சமுதாய மாற்றம் பற்றிய மார்க்சீய சித்தாந்தத்தில் தத்துவம் வகிக்கும் பங்கு

பி. டி. ரணதிவே

(இக்கட்டுரை, மார்க்ஸ் நினைவுநாள் நூற்றாண்டை ஒட்டி பி.டி.ரணதிவே எழுதிய கட்டுரையின் சுறுக்கம்)

மார்க்ஸ் மறைவின் நினைவு நூற்றாண்டைக் கொண்டாடும் இவ்வேளையில் மற்றொரு பேரறிஞரான பிரடரிக் எங்கல்சுடன் இணைந்து மார்க்ஸ் உருவாக்கித்தந்த தத்துவம் தொடர்ந்து வெற்றிகரமாக முன்னேறி வருவதைக் காண்கிறோம். சமுதாய வளர்ச்சி மற்றும் மாற்றங்கள் பற்றிய மார்க்சிய சித்தாந்தம் இறந்த காலத்தைப் பற்றி புரிந்துகொள்வதற்கு மட்டுமல்ல, சமுதாய மாற்றத்தின் விதிகளுக்கு உட்பட்டு உணர்வுப் பூர்வமாக வரலாற்றை உருவாக்குவதற்கு இன்று மக்களுக்குத் துணை நிற்கிறது.

வரலாறெங்கும் காணக்கிடைக்கும் புரட்சிகளிலேயே சோசலிசப் புரட்சிதான் முதன் முதல் உணர்வுபூர்வமாக நடத்தப்பட்ட புரட்சியாகும். அதாவது புரட்சியின் முன்னணி சக்திகள் தங்களது குறிக்கோள்களையும் லட்சியங்களையும் முழுவதுமாக உணர்ந்து செயல்பட்டு உருவாக்கிய புரட்சியாகும்.

அனைத்து சகாப்தங்களிலும் மனித குல நடவடிக்கைகளின் மீது செல்வாக்கு வகிக்கின்ற தத்துவ ஞானம், மதம், பாரம்பரியங்கள் முதலிய அம்சங்களை வரலாறு பற்றிய பொருள்முதல்வாதம் கவனிக்காமல் புறக்கணித்துவிட்டதென பொருள்முதல்வாதத்தின் எதிரிகள் குற்றஞ்சாட்டுவதுண்டு. இத்தகைய கண்டனம் சரியானதல்ல. ஏனென்றால் மார்க்சிய மூலவர்கள் தங்களது தத்துவத்தை விளக்கமாகக் கூறும்போது, மேற்சொன்ன தத்துவங்களின் செல்வாக்கைப் பற்றி கவனிக்க என்றுமே தவறியதில்லை.

உற்பத்தி உறவுமுறைகளில் மாறுதல் ஏற்பட்டவுடன், மனிதகுலம் ஒரு தத்துவத்திலிருந்து மற்றொரு தத்துவத்திற்கு தானாகவே தாவிக் குதித்துவிடும் என அவர்கள் கருதியிருந்தார்களேயானால் , பழைய தத்துவ அரசியல் அமைப்புகள் புதியவற்றிற்கு எளிதில் வழிவிட்டு ஒதுங்கிவிடும் என அவர்கள் கருதியிருந்தார்களேயானால் பழைமையான கருத்துகளை எதிர்த்து ஒரு தத்துவப் போராட்டத்தை நடத்தியிருக்க மாட்டார்கள். முதலாளித்துவ அரசைத் தூக்கியெறிவதற்கும், பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசை உருவாக்கும் வகையிலும் தொழிலாளி வர்க்கத்திற்கு ஒரு அரசியல் ஸ்தாபனம் வேண்டும் என விரும்பியிருக்க மாட்டார்கள்.

மேலோங்கிவரும் புதிய உறவுகளை எதிர்ப்பதில் பழைய தத்துவங்கள் போன்ற மேல்கட்டுமானங்களின் முனைப்பான பாத்திரம் பற்றி அவர்கள் முழுவதுமான விளக்கியிருக்கிறார்கள். ஏற்கனவே வழக்கத்திலிருக்கும் தத்துவங்களையும் ஆதிக்கம் புரியும் அரசியல் அதிகாரத்தையும் எதிர்த்துப் போராடுவது தவிர்க்க முடியாதது. ஏனெனில் புதிய மாற்றங்களினால் பழைய ஆதிக்க வர்க்கங்களின் நலன்கள் பாதிக்கப்படுகின்றன. ஆகவே அவர்களது தத்துவங்களை எதிர்ப்பது அவசியமாகிறது.

மாற்றத்தை ஏற்படுத்துவதிலும், பழைய அமைப்பை எதிர்த்துப் போராடுவதிலும் அக்கறை கொண்ட மக்கள் தங்களது பழைய கருத்துகளை உடனடியாகக் கைவிட்டுவிடுவதில்லை. இதன் காரணமாக பிற்போக்குத்தனமான திசை திருப்பும் தத்துவங்களுக்கு அவர்கள் இரையாகின்றனர். இதனால் சமுதாயப் போராட்டத்தை ஒருமுகப்படுத்துவதில் தடையும் தாமதமும் ஏற்படுகின்றன.

ஆதிக்கச் சக்திகளின் சமுதாய உணர்வு என்பது சக்தியற்று நிற்கும் உணர்வு அல்ல. வளர்ந்துவரும் மாற்றங்களைக் கண்டு அது அமைதியாக இருப்பதில்லை. புதிய மாற்றங்களை எதிர்த்துப் போராடவரும்; புதுமையான சமுதாய உணர்வுகள் தோன்றும்போது அவைகளை முழுமையாக முறியடிக்க முன்வரும்.

இந்தியா சுதந்திரமடைந்து முப்பத்தைந்து ஆண்டுகள் ஆகிய பின்னரும், சில தவிர்க்க முடியாத பொருளாதார விளைவுகள் ஏற்பட்டுவிட்ட பின்னரும், மதவெறி, சாதி வெறி, தேசிய ஒற்றுமை உணர்வின்மை இவையெல்லாம் குறைவதற்கு பதிலாக அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.

இது ஏன் என்று பலருக்கு குழப்பமாகவே இருக்கிறது. விடுதலைப் போராட்டம் நடைபெற்ற நீண்ட நெடிய காலத்தில் முற்போக்கு சக்திகள் அன்று நடத்திய போராட்டங்களை மீண்டும் புதிதாக நடத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வர்க்கப் போராட்டமோ, மார்க்சியமோ இந்திய சூழ்நிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை எனவும், சாதி, மத உணர்வுகள் என்றும்போல் தொடர்ந்து வலுவாக இருந்துவருகின்றன எனவும் சிலர் வாதிடுகின்றனர். முந்தைய காலங்களில் இவர்கள் ஒரு வாதத்தை எழுப்புவதுண்டு இந்தியாவின் ஆன்மீகப் பின்னணியும் பாரம்பரியங்களும் மேற்கத்திய பொருள்முதல்வாதக் கண்ணோட்டங்களினால் எக்காலத்திலும் பாதிக்கப்பட மாட்டா என்ற கருத்தைக் கொண்டிருந்தனர்.

பொருளாதார வளர்ச்சிதான் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் உந்து சக்தி:

1892 ஆம் ஆண்டு “கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும்’ என்ற தனது ஆங்கில நூலுக்கு எங்கல்ஸ் ஒரு முன்னுரை எழுதினார். அதில் பின்வருமாறு கூறுகிறார். “நான் வரலாற்றுப் பூர்வமான பொருள் முதல்வாதம் என்ற சொற்களை ஆங்கிலத்திலும் இதர மொழிகளிலும் பயன்படுத்தும்போது, பிரிட்டிசாரின் மரியாதைக்கு, மதிப்புக்கொடுக்கும் மனப்பாங்கு அதிர்ச்சியடையாது என நம்புகிறேன்” இந்த சொற்றொடரை நான் எதற்காக பயன்படுத்துகிறேன்?

வரலாற்றில் நிகழும் அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளுக்கும் உந்து சக்தியாகத் திகழ்வது இறுதியான ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சிதான். இந்த மாறுதலுக்குக் காரணமான உந்து சக்தி என்பதைக் குறிப்பிடவே பயன்படுத்துகிறேன். உற்பத்தி முறையிலும் பொருட்களின் பரிவர்த்தனையிலும் மாறுதல் ஏற்படுவதும் அதன் விளைவாக சமூக அமைப்பானது தெளிவான, வர்க்கங்களாகப் பிளவுபடுவதும், அதன் விளைவாக ஒன்றுக்கு மற்றொன்று எதிராக வர்க்கப் போராட்டங்களில் ஈடுபடுவதும்தான் வரலாற்றில் நிகழும் அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளுக்கும் முக்கியக் காரணங்களாகத் திகழ்கின்றன என்பதைக் குறிப்பிடவே மேற்கூறிய சொற்றொடரைப் பயன்படுத்துகிறேன்” (வரலாற்று ரீதியான பொருள்முதல்வாதம்)

பொருளதார அடிப்படைதான் இறுதியாக நிர்ணயிக்கின்ற சக்தி என்ற கருத்தை வலியுறுத்தும் எங்கல்ஸ், அதே வேளையில் பொருளாதார அடிப்படை அல்லாமல் வேறு சில அம்சங்களுக்கு பங்கே இல்லை எனப் பொருள்கொள்ளக் கூடாது எனவும் விளக்குகிறார். சி. ஸ்மித் என்பவருக்கு 1990 ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தில் ‘பொருளாதார அமைப்புதான் அடிப்படைக்  காரணம்’ என்றாளும் கூட தத்துவங்களும் (சமூக அமைப்பின் மீது) தங்களது செல்வாக்கைச் செலுத்துகின்றன என்பதை மறுக்க முடியாது. தத்துவங்களின் விளைவு இரண்டாம்பட்சமே என்பது வேறு விசயம். இந்த உண்மையை இந்த மனிதர் இன்றும் அறிந்திருக்கவில்லையென்றால், அவர் எழுதும் விசயங்களைப் பற்றியும் அவர் புரிந்துகொண்டிருக்க முடியாது’ எனக் குறிப்பிடுகிறார்.

ஜே.ப்ளோக் என்பவருக்கு தான் எழுதிய கடிதத்தில் (செப்டம்பர் 1890) நாங்கள் இதைப்பற்றி மேலும் விளக்கும் வகையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின்படி யதார்த்த வாழ்வின் உற்பத்தியும் மறு உற்பத்தியுமே இறுதியாக வரலாற்றை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குகின்றன. மார்க்சோ, நானோ இதற்கு மேல் எதையும் வலியுறுத்திச் சொன்னதில்லை. ஆகவே பொருளாதார அம்சம் மட்டுமே நிர்ணயிக்கும் சக்தி கொண்டது என எவராவது திருத்துக் கூறுவார்களேயானால் அது அர்த்தமற்ற பிதற்றல் என்றே கொள்ள வேண்டும். பொருளாதாரச் சூழல் என்பது அடிப்படை – ஆனால் அதன் மேல்கட்டுமானத்தில் உள்ள பல்வேறு அம்சங்களும் இதில் பங்கு வகிக்கின்றன. வர்க்கப் போராட்டத்தின் அரசியல் வடிவங்கள் மற்றும் அதன் விளைவுகள், உதாரணமாக வெற்றிபெறும் வர்க்கப் போராட்டத்திற்குப் பின் உருவாகின்ற அரசியல் சாசன சட்டங்கள் நீதி நிர்வாக முறைகள், இந்தப் போராட்டத்தில் நேரடியாக பங்கேற்பவர்களின் மனதில் அரசியல் நீதி, தத்துவஞானம், மதம் ஆகிய அம்சங்களின் மற்றும் இத்தகைய அம்சங்களின் மற்றும் இத்தகைய அம்சங்களை உள்ளடக்கிய பொதுவான தத்துவங்களின் பிரதிபலிப்புகள் ஆகிய அனைத்துமே வரலாற்றில் நிகழும் போராட்டங்களின் வளர்ச்சிப் போக்கில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இன்னும் சொல்லப்போனால், இந்த அம்சங்கள் பல நேரங்களில் போராட்டங்களின் வடிவத்தை தீர்மானிப்பதில் அதிக செல்வாக்கு வகிக்கின்றன. இத்தகைய பல்வேறு அம்சங்கள்: ஒன்றுக்கொன்று பாதிப்புகளை உண்டாக்குகின்றன. அதனூடே பல தற்செயல் நிகழ்ச்சிகள் நிகழ்வதும் உண்டு . இந்த தற்செயல் நிகழ்ச்சிகளுக்கான தொடர்பு என்ன என்பது நிரூபிக்கப்பட முடியாமல் இருக்கலாம். அதன் விளைவாக அவை கணக்கிலெடுத்துக் கொள்ளத் தேவையில்லாத ஒன்றாகவும் இருக்கலாம். எனினும் இறுதியாக வரலாற்றை நிர்ணயிக்கும் சக்தி, பொருளாதார இயக்கம் தேவையான ஒன்றாக தன்னை ஊர்ஜிதம் செய்துகொள்கின்றது. இப்படிப்பட்ட சிக்கலான தன்மை, இந்த தத்துவ அணுகுமுறையை ஒவ்வொரு காலகட்டத்திற்கும் பொருத்திப் பார்க்கும்போது தோன்றத்தான் செய்யும். இப்படிப்பட்டதொரு எதார்த்த அணுகுமுறை இல்லையென்றால், வரலாற்றைப் பற்றிய ஒரு ஞானம் சாதாரண பெருக்கல் வாய்ப்பாடு போல சுலபமானதாகக் கருத இடமளிக்கும்”

ஜோசப் ப்ளோக் எழுப்பி கேள்விக்கே எங்கல்ஸ் மேற்கண்டவாறு கூறினார். அந்தக் கேள்வி என்ன? வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின் படி, வரலாற்றை நிர்ணயிக்கும் அம்சம் யதார்த்த வாழ்வில் நிகழும் உற்பத்தியும் மறு உற்பத்தியும் என்று கூறுகிறீர்கள். அப்படியானால், இதை எப்படி புரிந்துகொள்வது? பொருளாதார உறவுகள் மட்டுமே சமூக வாழ்வில் அம்சமாகிவிடுமா? அல்லது தாங்களாகவே செயல்படுகிற மற்ற உறவுகளுக்கு பொருளாதார உறவுகள் ஓரளவு அடிப்படையாக அமைகின்றனவா? வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் முழுக்க முழுக்க அரசியல் வம்சாவளி ஆட்சி தவிர தனிநபர் நலன்கள் கூட பாத்திரம் வகித்ததில்லையா?” என்ற ப்ளோக்கின் இந்தக் கேள்வியைக் குறிப்பிட்டு எங்கல்ஸ் ஸ்மித்துக்கு எழுதிய கடிதத்தில் (அக்டோபர் 1980) பின்வருமாறு குறிப்பிடுகிறார்; “பொருளாதார இயக்கத்தின் அரசியல் பிரதிபலிப்புகள் முதலிய ஒவ்வொரு எதிர் விளைவும் அந்த இயக்கத்தையும் பாதிக்கும் என்பதையும் நாம் மறுக்கிறோம் என ப்ளோக் நினைப்பாரேயானால் அவர் சுழற்காற்றாடி எந்திர மில்லில் சிக்கிக் கொண்டு தவிக்கிறார் என்றுதான் பொருள்”

பொருளாதார மாற்றங்களுக்கு எதிரான அரசுகள் சிதறும்

மார்க்சும் எங்கல்சும் தங்களது காலத்திய நிகழ்ச்சிப் போக்குகளையும், இறந்த காலத்தையும் பற்றி ஆய்வு செய்யும்போது, பொருளாதார அம்சத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த அதே வேளையில் மற்ற அனைத்து அம்சங்களையும் கணக்கில் கொண்டே ஆய்வு செய்தனர், இறந்தகாலத்தை பற்றி ஆய்வுசெய்யும்போது, வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் ஒரு கட்டத்தில் ஏற்பட்ட அரசு பிற்கால வரலாற்றில் அது வகித்த பாத்திரம் பற்றியெல்லாம் அவர்கள் கணக்கிலெடுத்துக் கொள்ளத் தவறவில்லை. அரசு அதை ஊக்குவித்துச் சென்றதுமுண்டு அல்லது அத்தகைய பொருளாதார மாற்றங்களுக்கு எதிராக செயல்பட்டதும் உண்டு. எதிராகச் செயல்படும் நேரங்களில் அரசு துண்டுதுண்டாக நொறுங்கிவிடும், பொருளாதார மாற்றம் ஒரு குறிப்பிட்ட திசையில் செல்வதைத் தடுத்து, வேறு ஒரு பாதையில் செல்லவைக்கும் பணியையும் அரசு மேற்கொள்வதுண்டு. இவைகளைப் பற்றியெல்லாம் மார்க்சும் எங்கல்சும் கவனிக்கத் தவறவில்லை.

1894 ஆம் ஆண்டு டபிள்யூ, போர்ஜியஸ் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் எங்கல்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “அரசியல், சடம், தத்துவம், மதம், இலக்கியம், கலை முதலியவற்றின் வளர்ச்சிக்கு பொருளாதார வளர்ச்சியே அடிப்படையாகும். ஆனால் இவையனைத்தும் ஒன்றின் மீது ஒன்றும் பொருளாதார அடிப்படையின் மீதும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. பொருளாதாரச் சூழ்நிலை மட்டும்தான் காரணமாகவும் தனித்துச் செயல்படக்கூடியதாகவும் இருக்கிறது. மற்ற அனைத்தும் அதற்கு உட்பட்டு இணைந்து செல்லக் கூடியதாகவே இருக்கும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். மாறாக, பல்வேறு அம்சங்களின் பரஸ்பர நிகழ்வுகளுக்கு அடிப்படைப் பொருளாதாரத் தேவையேயாகும். அந்தத் தேவைதான் இறுதியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. அரசை எடுத்துக்கொள்வோமானால், அதனுடைய நடவடிக்கைகளுக்கு ஒரு பொருளாதார விளைவு உண்டு. தற்காப்பு வரிகளை விதிப்பது, சுதந்திரமான வணிகத்தை அனுமதிப்பது நல்லதாகவோ அல்லது மோசமானதாகவோ வரைமுறைகள் கொ?ண்டிருப்பது இவையெல்லாமே பொருளாதாரத்தின் மீது செல்வாக்கு செலுத்துகிற அம்சங்களே.

அரசியல், தத்துவம், ஆதிக்கம் செலுத்தினாலும் இறுதியாக நிர்ணயிப்பது

1648 லிருந்து 1830 வரை, ஜெர்மனியில் ஒருவகையான அரசு இருந்தது, மத சம்பந்தமான விசயங்களில் அதீதமான பயபக்தி அதீதமான ஆன்மீக ஒழுக்கம், அரசர்களுக்கும், பிரபுக்களுக்கும் அடிபணிந்து நடக்க வேண்டும் என்று அரசு செய்துவந்த போதனைகளுக்கு பொருளாதார விளைவுகள் இல்லாமலில்லை. பொருளாதார முன்னேற்றம் ஏற்பட தடையாக இல்லாமல் இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம். இதற்கு அடுத்தாற்போல் நடந்த புரட்சிப் போராட்டங்கள் நெப்போலியன் படையெடுப்புகள் நிகழும்வரை மேற்கூறிய நிலைமை நீடித்தது. அந்த நிலைமை நாட்டுக்கு ஏற்படுத்திய துயரம் கொடுமையானதாகும். இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவு, ஒரு பொருளாதார  வளர்ச்சிப் போக்கு நிகழ்ந்துவிட்டவுடனேயே சிலர் தங்கள் வசதிக்கு நினைத்துக்கொள்வதைப் போல உடனடியாக சமூக மேல்கட்டுமானத்தில் மாறுதல்களைச் செய்துவிடுவதில்லை. மனிதர்கள்தான் வரலாற்றைப் படைக்கின்றனர்; ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில்தான் அவ்வாறு செய்கின்றனர்; அந்தக் குறிப்பிட்ட சூழ்நிலைக்கு ஏற்கனவே இருந்து வரும் உறவுகளுக்குள் பிரதானமாக பொருளாதார உறவுகளே அடிப்படையாக அமைகின்றன. அரசியல் மற்றும் தத்துவம் போன்ற மற்ற உறவுகள் பொருளாதார உறவுகளின் மீது எவ்வளவு ஆதிக்கம் செலுத்தியபோதும், பொருளாதார உறவே இறுதியாக நிர்ணயிக்கும் அம்சமாக இருக்கிறது. அதன் அடிப்படையில்தான் விசயங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்”

(மார்க்ஸ் எங்கல்ஸ் கடிதங்களின் திரட்டு, புத்தகம்)

சமுதாய வாழ்வில் பொருளாதார அம்சங்கள் வகிக்கும் நிர்ணயமான பங்கின் முக்கியத்துவத்தை யாரும் ஒப்புக்கொள்ளாத காலத்தில் மார்க்சும், எங்கல்சும் அவைகளை வலியுறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனால்தான் குழப்பம் உண்டாயிற்று என்று சிலர், பொருளாதார அம்சத்திற்கு தேவைக்கு மீறிய அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்தக் குழப்பத்திற்கு மார்க்சும், நானும் ஓரளவுக்குப் பொறுப்பேற்க வேண்டும். எங்கள் எதிர்ப்பாளர்கள் எங்களது முக்கியமான சித்தாந்தத்தை மறுக்கும்போது நாங்கள் அதை வலியுறுத்திக் கூற வேண்டியிருந்தது. மற்ற அம்சங்களுக்கும் அவைகளுக்கு உரித்தான அளவில் முக்கியத்துவம் அளித்து விளக்குவதற்கு எங்களுக்கு எப்போதும் நேரமோ சந்தர்ப்பமோ, இடமோ வாய்க்கவில்லை. அதே நேரத்தில் வரலாற்றின் ஒரு பகுதியை விளக்க முற்படும்போது தத்துவத்தை நடைமுறைக்கு பொருத்திப்பார்க்கும்போது அது முற்றிலும் வேறான விசயமாக உள்ளது. அந்த விசயத்தில், தவறு எதையும் அனுமதிக்க முடியாது” என்று கூறுகிறார்.

தனிநபர் பக்தி வகித்த பாத்திரம்:

இது உண்மைதான். மார்க்சும், எங்கல்சும் எழுதிய ஒவ்வொரு விசயத்திலும் பொருளாதார  அம்சம் சமூக வாழ்வி நிர்ணயிக்கும் தன்மை வாய்ந்தது என்று வலியுறுத்திக் கூறும் அதே நேரத்தில் மற்ற அம்சங்களைப் பற்றியும் லூயி போனபார்ட்டின் 18 ஆம் புருமர் என்ற நூலைப் பற்றிக் குறிப்பிடும் எங்கல்ஸ், சமகால நிகழ்ச்சிகளை புரிந்துகொள்வதற்காக தத்துவத்தைப் பயன்படுத்தும் முறைக்கு அந்நூல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறுகிறார்.

இந்த நூலில் வரலாற்றின் ஒரு காலகட்டத்தை மதிப்பிடும்போது பொருளாதார அம்சங்களுடன் அரசியல் மற்றும் தத்துவ அம்சங்களையும் கணக்கிலெடுத்துக்கொள்ளும் மார்க்ஸ், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் பாதிப்பை விளைவிக்கும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பங்கு பற்றியும் அலசி ஆராய்கிறார். விவசாயிகள் லூயி போனபார்ட் என்பவனை சர்வாதிகாரியாக பதவியில் அமர்த்தியதற்கு ஆதரவளித்தனர். நெப்போலியன் மீது அவர்கள் கொண்டிருந்த தனிநபர் பக்தி எத்தகைய செல்வாக்கை வகித்தது என்பது பற்றி மார்க்ஸ் விளக்குகிறார்: “நெப்போலியன் என்ற பெயர் கொண்டவனால்தான் தாங்கள் இழந்துவிட பெருமையை தங்களுக்கு மீட்டுத்தர முடியும் என்பது பிரெஞ்சு விவசாயிகளின் மனதில் வரலாற்றுப் பாரம்பரியம் ஏற்படுத்தியிருந்த ஒரு நம்பிக்கையாகும் (பழைய) நெப்போலியனின் (குடும்பப்) பெயரான போனபார்ட் என்ற பெயரைக் கொண்ட ஒருவன்தான்  அதைச் செய்ய முடியும் என்று தங்களது நம்பிக்கையின்படி மக்கள் அவனை பிரெஞ்சு சக்கரவர்த்தியாக (லூயி போனபார்ட்டை) ஆக்குகின்றார்கள். மருமகனின் (முந்தைய நெப்போலியன் போனப்பார்ட்டின் மருமகன்) விருப்பம் நிறைவுபெறக் காரணம், அந்தக் கருத்து பிரெஞ்சு மக்களில் மிகப்பெருமளவு வர்க்கங்களின் குறிப்பிட்ட கருத்துடன் ஒத்திருந்ததே” என மார்க்ஸ் குறிப்பிடுகிறார். இவ்வாறு பொருளாதார வளர்ச்சிப் போக்கினால் கட்டவிழ்த்து விருப்பப்படும் சமுதாய மாறுதலில் மேல் கட்டுமானமாக உள்ள அம்சங்கள் மனிதர்களின் அந்தந்தக் காலத்திய உணர்வுகளிலும் பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன என்பதை மார்க்சியம் அங்கீகரிக்கிறது. அதே சமயத்தில் எவ்வாறு மனிதர்களின் உணர்வுகளும், சித்தாந்தங்களும் பொருளாதார அம்சங்களுக்குத் தக்கவாறு மாறுகின்றன என்பதை மார்க்சியம் சரியாகவே கணித்துள்ளது.

சட்டங்களைப் பற்றிய பார்வை:

ஒரு சமுதாய அமைப்பின் சட்டங்களைப் பற்றிக் குறிப்பிடும் எங்கல்ஸ் பின்வருமாறு கூறுகிறார்: ஒரு நவீன அரசமைப்பில், சட்டம் என்பது பொதுவான பொருளாதார சூழ்நிலைக்கும், அதன் வெளிப்பாடுகளுக்கும் பொருந்துவதாக அமைய வேண்டும். அது மட்டுமல்ல, அந்தச் சட்டத்தில் முன்னுக்குப் பின் முரணில்லாத வகையில் உள்ளார்ந்த இசைவும் இருக்க வேண்டும். அதாவது உள் முரண்பாடுகளின் காரணமாக சட்டம் தன்னையே மறுத்துவிடக் கூடாது. இதை நிறைவேற்ற முயலும்போது பொருளாதாரத் தேவைக்கு சரியான பிரதிநிதித்துவத்தை சட்டம் வழங்குவதற்கு மேலும் மேலும் பாதிப்பு ஏற்படுகிறது. சட்டங்கள் என்பவை ஆதிக்க வர்க்கங்களின் அப்பட்டமான கலப்பற்ற எண்ணங்களை, விருப்பங்களை பிரதிபலிப்பது மிகவும் அபூர்வம். அப்படிச் செய்தால் மனித உரிமை பற்றிய பார்வையை அது பாதித்துவிடுமல்லவா? புனிதமான நெப்போலியனிய சட்டக் கோட்பாடுகளில் கூட 1792-1796 காலத்திய புரட்சிகர பூர்ஷ்வாக்கள் மனித உரிமைபற்றி நெடுங்காலமாகக் கொண்டிருந்த கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மனித உரிமையைப் பற்றிய கருத்தை சட்டக் கோட்பாடுகளாக மாற்றிய பின்னர், பாட்டாளி வர்க்கத்தின் சக்தி வளர்ந்தோங்கியதன் விளைவாக மனித உரிமை பற்றிய அக்கருத்தை தினமும் பலவாறாக மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. முதலில் பொருளாதார உறவுகளை சட்டக் கோட்பாடுகளாக மாற்றும்போது ஏற்படும் முரண்பாடுகளைக் களைந்து ஒரு இசைவான அமைப்பாக சடங்களை மாற்றும் முயற்சி நடைபெறுகிறது. அதன் பிறகு தொடர்ந்து நிகழும் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தும் நிர்ப்பந்தங்கள், சட்ட அமைப்பின் மீது செலுத்தும் செல்வாக்கு ஆகியவற்றின் காரணமாக ஏற்கனவே உருவாக்கப்பட்ட சட்டங்கள் அடிக்கடி மீறப்படுகின்றன. இது சட்டங்கள் பற்றிய வளர்ச்சிப் போக்கின் நிலைமையாகும். (மார்க்ஸ் – எங்கல்ஸ் கடிதங்கள்)

முழுக்க முழுக்க சட்டத்தின் எல்லைக்குள் நின்று பேசுவதாகவும், காரணத்திலிருந்துதான் விளைவுகளை ஆராயும் முறையிலேயே செயல்படுவதாகவும் சில சட்ட அறிஞர்கள் கற்பனை செய்துகொள்கின்றனர். இது உண்மையல்ல. சட்ட அறிஞர்களின் மூளைக்குள் உதிக்கும் ஒரு தலைகீழ் பார்வை என்று எங்கல்ஸ் குறிப்பிடுகிறார். இந்தத் தலைகீழ் வடிவத்தைத்தான் நாம் தத்துவக் கண்ணோட்டம் என அழைக்கிறோம். இத்தகைய கண்ணோட்டம் பொருளாதார அடிப்படையின் மீதும் செல்வாக்கைச் செலுத்த முடியும். சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் சில மாற்றங்களையும் ஏற்படுத்தக் கூடிய. இதற்கு ஒரு எடுத்துக்காட்டை எங்கல்ஸ் தருகிறார். பாரம்பரிய உரிமை என்பதற்கு அடிப்படையாக அமைவது பொருளாதாரம்தான். குடும்பத்தைப் பற்றிய வளர்ச்சி மட்டம் எங்கும் ஒரே மாதிரி இருக்கும்போது இது சரியானதே ஆனால், இங்கிலாந்திற்கும், பிரான்சிற்கும் இதே விசயத்தில் வேறுபாடுகள் உள்ளன. இங்கிலாந்தில் ‘உயில்’ எழுதுபவர்களுக்கு அபரிமிதமான சுதந்திரம் உண்டு ஆனால் பிரான்சில் ‘உயில்’ எழுதுவதற்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் அடிப்படை என்ன? இவற்றிற்கெல்லாம் முக்கியமான காரணங்கள் பொருளாதாரக் காரணங்களே தவிர வேறில்லை. காரணம் சொத்துரிமையை விநியோகம் செய்வதன் தேவை இந்த இரு தேசங்களிலும் இருவேறுவிதமான செல்வாக்குகள் செலுத்துகின்றன.

மனம் சிந்தனை பற்றி :
பொருளாதார நடவடிக்கைகளுக்கு நேரடியாகத் தொடர்பில்லாத மனம், சிந்தனை பற்றிய தத்துவங்களின் அடிப்படையே வேறு. அவை இறந்த காலத்தினாலேயே அதிக ஆதிக்கம் செலுத்தப்படுபவை. இறந்த காலத்தின் அறிவு அல்லது அறியாமையின் குவியலே அவை. நிகழ்காலம், இறந்த காலத்தை சிறிது மாற்றி புதிய வடிவில் அவர்களை வேரூன்றச்செய்கிறது. மதம், தத்துவஞானம் ஆகியவற்றில் வரலாற்றுக்கு முந்திய காலத்திய சிந்தனைகளின் பாதிப்பு உண்டு. உதாரணமாக, மனிதன் தன்னைப்பற்றியும் , இயற்கையைப் பற்றியும் கொண்டிருந்த பண்டைக்காலத்திய தவறான எண்ணப்போக்குகளின் பாதிப்பும் இருக்கும்.
“என்னைப் பொறுத்தவரை, இந்தத் துறைகளிலும் கூட, பொருளாதார வளர்ச்சியே இறுதியாக மேலாதிக்கம் செலுத்தக்கூடியது என்பது நிலைநிறுத்தப்பட்ட உண்மை. ஆனால் இந்தக் குறிப்பிட்ட துறைகளின் சில நிபந்தனைகளுக்குட்பட்டுத்தான் அந்த உண்மை செயல்படுகிறது. உதாரணமாக தத்துவஞானத்தை எடுத்துக் கொள்ளுங்கள். முந்தைய தலைமுறையினர் அளித்திருக்கும் தத்துவஞான விஷயங்களின் மீது பொருளாதார செல்வாக்கு செயல்படுகிறது (இது பொதுவாக அரசியல் வெளிப்பாடு போன்றவை மூலமாக செயல்படுகிறது). இங்கு பொருளாதாரம் புதிதாக எதையும் படைப்பதில்லை. ஆனால் ஏற்கனவே நடைமுறையிலிருக்கும் சிந்தனைப் போக்கில் மாறுதல் செய்து வளர்ச்சி பெறச் செய்கிறது. இதுவுங்கூட பெரும் பகுதி மறைமுகமாகவே நடைபெறுகிறது. ஏனெனில் அரசியல் சட்ட தார்மீ்க தாக்கமே தத்துவஞானத்தின் மீது நேரடியான செல்வாக்கைச் செலுத்துகின்றன.”(மார்க்ஸ்-எங்கெல்ஸ் கடிதங்கள் பக்கம்–401)

மதங்களின் மீது செல்வாக்கு

பொருளாதார நடவடிக்கையினின்றும் வேறுபட்டது என்று ஒதுக்கி வைக்கப்படும், மதமானது பல்வேறு வரலாற்று கால கட்டங்களையும் தாண்டி ஜீவிக்கிறது. ஆனால் அது பல்வேறு பட்ட காலங்களில் பல்வேறுவிதமான, வர்க்க எஜமானர்களுக்கு சேவை செய்திருக்கிறது. மதம் என்பது மிகப் புராதனமான ஆதிசமுதாய காலங்களில் தோன்றியதாகும். ஒவ்வொரு தத்துவமும், அது தோன்றிய பிறகு, அந்தந்த காலங்களில் உருவாகி வளரும் எண்ணங்களின் சூழ்நிலையில் வளர்கிறது: அந்த எண்ணங்களை மேலும் வளர்க்கிறது. அப்படிச் செய்யாவிட்டால் அது ஒரு தத்துவமாகவே இருக்க முடியாது. அந்தச் சிந்தனைகள், எண்ணங்கள் சுதந்திரமான தன்மையைப் பெற்று அதற்கே உரித்தான வழிமுறைகளின்படி சுதந்திரமாக வளர்கின்றன. எங்கெல்ஸ்(பஃவர்பாக்-எங்கெல்ஸ்) இந்த இடத்தில் எங்கெல்ஸ் கிறித்துவ மதம், நிலப்பிரபுத்துவத்தின் மறுபதிப்பான மத ஸ்தாபனமாக வளர்ந்தது எனக் குறிப்பிடுகிறார். மத்திய காலத்தில் இந்த வளர்ச்சியை அடுத்து கிறிஸ்தவ மதமும் நிலப்பிரபுத்துவம் போன்ற ஒரு அதிகார அமைப்பு முறையை ஏற்படுத்திக் கொண்டது. இந்தக் கட்டத்தில்தான் முதலாளி வர்க்கம் என்பது தோன்றுகிறது. இந்த புதிய சூழ்நிலைக்குத் தக்கவாறு மதத்திலும் மாறுதல் ஏற்படுகிறது. கத்தோலிக்க மதத்திற்கு எதிராக புராட்டஸ்டெண்ட் மதம் என ஒன்று தோன்றுகிறது. உழைக்கும் மக்களின் புரட்சிகரமான எதிர்ப்பும் இத்துடன் தோன்றுகிறது “மக்களின் உணர்ச்சிகளுக்கு மற்ற எதையும் விட மதம் அதிகம் தீனி போடுகிறது. அவர்களின் நலன்களை மதப் போர்வையுடன் பிரதிபலிக்கிறது. மேலும் வளர்ச்சிக்கு உதவிகரமாக இத்தகைய மாற்றம் ஏற்படுகிறது. எவ்வளவு முயன்ற போதிலும் புராட்டஸ்டெண்ட் மதத்தை அது தோன்றிய காலத்தில் கொன்றுவிட முடியவில்லை. காரணம் புராட்டஸ்டெண்ட் மதமானது வளர்ந்து வந்த முதலாளித்துவ நலன்களைப் பிரதிபலித்தது.”
மதம் சம்பந்தமான தத்துவம் மேலும் வளர்கிறது…ஆனால் அதனுடைய புதிய பதிப்புகள் பல்வேறு வர்க்கங்களின்  பல்வேறு சமுதாயங்களின் நலன்களை பிரதிபலிக்கின்றன. மாற்றமடையாத மதம் தனது எஜமானர்களையே மாற்றிக்கொண்டது.
போப்பாண்டவரும், கிறிஸ்துவ மத ஆலயங்களும் வாழ்க்கையில் தலையிடுகின்றன. கத்தோலிக்கர்களுக்கும், புராட்டஸ்டெண்டினருக்கும் இடையே யுத்தங்கள் நிகழ்கின்றன. இவை அனைத்தும் சமுதாய அரங்கில் தோன்றிவிட்ட புதிய உணர்வும், புதிய தத்துவமும் செயலூக்கமான பங்கை வகிக்கின்றன என்பதையே காட்டுகின்றன.
இந்தியாவில் மதவாதமும் வகுப்புவாதமும் நீடிக்க காரணம் என்ன?

இந்தியாவில் இப்போது இருந்து வரும் அரசியல் மேல் கட்டுமானமும், உணர்வுகளும் அதாவது மதவாத, சாதீய உணர்வுகளும் மாற்றங்களை முறியடித்து, முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதில் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றன. தேசிய உணர்வுகளை ஒன்றுபடுத்தி, ஏகாதிபத்தியத்தை முறியடித்த சக்திகள், நாடு விடுதலையடைந்து கடந்த முப்பதாண்டுகளாக சுதந்திரமாக இயங்கிவரும் இக்காலத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டதுபோல் தோன்றுகிறது.

ஏன் இந்த நிலைமை : சந்தேகமில்லாமல், கடந்த நூறு ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு பல பொருளாதாரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. மன்னர் சமஸ்தானங்கள் ஒழிக்கப்பட்டுவிட்டன. தொழிலுற்பத்தி அளவு உயர்ந்திருக்கிறது. கிராமங்கள் தனிமைப்பட்டுக்கிடந்த நிலைமை மாற்றப்பட்டுள்ளது. அவைகளும் முதலாளித்துவ சந்தைக்குள் திணிக்கப்பட்டுவிட்டன. சாலைகளும் இரயில் போக்குவரத்தும் இத்தகைய நிலையை உறுதிப்படுத்தியிருக்கின்றன.

இவையனைத்தையும் மீறி, மத, வகுப்பு, சாதீய உணர்வுகள் வளர்வதுபோல் தோன்றுகின்றன. ஜோதிடர்கள், கைரேகை நிபுணர்கள், சாயிபாபாக்கள் ஆகியோருடைய வியாபாரம் செழித்தோங்கி வருகிறது. கேரளாவிலும், வேறு பல இடங்களிலும் புதிய கடவுள்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் அருளை வேண்டி பல்லாயிரக்கணக்கில் மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். வரலாற்றைப் பற்றிய பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில், இந்தியா மட்டும் விதிவிலக்கா… இந்தியாவின் மதவாதத்திலும், வகுப்புவாதத்திலும், சாதிய உணர்வுகளுக்குள்ளும், வளர்ந்து வரும் பொருளாதார மாற்றங்கள் உட்புகுந்து பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லையா..

பாரம்பரியமான சக்திகளின் புதிய தாக்குதல்களையும் மீறி மற்ற சக்திகள் – அவை இன்னும் பலவீனமாக இருந்தாலும் கூட – எதிர்த்துப் போராடுகின்றன என்பதை முதலில் உணர்ந்து கொள்ளவேண்டும்.

இரண்டு கேள்விகளுக்கு இப்போது பதில் கூறியாக வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களது பொதுவான துன்ப துயரங்கள் அதிகரித்துக் கொண்டே செல்லும்போது தங்களது ஒற்றுமையையும் போராட்டத்தையும் சீர்குலைக்கின்ற பிற்போக்குத்தனமான உணர்வுகளுக்கு ஏன் இரையாகிறார்கள்.

மனித சமுதாய அமைப்புகளில் தீவிரமான, புரட்சிகரமான மாற்றங்கள் தோன்றி மதம், வகுப்புவாதம் ஆகியவற்றின் தத்துவங்களை நேருக்கு நேர் சந்திக்கின்றன. இதன் விளைவு என்ன. இந்த மதவாத தத்துவங்களுககு ஆதாரமானவற்றை தகர்த்தெறிய வேண்டுமல்லவா. இந்தியாவில் நிகழ்ந்ததென்ன. இந்தியாவில் புரட்சிகரமான மாற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை. மாறாக ஒரு சமரசமேற்பட்டுள்ளது. இந்திய. கிராமப்புற சமுதாய அமைப்புடன் ஒரு சமரச ஏற்பாடே நிகழ்ந்துள்ளது.

இயற்கை வழங்கும் மழையையும், தற்போதுள்ள விற்பனை சந்தையின் வேடிக்கை வினோதங்களையும், வியாபாரிகளின் நேர்மையின்மையையும், அரசாங்கக் கொள்முதல் அமைப்புகளையும், நம்பி வாழவேண்டிய நிலையிலுள்ள சிறிய பொருளுற்பத்தி முறை, நவீன உழைப்புச் சந்தைக்குள் நுழைந்து நவீன தொழிலாளி வர்க்கமாக மாறமுடியாத நிலையில் சிக்கித் தவிக்கும் பெரும்பான்மையான நிலமற்ற விவசாயிகள் ஆகிய இந்த நிலைமை தான் மதவாத, ஜாதி,வகுப்பு உணர்வுகளுக்கு ஊற்றுக் கண்களாய் விளங்குகின்றன.

கிராமப்புறங்களில் நிலப்பிரபுத்துவ, அரைநிலப்பிரபுத்துவ உறவுகள் நீடிப்பதும் ஒரு சிலர் கையில் நிலம் குவிந்திருப்பதும் அதிபயங்கரமான குத்தகை முறைகள், கந்துவட்டி முறைகளும் கொத்தடிமை முறையும், நிலமற்றவர்களின் நிலப்பசியும் இவையனைத்தும் நெடுங்காலத்திய சாதிப் பிரிவினை அமைப்புக்குள் இருப்பதால் மேற்கூறிய மதவாதமும், வகுப்புவாதமும் நீடிப்பதற்கு காரணமாக இருக்கின்றன.

மதவாதம், சாதீய முறைகள் அனைத்துமே முந்தைய காலத்துப் பரம்பரைச் சொத்து ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய தேசீய இயக்கமும், இதை எதிர்க்கவில்லை. மாறாக, பிறபோக்குத்தனமான இந்த சக்திகளுடன் ஒவ்வொரு கட்டத்திலும் தேசீய இயக்கம் சமரசம் செய்து கொண்டே வந்தது. விடுதலைப் போராட்ட காலத்தில் நிலப்பிரபுத்துவ சக்திகளுடன் முன்னணி தேசீய பூர்ஷ்வா தலைமை செய்து கொண்ட சமரசத்தின் நேரடி விளைவே அது.

பூர்ஷ்வா தலைமையின் கீழ் நடைபெற்ற விடுதலை இயக்கம் பழம்பெருமையைக் கூறியே மக்களது கவனத்தைக் கவருவதையே சார்ந்து நின்றது: பழங்கால பெருமைகளைப் பேசியது. பழங்கால மதப் பழக்க வழக்கங்களையும் தத்துவங்களையும், தத்துவ ஞானங்களையும் ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டது.

காலஞ்சென்ற பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான ரஜனி பாமி தத் இந்த பழம் பெருமை பேச்சுக்களின் குணாம்சங்களைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்: ” முடை நாற்றமடிக்கும் மோசமான நிலை, அழிந்து வரும் தத்துவங்கள், நொறுங்கி விட்ட கிராம அமைப்பின் சிதிலமடைந்த அடையாளச் சின்னங்கள்: மறைந்துவிட்ட நாகரீகத்தின் அலங்கார அரண்மனைகளின் மிச்சமீதிகள் இவைதான் அன்றிருந்த நிலை. இந்த நிலையிலிருந்துதான் இந்துக் கலாச்சாரம் பற்றிப் பேசி – ஒரு பொற்கனவை உருவாக்கி அதை தங்களது எதிர்கால லட்சியமாக முன் வைத்தார்கள். வழிகாட்டும் ஒளிவிளக்காகவும் ஏற்றிப் போற்றினர். பிரிட்டிஷ் பூர்ஷ்வா கலாச்சாரமும் தத்துவமும், இந்தியாவிற்குள் வெள்ளமெனப் பிரவேசித்த நிலையில், அவை இந்திய பூர்ஷ்வாக்களையும், அறிவாளிகளையும், கவ்விப் பிடித்த நிலையில் புனரமைப்புச் செய்யப்பட்ட இந்து தத்துவத்தை ஓரளவு கேடயமாகக் கொள்வதற்கு இந்திய விடுதலை இயக்கத் தலைமை முயன்றது. ஆனால் இந்தியாவின் யதார்த்தமான வாழ்க்கை நிலைமைகளில், அந்தத் தத்துவம் நிலைத்திருப்பதற்கு இயற்கையான ஆதாரம் ஏதுமில்லை. இந்தக் கொள்கையின் தீவிர பக்தர்கள் புதிதாக இந்தியாவுக்குள் வந்த சமுதாய, விஞ்ஞான முன்னேற்றங்கள் அனைத்தையுமே, ஆக்கிரமிப்பாளர்களின் கலாச்சாரம் என வர்ணிக்கத் தலைப்பட்டனர். பழங்கால, வழக்கொழிந்துவிட்ட பாரம்பரியங்களையும், தவறான பாரம்பரியங்களையும் சலுகைகளையும், மதவாத பிற்போக்குத்தனத்தையும் பக்தி சிரத்தையுடன் போற்றி புகழ்ந்தனர்.”

பாமி தத் இவ்வாறு குறிப்பிட்டிருப்பது முழுவதையும் சரியென்று கூறமுடியாது: யதார்த்தமான நிலைமையின் ஒரு பகுதியை மட்டுமே அவர் குறிப்பிடுகிறார். ஏனெனில் தேசீய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக பழைய நாகரீகத்தைப் பற்றிக் கூறி மக்களைத் திரட்டுவது ஒரு பகுதியாக அன்று அமைந்தது. அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் சுயமரியாதை உணர்வுகளைத் தட்டி எழுப்புவதற்கு அது பயன்பட்டது. “அழிந்துவிட்ட தலைமுறைகள் அனைத்தின் பாரம்பரியமும், வாழும் தலைமுறையின் மூளையில் அச்சுறுத்தும் கனவுகளாகக் கனத்துக் கொண்டிருக்கும். மக்கள் தங்களையோ அல்லது தங்களது விஷயங்களையோ பரட்சிகரமான மாற்றத்திற்கு ஆட்படுத்த விரும்பும் காலங்களில் எப்போதுமே இருந்திராத ஒன்றை உருவாக்க முயலும்போதும். குறிப்பாக புரட்சிகரமான நெருக்கடி நிலவும் காலங்களில், தங்களது பணியை நிறைவேற்றிக் கொள்ள இறந்த காலத்தின் ஆவிகளை வேகமாக வரவழைத்துக்கொண்டு இறந்த காலத்திலுள்ள பெயர்கள், போர்க்கோஷங்கள், உடைகள் ஆகியவற்றையும் கடன் வாங்கிக் கொள்கின்றனர். உலக வரலாற்றில் ஒரு புதிய காட்சியை உருவாக்குவதற்காகவே காலத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தோற்றத்தையும், கடன் வாங்கப்பட்ட மொழியையும் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதே மாதிரி தான் கிறிஸ்தவ மதத்தை எதிர்ப்பதற்கு அதற்குள்ளேயே புராட்டஸ்டெண்ட் மதத்தின் தலைவராகத் தோன்றிய மார்ட்டின் லூதர் ஒரு தேவதூதன் என்ற முகமூடியை தரித்துக் கொண்டு போராட்டக் களத்தில் இறங்கினார்” என்று மார்க்ஸ் சரியாகவே குறிப்பிட்டார். (மார்க்ஸ் பதினெட்டாவது புருமர்.)

இந்தியாவை பொறுத்தவரை, நிகழ்காலத்திற்கு தேவையான ஊக்கத்தை பெறுவதற்காகவே, பழங்காலத்தைப் பயன்படுத்திக்கொண்டார்கள் என சாதாரணமாக கூறிவிடமுடியாது. ஜனநாயக விரோதமான சாதி  அமைப்புடன் சமரசம் செய்துகொள்வதற்காகவும், மத வாத பிற்போக்குத்தனங்களுடன் சமரசம் செய்துகொள்வதற்காகவுமே இந்தப் பண்டை கால பெருமை பேச்சு  பயன்படுத்தப்பட்டன. அன்று பாட்டாளி வர்கம் பலவீனமாக இருந்ததால், வளர்ந்துக்கு கொண்டிருந்த பூர்ஷ்வா வர்க்கம் தேசிய இயக்கத்தின் தலைமைப் பாத்திரத்தை கையிலெடுத்துக் கொண்டது. அந்த   பூர்ஷ்வா தலைமை தொடக்கத்திலிருந்தே நில உடைமையாளர்களுடனும் கண்மூடித்தனமான மதத்தையும் சாதியையும் வளர்க்கின்ற கிராமப்புற அமைப்பு முழுவதுடனும்  சமரசம் செய்துகொள்வதில் அக்கறை காட்டியது.

மதவாதம்,  வகுப்புவாதம், ஜாதியம் ஆகியவற்றைத் தொடரச்செய்வது இந்த சமரசங்களுக்குள் ஆழமாகப் பதிந்திருந்தது, அத்தகைய தொடர்ச்சியான சமரசமும், அந்தச் சமரசத்தின் பின்னணியில் அனுஷ்டிக்கப்பட்ட  முதலாளித்துவப்  பாதையின் விளைவே ஆகும். அதனால்தான், அடுத்தடுத்து பல ஐந்தாண்டுத்  திட்டங்கள் வெற்றியடைந்த பின்னருங்கூட, இறந்த காலத்தின் இத்தகைய அச்சுறுத்தும் கனவுகளை தவிர்க்க இயலவில்லை அது தொடர்ந்து நாட்டின் ஒற்றுமையை அரித்து வருகிறது.

மதத்தத்துவங்களை முறியடிக்கும் எதிர் சக்தி
பொருள் முதல்வாத தத்துவமே!

வகுப்புவாதம், மதப்பிரிவினைவாதம், சாதிய வாதம் இவையனைத்தும் நமது நாடு ஒரு நவீன தேசமாக வளர்ச்சியடைவதை தடுத்து நிறுத்துகின்றன. மக்களின் சமத்துவத்திற்கு, மற்ற  அனைத்தையும் நாட்டு விசுவாசத்திற்கு கீழே தள்ளி, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் விசுவாசமாக இருக்கவேண்டும் என்ற நிலைமைக்கு இவை தடையாக நிற்கின்றன. ஒரு தேசீய முதலாளித்துவச் சந்தையின் மூலம் ஒன்றுபட்ட நவீன பூர்ஷ்வா தேசம் உருவாக வேண்டுமானால், முதலாளித்துவத்திற்கு முந்தய பிரிவினைத்  தத்துவங்கள்  அனைத்தையும் நமது தேவைகளின் அடிப்படையில் முறியடிப்பதன் மூலம் தான் செய்ய முடியும்.

ஐரோப்பாவில், வளர்ச்சி பெற்று வந்த பூர்ஷ்வாக்கள் நிலப்பிரபுத்துவ தத்துவங்களை தோற்கடித்தனர். அதற்காக அவர்கள் ரோமன் கத்தோலிக்க மதத்துடன் போராடினர்.ஆனால் அது மட்டும் போதவில்லை, கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கத்தையும் நிலப்பிரபுத்துவ சக்திகளின்

அதிகாரத்தையும் உடைத்தெறிந்தனர். ஆட்சியாளர்களின் பொருளாதார, அரசியல் அதிகாரங்களையும் தகர்த்தெறிந்தனர். இங்கிலாந்தில் செய்தது போல் அதிகாரமில்லாத அரசனை உருவாக்கினார். இருந்த போதிலும் முன்னேற்றம் அடைந்த முதலாளித்துவ சமுதாயங்களில் மதமும் அதன் செல்வாக்கும் முற்றும் மறந்துவிடவில்லை. உண்மையில், இவை நவீன பொருள் உற்பத்தியாளர்களின் புதிய சமுதாயத்திற்கு பொருந்துகின்ற வகையில் ஒரு புதிய மதம் தோன்றியது. ஸ்தூலமற்ற மனிதன் என்ற தத்துவத்தின் அடிப்படையில், குறிப்பாக பூர்ஷ்வா வளர்ச்சிக்கேற்றாற்போல் தன்னை மாற்றிக் கொண்ட கிறிஸ்துவ மதம் புராட்டஸ்டண்ட் மதமாக

உருவெடுத்தது. ஆனால், புதிய சமூதாயத்தின் தேவைகளுக்கேற்ப செயல்பட நேர்ந்தது. சில சமயங்களில்,பூர்ஷ்வா சமுதாயத்திற்கான போராட்டத்தில், மதங்களின் அடிப்படைத் தத்துவங்களுக்கே பொருள்முதல்வாதத்  தத்துவம் நேரடிச் சவாலாய் அமைந்தது .

இது ஏன் நடைபெற்றதென்றால், அரசியால் அதிகாரத்தை அடைவதற்காகவும்,  நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களை தூக்கியெறிவதற்காகவும், நிலப்பிரபுக்களின் பொருளாதார அதிகார தளங்களையும் அந்த அதிகாரங்களுக்கு உயிரூட்டி வந்த தத்துவ மேல்கட்டுமானங்களையும் உடைத்தெறிவதற்காக வளர்ந்து வரும் பூர்ஷ்வாக்கள் ஜீவமரணம் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. இவ்வாறு எதிர்க்கப்பட  வேண்டி வந்த தத்துவங்களில் ரோமன் கத்தோலிக்க மதத்தின் தத்துவமும் ஒன்று.

இந்திய நிலைமை

இந்தியாவிலும், புதிதாக விடுதலையடைந்த நாடுகளிலும் நிலைமை அப்படியல்ல. பிரிவினை என்னும் பிரச்னை மதத்தினால் ஊக்குவிக்கப்பட்டு, நமது தேசிய போராட்டம் நடந்த காலம் முழுவதும் தொடர்ந்தது. இறுதியில் பிரிவினைக்கே இட்டு சென்றது. இதை நமது நாட்டில் கண்டோம். அது  மீண்டும் இன்று தலை தூக்கி, நாட்டின் ஒற்றுமைக்கே சவால் விடுகிறது.

பூர்ஷ்வாக்களின் தலைமையில் விடுதலைப் போராட்டம் நடைபெறும்போது நிலவிய ஒரு வினோதமான சூழ்நிலையே இதற்கு காரணம். தங்களின் தேவைகளின் அடிப்படையில் இந்திய பூர்ஷ்வாக்கள் ஒரு வர்க்கமாக உருவெடுத்து வந்த சமயத்தில், இந்தியாவிலிருந்த நிலப்பிரபுத்துவ ஆட்சி அதிகாரம் பிரிட்டிஷ்காரர்களால் ஏற்கனவே நொறுக்கப்பட்டது. அதே சமயத்தில் இந்திய பூர்ஷ்வாக்கள்  அதிகாரத்திற்காக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராட வேண்டி இருந்தது. இவ்வாறு  பூர்ஷ்வா வர்க்கம் தனது வாழ்விற்காகவே, நிலப்பிரபுத்துவ அரசையோ அல்லது அவர்களது தத்துவத்தையோ எதிர்த்துப் போராட வேண்டிய தேவை ஏற்படவில்லை.

அது மட்டுமல்ல, ஒருசமயம்  இந்திய பூர்ஷ்வா வர்க்கம் ஏகாதிபத்தியத்தின்

உப விளைபொருளாகவே தோன்றியது என்று கூறப்பட்டது. தரகு முதலாளி வர்க்கம், வர்த்தகர்கள், வணிகர்கள், வியாபாரம் மற்றும் லேவாதேவியில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆகியவர்களிடையே இருந்து  தோன்றியதே இந்திய பூர்ஷ்வா வர்க்கம். நெடுங்காலமாக இவர்கள் தங்களது நிலப்பிரபுத்துவச்  சுரண்டல் முறைகளை மாற்றிக் கொள்ளாமலேயே, இந்தியப் பூர்ஷ்வாக்களின் பங்காளிகளாய் இருந்தனர்.

ஐரோப்பாவில் பூர்ஷ்வா வர்க்கம் தொழில் உடைமையாளர்களிடமிருந்தும் பொருள் உற்பத்தியாளர்களிடமிருந்தும் தோன்றியது. ஆனால் இந்தியாவில் விவசாயம் சம்மந்தப்பட்டவர்களுடனும் இந்திய பூர்ஷ்வா வர்க்கத்திற்கு ஆரம்பத்திலிருந்தே தொடர்பிருந்தது வந்தது. வர்த்தக பகுதியிலிருந்து வந்தவர்கள், நிலப்பிரபுத்துவ  சுரண்டல்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள், நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களை அதிகாரத்திலிருந்து தூக்கியெறியும்

கடமையை செய்யாதவர்கள் ஆகியோரே இந்திய பூர்ஷ்வாக்கள். ஆகவே அவர்களுக்கு நிலப்புரட்சி தேவைப்படவில்லை. நிலப்புரட்சி பற்றி அவர்கள் அஞ்சினார்கள். உண்மையில், ஏகாதிபதியத்தியதை எதிர்த்த போராட்டத்தில், அவர்கள் நிலப்பிரபுக்களின் ஆதரவை நம்பியிருந்தனர். சமஸ்தானங்களில் மன்னராட்சிமுறையை ஒழிப்பதற்கு காங்கிரஸ் இறுதிவரை எதிர்ப்பு தெரிவித்தது  தெரிந்ததே. நிர்பந்தம் ஏற்பட்ட பின்னர்தான் அதை ஏற்றுக்கொண்டது. நிலப்பிரபுக்களுக்கான விவசாயிகளின் கோரிக்கைகள் காங்கிரஸின் திட்டத்தில் என்றுமே இடம் பெற்றதில்லை.

இது இரண்டு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.  தடுத்து நிறுத்தப்பட்டது ஒன்று. மற்றொன்று முதலாளித்துவத்திற்கு முந்தய கால தத்துவங்களான இந்து மதம், சாதி, வகுப்பு வாதம் ஆகிய அனைத்தும் பெருமளவிற்கு அப்படியே நிலைத்து நின்றன.

இந்ததியாவில் சாதி அமைப்பு தோற்றம் எப்படியிருந்த போதிலும், இஸ்லாம் மதம் தோன்றிய காலத்தில் அது ஒரு புரட்சிகரமான பாத்திரம் வகித்த போதிலும், இன்று நிலப்பிரபுத்துவ விவசாய உறவுகள் நீடிப்பதின் காரணமாகவும், விரிந்த அளவில் தொழில் வளர்ச்சி ஏற்படாததன் காரணமாகவும், மதப்பிரிவினை வாதங்களின் உண்மையான பாத்திரம் பற்றி மக்களுக்கு புரியாததன் காரணமாகவும், சாதி வெறியும், இந்து- முஸ்லீம் பிரிவினைகளும் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன.

இதன் விளைவாக, மதத்தையும், முதலாளித்துவத்திற்கு முந்தைய காலத்திய தத்துவங்களையும் எதிர்த்துப் போராடுவதற்கு, இந்திய பூர்ஷ்வா வர்க்கத்திற்கு தேவை ஏதும் ஏற்படுவதில்லை.

மேற்கத்திய  நாடுகளில் நிகழ்ந்தது போன்று, ஒரு புதிய மதத்தை உருவாக்க வேண்டும் என்ற அவசியம் அவர்களுக்கு தோன்றவில்லை.

இந்து மதத்தில்  ” சமூக சீர்திருத்தம் ” “இந்து-முஸ்லீம் ஒற்றுமை ஓங்குக” என்ற கோஷங்களுடன் அவர்கள் திருப்தியடைந்துவிடுகின்றனர். பின்வரும் வாசகங்கள் இதனைச் சரியாக விளக்கும் என நினைக்கிறேன் :

“இந்தியாவிலுள்ள- இஸ்லாம், புத்தமதம் அனைத்திற்கும் மேலாக இந்துமதம் ஆகிய எந்த மதத்தின் நடைமுறையிலும், ஒரு தீவிரமான பூர்ஷ்வா சீர்த்திருத்தம் ஏற்படவில்லை. இதன் பொருள் என்ன? புதிதாக தோன்றியுள்ள நிலைமையில், அதாவது வர்க்க முரண்பாடுகள், தொழில் ஏகபோக முதலாளித்துவ குறுக்கீட்டால் தீவிரப்படுத்தப்பட்ட சூழ்நிலையில், பாரம்பரியமாக உள்ள முதலாளித்துவத்திற்கு முந்திய வகுப்புவாத உணர்வுகள் சிறு உற்பத்தியாளர் பிரிவிலிருந்தே   இந்த புதிய மாற்றங்களுக்கு எதிரானதாகத் தோன்றுகின்றன.”

மேலேகூறியதன் கடைசி வார்த்தைகள் ஜாதிய வகுப்புவாத சச்சரவுகள் தோன்றி அதிகரித்து வருவதை சரியாக விளக்குகின்றன.

பழங்காலத்தை புதுப்பிப்பதில் நம்பிக்கை கொண்ட இந்திய தேசிய விடுதலைப் போராட்டத் தலைமையினர், மக்களின் மதநம்பிக்கைகளை அரவணைத்துச் செல்வது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் சரியான ஆயுதமாக பயன்படும் என நினைத்தனர். அவர்கள் நினைத்ததெல்லாம் பல்வேறு மதநம்பிக்கை கொண்ட மக்கள் ஒருவருக்கொருவர் எதிராக மோதிக் கொள்ளக்கூடாது என்பதுதான். மதங்கள் அனைத்தையுமே, விமர்சனம் செய்யக்கூடாத புனிதமான விஷயங்களாக மதிக்கவேண்டும் என அவர்கள் விரும்பினர். ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது என்ற நவீனமான நோக்கத்திற்காக மதங்களுடன் செய்து கொண்ட சமரசம் இது.

இந்த சமரசத்தால் விடுதலைப் போராட்டம் நடந்த குறுகியகாலத்தில் பலன் கிடைத்தபோதிலும், அது அழிவிலே முடிந்தது.

கிலாஃபத் இயக்கமும் அதன் பின்விளைவும்

தங்களது ஆளும் உரிமையை மறுத்து தங்களது ஆட்சி அதிகாரத்தை பிரிட்டிஷ்காரர்கள் பறித்துக் கொண்டதாக வைதீகமான முஸ்லீம்கள் கருதினர். கல்விமுறை உள்ளிட்ட மேற்கத்திய நாகரீகமானது பாவம் என்றும், முஸ்லீம் விரோதத் தன்மை கொண்டது என்றும், காந்தி கண்டனம் செய்வதற்கு முன்பாகவே, கிறிஸ்தவ மதத்தை எதிர்க்க வேண்டும் என்ற கருத்துடன் தங்களது இஸ்லாமிய பாரம்பரியங்களை முஸ்லீம்கள் எண்ணிப் பார்க்கத் தொடங்கினர். ஜனநாயகக் கோட்பாடுகள், சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு அந்த வகுப்பினர் நவீனப்படுத்தப்படுவதும் மிகக் குறைந்த வேகத்திலேயே நடைபெற்றது.

சேவ்ரீஸ் ஒப்பந்தத்தின் மூலம் முஸ்லீம் பேரரசான துருக்கிக்கு பிரிட்டிஷ் ஆட்சி இழைத்த அநீதியை எதிர்த்து நடைபெற்றதுதான் கிலாஃபத் இயக்கம். முதல் உலகப்போருக்குப் பின்னர் முஸ்லீம் மக்களிடையே இருந்த அதிருப்தியை ஒருமுகப்படுத்துவதற்கு அந்த இயக்கம் பயன்பட்டது. துருக்கி மக்களின் உரிமைகள் மீறப்படுவதை எதிர்த்து மட்டும் நடைபெற்ற இயக்கமல்ல அது: இஸ்லாம் மதத்தின் ஆன்மீகத்தலைவர் என்ற முறையில் தனது அலுவல்களை மேற்கொள்ளும் வகையில் கலீஃபாவுக்கு (துருக்கி அரசர்) அரசு அதிகாரத்தை மீட்டுத் தரவேண்டும் என்பதும் அந்த இயக்கத்தின் கோரிக்கையாகும். இதில் முஸ்லீம் மத உணர்வுகள் மேலோங்கியிருந்த போதிலும், ஒத்துழையாமை இயக்கம் என்ற இந்திய தேசியப் போராட்டத்தில் இந்த கிலாஃபத் இயக்கமும் இணைந்தது. காந்தியும், தேசீய காங்கிரசும் இந்த கிலாஃபத் இயக்கத்திற்கு ஆதரவளித்தனர். அதன் மூலம், முன்னெப்போதும் கண்டிராத அளவில் இந்திய மக்களின் ஒற்றுமையை உருவாக்கியதன் மூலமாக 1857-ல் நடந்த விடுதலைப் போராட்ட நாட்களை பிரிட்டிஷாருக்கு நினைவுபடுத்தி, அவர்களை குலைநடுங்க வைக்க முடிந்தது.

சுயராஜ்யம் என்றால் முழுமையான சுதந்திரம் என்றே பொருள் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முதலில் எழுப்பியவர்கள் கிலாஃபத் தலைவர்களே. 1921-ல் அகமதாபாத்தில் நடைபெற்ற தேசீயகாங்கிரசின் கூட்டத்தில்தான் மௌலானா அஸ்ரத் மொகானி என்பவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். இந்த கோரிக்கைக்கு ஏற்பட்ட எதிர்ப்புக்கு தலைமை வகித்தவர்தான் காந்திஜி.

அதேபோன்று, 1919–ம் ஆண்டிலேயே முஸ்லீம்கள் எவரும் இந்திய ராணுவத்தில் சேரக்கூடாது என முஸ்லீம்லீக் தனது அமிர்தசரஸ் கூட்டத்தில் அறைகூவல் விட்டது.

“இந்தியாவின் நலன்களையும், முஸ்லீம்களின் நலன்களையும் கவனத்தில் கொண்டு நோக்கும்போது, ‘சுயராஜ்யம்’ என்ற தனது முழக்கத்திற்கு  பதிலாக, “முழு சுதந்திரம்” (பூர்ணசுயராஜ்யம்) என்ற முழக்கத்தை காங்கிரஸ் உருவாக்க வேண்டும்” என 1922 ஜூன் மாதம், லக்னோவில் கிலாஃபத் இயக்கமும், ஜமாதி-எ-உல்-உலீமாவும் இணைந்து நடத்திய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதியநிலைமை

இந்த காலத்தில்தான் இந்தியாவிலிருந்த பாரம்பரியங்களும், பரம்பரையான பிளவுகளும் உடைத்து நொறுக்கப்பட்டன. இந்திய அரசாங்கத்தின் வெளியீடு ஒன்று (1919-20-ம்ஆண்டுகளில் இந்தியா என்ற வெளியீட்டில்) பின்வருமாறு குறிப்பிடுகிறது:

“என்றுமில்லாத அளவுக்கு இந்து-முஸ்லீம் சகோதரத்துவம் ஏற்பட்டது. பொதுவான பரபரப்பான சூழ்நிலையில் குறிப்பிட்டுக் கூறவேண்டிய ஒரு அம்சம் என்னவெனில், தலைவர்களிடம் ஏற்பட்ட ஒற்றுமை, ஒரு தேசியமேடை அமைப்பதற்கு உதவிகரமான, நீண்டகாலமாக சிந்திக்கப்பட்ட, ஒரு திட்டமாக அது அமைந்தது. பொதுமக்களிடம் பரபரப்பு ஏற்பட்டிருந்தநிலையில் கீழ்நிலையிலிருந்த வர்க்கங்கள் கூட தங்களது வேறுபாடுகளை முதல்தடவையாக மறந்துவிடுவதற்கு சம்மதித்தனர். மிக அபூர்வமான இந்து-முஸ்லீம் சகோதரத்துவக் கட்சிகள் நாட்டில் ஏற்பட்டன. இந்துக்கள் முஸ்லீம்கள் கைகளிலிருந்தும், முஸ்லீம்கள் இந்துக்களின் கைகளிலிருந்து பகிரங்கமாக தண்ணீர் வாங்கி அருந்தினர். ஊர்வலங்களில் முழங்கிய கோஷங்களிலும், பதாகைகளிலும் “இந்து-முஸ்லீம் ஒற்றுமை” என்பது தாரகமந்திரமாக மாறியது. மசூதிகளின் மேடைகளிலிருந்து உரையாற்ற இந்துமதத்தைச் சார்ந்த தலைவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.”

இந்த சமயத்தில்தான் விவசாயிகள் பகிரங்கமாக நிலச்சுவான்தார்களை எதிர்த்து போராடினர். இந்த போராட்டத்தை காங்கிரஸ் காரியக்கமிட்டி பர்தோலி கூட்டத் தீர்மானத்தின்மூலம் வாபஸ் வாங்கியது. இவ்வாறு வாபஸ் வாங்கியது, போராடிய மக்களிடையே சோர்வை உண்டாக்கி இந்து-முஸ்லீம் வகுப்புகளைச் சார்ந்த விவசாயிகள் என்ற வகையில் ஒன்றுபட்டு நிலப்பிரபுகளுக்கு எதிராக ஒற்றுமையாக போராடியதை தடுத்து விட்டது. இந்து முஸ்லீம் ஒற்றுமை நிலப்பிரபுகளுக்கு எதிராக வளர்வதைத் தடுத்துவிட்டது. இந்த சமயத்தில் துருக்கியில் காலிப் பதவியிறக்கம் செய்யப்பட்டார். இது கிலாஃபத் இயக்கத்தின் உற்சாகத்தை குறைத்து விட்டது. கிலாஃபத் இயக்கத்தின் முக்கியமான கோஷத்திற்கு மதிப்பில்லாமல் போய்விட்டதால் காங்கிரசிடமிருந்தும், பொதுவான போராட்டங்களிலிருந்தும் முஸ்லீம் மக்கள் விலகிச் சென்றனர். அதற்குப்பின் தேசீயப் பேரெழுச்சிகளில் அவ்வளவு பெரிய அளவில் அவர்கள் கலந்துகொள்ளவேயில்லை. இதற்குப் பிறகு, பொதுவான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திலிருந்து அவர்களை பிரித்துவைக்கும் வகையில் அவர்களது முஸ்லீம் மத உணர்வுகள் நவீன சுயநலசக்திகளுக்கு பயன்பட்டது.
இவ்வாறு சிறுபான்மை மதத்தினருக்கு வேண்டுகோள் விடுவது, அவர்களை தேசீய இயக்கத்தில் சேர்த்துக் கொள்வது என்ற போக்கு தேசிய இயக்கத்திற்கு பாதகமாக முடிந்தது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், முஸ்லீம் நிலப்பிரபுக்களும் 1920–ம் ஆண்டு நிகழ்ச்சிகள் மீண்டும் இந்து-முஸ்லீம் ஒற்றுமை ஏற்பட்டுவிடாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டனர். மக்களிடம் மதவெறி பரப்பப்பட்டது. ஆனால் அதன் உண்மையான உள்ளடக்கம் என்னவென்றால் ஆளும் ஏகாதிபத்தியத்தின் நலன்கள் உள்ளிட்ட அக்காலத்திய சுயநல சக்திகளின் அனைத்து நலன்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதே.

சிறுபான்மையோர் பிரிந்துசென்று விட்டனர்; அது நாட்டுப் பிரிவினையில் போய்முடிந்ததென்று கூறப்படுவதன் பின்னால் உள்ள நவீன வர்க்கநலன்களை பற்றி ரஜனி பாமி தத் மிகத் தெளிவாகவே விளக்குகிறார். “பம்பாய், கல்கத்தா, சென்னை ஆகிய பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில்,  வடக்கில் முஸ்லீம்கள் சிறுபான்மையாக இருக்கும் பகுதிகளைவிட மிக முன்னதாகவே, வர்த்தகம், வணிகம், கல்வி ஆகியவற்றின் வளர்ச்சி தொடங்கிவிட்டது. இந்திய பூர்ஷ்வா வர்க்கம் தோன்றியதையடுத்து, இரண்டு பகுதியினருக்கிடையே இருந்த போட்டி மிக எளிதாக வகுப்புவாத உணர்வுகளாக மாறியது. முஸ்லீம் மேல்தட்டு மக்களில் பெரும்பான்மையோர் பெரிய நிலப்பிரபுக்களே. வளர்ந்துவரும் தொழில் முதலாளிகளைக் கண்டு அவர்கள் அதிருப்தியடைந்தனர். அந்த முதலாளிகளின் முன்னேற்றத்தை, இந்து பனியாக்களின் முன்னேற்றமாகவே அவர்கள் கருதினர்’ என்று பாமி தத் குறிப்பிடுகிறார்.

மதப் பிரச்சனையில் காங்கிரஸ் இயக்கத்தின் முரண்பாடுகள்.

பிற்காலத்தில் ஏற்பட்ட சிறுபான்மையோர் பிரிவினைவாதம் வர்க்க நலன்களில் ஏற்பட்ட மோதல்களின் நேரடி விளைவேயாகும். (முஸ்லீம்) நிலப்பிரபுக்கள் பூர்ஷ்வாக்களின் முன்னேற்றத்திற்காக முஸ்லீம் மக்களைத் திரட்டியதன் விளைவே இந்து ஆதிக்க எதிர்ப்பு உணர்வாக பிரதிபலித்தது. வர்க்க ரீதியான மோதல்களுக்கு மதவேறுபாடுகளினால் ஏற்பட்ட வகுப்புச்சண்டை என்ற போர்வை போர்த்தப்பட்டது.

காங்கிரஸ் தலைவர்களின் தேசீயம் ஐயத்திற்கிடமில்லாமல் இந்துமதக் கோட்பாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தது. இதுவும் ஒரு சாதாரண முஸ்லீமைப் பொறுத்தவரை நிலைமையை மேலும் சிக்கலாகியது.

சாதி உணர்வுகள் நிலைத்து நிற்பதும் அதைப் போன்ற காரணங்களினால்தான். விவசாயப் புரட்சி (நிலச் சீர்திருத்தம்) நடத்தப்படவில்லை; முன்னணி பூர்ஷ்வா வர்க்கமும், நிலப்பிரபுத்துவ வர்க்கமும் இணைந்து நின்று பண்டைய பெருமைவாத உணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்; இந்துமதத்தில் சமூக சீர்திருத்தம் செய்யப்படவில்லை. ஏறக்குறைய உயர்சாதிகளிருந்தே வருகின்ற பூர்ஷ்வா அறிவாளர்கள் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் பற்றிய பிரச்சனையை எடுத்துக் கொள்வதையே விரும்பவில்லை. அப்படிச் செய்தால், அது அரசியலில் மதத்தைக் கலப்பதாக அமையும் என கூறுகின்றனர். அதனால்தான், முந்தைய காலத்திய சாதி எதிர்ப்பு இயக்கங்களும், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களின் நியாயமான எதிர்ப்பியங்கங்களும், காங்கிரசிடமிருந்து தனித்து நின்றே வளர்ந்தன.

சாதி எதிர்ப்பு இயக்கங்களும், தங்களது போராட்டத்தை விவசாய உற்பத்தி உறவுகளை மாற்றுவதற்கான போராட்டத்துடன் இணைத்துக் கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களினின்றும் கூட அவை தம்மை விலக்கிக் கொண்டன.

சாதி அமைப்புடன் சமரசம் செய்துகொண்டு அதைப் பாதுகாப்பது என்ற தத்துவத்தின் பிரதிநிதி வேறுயாருமல்ல; காந்திஜியே அதைச் செய்தார். தனது முதல் ஒத்துழையாமை இயக்கத்தின்போது, ஒரு புனித போரின் போர்வீரன்போல் தீண்டாமையை எதிர்த்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் மகாத்மா என்பதால், அவரைப் பற்றி இப்படிக் கூறுவது விநோதமாயிருக்கும்.

ஆரம்ப காலத்தில், பிரிட்டிஷாருக்கெதிரான போராட்டத்தில் ஒரு தேசிய பேரெழுச்சி தேவைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையே அது. இவ்வாறு அவர் கிளர்ச்சிப் போராட்டத்தை நடத்தியபின்பு, இந்து மக்கள் தங்களிடையே சமூக சீர்திருத்தம் செய்துகொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளுடன் தனது இயக்கத்தை முடித்துக் கொண்டார். நில உறவுகளை மாற்றுவதற்கான போராட்டத்திலிருந்தும் தனது இயக்கத்தை விலக்கியே வைத்தார். அதைத் தவிர வர்ணாஸ்ரம தர்மம் என்ற தத்துவத்தையும் அவர் நியாயப்படுத்தினார். “தீண்டாமையை நாம் ஒழிக்கவில்லை என்றால், பூமியின் பரப்பிலிருந்து நாம் ஒழிக்கப்பட்டு விடுவோம். ….எண்ணிலடங்கா சாதிகள் தேவையற்ற, இயற்கைக்கு விரோதமான வளர்ச்சித் தோற்றங்கள்;  அதேவேளையில் நான்கு வர்ணங்கள் மிகவும் அடிப்படையானவை; இயல்பானவை; தேவையானவை. சக்தியையும், பொருளாதாரத்தையும் சீரான நிலையில் பாதுகாப்பது என்ற இயற்கையின் விதியை வர்ணங்கள் நிறைவு செய்கின்றன. சுயகலாச்சாரத்தின் வேறுபட்ட அமைப்புகளின் வகைப்படுதலே அது.  ஸ்திரத் தன்மைக்கும், சுபிட்சத்திற்கும் மிகவும் சிறப்பான முறையிலான அனுசரணையான ஏற்பாடு அது. ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைமுறையை உருவாக்க அது முயல்கிறது. ஒரு குறிப்பிட்ட குடும்பம் எந்த ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்தது என்ற பிரச்னையில், சில அறிஞர்கள் தம் மனம்போன போக்கில், ஒருதலைப்பட்சமாக தீர்ப்பளிப்பதை அது அனுமதிப்பதில்லை. பாரம்பரியம் என்ற கோட்பாட்டில் அது நம்பிக்கை கொள்கிறது. ஒரு குறிப்பிட்ட நபரோ அல்லது குடும்பமோ தங்களது நல்வாழ்விற்காக தங்களது வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்திருப்பினுங்கூட தொடர்ந்து பழைய குழுவிலேயே இருக்கவேண்டியிருப்பதை, ஒரு கலாச்சார அமைப்பு என்ற அதை ஒரு அநீதியாக வர்ணாஸ்ரம தர்மம் கருதுவதில்லை.”

இதைவிட ஒரு அனுசரணையான அமைப்பை கற்பனை செய்வது கடினம். சாதி என்றால் அதற்கு உயர்வு தாழ்வு என்று ஏதுமில்லை. வேறுபட்ட கண்ணோட்டத்தையும், அதற்கிசைந்த வாழ்க்கை முறையையும் அது அங்கீகரிக்கிறது,  அவ்வளவுதான்” ( தான் எழுதிய ‘ இந்தியாவில் சாதியின் சவால்’ என்ற நூலில் மேற்கண்ட காந்தியின் வாசகங்களை ஜெகஜீவன் ராம் மேற்கோள் காட்டியிருக்கிறார்.)

ஜவகர்லால் நேரு முற்போக்கான, மதசார்பற்ற கண்ணோட்டம் கொண்டவராகயிருந்தாலும்கூட,  காந்தியக் கண்ணோட்டம்தான் காங்கிரஸ் தலைவர்களிடமும் ஊழியர்களிடமும் ஆதிக்கம் வகித்தது. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணியிலிருந்த பூர்ஷ்வாக்களின் வர்க்கத் தேவைகளை அது சரியாக பிரதிநித்துவப்படுத்தியது. ‘முதலிலும், முடிவிலும் தேசமே’ என தேசியத் தலைவர்கள் முழங்கியதென்னவோ உண்மைதான். ஆனால் சாதியைக் கடைப்பிடிப்பதில் அவர்கள் காந்தியின் கண்ணோட்டத்தையே நடைமுறைப்படுத்தினர்.

அரசியல் சாசனத்தின்படி சட்டத்தின் முன் அனைத்துக் குடிமக்களும் சமம் என பூர்ஷ்வா தலைவர்கள் கூறினார்கள். ஆனால் அது ஒரு சம்பிரதாயமான அறிவிப்புதான். யதார்த்த வாழ்வில், பல்வேறு சாதிகளிடையே சமத்துவம் என்பது இல்லை.

சுதந்திரத்திற்குப் பின் வளர்ந்து வரும் சாதி, மத உணர்வு

சுதந்திற்குப்பின் அண்மைக் காலங்களில், இந்தச் சாதி உணர்வு வளர்ச்சி பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது. தேர்தல்களிலும், சில சலுகைகளை பெறுவதிலும், அமைச்சரவைகளில் இடம்பிடிப்பதிலும் இது அப்பட்டமாக பயன்படுத்தப்படுகிறது. ஆளுங்கட்சிகூட, தேர்தல்களில், வாக்குகளை சேகரிப்பதற்கு, அமைச்சரவை அமைப்பதற்கு இதைக் கையாளுகின்றது. ஜனநாயகப் போராட்டங்களிலும், வர்க்கப் போராட்டங்களிலும் சாதி என்ற மேல்கட்டுமானமும், சாதி உணர்வுகளும் ஊடுருவியிருக்கின்றது என்பது தெளிவானதாகும். மற்ற பிரிவினை சக்திகளுக்கு உதவுவதில், முனைப்பாக நிற்கும் சக்திகளில் இதுவும் ஒன்று.

தீங்கு விளைவிக்கும் இந்த சாதிய செல்வாக்கு, உயர்சாதிகளிலும், நல்ல நிலைமையிலிருக்கும் சாதிகளில் மட்டுமே இருப்பதாகக் கூறமுடியாது. இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களும், அரசியல் எழுச்சிகளும், சாதியின் பொருளாதார அடிப்படை மீது மிகக் குறைவான பாதிப்பையே ஏற்படுத்தியிருக்கின்றன. பாதிப்பு எந்த அளவிற்கு குறைவானதென்றால் தீண்டப்படாத மக்கள் தங்களுக்குள்ளேயே சாதிக் கண்ணோட்டங்கள் காரணமாக பாதிக்கப்படுகின்றனர். ‘இந்தியாவில் சாதியின் சவால்’ என்னும் தனது புத்தகத்தில் ஜெகஜீவன் ராம் கூறுகிறார்; “இந்த (சாதி) அமைப்பின் விளைவுகள் எந்த அளவுக்கு தீங்கு பயப்பதாயும், எங்கும் வியாபித்திருப்பதாயும் இருக்கிறதென்றால், பிற்படுத்தப்பட்ட மக்களே பெரும்பான்மையாக இருக்கும் இந்த நாட்டின் மக்கள், சாதி விலங்குகளை உடைத்தெறிவதற்கு பதிலாக, உயர்சாதிகளின் பழக்க வழக்கங்களை பழகிக் கொள்வதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர்.

தீண்டப்படாத மக்கள் தங்களுக்குள்ளேயே தீண்டாமையை அனுஷ்டிக்கிறார்கள் என்ற வியத்தகு நிலைக்கு சென்றிருக்கிறார்கள் என்றால் பிராமணர்களை இவர்கள் மிகவும் உளப்பூர்வமாக பின்பற்றுகிறார்கள், ஆனால் மோசமாகப் பின்பற்றுகிறார்கள் என்றுதான் பொருள்கொள்ள முடியும்.”

யதார்த்தத்தில், தீண்டப்படாத மக்கள் மத்தியில் சாதியின் பிடிப்பையே இது வெளிப்படுத்துகிறது. இது பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருவதும் அவர்களுக்கெதிரான கொடுமைகளுக்குப் பின்னும் அவர்களால் உடைத்தெறிய முடியாததுமான அந்த தத்துவம் அவர்களையே கவ்விப் பிடித்திருக்கிறது. ஆளும் பகுதியினரின் தத்துவம் ஒடுக்கப்பட்டவர்கள்மீது இவ்வாறுதான் தொடர்ந்து ஆதிக்கம் வகித்து வருகிறது. இந்த சாதியத் தத்துவம் பாட்டாளிகளின் வர்க்கப் போராட்டங்களிலும் சமத்துவம்கோரி தீண்டப்படாதவர்களும் மற்றவர்களும் நடத்தும் போராட்டங்களிலும் முனைப்பாக ஊடுருவி அப்போராட்டங்களை சீர்குலைக்கிறது. ஆளுகின்ற இரண்டு பிரிவினரின் வர்க்கக் கூட்டின் விளைவாக தோன்றிய இன்றைய சாதிய உணர்வு, அந்த வர்க்கங்களின் தேவைகளுக்கு சேவைசெய்து வருகிறது.

சாதி, மத வாதத்தைஎதிர்த்துப் போராடும் சக்திகள்

ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல், சாதியையும், வகுப்புவாதத்தையும் எதிர்த்துப் போராடும் சக்திகளும் களத்திலிருக்கின்றன. சாதி, மத வேறுபாடுகளின்றி பொதுவான போராட்டங்களில் மக்களை ஒன்றுபடுத்தும் சக்திகளாக அவை செயல்படுகின்றன. வெகுஜன ஸ்தாபனங்களும், இடதுசாரிக் கட்சிகளும் சேர்ந்து எடுக்கும் வெகுஜன கூட்டு நடவடிக்கைகள், மக்களை தெளிவுபடுத்துகின்ற வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்ற இடதுசாரிக் கட்சிகளும் நடத்துகின்ற தத்துவ, அரசியல் பிரச்சாரங்கள், இரண்டரை லட்சம் பம்பாய் பஞ்சாலை தொழிலார்களின் வேலைநிறுத்தம் போன்ற உழைக்கும் வர்க்கத்தின் நீண்ட நெடிய போராட்டங்கள் எல்லாம் புதிய உணர்வுகளை உருவாக்குகிற சக்திகளின் நடவடிக்கைகளாகும். பொதுவான போராட்டத்திற்கான அவசியத்தின் அடிப்படையில்தான் இந்த புதிய உணர்வு உருவாகிறது. ஆனால் முதலில் வருவது நடைமுறை செயல். அதன் பின்னர்தான் பேச்சும் உணர்வும். இந்த போராட்டங்களின் அனுபவம் என்ன? மக்களது உணர்வில் உடனடியான மாற்றத்தை ஏற்படுத்தி விடுவதில்லை. திடீர் குமுறல்கள், பின்னடைவுகள் ஆகியவற்றுடன் சேர்த்து வரும் இந்த வளர்ச்சிப்போக்கு மெள்ளமெள்ளத்தான் முன்னேற்றமடையும். சூழ்நிலையில் ஏற்பட்டு வரும் மாற்றத்தையும், சாதிஎதிர்ப்பு மோதல்கள் வளர்ந்து வருவதையும், அந்தப் போராட்டம் வர்க்கப் போராட்டத்துடன் இணைவதையும் வெளிப்படுத்துகின்ற மற்றொரு அறிகுறியாக கிராமப்புறங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அது தற்போது நிலப்பிரபுகளுக்கு (மேல்ஜாதியைச் சேர்ந்த நிலப்பிரபுக்களுக்கு) எதிராக விவசாயத் தொழிலாளர்களின் நேரடிப் போராட்டமாக உருவெடுத்து வருகிறது.

தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்ந்து குனிந்து கொடுத்துக் கொண்டிருப்பதை விரும்பவில்லை. அவர்களும் எதிர் நடவடிக்கைகளில் இறங்கத் தொடங்கிவிட்டனர். அத்தகைய நடவடிக்கைகள்மீது பூர்ஷ்வா-நிலப்பிரபுத்துவ ஆட்சி அதிகாரம் இரக்கமற்ற முறையில் அடக்குமுறையை ஏவிவிடுகிறது. பொருளாதார நெருக்கடியும், வறுமையும் மக்கள் மத்தியில் ஒரு புதிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. மக்கள் தங்களது ஜனநாயகப் போராட்டங்களை பாரம்பரியமான முறையில் (சாதி முதலிய முறைகளில்) வெளிப்படுத்தி வருகின்றனர். இதை சாதி உணர்வு என்று கருதக் கூடாது; மாறாக, இது சாதிக்கு எதிரான போராட்டமே.

மதவெறி கட்சிகளின் அழிவு வேலையும் அரசின் அலட்சியப் போக்கும்

இஸ்லாமிய அடிப்படைவாத உணர்வுகளும், முஸ்லீம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன. தற்போதைய சூழ்நிலையினுடைய வர்க்கசக்திகளின் செயல்பாடுகளினுடைய தர்க்கரீதியான தொடர்விளைவே இது. மேற்குஆசிய நாடுகளில், முற்போக்கு ஜனநாயக பாட்டாளி வர்க்கச் சக்திகளை எதிர்த்து போராடுவதற்கும், ஏகாதிபத்தியத்திற்கு வால்பிடிக்கின்ற பிற்போக்கு ஆட்சியாளர்களை பதவியிலமர்த்துவதற்கும் இஸ்லாமிய அடிப்படைவாதம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் வறுமையினால் பாதிக்கப்பட்டும், ஓரவஞ்சனை செய்யப்பட்டும்,   இரண்டாந்திர குடிமகனாக நடத்தப்பட்டு வரும் முஸ்லீம்களின் செவிகளில் இது தேனாக பாய்கிறது. வறுமையில் சிக்கித் தவிக்கும் மற்ற மக்களுடன் துன்பங்களை பகிர்ந்து கொள்ளும் உணர்வுக்கு மாறாக, அரசாங்கத்திலிருக்கும் தலைவர்கள் வேறு மத நம்பிக்கை கொண்டவர்கள் என்பதால் அவர்களால் அநீதி இழைக்கப்படுகிறது என்ற வகையில் உணர்வுகள் உருவாகின்றன. பொதுவான ஜனநாயகப் போராட்டம் மற்றும் வர்க்கப் போராட்டத்தினின்று முஸ்லீம் மக்களை விலைக்கு வைக்கவும், தேசீய உணர்வுகளுக்கு ஊறுவிளைவிக்கவும் தேசீய ஒற்றுமை உணர்வை அரிக்கச் செய்யவும், மதத் தத்துவம் இப்போது முனைப்பாக தலையிடுகிறது. சிறுபான்மையினருக்கு, அதாவது, மதம், கலாச்சாரம் முதலானவற்றின் அடிப்படையிலான சிறுபான்மையினருக்கு ஒரு பூர்ஷ்வா-நிலப்பிரபுத்துவ ஆட்சி நீதி வழங்கிட முடியாது. இந்தியாவை போன்ற புதிதாக விடுதலையடைந்த ஒரு நாட்டில், முதலாளித்துவத்திற்கு முந்தைய தத்துவங்கள் மக்களின் உணர்வுகளில் ஆதிக்கம் புரியும் நிலையில், மதச் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுகின்றனர். நாட்டின் ஒற்றுமையை உருக்குலைத்து ஏகாதியத்திற்கு உதவும் வகையில் மக்களை ஒருவருக்கொருவர் எதிர்த்து மோதவைப்பதற்கு, பகைமை உணர்வுகளை மதவெறியர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில், சிறுபான்மை பிரிவினைவாதம் என்பது சில கற்பனையான மனக்குறைகளின் அடிப்படையில் தோன்றியவை. ஆனால் இன்று அவை நியாயமான மனக்குறைகளாகும். ஜனநாயக உரிமைகள் மீறப்படுவதால் ஏற்படும் உண்மையான குறைபாடுகளாகும். . ஆனால், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், வகுப்புவாதிகளும், அதை மதவாத, வகுப்புவாத பிரச்சினையாக  மாற்றி விட்டனர். மனக் குறைபாடுகள் ஏதுமில்லாமலேயே ஒரு பிரிவினைவாதக் கண்ணோட்டம் உண்டென்றால், அது ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான இந்து வகுப்புவாதம்தான். பகைமைகளை தூண்டி விடுவதற்காக வேண்டுமென்றே கிளப்பிவிடும் வாதம் அதனுடையது.

இந்து வகுப்புவாதப் பிரச்சாரத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் இரையாகின்றனர் என்றால், ஆளும் வர்க்கங்கள் இந்த நாட்டிற்கு விளைத்திருக்கும் தீமையின் அளவையே, இந்த நிலைமை எடுத்துக்காட்டுகிறது. இந்துமத வழிபாடான பசு-பாதுகாப்பு என்பது நாட்டின் அரசியல்சாசனத்தில் அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளில் ஒன்றாக இடம் பெற்றிருப்பதின்மூலம், இந்துமத வைதீகத்திற்கு எத்தகைய சலுகை வழங்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவு.

தேசீயஒற்றுமை என்ற அஸ்திவாரத்தைக் கட்டுவதற்காக, எந்தெந்த தத்துவங்களையும் கண்ணோட்டச் செல்வாக்குகளையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள் எதிர்த்துப் போராடினவோ, அவையெல்லாம் இன்று நிலைத்து நிற்கின்றன. பூர்ஷ்வா நிலப்பிரபுத்துவக் கூட்டணிக்குள் இருந்துவரும் உள்ளார்ந்த சமரசம், தீவிர நிலச்சீர்திருத்தங்கள் செய்ய மறுப்பது, தொழில்வளர்ச்சியில் மந்தப்போக்கு ஆகிய அனைத்தும் ஒன்று சேர்ந்துதான் அவற்றை அவ்வாறு நிலைபெறச் செய்திருக்கின்றன. இன்று அதே செல்வாக்குகள் மேலும் உயரச் செல்லுவதற்காக போராடுகின்றன. பிரிவினை கோரிக்கைகளுக்கு வழிகோலும் சீர்குலைவு சக்திகளிடமிருந்து புதிய சவால்கள் தோன்றியிருக்கின்றன. பல்வேறு மொழி பேசும் மக்களை ஒன்றாக இணைந்து இருக்கச் செய்து மொழி வழி தேசிய ஒற்றுமை காப்பது அவசியம். இதை இந்த பூர்ஷ்வா-நிலபிரபுத்துவ ஆட்சியால் செய்ய இயலவில்லை என்பதையே அஸ்ஸாமும், காலிஸ்தானும் மீண்டும் உணர்த்தியிருக்கின்றன. இந்தியாவை துண்டாடும் அமெரிக்காவின் திட்டம் மேற்கூறிய தத்துவங்கள் செய்துவருகின்ற சீர்குலைவு வேலைகளை ஆதாரமாக கொண்டிருக்கிறது.

“பல ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளில் பரம்பரையான வகுப்புவாதம், இனம், சாதி, இடம், குழு, அரை-நிலப்பிரபுத்துவ மதவெறித்துவம் ஆகியவையெல்லாம், ‘எஜமானர்களாகவும்’, வர்த்தகர்களாகவும், மாற விரும்புகின்ற சிறிய உடைமையாளர்களின் தினசரி வாழ்க்கையின் தத்துவங்களாக இருக்கின்றன. அதனால்தான் அவர்கள் பழங்குடிஇனம், சாதி, மதம், தார்மீக முறைகள் ஆகியவற்றைப் பின்பற்றி வருகின்றனர். இவையனைத்தையும் வரலாறு விரும்புகின்ற வேகத்தில் மாற்றிவிட்டு அந்த இடத்தில் தூய்மையான மதச்சார்பின்மை தத்துவத்தையும், ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசீயத்தையும் உருவாக்கிவிடுவது என்பது அவ்வளவு எளிதான காரியமா? சாதாரணமாக அது முடியாது” என்று கூறுகிறார்கள். இப்படிக் கூறுவது சரியாக இருக்குமா? இது ஓரளவு உண்மைதான். ஆனால் பிரச்சனை என்னவென்றால், இந்த உணர்வுக்கு வெகுமுன்பாகவே நடைமுறை தேவை செயல்தான் முதலில் தோன்ற வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இத்தகைய முயற்சி ஏற்கனவே இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது. வகுப்புவாதம், சாதி, மதம் முதலான சீர்குலைவு சக்திகளின் அபாயத்தை குறைத்து மதிப்பிடுவது கூடாது. இதை எதிர்க்கின்ற சக்திகளின் பலவீனம் பற்றி, குறிப்பாக தொழிலாளி வர்க்கத்தின் உணர்வு பற்றி ஏற்கனவே குறிப்பிட்டாகிவிட்டது.

இடதுசாரி கட்சிகளின் முன்னுள்ள பிரதான கடமைகள்

ஆனால், இந்தியாவில் இன்று மோசமாகிவரும் பொருளாதார நெருக்கடி, விவசாயிகள் மொத்தமாக வறுமைக்குள் தள்ளப்படுவது, தொடர்ந்து விலைவாசிஉயர்வும் அதன் விளைவுகளும், சட்டம் ஒழுங்கும் சீர்குலைந்து சரிந்து வருவது ஆகிய இவையனைத்தும் மக்களை போராடத் தூண்டியிருக்கின்றன. அத்துடன்கூடவே, அவர்களது சாதி, மத உணர்வுகள், மூடநம்பிக்கைகள் தொடர்கின்றன. நடைமுறையில், இந்த பலவீனங்களையும் மீறி ஆளுங்கட்சிகளை அவர்கள் ஆட்சியிலிருந்து இறக்கி விடுகின்றனர்; இ.காங்கிரசை தோற்கடிக்க லட்சக்கணக்கில் அணிதிரளுகின்றனர்; நம்பிக்கைத் துரோகம் செய்த கட்சிகளை விரட்டி விடுகின்றனர்; ஒருதடவை ஆட்சியில் அமர்த்திவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமைதாங்கும் இடதுசாரிகட்சிகளிடம் நம்பிக்கையை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளுகின்றனர்.

இதுவெல்லாம் ஒரு ஆரம்ப முயற்சிதான்.  மக்களது இந்தப் பரிசோதனைகளிலிருந்து, தவறுகளிலிருந்து அனுபவம் பெற்று வருகின்றனர். லெனின் கூறியதுபோல், மக்களுக்குக் கிடைக்கும் உண்மையான போதனையை, புரட்சிகரமான போராட்டங்களிலிருந்து பிரித்துவிட முடியாது. இந்த போராட்டங்களின் அனுபவம்தான் அவர்களது உணர்வுகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. விவசாயிகள் மத்தியில் வளர்ந்துவரும் அதிருப்தி, பெரிய போராட்டங்கள் அண்மையில் வெடிக்கவிருக்கின்றன என்பதையே காட்டுகிறது. அவர்களுக்கு ஒரு சரியான வழிகாட்டுவது இன்று இடதுசாரி ஜனநாயக சக்திகளுக்கும், தொழிலாளி வர்க்கத்திற்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் முன்பாக இருக்கும் மிகப் பெரிய கடமையாகும். இதற்கு தொழிலாளி வர்க்கம் தன் நடவடிக்கைகள் மூலம் பக்கபலமாக நின்று நாட்டுமக்கள் உணர்வுநிலைகளில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

அதேவேளையில், தொழிலாளி வர்க்க இயக்கமும், கம்யூனிஸ்ட் இயக்கமும் தங்களிடம் தொடர்ந்து இருந்துவரும் பலவீனங்களைக் களைய வேண்டும்; சமுதாயப் போராட்டங்களிலும், பொதுவான இயக்கங்களிலும் ஆளும் வர்க்கங்களின் தத்துவம் தலையிட்டு சீர்குலைத்து வருகிறது. மற்ற போராட்டங்களை நடத்தும்போதே ஒரு தத்துவப் போராட்டத்தையும் சேர்த்து நடத்துவதன் மூலமே பிற்போக்கு சக்திகளின் தலையீட்டையும், சீர்குலைவுகளையும் முறியடிக்க முடியும். மக்களுடைய நடைமுறை நடவடிக்கைகளுடன் தத்துவப் போராட்டங்களும் ஒன்றிணைக்கப்பட வேண்டும். இந்தக் கடமையை நிறைவேற்றுவதிலும், மதத்தைப் பற்றியும் இந்தியாவில் அதனுடைய பிற்போக்குத் தனமான சமுதாய வெளிப்பாடுகள் பற்றியும் பொருள்முதல்வாத அடிப்படையில் விமர்சனம் செய்வதிலும், கம்யூனிஸ்ட் இயக்கமும், இடதுசாரி இயக்கமும் இன்னமும் பலவீனமாகவே உள்ளன. பூர்ஷ்வா தலைமை இந்த கடமையை நிறைவேற்றவில்லை. தொழிலாளி வர்க்கமும் அந்த கடமையை புறக்கணித்துவிட்டது. பிற்போக்குத் தனமான தத்துவங்களின் அடிப்படைக் கோட்பாடுகளின்மீது நேரடியாகத் தாக்குதல் தொடுக்காமல், பிரச்சனைகள் தோன்றும்போதுமட்டும் சில தந்திரோபாய அணுகுமுறைகளை மேற்கொள்வதன் காரணமாக, நடைமுறையில், குழப்பமும் சந்தர்ப்பவாதமும்தான் உருவாகின்றன. இந்த பலவீனம் களையப்பட வேண்டும்.

மக்கள்மீது ஆதிக்கம் வகிக்கின்ற மதம், சாதி, வகுப்புவாதம் ஆகிய தத்துவங்கள் மற்ற இடங்களைப் போலவே, இந்தியாவிலும் பொருளாதார வளர்ச்சியின் பாதிப்பிற்கு உட்படுபவைதான். இந்திய சமுதாயத்தில் புரட்சிகரமான மாற்றம் ஏதும் உருவாகாத நிலையில், அந்தத் தத்துவங்களுக்கு உயிரூட்டுகின்ற சமுதாய சூழ்நிலைகள் தொடர்ந்து நீடிக்கின்றன. ஆகவே அத்தத்துவங்களும் ஒரு புதிய மாறுபட்ட வடிவில் தொடர்ந்து செயல்படுகின்றன. தற்போதைய காலகட்டத்தில் இன்றுள்ள பூர்ஷ்வா நிலப்பிரபுத்துவ ஆட்சி ஆளும் வர்க்கங்களின் தேவைகளுக்கே சேவைசெய்கின்றன. இந்நாட்டின் ஒற்றுமையை உருக்குலைக்க நினைக்கும் ஏகாதிபத்தியத்தின் சதிக்கும் இந்தப் போக்கு துணைபுரிகிறது.

மக்களிடையே ஜனநாயகப் புரட்சி நலன்களுக்கு உதவுகின்ற தத்துவங்களின் முனைப்பான தலையீட்டின் மூலம்தான், பிற்போக்குத் தத்துவங்களின் தலையீட்டை முறியடிக்க முடியும்.

பூர்ஷ்வா நிலப்பிரபுத்துவக் கட்சிகள் எதுவும் இந்தத் தத்துவப் போராட்டத்தில் அக்கறை காட்டுவதில்லை. ஜனநாயக, தொழிலாளி வர்க்க சக்திகள் வெகுஜனப் போராட்டங்களை நடத்தும்போது, ஒரு திட்டமிட்ட தத்துவத் தாக்குதலையும் நடத்தியாக வேண்டும்.

தொழிலாளர் வர்க்கத்தை ஒன்றுபடுத்துவோம், அவர்களின் வர்க்க உணர்வை மேம்படுத்துவோம்!

1964 ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று அன்றைய கல்கத்தா நகரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 7 ஆவது அகில இந்திய மாநாட்டில் கட்சித் திட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் நீண்ட காலமாக நடைபெற்று வந்த அரசியல் மற்றும் தத்துவார்த்தப் போராட்டத்திற்கு ஒரு முடிவு காணப்பட்டது. அந்தப் போராட்டம், இந்திய அரசின் வர்க்க குணாம்சம் குறித்தும் அத்துடன் இந்தியாவில் ஒரு சோசலிஸ்ட் அமைப்பை உருவாக்குவதற்கான புரட்சிகரப் போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் பங்களிப்பு குறித்ததுமாகும். மேலும் இது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என்று புதியதொரு கட்சி உதயமானதையும் அறிவித்தது. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் வெளிவருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னதாகவே, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் கருத்து வேறுபாடுகள் உருவாகத் துவங்கியிருந்தன.

இந்திய அரசு அமைப்பில் இந்திய முதலாளிகளின் பங்கு குறித்து, கட்சித் திட்டத்தில் தீர்மானகரமாகக் கூறப்பட்டது. கட்சித் திட்டத்தின்படி, இந்திய அரசு, “பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்பட்ட முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் வர்க்க ஆட்சியாகவும், அது முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றுவதற்காக மேலும் மேலும் அந்நிய நிதி மூலதனத்துடன் நெருக்கமாக உறவை அதிகரித்துக் கொண்டும், செயல்பட்டு வருகிறது,’’ என்று இறுதிப்படுத்தப்பட்டது.

இந்தக் கட்சித் திட்டம், தொழிலாளர் வர்க்கத்தால் தலைமை தாங்கப்படும் மக்கள் ஜனநாயக அரசை நிறுவுவதுதான் கட்சியின் லட்சியம் என்றும், அதற்கான மக்கள் ஜனநாயகப் புரட்சியின் தலைமைப் பாத்திரம் தொழிலாளி வர்க்கத் தினுடையதுதான் என்றும் பறைசாற்றியது.

தொழிலாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரம் குறித்த இத்தகைய தெளிவான புரிதல்தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இதரர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதில் பிரதான அம்சமாக உள்ளது.

வேறெந்த வர்க்கமும் தலைமை தாங்க முடியாது

கட்சித் திட்டம், தொழிலாளர் வர்க்கத்தின் முக்கியத்துவத்தை இவ்வாறு அடிக்கோடிட்டுக் காட்டியிருப்பதுடன், இந்தியாவில் தொழிலாளர் வர்க்கம் மற்றும் அதன் அரசியல் கட்சியின் கீழன்றி மக்கள் ஜனநாயக முன்னணியை வெற்றிகரமாகக் கட்டவோ, புரட்சியை வெற்றி பெறச் செய்யவோ முடியாது என்று அறுதியிட்டுக் கூறியது. வரலாற்று ரீதியில், “நவீன சமுதாயத்தில் தொழிலாளி வர்க்கத்தைத் தவிர வேறு எந்த ஒரு வர்க்கமும் இந்தப் பணியை ஆற்றக்கூடியதாக இல்லை என்ற உண்மையை நமது காலத்தின் மொத்த அனுபவமும் தெளிவாக உணர்த்துகின்றது,’’ என்றும் கட்சித் திட்டம் தெளிவுபடுத்தியது.

தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின் கீழ் கட்டப்பட வேண்டிய கூட்டணி குறித்து கட்சித் திட்டத்தில் கூறப்பட்டிருப்பதாவது: “தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் வலுவான கூட்டணிதான் மக்கள் ஜனநாயக முன்னணிக்கு மையமானதும், அடித்தளமானதும் ஆகும். நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், நீண்ட கால விளைவுகளைத் தரக்கூடிய ஜனநாயக மாற்றத்தைக் கொணரவும், ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தை உறுதிப்படுத்தவும் இந்தக் கூட்டணி மிக முக்கியமான சக்தியாக இருக்கும். புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் இதர வர்க்கங்கள் வகிக்கும் பாத்திரம் தொழிலாளர் – விவசாயிகள் கூட்டணியின் வலிமை, ஸ்திரத்தன்மை ஆகியவற்றையே முக்கியமாக சார்ந்துள்ளது.’’

அதேசமயத்தில், கட்சியின் 7 ஆவது அகில இந்திய மாநாடு, தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்குத் தலைமை ஏற்க வேண்டிய, தொழிற்சங்கங்கள் மற்றும் இதர வெகுஜன ஸ்தாபனங்களில் பெருமளவுக்கு இருந்த பலவீனங்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டது.

கட்சியின் அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம், “கட்சி உறுப்பினர்கள், மக்களுக்கான நிவாரணங்களைப் பெற்றெடுக்கவும் அவர்களது வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவுமான திட்டமிட்டப் போராட்டங்களுக்கு உறுதியாகத் தலைமையேற்று செயல்பட வேண்டும்’’ எனவும் வலியுறுத்தியது. தீர்மானத்தில் மேலும், “வெகுஜன ஸ்தாபனங்களில், அதிலும் குறிப்பாக தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களில் நிலவும் பலவீனங்களினால் எழும் ஆழமான ஆபத்துக்களிலிருந்து முழுமையாக விடுபட்டு, எழாவிட்டால், இந்தப் பணியை வெற்றிகரமாக ஆற்றிட முடியாது’’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் தொழிற்சங்க இயக்கத்தின் நிலைமை என்னவாக இருந்தது? அரசாங்கமும், ஆளும் வர்க்கங்களும் தாக்குதலைத் தொடுத்துக் கொண்டும், அதன் விளைவாக உழைக்கும் மக்களின் மீதான சுமைகள் அதிகரித்துக் கொண்டும் இருந்த அதேசமயத்தில், சீர்திருத்தத் தலைமையின் கீழிருந்த தொழிலாளர்கள்கூட போராட்டக் களத்தில் முன்னேறிக் கொண்டிருந்தனர்.

அணிதிரள அறைகூவல்

கட்சி உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் கீழ்வரும் வழிகாட்டுதல்களை மாநாடு வழங்கியது. “சரியான மற்றும் நடைமுறை சாத்தியமான கோரிக்கைகளை வடித்தெடுத்து, தொழிலாளர்களை அவற்றின் கீழ் அணிதிரட்டிட வேண்டும். அதேசமயத்தில் இதர தொழிற்சங்கங்களின் கீழ் உள்ள தொழிலாளர்களையும் சகோதரப்பூர்வமான முறையில் அணுகிட வேண்டும். அவற்றின் தலைமைகளுடனும் ஒரு முறையான அணுகுமுறையை ஏற்படுத்திக் கொண்டு ஒன்றுபட்ட போராட்டங்களைக் கட்டவிழ்த்து விட வேண்டும்.’’

அதேசமயத்தில், தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக ஏற்படும் போராட்டங்களைச் சார்ந்திருக்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்தி இருந்தது. ஸ்தாபனத்தை வலுப்படுத்துதல், தொழிற்சங்க அமைப்புகளுக்குள் வராது வெளியே இருக்கும் பெருவாரியான தொழிலாளர்களை ஸ்தாபனப்படுத்துதல், அவர்களின் அரசியல் உணர்வினை மேம்படுத்துதல் ஆகிய பணிகளின் முக்கியத்துவம் அடிக்கோடிட்டுக் கூறப்பட்டிருந்தது. அதேசமயத்தில், தொழிற்சங்க இயக்கத்தில் முன்பு நிலவிய இக்கட்டான நிலைமையினை அடிக்கோடிட்டுக் காட்டிட, கட்சியின் அகில இந்திய மாநாடு, தவறவில்லை. அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “தொழிற்சங்க இயக்கம் மிகவும் ஆழமான முறையில் பொருளாதாரவாதத்திற்குள் மூழ்கி இருக்கிறது. தொழிலாளர்களின் அரசியல் உணர்வினை வளர்த்தெடுக்கவும், மக்களின் இதர பகுதியினருக்கு, குறிப்பாக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்று அவர்களை அணிதிரட்டிடவும் நாம் தவறிவிட்டோம்,’’ என்றும் குறிப்பிட்டிருந்தது. `இந்த பலவீனத்தை மிகவும் விரைவில் சரி செய்திட வேண்டும் என்றும், அனைத்து வழிகளிலும் அரசியல் உணர்வினை மிகவும் விரைந்து, புகுத்திட வேண்டும்’ என்றும் கட்சியால் அறைகூவல் விடுக்கப்பட்டது.

கட்சி, தொழிலாளர் வர்க்க ஒற்றுமையைப் பாதுகாத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளத் தீர்மானித்திருந்தது. எனவே, ஏஐ டியுசி-இன் ஒற்றுமையை நிலைநிறுத்திடவும் அதனை வலுப்படுத்திடவும் அறைகூவல் விடுத்திருந்தது. ஏஐடியுசி-இன் ஒற்றுமையை சீர்குலைப் பதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் தொழிலாளர்களை அணிதிரட்டி முறியடித்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தது. தொழிற்சங்க ஜனநாயகம் மிகவும் பலவீனமாக இருப்பதையும், அது இயக்கத்தை எந்த அளவிற்கு மிகவும் ஆழமான முறையில் இடருக்குள்ளாக்குகிறது என்பதையும், அது எவ்வாறெல்லாம் தலைமையில் அதிகார வர்க்க செயல்பாட்டிற்கு இட்டுச் செல்கிறது என்பதையும் சுட்டிக் காட்டியதுடன், அவை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கட்சி அறைகூவல் விடுத்தது.

இவ்வாறு, ஏழாவது அகில இந்திய மாநாடு நிறைவேற்றிய தீர்மானத்திலேயே, தொழிற்சங்க அரங்கில் கட்சி ஆற்ற வேண்டிய பணிகள் சுருக்கமாகப் பட்டியலிடப்பட்டிருந்தன. தொழிற்சங்க இயக்கத்தின் திசைவழி மிகவும் தெளிவானதாகும். ஒற்றுமையை நிலைநாட்டுங்கள், ஸ்தாபனத்தை பலப்படுத்துங்கள், அதன் ஜனநாயக செயல்பாட்டை உத்தரவாதப்படுத்துங்கள், அரசியல் உணர்வை அதிகரித்திடுங்கள், வீரஞ்செறிந்த வெகுஜனப் போராட்டங்களை உருவாக்குங்கள் என்று மிகவும் தெளிவான முறையில் திசைவழி காட்டப்பட்டிருந்தது..

கடமைகள் குறித்த ஆவணம்

1967 இல் மத்தியக்குழுவால் நிறைவேற்றப்பட்ட `தொழிற்சங்க அரங்கில் ஆற்ற வேண்டிய கடமைகள்’ என்னும் ஆவணத்தில் இதற்கான கட்டளைகள் மேலும் விரிவான முறையில் கூறப்பட்டு, வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்மானம், தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் செயல்படும்போது ஆற்ற வேண்டிய அனைத்து அரசியல் கடமைகள், ஸ்தாபனக் கடமைகள் மற்றும் தத்துவார்த்தக் கடமைகள் குறித்தும் தொட்டுக்காட்டி இருக்கிறது.

பொருளாதாரப் போராட்டங்களில் கூட வர்க்க ஒற்றுமை மிகவும் பலவீனமாக இருந்ததைக் கவனத்தில் கொண்டு வர்க்க ஒற்றுமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. `கடமைகள்’ குறித்த ஆவணம், தொழிற்சங்கங்கள் தங்கள் பங்களிப்பினை வலுவான முறையில் ஆற்றிட வேண்டுமாயின், `அவை தொழிலாளர் வர்க்கத்தின் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதில் ஒரு வலுவான கருவியாக மாறிட வேண்டும், இப்போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தை முழுமையாக ஒன்றுபடுத்திடும் வல்லமையைப் பெற்றிருக்க வேண்டும்’. இத்தகு ஒற்றுமையின் முக்கியத்துவம் மற்றும் வர்க்க உணர்வினை மேம்படுத்தக்கூடிய விதத்தில் வர்க்கப் போராட்டத்தை உக்கிரப்படுத்துதலுக்கும் அழுத்தம் தரப்பட்டிருந்தது.

முதலாளிகள் மற்றும் அரசாங்கத்தின் தாக்குதலைத் தடுத்து, முறியடித்திட ஐக்கிய முன்னணி அமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அதேசமயத்தில், `கடமைகள்’ குறித்த ஆவணம் இவ்வாறு `தாக்குதலைத் தடுத்து நிறுத்தும் பணியில் ஒரு வர்க்கமாக செயல்பட’ வேண்டியது தொழிலாளர் வர்க்கத்திற்கு அவசியமான ஒன்று என்பது குறித்தும் அழுத்தம் தந்திருந்தது. ஒன்றுபட்ட நடவடிக்கைகளை வளர்த்தெடுப்பது தொடர்பாக, 1967 ஆவணம் காட்டிய திசைவழி, இன்றைக்கும் பொருத்தம் உடையதாக இருப்பது, மிகவும் சிறப்புக்குரிய ஒன்றாகும்.

“மிகவும் உறுதியான முறையிலும், தீர்மானகரமான விதத்திலும் கீழிருந்து ஐக்கிய முன்னணியைக் கட்டும் உத்திகள் மக்களைத் திரட்டுவதில் உண்மையான போல்ஷ்விக் முறையை நிறுவுகிறது. ஐக்கிய முன்னணி குறித்து தலைமை மட்டத்திலிருந்தான முயற்சிகள் மூலம் இது வலுப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் கீழிருந்து கட்டப்படும் ஐக்கிய முன்னணி முயற்சிகளுக்கு இது ஒரு முன் நிபந்தனையாகும். ஒரு பரந்துபட்ட ஐக்கிய முன்னணியால் மட்டுமே, முதலாளித்துவத்தின் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் மத்தியில் தன்னெழுச்சியான முறையில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். இவ்வாறான முறையில் ஸ்தாபன ரீதியாகத் திரட்டப்பட்ட தொழிலாளர்களோடு, திரட்டப்படாத தொழிலாளர்களையும், முன்னேறிய தொழிலாளர்களோடு, பின்தங்கிய தொழிலாளர்களையும், அனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் கீழ் உள்ள அனைத்துத் தொழிலாளர்களையும் தங்கள் நலன்களைப் பாதுகாப்பதற்காக வெற்றிகரமான முறையில் அணிதிரட்டிட முடியும்.’’

இந்த ஆவணமானது கடந்தகால நடைமுறைகளிலிருந்து முழுமையாக முறிவினை ஏற்படுத்திக் கொண்டு, வர்க்க ஒற்றுமை மற்றும் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டிய அவசியத்தைப் பறைசாற்றியது. இத்தகைய புரிதலின் அடிப்படையில்தான் கட்சி, தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் தன் பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறது.

ஆனாலும், ஏஐடியுசி-இன் பதாகையின் கீழ் வீரஞ்செறிந்த போராட்டங்களை வளர்த்தெடுப்பதோ, ஜனநாயக முறையில் செயல்படுவதை உத்தரவாதப்படுத்துவதோ, ஒற்றுமையைக் கட்டும் பணியை முன்னெடுத்துச் செல்வதோ சாத்தியமில்லாமல் இருந்தது.   ஏஐடியுசி-க்குள்ளேயே ஒற்றுமையை நிலைநிறுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை மேற்கொண்ட முயற்சிகள் பலனளித்திடவில்லை. 1962 இலிருந்து ஏஐடியுசி-க்குள்ளேயே நடத்தி வந்த போராட்டம் 1969 வரை தொடர்ந்தது.

ஏஐடியுசி-இன் அப்போதைய முன்னணித் தலைமை, அதன் அரசியல் மற்றும் தத்துவார்த்த நிலைமைகள் காரணமாக, போராட்ட நடவடிக்கைகளுக்குத் திட்டமிடுவதிலும், தலைமை தாங்குவதிலும் முன்முயற்சி எடுக்கத் தயாராக இருக்கவில்லை. ஏதாவது காரணத்தைச் சொல்லி எவ்விதமான போராட்டத்திற்கும் தலைமையேற்கக் கூடிய விதத்தில் தயாரிப்புப் பணிகளைச் செய்யாதவிதத்தில் அமைந்திருந்தன. ஊதியங்கள், அகவிலைப்படி, போனஸ் போன்று நாட்டிலிருந்த உழைக்கும் மக்கள் எதிர்கொண்ட பல்வேறு முக்கியமான பிரச்சனைகளாக இருந்தாலும் சரி, அரசாங்கத்துடன் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக தத்துவார்த்த மற்றும் அரசியல் பிரச்சனையாக இருந்தாலும் சரி, ஏராளமான வித்தியாசங்கள் தோன்றிக் கொண்டே இருந்தன. இவை அனைத்தையும் ஜனநாயக முறையில் தீர்த்திட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் சீர்குலைக்கப்பட்டன. இவை அனைத்தும் இப்போது தொழிலாளர் வர்க்க இயக்க வரலாற்றின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

`தொழிலாளர் வர்க்கம் முதலாளிகளிடமிருந்தும், அரசாங்கத்திடமிருந்தும் மூர்க்கத்தனமான முறையில் தாக்குதல்களைத் தொடர்ந்து எதிர்கொண்டு வந்த’ சமயத்தில்தான் இவை அனைத்தும் நடந்து கொண்டிருந்தன. 1967 தேர்தல்களுக்குப் பின்னரும், நாட்டில் எட்டு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோற்ற பின்னரும், மக்கள் மத்தியில் இருந்த கோபம் பல்வேறு வடிவங்களில் வெடித்தது. நாட்டில் பல்வேறு பிரிவினரின் தீவிரமான போராட்டங்களும் நடைபெற்று வந்தன. மத்தியிலிருந்த அரசாங்கம் உழைக்கும் வர்க்கத்தின் போராட் டங்களுக்கு எதிராகக் கடும் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் இருந்த மாநில அரசாங்கங்கள், தொழிலாளர்களின் பக்கம் நின்று, மத்திய அரசின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிய மறுத்தன. இந்தக் காலகட்டத்தில்தான் இம்மாநில அரசாங்கங்கள் ஆளும் வர்க்கங்களால் துவக்கப்பட்ட சதிகளின் மூலமாகக் கவிழ்க்கப்பட்டன.

புதிய ஸ்தாபனம் உதயம்

ஏஐடியுசி தலைமை, போராடும் தொழிலாளர்களின் விருப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறியதும், பல்வேறு மட்டங்களில் ஜனநாயக விரோத முறையில் செயல்பட்டதும், ஏஐடியுசி-க்குள் செயல்பட்டு வந்த கட்சியின் முன்னணி ஊழியர்களை, 1970 இல் இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) என்னும் புதியதொரு தொழிற்சங்கத்தை அமைத்திட, நிர்ப்பந்தித்தது.

சிஐடியு-வின் அமைப்பு மாநாடு, தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், `ஒன்றுபடு – போராடு’ — போராட்டங்களை வலுப்படுத்துவதற்காக ஒன்றுபடு, ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காகப் போராடு — என்னும் முழக்கத்தை உருவாக்கிக் கொடுத்தது. சிஐடியு-வின் நாடு தழுவிய அளவிலான பிரச்சாரங்கள் ஒற்றுமை வாரம் அனுசரிப்பதுடன் தொடங்கின.

சிஐடியு-வின் அமைப்பு மாநாட்டில் நிறைவுரையாற்றியபோது, நிறுவனத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் பி.டி. ரணதிவே, ஒற்றுமை மற்றும் ஒன்றுபட்ட போராட்டங்களின் முக்கியத்துவம் குறித்து மிகவும் விரிவாகக் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது: “உழைக்கும் வர்க்கம் ஒன்றுபட வேண்டிய தருணமிது. தாங்கள் ஒன்றுபடாவிட்டால், தங்கள் மீது ஏவப்பட்டுள்ள தாக்குதலைச் சந்திக்க முடியாது என்பதை, உழைக்கும் வர்க்கம் சொந்தமாகவே சிந்திக்கும் தருணமிது. நம்முடைய ஸ்தாபனமும் இந்தக் களத்தில் இறங்கி ஒவ்வொருவரிடமும், `ஒற்றுமைப் பதாகையை உயர்த்திப் பிடிப்போம், பொது செயல்பாடுகளிலும், கூட்டு செயல்பாடுகளிலும், ஒற்றுமைப் பதாகையை உயர்த்திப் பிடிப்போம்,’ என்று கூற வேண்டிய தருணமிது’’ என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும், முன்னணி ஊழியர்களும் இத்தகைய புரிதலுடன், “ஒன்றுபடுவோம் – போராடுவோம்’’ என்னும் முழக்கத்துடன் கடந்த ஐம்பதாண்டு காலமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.

தொடர்ந்து வந்த அரசாங்கங்களின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டங்களை வளர்த்தெடுப்பதற்கான இடைவிடா முயற்சிகள் மூலமாக, தொழிற்சங்கங்களின் ஐக்கிய கவுன்சில் (UCTU), தேசியப் பிரச்சாரக் குழு (NCC), இந்தியத் தொழிற் சங்கங்களின் நடவடிக்கைக் குழு (Sponsoring Committee), தற்போதைய பதினொன்று மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் சுயேச்சையான தேசிய சம்மேளனங்களின் கூட்டுமேடை போன்ற பல்வேறு மேடைகள் படிப்படியாய்த் தோற்றுவிக்கப்பட்டன. கட்சி இந்நடவடிக்கைகள் அனைத்தையும் முழுமையாக ஆதரித்தது. அதன் செயல்வீரர்கள், இக்காலகட்டம் முழுவதும், பல்வேறு துறைகளிலும் மற்றும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பல்வேறு வேலை நிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின்போதும், தொழிலாளர் களின் ஒற்றுமையை உருவாக்குவதில் முன்னணிப் பாத்திரம் வகித்தனர்.

புதிய சவால்கள்

நாட்டில் கடந்த இருபத்தைந்து ஆண்டு காலமாக நடைபெற்று வரும் நவீன தாராளமய ஆட்சியின் கீழ், உழைக்கும் மக்களுக்கு எதிராக மிகவும் கடுமையான முறையில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன. கட்சியின் 20 ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தத்துவார்த்தப் பிரச்சனைகள் மீதான தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது: “நவீன தாராளமய சீர்திருத்தக் கொள்கையானது தொழிலாளர் படைப்பிரிவினரில் பெரும்பகுதியினரை மிகவும் மோசமான விதத்தில் முறைசாராப் பிரிவினராக மாற்றி அமைப்பது அதிகரித்திடும். அவ்வாறான `வளர்ச்சி’ என்றென்றும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். மூலதனம் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக,   நிரந்தர வேலைவாய்ப்புகளை கேசுவல் மற்றும் ஒப்பந்தத் தொழில்களாக மாற்றுவதுடன், தொழிலாளர்களின் ஒற்றுமையை சிதைக்கும் மற்றும் சீர்குலைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன. கேசுவல், தற்காலிக மற்றும் சுயவேலைவாய்ப்புத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.’’

நன்கு வளர்ந்த பெரிய நிறுவனங்களில்கூட, தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக இப்போது இருந்து வருகிறார்கள். இது, முறைசாரா மற்றும் அணிதிரட்டப்படாத ஊழியர்களையும் சேர்ந்து சுமார் 95 சதவீதம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தத்துவார்த்தப் பிரச்சனைகள் மீதான தீர்மானம் வலியுறுத்துவதாவது: “இத்தகைய சவால்களை விஞ்சி வெற்றிபெற, பொருத்தமான உத்திகளை உருவாக்க, அணிதிரட்டப்படாத தொழிலாளர்களையும் புரட்சிகர நடவடிக்கைக்குள் ஈர்ப்பதன் மூலம் தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்திடுவோம்.’’

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசாங்கம், இந்திய மற்றும் அயல்நாட்டுக் கார்ப்பரேட்டுகளின் முழு ஆதரவுடனும் ஆட்சியில் அமர்ந்ததைத் தொடர்ந்து, தொழிலாளர் வர்க்கம் கடுமையாகப் போராடிப் பெற்ற பல உரிமைகள் மீது புதிதாகத் தாக்குதல்கள் தொடுக்கப்படுவது தொடங்கி இருக்கிறது. ஆட்சிக்கு வந்த நூறு நாட்களுக்குள்ளேயே,   தொழிலாளர் நலச்சட்டங்களில் பல முக்கியமான ஷரத்துக்கள் அரக்கத்தனமான முறையில் திருத்தப்பட்டு வருகின்றன. அதன்மூலம் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெரும்பான்மை தொழிலாளர்களை, தொழிலாளர் நலச்சட்டங்கள் மற்றும் தொழிற்சாலை ஆய்வாளர்களின் வரையறைக்குள் வராது விலக்கி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இத்தகைய சவால்கள் வலுவாக எதிர்கொள்ளப்பட வேண்டியவைகளாகும். மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் கூட்டுமேடை ஏற்கனவே இதனைக் கையில் எடுத்துக் கொண்டு, இது தொடர்பாக பிரச்சாரங்களையும், போராட்டங்களையும் தொடங்கிவிட்டது. இந்த முக்கியமான போராட்டம் குறித்து கட்சி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தொழிலாளர் வர்க்க இயக்கம் இன்றைய தினம் மிகவும் ஓர் இக்கட்டான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. தொழிற்சங்க அரங்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கியமான கடமைகள் எனக் கட்சியால் அளிக்கப்பட்ட கடமைகளில் பல இன்னமும் நிறைவேற்றப்படாத நிலையிலேயே இருக்கின்றன. தொழிற்சங்க இயக்கத்தில் மேல்மட்டத்தில் கட்டப்பட்டுள்ள ஒற்றுமை, கீழ்மட்ட அளவில் இன்னமும் முழுமையாகப் போய்ச் சேர வேண்டிய நிலை இருக்கிறது. தொழிற்சங்க அரங்கில் ஆற்ற வேண்டிய `கடமைகள்’ குறித்து 1967 மற்றும் 1983 ஆவணங்களிலும் மற்றும் கட்சி அமைப்புகள் மற்றும் மாநாடுகள் பலவற்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும் பட்டியலிடப்பட்ட பலவீனங்கள் பல இன்னமும் களையப்படாமலேயே இருக்கின்றன. தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் உணர்வுமட்டத்தை உயர்த்துவதிலும், இக்கடமையை வலுவான முறையில் நிறைவேற்றக் கூடிய விதத்தில் முன்னணி ஊழியர்களைத் தயார் செய்வதிலும் நாம் இன்னும் பின்தங்கியே இருக்கிறோம்.

தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் மக்கள் ஜனநாயக முன்னணியை அமைத்திடுவதற்கான முயற்சிக்கு ஏற்றவகையில், தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் முன்னணிப் பிரிவினரை ஈர்த்திட, இன்னும் ஏராளமான பணிகளைச் செய்ய வேண்டியது இருக்கிறது. இதற்கு, வர்க்கப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவதும், தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் உணர்வை மேம்படுத்துவதும் தேவை. இதற்கு, தொழிற்சங்க அரங்கில் ஆற்ற வேண்டிய `கடமைகள்’ ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பலவீனங்கள் களையப்பட வேண்டியதும் அவசியம்.

கட்சியின் 20 ஆவது அகில இந்திய மாநாட்டில் வெளியிடப்பட்ட `சில தத்துவார்த்தப் பிரச்சனைகளின் மீதான தீர்மானத்தில்’ குறிப்பிடப்பட்டிருப்பதைப்போல, “தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின்கீழ், இந்திய மக்கள், விடுதலையை எய்திட உறுதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கட்சி என்ற முறையில், இந்தியாவில் மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக, அதனால் சுரண்டப்படும் மக்கள் அனைவருக்கும் தலைமையேற்று முன்னேறிச் செல்லக்கூடிய விதத்தில், தொழிலாளர் வர்க்கத்தின் வர்க்க ஒற்றுமையையும், புரட்சிகர உணர்வையும், தொழிலாளர் வர்க்கத்தின் வலிமையையும் உயர்த்த வேண்டியது அவசியம்.”

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தினத்தின் ஐம்பதாம் ஆண்டு

சீத்தாராம் யெச்சூரி

தமிழில்: ச. வீரமணி

மாபெரும் அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி வெற்றி பெற்று சாதனை படைத்த நவம்பர் 7 ஆம் தேதியன்றுதான் 1964 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரபூர்வமான முறையில் தன் அமைப்பை அதனுடைய 7ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட புரட்சி திட்டத்துடன் அறிவித்தது.

1920 இல் தாஸ்கண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது. அதனையே கட்சி தொடங்கிய நாளாக எடுத்துக் கொண்டுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தன் பயணத்தைத் தொடர்கிறது. அதனால்தான் 1964 இல் இந்திய புரட்சி இயக்கத்தின் உண்மையான வாரிசு என்ற முறையிலும், புரட்சியின் முன்னணிப் படை என்ற முறையிலும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய அமைப்பு அகில இந்திய மாநாட்டையே 7ஆவது அகில இந்திய மாநாடு என்று எண்ணிட்டது. இவ்வாறு, 2014 ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்ட 94 ஆம் ஆண்டு தினமாகும்.

1982 ஜனவரி, 11 ஆவது அகில இந்திய மாநாட்டின் அரசியல் – ஸ்தாபன அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

“ஒரு சரியான அரசியல் தத்துவார்த்த நிலைப்பாட்டிற்காக, 1955-62 ஆம் ஆண்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடைபெற்ற உள்கட்சிப் போராட்டம், கட்சி பிளவுபடுவதிலும் 1963-64 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்படுவதிலும் முடிந்தது. அரசியல் நிலைப்பாடு, தத்துவார்த்த நிலைபாடு, தேசிய நிலை மற்றும் சர்வதேசிய நிலை எனப் பல்வேறு பிரச்சனைகளிலும் வித்தியாசங்கள் கூர்மையாக முன்வந்து, இரு தரப்பினரையும் பிரித்தது.’’

மேலும், அதில் கூறப்பட்டிருப்பதாவது:

“இந்திய அரசு குறித்தும் இந்திய அரசாங்கம் குறித்தும் முற்றிலும் வெவ்வேறான இரு மதிப்பீடுகள் இரு வெவ்வேறான திட்டங்கள் மற்றும் அரசியல் நடைமுறை உத்திகளைப் பின்பற்ற வேண்டியதற்கு இட்டுச் சென்றன. அவை பிந்தைய ஆண்டுகளில் வெளிப்படுத்தப்பட்டன.’’

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 7 ஆவது அகில இந்திய மாநாட்டின் 20 ஆம் ஆண்டு தினத்தைக் கொண்டாடிய சமயத்தில், பி.டி.ரணதிவே, பீப்பிள்ஸ் டெமாக்ரசி (நவம்பர் 7, 1984) இதழுக்காக எழுதிய சிறப்புக் கட்டுரையில் கூறியிருந்ததாவது:

“புதிய இந்திய அரசு மற்றும் அரசாங்கத்தின் வர்க்கக் குணாம்சம் என்ன என்பது குறித்தும்,   புரட்சியில் உழைக்கும் வர்க்கத்திற்காக ஆற்ற வேண்டிய பணிகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் உள்ளார்ந்த மதிப்பீடு சம்பந்தமாக கேந்திரமான கேள்வி எழுந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசானது, பெருமுதலாளிகளால் தலைமை தாங்கப்படக்கூடிய, அந்நிய நிதி மூலதனத்துக்கு உடந்தையாக இருந்து ஒத்து செயல்படுகிற முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அரசு என்றே அரசின் வர்க்கக் குணாம்சம் குறித்து வரையறுத்தது.”

இதன் பொருள், மக்கள் ஜனநாயக அரசைக் கட்டுவதற்காக, அதிகாரத்திற்கான போராட்டத்தில், அரசு மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக எவ்வித சமரசத்திற்கும் இடமில்லாத வகையில் போராட வேண்டும் என்பதாகும். எனவேதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் மேற்கு வங்கத்தில் அரைப் பாசிசத் தாக்குதல், கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் கொடூரமான பிரச்சாரம் ஆகியவற்றையும் துணிவுடன் எதிர்த்து நின்று அரசாங்கத்திற்கு எதிராக உறுதியான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடிந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடதுசாரி மற்றும் வெகுஜன இயக்கத்திற்கு எதிராக ஏவப்பட்ட ஒடுக்குமுறையைத் தாங்கிக் கொண்டு, இத்தனை ஆண்டு காலமும் எதிர்ப்புத் தீப்பந்தத்தை, சில சமயங்களில் அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் கைவிட்ட சமயங்களிலும் கூட, தனியாகவும், உயர்த்திப் பிடித்து வந்திருக்கிறது.

“இந்திய அரசின் குணம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எப்படி புரிந்து கொண்டது? அது ஒட்டுமொத்தத்தில் பெரிய மற்றும் பெரிதல்லாத முதலாளிகளால் தலைமை தாங்கப்படுகிற அரசு என்று அதனைப் புரிந்து கொண்டது. எதார்த்தத்தில் அரசும் அரசாங்கமும் பெரிதல்லாத முதலாளிகளால் தலைமை தாங்கப்பட்டது என்றே பொருளாகும்.’’

புரட்சியின் ஜனநாயகக் கட்டம் சம்பந்தமாக வித்தியாசம் இல்லை என்ற போதிலும், அரசின் வர்க்க குணம், இந்திய முதலாளிகளின் இரட்டைத் தன்மை கொண்ட குணம் மற்றும் அதன் விளைவாக நாம் மிகச்சரியான முறையில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை உத்தி குறித்த பிரச்சனைகளிலும், கூர்மையான அளவில் வித்தியாசங்கள் இருந்தன.

இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வுகளை வைத்தே, இப்பிரச்சனைகள் பலவற்றைக் குறித்து ஏராளமாக எழுத முடியும். ஏற்கனவே பலவற்றைக் குறித்து எழுதி இருக்கிறோம். கடந்த ஐம்பதாண்டுகளில் இப்பிரச்சனைகள் குறித்து நிறையவே எழுதி இருக்கிறோம்.   இன்றைய சூழ்நிலையிலும் மிகவும் முக்கியமாகத் தொடரும் சில தத்துவார்த்த அடித்தளங்கள் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டதற்கான வரையறை மற்றும் அதனைத் தொடர்ந்து அது நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் சக்திகளில் எழுச்சியுடன் முன்னேறிச் சென்றது குறித்தும் கவனம் செலுத்திட விரும்புகிறேன்.

ஆயினும், இந்தப் பிரச்சனை குறித்து ஆய்வு செய்வதற்கு முன்பு, கட்சி ஆதரவாளர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது பரிவு காட்டுவோர் அடிக்கடி எழுப்பும் சிலவற்றைக் குறித்து கருத்துக் கூறுவது அவசியமாகும். கம்யூனிஸ்ட் கட்சி பிரியாமலும் உடைபடாமலும் தவிர்க்கப்பட்டிருப்பின், கம்யூனிஸ்ட் இயக்கம் பதிவு செய்துள்ள முன்னேற்றம் இப்போதிருப்பதை விட மேலும் பன்மடங்கு கூடுதலாக இருந்திருக்கக் கூடும் என்பதே அவர்கள் மத்தியில் காணப்படும் உணர்வாகும்.

மேலே நாம் குறிப்பிட்ட பி.டி.ரணதிவேயின் கட்டுரையில் இதுகுறித்தும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருப்பதாவது:

“கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முட்டாள்தனமான முறையில் ஏதேனும் உடைப்பு ஏற்பட்டிருப்பின் அது கிரிமினல்தனமான ஒன்றேயாகும். சரியானதொரு நிலைப்பாட்டிற்கு எதிராக இவ்வாறு கட்சியை உடைப்பதில் ஈடுபடுவோர், மக்களிடமிருந்து தனிமைப்படுவார்கள். அவர்கள் தங்கள் தவறான போக்கைத் திருத்திக் கொள்ளவில்லை என்றால் ஓர் அரசியல் சக்தியாக இருப்பதிலிருந்து துடைத்தெறியப்பட்டு விடுவார்கள். அதே சமயத்தில், கட்சியில் ஆதிக்கம் செலுத்தும் தலைமை தவறான நிலைப்பாட்டைத் தொடரும்போது, தன்னுடைய தவறான நிலைப்பாட்டைத் திருத்திக் கொள்ள மறுக்கும்போது, வர்க்க சமரசப் பாதையிலேயே கட்சி முழுவதையும் கொண்டு செல்வதற்கான உறுதியைக் காட்டுகிறபோது, கட்சிக்குள் மோதல்களும் பிளவுகளும் அடிக்கடி நிகழும். அத்தகைய நிலைப்பாட்டின் காரணமாக எழும் தீய விளைவுகளை நடைமுறையில் பார்க்கலாம்.’’

பின்னர் நடைபெற்ற நிகழ்வுகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடே மிகவும் சரியான நிலைப்பாடு என்று உறுதி செய்ததுடன், நாட்டில் இடதுசாரி சக்திகளில் தலைமை தாங்கும் பாத்திரத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளித்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் 50 ஆம் ஆண்டு தினத்தை அனுசரிக்கக்கூடிய தருணத்தில் சமீபத்திய தேர்தல்களில் பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் ஆளும் வர்க்கங்களும் ஊடகங்களும் அதன்மீது தொடுத்திடும் தாக்குதல்கள் குறித்தும் கையாள்வது அவசியமாகும். 1964 ஏப்ரல் 11 இல் அன்றைக்கு இருந்த ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கவுன்சில் கூட்டத்திலிருந்து 32 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து, அதன் பின்னர் சில நாட்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அமைத்தது தொடர்பாக, இப்போது சில ஏடுகள் கிண்டலாகக் கருத்துக்களை வெளியிட்டுள்ளன. இது குறித்துக் கையாள்வதும் அவசியம்.

ஒரு முன்னணி மலையாள நாளிதழ், இது தொடர்பாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறது. “கொள்கைகளும் தோல்விகளும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 50 ஆண்டுகளை வீணடித்துவிட்டது.’’ (2014 ஏப்ரல் 12) என்று தலைப்பிட்டு மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக மிகவும் விரிவான முறையில் கதை புனைந்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வீழ்ச்சிக்கான காரணங்கள் குறித்து பல்வேறு கதைகளை அது அளந்துவிட்டு, கடைசியாக அது மார்க்சிஸ்ட் கட்சி வர்க்கங்களின் இயற்கை குணம் மாற்றங்கள் அடைந்திருப்பதை கணக்கில் கொள்ளாததால் அதனால் முன்னேறிச் செல்ல முடியாமல் இருக்கிறது, என்று குறிப்பிட்டிருக்கிறது.

இந்தியாவில் பொருளாதாரம் சம்பந்தமாக வெளியாகும் `இளஞ்சிவப்பு முன்னணி செய்தித் தாள்களில் ஒன்று தன்னுடைய தலையங்கத்தில், “வரலாற்றை எதிர் கொள்ளல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய 50 ஆம் ஆண்டு விழாவைத் தொடங்குகையில் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது’’ என்று குறிப்பிட்டிருக்கிறது. சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்வது வரவேற்கத்தக்க ஒன்றுதான். உண்மையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதைத்தான் துல்லியமாகக் கோருகிறது. புதிய சவால்களை அடையாளம் கண்டு அவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழைவு. ஆயினும் அந்நாளேடு தன் தலையங்கத்தில் மேலும் அடிக்கோடிட்டுக் கூறியிருப்பது என்ன தெரியுமா? “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதனுடைய வரலாற்றில் மாபெரும் சவாலை எதிர்நோக்கி இருக்கிறது. அதாவது, இன்றைய காலகட்டத்திற்குப் பொருத்தமற்ற ஒன்று என்கிற அச்சுறுத்தலை அது எதிர்கொண்டிருக்கிறது. ஏன்?… ஏனெனில், அதன் தலைமை இன்றைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பம் மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் குணாம்சங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அது கண்டுகொள்ளவில்லை.’’

இவ்வாறு நம்மீது விமர்சனம் செய்துள்ளவர்கள் எழுப்பியுள்ள பிரச்சனைகளின் சாராம்சத்தை எடுத்துக் கொள்வதற்கு முன்பு, ஒன்றை அடிக்கோடிட்டுச் சொல்வது அவசியமாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது எப்போதுமே காலந்தோறும் மாறி வரும் ஒவ்வொரு அம்சத்தையும் உன்னிப்பாகக் கவனித்து அதற்கேற்ற விதத்தில் தன் கொள்கைகளை கோட்பாடுகளை அமைத்து, அதன் அடிப்படையில்தான் கொள்கைகளை நடைமுறையில் பின்பற்றி வந்திருக்கிறது. மார்க்சிய லெனினியத்தின் உயிரோட்டமான சாராம்சம் என்பதே துல்லியமான நிலைமைகளின் துல்லியமான ஆய்வுதான். அதன் அடிப்படையில்தான் அது செயல்பட்டுக் கொண்டு வந்திருக்கிறது. நிலைமைகள் தொடர்ச்சியாக மாறுவதால், அதற்கேற்ற விதத்தில் மார்க்சிய நுண்ணாய்வையும் மாற்ற வேண்டியிருக்கிறது. அவ்வாறு செய்யத் தவறுமேயானால், உண்மையில், நாம் மார்க்சியத்தையே – அதன் புரட்சிகர உள்ளடக்கத்தையும், அதனுடைய விஞ்ஞானப்பூர்வமான ஆய்வுக் கோட்பாட்டையுமே – மறுதலித்தவர்களாகிறோம். மார்க்சியம் மிகவும் விஞ்ஞானப்பூர்வமானது என்பதையும், எனவே, ஓர் ஆக்கப்பூர்வமான விஞ்ஞானம் எப்போதுமே வறட்டுத்தனமின்றி இயல்பானதாகவும், இயற்கையானதாகவும், மெய்யானதாகவும் இருந்திடும் என்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் உயர்த்திப் பிடித்தே வந்திருக்கிறது.

ஆம். இந்த அடிப்படையில், நம்முடைய சமூகக் கட்டமைப்பில் பல்வேறு வர்க்கங்களின் இயக்கத்தில் ஏற்படும் துல்லியமான மாற்றங்களை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, முதலாளித்துவத்தின் வளர்ச்சியானது, முழுமையாக முதலாளித்துவக் கட்டமைப்புக்குள் இன்னமும் மாறாத பல்வேறு சமூக அடுக்குகளைக் கொண்ட நம்முடைய அமைப்பின் மீது – அதாவது சாதிய அடுக்குகளும் மற்றும் அதன் தொடர்ச்சியாக சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒடுக்குமுறையை ஏவி, அதீதமான அளவில் ஆதிக்கம் செலுத்த முன்வருகையில், இது மிகவும் அவசியமாகிறது. ஆனால் இந்த விமர்சகர்கள் முன்வைக்கும் விஷயம் அப்படியானதல்ல. அவர்கள் கூறும் விமர்சனங்கள் வேறானவைகளாகும்.

நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்கும் மேதைகள் இப்போது சொல்வது என்ன? காரல் மார்க்ஸ் காலத்தில் இருந்த முதலாளித்துவத்தின் கீழ் இருந்த தொழிலாளி வர்க்கத்தின் குணாம்சம் இன்றுள்ள தொழிலாளி வர்க்கத்துக்குக் கிடையாதாம். அன்றைக்கு இருந்ததுபோல் கரத்தால் உழைக்கும் தொழிலாளர்கள் (manual labour) அளவிலும் மற்றும் பல்வேறு வகையினர் கலந்து பணியாற்றுவதிலும் இன்றைக்குக் குறைந்துவிட்டார்களாம். எனவே, காரல் மார்க்சும் ஏங்கெல்சும் உலகை மாற்றிட, முதலாளித்துவத்தை புரட்சிகரமான முறையில் தூக்கி எறிய, தங்களுடைய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் முன்வைத்த, “உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள், நீங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை, உங்கள் அடிமைச் சங்கிலியைத் தவிர,’’ என்கிற முழக்கம் இனிப் பொருந்தாதாம். ஏனெனில் தொழிலாளர் வர்க்கத்தில் பெரும்பகுதியினர் முதலாளித்துவ அமைப்பின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டார்களாம், முதலாளித்துவச் சுரண்டலின் அடிமைத்தளையிலிருந்து வெளியேறி அவர்கள் செய்ய வேண்டியது நிறையவே இருக்கிறதாம்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், இவ்வாறு விமர்சிப்பவர்கள் கூறவரும் கருத்து இதுதான்: “மார்க்ஸ் காலத்திலிருந்த தொழிலாளி வர்க்கத்தின் குணம் இன்றையதினம் மாறிவிட்டதால், நவீன தாராளமய உலகமயக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படும் இன்றைய சூழ்நிலைக்கு மார்க்சியம் பொருந்தாது. இந்த `எதார்த்தத்தை’ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்க மறுப்பதால், அக்கட்சியும் இன்றைய காலகட்டத்திற்கு பொருந்தாத ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது. எனவே, இதுதான் அக்கட்சி இன்றைய தினம் எதிர்கொள்ளும் மாபெரும் சவாலாகும்.’’

ஆனால் உண்மை நிலைமை என்ன? உலக முதலாளித்துவம் கடந்த ஆறு ஆண்டு காலமாக தொடர்ந்து நெருக்கடிக்குள் சிக்கி வெளிவர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது மார்க்சியம் இன்றைக்கும் பொருத்தமுடையதே என்று உரத்தகுரலில் பிரகடனம் செய்கிறது. உலகப் பொருளாதாரத்தையே சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கும் தற்போதைய நெருக்கடியைப் புரிந்து கொள்ளவும் ஆய்வு செய்யவும் காரல் மார்க்சின் மூலதனத்தின் பிரதிகள் வேண்டும் என்று வாடிகனிலிருந்து தகைசான்ற போப் ஆணை பிறப்பித்தாரே, அது ஒன்றும் தற்செயலாக ஏற்பட்ட விபத்தல்ல.

ஆயினும், இன்றைய நெருக்கடிக்கான காரணத்தை ஆய்வு செய்ய வேண்டுமானால் மார்க்சியத்தை நன்கு கற்ற ஒருவராலேயே அதனைச் செய்திட முடியும். தொடர்ந்து இருந்து வரும் உலகப் பொருளாதார நெருக்கடியும், உண்மையில் அத்தகைய நெருக்கடிக்கான ஆணிவேர் எது என்பதையும், சர்வதேச நிதி மூலதனத்தின் உயர்வையும், இன்றைய உலக நாடுகள் பலவற்றிலும் நவீன தாராளமயப் பொருளாதார ஒழுங்கை நிலைநிறுத்துவதில் அது மேற்கொள்ளும் மேலாதிக்கப் பங்களிப்பினையும் மார்க்சியத்தால் மட்டுமே புரிந்து கொள்ளப்பட்டு விளக்கப்பட முடியும். அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற வால்ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கம் கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று அல்ல. எனினும் தன்னெழுச்சியாக நடைபெற்ற இந்த இயக்கத்தின் இறுதியில் சுயேச்சையாக எடுக்கப்பட்ட முடிவு என்ன? இந்தக் கிளர்ச்சிகள் `அமைப்புக்குள் உள்ள கோளாறுக்கு எதிராக அல்ல, மாறாக இந்த அமைப்பே கோளாறானது அதாவது முதலாளித்துவ அமைப்பே கோளாறானது என்றும் அதற்கு எதிராகவே இது நடைபெற்றுள்ளது என்றும் முடிவுக்கு வந்தது. இதே மாதிரி புரட்சிகரமான முடிவுக்குத்தான் மார்க்சியமும் வருகிறது. இந்தக் கோளாறான அமைப்புமுறை தூக்கி எறியப்படும்போது மட்டுமே மனித சமூகம் ஒட்டுமொத்தமாக விடுதலை அடைய முடியும். ஆனால் நவீன தாராளமயக் கொள்கையை பூஜிப்போருக்கு இது வெறும் தெய்வ நிந்தனையாகவே தோன்றும். எனவேதான் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இன்றைய தினம் `பொருந்தாத, `பொருத்தமற்றதான கட்சியாக இகழ்ந்துரைக்கிறார்கள்.

மேலும், தொழிலாளர் வர்க்கத்தின் சேர்மானத்தில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்த போதிலும், கரத்தால் உழைப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து, அந்த இடத்தை கருத்தால் உழைப்பவர்கள் நிரப்பியிருந்த போதிலும், (மனிதகுல நாகரிகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுகையில் இது சாத்தியமே) முதலாளித் துவத்தின் இயல்பான குணம் – அதாவது மனிதனை மனிதன் சுரண்டும் குணம் – அதன் முதுகெலும்பாகத் தொடர்ந்து இருந்து வருவது இன்றைக்கும் மாறாததோர் உண்மை அல்லவா? ஏனெனில், சுரண்டல் என்பது முதலாளித்துவ உற்பத்தியுடன் இணைபிரியா ஒன்றல்லவா? இது ஏன்? ஏனெனில், முதலாளித்துவ உற்பத்தி நடைமுறையின் அடிப்படையே சுரண்டல்தான்.

உற்பத்தி செய்யப்படும் பொருளின் மதிப்பில், அந்தப் பொருளை உற்பத்தி செய்த தொழிலாளியின் பங்களிப்பு எப்போதுமே அவருக்குக் கொடுக்கப்படும் ஊதியத்தின் மதிப்பைவிட அதிகமாகத்தான் இருக்கும். இந்த வித்தியாசம்தான் முதலாளித்துவ உற்பத்தி முறையில், தொடர்ந்து உபரி மதிப்பை உற்பத்தி செய்கிறது. இந்த உபரிமதிப்பைத்தான் முதலாளிகள் லாபம் என்ற பெயரில் தமதாக்கிக் கொள்கிறார்கள். எனவே, தொழிலாளி, `கருத்தால் உழைப்பவரா’ அல்லது `கரத்தால் உழைப்பவரா’ என்பதே இங்கே பிரச்சனை இல்லை. எவராயிருந்தாலும் அவரைச் சுரண்டுவது என்பதே முதலாளித்துவத்தின் குணம். எனவே, இந்த முதலாளித்துவ அமைப்பு முறையை முற்றிலுமாகத் தூக்கி எறிவதன் மூலம் மட்டுமே, இத்தகைய சுரண்டலிலிருந்து, மனிதகுலத்திற்கு விடுதலை யைக் கொண்டு வர முடியும். இத்தகைய அறிவியல்பூர்வமான உண்மையை நவீன தாராள மயத்திற்கு வக்காலத்து வாங்கும் `மேதைகள்’ ஒப்புக் கொள்ள மனம் வராது, வெறுப்பார்கள். எனவேதான் அதனை மறைப்பதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்றைய தினம் பொருத்தமற்றதாக மாறிவிட்டது என்று நம்மீது பாய்கிறார்கள்.

இத்தகைய விமர்சகர்களின் மற்றொரு வகையான செயல்பாடு என்பது, முதலாளித்துவ சுரண்டல் அமைப்பின் அடித்தளங்களைப் பாதிக்காத விதத்தில் பல்வேறு அரசு சாரா அமைப்புகள் நடத்தக்கூடிய இயக்கங்களை ஊக்குவிப்பதும் மற்றும் ஆதரிப்பதுமாகும். அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் அல்லது ஆம் ஆத்மி கட்சிக்கு கார்ப்பரேட் ஊடகங்கள் அளித்த அளவுக்கு மீறிய விளம்பரம், ஆகியவற்றிலிருந்தே இதனை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் நடைபெற்ற அதேசமயத்தில்தான் இடதுசாரிக் கட்சிகள் அவர் முன்வைத்த அதே கோரிக்கைகளுக்காக பிரம்மாண்டமான முறையில் மக்கள் இயக்கங்களை நடத்தின. ஆனால் அவை குறித்து அநேகமாக எதையுமே அவை கூறவில்லை. அல்லது பெயரளவில் ஒரு சில நொடிகள் கூறும். காரணம் என்ன? ஏனெனில், இடதுசாரிக் கட்சிகளைப்போல அல்லாமல், முதலாளித்துவ அமைப்பின் அடித்தளங்களான சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை ஆகியவற்றின் மீது அவை கை வைப்பதில்லை. முதலாளித்துவத்திற்கு, அதனுடைய அடித்தளத்தின் மீது கைவைக்காமல் இயங்கும் அனைவருமே உன்னதமான வர்கள் தான், அவர்களை தூக்கி வைத்து அது கொண்டாடும். எனவேதான், அது, `ஊழலை ஒழிப்போம்’, `நேர்மையான அரசியல்’ போன்று இயக்கம் நடத்தும் அனைத்து அமைப்புகளையுமே அவை வரவேற்கும். ஆனால், அதே சமயத்தில், இடதுசாரிகளைத் தனிமைப்படுத்திட வேண்டும் என்பதில் அவை குறியாக இருக்கும். ஏனெனில், இடதுசாரிகள் இந்த அமைப்பையே கேள்விக்குறியாக்குவது தொடர்வதும், இந்த அமைப்புக்கு மாற்று ஏதும் இல்லை என்று கூறுவதை இடதுசாரிகள் ஏற்க மறுப்பதும்தான் காரணங்களாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரை, இந்த முதலாளித்துவ அமைப்புக்கு மாற்று உண்டு என்றும், சோசலிச அமைப்பே அதற்கு மாற்று என்றும் பிரகடனம் செய்கிறது.

நம் வளர்ச்சியில் அக்கறையுடன் நம் கொள்கைகளையும் நம் செயல்பாடுகளையும் நடுநிலையுடன் விமர்சிப்பவர்களை நாம் வரவேற்கிறோம். ஆனால் அதே சமயத்தில், குழந்தை அழுக்காகிவிட்டதே என்று தண்ணீர் தொட்டிக்குள்ளே குழந்தையைத் தூக்கி எறிவது போன்று விமர்சிப்பவர்களுக்கு நாம் கூறும் பதில், அத்தகைய விமர்சனங்களை ஏற்க முடியாது என்பதும் அவற்றிற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்பதுமேயாகும்.

உலக முதலாளித்துவ அமைப்பைத் தூக்கி எறிவதன் மூலம் மட்டுமே, உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையோரைத் துன்பத்திலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ள வறுமையின் கோரப்பிடியிலிருந்து விடுவித்திட முடியும் என்கிற சித்தாந்தம் மற்றும் தத்துவார்த்த அடித்தளங்களையும் அதேபோன்று அதன் நடைமுறைகளையும்தான் மார்க்சியமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ந்து கூறி வருகிறது. எனவே, முதலாளித்துவத்தைத் தூக்கி எறிவது என்பது ஓர் அறநெறி சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல. ஒரு விதத்தில் இது அறநெறி சார்ந்த விஷயமே என்ற போதிலும், முக்கியமாக அதனைத் தூக்கி எறிவதன் மூலம் மட்டுமே, ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் விடுதலையை அளித்திட முடியும் என்கிற அறிவியல் உண்மையுமாகும்.

ஆயினும் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் இத்தகைய குறிக்கோளை எய்தக் கூடிய விதத்தில் புரட்சிகர சக்திகள் மற்றும் இயக்கங்கள் வலுப்பெற்று வெற்றி பெறுவதன் மூலம் மட்டுமே இதனை எய்திட முடியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ‘சில தத்துவார்த்தப் பிரச்சனைகள் மீதான தீர்மானத்தில்’, இத்தகைய முயற்சிகளை வலுப்படுத்திடுவதற்காக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய துல்லியமான பிரச்சனைகள் என்ன வென்று குறிப்பிட்டிக்கிறது. “இந்திய நிலை மைகள்: சில துல்லியமான பிரச்சனைகள்’’ என்ற பிரிவில் கூறப்பட்டிருப்பதாவது:

“இந்திய நிலைமைகளில், நம் பணி இந்த இடைப் பரிவர்த்தனை (transition) காலத்தில், நம்முடைய புரட்சிகர முன்னேற்றத்தை வலுப்படுத்திட நம் பணி, ஏகாதிபத் தியத்திற்கு ஆதரவாக சில சக்திகள் மாறியிருக்கக்கூடிய சூழ்நிலையில், நம்முடைய லட்சியக் குறிக்கோளை முன்னெடுத்துச் சென்றிட, இந்திய மக்கள் மத்தியில் வர்க்க சக்திகளின் சேர்மானத்தில் மாற்றத்திற்காக வேலை செய்வதில் துல்லியமான முயற்சிகள் தேவை. இதற்கு, நாம் நம் சமூகத்தில் இன்றுள்ள துல்லியமான நிலைமைகளில் வர்க்கப் போராட்டத்தைக் கூர் மைப்படுத்தி வலுமிக்க மற்றும் வெகுஜன போராட்டங்களைக் கட்டவிழ்த்துவிட வேண்டியது அவசியமாகும்.’’

நாடாளுமன்ற மற்றும் நாடாளுமன்றத்திற்கு அப்பால் உள்ள வடிவங்கள்: இந்தப் பணியை எய்திட, மேம்படுத்தப்பட்ட கட்சித் திட்டம் குறிப்பிடுவதாவது:

“மக்கள் ஜனநாயகம் மற்றும் சோசலிச சமூக மாற்றத்தை அமைதியான வழியில் அடையவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விழைகிறது. வலிமையான வெகுஜன புரட்சிகர இயக்கத்தை வளர்த்தெடுப்பதன் மூலமும், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நடைபெறுகிற போராட்டங்களை இணைப்பதன் மூலமும் பிற்போக்கு சக்திகளின் எதிர்ப்பை முறியடிக்க தொழிலாளி வர்க்கமும், அதன் கூட்டாளிகளும் முயல்வதோடு, அமைதியான வழிமுறையில் இத்தகைய மாற்றங்களை கொண்டுவர பாடுபடுவர். எனினும், ஆளும் வர்க்கங்கள் தங்களது அதிகாரத்தை ஒருபோதும் தாமாக விட்டுத்தர மாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக, சட்டத்திற்கு புறம்பாகவும், வன்முறை மூலமாகவும் இதைப் பின்னுக்குத் தள்ள முயல்வார்கள். எனவே, நாட்டின் அரசியல் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய திருப்பங்கள், திருகல்களையும் கவனத்தில் கொண்டு அனைத்து சூழ்நிலைகளையும் சந்திக்கின்ற வகையில் விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும்.’’

இவ்வாறு நாடாளுமன்றப் பணியையும் நாடாளுமன்றத்திற்கு வெளியேயான பணியையும் நடைமுறையில் முறையாக இணைப்பது நடப்பு சூழ்நிலையில் கட்சிக்கு முன் உள்ள முக்கியமான பணியாகும். நம் கட்சித் திட்டம் கூறுவதாவது:

“இந்தியாவில் தற்போதுள்ள நாடாளுமன்ற முறை முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் வடிவமாக இருந்தாலும், மக்களின் முன்னேற்றத்திற்கான ஓர் அங்கமாக உள்ளது. மக்கள் தங்களின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், அரசு விவகாரங்களில் ஓரளவு தலையிடுவதற்கும், ஜனநாயக மற்றும் சமூக வளர்ச்சிக்கான போராட்டங்களை நடத்துவதற் கும் தற்போதுள்ள நாடாளுமன்ற முறை சில வாய்ப்புகளை வழங்குகிறது.’’ (பத்தி 5.22)

ஆனாலும் பெரும் மூலதனத்தின் அதிகாரம் அதிகரித்திருப்பதும், அரசியலில் பெருமளவில் பணம் நுழைந்திருப்பதும், அரசியலில் கிரிமினல்மயம் அதிகரித்திருப்பதும் ஜனநாயக நடைமுறைகளைத் திரித்து, கீழறுத்து, வீழ்த்திக் கொண்டிருக்கிறது.

“(2010 ஆகஸ்ட் 7-10 தேதிகளில்) விஜயவாடாவில் நடைபெற்ற விரிவடைந்த மத்தியக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தில் சுட்டிக்காட்டி இருப்பதாவது:

“நாடாளுமன்ற ஜனநாயகமே நவீன தாராளமயத்தாலும், உலக நிதி மூலதனத்தின் தாக்கத்தாலும் அரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசியலில் பணம் மற்றும் கிரிமினல்மயம் மூலம் ஜனநாயகம் களங்கப்படுத் தப்படுவதுடன் ஜனநாயக உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரிப்பதும் இணைந்து கொண்டுள்ளன. ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்கள் செய்வதற்கான உரிமைகள் நிர்வாக நடவடிக் கைகள் மூலமும், நீதித்துறை தலையீடுகள் மூலமும் கட்டுப்படுத்தப்படுகின்றன. கார்ப்பரேட் ஊடகங்களோ இவ்வாறு மக்களின் உரிமைகள் கட்டுப்படுத்தப்படுவது நியாயம்தான் என்கிற முறையில் கருத்துக்களைப் பரப்பிட, பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன”. (பத்தி 2.35)

“ஜனநாயக அமைப்பு மற்றும் பிரஜைகளின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து விரிவாக்குவதற்கான போராட்டம் முதலாளித் துவ – நிலப்பிரபுத்துவ அரசுக்கெதிரான உழைக் கும் மக்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். இதனை மக்கள் ஜனநாயகத்தின் கீழ் ஜனநாயகத்தின் உயர் வடிவத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். நம் கட்சித் திட்டத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

“மக்கள் நலனைப் பாதுகாக்க நாடாளுமன்ற ஜனநாயக முறை மற்றும் ஜனநாயக அமைப்புகளுக்கு எதிராக விடப்பட்டுள்ள இத்தகைய மிரட்டல்களை முறியடிக்க வேண்டியது ஆகப் பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இத்தகைய நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புகளை நாடாளுமன்றத்திற்கு வெளியிலான நடவடிக்கைகளோடு இணைத்து, கவனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.’’ (பத்தி 5.23)

“இத்தகைய தொலைநோக்குப் பார்வையுடன், நாடாளுமன்ற அமைப்புகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை, வெகுஜன இயக்கங்களை வலுப்படுத்திடப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போதைய முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு மாற்றாக ஒரு வலுவான இயக்கத்தைக் கட்டக்கூடிய விதத்தில், நாடாளுமன்றப் பணி, நாடாளுமன்றத்திற்கு அப்பால் உள்ள நடவடிக்கைகளோடும், போராட்டங்களோடும் இணைக்கப்பட வேண்டும்.

“ஆயினும், நாடாளுமன்றப் பணியில் ஈடுபடும் சமயத்தில் கம்யூனிஸ்ட் நெறிமுறையிலிருந்து விலகிச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமான அளவில் வரலாம். அப்போதெல்லாம் அத்தகைய கம்யூனிஸ்ட் நெறிபிறழ்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடாது எச்சரிக்கையாக நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இத்தகைய போக்குகள் பல வடிவங்களில் வர முடியும். நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பே பல மாயைகளை உருவாக்கிடும். போராடவே வேண்டியதில்லை. அரசாங்கத்தின் ஆதரவுடன் அனைத்தையும் சாதித்துக் கொள்ளலாம் என்கிற உணர்வு சர்வசாதாரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிடும். குறிப்பாக அரசு நம் ஆதரவில் இயங்கும்போது இப்போக்கு மக்கள் மத்தியில் அதிகமாகக் காணப்படும். இத்தகைய மாயைகளை போராடி முறியடித்திட வேண்டும். தங்கள் வர்க்க ஆட்சிக்கு மக்கள் பணிந்து செல்ல வேண்டும் என்பதுபோன்ற மாயைகளைப் பயன்படுத்தி ஆளும் வர்க்கங்கள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளை தோலுரித்துக் காட்டிட வேண்டும். சுரண்டப்படும் மக்களை சரியான நடைமுறை உத்திகள் மூலம் தட்டி எழுப்பி, புரட்சி நடவடிக்கைக்குத் தயார்படுத்த வேண்டியது அவசியமாகும்.

“மேலும், அமைதியாகவே இடைப் பரிவர்த்தனை ஏற்படும் என்கிற மாயைகளும் வலுப்படும். இதனை நம் மேம்படுத்தப்பட்ட திட்டத்தில் சரி செய்திருக்கிறோம். கட்சியில் அவ்வப்போது முறையாக நாம் மேற்கொள்ளும் நெறிப்படுத்தும் இயக்கங்களில் நாடாளுமன்ற சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டியதை வலியுறுத்தி வருகிறோம்.

“இன்றைய நடப்பு சூழ்நிலையில், இடது அதிதீவிரவாதத் திரிபை வெளிப்படுத்தும் மாவோயிசம் இந்திய மக்களின் புரட்சிகர வர்க்கப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு தத்துவார்த்த சவால்களாக தொடர்ந்து இருந்து வருகிறது. அதன் புரிதல் தவறானது என்று மெய்ப்பிக்கப்பட்ட போதிலும், இந்திய ஆளும் வர்க்கங்களை தரகு முதலாளிகள்/அதிகாரவர்க்கத்தினர் என்று முத்திரை குத்துவதும், அரசுக்கு எதிராக உடனடி ஆயுதந்தாங்கிய போராட்டத்தை நடத்த வேண்டும் என்கிற தந்திரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுவதும் தொடர்கிறது. குறிப்பாக அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை குறி வைக்கிறது. அது முதலாளித்துவ பிற்போக்கு அரசியல் கட்சிகளுடனும், சக்திகளுடனும் சேர்ந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிராக கொலை பாதகத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய இடது அதிதீவிரப் போக்கிற்கு எதிராகத் தத்துவார்த்தப் போராட்டங்களை வலுப்படுத்தி, அதனை அரசியல் ரீதியாகவும், ஸ்தாபன ரீதியாகவும் முறியடிக்க வேண்டியதும் அவசியம். சோசலிசத்திற்காக இந்திய மக்களின் போராட்டத்தை அறிவியல் பூர்வமாகவும் புரட்சி அடித்தளங்களின் கீழ் நின்று முன்னெடுத்துச் செல்வதற்கு இது மிகவும் முக்கியமாகும்.

“இத்தகைய திரிபுகளில் ஏதேனும் ஒன்றிற்கு இரையாவது, மக்களைத் திரட்டி வர்க்கப் போராட்டங்களை நடத்துவதை உதாசீனப்படுத்தி, நாடாளுமன்ற நடவடிக்கைகளை மட்டுமே சார்ந்திருக்கக்கூடிய திருத்தல்வாத வலைக்குள் சிக்கிக் கொள்ளக்கூடிய ஆபத்து ஏற்படும். மற்றொன்று, நாடாளுமன்ற ஜனநாயகத்தையே மறுதலிக்கும் இடது அதிதீவிர திரிபு என்னும் சிறுபருவக் கோளாறு வலைக்குள் நம்மைத் தள்ளிவிடக் கூடிய ஆபத்தினை ஏற்படுத்திடும். `அனைத்து நடைமுறை உத்திகளும் மற்றும் போர்த் தந்திரம் இல்லாமையும்’ (All tactics and no strategy) திருத்தல் வாதத்திற்கு இட்டுச் செல்லும். `அனைத்து போர்த் தந்திரங்கள் மற்றும் நடைமுறை உத்திகள் இல்லாமை’ அதிதீவிரவாதத்திற்கு இட்டுச் செல்லும். இவ்விரண்டிற்கும் எதிராக நாம் உறுதியுடன் போராடி நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அது துவக்கப்பட்ட காலத்திலிருந்தே, இந்திய புரட்சியை சரியான அரசியல் நிலைப்பாட்டில் முன்னெடுத்துச் செல்வதற்காக, மற்ற பல்வேறு பிரச்சனைகளுடன் இவ்விரு திரிபுகளுக்கு எதிராகவும் வலுவுடனும், உறுதியுடனும் போராடி வந்திருக்கிறது. இந்தப் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானதுடன் முடிந்துவிடவில்லை மற்றும் இந்திய புரட்சி வெற்றிபெற்ற பின்னரும் முடிந்திடாது.

“மார்க்சிய லெனினியத்தின் புரட்சிகர உள்ளடக்கத்திலிருந்து விடுபட்டு அனைத்துத் திரிபுகளுக்கும் பலியாவதற்கு எதிராக மிகுந்த விழிப்புடனிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதை சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் அனுபவம் நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. அவ்வாறு செய்யத் தவறியமைதான் சோவியத் யூனியனில் சோசலிசம் விழுங்கப்பட்டு, அதன் வடிவமும் உள்ளடக்கமும் 21 ஆவது நூற்றாண்டில் கூட மீளவும் நிறுவமுடியாத நிலை உருவாகி இருக்கிறது.

தொழிலாளர் – விவசாயிகள் கூட்டணி: இந்தியாவின் நிலைமைகளில் `அகக்காரணிகளை’ (‘subjective factor’) வலுப்படுத்துவது என்பது முக்கியமாக நம் போர்த்தந்திர லட்சியத்தை முன்னெடுத்துச் சென்றிட தொழிலாளர் – விவசாயிகள் வர்க்கக் கூட்டணியை வலுப்படுத்துவதையே பெரிதும் சார்ந்திருக்கிறது. தற்போதைய நிலைமைகளில், வர்க்கப் போராட்டங்களை வலுப்படுத்துவதற்காக, இந்தக் கூட்டணியை எய்துவதில் உள்ள பலவீனங்களைக் களைவது அவசரத் தேவையாகும். நம்முடைய நாட்டில் புறச்சூழ்நிலை (objective situation) இத்தகைய முயற்சிக்கு மிகவும் சாதகமாக இருக்கிறது. அக பலவீனங்கள் (subjective weaknesses) சமாளித்து கடந்து செல்ல வேண்டியதாக இருக்கிறது. இதில் மிகவும் முக்கியமான மூலக்கூறு மிகவும் சுரண்டப்படும் பகுதியினராகவும், நம் விவசாயிகள் வர்க்கத்தில் புரட்சிகரமான பிரிவினராகவும் விளங்கும் விவசாயத் தொழிலாளர்கள் – ஏழை விவசா யிகள் ஒற்றுமையை உருவாக்குவதாகும்.

தொழிலாளர் வர்க்க ஒற்றுமை: தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின் கீழ் இந்திய மக்களின் விடுதலையை எய்திட தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ள ஒரு கட்சி என்ற முறையில், வர்க்க ஒற்றுமையும், புரட்சிகர உணர்வும் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தை, இந்தியாவில் மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக தாக்குதலைத் தொடுக்கக்கூடிய விதத்தில் இதர சுரண்டப்படும் வர்க்கப் பிரிவினரை இணைத்துக் கொண்டு வர்க்கத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கக்கூடிய அளவிற்கு, வலுப்படுத்துவது மிகவும் முக்கியமாகும்.

“ஆயினும் இந்தப் பணி ஏகாதிபத்திய உலகமயத்தின் தற்போதைய நிலைமைகளில் மிகவும் சிக்கலான ஒன்றாக மாறி இருக்கிறது. நவீன தாராளமய சீர்திருத்தங்கள் காரணமாக தொழிலாளர் வர்க்கத்தினரில் அதிகமான அளவில் அணிதிரட்டப்படாத பிரிவினராக மாறிக் கொண்டிருக்கின்றனர். முதலாளிகளுக்கு அதிக லாபத்தை ஈட்டித் தரக்கூடிய விதத்தில் நிரந்தர வேலைகளே கேசுவல் வேலையாகவும், ஒப்பந்த வேலையாகவும் மாறிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு ஆளும் வர்க்கங்கள் ஈட்டக்கூடிய அதே சமயத்தில் தொழிலாளர்கள் ஒற்றுமையையும் உடைத்து, சீர்குலைக்கும் வேலைகளில் இறங்கி இருக்கிறது. கேசுவல், தற்காலிக மற்றும் சுயவேலைவாய்ப்பு தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய சவால்களை சமாளித்து முன்னேறவும், பெரும் திரளாக மாறியிருக்கும் முறைசாராத் தொழிலாளர்களை புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக்கூடிய வகையில் உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையை வலுப்படுத்திடவும், பொருத்தமான நடைமுறை உத்திகள் வகுக்கப்பட வேண்டும்.

“தொழிற்சங்க நடவடிக்கைகளின்போது பொருளாதாரவாதத்தை (economism) முறியடிக்கும் பணியையும் எப்போதும் புரட்சி இயக்கங்கள் மேற்கொண்டு வந்திருக்கின்றன. இது தொடர்பாக, சோசலிசத்திற்கான இருபதாம் நூற்றாண்டு போராட்டங்களின் அனுபவங்கள் கற்றுணரப்பட்டு, இன்றைய நிலைமைகளில் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டியது அவசியம்.

அடையாள அரசியல்: முதலாளித்துவம் தோன்றுவதற்கு முன்னரேயே ஆளும் வர்க்கங்கள் அடையாள அரசியலைப் பயன்படுத்தி வந்திருக்கின்றன. இன உணர்வு போன்ற பல்வேறு அடையாளங்களை தங்கள் வர்க்க ஆட்சியைத் தூக்கி நிறுத்துவதற்காகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கின்றன. பல்வேறு விதமான தேசியவாதங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுச்சி பெற்ற யூத இனம், சமீப காலங்களில், இஸ்ரேல் அமைவதற்கு இட்டுச் சென்றுள்ளமை, இதுபோன்றவற்றுள் ஒன்று. சோவியத் யூனியன் தகர்ந்து கொண்டிருந்த சமயத்தில் அதனுடன் இணைந்திருந்த முந்தைய குடியரசுகள் பலவற்றில் இருந்த பிற்போக்கு சக்திகள் தங்கள் ஆட்சியை ஒருமுகப்படுத்துவதற்காக அடையாளங்களைப் பயன்படுத்திக் கொண்டன. முந்தைய யுகோஸ்லேவியா இன்று இந்த அடிப்படையில்தான் சிதறுண்டு போயிருக்கிறது. இந்திய துணைக் கண்டத்தைப் பிளவுபடுத்திட, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தாலும், நம் நாட்டிலிருந்த ஆளும் வர்க்கங்களாலும் மத அடையாளங்கள் மிகவும் வலுவான முறையில் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. இன்றும் கூட சுரண்டப்படும் பிரிவினர் மத்தியில் உள்ள வர்க்க ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் விதத்தில் மதரீதியாகவும், சாதிய ரீதியாகவும் மக்கள் திரட்டப்படுவது தொடர்கிறது. இன்றைய நிலைமைகளில், முதலாளித்துவம் ஒரு பக்கத்தில் அடையாள அரசியலைப் பயன்படுத்திக் கொண்டு, வர்க்க ஒருமைப்பாட்டை சீர்குலைக்கிறது, மறுபக்கத்தில் அத்தகைய அடையாள அரசியலை மேம்படுத்தி, மக்களை அரசியலற்றவர்களாகவும் மாற்றுகிறது.

“மார்க்சிய எதிர்ப்பு சித்தாந்தப் புனைவான, பின்நவீனத்துவம், அரசியலுக்கு பெரிய அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது, அது மிகவும் “நுண்ணிய’’ ஒன்று அல்லது வட்டாரம் சார்ந்தது என்றும், அரசியல் என்பதை “வித்தியாசங்கள்’’ மற்றும் “அடையாளங்கள்’’ ஆகியவற்றின் அடிப்படையில்தான் இருக்க முடியும் என்றும் விவாதிக்கிறது. இவ்வாறு, இது நடப்பு சூழ்நிலையில் ஒரு புதிய அடிப்படையை அடையாள அரசியலுக்கு அளிக்கிறது.

“அடையாள அரசியலில், பின் நவீனத்துவ ஆதரவாளர்கள் நடைமுறைப்படுத்துவது போன்று, இன்றைய சூழ்நிலைமைகளில் இனம், மதம், சாதி, பழங்குடி அல்லது பாலினம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டப்படும் அடையாளங்கள் அரசியலுக்கும் அரசியல் ரீதியாக ஒன்றுதிரட்டுவதற்கும் அடிப்படைகளாக மிகவும் அதிகமான அளவில் மாறிக் கொண்டிருக்கிறது. வர்க்கம் என்பது அடையாளத்தின் ஒரு சிதறிய துண்டு என்றே கருதப்படுகிறது. இவ்வாறு அடையாள அரசியல் தொழிலாளர் வர்க்கத்தின் கருத்தாக்கத்தையே மறுதலிக்கிறது. இதன் இயற்கைத் தன்மையே, அடையாள அரசியல் ஒரு அடையாளத்தினரை பிறிதொரு அடையாளத்தினரிடமிருந்து ஒதுக்கி வைக்கிறது மற்றும் எல்லையை வரையறுக்கிறது. எங்கெல்லாம் அடையாள அரசியல் பிடிப்புடன் காணப்படுகிறதோ அங்கெல்லாம் அது மக்களை தனித்தனிக் குழுக்களாகப் பிரித்து, குழுக்களுக்கிடையே மோதலையும் போட்டியையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

“அடையாள அரசியல் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு கருத்தியல் ரீதியாகப் பொருத்தமான ஒன்று. அடையாளம் சிதறுண்டு போவதை சந்தையால் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. உண்மையில், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில், பல்வேறு வாழ்க்கைப் பாணிகள் கொண்டாடப்படுகின்றன, நுகர்வோர் சமூகத்தின் ஓர் அங்கம் என்ற முறையில் அவர்களைக் கவரக்கூடிய விதத்தில், நாகரிகங்களும், நாகரிக வடிவங்களும் உருவாக்கப்படுகின்றன. முன்னேற்றம் குறைவாகவுள்ள முதலாளித்துவ நாடுகளில் அடையாள அரசியல் உலக நிதி மூலதனம் ஊடுருவவும், சந்தையை அது கைப்பற்றித் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் வசதிசெய்து தருகிறது. அடையாளக் குழுக்களுக்கிடையேயான “வித்தியாசம்’’, சந்தையின் ஒரே சீரான தன்மையையும் அதன் நடைமுறைகளையும் பாதிப்பதில்லை. அடையாள அரசியல் வர்க்க ஒற்றுமையை மறுதலிப்பதில் தலையிட்டு, மக்களின் ஒன்றுபட்ட இயக்கங்களைக் கட்டுவதில் தடையாகச் செயல்படுகிறது. அடையாள அரசியல் சிவில் சமூகம் என்று அழைக்கப்படுகின்ற அரசு சாரா நிறுவனங்கள் மூலமும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமும் மிகவும் சாதுரியமாக மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய அரசு சாரா நிறுவனங்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தனித் தனியே துண்டு துண்டான பிரிவுகளாகச் செயல்பட்டு தனித்தனி அடையாளக் கருத்துக்களை சுமந்து செல்லும் கருத்தியல் வாகனங்களாக செயல்படுகின்றன.

சமூக ஒடுக்குமுறைக்கான போராட்டமும், சாதிய ரீதியில் திரட்டப்படுவதற்கு இருக்கின்ற பிரதிபலிப்பும்: சாதி, பழங்குடி போன்ற முறைகளில் அரசியல் ரீதியாகத் திரட்டப்படும் அடையாள அரசியல் சமூகத்தின் அனைத்து சுரண்டப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் ஒற்றுமையைக் கட்டி எழுப்பிட முயல்வோருக்கு மிகவும் ஆழமான சவாலாக முன்வந்துள்ளது. தொழிலாளர் வர்க்கத்தின் கட்சி சமூக ஒடுக்குமுறை மற்றும் சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராக இயக்கங்களில் ஈடுபடும் அதேசமயத்தில், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சாதியினர் ஆகியோருக்கு நிலம், ஊதியம் மற்றும் வாழ்வாதாரங்களுக்கான பிரச்சனைகளைத் துல்லியமாகக் கையிலெடுத்துப் போராட வேண்டும். வர்க்கப் பிரச்சனைகளையும், சமூகப் பிரச்சனைகளையும் ஒருசேர எடுத்துக் கொள்வதன் மூலம், பெருங்கேட்டினை உருவாக்கும் அடையாள அரசியலையும், சாதிய ரீதியிலாக மக்கள் திரட்டப்படுதலையும் வெற்றிகரமான முறையில் முறியடித்திட முடியும். எப்படி வர்க்கச் சுரண்டல் மற்றும் சமூக ஒடுக்குமுறை பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை மார்க்சியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் ஆராய்ந்தால் இதனை வெற்றிகரமாகச் செய்திட முடியும்.

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு, சமூகத்தில் வர்க்க சுரண்டலும், சமூக ஒடுக்குமுறையும் இருக்கிறது என்பதை அங்கீகரிப்பதன் அடிப்படையில் அமைந்திருக்கிறது. நம் நாட்டின் சமூகப் பொருளாதார அமைப்பில், முதலாளித்துவ மற்றும் அரை நிலப்பிரபுத்துவ வர்க்கச் சுரண்டல் நடைபெறுவதுடன், சாதி, பழங்குடியினம், பாலினம் அடிப்படையிலான சமூக ஒடுக்குமுறையில் பல்வேறு வடிவங்களும் நடைமுறையில் இருந்து வருகின்றன. ஆளும் வர்க்கங்கள் வர்க்கச் சுரண்டலின் மூலம் உபரியை உறிஞ்சி எடுத்துக் கொள்வதுடன், தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அவர்கள் சமூக ஒடுக்குமுறையின் பல்வேறு வடிவங்களையும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பாலினப் பிரச்சனை: சாதிய அமைப்பின் சமூக ஒடுக்குமுறையுடன் என்றென்றும் நிலவவரும் நிலப்பிரபுத்துவ சிந்தனை செல்வாக்கும் சேர்ந்து கொண்டு ஆணாதிக்க சித்தாந்தத்தின் குணக்கேடுகளை வலுவான முறையில் ஊட்டி வளர்க்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகள் இதனை மேலும் ஊக்குவிக்கிறது. பாலின அடிப்படையிலான பாகுபாடு நிலப்பிரபுத்துவத்தின் பழமை சிந்தனை மட்டுமல்ல, வர்க்க அடிப்படையிலான சமூகத்தில் புரையோடியிருக்கிற சமூகக்கேடுமாகும். சமத்துவமற்ற முறையில் வேலைப் பிரிவினையும், குடும்பப் பொருளாதாரத்தில் பெண்கள் மீதான தாங்க முடியாத சுமைகளும் நவீன தாராளமயக் கொள்கைகளினால் மேலும் உக்கிரப்படுத்தப்பட்டிருப்பதுடன், அரசு தான் அளித்து வந்த சமூகப் பொறுப்புக்களிலிருந்து கழண்டு கொள்வதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பாலின சமத்துவமின்மைக்கு எதிராகவும் மற்றும் அதனையொட்டி எழும் அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். தொழிலாளர் வர்க்கத்தின் கட்சி என்ற முறையில் வர்க்கப் போராட்டங்களை வலுப்படுத்துவதன் ஒரு பகுதியாக பாலின ஒடுக்குமுறைக்கு எதிராகவும் மக்கள் மத்தியில் தேவையான அளவிற்கு சமூக உணர்வினை வளர்த்தெடுக்க, தொடர்ந்து செயலாற்றிட வேண்டும்.

வகுப்புவாதம்: இந்தப் பின்னணியில் பெரும்பான்மை வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டமும், சிறுபான்மை மத அடிப்படைவாதத்தின் அனைத்து விதமான வெளிப்பாடுகளும் பார்க்கப்பட வேண்டும். வகுப்புவாத சக்திகள், (ஆர்எஸ்எஸ் கொள்கையான ஒரு வெறிபிடித்த சகிப்புத் தன்மையற்ற பாசிஸ்ட் `இந்து ராஷ்ட்ரம்’ போன்று) நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்கள் சீர்குலைக்கப்படுவது மற்றும் பலவீனப்படுத்தப்படுவதல்லாமல், நம் வர்க்க சேர்மானத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு முக்கியமான முன்நிபந்தனையாக விளங்கும் ஜனநாயக உரிமைகளை செயல்படுத்துவதற்கு வசதி செய்து தரும் அடித்தளங்களையும், வர்க்க ஒற்றுமையை முன்னெடுத்துச் செல்வதற்கான நிலைமைகளையும் மக்கள் மத்தியில் மதவெறியூட்டி, அவர்களின் மதவுணர்வுகளை வெறித்தனமாக ஏற்றி, சிதைக்கின்றன. எனவே, வகுப்புவாதத்தை முறியடித்திட ஓர் உறுதியான போராட்டம் இல்லாமல், நம் நாட்டில் புரட்சியை முன்னெடுத்துச் செல்வது சாத்தியமில்லை.

தேசியவாதம்: நவீன தேசியவாதம் முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சியுடனும் அது நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக தேசிய உணர்வினைப் பயன்படுத்துவதுடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டில், தேசியவாதம், காலனியாதிக்க மற்றும் அரைக் காலனியாதிக்க நாடுகளில், காலனிய மற்றும் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் எழுச்சி பெற்றது. ஏகாதிபத்தியத்தின் ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கம் இக்காலனியாதிக்க நாடுகளில் ஆளும் வர்க்கங்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்பு நீர்த்துப்போயின. இன்றைய ஏகாதிபத்திய உலகமயச் சூழலில், தேசிய இறையாண்மைக்கு எதிராக மிகவும் திட்டமிட்ட முறையில் தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. ஏகாதிபத்திய நிதி மூலதனம் அனைத்து நாடுகளில் உள்ள அரசுகளிடமும் தங்களுடைய கட்டளைக்கு தேசிய இறையாண்மை இணங்கிட வேண்டும் என்று கோருகிறது.

“எண்ணற்ற பிராந்திய மற்றும் இன அடையாளங்களின் அடிப்படையில் மக்கள் அணிதிரட்டப்படுவதன் மூலமாக புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.   தெலுங்கானா, டார்ஜிலிங் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் தனி மாநிலங்களுக்கான இயக்கங்கள் இன்றைய தினம் உருவாகி இந்திய அரசின் மொழிவாரி மாநிலங்களின் அடித்தளங்களையே சீர்குலைப்பது மட்டுமல்ல, சுரண்டப்படும் வர்க்கங்களின் ஒற்றுமையையும் சீர்குலைத்துக் கொண்டிருக்கின்றன.

“சர்வதேச நிதிமூலதனம், நாடுகளின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பலவீனப்படுத்துவதற்காக, இன தேசியவாதத்தையும் ((ethnic nationalism), பிரிவினைவாதத்தையும் ஊக்குவிக்கிறது. மக்களை குறுகிய குழுவாத அடிப்படையில் பிரிப்பதற்கு வகை செய்யும் இத்தகைய பிற்போக்குத்தனமான இன தேசியவாதம் எதிர்த்து முறியடிக்கப் பட்டாக வேண்டும். மாறாக அம்மக்களின் ஜனநாயக அபிலாசைகளை அவர்கள் வென்றெடுத்திட முன்னின்று போராட வேண்டும். அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். அதேசமயத்தில், தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பது மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியவாதம் ஆகியவை சுரண்டப்படும் வர்க்கங்களை ஒன்று திரட்டிடவும், ஏகாதிபத்திய உலகமயத்திற்கு எதிரான போராட்டத்தில் வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்திடவும் ஒரு முக்கியமான அம்சமாகும்.

“இந்தியா போன்ற பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாட்டில், உலகில் வேறெந்த நாடுகளுடனும் ஒப்பிடமுடியாத அளவிற்கு, சமூக-கலாச்சாரப் பன்முகத்தன்மை கொண்டு நம் நாட்டில், இத்தகைய போக்குகளில் ஈடுபடுவதற்கான நாட்டம் எண்ணிலடங்காத வகையில் தொடர்கிறது. அவை சுரண்டும் வர்க்கங்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதுடன், நம் இறுதி லட்சியத்தை எய்துவதற்காக நாம் நம் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதையும் பலவீனப்படுத்துகின்றன. வர்க்கப் பிரச்சனைகளின் மீது வெகுஜனப் போராட்டங்களை வலுவான முறையில் கட்டி எழுப்புவதன் மூலமும் அனைத்து சுரண்டப்பட்ட பிரிவினரின் வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்துவதன் மூலமும் மட்டுமே இதனை எதிர்த்து முறியடித்திட முடியும். ஏற்கனவே மொழிவாரி மாநிலங்களாகப் பிரிந்திருக்கக்கூடிய இந்திய மாநிலங்களை மாற்றி அமைப்பதற்காக நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களுக்கு எதிராக இத்தகைய புரிந்துணர்வின் அடிப்படையில்தான் நாம் நம் நடைமுறை உத்திகளை வகுத்திருக்கிறோம்.’’

எனவே, இன்றைய சூழ்நிலையின் கீழ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்ட ஐம்பதாம் ஆண்டு தினத்தைக் கொண்டாடக்கூடிய இந்த சமயத்தில், இந்திய புரட்சிக்கான “அகக் காரணிகளை’’ (“subjective factor”) வலுப்படுத்திட, அதாவது, தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர தத்துவார்த்தப் போராட்டத்தை வலுப்படுத்திட, மார்க்சிய லெனினியத்தைக் கடைப்பிடிக்கும் கட்சியின் தலைமையின் கீழ் தொழிலாளர் வர்க்கத்தின் தீர்மானகரமான தலையீட்டை ஏற்படுத்திட, வர்க்க சக்திகளின் தற்போதைய சேர்மானங்களில் மாற்றத்தைக் கொண்டுவந்து, நாட்டு மக்களின் அனைத்து சுரண்டப்படும் பிரிவினரையும் தொழிலாளர் வர்க்கத்தின் கீழ் ஒன்றுபடுத்திட, மக்கள் ஜனநாயகத்தை நிறுவுவதற்கான புரட்சிகரமான தாக்குதலைத் தொடுத்திடவும், அதன் மூலம் சோசலிசத்திற்கான அடித்தளங்களை அமைத்திட, நம் உறுதியை இரட்டிப்பாக்கிக் கொள்ள வேண்டும்.

சோசலிசத்தின் எதிர்காலம் என்ன? என்ற கேள்விக்குப் பதில் இதுதான்:

“சோசலிசம் மட்டுமே எதிர்காலம்.’’ இல்லையேல், மனித நாகரிக முன்னேற்றம் என்னும் காலக் கடிகாரத்தில் எதிர்காலம் என்னும் முள் மீளவும் காட்டுமிராண்டித்தனம் என்னும் இருண்ட காலத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும்.

 

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தத்துவார்த்த தமிழ் ஏடாக மலரும் மார்க்சிஸ்ட் முதல் மாத இதழ் இதோ தமிழக வாசகர்களையும் கட்சித் தோழர்களையும் ஆதர வாளர்களையும் சந்திக்கிறது. இப்படியொரு மாதாந்திர ஏட்டைக் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன?

நாள்தோறும் புதுப்புது மாற்றங்கள் சர்வதேச அலவிலும் தேசிய அளவிலும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த அன்றாட நிகழ்ச்சிப் போக்குகள் பற்றிய மார்க்சிய பார்வையை கட்சி அணி களுக்குத் தரவேண்டியுள்ளது. அத்துடன் பல்வேறு பிரச்சனைகள் பற்றி நமது வர்க்கக் கண்ணோட்டத்தையும் தத்துவார்த்த ரீதியாகத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. அந்த நோக்கத்துடன்தான் கட்சியின் மத்தியக் கமிட்டி சார்பில் `தி மார்க்சிஸ்ட்’ என்ற மாத ஏடு வெளிவந்து கொண்டிருக்கிறது. அதில் கட்சித் தலை வர்களின் கட்டுரைகளும், தத்துவார்த்த விளக்கங்களும், மார்க்சியக் கல்விக்கும், அரசியல் தெளிவுக்கும் உதவக்கூடிய முக்கிய சர்வதேசிய கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களின உரைகளும் குறிப்புகளும் வெளியாகின்றன.

இத்தகைய கட்டுரைகளை தமிழில் தருவதோடு, நாமும் சில பிரச்சனைகளில் கட்டுரைகளும் தயாரித்தளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் தமிழில் இந்த மார்க்சிஸ்ட் மாத ஏடு வெளிவருகிறது.

இந்த முதல் இதழில், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் மூத்தவரான தோழர் முசாபர் அகமது அவர்கள் பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் ஆரம்பகாலத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவருமான தோழர் பி.டி.ரணதிவே எழுதியுள்ள `கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறும் தத்துவமும்’ உள்ளடக்கிய அருமையானதொரு கட்டுரை பொருத்தமாக இடம் பெறுகிறது. நாடு முழுவதும் முசாபர் அகமதுவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இத்தருணத்தில் இக்கட்டுரை வெளியாவது இரட் டிப்பு பொருத்தம்.

தோழர் முசாபர் அவர்கள் எழுதிய “நானும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்” (Myself and the Communist Party of India) என்ற நூலை ஆதாரமாகக் கொண்டு, இந்திய கம்யூனிச இயக்கத்தின் அந்த ஆரம்பகால கட்டத்தில் கட்சியை உருவாக்குவதில் ஈடுபட்டவர் என்ற முறையில் பி.டி.ரணதிவே இக்கட்டுரையை வழங்கியுள்ளார்.

முசாபர் அகமதுவின் அரசியல் சிந்தனை வளர்த்தது எப்படி? கடுமையான குடும்பச் சூழலில் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த அவர் ஒரு கம்யூனிஸ்ட்டாகப் பரிணமித்தது எப்படி என்பதை பி.டி.ஆர். அன்றைய இந்திய அரசியல் பின்னணியில் எடுத்துரைக்கிறார்.

1020ம் ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டவர்களில் பலரும் காங்கிரஸ் தலைமையில் நடந்த ஒத்துழையாமை இயக்கத்திலோ அல்லது கிலாபத் இயக்கத்திலோ பங்கேற்றவர்கள்தான். இவை இரண்டிலுமே பங்கு பெறாத முசாபர் எப்படி கம்யூனிச இயக்கத்திற்கு வந்தார் என்பதை பி.டி.ஆர். விளக்குகிறார்.

ஜனநாயக சிந்தனையும், நாட்டுப்பற்றும் கொண்ட முசாபர் அன்றைய காங்கிரஸ் இயக்கம் முழங்கிய வந்தே மாதரம் பாடலில் இந்து மதக் கடவுளான துர்காதேவியை முன்னிறுத்தியிருந்ததைக் கண்டு காங்கிரசின் சுதந்திர லட்சியம் இந்துமத சார்புத்தன்மையை உடையதாகத்தான் இருக்கும் என்று கருதினார். காங்கிரசின் அந்தப் போக்கு முசாபருக்கு பிடிக்கவில்லை. இதே காலகட்டத்தில் முஸ்லீம் இளைஞர்கள் இயக்கம் முன்பு பிரிட்டிஷாரிடம் இழந்த முஸ்லீம் ராஜ்யத்தை அடைய மீண்டும் முயன்றதையும் முசாபர் பார்த்தார். அதையும் அவர் ஏற்கவில்லை. இந்த இரண்டு போக்குகளையுமே நிராகரித்து மதச்சார்பற்ற ஜனநாயக அரசிய லுக்கு வந்தவர் அவர்.

முசாபர் அவர்கள் வங்கமொழி கலை இலக்கியங்கள் மீதும் கலாச்சாரத்தின் மீதும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவராவார். ஆரம்பத்தில் வங்க முஸல்மான் சாகித்ய பரிஷத் என்ற கலை இலக்கிய அமைப்பு ஒன்றையும் உருவாக்கி, நவயுகம் என்ற பத்திரிகையையும் நடத்தி வந்தார். இயல்பாகவே அந்தப் பத்திரிகை தொழிலாளர் பிரச்சனை பற்றி எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பல பிரச்சனைகளோடு அவரை சந்திக்கவரும் தொழிலாளர்கள் மற்றும் மாலு மிகளுக்கு விளக்கமளிக்க வேண்டிய அவசியம் வருகிறது. காரல் மார்க்ஸ், லெனின் எழுதிய சில நூல்கள் அவருக்குக் கிடைக்கின்றன. மார்க்சின் இடதுசாரி தீவிரவாதம் இளம் பருவக்கோளாறு என்ற நூலையும் படிக்கிறார். அவை அவருக்குப் புதிய வெளிச்சத்தை தருகின்றன. நாட்டின் முழுமையான விடுதலைக்கு சரியான வழி இதுவே என்ற பார்வையைத் தருகின்றன. இதை வைத்து எப்படி இயக்கத்தைக் கட்டுவது? இது சம்பந்தமாக சர்வதேசியத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும், இயக்கத்தை உருவாக்கவும் அவர் மனம் விழைந்தது.

இக்காலகட்டத்தில்தான் கம்யூனிஸ்ட் அகிலத்தின் மூன்றாவது மாநாடு நடைபெறுகிறது. அதில் கம்யூனிஸ்டுகள் அடிமைப்பட்டிருந்த கிழக் கிந்திய நாடுகளுக்குச் சென்று அங்கே கம்யூனிச இயக்கம் வளர உதவுவது என முடிவு செய்யப்பட்டது. அந்த அடிப்படையில் சர்வதேச கம்யூனிஸ்ட்டுகள் (குறிப்பாக பிரிட்டனிலிருந்து) இந்தியாவிற்கும் வந்தனர். இந்தியாவின் பம்பாய், கல்கத்தா, சென்னை, லாகூர் ஆகிய நான்கு நகரங் களில் தொடர்பு கொண்டு இயங்கினர். கல்கத்தாவிலிருந்த முசாபர் அகமது, கம்யூனிஸ்ட் அகிலம் மூலமாகவே பம்பாயிலிருந்து செயல்பட்ட எஸ்.ஏ.டாங்கே, காட்டே போன்றவர்களை தெரிந்து கொள்கிறார். இவ்வாறு இந்தியாவில் அப்போது தனித்தனியே செயல்பட்டுக் கொண்டிருந்த தோழர்களிடையே தொடர்பு ஏற்படுத்தியது.

1921ல் நடைபெற்ற கயா காங்கிரஸ் மாநாட்டில் எம்.என்.ராய், எழுதிய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கொள்கை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. அதன் பிறகே கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான தாக்குதல்களை பிரிட்டிஷ் அரசு தீவிரமாக்குகிறது. ஒன்றல்ல, இரண்டல்ல, கம்யூனிஸ்டுகளை முடக்குவதற்கு பல சதி வழக்குகளை ஜோடித்தது பிரிட்டிஷ் அரசு. 1922ல் கம்யூனிஸ்டுகள் மீதான முதல் சதி வழக்கு (பெஷாவர் சதிவழக்கு) தொடுக்கப்பட்டது. மாஸ்கோவில் தூரகிழக்கு பயிற்சிக் காலத்தில் பயிற்சி பெற்று வந்த இளம் முஸ்லீகள் பலர் இந்த வழக்கில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதன் பின் முசாபர் அகமது, டாங்கே, நளினி குப்தா, சவுகத் உஸ்மான் ஆகியோரைக் கைது செய்து அவர்கள் மீது கான்பூரில் சதிவழக்கு தொடுக்கப்பட்டது. இதை கம்யூனிஸ்டு சதி வழக்கு என்று அறிவித்தனர். மாட்சிமை பொருந்திய பிரிட்டிஷ் மன்னரது ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்தனர் என்று அவர்கள் மீது குற்றஞ் சாட்டிய இந்த வழக்கு இந்திய மக்களிடையே கம்யூனிஸ்ட் லட்சியங்களைப் பிரபலப்படுத்தியது. அப்போது பிரிட்டனின் ஆளும் கட்சியாக இருந்த தொழிலாளர் கட்சியின் தலைவர்கள் பலர் இதை எதிர்த்தனர். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை அமைக்க முயன்றவர்களுக்கு சிறைத் தண்டனையா என்று கண்டித்தனர். அவர்களை விடுதலை செய்யக் கோரினர். நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. முசாபரும் இதர தோழர்களும் இரண்டு ஆண்டுகளில் விடுதலை செய்யப்படுகின்றனர்.

விடுதலையான முசாபர் அகமது கணவாணி (மக்கள் குரல்) என்ற பத்திரிகையைத் துவக்கினார். அதிலே கம்யூனிச இயக்கம் பற்றியும் தொழிலாளர் வர்க்கப் போராட்டங்கள் பற்றியும் தொடர்ந்து எழுதினார்.

1924 முதல் 1927 வரையிலான மூன்றாண்டு காலத்தில் பல மாநிலங்களில் தொழிலாளர் விவசாயிகள் கட்சி உருவாக்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் குழுக்கள் உருவாகின. பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு சுயாட்சியே போதுமென்று காங்கிரஸ் கட்சி கோரி வந்தபோது கம்யூனிஸ்டுகள்தாம் முதல் முறையாக இந்தியாவுக்கு பரி பூரண சுதந்திரமே லட்சியம் என்று முழங்குகிறார்கள். காங்கிரசில் இருந்த ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் அதை ஏற்றுக் கொண்டு பின்னர் அதையே காங்கிரசின் குரலாக ஒலித்தனர்.

இப்படி கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்ந்ததுடன் காங்கிரசுக்குள்ளேயே முற்போக்கான சிந்தனைகள் பிரதிபலித்தன. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பீதியடைந்தனர். கம்யூனிஸ்டுகளை மீண்டும் வேட்டையாடத் துவங்கினார்கள். 1929ல் மீரட் சதி வழக்கு தொடுக்கப்பட்டது. இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே நீண்ட வழக்காகப் பதிவு பெற்ற இவ்வழக்கில் முசாபர் உள்ளிட்ட 31 தோழர் களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது. முசாபருக்கு ஆயுள் தண்டனை, பிலிப்ஸ் பிராட், பென் பிராட்ஸ், ஹாட்சிஸன் ஆகிய மூன்று பிரிட்டிஷ் கம்யூனிஸ்டுகளும் இவ்வழக்கில் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இப்படி பிரிட்டிஷ் தொழிலாளர் வர்க்கத்தின் முன்னணி தலைவர்கள் இந்திய கம்யூனிச இயக்க வளர்ச்சிக்கு உதவியதை முசாபரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்வதன் மூலம் பி.டி.ஆர் கோடிட்டுக் காட்டுகிறார்.

மீரட் சதி வழக்கில் விதிக்கப்பட் தண்டனையைக் கண்டித்து பிரிட்டனிலும் இயக்கம் வெடித்தது. ஆயுள் தண்டனை உள்பட முன்பு விதிக்கப்பட்டிருந்த தண்டனைகள் குறைக்கப்பட்டன. எனினும் தோழர் முசாபர் ஆறரை ஆண்டுகள் சிறையிலிருந்த பின்னரே 1926ல் விடுதலை செய்யப்பட்டார்.

பிரிட்டிஷ் ஆட்சியின் இத்தகைய அடக்கு முறைகள் இந்திய கம்யூனிச இயக்கத்தின் அந்த முன்னோடிகளை ஒரு சிறிதும் கலக்கவில்லை. மாறாக வழக்கு நடைபெற்ற நீதிமன்றத்தையே தமது கம்யூனிஸ்ட் இயக்கப் பிரச்சார மேடையாகப் பயன்படுத்திக் கொண்டனர் கம்யூனிஸ்ட்டுகள்.

தேசிய விடுதலைக்காகப் போராடுகிற இந்திய பூர்ஷ்வாக்களுடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தை தீவிரப்படுத்துவது அவசியம் என்றும், அதே சமயத்தில் கம்யூனிஸ்டுகள் தமது தனித் தன்மையைப் பாதுகாத்துக் கொள்வதும் அவசியம் என்றும் சர்வதேச கம்யூனிச இயக்கம் வழிகாட்டிய விவரங்களை எல்லாம் இந்தக் கட்டுரையில் பி.டி.ஆர். நமக்களிக்கிறார். சுதந்திரப் போராட்டம் பற்றிய வர்க்க ரீதியான சரியான மதிப்பீட்டின் அடிப்படையில் இவ்வாறு வழிகாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுகள் தேசிய இயக்கத்துடன் இணைந்ததும், விடுதலைப் போராட்டம் புதுவேகம் பெற்றதும் இறுதியில் 1947ல் இந்தியா விடுதலை பெற்றதும் நமக்கு தெரிந்த வரலாறு.

இந்தப் போராட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கிற முசாபரின் போராட்ட வாழ்க்கை சுதந்திரத்திற்குப் பிறகும் தொடர்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு சரியான மார்க்சிய-லெனினிய அணுகுமுறையை நிலைநாட்டுவதற்காக நடைபெற்ற போராட்டத்திலும் முசாபரின் பங்கு முக்கியமானது.

வலதுசாரி திருத்தல்வாதப் போக்கையும், இடதுசாரி அதிதீவிரப் போக்கையும் எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த முசாபர் அகமது வர்கள் 1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமாவதற்கு முன்னர் நடைபெற்ற தெனாலி சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்த காட்சி மறக்க முடியாதது. உடல் தளர்ந்த நிலையிலும் உள்ளத்தின் உறுதி கொஞ்சமும் தளராதவராக 1964ல் உருவான மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்தார். இந்திய மக்களுக்கு ஒரு சரியான பாதையைக் காட்டி வரும் நம் கட்சியின் மத்தியகுழு உறுப்பினராக தொடர்ந்து பணியாற்றினார். 1968ல் அவரது மூச்சு நிற்கும் வரை, கம்யூனிச இயக்கத்தில் அவரது பணி நிற்காமல் தொடர்ந்தது.

முசாபரின் வரலாறு தனிமனிதனின் வரலாறல்ல. இந்திய கம்யூனிச இயக்கத்துடன் – மார்க்சிஸ்ட் கட்சியின் பரிணாமத்துடன் இரணடறக் கலந்து நிற்கும் வரலாறு என்பதை பி.டி.ஆரின் இந்தக் கட்டுரை விளக்குகிறது. ஒரு சரியான கொள்கை நிலைக்காக, மக்களின் உண்மையான விடுதலைக்காக சுரண்டலற்ற புதிய சமுதாயத்திற்காக இறுதி வரை போராடிய அந்த மாவீரனின் வரலாறு இன்றைய இளம் தோழர்களுக்கு ஒரு அனுபவ வழிகாட்டியாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

 

அபூர்வ மனிதன் வி.பி.சிந்தன்!

மே 8-ந் தேதி தோழர் வி.பி. சிந்தன் அவர்களின் நினைவு நாள். 1987ம் ஆண்டு இதே நாளில் அவர் மறைந்தார்.

அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்தில் இந்திய மார்க்சிய இயக்கத்தின் முதுபெரும் தலைவர் பி.டி. ரணதிவே அவர்கள் “தோழர் வி.பி. சிந்தன் ஒரு அபூர்வ மனிதன்” என்று புகழ்ந்து, போற்றி தனது அஞ்சலியைத் தெரிவித்தார்.

விடுதலைப் போரின் தாக்கத்தில் தேசிய இயக்கத்தின் போராளியாய் களத்திற்கு வந்த இளம் மாணவன் தான் மறையும் போது தனி உயரத்தில் நின்ற வி.பி. சிந்தன் என்கிற ஆளுமை. “போராட்டமே வாழ்க்கையாய்” என்ற வார்த்தைகளுக்கு உண்மையான இலக்கணமாக அவரது வாழ்க்கை அமைந்தது.

ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தின் கேரளப் பகுதியில் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து கம்யூனிஸ்ட்டாய் சிந்தன் பரிணமித்துவிட்டார். அவரைப் பார்த்து இயக்கத்தின் தேவை உன்னை தமிழ்ப்பகுதிக்கு அழைக்கிறது; இயக்கம் உன்னிடம் எதை எதிர்பார்த்தாலும் அதைத் தருகிற மார்க்சிய புரிதலும் அர்ப்பணிப்பும் உனக்கிருக்கிறது; எனவே உடனே சென்னைக்கு புறப்படு என்று கட்சியின் முடிவை தோழர் கிருஷ்ணபிள்ளை அவர்கள் கூறினார். அதை அக்கணமே ஆணையாய் ஏற்றுக் கொண்டு அவர் புறப்பட்டார். அமைப்பின் தேவைக்கு தனது சொந்த நலன்களை உட்படுத்திக் கொள்வது என்பதற்கு உயர்ந்த உதாரணம் ஆனார். ஒரு முழுநேர ஊழியர் எப்படி ஒரு முழுநேரப் புரட்சிக்காரன் என்பதற்கு எடுத்துக்காட்டாய் கடைசி வரை வாழ்ந்தார். ஸ்தாபன ஒழுக்கம், கட்டுப்பாடு என்பதை எவ்வளவு ஆழமான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட போதும் பேணிக் காத்தார்.

அவரது மார்க்சியப் புரிதலும், அடிப்படைத் தத்துவக் கோட்பாடுகளில் அவருக்கு இருந்த விசாலமான ஞானமும் வியப்பிற்குரியது. தொழிலாளி வர்க்கப் புரட்சி சாத்தியம், சோசலிசமே அடுத்த சமூக மாற்று என்பதில் அவருக்கு இருந்த ஆழ்ந்த நம்பிக்கைக்கு இதுவே அடிப்படை. அவர் தனது வகுப்புகளில் மார்க்சிய தத்துவத்தை விரும்பி போதிப்பார். இந்திய மரபு வழிப்பட்ட பொருள்முதல்வாதத்தில் அவருக்கு ஆழ்ந்த தேர்ச்சி இருந்தது. சமஸ்கிருதத்தையும் அவர் அறிந்திருந்தார். இதுபற்றி அவரது சிறு பிரசுரங்களும் வந்துள்ளன. அவரது தத்துவ வகுப்புகளில் வாழ்க்கையின் மீதும், மாற்றங்களின் மீதுமான நம்பிக்கை சாரமாய் உள்ளிறங்கும். அவரது போதனை மிகவும் இயல்பாகவும், இயற்கையாகவும் இருக்கும். குறிப்பாக நடப்பு போராட்டங்களிலிருந்தும், அனுபவங்களிலிருந்தும் உதாரணங்களையும் படிப்பினைகளையும் தருவார். அவரது தனித்தன்மைகளில் இதுவும் ஒன்று. தத்துவத் தெளிவை ஊட்டுவதில் அவரது பங்களிப்பு மகத்தானது.

1964ல் கட்சி பிரிந்த பிறகு திருத்தல்வாதத்தை எதிர்த்த கொள்கைப் போரில் அவர் பெரும்பங்காற்றினார். இந்திய ஆளும் வர்க்கம் பற்றிய நிர்ணயிப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை உருவாவதிலும் அதுபற்றிய தெளிவை அணிகளுக்கு போதிப்பதிலும் அவர் கட்சி ஸ்தாபனத்தில் பெரும் பங்காற்றினார்.

அவர் பிரதானமாக தொழிற்சங்கப் பணிக்கு வந்த போது சென்னை நகரில் நமது தொழிற்சங்க இயக்கம் மிகவும் சிறியதாக இருந்தது. பெரும்பாலான தொழிற்சங்கங்கள் மற்றவர்கள் தலைமையில் இருந்தது. அவர் தொழிற்சங்க இயக்கத்தில் நுழைந்த நேரத்தில் சென்னை சுற்றுப்புற தொழிற்சாலைகளில் பெரும் கொந்தளிப்பான நிலை இருந்தது. தொழிலாளர்கள் சட்ட உரிமைகள், பணி நிரந்தரம் போன்றவை கூட மறுக்கப்பட்டு கடும் அடக்குமுறைக்கு ஆளாகிக் கொண்டிருந்தார்கள். முதலாளிகள் தங்களுக்கு ஒத்துப்போகிற தலைவர்களைக் கொண்ட சங்கம் அமைத்துக் கொண்டு அதனோடு தான் பேசுவேன் என்றார்கள். இந்த அடக்குமுறையை எதிர்த்து, தொழிலாளி தான் விரும்பிய சங்கத்தை அமைத்துக் கொள்ளவும், தனக்கு ஏற்பான தலைமையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவுமான போராட்டங்கள் வெடித்தன.

அந்தத் தருணத்தில் இந்தப் போராட்டங்களை இணைத்து ஒருமுகப்படுத்தவும், சகோதர ஆதரவு முழக்கங்களை முன்வைக்கவும், கூட்டுப் போராட்டத் தேவையை உணர்த்தவும், அரசு முதலாளிகளுக்கு சாதகமாக இருப்பதை அம்பலப்படுத்தவும், அரசின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களை கூட்டாக முன்னெடுக்கவுமான பெரும்பணியை ஆற்றியவர் வி.பி.சி. தான். அதற்காக ஆளும் வர்க்கத்தின் கொலைவெறித் தாக்குதலையும் அவர் சந்திக்க நேர்ந்தது, அதிலிருந்து மீண்டெழுந்து தன்பணியினை தொடர்ந்தார். அவரது நெடிய அரசியல் வாழ்க்கையால், அர்ப்பணிப்பால் அவருக்கு இருந்த மரியாதையும், மற்றவர்களாலும் மறுக்க முடியாத நேர்மையும், தியாகமும் அவரை ஒரு ஆளுமையாக உயர்த்தியிருந்தது. இதன் மூலம் தொழிற்சங்க இயக்கத்திற்கு புத்துணர்ச்சியை அவரால் பாய்ச்ச முடிந்தது. ஒரு தொழிற்சாலையில் ஒரு சங்கம் என்று சென்னையில் வேர்விட்டிருக்கிற அந்த நிலைமையை இவரது பரந்த பார்வை உருவாக்கியது. கட்சி என்பதை தொழிற்சங்க கட்சி என்று புரிந்து கொள்ளக் கூடாது. தொழிலாளி வர்க்க கட்சி என்பதை அவர் அழுத்தமாகக் கூறுவார். தொழிலாளர் அனைவரும் நமது அடிப்படை வர்க்கம் என்று கூறுவார். அவர்களை அரசியலால் அணி திரட்டுவதில் தான் புரட்சியின் வெற்றியிருக்கிறது என்று கூறுவார். அவர் காலத்தில் இருந்த அதே நிலையை இப்போது உலகமய சூழலில் நாம் எதிர்நோக்குகிறோம். அவரது அணுகுமுறைகள் இன்றைய போராட்டங்களில் வழிகாட்டும் ஒளியாய் இருக்கின்றன.

ஸ்தாபனப் பிரச்சனைகளில் வருத்தப்படுவோர், கோபமுற்றோர், சோர்வுற்றோர், ஒதுங்கி நிற்போர் போன்றவர்களை அவர் உரிமையோடு கடிந்து கொண்டு திருத்த முற்படுவார். அவர் கடைசியில் சொல்வது இதுதான்.

“நீ யாருக்கும் அடிமையல்ல; ஆனால் ஸ்தாபனக் கட்டுப்பாடுகளைப் பின்பற்று; புரட்சிக்கு விசுவாசமாக இரு”.

அவரது எல்லா செயல்களிலும் நடைமுறை சாத்தியப்பாடுகள் என்பதும் பொருத்தமாக கலந்திருக்கும். அவரது எந்த உரையிலும் நடைமுறை பிரச்சனைகளை சக்தியோடு எடுத்து வைத்து புரட்சிகர முழக்கத்தோடு தான் முடிப்பார்.

சோசலிச மாற்றுக்கு மக்களைத் திரட்டுவோம்! புரட்சியை முன்னெடுப்போம்!

 

மே தினத்தின் புரட்சிகரப் பாரம்பரியம்

உலகெங்கும் உள்ள உழைப்பாளர்களின் ஒருமைப்பாட்டையும் போராட்ட உணர்வையும் மே தினக் கொண்டாட்டாங்கள் வெளிப்படுத்துகின்றன. இந்த ஆண்டு உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் மே தினத்தைக் கொண்டாடும் போது இந்திய பாட்டாளி வர்க்கம் ஒரு கடுமையான அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்தியாவின் 16 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. இந்தத் தேர்தல் களத்தில் உலகின் பல்வேறு பகுதியிலுள்ள பாட்டாளி மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை இந்தியப் பாட்டாளி வர்க்கமும் எழுப்பியுள்ளது. உழைக்கும் வர்க்கத்தை பொறுத்த வரை கூலி, பணிப்பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, வேலையின்மை, சமூகப் பாதகாப்பு போன்றவை முக்கியமான சில பிரச்சினைகளாகும்.

மேலும், பாட்டாளி வர்க்கம் தான் விரும்பிய தொழிற்சங்கத்தைத் துவக்கி நடத்துவது என்பது உள்ளிட்ட தனது உரிமைகளை நிலைநாட்டுவது போன்ற பிரச்சனைகளும் முக்கியமாகும். மேற்கூறிய பிரச்சனைகள் அனைத்தும் கடந்த 23 ஆண்டுகளாக நம் நாட்டில் கடைபிடிக்கப்படும், நவீன தாராளமயக் கொள்கைகளோடு தொடர்புள்ள பிரச்சனைகளாகும். உழைக்கும் வர்க்கம், இந்தப் பிரச்சனைகளின் மீது மக்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்க வேண்டும். இந்தப் பிரச்சனைகள் பாட்டாளி மக்களின் வாழ்வாதாரங்களோடு தொடர்புடையவை. அதுமட்டுமின்றி நாட்டின் பெரும்பகுதி மக்களின் எதிர்காலத்தோடும் தொடர்புடையது.

இந்திய பாட்டாளி வர்க்கம் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பிரச்சாரம் கடந்த 5 ஆண்டுகளாக பாட்டாளி வர்க்கம் நடத்தி வரும் மாபெரும் ஒன்றுபட்ட போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும். இந்தக் காலகட்டத்தில் இந்திய பாட்டாளி வர்க்கம் துறைவாரியான மாபெரும் போராட்டங்களை நடத்தியுள்ளது. பல ஒன்றிணைந்த போராட்டங்களையும் நடத்தியுள்ளது. நாடு தழுவிய வேலை நிறுத்தங்களை நடத்தியுள்ளது. அரசு பின்பற்றும் கொள்கைகளில் மாற்றம் தேவை என்பதை வலியுறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இப்போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தப் போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் இவையனைத்தும் உலக முழுவதிலும் உள்ள பாட்டாளி மக்கள், பல்வேறு பகுதிகளிலும் நடத்திவரும் மாபெரும் போராட்டங்களோடு ஒத்திசைந்தவை எனலாம்.

நீக்கமற நிறைந்த பிரச்சனைகள்

கடந்த சில ஆண்டுகளாக முதலாளித்துவ உலகைக் கடுமையான பிரச்சனைகள் வாட்டி வருகின்றன. உலகெங்கிலும் உள்ள பல பகுதி மக்களின் வாழ்வு இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்கூடாகக் காணலாம். இத்தகைய சிக்கல்களின் பின் விளைவுகளை எதிர்த்துதான் ஐரோப்பாவிலும் மற்ற நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்தன. ஐரோப்பாவில் வேலையின்மை, மிக முக்கியப் பிரச்சனையாகும். கிரீஸில் வேலையற்றோரின் விகிதம் 27.4 சதவீதம் என்பது அதிகாரப்பூர்வமான தகவல்: ஸ்பெயின் 26.7 சதவீதம்: போர்ச்சுகல் 15.5 சதவீதம்: பல்கேரியா 12.9 சதவீதம்: இத்தாலி 12.7 சதவீதம். பெண்கள், இளைஞர்கள் இவர்களைப் பொறுத்த வரையில் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. அனைத்து நாடுகளிலும் இந்த இரண்டு பிரிவினரும் வேலையற்றோரில் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இந்த காலகட்டத்தில், வேலையின்மை பெருகும்: மேலும் தொழிலாளர்களின் கூலியின் மீதும் சமூகப் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளின் மீதும் தாக்குதல் நடைபெறும். இதுதான் வரலாறு நமக்குப் புகட்டும் பாடம். சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் எடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகள் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்குகின்றன. உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களின் மீது மிகக் கடுமையான தாக்குதல்களை ஏவுகின்றன. கொள்கை ரீதியில் நவீன தாராளமயக் கொள்கைகளை ஏற்றுக் கொள்பவர்கள் கூட ஆளும் வர்க்கங்களும், பன்னாட்டு நிதி நிறுவனம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி போன்றவற்றின் இத்தகைய கொள்கைளை ஏற்கத் தயங்குகிறார்கள். ஏப்ரல் 4 ஆம் தேதி பிரஸ்ஸல்ஸ் நகரில் மிகப் பெரிய பேரணி ஒன்று நடந்தது. அதில் ஐரோப்பா முழுவதிலிருந்தும் வந்திருந்த ஆயிரமாயிரம் உழைப்பாளர்கள் சிக்கன நடவடிக்கைகள் ஒழிக என்றும் இன்னொரு ஐரோப்பா சாத்தியமே என்ற கோஷங்களை முழங்கினார்கள். இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகிகள் வேலையின்மை, வறுமை, சமத்துவமின்மை ஆகிய சிக்கல்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.

துரதிருஷ்டவசமாக இந்த மாபெரும் போராட்டங்கள், அநீதியை எதிர்த்த கோஷங்கள், ஏழைகளுக்கும், செல்வந்தவர்களுக்கிடையே அதிகரித்து வரும் இடைவெளியை எதிர்த்த கோஷங்கள் போன்ற போராட்டங்கள் வால்ஸ்டிரீட் முற்றுகை போராட்டத்தைப் போலவே, ஓர் அரசியல் குறிக்கோள் இல்லாமலே முடிந்து விடுகின்றன. எதிர்ப்பையும், கோபத்தையும் வெளிப்படுத்திய பின்னர் அடங்கி விடுகின்றன.

தற்போதைய அமைப்புக்குச் சவால்

மேற்கூறிய அனைத்துப் பிரச்சனைகளையும் வர்க்க நோக்கோடு பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது மே தினம். உழைப்பாளிகளைச் சுரண்டினால்தான் முதலாளித்தவம் நிலைத்து நிற்க முடியும். நாம் தற்போது சந்திக்கும் அத்தனைப் பிரச்சனைகளுக்கும் மூல காரணம் முதலாளித்துவம்தான். அதனால், முதலாளித்துவ அமைப்புக்கு நாம் சவால்விட வேண்டும். இந்த குறிக்கோளை எட்டுவதற்காக பாட்டாளி வர்க்கமும் மற்ற எல்லா உழைக்கும் மக்களும் ஓரணியாகத் திரண்டுவர வேண்டும். அவர்களுடைய அன்றாடப் போராட்டங்களை ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளின் மீதான விமர்சனத்துடன் இணைக்க வேண்டும். இந்த ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளுக்குப் பின்னாலிருக்கும் அரசியலை அம்பலப்படுத்த வேண்டும். இதுதான் மிக முக்கியமான பணியாகும். மே தினத்தின் உத்வேகம் நிறைந்த அறைகூவல் முதலாளித்துவத்தை எதிர்த்த போராட்டத்தை வலுப்படுத்தவோம் என்பதுதான் இன்றைய உலகில் குறிப்பாக நம் நாட்டில் பொருளாதார, அரசியல் மற்றும் தத்துவார்த்த மட்டங்களில் நமது செயல்பாடுகளை வலுப்படுத்த வேண்டும். நவீன தாராளமயக் கொள்கைகள், நமது சமுதாய அமைப்பில் கடுமையான தாக்குதலை நிகழ்த்திச் சமுதாயத்தைச் சீரழித்துவிடுகிறது. இத்தகைய நவீன தாராளமயக் கொள்கையினால் ஏற்பட்ட பாதிப்புகள் ஆழ்ந்து பரிசீலனை செய்யப்பட வேண்டும். இந்தச் சமுதாயச் சீரழிவைத் தடுக்கும் வழிமுறைகளைப் பற்றி ஆலோசிக்க வேண்டும்.

45 கோடிக்கும் மேல் உழைப்பாளர்களைக் கொண்ட நம் நாட்டில், அதில் மிகச் சிறிய பகுதியினரே வெகுஜன அமைப்புகளில் உறுப்பினராக உள்ளனர். இந்த நிலையில் தொழிற்சங்க இயக்கத்தை வலுப்படுத்துவதே நம் தலையாய கடமையாகும். இந்தியாவில் உழைக்கும் மக்களில் பெரும்பகுதியினர் ஏழை விவசாயிகளும், விவசாயத் தொழிலாளிகளும் ஆவர். தொழிற்சங்கங்கள் இந்த மக்களின் பிரச்சினைகளையும் கையிலெடுக்க வேண்டும். இந்தப் பகுதி மக்கள் ஈவு இரக்கமின்றிச் சுரண்டப்படுகிறார்கள். லட்சக்கணக்கானோர் தற்கொலை செய்து கொண்டு இறக்கிறார்கள். உழைக்கும் மக்களிடையே நிலப்பிரபுத்துவக் கருத்துக்களும், திருத்தல்வாத மனோநிலையும் காணப்படுவது இன்னொரு பெரும் சவாலாகும். இது நம் பணியை மேலும் முக்கியமானதாக்குகிறது. தொழிற்சங்கங்களுக்கு வர்க்க உணர்வை ஊட்டுவதும், பாட்டாளி மக்களிடையே விஞ்ஞான சோசலிசக் கருத்துக்களைப் பரப்புவதும் நமது மிக முக்கியமான பணியாகும். நமது போராட்டங்களில் ஒவ்வொரு நாட்டுக்கும் உரிய தனிப்பட்ட பிரச்சினைகளைக் கையிலெடுக்கும் போது, ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்கள், அதன் தலையீடு இவற்றைப் பற்றியும் குறிப்பிட வேண்டும்.

இந்த ஆண்டு முதல் உலகப்போர் நிகழ்ந்து நூறாண்டு நிறைவு பெறுகிறது. இந்தப் போர் முடிந்தாலும், இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியிலேயே உலகம் இன்னொரு கொடூரமான போரைச் சந்தித்தது. இதன் விளைவாக ஏராளமான பொருட்சேதமும், உயிர் சேதமும் விளைந்தன. ஆனால், இன்னமும் போர் வெறி குறையவில்லை. ஏகாதிபத்திய நாடுகள், நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு கண்டங்களிலும், பல்வேறு நாடுகளிலும் அவற்றின் விவகாரங்களில் தலையிட்டு, அந்நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்த முனைகின்றன.

ஏகாதிபத்திய சதிக்கு ஆளாகியிருக்கும் நாடுகளான சிரியா, வெனிசுலா, பாலஸ்தீன், கியூபா முதலிய நாடுகளின் மக்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்நாடுகளில் ஏகாதிபத்திய சதியை எதிர்த்து நாம் குரல் கொடுக்க வேண்டும். லிபியா, ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் ஏகாதிபத்தியத்தின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இந்நாட்டு மக்களுக்கும் ஆதரவாக நிற்க வேண்டும்.

நம்முன் இருக்கும் பணிகளை நமக்கு நினைவூட்டும் நாள் மே தினம். இந்தியாவில் தற்போது மதவெறி வகுப்புவாதம் தலைவிரித்தாடும் நிலைமையைக் காண்கிறோம். இத்தகைய வகுப்புவாதம் மக்களைக் கூறுபோடுவதோடு சமூக அமைதியைச் சீர்குலைக்கிறது. அதுமட்டுமின்றி உழைக்கும் மக்களின் ஒற்றுமையைக் குலைத்துத் தொழிற்சங்க இயக்கத்தையும் பலவீனப்படுத்துகிறது. தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் இன்னொரு பிரச்சினை சாதியம். சாதிய மோதல்களை ஊக்குவிக்கும் சக்திகளை அடையாளம் கண்டு, சாதியத்தை எதிர்த்துப் போராட வேண்டும்.

இந்திய தொழிற்சங்க மையத்தைத் தோற்றுவித்தவரும், அதன் தலைவருமான பி.டி.ரணதிவே “மே தினத்திற்குப் புரட்சிகரமான பாரம்பரியம் உண்டு. இந்தப் பாரம்பரியம் எப்போதும், மக்களின் கோரிக்கைகளோடு, உழைக்கும் மக்களின் சர்வதேச ஒருமைப்பாட்டையும் இணைத்துக் கொண்டுள்ளது. முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் நம்பிக்கையும், திண்மையும் கொண்டது. உழைக்கும் மக்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று உறுதி பூண்டது” – என்கிறார்.

உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டங்களில் தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளின் மகத்தான தியாகங்களை நினைவு கொள்வோம். வர்க்க ஒற்றுமையை மனதில் இருத்திப் புரட்சிப் பதாகையை உயர்த்திப் பிடித்து நமது இலக்கை நோக்கி வீறு நடை போடுவோம்.

– தமிழில் பேராசியர் ஹேமா

பி.எஸ்.ஆரின் நூற்றாண்டு: வாழ்வும் பணியும்

“ஒரு நபர் தனக்காக மட்டுமே பாடுபட்டால் ஒரு வேளை பிரபலமான அறிவாளியாகலாம். மாபெரும் ஞானியாகலாம். மிகச்சிறந்த கவிஞராகலாம். ஆனால், அவர் ஒரு குறையில்லாத உண்மையிலேயே மாபெரும் மனிதராக முடியாது.

ஆனால், மனிதன் தன்னுடைய சகமனிதர்களின் பரிபூரணத்திற்காக, நன்மைக்காக பாடுபடுவதன் மூலமாகவே தன்னுடைய சுயபரிபூர்ணத்துவத்தை அடைய முடியும்.

நாம் தேர்ந்தெடுக்கும் தொழில், மனித குலத்தின் நன்மை, நமக்கு முக்கியமான வழிகாட்டியாக இருக்க வேண்டும். மிகவும் எண்ணற்ற மனிதர்களை மகிழ்ச்சியடையச் செய்தவரே மிகவும் அதிகமான மகிழ்ச்சியுடையவராகிறார் என்று அனுபவம் தெரிவிக்கிறது.”

– காரல் மார்க்ஸ்

பி.சீனிவாசராவ் அவர்களின் நூற்றாண்டு 2007 ஏப்ரல் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. அவரது வாழ்வும், அவர் ஆற்றிய பணியும் இன்றைய தலைமுறையினருக்கு சிறந்த வழிகாட்டியாகவும் முன்னுதாரணமாகவும் அமையும்.

54 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர். சுமார் 19 ஆண்டுகள் மட்டுமே தஞ்சை மாவட்டத்தில் கட்சிப் பணியாற்றினார். ஆம்! 1907 ஏப்ரல் மாதத்தில் கர்நாடகத்தில் பிறந்து 1961 செப்டம்பர் மாதத்தில் தஞ்சை மாவட்டத்தில் இறந்தார். குறுகிய காலத்தில் அனைவராலும் போற்றக்கூடிய அளவுக்கு வளர்ந்தார். உயர்ந்தார் என்றால் அது எவ்வாறு?

1943 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்திற்கு பி.எஸ்.ஆர். செல்கிறபோது, அவருக்கு தமிழில் பேச முடியும். ஆனால் சரியாக படிக்கவும், எழுதவும் தெரியாது. மொழி புதிது, மக்களும் புதியவர்கள். இத்தகைய தடைகளை மீறி பி.எஸ்.ஆர். விவசாயிகள் இயக்கத் தலைவராக, கம்யூனிஸ்ட் தலைவராக, சிறந்த போராளியாக எவ்வாறு ஜொலிக்க முடிந்தது? “பி.சீனிவாசராவ் செய்த சேவையின் மதிப்பு எல்லோராலும் உணரப்படக்கூடிய காலம் வரும்” அவரோடு கட்சிப் பணியாற்றிய தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஜீவா இவ்வாறு கூறியிருக்கிறார்.

பி.எஸ்.ஆர். கர்நாடகத்தில் தென்கனரா பகுதியில் பிறந்து பெங்களூரில் உள்ள கிருத்துவ கல்லூரியில் கல்வி பயின்றார். சுதந்திரப் போராட்டம் வீறு கொண்டு எழுந்தபோது, “மாணவர்களே அந்நியக் கல்வி முறையை எதிர்த்து வெளியேறுங்கள்” பெற்றோர்களே! பிள்ளைகளை அந்நியர்கள் நடத்தும் கல்லூரிகளுக்கு அனுப்பாதீர்கள்” என 1920 இல் கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கட்டளையிட்டது. காங்கிரஸ் கமிட்டியின் அறைகூவலை ஏற்று 1920களில் கல்லூரிப் படிப்பை தூக்கியெறிந்துவிட்டு, வெளியேறிய தேசப்பற்று மிக்க பல மாணவர்களில் பி.எஸ்.ஆரும் ஒருவர்.

சுதந்திர வேட்கையால் கல்லூரியை விட்டு வெளியேறிய பி.எஸ்.ஆர். நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று பிறகு சிங்கப்பூர் சென்று அங்கிருந்து சென்னை திரும்பினார்.

சென்னையில் 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்நியத் துணி விற்பனைக்கு எதிரான மறியலில் கலந்து கொண்டார். காவல் துறையினரால் கடுமையானத் தாக்குதலுக்கு உள்ளானார். காங்கிரஸ் கட்சியிலும், பிறகு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும் சேர்ந்து ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தில் கலந்து கொண்டார். பி.எஸ்.ஆர். கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது அமீர் ஹைதர்கானை (தென் மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதில் முக்கியமான பங்காற்றியவர்) சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அமீர் ஹைதர்கான் தான் பி.எஸ்.ஆர் ஐ கம்யூனிஸ்ட்டாக்கினார்.

சென்னையில் பி.எஸ்.ஆர்., பி.ராமமூர்த்தி, ஜீவா போன்றவர்கள் இணைந்து கட்சிப் பணியாற்றியிருக்கிறார்கள். 1943 ஆம் ஆண்டு கட்சியின் மாநிலக்குழு கூடி தஞ்சையில் விவசாயிகளை திரட்டிட கம்யூனிஸ்ட் கட்சி முயற்சிக்க வேண்டும் என்று முடிவெடுத்தபோது பி.எஸ்.ஆர். தஞ்சைக்கு செல்கிறார்.

பி.எஸ்.ஆர். தஞ்சைக்கு செல்ல வேண்டுமென்று கட்சியின் மாநிலக்குழு முடிவெடுத்து அவர் சென்றபோது அவருக்கு மண்ணைத் தாலுக்கா களப்பால் கிராமத்தில் களப்பால் குப்புவின் தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. காக்கி அரைக்கால் சட்டையிலும், வெள்ளை அரைக்கை சட்டையிலும் செக்கச் செவேலென்று நெடிய உருவமுடைய பி.எஸ்.ஆர். வர வேற்பை ஏற்றுக் கொண்டு ஏற்புரையாற்றினார்.

“நீங்களெல்லாம் தாய் வயிற்றில் பத்து மாதம் கருவாகி உருவாகி வெளியே வந்தவர்கள்தான். உங்கள் மிராசுதாரர்களும் கார்வாரிகளும் கூட அப்படிப் பிறந்தவர்கள்தானே? அவர்களைப் போன்றே நீங்களும் மனிதர்கள்தான்! உங்களுக்கும் அவர்களுக்கும் தலைக்கு இரண்டு கை, இரண்டு கால்தானே? வேறென்ன வித்தியாசம்? அடித்தால், திருப்பியடி! சாணிப்பால் புகட்டினால் சாட்டையால் அடித்தால், அது சட்ட விரோதம்! அப்படித் தண்டிக்க வருவோரை முட்டியை உயர்த்தி ஓட ஓட விரட்டியடி! அடியாட்கள் ஆயுதங் களுடன் தாக்க வந்தால், பிடித்து கட்டிப்போடுங்கள். ஒருவர், இருவருக்கு தொல்லை கொடுத்தால் ஊரே திரண்டு தற்காத்துக் கொள்ளுங்கள். ஒற்றுமையும், உறுதியும்தான் சங்கம்.

எல்லா ஊர்களிலும், நமது கொண்டான் கொடுத்தான் களிருப்பதால், அங்கெல்லாம் போய்க் கொடி ஏற்றுங்கள். எல்லா இடங்களிலும் சங்கம் வந்து விட்டால், அடிக்குப் பதிலடி கொடுப் போம் என்று தெரிந்தால், நம்மை வாட்டி வதைக்கும், “எஜமானர்கள்” பயப்படுவார்கள். பழைய காலம் போல், போலீசும் காட்டு ராஜா தர்பார் நடத்தப் பயப்படும். அவர்கள் சட்டப்படி நடக்கச் செய்வதில் சங்கத்தின் வார்த்தைக்கு மதிப்பு ஏற்படும். நாங்களிருக்கும் தைரியத்தில் நீங்கள் துணிந்து செயல்படுங்கள்”

பி.எஸ்.ஆர். ஆற்றிய உரையை படிப்போர் அன்று கீழத் தஞ்சையில் இருந்த அரசியல் சமூகப் பொருளாதாரச் சூழலை புரிந்து கொள்ள முடியும். தஞ்சை மாவட்டத்தில் நிலங்கள் அனைத்தும் விரல்விட்டு எண்ணக்கூடிய நிலச் சுவான்தார்கள், மடாதிபதிகள், மடங்கள் மற்றும் ஜமீன்தார்கள் போன்றோருக்கு சொந்தமாக இருந்தது. தமிழகத்திலேயே நிலக்குவியல் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில்தான் அதிகம். மறுபுறத்தில் விவசாயத்தில் அன்றாட சாகுபடி வேலைகளைச் செய்யும் தலித் பண்ணையாட்கள், தலித் மக்களின் பெரும்பான்மையோர் நிலமற்றவர்களாகவும், பண்ணை யாட்களாகவும் வேலை செய்து வந்தார்கள். சாதி இந்து மக்களில் பெரும்பாலோர் குத்தகை சாகுபடிதாரர்களாக இருந்தார்கள். நிலச்சுவான்தார்கள் அனைவரும் சாதி இந்துக்கள்தான். இதில் ஒரு பகுதியினர் உயர்சாதியைச் சார்ந்தவர்கள். தலித் பண்ணையாட்கள் தீண்டாமை கொடுமைக்கும் நிலப்பிரபுத்துவத்தின் கொடுமையான சுரண்டலுக்கும் ஆளாகியிருந்தார்கள். குத்தகைய விவசாயிகள் சாகுபடிதாரர்களாக இருந்தாலும், நிலவுடைமையாளர்களின் கடுமையான சுரண்டலுக்கும், ஒடுக்குதலுக்கும் உள்ளானார்கள். அன்றைய ஆங்கிலேயே காலனியாதிக்க அரசு நிலச்சுவான்தார் களுக்கு அரணாகவும், பண்ணையாட்களுக்கும் குத்தகை விவசாயி களுக்கும் எதிராகவும் இருந்தது. இதனால்தான், 1940களில் விவசாயிகள் இயக்கம் நிலப்பிரபுத்துவத்தையும் தீண்டாமை கொடுமையையும் எதிர்ப்பதோடு, காலனியாதிக்கத்தையும் எதிர்த்து பேராட வேண்டியிருந்தது. சாதியும், நிலவுடைமையும் தீண்டாமை கொடுமையும் பின்னிணிப் பிணைந்து இருந்த சூழல்தான் ஒன்றுபட்ட தஞ்சையில், குறிப்பாக கீழத்தஞ்சையில்.

பி.எஸ்.ஆர். தனக்கு அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஆற்றிய உரை கூடியிருந்தவர்களின் சிந்தனையில் மின்சாரத்தை பாய்ச்சியது போல் ஆயிற்று. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பண்ணை யாட்கள் மற்றும் சாதி இந்து குத்தகைதாரர்கள் மத்தியில் புதிய தெம்பு ஏற்பட்டது.

தென்பரை

பி.எஸ்.ஆர். தஞ்சைக்கு செல்வதற்கு முன்பே தென்பரை (கோட்டூர் ஒன்றியம்) கிராமத்தில் குத்தகை விவசாயிகள் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தென்பரையில் உள்ள பெரும்பகுதி நிலத்திற்கு சொந்தக்காரரான உத்திராபதி மடத்தை எதிர்த்து, குத்தகை விவசாயிகள் போராடிக் கொண்டிருந்தார்கள். தென்பரை கிராமத்திற்கு மாவட்டத்தில் உள்ள மற்ற தலைவர்களோடு சென்ற பி.எஸ்.ஆர். தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்க முதல் கிளையை துவக்கி வைத்து கொடியேற்றுகிறார். குத்தகை விவசாயிகள் போராட்டம் சில கோரிக்கைகளை வென்றெடுத்தது.

தென்பரையில் செங்கொடி இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி காட்டுத் தீயைப் போல் கீழத்தஞ்சை முழுவதும் பரவியது. குத்தகை விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி மாவட்டத்தில் உள்ள பண்ணை யாட்களையும் உற்சாகப்படுத்தியது. தீண்டாமை கொடுமைக்கு எதிராக நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராக விவசாயிகள் சங்கமும், கம்யூனிஸ்ட் கட்சியும் தங்களை பாதுகாக்கும். தங்களுக்கு கொடுமையிலிருந்து விடுதலை பெற்றுத் தருமென தலித் மக்கள் உண்மையாகவே நம்பினார்கள்.

தினமும் கிராமம், கிராமமாக பி.எஸ்.ஆர்.ரும் மற்ற தலைவர்களும் சென்று விவசாயச் சங்கக் கொடியையும், கம்யூனிஸ்ட் கட்சி கொடியையும் ஏற்றி வைத்தார்கள். விவசாயிகள் சங்க கிளைகளும், கம்யூனிஸ்ட் கட்சிக் கிளைகளும் பரவலாக துவங்கப் பட்டது. விவசாய சங்கத்தினுடைய உதயமும், கம்யூனிஸ்ட் கட்சியினுடைய துவக்கமும் கீழத் தஞ்சை முழுவதும் பரபரப்பான சூழலை உருவாக்கியது. மணலி கந்தசாமி, ஆர்.அமிர்தலிங்கம், பி.எஸ். தனுஷ்கோடி, ஏ.கே.சுப்பையா, கே.ஆர்.ஞானசம்பந்தம், ஏ.எம். கோபு, எம்.பி.கண்ணுசாமி, மணலூர் மணியம்மை போன்ற மாவட்டத் தலைவர்களும் பி.எஸ்.ஆர்.உடன் கிராமம், கிராமமாக சென்று விவசாயச் சங்கக் கிளைகளையும், கட்சிக் கிளைகளையும் உருவாக்கினார்கள்.

சாணிப்பால், சாட்டையடி போன்ற தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும், பண்ணையாளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்தும், குத்தகைய விவசாயிகளுக்கு பாதுகாப்பு மற்றும் நியாயமானக் குத்தகை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி போன்ற வட்டங்களில் பரவலாக இயக்கம் துவங்கியது. இதனுடைய பிரதிபலிப்பாக கீழத் தஞ்சை முழுவதும் தலித் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்பட்டது.

தலித் மக்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சியின் விளைவாக காவல்துறை தலையிட்டு விவசாயச் சங்கப் பிரதிநிதிகளையும், நிலச்சுவான்தார்கள் பிரதிநிதிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி 1944 இல் ஒப்பந்தம் உருவானது.

சாணிப்பால் சாட்டையடிக்கு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டது. பண்ணையாளுக்கு அளிக்கப்பட்ட கூலி உயர்த்தப்பட்டது. குத்தகைய விவசாயிகளின் கோரிக்கையின் ஒரு பகுதியும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. குறிப்பாக இந்தப் பேச்சுவார்த்தையின் போது நிலப்பிரபுக்களும் – தலித் பிரதிநிதிகளும் சமமாக உட்கார்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நிலச்சுவான்தார்கள் கையில் இருந்த சாட்டையை கம்யூனிஸ்ட் கட்சியும், விவசாயச் சங்கமும் பறித்து மோசமான தீண்டாமைக் கொடுமைக்கு முற்றுப் புள்ளி வைத்தது.

கீழத் தஞ்சையில் தீண்டாமை கொடுமை அக்காலத்தில் பல வடிவங்களில் இருந்தது. சாதி இந்துக்கள் தெருக்களில் தலித் மக்கள் செல்ல முடியாது. பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாது. டீ கடைகளில் தலித் மக்களுக்கு சமமான இடமில்லை. தலித் மக்கள் கோவிலுக்குச் செல்ல முடியாது. இதுபோன்ற மோசமான வடிவத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமைகளுக்கு கம்யூனிஸ்ட் இயக்கம் முடிவு கட்டியது. சாதிய வேறுபாடும், தீண்டாமை கொடுமையின் மிச்ச சொச்சமும் கீழத் தஞ்சையில் இன்றும் நீடித்தாலும் அதன் குரூரத்தன்மைக்கு முற்றுப்புள்ளி வைத்ததில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு பெரும் பங்குண்டு. இத்தகைய போராட்டத்தில் பி.எஸ்.ஆர். பிரதான பங்காற்றினார்.

1944 ஆம் ஆண்டின் பண்ணையாட்களுக்கு கூலி உயர்வும், குத்தகை விவசாயிகளுக்கு அதிகப் பங்கும் அளிக்கக்கூடிய ஒப்பந்தம் மன்னார்குடியில் உருவானது. இந்த ஒப்பந்தத்தில் நிலச்சுவான் தார்கள் கையெழுத்திட்டாலும், அமலாக்குவதற்கு மறுத்து வந்தனர். 1946 ஆம் ஆண்டு நீடாமங்கலத்தில் ஒரு முத்தரப்பு மாநாடு நடை பெற்றது. இதில் அன்றைய வருவாய்த்துறை அமைச்சர் பாஷ்யம் அய்யங்காரும், நிலச்சுவான்தார்கள் பிரதிநிதிகள் சிலரும் விவசாயச் சங்கத்தின் சார்பில், பி.எஸ்.ஆரும் மற்ற தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.

இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமே மாவட்ட செஷன்ஸ் நீதிபதி அனந்தநாராயணன் கமிஷன் வழங்கிய “கூலி உயர்வை” ரத்து செய்ய வேண்டும் என்பதே. சாமியப்ப முதலியார் என்ற நிலப்பிரபு குடும்பத்திற்கு வழக்கறிஞராக பணியாற்றுபவர் தான் மாநில அமைச்சர் பாஷ்யம். இந்தப் பின்னணியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையின்போது, அமைச்சரின் பேச்சு நிலப்பிரபுக்களுக்கு ஆதரவாகவே அமைந்தது. பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பி.எஸ்.ஆர்., “ஏஜண்டுகள் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று அமைச்சரைப் பார்த்து கேட்க”, அமைச் சரோ! “அதனை நான் வலியுறுத்த முடியாது என்று கூறினார்”. கொதித்தெழுந்த பி.எஸ்.ஆர். பிறகு ஏன் இக்கூட்டத்தை கூட்டினீர் கள் என்று கேட்க? அமைச்சர் பாஷ்யம் பி.எஸ்.ஆரிடம் நான் யார் தெரியுமா என்று கேட்டார்? பி.எஸ்.ஆர். மிக அமைதியாக தெரியுமே! நீங்கள் வருவாய்த்துறை அமைச்சர் பாஷ்யம் என்று கூற, சூடேறிய அமைச்சர், “நான் நினைத்தால் எட்டு மணி நேரத்தில் போலீஸ் இங்கே வந்து விடும்” என்று கூறினார். அதற்கு பதிலடியாக பி.எஸ்.ஆர். உங்களுக்கு எட்டு மணி நேரம் தேவை! ஆனால், நான் “புரட்சி ஓங்குக!” என்று குரல் கொடுத்தால், அடுத்த நிமிடமே நீங்கள் சுற்றி வளைக்கப்படுவீர்கள் என்று கோபத்தோடு கூறினார். நிலப்பிரபுவின் வாலாக செயல்பட்ட பாஷ்யம் பேச்சுவார்த்தையை நிறுத்தி விட்டு ஓடிப்போய் விட்டார்.

இதற்குப் பின் பி.எஸ்.ஆர். கூலி உயர்வு பெறும் வரையில் யாரும் நிலத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று விவசாயி களுக்கு கூற, போராட்டத்தின் வீச்சைக் கண்டு கலங்கிப்போன நிலப்பிரபுக்கள் “நெல் கூலி உயர்வுக்கு ஒத்துக் கொண்டனர்” பி.எஸ்.ஆரின் பெருங் கோபம் நிலப்பிரபுக்களுக்கு கிலிப்பிடிக்க வைத்தது என்றால் மிகையாகாது.

நாடு விடுதலையடைந்த பிறகு சுதந்திர ஆட்சியில் பண்ணையாட்களுக்கும், குத்தகை விவசாயிகளுக்கும் விடுதலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆட்சி மாறினாலும், நிலச்சுவான்தார்கள் அணுகு முறையில் மாற்றம் ஏற்படவில்லை. ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசின் கொள்கையிலும் மாற்றம் இல்லை.

1948 – 51 ஆம் ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. தோழர். பி.எஸ்.ஆர். மற்ற மாநிலத் தலைவர்களைப் போல் தலைமறைவாகச் செயல்பட வேண்டியிருந்தது. இவருடைய தலைக்கு அன்றைய மாநில அரசு விலை வைத்தது. உழைப்பாளி மக்களின் நலனே தன்னுடைய வாழ்க்கை என்ற அடிப்படையில் பல சிரமங்களையும் ஏற்று பி.எஸ்.ஆர். செயல்பட்டார்.

1952 ஆம் ஆண்டு திருத்துறைப் பூண்டியில் பி.எஸ்.ஆர். முன் முயற்சியில் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் குத்தகை விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. இதில் 60 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அன்றைய சென்னை மாகாணத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்ற ராஜாஜி தலைமையிலான அரசு சாகுபடிதாரர் மற்றும் பண்ணை யாள் பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வந்தது. பண்ணையாள் முறைக்கு முற்றுப் புள்ளி வைக்கக்கூடிய மற்றும் குத்தகை விவசாயி களை நிலத்தை விட்டு வெளியேற்றுவதற்கு முற்றுப் புள்ளி வைக்கக் கூடிய இச்சட்டம் விவசாயிகள் இயக்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

தலைவர்களை உருவாக்கிய தலைவர்

கீழத் தஞ்சையில் நடைபெற்ற மகத்தான இயக்கத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியும் விவசாயிகள் இயக்கமும் தலைமை தாங்கியது. தமிழகத்திலேயே தீண்டாமை கொடுமை ஒப்பீட்டளவில் பெருமளவிற்கு ஒழிக்கப்பட்டுள்ளது என்றால் இதன் பெருமை கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கே. இத்தகைய சாதனையை ஓரிரு தலைவர்கள் சாதித்ததல்ல மக்கள் இயக்கம்தான் மாற்றத்திற்குக் காரணம். கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டுத் தலைமை வலுவான இயக்கத்திற்கு வழிகாட்டியது. இருப்பினும் இம்மகத்தான இயக்கத்தில் பிரதான பாத்திரம் வகித்தவர் பி.எஸ்.ஆர். 1940 களில் துவங்கிய இவ்வியக் கத்தால் பண்ணையாட்களும், சாதாரண விவசாயிகளும் விவசாயத் தொழிலாளிகளும் தலைவர்களானார்கள். பிற்காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக உயர்ந்தார்கள். இத்தகைய தலைவர்களை உருவாக்குவதில் பி.எஸ்.ஆருக்கு முக்கியப் பங்குண்டு. இதனால்தான் இவரை தலைவர்களை உருவாக்கிய தலைவர் என்று கூறுவார்கள்.

ஒருமுறை மாநாட்டில் நிறைவுரையாற்றுகிறபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னரான மறைந்த தோழர் பி.டி.ரணதிவே அவர்கள் ஒரு இயக்கம் வெற்றிபெற இரண்டு முக்கிய அம்சங்கள் தேவை என்றார். முதலாவது, சரியான கொள்கை இருக்க வேண்டும். இரண்டாவது, கொள்கைக்காக தியாகம் செய்யும் செயல்வீரர்கள் இருக்க வேண்டும். இந்த இரண்டு அம்சங்களும் சேர்ந்திருந்தால் அந்த இயக்கம் வெற்றி பெறும். கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழகத்தில் நிலக்குவியல் அதிகமாக இருந்ததும், தீண்டாமை கொடுமை மோசமான வடிவத்தில் இருந்ததும் ஒன்றுபட்ட தஞ்சையில் குறிப்பாக கீழத்தஞ்சையில்தான். (கீழத்தஞ்சை என்பது இன்றைய திருவாரூர், நாகை மாவட்டங்கள்) தீண்டாமைக் கொடுமையை எதிர்த்துப் பல இயக்கங்கள் குரல் கொடுத்தன. தந்தை பெரியார் சாதி வேறுபாட்டை, சாதிக் கொடுமையை கடுமையாக எதிர்த்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதேபோல் காந்திஜி தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்றார். தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கும் போராட்டத்திற்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்தார். டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், அண்ணல் காந்திஜி, டாக்டர் அம்பேத்கர் ஆகியோர் தீண்டாமைக் கொடுமை யையும், சாதிக் கொடுமையையும் எதிர்ப்பதில் ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது. இருப்பினும் எங்கு கம்யூனிஸ்ட் இயக்கம் பலமாக இருக்கிறதோ அங்குதான் தீண்டாமைக் கொடுமை ஒப்பீட்டளவில் ஒழிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் கேரளா, திரிபுரா, தமிழகத் தில் கீழத்தஞ்சை. காரணம் இங்கெல்லாம் சாதிக் கொடுமையை எதிர்ப்பதோடு கம்யூனிஸ்ட் இயக்கம் நிலப்பிரபுத்துவத்தையும் எதிர்த்தது. நில விநியோகத்திற்காகப் போராடியது.

கீழத்தஞ்சையில் கம்யூனிஸ்ட் இயக்கம் சாணிப்பால், சாட்டையடி என்ற அப்பட்டமான தீண்டாமைக் கொடுமையை எதிர்த்ததோடு நிலப்பிரபுத்துவ கொடுமைகளையும் சேர்த்து எதிர்த் தது. பி.எஸ்.ஆர். 1947 இல் எழுதி வெளியிட்ட “தஞ்சையில் நடப்ப தென்ன” என்ற பிரசுரத்தில் கீழத்தஞ்சையில் தலித் பண்ணை யாட்கள் சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் நிலச்சுவான் தார்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தார்கள். சாதிக் கொடுமையும் நிலப்பிரபுத்துவ, சுரண்டலும் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பதை விளக்கியிருக்கிறார்.

“பண்ணையாட்களெல்லாம் பெரும்பாலும் ஆதிதிராவிட மக்களே. இவர்கள் நாள்முழுவதும் வேலை செய்தாலும்அரை மரக்கால் நெல்தான். …. அவர்களது மனைவி மார்களும் குழந்தை குட்டிகளும் மிராசுதார் பண்ணையில் பாடுபட வேண்டும் என்பதை யும் மறந்துவிடாதீர்கள். ஐந்து வயதுகூட நிரம்பாத பச்சிளம் குழந் தைகள் மிராசுதாரின் மாடுகளை மேய்க்க வேண்டும் என்பதையும் மறந்து விடாதீர்கள்…. பண்ணையாட்களின் பரிதாபம் இத்துடன் நிற்கவில்லை. ஒரு சிறு குற்றம் செய்தாலும் போச்சு. மரத்தில் கட்டிப்போட்டு ஈவு இரக்கம் இல்லாமல் மிராசுதார் அடிப்பார் அல்லது அவரது ஏஜண்டுகள் அடிப்பார்கள்”.

கீழத்தஞ்சையில் அக்கால நிலப்பிரபுக்கள் பலர் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்களாகவும், திராவிட இயக்கத்தை சார்ந்தவர் களாகவும் இருந்தார்கள். ஆனால் தலித் பண்ணையாட்களை இரண்டு விதமானக் கொடுமைகளுக்கு உட்படுத்துவதில் நிலப் பிரபுக்க ளுக்குள் எந்த வேறுபாடும் இல்லை. அகில இந்திய அளவில் கம்யூனிஸ்ட் இயக்கம் உருவாக்கிய அணுகுமுறையை கீழத்தஞ்சை யில் நிலைமைக்கேற்ப அமலாக்குவதில் பி.எஸ்.ஆர். பிரதானப் பங்காற்றினார்.

1952 ஆம் ஆண்டு பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம் வந்த பிறகு அடுத்த சில ஆண்டுகளில் நிலப்பிரபுக்கள், பண்ணையாள் என்ற தன்மை மாறி நிலச்சுவான்தார்கள் விவசாயத் தொழிலாளி என்ற நிலைமை உருவானது. சாணிப்பால், சாட்டையடிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகு, பண்ணையடிமை முறை ஒழிக்கப்பட்ட பிறகு, குத்தகை விவசாயிகளுக்கு ஓரளவுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்ட பிறகு புதிய நிலைமை உருவானது. புதிய நிலைமைக்கேற்றவாறு கோரிக்கை உருவானது. கூலி உயர்வு, குத்தகை விவசாயிகளுக்கு நியாயமான பங்குக்காக மற்றும் தொடர்ச்சியான இயக்கங்களுக்கு தலைமை தாங்கிய பி.எஸ்.ஆர். கீழத்தஞ்சையில் விவசாயிகளின் இயக்கத் தலைவராக மட்டுமல்ல மாநில விவசாயிகளின் சங்கத் தலைவராகவும் பணியாற்றி வந்தார்.

நில உச்சவரம்புச் சட்டத்தை திருத்தி நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு நிலவிநியோகம் செய்திட வேண்டுமென்று 1961 ஆம் ஆண்டு மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது. பி.எஸ்.ஆர். பல மாவட்டங்களுக்குச் சென்று விவசாயிகள் மறியல் போராட்டத்திற்கு வழிகாட்டினார்.

தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையிலான அ7ரசு கொண்டு வந்த நில உச்சவரம்புச் சட்ட மசோதாவை திருத்தி நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு நில விநியோகம் செய்ய வேண்டி வற்புறுத்தி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய மறியல் நடைபெற்றது. மறியல் தயாரிப்பிற்காக எழுதிய கட்டுரையில் பி.எஸ்.ஆர். கீழ்வருமாறு கூறுகிறார்.

“1958 இல் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இருந்த கேரள சர்க்கார் நிலவுறவு மசோதாவை வெளியிட்டது. உச்சவரம்பை 5 பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு இருபோக நிலம் 15 ஏக்கர் என இந்த மசோதா நிர்ணயித்தது.

இந்தியா பூராவிலும் இது ஒரு பெரிய பிரதிபலிப்பை ஏற்படுத்தியது. இதனால் தான் காங்கிரஸ் மகாசபை கூட, தன்பெயர் போன நாகபுரி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. எல்லா ராஜ்யங்களும் 1959 இறுதிக்குள் நிலவுடைமை உச்ச வரம்புச் சட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்று இந்தத் தீர்மானம் பணித்தது.

சென்னை ராஜ்ய சர்க்காரும் 1960 ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நிலவுடைமைக்கு உச்சவரம்புக் கட்டும் ஒரு மசோதாவைக் கொண்டு வந்தது. இந்த மசோதா பரிசுரிக்கப்படுவதற்குள்ளாகவே, நிலவுடை மைக்கு உச்சவரம்புக் கட்டும் நோக்கத்தையே சிதறடிக்கும் முறையில் நிலச்சுவான்தார்கள் நிலங்களை மற்றவர்கள் பெயருக்கு மாற்றுவதையெல்லாம் முடித்துவிட்டார்கள். இந்த நில மாற்றங்களை ரத்து செய்வதற்கு சர்க்கார் எத்தகைய நடவடிக்கையும் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த மாற்றங்களுக்கெல்லாம் சர்க்கார் உடந்தையே.

சென்னை உச்சவரம்பு நிர்ணய மசோதா, 30 ஸ்டாண்டர்ட் ஏக்கர் என்று உயர்வான உச்ச வரம்பை நிர்ணயித்தது மட்டுமின்றி, இதர ராஜ்யங்களின் மசோதாக்களில் உள்ள எல்லாப் பாதகமான அம்சங்களும் இம்மசோதாவிலும் உள்ளன.

மேற்கண்ட மாநிலந் தழுவிய விவசாயிகள் மறியல் போராட் டத்தில் பல்லாயிரக்கணக்கில் விவசாயிகள் கலந்து கொண்டார்கள். எதிர்காலத்தில் கீழத்தஞ்சையில் ஒரளவுக்கு நடைபெற்ற நிலவிநி யோகத்திற்கு இப்போராட்டம் நிர்பந்தமாக அமைந்தது.

இத்தகைய மறியல் போராட்டம் நடைபெறுகிறபோது தோழர் பி.எஸ்.ஆர். மாநிலம் முழுவதும் சென்றார். ஓய்வின்றி அலைந்ததால் அவர் உடல் நலம் குன்றி இருந்தார். 1961 செப்டம்பர் 29 ஆம் தேதி கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் தஞ்சையில் இரவு பின்நேரத்தில் அவர் இறந்தார்.

தஞ்சை மாவட்டமே கண்ணீர் வடித்தது. அமரர் பி.எஸ்.ஆர் ரின் இறுதி நிகழ்ச்சி தோழர் எம்.ஆர். வெங்கட்ராமன் தலைமையில் இரவு 11.30 மணிக்கு ஆரம்பமாயிற்று. தோழர் பி. ராமமூர்த்தி, எம். கல்யாண சுந்தரம், எம்.காத்தமுத்து, கே.டி.கே.தங்கமணி, கே.ரமணி, பார்வதி கிருஷ்ணன், கே.டி. ராஜூ மற்றும் பலர் பேசினார்கள். இரங்கல் கூட்டம் இரவு 1.10 மணிக்கு முடிவடைந்தது. இக்கூட்டத்தில் என்.சங்கரய்யா, ஏ.பாலசுப்பிரமணியன், வி.பி.சிந்தன் போன்ற பல தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.

பி.எஸ்.ஆர். மறைவிற்குப் பிறகு அவரைப் பற்றி எழுதிய கட்டுரையில் தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன், பி.எஸ்.ஆரின் குணநலன்களைப் பற்றி எழுதியிருக்கிறார். “வெட்டு ஒன்று; துண்டு இரண்டு என்றுதான் அவர் எப்போதும் பேசுவார். ஒளிவு மறைவென்ற பேச்சுக்கே இடமில்லை. தவறுகள் அல்லது அநீதி என்று அவர் கருதியதைக் காரசாரமாகக் கண்டிக்கத் தவறமாட்டார். அரசியல் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய குறைபாடுகளை நீக்கிக் கொள்ள, இத்தகைய அவரது பிரதிபலிப்புகள், பல சந்தர்ப்பங்களில் எனக்கு உதவி புரிந்திருக்கின்றன.

பி.எஸ்.ஆர். பற்றி பி.ராமமூர்த்தி கூறியது. “மாவீரர் தோழர் .பி. சீனிவாசராவ் அவர்களை 1930 ஆம் வருடத்திலிருந்து எனக்குத் தெரியும். 1930 ஆம் வருடம் தேசிய மறியல் போராட்டத்தில் அவர் செய்த வீரத் தியாகங்கள் இன்னும் என் நினைவில் இருக்கிறது. அந்நிய துணி பகிஷ்கார மறியலில் தன்னந்தனியாக நின்று மறியல் செய்வார். கொடூரமான தடியடிப் பிரயோகத்தில் அவர் மண்டை உடைந்து ரத்தம் ஓடும். ஜனங்கள் இதைப்பார்த்து ஆத்திரமுற்று கதர் துணியை அதிகமாக வாங்கிக் கட்டுவார்கள். அன்று கதர் கடைகளில் அதிக வியாபாரம் நடந்தால், “இன்று சென்னையில் சீனிவாசராவ் மறியலா?” என்று கேட்பார்கள். என்னைப் போன்ற தோழர்களைக் கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கொண்டு வருவதற்கு அரும்பாடுபட்டார்.”

பி.எஸ்.ஆர். பற்றி ஏராளம் கூற முடியும். அர்ப்பணிப்பு, கொண்ட கொள்கையில் உறுதி, தெளிவு, வாழ்க்கையில் எளிமை, நேர்மை என விளக்கிக் கொண்டே போகலாம். அண்ணல் காந்திஜியை அவருடைய இறுதிக்காலத்தில் நாட்டு மக்களுக்கு அவர் விடுக்கும் செய்தி என்ன என்று கேட்டபோது, என் வாழ்வுதான்தான் விடுக்கும் செய்தி எனக் கூறினார். அதைப்போலவே பி.எஸ்.ஆர் இன் வாழ்வும், பணியும் தான் இன்றைய தலைமுறைக்கு அவர் விடுத்த செய்தியாக எடுத்துக் கொள்வோம்.

பி.எஸ்.ஆர். இன் நூற்றாண்டு ஏப்ரல் 10, 2007 இல் நிறைவுறுகிறது. ஆனால், அவர் துவக்கிய பணி நிறைவு பெறவில்லை. மகத்தான பணியை முன்னெடுத்துச் செல்ல உறுதியேற்போம்.