அலங்கார ஊர்திகளை ஒன்றிய அரசு ஒதுக்கியது ஏன்?

சி.பி.நாராயணன், ஆசிரியர், சிந்தா இதழ்.

(மலையாளத்தில் வெளியாகும் மார்க்சிய தத்துவ இதழான ‘சிந்தா’-வில் இடம்பெற்ற கட்டுரை தமிழில்)

மொழியாக்கம்: ஆர்.சுரேஷ்

இந்த ஆண்டு தில்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் கேரள மாநிலத்தின் அலங்கார ஊர்திக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளது. தமிழ்நாடு பல மாநிலங்களுக்கும் அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது. நாராயண குருவை மையப்படுத்திய அலங்கார ஊர்தி என்பதாலேயே அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சங்கராச்சாரியாரை மையமாக கொண்டு அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் என ஒன்றிய அரசு வற்புறுத்தியுள்ளது. அதாவது நாராயண குருவை வைத்தால், சங்கராச்சாரியாரையும் வைக்க வேண்டும் என்றுள்ளது ஒன்றிய அரசு. ஆனால் கேரள மாநில அரசு அந்த வற்புறுத்தலை ஏற்கவில்லை. எனவே கேரள மாநில அரசின் ஊர்தி அணிவகுப்பில் இடம்பெறவில்லை.

நாராயணகுருவும், சங்கராச்சாரியாரும்:

நாராயண குருவும், சங்கராச்சாரியாரும் கேரளம் கொடுத்த இரண்டு ஆன்மீக தலைவர்கள். ஆனால் இந்தியாவின் மத நல்லிணக்கத்தையும், ஜனநாயகத்தையும் ஆராய்ந்து பார்த்தால், இந்த சமூகத்தில் சாதி வேற்றுமையையும், நால்வர்ணங்களையும் மக்களிடையே பரவலாக்குவதில், குறிப்பாக கேரளாவில் பரப்புவதில் சங்கராச்சாரியார் பிரதான பங்கினை வகித்துள்ளார். கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கேரளத்தில் சாதி வேறுபாடுகளும், மத வேற்றுமைகளும் மேலோங்கி நின்றிருந்தன. ஆனால் வேதங்களையும், உபநிடதங்களையும் நன்கு படித்து ஆராய்ந்து அதற்கு எதிரான கராரான நிலைப்பாட்டை மேற்கொண்டவர் நாராயணகுரு.

சாதி, மத வேற்றுமை இல்லாமல் அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டும் என்று அறைகூவல் விடுத்த நாராயணகுரு, ‘மனிதர்களுக்கு ஒரே சாதி, ஒரே மதம், ஒரே கடவுள்’ என்ற புதிய கொள்கையை நிறுவினார். அப்படியே அவர் சங்கராச்சாரி நடைமுறைப்படுத்திய சாதி வேற்றுமையை எதிர்த்தும் வந்தார். சாதி, மதம் தொடர்பான ஶ்ரீ நாராயணகுருவின் கோட்பாடுகள், உலகமெங்கும் எழுந்துவந்த மனித நேயம், ஜனநாயகம், சமத்துவம் போன்ற புதிய முழக்கங்களுக்கும், அளவுகோல்களுக்கும் ஏற்றதாக இருந்தது. சங்கராச்சாரியாரின் நால்வருண போதனைகள், ஶ்ரீ நாராயணகுருவின் கோட்பாடுகளுக்கு ஒருபோதும் ஈடாகாது.

நால்வருண வேற்றுமைகளுக்கு எதிர்ப்பு:

இப்படியான சூழலில், பாஜக அரசு நாராயணகுருவை விலக்கிவிட்டு, சங்கராச்சாரியாரே கேரளாவின் அடையாளம் என்று கூறுவதற்கு முக்கியக் காரணம் உண்டு. கிருஸ்து பிறப்பிற்கு பல ஆண்டுகள் முன்பிருந்தே, இந்திய துணைக்கண்டத்தில், மனிதர்களை வேற்றுமைப்படுத்தி பிரித்து வைக்கும் போக்கு இருந்து வந்தது. கேரளாவிலிருந்து தொடங்கி இந்தியா முழுமைக்குமே நான்கு வர்ணங்களும், வேறு பல வேற்றுமைகளும் மக்களின் மீது சுமத்தப்பட்டன. இதனைப் பரப்புவதில் சங்கராச்சாரியார் முதன்மையான பங்கினை வகித்தார். நான்கைந்து நூற்றாண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் பிற பகுதிகளில் பக்தி அமைப்புகளின் வடிவில் அதற்கு எதிரான பிரச்சாரங்களும் முழக்கங்கங்களும் எழுந்தன.

மீண்டும் 11-ம் நூற்றாண்டின் பாதியில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான முழக்கங்களும், பிரச்சாரங்களும் முதல் சுதந்திரப் போராட்டத்தில் இருந்து வலிமையடைந்தன. மனிதர்களை பலவாக பிரிக்கும் சாதி வேற்றுமைக்கு எதிரான போராட்டங்களும் அதில் அடங்கியிருந்தன. அந்த நூற்றாண்டின் கடைசியில், சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் பற்பல பண்பாடுகளையும், கலாச்சாரங்களையும் இணைக்கின்ற புதிய கொள்கைகளோடு அறிமுகமானார். சங்கராச்சாரியார் முன்னெடுத்த நான்கு வர்ண தத்துவங்களையும், சாதி வேற்றுமைக் கொள்கைகளையும் சுவாமி விவேகானந்தர் ஏற்றுக்கொள்ளவில்லை.

விவேகானந்தரும், நாராயணகுருவும்:

ஆதி சங்கரரின் காலத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வாழ்ந்தவர்தான் சுவாமி விவேகானந்தர். அந்தக் காலத்தில் இந்திய சமூகத்தில் கொள்கை ரீதியாக பல பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. விவேகானந்தர் சுதந்திரமான கருத்துக்களை ஏற்பவராகத் திகழ்ந்தார். அந்த வகையில் அவர் சங்கராச்சாரியாரின் கருத்துக்களை அவருடைய காலத்தோடு பொருத்திப் பார்த்ததுடன், சந்தேகத்திற்கிடமின்றி நிராகரித்தார்.

ஶ்ரீ நாராயணகுருவும், விவேகானந்தரும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள். விவேகானந்தருக்கு பிறகு ஏறத்தாழ முப்பதாண்டுகள் கூடுதலாக செயல்பட்டார் நாராயணகுரு. இவர்கள் இருவருமே பிராமணிய சிந்தனைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவேதான் அவர்கள் சங்காராச்சாரியாரின் நால்வர்ணச் சிந்தனைகளை ஏற்காமல் இருந்தார்கள். அது மட்டுமல்ல, 19 ஆம் நூற்றாண்டின் கடைசியில், தென் இந்தியாவின் கடைக்கோடியில் இருந்து எழுந்த அய்யா வைகுண்டரின் போதனைகளும் பிராமணிய மதக் கோட்பாடுகளை கேள்வி கேட்பவையாகவும், எதிர்ப்பவையாகவும் இருந்தன. அய்யா வைகுண்டரின் போதனைகள், ஶ்ரீ நாராயண குருவை ஈர்ப்பதாகவும், ஊக்கப்படுத்துவதாகவும் இருந்தன.

இவர்களின் சிறப்பு என்னவென்றால், இந்து மத நம்பிக்கைகளுக்குள் மட்டும் சுருங்கிக்கொள்ளவில்லை. அதனை வெளிப்படுத்தக்கூடிய முழக்கம்தான் ‘மனிதனுக்கு ஒரு சாதி, ஒரு மதம், ஒரு கடவுள்’.

நவீன இந்தியாவிற்கான நிலைப்பாடு:

இந்தக் கொள்கை, வேற்றுமையில் ஒற்றுமை என்ற சுதந்திர இந்தியாவிற்கு ஏற்ற நிலைப்பாடாக இருந்தது. அரசியலமைப்புச் சட்டம், அனைத்து மக்களுக்கும் சமமான உரிமைகளையும், சுதந்திரத்தையும் உறுதிப் படுத்துகின்றபோது, நாராயண குருவின் கொள்கைகளும், கோட்பாடுகளும் அனைத்து மக்களுக்கும் நம்பிக்கையூட்டும் விதமானதாகவும், சம வாய்ப்புக்களைக் கொடுப்பதாகவும் இருந்தன.

நாராயண குரு, ஒரு மதத்தின் கூண்டிலோ, ஜாதியின் கூண்டிலோ அடைபடாத ஒரு புதிய கொள்கையை பரப்பி, பதியச் செய்திருக்கிறார். இந்தக் கொள்கை, அன்றைய கேரளத்தின் இந்துச் சமூகத்திற்கு ஏற்புடையதாக இல்லை. யாரும் யாருக்கும் மேலானவராகவோ, கீழானவராகவோ இல்லை என்ற அவருடைய நிலைப்பாட்டிற்கு உயர் சாதிகளிடமும், தாழ்த்தப்பட்டோரிடமும் ஆதரவு கிடைக்கவில்லை. அனைவரும் சமமானவர்கள் என்ற சமத்துவ சித்தாந்தத்தை எவரும் முதலில் அங்கீகரிக்கவில்லை. பிறகு கீழ் அடுக்கில் இருந்தவர்கள் (அவர்ணர்) மத்தியில் பொதுவான அங்கீகாரம் உருவானது. மேல் தட்டில் இருந்தவர் (சவர்ணர்) இதை ஏற்றுக் கொள்ல பல காலம் ஆனது.

நால்வருணமே ஆர்.எஸ்.எஸ் விருப்பம்:

ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு, ஶ்ரீ நாராயணகுருவின் கொள்கைகள் ஏற்புடையதாக இல்லை. அவர்களுடைய விருப்பமான, நால்வர்ணத்தை அடிப்படையாகக் கொண்ட இந்து ராஷ்ட்டிரத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிக்கு ஒத்துழைப்புத் தேட முயன்றார்கள். அவர்கள் சிவகிரிக்குச் சென்று, ஶ்ரீ நாராயணகுருவின் அமைப்பை தங்கள் பக்கம் திருப்பிட முயற்சி மேற்கொண்டார்கள். ஆனால் நால்வர்ணத்தை அடிப்படையாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கருத்துக்ககுக்கு, நாராயண குருவின் சிந்தனையும், அமைப்பும் எதிராகவே இருந்தன.

இந்துக்கள் அனைவரையும் தங்களுடைய பக்கம் கொண்டுவர வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் விருப்பத்திற்கு, நாராயணகுருவின் சிந்தனைகள் உதவாது என்பதால், அவருடைய உருவம் கொண்ட வாகனத்தைப் புறக்கணித்துவிட்டு, நான்கு வர்ணத்தைக் கட்டிப் பாதுகாக்கத் துணிந்த சங்கராச்சாரியாரை அடிப்படையாகக் கொண்டு ஊர்தி உருவாக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது.

ஒரு விஷயத்தை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி., பொறுத்தவரையில் அவர்கள் செய்ய விரும்புவதெல்லாம் ஒன்றுதான். இந்திய நாட்டினை இந்து ராஷ்ட்டிரமாக மாற்ற வேண்டும். நால்வர்ணக் கட்டமைப்பில் இந்தியாவை மாற்றியமைக்க வேண்டும். தற்போது மோடி அரசாங்கமும், பாஜகவும் வேகமாக முன்னெடுக்கும் நடவடிக்கைகள் அதனை நோக்கியதாகவே உள்ளன. அதனால்தான் ஶ்ரீ நாராயணகுருவின் சித்தாந்தத்திற்கு எதிரான முயற்சிகளை மோடி அரசு நிர்ப்பந்திக்கிறது.

அடிமைத்தனத்தின் மீதே விருப்பம்:

குடியரசு தினம் என்பது, இந்திய அரசிலமைப்புச் சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்ட நாள் ஆகும். இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதே நமது அரசமைப்புச் சட்டத்தின் முதல் பத்தியின் உள்ளடக்கம். வேற்றுமையில் ஒற்றுமை என்பது வெளிப்பட வேண்டுமென்றால், பல்வேறு மாநிலங்களின் அடையாளங்களும், அவைகளின் ஊர்திகளும் இடம்பெற்றிட வேண்டும். இவையெல்லாம்தான் குடியரசு தின அணிவகுப்பிற்கு உருவம் கொடுக்கிறது. கேரளத்தில் மட்டுமல்லாது, பாஜக ஆட்சியில் இல்லாத மேற்கு வங்கம், தமிழ்நாடு, தெலங்கானா மாநிலங்களின் அலங்கார ஊர்திகளையும், தங்கள் உத்தரவுக்கு மாறாக இருந்த காரணத்தால் ஒன்றிய அரசு நிராகரித்தது.

இந்த அலங்கார ஊர்திகளின் விசயத்தில் ஒன்றிய அரசாங்கம் தங்களுடைய விருப்பத்தினை மாநில அரசுகளின் மேல் சுமத்துகிறது. இந்த முரட்டுத்தனமான போக்கினால் ஒன்றிய அரசுக்கும் – மாநிலங்களுக்கும் இடையிலான பிளவு அதிகரித்துள்ளது என்பதன் வெளிப்பாடுதான் இந்த நிகழ்வுப்போக்குகள்.

மேற்கு வங்கத்தின் அலங்கார ஊர்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் விடுதலையையும், சுதந்திரப் போராட்ட தியாகங்களையும் அடையாளப்படுத்தும் அத்தகைய ஊர்தியின் சாரத்திற்கு மாறாக அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்புகளையே ஒன்றிய அரசாங்கம் விரும்பியது. தாங்கள் சொல்வதை அடிமைகளைப் போல மாநில அரசாங்கங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தது.

அதிகாரக் குவியலை அனுமதியோம்:

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கட்சி, ஒரே அரசு, ஒரே மக்கள் என்ற கருத்தினை மையமாகக் கொண்டு அதனை வேகமாக முன்னெடுக்கத் துடிக்கிறது ஒன்றிய அரசு. வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கைப் பாரம்பரியத்தில் எழுச்சி பெற்ற இந்திய விடுதலைப் போராட்டம் எல்லோராலும் ஏற்கப்பட்டது. அதன் வெளிப்பாடாக அமைந்த அரசியலமைப்புச் சட்டமும், மாநில அரசாங்கங்களும், உள்ளாட்சி அமைப்புகளும், அதற்கேற்ப உரிமைகளும், கடமைகளும், அதிகாரங்களும் பெற்றுள்ளன. அவைகள் அனைத்தையும் நிராகரித்து, தானே எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறது ஒன்றிய அரசாங்கம். அதனை நோக்கியே ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், பாஜகவும் மிக வேகமாக காய்களை நகர்த்துகிறார்கள். இந்த அதிகாரக் குவியலுக்கு எதிராக கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலங்கள் நிற்கின்றன. குடியரசு தின விழாவில், அதிகார ஊர்திகளை மையப்படுத்தி எழுந்த பிரச்சனைக்கு இதுவே அடிப்படையாகும்.

சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஆணும், பெண்ணும்!

பினராயி விஜயன்

தமிழில்: இரா.பிரவீணா

குரல்: பூங்கொடி மதி அரசு

(கேரள மாநிலத்தில் வரதட்சணை, குடும்ப வன்முறைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பெண்ணிய நவ கேரளம் இயக்கத்தை ஒட்டி, மார்க்சிய வார இதழான ‘சிந்தா’வில் கேரள மாநில முதல்வரும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பினராயி விஜயன் எழுதிய கட்டுரை) 

முதல் தலைமுறை பட்டதாரிகள் மிக அதிகமாக உள்ள நம் மாநிலத்தில் முற்போக்கான மாற்றங்கள் பலவற்றையும், அவற்றிற்கு காரணமான போராட்டங்களையும் கண்டிருக்கிறோம். அதே சமயம், முன்னேறிய சமூகத்திற்கு பொருந்தாத பல செயல்களும் இன்னும் நிலைத்திருக்கின்றன. அவற்றிற்கு எதிராக போராடவில்லையென்றால், கேரளத்தின் முன்னேறிய சூழலை நிலைநிறுத்திட முடியாது.

நாம் அடியோடு களைந்திட வேண்டிய தீய வழக்கங்களில் ஒன்று வரதட்சணை ஆகும். பெண்களை அடிமைகளாகவும், குழந்தை பெற்றுக்கொடுக்கும் இயந்திரங்களாகவும் பார்க்கின்ற பிற்போக்கான பார்வையில் இருந்தே இந்த வழக்கங்கள் உருவாகின்றன. அதனைக் களைந்து, பெண் சமத்துவத்தை உறுதி செய்யும் சமூகத்தை உருவாக்க வேண்டியுள்ளது. அதனை சாத்தியமாக்குவது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

உலக வரலாற்றில் இடம்பெற்ற முக்கியமான உரிமைப் போராட்டங்களில் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாததாக இருந்துள்ளது. பாரிஸ் கம்யூன் தோல்வியுற்றபோது, யுத்த கமிசனுக்கு முன் நிறுத்தப்பட்ட போராளிகளில் 1,051 பேர் பெண்கள் ஆவர்.

போராட்ட வரலாறு:

நம் நாட்டில் நிலவும் பாலின வேறுபாட்டையும், சமத்துவமற்ற நிலைமையும் முடிவுக்கு கொண்டுவர முன்னெடுக்க வேண்டிய செயல்கள் மறுமலர்ச்சிக் காலத்திலேயே தொடங்கிவிட்டன.

குழந்தை மணம், கைம்பெண் மறுமணத்திற்கு மறுப்பு, உடன்கட்டை ஏற்றல், பரம்பரச் சொத்துக்களில் உரிமை மறுப்பு, பெண் கல்வி மறுப்பு, பலதார மணம் முதலிய செயல்களுக்கு எதிராக அந்தக் காலத்தில் கிளர்ச்சிகள் எழுந்தன. பஞ்சமி என்ற பிற்படுத்தப்பட்ட சமூக பெண் குழந்தையையும் கூட்டிக் கொண்டுதான் இருட்டம்பலம் கோயிலுக்கு அய்யங்காளி நடைபயணமாக சென்றார். அதனைத் தொடர்ந்துதான் “படிக்க விடாவிட்டால் அறுவடைக்கு செல்ல மாட்டோம்” என்ற முழக்கத்துடன் போராட்டங்கள் கேரளத்தில் நடந்தன. கல் மாலை போராட்டம், தோள் சீலைப் போராட்டம் (மார்பை மறைத்து உடை உடுத்துவோம் என்ற போராட்டம்) முதலிய ஏராளமான போராட்டங்களும் அந்த வரலாற்றின் பகுதிகளே.

லக்கிடியிலே தொழில் மையம் பெண்களுடைய கம்யூனாக இருந்தது. நூல் நூற்றல், நெய்தல், தையல் போன்ற பணிகளை மேற்கொண்டு பெண்கள் சுயமரியாதையுடன் வாழ்ந்தார்கள். மலையாள பெண்ணிய நாடகமான ‘தொழில் கேந்திரம்’ உருவானது இதன் பின்னணியில்தான். “அடுப்படியில் இருந்து அரங்கத்திலேற்று”, “மாய்க்குடக்குள்ளிலே மகாநகரம்”, “ருதுமதி” ஆகிய நாடகங்கள் பெண்ணிய எதிர்ப்பும், தெளிவின்மையும் கொண்டிருந்த பொதுப்புத்திக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்க பயன்பட்டன.

1800களுக்கு முன் தொடங்கிய ‘தோள் சீலைப் போராட்டம்’ போராட்டம் இந்திய வரலாற்றின் அறிவார்ந்த முதல் பெண் முன்னேற்றமாகும். கேரளம் கண்ட முதல் சமூக உரிமைப் போராட்டமும் இதுவாகவே இருந்தது. சாணார் பெண்கள் தோள் சீலை உடுத்துவதன் மூலமாக தங்களின் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டினார்கள் என்றால், கூச்சல்களை புறக்கணிப்பதன் மூலமாக நம்பூதிரிப் பெண்கள் முன்னேற்றத்தை சாதித்தார்கள்.

சீமேனியில் தேனும், சுள்ளியும் சேகரிக்கும் போராட்டத்தில் முன்னணியில் நின்றது குஞ்ஞி மாதவியையும், கார்த்தியாயனி குட்டியம்மாவையும் போன்ற வீரப் பெண்களே. எட்டு மாதங்கள் நீடித்த இந்தப் போராட்டம் தேனும் விறகும் சேகரிக்கும் உரிமையை உறுதிசெய்த பிறகே முடிவிற்கு வந்தது.

விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்த ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்த 20 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்தக் காலகட்டத்தில் கேரளத்தில் அதிகரித்துவந்த விவசாயிகளின் இயக்கங்கள், தொழிலாளி வர்க்க இயக்கங்களின் தலைமையிலான போராட்டங்களில் பெண்களின் தியாகப்பூர்வமான பங்கேற்பைக் கண்டோம். இப்படியான முன்மாதிரியான முன்னேற்றங்களைச் சாதித்த நமது மாநிலத்தில், வரதட்சணையின் பேரில் பெண்கள் மீது தாக்குதல் நடப்பதற்காக நாம் வெட்கப்பட வேண்டும்.

மறுமலர்ச்சி இயக்கங்களும், முற்போக்கு இயக்கங்களும் தலைமையேற்ற போராட்டங்களினாலும், தலையீடுகளாலும் முன்னேற்றமடைந்த நம்முடைய பெண்களையும், பொதுச் சமூகத்தையும் பின் நோக்கி இழுக்கக்கூடிய விதத்திலான வரதட்சணை வன்கொடுமைகளும், உயிரிழப்புகளும் நடக்கக்கூடிய மாநிலமாக கேரளம் மாறக்கூடாது.

மணவாழ்வின் அடிப்படை:

சட்டப்படியாக வரதட்சணை தடை செய்யப்பட்டு 60 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றாலும், பல வடிவங்களிலும், பல்வேறு அளவுகளிலும் வரதட்சணை கொடுக்கவும், பெற்றுக்கொள்ளவும் படுகிறது. இதனை அதிக ஆபத்தான சமூக போக்காகவே காண வேண்டும். ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல், கணவனின் குடும்பம், மனைவியின் குடும்பம் என்று வேறுபடுத்தி காணாத, பாலின சமத்துவத்திற்கான நிலைப்பாட்டினை நாம் சமரசமில்லாமல் முன்னெடுக்க வேண்டும்.

திருமணமும், அதனை ஒட்டிய நிகழ்வுகளும், ஒரு குடும்பத்தின் அந்தஸ்தையும், செல்வாக்கையும் வெளிக்காட்டுவதற்கானவை அல்ல. பெண்களுக்கு எவ்வளவு கொடுத்தார்கள்; எத்தனை கொடுத்தார்கள் என்பது குடும்ப பெருமைக்கான அளவுகோல் அல்ல. அவ்வாறாக சிந்திக்கின்றவர் தனது சொந்த மகளை விற்பனைப் பண்டமாக மாற்றுகின்றீர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வரதட்சணை கேட்கிற ஒருவர் பெண்களை விடவும் பணத்திற்குத்தான் முக்கிய இடம் தருகின்றனர். இவைகளை மனதில் நிறுத்துவதும், இந்த அடிப்படையில் உறவுகளை தீர்மானிக்காமல் இருப்பதும் அவசியம்.

வரதட்சணை கேட்பது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு கேட்போர் மீது வழக்கு பதிவு செய்யவும் தயாராக வேண்டும். கையூட்டுப் பெறுவதை எப்படி பார்க்கிறோமோ, அதே புரிதலுடன் வரதட்சணையும் பார்க்க வேண்டும். பெண்களைப் பெற்றோரும் கவனமாக இருக்கவேண்டிய விசயம் இது.

ஆண்களும் அவர்களுடைய பெற்றோரும் முக்கியத்துவம் கொடுத்து கவனிக்க வேண்டிய ஒரு விசயம் உண்டு. திருமணத்தையும், குடும்ப வாழ்க்கையையும் ஒரு வணிக ஒப்பந்தமாக தரம் தாழ்த்தும் வரதட்சணைக்கு மதிப்புக் கொடுக்கும் வாதங்களை எதிர்த்த வாதங்களை வீட்டிற்குள் நிகழ்த்த வேண்டும். அப்படியான வாதங்கள், வளரும் தலைமுறையின் மனங்களில் பதிந்துவிடும். பெண்களுடைய வீட்டில் இருந்து ஏதாவது வெகுமதியைப் பெற்றுக்கொள்வது நம் உரிமை என்ற எண்ணத்தை ஆண் பிள்ளைகளிடக்ம் உண்டாக்கிட வேண்டாம்.

கணவரின் வீட்டில் உடல் ரீதியிலும், மன ரீதியிலுமான வன்முறைகளையெல்லாம் சகித்து வாழ வேண்டியவள் மனைவி என்ற எண்ணத்தை பெண் பிள்ளைகளின் மனத்தில் விதைத்திட வேண்டாம். இவை இரண்டும் ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடுகள் ஆகும்.

குடும்பங்களில் கற்பிப்போம்:

ஆதிக்கம் செலுத்துவதல்ல; ஒத்துழைப்பு நல்குவதே அவசியம்.  பெண்களை அடிப்பது ஆண்மை என்றும், மன்னிப்பதும் சகிப்பதும் பெண்மைக்கான தன்மைகள் என்றுமாக நமது புரிதல் இருக்கக் கூடாது. இம்மாதிரியான தவறான பார்வைகளை குழந்தைகளுக்கு ஊட்டவும் கூடாது.

ஆண், பெண் சமத்துவத்திற்கான புதிய சிந்தனைகள் சமூகத்திற்கு தேவைப்படும் காலம் இது. அதற்கு உதவி செய்யக்கூடிய பாடங்களை பாடத்திட்டத்தில் சேர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.

முதன்மையான சமூகம் என்ற நிலைக்கு, விஞ்ஞான பொருளாதாரத்திற்கு நம் மாநிலத்தை உயர்த்திடத்தான் நாம் முயற்சிக்கிறோம். அதற்கு உயர்ந்த அறிவும், திறனும் உள்ள தலைமுறையை வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது. பாலின வேறுபாடுகளுக்கு அங்கே இடமில்லை. அதற்கு உதவுகின்ற பாலபாடங்களை குடும்பத்தில் இருந்து தொடங்க வேண்டும். அந்த எண்ணத்தை வளர்ப்பதற்கு பொது இடங்களிலும், தொழில் இடங்களிலும் அரசு முயற்சியினை மேற்கொள்ளும். வரதட்சணை தொடர்பான கொலைகள் மட்டுமல்லாது, ஆணவக் கொலைகளும் கூட அரிதாகவே கேரளத்தில் நடந்துள்ளன.

காதலில் ஜனநாயகம்:

காதலினை நிராகரிப்பதன் பேரிலும், காதல் உறவுகளில் உண்டாகிற பிரச்சனைகளின் காரணத்தால் பெண்கள் கொலை செய்யப்படும் நிகழ்வுகள் சில காலமாக நடந்து வருகின்றன. குடும்ப வன்முறையைத் தொடர்ந்து நடக்கின்ற மரணங்களையும் கொலைகளையும் போலவேதான், இந்த இரண்டு போக்குகளும் வலுவாக எதிர்க்கப்படவேண்டிய சமூக பிரச்சனைகளாகும். இதனைப் போன்ற போக்குகளுக்கு தீர்வு காணும் வகையிலான கூட்டு முயற்சிகள் சமூகத்தில் இருந்தே மேலெழுந்து வரவேண்டும்.

காதலினைப் பற்றியும், ஆண் – பெண் இடையிலான உறவினைப் பற்றியுமான ஜனநாயக பார்வையை நாம் வளர்த்தெடுக்க வேண்டும். ஒருவர் தன்னுடைய விருப்பத்தை மற்றவரின் மேல் கட்டாயப்படுத்துவதை ஏற்க முடியாது. தனது விருப்பத்திற்கேற்ப திருமணம் செய்யவில்லை என்றால், தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப காதலிக்கவில்லை என்றால், ஒருவர் இன்னொருவரைத் தாக்கலாம் என்றோ, மற்றவரின் உயிரை எடுக்கலாம் என்றோ கருதுவது மனித உறவுகளை அதிகார வடிவங்களாகக் காண்பதனால்தான். அவை உறவுகளே அன்றி அதிகார வடிவங்கள் அல்ல என்ற புரிதலும், ஜனநாயக சமத்துவத்தை பற்றிய புரிதலும் உண்டாகும்போதுதான் அவை பொருளுள்ளவை ஆகின்றன. இதில் நமக்கு உறுதிப்பாடு தேவை. உறவுகள் ஜனநாயகபூர்வமாக உள்ள சமூகங்களில்தான் வேற்றுமையற்ற சமத்துவத்தினை உறுதி செய்திட முடியும்.

அரசாங்க தலையீடுகள்:

சமூக அநீதிகளில் இருந்து பெண்களுக்கு விடுதலையை அளிக்க வேண்டுமென்றால் பல்வேறு நிலைகளிலும் செயல்பாடுகளை ஏற்க வேண்டியுள்ளது. அதில் ஒன்று சமையலறை வேலைகள் உள்ளிட்ட செயல்கள் பெண்களின் தலையில் மட்டும் சுமத்த வேண்டிய சுமையாக காண்கிற பார்வையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றம் ஆகும். சமையல் வேலைகள் மட்டுமல்லாமல், குழந்தைகளையும், வயதான பெரியவர்களையும் பார்த்துக்கொள்கிற சுமைகளையும் பெண்கள் மட்டுமே ஏற்க வேண்டியதாகின்றன. இந்தப் போக்குகளிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பதால்தான், வீட்டு வேலைகளைச் செய்யும் பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும், வீட்டிற்குள் வேலைச் சுமைகளை குறைக்கின்ற ஸ்மார்ட் கிச்சன் திட்டத்தை செயல்படுத்தவும், அரசாங்கம் ஆலோசித்தது.

இதுபோன்ற முன்னெடுப்புகளை அரசாங்கம் எடுக்கும்போதுதான் வீட்டு வேலைகள் குடும்பத்தில் உள்ள எல்லோருமே சேர்ந்து செய்ய வேண்டியதே என்ற உணர்வை சமூகத்தில் வளர்த்தெடுக்க முடியும்.

பெண் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான தவிர்க்க முடியாத காரணி, பெண்களின் பொருளாதார தன்னிறைவு ஆகும். குடும்ப வன்முறைக்கு இரையாகின்ற பெண்களில் பலரும் பொருளாதார தன்னிறைவு இல்லாதவர்களாகவே உள்ளார்கள். பொருளாதார தன்னிறைவு பெறும்போது அவர்களால் கூடுதல் சுதந்திரத்தோடு சிந்திக்கவும் செயல்படவும் முடியும். அது போலவே கூடுதல் சுதந்திரமான பெண் சமூகம் உருவாகும். அதற்கு நாம் வேலைவாய்ப்புத் துறையில் அதிகமான கவனம் செலுத்த வேண்டும்.

மாநில மக்கள் தொகையில் பெண்களே அதிக எண்ணிக்கையில் இருப்பினும் வேலைவாய்ப்புகளில் அவர்களுடைய எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. பெண்கள் உயர்கல்வி பெற்றபோதிலும் பணிக்கு செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கியிருப்பது, முற்போக்குச் சமூகத்திற்கு பொருத்தமான நிலைமை அல்ல.

பெண்களுக்கு வேலை வாய்ப்பு:

பெண்களையும் தொழிலாளர் படையில் இணைப்பது, வளர்ச்சி நடவடிக்கைகளில் பங்காற்ற வைப்பதுமான கடமைகளை அரசாங்கம்  ஏற்றுள்ளது. இந்த நடவடிக்கையில் 45 லட்சத்திற்கும் அதிகமாக உள்ள குடும்பஸ்ரீ குழுக்கள் மிகப்பெரிய பங்களிப்பை செலுத்த முடியும்.

2016 ஆம் ஆண்டில் இடது ஜனநாயக முன்னணி கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பில் 18 சதவீதமாக உயர்த்தப்படும் என்றது. இன்று, வேலைவாய்ப்பில் பெண்களின் பங்கு 24 சதவீதமாக உள்ளது. அதனை 50 சதவீதமாக உயர்த்திடுவோம். 5 வருடங்களில் 40 லட்சம் தொழில் வாய்ப்புகளை உருவாக்க முயற்சியெடுக்கிறோம். அதில் பெண்களே அதிக அளவில் பயன்பெறுவார்கள். பெண்களுக்காக வேலை வாய்ப்புகளில் நான்கில் ஒரு பங்காவது உயர்த்துவதே இலக்காகும்.

பெண்ணின் தன்னிறைவினை இலக்காகக் கொண்டு 1998 ஆம் ஆண்டில் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசாங்கம் தொடங்கிய குடும்பஸ்ரீ இயக்கம் இப்போது உலகத்திற்கே முன்னுதாரணமாக விளங்குகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்கத்தின் மூலமாக பெண்களை உயர்ந்த பதவிகளில் நிர்வாகச் செயல்பாடுகளின் பகுதியாக்கிடவும், பெண்மைக்கு புதிய பரிணாமத்தை தருவதும் நமக்கு சாத்தியமாக வேண்டும்.

திட்டங்களை உருவாக்குவதிலும், செயல்படுத்துவதிலும் பெண்களின் தீவிர பங்கேற்பு சாத்தியமாகியது. அதிகார பரவலாக்கத்தை திறம்பட செயல்படுத்துவதன் வழியாக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பினை அதிகரிப்பதை உறுதி செய்திருக்கிறோம். இதனை விடவும் அதிக செயல் திறன் வாய்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தும் சூழ்நிலைமையும் உருவானது.

கடந்த 5 ஆண்டுகளில் பெண்களின் மேம்பாட்டை குறிக்கோளாக வைத்து நடைமுறைப்படுத்திய திட்டங்கள் அதிகம் உள்ளன. மகளிர் மேம்பாட்டிற்காக தனியாக துறையும், இயக்ககமும் அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான உதவி மையம் செயல்படுத்தினோம். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நிதியில் வீட்டில் வேலை செய்யும் பெண்களும் உட்படுத்தப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் பெண்களுக்கான கழிப்பிடங்களை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கிறோம். எல்லா துறைகளிலும் அலுவலகங்களிலும் பாலின கணக்காய்வு நடத்தப்பட்டது. ‘சதைரியம் முன்னோட்டு’ ‘பொதுவிடம் என்டேது’, ‘ஸ்த்ரிசெளகிரக கிராமம்’, ‘சகி’, ‘சகாய ஹஸ்தம்’, ‘கைத்தாங்கு’, ‘சினேகித’, ‘ஷ்ரத்த’, ‘ஆஷ்வாச நிதி’, ‘ஒப்பம்’ முதலிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

குடும்பஸ்ரீ திட்டத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்தோம். குடும்ப வன்முறைகளை முழுமையாக அழிப்பது, பெண் அதிகாரத்தை உருவாக்குவது, எல்லோருக்கும் விழிப்புணர்வை பரவலாக்குவது ஆகிய குறிக்கோள்களுடன் ‘கனல்’ என்ற செயல்திட்டம் தொடங்கப்பட்டது.

வரதட்சணை ஒழிப்பு சட்டம்:

வரதட்சணை ஒழிப்புச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு 2004 கேரள வரதட்சணை ஒழிப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. எல்லா மாவட்டங்களிலும்    பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அதிகாரிகள் வரதட்சணை ஒழிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டார்கள். வரதட்சணை ஒழிப்பு நடவடிக்கைகளை திறன்பட செயல்படுத்த மாவட்ட ஆலோசகர் குழு, நலத்திட்ட அமைப்பு ஆகியவையும் உருவாக்கப்படுகிறது. பெண்கள் தங்குவதற்காக விடுதிகள் இல்லாத எல்லா மாவட்டங்களிலும் அவை தொடங்கப்படும். அரசு ஊழியர்கள் வரதட்சணை கேட்கவோ, வாங்கவோ, கொடுக்கவோ செய்கிறார்களா என்று கண்காணிக்கப்படுகிறார்கள். பெண்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும், பாலின வேறுபாடு, வரதட்சணை – குடும்ப வன்முறைகள் ஆகியவைகளுக்கு எதிராகவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அது தொடர்பான சட்டங்களை மீறினால் தண்டனை உண்டு என்பதை உணர்த்திடவும் பெரிய அளவிலான பிரச்சாரம் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.

பாலின பார்வையுடன் பட்ஜெட்:

கடந்த அரசின் ஆட்சிக்காலத்தில் பாலின நிதிநிலை அறிக்கைக்கு தொடக்கப்புள்ளி வைத்தோம். மாநில அரசு தனது செலவினத்தில் 16 சதவீதம் பெண்களுக்கான திட்டங்களுக்காக மாற்றியமைத்தது. பொதுத் திட்டங்களில் பெண்களுக்காக செலவிடப்படும்  நிதியையும் சேர்த்தால் இந்த விகிதம் 19 ஆக உள்ளது. அதனை 25 சதவீதமாக உயர்த்திடுவோம்.

பாலியல் துன்புறுத்தலுக்கான பதிவேடு தொடங்கப்பட்ட முதல் மாநிலம் நம்முடையதுதான். இதன் தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைளை குறைப்பதற்கான ‘குற்றப் பதிவு வரைபடம்’ உருவாக்கப்படும். இவையெல்லாம் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பான இடமாக கேரளத்தை மாற்றிடும் என்று நினைக்கிறோம்.

பெண் விடுதலையினைச் சீர்குலைக்கும் பிற்போக்கான கருத்தியல் போக்குகளை மொத்தமாக எதிர்ப்பதுடன், வகுப்புவாத சமரசமில்லாமல், பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் என்ற வேறுபாடில்லாமல் எதிர்த்திட வேண்டும். தனது  சிந்தனையை சுதந்திரமாகவும், ஜனநாயக அடிப்படையிலும் மேற்கொள்வதற்கு பெண்களால் முடிய வேண்டும். சாதி மத வர்க்க பேதங்களுக்கு எதிராக பெண்களை ஓரணியில் நிறுத்துவதுதான் முக்கியம். எல்லாவிடங்களிலும் நிலவக்கூடிய பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்திட, முற்போக்கான ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்த பெண்ணிய இயக்கம் எழுப்பப்பட வேண்டும்.

கேரளத்தின் முன்னேற்றத்தில் ‘குடும்பஸ்ரீ’ இயக்கம் வகித்த பங்கு முக்கியமானது. சமூகத்தின் எல்லாத் துறைகளிலும் உள்ள பெண்களை முன்நிறுத்தி, உள்ளூர் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமையும் விதத்தில் ‘குடும்பஸ்ரீ’ தனது பிரச்சார பணியை தொடங்கியுள்ளது.

பெண்களுடைய பிரச்சனைகள் அவர்களுக்கு மட்டுமான பிரச்சனை என்றும், ஆண்களுடைய பிரச்சனை சமூகத்தின் பிரச்சனை என்பதுமான அணுகுமுறை சில பகுதியினரிடம் இருந்து வெளிப்படுவது உண்டு. பெண்கள் சமூகத்தில் ஒரு பகுதி.; அவர்களுக்கு சமூகத்தில் சமத்துவமான பங்களிப்பு உண்டு என்பதை உறுதிப்படுத்துவதற்கு வரதட்சணை – பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஆகியவைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ‘பெண்ணிய நவ கேரளம்’ இயக்கத்தின் பிரச்சாரம் வெற்றியடைந்திட சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஆதரவினையும், ஒத்துழைப்பையும் வழங்கிட வேண்டும்.

கல்வித்துறை நவீனப்படுத்தும், கேரள இடதுசாரி அரசாங்கம் : பிணராயி விஜயன்

சிந்தா, மலையாள இதழிலிருந்து தமிழில்: நந்தகுமாரன்

(கேரள கல்வித்துறையை மேம்படுத்துவதற்கு திட்டமிட்ட அணுகுமுறையை கேரள அரசாங்கம் கடைப்பிடிக்கிறது. கேரள முதல்வர் தோழர் பிணராயி விஜயன் விளக்குகிறார்)

கல்வி  உட்பட எல்லாவகை உரிமைகளுக்குமான சொந்தக்காரர்கள் என தங்களுக்குத் தாங்களே சுயமாக அறிவித்துக் கொண்ட சிறு பிரிவினர் ஒரு காலத்தில் இருந்தனர். அவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என முத்திரை குத்தப்பட்ட  ஒரு பெரும் பிரிவினரை சமூகத்தின் அனைத்து துறைகளிலிருந்தும் விலக்கி வைத்திருந்தனர். இத்தகைய சமத்துவமின்மை தாழ்த்தப்பட்ட மக்களின் அறிவு தேடும் உரிமையை மிகக் கடுமையாக பாதித்தது. ஆசிரியரிடம் நேரடியாக சென்று கல்வி கற்கும் உரிமையை மறுத்தது மட்டுமல்லாமல், மறைமுகமாக அறிவைத் தேடும் முயற்சிகளுக்கு தண்டனைகளும் வழங்கப்பட்டது. கல்வி கற்க முடியாமல், பொது வழியில் நடக்க முடியாமல், விருப்பப்பட்ட உணவை உண்ண இயலாமல், ஆலயங்களில் நுழைய இயலாமல் இருந்த அத்தகைய நிலைமைகளைத் தான் ஸ்ரீ நாராயண குரு, அய்யங்காளி, அய்யா வைகுண்டர், சட்டம்பி சுவாமிகள் போன்ற சீர்த்திருத்த வாதிகள் கேள்வி எழுப்பினர்.

இருண்ட காலத்தை திரும்ப விடோம்!

சாதிப் பாகுபாடுகளாலும், மூட நம்பிக்கைகளாலும், பழக்கவழக்கங்களாலும் நிறைந்து காணப்பட்ட அன்றைய சூழல்களை முன்னிறுத்தி தான் சுவாமி விவேகானந்தர் கேரளத்தை “பைத்தியக்காரர்களின் நாடு “ எனக் குறிப்பிட்டார். அத்தகைய நிலைமைகளை மாற்றவே, ஸ்ரீ நாராயண குரு கல்வி அறிவின் தேவையைப் பற்றி எழுதியதுடன், சிவிகிரியில் பள்ளிக்கூடம் ஒன்றையும் துவக்கினார். கல்விக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு பரிதாபகரமான நிலையில் வாழ்ந்து வந்த குழந்தைகளை பள்ளிக் கூடங்களை நோக்கி அய்யாங்காளி அழைத்து சென்றதென்பது நமது மண்ணில் பீடித்திருந்த கறையை துடைத்த அகற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே. கல்வி வளர்ச்சிக்காக மிஷனிரிகளும், சமூக அக்கறை கொண்ட இயக்கங்களும் அளித்த பங்களிப்புகள் விலைமதிப்பற்றவை. மறுமலர்ச்சி இயக்க நாயகர்கள் அன்று பற்றவைத்த நெருப்பினை அணையவிடாமல்  கேரளத்தில்  பாதுகாத்தது  நாம் இடதுசாரிகளே என பெருமையுடன் கூறிக் கொள்ள முடியும்.

கல்வி வாய்ப்பை மறுத்த அந்த இருண்ட காலத்திற்கு கேரளா இனி ஒருபோதும் திரும்பி போகக் கூடாது என்பதில் இந்த அரசு உறுதியுடன் இருந்து வருகிறது. அதன் காரணமாகவே பொதுக் கல்வி பாதுகாப்பு  இயக்கம் என்ற பெயரில் ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறோம். ஒருவரின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும், சமூக உயர்வுக்கும் அடிப்படையாக இருப்பது கல்வியே.  அதோடு, தனிப்பட்ட வளர்ச்சிக்கு தேவையான அறிவு, ஊக்கம் மற்றும் மதிப்பினை வழங்கவும் கல்வியால் மட்டுமே முடியும். அதனால் கல்வி அனைவருக்கும் கிடைத்தாக வேண்டும். இது மாணவர்களுக்கு வழங்கும் தானமல்ல. மாறாக, அவர்களின் உரிமையாகும். இதனை உறுதிப்படுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் கடமையும் பொறுப்பும் ஆகும். அத்தகைய உணர்வின் அடிப்படையில் தான், பொதுக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தை அரசு முன்னெடுத்து வருகிறது.

அறியாமை தொடர விரும்பும் ஆளும் வர்க்கம்

குறிப்பிட்ட காலத்திற்குள் அனைவருக்கும் இலவச கல்வி என்பது நமது அரசியலமைப்பு சட்ட சிற்பிகள் கண்ட கனவாக இருந்தது. ஆனால் அவர்கள் நிச்சயித்த காலஅளவைத் தாண்டி எத்தனையோ ஆண்டுகள் கடந்து போய்விட்டன. இன்றும் எழுத்துகளின் ஓசைகளைக் கேட்டேனும் கற்கவியலாத நிலையில் லட்சக்கணக்கான குழந்தைகள்  பள்ளிக்கூடங்களைவிட்டு  ஒதுங்கி இருக்கின்றனர். அவர்கள் கல்வி கற்க வேண்டிய வயதில் மிகக் கடுமையான வேலைகளை செய்து வருகின்றனர். இந்தநிலை மாற வேண்டுமெனில் வருடந்தோறும் மத்திய அரசு கல்விக்காக ஒதுக்கும் நிதியின் விழுக்காடு அதிகரிக்கப்பட வேண்டும்.

எண்ணற்ற கல்விக் குழுக்கள் இது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கியுள்ளன.  இருப்பினும், கல்விக்கான ஒதுக்கீட்டில்  சொல்லும்படியான அதிகரிப்பு ஒன்றும் செய்யப்படவில்லை. இதற்கு காரணம், குழந்தைகளுக்கு கல்வி வழங்காமல் இருப்பது தங்களுக்கு அரசியல் ரீதியாக பயனளிக்கும் என கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்தவர்கள் நினைத்திருக்கக் கூடும். எழுத்தும் அறிவும் இல்லையெனில் சிந்திக்கமாட்டார்கள் அல்லவா ? அவ்வாறு சிந்திக்கும் சக்தி இல்லையெனில் தாங்கள் செய்யும் தவறுகளை எதிர்க்காமல் இருந்துவிடுவார்கள். எங்கேயிருந்தும் ஒரு எதிர்ப்பும் எழும்பாதவிதத்தில் புதிய தலைமுறையை மயக்க நிலைக்குட்படுத்தி ஆட்சியை தொடர வேண்டுமெனில் கல்வியறிவற்ற இருண்ட சமூகத்தை நிலைநிறுத்தி கொண்டால் மட்டுமே சாத்தியமாகும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கக் கூடும்.

பழம்பெருமை பிதற்றுவதால் பலனில்லை

பாரம்பரியத்தைப் பற்றி வறட்டுப் பெருமைகளைக் கொண்டிருப்பதால் எந்த பயனும் இல்லை. முற்காலத்தில் நாளந்தா பல்கலைகழகம் இருந்தது ; தக்ஷசீலம் உண்டாயிருந்தது; என்றெல்லாம் கூறிக் கொண்டிருப்பதால் எந்தவித பயனும் இல்லை. இன்றைக்கு என்ன இருக்கிறது என்பது தான் பிரச்சினையே. நாளந்தா பல்கலைக்கழகத்தை மீண்டும் புனரமைத்திட பிரபல பொருளாதார வல்லுநரும், நோபல் பரிசு பெற்ற அறிஞருமான டாக்டர் அமர்த்தியா செனை பொறுப்பாக மத்திய அரசு பணியமர்த்தியிருந்தது. ஆனால், மத்திய அரசால் திணிக்கப்பட்ட வகுப்புவாத பிடிவாதங்களையும், கட்டுப்பாடுகளையும் சகிக்க முடியாமல் அவர் அந்த பொறுப்பிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

தேசிய அளவில் கல்வியானது அனைவருக்கும் உரியதாகவும், கட்டாயமானதாகவும்  உருவாக்கப்பட புதிய காலத்தில் பெரிய அளவிலான போராட்டத்திற்கான தேவை எழுந்துள்ளது. நமது நாட்டில் போராட்ட வழிகளின் மூலமல்லாது யாரும் பெரிய அளவில் ஒன்றும் சாதித்துவிடவில்லை. கேரளத்தில் கூட ஏழை மாணவர்கள் பெரிய அளவிலான கட்டண சுமை இல்லாமல் கல்வி கற்க வழி ஏற்பட்டதற்கான காரணம், மாணவர் இயக்கத்தினரின் கடுமையான போராட்டங்களும், முற்போக்கு அரசுகளின் தலையீடுமே ஆகும்.
இவ்வாறு கேரளா முழுவதும் அனைவருக்கும் கல்வி என்பது சாத்தியப்பட்ட கல்வியை தகர்க்கும் வகையில் அத்துறையில் உலகமயமாக்கலின் வரவு அமைந்துள்ளது. இத்தகைய நிலையை தடுத்து, ஏற்கனவே உருவாக்கிய கல்வி உரிமைக்கான நலன்களை பாதுகாப்பதுடன் அவற்றை மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவை அதிகரித்து வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக சர்வதேச தரத்திற்கு இணையாக நமது கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதில் இடது ஜனநாயக முன்னணி அரசு முனைப்பு காட்டி வருகிறது.

திட்டமிட்ட அணுகுமுறை

இனி வருங்காலங்களில் உலகம் முழுவதும் ஒரே சந்தையாக மாற்றப்படும். அந்த பொது சந்தையில் வளர்ந்த நாடுகளிலிருந்து வரும் மாணவர்களுடன் போட்டியிட்டு தனது திறமையை நிரூபித்து வாழ வேண்டிய சூழலே நமது குழந்தைகளுக்கு ஏற்படும். அதற்கு அவர்களை தகுதியுடையவர்களாக மாற்றும் விதத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உள்ளதா என்பதனை ஆய்வுசெய்தோம். அதற்கு இல்லை என்ற பதிலே எங்களுக்கு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து,  நம்முடைய அரசுப் பள்ளிகளை உலகத் தரத்திற்கு இணையாக மேம்படுத்தவும், நமது குழந்தைகளை உலகின் எந்த பகுதியில் உள்ள மாணவர்களுடனும் போட்டியிடும் அளவிற்கான தரத்திற்கு உயர்த்தவும் தேவையான திட்டங்களை வகுக்க தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே தற்போது பொது கல்வி பாதுகாப்பு இயக்கத்தை முன்னெடுத்து செல்கிறோம். ஏற்கனவே, நிரந்தரமாக மூடும் நிலையில் இருந்த பள்ளிக் கூடங்களை மீண்டும் திறந்து அவற்றை பாதுகாத்த நிகழ்வுகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

நவீன காலத்திற்கேற்ப தொழில் நுட்ப அறிவியல் துறையில் நாம் முன்னோக்கி செல்ல வேண்டிய தேவையுள்ளது. அதற்கு தேவையான திட்டங்களையும், செயல்முறை நிகழ்ச்சிகளையும் இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக கேரளம் நடைமுறைப்படுத்தி வருகிறது.

கேரளம் ஒரு முன் மாதிரி

நமது மாநிலத்தில் பெரும்பாலான குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் தான் இன்றும் கல்வி கற்று வருகின்றனர். சாதி, மத, பொருளாதார வேறுபாடுகள் இல்லாமல் எல்லா மாணவர்களுக்கும் கல்வி கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது என்பது தான் கேரளத்தை மற்ற மாநிலங்களிலிருந்து வேறுபடுத்துகிறது. உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டு, பேசப்பட்டு வந்த கேரள மாதிரி வளர்ச்சியில் கூட நமது பொதுக் கல்வியும், அரசுப் பள்ளிகளும் பெரிய அளவிலான பங்கு வகித்திருந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

பலதரப்பட்ட சாதி,மதப் பிரிவு மக்கள் தங்களுக்கிடையே கலந்து ஒருவருக்கொருவர் சகிப்புத் தன்மையுடனும், நட்புறவுடனும் வாழும் நிலையை உருவாக்கியெடுத்ததில் பொதுக் கல்விக்கு பெரிய அளவிலான பங்கு உண்டு. சாதி மற்றும் பொருளாதார வேறுபாடுகளையும் கடந்து நம்முடைய புதிய தலைமுறையை சமத்துவ கலாச்சாரத்தில் வளர்த்தெடுப்பதில் அரசுப் பள்ளிகளும் அவற்றில் நிலவும் சூழல்களும் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தன. அவற்றிலிருந்து நாம் தொடர்ந்து முன்னோக்கி பயணிக்க வேண்டிய தேவையுள்ளது. அதோடு, முன்னோக்கித் தான் செல்கிறோம் என்பதை உறுதிப்படுத்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கூட்டு செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

நமது மாநிலத்தில் அரசு பள்ளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமலிருக்கின்றன என்ற விமர்சனம் சமீபகாலம் வரை முன்வைக்கப்பட்டது. அதிக ஆசிரியர்களும், மேசைகளும், பெஞ்சுகளும் மட்டும் இருந்தால் போதாது. கூடவே நவீன வசதிகளும் அரசுப் பள்ளிகளில் உருவாக்கப்பட வேண்டும் என்பது தான் அத்தகைய விமர்சனத்தின் அடிப்படை. ஆனால், இந்த இயக்கம் துவக்கப்பட்ட முதல் வருடத்திலேயே அத்தகைய விமர்சனங்களுக்கு அடிப்படையாக இருந்த பிரச்சினைகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் தீர்வு காணப்பட்டுள்ளது.

நவீன வசதிகள் உருவாக்கம்

பெரிய கட்டிடங்கள் மட்டுமல்ல, சகலவித வசதிகளுடன் கூடிய ஹைடெக் ஸ்மார்ட் கிளாஸ் அறைகள் பொதுக் கல்வி இயக்கம் மூலம் செயல்படுத்த அரசு கலந்தாராய்ந்து வருகிறது. நூலகங்கள், கணினி சோதனைக் கூடங்கள், பல்லுயிர் பூங்காக்கள் முதலிய வசதிகளை எல்லாம் இதன் ஒரு பகுதியாக நமது அரசுப் பள்ளிகளில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒன்று என்ற கணக்கில் அரசுப் பள்ளிகளில் சர்வதேச தரத்துக்கு இணையாக உள்ள அடிப்படை வசதிகளை உருவாக்கும் நடவடிக்கைகள் தற்போது வேகமாக எடுக்கப்பட்டு வருகின்றன. அடிப்படை வசதிகள் குறைவாக உள்ள மற்ற பள்ளிக் கூடங்களிலும் அவற்றை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் அடுத்தக்கட்டமாக, கீழ்நிலை மற்றும் மேல்நிலை தொடக்கப்பள்ளிகளிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் நாற்பதாயிரம் வகுப்பறைகளை ஹைடெக் ஆக்குவதன் மூலம் இந்தியாவில் பூரணமாக டிஜிட்டல்மயமாக்கப்பட்ட கல்வித் துறை என்ற கனவுத் திட்டத்தினை நோக்கி கேரளம் நடைபோடுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் அடிப்படை வசதியற்ற ஒரு பள்ளியும் கேரளத்தில் இருக்கக் கூடாது என்பதுடன், அனைவரும் ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலமே கல்வி கற்கின்றனர் என்பதனையும் உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்படிப்பட்ட வசதிகள் உண்டாக்கப்படுவதன் எதிரொலியாக அதற்கான நற்பலன்கள் தற்போதே பள்ளிகளில் கிடைக்க துவங்கியுள்ளன. இக்கல்வியாண்டின் துவக்கத்தில் அரசுப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததே அதற்கு சான்று. இரண்டாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஏறத்தாழ ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் கடந்த ஆண்டை விட கூடுதலாக அரசு பள்ளிகளில் சேர்ந்தனர். இப்படிப்பட்ட கூடுதலான மாணவர் சேர்க்கை கடந்த பத்தாண்டுகளில் இதுவே முதல் முறை என புள்ளி விபரங்கள் கூறுகையில் பொதுக் கல்வி குறித்த நமது உணர்வுகள் குறித்து நான் கூடுதலாக ஒன்றும் விளக்க வேண்டியதில்லை என்றே கருதுகிறேன்.

உலகின் பல பகுதிகளிலிருந்தும் உள்ள மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் நமது குழந்தைகள் கல்வி தொடர்பாக தொடர்பு கொள்ளுகின்றனர். ஆங்கிலத்தில் உள்ள நூல்களை வாசித்து புரிந்து கொள்கின்றனர். கூகுள் போன்ற இணைய தேடு பொறிகளை தங்களது அறிவுத் தேடலுக்காக போதிய அளவில் பயன்படுத்துகின்றனர். விக்கிபீடியா போன்றவற்றில் கேரளாவைப் பற்றிய விலைமதிப்பற்ற விபரங்களை எழுதுகின்றனர். மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் ஒரே போன்று தொடர்பு கொள்ள அவர்களால் முடிகிறது. இவைகள் மூலம் நமது கல்வித் துறையில் புதியதொரு உணர்வு எதிரொலிக்கிறது.

மலபார் முஸ்லீம்களும் இடதுசாரிகளும்

பினராயி விஜயன்

தமிழில்: வீ.பா. கணேசன்

நீண்ட நெடுங்காலம் நடத்தி வந்த காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போராட்டம், பாரம்பரிய மான மறுமலர்ச்சி ஆகியவற்றின் பின்னணியில் மலபார் பகுதியில் உள்ள முஸ்லீம் மக்களை முன்னுக்கு எடுத்துச் செல்வதில் இடதுசாரி களின் பங்களிப்பு மற்றும் அவர்கள் மேற்கொண்ட நிலைபாடு ஆகியவற்றை விளக்குவதற்கான ஒரு முயற்சியே இந்தக் கட்டுரை. முஸ்லீம் மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை தீர்த்து வைப் பதில் இடதுசாரிகள் எப்போதுமே தலையிடு வதில்லை என்றதொரு பிரச்சாரத்தை திட்டமிட்டதொரு முயற்சி சில பிரிவினரால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பின்னணியில்தான் முஸ்லீம் மக்களின் வளர்ச்சியிலும், முன்னேற்றத் திலும் இடதுசாரிகள் மேற்கொண்ட நடவடிக் கைகள் பற்றிய ஒரு விசாரணை பொருத்தமான தாகிறது. அதன் துவக்க காலத்திலிருந்தே இஸ்லாம் மதத்தின் பிரத்யேகமான அம்சங்கள், வரலாற்றில் அது செலுத்திய பங்கு ஆகிய அனைத்தையும் முறையானதொரு கண்ணோட்டத்தில் காண கம்யூனிஸ்ட் கட்சி தயாராகவே உள்ளது. அரேபிய மக்கள் உலக முழுவதற்கும் வழங்கிய பங்களிப்பை எடுத்துக் கூறுவதில் கம்யூனிஸ்ட் கடசியின் நிறுவனங்கள் எப்போதும் தயங்கியதே இல்லை. கேரளாவிலும், கம்யூனிஸ்ட் இயக்கம் அது தோன்றிய காலத்திலிருந்தே அதே பாரம்பரியத்தை பின்பற்றி வருகிறது. வர விருக்கும் நாட்களிலும் கூட அதே நிலை பாட்டையே அது தொடர்ந்து கடைப்பிடிக்கும்.

அரேபியர்களின் பங்களிப்பு

அதற்கேயுரிய பிரத்யேகமான பூகோள நிலைமைகளின் விளைவாக அரேபியாவில் விவசாயம் செய்வது இயலாத ஒன்று என்ற நிலையில் இதர பகுதிகளிலிருந்து உணவுப் பொருட்களை கொண்டு வர அரேபியர்கள் முயற்சித்தது மட்டுமன்றி வணிகத்தின் மூலம் பொருளீட்டவும் அவர்கள் முயற்சி செய்தனர். உலகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று வரும் போது கிடைத்த அறிவை உலக முழுவதிலும் பரவச் செயவ்திலும் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ள அறிவோடு இந்த அறிவை இணைப்பதிலும் அரேபியர்கள் வகித்த பங்கை மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகிய இருவருமே விரிவாக எடுத்துக் காட்டியுள்ளனர்.

“இயற்கையின் இயங்கியல்” என்ற அவரது நூலுக்கு எழுதிய முன்னுரையில் எங்கெல்ஸ் உலகத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி குறித்து விரிவாக விளக்குகிறார். ஐரோப்பாவில் புதிதாக உருவாக்கப்பட்ட பொருட்கள், புதிய கண்டு பிடிப்புகள் ஆகிய அனைத்திற்கும் பின்னால் உலகின் பல பகுதிகளிலிருந்தும் தாங்கள் பெற்ற அறிவுச்செல்வத்தை அரேபியர்கள் பகிர்ந்து கொண்டதுதான் அடிப்படையாக அமைந் திருந்தது என்ற உண்மையை தனது முன்னுரையில் அவர் ஒப்புக்கொள்கிறார். கேரளாவிலிருந்து கூட அவர்கள் பெற்ற இத்தகைய அறிவை உலகத்தின் இதர பகுதிகளில் உள்ளவர்களோடு பகிர்ந்து கொண்டார்கள் என்பதும் சமீபத்திய ஆய்வுகளிலிருந்து தெரிய வந்துள்ளது. அரேபிய மக்களின் இத்தகைய பங்களிப்புகளுக்கு கம்யூ னிஸ்டுகள் எப்போதுமே மரியாதை செய் வார்கள்.

இஸ்லாம் உருவாக்கமும் மார்க்சிய அணுகுமுறையும்

மார்க்சும் எங்கெல்சும் உலகத்தில் தோற்றுவிக்கப்பட்ட மதங்களைப் பற்றியும், அந்தக் காலத்தில் அவைகளின் பொதுவான செயல்பாடுகள் பற்றியும் மிகவும் விரிவான ஆய்வை மேற்கொண் டனர். இஸ்லாம் தோன்றியது பற்றியும் சமூகத்தில் அது ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றியும் அவர்கள் ஆராய்ந்தனர். அவர்களது கருத்துப்படி இஸ்லாம் மதம் என்பது ஒருபுறத்தில் வர்த்தகம்- தொழில் ஆகியவற்றில் ஈடுபட்ட நகர்ப்புற மக்களுக்கும், மறுபுறத்தில் ஓரிடத்தில் நிலைத்து நிற்காது இடம் மாறிக் கொண்டேயிருக்கும் பெடோயின் எனப்படும் நாடோடி இனத் தவருக்கும் மிகவும் பொருத்தமான விதத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மதமாகும். செல்வச் செழிப்புமிக்க நகர்ப்புற மக்களுக்கும், பரம ஏழைகளான பெடோயின்களுக்கும் இடையே நிலவும் முரண்பாட்டில் இருந்துதான் இஸ்லாம் மதம் உருவாக்கப்பட்டது என்ற கருத்தை எங்கெல்ஸ் முன்வைக்கிறார். அரேபிய தேசிய உணர்வு என்ற தேவைகளுக்கும் அங்கிருந்த அடிப்படை வர்த்தகத்தைச் சேர்ந்த மக்களுக்கும் இடையேயான தலையீடுகளின் அடிப்படையிலேயே இஸ்லாம் மதம் உருவாக்கப்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார். அபிசீனியாவின் ஆதிக்கத்திலிருந்து அரேபிய வளைகுடாவை விடுவிக்கவும், வணிகத்திற்கான கடல் வழிகளை மீண்டும் மீட்டெடுக்கவும் இந்த அரேபிய தேசிய உணர்வு என்ற விழிப்பு உணர்ச்சி உதவியது என்பதும் கூட சுட்டிக்காட்டப்பட்டது.

கேரளாவிற்குள் இஸ்லாம் வந்த வழி

அரேபியப் பெருங்கடலின் கடற்கரையோரப் பகுதியாக கேரள மாநிலம் இருப்பதானது ஆரம்ப காலத்திலேயே அரேபியாவுடன் அது உறவுகளை உருவாக்கிக் கொள்ள வழி வகுத்தது. இஸ்லாம் மதம் தோன்றுவதற்கு முன்பாகவே கேரளா அரேபியர்களுடன் வர்த்தக உறவுகளை கொண்டிருந்தது. எனவே, அரேபியாவில் இஸ்லாம் மதம் உருவான போது அரேபிய வர்த்தகர்கள் மூலமாக இச்செய்தி நம் நாட்டை வந்தடைந்தது.

கேரளாவில் நிலவிய குறிப்பிட்டதொரு சமூகப்பின்னணியில் குறிப்பாக துறைமுகங்க ளோடு நேரடியாகத் தொடர்புடைய பகுதிகளில் இத்தத்துவம் இங்கே பரப்பப்பட்டது. இன்று கொடுங்காளூர் என்று அழைக்கப்படும் அந்நாளைய முசிறிதான் கேரளாவில் முக்கியமான வர்த்தக மையமாக விளங்கியது. இங்கேதான் முதல் மசூதி நிறுவப்பட்டது.

வர்த்தகத்துறையைப் பொறுத்தவரையிலும் குறிப்பாக மலபாரில், அரேபியர்கள் தான் மேலாதிக்கம் பெற்றவர்களாக இருந்தனர். இந்தப் போர்வையில் வர்த்தகத்தை மேலும் விரிவாக் கவோ அல்லது நாட்டில் தங்களது அதிகாரத்தை நிலை நாட்டவோ அரேபியர்கள் முயற்சிக்க வில்லை. அதேநேரத்தில் கேரளாவிற்கு வருகை தந்தவர்களின் எழுத்துக்களிலிருந்து இந்த உண்மை தெளிவாகிறது.

1498-ம் ஆண்டில் போர்த்துக்கீசியர்கள் கேரளாவில் வந்திறங்கிய பிறகே வெளிநாட்டு வர்த்தகத்துறையில் மேலாதிக்கம், குறித்த போட்டி அவர்களிடையே துவங்கியது. வர்த்தக ஏகபோகத்திலிருந்து அரேபியர்களை கழற்றி விட வேண்டும் என்ற போர்த்துக்கீசியர்களின் கோரிக்கையை அப்போதைய ஜாமோரின் ஒப்புக் கொள்ளவில்லை. அப்போது இங்கிருந்த இளவரசர்களுக்கு இடையே நிலவிய மோதல் களை பயன்படுத்தி தங்கள் அதிகாரத்தை நிறுவ போர்த்துக்கீசியர்கள் முயற்சிகளை மேற்கொண் டார்கள். இது கேரளாவின் கடற்கரை பகுதி களில் மோதல்களை உருவாக்கியது. இது போர்த்துக்கீசியர்களுக்கும், அரேபியர்களுக்கும் இடையேயான மோதல்கள் தீவிரமடையவும், முஸ்லீம் மக்களின் நலன்களுக்கு எதிராக அவர் கள் தலையிடவும் வழிவகுத்தது. போர்த்துக் கீசியர்களின் பலம் கப்பல்களை இயக்கும் நட வடிக்கைகளில்தான் இருந்தது. அந்த நாட்களில் கடலில் போர் புரிவதென்பது நாயர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒவ்வாத ஒரு செயல் என்ற கருத்து இருந்த நிலையில், சமூகத்தின் இதர பிரிவினரையே ஜாமோரின் நம்பியிருக்க வேண்டியிருந்தது. கடல் மற்றும் வணிகம் ஆகிய இரண்டிலும் போர்த்துக்கீசியர்களுக்கு எதிராக இருந்த முஸ்லீம் பிரிவினரை அவர் அணி திரட்டினார்.அந்நிய சக்திகளுக்கு எதிரான போராடடத்தின் ஒரு பகுதியாக இஸ்லாமிய மதத்தை ஊக்குவிப்பது என்றதொரு சூழ்நிலை மலபார் பகுதியில் உருவானது.

நாயர் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் நிலப்பகுதி யில் போர் புரிவதற்கான பொறுப்பை ஏற்ற அதே நேரத்தில் குஞ்ஞாலி மரைக்காயர் தலைமையில் கடலில் போரிடும் கடமையை முஸ்லீம்கள் மேற் கொண்டனர். இந்த இரு பிரிவினரையும் இணைப்பதின் மூலம் தான் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இயக்கம் மலபார் பகுதியில் வடிவம் பெற்றது. இந்த அம்சங்களின் விளைவாகவே அரக்கல் பரம்பரையினரால் வலுவானதொரு கடற்படை உருவாகியது.

கடற்கரை பகுதிகளில் வசித்து வந்த மக்களை மதம் மாற்றுவதற்கு போர்த்துக்கீசியர்கள் முயற் சித்த போது, முஸ்லீம்கள் அதற்கு எதிராகப் போராடினார்கள். இத்தகைய எதிர்ப்புதான் கேரளாவில் போர்த்துக்கீசியர்கள் தங்களது மேலாதிக்கத்தை நிலை நாட்டாமல் தடுத்தது. அப்போது மேலாதிக்கத்தின் முக்கிய மையமாக விளங்கிய கண்ணூரில் இருந்த உள்ளூர் மக்கள் போர்த்துக்கீசியர்களின் தவறான கொள்கை களை எதிர்த்துப் போராடினர். கண்ணூரில் இந்த போர்த்துக்கீசியர்களின் கோட்டையைச் சுற்றி லும் முஸ்லீம்களே பெரும்பகுதியயாக வசித்து வந்த நிலையில் கண்ணூரில் அவர்களுக்கிடையே தொடர்ந்து மோதல்கள் நடந்தே வந்தது. போர்த்துக்கீசியர்களுக்குப் பிறகு இப்பகுதியில் தங்களது மேலாதிக்கத்தை நிலை நாட்டிய பிரிட்டிஷார் அப்போது நிலவி வந்த நிலப் பிரபுத்துவ முறையை வலுப்படுத்தவே செய் தார்கள். சாதிய அடுக்குமுறை என்பதிலிருந்து விடுபட்டதாக இஸ்லாம் இருந்த நிலையில் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட பிரிவு களைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமிய மதத்தைத் தழுவினார்கள்.

முஸ்லீம் மக்களும் விவசாயப் போராட்டங்களும்

அந்த நாட்களில் இஸ்லாமிய சமூகமானது சமூகத்தின் கீழ்த்தட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களைக் கொண்டதாக அமைந்திருந்தது. அப்போது நிலவிய நிலப்பிரபுத்துவ அமைப்பின் காலடியில்தான் அவர்கள் வசித்து வந்தார்கள். நிலப்பிரபுத்துவ அடக்குமுறைக்கு எதிரான எதிர்ப்புக்குரல் என்பது இந்தப்பிரிவினரிட மிருந்துதான் எழுந்தது. இந்தப் போராட்டங் களையே பிரிட்டிஷார் மாப்ளா கலகங்கள் என்று வர்ணித்தனர்.

1921ம் ஆண்டில் நடந்த மலபார் விவசாயி களின் கலகத்திற்கு முன்பாகவே வேறு பல போராட்டங்களும் இங்கே நடந்தன. இது போன்ற எழுச்சிகளுக்குத் தலைமை தாங்கியதற்காக மாம்பரம்ஃபாலஸ் ஙுபூக்கோயா தங்கல் அவர்கள் பிரிட்டிஷாரால் நாட்டைவிட்டே வெளியேற்றப்பட்டார் என்ற வரலாறும் மலபார் பகுதிக்கு உண்டு. மலபார் பகுதியில் நிலவும் பிரச்சனைகளை ஆராய்வதற்காக பிரிட்டிஷாரால் அனுப்பப்பட்ட வில்லியம் லோஹன் என்பவர் இந்தப் போராட்டங்கள் அனைத் திற்கும் பின்னால் நிலவிய பிரச்சனைகள் அனைத்துமே அடிப்படையில் விவசாயத்தின் மீதானவையே என்று தெளிவாகக்குறிப்பிட்டி ருக்கிறார்.

முகமது அப்துர் ரஹ்மானும் கம்யூனிஸ்டுகளும்

மாப்பிளா கலகம் என்று பெயரிட்டு பிரிட்டிஷார் அவதூறு செய்த கலகம் என்பது அதற்கு முன்பு நடைபெற்ற கலகங்களின் தொடர்ச்சியே ஆகும். இந்தக் கலகத்தை பிரிட்டிஷார் மிகக் கொடூரமான முறையில் அடக்கி ஒடுக்கினர். அலி முசலியார் போன்ற தலைவர்கள் தூக்கிலிடப் பட்டு கொல்லப்பட்டனர். வரியம்குன்னத் குன்னகமது ஹாஜி, செம்பசேரி தங்கல் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தக் கலகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். சுமார் 14000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தத் தொடர் சம்பவத்தில் மிகவும் தீவிரமான சம்பவமாக இருந்தது. 1921 நவம்பர் 17ம் தேதியன்று நிகழ்ந்த சரக்கு ரயில் பெட்டி வண்டி துயர சம்பவமாகும். வகுப்புவாத அடிப்படையில் மாப்பிளாக்களின் வெறியாட்டத்தை நசுக்குவது என்ற பெயரில் பிரிட்டிஷார் மேற்கொண்ட முயற்சிக்கு எதிரான உறுதியான நிலைபாட்டை மேற்கொண்டவர் முகமது அப்துர்ரஹ்மான் ஆவார். இக்கலகத்தின் தன்மையில் அடங்கியிருந்த தேசியவாதப் போக்கை உணர்ந்து கொண்ட நிலையில் இப்போராட்டத்திற்கு ‘’மலபார் கலகம் என்று பெயர் சூட்டியவர் அவரே ஆவார். அந்த நேரத்தில் முஸ்லிம் லீகும் பின்னர் காங்கிரஸ் கட்சியும் இந்தக்கலகத்தை அவதூறு செய்தன. அதன் பிறகே முகமது அப்துர்ரஹ்மான் களத்தில் இறங்கி கலகம் செய்து கொண்டிருந்தோருக்கு ஆதரவு தெரிவித்தார். முஸ்லிம்களின் பணக் காரர்கள் இந்தக் கலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அதேநேரத்தில், ஏழைகளே இந்தக் கலகத்தின் பின்னே அணி திரண்டனர். பணக்காரர்களின் நலனை மட்டுமே பாதுகாத்துக் கொண்டிருந்த லீக், அவர்களுக்கு ஆதரவாக நின்று கலகத்தின் மீத அவதூறு பொழிந்தது. முகமது அப்துர் ரஹ்மான் மேற்கொண்ட நிலைபாட்டை ஆதரிப்பது என்ற போக்கை இடதுசாரிகள் கடைப் பிடித்தனர். இந்தப் பின்னணியில்தான் காங்கிரசில் இந்த வலதுசாரி சக்திகளுக்கு எதிராகப் போராடும் நோக்கத்துடன் கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி ஒன்று முகமது அப்துர் ரஹ்மானை தலைவராகவும், இஎம்எஸ்-ஐ செயலாளராகவும் கொண்டு உருவாக்கப்பட்டது.

மலபார் கலகம்

மலபார் கலகத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு 1946 ஆகஸ்ட் 18,19 தேதிகளில் கோழிக்கோட்டில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாங்கூர், கொச்சி, மலபார் கமிட்டிகளின் கூட்டுக் கூட்டமானது “1921 : அறைகூவலும் எச்சரிக்கையும்” என்ற தலைப்பில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த விஷயத்தை மேலும் விளக்கும் வகையில் தோழர் இஎம்எஸ் அதே தலைப்பில் ஒரு பிரசுரத்தையும் எழுதினார். இந்தப் பிரசுரத்தை தேசாபிமானியில் வெளியிட்டதற்காக அதை தடை செய்வதென பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது. மலபார் கலகத்தை அதன் உண்மை யான பொருளில் ஆய்வு செய்ததற்காக தேசாபி மானி தடை செய்யப்பட்டது. முஸ்லிம் லீகும் காங்கிரஸ் கட்சியும் மலபார் கலகத்தை அவதூறு செய்த அதேநேரத்தில் அதன் உண்மையான தன்மை கம்யூனிஸ்டுகளால் முன்வைக்கப்பட்டது. பிரிட்டிஷார் செய்ததைப் போன்றே சில வகுப்புவாத சக்திகளும் இந்தக் கலகத்தை மாப்பிளாக்களின் வெறித்தனம் என சித்தரித்தன. எனினும் இந்தச் சம்பவம் நிகழ்ந்த போது அது ஒரு வகுப்புவாதத்தன்மை கொண்டதாக மாறக் கூடாது என்பதற்காகவே கலகத்தின் தலைவர்களின் அணுகுமுறையானது அமைந்திருந்தது. வரியம் குன்னம் குன்னகமது ஹாஜி அவர்களின் அணுகுமுறை இதையே வெளிப்படுத்துகிறது. இது ஒரு முஸ்லிம்களின் கலகம் என்ற கருத்தை குன்னகமது ஹாஜி நிராகரித்தார். 1946 ஆகஸ்ட் 25 அன்று தேசாபிமானியில் சர்தார் சந்த்ரோத் எழுதிய கட்டுரையில் குன்னகமது ஹாஜியின் உரை கீழ்க்கண்ட வகையில் மேற்கோள் காட்டப் பட்டிருந்தது. ————“நேற்று எனக்கு ஒரு தகவல் கிடைத்தது. தற்போது நடைபெற்று வரும் கிளர்ச்சி இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையேயான ஒரு போர் என்பதாக மற்ற நாடுகளில் கூறப்படுவதாகத் தெரியவந்தது.” இந்துக்களின் மீது எங்களுக்கு எவ்வித வெறுப் பும் கிடையாது. ஆனால் அரசாங்கத்திற்கு உதவி செய்பவர்களும் எங்களை அரசாங்கத்திடம் காட்டிக் கொடுப்பவர்களும், எவ்வித கருணையு மின்றி தண்டிக்கப்படுவார்கள். தேவையில்லாமல் இந்துக்களுக்கு யாராவது ஊறு செய்கிறார்கள் என்று தெரிய வந்தால், நானே அவர்களை தண்டிப்பேன். இந்துக்கள் நம்மோடு ஒரே நாட்டில் சகோதரர்களாக வாழ்பவர்கள். இந்த நாட்டை ஒரு முஸ்லிம் நாடாக மாற்ற வேண்டும் என்ற ஆசை எதுவும் எங்களுக்கு இல்லை.

மலபார் கலகத்தின் சாரம் என்பது மதரீதியான மோதல் என்ற கருத்தோட்டம் முற்றிலும் தவறானது என்பதையே இவை அனைத்தும் தெளிவாக்குகின்றன. கலகத்தை (அரசிற்கு) காட்டிக் கொடுத்து துரோகமிழைக்க முயன்றவர்கள் மட்டுமே கொல்லப்படவில்லை, போலீஸ் உடனும் ராணுவத்துடனும் சேர்ந்து கொண்டு இந்தக் கலகத்தை ஒடுக்க முயற்சி செய்த முஸ்லீம் அதிகாரிகளும் கூட படுகொலை செய்யப்பட்டனர். ஆமு சாஹிப், மொய்தீன் இன்ஸ்பெக்டர் போன்ற போலீஸ் அதிகாரிகளை கிளர்ச்சியாளர்கள் கொன்றனர். கிளர்ச்சியாளர்களை பிரிட்டி ஷாருக்கு காட்டிக் கொடுத்ததற்காக அனக்காயம் சேக்குட்டி அதிகாரி என்பவரும் அவர்களால் கொல்லப்பட்டார். கலகத்தின் பொதுவான நடைமுறை என்பது மதரீதியானதாக அமைந் திருக்கவில்லை என்பதையே இவை நிரூபிக் கின்றன. ஒரு சில இடங்களில் இந்தக் கலகத்தை வகுப்புவாத வழியில் திசை திருப்பி விடுவதற் கான முயற்சிகளும் நடைபெற்றன என்பதை சுட்டிக்காட்டவும் கம்யூனிஸ்ட் கட்சி தவற வில்லை.

இந்தப் பின்னணியில் தான் இந்த அறை கூவலையும் அதே நேரத்தில் ‘எச்சரிக்கை’யையும் கட்சி கணக்கில் எடுத்துக் கொண்டது. இது போன்ற சில அம்சங்களும் நிலவி வந்தது என்ற உண்மையை சுட்டிக் காட்டிய கட்சி இது ஒரு அறைகூவல் மட்டுமல்ல; ஓர் எச்சரிக்கையும் கூட என்ற முடிவுக்கு வந்தது.

சர்வதேச அளவிலும் கூட மலபார் கலகத்தை ஆய்வு செய்து, அதனடிப்படையில் கொள்கை களை உருவாக்குவதிலும் கம்யூனிஸ்டுகள் தலையீடு செய்தனர். இந்தக் கலகமானது லெனினின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த கால கட்டத்தில் உருவான இந்து – முஸ்லீம் ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் லெனின் தனது எழுத்துக் களில் பதிவு செய்திருந்தார். மலபார் கலகத்தின் பின்னணியில் இந்தியாவில் விவசாயப் பிரச்சனை, விவசாயிகளின் போராட்டங்கள் ஆகியவை பற்றி கிடைக்கின்ற உண்மைகள் அனைத் தையும் ஒன்று திரட்டி, ஒரு பிரசுரம் ஒன்றை உருவாக்குமாறு அன்றைய இந்திய கம்யூனிஸ்டு களில் ஒருவரான அபானி முகர்ஜிக்கு லெனின் ஆலோசனை வழங்கினார். ஒரு பொருளாதார நிபுணருமான அபானி முகர்ஜி அவ்வாறே ஒரு பிரசுரத்தை எழுதி ருஷ்ய மொழியிலும், ஆங்கில மொழியிலும் மாஸ்கோவிலிருந்து வெளியிட் டார். குடோவ்ஸ்கி என்ற ருஷ்ய நாட்டவர்தான் மலபார் கலகம் பற்றி முதன்முதலாக ஆய்வு செய்து டாக்டர் பட்டம் bப்றறவர். அதே போன்று பிரிட்டனைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் ஆன கான்ராட் வுட்ஸ் என்பவரும் மலபார் கலகம் பற்றி ஆய்வு செய்தார். சுருக்கமாக கூறுவதெனில் காங்கிரஸ் கட்சியும், முஸ்லீம் லீக்கும் மலபார் கலகத்தை தூற்றிக் கொண்டிருந்த நேரத்தில், சர்வதேச அளவில் அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தவர்கள் கம்யூ னிஸ்டுகள் தான்.

1800களின் துவக்க காலத்தில் நிகழ்ந்த பழஸி கலகம், (திருவாங்கூரைச் சேர்ந்த) வேலுத்தம் பிய்ன தலைமையிலான போராட்டங்கள் ஆகிய அனைத்துமே பிரிட்டிஷ் எதிர்ப்புத் தன்மை கொண்டவையாகவே இருந்தன. இந்தப் போராட்டங்களில் உள்ளடங்கி இருந்த தேசபக்தி உணர்வுதான் அனைத்துக் காலங்களிலும் நமது போராட்டங்களுக்கு வலிமை ஊட்டுகிறது. இங்கு அடுத்த கட்டமாக நிகழ்ந்த போராட்டங்கள் நிலப்பிரபுக்களுக்கு எதிரான தன்மை கொண்டதாக இருந்ததையும் நம்மால் காண முடிந்தது. அத்தகைய போராட்டங்களில் மலபார் கலகம் மிக முக்கியமானதொரு இடத்தை வகிக்கிறது.

19ஆம் நற்றாண்டின் துவக்கத்தில் இதுபோன்ற கலகங்கள் நடைபெற்ற போது இயக்கவியல் பொருள்வாதக் கருத்துக்களோ அல்லது இடது சாரி அரசியல் இயக்கங்களோ கேரளாவில் இருக்கவில்லை. எனவே அவற்றில் சில பல வீனங்கள் தோன்றுவதென்பது இயற்கையான ஒன்று தான். சீனாவில் நடைபெற்ற விவசாயப் போராட்டங்கள் குறித்து ஆழ்ந்த அறிவு கொண்ட செஸ்னூ அரசியல் கருத்துக்களும் இயக்கமும் தெளிவான இலக்கும் தலைமையும் கொண்டதாக இல்லாத போது மத ரீதியான கருத்துக்களும் சிந்தனையும் விவசாயப் போராட் டங்களுக்கான உந்து சக்தியை வழங்கும் என்று தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். இதுபோன்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு கலகங்களின் பாரம்பரியத்தை அதையடுத்து வந்த நாட்களில் கம்யூனிஸ்டுகள் மேற்கொண்டு முன்னெடுத்துச் சென்றார்கள் என்பதே உண்மை யாகும். தூக்கு மேடையை நோக்கிச் சென்ற கையூர் போராளிகள் ஏகாதிபத்தியற்கு எதிராக வும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும் கோஷங் களை எழுப்பிய படியே தான் உயிர் நீத்தனர் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று தான். கம்யூனிஸ்டுகள் செய்ததெல்லாம் மலபார் விவசாயிகளின் கலகத்தில் வெளிப்பட்ட சில பலவீனங்களை சரி செய்து, அதன் சாதகமாமன அம்சங்களை முன்னெடுத்துச் சென்றதன் மூலம் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட் டத்தை மேலும் முன்னேற்றி இருக்கிறார்கள் என்பதேயாகும்.

மலபார் கலகமும் நினைவிடங்களும்

இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சிக் காலத்தில்தான் மலபார் கலகத்தின் போற்று தலுக்குரிய தலைவர்களான அலி முசலியார், மாதவன் நாயர் ஆகியோருக்கு நினைவிடங்கள் எழுப்பப்பட்டன. அலி முசலியார் நினைவிடத் திற்கு டி. சிவதாசமேனன் அடிக்கல் நாட்ட, மாதவன் நாயர் நினைவிடத்திற்கு பலோலி முகமது குட்டி அடிக்கல் நாட்டினார். திரூர் நகராட்சியில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகே ரயில் பெட்டி துயர சம்பவத்திற்கான நினைவிடம் உருவாக்கப்பட்டது. வல்லம்புரத்தில் ஹிட்ச்காக்கின் நினைவாக எழுப்பப்பட்டிருந்த நினைவிடத்தை அகற்றியதும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசுதான். மலபார் கலகத்தின தொடர் விளைவாக மலபார் சிறப்பு போலீஸ் படையில் முஸ்லீம்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 1957 இல் ஆட்சிக்கு வந்த (இ.எம்.எஸ். தலைமையிலான) இடதுசாரி அரசு தான் அந்த உத்தரவை மாறியமைத்து தடையையும் நீக்கியது. இதர பகுதி மக்கள் கோயில்களை கட்டிக் கொள்வதில் எவ்விதக் கட்டுப்பாடும் கிடையாது, தடையெல்லாம் முஸ்லீம்களுக்கு மட்டும் தான். இத்தகைய தடைகளையும் அரசு அகற்றியது.

சமூக சீர்திருத்த இயக்கங்கள்

சமூகத்தில் நவீன கருத்துக்கள் வலுப்பெற்று வரும் நிலையில் சமூகத்தின் இதர பிரிவினரைப் போன்றே முஸ்லீம்கள் மத்தியிலும் பாரம்பரியமான வழிமுறைகளில் மாற்றம் வேண்டுமென்ற சிந்தனை அதிகரித்தது. முஸ்லீம் பிரிவில் மறுமலர்ச்சி இயக்கங்கள் எழுந்தன. சையத் சானுல்லா மக்தி தங்கள் இத்தகைய மறுமலர்ச்சி போக்கு முன்னேறிச் செல்வதற்காகப் பாடுபட்ட தலைவர்களில் தலைசிறந்தவர் ஆவார். மலையாளம், அரபி, ஆங்கிலம், உருது, பாரசீக மொழிகளை அவர் நன்கறிந்தவர் ஆவார். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அவருக்கு வேலை கிடைத்த போதிலும், இந்த மத மறுலர்ச்சிக்கான இயக்கங் களில் பங்கேற்க வேண்டுமென்று அவர் வேலையை ராஜினாமா செய்தார். மூட நம்பிக்கை, தீய நோக்கங் கொண்ட சடங்குகள் ஆகியவற்றுக்கு எதிராக அவர் போரிட்டார். நவீன கல்வியைப் பெற்ற, சீர்திருத்தப் பாதையை மேற்கொள்ளுமாறு அவர் முஸ்லீம்களை கேட்டுக் கொண்டார். கல்வி நிறுவனங்களையும் அவர் நடத்தினார். அரபி, மலையாளம் ஆகிய மொழிகளில் அவர் நூல்களையும், பிரசுரங்களையும் வெளியிட்டார். பழமைகளின் எதிர்ப் பிறகு அவர் இரையாகவில்லை. சாலியத் குன்னேஹமத் ஹாஜி அவர்களின் பெயர் இங்கே குறிப்பாகச் சுட்டிக்காட்டப்பட வேண்டும். ஓர் ஆசிரியர் என்ற முறையில் இஸ்லாமிய மதக் கல்வி, பொதுக் கல்வி ஆகியவற்றை பாரம்பரிய மான முறையிலிருந்து அவர் விடுவித்தார். நவீன காலத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல அவர் முயற்சித்தார். பெண்களின் கல்வியிலும் அவர் சிறப்பான ஆர்வம் கொண்டிருந்தார். ஷேக் முகமத் ஹமதானி தங்கள் கல்வித்துறையில் சிறப்பாகச் செயல்பட்ட மற்றொரு முக்கிய நபர் ஆவார். இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்த வைக்கம் மௌலவி உலகின் புதிய வளர்ச்சிப் போக்குகளை முஸ்லீம் இனத் தவரிடையே கொண்டு செல்லும் நோக்கத் துடன் ஐக்கிய முஸ்லீம் சங்கத்தை உருவாக்கி னார். அவரது நவீனப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில் அரசியல் நடவடிக்கைகளில் தலையிடவும் அவர் முயற்சித்தார். வைக்கம் மௌலவிக்கு சொந்த மான நாளிதழில் ஸ்வதேசாபிமானி ராம கிருஷ்ண பிள்ளையின் கட்டுரைகள் வெளிவந்தன.

எரநாட்டிலும், வள்ளுவ நாட்டிலும் குத்தகை விவசாயிகளை அணிதிரட்டுவதில் கட்டிளசேரி முகமத் முசலியார் முக்கிய பங்கு வகித்தார். நவீன கால வாழ்க்கை, நவீன முறையிலான கல்வி ஆகியவற்றை இஸ்லாமிய நம்பிக்கையாளர் களிடம்b காண்டு சேர்க்க இதுபோன்ற பல தனி நபர்களும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கி றார்கள். அரக்கல் அரச குடும்பத்தினருக்கு கல்வி பயிற்றுவித்து வந்த ஆசிரியரான கோயாக்குஞ்சு சாஹிப் இத்தகையோரில் ஒருவராவார். குரானை மலையாளத்தில் மொழி பெயர்த்த சி.ஐ.அஹமத் மௌலவி குறிப்பிடத்தக்க ஒருவராவார். குரானை மலையாளத்தில் மொழி பெயர்ப்பது தவறானது என்ற கருத்தும் அப்போது எழுந்தது. இந்தக் கருத்தை மறுதலித்தே அவர் இந்தப் பணியை முடித்தார். குரானை மொழி பெயர்க்க அஹமத் மௌலவிக்கு ஊக்கமளித்தவர் முகமத் அப்துர்ரஹ்மான் ஆவார். அரசியலில் தீவிரமாக அவர் இறங்கியிருந்த போதிலும் மறுமலர்ச்சி தொடர்பான நபர்களோடு தொடர்ந்து உறவை நீடித்து வருவதிலும் கவனம் செலுத்தினார். செக்கணூர் மௌலவியின் சிந்தனைகளும் இந்தப் பிரிவினரை ஒத்ததே ஆகும்.

முஸ்லீம்களிடையே இயக்கங்கள்

உலகில் முஸ்லீம் இனத்தவரிடையே நிலவும் வலுவான பிரிவினை என்பது ஷியா, சன்னி ஆகிய இரு பிரிவகளாக உள்ளன. இதில் கேரளாவில் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள் கிட்டத்தட்ட இல்லை என்றே கூறிவிடலாம். இங்கே சன்னி பிரிவு மிகவும் முக்கியமான பிரிவாகும். மதச்சார் பற்ற ஓர் அரசின் கீழ் செயல்படுவது இஸ்லாமியக் கொள்கைக்குத் தடையான ஒன்றல்ல; ஏனெனில் மதநம்பிக்கை களையும் சடங்குகளையும் பின்பற்ற அது அனுமதிக்கிறது என்ற வகையில் மதச்சார் பற்ற நிலைபாட்டை பொதுவாக ஏற்றுக் கொள் ளும் போக்கே சன்னி பிரிவினரிடம் நிலவுகிறது. மத சீர்திருத்தம் என்ற பெயரில் முஜாஹித் இயக்கமும் உருவானது. மசூதிக்குள் பெண்களை அனுமதிப்பது போன்ற சாதகமான கண்ணோட் டங்கள் சிலவற்றை அவர்கள் முன்வைத்தனர். இஸ்லாமிய மதத்திற்குள் முற்போக்கான கண் ணோட்டங்களையும் அவர்கள் எழுப்பினார்கள். புதிய காலத்தில் இதுபோன்ற கண்ணோட் டங்களை முன்வைக்க முடியுமா? என்பதும் பரிசீலனைக்கு உரிய ஒன்று தான். ஜமாத் ஏ இஸ்லாமி அமைப்பானது மதத்திற்கும் அரசிற் கும் இடையே எவ்வித வேறுபாட்டையும் காணாது, ஓர் இஸ்லாமிய அரசை நிறுவ வேண்டும் என்று விழைகின்ற, மதச்சார்பின்மை கருத்தை எதிர்க்கின்ற, இத்தகைய நோக்கங்களுக்காகப் பாடுபடுகின்ற ஓர் அமைப்பாகும். ஓர் இஸ்லாமிய அரசிற்குள் மட்டுமே இஸ்லாமிய நம்பிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்ற நிலைபாட்டையே அவர்கள் மேற்கொண் டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இந்து நாடு என்பதைப் போலவே இஸ்லாமிய நாடு என்ற கருத்தோட்டத்தை முன்வைக்கின்ற ஜமாத் ஏ இஸ்லாமி அமைப்பின் வகுப்புவாதத் திட்டம் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். நலக்கட்சி என்ற முக மூடியை அணிந்தபடி தங்களது திட்டத்தை அமல்படுத்த அவர்கள் இப்போது முயற்சித்து வருகிறார்கள். தேசிய ஜனநாயக முன்னணியானது இப்போது இந்திய சமூக ஜனநாயகக் கட்சி என்ற பெயரில் செயல் பட்டு வருகிறது. தீவிரவாதக் கருத்துக்களை கடுமையாகப் பிரச்சாரம் செய்வது; முஸ்லீம் சமூகத்திற்கு வகுப்புவாத வெறியூட்டுவது என் பதே அவர்களின் வழியாக இருந்து வருகிறது. முஸ்லீம் வகுப்பைச் சேர்ந்தவர்கள் இதர மத நம்பிக்கையை கொண்டவர்களுடன் எவ்வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் குறிப்பிட்டதொரு வகையில் தான் அவர்கள் வாழ வேண்டுமென்றும் குறிப்பிட்ட வகையில் தான் உடை அணிய வேண்டுமென்றும் அவர்கள் வற்புறுத்துகிறார்கள். இவ்வகை யானது முஸ்லீம் சிறுபான்மை மக்களை பொதுச் சமூகத்திலிருந்து விலக்கி வைப்பதற்கான ஒரு முறையே ஆகும்.

இன்றைய உலக அரசியலும் முஸ்லீம் மக்களும்

உலக அரசியலில் மேலாதிக்க முறைகளை கையாண்டு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செயல்கள் மற்ற இடங்களைப் போலவே கேரளாவிலும் ஆழ்ந்த கவலையை முஸ்லீம் பிரிவினரிடையே ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வளைகுடா பகுதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் வேலை செய்து வரும் நிலையில் இது கவலைக்குரிய ஒன்றேயாகும். உண்மை என்னவெனில் கேரள மாநிலத்தில் வீடுகளில் அடுப்பெரிய வேண்டுமெனில் வளை குடா பகுதியில் வேலை செய்வேர் அனுப்பும் பணம் தேவைப்படுகிறது. அங்குள்ள எண்ணெய் சுரங்கங்களை கைப்பற்ற வேண்டும் என்ற நோக் கத்துடன் வளைகுடா பகுதியில் தன் அதி காரத்தை நிலைநிறத்திக் கொள்ள அமெரிக்கா முயற்சித்து வருகிறது. ஈராக்கிலும் ஆப்கானிஸ் தானிலும் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டிய பிறகு ஈரானிலும் சிரியாவிலும் பிளவுகளை ஏற்படுத்த அது முயற்சித்து வருகிறது. அரேபிய பகுதியில் இப்போது மீதம் இருக்கும் ஒரேயொரு மதச்சார்பற்ற நாடான சிரியாவை சீர்குலைக்க பயங்கரவாதிகளுக்கு ஊக்கமளிக்கப்படுகிறது. அமெரிக்காவின் இத்தகைய தலையீடுகள் முஸ்லீம் மக்களிடையே கடுமையான எதிர்ப்பை எற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இத்தகைய ஜனநாயகமற்ற செயல்களை எதிர்ப்பதற்கு இந்தியாவைப் போன்ற நாடுகள் தயாராக இல்லை என்பது மிகவும் மோசமானதொரு விஷயம் ஆகும். அரேபியப் பகுதிகளில் இருக்கும் நாடுகளின் மிக நெருங்கிய நண்பனாக சோவியத் யூனியன் திகழ்ந்து வந்தது. இப்போது போலவே அப்போது கூட அமெரிக்கா இப்பகுதிகளில் தலையிட முயற்சி செய்தது. சோவியத் யூனியன் தான் அதைத் தடுத்து வந்தது. எகிப்தில் நேரடி யாகத் தலையிட அமெரிக்கர் முயற்சித்த நேரத்தில், அதற்கு எதிராக சோவியத் யூனியன் நேரடியாகக் களத்தில் இறங்கியவுடன் அமெரிக் காவினால் எதையும் செய்ய முடியவில்லை. அந்த நாட்களில் ஈராக் உள்ளிட்ட பல்வேறு அரேபிய நாடுகளும் சோவியத் யூனியனுடன் நல்ல உறவு களை வைத்திருந்தன. சோவியத் யூனியன் சரிவு தான் அமெரிக்காதனது நலன்களை மற்றவர் களின் மீது திணிப்பதற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்கியது.

தேசிய அரசும் முஸ்லீம் மக்களும்

சங் பரிவார் படைகள் இந்தியாவில் இந்துத்துவா வகைப்பட்ட செயல்திட்டத்தை அமல் படுத்த முயற்சி செய்து வருகின்றன. பாப்ரி மஸ்ஜித் தரைமட்டாக்கியதன் மூலம் மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகியவற்றை அவர்கள் வேரோடு வெட்டிச் சாய்த்தார்கள். மதச்சார்பற்ற தொரு கட்சி என்று கூறிக் கொள்கின்ற காங் கிரஸால் சங்பரிவாரின் இத்தகைய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை. எந்தவிதமான நடவடிகையையும் எடுக்க தங்களது ஆதுரவு உண்டு என்று இடதுசாரிகள் அறிவித்திருந்த போதிலும் சங்பரிவாரை தடுத்து நிறுத்த காங்கிரஸ் தயாராக இல்லை. வகுப்புவாதத் தாக்குதல்களுக்கு தலைமை தாங்குவோரை சட்டத்தின் முன்னால் கொண்டு வந்து நிறுத்துவதிலும் அரசு பெரும்பாலும் தவறுகிறது. இத் தகைய போக்குகளும் கூட சிறுபான்மையினரில் சிறியதொரு பகுதியினர் பயங்கரவாதத்தை நோக்கி நடைபோட்டுச் செல்வதற்கானதொரு பின்னணியை உருவாக்குகிறது. பயங்கரவாதம் என்பது குறிப்பிட்டதொரு மதத்திலிருந்து மட்டுமே வெளிப்படுகின்ற ஓர் அம்சம் அல்ல. சங்பரிவாரின் தலைமையின் கீழ் மலேகான், கோவா, மெக்கா மஸ்ஜித் போன்ற இடங்களில் நிகழ்ந்த வெடிகுண்டுச் சம்பவங்கள் இந்த யதார்த்தத்தை சுட்டிக் காட்டுகின்றன. தற்போதைய தேசிய சூழ்நிலையில் காங்கிரசிற்கும் பாஜகவிற்கும் மாற்றான ஓர் அரசியல் சக்தியை முன்னுக்குக் கொண்டு வருவது மிகவும் முக்கிய மானது என்பதை இதிலிருந்தே உணர்ந்து கொள்ள இயலும். வெளிநாட்டு உறவுக் கொள்கை பொருளாதாரக் கொளகைகள் உள்ளிட்டு அவர்கள் முன்னிறுத்தும் கொள்கைகளில் அமெரிக்க ஆதரவுப் போக்கையே காங் கிரசும், பாஜகவும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இன்றைய சூழ்நிலை

கேரளாவில் வசிக்கும் முஸ்லீம்கள் நாட்டின் இதர பகுதிகளில் வசிக்கும் முஸ்லீம்களை விட நெடுந்தூரத்தில் முன்னேற்றமாக இருக்க முடிந்துள்ளது. கேரளாவில் உள்ள சிறுபான்மை இனத்தவரின் மொத்த எண்ணிக்கையானது மாநில மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதியளவிற்கு உள்ளது. மதரீதியான பாரபட்சம் அல்லது ஒடுக்குமுறை என்பது மற்ற மாநிலங்களைப் போல் இங்கு உணரப்படுவதில்லை. முஸ்லீம் இனத்தவரில் கணிசமான பகுதியினர் பணம் படைத்தவர்களாக மாறியுள்ளனர். இந்த இனத்தின் தலைமைப் பொறுப்பும் அவர்களிடமே உள்ளது. சிறுபான்மையினரின் உரிமைகள் என்ற பெயரால் காப்பாற்றப்படுவதெல்லாம் இந்த இனத்தின் மேல்தட்டு மக்களின் நலன்கள்தான். அரசியல் அதிகாரத்தில் தலையிட இனத்தவரின் ஆதரவை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான பாஜகவுடன் கூட சேர்ந்து கொள்வதில் இந்த இனத்தின் மேல்தட்டு மக்களுக்கு எவ்விதத் தயக்கமும் இருப்பதில்லை. முஸ்லீம்களின் உரிமைகளுக்காகவே நிற்கிறோம் என்று கூறிக் கொள்கின்ற முஸ்லீம் லீக் மேற்கொள்ளும் அணுகுமுறையானது இத்தகைய பணம் படைத்த பிரிவினரின் நலன்களே முக்கியம் என்பதையே எடுத்துக் காட்டுவதாக உள்ளது. வசதிபடைத்த இந்தப் பிரிவினரை சுட்டிக் காட்டியும் அவர்களின் நலன்களையே லீக் பாதுகாக்கிறது என்று கூறியும் வகுப்புவாத செயல்திட்டம் ஒன்றிற்கு பிரச்சாரம் மேற் கொள்ள ஆர்.எஸ்.எஸ். முயற்சித்து வருகிறது. இவ்வாறு முஸ்லீம் மக்களுக்கு எதிரான உணர்வு களைத் தூண்டிவிட அவர்கள் முயற்சிக்கி றார்கள்.

வகுப்புவாதங்களுடன் சமரசம்

வலதுசாரிகளின் அரசியல் கொள்கைகள் என்பது வகுப்புவாத அடிப்படையில் மக்கள் பிளவுபடுவதை நோக்கி அழைத்துச் செல் வதையே நோக்கமாகக் கொண்டவையாகும். கம்யூனிஸ்ட் இயக்கத்தை எதிர்கொள்வதற்காக சாதிய, மதரீதியான சக்திகளுடன் இணைந்து நிற்கவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள். வலதுசாரிகளின் ஆதரவு நிழலில்தான் இத் தகைய சக்திகள் வளரத் துவங்குகின்றன. பாஜகவுடன் கூட அவர்களால் உறவு கொள்ள முடியும் என்பதை இதற்கு முந்தைய தேர்தல்களில் பேபூர் வடகரா கூட்டணிகள் நிரூபணம் செய்தன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி தேசிய ஜனநாயக முன்னணியுடன் ஏற்படுத்திக் கொண்ட உறவு இத்தகைய போக்கைச் சேர்ந்த ஒன்றுதான். இடதுசாரிகள் மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போது வகுப்புவாதக் கலவரங்கள் எதுவும் தலைதூக்குவதில்லை. ஆனால் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி செய்யும் போது நிலைமை அப்படி இருப்பதில்லை. அரசியல் நோக்கங்களுக்காக மதத்தைப் பயன்படுத்திக் கொள்வதன் விளைவே இது. இத்தகைய போக்கில் மாற்றம் அவசியமாகிறது.

அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டுவது என்ற செயல்திட்டம் எதையும் மலபாரில் உள்ள முஸ்லீம்களின் வரலாற்றிலிருந்து எவராலும் காண முடியாது. அனைத்துப் பகுதி மக்களுடன் இணைந்து வாழ்வது என்ற பாதையையே அவர்கள் பொதுவாக மேற்கொண்டு வருகின்றனர். முஸ்லீம் மக்களுக்கு இடையே செயல்பட்டு வரும் வகுப்புவாத சக்திகள் இதை உடைத்து நொறுக்குவது என்ற அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் முன்னேறி வருகின்றன. இத்தகைய செயல்கள் பொதுவான வாழ்க்கைப் போக்கிலிருந்து முஸ்லீம்களை தனிமைப்படுத்துவது மட்டுமின்றி பெரும்பான்மை வகுப்பைச் சேர்ந்த வகுப்புவாத சக்திகள் வளர்வதற்கான அடித்தளத்தை உருவாக்குவதாகவும் அமைகிறது. வகுப்புவாத சக்திகள் அனைத்துமே தொழிலாளி வர்க்க இயக்கங்களை குறிவைத்துத் தாக்குவதிலிருந்து இதை உணர முடியும். மக்களின் அடிப்படைப் பிரிவுகளின் நலன்களை உடைத்து நொறுக்கு வதாகவே பெரும்பான்மை, சிறுபான்மை பிரிவு வகுப்புவாதங்களின் செயல்கள் அமைகின்றன.

சமூக வாழ்விற்கு மேலும் ஒத்திசைவு தேவை

மக்களை ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போராடச் செய்வது என்ற வகுப்புவாத சக்தி களின் செயல்திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனில், பொதுவெளியை மேலும் வலுப்படுத்துவதில் நமது தலையீடு அவசிய மாகிறது. இந்தப் பின்னணியில் தான் பொதுக் கல்வியை வலுப்படுத்துவது என்பது முக்கியமான ஒன்றாக ஆகிறது. மத நம்பிக்கை உள்ள, மத நம்பிக்கை இல்லாதவர்களின் குழந்தைகள் ஒன்றாகக் கலந்து செயல்படும் இது போன்ற நிறுவனங்களே மதச்சார்பின்மையின் வலுவான அடித்தளங்களாகக் செயல்படும். சாதிய அடிப்படையிலான, மத அடிப்படையிலான சக்திகளால் நடத்தப்படும் அரசு உதவிபெறாத கல்வி நிறுவனங்கள பலவற்றிலும் குறிப்பிட்ட வகையான கல்வியை மட்டுமே பிள்ளைகள் பெறுகினறனர். இத்தகைய நிறுவனங்கள் மாண வர்களின் மனதில் மதச்சார்பற்ற அடித்தளத்தை வளர்த்தெடுப்பதற்கு தடைக்கற்களாக மாறி யுள்ளன என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

மதச்சார்பின்மையும் ஜனநாயகமும் நிலவு கின்ற ஒரு சமூகத்தில் தான் நவீன காலத்திற்குப் பொருத்தமான, அவற்றோடு ஒத்திசைவாக உள்ள கண்ணோட்டம் ஒன்றை வளர்த்தெடுக்க இயலும். அதிகமான அளவில் பிற்போக்குத்தன மான நிலைபாடுகளை மேற்கொள்ளும் இனத் தலைவர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் முடியும். திருமணம் செய்து கொள்வதற்கான வயது பற்றிய விஷயத்தில் மேற்கொள்ளப்பட் டுள்ள பிற்போக்குத் தனமான கொள்கை அணுகுமுறைகள் பெண்களின் வாழ்க்கையை மேலும் பின்னுக்குத் தள்ளவே வழிவகுக்கும். இதுபோன்ற முயற்சிகளுக்கு எதிராக நிற்கவும் முடியும்.

விழாக் காலங்களின்போது பல்வேறுபட்ட மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றாகக் கூடுவது என்ற முறையை விரிவுபடுத்துவது அவசியம் என்பதோடு அவற்றை வாழ்க்கையின் முக்கிய தருணங்களாக மாற்றுவதும் அவசியமாகும். திருமணம், இறப்பு போன்ற தருணங்களுக்கு குறிப்பான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு மதத்திலும் வகுப்புவாதத்தையும் தீவிரவாதத்தையும் பிரச்சாரம் செய்கின்றவர் களை தனிப்படுத்த மதநம்பிக்கை கொண்ட அனைவரும் முன்முயற்சி எடுக்க வேண்டும். காந்திஜி, மௌலான அபுல்கலாம் ஆசாத் உள்ளிட்ட விடுதலைப் போராட்டத் தியாகி களின் முன்மாதிரியை முன்வைத்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும். மதத்திற்குள் மறுமலர்ச்சியின் முன்னேற்றத்தை வலுப்படுத்துவதில் முற்போக்கு எண்ணங்கொண்டவர்களின் தலையீடு அவசியமாகும்.

ஒருவர் எந்தவொரு மதத்தை நம்புபவராக இருந்தாலும் சரி, வாழ்க்கையின் பிரச்சனைகள் என்பது அனைவருக்கும் பொதுவானதே. அவற் றைக் கையிலெடுத்து, முன்னே அடிவைத்துச் செல்லும் போது தான் பொதுப் பிரச்சனைகளில் ஒற்றுமையை உறுதிப்படுத்த முடியும். இத்தகைய ஒன்றுபட்ட நிலைபாடு மதச்சார்பற்றதொரு சமூகத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும். மார்க்சிஸ்ட் கட்சியானது மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு அவர்களை அணிதிரட்டும் பணியில் ஈடுபட் டுள்ள ஒரு கட்சியாகும். சமூக பிற்போக்கு நிலையை போக்கத் தலையிடும் அதே நேரத்தில் வர்க்க ஒற்றுமையின் அடிப்படையில் மக்களை முன்னெடுத்துச் செல்லவே கம்யூனிஸ்டுகள் பாடுபட்டு வருகிறார்கள். இவ்வழியில் தோழர் இ.எம்.எஸ். முன்வைத்த பாதையையே கட்சி பின்பற்றி வருகிறது. துயரத்தில் ஆழ்ந்துள்ள மக்கள் பிரிவினரின் பிரச்சனைகளில் சிறப்பான கவனம் செலுத்துவதில் கட்சி உறுதியாக உள்ளது. கேரளாவில் தாழ்த்தப்பட்ட – பழங்குடி மக்கள், பெண்கள், சிறுபான்மையினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் முன்னேறிய இனத் தவரில் பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட பிரினிர் போன்ற அனைவருமே பல்வேறு வகையான பிரச்சனைகளை எதிர்கொண்டே வருகின்றனர். அவற்றை சிறப்பான முறையில் காணவும் இயலும். இவ்வகையில் முஸ்லீம் பிரிவினரின் பிரச்சனைகளை கையாள கட்சி எப்போதுமே போதிய கவனம் செலுத்தி வந் துள்ளது.

சிறுபான்மையினரின் நலனுக்கான தலையீடுகள்

சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த மக்கள் எதிர் கொள்ளும் இடையூறுகளை கையிலெடுத்து தொடர்ந்து தலையிட்டு வந்த ஒரே இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம் மட்டுமே ஆகும். இந்தி யாவிலேயே முதன் முறையாக, 1957இல் முஸ்லீம் களுக்கு ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது கம்யூனிஸ்டுகளின் தலைமையில் கேரளத்தில் அமைந்த அரசு தான். அது அறிமுகப்படுத்திய நிலச்சீர்திருத்தங்களின் விளைவாக முஸ்லீம் குத்தகைதாரர்களுக்கு நிலத்திற்கான உரிமை கிடைத்தது. இடதுசாரி அரசின் தலையீட்டின் விளைவாகவே அவர்கள் நிதி நிலைமை பெரு மளவிற்கு முன்னேற்றம் கண்டது. 1967இல் அமைந்த இடதுசாரி அரசு தான் முஸ்லீம் சிறுபான்மையினர் தங்களது பிற்பட்ட நிலை யிலிருந்து மீள உதவும் வகையில் மலப்புரம் மாவட்டத்தை உருவாக்கியது. மலப்புரத்திலேயே ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்குவதிலும் தலைமை தாங்கியது. முஸ்லீம் மக்களைப் பொறுத்த வரையில் இடதுசாரி அரசுகளின் தலையீடுகளின் விளைவாக பொதுக் கல்வி, பொது சுகாதாரம் போன்றவற்றில் சாதகமான விளைவுகள் ஏற்பட்டன. இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரிடையே நிலவும் பொதுவான பிற்பட்ட தன்மையை பற்றியும், சிறுபான்மை யினரின் பிரச்சனைகள் குறித்தும் ஆய்வு செய்ய சச்சார் கமிட்டி நியமிக்கப்பட்டது. அதனடிப் படையில் மாநிலத்திலுள்ள பிரச்சனைகளை ஆராய்ந்து, அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக் கைகளை மேற்கொண்டது இடது ஜனநாயக முன்னணி அரசு தான்.

அவர்கள் எந்த சாதியை, மதத்தை சேர்ந்தவர்க ளாக இருந்தாலும் அல்லது எந்தப் பிரிவிலும் சேராதவர்களாக இருந்தாலும் மக்களின் பிரச் சனைகளை கையிலெடுத்துச் செயல்பட்டு வரும் மார்க்சிஸ்ட் கட்சி, சாதி அல்லது மதத்தின் பெய ரால் மோதல்களைத் தூண்டி விட முயற்சிக்கும் பிற்போக்குவாதிகளின் தலையீடுகளை அகற்ற முனைகிறது. கட்சியின் செயல்பாடு என்பதே மதச்சார்பின்மையின் முக்கிய தூணாக மாறி யுள்ளது. மதச்சார்பற்றதொரு சமூகத்தை உறுதிப் படுத்த வேண்டுமெனில் இடதுசாரி இயக்கம் வலுப்படுத்தப்பட வேண்டும். சிறுபான்மை பிரிவுகளை பாதுகாக்க இடதுசாரிகளின் வளர்ச்சி அத்தியாவசியமான ஒன்று என்பதும் உணரப்பட வேண்டும்.

சிறுபான்மை மக்களைப் பொறுத்தவரையில் மதச்சார்பற்றதொரு சமூகம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இதுபோன்ற ஒரு சமூகத்தை வலுப்படுத்துவதற்கு பதிலாக முஸ்லீம் மக்களை பொது நடவடிக்கைகளிலிருந்து அகற்றவே வகுப்பவாத, தீவிரவாத அமைப்புகள் முயற்சித்து வருகின்றன. அவர்களின் இத்தகைய செயல்திட்டத்தை எதிர்த்துப் போராட முடியும். முஸ்லீம் லீக்கின் நிலைபாடு என்பது இத்தகைய சக்திகளுடன் சமரசம் செய்து கொள்வதாகவே அமைந்துள்ளது. இந்த பிரிவினரில் வசதிபடைத்தோரின் நலன்களை பாதுகாக்க அவர்கள் மேற்கொள்ளும் தலையீடுகளை இதே பிரிவைச் சேர்ந்த ஏழைகளின் நலன்களுக்கு எதிரானது என்ற உண்மையை வேறுபடுத்திப் பார்ப்பதும் அவசியமாகும்.

ஆங்கில மார்க்சிஸ்ட் இதழ் 30 (ஜனவரி – மார்ச் 2014)ல் வெளியானது.