COP26 மாநாட்டின் உண்மைப் பின்னணி !

வெப்பமாகும் புவி: நவ-காலனிய ஆதிக்கத்திற்கான புதிய திட்டம்

ஜெ.ராஜன்

தமிழில்: சிந்தன்

குரல்: தோழர் பீமன்

பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசாங்க குழு (IPCC) முன்வைத்த அறிக்கையின் படி, தொழில்மயத்திற்கு முன்பு இருந்ததை விடவும், புவி மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 1.07 டிகிரி செல்சியஸ் சராசரி உயர்வை கண்டுள்ளது. முன்னர் பாரீசில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில், அனைத்து நாடுகளும் முயற்சிப்பதாக ஒப்புக்கொண்ட வெப்பநிலை இலக்குகளை 15 ஆண்டுகளிலோ அல்லது அதற்குள்ளோ எட்டிவிடுவோம் என்பதையும், இப்போது அனைத்து நாடுகளும் பசுங்கூட வாயுக்கள் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த எடுத்துவரும் முயற்சிகளின் அடிப்படையில், சராசரி வெப்பநிலை இலக்கு 1.5 டிகிரியாக அதிகரித்துள்ளது என்பதையும் விஞ்ஞானிகள் அதே அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

கார்பன் பட்ஜெட்:

முற்போக்காளர்களும், ஜனநாயகவாதிகளும் பூமியின் சூழல் வளங்கள் (வளிமண்டலம், கடல்கள் மற்றும் நிலம்) அனைத்தும் உலகிற்கு பொதுவானவை என்ற பார்வையை முன்வைக்கிறார்கள். அந்த பார்வைக்கான அறிவியல் ஆதாரத்தை பருவநிலை விஞ்ஞானம் தெளிவாக முன்வைக்கிறது. உலக ‘கார்பன் பட்ஜெட்’ என்ற கருத்தில் இந்த பார்வை வெளிப்படுகிறது. புவி வெப்பநிலை உயர்வினை குறிப்பிட்ட வரம்பிற்குள் கட்டுப்படுத்த வேண்டுமானால், மொத்த உலகமும் சேர்ந்து பசுங்கூட வாயுக்களின் வெளியீட்டு அளவினை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக அதிகபட்ச எல்லையே ‘கார்பன் பட்ஜெட்’ ஆகும்.

வளர்ந்த நாடுகளால், உலகப் பொது வளங்கள், பெருமளவில் அபகரிக்கப்பட்டு வந்துள்ளன. உலக மக்கள் தொகையில் 18 சதவீதம் பேர் மட்டுமே வாழக்கூடிய அந்த நாடுகளில் இருந்துதான், தொழில்மய காலத்திற்கு முன்பில் இருந்து தற்சமயம் வரை வெளியான மொத்த பசுங்கூட வாயுக்களில் 60 சதவீதம் அளவு வரையிலும் வெளியாகியுள்ளன. சீனாவின் வெளியேற்றம் சுமார் 13 சதவீதம் ஆகும். தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள 1.5 டிகிரி என்ற வெப்பநிலை இலக்கின்படி, 17 சதவீத ‘கார்பன் பட்ஜெட்’ மட்டுமே மீதமுள்ளது. இந்தியாவின் வெளியேற்றம் 4.37 சதவீதம் மட்டுமே ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வெளியிடும் பசுங்கூட வாயுக்களின் தலா கணக்கீடு மிகவும் குறைவு ஆகும்.

நிலக்கரி அவசியம்:

வளரும் நாடுகளின் ஆற்றல் உருவாக்கத்திற்கு, புதைபடிவ எரிபொருட்கள் (fossil fuels) இப்போதும் அவசியமாக உள்ளன. அந்த வகையில் இந்தியாவை பொருத்தமட்டில், நிலக்கரி தொடர்ந்து தேவைப்படுகிறது. சூரியன் இரவில் ஒளிர்வதில்லை, காற்று எல்லா நேரத்திலும் வீசுவதில்லை என்பதால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கும் கூட, புதைபடிவ எரிபொருட்களில் இருந்து ஆற்றலை பெறுவது அவசியம். வளரும் நாடுகளில் வசிக்கும் பெரும்பகுதி மக்கள் தொகையினரிடையே நிலவும் ஆற்றல் வள வறுமையை தீர்ப்பதற்கு, விலை குறைந்த பேட்டரிகளோ, இதர மின் ஆற்றல் சேமிப்பு முறைகளோ கண்டுபிடிக்கும் காலம் வரைக்கும் காத்திருக்க முடியாது. உரம் உற்பத்தி செய்வதற்கு புதைபடிவ எரிபொருட்கள் அத்தியாவசியமாக உள்ளன, மேலும் வேளாண் உற்பத்தியால் வெளியிடப்படும் பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றம், உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ‘அத்தியாவசிய வெளியேற்றமும்’ ஆகும். முக்கியமான தொழில் உற்பத்தி துறைகளும் ஆற்றல் தேவைகளுக்காக புதைபடிவ எரிபொருட்களையே சார்ந்துள்ளன. இத்துறைகளும் இவற்றில் செயல்படும் சிறு குறுந்தொழில்களும், இந்தியா உள்ளிட்ட (புவியின்) தெற்கு நாடுகளில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற அவசியமானவை ஆகும்.

வளர்ந்த நாடுகளின் நோக்கம்:

வளர்ந்த நாடுகள், தாங்கள் வெளியிடும் பசுங்கூட வாயுக்களின் அளவை குறைப்பதற்கு தேவையான முயற்சிகளை எடுக்க மறுக்கிறார்கள். அவர்கள் 1990 ஆம் ஆண்டில் வெளியிட்டதை விடவும் ஒவ்வொரு ஆண்டும் 0.4 சதவீதம் கூடுதலான பசுங்கூட வாயுக்களை வெளியிடுவார்கள் (2020 ஆம் ஆண்டில்) என்ற மதிப்பீட்டினை ஐக்கிய நாடுகள் சபையின், பருவநிலை தொடர்பான மாநாடு (UNFCCC) முன்வைத்துள்ளது. அதனோடு ஒப்பிட்டு நோக்கினால், அவர்கள் 2050 ஆம் ஆண்டுக்குள், பசுங்கூட வாயு வெளியேற்றத்தை நிகர மதிப்பில் பூஜ்ஜியம் ஆக்கிவிடுவோம் என்று தரும் உறுதி நம்பத்தக்கதல்ல. மேற்சொன்ன இலக்குத் தேதியை அப்படியே நம்பினாலும், வரும் 2030 ஆம் ஆண்டு வரையிலும் கொடுத்திருக்கும் புதிய வாக்குறுதிகளின் கணக்குப்படி பார்த்தாலும் கூட, உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் கூட கொண்டிருக்காத அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும், மீதமுள்ள ‘கார்பன் பட்ஜெட்டில்’ 30 சதவீதத்தை விழுங்கிவிடுவார்கள்.

பருவநிலை நெருக்கடிக்கான தீர்வை சந்தையின் மூலமாக கண்டடையலாம் என்று வளர்ந்த நாடுகள் தொடர்ந்து வற்புறுத்துகிறார்கள். அதாவது, புவி வெப்ப தணிப்பு நடவடிக்கைகளுக்காக தங்கள் பொருளாதாரத்தில் தர வேண்டிய மதிப்பை விடவும் மலிவான விலையில் கார்பன் பட்ஜெட்டை ‘வாங்கிக் கொள்ளலாம்’ என்று எதிர்பார்க்கிறார்கள். பருவநிலை மாற்றத்தால் நமக்கு ஏற்படும் தாக்கத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணி இந்தியா பசுங்கூட வாயு வெளியேற்றத்தை குறைப்பது என்ற நடவடிக்கை அல்ல. உலகளவில் எந்த அளவிற்கு பசுங்கூட வாயு வெளியேற்றம் குறைகிறது என்பது தான்.

சமநீதியான தீர்வு:

செவ்வியல் மார்க்சியம் வரையறுத்துள்ள நெருக்கடியாகவே இது உள்ளது. பழைய முறையில் புதைபடிம எரிபொருட்களை சார்ந்த நுட்பங்களை தொடர்ந்து பயன்படுத்தினால் உலகம் தொடர்ந்து வெப்பமடையும். இதனை மாற்றிட) தேவைப்படும் புதிய நுட்பங்களை இன்னும் முறையாக வெளிவரவில்லை.இப்போதைக்கு ஆற்றல் உருவாக்கத்தில் அவற்றின் (மாற்று முறைகளின்) பயன்பாட்டு வரம்பு மிகவும் குறைவு. அதுவும் பெரும்பாலும் ஆற்றல் துறை உற்பத்திக்கு மட்டும் பயன்படும். அவற்றின் செலவும் அதிகம். ஆனால் வளரும் நாடுகளில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக்கு அரசு தர வற்புறுத்தப்படும் ஆதரவினால் அந்தச் செலவுகள் வெளியில் தெரிவதில்லை. எனவே மேலெழுந்தவாரியாக பார்த்தால் மலிவாக தெரிகின்றன.

இந்த நெருக்கடிக்கான தீர்வினை சமநீதியின் அடிப்படையில் தேடிட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாநாட்டில் (UNFCCC) கையெழுத்திட்டுள்ள அனைத்து நாடுகளும், ஒரே பொதுவான இலக்கில், அவரவர் தகுதிக்கு தக்க மாறுபட்ட பொறுப்புகளை ஏற்று இயங்க வேண்டும். இதில் வளர்ந்த நாடுகளே முன்னிலை வகிக்க வேண்டும். ஆனால் வளர்ந்த நாடுகள், உலக பருவநிலை திட்டத்தினை மேற்சொன்ன கொள்கையின் அடிப்படையில் முன்னெடுக்க மறுக்கின்றனர். அதுமட்டுமல்லாது, பிற உலக நாடுகளுக்கு பருவநிலை நிதியும், பருவநிலை தொழில்நுட்ப உதவிகளும் செய்வோம் என்ற முன்பு அளித்திருந்த வாக்குறுதிகளில் இருந்தும் நழுவுகிறார்கள்.

நவ-காலனிய முயற்சிகள்:

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான சுமையில் பெரும்பகுதியை வளரும் நாடுகளின் மீது திணிப்பதற்கே வளர்ந்த நாடுகள் தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். பாரிஸ் ஒப்பந்தத்தை அமலாக்க தொடங்கியபோது, சீனாவையும் தங்களோடு ஆட்டத்திற்கு இழுத்தார்கள், அதன் மூலம் தெற்கு நாடுகளில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை தடுக்கும் வகையிலான தாக்குதலுக்கு முயற்சித்தார்கள். அணு சக்தி விசயத்தில் நடந்ததைப் போலவே இந்த விசயத்திலும் ‘புதைபடிவ எரிபொருள் தடை ஒப்பந்தம்’ ஏற்படுத்துவதற்கான வாதங்கள் தொடங்கின. இந்த ஏற்பாடு, உலகின் பருவநிலை மீது பாரபட்சமான அதிகாரத்தை செலுத்துவதற்கான முயற்சியே ஆகும். மேலும், இது அணு பரவல் தடை ஒப்பந்தத்தினை விடவும் பாதகமானதாக அமைந்துவிடும்.

அமெரிக்காவின் தலைமையில் முன்னெடுக்கப்படும் நவ காலனிய முயற்சியின் திட்டங்கள் பின்வருமாறு அமைகின்றன :

1) புதைபடிவ எரிபொருட்களை பயன்படுத்தும் வளர்ச்சித்திட்டங்களுக்கு – நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு பயன்படுத்தும் திட்டங்களுக்கு – பன்னாட்டு வளர்ச்சி வங்கிகளின் கடன் உதவிகளை தடுப்போம் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இதே அமெரிக்காதான், சமீபத்தில் உலகம் கண்ட மிகப்பெரிய எண்ணெய் எரிவாயு ஏலத்தை நடத்தி முடித்துள்ளது, ரஷ்யாவிற்கு செல்லும் எண்ணெய் எரிவாயு குழாயை ஐரோப்பிய ஒன்றியம் இப்போதுதான் கட்டி முடித்துள்ளது என்ற செய்திகளையும் இத்துடன் இணைத்துப் பார்க்கும்போது, அவர்களின் பாகுபாடும் பொய்மையும் தெள்ளத்தெளிவாகிறது.

2) தனியார் துறையின் மூலமான பருவநிலை நிதியை அமெரிக்கா அறிவித்துள்ளது. வளரும் நாடுகள் அந்த உதவியைப் பெறுவதன் மூலம் கடுமையான ‘பசுமை’ நிபந்தனைகளும், பெரும் கடன் சுமையும் அவர்கள் மீது சுமத்தப்படும். பசுங்கூட வாயு வெளியேற்றத்தை குறைத்து, புவி வெப்பத்தை தணிப்பதற்காக, வளரும் நாடுகளில் நடக்கும் தொழிற்கூட உற்பத்திகளை பலவீனப்படுத்தும் வகையில் சர்வதேச நிதி மூலதனம் திரட்டப்படுகிறது.

3) பிரேசிலின் காடுகள் அவர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்று அமெரிக்காவும், பிரான்சும் மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். புவியின் தெற்கு நாடுகளில் உள்ள தாவரங்களும் காடுகளும் வளிமண்டலத்தில் பசுங்கூட வாயுக்களை உறிஞ்சிக்கொள்ளுமானால் அது வடக்கே உள்ள நாடுகள் பசுங்கூட வாயு வெளியேற்றத்தை குறைப்பதை தாமதப்படுத்த உதவும் என்ற உத்தியின் வெளிப்பாடே இந்த மிரட்டல் ஆகும். தெற்கு நாடுகளின் வளங்களை கைப்பற்ற வடக்கு நாடுகள் விரும்புகிறார்கள்.

அதே விதத்தில், வேளாண்மையும், வெப்ப தணிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இழுக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள சிறு விவசாய குடும்பங்கள், பருவநிலை நெருக்கடி உருவாகக் காரணமான எதையுமே செய்ததில்லை. ஆனால் பணக்கார நாடுகள் செய்தவைகளுக்கான விளைவுகளை அவர்கள் அனுபவிப்பார்கள். “செலவே இல்லாத இயற்கை விவசாயம்” என்பது போன்ற அறிவியலுக்கு புறம்பான முன்மொழிவுகளை ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு பெற்ற சர்வதேச நிறுவனங்கள் முன்வைக்கின்றன. இந்த விதத்தில் ‘பசுங்கூட வாயுக்களை’ குறைப்பது என்ற பெயரால் விவசாயத்தில் உற்பத்தி திறனை உயர்த்துவதற்கான முக்கியத்துவம் பின் தள்ளப்படுகிறது. இலங்கை இப்போது எதிர்கொண்டுவரும் வேளாண் உற்பத்தி நெருக்கடி, வரும் காலத்தில் வளரும் நாடுகள் எதிர்கொள்ளவுள்ள நெருக்கடியை எடுத்துக்காட்டும் ஒரு உதாரணமாகும். நவ-காலனிய ஆதிக்க பிரச்சாரத்திற்கு அடிபணிந்தோமானால், இதுதான் நடக்கும்.

பொருத்தமற்ற அணிச்சேர்க்கைகள்:

தங்களுக்கு முன்னுள்ள சவால்களை வளரும் நாடுகளால் எதிர்கொள்ள முடியவில்லை. ஒற்றுமையும் பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்த வளர்ச்சியுற்ற நாடுகள், சிறு தீவு நாடுகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட நாடுகள் பலவும் வளர்ந்த நாடுகளோடு சேர்ந்து நிற்பதன் மூலம், பெரிய வளரும் நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து, தங்களுடைய பங்கினை பெற முடியும் என்று நினைக்கிறார்கள்.

டிரம்ப் அதிபராக இருந்த 4 ஆண்டுகளில் பருவநிலை நெருக்கடியை மறுத்துக் கொண்டு, அதன் வழியாக சிக்கலை தீவிரப்படுத்திய அமெரிக்கா, தற்போது தனது வல்லாதிக்க நடைமுறைகளின் மூலம் மற்றவர்கள் மீது நிர்ப்பந்தம் செலுத்த முயற்சிக்கிறது. அமெரிக்க அதிபரான பைடன் பருவநிலை பிரச்சனையை ஒரு முக்கிய “ பாதுகாப்பு” பிரச்சினையாக அறிவித்துள்ளார். மற்ற வளர்ந்த நாடுகளுடன் இணைந்து அந்த பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்துச் செல்ல முயற்சிக்கிறார். உலகத்தில் ஏற்கனவே வர்த்தக ஆளுகையிலும், நிதி ஆளுகையிலும் தான் செலுத்திவரும் ஆதிக்கத்தை பருவநிலை பற்றிய ஆளுகையிலும் செலுத்திட வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. புவிக்கோளத்தின் தெற்கில் உள்ள நாடுகளை நோக்கி, பைடனின் நிர்வாகம் முன்னெடுக்கும் இந்த நவ காலனீய நடவடிக்கைகளை, வளர்ந்த நாடுகளில் உள்ள சமூக ஜனநாயக ‘இடதுசாரி’ பிரிவினர் சிலர் விமர்சனமற்று ஆதரிப்பது வருத்தமளிப்பதாகும்.

பருவநிலை பிரச்சனையில் இயங்கும் புதிய தலைமுறை இளைஞர் ‘இயக்கங்களும்’ கூட, புவி வெப்பமாதலால், தெற்கு நாடுகளில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய புரிதலும், கவலையும் அற்றவர்களாக உள்ளனர். பருவநிலை நெருக்கடியினால், வடக்கு நாடுகளில் உருவான புதிய ‘இயக்கங்கள்’ முன்னெடுக்கும் ஆபத்தான முழக்கம் ‘வளர்ச்சி மறுப்பு’ ஆகும். தெற்கு நாடுகளில் நிலவும் மிகக் குறைந்த தொழில் உற்பத்தி அல்லது தொழில் உற்பத்தியே இல்லாத நிலைமையை அப்படியே தொடரச் செய்வதுதான் அந்த நாடுகளுக்கு தேவையான ஒன்று என்ற வாதத்தை, இடதுசாரி முகமூடியுடன் அவர்கள் முன்வைக்கிறார்கள். அதுவும், தெற்கு நாடுகளின் ஊரக பகுதிகளில் ஆற்றல் வளங்களே இல்லாத நிலைமையும், ஆற்றல் வளத்தின் குறைந்த பயன்பாடுகளுமே ‘நல்லொழுக்கம்’ என்ற வகையில் அதீதமான புனிதப்படுத்துதல் வேலையும் செய்யப்படுகிறது. இந்த வாதங்கள் வளர்ந்த சமூகங்களை நோக்கியது போல தோன்றினாலும், அவை தெற்கின் மீதுதான் அழுத்துகின்றன.

கார்பன் காலனியம் :

அமெரிக்காவின் தலைமையிலான வளர்ந்த நாடுகளின் இந்த அழுத்தத்தின் பின்னணியில்தான், கிளாஸ்கோவில் COP26 மாநாடு நடந்தது. COP26 மேற்கொண்ட பல முடிவுகளும் வளந்த நாடுகளின் விருப்பத்திற்குரிய நிகழ்ச்சி நிரலை பிரதிபலிக்கின்றன. வளரும் நாடுகள் மீதான அவர்களுடைய அழுத்தத்தை உயர்த்துகின்றன. வளரும் நாடுகள் இதை எதிர்க்க வேண்டும். பருவநிலை மாற்ற நிதி வழங்குவோம் என்ற வாக்குறுதியளித்த வளர்ந்த நாடுகள், அதிலிருந்து தவறியிருப்பதை சுட்டுவதுடன், வரும் காலத்தில் பருவநிலை மாற்ற நிதியை உருவாக்கி, தொடர்வதையும் ஒவ்வொரு பருவநிலை மாநாட்டிலும் இது பற்றிய விவாதங்கள் தொடர்வதையும் நோக்கி செயல்பட வேண்டும். அப்போதும் முக்கியமான ஒரு பிரச்சனை தொடர்ந்துகொண்டுள்ளது. அமெரிக்காவும் பிற வளந்த நாடுகளும் உலக பருவநிலை ஆளுகையை தங்கள் வசம் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அதன்மூலம், அவர்கள் தங்களுடைய சுமைகளை குறைக்கவே முயற்சிக்கிறார்கள். இப்பிரச்சனையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ளும் அதே சமயத்தில், சர்வதேச பொருளாதாரத்தில் தங்கள் ஆதிக்கத்தை தக்கவைத்துக்க முயல்கிறார்கள். COP26 மாநாட்டில் பேசிய பொலிவியா (ஒத்த சிந்தனையுடைய வளரும் நாடுகளின் சார்பில் பேசிய போது) முன்னெப்போதும் இல்லாத வகையில் வடக்கு நாடுகளின் “கார்பன் காலனிய சிந்தனை” என்பதை மீண்டும் மீண்டும் குறிப்பிட்டது. இந்த ஒத்த சிந்தனையுடைய வளரும் நாடுகளின் கூட்டணியில் இந்தியா, சீனா உட்பட 14 நாடுகள் உள்ளன.

உற்பத்தி சக்திகளுக்கு நெருக்கடி:

மற்ற வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை விடவும், இந்தியாவின் பொருளாதாரத்தில், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு, பெரிய நெருக்கடி வந்துள்ளது. இந்தியாவிலிருந்து குறைவாகவே பசுங்கூட வாயுக்கள் வெளியிடப்படுவது, நிலைத்தகு தன்மையின் விளைவாக அல்ல மாறாக இங்கே ஆலை உற்பத்தி வளர்ச்சி குறைவாக உள்ளதன் காரணமாகவே அந்த நிலைமை நிலவுகிறது. நவ-தாராளமய சீர்திருத்த காலத்தில் நடக்கும் பொருளாதார வளர்ச்சி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஆலை உற்பத்தி வகிக்கும் பங்கினை அதிகரிப்பதாக இல்லை. மனித வள மேம்பாடு குறைவாகவே நடக்கிறது, எனவே பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளுக்கு நம் மக்கள் தொகையில் பெரும்பகுதியானவர்கள் ஆளாகும் சூழல் உள்ளது.

இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் குரலும், ‘நிபுணர்கள்’ என்று அறியப்படுவோரின் குரலும், வளர்ந்த நாடுகளின் ஆதரவு நிறுவனங்களின் ‘பிரச்சாரகர்களும்’ , சர்வதேச என்.ஜி.ஓ நிறுவனங்களும் – புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டினை இந்தியா தடை செய்ய வேண்டும் என்று ஓயாமல் சொல்லி வருகிறார்கள். மன்மோகன் சிங் காலத்திய நவீன தாராளமய சிந்தனையாளர்களும் அதற்கு ஒத்து ஓதுகிறார்கள். பசுமையான மாற்றத்தை முன்னெடுக்கும் ஒரு ‘உலக தலைவனாக’ இந்தியாவை மாற்றியமைக்கும் வாய்ப்பாக, பருவநிலை நெருக்கடியை பார்க்க வேண்டும் என்று அவர்கள் பேசுகிறார்கள். நாட்டின் உற்பத்தி அடித்தளத்தினை தற்சார்புடையதாகவும், விரிவான ஒன்றாகவும் உருவாக்கத் தவறிய அரசாங்கங்களையும், அவர்களுடைய தோல்விகளையும் கவனித்து வரக்கூடிய எவருக்கும், மேற்சொன்ன வாதங்களின் சாத்தியமற்ற தன்மை புலப்படும்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி பெரிய அளவில் நடக்கிறது, அவ்வாறு இதில் ஒரு சிறு பகுதியே இந்தியாவில் உருவாக்கப்பட்ட திறன் (capacity). இந்தியாவிலேயே நடக்கும் நிலக்கரி உற்பத்தியை குறைப்பதால், பன்னாட்டு எண்ணெய்/எரிவாயு நிறுவனங்களே பலனடைவார்கள். அவர்கள் எரிசக்தி ஆற்றலுக்கான கட்டணத்தை உயர்த்துவார்கள். நிலக்கரி துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும். இவையெல்லாம் பொருளாதாரத்தில் நேரடியான, மறைமுகமான தாக்கங்களை உருவாக்கும்.

அவசியமற்ற வாக்குறுதிகள்:

இந்திய பிரதமர், கிளாஸ்கோவில் பேசியபோது புதிய வாக்குறுதிகளை அறிவித்தார். பருவநிலை நெருக்கடியின் தொடர் விளைவுகளைக் குறித்து அச்சத்தில் இருக்கும் உலக மக்களுக்கு இத்தகைய அறிவுப்புகள் நம்பிக்கையூட்டும் என்பது உண்மை. அதே சமயத்தில், நியாயமான அளவை விடவும் அதிகமான சுமைகளை நாம் ஏற்பது, நாட்டின் பொருளாதாரத்திற்கு புதிய சிக்கல்களை கொண்டுவரும். இந்த மாற்றங்களுடைய விளைவுகளை யார் சுமப்பது என்பதைப் பற்றிய தீவிரமான விவாதங்கள் எதுவும் நடக்கவில்லை. ஏற்கனவே நம் நாட்டில் மலிவான நிலக்கரி மின்சார உற்பத்திக்கு பதிலாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் வழியாக மேற்கொள்ளப்படும் மின்சாரத்திற்காக, அதிகமான கட்டணத்தை மக்கள் செலுத்திவருகிறார்கள். ஒன்றிய அரசாங்கம், கொரோனா நெருக்கடிக் காலத்திலும் கூட இந்தக் கொள்கையை தயக்கமின்றி முன்னெடுத்தது. அதன் விளைவாக நிலக்கரி மின்சார உற்பத்தி திறனை பயன்படுத்துவது குறைந்தது. இதையே காரணம் காட்டி, நம் நாட்டிற்கு நிலக்கரி மின்சாரம் அவசியப்படவில்லை என்ற வக்கிரமான வாதம் முன்னெடுக்கப்பட்டது. அதன் பிறகு, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திக்கும், நிலக்கரி மின் உற்பத்திக்குமான செலவுகளை ஒப்பிட்டு வாதங்கள் வைக்கப்பட்டன. அவ்வாறு செலவுகளை ஒப்பிடும்போது புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியில் உள்கட்டமைப்புக்கு ஆகும் செலவு சேர்க்கப்படவில்லை, ஆனால் நிலக்கரி மின் உற்பத்திச் செலவுகளில் உள்கட்டமைப்புச் செலவும் சேர்த்து காட்டி இரண்டும் ஒப்பிடப்பட்டது.

அதே போல வாகன உற்பத்தி துறையிலும், ஒன்றிய அரசாங்கத்தினால் பி.எஸ்., 4 விதிகளில் இருந்து நேரடியாக பி.எஸ்.6 விதிகள் திணிக்கப்பட்டன. அதற்கான செலவினம் ரூ. 50 ஆயிரம் கோடி முதல் ரூ.60 ஆயிரம் கோடி வரை ஏற்பட்டது. மேலும் இது அந்தத் துறையில் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தியது. ஒருபக்கம் இந்த மாற்றம் அமலாகத்தொடங்கியிருந்த நிலையில், இன்னொரு பக்கம் மின்சார வாகன பயன்பாட்டை பெரிய அளவில் முன்னெடுக்கத் தொடங்கினார்கள். 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் வாகனங்களில் 80-90 சதவீதம் மின்சாரத்தில் ஓடச் செய்வோம் என்ற வாக்குறுதியும் தரப்பட்டது. மன்மோகன் சிங் அரசாங்கம் முதலே இந்த வாக்குறுதிகள் தரப்பட்டன. பின் 5 ஆண்டுகளில் அந்த இலக்கு 90 சதவீதம் என்பதில் இருந்து 30 சதவீதமாக ஆக்கப்பட்டது. இதற்காகவும் கூட நாம் இறக்குமதியைத்தான் பெருமளவில் சார்ந்திருக்க வேண்டி வரும். அதே போல, 2030 ஆம் ஆண்டுக்குள், இந்திய ரயில்வே வெளியிடும் பசுங்கூட வாயுக்களின் அளவு நிகர பூஜ்ஜியமாக்கும் என்ற உத்தரவாதம் தரப்பட்டது. இது எப்படி சாத்தியம் என்பது வெளிப்படையாக விளக்கப்படவில்லை. அதுவும் கூட ஒரு விளம்பர அறிவிப்பாகவே இருக்கக் கூடும். தற்சார்பு பொருளாதாரம் என்ற பகட்டான அறிவிப்பு வெளியாகி, அது பற்றிய அரசு அமைச்சகங்களும், மாநில அரசுகளும் பேசிக்கொண்டிருக்கும்போதே, நமது போதாமை அப்பட்டமாக வெளிப்பட்டது. மேலே குறிப்பிட்ட இந்த எல்லாக் கருத்துக்களும் அன்னிய நிதி உதவிபெற்ற நிறுவனங்களினாலும், சர்வதேச என்.ஜி.ஓக்களாலும் முன்னெடுக்கப்பட்டவையே.

தொடரும் கபடத்தனம் :

கிளாஸ்கோவில் நடந்த COP26 மாநாடு முடிவுக்கு வந்தபோது, அங்கே தரப்பட்ட உறுதிமொழிகள் பலவும், வளர்ந்த நாடுகளின் விருப்பங்களை முன்னெடுப்பதாகவே அமைந்தன. நிலக்கரி மட்டும்தான் புதைபடிம எரிபொருள் என்றும் அதனை பயன்படுத்துவதில் இருந்து இந்தியா வெளியேறுவது அவசியம் என்றும் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை இந்தியா ஏற்க இயலாது என்பதில் இருகருத்துக்கு இடம் இல்லை. எரிவாயு மற்றும் எண்ணெய் பயன்பாட்டின் காரணமாக அமெரிக்கா வெளியேற்றும் பசுங்கூட வாயுக்களைப் பற்றி எவருமே சுட்டிக்காட்டிப் பேசவில்லை. அந்த அளவு, இந்திய நிலக்கரி பயன்பாட்டினால் வெளியேறும் பசுங்கூட வாயுக்களை விடவும் அதிகம். ஐரோப்பிய நிலைமையோடும் எந்த ஒப்பீடும் செய்யப்படவில்லை. ஆக, இதிலும் கூட பொய்மை தன்மையே அம்பலப்பட்டது. இந்தியாவின் வாக்குறுதிகளும், அறிவிக்கப்பட்ட அவற்றின் அளவும் உண்மையிலேயே தேவையற்றவை. பாரிசில் நடந்த மாநாட்டில், வாக்குறுதி கொடுத்த பல முக்கிய பொருளாதாரங்களைப் போல இந்தியாவும் வாக்குறுதிகள் கொடுத்தது. அவை அப்படியே இருக்கும்போது இந்த வாக்குறுதிகள் அவசமியமற்றவை என்றே சுயேட்சையான நிபுணர்கள் பலரும் கருதுகிறார்கள்.

இந்தியா வெளியிடும் பசுங்கூட வாயுக்களின் அளவை 2070 ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜியமாக குறைப்போம் என முன்வைக்கப்பட்டுள்ள இலக்கு இந்திய மக்களை குழப்பியுள்ளது. முக்கியமான சில துறைகளில் அல்லது ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் பசுங்கூட வாயு வெளியேற்றத்திற்கு முற்றாக முடிவுகட்டுவதுதான் அந்த அறிவிப்பின் பொருள் என பலரும் தவறாக அனுமானிக்கிறார்கள். இந்த குழப்பத்தினை பயன்படுத்திக்கொண்டு, வளர்ந்த நாடுகள் நமது அரசாங்கத்தின் மீது நிர்ப்பந்தத்தை செலுத்துவார்கள். மேலும், மாநில அரசாங்கங்கள், மாநில அளவில் செயல்படும் பல்வேறு நிறுவனங்களின் மூலம், வளர்ச்சித் தேவைகளை விடவும் பருவநிலை மாற்ற பிரச்சினையே முதன்மையானது என்ற அழுத்தத்தை தருவதாக அவர்களின் வாதம் அமையக்கூடும். மாநில அரசாங்கங்கள் அந்த அழுத்தத்திற்கு பலியாகக் கூடாது. ஒன்றிய அரசு முன்வைத்துள்ள தணிப்பு நடவடிக்கைகளுக்கும் தாண்டி அரசியல் போட்டியால் உந்தப்பட்டு கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதில்லை.

வேளாண்மைக்கும் பாதிப்பு:

ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் வெட்டவெளிச்சமான பாரபட்ச அணுகுமுறை இந்திய அரசை வளர்ந்த நாடுகள் ஏற்படுத்திய நிர்ப்பந்தங்களுக்கு எதிராக ஓரளவிற்கு நிலை எடுக்க வைத்துள்ளது. மற்ற பல துறைகளில் அமெரிக்காவுடன் தமது உறவை வலுப்படுத்துவதில் இந்திய அரசு ஆர்வமாக உள்ளது. ஆனால், பருவநிலை பிரச்சனையில் இது இந்தியாவிற்கு மிகவும் கடினமானது. மீத்தேன் மற்றும் காடுகளைக் குறித்தான கிளாஸ்கோ உடன்படிக்கைகளின் விளைவுகள் தீவிரமாக இருக்கும் என்பதை இந்திய அரசாங்கம் உணர்ந்துள்ளது. காடுகளைப் பற்றிய உடன்படிக்கை அதைப் பற்றி மட்டும் பேசவில்லை, அதில் வேளாண்மையைக் குறித்த பகுதிகளும் உள்ளன. அதன் காரணமாக, கார்பன் வரி, உற்பத்தி திறன் வளர்ச்சி மீதான கட்டுப்பாடுகள் என்று பல்வேறு புதிய சுமைகள் வேளாண்மையின் மீது சுமத்தப்படும். மேற்சொன்ன இரண்டு உடன்படிக்கைகளும் இந்திய சிறு குறு விவசாயத்தை கடுமையாக பாதிப்பதுடன், அனைத்து துறைகளின் மீதும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த உடன்படிக்கைகளில் கையெழுத்திடுவதன் மூலம், இந்தியாவின் வேளாண்மைத் துறையும் பருவநிலை தணிப்பு நடவடிக்கைகளுக்கு உடன்பட வேண்டிய கட்டாயம் உருவாகிறது. கோடிக்கணக்கான இந்திய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வேளாண்மையை சார்ந்துள்ளனர். அதன் மூலம் வெளியாகும் பசுங்கூட வாயுக்கள், உலக நாடுகளோடு ஒப்பிட்டால் மிக மிகக் குறைவாகும்.

இந்தியா அடிபணிவதா?

குறைந்த கார்பன் வெளியேற்றத்துடன் கூடிய வளர்ச்சி என்ற திட்டத்தை முன்னெடுத்து, புவி வெப்பமாதலின் அச்சுறுத்தலுக்கு எதிராக தனது உரிய பங்கை ஆற்றிக்கொண்டே இந்தியா, உலக கார்பன் பட்ஜெட்டில் தனது நியாயமான பங்கினை பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான உத்திகளை வகுக்க வேண்டும். சுய சார்பான உற்பத்தி துறை வளர்ச்சி என்ற இலக்கில் சமரசத்திற்கு இடம் இல்லை. அதே போல, வறுமை ஒழிப்பும் இந்திய மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதும் அவசர கடமைகள். குறைந்த கார்பன் வெளியேற்றம் கொண்ட வளர்ச்சியை முன்னெடுத்துக்கொண்டே, அதன் சுமைகள் எவ்வாறு பகிரப்பட வேண்டும், குறுகிய எதிர்காலத்தில் இதற்கான பாதையும் வழித்தடங்களும் எவை என்பன குறித்த அறிவியல் பூர்வமான ஆய்வுகளையும் மேற்கொள்ளவேண்டும்.

கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக நடந்துவரும் முதலாளித்துவ-நிலவுடைமை வர்க்கங்களின் ஆட்சியின் விளைவாக உலக பருவநிலை ஆளுகை என்ற பெயரில், ஏகாதிபத்திய நாடுகள் முன்னெடுக்கும் நவ-காலனிய ஆதிக்க விதிகளுக்கு அடிபணியக்கூடிய பலவீன நிலையில் இந்தியா உள்ளது இந்தியாவில் உற்பத்தி சக்திகளுடைய வளர்ச்சியினை வெட்டிச் சுறுக்குவதனால், புவி வெப்பமாதலால் எழும் சவால்களை எதிர்கொள்வதும், மக்கள் நல்வாழ்விற்கு அவசியமான அடிப்படை நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் என இரண்டுமே பாதிப்புக்கு உள்ளாகும். இந்த பாதிப்பு உடனடியாகவும், எதிர்காலத்திலும் வெளிப்படும். எனவே இந்தியாவின் உற்பத்தி திறன் வளர்ச்சிக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுருத்தலை சரியாக புரிந்து எதிர்க்க வேண்டும். இந்தியாவிற்கு மட்டுமல்ல பெரும்பகுதி வளரும் நாடுகளுக்கும் இது பொருந்தும்.

‘சோசலிசம் உடனடித்தேவை’: பறைசாற்றும் காலநிலை மாற்றம் !

விஜயன்

அறிமுகம்

காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச நிபுணர்குழு (IPCC) வின் ஆறாவது மதிப்பீடு கடந்த ஆகஸ்ட் மாதம் 9ஆம்தேதி வெளிவந்ததிலிருந்து பத்திரிக்கைகளில் தொடர்ச்சியாக கட்டுரைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதையொட்டி ஆண்டுதோறும் நடைபெறும் உறுப்பு நாடுகள் மாநாடு (COP) இந்த ஆண்டு பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடக்கிறது. இதிலும் இப்பிரச்சனை விவாதிக்கப்படவுள்ளது. இந்தப் பின்னணியில் சர்வதேச சமூகத்தின் கடந்த 30 ஆண்டுகால முயற்சியில் ஏன் துளிக்கூட முன்னேற முடியவில்லை என்பதை பரிசீலிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ஆயிரக்கணக்கான கட்டுரைகள் இதுசம்பந்தமாக வெளிவந்தாலும், இப்பிரச்சனையின் ஆணிவேர் எங்குள்ளது என்பதை ஆய்வு செய்யும் கட்டுரைகள் பின்னுக்குபோன நிலையில், அத்தகைய முயற்சியை முன்னெடுத்துச் செல்வதும் இதன் நோக்கமாகும்.

இயற்கையாக நிகழும் நிகழ்வாக அல்லாமல் மனித நடவடிக்கையாலும் புவியின் வெப்பம் உயர்கிறது என்பது அறிவியல் ரீதியாக 1967ஆம் ஆண்டு நிரூபிக்கப்பட்டது. ஜப்பானிய அமெரிக்கரான சுகுரா மனாபே என்ற அறிவியலாளரால் இது நிறுவப்பட்டது.  இவர் இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசில் 25 சதவீதத்தை பெற்றிருக்கிறார். இவரது பணியைத் தொடர்ந்த க்ளாஸ் ஹாசல்மேன் என்ற ஜெர்மானிய அறிவியலாளர் இடத்துக்கு இடம் நேரத்திற்கு நேரம் மாறுபடும் வானிலை உருப்படிவம் (Climate Model) உருவாக்கும் வழிமுறையை கண்டறிந்தார். இவரும் இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசில் 25 சதவீதத்தை பெற்றிருக்கிறார்.

மனித நடவடிக்கையால் புவிவெப்பம் எப்படி உயர்கிறது?

சூரியனிலிருந்து உமிழப்படும் அகச்சிவப்பு கதிர்கள் மூலமாகவே வெப்பம் பூமிக்கு வருகிறது. அகச்சிவப்புக்கதிர் என்பது கண்ணுறு ஒளியை விட நீண்ட அலை நீளம் கொண்டது.  இந்த அகச்சிவப்பு கதிர்களை பெற்றுக்கொண்டு பூமி வெப்பமாகும். அதே வேளையில் அதன் ஒரு பகுதியை பூமியானது வளிமண்டலத்திற்கு திருப்பி அனுப்புகிறது. திருப்பி அனுப்பப்படும் இந்த அகச்சிகப்பு கதிர்களை வளிமண்டலம் மீண்டும் திருப்பி அனுப்புகிறது.  இப்படியாக பூமியின் சராசரி வெப்பநிலை 15 டிகிரி அளவுக்கு இருக்கிறது. ஒருவேளை வளிமண்டலம் இல்லை என்றால் எதிரொளிக்கப்பட்ட அகச்சிவப்புக்கதிர்கள் விண்வெளிக்கு சென்று விடும். இதனால் பூமியின் சராசரி வெப்பநிலை இரவு நேரத்தில் கிட்டதட்ட மைனஸ் 18 டிகிரிக்கு சென்றுவிடும். எடுத்துக்காட்டாக நிலவில் வளிமண்டலம் இல்லை. அதனால்தான் நிலவின் இரவு நேர வெப்ப நிலை மைனஸ் 50 டிகிரிக்கு கீழே செல்கிறது.  வளிமண்டலம்தான் நமது பூமிக்கு வெப்பப்பாதுகாப்பு உறையாக செயல்படுகிறது. சூரிய ஒளிக்கதிர்களை உள்ளே அனுமதித்து, பூமியிலிருந்து வெளியேறும் அகச்சிவப்புக் கதிர்களை தடுத்து நிறுத்தும் வளிமண்டலத்தின் இந்த செயலை நாம் பசுங்குடில் விளைவு என்று அழைக்கிறோம். வளிமண்டலம் என்று நாம் சொல்லும் போது அங்குள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு, மீத்தேன் போன்ற பல்தனிம மூலக்கூறுகளைக் கொண்ட வாயுக்களைத்தான் நாம் அவ்வாறு கூறுகிறோம். ஆக, பசுங்குடில்வாயுக்கள் குறைவாக இருந்தால் வெப்பம் வீழ்ச்சியடைந்துவிடும் மனிதர்கள் வாழமுடியாது. பசுங்கூட வாயுக்கள் அதிகமாக இருந்தால் வெப்பம் அதிகரித்து விபரீதமான காலநிலை மாற்றம் ஏற்பட்டு மனிதர்கள் வாழும் நிலப்பகுதி தண்ணீரில் மூழ்குதல், கடும் வெள்ளம், கடும் வறட்சி என்று மனிதர்கள் பெருந்துயரத்திற்கு ஆளாவார்கள்.

இந்த ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஹாசல்மானின் முக்கியமான பங்களிப்பு என்பது புவி வெப்பமயமாதலில் மனிதனின் பங்கு என்ன என்பதைக் கண்டறிந்ததுதான். பூமியின் வெப்பமயமாதல் என்பது இயற்கையாகவும் நடக்கலாம்; அல்லது மனிதனின் நடவடிக்கைகளாலும் நடக்கலாம். இங்கே இயற்கையாக நடப்பது என்றால் எரிமலை வெடிப்பின் மூலம் கார்பன்-டை-ஆக்சைடு மூலக்கூறுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, அல்லது சூரிய வெப்பம் அதிகரிப்பு. செயற்கையாக என்றால் மனிதனின் நடவடிக்கைகளில் மூலமாக (தொழிற்சாலை வெளியிடும் வாயுக்கள், வாகனங்கள் வெளியிடும் வாயுக்கள்) என கார்பன்-டை-ஆக்சைடு வாயு எண்ணிக்கை அதிகரிக்கலாம். ஹாசல்மான்  தனது ஸ்டோகாஸ்டிக்ஸ் கோட்பாட்டு உருப்படிவம் மூலம் பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு மனிதனின் நடவடிக்கைகளால் எவ்வளவு அதிகரித்தது; இயற்கையான சீற்றங்களால் எவ்வளவு அதிகரித்தது என்று பிரித்து எடுத்து சொன்னார். இது மிகப்பெரிய சாதனை.

சுற்றுச்சூழல் பிரச்சனையும் புவிவெப்பமாகும் பிரச்சனையும்

பசுங்குடில் வாயுக்கள் வகையினத்தைச் சாராத, மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும், தாவரங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் இதர வாயுக்களும் உள்ளன. இவற்றை நாம் மாசுக்கள் (Pollutants) என்கிறோம். உதாரணமாக கந்தக அமில உற்பத்தியில் வெளியேற்றப்படும் கந்தக-டை-ஆக்ஸைடு என்ற வாயு அமிலமழை உருவாவதற்கு காரணமாகிறது. மனித நடவடிக்கைகள் என்று கூறப்படும் பெருவீத பொருள் உற்பத்தியில் பசுங்குடில் வாயுக்கள் வெளியாகின்றன. இவ்வாயுக்கள் மனிதர்களுக்கு பொதுவாக நேரடியாகத் தீங்கு விளைவிப்பதில்லை. ஆனால் இவற்றின் வெளியேற்றம் புவி வெப்பமடைவதற்கு சுற்றடியாக காரணமாக்குகிறது. முதலாவது வகை வாயுக்கள் உண்டாக்குவது சுற்றுச்சூழல் பிரச்சனை. இது பிரதேசம் சார்ந்த பிரச்சனையாக இருக்கிறது. இரண்டாவது, புவிவெப்பமயமாகும் பிரச்சனை. பசுங்குடில் வாயுக்கள் உமிழ்வானது உலகளாவிய வெப்பநிலை உயர்வுக்கு காரணமாவதால், இது உலகளாவிய பிரச்சனையாகும். எனவே இது உலக சமூகம் முழுவதும் கட்டாயம் தலையிட வேண்டிய பிரச்சனையாகும்.

இதேபோல் உலகளாவிய பிரச்சனையாக உருவெடுத்தது வளிமண்டல ஓசோன் படல தேய்மானம். குளிர்ச்சாதனங்களில் பயன்படுத்தப்படும் குளோரோபுளோரா கூட்டுப்பொருட்கள் வளிமண்டல ஓசோன் படலத்தை அரிப்பதால் இந்தப் படலம் மெலிந்து கொண்டே வந்தது. பூமியின் மீது விழும் புறஊதாக் கதிர்களை தடுக்கும் பணியை ஓசோன் படலம் செய்து வருகிறது. இது மெலிந்து போனால் புறஊதாக்கதிர்களை தடுக்க முடியாமல் போய், உயிரினங்கள் புறஊதாக்கதிர்களின் நேரடித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. எனவே ஓசோன் படல தேய்மானம் உலகளாவிய பிரச்னையாகும்.  1987ஆம் ஆண்டு உலகநாடுகளுக்கிடையே கையொப்பமிட்ட மாண்டிரியல் ஒப்பந்தத்தின் மூலமாக இதற்குத் தீர்வு காணப்பட்டது. இதேபோல் இப்பொழுதும் ஒரு உலகளாவிய ஒப்பந்தம் தேவைப்படுகிறது. உமிழப்படும் பசுங்குடில் வாயுக்களின் அளவைக் கட்டுப்படுத்தி 1990ஆம் ஆண்டிலிருந்து உயர்ந்து கொண்டே வரும் வெப்பத்தை 1.5 டிகிரி செல்ஷியஸுக்குள் நிறுத்த வேண்டும். இது முடியாது என்று இப்பொழுது ஆகிவிட்ட நிலையில் 2 டிகிரிக்குள்ளாவது நிறுத்த வேண்டும் என்பதே IPCCயின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை கூறுகிறது. பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இரண்டையும் போட்டுக் குழப்பி தவறாக வழிகாட்டுகின்றனர். சிலர் காற்றுமாசுதான் வெப்பநிலை உயர்வுக்கு காரணம் என்கின்றர். சிலர் ஓசோன் படலம் தேய்ந்துபோன நிகழ்வையும் புவிவெப்பத்தையும் இணைத்துப் பேசுகின்றனர். இரண்டும் தவறு.

சர்வதேச அமைப்புகள்

காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச நிபுணர்குழு (Inter-governmental Panel on Climate Change –   IPCC) என்ற அமைப்பானது பன்னாட்டு அரசுப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவாகும். இக்குழுவானது ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு உபகுழுவாகும். ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (United Nations Environment Program – UNEP) என்ற அமைப்பும் உலக வானிலை அமைப்பும் (World Meteorological Organization – WMO) இணைந்து 1988ஆம் ஆண்டு இக்குழு ஏற்படுத்தப்பட்டது. இது ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் அங்கீகரிக்கப்பட்டு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் துவங்கியது. இதில் இந்தியா உள்ளிட்ட 195 உறுப்புநாடுகள் உள்ளன. இந்த அமைப்பானது காலநிலை மாற்றத்தை அவ்வப்போது அறிவியல் அடிப்படையில் ஆய்வுசெய்து மதிப்பீட்டு அறிக்கைகள் வெளியிடும். கடந்த ஆகஸ்ட்டில் வெளியான அறிக்கை உள்ளிட்டு இதுவரை ஆறு அறிக்கைகளை இக்குழு வெளியிட்டிருக்கிறது. இதன் அறிக்கைகள் மீது அனல்பறக்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. 1995ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரண்டாவது மதிப்பீட்டு அறிக்கை க்யூட்டோ ஒப்பந்தத்துக்கு வழிகோலியது. 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கையின் விளைவாக பாரிஸ் ஒப்பந்தம் ஏற்பட்டது.

காலநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு (United Nations Framework on Climate Change – UNFCC) என்ற அமைப்பு 1992ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது பிரேஸில் நாட்டின் ரியோ-டி-ஜெனரியோ நகரில் நடைபெற்ற புவிமாநாட்டில் (Earth Summit என்று சொல்லப்படும் United Nations Conference on Environment and Development – UNCED) அமைக்கப்பட்டது.  இது ஜெர்மனியில் உள்ள பான் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு 1994லிருந்து செயல்பட ஆரம்பித்தது. இதில் இந்தியா உள்ளிட்டு 197 உறுப்புநாடுகள் உள்ளன. இந்த 197 உறுப்பு நாடுகளும் ஆண்டுக்கொருமுறை கூடி காலநிலைமாற்றம் பற்றி இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பரிசீலித்து, எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தீர்மானிக்கும். ஆண்டுக்கொருமுறை கூடும் இக்கூட்டத்தை உறுப்பு நாடுகள் மாநாடு (Conference of Parties – COP) என்று அழைக்கின்றனர். பொதுவாக இது ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் நடைபெறும். 1995 ஆண்டு முதல் இதுவரை 25 மாநாடுகள் நடைபெற்றுவிட்டன. 2020இல் பெருந்தொற்று காரணமாக நடைபெறவில்லை. இப்பொழுது 26வது மாநாடு  பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடக்கிறது. IPCC காலநிலை மாற்ற ஆய்வறிக்கைகள் வெளியிடும் அமைப்பு என்றால் UNFCC காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் செயல்திட்டத்தை மேற்கொண்டுவரும் அமைப்பாகும்.

முயற்சிகளும்முறியடிப்புகளும்

IPCCயின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையை நாம் இங்கு விவாதிக்க வேண்டியதில்லை. இது ஒரு நீண்ட நெடிய அறிக்கை. 3,949 பக்கங்களைக் கொண்டது. விரிவான, ஆழமான, ஆய்வு முடிவுகள் இதில் உள்ளன. இதை ஆங்காங்கே பிய்த்து எடுத்து ஏராளமான கட்டுரைகள் வந்துவிட்டன. இந்தியா எப்படி பாதிக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்புவர்கள் இவ்வறிக்கையின் சம்பந்தப்பட்ட பகுதியை படிக்கவும். முழுக்க முழுக்க இது அறிவியல் அறிக்கை. தொழில்நுட்ப அடிப்படையிலானது. நோபல் அறிஞர்கள் மனாபே, ஹாசல்மேன் கோட்பாடுகளை பயன்படுத்தி தயார் செய்த அறிக்கையாகும். காலநிலை அறிவியலில் ஓரளவு ஞானம் உள்ளவர்கள் மட்டுமே முழுமையாக புரிந்து கொள்ள முடியும். இந்த அறிக்கையின் மூலம் புவியின் வெப்பமானது 1990இன் அளவை விட 2 டிகிரி உயர்ந்தால் கடுமையான தீய விளைவுகள் ஏற்படப்போவது உறுதி என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இப்பொழுது நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

IPCCயின் முதல் அறிக்கை 1990ஆம் ஆண்டு வெளிவந்ததிலிருந்தே சர்ச்சை துவங்கிவிட்டது. பசுங்குடில் வாயுக்கள் ஒரு நூற்றாண்டில் எவ்வளவு வெளியிடப்பட்டிருக்கிறது; யார் வெளியிட்டார்கள் என்ற விபரங்களை இந்த அறிக்கை போட்டு உடைத்துவிட்டது. புவிவெப்பமயமாவதற்கு வளர்ச்சியடைந்த மேற்கு நாடுகள் அதிகப் பொறுப்பு ஆகும் என்ற உண்மையை இது தெள்ளத் தெளிவாக்கியது. பொதுவாக அறிவியல் அடிப்படையில் நிறுவப்பட்ட ஒன்று கேள்விக்குள்ளாகாது. உதாரணமாக, பூமி சூரியனைச் சுற்றுகிறது போன்றவை கேள்விக்குள்ளாவதில்லை. ஆனால் அறிவியல் அடிப்படையில் மதிப்பிட்ட இந்த அறிக்கையின் அம்சங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. கேள்வியை எழுப்பியவர்களில் மிகவும் மதிப்பு வாய்ந்த அறிவியலாளர்களும் அடங்குவர்.

அறிவியலில் நிறுவப்பப்பட்ட ஒன்று தூய்மையான அறிவியலாக இருக்கும்வரை அது கேள்விக்குள்ளாகாது. ஆனால் அது பொருளியல் சம்பந்தப்பட்டால் அது கேள்விக்குள்ளாகும் என்பது தெளிவு. அறிவியல் பாதையில் பயணித்து வந்த அரசியல்-பொருளாதாரம், மார்க்ஸ் காலத்தில் உபரி மதிப்பு எப்படி தோன்றுகிறது, உண்மையான செல்வ உற்பத்தியாளர்கள் யார் என்பதை இனம் கண்டவுடன், அந்த முடிவுகள், ஆதாயம் அடைபவர்களை அடையாளம் காட்டியதால் போலி அறிவியல் அரசியல்-பொருளாதாரத்திற்குள் புகுந்து அதை கொச்சைப் பொருளாதாரம் ஆக்கிவிட்டது. காலநிலை அறிவியல் மீதும் இதே போன்று தாக்குதல் தொடுக்கப்பட்டது. புவியின் வெப்பம் மனித நடவடிக்கையால் உயரவில்லை என்ற கருத்தும் தற்போது நாம் காணும் உயர்வு இயற்கையானதுதான் என்றொரு கருத்தும், வெப்பம் உயரவேயில்லை என்று சாதிக்கும் மற்றொரு கருத்தும், பரவலாக உலா வந்தன. இக்கருத்துகளுக்குச் சொந்தக்காரர்களில் பலர் மதிப்பு வாய்ந்த அறிவியலாளர்கள் ஆவார்.அடுத்தடுத்த IPCCயின் மதிப்பீட்டு அறிக்கைகைகள் வெளிவந்த நிலையில் இனிமேலும் உண்மை என்ற சூரியனை போலி அறிவியல் கொண்டு மறைத்துவிட முடியாது என்ற நிலை ஏற்பட்டது.

க்யூட்டோஉடன்படிக்கை

முதலாம் அறிக்கையின் தாக்கமே 1992ஆம் ஆண்டு நடைபெற்ற புவிமாநாடு. அதையொட்டி அமைக்கப்பட்டதே UNFCC. அதன் ஏற்பாடுதான் ஆண்டுதோறும் நடைபெறும் உறுப்பு நாடுகள் மாநாடுகள். மூன்றாவது உறுப்பு நாடுகள் மாநாட்டில் எற்டப்பட்டதுதான் க்யூட்டோ உடன்பாடு. இந்த உடன்படிக்கையானது ஜப்பான் நாட்டின் க்யோட்டோ நகரில் 1997ஆம் ஆண்டு டிசம்பரில் எட்டப்பட்டது. மார்ச் 16, 1998 முதல் மார்ச் 15, 1999 வரை நாடுகள் கையொப்பமிட அவகாசம் கொடுக்கப்பட்டது. பிப்ரவரி 16, 2005 முதல் அமலுக்கு வந்தது.  இந்த உடன்படிக்கையானது “உச்சவரம்பு மற்றும் வணிகம்” (Cap and Trade) என்ற அணுகுமுறையில் அமைந்தது. இந்த உடன்படிக்கையின்படி தொழில்வள நாடுகள் (உடன்படிக்கையில் அட்டவணை ஒன்று நாடுகள் – இதில் இந்தியா, சீனா கிடையாது) தாங்கள் உமிழும் பசுங்குடில் வாயுக்களை 1990இன் அளவில் 5.2 சதவீதம் குறைவாக உமிழ்வது என்ற உச்சவரம்பிற்கு ஒப்புக் கொண்டன. இதில் ஐரோப்பிய யூனியன் நாடுகள் 8 சதவீதமும் அமெரிக்கா 7 சதவீதமும் ஜப்பான் 6 சதவீதமும் ரஷ்யா 0 சதவீதமும் 1990ஆம் ஆண்டைவிட குறைக்கும் என்ற முடிவுக்கு வந்தனர். இந்த உடன்படிக்கையானது ஆஸ்திரேலியாவிற்கு 1990ஆம் அளவைவிட 8 சதம் அதிகமாகவும் ஐஸ்லாந்திற்கு 10 சதம் அதிகமாகவும் நிர்ணயித்தது.  பிப்ரவரி 2009 வரை 183 நாடுகள் இந்த உடன்படிக்கையின் அம்சங்களை ஏற்றுக் கொண்டுள்ளன. உச்சவரம்பைவிட குறைவாக உமிழ்பவர்கள் சான்றிதழ் பெறுவார்கள்; அதிகமாக உமிழ்பவர்கள் சான்றிதழ் உள்ளவர்களிடம் விலைகொடுத்து வாங்கி மொத்த உமிழ்வை ஒரு எல்லைக்குள் நிறுத்த வேண்டும்.

கோபன்ஹேகன்உடன்படிக்கை

“உச்சவரம்பு மற்றும் வணிகம்“ அணுகுமுறையானது உமிழ்வு வணிகத்தையும் அதையொட்டிய ஊகவணிகத்தையும் திறந்துவிட்டது. அத்துடன் 2001ஆம் ஆண்டு அமெரிக்க அதிபரான புஷ் இந்த உடன்பாட்டிலிருந்து விலகுவதாக அறிவித்து இதை உடைத்தெறிந்தார். இதன் மூலமாக அமெரிக்கா இதுவரை உமிழ்ந்ததற்கு மற்றவர்கள் செலவழிக்க வேண்டும் என்று மறைமுகமாக வாதிட்டது. இந்தக் கொள்கை சர்வதேச அளவில் கடுமையாக விவாதிக்கப்பட்டு வந்தது. இழுபறி நிலையே நீடித்தது. பின்தங்கிய நாடுகள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. மற்றவர்கள் அளவிற்கு வளரும் வரை இதில் பங்கெடுக்க முடியாது என்று வாதிட்டு வந்தன. எனினும் இந்த தேக்க நிலையில் ஒரு மாற்றம் 2009ஆம் ஆண்டு கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற 15வது உறுப்பு நாடுகள் மாநாட்டில் வந்தது. இந்த மாநாட்டில் பின்தங்கிய நாடுகளும், உமிழ்வு குறைக்கும் முயற்சியில் பங்கெடுப்பது என்று ஒரு அடி முன்வைத்து உடன்பாட்டுக்கு வந்தன. ஆரம்ப கட்டமாக ஒவ்வொரு நாடும் அதன் மொத்த உமிழ்விற்கும் உள்நாட்டு உற்பத்திக்கும் (Emission/GDP Ratio) உள்ள விகிதத்தை சரிசமமாக பராமரிப்பது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதாவது பின்தங்கிய நாடுகள் கோரிய தனிநபர் உமிழ்வு என்பது கைவிடப்பட்டு Emission/GDP Ratio வந்துவிட்டது. இதன் பிரச்சனை என்னவென்றால் அதிக GDP உள்ள நாடுகள் அதிகமாக உமிழலாம்; அதாவது அதிக GDP உள்ளவர்களுக்கு மட்டும் தனிநபர் உமிழ்வு அதிகமாக வைத்திருக்க உரிமை உண்டு. எனினும் வளர்ச்சியடைந்த நாடுகள், அதாவது அதிக GDP உள்ள நாடுகள், பின்தங்கிய நாடுகளுக்கு உதவ முன்வந்தன.  இதை அடைவதற்கு வளர்ச்சியடைந்த நாடுகள் பின்தங்கிய நாடுகளுக்கு தொழில்நுட்பத்தை வழங்குவது என்றும், மூலதனத்தை வழங்குவது என்றும், 2020க்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர் நிதிதிரட்டி பின்தங்கிய நாடுகளுக்கு உதவுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இப்படிச் செய்தால் தொழிற்புரட்சிக்கு முந்தைய வெப்பநிலையில் 2 டிகிரி செல்ஷியஸ் மட்டுமே உயரும் என்றும் கணக்கிடப்பட்டது.

டர்பன்திட்டம்

குட்டித் தீவு நாடுகளுக்கு கோபன்ஹேகன் உடன்பாட்டில் திருப்தி ஏற்படவில்லை. அவர்கள் வாழும் பகுதி வேகமாக மூழ்கிவந்த நிலையில் அவர்கள் தீவிர நடவடிக்கை கோரி கூக்குரலிட்டு வந்தனர். எனவே டர்பன் நகரில் 2011ஆம் ஆண்டில் நடைபெற்ற 17வது உறுப்பு நாடுகள் மாநாட்டில் காரசாரமான விவாதம் முன்னுக்கு வந்தது. குட்டித் தீவு நாடுகளின் அச்சத்தை முன்வைத்து பருவநிலை பிரச்சனையை சரி செய்ய வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு அதிக கடப்பாடு இருக்கிறது என்ற கொள்கையை ஒழித்துக் கட்டினர். இந்தக் கொள்கை இருப்பதால்தான் உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுப்பது நடைமுறையில் சாத்தியப்படவில்லை என்ற வாதத்தை முன்வைத்து இதை நீக்குவதற்கு கோரி வந்தது. அழியும் நாடுகளின் கூக்குரலுக்கு எல்லாரும் செவிசாய்க்க வேண்டும் என்ற நிலையில் பின்தங்கிய நாடுகள் இக்கொள்கையை வலியுறுத்துவதை நிறுத்த ஒப்புக் கொண்டன. அத்துடன் இக்கொள்கை நிறுத்தி வைக்கப்பட்டால் ஓராண்டுக்குள் உருப்படியான நடவடிக்கை எடுக்கும் உடன்பாட்டுக்கு வழிகோல முடியும் என்றும் வாக்குறுதியளித்தன. அப்படி நடக்காவிட்டால் 2015க்குள் கண்டிப்பாக உருப்படியான உடன்படிக்கை எட்டுவது என்ற இலக்கிற்கு ஒப்புக்கொண்டது. உருப்படியான நடவடிக்கை என்றால் ஒவ்வொரு உறுப்பு நாடும் சட்டரீதியாக உமிழ்வு குறைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். அமெரிக்காவில் அதீத வலதுசாரி குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில் இது சாத்தியப்படாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இவர்கள் பெரும்பான்மையாக இருந்தபொழுதுதான் க்யோட்டா உடன்படிக்கையை சட்ட ரீதியாக ஏற்றுக் கொண்டதை ரத்து செய்தார்கள்.

22வதுஉறுப்புநாடுகள் (பாரிஸ்)மாநாடு

2015ஆம் ஆண்டு நெருங்கி வந்ததையொட்டி அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்று வந்தன. இதற்கிடையில் சீனாவும், அமெரிக்காவும் 2014ல் ஒரு பருவநிலை உடன்பாடு செய்து கொண்டன. இதன்படி 2030க்குள் சீனா அதன் உமிழ்வின் உச்சத்தை அடைந்துவிடும் என்றும், அதன் பிறகு அது படிப்படியாக குறைக்கத் துவங்கிவிடும் என்பதும் அந்த உடன்பாட்டில் கூறியிருக்கிறது. அத்துடன் படிம எரிபொருட்களின் உபயோகத்தை 20 சதவிதம் குறைப்பதாகவும் கூறியிருந்தது. படிம எரிபொருட்கள்தான் பசுங்குடில் வாயுக்கள் உமிழ்வில் முக்கிய பங்காற்றுகின்றன இதுவே புவிவெப்பமயமாவதற்கு காரணம். தன்னுடைய தரப்பில் அமெரிக்காவானது 2005ஆம் ஆண்டு உமிழ்வில் 26-28 சதவீதத்தை 2025க்குள் குறைப்பதாக ஒப்புக் கொண்டது. எனினும் குடியரசுக் கட்சியினர் கட்டுப்பாட்டில் இருக்கும் அமெரிக்க பாராளுமன்றத்தில் இது சாத்தியப்படாது என்பதால் அதிபர் ஒபாமா அவர்கள் நாட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் சுற்றறிக்கை மூலம் அமல்படுத்த முயன்றார். விஷயம் நீதிமன்றம் சென்று நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது. இதனையடுத்து 2015ஆம் ஆண்டு நவம்பரில் சீனாவும், ஃபிரான்சும் ஒரு கூட்டறிக்கை வெளியிட்டன. இதன்படி அதே ஆண்டு டிசம்பர் மாதம் பாரிசில் நடைபெறும் மாநாட்டில் இரண்டும் இணைந்து செயல்பட்டு ஒரு உடன்பாடு உருவாவதை வெற்றிகரமாக்க முயற்சிக்கும் என்று அறிவித்தன. எப்படிச் செய்யப்போகின்றன என்று அறிவிக்கவில்லை.

பாரிஸ் மாநாட்டிற்கு முன்பாக ஒவ்வொரு நாடும் தன்னால் எவ்வளவு உமிழ்வை குறைக்க முடியும் என்பதும், அதற்கு தேவைப்படும் நிதி எவ்வளவு என்பதும் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மிகவும் பின்தங்கிய நாடுகளை நெருக்கி அவர்களிடம் வாக்குறுதியைப் பெற்றுவிட்டன. சில நாடுகள் தங்களின் வளர்ச்சித் திட்டத்தில் சமரசம் செய்து கொண்டு உடன்படிக்கைக்கு முன்வந்தன. இவர்களை அணிசேர்த்துக் கொண்டு வளர்முக நாடுகளை, குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவை, அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் நெருக்கி வந்தன. பாரிஸ் மாநாட்டில் உடன்படிக்கை என்பது ஒருவழியாக எட்டப்பட்டுவிட்டது. வளர்ந்த நாடுகளின் கோரிக்கையான பருவநிலை மாற்றத்தினால் பின்தங்கிய நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்பதும், பின்தங்கிய நாடுகளின் கோரிக்கையான பொதுவான ஆனால் வித்தியாசமான பொறுப்பு (Equity or Common but differentiated Responsibilities) என்ற கோரிக்கையும் உடன்பாட்டில் இடம் பெற்றிருக்கின்றன. நாடுகளின் வாக்குறுதிகளும் இடம் பெற்றிருக்கின்றன. எனினும் எதுவும் சட்டரீதியானது கிடையாது. ஐந்தாண்டுக்கொருமுறை பரிசீலனை செய்து உமிழ்வுகுறைப்பில் மாற்றங்கள் செய்வதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதும் உடன்பாட்டில் உண்டு. இந்த உடன்பாட்டிலிருந்து பின்வாங்கப் போவதாக அதிபர் ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின்போது கூறியிருந்தார். வெற்றி பெற்றபின் சொன்னதைச் செய்தும் காட்டினார்.

முதலாளித்துவம் இருக்கும்வரை புவிவெப்பமயமாக்கலுக்குத் தீர்வு கிட்டாது

இந்தப் பின்னணியில்தான் 26வது உறுப்பு நாடுகள் மாநாடு கிளாஸ்கோ நகரில் நடைபெறுகிறது. இது அபாயச்சங்கு ஊதும் IPCCயின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின் பின்னணியில் நடைபெற்று வருகிறது. எதிர்பார்த்ததைப் போல் எந்த உருப்படியான முடிவும் எட்டப் போவதில்லை. மதிப்பீட்டு அறிக்கை சுட்டிக்காட்டியபடி 2030க்குள் 2 டிகிரி செல்ஷியஸுக்குள் வெப்பஉயர்வை நிறுத்துவதற்கு ஒவ்வொரு நாடும் குறைக்க வேண்டிய உமிழ்வின் இலக்குகள் என்று எதுவும் நிர்ணயிக்கப் போவதில்லை. காடுகள் அழிப்பை குறைக்கப் போகிறார்களாம். பசுங்குடில் வாயுக்களில் பிரதான வாயுவான கார்பன்-டை-ஆக்ஸைடை குறைப்பது பற்றி எதுமில்லை. ஆனால் சிறிய அளவு பங்கு வகிக்கும் மீத்தேன் உமிழ்வைக் குறைக்கப் போகிறார்களாம். மாநாடு நவம்பர் 12ஆம்தேதி முடிவடைகிறது.

ஓசோன்படலம் தேய்மானப்பிரச்சனை முன்னுக்கு வந்த பொழுது மாண்டிரியல் உடன்படிக்கை மூலம் தீர்வு எட்டப்பட்டது. இந்த தீர்வின் விளைவாக குளோரோபுளோரா கூட்டுப்பொட்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டு அதற்கு மாற்றாக வேறு குளிர்விப்பு ஊடகம் புழக்கத்திற்கு வந்துவிட்டது. குளோரோஃபுளோரா கூட்டுப்பொருள் உற்பத்தியில் ஈடுபட்ட மூலதனதனமானது ஒட்டுமொத்த உலக மூலதனத்தின் சிறுபகுதியே. எனவே அதன் வலிமையும் குறைவு. முதலாளித்துவ உற்பத்திமுறையில் பல்வேறு உற்பத்திக் கிளைகளுக்குள் முரண்பாடுகள் எப்பொழுதுமே இருந்துவரும். இதில் நெருக்கடி கட்டத்தை ஏட்டும்பொழுது சிறுமூலதனம் நசுங்கிச் செத்துவிடும். குளோரோஃபுளோரோ கூட்டுப்பொருளுற்பத்தியில் ஈடுபட்ட மூலதனம் இப்படித்தான் மறைந்து போனது. ஆனால் புவிவெப்பப் பிரச்சனையில் நிலைமை வேறு. படிமஎரிபொருட்கள் உற்பத்தியில் ஈடுபடும் மூலதனமும் அவற்றின் உற்பத்திப் பொருட்களை கச்சாப் பொருட்களாக கொண்டு செயல்படும் மூலதனமும் உலக மூலதனத்தில் கணிசமான பங்கை வகிக்கின்றது. எனவே இந்த மூலதனத்தின் வலிமையை குறைந்தது மதிப்பிட முடியாது. அத்துடன் வளரும் நாடுகள் படிம எரிபொருளையே தங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு சார்ந்திருக்கின்றன. எனவே வளரும் நாடுகளின் மூலதனமும் படிம எரிபொருளை முடக்க அனுமதிக்காது.

முதலாளித்துவ உற்பத்திமுறை அதற்கே உரித்தான இயங்குவிதிகளுடன் இயங்கிவருகிறது. இவ்வுற்பத்திமுறை இருக்கும் வரை அதன் இயங்குவிதிகளில் யாரும் தலையிட முடியாது. முதலாளித்துவ உற்பத்திமுறை ஏற்படுத்திவரும் நெருக்கடிக்குத் தீர்வாக அரசு செலவீனத்தின் மூலம் செய்யப்படும்அரசு தலையீடு ஒரு ஒழுங்குக்கு கொண்டுவரும் என்ற கோட்பாட்டை ஜான் மோனார்டு கீன்ஸ் முன்மொழிந்தார். ஆனால் அவருடைய கோட்பாட்டை அமல்படுத்த முடியவில்லை. அவ்வப்போது அமல்படுத்தப்பட்டாலும், ஒரு குறுகிய காலத்திற்குள் அமலாக்கம் பின்வாங்கப்பட்டுவிடுகிறது. ஏனென்றால் முதலாளித்துவத்தின் இயங்குவிதியானது கீனிஸியத்தை ஒருபோதும் அனுமதிக்காது. அதேபோல்தான் புவிவெப்ப பிரச்சனையிலும் அரசுகளின் தலையீட்டை அனுமதிக்காது. ஒருபுறம் வளர்ச்சியை கோரி நிற்கும் பின்தங்கிய நாடுகள், இன்னொருபுறம் அதிக உமிழ்வைச் செய்து வளர்ந்துவிட்ட நாடுகள். வளரும் நாடுகளின் கோரிக்கைகளை சுட்டிக்காட்டி இவை தனது பொறுப்பை தட்டிக்கழிக்க முனைகின்றன.

எப்படிப்பட்ட சமூகப் பிரச்சனைகள் இருந்தாலும் உற்பத்திமுறைக்குள்ளோ உற்பத்தியமைப்புக்குள்ளோ தலையீடு செய்வதை முதலாளித்துவத்தின் இயங்குவிதிகள் ஒருபோதும் அனுமதிக்காது. கடந்த முப்பது ஆண்டுகளாக வரவிருக்கும் ஆபத்தை எவ்வளவுதான் உரக்கக் கூறி எத்தனை கிரேட்டா தன்பெர்க்குகள் போராட்டம் நடத்தினாலும் முதலாளித்துவத்தை அதனது லாப நோக்க செயல்பாட்டிலிருந்து விடுவித்து ஒட்டுமொத்த சமூக நோக்க செயல்பாட்டிற்குள் கொண்டு வரமுடியாது. “முதலாளித்துவமானது, அதனளவில் அதன் உற்பத்தித்தளத்தில் ஒரு கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் கொண்டுவருகிறது. அதே நேரத்தில், உற்பத்தித்தளத்திற்கு வெளியே ஒழுங்கின்மையையும், அராஜகத்தையும் ஏற்படுத்துகிறது” என்று மூலதன நூலில் வலியுறுத்திக் கூறும் மார்க்ஸின் கூற்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. நெருக்கடிகள் முற்றுவதால், பேச்சுவார்த்தைக்கு பல்வேறு மூலதனத்தின் பிரதிநிதிகள் மேஜைக்கு வந்திருக்கிறார்கள். என்ன மாதிரியான முடிவெடுத்தாலும் அது மூலதனத்தின் இயக்கப் போக்கில் தலையிடுவதாகவே வருகிறது. எனினும் பேச்சுவார்ததை மேஜையில் அமர்ந்திருப்பவர்கள் கறாராக முதலாளித்துவ கோட்பாடுகளை இம்மி பிசகாமல் அமல்படுத்த முயன்று வருகிறார்கள். எப்பொழுதெல்லாம் சூழலைக் கெடுக்கும் இந்த அராஜக உற்பத்திமுறையில் மனிதத் தலையீடு வேண்டும் என்ற கோஷம் வலுக்கிறதோ, அப்பொழுதெல்லாம் சந்தை வழியில் தீர்வு என்பதாக திசை திருப்பப்பட்டு, சந்தைதான் திசைவழியைத் தீர்மானிக்கும்; மனிதத் தலையீடு தீர்மானிக்க முடியாது என்று நிறுவுவதற்கு கறாராக முயல்கிறார்கள்.

முதலாளித்துவம் ஏற்படுத்தும் உற்பத்திசக்திகளின் பிரம்மாண்டமான வளர்ச்சியானது சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும். ஆனால் அதன் அராஜக உற்பத்தியமைப்பு முறை மனிதர்களுக்கு சொல்லொண்ணாத் துயரத்தையும் கொண்டுவரும். அது மனிதர்களுக்கு கொண்டுவரும் துயரங்களிலிருந்து மானுடம் பாடம் கற்றுக்கொண்டு புதிய சமூக அமைப்பாக தன்னை தகவமைத்துக் கொள்ளும். அப்புதியவகை சமூக அமைப்பே சோசலிச சமூகம்; அது லாபத்திற்காக உற்பத்தி என்பதை கைவிட்டு மனிதத் தேவைக்கான உற்பத்தி என்பதை மையமாக வைத்து செயல்படும். இயற்கையான இந்த மாற்றங்கள் நடைபெறுவதற்கு நீண்டகாலம் பிடிக்கும். அதுவரை இயற்கை வளங்களைப் பற்றியும், சுற்றுச்சூழலை பற்றியும் ஒட்டுமொத்தமாக இந்த புவி பற்றியும் கவலைப்படாமல் அராஜக உற்பத்திமுறையை முதலாளித்துவம் தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது.  லாபவெறியில் இயங்கும் முதலாளித்துவம் புவியை காப்பாற்ற அனுமதிக்காது. எத்தனை சுற்றுகள் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும், உறுப்பு நாடுகள் மாநாடு எத்தனை நடைபெற்றாலும், மூலதன இயங்குவிதிகளை மீறும் தலையீடுகளை முதலாளித்துவ உற்பத்திமுறை அனுமதிக்காது. மூலதன இயங்குவிதிகளை மீறும் தலையீடு இல்லாமல் புவிவெப்ப பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாது. படுவேகமாக அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் புவியைக் காப்பாற்றவேண்டுமானால் முதலாளித்துவம் தூக்கியெறியப்பட்டு அதனிடத்தில் மானுடத்தில் அக்கறையுள்ள சமூக அமைப்பான சோசலிசம் வரவேண்டும் என்பதே மானுடம் முன் உள்ள முன்னுரிமை என்பதை புவிவெப்பமயப் பிரச்சனை வலியுறுத்துகிறது.