ஆ.சி.ஈ.பி (RCEP) ஒப்பந்தம் இந்தியாவுக்கு உகந்த ஒன்றுதானா?

பிரபாத் பட்நாயக்

தமிழில்: பிறைகண்ணன், நர்மதா தேவி

பிராந்திய அளவிலான விரிவான பொருளாதாரக் கூட்டு’ (Regional Comprehensive Economic Partnership – RCEP-ஆர்.சி.ஈ.பி) என அழைக்கப்படும் , இந்தியா உட்பட 16 நாடுகள் அங்கம் வகிக்க இருக்கும் அமைப்பை எதிர்த்து, கடந்த அக்டோபர் 24-25 தேதிகளில், நாடு முழுவதும் விவசாயிகள் மாபெரும் போராட்டத்தை நடத்தினார்கள். ஒப்பந்தப் பேர பேச்சுவார்த்தைகள் இறுதிப்படுத்தப்படவுள்ள நிலையில், இத்தகைய போராட்டங்கள் உச்சத்தை எட்டியிருக்கின்றன. அனைத்திந்திய விவசாயிகள் சங்கம் நவம்பர் 4 அன்று – ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதற்கு சற்று முன்னால் – நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. கேரள அரசும் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கிறது!

முதலில் இந்த ஆர்.சி.ஈ.பி என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம் !

ஆர்.சி.ஈ.பியில் அங்கம் வகிக்கும் தெற்காசியாவின் 16 நாடுகளில், பத்து நாடுகள் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியானில் அங்கமாக இருக்கின்றன. அதாவது இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், தெ.கொரியா உள்ளிட்ட ஆறு நாடுகள் ஆசியான் அமைப்புடன் தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் (Free Trade Agreement – FTA) இருக்கின்றன. இந்த 16 நாடுகளின் மக்கள்தொகை உலகின் சரி பாதியாகும். உலகின் 40 % உற்பத்தியும் 30 % வர்த்தகமும் இந்த நாடுகளிடம் இருக்கின்றன. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், இத்தகைய ஒப்பந்தங்களிலேயே இதுதான் மிகப் பெரிய ஒன்றாக இருக்கும். இந்த ஓர் அம்சமே, இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் பரம ரகசியமான முறையில் நடந்து வருவதை, மிகப்பெரும் கண்டனத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.

ஜனநாயகமற்ற வகையில் இந்த ஒப்பந்தம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருவது உண்மையில் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பேர பேச்சுக்கள் பரம ரகசியமாக நடத்தப்பட்டு வருகின்றன; நவம்பர் தொடக்கத்தில் அரசுகள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டால், எஃப்.டி.ஏ., கையெழுத்தாகும், பாதிக்கப்படப்போகும் தரப்பைக் கலந்தாலோசிக்காமல் நிறைவேற்றப்பட்ட, ஒரு ‘செய்து முடிக்கப்பட்ட வினை’யாகிடும் (fait accompli)

இந்த ஒப்பந்தத்துக்குள் வரும் இந்தியா உட்பட எந்த நாட்டின் மக்களும், அவர்கள் மீது இந்த ஒப்பந்தம் ஏற்படுத்த இருக்கும் தாக்குதல்கள் குறித்துக் கருத்து தெரிவிக்க முடியாமல் போய்விடும்.

இந்திய அரசு ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் இந்தத் தாராள வர்த்தக ஒப்பந்தத்துக்குள் நாட்டை இழுத்துச் செல்கிறது என்பதையும் தாண்டி இன்னொரு ஆபத்து இருக்கிறது. மத்திய மாநில அரசுகளின் அதிகார வரம்புகளை வரையறுக்கும் இந்திய அரசியலமைப்பின் 7-ம் அட்டவணைப்படி, விவசாயம் தற்போது மாநில அரசின் அதிகார வரம்புக்குள் வருகிறது.
ஆர்.சி.ஈ.பியோ, அல்லது எந்தவொரு தாராள வர்த்தக ஒப்பந்தமோ, விவசாயத்தை நிச்சயமாகப் பாதிக்கும். என்றாலும், அதன் நிபந்தனைகள் குறித்து மாநிலங்களிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை. மாநிலங்களின் அதிகார வரம்புக்குள் இருக்கும் ஒரு துறை குறித்து, மத்திய அரசு இப்படி ஒருதலைப்பட்சமாக செயல்படுவது என்பது, மாநிலங்களுடைய அரசியலமைப்பு உரிமையை அப்பட்டமாக மீறும் செயல்.

அமெரிக்காவில், அரசு நிர்வாகம் இத்தகைய பன்னாட்டு ஒப்பந்தங்களில் முன்னதாகவே கையெழுத்திட்டிருந்தாலும்கூட, நாட்டில் ஒப்பந்தம் அமலாவதற்கு முன்பாக அந்த நாட்டின் பாராளுமன்றமான காங்கிரசின் ஒப்புதலைப் பெறுவது அவசியம்.
இந்தியாவிலோ, அரசிலமைப்புச் சட்டம் அத்தகைய நடைமுறைக்கு அழுத்தம் கொடுத்தாலும், அடுத்தடுத்த மத்திய அரசுகள், பாராளுமன்ற ஒப்புதலுக்கு சமர்ப்பிக்காமலேயே, இத்தகைய தாராள வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகின்றன.

உண்மையில், ஆசியான் அமைப்பின் தாராள வர்த்தக ஒப்பந்தம், இரண்டாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால், முற்றிலும் ஒருதரப்பான முறையிலேயே கையெழுத்திடப்பட்டது. கேரள அரசு, தன்னுடைய மாநிலத்தின் சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் மீது இந்த ஒப்பந்தம் ஏற்படுத்த இருக்கும் தாக்கம் குறித்து பெருங்கவலைகள் கொண்டிருந்தது; அப்போதைய முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் தலைமையிலான அரசின் தூதுக்குழு, டில்லி சென்று, மத்திய அரசிடம் தங்களுடைய கவலைகளைத் தெரிவித்தது. தன்னுடைய அமைச்சரவை சகாக்களுடன் இந்தக் குழுவைச் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், கேரளாவுடன் கலந்தாலோசித்த பிறகே அந்த ஒப்பந்தம் இறுதியாகக் கையெழுத்திடப்படும் என்று தனிப்பட்ட அளவில் உறுதிகூறினார். இருந்த போதிலும், அடுத்தமுறை கேரள அரசின் தூதுக்குழு நாட்டின் தலைநகரை அடைந்தபோது, தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டது! பிஜேபி அரசோ, கூட்டாட்சித் தத்துவத்தின் மீது துளிகூட மதிப்பு கொண்டிறாத நிலையில், இந்த அப்பட்டமான அரசியலமைப்பு உரிமை மீறலை வெகு இலகுவாக அடுத்த கட்டத்துக்கு நடத்திச்செல்கிறது.

ஒப்பந்தத்தின் உண்மையான அம்சங்கள் மூடிமறைக்கப்பட்டாலும், விவசாயிகள் இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் வலுவாகவே இருக்கின்றன, காரணம் விவசாயத்தை உள்ளடக்கிய இந்த வகையிலான முந்தைய தாராள வர்த்தக ஒப்பந்தங்கள் எப்போதுமே விவசாயத்துக்கு எதிராக இருந்து வருகின்றன. இந்திய உற்பத்தியாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி, ஆஸ்திரேலியா, நியுசிலாந்தில் இருந்து மானிய விலையில் இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்களின் தாக்கம் இங்கு ஏற்கனவே கவனம் பெற்றுவருகிறது. அதேபோல், இந்திய சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்களை, அதுவும் குறிப்பாகக் கேரள உற்பத்தியாளர்களைப் பாதிக்கக்கூடிய, இந்தோனேசியா, மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவுவிலை சமையல் எண்ணெய்க்கான வாய்ப்புகளும் கவனம் பெற்றுள்ளது.

இந்திய-ஆசியான் தாராள வர்த்தக ஒப்பந்தம் ஏற்கனவே சமையல் எண்ணெய் இறக்குமதியை இந்தியாவிற்குள் அனுமதித்துவிட்டது என்பது உண்மைதான். அதேசமயம், அந்த ஒப்பந்தம் அவை மீதான வரி விதிப்புகளையும் அனுமதித்து வந்தது. இந்த ஆர்.சி.ஈ.பி ஒப்பந்தமோ, அதற்கான வாய்ப்புகளை மிகவும் குறைத்துவிடும்.
உண்மையில் இந்தக் காரணத்தால் தான், கோதுமை, பருத்தி இறக்குமதிக்கான வாய்ப்புகள் குறித்த கவலைகளும் அதிகரித்துள்ளன. இவை இந்திய விவசாயத்துறையின் மீது பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும்.

நாட்டின் தொழிலாளர் சக்தியில் சரிபாதியைக் கொண்டுள்ள வேளாண்துறை, நவீன தாராளமயக் கொள்கையால் ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், பிஜேபி அரசின் பணமதிப்பிழப்பு உள்ளிட்ட மதிகெட்ட செயல்களால் அந்தப் பாதிப்பு மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கும் ஆர்.சி.ஈ.பியின் விளைவுகள் கடுமையானவை.

ஆபத்துகள் இத்தோடு முடியவில்லை. ஆர்.சி.ஈ.பியின் ஒரு அம்சமாக வரயிருக்கும் அறிவுசார் காப்புரிமை ஆதிக்கம், விவசாயிகள் தங்களுடைய விதைகளைப் பயன்படுத்துவதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வரும் என்பதோடு மட்டுமில்லாமல், வழக்குகள் இல்லாமல், விவசாயிகள் தங்களுடைய விதைகளைப் பயன்படுத்த முடியாத நிலையையும் உருவாக்கும்.
காப்புரிமை ஆதிக்கத்தின் கடுமையான கட்டுப்பாடுகள், மருந்துத் துறையையும் கடுமையாகப் பாதித்து, மருந்துகளின் விலையை ஏற வைத்து மக்களைக் கடுமையாகப் பாதிக்கும்.

இத்தகைய சூழல், ‘இந்த ஒப்பந்தந்தால், இறக்குமதிகள் மலிவாகி, சரக்குகளின் விலை குறைந்து, நுகர்வோருக்கு நன்மை பிறக்கும்’ என்ற வழக்கமான வாதத்துக்கும் முரணாகவே நிலைமைகள் மாறும் என்பதை காட்டுகிறது.
மேலும் இந்த வாதம், காலனியாதிக்கத்தின் போது, இந்தியாவில் தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டதை நியாயப்படுத்த, காலனிய அரசாங்கம் முன்வைத்த வாதத்தை முற்றிலும் ஒத்திருக்கிறது.

இயந்திரங்கள் உற்பத்தி செய்த மலிவான பொருட்களின் இறக்குமதியால் விளைந்த, பெருந்திரளான வேலையின்மையையும், பெருந்திரளான வறுமையையும் நியாயப்படுத்த, இத்தகைய மலிவான இறக்குமதிகள், இத்தகைய பொருட்களின் நுகர்வோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது என அந்தக் காலத்தில் வாதிடப்பட்டது.
ஆனால், மலிவான இறக்குமதியால் ஏற்படும் பெருந்திரளான வேலையின்மைக்கும் வறுமைக்கும் எதிராகப் போராடுவது மட்டும் இங்கு கேள்வியில்லை.

இந்த மலிவான இறக்குமதியால் சிலருக்கு சிறந்த வாழ்க்கைத் தரம் கிடைக்கும் என்பது முற்றிலும் அற்பமானது. இங்கே இன்னும் ஒரு நுட்பமான புள்ளி உள்ளது.
மலிவான இறக்குமதிகள் உருவாக்கக்கூடிய விவசாயிகளின் நிற்கதியற்ற நிலை என்பது, உழைப்பை வழங்கக்கூடிய வேலையற்றோர் பட்டாளத்தை அதிகரிப்பதுடன், தங்களுடைய கூலிக்கான கோரிக்கைகளை முன்வைக்கும் வலுவற்றவர்களாக அவர்களை ஆக்கிவிடும்.
விவசாயிகள் மற்றும் பிற தொழிலாளர்களின் குறைந்த வருமானம் போன்றவற்றால், ஏற்படக்கூடிய பெருக்க விளைவுகள் வாயிலாக, தற்போது நம்முடைய பொருளாதாரம் வீழ்வதற்காக விரைந்து கொண்டிருக்கும் மந்தநிலை என்பது மேலும் தீவிரமடையும்.
மலிவான இறக்குமதிகளால் பயன்பெறக் கூடிய நபர்கள், விவசாயிகள் ஆதரவற்ற நிலையில் இருந்தாலும், தங்களுடைய வருமான துளியும் பாதிப்புக்குள்ளாத நபர்களாகவே இருப்பார்கள்.
ஆனால், விவசாயிகளின் நிற்கதியற்ற நிலை என்பது ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கும்போது, மாறாத வருமானம் கொண்ட உழைக்கும் மக்கள் என்று ஒருத்தரும் இருக்க முடியாது.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், விவசாயிகளின் தலையெழுத்து, நாட்டு மக்களின் தலையெழுத்தையும் பெரிய அளவில் பாதிக்கும். அவர்களின் நிற்கதியற்ற நிலை, சமூகத்தின் பரவலான ஒரு பகுதியைப் பாதிக்கும்.
இந்த உண்மை, வேறு சில சந்தர்ப்பங்களில், வேறு சில நிகழ்வுகளால் மறைக்கப்படும் என்பது உண்மைதான். உதாரணமாக, சொத்து விலைவீக்கக் குமிழி போன்றவற்றால் பொருளாதாரத்தில் ஏற்படும் மலர்ச்சி.

உண்மையில் தற்போதுவரை அந்த பாதிப்புகால் மறைக்கப்பட்டே வந்துள்ளது; விவசாய நெருக்கடி என்பது இதுவரை நடுத்தர வர்க்கத்தைப் பாதிக்கவில்லை; ஆனால், தற்போதைய சூழலில், இந்த மலர்ச்சியெல்லாம் அடங்கிவிட்ட நிலையில், அவ்வாறாக வாய்ப்பே இல்லை, அதனால், இனி மேற்கொண்டு வரக்கூடிய நிற்கதியற்ற விவசாயிகளின் நிலை என்பது, பரவலான பாதிப்பை சமூகத்தில் ஏற்படுத்தத்தான் செய்யும், அதனால், மலிவான இறக்குமதிகளால் பயனடைபவர்களாக எஞ்சப் போகிறவர்கள் சொற்ப எண்ணிக்கையிலானவர்களாகவே இருப்பார்கள்.

ஆர்.சி.ஈ.பி வெறும் விவசாயத் துறையை மட்டும் பாதிக்கப் போவதில்லை. கிழக்காசியாவில் இருந்து இந்தியாவிற்குள் குவியக்கூடிய இறக்குமதிகள் இந்திய உற்பத்தித் துறையையும் கடுமையாகப் பாதிக்கும். இரும்பு, உருக்கு, கடல்வளப் பொருட்கள், வேதிப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள் துறைகள், ஏன் ஆடைத் துறைகள் கூட, ஆர்.சி.ஈ.பின் கீழான வரிவெட்டுகள் குறித்துக் கலக்கமடைந்துள்ளன.
ஒரு சிலர், ‘இப்படிப் பரவாலான உற்பத்தித் தளத்தில் இந்தியா போட்டிகளை இல்லாமல் செய்துவிட்டால், தகுதியற்ற உற்பத்திக் கூடங்களை மூடுவதன் வாயிலாக, நிலைமையை மேம்படுத்த முடியும் அல்லவா?’ எனக் கேட்கிறார்கள்.
இந்தக் கேள்வி, பொருளாதாரம் குறித்த புரிதலற்ற போக்கைக் காட்டிக்கொடுக்கிறது. ஒரு சமூகத்தால் உற்பத்தி செய்ப்பட்ட பொருட்கள்- வளங்களின் அடிப்படையில் அது எவ்வளவு விலை அதிகமாக இருந்தாலும்- அதே சமூகத்தால் முழுவதும் பயன்படுத்தப்படும்போது, அந்தச் சமூகத்தில் அதிகமான வேலைவாய்ப்புகளும், நுகர்வும் இருக்கும்.
ஆனால், அந்தச் சமூகத்து மக்கள் தங்கள் சமூகத்தில் உற்பத்தியாகாமல், வெளியில் இருந்து உற்பத்தியான பொருட்களை வேண்டினால், வேலைவாய்ப்பும், உற்பத்தியும் மட்டும் வீழ்ச்சியடையாது (இறக்குமதி மதிப்புக்கு சமமான அளவுக்கு ஏற்றுமதிகளால் இந்த நிலை சரிப்படுத்தப்படாதவரை), திருத்தத்துக்கு இடமே இல்லாத வகையில் நுகர்வும் குறையும்.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், “தாராள வர்த்தம்” “திறன்” போன்ற வாதங்கள் எல்லாம், முதலாளித்துவ பொருளாதாரத்தின் தூய கருத்தியல் மரபே. அவை பொதுவாக செல்லுபடியாகாது; அவற்றை நாம் விரைவில் மறப்பது நமக்கு நல்லது.
இதுவரை ஆர்.டி.ஈ.பியின் வேலையின்மையை உருவாக்கும், அல்லது வறுமையை உருவாக்கும் விளைவுகளை மட்டுமே நாம் பார்த்தோம்.

எவ்வாறாயினும், அத்தகைய வறுமையுடன் நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் விரிவடையும் (உண்மையில் வறுமையின் பிரதிபலிப்புதான் இது).
இந்தோ-ஆசியான் எஃப்.டி.ஏ., ஏற்கனவே ஆசியான் முகாமுடன் நமது தற்போதைய பற்றாக்குறையை விரிவுபடுத்தியுள்ளது; சீனாவுடனான நமது பற்றாக்குறையைப் போலவே ஆர்.சி.ஈ.பி.,யின் கீழ் இந்தப் பற்றாக்குறை மேலும் விரிவடையும்.
சுருக்கமாகக் கூறுவெதென்றால், ஆர்.சி.ஈ.பி.,யில் கையெழுத்திடுவது என்பது, நாட்டில் வறுமையை ஏற்படுத்துவதற்காக, ஒரு பெரும் தொகையைக் (தற்போதைய விரிந்த பற்றாக்குறையை ஈடுசெய்வதற்காக) கடன் வாங்குவதற்கு ஒப்பானது.

புதிய பொருளாதாரக் கொள்கை, சோவியத் செய்த முயற்சியும், இன்றைய உலகமய தாக்குதலும் ….

(1991 ஆம் ஆண்டில் நரசிம்மராவ் பிரதமராக பொறுப்பேற்றபின் புதிய பொருளாதாரக் கொள்கை முன்வைக்கப்பட்டு அது தொடர்யது பல்வேறு வடிவங்களில் செயல்படுத்தப் பட்டுவருகிறது. அதனை நாம் எதிர்க்கும்போது 1921 இல் லெனின் சோவியத் யூனியனில் புதிய பொருளாதாரக் கொள்கையினை முன்வைக்கவில்லையா? என்று சிலர் எதிர்க் கேள்வி கேட்கின்றனர். அதனை விளக்கும் முயற்சிதான் இயதக் கட்டுரை)

மனித குல வரலாற்றில் முதன்முறையாக உழைக்கும் வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை 1917இல் அன்றைய ருஷ்யாவில் கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கிருந்த சுரண்டல் வர்க்கங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்தப் புதிய அரசை முளையிலேயே கிள்ளி எறிவதற்காக எதிர்ப்புரட்சி சக்திகளை கட்டவிழ்த்து விட்டன. இந்த முயற்சிக்கு அமெரிக்கா உள்ளிட்ட 14 முதலாளித்துவ நாடுகள் நிதியுதவி செய்தன.

கிட்டத்தட்ட 1917 நவம்பர் முதல் 1921 வரை நடைபெற்ற இந்த ‘வெள்ளைப் போர்’ புதிய அரசின் கவனத்தை திசைதிருப்பி அதன் முயற்சிகள் அனைத்தையும் முடக்கியது. வெள்ளைப் போரின் விளைவாக மட்டுமின்றி பருவ நிலை காரணமாகவும் 1920ஆம் ஆண்டில் மிக மோசமான உற்பத்திச் சரிவை ருஷ்யா எதிர்கொண்டது. உணவு உற்பத்தி மிக மோசமாக சரிந்தது. நாடு முழுவதும் கடுமையான பஞ்சம் நிலவியது. நாட்டின் மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் விவசாயிகளாக இருந்த போதிலும் உணவு உற்பத்தி குறைந்ததன் விளைவாக நகர்ப்புறங்களில் வசித்தவர்கள் வாழ்க்கை நடத்த முடியாமல் கிராமங்களுக்குக் குடிபெயர்ந்தனர். அங்கு கைவினைப் பொருட்களை விற்பவர்களாக மாறினர். உள்நாட்டுப் போரின் தேவைகளுக்காக அரசு மேற்கொண்ட கட்டாய உணவு தானிய கொள்முதல் முயற்சி மக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியது. நாட்டில் இருந்த அராஜக வாதிகள், முதலாளித்துவ அடிவருடிகள், முன்னாள் அரசு அதிகாரிகள் ஆகியோரின் கூட்டணி இந்தப் பஞ்சத்தையும் மக்களின் அதிருப்தியையும் பயன்படுத்தி நாடு முழுவதும் கலவரங்களை உருவாக்கியது.

இத்தகையதொரு பின்னணியில்தான் லெனின் நாட்டுப் பொருளாதாரத்தை நிலைநிறுத்தவும், பஞ்சத்திற்குக் காரணமான உணவு உற்பத்தியில் முன்னேற்றம் காணவும், புதிய தொழில்நுட்பங்களை தொழில் உற்பத்தியில் அறிமுகப்படுத்தவும் 1921ஆம் ஆண்டில் புதிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்தார். அனைத்தையும் பொதுமயமாக்குவது என்ற கட்சியின் கொள்கையை சற்றே நிறுத்திவிட்டு, புதிய அரசின் ஸ்திரத்தன்மைக்கு அவசியமான அமைதியை நிலைநாட்ட எடுக்கப்பட்ட முயற்சியே இந்தக் கொள்கையாகும். லெனினின் வார்த்தைகளிலேயே கூறுவதானால், “பின்னாளில் இரண்டுகால் பாய்ச்சலில் நாடு முன்னேறுவதற்கு உதவும் வகையில் இப்போது ஓர் அடி பின்னே வைத்திருக்கிறோம்!”.
முக்கிய அம்சங்கள்

1.பொதுத் துறையோடு கூடவே தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி அளிப்பது. அரசு நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கும் ஒரு கலப்புப் பொருளாதாரப் போக்கை பின்பற்றுவது.

2. அனைத்துத் தொழில்களையும் பொது உடமை ஆக்குவது என்ற நிலைபாட்டிலிருந்து சற்றே விலகி தொழில்துறையின் குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு விதிவிலக்கு அளிப்பது.

3. இத்தகைய நிலைபாடு மாற்றத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் அந்நிய மூலதனத்தை தொழில், வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்வது. இந்த அந்நிய முதலீடு என்பதை அந்நிய செலாவணி அல்லது நாட்டின் தொழில்நுட்பத் தேவைகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப ரீதியாக உதவி செய்வது என்ற வகையில் ஏற்றுக் கொள்வது. உதாரணமாக மின் உற்பத்தித் திட்டங்கள்.

4. இந்தப் புதிய கொள்கையின் கீழ் தனியார் நிலங்களை சொந்தமாக வைத்திருக்க அனுமதிப்பது. விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் உற்பத்தியான உணவு தானியங்களை பொதுச் சந்தையில் சுதந்திரமாக விற்பனை செய்து கொள்ள அனுமதிப்பது.

5. இத்தகைய விவசாயிகள் மீது வரி விதிப்பு. முதலில் உணவுப் பொருள் கையிருப்பை அதிகரிக்க, இந்த வரியானது உணவு தானியங்களாக வசூலிக்கப்பட்டது. நிலைமை ஓரளவு சரியானதும் இந்த வரி 1924இல் இருந்து பணமாகவே வசூலிக்கப்பட்டது. இத்தகைய ஊக்க நடவடிக்கைகள் மூலம் விவசாய உற்பத்தியானது 40% அதிகரித்தது என்பதும், 1921-22இல் நிலவிய பஞ்சத்தை வென்றெடுக்க முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

6. இந்தப் புதிய கொள்கையின் கீழ் தொழிலாளர்கள் குறித்த சீர்திருத்தங்கள் அனைத்தும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. உற்பத்திச் செலவை குறைப்பதற்கான ஆலோசனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதன் விளைவாக தொழிலாளர்களின் உற்பத்திக்கான முயற்சிகள் இரு மடங்காகப் பெருகின. தொழிலாளர் சங்கங்கள் இதர பொதுமக்களின் அமைப்புகளைப் போலவே சுயேச்சையாக செயல்படத் துவங்கின.

7. இந்தப் புதிய கொள்கையானது சிறப்பான தகுதி படைத்தவர்கள் அரசுப் பதவிகளை பெற வழிவகுத்தது. பொறியாளர்கள், தனித்திறன் படைத்தோர், உற்பத்திச் செலவை கணக்கிடும் ஆய்வாளர்கள் ( காஸ்ட் அக்கவுண்டிங்) போன்ற திறமைசாலிகள் நேரடியாக அரசில் பங்குபெற முடிந்தது. அதைப் போலவே கருவிகளை வாங்குவது; செயல் நடைமுறைகளில் திறமையை வளர்ப்பது; ரயில்வே கட்டுமானப் பணிகள்; தொழிற்சாலை நிர்வாகம் போன்ற துறைகளுக்கு நிபுணர்களை கவர்ந்திழுக்க தனியார் முன்முயற்சி ஊக்குவிக்கப்பட்டது. நகர்ப்புறங்களில் அதிகபட்சம் 20 தொழிலாளர்களை இவர்கள் நியமித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. இந்த நிறுவனங்களில் கிராமப்புற கைவினைஞர்கள் பங்கேற்கவும், அவர்கள் தங்களது உற்பத்தியை தனியார் சந்தையில் விற்கவும் அனுமதிக்கப்பட்டது.

மறுபுறத்தில் லெனினின் இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கையை மறுதலித்து, ட்ராட்ஸ்கி சோஷலிஸத்தை தீவிரமாக அமலாக்க வேண்டும் என்று குரலெழுப்பினார். அப்போது லெனினுக்கு ஆதரவாக நின்ற ஸ்டாலின்தான் லெனின் மறைவிற்குப் பிறகு 1928ஆம் ஆண்டில் முதல் ஐந்தாண்டு திட்டத்தை முன்வைத்து இக்கொள்கையை மாற்றி அமைத்தார்.

லெனினின் இந்தக் கொள்கைக்குப் பின்னால் இருந்த உணவுப் பொருள் உற்பத்தியை அதிகரிப்பது, வெளிநாடுகளில் இருந்து தொழில்நுட்பத்தைப் பெற்று தொழில்துறையில் உற்பத்தியை அதிகரிப்பது என்ற நோக்கம் லெனின்1924இல் மறைவதற்கு முன்பாகவே மிக விரைவிலேயே நிறைவேறியது. அதையடுத்தே, ஐந்தாண்டு திட்டம் என்ற மத்தியப்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கையின் மூலம் ஸ்டாலின் நாட்டின் விவசாய, தொழில் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க உச்சத்தை எட்டினார். 1929ஆம் ஆண்டில் முதலாளித்துவ உலகம் முழுவதும் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தபோது (Great Depression) சோவியத் நாட்டின் உற்பத்தி அனைத்து வகையிலும் இந்த முதலாளித்துவ நாடுகளை விஞ்சியதாக இருந்தது என்பதை கீழ்கண்ட அட்டவணையின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

தொழில் உற்பத்தி (1929 முதல் 1933 வரை சதவீதத்தில்)

நாடுகள் 1929 1930 1931 1932 1933
அமெரிக்கா 100 80.7 63.1 59.3 64.9
பிரிட்டன் 100 92.4 83.8 83.8 86.3
ஜெர்மனி 100 88.3 73.7 59.8 66.8
ஃப்ரான்ஸ் 100 100.7 89.2 99.3 77.4
சோ.யூனியன் 100 129.2 161.9 184.7 201.5

(ஜே.வி. ஸ்டாலின் தொகுப்பு நூல்கள்தொகுதி 13 – பக். 293)

எனவே, ருஷ்யப் புரட்சிக்குப் பின் 1921இல் லெனின் முன்வைத்த புதிய பொருளாதாரக் கொள்கை என்பது ஒரு குறிப்பிட்ட சூழலில் எடுக்கப்பட்ட ஒரு நடைமுறைத் தந்திரமே ஆகும். இக்கொள்கையின் நோக்கமும் வெற்றிகரமாகவே நிறைவேறியது. தனியார் முயற்சிகளை ஊக்குவித்த இந்தப் பொருளாதாரக் கொள்கையின் விளைவாக, அக்டோபர் புரட்சியை முன்னின்று நடத்திய தொழிலாளி வர்க்கத்திற்கோ, சோவியத்துகளுக்கோ, விவசாயிகளுக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. மாறாக, உற்பத்தி அதிகரித்து, பொருளாதாரம் நிலைபெற்று, புரட்சியின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லவே இக்கொள்கை உதவியது. மேலும் புதிதாகப் பெற்ற இந்த வளமையின் விளைவாக இதுவரை உலகில் வேறெங்கும் கண்டிராத, கேட்டிராத வகையில் வேலையின்மை அகன்றதோடு, பல புதிய சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதைக் கண்டு அதிர்ந்து போன முதலாளி வர்க்கம் இதுவரை சிந்தித்துப் பார்த்திராத வகையில் தனது ஆதிக்கத்தில் உள்ள நாடுகளில் அதே போன்ற சமூகப் பாதுகாப்பு திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.

இவ்வாறு நிலைபெற்ற சோஷலிஸ சோவியத் யூனியனை நிலைகுலைக்க முதலாளித்துவத்தின் தலைமையில் ஏகாதிபத்திய நாடுகள் தொடர்ந்து முயற்சிகளை செய்துகொண்டேதான் இருந்தன. அதற்கெதிராக நாஜிஸத்தையும் பாசிஸத்தையும் ‘கொம்பு சீவி’ விடுவதிலிருந்து துவங்கி, ‘பனிப்போர்’ வரையில் சோஷலிஸ ஆட்சியை சீர்குலைக்க ஏகாதிபத்தியம் அனைத்து வகையான தந்திரங்களையும் கையாண்டது. இறுதியில் வெற்றியும் பெற்றது.

எனினும் முதலாளித்துவ அமைப்பு என்ற ஒன்று இருக்கும் வரையிலும் அதை குழிதோண்டிப் புதைக்கவே பிறந்த பாட்டாளி வர்க்கம் என்ற ஒன்றும் இருக்கும் என்பதும் தவிர்க்க முடியாததோர் உண்மைதான். இப்பூவுலகில் இதுவரையில் பிறந்த தத்துவ ஞானிகளின் வரிசையில் முதல் இடம் மார்க்ஸுக்கே உரியது என்று முதலாளித்துவ உலகின் கருத்துக் கணிப்பே உறுதி செய்துள்ள நிலையில், மார்க்ஸையும் அவரது எழுத்துக்களையும் மீண்டும் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு இன்று முதலாளித்துவமும் அதன் உச்ச நிலையான ஏகாதிபத்தியமும் ஆளாகியுள்ளன.

இந்தப் பின்னணியில்தான் ஏகாதிபத்தியம் தனது பிடிப்பை வளரும் நாடுகளின் மீது வலுப்படுத்த சர்வதேச நிதி நிறுவனம், உலக வங்கி, சர்வதேச வர்த்தக அமைப்பு ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளது. நிதி மூலதனம் ‘நாடு’ என்ற எல்லையைக் கடந்து எங்கு வேண்டுமானாலும் புகுந்து தன் ஆதிக்கத்தை நிறுவுவதற்கு இந்த அமைப்புகளே வழியமைத்துத் தருகின்றன. உலக மயமாக்கல், தாராள மயமாக்கல், தனியார் மயமாக்கல் என்ற நிதிமூலதனத்தின் ‘அகோரப் பசி’க்குத் தீனியாக வளரும் நாடுகளை அவை தயார்படுத்தி வருகின்றன.

அந்த நிதி மூலதனத்தின் முன்னால் போடப்பட்டுள்ள இலையில் ஒரு அயிட்டமாகத்தான் இன்று இந்தியா உருமாறியிருக்கிறது. இந்தியா இவ்வாறு உருமாறிய கதை ஒரு தனிக்கதை. இங்கு அது தேவையற்றது.

இவ்வாறு நிதிமூலதனம் உலக வங்கி போன்ற நிதியமைப்புகளின் மூலம் இந்தியாவின் மீது சுமத்திய உலக மயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல் என்ற நிபந்தனைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றவே உலக வங்கியின் முன்னாள் ஊழியரும் அந்நாள் நிதியமைச்சருமான மன்மோகன் சிங் 1991இல் புதிய பொருளாதாரக் கொள்கையை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். இப்போது அதன் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

உலகமயமாக்கல்:

1) நாட்டின் தொழில் நடவடிக்கைகளில் அந்நிய முதலீடு என்பது (அதுவரை இருந்து வந்த 49% க்கு பதிலாக) 100% வரை என்ற வகையில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டன.

2) இந்திய நிறுவனங்களில் பன்னாட்டு நிதிநிறுவனங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (இது உண்மையில் பெயரளவிற்குத்தான்!) முதலீடு செய்ய அனுமதி.

தாராளமயமாக்கல்:

1) (அதுவரையில் நடைமுறையில் இருந்து வந்த பெர்மிட் ராஜ் தூக்கியெறியப்பட்டு) ஆறு தொழில்களைத் தவிர அனைத்து விதமான தொழில்களையும் துவங்க பரிபூரண சுதந்திரம் வழங்கப்பட்டது.

2) அதைப் போலவே நான்கு குறிப்பிட்ட தொழில்களில் மட்டுமே பொதுத்துறையின் பங்கு இருக்கும். மற்ற அனைத்துத் தொழில்களும் தனியார் கைகளில் ஒப்படைக்கப்பட்டன.

3) ஏற்றுமதியை மட்டுமே நோக்கமாகக் கொண்ட தொழில்களுக்கு அனைத்து விதமான சலுகைகளும் வழங்கப்பட்டன. இதில் மக்களின் அன்றாட நுகர்வுப் பொருட்களும் அடங்கும்.

4) (மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றும் வகையிலான பொருட்களில் கவனம் செலுத்துவதற்கு மாறாக) உலகத்தின் மூலை முடுக்கிலிருந்தும் என்ணற்ற பொருட்கள் இந்திய சந்தையை நிரப்ப வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டது. நுகர்வு கலாச்சாரம் அன்றாட வாழ்க்கையாக மாற்றப்பட்டது.

தனியார் மயமாக்கல்:

1) ஏற்கனவே ஆறு தொழில்களில் மட்டுமே ஈடுபட முடியும் என்ற வகையில் பொதுத்துறையை குறுக்கிய பிறகும், பொதுத்துறையில் அரசின் பங்கை தனியார் கைகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் பொதுத்துறையின் பங்குகள் படிப்படியாக விற்கப்பட்டன.

2) பொதுத்துறைக்கு இதுவரை அளித்து வந்த அரசு உதவி படிப்படியாகக் குறைக்கப்பட்டது. இதன் மூலம் அவை மெதுவாக மூச்சை விட்டு விடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

3) அரசின் இத்தகைய மாற்றாந்தாய் போக்கின் விளைவாக நலிந்து கொண்டு வரும் நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் வேலைகள் துவங்கின. அதுவும் அடிமாட்டு விலைக்கு.

ஆக, 1991இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை என்பது இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கோ, பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கோ அறிவிக்கப்பட்ட ஒன்றல்ல; அது உலக நிதி மூலதனத்திற்கு இந்திய சந்தையை விரியத் திறந்து விடவும், இந்திய பெருமுதலாளிகள் உலக முதலாளிகளாக வளர்ச்சி பெறவும் எடுக்கப்பட்ட ஒரு முயற்சியே ஆகும். இந்த புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறையில் இருந்துவரும் கடந்த 24 ஆண்டுகால அனுபவம் நமக்கு எதைக் காட்டுகிறது? சற்றே வரிசைப்படுத்திப் பார்ப்போம்.

1) இதுவரையில் கேந்திரமான தொழில்கள் என்று கருதப்பட்டு வந்த தொழில்கள் அனைத்துமே (ராணுவத்திற்கான தளவாடங்கள் உட்பட) தனியாரின் கைகளில் படிப்படியாக ஒப்படைக்கப்பட்டுவிட்டன.

2) ஏற்றுமதிக்கு ஊக்கமளிப்பது என்ற பெயரில் அத்தியாவசிய உணவு மற்றும் நுகர்வுப் பொருட்கள் அனைத்துமே சர்வதேச வணிகச் சந்தையுடன் இணைக்கப்பட்டதன் விளைவாக உணவுதானிய உற்பத்தி என்பது குறைந்து பணப்பயிர் உற்பத்திக்கே முன்னுரிமை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

3) இதுவரை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த நீர் வள, நில வள ஆதாரங்கள் படிப்படியாக தனியார் கைகளில் ஒப்படைக்கப்பட்டதன் விளைவாக நிலக்கரி, கனிமங்கள், எரிவாயு, கச்சா எண்ணெய் போன்றவை தனியாரால் முற்றிலுமாக சுரண்டப்பட்டு வருவதோடு சுற்றுச் சூழலையும் கடுமையான பாதிப்பிற்கு ஆளாக்கியுள்ளது.

4) தாராள மயமாக்கல் என்ற பெயரில் நுகர்வுக் கலாச்சாரம் வேரூன்றி நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு காலியாகி வருகிறது. உள்நாட்டுத் தொழில்நுட்ப ஆராய்ச்சியும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

5) தனியார் மயமாக்கலின் ஒரு பகுதியாக இதுவரை அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு பெற்று வந்த சலுகைகளை முனை மழுங்கச் செய்யும் வகையில் தொழிலாளர் நலச் சட்டங்கள் படிப்படியாக நீர்த்துப் போகச் செய்யப்பட்டு வருகின்றன.

6) இதுவரையில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பகுதி விவசாயம் என்ற நிலை தலைகீழாக மாறியுள்ளதோடு, தொழில் உற்பத்தியும் குறைந்துள்ளது. அதற்கு மாறாக, அதில் உழைப்பவர்களுக்கு எவ்வித சமூகப் பாதுகாப்பும் தராத சேவைப் பிரிவுகள் பெருமளவில் வளர்ச்சி அடைந்துள்ளன.

7) பாரம்பரிய விவசாயம் அழிந்த நிலையில் உழைப்பாளிகள் வேலை தேடி நகர்ப்புறங்களை நோக்கி நகர்வதும், நகர்மயமாதலும் பல்வேறு புதிய நெருக்கடிகளை உருவாக்கியுள்ளன.

8) உழைப்பை மட்டுமே நம்பியுள்ள மக்கள் நாளுக்கு நாள் வறியவர்களாக மாறிவரும் அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, 1991க்கும் முன்பு ஏகபோக முதலாளிகளாக இருந்தவர்களின் சொத்தின் மதிப்பு பல நூறு மடங்கு அதிகரித்துள்ளதோடு, அவர்கள் பன்னாட்டு முதலாளிகளாகவும் உருமாறியுள்ளனர்.

9) நாட்டின் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைத் தரம் அதல பாதாளத்திற்குச் சென்று விட்டது. ஒரு நாளைக்கு ரூ 20/- மட்டுமே செலவு செய்யத் திறன் கொண்டவர்களின் எண்ணிக்கை இன்று சமூகத்தில் பெரும்பகுதியாக மாறியுள்ளது என்பதை அரசே வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளது.

எனவே முதலில் குறிப்பிட்டது போல, 1921இல் லெனின் ஒரு தற்காலிக நடவடிக்கையாகவே தனியாருக்கு ஊக்கமளித்து, சோஷலிஸ அரசை பாதுகாத்தார் எனில், 1991இல் மன்மோகன் சிங் அறிமுகப்படுத்திய பன்னாட்டு நிதிமூலதன ஆதிக்கம் என்பது, தாராளமயம், தனியார் மயம், உலக மயம் என்ற பெயரில், நாட்டின் பெரும்பகுதி மக்களை இந்த 25 ஆண்டு காலத்தில் ஓட்டாண்டிகளாக மாற்றி, இந்தியாவின் அனைத்து ஆதாரங்களையும் சுரண்டி, முதலாளிகளை கொழுக்க மட்டுமே வைத்துள்ளது என்பதை நாம் அன்றாட அனுபவத்தில் கண்டு வருகிறோம்.

இதில் எது சிறந்தது? சமூக நோக்கம் கொண்டது? என்பதை அறிவுபூர்வமாக சிந்திக்கும் அனைவருமே புரிந்து கொள்வார்கள் என்பது உறுதி.

 

 

மத்திய பட்ஜெட் 2016 – 17: ஏமாற்றுவித்தை பொருளாதாரம் தொடர்கிறது

 

வழக்கம் போல் மத்திய நிதி அமைச்சர் ஜெயட்லி  பிப்ரவரி இறுதி நாள் பட்ஜெட்டை சமர்ப்பித்தார். ஆனால் இதற்கு ஒருமாதம் முன்னதாகவே, முதலாளித்துவ பத்திரிகைகளிலும் .தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களிலும் இந்த பட்ஜெட் எப்படி இருக்கவேண்டும் என்று பல ஆலோசனைகள் பெருமுதலாளிகள் சார்பாக முன்வைக்கப்பட்டன, பொதுவாக அவை அனைத்துமே (இதுவும் வழக்கம் போல்தான்!) உணவு எரிபொருள் மற்றும் உர மானியங்கள் வெட்டப்படவேண்டும், பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்கப்படவேண்டும், கார்ப்பரேட்டுகளுக்கு வரி சலுகைகள் தரப்படவேண்டும் என்ற பாணியில் இருந்தன. ஓரிருவர் அரசு முதலீடுகளை மேற்கொண்டு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்று சொன்ன பொழுதும், இதற்கான வளங்களை வரி விதித்து திரட்டக்கூடாது என்றும் மானியங்களை வெட்டியே வளங்கள்  திரட்டப்படவேண்டும் என்றும் கூறினர். ஜெயட்லியின் பட்ஜெட் இத்தகைய எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வதாகவே, பெருமுதலாளிகள் மற்றும் அந்நிய நிதி மூலதனத்தை தாஜா செய்வதாகவே அமைந்துள்ளது.

வரி விதிப்பு: வரி ஏய்ப்போருக்கு அழைப்பு

பா.ஜ.க. அரசின் மூன்றாம் பட்ஜெட் இது. ஆட்சிக்கு வரும் முன்பு தங்களது தேர்தல் பிரச்சாரத்தில் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் வங்கி கணக்குகளிலும் வேறுவகைகளிலும் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் பல லட்சம் கோடி ரூபாய்களை இந்தியாவிற்கு திருப்பிக் கொணர்ந்து ஒவ்வொரு வாக்காளர் வங்கி கணக்கிலும் பல லட்சம் ரூபாய் போடுவதாக வாக்குறுதி மோடி துவங்கி அனைத்து பா ஜ க தலைவர்களும்.தேர்தல் மேடைகளில் உரக்க முழங்கினர். ஆனால் தேர்தல் முடிந்து சில மாதங்களிலேயே அடிக்கடி நம்மை எல்லாம் பாகிஸ்தானுக்குப் போகச் சொல்லிவரும் பா ஜ க தலைவர் அமீத் ஷா இந்த வாக்குறுதியின் குட்டை உடைத்துவிட்டார். ஒரு பேட்டியில், தேர்தலில் தரப்பட்ட இந்த வாக்குறுதி “ஜூம்லா” தான் – அதாவது, ஒரு பேச்சு வழக்காக சொல்லப்பட்டதுதான் –இதையெல்லாம் அமல்படுத்த முடியாது என்று மிகத் தெளிவாக கூறிவிட்டார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் அமீத் ஷாவிற்கு ஒருபடி மேலே போய், ஜெய்ட்லி அவர்கள், மறைத்த பணத்தை அரசிடம் ஒப்புக் கொண்டுவிட்டால், அந்த தொகையில் நாற்பத்தி ஐந்து சதமானம் வரியாக  கட்டினால் போதும். மீதி பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளலாம். உங்கள் மீது எந்த வழக்கும் தொடரமாட்டோம், நீங்கள் சட்டத்தை மீறி, அதனை ஏமாற்ற முயன்றதை நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம். நீங்கள் வருமானத்தை வேண்டுமென்றே மறைத்துள்ள போதிலும் உங்களை தண்டிக்க மாட்டோம்.’ என்று பொருள்பட தனது பட்ஜெட் உரையில் கருப்பு பணக்காரர்களை அன்புடன்  அழைத்துள்ளார்.

தனி நபர் வருமானத்தின் மீது வரி விதிப்பை பொறுத்தவரையில் பட்ஜெட் பெரிதாக மாற்றம் செய்யவில்லை. ஆனால் ஐந்து லட்சம் ரூபாய் அல்லது அதற்கு குறைவாக ஆண்டு வருமானம் பெறுவோருக்கு வருமான வரி ரத்து செய்யப்படவேண்டும் என்று கடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கிய ஜெயிட்லி, தனது மூன்றாவது பட்ஜெட்டிலும் அதை செய்யவில்லை.  அதேசமயம், தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் வைப்பு நிதியில் இருந்து பணம் அவர்கள் எடுக்கும் பொழுது அதை வருமானமாக கருதி அதன் மீது வரி விதிக்கப்படும் என்று முன்மொழிந்திருப்பது உழைப்பாளி மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.

மொத்தத்தில், நேர்முக வரியான, கொடுக்கும் திறன் அடிப்படையிலான,  வருமான வரி தொடர்பாக பட்ஜெட் முன்மொழிவுகளின்படி அரசுக்கு 1000 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படும் என்று ஜெயிட்லி கூறியுள்ளார். மறுபுறம், சாதாரண மக்கள் மீது கடும் சுமையாக உள்ள மறைமுக வரிகள் –கலால் வரி, சுங்க வரி, சேவை வரி- ஆகியவை தொடர்பான பட்ஜெட் முன்மொழிவுகளால் அரசுக்கு ரூ 20,000 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும் பட்ஜெட் உரை கூறுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. 2015 – 16 பட்ஜெட்டில் கார்ப்பரேட் வருமான வரி, தனி நபர் வருமான வரி, கலால் வரி, சுங்க வரி, சேவை வரி ஆகிய வரி இனங்களின் மூலம் அரசுக்கு எவ்வளவு வரி வருமானம் கிடைக்கும் என்ற மதிப்பீட்டை கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஜெயிட்லி கொடுத்தார். இம்முறை தனது பட்ஜெட் உரையில் இவ்வரி இனங்கள் மூலம் கிடைத்துள்ள வருமானம் பற்றிய திருத்தப்பட்ட மதிப்பீட்டை கொடுத்துள்ளார். அதன்படி, கார்ப்பரேட் வருமான வரி வசூல் பட்ஜெட் மதிப்பீட்டை விட ரூ 18.000  கோடி குறைவாகவும் தனி நபர் வருமான வரி வசூல் ரூ 28,000  கோடி குறைவாகவும் தான் இருக்கும் என்று பட்ஜெட் உரை தெரிவிக்கிறது. ஆக மொத்தம், செல்வந்தர்களிடம் இருந்து வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட வரி வருமானத்தில் அரசுக்கு விழுந்துள்ள துண்டு 46,000 கோடி ரூபாய். ஆனால், கலால் வரி மூலம் பட்ஜெட்டில் கடந்த ஆண்டு மதிப்பிடப்பட்டதை விட 55,௦௦௦ கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. இதன் சூட்சுமம் என்ன? பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணய் விலை பாரெல் ஒன்றுக்கு 130 அமெரிக்க டாலரில் இருந்து 30 க்கு குறைந்த பொழுது  மீண்டும் மீண்டும் கலால் வரியை உயர்த்தி பெட்ரோல், டீசல் விலை குறையாமல் மத்திய அரசு பார்த்துக்கொண்டது. இதனால் அரசுக்கு கலால் வரி வருமானம் பட்ஜெட் மதிப்பீட்டை விட பெருமளவு கூடியுள்ளது. அதாவது, அரசின் மொத்த வரிவருமானத்தில் மக்களை வாட்டி வதைக்கும் மறைமுக வரிகளின் பங்கு கணிசமாக கூடியுள்ளது. ஆனால் செல்வந்தர்கள் தர வேண்டிய வரி வருமானம் உரிய அளவு வரவில்லை.

சென்ற ஆண்டு ஜெயிட்லி தனது பட்ஜெட்டில் சொத்துவரியை அறவே நீக்கி விட்டார். நூறு டாலர் சீமான்கள் கையில் தலா 1 பில்லியனுக்கு அதிகமாக சொத்து குவிந்துள்ள நாடு நமது இந்தியா. அதாவது, 130 கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில் 100 பெரும் செல்வந்தர்கள் கையில் தலா ரூ 7000 கோடிக்கும் அதிகமாக சொத்து உள்ளது. இவர்களின் மொத்த சொத்து நாட்டின் ஆண்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட நாலில் ஒரு பங்கு. இத்தகைய நாட்டில் தான் சொத்து வரி வேண்டாம், வாரிசு வரி வேண்டாம், வருமான வரியை குறைக்கவேண்டும் என்று செல்வந்தர்கள் கூவுகின்றனர். அவர்கள் ஊதுகுழலாக உள்ள ஊடகங்களும் இதையே உரக்கச் சொல்லுகின்றன. மத்திய மாநில அரசுகள் திரட்டும் மொத்த வரிப்பணத்தில் 65% க்கும் கூடுதலாக ஏழை மக்களை தாக்கும் மறைமுக வரிகளே உள்ளன. (தீப்பெட்டி வாங்கும் பொழுதும் மண்ணெண்ணய் வாங்கும் பொழுதும் எந்த ஒரு பொருளையோ சேவையையோ வாங்கும் பொழுதும் சாதாரண மக்கள் மறைமுக வரி கட்டுகின்றனர். இந்த வரி வாங்கும் பொருளின் விலையில் ஒளிந்திருப்பதால் மறைமுக வரி என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய வரிகள் அம்பானிக்கும் ஒன்றுதான் ஆண்டிக்கும் ஒன்றுதான். ஏழைகளின் வருமானம் குறைவாக இருப்பதால், ஏழைகள் மீது இவை பெரும் சுமையாக ஆகின்றன. செல்வந்தர்களுக்கு இது ஒரு கொசுக்கடிதான்.)

வருமான வரி சலுகைகளை செல்வந்தர்களுக்கு அளித்தது மட்டுமின்றி, வரிஏய்ப்போருக்கு சாதகமாக இருப்பது மட்டுமின்றி, பட்ஜெட் வரி தொடர்பான சச்சரவு அரசுக்கும் பணக்காரர்களுக்கும் இருக்கும் பட்சத்தில் அதனை பரஸ்பர பேரம் மூலம்  தீர்த்துக் கொள்ளவும் வலியுறுத்தி, பணக்காரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அரசின் வரவு-செலவு கொள்கை   

மத்திய பட்ஜெட் என்பது அடிப்படையில் மத்திய அரசின் ஒரு ஆண்டுக்கான வரவுகள் மற்றும் செலவுகள் பற்றிய மதிப்பீடுகள் தரும் அறிக்கை. இதன் அடிப்படையாக இருப்பது நாட்டின் பொருளாதார நிலையும் அரசின் வரவு மற்றும் செலவு தொடர்பான கொள்கைகளும் தான். அரசின் நடப்பு வரவுகளில், வரிகள் தவிர, பொதுத்துறை  நிறுவனங்கள் ஈட்டும் லாபங்கள், மற்றும் அரசு தான் வழங்கும் சேவைகளுக்கு வசூலிக்கும் கட்டணங்கள் ஆகியவையும் சேரும். மூலதன வரவு என்பது அரசு பொதுத்துறை சொத்துக்களை விற்று பெறும் தொகையும் அரசு கடன் வாங்கி பெறும் தொகையும் தான். கடந்த ஆண்டு பட்ஜெட் சமர்ப்பித்த பொழுது பொதுத்துறை சொத்துக்களை விற்று அரசு அறுபத்தெட்டாயிரம் கோடி ரூபாய் பெறும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் சுமார் 25,௦௦௦ கோடி ரூபாய்தான் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு 56,5௦௦ கோடி ரூபாய் அளவிற்கு பொதுத்துறை சொத்துக்களை விற்று பெறப்போவதாக பட்ஜெட் கூறுகிறது. இப்படி, பெரும் பன்னாட்டு, இந்நாட்டு கம்பனிகள் மீதும் செல்வந்தர்கள் மீதும் உரிய வரி விதித்து வசூலித்து வளங்களை திரட்டுவதற்குப் பதிலாக, மக்கள் சொத்துக்களாகிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று வருமானம் ஈட்ட முனைகிறது அரசு. கடன் மூலம் அரசின் வரவை கூட்டுவதற்கு முதலாளிகளும் பன்னாட்டு மூலதனமும் உலக வங்கி, ஐ.எம்.எஃப். போன்ற அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. எனவே, தாராளமய கொள்கைகளை பின்பற்றும் மத்திய அரசு வளங்களை திரட்டுவதற்குப் பதிலாக, செலவுகளை குறைப்பதற்கே அழுத்தம் அளிக்கிறது. அதிலும் உணவு, உரம், எரிபொருள் போன்ற மக்களுக்கும் வேளாண்மைக்கும் அவசியமான மானியங்களை வெட்டி செலவை சுருக்கிக்கொள்ள அரசு விழைகிறது. இதுதான் இந்த ஆண்டும் நடந்துள்ளது.

அரசின் ஒதுக்கீடுகள்

ஊடகங்களில் அரசு இந்த பட்ஜெட்டில் வேளாண்மை, கல்வி, ஆரோக்கியம் ஆகிய துறைகளுக்கு மிகவும் கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளதாக பொய்ப்பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் ‘வறுமை ஒழிப்பு’ பட்ஜெட் என்றெல்லாம் அபத்தமாக சொல்லப்படுகிறது; எழுதப்படுகிறது. உண்மை என்ன? எல்லா விவரங்களுக்கு உள்ளும் போக முடியாவிட்டாலும் சில முக்கிய தகவல்களை பார்ப்போம்.

வேளாண்துறைக்கு இந்த ஆண்டு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையைப் போல்  இரண்டு மடங்குக்கும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தம்பட்டம் அடிக்கப்படுகிறது. ஆனால் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் என்ற தலைப்பின் கீழ் முப்பத்து  எட்டாயிரத்தி ஐந்நூறு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதில் விவசாயிகள் செலுத்த வேண்டிய வங்கி கடன் வட்டிக்கு அரசு அளிக்கும் மான்யமும் அடங்கும்.. சுமார் 15,000 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ள இந்த மானியம் கடந்த ஆண்டும் கொடுக்கப்பட்டது. ஆனால் நிதி அமைச்சகத்தின் செலவாக அது காட்டப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட் கணக்கில் அதே தொகையை விவசாயிகள் நலன் என்ற இனத்தின் கீழ் கொண்டு வந்துள்ளனர். அவ்வளவுதான் விஷயம். உண்மையில், சென்ற ஆண்டு ஒதுக்கீட்டை விட இந்த ஆண்டு வேளான்துறைக்கான ஒதுக்கீடு சுமார் 33% தான் கூடியுள்ளது. விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால் உண்மையில் அதைவிட குறைவாகத்தான் அதிகரிப்பு உள்ளது. கடும் வறட்சி, விளை பொருளுக்கு நியாய விலை இல்லை, நாளும் நிகழும் ஏராளமான விவசாயிகளின் தற்கொலைகள் என்ற பின்புலத்தில் பார்த்தால் இந்த ஒதுக்கீடு உயர்வு, நிலவும் வேளாண் நெருக்கடியை எதிர்கொள்ள யானை பசிக்கு சோளப்பொறி என்பதுதான் உண்மை.

அதேபோல் ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான ஒதுக்கீடு முப்பத்தி எட்டாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய். இது கடந்த ஆண்டை விட சுமார் 10 சதவீதம் அதிகம். ஆனால் சென்ற ஆண்டுக்கான கொடுபடா கூலித் தொகையே பல ஆயிரம் கோடி ரூபாய்கள். அவற்றை கொடுத்த பிறகு மிஞ்சுவது சென்ற ஆண்டை விட பண அளவிலும் உண்மை அளவிலும் குறைவாகவே இருக்கும். அது மட்டுமல்ல. 2009-10 ஆண்டிலேயே இத்திட்டத்திற்கு ,நாற்பதாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இன்றைய விலைவாசியில் அதன் மதிப்பு ரூ 63,௦௦௦ கோடி ரூபாயாகும். உண்மையில், மக்கள் இடதுசாரிகள் தலைமையில் போராடிப்பெற்ற ரேகா திட்டத்தை   பா ஜ க அரசு தொடர்ந்து வெட்டிச் சுருக்கி வருகிறது. இதை வெளிப்படையாகவே நிதி அமைச்சகத்தின்  2014 நடு ஆண்டு பொருளாதார பரிசீலனை அறிக்கை கூறுகிறது. கல்வி, ஆரோக்கியம், குழந்தைகள் நலன் என்று ஒவ்வொரு சமூக நலத்துறையிலும் இதுதான் கதை. பெண்கள் மற்றும் சமூக நலத்துறையின் ஒதுக்கீடு சென்ற ஆண்டைவிட குறைந்துள்ளது. ஆரோக்கியத்தை பொறுத்தவரையில், அரசே மக்களுக்கு மருத்துவ வசதிகளை உறுதிபட அளிப்பதற்குப் பதிலாக, காப்பீட்டு ஏற்பாடுகள் மூலம் மக்கள் தனியார் மருத்துவ மனைகளுக்கு தள்ளப் படுகின்றனர். இதனால் அதிகம் பயனடைவது தனியார் மருத்துவத்துறையும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களும்தான். அதிலும் கூட ஒதுக்கீடு மிகக் குறைவாகவே உள்ளது. அடுக்களை புகையிலிருந்து பெண்களை விடுவிப்பதாக தம்பட்டம் அடிக்கும் அமைச்சர், ஏழை மக்களுக்கு எரிவாயு இணைப்புக்கு வெறும் 2000 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பது அரசின் அணுகுமுறையை அம்பலப்படுத்துகிறது. அதே சமயம், உணவு மானியமும், உர மானியமும் இரண்டும் சேர்ந்து 7000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற அடிப்படையில் நாம் வேறு சில அம்சங்களுக்குச் செல்லலாம். .

பட்ஜெட்டும் பொருளாதார வளர்ச்சியும்

தனது பட்ஜெட் உரையில் பன்னாட்டுப் பொருளாதாரம் மந்தமான நிலையில் இருந்தும் இந்தியா சிறந்த வளர்ச்சி பெற்றிருப்பதாக நிதி அமைச்சர் மார் தட்டிக் கொள்கிறார். உண்மையில் இவர் தரும் வளர்ச்சி விகிதப் புள்ளி விவரங்களைப்பற்றி  அரசின் அங்கமாக செயல்படும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அடிப்படை ஆண்டு மாற்றம், மறைமுக வரிகளைக் கூட்டி சந்தை விலைகள் அடிப்படையில் உற்பத்தி மதிப்பை கணக்கிடுதல், கணக்கிடும் வழிமுறைகளில் பல மாற்றங்கள் இவையெல்லாம் அரசின் வளர்ச்சி “சாதனை”யின் பின்னால் உள்ளன. இவை ஒரு புறமிருக்க, மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது, பன்னாட்டு சந்தையில் பெட்ரோலியம் கச்சா எண்ணய் .விலைகள் பெருமளவிற்கு சரிந்ததால், அயல் வர்த்தகத்தில் அந்நியச் செலாவணி பற்றாக்குறை பிரச்சினை எழவில்லை என்பதுதான். வரும் ஆண்டில் கச்சா எண்ணய் .விலைகள் உயரக் கூடும் என்பதும் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விக்தங்களை உயர்த்த உள்ளது என்பதும் கூடுதல் சவால்களாக அமையும். பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான அம்சம் இந்த வளர்ச்சியின் தன்மை. அரசு தரும் புள்ளிவிவரப்படியே, வேளாண்துறை வளர்ச்சியும் தொழில் வளர்ச்சியும் மிக மந்தமாக உள்ளன. வேலை வாய்ப்புகள் மேலும் சுருங்கி, கடும் வேலையின்மை நிலவுகிறது. விவசாயிகள் தற்கொலை முடிவின்றி தொடர்கிறது. சட்டப்படி ஒவ்வொரு கிராம குடும்பத்திற்கும் ஆண்டுக்கு நூறு நாள் வேலை தர வேண்டிய சட்ட நிபந்தனை இருந்தும் சராசரி ரேகா வேலை நாட்கள் நாற்பதுக்கும் கீழே உள்ளன. பல ஆயிரம் கோடி ரூபாய் கூலி பாக்கி வைக்கப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் மறைத்துவிட்டு, வளர்ச்சி பற்றி பேசப்படுகிறது.

இதுமட்டுமல்ல. பன்னாட்டு சூழல் மேலும் மந்தமாகும் என்று தனது பட்ஜெட் உரையில் குறிப்பிடும் அமைச்சர் தனது பட்ஜெட்டில் அரசின் ஒட்டுமொத்த ஒதுக்கீடுகளை போதுமான அளவு உயர்த்தியுள்ளாரா என்றால் இல்லை. மாறாக, அரசின் நிதிப் பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்கவேண்டும் என்ற தாராளமய தாரக மந்திரத்தை முன்வைத்து முதலீடுகள் உள்ளிட்டு  அரசின் செலவுகள் சுருக்கப்பட்டுள்ளன. நிதிப் பற்றாக்குறை என்பது அரசின் மொத்த செலவுகளில் இருந்து கடன் அல்லாத வரவுகளைக் கழிப்பதால் கிடக்கும் தொகை. இதனை குறைப்பதை இலக்காக ஆக்குவதன் பொருள் என்னவெனில், நாட்டு வளர்ச்சிக்கு அரசு கடன் வாங்கி முதலீடுகளை மேற்கொள்ளக்கூடாது என்பதாகும். முதலீடுகளை லாப நோக்கு அடிப்படையில் முதலாளிகள் செய்யட்டும், தொழிலாளிகளை கட்டுப்படுத்தி, அவர்கள் உரிமைகளை மறுத்து, சட்டம் ஒழுங்கை முதலாளிகள் சார்பாக அரசு பாதுகாக்கட்டும் என்பதுதான் தாராளமயத்தின் அடிப்படை வர்க்க அரசியல். நமது வாதம் அரசு கடன் வாங்கித்தான் முதலீடு செய்ய வேண்டும் என்பது அல்ல. முறையாக பெரும் கம்பனிகள், செல்வந்தர்கள் மீது வரிவிதித்து வசூல் செய்தாலே, அரசு கட்டமைப்புகளை மேம்படுத்தவும், கல்வி, ஆரோக்கியம் ஆகிய துறைகளை வலுப்படுத்தவும் கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ள முடியும். அதற்குப் பதிலாக, பொதுத்துறை பங்குகளை அடிமாட்டு விலைக்கு பெருமுதலாளிகளுக்கு  விற்று தனது செலவுகளை அரசு செய்து கொள்கின்ற தாராளமய அணுகுமுறைதான் பட்ஜெட்டில் தொடர்கிறது. கடந்த ஆண்டிலும் இதேதான் செய்யப்பட்டது. பணக்காரர்கள் மீது வரியும் போட மாட்டோம், பொதுத்துறை பங்குகளையும் சகாய விலையில் அவர்களிடம் ஒப்படைப்போம் என்ற அரசின் கொள்கை பொதுத்துறையை பற்றி வைத்துள்ள அணுகுமுறை இதுதான்: “ லாபத்தில் செயல்பட்டால் விற்று விடு, நட்டத்தில் இருந்தால் மூடி விடு ”

கட்டமைப்பு முதலீடுகள் பற்றி பட்ஜெட் உரை பேசுகிறது. ஆனால், கடந்த ஆண்டு அரசின் மூலதனச்செலவு தேச உற்பத்தியில் 1.8 %  ஆக இருந்தது, இந்த ஆண்டு  1.6% ஆக குறைக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பை கட்டும் பாணி பொது – தனியார் இணை பங்கேற்பு (PPP OR PUBLIC PRIVATE PARTICIPATION) என்ற முறையில் நடத்தப்படும். இது பெரிய கம்பெனிகள் கொள்ளை லாபம் ஈட்ட உதவுமே தவிர அரசின் பணம் முறையாக, மக்களுக்குப் பயன் தரும் வகையில் செலவிடப்படுவதை உத்தரவாதம் செய்யாது.

இறுதியாக ஒருவிஷயம். மத்திய மாநில உறவுகளில் கூட்டுறவுப் போக்கை கடைப்பிடிப்பதாக சொல்லிக்கொள்ளும் பா ஜ க அரசு, தொடர்ந்து மாநிலங்களின் வரி வருவாய்களை குறைத்து வருகிறது. வருமான வரிகளில் அரசு செல்வந்தர்களுக்கும் பெரும் கம்பனிகளுக்கும் அளிக்கும் சலுகைகள், மாநிலங்களின் வரி வருமானத்தை பாதிக்கிறது. பதினான்காவது நிதி ஆணையம் பகிரப்படும் வரி தொகையில்  மாநிலங்களின் பங்கை அதிகரித்துள்ள போதிலும், சர்சார்ஜ், செஸ் போன்ற வழிகளில் மாநிலங்களுடன் பகிராத வகையில் மத்திய அரசு தனது வரிப்பங்கை கூட்டிக் கொள்கிறது. திட்ட அடிப்படையிலான மாநில ஒதுக்கீடுகள் குறைந்துள்ளதால், நிகரமாக மாநிலங்கள் பெரும் வரவு தேச உற்பத்தியின் சதவிகிதமாக பார்த்தால் குறைந்து வருகிறது. மாநில முதலாளித்துவ கட்சிகள் இதை எதிர்த்து வலுவாக குரல் கொடுப்பதில்லை.

மொத்தத்தில் “அச்சே தின் “ என்ற நல்ல நாட்கள் கருப்பு பணக்காரர்கள், வரி ஏய்ப்போர், பன்னாட்டு, இந்நாட்டு பெரும் கம்பெனிகள், கோடி டாலர் கனவான்கள், அந்நிய மூலதனம் ஆகியோருக்கு மட்டுமே தொடரவுள்ளன.