கொரோனா பெருந்தொற்று: சீனாவுக்கு எதிரான ஏகாதிபத்திய பொய்கள்

அபிநவ் சூர்யா

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக ஏகாதிபத்திய சக்திகள் பெரும் தோல்வியை அடைந்திருக்கின்றன. உடனே ஏகாதிபத்திய நாடுகளும், முதலாளித்துவ சிந்தனையாளர்களும் தங்கள் தோல்வியிலிருந்து திசை திருப்ப சீனாவின் மேல் அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். இயல்பாகவே வலதுசாரி சக்திகள் அறிவியல் ஆக்கத்திற்கு எதிரானவர்கள். எனவே, சீனாவிடமிருந்து பாடம் கற்க கோரும் அறிவியல் சமூகத்தின் கருத்துக்களை அவர்கள் நிராகரிக்கின்றனர்.

உலக நாடுகளின் “தலைவர்கள்” என்று கூறிக்கொள்ளும் நாடுகள், சொந்த மக்கள் எத்தனை பேர் பலியானாலும் தங்களின் அரசியல் மூலம் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முனைகிறார்கள். இது போன்ற உத்திகளுக்கு தலைமை வகிக்கும் அமெரிக்காவும் பிரிட்டனும், தாங்கள் முன்னெடுத்த ஏகாதிபத்திய போர்கள், காலனியாதிக்கங்கள், பொருளாதார கொள்கைகள் மூலம் உலகையே சூறையாடிய வரலாற்றை வசதியாக மறந்துவிடுகின்றனர். சரியாக செயல்பட்டுவரும் சீனாவிடமிருந்து நட்ட ஈடு கோரும் சிறுமையை செய்யவும் தயங்கவில்லை.

இது போன்ற ஏகாதிபத்திய சக்திகளின் அவதூறுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் அதற்காக இல்லாமல், ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மக்கள் அரசு நடத்தி வரும் சீனா, இந்த நெருக்கடியில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்வது முற்போக்காளர்களுக்கு மிகவும் அவசியம்.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நவீன தாராளமயக் கொள்கைகளை உலக நாடுகள் மீது புகுத்தி, மக்களின் நல்வாழ்வு மீதான அரசுகளின் பொறுப்பை முற்றிலுமாக ஒழித்து விட்ட ஏகாதிபத்திய தாக்குதலின் மத்தியிலே, ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, மக்கள் நலனில் அரசு முக்கிய பங்காற்றுவதன் மூலம் அசாதாரண பொருளாதார வளர்ச்சியை ஈட்ட முடியும் என்று நிறுவியது சீனாவாகும்.

கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதில் தொடக்கத்திலிருந்து சீனா என்ன நடவடிக்கைகள் எடுத்தது என்று அறிவது நமக்கு அறிவியல் ஞானம் மட்டுமன்றி, மக்கள் நலத் திட்டங்கள் குறித்த முக்கிய பாடங்களையும் வழங்குகிறது.

டிசம்பர் மாத பிற்பகுதியில் தான் ஊகான் நகர சுகாதார அமைப்பு நூதனமான, நிமோனியா போன்ற தொற்றுநோய் பரவி வருவதை கண்டறிந்தது. இந்த நேரத்திலிருந்து, சீனா இந்நோயை கட்டுக்குள் கொண்டு வர எடுத்த நடவடிக்கைகள் அனைத்துமே துரிதமாகவும், வெளிப்படையாகவும் இருந்தன.

டிசம்பர் 27 அன்று, டாக்டர் ஜாங் ஜிக்சியாங் என்பவர் தான் இந்த நிமோனியா போன்ற நோய் தொற்று ஒரு ஆபத்தான வைரஸ் மூலம் பரவி வருவதாக முதலில் சீன மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களிடம் தெரிவித்தார். அன்றிலிருந்து சீனாவின் மொத்த சுகாதார கட்டமைப்பும் துரிதமாக செயல்பட துவங்கிவிட்டன.

டிசம்பர் 30ம் தேதி அன்று, ஊகான் நகர சுகாதார ஆணையம் அனைத்து மருத்துவமனைகளுக்கும் இந்த நூதன நிமோனியா நோய்க்கு சிறப்பு கவனம் அளிக்குமாறு கூறிய பின், டிசம்பர் 31 அன்று இந்த நோய் பற்றிய தகவலை பொது மக்களுக்கு அறிவித்ததோடு, பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், முகக் கவசங்கள் அணியுமாறும் அறிவுறுத்தியது.

டிசம்பர் பிற்பகுதியில் நோயை பற்றி கண்டறிந்த சீனா, (இந்த நோயை பற்றி ஏதுமே அறியாத நிலையில்), டிசம்பர் 31ற்குள் இந்த அறிவிப்பை செய்தது. இதை ஒப்பிடுகையில், சீனா இந்நோயை பற்றி பல தகவல்கள் அளித்த பின்பும், ஜனவரி இறுதியில் முதல் நோயாளியை கண்டறிந்த பல நாடுகள் மார்ச் வரை இப்படிப்பட்ட அறிவிப்பை மேற்கொள்ளவில்லை என்பதை இணைத்து பார்க்க வேண்டும்.

இந்த நேரம் குறித்து பின்னாளில் துவங்கிய பொய் பிரச்சாரங்களில் ஒன்று, லீ வென்லியாங் என்ற டாக்டர் இந்நோயை பற்றி வெளியே கூற விடாமல் அவரை கைது செய்து சீனா முடக்கியது என்பதாகும். இந்த மருத்துவர் தன் சமூக வலைதளத்தில் சார்ஸ் போன்ற நோய் பரவி வருவதாக டிசம்பர் 30 அன்று பதிவிட்டது உண்மை தான். ஆனால் ஏற்கனவே கூறியது போல், டிசம்பர் 27 அன்றே இந்த வைரஸ் பரவி வருவது பற்றி அனைத்து சீன டாக்டர்களும் அறிந்திருந்தனர். மேலும் ஊகான் மருத்துவமனைகளும் இதற்கேற்ப நடவடிக்கைகள் எடுத்து வந்தன. ஆகையால், சீனா அதன் அறிவியலாளர்களிடமிருந்து மறைக்க ஏதுமில்லை.

மேலும், இந்த நோயை பற்றி சீனாவின் தலைசிறந்த ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வந்த நேரத்தில், முழு உண்மையை அறியாமல், இந்த டாக்டர் உரிய சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கூறாமல், நேராக சமூக வலைதளத்தில் பதிவிட்டது தவறென்று காவல்துறை அவருக்கு எச்சரிக்கை செய்தது. அதே சமயம் அவர் கைது செய்யப்பட்டதாக முதலாளித்துவ ஊடகங்கள் சொல்வது பொய்யாகும்.

மேலும் பின்நாளில் இவ்வாறு காவல்துறை எச்சரித்தது தவறு என சீன உச்ச நீதி மன்றம் தீர்ப்பளிக்க, ஊகான் மாநகராட்சி அந்த டாக்டரின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, மறைப்பதற்கு எவரும் அறியாத ஒன்றை இந்த டாக்டர் கூறவும் இல்லை; அவர் துன்புறுத்தப்படவும் இல்லை.

மேலும், இந்த நோயை பற்றிய ஆய்வை துரிதப்படுத்திய சீனா, ஜனவரி 3 அன்றே உலக சுகாதார அமைப்பையும், அனைத்து முக்கிய நாடுகளையும் தொடர்பு கொண்டு, இந்நோயை குறித்து எச்சரித்தது. இதில் அமெரிக்காவும் அடக்கம். இந்நோயை பற்றிய எச்சரிக்கையை அமெரிக்காவின் நோய் தடுப்பு ஆணையம் ஜனவரி 3 அன்று பெற்றது என்பதை அமெரிக்காவே ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் இதன் பின்பும், ட்ரம்ப் இன்றும் சீனா இந்நோயை பற்றி உரிய நேரத்தில் எச்சரிக்கவில்லை என பொய் கூறி வருகிறார்.

இதற்கு பின், ஒவ்வொரு நாளும் ஊகான் சுகாதார ஆணைய அதிகாரிகள் ஊடங்கங்களை சந்தித்து பதிலளித்ததோடு, ஒவ்வொரு நாளும் இந்த நூதன நிமோனியா நோயால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்ள்ளனர் என்பதை தன் வலைத்தளத்தில் பதிப்பித்துக்கொண்டே வந்தது.

இக்காலத்தில் முக்கிய சாதனை, ஜனவரி 12 அன்று சீன ஆய்வாளர்கள் இந்த வைரஸின் முழு மரபணு அமைப்பை கண்டறிந்தனர். இது இருந்தால் மட்டுமே இந்நோயை கண்டறியும் சோதனை  கிட்டுகளையும், இந்நோய்க்கான தடுப்பூசியையும் உருவாக்க முடியும். நோயை பற்றி அறிந்த சில நாட்களிக், இந்த மரபணு அமைப்பை கண்டறிந்தனர். இது மிகப்பெரும் சாதனை. ஒப்பீடாக, 2002ல் சார்ஸ் நோய்த்தொற்றின் பொழுதும், பின்னர் எபோலா வைரஸ் தொற்றின் பொழுதும், மரபணு அமைப்பை கண்டறிய ஆய்வாளர்களுக்கு 2-3 மாதங்கள் தேவைப்பட்டது.

மரபணு கட்டமைப்பை கண்டறிந்த சீன ஆய்வாளர்கள், உடனடியாக, வெளிப்படையாக, இந்த மரபணு அமைப்பைப் பற்றி உலக சுகாதார அமைப்பிடம் பகிர்ந்து கொண்டனர்.இதனால், லாபம் பாராமல், உலக ஆய்வாளர்கள் யார் வேண்டுமானாலும் தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்க வழி வகுத்தது சீனா.

மேலும் இந்த காலகட்டத்தில், இந்த தொற்றை பற்றி மேலும் அறியவும், கட்டுப்படுத்தவும் சிறப்பு குழுக்கள் ஊகான் மற்றும் அனைத்து நகரங்களுக்கும் அனுப்பப்பட்டன. மேலும் ஜனவரி 16ம் தேதிக்குள் “பி.சி.ஆர்” எனப்படும் சோதனைக் கருவிகளை உருவாக்கி, அனைத்து மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைத்தார்கள் (இன்று நாம் இந்த கருவியையே சோதனைக்கு பயன் படுத்தி வருகிறோம்).

இந்தக் கால கட்டத்தில், இந்த வைரஸ் ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதரிடம் பரவி வருவதைப் பற்றிய சந்தேகங்கங்கள் ஆய்வாளர்களுக்கு இருந்தாலும், உறுதி செய்ய ஆதாரங்கள் இல்லை. இதை உலக சுகாதார அமைப்பும் உறுதி செய்தது.

ஜனவரி 19 அன்று தான், சீன அரசால் ஊகான் நகரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட சீனாவின் தலை சிறந்த வைரஸ் ஆய்வாளர் ஷாங் நன்ஷங் இந்த வைரஸ் ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதரிடம் பரவி வருவதைக் கண்டறிந்து கூறினார். இதன் ஆபத்தை உடனே உணர்ந்தது சீன அரசு. ஜனவரி 20 அன்றே அதிபர் தோழர் ஜி ஜின்பிங் இந்த தொற்றின் ஆபத்தை குறித்து தேசத்திற்கு அறிவித்தார். இதன் பின் ஜனவரி 28 அன்று சீனா சென்ற உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ், சீனாவின் வெளிப்படைத்தன்மையைக் குறித்து பாராட்டினார்.

ஜனவரி 4ம் தேதியிலிருந்து 20ம் தேதி வரையிலான காலம் பற்றியே சீனா பற்றிய ஏகாதிபத்திய நாடுகளின் பொய் ஜோடிப்பு இன்று பரவலாக உள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் முக்கிய ஊடகம் ஒன்று ஏப்ரலில் வெளியிட்ட அறிக்கையில், சீனா ஜனவரி 4ம் தேதியிலிருந்து இரண்டு வாரங்களுக்கு நோயுற்றோர் பற்றிய தகவலை சேகரிக்கவில்லை எனவும், ஜனவரி 14 முதல் 20 வரை நோய் தொற்றை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு கூறியது. இந்த கட்டுக்கதையை வைத்து தான் ட்ரம்ப் உட்பட பல உலக ஏகாதிபதியவாதிகளும் இன்று சீனா மீது பழி சுமத்தி வருகின்றனர். ஆனால் இந்த பொய்க்கு எதிரான ஆதாரங்கள் நிரம்ப உள்ளன.

மேலும் ஜனவரி 20ம் தேதிக்கு பிறகு நிகழ்ந்தவை மிகவும் அசாதாரணமான நிகழ்வுகள். உடனடியாக, ஜனவரி 23 அன்றே சீன அரசு ஊகான் நகரை “லாக் டவுன்” எனும் ஊரடங்கிற்குள் கொண்டு வந்தது. இந்த தொற்றின் ஆபத்து பற்றி உலக சுகாதார அமைப்பு உணர்ந்த போதும், இது அதுவரை சந்தித்திராத புதுமையான நிலைமை என்பதால், தீர்மானமான அறிவுரையை சீனாவிற்கு வழங்க முடியவில்லை. ஆனால் சீன அரசு தைரியமாக ஊரடங்கை அமலாக்கியது.

சீன அரசு அவ்வாறு செய்வதற்கு முன், மனித வரலாற்றிலேயே எந்தநேரத்திலும், ஒரு கோடி மக்களுக்கு மேல் வசிக்கும் எந்த பகுதியிலும் “லாக் டவுன்” கொண்டுவரப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீன அரசின் இந்த புதுமையான மற்றும் தைரியமான நடவடிக்கை, இன்று உலகமே இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டியாய் உள்ளது.

இந்த “லாக் டவுன்” அமலாக்கிய பொழுது, சீனாவை சர்வாதிகாரத்தனமாக நடந்து கொள்வதாக சாடிய ஏகாதிபத்திய நாடுகள், இன்று சீனா ஏன் ஊரடங்கை இன்னும் விரைவாக அமலாக்கவில்லை என கேள்வி எழுப்புவது நகை முரண். இந்த தொற்றின் ஆபத்தை பற்றி சீனா அனைத்து தகவல்களையும் அளித்திருந்தபோதும், எந்த ஏகாதிபத்திய நாடுகளும் ஒரு மதத்திற்கு மேல் “லாக் டவுன்” அறிவிக்காமல் இருந்தன. ஆனால் தொற்றை பற்றி ஏதுமே தெரியாமல் இருந்த சீனா, ஒரே வாரத்திற்குள் “லாக் டவுன்” அறிவித்திருக்க வேண்டும் என இப்பொழுது எதிர்பார்ப்பது எவ்வளவு வேடிக்கை!

சீனா கடைபிடித்த “லாக் டவுன்”, இன்று இந்தியா கடை பிடிப்பது போல் உழைக்கும் மக்களை உணவின்றி தவிக்க விடும் கொடிய “லாக் டவுன்” அல்ல. ஹூபே மாகாணத்தின் ஒவ்வொரு தெருவிற்கும், ஒவ்வொரு பகுதிக்கும், ஒரு அதிகாரியை நியமித்து, அங்குள்ள ஒவ்வொருவருக்கும் உணவும் மருந்தும் வீட்டிற்கே கிடைப்பதை உறுதி செய்தார்கள். எவரும் வீட்டை விட்டு வெளியே வர சிறிதும் அவசியமற்ற ஏற்பாடுகள் செய்தது அரசு. பச்சை வழிப் பாதைகள் அமைத்து, சீனாவின் இதர பகுதிகளிலிருந்து ஹூபே மாகாணத்திற்க்கு உணவு, மருந்து மற்றும் இதர தேவைகள் அனைத்தும் தங்கு தடையின்றி வர வழி செய்தது. வீட்டிற்குள்ளேயே இருப்போர் மனநலத்தை உறுதி செய்ய இணைய வழி ஆலோசனை மையங்களை உருவாக்கியது. இவ்வாறு மக்கள் நலனை மனதில் கொண்டே அனைத்து நடவடிக்கைகளும் எடுத்தது.

ஒவ்வொரு படியிலும், தாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும், தாங்கள் செய்யும் தவறுகள் குறித்தும் உலக நாடுகளுக்கு அறிவித்துக்கொண்டே வந்தது சீனா. ஆனால் இந்த அனைத்து தகவல்களும் எச்சரிக்கைகளும் அறிந்திருந்த போதும், எந்த ஏகாதிபத்திய நாடும், ஏறத்தாழ இரண்டு மாதங்கள் வரை எந்த விதமான ஏற்பாடுகளும் செய்யாமல் இருந்தன.

தன் மக்களின் நலனில் சிறிதும் கவலை இல்லாத ஏகாதிபத்திய நாடுகள், அதன் முதலாளித்துவ கொள்கைகளால் இன்று தொற்று கட்டுக்கடங்காத நிலைக்கு செல்ல விட்டுள்ளன. பின் சீனா பொய்யான தகவல்களை அளித்ததாகவும், சீனாவில் அரசு அறிவித்ததை விட அங்கு பன்மடங்கு மக்கள் இறந்ததாகவும் பொய் பரப்பி வருகின்றனர். ஆனால் இதையும் பொய்யென நிறுவியது சீனா.

பிப்ரவரி இரண்டாம் வாரம், டாக்டர் பிரூஸ் அயல்வார்ட் ஒரு மருத்துவர்கள் குழுவை உலக சுகாதார அமைப்பு ஊகான் மற்றும் இதர பகுதிகளுக்கு அனுப்பியது. அவர்கள் சீனாவின் நடவடிக்கைகளை கண்டு பெருமளவில் வியந்தனர். பல்வேறு தரப்பிலிருந்தும் தரவுகளை சேகரித்த அவர்கள், சீன அரசு வெளியிட்டுள்ள தரவுகள் உண்மை தான் என்பதை உறுதி செய்தனர். இவ்வளவு சிறப்பாக, குறைந்த இறப்பு விகிதத்தோடு நோயை கட்டுக்குள் கொண்டு வந்ததைக் கண்டு ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த உண்மையை ஏற்க முடியாத ஏகாதிபத்திய நாடுகள், உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக இருப்பதாக குறை கூறுகிறார்கள். ஆனால், அங்கு சென்ற மருத்துவர்களில் பாதிப்பேர் உலக சுகாதார அமைப்புடன் சார்பு இல்லாத தன்னிச்சையான மருத்துவர்கள் ஆவார்கள். அவர்களும் இதே உண்ம்மையைத் தான் கூறுகின்றனர். ஆக, சீனா இந்நோயை திறம்பட கட்டுக்குள் கொண்டு வந்தது ஜோடிப்புகளுக்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப் பட்டது.

சீனாவின் இந்த சிறப்பான நடவடிக்கைகள் குறித்து உலக விஞ்ஞானிகளுக்கு பாராட்ட சொற்கள் இல்லை. மருத்துவர் பிரூஸ் அயல்வார்ட் சீனா சென்று கண்ட பின் கூறுகையில், “எவருமே அறியாத நோயொன்றை எதிர்கொண்ட சீனா, அதை கட்டுப்படுத்த பாரம்பரிய முறைகளோடு நவீன அறிவியலையும் கலந்து, கற்பனைக்கெட்டாத முறையில் சாதனை செய்துள்ளது” என்றும், “இந்த போராட்டத்தில் சீன மக்கள் செய்துள்ள தியாகத்திற்கு உலகமே அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது” என்றும், “சீனாவின் சிறந்த நடவடிக்கைகளால், இந்த நோயை கட்டுப்படுத்தியதோடு, இந்த தொற்றை சமாளிக்க அவசியமான விலைமதிப்பில்லாத நேரத்தை சீனா உலகிற்கு பெற்றுத் தந்துள்ளது” என்றும் போற்றினார்.

உலக சுகாதார அமைப்பின் மருத்துவர் கவுடன் கலியா, “ஒரு தொற்று நோயின் பொழுது, அது பெருமளவிலான மக்களை தாக்கி, பின் அடங்குவது தான் அதன் இயற்கையான போக்கு. ஆனால் சீனா இந்த போக்கையே மாற்றி, தொற்று நோயை முளையிலேயே வெட்டிவிட முடியும் என்று உலகிற்கே நிறுவியுள்ளது” என்று பெருமையாக கூறினார். மேலும் மக்களுக்கு பொது சுகாதாரம் வழங்குவதன் அவசியத்தை சீனா காட்டியுள்ளதாக அவர் புகழ்ந்தார்.

இது எதையுமே ஏற்க மறுக்கும் ஏகாதிபத்தியவாதிகள், முதலில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் மருத்துவர் டெட்ரோஸ் சீனாவின் கைக்கூலி என்று கூறினார்கள். பின் அனைத்து மருத்துவர்களும் சீனாவை பாராட்டியதால், மொத்த அமைப்பே சீனவின் கைக்கூலி எனக் கூறியதோடு, அந்த அமைப்பிற்கான நிதியை முடக்கியது அமெரிக்கா.

உலக சுகாதார அமைப்பின் தலைமையில் இருப்பவர்களிக் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே சீன மருத்துவர் ஆவார். இதர அனைவருமே பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள். உலக சுகாதார அமைப்பின் நிதியில் பெரும்பான்மை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிடமிருந்தே வருகின்றது. வெறும் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான நிதி மட்டுமே சீனாவிடம் இருந்து வருகிறது. உலக சுகாதார அமைப்பிற்கு சீனாவிற்கு எதிராக பேசி, அமெரிக்கா-பிரிட்டனை ஆதரிக்க அனைத்து உந்துதலும் உள்ளது. ஆனால் சீனாவை ஆதரிக்க அறிவியல் நேர்மையைத் தவிர வேற எந்த உந்துதலும் இல்லை.

இதனால் சீனா தவறுகளே செய்யவில்லை என்று கிடையாது. ஆனால் தாங்கள் செய்யும் தவறை ஒப்புக்கொண்டதோடு, அதை உலக நாடுகள் செய்யாமல் இருக்குமாறும் கேட்டுக்கொண்டனர். உதாரணமாக, சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் தொற்று பரவுவதை சற்றே தாமதமாகவே கண்டறிந்த சீனா, உடனடியாக பாதுகாப்பு உபகரணங்களை அவர்களுக்கு அளித்ததோடு, இந்த தவறை மற்ற நாடுகள் செய்யாமல் இருக்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், இன்றும் ஏகாதிபத்திய நாடுகள் தங்கள் நாட்டு சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க சரியான ஏற்பாடுகள் செய்யாமல், அவர்களின் இறப்புக்கு காரணமாகி வருகின்றன.

மேலும், இந்த நோயை சிறப்பாக கட்டுப்படுத்திய சீனாவே, தங்களின் பாதையில் பல தவறுகள் இழைத்ததாகவும், அதிலிருந்து பாடம் கற்க வேண்டும் என்றும் ஒப்புக்கொண்ட முதல் உலக அதிபர் தோழர் ஜி ஜின்பிங் தான். ஆனால் தொற்றை கட்டுப்படுத்த தவறிய ஏகாதிபத்திய அரசுகள், இன்றும் தங்களின் கொடிய தவறுகளுக்கு பிறரை குற்றம் கூறி வருகின்றன.

சீனாவின் சிறப்பான திட்டமிடுதலும், அறிவியல் ரீதியான நடவடிக்கைகளும் உலக நாடுகள் அனைத்துமே கற்க வேண்டிய முக்கிய பாடம். அனால் இதை ஒப்புக்கொண்டால், தங்கள் நாட்டில் கம்யூனிச உணர்வு வளர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில், வலதுசாரி ஏகாதிபத்தியவாதிகள் இதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். இன்றும், பல்வேறு ஆய்வுகளும் இந்த வைரஸ் எந்த ஆய்வுக்கூடத்திலும் உருவாக்கவில்ல, இயற்கையில் உருவானதே என்று உறுதியாக கூறிய பின்னும், இந்த வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவானதாக பொய்யுரைத்து வருகிறார் ட்ரம்ப். மேலும் தன்னை தேர்தலில் தோல்வியுறச் செய்ய சீனா எந்த எல்லைக்கும் செல்லும் என குற்றம் சாட்டி வருகிறார். நாள் ஒன்றிற்கு 2500க்கும் மேற்பட்டோர் மரணிக்கும் பொழுதும், ட்ரம்ப் அரசின் கவனம் மக்களை காப்பாற்றுவதில் இல்லை; தேர்தல் பிரச்சாரம் செய்வதிலேயே உள்ளது.

மக்களின் சுகாதார மற்றும் பொது நலனை சந்தைகள் உறுதி செய்ய முடியாது, அரசின் பங்கு மிக முக்கியம் என்பதை இந்த கொரொனா வைரஸ் நோய் தொற்றின் சமயத்தில் சீனாவும் இதர சோசலிச நாடுகளும் நிறுவியுள்ளன.