ஜவஹர்லால் நேரு: அனைத்திற்கும் மேலாக, மதச்சார்பற்றவர் …

பிரகாஷ் காரத்

ஒரு விடுதலைப் போராட்ட வீரராக, இந்திய முதலாளித்துவ வளர்ச்சியின் சிற்பியாக, உலக அரங்கில் இந்தியாவின் நலனை முன்னிறுத்தி செயல்பட்ட தலைவரான ஜவகர்லால் நேரு வலதுசாரி பிற்போக்கு வாதத்தை இறுதிவரை எதிர்த்துப் போராடியவர். அவரது மதசார்பற்ற கண்ணோட்டத்தை இன்றைக்கும் நினைவுகூர்ந்து முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதை வலியுறுத்தி ஜவகர்லால் நேருவின் 125வது பிறந்தநாளை ஒட்டி ஃப்ரண்ட்லைன் இதழின் 2014 டிசம்பர் 12 பதிப்பில் தோழர் பிரகாஷ் காரத் எழுதியிருந்த கட்டுரையின் முக்கியத்துவம் கருதி இப்போது தமிழில் வெளியாகிறது. – ஆசிரியர் குழு

ஜவகர்லால் நேருவின் 125வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் பின்னணியில், நேருவின் பாதை, பாரம்பரியம் ஆகியவை குறித்தும் இன்றைய காலகட்டத்தில் அவற்றின் பொருள் எத்தகையதாக அமைகிறது என்பது குறித்துமான விவாதம் இப்போது மீண்டும் எழுந்துள்ளது. நேரு முன்வைத்த தொலைநோக்கு, குறிக்கோள்கள் ஆகியவற்றுக்கு நேரெதிர் நிலைபாட்டிலுள்ள பாரதிய ஜனதா கட்சி ஓர் ஆளும் கட்சி என்ற வகையில் தலைமை வகிக்கும் நரேந்திர மோடியின் அரசு தரும் முரண்பட்ட சித்திரமானது இந்தக் கேள்வியை மேலும் கூர்மையாக்குகிறது.

இடதுசாரிகளை, குறிப்பாக கம்யூனிஸ்டுகளை பொறுத்தவரையில் நேருவின் தொலைநோக்கும் அவரது பணியும் கம்யூனிஸ்டுகளின் சொந்த வரலாறு, அவர்களது தத்துவார்த்த வளர்ச்சி ஆகியவற்றோடு ஓரளவிற்குப் பின்னிப் பிணைந்ததாகவே உள்ளன. நாட்டின் விடுதலைக்கான தேசிய இயக்கம் நடைபெற்ற காலத்தில் நேருவிற்கும் இடதுசாரிகளுக்கும் இடையே பெருமளவிலான ஒற்றுமை நிலவியது எனில், விடுதலை பெற்ற இந்தியாவில் நேருவின் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வந்த ஆண்டுகளில் அதிகமான அளவில் இடைவெளிகளும் மோதல்களும் நிலவின.

நேரு மறைந்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நேருவின் காலம் குறித்த இடதுசாரிகளின் புரிதல் என்பது மிகப்பெருமளவில் சமநிலையான, நாகரீகமான ஒரு வடிவத்தை பெற்றதாக உள்ளது.

இந்திய விடுதலைப் போராட்டத்தை தலைமைதாங்கி நடத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் மிகவும் அறிவுச்செறிவு மிக்க தலைவராக நேரு விளங்கினார். அவ்வகையில் அவரது தலைமுறையைச் சேர்ந்த பலரையும் கடந்தவராகவும் அவர் இருந்தார். மதச்சார்பின்மை, ஜனநாயகம், அறிவியல்பூர்வமான உணர்வு ஆகியவற்றை ஆதரிப்பவராகவும் நேரு இருந்தார். மகாத்மா காந்தியைச் சுற்றியிருந்த பழமைவாத, மீட்சிவாத தலைவர்கள் பலரின் கருத்துக்களுக்கு இவை முற்றிலும் முரணானவையாக இருந்தன. நேருவின் இத்தகைய நவீனமான, முதலாளித்துவ ஜனநாயகபூர்வமான அணுகுமுறையானது தேசவிடுதலைப் போராட்டத்தில் அவரை தனித்துவமானதொரு ஆளுமை கொண்டவராக ஆக்கியது.

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து முழுமையான விடுதலை என்ற கோஷத்தை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளப் போராடியவர் நேருதான். 1927ஆம் ஆண்டில் மதராஸில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் இதற்கான ஒரு தீர்மானத்தையும் அவர் முன்வைத்தார். எனினும் காந்திஜியின் வற்புறுத்தலால் நேருவின் தீர்மானம் மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதன்பிறகு 1929ஆம் ஆண்டில்தான் காங்கிரஸ் கட்சி முழுமையான விடுதலை என்ற கோஷத்தை ஏற்றுக் கொண்டது. 1921ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலேயே கம்யூனிஸ்டுகள் இந்தக் கோரிக்கையை எழுப்பியிருந்தனர். அப்போதும் கூட காந்திஜி அதை நிராகரித்தார். தொழிலாளர்-விவசாயிகளின் வெகுஜன அமைப்புகள் காங்கிரஸுடன் நேரடியாக இணைக்கப்பட வேண்டும் என்றும் நேரு விரும்பினார். எனினும் கட்சித் தலைமையை  இதை ஏற்றுக் கொள்ளச் செய்வதில் அவர் தோல்வியுற்றார்.

1936ஆம் ஆண்டில் நேரு தலைமைப் பொறுப்பில் இருந்தபோது லக்னோவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு சோஷலிசத்திற்காகப் பேசியது. ஐரோப்பாவிலும் உலகத்திலும் தலைதூக்கி வந்த பாசிஸம் குறித்தும் அதனால் ஏற்படப் போகும் அபாயங்கள் குறித்தும் அறிந்தவராகவும் நேரு இருந்தார். இந்தக் காலப்பகுதியில்தான் காங்கிரஸிற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த இடதுசாரிகள் நேருவுடன் மிக நெருக்கமாகச் செயல்பட்டு வந்தனர்.

எனினும் காந்திஜியின் மிகவும் நம்பகமான சீடராகவும் நேரு இருந்தார். தேசவிடுதலை இயக்கத்தின் வர்க்கத் தலைமையின் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்காக காந்திஜியின் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களுக்கு அதன் ஒவ்வொரு கட்டத்திலுமே நேரு அடிபணிந்தார். காந்திக்கு அடுத்தபடியாக மக்களால் பெரிதும் போற்றப்பட்ட தலைவராகவும் நேரு இருந்தார். காந்திஜியின் வாரிசு என்றும், அவருக்குப் பின்னால் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருப்பவர் என்றும் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டவராகவும் அவர் இருந்தார்.

முக்கியமாக, நேருவின் சோஷலிசம் என்பது அடிப்படையில் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரானது என்பதையும் தேச விடுதலை இயக்கத்திற்குள் பெருந்திரளான மக்களை கொண்டுவருவதற்கான ஒரு வழியாகவுமே அவர் அதைப் பயன்படுத்தினார் என்பதையும் தொடக்கத்திலேயே கம்யூனிஸ்டுகள் புரிந்து வைத்திருந்தனர். பிரதமராக ஆன பிறகு, நேரு சோஷலிசத்திலிருந்து விலகி, சமூக ஜனநாயகத்தின் பக்கம் நகர்ந்து சென்றார். இருந்தபோதிலும், 1955ஆம் ஆண்டில் சென்னை ஆவடியில் நடைபெற்ற அகில இந்திய  காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘சோஷலிச வகைப்பட்ட சமூகம்’ என்பது வலதுசாரி சக்திகளையும் கம்யூனிஸ்டுகளையும் எதிர்த்துப் போராடுவதற்கான ஓர் ஆயுதமாகவே பயன்பட்டது. 1955ஆம் ஆண்டில் ஆந்திராவில் நடைபெற்ற தேர்தல்களிலும், 1957இல் கேரளாவில் நடைபெற்ற தேர்தல்களிலும் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடிக்க நேருவின் ‘சோஷலிச’ மேடை பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

முதலாளித்துவ வளர்ச்சி

துவக்க கட்டத்திற்குப் பிறகு, பொருளாதார வளர்ச்சிக்கு உதவி செய்ய நேருவின் பார்வை மேற்கு நாடுகளை நோக்கியிருந்தது. எனினும் சுயேச்சையான, முன்மாதிரியுடன் கூடிய வளர்ச்சியுடன் இந்தியா தலையெடுக்க மேற்கத்திய நாடுகள் உதவி செய்யாது என்பதையும் பின்னர் அவர் உணர்ந்தார். எனவே முதலாளித்துவ வளர்ச்சிக்கான அடித்தளத்தை நிறுவுவதற்கு முதலாளித்துவ வர்க்கத்திற்கு தேவைப்படுகின்ற பொதுத்துறையை வளர்த்தெடுப்பதிலும் அதற்கான திட்டமிடுதலிலும் நேரு இறங்கினார். பொதுத்துறையை வளர்த்தெடுப்பதற்கு சோவியத் யூனியனிடமிருந்து உதவி பெறப்பட்டது. பெருநகர மூலதனத்திலிருந்து ஓரளவிற்கு சுதந்திரமானதாக, அரசின் உந்துதலின் மூலமான முதலாளித்துவ வளர்ச்சியாக அது இருந்தது என்பதே இதன் பொருள். முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு சில பிரிவுகள் நேருவின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும் ஒட்டுமொத்தத்தில் இது முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்கு ஏற்றதாகவே இருந்தது. இவ்வாறு நேருவிய வகைப்பட்ட பாதையானது சர்வதேச மூலதனத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிய வேண்டிய தேவையில்லாத, ஒரு வகைப்பட்ட முதலாளித்துவ வளர்ச்சிக்கான பாதையை உருவாக்கியது.

அதேநேரத்தில் நிலச் சீர்திருத்தங்களை  மேற்கொள்ளாமல், நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்து கொண்டு, அதே நேரத்தில் ஏகபோக மூலதனத்திற்கும் ஊட்டம் கொடுத்து முதலாளித்துவத்தை வளர்த்தெடுத்ததானது முரண்பாடுகளின் வளர்ச்சிக்கும் வழிவகுத்தது. இதைத் தொடர்ந்த காலப்பகுதியில் சுயேச்சையான வளர்ச்சிக்கான எந்தவிதமான வாய்ப்பையும் இது வலுவிழக்கச் செய்ததோடு, சர்வதேச நிதி மூலதனத்துடன் ஒன்றிணைவதற்கும், அதன் மூலம் ஏற்படும் விளைவுகளுக்கும் வழியேற்படுத்தித் தந்தது. நேருவிய காலத்தின் மிகப் பெரிய துரோகம் என்பது நிலச் சீர்திருத்தத்தை மேற்கொள்வது என்ற அதன் உறுதிமொழியினை நிறைவேற்ற மறுத்ததே ஆகும். நேரு அரசினால் முன்வைக்கப்பட்ட இந்த வகைப்பட்ட முதலாளித்துவ வளர்ச்சியை கம்யூனிஸ்டுகள் எதிர்த்தது மட்டுமின்றி, இதுவே சோஷலிசப் பாதை என்ற அதன் தம்பட்டத்தையும் முற்றிலுமாக நிராகரித்தனர்.

வெளியுறவுக் கொள்கை

எனினும் 1950களின் நடுப்பகுதியில் நேரு அரசு இடதுசாரி பாதையை நோக்கி மாறியதாகத் தோற்றம் அளித்தது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஆவடி மாநாடு  ‘சோஷலிச வகைப்பட்ட’ சமூகத்திற்காகப் பாடுபடப் போவதாக அறிவித்தது. (1956-61க்கான) இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் தொழில் மயமாக்கலுக்கும் பொதுத்துறைக்கும் உத்வேகம் அளித்தது. தொடக்க ஆண்டுகளில் மேற்கு நாடுகளை சார்ந்திருந்த நிலைக்குப் பிறகு, அணிசேரா கொள்கை என்ற புதியதொரு பாதையை நோக்கி நேரு வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைத்தார். இந்தக் கொள்கை சர்வதேச அமைதிக்காகவும் தேச விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவாகவும் தீவிரமாக பாடுபட்டது. இந்தக் கொள்கையிலிருந்து விலகி நின்ற சில தருணங்கள் இருந்தபோதிலும், அதிகமான செயல்திறனையும், ஓரளவிற்கு சுயாட்சியையும் கொண்டு பெருமளவிற்கு இந்திய அரசின் நலன்களுக்கு உகந்ததாக நேரு காலத்திய வெளியுறவுக் கொள்கை இருந்தது. சீனாவுடன் எல்லை மோதல் உருவான காலம் வரை இந்த நிலை நீடித்தது.

நேரு மேற்கொண்ட இத்தகைய நடவடிக்கைகள் அனைத்துமே இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளேயும், இடதுசாரிகளுக்கு உள்ளேயும் மாறுபட்ட கருத்துக்கள் தோன்ற வழிவகுத்தன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த ஒரு பிரிவினர் முற்போக்கான வெளியுறவுக் கொள்கையை உள்நாட்டுக் கொள்கையுடன் பொருத்தி வைத்து, காங்கிரஸ் கட்சியுடன் ஓர் ஐக்கிய முன்னணியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரினர். நேரு பின்பற்றிய பாதையை எவ்வித விமர்சனமுமின்றி அப்படியே ஏற்றுக் கொள்வது என்பதே இந்தக் கோரிக்கையின் உள்ளீடான அம்சமாகும். 1956ஆம் ஆண்டு பாலக்காடு நகரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நான்காவது காங்கிரஸில் இந்தப் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது. பிரதிநிதிகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்த நிலைபாட்டை ஆதரித்த போதிலும் காங்கிரஸ் உடனான ஐக்கிய முன்னணி என்ற கருத்துருவை கட்சி காங்கிரஸ் நிராகரித்தது. 1964ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவுக்கான விதை அப்போதுதான் தூவப்பட்டது.

1930களில் சோஷலிசத்தை ஆதரித்துப் பேசி வந்த நேரு முதலாளித்துவம் குறித்த சமூக-ஜனநாயக அணுகுமுறைக்கு நெருக்கமாக நகர்ந்து சென்றார். அரசு ஆதரவு பெற்ற முதலாளித்துவம் என்ற இந்த வடிவமானது மூலதனக் குவிப்புக்கு வழிவகுத்து, பெருநிறுவன குடும்பங்கள் உயிர்த்தெழவும் வழியேற்படுத்தியது. ‘விஞ்ஞான சோஷலிசம்’ என்பதிலிருந்து மேலும் மேலும் விலகிப்போன நேரு, அதை வறட்டுத்தனமான ஒரு தத்துவமாகவும் கண்டார். மேலும் சோவியத் யூனியனில் இருந்தது போன்ற ஒரு சோஷலிச அமைப்பில் வன்முறையும் வற்புறுத்தலும் உள்ளார்ந்த அம்சமாக விளங்குகின்றன என்றும் அவர் குறை கூறினார்.

பிந்தைய காலப்பகுதியில் முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அமைப்பின் உள்ளீடாக அமைந்த அனைத்துக் குறைபாடுகளையும் வெளிப்படுத்துவதாகவே நேருவின் தலைமையிலான அரசு இருந்தது. ஆளும் காங்கிரஸ் மேலும் மேலும் ஊழல் மிக்கதாக, விடுதலைப் போராட்டத்தின்போது நிலவிய சமூக, அரசியல் குறிக்கோள் அனைத்தையும் கைவிட்டதாக மாறியது. நேருவிற்குப் பிறகு காங்கிரஸில் சீரழிவு மேலும் துரிதமாக ஆனதோடு, நேரு காலத்திய நேர்மறை அம்சங்கள் அனைத்தும் ஒதுக்கப்பட்டன. புதிய தாராளவாதப் பாதையை நோக்கிய அதன் சரிவு தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது.

நேரு காலத்திய வளர்ச்சிப் பாதை குறித்த இடதுசாரிகளின் விமர்சனங்கள் இருந்தபோதிலும், நவீன இந்தியாவை உருவாக்குவதில் நேருவின் இரண்டு உயிரோட்டமான பங்களிப்புகள் இருந்தன. தேசிய இயக்கத்தில் மதச் சார்பின்மை குறித்த ஆழமான, தீவிரமான உறுதிப்பாடு வேறு எந்த தலைவருக்கும் அவரைப் போன்று இருக்கவில்லை. இந்திய அரசின் மதசார்பற்ற திசைவழியை நிறுவுவதில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு பொறுப்பேற்றது மிக முக்கியமான பங்கினை வகித்தது. நாட்டுப் பிரிவினைக்குப் பிறகு டெல்லியில் கலவரங்கள் வெடித்து, முஸ்லீம்களின் மீதான தாக்குதல்கள் நிகழ்ந்தபோது, கலவரக்காரர்களை தடுத்து நிறுத்தவும், முஸ்லீம்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவும் நேரு கலவரம் நடந்து வந்த இடங்களுக்கு நேரடியாகச்  சென்றார். வல்லபாய் பட்டேல், ராஜேந்திர பிரசாத் மற்றும் இதர காங்கிரஸ் தலைவர்கள் நேருவின் இச்செயலை வெறுத்ததோடு, அதை ஏற்றுக் கொள்ளவும் மறுத்தனர். இத்தகைய பாதுகாப்போ, சிறப்பு நடவடிக்கைகளோ எடுக்கப்படக் கூடாது என்றுதான் அவர்கள் கருதினர்.

இத்தகையதொரு தருணத்தில்தான் பெரும்பான்மையினரின் வகுப்புவாதம் “தேசியவாதம் ஆக தனது தோற்றத்தை வைத்துக் கொள்ளும் அதே நேரத்தில் சிறுபான்மையினரின் வகுப்புவாதம் அது எப்படி இருக்கிறதோ அதே வகையில் அடையாளம் காணப்படும்” என்று மிகுந்த தீர்க்க தரிசனத்துடன் நேரு எச்சரித்தார். நாட்டு விடுதலைக்குப் பிந்தைய தொடக்க ஆண்டுகளில் அரசு அமைப்பு மற்றும் அரசியல் ஆகிய துறைகளில் மதசார்பற்ற குறிக்கோளை நிறுவுவதற்காக நேரு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இடைவிடாது போராட வேண்டியிருந்தது. 1950ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக புருஷோத்தம் தாஸ் தாண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டபோது காங்கிரஸுக்குள் இருந்த இந்து பாரம்பரியவாதிகளுடனான நேருவின் இந்தப் போராட்டங்கள் உச்சநிலையை எட்டின. வகுப்புவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலும், மதசார்பற்ற ஓர் அரசை நிறுவுவதிலும் நேருவைப் போல் தெளிவான சிந்தனை, உறுதி ஆகியவற்றைக் கொண்ட வேறு எந்த காங்கிரஸ் தலைவரும் இல்லை.

1948ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக ஆன, எளிதில் அமைதிப்படுத்தி விட முடியாத வகையில் நேரு அரசின் எதிரியாக விளங்கிய பி.டி. ரணதிவே 1989ஆம் ஆண்டில் நேருவின் பிறந்ததின நூற்றாண்டு தருணத்தில் நேருவைப் பற்றிய மிகச் சிறப்பான மதிப்பீட்டை செய்திருந்தார். அப்போது அவர் எழுதியிருந்தார்: “ஆழமான மதசார்பற்ற கண்ணோட்டம், ஜனநாயகம் குறித்த நவீன கருத்தாக்கம் ஆகியவற்றைக் கொண்டிருந்த நேருவிற்குப் பதிலாக வேறு எவராவது அரசுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தால் நாட்டின் விடுதலையே அபாயத்திற்கு ஆளாகியிருக்கும்”. மேலும் “மீட்சி வாத பாரம்பரியத்தை மறுதலித்து, மதசார்பற்ற, நவீன ஜனநாயக மதிப்பீடுகளின் அடிப்படையில் மக்களை அணிதிரட்டியதில் நேருவின் தனித்துவமான பங்களிப்பை குறைத்து எடைபோட்டு விடக் கூடாது” என்றும் அவர் சுட்டிக் காட்டினார். (பி.டி. ரணதிவே, ஜவகர்லால் நேரு: ஒரு நூற்றாண்டு மதிப்பீடு, மார்க்சிஸ்ட் (ஆங்கிலம்) ஜூலை-டிசம்பர் 1989)

அதற்குள் பல்வேறு விதமான குறைபாடுகள் இருந்தபோதிலும் நாடாளுமன்ற ஜனநாயகம் நாட்டில் வேரூன்றுவதை உறுதிப்படுத்தியதில் தனிப்பட்ட பொறுப்பு நேருவிற்கே உரியது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கருடன் இணைந்து இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஜனநாயக ரீதியான கட்டமைப்பினை உருவாக்குவதற்குக் காரணமாகவும் அவர் திகழ்ந்தார். இருந்தபோதிலும், நேருவின் ஜனநாயக ரீதியான சாதனையிலும் மிகப்பெரும் களங்கம் ஒன்றும் இருந்தது. கேரளாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசின் அரசியல் ரீதியான அச்சுறுத்தலை எதிர்கொண்டபோது தனது கட்சியின் அழுத்தத்திற்கு அடிபணிந்த அவர் 1959இல் இ எம் எஸ் நம்பூதிரிபாட் தலைமையிலான அரசை கலைத்தார். இங்கும் கூட வர்க்க நலனே அவரது ஜனநாயக உணர்வுகளை மீறியதாக இருந்தது.

பாஜக- ஆர் எஸ் எஸ் ஆகியவற்றின் பிரதிநிதியாக விளங்கும் மத்திய அரசின் தற்போதைய ஆளும் கூட்டணி நேருவின் பாரம்பரியத்திற்கு முற்றிலும் மாறான ஒரு கருத்தாக்கத்தின் பிரதிநிதியாகவே இருக்கிறது. நேருவிற்கும் இந்தக் கூட்டணிக்குமான வேறுபாடு மிகப் பெரியது. மதசார்பற்ற அடித்தளத்தின்மீது ஒரு தேசியவாத உணர்வை கட்டியமைக்க இந்தியாவின் முதல் பிரதமர் தீவிரமாக முயற்சி செய்தாரெனில், தற்போதைய பிரதமர் தான் ஒரு இந்து தேசியவாதி என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்பவர். மக்களிடையே அறிவியல் பூர்வமான உணர்வை வளர்த்தெடுக்க நேரு தீவிரமாக பாடுபட்டு வந்தார் எனில், வேதகாலத்திலேயே அறிவியல் உருவாகி நன்கு வளர்ந்திருந்தது; மகாபாரத காலத்திலேயே மரபணு அறிவியல் இருந்தது; மாற்று அறுவை சிகிச்சை மூலம் உருவானவரே விநாயகர் எனப்படும் பிள்ளையார் என்பது போன்ற ஆர் எஸ் எஸ் அமைப்பின் புராணக் கதையை பரப்புபவராக நரேந்திர மோடி இருக்கிறார். இப்போது  மதசார்பற்ற மதிப்பீடுகள் குறுகிய, பிரிவினை நோக்கம் கொண்ட இந்துத்துவா தத்துவத்திற்கு விரோதமான சமூக, கலாச்சார கருத்தாக்கங்கள் அனைத்தின்மீதும் முழு அளவிலான தாக்குதல்தான்  நடந்து வருகிறது.

மதசார்பற்றதொரு அரசுக்கான நேருவின் தொலைநோக்கும் ஜனநாயக பூர்வமான வழிகளின் மூலம் அத்தகைய ஓர் அமைப்பை உருவாக்குவதற்கான அவரது முயற்சிகளும் என்றும் நிலைத்து நிற்கும் அவரது பாரம்பரியங்களாகத் திகழ்கின்றன. இவை அனைத்துமே இப்போது நேருவின் மிகப் பழைய எதிரிகளான இந்துத்துவ வாதிகளிடமிருந்து மோசமான தாக்குதலுக்கு  ஆளாகியுள்ளது. நேருவின் இந்தப் பாரம்பரியம்தான் நாம் பாதுகாத்து, வளர்த்தெடுக்க வேண்டிய ஒன்றாகும்.

தமிழில்: வீ. பா. கணேசன்                                                                  நன்றி:  ஃப்ரண்ட்லைன்

மதச்சார்பின்மையை காக்க சமரசமின்றி போராடும் மார்க்சிஸ்ட் கட்சி

(குரல் : கணேசன்)

  • அன்வர் உசேன்

இந்திய அரசியல் இயக்கங்களில் மதச்சார்பின்மையை காக்க துளி சமரசமும் இல்லாமல் போராடுவது மார்க்சிஸ்ட் கட்சிதான் எனில் மிகை அல்ல. மதச்சார்பின்மை என்பது இந்திய ஜனநாயகத்திற்கும் ஒற்றுமைக்கும் மிகவும் இன்றியமையாத கோட்பாடு என கட்சி ஆழமாக மதிப்பீடு செய்துள்ளது. எனவேதான் தனது திட்டத்திலேயே கட்சி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:

“மதச்சார்பினமை கோட்பாடுகள் அமலாக்குவதற்கு கட்சி சமரசமில்லாத போராட்டத்தை நடத்தும். இந்த கோட்பாடுகளிலிருந்து நழுவுவதற்கு செய்யப்படும் மிகச் சிறிய முயற்சியை கூட அம்பலப்படுத்த வேண்டும்; அதற்கு எதிராக போராட வேண்டும்.”  (பாரா: 5.8)

அனைத்து மதங்களையும் சமமாக பாவிப்பதுதான் மதச்சார்பின்மை என முதலாளித்துவ கட்சிகள் முன்வைக்கின்றன. மாறாக அரசின் செயல்பாடுகளிலும் அரசியலிலும் மதம் தலையிடக்கூடாது என்பதுதான் உண்மையான மதச்சார்பின்மை என கட்சி திட்டம் அழுத்தமாக முன்வைக்கிறது.

மதச்சார்பின்மையை பாதுகாக்க மதவாதத்தை எதிர்த்து மூன்று தளங்களில் மார்க்சிஸ்ட் கட்சி போராடுகிறது. அவை:

  1. சித்தாந்த கருத்தியல் தளம்
  2. அரசியல் தளம்
  3. நடைமுறை போராட்ட களம்.
சங்பரிவாரத்திற்கு எதிராக கருத்தியல் போராட்டம்!

சித்தாந்த கருத்தியல் தளத்தில் சங்கபரிவாரம் கூடுதல் முனைப்புடன் செயல்படுகிறது. கடந்த கால வரலாற்றை மாற்றி எழுத கடும் முயற்சிகள் நடக்கின்றன. குறிப்பாக இந்து-முஸ்லீம் ஒற்றுமை குறித்த அனைத்து வரலாற்று பதிவுகளையும் அழிக்க முயல்கின்றனர்.

இந்திய வரலாற்றின் மத்திய காலம் முரண்பாடுகளும் ஒற்றுமையும் கலந்த கலவையாகவே இருந்தது. சங்பரிவார அமைப்புகள் திட்டமிட்டு ஒற்றுமை அம்சங்களை மக்களின் கவனத்திற்கு வருவதை தடுக்கின்றனர். முரண்பாடுகளை மட்டுமே மிகைப்படுத்தி பொய் பிரச்சாரம் செய்கின்றனர். இதற்கு மாறாக மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரி கருத்தியல் வல்லுநர்களும் மத்தியகாலத்தின் அனைத்து அம்சங்களையும் மக்களிடம் கொண்டு செல்கின்றனர். குறிப்பாக ஒற்றுமை அம்சங்களுக்கு அழுத்தம் தருகின்றனர்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1801 மற்றும் 1806ல் நடந்த தென்னிந்திய கிளர்ச்சிகளும் 1857ல் நடந்த வட இந்திய கிளர்ச்சியும் மிக வலுவான இந்து- முஸ்லிம் ஒற்றுமை எனும் அடித்தளத்தில் பிரிட்டஷாருக்கு சவால்விட்ட மாபெரும் போராட்டங்கள் ஆகும். இந்துமுஸ்லிம்களிடையே உருவான இந்த மகத்தான ஒற்றுமையின் எந்த தகவலும் மக்களுக்கு சென்று அடையக் கூடாது என சங் பரிவாரம் கண்ணும் கருத்துமாக உள்ளது.

எனவேதான் வரலாற்றை மாற்றி எழுத கடுமையான முயற்சிகள் நடக்கின்றன. இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி வலுவான கருத்தியல் போராட்டத்தை தொடர்ந்து சமரசமில்லாமல் நடத்துகிறது. இந்த கருத்தியல் போராட்டம் மத ஒற்றுமையையும் மதச்சார்பின்மையையும் வலுப்படுத்திட உதவும் என கட்சி நம்புகிறது.

சங்பரிவாரத்தின் அரசியல் அதிகாரத்தை தடுத்த மார்க்சிஸ்ட் கட்சி:

சங் பரிவாரத்தின் அரசியல் முகமாக விளங்குவது பாரதிய ஜனதா கட்சி ஆகும். பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் தனது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை அமலாக்குவதற்கு பொன்னான வாய்ப்பு கிடைக்கும் என்பதை ஆர்.எஸ்.எஸ் அறிந்திருந்தது. ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி வாய்ப்பு கிடைத்த பொழுதெல்லாம் பா.ஜ.க. அரசியல் அதிகாரத்தில் அமர்வதை தடுத்துள்ளது.

1977ல் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி செய்தது. ஜனதா கட்சிக்குள் ஆர்.எஸ்.எஸ்.ல் உறுப்பினராக இருப்பது குறித்து முரண்பாடுகள் வெடித்தன. . ஜனசங்கம் மற்றும் பழைய காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ். பக்கமும் ஏனையோர் எதிர் பக்கமும் நின்றனர். ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக நின்ற பிரிவை கட்சி ஆதரித்தது. இதன் மூலம் சங்பரிவாரம் அரசு இயந்திரத்தில் தொடர்ந்து பங்கு பெறுவதை கட்சி தடுத்தது.

1989ல் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஒரு பக்கம் இடதுசாரிகளின் ஆதரவும் மறுபக்கத்தில் பா.ஜ.க.வின் ஆதரவுடன்தான் ஆட்சி அமைக்க முடியும் எனும் சூழல் உருவானது. எனவே வி.பி.சிங் ஆட்சியில் வலுவான பங்காளியாக இணைந்திட 85 உறுப்பினர்களை கொண்டிருந்த பா.ஜ.க. கடும் முயற்சி செய்தது. பா.ஜ.க. ஆட்சியில் பங்கேற்றால் தேசிய முன்னணிக்கு ஆதரவு இல்லை என மார்க்சிஸ்ட் கட்சி வலுவான நிலைபாடு எடுத்தது. இதன் விளைவாகவே பா.ஜ.க. வெளியிலிருந்து ஆதரவு தரவேண்டிய நிலை ஏற்பட்டது.

தாம் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவோம் எனும் இறுமாப்புடன்தான் பா.ஜ.க. 2004ம் ஆண்டு தேர்தலை சந்தித்தது. ஆனால் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. பா.ஜ.க.வின் ஆட்சியை தடுத்திட மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் காங்கிரஸ் கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தன. இந்திய மக்கள் அளித்த இந்த மகத்தான ஆதரவை காங்கிரஸ் கூட்டணி சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. நவீன பொருளாதார கொள்கைகளில் கொண்ட மோகத்தால் 2014ம் ஆண்டு ஆட்சியை பா.ஜ.க.விற்கு தாரை வார்த்த்து காங்கிரஸ்!

பாபர் மசூதி இடிப்பும் பா.ஜ.க. ஆட்சிகள் கலைப்பும்:

இந்திய மக்களின் மத ஒற்றுமையை வலுவாக சீர்குலைத்தது இரு நிகழ்வுகள். ஒன்று 1992ல் பாபர் மசூதி இடிப்பு. இரண்டாவது 2000ம் ஆண்டு குஜராத் கலவரங்கள். முன்னதாக ராஜிவ் காந்தி ஆட்சி மதச்சர்பின்மையை சீர்குலைக்கும் விதத்தில் சில தவறுகளை செய்தது. ஷா பானு வழக்கில் முஸ்லிம் மதவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சட்ட திருத்தமும் அதனை தொடர்ந்து  இந்து மதவாத அமைப்புகளுக்கு இராமர் கோவில்- பாபர் மசூதி வளாகத்தில் செங்கல் பூஜை அனுமதியும் ராஜிவ் காந்தி ஆட்சி கொடுத்தது. 1990ல் மதவாதத்தை வலுப்படுத்தும் நோக்கில் அத்வானி ரதயாத்திரை நடத்தினார். இது இறுதியில் நரசிம்மராவ் ஆட்சியில் பாபர் மசூதி இடிப்பில் முடிந்தது.

இந்த கால கட்டம் முழுதும் மார்க்சிஸ்ட் கட்சி மதச்சார்பின்மையை பாதுகாக்க வலுவான முயற்சிகளை எடுத்தது. இந்தியா முழுதும் உள்ள மதச்சார்பின்மை சக்திகளை திரட்டியது. அத்வானி ரத யாத்திரை மேற்கு வங்கத்தில் நுழைந்தால் அத்வானி கைது செய்யபப்டுவார் என தோழர் ஜோதிபாசு எச்சரித்தார். அகில இந்திய அளவிலும் ஒவ்வொரு பகுதியிலும் மதச்சார்பின்மைக்காக கட்சி செய்த பிரச்சாரங்கள் மிக ஆழமானவை! குஜராத் கலவரங்களின் கொடூர தன்மைகளை முழுதும் சேகரித்து ஆவணப்படுத்தி அவற்றை இந்திய மக்களின் கவனத்திற்கு கட்சி கொண்டு வந்த்து.

1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டதற்காக உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பா.ஜ.க. ஆட்சிகளை கலைக்க வேண்டும் எனும் கோரிக்கை வலுவாக எழுந்தது. மக்களால் தேர்நெடுக்க்ப்பட்ட மாநில அரசாங்கங்ககளை மத்திய அரசாங்கம் அகற்ற கூடாது என்பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் வலுபவான நிலை! மத்திய அரசாங்கத்தின் ஆட்சி கலைப்புக்கு முதல் பலி 1957ல் தோழர் ஈ.எம்.எஸ். தலைமை தாங்கிய அரசாங்கம்தான்! பல முறை மத்திய அரசாங்கம் மாற்று கொள்கைகளை கொண்ட மாநில அரசாங்கங்களை கலைத்துள்ளது. இந்த அரசியல் சர்வாதிகாரத்தை கட்சி கடுமையாக எதிர்த்து வந்துள்ளது.

எனினும் பாபர் மசூதி இடிப்பை அமனுமதித்த உ.பி. பா.ஜ.க. அரசாங்கம் மதச்சார்பின்மை மீது மிகப்பெரிய தாக்குதலை தொடுத்தது. அரசியல் சட்டத்தை அப்பட்டமாக மீறியது. மசூதியை பாதுகாப்போம் என உச்ச நீதிமன்றத்தில் தந்த வாக்குறுதியை உதாசீனப்படுத்தியது. இதே நிலைதான் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச அரசாங்கங்கங்கள் எடுத்தன. எனவே இந்த அரசாங்கங்கங்கள் கலைக்கப்பட்ட பொழுது மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் கட்சி இதனை வரவேற்றது. எனினும் இது ஒரு விதிவிலக்கு எனவும் எல்லா சூழல்களுக்கும் இதனை பொருத்துவது கூடாது எனவும் கட்சி கருதியது.

மதவாத கட்சியான பா.ஜ.க. தனது சுயநலனுக்காக அப்துல் கலாம் அவர்களை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைத்தது. தி.மு.க. காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் அப்துல் கலாமை ஆதரித்த பொழுதும் மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் எதிர் வேட்பாளரை களம் இறக்கின. பிரச்சனை அப்துல் கலாம் அல்ல! மாறாக மதசார்பின்மைதான் பிரச்சனை! பா.ஜ.க. முன்நிறுத்தும் ஒரு வேட்பாளரை எப்படி ஆதரிக்க முடியும்?

மதச்சார்பின்மை பாதுகாக்க உயிர் தியாகம்

மதச்சார்பின்மையை பாதுகாக்க கருத்தியல் மற்றும் அரசியல் போராட்டம் மட்டுமல்ல; நேரடி களத்திலும் மார்க்சிஸ்ட் கட்சி உயிர் தியாகம் செய்துள்ளது. மதவாதம் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள கொலை வெறி செயல்களில் ஈடுபடுகிறது. கட்சி அத்தகைய கொலை வெறி  தாக்குதல்களை சந்தித்துள்ளது.

குறிப்பாக கேரளா, மேற்கு வங்கம் மற்றும் தற்பொழுது திரிபுராவில் அத்தகைய தாக்குதல்கள் கட்சி மீது ஏவப்படுகின்றன. மிக அதிகமான தாக்குதல்கள் கேரளாவில் நடைபெற்றுள்ளன. நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மதவாதத்திற்கு எதிராகவும் மதச்சார்பின்மையை பாதுகாக்கவும் உயிர் தியாகம் செய்துள்ளனர்.

பெரும்பானமை மதவாதம் மட்டுமின்றி சிறுபான்மை மதவாதமும் இத்தகைய கொலை வெறி தாக்குதல்களில் ஈடுபடுகிறது. சமீபத்தில் தோழர் அபிமன்யூவின் கொலை இதற்கு உதாரணம். இதே போல 1980களில் சீக்கிய மதவாதம் அடிப்படையில் இயங்கிய காலிஸ்தான் அமைப்பினர் பல மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களை கொன்றனர். மதச்சர்பின்மையை பாதுகாக்க இத்தகைய உயிர்தியாகம்  மார்க்சிஸ்ட் கட்சி அளவிற்கு வேறு எந்த இயக்கமும் செய்யவில்லை என உறுதியாக கூற முடியும்.

மதச்சார்பின்மையும் சிறுபான்மை மதவாதமும்:

மதச்சார்பின்மைக்கு ஆபத்து மிக அதிகமாக பெரும்பான்மை மதவாதத்திடமிருந்துதான் வருகிறது. எனினும் சிறுபான்மை மதவாதமும் மதச்சார்பின்மையை விரும்புவது இல்லை. மார்க்சிஸ்ட் கட்சி சிறுபான்மை மதவாதத்தை விமர்சிப்பது இல்லை எனும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இது உண்மைக்கு மாறானது.

1980களின் மத்தியில் ஷா பானு வழக்கு மதச்சார்பின்மைக்கு சவாலாக முன்வந்தது. முஸ்லீம் பெண்களுக்கு ஜீவனாம்சம் உரிமை இல்லை என முஸ்லீம் அமைப்புகள் போர் கொடி தூக்கின. ஏனைய பெண்களை போலவே முஸ்லிம் பெண்களுக்கும் ஜீவனாம்சம் உரிமை உண்டு என மார்க்சிஸ்ட் கட்சி உறுதியான நிலை எடுத்தது.

இந்த கால கட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியிடமிருந்து பிரிந்த அகில இந்திய முஸ்லீம் லீக் எனும் அமைப்பு கேரளாவில் இடது ஜனநாயக அணியின் ஒரு அங்கமாக இருந்தது. இந்த அமைப்பு ஷா பானு வழக்கில் முஸ்லீம் அமைப்புகளின் நிலைபாடை ஆதரிக்க வேண்டும் எனவும் ஜீவனாம்சம் உரிமை முஸ்லிம் பெண்களுக்கும் உண்டு எனும் தனது நிலையை கட்சி மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் வற்புறுத்தியது. ஆனால் கட்சி இதனை நிராகரித்துவிட்டது.

இதன் காரணமாக தான் இடது ஜனநாயக முன்னணியிலிருந்து விலகப்போவதாக அகில இந்திய முஸ்லீம் லீக் பயமுறுத்தியது. எனினும் கட்சி தனது நிலைபாடில் மாறவில்லை. பின்னர் அகில இந்திய முஸ்லீம் லீக் வெளியேறியது. இந்த அரசியல் நிகழ்வை ஆய்வு செய்த மார்க்சிஸ்ட் கட்சி ஒரு முக்கியமான முடிவை எடுத்தது. கேரளாவில் மட்டுமல்ல; இந்தியா முழுதும் மதம் அல்லது சாதியை மட்டுமே  சார்ந்து இயங்குகின்ற எந்த ஒரு கட்சியுடனும் தேர்தல் புரிதல் உட்பட எவ்வித அரசியல் புரிதலுக்கும் முயலக்கூடாது எனும் முடிவை கட்சி எடுத்தது. எனவேதான் முஸ்லீம் லீக் கட்சியுடன் எவ்வித தேர்தல் புரிதலுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி உடன்பட்டதே இல்லை.

முத்தலாக் உட்பட பல பிரச்சனைகளில் மார்க்சிஸ்ட் கட்சி முஸ்லீம் பெண்களுக்கு ஆதரவாக உறுதியான நிலை எடுத்துள்ளது. அதன் காரணமாக முஸ்லிம் மதவாதிகளின் தாக்குதல்களையும் கட்சி சந்தித்துள்ளது. அதே சமயத்தில் முத்தலாக் பிரச்சனையை கிரிமினல்மயமாக்கும் மோடி அரசாங்கத்தின் வஞ்சக அணுகுமுறையை கட்சி கடுமையாக எதிர்க்கிறது.

சமீபத்தில் நடந்த 22வது கட்சி மாநாடு அரசியல் தீர்மானம் சிறுபான்மை மதவாதம் குறித்து கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது: “பெரும்பான்மை மதவாதத்தின் தாக்குதல்கள் சிறுபான்மை மதவாதம் மற்றும் தீவிரவாதத்தின் நடவடிக்கைகளுக்கு களம் அமைத்து தருகின்றன. சிறுபான்மை மக்களின் நலன்களுக்கே கூட இத்தகைய போக்குகள் ஆபத்தானவை. இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக மக்களின் ஒற்றுமையை உருவாக்க (சிறுபான்மை மதவாதத்தை முன்நிறுத்தும்) இத்தகைய போக்குகளுக்கு எதிராக போராடுவது அவசியமாகிறது.” (பாரா 2.49)

முஸ்லீம் மக்களின் நலன்களுக்காக உறுதியாக குரல் தரும் அதே சமயத்தில் மதச்சார்பின்மையை பாதுகாக்க சிறுபான்மை மதவாதத்தை எதிர்க்க கட்சி தயங்கியது கிடையாது..

மதச்சார்பின்மை எதிர்கொள்ளும் நவீன சவால்கள்!

நிகழ்காலத்தில் குறிப்பாக மோடி ஆட்சிக்கு பின்னர் மதச்சார்பின்மைக்கு உருவாகியுள்ள புதிய சவால்களை உள்வாங்கிகொள்வது மிகவும் அவசியமாகிறது. சில பத்தாண்டுகளுக்கு முன்பு பெரும்பாலும் உயர் சாதியினரின் ஒரு பகுதியினர், குறிப்பாக மத்தியதர வர்க்கத்தினரின் ஒரு பிரிவினர் மதவாதத்தால் ஈர்க்கப்பட்டனர் . ஆனால் இன்று சாதாரண உழைக்கும் மக்களிடையேயும் மதவாதம் ஊடுருவியுள்ளது.

உதாரணத்திற்கு குஜராத்தில் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களை திட்டமிட்டது  உயர் சாதியினர். ஆனால் களத்தில் அதனை அமலாக்கியது அதாவது முஸ்லிம்கள் மீது கொலை உட்பட வன்முறையை நிகழ்த்தியது பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் ஆதிவாசி மக்கள்தான் என்கிறார் ராம் புண்ணியானி எனும்  சமூக ஆய்வாளர். சிறுபான்மை மதவாதமும் உழைக்கும் மக்களை மதவாத செயல்களில் ஈடுபடுத்துகிறது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் மக்கள் உட்பட உழைக்கும் மக்களிடமும் கூட மதவாதம் தனது நச்சு கொடுக்குகளை பரவவிட்டுள்ளது..

மதவாதம் வெற்றிடத்தில் இயங்குவது இல்லை. நவீன தாராளமய பொருளாதார கொள்கைகள் அமலாக்கத்தின் பின்னணியில் மதவாதம் செயல்படுகிறது. நவீன தாராளமய பொருளாதார கொள்கைகள் மிக அதிகமாக ஏழைகளை உருவாக்குகிறன. தமது வாழ்வாதரத்தின் எதிர்காலம் குறித்து மிகப்பெரிய கவலை இப்பகுதி மக்களிடம் எழுகிறது. இந்த பொருளாதார சூழலை பயன்படுத்தி  மக்களின் ஒரு பிரிவினரை மதவாதம் ஈர்ப்பது மிகவும் எளிதாக நடக்கிறது. எனவேதான் மதசார்பின்மை கொள்கைகளை உழைக்கும் மக்களிடையே கொண்டு செல்வது மிக அவசியம் என மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.

பொருளாதார நெருக்கடி அதிகமாக உள்ள காலகட்டத்தில் மோடி போன்ற இந்துத்துவ அரசியல்வாதி எதிர்காலம் குறித்து பொய்யான கனவுகளை முன்வைத்தால் மக்கள் அதனை நம்புகின்றனர். மதச்சார்பின்மையை பின்னுக்கு தள்ளிவிடுகின்றனர். 2014 தேர்தல் மற்றும் அதனை தொடர்ந்து மோடியின் வெற்றி இதனை தெளிவாக்குகிறது. மோடி ஆட்சியில் நவீனதாராளமய கொள்கைகள் வெறித்தனமாக செயல்படுத்தப்படுகின்றன.

அதே மோடி ஆட்சியில் மதவாதமும் பேயாட்டம் ஆடுகிறது. சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்க லவ்ஜிகாத், மாட்டிறைச்சி போன்ற புதிய பிரச்சனைகள் கட்டமைக்கப்படுகின்றன. கிறித்துவ சிறுபான்மை மக்களும் தாக்குதலுக்கு தப்பவில்லை. அரசு அதிகாரத்தை பயன்படுத்தி சங்பரிவாரம் அரசியல் சட்டத்திலிருந்து மதச்சார்பினமை கோட்பாடை அகற்ற எத்தனிக்கின்றனர்.

ஒரு காலத்தில் முதலாளிகளுக்கு மதச்சார்பின்மை காக்கப்பட வேண்டும் எனும் கவலை இருந்தது. 1992ம் ஆண்டு மும்பை கலவரத்தை கண்டித்து ஜே.ஆர்.டி. டாட்டா, ராமகிருஷ்ணா பஜாஜ் ஆகியோர் பகிரங்கமாக அறிக்கைவிட்டனர்.  ஆனால் இன்று நவீன தாராளமய கொள்கைகள் தரும் கொள்ளை இலாபம் முதலாளித்துவத்தின் கண்களை மறைத்துவிட்டது. “மோடி காந்திஜிக்கு இணையானவர்”” “ என அம்பானி பேசியது இதனை தெளிவாக்குகிறது. சமீபகால மதவாத தாக்குதல்களை கண்டித்து எந்த முதலாளியும் வாய் திறப்பது இல்லை.

மதவாதத்தின் ஊற்றுக்கண்ணாக நவீன தாராளமயம்:

மதவாதத்திற்கு உள்ள பல ஊற்றுக்கண்களில் மிக முக்கிய ஒன்றாக நவீன தாராளமய கொள்கைகள் உருவாகியுள்ளன. நவீன தாராளமயக் கொள்கைகளை ஆதரித்து கொண்டே மதவாதத்திற்கு எதிராக மட்டும் குரல் கொடுப்பது முழு பலன் அளிக்காது. மதவாதம், நவீன தாராளமய கொள்கைகள் இரண்டையுமே எதிர்த்து முறியடிக்க வேண்டிய தேவை உள்ளது. துரதிர்ஷ்ட வசமாகவோ அல்லது தமது வர்க்க நலன்கள் காரணமாகவோ இந்த முக்கிய உண்மையை பல அரசியல் சமூக அமைப்புகள் புரிந்து கொள்ள மறுக்கின்றன.

பா.ஜ.க.வை தோற்கடிப்பது மிக முக்கிய அரசியல் கடமைதான்! எனினும் பா.ஜ.க.வின் தோல்வி என்பது ஆர்.எஸ்.எஸ்.ன் தோல்வியாகவும் அமைந்துவிடும் எனும் உத்தரவாதம் இல்லை. இந்திய சூழலை பொறுத்தவரை பா.ஜ.க.வின் தோல்விக்கு பிறகும் நவீன தாராளமய கொள்கைகள் தொடர்ந்தால் அது மதவாதத்திற்கு உகந்த களமாகவே இருக்கும். எனவேதான் மதவாதம் மற்றும் நவீன தாராளமய கொள்கைகள் இரண்டையுமே முறியடிக்க வேண்டிய அவசியம் உள்ளது என மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.

மதச்சார்பின்மையை பாதுகாக்கும் முழு கடமை உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. எனவேதான் மதச்சார்பின்மை குறித்த செயல்பாடுகள் உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் வலுவாக கொண்டு செல்ல வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மதவாதத்தை பண்பாடு, கலாச்சார தளங்களிலும் எதிர்கொள்வது அவசியம். மதவாதத்திற்கு எதிரான போரில்  அதன் நவீன வடிவங்கள் முன் நிறுத்தும் சவால்களை முறியடிப்பது அவசிய தேவை. இதனை மார்க்சிஸ்ட் கட்சி உணர்ந்துள்ளது. அதன் அடிப்படையில் மதச்சார்பின்மையை பாதுகாக்க கட்சி இடைவிடாது செயல்படுகிறது. உழைக்கும் மக்களை அணிதிரட்டி மதவாதத்தை தோற்கடிப்பதும் மதசார்பின்மையை உறுதிப்படுத்துவதும் சாத்தியமான ஒன்றே என மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக நம்புகிறது.

முறியடிக்க வேண்டிய ‘இந்துத்துவ’ நிகழ்ச்சிநிரல்!

Modi Government: New Surge of Communalismஆர்.எஸ்.எஸ் கூறும் இந்து ராஷ்டிரம் என்றரால் என்ன? என்ற தலலைப்பில் தோழர். சீத்தாராம் யெச்சூரி மேற்கொண்ட ஆய்வு, பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ‘மோடி அரசாங்கம்; வகுப்புவாதத்தின் புதிய அலை’ என்ற புத்தகத்தில் முதல் அத்தியாயமாக இடம் பெற்றுள்ளது. இந்துத்துவத்தை களத்தில் எதிர்கொண்டு முறியடிக்கும் பணியில் தோழர்களுக்கு உதவிடும் அந்த ஆய்வின் சுருக்கத் தழுவலை இங்கே வழங்குகிறோம்.


ஆர்எஸ்எஸ் இயக்கத்தினுடைய ‘இந்துத்துவ’ சித்தாந்தம் இந்து மதத்தை மேம்படுத்தும் எந்த சேவையையும் செய்ததில்லை. மாறாக மத அடையாளத்தைக் கொண்டு தன் அரசியல் குறிக்கோளை சாதுர்யமாக நிறைவேற்றிக் கொள்ள விரும்புகிறது. அப்பட்டமாக அதுவொரு வகுப்பு வாதமாகும். இந்த உண்மையை வெளிப்படுத்துவோர் மீது அந்த சித்தாந்தத்திற்காக வக்காலத்து வாங்குவோர் விஷத்தை உமிழ்கிறார்கள். இருப்பினும் இவர்களின் சித்தாந்தத்திற்கு எதிராக மிகவும் வலுவான பதில்கள் இந்து மதத் தலைவர்கள் பலரிடமிருந்தே வந்திருக்கின்றன.

“மக்களின் மத உணர்வுகள் தங்கள் அரசியல் லட்சியத்தை அடைவதற்கான பிரதான வழியாக அவர்களால் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன.   இவ்வாறு மதத்தைத் துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் அவர்கள் இந்து மதத்தின் மனிதாபிமான சாராம்சத்தின் எதிரிகளாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்”.

(குன்றக்குடி அடிகளார் நேர்காணல், ப்ரண்ட்லைன், மார்ச் 12, 1993).

களத்தை தயார் செய்தல்:

முதலில் அவர்கள் தங்கள் நோக்கத்தை அடைவதற்காக வரலாற்றையும் அறிவியலையும் கெட்டிக்காரத்தனமாக திரிக்கின்றனர். பாஜக ஆளும் பல மாநிலங்களில் பள்ளிப் பாடத்திட்டங்கள் மிகவும் அற்பமான விதத்திலும், அறிவியல் அடிப்படையற்றும் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

முதலாவதாக அவர்கள் நாட்டில் பல நூறு ஆண்டுகளாக மக்கள் மத்தியில் இருந்துவரும் பல்வகைப்பட்ட கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், மொழிகள் மற்றும் பழக்க வழக்கங்களை எல்லாம் `இந்துயிசம்’ என்கிற ஒரே பையில் திணிக்க முயல்கின்றனர். இரண்டாவதாக, அயலான எதிரி (external enemy) ஒருவரை உருவாக்குகின்றனர். அதாவது `அயலான’ என்பதன் பொருள் இந்துக்களுக்கு `அயலானவர்’ என்பதாகும். `இந்து’க்களை ஒருமுகப்படுத்திட இத்தகைய `அயலானவர்களுக்கு’ எதிராகத்தான் வெறிச் செயல்கள் விசிறிவிடப்படுகின்றன.

ஏகாதிபத்திய சேவகம்:

இந்த சமயத்தில் ஒன்றை நாம் குறித்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆர்எஸ்எஸ் இயக்கத்தவரால் அயலக எதிரியாக அந்தக் காலத்தில் நம்மை ஆட்சி செய்த பிரிட்டிஷார் அடையாளப்படுத்தப்படவில்லை. உண்மையில் அந்த சமயத்தில் மக்கள், பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தார்கள். ஆர்எஸ்எஸ் இயக்கம் பிரிட்டிஷாருக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்ததைவிட முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்ததுதான் அதிகம். அவ்வாறு முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புதான் பரப்பப்பட வேண்டும் என்று அது தன் அமைப்புகளைக் கோரியது. ஏனெனில் பிரிட்டி ஷாருக்கு எதிராகப் போராடிய இந்திய மக்கள் அனைவரையும் `இந்து ராஷ்ட்ரம்’ என்ற தங்கள் குறிக்கோளை அடைந்திட ஒன்றுபடுத்திட முடியாது என்பதை ஆர்எஸ்எஸ் அறிந்திருந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உணர்வுகள் ஒன்றுபட்ட விடுதலை இயக்கத்தின் வல்லமை அதிகரித்து வருவதன் வெளிப்பாடாகும். இதன் காரணமாக ஆர்எஸ்எஸ் இயக்கம் எப்போதுமே பிரிட்டிஷாரைத் தங்கள் எதிரியாகப் பாவிக்கவில்லை. பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டங்கள் பலவற்றை பகிஷ்கரித்தது. சில சமயங்களில் விடுதலைப் போராட்டத்தை எதிர்க்கவும் செய்தது.

சர்வதேச தொழிலாளர் வர்க்கத்திற்காக சளையாது பாசிஸ்ட் எதிர்ப்புப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஜார்ஜி டிமிட்ரோவ் கூறியதனை இங்கே குறிப்பிடலாம்: “பாசிசம் அதிதீவிர ஏகாதிபத்தியவாதிகளின் நலன்களுக்கே சேவகம் செய்கிறது. ஆயினும் மக்கள் மத்தியில் முந்தைய மோசமான ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டுவிட்டார்கள் என்று நாடகமாடி, எனவே நாட்டுப்பற்று மிக்கோர் அவர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறது.”

(டிமிட்ரோவ், 1972, ப. 11).

பன்மையை வெறுத்தல்:

மதம், அரசியலிலிருந்தும் அரசின் கட்டுப்பாட்டிலிருந்தும் தனியே பிரிக்கப்பட வேண்டும் என்றும் அதனை தனிப்பட்டவரின் பிரச்சனையாகக் கருத வேண்டும் என்கிற மதச்சார்பின்மை குறித்த நவீன சித்தாந்தத்தை கோல்வால்கர் தள்ளுபடி செய்கிறார். பல்வேறு தேசங்கள், ஒரே மதத்தை அரசு மதமாகக் கொண்டிருக்கிறது என்பதையோ, அல்லது எந்த மதத்தையும் ஏற்றுக் கொள்ளாது மதச்சார்பற்ற தேசங்களும் இருப்பதையோ மற்றும் பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட தேசங்களும் இருப்பதையோ, நாட்டின் ஒற்றுமையைக் கட்டிக்காத்திட மதத்திற்கு இடமில்லை என்று அறிவியல் பூர்வமாக மெய்ப்பிக்கப்பட்டிருக்கிற உண்மையையோ, அவர் மறுதலிக்கிறார்.

நம் நாட்டில் புழக்கத்திலிருக்கும் ஏராளமான மொழிகளையும், அவை ஒவ்வொன்றுக்குமே தனி வரலாறு, பண்பாடு மற்றும் பாரம்பர்யம் இருப்பதையும், பரஸ்பரம் தொடர்ந்து கலந்துறவாடுவதன் மூலமே தேசிய இனங்கள் உருவாகி இருக்கின்றன என்பதும் அவர்களால் ஏளனத்துடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. “கடவுள்களால் பேசப்பட்ட சமஸ்கிருத மொழி இமயமலையிலிருந்து தெற்கேயுள்ள பெருங்கடல் வரையும், கிழக்கிலிருந்து மேற்கு வரை பரவியுள்ள அனைவருக்கும் பொதுவான மொழி. மற்றும் நவீன அனைத்து சகோதர மொழிகளும் அதிலிருந்துதான் வந்திருக்கின்றன.”

(கோல்வால்கர், 1939, ப.43)

தமிழும் காஷ்மீரியும் மொழிகளில் சமஸ்கிருதக் குழு அல்லாத மூலங்களைக் கொண்டவை என்பது குறித்து அவர்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது. அல்லது அதற்காகவாவது, சமஸ்கிருத மொழியே இந்தோ ஐரோப்பிய மொழிகளின் ஒரு கிளைதான் என்றும், அது உலகத்தின் இந்தப் பகுதியில் மலர்ந்து வளர்ந்தது என்றும் கூறவேண்டும். இந்தியாவிலேயே முழுமையாகவும் பூரணமாகவும் மலர்ந்த மொழி உருது. அதனைக் காவிப் படையினர் எதிர்க்கிறார்கள் மற்றும் இந்தியைத் திணிக்க முயற்சிக்கிறார்கள்.

பாசிசத்துக்கான தத்துவ நியாயம்:

இத்தகைய திரிபு வேலைகளைச் செய்த பிறகு – தன்னுடைய ‘இந்து தேசத்தின்‘ அடிப்படையாக அமையும் சகிப்பின்மைக்கான தத்துவ அடிப்படையை விதைக்கத் தொடங்குகிறது. “அந்நியர்களாக இருப்பவர்களுக்கு இரு மார்க்கங்கள் மட்டும்தான் வெளிப்படையாக இருக்கிறது. ஒன்று அவர்கள் தேசிய இனத்துடன் முழுமையாக இணைந்து, அவர்களின் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும், அல்லது தேசிய இனம் அவ்வாறு அவர்கள் தொடர்ந்து இருப்பதற்கு அனுமதிக்கும் வரையில்  மற்றும் தேசிய இனத்தவரால் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறிட வேண்டும் என்று சொல்லும் வரை, அவர்களது கருணையின் கீழ் வாழ்ந்து கொள்ள வேண்டும்….”

“ஜெர்மனி தன்னுடைய இனம் மற்றும் கலாச் சாரத்தின் தூய்மையை அழியாமல் காப்பதற்காக, தங்கள் நாட்டில் இருந்த யூத இனத்தை அழிக்கும் வேலையில் இறங்கியதன் மூலம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இனத்தைப் பற்றிப் பெருமை கொள்வது இங்கே தெளிவாய்ப் புலப்படுகிறது. இனங்கள் மற்றும் கலாச்சாரங்கள் ஆழமாக வேரூன்றும்போது ஒன்று போலாவதைத் தடுப்பது எந்த அளவுக்கு சாத்தியமில்லை என்பதை ஜெர்மனி காட்டியிருக்கிறது. இது இந்துஸ்தானில் உள்ள நமக்கு ஒரு சரியான படிப்பினை. இதனை நாம் கற்றுக்கொண்டு ஆதாயம் அடைய வேண்டும்.”

(கோல்வால்கர், 1939, ப. 35).

`ஹிட்லர், இவ்வாறு, ‘குருஜியினுடைய குரு’ வாக வெளிப்படுகிறார். உண்மையில், இது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் திட்டத்தின் கொடூரமான குணத்தை வெளிப்படுத்துகிறது. பாசிசம் என்னும் பரிபூரணமான நவீன மற்றும் மேற்கத்திய சித்தாந்தத்தைக் கடன் வாங்கிக் கொள்வதில் இந்துத்துவாவிற்கு எவ்விதமான மனஉறுத்தலும் இல்லை. ஆனால், வெளித்தோற்றத்தில் இந்து மதத்தினை உயர்த்திப் பிடிப்பதற்கும், அனைத்துமே புராதனமானவை என்று காட்டுவதற்கும் அதனை வெகு சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. பாசிசம் தவிர மற்ற அனைத்து மேற்கத்திய சித்தாந்தங்களும் நாகரிக முன்னேற்றங்களும் `அந்நியமானவை’ என்று கண்டனத்திற்குரியவைகளாகின்றன.

மனுவை மீட்டெடுத்தல்:

கோல்வால்கர் முன்வைக்கும் இந்து ராஷ்ட்ரத்தின் சமூக ஒழுங்கைப் பற்றியும் குறிப்பிடுகிறார். அவர் மனுவை “உலகின் முதலாவதும், மாபெரும் சட்ட வல்லுநருமாவார்’’ என்று போற்றிப் பாராட்டியிருப்பதுடன், “அவர்தான் தன்னுடைய மனுதர்மத்தில் உலகில் உள்ள அனைத்து மக்களும் இந்துஸ்தானுக்குச் சென்று அந்நாட்டிலுள்ள `முதலில் பிறந்த’ பிராமணர்களின் புனிதக் காலில் விழுந்து வணங்கி, தங்களுடைய கடமைகள் என்ன என்பதைக் கற்றுத் தெளிய வேண் டும்,’’ என்றும் கட்டளையிட்டிருக்கிறார்.

(கோல்வால்கர், 1939, பக். 55-56).

மனுஸ்மிருதி என்ன கூறுகிறது? “சூத்திரனுக்கு மிகவும் சிறந்த இயற்கையாய் அமைந்த செயல் பிராமணர்களுக்குப் பணிவிடை செய்வதுதான் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இதைத் தவிர அவன் வேறு எதைச்செய்தாலும் அவனுக்குப் பலனளிக்காது”. (123, அத்தியாயம் 10).

“பெண்களுக்கு என்று தனியே வேத சுலோகங்கள், சடங்குகள் இல்லை. இது மிகவும் உறுதியாக நிறுவப்பட்டுள்ள சட்டமாகும். பெண்களைப் பொறுத்த வரை, அவர்கள் ஆண்களைப் போன்று பலம் உள்ளவர்கள் அல்ல, பொய்யைப் போல் மாசு வடிவினர். இது நன்கு நிறுவப்பட்டிருக்கிறது.’’ (19, அத்தியாயம் 9)

இன்னும் ஆணாதிக்க, சாதி ஆதிக்க அடித்தளங்கள் கொண்ட சமூகத்தை நிறுவனமயமாக்கும் சட்டங்களை வகுத்துள்ளது மனுஷ் மிருதி.

இந்தப் புரிதலின் காரணமாகத்தான் ஆர்எஸ்எஸ், சுதந்திரத்திற்குப் பின் இந்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமுன்வடிவை (Hindu Code Bill) உடனடியாக எதிர்த்தது. இன்று மனுஸ் மிருதியை உயர்த்திப் பிடிக்கும் வேலைகளில் காவிப்படையினர் உறுதியாக இறங்கியுள்ளனர். உயர்சாதி மகாராஷ்ட்ர பிராமணர்கள் ஆர்எஸ்எஸ் தலைவர்களாக இதுநாள் வரை இருந்து வருவதன் முக்கியத்துவமும் இங்கே கவனிக்கத்தக்கது.

பொய் முழக்கங்களும், மெய்யான குறிக்கோளும்:

இந்த வழிகளிலெல்லாம் காவிப்படையினர் தங்கள் தாக்குதலை எதற்கு எதிராக அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நோக்கினால் – அவர்கள் சுதந்திர இந்தியாவின் அரசியலை வரையறுத்த மதச்சார்பின்மையையும் மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்களையும் தாக்குகிறார்கள் என்பதும் தெளிவாகிறது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குத் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள்தான் காரணம் என்றும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அரசமைப்புச் சட்டத்தையும் நாட்டின் நடைமுறையில் இருந்துவரும் சட்டங்களையும் மிக மோசமான முறையில் மீறியதால் அல்ல மாறாக தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளின் காரணமாக என்கின்றனர் காவிப்படையினர்.

இத்தகைய இவர்களது உத்திகள் குறித்தும் டிமிட்ரோவ் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

“பாசிசம் மிகவும் லஞ்சம் மற்றும் கைக்கூலி வாங்குகிற பேர்வழிகளின் கருணையில் இருக்கும்படி மக்களை வைக்கிறது. ஆனால் அதேசமயத்தில் மிகவும் விரக்தியில் ஊசலாடிக் கொண்டிருக்கும் மக்களிடம் `ஒரு நேர்மையான மற்றும் லஞ்சத்திற்கு ஆட்படாத அரசாங்கத்தை’ அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன்வைக்கிறது… பாசிசம் மக்கள் மத்தியில் வெறியைக் கிளப்புவதற்கு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பிரத்தியேகமான சிறப்பியல் புகளைப் பயன்படுத்திக் கொள்கிறது. பாசிசம் மக்கள் உணர்ச்சியை வெறித்தனமாகக் கிளப்பிடும் பேச்சுக்களுக்கு, சிறு முதலாளிய வர்க்கத்தினரும், ஏன், தேவையாலும், வேலையின்மையாலும், பாதுகாப்பற்ற சூழலில் வசித்து வருவதாலும் விரக்தியினால் பீடிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களும்கூட, மிக எளிதாக பலியாகிவிடுகிறார்கள்.”

(டிமிட்ரோவ், 1972, ப. 12).

தங்களின் ஒரே நிகழ்ச்சிநிரல் ராம ஜன்ம பூமி கோவில் கட்டுவதுதான் என்று மக்கள் முன்வைத்துள்ள காவிப்படையினர், உண்மையில் ஏழை எளியோரைச் சுரண்டும் மக்கள் விரோத சட்டங்களையும், நடவடிக்கைகளையும் சுரண்டும் அமைப்புகளையும்தான் வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய குறிக்கோளுக்காக ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவு அளித்திட வெளிப்படையாகவே உதவி வரும் இவர்களின் நடவடிக்கைகள் நாட்டு மக்களுக்கு மிகவும் பாதகமான நிலைமைகளைத்தான் ஏற்படுத்தும்.

ஒட்டிப் பிறந்த முஸ்லீம் அடிப்படைவாதம்:

இந்துத்துவத்தின் திசைவழியைக் கோடிட்டுக் காட்டிய கோல்வால்கரின் புத்தகம் வெளிவந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ஜமாத்-இ-இஸ்லாமி என்னும் அமைப்பு உருவானது. 1941 ஆகஸ்ட் 26 அன்று, மௌலானா அபுல் அலா மௌடுடி என்பவர் தலைமையில் பதான் கோட்டில் அந்த அமைப்பின் முதல் மாநாடு நடைபெற்றது. ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு கோல்வால்கர் எப்படியோ அதேபோன்று ஜமாத் இயக்கத்திற்கு மௌடுடி. அவர்களுடைய அரசியல் திட்டங்களிலும், வேலைமுறைகளிலும் உள்ள ஒத்தத்தன்மை உண்மையிலேயே பிரமிக்கத்தக்கது. எப்படி `ஹிட்லர் கோல்வால்கருக்கு `ஹீரோவாக இருந்தாரோ, மௌடுடிக்கும் அவர்தான் `ஹீரோ. எப்படி கோல்வால்கர் நவீன மனித சமூக நாகரிகத்தின் அனைத்து அம்சங்களையும் – அதாவது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் நாடாளுமன்ற அமைப்புகள் அனைத்தையும் – `அந்நிய கருத்தாக்கங்கள்’ (`alien concepts’) என நிராகரிக்கிறாரோ அதேபோன்றுதான் மௌடுடியும் முஸ்லீம் அடிப்படைவாதமும் நிராகரிக்கின்றன.

மௌடுடி, 1947 மே மாதத்தில் பதான் கோட்டில் உரையாற்றிய சமயத்தில், நாடு விரைவில் இரண்டாகப் பிரிந்துவிடும் என்ற நிலை ஏற்பட்டபோது, தாங்கள் எப்படி பாகிஸ்தானில் `அல்லா’வால் வடித்துத்தரப்பட்டுள்ள சட்டங்களின் அடிப்படையில் பாகிஸ்தானை அமைக்க இருக்கிறோமோ அதேபோன்று, இந்தியர்கள் தங்கள் அரசையும் சமூகத்தையும் இந்து சுவடிகள் மற்றும் சட்டங்களின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

முறியடிக்கப்பட வேண்டிய நிகழ்ச்சிநிரல்:

வகுப்புவாதத்தின் வளர்ச்சி நிச்சயமாக இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கக்கூடிய விதத்தில் தொடர்ந்து மோதலை உருவாக்குவதற்கான ஒன்று என்பதில் ஐயமில்லை. ஆயினும், கோல்வால்கர் மற்றும் காவிப்படையினர், “இவ்வளவு கேடுகளுக்கும் நாங்கள் காரணம் அல்ல, தேசிய உணர்வு செயலற்று இருப்பதுதான் காரணம்….’’ என்று கூறுவார்கள். (கோல்வால்கர், 1939, ப. 62)

காவிப்படையினர் நாட்டு மக்கள் முன் வைத்திருக்கும் நிகழ்ச்சி நிரலும், அதனை நிறைவேற்ற தாங்கள் பின்பற்றும் நடைமுறைகளும், தங்களுடைய குறிக்கோளை அடைவதற்காக, பாசிஸ்ட் ஆட்சியாளர்கள் பின்பற்றும் வடிவம்தான். ஆனால் அதன் வடிவத்தை அவர்கள் இந்தியாவிற்கு ஏற்ற விதத்தில் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அரசின் வடிவமும், அது பின்பற்றும் சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கைகளும், பாஜக ஆளும் வர்க்கங்களிலேயே மிகவும் பிற்போக்குத்தனமான ஒரு பிரிவு என்பதை தோலுரித்துக்காட்டி இருக்கிறது.

காவிப்படையினர் ஆட்சிக்கு வருவது என்பது, மத்தியில் ஒரு கட்சிக்குப் பதிலாக பிறிதோர் கட்சி ஆட்சியை அமைக்கிறது என்பது போன்ற வழக்கமான ஒன்று அல்ல. மதச்சார்பின்மை அடிப்படையிலான நாடாளுமன்ற ஜனநாயகம் என்னும் அமைப்பு, சகிப்புத் தன்மையற்ற குருமார்களின் சித்தாந்தத்தின் அடிப்படையில் அமைந்துள்ள வெளிப்படையான பயங்கரவாத சர்வாதிகார அமைப்பு ஒன்றால் மாற்றி அமைக்கப்படுகிறது என்பது இதன் பொருளாகும். இது ஒரு வடிவ மாற்றம் மட்டும் அல்ல. மாறாக, மிகவும் நச்சுத்தன்மை கொண்ட சாராம்ச மாற்றமும் ஆகும். நவீன இந்தியாவைப் பாதுகாத்திட வேண்டுமானால், காவிப்படையினரின் இத்தகைய நிகழ்ச்சி நிரல் முறியடிக்கப்பட்டாக வேண்டும். இவர்களிடமிருந்து இந்தியா பாதுகாக்கப்படவில்லை என்றால், பின்னர் அது சிறந்ததோர் இந்தியாவாக மாற்றப்பட முடியாது.

இந்திய அரசியலில் கொள்ளை நோயாய் பரவும் வலதுசாரி கருத்தியல்

மார்க்சிஸ்ட் கட்சியின் 16வது நாடாளுமன்றத் தேர்தல் பரிசீலனையில், பிஜேபி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருப்பது, இந்திய அரசியலில் வலதுசாரி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இடைக்காலத்தில் நடந்திருக்கும் நிகழ்ச்சிப் போக்குகளும் இதை நிரூபித்திருக்கின்றன. வலதுசாரி திருப்பம் என்று எதைச் சொல்கிறோம் என்று புரிந்து கொள்வது தேவையாயிருக்கிறது.

முதலில் அரசியலில் இடதுசாரி, வலதுசாரி என்ற சொற்பிரயோகம் எதைக் குறிக்கிறது என்று பார்ப்போம். 1789 பிரெஞ்ச் புரட்சியின் போது, தேசிய நாடாளுமன்றத்தில் புரட்சிக்கு ஆதரவானவர்கள் அவைத் தலைவருக்கு இடதுபுறமும், மன்னராட்சிக்கு ஆதரவானவர்கள் வலதுபுறமும் பிரித்து உட்கார வைக்கப்பட்டனர். பொதுவாக முற்போக்குவாதம், சோஷலிசம், கம்யூனிசம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, பெண் சமத்துவம், ஜனநாயகம், பரந்த பார்வை, சமத்துவ பார்வை, பாகுபாடுகள் எதிர்ப்பு, பொதுநலன் நாடல் போன்றவை இணைந்தது இடதுசாரிக் கண்ணோட்டம். பிற்போக்குவாதம், சமூகப் படிநிலை அப்படியே இருக்க வேண்டும் என்ற கருத்து, பாசிசம், சர்வாதிகாரம், ஆளும் வர்க்க நலன்களை பகிரங்கமாக ஆதரிப்பது, மதவாதம், சாதிய ஒடுக்குமுறை போன்ற அம்சங்கள் இணைந்தது வலதுசாரிக் கண்ணோட்டம். பொதுவாக இடதுசாரிக் கருத்தியல் முற்போக்கு என்றும், வலதுசாரி கருத்தியல் பிற்போக்கு என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு தனிமனிதர் அல்லது நிறுவனத்துக்கு ஒரு விஷயத்தில் முற்போக்குப் பார்வையும், மற்றொன்றில் பிற்போக்குப் பார்வையும் இருக்கலாம். அதை மட்டும் வைத்து வலதுசாரியா அல்லது இடதுசாரியா என்று எடை போட்டுவிட முடியாது. அரசியல், சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம் என அனைத்துத் துறைகளிலும் ஒட்டுமொத்தப் பார்வை இடதுசாரியா அல்லது வலதுசாரியா என்று பார்க்க வேண்டும். இடதுசாரி, வலதுசாரி கருத்தாக்கங்களிலும் பல நிறங்கள், நீரோட்டங்கள் உள்ளன.

பொதுவாக இந்த அளவுகோலில் உலக அரசியல் அரங்கில் கட்சிகள், கொள்கைகள், தத்துவங்கள் எடை போடப்படுகின்றன. இந்தியா உட்பட எந்த ஒரு சமூகத்திலும் இரு பகுதியாளர்களும் உள்ளனர். இரண்டு கருத்துக்களும் இருக் கின்றன. இருப்பதை மாற்றாமல், அதற்குள்ளேயே சில முன்னேற்றங்களைத் தேடும் மையத்துவவாதிகளும் (Centrists) உள்ளனர். ஆனால் ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் அல்லது ஆட்சிக்கு வர விரும்பும் ஒரு கட்சியின் கொள்கைகள், சித்தாந்தம் எந்த வகை என்று பார்க்க வேண்டும். ஏனெனில், சமூகம், பொருளாதாரம், அரசியல், பண்பாடு என்று அனைத்துத் தளங்களிலும் தேசத்தை அவ்வகையில் செலுத்த அந்தக் கட்சி முயற்சிக்கும். அது இடதுசாரிப் பாதையில் செலுத்த முயற்சிக்கிற கட்சியின் ஆட்சியாக இருந்தால், மக்களுக்கு அது நன்மை தரும். வலதுசாரிப் பாதையில் செலுத்துகிற ஆட்சியாக இருந்தால் பொது நலனுக்கு அது ஆபத்தாக முடியும்.

தேசியவாதம் என்பது முற்போக்கா?

உதாரணமாக, ஹிட்லரின் ஆட்சியின் அடிப்படையாக ஆளும் வர்க்க நலன் என்பதுடன் பாசிஸம், இன அழிப்பு உள்ளிட்டவை இருந்ததால் வலதுசாரி என்று சொல்கிறோம். தாலிபான், அல்கொய்தா போன்ற அமைப்புகளை, மத அடிப்படைவாதம், ஜனநாயக மறுப்பு, ஆணாதிக்கம் போன்ற குணாம்சங்களின் அடிப் படையில் வலதுசாரி என்றே வரையறுக்க வேண்டும். இஸ்ரேல் அரசின் அடிப்படை பார்வை யூத இனவெறி, எனவே அதை வலதுசாரி அரசு என்று பார்க்கிறோம். அமெரிக்காவில் செயல்பட்ட கூக்ளக்ஸ் கிளான் போன்ற அமைப்புகளைப் போல் தற்போது சில ஐரோப்பிய நாடுகளில் குடிபெயர்ந்து வந்து உழைக்கும் தொழிலாளிகளை வேட்டையாடும் அமைப்புகள் செயல்படுகின்றன. தேசியம் என்ற பெயரில் இவை வன்முறையில் இறங்குகின்றன. இவை வலதுசாரி அமைப்புகளே. மதம், தேசியம், இனம், மொழி என்று பல அடையாளங்களில் எது வேண்டுமானாலும் அல்லது எல்லாமே வலது சாரிக் கருத்தியலின் மையமாகப் பயன்படக் கூடும்.

உலகின் பல நாடுகளில் தேசியம் அல்லது தேசியவாதம் என்பது வலதுசாரிப் பாதையின் முகமூடியாகப் பயன்படுகிறது. தேசியம் என்பதில் என்ன தவறு என்ற கேள்வி எழக்கூடும். தேசியம் என்பதில் பல வகை உண்டு. அதிலும் வலதுசாரி இடதுசாரி கண்ணோட்டங்கள் உள்ளன. கம்யூனிஸ்டுகள் முன்வைக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கத்துடன் கூடிய வர்க்க நலன் இணைந்த தேசியம் உண்டு. சில அரபு நாடுகளில் மதச்சார்பற்ற அரபு தேசியம் என்பது பேசப்படுகிறது. ஹிட்லர் முன்வைத்தது உயர் இனப் பெருமையை மையப்படுத்தும் தேசியம். இதன் மூலம் இதர தேசிய இனங்களை அழித்தொழிப் பது என்பது நியாயப்படுத்தப்பட்டது. இது பாசிஸத்துக்குப் பயன்பட்டது. தாலிபான்கள் உள்ளிட்ட அமைப்புகள் செயல்படுத்தும் மத அடிப்படைவாத தேசியம் இருக்கிறது. அமெரிக்கா தன் பல்வேறு ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த உள்நாட்டுக்குள் தேசியத்தை முன்வைத்துப் பேசுகிறது. இந்தியாவில் பிஜேபியின் பிரச்சாரம் கலாச்சார தேசியம் என்பதை மையப்படுத்துகிறது. அதாவது இந்துக் கலாச்சாரம்தான் இந்தியாவின் கலாச்சாரம். அதை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் தேசிய வாதிகள் அல்ல என்பது. தேர்தல் காலத்தில், நரேந்திர மோடி, நான் ஒரு இந்து தேசியவாதி என்று பிரகடனப்படுத்திக் கொண்டார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், இந்துத் வம்தான் இந்தியாவின் அடையாளம் என்று திரும்பத் திரும்பக் கூறுகிறார். இது இதர மதங்களைச் சேர்ந்தவர்களை எதிரிகளாக உருவகப்படுத்தி இந்தியாவின் ஒருமைப்பாட்டை குலைப்பது, காப்பது அல்ல. எனவே, தேசியம் என்பதே முற்போக்கு ஆகி விடாது. அதன் உள்ளடக்கத்தைப் பொறுத்தே நிர்ணயிப்புக்கு வர முடியும்.

இந்தியா விடுதலை அடைந்த பிறகு நவீன இந்தியாவின் அடித்தளம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற விவாதம் நடந்த போது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் மத அடிப்படையில் இந்துராஷ்டிரமாக இந்தியா அமைய வேண்டும் என்று வற்புறுத்தினர். காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உட்பட பெரும்பான்மையினர் இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க ஜனநாயகம், மதச்சார்பின்மை, அறிவியல் நோக்கு, சமத்துவம் என்ற அஸ்திவாரம் தேவை என்று வலியுறுத் தினர். இறுதியில் அரசியல் நிர்ணய சபையால் ஆர்.எஸ்.எஸ். கண்ணோட்டம் நிராகரிக்கப்பட்டு, பன்முகத்தன்மை கொண்ட நவீன இந்தியா உருவாக்கப்பட்டது. அத்துடன் அந்த விவாதத் துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்று சிலர் நினைத்திருக்கலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ். விட்டுவிடவில்லை என்பது தான் உண்மை.

மேல்பூச்சு

காந்தி கொலையின் பின்னணியில் தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., தடையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள, தன்னை ஒரு கலாச்சார அமைப்பாகப் பிகடனம் செய்துகொண்டது. ஆனால், அதன் அரசியலை கவனிப்பதற்காக பாரதீய ஜனசங்கம் உருவாகி, அதன் தொடர்ச்சி யாகத் தற்போது பாரதீய ஜனதா கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கலாச்சார தேசியம், இந்து தேசியம் என்ற பேரில் சங் அமைப்பின் வலதுசாரி இந்துத்வ அரசியல் கருத்தியலை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோதே இது நடந்தது. ஆட்சி அதிகாரம் கையில் இருந்தால் இன்னும் தீவிரமாக நடக்கும் என்பதைத்தான் வாஜ்பாயி ஆட்சியில் பார்த்தோம். ஆனால், அப்போது பிஜேபிக்குப் பெரும்பான்மை இல்லாத நிலை யில் கூட்டணி ஆட்சியாக இருந்ததால், பல விஷ யங்களை நினைத்த அளவு செய்யமுடியவில்லை. இப்போது கூட்டணி ஆட்சி என்ற பெயர் இருந் தாலும், இது பிரதானமாக பிஜேபி ஆட்சியாகவே இருக்கிறது. முக்கிய அமைச்சரகங்கள் உள்துறை, பாதுகாப்பு, அயல்துறை, தொழில், வர்த்தகம், மனிதவளம், ஊரக வளர்ச்சி எல் லாமே பிஜேபி கையில்தான். இந்துத்துவக் கருத்தியல்களை நடைமுறைப்படுத்துவதை நோக்கி நகர இது மிக உதவியாக இருக்கும்.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு உத்தர பிரதேசத்தில் மட்டும் 27க்கும் மேற்பட்ட மத ரீதியான தாக்குதல்கள் நடந்துள்ளன. இவற்றைப் பற்றிய சிறு விமர்சனம் கூட மோடியால் செய்யப்பட வில்லை. அதை எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால் சுதந்திர தின உரையில் வகுப்புவாத, சாதிய மோதல்களுக்குப் பத்தாண்டுகள் தடை விதிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். குஜராத் முதலமைச்சராக இருந்த போது நடந்த மதவெறிக் கொடுமைகளுக்கு, பிரதமர் வேட் பாளராக இருந்த போது கூட வருத்தம் தெரிவிக்காதவர் திடீரென மாற்றிப் பேசுவதால் யார் நம்பிவிடப் போகிறார்கள்? கடந்த காலத்தில் பிரதான மதவெறித்தாக்குதல்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை குழுக் களின் அறிக்கையைப் பார்த்தாலே உண்மை புரியும். ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் (மும்பை 1992-93), டி.பி.மதான் கமிஷன் (பிவாண்டி, ஜால்காவ், மஹத் 1970) ஜோசஃப் வித்யாத்தில் கமிஷன் (தலைச்சேரி 1971), ஜக்மோஹன் ரெட்டி கமிஷன் (ஆமதாபாத் 1969), வேணுகோபால் கமிஷன் (கன்னியாகுமரி 1982), ஜிதேந்திர நாராயண் கமிஷன் (ஜாம்ஷெட்பூர் 1979) ஆகிய கமிஷன்கள் எல்லாமே, இரண்டு முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டியிருக்கின்றன. ஒன்று, மத மோதல் களைத் தூண்டுவதில், நடத்துவதில் இந்துத்துவ அமைப்புகளின் கிரிமினல் நடவடிக்கைகள், வன் முறைகள்; இரண்டு, காவல்துறையின் சிறு பான்மை விரோத அணுகுமுறை. விசாரணைகளின் போது, இந்துத்துவ ஆசாமிகளின் பங்கேற்பை மறைப்பதற்குக் காவல்துறையும், நிர்வாகமும் மிகுந்த பிரயத்தனம் எடுத்துக் கொண்டதும் வெளிப்படுத்தப்படுகிறது. அரசியலில் மட்டுமல்ல, அனைத்துத் துறைகளிலும் வலதுசாரி பார்வை இருப்பவர்கள் பொருத்தப் படுவார்கள் என்பதும் புரிகிறது. இதையெல்லாம் செய்து கொண்டே, மோதல்களை நிறுத்த வேண்டும் என்று ஒரே ஒரு உரையில் மட்டும் பொதுவாகப் பேசுவது மேல் பூச்சு தான்.

திருத்தப்படும் வரலாறு:

இந்து தேசியம் அதாவது இந்துக்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள் என்பது கோல்வால்கரின் அசைக்க முடியாத கூற்று. அதிலிருந்து தான் உள்நாட்டு எதிரியாக வரையறுத்து சிறுபான்மை மத எதிர்ப்பு கட்டப் படுகிறது. ஆனால் ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்று வரலாற்றியலாளர்கள் கூறுவது இதற்கு ஒத்துப் போகவில்லை. எனவே இதை மேற்கத்திய நிபுணர்களின் சந்தேகத்துக்குரிய கூற்று என்று கோல்வால்கர் ஒதுக்குகிறார். ஆகவே வரலாற்றைத் திருத்த வேண்டிய அவ சியம் இந்துத்துவவாதிகளுக்கு ஏற்படுகிறது. இவ்வேலையை கோல்வால்கர் துவங்கியும் வைத் திருக்கிறார். திலகர், ஆர்டிக் பிரதேசம் வேதங் களின் தாயகம் என்று சொன்னதை ஆதரித்தால், இந்தியா இந்துக்களின் தேசம் என்று சொல்ல முடியாது. அதே சமயம் திலகரை மறுக்கவும் முடியவில்லை. கடைசியில், ஆர்டிக் பிரதேசம் இந்தியாவின் பிஹார், ஒரிசாவுடன் இருந்ததாகவும், பிறகு இந்துக்களை இந்தியாவில் விட்டு விட்டு, விலகி விலகி சென்று தற்போது இருக்கும் இடத்தில் இருப்பதாகவும் கோல்வால்கர் எழுதியதை, தோழர் சீதாராம் யெச்சூரி சுட்டிக் காட்டியிருக்கிறார். பூகோள ஆய்வுகளை இது மீறுகிறது என்பது மட்டுமல்ல, மக்களை விட்டு விட்டு நிலப் பிரதேசம் மட்டும் இடம் மாறுமா என்றும் கேள்வி எழுப்புகிறார். திப்பு சுல்தான் போன்றவர்கள் கோயில்களுக்கு மானியம் கொடுத்ததும், சில இந்து மன்னர்கள் கோயில்களை இடித்ததும் வரலாற்றின் பகுதிதான். வரலாற்றிலிருந்து உண்மைகளைத் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டுமே தவிர, அவரவர் கொள்கைக்கு ஏற்றவாறு வரலாற்றைத் திருத்துவது பேராபத்தில் போய் முடியும்.

ஏற்கனவே வாஜ்பாய் ஆட்சியின் போது, முரளி மனோஹர் ஜோஷி, மனித வள மேம் பாட்டுத் துறையின் அமைச்சராகப் போடப்பட்டு, முக்கிய பொறுப்புகள் பலவற்றில் ஆர்.எஸ்.எஸ். நபர்களை நியமித்தார் என்பதை இங்கே நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். பாபர் மசூதி இடிப்புக்கு சாதகமாக ஆர்.எஸ்.எஸ். வரலாற்றியலாளர்கள் சாட்சியங்களை உரு வாக்கியதும் ஓர் உதாரணம். தற்போது மோடி ஆட்சியில் இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சிலின் தலைவராக ஒய்.எஸ்.ராவ் நியமிக்கப்பட்டுள் ளார். இவர் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பாரதீய இதிகாச சமிதியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த சமிதி, இந்து தேசிய நோக்கில் இந்திய வரலாறு எழுதப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கும் அமைப்பு. கலியுகத்தின் துவக் கத்திலிருந்து(!) வரலாறு எழுதப்பட வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள். ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு, அதை உள்ளடக்கிய இந்து தேசியம் என்று கட்டமைக்கும் ஆர்.எஸ்.எஸ். கண்ணோட்டத்தின் வலுவான பிரச்சாரகர்தான் ராவ்.

உள்துறை அமைச்சகத்தின் ஆயிரக்கணக்கான கோப்புகள், பிரதமரின் உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டன, அதில் காந்தி கொலை செய்யப்பட்ட செய்தியை மக்களுக்குத் தெரிவிக்கும் முன் நடந்த மத்திய அமைச்சரவை கூட்ட மினிட்சும் அடங்கும் என்கிற செய்திகள் அண்மையில் வெளிவந்தன. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் புருஷோத்தம் அகர்வால், தகவல் உரிமை சட்டத் தின் கீழ் பல கேள்விகளை இது குறித்து அரசுக்கு அனுப்பியுள்ளார். இது, மார்க்சிஸ்ட் கட்சியால் நாடாளுமன்றத்தில் எழுப்பப் பட்ட போது, அரசு அதை மறுத்திருக்கிறது. இருப்பினும் இது குறித்த உண்மை ஆழமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியிருக்கிறது. இதுவும் வரலாற்றைத் திருத்துவதன் ஒரு பகுதி தான். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆபத்தான பங்கு பாத்திரம் மறைக்கப்படும் முயற்சியே இது.

அதேபோல் இந்திய அரசியல் சட்டத்தின் படி குடியுரிமை என்பதற்கு மதம் அடிப்படையாக இல்லை. இந்தியாவுக்குள் குடியிருப்பது என்பதுதான் அடிப்படை. எனவேதான் குடியுரிமை அடிப்படையில் மதச்சார்பில்லாமல் சம உரிமை கள் வழங்கப்படுகின்றன. இந்துக்களைத் தவிர மற்றவர்கள் இரண்டாம் தரத்தினராக நடத்தப் பட வேண்டும் என்ற கோல்வால்கரின் கூற்றும் இதில் அடிபட்டுப் போகிறது. அரசியல் சட்டத் தைத் திருத்த வேண்டும் என்ற குரல்கள் கடந்த காலத்தில் ஓயாமல் எழுந்ததற்கு இதுவே பிரதான காரணம். தற்போதும் இதை நோக்கிக் காய்கள் நகர்த்தப்படும்.

கற்பனைகள் மட்டுமே கல்வியாய்:

அரசியல் அமைப்புச் சட்டக் கோட்பாடுகள், பொதுவாக ஒரு நாட்டின் கண்ணோட்டத்தைப் பிரதிபலிப்பவை. அப்படிப் பார்த்தால், கல்வித் திட்டம் ஜனநாயகம், மதச்சார்பின்மை, அறிவியல், சமத்துவக் கருத்துக்களை வளர்ப்பதாக இருக்க வேண்டும். நவீன தாராளமய காலத்தில் கல்வி வணிகமயமான சூழலில், இந்த மதிப்பீடுகள் பின்னுக்குத் தள்ளப் படுகின்றன என்ற விமர்சனத்தைத் தொடர்ந்து இடதுசாரிகள் முன்வைக்கின்றனர். இந்த மதிப்பீடுகள் மேற் கத்திய மதிப்பீடுகள் என்று குறை சொல்லி, கல்வியை இந்திய மயமாக்கப் போகிறோம் என்று பிஜேபி புறப்பட்டிருக்கிறது. இந்திய மரபில் முற்போக்குக் கருத்தியல்கள் எப்போதும் இடம் பெற்றே வந்திருக்கின்றன. ஆனால், பிஜேபி அமல்படுத்த முனையும் இந்தியமயம், இந்திய மரபின் பிற்போக்கு அம்சங்களைத் திணிப்பது தான். வாஜ்பாயி காலத்திலும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன.

தீனா நாத் பாத்ரா என்பவர் எழுதிய 7 புத்தகங் கள் அண்மையில் குஜராத் பள்ளிகளில் அறி முகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதற்கு முன் னுரை எழுதியதன் மூலம், அதன் உள்ளடக்கத் துக்கும் சேர்த்து ஒப்புதல் வழங்கியிருக்கிறார் மோடி. மஹாபாரத காலத்திலேயே ஸ்டெம் செல் கண்டுபிடிக்கப் பட்டதாகவும், கௌரவர்கள் உருவானது அந்த அடிப்படையில்தான் என்றும், வேதகாலத்தில் கார், விமானம் போன் றவை இருந்தது என்றும், பார்வையற்ற திருதராஷ் டிரருக்கு ஒரு ரிஷி, எங்கோ நடக்கும் பாரதப் போரை அரண்மனையில் உட்கார்ந்து கொண்டே, காட்சி காட்சியாக விவரித்தார், ஞான திருஷ்டி தான் டிவியாக உருவானது என்றும் எழுதியிருக்கிறார். குழந்தை இல்லாத வர்கள், பசுக்களைப் பாதுகாத்தால் போதும், குழந்தை பிறக்கும் என்பதெல்லாம் பள்ளிப் பாடங்களாக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே பாத்ரா தலைமையில் ஒரு தன்னார்வ அமைப்பு உருவாக்கப்பட்டு, கல்வியை இந்தியமயப்படுத்துவதற்கான ஆலோசனைகளை அது அரசுக்குக் கொடுக்கும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. கல்வியின் உள்ளடக்கம் கற்பனைகளையும், கட்டுக்கதைகளையும் கொண்டதாக மாறினால் அரசியல் சட்டத்தின் முற்போக்கு மதிப்பீடுகளுக்கு என்ன பொருள்? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று எழுதிவைத்து விட்டு, சமத்துவத்துக்கு எதிரான பிற்போக்குக் கருத்தியலைக் கற்றுக் கொடுப்பது எத்தகைய ஒரு முரண்பாடு? எதிர்கால சந்ததியைக் கடைந்தெடுத்த மதவாதிகளாக, அறிவியலின் வாசனையேபடாத அறிவிலிகளாக வளர்ப் பதற்காகவா கல்விக்கூடங்கள்? சிறுபான்மையினர் நடத்தும் கல்விக் கூடங்களில் இந்தப் பாடத்திட்டத்தைத் திணிப்பது ஒருமைப்பாட் டுக்கு எவ்வாறு உதவும்? தனியார் கல்வி நிலையங்களில் பாடத்திட்டத்தை நிர்ணயிப்பது உட்பட முக்கிய அம்சங்களில் அரசு தலையிட வேண்டும் என்று சொன்னது, அரசியல் சட்ட மாண்புகளை உயர்த்திப் பிடிப்பதற்குத் தானே தவிர, அடுத்த தலைமுறையைப் பல நூற்றாண்டுகள் பின்னோக்கி செலுத்துவதற்காக நிச்சயம் அல்ல. அனைத்து மதங்களைச் சார்ந்த நூல் களையும் அறிமுகப் படுத்தும் வேலையைப் பள்ளிக் கல்வி செய்ய வேண்டிய அவசியமில்லை. அவை நூலகத்தில் இருக்கட்டும். எல்லோரும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கட்டும். பல்கலைக்கழக அளவில் ஆய்வுக்காகப் பயன்படட்டும்.

அயல்துறை கொள்கையில்:

பொதுவாக அணிசேரா இயக்கம், சோஷலிச நாடுகளுடன் நட்புறவு போன்ற அணுகுமுறை இடதுசாரிப் பார்வை கொண்டது. ஏகாதிபத்திய நாடுகளுடன் நெருக்கம், அதற்கேற்ப உலக நிகழ்வுகளின் மீது ஏகாதிபத்திய சாய்மான நிலைபாடுகளை எடுப்பது என்பது அயல்துறை கொள்கையை வலதுசாரிப் பாதையில் திருப்புவதாகும். இப்பாதை ஏகாதிபத்திய உலகமய கட்டத்தில் காங்கிரசாலும் பின்பற்றப்பட்டதுதான்.   அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக இந்தியாவை மாற்றியது காங்கிரசாக இருந்தாலும், அன்றைக்கு அதை ஆதரித்து, இன்றும் அதில் தொடர்வது பிஜேபி. பாலஸ்தீனத்தை அநீதியாக ஆக்கிரமிக்கும் இஸ்ரேலுடன் நெருக்கமான உறவு, ராணுவ ஒத்துழைப்பு போன்றவையும் வாஜ்பாயியின் ஆட்சிக் காலத்திலேயே ஏற்பட்டது. மோடி ஆட்சியிலும் தொடர்கிறது. பிஜேபி எதிர்க்கட்சியாக இருந்த காலத்திலேயே அண்டை நாடுகளுடன் குறிப்பாக பாகிஸ்தானுடன் ஒரு கடினமான, வெறியை உருவாக்கும் அணுகுமுறையையே (Jingoism) கடைப்பிடித்தது. மோடி பதவி ஏற்பின் போது சார்க் நாடுகளின் ஆட்சியாளர்களை அழைத்து ஒரு பொது தோற்றத்தை ஏற்படுத்தினாலும், தற்போது பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தையை நிறுத்தியது அதன் உண்மை முகத்தைக் காட்டுகிறது.

பகிரங்கப்படும் ஆணாதிக்கம்

பெண் சமத்துவம் மறுக்கப்படுவதும், ஆணாதிக்கக் கருத்தியலுக்கு வலு சேர்ப்பதும் நிச்சயம் வலதுசாரிப் பார்வை தான்.

1949ல் அரசியல் சட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான ஆர்கனைசரில், இந்திய அரசியல் சட்டத்தில் பாரதீய அம்சங்களே இல்லை, உலகமே போற்றும் மனு ஸ்மிருதி பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை என்று தலையங்கம் எழுதப்பட்டது. இதில், நம்முடையது என்று சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது என்று கோல்வால்கர் கேள்வி எழுப்பினார். சாவர்க்கர், வேதங்களுக்கு அடுத்ததாக மனுநீதி முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். இவர்கள் சொல்லுகிற மனு சாஸ்திரம், பெண்கள் குறித்து என்ன சொல்கிறது? அனைத்து சாதியிலும் உள்ள பெண்கள் சூத்திரர் அந்தஸ்து பெற்றவர்கள் என்று கூறுகிறது. அதாவது, அவர்கள் வீட்டில் உழைக்க வேண்டும். அவர்களுக்கு உடைமை இருக்கக் கூடாது, கல்வி கூடாது என்பதுதான் இதன் பொருள். பெண்களின் பேரில் சொத்துக்கள் இல்லாத நிலை இதிலிருந்து உருவானதுதான். எனவேதான் மனுதர்மத்தில் பெண் அடிமை நிலையில் வைக்கப்படுகிறாள். பிறந்த உடன் தந்தைக்கு அடிமை, திருமணமானவுடன் கணவனுக்கு அடிமை, குழந்தை பெற்ற பிறகு மகனுக்கு அடிமை என்று சொல்லுகிற மனுதர்மம், இதைத் தவிர பெண்ணுக்கு வேறு வழியில்லை. எனவே ஆண்கள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது. மேலும், கணவன் நற்பண்புகள் அற்றவனாயினும், வேறிடத்தில் இன்பம் தேடுபவனாயும் இருந்தாலும் கூட, அவனையே மனைவி தெய்வமாய் தொழ வேண்டும் என்று மனு கோட்பாடு கூறுகிறது. இந்தப் பெண்ணடிமைத்தன கோட்பாடு, சுதந்திர இந்தியாவிலும் வெவ்வேறு வடிவங்களில் இந்துத்துவ சக்திகளால் முன்னிறுத்தப்படுகிறது.

இந்து கோட்பாட்டு மசோதாவை 4 ஆண்டுகள் நிறைவேற்ற முடியாமல் இழுத்தடித்து, ஒரு கட்டத்தில் குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் இதற்கு ஒப்புதல் அளிக்கமாட்டார் என்ற நிலையை ஏற்படுத்தி, அம்பேத்கர் அவர்களையே நோக வைத்து, சட்ட அமைச்சர் பொறுப்பிலிருந்து பதவி விலக வைத்தது அன்றைய இந்துத்துவவாதிகள்தான். பிஜேபி ஆண்ட பல மாநிலங்களில் பாடத்திட்டத்தில் பெண்ணடிமைத்தன கருத்துக்கள் புகுத்தப்பட்டன.

மகள், மருமகள், சகோதரியின் மானத்தைக் காப்போம் என்று மகா பஞ்சாயத்துக்களை நடத்திக் கொண்டிருக்கும் சங் பரிவார அமைப்புகள், சிறுபான்மை எதிர்ப்பு என்ற வட்டத்துக்குள் நின்றே அதைப் பார்க்கின்றனர். காதல் போர் (Love Jihad)என்று பெயர் வைத்து, முஸ்லீம் இளைஞர்கள் அனைவரும் ஏமாற்றுக்காரர்கள் என்று முத்திரை குத்திக் கொண்டிருக்கின்றனர். இளம்பெண்கள் தங்கள் வாழ்க்கை துணையைத் தேர்வு செய்யும் உரிமையை மறுக்கும் இவர்கள், பெண்கள் தேர்வு செய்வது முஸ்லீம் இளைஞனாக இருந்தால், அதைப் பாலியல் தாக்குதல் என்று வர்ணித்துத் தலையிட்டு மத மோதல்களை உருவாக்குகிறார்கள். இந்தியா முழுவதும் 2013-ல் பதிவு செய்யப்பட்ட 34,000 பாலியல் வல்லுறவு வழக்குகளில் எத்தனையில் தலையிட்டி ருப்பார்கள்? எனவே இந்துத்துவ சக்திகளின் தலையீடுகள் சிறுபான்மை எதிர்ப்பு அரசியலுக்கு விதையாகியிருக்கிறதே தவிர, பெண்ணுரிமையைப் பாதுகாக்கும் நோக்குடன் இல்லை.

பெண்கள் அணியும் உடை காரணமாகத்தான் பாலியல் கொடுமைகள் நடக்கின்றன என்பதை வலுவாகச் சொல்லும் பகுதியினரில் சங் பரிவார ஆட்களுக்கு முதல் மதிப்பெண் கொடுக்கலாம். ஒரு ‘சின்ன ரேப்’ நடந்ததால் சுற்றுலா பாதிக்கப்பட்டுவிட்டது என்று உலகையே அதிரவைத்த டெல்லி நிர்பயா வழக்கு குறித்து மத்திய பிஜேபி அமைச்சரே அண்மையில் பேசியிருக்கிறார். கௌரவக் கொலைகளைத் திட்டமிட்டுக் கொடுக்கும் காப் பஞ்சாயத்துக்களில் இவர்களுக்குப் பங்கு உண்டு. காதலர் தினத்தன்று வன்முறையில் ஈடுபடுவதுடன், தம்பதியர் அல்லாத ஆணும் பெண்ணும் பேசிக் கொள்ளக் கூடாது, பேசினால் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தாலியுடன் ‘கலாச்சார காவலர்களாக’ வலம் வருகிற இந்துத்துவ அமைப்புகளைப் பார்த்துக் கொண்டி ருக்கிறோம். பெண் சமத்துவம் இவர்களுக்கு ஏற்புடையதல்ல; பெண்ணைத் தாய், மகள், சகோதரி என்ற கோட்டுக்குள் நிறுத்துகிறார்கள். இவர்கள் உயர்த்திப் பிடிக்கும் மதவாதம், சாதியம் போன்ற கருத்தியலில் பகிரங்கப்படுவது ஆணாதிக்கம்தான்.

சமூக நலம் மெல்ல இனிச் சாகும்:

தொழிலாளர் நலனைப் புறக்கணிப்பது, சமூகச் செலவினங்களை வெட்டிச் சுருக்குவது, தேச வளர்ச்சியை காவு கொடுத்துப் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கதவுகளைத் திறப்பது, இந்தியப் பொருளாதாரத்தின் அஸ்திவாரமான பொதுத்துறை பங்குகளை விற்று தனியார்மய மாக்குவது, உள்நாட்டு வெளிநாட்டு பெருமுத லாளிகளின் நலனுக்காக எல்லா விதிகளையும், சட்டங்களையும் வளைப்பது போன்றவை வலது சாரிப் பொருளாதாரப் பாதையின் முக்கிய மைல் கற்களாகும். காங்கிரசாலும் பின்பற்றப்பட்ட இப்பாதை, மோடி ஆட்சியில் தீவிரமாக நடை முறைப்படுத்தப்படுகின்றது என்பது அவர்கள் ஆட்சிக்கு வந்து 2 மாதங்களிலேயே வெளிப்படு கிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் பொதுத்துறை பங்குகளை விற்பதற்காகவே தனித் துறையை உருவாக்கியது பிஜேபியே. பல்வேறு காரணங் களுக்காகக் காங்கிரஸ் செய்யத் தயங்கிய கார்ப்ப ரேட் ஆதரவு காரியங்கள் எல்லாம் மோடி ஆட்சி யில் துரித கதியில் நடக்கின்றன. ரயில்வேயில் அந்நிய நேரடி மூலதனம், காப்பீட்டுத்துறை, பாதுகாப்புத் துறையில் இருப்பதை உயர்த்துவது போன்றவை இதற்கு உதாரணம். திட்டக் கமிஷனை ஒழிப்பது என்ற அவர்களது ஆலோ சனை இதன் உச்சகட்டம். கொஞ்சநஞ்சம் இருக்கும் சமூக நலத்திட்டங்களைக் கண்காணிப் பது, அவற்றுக்கு நிதி ஒதுக்குவது போன்ற பணிகள் இனி அவ்வளவுதான். சமூக நலம் மெல்லச் சாகும் என்பது நிதர்சனம். இது கூட்டாட்சி முறைமைக்கும் முரணானது. தொழிலாளர் நலச்சட்டங்களும் தளர்த்தப்படுகின்றன.

சர்வதேச நிதி மூலதனம் கோலோச்சும் உலகமய காலத்தில், மூலதனம் பொது சொத்துக்களை சூறையாடும், அடித்துப் பிடுங்கும், ஆட்சியாளர் களை அதற்கேற்றாற் போல ஆட்டுவிக்கும் என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் 20வது காங்கிரஸ் தத்துவார்த்த தீர்மானம் கூறியதை நடப்பவை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

கலாச்சாரம், பண்பாடு படும்பாடு

புராதன இந்தியாவின் சாதிய அமைப்பு நியாயமானது, மேன்மையானது என்று இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் புதிய தலைவரும், கல்வியை இந்தியமயப் படுத்துவதற்குக் குத்தகை எடுத்திருக்கும் பாத்ராவும் அடித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய சமூக அமைப்பின் அருவருப்பான, அநீதியான அம்சத்தை ஆரத் தழுவுகிறார்கள். அனைத்து மொழிகளுக்கும் சம அந்தஸ்து என்பதற்கு மாறாக, கோல் வால்கர் கூறிய படி, இந்தி நிச்சயம், சமஸ்கிருதம் லட்சியம் என்ற பாதையில் பிரதேச மொழிகளை சில மாற்றுக் குறைந்தவையாக ஆக்குவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டன. பண்டி கைகள் ஏற்கனவே பலிகடா ஆகிவிட்டன. ஏகே 47 துப்பாக்கியுடன், டைனோசார் மீது வலம் வரும் பிள்ளையார்தான் இப்போது கதா நாயகன். கலாச்சார தேசியம் என்ற பெயரில் இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பலி கொடுத்து, மதம் சார்ந்த அதுவும் அவர்கள் நினைக்கும் உயர் சாதிய கலாச்சாரமே இந்தியக் கலாச்சாரம் என்ற அவர்களது கடந்த கால முயற்சிகளைத் தொடர்கின்றனர். அப்படிப்பட்ட சடங்குகள், விழாக்கள் அனைத்துப் பகுதியினரும் கடைப்பிடிக்கப்பட வேண்டியவையாக மாற்றப் படுகின்றன. அதில் வணிக நோக்கமும் உண்டு.

பல்வேறு வகை ராமாயணங்கள் இந்தியாவில் புழங்குகின்றன என்பது குறித்து பத்மஸ்ரீ ஏ.கே.ராமானுஜன் எழுதிய நூல், டெல்லி பல்கலைக்கழக வரலாற்றுப் பாடத்திட்டத்தி லிருந்து சமீபத்தில் நீக்கப் பட்டிருக்கிறது. விடிய விடிய ராமாயணம் கேட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பான்னானாம் என்று ஒரு பழமொழி இருந்தாலும், சீதை ராமனின் தங்கை என்று ஒரு வகை ராமாயணம் கூறுகிறது. புத்த ஜாதகக் கதைகள் அதற்கு ஒரு சாட்சி. ஒரு குறிப்பிட்ட வகை ராமாயணம் தான் அக்மார்க் முத்திரை பெற்றது என்று எப்படிக் கூறமுடியும்? கதை களும், கற்பனைகளும் பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபடுபவை. அவற்றை செழுமையான அனுப வங்களாக, பன்முகத்தன்மையைப் பிரதிபலிப் பவையாகப் பார்க்க வேண்டும். மதச் சார்பற்ற நிறுவனங்கள் வலதுசாரி நிர்ப்பந்தத்தை எதிர் கொள்ள முடியாமல் தடுமாறி இரையாவது எச்சரிக்கை மணி என்று புரிந்து கொள்ள வேண்டும்.

மாற்றுக் கருத்து கூறும் உரிமையை அடித்து நொறுக்குகின்றனர். சர்வ தேசப் புகழ் பெற்ற வெண்டி டோனிகர் எழுதிய ‘இந்துக்கள் – ஒரு மாற்று வரலாறு” என்ற புத்தகத்தைப் பெங்குவின் நிறுவனம் விலக்கிக் கொள்ள வைத்தது, தலித் செயல்பாட்டாளர் ஷீத்தல் சாத்தே மும்பை புனித சேவியர் கல்லூரிக்கு வருவதைத் தடுத்தது போன்ற சமீபத்திய உதாரணங்கள் நமக்கு முன் உண்டு. திரைப்படங் களுக்கு, மத்திய தணிக்கைக்குழுவுக்கும் மேலான சூப்பர் தணிக்கையாளராக சங்கப் பரிவாரம் நடப்பதும் நமக்குத் தெரியும். மோடி ஆட்சி மத்தியில் இருப்பது, இவர்களுக்கு பக்கபலமாக இருப்பதால், முன்னைக் காட்டிலும் வேகமாக வும், வெறியுடனும் இவை நடந்தேறுகின்றன.

மன வயல்களில் ஊன்றப்படும் விஷநாற்று

கார்ப்பரேட் ஊடகங்கள் இப்பிற்போக்குக் கருத்தியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளி யிட்டுக் கொண்டிருக்கின்றன. இது வரை சொல்லத் தயங்கிய பிற்போக்குக் கருத்தியல்கள் பெருமிதத்துடன் சொல்லப் படுகின்றன. பத்தி ரிகைகளில் அத்தகைய கருத்தியலைக் கொண்ட கட்டுரைகள் அதிகரித்திருக்கின்றன. சமூக பொது புத்தியின் ஓர் அம்சமாக இவை மாற்றப்படு வதற்கு நீண்ட காலம் ஆகாது. இல்லை இல்லை, இந்திய மக்கள் விட்டுக்கொடுத்து விட மாட்டார் கள், தமிழகப் பாரம்பரியம் அப்படிப் பட்டதல்ல என்பது உண்மையாக இருந்தாலும், இதை மட்டுமே கூறுவது நம்மை நாமே சமாதானப் படுத்திக் கொள்வதாகும். வலதுசாரிக் கருத்தியல் நாம் நினைப்பதைக் காட்டிலும் வெகுவேகமாகக் கொள்ளை நோய் போல் பரவி வருகின்றது. தொட்டால் பரவும் நோயை ஒட்டுவார் ஒட்டி (Contagious)என்பார்கள். அதைப்போலவே இது பரவும். கிராம்சி சொல்வதைப் போல், இத்தகைய கருத்துப் பிரச்சாரத்தின் தாக்கம் என்பது அணுவுக்குள் நடக்கும் மாலிக்யூல்களின் மாற்றம் போல் கண்ணுக்குத் தெரியாமல் நடந்து கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் வேறு பொருளாக அதாவது வேறுபட்ட உணர்வாக, கண்ணோட்டமாக அது உரு மாறும்.

ஏற்கனவே உள்ள பிரதான ஆளும் வர்க்கக் கட்சி அம்பலப்பட்டுப் போய் நிற்கும் போது, மக்கள் நெருக்கடிகளுக்குள் சிக்கி விழி பிதுங்கும் போது அந்த அதிருப்தியை மதவாத சக்திகள் பயன்படுத்தி முன்னேறுமா அல்லது இடதுசாரிகள் அதைப் பயன்படுத்தி வர்க்க பலாபலனில் மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் ஜனநாயகம் நோக்கி முன்னேறுவார்களா என்பதைப் பொறுத்தே இந்தியாவின் எதிர்காலம் இருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் 14வது அகில இந்திய மாநாட்டு அறிக்கை மிகச் சரியாக சுட்டிக் காட்டியது. அப்படிப்பட்ட திருப்பு முனையில் இந்தியா இன்று உள்ளது.

சமூகத்தை, அதன் அனைத்துப் பரிமாணங்களிலும் வலதுசாரிப் பாதையில் இழுத்துச் செல்லும் பணி கார்ப்பரேட் – ஆர்.எஸ்.எஸ். என்ற இரண்டு தூண்கள் தூக்கி நிறுத்தியுள்ள மோடி அரசால் அவசரமாக செய்யப் படுகின்றது. பொருளாதாரத்தில் நவீன தாராளமயம், இதர துறைகளில் மத அடிப்படை வாதம் என்பதே இவர்களின் பாதை. இதர பல அரசியல் கட்சிகள் நவீன தாராளமயத்தை ஆதரிக்கிறார்கள், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிஜேபியுடன் அணி சேர்ந்தவர்களாக அல்லது சேரத் தயாராக இருப்பவர்களாக உள்ளனர். எனவே, இரண்டு துhண் களையும் தகர்ப்பதில் இடதுசாரிகள் மட்டுமே இதில் முன்முயற்சி எடுக்க முடியும்.

இடதுசாரிகளும், தொழிலாளி வர்க்க அரசியலும் பின்னுக்குப் போகும் போது, பிற்போக்கு அடிப்படைவாத சக்திகள் தலைதூக்கும், வலுப்படும். எனவே, மக்களுக்கு நன்மை பயக்கும் ஜனநாயக, அறிவியல், மதச்சார்பற்ற, இடதுசாரிப் பார்வையைப் பாதுகாத்து முன்னேற்ற அவசரமாக செயல்பட வேண்டிய கடமை நமக்கு முன் உள்ளது. அப்படியானால் இடதுசாரிகள் பலப்பட வேண்டும். ஒரு பொது மேடைக்கு வர வேண்டும். வந்திருக்கும் ஆபத்தை எதிர்கொள்ள மேலும் நண்பர்களை அடையாளம் கண்டு ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளையும் கெட்டிப்படுத்த வேண்டியிருக்கிறது. எனவே ஒரு பரந்த மேடையை உருவாக்குவது முன்னெப்போதையும்விட அவசரம். அதற்கான செயலில் இறங்குவது பெரும் அவசியம்.

வகுப்புவாதங்கள்: மாறிவரும் வடிவங்களும் அவற்றின் எதிர்காலமும்

அய்ஜாஸ் அகமது

(தமிழில்: ச.வீரமணி)

வகுப்புவாதங்கள் குறித்து எண்ணற்ற கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. குறிப்பாக இடதுசாரிகளும் நிறையவே எழுதி இருக்கிறார்கள்.  குறிப்பிடத்தக்க வகுப்புவாத வன்முறை நிகழ்வுகள் குறித்தும், வகுப்புவாத அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் வரலாறுகள் குறித்தும், மத்திய, மாநில அரசுகள் பின்பற்றிய வகுப்புவாதக் கொள்கைகள் குறித்தும்  மிகவும் விரிவாகவே ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. இப்பொருள் குறித்து நானும் மிகவும் விரிவாகவே எழுதியிருக்கிறேன்.  அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக இங்கே அடுக்க வேண்டும் என்பது என் நோக்கமல்ல. இருப்பினும் சில உண்மைகள் அவ்வப்போது நம் நெஞ்சில் வந்து மோதத்தான் செய்கின்றன.

வகுப்புவாதம், மதச்சார்பின்மை, தேசியம் அல்லது தேசியவாதம் போன்றவை குறித்து நாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோம்?  இது தொடர்பாக என் அடிப்படை நிலைப்பாட்டை மிகவும் கடுமையான வார்த்தைகளுடனேயே தொடங்கிட விரும்புகிறேன்.

அனைத்துவிதமான வகுப்புவாதங்களும் ஓர் ஆரோக்கியமான அரசியலில் தீர்க்கப்பட முடியாத நோயல்ல. ஆர்எஸ்எஸ், சிவசேனை வகைய றாக்கள் பரப்பிடும் வகுப்புவாத வெறி உணர்வுகளுக்கு எதிராக அதைவிட அதிகமான அளவில் மதச்சார்பின்மை, நாட்டுப்பற்று உணர்ச்சிகளைக் கொடுப்பதன் மூலம் இந்நோயைக் குணப்படுத் திட முடியும்.  வகுப்புவாத நடவடிக்கைகள் என்று நாம் அழைத்திடும் –  தற்போது மக்கள்  பின்பற்றி வரும் – சில நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகள் மிகவும் சிக்கலான வரலாற்று வேர்களைக் கொண்டிருக்கின்றன.  இந்திய சமூகத்தின் கட்ட மைப்பிலும், நாள்தோறும் நாம் பின்பற்றும் நடைமுறை அரசியலிலும்  நன்கு ஆழமாக வேரூன்றி இருக்கின்றன.

நாம் பின்பற்றிவரும் தத்துவங்களை விமர்சனத்திற்குள்ளாக்குவது சந்தேகமற மிகவும் முக்கியமானதுதான். ஆனால், எண்ணற்றோர் உயிர்கள் சூறையாடப்படுவதற்குக் காரணமாக விளங்கும் வகுப்புவாத வன்முறை சம்பந்தமான உண்மைகளையும், விவரங்களையும்  திரட்டுவது  அதைவிட மிகவும்  முக்கியமானதாகும்.

அதுமட்டுமல்ல, வகுப்புவாத சிந்தனைகளும் நடைமுறைகளும் மிகவும் போற்றுதலுக்குரியவை என்றும், இவை நியாயமானவை மட்டுமல்ல, அவசியமானவையும், பயனளிக்கக் கூடியதும் என்றும் நாட்டில் உள்ள மக்களில் மிகப் பெரும் பாலானோர் நம்பிக்கொண்டும் இருக்கிறார்களே, இவர்களின் நம்பிக்கைகளை இவர்கள் மனம் கோணாதவாறு எவ்வாறு விமர்சிக்கப் போகிறோம் என்பது குறித்தும் நாம் ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்.

நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. குஜராத் மாநிலத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்ட நரேந்திர மோடி பாஜக சார்பில் இந்தியாவின் பிரதம வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மதவெறி உணர்ச்சியை மக்கள் மத்தியில் கிளப்பி விசிறிவிடுவதன் மூலம் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதற்குச் சரியான அடையாளம் நரேந்திர மோடி என்று நான் துணிந்து கூறுவேன்.

அவர் பிரதமராகிவிட்டால், வகுப்புவாதத் திற்கு எதிராக நாம் மேற்கொள்ளும் பயணம் மேலும் சிறிது காலத்திற்கு நீடித்திடும். இதனை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், தோழர் ரோசா லுக்சம்பர்க் ஒருமுறை கூறுகையில், முதலாளித்துவம், சோசலிசத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்றும் மாறாக காட்டுமிராண்டித் தனத்திற்கும் கூட இட்டுச் செல்லலாம் என்றும் சொன்னார். இந்தியாவில் மக்களின் நலன்களைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாது கொள்ளை அடிக்கும் கும்பலின் தலைமையில் அமைந்துள்ள முதலாளித்துவத்திற்கு லுக்சம்பர்க்கின் கூற்று மிகவும் சரியாகவே பொருந்துகிறது. ஏனெனில், நம்நாட்டில் செயல்பட்டுவரும் வகுப்புவாதங்கள் ஒன்றையொன்று ஊட்டி வளர்ப்பதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் நன்கு வளர்வதுடன், ஒருபக்கம் இத்தகைய முதலாளித்துவக் கொள்ளைக் கும்பலை உருவாக்கிடவும், மிகப்பெரிய அளவில் மக்களை பலிகிடா ஆக்கிடவும் இட்டுச் செல்கின்றன.

இவ்வாறு ஓர் இனவெறியால் கொடுமைகளுக்கு ஆளாகி மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள மக்கள், தங்கள் சொத்து சுகங்களை மட்டுமல்ல, தங்கள் அறநெறிப் பண்புகளையும் தொலைத்துவிட்டு நிர்க்கதியாய் இருக்கக்கூடிய நிலையில் பாசிஸ்ட்டுகள் அவர்களை மிக எளிதாகத் தூண்டிவிட்டு, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுகிறார்கள்.

“பாசிசம்” தலைதூக்குவது என்பது புரட்சியை நம்மால் கொண்டுவர முடியாமல் நாம் தோல்வி கண்டதற்கான தண்டனை என்று கிளாரா ஜெட்கின்  கூறினார். அது மிகவும் சரி யான கூற்று என்பதை வரலாறு மெய்ப்பித்திருக்கிறது.

முதலாவதாக, உலக அளவில் இடதுசாரி சக்திகள் தோற்கடிக்கப்பட்டிருப்பது, உலகின் பல பகுதிகளில் வலதுசாரி சக்திகள் வலுவடைவதற்கு இட்டுச் சென்றிருக்கின்றன. இதன் காரணமாக, (1) 1989க்கு முன் வலுவாக இருந்த சோசலிச முகாம் உலகின் பல பகுதிகளிலும் வலுவிழந்தது. இன்றைய தினம் உலகில் மிகச் சிறிய பூப்பந்தில் தான் ((global space)) மார்க்சிசமும், கம்யூனிசமும் கோலோச்சுகிறது. (2) அதிதீவிர முதலாளித்துவம் (extreme capitalism) என நான் அழைத்திடும்  நவீன தாராளமயம் உலகில் பல நாடுகளில் மிகவும் விரிவான முறையில் நுழைந்து வெற்றி பெற்றுள்ளது. உலக அளவில் பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ள நிலையிலும் கூட நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகப் பெரிய அளவில் தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்ப்பு என்பது ஏற்படவில்லை. (3)  ஆசிய மற்றும் ஆப்ரிக்கக் கண்டத்தில் உள்ள பல நாடுகள் நவீன தாராளமய உலகமயக் கொள்கைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்நாடுகளில் மேலோங்கியிருந்த தேசிய உணர்வு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு தற்போது முற்றிலுமாக இல்லாது ஒழிந்துவிட் டன. இதற்குச் சரியான எடுத்துக்காட்டு நரேந்திர மோடி. மதவெறியைத் தீவிரமாகப் பின்பற்றும் ஒருவர் – நம்மால் இந்து மதவெறியன் என்றும் அவரது சகாக்களால் இந்து தேசியவாதி என்றும் அழைக்கப்படும் ஒருவர் – பிரதமராக முன்னிறுத்தப்படுவது சரியான எடுத்துக் காட்டாகும்.

இன்றைய தினம் நாட்டில் உள்ள அம்பானிகளும், டாட்டாக்களும், உலகம் முழுவதும் விரவிக் கிடக்கும் நூற்றுக்கணக்கான இந்தியக் கோடீஸ்வரர்களும் நரேந்திர மோடியைச் சூழ்ந்து கொண்டுள்ளனர். அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் இதற்குமுன் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த பலரும் இப்போது அவரிடம் மன்னிப்பு கோரி அவரை வரவேற்று, அவருடன் கூடிக் கூலாவிக் கொண்டிருக்கின்றனர். எகிப்து நாட்டில் உள்ள முஸ்லீம் பிரதர்ஹூட் கட்சியின் தலைவரும் எகிப்தின் அதிபருமான மோர்சியைப் போன்று மோடி சிறப்பான முறையில்  சித்தரிக்கப்படுகிறார்.

கிளாரா ஜெட்கின் கூற்றின் அடிப்படையில் ஆராய்கையில் இந்தியாவில் இவ்வாறு பல்வேறு வகுப்புவாதங்கள் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் இடதுசாரிகளின் தோல்வியேயாகும். வகுப்புவாதத்திற்கு உண்மையான மாற்று என்பது கம்யூனிசம் அல்லது சோசலிசமேயாகும். (The real alternative to communalism is communism or socialism). நிச்சயமாக மதச்சார் பின்மையோ (secularism) அல்லது தேசியவாதமோ (nationalism) கிடையாது. கடந்த கால் நூற்றாண்டில் இடதுசாரிகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு வளராததன் காரணமாகத்தான் இத்தகைய மதவெறி, இனவெறி மற்றும் பிராந்திய வெறி சக்திகள் நாட்டின் பல பகுதிகளிலும் வளர்ந்துள்ளன.  நவீன தாராளமயக் கொள்கைகள் மற்றும் அயல்துறைக் கொள்கையைப் பொறுத்த அளவில் இத்தகைய சக்திகள் அவற்றுடன் முழுமையாகக் கருத்தொற்றுமை கொண்டு ஒத்துப்போகின்றன.

நாட்டில் இவ்வாறு பத்து விழுக்காட்டின் கட்சிகள் இருக்கின்றன என்பதே என் கருத்து. அவை ஐ.மு.கூட்டணியில் அங்கம் வகித்தாலும் சரி, அல்லது தே.ஜ.கூட்டணியில் அங்கம் வகித்தாலும் சரி, இவை மக்கள் தொகையில் உயர் பத்து விழுக்காட்டினர் நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இத்தகைய சக்திகள் வளர்ந்துள்ள இடங்களில் இடதுசாரிகள் தேர்தல் களத்தில் கிட்டத்தட்ட மிகப்பெரிய அளவிற்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. வகுப்புவாத அரசியலைப் பொறுத்தவரை, இடதுசாரி அல்லாத அரசியல் கட்சிகளில் எந்தக் கட்சியும் பாஜகவுடன் தீவிரமாக ஒத்துப்போகாதவை அல்ல. ஒருசில கட்சிகள் காங்கிரசுடன் இருக்கின்றன என்றால் அதற்குக் காரணம் காங்கிரசும் பாஜகவும் ஆள்வதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதுதான். பாஜக, வகுப்பு வாதத் துருப்புச் சீட்டைத் திட்டமிட்டு பயன்படுத்தும் அளவிற்கு காங்கிரஸ் பயன்படுத்தவில்லை என்ற போதிலும், காங்கிரஸ் கட்சியும் தேவைப்படும் சமயத்தில் பயன்படுத்தத் தயங்குவதில்லை.

முன்னுரை

இவை அனைத்து குறித்தும் மீளவும் நாம் விவாதிப்போம். முதற்கண் வகுப்புவாதம், மதச் சார்பின்மை மற்றும் தேசியவாதம் என்று நாம் அடிக்கடி பயன்படுத்தும் மூன்று முக்கிய சொற் றொடர்கள் குறித்து வழக்கத்துக்கு மாறான வழிகளில் ஆய்வு செய்திடுவோம்.

வகுப்புவாதம் (Communalism), மதச்சார்பின்மை (Secularism) மற்றும் தேசியவாதம் (Nationalism) ஆகிய சொற்றொடர்களுக்கு ஆங்கில அகராதியில் இருக்கும் அர்த்தத்தில் நம் நாட்டில் அவை உபயோகப்படுத்தப்படுவதில்லை. குறிப்பாக வகுப்புவாதம் என்ற சொல் நம் நாட்டில் ஓர் இனம் அல்லது ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் மற்ற இனத்தினர் மீது அல்லது மற்ற மதத்தைச் சார்ந்தவர்கள் மீது வெறுப்பை உமிழக்கூடிய சித்தாந்தத்தைப் பிரயோகிப்பதற்கும், வன்முறையை ஏவுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஒருவகையிலான பாசிச வடிவத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. வகுப்புக் கலவரம் என்ற நிகழ்வே உலகில் இந்தியாவில்தான் நடைபெறுகிறது.

உதாரணமாக, எகிப்தில் கிறித்துவ சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் நேரடியாகவே இஸ்லாமிஸ்ட் (Islamist), ஜிஹாதி (Jihadi), சலாஃபிஸ்ட் (Salafist) அல்லது வேறெந்த சொற்றொடர் மூலமோதான் அழைக்கிறார்கள். அவர்கள் அதனைத் வகுப்புவாரி (“communal”) தாக்குதல் என்று கூறுவதில்லை.

உண்மையிலேயே மிகவும் சரியாகச் சொல்வதென்றால், வரலாற்று ரீதியாக வகுப்புவாரி என்ற சொல் கம்யூனிஸ்ட் என்ற சொல்லிற்கு மிகவும் நெருக்கமான உறவினைக் கொண்டிருந்தது.  இவ்விரு வார்த்தைகளுமே பொது, (‘common’), நெருங்கிய தொடர்பு கொண்டிரு (‘commune’), சமூகஇனம் (‘community’) என்ற பொருள்களுடன் தொடர்பு கொண்டிருந்தவைதான்.

உதாரணமாக, சமூகத்தினருக்கான சொத்து (‘communal’ property) என்பது தனிச் சொத் துரிமைக்கு (private property) எதிரான சொற்றொடராக இருந்தது.

நம் நாட்டில் மேலும் இரு சிக்கல்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதில் ஒன்று, பெரும்பான்மையினர் சமூகம், சிறு பான்மையினர் சமூகம் என்று பேசுவதில் எதுவும் சிரமம் இருப்பதில்லை. மிகவும் சரியாகச் சொல்வதென்றால், இந்து சமூகத்தினர், முஸ்லீம் சமூகத்தினர், சீக்கிய சமூகத்தினர் போன்று பேசுவதில் சிரமம் இல்லை. ஆனால், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மற்ற சமூகத்தினர் மீது வகுப்புவாத உணர்வுடன் நடந்து கொள்ளாது, இந்தியாவின் பிரஜைகள் என்ற முறையில் மட்டுமே, அதாவது மதச்சார்பற்ற தேசிய இனத்தினர் (secular nationalists) என்ற உணர்வோடு மட்டும் நடந்து கொள்ள வேண்டும் என்பதே உண்மையில் நம்முடைய விருப்பமாகும். நாடும் அரசாங்கமும் மதச்சார்பற்ற அறநெறியை (secular moralism) உயர்த்திப் பிடித்திருப்பதால், மத ரீதியான வகுப்புவாத அடையாளம் அரசியலிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, தனிநபர் பிரச்சனையாக மாற்றப்பட்டிருக்கிறது.

நாட்டில் உள்ள மக்களில் அறுதிப் பெரும்பான்மையினர், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வாக்களிப்பதைத் தவிர வேறெந்த பிரஜா உரிமையையும் அனுபவிக்காத சூழ்நிலையில், இம்மக்கள் மத்தியில் தேசிய உணர்வு குறித்த பிரச்சாரங்கள் (nationalist discourses) போய்ச் சேருவதை விட, அவர்களின் சொந்த மத நம்பிக்கை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் மிக எளிதாக அவர்களை சென்று அடைந்துவிடுகின்றன. அவை பிற மதத்தினருடனான உறவுகள் மற்றும் சமூகப் பழக்க வழக்கங்களில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

இவ்வாறு மக்கள் தங்கள் சொந்த மதத்தின் அடிப்படையில் தங்கள் சமூக மற்றும் பொருளி யல் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில், அத்தகைய மத அடையாளங்களுடைய  மோசமான பக்கத்தை எப்போது அவர்கள் மீறி வெளிவருவார்கள் என்பது குறித்து என்னால் தெளிவாகக் கணிக்க முடியவில்லை.

முஸ்லீமாக இருக்கும் ஒருவரால் தன்னுடைய மத அடையாளத்தைத் துறந்து, சிந்தனை செய்வது சாத்தியமா? வீரஞ்செறிந்த அளப்பரிய துணிவுள்ள ஒருசிலருக்கு வேண்டுமானால் அது சாத்தியமாக இருக்கலாம். ஆனால் பெரும்பான்மை முஸ்லீம்களுக்கு அது சாத்தியமல்ல என்றே தோன்றுகிறது.

அடுத்து, “இந்து சமூகத்தினர்” என்றும் “முஸ்லீம் சமூகத்தினர்” என்றும் கூறுவதுகூட கற்பனையான ஒன்று என்றே நான் கருதுகிறேன். ஒருசில மதம்சார்ந்த சடங்கு சம்பிரதாயங்களைத் தவிர காஷ்மீரில் உள்ள முஸ்லீம்களும் கேரளாவில் உள்ள முஸ்லீம்களும் தங்களுக்கு இடையே உறவுகளைப் பகிர்ந்து கொள்வார்களா என்பது சந்தேகமே.

அதேபோன்றுதான் நாகாலாந்தில் உள்ள கிறித்துவர்களுக்கும், கேரளாவில் உள்ள கிறித்துவர்களுக்கும் இடையே உள்ள உறவுமாகும். அதேபோன்றதுதான் இந்தியா முழுதும் உள்ள இந்துக்களும் தங்கள் பிராந்தியங்கள், சாதிகள், தொழில்களைக் கடந்து ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று நினைப்பதும் மிகவும் அபத்தமான ஒன்றேயாகும்.

ஆயினும், நம்முடைய அரசியல் பிரச்சாரங்கள் அனைத்திலும், நாடு முழுவதுமுள்ள மதச் சமூகத்தினர் அனைவரும் ஒரேமாதிரிதான் என்கிற முறையிலேயே நம்முடைய அரசியல் பிரச்சாரங்களும், கொள்கைகளும் உருவாக்கப்படுகின்றன. இத்தகைய கற்பனையான அடையாளம், உண்மையான சமூகத்தினர் மீது அனைத்து மதங்களைச் சார்ந்த சுயநல அரசியல் வாதிகளாலும் மேலிருந்து திணிக்கப்படுகின்றன. அரசுகளும், முந்தைய காலனிய அரசு விரும்பியதைப்போலவே, வர்க்க அரசியலுக்குப் பதிலாக இத்தகைய இனம் சார்ந்த பிரதிநிதிகளையே விரும்புகின்றன.

இரண்டாவதாக, அனைத்து மத நம்பிக்கைகளும், அவை நம்பிக்கையாக இருந்தாலும் சரி அல்லது செயலாக இருந்தாலும் சரி,  வகுப்பு வாதத்தை நோக்கி இட்டுச் செல்வதில்லை. ஆனால் இந்தியாவில் அனைத்துவிதமான  வகுப்புவாதங்களும்  மத அடையாள உணர்வு டன், வேண்டுமென்றே தங்கள் அரசியல் ஆதா யங்களுக்காக அரசியலாக்கப்படுகின்றன. இதற்கு மதங்களையே குறை சொல்லக்கூடாது. ஆயினும், சில வகையான மத உணர்வுகள் மறுக்கமுடியாத விதத்தில் பிற மதத்தினர் மீது மதவெறித் தீயை உசுப்பிவிடும் விதத்தில் தூண்டப்படுகின்றன. உதிரிப்பாட்டாளியாக (lumpen proletariat) இருக்கிற ஒரு கரசேவகரை, மூளைச் சலவை செய்து, ராமபிரானின் ஜன்மபூமியை விடுவித்திட ஆயுதம் ஏந்து, ராமரின் படையில் அனுமானைப் போல பாபர் மசூதியின் குவிமாடத்தின் (dome) மீது தாவி ஏறி அதனைத் தகர்த்திடு, இந்துவாக இருந்து உன் வீரத்தைக் காண்பி என்று சொல்லும்போது அது அந்த கரசேவகருக்கு நியாயமாகவே தோன்றுகிறது.   இதற்கு மதம் பொறுப்பாகாது, அதேபோன்று இத்தகைய செயல் அப்பாவித்தனமான ஒன்றும் கிடையாது.

மதம், அரசியல் வாழ்க்கையின் அனைத்துவிதமான வடிவங்களிலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டால், மதத்தால் வன்முறை நிகழ்வுகள் நடைபெறுவது என்பது மிகவும் குறைந்த அளவிலேயே இருந்திடும். மதவெறியைத் தூண்டிவிடுவது என்பதும் அநேகமாக இருக்காது.

அடுத்து, நாம் விவாதத்திற்காக எடுத்துக் கொண்டுள்ள மதச்சார்பின்மை (“secularism”) என்ற சொல்லிற்கு வருகிறேன். மதச்சார்பின்மை என்றால் அனைத்து மதங்களுக்கும் சம அளவில் மரியாதை செய்தல் என்பது மிகவும் விசித்திரமான இந்தியக் கண்டுபிடிப்பாகும், காலங்காலமாக இருந்து வந்த மத சகிப்புத்தன்மை என்பதைப் படிப்படியாக ஒழித்துக் கட்டுவதற்கான வேலையே இது. உண்மையிலேயே மத நம்பிக்கை உள்ள ஒருவனுக்கு அவனுடைய சொந்த மதம்தான் உயர்வானது. எனவே அவன் மற்ற மதங்களுக்கும் சமமாக மரியாதை கொடுப்பது என்பது சாத்தியமே இல்லை. மத நம்பிக்கையுள்ள ஒரு முஸ்லீமுக்கு, இந்து மதம் என்பது இயல்பாகவே மட்டமானது தான். அனைத்து மதங்களுக்கும் சம மரியாதை செலுத்த வேண்டும் என்று கூறுவது, அரசின் விவகாரங்களை அமல்படுத்துவதில், லஞ்ச ஊழல் மிகுந்த தாராளமய ஜனநாயக அரசியலில், பெரும்பான்மையினர் மதத்தினரைப் பெரிய அளவிற்கு மரியாதை செலுத்துவதற்கே இட்டுச் செல்லும். ஏனெனில் எண்ணிக்கையில் அவர்கள் வாக்குகள்தான் அதிகம். பெரும்பான்மையினரின் பண பலமும், அதிகார பலமும்தான் ஆதிக்கம் செலுத்தும், பெரும்பான்மை மதத்தினரில் உள்ள மத்திய வர்க்கத்தினரின் மத்தியிலும் மூர்க்கத்தனமான முறையில் புதிய வகையிலான மதச் சிந்தனைகள் உருவாகி ஆதிக்கம் செலுத்துகின்றன.

இந்தியாவில், எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும், மதச்சார்பின்மையைக் கடைப் பிடிப்பதாக அவை சொல்லிக்கொண்டாலும், பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இந்துக் களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. பாஜக விற்கும் காங்கிரசுக்கும் சற்றே வித்தியாசம் இருக் கும் எனில் அது அவர்கள் பின்பற்றும் தத்துவங்க ளால் அல்ல, மாறாக அவர்கள் சார்ந்திருக்கிற நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மக்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே அமைந்திருக்கும்.

இது தொடர்பாக, பெர்ரி ஆண்டர்சன்  குறிப்பிடுகையில்,  இந்திய அரசு ஒரு இந்து வகுப்புவாத அரசுதான் என்கிறார். அது மதச்சார்பின்மை என்கிற சொல்லை தன் தத்துவத்தை நியாயப்படுத்துவதற்கானதாக உபயோகித்துக் கொண்டிருக்கிறது என்கிறார். ஆயினும், இதனை நான் வேறு விதமாகக் கூற விரும்புகிறேன்.  இந்து மதம் குறித்து காந்தி, நேரு மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கம் வெவ்வேறான அளவுகோல்களை வைத்திருந்தன. அவற்றை ஒரேமாதிரி பார்ப்பதென்பது சரியல்ல. மேலும் இந்தியா என்பது பல்வேறு மதங்களைக் கொண்ட நாடு. இங்கே முஸ்லீம்கள் உட்பட அனைத்து வகையான மதத்தினரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதனை இந்து நாடு என்று இந்து மதவெறியர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் இந்து மதத்தினர்தான் நாட்டில் பெரும்பான்மையினர் மற்றும் வல்லமைபடைத்தவர்கள். மற்ற அனைத்து மதத்தினரையும் ஒன்றிணைத்தால் கூட அவர்களை விடப் பெரும்பான்மையினராவார்கள்.

அல்லது, இதனை வேறுவிதமாகவும் கூறலாம். இந்தியாவில் மதவெறி வன்முறை நிகழ்வுகள் இல்லாதவரை அல்லது மிகமிகக் குறைவாக நிகழும் வரை அது பல்வேறு மதங்களுடன் மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். அவ்வாறு மிகவும் சிறிய அளவில் மத வன்முறை நிகழ்வுகள் நடைபெறுகையில், மற்ற வன்முறை நிகழ்வுகள் போன்றே அதுவும் ஒரு சட்டம் – ஒழுங்கு பிரச் சனைதான்.  மதச்சார்பின்மையை ஒரு நியாயமான தத்துவமாகக் கருதுவது எந்தவிதத்திலும் சரிதான்.

மதச்சார்பின்மை என்பது நவீனகால ஒழுக்கப் பண்பாகும். பண்டைக் காலங்களில் இது கிடையாது. அதாவது, அரசின் அதிகார வரம்புக்குள்ளிருந்து மதத்தை வெளியேற்றுதல் என்பதாகும். இது ஒரு ஐரோப்பிய ஒழுக்கப் பண்பாகும். இது தொடர்பாக மிக அதிக நாட்டுப்பற்றுடன் இதனை அணுகுவதற்கு முன்பு, மார்க்சிசமும் ஓர் ஐரோப்பிய ஒழுக்கப் பண்புதான் என்பதை நாம் நினைவில் இருத்திக் கொள்ளுதல் வேண்டும். இத்தகைய ஒழுக்கப் பண்புகள் அந்நாட்டின் வரலாற்றுத் தேவைகளின் அடிப்படையில் அங்கே உருவாயின என்பதையும், பின்னர் வரலாற்று நிலைகளின் காரணமாக படிப்படியாக அவை உலகம் முழுவதும் பரவின என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்திய முதலாளித்துவ வர்க்கம் நவீனத்துவத்தைக் கிரகித்துக் கொள்ளாமல் தன்னுடைய சமூகக் கண்ணோட்டத்தில் மிகவும் பிற்போக்குத் தனமாக இருந்ததால், நவீன மதச்சார்பின்மை ஒழுக்கப் பண்பினை சிதைத்து சின்னாபின்னமாக்கி, மதம் சார்ந்த சொற்றொடர்களுடன் மாற்றி வடிவமைத்துக் கொண்டது.

ஐரோப்பாவிலேயே பல நாடுகள் தற்போது கலாச்சாரக் கொந்தளிப்பில் சிக்கிக் கொண்டுள்ளன. ஏனெனில், பல்வேறு இனத்தைச் சேர்ந்த, பல்வேறு நிறத்தைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பாவிற்குள் குடியேறி வந்துள்ள நிலையில் அவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலாமல் அது திணறுகிறது.

மதச்சார்பின்மையைப் பின்பற்றுவதில் இந்தியா அளவிற்குக் கூட அமெரிக்கா இருக்கிறதா என்பது சந்தேகமே. இரு முதலாளித்துவ அரசுகள்தான் உண்மையில் முறையான மதச்சார் பின்மையை – அங்குள்ள முதலாளிகள் இளைஞர்களாக இருந்த காலத்தில் – பெற்றிருந்தன. அவை புரட்சிகர பிரான்சும் கேமாலிஸ்ட் துருக்கியும் மட்டுமேயாகும். அவைகூட இன்று அவ்வாறு உரிமை கொண்டாட முடியாது. ஆட்சி அதிகாரத்திலிருந்து மதச்சார்பின்மை அடிப்படையில் தேவாலயங்களைப் பிரித்த நாடுகள் என்று சொல்வது என்றால், மதம் ஒருவரின் தனிப்பட்டவரின் உரிமை, அதற்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்ன நாடுகள் என்றால் அவை கம்யூனிஸ்ட் நாடுகள் மட்டுமேயாகும்.

சோவியத் யூனியன் தகர்ந்த பின்பு, தேச அளவிலும் சர்வதேச அளவிலும் இயங்கும் மதவாத அமைப்புகள் வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிட்டதை நம்மால் பார்க்க முடிந்தது.

இறுதியாக, இம்மூன்று சொற்களிலும் மிகவும் கடினமான வார்த்தை தேசியவாதம் என்னும் சொல்தான்.

ரஷ்யப் புரட்சியைத் தவிர, சீனா, கியூபா உட்பட மற்ற அனைத்து நாடுகளிலும் ஏற்பட்ட சமூகப் புரட்சிகளும் காலனிய மற்றும் அரைக் காலனிய நாடுகளில் நடைபெற்றவைகள்தான். எனவே, சோசலிசத்திற்கான இயக்கங்கள் தேச விடுதலைக்கான யுத்தங்களுடன் இணைக்கப்பட்டன. மேலும், மூன்றாம் உலக நாடுகளில் இருந்த மிகவும் முற்போக்கான முதலாளித்துவ அரசுகள் தேசப்பற்றுடன் கூடிய பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றின. பாண்டுங் திட்டக் காலத்தில் நேருவின் இந்தியா, நாசரின் எகிப்து மற்றும் பாதிஸ்ட் அரபு நாடுகளை இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். இப்போது வெனிசுலா, பொலிவியா மற்றும் ஈக்வேடார் நாடுகளை இவ்வாறு கூற முடியும்.  இவ்வரலாறுகள் நம்மை இன்றைய தேசியவாதம் அல்லது நாட்டுப்பற்று உணர்வை ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதுடன் பொருத்திப் பார்க்கும் போக்கிற்கும் இட்டுச் சென்றுள்ளது.

காலனிய நாடுகளில் உருவான தேசியவாத அல்லது நாட்டுப்பற்று சித்தாந்தம் காலனியத்திற்கு எதிரான ஒன்றுதான். ஆனால் இது பல சமயங்களில் ஏகாதிபத்திய எதிர்ப்பு சித்தாந்தமாக தவறான முறையில் தீர்மானிக்கப்படுகிறது. இவ்வாறு காலனியத்திற்கு எதிராக உருவான பல இயக்கங்கள் சோசலிஸ்ட் உள்ளடக்கங்களைக் கொண்டவை என்று சொல்ல முடியாது. இத்தகைய இயக்கங்களில் பல ஏகாதிபத்திய மூலதனத்தின் நவீன காலனிய வடிவங்களுடன் மிக வேகமாகத் தங்களை இணைத்துக் கொண்டு, மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்கின்றன.

ஆப்ரிக்காவில் உள்ள நாடுகள் பல இத்தகைய வரலாற்றால் நிரப்பப்பட்டுள்ளன. ஏன், நம் அண்டை நாடுகளாக உள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் குறித்து கூறத் தேவையே இல்லை. இதில் மிகவும் சிக்கல் நிறைந்த வழக்குகள் எவை எனில், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக மூர்க்கமான முறையில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள தாலிபான்களாகும். ஆயினும் இவர்கள் மக்களுக்கான சோசலிச முற்போக்கு சக்தியாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.

20 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய பாசிஸ்ட் இயக்கங்கள் அனைத்தும் நடைமுறையில் ஒரு விஷயத்தில் ஒத்துப்போயின. முழுமையான தேசியவாதம் என்று தங்களை அழைத்துக் கொண்ட அவைகள் வலதுசாரி தேசியவாதங்களின் அனைத்து விதமான நச்சுத்தன்மை வாய்ந்த வடிவங்களையும் தம்முள் கொண்டிருந்தன.  ஐரோப்பிய முதலாளித்துவத்தின் 19 ஆம் நூற்றாண்டுக் காலத்தில் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் சித்தாந்தமாக தேசியவாதம் இருந்தது என்பது மட்டுமல்ல, அந்தக் காலகட்டத்தில் தான் ஐரோப்பாவில் தேசம் என்கிற வடிவம் உருவானது. இவ்வாறு கடுஞ்சிக்கல்கள் நிறைந்த நிலையில் தேசியவாதம் என்ற சொல்லை ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதுடன் சமமாய்ப் பொருத்திப் பார்க்கக் கூடாது என்றே எனக்குத் தோன்றுகிறது.

தேசியவாதம் அல்லது நாட்டுப்பற்று என்ற சொல்லின் பின்னணியில் எந்தவித வர்க்க உள்ளடக்கமும் இல்லை என்பதே என் சொந்தக்கருத்தாகும். எல்லா நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தும் சக்திகள் தங்கள் வர்க்க உள்ளடக்கத்தை அவற்றின் மீது ஏற்றுகின்றன என்பதே என் கருத்தாகும்.

லெனின், தொழிலாளி வர்க்கத்தின் கட்சியின் தலைவர் என்ற முறையில் காலனிய நாடுகளில் இருந்த நிலைமைகளை ஆராய்ந்து அவற்றின் அடிப்படயில் தேசிய இனப்பிரச்சனைக்கு அதிக அழுத்தம் கொடுத்தார். காலனிய எதிர்ப்பு தேசியவாதத்தின் தலைமையை முதலாளித்துவ வர்க்கம் தமதாக்கிக் கொள்வதற்கு முன்பு தேசிய இனப்பிரச்சனை மீது மேலாதிக்கத்தை நிறுவிட விவசாய வர்க்கத்தின் கூட்டணியுடன் தொழிலாளி வர்க்கத்தால் சாத்தியமாகலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே லெனின் அவ்வாறு கூறினார்.

காலனிய எதிர்ப்புப் போராட்டத்தில் தேசிய முதலாளிகளில் நாட்டுப்பற்று கொண்ட பிரிவினர் தலைமைப் பாத்திரம் வகிப்பதை ஏற்றுக் கொள்வது என்பது  விரும்பத்தக்க ஒன்று அல்ல. இது கம்யூனிய இயக்கத்தின் ஒரு பலவீனமேயாகும்.

தேசியவாத சித்தாந்தம் என்பது அடிப்படையில் தேசிய-அரசு (Nation-State) வடிவத்தைக் குறிக்கோளாகக் கொண்டு இணைக்கப்பட்டதாகும். தேசிய-அரசு என்ற வடிவம் இருக்கும் வரை, ஏதாவது ஒரு வகையிலான தேசியவாதம் ஒரு மெய்யான அவசியமாகும். நாஜி ஜெர்மனியின் பாசிஸ்ட் தேசியவாதம், அமெரிக்காவின் ஏகாதிபத்திய தேசியவாதம், வியட்நாம் அல்லது அங்கோலா போன்ற நாடுகளில் விடுதலை இயக்கங்களுக்குத் தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட்டுகளின் புரட்சிகர தேசியவாதம், மதச்சார்பற்ற அரசு தேசியவாதம், ஈரான் நாட்டின் சமயகுரு மார்களின் தேசியவாதம் என்று எண்ணற்ற தேசியவாதங்கள்.

எங்கெல்லாம் தேசியவாதங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் தேசியவாதம் குறித்த பொருள் குறித்தும் எண்ணற்ற சண்டை சச்சரவுகளும் உண்டு. தேசியவாதத்தின் ஒரு வகை, மற்றோர் வகையால் தோற்கடிக்கப்பட்டு, மாற்றியமைக்கப்படுவதும் ஒரே நாட்டில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இப்போதெல்லாம், உலகில் பலநாடுகளில், நாட்டின் குணாம்சத்தை வடிவமைப்பதில் அந்நாட்டில் பெரும்பான்மையாகவுள்ள மதத்தையும் இணைத்துக் கொள்வது என்பதும் புதுப்பாணியாக மாறி இருக்கிறது. யூத சமயத்தை ஒரு நாட்டினர் தூக்கிப் பிடிக்கிறார்கள் என்றால், சில நாடுகளில் இஸ்லாமை தூக்கிப் பிடிக்கிறார்கள், இங்கே இந்துயிசத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். வேறொரு நாட்டில் கத்தோலிக்கத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்.

ஒரு காரணத்திற்காகவே இவை அனைத்தையும் நான் கூறுகிறேன். என்னைப் பொறுத்தவரை, ஏகாதிபத்திய எதிர்ப்பு மட்டுமே இந்திய தேசியவாதத்திற்கான உண்மையான உள்ளடக்கமாக இருக்க முடியும் என்று நம்பக் கூடிய அளவிற்கு இடதுசாரிகளாகிய நீங்கள் ஏற்கனவே முடிவுக்கு வந்திருப்பீர்கள். நான் அவ்வாறுதான் நம்புகிறேன். ஏனெனில் நான் ஒரு மார்க்சிஸ்ட். துரதிர்ஷ்டவசமாக, மார்க்சிசம் நம் நாட்டில் மிகவும் சிறுபான்மையினர் மத்தியிலேயே இருந்து வருகிறது.

அதேசமயத்தில் இந்துத்துவா கொள்கையையும் புறத்தூண்டுதல் எதுவுமின்றி நகர்ப்புற, உயர்சாதி, மத்தியதர, சமூகத்தில் பத்தாம் பசலியாகவுள்ள இந்துக்கள் எவரும் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. இந்தியாவில் இந்துக்கள்தான் அதிகம். எனவே இந்துக் கலாச்சாரத்தை தேசியக் கலாச்சாரமாக அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால் நடை முறையில் அவ்வாறில்லை.

ஆர்எஸ்எஸ் இயக்கம் 1925 இல் துவக்கப்பட் டது. ஒவ்வோராண்டும் அதன் உறுப்பினர் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு உயர்ந்து வந்திருக்கிறது. ஆனாலும் 1948க்கும் 1962க்கும் இடையே மட்டும் விதிவிலக்காக அதன் உறுப்பினர் எண்ணிக்கை தேக்க நிலையில் இருந்தது. இவ்வாறு தேக்கநிலை ஏற்பட்டது என்பது காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கும், நேரு இறந்ததற்கும் இடையிலான காலகட்டம் என்பதை நீங்கள் நினைவுகூர முடியும். 1962 இல் இந்திய – சீன யுத்தம் துவங்கியபின் இதனை, இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளை அவமானப்படுத்திட, அவர்களுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்திட,  மிகவும் விரிவான அளவில் பயன்படுத்திக் கொள்ளப்பட் டது. அதன் பின்னர் வலதுசாரிகளும் தங்களை ஸ்தாபன ரீதியாகத் திரட்டிக் கொள்ள முடிந்தது.

ஆயினும், 1948க்கும் 1962க்கும் இடையே ஆர்எஸ்எஸ் வளராமல் தேக்க நிலையில் இருந்ததற்கு மகாத்மா காந்தியின் படுகொலை ஒரு காரணியாக இருந்த போதிலும், அந்த சமயத்தில் காலனி எதிர்ப்புப் போராட்டத்தின் வழிவந்த ஜவஹர்லால் நேருவால் தலைமை தாங்கப்பட்ட அரசியல் மற்றும் கலாச்சார மூலதனம்தான் அதற்கு மிகவும் முக்கியமான காரணி என்பது என் கருத்தாகும். மேலும் அந்த சமயத்தில் நாடாளுமன்றத்தில் நேருவுக்கு எதிர்ப்பைப் பிரதானமாக வழங்கியது கம்யூனிஸ்ட்டுகளும், சோசலிஸ்ட்டுகளும்தான் என்பதையும் நாம் நினைவு கூர்தல் வேண்டும். இவ்வாறு அந்த சமயத்தில் ஒட்டுமொத்த இந்திய அரசியலுமே வகுப்புவாதத்தை எதிர்த்த அரசியல் சக்திகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் ஆளும் கட்சி மட்டுமல்ல, ஹாப்ஸ்வாம் ஒருமுறை சொன்னது போல அறிவிற் சிறந்த இடதுசாரிகளும் (“The Enlightenment Left”) பிரதான எதிர்க்கட்சி சக்திகளாக இருந்து மண்ணின் மாண்புகளை உயர்த்திப் பிடித்தார்கள். ஜவஹர்லால் நேரு முதலமைச்சர்களுடன் கொண்டிருந்த எண்ணற்ற கடிதப் போக்குவரத்துகளிலிருந்து காங்கிரஸ் கட்சிக்குள்ளும் வகுப்புவாதம் புரையோடிப் போயிருந்ததை அவர் கூர்மையாகக் கண்டறிந்திருந்தார் என்பதைக் காண முடியும்.

ஆயினும், அந்த சமயத்தில் இடதுசாரிகளின் மேலாதிக்கம் இருந்தது பற்றி நான்கு அம்சங்களைக் கூற வேண்டியது அவசியம். முதலாவது, நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், காங்கிரசிலிருந்த வலதுசாரிகள் சூழ்ச்சி செய்தபோதிலும் கூட அவற்றைப் புறந்தள்ளிவிட்டு நாட்டில் பல மாநிலங்களில் ஆட்சியிலிருந்தாலும் சரி மற்றும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, இடதுசாரிகள்  வகுப்புவாதத்திற்கு எதிராக முன்னின்று போராடினார்கள்.

இரண்டாவதாக, முதலாளிகளுக்கு அளவுக்கு மீறிய சலுகைகள் அளிக்கப்பட்ட போதிலும், நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் துறைக்கு சேவகம் செய்யக் கூடிய விதத்தில் செயல்பட்ட அதே சமயத்தில், அவர்களின் அளவுக்கு மீறிய பேராசையை ஒரு சமயத்தில் தடுத்து நிறுத்தவும் முடிந்தது. இந்தியப் பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்பட்டு நெருக்கடிக்கு உள்ளான போது இந்திராகாந்தியுடைய வங்கிகள் தேசியமய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மூன்றாவதாக, அந்த சமயத்தில்தான் இந்திய அரசு மிகவும் உறுதியுடன் பல்வேறு முற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மிகவும் குளறுபடியாக இருந்த சமூக ஒழுங்கில் நவீன, மதச்சார்பற்ற, முற்போக்கு மாண்புகளை சமூகத்தில் ஆழப் பதித்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இவை அனைத்தையும் அப்போது வெளியான புதிய பாடப் புத்தகங்களில் காண முடியும். மேலும் ஆட்சியிலிருந்தவர்களால் மட்டுமல்ல, பிரதான எதிர்க்கட்சியினராலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் அரசியல் பேச்சுக்கள் அமைந்திருந்தன. ஏற்கனவே காலனிய எதிர்ப்பு இயக்கத்தில் அரசியலாக்கப்பட்டிருந்த மக்கள் மத்தியில் இவை மேலும் பெரிய அளவில் பக்குவத்தை உருவாக்கின.

இறுதியாக, மதச்சார்பின்மை என்பது தனிப்பட்ட ஒன்றாக பார்க்கப்படவில்லை. மாறாக அது அனைத்து மாண்புகளின் தொகுப்பாகவும், கூட்டுச் செயல்பாடாகவும்  கருதப்பட்டது.

நாட்டில் வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்தவர்களில் 90 விழுக்காட்டினர் எழுதப்படிக்கத் தெரியாத தற்குறிகளான ஒரு சமூகத்தை நாம் கொண்டிருந்தோம். நாடு சுதந்திரம் பெற்றபின் அயல்துறைக் கொள்கையில் அணிசேராக் கொள்கையை உறுதிபட பற்றி நின்றோம். ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்தைப் பாதுகாத்தோம். பொருளாதார விவகாரங்களில் சோசலிச வளர்ச்சிப் (“socialistic development”) பாதை முக்கிய பங்கு வகித்தது. இவ்வாறு பல முற்போக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆட்சியாளர்கள் நடைமுறையில் செய்தார்களோ இல்லையோ வாக்குறுதிகள் தாராளமாகவே அளிக்கப்பட்டன. அத்தகைய வாக்குறுதிகளும் கூட மக்களின் அரசியல் செயல்பாட்டுக்கு சேவை செய்தன.

நேருவினுடைய ஆட்சிக்கு பிரதானமான எதிர்ப்பு என்பது வலதுசாரிகளிடமிருந்து கிடையாது, மாறாக இடதுசாரிகள்தான் பிரதானமான எதிர்ப்பினை மேற்கொண்டிருந்தார்கள். அவை மிகவும் ஆக்கபூர்வமானதாகவும், மதச்சார்பின்மை மாண்புடன் பின்னிப்பிணைந்த சோசலிச சமுதாயத்தை உருவாக்கும் விதத்தில் அது அமைந்திருந்தது.

இப்போது அத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் ஆட்சியாளர்களால் கைவிடப்பட்டுவிட்டன. இடதுசாரிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் மட்டும்தான் இதற்கு விதிவிலக்கு.

நவீன தாராளமய மற்றும் வலதுசாரிகளின் கொள்கைகளில் மதச்சார்பின்மையின் மாண்பு எந்த அளவிற்கு பின்னிப் பிணைந்திருக்கிறது என்று கூறுவது மிகவும் கடினம். உலகின் பல பகுதிகளிலும் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன? அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ஐரோப்பாவாக இருந்தாலும் சரி மற்றும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாகவுள்ள நாடுகளாக இருந்தாலும் சரி, நவீன தாராளமயக் கொள்கைகள் எந்த நாடுகளில் அமல்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் வலதுசாரிகள் வெற்றிக் களிப்பில் மிதப்பதைப் பார்க்கலாம். இதற்கு இந்தியா மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா, என்ன?

வகுப்புவாதம் தொடர்பாக நான் இதுவரை மூன்று நூல்கள் வெளியிட்டுள்ளேன். 1993 இல் அயோத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சிகள் குறித்து (“On the Ruins of Ayodhya) ஒரு நூலும், அதன் பின்னர் பத்தாண்டுகள் கழித்து 2003 இல், குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் நடைபெற்ற சமயத்தில், இரு கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன். ஆயினும் மதவெறியர்களைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க அளவிற்கு மாற்றம் எதுவும் இதுவரை ஏற்படவில்லை.

இப்போது கார்ப்பரேட்டு மூலதனம் ஒன்றாக இணைந்து,  மோடியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி இருக்கிறது. இதன் மூலம் அரசியல் பொருளாதாரத்தின் ஆட்சிப் பரப்பிற்குள் மூலதனத்தின் நவீன தாராளமய எதேச்சாதிகாரம், தத்துவார்த்த ரீதியாக வகுப்புவாத எதேச்சாதிகாரமும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகக் கைகோர்த்துக் கொண்டுள்ளன.

கார்ப்பரேட்டுகளும் அரசாங்கமும் ஒன்றாக இருந்த முசோலினியின் இத்தாலியப் பாசிசத்தின் வடிவம் குறித்து இங்கே நினைவுகூர்தல் நலம் பயக்கும். சமீபத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் இந்தியப் பின் நவீனத்துவம் குறித்த பிரச்சனையில், சுதந்திரத்திற்குப் பிந்தைய நாட்டின் வரலாற்றை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம் என்று கூறியிருந்தேன். 1947இலிருந்து 1975 வரை முதல் கட்டம். நேருவின் ஆட்சி தொடங்கி, இறுதியில் நெருக்கடிக்க ஆளாகி, அவசரநிலைக் காலத்தில் சிதைந்தது. அடுத்த இருபது ஆண்டுகள் இரண்டாவது கட்டமாகும். இக்கால கட்டம் பல்வேறு சிந்தனைகளைக் கொண்டவர்களை இணைத்த ஜேபி இயக்கத்தால் துவங்கப்பட்டு, அவசரநிலைக் காலத்திற்குப் பின் ஆட்சி செய்த ஜனதா அரசாங்கத்தின் காலம். இக்கால கட்டத்தில்தான் ஆர்எஸ்எஸ் இயக்கம் இந்திய அரசியலில் ஒரு மரியாதைக்குரிய மதித்துப் போற்றக்கூடிய ஓர் இயக்கமாகவும் சட்ட ரீதியாக இயங்கக் கூடிய ஓர் இயக்கமாகவும் மாற்றப்பட்டது. இதன் அரசியல் அங்கமான ஜனசங்கம் கட்சிக்கும் அதன் தலைவர்கள் வாஜ்பாபி மற்றும் அத்வானிக்கும் ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்திய அரசியலில் இது அவர்களுக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. ஒட்டுமொத்தத்தில், இந்தியாவில் காங்கிரஸ் கட்சியால் தலைமை தாங்கப்பட்ட முதலாளித்துவ அரசின் அரசியல் நெருக்கடி காரணமாக மேலும் தொடர்ந்து ஆட்சி செலுத்தும் வல்லமையை இழந்தது. ஆயினும் அதற்கு மாற்றாக வேறொருவரும் தோன்றவில்லை.

இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடி முடிவுக்கு வந்து,  இரண்டாவது வாஜ்பாயி அரசாங்கம் 1998 இல் ஆட்சிக்கு வந்தது. இது புதியதொரு கட்டத்தைத் தொடங்கி வைத்தது. இடதுசாரிகள் அல்லாத அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கி ஓர் அரசியல் கட்சிகளின் கூட்டணி உருவானது. இது முதலாளித்துவ ஆட்சிக்கு புதியதொரு ஸ்திரத்தன்மையைக் கொடுத்தது. எந்தக் கூட்டணியில் நின்று தேர்தலில் போட்டியிட்டாலும், வெற்றி பெற்ற பின் கூட்டணியை மாற்றிக் கொள்வது என்பதும் இக்காலகட்டத்தில் நடந்தது.

இந்தச் சூழ்நிலையில்தான் 1989இலிருந்து 1992 வரை மூன்றாண்டுகளில் சர்வதேச அளவிலும், தேச அளவிலும் முக்கிய சம்பவங்கள் பல நிகழ்ந்தன. சர்வதேச அளவில்  சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் வரலாற்றுச் சிறப்பு கொண்ட கம்யூனிஸ்ட் அமைப்பு முறை முடிவுக்கு வந்தது. அமெரிக்கா உலக மேலாதிக்கப் போலிஸ்காரனாக (Hegemon) உருவெடுத்தது. இதனுடன் போட்டிபோடக் கூடிய அளவிற்கு எவரும் இல்லை. இந்திய ஆளும் வர்க்கமும் அதன் அரசும் இப்போது வெளிப்படையாகவே புதிய ஏகாதிபத்திய வல்லரசுக்குப் பின்னால் எவ்விதமான கருத்து வேறுபாடுமின்றி அணிதிரண்டன.

நம் நாட்டிற்குள்ளும் நவீனதாராளமயக் கொள்கைகள் நரசிம்மராவ்-மன்மோகன்சிங் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் களமிறங்கின. வகுப்புவாதத்தின் அமைப்புகளுக்கும், காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கும் இடையே அதிகார பூர்வமாக அறிவிக்காமல் குறிப்பறிந்து ஒன்றாய் செயல்படும் விதத்தில் ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. இதனை 1989 இல் சிலாநியாஸிலும், மிகவும் மோசமான முறையில் 1998 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் பார்க்க முடிந்தது. இக்கால கட்டம் 1998 இல் முடிவுக்கு வந்தது.

அதன்பின் புதிதாக பாஜக தலைமையிலான வலதுசாரிகளின் அரசாங்கம் அமைந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய ஆளும் வர்க்கத்தின் எண்ணப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டது. அது நாட்டிற்கு வெளியே ஏகாதிபத்தியத்துடன் மிகவும் நெருக்கமாகக் கூட்டணி வைத்துக் கொண்டது, நாட்டிற்கு உள்ளே நவீன தாராளமயக் கொள்கையை (இதனை நான் அதிதீவிர முதலாளித்துவம் என்று அழைப்பேன்) பின்பற்றியது.

ஆளும் வர்க்கத்துக்கு மதச்சார்பின்மை முகத்துடன் காங்கிரஸ் சேவகம் செய்தது, பாஜகவோ வகுப்புவாத முகத்துடன் சேவகம் செய்தது. பாஜக தன்னுடைய ஆட்சிக்கு வேறு பல கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்து இருக்க வேண்டியிருந்ததால் அது தன்னுடைய சொந்தத் திட்டத்தின் ஆத்திரமூட்டல் அம்சங்களைச் சற்றே நிறுத்தி வைத்திருந்தது.

இப்போது மோடி, தன்னுடைய பிரதமர் பதவிக்கான கனவிற்கு இந்துத்துவாக் கொள்கையை இலக்காக முன்வைக்கவில்லை, மாறாக மன்மோகன்சிங்கிற்கு சேவை செய்த அதே வளர்ச்சிக் கொள்கையைத்தான் முன்வைத்திருக்கிறார்.

வகுப்புவாதப் பிரச்சனையைப் பொறுத்த வரை, அரசியல் அரங்கில் மிக முக்கியமான அம்சம், 1998க்குப் பின், பாஜகவுடன் இடதுசாரிகளைத் தவிர மற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் ஏதோ ஒரு சமயத்தில் அல்லது பிறிதொரு சமயத்தில் உறவு கொண்டுள்ளன என்பதாகும்.

மக்கள் மத்தியில் மதவெறி சிந்தனைகளை வளர்த்தெடுப்பதென்பது இரு விதங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் கீழ் இயங்கும் அமைப்புகளும் மக்கள் மத்தியில் இவ்வேலையை மிகவும் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கின்றன. கடந்த 80 ஆண்டுகளில் தங்கள் பக்கம் ஆதரவர்களை அதிக அளவில் இவர்கள் பெற்றுள்ளனர். கிராம்சி கூறியதைப்போல சமூகத்தின் அடித்தட்டில் உள்ள மக்கள் மத்தியில் நாள்தோறும் சிறுசிறு இயக்கங்கள் மூலம் இவர்கள் தங்கள் வேலைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இப்போது இத்தகைய வேலைகளை தாங்கள் ஆட்சிபுரியும் மாநிலங்களில் ஆட்சியாளர்கள் மூலமாகவும், அதன் அரசியல் கட்சிகள், கல்வி நிறுவனங்கள், அடக்குமுறை கருவிகள் மற்றும் பல சமயங்களில் நீதித்துறை மூலமாகவும் மேற்கொண்டு வருகின்றனர்.

வகுப்புவாதம் குறித்த நம்முடைய ஆய்வுகள், சங்பரிவாரக் கூட்டத்தின் வேலைகள் குறித்தே அதிக அளவில் கவனம் செலுத்தி இருக்கின்றன. ஏனெனில் நாட்டில்  மிகவும் பெரிய அளவில் ஸ்தாபன ரீதியாக செயல்படும் வகுப்புவாத சக்தி இதுதான். ஆயினும் இது ஒன்று மட்டும் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கவில்லை. எடுத்துக்காட்டுக்காக நான் மேலும் இரண்டைக் குறிப்பிட விரும்புகிறேன். அவை முறையே முஸ்லீம் வகுப்புவாதம் மற்றும் சிவசேனை ஆகியவைகளாகும்.

பொதுவாக இந்திய முஸ்லீம்களைப் பொறுத்த வரை, ஒரு குறிப்பிடத்தக்க உண்மை என்னவெனில், நாடு சுதந்திரம் அடைந்த பின் முஸ்லீம்களுக்கு என்று அகில இந்திய அளவில் ஒரு கட்சி உருவாகவில்லை. வட்டார அளவிலும் மாநில அளவிலும் ஏராளமாக இருந்தாலும், அகில இந்திய அளவில் அப்படி ஒரு கட்சி இல்லை.

தேசிய அரசியலிலும், ஏன் மாநில அளவிலான அரசியலிலும் கூட, முஸ்லீம்களில் பெரும்பாலோர் ஒரு மதச்சார்பற்ற தேர்தல் மாற்றைத்தான் (secular electoral alternative) கோருகின்றனர். இதற்கு அவர்கள் மதச்சார்பின்மை கண்ணோட்டத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்பதற்காக அல்ல, மாறாக மதச்சார்பற்ற அரசு மூலம்தான் தாங்கள் பெரும் அளவில் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோருக்கு மதச்சார்பின்மை என்பது இவ்வாறு சமூக நவீனமயத்தை (social modernization) அல்லது ஓர் அரசியல் கண்ணோட்டத்தை அல்லது ஒரு தத்துவார்த்த வாழ்நிலையை வெளிப்படுத்தும் ஒன்றாக மட்டுமல்ல, தங்கள் இனத்தின் நலனுக்கு மிகவும் உகந்த ஒன்றாகவும் இது இருப்பதால்தான் அவ்வாறு அவர்கள் கோருகிறார்கள்.

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில், முஸ்லீம் வகுப்புவாதத் தலைவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சமூகரீதியாக பத்தாம் பசலித்தனமான சக்திகள் முஸ்லீம்கள் மீது அதிகாரம் செலுத்தக்கூடிய விதத்தில்தான் பொதுவாக இருக்கிறார்கள். நாடு சுதந்திரம் அடைந்த பின்பு, வருமானம், கல்வியின் நிலைகள், காவல்துறை மற்றும் ராணுவம் போன்ற அரசு நிறுவனங்களில் வேலைக்கு எடுத்தல் என அனைத்திலும் முஸ்லீம்களுக்கும் சாதி இந்துக்களுக்கும் இடையேயான இடைவெளி விரிவடைந்திருப்பதாகத்தான் அனைத்துப் புள்ளி விவரங்களும் கூறுகின்றன. அரசின் நிறுவனங்கள் அனைத்திலும் வகுப்புவாதமயப்படுத்தப்பட்டிருப்பதும், குறிப்பிட்ட கால இடைவெளியில் நன்கு ஸ்தாபனப்படுத்தப்பட்ட வன்முறை அவர்களுக்கு எதிராக ஏவப்படுதலும், முஸ்லீம்கள் மத்தியில், எந்த நிமிடத்திலும் தாங்கள் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டுத் தாக்கப்படலாம் என்கிற அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கின்றன.

காஷ்மீரில் அரசுப் பயங்கரவாதத்தை, ஜிகாத் பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமல்ல, சாமானிய மக்களின் கிளர்ச்சிகள் மற்றும் எழுச்சிகளுக்கு எதிராகவும் பயன்படுத்துவது மக்களை ஆட்சியாளர்களிடமிருந்து அந்நியப்படுத்தியுள்ளது. முஸ்லீம்கள் பெரும்பான்மையாகவுள்ள அந்த மாநிலத்தில் அவர்கள் சுயாட்சி கோருவது என்பதையே மதச்சார்பற்ற குடியரசு என்று சொல்லப்படுகின்ற ஆட்சியாளர்களால் ஏற்க முடியவில்லை. முஸ்லீம்களில் உயர்ந்தோர் குழாமைத் தவிர மற்ற சாமானிய முஸ்லீம்கள் அனைவரும் ஆட்சியாளர்களைத் தங்களைக் கிஞ்சிற்றும் மதிக்காது ஒதுக்கி வைத்திருப்பதாகவும், ஆடுமாடுகளைப் போலவே  சமூக ரீதியாக, கலாச்சார ரீதியாக, குடியிருப்புப் பகுதிகளில் நடத்தப்படுவதாகவும் கருதுகிறார்கள்.

இத்தகைய நிலைமைகள் அவர்களை பிற்போக்கான முஸ்லீம் மதத் தலைவர்களிடமும், படுபிற்போக்கு முஸ்லீம் சிந்தனையாளர்களிடமும் மிக எளிதாகத் தள்ளிவிட்டுள்ளது. இவற்றின் விளைவுகளில் ஒன்று, இவர்களை மிகவும் பயபக்தி உடைய கடவுள் நம்பிக்கையாளர்களாக மாற்றி இருப்பதாகும். சாதி இந்துக்களில் உள்ள வளர்ச்சியைவிட இது அதிகம் என்றே கூறலாம். வகுப்புவாத சக்திகள் இவர்களை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன. பயபக்தியுடன் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களிடம் படிப்படியாக அரசியலின் வகுப்புவாத வடிவங்களைப் போதிப்பதுடன் வன்முறையை ஏவிடும் வகுப்புவாதக் கட்டமைப்புகளுக்குள்ளும் அவர்களைத் தள்ளிவிடுகின்றன.

பாபர் மசூதி இடிப்பு, அதனைத் தொடர்ந்து குறிப்பாக குஜராத்தில் முஸ்லீம் மக்கள் மீது நடந்த இனப்படுகொலைகள், நகர்ப்புற முஸ்லீம்களில் ஒரு சிலர் மத்தியில் இந்து வகுப்புவாத பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக முஸ்லீம் ஜிகாதி பயங்கரவாத அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கனவு காணத் தொடங்கியுள்ளனர். இவ்வாறு கனவு காண்பவர்களுக்கு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்று முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு‍களில் உருவாகியுள்ள பற்பல ஜிகாதி குழுக்கள் உத்வேகம் அளிக்கின்றன.

இந்திய முஸ்லீம் சமூகத்தில் மதச்சார்பற்ற நீரோட்டத்துடன் எண்ணற்ற முஸ்லீம்கள் இருந்தபோதிலும், அவர்களது சுதந்திரமான எண்ணங்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஓர் அரசியல் ஸ்தாபனம் இல்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும். இந்தியாவில் உள்ள முஸ்லீம் சமூகத்தினர் இடையே முற்போக்கான முஸ்லீம் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லக்கூடிய விதத்தில் ஓர் அமைப்பு இல்லாததன் காரணமாக, இவர்களை இங்கே இருக்கின்ற பல்வேறான பிற்போக்கு சக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றன.

விளைவு, முஸ்லீம்கள், முற்போக்கு மேடைகளில் அணிதிரட்டப்படுவதென்பது மிகவும் அரிதாகவே இருக்கின்றன. இவர்களில் பெரும்பாலோருக்கு, பாலஸ்தீனப் பிரச்சனை என்பது யூதர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான மோதலாகத்தான் தெரிகிறதேயொழிய, அது காலனியாதிக்கத்தின் மிகக் கொடூரமான காட்டு மிராண்டித்தனமாகப்படவில்லை. ஆப்கானிஸ்தானத்திற்குள்ளோ அல்லது ஈராக்கிற்குள்ளோ ஊடுருவுதல் நடைபெறுவதை அவர்களால் மேற்கத்திய கிறித்தவர்கள் கிழக்கத்திய முஸ்லீம்கள் மீது தொடுத்திடும் இனப்படுகொலைகளாகத்தான் பார்க்கப்படுகிறதேயொழிய, நவீன ஏகாதிபத்தியத்தின் வரலாற்றின் அத்தியாயங்களாக அவர்களுக்குத் தெரியவில்லை.

சமீபத்தில் கூட, இந்திய முஸ்லீம்களில் பலதரப்பினர் வங்கதேச முஸ்லீம் லீகிற்கு ஆதரவாக சக்திமிக்க ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதைப் பார்த்தோம். ஆனால் அவர்கள் ஷா பாக் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை. பாகிஸ்தானிலும், வங்க தேசத்திலும் இப்போது கடவுள் பற்றுள்ளவர்களால் கடவுள் பற்றற்றவர்கள் கொல்லப்படுவது என்பதும் சன்னி குழுவினரால் ஷியா குழுவினரும், முற்போக்கான பெண்கள் பிற்போக்கான ஜிஹாதிகளால் கொல்லப்படுவது என்பதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு பிற்போக்காளர்களால் கொல்லப்படுபவர்களுக்கு ஆதரவாக இந்திய முஸ்லீம்கள் மத்தியில் அர்த்தமுள்ள ஆதரவு இயக்கம் எதுவும் நடைபெறவில்லை.

நாட்டில் உள்ள முஸ்லீம்களில் உயர் அடுக்கில் உள்ளவர்கள் ஆட்சியாளர்களின் கொள்கைகள் சிலவற்றைக் குறித்து அவ்வப்போது எதிர்ப்பினையோ அல்லது விமர்சனங்களையோ காட்டுவார்கள். இது எதற்கு என்றால் அவர்கள் தங்களின் பேரம்பேசும் நிலையை வலுப்படுத்திக் கொள்வதற்காகத்தானேயொழிய,  வேறெதற்காகவும் அல்ல. ஆனால், முஸ்லீம்களில் கீழடுக்கில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் உதிரிப் பாட்டாளிகளாகவே (Lumpen-Proletariat), சிவசேனை மற்றும் சங்பரிவாரக் கூட்டத்தில் உள்ளவர்களைப் போலவே இருக்கிறார்கள். ஆனால் நாட்டில் எங்கு வன்முறை வெடித்தாலும், அந்த சமயங்களில் காவல்துறையினராலும் இதர பாதுகாப்புப் படையினராலும் கைது செய்யப்படும்போது, இந்துக்களுக்கு உள்ளதுபோன்ற அமைப்புகள் எதுவும்  இவர்களைக் காப்பாற்றுவதற்கு முன்வருவதில்லை.

பம்பாயில் சிவசேனை அமைப்பு இவ்வாறு உதிரிப் பாட்டாளிகளைக் கொண்டுதான் உருவானது. இவர்கள் உத்திகளை, தங்கள் எதிரிகளை மற்றும் வன்முறைகளை எவ்வாறு தேர்ந்தெடுத்தார்கள்? தங்களின் கீழ் திரண்ட உதிரிப் பாட்டாளிகளை வைத்து ஒரு பக்கத்தில் கம்யூனிஸ்ட்டுகளையும், தொழிற்சங்கவாதிகளையும் வேட்டையாடினார்கள், மறுபக்கத்தில் தமிழர்களுக்கு எதிராகவும் வன்முறையை ஏவினார்கள். இவற்றிற்கு இந்துத்துவா வெறியர்களை பயன்படுத்திக் கொண்டார்கள்.

பின்னர் பீகாரிகளுக்கு எதிரான இயக்கத்தை நடத்தியபோது இவர்கள் இந்து பீகாரி மற்றும் முஸ்லீம் பீகாரிகளுக்கு இடையே வித்தியாசம் எதையும் பார்க்கவில்லை. இங்கே நான் சிவசேனையைப் பற்றி ஆய்வு செய்திடவில்லை. எனினும் ஒருசில விஷயங்களைக் குறிப்பிட வேண்டியிருந்தது.

தாக்கரேயின் சித்தாந்தத்தின் முக்கிய கூறு என்னவெனில் கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் இடதுசாரிகளுக்கு எதிராக வெறுப்பை உமிழ்வது என்பதுதான்.

1966 இல் உருவான சிவசேனை 1980களில்தான் இந்துத்துவாவின் சித்தாந்தத்தை முழுமையாகத் தழுவிக் கொண்டது. ஒரு சமயத்தில், தாக்கரே அவசரநிலைப் பிரகடனத்தைக் கூட ஆதரித்தார், வடஇந்தியர்களுக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற பிரச்சாரங்களின் போது அது இந்துக்களுக்கும் இந்துக்கள் அல்லாதவர்களுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் காட்டவில்லை. அனைவருமே வெளியாட்கள் போன்று தான் சித்தரிக்கப்பட்டார்கள். இவர்கள் பம்பாயில் இருப்பதால்தான் மராத்தியர்களின் துன்பதுயரங்களுக்குக் காரணமாம். நாட்டின் நிதி மையமாக விளங்கும் பம்பாயில் சூறையாடும் முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட துன்ப துயரங்களுக்கெல்லாம் மிகவும் வறிய நிலையில் வாழ்ந்த, மிக அற்பக் கூலி பெற்ற வட இந்தியர்கள்தான் காரணமாம்.

சிவசேனை தன் கீழ்  இருந்த உதிரிப் பாட்டாளிகளைக் கொண்டு, வன்முறை வெறியாட்டங்களை  தமிழர்கள், முஸ்லீம்கள், பீகாரிகள்  என்று நடத்தியது. பின்னர் வங்காளிகள் மீது இவர்கள் எல்லாம் வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறி வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. அவர்களின் சொத்துக்களை எல்லாம் கொள்ளையடித்தார்கள், அவர்களின் சிறிய வியாபார நிறுவனங்களை எல்லாம் அபகரித்துக் கொண்டார்கள்.

தாக்கரே ஆரம்பத்தில் ஒரு கார்ட்டூனிஸ்ட்டாகத்தான் தன் வேலையைத் தொடங்கினார். பின்னர் சிவசேனையின் தலைவராக உயர்ந்தபின் அவர் இறக்கும் தருவாயில் அவரது சொத்தின் மதிப்பு 30 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. அது எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும்.

இவ்வாறு வகுப்புவாத வன்முறை என்பது ஸ்தாபன ரீதியாகக் குற்றங்கள் புரிவதற்கான வடிவங்களை எடுத்துக் கொள்கின்றன. இவ்வாறு கிரிமினலாகக் குற்றம் புரியும் அமைப்புகளோடு இவை சிண்டிகேட்டுகள் அமைத்துக் கொள்கின்றன. வகுப்புவாதத்தில் சரியான அம்சம் என்பது பொதுவாக இதுதான். சிவசேனையின் ஆட்கள் உதிரிப் பாட்டாளி வர்க்கத்திலிருந்தே பொறுக்கி எடுக்கப்பட்டார்கள்.

மரபு ரீதியான முடிவுரை கூறி இந்த உரையை நான் முடிக்க முயற்சிக்கப் போவதில்லை. ஆயினும், ஒருசில முக்கிய அம்சங்களை மட்டும் கூறி முடித்துக் கொள்ள விரும்புகிறேன்.

முதலாவதாக, இந்தியாவில் வகுப்புவாதக் கட்டமைப்பிற்கு உதிரிப்பாட்டாளிகள்தான் (lumpen proletariat and the lumpenised petty bourgeoisie) குறிப்பிடத்தக்க பங்களிப்பினைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அது சங்பரிவாரக் கூட்டமாக இருந்தாலும் சரி, அல்லது முஸ்லீம்களாக இருந்தாலும் சரி அல்லது சிவசேனை போன்ற அமைப்புகளாக இருந்தாலும் சரி. ஏனெனில், நவீன தாராளமய கட்டத்தில் இந்திய முதலாளித்துவத்தின் கட்டமைப்பு அம்சம் அதுதான். நாட்டில் தொழிலாளர் வர்க்கச் சேனையை விட வேலையில்லாத இளைஞர்களின் சேனை மிகவும் பெரிதாக இருக்கிறது. இத்தகு நிலையில் சமூகத்தில் ஒரு முறையான தொழிலாளர் வர்க்கக் கலாச்சாரத்தை நிறுவுவது என்பது மிகவும் சிரமம். தொழிலாளர் வர்க்கத்திற்குள்ளேயே கூட உதிரிப் பாட்டாளிகளை உருவாக்கும் வேலையும் நடந்து கொண்டிருக்கிறது. முறையான ஊதியம் கிடையாது, எந்த நிமிடமும் வேலையைவிட்டு விரட்டி அடிக்கப்படலாம் என்ற நிலை. எல்லாவற்றையும் விட மோசம், வேலையில்லாதோர் பட்டாளம் மிகவும் பெரிது, நிரந்தரமானது.

ஆக்கபூர்வமான உழைப்பில் ஈடுபட்டிருப்பவரின் நிலையான வாழ்க்கை ஒருவருக்கு மதிப்பையும் மரியாதையையும் அளிக்கிறது அல்லது குறைந்தபட்சம் வாழ்வதற்கான அடிப்படை ஆதாரத்தை அளிக்கிறது. அவ்வாறு ஆக்கபூர்வமான உழைப்பில் ஈடுபடாதவர்களின் நிலை? காலப்போக்கில் மற்றவர்களைத் துன்புறுத்துவதைப் பற்றிக் கிஞ்சிற்றும் பொருட்படுத்தாது கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இத்தகைய நபர்களை வகுப்புவாதம் தன்னுடைய வன்முறைச் செயல்களுக்கு நன்கு பயன்படுத்திக் கொள்கிறது.

ஆக்கபூர்வமான உற்பத்தியில் ஈடுபட்டிருப்போர் வாழ்க்கை என்பது அவரைப் போலவே ஆக்கபூர்வமான உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மற்றவர்களோடும் இணைந்து ஓர் இனமாக, ஒரு சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் உதிரிப்பாட்டாளிகள் என்று சொல்லப்படுகிற ரவுடிகள், கிரிமினல்கள், திருடர்கள், பொறுக்கிகள் மற்றும் இதுபோன்று சமுதாயத்திற்குக் கேடு பயக்கும் தொழில்களில் ஈடுபட்டிருப்போர் வாழ்க்கை என்பது இயற்கையாகவே குறிப்பிட்ட குணாம்சங்களுடன் கூடிய எவ்விதமான  இனத்தையும் (The life of the lumpenproletariat is by its nature one that creates no community out of any shared conditions of labour) உருவாக்குவதில்லை, தற்காலிகமாக சேர்ந்து கொள்வார்கள், வேலை முடிந்தபின் கலைந்து சென்று விடுவார்கள். தொழிலாளர் வர்க்கக் குணம் பறிக்கப்பட்ட இவர்கள், சாதி, மதம் அல்லது வேறு எந்த விதத்திலாவது வெறியூட்டப்பட்டால் அதற்கு மிக எளிதாக மயங்கிவிடுவார்கள். வகுப்புவாத அரசியல் இத்தகைய உதிரிப் பாட்டாளிகளுக்கு வெகுவாகவே தீனி போடுகிறது.

இத்தகைய உதிரிப் பாட்டாளிகளை வகுப்பு வாத/பாசிஸ்ட் வகையிலான வன்முறை இயக்கங்கள் மிகவும் எளிதாக முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

மிகவும் பொதுவாகக் கூறுவதென்றால், வகுப்புவாதத்தின் அனைத்து வடிவங்களும் நவீன தாராளமயம் அல்லது அதிதீவிர முதலாளித்துவத்துடன் நேரடியாகத் தொடர்புடையதாகும். அதாவது, முதலாளித்துவத்தின் பணப் பேராசை பிடித்தலைகிற, கொள்ளையிடும் வடிவமாகும். அனைத்து முதலாளித்துவமும் கொள்ளையடிக்கும் குணம் கொண்டவைதான். ஒவ்வொன்றுக்கும் இடையே கொஞ்சம் கூட குறைச்சல் இருக்கலாம், அவ்வளவுதான்.

இத்தகைய முதலாளித்துவ மனப்பாங்கு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. ஆயினும் நவீனதாராளமய தீவிரவாதம் தலை தூக்குவதற்கு முன் சில கட்டுப்பாடுகளுடன் இருந்தது. இப்போது அத்தகைய கட்டுப்பாடுகள் அனைத்தும் கைவிடப்பட்டுவிட்டன. அரசின் தலையீடு என்பதும் அநேகமாக இல்லை. எப்போதாவது மதவன்முறை வெறியாட்டங்கள் சட்டம் – ஒழுங்கு பிரச்சனையாக மாறும்போதுதான் அரசு தலையிடுகிறது.

நாடு சுதந்திரம் பெற்ற பின் முதல் கட்டத்தின் போது, அரசு ஒரு முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அரசாக இருந்த போதிலும், ஏகாதிபத்தியத்தின் நிர்ப்பந்தங்களுக்கு எல்லாம் இடம் தராது அதனை எதிர்த்து நின்று இந்தியப் பொருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் பாதுகாக்க முயற்சிகளை மேற்கொண்டது. இந்திய முதலாளித்துவம் வலுவானதாகவும், அதிகம் கொள்ளையடிக்கக் கூடியதாகவும் மாறியதால், ஏகாதிபத்தியக் கொள்ளையர்களோடு கூடிக்குலாவுவது என்பதும் அதிகமாகியது. பொதுச் சொத்துக்களை தனியாரிடம் தாரைவார்க்கவும் முன்வந்தது. இந்தியப் பொருளாதாரத்தையும் மேலும்மேலும் அந்நியர்களுக்குத் திறந்துவிட வழிவகுத்தது.  இவற்றின் மூலமாக ஒரு சிலரை மட்டும் நிரந்தர வேலையில் வைத்துக் கொண்டு, மற்றவர்களை வேலையில்லாதோர் பட்டாளத்தில் தள்ளியது.

இவற்றின் மூலமாக அரசின் குணாம்சமும் அரசின் பங்கும் மிகவும் மோசமாக மாறியது. நாட்டிற்குள்ளே, இது ஒட்டுமொத்த இந்திய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாமல், அநேகமாக முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை மட்டுமே, அதிலும் குறிப்பாக கார்ப்பரேட்டுகள் நலன்களை மட்டுமே காக்கும் ஒன்றாக மாறியது. உலகப் பொருளாதாரத்துடனான உறவுகளைப் பொறுத்தவரை, அரசு, உலகத்தின் முன்னே இந்திய மக்கள் மற்றும் அவர்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. மாறாக, நவீன தாராளமயக் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும் இந்த அரசின் முக்கியமான வேலை என்பது சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களையும் கட்டளைகளையும் இந்திய மக்களுக்கு கைமாற்றிக் கொடுப்பதாகும். இத்தகைய சூழ்நிலையில் அரசு மதச்சார்பற்ற தேசியம் (secular nationalism) என்னும் கொள்கையை – நம்முடைய காலனிய எதிர்ப்பு இயக்கங்களின்போது நமக்கு அடிப்படையாக அமைந்திருந்த கொள்கையை – நடைமுறையில் கைவிட்டாக வேண்டும்.  இந்த இடத்தில் வலுவாக உள்ள வலதுசாரிகள் இந்திய தேசியத்தை (Indian nationalism) மதரீதியான, அறிவு பெருகுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிற (obscurantist), உயர் பிராமணத்துவத்திற்கு வக்காலத்து வாங்குகிற மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காத விதத்தில் மாற்றியமைக்கும் பணியை வேகம் வேகமாகச் செய்து வருகின்றன. நாட்டு மக்கள் இன ரீதியாக, பிராந்திய ரீதியாக, மத ரீதியாக மோதவிடப்பட்டு இந்திய மக்களின் ஒற்றுமை கூட  கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கின்றன.

நவீனதாராளமயக் கொள்கை கொடூரமான சுரண்டலுக்கு மட்டுமல்ல தொழிலாளர் வர்க்கத்தின் உணர்வுகளை மழுங்கடிக்கக் கூடிய விதத்தில் மிக அற்பக் கூலி தரும் ஒன்றாகவும் அமைந்துள்ளது. மக்களில் பெரும்பான்மையினருக்கு வேலை அளிப்பதற்கோ அல்லது பாதுகாப்பான வேலையை அளிப்பதற்கோ அது மறுக்கிறது.

இவ்வாறு இந்த அமைப்பு முறையானது சுரண்டல் தன்மை கொண்டது மட்டுமல்ல, சமூகத்தையே வேருடன் பிடுங்கி எறியக் கூடியதாகும். மக்களின் சமூக அமைப்பு முறையையும் குழி தோண்டிப் புதைக்கக் கூடியதாகும். இவ்வாறு அதிதீவிர முதலாளித்துவம் சமூகத்தையே அழுகச் செய்துவிட்டது. மக்களில் பெரும்பாலானவர்கள் மத்தியில் நஞ்சை விதைத்திருக்கிறது. ஏன், தொழிலாளர் வர்க்கத்தில் ஒருசில பிரிவினரிடம் கூட இதனை அது செய்திருக்கிறது.

வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் அனைத்து வடிவங்களும் மிகவும் அவசியமானவைகளாகும். ஆயினும் அதே சமயத்தில்,  எவ்வளவு காலத்திற்கு மற்றும் எவ்வளவு கடுமையாக இப்போராட்டத்தை நடத்த வேண்டும் என்பது குறித்து எவ்விதமான மாயையும் நமக்கு இருக்கக் கூடாது.

வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது மதச்சார்பின்மைக்கு ஆதரவான தத்துவார்த்த போராட்டம் மட்டுமல்ல, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியுமாகும். சுருக்கமாகச் சொல்வதென்றால், வகுப்புவாதத்திற்கு (Communalism) மாற்று, கம்யூனிசம் (Communism) அல்லது சோசலிசம்தான். இன்றைய தினம் நாட்டில் வகுப்புவாத சிந்தனைகள் மிகப்பெரிய அளவில் ஊட்டி வளர்க்கப்படுவதை முறியடிக்கக் கூடிய விதத்தில் மதச்சார்பின்மையையும் கம்யூனிஸ்ட்டுகளின் குணங்களில் ஒன்றாக முன்னெடுத்துச் சென்றிட வேண்டும்.

குடியரசின் பலன்களை ஒன்று திரட்டப் போராடுவோம்!

ஹரிகிஷன் சிங் சுர்ஜித்

தமிழில். சி.சுப்பாராவ்

பூரண சுதந்திரம் என்ற குறிக்கோளை பல ஆண்டுகளாக ஏற்க மறுத்த காங்கிரஸ், கடைசியில் 1929 டிசம்பரில் நடந்த லாகூர் காங்கிரசில் அதை ஏற்று ஆண்டுதோறும் ஜனவரி 26 ஐ சுந்திர தினமாகக் கொண்டாடத் தீர்மானித்தது. ஆனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத் தளைகளைத் துண்டித்தால் மட்டும்  போதாது என்பதை மக்கள் உணர்ந்திருந்தனர். காலங்காலமாக இங்கு நீடித்து வரும் பசி, சுரண்டல் ஒடுக்குமுறைத் தளைகளிலிருந்து இந்திய மக்கள் விடுபடுவது தான் முக்கியமானது என்று அவர்கள் உணர்ந்திருந்தனர். இந்த விழிப்புணர்வு  நாடெங்கிலும் எண்ணிலடங்கா வழிகளில் பிரதிபலித்தது. உதாரணமாக,  ஒரு இர்விங்கை விரட்டி விட்டு அங்கு ஒரு புருஷோத்தம்தாஸ் தாக்குர்தாஸ்ஸை உட்கார வைப்பதில் சாதாரண இந்தியக் குடிமகனுக்கு என்ன கிடைக்கப்போகிறது? என்று சிறையின் மரணத் கொட்டடியிலிருந்து பகத்சிங் எழுதி, அது அவரை தூக்கிலிட்ட பிறகு, இளம் அரசியல் ஊழியருக்கு என்ற தலைப்பில் வெளிவந்தது ஒரு சிறந்த உதாரணம்.

இதே ஜனவரி 26 தான் பின்னாளில் குடியரசு தினமாக்கப்பட்டது. காரணம் நாமனைவரும் அறிந்ததே..

காங்கிரஸ் வட்டாரங்களிலும் இதே உணர்வுகள் பிரதிபலித்ததில் வியப்பேதுமில்லை. பூரண சுதந்திரம் குறித்த தீர்மானம் நிறைவேறி யதன் பின், ஒன்றே காலாண்டு கழித்து 1931 மார்ச் 29-31 ல் நடைபெற்ற கராச்சி காங்கிரசில் அடிப்படை உரிமைகள் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தான்  1947 சுதந்திரத்திற்குப் பிறகு அரசியலமைப்புச் சட்டம் உருவாக்க அடித்தளமாக அமைந்தது.  அதே ஆண்டு 1931 ஆகஸ்ட் 6-8 ல் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டத்தில் சில மாற்றங்களுடன் இந்த தீர்மானம் அங்கீகாரம் பெற்றது.

இந்த தீர்மானத்தின் முக்கியமான குறிப்புகளில் ஒன்று மக்களை சுரண்டும் முறைக்கு முடிவு கட்ட அரசியல் சுதந்திரத்தோடு உண்மையான பொருளாதார சுதந்திரமும், பசியில் வாடும் கோடிக் கணக்கான மக்களுக்கு கிடைக்கச் செய்வது அவசியம் என்பதாகும். மேலும் இத்தீர்மானம் எதிர்கால அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற வேண்டிய விஷயங்களின் பட்டியலைத் தந்தது..

பின்னால் சேர்க்கப்பட இருந்த முக்கியமான கடமைகள் பல துவக்கத்தில் இந்தப் பட்டியலில் இல்லை என்பதில் சந்தேகமில்லை. உதாரணமாக தாழ்த்தப் பட்டவர், பழங்குடியினர், (SC/ST)) என பின்னாளில் அழைக்கப் பட்ட மக்களுக்கு பிரத்யோகமாக எவ்வித வாக்குறுதியும் இதில் இல்லை. அதேபோல் விவசாயிகளின் சிரமத்தைக் குறைப்பதாக அது கூறினாலும், நிலச் சீர்திருத்தத்தின் அவசியத்தை அது சுற்றி வளைத்து ஏதோ சொல்லியது. குத்தகை முறை, வருவாய், குத்தகை இவைகள் சமத்துவ அடிப்படையில் சரி செய்யப்படும் என்று சொல்லியது. நிலப்பிரபுத்துவ உடைமையோ, நிலப்பிரபுத்துவ நில உறவையோ ஒழிப்பது காங்கிரசின் செயல் திட்டத்தில் இன்றும் இடம் பெற வில்லை. விவசாயிகளின் சுமையைக் சமத்துவ அடிப்படையல் சரிசெய்யப்படும் என்பதற்கு நூற்றுக் கணக்கான முறையில் அர்த்தப்படுத்த முடியும். இருந்தாலும்,  1931 ல் நிலவிய அரசியல், தத்துவார்த்த சூழலில் இந்த அளவு கூறியுள்ளதே மிகப் பெரிய முன்னேற்றம் என்பதில் ஐயமில்லை. 1922 ல் நிலப்பிரப்புகளின் நிலங்களைத் தொடக் கூட காந்தியடிகள் மறுத்த தையும், நில உரிமையாளருக்கு உண்டான குத்தகையை விவசாயிகள் தராமல் நிறுத்தக் கூடாது என்றுகூறியதையும், ஒப்பிட்டால், உண்மையிலேயே இது பெரிய முன்னேற்றம்தான்.

மொத்தத்தில் கராச்சி ஆவணத்தில் பல குறைபாடுகள் இருந்தாலும், இந்திய உழைப்பாளி மக்களுக்கு காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் குறிப்பிடத் தகுந்தவை. தங்கள் பங்கிற்கு மக்களும் காங்கிரஸை ஏமாற்ற வில்லை. தங்கள் முழு ஆதரவை நல்கினார்கள். 1937 தேர்தல் முடிவுகளில் இது  பிரதி பலித்தது. காங்கிரஸிற்கு மக்கள் ஆதரவு தந்ததற்கான காரணங்களை வேறு ஒருகோணத்திலும் காணமுடியும். 1937 ல் பெரும்பான்மை மாநிலங்களில் முஸ்லீம் லீக் தோற்றது. காங்கிரஸிடம் இருந்ததைப் போல் அதனிடம் அப்படி ஒரு திட்டம் இல்லை என்பதே இதற்கு காரணம் ஆகும். 55 சதம் முஸ்லீம்களாக இருக்கும் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளுக்கு ஆதரவான யூனியனிஸ்ட் கட்சியே வென்றதைச் சுட்டிக் காட்டலாம்.

நிறைவேறாத வாக்குறுதிகள்

இருப்பினும், சுதந்திரத்திற்குப் பின் வாழ்வில் எத்தனையோ விஷயங்களில் எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், 1947 க்கு முன் காங்கிரஸ் நாட்டு மக்களுக்கு அளித்த பல வாக்குறுதிகளை கைவிட்டு துரோகமிழைத்தது என்ற உண்மையை மறுக்க இயலாது.

நாம் மேலே விவாதித்த நிலச் சீர்திருத்த விஷயத்தையே எடுத்துக்கொள்வோம். 1931 ல் காங்கிரஸ் நிலச் சீர்திருத்தம் பற்றி சுற்றி வளைத்துப் பேசி, நிலப்பிரபுத்துவத்தை அழிப்பது பற்றிப் பேச மறுத்தாலும், விரைவிலேயே சூழ்நிலைகள் அதைத் தீவிரமாகப்  பேச வைத்தன. 1936 ல் தோன்றிய அகில இந்திய விவசாயிகள் சங்கம் நிலப்பிரபுத்துவத்தை அழிப்பது பற்றிப் பேசியதும், வரவிருந்த மாகாண சட்டசபைத் தேர்தல்களும் சேர்ந்து, காங்கிரஸ் இவ் விஷயத்தில் ஒரு நிலைபாடு எடுக்க வேண்டியதாயிற்று. ஐக்கிய மாகாணங்களில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் நேரு இது குறித்து தெளிவான வாக்குறுதிகள் அளித்தார். இத்தகைய வாக்குறுதிகள் இன்றி விவசாயப் பெருங்குடி மக்களின் நம்பிக்கையைப் பெற இயலாது என்று காங்கிரஸ் சரியாகவே கணித்திருந்தது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், அது எடுத்த நடவடிக்கைகளில் ஒன்று ஜமீன்தாரி முறையை ஒழித்தது ஆகும். நிலவுடமைக்கு சில உச்சவரம்புகள் கொண்டு வரப்பட்டன. இதுவும் தெலுங்கானா போன்ற விவசாயிகளின் எழுச்சியின் காரணமாகத்தான். இதுபோன்ற சில ஆரம்ப நடவடிக்கைகளைத் தாண்டி, விவசாயிகளை அவர்களது துன்பத்திலிருந்து விடுவிக்க, காங்கிரஸ் வேறெதுவும் அபூர்வமாகக் கூடச் செய்யவில்லை. ஜமீன்தாரி முறை மேலோட்டமாக அழிக்கப் பட்டதால், மிகப்பெரிய நிலச்சுவான்தார்கள் நாட்டில் இருக்கவே செய்தார்கள். வேண்டுமென்றே பல ஓட்டைகளுடன் ஏற்படுத்தப் பட்ட நில உச்சவரம்புச் சட்டம் கேலிக் கூத்தாக்கப் பட்டது. காரணம் 1947 க்குப் பிறகு அரசு அதிகாரத்தில் நிலப்பிரபுக்களுக்கும் பங்கிருந்தது..

உண்மையில் நிலச் சீர்திருத்தமே இல்லாது போனதால், ஒட்டுமொத்தமாக நாட்டிற்கும், குறிப்பாக சமூகத்தின் அடிமட்ட மக்களுக்கும் பெரும் தீங்கு விளைவித்தது. வசதியான வாழ்க்கைத்தரம் பெற வைப்போம் எனக் கராச்சி காங்கிரஸ் அளித்த வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. நிலச்சீர்திருத்தம் முழுமையடையும் வரைஅது நிறைவேறாமலேயே இருக்கும். சுமார் 65 சத மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள் என்ற அடிப்படையில் கிராமப் புறங்களில் மிக முக்கியமான நிலம் இல்லாவிடில், அவர்களால் வாழ இயலாது. கராச்சித் தீர்மானம் உறுதி யளித்ததுபோல  விவசாயக் கூலிகளை அடிமைத்தனத்திலிருந்து மீட்க முடியவில்லை என்றால் அதற்கும் நிலச் சீர்திருத்தம் அமலாகாததுதான். சிந்தித்துப் பார்த்தால் சமூகத்தைப் பிடித்துள்ள முப்பெரும் வியாதிகளான, குழந்தைத் தொழிலாளர், பிச்சை எடுத்தல், விபச்சாரம் இவை யனைத்தும் நிலச்சீர்திருத்தம் நடக்காததால் ஏற்பட்டவைதான்.

விவசாயிகள் சங்கமும், இடதுசாரிகளும் நிலச்சீர்திருத்தம் சிறிய அளவிலாவது நடக்க மிக நீண்ட நெடிய போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் கொண்டு வரப்பட்ட சட்டங்களை நீதித்துறை செல்லாததாக ஆக்கிவிடாது தடுக்கவும் போராட வேண்டியிருந்தது.

ஆனால் இன்று பல மாநிலங்களில் பெயரளவிற்கு நடந்த நிலச்சீர்திருத்தங்களையும் மாற்றிவிட இன்று அரசுகள் முயற்சித்து வருவதுதான் மிகக் கொடுமை. இம்முறை நிலப்பிரபுக்கள் தனியாக இல்லை மிகப்பெரிய தொழிலகங்களும், அன்னிய மூலதனங்களும் இவ்விஷயத்தில் அவர்களுக்கு துணை சேர்ந்துள்ளார்கள்.

தாழ்த்தப்பட்டோரின் நிலை

மறு விநியோகம் என்ற அம்சம் நிலச்சீர்திருத்தத்தில் இல்லாததால் மற்றொரு எதிர் வினையும் ஏற்பட்டுள்ளது. ஜாதியின் பெயரால் சுதந்திர இந்தியாவில் எந்த ஒரு குடிமகனுக்கும் தீங்கு நேராது என்று கராச்சித் தீர்மானம் கூறுகிறது. கிணறுகள், குளங்கள், பொது இடங்களிலும், எல்லாக் குடிமக்களுக்கும் சம உரிமை உண்டு என்றும் கூறுகிறது. இருப்பினும் இன்று நாம் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் (SC/ST)) என்று குறிப்பிடும் மக்களைப் பற்றி தனியாக எதுவும் குறிப்பிடவில்லை. இப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பாக காந்தி, அம்பேத்கர் ஒப்பந்தப்படி, கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு என்ற கருத்து உருவானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்நாட்டில் கடுமையாக ஒடுக்கப்பட்ட அம்மக்களுக்கு, சுதந்திர இந்தியாவில் சம உரிமை அளிக்கப்படும் என்ற வாக்குறுதியைக் காங்கிரஸ் அளித்தது.

தலித் மக்களின் சமூக ஒடுக்கு முறையின் பொருளாதாரப் பரிணாமத்தை காங்கிரசோ அல்லது டாக்டர் அம்பேத்கரோ கவனிக்கத் தவறியது என்பது வேறு விஷயம். அக்காலத்தில் இப்பிரச்சனையை கம்யூனிஸ்ட்டுகள் தான் எழுப்பி வந்தனர். 1930 ல் செயலுக்கான மேடையில் (Platform Of  Action) இவ்விஷயம் முக்கியமான பிரச்சனையாக இடம் பெற்றது. எனினும் இந்நிலை நீண்டநாள் நீடிக்கவில்லை. இந்திய அரசியலமைப்பு விரைவில் கையெழுத்திட்ட பின் நடந்த தலித் மக்களின் பேரணியில் அம்பேத்கர் இது பற்றிப் பேசினார். இன்று தலித்துகள் சிவில், அரசியல் சமத்துவமுள்ள ஒரு யுகத்தில் நுழைகிறார்கள் – எனினும் அங்கு சமூகப், பொருளாதார சமத்துவம் இருக்காது என்றார் அவர். இது ஒரு முக்கியமான கூற்று. தலித்துக்களின் முன்னேற்றத்திற்காக கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடுகள் தொடர்ந்தாலும், அவை பெரும்பாலான இம்மக்களுக்கு குறிப்பிட்ட அளவு உதவவில்லை என்பது யதார்த்தம். ஜாதி – வர்க்க ஒருங்கிணைப்பு (Cast – Class Comondance) காரணமாக, பொருளாதார ஏணியின் அடித்தளத்தில் இருப்பவர்கள் சமூகப் படிகளிலும், அடித்தளத்தில் இருப்பதே இதன் காரணம். இன்னும் விவசாயக் கூலிகளில் பெரும்பாலானோர் தலித்துக்கள் என்பதால் நிலச் சீர்திருத்தம் இவர்களுக்கு சொத்தைத் தருவதோடு, சமூக அந்தஸ்த்தையும் தரும். மேற்கு வங்கம் இதைத்தான் பளிச்சென்று காட்டுகிறது. ஆனால், இதுதான் நாடு முழுவதும் கவனமாகத் தவிர்க்கப்பட்டது.

இன்னும் சில உதாரணங்கள்

வாழ்நிலைக் கேற்ற கூலி, நல்ல பணிச் சூழல், வரையறுக்கப்பட்ட வேலை நேரம், பெண் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு, சுரங்கம் மற்றும் தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்களைப் பணியிலமர்த்தத் தடை, கிராமப்புற கடன்கள் ஒழிப்பு, கந்து வட்டி ஒழிப்பு (இதனால் நம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்) போன்ற பல்வேறு விஷயங்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பற்றி இங்கு பேசாமல் இருப்பதே நல்லது. ஆளும் வர்க்கம் சாமர்த்தியமாக இவற்றில் பலவற்றை அரசின் கொள்கைகளை நெறியுறுத்தும் கோட்பாடுகளில் வைத்தது. இதனால், இவை செயல்படுத்தப்பட வேண்டிய வரையறைக்குள் வராமல், உன்னதமான விருப்பமாகவே நின்றுவிட்டன.

இவை எவ்வாறெல்லாம் கேலிக் கூத்தாகின என்பதற்கு ஒரு உதாரணம் பார்க்கலாம். அரசு அனைவருக்கும் கட்டாய அடிப்படைக் கல்வி வழங்கும் என்று கராச்சி தீர்மானம் கூறியது. சுதந்திரத்திற்குப் பின் அடிப்படைக் கல்வி (Primary) என்பது ஆரம்பக்கல்வி (Elementary) என்று மாறியது. புதிய அரசியலமைப்புச் சட்டமோ 10 ஆண்டுகளில் அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச, கட்டாய ஆரம்பக்கல்வி அளிக்க அரசு முயற்சி செய்யும் (trike to Provide) என்றது. கராச்சித் தீர்மானத்தில் இது அடிப்படை உரிமைகளும், கடமைகளும் என்ற தலைப்பில் 1 (XI) பகுதியாக இடம் பெற்றதும், சுதந்திரத்திற்குப் பின் இது நெறியுறுத்தும் கோட்பாடுகளில் வைக்கப்பட்டதும் கவனிக்கத் தக்கது.

56 ஆண்டுகளாகியும், நடைமுறைப்படுத்தாத இவ்விஷயத்தை 10 ஆண்டுகளில் செய்வதாகக் கூறிய விந்தையை என்ன வென்று சொல்வது?

பொது சுகாதாரம், கல்வி மற்றும் இதர சமூக நலத் திட்டங் களுக்கான செலவுகளை இந்நாட்டின் எதிர்கால வளத்திற்கான முதலீடு எனக்கருதாமல், வீண் செலவு என்றே இந்திய ஆளும் வர்க்கங்கள் நினைத்து வந்துள்ளன. கோத்தாரி கமிஷனின் பரிந்துரைகள் வந்த பின், இரண்டாண்டுகள் கழித்து, 1968 ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதத்தை செலவிட மத்திய அரசு ஒப்புக் கொண்டது. ஆனால், அதன் பின் 36 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாய் வந்த பல அரசாங்கங்கள் இந்தப் பரிந்துரையை அமலாக்கவில்லை. இடதுசாரிகளில் கடும் நிர்பந்தம் காரணமாக தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கல்விக்கு இத்தொகை ஒதுக்குவதாக ஒத்துக் கொண்டுள்ளது.

மதச்சார்பின்மை, கூட்டாட்சி

கராச்சித் தீர்மானம் அதிக முக்கியத்துவம் தந்த மற்றொரு விஷயம் மதச்சார்பற்ற அரசியல். அரசு எந்த மதத்தையும் சாராமல் நடுநிலை வகிக்கும் என அது கூறியது. ஆனால், இன்று ஆளும் அரசியல் வாதிகள் மதவாதப் பிரச்சனைகள் எழுந்தால் நடுங்குகிறார்கள். மதவாத சக்திகளோடு சமாதானமாகப் போகிறார்கள். இல்லை யெனில் சரணாகதியடைகிறார்கள். அவர்களில் பலரும் மதச்சார்பின் மையை எந்த மதத்தையும் சாராது நடுநிலை வகித்தல் என்ற பொருளில் பார்க்காது, எல்லா மதவாத சக்திகளுடனும் ரகசியத் தொடர்பு வைத்திருத்தல் என்ற பொருளில் பார்க்கின்றனர். எனினும், சாதாரண மக்கள் மதச்சார்பின்மையை சரியான வழியில் புரிந்து கொண்டுள்ளனர். இன்றும் நமது மதச்சார்பற்ற தன்மை பாதுகாக்கப் படுகிறது என்றால், அது இந்நாடு எதிர் நோக்கும் சவால்களை உணர்ந்து, தேச ஒற்றுமையைக் காப்பதன் அவசியத்தை உணர்த்த, உண்ண உணவும், உடுக்க உடையும் இல்லாத, படிப்பறிவில்லாத நமது பாமர மக்களால் தான்.

நமது நாட்டின் அடிப்படைத் தன்மைகளில் முக்கியமான மற்றொரு அம்சமான கூட்டாட்சி பற்றி கராச்சி ஆவணம் எதுவும் கூறவில்லை. இரு காரணங்களால் இது நமக்கு வியப்பளிக்கிறது. முதலாவதாக, இதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்புதான், மோதிலால் நேரு கமிட்டி எதிர்கால இந்தியாவில் கூட்டாட்சி முறைதான் இருக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறியிருந்தது. கராச்சி மாநாடு காங்கிரசை இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டின் விவாதப் பொருள்களில் இந்தியாவில் கூட்டாட்சி முறையின் அவசியம், அதற்குத் தேவையான அம்சங்கள் ஆகியன இடம் பெற்றது இரண்டாவது காரணம். 1930 ல் காங்கிரஸ் முதல் வட்ட மேஜை மாநாட்டைப் புறக்கணித்தது. ஒத்துழையாமை இயக்கம் துவங்கியது. பிறகு காந்தி – இர்வின் ஒப்பந்தம் அடுத்த வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்ளும் சூழலை உருவாக்கியது. அதை கராச்சி மாநாடும் அனுமதித்தது எல்லாம் நாம் அறிந்தவையே. ஆனாலும், இந்திய அரசுச்சட்டம் 1935ன் கூட்டாட்சி பற்றிய பகுதியை, சரியில்லை எனக் கூறி காங்கிரஸ் நிராகரித்தது. இச்சட்டப்படி 1937 ல் நடந்த மாகாணத் தேர்தல்களில் மட்டுமே போட்டியிட ஒப்புக் கொண்டது.

இது இவ்வாறு இருப்பினும், கூட்டாட்சித் தத்துவத்தை 1921 வாக்கிலேயே காங்கிரஸ் ஏற்றுக்கொண்டுள்ளது. அப்போதே அது நிர்வாகக் காரணங்களுக்காக பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த மாகாணங்கள், ராஜதானிகளை காங்கிரஸ் நிராகரித்துள்ளது. இதற்கு மாறாக, காந்தியடிகள் தலைமையிலான காங்கிரஸ் தனது கிளைகளை மொழிவாரியாகப் பிரித்தது. 1928 ல் நேரு தலைமையிலான கமிட்டி அளித்த அறிக்கையில் மொழிவழி மாநிலங்கள் அமைப்பது பற்றிய சிந்தனைகள் தெளிவாக இடம் பெற்றன. சுதந்திரத்திற்குப் பின், மொழிவழி மாநிலங்கள் அமைய மக்கள் கடுமையாகப் போராடி, பல தியாகங்கள் செய்ததும், பெரும்பாலும் இப்போராட்டங்கள் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் நடந்ததும் வேறு விஷயம்.

இன்று இந்திய அரசியலின் இரு அடிப்படைத் தன்மைகளான மதச்சார்பின்மையும், கூட்டாட்சித் தத்துவமும், மதவாத சக்தி களாலும், அவர்களது கூட்டாளிகளாலும் கடும் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன. இன்று இவற்றைக் காப்பது மட்டுமின்றி, இவற்றை வலுப்படுத்துவதும் தேவையாக உள்ளது.

ஏகாதிபத்தியத்திற்கெதிரான மக்கள் உணர்வுகளைப் பிரதி பலிக்கும் வண்ணம், சுதந்திரத்திற்கு முன் இந்திய தேசிய காங்கிரஸ் பல்வேறு வாக்குறுதிகளைத் தந்துள்ளது. அவை இன்றைய சூழலில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. உதாரணமாக, தங்கள் நலன்களைக் காக்க விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் சங்கம் அமைக்கும் உரிமை வழங்கப்படும் என்ற வாக்குறுதிகளுக்கு எதிராக இன்று அவ்வுரிமையைப் போராடிப் பெற்றவர்களிடமிருந்து அதைப் பறிக்கும் முயற்சிகள் நடக்கின்றன. வேலை நிறுத்தங்கள் சட்ட விரோதமானவை என்ற உச்ச நீதி மன்றத் தீர்ப்பை மாற்ற பாராளுமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இன்று வரை ராணுவச் செலவுகள், இதர செலவினங்களைக் குறைத்து, மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதியைத் திருப்பிவிட அரசுக்கு இயலவில்லை. கனிம வளம், ரயில், கப்பல், தரைப்போக்குவரத்து, கேந்திரமான தொழிற்சாலைகள் அனைத்தும் அரசுடைமையாக்க, அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது வாக்குறுதி.

ஆனால், இன்று அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற் சாலைகள், சேவைத்துறைகளை தங்கத்தாம்பளத்தில் வைத்து தனியார் பூர்ஷ்வா முதலாளிகளுக்குத் தாரை வார்ப்பதைப் பார்க்கிறோம். ஜவுளி மற்றும் உள்நாட்டுத் தொழில்களை வெளி நாட்டுப் போட்டியில் இருந்து பாதுகாப்போம் என்பது பழைய உறுதி மொழி. இன்று யதார்த்தத்தில் நம் உள்நாட்டுத் தொழில் களெல்லாம் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு இரையாகின்றன. சம ஆடுதளம் கூட நம் தொழில்களுக்கு இல்லை. பணம் மற்றும் அந்நியச் செலவாணி பற்றிக் குறிப்பிடும் போது, நாட்டின் நலன் கருதி அவை கட்டுப் படுத்தப்படும் என்றார்கள். நடைமுறையில் ஏகாதிபத்தியத்தின் வேண்டுகோளை ஏற்று ரகசியமாகவோ, வெளிப்படையாகவோ பணத்தின் மதிப்பு இறக்கப்படுகிறது.

மொத்தத்தில், இந்நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் போது, போராடிய மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இந்த நாட்டின் ஆளும் வர்க்கங்கள் அக்கறை காட்ட வில்லை. நம் மக்களின் மகத்தான போராட்டங்களின் விளைவாக இங்கு ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு ஏற்பட்டுள்ளது. எனினும், ஏகாதிபத்திய பூர்ஷ்வா சக்திகள் நமது குடியரசின் அடித்தளத்தை பலவீனப்படுத்தி, மக்களை என்றும் அடிமைத்தளையில் வைத்திருக்க முயற்ச்சிக்கின்றன. அவர்களுக்குப் புரியக்கூடிய வகையில் பதிலளிக்க ஒரே மொழிதான் உள்ளது – போராட்ட மொழி. மக்களுக்கு அளிக்கப் பட்டுள்ள வாக்குறுதிகள் காகித மலர்களாக இல்லாது உண்மையாக மாற இடதுசாரி, ஜனநாயக சக்திகள் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை தூக்கி எறிந்ததைப்போல, மக்கள் தங்கள் விடுதலைப் போராட்டத்தை விரிவு படுத்தி, வலுப்படுத்தி, நம் குடியரசைக் காக்க வேண்டும். இந்தக் குடியரசு நன்னாளில், நமது இத்தீர்மானத்தைப் புதுப்பித்துக் கொண்டு, அதன் வெற்றி நோக்கி முன்னேறுவோம்!

குடியரசின் மாண்புகளைப் பாதுகாப்போம்! மக்கள் நலன்களை முன்னேற்றுவோம்!

பிரகாஷ் காரத்

தமிழில். சி.சுப்பாராவ்

1950ல் குடியரசு அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டது சுதந்திர இந்தியாவின் முக்கியமான சாதனையாகும், ஐம்பத்தியாறு ஆண்டுகளுக்கு முன், அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை தனது குடிமக்களுக்கு ஜாதி, மத, இன, பால் பேதமின்றி சம உரிமை அளிக்கும் ஜனநாயகக் குடியரசாக அறிவித்தது. இப்போது நினைத்துப் பார்த்தால், வயது வந்தோருக்கான வாக்குரிமையுடன் கூடிய பாராளுமன்ற ஜனநாயக முறையை உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டம் மிகப் பெரிய சாதனைதான் என்று தெரிகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் சொல் அமைப்பிலும், செயல்படும் முறைகளிலும், பல தடைகளும் எல்லைகளும் கொண்டதாக  இருந்தாலும் கூட, சாமானியனும் அரசியலில் ஈடுபட அது வழி வகுத்தது. பிரிட்டிஷ் அரசு உருவாக்கிய இந்திய அரசுச்சட்டம் 1935 ன் படி, வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், நியமன உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் நிர்ணய சபையால் உருவாக்கப் பட்ட அரசியலமைப்புச் சட்டமானது, 1947ல் அதிகாரத்திற்கு வந்த ஆளும் வர்க்கத்தின் முத்திரையைப் பெற்றதில் வியப்பில்லை. எனினும், தேச விடுதலைப் போராட்டத்தின் போது மக்களிடையே இருந்த எதிர்பார்ப்புகளையும் அது முன்னெடுத்துச் சென்றது.

இவற்றில் சில வழிகாட்டும் கொள்கைகளில் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன. அடிப்படை உரிமைகள் மக்களின் சில குடி உரிமைகளைப் பற்றியும் அதில் கூறப்பட்டுள்ளன. அதே நேரத்தில், வழிகாட்டும் கொள்கைகளை நீதிபூர்வமாக நடைமுறைப்படுத்தும் கட்டாயமில்லை. நடைமுறையில் பல அடிப்படை உரிமைகள் மீறப்படுவதும், அவை அணுக முடியாத உயரத்தில் இருப்பதும் மக்களின் வாழ்பனுபவமாகும். அரசியலமைப்புச் சட்டத்தில் தரப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததன் முக்கியக் காரணம் இந்திய அரசின்  அடிப்படைத் தன்மையில் – அதன் நிலப்பிரபுத்துவ, பூர்ஷ்வாத் தன்மையில் உள்ளது. அரசியல் ஜனநாயகம் ஒரு புறமாகவும், செல்வக்குவிப்பும், பொருளாதார ஆதாரங்கள் குவிப்பும் மறுபுறமாகவும் முரண்பட்ட நிலையை உருவாக்குகின்றன.

பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு அரசியலமைப்புச் சட்டம் தான் ஒரு கட்டமைப்பைத் தந்துள்ளது. இந்த முறையை ஏற்றுக் கொண்டுள்ள பல முன்னாள் – காலனி நாடுகளைக் காட்டிலும், இங்கு அது உயர்வாக இயங்குகிறது. ராணுவம், அதிகார வர்க்கம் ஆகியவற்றை அரசியல் கட்டுப்பாட்டில் வைக்கவும், ஓரளவு சுதந்திரமான நீதித்துறை ஆகியவற்றை இது அளித்துள்ளது.

இந்தியா போன்ற ஒரு வளர்ந்து வரும் முதலாளித்துவ நாட்டில் ஜனநாயக முறை பெற்று இருக்கும் அடிப்படை குறுகியதாக இருந்தாலும், அதற்கும் தடைகள் இருந்தாலும் அவைகளை மீறி, பாரளுமன்ற ஜனநாயகம் தன் ஜீவனை, உயிர்ப்பை பல அண்டுகளாகக் காப்பாற்றி வருவது பாராட்டுக்குரியது. சுதந்திரத்திலிருந்து இன்று வரை ஜனநாயகத்திற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளனவே தவிர குறையவில்லை. அனைத்து மட்டத் தேர்தல்களிலும், சாதாரண மக்கள் உற்சாகத்தோடு பங்கேற்கிறார்கள். கிராமப்புற ஏழைகளும், ஒடுக்கப்பட்டோரும் தேர்தல்களை, சந்தேகக் கண்ணோடு பார்ப்பதில்லை. மாறாக, பல இடங்களில், கிராமப்புறங்களில், வன்முறை மூலம், நிலப்பிரபு / ஆதிக்க ஜாதியினர் ஏழைகளை, தலித்துகளை வாக்களிக்க விடாமல் தடுப்பதைப் பார்க்கிறோம். உட்கட்சி ஜனநாயகத்தைத் தம் கட்சிக்குள் கொண்டு வருவதில் பல கட்சிகள் தோல்வியடைந்தாலும், அது ஒட்டு மொத்தமாக கட்சி அரசியல் முறையின் சிதைவில் முடியவில்லை. கட்சி அரசியல் முறையின் உயிரோட்டத்திற்குச் சாட்சியாக, அரசியல் கட்சிகள் பல்கிப் பெருகி வருகின்றன. நாட்டின் அரசியலை இருகட்சி முறைக்கு மாற்ற நினைத்தவர்களின் ஆசையில் மண் விழுந்தது.

பல குறைபாடுகளும், எல்லைகளும் இருந்தாலும், குடியரசு அரசியலமைப்பு பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு ஒரு அடித்தளம் அமைத்துத் தந்துள்ளது. ஜனநாயகத்தில் வெகுஜனப் பங்கேற்பை ஏற்படுத்தி, அரசியல் சட்டப் பூர்வ மதிப்பை அளித்துள்ளது. இது 1950 களில் தோன்றிய அரசியல் முறையின் சாதகமான அம்சமாகும்.

ஆனால், இவைகளால் ஜனநாயக முறையின் ஆபத்தான குறைபாடுகளையும், அது சந்திக்கும் சவால்களையும் மறைக்க முடியவில்லை. நவீன தாராளமயக் கொள்கைகள், தடையில்லாத தனியார் மயம் என்று போய்க்கொண்டிருக்கும் இன்றைய முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில், பொருளாதார அமைப்பின் வர்க்கப் படிநிலையிலிருந்து அரசியல் ஜனநாயகம் சிறிது சிறிதாக விலகி வருகிறது. அரசியலமைப்பின் சிற்பி.டாக்டர்.அம்பேத்கர் இப்பிரச்சனை குறித்து சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளார். சமூக, பொருளாதார ஜனநாயகம் இல்லாத இடத்தில் அரசியல் ஜனநாயகம் வெற்றி பெற இயலாது என்பதை புரிந்து கொள்ளத் தவறும் இரண்டாவது தவறான தத்துவப் பார்வை, பாராளுமன்ற ஜனநாயகத்தை பலகீனப்படுத்திவிடும் ஊறு உள்ளது. சுதந்திர இந்தியாவில் முன்பு எப்போதையும் விட இப்போது இருப்பவர் – இல்லாதவர்களிடையே உள்ள இடைவெளி அதிகரித்துள்ளது. பெரும்பாலோருக்கும் பயனளிக்கவில்லை என வெளிப்படையாகத் தெரிந்த போதிலும் கூட, அத்தகைய பொருளாதார வளர்ச்சி போற்றப் படுகிறது. அரசியலமைப்பின் வழிகாட்டும் கொள்கைகளில் கூறப்பட்டுள்ள வேலைவாய்ப்பு உரிமை, கல்வி, உழைப்போர்க்கு வாழ்வதற்கேற்ற ஊதியம், குழந்தைகளுக்கு இலவசக்கட்டாயக்கல்வி என்ற பல்வேறு வாக்குறுதிகளிலிருந்து அரசு பின்வாங்குவது தற்போது அதிகமாகியுள்ளது.

குறைபாடுகளும், சவால்களும்

சமூகத்தில் சமத்துவம் நிலவுவதாக காட்டும் தோற்றத்தைக் கூட ஏற்படுத்த இயலாமல் குடியரசு தோல்வியடைந்துள்ளது தெளிவு. அரசியலமைப்பின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள கண்துடைப்பு நடவடிக்கையாக இடஒதுக்கீடு  ஆகிவிட்ட நிலையில், தலித்துகள் ஒடுக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். 8.4 கோடி ஆதிவாசிகள் நிலப்பிரபுத்துவ – லேவாதேவி – காண்டிராக்டர்களின் வட்டாரத்தால் கடுமையாகச் சுரண்டப்படுகின்றார்கள். இதற்கும் மேலாக, அவர்களது நிலம், வாழ்க்கை, வாழிடம் அனைத்தையும் பிடுங்கும் இடையறாத தாரளமய, தனியார்மயத்திற்கு அவர்கள் இரையாகிறார்கள். ஆதிவாசிகளின் மீதான உட்சபட்சத் தாக்குதலை கலிங்கா நகர் படுகொலையில் பார்த்தோம். குடியரசாகி ஐம்பத்திஆறு ஆண்டுகளான பின்னும், அரசு மக்களுக்கு எழுத்தறிவே தரவில்லை யெனும் போது, 14 வயது வரைக்கும் கட்டாயமான, இலவசக்கல்வி குறித்து நாம் பேச முடியுமா? மக்கள் தொகையில் முப்பத்தி ஐந்து சதம் கல்வியறி வில்லாதவர்கள் தான்.

மற்ற உலக நாடுகளோடு ஒப்பிட முடியாத அளவு கோரமான வறுமை இந்தியாவில் நிலவுகிறது. பசி, ஊட்டச்சத்துக்குறைவு, நோய்கள் என இது தொடர்பான பிரச்சனைகள் ஏராளம். முழுமுதல் அடிப்படையான தோல்வி வறுமை ஒழிப்பில் தான்.

கடந்த பதினைந்து ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்படும் தாரளமய, தனியார்மயக் கொள்கைகள் ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோதப் போக்கை நாட்டில் பரப்பியுள்ளன. தாரளமய சித்தாந்தங்களின் விளைவாக ஜனநாயகத்தின் மீது புதுத் தாக்குதல்கள் ஏற்பட்டுள்ளன. உழைக்கும் வர்க்கத்தைக் தட்டி வைக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. 1990 களில் பா.ஜ.க.வின் வளர்ச்சி அப்பட்டமான மதவாதத்தின் வளர்ச்சி; வலது சாரி சர்வாதிகாரத்தை நோக்கிய சாய்வு என்று கொள்ளலாம். பா.ஜ.க. வும் அதன் தலைவர் திரு.எல்.கே.அத்வானியும் தற்போதுள்ள பாராளுமன்ற ஆட்சி முறையை மாற்றி ஜனாதிபதி ஆட்சி முறை ஏற்படுத்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்ததில் வியப்பொன்றும் இல்லை. வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்பதில் சில கட்டுப்பாடுகள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கே கல்வித் தகுதிகள், இவைபற்றியெல்லாம் பல வதந்திகள் உலவுகின்றன. இவை ஏதோ சில தனிநபர்கள் அல்லது அரசியல் கட்சிகள் கூறுவதாக நினைப்பது தவறு. இவை சர்வதேச நிதி மூலதனத்தைத் தேடும் மிகப் பெரிய பண முதலைகளின் ஜனநாயக விரோதக் கொள்கைகள்.

இது போன்ற கொள்கைகளை நாட்டின் மிக உயரிய நீதி அமைப்பும் வெளியிடுகிறது. மக்களின் கூட்டுப் போராட்ட உரிமைகளை அது சகித்துக் கொள்வதில்லை. ஹர்த்தால்கள், பந்த்கள் தடை செய்யப்படுகின்றன. கூட்டங்கள் நடத்துவது, கண்டம் தெரிவிப்பது போன்ற நடவடிக்கைகளுக்குப் பல கட்டுப்பாடுகள். மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவதை தடுப்பது இப்படி தொழிலாளர்கள் குறித்த பழமைவாதப் போக்கை உச்ச நிதிமன்றத்தின் பல தீர்ப்புகளில் காணலாம். அரசியலிலும், பொருளாதாரத்தில் மட்டும் வலதுசாரிச் சிந்தனைகள் தோன்றுகின்ற நிலையைத் தாண்டி, தற்போது நிலவும் பழக்க வழக்கங்களை நிலைபெறச் செய்வது, ஜாதிய வெறுப்புணர்வுகளை மங்கவிடாமல் வளர்ப்பது, விஞ்ஞானத்திற்கும், பகுத்தறிவிற்கும் பொருந்தாத விஷயங்களை தலைமேல் வைத்துக் கொண்டாடுவது – இவைகளும் தான் இன்றைய நிலவரமாக உள்ளது. சுதந்திரம் அடைந்த புதிதில், ஜனநாயக நெறிகளையும், விஞ்ஞானப் பூர்வமான அணுகுமுறையையும் பாதுகாக்கப்போவதாக ஆளும் பூர்ஷ்வா வர்க்கம் அன்று பேசியதற்கும், இப்போது நடப்பதற்கும் சம்பந்தமே இல்லை. பா.ஜ.க. ஆட்சியில், அனைத்துத் துறைகளிலும் மதவாதமும், சமூகக் கட்டுப்பெட்டித் தனமும் ஊடுருவின. இன்றும் அதில் பெரும்பகுதி நேராக்கப்படாமலேயே உள்ளது.

அனைத்து மட்டங்களிலும் உள்ள ஊழலால், அரசாங்க அமைப்பின் எல்லாத் துறைகளும் சீரழிந்துவிட்டன. அரசியல் கட்சிகள் உரிமை கொண்டாடும் அம்சமாக ஊழல் ஆகிவிட்டது. இதுவரை அதிகார பீடத்தில் ஏறாத அரசியல் கட்சி, ஜாதிச் செல்வாக்கில் ஆட்சிக்கு வரும் போது மக்கள் ஏற்றுக் கொள்வது அதிகரித்துள்ளது. வளர்ச்சிக்கான அரசின் திட்டங்கள், நலப்பணிகள் மக்களைச் சென்று அடையாததன் முக்கியக் காரணம் மேல்மட்ட அதிகாரிகள், பூர்ஷ்வா அரசியல் வாதிகள் ஆகியோர் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பது தான்.

எனினும், இத்தகைய எல்லா பாதகமான அம்சங்களும், பாராளுமன்ற ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து விடவில்லை. பூர்ஷ்வா வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தின் வடிவமாக இருந்தாலும் கூட, இன்றைய பாராளுமன்ற அமைப்பு மக்களின் முன்னேற்றத்தையும், பிரதிநிதித்துவப்படுத்துகிறது.. அது மக்களுக்குத் தங்கள் நலன்களைப் பாதுகாக்க சில வாய்ப்புக்களைத் தருகிறது. ஓரளவு அரசின் செயல்பாடுகளில் மக்களால் தலையிட முடிகிறது. சமூக முன்னேற்றத்திற்கும், ஜனநாயக முன்னேற்றத் திற்குமான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வழி வகுக்கிறது.

இறையாண்மையின் வீழ்ச்சி

குடியரசின் இறையாண்மைத் கோட்பாட்டிற்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றொரு ஆபத்தான விஷயமாகும். குடியரசாகிப் பல ஆண்டு களுக்கு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அதன் சுயேச்சையான செயல்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் பெருமை சேர்ப்பதாக இருந்தது. 1991 ல் தாராளமயக் கொள்கைகள் வந்தபோது, அணிசேராக் கொள்கையை கைவிட முன்வைப்பப்பட்ட வாதங்கள் இறுதியில் சுயேட்சையான அயலுறவுக் கொள்கையை கைவிட வழிவகுத்தது. ஆறாண்டு கால பா.ஜ.க. ஆட்சியின் போது, அமெரிக்காவின் இயல்பான துணையாக இருப்பது தான் நமது குறிக்கோள் என்ற ரீதியில் செயல்பட்ட போது இது அதிர்ச்சி தருகிற முறையில் வெளிப்பட்டது. பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றம், நமது பொருளாதாரக் கொள்கைகளில் அமெரிக்கா மற்றும் சர்வதேச நிதி மூலதனங்களின் தாக்கம் ஆகியன வெளியுறவுக் கொள்கைகளில் மேலும் மாற்றத்தை ஏற்படுத்தியது.  சுயேட்சையான வெளிநாட்டுக் கொள்கை, பல துருவ உலக உறவை பலப்படுத்துவது என்று வாக்குறுதி அளித்த ஐக்கிய முற்போக்கு அணி அரசு இப்பொழுது ஆளும் வர்க்கங்களின் நிலைபாடான அமெரிக்வின் அரசியல் பங்காளியாக இருப்பது என்ற நிலைபாட்டை உறுதி செய்து வருகிறது. இந்திய – அமெரிக்க ராணுவ ஒப்பந்தமும், ஜூலை 2005 ல் பிரதமர் வாஷிங்டனில் அளித்த கூட்டு அறிக்கையும் சுயேட்சையான வெளியுறவுக் கொள்கை தேய்ந்து போனதைத்தான் காட்டுகின்றன. கடந்த செப்டம்பரில் ஈரான் அணுசக்தி விஷயத்தில் சர்வதேச அணுசக்தி குழுமத்தில் ஈரானுக்கு எதிராக வாக்களித்தது இந்தியாவின் அமெரிக்க சார்புக்கு முக்கியமான அடையாளமாகும்.

இந்தியாவின் இறையாண்மையை பாதிக்கும் கோரிக்கைகளை முன்வைப்பதில் தயக்கம் காட்டாமல் அமெரிக்கா நடந்து கொள்கிறது. வடகிழக்கில் குண்டு வெடிப்புச் சம்பவத்தைப் புலனாய்வு செய்ய அமெரிக்க உள்நாட்டு புலனாய்வு அமைப்பை அனுப்புவதாக அமெரிக்கத் தூதரால்  சொல்ல முடிகிறது.  இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி மூலதனத்தை உயர்த்தாமல் நம்பிக்கைத் துரோகம் செய்ததாகக் குற்றம் சாட்டவும் முடிகிறது. ஈரான் – இந்தியா – பாகிஸ்தான் கூட்டு முயற்சியாக எரிவாயு குழாய் இணைப்புத் திட்டத்தை இந்தியா செயல்படுத்தக் கூடாது என அமெரிக்கா எச்சரிக்கவும் முடிகிறது. முன்னாள் இருந்த பா,ஜ,க, தலைமையிலான அரசும் சரி, இப்பொழுது ஐக்கிய முற்போக்கு அணியும் சரி, அமெரிக்காவுடன் இணைந்து, அமெரிக்காவின் ஜனநாயகத்தைப் பரப்புவது என்ற போர்வையில், அதன் மேலாதிக் கத்தை திணிக்கும் முயற்சிக்கு  உதவுவதில் எந்தத் தவறும் இருப்பதாகக் கருதவில்லை. இன்றைய அரசியல் அமைப்பில் வெளிப்படும் அனைத்து ஜனநாயக விரோதப் போக்குகளையும் சி.பி.எம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. மதச்சார்பின்மையை உள்ளடக்கிய ஜனநாயக நெறிகளைப் பாதுகாப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மதவாத ஆபத்தை எதிர்த்து, நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்க, அரசியல் ஜனநாயகத்தை வலுப்படுத்தி, நாட்டின் அரசியலில், இடதுசாரிகள் தான் மாற்று என்பதை உணர்த்த இன்னும் அதிகமான பணிகள் செய்ய வேண்டும்.

பாராளுமன்ற ஜனநாயக முறையை வலுப்படுத்த, தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியம். பணபலம் மற்றும் அடியாள் பலத்தைக் கட்டுப்படுத்த தேர்தல்களில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் (Proportional Representation) அடிப்படையான தேவையாகும். தேர்தல் செலவிற்கு என நிர்ணயிக்கப்பட்ட தொகையில் அனைத்து செலவீனங் களையும் அடக்கும் விதமாக சட்டங்கள் கடுமைக்கப்பட வேண்டும். தேர்தல் பிரச்சாரத்திற்கான அனைத்துப் பொருட்களை யும் அரசே தரும் விதமாக சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

1994 ல் ஒன்பது பேர் அடங்கிய உச்ச நீதி மன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்ச் மதச்சார்பின்மை தான் அரசியலமைப்பின் ஆதாரம் என்றும், அதன் பொருள் அரசில் மதம் தலையிடுவதும், மதத்தில் அரசு தலையிடுவதும் இன்றி, இரண்டும் தனித்தனியாக இருப்பது என்று வரையறுத்தது. இந்த வரையறை அரசியமைப்பில் தெளிவாக இடம் பெற வேண்டும்.

இன்றைய நிலையில், பொருளாதாரக் கொள்கைகளின் மோசமான போக்கை எதிர்த்து இடதுசாரிகளும், சி.பி.எம்.மும் போராட வேண்டும். வர்க்கப் பிரச்சனைகளான நிலச் சீர்திருத்தம், கூலி, வேலை வாய்ப்பு, பொதுத்துறை பாதுகாப்பு, உழைக்கும் மக்களைப் பாதிக்கும் தாரளமயத்தை எதிர்த்துப் போராட்டம். இவையனைத்தும், வர்க்கப் போராட்டத்தையும், வெகுஜன இயக்கத்தையும் விரிவு படுத்த அடித்தளமாக அமைய வேண்டும். பெண்ணுரிமை, தலித்துகள், ஆதிவாசிகள் முன்னேற்றம், சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டோரின் உரிமையைப் பாதுகாக்கும் அனைத்துப் போராட்டங்களையும் இடதுசாரிகள் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். மதவாத விஷத்திற்குப் புத்துயிர் அளிக்க பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கூட்டணி செய்யும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும். வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்க சார்பு நிலையை எதிர்ப்பது, குடியரசு, இறையாண்மை மாட்சியைப் பாதுகாப்பதில் சுயேட்சையான வெளியுறவுக் கொள்கை அவசியம் என்பதை நிறுவுவது, நமது போராட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த இருபது மாதங்களாக ஆட்சியில் இருக்கும் சூழலில் இப்பணிகள் அனைத்தையும் நாம் செய்ய வேண்டும். ஐ.மு.கூ. அரசை மக்கள் நலப் பணிகளைச் செய்ய வலியுறுத்தும் அனைத்து வேலைகளையும் தற்போது நடந்து வருகின்றன. இப்பாதையில் மேலும் நடைபோட செப்.29 வேலை நிறுத்தம் நமக்கு உத்வேகம் அளித்துள்ளது. இந்தியர்கள் தங்கள் தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமையை ஏகாதிபத்தியத்திடம் ஒப்படைக்க மாட்டார்கள் என்பதை அறிவிக்க, எதிர்வரும் அமெரிக்க அதிபர் புஷ் வருகிற நேரம் இடதுசாரிகளுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் கிடைத்த அருமையான வாய்ப்பாகும்.

சிவில் சமூகம் என்றால் என்ன?

அரசு சாரா அமைப்பு சொல்லும் அரசியல் சாரா சமூகம் – ஒரு மார்க்சீய ஆய்வு

அறிமுகம்

(அரசியல் சாரா அமைப்புகள் பற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் நிலையினை 18வது கட்சி காங்கிரஸ் அதன் அரசியல் – ஸ்தாபன அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த அமைப்புகளில் சில அணி திரட்டப்பட்ட இடதுசாரி இயக்கங்களிலிருந்து மக்களை திசை திருப்ப பயன்படுத்தப்படுகின்றன என அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. சிவில் சமூகம் என்ற கோட்பாட்டினை இவை முன்வைத்து, ஒரு மூன்றாவது வழியாக (சோசலிசம், முதலாளித்துவம் ஆகிய இரண்டிற்கும் மாற்றாக) பிரச்சாரம் செய்யப்படுகிறது.

சிவில் சமூகம் பற்றி மார்க்சீய – லெனினிசத்தின் அடிப்படையில் இத்தாலிய கம்யூனிஸ்ட் அறிஞர் அந்தோனியோ கிராம்சி கூறியதை நினைவில் கொள்வது அவசியம். சிவில் சமூகம் என்பதும் அரசு (அரசியல் சமூகம்) என்பதும் வெவ்வேறு அமைப்புகளாக இருந்தாலும், ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகள் தான். அரசின் மீது எந்த வர்க்கம் மேலாதிக்கம் செலுத்துகிறதோ அதுவேதான் சிவில் சமூகத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தும்.

சிவில் சமூகங்களை அரசுக்கு எதிராக, அல்லது அதற்கு மாற்றாக நிறுத்தும் முயற்சியில் அரசு சாரா அமைப்புகள் இன்று தாராளமயக் கொள்கைகளை எதிர்த்துப் போராடும் மக்களை வலுவிழக்கச் செய்து விடுகின்றன. எங்கும் பரவி நிற்கும் (தாராளமாக வந்து குவியும் நிதியாதாரங்களோடு) இந்த அமைப்புகள் இடதுசாரி புரட்சிகர இயக்கத்திற்கு பெரும் சவாலாக உருவெடுக்கின்றன.

தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற போராடும் பொழுது சிவில் சமூகத்தின் மீது தன் ஆளுமையினை உறுதி செய்து கொள்ள வேண்டுமென்கிறார் கிராம்சி. தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் கட்சியும் (கம்யூனிஸ்ட் கட்சி) தொழிலாளர் நலன்களுக்காக போராடும் மற்ற அமைப்புகளும், பரந்த அளவில் மக்களின் ஜனநாயக உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களின் ஆதரவுடன் செயல்படுவதற்கான சமூக அடிப்படை சிவில் சமூகத்தில் இருக்கிறது.

பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி இது சம்பந்தமாக வெளியிட்ட விமர்சனக் கட்டுரையினை தமிழாக்கம் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. கட்சி அணிகள் அரசியல் சாரா இயக்கங்கள் பற்றிய கோட்பாட்டு அடிப்படைகளில் தெளிவு பெற இக்கட்டுரை உதவும் என்று ஆசிரியர் குழு கருதுகிறது)

சிவில் சமூகக் கருத்து :

சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட பிறகு பெரும்பாலான இடதுசாரி அறிவு ஜீவிகள் சிவில் சமூக கோட்பாடு என்னும் காய்ச்சலுக்கு ஆட்படுத்தப்பட்டனர். அரசியல் சாரா தன்னார்வ அமைப்புகள், மனித உரிமைக் குழுக்கள் முதல் கல்வியாளர்கள், ஆர்வலர்கள் வரை ஜனநாயகவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொண்ட எதிர்ப்பாளர்கள் உட்பட நவீன உலகின் தீமைகளை எதிர்த்துப் போராட சிவில் சமூகம் என்னும் கோட்பாட்டையே பாதையாகத் தேர்ந்தெடுத்தனர். எனினும், சிவில் சமூகம் என்பதன் உண்மையான பொருள் என்ன என்பதற்கு சிலர் கேள்வி எழுப்பினாலும், மற்றவர்கள் அதைப் பற்றிய கருத்து எதையும் வெளிப்படுத்தவில்லை.

பிரெஞ்சு மற்றும் அமெரிக்கப் புரட்சிகள், ஜனநாயகம் மற்றும் சிவில் சமூக கோட்பாடுகளின் மூலாதாரமாக அமைந்தது. மேற்கூறப்பட்ட முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிகளின் காலத்தில் வளர்ச்சி பெற்ற இக்கொள்கையே இன்று சிவில் சமூகம் என்பதன் அடித்தளமாக அமைந்துள்ளது.

பிரெஞ்சு மற்றும் அமெரிக்கப் புரட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டங்களின் படி சிவில் சமூகம் என்பது ஆறு கொள்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.

அவை;- சொத்து, சமத்துவம், சுதந்திரம், பாதுகாப்பு, மதச்சார்பின்மை மற்றும் பத்திரிகை சுதந்திரம்.

உதாரணமாக, மனித உரிமை பிரகடனம் ஷரத்து 2, சமத்துவம், சுதந்திரம், பாதுகாப்பு, சொத்து ஆகியவை இயற்கையான, மீறப்படக் கூடாத உரிமைகள் என விளக்குகிறது. முதற்பார்வையில் இந்தக் கொள்கைகள் நியாயத்திற்கு உருக் கொடுத்தது போல் தோற்ற மளிக்கின்றன. பிரபல பத்திரிகைகள் மற்றும் தினசரி செய்தித் தாள்கள் மூலம் இவை தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யப்பட்டன. இருப்பினும், கூர்ந்து நோக்குங்கால், சிவில் சமூக கோட்பாடு என்பது முதலாளி வர்க்க ஆட்சியாதிகாரத்தைக் கடந்து சிறிதும் சென்று விடவில்லை என்பது புலப்படும். ஒரு வார்த்தையில் கூறினால், சிவில் சமூகம் என்பது முதலாளி வர்க்க சர்வாதிகாரத்தை மறைமுகமாகச் சொல்வதாகும்.

சொத்து: –

சிவில் சமூகக் கோட்பாட்டின் மையக் கொள்கையாவது, மீறப்படாத உரிமை கொண்ட தனிச் சொத்தைப் பற்றியதாகும். உதாரணமாக அரசியல் சட்டம் 1793ன் ஷரத்து 16ன் படி:- சொத்துரிமை என்பது எல்லா பிரஜைகளும் அவரவர்கள் செய்த வேலை, தொழில் ஆகியவை மூலம் ஈட்டிய வருமானத்தையும், பொருட்களையும் அவர்கள் சொந்த விருப்பப்படி அனுபவிக்கவும், விற்கவும் உரிமை பெற்றவர்கள் என்பதாகும் என்று மார்க்ஸ் கூறுகிறார்.

இப்படியாக சொத்துரிமை என்பது அவன் தன்னிடம் இருப்பதை அனுபவித்து விருப்பம் போல் அதை கையாளும் உரிமை; மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் சமூகத்திலிருந்து விடுபட்டு நின்று சுயநலம் பேணும் உரிமையாகும். முன்னால் குறிப்பிட்ட தனி மனித சுதந்திரத்தோடு பின் குறிப்பிடப்பட்ட அதை செயல்படுத்தும் முறைதான் சிவில் சமூகத்தின் அடிப்படையினை உருவாக்குகிறது. அது மனிதன் தன் சுதந்திரத்தைப் புரிந்து கொள்ள உதவுவதில்லை, மாறாக அடுத்தவனுக்கும் அந்த சுதந்திரம் உண்டு என்பதை உணர விடாமல் தடுக்கிறது. தனது சுதந்திரத்திற்கு எல்லை போடுபவர்களாக அடுத்தவர்களைப் பார்க்க வைக்கிறது.

இவ்வாறாக ஏனைய இதர மனித சமுதாயத்தை முழுவதுமாகப் புறக்கணித்து தனது விருப்பத்தின் பேரில் தனிச் சொத்தின் உபயோகம் என்பது முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் சிவில் சமூக கோட்பாடுகளின் நிர்ணய நியதிகளாக கட்டமைக்கப்பட்டுள்ளன. செல்வ ஆதாரங்களை சுயநலத்திற்கு பயன்படுத்துவது  என்பதே சிவில் சமூகக் கோட்பாட்டின் மையக் கொள்கையாகும்.

பொருளாதார ஆய்வுகளிலிருந்து தனிச் சொத்து என்பது சில குறிப்பிட்ட வளர்ச்சி விதிகளைப் பின்பற்றுகிறது என்பதை நம்மால் அறிய முடிகிறது.  நமது கவனத்தைக் கவர்வது மூலதனக் குவிப்பு நியதியாகும். உண்மையில், உலகில் மூன்று மிகப் பெரும் தனிநபர் பணக்காரர்களிடம் உள்ள சொத்து 60 கோடி மக்களிடம் உள்ளதை விட அதிகமாகும். இம்மாதிரியான வளர்ந்து வரும் சமத்துவமின்மை தனி உடமை தர்மத்திற்கு விரோதமானதல்ல.

சமத்துவம்:

சமத்துவம் என்ற கோட்பாட்டை சிவில் சமூகம் இவ்வாறு விளக்குகிறது. அரசியல் சட்டம் ஷரத்து 3ன்படி; …… சமத்துவம் என்பது சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்ற உண்மையை உள்ளடக்கியதே. பாதுகாப்பு நல்கினாலும், தண்டனை கொடுத்தாலும் பாகுபாடு காண்பிக்கக்கூடாது என்பதே. வேறு வார்த்தைகளில், சிவில் சமூகத்தில் சொல்லப்படுகின்ற சமத்துவம் என்பது சட்டத்தின் முன் சமம் என்பதே தவிர வாய்ப்பு அளிப்பதில் சமத்துவம் என்பதல்ல. அதாவது, சட்ட ரீதியான சமத்துவம் என்பதே தவிர பொருளாதாரரீதியாகவோ மனிதன் என்ற முறையிலோ அது அர்த்தப்படுத்தப்படவில்லை. ஆகவே, சிவில் சமூகக் கோட்பாட்டில் அடங்கியுள்ள சமத்துவம் என்பது பரந்தும், வளர்ச்சியுற்றும் வருகின்ற பொருளாதார ஏற்றத் தாழ்வு, செல்வக் குவிப்பு, அதிகாரம் மற்றும் தனியுரிமை ஆகியவற்றுடன் முழுவதுமாக இணக்கம் கொண்டதாகும். உண்மையில் சிவில் சமூகத்தில் சொல்லப்படுகின்ற சமத்துவம் என்பது பொருளாதார சமத்துவமின்மைக்கு முகவுரையாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சிவில் சமூகம் என்ற கோட்பாடே தனிச் சொத்து என்பதன் முகவுரைதான்!

சுதந்திரம்:

எனவே எந்த அர்த்தத்தில் இத்தகைய சமூகத்தில் சுதந்திரம் என்ற சொல் உள்ளது என்பதை கேள்வியாக கேட்க வேண்டியள்ளது. சுதந்திரம் என்ற மிகப் பெரிய வார்த்தை, சுரண்டலிலிருந்து விடுதலை என்னும் கருத்தை உணர்த்துவதாகும். எனினும் இந்தக் கருத்து சிவில் சொசைட்டி கோட்பாட்டின்படி முழுவதுமாக சரியல்ல. ஷரத்து 6-இன் படி:- சுதந்திரம் என்பது ஒரு மனிதன் மற்றவர்களின் உரிமையினை மீறாதவாறு எந்த ஒரு செயலையும் செய்ய அளிக்கப்பட்ட அதிகாரம் என்பதாகும். 1791 மனித உரிமை பிரகடனத்தின்படி, சுதந்திரம் என்பது சட்டங்கள் விளக்கியபடி மற்றவர்களைத் துன்புறுத்தா வண்ணம் எந்தவொரு செயலையும் செய்யும் அதிகாரத்தை உள்ளடக்கியது. ஆகவே சிவில் சமூகத்தில் சொல்லப்படுகின்ற சுதந்திரம் என்பது மற்றவர்களுடைய சொத்தின் மீது உரிமை கோராத வகையில் எதையும் செய்யும் உரிமை என்பதாகும். தனிச் சொத்தின் மீது எந்த (எவருடைய) உரிமை கோருதலும் இருத்தல் கூடாது என்பதை உயர்த்திப் பிடிக்கும் சட்டத்தை வரம்புகளாகக் கொண்டதே சிவில் சமூகத்தின் மையக் கோட்பாடு. அதாவது, தனிச் சொத்து என்ற ஸ்தாபனம் மூலம் தொழிலாளர்களை சுரண்டும் உரிமையை முதனிலைப் படுத்தப்பட்டது தான் சுதந்திரம் என்பதாகும். மேலும், சமூக உறவுகளை தொழிலாளிகள் மாற்றியமைக்க முயற்சி செய்யுங்கால், அச் செயல் மற்றவர் உரிமை அல்லது சுதந்திரத்தை மீறும் செயலாகக் கருதப்படுமேயொழிய, சுரண்டலிலிருந்து சுதந்திரம் பெறுவது என்பதாகாது. முடிவாக, சிவில் சமூகத்தில் சொல்லப்படுகின்ற சுதந்திரம் என்பது முதலாளிகள் தொழிலாளிகளைச் சுரண்டுவதேயன்றி வேறேதுமில்லை.

பாதுகாப்பு:

பொருளாதார சமத்துவமின்மை என்னும் நெறுக்குதலிலிருந்து சிவில் சமூகம் சிதறாத வகையில், தடுத்து நிறுத்தும் கொள்கையே பாதுகாப்பு என்பதாகும். அரசியல் சட்டம் 1793ன் ஷரத்து 8ன் படி: – சமூகம் தனது ஒவ்வொரு பிரஜைக்கும் தனிநபர், உரிமைகள், சொத்து இவற்றிற்கான காப்பாற்றுதல் அளிப்பதை உள்ளடக்கியதே பாதுகாப்பு என்பதாகும் மார்க்ஸ் எழுதுகிறார்.

பாதுகாப்பு என்பது சிவில் சமூகத்தின்  உயர்ந்தபட்ச சமூக கோட்பாடாகும். காவல்துறை மூலம் காப்பது என்பதாகும்.  ஒருவனது சொத்து  மற்றும் உரிமைகளை சமூகமே பாதுகாக்க வேண்டும் என்பதாகும்.

வேறு வார்த்தைகளில் கூறினால் சிவில் சமூகத்தில் உள்ள பாதுகாப்பு என்பது பசி, வறுமை, சீரழிவு இவற்றிலிருந்து மக்களுக்கு பாதுகாப்பு என்பதல்ல; சொத்து மற்றும் உரிமைகள் மீதான பாதுகாப்பே! இப்பாதுகாப்பு சொத்தின் மீது தடையில்லாத தனிப்பட்ட உபயோகத்தை விளக்குவதாகவே உள்ளது. ஆகவே பாதுகாப்பு என்பது பொதுவாக மக்கள் அல்லது தனிநபர் பாதுகாப்பு என்று  இல்லாமல், குறிப்பாக சொத்துப் பாதுகாப்பு மற்றும் சொத்தின் உபயோகம் என்பதைப் பற்றியதாகும். மார்க்ஸ் எழுதுகிறார்: ஆகவே, மனிதனின் உரிமைகள் என்று இது கூறப்படு பவைகள் எல்லாம் தன்னகங்காரம் கொண்ட மனிதனை  தாண்டி செல்வதில்லை; அவன் தான் வாழும் சிவில் சமூகத்திலிருந்து விலகி நின்று சுய நலன்களுக்கு பின்னே தான் நின்று கொண்டிருக்கிறான்……… இயற்கைத் தேவைகள், சொந்த நலன்கள் மற்றும் தேவைகள், சொந்த சொத்துக்கள் மற்றும் தன் ஆணவ உணர்வுகளை பாதுகாப்பது என்பவைகள் மட்டும் தான் மனிதர்களை இணைக்கிறது.

சிவில் சமூகம் என்பது முதலாளித்துவ சுரண்டலை அடிப்படையாகக் கொண்டது.  சட்டத்தின் முன் சமம் என்கிற சம்பிரதாய விளக்கம் உழைப்பாளிகளைச் சுரண்ட சுதந்திரம், பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த போலீஸ் படை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. சிவில் சமூகம் என்ற பெயரில் பேசுபவர்கள், தாம் முதலாளித்துவ சுரண்டல் சார்பாக பேசுபவர்கள் என்பதை உணர இது தக்க தருணமாகும்.

மேற்கூறப்பட்ட கருத்துக்கள் சரியானவையாக இருக்கலாம்; இருந்தபோதிலும் மதச்சார்பின்மை, பத்திரிகை சுதந்திரம் ஆகியவை சிவில் சமூகத்தின் சாதகமான பயன்களே என்று சிலர் வாதிடலாம்.

மதச்சார்பின்மை:

மதச் சார்பின்மை பற்றிய பொதுவான கருத்து என்னவெனில், அது மதத்திற்கு எதிரான கொள்கை அல்லது மத சகிப்பின்மை என்பதாகவே உள்ளது. இக்கருத்து மதச்சார்பின்மையாளர்களை சளைக்காமல் வசைமாரி பொழியும் மதவாதிகளால் ஆதரிக்கப்படுகிறது. இந்தக் கருத்தும் சரியானதல்ல. மனித உரிமை மற்றும் பிரஜா உரிமை பிரகடனம் 1791, ஷரத்து எண் 10ன் படி; ஒருவர் கொண்டிருக்கும் கருத்துக்களுக்காக – அது மத ரீதியாக இருந்தாலும் சரி, துன்புறுத்தல் கூடாது., மேலும் தான் ஏற்றுக் கொள்ளும் ஒரு மதத்தைப் பின்பற்ற எந்தவொரு மனிதனுக்கும் சுதந்திரம் உண்டு என்பது மனித உரிமையாக உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ளது. 1793 மனித உரிமை பிரகடனம் ஷரத்து 7 சுதந்திரமான மத பழக்கவழக்கங்களையே உயர்த்திப் பிடிக்கிறது.

அரசியல் சட்டம் 1795 பிரிவு 14 ஷரத்து 354, இந்த உரிமைகளை அறிவிப்பதன் அவசியம் நிகழ்கால அல்ல சமீபத்திய கொடுங் கோன்மையை நினைவில் கொண்டுதான் என்பதை மத சுதந்திரக் கொள்கை வெளிப்படுத்துவதாக வாதிடுகிறது.

அதே போன்று பென்சில்வேனியா அரசியல் சட்டம் ஷரத்து 9 பாரா 3 இவ்வாறு சொல்கிறது;-

எல்லா மனிதர்களுக்கும் அவரவர் மன உணர்வின்படி கடவுளை வழிபடும் உரிமை இயற்கையாகவே உள்ளது. எந்த மனிதனும் அவனது ஒப்புதலுக்கு எதிராக ஒரு வழிபாட்டுத் தலத்தை ஏற்படுத்தவோ, அதற்கு ஆதரவாக இருக்கவோ, எந்தவொரு மத அமைப்பையும் நிர்வகிக்கவோ கட்டாயப்படுத்தப்படக் கூடாது. இந்த உள்ளுணர்வு உரிமைகளில் எவ்விதத்திலும் கட்டுப்பாடு செய்யவோ அல்லது தலையிடவோ எந்த மனிதனுக்கும் அதிகாரம் இல்லை.

நியூஹாம்ப்ஷர் அரசியல் சட்டம் ஷரத்து 5,6 சொல்வது;-

இயற்கை உரிமைகளில் சில நூதனமான தன்மை கொண்டவை. மன சாட்சிப்படி நடக்கும் உரிமைகள் இவ்வகைப்படும்.

பாகிஸ்தானில் முதலாளித்துவ மதச்சார்பின்மையாளர்களுக்கும், மதவாதிகளுக்கும் உள்ள சச்சரவு மதம் அல்லது மத வழிபாடு வேண்டுமா என்பதல்ல; (இரு சாராரும் மதவழிபாட்டை உயர்த்திப் பிடிப்பவர்களே) இவ்விரு பிரிவினருக்கும் உள்ள மையப் பிரச்சனை என்னவெனில், நாடானது மதகுருக்கள் ஆளும் நாடாக இருக்க வேண்டுமா அல்லது மதச் சார்பின்மை நாடாக இருக்க வேண்டுமா என்பதே.

மெத்தப்படித்த முதலாளிகளாகிய பூர்ஷ்வா மதச்சார்பின்மை யாளர்கள், மிக நவீன கருத்துக்கள் / எண்ணங்கள் கொண்ட முதலாளித்துவ உறவுகளுக்கேற்றவாறு முதலாளித்துவப் பொருளாதாரம் நடத்தப்படுவதையே விரும்புகிறார்கள். இதர அம்சங்களில், பெண் விடுதலை உள்ளடக்கியதாக இருந்த போதிலும், அது முதலாளித்துவ பொருளாதாரத்தின் எல்லைகளுக்குள்ளே தான் என்பது தெளிவு.  இம்மாதிரியான பெண் விடுதலை, அதன் வர்க்க குறிக்கோள்களால் முடக்கப்பட்டதால் தொழிலாளி வர்க்கத்திலும், விவசாயத்திலும் உள்ள பெண்களை அவர்களால் அணி திரட்ட முடியவில்லை.

போதுமான கல்வியறிவு பெறாத மத உரிமைவாதிகளாக இருக்கும்  சிறு முதலாளிகள், முதலாளித்துவ பொருளாதாரம் இன்னும் அதிகமாக பாரம்பரிய வழக்கங்களைத் தராளமாகக் கொண்டு கட்டப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்தப் பாரம்பரிய பழக்க கட்டமைப்பு உண்மையில் எழுச்சி பெற்று வரும் தொழிலாளி வர்க்க இயக்கங்களை எதிர்ப்பதில், முதலாளி வர்க்க ஜனநாயகத்தை விடவும் தத்துவார்த்த ரீதியான சிறந்த பாதுகாப்பாக உள்ளது. ஆகவே தொழிலாளி வர்க்கத்தின் முன்னேற்றப் பாதையில் இவர்களே முதல் தடங்கல். இந்த இரண்டு சமூக குழுக்களுக்கும் இடையே உள்ள சச்சரவு குறிப்பிட்ட வடிவிலான முதலாளித்துவத்தைப் பற்றியதே. (நவீனம் அல்லது பழைமை). மதவாதிகளே தெளிவாகத் தெரியக் கூடிய விரோதிகளாக உள்ள போதிலும், முதலாளித்துவ மதச் சார்பின்மையாளர்கள் உழைக்கும் பிரிவினருக்கும், பெண்களுக்கும் திசை மாற்றும் புத்திசாலித்தனமான மறைமுக எதிரிகளாவார்கள். புரட்சிகர சக்திகள் தமது வலதுகரத்தை குறுகிய மனப்பான்மை கொண்ட வலதுசாரி (மத) சக்திகளின் செல்வாக்கை எதிர்க்கவும், இடது கரத்தை இடதுசாரி போர்வையில் உள்ள முதலாளித்துவ மதச்சார்பின்மையாளர்களை எதிர்க்கவும் பயன்படுத்த வேண்டும்.

பத்திரிகை சுதந்திரம்:

அரசியல் சட்டம் 1793, ஷரத்து 122ன்படி, கட்டுப்பாடற்ற பத்திரிகை சுதந்திரம் மனித உரிமைகளின் பலனாக, தனி மனித சுதந்திரமாக உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், ஆழமாக அறியுங்கால் பத்திரிகை சுதந்திரம் என்பது பொது சுதந்திரம் என்ற கோட்பாட்டால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதே ஷரத்து, சொல்வது, பொது சுதந்திரத்துடன் சமரசம் செய்து கொள்ளும் போது பத்திரிகை சுதந்திரம் அனுமதிக்கப்படக் கூடாது அதாவது, தனிச் சொத்து என்ற ஸ்தாபனம் மூலம் முதலாளி வர்க்கம் தொழிலாளர்களைச் சுரண்ட செலுத்தும் உரிமை மீது தாக்குதல் தொடுக்கும் போது பத்திரிகை சுதந்திரம் அனுமதிக்கப்படக் கூடாது என்பதாகும். சுதந்திரமான தகவல் தொடர்பு சகாப்தத்தில் நாம் நுழைந்திருப்பதாக உரிமை கொண்டாடும் இந்நேரத்தில் உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் இறுக்கமாகத் தடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. இக்கட்டுப்பாடு சிவில் சமூகக் கோட்பாட்டிலிருந்து வேறுபட்டதல்ல என்பது குறைவாகவே புலப்படுகிறது. தனிச் சொத்தின் அடிப்படையில் அமைந்துள்ள சுதந்திரம் என்பதைப் பாதுகாக்க இந்த ஊடகக் கட்டுப்பாட்டு உரிமையை முதனிலைப்படுத்தியதே சிவில் சமூகம் என்பது, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் தொடுத்த போது பத்திரிகை சுதந்திரத்தில் அமெரிக்காவின் நோக்கத்தை அறிந்து கொள்ளலாம்.

முடிவுரை:

மேற்கூறிய விளக்கங்களிலிருந்து சிவில் சமூகம் என்ற கோட்பாடு முழுவதுமாக முதலாளி வர்க்க ஆட்சி அதிகாரத்துடன் கட்டப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆகவே, சிவில் சமூகம் என்பது முதலாளித்துவ எதேச்சதிகாரத்தை மறைமுகமாகக் கொண்டது என்ற முடிவு, ஆதாரமற்ற ஒன்றாக கருத முடியாது.
மேலும், சிவில் சமூகம் என்ற கோட்பாட்டினை ஒரு குறிப்பிட்ட குழுவினர் பயன்படுத்துவது மேலே கூறப்பட்ட விளக்கத்திலிருந்து மாறுபட்டது என்று வாதிட முடியாது; அப்படிச் செய்வது அதன் அரசியல் தன்மையினை ஒதுக்கித் தள்ளுவதாகும். தனி மனித அல்லது சில குழுக்களின் சொந்த விருப்பங்கள், சிவில் சமூகம் என்ற கோட்பாட்டினை செயல்படுத்துவதற்கு பொருத்த மற்றவைகள். அரசியல் தளத்தில், இந்த கோட்பாடு அறிவார்ந்த ரீதியிலும் தார்மீக ரீதியிலும் முதலாளி வர்க்க ஆட்சியோடு கட்டப்பட்டிருக்கிறது. இந்த இணைப்பு மாற்ற முடியாதது; புரட்சிகர நோக்கங்களுக்காக இதை சொந்த உடமையாக்கிக் கொள்ளவும் இயலாது.

ஆகவே செயலூக்கம் கொண்டவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். சிவில் சமூகம் (அரசியல் சாரா சமூக இயக்கம்) என்பது சுரண்டல், சுயநலம், ஒடுக்குமுறை, ஏற்ற தாழ்வு மற்றும் கண்காணிப்பு ஆகியவைகளை உள்ளார்ந்த அம்சங்களாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மக்களைப் பற்றி உண்மையான அக்கறை கொண்டவர்கள், அவர்களை அனைத்து துறைகளிலிருந்து விடுவிக்க நடத்தும் போராட்டங்களுக்கு புதிய தத்துவார்த்த வடிவங்களை வளர்த்தெடுக்க வேண்டும்.

தமிழாக்கம்: ஆர். விஜயலெட்சுமி

ஆர்.எஸ்.எஸ்.சின் தாக்குதல்

கே.என். பணிக்கர்
தமிழில் எம். அசோகன்

முகமது அலி ஜின்னா ஒரு மதச்சார்பின்மைவாதி என்று லால் கிருஷ்ண அத்வானி மதிப்பிட்டார். அந்தக்கூற்று வரலாற்று ரீதியாகத் துல்லியமானதா இல்லையா என்பது, இந்து வகுப்புவாத அரசியலின் எதிர்காலத்திற்கும் அத்வானியின் சொந்த தத்துவார்த்த நிலையெடுப்பிற்கும் அந்தக் கூற்றுக்கும் இருக்கும் சம்பந்தத்தை விட முக்கியமானதல்ல. இத்துணைக் கண்டத்தின் இருபதாம் நூற்றாண்டு அரசியலில் ஜின்னாவின் பங்கு குறித்த முழுமையான மதிப்பீடாக அத்வானியின் பாகிஸ்தான் பேச்சு இருக்கவில்லை என்பது கண்கூடு. திரட்டுவதற்காக ஜின்னா மதத்தைப் பயன்படுத்திய விதத்தைப் பற்றி இவர் குறிப்பிடவில்லை; மதவாத அரசான பாகிஸ்தான் ஜின்னாவை ஏன் தேசத் தந்தையாக பூஜிக்கிறது என்று கேள்வி எழுப்பவில்லை.

தன்னுடைய ஆரம்பகால அரசியல் வாழ்வில் தாராளவாதியாக இருந்த ஜின்னா பக்திசிரத்தையுள்ள முஸ்லீம் அல்ல. எனினும், இந்துத்துவாவின் மூலகர்த்தாவான வினாயகக் தாமோதர் சாவர்காரைப் போல தேசிய அடையாளத்திற்கு ஒரு மூலமாக மதம் இருக்க முடியும் என்பதை உணர்ந்தார். அரசியல் நோக்கங்களுக்காக அதை வெற்றிகரமாகக் கையாண்டார். 1947, ஆகஸ்ட் 11ல் பாகிஸ்தான் அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில், புதிய நாடு மதச்சார்பற்ற நாடாக ஆக வேண்டுமென்று பாகிஸ்தான் நிறுவனர் ஜின்னாவின் அந்தப் பேச்சை மட்டும் அத்வானி குறிப்பிட்டது கவனிக்கத்தக்க தாகும். மேலும் அரசின் பார்வையில் அனைத்து குடிமக்களும் சமம் மற்றும் அனைத்துக் குடிமக்களும் தாங்கள் விரும்புகிற மதத்தைப் பின்பற்ற சுதந்திரம் உண்டு என்பதே மதச்சார்பின்மைக்கு விளக்கம் கொடுத்தார். இதைத்தான் நாங்கள் இந்தியாவில் மதச்சார்பற்ற அல்லது மதவாத மற்ற அரசு என்று அழைக்கிறோம்.. அந்த அரசில் (நாட்டில்) மத வெறிக்கோ, வெறுப்பிற்கோ, சகிப்பின்மைக்கோ மற்றும் மதத்தின் பெயரால் பாரபட்சம் காட்டுவதற்கோ இடமில்லை என்று மேலும் கூறினார்.

ஆனாலும், இதை மதச்சார்பின்மை என்று அத்வானி இந்தியாவில் கூறுவதில்லை. ஆனால் அதை வர்ணிப்பதற்கு கிட்டத்தட்ட இவருடைய அரசியலைப் போலவே அங்கே ஜின்னாவின் அரசியலும் இருந்ததால் ஜின்னாவிற்கு மதச்சார்பின்மைவாதி என்ற மகுடம் சூட்டுவதால் இவருக்கு ஆதாயம் இருக்கிறது. அப்படிச் செய்யும் போது, ஜின்னாவின் ஆகஸ்ட் உரை பாதை பிறழ்வு என்பதையும், பின்னாளில் ஜின்னாவே அதைத் திருத்திக் கொண்டார் என்பதையும், ஆகஸ்ட் உரை பாகிஸ்தானில் முற்றிலும் மறக்கப்பட்டுவிட்டது என்பதையும் அத்வானி கண்டும் காணாதது போல் விட்டுவிட்டார். ஆதலால் அத்வானி பேச்சின் அர்த்தமும் நோக்கமும் ஜின்னாவை மதிப்பிடுவதற்கு அப்பால் வெகுதூரம் செல்கிறது. அந்தப் பேச்சுக்கு பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்படுவது மட்டுமின்றி, சங்பரிவாருக்குள் கடுமையான உணர்வுகளைக் கிளறிவிட்டது. தன்னுடைய பேச்சு என்னென்ன அரசியல் விளைவுகளை உண்டாக்கும் என்பதை அத்வானி அறியாமலிருத்திருக்க முடியாது.

அப்படியெனில், மதச்சார்பின்மை குறித்த ஜின்னாவின் கருத்துக்களுக்கு அத்வானி ஒப்புதல் அளித்தது, ஆழ்ந்த – கவனமான யோசனையில் விளைவாக மட்டுமே இருக்க முடியும். பாகிஸ்தானில் அவருக்கேற்பட்ட ஞானோதயம் அவர் இது நாள்வரைக் கடைப்பிடித்து வந்த அரசியலின் தன்மை குறித்து வேண்டுமென்று நடத்தப்பட்ட தற்சோதனையின் விளைவாகவும், கடந்த பொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி மற்றும் அதன் விளைவாக தே.ஜ.கூ. உடைந்து சிதறிய பின்னணியில் பாஜக தன்னுடைய தத்துவத்தையும் அரசியல் நடைமுறையையும் மறுவடிவமைக்க வேண்டுமென்ற அவருடைய திட நம்பிக்கையைக் குறிப்பதாகவும் இருக்கக் கூடுமா?

அத்வானியும் இந்துத்துவமும்

இந்துத்துவத்தின் தீவிர முகமாக அத்வானி இருந்து வருகிறார். ஆர்.எஸ்.எஸ்.சின் தத்துவத்திலிருந்து கடந்த காலத்தில் அவர் கடுகளவு கூட விலகியதில்லை. உண்மையில் அவர்தான் பாஜகவில் ஆர்.எஸ்.எஸ்.சின் முக்கிய குரலாக இருந்தார். சங்பரிவார் உறுப்பினர்கள் நாகரீகமான நடத்தையின் எல்லைகளை அடிக்கடி மீறியதெல்லாம் வாஜ்பாய் போல இவர் மனசாட்சியின் உறுத்தலுக்கோ, தொந்தரவுக்கோ ஆளானதில்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை இவர் கொண்டாடியதாகச் செய்திகள் கூறுகின்றன; குஜராத்தில் நரேந்திடி மோடியை பாதுகாத்திருக்கிறார், ஆதரித்திருக்கிறார். இந்து உணர்வுகளை அவர் திறமையாகவும் சூழ்ச்சியாகவும் கையாண்டதால் பாஜக அதிகாரத்திற்கு வந்தது என்று சரியாகவே குறிப்பிடப்படுகிறது. மதச்சார்பின்மையின் மீது இடைவிடாமல் தாக்குதல் தொடுத்தார்; போலி மதச்சார்பின்மை எனற கருத்தை உருவாக்கி அதை இடைவிடாமல் பிரச்சாரம் செய்தார்; இந்துக்களின் மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் அயோத்திக்கு ரதயாத்திரையை தலைமையேற்று நடத்தினார். இவ்விதமாக அவர் இந்து வகுப்புவாத அரசியலுக்கு பெரும் ஊக்கத்தை அளித்தார்; பாஜக அதிகாரத்திற்கு உயர்ந்ததற்கு காரணகர்த்தாவாக அங்கீகரிக்கப்பட்டார். சமரசமின்றி ஆர்எஸ்எஸ் தத்துவத்தைக் கடைப்பிடித்தால் அவர் இதைச் சாதித்தார். கடந்த தேர்தலில் தே.ஜ.கூ. வெற்றி பெற்றிருந்தால் எப்போதும் ஊசலாடிக் கொண்டிருக்கும் வாஜ்பாய்க்குப் பதில் பிரதமர் பதவிக்கு ஆர்எஸ்எஸ்சின் தேர்வாக இவரே இருந்திருப்பார்.

இந்தப் பின்னணியில் பார்க்கும் போது, அவரது பாகிஸ்தான் பயணம் ஒரு மாறுபாட்டைத் தெரிவித்தது. அநேகமாக அது தனக்கும் தனது கட்சிக்கும் ஒரு புதிய பிம்பத்தை காட்டும் முயற்சி, இத்துணைக் கண்ட அரசியல் வரலாறு பற்றியும், அவ்விஷயத்தில் இந்துத்துவ அணுகுமுறை பற்றியும் ஒரு விவாதத்தைத் துவக்கி வைக்கலாம் என அத்வானி நம்பியது போல் தெரிகிறது. ஆனால் ஜின்னாவும் அவரது அரசியலும் தேசப் பிரிவினைக்கும் மற்றும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் படுகொலைக்கும் இட்டுச் சென்றது என்ற சங்பரிவாரின் புரிதலை விவாதத்திற்கு இடமில்லை என்று வலியுறுத்தியதன் மூலம் அதற்கான சாத்தியக் கூற்றை மூடி அடைத்து விட்டது. அத்வானியின் பாகிஸ்தான் பயணம் சங்பரிவாரின் அரசியல் மற்றும் நடைமுறையை பலஹீனப்படுத்தி விட்டது என்று ஆர்எஸ்எஸ் கருதியது. ஹிந்து லட்சியத்தின் மீதான அவரது பற்றுருதி இழந்து விட்டார் என்றே கருதினர். ஆர்எஸ்எஸ் மட்டும் இப்படிக் கருதவில்லை. ஏராளமான பாஜக தலைவர்களும் தொண்டர்களும் கூட அப்படியே கருதினார்கள். ஏனெனில் கண்டனம் பிரவீன் தொகாடியா மற்றும் அசோக் சிங்கால் போன்ற வெறியர்களிடமிருந்து மட்டும் வரவில்லை. ஆனால் முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த்சின்கா போன்ற மூத்த தலைவர்களிடமிருந்தும் வந்தது. அத்வானியின் பேச்சை சங்பரிவாரின் தத்துவத்தை நீர்த்துப்போகச் செய்வது என யஷ்வந்த் சின்கா வர்ணித்தார். கட்சியிலிருந்து அவரது நெருங்கிய நண்பர்கள் கூட ஜாக்கிரதையாக மௌனம் சாதித்தனர்.

கட்சித் தலைவர் பதவியிலிருந்து அவர் விலக வேண்டுமென்று கோரி அவரது ராஜினாமாவைப் பெறும் அளவிற்கு விஎச்பியும் ஆர்எஸ்எஸ்சும் அதிகக் கோபமடைந்தன. தன்னுடைய பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பாகிஸ்தானில் எடுத்த கருத்து நிலையிலிருந்து அத்வானி பின்வாங்க வேண்டியிருந்தது. யாருடைய கட்டளை பரிவாரத்திற்குள் செல்லுப்படியாகிறது என்பதை ஆர்எஸ்எஸ் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியது.

சங்பரிவாரின் உடடினயான கடும் எதிர்வினையை, பாகிஸ்தான் மற்றும் முஸ்லீம்கள் அதன் அரசியல் தத்துவத்தில் என்ன இடத்தில் இருக்கிறார்கள் என்ற பின்னணியில் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். முஸ்லீம்கள் மற்றவர்கள் (அவர்கள்) என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்து வகுப்புவாதத் தத்துவம் அவர்களை அந்நியர்களாகக் கணக்கிட்டது மட்டுமின்றி அவர்களது மதவெறியும் கலாச்சார செல்வங்களை அழிக்கும் குணமும் இந்திய நாகரீகத்திற்கு கணக்கிட முடியாத அளவு சேதத்தை உண்டு பண்ணியதாகவும் கருதுகிறது. வி.டி. சாவர்கர் மற்றும் மாதர் சதாசிவ கோல்வால்கர் போன்ற ஆரம்பகால வகுப்புவாத தத்துவவாதிகளால் முன்வைக்கப்பட்ட இத்தகைய கண்ணோட்டம் பின்னர் சங்பரிவாரின் அரசியல் மற்றும் அறிவுசார் நடைமுறையின் மையமாக பின்பற்றப்பட்டது. அவர்களைப் பொறுத்த வரையில், கலாச்சார ரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ முஸ்லீம்கள் இந்த தேசத்தைத் சேர்ந்தவர்களில்லை; முஸ்லீம்களின் தனிமையுணர்வின் விளை வாகவே பாகிஸ்தான் உருவானது. இதனால் அவர்களால் (சங்பரி வாரங்களால்) 1947-ல் சுதந்திர பாகிஸ்தான் நாடு உருவான அரசியல் யதார்த்தத்தை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. பாகிஸ்தான் முறைதவறிப் பிறந்த நாடாகக் கருதப்பட்டது. அதை இல்லாமல் செய்வது 1947-லிருந்து சங்பரிவார் இடைவிடாமல் கடைப்பிடித்து வந்த வகுப்புவாத நிகழ்ச்சி நிரலின் உள்ளார்ந்த பகுதியாக இருந்தது. ஒன்றுபட்ட இந்து நாட்டை மீண்டும் நிறுவுவது அதன் உறுதியான குறிக்கோளாக இருந்தது. பாகிஸ்தானையும் பங்களாதேஷையும் இணைத்து அகண்ட பாரதம் உருவாக்குவதன் மூலம் 1947ல் பாகிஸ்தான் உருவான வரலாற்று யதார்த்தத்தை அழிப்பது. இந்தியப் பிரிவினைக்கு இந்து தேசத்தின் மீது முஸ்லீம்களுக்கு இருந்த பகைமையுணர்வே காரணம் என்று அவர்கள் கூறினார்கள். மேலும் பிரிட்டிஷ் ஆதரவுடன் செயல்பட்ட முகமது அலி ஜின்னா இந்துக்களுக்கு ஏற்பட்ட துயரத்திற்குக் காரண கர்த்தா என்று கருதப்பட்டார். இந்த கருத்திற்காக தொடர்ந்து வாதாடி வந்தார் அத்வானி. அவர் பாகிஸ்தானில் அடித்த பல்டி சங்பரிவாரை மூச்சு திணற வைத்து விட்டது.

பாகிஸ்தானை மையமாக வைத்து வகுப்புவாதப் பிரச்சாரம் செய்யப்பட்ட போதும் உண்மையில் நாட்டிற்குள் முஸ்லீம்களை பேய் பிசாசுகளைப் போல் சித்தரிப்பதன் நீட்சியே அது. இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்ட பல பிரச்சினைகளில் முஸ்லீம் ஆட்சியாளர்களால் இந்துக் கோவில்கள் மிக வலுவானது. சங்பரிவாரின் தத்துவவாதிகள் (அல்லது அவர்கள் வரலாற்று அறிஞர்களா?) முஸ்லீம் ஆட்சியாளர்களால் 1000 கோவில்கள் இடிக்கப்பட்டதாகப் பட்டியலிட்டுள்ளார்கள். இந்தக் கோவில்களை மீண்டும் பெறுவதன் மூலம் முஸ்லீம் படையெடுப்பாளர்களால் இந்துக்களுக்கு அழைக்கப்பட்ட அவமானத்திற்குப் பழி தீர்ப்பதே வகுப்புவாதத்தின் திட்டம்.

உறங்கிக் கொண்டிருந்த ராமஜென்மபூமி கோவில் கட்டுவதற்கான இயக்கத்திற்கு உயிரூட்டினார் அத்வானி. ராமஜென்மபூமி கோவில் முகலாயப் பேரரசர் அக்பரின் படைத் தளபதி மீர் பாகியால் மசூதி கட்டுவதற்காக இடிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. சோம்நாத்திலிருந்து அயோத்திக்கு அத்வானியால் நடத்தப்பட்ட ரதயாத்திரை இறுதியில் மசூதியை இடித்துத் தள்ளுவதை சாத்தியமாக்கியது; இந்திய நாகரீகத்தின் மீது ஆழமான தழும்பை உண்டாக்கிய அச்சம்பவமானது தற்கால இந்திய வரலாற்றின் நிர்ணயகரமான ஒரு தருணமாகும். சமீபகாலங்களில் காணப்பட்டவற்றில் மதரீதியான அணி திரட்டல்களில் மிகவும் சக்தி வாய்ந்த இயக்கமான அது பாஜகவிற்கு கணிசமான அரசியல் ஆதாயங்களைப் பெற்றுத் தந்தது. இதன் விளைவாக, இந்து அபிலாஷைகளை ஈடேற்றியவர், அதன் மூலம் பாஜகவின் அரசியல் வெற்றிக்கு பாடுபட்டவர் என்று அத்வானி புகழப்பட்டார். கடந்த தேர்தலில் பாஜகவிற்கு ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, முன்பு போலவே கட்சிக்கு சக்தியூட்டுவார் என்ற எதிர்பார்ப்புடன் அத்வானி மீண்டும் கட்சித் தலைவராக்கப்பட்டார்.

பாகிஸ்தான் பயணத்தின் அர்த்தம்

அத்வானியின் பாகிஸ்தான் பேச்சுக்கள் மேற்குறிப்பிடப்பட்ட சங்பரிவாரின் அடிப்படையான கருத்துக்களுக்கு முரணாக இருந்தது. இந்தக் கருத்துக்களை உருவாக்கவும், பரப்பவும், நிலை நாட்டவும் அத்வானியே உதவியிருக்கிறார். பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட வகையில் யுத்த வெறியராகக் கருதப்படும் அந்த அத்வானி, பரிவாரத்தால் தொடர்ந்து பிடிவாதமாக எதிரியாக சித்தரிக்கப்படும் ஒரு நாட்டிற்கு, அதனுடன் நட்புறவை வளர்ப்பதற்காக பயணம் மேற்கொண்டதை முந்தைய நிலைப்பாட்டிலிருந்து விலகிச் செல்வதாகக் கூறலாம். அவர் அரசாங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில் சடங்கை நிறைவேற்றவொன்றும் அவர் சொல்ல வில்லையே! ஆகவே இந்தப் பயணமானது பாகிஸ்தான் எனும் நாட்டை அங்கீகரிக்கத் தயராக இருப்பதைக் குறிக்கிறது. இன்னும் முக்க்கியமாக போற்றி வளர்க்கப்பட்ட அகண்ட பாரத லட்சியத்தைக் கைவிடுவதையும் குறிக்கிறது. இப்பயணத்தின் அரசியல் அர்த்தம் குறித்து பாகிஸ்தானும் சங்பரிவாரும் உணர்ந்தே இருந்தன. ஆகவே, பகையான கடந்த காலம் இருந்த போதும், பாகிஸ்தான் அதிகாரிகள் இப்பயணத்தைப் பெரிதுபடுத்தினர். தங்களுடைய தத்துவார்த்த திட நம்பிக்கைகளின் மீது அப்பயணம் தொடுத்த பலத்த அடியால் சங்பரிவாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பாபர் மசூதி இடிப்பைத் தூண்டிவிட்டவர்களில் பிரதானமான வரான அத்வானி மசூதி இடிப்பிற்கு வருத்தம் தெரிவிப்பதற்கு இப்பயணத்தை ஒரு வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொண்டார். மசூதி இடிக்கப்பட்ட தினம் தன் வாழ்நாளின் மிக இருண்ட தினம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இது போன்ற உணர்வுகளை அதற்கு முன்பாக, வெளிப்படுத்தியிருந்த போதும் பாகிஸ்தானில் பேசியது கூடுதல் முக்கியத்துவம் பெற்றது. முஸ்லீம் உலகத்திற்கு அளிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் போலவும் மன்னிப்பு கோருவது போன்ற தொனியிலும் அது இருந்தது. சங்பரிவாரத்திற்கோ மசூதி இடிப்பு வருத்தப்படுதவற்கான விஷயமல்ல. அதை மத மற்றும் தேசபக்த செயலென்று ஆரவாரம் செய்தது; இந்து தேசிய பெருமிதத்தையும் சுயமரியாதையையும் மீட்டெடுத்த செயல் என்றது. வாஜ்பாய் கூட அதை தேசிய உணர்வுகளின் வெளிப்பாடு என்று வர்ணித்தார். மசூதி இடிப்பிற்கும் அப்பால் ஒரு அர்த்தத்தை அச்செயலின் மீது சங்பரிவார் சுமத்தியது. முஸ்லீம்கள் செய்த வரலாற்றுத் தவறுக்குப் பழிவாங்கும் அடையாளச் செயல் என்று அர்த்தம் கற்பித்தது. அவர்களது குறி மசூதி அல்ல; உலகம் முழுவதும் இருக்கும் முஸ்லீம்கள். ஆகவே, மசூதி இடிப்பின் மூலம் மீட்டெடுக்கப்பட்ட சுயமரியாதையை அத்வானி அழித்து விட்டது போல் சங்பரிவாருக்குத் தோன்றியது.

தத்துவம் பலஹீனப்படுத்தப்பட்டது

“இந்து ராஷ்டிரா” எனும் கருத்தாக்கத்தைச் சுற்றிக் கட்டமைக்கப் பட்ட இந்து வகுப்புவாத சக்திகளின் தத்துவார்த்த பிணைப்பு சில காலமாக சிக்கலில் இருந்து வந்தது. இந்து வகுப்புவாத நிகழ்ச்சி நிரலில் மையமாக இருக்கக் கூடிய பிரச்சனைகளில் ஆர்எஸ்எஸ்சும் விஎச்பியும் பாஜகவும் வெவ்வேறு குரல்களில் பேசின. கூட்டணி அரசியல் நிர்ப்பந்தத்தாலும் அதிகாரத்தை அடைவதற்காகவும் ராமர் கோவில், அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு மற்றும் பொதுசிவில் சட்டம் ஆகிய பிரச்சனைகளை முடக்கி வைக்க பாஜக ஒப்புக் கொண்டது. இவ்வாறாக தன்னுடைய அரசியல் எதிர்காலத்தை விருத்தி செய்து கொள்ளவும் இப்படிச் செய்தது. வீரியம் குறையாமல் வகுப்புவாதப் பாதையைக் கடைப்பிடிக்க பாஜக தலைமை காட்டிய தயக்கம் சங்பரிவாரின் இதர பிரிவுகளை பெரிதாக மகிழ்ச்சியடையச் செய்யவில்லை. மதச்சார்பின்மையை ஒரு அரசியல் நடைமுறை என்ற வகையில் மறுத்தத்தைச் சுற்றியே அவர்களது செல்வாக்கும் ஆதரவு அணிகளும் கட்டப்பட்டது என்பது பொதுவாக பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்து.

எதிர்க்கட்சியாக இருந்த வரை இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்காக வாதிடும் கட்சியாக பாஜக தன்னை முன்னிறுத்திக் கொண்டது. ஆனால் கூட்டணி அரசியலுக்குள் நுழைந்தவுடன் அதனால் முடியவில்லை; மாறாக மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காக இந்துத்துவத்தின் மையப் பிரச்சனைகளில் கூட சமசரம் செய்து கொள்ள வேண்டியிருந்தது. இதனால், பாஜக தலைமையிலான அரசாங்கம் இந்து வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை அனுசரித்த போதும் அதனால் இந்துத்துவ திட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியவில்லை. குறிப்பாக, ராமர் கோவில் கட்டுவது, பொது சிவில் சட்டத்தை அறிமுக்கப்படுத்துவது மற்றும் அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவை ரத்து செய்வது போன்றவை.

இதன் விளைவாக, பாஜகவிற்கும் பரிவாரத்தின் இதர உறுப்பினர்களுக்குமிடையே சிக்கல் வளர்ந்தது. வாஜ்பாயின் தாராளவாதம் சங்பரிவாருக்கு வெறுப்பைத் தந்தது. தங்களின் கோரிக்கைகளுக்கு அத்வானி கூடுதல் விசுவாசமாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தது. ஆனால் கூட்டணி செயல்பாட்டிற்காக வாஜ்பாயும், அத்வானியும் மிகவும் கவனமாக நடக்க வேண்டியிருந்தது; மற்றும் ஆர்எஸ்எஸ் மற்றும் மற்றும் விஎச்பியிடமிருந்து சுதந்திரமானவர்கள் போன்ற வெளித்தோற்றத்தை பாவனை செய்ய வேண்டியிருந்தது. அவ்வாறு செய்யும் போது சங்பரிவாரின் இதர உறுப்பினர்களுடனான உறவைத் தேவையின்றி சிக்கலாக்காமல் கூட்டணியை விரிவுபடுத்த முடியுமென்றும், கட்சிக்கென்று சுதந்திரமான தளத்தை செதுக்கி எடுத்துக் கொள்ள முடியுமென்றும் நம்பினார்கள். எனினும் இது ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பியிலும் கணிசமான அமைதியின்மையை உருவாக்கியது. ஆகையால் அவர்கள் வாஜ்பாய் மற்றும் அத்வானியை விமரிசப்பவர்கள் ஆனார்கள். இந்து நலன்களை அனுசரிக்க பாஜக தலைமை தயங்கியதால் தான் தேஜகூ தோல்வியடைந்தது என விஎச்பியும் ஆர்எஸ்எஸ்சும் குற்றம் சாட்டின.

தேர்தல் தோல்வி ஆர்எஸ்எஸ்சுக்கும் பாஜகவின் ஒரு பகுதிக்கும் இடையிலான பிளவை அதிகரித்தது. இன்னும் கூடுதலான அடிப்படைவாத நிலை எடுக்க வேண்டுமென்றும் இந்துத்துவ தத்துவத்தின் அடிப்படையில் இந்துக்களை திரட்டினால் மட்டுமே கட்சி மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்று ஆர்எஸ்எஸ் நம்பியது. ஆதிவாசிகளையும் தலித்துகளையும் இந்துக்களாக்கும் செயல்பாடுகளை விரிவாக்கியதன் மூலம் ஆர்எஸ்எஸ்சும் விஎச்பியும் இத்திசையில் நடவடிக்கைகளைத் துவக்கின. இதற்கு மாறாக, மதரீதியான ஆதரவு தளத்தை விட்டுக் கொடுக்காமலும், ஆனால் முழுமையாக அதையே சார்ந்தது இராமலும் கட்சிக்கு மித வலதுசாரி தோற்றத்தை உருவாக்குவதில் மட்டுமே கட்சிக்கு எதிர்காலம் இருக்கிறது என்பதை வாஜ்பாய் மற்றும் அத்வானி மற்றும் நவீன இரண்டாம் தலைமுறை தலைவர்களைக் கொண்ட பாஜகவின் ஒரு பகுதியினர் உணர்ந்திருந்தனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாதிக் கட்சிகளின் செல்வாக்கு, இடதுசாரி கட்சிகளின் ஆதரவாளர்களின் எண்ணிக்கை சீராக உயர்ந்து வருவது, சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் புதிய சக்தியும், உற்சாகமும் கண்டு வருவது என்ற பின்னணியில் அதிகாரத்தை மீண்டும் பெறும் அளவிற்கு பாஜகவின் இப்பகுதி உணர்ந்தது. எனவே மக்கள் தொகையின் பெரும்பகுதியினரை ஈர்க்கக் கூடிய வகையிலான திருத்தல் வாதக் கொள்கையே உசிதமென இவர்கள் கருதினர். அத்வானியின் பாகிஸ்தான் பேச்சுக்கள் நடைபெறக் கூடிய இந்தப் பாதை மாற்றத்திற்கான முன்னோடியாகும். போதுமான தயாரிப்புகள் இல்லாததாலும், சரியான காலத்திற்கு முன்னரே பேசியதாலும் அது குறிதவறியது.

தேஜகூ ஆட்சிக் காலத்தில் பாஜகவிற்கென சுயேட்சையான தளத்தை உருவாக்கி எடுக்க வாஜ்பாயும், அத்வானியும் முயற்சித்து கொண்டிருந்தார்கள் என்பதை ஆர்எஸ்எஸ் அறிந்தே இருந்தது. இந்து ஆட்சி நீடிக்க வேண்டுமென்ற அக்கறையினால் அதனால் அப்போது வெளிப்படையாக எதுவும் சொல்ல முடியவில்லை. மேலும் வாஜ்பாயும், அத்வானியும் இந்திய அரசியலில் சங்பரிவாரில் வேறு எவரும் ஈடு என்று சொல்ல முடியாததொரு நிலையை பெற்றிருந்தனர். இதனால் அவர்களால் ஓரளவு தாராளத் தன்மையை பிரயோகிக்க முடிந்தது. ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பியால் நிர்ப்பந்தம் கொடுக்கப்படும் போது திரித்து; புரட்டிப் பேசி சமாளிக்கவும் முடிந்தது. (ஆர்எஸ்எஸ்-விஎச்பியை முற்றிலும் சார்ந்திராமல்) சுதந்திரமாக இருப்பதற்காக இத்தலைவர்கள் முயற்சித்தது ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பியை கோபமடையச் செய்ததும், இது அத்தலைவர்களிடம் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்பட்டதும் பதிவாகியுள்ளது.

புது இந்துக் கட்சியொன்றை அமைக்கப் போவதாக விஎச்பி அடிக்கடி எச்சரித்தது. ஆர்எஸ்எஸ் அதன் தலைவர்களை அவ்வப்போது அழைத்து சமாதனம் செய்தது. இந்த மோதலின் விளைவாக ஆர்எஸ்எஸ் தலைவர் கே.எஸ். சுதர்சன் அத்வானியும் வாஜ்பாயும் இளம் தலைவர்களுக்கு வழிவிட வேண்டுமென்று கோரினார். குறைவான அந்தஸ்துள்ள தலைவர்களை சுதர்சன் தேடிக் கொண்டிருந்தார். ஏனெனில் அவர்களை ஆர்எஸ்எஸ்சின் சொல்படி கீழ்படியச் செய்ய முடியும். மரண அடி கொடுப்பதற்கு முன்னர் நட்பு ரீதியில் வழங்கப்பட்ட ஆலோசனையாகும் அது.

அத்வானியின் பாகிஸ்தான் பேச்சுக்களை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அது தாக்கியது. இருந்த போதிலும், தாக்குதலுக்கான காரணம், சங்பரிவாரின் தத்துவத்திலிருந்து விலகிச் சென்ற அத்வானியின் பேச்சுக்களை விட மிக மிகத் தீவிரமானது. இந்த வாய்ப்பை பரிவாரத்திறக்குள் தன்னுடைய மேலதிகாரத்தை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு ஆர்எஸ்எஸ் பயன்படுத்திக் கொண்டது. மேலும், பாஜக தலைவர்களுக்கு அவர்களுடைய கட்சியொன்றும் சுயேட்சையான அமைப்பல்ல, ஆர்எஸ்எஸ்சின் கீழ் செயல்படும் அதன் அரசியல் அங்கமே என்பதை நினைவூட்டவும் பயன்படுத்திக் கொண்டது. ஐந்தாண்டு காலம் அதிகாரத்தில் இருந்த போது அனுபவித்த சுதந்திரம் வேறுவிதமான எண்ணத்தை உருவாக்கியிருந்தால் பாஜக அதை உடனடியாகத் திருத்திக் கொள்ள வேண்டும். அத்வானி விவகாரம் யாருடைய கையில் சாட்டை இருக்கிறது என்பதில் எந்த சந்தேகத்திற்கும் இடம் வைக்கவில்லை. இரும்பு மனிதரை இவ்விதமாக பணிய வைக்க முடியுமென்றால் கட்சியின் சிறிய தலைவர்கள் எம்மாத்திரம்? ஆர்எஸ்எஸ் தன் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொண்டதானது நாட்டின் எதிர்கால அரசியலில் ஏற்படுத்தக் கூடிய அபாயகரமான விளைவுகளைக் கவனிக்காமல் விட முடியாது. ஏனெனில் ஆர்எஸ்எஸ்சின் பிடி இறுகுவதன் அர்த்தம் என்னவெனில் பாஜக இன்னும் கூடுதலான அடிப்படை வாத மற்றும் இருண்மைவாத அரசியல் பாதையை மேற்கொள்ளக் கூடும் என்பதாகும்.

நன்றி: பிரண்ட்லைன், ஜூலை 1, 2005