானியங்கள் உடலுக்கு கேடு விளை விக்காமல் என்ன செய்யும்?

இந்தியாவில் மிக அதிகமாக பூச்சிக் கொல்லி இருப்பு தங்கும் பொருட்கள் பழங்கள், காய்கறிகள், மற்றும் பால் ஆகும். சுற்றுச் சூழல் பாதித்து, மாடுகள் நல்ல ஆரோக்கியமான தீவனத்தை உண்ண இயலாததால், பாலின் தரம் மோசமாக உள்ளது. உணவில் எந்த அளவுக்கு பூச்சிக் கொல்லி உள்ளன என்பதை கண்காணிக்க அமைப்புகள் இருந்த போதிலும், நிலமை மோசமாக உள்ளது.

சுற்றுச் சூழல் – சுகாதாரம் – அரசு

வளர்ந்துள்ள நாடுகளில் சுற்றுச் சூழலுக்கு அரசு கணிசமான தொகையை ஒதுக்கீடு செய்வதுடன், சுற்றுச் சூழலை மாசுபடுத்து வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கிறது. சுகாதாரத்தைப் பொறுத்தவரை, வளர்ந்துள்ள நாடுகளுக்கும், பின் தங்கிய நாடுகளுக்கும் இடையே நிறைய இடைவெளி உண்டு.

ஆதாரம்: மனித வள அறிக்கை 2000
வளர்ந்துள்ள 25 நாடுகள் வளரும் நாடுகள் பின்தங்கியுள்ள 45 நாடுகள்
ஆயுட்காலம் 76 ஆண்டுகள் 62.2 51.2
பிரசவ கால இறப்பு (1 லட்சத்திற்கு) 30 488 1100
5 வயதுக்குட்பட்டோர் இறப்பு (1000க்கு) 16 65 171

நாடுகளுக்கிடையே மட்டுமின்றி, இந்தியாவில் மாநிலங்களுக்கிடையேயும் ஏகப்பட்ட ஏற்றத் தாழ்வுகள் இருப்பதை காண முடியும்.

சுற்றுச் சூழல் சட்டங்கள்:

சுற்றுச் சூழல் குறித்து ஏறத்தாழ 200 சட்டங்கள் இருப்பதாக திவாரி கமிட்டி குறிப்பிட்டுள்ளது.

புதிய சுற்றுச் சூழல் சட்டங்கள்

  1. தண்ணீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டம்) 1972
  2. காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டம்) 1981
  3. சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டம் (1986)
  4. பொது பொறுப்புரிமை காப்பீடு சட்டம் (1991)
  5. தேசிய சுற்றுச் சூழல் தீர்ப்பாய சட்டம் (1995)
  6. தேசிய சுற்றுச் சுழல் மேன்முறையீட்டு அதிகாரக் குழுச் சட்டம் (1997)

தண்ணீர் தொடர்பான சட்டம் கழிவு நீரை ஆறு ஓடைகளில் விழுவதை தடுக்க வேண்டும். மீறினால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அந்த நிறுவனங்களின் உற்பத்தியை முடக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரம் உண்டு நடைமுறையில்???

காற்று மாசை தடுக்கும் உரிமை வாரியத்துக்கு உண்டு. 5 ஆண்டுகள் தண்டனை கூட தரலாம். ஆனால், இவற்றை பரிசோரிக்க வேண்டிய ஆய்வாளர்கள் அதிகாரிகள் கண்டுகொள்ளவதில்லை.

இந்த சட்டங்கள் இருந்தும், ஊழல் நிர்வாக அமைப்பால் எதுவும் அமுலாவதில்லை. முதலாளிகளின் லாப வெறியும், ஆடம்பர பொருள் உற்பத்தி பண்பாடும் மாற வேண்டுமானால் மக்கள் இயக்கம் வலுப்பட வேண்டும். மக்கள் இயக்கம் அரசியல் சக்தியாக உயரும் பொழுது தான் மாற்றங்கள் ஏற்படும். இயற்கையும், மனித சமூகமும் இணைந்து வாழ முடியும். அதில் பெண்களின் பங்கு முக்கியம் என்பதை ஆண்கள் உணர வேண்டும். பெண்கள் அமைப்பு எதை உணர்த்த வேண்டும்.

சுற்றுச் சூழலுக்கு கேடுவிளைவிக்காத விவசாய முறைகளை மீட்டெடுக்க வேண்டும். அதற்கான அறிவாற்றலை பெண்களுக்கு அளிக்க வேண்டும். நீர், நில, வன வளங்களை பாதுகாப்பதற்கான சட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கறாராக அவற்றை அமுலாக்க வேண்டும்.

சுகாதார கேடுகளை விளைவிக்கும் ஆலைகள், கழிவுகளை அப்புறப்படுத்த முறையான நடவடிக்கைகள் எடுக்காவிடில் அவற்றின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாட்டை மேம்படுத்த,

  1. தேவையான மருந்துகள்
  2. போதிய அளவு மருத்துவர்கள்
  3. 24 மணி நேர சேவை

போன்றவற்றை உறுதிப்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகள் சுற்றுச் சூழல் பாதிப்பினால் ஏற்படும் சுகாதார பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து உதவி அளிக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள ஏற்ற சூழல் உருவாக்கப்பட வேண்டும்.