வடகொரியாவின் அணுச்சோதனை!

பலமிக்க அமெரிக்காவின் ராணுவத்தளம் மற்றும் ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் சுற்றி வளைத்து பொருளாதார, ராணுவ தாக்குதல் நடத்துகிற சூழல் வடகொரியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இதனால், கடந்த அக்டோபர் 9 ம் தேதியன்று வடகொரியா அணுச் சோதனையை நடத்தியது. இந்தச் சோதனை உலகின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

முனனாள் சோவியத் யூனியனோடு வடகொரியா போட்டுள்ள ஒப்பந்தத்தில் அணு ஆயுத தயாரிப்பு முயற்சிகளை மேற்கொள்ள மாட்டோம் என்று உறுதியளித்திருந்தது. இது மீறப்பட்டுள்ள நிலையில் வடகொரியாவின் நட்பு நாடான சீனாவும் இச்சோதனை யை கண்டிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தொழிலாளி வர்க்க நாடுகள் உலக ஒப்பந்தங்களை ஏற்று நடப்பது தான் கடந்த கால வரலாறு. ஏராளமான பிராந்திய மோதல்கள், கருத்து மோதல்கள் நிரம்பிய பகுதியாக இந்த வடகிழக்கு ஆசியா உள்ளது. இந்நிலையில் மேலும் அணு ஆயுதங்கள் அதிகரிப்பது ஆபத்தானது. அந்த வகையில் வடகொரிய அணுச் சோதனை கவலைக்குரிய நிகழ்வு; மிகவும் துரதிருஷ்டமான விளைவு.

அணு ஒப்பந்தங்கள் அணு ஆயுதங்களைக் குறைத்ததா?

அணு ஆயுதம் பயன்படுத்துவது குற்றம் என்பது சர்வதேச சட்டமாக ஆக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்களை ஒழிக்க அரசுகள் பல்வேறு பேச்சுவார்த்தைகளில் இறங்கின. நாட்டாமை செய்து உலகைச் சுரண்டி வரும் ஏகாதி பத்தியங்கள் இருக்கும் வரை, அணு ஆயுதங்களற்ற உலகம் சாத்தியமாகுமா? ஏகாதிபத்தியங்கள் தங்களது பொருளாதாரச் சுரண்டல் மேலாதிக்கத்தை மற்ற நாடுகள் மீது நிலை நிறுத்த, நிச்சயமாக ஆயுதங்கள் தேவை. அதிலும் சாதாரண ஆயுதங்களை விட பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் தேவை. இதற்கு அவர்களுக்கு சரியான வழி, அணு ஆயுதத் தயாரிப்பு தான்.

இந்த எண்ணத்தின் அடிப்படையில் தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அணு ஆயுதங்களை விடாப்பிடியாக, உலக மக்களின் விருப்பத்திற்கு விரோதமாக தங்களிடம் சேர்த்து வைத்துள்ளன.

அமெரிக்காவும், சோவியத் யூனியனும் அணு ஆயுத குறைப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தின.  தற்போது அணு ஆயுதம் வைத்திருப்போர் வைத்திருக்கட்டும். ஆனால், புதிதாக யாரும் தயாரிக்க வேண்டியதில்லை என்கிற நிலைபாட்டில் போடப்பட்ட ஒப்பந்தம்  அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் (NPT – Non – Proliferation Treaty). இந்த நிலைபாட்டை இந்தியா உள்ளிட்ட நாடுகள் மிகச் சரியாகவே எதிர்த்தன. பாரபட்சமான ஒப்பந்தம் என்றும், முற்றாக அணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டுமே தவிர அணு ஆயுதம் கொண்ட நாடு,  அணு ஆயுதமில்லாத நாடு என்று இருவகையாகப் பிரித்து ஒரு அணுகு முறையை உருவாக்கிடக் கூடாது என்று இந்தியா கருதியது. இதனால் இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

ஆக, இன்றைய உலகில் ஒப்பந்தங்கள் பல உருவானாலும், அணு ஆயுதங்களை ஒழிப்போம் என்ற முழக்கங்கள் விடாது ஒலித்தாலும், கொடூரங்களை நிகழ்த்தக் கூடிய அணு ஆயுதங்கள் இன்று உலகில் பலரிடம் உள்ளன என்பதே உண்மை.

உலகத்திற்கே ஆபத்தா?

இந்தப் பின்னணியில் வடகொரியா நடத்திய சோதனை பெரும் அச்சுறுத்தல் என்று பூதாகரமாக சித்தரிக்கப்படுகிறது. வட கொரியா அணுச்சோதனை செய்ததால் உலகமே இன்று ஆபத்தில் மூழ்கி இருப்பது போன்று பேசப்படுகிறது.

வடகொரிய அணுச்சோதனை, அளவுக்கு அதிகமாக ஊதிவிடப்படுகிறது. ஆனாலும், இந்தச் சோதனை பல எதிர் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தென்கிழக்கு ஆசிய மக்களுக்குப் பாதகமான பல நிகழ்வுப் போக்குகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.

முதன்மையாக, அணு ஆயுதங்களற்ற உலகை உருவாக்க விழையும் லட்சியத்திற்கு வடகொரியச் சோதனை ஊறு விளைவித்துள்ளது. வடகொரியச் சோதனையின் விளைவாக பதட்டம் அதிகரித்துள்ளது. கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் நாடுகள் அச் சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. ஆனால், இதற்கு வடகொரியாவை மட்டுமே குறைசொல்ல முடியுமா? இந்த நிலைமைகளுக்கு உண்மையில் யார் காரணம்? நிச்சயமாக, அமெரிக்காவின் அடாவடித்தனமான ஆதிக்கப் போக்குதான், அடிப்படைக் காரணம். கொரியத் தீபகற்பத்தில் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அமெரிக்காவே முக்கிய காரணம்.

தீமைகளின் அச்சு – புஷ்ஷா? வடகொரியாவா?

2002 ம் ஆண்டு தீமைகளின் அச்சு என்று புஷ் குறிப்பிட்ட நாடுகள் இராக், இரான், வடகொரியா ஆகியன. பிறகு இராக் போருக்குப் பிறகு, சதாம் உசேனை வீழ்த்திய பிறகு, இராக்கினை அந்த பட்டியலிலிருந்து எடுத்துவிட்டனர். அதற்குப் பதிலாக சிரியாவை 2005 ம் ஆண்டிலிருந்து இணைத்து விட்டனர். ஆக, தீமைகளின் அச்சு நாடுகள் என்ற கொள்கை தொடருகிறது. இந்தக் கொள்கை அடிப்படையிலான ஆத்திரமூட்டல் மோதல் நடவடிக்கைகளை புஷ் நிர்வாகம் செய்து வந்துள்ளது. உலக வரலாற்றில் இல்லாத ஒரு அரக்கத்தனமான கொள்கையை புஷ் நிர்வாகம் தனது வெளியுறவு கொள்கையாக அறிவித்தது.

ஒரு நாடு தன்னைத் தாக்க முனைந்தால், பதிலடியாக யுத்தத்தில் இறங்குவதுதான் நாடுகளின் இயல்பான செயல்பாடாக இருந்து வந்துள்ளது. இதற்கு மாறாக ஒரு நாடு தன்னை தாக்கவில்லை என்றாலும் கூட, அது தாக்கக்கூடும் என்று முடிவுக்கு வந்து அந்த நாட்டின் மீது தாக்குதல் தொடுப்பது என்ற வித்தியாசமான கொள்கையை புஷ் அறிவித்தார்.  இதற்குப் பெயர் “Pre Emptive War” என்பது.

இத்தகைய போர்களை தூண்டுகிற, அழிவை ஆராதிக்கிற கொள்கையை அதிபர் புஷ், துணை அதிபர் டிக் செனேய் ஆகியோர் கொண்ட வெறிக்கூட்டம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.

இதன் விளைவாக பல நாடுகள் நிரந்தர அச்சுறுத்தலுக்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அடிபணியாத நாடுகள் மீது யுத்தம் நடத்தினர். இந்த நிலைதான் வடகொரியா தன்னை ஆயுத பாணியாக்கிக் கொள்ள காரணமாக அமைந்தது. தற்கால உலக அரசியல் உறவுகளை ஆய்வு செய்யும் எந்த ஒரு மாணவனும் இதனை ஏற்றுக் கொள்வான்.

புஷ் கூட்டம் வடகொரியாவை மட்டும் தீமைகளின் அச்சு என்று குறிப்பிட்டதோடு நிற்கவில்லை. அந்த நாட்டின் அதிபரான கிம் – ஜாங் – இல் லின் மீது பொய்யான அவதூறுகளைப் பொழிந்து வருகின்றனர். அவரை சுகவாசி, மனநோயாளி, ஆடம்பரப் பொருளின் பிரியர் என்றெல்லாம் தூற்றுகின்றனர். புஷ்கூட அவரை குள்ளன் என்றும், அதிக செல்லம் கொடுத்ததால் கெட்டுப் போன குழந்தை என்றெல்லாம் தரம் தாழ்ந்து வர்ணித்துள்ளார்.

உண்மையில், ஆசியாவிற்கு அணு ஆயுத ஆபத்து வடகொரியாவினால் மட்டும் ஏற்படவில்லை. அமெரிக்கா அவ்வப்போது இரான் மூலம் ஆசியாவிற்கு ஆபத்து, லிபியாவினால் அணு ஆபத்து, ஈராக்கினால் ஆபத்து என்று சொல்லியே ஆசியாக் கண்டத்தில் தனது தலையீட்டையும், செல்வாக்கையும் அதிகரித்து வந்துள்ளது. ஆனால், வேடிக்கை என்னவென்றால், இதுவரை அணு ஆயுதத்தைப் பயன்படுத்தி அப்பாவி மக்களை அழித்த ஒரே நாடு அமெரிக்காதான். ஆபத்து எனில், அது அமெரிக்காவினால் தான் ஆசியாவிற்கு ஏற்படும்.

வடகொரியச் சோதனை பற்றி பெரும் கூச்சல் எழுப்பு கிறவர்கள் அமெரிக்கா தான் உலகிலேயே அதிக அணுச்சோதனை செய்த  நாடு என்பதை மறக்க, மறைக்கப் பார்க்கின்றனர். அது மட்டுமல்லாது, ஆசியாவில் வடகொரியாவை விட இஸ்ரேல் மூலம் தான் அதிக அணு ஆபத்து உள்ளது. ஏனெனில் 200 க்கும் மேற்பட்ட பயங்கரமான அணு ஆயுதங்களைக் கொண்ட நாடு இஸ்ரேல். கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களுக்கு இடமில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். கொரிய தீபகற்பம் அணு ஆயுதங்களின் களமாக மாறுவது, தென் கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் மட்டுமல்ல, ஆசியக் கண்டத்தின் பாதுகாப்பிற்கே ஆபத்தானது.

இதை வடகொரியா உணர்ந்திருக்கிறது. முற்றிலும் அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான பேச்சுவார்த்தை அவசியம் என்ற கொள்கை நிலைபாட்டிலிருந்து தான் இப்பிரச்சனையை வடகொரியா அணுகுகிறது. இதனை பாரபட்சமின்றி சிந்திக்கும் ஆய்வாளர்கள் ஒத்துக் கொள்கின்றனர்.

பேச்சுவார்த்தையை வெறுத்து ஒதுக்கும் புஷ்

2002 ம் ஆண்டு தீமைகளின் அச்சு நாடு என்று வடகொரியாவைக் குறிப்பிட்ட பிறகு பேச்சுவார்த்தைக்கான கதவுகளை மூடினார் புஷ். அது மட்டுமல்லாது ஆத்திரமூட்டல் நடவடிக்கைகள் வேகம் பெற்றன. அமெரிக்கா, வடகொரியாவை ஆக்கிரமித்து, அச்சுறுத்தி வருகிற வரலாறு 1950 லிருந்து நடைபெற்று வருகிறது. எனினும், புஷ் நிர்வாகத்தின் கீழ் போர் வெறி அதிகரித்தது. இன்றைக்கும் கூட 40000 அமெரிக்கத் துருப்புகள் தென் கொரிய எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. அணு ஆயுதங்களும் தென்கொரியாவிடம் உள்ளன. தொடர்ந்து அமெரிக்க – தென் கொரிய கூட்டு ராணுவப் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.

புஷ் நிர்வாகத்தின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் உலகம் முழுவதும் கண்டனத்திற்கு ஆளாயின. இதைவிட முக்கியமானது, அமெரிக்காவிலேயே புஷ் நிர்வாகத்தின் அடாவடித்தனத்தை எதிர்த்துக் கண்டனக் குரல்கள் கடுமையாக எழுந்தன. அமெரிக்க அச்சுறுத்தலின் தன்மையை முழுவதும் உணர்ந்த பல ஆய்வாளர்கள் வடகொரியாவிற்கு வேறு வழியில்லாத சூழலில் வடகொரியா செய்தது நியாயமானது என வாதிடுகின்றனர்.

இடதுசாரி சிந்தனையாளரான நோம் சாம்ஸ்கி கூறினார்: அந்த பிராந்தியத்தில் அமெரிக்கா ஏராளமான அணு ஆயுதங்களை குவித்துள்ளது. இதனால் வடகொரியா அச்சுறுத் தலுக்கு ஆளாகியுள்ளது. எனவே, வடகொரியா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்றார் அவர்.

முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், ஒரு நாட்டோடு பிரச்சனை இருக்கிறதென்றால், பேச்சுவார்த்தை நடத்திடாமல் இருப்பது முட்டாள்தனம் என்று புஷ்ஷைக் கண்டித்தார். ஜனநாயகக் கட்சியின் வளர்ந்து வரும் செல்வாக்கு மிக்க தலைவரான செனட்டர் பராக் ஓபமா (Barack Obama of Illinois) கூறினார்.

பனிப்போர் தீவிரமாக இருந்த காலத்தில் கூட-  அமெரிக்காவின் ஒவ்வொரு நகரத்தையும் குறிவைத்து அணு ஏவுகணைகள் நிறுத்தப்பட்ட சூழலிலும் கூட, வெள்ளை மாளிகைக்கும், கிரெம்ளினுக்கும் நேரடித் தொடர்பு இருந்தது எனக் குறிப்பிட்டு வடகொரியாவோடு புஷ் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தாமல் இருக்கின்ற மூடத்தனத்தையும் எதிர்த்துள்ளார்.

எந்த முரண்பாடான பிரச்சனைகளையும் சுமுகமாக முடிக்காமல், பேச்சுவார்த்தையை அறவே வெறுக்கிற போக்கும், தான் சொல்வதையே மற்ற நாடுகள் ஏற்க வேண்டுமென்ற ஜனநாயக விரோதத் தன்மையும் கொண்டதாக புஷ் கூட்டம் இருந்து வந்துள்ளது.

இதோ அதற்கு ஓர் உதாரணம்.

சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜார்ஜ் புஷ்ஷிடம் பத்திரிக்கையாளர்கள் ஒரு கேள்வி கேட்டனர். அண்டை நாடுகளான இரானும், சிரியாவும் இராக்கில் அமைதி திரும்ப ஒத்துக்கொண்டால், அவர்களோடு சேர்ந்து செயல்பட அமெரிக்கா தயாராக இருக்கிறதா? இராக்கில் தற்போதுள்ள நிலையில் அண்டை நாடுகளின் ஒத்துழைப்பை, அறிவுள்ள யாரும் நிராகரிக்க மாட்டார்கள். ஆனால் புஷ் என்ன கூறினார்?

இந்தக் கேள்விக்குப் புஷ் கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்.

இரானும், சிரியாவும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இராக்கிற்கு அவர்கள் உதவ வேண்டுமென்று உலகம் எதிர் பார்க்கிறது. இப்படி ஆணவத்தோடு கூறிவிட்டு, சரமாரியாக பல நிபந்தனைகளைப் போட்டு, தொடர்பில்லாத பல பிரச்சனைகளை இத்துடன் இணைக்கிறார் புஷ்.

இரானியர்கள் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரிப்பதை நிறுத்த வேண்டும். அப்படிச் செய்தால் தான் அமெரிக்க வெளியுறவு அதிகாரிகள் அவர்களோடு பேசுவார்கள். பிறகு, அமெரிக்காவின் கடைக்கண் பார்வை கிடைக்க வேண்டுமென்றால், சிரியா என்னென்ன செய்ய வேண்டு மென்ற ஒரு பெரிய பட்டியலை புஷ் தெரிவித்தார். அத்துடன் லெபனான் அரசு இஸ்ரேல் தனது பிணைக் கைதிகளை திரும்பப் பெற ஹமாசினை நிர்பந்தப்படுத்த வேண்டும். ஹமாஸ், ஹிஸ்புல்லா இயக்கங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு எதிராக சதி செய்வதை கைவிட வேண்டும். என்றெல்லாம் புஷ் அடுக்குகிறார். இப்படிப்பட்ட போக்கு, எந்த உலகப் பிரச்சனையையாவது தீர்த்திட உதவிடுமா? சட்டாம் பிள்ளைத் தனம், அதிகார ஆணவம் எல்லாம் சேர்ந்து இன்று உலகின் பல நாடுகளில் மோசமான விளைவுகளை உருவாக்கியுள்ளது. இதுவே அணு ஆயுதங்களைத் தயாரித்தால்தான் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற துரதிருஷ்டமான முடிவுக்கு வடகொரியாவைத் தள்ளியது.

வடகொரிய அணுப் பிரச்சனையைத் தீர்க்க ஆறு நாடுகள் கொண்ட ஒரு அமைப்பு நிறுவப்பட்டது. சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, ரஷ்யா, வடகொரியா என்ற ஆறு நாடுகள் கொண்ட அமைப்பில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன. பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகள் மீதான தொடர் நடவடிக்கைகள் இல்லை. உதாரணமாக 1994ம் ஆண்டு அமெரிக்கா அங்கீகரிக்கப் பட்ட வரையறை என்ற ஒப்பந்தத்தில் வடகொரியாவுடன் சேர்ந்து கையெழுத்திட்டது.

இதன்படி வடகொரியாவின் அணு கிராபைட் உலைகளுக்கு மாற்றாக லைட் வாட்டர் (Light Water) உலைகளை நிறுவ அமெரிக்கா ஒத்துக் கொண்டது. அதாவது, அணுசக்தி மூலம் மின் , எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள வடகொரியாவிற்கு அமெரிக்கா உதவிட வேண்டுமென்றும், பதிலாக வடகொரியா அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சிகளை கைவிடுவது எனவும் முடிவாக்கப்பட்டது. ஆனால், தான் ஏற்றுக் கொண்ட  எந்த வாக்குறுதியையும், அமெரிக்கா நடைமுறைப்படுத்தவில்லை. இவை அனைத்தும் சேர்ந்துதான் தற்போதைய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அச்சுறுத்தல் வரலாறு

அணு ஆயுத மிரட்டல் என்ற பாணத்தை வடகொரியா இப்போதுதான் கையிலெடுத்திருக்கிறது. ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அமெரிக்கா செய்து வருகிறது. கொரியப் போர் நடந்து கொண்டிருந்த போது அன்றைய அமெரிக்க அதிபர் ட்ரூமென்னை ஒரு பத்திரிகை நிருபர், நீங்கள் இந்த யுத்தத்தில் அணு குண்டை பயன்படுத்துவீர்களா? என்று கேட்டனர். அதற்கு ட்ரூமென், எங்களிடம் இருக்கும் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்துவோம் என்றார். இப்படி அவர் பதிலளிக்கும் போது ஹிரோஷிமா, நாகாசாகி அழிவு ஏற்பட்டு ஐந்து ஆண்டு காலம்தான் முடிந்திருக்கிறது.

இதே போன்று 1953ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர் இவ்வாறு கூறினார். வடகொரியா சரியாக நடந்து கொள்ளவில்லை என்றால், ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு உள்ள கட்டுப்பாடுகள் அனைத்தையும் அகற்றுவோம் என்றார்.

இதைவிட அதிர்ச்சியான ஒரு தகவல் தற்போது வெளி வந்துள்ளது. பின்கஸ் என்ற பத்திரிக்கையாளர் வாஷிங்டன் போஸ்டில் எழுதியுள்ளார். 1957ஆம் ஆண்டு முதல் இரண்டு கொரியாவையும் பிரிக்கும் இடத்தில் அணு ஆயுத வல்லமை கொண்ட ஏவுகணைகளை அமெரிக்கா நீண்ட காலமாக நிறுத்தியிருந்தது. கடுமையான நிர்ப்பந்தத்திற்குப் பிறகு 1970ஆம் ஆண்டில் தான் அதிபர் ஜிம்மி கார்ட்டர் அதனை விலக்கிக் கொண்டனர்.

ஆக, வடகொரியா அமெரிக்காவின் அரை நூற்றாண்டு அச்சுறுத்தலுக்கு ஆளான நாடு. இந்த வரலாறு தெரியாதவர்கள்தான் இன்று வடகொரிய அணுச் சோதனை மனித குலத்துக்கே அழிவு என்று எழுதி வருகின்றனர். வடகொரியா, அணு ஆயுத முயற்சிகளை கைவிட வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து இருந்திட முடியாது. ஆனால் இதற்கு அமெரிக்காவின் அச்சுறுத்தல் ஆரவாரங்கள் முற்றாக கைவிடப்பட வேண்டும்.

தென்கொரியா மூலம் அச்சுறுத்தல்

தென் கொரியாவில், அமெரிக்க தலையீட்டிற்கு எதிராக பெரும் போராட்டம் நடைபெறுகிறது. அங்கு அமெரிக்கா தனது ராணுவ தளத்தை விரிவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

தென்கொரியாவில் வலுவான ராணுவ தளம் என்பது வெறும் வடகொரியாவை மிரட்டுவதற்கு மட்டுமல்ல; அமெரிக்காவிற்கு பெரும் சவாலாகவும், உலகப் பொருளாதாரத்தில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் சீனாவின் ஆதிக்கம் வளராமல் தடுப்பதற்கும் வலுவான ராணுவ தளம் தென் கொரியாவில் இருப்பது அவசியம் என அமெரிக்கா கருதுகிறது.
ஏற்கெனவே வலுவான தளம் இருந்த போதிலும், மேலும் அதனை விரிவுபடுத்தி விரிவாக்கிட அமெரிக்கா முயற்சித்து வருகின்றது.

இதற்கென அங்குள்ள விவசாயிகளின் நிலங்களை அபகரிக்க முயற்சிகள் நடந்தது. உடனே விவசாயிகள் ஆர்ப்பரித்து எழுந்து போராட்டத்தில் குதித்தனர். கடந்த ஜூலை மாதம் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் மேற்கொண்டனர்.

ஏற்கனவே உலக வர்த்தக நிறுவனம் மூலம் தென்கொரிய விவசாயிகளை அமெரிக்கா பழிவாங்கி வருகின்றது. இதனை யொட்டி பிரம்மாண்டமான போராட்டங்களும் நடைபெற்றன. தற்போது அமெரிக்க ராணுவதள விரிவாக்கம் கூடாது என்ற கோரிக்கையை எதிர்த்தும் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்தியாவின் கண்டனம்

இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வடகொரியா அணுச் சோதனையை கண்டித்து கடுமையான அறிக்கையை வெளியிட்டனர். இந்தச் சோதனை மூலம் வடகொரியா உலகிற்கு அளித்த வாக்குறுதிகளை மீறி விட்டதாக கண்டித்தார்.

1994ஆம் ஆண்டே அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொண்டதாக வடகொரியா அறிவித்து விட்ட நிலையில், அணுச் சோதனை செய்வதன் மூலம் எந்த ஒப்பந்த வாக்குறுதிகளையும் அது மீறவில்லை. எனவே, இந்தியா இவ்வாறு கண்டிப்பது அர்த்தமற்றதாகும்.

வடகொரியாவின் அணுச்சோதனையை இந்தியா கண்டிப்பது வேடிக்கையானது. இரண்டு முறை அணு வெடிச் சோதனை நடத்திய நாடு இந்தியா. இந்திய நாட்டு மக்களிடம் நீண்ட காலமாக அணு ஆயுதமற்ற உலகம் என்ற லட்சியத்திற்கு பெரும் ஆதரவு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் தான் அணு ஆயுதத் தயாரிப்பு சோதனையில் ஈடுபடுத்திக் கொண்டவர்கள் இந்திய ஆட்சியாளர்கள். எனவே, இந்தியாவிற்கு வடகொரியச் சோதனையை கண்டிக்க என்ன உரிமை இருக்கிறது? அமெரிக்கா கண்டிப்பதால், தானும் கண்டிக்க வேண்டும் என்று முனைகிறது இந்திய ஆளும் வர்க்கம்.

இந்திய ஆட்சியாளர்களுக்கு உள்ள பயம் என்னவென்றால், வடகொரிய சோதனை ஏற்படுத்தியுள்ள ஆரவாரத்தில், இந்திய – அமெரிக்க அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா கை கழுவி விட்டால் என்ன செய்வது என்பதுதான். இதனால்தான் அவசர அவசரமாக வடகொரியாவை கண்டித்தனர்.

பிறகு, அமெரிக்க ஆதரவு செயலாளர் நிக்கோலஸ் பார்ன்ஸ் இந்தியா, பாகிஸ்தான் செய்த அணுச் சோதனைகளோடு, வடகொரியச் சோதனையை ஒப்பிட முடியாது என்ற தத்துவ முத்தினை உதிர்த்தார். இது எப்படி என்றெல்லாம் தலையை பிய்த்து கொள்ளாமல் இந்திய அரசு நிம்மதிப் பெரு மூச்சு விட்டது.

தீர்வு என்ன?

அக்டோபர் 14ஆம் தேதி ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் 1718 எண் கொண்ட தீர்மானத்தை நிறைவேற்றியது. இதன்படி எல்லா அரசாங்கங்களும் வடகொரியாவுடன் ஏவுகணை உள்ளிட்ட பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை வாங்குவதோ, விற்பதோ கூடாது. அதே போன்று சில பொருட்களின் வர்த்தகமும் தடை செய்யப்பட்டது. இப்படிப்பட்ட தடைகள் பிரச்சனையை தீர்க்கப் போவதில்லை. மாறாக, பதட்டத்தை மேலும் அதிகரிக்கவே செய்திடும்.

அமெரிக்கப் பத்திரிக்கைகளும், ஆளுகிற வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் வடகொரியா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், ராணுவத் தலையீடு உடன் தேவை என்றும் போர் வெறியோடு கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர்.

வடகொரியாவுடன் கடந்த பல ஆண்டுகளாக நெருக்கமாக இருந்து வந்துள்ளது சீனா. எனவே, சீனா அமைதியாக இருக்கக் கூடாது; வடகொரியாவிற்கு அனுப்புகிற உணவு, மருந்து சப்ளை எல்லாவற்றையும் நிறுத்திட வேண்டுமென கூக்குரலிட்டனர் அமெரிக்கர்கள். இதே போன்று தான் இராக் மீது 1980 களில் உணவு மருந்து சப்ளைக்கு ஐ.நா. சபை மூலம் தடை விதித்தது அமெரிக்கா. அதனால் சொல்லொண்ணாக் கொடுமையை இராக்கின் சாதாரண பொதுமக்கள் அனுபவித்தனர். 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் உணவின்றி, பட்டினியால் மடிந்து போயினர்.

இதே போன்ற கொடூரம், வடகொரியாவிலும் நிகழ வேண்டும் என்பது புஷ் கூட்டத்தினரின் ஆசை. ஆகையால், அவர்கள் சீனா விடம் நிர்பந்தம் செய்கின்றனர்.  ஆனால், சீனா அறிவுப் பூர்வமாகச் செயல்பட்டது.

முதலில் வடகொரியாவின் அணுச் சோதனையை கண்டித் தனர்.  பிறகு ஐ.நா. சபையில் கடும் பொருளாதாரத் தடையை விதிக்க அமெரிக்கா முயற்சித்த போது, அதைச் சீனா ஏற்றுக் கொள்ளவில்லை. இதர வீட்டோ நாடுகளைச் சேர்த்துக் கொண்டு இதை எதிர்த்தது. குறிப்பாக, ரஷ்யாவோடு கைகோர்த்து அமெரிக்க முயற்சியை தடுத்து நிறுத்தியது.

பிறகு அணு ஆயுத மூலப் பொருட்களுக்கும், சில குறிப்பிட்ட பொருட்களுக்கும் தடை என்று ஐ.நா. சபையில் முடிவு எடுக்கப்பட்டது. வடகொரியாவுடன் பேச்சுவார்த்தையைத் தொடருவது எனும் வகையில் சீன வெளியுறவு அமைச்சர் வடகொரியா சென்றார். வடகொரிய அதிபர் கிம் – ஜாங் – இல் லுடன் பேச்சுவார்த்தை நடத்தியது சீனக்குழு. தொடர்ந்து பலமுறை இத்தகைய தொடர்பு களை சீனா வடகொரியாவுடன் ஏற்படுத்திக் கொண்டது.

கடைசியாக, சீனாவின் கடும் முயற்சிக்கு வெற்றி கிட்டியது. வடகொரியா ஆறு நாடுகள் சேர்ந்து நடத்தி வந்த பேச்சுவார்த்தை தொடருவதற்கும் அதில் தாங்கள் கலந்து கொள்வதற்கும் சம்மதித்தது.

இந்தப் பிரச்சனைக்கு மிரட்டல், யுத்தம் ஆகிய வழிமுறை களைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டு மென்பது தான் ஜனநாயக எண்ணம் கொண்டோர் அனைவரின் விருப்பம். இந்தக் கோட்பாடே சிறந்தது என்பதற்கான எடுத்துக் காட்டாக, சீனாவின் முன்முயற்சியும், அதற்கான வெற்றியும் சான்றாக அமைந்தன.

நஞ்சு கலந்த வரலாற்றுத் திருத்தங்கள் – ஏகாதிபத்தியத்தின் புதிய சாகசம்

நாட்டு மக்களே! வரலாற்றிலிருந்து நாம் நழுவ இயலாது இப்படிச் சொன்னவர் ஆப்ரஹாம் லிங்கன். ஆனால் நழுவுதல் என்னவோ நடந்து கொண்டுதான் இருக்கிறது. வரலாறு மறைக்கப்படுவதும், மறுக்கப்படுவதும் அல்லது திருத்தப்படுவதும் அந்த நழுவுதலின் சில வடிவங்கள் ஆகும். அத்தகைய முயற்சிகளுக்கு தற்போது புதிய வேகம் கிடைத்திருக்கின்றது. இந்தச் சூழலில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மையங்கள் பல்வேறு வடிவங்களில் உருவாவதையும் காண்கிறோம். ஆசியாவில் செயல்படத் துவங்கியிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு, லத்தின் அமெரிக்காவில் எழுந்து வரும் அமெரிக்காவிற் கான பொலிவிய மாற்று போன்ற அமைப்புகள் ஏகாதிபத்திய வீச்சினை (அப்படி ஒரு நோக்கம் இருப்பதாக அறிவிக்கப்பட வில்லை யென்றாலும்) தடுத்து நிறுத்தும் உள்ளடக்கம் கொண்டதாக உள்ளன. மத்திய ஆசியப் பகுதியில் நடப்பு நிகழ்வுகள் ஏகாதி பத்தியத்தின் கோரமான முகத்தை தெளிவாக உலகுக்கு வெளிக் காட்டுகின்றன. ஆகவே, நிலைமைகளை சந்திக்க ஏகாதிபத்தியத்திற்கு புதிய முகம் தேவைப்படுகிறது. தன்னொளி பொங்கும் முகம் அதற்கு உண்டு என்று சொல்லும் முயற்சி தான் தற்பொழுது துவக்கப் பட்டிருக்கும் வரலாற்றுப் புரட்டல். பேராசிரியர்கள் சிலர் ஊடகங்களின்  துணை கொண்டு ஏகாதிபத்தியம் ஆற்றிய நல்ல பணிகள் குறித்து வரலாற்றின் பக்கங்களைப் புரட்டி எழுதத் துவங்கியிருக்கிறார்கள்.

காலனி ஆதிக்கத்தின் உண்மை முகம்

பிரிட்டிஷ் ஊடகங்கள் இந்த தத்துவார்த்த விளையாட்டினை துவக்கியிருக்கின்றன. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திருமதி. பிரியம் வதா கோபால் தி கார்டியன் பத்திரிக்கைக்கு சமீபத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில், கடந்த கால காலனி ஆதிக்கத்திற்கு புனிதமான தோற்றம் கொடுக்கும் இந்த ஊடக முயற்சிகளை தோலுரித்துக் காட்டியிருக்கிறார். வரலாற்றைத் திருப்பி எழுத அல்ல, திருத்தி எழுதி பிரிட்டிஷ் பேரரசின் கொடுங்கோல் ஆட்சியினை மூடி மறைக்கும் வேலை பி.பி.சி.யின் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் செய்யப்படுகிறது. ஏகாதிபத்திய அமைப்புக்கு வக்காலத்து வாங்கி எழுதிக் கொண்டிருக்கும்  நியாலி பெர்கூசன் என்பவர் அந்த பி.பி.சி நிகழ்ச்சிக்கான வரலாற்றுப் பேராசிரியராக பணியாற்றுகிறார். அவர் கூறும் வரலாறு ஒரு சுகமான கற்பனைக் கதை என்கிறார் பிரியம் வதா. அமெரிக்க வலது சாரி சிந்தனைப் போக்கால் உந்தப்பட்டு வலிந்து புகுத்தப்படும் வரலாற்றுப் புரட்டல் அங்கே அரங்கேறு கிறது. காலனி ஆதிக்கம் என்றால் எது நம் நினைவுக்கு வருகிறது? அடிமைத்தனம், சூறையாடல், யுத்தம், ஊழல், ஏழ்மை, நில அபகரிப்பு, பஞ்சம், சுரண்டல், கொத்தடிமை இப்படிப் பல இருட்டுப் பகுதிகளைக் கொண்டது தான் காலனி ஆதிக்கம். ஆனால், இந்த நிகழ்வுக ளெல்லாம் நல்ல நோக்கத்துடன் செயல் பட்ட காலனி ஆதிக்கத்தின் குறுக்கே விழுந்த தவிர்க்க முடியாத சம்பவங்கள், தவறுகள் மற்றும் அத்து மீறல்கள் என்ற குறிப்போடு அவைகள் மூடப்படுகின்றன. பாதி உண்மைகளும், பாதி கற்பனை கலந்த ஊகங்களும் எந்த வகையான நிரூபணமும், அடிக்குறிப்பு களும் இல்லாமல் அதிகாரப் பூர்வமான வரலாறு இதுதான் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது.

தொலைகாட்சி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வெளியிட்ட உலகின் யுத்தம் என்று பெர்கூசன் எழுதிய புத்தகம் கடந்த காலத்தில் கடைபிடித்த இனவெறிக் கொள்கையினைத் தூக்கிப் பிடிக்கின்றது. பொதுவாக மக்கள் தங்கள் இனத்தைச் சார்ந்த மக்களை நம்புவார்கள் என்றும், காலனி மக்களை நவீனப்படுத்த வெள்ளை மனிதர்கள் மேற்கொண்ட சுமை பற்றியும், அவர்கள் புரிந்த வீர சாகசங்கள் குறித்தும் பெர்கூசனின் வரலாறு நிறையவே சொல்லுகிறது.

வரலாற்றை மறைக்கும் முயற்சிகள்

இந்த ஒளிபரப்பு நிகழ்ச்சிகளும், பேச்சுக்களும் ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றன. நவீன பிற்போக்குவாதிகளின் முற்போக்கு  சொல்லாடல்கள் இவை. பெர்கூசன் புதிதாக எதையும் சொல்லவில்லை. மெக்காலே, மில் போன்ற ஏகாதிபத்திய  ஆதர வாளர்களும், தற்போது புஷ் நிர்வாகம் கொஞ்சம் சுத்தப்படுத்தி வெளியிடும் உளுத்துப்போன சுய விளம்பரக் கனவுகளையும், பரப்பப்பட்ட பொய்களையும்தான் பெர்கூசன் பட்டை தீட்டி நம்முன் வைக்க விரும்புகிறார். அவர் போன்றவர்களை அதிகாரப் பூர்வமான வரலாற்றாசிரியர்கள் என பிரிட்டிஷ் ஊடகங்கள் அங்கீகரிப்பதன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேன்மை யைப் பரப்பும் பிரச்சார பீரங்கிகளாக அவர்கள் மாற்றப்படுகிறார்கள்.

பிரிட்டனில் குடியுரிமை வேண்டுவோர் பிரிட்டனின் வரலாறு படித்து தேர்வு பெற வேண்டும் என பிரிட்டிஷ் குடியுரிமை விதிகள் கூறுகின்றன. அதற்காக ஒரு வரலாற்றினை எழுதியிருப்பவர் பேராசிரியர் பெர்னார்ட் க்ரிக் – இவரை நியாலி பெர்கூசனின் மறுபதிப்பு எனலாம். 9000 வார்த்தைகளைக் கொண்ட இந்தப் புத்தகம். பிரிட்டனின் மேன்மைக் குடியைப் பற்றி பலவாறு குறிப்பிடுகிறது. பிரிட்டனின் உயர்தனிக் குடும்பங்களைப் பற்றி 210 வார்த்தைகள் இந்தப் புத்தகத்தில் உள்ளது. ஆனால், பிரிட்டன் நாட்டு பாமர மக்களின் சாசன இயக்கம் (Charter Movement) பற்றியோ, தொழிற்சங்க இயக்கத்தின் துவக்கம் பற்றியோ, 1927 ல் நடந்த மிகப் பெரிய வேலை நிறுத்தம் பற்றியோ ஒரு வார்த்தை கூட எழுதப்படவில்லை. தாட்சர் ஆட்சி பற்றி பக்கம் பக்கமாக எழுதப்பட்டிருக்கிறது; ஆனால், அர்ஜென்டினாவுக்கு எதிராக அந்த அரசு நடத்திய  தார்மீக நெறியற்ற ஃபாக்லண்ட் யுத்தம் பற்றி ஏதுமில்லை. அட்லாண்டிக் பெருங்கடல் தாண்டி நடத்தப்பட்ட அடிமை வியாபாரம் தீதானது என்று குறிப்பிடும் போது, பிரிட்டிஷ் பேரரசின் கொடிய செயல்களை வெண்பட்டு முக்காடு கொண்டு மறைக்கப்பட்டுள்ளன. பெர்னார்டு கிரிக் காலனி ஆதிக்கத்தை சித்தரிக்கும் விதமே அலாதியானது. “ஆப்பிரிக்காவின் பூர்வ குடி மக்களுக்கும், இந்திய உபகண்டத்தில் உள்ள மக்களுக்கும் நடுநிலையான சட்ட ஒழுங்கு அமைப்பை கொடுத்தும், ஆங்கிலக் கல்வி கொடுத்தும், சிதறிக்கிடந்த மக்களை ஒற்றுமைப் படுத்தி, மக்கள் நலன், கல்வி முதலியவற்றில் கவனம் செலுத்தி அமைதி காத்து, யார் தங்களை ஆளுகிறார்கள் என்பதைப் பற்றி மக்கள் கவலைப்படாமல் இருக்கச் செய்தது” என்கிறார். இதைப் படித்துவிட்டுத்தான் நம் நாட்டின் பிரதமர் அண்மையில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு “நல்லாட்சி” (Good governance) விருது வழங்கியிருப்பாரோ?

காலனி அரசின் அலங்கோலம்

அமர்த்தியா சென், நிக்கோலஸ் டிர்க்ஸ், மைக் டேவிஸ் மகமூத் மம்தானி, கரோலின் எல்கின்ஸ், வால்டர் ரோட்னி போன்றவர் களெல்லாம் ஐரோப்பிய காலனி ஆதிக்கம் பற்றி ஆய்வு செய்து எழுதியவற்றில் காலனி நல்லாட்சி என்பது வறுமையும், ரத்தக்களறியும், அடக்கு முறையும், துன்ப துயரங்களும் நிறைந்த ஆட்சியாக இருந்தது என்பதை விளக்கியிருக்கிறார்கள். மைக் டேவிஸ் எழுதிய கடந்த விக்டோரியா காலப் படுகொலைகள் என்ற புத்தகத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் அவலங்களைப்பற்றி எழுதியிருக்கிறார். 1896-1900 காலத்தில் மட்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட 12 லிருந்து 29 மில்லியன் மக்கள் பஞ்சத்தில் இறந்து போனார்கள்.  அதற்கு முந்தைய  2000 ஆண்டுகளில் அப்படி இறந்தவர்களைக் காட்டிலும் இது அதிகம். பிரிட்டிஷ் ஆட்சியால் அந்த மக்கள் படுகொலை செய்யப்பட்டவர்கள் என்கிறார் டேவிஸ். எல்நினோ என்றழைக்கப்பட்ட வறட்சி நிலை 1876ல் இந்தியாவின் தக்காணப் பகுதியினைத் தாக்கியது. அரசிடம் போதுமான அரிசியும், கோதுமையும் இருப்பில் இருந்தது. அன்றைக்கு இந்திய வைஸ்ராய் பொறுப்பில் இருந்த லிட்டன் எந்தச் சூழ்நிலையிலும் பிரிட்டனுக்கு அனுப்பப்படும் உணவுப் பொருட்களின் ஏற்றுமதியினைத் தடுத்து நிறுத்தக் கூடாது என உத்தரவிட்டிருந்தார். பஞ்சம் நிலவிய உச்ச கட்டத்தில் 320,000 டன் உணவுப் பொருள் ஏற்றுமதி செய்யப்பட்டது.

பட்டினியால் வாடிய விவசாயிகளுக்கு கொடுத்த நிவாரண உதவிகளை நிறுத்த உத்தரவிடப்பட்டது. சந்தையில் விலை நிர்ணயம் செய்யப்படுவதில் குறுக்கீடு இருக்கிறது என்று சொல்லி அறவழி நன்கொடைக்கு எதிராக 1827-ம் ஆண்டு சட்டத்தினைப் பயன்படுத்தி தனியார் நிவாரண உதவிகளும் தடைசெய்யப்பட்டன; மீறினால் தண்டனைக்குள்ளாவார்கள் என எச்சரிக்கை விடப்பட்டது. கடும் உழைப்புக்கு மக்கள் நிர்பந்திக்கப்பட்டனர். நாஜி ஜெர்மனியின் புக்கன் வால்ட் கைதிகள் முகாமில் கொடுக்கப்பட்ட உணவைக் காட்டிலும் மிகக் குறைவான உணவே அந்த உழைப்புக்கு வழங்கப் பட்டது. அந்த உழைப்பிற்கான முகாம்களில் மாதாந்திர இறப்பு விகிதம் 94 சதம். இதுவே ஓர் ஆண்டு இறப்பு விகிதமாக இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களின் சாவு எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கும் போது, வரி வசூலை முடுக்கிவிட்டது காலனி அரசு. அந்தப் பணம் லிட்டன் நடத்திய ஆப்கானிஸ்தான் யுத்தத்திற்கு பயன்படுத்தப்பட்டது. பஞ்சாப் மற்றும் (இன்றைய) உத்திரப்பிரதேசப் பகுதிகளில் அபரிமிதமான அறுவடை இருந்தது; ஆனால் காலனி அரசின் ஏற்றுமதிக் கொள்கையால், இந்தப் பகுதியில் மட்டும் 12.5 லட்சம் பேர் இறந்தார்கள். இதுதான் அந்த நல்லாட்சியின் அளவீடு.

நல்லாட்சியின் அம்சங்கள்

ஜனநாயகம், விடுதலை, சகிப்புத்தன்மை போன்ற மனித குலம் போற்றும் பண்புகளை நாங்கள் தான் காலனி மக்களுக்குக் கொடுத் தோம் என்று காலனி ஆதிக்கவாதிகள் தங்கள் முதுகில் தாங்களே தட்டிக் கொள்கிறார்கள். கென்யாவில் பிரிட்டன் நடத்திய வெறியாட்டம் மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து நடத்திய கொடுஞ்செயலாகும். விரல்விட்டு எண்ணக்கூடிய பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்கள் ராணுவத்தின் துணைகொண்டு 12000 சதுர மைல் நிலங்களை அபகரித்து, 2000 சதுர மைல் பரப்பளவுப் பகுதியில் சுற்றி வளைக்கப்பட்ட கிராமங்களில் 12.5 லட்சம் கிகியூ இனத்தவரை அடைத்துப்போட்டது என்ன விடுதலை உணர்வோ! எதிர்த்துப் போரிட்ட மாவ்மாவ் இயக்கத்தினரை கொலை, சித்தர வதை போன்ற அடக்கு முறை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தி ஆட்சி செய்தது என்ன சகிப்புத்தன்மையோ! 3.20 லட்சம் பேர் அந்த சித்தரவதை முகாம்களில் இருந்தனர். செவி மடல்களை வெட்டியும், உடலில் மெழுகை ஊற்றி பின்பு எரித்தும், எரியும் சிகரெட் துண்டுகளை செவிகளில் நுழைத்தும் கைதிகள் விசாரிக்கப்பட்டார்கள் என கரோலின் எல்கின்ஸ் பிரிட்டனின் குலாக் என்ற புத்தகத்தில் எழுதுகிறார். 1 லட்சம் பேர் கொல்லப்பட்டும், நோயினாலும், பட்டினியாலும் மடிந்து போனார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.

1919ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை காலனி ஆதிக்கத்தின் வெறித்தனத்தை வெளிக்காட்டிய செயல். டாஸ்மானி யாவில் நடந்த இனப்படுகொலை, 1948 – 60 ல் மலேயாவிலும், சைப்ரஸிலும் (1955-59) நடத்திய ராணுவ நடவடிக்கைகள், ஓமன் கிராமங்களின் மீது நடத்திய குண்டு வீச்சு, வடக்கு ஓமன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் யுத்தம், டியோகா கார்சியா தீவிலிருந்து மக்களை வெளியேற்ற எடுத்த நடவடிக்கைகள், 1953-62 ல் கயானாவில் மக்களின் ஜனநாயக முடிவினை எதிர்த்து நடத்திய ராணுவ நடவடிக்கை, 1956 ல் பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலுடன் சேர்ந்து சூயஸ் கால்வாயினை மீண்டும் பிடிக்க எடுக்கப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகள் இவைகள் தான் பிரிட்டிஷ் அரசின் நல்லாட்சிக்கான வரலாற்றுப் பூர்வ நிரூபணங்கள். நமது நாட்டில் மத அடிப்படையிலான பிரிவினையை நடத்தி வைத்த பெருமை பிரிட்டிஷ் அரசுக்கு உண்டு; 1 கோடி மக்கள் புலம் பெயர்ந்து பரிதவித்த சோக வரலாற்றினை நாம் கண்டோம்.

பேராசை, வன்முறை

பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க மேலாதிக்கம் நிறுவப்படுவதற்கு முன் இந்த உலகம் எப்படி இருந்தது? என்பதைச் சிந்தித்துப் பார்ப்பதில் நாம் தோல்வியடைந்திருக்கிறோம் என்கிறார் பிரியம் வதா. பேராசையும், வன்முறையும் ஒரு குறிப்பிட்ட பண்பாடு அல்லது கலாச்சாரத்துக்கு மட்டும் உரித்தானதல்ல. ஆனால், காலனி ஆதிக்கத்தின் இந்த நடைமுறைகள் முன்னேற்றத்திற்கான சாத்தியக் கூறுகளை அழித்துவிட்டது. முகலாய மன்னர் அக்பரின் அட்சி முறை சுல்-எ-குல் அல்லது அனைவருக்கும் நன்மை என்ற பிரதான கோட்பாட்டின் அடிப்படையில் செயல்பட்டது; ஆனால், இதையெல்லாம் மாற்றி பிரிட்டன் இங்கே அதன் பேராசையின் வரலாற்றிற்கு புதிய அத்தியாயம் எழுதியது. பருத்தி, கரும்பு, தேக்கு, ரப்பர் மற்றும் பல்வேறு கனிமங்கள் போன்ற இந்த நாட்டின் இயற்கைச் செல்வம் பெரிய அளவில் சூறையாடப்பட்டது. பிரிட்டிஷ் வருவதற்கு முன் இந்தியாவின் துணி உற்பத்தி மிகவும் வளர்ந்த நிலையில் இருந்தது. ஆனால், பிரிட்டிஷ் ஆட்சி ஒரு அரைநூற்றாண்டு காலத்தில் அதை அழிவுக்குக் கொண்டு வந்தது. மார்க்ஸ் மூலதனம் புத்தகத்தில் குறிப்பிடுவது போல், பருத்தி துணி நெய்யும் நெசவாளிகளின் எலும்புகள் இந்திய சமவெளியினை வெளிறச் செய்துவிட்டது. ஜார்ஜ் மான்பியாட் என்ற கட்டுரை யாளர் தி கார்டியன் பத்திரிக்கைக்கு எழுதிய கட்டுரையில் 18ம் நூற்றாண்டில் தென் இந்தியத் தொழிலாளர்கள் அதே காலக் கட்டத்தில் இருந்த பிரிட்டன் தொழிலாளர்களைக் காட்டிலும் அதிகம் சம்பாதித்தார்கள். நல்ல பொருளாதாரப் பாதுகாப்போடு வாழ்ந்தார்கள் என (பி.பார்த்த சாரதி என்பவர் ஆய்வினை மேற்கோள் காட்டி) குறிப்பிடுகிறார். 1757 லிருந்து 1947 வரை இந்தியாவில் தனிநபர் வருமானம் எள்ளவும் உயரவில்லை என்று மைக் டேவிஸின் கருத்தினையும் முன் வைக்கிறார். 2 கோடி ஆப்பிரிக்க மக்களும், 15 லட்சம் இந்தியர்களும் கொத்தடிமைகளாக கடல் கடத்தப்பட்டு தேயிலை, கரும்புத் தோட்டங்களில், சுரங்கங்களில் பணி புரிய நிர்பந்திக்கப்பட்டனர். ஃபிஜித் தீவின் கரும்புத் தோட்டங்களில் கொத்தடிமையாய் வெந்து மடியும் இந்தியர்களைப் பற்றி பாரதி பாடியது நினைவுக்கு வருகிறது.

நாட்டை நினைப்பாரோ எந்த
நாளினைப் போவதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ – அவர்
விம்மி விம்மி விம்மி யழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே! – துன்பக்
கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல் மீட்டும் உரையாயோ? அவர்
விம்மியழவுந் திறங்கெட்டுப் போயினர்…

நாடுகளை அடிமைப்படுத்தி, செல்வங்களைச் சுரண்டி, உழைப்பை உறிஞ்சி திரட்டிய செல்வத்தில் உருவாகி, வளர்ந்த முதலாளித்துவ உலகம்; ஏகாதிபத்தியமாக உருவெடுத்தது.

பிரிட்டன் வழியில் அமெரிக்கா

ஏகாதிபத்திய உலகில் பிரிட்டனின் வாரிசாக பிரிட்டனையே பின்தள்ளிவிட்டு அமெரிக்க ஏகாதிபத்தியம் முன்னே வந்து நிற்கிறது. இவர்களுக்கும் உண்மையான வரலாறு படிப்பதில் சங்கடங்கள் உண்டு. ஈராக் யுத்தம் முடிவுற்ற போது, (இன்னும் முடிவு பெறவில்லை என்பது வேறு விஷயம்) புஷ் பேசினார்: வரலாறு? எங்களுக்குத் தெரியாது. முடிவில் நாம் எல்லோரும் இறந்து போவோம். இப்படி ஒரு வாழ்க்கைத் தத்துவத்தில் வரலாற்றை ஒதுக்க நினைத்தாலும், அது ஒதுங்குவதாக இல்லை. சென்ற ஆண்டு (நவம்பர் 11) போரில் சிறப்பாக பணி புரிந்தோர் தினத்தில் பேசும்போது புஷ்  எப்படி போர் துவங்கியது என்று வரலாற்றைத் திருப்பி எழுத முயற்சிப்பது எல்லையற்ற பொறுப்பின்மை என்று குற்றம் சாட்டினார். ஈராக் யுத்தம் எப்படி பொய்களையும், உளவுத்துறை செய்திகளின் திருத்தங்களையும், ஏகாதிபத்திய உள்நோக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு துவக்கப் பட்டது என்று ஆராயத் துவங்கியதன் விளைவுதான் இந்தக் கோபம். ஜனநாயகம், விடுதலை நாகரீகம் என்பதையெல்லாம் உலகுக்கு கற்றுக் கொடுக்க எடுத்த அவதாரம் தான் தங்கள் அமெரிக்கா என்று பறைசாற்றுகிறார்கள். 5 லட்சம் ஈராக் குழந்தைகளைப் பலி வாங்கி, தொன்மையான யூப்ரிடிஸ் – டைக்ரிஸ் நதிக்கரை நாகரிகத்தின் வரலாற்றுச் சின்னங்களையும் அழித்துவிட்டு, அவர்கள் சுட்டு விரலுக்கு அசையும் பொம்மை அரசினை நிறுவிவிட்ட பின் னணியில், அந்த அழிப்பு வேலை வரலாற்றுப் புத்தகங்களில் இடம் பெறுவதை புஷ் கும்பல் விரும்பவில்லை. கடந்த கால வரலாறு எழுதுவது நிறுத்தப்பட்டால் மனிதாபிமானம் என்பது நிறுத்தப் படுகிறது என்று பொருள். கடந்த காலம் என்ன சொல்கிறது?

உங்களுடைய தளர்வுற்ற, ஏழ்மையுற்ற, தாழக் குனிந்து விடுதலை வேண்டும் என்று கெஞ்சுகிற மக்களை – உங்கள் கடலலைகள் உமிழ்ந்து கொட்டி துயருற்று பயனற்றதென கழிவு செய்த மக்களை – உறைவிடம் ஏதுமற்று, சூறாவளியினால் அலைக்க ழிக்கப்படுகிற அந்த மக்களை என்னிடம் அனுப்புங்கள் என நியூயார்க் துறைமுக வாயிலில் தீபத்தைக் கையில் ஏந்திய சுதந்திர தேவியின் சிலைக்கு அடியில் எழுதப்பட்ட வாசகங்கள் இவை. அந்த மக்கள் வந்தார்கள். அமெரிக்க வரலாறு சொல்கிறது வந்தவர்கள் அப்படியே வாழ்ந்தார்கள் என்று ஃபெலிக்ஸ் க்ரின் தன்னுடைய எதிரி என்ற புத்தகத்தில் குறிப்பிடுவது போல், அமெரிக்காவின் புதிய உலகக் கனவில் துவக்கத்திலிருந்தே கேடு விளைவிக்கும் ஊனம் இருந்தது – மனிதர் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டின் மீது கட்டப்படும் எந்தச் சமூகமும் ஒரு அடிமைச் சமூகமாக இருக்க முடியாது;

ஆனால், அமெரிக்கா அப்படித்தான் ஆனது; அந்த மண்ணில் வாழ்ந்த பூர்வீக குடிகளான இந்திய மக்களை (செவ்விந்தியர்கள் என்று ஹாலிவுட் படங்கள் சித்தரித்தன) ஈவிரக்கமின்றி படுகொலை செய்ததை மன்னித்துவிட முடியுமா? உற்பத்திச் சாதனங் களை தனியார் கையில் கொடுத்துவிட்டு மனித சமத்துவம் உருவாக்க முடியுமா? பகட்டான வார்த்தைகளில் வெளியிடப்படும் உன்னத லட்சியத்திற்கும், செயலில் வெளிப்படும் யதார்த்த நிலைக்கும் உள்ள இந்த முரண்பாடுகள் சொல்லொணா விளைவுகளைக் கொண்டு வரும் என்று எச்சரிக்கிறார். ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட கறுப்பு நிற அடிமைகள், அங்கேயே உள்ள இந்திய இன மக்கள், சுதந்திர தேவி அழைத்த முறையில் வந்து குடியேறிய மக்கள் – இவர்களின் உழைப்பு கொடுமையான சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டது. நிலம் வேண்டி, தங்கம் தேடி அமெரிக்காவில் மேற்கு நோக்கி நகர்ந்த ஐரோப்பி யர்கள் 10 லட்சம் இந்தியர்களில், கிட்டத்தட்ட 7 1/2 லட்சம் பேரைக் கொன்று குவித்துவிட்டுத்தான் நிலத்தையும், தங்கத்தையும் எடுத்துக் கொண்டார்கள். டிசம்பர் 28, 1870 ல் வூண்டட் நீ (Wonded Knee) என்னுமிடத்தில் அரசுப் படைகளுக்கும், இந்தியர்களுக்கும் நடந்த மோதலின் முடிவு எப்படி இருந்தது என்பதைப் பற்றி டீ ப்ரௌன் (Dee Brown) என்பவர்  My Heart at Wounded Knee என்ற புத்தகத்தில் எழுதியதை குறிப்பிடுவது மறந்து போன அமெரிக்க வரலாற்றினை நினைவுக்குக் கொண்டு வரும். அந்த வெறித்தனம் முடிந்த பொழுது பிக்ஃபூட்  (இந்தியர்களின் ஒரு குழுத் தலைவர்) மற்றும் அவர் குழுவில் பாதிக்கும் மேல் இறந்து போனார்கள். பலர் படுகாயமுற்றனர்; தெரிந்த அளவில் 153 பேர் இறந்து போனார்கள். காயமுற்ற பலரும் ஊர்ந்து போனார்கள், கடைசியில் அவர்களும் மாண்டனர்.

ஒரு கணிப்பு கொடுத்த தகவலின் படி, மொத்தம் 350 பேரில் ஆண், பெண், குழந்தைகள் உட்பட, 300 பேர் கொல்லப் பட்டனர். ராணுவத்தினர் 25 பேர் உயிரிழந்தனர். 39 பேர் காய முற்றனர்; அதுவும் அவர்களின் துப்பாக்கிக் குண்டுகள் மற்றும் வெடித்த உலோகத் துண்டுகள் மூலமாகத்தான் இந்த நிகழ்வுக ளெல்லாம் அனை வரையும் சமமாகப் பாவிக்கும் அமெரிக்க அரசியல் சட்டம் நிறை வேற்றிய பிறகு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வரலாற்றாசிரியன் ஆராய்கின்ற கடந்த காலம் அழிந்து போன கடந்த காலம் அல்ல. ஆனால், ஒரு அர்த்தத்தில் நிகழ்காலத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற கடந்த காலம் அது என இ.எச்.கார் தன்னுடைய வரலாறு என்றால் என்ன? புத்தகத்தில் குறிப்பிடுவதை நாம் கவனத்தில் கொள்வோம். அந்த அடித்தளத்தில் கட்டப்பட்டது தான் இன்றைய அமெரிக்கா.

ஆக்கிரமிப்பு  எல்லை விரிவடைகிறது

பல ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் வளர்ந்தது. 1898 ல் ஸ்பெயின் பிடியில் இருந்த பிலிப்பைன்ஸ், ப்யூர்டோ-ரிகோவினை அமெரிக்கா கைப்பற்றியது. ஃபெலிக்ஸ் க்ரீன் கேட்கிறார்: ஹவாய் மற்றும் ப்யூர்டோரி கோவினைக் கைப்பற்ற அமெரிக்காவிற்கு கடவுள் கொடுத்த அதிகாரம் ஏதேனும் உண்டா என்று அமெரிக்க மக்கள் கேட்ட துண்டா? அந்த மக்களிடம் இது பற்றி விவாதித்ததுண்டா? இரண் டாம் உலகப் போருக்கு முன்பே பிலிப்பைன்ஸ், மெக்ஸிகோ, கியூபா, நிகரகுவா, பனாமா, ஹைதி, கொலம்பியா, பெரு, டொமினிகன் குடியரசு, கோஸ்டாரிகா, ஹோண்டுராஸ் மற்றும் கரீபியன் பகுதியில் உள்ள நாடுகளில் அமெரிக்க ராணுவம் அத்துமீறி நுழைந்ததை அமெரிக்க மக்களின் மனச்சாட்சி ஏற்றுக் கொள்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு பதில் ஏதும் கிடைக்க வில்லை. 1954 ல் 72 சதம் வாக்குகளைப் பெற்று ஜாக்கோபா அரபென்ஸ் கவுதமாலாவின் குடியரசுத் தலைவரானார்;

நிலச் சீர்திருத்தம் கொண்டு வந்தார், அன்றைக்கு அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சராக இருந்த டல்லசின் குடும்பம் பங்கு கொண்ட ஒரு நிறுவனம் பறிக்கப்பட்டது. நஷ்ட ஈடு போதாது என்று சொல்லி அதற்காக ராணுவ தளபதி காஸ்டில்லோ அராமாஸ் என்பவனைத் தூண்டி அண்டை நாடான ஹோண்டுராஸிலிருந்து படையெடுத்து, அரபென்ஸ் அரசைக் கவிழ்த்த வரலாறு அதிகமாகப் பேசப்படாத ஒன்று. ராணுவ ஆக்கிரமிப்பு முடிந்தவுடன் டல்லஸ் சொன்னது; அமெரிக்க நாடுகளின் சிறப்பான பாரம்பரியத்தில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டிருக்கிறது. சிலியில் இதே முறையில் அலெண்டே அரசும் கவிழ்க்கப்பட்டதும் ஒரு வரலாறு. அமெரிக்கா நடத்திய வியட்நாம் யுத்தம் எளிதில் மறந்து விடக் கூடிய வரலாற்று நிகழ்வா? இப்போது ஈராக். அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் அண்மையில், ஈராக்கில் மீண்டும் ஒரு வியட் நாமை சந்திக்க நேரும் என்று அமெரிக்க அரசை எச்சரித்திருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு வரலாற்றை எழுதினால் புத்தகத்தின் பக்கங்கள் முடிவு பெறாமல் போய்க்கொண்டே இருக்கும். ஆனால், புஷ் மற்றும் ஏகாதிபத்தியத்திய வாதிகள் அந்த வரலாறு நினைவு படுத்தப்படுவதை விரும்பவில்லை.

நாணயமான வரலாறு மதிப்பீடு

வரலாற்றை மறைக்க வேண்டும் என்ற ஆசை சிலருக்கு இருக்கக் கூடும். அதை மறந்தால் சமூகம் முன்னேறுவதற்கான திறனை முற்றிலும் இழந்துவிடும். திருத்தும் பேராசிரியர்கள் கடந்த காலத்தில் இந்தியா போன்ற நாடுகளில் ஆட்சி செய்த கொடுங்கோல் மன்னர்களைப் பற்றி ஏன் விமர்சிப்பதில்லை என்று கேட்கிறார்கள். ஆனால் ஒரு கொடுங்கோன்மை அமைப்பிலிருந்து மீண்டும் மற்றொன்றின் கீழ் வாழ மக்கள் விரும்புவதில்லை. ஜனநாயகம், பாராளுமன்ற அமைப்பு முறை, நிர்வாக அமைப்பு முறை இவைகளையெல்லாம் நாங்கள் தானே கொடுத்தோம் (நம் நாட்டின் பிரதமர் உட்பட சிலர் நம்புவது போல்) என்று பறைசாற்றும் மேலை நாட்டு காலனி ஆதிக்க ஆதரவாளர்கள் அந்த நாடுகளின் பாரம் பரியத்தையும், பண்பாட்டையும் முழுமையாகப் புரிந்து கொள்ளா தவர்களாகத்தான் உள்ளனர். அமர்த்தியா சென் போன்றவர்க ளெல்லாம் இந்த மண்ணுக்கு சுதந்திரமான சிந்தனையும், விவாதங் களும், கருத்துப் பரிமாற்றங்களும் மேற்கொண்ட பாரம்பரியம் உண்டு என்று பல ஆய்வுகளில் சுட்டிக் காட்டி யுள்ளனர். மக்கள் பங்கு கொள்ளும் முறைகளைக் கொண்ட கிராமப்புற அமைப்புகள் இங்கே இருந்ததுண்டு.

ஜனநாயகப் பண்புகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டின் அசைவுகள் என்று குறுக்கிவிடும் பேதமை யினை நாம் சந்திக்கிறோம். அமிதாவ் கோஷ் போன்ற வரலாற்றா சிரியர்கள் சுதந்திரச் சந்தை என்று இன்று அதிகமாகப் பேசப்படும் வணிக முறை கூட இந்தியாவிற்குப் புதிதல்ல என்றும், பிரிட்டிஷ் இங்கு வருவதற்குப் பல நூற்றாண்டுகள் கடல் கடந்த வணிகம் ஆப்பிரிக்கா மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கும் நம்நாட்டில் செயல்பட்ட பல்வேறு பேரரசுகளுக்கிடையே இருந்திருக்கிறது என்றும் விவரிக்கிறார்கள். ஆனால், காலனி ஆதிக்கவாதிகளும், ஏகாதிபத்தியமும் புதிய வரலாறு எழுத முயற்சிக்கும் போது ஒரு விஷயத்தை நமக்குச் சொல்ல விரும்புகிறார்கள். அதாவது அவர்களது உயர்ந்த நாகரிகம் மற்ற நாகரிகங்களோடு மோதுவதைத் தவிர்க்க முடியாது. ரட்யார்ட் கிப்ளிங்ஸ் என்ற ஆங்கிலக் கவிஞர் எழுதுவதுபோல்,  கிழக்கு கிழக்கு தான், மேற்கு மேற்கு தான்; இரண்டும் என்றும் சந்திக்க முடியாது என்ற நோக்கத்தோடு அவர்கள் செயல்படுகிறார்கள். பல வகையான பண்பாட்டு நுழைவினைத் தடுத்து, அந்தந்தப் பண்பாட்டினைக் கெட்டிப்படுத்தி நிறுத்துவது (இரண்டும் சந்திக்க முடியாது) ஏகாதிபத்திற்கு தேவைப்படுகிறது. அப்படிச் சந்திக்க முடியாது என்று சொல்வது காலனி ஆதிக்கத்தின் அவலச் சுவை கொண்ட பொய் என்கிறார். பிரான்ஜ் பெனான் (Franz Fanon) இக்கருத்தின் செயல்வடிவம் தான் இஸ்லாமுக்கு எதிராக புஷ் தொடங்கியிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு; யுத்தம், அதற்குப் பதிலடி கொடுப்பதாக எழுந்திருக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளும், அக்கருத்தின் மோசமான விளைவுகள்தான். இந்த ஏகாதிபத்திய அணுகுமுறை உடைத்தெறியப்பட வேண்டும். அது உண்மையான வரலாற்றுக்குப் பொய்யான முகம் கொடுத்து வண்ண வண்ண கற்பனைக் கதைகள் உலா வருவதைத் தடுத்து நிறுத்திட வேண்டும்.

கடந்த காலத்தைப் பற்றி நாணயமான மதிப்பீடு செய்ய வேண்டும். அமெரிக்க மக்களின் வரலாறு எழுதிய ஹோவர்ட் ஜின் (Howard Zinn) குறிப்பிடுகிறார் வரலாறு சாதாரண மக்களால் உருவாக்கப்படுகிறது. அவர்களில் பலரின் முகங்கள் யாருக்கும் தெரியாது; பலர் சமூகத்தின் கடைக் கோடியில் உள்ளவர்கள்; பலர் பழிதூற்றலுக்கு உள்ளானவர்கள். ஆனால், உண்மையினைப் பேச உரம் பெற்றவர்கள். நமது நாட்டு வரலாற்றைத் திருத்தி எழுதும் முயற்சியினை தேசிய ஜனநாயக முன்னணி அரசு (பா.ஜ.க.வின் வழிகாட்டுதலால்) மேற்கொண்டது நமக்குத் தெரியும். உலக வரலாற்றை மாற்ற ஏகாதிபத்தியம் எடுக்கும் நடவடிக்கையின் மற்றொரு வடிவமாகத்தான் அது இருந்தது. கடந்த காலத்தில் நடந்ததெல்லாம் மக்களின் நன்மைக்கே என்ற பிரச்சாரத்தை ஏகாதிபத்தியம் துவக்கியிருக்கும் போது, உண்மை யினைப் பேச உரம் பெற்றவர்களை பேச வைக்க வேண்டும்.

ஆதாரங்கள்

  1. Dr. Priyam vada Gopal – The Guardian 28.6.20006
  2. George Monbiot – The Hindu 28.12.2005
  3. Mike Morqusee – The Hindu 6.8.2006
  4. Felix Greene – “The Enemy”
  5. Howard Zinn – “Voices of the Peoples’s history of United States”
  6. Dee Brown – “Bury my Heart at Wounded Knee”