முற்றுகையின் கீழ் இந்திய ஜனநாயகம்…

  • பிரகாஷ் காரத்

இந்திய மக்களாகிய நாம் நமது தேசத்தின் 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வேளையில், விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்பும் கூட, இந்திய நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகம் நடைமுறையில் இருக்கிறது என்பது நமது சாதனைகளுள் ஒன்றாகும். இதற்கு முழுமுதற் காரணம், 1950 ஆம் வருடம் நாம் ஏற்றுக் கொண்ட இந்திய அரசியல் அமைப்பு சட்டமும் அதன் பலனாக இந்திய மக்கள் அனைவரின் குரல்களும் அரசியலில் ஒலித்துக்  கொண்டிருப்பதும்தான். இன்றைக்கு இந்திய மக்கள் எழுப்பும் இந்த குரல், இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் எழுப்பப்பட்ட குரல்களின் எதிரொலி என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

இந்திய நாட்டில், முதலாளித்துவ சக்திகளின் குறுகிய பார்வை போன்ற கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் கூட, சுதந்திரம் பெற்று ஏழு பத்தாண்டுகள் கடந்த பின்னரும், நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது உயிர்ப்புடன் இருக்கிறது. இவ்வளவு காலம் நாடாளுமன்ற ஜனநாயகம் நிலைத்திருப்பதற்கு முக்கிய காரணம், இந்திய மக்களும், ஜனநாயக சக்திகளும் இணைந்து நடத்திய போராட்டங்கள்தான்.

எனினும், நாம் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் இருண்டதாக தெரிகிறது. நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பும், இந்திய அரசியல் அமைப்பு நமக்கு கட்டமைத்து கொடுத்திருக்கிற ஜனநாயகத்தை பாதுகாத்திடும் அடித்தளங்களும் மிகத் தீவிரமான தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. இன்றைக்கு முழு அளவிலான சர்வாதிகார போக்கு என்பது தலைதூக்கி வருகிறது. இது இந்திய நாட்டின் ஜனநாயகம் வழங்கியுள்ள அரசு நிறுவனங்கள்  அமைப்புகளின் அதிகாரங்களை குறைத்துவிட்டதால், இந்திய நாட்டின் ஆட்சி அதிகாரம், நீதிமன்றம் மற்றும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான சமநிலையை பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

முழு அளவிலான சர்வாதிகாரத்தனம்..

கூடுதலான நாடாளுமன்ற உறுப்பினர்களோடு, 2019ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., ஒரு கட்சி சர்வாதிகாரத்தை கட்டமைப்பதற்கான இலக்கினை தனக்குத் தானே நிர்ணயித்துக் கொண்டுள்ளது. பா.ஜ.க.வின் இந்த நிர்ணயிப்பிற்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் நின்று கடுமையான எதிர்த்தாக்குதலை நடத்திட வேண்டும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒடுக்குவது, எதிர்க்கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலங்களில், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சிக் கவிழ்ப்பை செய்வது, மத்திய அரசின் சிபிஐ, வருமானவரி, அமலாக்கத்துறை போன்ற   அமைப்புகளை தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் மீதும், எதிர்க்கட்சி தலைவர்கள் மீதும்  தாக்குதலுக்கு பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது சர்வாதிகார பா.ஜ.க. அரசு.

நாடாளுமன்றத்தின் மாண்புகளை குறைப்பது, நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீரழிப்பது என்பது  மோடியின் இரண்டாவது ஆட்சியில் மிகவும் தீவிரத்தன்மையோடு உள்ளது. இந்திய நாடாளுமன்றம் கடந்த 2021 ஆம் ஆண்டில் மொத்தத்தில் 50 நாட்களுக்கும் குறைவாகவே நடைபெற்றுள்ளது. எந்தவொரு மசோதா மீதும் விவாதங்கள் என்பது நடப்பதில்லை; எதிர்க்கட்சிகளுக்கு விவாதங்களுக்கான நேரம் என்பது ஒதுக்கப்படுவது கிட்டத்தட்ட இல்லை என்ற அளவில்தான் உள்ளது. அதே போல், எந்தவொரு மசோதாவும் ஆய்விற்கு உட்படுத்துவது என்பதும் இல்லை. கடந்த UPA ஆட்சியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 60 முதல் 70 சதவீத மசோதாக்கள், நாடாளுமன்ற நிலைக்குழு அல்லது தேர்வுக்குழுக்களுக்கு அனுப்பப்பட்டன. ஆனால் இந்த சதவீதம் பா.ஜ.க. வின் முதலாம் ஆட்சியில் 23 சதமாகவும், இரண்டாவது ஆட்சியில் 13 சதமாகவும் குறைந்து விட்டன. இவற்றோடு இணைந்து, எதிர்க்கட்சிகள் பிரச்னைகளை எழுப்புவதற்கும், ஓட்டெடுப்பு கோருவதற்கும் நாடாளுமன்றத்தில் மறுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மசோதாக்களை பண மசோதாக்களாக (Money Bill) கொண்டு வந்து, ராஜ்ய சபையின் மாண்புகளை தரம் தாழ்த்தி விட்டது மோடி அரசு.

பா.ஜ.க. அரசின் சர்வாதிகாரப் போக்கு, இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள பொது மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமக்களின் சுதந்திரம் ஆகியவற்றை காலில் போட்டு மிதிப்பது என்கிற இடத்திற்கு ஆட்சியாளர்களை இட்டுச் சென்றுள்ளன.

எதிர்ப்புக் குரல்களை குற்றவாளிகளாக சித்தரித்து தண்டிப்பது, குடிமக்களின் உரிமைகளை நசுக்குவது என்பது சர்வாதிகார மோடி ஆட்சியின் முத்திரையாக மாறிவிட்டது. கொடூரமான சட்டங்களான உவாபா (UAPA)  போன்றவற்றின் மூலம் எதிர்ப்பு குரல்களை நசுக்கும் போக்கு வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது. 2014 முதல் 2020 ஆம் வருடங்களுக்கு இடையிலான ஆறு வருட காலத்தில் 690 குற்ற வழக்குகள் இந்திய நாட்டு மக்களின் மீது போடப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் வாயிலாக 10,552 பேர் கைது செய்யப்பட்டுள்ள கொடூரம் நிகழ்ந்துள்ளது. அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அரசியல் செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள் என அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பீமா கோரேகான் வழக்கில் 16க்கும் மேற்பட்ட சமூக செயல்பாட்டாளர்கள், அறிவு ஜீவிகள் கைது செய்யப்பட்டு சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் மூன்று வருட காலமாக அடைக்கப்பட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றம் தனது சுயேச்சையான செயல்பாட்டை நிறுத்திவிட்டு அதிகாரிகளின் கைப்பவைகளாக செயல்பட ஆரம்பிப்பதுதான் சர்வாதிகார ஆட்சியின் மோசமான அம்சம். உச்சநீதிமன்றம் ஒரு நிர்வாக நீதிமன்றமாக செயல்படத் துவங்கியுள்ளது. சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளான ஜாக்கியா ஜாஃப்ரி வழக்கிலும், பண மோசடி வழக்குகளில் அமலாக்கப் பிரிவின் அதிகார வரம்பு பற்றிய வழக்கிலும் உச்ச நீதி மன்றம் குடிமக்களின் உரிமைகள் மீது நிர்வாகத் தாக்குதல்கள் நடத்தியிருப்பதை காண முடியும்.

75 ஆண்டுகால இந்திய வரலாற்றை பார்க்கையில், 1975ஆம் வருடம் ஜூன் மாதம் இந்திராகாந்தி  ஆட்சி காலத்தில், இந்திய ஜனநாயகத்திற்கு நெருக்கடி நிலை என்கிற பெயரில் மிகப் பெரிய தாக்குதல் ஏற்பட்டது. ஆனால் அது 20 மாத காலம் மட்டுமே நீடித்தது.  அந்த காலகட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிவில் உரிமைகள் பறிக்கப்பட்டு, அனைத்து பத்திரிக்கைகளும் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டன. அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால் இன்றைக்கு ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலானது, எமர்ஜென்சி காலத்தை விட மிகவும் தீவிரமானது; விரிவானது. குடியாட்சி என்கிற தத்துவத்தின் முக்கியமான அம்சங்களான மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி இரண்டையும் துண்டித்து வருகிறது.

ஏன் இந்த கொடூர வடிவிலான சர்வாதிகாரம் இந்திய நாட்டின் ஜனநாயகத்தை முடக்கத் துடிக்கிறது? இது ஏதோ பிறழ்வோ அல்லது தற்செயலாக ஏற்பட்ட விபத்தோ அல்ல. இது தனிநபர் சர்வாதிகாரப் போக்கு என்றும் நாம் குறிப்பிட முடியாது. இத்தகைய சர்வாதிகாரம் கருக்கொள்வதற்கு பல்வேறு பாசிச சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட்டுள்ளன என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அரசியல் ஜனநாயகம் குறித்து அம்பேத்கர் …

இந்திய நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தினை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நேரத்தில், டாக்டர். அம்பேத்கர் அவர்கள் கூறியதை தற்போது நினைவு கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. பொருளாதார சமத்துவமும், சமூக நீதியும் வெற்றி பெறாமல் அரசியல் சுதந்திரம் என்பது வெற்றி பெறாது என்று கூறினார். இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் மேல்பூச்சாக மட்டுமே உள்ளது; அது ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமானது என்றும் அம்பேத்கர் எச்சரித்தார்.

இவ்வளவு காலமும், தேர்தல் ஜனநாயகம் நடைமுறையில் இருந்தாலும், பொருளாதார மற்றும் சமூக ஜனநாயகம் தோற்றுப் போயுள்ளது. ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுத்த முதலாளித்துவ பாதை இவற்றையெல்லாம் சீரழித்துவிட்டதோடு, பிராந்திய அளவிலான வேற்றுமைகளையும் அதிகரித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகாலமாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வரும் புதிய தாராளமயக் கொள்கைகள், பொருளாதார அசமத்துவத்தை மேலும் மேலும் விரிவுபடுத்தி, இந்திய நாட்டின் வளங்களை எல்லாம் ஒரு சிலரின் கைகளில் கொண்டு சேர்த்திருக்கிறது. மற்றொரு புறம் முதலாளித்துவ வர்க்கம், நிலப்பிரபுக்களிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, சாதிய ஒடுக்குமுறைகளை களைவது போன்ற ஒரு நாடகத்தை மட்டுமே நிகழ்த்தியுள்ளனர்.

அம்பேத்கர் அவர்கள் அரசியல் ஜனநாயகத்திற்கும், பொருளாதார மற்றும் சமூக நிலைமையில் விரிவடைந்து வரும் சமத்துவமற்ற போக்கிற்கும் உள்ள முரண்பாட்டினை முன் கூட்டியே உணர்ந்து சொல்லியிருக்கிறார்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அம்பேத்கரின் இந்த பகுப்பாய்வும், இந்தியாவில் மார்க்சிஸ்டுகள் சொல்லி வரும் கருத்துக்களும் இணையானதாக உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கத்திலிருந்தே சொல்லி வருவது என்னவென்றால், சமூக மற்றும் விவசாய உறவுகளில் ஜனநாயகப் பூர்வமான மாற்றத்தை  முழுமையாக கொண்டு வராமல் முதலாளித்துவ வளர்ச்சியே சாத்தியமில்லை என்பதுதான். நவீன தாராளமயக் கொள்கைகளும், இந்துத்துவா சர்வாதிகாரமும் கைகோர்த்து பவனி வரும்போது, சமூக மற்றும் பொருளாதார நீதி என்பது முற்றிலும் தோல்வியுறும். இது முற்றிலும் ஜனநாயகத்தை வேரறுத்து சர்வாதிகாரத்தை வளர்ந்துவிடும்.

ஜனநாயகத்தை கட்டுப்படுத்தும் புதிய தாராளமயம்…

புதிய தாராளமயக் கொள்கைகள் ஜனநாயகத்தின் மாண்புகளை குறைத்தும் கட்டுப்படுத்தியும் வருகின்றது. குடிமக்கள் மற்றும் அவர்களது உரிமைகளை விட சந்தை தான் முக்கியமானது என்று வற்புறுத்துகிறது. நிதி மூலதனம் அரசியல் அமைப்பிற்குள் ஊடுருவி விட்டது. அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் பெரும் மூலதனத்திற்கு கீழ்ப்படிந்து கிடக்கின்றன.  இந்தப் போக்கு நாடாளுமன்ற அமைப்பையே சீரழிக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் இதைத்தான் சொல்கிறது: “நாடாளுமன்ற அமைப்புகளுக்கும், ஜனநாயகத்திற்கும் ஆபத்து என்பது ஒருபோதும் தொழிலாளி வர்க்கத்தால் அல்லது அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த அரசியல் கட்சிகளாலும் ஏற்படாது. ஆனால் அந்த ஆபத்து சுரண்டும் வர்க்கத்தால் மட்டுமே ஏற்படும். முதலாளித்துவ சுரண்டும் வர்க்கம்தான் நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் இருந்து கொண்டு, அவர்களின் குறுகிய லாபத்திற்காக நாடாளுமன்ற அமைப்பையே சிதைக்கிறார்கள்.

2014 ஆம் ஆண்டில் இந்துத்துவா சக்திகளின் வளர்ச்சியும், பா.ஜ.க. தனிக்கட்சியாக ஆட்சி அமைத்ததும் ஒரு முக்கிய மாற்றத்தை இந்திய அரசியலில் கொண்டு வந்தது. ஆர்.எஸ்.எஸ். என்கிற மதவாத சக்திகளால் தூண்டப்பட்ட ஒரு அரசியல் கட்சி அதை பயன்படுத்திக் கொண்டு நாட்டின் ஆட்சியைப் பிடிக்கிறது. இந்த அரசு, ஜனநாயகம் என்பதையே இழிவாக பார்க்கும், இந்துத்துவா சித்தாந்தத்தை புகுத்தி, இந்து ராஷ்ட்ரம் அமைத்திட துடிக்கிறது. இந்து ராஷ்ட்ரம் என்பது சிறுபான்மையினருக்கு சாம் அந்தஸ்தும், சம உரிமைகளையும் மறுக்கின்ற ஒரு கொள்கையாகும்.

இந்துத்துவா கொள்கைகளுக்கு ஆதரவாக அரசின் சட்டங்களையும், இந்து தீவிரவாத அமைப்புகளின் சிறுபான்மையினருக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிறுபான்மையினர் என்றால், குறிப்பாக இஸ்லாமிய மக்களை குறி வைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அவர்களை தொடர்ந்து அச்சத்திலும், வன்முறையிலும் வைத்திருக்கின்றன மத வாத அரசுகள். குறிப்பாக, பா.ஜ.க. ஆட்சி புரியும் உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில் இஸ்லாமிய மக்கள் அனுதினமும் துன்புறுத்தப்படுகிறார்கள் அல்லது அச்சுறுத்தப்படுகிறார்கள்.

இந்துத்துவா-கார்ப்பரேட் கூட்டணி…

சர்வாதிகாரம் என்பது கார்ப்பரேட் மற்றும் இந்துத்துவா சக்திகளினால் நெய் ஊற்றி வளர்க்கப்படும் பெரு நெருப்பாகும். இரு தீய சக்திகளுக்கும் நவீன தாராளமயக் கொள்கைகளை முன்னெடுப்பது என்பது அடிப்படை தேவைகளாகும். அதற்கு உயர்ந்தபட்ச சர்வாதிகாரம் என்பது தேவைப்படுகிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான அனைத்து சட்டங்களையும் வெட்டிச் சுருக்கி நான்கு தொழிலாளர் விதிகளாக (four labour codes) மாற்றி அமைத்தது ஆகும்.

அரசியல் அமைப்பு என்கிற போர்வைக்குள் இருந்து கொண்டு, ஜனநாயகத்தின் அத்தனை தூண்களையும் தகர்க்கும் வேலையை இந்த கூட்டணி செய்து கொண்டிருக்கிறது. சர்வாதிகாரம் என்பது அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படாமல், சமூகம் மற்றும் பண்பாட்டுத் தளங்களில் வளர்த்தெடுக்கப் படுகிறது. பசு மாடுகளை கொல்லத்தடை, மாட்டிறைச்சி உண்பதற்குத் தடை, ஒழுக்க காவலர்களாக மாறுதல், கலைஞர்களை எழுத்தாளர்களை கட்டுப்படுத்துவது, – இவையெல்லாம் சர்வாதிகாரத்தின் கூறுகளாக நாம் தினம் தினம் காண்கிறோம்.

ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போர்…

ஆகவே, இந்திய நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த பின்பு, இந்திய நாட்டின் ஜனநாயகம் என்பது மோசமான திருப்புமுனையில் உள்ளது. மோடி அரசால் பின்பற்றப்படும் இந்த சர்வாதிகாரம் இந்திய ஜனநாயக மாண்புகளுக்கும் குடிமக்களின் உரிமைகளுக்கும் எதிரானது. அது நாட்டின் சமத்துவம் கூட்டாட்சித் தத்துவங்களின் மீதான தீவிர தாக்குதல்களை செய்து வருகிறது. வரும் காலங்களில் அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத, இன, மொழி பேதமின்றி இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக போர் புரிய வேண்டும். அப்படி ஜனநாயகத்தை காக்கும் போராட்டம் என்பது நவீன தாராளமய கொள்கைகளுக்கும், இந்துத்துவா சக்திகளுக்கும் எதிரான போர் என்பதை உணர்ந்து போரிட வேண்டும்.

தொழிலாளர் வர்க்கத்தைப் பொறுத்த மட்டில், ஜனநாயக உரிமை என்பது மிகவும் அடிப்படையான தேவையாகும். ரோசா லக்சம்பர்க் சொல்வது போல், முதலாளித்துவ சாதிகளுக்கு ஜனநாயகம் என்பது தேவையற்றது மட்டுமல்லாமல் தொந்தரவானதும் கூட; ஆனால் அதுவே, தொழிலாளி வர்க்கத்திற்கு மிகவும் முக்கியமானது மட்டுமல்லாமல் தவிர்க்க முடியாததும் கூட. ஏனென்றால் முதலாளித்துவ பூர்ஷ்வா சக்திகளை அழித்துவிட்டு, சமத்துவ சமூக மாற்றத்தினை முன்னெடுப்பதற்கு ஜனநாயகம் என்பது சக்கரங்களாகவும், அதிர்வு தாங்கிகளாகவும் உள்ளது. அது இன்றியமையாதது; ஏனெனில் அதில் மட்டுமே, ஜனநாயகத்திற்கான போராட்டத்தில், பாட்டாளி வர்க்கம் அதன் வர்க்க நலன்கள் மற்றும் அதன் வரலாற்றுப் பணியை உணர்ந்து கொள்ள முடியும்.

இடதுசாரிகள் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கும், இந்துத்துவா சக்திகளுக்கும் முற்றிலும் எதிரானது என்ற நிலையில், நாட்டிலுள்ள அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளை ஓரணியில் இணைத்து ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. முன்னெடுக்கும் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடுவதற்கு முன்முயற்சி எடுக்க  வேண்டும்.

தமிழில்: வெ. ராகுல்ஜி

புதிய சூழலில் இந்துத்துவா எதிர்ப்பு !

– பிரகாஷ் காரத்

இந்துத்துவா வகுப்புவாத சக்திகளையும், ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தையும் எதிர்கொள்ள, அரசியல் தளத்திலும், சித்தாந்த தளத்திலும், சமூக மற்றும் பண்பாட்டு தளத்திலும் திட்டவட்டமான அணுகுமுறைகளை உருவாக்கி  முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். இது நம்முடைய முக்கிய நிகழ்ச்சி நிரலாக உள்ளது.

வகுப்புவாத சக்திகளை எதிர்கொள்வது பற்றி, கடந்த காலத்தில் எடுத்த முடிவுகள் இப்போது போதுமானதாக இல்லை. முந்தைய நிலையில், வகுப்புவாத சக்திகள் சில பிரிவினை திட்டங்களை முன்னெடுத்து இந்து மக்களின் ஆதரவை பெற முயல்வதுடன், சிறுபான்மையினருக்கு எதிரான திட்டங்களை முன்னெடுப்பார்கள். ஆனால் இப்போது இந்துத்துவா வகுப்புவாத சக்திகள் அரசு அதிகாரத்துடன் இயங்குகிறார்கள். இது கடந்த கால சூழலில் இருந்து மாறுபட்டது. இப்போதைய புதிய நிலைமைகளை பயன்படுத்தி, குடியரசின் தன்மையையே மாற்றியமைத்து, அரசியல் சாசனத்தை மாற்றியமைத்து,  ‘இந்து ராஷ்ட்டிராவை’ நோக்கி செயல்பட்டு வருகிறார்கள்.  ஆதரவுத் தளத்தை விரிவாக்கிட, முந்தைய காலத்தில் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இருந்து இது மாறுபட்டது ஆகும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அடிப்படையான இலக்குகளை நிறைவேற்றக்கூடிய போக்கினை நாம் எதிர்கொண்டு வீழ்த்த வேண்டியுள்ளது.

பாஜக எப்படிப்பட்ட கட்சி ?

மேம்படுத்தப்பட்ட நம்முடைய கட்சி திட்டம், பாரதிய ஜனதா கட்சியை பிற முதலாளித்துவ கட்சிகளைப் போன்ற இன்னொரு சாதாரண முதலாளித்துவக் கட்சியாக பார்க்கவில்லை. பாஜகவை உருவாக்கியதும், வளர்த்தெடுப்பதும் பாசிச வகைப்பட்ட தத்துவத்தால் வழிநடத்தப்படும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமாகும். அவர்கள் அதிகாரத்திற்கு வரும்போது, அரசு இயந்திரத்தை பயன்படுத்தி ‘இந்து ராஷ்ட்டிராவை’ நோக்கிய பயணத்தை வேகப்படுத்த முயற்சிப்பார்கள் என்று நம் திட்டத்திலேயே குறிப்பிட்டுள்ளோம். 2000 ஆண்டில் நமது கட்சி திட்டத்தை மேம்படுத்திய போது வாஜ்பாய் அரசாங்கம் இருந்தது.

‘இந்து ராஷ்ட்டிரா’ என்பது இந்து ராஜ்ஜியம் அல்ல. அதாவது அது  மத தலைவர்களின் ஆட்சி அல்ல. (ஈரான் நாட்டில் நடப்பதை மத தலைவர்களின் ஆட்சி எனலாம், அதனை ஒத்த ஆட்சியாக இது இருக்காது). ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆட்சி என்பதுதான் ‘இந்து ராஷ்ட்டிரா’ என்பதன் பொருள் ஆகும்.  ஏற்கனவே அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்ட பின்னணியில் ‘இந்து ராஷ்டிரத்தைக்’ கட்டமைக்கும் பணியும் ஏற்கனவே துவங்கி விட்டது. பாஜக மக்களவையில் பெரும்பான்மை பெற்றுள்ளது. அரசமைப்பின் அடிப்படையான சில அம்சங்களையும், குணாம்சத்தையும் மாற்றியமைக்க முயல்கிறது. நீதித்துறையினுடைய தன்மையையும், அதிகார வர்க்கத்தின் தன்மையையும், ராணுவத்தின் தன்மையையும் மாற்றியமைக்க முயல்கிறார்கள்.

அக்னிபத் திட்டத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அந்த திட்டத்தின் நோக்கம் என்ன?. ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முறையை அரசியல் அடிப்படையிலானதாக திட்டமிட்ட விதத்தில்  மாற்றியமைப்பதுதான் அதன் நோக்கம். இவ்வகையில் அவர்கள் ராணுவத்தில் ஆள் எடுக்கும் தன்மையையே மாற்றியமைக்க முயற்சிக்கிறார்கள்.

பரந்துபட்ட உத்தி அவசியம்

எனவே இதுதான் இப்போதைய நிலை என்கிறபோது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை  தேர்தல் களத்தில் மட்டும் நடத்தினால் போதாது என்பதை உணர முடியும். தேர்தல் கால உத்திகள் மட்டும் பலன் கொடுக்காது. அவர்கள் தேர்தல் களத்திலும், அரசியல் தளத்திலும் மட்டுமே செயல்படுவதில்லை. தங்களை கலாச்சார அமைப்பு என்று கூறிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ், இந்திய குடியரசின் பண்பு நலன்களை மாற்றியமைப்பதையே  இலக்காக கொண்டு செயல்படுவதை ஒட்டுமொத்தமாக கணக்கில் எடுத்து, அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான உத்தியோடு செயல்பட வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்/பாஜக அமைப்புகளால், இந்திய தேசியம் என்ற பெயரில் இந்து பெரும்பான்மை வகுப்புவாதத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்துள்ளது. 23 வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானத்தில் இதை நாம் குறிப்பிட்டுள்ளோம். மக்களின் மனங்களில் தாக்கம் ஏற்படுத்தி, கருத்தை மாற்றியமைக்க அவர்களால் முடிந்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் வாழும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சாதாரண மக்களின் மனங்களில் தம் கருத்துக்களை ஆழமாக பதித்துள்ளார்கள். அவர்கள் மட்டுமே  உண்மையான தேசியவாதிகள் என்றும், தேசத்தின் மீது அக்கறை கொண்ட சக்திகள் என்றும் பதிய வைத்துள்ளார்கள்.

இந்துக்கள் வலுவடைந்தால்தான் தேசம் வலுப்படும் என்கிறார்கள். இந்த வாதத்தின் மற்றொரு பகுதி இஸ்லாமியர்கள் இந்த தேசத்தை பலவீனமாக்குகிறார்கள் என்பதாகும். இந்துக்கள் என்றால் ’நாம்’, இஸ்லாமியர்கள் என்றால் ’அவர்கள்’. ‘நாம்’ –  எதிர் –  ‘அவர்கள்’ என்ற உணர்வினை உருவாக்கியுள்ளார்கள். இது கணிசமான மக்களை சென்று சேர்ந்திருக்கிறது.

குறிப்பாக உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இதுதான் நிலைமை. பாஜகவை மக்கள் வலுவான தேசியவாத  சக்தியாக பார்ப்பதுடன், பெரும்பான்மை மக்களுக்கு நல்லது செய்வதற்கே அவர்கள் இருப்பதாக பார்க்கிறார்கள். இந்த சூழலை எவ்வாறு எதிர்கொள்வது?

கடந்த  21, 22 மற்றும் 23 மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்திலும், அரசியல் ஸ்தாபன அறிக்கையிலும் ‘இந்துத்துவாவை எதிர்கொள்வது’ என்ற தலைப்பிலான பகுதி இடம்பெற்று வந்துள்ளது. கடந்த காலங்களில் நாம் பொதுவாக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போராடியிருக்கிறோம். பல மாநிலங்களில் இதர முதலாளித்துவக் கட்சிகளை எதிர்த்துப் போராடியிருக்கிறோம். ஆனால் இது அதிலிருந்து வேறுபட்ட ஒன்றாகும். அதனால்தான் நமது தீர்மானங்களில் தனியாக குறிப்பிட வேண்டி வந்தது.

எனவே 2015ஆம் ஆண்டில் இருந்து தனித்துவமாக, இதுபோல சில திட்டவட்டமான  உத்திகளை உருவாக்க முயற்சிக்கிறோம்.  அரசியல் செயல்பாடுகளிலும், கருத்தியல் செயல்பாடுகளிலும் இந்துத்துவா சக்திகளை எதிர்கொள்ளும் விதத்தில் பணிகளை திட்டமிட்டு முன்னெடுக்க கட்சியை தயார்ப்படுத்த வேண்டியுள்ளது. பல தளங்களிலும் நாம் கால் பதிக்க வேண்டியுள்ளது என்பதை கட்சி அணிகளுக்கு உணர்த்திட வேண்டும்.

கட்சியும், பல்வேறு வர்க்க வெகுஜன அரங்கங்களும், தமது வேலை பாணியை மாற்றியமைக்க வேண்டும். கருத்தியல் தளத்திலும், சமூக – பண்பாட்டுத் தளத்திலும், கல்வித் தளத்திலும் பணிகளை திட்டமிட வேண்டும். கடந்த காலத்தில் இந்த பணிகளை பொதுவாக அலட்சியப்படுத்தியே வந்திருக்கிறோம். கட்சி சில முழக்கங்களை முன்னெடுக்கும், தேர்தலை எதிர்கொள்ளும், வர்க்க – வெகுஜன அமைப்புகள் சில முழக்கங்களை முன்னெடுப்பார்கள், போராட்டங்களை நடத்துவார்கள்.

கருத்தியல் தளத்தில் கட்சி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக பேசிவந்திருக்கிறோம். ஆனால் இதுவரை அதில் என்ன செய்திருக்கிறோம்? பொதுவாக நம்முடைய கட்சி தொழிலாளி வர்க்க கட்சியாகும். நம்முடைய கட்சியினுடைய கருத்தியல் என்பது தொழிலாளி வர்க்க கருத்தியலே. ஆனால் மும்பை, தில்லி போன்ற பெருநகரங்களில் வாழும்   தொழிலாளர்களோடு பேசினால் அவர்களில்  கணிசமானோர் பின்பற்றும் சித்தாந்தம் இந்துத்துவா சித்தாந்தமாக உள்ளது. இந்துத்துவாவை பின்பற்றிக் கொண்டே சிலர்  நம்முடைய சங்கங்களிலும் இருப்பார்கள். அதுதான் இப்போதைய சூழல்.

எனவே கருத்தியல் தளத்தில் நடத்த வேண்டிய போராட்டத்தில் நாம் முன்னேற வேண்டியுள்ளது.  தொழிற்சங்கம் மட்டுமே இந்த போராட்டத்தை முன்னெடுத்திருக்க முடியாது. கட்சிக்கு தான் அதில் கூடுதலான பங்கு உள்ளது. எனவே அரசியல் தளத்தில் மட்டுமல்லாது, கருத்தியல் மற்றும் சமூக தளத்திலும் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

சில மாநிலங்கள் இந்த சூழலில் விதிவிலக்காக அமைந்துள்ளன. தமிழ்நாட்டினை உதாரணமாக பார்க்கலாம். தமிழ் நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புகள் பிரதான இடத்தில் இல்லை. ஆனாலும் அவர்கள் வளர முயற்சிக்கிறார்கள். இன்றுள்ள நிலைமையை கணக்கில் எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டிலோ, ஆந்திராவிலோ, கேரளத்திலோ ஆர்.எஸ்.எஸ் அமைப்பினுடைய செல்வாக்கிற்கு மக்கள் உட்பட மாட்டார்கள் என்ற நினைப்பில் இருந்துவிடக் கூடாது. ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் அவர்கள் கணிசமான செல்வாக்கை பெற்றுள்ளார்கள். பிரதான சக்தியாக உள்ளார்கள். தெலங்கானாவிலும் சில முன்னேற்றங்களை அடைந்துள்ளார்கள். தமிழ் நாட்டில் ஒரு பெரிய சக்தியாக வளர்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்று அவர்களுக்கு தெரியும். அதற்கு இந்த மாநிலத்தின் அரசியல், கருத்தியல், சமூக சூழல் ஒரு காரணமாக உள்ளது. திராவிட சித்தாந்தம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை சொல்லலாம். ஆனாலும் அவர்கள் இந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், தமது  குறைபாடுகளை மீறி முன்னேறுவதற்கும் பல தளங்களிலும் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பட்டியல் இனத்தின் மீது குறி !

ஆர்.எஸ்.எஸ் என்றால் ”உயர்” சாதி அமைப்பு எனபலர் நினைக்கிறார்கள். ஆம் அவர்கள்  சிந்தனை, கருத்தியல் இரண்டிலும் நிச்சயமாக “உயர்” சாதி ஆதிக்க கருத்தியல் கொண்டவர்கள்தான். ஆனால் ”உயர்” சாதியினரை மட்டும் கொண்ட கட்சியாக மட்டுமே அவர்கள் இல்லை.

உத்திரப்பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் ஓபிசி யை சேர்ந்த பெரும்பகுதியினர் பாஜக ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். அதே போல் தலித் மக்களில் குறைந்த பட்சம் 50 சதவிகிதம் பாஜக ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். இது எப்படி சாத்தியமானது?. முன்பு ”உயர்”  சாதியினர் கட்சியாக பார்க்கப்பட்ட கட்சி,  இன்றைக்கு ஓபிசி, எஸ்சி /எஸ்டி  மத்தியிலும் வளர்ந்திருக்கிறது என்றால் இது எப்படி நடந்தது? அவர்கள் குறிப்பாக சில சாதிகளைக் குறிவைத்து தங்களுடைய பணிகளைச் செய்தார்கள். அனைத்து இந்து மக்களின் பிரச்சனைகளையும் எடுப்பவர்களாக, அவர்களுக்கான கட்சியாகவும்  தங்களை அடையாளப்பட வைப்பதற்கான முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த காலத்தில் ஆர்எஸ்எஸ் உருவாக்கிய அரசியல் கட்சி யான ஜன சங்கத்தை பனியா கட்சி என்று சொல்வதுண்டு, அதற்குப் பிறகு பாஜக உருவான பின்பும் தொடக்க கட்டத்தில் அவர்களை பனியா கட்சி என்றே குறிப்பிடப்பட்டு வந்தது.

பனியா என்பது வடமாநிலத்தில் உள்ள ஒரு குறிப்பட்ட சமூகம். குறிப்பாக வியாபாரிகள் வணிகர்கள்; அவர்கள் ஜெயின் அல்லது குப்தாக்களாக இருக்கலாம். மார்வாடிகளாக இருக்கலாம். ஒரு வியாபாரம் செய்யக்கூடிய சமூகம். அவர்கள் மத்தியில் பாஜக வலுவாக இருந்தது. எனவே பாஜக அல்லது அதற்கு முன்னதாக ஜனசங்கத்தினுடைய வளர்ச்சி என்பது நகர்ப்புறங்களைச் சார்ந்து இருந்தது. ஆனால் இன்றைக்கு உத்தரப்பிரதேசத்தில் பட்டியலினத்துக்கான தொகுதிகளில் பெரும்பான்மையான தொகுதிகளில் அவர்கள் வெற்றிபெற முடிகிறது.

மாயாவதியினுடைய பகுஜன் சமாஜ் கட்சி  இருக்கிறது என்பது உண்மைதான். அந்த கட்சி யார் மத்தியில் இருக்கிறது என்று சொன்னால், பட்டியல் சாதிகளில்  உள்ள குறிப்பிட்ட துணை சாதி மத்தியில்தான் அவர்கள்  ஆழமாக இருக்கின்றனர். பட்டியல் இனத்தின் இதர துணை சாதிகளுக்குள்  பாஜக ஏகமாக வளர்ந்துள்ளது. பட்டியல்/பழங்குடி பிரிவினரை அவர்கள் குறிவைக்கிறார்கள்.

கடந்த 30, 40 ஆண்டுகளாகவே ஆர்எஸ்எஸ் பழங்குடியினர் மத்தியில் ஆழமாக வேலை செய்து வந்தது.  ஒரு நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில்தான் அவர்கள் பணியாற்றி வந்தார்கள். இவர்களின் ஊடுருவலை நாம் கவனித்து நோக்க வேண்டும்.

பாஜக என்பது நால் வருணத்தில் நம்பிக்கை உள்ள கட்சிதான், மதவாதத்தைப் பின்பற்றுகிற கட்சிதான். இருந்தாலும் அவர்களுடைய அரசியல் நோக்கத்திற்காக அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் தேவை அவர்களுக்கு இருக்கிறது. அதனை முயற்சிக்கிறார்கள்.

தெரிந்த பல அமைப்புகள் ஆர்எஸ்எஸ் அமைப்புகளாக இருக்கும். இந்து முன்னணி போல சிலதை சொல்லலாம். ஆனால், தெரியாமல் பல்வேறு  அமைப்புகள், என்ஜிஓ-கள் ஆர்எஸ்எஸ் வழிகாட்டி நடத்தக்கூடிய அமைப்புகளாக இருப்பார்கள். குறிப்பாக இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் அவர்களுக்கு நிதி என்பது ஒரு பிரச்சனையாக இல்லை.

கேரளாவில் பழங்குடியின மக்கள் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 2 சதவிகிதம் கூட இருக்க மாட்டார்கள். ஆனாலும் ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் செயல்படக்கூடிய பெரும்பகுதி என்ஜிஓ கள் செயல்படும் பகுதி பழங்குடியின மக்கள் பகுதிதான். எனவே ஆர்எஸ்எஸ் நடவடிக்கைளுடைய எல்லை என்ன ?ஆழம் என்ன ? அதனுடைய தன்மை என்ன? வகைகள் என்ன ? என்பதை சரியாக புரிந்துகொண்டு எதிர்க்க வேண்டும்.

கருத்தியல் நடவடிக்கைகள்

இதற்கான திட்டத்தை உருவாக்குவதற்கான பரந்த வழிகாட்டுதல், 23 வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் ஸ்தாபன அறிக்கையில் தெளிவாக தரப்பட்டுள்ளது. அதில் முதல் விசயம், கருத்தியல் நடவடிக்கைகள் ஆகும்.  இந்துத்துவ வகுப்புவாத கருத்தியலை வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளுக்கான ஏராளமான விபரங்களை கொண்ட பிரசுரங்கள், வகுப்பு குறிப்புகள், பிரச்சார கருவிகளை, சமூக வலைத்தள உள்ளடக்கங்களை உருவாக்க வேண்டும். இவற்றை உள்ளூர் மட்டத்திலேயே சுலபமாக செய்துவிட முடியாது. கட்சியின்  மத்தியக்குழுவும், மாநிலக்குழுவும் இணைந்து குறிப்பிட்ட காலவரையறைக்குள் இதனை முடிக்க வேண்டும். சமூக வலைத்தளத்தையும் வலுப்படுத்தி கருத்தியல் பிரச்சார நோக்கில் பயன்படுத்த வேண்டும்.

இரண்டாவது விசயம், கட்சி மக்களோடு உயிரோட்டமான தொடர்பில்,  இரண்டற  கலந்திருக்க வேண்டும் என்கிற மாஸ்லைன் கடைப்பிடிப்பது.  மக்கள் மத்தியில் நம்முடைய தலையீடுகளும், பணிகளும் விரிவாக நடக்க வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். இது  கட்சிக்கும், வெகுஜன அமைப்புகளுக்கும் பொருந்தும்.  மக்களோடு உயிர்ப்பான ஒரு  தொடர்பில் இருக்க வேண்டும் என்பது  கொல்கத்தா பிளீனத்தில் இருந்தே சொல்லப்படுகிறது. மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு என்று சொல்வதன் மற்றொரு அம்சம், பல்வேறு நல நடவடிக்கைகளை, சமூக சேவை  நடவடிக்கைகளை முன்னெடுப்பது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இது போன்ற பணிகளை  மேற்கொள்கிறார்கள். நாம் கட்சியாகவும், வர்க்க வெகுஜன அமைப்புகளின் வழியாகவும் இதனைச் செய்ய வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கல்வி தளத்தில் செயல்படுகிறது. அவர்களை போல ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்களை நாம் நடத்த முடியாது. ஒன்றிரண்டு நடத்தலாம். ஆனால்  இளைஞர், மாணவர் அமைப்புகள்  கல்வி தளத்தில்  பங்களிக்க முடியும். உதாரணமாக மாலை நேர கல்வி (டியூசன்) மையங்கள் நடத்தலாம்.  தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் நடத்தலாம். படிப்பு வட்டங்கள், நூலகங்களை நடத்த முடியும்.

அதே போல, பண்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். பண்பாட்டு நடவடிக்கை என்றாலே  கலைக்குழு அமைப்பு, பாடல்குழு, வீதிநாடகக்குழு என்பது மட்டுந்தான் நினைவில் வருகிறது. அந்த பணிகள் இன்னும் பரந்து பட்டதாக இருக்க வேண்டும். நமக்கு அப்பாற்பட்ட மக்களை ஈடுபடுத்தகூடிய விதமான நடவடிக்கைகளாக செய்ய வேண்டும். உதாரணமாக புத்தகத் திருவிழாக்களை சொல்லலாம். மாணவ/மாணவியருக்கான பேச்சு போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடத்தலாம். இந்த நடவடிக்கைகளை கட்சியாக மட்டும் நடத்த முடியாது. வர்க்க வெகுஜன அமைப்புகளும் செய்ய வேண்டும். குறிப்பாக தொழிற்சங்கள் சில முயற்சி எடுத்து, தொழிலாளர் வாழும் பகுதிகளில் பண்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.

அடுத்து வளர்த்தெடுக்க வேண்டியது பாலர் சங்கம்,  சில மாநாடுகளாகவே நாம் பாலர் சங்கம் பற்றி பேசுகிறோம். இந்த விசயத்தில் தீவிர முன்முயற்சி ஏதும் இல்லை. அதனால்தான் பாலர் சங்கத்தை உருவாக்குவதை மாநாட்டின் கடமையாகவே நாம் வரையறுத்திருக்கிறோம். கேரளாவில் இவ்விசயத்தில் நமக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. ஒரு பரந்த அமைப்பாக பாலர் சங்கத்தை கட்டமைத்திருக்கிறார்கள். பாலர் சங்கத்தை உருவாக்கும் போது, கட்சி ஏற்கனவே கணிசமாக இருக்கும் பகுதி, செல்வாக்கு இருக்கும் பகுதியில் தொடங்கினால், இதர பகுதிகளுக்கும் விரிவாக்க முடியும் என்பது கேரள அனுபவம்.

மத விழாக்கள்

கோவில் திருவிழாக்களிலும், மத விழாக்களிலும் பங்கெடுத்தல் அடுத்து வருகிறது. பொதுவாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கோவில்களை, மத நம்பிக்கைகளை பயன்படுத்துகிறார்கள். கோவில் என்று சொல்லும் போது மதம் சார்ந்த நடவடிக்கைகள் இருக்கும். அடுத்து  கோவில் திருவிழாக்கள் என்று சொல்லும் போது அது மதம் சார்ந்த நடடிவடிக்கையாக மட்டும் இல்லாமல் ஒரு சமூகம் சார்ந்த நடவடிக்கையாகவும் இருக்கும் ஏரளாமான மக்களுடைய பங்கேற்பும் இருக்கும். நாம் சமூகம் சார்ந்த நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க முடியாது.

திருவிழாக்களை நாம் முற்றிலும் நிராகரித்துவிட முடியாது. ஆனால் எந்த திருவிழாவில் பங்கேற்பது. எந்த அளவில் பங்கேற்பது என்பது பற்றி  ஓரே சீரான முடிவினை மேற்கொள்ள முடியாது. ஒவ்வொரு திருவிழாவின் தன்மையை பொருத்து முடிவு செய்ய வேண்டும். சில திருவிழாக்கள் முழுக்க முழுக்க மதம் சார்ந்த நடவடிக்கையாக மட்டும் இருக்கும். அதில் சமூக ரீதியான  பங்கேற்பு பெரியதாக இருக்காது. எனவே ஒவ்வொரு திருவிழாக்களின் தன்மையை கணக்கில் எடுத்து உள்ளூர் மட்டத்தில் முடிவு எடுக்க வேண்டும்.

கோயில்களுக்கும் சமூக வாழ்க்கையில் பாத்திரம் உள்ளது. அவைகளை ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்புகள் கையகப்படுத்துகிறார்கள். இந்துத்துவா நடவடிகைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். நாம் அதனை அப்படியே தங்குதடையில்லாமல் அனுமதிக்க முடியாது. எனவே கோயில் நிர்வாகத்தில் நாமும் தலையிட வேண்டும். அதற்காக கட்சியின் முக்கிய ஊழியர்கள் அதனை செய்ய முடியாது. கட்சி ஆதரவாளர்கள், மதச்சார்பற்ற மனநிலை கொண்ட நம்பிக்கையாளர்கள் அதில் இணைந்திட முடியும். இது அத்தனை எளிதாக இருக்காது. ஆனால் நாம் இதன் மூலமே கோயில்களை ஆர்.எஸ்.எஸ் செயல்பாட்டுக்கான  களமாக மாறாமல் தடுக்க முடியும்.

விளையாட்டு விழாக்கள், யோகா பயிற்சி போன்ற வேறு பல சமூகம் சார்ந்த நடவடிக்கைகளும் அவசியமே.

பொதுவாகவே மக்கள் மத்தியில் மத உணர்வு அதிகரித்துள்ளது. (மதவாதத்தை குறிப்பிடவில்லை). கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள் மத்தியிலும் மத உணர்வு கூடுதலாகியுள்ளது. மதத்திற்கு எதிரான போராட்டத்தை நாம் நடத்துவதில்லை. அதற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. மதவாத சக்திகள், மதவெறி சக்திகளை எதிர்த்த போராட்டத்திற்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறோம்.

நேரடியாக மதத்தை விமர்சிக்காத அதே சமயத்தில் அறிவியல் ரீதியான கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும், அதே போல முற்போக்கான சிந்தனைகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை  மேற்கொள்ள வேண்டும்.  மூடநம்பிக்கைகளையும்,  பழமைவாதத்தையும் எதிர்த்து பிரச்சாரம் செய்ய வேண்டும். இதுபோன்ற முயற்சியின் மூலம் சமூகத்தை  அறிவியல் பாதையில், முற்போக்கு பாதையில் செலுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

சிறுபான்மை வகுப்புவாதம்

ஆர்எஸ்எஸ் இந்துத்துவச் சக்திகள் வளர்கிறார்கள். அந்த வளர்ச்சி மட்டும் தனியாக நடப்பதில்லை. இன்னொரு பக்கம் இஸ்லாமிய மத அடிப்படை வாதிகளும் வளர்கிறார்கள். அதிலிருந்தும் ஆர்.எஸ்.எஸ் பலனடைகிறது. 1990 களில் கோவையில் என்ன நடந்தது என்பதைப் பார்த்தோம்.

பொதுவாக நாடு முழுவதுமே இஸ்லாமிய மக்கள் மிக மோசமான தாக்குதலுக்கு ஆளாகிவருகிறார்கள். குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில்  இரண்டாம்தர குடிமக்களாக வேகமாக மாற்றப்பட்டு வருகிறார்கள். எல்லாக் குடிமக்களுக்கும் உரிய அடிப்படையான உரிமைகள் கூட இஸ்லாமிய மக்களுக்குமறுக்கப் படுகின்றன. எனவே இந்த மாநிலங்களில் இஸ்லாமிய மக்கள்   விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளப்படுகிறார்கள். அந்த மாதிரியான சூழலில் அவர்கள்  இஸ்லாமிய அடிப்படைவாத, தீவிரவாத  அமைப்புகள் பக்கம் திரும்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

குறிப்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அதனுடைய அரசியல் கட்சியான எஸ்டிபிஐ, அதைப்போல ஜமாத்-இ-இஸ்லாமி அதனுடைய அரசியல் கட்சியான வெல்பேர் பார்ட்டி போன்றவற்றை நோக்கி ஒரு பகுதி சிறுபான்மையினர்  திரும்ப வாய்ப்பு இருக்கிறது.

தீவிரவாத போக்குகள்  சிறுபான்மை மக்கள் மத்தியிலிருந்து வந்தாலும் அதை கடுமையாக எதிர்க்க வேண்டும். இந்துத்துவ சக்திகளை எதிர்த்து விட்டு, சிறுபான்மை தீவிரவாதத்தை எதிர்க்கவில்லை என்று சொன்னால், சாதாரண மக்களுக்கு நம் மீது நம்பகத்தன்மை வராது. அது ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு சாதகமாகிவிடும். நம்முடைய நோக்கம் அனைத்து மதங்களையும் சார்ந்த மக்களை ஒரே அணியில் இணைத்து மதவெறிக்கு எதிரான, மதவாதத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான நடவடிக்கைகளை உள்ளூர் அளவில் திட்டமிட்டு, திட்டவட்டமாக முன்னெடுக்க வேண்டும். மாநில அளவிலும், அகில இந்திய அளவிலும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நாடும், நாட்டு மக்களும்  எதிர்கொள்ளும் தீவிர அபாயத்திற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.

தமிழில்: உ.வாசுகி

தொகுப்பு: எம்.கண்ணன் (தீக்கதிர்)

ஜவஹர்லால் நேரு: அனைத்திற்கும் மேலாக, மதச்சார்பற்றவர் …

பிரகாஷ் காரத்

ஒரு விடுதலைப் போராட்ட வீரராக, இந்திய முதலாளித்துவ வளர்ச்சியின் சிற்பியாக, உலக அரங்கில் இந்தியாவின் நலனை முன்னிறுத்தி செயல்பட்ட தலைவரான ஜவகர்லால் நேரு வலதுசாரி பிற்போக்கு வாதத்தை இறுதிவரை எதிர்த்துப் போராடியவர். அவரது மதசார்பற்ற கண்ணோட்டத்தை இன்றைக்கும் நினைவுகூர்ந்து முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதை வலியுறுத்தி ஜவகர்லால் நேருவின் 125வது பிறந்தநாளை ஒட்டி ஃப்ரண்ட்லைன் இதழின் 2014 டிசம்பர் 12 பதிப்பில் தோழர் பிரகாஷ் காரத் எழுதியிருந்த கட்டுரையின் முக்கியத்துவம் கருதி இப்போது தமிழில் வெளியாகிறது. – ஆசிரியர் குழு

ஜவகர்லால் நேருவின் 125வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் பின்னணியில், நேருவின் பாதை, பாரம்பரியம் ஆகியவை குறித்தும் இன்றைய காலகட்டத்தில் அவற்றின் பொருள் எத்தகையதாக அமைகிறது என்பது குறித்துமான விவாதம் இப்போது மீண்டும் எழுந்துள்ளது. நேரு முன்வைத்த தொலைநோக்கு, குறிக்கோள்கள் ஆகியவற்றுக்கு நேரெதிர் நிலைபாட்டிலுள்ள பாரதிய ஜனதா கட்சி ஓர் ஆளும் கட்சி என்ற வகையில் தலைமை வகிக்கும் நரேந்திர மோடியின் அரசு தரும் முரண்பட்ட சித்திரமானது இந்தக் கேள்வியை மேலும் கூர்மையாக்குகிறது.

இடதுசாரிகளை, குறிப்பாக கம்யூனிஸ்டுகளை பொறுத்தவரையில் நேருவின் தொலைநோக்கும் அவரது பணியும் கம்யூனிஸ்டுகளின் சொந்த வரலாறு, அவர்களது தத்துவார்த்த வளர்ச்சி ஆகியவற்றோடு ஓரளவிற்குப் பின்னிப் பிணைந்ததாகவே உள்ளன. நாட்டின் விடுதலைக்கான தேசிய இயக்கம் நடைபெற்ற காலத்தில் நேருவிற்கும் இடதுசாரிகளுக்கும் இடையே பெருமளவிலான ஒற்றுமை நிலவியது எனில், விடுதலை பெற்ற இந்தியாவில் நேருவின் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வந்த ஆண்டுகளில் அதிகமான அளவில் இடைவெளிகளும் மோதல்களும் நிலவின.

நேரு மறைந்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நேருவின் காலம் குறித்த இடதுசாரிகளின் புரிதல் என்பது மிகப்பெருமளவில் சமநிலையான, நாகரீகமான ஒரு வடிவத்தை பெற்றதாக உள்ளது.

இந்திய விடுதலைப் போராட்டத்தை தலைமைதாங்கி நடத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் மிகவும் அறிவுச்செறிவு மிக்க தலைவராக நேரு விளங்கினார். அவ்வகையில் அவரது தலைமுறையைச் சேர்ந்த பலரையும் கடந்தவராகவும் அவர் இருந்தார். மதச்சார்பின்மை, ஜனநாயகம், அறிவியல்பூர்வமான உணர்வு ஆகியவற்றை ஆதரிப்பவராகவும் நேரு இருந்தார். மகாத்மா காந்தியைச் சுற்றியிருந்த பழமைவாத, மீட்சிவாத தலைவர்கள் பலரின் கருத்துக்களுக்கு இவை முற்றிலும் முரணானவையாக இருந்தன. நேருவின் இத்தகைய நவீனமான, முதலாளித்துவ ஜனநாயகபூர்வமான அணுகுமுறையானது தேசவிடுதலைப் போராட்டத்தில் அவரை தனித்துவமானதொரு ஆளுமை கொண்டவராக ஆக்கியது.

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து முழுமையான விடுதலை என்ற கோஷத்தை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளப் போராடியவர் நேருதான். 1927ஆம் ஆண்டில் மதராஸில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் இதற்கான ஒரு தீர்மானத்தையும் அவர் முன்வைத்தார். எனினும் காந்திஜியின் வற்புறுத்தலால் நேருவின் தீர்மானம் மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதன்பிறகு 1929ஆம் ஆண்டில்தான் காங்கிரஸ் கட்சி முழுமையான விடுதலை என்ற கோஷத்தை ஏற்றுக் கொண்டது. 1921ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலேயே கம்யூனிஸ்டுகள் இந்தக் கோரிக்கையை எழுப்பியிருந்தனர். அப்போதும் கூட காந்திஜி அதை நிராகரித்தார். தொழிலாளர்-விவசாயிகளின் வெகுஜன அமைப்புகள் காங்கிரஸுடன் நேரடியாக இணைக்கப்பட வேண்டும் என்றும் நேரு விரும்பினார். எனினும் கட்சித் தலைமையை  இதை ஏற்றுக் கொள்ளச் செய்வதில் அவர் தோல்வியுற்றார்.

1936ஆம் ஆண்டில் நேரு தலைமைப் பொறுப்பில் இருந்தபோது லக்னோவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு சோஷலிசத்திற்காகப் பேசியது. ஐரோப்பாவிலும் உலகத்திலும் தலைதூக்கி வந்த பாசிஸம் குறித்தும் அதனால் ஏற்படப் போகும் அபாயங்கள் குறித்தும் அறிந்தவராகவும் நேரு இருந்தார். இந்தக் காலப்பகுதியில்தான் காங்கிரஸிற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த இடதுசாரிகள் நேருவுடன் மிக நெருக்கமாகச் செயல்பட்டு வந்தனர்.

எனினும் காந்திஜியின் மிகவும் நம்பகமான சீடராகவும் நேரு இருந்தார். தேசவிடுதலை இயக்கத்தின் வர்க்கத் தலைமையின் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்காக காந்திஜியின் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களுக்கு அதன் ஒவ்வொரு கட்டத்திலுமே நேரு அடிபணிந்தார். காந்திக்கு அடுத்தபடியாக மக்களால் பெரிதும் போற்றப்பட்ட தலைவராகவும் நேரு இருந்தார். காந்திஜியின் வாரிசு என்றும், அவருக்குப் பின்னால் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருப்பவர் என்றும் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டவராகவும் அவர் இருந்தார்.

முக்கியமாக, நேருவின் சோஷலிசம் என்பது அடிப்படையில் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரானது என்பதையும் தேச விடுதலை இயக்கத்திற்குள் பெருந்திரளான மக்களை கொண்டுவருவதற்கான ஒரு வழியாகவுமே அவர் அதைப் பயன்படுத்தினார் என்பதையும் தொடக்கத்திலேயே கம்யூனிஸ்டுகள் புரிந்து வைத்திருந்தனர். பிரதமராக ஆன பிறகு, நேரு சோஷலிசத்திலிருந்து விலகி, சமூக ஜனநாயகத்தின் பக்கம் நகர்ந்து சென்றார். இருந்தபோதிலும், 1955ஆம் ஆண்டில் சென்னை ஆவடியில் நடைபெற்ற அகில இந்திய  காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘சோஷலிச வகைப்பட்ட சமூகம்’ என்பது வலதுசாரி சக்திகளையும் கம்யூனிஸ்டுகளையும் எதிர்த்துப் போராடுவதற்கான ஓர் ஆயுதமாகவே பயன்பட்டது. 1955ஆம் ஆண்டில் ஆந்திராவில் நடைபெற்ற தேர்தல்களிலும், 1957இல் கேரளாவில் நடைபெற்ற தேர்தல்களிலும் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடிக்க நேருவின் ‘சோஷலிச’ மேடை பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

முதலாளித்துவ வளர்ச்சி

துவக்க கட்டத்திற்குப் பிறகு, பொருளாதார வளர்ச்சிக்கு உதவி செய்ய நேருவின் பார்வை மேற்கு நாடுகளை நோக்கியிருந்தது. எனினும் சுயேச்சையான, முன்மாதிரியுடன் கூடிய வளர்ச்சியுடன் இந்தியா தலையெடுக்க மேற்கத்திய நாடுகள் உதவி செய்யாது என்பதையும் பின்னர் அவர் உணர்ந்தார். எனவே முதலாளித்துவ வளர்ச்சிக்கான அடித்தளத்தை நிறுவுவதற்கு முதலாளித்துவ வர்க்கத்திற்கு தேவைப்படுகின்ற பொதுத்துறையை வளர்த்தெடுப்பதிலும் அதற்கான திட்டமிடுதலிலும் நேரு இறங்கினார். பொதுத்துறையை வளர்த்தெடுப்பதற்கு சோவியத் யூனியனிடமிருந்து உதவி பெறப்பட்டது. பெருநகர மூலதனத்திலிருந்து ஓரளவிற்கு சுதந்திரமானதாக, அரசின் உந்துதலின் மூலமான முதலாளித்துவ வளர்ச்சியாக அது இருந்தது என்பதே இதன் பொருள். முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு சில பிரிவுகள் நேருவின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும் ஒட்டுமொத்தத்தில் இது முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்கு ஏற்றதாகவே இருந்தது. இவ்வாறு நேருவிய வகைப்பட்ட பாதையானது சர்வதேச மூலதனத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிய வேண்டிய தேவையில்லாத, ஒரு வகைப்பட்ட முதலாளித்துவ வளர்ச்சிக்கான பாதையை உருவாக்கியது.

அதேநேரத்தில் நிலச் சீர்திருத்தங்களை  மேற்கொள்ளாமல், நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்து கொண்டு, அதே நேரத்தில் ஏகபோக மூலதனத்திற்கும் ஊட்டம் கொடுத்து முதலாளித்துவத்தை வளர்த்தெடுத்ததானது முரண்பாடுகளின் வளர்ச்சிக்கும் வழிவகுத்தது. இதைத் தொடர்ந்த காலப்பகுதியில் சுயேச்சையான வளர்ச்சிக்கான எந்தவிதமான வாய்ப்பையும் இது வலுவிழக்கச் செய்ததோடு, சர்வதேச நிதி மூலதனத்துடன் ஒன்றிணைவதற்கும், அதன் மூலம் ஏற்படும் விளைவுகளுக்கும் வழியேற்படுத்தித் தந்தது. நேருவிய காலத்தின் மிகப் பெரிய துரோகம் என்பது நிலச் சீர்திருத்தத்தை மேற்கொள்வது என்ற அதன் உறுதிமொழியினை நிறைவேற்ற மறுத்ததே ஆகும். நேரு அரசினால் முன்வைக்கப்பட்ட இந்த வகைப்பட்ட முதலாளித்துவ வளர்ச்சியை கம்யூனிஸ்டுகள் எதிர்த்தது மட்டுமின்றி, இதுவே சோஷலிசப் பாதை என்ற அதன் தம்பட்டத்தையும் முற்றிலுமாக நிராகரித்தனர்.

வெளியுறவுக் கொள்கை

எனினும் 1950களின் நடுப்பகுதியில் நேரு அரசு இடதுசாரி பாதையை நோக்கி மாறியதாகத் தோற்றம் அளித்தது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஆவடி மாநாடு  ‘சோஷலிச வகைப்பட்ட’ சமூகத்திற்காகப் பாடுபடப் போவதாக அறிவித்தது. (1956-61க்கான) இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் தொழில் மயமாக்கலுக்கும் பொதுத்துறைக்கும் உத்வேகம் அளித்தது. தொடக்க ஆண்டுகளில் மேற்கு நாடுகளை சார்ந்திருந்த நிலைக்குப் பிறகு, அணிசேரா கொள்கை என்ற புதியதொரு பாதையை நோக்கி நேரு வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைத்தார். இந்தக் கொள்கை சர்வதேச அமைதிக்காகவும் தேச விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவாகவும் தீவிரமாக பாடுபட்டது. இந்தக் கொள்கையிலிருந்து விலகி நின்ற சில தருணங்கள் இருந்தபோதிலும், அதிகமான செயல்திறனையும், ஓரளவிற்கு சுயாட்சியையும் கொண்டு பெருமளவிற்கு இந்திய அரசின் நலன்களுக்கு உகந்ததாக நேரு காலத்திய வெளியுறவுக் கொள்கை இருந்தது. சீனாவுடன் எல்லை மோதல் உருவான காலம் வரை இந்த நிலை நீடித்தது.

நேரு மேற்கொண்ட இத்தகைய நடவடிக்கைகள் அனைத்துமே இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளேயும், இடதுசாரிகளுக்கு உள்ளேயும் மாறுபட்ட கருத்துக்கள் தோன்ற வழிவகுத்தன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த ஒரு பிரிவினர் முற்போக்கான வெளியுறவுக் கொள்கையை உள்நாட்டுக் கொள்கையுடன் பொருத்தி வைத்து, காங்கிரஸ் கட்சியுடன் ஓர் ஐக்கிய முன்னணியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரினர். நேரு பின்பற்றிய பாதையை எவ்வித விமர்சனமுமின்றி அப்படியே ஏற்றுக் கொள்வது என்பதே இந்தக் கோரிக்கையின் உள்ளீடான அம்சமாகும். 1956ஆம் ஆண்டு பாலக்காடு நகரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நான்காவது காங்கிரஸில் இந்தப் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது. பிரதிநிதிகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்த நிலைபாட்டை ஆதரித்த போதிலும் காங்கிரஸ் உடனான ஐக்கிய முன்னணி என்ற கருத்துருவை கட்சி காங்கிரஸ் நிராகரித்தது. 1964ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவுக்கான விதை அப்போதுதான் தூவப்பட்டது.

1930களில் சோஷலிசத்தை ஆதரித்துப் பேசி வந்த நேரு முதலாளித்துவம் குறித்த சமூக-ஜனநாயக அணுகுமுறைக்கு நெருக்கமாக நகர்ந்து சென்றார். அரசு ஆதரவு பெற்ற முதலாளித்துவம் என்ற இந்த வடிவமானது மூலதனக் குவிப்புக்கு வழிவகுத்து, பெருநிறுவன குடும்பங்கள் உயிர்த்தெழவும் வழியேற்படுத்தியது. ‘விஞ்ஞான சோஷலிசம்’ என்பதிலிருந்து மேலும் மேலும் விலகிப்போன நேரு, அதை வறட்டுத்தனமான ஒரு தத்துவமாகவும் கண்டார். மேலும் சோவியத் யூனியனில் இருந்தது போன்ற ஒரு சோஷலிச அமைப்பில் வன்முறையும் வற்புறுத்தலும் உள்ளார்ந்த அம்சமாக விளங்குகின்றன என்றும் அவர் குறை கூறினார்.

பிந்தைய காலப்பகுதியில் முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அமைப்பின் உள்ளீடாக அமைந்த அனைத்துக் குறைபாடுகளையும் வெளிப்படுத்துவதாகவே நேருவின் தலைமையிலான அரசு இருந்தது. ஆளும் காங்கிரஸ் மேலும் மேலும் ஊழல் மிக்கதாக, விடுதலைப் போராட்டத்தின்போது நிலவிய சமூக, அரசியல் குறிக்கோள் அனைத்தையும் கைவிட்டதாக மாறியது. நேருவிற்குப் பிறகு காங்கிரஸில் சீரழிவு மேலும் துரிதமாக ஆனதோடு, நேரு காலத்திய நேர்மறை அம்சங்கள் அனைத்தும் ஒதுக்கப்பட்டன. புதிய தாராளவாதப் பாதையை நோக்கிய அதன் சரிவு தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது.

நேரு காலத்திய வளர்ச்சிப் பாதை குறித்த இடதுசாரிகளின் விமர்சனங்கள் இருந்தபோதிலும், நவீன இந்தியாவை உருவாக்குவதில் நேருவின் இரண்டு உயிரோட்டமான பங்களிப்புகள் இருந்தன. தேசிய இயக்கத்தில் மதச் சார்பின்மை குறித்த ஆழமான, தீவிரமான உறுதிப்பாடு வேறு எந்த தலைவருக்கும் அவரைப் போன்று இருக்கவில்லை. இந்திய அரசின் மதசார்பற்ற திசைவழியை நிறுவுவதில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு பொறுப்பேற்றது மிக முக்கியமான பங்கினை வகித்தது. நாட்டுப் பிரிவினைக்குப் பிறகு டெல்லியில் கலவரங்கள் வெடித்து, முஸ்லீம்களின் மீதான தாக்குதல்கள் நிகழ்ந்தபோது, கலவரக்காரர்களை தடுத்து நிறுத்தவும், முஸ்லீம்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவும் நேரு கலவரம் நடந்து வந்த இடங்களுக்கு நேரடியாகச்  சென்றார். வல்லபாய் பட்டேல், ராஜேந்திர பிரசாத் மற்றும் இதர காங்கிரஸ் தலைவர்கள் நேருவின் இச்செயலை வெறுத்ததோடு, அதை ஏற்றுக் கொள்ளவும் மறுத்தனர். இத்தகைய பாதுகாப்போ, சிறப்பு நடவடிக்கைகளோ எடுக்கப்படக் கூடாது என்றுதான் அவர்கள் கருதினர்.

இத்தகையதொரு தருணத்தில்தான் பெரும்பான்மையினரின் வகுப்புவாதம் “தேசியவாதம் ஆக தனது தோற்றத்தை வைத்துக் கொள்ளும் அதே நேரத்தில் சிறுபான்மையினரின் வகுப்புவாதம் அது எப்படி இருக்கிறதோ அதே வகையில் அடையாளம் காணப்படும்” என்று மிகுந்த தீர்க்க தரிசனத்துடன் நேரு எச்சரித்தார். நாட்டு விடுதலைக்குப் பிந்தைய தொடக்க ஆண்டுகளில் அரசு அமைப்பு மற்றும் அரசியல் ஆகிய துறைகளில் மதசார்பற்ற குறிக்கோளை நிறுவுவதற்காக நேரு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இடைவிடாது போராட வேண்டியிருந்தது. 1950ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக புருஷோத்தம் தாஸ் தாண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டபோது காங்கிரஸுக்குள் இருந்த இந்து பாரம்பரியவாதிகளுடனான நேருவின் இந்தப் போராட்டங்கள் உச்சநிலையை எட்டின. வகுப்புவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலும், மதசார்பற்ற ஓர் அரசை நிறுவுவதிலும் நேருவைப் போல் தெளிவான சிந்தனை, உறுதி ஆகியவற்றைக் கொண்ட வேறு எந்த காங்கிரஸ் தலைவரும் இல்லை.

1948ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக ஆன, எளிதில் அமைதிப்படுத்தி விட முடியாத வகையில் நேரு அரசின் எதிரியாக விளங்கிய பி.டி. ரணதிவே 1989ஆம் ஆண்டில் நேருவின் பிறந்ததின நூற்றாண்டு தருணத்தில் நேருவைப் பற்றிய மிகச் சிறப்பான மதிப்பீட்டை செய்திருந்தார். அப்போது அவர் எழுதியிருந்தார்: “ஆழமான மதசார்பற்ற கண்ணோட்டம், ஜனநாயகம் குறித்த நவீன கருத்தாக்கம் ஆகியவற்றைக் கொண்டிருந்த நேருவிற்குப் பதிலாக வேறு எவராவது அரசுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தால் நாட்டின் விடுதலையே அபாயத்திற்கு ஆளாகியிருக்கும்”. மேலும் “மீட்சி வாத பாரம்பரியத்தை மறுதலித்து, மதசார்பற்ற, நவீன ஜனநாயக மதிப்பீடுகளின் அடிப்படையில் மக்களை அணிதிரட்டியதில் நேருவின் தனித்துவமான பங்களிப்பை குறைத்து எடைபோட்டு விடக் கூடாது” என்றும் அவர் சுட்டிக் காட்டினார். (பி.டி. ரணதிவே, ஜவகர்லால் நேரு: ஒரு நூற்றாண்டு மதிப்பீடு, மார்க்சிஸ்ட் (ஆங்கிலம்) ஜூலை-டிசம்பர் 1989)

அதற்குள் பல்வேறு விதமான குறைபாடுகள் இருந்தபோதிலும் நாடாளுமன்ற ஜனநாயகம் நாட்டில் வேரூன்றுவதை உறுதிப்படுத்தியதில் தனிப்பட்ட பொறுப்பு நேருவிற்கே உரியது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கருடன் இணைந்து இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஜனநாயக ரீதியான கட்டமைப்பினை உருவாக்குவதற்குக் காரணமாகவும் அவர் திகழ்ந்தார். இருந்தபோதிலும், நேருவின் ஜனநாயக ரீதியான சாதனையிலும் மிகப்பெரும் களங்கம் ஒன்றும் இருந்தது. கேரளாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசின் அரசியல் ரீதியான அச்சுறுத்தலை எதிர்கொண்டபோது தனது கட்சியின் அழுத்தத்திற்கு அடிபணிந்த அவர் 1959இல் இ எம் எஸ் நம்பூதிரிபாட் தலைமையிலான அரசை கலைத்தார். இங்கும் கூட வர்க்க நலனே அவரது ஜனநாயக உணர்வுகளை மீறியதாக இருந்தது.

பாஜக- ஆர் எஸ் எஸ் ஆகியவற்றின் பிரதிநிதியாக விளங்கும் மத்திய அரசின் தற்போதைய ஆளும் கூட்டணி நேருவின் பாரம்பரியத்திற்கு முற்றிலும் மாறான ஒரு கருத்தாக்கத்தின் பிரதிநிதியாகவே இருக்கிறது. நேருவிற்கும் இந்தக் கூட்டணிக்குமான வேறுபாடு மிகப் பெரியது. மதசார்பற்ற அடித்தளத்தின்மீது ஒரு தேசியவாத உணர்வை கட்டியமைக்க இந்தியாவின் முதல் பிரதமர் தீவிரமாக முயற்சி செய்தாரெனில், தற்போதைய பிரதமர் தான் ஒரு இந்து தேசியவாதி என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்பவர். மக்களிடையே அறிவியல் பூர்வமான உணர்வை வளர்த்தெடுக்க நேரு தீவிரமாக பாடுபட்டு வந்தார் எனில், வேதகாலத்திலேயே அறிவியல் உருவாகி நன்கு வளர்ந்திருந்தது; மகாபாரத காலத்திலேயே மரபணு அறிவியல் இருந்தது; மாற்று அறுவை சிகிச்சை மூலம் உருவானவரே விநாயகர் எனப்படும் பிள்ளையார் என்பது போன்ற ஆர் எஸ் எஸ் அமைப்பின் புராணக் கதையை பரப்புபவராக நரேந்திர மோடி இருக்கிறார். இப்போது  மதசார்பற்ற மதிப்பீடுகள் குறுகிய, பிரிவினை நோக்கம் கொண்ட இந்துத்துவா தத்துவத்திற்கு விரோதமான சமூக, கலாச்சார கருத்தாக்கங்கள் அனைத்தின்மீதும் முழு அளவிலான தாக்குதல்தான்  நடந்து வருகிறது.

மதசார்பற்றதொரு அரசுக்கான நேருவின் தொலைநோக்கும் ஜனநாயக பூர்வமான வழிகளின் மூலம் அத்தகைய ஓர் அமைப்பை உருவாக்குவதற்கான அவரது முயற்சிகளும் என்றும் நிலைத்து நிற்கும் அவரது பாரம்பரியங்களாகத் திகழ்கின்றன. இவை அனைத்துமே இப்போது நேருவின் மிகப் பழைய எதிரிகளான இந்துத்துவ வாதிகளிடமிருந்து மோசமான தாக்குதலுக்கு  ஆளாகியுள்ளது. நேருவின் இந்தப் பாரம்பரியம்தான் நாம் பாதுகாத்து, வளர்த்தெடுக்க வேண்டிய ஒன்றாகும்.

தமிழில்: வீ. பா. கணேசன்                                                                  நன்றி:  ஃப்ரண்ட்லைன்

விடுதலை75: நவீன இந்தியாவின் அடிப்படைகளைக் காப்போம் !

  • பிரகாஷ் காரத்

(மார்க்சிஸ்ட் இதழின் சார்பில், இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டில் நடைபெறும் தொடர் இணைய வழி கருத்தரங்கங்களின் தொடக்க நிகழ்வாக ஆகஸ்ட் 15 அன்று காலை நடைபெற்ற நிகழ்வினை தொடங்கி வைத்து  தோழர் பிரகாஷ் காரத் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம்)

இந்திய விடுதலையின் 75வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம்.  74 ஆண்டுகளுக்கு முன்னர் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று இந்தியா தன் அரசியல் விடுதலையைப் பெற்றது. 200 ஆண்டுகள் காலனியாதிக்கத்தின் கீழ் சிக்கிக் கிடந்த இந்தியா ஒரு சுதந்திர நாடாக பரிணமித்தது. இது உலகளாவிய முக்கிய நிகழ்வு ஆகும். ஏனெனில், உலகின் இரண்டாவது மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டம், நவீன வரலாறு கண்ட மிகப் பெரிய வெகுமக்கள் இயக்கங்களில் ஒன்று. உலகத்தில் நிலவிய பழைய பாணியிலான காலனி ஆதிக்க முறை, 19 ஆம் நூற்றாண்டுடன் முடிவுக்கு வரத் தொடங்கியதை இந்திய விடுதலை உணர்த்துகிறது.

இந்தியா ஒரு நவீன தேசமாக உருவானது. நம்மைப் பொறுத்தவரை இந்திய தேசியமானது ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நாம் நடத்திய போராட்டத்தின் விளை பொருளே ஆகும். ஆங்கிலேயர்கள் இங்கே வருவதற்கு முன் இந்தியா ஒரு தேசமாக இருக்கவில்லை. சாம்ராஜ்ஜியங்களாக, பேரரசுகளாக, சிறு-குறு நில மன்னர்களின் ஆட்சிப் பகுதிகளாகவே அது இருந்தது. ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்தில்தான் இது ஒரு தேசமாக  உருவெடுத்தது என்பதை புரிந்து கொள்வது அவசியமாகும்.

இந்திய தேசியத்தின் உருவாக்கம்

இன்றைக்கு இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாஜகவும், அதன் தாய் அமைப்பாகிய ஆர்எஸ்எஸ் அமைப்பும் புராதன இந்து தேசம் அல்லது புராதன இந்திய தேசியம் என்பதாக தொடர்ந்து பேசிக் கொண்டுள்ளனர். இவ்வாறு கூறுவதின் மூலம் இந்தியாவை அவர்கள் இந்து தேசமாகக் குறிப்பிடுகிறார்கள்.  அவர்களைப் பொறுத்தவரை, இத்தகைய இந்து தேசமானது 3,000 ஆண்டுகளாக இருந்து வருகிறது.  ஆனால், வரலாற்று ரீதியாகப் பார்த்தால், அதற்கு முன்பிருந்த நிலப்பிரபுத்துவ அரசியல் நடைமுறையை தூக்கி எறிந்து புதிதாகத் தோன்றிய முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சிப் போக்கோடு இணைந்தே நவீன தேசம் என்ற கருத்தாக்கம் உருவானது. எனவேதான், ஐரோப்பாவில் – குறிப்பாக 18ஆம் நூற்றாண்டில் பல தேசிய இயக்கங்கள் உருவானதையும், முதலாளித்துவவாதிகள் தலைமையில் அந்த இயக்கங்கள் நிலப்பிரபுத்துவ அரசுகளை தூக்கி எறிந்து, இன்றுள்ள நவீன தேசங்களை நிர்மாணித்ததையும் நாம் பார்த்தோம். 

இந்தியாவிலும், ஏகாதிபத்தியத்தையும், காலனியாதிக்கத்தையும் எதிர்த்து நடந்த விடுதலைப் போராட்டம், சாதி, மதம், இனம், மொழி ஆகிய அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டு நடந்தது. அனைத்துப் பகுதி மக்களையும் ஒன்றிணைத்தது.  ஆக, இந்திய தேசிய அடையாளம் என்பது தேச விடுதலைப் போராட்ட கனலிலிருந்தே தோன்றியது.  நாம் அனைவரும் இந்தியர்கள்; நமக்கென்று ஒரு சுதந்திர நாடு இருக்க வேண்டும்; இந்த நாட்டின் தலைவிதியை நாமே தீர்மானிக்க வேண்டும் போன்ற உணர்வுகளை இதுவே தட்டியெழுப்பியது.  எனவே, நவீன இந்தியாவின் அடிப்படை கோட்பாடுகளைப் பற்றி பேசும் போது, அவை தேச விடுதலைப் போராட்டத்தின்போது எழுந்த மாண்புகள், லட்சியங்கள், குறிக்கோள்களோடு இரண்டற கலந்து பின்னிப் பிணைந்தவையே ஆகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அடிப்படை கோட்பாடுகளின் உருவாக்கம்

இந்தியாவை அல்லது நவீன இந்தியாவின் அடிப்படைக் கோட்பாடுகளை வடிவமைப்பதில், அந்த காலகட்டத்தில் மிகச் சிறியதொரு சக்தியாக இருந்தபோதிலும் கம்யூனிஸ்டுகள் மிக முக்கியமான பங்களிப்பை ஆற்றினார்கள்.  “முழு விடுதலை” என்ற முழக்கத்தை முதலில் முன்வைத்தவர்கள் கம்யூனிஸ்டுகளே அன்றி காங்கிரஸ் தலைமை அல்ல என்பதை நாம் மறந்து விடலாகாது.  1921ஆம் ஆண்டில் அகமதாபாத்தில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் அமர்வில், அப்போதிருந்த கம்யூனிஸ்ட் குழுக்களோடு நெருக்கமான தொடர்பில் இருந்த மௌலானா ஹஸ்ரத் மொஹானி அவர்கள்தான் முழுமையான விடுதலையைக் கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். 

அதன் பிறகும், தேசவிடுதலை என்பது வெறும் அரசியல் விடுதலை மட்டுமல்ல; அது பொருளாதார மற்றும் சமூக உள்ளடக்கத்தையும் அகத்தே கொண்டிருக்க வேண்டுமென்று கம்யூனிஸ்டுகள் வாதிட்டனர்.  இவ்வாறாக, 1929ஆம் ஆண்டில்தான்ஆண்டில்தான் “முழு விடுதலை” என்ற கருத்தாக்கம் காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

1931ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் அகில இந்திய அமர்வில், விடுதலை இந்தியா எப்படி அமைய வேண்டும் என்பதைக் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  ‘அடிப்படை உரிமைகள் மற்றும் தேசிய பொருளாதார திட்டம்’ என இத்தீர்மானம் அழைக்கப்பட்டது. அதில்தான் முதன் முறையாக நவீன இந்தியா குறித்த கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டது.  கருத்துச் சுதந்திரம், கூட்டம் கூடுவதற்கான உரிமை, பத்திரிகை சுதந்திரம் என்பன போன்ற குடிமக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து அதில்  பேசப்பட்டன.  இவற்றோடு, தொழிலாளர்களின், விவசாயிகளின் உரிமைகள், குத்தகை விவசாயிகள் செலுத்த வேண்டிய குத்தகைக் கட்டணத்தை குறைப்பது, தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச வேலை நேரம், பெண்களுக்கு சமஉரிமை, தொழிற்சங்கத்தை உருவாக்குவதற்கான உரிமை, விவசாயிகளுக்கான அமைப்புகளை ஏற்படுத்துவதற்கான உரிமை ஆகியன குறித்தும் பொருளாதார திட்டத்தில் பெருமளவில் பேசப்பட்டது.  இவ்வகையில், கராச்சி தீர்மானமானது அப்போது காங்கிரஸ் இயக்கத்திற்குள் இருந்த இடதுசாரிகளின் செல்வாக்கைப் பெற்றிருந்தது.  எனவேதான், பின்னாளில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. 

தேச விடுதலைக்கான இயக்கத்தின் இத்தகைய போக்கில்தான், மதச்சார்பற்ற, ஜனநாயகம் கொண்ட, பொருளாதார, சமூக நீதியை உள்ளடக்கிய நவீன இந்தியா குறித்தான கண்ணோட்டம் வடிவம் பெற்றது.

1950 ஆம் ஆண்டில் இந்தியா ஒரு குடியரசானது. தேச விடுதலை இயக்கத்தில் வடிவம் பெற்ற மதச்சார்பின்மை, ஜனநாயகம் போன்ற கருத்தாக்கங்கள், இந்திய அரசியல் சாசனத்தில் இடம் பெற்றிருந்தன.  கூட்டாட்சி தத்துவமும், வேற்றுமையில் ஒற்றுமையும் அதில்  அடங்கியிருந்தன.

அடிப்படைகள் மாறவில்லை

1947இல் விடுதலையின் போது, இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையும் சேர்ந்தே நடந்தது. இது பெருமளவிலான வன்முறைகளுக்கும், படுகொலைகளுக்கும் வழிகோலியது.  நாட்டின் மேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பயங்கர வன்முறைகள் நடைபெற்றன. பிரிவினையின் வலியை நினைவு கூறும் வகையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இத்தகைய அறிவிப்பின் பின்னால் உள்ள நோக்கம் சந்தேகத்திற்குரியதே. ஏனென்றால், ஒருபுறம் முஸ்லீம் லீக் கட்சியும், மறுபுறம் இந்து மத அடிப்படைவாதிகளுமாக, வகுப்புவாத சக்திகளே பிரிவினையை கூர்மைப்படுத்தியதுடன் ,   மதக்கலவரங்களையும், வன்முறைகளையும் தூண்டிவிட்டனர் என்பதை நாம் அறிவோம்.

ஆகஸ்ட் 14 என்பது பாகிஸ்தானின் விடுதலைநாள் ஆகும்.  எனவே, பிரதமர் மோடி மேற்கொண்டுள்ள அறிவிப்பின் நோக்கம், இந்நிகழ்வுகளை நினைவு படுத்துவதன் மூலம் இஸ்லாமியர்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டுவதும், இவ்வகையில் மதஉணர்வுகளின் அடிப்படையில் மக்களிடையே பிளவினை அதிகரிப்பதும் ஆகும்.

பிரிவினையின்போது பயங்கர வன்முறைகள் நிகழ்ந்தபோதும், பாகிஸ்தான் போன்று மத அடையாளத்தின் அடிப்படையிலான நாடாக அல்லாமல், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகவே அமைந்தது.  மதத்தின் அடிப்படையில் குடிமக்கள் யார் மீதும் பாகுபாடு காட்டப்படாது என்பதை இந்திய அரசியல் சாசனம் தெளிவாக வரையறுத்தது. இது மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டியதாகும். ஏனென்றால், இன்றைக்கு நாட்டின் அதிகாரத்தில் இருப்பவர்களால் இந்த அடிப்படைக் கோட்பாடு குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது, இந்தக் கோட்பாடு அரிக்கப்படுகிறது.

கைவிடப்பட்ட வழிகாட்டு நெறிகள்

விடுதலைப் போராட்டத்தில் முன்னுக்கு வந்த மாண்புகளையும், கண்ணோட்டங்களையும் பெருமளவில் உள்ளடக்கியதாக நமது அரசியல் சாசனம் அமைந்துள்ளது என்பதை  ஏற்கனவே குறிப்பிட்டேன்.  1931இல் நிறைவேற்றப்பட்ட கராச்சி தீர்மானமானது இந்திய அரசியல் சாசனத்திலும் எதிரொலிக்கிறது.  அரசியல் சாசனத்தில் வழிகாட்டும் நெறிமுறைகள் என்றொரு பகுதி இருக்கிறது.  இது கண்டிப்பாக நடைமுறைபடுத்தப்பட வேண்டிய பகுதியல்ல என்றபோதும், நாடு பயணிக்க வேண்டிய திசை வழியை இது காட்டுகிறது.  அதிலிருந்து சில பகுதிகளை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். 

முதலாவதாக, தேசிய வாழ்க்கையோடு இணைந்த அனைத்து நிறுவனங்களிலும் நீதி உத்திரவாதப்படுத்தப்பட வேண்டும்.  அதேபோன்று, சமூக, பொருளாதார, அரசியல் வாழ்க்கையிலே பாகுபாடு எதுவுமின்றி நீதியும், நேர்மையும், நியாயங்களும் இருக்க வேண்டும்.  இவற்றின் வாயிலாக மக்கள் நலனை ஊக்குவித்திட அரசை வலியுறுத்துகிறது.

இரண்டாவதாக, ஊதியத்தில் காணப்படும் சமமற்ற நிலைமையை குறைத்திட வலியுறுத்துகிறது. இதனை செயல்படுத்திட, சமூகத்திற்குச் சொந்தமான வளங்களின் மீதான கட்டுப்பாடு என்பது பொதுநலனுக்கு உட்பட்டதாகத்தான் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடுகிறது.

இந்தியாவின் பொருளாதார முறைமை செயல்படுத்தப்படுவதன் மூலம் பொதுநலனுக்கு எதிரான விதத்தில் ஒருபோதும் செல்வமும், உற்பத்தி சாதனங்களும் ஒரு சிலரின் கைகளில் குவிந்திடக் கூடாது.

ஆக, இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் அரசியல், பொருளாதார, சமூக நீதியின் அடிப்படையிலான நவீன இந்திய அரசின் கொள்கைகள் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளன.

இந்தியா தற்போது 75வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தருணத்தில், இந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பார்க்கும்போது, இந்திய அரசு நிர்வாக அமைப்பும்,  அடுத்தடுத்து ஆட்சியதிகாரத்திற்கு வந்த அரசுகளும் இந்த நெறிமுறைகளை அதன் மெய்யான சாராம்சத்தோடு செயல்படுத்த முனைந்ததாக கூற முடியுமா?  சொல்லப்போனால், இன்றைக்கு அரசால் செயல்படுத்தப்படும் பல கொள்கைகள் அரசியல் சாசனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டவற்றிற்கு நேர்எதிராகவே உள்ளன.  ஏனெனில், விடுதலைக்கு பின் உருவாக்கப்பட்ட அரசுகளின் அதிகாரம் ஆளும் வர்க்கங்களின் கைகளிலேயே இருந்தது.  அதாவது நவீன இந்தியாவில் முன்னெழுந்த வர்க்கமாகிய முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளில் இருந்தது.  புதிதாக உருவான வர்க்கம் எனும் போதிலும் அது ஓரளவிற்கு வலுவானதாகவே இருந்ததையும் நாம் கவனிக்க வேண்டும். அவர்கள் உண்மையில் என்ன செய்திருக்க வேண்டும்?  வழிகாட்டும் நெறிமுறைகளில் இடம் பெற்றிருந்த கண்ணோட்டங்களையும், லட்சியங்களை நிறைவேற்றுவதற்கான முயற்சியிலே ஈடுபட்டிருக்க வேண்டும். அதை கவனத்தில் கொள்ளவே இல்லை என்பதோடு மொத்தமாக கைவிட்டு விட்டார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.  இவர்கள் பழைய நிலவுடைமை, அரைநிலவுடைமை சக்திகளோடு சமரசம் செய்து கொண்டனர்.  அரசு அதிகாரத்தில் பங்காளியாக இணைத்துக் கொண்டார்கள்.  எனவேதான், இந்திய அரசின் வர்க்கத்தன்மையை குறிப்பிடும்போது  முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசு என்று குறிப்பிடுகிறோம். 

பழைய கண்ணோட்டங்களோடு சமரசம்

நிலப்பிரபுத்துவத்தோடு இவர்களின் சமரசம் நவீன இந்தியாவின் வடிவமைப்பில் பலப்பல விதங்களில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  இந்த சமரசத்தின் காரணமாகவே தீவிரமான நிலச்சீர்திருத்தம் நடைபெறவில்லை.  நிலத்தின் மீதான உரிமை ஒரு சிலர் கைகளில் குவிந்திருந்த நிலையை பெரிதாக மாற்ற இயலவில்லை.  நிலப்பிரபுத்துவ சமூக உறவுகளில் பெரிய அளவிற்கு முறிப்பை ஏற்படுத்த இயலவில்லை.  குறிப்பாக, சாதி ஒழிப்பிற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.  கராச்சி தீர்மானத்திலும், தேச விடுதலைப் போராட்டத்தின்போது முன்னெழுந்த மாண்புகள், லட்சியங்கள், அரசியல் சாசனத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள் முன்வைத்த விஷயங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டதற்கு இத்தகைய சமரசமே முக்கியமான காரணமாகும். 

இதற்கு உதாரணமாக கல்வியை நாம் குறிப்பிடலாம். இவர்கள் ஆட்சியதிகாரத்திற்கு வந்தவுடனேயே அனைவருக்கும் ஆரம்பநிலைக் கல்வியை உறுதி செய்யும் முயற்சியை தீவிரமாக முன்னெடுத்திருக்க வேண்டும்.  ஆனால், விடுதலையடைந்து 20-25 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட – அதாவது 70களின் துவக்கத்திலும் கூட இந்தியாவின் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வி கிடைக்கவில்லை. அந்த குழந்தைகளை எல்லாம் பள்ளிகளில் சேர்ப்பதற்கான முயற்சி பெரிய அளவில் ஆளும் வர்க்கங்களிடமிருந்து வரவில்லை என்கிறபோது, அதிகார வர்க்கமும் அது பற்றி பெரிய அளவில் முனைப்பு காட்டவில்லை.  நேரு உள்ளிட்டவர்களுக்கு இந்த பார்வை இல்லை என்றோ,  அல்லது இந்த விஷயம் அவர்களுக்குத் தெரியவில்லை என்பதால் இது நடக்கவில்லை என்றோ சொல்லிவிட முடியாது.  தெரிந்தும் ஏன் நடக்கவில்லை என்றால், சாதிய அமைப்பு முறை உடைக்கப்படாதது தான் முதன்மையான காரணமாக முன்னுக்கு வருகிறது.  கல்வி என்றால் அது எங்களுக்குத்தான், மற்றவர்களுக்கு இல்லை என்ற அடிப்படையில்தான் உயர்சாதிகளைச்  சார்ந்தவர்கள்  செயல்பட்டு வந்தனர். எனவே, அதிகார வர்க்கமும் இதில் முனைப்புக் காட்டவில்லை. இதன் காரணமாக, அனைவருக்கும் ஆரம்ப கல்வி என்பது தோல்வியை அடைந்தது.

முதலாளித்துவ பாதையின் சிக்கல்கள்

மேலும் ஆளும் வர்க்கங்கள், இந்தியாவிற்கு முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை தேர்வு செய்தார்கள். இது முதலாளித்துவத்தை மேலும் வளர்த்தெடுக்க உதவும். ஆனால் இந்தியாவிற்காக  ஏற்கனவே முன்வைத்துள்ள கோட்பாடுகளை பின்னுக்குத் தள்ளிடும்.  பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக முன்வைக்கப்பட்டுள்ள விடுதலைக்கான லட்சியங்களுக்கு நேர் எதிரானதாக, பிற்போக்கானதாக, முதலாளித்துவ பாதை இருக்கும் என்று  கம்யூனிஸ்டுகள் எச்சரித்தோம். இந்த முதலாளித்துவ வளர்ச்சிப் பாதை, செல்வ வளங்களை ஒரு சிலரின் கைகளிலே குவிந்திடச் செய்யும்; ஏகபோகங்களை உருவாக்கும்; மிகப் பெரிய தொழிலதிபர்கள் உருவாவார்கள் என்று நாம் சொன்ன  எல்லாம் பின்னாளில் நிகழ்ந்தன. 

அதுமட்டுமின்றி, முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்கள் வரை பொருளாதார தளத்திலே நிகழ்ந்த முன்னேற்றங்களும், அவற்றின் பலன்களும் ஒரு சிலரின் கைகளிலேயே குவிந்தன.  தீவிர நிலச்சீர்திருத்தம் நடைபெறவில்லை.  நிலஉறவுகளில் ஜனநாயக ரீதியிலான மாற்றங்கள் ஏற்படவில்லை. அதே போல முதலாளித்துவ பாதையை பின்பற்றினால் அதன் காரணமாக நெருக்கடிகள் உருவாகும் என்பதையும் நாம் சுட்டிக் காட்டினோம். இந்தப் பாதை அந்நிய மூலதனம், சர்வதேச நிதிமூலதனத்தை சார்ந்து செயல்படக் கூடிய பாதையாகும்.  எனவே, நிச்சயமாக இதில் நெருக்கடிகள் உருவாகும்.  உள்நாட்டு சந்தைகளை பலப்படுத்த வேண்டும்.  அதற்கு மக்கள் கைகளிலே வாங்கும் சக்தி வேண்டும்.  எனவே, தீவிர நிலச்சீர்திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தால்தான் வாங்கும் சக்தி உருவாகும். அது உள்நாட்டு சந்தைகளை வலுப்படுத்தும்.  எனவே அந்நிய மூலதனத்தை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று நாம் குறிப்பிட்டோம்.  ஆனால், அவர்கள் பின்பற்றிய வளர்ச்சிப் பாதை இவற்றுக்கெல்லாம் நேர் எதிராகவே இருந்த காரணத்தால் நாம் சுட்டிக் காட்டியவாறு நெருக்கடிகள் நிகழ்ந்தன என்பதைக் காண வேண்டும்.  சொல்லப்போனால், 1970களிலேயே இந்த நெருக்கடிகள் இந்தியாவில் உருவாயின. 

இந்தியாவில் இவர்கள் கடைப்பிடித்த முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில் அரசு ஒரு முக்கியமான பங்கை வகித்தது.  கனரகத் தொழில்கள், உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவை எல்லாம் பொதுத்துறையில் உருவாக்கப்பட்டன. முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்காக அரசு தலையிட்டு இந்த உதவிகளை எல்லாம் செய்தது.  ஆனால், நெருக்கடி உருவான பின்னணியில் இந்த போக்குகளைக் கூட கைவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. 

1991ஆம் ஆண்டு தொடங்கி நவீனதாராளவாத பாதைக்கு இந்தியா மாறியது. இந்த மாற்றத்திற்கும் உலக  அளவிலான நிகழ்ச்சிப் போக்குகளுக்கும் தொடர்பு உண்டு.  சோவியத் ஒன்றியம் சிதறுண்டது; உலகளாவிய நிதிமூலதனத்தின் ஆதிக்கம் ஏற்பட்டது; உலகமயச் சூழலுடனான நவீன தாராளவாத கொள்கைகள் உலக நாடுகளிலுள்ள பல அரசுகளால் பின்பற்றப்பட்ட நிலை ஆகிய காரணங்களால் இந்தியாவிற்கும் அந்த நிலைமை ஏற்பட்டது.  

ஏற்கனவே சொன்னபடி, முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்களால் வழிநடத்தப்பட்ட இந்திய அரசு, தனது ஜனநாயகக் கடமைகளை முழுமையாக செய்து முடிக்காத நிலைமையும், முதலாளித்துவ வளர்ச்சிப்பாதையை தேர்ந்தெடுத்ததால் வந்த நெருக்கடிகளும் நிலவுகிற சூழலில், நவீன தாராளமய கொள்கைகளும் கடைப்பிடிக்கப்படும் ஒரு புதிய கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

பெற்றதையும் இழப்பதா?:

இந்திய ஆளும் வர்க்கங்கள் தங்களது ஜனநாயக புரட்சியின் கடமைகளை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்தது மட்டுமல்ல; அந்த கடமைகளுக்கு நேர்எதிரான பாதையில் செல்கின்றன. விடுதலையால் பெற்ற கொஞ்சநஞ்ச பலன்களும், வளர்ச்சியும் மீண்டும் பறிக்கப்படும் நிலைக்குத்தான் இவர்கள் இட்டுச் செல்கிறார்கள்.  எனவேதான், மதச்சார்பின்மைக்கு, ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள், கூட்டாட்சி கோட்பாட்டை சீர்கெடுப்பது,  தேசியம் என்று பேசிக்கொண்டே நாட்டின் இறையாண்மையை காலில் போட்டு மிதிப்பது போன்றவை எல்லாம் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 7 ஆண்டுகளில் நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வகையில்  நவீன இந்தியாவின் அடிப்படை கோட்பாடுகள் மீது ஒரு தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது.

இந்திய விடுதலையின் 75வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்தச் சூழலில் நாட்டின் எதிர்காலம் குறித்த கேள்வி எழுகிறது.  எப்படி இருக்க வேண்டும் என நினைத்தார்கள் என்று பார்த்தோம். இடைக்காலத்தில் எப்படி இருந்தது என்பதையும் பார்த்தோம்.  எதிர்கால இந்தியா குறித்த ஊகங்களை கடந்த மூன்றாண்டுகளாகவே பிரதமர் மோடி சொல்லிக் கொண்டிருக்கிறார். 

2018ஆம் ஆண்டு பிரதமர் மோடி நிகழ்த்திய சுதந்திர தின உரையிலே புதிய இந்தியா என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார்.  புதிய இந்தியா முழுமையாக எப்போது வடிவம் பெறும் என்று சொன்னால் 2022இல் – அதாவது இந்திய விடுதலையின் 75 ஆண்டுகள் நிறைவு பெறும்போது அது நிகழ்ந்திடும் என்று அவர் சொன்னார்.  அவர் சொல்வதைப் பார்க்கும்போது, இந்தப் புதிய இந்தியாவின் பாதை ஒருபுறம் இந்துத்துவ மதவெறிப் பாதையாகவும், மறுபுறம் நவீன தாராளவாத கார்ப்பரேட் பாதையாகவும் இருக்கும் என்று தெரிகிறது.  இந்தக் கலவை நச்சுத்தன்மை கொண்டது.  மிக ஆபத்தானது.  இதுதான்  இந்திய விடுதலையின் பவள விழா தருணத்தில் மிகப் பெரிய அச்சுறுத்தலாகவும், ஆபத்தாகவும் இந்திய மக்களின் முன் வந்து நிற்கிறது.

மோடி ஆட்சி, ஒரு நச்சுக் கலவை

2019 மக்களவை தேர்தலில், மிகப் பெரிய பலத்தோடு பாஜக ஆட்சியமைத்தது. அந்த ஆண்டே ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, மாநிலத்தை சிதைத்தது. அரசியல் சாசனத்தின் பிரிவு 370ஐ ஒழித்துக் கட்டியது. முதன் முறையாக, இந்தியாவில் மாநிலங்களின் எண்ணிக்கை 29 என்பதிலிருந்து 28 ஆகக் குறைந்தது. இந்தச் செயல் புதிய இந்தியா பற்றிய ஒரு முன்னோட்டமாகும்.  இந்த ஒரே நடவடிக்கை நாட்டின் மதச்சார்பின்மை மீதான தாக்குதலாகவும், கூட்டாட்சி கோட்பாட்டின் மீதான தாக்குதலாகவும் இருந்தது. எந்தவொரு மாநிலமும் சுயேச்சையாக சில விஷயங்களில் முடிவு செய்வதை இந்த ஆட்சியும், அரசும் ஒருபோதும் ஏற்காது. மேலும், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஒரு மாநிலம் என்பதாலும், அதனை சிதைக்கும் நோக்கத்தோடு இதனை முன்னெடுத்தார்கள்.

இதற்கு அடுத்து, 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய பூமி பூஜை அரசு விழாவாக நடத்தப்பட்டது. அந்த நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது.  ஆனால், ஆகஸ்ட் 5ஆம் தேதிதான் இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது என்று ராமர் கோவில் அஸ்திவார நிகழ்வோடு இணைத்துப் பேசினார்.  அப்படியானால், புதிய இந்தியா ஒரு இந்து ராஷ்டிரமாக இருக்கும் என்பதற்கான அடையாளமாக இந்தக் கோயில் இருக்கும் என்பதை அவரது உரை சுட்டிக் காட்டியது. 

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.  சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக குடியுரிமைக்கான தகுதியாக மதம் என்பது நிறுவப்பட்டது.  இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விவரங்களுக்குள் போக விரும்பவில்லை. ஆனால், நவீன இந்தியாவில் குடியுரிமை பெறுவதற்கான தகுதிகள் என்னவாக இருக்க வேண்டும் என்று அரசியல் சாசனம் சுட்டிக் காட்டியதோ, அதற்கு மாறாக, மதம் என்பதை ஒரு தகுதியாகக் கொண்டு வருகிற வேலையை குடியுரிமை திருத்தச் சட்டம் செய்தது.  ஏற்கனவே இந்தியாவின் அரசியல் சாசனம் மத அடிப்படையிலோ, பாலின அடிப்படையிலோ, மொழி அடிப்படையிலோ பாகுபாடுகள் இருக்கக் கூடாது என்பதை அடிப்படைக் கோட்பாடாக முன்வைத்துள்ளது என்பது நமக்குத் தெரியும்.  எனவே, இப்போது கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது அரசியல் சாசனம் சுட்டிக் காட்டியிருக்கக் கூடிய நவீன இந்தியா என்ற கருத்தாக்கத்திற்கு அடித்தளமாக இருக்கக் கூடிய அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணானதாக, அதை சிதைக்கக் கூடியதாக இருக்கிறது.

அடுத்தடுத்து, பாஜக ஆட்சியதிகாரத்தில் இருக்கக் கூடிய உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், அசாம், ஹரியானா போன்ற மாநிலங்களில் கொண்டு வரப்படக் கூடிய சட்டங்கள் பெரும்பாலும் மதச்சார்பின்மைக்கு எதிரானவையாக இருக்கின்றன.  இஸ்லாமிய சமூகத்தை குறி வைத்து தாக்குபவையாக இருக்கின்றன. லவ் ஜிகாத், பசுவதை தடுப்பு ஆகிய பெயர்களில் இருந்தாலும், அதன் உள்ளடக்கம் இஸ்லாமிய சமூகத்தை குறிவைப்பதாகவே இருக்கிறது. இந்த அரசாங்கத்திற்கு வழிகாட்டுகிற ஆர்எஸ்எஸ் தலைமையில் செயல்படும் இந்துத்துவா சக்திகள் நாட்டின் பல்வேறு நிறுவனங்களில்   ஊடுருவியுள்ளார்கள்.  ஏனெனில், அரசு என்று சொன்னால் அது நாடாளுமன்றம் மட்டுமின்றி, நீதித்துறையும்  அதிகார வர்க்கமும், ராணுவம் உள்ளிட்ட ஆயுதப்பிரிவுகள் அனைத்தும் அடங்கியதாகும்.  அவர்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு அரசாங்கத்தை அமைத்துவிட்டார்கள் என்பதால், அந்த அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி இதர துறைகளில் இருக்கக் கூடிய முக்கியமான நிறுவனங்களில் ஊடுருவி,  அதனுடைய தலைமையை கைப்பற்றுகிற வேலையையும் செய்கிறார்கள்.

அதிகாரத்தில் ஊடுருவல்

இத்தாலிய மார்க்சீய சிந்தனையாளர் கிராம்ஷி அவர்கள் இந்த போக்கைப் பற்றி சொல்லும்போது இந்த ஆபத்தான சக்திகள் நடத்துகிற நெடும்பயணம் என்கிறார்.  இந்த நெடும்பயணம் என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களை ஊடுருவி, அவற்றின் தலைமையை கைப்பற்றுகிற பாதை என கிராம்ஷி அவர்கள் குறிப்பிட்டதுதான் இன்றைக்கு இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  இந்த நிறுவனங்களை எல்லாம் அவர்கள் சீரழிக்கவில்லை; சிதைக்கவில்லை.  மாறாக, நிறுவனங்களை அப்படியே வைத்துக் கொண்டு, அவற்றினுள் ஊடுருவி, உள்ளிருந்து அதன் தலைமையை, அதிகாரத்தைக் கைப்பற்றுகிறார்கள் என்பது மிக மிக ஆபத்தான விஷயமாகும்.  எனவே, நவீன இந்தியா என்கிற கருத்தாக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுளையும், தன்மையையும் இவர்கள் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

மறுபுறம் நவீன தாராளவாதக் கொள்கைகளை அவர்கள் மிகத் தீவிரமாகப் பின்பற்றுகிறார்கள். 2018 துவங்கி 2021 வரையிலான இதே மூன்றாண்டு காலத்தில் கார்ப்பரேட் ஆதரவு நவீன தாராளவாத கொள்கைகளும் மிகத் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.  பொதுத்துறை நிறுவனங்கள் அநேகமாக முற்றிலுமாக ஒழித்துக் கட்டப்பட்டு வருகின்றன.  கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று இருந்த காலமாகும். இக்காலகட்டத்தில் நிவாரண திட்டங்கள் என்ற பெயரில் சில திட்டங்களை இவர்கள் அறிவித்துக் கொண்டிருந்தார்கள். அதிலே ஒரு கொள்கையாக இவர்கள் அறிவித்தது என்னவென்றால், கேந்திரமான துறைகளில் மட்டும்தான் பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படும்.  மற்றவை எல்லாம் தனியார்மயமாக்கப்படும் என்றனர்.  கேந்திரமான துறைகளில் கூட அதிகபட்சமான 4 பொதுத்துறை நிறுவனங்கள்தான் இருக்கும்.  மற்றவை எல்லாம் தனியாருக்கு விற்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  எண்ணெய் நிறுவனங்கள் உட்பட அனைத்திலும் இதுவே இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  பிரதானமாக இருக்கக் கூடிய பொதுத்துறை நிறுவனங்கள் ஒன்று இணைக்கப்படுகின்றன; அல்லது தனியாருக்கு விற்கப்படுகின்றன என்பதுதான் இந்த மூன்றாண்டு கால நடவடிக்கையாக இருந்து வருகிறது.

இறையாண்மைக்கு ஆபத்து

பிரதமர் பேசும்போதெல்லாம் சுதந்திர இந்தியா என்பது சுயசார்புள்ள இந்தியாவாக இருக்க வேண்டும் என்கிறார்.  இவ்வாறு சொல்லிக் கொண்டே, இந்தியாவிற்கு ஏற்கனவே கொஞ்சநஞ்சம் இருக்கிற சுயசார்பையும் தங்கள் நடவடிக்கைகளால் தகர்க்கிறார்கள்.  சுயசார்பு தகர்க்கப்படுகிறது என்றால் என்ன பொருள்?  பொருளாதார இறையாண்மை விட்டுக் கொடுக்கப்படுகிறது என்பதேயாகும்.  அதனுடைய ஒரு மிக முக்கியமான உதாரணமாக, பாதுகாப்புத் துறையிலே ஆயுதத் தளவாட உற்பத்தியில் 100% அந்நிய நிறுவனங்கள் உள்ளே வரலாம் என ஒரு கொள்கையை இவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். அமெரிக்க நிறுவனங்கள் பாதுகாப்புத் துறைக்கான டேங்குகள், ஆயுதங்கள் இவற்றையெல்லாம் உற்பத்தி செய்யலாம். இவற்றின் மீதான முழுக்கட்டுப்பாடு பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் இருக்கும்.  எனவே, தேசத்தின் பாதுகாப்பு தொடர்பான தளவாட உற்பத்தி தொடர்பான மொத்தக் கட்டுப்பாடும் பன்னாட்டு நிறுவனங்கள் கைகளுக்குப் போய்விட்டது என்று சொன்னால் இந்திய தேசத்தின் இறையாண்மையை எங்கே போய் தேட முடியும்?  இறையாண்மை எப்படி இருக்கும்?  ஆனால், இதைப்பற்றி எல்லாம் இந்திய ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை.  ஏனென்று சொன்னால், தேச விடுதலை, தேசத்தின் இறையாண்மை என்பவற்றிற்கெல்லாம் இவர்கள் பெரிய முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது.  விடுதலைக்காக நடந்த போராட்டத்தில் இவர்களுக்கு எந்தவொரு பங்குபாத்திரமும் கிடையாது. இவர்களுக்கு வேண்டியதெல்லாம் இந்து ராஜ்ஜியம் என்பதேயாகும்.  அதற்காக இவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். 

இந்த கார்ப்பரேட் ஆதரவு பாதையிலே அமெரிக்க ஏகாதிபத்தியம் இவர்களுக்கு உதவுகிறது என்றால் அவர்களோடு கை கோர்க்கவும் இவர்கள் தயங்க மாட்டார்கள்.  எனவே, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது கொஞ்சம் கூட இல்லாத ஒரு பகுதியாகத்தான் இவர்கள் இருக்கிறார்கள் என்பதைத்தான் தேச விடுதலைப் போராட்ட காலம் துவங்கி இன்று வரை நாம் பார்த்துக் கொண்டு வருகிறாம்.    எனவே, மோடி முன்வைக்கிற ஆத்மநிர்பர் – அதாவது சுயசார்பு- என்பது வெறும் வாய் வார்த்தையாகவே உள்ளது.

அருங்காட்சியகத்தில் ஜனநாயகம்

அதேபோலத்தான் நாடாளுமன்ற ஜனநாயகமும் இருக்கிறது.  இப்போது புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கான கட்டுமானப் பணிகள் தில்லியில் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  இதைக் கட்டுகிற பொறுப்பு டாடா நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.  இன்னும் 2 ஆண்டுகளில், அதாவது 2023ஆம் ஆண்டிற்குள் இந்த கட்டுமானப் பணியை முடித்துவிடுவோம் என டாடா நிறுவனம் சொல்லி வருகிறது.  அரசு சார்பில் என்ன சொல்லப்படுகிறது என்றால், இந்த புதிய வளாகத்தில்தான் நாடாளுமன்றம் இயங்கும்.  பழைய நாடாளுமன்ற கட்டிடம் என்பது ஜனநாயகத்தின் அடையாளமாக பொருட்காட்சியில் வைக்கப்படும் என்று அவர்கள் சொல்கிறார்கள்.  இன்றைக்கு நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது பொருட்காட்சியில் வைக்கப்படுகிற நிலைமையில்தான் இருக்கிறது.  இந்த ஒரு விஷயத்தை அவர்கள் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். 

நாடாளுமன்றத்தைப் பற்றியோ அல்லது அது சார்ந்த நிறுவனங்களைப் பற்றியோ இவர்களுக்கு எந்த உணர்வும் இல்லை; மரியாதையும் இல்லை.  எனவே, நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது பொருட்காட்சியில் வைக்கத் தகுந்த ஒன்றுதான் என்ற அடிப்படையில்தான் இவர்களது நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.  நாடாளுமன்ற ஜனநாயகத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஒரு புதிய வகையான ஜனநாயகத்தை நிறுவ இவர்கள் முயல்கிறார்கள்.  இந்த புதிய வகையான ஜனநாயகம் எப்படி இருக்கும் என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது.  நாடாளுமன்றத்தின் கடந்த மழைக்கால கூட்டத் தொடரின்போது பல முக்கியமான மசோதாக்கள் எந்தவிதமான விவாதத்திற்கும் உட்படுத்தப்படாமல் நிறைவேற்றப்பட்டன என்பதிலிருந்தே அதனை புரிந்து கொள்ள முடியும்.  குறிப்பாக, பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கான மசோதா குறித்து விவாதிக்க அனுமதிக்காததோடு மட்டுமின்றி, அதை நிலைக்குழுவிற்கு அனுப்பலாம் என்ற வாதத்தையும் கூட அரசு ஏற்கவில்லை.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, பாஜகவோடு கூட்டணியில் உள்ள சில கட்சிகள் உட்பட இந்த மசோதாவிற்கு எதிரான நிலையைத்தான் எடுத்திருந்தார்கள். ஒரு வேளை  மாநிலங்களவையில் இம்மசோதா மீதான வாக்கெடுப்பு அனுமதிக்கப்பட்டிருந்தால், நிச்சயமாக அவர்களால் அதனை நிறைவேற்றியிருக்க முடியாது.  எனவே, இம்மசோதா மீது விவாதத்திற்கோ, வாக்கெடுப்பிற்கோ இடம் கொடுக்காது அவசர அவசரமாக நிறைவேற்றினார்கள். இப்படிப்பட்ட நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது முழுமையாகக் குழிதோண்டி புதைக்கிற இடத்தில் தான் இவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்.

கூட்டாட்சிக்கு கேடு

அதுபோலத்தான், கூட்டாட்சி கோட்பாடுகளும், மாநில உரிமைகளும், நிதி தொடர்பான மாநிலங்களுக்கான பங்கீடும் மோசமாக அரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  மத்திய அரசு எதை வேண்டுமானாலும் செய்யலாம்.  உங்களுக்கு இந்த நிதியில், வரி வருவாயில் பங்கீடு வேண்டுமென்றால், நீங்கள் அதன் நிபந்தனைகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் கூற முடியும்.  ஏற்கனவே மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய ஜிஎஸ்டிக்கான இழப்பீடு மிகப் பெரிய நிலுவையில் உள்ளது. எனவே, நிதி விஷயத்தில் மாநிலங்களை அவர்கள் பட்டினி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது முக்கியமான விஷயமாகும்.

அதே போன்று, அரசியல் தளத்திலும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்றால் ஆளுநர்களையும், துணைநிலை ஆளுநர்களையும்  கொண்டு கவிழ்ப்பதற்கான முயற்சி செய்வது, இதர கட்சிகளிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பாஜக தலைமையிலான ஒரு மாநில அரசாங்கத்தை உருவாக்க முயற்சிப்பது என்ற நடவடிக்கைகளால் கூட்டாட்சி கோட்பாடு முற்றிலும் தகர்க்கப்பட்ட நிலையில் நாம் உள்ளோம். 

இதுவரை மாநில உரிமைகள் பலவற்றிலும் ஒன்றிய அரசு தலையீடு செய்தது என்பதையும், மாநில அதிகாரங்களை எல்லாம் ஒன்றிய அரசு தன்வசப்படுத்திக் கொண்டது என்பதையும் நாம் கண்டோம்.  சமீபகாலத்தில் சில புதிய பகுதிகளிலும் அவர்களது இத்தகைய ஆக்கிரமிப்பு நடந்து கொண்டுள்ளது என்பதை பார்க்க முடிகிறது.  புதிய கல்விக் கொள்கையை, வேளாண் சட்டங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.  அதேபோன்று கூட்டுறவுத் துறை என்பது மாநில அதிகார வரம்பிற்குள் உள்ள ஒன்றாகும்.  ஆனால், இதற்கு மத்தியில் ஒரு அமைச்சகத்தை ஏற்படுத்தி அமித் ஷாவை அதற்கு அமைச்சராக நியமித்திருக்கிறார்கள்.

கொள்கை மாற்று தேவை

2019 நாடாளுமன்ற தேர்தல்களுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் ஒப்பீட்டளவில் பலவீனமாக இருக்கின்றன. மேலும், ஒரு சில மாநிலக் கட்சிகள், பாஜகவினர் செய்யும் அக்கிரமங்களுக்கு எதிராக வாய் திறக்க மறுக்கின்றனர். எனவே, பாஜக எதை வேண்டுமானாலும் செய்துவிட்டு அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்ற நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.  எனவே, ஒட்டுமொத்தமாக நவீன சுதந்திர இந்தியாவின் அடிப்படைக் கோட்பாடுகள் முற்றுகையிடப்பட்ட சூழலில்தான் நாம் இதனை பேசிக்கொண்டுள்ளோம்.

எனவே நமது சுயேச்சையான மாற்றுக் கண்ணோட்டங்கள் அல்லது நவீன இந்தியா குறித்த மாற்றுத் திட்டங்களின் மூலமே இவற்றை எதிர்கொள்ள வேண்டும்.  இந்தியா குறித்த கடந்த கால முதலாளித்துவ தாராளவாத கண்ணோட்டத்தைப் பற்றி பேசுவது மட்டும் போதாது.  ஏனெனில் அக்கண்ணோட்டத்தின் பெரும்பகுதி கடந்த காலத்தில் அரிக்கப்பட்டு விட்டது. அது இந்துத்துவா சக்திகளால் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.  எனவே, இந்திய மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிற ஒரு புதிய சமூக கருத்தாக்கத்தை நாம் உருவாக்க வேண்டும்.  மதச்சார்பற்ற, ஜனநாயக, கூட்டாட்சி ஆகியவையும் தேச இறையாண்மை பாதுகாப்பும் அந்த மாற்றுக் கொள்கைகளின் தூண்களாக அமையும்.

இந்துத்துவா கொள்கையை, வகுப்புவாதத்தை, நவீன தாராளவாத கொள்கைகளை தெளிவாக எதிர்கொள்கிற கொள்கையாக அது இருக்க வேண்டும். நவீன தாராளவாதமும், இந்துத்துவாவும் கலந்த அபாயகரமான கலவை நீடிக்கக் கூடாது.  

இடது ஜனநாயக மாற்று

மோடி தலைமையிலான இந்த அரசின் இத்தகைய கொள்கைகளால் அதிகம் பயனடைந்தவர்கள் யார்? என்பதை இந்த நோய்த்தொற்று காலத்தில் கூட பார்க்க முடிந்தது. 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் 102 பில்லியனர்கள் இருந்தனர்.  2021ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது.  பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்தக் காலத்தில் பணக்காரர்கள் மேலும் பணம் படைத்தவர்களாக மாறியிருக்கிறார்கள் என்பதிலிருந்து இக்கொள்கைகளால் பலனடைந்தவர்கள் யார் என்பது தெளிவாகிறது. மறுபக்கம், வேலையின்மை உருவாகியுள்ளது; வறுமை, பட்டினி ஆகியவை அதிகரித்துள்ளன.

இடது ஜனநாயக முன்னணியின் மாற்றுக் கொள்கைகள் என நாம் குறிப்பிடுகிற சமூக, பொருளாதார, அரசியல் மாற்றுக் கொள்கைகளை முன்வைக்காமல் இந்த நிலைமைகளை மாற்ற முடியாது. அந்த கொள்கைகளைக் கொண்டு அனைத்துப் பகுதி உழைப்பாளி மக்கள், மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்திட வேண்டும்.

போராட்டங்களில் எழும் நம்பிக்கை

இந்துத்துவா.- நவீன தாராளவாத கொள்கைகளுக்கு எதிர்ப்பே இல்லாத நிலைமை இல்லை. குடியுரிமை திருத்த சட்டத்தை இவர்கள் கொண்டு வந்தபோது, நாடு முழுவதிலும் கண்டன இயக்கங்கள் எழுந்ததை பார்த்தோம்.  இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது, இதர மதங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்போராட்டங்களில் திரண்டனர்.  நோய்த்தொற்று காரணமாக இப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க இயலவில்லை என்றாலும், அது ஒரு மிகப் பெரிய வெகுஜன இயக்கமாக அமைந்தது. 

அதே போலவே விவசாயிகளின் இயக்கமும் வெடித்துள்ளது.  ஒன்பதாவது மாதத்தை அது எட்டியுள்ளது. தில்லியின் எல்லையில் நான்கு முனைகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்னமும் முகாமிட்டு அப்போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.  பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களின் அரசியலில் இந்த விவசாயிகள் போராட்டத்தின் தாக்கம் இருக்கும்.  ஏனெனில், பாஜக அரசு ஆட்சியில் நீடித்திருக்கும் வரை விவசாயிகளுக்கு எதிரான இத்தகைய கொள்கைகள் இருக்கும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். எனவே, பாஜக அரசுகளை அகற்றுங்கள் என்ற முழக்கத்தை அவர்கள் முன்வைத்துள்ளனர். 

தனியார்மயமாக்கல், புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் போன்றவற்றிற்கு எதிராக எண்ணற்ற போராட்ட இயக்கங்கள் நடைபெற்று வருவதையும் காண்கிறோம்.  விசாகப்பட்டின உருக்காலை தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்து மிகப் பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது. இது உழைக்கும் வர்க்கத்தின் போராட்டமாக மட்டுமின்றி, அனைத்துப் பகுதி மக்களையும், பாஜக தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்த மக்களின் போராட்டமாக வடிவெடுத்துள்ளது. இத்தகைய போராட்ட இயக்கங்கள் கட்டப்பட்டு, பரவலாக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.  நாம் முன்வைக்கும்  இடது ஜனநாயக மாற்றுத் திட்டம், மக்களை ஒருங்கிணைக்கும் புள்ளியாக மாற வேண்டும்.

எதிர்ப்புரட்சி என்ற நிலையிலிருந்து செயல்படும் ஆளும் வர்க்கத்திற்கும், அதனுடைய கொள்கைகளுக்கும் எதிராக ஒரு வலுவான போராட்டத்தை நிச்சயமாக நம்மால் நடத்த முடியும்.  அதேபோன்று, அரசியல், சமூக, பொருளாதார தளத்தில் மக்களுக்கான நீதியை வழங்கக் கூடிய ஒரு திட்டத்தை முன்னெடுக்க முடியும்.  இதன் மூலம் விடுதலைப் போராட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மாண்புகளையும், அரசியல் சாசனத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளில் அடங்கியுள்ள கூறுகளையும்  நம்மால் முன்னெடுக்க முடியும்.

எனவே, இந்திய விடுதலை, 75வது ஆண்டை எட்டியுள்ள இந்தத் தருணத்தில் அனைத்து இடதுசாரி, ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து ஒரு உறுதிமொழியை எடுப்போம்.

மோடியும் அவரது அரசும் முன்வைக்கக் கூடிய கொள்கைகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் எதிராக மிகப் பெரிய எதிர்ப்பியக்கத்தைக் கட்டமைப்பது; அவர்களுடைய நடவடிக்கைகளை  திரும்பப் பெறச் செய்திடும் வகையில் இயக்கங்களை முன்னெடுப்பது; இந்த நாசகரமான ஆட்சியை அகற்றுவதுடன், அதன் இடத்தில் புதிய சக்திகளை,  நவீன இந்தியாவின் அடிப்படைக் கோட்பாடுகளை முன்னெடுக்கக் கூடிய சக்திகளை, அமர்த்திடுவோம் என்று உறுதியேற்போம்.

இவ்வகையில் நமது எதிர்கால நடவடிக்கைகள் அமைவது அவசியமாகும்.

தமிழில்: கிரிஜா

பிப்ரவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் … (இடது ஜனநாயக அணி சிறப்பிதழ்)

மார்க்சிஸ்ட் கட்சியின் 22 வது மாநில மாநாட்டை ஒட்டி, இவ்விதழ் ‘இடது ஜனநாயக முன்னணி’ சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. மக்கள் ஜனநாயக புரட்சியை நோக்கிய பயணத்தில், நடைமுறை உத்தியாக ‘இடது ஜனநாயக அணி’ என்ற முழக்கத்தை மார்க்சிஸ்ட் கட்சி முன்வைத்தது.

மார்க்சிய சமூக விஞ்ஞானத்தின் வழியில் நடைபோடும் மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த முழக்கம், தேர்தல் அணிச் சேர்க்கையாகப் புரிந்துகொள்ளப்படும் குறுகிய முழக்கமல்ல. பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் அதிகாரம், சுரண்டலுக்கு முடிவுகட்டிய சமூகம் என்ற இலக்கை சாதிப்பதற்கான வர்க்கச் சேர்க்கையை ஏற்படுத்துதலுக்கான முழக்கம்.

தோழர் பிரகாஷ் காரத், இடது ஜனநாயக அணியைக் குறித்த சிறப்புக் கட்டுரையை தமிழ் மார்க்சிஸ்ட் வாசகர்களுக்கு வழங்கியிருக்கிறார். அகில இந்திய அளவில் அதன் முக்கியத்துவத்தை விளக்கியிருப்பதோடு, தமிழகத்திலும் இடதுசாரிகள் முன்னெடுக்கவேண்டிய கடமைகளை அவர் நினைவூட்டுகிறார்.

தமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளுடன் சேர்த்து, இடது ஜனநாயக அணி கருத்தாக்கங்களை விளக்கியுள்ளார் தோழர் ஜி.ராமகிருஷ்ணன்.
இடது ஜனநாயக அணிக்கான வர்க்கங்களைத் திரட்டுவ து குறித்தான கட்டுரையை தோழர் என்.குணசேகரன் எழுதியிருக்கிறார். கருத்து, செயல் என இரண்டு தளங்களிலும் நாம் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளைக் குறிப்பிடும் அக்கட்டுரை, உள்ளூர் மட்டத்தில் ஒரு சமூக நிலைமையை கவனித்து அதனை மாற்றியமைக்க எப்படியான தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வழிகாட்டுகிறது.
இடது ஜனநாயக அணியில் அமையப்பெறும் வர்க்கங்களை கவனிப்பதைப் போலவே, ஒடுக்கப்பட்ட சமூக அடையாளங்களைத் திரட்டுவது எத்தனை முக்கியம், அதில் ஏன் கவனம் செலுத்தவேண்டும் என்பதை தோழர் உ.வாசுகி எழுதியிருக்கிறார்.

இந்தியாவில் நாம் முன்னெடுக்கவுள்ள எந்தவொரு உத்தியிலும் வேளாண் சமூகத்தின் மீது தனித்த கவனம் செலுத்தப்பட வேண்டும். நவின தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்திற்குப் பின் இந்திய சமூகங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கட்சி கூர்ந்து கவனித்தே வருகிறது. மாறிவரும் சூழ்நிலைமைகளில் நாம் எவ்வாறு செயல்படவேண்டும் என்று தோழர் விஜூ கிருஷ்ணன் விளக்கியிருக்கிறார்.
இடது ஜனநாயக அணியின் மாற்று பொருளாதாரப் பார்வையை தெளிவாக்கிற வகையில் ஆத்ரேயா கட்டுரை அமைந்துள்ளது.

மார்க்சிய இயக்கத்திற்கு, உத்திகளை வகுப்பதன் தேவையையும், திட்டவட்டமான ஆய்வு எப்படி திட்டவட்டமான மாற்றங்களுக்கு அடிப்படையாக அமையும் என்பதையும் ஜி.செல்வா எழுதியுள்ள ஏப்ரல் கருத்தாய்வு குறித்ததான கட்டுரை நமக்கு விளக்குகிறது.

கடைசி நேரத்தில் என்றாலும், கவனமுடனும் அக்கறையுடனும் தோழர் ஆர்.எஸ்.செண்பகம், சமூக நேசன் எழில் ராஜூ ஆகியோர் மொழியாக்க பணிகளை மேற்கொண்டுள்ளனர். அட்டை வடிவமைத்துள்ளார் ஆனந்த் காஸ்ட்ரோ. அவர்களுக்கு பாராட்டுக்கள்.

ஜனவரி 28 ஆம் தேதி முதல் மார்க்சிஸ்ட் செயலி அப்டேட் செய்யப்பட்டு ஒலி இதழாக வெளிவருகிறது. சந்தா சேர்ப்பும், வாசகர் வட்டங்களும் துணையாக இல்லாமல் புதிய முயற்சிகளைத் தொடர்வது சாத்தியமில்லை. மார்க்சிஸ்ட் வாசகர் வட்ட தோழர்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறோம்.

  • ஆசிரியர் குழு

தீவிரமாகும் கிராமப்புற முரண்பாடுகள்

 

டாக்டர். விஜூ கிருஷ்ணன்
தேசிய இணை செயலாளர், அகில இந்திய விவசாயிகள் சங்கம்

இந்திய வேளாண்மை அமைப்பின் திட்டவட்டமானதொரு பகுப்பாய்வின் மையப்புள்ளி நமக்கு உணர்த்தும் உண்மை என்னவென்றால், நம்  கிராமப்புறத்தில் அதிகரித்து வரும் முதலாளித்துவ அமைப்பின் வளர்ச்சிப் போக்கேயாகும். இது பிராந்தியங்களுக்கேற்ப வேறுபடும் தன்மையோடும் சமநிலையற்றதொரு முதலாளித்துவ வளர்ச்சிப்போக்குடனும் காலப்போக்கில் அதிகரித்து  வந்துள்ளது. நிலப்பிரபுத்துவச் சுவடுகள்,  பழமைவாத  சமூக உருவாக்கம் ஆகியவையே சுரண்டலுக்கும் வழிவகுக்கின்றன.  நாட்டின் பெரும்பகுதியில் முழுமை பெறாத நிலச்சீர்திருத்தம் மேற்குறிப்பிட்ட நிலப்பிரபுத்துவச் சுவடுகள், நியாயத்திற்கு முரணான நிலவுடைமைச் சமூகம் ஆகியவை தொடர்வதற்கும் அதிமுக்கியமான காரணங்களில் ஒன்றாக அமைகிறது.

நவீன தாராளமய ஆட்சி தாக்கம்:
கால் நூற்றாண்டுகால நவீன தாராளமய பொருளாதார கொள்கைகள் நாட்டை கடுமையான விவசாய நெருக்கடிக்கு இட்டுச்சென்றதோடு  முரண்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது. ஏழை – பணக்காரச் சக்திகளுக்கு இடையிலான இடைவெளி நீண்டுள்ளதோடு சமத்துவமின்மை அதிகரித்தே வருகிறது. இத்தகைய சுரண்டல் அமைப்பின் பலன் என்பது மக்கள் மீதான கடும் பொருளாதாரச் சுமைகளை திணித்து, வருமானத்தை ஒடுக்கி வேலைவாய்ப்புகளை சுருக்கியதைத் தவிர வேறொன்றும் இல்லை. மேலும் இதுவே மக்களின் பஞ்சம், பட்டினி, ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கும் முழுமுதற்காரணமாகும்.

நிலக்குவியலும் விவசாய மற்றும் விவசாயம் சாராத இதர வருமானமும் இதன் மூலம் சொத்துகளும் பெருக்கமடைகிறன. முதலாளித்துவ சக்திகளின் வளர்ச்சி முடுக்கி விடப்படுவதாலும், விரிவடைவதாலும் விவசாயிகளின் வறுமை அதிகரித்து நிலங்கள் பறிக்கப்பட்டு, அவர்கள்  பாட்டாளி வர்க்கமாக உருமாறியுள்ளனர். பரந்துபட்ட புதிய பகுதி ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள் விவசாயம் சார்ந்தோ அல்லது சாராத அத்துக்கூலி தொழிலாளிகளாக மாற்றப்பட்டுள்ளனர். இவர்களே பெரும்பகுதி கிராமப்புற தொழிலாளி வர்க்கத்தை சார்ந்தவர்கள். கந்துவட்டிக்கடன் என்னும் சுருக்கு கயிற்றால் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் நிலம் பிடுங்கப்பட்டு, வறுமைக்குள்ளாகி இன்று சிறு, குறு நிலத்தை சொந்தமாக வைத்துள்ள விவசாயி, நாளை நிலமற்ற குத்தகை விவசாயியாகவோ விவசாயக்கூலி தொழிலாளியாகவோ மாறி, விரைவில்  பாதுகாப்பற்ற கிராமப்புற முறைசாராத் தொழிலாளியாகவோ அல்லது நகர்ப்புறத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளியாகவோ தள்ளப்படுவார். இக்காரணிதான் நமது வர்க்க வெகுஜன அமைப்புகளின் தேவையான, வெகுவாக ஒருங்கிணைக்கப்பட்ட, போராட்ட நடவடிக்கைக்கான சாத்தியக்கூறுகளை நமக்கு உணர்த்துகிறது.

பணக்காரச் சக்திகளின் ஆதிக்கம்
ஊரக பணக்கார சக்திகளுக்கிடையேயான  கூட்டு-உறவுநிலை ஒருபுறமும் நிலமற்ற அத்துக்கூலித்தொழிலாளர்கள், கைவினைஞர்கள் உள்ளிட்ட வெகுஜன ஏழை விவசாயிகள் மறு புறமும் இருப்பது நாட்டின் பெரும்பகுதிகளில் நிலவும் கூர்மையான பிரிவினை வெளிப்படையாகவே தெரிவதை நாம் பார்க்கிறோம். குறிப்பாக நிலப்பிரபுக்கள், பெரிய முதலாளித்துவ விவசாயிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பெருவணிகர்கள் அடங்கிய ஊரக பணக்காரர்களுக்கிடையான நெருக்கமான கூட்டு-உறவுநிலைதான் கிராமப்புறங்களில் ஆதிக்க சக்தியாக உருவெடுத்துள்ளது. இச்சக்திகளின் அடிப்படை அதிகாரம் என்னவெனில் நிலங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதே ஆகும்.

இவர்களே கந்துவட்டிக்கு கடன் கொடுப்பது, தானிய அரவை செய்வது, பால்பண்ணை, வணிகம் செய்வது , உணவு தானியங்கள் மற்றும்  விதை, உரம், செயற்கை மற்றும் இயற்கை உரம் உள்ளிட்ட  வேளாண் இடுபொருள்களில்  ஊகவணிகம் செய்வது, உற்பத்தித்துறை, வீட்டுமனைப் பிரிவு, கட்டுமானம், சினிமா தியேட்டர், பெட்ரோல் மற்றும் டீசல் நிலையங்கள், போக்குவரத்து, விவசாய இயந்திரங்களைக் குத்தகைக்குவிடுவது மற்றும் பெரும் பணம் கொழிக்கும் கல்வி நிலையங்கள் உள்ளிட்ட கிராமப்புறங்களில் பெரிதும் வருமானம் தரக்கூடிய தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் விளைவாக இவர்களின் செல்வாக்கும் தாக்கமும் கிராமப்புறத்தின் மூலை முடுக்கெங்கும் பரவிக்கிடக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயிகள், விவசாயக் கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு கிராமப்புற பாட்டாளி வர்க்கத்தினரும் பல்வேறு வழிகளில் மேற்குறிப்பிட்ட ஊரக பணக்காரர்களிடம் கட்டுப்பட்டு இருக்கிறார்கள். ஒடுக்கும் வர்க்கத்தினருக்கும் ஒடுக்கப்படும் வர்க்கத்தினருக்கும் இடையே, சுரண்டல்காரர்களுக்கும் சுரண்டலுக்குள்ளாபவர்களுக்குமிடையே பல்வேறு இணைப்புகள் தொடர்ந்து இங்கே நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.

கிராமப்புற அளவிலான சுரண்டல், ஒடுக்குமுறை மற்றும் கிராமப்புற பணக்காரச் சக்திகளுக்கிடையேயான நெருக்கமான கூட்டு –உறவு நிலை ஆகியவற்றின் அளவு பிராந்தியங்களுக்கேற்ப கடுமையாகவோ அல்லது சற்று குறைவாகவோ மாறுபடக்கூடும்.

மார்க்சிஸ்ட் கட்சியின் ஆய்வு அறிக்கை

நவீன தாராளமய ஆட்சிக்காலத்தில் விவசாய வர்க்கத்தினர் மத்தியில் வேளாண்சார் உறவுகளுக்கிடையே ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு  அறிக்கையில் (பத்தி 3.21) பின்வருமாறு குறிப்பிடுகிறது:

பெரும்பாலான கிராமப்பகுதிகளில்  நிலப்பிரபுக்களுக்கும் பணக்கார விவசாயிகளுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் பெரும் வர்த்தகர்களுக்கும் இடையே அதிகாரம்மிக்க நெருக்கமான கூட்டு-உறவு உயர்ந்துள்ளது. அவர்கள் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள், கூட்டுறவு நிறுவனங்கள், ஊரக வங்கிகள் மற்றும் கடன் நிறுவனங்களின் (இடதுசாரிகள் வலுவாகவுள்ள மாநிலங்கள் தவிர்த்து) ஆதிக்கம் செலுத்துவது மட்டுமின்றி பூர்ஷ்வா (நிலப்பிரபுத்துவ –முதலாளித்துவ) அரசியல் கட்சிகளின் கிராம அளவிலான அனைத்து தலைமைப்பொறுப்புகளையும் தங்கள்  கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

இத்தகைய பிரிவினரால் மேற்கண்ட அமைப்புக்களில் இருந்து சுரண்டப்படும் உபரி கொள்ளை லாபமே கிராமப்புறங்களில் கந்து வட்டி, ஊகவணிக செயல்பாடு,  வீட்டுமனைப் பெருக்கம் மற்றும் வேளாண்சார் தொழிற்சாலைகளில் மூலதனமாக விதைக்கப்படுகிறது. கிராமப் பகுதியிலிருக்கும் மேலாதிக்க வர்க்கத்தினர் அங்கிருக்கும் ஏழைவர்க்கத்தினருக்கு எதிராக ஆதரவைத்திரட்டி வன்முறை மூலம் அச்சுறுத்துவதற்கு தங்கள் மேலாதிக்க வர்க்க–சாதியச் சேர்க்கை அடையாள உத்தியை கையாண்டு ஏழைவர்க்கத்தினரை ஒடுக்குமுறைக்கு ஆளாக்குகின்றனர்.

பழங்குடி சமூக ஒடுக்குமுறைக்கெதிராக

மேல்குறிப்பிட்ட கூட்டு உறவு நிலை ஏழைப்பகுதியினரை குறைந்த கூலி கொடுப்பது; குறைந்த விலை நிர்ணயம் செய்வது; அதிகமான வாடகை வசூலிப்பது; வட்டி வாங்குவது; குடிநீர் கட்டணம்; டிராக்டர்- பயிர் அறுவடை இயந்திரம் வாடகை; மற்றும் இதர வேளாண் இயந்திரங்கள், சேமிப்பு கிட்டங்கிகளுக்கு கட்டணம் போன்று பல்வேறு வகை சுரண்டல்களுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு சென்று சேரவேண்டிய அரசு திட்டங்களின் சலுகைகளை பெரிய பணக்காரர்களே அனுபவித்து வருகின்றனர். இந்த சூழலில் வர்க்க போராட்ட, வேளாண் வர்க்க இயக்கங்களின் வளர்ச்சி என்பது அடிப்படையில் நிலப்பிரபுத்துவ சுரண்டல் சக்திகளுடன் இணைந்த ஊரக பணக்கார கூட்டு சக்திகளை எதிர்த்த போராட்டமாக அமையவேண்டும்.

இங்கே விவாதிக்கப்படும் கிராமப்புற பணக்காரக் கூட்டுக்காரர்களுக்கும் அப்பகுதி ஏழை விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் அடங்கிய ஏழைகளுக்கும் இடையேயான முரண்பாடு, அவர்களின் விவசாயம் மற்றும் விவசாயம் சாரா முதலாளித்துவ நடவடிக்கைகளிலிருந்தே தோற்றம் பெறுகிறது.  அனைத்து வகையான சுரண்டல் பிரச்சினைகளுக்கு எதிராக உறுதியோடு போராடாதவரை வலுவான ஒன்றுபட்ட இயக்கங்கள் சாத்தியமற்றதாக ஆகிவிடும். இத்தகைய ஊரக பணக்கார கூட்டு சக்திகளை எதிர்த்துப் போராட கிராமப்புற நிலமற்ற அத்துக்கூலித்தொழிலாளர்கள், ஏழை சிறு, குறு விவசாயிகள், விவசாயம் சாரா கைத்தொழிலாளர்கள், கைவினைஞர்கள் உள்ளிட்ட அனைத்துவகை வெகுஜன கிராமப்புற ஏழைகள் சேர்ந்து  பரந்துபட்ட ஒற்றுமையை கட்டமைக்க வேண்டியது மிகவும் தேவையான செயல்திட்டமாகும். இத்தகைய ஒற்றுமை, சமூக (சாதிய) ஒடுக்குமுறைக்கெதிராகவும் பழங்குடிகள் மீது தொடுக்கப்படும் சுரண்டலுக்கெதிராகவும் கட்டி எழுப்பியதாக அமைய வேண்டும். இந்த திரட்டல்கள் மாநிலங்களுக்கேற்ப மாறுபடும் தன்மையோடு இருக்கும். அதேநேரத்தில் வளர்ச்சிப்போக்கின் முக்கிய நோக்கத்தில் மாற்றமிருக்காது. பிரச்சினைகளை கண்டறிந்து, நுட்பமாக உத்திகளை உருவாக்கி, கோரிக்கை முழக்கங்கள், போராட்ட இயக்கங்களின் பாதைகளை அந்தந்த மாநிலங்கள் மாவட்ட நிலைமைகளின் தன்மைக்களுக்கேற்ப அலசி ஆராய்ந்து, திட்டவட்டமான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும்.

வழிகாட்டும் போராட்டங்கள்
கேரளம், மேற்கு வங்காளம், தமிழகம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் இதர பகுதிகளில் நடைபெற்ற சட்டக்கூலிக்கான கோரிக்கை இயக்க போராட்டங்கள் கிராமப்புற ஏழை வர்க்கத்தினை இங்கே விவாதித்த கிராமப்புற பணக்காரக் கூட்டுசக்திகளை எதிர்த்து ஒன்றுதிரட்டுவதற்கு  வரலாற்று ரீதியாக உதவியது. கிராமப்புற பணக்காரக் கூட்டுசக்திகளை எதிர்த்த போராட்டத்தில் ஏழை விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் கடுமையான சமூக, வர்க்க ஒடுக்குமுறை தாக்குதலுக்கு ஆளாயினர்.

தங்களது இன்னுயிரை செங்கொடி இயக்கத்திற்காகவும், விவசாயிகள் – விவசாயத்தொழிலாளர்கள் உரிமைகளுக்காகவும் மிகப்பெரிய தியாகம் செய்த தஞ்சை- கீழ்வெண்மணி தியாகிகள் நம் போற்றுதலுக்குரிய  விவசாயிகள் – விவசாயத்தொழிலாளர்கள் (இவர்களில் பெரும்பான்மை தலித் பிரிவினர் என்பது குறிப்பிடத்தக்கது) . குத்தகை வாடகை விவசாயிகள் மீது அளவுகடந்த வாடகை வசூல் சுரண்டலை எதிர்த்து மேற்குவங்கத்தில் நடைபெற்ற தெபாகா எழுச்சி (1946-47) , தெலுங்கானா போர் (1946-51) மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் நன்கு அறியப்பட்டவை. மேற்கண்ட ஆய்வுகளின் அடிப்படையிலும், இடதுசாரிகளின் புகழ்பெற்ற போராட்ட இயக்கங்களின் உத்வேகத்தின் விளைவாகவும் தற்போதைய சூழ்நிலைக்கு தகுந்த வகையில் போராட்ட இயக்கங்களின் தொடர் திட்டங்களை நாம் திட்டமிடவேண்டும். விவசாய தொழிலாளர்கள், ஏழை சிறு, குறு, நடுத்தர விவசாயிகள், மற்றும் நலிவுற்ற வெகுஜன வர்க்கத்தின் நலன்களை மையப்படுத்தி பாட்டாளி விவசாய வர்க்கத்தினை ஒன்றுதிரட்டி கட்டியமைத்து கிராமப்புற பணக்காரக் கூட்டுசக்திகளின் சுரண்டலை எதிர்த்து கோரிக்கைகளை உருவாக்கி வலுவான  போராட்ட இயக்க முழக்கங்களை முழங்கிட வேண்டும்.

பிரத்தியேகமான கோரிக்கை முழக்கம்
நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ வர்க்கங்களுக்கு எதிரான விவசாயிகளின் கோரிக்கை மட்டுமல்லாமல், அவர்களால் எதிர்க்கப்படும் கோரிக்கைகள் குறித்தும் தெளிவான வரையறையுடன் நமது கோரிக்கைகள் வடித்தெடுக்கப்பட வேண்டும். ஏழை சிறு குறு / நடுத்தர விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், கைத்தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய கடன் தள்ளுபடி , கடன் வசதிகள், வேளாண் இடுபொருள்களுக்கான மானியங்களின் பயன்களை கிராமப்புற  பணக்காரக் கூட்டு சக்திகள் சுரண்டுவதைத் தடுக்கும் வகையில் கோரிக்கைகள் அமைய வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர விவசாய வர்க்கத்தினருக்கென  போனஸ் வகையிலான கூடுதல் ஊக்கத்தொகை, தானிய சேமிப்பு வசதிகளில்  சலுகை மற்றும் போக்குவரத்து மானியங்கள் போன்ற சிறப்பு கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டும். இதுபோல் இவர்களுக்கான கடன்களில் மிகக் குறைந்த வட்டிமுறை, வட்டியில்லா அல்லது  பிரத்தியேகமான வட்டி மானியத்தை உறுதிப்படுத்தும் வகையில் போராட்ட கோரிக்கைகள் ஒன்றுபட்டு உயரும்பொழுது பலன்கள் கிடைக்க கிராமப்புறத்தில் சிறப்புகளம் காண்போம்.

தீவிரமடையும் கிராமப்புற பணக்காரக்கூட்டு சக்திகளுக்கும் ஏழை பாட்டாளிக்குமான முரண்பாடுகளின் மதிப்பீட்டில் நமது தலையீடுகளின் கள அனுபவங்கள் என்ன ?

ஆந்திரப்பிரதேசத்தில் குத்தகை விவசாயிகளை ஒன்றுதிரட்டி ‘ஆந்திரப்பிரதேச குத்தகை விவசாய சங்கம்’ தோற்றுவிக்கப்பட்டது. இச்சங்கம் பணக்காரக் கூட்டுச்சக்திகளோடு நேரடியாக முரண்படக்கூடிய பிரச்சினைகளை கோரிக்கைகளாகக் கொண்டு போராடி வருகிறது.

ஒன்றுபட்ட ஆந்திரப்பிரதேசத்தில், அகில இந்திய விவசாயிகள் சங்கம் (ஏ.ஐ.கே.எஸ்), அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் (ஏ.ஐ.ஏ.டபிள்யூ.யு) மற்றும் இதர இயக்கங்களின்  தலைமையில் நடைபெற்ற கூட்டுப்போராட்டத்தின் பலனாக உழவுத்தொழிலில் ஈடுபடும் பெரும்பான்மை குத்தகை விவசாயிகளுக்கு கடன் பெறும் தகுதி அட்டை வழங்குவதற்கு வழிவகுக்கும் விவசாய உற்பத்தியாளர் அங்கீகாரச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. குத்தகை விவசாயிகள் தாங்கள் பயிரிடும் பயிர் செலவினத்துக்கு அது நாள் வரை கந்து வட்டிக்கு கிராமப்புற பணக்கார கூட்டுச் சக்திகளிடம் சிக்கித்தவித்து வந்த நிலையிலிருந்து மேற்கண்ட போராட்டத்தினாலும் அதன் நிர்ப்பந்தத்தினாலும் இயற்றப்பட்ட சட்டத்தின் பயனால் சற்று மீண்டு எழுந்து வருவது பணக்காரக்கூட்டு சக்திகளுக்கு சற்று பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கே பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் நிலமற்ற மற்றும் ஏழை விவசாய குடும்பத்தினரிடமிருந்து நிலப்பிரபுக்கள் வாடகைக்கு வாடகை விடும் கொடுமை பொதுவான நடைமுறையாக உள்ளது.

வாடகை குறைப்பு கோரிக்கை, மானியங்கள் கிடைக்க வழிவகை செய்வது, போலியான இடுபொருள்கள் விற்பனை செய்வதோடு விவசாயிகளின் விளைபொருளுக்கு மிகக்குறைந்த விலை நிர்ணயம் செய்வது போன்ற விவசாய விரோத செயல்களில் ஈடுபடும் பெரிய வர்த்தகர்களை எதிர்த்த இயக்கம், கண்மூடித்தனமாக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராகவும் மற்றும் நிலத்தை விட்டு வெளியேறிய நிலப்பிரபுக்கள் தாங்கள் பயிர் செய்யாமல் நிலத்தை தரிசாக விட்டு வைப்பார்களேயொழிய காலம் காலமாக உழுதுவரும் நிலமற்ற ஏழை குத்தகை விவசாயிக்கு நிலத்தை குத்தகை வாடகைக்குக்கூட பயிரிட மறுக்கும் சூழலை எதிர்த்த பல்வேறு கோரிக்கை முழக்கங்கள் போராட்டங்களாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நமது அகில இந்திய விவசாயிகள் சங்கம் (அ.இ.வி.ச) மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்துடன் (அ.இ.வி.தொ.ச) தலித் மற்றும் ஆதிவாசி சங்கங்கள் இணைந்த ஒன்றுபட்ட கூட்டுப்போராட்டத்தினை முன்னெடுக்கும் பொழுது அப்பகுதியில் பிரதான முன்னேற்றத்தை அடைய வழிவகுக்கும் என்பது திண்ணம்.

எழுச்சிகரமான ராஜஸ்தான், மகாராஷ்டிர விவசாயிகளின் கூட்டுப்போராட்டங்கள்…

சமீபத்திய ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிர மாநில விவசாயிகளின் போராட்டங்களில் கிராமப்புற பணக்கார விவசாயி கூட்டுச்சக்திகளின் வழக்கமான கோரிக்கைகளிலிருந்து நம் கட்டுரையின் முற்பகுதியில் முன்வைத்த ஏழை எளிய பாட்டாளி வர்க்க விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து ஓர் தெளிவான வரையறை கொண்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது ஏழை விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், கிராமப்புற இதர தொழிலாளர்கள், கைவினை கலைஞர்கள் மற்றும் இதர பாட்டாளிகள் கொண்ட விரிவடைந்த ஒற்றுமையை கட்டுவதில் வெற்றியடைந்துள்ளது.

கர்நாடகம், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா மாநிலங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டம் (பரவலாக ரேகா இது என்று அழைக்கப்படுகிறது / 100 நாள் வேலைத்திட்டம் என  அழைக்கப்படுகிறது) தொழிலாளர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட பிரிவினர். நமது அ.இ.வி.ச, அ.இ.வி.தொ.ச மற்றும் பழங்குடி மக்களுக்கான தேசிய மேடை (ஏ.ஏ.ஆர்.எம்) ஆகிய அமைப்புகளின் தலைமையில் ஒன்றிணைந்து, காண்ட்ராக்ட் ஒப்பந்தக்காரர்கள் கிராமப்புற பணக்காரக் கூட்டுசக்திகளோடு சேர்ந்து தேசிய ஊரக வேலைவாய்ப்பு தொழிலாளர்களின் உணவில் மண்ணை அள்ளிப்போடுவதற்கு ஒப்பான பெரிய இயந்திரங்களை பயன்படுத்துதல் என்ற போர்வையில் ஊழல் செய்து மக்கள் வரிப்பணத்தை உண்டு கொழுப்பது, தொழிலாளர்களின் கூலிப் பணத்தை கொள்ளையடிப்பது, ஜாப் கார்டு என்று அழைக்கப்படும் ரேகா அட்டையை கைப்பற்றி பிணையம் போன்று வைத்து கொண்டு கூலிப்பணத்தை தராமல் இருப்பது உள்ளிட்ட அநியாயங்களை எதிர்த்த போராட்டத்தின் மூலம் ஒன்று திரண்டுள்ளனர்.

இத்தகைய ஒன்றுபட்ட பரந்த மேடை சுரண்டும் வர்க்கத்திற்கு எதிராக சுரண்டலுக்குள்ளாகும் வர்க்கத்தினரை திரட்டுவதில் நல்ல பலனை ஈட்டியுள்ளது. அவர்கள் பரவலாக நடைபெறும் அரசு திட்டங்களின் ஊழலுக்கெதிராகவும், ஏழை விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு திட்டத்தின் பலன்களை கிடைக்க செய்யாமல் , கிராமப்புற பெரிய பணக்காரக்கூட்டுச்சக்திகள் அனுபவிக்கும் ஏற்பாடுகளை செய்யும் நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ கட்சிகளின் உள்ளூர் தலைவர்களின் அநீதியான செயல்பாடுகளுக்கு எதிராகவும் கடும் போராட்டக்குரலை எழுப்பினர்.

தொழிலாளர்களும் விவசாயிகளும் இணைந்த வர்க்க போராட்டங்கள்…

மற்றுமொரு போராட்டக்களம் என்பது கட்டுமானத்துறையில் தொழிலாளர்களை சுரண்டலுக்குள்ளாக்கும் பெரிய காண்டிராக்டர் மற்றும் இடைத்தரகர்களை எதிர்த்த போராட்டமாகும். அத்தகைய கிராமப்புற பாட்டாளி தொழிலாளி வர்க்கத்தினரை குறிப்பாக கட்டுமான தொழிலாளர்களை தொழிற்சங்கத்தின் அங்கத்தினராக மாற்றும் களச்செயல்பாட்டை சிஐடியூ தொழிற்சங்கம் வலியுறுத்தியதன் விளைவாக தொழிலாளர்கள் பலனடைந்துள்ளனர்.

இதேபோல் பீடி சுற்றும் தொழிலாளர்கள், தலை சுமைப்பணி தொழிலாளர்கள், ஊராட்சி தூய்மைப்பணி ஊழியர்கள் மற்றும் தொழிலாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கெதிரான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஊழியர்கள் (ஆஷா ஊழியர்கள்) போன்றோர்கள் தான் சமீபத்திய ஆண்டுகளில் மிகப்பிரமாண்டமான தொழிற்சங்க போராட்டங்களை நடத்தியவர்களில் முக்கியமானவர்கள். இத்தகைய சங்கங்கள் தங்களுடைய போராட்டங்களில் மட்டும் நின்றுவிடாமல் கிராமப்புற ஏழைகள் மற்றும் விவசாய வர்க்கத்தினரின் போராட்டங்களுக்கு ஆதரவாகவும் போராடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கத.

நவீன தாராளமய மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிரான பூமி அதிகார அந்தோலன் இயக்கம்

குறிப்பிட்ட பிரச்சினைகளின் மீதான ஒன்றுபட்ட போராட்டங்களை கட்டும்போது சில சமீபத்திய அனுபவங்கள் கசப்பான ருசிகரம். பூமி அதிகார அந்தோலன் என்று அழைக்கப்படுகின்ற நில உரிமை மீட்புக்குழு கூட்டமைப்புடனான இயக்கத்தில் நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிரான போராட்டத்தில் வெறும் நிலம் கையகப்படுத்துதல் பிரச்சினைக்கு எதிராக திரள்வது  மட்டுமின்றி நில உரிமைக்கான போராட்டமாக அதனை மாற்றி முன்னெடுக்க வேண்டும் என்று அ.இ.வி.ச மற்றும் அ.இ.வி.தொ.ச முன்வைத்தபோது கிராமப்புற பணக்கார கூட்டுச்சக்திகளுக்கு விசுவாசமான சில அமைப்புகள் வெளியேறிவிட்டன.

கடன் தள்ளுபடி மற்றும் கட்டுப்படியான விலை நிர்ணயம் என்ற இரு பிரதானமான கோரிக்கைகளை முன்வைத்து ஜூன் 2017 ல் துவக்கப்பட்ட அகில இந்திய கிசான் சங்கர்ஷ் கோ-ஆர்டினேஷன் கமிட்டி எனப்படும் விவசாயிகளின் கூட்டுப்போராட்ட ஒருங்கிணைப்புக்குழு இந்தியா முழுவதும் உள்ள 187 சங்கங்கள் மற்றும் அமைப்புகளை உள்ளடக்கிய மிகப்பரந்துபட்ட விரிவடைந்த மேடையாகும். பணக்கார விவசாயக்கூட்டுச்சக்திகள் மட்டுமே பலன்பெறும் வகையில் வழக்கமான கடன் தள்ளுபடி திட்டம் போல் அமைந்து விடாமல் ஏழை எளிய விவசாயிகள் நேரடியாக பலன்பெறுகின்ற வகையில் நாம் முன்னர் விவாதித்த கடன் தள்ளுபடி திட்டம் குறித்த வரையறைகளுடன் கோரிக்கை வைக்க வேண்டும் எனும் முழக்கத்திற்கு இதில் உள்ள சில அமைப்புகள் உடன்பட மறுக்கும் சிக்கல் ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ,தமிழகம் மற்றும் இன்னபிற மாநிலங்களிலும் நிலவி வருகிறது.

தமிழகத்தில் ருசிகரமோ மிகவும் வினோதமானது. நாம் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் கடன் தள்ளுபடி திட்டத்தை எதிர்த்து கிராமப்புற பணக்காரக் கூட்டுச்சக்திகளின் நலனை பாதுகாக்க நினைக்கும் அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பாட்டாளி வர்க்க விவசாயிகளின் நலன்களுக்கெதிராக சவால் விடுக்கிறது.

பூமி அதிகார அந்தோலன் என்று அழைக்கப்படுகின்ற நில உரிமை மீட்புக்குழுவானது மக்கள் விரோத நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வண்ணம் மதவாத சக்திகளுக்கு எதிரான போராட்ட நிலைப்பாட்டில் தெளிவான முடிவெடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் இத்தகைய இரண்டு முக்கிய போராட்ட குணாம்சம் 187 சங்கங்கள் அடங்கிய அகில இந்திய கிசான் சங்கர்ஷ் கோ-ஆர்டினேஷன் கமிட்டி எனப்படும் விவசாயிகளின் கூட்டுப்போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் வேலைத்திட்டத்தில் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சமூக ஒடுக்குமுறைக்கெதிராக
தீண்டாமைக் கொடுமை, நில உரிமை, கல்வி உரிமை , பொது சுகாதாரம், அடிப்படையாக குடியிருக்கும் வீடு போன்றவை மறுக்கப்படுவது, பலிகடாவாக்கப்பட்ட சமூகக் குழுக்களின் மனிதர்களை அவர்கள் தொழிலாளியாக வேலைசெய்யும் பகுதியில் தொழிலாளர்களுக்குள் சமூகப் பிளவை ஏற்படுத்துவது, அவர்களை ஒதுக்குப்புறத்தில் தனிமைப்படுத்தி தங்கவைப்பது போன்ற சமூக ஒடுக்குமுறைகள் மற்றும் சமூக இழப்புக்கும் எதிரான போராட்டங்கள் சில மாநிலங்களில் நடந்தாலும் இன்னும் கூர்மையான அதிக அளவிலான இயக்கங்கள் கட்டாய தேவையாகும்.

எங்கெல்லாம் மேற்கண்ட திட்டம் திறம்பட நடந்தேறுமோ அங்கெல்லாம் சமூக ஒடுக்குமுறைக்குள்ளான பகுதியினர் வர்க்கப்போராட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் அனைத்து வர்க்கமும் ஒன்று சேரவும் தயக்கமின்றி அனைவரும் சாதிய ஒடுக்குமுறைக்கெதிராக போராடவும் இயலும்.

பீகார் , கர்நாடகா நில உரிமை மற்றும் தலித் ஆலய நுழைவு வெற்றி போராட்டங்களும்
பீகார் மாநிலத்தில் உபரி நிலத்தினை அனுபவித்து வரும் நிலமற்ற ஏழைகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த போராட்டத்திலும், கர்நாடகா மாநிலம் ஹசன் மாவட்டத்தில் கிராமப்புற பெரும்பணக்காரக் கூட்டுச்சக்திகளுக்கு எதிரான பரந்துபட்ட ஒற்றுமையை கட்டியதன்  பலனாக நில உரிமை மற்றும் தலித் ஆலய நுழைவு போராட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளோம்.

பெரும்பணக்கார கூட்டுச்சக்திகள் ஆதிக்கம் செலுத்தி அவர்களின் நலன்களுக்காகவே அரசு மற்றும் இதர அனைத்து வகையிலான பலன்களை ருசிபார்த்து வரும் மாநிலங்களில் கூட்டுறவுத்துறையை ஜனநாயகப்படுத்துவது என்பது மிக முக்கியமான பிரச்சினையை சரிசெய்யும் பணியாகும்.

கேரளம், திரிபுராவில் நாம் கூட்டுறவுத்துறையை ஜனநாயகப்படுத்துவதில் நல்ல முன்னேற்றத்தை அடைந்ததன் விளைவாக இன்ன பிற மாநிலங்களும் இதில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளன. கர்நாடகாவின் பெல்தங்காடி கூட்டுறவுச்சங்கத்தின் மூலம் குறைந்த / நியாயமான வாடகை விலையில் விவசாய இயந்திரங்கள் வாங்கி பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டதால், பெரும்பணக்கார கூட்டுச்சக்திகளிடம் அளவுக்கதிகமான வாடகையில் விவசாய இயந்திரங்கள் வாங்கி பயன்படுத்த வேண்டிய அவல நிலை தடுக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவின் தன்டேவாடா அடுத்த மாவோயிஸ்ட்களின் கோட்டையான நபராங்பூர் மாவட்டத்தில் ஆதிவாசிகளை திரட்டி ஐயாயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்களை உரிமைப்போராட்டத்தில் பெற்று தற்பொழுது ஆதிவாசிகள் உழுது விவசாயம் செய்து வருகிறார்கள். அங்கு மக்காச்சோளம் தான் பிரதானமான பயிர்.

மத்திய பாஜக – நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தேர்தல் அறிக்கையில் அளித்த விவசாய விளைபொருள் உற்பத்தி செலவில் ஒன்றரை மடங்கு விலைகொடுப்போம்   வாக்குறுதியை நிறைவேற்ற மறுக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்படியாகாத குறைந்தபட்ச ஆதார விலையைக்கூட தர மறுக்கிறார்கள் வர்த்தகர்கள்.

விளைபொருட்களை பதப்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்  செய்யும் கட்டமைப்பு முறைகள் பெரும்பணக்காரக்கூட்டுச்சக்திகளின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஒரு சிலரிடம் மட்டுமே உள்ளது. நாம் உழவர் கூட்டுறவு அமைப்பை உருவாக்கி மேற்கண்ட பிரச்சினைகளின் சாத்தியக்கூறுகளை கள ஆய்வு செய்து தீர்வு காணும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். பரந்த ஒற்றுமையை கட்டியதன் பயனாக மக்கள் தற்பொழுது நெருக்கமாக ஒன்றிணைந்து ஏழை எளிய மக்களின் பயன்பாட்டிற்காக, சிறந்த பள்ளி கல்வி நிலையங்களை ஏற்படுத்தி,  நன்கு கற்றறிந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பது, ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டமைத்து பொது சுகாதாரம் பேணி காப்பது போன்ற மக்கள் நல பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இறுதியாக..

கிராமப்புற பெரும்பணக்கார கூட்டுச்சக்திகளின் சுரண்டலை எதிர்த்த போராட்ட முயற்சிகளை ஆங்காங்கே எடுத்த போதிலும், இதுகுறித்து நாம் விவாதித்த பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான கிராமப்புற நிலமற்ற அத்துக்கூலித்தொழிலாளர்கள், ஏழை சிறு , குறு விவசாயிகள், விவசாயம் சாரா கைத்தொழிலாளர்கள், கைவினைஞர்கள் உள்ளிட்ட இதர தொழிலாளர்கள் , அனைத்துவகை வெகுஜன கிராமப்புற ஏழைகள் சேர்ந்த பரந்துபட்ட ஒற்றுமையை கட்டி, அவர்கள் அனைவரையும் ஒன்றுத்திரட்டி இன்னும் அதிகப்படியான போராட்ட புரட்சிப்போரினை முன்னெடுத்து நாம் விவாதித்த  தீவிரமாகி வரும் கிராமப்புற முரண்பாடுகளை களைந்திட களம் காண்பதே அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதற்கும், இறுதியாக எதிர்கொள்ள இருக்கும் ”மக்கள் ஜனநாயக புரட்சிக்கு” முன் இன்றைக்கு நம் முன்னேயுள்ள மிகவும் அடிப்படையான சவால் இதுவென்றால் மிகையாகாது.

தமிழில்: சமூகநேசன் எழில்ராஜூ

இடது ஜனநாயக முன்னணி – பிரகாஷ் காரத்

பிரகாஷ் காரத்

இடது ஜனநாயக மாற்றினை நோக்கி முன்னேறுவோம் என்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வகுத்துக்கொண்ட நடைமுறை உத்தியாக அமையப்பெற்ற அறைகூவலாகும். இதற்காக நமது கட்சி, அனைத்து இடது மற்றும் ஜனநாயக சக்திகளை அணிதிரட்டி வலுவான இடது ஜனநாயக அணியினை கட்ட வேண்டும். முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆட்சிமுறைக்கு (bourgeois-landlord order) உண்மையான மாற்றாக இந்த அணி இருக்கும் என்று கட்சி கருதுகிறது.

திரட்டவேண்டிய வர்க்கப் பிரிவுகள்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை தொலைநோக்குத் திட்டத்துடன் இந்த இடது ஜனநாயக மாற்றுக்கு உள்ள பொருத்தப்பாடு என்ன?  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொலைநோக்குத் திட்டம் மக்கள் ஜனநாயகப் புரட்சியை நோக்கியதாகும்.  இதற்காக முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அமைப்பினால் சுரண்டப்படும் வர்க்கத்தின் அனைத்து பிரிவினரையும் ஒன்றிணைத்து, மக்கள் ஜனநாயக முன்னணி அமைக்கவேண்டும் என்கிறது கட்சியின் திட்ட ஆவணம். தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், விவசாயக்கூலிகள், மத்தியதர வர்க்கத்தினர் மற்றும் சிறு முதலாளிகள் ஆகியோரே அந்த சுரண்டப்படும் வர்க்கப் பிரிவினர் ஆவர்.

மக்கள் ஜனநாயக அணியை கட்டுவதை நோக்கி முன்னேறும்போது, தேவைப்படும் நேரங்களில் இடைக்கால நிலைமைகளுக்கேற்ப இடைக்கால முழக்கங்களை உருவாக்கிக் கொள்ளலாம் என்று கட்சியின் திட்டம் விளக்குகிறது.

இடது ஜனநாயக முன்னணி என்பது அப்படிப்பட்ட இடைக்கால முழக்கமாகும்.  அது முதலில் 10வது கட்சிக்  காங்கிரஸ் ஜலந்தரில் 1978 ஆம் ஆண்டு நடந்தபோது உருவாக்கப்பட்டது. 10வது கட்சிக் காங்கிரஸ் இடது ஜனநாயக முன்னணியின் கருதுகோளைக் குறித்து பின்வருமாறு விளக்குகிறது;-

”இடது ஜனநாயக அணியைக் கட்டுவதற்கான நமது போராட்டம் என்பது வர்க்க சக்திகளுக்கிடையேயான சமன்பாட்டில் ஒரு மாற்றத்தினை உருவாக்கும் நமது போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.  அதே போல, இரண்டு நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ கட்சிகளில் ஏதேனும் ஒன்றைத்தான் மக்கள் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்ற நிலையில், தற்போதுள்ள அமைப்பு முறையின் சட்டகத்திற்குள்ளேயே கட்டுண்டு கிடக்கும் நிலையினை மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாகும் அது.  அனைத்து இடது மற்றும் ஜனநாயக சக்திகளையும் அணி திரட்டுவதன் மூலம் இந்த முன்னணியின் முன்னேற்றத்தினை நோக்கி நகர முடியும்.  அவ்வாறு நகரும்போது, கட்சி இந்த சக்திகளை  அணி திரட்டத் தொடங்குவதன் காரணமாக, எதிர்காலத்தில், தொழிலாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் மக்கள் ஜனநாயக அணியினை நாம் கட்ட முனையும்போது இந்த சக்திகள் அந்த அணியில் பங்கேற்க முடியும்.  இடது ஜனநாயக அணியினை வெறும் தேர்தலுக்கான அணியாகவோ அல்லது அமைச்சரவைக்கான முன்னணியாகவோ புரிந்து கொள்ளக்கூடாது.  மாறாக, பொருளாதாரத்தை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கும் பிற்போக்கு சக்திகளை தனிமைப்படுத்துவதற்கும், பொருளாதார மற்றும் அரசியல் தளங்களில் உடனடி முன்னேற்றத்திற்குமான போர்ப்படையாக இதனை புரிந்து கொள்ள வேண்டும்.”

இதன் தொடர்ச்சியாக, மக்கள் ஜனநாயக அணியில் இடம் பெற வேண்டிய வர்க்கங்கள்தான் இடது மற்றும் ஜனநாயக முன்னணியில் இடம் பெறுவார்கள் என்று விளக்கமளித்துள்ளோம்.  இருந்தபோதும், இதில் உள்ள ஒரே வேறுபாடு தலைமை குறித்தானது.  மக்கள் ஜனநாயக முன்னணிக்கான தலைமை தொழிலாளி வர்க்கமாக  இருக்க வேண்டும் என்ற அவசிய தேவை இடது ஜனநாயக அணிக்கான அவசியத்தேவையாக இருக்க வேண்டுமென்பதில்லை.  10வது கட்சிக் காங்கிரசில் இருந்து இந்தக் காலம் முழுவதும் இடது ஜனநாயக அணி என்ற நடைமுறை உத்திக்கான அறைகூவலை விடுத்துவந்த போதிலும், ஒவ்வொரு கட்சி காங்கிரசிலும், இந்த இடைக்கால முழக்கத்தின் நோக்கத்தில் எந்த முன்னேற்றத்தையும்  எட்ட முடியவில்லை.

மேற்குவங்கம், கேரளா மற்றும் திரிபுராவில் மட்டுமே இந்த அரசியல் மற்றும் வர்க்க சக்திகளை கொண்ட முன்னணிகளையும் கூட்டணிகளையும் நம்மால் உருவாக்க முடிந்துள்ளது.  உதாரணமாக, மேற்குவங்கத்தில் கடந்த இரு பத்தாண்டுகளில் பல்வேறு வர்க்கப் போராட்டங்கள் மற்றும் இயக்கங்களின் வாயிலாக இடது முன்னணி கட்டப்பட்டுள்ளது.  ஆனால், இந்த மூன்று மாநிலங்களிலும் இந்த கூட்டணிகளை உருவாக்கியுள்ளது என்பது நமது நோக்கத்தின் ஒரு பகுதி வெற்றிதான்.  இது அகில இந்திய அளவில் உருவாக்கப்பட வேண்டும்.

நடைமுறை உத்தி குறித்த பரிசீலனை:

ஏப்ரல் 2015ம் ஆண்டில் நடந்த 21வது கட்சி காங்கிரஸ் கடந்த 25 ஆண்டுகளாக நாம் கடைபிடித்து வந்துள்ள அரசியல் நடைமுறை உத்தி குறித்த மிக ஆழமான பரிசீலனையை நடத்தியது.  ஏன் நம்மால் இடது ஜனநாயக மாற்றினை கட்ட முடியவில்லை என்பதை பற்றித் தெரிந்து கொள்ள விமர்சனப் பூர்வமான ஆழ்ந்த பரிசீலனை தேவைப்பட்டது.

இந்த ஆழ்ந்த பரிசீலனையின்போது இக்காலக்கட்டத்தில் கட்சியின் சொந்த பலம் அதிகரிக்கப்படவில்லை என்பது தெளிவாகியது.  சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், மேற்குவங்கம், கேரளா மற்றும் திரிபுராவைத் தவிர்த்த நாட்டின் பிற பகுதிகளில் கட்சியின் சொந்த பலம் குறைந்துள்ளது.  காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதா கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்பதே உடனடிநோக்கமாக இருந்ததன் காரணமாக  அதற்குப் பொருத்தமான தந்திரங்களை உருவாக்குவற்கே முதன்மை கவனம் செலுத்தப்பட்டு வந்துள்ளது. இடது ஜனநாயக சக்திகளை அணிதிரட்டும் நோக்கில் கவனம் குவித்து பொதுத் திட்டத்தின் அடிப்படையில் வர்க்க, வெகுமக்கள் போராட்டங்களைக் கட்டமைத்து வளர்ப்பதற்கன முக்கியத்துவம், அவசியமான அளவுக்கு தரப்படவில்லை.

21 வது மாநாட்டின் விவரிப்பு:

எனவே, கட்சிக் காங்கிரஸ் இந்த பலவீனத்தைக் களைவது என்ற முடிவிற்கு வந்தது.  அந்த கட்சிக் காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம் இடது ஜனநாயகஅணியினை கட்டுவதற்கு மீண்டும் முதன்மை இடத்தை வழங்க வேண்டும் என்று முடிவெடுத்தது.  இதற்காக கட்சியின் சொந்த பலத்தை அதிகரிப்பதற்கு மிக அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.  இதற்கு நவீன தாராளமயத்தின் தாக்கத்தின் காரணமாக சமூகப் பொருளாதார சூழ்நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஒரு தீர்க்கமான ஆய்வினை நடத்த வேண்டுமென்றும், அந்த ஆய்வின் அடிப்படையில் நமது நடைமுறை உத்திக்கேற்ற முழக்கங்களை  உருவாக்க வேண்டும் என்றும், வர்க்க மற்றும் வெகுமக்கள் போராட்டங்களை நடத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

21வது கட்சி காங்கிரசும், 10வது கட்சிக் காங்கிரஸ் விவரித்தது போலவே, இடது ஜனநாயக அணியை ஒரு தேர்தல் கூட்டணியாகப் பார்க்கக்கூடாது என்றும்,  அது வெறுமனே அரசியல் கட்சிகளின் கூட்டணி அல்ல என்றும், மாறாக, பல்வேறு வர்க்க மற்றும் மக்கள் ஜனநாயக அமைப்புகள் மற்றும் சமூக இயக்கங்களின் கூட்டணியாகும் என்றும் விவரித்தது.

21வது கட்சி காங்கிரசின் விளக்கம் பின்வருமாறு:-

”இடதுசாரிக் கட்சிகள், அவற்றின் வர்க்க வெகுஜன அமைப்புகள், இடதுசாரி குழுக்கள் மற்றும் இடது அறிவுஜீவிகள், பல்வேறு கட்சிகளில் பரவிக் கிடக்கும்  சமூகவியலாளர்கள், மதச்சார்பற்ற முதலாளித்துவ கட்சிகளில் உள்ள ஜனநாயகப் பிரிவினர், ஆதிவாசி, தலித், பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் ஜனநாயக அமைப்புகள், ஒடுக்கப்படும் மக்கள் பிரிவினரின் பிரச்சினைகளை கையிலெடுத்து போராடும் சமூக இயக்கங்கள் போன்றவை இடது ஜனநாயக அணியில் இடம்பெற வேண்டும்.  இந்த சக்திகள் அனைத்தையும் ஒரு கூட்டு மேடையின் கீழ், முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளின் கொள்கைகளுக்கு எதிரான, ஒரு தனித்துவமான, பொதுத்திட்டத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே, இடது ஜனநாயக அணியினை உருவாக்குவதற்கான திட்டவட்டமான வடிவத்தை நாம் பெறமுடியும்”.

மாநிலங்களுக்கான திட்டம்:

இந்தப் புரிதலின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு இடது ஜனநாயகத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.  அந்தத் திட்டத்தில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் உள்ளடங்கியிருக்கும்.  இந்தத்திட்டத்தின் கீழ் எந்தெந்த மக்கள் சக்திகள் இடது ஜனநாயக அணியின் கீழ் கொண்டு வரப்பட வேண்டுமோ அந்தப் பிரிவினர் அனைவரும் அணி திரட்டப்பட வேண்டும்.  இந்த கூட்டுமேடையிலிருந்து பல்வேறு கட்சிகள், வர்க்கங்கள், வெகுஜன அமைப்புகள் மற்றும் சமூக இயக்கங்கள் கட்டவிழ்த்துவிடும் ஒன்றுபட்ட போராட்டங்கள் மற்றும் இயக்கங்களின் மூலம், ஒரு குறிப்பிட்ட அரசியல் திசைவழியுடன் கூடிய திட்டவட்டமான இடது ஜனநாயக அணி உருவாக்கப்பட வேண்டும்.

அப்படி ஒரு முன்னணி உருவாக்கப்படும்போது, அந்த முன்னணியினால் பிற முதலாளித்துவ கட்சிகளின் கொள்கைகளில் இருந்தும், அரசியலில் இருந்தும் முற்றிலும் வேறான அரசியல் – தத்துவப் பார்வையினை கொண்டு செயல்படமுடியும்.

தமிழகத்தில் இடதுஜனநாயக திட்டம்:
தமிழ் நாட்டில், 21வது கட்சிக் காங்கிரசிற்குப் பிறகு இடது ஜனநாயக திட்டத்தினை உருவாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.  பல்வேறு இடதுசாரி கட்சிகளின் வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகள் ஒரு பொது மேடையின் கீழ் ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்தவும், இயக்கங்களை நடத்தவும் அணிதிரட்டப்பட்டன.  இது தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.

இதோடு கூட, முக்கிய திராவிட கட்சிகள் மற்றும் பிற முதலாளித்துவ கட்சிகளின் அரசியல் மற்றும் தத்துவார்த்தப் பார்வையிலிருந்து தனித்துவமான தத்துவார்த்தப் பார்வையுடன் கூடிய  ஒரு அரசியல் கொள்கை திட்டம் இந்த கூட்டு மேடையில் இருந்து உருவாக்கப்பட வேண்டும் என்ற தேவை உள்ளது.  நவீன தாராளவாதக் கொள்கைகளுக்கு மாற்றான, மக்கள் முன்னேற்றத்திற்கான, மற்றும் இந்த சமூகத்தில் நிலவும் பொருளாதார சமூக ஏற்றத்தாழ்வுகளுக்குக் கடிவாளமிடக்கூடியதுமான ஒரு மாற்றுக்கொள்கைச் சட்டகம் அங்கு உருவாக்கப்படவேண்டும்.

கருத்தியல் போராட்டம்:

இந்தத் திசைவழியில் எடுக்க வேண்டிய மற்றொரு நடவடிக்கை திராவிடக் கருத்தியலுக்கும், இயக்கங்களுக்கும் இசைவான ஒரு இடதுசாரி கருத்தியல் பார்வை உருவாக்கப்பட வேண்டும்.  இந்த இடதுசாரிக் கருத்தியல், திராவிடக் கருத்தியலுடனும் இயக்கங்களுடனும் விமர்சனப்பூர்வ தலையிடல் மேற்கொண்டு அதன் பாரம்பரியத்தில் அமைந்த நேர்மறை அம்சங்களை இணைத்துக் கொள்வதாகவும், எதிர்மறை அம்சங்களைக் கழித்துக்கட்டுவதாகவும் அமைந்து, அதன் போதாமைகளை மிஞ்சுவதாக அமையவேண்டும். மேலும் குறிப்பாக புதிய தாராளவாதத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட கேடுவிளைவிக்கும் கருத்தியல் தலையீட்டையும், சீர்குலைவையும் புரிந்துகொள்ளவேண்டும்.

மேலும், இந்த இடது ஜனநாயகத் திட்டம் என்பது மக்களை பிரித்தாளும் இந்துத்துவா வகுப்புவாதக் கொள்கைகளை எதிர் கொள்ளக் கூடிய வகையில் ஒரு தெளிவான திசைவழியினை காட்ட வேண்டும்.

கட்சியின் அனைத்து மட்டங்களுக்கும் இடது ஜனநாயக அணி குறித்தும் அதனுடைய மாற்று குறித்தும் அதன் அடிப்படைக் கரு குறித்தும் தெளிவாக விளக்கி அவர்கள் புரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும்.  இதனை தேர்தல் கூட்டணிகளுடனோ அல்லது தேர்தல் உடன்பாட்டுடனோ குழப்பிக் கொள்ளக்கூடாது என்பது தெளிவாக அவர்களுக்குப் புரியச் செய்யப்பட வேண்டும்.  இடது ஜனநாயக அணியினை கட்டுவது என்பதனை நமது பிரதானமான நோக்கமாக தக்க வைத்துக் கொண்டு, எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் அதற்குப் பொருத்தமான தேர்தல் உத்திகளை உருவாக்கிக் கொள்ளலாம். கட்சியின் நலன்களை நோக்கி முன்னேறுவதன் அவசர அவசியத்திற்கும், இடது ஜனநாயக சக்திகளை அணி திரட்டுவதன் உடனடி அவசர அவசியத்திற்கும் நன்றாகப் பொருந்தும்படி இந்த தேர்தல் உத்திகள் வடிவமைக்கப்பட வேண்டும்.

  • தமிழில்: ஆர்.எஸ்.செண்பகம்

இடது ஜனநாயக அணியில் ஒடுக்கப்பட்ட சமூக பிரிவினரின் பங்கு

. வாசுகி

கொள்கை குறித்த கேள்வியையே நையாண்டி செய்வோர், எதிரும் புதிருமான அத்தனை தத்துவங்களையும் வரிசைப்படுத்தி, இதுதான் எங்கள் கட்சியின் இசம் என்று சொல்வோர்,

இதுவரை கொள்கை குறித்து எவ்வித முன்மொழிவும் இன்றியே ஆட்சிக்கு வந்து விட்டோர்,

சுரண்டும் வர்க்கத்துக்குத் துணை போகும் கொள்கைகளை, தேன் தடவிய சொல்லாடல்களால் மறைப்போர்

எனப் பலரையும் இச்சமூகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, இந்திய மக்கள் விடுதலைக்காக நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற மும்முனைகள் கொண்ட மக்கள் ஜனநாயக புரட்சி செய்வதை இலக்காக வைத்து, அதற்கான திட்டத்தையும் மக்கள் முன் வைத்திருக்கிறது. புரட்சியின் படையாக மக்கள் ஜனநாயக அணி உருவாக்கப்பட வேண்டும் என்பதுடன், இதை அடைய, இடது ஜனநாயக அணி என்பதை இடைக்கால நோக்கமாகவும் முன்வைக்கிறது. இந்த இதழின் மற்ற கட்டுரைகளில், இடது ஜனநாயக அணி குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

இது வர்க்கங்களால் கட்டமைக்கப்படும் அணி என்று கூறும் அதே சமயத்தில்,  ஒடுக்கப்படும் சமூக பிரிவினர் இதில் இடம் பெறும் அவசியம் குறித்தும் இடது ஜனநாயக திட்டம் பேசுகிறது.

இந்திய சமூக அமைப்பில் சாதியும் வர்க்கமும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. சாதிய அமைப்பின் மீதே, இன்றைய முதலாளித்துவ வர்க்கமும், தொழிலாளி வர்க்கமும் பிறந்திருக்கின்றன என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புரிதலாகும். கட்சி திட்டத்தின் பிரிவு 3.15, சாதிய மற்றும் பாலின ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை என்பதை புரட்சிகர மாற்றத்தின் ஒரு முக்கிய பகுதியாக முன்னிறுத்துகிறது. இந்திய சூழலில், வகுப்புவாத நடவடிக்கைகளால் சிறுபான்மை மக்கள் பாகுபடுத்தப்படுகின்றனர் என்ற அடிப்படையில், விடுதலை என்பதில், சாதியம், மதவெறி போன்றவற்றிலிருந்து விடுதலை என்பதும் உள்ளடங்கும் எனவும் அது விளக்குகிறது.

சாதியம், வகுப்புவாதம், ஆணாதிக்கம் என்ற மூன்றுக்கும் எதிரான சமரசமற்ற போராட்டம், சுரண்டலை எதிர்த்த வர்க்க போராட்டத்தின் முக்கிய பரிமாணமாக விளங்குகிறது. ஒரு சமூகப் பகுதி என்ற முறையில் தலித், பழங்குடியின மக்கள், மத வழி சிறுபான்மையினர்,  பெண்கள் ஆகியோர் பிரத்தியேக ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர். ஒருவர் பெண்ணாக, தலித்தாக/பழங்குடியினராக, தொழிலாளி/விவசாயியாக இருந்தால் பாலினம், சாதியம், வர்க்கம் என்கிற மூன்று அடிப்படையிலும் ஒடுக்கப்படுகிறார். இசுலாமியராக, கிறித்துவராக இருந்தால் இந்துத்துவ அடக்குமுறைக்கு உள்ளாகிறார்.  இத்தகைய சமூக ஒடுக்குமுறை பிரச்னைகளைக் கையிலெடுக்காமல், வர்க்க ஒற்றுமையையும் கட்ட முடியாது.

சமூக ஒடுக்குமுறையும் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளும்:

முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ கட்சிகள், கவனமாக, சமூக ஒடுக்குமுறையை அரசியல் படுத்தி, வாக்கு வங்கியாக மாற்றுகின்றன. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்ற அடிப்படையில் தேர்தல் அரசியலை மையப்படுத்தியே பிரச்னைகளில் தலையீடுகள் செய்யப்படுகின்றன. உடுமலை சங்கர் படுகொலையில் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை கிடைத்தது குறித்து அதிமுக உள்ளிட்ட பல மாநில முதலாளித்துவ கட்சிகள் கருத்து கூற விரும்பவில்லை என்பது மட்டுமல்ல, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுக, அச்செய்தியை முரசொலியில் வெளியிடவில்லை என்பதும்,  எங்கள் கட்சி உறுப்பினர்களில் 70% இந்துக்கள் என்று ஒரு கட்டத்தில் கூறியதும்  இதற்கு ஒரு சான்று.

அதேபோல், சமீபத்தில் நடந்த குஜராத் தேர்தலில் காங்கிரஸ் பிரச்சாரம் செய்த ஓர் இடத்தில் கூட, மோடி  முதல்வராக இருந்தபோது  இசுலாமியர்கள் கொன்று குவிக்கப்பட்ட சம்பவத்தைப் பேசவில்லை. அதன் பொது செயலாளர் ராகுல் காந்தி, நான் ஒரு பிராமணன், சிவ பக்தன் என்று பேசியதும் தற்செயலானதல்ல. ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில், பசு பாதுகாப்பு என்ற பெயரால் இசுலாமியர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவங்களில், ஒரு கண்டன அறிக்கை கொடுப்பதற்குக் கூட  காங்கிரஸ் முன்வரவில்லை.

ராம நவமி போன்ற விழாக்களை, மேற்கு வங்கத்தில், பாஜகவுடன் போட்டி போட்டுக் கொண்டு காங்கிரஸ் நடத்தியது. ஒரு சில இடங்களில் விழா மேடையில் இரு கட்சிகளின் உள்ளூர் தலைவர்களும் இடம் பெற்றனர்.  அதாவது, இங்கு, சமூக பிரச்னைகளில் தன் கொள்கையை சொன்னால் பெரும்பான்மை மதத்தினரின் வாக்குகள் வராது என்று மதிப்பீடு செய்து, பாஜக நிகழ்ச்சி நிரலின் சில பகுதிகளைத் தமதாக்கிக் கொள்ள காங்கிரஸ் முயற்சிக்கிறது.

பாஜகவோ, சாதிய படிநிலையை நியாயப்படுத்திக் கொண்டே, இந்து என்கிற பெயரில் தலித்துகளை  அணி திரட்ட முயற்சிக்கிறது. சில இடங்களில் இசுலாமியர்களுக்கு எதிர் நிலையில் அவர்களை நிறுத்தியதும் நடந்திருக்கிறது.  கர் வாபசி என்ற அவர்கள் முழக்கத்தின் போது, முற்போக்காளர்கள் கேட்டனர், மீண்டும் இந்து மதத்துக்கு வந்த பிறகு, அவர்களை எந்த சாதியில் வைப்பீர்கள்,  அவரவர் ஏற்கனவே இருந்த சாதிய படிநிலையில் தானே? என்று.  வர்ணாசிரம தர்மம் உழைக்கும் வர்க்கத்தின் பகுதிகளான தலித், பழங்குடியின மக்கள், பெண்களை சமூக ஏணிப்படியின் கீழ் படியில்தான் வைத்திருக்கிறது. எனவே, இந்துத்துவத்தின்  உள்ளடக்கத்தில் சாதி வெறியும், ஆணாதிக்கமும் உண்டு என்பதைப் பார்க்கத் தவறி விடக்கூடாது.

இந்திய முதலாளித்துவம் சாதிய பாகுபாடுகளை வளர்க்கிறது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.  அதாவது சமூக ஒடுக்குமுறை, குறிப்பாக சாதிய, பாலின ரீதியான ஒடுக்குமுறை, மலிவு உழைப்பை உறுதி செய்கிறது.  முதலாளித்துவத்தின் அடித்தளமான உழைப்பு சுரண்டலை நியாயப்படுத்தும் ஏற்பாடே இது. ஏகாதிபத்தியத்தின் தற்கால முகத்தோற்றமான நவீன தாராளமயம் இச்சுரண்டலைத் தீவிரமாக்குகிறது. திமுக, அதிமுக போன்ற மாநில முதலாளித்துவ கட்சிகளும் கூட அவர்கள் வர்க்க நலனிலிருந்து நவீன தாராளமய ஆதரவாளர்களாக, அவற்றை நிறைவேற்றுபவர்களாக மாறியுள்ளனர். சமூக நீதி என்ற திராவிட கருத்தியலின் முக்கிய கூறு, இக்கட்சிகளின் குணாம்சம் மாறுபட்டுள்ள சூழலில், நீர்த்துப் போய்க்கொண்டிருக்கிறது. எனவே சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான அவர்களின் குரல் ஏட்டளவிலேயே நிற்பதைக் காண முடிகிறது.

மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு:

மார்க்சிஸ்ட் கட்சி சமூக ஒடுக்குமுறை தொடர்வதற்குக் காரணமாக உள்ள பொருளியல் தளத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. வேலை, நிலம், கூலி உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைக்கிறது. தீண்டாமை பிரச்னையை ஜனநாயக பிரச்னையாகப் பார்த்து, பாதிக்கப்பட்ட பகுதியினர் மட்டுமல்ல; ஜனநாயக எண்ணம் கொண்ட அனைவரும் சேர்ந்து போராட வேண்டிய அவசியத்தைப் பேசுகிறது.

அனைத்தையும் சாதி அமைப்புகள் என்று   வகைப்படுத்துவது தவறு  எனவும், சாதிய ஒடுக்குமுறையிலிருந்து விடுபட வேண்டும் என்று போராடும் தலித், பழங்குடியின அமைப்புகளின் செயல்பாட்டில், நிகழ்ச்சி நிரலில் விடுதலைக்கான வேட்கையும், ஜனநாயக உள்ளடக்கமும் இருக்கின்றன என்பதையும் விளக்குகிறது. சில தலித் இயக்கங்கள்  ஒடுக்கப்பட்ட மக்களை சாதிய வரம்புக்குள் நிறுத்துகிற அடையாள அரசியலைப் பின்பற்றுகின்றன. இத்தகைய அடையாள அரசியலை நிராகரித்து,  மேற்கூறிய ஜனநாயக உள்ளடக்கத்தை வலுப்படுத்த வேண்டும்.

வர்க்க போராட்டம் வலுப்பெற வேண்டுமானால், கடும் உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாகும் தலித் பழங்குடியின பகுதியினர் அதில் இடம் பெற வேண்டும். அவர்கள் மீதான பொருளாதார சுரண்டலுடன், அவர்கள் சந்திக்கும் பிரத்தியேக சமூக ஒடுக்குமுறை ஒழிக்கப்படுவதற்கான போராட்டத்தையும் சேர்த்துக் கையில் எடுக்க வேண்டும். அதே போல்தான், பாகுபாடுகளுக்கு எதிரான பெண்கள் இயக்கங்களின் போராட்டம், ஜனநாயக போராட்டத்தின் ஒரு பகுதி. சமத்துவத்துக்கான அவர்களின் குரல் சமூக விடுதலைக்கான குரல். எனவே மேற்கூறிய சமூகப்பகுதியினர், ஜனநாயக புரட்சியை முன்னெடுக்க முதல் கட்டமாகத் தேவைப்படும்  இடது ஜனநாயக அணியின் பிரிக்க முடியாத பகுதியினராக இடம் பெறுவர்.

மேலும், கிராமப்புற பணக்கார வர்க்கங்கள், சாதியிலும், பொருளாதாரத்திலும், வளங்களின் மீதும் அதிகாரம் செலுத்துபவர்களாக செயல்படுவதையும், மாநில முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகள் இவர்களின் நலனைப் பிரதிபலிப்பதையும், வாக்குகளுக்காகவும், நிதிக்காகவும் இவர்களை சார்ந்து இருப்பதையும், கிராமப்புற உழைப்பாளி மக்கள் மீதான சுரண்டல் வலை இந்தக் கொள்ளை கூட்டணியால் பின்னப்படுவதையும்  மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டமும், ஸ்தாபன சிறப்பு மாநாட்டு ஆவணமும் சுட்டிக்காட்டுகின்றன.  கிராமப்புறங்களில் நிலவும் இத்தகைய முரண்பாடுகளை முன்னிறுத்திப் போராடாமல் இடதுசாரி இயக்கத்தை வளர்த்துவிட முடியாது. இத்தகைய போராட்டத்திலும், அடிப்படை வர்க்கங்களுடன், தலித், பழங்குடியினத்தவர், பெண்கள் இணைக்கப்பட வேண்டும்.

முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில், மத வழி சிறுபான்மை மக்களின் உரிமைகள் நிலைநாட்டப் படுவதில்லை என்று சுட்டிக்காட்டும் மார்க்சிஸ்ட் கட்சி, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையை வலுப்படுத்தும் போராட்டமாகும் என உறுதிபடக் கருதுகிறது. ஜனநாயக புரட்சியை நோக்கிய பயணத்தில் இடது முன்னணி மேடையில் இவர்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

ஊனமுற்றோர், இச்சமூகத்தில் பிரத்தியேக பிரச்னைகளை சந்திக்கின்றனர். இவர்களில் பெரும் பகுதியினர் ஏழைகளாக உள்ளனர். இவர்களும், இடது ஜனநாயக அணியில் இடம் பெற வேண்டிய சக்திகளே.

21வது அகில இந்திய மாநாட்டில் முன்வைக்கப்பட்ட இடது ஜனநாயக திட்டம்:

தலித்:

சாதி ஒழிப்பு, அனைத்து வித சாதிய ஒடுக்குமுறைகள் ஒழிப்பு, தீண்டாமை மற்றும் சாதிய பாகுபாடுகளைக் கடைப்பிடிப்போருக்குக் கடும் தண்டனை,  காலி பணியிடங்களை நிரப்புதல்,  தலித் கிறித்துவர்களையும் தலித் என வகைப்படுத்துவது,  தனியார் துறையில் இட ஒதுக்கீடு.

பழங்குடியினத்தவர்:

பழங்குடியின மக்களின் நில உரிமையைப் பாதுகாப்பது; அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீட்பது;  வன உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது; சிறு வன பொருட்களுக்கு ஆதரவு விலை நிர்ணயிப்பது; பழங்குடி மொழிகள் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது.

சிறுபான்மை மக்கள்:

சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாப்பது; கல்வி, வேலை வாய்ப்பு, சமூக நல நடவடிக்கைகள் போன்றவற்றில் இசுலாமியர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்.

பெண்கள்:

சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு, பெண்கள், குழந்தைகள் மீதான அனைத்து வித வன்முறைகளையும் தடுக்க, நிறுத்த, குற்றவாளிகளைத் தண்டிக்க கறாரான நடவடிக்கைகள்; சம வேலைக்கு சம ஊதியம்.

ஊனமுற்றோர்:

உரிமை அடிப்படையிலான ஏற்பாடுகள், ஊனத்தை அடிப்படையாக வைத்து பாகுபாடு பார்ப்பதைத் தடுக்க அரசியல் சட்டத்தைத் திருத்துவது;  சம வாய்ப்புகள், சம தளத்தில் செயல்பட உகந்த ஏற்பாடுகள், அனைத்துப் பொது இடங்களுக்கும் தடையின்றிப் போவதற்கான ஏற்பாடு.

செய்ய வேண்டியது என்ன?

21வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானத்தின் 2.87 பிரிவு, பழங்குடி, தலித், பெண்கள், சிறுபான்மையினரின் ஜனநாயக தன்மை கொண்ட அமைப்புகள், ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பிரச்னைகளை எடுத்து செயல்படும் சமூக அமைப்புகள் இடது ஜனநாயக அணியின் ஓர் அம்சம் என்று குறிப்பிடுகிறது. முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளின் கொள்கைகளுக்கும் முற்றிலும் மாறுபட்ட திட்டத்தின் அடிப்படையில் இவர்களை அணி திரட்டுவது முக்கிய கடமை என்றும் முன் வைக்கிறது.

இந்த அடிப்படையில்தான், கட்சியின் மத்திய குழு, தலித், பழங்குடியின அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு, சிறுபான்மை மக்களின் நலனுக்காக செயல்படும் அமைப்புகள், ஒடுக்கப்பட்ட சமூக பிரிவினருக்காக நேர்மையுடன் போராடும் அமைப்புகள், பெண்கள் அமைப்புகளுடன் கூட்டுப் போராட்டங்கள் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்துகிறது. தத்துவார்த்த ரீதியான தலையீடுகள் செய்வதையும் வற்புறுத்துகிறது.

அரசின் கொள்கைகள் வர்க்கச் சுரண்டலைத் தீவிரப்படுத்துகிறது. ஏற்கனவே சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பகுதியினர், இதற்குக் கூடுதல் இலக்காகின்றனர். மறுபுறம் நிலம், வேலை, கூலியில், பொருளாதாரத்தில் கீழ்மட்டத்தில் இருப்பதால் இவர்களை சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவது எளிதாகிறது.  உதாரணமாக, நிலமற்றவர்களுக்காக நில சீர்திருத்தம் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்ட கோரிக்கையாக இருக்கும் போது, நிலங்களிலிருந்து தலித் மற்றும் பழங்குடியினரை மேலும் அந்நியப்படுத்தி, கார்ப்பரேட் மற்றும் முதலாளிகளுக்கு ஆதரவாக நிலக்குவியலை உறுதி செய்ய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. நிலத்தின் மீது, வளங்களின் மீது அதிகாரம் மறுக்கப்படுவது பாகுபாடுகளை அதிகப்படுத்துகிறது. எனவே, ஒடுக்கப்பட்ட சமூக பகுதியினரின் நலனுக்கான மாற்று திட்டத்தை முன் வைத்து, வலுவான போராட்டங்களை சுயேச்சையாகவும், அவர்கள் மத்தியில் பணியாற்றும் அமைப்புகளுடன் இணைந்து நடத்துவதன் மூலம் இடதுசாரி அரசியல் நோக்கி அவர்களை ஈர்க்க முடியும். இப்பகுதியினர் மத்தியில் பணியாற்றும் இடதுசாரி அமைப்புகள் இத்தகைய கண்ணோட்டத்துடன் இயங்க வேண்டும்.

புரட்சியை உந்தித்தள்ளிய தோழர் லெனினின் ‘ஏப்ரல் ஆய்வுரைகள்’

ஜி. செல்வா

“லெனின்மட்டும் தான் புரட்சிக்கு வெளியே தனியாக நிற்பார். நாம் எல்லோரும் நம் சொந்த வழியில் செல்வோம்” இது லெனின் முன்மொழிந்து பேசிய ஏப்ரல்ஆய்வுரைகள் குறித்து பிளக்கனோவ் சொன்னது. இன்னும் ஒரு படி மேலே சென்று இவை அனைத்தும் “வெறும் பிதற்றல்” என்றார். இப்படியாய் புரட்சியின் திட்டம்குறித்து, நடைமுறை உத்தி குறித்து பழங்கருத்துக்களைக் கையாண்டவர்களை மார்க்சிய தத்துவ வெளியில் சித்தாந்த ரீதியாக அடித்து நொறுக்கி “புரட்சியினை நடைமுறையில் எதார்த்தமாக்கினார்” லெனின்.

இது எப்படிசாத்தியமாயிற்று?
சூழல் புரட்சிகரமாக மாறிவிட்டது என்பதை எப்படி உணர்வது?
ஒரு மார்க்சியவாதி நெருக்கடியான சூழல்களை எப்படி எதிர்கொள்வது?
கட்சியை, மக்களை புரட்சிகர இயக்கத்தில் எப்படி பங்கேற்கவைப்பது?

இப்படியாய் பல்வேறு வினாக்களை எழுப்பி தெளிவுபெற உலகப் புரட்சிகர சக்திகளுக்கு இன்றும் தோழர் லெனின்தான் ஆசானாகத் திகழ்கிறார். அவர் எழுதிய எழுத்துக்களை, நூல்களை நிதானமாகப் படித்து புரிந்து கொள்வது காலத்தின் தேவை. அதிலும் உலக அளவில் மார்க்சிய அறிஞர்கள் லெனினது எழுத்துக்களை இன்று பல்வேறு காலகட்டங்களாகத் தொகுத்து ஆய்வு செய்து வருகின்றனர். அப்படி பார்க்கும்போது 1917 பிப்ரவரி முதல் அக்டோபர் வரையிலான எழுத்துக்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.இவ்வெழுத்துக்கள் தொகுக்கப்பட்டு பிரகாஷ் காரத் முன்னுரையோடு “லெனின் 1917” என்ற புத்தகத்தை லெப்ட்வேர்டு பதிப்பகம் வெளியிடுகிறது.

இக்காலகட்டத்தை அதாவது புரட்சிகரமான காலகட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் லெனினது எழுத்துக்களில் மிக முக்கியமானது ஏப்ரல் ஆய்வுரைகள் (April Thesis). இந்த ஆய்வுரைகளின் சாராம்சத்தை லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தபோதே கடிதங்கள் வாயிலாக கட்சி அணிகளுக்கு தெரிவித்தவண்ணம் இருந்தார். அது “தூரதேசத்திலிருந்து லெனினது கடிதங்கள்” (Letters from Afar) என தொகுக்கப்பட்டுள்ளது. ஆனால், லெனின் அனுப்பிய முதல் கடிதம் மட்டும்தான் அப்போது கட்சிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டது. மற்ற கடிதங்கள் அக்டோபர் புரட்சிக்குப் பின்புதான் அச்சாகியது. எனவே, ரஷ்யப் புரட்சியை உந்தித் தள்ளும் வினையூக்கியாக செயலாற்றியது ‘ஏப்ரல் ஆய்வுரைகள்’தான்.

ஆய்வுரைகள் உருவானதன் பின்னணி

ஒருநாள் மதிய உணவுக்குப் பிறகு லெனின் அவரது புகழ் பெற்ற நூல் ஒன்றினை எழுதுவதற்கான விவரங்களை சேகரிக்க நூலகம் நோக்கி செல்லத் தயாராகிறார். அப்போது அங்கு வந்த போலந்து நாட்டு இளம் புரட்சியாளர் மிஷிஸ்லா பிரான்ஸ்கி (Mieczyslaw Bronski) “உங்களுக்கு செய்தி தெரியாதா? ரஷ்யாவில் புரட்சி தொடங்கி விட்டது” என்கிறார். அப்போது லெனின் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜூரிச் தலைநகரத்தில் இருந்தார். இச்செய்தி லெனினை உற்சாகம் கொள்ள வைத்துவிட்டது. உடனே ரஷ்யா செல்லத் தயாராகிறார். சுமார் 1981 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த லெனின் அடுத்த சில தினங்களிலேயே பல்வேறு கட்டுப்பாடுகளையும், தடைகளையும் மீறி ரஷ்யா செல்கிறார். இப்பயணம் குறித்து பல்வேறு ஆய்வாளர்கள் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க முக்கியமான கட்டுரையை ரஷ்யப் புரட்சி நூற்றாண்டு சிறப்பிதழில் ஃப்ரண்ட்லைன் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இந்தப் பயணத்தின்போதுதான் லெனின் தனது ஆய்வுரைகளை வளர்த்தெடுக்கிறார். ஏப்ரல் மாதத்தில் அது முன்மொழியப்பட்டதால் ஏப்ரல் ஆய்வுரைகள் என அழைக்கப்படுகிறது. அப்போது முதல் உலக யுத்தம் (1914-1918) நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த யுத்தம் குறித்து எத்தகைய நிலைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென முடிவெடுப்பதற்காக 1912-ல் சோசலிஸ்ட் கட்சிகளின் சர்வதேச காங்கிரஸ் விவாதிக்கிறது. அம்மாநாட்டின் முடிவாக முதலாம் உலக யுத்தம் ஏகாதிபத்தியங்களுக்கிடையே நாடு பிடிப்பதற்கான போட்டிதான். எனவே, சோசலிஸ்டுகள் இந்த யுத்தத்தைஆதரிக்கக் கூடாது. மேலும், உள்நாட்டில் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்காகப் பயன்படுத்த வேண்டும் என முடிவெடுக்கின்றனர்.

இம்மாநாட்டில் பங்கெடுத்த சோசலிஸ்ட் சக்திகள் தங்களது நாட்டுக்குத் திரும்பியவுடன், தங்களது நாட்டின் முதலாளித்துவ அரசியலுக்குப் பின்னால் போருக்கு ஆதரவாக அணிதிரண்டு நின்றனர். குறிப்பாக, அக்காலகட்டத்தில் மிகப்பெரும் செல்வாக்கு கொண்ட கட்சியாக ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சி இருந்தது. 1906ஆம் ஆண்டு ஒரு லட்சம் உறுப்பினர்களைக் கொண்டிருந்த அக்கட்சி 1914 ஆம் ஆண்டில் 3 லட்சத்து 85 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டு பரந்துபட்ட செல்வாக்கைக் கொண்டிருந்தது. ஆனால், கார்ல் காவுட்ஸ்கி தலைமையிலான இக்கட்சிதான் முதலாம் உலக யுத்தத்தின்போது மிகத் துரோகமான முடிவினை எடுத்தது. ஜெர்மனி நாட்டு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு யுத்தத்தின் நெருக்கடியை பயன்படுத்தாமல் அந்நாட்டு முதலாளி அரசுக்கு சாதகமாக முதலாம் உலகப் போரை ஆதரித்தது. இது சர்வதேச சோசலிச சக்திகளுக்கு பெரும் பின்னடைவை உருவாக்கியது. இத்தகைய கருத்துக்கள்தான் அன்று ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களிடமும் இருந்தது.

ஏகாதிபத்திய போரை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தின்படி லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகள் மட்டுமே செயலாற்றத் தொடங்கினர். ரஷ்யாவில் தொழிலாளர் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பின. தொழிலாளர்களின் எழுச்சியை நசுக்க பெத்ரோகிராடிற்கு அனுப்பப்பட்ட ராணுவம் தொழிலாளர்களோடு கரம் கோர்த்துக் கொண்டது. புரட்சித் தீ பற்றி எரியத் தொடங்கியது. 300 ஆண்டுகள் அசைக்க முடியாத ஜார் ஆட்சியின் அதிகாரம் அகற்றப்பட்டது. போல்ஷ்விக்குகள் தெருவில் இணைந்து மக்களோடு போராடிக் கொண்டிருந்தபோதே 1917 பிப்ரவரி மாதம் ரஷ்ய முதலாளிகளின் தலைமையில் இடைக்கால அரசு அமைக்க மென்ஷ்விக்குகளும், சோசலிஸ்ட் புரட்சியாளர்களும் மிதவாத முதலாளிகளுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டனர். “சமாதானம், உணவு, சுதந்திரத்திற்கான மக்களின் கோரிக்கைகளை புறந்தள்ளி தனக்கு சாதகமாக, அதாவது புரட்சிக்கு எதிரான பாதையில் இடைக்கால அரசு செயல்படத் தொடங்கியது”.

இத்தருணத்தில்தான் 1917 பிப்ரவரி மாதத்தில் வெடித்த புரட்சி செய்திதான் தொலைதூர தேசத்தில் இருந்த லெனினை ரஷ்யா நோக்கி உந்தித் தள்ளியது. 1917 ஏப்ரல் 16 நள்ளிரவில் பெட்ரோகிராட் நகரத்திற்கு வந்து சேர்கிறார். லெனின் வந்ததும் புரட்சியின்முன்னேற்றம் முக்கியத்துவம் பெறத் தொடங்கி விட்டது. ரயில் பயணத்தின்போதே தயாரித்து வைத்திருந்த “இன்றைய புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்”ஆய்வுரைகளை போல்ஷ்விக்குகள் இருந்த கூட்டத்திலும், போல்ஷ்விக்குகள் மற்றும் மென்ஷ்விக்குகள் இருந்த கூட்டத்திலும் முன்மொழிந்து அவர் பேசுகிறார். இந்த உரைதான் பின்னர் ஏப்ரல் ஆய்வுரைகள் என அழைக்கப்பட்டது. அடுத்த சில தினங்களில் எழுதிய “செயல் தந்திரம்” பற்றிய கடிதங்கள் “புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்” ஆகியவற்றை இணைத்துத்தான் ஏப்ரல் ஆய்வுரைகள் என்ற நூல் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுரைகளைத்தான் பிளக்கனோவ் முதல் டிராட்ஸ்கி வரை எதிர்த்தனர். ஜெர்மன் ராணுவ அதிகார வர்க்கத்துடன் லெனினுக்கு தொடர்பு இருக்கிறது என ரஷ்ய முதலாளித்துவ கட்சிகள் அவதூறு பிரச்சாரம் செய்தன. லெனினையும் அவரது தோழர்களையும் உறுதியாக எதிர்க்க வேண்டுமென மென்ஷ்விக்குகள் கூப்பாடு போட்டனர். ஆனால், நடந்தது என்ன? லெனினது கருத்துக்கள் பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறை எதார்த்தமாக்கப்பட்டது.

இந்த ஆய்வுரைகள் புரட்சியின் தற்போதைய கட்டம், இடைக்கால அரசு குறித்த நிர்ணயிப்பு, சோசலிச புரட்சிக்கான வழிகாட்டுதல், அதற்காக மக்களை வென்றெடுக்கவும் விவசாயிகளை அணிதிரட்டுவதற்குமான வழிமுறைகள், கட்சி அமைப்பில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என பல்வேறு முக்கிய அம்சங்களை, கருதுகோள்களைக் கொண்டுள்ளது.

உலக யுத்தமும், புரட்சிகரமான தற்காப்புவாதமும்

முதலாம் உலக யுத்தம் குறித்த நிர்ணயிப்பின்படி செயல்படாததால் பல்வேறு நாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பின்னடைவுக்குள்ளானது வரலாறு. ஆனால், லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகள் மட்டுமே இந்த யுத்தத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டனர். அது அவ்வளவு எளிதாக இருந்ததா? “யுத்தம் அவசியமானது”, “நாடு பிடிப்பதற்கான வழிமுறை அல்ல யுத்தம்” என்று பெரும்பான்மையான ரஷ்ய மக்கள் கருதினர்; கருத வைக்கப்பட்டனர்.

எனவே, இதற்கேற்றாற்போல் யுத்தத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் “புரட்சிகரமான தற்காப்பு” (Revolutionary Defense) என்ற நிலைப்பாட்டை இடைக்கால அரசாங்கம் எடுத்தது. இதை கடுமையாக எதிர்த்தார் லெனின். இந்த யுத்தமானது சந்தேகத்திற்கிடமின்றி கொள்ளைக்கார ஏகாதிபத்திய யுத்தம்தான் எனக் கூறினார். மூலதனத்திற்கும், யுத்தத்திற்குமுள்ள பிரிக்க முடியாத பிணைப்பைஎடுத்துரைத்து மூலதனத்தை தூக்கி எறியாமல் யுத்தத்திற்கு முடிவு கட்டாமல், உண்மையில் ஜனநாயக பூர்வமான சமாதானத்தை ஏற்படுத்துவது சாத்தியமல்ல என்பதை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டுமென லெனின் வற்புறுத்தினார்.

‘புரட்சிகரமான தற்காப்பில்’ நம்பிக்கை கொண்டுள்ள வெகு மக்களின் நேர்மையை சந்தேகம்கொள்ளாமல் அவர்களை முதலாளிகள் ஏமாற்றுகிறார்கள் என்பதை மிகத் தீர்க்கமாக, விடாப்பிடியாக, பொறுமையாக மக்களிடம் எடுத்துக் காட்ட வேண்டியது அவசியம்.மேலும், இது போன்ற பிரச்சாரங்களை யுத்தத்தில் பணியாற்றிவரும் ரஷ்ய ராணுவவீரர்கள் மத்தியிலும் விரிவான முறையில் கொண்டு செல்ல வேண்டுமென்றார். ஏனெனில், அப்போது ரஷ்ய ராணுவத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போர் வீரர்கள் பெரும்பாலும் கிராமப்புற விவசாயம் சீரழிக்கப்பட்டதால் பிழைப்பு தேடி ராணுவத்தில் சேர்க்கப்பட்டவர்களே. தற்காப்பு வாதத்திற்கு எதிரான இத்தகைய போராட்டம்தான் திட்டவட்டமான வெற்றியை கொடுக்கும் எனக் கூறும் லெனின், “ஒரு வேளை வேகமாக வெற்றி கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், வெற்றி எதார்த்தமாகவும், நீடித்ததாகவும் இருக்கும்” என்கிறார்.

புரட்சியின் தற்போதைய கட்டம்
நீண்ட, உதறியெறியப்பட்ட சந்தமாய்
சமகாலக் கவிஞர் கூட்டத்தால்
எள்ளி நகையாடப்படும் நான்
காலமெனும் மலைகளைத் தாண்டி வருகின்ற ஒன்றை
யாரும் காணாததைக் காண்கிறேன்
பட்டினிப் பட்டாளத்தால் மனிதனின் பார்வை
குறுக்கப்படும் அவ்விடத்தில்
புரட்சியின் முட்கிரீடம் தரித்த
1916ஐப் பார்க்கிறேன் நான்

புரட்சியை எதிர்பார்த்து அக்காலத்தின் சூழலை தனது கவிதையில் பிரதிபலிக்கிறார் கவிஞர் மயாகோவ்ஸ்கி. கலைஞனின் எதிர்பார்ப்பை கச்சிதமாக களத்தில் நிறைவேற்றுகிறார் புரட்சியாளர் லெனின்.

எப்படி?

மாறிவரும் சூழலையும், மக்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு புரட்சிக்கான கட்டத்தை தீர்மானிப்பது மிக முக்கியமானது. அதைத்தான் லெனின் செய்தார். “ரஷ்யாவில் இன்றைய நிலைமையின் சிறப்பம்சம் புரட்சி ஆரம்ப கட்டத்திலிருந்து இரண்டாம் கட்டத்திற்கு மாற்றமடைய வேண்டி இருக்கிறது” என்கிறார் லெனின். அதாவது 1917 பிப்ரவரி மாதம் நடைபெற்ற புரட்சியில் அதிகாரத்திற்கு வந்த இடைக்கால அரசு புரட்சியின் முதற்கட்டமாகவும், சோசலிசத்தை நோக்கி மாறுவது இரண்டாவது கட்டம் எனவும் லெனின் வரையறுக்கிறார். “உழைக்கும் வர்க்கத்திற்கு இருக்க வேண்டிய வர்க்க விழிப்புணர்வு, ஸ்தாபன வலிமை இல்லாததால் புரட்சியின் முதல் கட்டம் முதலாளி வர்க்கத்தின் கைகளில் அதிகாரத்தை கொடுத்தது. இரண்டாவது கட்டத்திலோ அதிகாரம் உழைக்கும் வர்க்கம்மற்றும் ஏழை விவசாயி கைகளுக்கு வரவேண்டும்” என்கிறார் லெனின். இத்தகைய முடிவுக்கு லெனின் வந்ததற்கான காரணங்களை புரிந்து கொள்வதன் மூலமாக உலகப் புரட்சிகர சக்திகள் தங்களது நாடுகளில் மார்க்சிய தத்துவத்தை சூழலுக்கு ஏற்றாற்போல் எப்படி பயன்படுத்துவது என்பதை புரிந்துகொள்ள முடியும். “ஒரு மார்க்சியவாதி சாத்தியப்பாடுகளிலிருந்து ஆரம்பிக்காமல் எதார்த்த நிலையிலிருந்து பார்க்க வேண்டும்” என்கிறார்.

மறுக்க முடியாத உண்மை என்ன வெனில், உண்மை நிகழ்ச்சிகளையும், எதார்த்தத்தின் கறாரான விபரங்களையும் ஒரு மார்க்சியவாதி கணக்கில் எடுக்க வேண்டும். நேற்றைய தத்துவங்களை பிடித்துக் கொண்டு தொங்கக் கூடாது. இந்தத் தத்துவத்தையும் மற்ற தத்துவங்களைப் போலவே பிரதானமாகவும், பொதுவாகவும்தான் கூற முடியும். வாழ்க்கையின் சிக்கலான அம்சங்களை ஸ்தூலமாக பரிசீ லிப்பது போலன்றி இது ஏறக்குறையத்தான் பரிசீலிக்கும்”. இவ்வாறு சொல்லும் லெனின், கத்தேயின் ஒரு மேற்கோளை சுட்டிக் காட்டுகிறார். “எனது நண்பனே! தத்துவம் நரைத்துப்போனது. ஆனால், வாழ்க்கை எனும் விருட்சம் பசுமையானது. சாகாவரமான வாழ்க்கை மரம்தான் பசுமையானது”. இதன்மூலம் வாழ்க்கை அனுபவத்தை, நடைமுறையை, தத்துவத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டும் என சொல்லித் தருகிறார்.

புரட்சிக்கான பாதை

போல்ஷ்விக்குகளைத் தவிர அன்றிருந்த மற்ற அனைத்து சக்திகளும் இடைக்கால அரசான முதலாளித்துவ அரசின் மீது மாயையை உருவாக்கியவண்ணம் இருந்தன. இதை தகர்க்க வேண்டும் என்கிறார் லெனின். அதே நேரத்தில் இந்த அரசுக்கு மாற்றாக தொழிலாளர்கள்-விவசாயிகள் அடங்கிய சோவியத்துகள்தான் புரட்சிகரமான அரசு என வரையறைசெய்கிறார். இங்கு மிக முக்கியமான விஷயம் என்னவெனில், தொழிலாளர்-விவசாயிகள் அடங்கிய சோவியத்துகளில் அப்பொழுது பெரும்பான்மையாக இருந்தவர்கள் ‘சோசலிஸ்ட் புரட்சியாளர்கள்’ தான். போல்ஷ்விக்குகள் எண்ணிக்கையில் மிகக் குறைவாகவே இருந்தனர். ஆனாலும், லெனின் இந்த தொழிலாளர்களின் பிரதிநிதிகள் அடங்கிய சோவியத்துகள்தான் புரட்சிகரமான அரசாங்கத்தின் சாத்தியமான ஒரே ரூபமாகும் என்பதை வெகுஜனங்களுக்கு விளக்கிக்கூற வேண்டும் என்கிறார். ‘நாம் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் வரை தவறுகளை விமர்சித்து அம்பலப்படுத்துவதை மேற்கொள்ள வேண்டும். அரசாங்க அதிகாரம் அனைத்தும் தொழிலாளர் பிரதிநிதிகள் அடங்கிய சோவியத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்பதையும் கற்பிப்போம். அப்போதுதான் அனுபவத்தின்பேரில் மக்கள் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்வர்’. அதாவது முதலாளித்துவ அரசின் செல்வாக்கிலிருந்து மக்கள் விடுபடுவர் என லெனின் கூறுகிறார்.

அதேபோன்று தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் இவர்களின் பிரதிநிதிகள் கொண்ட சோவியத்துகளை மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை நாடெங்கிலும் கொண்ட குடியரசு அமைய வேண்டும். தற்போதுள்ள இடைக்கால அரசின் போலீஸ், ராணுவம், அதிகார வர்க்கம் ஒழிக்கப்பட வேண்டும். அதிகாரிகள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவசியம் ஏற்பட்டால் அவர்களை அப்பதவியிலிருந்து நீக்க உரிமை வேண்டும். அதுமட்டுமல்ல, லெனின் சொல்கிறார் அதிகாரிகளின் சம்பளம் ஒரு திறமையான தொழிலாளியின் சம்பளத்தை விட அதிகமாக இருக்கக் கூடாது.

உடனடியாக அனைத்து வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளோடு இணைக்கப்பட்டு அது தொழிலாளர்களின் பிரதிநிதிகளின் அதாவது சோவியத்துகளின் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் எனக் கூறுகிறார் லெனின், அதே நேரத்தில் நமது உடனடி கடமை “சோசலிசத்தை புகுத்துவது அல்ல. சமூக உற்பத்திகளையும், உற்பத்தியாகும் பொருட்களின் விநியோகத்தையும் தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்தின் நிர்வாகத்தின்கீழ் கொண்டுவருவதுதான்” என மிகப் பொருள்பொதிந்த கடமையை வரையறுக்கிறார்.

புரட்சிகர சக்தியான விவசாய வர்க்கம்

மார்க்சிய தத்துவத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பை லெனின் வழங்கியுள்ளார். அதில் மிக முக்கியமானது விவசாய வர்க்கத்தை புரட்சியின் அச்சாணியாக மாற்றியது. விவசாயப் போராட்டங்கள், கலகங்கள் பிரெஞ்சு புரட்சியின்போதும் நடைபெற்றது. ஆனால், போல்ஷ்விக் தலைமையிலான ரஷ்ய புரட்சியில்தான் அது மைய சக்தியாகமாறியது. அது லெனினால்தான் சாத்தியமானது. எப்படி?

ஜார் ஆண்ட ரஷ்ய அரசானது மிகப் பெரிய தேசம். அதன் ஒரு முனையானது ஜெர்மனியை ஒட்டி இருந்தது. தொழில் வளர்ச்சியடைந்த தொழிலாளர்களை மையப்படுத்திய பகுதியாக இருந்தது. மறுபகுதியானது பெரும்பாலும் விவசாயிகளை உள்ளடக்கி இருந்தது. இப்பகுதியானது ஆசிய கண்டத்தின் எல்லையை நோக்கி இருந்தது. இவ்விடத்தில்தான் லெனின் ஒரு பெரிய தேசத்தில் புரட்சியை உருவாக்க வேண்டுமெனில் ஏகாதிபத்திய-முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவசக்திகளால் சிக்கி சின்னாபின்னமாகி வரும் மக்களை புரட்சியின் அச்சாணியாக மாற்றுவதற்கான கருதுகோளை வளர்த்தெடுக்கிறார். “தொழிலாளர் கட்சி என்பதால் விவசாய (நில)திட்டத்தை முன்வைப்பதோடு மட்டுமின்றி ரஷ்யாவில் விவசாய புரட்சியின் நலன்களுக்கு உகந்த உடனடியாக நிறைவேற்றக்கூடிய நடைமுறைகளையும் முன்வைக்கவேண்டியது நமது கடமை” என கட்சி அணிகளுக்கு, கட்சிக்கு அறிவுறுத்துகிறார். “அசல் அதிகார வர்க்க புத்திமதிகளை முறியடிப்பதற்காக ஸ்தலங்களில் உள்ள விவசாய பிரதிநிதிகள் சோவியத்துகளின் முடிவுகள் பேரில் தாங்களாகவே விவசாய சீர்திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென்றும், உடனடியாக நில எஸ்டேட்டுகளை பறிமுதல் செய்ய வேண்டுமென்றும் விவசாயிகளை கட்சி வற்புறுத்தவேண்டும்” எனக் கோருகிறார் லெனின். இதை அப்போது லெனின் மட்டும்தான் சொன்னார். மற்றவர்கள் எல்லாம் இப்போது நிலத்தை கைப்பற்ற வேண்டுமா? நிலச் சீர்திருத்தத்தை ஆரம்பிக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். ஆனால், களமோ லெனின் சொன்னதை சாத்தியமாக்கியது.

விவசாய வர்க்கத்தை ரஷ்யப் புரட்சியின் அடிப்படையாக மாற்றியதன் மூலம் லெனின் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு வற்றாத பங்களிப்பை செய்துள்ளார். அது மட்டுமல்ல, ஆசிய நாடுகளின் காலனியாதிக்கத்திற்கு முடிவு கட்டுவதற்கான உந்து சக்தியாகவும் மாறினார் தோழர் லெனின்.

சமூக ஜனநாயக கட்சி கம்யூனிஸ்ட் கட்சியாக மாறியதன் பின்னணி

தனதுஏப்ரல் ஆய்வுரைகளில் கட்சியின் கடமைகளாக லெனின் சுட்டிக்காட்டியதில் ஓர் அம்சம் கட்சியின் பெயரை மாற்றுவது. அதுவரை சமூக ஜனநாயகவாதிகளாக கம்யூனிஸ்டுகள் தங்களை அழைத்து வந்தனர். எனவே, அன்று சமூக ஜனநாயக கட்சி என்பது கம்யூனிஸ்ட் கட்சியாக கருதப்பட்டது. முதல் உலக யுத்தத்தின்போது சமூக ஜனநாயகத்தின் அதிகாரப்பூர்வமான தலைவர்கள் உலகெங்கிலும் சோசலிசத்திற்கு துரோகம் இழைத்துவிட்டு அந்தந்த நாட்டு முதலாளிகளின் பின்னால் அணிதிரண்டு விட்டனர். எனவே, சமூக ஜனநாயகம் என்ற வார்த்தை ‘நடுநிலையானவர்கள்’ என்ற பெயரில் அதிகார வர்க்கத்தின் சார்பானவர்களாக மாறியவர்களை குறிப்பிடும் தரம் தாழ்ந்த வார்த்தையாக மாறிவிட்டது. எனவே, “கம்யூனிஸ்ட் என்னும் பெயர் கட்சியின் இறுதி லட்சியத்தை சரியாக குறிப்பிடுவதால் சந்தர்ப்பவாதத்திற்கும், குறுகிய தேச வெறிக்கும் இடமளிக்காத வகையில் கட்சியின் பெயரை கம்யூனிஸ்ட் கட்சி என்றும், மேலும் புதிய அகிலத்தை அதாவது கம்யூனிஸ்ட் அகிலத்தை நிறுவ வேண்டும்” என்றும் லெனின் வழிகாட்டினார்.

நிறைவாக

இன்று உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கும் ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை சாத்தியமாக்கி மனிதகுல வரலாற்றில் மிக முக்கிய மைல்கல்லாக மாறிய புரட்சியை சாத்தியமாக்கியதற்கான கருதுகோள்களை உருவாக்கியது ஏப்ரல் ஆய்வுரைகள் என்றால் அது மிகையல்ல. 1917 ஏப்ரல் 24 முதல் 29 வரை பெட்ரோகிரேடில் நடைபெற்ற ரஷ்ய போல்ஷ்விக் கட்சியின் மாநாட்டில் லெனின் முன்மொழிந்த ஆய்வுரைகள் ஏற்கப்பட்டது. இதில் 80 ஆயிரம் கட்சி உறுப்பினர்கள் சார்பாக 150 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இம்மாநாடு கட்சியின் அரசியல் ஒற்றுமைக்கும், ஒன்றுபட்ட சக்தியாவதற்கும் உதவி செய்தது மட்டுமின்றி ஒரு நாட்டில் சோசலிசம் வெற்றியடையும் வாய்ப்பு இருக்கிறது எனும் கூற்றையும் உறுதிபடுத்தியது.

லெனினது ஆய்வுரைகளை பிதற்றல் என்று பிளக்கனோவ் கூறியபோது லெனின் கூறினார்: “பாரிஸ் கம்யூன் அனுபவத்தை பற்றியும், தொழிலாளி வர்க்கத்திற்கு எத்தகைய அரசாங்க அமைப்பு தேவை என்பது குறித்தும் மார்க்சும், ஏங்கெல்சும் 1871, 1872, 1875 வருடங்களில் என்ன கூறினார்கள் என்பதை நினைவுபடுத்தி இணைத்து விளக்கிக் கூறுவதைவிட கூச்சலிடுவதும், திட்டுவதும் மிகவும் எளிதானது என்பதில் சந்தேகமில்லை”.

மேலும், நாம் உலகை மாற்றுவதற்காக நிற்கிறோம். கோடானுகோடி மக்களை இழுத்துள்ள கோடானகோடி மூலதனத்தின் நலன் சம்பந்தப்பட்ட ஏகாதிபத்திய உலக யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நிற்கிறோம். மனித சமுதாயத்தின் சரித்திரம் கண்டிராத மிகப்பெரிய பாட்டாளி வர்க்க புரட்சியால்தான் இந்த யுத்தத்திற்கு முடிவு கட்டி உண்மையான ஜனநாயக சமாதானத்தை ஏற்படுத்த முடியும்.

இருந்தாலும், நம்மைக் கண்டு நாமே பயப்படுகிறோம். “அன்பான பழைய” சட்டையை தூக்கி எறிய கஷ்டப்படுகிறோம். கறை படிந்த சட்டையை தூக்கி எறிந்துவிட்டு லினன் சட்டை அணிவோம்” என்கிறார் லெனினது துணைவியும், தோழருமான குரூப்ஸ்கயா தனது நினைவுக் குறிப்புகளில். “நெருக்கடியான காலகட்டங்களில் ஆலோசனை தேவைப்படும் தருணத்தில் எப்போதும் லெனின் மார்க்ஸ், ஏங்கெல்சிடமே செல்வார். தான் எதிர்நோக்கும் சூழலில் மார்க்ஸ் இருந்தால் என்ன செய்வார்? எத்தகைய நிலைபாடு எடுப்பார்? என்ற அடிப்படையிலேயே லெனினும் செயல்படுவார். மார்க்சின் உண்மையான சீடன் லெனின்” என்கிறார்.

இப்படியாய் மார்க்சியத்தை தனது காலத்திற்கும், சூழலுக்கும் ஏற்றாற் போல் வளர்த்தெடுத்து ரஷ்ய புரட்சியை சாதித்தார் லெனின்.

இந்தியாவில் பெரும்பகட்டோடு உருவாக்கப்பட்ட நவீன தாராளமயமாக்கல் கொள்கையின் கொடூரங்களும், பலவீனங்களும் பளிச்செனத் தெரிய ஆரம்பித்து விட்டன. இதைப்பார்த்து உருவான இளைய தலைமுறை இக்கொள்கையின் விளைவுகளுக்கெதிராக எழுச்சியுடன் போராடிவருகிறது. சர்வதேச நிதி நிறுவனத்தால் திட்டமிட்ட சூறையாடல்களுக்கு எதிராக லட்சக்கணக்கான மக்களின் ஆதரவை அடித்தளமாகக் கொண்ட புரட்சிகர கட்சியை கட்டுவதன் மூலம், இந்திய மண்ணில் புரட்சியை சாதிக்க மார்க்சிடம் மார்க்சியம் பயில்வதும், லெனினிடம் லெனினியம் கற்பதும் நம் காலத்தின் அவசிய தேவை.

தமிழகத்தில் இடது ஜனநாயக முன்னணி: பொருளாதார கொள்கைகள்

வெங்கடேஷ் ஆத்ரேயா

இந்திய ஒன்றியத்தின் ஒரு மாநிலம் என்ற வகையில் மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளும் நிலவும் மத்திய மாநில நிதி உறவுகளும் தமிழக வளர்ச்சிக்கும் அதன் தன்மைக்கும் ஒரு முக்கிய காரணமாக அமைகின்றன.

கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் ஆளும் அரசாங்கங்கள் பின்பற்றிவந்த  தாராளமய கொள்கைகள் தமிழக வளர்ச்சியின் தன்மையை கணிசமான அளவிற்கு நிர்ணயித்துள்ளன.

தமிழகத்தில் தொடர்ந்து அரசு பொறுப்பில் இருந்து வந்துள்ள திமுக, அதிமுக ஆகிய கட்சிகளும் அதே தாராளமய கொள்கைகளைத்தான் பின்பற்றி வந்துள்ளன. மக்களின் நேரடி அதிருப்தி இவர்கள் மீது பாயும் பொழுதெல்லாம் சில மக்கள் நல திட்டங்களை அறிவிக்கின்றனர். மக்கள் கோரிக்கைகளை கண்டறிந்து நாமும் இதர ஜனநாயக இயக்கங்களும் நடத்தும் போராட்டங்களும் சில மக்கள் நல திட்டங்களும் நடவடிக்கைகளும் அமலாக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. எனினும் அடிப்படையில் தாராளமய கொள்கைகளின் தாக்கம் மக்கள் வாழ்வில் பெரும் சவாலாக வந்து நிற்கிறது.

மாநிலத்தின் ஆண்டு உற்பத்தி ஆண்டுக்கு 6% க்கும் அதிகமாக வளர்ந்துவருவதாக சொல்லப்பட்ட போதிலும்,  மக்களின் அடிப்படை பிரச்சினைகளான வேலையின்மை, சிறு குறு விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளும் வேளாண் நெருக்கடி, சிறு குறு தொழில்முனைவோர் சந்திக்கும் தொழில் நெருக்கடி, தொழில் மந்தநிலை, சொத்து, வருமானம், கல்வி, ஆரோக்கியம் அனைத்திலும் நிலவும், மேலும் அதிகரித்துவரும் பெரும் ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை கவனிக்கும்போது, மாற்றுக் கொள்கைகளின் அவசியத்தை உணரலாம்.

ஊழல் மலிந்துள்ளதும், தமிழகத்தின் கனிமங்கள், ஆற்று மணல், தாது மணல், நீர், நிலம் உள்ளிட்ட இயற்கை வளங்கள்  மிகக் குறைந்த விலையில் பெரும் கம்பெனிகளுக்கு தாரைவார்க்கப்படுவதும் மறுபுறம் பொதுத்துறை முதலீடுகள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருகின்றன, பாசனம், கிராமப்புற கட்டமைப்பு வசதிகள், வேளாண் விரிவாக்க அமைப்பு, வேளாண் ஆராய்ச்சி ஆகியவற்றிற்கான ஒதுக்கீடுகள் மத்திய மாநில அரசுகளால் வெட்டப்பட்டு வருகின்றன. இடுபொருள் மானியங்கள் குறைக்கப்படுகின்றன.

அரசின் வரவு-செலவு இடைவெளியை கடுமையாக குறைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும், இதனை செலவைக் குறைப்பதன் மூலம் மட்டுமே செய்யவேண்டும் என்பதே தாரளமய பட்ஜெட் கொள்கை.

அண்மை ஆண்டுகளில் மத்திய பா ஜ க அரசு நலத்திட்டங்களையும்  அழித்து வருகிறது. இதில் ஊரக வேலை உறுதித்தித் திட்டமும் அடங்கும். பொதுவிநியோக அமைப்பையும் மத்திய அரசு திட்டமிட்டு சீரழித்து வருகிறது. தானியங்கள் உள்ளிட்டு வேளாண் விளை பொருட்களை அரசு இனி கொள்முதல் செய்யாது என்ற தொனியில் தான் மைய அரசு பேசி வருகிறது.

இந்தப் பின்புலத்தில் இடது ஜனநாயக முன்னணி கட்டுவது அவசியம் என்ற புரிதலில் அதற்கான அரசியல் – பொருளாதார கொள்கைகளை நாம் முன்வைக்க வேண்டியுள்ளது.

மாற்று பொருளாதாரக் கொள்கைகள்

விவரங்களுக்குள் போகும் முன், இடது ஜனநாயக முன்னணியின் (இஜமு) மாற்று பொருளாதார பார்வை பற்றிய புரிதல் அவசியம்..

தொழிலாளிவர்க்கம், கிராமப்புறங்களில் விவசாயத்தொழிலாளிகள், ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள், இதர கிராமப்புற, நகர்ப்புற சிறு உற்பத்தியாளர்கள், மத்திய தர வர்க்கத்தினர் ஆகிய உழைக்கும் மக்கட்பகுதி இரண்டு முன்னணிகளிலும்  இடம்பெறும். பணக்கார விவசாயிகளைப் பொருத்த வரையில், விடுதலை போராட்ட காலத்திலும் விடுதலைக்கு பின் ஒரு கட்டம் வரையிலும் பணக்கார விவசாயிகளுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் இடையில் வலுவான முரண்பாடுகள் இருந்தன. தாராளமய கொள்கைகள் அமலுக்கு வந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் முடியும் தறுவாயில் இந்த முரண்பாடுகள் மட்டுப்பட்டுள்ளன. எனினும், இஜமுவிலும் மஜமுவிலும் பணக்கார விவசாயிகளை, முன்பின் முரணற்று இல்லாவிடினும், இடம்பெறச் செய்ய முடியும். அதேபோல், பெருமுதலாளிகள் தலைமையிலான அரசில் நிலப்பிரபுக்களுடன் முதலாளிவர்க்கமும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால், சிறு நடுத்தர முதலாளிகள் இயல்பாக இஜமு / மஜமு பக்கம் வந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் முதலாளித்துவ  நிலப்ரபுத்வ வளர்ச்சிப்பாதையின் நெருக்கடிகள் முற்றுகையில் தொழிலாளி வர்க்கம் தனது தலைமைப் பங்கினை சரிவர ஆற்றி  அவர்களை நம்பக்கம் கொண்டுவர இயலும். இத்தகைய புரிதலின் அடிப்படையில் தமிழக சூழலில் இடது ஜனநாயக பொருளாதார மாற்று பற்றி நாம் பரிசீலிப்போம்.

வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி: இடது மாற்று

இடது ஜனநாயக மாற்றின் முக்கிய பொருளாதார அம்சம், நில ஏகபோகத்தை தகர்க்கும் முழுமையான நில சீர்திருத்தம் ஆகும். இதனை சாதிப்பதன் மூலம் தான் கிராமங்களில் நில உடமை அடிப்படையில் ஆதிக்க சக்திகளாக விளங்கும் பணக்கார ஆளும் வர்க்கங்களின் பிடியை தளர்த்த முடியும். விவசாயத்தில் உற்பத்தி சக்திகள் வேகமாகவும் ஜனநாயகத்தன்மையுடனும் வளர முடியும். சாதி ஆதிக்க சக்திகளை தகர்க்கவும் இது மிகவும் அவசியமான நடவடிக்கை. உள்நாட்டுச்சந்தை விரிவடையவும் ஊரகப்பகுதிகளில் வேலை வாய்ப்பு பெருகவும் இது அவசியம்.

தமிழக மக்களில் சரிபாதியினர் கிராமங்களில் வசிக்கின்றனர். ஊரகக் குடும்பங்களில் பெரும்பாலானோர் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியையாவது வேளாண்மை மூலம் பெறுகின்றனர். ஆகவே, தமிழகத்தில் நிலப்பிரச்சினை மிக முக்கிய பிரச்சினையாகும்.  2011 ஆண்டிற்கான வேளாண் சென்சஸ் கணக்கெடுப்பு தரும் தகவல்படி 10 ஏக்கர் அல்லது அதைவிட அதிகமாக நிலம் சாகுபடி செய்வோர் தமிழகத்தின் மொத்த சாகுபடி நிலப்பரப்பில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒருபங்கை சாகுபடி செய்கின்றனர். ஆனால் 5 ஏக்கருக்கு குறைவாக சாகுபடி செய்யும் குடும்பங்கள்  மொத்த சாகுபடி செய்யும் குடும்பங்களில் 92% ஆக இருந்தும் மொத்த சாகுபடிபரப்பில் 61% தான் அவர்களால் சாகுபடி செய்யப்படுகிறது.இது சாகுபடி நிலங்களின் விநியோகம். ஆனால் நில உடமை இதைவிட கூடுதலாக ஒரு சிலரிடம் குவிந்துள்ளது. ஏனெனில் நிலம் உள்ளவர்கள் ஒருபகுதியை குத்தகைக்கு விடுகின்றனர். குத்தகைக்கு நிலம் எடுப்பவர்களில் பெரும் பகுதியினர் சொந்தமாக நிலம் அற்றவர்கள்.

சாதிவாரி சமூக பொருளாதார கணக்கெடுப்பு 2௦11 இன்படி தமிழக கிராமங்களில் 73% குடும்பங்கள் சொந்தமாக விவசாய நிலம் அற்றவை. இதே கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் கிராமங்களில் மொத்த  உழைப்பு படையில் சுமார் 20% சாகுபடியாளர்கள், 45% விவசாயத் தொழிலாளர்கள். தலித்துகளில் பெரும்பகுதியினர் விவசாய அல்லது பிற உடலுழைப்பு தொழிலாளர்கள். இதுதான் வன்னியர் உள்ளிட்ட சில ஏழை குடியானவ சாதிகளின் நிலையும். இவ்விவரங்களை இணைத்துப் பார்த்தால், தமிழகத்தில் நிலக்குவியல் தொடர்வதும், ஏராளமான ஊரக குடும்பங்கள் சொந்த சாகுபடிக்கு வாய்ப்பின்றி கூலி தொழிலாளிகளாகவும் குத்தகை விவசாயிகளாகவும் உள்ளனர் என்பதும் தெரிகிறது.

தமிழக கிராமங்களில் நிலவும் நில ஏகபோகத்திற்கு ஒரு முக்கிய சமூக அம்சம் உண்டு. தலித் மக்களில் பெரும் பகுதியினர் நிலம் மற்றும் இதர உற்பத்தி கருவிகள் இல்லாதவர்கள். இதனால் முழுமையான நிலச்சீர்திருத்தம் என்ற முழக்கம் சமூக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. நிலவும் சாதி ஒடுக்குமுறை அமைப்பை தகர்க்க முழுமையான நிலச்சீர்திருத்தம் ஒரு முக்கியமான புள்ளி.

இருக்கும் நிலம் தொடர்பான சட்டங்களை முறையாக அமலாக்கினாலேயே ஓரளவு நில மறுவிநியோகம் சாத்தியமாகும். இதற்கு வலுவான இயக்கமும் அமைப்பும் தேவை என்பது உண்மையே. எனினும் நிலப்பிரச்சினை என்று ஒன்று தமிழகத்தில் உள்ளது, அது கம்பெனிகளுக்கு நிலம் தாரைவார்க்கப்படுவது மட்டுமல்ல. இங்குள்ள நிலமற்ற, மிகக் குறைவான நிலம் உள்ள ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மக்களுக்கு நிலம் மிக அவசியம். இந்த புரிதலை விரிவாக கொண்டுசெல்வது இடதுஜனநாயக முன்னணி கட்டும் பணியில் இடம் பெற வேண்டும்.

விவசாயத்தை பெரும்பகுதி மக்களுக்கு நன்மை பயக்கும் தொழிலாக மாற்றவும், மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தவும் உற்பத்தியில் மக்களின் ஈடுபாட்டை பன்மடங்கு அதிகப்படுத்தவும் கிராமப்புற சாதி ஆதிக்க விழுமியங்களை உடைக்கவும்  அவற்றிற்கு தொடர்ந்து உயிர் கொடுத்து வரும் பெரும் நில உடைமையாளர்களின் சமூக அரசியல் செல்வாக்கை தகர்க்கவும்  அடிப்படை நில சீர்திருத்தம் தேவை.

இதன் முதல்படியாக, அரசு தரிசுகளை பெரும் கம்பெனிகளுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் குத்தகைக்கு கொடுக்கும் கொடுமைக்கு முடிவு கட்டி அவற்றை நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு மறுவிநியோகம் செய்ய வேண்டும்.  சட்டத்திலுள்ள ஓட்டைகளை அடைத்தால் – குறிப்பாக கோவில், ட்ரஸ்ட் நிலங்களை கையகப்படுத்தினால், பினாமிகளை இனம் கண்டு அகற்றினால், நில உச்சவரம்பு சட்டம் தொடர்பான பல விலக்குகளை நீக்கினால் கணிசமாக நிலம் கிடைக்கும்.

எனினும் முழுமையான நிலச்சீர்திருத்தம் என்ற முழக்கத்தை நடைமுறை முழக்கமாக மாற்றுவது எளிதல்ல. ஆகவே வர்க்கங்களை திரட்டும் பணியில் இந்த முழக்கத்தை திட்டமிட்டு நடைமுறை முழக்கமாக நாம் மாற்ற வேண்டியுள்ளது.

நில மறுவிநியோகம் என்பது துவக்கம் தான். இதனை தொடர்ந்து ஒட்டுமொத்த வேளாண் குடிமக்களுக்கு கூடுதல் அரசு ஆதரவு, பாசனம், சந்தை வசதிகள், கட்டுப்படியாகும் விளைபொருள் விலை, விரிவாக்க உதவி, ஆராய்ச்சி உதவி, நிறுவனக்கடன், இடுபொருள் மானிய உத்தரவாதம் ஆகியவையும் வேளாண் நெருக்கடியிலிருந்து தமிழகத்தை மீட்கவும் தமிழக கிராமங்களின் முகங்களை மாற்றவும் மிக அவசியம்.

நமது மாற்று கொள்கையின்கீழ் பாசனம், மின்சாரம், வேளாண் பொருட்களை சேமித்து வைக்க கிடங்குகள், குளிர்சாதன வசதிகள், கிராமப்புற சாலைகள்  உள்ளிட்ட  கட்டமைப்பு வசதிகளை அரசு உருவாக்க வேண்டும். இவற்றை செய்ய,  தனியார்மய, தாராளமய கொள்கைகள் கைவிடப்பட்டு, பொதுத்துறை  முதலீடுகள் உயர்த்தப்படவேண்டும் என்பது இடது மாற்றின் அம்சம்.. அதேபோல், சிதைந்துகிடக்கும் மாநில வேளாண் விரிவாக்க அமைப்பை தூக்கி நிறுத்தி வலுப்படுத்த அரசு நடவடிக்கை தேவை என்பதை மக்கள் இயக்ககங்களின்மூலமாக கொண்டு செல்லும் பொழுது இடது மாற்றுப் பார்வையில் நமது அணிதிரட்டல் நடைபெறும்.. நமது மாற்று பார்வையில்: :வேளாண் ஆராய்ச்சிக்கான ஒதுக்கீடுகள் உயர்த்தப்பட்டு, மகசூல் அதிகரிக்க வழி செய்யவேண்டும். பல்வகை வேளாண் மற்றும் பால் கூட்டுறவு அமைப்புகளையும் கூட்டுறவு வங்கிகளையும் வலுப்படுத்தி, வேளாண் மற்றும் கால்நடை துறைகளில் பாடுபடும் சிறு குறு உற்பத்தியாளர்களுக்கு அரசு உதவும். பெரும் உற்பத்தியின் வலிமையை சிறு குறு விவசாயிகளுக்கு ஏற்படுத்தவேண்டும் என்பது நமது மாற்று கொள்கை. வேளாண் துறை மற்றும் வேளாண் குடிமக்கள்  நலனுக்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசை நிர்ப்பந்திப்போம். குறிப்பாக, விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை மற்றும் கொள்முதல் உத்தரவாதம், தேசீய வேளாண் விரிவாக்க அமைப்பு, ஆராய்ச்சி அமைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துதல், குறைந்த வட்டியில் போதுமான கடன்களை வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்குதல், போதுமான இடுபொருள் மானியங்களை உறுதியாகவும் உரிய நேரத்திலும் வழங்குதல்,  ஊராக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பொதுத்துறை முதலீடுகள் ஆகிய கொள்கைகளை மத்திய அரசு பின்பற்றிட நாம் நிர்ப்பந்திப்போம்.

கிராமப்புறங்களில் வேளாண்மையை பிரதான வருவாயாக கொண்டுள்ள குடும்பங்கள் 18 சதவிகிதம் தான். 65 சதவிகித குடும்பங்களின் பெரும்பகுதி வருமானம் உடல் உழைப்பிலிருந்து கிடைக்கிறது.  தமிழக கிராமப்புறங்களில் மொத்தக் குடும்பங்களில் கூலி வேலை செய்து வாழ்பவர்கள் மூன்றில் இரண்டு பங்கு குடும்பங்கள். மொத்த கிராமப்புற குடும்பங்களில் சம்பளத்திற்கு ஒருவராவது வேலை செய்யும் குடும்பங்கள் 10 சதவிகிதம்.  இத்தகையோரில் 78 சதவிகிதம் பேரின் மாத வருமானம் ரூ.5000-ம ரூ.5000-க்கு குறைவு. 16 சதவிகிதத்தினர் ரூ,5000 முதல் ரூ.10000 வரை பெறுகின்றனர். ஆக, தமிழக கிராமங்களில் கணிசமான பகுதியினர் வறுமையில் வாடுகின்றனர். மாத வருமானம் ரூ.10,000-மும் அதற்கும் குறைவாகவும் உள்ளவர்களே கிராமப்புறத்தில் பெரும்பான்மையான குடும்பங்கள். இவர்களுடைய கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மனைப்பட்டா, வீட்டு வசதி போன்ற பிரச்சனைகளுக்கு இடது ஜனநாயக மாற்று முன்னுரிமை அளிக்கும்.

தொழில் துறையில் இடது ஜனநாயக முன்னணியின் திட்டம்

விடுதலைக்குப் பின்பும், குறிப்பாக கடந்த இருபத்தைந்து ஆண்டு தாராளமய காலத்திலும், தனியார் பெரும் கம்பெனிகளுக்கு வரிச்சலுகைகளும் கட்டமைப்பு வசதிகளும் அளித்து, அவர்களது லாபத்தை அதிகரிப்பதன் மூலம் தான் முதலீடுகளையும் வேலை வாய்ப்புகளையும் பெருக்க முடியும் என்பதே அடுத்தடுத்து வந்த மத்திய மாநில அரசுகளின் தாரக மந்திரமாக  இருந்துள்ளது. கொடுக்கப்பட்ட சலுகைகள் உண்மையிலேயே எந்த அளவிற்கு முதலீடுகளை ஈர்த்துள்ளன, வேலை வாய்ப்புகள் போதுமான அளவு உருவாக்கப்பட்டுள்ளனவா என்றெல்லாம் எந்த ஆய்வும் அரசுகளால் மேற்கொள்ளப்படவில்லை. நாம் தமிழகத்தில் பலமுறை கோரியும் சட்டமன்றத்தில் இவை தொடர்பான வெள்ளை அறிக்கை வைக்கப்படவில்லை. கார்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகள் மட்டும் அள்ளிக்கொடுக்கப்படுகின்றன.

நமது மாற்றுக் கொள்கையின்கீழ் இதுவரை மாநில அரசுகளால்  பெரும்கம்பெனிகளுடன் போடப்பட்டுள்ள அனைத்து தொழில்சார்  புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிசீலிக்கப்பட்டு, அவற்றின் அமலாக்கம் உழைப்பாளி மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் மாற்றப்படும். கம்பெனிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகள் வேலை வாய்ப்பு அதிகரிப்புடன் இணைக்கப்படும். பயனளிக்காத ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும்.

தாராளமய கொள்கைகளால் சிறு குறு தொழில் முனைவோர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவர்களுக்கு என்று இருந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டு, பெரும் நிறுவனங்களுடன் சமமற்ற ஆடுகளத்தில்  போட்டிபோடும் நிர்ப்பந்தத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தற்சமயம் ஆட்சியில் உள்ள பாஜக பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலமும் ஜிஎஸ்டி மூலமும் சிறுகுறு தொழில்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. அந்நிய நேரடி முதலீட்டை வரவேற்பது என்ற பெயரில் சிறு குறு தொழில்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. நமது மாற்றுக்கொள்கையின்கீழ், இத்தகைய அணுகுமுறை முற்றிலும் தவிர்க்கப்படும். சிறு குறு தொழில்முனைவோர் ஊக்கம் பெற, அவர்களுக்கு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அரசு அறிவித்துள்ள சலுகைகள் உரிய நேரத்தில் அவர்களை வந்தடையும். சிறு குறு தொழில்முனைவோருக்கு நிறுவனக்கடன் வசதி மிக அவசியம். மாநில அளவில் நமது மாற்று திட்டம் இதனை செய்யும். எனினும், மத்திய அரசின் கொள்கைகளில் மாற்றம் காணாமல் கடன் வசதி மேம்பாட்டில் ஓரளவு தான் செய்ய முடியும். ஆகவே, மத்திய அரசின் கொள்கைகளில் தக்க மாற்றம் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதைப் போலவே கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை தமிழகத்தில் இடது ஜனநாயக அணி ஆவணத்தில் காணலாம்.

கட்டமைப்பு தொடர்பான இடது ஜனநாயக முன்னணியின் திட்டம்

ஆற்றல் துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும். மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்திற்கு உரிய கவனம் செலுத்தப்படும். சுற்றுச்சூழல் அம்சங்களையும் கணக்கில் கொண்டு மின் உற்பத்திக்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அனைத்துவகை ஆற்றல் தோற்று வாய்களும் கணக்கில் கொள்ளப்பட்டு மின் உற்பத்திப் பெருக்கம் திட்டமிட்டு அமலாக்கப்படும்.

மின்சாரம் உள்ளிட்ட ஆற்றல் துறையில் போதிய முதலீடுகள் அரசாலும் கூட்டு நிறுவனங்கள் மூலமும் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசு, தொழில் நிறுவனங்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்டு அனைத்து தொழிற்சங்கங்களின் பங்களிப்பும் இதில் வரவேற்று பெறப்படும். புதுப்பிக்கத்தகுந்த ஆற்றல் தோற்றுவாய்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

போக்கு வரத்து, தகவல் தொடர்பு, ஆற்றல், பாசனம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு துறைகளிலும் அந்நிய இந்திய பெருமுதலாளிகளின் முதலீட்டைப்பெறுவதையே மையப்படுத்தும் அணுகுமுறைக்கு மாறாக அரசே முன்கை எடுக்கும். இதற்கான வளங்களை  மத்திய அரசுடன் வாதாடியும், ஊழலை முற்றிலுமாக ஒழித்தும், ஊழலற்ற வரிவசூல் மூலமும்  கனிமப்பொருள்கள் உள்ளிட்ட தமிழக இயற்கை வளங்களை அரசே பயன்படுத்தியும், வரி அல்லாத வளங்களை திரட்டியும் அரசு செயல்படும்.

போக்குவரத்து, ஆற்றல் துறைகள் உள்ளிட்டு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் திறம்பட பராமரிக்கப்பட்டு, அவற்றின் பொதுநல தன்மை பாதுகாக்கப்பட்டு, அவற்றை லாபகரமாக செயல்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்நிறுவனங்களில் பணிபுரியும் உழைப்பாளி மக்களின் உரிமைகளும் நலன்களும் பாதுகாக்கப்படும்.

தமிழகத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்கவும் பொருத்தமான வகைகளில் பயன்படுத்தவும் திட்டங்கள் உருவாக்கப்படும். தமிழகத்தின் நீர்வளங்கள் பயன்பாடும் பராமரிப்பும் தொலைநோக்கு அடிப்படையில் திட்டமிடப்படும். பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை கணக்கில் கொண்டு, இயற்கை சீற்றங்களை எதிர்கொள்வதற்கான, அவற்றால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் குறைக்கவும் உதவும் வகையில்  பேரிடர் மேலாண்மை வலுப்படுத்தப்படும்.

வளர்ச்சிக்கான வளம் திரட்டுதல்: இடது ஜனநாயக மாற்று அணுகுமுறை

மக்களுக்கு நன்மை செய்திட அரசின் ஒதுக்கீடுகளை கணிசமாக அதிகரிக்க வேண்டும். இதற்கு மத்திய அரசுடன் கூடுதல் வளங்கள் மாநிலங்களுக்கு தரப்படவேண்டும் என்ற போராட்டத்தில் தெளிவாக நிலை எடுக்கப்படும். வரிவசூலில் ஊழலுக்கு முடிவுகட்டி  அரசின் வரிவருமானம் உயர்த்தப்படும். வரி வருவாய் திரட்ட பயனளிக்காத, தேவையற்ற  வரி சலுகைகள் கண்டறியப்பட்டு நீக்கப்படும்.

இடது ஜனநாயக மாற்றின் சில பொது பொருளாதார அம்சங்கள்

குறைந்தபட்சக் கூலியை தொழிலாளர் அமைப்புகளைக் கலந்து நிர்ணயித்து சட்டபூர்வமாக உறுதிசெய்வது, விலைவாசி உயர்வுக்கேற்ப ஊதிய மாற்றம் செய்வது, ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது, உழைப்பாளி மக்களுக்கு குறைந்தபட்ச சமூக பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிசெய்வது, பொதுவிநியோக அமைப்பை பாதுகாப்பது, வலுப்படுத்துவது: சுற்றுச்சூழலுக்கு சிறப்பு கவனம் செலுத்துவது, மக்கள் ஒப்புதலுடன் தொழில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவது, முதியோர் நலன் காப்பதற்கான சிறப்பு திட்டங்களை உருவாக்கி அமலாக்குவது போன்றவையும் மாற்றுக் கொள்கைகளின் பகுதியாகும்.

இத்தகைய இடது ஜனநாயக முன்னணியின் அடிப்படை பொருளாதார மாற்றுக்கொள்கைக்கான போராட்டங்கள் இடது ஜனநாயக முன்னணியை கட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கும்.