தமிழ் நாடு பட்ஜெட் 2022-23: தாராளமய தாக்கம் !

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

இன்றைய பன்னாட்டு சூழல் மிகவும் சவாலானதாக உள்ளது. 2008இல் வெடித்த உலக பொருளாதார நெருக்கடிக்குப் பின் பல ஆண்டுகளாகவே உலக முதலாளித்துவ அமைப்பு மந்த நிலையில் உள்ளது. கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் தொற்றும் அதனையொட்டி அமலாக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும் மந்தநிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. ரஷ்யா – உக்ரைன் போர் பன்னாட்டு பொருளாதார மீட்சிக்கான வாய்ப்புகளை மேலும் குறைத்துள்ளது. ஓரளவு ஏற்றுமதியை சார்ந்துள்ள தமிழ் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு இது பாதிப்பாக அமையும்.

இந்தியாவின் தேசீய பொருளாதார நிலைமை சாதகமாக இல்லை. கடந்த எட்டு ஆண்டுகளாகவே ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் தீவிர தாராளமய கொள்கைகளாலும் 2016 நவம்பர் மாதம் ஒன்றிய அரசு அமலாக்கிய பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அதனையடுத்து அமலுக்கு வந்த குளறுபடியான ஜிஎஸ்டி ஆகியவற்றாலும் விவசாயம், சிறு,குறு தொழில்கள் உள்ளிட்ட முறைசாரா துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஜிஎஸ்டி தாக்குதலாலும் கார்ப்பரேட் கம்பெனிகள் மற்றும் செல்வந்தர்களுக்கு ஒன்றிய அரசு அளித்த வருமானவரி சலுகைகளாலும் மாநிலங்களின் நிதிநிலைமையும் மோசமானது. பெரும் தொற்றும் அதனை ஒன்றிய அரசு எதிர்கொண்ட விதமும் மக்களுக்கும் மாநில அரசுகளுக்கும் எதிராகவே அமைந்தது.

எங்கே ‘திராவிட மாடல்’?

இத்தகைய சூழலில் 2022-23க்கான தமிழ் நாடு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த மார்ச் 18 அன்று தாக்கல் செய்துள்ளார். அவர் தனது உரையில் பல முறை ‘திராவிட மாடல்’ என்று தனது பட்ஜட்டை வர்ணித்துள்ளார். இதன் பொருள் என்ன என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. எனினும் பொருளாதார வளர்ச்சி விகிதம் மட்டுமே இலக்கு என்று இல்லாமல் மக்களுக்கான நலத்திட்டங்களையும் அரசு முன்னெடுக்கும் என்று சிலர் இதை புரிந்து கொள்ளக் கூடும். ஆனால் உண்மையில் தமிழ் நாடு அரசின் பட்ஜட் வளர்ச்சியை ஏற்படுத்த உதவாது. இதர, மக்கள் நலன் சார்ந்த முனைவுகளும் இந்த பட்ஜட்டில் மிகக்குறைவுதான். இதன் பின்புலம் என்னவெனில் நிதி அமைச்சர் ஒன்றிய அரசின் தீவிர தாராளமய கொள்கைகளை பெருமளவிற்கு பின்பற்றுகிறார். அரசின் வரவு-செலவு இடைவெளி இலக்கை அடைவதற்கு செலவுகளை குறைப்பது மட்டுமே வழி என்ற தாராளமய கோட்பாட்டை அவர் ஏற்கிறார். இது பற்றிய விவரங்களை காண்போம்.

பட்ஜட் ஒதுக்கீடுகள் அதிகரிப்பு சொற்பமே

பல்வேறு துறைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகளைப் பார்த்தாலே, மக்கள் நலன் சார்ந்த முன்னேற்றத்துக்கான முக்கியத்துவம் குறைவாகவே இருக்கிறது என்பது புலனாகும். கடந்த பட்ஜெட்டைவிட (2021-22) இந்தப் பட்ஜெட்டில் பெரும்பாலான துறைகளுக்கான ஒதுக்கீடுகள் சிறிதளவே உயர்ந்திருக்கின்றன. சில ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் சில ஒதுக்கீடுகள் பணவீக்க விகிதத்தை விடவும் அதிகமாக, கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. பள்ளிக் கல்விக்கான ஒதுக்கீடு 13.1 சதவீதம் உயர்ந்திருக்கிறது. போன பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 32,599.54 கோடி ரூபாய். இப்போது அது 36,895.89 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அதைப்போல கிராம முன்னேற்றம் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளுக்கான ஒதுக்கீடு 22,738 கோடியிலிருந்து 26,647 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இது 17.2 சதவீத உயர்வு.
ஆனால் பெரும்பாலான மற்ற துறைகளுக்கான ஒதுக்கீடுகளில் உயர்வு எதுவும் இல்லை.

உயர்கல்வித்துறைக்கு இந்தப் பட்ஜெட்டில் 5,668.89 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 5,369.09 கோடி ரூபாய். சுகாதாரம் மற்றும் குடும்ப நலனுக்கு சென்ற ஆண்டு 18,933 கோடி. ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்தப் பட்ஜெட்டில் 17,901.73 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான வீழ்ச்சியை இந்த ஒதுக்கீடுகள் காட்டுகின்றன. சமூக நலன், பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகப் பாதுகாப்பு, ஆதிதிராவிடர் மற்றும் மலைசாதியினர் நலன் ஆகிய துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் உண்மையளவில் குறைந்துள்ளன. அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவது பற்றி பட்ஜெட் மௌனம் சாதிக்கிறது.

வேளாண் துறை சார்ந்த முதலீடுகள் குறைவு

வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, சமச்சீர்வாக, தொடர்ந்து வேளாண்மையை நவீன மயமாக்குவதற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். அதைப்போன்றே அதிமுக்கியமான இலக்குகளை நிறைவேற்றுவதற்காகச் செலவுகளை அதிகப்படுத்தும் முயற்சிகள் என்று எதுவுமில்லை. கிராம வேளாண் தொழிலில் மதிப்புக்கூட்டல் அம்சத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் வளர்ச்சி என்பது பரவலாக்கப்படும்; கிராமப்புற வேலையின்மைப் பிரச்சினை ஓரளவு குறையும். நகர்ப்புற வேலை உத்தரவாதத் திட்டத்தை சரியான சட்டத்தின் ஆதரவோடு நகரப்புறம் முழுவதும் முன்னெடுத்துச் செல்வதற்கான முனைப்பு இல்லை. மகாத்மா காந்தி தேசிய கிராம வேலைவாய்ப்புத் திட்டத்தை வலுப்படுத்தவும் முயற்சி இல்லை.

2021-22 ஆண்டிலேயே சிக்கன நடவடிக்கைகள் மூலம் பற்றாக்குறையை (fiscal deficit) மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 3.8 % ஆக குறைத்துள்ளார் நிதி அமைச்சர். பதினைந்தாவது நிதி ஆணையம் அனுமதித்துள்ள 4.5% என்பதை பயன்படுத்தி வளர்ச்சிக்கான முதலீடுகளை அதிகமாக செய்திருக்க முடியும். வரும் 2022-23 ஆண்டிலும் கூடுதலாக மூலதனச் செலவுகளை மேற்கொண்டிருக்க முடியும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்கு நிவாரணத்தை கூட்டவும், கிராக்கியை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க நிதி அமைச்சர் தவறி விட்டார்.

பதுங்கியிருக்கும் தாராளமய கோட்பாடு

இந்த விளைவுகள் எல்லாம், நிதிநிலையைப் உறுதிப்படுத்துவதற்கான ‘அவசர’ தேவையைப் பற்றி நிதியமைச்சர் சொன்ன கருத்துடன் ஒத்திசைவானவை. உள்நாட்டு உற்பத்தியில் சதவிகிதப் பங்கு என்ற அலகில் கடன்களைக் குறைத்தல், நிதிப்பற்றாக்குறையைச் சரிசெய்தல் ஆகியவை நிதிநிலையைப் உறுதிப்படுத்தும் அம்சங்கள். 2021ஆம் ஆண்டு ஆகஸ்டில் தனது பட்ஜெட் உரையில் பிடிஆர் இப்படிச் சொன்னார்: “நிதிநிலையைப் பலப்படுத்துதல் என்பது அடிப்படைக் கொள்கை. தமிழ்நாடு நிதிப்பொறுப்பு சட்டம் சொல்லும் விதிகளை தொடர்ந்து பின்பற்றி, இனி வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறையைக் குறைக்கும் இந்த மாநில அரசு. அதே சமயம், வளர்ச்சி சம்பந்தப்பட்ட செலவுகளுக்காக முதலீடும் செய்யப்படும்.”
இதிலிருக்கும் பிரச்சினை என்னவென்றால், நலத்திட்டங்களுக்கும், ‘வளர்ச்சித்’ திட்டங்களுக்கும் இடையில் இருப்பதாகச் சொல்லப்படும் முரண்பாடு.

கல்வி மட்டுமல்ல; உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பும் மனித மேம்பாட்டுக்கு உதவும். இத்தகைய முதலீடுகள் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்குச் சம்பந்தமில்லாதவை என்று ஏன் கருதப்படுகிறது? “பொருளாதாரக் கோணத்தில் பார்க்கும்போது, சமூகநலனும், ஒட்டுமொத்தப் பொருளாதார முன்னேற்றமும் சமன்படுத்தி கொண்டு செல்ல வேண்டிய இரண்டு (எதிர்மறை) பக்கங்கள்,” என்று தனது பட்ஜெட் உரையில் பழனிவேல் தியாகாராஜன் சொல்லியிருந்தார். இப்பார்வையில் சிக்கல் உள்ளது.

மக்கள் நலன் காக்கும் செலவுகள் வளர்ச்சிக்கு எதிரானதா?

ஏன் சமூகநலன் சார்ந்த செலவுகள் பொருளாதார வளர்ச்சிக்கு எதிராகவே வைக்கப்படுகிறது? சமூகநலத் திட்டங்கள் ஆட்சியாளர்களின் கருணைச் செயல்களாகவே ஏன் பார்க்கப்படுகின்றன? ‘உணவு, உடை, உறைவிடம், கல்வி, ஆரோக்கியம் ஆகியவை நாகரிகமடைந்த ஒரு சமூகத்தில் மக்களின் உரிமைகள்’ என்று பார்க்கப்பட வேண்டும். ‘பெரிய மனதுடன்’ அரசு அளிக்கும் கொடைகள் அல்ல இவை. பிரச்சினை என்னவெனில் ’புதிய தாராளமயக் கொள்கை’ என்பது ‘சமூக நலனோடும்’ ‘அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியோடும்’ ஒத்துப்போவதில்லை. சமூகநலனையும் உள்ளடக்கிய, ஒட்டுமொத்த, ஜனநாயகத் தன்மை கொண்ட வளர்ச்சியை முன்னெடுப்பதும் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை என்ற பார்வைக்கும், ஜனநாயக அரசாங்கத்தை ‘திறமையான’ முதலாளித்துவ தாராளமய பொருளாதாரத்திற்கு பெருந்தடையாக, தொல்லையாகப் பார்க்கும் புதிய தாராளமய சித்தாந்தத்திற்கும் இடையில்தான் உண்மையான போராட்டம் நிகழ்கிறது.

புதிய தாராளமய அமைப்பில் ஏற்படும் ‘வளர்ச்சி’ கொழுத்த நிதி மூலதனத்தின் நலன்களை மட்டுமே முதன்மையாகக் கவனித்துக் கொள்வதும், அதனால் சமத்துவமின்மையும், உழைக்கும் வர்க்கத்தினரின் பெருந்திரள் வறுமையும் அதிகரிப்பதும் உலகம் முழுவதும் காணப்படும் போக்குதான். அதற்காக வளர்ச்சியே வேண்டாமென்று பொருளல்ல. அந்த வளர்ச்சி மக்களுக்கு அதிகாரம் வழங்குவதாகவும், மக்களின் அடிப்படை மனித உரிமைகளை, பொருளாதார, சமூக, அரசியல் உரிமைகளை நிறைவேற்றுவதாகவும் அமைய வேண்டும் என்பதுதான் முக்கியம்.

உண்மை என்ன?

நாம் வாழும் இந்தக் காலகட்டத்தில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா தொற்றுப்பரவலின், ஊரடங்குகளின் கடுமையான விளைவுகள் மட்டுமல்ல; பொருளாதார வளர்ச்சி மந்தம், வேலையின்மை அதிகரிப்பு, சீறி உயரும் விலைவாசி ஆகியவையும் மக்களை வாட்டி வதைக்கின்றன. மேலும், முறைசாராத் துறையை சீரழித்த 2016-ஆம் ஆண்டின் பணமதிப்பிழப்பு என்ற நாசகார நடவடிக்கையும், 2017ஆம் ஆண்டு ஜிஎஸ்டி படு தோல்வியும், கடந்த ஐந்து ஆண்டுகளாக கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஏற்படுத்திய துன்பம் மக்களை பாடாய்ப்படுத்துகிறது.

2017-18-க்கான உழைப்பு படை ஆய்வும், 2017-18-க்கான நுகர்வோர் செலவு ஆய்வும், 2018-19 ஆண்டை மையப்படுத்தி இந்தியாவில் கிராமப்புறங்களில் இருக்கும் வேளாண் குடும்பங்களின் நிலையைப் பற்றி சமீபத்தில் வந்த தேசிய மாதிரி ஆய்வும் மக்களிடையே பரவலாக நிலவும் துயரத்தை, வாங்கும் சக்தி இழப்பை, வெளிக்காட்டின. மற்ற சில மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழ்நாடு பரவாயில்லைதான். ஆனாலும் கிராமப்புற தமிழ்நாட்டு வேளாண் வீடுகளில் சராசரி மாத வருமானம் பற்றிய தேசிய மாதிரி ஆய்வு தரும் தகவல்களில் இருந்து, அந்தச் சராசரி வருமானம் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதை அறிய முடிகிறது. அறிவுபூர்வமாக வறுமையை ஆராய்ந்து உருவாக்கப்பட்ட எந்த வரையறையின்படி பார்த்தாலும், கணிசமான அளவு கிராமத்து மக்கள் ஏழைகள்தான் என்பது அந்த ஆய்வு உணர்த்தும் செய்தி.

ஆண்டுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7 அல்லது 8 சதவீதம் வளர்ந்திருக்கிறது என்று பல ஆண்டுகளாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்தபின்பும் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. இதைப் பார்க்கும்போது மனதில் தோன்றுவது இதுதான்: நமக்கு வளர்ச்சி வேண்டும் நிச்சயமாக. ஆனால் அந்த வளர்ச்சி வேறுவிதமாக இருக்க வேண்டும்.

எத்தகைய வளர்ச்சி தேவை?

கிராம முன்னேற்றம், கல்வி முன்னேற்றம், ஆரோக்கியம் பேணுதல் ஆகியவை மிக அவசியம். கிராமப்புறத்து, நகர்ப்புறத்து உட்கட்டமைப்பு, மற்றும் வேளாண் துறை ஆகியவற்றில் பொதுமுதலீடுகளை அதிகரிக்க வேண்டும். முழுமையான நில மறுவிநியோகமும், சிறுகுறு விவசாயிகளுக்கு அரசின் திட்டமிட்ட உதவிகளும் அவசியம். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு முக்கியத்துவம் தந்து, வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு நிதி அடிப்படைவாதத்தைக் கைவிடுவதோடு, பெருமுதலாளி நிறுவனங்கள் மீதும் பெரும் செல்வந்தர்கள் மீதும் உரிய வருமான வரிகள் விதிக்கப்பட்டு, கறாராக வசூலிக்கப்பட வேண்டும். அதைப்போலவே முக்கியமானது, ஒன்றிய அரசிடமிருந்து மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் நிதிவளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டம் வரையறுத்திருப்பது போல இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியமாக கட்டமைத்துக் கொள்வதற்கு ஒரு பெரும் போராட்டம் வேண்டியிருக்கிறது.

முன்மாதிரி நடவடிக்கைகள் எங்கே?

அண்மை காலங்களில் ‘திராவிட மாடல்’ என்ற சொற்றொடர் பலரால் பயன்படுத்தப்படுகிறது. பிரபலம் அடைந்துள்ளது. எனினும் இதன் பொருள் துல்லியமாக வரையறுக்கப்படவில்லை. அண்மையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெரும் வெற்றி பெற்ற பொழுது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் நாடு முதல்வர் இந்த வெற்றி ‘திராவிட மாடல்’ பெற்ற வெற்றி என்று பொருள்பட கூறினார். இது அரசியல் களத்தில் கிடைத்த தேர்தல் வெற்றியை முன்வைத்து சொல்லப்பட்டுள்ளது. சிலர் திராவிட மாடலுக்கு கொடுக்கும் விளக்கம் இது பொருளாதார வளர்ச்சியையும் வறுமை ஒழிப்பு உள்ளிட்டு நலிந்தவருக்கு சமூக பாதுகாப்பையும் அளிக்கும் தனித்தன்மை வாய்ந்த வளர்ச்சிப் பாதை என்பதாகும். ஒரு சிலர் இன்னும் ஒருபடி மேலே சென்று இதுதான் நாட்டுக்கே பொருத்தமான பாதை என்று முழங்குகின்றனர்.

‘திராவிட மாடல்’ பற்றிய விரிவான விளக்கமும் விவாதமும் தமிழ் நாடு பட்ஜெட் பற்றிய இக்கட்டுரையின் வரம்பிற்கு அப்பாற்பட்டது. நவீன தமிழ் நாட்டின் முக்கிய சிற்பிகளில் ஒருவரான பெரியார் அவர்களின் தலைமையில் வளர்ந்த திராவிட சமூக சீர்திருத்த இயக்கத்தின் மகத்தான ஜனநாயகப் பங்கை அங்கீகரிப்பது மிகவும் அவசியம். எனினும், பொருளாதாரக் கொள்கைகளை பொறுத்தவரையில், திராவிட கட்சிகள் என்று தங்களை கருதிக் கொள்ளும் கட்சிகள் கடந்த ஐம்பத்து ஐந்து ஆண்டுகளாக தமிழ் நாட்டு ஆட்சியாளர்களாக செயல்பட்டு வந்துள்ளனர் என்பதையும், குறிப்பாக கடந்த முப்பது ஆண்டுகளாக தீவிரமான தாராளமய கொள்கைகளை அமலாக்கிவரும் ஒன்றிய அரசாங்கங்கள் அனைத்திலும் இக்கட்சிகள் மாறி மாறி நேரடியாக பங்கேற்று அல்லது ஆதரித்து வந்துள்ளனர் என்பதையும், புறந்தள்ள இயலாது. பாராளுமன்றத்தில் தாராளமய கொள்கைகளுக்கும் அவற்றை அமலாக்கிட முன்மொழியப்பட்ட பல மசோதாக்களுக்கும் திராவிட கட்சிகள் ஆதரவு தந்து வந்துள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது.

அரசு தரும் புள்ளிவிவரக் குறியீடுகள்படி கல்வி, ஆரோக்கியம் உள்ளிட்ட துறைகளில் பல மாநிலங்களை விட தமிழ் நாடு முன்னேறியுள்ளது என்பது உண்மை. நவீன பெரும் தொழில் வளர்ச்சியிலும் ஒப்பீட்டளவில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழ் நாடு திகழ்கிறது என்பதும் உண்மை. ஆனால் ஒன்றிய அரசின் அங்கமாக, அல்லது அதற்கு ஆதரவாக இருந்ததால் பல மக்கள் விரோத தாராளமய கொள்கைகளை அமல்படுத்தும் அரசுகளாக அடுத்தடுத்து வந்த திராவிட கட்சிகளின் அரசுகள் இருந்தன என்பதும் உண்மை. இதனால் நகரப்பகுதிகளிலும் கிராமப்பகுதிகளிலும் பரவலாக வறுமை தொடர்வதை தடுக்க இயலவில்லை. கிராமப்புற விவசாயக் குடும்பங்களின் வாழ்நிலை பற்றி ஒன்றிய அரசின் புள்ளியியல் நிறுவனம் நடத்திய 2018-19 ஆண்டுக்கான ஆய்வு பெரும் தொற்றுக்கு முன்பே இக்குடும்பங்களின் சராசரி மாத வருமானம் மிகக் குறைவாக இருந்தது என்பதை தெரிவிக்கிறது.

பொது உடமை இயக்கத்தின் தீவிர போராட்டங்களாலும் முயற்சிகளாலும் நில மறுவிநியோகம் உள்ளிட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் நடந்துள்ளன என்றாலும், நில விநியோகம் தமிழ் நாட்டின் ஜனநாயக இயக்கங்களின் தொடரும் சவாலாகவே உள்ளது. அண்டை கேரள மாநிலத்தில் நிலசீர்திருத்தம் பொது உடமை இயக்கத்தின் தலைமையில் மிகப்பெரிய மக்கள் இயக்கமாக நடந்தது. பெண்-ஆண் சமத்துவத்திற்கும் சமூக ஒடுக்குமுறைகளை தகர்க்கவும் முக்கிய பங்கு ஆற்றியது. புகழ்பெற்ற பொருளியல் அறிஞர் பேராசிரியர் அமர்த்யா சென் ஒருமுறை நவீன ஆசியாவில் வளர்ச்சி என்ற சவாலில் சாதனை புரிந்துள்ள நாடுகளாக ஜப்பான், மக்கள் சீனம், தாய்வான் மற்றும் தென் கொரியா ஆகியவற்றை குறிப்பிட்டு, இந்நாடுகளின் ஒரு பொது அம்சம் இவை அனைத்தும் முழுமையான நிலசீர்திருத்தம் நடைபெற்றுள்ள நாடுகள் என்பதை சுட்டிக் காட்டுகிறார். இந்த அனுபவங்கள் தமிழ் நாட்டு வளர்ச்சி பற்றிய விவாதத்திற்கும் வெளிச்சம் தரும்.

நீண்ட காலமாக சமூகநீதி பொதுவெளியில் உரக்கப் பேசப்பட்டும் சமூக ஒடுக்குமுறைகளும் சாதி மறுப்பு திருமணங்களை ஏற்க மறுக்கும் சமூக விழுமியங்களும் தமிழகத்தில் ஏன் தொடர்கின்றன என்பவை போன்ற கேள்விகளையும் தமிழ் நாட்டு ஜனநாயக இயக்கங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

நிதி அடிப்படைவாதம் உதவாது

ஒரு ஆண்டுக்கான தமிழ் நாடு பட்ஜெட் பற்றிய பரிசீலனை என்பதை ஒரு வரம்பிற்குள் தான் செய்ய முடியும். அதில் திராவிட மாடலை தேடுவதோ, அது இல்லை என்று சொல்வதோ, இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. நாம் சொல்வது என்னவென்றால், தமிழ் நாடு நிதி அமைச்சர் ஒன்றிய அரசும் பதினைந்தாவது நிதி ஆணையமும் முன்வைக்கும் நெறிமுறைகளை தட்டிக் கேட்க வேண்டும் என்பதுதான். தனது பட்ஜெட் உரையிலேயே நிதி அமைச்சர் ஒன்றிய அரசின் மாநில உரிமை பறிப்பு அணுகுமுறையை விமர்சித்துள்ளார். ஒன்றிய அரசிடம் இருந்து மாநிலத்துக்கு சட்டப்படி அளிக்கப்படும் தொகைகளை நிபந்தனையின்றி அளிக்க வேண்டும் என்றும் கோரி இருக்கிறார். இதுபோல் ஒன்றிய அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகளை ஒத்த கருத்துள்ள மாநில அரசுகளுடன் இணைந்து எதிர்க்க தமிழ் நாடு அரசு முன்வர வேண்டும்.

நிதி அமைச்சர் கவனத்திற்கு இன்னும் ஓரிரு விஷயங்களை முன்வைக்க வேண்டியுள்ளது. பெரும் தொற்றுக்கு முன்பிருந்தே பெரும் சிக்கலில் உள்ளவை தமிழ் நாட்டின் சிறுகுறு தொழில்கள். இவை கணிசமான அளவில் தொழில் உற்பத்திக்கும் ஏற்றுமதிக்கும் பங்காற்றுபவை. மேலும் பெரும் தொழில்களைவிட குறைந்த முதலீட்டில் கூடுதல் வேலை வாய்ப்புகள் தருபவை. நகர்ப்புற வேலை திட்டத்தை முழுமையாக விரிவுபடுத்தி, சிறு,குறு தொழில்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் தொழிலாளர்களுக்கு தரப்படும் கூலியில் ஒருபகுதியை இந்த வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் மானியமாக வழங்கலாம். கேரள அனுபவத்தை உள்வாங்கி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரங்கள், நிதி மற்றும் பணியாளர்கள் தந்து உதவலாம். இது ஜனநாயக பங்கேற்புக்கான வாய்ப்புகளையும் மக்களுக்கு அளிக்கும்.

வேளாண் துறையில் விரிவாக்கப் பணி அமைப்பையும் ஆராய்ச்சி அமைப்பையும் வலுப்படுத்துவதுடன், போதுமான அளவில் விளைபொருட்களை நல்ல விலையில் விற்கும் வகையில் வேளாண் விளைபொருள்களை சந்தைப்படுத்தும் குழுக்களின் எண்ணிக்கையையும் செயல்பாட்டு திறனையும் உயர்த்த உரிய ஒதுக்கீடுகள் செய்யலாம். இங்கே நாம் குறிப்பிட்டிருப்பவை சில எடுத்துக்காட்டுகளே.
நிதி அடிப்படை வாதத்தை புறம் தள்ளி மக்கள் சார் அணுகுமுறையை பின்பற்றி தமிழ் நாடு மேலும் முன்னேற நம் முன் வாய்ப்புகள் உள்ளன.

மோடி அரசின் மோசடி பட்ஜெட் 2019

வெங்கடேஷ் ஆத்ரேயா

பாஜக தலைமையிலான மத்திய அரசு இன்னும் இரண்டே மாதங்களில் காலாவதியாக உள்ளது. இந்த நிலையில் தேர்தல் நடந்து புதிய அரசாங்கம் அமையும் வரையிலான, வரும் 2019-20 நிதியாண்டின் முதல் மூன்று மாதங்கள் வரை, அரசு நடத்துவதற்கான வரவு செலவு திட்டம் முன்வைக்க  மட்டுமே இந்த அரசுக்கு அதிகாரம் உண்டு. இதனை ஏற்று,  நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே சமர்ப்பிக்க உள்ளோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, பின்னர் அதை மீறி 2019-20 நிதி ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை மத்திய அரசின் சார்பாக பொறுப்பு நிதி அமைச்சர் பியூஷ் கோயல் சமர்ப்பித்துள்ளார். நடப்பு ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்திலும் மாற்றங்களை செய்துள்ளார். கொடுத்த வாக்குறுதிகளை மீறுவதும்  அவற்றை செயல்படுத்த மறுப்பதும் பாஜகவிற்குப் புதிதல்ல.

இருபெரும் பிரச்சினைகள்

இன்று இந்திய மக்கள் எதிர்கொள்ளும் இருபெரும் பொருளாதார பிரச்சினைகள் தொடரும் தீவிர வேளாண் நெருக்கடியும் கடுமையான வேலையின்மையும் ஆகும். இவை பற்றி பட்ஜெட் என்ன சொல்லுகிறது?

 கடந்த இரண்டு ஆண்டுகளாக பாஜக செல்வாக்கு பரவலாக உள்ள சில வட இந்திய மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் இரு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து அகில இந்திய விவசாய சங்கம் எழுச்சிமிக்க மக்கள்திரள் போராட்டங்களை நடத்தி வந்துள்ளது. 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள்  ஒன்றிணைந்து தில்லியில் வரலாறு காணாத பேரணியை நடத்தின. ஐந்து வட மாநிலங்களில் பாஜக அரசுகள் தூக்கி எறியப்பட்டன. விவசாயிகள் முன்வைத்த இருமுக்கிய கோரிக்கைகளில் ஒன்று கடன் ரத்து, மற்றொன்று வேளாண் விளைபொருட்களுக்கு பேராசிரியர் சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம் பரிந்துரைத்த சூத்திரத்தின் அடிப்படையிலான விலையில் அரசு கொள்முதல்.

 கடன் ரத்து கோரிக்கையை மத்திய அரசு பட்ஜெட் உரை முற்றிலும் புறக்கணித்து உள்ளது. விளைபொருள் கொள்முதல் விலை பற்றி முற்றிலும் தவறான தகவலை பட்ஜெட் உரை முன்வைக்கிறது. விவசாயிகள் வெளிப்படையான செலவுடன் அவர்களது உழைப்புக்கு பணமதிப்பு கணக்கிட்டு, நிலவாடகைக்கும் கணக்கிட்டு, விவசாயிகள் போட்டுள்ள முதலுக்கான வட்டியையும் கணக்கிட்டு இவற்றை கூட்டி கிடைக்கும் தொகையுடன் அதில் பாதி அளவை சேர்த்து வரும் தொகை தான் சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைக்கும் கொள்முதல் விலை. இதை கொடுக்கிறோம் என்று 2014 தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் உச்சநீதி மன்றத்தில் இது இயலாது என்று அறிவித்தது பாஜக அரசு. பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளின் விவசாயப் பேரெழுச்சிக்குப்பின் சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரை அடிப்படையில் கொள்முதல் விலை கொடுத்துவிட்டோம் என்று பட்ஜெட் உரையில் கூறப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான தகவல் ஆகும். உண்மையில் நிலவாடகை, முதலுக்கான வட்டி ஆகியவை அரசு சொல்லும் விலையில் இடம் பெறவில்லை.

இப்படி உண்மைகளை மறைத்துக்கொண்டே, இரண்டு  ஹெக்டேருக்கு குறைவாக நிலம் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் நேரடியாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் நிதி அமைச்சர். நடப்பு ஆண்டில் இருந்தே இத்திட்டம் துவங்கும் என்றும் நடப்பு ஆண்டில் இதற்கென ரூபாய் 20,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இது விவசாயிகளுக்கு அரசு அளிக்கும் மாபெரும் வரம் என்ற பாணியில் ஆளும் கட்சி ஆசாமிகள் பிரச்சாரம் செய்கின்றனர். உண்மை என்ன? பயன்பெற தகுதியுள்ள குடும்பங்களை முதலில் எடுத்துக்கொள்வோம். ஆண்டுக்கு 6000 ரூபாய் என்றால் மாதம் 500 ரூ. தினசரி என்று பார்த்தால் ஒரு குடும்பத்திற்கு 17 ரூபாய்க்கும் குறைவு. ஐந்து உறுப்பினர் கொண்ட குடும்பத்திற்கு நபர் ஒருவருக்கு ரூபாய் 4 க்கும் குறைவு. இதையா விவசாயிகள் கேட்டார்கள்?

கட்டுபடியாகும் விளைபொருள் விலை, கடன் ரத்து, நிலச்சீர்திருத்தம், விவசாயத்தொழிலாளர்களுக்கு நியாயம் வழங்குதல், வேளாண் துறைக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், வேளாண் விரிவாக்க அமைப்பையும் ஆராய்ச்சி அமைப்பையும் வலுப்படுத்துவது  என்பதையெல்லாம் ஆட்சிக்காலம் முழுவதும் புறக்கணித்து விட்டு, விவசாயிகளை கேவலப்படுத்தும் வகையில் 2 ஹெக்டேர் மற்றும் அதற்குக் குறைவாக நிலம் உள்ள விவசாயிகளுக்கு நாளொன்றிற்கு நபர் ஒருவருக்கு ரூபாய் 3 சொச்சம் தரும் “திட்டத்தை” விவசாயிகளுக்கு வரப்ரசாதம் என்பதுபோல் பட்ஜெட்டில்  அறிவித்திருப்பது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சும் வகையில் அமைந்துள்ளது.

இதுமட்டுமல்ல. இந்த சலுகை கூட நிலத்தில் பாடுபடும் அனைவருக்கும் கிடைக்காது. குத்தகை விவசாயிகளுக்கு இத்தொகை கிடையாது. நில உடமையாளருக்குத்தான். மேலும் பாசனம் பெறும் நிலம் பாசனம், இல்லாத நிலம் என்று வேறுபடுத்தாமல் 2 ஹெக்டேர் என்ற வரம்பு போடப்பட்டுள்ளது. களத்தில் நில உடமை பதிவு ஆவணங்கள் முறையாக சமகாலப்படுத்தப்படாத நிலையில், திட்டத்தின் பயன் ஓரளவு நிலபலம் உள்ள பகுதியினருக்கே கிடைக்கும். ஏழை விவசாயிகளுக்கு மிகக்குறைந்த பயன் தான் இருக்கும். விவசாய நெருக்கடியின் கடுமையான தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கும் விவசாயத்தொழிலாளிகளுக்கு இத்திட்டம் எந்தவகையிலும் பயன் அளிக்காது.

ஏற்கெனவே மத்திய அரசின் திட்டத்தைவிட மேம்பட்ட பணப்பயன் அளிக்கும் திட்டங்களை தெலுங்கானா அமலாக்கி வருகிறது. ஒதிசா மாநில அரசும் தெலுங்கானா திட்டத்தைவிட பணப்பயன் குறைவு என்றாலும் மத்திய அரசைவிட அதிகமான பணப்பயன் தரும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முதலாளித்துவ மாநில அரசுகளின் திட்டங்களும்  வேளாண் நெருக்கடிக்கு தீர்வுகாணும் தன்மையிலான திட்டங்கள்  அல்ல. எனினும்  மத்திய அரசின் அப்பட்டமாக அரசுபணத்தை பயன்படுத்தி தேர்தல் நெருக்கத்தில் வாக்குக்கு காசுதரும் தன்மையிலான லஞ்ச நடவடிக்கைபோன்று அவை இல்லை. 

வேலையின்மை பிரச்சினை

2௦14 தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடியும் பாஜகவும் மீண்டும் மீண்டும் கொடுத்த வாக்குறுதி ஆண்டுக்கு ஒருகோடிக்கும் அதிகமாக புதிய பணியிடங்களை உருவாக்குவது என்பதாகும். ஆனால் நிகழ்ந்துள்ளது என்ன?

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இந்திய அரசின் நிறுவனமான தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (National Sample Survey Organization-NSSO) ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, மிக அதிக எண்ணிக்கையில் குடும்பங்களை அறிவியல் பூர்வ அடிப்படையில் தேர்வு செய்து  தேச அளவில் வேலையில் உள்ளவர், வேலை தேடுவோர், உழைப்பு படையில் இல்லாதவர் என்று மக்களை வகைப்படுத்தி ஆய்வு செய்துவருகிறது. இதன்படி 2011-12 முழு ஆய்வு நடந்தது. பின்னர்  2016-17இல் நடந்திருக்கவேண்டும். ஆனால் அப்படி நடந்தால் மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பெரும் சேதம் வேலையின்மையை மிகக்கடுமையாக ஆக்கியிருப்பது அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தில் மோடி அரசு அந்த ஆண்டில் ஆய்வு நடத்த அனுமதிக்கவில்லை. பின்னர் இந்த ஆய்வு 2௦17-18 ஆண்டை அடிப்படையாகக்கொண்டு தேசிய மாதிரி ஆய்வு அமைப்பால் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு ஜூலை 2018 முடிக்கப்பட்டு, அதன் அறிக்கை டிசம்பர் மாதம் சம்பந்தப்பட்ட அதிகாரபூர்வ குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் தொடர்ந்து இந்த அறிக்கையை வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை எதிர்த்து தேசிய புள்ளியியல் ஆணையத்தின் இரு உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர் என்பது ஊரறிந்த செய்தி. மத்திய அரசுக்கு இந்த அறிக்கையை வெளியிட விரும்பாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் இந்த அறிக்கை வேலையின்மை நிலைமை எப்பொழுதும் இல்லாத அளவிற்கு மோசமாகியுள்ளதை தெளிவாக்குகிறது. 1972-73 முதல் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு தொடர்ந்து நடத்திவந்துள்ள முழு சுற்று ஆய்வுகளில் (1972-73, 1977-78, 1983, 1987-88, 1993-94, 1999-2000, 2004-05, 2009-10, 2011-12, 2017-18) மிக அதிகமான வேலையின்மை விகிதம் 2017-18 சுற்றில் தான் நிகழ்ந்துள்ளது.

இங்கே ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும். இந்திய நாட்டில் உழைப்பாளி மக்களுக்கு சமூக வாழ்வாதார பாதுகாப்பு மிகக் குறைவு. எனவே முழுமையாக  வேலை செய்யாமல் இருப்பவர்கள் குறைவாகவே இருப்பார்கள். (செல்வந்தர்கள் மட்டுமே வேலை செய்யாமல் வாழ முடியும்! ஏழைகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் அந்த வாய்ப்பு கிடையாது!!) ஏதோ ஒருவேலையில் (சுயவேலை, கூலிவேலை) – மிகக்குறைவான ஊதியமோ வருமானமோ கிடைத்தாலும் – இருந்தே ஆகவேண்டும். வேலையில்லா ஏழைகளுக்கு உணவு, உடை, உறைவிடம் எதற்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது. எனவே ஆய்வுகளில் கிடைக்கும் வேலையின்மை விகிதம் உண்மையான வேலையின்மை அளவையும் மிகவும் குறைத்து மதிப்பிடுகிறது. வேலையில் இருப்பதாக கருதப்படுவோரின் மோசமான பணி நிலைமைகள் பற்றிய விவரங்களும் இத்தகைய ஆய்வுகளில் பெருமளவிற்கு கிடைப்பதில்லை. மேலும் இந்திய உழைப்புப்படையில் சரிபாதிக்கும் சற்று அதிகமானவர்கள் சுயவேலை செய்பவர்கள். இவர்கள் கணிசமான நேரம் வேலையின்றியே உள்ளனர். உதாரணமாக, இரண்டு ஏக்கர் அல்லது அதற்கு குறைவான நிலம் உள்ள விவசாயக் குடும்பத்தில்  உழைக்கும் வயதிலான  குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் வருடம் முழுவதும் வேலை இருக்க வாய்ப்பே இல்லை. பகுதிநேர வேலையின்மை என்பது – பொருளாதார அறிஞர்கள் இதனை ‘மறைமுக வேலையின்மை‘ என்று அழைக்கிறார்கள். – நமது நாட்டில் நிலவும் சமூக பொருளாதார அமைப்பின் ஒரு மிகப்பெரிய கேடு.  இதையெல்லாம் நாம் புரிந்து கொள்வது அவசியம் என்பது ஒருபுறம்.

மறுபுறம், அரசு வெளியிட மறுத்த தேசிய மாதிரி ஆய்வு 2௦17-18 அறிக்கை – ஊடகம் ஒன்றின் முயற்சியால் பொதுவெளிக்கு வந்துள்ள அறிக்கை – தரும் விவரமும் மிக முக்கியமானது. நமது நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் – பாஜக ஆட்சியில் – வேலையின்மை பிரச்சினை பூதாகாரமாக அதிகரித்துள்ளது என்பதை அறிக்கை விவரங்கள் தெளிவுபடுத்துகின்றன. வேலையின்மை பற்றிய 2011-12 ஆய்வு விவரங்களையும் 2௦17-18 ஆய்வு விவரங்களையும் ஒப்பிட்டால் வேலையின்மை  மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்று தெளிவாகத் தெரிகிறது.  தேசிய மாதிரிஆய்வு அமைப்பின் அறிக்கை மட்டுமல்ல. இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் ( Centre for Monitoring Indian Economy – CMIE) தரும் விவரங்களின்படி, நவம்பர் 2௦17 முதல் நவம்பர் 2௦18 வரையிலான ஒரு ஆண்டில் வேலையில் உள்ளவர் எண்ணிக்கை  ஒரு கோடியே பத்து லட்சம் குறைந்துள்ளது என்பது தெரிகிறது. எனவே வேலையின்மை பிரச்சினை பாஜக ஆட்சி அமலாக்கிவரும் கொள்கைகளால் மிகவும் கூர்மையாகியுள்ளது. இதில் பொதுவான தாராளமய கொள்கைகளின் தாக்கம் மட்டுமல்ல, பணமதிப்பிழப்பு நடவடிக்கையும்  மிகுந்த குழப்பங்களுடன் அவசரகோலமாக திணிக்கப்பட்ட  சேவை மற்றும் சரக்குவரி – ஜிஎஸ்டி – அமலாக்கமும் முக்கிய பங்கு ஆற்றியுள்ளன. இவ்விரு நடவடிக்கைகளும் பொதுவாக பொருளாதார வளர்ச்சியைப் பாதித்தது மட்டுமின்றி குறிப்பாக விவசாயம், சிறு குறுதொழில்கள் உள்ளிட்ட முறைசாராத்துறைகளை பெரிதும் பாதித்துள்ளன. வேலையின்மையை கடுமையாக தீவிரப்படுத்தியுள்ளன.

தொடரும் மக்கள் விரோத வரி கொள்கை

மேலே விவரிக்கப்பட்டுள்ள இருபெரும் பிரச்சினைகளைப் பற்றி எந்த நடவடிக்கையையும் ஆலோசனைகளையும் பட்ஜெட் முன்வைக்கவில்லை. அதற்கு மாறாக தேர்தல் நோக்கிலான பட்ஜெட் முன்மொழிவையே நாம் காண்கிறோம். 12 கோடி விவசாயிகள் குடும்பங்களுக்கு நேரடி பணம் பட்டுவாடா என்பது அப்பட்டமாக மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்கும் முயற்சி. அதேபோல் தான் தனிநபர் வருமான வரி தொடர்பான சலுகைகளும். இவற்றால் பயன் அடைவோருக்கு கிடைக்கும் பணப்பயன் குறைவாகவே இருக்கும். ஆனால் பேரோசையை இவை ஏற்படுத்தும் என்று பாஜக நம்புகிறது. இதிலும் தில்லுமுல்லு உள்ளது. 2௦14 தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தனிநபர் வருமான வரி வரம்பை ஆண்டுக்கு  3 லட்சம் என்பதிலிருந்து 5 லட்சம் ஆக்குவோம் என்று அருண் ஜெயிட்லி ட்வீட் செய்தார்.மேடைக்கு மேடை பேசினார். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் செய்யவில்லை. இந்த ஆண்டும் செய்யவில்லை. வருமானவரிக்கு உள்ளாகும் வருமானம் ஐந்துலட்சம் அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் செலுத்தவேண்டிய வரிக்கு முழு  ரிபேட் அளிக்கப்படும் என்று மட்டுமே பட்ஜெட் முன்மொழிவு கூறுகிறது. வருமான வரி வரம்பு உயர்த்தப்படவில்லை. இது ஒருபுறம் இருக்க, தனிநபர் வருமான வரி தொடர்பான மாற்றங்களை இடைக்கால பட்ஜெட்டில்  கொண்டு வருவது என்பதே நெறிமுறைகளை மீறுவதாகும். இதில் மேலும் கவனிக்க வேண்டியது தனிநபர் வருமான வரி மற்றும் இதர நேர்முக வரி சலுகைகளால் அரசுக்கு ஏற்படும் வரி வருமான இழப்பு சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் என்று பட்ஜெட் விவரங்கள் தெரிவிக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களைப் பொருத்தவரையில் சென்ற பட்ஜெட்டிலேயே அவர்கள் மீதான வரிவிகிதம் குறைக்கப்பட்டுவிட்டது. வரிவிலக்கு ஷரத்துகள் தொடர்கின்றன. மேலும் சொத்துவரி பாஜக ஆட்சியால் முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டது. வாரிசுவரி கிடையாது. மறுபுறம் பாஜக ஆட்சியில் ஆண்டு தோறும் மறைமுகவரிகள் ஏற்றப்பட்டுவந்துள்ளன. தனது முதல் நான்கு பட்ஜெட்டுகளில் கச்சா எண்ணய் மீதான  கலால் வரி உயர்வுகள் மூலம் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டைவிட கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளது. தனது ஐந்து பட்ஜெட்டுகளிலும் இந்த பட்ஜெட்டிலும் பாஜக தொடர்ந்து செல்வந்தர்கள் மீதான வரிச்சுமையை குறைத்து சராசரி உழைப்பாளி மக்கள் மீதான  வரிச்சுமையை உயர்த்தியுள்ளது. இந்தியாவில், மொத்த குடும்ப சொத்துமதிப்பில் மேல்மட்ட 1% குடும்பங்கள் கையில் 63% க்கும் அதிகமாக உள்ளது  என்ற விவரம் இந்தியாவில் நிலவும் பிரம்மாண்டமான சொத்து மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகளை நமக்கு உணர்த்துகிறது. இப்படிப்பட்ட நாட்டில் சொத்துவரியும் வாரிசுவரியும் இல்லை என்பது அரசின் கொள்கைகள் மீது செல்வந்தர்கள் செலுத்தும் செல்வாக்கை காட்டுகிறது. அதேபோல், தனி நபர் வரி வருமான விகிதம் (3௦% + சர்ச்சார்ஜ்) கார்ப்பரேட் நிறுவனங்களின் மீதான வரி விகிதத்தை விட அதிகமாக உள்ளது. ஆண்டுக்கு ரூபாய் 25௦ கோடிக்கு குறைவாக விற்பனை மதிப்பு கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான வருமான வரிவிகிதம் 3௦% இல் இருந்து 25% ஆக சென்ற ஆண்டு பட்ஜெட்டில் ஆக்கப்பட்டது. ஆக, பெரும் செல்வந்தர்களும் பெரும் கம்பனிகளும் இந்திய அரசின் வரவு செலவு கொள்கை உட்பட அரசின் பொருளாதார கொள்கைகளை தீர்மானிக்கின்றனர் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

பட்ஜெட்டின் ஒதுக்கீடுகள்

விவசாயிகளுக்கும் ஏழை மக்களுக்கும் வாரி வழங்கி விட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மத்திய அரசின் மக்கள் நலன் சார்ந்த துறைகளுக்கும் திட்டங்களுக்குமான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படவில்லை. மொத்த பட்ஜெட்டில் தொடர்ந்து சொற்பமாகவே அவை உள்ளன. கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கு மிகவும் அவசியமான, வேலை பெறுவதை சட்ட பூர்வ உரிமையாக்கிய வேலை உறுதி சட்டத்தின் அடிப்படையில் மன்ரேகா அல்லது ரேகா அல்லது நூறுநாள் திட்டம் என்று அழைக்கப்படும் ஊரக வேலை உறுதி திட்டம் 2௦௦6 இல் இருந்து அமலில் உள்ளது. இடதுசாரி இயக்கங்களும் சில சிவில் சமூக அமைப்புகளும் முதலாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு கொடுத்த நிர்ப்பந்தத்தினால் தான் ரேகா சட்டம் வந்தது. இச்சட்டத்தின்படி விருப்பம் தெரிவிக்கின்ற ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்கும் ஒரு ஆண்டில் 1௦௦ நாட்கள் வேலையை அரசு கொடுக்கவேண்டும். இதன்மூலம் கிராமப்புற ஏழை உழைப்பாளி மக்களுக்கு வேலையும் அதன் மூலம் வருமானமும் கிடைக்கும். ரேகா பணிகள் மூலம் கிராமங்களில் பாசனம் உள்ளிட்ட உற்பத்தி சொத்துக்கள் உருவாக்கப்படும். இந்த அருமையான திட்டத்தை கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜக அரசு சின்னாபின்னமாக்கி அழிக்க முற்பட்டுவருகிறது. வேலை நாட்களை குறைத்துள்ளது. நிதி ஒதுக்கீடுகளை கடுமையாக வெட்டியுள்ளது. எடுத்துக்காட்டாக, நடப்பு நிதி ஆண்டில் ரேகாவிற்கான ஒதுக்கீடு (திருத்தப்பட்ட மதிப்பீடு) 61,௦84 கோடி ரூபாய். ஆனால் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் வரும் நிதி ஆண்டிற்கு ரேகாவிற்கு ரூ 6௦,௦௦௦ கோடி தான் ஒதுக்கியுள்ளது. துவக்கத்தில் இருந்த மாதிரி ரேகா திட்டத்திற்கு பொருத்தமான ஒதுக்கீடு செய்வதாக இருந்தால் அது இத்தொகையைப்போல் இரண்டு மடங்கு இருக்க வேண்டும். ரேகாவில் உழைத்துள்ள மக்களுக்கு வர வேண்டிய கூலி பாக்கித்தொகை பல ஆயிரம் கோடி ரூபாய்களை தாண்டிவிட்டது. உண்மையில், பாஜக அரசு இந்த திட்டத்தை மூடி விடும் நோக்கில் உள்ளது.  ஊரக உழைப்பாளி மக்களின் கடும் களப்போராட்டங்கள் நடத்தி இத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டை பெரிதும் உயர்த்துவது அவசியம். ரேகா திட்டத்தில் பயன்பெறுவோரில் கணிசமானவர்கள் சிறு குறு விவசாயிகள், குறிப்பாக பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வேறுபல மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கும் ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது அல்லது மிகவும் சொற்ப அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. ஆரோக்கியம் மற்றும் கல்வித் துறை சார்ந்த திட்டங்களின் ஒதுக்கீடுகளில் நாம் இதைக்காண முடிகிறது. கடந்த ஆண்டும் மொத்த திருத்தப்பட்ட மதிப்பீடை விட மிகவும் சொற்பமாகவே வரும் ஆண்டுக்கான அரசின் ஒதுக்கீடுகள் உயர்த்தப்பட்டுள்ளன. விவசாயிகளின் வாக்குகளை குறிவைத்து நேரடி பண பட்டுவாடா திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ 20,000 கோடி ரூ என்பதன் பெரும்பகுதி இவ்வாறு பிற திட்டங்களை வெட்டி கணக்கில் வந்துள்ளது.

வளங்களை திரட்டுதல்

  ஒருபட்ஜெட்டின் முக்கிய அம்சம் மக்கள் நலனுக்காக வகுக்கப்படும் திட்டங்களுக்கு உரிய ஒதுக்கீடுகளை செய்திட பொருத்தமான முறையில் அரசு வளங்களை திரட்ட வேண்டும் என்பதாகும். ஆனால் நாம் பாஜக அரசு பெரும் கம்பனிகளுக்கும் செல்வந்தர்களுக்கும் தொடர்ந்து வருமான வரிச்சலுகைகள் அளித்துவருவதை ஏற்கெனவே குறிப்பிட்டோம். இந்த ஆண்டும் செல்வந்தர்களிடம் இருந்தோ பெரும் கம்பனிகளிடம் இருந்தோ வளர்ச்சிக்கான வளங்களை திரட்டும் எந்த முயற்சியும் இல்லை. மாறாக வருமான வரி தொடர்பாக அறிவி க்கப்பட்டுள்ள சலுகைகளால் அரசுக்கு  சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரி இழப்பு ஏற்படும் என்று பட்ஜெட் உரை கூறுகிறது என்பதை நாம் ஏற்கெனவே குறிப்பிட்டோம். ஜிஎஸ்டியின் கீழ் மத்திய பட்ஜெட் மூலமாக மறைமுக வரிகளை உயர்த்துவது சாத்தியமில்லை என்பதாலும் தேர்தல் நெருக்கத்தில் இருப்பதாலும் கொடுத்தல் வரிவிதிப்பு முயற்சிகள் இந்த இடைக்கால பட்ஜெட்டில் இல்லை. எனினும் பல மானியங்கள் வெட்டப்பட்டுள்ளன அல்லது தேவைக்கு மிகக்குறைவாகவே உயர்த்தப்பட்டுள்ளன. இது தவிர, வரி இழப்பாலும் தேர்தல் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்களாலும் அரசுக்கு  ஏற்படும்  வருமான இழப்பை எதிர்கொள்ள பாஜக அரசு தொடர்ந்து அரசு கடைப்பிடிக்கும் முக்கிய தந்திரம் பொதுத்துறை சொத்துக்களை விற்பதாகும். 2017-18 இல் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று மத்திய அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பெற்றுள்ளது. இது பட்ஜெட்டில் சொல்லப்பட்டதைவிட 25௦௦௦ கோடி ரூ கூடுதல் ஆகும்.   2018-19 இல் இவ்வாறு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன்மூலம் 80,000ரூ திரட்டப்பட்டுள்ளதாக பட்ஜெட் ஆவனங்கள் கூறுகின்றன. 2019-20 இல் ரூ 90,000 கோடி அளவிற்கு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்கப்படும் என்று பட்ஜெட் உரை கூறுகிறது. இது தாராளமய கொள்கைகளின் மிக மோசமான அம்சங்களில் ஒன்று. மக்கள் சொத்தை படிப்படியாக  தனது நண்பர்களுக்கு தாரை வார்க்கும் ஏற்பாட்டை தான் மோடி அரசு அரங்கேற்றி வருகிறது. தற்சமயம் தனியார் நிறுவனங்கள் பொதுத்துறை பங்குகளை வாங்கும் நிலையில் இல்லை. எனவே மோடி அரசு  பொதுத்துறை நிறுவனங்களான  LIC, ONGC போன்ற நிறுவனங்களை நிர்ப்பந்தப்படுத்தி  அரசு விற்கும் பங்குகளை வாங்க வைக்கிறது. அரசின் தாராளமய கொள்கைகளால் இந்தப்பங்குகளின் மதிப்பு எதிர்காலத்தில் சரியும்பொழுது நட்டமடைவது இத்தகைய பொதுத்துறை நிறுவனங்களே. படிப்படியாக அவற்றையும் தனியாருக்கு தாரை வார்க்கும் பாதையில் தான் தாராளமய அரசுகள் பயணிக்கும். இதைத்தான் மோடி அரசு செய்துவருகிறது.

இப்படியெல்லாம் கணக்கு காட்டுவதில் பல ஜால வித்தைகள் செய்தாலும் அரசின் பிஸ்கல் பற்றாக்குறை இலக்கை மீறியுள்ளது. பிஸ்கல் பற்றாக்குறை என்பது அரசின் மொத்த செலவில் இருந்து கடன் அல்லாத வரவுகளை கழித்தால் கிடைக்கும் தொகை. இது நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில்  3% க்குக் குறைவாக இருக்கவேண்டும் நமது நாட்டில் ஒரு அபத்தமான சட்டம் உள்ளது. அந்த இலக்கை நோக்கி பயணிக்க மக்கள் நலன் சார்ந்த செலவுகளையும் மக்களுக்கான மானியங்களையும் அரசு தொடர்ந்து வெட்டி வருகிறது. கார்ப்பரேட்டுகள் மீதும் செல்வந்தர்களின் மீதும் உரிய வரிவிதித்து அதனை வசூல் செய்தாலே பற்றாக்குறை குறைந்துவிடும். ஆனால் அப்படி செய்தால் கார்ப்பரேட்டுகளும் முதலீட்டாளர்களும் ஊக்கம் இழந்து கடைகளை மூடிவிடுவார்கள் என்ற மிரட்டலின்கீழ் இன்று செல்வந்தர்கள் மென்மையாக அணுகப்படுகின்றனர், மறுபுறம் மக்கள் வாட்டப்படுகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளிவைக்க நாட்டிற்கு தேவை தலைவர்களை மாற்றுவது அல்ல. கொள்கைகளை மாற்றுவதாகும்.

இறுதியாக

பட்ஜெட் புள்ளிவிவரங்களையும் அரசு தரும் விவரங்களையும் வைத்துதான் நாம் பலவிஷயங்களைப்பேச வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த புள்ளிவிவரங்களின் நமபகத்தன்மை தொடர்ந்து சரிந்து வருகிறது. இது பாஜக ஆட்சியின் “சிறப்பு சாதனை”. எடுத்துக்காட்டாக, 2016-17ஆம் ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சிவிகிதம் 7.1% என்று அரசு முன்பு கூறியது. இது அதன் முந்தைய ஆண்டின் வளர்ச்சி விகிதத்தில் இருந்து ஒரு சரிவைக் காட்டியது. நிபுணர்கள் அனைவருமே இந்த சரிவு  மோடியின் நவம்பர் 2016  செல்லாக்காசு நடவடிக்கையால் தான் என்று ஒருமனதாக கூறினார். ஆனால் அரசு அதனை ஏற்க தயாராக இல்லை. எனினும் அன்றைக்கு அதிகார பூர்வமாக வளர்ச்சிவிகிதம் 7.1% என்றே பதிவாகியது. இப்பொழுது தேர்தல் நெருங்கும் வேலையில் செல்லாக்காசு நடவடிக்கையை நியாயப்படுத்தும் கதையாடலின் பகுதியாக 2016-17ஆம் ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சிவிகிதம்   8.2% என்று அறிவிக்கப்பட்டுள்ளது! வேலையின்மை தொடர்பான அறிக்கையை வெளியிட மறுத்ததும் இதனால் தான். பல சட்டபூர்வமான அமைப்புகளை நாசப்படுத்திவரும் மோடி அரசின் அந்நடவடிக்கைகளின் வரிசையில் புள்ளியியல் நிறுவனமும் சிக்கியுள்ளது. பட்ஜெட் பற்றிப்பேசும் பொழுது இவற்றை எல்லாமும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

வரும் வாரங்களில், நாட்களில் பட்ஜெட் பற்றிய அரசின் பிரச்சாரமும் கதையாடலும் மேலும் மேலும் பொய்களின் தொகுப்பாக உலாவரும். இதனை உண்மைகளின் அடிப்படையிலான நமது பிரச்சாரத்தால் நாம் முறியடிக்க வேண்டும். இது நம்முன் உள்ள முக்கிய அரசியல் கடமையாகும்.

பழைய பாதையில் பயணம் : தமிழக நிதிநிலை அறிக்கை 2017–18

  • வெங்கடேஷ் ஆத்ரேயா

இந்திய அரசியல் அமைப்பில் அடிப்படையிலேயே அதிகாரங்கள் மத்திய அரசிடம் குவிக்கப்பட்டுள்ளன. விடுதலைக்குப்பின் கடந்த எழுபது ஆண்டுகளில் இந்திய பெருமுதலாளிகளின் நலன் கருதி இந்த அதிகாரக்குவிப்பை அதிகப்படுத்த ஆளும் வர்க்கக் கட்சிகள் தொடர்ந்து முனைகின்றன. கடந்த காலங்களில் மாநில உரிமை பேசி வந்த பல்வேறு மாநிலக்கட்சிகள் தாராளமய கொள்கைகளை முழுமையாக ஏற்று அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அமலாக்கிவரும் சூழலில் மத்திய மாநில அதிகாரப்பகிர்வு தொடர்பான ஜனநாயக கோரிக்கைகளை அவை வலுவாக முன்வைப்பதில்லை. இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியும் இதர இடதுசாரி கட்சிகளும் மட்டுமே மாநில அதிகாரங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. தமிழகத்தை மாறி மாறி ஆண்டு வந்துள்ள திமுக, அஇஅதிமுக இரண்டுமே கடந்த பல ஆண்டுகளாக மாநில உரிமைகள் பற்றி பெரும்பாலும் மௌனமாகவே உள்ளன. எப்போதாவது அவை மாநில உரிமைகள் பற்றிப் பேசினாலும் அந்த உறவுகளை ஜனநாயகப்படுத்த அவசியமான போராட்டங்களை முன்பின் முரணற்று நடத்திடவில்லை. இப்பின்புலத்தில், தமிழக அரசின் வரும் நிதி ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையை பரிசீலிப்போம்.

கடும் கிராமப்புற நெருக்கடி

நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவ மழை ஆகிய இரண்டுமே பொய்த்துள்ள நிலையில் தமிழகம் கடும் வேளாண், ஊரகப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் அல்லது பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் இறந்துள்ளனர். நெருக்கடிக்கு காரணம் இயற்கை அவர்களைக் கைவிட்டது மட்டுமல்ல; அரசுகளின் தொடரும் தாராளமய கொள்கைகளும் கிராமப்புற உழைக்கும் மக்கள் சந்திக்கும் துயரங்களுக்கு முக்கிய காரணம். இதுமட்டுமல்ல; மோடி அரசின் செல்லாக்காசு நடவடிக்கை விவசாயத்தையும் கிராம, நகர்ப்புற முறைசாரா தொழில்களையும் பெருமளவிற்கு பாதித்துள்ளது. கிராம, நகர உற்பத்தி மட்டுமே பாதிக்கவில்லை. வேலைவாய்ப்புகள் மிகவும் குறைந்துள்ளன. இதுவும் பட்ஜெட்டில் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே வேளாண் துறையின் வளர்ச்சி மந்த நிலையில் உள்ளது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் நெல் உற்பத்தி தேக்க நிலையில் உள்ளது. 2001-02 இல் அரிசி உற்பத்தி 65.8 லட்சம் டன் என இருந்தது. 2013-14 வரையிலான அடுத்த 12 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால், மூன்று ஆண்டுகளில் மட்டுமே இதை விட அதிகமான அரிசி உற்பத்தி நிகழ்ந்தது. 2009-10 முதல் 2013-14 வரையிலான ஐந்து ஆண்டுகளின் சராசரி ஆண்டு அரிசி உற்பத்தி 60 லட்சம் டன் என்ற அளவில்தான் இருந்தது. மொத்த தானிய உற்பத்தியின் வளர்ச்சியும் கடந்த பதினைந்து ஆண்டுகளில் மிக மந்தமாகவே இருந்தது. பொதுவாக வேளாண் உற்பத்தியும் விவசாயிகளின் வாழ்வும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. வேளாண் மற்றும் இதர கிராமப்புற கூலி உழைப்பாளிகளின் நிலைமையும் இதேதான். நகர்ப்புறங்களிலும் பொருளாதார மந்த நிலையின் வெளிப்பாடுகளைக் காண முடியும். கடந்த சில ஆண்டுகளாக புதிய தொழில் முதலீடுகள் குறைந்துள்ளன. தொழில் துறை வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாக இல்லை. வேலை விரிவாக்கம் என்பது அமைப்புசார் துறைகளில் கிட்டத்தட்ட இல்லை என்றே கூறலாம். முன்பு ரியல் எஸ்டேட்டும், கட்டுமானமும் தகவல் தொழில்நுட்பமும் நிதிசார் நடவடிக்கைகளும் ஓரளவு வருமானத்திற்கும் வேலை வாய்ப்புக்கும் நகரங்களில் கைகொடுத்தன. தற்சமயம் அங்குமே மந்த நிலைதான் உள்ளது. இத்தகைய பொதுவான மந்த நிலையை செல்லாக்காசு நடவடிக்கை மேலும் மோசமாக்கியுள்ளது. பருவமழை பொய்த்ததும் டெல்டா பகுதி உள்ளிட்டு தமிழகம் முழுவதும் பரவியுள்ள வறட்சியும் மத்திய மாநில அரசின் கொள்கைகளும் சேர்ந்து தமிழகத்தை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளன.

இப்பிரச்சினைகள் தொடர்பாக தமிழக பட்ஜெட் மக்களுக்கு ஏதாவது நிவாரணம் அளிக்கிறதா?

பட்ஜெட்: மாநில அரசின் அணுகுமுறை

பட்ஜெட் சமர்பிப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு மாநில அரசு பெட்ரோல் டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை உயர்த்தி மக்கள் மீதான தாக்குதலை நடத்தியது. இப்பின்னணியிலும், ஜி எஸ் டி (பொருள் மற்றும் சேவை வரி) நடைமுறைக்கு வரவுள்ளதை காரணம் காட்டியும் புதிய வரிகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. அதே சமயம், ஒட்டுமொத்த அரசு செலவும் மிகக்குறைவாகவே அதிகரித்துள்ளது.

மாநில அரசின் வரி வருமானத்தை அதிகரிப்பதில், நடப்பில் உள்ள மத்திய மாநில நிதி அதிகாரப்பகிர்வு ஏற்பாடு காரணமாக சில சிரமங்கள் ஏற்படுகின்றன. எனினும் வரி வசூல் நிர்வாகத்தில் நிலவும் ஊழல்களை ஒழித்தால், வரிவருமானத்தை மாநில அரசால் கணிசமாக உயர்த்த முடியும். வரி அல்லா வருமானத்தை பொறுத்த வரையில், மிக முக்கியமாக, தாது மணல், ஆற்று மணல், கிரானைட் உள்ளிட்ட தமிழகத்தின் இயற்கை வளங்களை ஏலம் விடுவதில் உள்ள மகாஊழல்கள் மாநில அரசுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பை ஆண்டு தோறும் ஏற்படுத்தி வருவதை சகாயம் அறிக்கை உள்ளிட்ட பல அரசு ஆவணங்கள் புலப்படுத்துகின்றன. இவற்றை சரிசெய்யவும், மாநிலத்தின் இயற்கை வளங்களை திறம்பட நிர்வகித்து, வரி அல்லா வருமானங்களை உயர்த்தவும் எந்த நடவடிக்கையும் பட்ஜெட்டில் இல்லை.

மத்திய அரசின் நிர்ப்பந்தங்களுக்குப் பணிந்து, மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பான “உதய்” திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டதன் விளைவாக அரசின் கடன் சுமை அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில் இது கணிசமான வட்டிச்செலவுகளை தமிழக அரசின் மீது திணிக்கும். அதேபோல், மத்திய அரசின் கெடுபிடியின் விளைவாக தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தினை ஏற்றுக்கொண்ட அதே நேரத்தில் அனைவருக்குமான பொது விநியோக அமைப்பை தொடர்வதால் தமிழக அரசு கூடுதல் செலவுகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. நடைமுறையில் இப்போக்கு பொதுவிநியோக அமைப்பை பலவீனப்படுத்துவதாகவே அமைகிறது. கடந்த ஆண்டு மாநில அரசு அறிவித்த சிறப்பு பொது விநியோக திட்டம் ஒரு சில மாதங்களாகவே அமலாக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்கள் ரேஷன் கடைகளில் கிடைப்பதில்லை. மக்கள் அரிசிக்குப் பதில் கோதுமை வாங்க நிர்ப்பந்திக்கப்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

நிதி ஆணையத்தின் கெடுபிடியை ஏற்று தமிழகம் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தை (FISCAL RESPONSIBILITY AND BUDGET MANAGEMENT ACT – FRBM ACT) ஏற்கெனவே நிறைவேற்றியுள்ளது. தாராளமய கொள்கைகளின் முக்கிய வெளிப்பாடான – மக்களுக்கான அரசு செலவுகள் வெட்டிச்சுருக்கப்படவேண்டும் என்ற நோக்கம் கொண்ட இத்தகைய சட்டம் அகில இந்திய அளவில் 2003 இலேயே நிறைவேற்றப்பட்டது. அதன்பின், நிதி ஆணையம் மூலமாக மாநில அரசுகளும் இத்தகைய சட்டம் நிறைவேற்ற வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தின்படி மாநில பட்ஜெட்டில் நிதிசார் (FISCAL) பற்றாக்குறை – அதாவது, அரசின் மொத்த செலவுக்கும் அரசு பெறுகின்ற கடன் அல்லாத வரவுகளுக்குமான இடைவெளி மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.எஸ்.டி.பி. – GSDP) 3 %க்கு மிகாமல் இருக்கவேண்டும். இதன் பொருள் அரசு கடன் மூலம் பெரும் தொகை வரவு என்று கணக்கில் கொள்ளப்படாது என்பதாகும். மேலும், மொத்த செலவுக்கும் கடன் அல்லாத வரவுக்கும் இடையே உள்ள இடைவெளி சுருக்கப்பட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. மத்திய மாநில அரசுகள் அமலாக்கி வரும் பொருளாதார கொள்கைகள் இந்த இடைவெளியை குறைக்க செலவைக் குறைக்கவே பிரதானமாக முற்படுகின்றன. மறுபுறம் செல்வந்தர்களுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் மத்திய அரசு தொடர்ந்து அளிக்கும் வரிச் சலுகைகளும் வரி விலக்குகளும் மாநிலங்களின் வரிவருமானத்தை குறைக்கின்றன. மத்திய அரசு செஸ் மூலமும் சர்சார்ஜ் மூலமும் வரி வருமானம் ஈட்டும் பொழுது, மாநிலங்களுக்கு இதில் பங்கேதும் கிடையாது. இதெல்லாம் உண்மை என்றாலும், இவற்றிற்கு மத்தியில் கேரள மாநிலத்தின் இடது ஜனநாயக முன்னணி அரசு மாற்றுக்கொள்கைகளின் அடிப்படையில் அரசின் வரவு செலவு திட்டங்களை அமைத்தும், கறாரான, ஊழலற்ற வரிவசூல் நிர்வாகத்தை உறுதிப்படுத்தியும் சமாளித்து வருவதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

ஒதுக்கீடுகள்

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை 1 நடப்பு ஆண்டுக்கும் வரும் ஆண்டுக்குமான சில முக்கிய துறைகளுக்கான ஒதுக்கீடுகள் பட்ஜெட்டுகளில் அவ்வாறு அமைந்துள்ளது என்பது குறித்த சில விவரங்களை தருகிறது.

தமிழக பட்ஜெட் நடப்பு ஆண்டு (2016-17) ஒதுக்கீடுகளில் இருந்து வரும் ஆண்டுக்கான (2017-18) ஒதுக்கீடுகள் பெரும்பாலான துறைகளில் சிறிதளவே உயர்த்தப்பட்டுள்ளன. நீர்வளம் மற்றும் பாசனத் துறை மட்டும் சற்று கூடுதல் ஒதுக்கீடு பெற்றுள்ளது. ஆற்றல் துறையில் காணப்படும் அதிகரிப்பு டான்ஜெட்கோ கடன் மீதான வட்டிக்கே செலவாகிவிகும். கல்வித்துறையில் உயர்கல்விக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டு அளவிலேயே உள்ளது. சுற்று சூழல் மற்றும் வனம், மீன்வளர்ச்சி, கால்நடை, தொழில்துறை ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் வரும் ஆண்டில் நடப்பு ஆண்டை விட பண அளவில் குறைந்துள்ளன.

மாநில மொத்த உற்பத்தி மதிப்பு வரும் ஆண்டில் கிட்டத்தட்ட ஒன்பது சதவீதம் அதிகரிக்கும் என்று பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ளதையும் விலைவாசி உயர்வையும் கணக்கில் கொண்டால், வரும் ஆண்டுக்கான ஒதுக்கீடுகளில் மாநில உற்பத்தி மதிப்பின் விகிதத்தில் பார்த்தால் உண்மை அளவில் முன்னேற்றம் இல்லை என்பது தெளிவாகிறது.

கிட்டத்தட்ட ஒரு கோடி மக்களுக்கு வேலை தரும் சிறு, குறு மற்றும் மிகச்சிறு நிறுவனங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 15 லட்சம் என பட்ஜெட் குறிப்பிடுகிறது. ஆனால் அத்துறைக்கான ஒதுக்கீடு நடப்பு ஆண்டை விட வரும் ஆண்டில் அதிகம் என்றாலும் அளவில் அது சொற்பமான தொகை தான். மறுபுறம் , இந்நாட்டு, பன்னாட்டு பெரும் நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளை (மத்திய அரசைப்போலவே)) மாநில அரசும் வழங்குகிறது. அச்சலுகைகளால் ஏற்பட்டுள்ள சமூக பயன் என்ன, பாதிப்பு என்ன என்பது பற்றி, இடதுசாரிக் கட்சிகள் கடந்த ஆண்டுகளில் பலமுறை கோரியும், இன்றுவரை ஒருவெள்ளை அறிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு சென்னையில் நடந்தபோது 2,42,000 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இவை அனைத்தும் அமலுக்கு வந்தால் கூட, அதனால் உருவாகும் வேலை வாய்ப்பு நான்கு லட்சத்தி ஐம்பதாயிரம் என்ற அளவில்தான் இருக்கும் என்றும் தெரிகிறது. ஒரு கோடி ரூபாய் முதலீடுக்கு ஓரிரு பணியிடங்களையே உருவாக்கும் முதலீடுகளுக்கு முக்கியத்துவம் தருவதும், சலுகைகளை வாரி இறைப்பதும் வேலை வாய்ப்பின் முக்கியத்துவத்தை அரசு முன்னிறுத்தவில்லை எண்பதைத் தெளிவாக்குகிறது.

கைவிடப்பட்ட திட்டமிடுதல்

கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும் இடதுசாரிகள் ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கணிசமான நிதி மாநில அரசால் பகிர்ந்தளிக்கப்பட்டது நாடறிந்த உண்மை. ஆனால் தமிழகத்தில் இரு கழக ஆட்சிகளுமே உள்ளாட்சி அமைப்புகளுடன் வளங்கள், நிதி ஆதாரங்கள், அதிகாரங்கள் ஆகியவற்றை பகிர்வதில் விருப்பம் காட்டவில்லை. இப்பொழுதும் அந்நிலை தொடர்கிறது.

இந்த ஆண்டு பட்ஜெட் உரையில் ஒரு தவறான அணுகுமுறை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. திட்டமிடுதலைக் கைவிடுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இப்பொழுது உள்ள மாநில திட்டக்குழுவை கலைப்பதாகவும், அதன் இடத்தில் “மாநில வளர்ச்சி கொள்கைக்கான குழு“ ஒன்றை அமைக்கவுள்ளதாகவும் பட்ஜெட் உரையில் கூறப்பட்டுள்ளது. இந்தக்குழு மாநில அரசுக்கு அறிவுரைகள் வழங்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

பொருளாதாரம் தொடர்பான நீண்ட காலப்பார்வையும் ஒட்டுமொத்த திட்டமிடுதலும் தேச விடுதலை போராட்ட காலத்திலிருந்தே அவசியம் என கருதப்பட்டு வந்தது. இருபத்தைந்து ஆண்டுகளாக தாராளமய கொள்கைகள் அமலாக்கப்பட்டு வந்தாலும், அரசு தொடர்ந்து பொருளாதாரத்தில் ஆற்றும் பங்கினை கணக்கில் கொண்டும் பன்னாட்டு, இந்நாட்டு பொருளாதார புற நிலைமைகள் தொடர்ந்து மாறிவரும் சூழலில் அவற்றை எதிர்கொள்ள திட்டமிடுதல் அவசியம் என்பதை கணக்கில் கொண்டும்தான் இக்காலங்களிலும் ஐந்தாண்டு திட்டங்கள் எட்டாம் திட்டம் (1992-97), ஒன்பதாவது திட்டம் (1997-2002), பத்தாவது திட்டம் (2002-07), பதினொன்றாவது திட்டம் (2007-12) மற்றும் பன்னிரண்டாவது திட்டம் (2012-17) ஆகியவை தீட்டப்பட்டு அமலாக்கப்பட்டன. ஆனால் மோடி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த உடனேயே தனது தாராளமய பொருளாதார அணுகுமுறையை பிரகடனப்படுத்தும் வண்ணம் திட்டக்குழு கலைக்கப்படும் என்று அறிவித்தது.

இந்த அறிவிப்பை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கே விடாமல் அரசே உடனடியாக அமல் படுத்தியது. மோடி அரசு அதற்கே உரிய “ஜனநாயக” பாணியில் மத்திய திட்டக்குழுவை அழித்தொழித்தது. மோடி அரசின் நிலைபாட்டை அப்படியே ஏற்று தமிழ் மாநில அரசு பின்பற்றுவது அதன் தாராளமய அணுகுமுறையை மீண்டும் தெளிவாக்குகிறது. இதற்கு நேர்மாறாக, கேரள மாநிலத்தில் மாநில திட்டக்குழு சிறப்பாக இயங்கி வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுக்கான திட்டத்தை தயார் செய்யும் பணிகளை அது மேற்கொண்டுள்ளது. வரும் ஆண்டுக்கான ஓராண்டு திட்டத்தையும் சமர்ப்பித்துள்ளது.

7.2 கோடி மக்கள் வசிக்கும் தமிழ் நாடு மக்கள் தொகை அளவில் ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஏறத்தாழ சமம் ஆகும்.அத்தகைய ஒரு மாநிலத்தில் அதன் இயற்கை மற்றும் இதர வளங்கள், மனிதவளங்கள், தொழில்நுட்ப வாய்ப்புகள் இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு நீண்ட கால திட்டங்களை உருவாக்குவது பலனளிக்கும் என்பதும் சாத்தியம் என்பதும் கேரளா நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம். தாராளமய கொள்கைகள் நாட்டில் பின்பற்றப்பட்டு வந்தாலும், மத்தியிலும் மாநிலத்திலும் அரசுகள் பல பொருளாதார நடவடிக்கைகளை தொடர்ந்து பொறுப்பேற்று செயல்படுத்திவரும் நிலையில், திட்டமிடுதலின் அவசியம் தொடர்கிறது. ஆனால் தமிழக அதிமுக அரசு இந்த வாய்ப்பை தவற விட்டுள்ளது. தனியார் பெரும் நிறுவனங்களிடம் நாட்டை ஒப்படைப்பதே அதன் வளர்ச்சி தொடர்பான அணுகுமுறையாக உள்ளது.

மக்களைப் புறக்கணிக்கும் மாமூல் பட்ஜெட்

தமிழகம் கடும் வறட்சியையும் வேளாண் மற்றும் வேலைவாய்ப்பு நெருக்கடியையும் குடிநீர் பற்றாக்குறையையும் எதிர்கொள்ளும் சூழலில் இப்பிரச்சினைகளை சந்திக்க பட்ஜெட்டில் பொருத்தமான அணுகுமுறையும் இல்லை. இயற்கை வளங்கள் மூலமும் இதர வகைகளிலும் ஊழலின்றி செயல்பட்டு வளங்களை திரட்டும் முயற்சியும் இல்லை. வரி நிர்வாகத்தை சீர்செய்து வரி வருமானத்தை உயர்த்தும் அணுகுமுறையும் இல்லை. மத்திய அரசுடன் போராடி கூடுதல் வளங்களைப்பெற முயற்சியும் இல்லை. அரசின் மக்கள் சார் செலவுகளை மட்டுப்படுத்தி நிதிசார் பற்றாக்குறையை குறைக்கும் வழிமுறைதான் உள்ளது.

அட்டவணை 1: தமிழக பட்ஜெட் – சில ஒதுக்கீடுகள் (ரூபாய் கோடிகளில்)

துறை

2016-17

தி. .

2017-18

. .

மீன்வளர்ப்பு

744

768

கால்நடை

1,189

1,161

சூழல் மற்றும் வனம்

653

567

நீர்வளம் மற்றும் பாசனம்

3,407

4,791

ஆற்றல்

13,856

16,998

தொழில் துறை

2,104

2,088

சிறு குறு மிகச்சிறு நிறுவனங்கள்

348

532

சமூக நலம்

4,512

4,781

பள்ளிக்கல்வி

24,130

26,932

உயர் கல்வி

3,679

3,680

சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்

9,073

10,158

 

குறிப்பு: தி. . –திருத்தப்பட்ட மதிப்பீடுகள், . . – பட்ஜெட் மதிப்பீடுகள்

மாநில அரசின் கடன் பற்றி

இறுதியாக தமிழக அரசின் நிதி நிலை குறித்த விவாதங்களில் பலர் மீண்டும் மீண்டும் அரசின் கடன் தொகை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி, அரசின் செலவுகள் குறைக்கப்படவேண்டும் என்றும், குறிப்பாக மக்கள் நல திட்டங்களை சுருக்கவேண்டும் என்றும் வாதிடுகின்றனர். உண்மை நிலை என்ன?

மாநில அரசுகளுக்கு வரி வருமானத்தை உயர்த்துவது சாத்தியம் என்றாலும் மிக எளிதல்ல. பொருளாதார வளர்ச்சியையொட்டி வேகமாக அதிகரிக்கும் வரி இனங்கள் தொடர்பான அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. மொத்த வரிவருமான பகிர்வில் அனைத்து மாநிலங்களுக்கான மொத்தப் பங்கு 32% இலிருந்து 42% ஆக உயர்த்தப்பட்டுள்ள போதிலும் மத்திய அரசு பிறவகை வருமான பகிர்வில் மாநிலங்களுக்கு பாதகமான மாற்றங்களை செய்துள்ளதால் நிகரமாக மாநிலங்களுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் வருமானம் தேச உற்பத்தி மதிப்பின் விகிதமாக பார்க்கையில் குறைந்துள்ளது. ஆனால் வளர்ச்சி தொடர்பான கூடுதல் பொறுப்புகள் மாநிலங்களிடம்தான் உள்ளன. இச்சூழல் மாநில அரசுகளுக்கு கடன் சுமையை ஏற்படுத்துகிறது. இந்த நிலை மாற வேண்டும்.

எனினும், இச்சூழலிலும் மாநில அரசுகள் வரிவசூலில் நிர்வாக மேம்பாட்டையும் கறாரான ஊழல் மறுப்பு அணுகுமுறையையும் பின்பற்றினால் வரிவருமானத்தை உயர்த்தமுடியும் என்பதும் உண்மை. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அரசின் மொத்தக் கடன் வேகமாக அதிகரித்து வருகிறது எண்பது உண்மை. 2002-03இல் 43,815 கோடி ரூபாயாக இருந்த இக்கடன் 2008-09 இல் 83,144 கோடி ரூபாயாக அதிகரித்தது. 2014-15 இல் இது ரூ 1,95,230 கோடியாகியது. 2018 மார்ச் மாத இறுதியில் இது 3,14,000 கோடி ரூபாயாக இருக்கும் என்று பட்ஜெட் அறிக்கை கூறுகிறது. ஆனால் இதை எப்படி பார்க்கவேண்டும்? மாநில உற்பத்தி மதிப்பின் சதவிகிதமாக கணக்கிட்டால், கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக, மாநில அரசின் மொத்தக் கடன் தொடர்ந்து 20% ஐ ஒட்டியே உள்ளது. இது அபாயகரமான அளவு என்று சொல்லிவிட முடியாது. ஆனால் கேள்வி என்னவென்றால், கடனைக் கூட்டாமல் மக்கள் நல திட்டங்களை பாதுகாக்கவும், விரிவாக்கவும் முடியுமா என்பதுதான். முடியும் என்பதே நமது விடை. அதற்கு மாநில இயற்கை வளங்களை அரசே லாபகரமான வகையில் பயன்படுத்தவேண்டும். இவற்றை தனியார் கம்பனிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தருவதாக இருந்தால் ஊழலற்ற முறையில் அதனைச்செய்து நல்ல வருமானத்தை ஈட்ட முடியும். அதுமட்டுமல்ல. வரிவசூல் நிர்வாகம் மேம்படுத்தப்பட்டு ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். இந்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு மத்திய மாநில அரசுகள் அளித்துவரும் பல்வேறு சலுகைகளால் நாட்டுக்கு ஏற்படும் பலன்களும் நட்டங்களும் முறையாக ஆய்வு செய்யப்பட்டு அவை ஒழுங்குபடுத்தப்பட்டால், மாநிலங்களுக்கு கூடுதல் நிதிஆதாரங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. இறுதியாக, மாநிலங்களுக்கு கூடுதல் வருமான பங்கு கிடைக்கும் வகையில் மத்திய மாநில நிதி உறவுகளில் மாற்றம் காணப்படவேண்டும். இவற்றை எல்லாம் ஆளும் வர்க்கக்கட்சிகள் பரிசீலிக்க மறுக்கின்றன. தமிழக அரசுகள் – கடந்த காலத்திலும் சரி, சமகாலத்திலும் சரி – ஆளும் வர்க்க நலன்களை காக்கும் நோக்கிலேயே பிரதானமாக வரவு செலவு அறிக்கைகளை அமைத்து வருவதால், மாநில அரசின் நிதி நிலைமையில் சிக்கல்கள் தொடர்கின்றன.

பல பிரச்சினைகள் பற்றி கூடுதல் தரவுகளுடன் விவாதங்கள் தொடர வேண்டும் என்ற போதிலும், மொத்தத்தில்தமிழக பட்ஜெட் மக்களைப் புறக்கணிக்கும் பட்ஜெட் .

மத்திய பட்ஜெட் 2016 – 17: ஏமாற்றுவித்தை பொருளாதாரம் தொடர்கிறது

 

வழக்கம் போல் மத்திய நிதி அமைச்சர் ஜெயட்லி  பிப்ரவரி இறுதி நாள் பட்ஜெட்டை சமர்ப்பித்தார். ஆனால் இதற்கு ஒருமாதம் முன்னதாகவே, முதலாளித்துவ பத்திரிகைகளிலும் .தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களிலும் இந்த பட்ஜெட் எப்படி இருக்கவேண்டும் என்று பல ஆலோசனைகள் பெருமுதலாளிகள் சார்பாக முன்வைக்கப்பட்டன, பொதுவாக அவை அனைத்துமே (இதுவும் வழக்கம் போல்தான்!) உணவு எரிபொருள் மற்றும் உர மானியங்கள் வெட்டப்படவேண்டும், பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்கப்படவேண்டும், கார்ப்பரேட்டுகளுக்கு வரி சலுகைகள் தரப்படவேண்டும் என்ற பாணியில் இருந்தன. ஓரிருவர் அரசு முதலீடுகளை மேற்கொண்டு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்று சொன்ன பொழுதும், இதற்கான வளங்களை வரி விதித்து திரட்டக்கூடாது என்றும் மானியங்களை வெட்டியே வளங்கள்  திரட்டப்படவேண்டும் என்றும் கூறினர். ஜெயட்லியின் பட்ஜெட் இத்தகைய எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வதாகவே, பெருமுதலாளிகள் மற்றும் அந்நிய நிதி மூலதனத்தை தாஜா செய்வதாகவே அமைந்துள்ளது.

வரி விதிப்பு: வரி ஏய்ப்போருக்கு அழைப்பு

பா.ஜ.க. அரசின் மூன்றாம் பட்ஜெட் இது. ஆட்சிக்கு வரும் முன்பு தங்களது தேர்தல் பிரச்சாரத்தில் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் வங்கி கணக்குகளிலும் வேறுவகைகளிலும் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் பல லட்சம் கோடி ரூபாய்களை இந்தியாவிற்கு திருப்பிக் கொணர்ந்து ஒவ்வொரு வாக்காளர் வங்கி கணக்கிலும் பல லட்சம் ரூபாய் போடுவதாக வாக்குறுதி மோடி துவங்கி அனைத்து பா ஜ க தலைவர்களும்.தேர்தல் மேடைகளில் உரக்க முழங்கினர். ஆனால் தேர்தல் முடிந்து சில மாதங்களிலேயே அடிக்கடி நம்மை எல்லாம் பாகிஸ்தானுக்குப் போகச் சொல்லிவரும் பா ஜ க தலைவர் அமீத் ஷா இந்த வாக்குறுதியின் குட்டை உடைத்துவிட்டார். ஒரு பேட்டியில், தேர்தலில் தரப்பட்ட இந்த வாக்குறுதி “ஜூம்லா” தான் – அதாவது, ஒரு பேச்சு வழக்காக சொல்லப்பட்டதுதான் –இதையெல்லாம் அமல்படுத்த முடியாது என்று மிகத் தெளிவாக கூறிவிட்டார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் அமீத் ஷாவிற்கு ஒருபடி மேலே போய், ஜெய்ட்லி அவர்கள், மறைத்த பணத்தை அரசிடம் ஒப்புக் கொண்டுவிட்டால், அந்த தொகையில் நாற்பத்தி ஐந்து சதமானம் வரியாக  கட்டினால் போதும். மீதி பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளலாம். உங்கள் மீது எந்த வழக்கும் தொடரமாட்டோம், நீங்கள் சட்டத்தை மீறி, அதனை ஏமாற்ற முயன்றதை நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம். நீங்கள் வருமானத்தை வேண்டுமென்றே மறைத்துள்ள போதிலும் உங்களை தண்டிக்க மாட்டோம்.’ என்று பொருள்பட தனது பட்ஜெட் உரையில் கருப்பு பணக்காரர்களை அன்புடன்  அழைத்துள்ளார்.

தனி நபர் வருமானத்தின் மீது வரி விதிப்பை பொறுத்தவரையில் பட்ஜெட் பெரிதாக மாற்றம் செய்யவில்லை. ஆனால் ஐந்து லட்சம் ரூபாய் அல்லது அதற்கு குறைவாக ஆண்டு வருமானம் பெறுவோருக்கு வருமான வரி ரத்து செய்யப்படவேண்டும் என்று கடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கிய ஜெயிட்லி, தனது மூன்றாவது பட்ஜெட்டிலும் அதை செய்யவில்லை.  அதேசமயம், தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் வைப்பு நிதியில் இருந்து பணம் அவர்கள் எடுக்கும் பொழுது அதை வருமானமாக கருதி அதன் மீது வரி விதிக்கப்படும் என்று முன்மொழிந்திருப்பது உழைப்பாளி மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.

மொத்தத்தில், நேர்முக வரியான, கொடுக்கும் திறன் அடிப்படையிலான,  வருமான வரி தொடர்பாக பட்ஜெட் முன்மொழிவுகளின்படி அரசுக்கு 1000 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படும் என்று ஜெயிட்லி கூறியுள்ளார். மறுபுறம், சாதாரண மக்கள் மீது கடும் சுமையாக உள்ள மறைமுக வரிகள் –கலால் வரி, சுங்க வரி, சேவை வரி- ஆகியவை தொடர்பான பட்ஜெட் முன்மொழிவுகளால் அரசுக்கு ரூ 20,000 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும் பட்ஜெட் உரை கூறுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. 2015 – 16 பட்ஜெட்டில் கார்ப்பரேட் வருமான வரி, தனி நபர் வருமான வரி, கலால் வரி, சுங்க வரி, சேவை வரி ஆகிய வரி இனங்களின் மூலம் அரசுக்கு எவ்வளவு வரி வருமானம் கிடைக்கும் என்ற மதிப்பீட்டை கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஜெயிட்லி கொடுத்தார். இம்முறை தனது பட்ஜெட் உரையில் இவ்வரி இனங்கள் மூலம் கிடைத்துள்ள வருமானம் பற்றிய திருத்தப்பட்ட மதிப்பீட்டை கொடுத்துள்ளார். அதன்படி, கார்ப்பரேட் வருமான வரி வசூல் பட்ஜெட் மதிப்பீட்டை விட ரூ 18.000  கோடி குறைவாகவும் தனி நபர் வருமான வரி வசூல் ரூ 28,000  கோடி குறைவாகவும் தான் இருக்கும் என்று பட்ஜெட் உரை தெரிவிக்கிறது. ஆக மொத்தம், செல்வந்தர்களிடம் இருந்து வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட வரி வருமானத்தில் அரசுக்கு விழுந்துள்ள துண்டு 46,000 கோடி ரூபாய். ஆனால், கலால் வரி மூலம் பட்ஜெட்டில் கடந்த ஆண்டு மதிப்பிடப்பட்டதை விட 55,௦௦௦ கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. இதன் சூட்சுமம் என்ன? பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணய் விலை பாரெல் ஒன்றுக்கு 130 அமெரிக்க டாலரில் இருந்து 30 க்கு குறைந்த பொழுது  மீண்டும் மீண்டும் கலால் வரியை உயர்த்தி பெட்ரோல், டீசல் விலை குறையாமல் மத்திய அரசு பார்த்துக்கொண்டது. இதனால் அரசுக்கு கலால் வரி வருமானம் பட்ஜெட் மதிப்பீட்டை விட பெருமளவு கூடியுள்ளது. அதாவது, அரசின் மொத்த வரிவருமானத்தில் மக்களை வாட்டி வதைக்கும் மறைமுக வரிகளின் பங்கு கணிசமாக கூடியுள்ளது. ஆனால் செல்வந்தர்கள் தர வேண்டிய வரி வருமானம் உரிய அளவு வரவில்லை.

சென்ற ஆண்டு ஜெயிட்லி தனது பட்ஜெட்டில் சொத்துவரியை அறவே நீக்கி விட்டார். நூறு டாலர் சீமான்கள் கையில் தலா 1 பில்லியனுக்கு அதிகமாக சொத்து குவிந்துள்ள நாடு நமது இந்தியா. அதாவது, 130 கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில் 100 பெரும் செல்வந்தர்கள் கையில் தலா ரூ 7000 கோடிக்கும் அதிகமாக சொத்து உள்ளது. இவர்களின் மொத்த சொத்து நாட்டின் ஆண்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட நாலில் ஒரு பங்கு. இத்தகைய நாட்டில் தான் சொத்து வரி வேண்டாம், வாரிசு வரி வேண்டாம், வருமான வரியை குறைக்கவேண்டும் என்று செல்வந்தர்கள் கூவுகின்றனர். அவர்கள் ஊதுகுழலாக உள்ள ஊடகங்களும் இதையே உரக்கச் சொல்லுகின்றன. மத்திய மாநில அரசுகள் திரட்டும் மொத்த வரிப்பணத்தில் 65% க்கும் கூடுதலாக ஏழை மக்களை தாக்கும் மறைமுக வரிகளே உள்ளன. (தீப்பெட்டி வாங்கும் பொழுதும் மண்ணெண்ணய் வாங்கும் பொழுதும் எந்த ஒரு பொருளையோ சேவையையோ வாங்கும் பொழுதும் சாதாரண மக்கள் மறைமுக வரி கட்டுகின்றனர். இந்த வரி வாங்கும் பொருளின் விலையில் ஒளிந்திருப்பதால் மறைமுக வரி என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய வரிகள் அம்பானிக்கும் ஒன்றுதான் ஆண்டிக்கும் ஒன்றுதான். ஏழைகளின் வருமானம் குறைவாக இருப்பதால், ஏழைகள் மீது இவை பெரும் சுமையாக ஆகின்றன. செல்வந்தர்களுக்கு இது ஒரு கொசுக்கடிதான்.)

வருமான வரி சலுகைகளை செல்வந்தர்களுக்கு அளித்தது மட்டுமின்றி, வரிஏய்ப்போருக்கு சாதகமாக இருப்பது மட்டுமின்றி, பட்ஜெட் வரி தொடர்பான சச்சரவு அரசுக்கும் பணக்காரர்களுக்கும் இருக்கும் பட்சத்தில் அதனை பரஸ்பர பேரம் மூலம்  தீர்த்துக் கொள்ளவும் வலியுறுத்தி, பணக்காரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அரசின் வரவு-செலவு கொள்கை   

மத்திய பட்ஜெட் என்பது அடிப்படையில் மத்திய அரசின் ஒரு ஆண்டுக்கான வரவுகள் மற்றும் செலவுகள் பற்றிய மதிப்பீடுகள் தரும் அறிக்கை. இதன் அடிப்படையாக இருப்பது நாட்டின் பொருளாதார நிலையும் அரசின் வரவு மற்றும் செலவு தொடர்பான கொள்கைகளும் தான். அரசின் நடப்பு வரவுகளில், வரிகள் தவிர, பொதுத்துறை  நிறுவனங்கள் ஈட்டும் லாபங்கள், மற்றும் அரசு தான் வழங்கும் சேவைகளுக்கு வசூலிக்கும் கட்டணங்கள் ஆகியவையும் சேரும். மூலதன வரவு என்பது அரசு பொதுத்துறை சொத்துக்களை விற்று பெறும் தொகையும் அரசு கடன் வாங்கி பெறும் தொகையும் தான். கடந்த ஆண்டு பட்ஜெட் சமர்ப்பித்த பொழுது பொதுத்துறை சொத்துக்களை விற்று அரசு அறுபத்தெட்டாயிரம் கோடி ரூபாய் பெறும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் சுமார் 25,௦௦௦ கோடி ரூபாய்தான் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு 56,5௦௦ கோடி ரூபாய் அளவிற்கு பொதுத்துறை சொத்துக்களை விற்று பெறப்போவதாக பட்ஜெட் கூறுகிறது. இப்படி, பெரும் பன்னாட்டு, இந்நாட்டு கம்பனிகள் மீதும் செல்வந்தர்கள் மீதும் உரிய வரி விதித்து வசூலித்து வளங்களை திரட்டுவதற்குப் பதிலாக, மக்கள் சொத்துக்களாகிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று வருமானம் ஈட்ட முனைகிறது அரசு. கடன் மூலம் அரசின் வரவை கூட்டுவதற்கு முதலாளிகளும் பன்னாட்டு மூலதனமும் உலக வங்கி, ஐ.எம்.எஃப். போன்ற அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. எனவே, தாராளமய கொள்கைகளை பின்பற்றும் மத்திய அரசு வளங்களை திரட்டுவதற்குப் பதிலாக, செலவுகளை குறைப்பதற்கே அழுத்தம் அளிக்கிறது. அதிலும் உணவு, உரம், எரிபொருள் போன்ற மக்களுக்கும் வேளாண்மைக்கும் அவசியமான மானியங்களை வெட்டி செலவை சுருக்கிக்கொள்ள அரசு விழைகிறது. இதுதான் இந்த ஆண்டும் நடந்துள்ளது.

அரசின் ஒதுக்கீடுகள்

ஊடகங்களில் அரசு இந்த பட்ஜெட்டில் வேளாண்மை, கல்வி, ஆரோக்கியம் ஆகிய துறைகளுக்கு மிகவும் கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளதாக பொய்ப்பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் ‘வறுமை ஒழிப்பு’ பட்ஜெட் என்றெல்லாம் அபத்தமாக சொல்லப்படுகிறது; எழுதப்படுகிறது. உண்மை என்ன? எல்லா விவரங்களுக்கு உள்ளும் போக முடியாவிட்டாலும் சில முக்கிய தகவல்களை பார்ப்போம்.

வேளாண்துறைக்கு இந்த ஆண்டு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையைப் போல்  இரண்டு மடங்குக்கும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தம்பட்டம் அடிக்கப்படுகிறது. ஆனால் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் என்ற தலைப்பின் கீழ் முப்பத்து  எட்டாயிரத்தி ஐந்நூறு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதில் விவசாயிகள் செலுத்த வேண்டிய வங்கி கடன் வட்டிக்கு அரசு அளிக்கும் மான்யமும் அடங்கும்.. சுமார் 15,000 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ள இந்த மானியம் கடந்த ஆண்டும் கொடுக்கப்பட்டது. ஆனால் நிதி அமைச்சகத்தின் செலவாக அது காட்டப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட் கணக்கில் அதே தொகையை விவசாயிகள் நலன் என்ற இனத்தின் கீழ் கொண்டு வந்துள்ளனர். அவ்வளவுதான் விஷயம். உண்மையில், சென்ற ஆண்டு ஒதுக்கீட்டை விட இந்த ஆண்டு வேளான்துறைக்கான ஒதுக்கீடு சுமார் 33% தான் கூடியுள்ளது. விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால் உண்மையில் அதைவிட குறைவாகத்தான் அதிகரிப்பு உள்ளது. கடும் வறட்சி, விளை பொருளுக்கு நியாய விலை இல்லை, நாளும் நிகழும் ஏராளமான விவசாயிகளின் தற்கொலைகள் என்ற பின்புலத்தில் பார்த்தால் இந்த ஒதுக்கீடு உயர்வு, நிலவும் வேளாண் நெருக்கடியை எதிர்கொள்ள யானை பசிக்கு சோளப்பொறி என்பதுதான் உண்மை.

அதேபோல் ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான ஒதுக்கீடு முப்பத்தி எட்டாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய். இது கடந்த ஆண்டை விட சுமார் 10 சதவீதம் அதிகம். ஆனால் சென்ற ஆண்டுக்கான கொடுபடா கூலித் தொகையே பல ஆயிரம் கோடி ரூபாய்கள். அவற்றை கொடுத்த பிறகு மிஞ்சுவது சென்ற ஆண்டை விட பண அளவிலும் உண்மை அளவிலும் குறைவாகவே இருக்கும். அது மட்டுமல்ல. 2009-10 ஆண்டிலேயே இத்திட்டத்திற்கு ,நாற்பதாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இன்றைய விலைவாசியில் அதன் மதிப்பு ரூ 63,௦௦௦ கோடி ரூபாயாகும். உண்மையில், மக்கள் இடதுசாரிகள் தலைமையில் போராடிப்பெற்ற ரேகா திட்டத்தை   பா ஜ க அரசு தொடர்ந்து வெட்டிச் சுருக்கி வருகிறது. இதை வெளிப்படையாகவே நிதி அமைச்சகத்தின்  2014 நடு ஆண்டு பொருளாதார பரிசீலனை அறிக்கை கூறுகிறது. கல்வி, ஆரோக்கியம், குழந்தைகள் நலன் என்று ஒவ்வொரு சமூக நலத்துறையிலும் இதுதான் கதை. பெண்கள் மற்றும் சமூக நலத்துறையின் ஒதுக்கீடு சென்ற ஆண்டைவிட குறைந்துள்ளது. ஆரோக்கியத்தை பொறுத்தவரையில், அரசே மக்களுக்கு மருத்துவ வசதிகளை உறுதிபட அளிப்பதற்குப் பதிலாக, காப்பீட்டு ஏற்பாடுகள் மூலம் மக்கள் தனியார் மருத்துவ மனைகளுக்கு தள்ளப் படுகின்றனர். இதனால் அதிகம் பயனடைவது தனியார் மருத்துவத்துறையும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களும்தான். அதிலும் கூட ஒதுக்கீடு மிகக் குறைவாகவே உள்ளது. அடுக்களை புகையிலிருந்து பெண்களை விடுவிப்பதாக தம்பட்டம் அடிக்கும் அமைச்சர், ஏழை மக்களுக்கு எரிவாயு இணைப்புக்கு வெறும் 2000 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பது அரசின் அணுகுமுறையை அம்பலப்படுத்துகிறது. அதே சமயம், உணவு மானியமும், உர மானியமும் இரண்டும் சேர்ந்து 7000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற அடிப்படையில் நாம் வேறு சில அம்சங்களுக்குச் செல்லலாம். .

பட்ஜெட்டும் பொருளாதார வளர்ச்சியும்

தனது பட்ஜெட் உரையில் பன்னாட்டுப் பொருளாதாரம் மந்தமான நிலையில் இருந்தும் இந்தியா சிறந்த வளர்ச்சி பெற்றிருப்பதாக நிதி அமைச்சர் மார் தட்டிக் கொள்கிறார். உண்மையில் இவர் தரும் வளர்ச்சி விகிதப் புள்ளி விவரங்களைப்பற்றி  அரசின் அங்கமாக செயல்படும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அடிப்படை ஆண்டு மாற்றம், மறைமுக வரிகளைக் கூட்டி சந்தை விலைகள் அடிப்படையில் உற்பத்தி மதிப்பை கணக்கிடுதல், கணக்கிடும் வழிமுறைகளில் பல மாற்றங்கள் இவையெல்லாம் அரசின் வளர்ச்சி “சாதனை”யின் பின்னால் உள்ளன. இவை ஒரு புறமிருக்க, மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது, பன்னாட்டு சந்தையில் பெட்ரோலியம் கச்சா எண்ணய் .விலைகள் பெருமளவிற்கு சரிந்ததால், அயல் வர்த்தகத்தில் அந்நியச் செலாவணி பற்றாக்குறை பிரச்சினை எழவில்லை என்பதுதான். வரும் ஆண்டில் கச்சா எண்ணய் .விலைகள் உயரக் கூடும் என்பதும் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விக்தங்களை உயர்த்த உள்ளது என்பதும் கூடுதல் சவால்களாக அமையும். பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான அம்சம் இந்த வளர்ச்சியின் தன்மை. அரசு தரும் புள்ளிவிவரப்படியே, வேளாண்துறை வளர்ச்சியும் தொழில் வளர்ச்சியும் மிக மந்தமாக உள்ளன. வேலை வாய்ப்புகள் மேலும் சுருங்கி, கடும் வேலையின்மை நிலவுகிறது. விவசாயிகள் தற்கொலை முடிவின்றி தொடர்கிறது. சட்டப்படி ஒவ்வொரு கிராம குடும்பத்திற்கும் ஆண்டுக்கு நூறு நாள் வேலை தர வேண்டிய சட்ட நிபந்தனை இருந்தும் சராசரி ரேகா வேலை நாட்கள் நாற்பதுக்கும் கீழே உள்ளன. பல ஆயிரம் கோடி ரூபாய் கூலி பாக்கி வைக்கப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் மறைத்துவிட்டு, வளர்ச்சி பற்றி பேசப்படுகிறது.

இதுமட்டுமல்ல. பன்னாட்டு சூழல் மேலும் மந்தமாகும் என்று தனது பட்ஜெட் உரையில் குறிப்பிடும் அமைச்சர் தனது பட்ஜெட்டில் அரசின் ஒட்டுமொத்த ஒதுக்கீடுகளை போதுமான அளவு உயர்த்தியுள்ளாரா என்றால் இல்லை. மாறாக, அரசின் நிதிப் பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்கவேண்டும் என்ற தாராளமய தாரக மந்திரத்தை முன்வைத்து முதலீடுகள் உள்ளிட்டு  அரசின் செலவுகள் சுருக்கப்பட்டுள்ளன. நிதிப் பற்றாக்குறை என்பது அரசின் மொத்த செலவுகளில் இருந்து கடன் அல்லாத வரவுகளைக் கழிப்பதால் கிடக்கும் தொகை. இதனை குறைப்பதை இலக்காக ஆக்குவதன் பொருள் என்னவெனில், நாட்டு வளர்ச்சிக்கு அரசு கடன் வாங்கி முதலீடுகளை மேற்கொள்ளக்கூடாது என்பதாகும். முதலீடுகளை லாப நோக்கு அடிப்படையில் முதலாளிகள் செய்யட்டும், தொழிலாளிகளை கட்டுப்படுத்தி, அவர்கள் உரிமைகளை மறுத்து, சட்டம் ஒழுங்கை முதலாளிகள் சார்பாக அரசு பாதுகாக்கட்டும் என்பதுதான் தாராளமயத்தின் அடிப்படை வர்க்க அரசியல். நமது வாதம் அரசு கடன் வாங்கித்தான் முதலீடு செய்ய வேண்டும் என்பது அல்ல. முறையாக பெரும் கம்பனிகள், செல்வந்தர்கள் மீது வரிவிதித்து வசூல் செய்தாலே, அரசு கட்டமைப்புகளை மேம்படுத்தவும், கல்வி, ஆரோக்கியம் ஆகிய துறைகளை வலுப்படுத்தவும் கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ள முடியும். அதற்குப் பதிலாக, பொதுத்துறை பங்குகளை அடிமாட்டு விலைக்கு பெருமுதலாளிகளுக்கு  விற்று தனது செலவுகளை அரசு செய்து கொள்கின்ற தாராளமய அணுகுமுறைதான் பட்ஜெட்டில் தொடர்கிறது. கடந்த ஆண்டிலும் இதேதான் செய்யப்பட்டது. பணக்காரர்கள் மீது வரியும் போட மாட்டோம், பொதுத்துறை பங்குகளையும் சகாய விலையில் அவர்களிடம் ஒப்படைப்போம் என்ற அரசின் கொள்கை பொதுத்துறையை பற்றி வைத்துள்ள அணுகுமுறை இதுதான்: “ லாபத்தில் செயல்பட்டால் விற்று விடு, நட்டத்தில் இருந்தால் மூடி விடு ”

கட்டமைப்பு முதலீடுகள் பற்றி பட்ஜெட் உரை பேசுகிறது. ஆனால், கடந்த ஆண்டு அரசின் மூலதனச்செலவு தேச உற்பத்தியில் 1.8 %  ஆக இருந்தது, இந்த ஆண்டு  1.6% ஆக குறைக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பை கட்டும் பாணி பொது – தனியார் இணை பங்கேற்பு (PPP OR PUBLIC PRIVATE PARTICIPATION) என்ற முறையில் நடத்தப்படும். இது பெரிய கம்பெனிகள் கொள்ளை லாபம் ஈட்ட உதவுமே தவிர அரசின் பணம் முறையாக, மக்களுக்குப் பயன் தரும் வகையில் செலவிடப்படுவதை உத்தரவாதம் செய்யாது.

இறுதியாக ஒருவிஷயம். மத்திய மாநில உறவுகளில் கூட்டுறவுப் போக்கை கடைப்பிடிப்பதாக சொல்லிக்கொள்ளும் பா ஜ க அரசு, தொடர்ந்து மாநிலங்களின் வரி வருவாய்களை குறைத்து வருகிறது. வருமான வரிகளில் அரசு செல்வந்தர்களுக்கும் பெரும் கம்பனிகளுக்கும் அளிக்கும் சலுகைகள், மாநிலங்களின் வரி வருமானத்தை பாதிக்கிறது. பதினான்காவது நிதி ஆணையம் பகிரப்படும் வரி தொகையில்  மாநிலங்களின் பங்கை அதிகரித்துள்ள போதிலும், சர்சார்ஜ், செஸ் போன்ற வழிகளில் மாநிலங்களுடன் பகிராத வகையில் மத்திய அரசு தனது வரிப்பங்கை கூட்டிக் கொள்கிறது. திட்ட அடிப்படையிலான மாநில ஒதுக்கீடுகள் குறைந்துள்ளதால், நிகரமாக மாநிலங்கள் பெரும் வரவு தேச உற்பத்தியின் சதவிகிதமாக பார்த்தால் குறைந்து வருகிறது. மாநில முதலாளித்துவ கட்சிகள் இதை எதிர்த்து வலுவாக குரல் கொடுப்பதில்லை.

மொத்தத்தில் “அச்சே தின் “ என்ற நல்ல நாட்கள் கருப்பு பணக்காரர்கள், வரி ஏய்ப்போர், பன்னாட்டு, இந்நாட்டு பெரும் கம்பெனிகள், கோடி டாலர் கனவான்கள், அந்நிய மூலதனம் ஆகியோருக்கு மட்டுமே தொடரவுள்ளன.