சமூக ஒடுக்குமுறையும் இடது ஜனநாயக திட்டமும்

குரல்: அருந்தமிழ் யாழினி

உ. வாசுகி

இந்தியச் சூழலில் மக்கள் ஜனநாயகப் புரட்சியை இலக்காக வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கு உகந்தவகையில் மக்கள் ஜனநாயக அணியை உருவாக்க வேண்டும் என்பது கட்சித் திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. வர்க்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட வேண்டிய அந்தப் போராட்ட  அணியின் முன் முயற்சியாக, வர்க்க சேர்மானத்தில்  மாற்றத்தை ஏற்படுத்திட இடது ஜனநாயக அணி கட்டமைக்கப்பட வேண்டும் என்பது 1978 முதல் அகில இந்திய மாநாடுகளில் வலியுறுத்தப்பட்டு வந்த  கடமையாகும். இடைப்பட்ட காலத்தில் இடது ஜனநாயக அணி கட்டப்படுவதற்கான முக்கியத்துவம் பின்னடைவை சந்தித்தது. 20வது மாநாட்டில் அந்த பலவீனம் பரிசீலிக்கப்பட்டு, இடது ஜனநாயக அணி கட்டப்படுவது  அதி முக்கியத்துவம் வாய்ந்த முன்னுரிமை கடமையாக மீட்டெடுக்கப்பட்டது.

இந்திய மக்களின்  முன், முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் முற்றிலும்  வேறுபட்ட மாற்றாக இடது ஜனநாயக கொள்கைகளும் திட்டங்களும் முன்வைக்கப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. மக்கள் தேர்வு செய்வதற்கு ஏதுவாக, அரசியல் பொருளாதார சித்தாந்த பண்பாட்டுத் தளங்களில் ஒரு மாற்றுப்பாதை உருவாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அத்தகைய திட்டமும் வகுக்கப்பட்டது. இடதுசாரி கட்சிகள், அமைப்புகள், குழுக்கள், தனிநபர்கள் மற்றும் ஜனநாயக சக்திகளை, சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பகுதிகளைத் திரட்டி, வர்க்கங்களை உள்ளடக்கிய போராட்ட அணியாக இது வடிவமைக்கப்பட வேண்டும் என அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானம் வழிகாட்டியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலில் செயல்படக்கூடிய ஒன்றிய பாஜக அரசு அதன் சித்தாந்த அடிப்படையில் பொருளாதார சுரண்டலை தீவிரப்படுத்துவது மட்டுமல்ல, சமூக ஒடுக்குமுறையை ஊக்குவிக்கவும் நியாயப்படுத்தவும் செய்கிறது. அடையாள அரசியல் இதற்கான தீர்வாக இருக்க முடியாது. சமூக ஒடுக்குமுறையின்  அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு வேர்களை அடையாளம் கண்டு, அவற்றை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிப்பதற்கான கொள்கைகள்தான் மாற்றுக் கொள்கைகள் ஆக இருக்க முடியும். வேறுபட்ட தலைவர்களும் கட்சிகளும் மீட்பராக, ஆளும் கட்சியின் மாற்றாகக் காட்சியளிக்க முயற்சிப்பதை, இடது ஜனநாயக மாற்றுக் கொள்கைகள், அவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் போராட்டங்கள் மூலமாகவே அம்பலப்படுத்த முடியும்.

தற்போதைய நிலைமை:

சாதிய, பாலின ஒடுக்குமுறைகள் கடந்த காலத்தை விட அதிகரித்து வருகின்றன. சாதிப் பெருமிதமும், ஆண் என்கிற பெருமிதமும் வெளிப்படையாகவே பிரதிபலிக்கப் படுகின்றன; பகிரப்படுகின்றன. இவை உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதாகவும் உள்ளன.

வருடத்துக்கு சராசரியாக 30,000 பெண்கள் இந்தியாவில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதில் பெரும்பான்மையாக  ஏழை குடும்பங்கள், பட்டியலின, பழங்குடியின பெண்கள் அடங்குவர். ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஆளும் கட்சியான பாஜகவின் தலைவர்களும், அமைச்சர்களும், முன்னணி ஊழியர்களும் இத்தகைய குற்றவாளிகள் பட்டியலில் உள்ளனர். உடை உள்ளிட்ட பல்வேறு கவைக்குதவாத வாதங்களை முன்வைத்து இத்தகைய குற்றங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. மாறுபட்ட கருத்துக்கள், பாஜகவின் மீதான விமர்சனங்கள்  பதிவு செய்யப்பட்டால், அப்பெண்ணுக்கோ அல்லது ஆணின் பெண் உறவினர்களுக்கோ  பகிரங்கமாக பாலியல் வல்லுறவு மிரட்டல் விடுக்கப்படுகிறது. இஸ்லாமியப் பெண்களை கற்பனையாக ஏலம் விடக்கூடிய செயலிகள் சமீபத்தில் உருவாக்கப்பட்டன. வலுவான வணிகமயமாக்கலை நோக்கிச் செல்லும் புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வந்தால் பெண்கல்வி பெருமளவில் பாதிக்கப்படும். ஊரக வேலை உறுதி சட்டத்திற்கு  நிதி ஒதுக்கீடு தொடர்ந்து போதுமானதாக இல்லாத சூழல், அதை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான ஊரகப் பெண்களை பாதிக்கிறது. உலக வங்கி நிதி/கடன் உதவியோடு கொண்டுவரப்படும் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட கட்டமைப்புகள் ஏழைக் குடும்பங்களின் குடியிருப்பைக் கேள்விக்குறியாக்குகிறது. இது பெண்களின் பாதுகாப்பை பலவீனப்படுத்துகிறது. குடும்பப் பணிக்கான பொறுப்புகள் பெண்ணின் தலை மீது சுமத்தப்பட்டுள்ள சமூகச் சூழலில் கடும் விலை உயர்வு, பொது சேவைகளில் இருந்து அரசு விலகல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் பெண்களுக்கே கூடுதலான பின் விளைவுகளை உருவாக்குகின்றன. உழைப்பு படையில் 2013இல் 36 சதவீதமாக இருந்த பெண்களின் பங்கேற்பு, 2018இல்  23 ஆகக் குறைந்து, 2019 இல் 18 ஆக மாறி, 2021இல் 9.24 சதவீதமாக படுபாதாளத்தில் சரிந்திருக்கிறது. பசிக் குறியீட்டில் மிக மோசமான நிலைமையில் இந்தியா உள்ளது. பெருந்தொற்று  காலத்தில்  அதிகரித்த உலகளாவிய வறுமையில் 60 சதவிகிதம்  இந்தியாவில் நிலவியது என்னும்போது, சமூகத்திலும், குடும்பத்திலும் இரண்டாம் தரக் குடிமக்களாக பாவிக்கப்படக்கூடிய பெண்களே அதிகம் சேதாரம் அடைகின்றனர். இதில் பட்டியலின, பழங்குடியின பெண்கள் பல மடங்கு அதிகம் பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

பழங்குடியின மக்களின் நிலங்கள் மற்றும் வசிப்பிடங்களைக் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க ஏதுவாக  விதிமுறைகள், சட்டங்கள் திருத்தப்படுகின்றன. வன உரிமை சட்டத்தின் அடிப்படையான சாராம்சம் நீர்த்து போகிறது. பட்டியலின மக்களின் மீதான வன்கொடுமைகள் எண்ணிக்கையில் அதிகரிப்பது மட்டுமல்ல, மிகக் கொடூரமான முறையில் நடத்தப்படுகின்றன. இவற்றை செய்யும் சாதி ஆதிக்க சக்திகளின் பகுதியாகவும், ஆதிக்கத்தை நியாயப்படுத்துவதோடு குற்றவாளிகளின் பாதுகாவலர்களாகவும்  பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் செயல்படுகின்றன. பல்வேறு  பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும்போது இட ஒதுக்கீடு அமலுக்கு வராது என்ற நிலை, பட்டியலின மக்களின், பெண்களின் வேலைவாய்ப்பைப் பெரிதும் பாதிக்கும் பிரதான பிரச்சனையாக முன்னுக்கு வருகிறது.

இந்தியாவின் பிரத்தியேக சூழலில் ஏற்கனவே நிலவி வந்த  சாதியக் கட்டமைப்பின் மீது தான் நவீன வர்க்கங்களான  முதலாளி, தொழிலாளி வர்க்கங்கள் உருவாயின. நிலப்பிரபுத்துவம் முற்றாக ஒழிக்கப்படாத சூழலில், முதலாளி வர்க்கம் நவீன வர்க்கமாக இருந்தாலும், அதற்கு முந்தைய காலகட்டத்தின் சாதிய, ஆணாதிக்க ஒடுக்குமுறை கருத்தியலைத் தன் உழைப்புச் சுரண்டலுக்கும் , லாபவெறிக்கும்  சாதகமாக பயன்படுத்தி வருவதையே பார்க்கிறோம். பல்வேறு அரசியல் கட்சிகள் சாதி ஒழிப்புக்கோ, சாதிய ஒடுக்குமுறை ஒழிப்புக்கோ உண்மையாகப் போராடாமல், சாதிகளை வாக்கு வங்கிகளாகக் கருதியே செயல்படுகின்றன. சாதியின் பெயரால் உணர்வுகளைத் தட்டி எழுப்பி, அந்த அடையாளத்தை அரசியல் பேரத்துக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. நிலம், கூலிக்காகவும், பெருநில உடைமைக்கு எதிராகவும் நடத்த வேண்டிய போராட்டங்களைத் தம் நிகழ்ச்சிநிரலில் கூட வைப்பதில்லை. நில விநியோகம்  மற்றும் ஊரக வேலை  திட்டம் அமல்படுத்தல் சம்பந்தமாக  இதர கட்சிகள்  களத்துக்கு வருவதில்லை என்பது  இதற்கான உதாரணம். மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் தான் பிரச்சனைக்கு பின்னாலுள்ள சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் குறிவைக்கின்றன. நிலம், கூலி, பெரு நிலவுடைமை முறைமைக்கு எதிரான போராட்டங்களை நடத்துகின்றன. தீவிர நிலச் சீர்திருத்தத்தை முன்வைக்கின்றன. இந்தியாவிலேயே நில விநியோகம் அதிகமாக நடைபெற்ற மாநிலங்களில் மேற்கு வங்கம் கேரளா, திரிபுரா முன்னிலையில் உள்ளன. தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை கட்டப்பட வேண்டுமானால், சாதிய முறைமைக்கும், பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளுக்கும்  எதிராக ஒன்றுபடுவது முன் நிபந்தனையாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் தெளிவாக வரையறுக்கிறது.

நடவடிக்கைகள்:

இச்சூழலில் இடது ஜனநாயக சக்திகளை அணிதிரட்ட வும், போராட்டங்களில் இறக்கவும் சில நடவடிக்கைகள் மார்க்சிஸ்ட் கட்சியால் எடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, இடதுசாரி வெகுஜன அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு, JEJAA என்கிற பெயரில் செயல்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. தொழிற்சங்க அமைப்புகள், விவசாய விவசாயத் தொழிலாளர் அமைப்புகளின் பொது கோரிக்கைகள் மீதான கூட்டுப் போராட்டம் இக்காலகட்டத்தில் வலுப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஒரு நீண்ட நெடிய வெற்றிகரமான போராட்டத்தை நடத்தி முடித்துள்ளது. அதில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பங்கு பாத்திரம் பிரதானமானது. பெண்களுக்கும் பட்டியலின மக்களுக்கும் எதிராக செயல்படும் காப் பஞ்சாயத்துகள், இக்காலகட்டத்தில் மேற்கூறிய பகுதியினரும் பங்கேற்கும் விதத்தில் இயங்கின.

பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய பட்டியலின,  பழங்குடியின மக்களுக்கான பரந்த மேடைகள், சிறுபான்மை நல குழுக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதலோடு செயல்பட்டு வருகின்றன. சாதிய, பாலின ஒடுக்குமுறை பிரச்சினைகளில் கட்சியின் தோழர்கள் களத்தில் இறங்கி தலையீடு செய்கின்றனர். அதிகரித்து வரும் சாதி ஆணவக்  குற்றங்கள் மற்றும் கொலைகளுக்கு எதிராக உறுதியான போராட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் நடைபெறுகின்றன. கோயில் உள்ளிட்ட பொது இடங்களில் பெண்களும், பட்டியல் இன மக்களும்  உள்நுழைவதை உறுதிப்படுத்துவதற்கான இயக்கங்களும் தொடர்ந்து நடக்கின்றன. சபரிமலை பிரச்சினையை உதாரணமாகக் கூற முடியும். சமூகநீதி பாரம்பரியத்தை நினைவுகூர்ந்து அடர்த்தியான ஒரு மனிதச்சங்கிலி லட்சக்கணக்கான பெண்களின் பங்கேற்புடன் கேரளாவில் நடைபெற்றது. நிர்பயா பிரச்சனைக்குப் பிறகு அமைக்கப்பட்ட நீதியரசர் வர்மா கமிஷனுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கொடுக்கப்பட்ட ஆலோசனைகள் மதிப்பு மிகுந்தவையாகும். தமிழக அரசால் வெளியிடப்பட்ட பெண்களுக்கான வரைவு கொள்கை குறித்து அரசியல் கட்சி என்கிற முறையில் அனேகமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே தன்னுடைய கருத்துக்களை விரிவான குறிப்பாக அனுப்பி இருக்கிறது.

மாநில அரசின் குறுகிய அதிகார வரம்புக்கு உட்பட்டு, இடது ஜனநாயக மாற்று கொள்கைகளை ஓரளவு அமல்படுத்திய செயல்பாட்டின் மூலமாகவே கேரளாவில் இடது முன்னணி அரசு பெரும்பான்மையான மக்கள் ஆதரவோடு மீண்டும் தேர்வு செய்யப்பட்டது.

 பழங்குடியின மக்களின் கலாச்சாரம், மொழி, நிலம், வாழ்வாதாரம் உள்ளிட்ட உரிமைகளைப் பாதுகாக்க அவர்கள் அடர்த்தியாக வசிக்கக்கூடிய தொடர்பகுதிகளுக்கு பிரதேச சுயாட்சி உரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்திலேயே சுட்டிக்காட்டப்பட்ட அம்சம். அதன் அடிப்படையில்தான் மேற்கு வங்கத்தில் கோர்க்கா இன மக்களுக்கும், திரிபுராவின் பழங்குடியின மக்களுக்கும் மாவட்ட சுயாட்சி கவுன்சில்கள் அமைக்கப்பட்டன. பழங்குடியின மக்களின் குடியிருப்பு, இனச்சான்றிதழ், கல்வி, வேலைவாய்ப்புக்கு வலுவான போராட்டங்கள் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடத்தப்படுகின்றன

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு ஒன்றிய பாஜக அரசு காட்டுகிற தயக்கம் அதன் சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே  முன் வருகிறது என சுட்டிக் காட்டப்பட்டது. கணக்கெடுப்பு என்று சொல்லும்போது எண்ணிக்கை மட்டுமல்ல; கல்வி, வேலைவாய்ப்பு, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வாழ்வியல் அம்சங்களில் இந்த சாதிகள் எந்த நிலைமையில் உள்ளன என்பதும் புரிந்து கொள்ளப்படும். இந்துக்கள் என்கிற ஒற்றை வார்த்தைக்குள் சாதிய ஒடுக்குமுறைகளையும் வேறுபாடுகளையும் மூடி மறைக்கிற ஆர் எஸ் எஸ்ஸின் முயற்சிகள் இதில் அம்பலமாகும்.

இடது ஜனநாயக திட்டம் சமூக நீதி குறித்த கீழ்கண்ட அம்சங்களை மாற்றுக் கொள்கையாக முன்வைக்கிறது:

  • சாதிய முறைமையையும், சாதிய ஒடுக்குமுறையின் அனைத்து வடிவங்களையும் முற்றாக ஒழிப்பது;
  • பட்டியலின, பழங்குடியின மக்களின் அடிப்படையான மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு சிறப்பு நடவடிக்கைகள் எடுப்பது;
  • பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான துணை திட்டத்தை ஒரு சட்டத்தின் அடிப்படையில் உருவாக்குவது;  இதனை கண்காணிக்க உயர்மட்ட கமிட்டி ஒன்றை நிறுவுவது;
  • பழங்குடியின மக்களின் நில  உரிமை, வாழ்வுரிமை, கலாச்சார உரிமைகளுக்கான அரசியல் சாசனப் பிரிவுகள் மற்றும் சட்டப் பிரிவுகளைப் பாதுகாப்பது;
  • தனியார் துறையில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வருவது;
  • சாதி வாரி கணக்கெடுப்பை நடத்துவது; பிற்பட்ட சாதிகள் குறித்தும் கணக்கெடுப்பது;
  • நிலுவையில் இருக்கும் காலி இடங்களை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்புவது
  • கையால் மலம் அள்ளும் நடைமுறையைக் கறாராக தடுத்து நிறுத்துவது;
  • தீண்டாமைக்கு எதிராகக் கடும் தண்டனைகளை அமல்படுத்துவது;
  • வன உரிமை சட்டத்தைக் கறாராக  நடைமுறையாக்குவது;
  • சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டம் ஆக்குவது;
  • பெண்கள் குழந்தைகள் மீதான கொடூரமான வன்முறையைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுப்பது; குற்றவாளிகள் தப்பி விடாமல் தண்டனைக்கு உட்படுத்தப்படுவதை உறுதிசெய்வது;
  • சாதி ஆணவக் குற்றங்களுக்கு எதிரான சட்டம் கொண்டு வருவது.

மாநில, அகில இந்திய மாநாடுகள் இடது ஜனநாயக அணி மற்றும் திட்டம் குறித்து பரிசீலிக்கும். ஆனால், இவை மாநாட்டு பரிசீலனைக்கான அம்சங்கள் மட்டுமல்ல; மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைகளும், கமிட்டிகளும், உறுப்பினர்களும் தம் அன்றாட பணிகளை, தமிழகத்தின் இடது ஜனநாயக திட்டத்தைச் சுற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். இடதுசாரி வெகுஜன அமைப்புகளை இவற்றிலுள்ள கோரிக்கைகளின்பால் அணிதிரட்டி, கூட்டுப் போராட்டம் நடத்திட வேண்டும். இதில் இடம் பெற்றுள்ள ஒவ்வோர் அம்சத்தையும் ஆதரிக்கக் கூடிய பல்வேறு முற்போக்கு ஜனநாயக அமைப்புகள் கண்டிப்பாக உள்ளன. அவற்றையும் உள்ளடக்கிய கூட்டு மேடைகள் உருவாக்கப்பட்டு பலப்படுத்தப்பட வேண்டும். ஒரே ஒரு கோரிக்கையில் அல்லது அக்கோரிக்கையின் ஒரே ஒரு புள்ளியில் இணைய முன் வருபவர்களையும் அதற்குத் தகுந்தவாறு பயன்படுத்திட வேண்டும்.

ஒன்றிய அரசின் சாதிய மதவெறி கொள்கைகள், மாநில உரிமைகள் பறிப்பு, பொருளாதார சுரண்டல் போன்றவற்றை எதிர்த்த போராட்டங்களில் மாநில முதலாளித்துவ கட்சிகளை இணைத்துக் கொள்ள வேண்டும். பெரு முதலாளி வர்க்க பிரதிநிதிகளான பாஜக, காங்கிரசையும், மாநில முதலாளித்துவ கட்சிகளையும் சமப்படுத்தி பார்க்கக்கூடாது என்று கட்சி ஆவணங்கள் சுட்டிக் காட்டுகிற அதே நேரத்தில், நமது வர்க்கங்கள் மற்றும் சமூக ஒடுக்குமுறையில் பாதிக்கப்படும் பகுதியினருக்கான  ஆதரவு நிலையில் சமரசத்திற்கு இடமில்லை எனவும், அத்தகைய கொள்கைகளை நடவடிக்கைகளை ஆட்சியிலிருக்கும் மாநில முதலாளித்துவ கட்சி எடுக்கும்போது மக்களைத் திரட்டி போராட்டங்களில் இறக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.  இதற்கு கட்சியின் சொந்த பலம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது தலையாய கடமை. எனவே கட்சித் திட்டம் சார்ந்தும், இடது ஜனநாயக திட்டம் சார்ந்தும் பணிகளை ஒருங்கிணைத்து முன்னேறுவது என்பது அவசர அவசியமானதாகும்.

நாடு தழுவிய புரட்சிக் கட்சி …

குரல்: தேவி பிரியா

ஆடியோ எடிட்: மதன்ராஜ்

என். குணசேகரன்

இந்திய நாடு இன்று எதிர்நோக்கும் சவால்கள் பன்முகத் தன்மை கொண்டவை. அரசியல்,சமூகம்,பொருளாதாரம் என பல தளங்களில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் ஏராளமாக உள்ளன. இவை அனைத்திலும் தவறான கொள்கைகளை மேற்கொண்டு, வெகு மக்கள் நலன் பறிபோகின்ற தவறான பாதையில் நாட்டை ஆளுகிற சக்திகள் வழிநடத்தி வருகின்றனர்.

இவற்றை ஆராய்ந்து முற்றிலும் புதியதோர் பாதையில் நாட்டைக் கொண்டு செல்ல மார்க்சிஸ்ட் கட்சியின் 22வது அகில இந்திய மாநாடு வழி வகுத்துள்ளது. உழைக்கும் பாட்டாளி வர்க்கங்களின் நலன் சார்ந்த இடதுசாரி பாதையே இந்தியப் பிரச்னைகளுக்கான சரியான தீர்வு என்பதனை இந்த மாநாடு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

கடந்த மாநாட்டிலிருந்து…

கம்யூனிஸ்ட் கட்சியின் நடைமுறை அடிப்படையில் இந்தக் கட்சி காங்கிரசில் அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் அரசியல் ஸ்தாபன அறிக்கை எனப்படும் ஆவணமும் விவாதித்து நிறைவேற்றப்பட்டது.

இந்த அறிக்கையில் கடந்த 21வது கட்சிக் காங்கிரஸ் எடுத்த முடிவுகள் அமலான விதம் குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுக் காலத்தில் நவீன தாராளமயம், வகுப்புவாதம், சமூக ஒடுக்குமுறை ஆகிய தீமைகளை எதிர்த்து கட்சி தீரமிகு போராட்டங்களை நடத்தியுள்ளது.

பல்வேறு மக்கள் பிரச்னைகளுக்கு தனியாகவும் கூட்டாகவும் கட்சி மற்றும் வெகுஜன அமைப்புக்கள் போராடி வந்துள்ளன.

நவீன தாராளமயக் கொள்கைகளினால் நூறு நாள் வேலைத் திட்டத்தை முடக்குவது, பொது விநியோக முறையை சீர்குலைப்பது், விலைவாசி உயர்வு, வேலையின்மை, விவசாய நெருக்கடி போன்ற பல பிரச்னைகளால் மக்கள் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டனர். அவற்றுக்கான இயக்கங்களை நாடு தழுவிய அளவிலும், மாநில அளவிலும் கட்சி மேற்கொண்டது.

பணமதிப்பு நீக்கம், ஜி. எஸ். டி. போன்ற பிரச்னைகள் முன்வந்தபோதும் கட்சி வலுவாக எதிர்ப்பியக்கத்தைக் கட்டியது.

இந்தப் பணிகள் அனைத்தையும் பரிசீலித்த கட்சிக் காங்கிரஸ் கீழ்க்கண்ட குறைபாட்டை முன் வைத்துள்ளது.

” ..இந்த எதிர்ப்பு இயக்கங்களின் பங்கேற்பு, பெருமளவில், நமது கட்சித் தோழர்கள், கட்சி ஆதரவாளர்கள் என்ற வட்டத்திற்குள்ளாகவே இருந்துள்ளது. ”

மக்கள் பங்கேற்கும் இயக்கங்கள் நடத்த வேண்டுமென்பது முக்கிய படிப்பினை.

அறிக்கையில், “மாநிலங்களில் பொதுக் கோரிக்கையோடு இணைந்து, உள்ளூர் பிரச்னைகளை மையப்படுத்திய இயக்கங்களில் விரிவான பங்கேற்பு இருந்துள்ளது.” என்று உள்ளூர் முன் முயற்சிகளின் முக்கியத்துவம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

வகுப்புவாத எதிர்ப்பின் பல தளங்கள்

திரிபுரா தேர்தல் பற்றிய பரிசீலனையில், பாஜகவின் வகுப்புவாதத்தை முறியடிக்கும் நமது நடவடிக்கைகள் போதுமானதல்ல என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இது அரசியல் பிரச்சாரம் என்ற மட்டத்தில் நடத்தினால் போதுமானதல்ல. சமூக, கலாச்சார, கல்வி தளங்களிலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உழைக்கும் வர்க்கங்கள் வாழுமிடங்களில், சமூக, கலாச்சார நடவடிக்கைகள் மேற்கொண்டு, மக்களிடம் மதச்சார்பற்ற, அறிவியல் உணர்வுகளை ஆழமாக பதிய வைத்திட சிறப்பு கவனம் செலுத்திட வேண்டும்.

சாதிய, பகுத்தறிவுக்கு ஒவ்வாத சிந்தனைகள், நடைமுறைகள், மூடத்தனமான கருத்துக்கள் போன்றவற்றுக்கு எதிரான பிரச்சாரம் அவசியம். இதற்கு வெகுமக்களை எட்டுகிற அறிவியல் இயக்கம் பலப்படுத்திட வேண்டும்

பிளீனத்தின் ஐந்து முடிவுகள்

கொல்கத்தாவில் நடைபெற்ற சிறப்பு ஸ்தாபன மாநாடு (பிளீனம்) தற்போதுள்ள நிலையில் வேகமான ஸ்தாபன வளர்ச்சியை எட்ட வேண்டுமெனில், ஐந்து முக்கிய அம்சங்களில் முழுக் கவனம் செலுத்த வேண்டுமென முடிவெடுத்தது. பிளீனத்திற்குப் பிறகு அவற்றை அமலாக்கிட கட்சி எடுத்த முயற்சிகளும், நீடிக்கும் குறைகளும் கட்சிக் காங்கிரசின் ஸ்தாபன அறிக்கையில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

1.கட்சி செல்வாக்கு உயர்வு – இடது ஜனநாயக அணி கட்டுதல்

இன்று முதலாளித்துவ அரசின் கொள்கைகள் அனைத்து வர்க்க மக்களையும் தாக்கி வருகின்றன. இதனையொட்டி பல போராட்டங்களை கட்சியும் வெகுஜன அமைப்புக்களும் கடந்த மூன்றாண்டுகளில் நடத்தியுள்ளன. ராஜஸ்தானில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டமும்,மஹாராஷ்டிராவில் நடைபெற்ற விவசாயிகள் நெடும் பயணமும் கட்சி, மற்றும் விவசாய சங்கங்களின் முன்முயற்சியால் நடத்தப்பட்டு வெற்றியை ஈட்டிய போராட்டங்கள்.

தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தம் பல்வேறு பிரிவு சார்ந்த போராட்டங்கள் இந்த மூன்று ஆண்டுகளில் பரவலான பங்கேற்புடன் நடைபெற்றுள்ளன.

அரசின் வகுப்புவாத நடவடிக்கைளை எதிர்த்த போராட்டங்களும் தீவிரமாக நடந்துள்ளன. குறிப்பாக மாணவர்கள் அரசின் கல்வி உரிமை பறிப்பு, காவிமயம் போன்ற பிரச்னைகளுக்காக எழுச்சிமிகு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

இந்தப் போராட்டங்களில் கட்சியும் வெகுஜன ஸ்தாபனங்களும் அயராது பணியாற்றியுள்ளனர் என்பதை மறுக்க இயலாது.

தனியாகவும்,கூட்டாகவும் இயக்கங்கள் நடைபெற்றுள்ளன. உண்மையில் அனைத்து வர்க்கப் பிரிவு சார்ந்த மக்களும் தன்னெழுச்சியாகவும் போராடியுள்ளனர். எனவே கடந்த மூன்று ஆண்டுகள் போராட்ட ஆண்டுகளாக அமைந்தன.

ஆனால் இந்த போராட்ட எழுச்சிகள் கட்சியின் செல்வாக்கினை உயர்த்தவும், அமைப்பு விரிவாக்கத்திற்கும் பயன்பட்டிருக்கிறதா?அவ்வாறு பயன்படும் வகையில் கட்சி தரப்பில் திட்டமிட்ட முயற்சிகள் முன்னெடுத்து செல்லப்பட்டதா? இக்கேள்விகள் முக்கியமானவை.

நாடு தழுவிய அனுபவத்தை பரிசீலிக்கிறபோது இந்த கடமையை நிறைவேற்றுவதில் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது. இயக்கங்களால் கிடைத்த தொடர்புகள், கட்சிக்கு கிடைத்த அறிமுகம், மரியாதை ஆகியவற்றை கட்சியின் அமைப்பு விரிவாக்கத்திற்கு பயன்படுத்துவதில் முன்னேற்றம் இல்லை.

கட்சியின் செல்வாக்கும் அமைப்பு விரிவாக்கமும்தான் இடது ஜனநாயக அணியை கட்டுவதற்கு உறுதுணையாக அமைந்திடும்.

இடது ஜனநாயக அணி என்பது வர்க்கக் கூட்டணி. (பார்க்க: பிப்ரவரி மார்க்சிஸ்ட் இதழ்). வர்க்கப் போராட்டங்கள்தான் இந்த வர்க்கக் கூட்டணியை அமைப்பதற்கான பாதையை அமைத்திடும்.

தேசிய அளவில் இடதுசாரி வர்க்க வெகுஜன ஸ்தாபனங்களின் மேடை அமைக்கப்பட்டுள்ளது. பல சமூக இயக்கங்களும் இந்த மேடையின் அங்கமாக உள்ளன. இந்த மேடை சார்பில் சில இயக்கங்களும் நடத்தப்பட்டுள்ளன. இது வர்க்கங்களைத் திரட்டுவதற்க்கு வாய்ப்புள்ள மேடை. ஆனால், இது அனைத்திந்திய மட்டத்தில் இயங்கினால் மட்டும் போதாது. கீழ்மட்ட அளவில் விரிவுபடுத்தி செயல்படுத்த வேண்டும்.

பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், 6 இடதுசாரி கட்சிகள் ஒன்றுபட்ட இயக்கங்கள் சிலவற்றை நடத்தியுள்ளன. இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்.

2. மக்களோடு உயிரோட்டமான தொடர்பு-வெகுமக்கள் பாதை :

உண்மையில் வெகுமக்கள் பாதை எனப்படுவது மக்களிடமிருந்து கற்றுக் கொள்வது, கற்றுக் கொண்ட படிப்பினைகள் அனுபவங்கள் அடிப்படையில் மக்களைத் திரட்டுவது என்பதுதான். இதற்கு மக்களோடு வலுவான பிணைப்பும் நெருக்கமும் தேவை.
கடந்த மூன்று ஆண்டுகளில் போராட்டங்களையொட்டி,மேலிருந்து கிளை மட்டம் வரை,மக்களோடு நெருக்கம் காண முயற்சிக்கப்பட்டுள்ளது.எனினும் இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. அனைத்து மட்டங்களிலும் மக்களோடு உயிரோட்டமான நெருக்கம் காண இடையறாது முயற்சித்திட வேண்டுமென அறிக்கை வலியுறுத்துகிறது.

3. ஸ்தாபன செயல்பாட்டை மேம்படுத்துவது-தரம் உயர்த்துவது:

புரட்சிகர கட்சியை கட்டும் வகையில் ஸ்தாபன செயல்பாட்டை மேம்படுத்த வேண்டும். இதற்கு கட்சியின் அரசியல் தத்துவார்த்த தரத்தை அனைத்து மட்டங்களிலும் உயர்த்திட வேண்டும்.

அகில இந்திய கட்சி மையத்தின் செயல்பாடு, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களின் பொறுப்புக்களை நிறைவேற்றுவது,வர்க்க வெகுஜன அமைப்புக்களின் அகில இந்திய உபகுழுக்கள் செயல்பாட்டை உறுதிப்படுத்துவது, அகில இந்திய கட்சி மையத்தின் ஒற்றுமை ஆகியவற்றில் கடந்த ஆண்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.மேலும் முன்னேற்றம் காண வேண்டும் என அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

வாலிபர் விவசாய,விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் செயல்பாட்டை மேம்படுத்த வழிகாட்டும் ஆவணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இவை மாநில கட்சி மட்டங்களில் விவாதிக்கப்பட்டு,செயல் திட்டங்கள் உருவாக்கி செயலாற்றிட வேண்டும்.

கட்சியின் அனைத்து மட்டங்களிலும் அரசியல் தத்துவார்த்த புரிதலை ஏற்படுத்த சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாலிபர்கள், பெண்கள், தலித், ஆதிவாசியினர் மத்தியில் பணியாற்றி, அவர்களை கட்சி உறுப்பினர்களாகவும், ஊழியர்களாகவும் உருவாக்க வேண்டும்.பெண்கள் கட்சியில் கொண்டு வருவதற்கு இலக்கு வைத்து முயற்சிக்க வேண்டும்.31-வயதுக்குட்ப்பட்ட வாலிபர்களை கட்சிக்குள் கொண்டு வரவும் திட்டமிட்ட முயற்சிகள் தேவைப்படுகின்றன.

கட்சி உறுப்பினரைப் புதுப்பிக்க 5 நிபந்தனைகளை அவர் கடைப்பிடித்திருக்க வேண்டுமென்பது மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கட்சிக் கல்வி

கட்சியின் தரத்தை உயர்த்திட கடந்த மூன்று ஆண்டுகளில் கட்சி கல்வி உபகுழு பல முயற்சிகளை மேற்கொண்டது.
1. கட்சி உறுப்பினர் அனைவருக்கும் கட்சி திட்டம்,கட்சி ஸ்தாபனம்,மார்க்சிய தத்துவம்,மார்க்சிய அரசியல் பொருளாதாரம் ஆகிய 4 தலைப்புக்களில் கல்வி அளிக்க வேண்டும்.
2. தத்துவார்த்த விஷயங்களை விவாதித்து உட்கிரகிக்கும் வகையில் வாசிப்பு வட்டங்கள் அமைத்து செயல்படுத்த வேண்டும்.
3. அனைத்து மட்டங்களில் பணியாற்றும் தோழர்களுக்கு ஏற்ப,கட்சி பாடத்திட்டம்,படக்குறிப்புக்கள் உருவாக்கி கல்விப்பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
மூன்று ஆண்டுக் காலத்தில் மேற்கண்ட கடமைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தாலும், ஒழுங்கமைக்கப்பட்ட, தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதில் வரும் காலங்களில் அதிக கவனம் செலுத்த அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. கட்சி வளர்ச்சியை எட்ட வேண்டுமெனில், கட்சியின் தரத்தை உயர்த்த வேண்டுமென்பது பிளீனத்தின் வழிகாட்டுதல்.இதற்கு அயராத கட்சிக்கல்வி பணிகள் அவசியமானது.

4. இளைய தலைமுறையை கட்சிக்குள் கொண்டு வரும் முயற்சிகள்;

எதிர் வரும் இரண்டு ஆண்டுகளில் கட்சியின் மொத்த உறுப்பினர்களில் 20 சதமானோர் வாலிபர்கள் என்ற நிலையை எட்ட முயற்சிக்குமாறு மாநிலக்குழுக்களை கட்சி காங்கிரஸ் அறிக்கை வலியுறுத்துகிறது.

இதற்காக, கட்சியின் அனைத்து மட்டங்களும் வாலிபர், மாணவர் அமைப்புக்களுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும்.

5. சித்தாந்தப் போராட்டம்

சுயநலத் தன்மை கொண்ட நவீன தாராளமய கண்ணோட்டங்கள், சமூக ஒடுக்குமுறை, பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட பிற்போக்கான கருத்துக்கள், வகுப்புவாதக் கருத்து நிலைகள் ஆகியவற்றுக்கு எதிராக கருத்துத் தளத்தில் வலுவான போராட்டத்தை நடத்த ப்ளீனம் வழிகாட்டியது. இதில் சில முயற்சிகள் நடந்திருந்தாலும் மேலும் அதிக முயற்சிகள் தேவைப்படுகின்றன.

இதற்கு, கட்சி நடத்தும் அரசியல் தத்துவார்த்த பத்திரிக்கைகளின் தரம், கிளர்ச்சிப் பிரச்சாரக் குழுவின் செயல்பாடு, சமூக ஊடகங்களின் முயற்சிகள் மேம்பட வேண்டும்.

கலாச்சாரத் துறையில் செயல்பட ஒரு வழிகாட்டு ஆவணம் உருவாக்கப்பட்டு உள்ளது. அதனையொட்டி செயல்பாடுகளை கலாச்சாரத் தளத்தில் அதிகரிக்க வேண்டும்.

தற்போது மார்க்ஸ்-200 பிறந்த ஆண்டை முன்னிட்டு தத்துவார்த்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முழுவதும் இது பல வடிவங்களிலும் தொடர வேண்டும்.

பன்முக தளங்களில் செயல்பாடு;
தற்போது மாற்றுத் திறனாளிகளைத் திரட்டும் அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தேசிய அளவில் அமைக்கப்பட்டுள்ள மேடையின் செயல்பாடுகள் ஊக்குவிக்க வேண்டும்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவோரை திரட்டும் முயற்சிகள் நடந்துள்ளன. இதனை முன்னெடுத்துச் செல்ல கட்சி வழிகாட்டுதல்கள் உருவாக்கபப்ட்டுள்ளன. இதன் அடிப்படையில் தலையீடுகள் அதிகரிக்க வேண்டும்.

தற்போது அறிவியல் தொழில்நுட்பத் துறையில் தனியாரை கண்மூடித் தனமாக அனுமதிக்கிற மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்தும், அறிவியலற்ற பிரச்சாரங்களை எதிர்கொண்டு அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மக்கள் அறிவியல் இயக்கம் செயலாற்றி வந்துள்ளது. கீழ்மட்ட அளவில் இப்பணிகள் விரிவாக்கப்பட வேண்டும்.

நகர்ப்புற மக்களைத் திரட்டவும் பல முயற்சிகள் நடந்துள்ளன. கட்சி மாநிலக் குழுக்கள் நகர்மய கொள்கைகள், நகர்ப்புற உள்ளூர் கோரிக்கைகளை எடுப்பதிலும், குடிசை வாழ் மக்கள், குடியிருப்போர் கூட்டமைப்பு அமைப்பது போன்ற முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

சமூக ஒடுக்குமுறை, தலித் மக்கள் பிரச்னைகளை முன்னெடுக்க சில முயற்சிகள் கூட்டாகவும் தனியாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இந்துத்துவ தாக்குதல் சூழலில் அதனை எதிர்கொள்ள தலித், ஆதிவாசி ஒடுக்கப்பட்ட மக்களைத் திரட்டும் பணிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கள் குழந்தைகள் மத்தியில் தீவிரமாக இந்தக் காலத்தில் பணியாற்றி வருகின்றனர்.இதன் ஆபத்தை உணர வேண்டும். பாலர் சங்கம் அமைத்து செயல்படுத்திடும் முயற்சிகளை வேகப்படுத்துவது அவசியம்.

அறிக்கையில் அனைத்து வர்க்க வெகுஜன அமைப்புக்களின் செயல்பாடுகள் குறித்து ஆழமான ஆய்வுகுறிப்புக்கள் உள்ளன. அந்த அமைப்புகளின் கிளை சார்ந்த கீழ்மட்ட அமைப்புக்களை பலப்படுத்துதல், கட்சி காட்டும் பணியில் அதிக கவனம் செலுத்துதல் போன்ற வழிகாட்டுதல்கள் வரும் மூன்றாண்டுகளில் அமலாக்கப்பட வேண்டும்.

வெகுமக்கள் பாதையில் பயணிக்கிற புரட்சிகர கட்சியைக் கட்டுவது என்பதுதான் தற்போது கட்சி அடைய வேண்டிய குறிக்கோள். அரசியல் ஸ்தாபன அறிக்கையின் வழிகாட்டுதல்களை தீவிரமாக முன்னெடுப்பது, அத்தகு கட்சியை கட்டவும், நாடு தழுவிய பலம் வாய்ந்த கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சியை உயர்த்திடவும் உதவிடும்.

பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே கம்யூனிஸ்டுகளின் முதன்மையான கடமை!

பாஜகவையும் அதன் கூட்டாளிகளையும் ஆட்சியிலிருந்து அகற்றுவதே பிரதான கடமை

எடிட்: மதன் ராஜ்

– உ.வாசுகி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது அகில இந்திய  மாநாடு, ஏப்ரல் 18-22 ஆகிய நாட்களில் தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் நடைபெற்றது. 758 பிரதிநிதிகளும், 71 பார்வையாளர்களும் பங்கேற்ற இந்த மாநாட்டில் அடுத்த 3 ஆண்டுகளுக்கான அரசியல் நடைமுறை உத்தி வரையறுக்கப்பட்டது.

மக்களின் வாழ்வுரிமை மீதும், நாட்டின் ஒருமைப்பாட்டின் மீதும் ஆர்.எஸ்.எஸ்./பாஜக கட்டவிழ்த்து விட்டிருக்கும் தொடர்ச்சியான தாக்குதல்களின் விளைவுகளைப் பரிசீலிக்கும் முன்னர், உலகளாவிய நிகழ்வுகளின் பின்னணியில் அவற்றைப் பொருத்திப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

தீவிரமாகும் பொருளாதார சுரண்டல்:

2008-ம் ஆண்டு துவங்கிய உலகளாவிய பொருளாதார நெருக்கடியிலிருந்து உலக முதலாளித்துவம் இன்னும் மீளவில்லை. இதனை எதிர்கொள்ள, பிரச்சனையின் சுமையை மக்கள் மீது சுமத்துவது; ஜனநாயக உரிமைகளைப் பறித்து, எதிர்ப்புகளை ஒடுக்குவது என்ற வழிமுறையை முதலாளித்துவ ஆட்சியாளர்கள் அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் கடைப்பிடிக்கின்றனர். இது, மக்கள் மீதான பொருளாதார சுரண்டலை மேலும் தீவிரப்படுத்துகிறது. உண்மையில் இந்நிலை எப்படி உருவானது என சற்று திரும்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது. பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக மக்களின் வாங்கும் சக்தி குறைந்து, உற்பத்தியாகும் பொருட்களை விற்க வழியில்லாத சூழல் உருவான போது, தற்காலிக வாங்கும் சக்தியைக் கடனாக அளிக்க, புதிய வடிவிலான  நிதிசார் சாதனங்களை நவீன தாராளமயம் உருவாக்கியது. வாங்கிய கடனைத் திருப்பிக் கட்ட முடியாத நிலை பரவலான போதுதான் 2008-ல் அமெரிக்காவில் நிதிசார் நெருக்கடி உருவாகி, பின்னர் உலகளாவிய பொருளாதார நெருக்கடியாக மாறியது. அதை எதிர்கொள்ள முதலாளித்துவம் எடுக்கும் முயற்சிகள் மக்களின் வாங்கும் சக்தியை மேலும் குறைக்கின்றன. எனவே, நெருக்கடியிலிருந்து மீள, நவீன தாராளமய கொள்கைகளின் அடிப்படையில் முதலாளித்துவம் எடுக்கும் நடவடிக்கைகள் இன்னொரு நெருக்கடியை உருவாக்குகின்றன. மொத்தத்தில் நவீன தாராளமயமே நெருக்கடியில் இருக்கிறது. இந்த நிலை, ஏகாதிபத்திய நாடுகளிடையே முரண்பாடுகளையும், மோதல்களையும் உருவாக்குகிறது; சமூக பதட்டங்களை ஏற்படுத்துகிறது. வளரும் நாடுகளை மேலும் தீவிரமாக சுரண்டவும் ஏகாதிபத்திய நாடுகளும் பன்னாட்டு முதலாளிகளும் முயல்கிறார்கள்.

இதனால் மக்களின் வாழ்க்கை தரம் சீரழிகிறது. வேலை வாய்ப்புகள் அழிக்கப்படுகின்றன. கிடைக்கும் வேலைகளும் குறைந்த கூலி, தரம் குறைவு, பகுதி நேரம், காசுவல், ஒப்பந்த அடிப்படையில் அமைந்தவையாகவே உள்ளன. புதிய தொழில் நுட்ப வளர்ச்சிகள், இயந்திரமயமாக்கலை அதிகப்படுத்துகின்றன. இதுவும் வேலை வாய்ப்புகளை இழக்க செய்கிறது. மேல் மட்ட 1 சதவீதம் பேருடன் ஒப்பிடும் போது, அடிமட்டத்திலுள்ள 50 சதவீதம் பேரின் வருமான வளர்ச்சி மந்தமாகவோ அல்லது அறவே இல்லாமலொ இருக்கிறது என உலக சமத்துவமின்மை அறிக்கை 2018 எடுத்துக் காட்டுகிறது. இந்நிலை மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்குகிறது. போராட்டங்கள் வெடிப்பதும், ஒடுக்கப்படுவதும் இக்கால கட்டத்தின் காட்சிகளாக நீடிக்கின்றன.

வலதுசாரி அரசியல் திருப்பம்:

இந்த அதிருப்தியின் விளைவு எத்தகைய அரசியல் போக்குக்கு சாதகமாக திரும்பும் என்பது முக்கியமான அம்சம். உலக நாடுகளின் நடப்புகள் எதைக் காட்டுகின்றன? எங்கு இடதுசாரி சக்திகள் வலுவாக இருக்கின்றனவோ அங்கு அதிருப்தியின் விளைவு அவர்களுக்கு சாதகமான அரசியல் சூழலை உருவாக்குகிறது.  எங்கு அவர்கள்  வலுவாக இல்லையோ, அங்கு வலதுசாரி அரசியல் சக்திகள் இதனை அறுவடை செய்கின்றன. பிரச்சனை என்னவென்றால், எந்த நவீன தாராளமய கொள்கைகள் மக்கள் வாழ்வை சீரழித்து கடும் அதிருப்தியை உருவாக்கினவோ, அதே கொள்கைகளை இன்னும் தீவிரமாகப் பின்பற்றுபவர்களாக வலதுசாரி அரசியல் சக்திகள் இருக்கிறார்கள் என்பதுதான். இந்த 3 ஆண்டு காலத்தில் பொதுவாக அவ்வாறான ஒரு வலதுசாரி அரசியல் திருப்பம் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க பிற்போக்கு சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் டிரம்ப்  அதன் அதிபரானது இத்தகைய போக்கினை வலுப்படுத்தியிருக்கிறது. இனி வரும் காலத்தில், மக்களின் அதிருப்தியும், கோபமும் இடதுசாரி ஜனநாயக சக்திகளுக்கு ஆதரவாக மாறுகிறதா, வலதுசாரிகளைத் தேர்வு செய்ய வைக்கிறதா என்பதே பல நாடுகளின் அரசியல் திசைவழியைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும். 1929-33 வரையிலான பொருளாதார பெரு மந்தநிலை ஏற்பட்ட காலத்தில் தான், மக்களின் வெடித்துக் கிளம்பிய அதிருப்தியை பாசிச சக்திகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தின. இப்போதும் இடதுசாரிகள் அதில் வெற்றி பெறா விட்டால், நவீன பாசிச மற்றும் தீவிர வலதுசாரி சக்திகள் வெற்றி பெறும் அபாயம் முன்னெழும்.

இக்கால கட்டத்தில் பொருளாதார நெருக்கடியின் இக்கட்டுகளை சமாளிக்கவும், உலகளாவிய தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ளவும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அரசியல், பொருளாதாரம், ராணுவம் என அனைத்து துறைகளிலும் கடும் தலையீடுகளை செய்து கொண்டிருக்கிறது. இடதுசாரி சக்திகள் அரசாங்கத்தில் உள்ள பல நாடுகளைக்  கொண்ட லத்தீன் அமெரிக்க பிரதேசத்தில் அவற்றைக் கீழே இறக்க பல்வேறு உத்திகளை வலுவாகக் கையாண்டு வருகிறது. ஒரு துருவ உலகமாக, தன் தலைமையின் கீழ் உலகைக்கொண்டு வர அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளுக்கு மாற்றாக, பிரதேச ஒத்துழைப்பு என்ற பெயரில் பல்வேறு இடங்களில் நாடுகள் எடுக்கும் முயற்சிகளில் சில தடங்கல்கள் நிகழ்ந்துள்ளன. ஒத்துழைப்பில் இருக்கும் நாடுகளில் சில அமெரிக்க சார்பு நிலை எடுப்பது இதற்கு ஒரு காரணம். இந்தியாவும் இதற்கு ஓர் உதாரணம்.

அதே சமயம், பல நாடுகளில் இடதுசாரி பார்வையுள்ள அமைப்புகள், மேடைகள் உருவாகியுள்ளன. சமூக ஜனநாயக கட்சிகள் பின்னடைவை சந்தித்திருக்கின்றன. சோஷலிச நாடுகளில் மக்கள் சீனம் தன் வலுவையும், உலகளாவிய செல்வாக்கையும் அதிகரித்திருக்கிறது. வியத்நாமும், கியூபாவும் ஓரளவு நீடித்த பொருளாதார வளர்ச்சியைக் காட்டியிருக்கின்றன. லாவோஸ் ஆசியாவிலேயே மிக வேகமான பொருளாதார வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. வட கொரியாவைப் பொறுத்த வரை, 50 ஆண்டுகளுக்கும் மேலான பொருளாதார தடைகளின் காரணமாக, தனது கனிம வளங்களைக் கொடுத்து உணவு, இதர அத்தியாவசிய பொருட்களைப் அது பெற்றுக் கொண்டிருந்தது. தற்போது அமெரிக்க – தென்கொரிய ராணுவ கூட்டு அச்சுறுத்தலிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளுக்குத் தனது வளங்களை அது செலவழிக்க வேண்டியிருக்கிறது. இருப்பினும் சமீபத்தில் தென் கொரியாவுடன் ஒத்துழைப்புக்கான சில முன்முயற்சிகளை எடுத்துள்ளது.  வட கொரிய அதிபர் கிம் ஜாங் உண் உடன் உயர்மட்ட பேச்சு வார்த்தை நடத்த டிரம்ப் (முரண்களுடன் கூடவே) ஆர்வம் காட்டி வருகிறார்.

அண்டை நாடுகளில் நேபாளத்தில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து தேர்தலில் மாபெரும் வெற்றியை ஈட்டியதோடு, ஒரே கட்சியாவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. புதிய அரசியல் சட்டம் இயற்றப்பட்டு நேபாளம் ஒரு குடியரசாக பிரகடனம் செய்துள்ள பின்னணியில் இத்தேர்தல் நடந்துள்ளது.

இலங்கையில் உள்ள கூட்டணி அரசு, (இலங்கை சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி) புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது. தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான அம்சத்தை இது உள்ளடக்கி வரும் எனக் கூறப்படுகிறது. இந்த முயற்சிகள் வெற்றி பெற வேண்டும். புத்த மத வெறியர்களால் முஸ்லீம்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள், பல்வேறு சமூகங்களுக்கிடையே பதட்டம் தொடர்கிறது என்பதைக் காட்டுகிறது.

சர்வதேசக் கடமைகள்:

இச்சூழலில் இந்தியாவில் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை வலுப்படுத்துவதும், மோடி அரசு அமெரிக்காவின் கீழ்நிலை கூட்டாளியாக மாறி, அதற்கு சரணாகதி அடைவதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதும்  மட்டுமல்ல; உலகெங்கிலும் ஏகாதிபத்திய, நவீன பாசிச சக்திகள், அடிப்படைவாதம், மதவெறி, பழமைவாதம், பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக செயல்படும் அனைத்து சக்திகளுடனும் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும். இவற்றுக்கிடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். சோஷலிச நாடுகளுடன் தோழமை உணர்வை வலுப்படுத்த வேண்டும்., உலகெங்கிலும் உள்ள முற்போக்கு சக்திகளுடன் உறவைப் பேண வேண்டும். இவற்றை, உலகச் சூழல் குறித்த மதிப்பீட்டின் அடிப்படையில் நமது கடமைகளாக அரசியல் தீர்மானம் வரையறுக்கிறது.

தேசிய சூழல்:

சென்ற மாநாட்டில் சுட்டிக்காட்டியபடி, பாஜக ஆட்சிக்கு வந்ததை ஒட்டி இந்திய அரசியலில் வலதுசாரி திருப்பமும், பல்வேறு பெரும் மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. நான்கு  வடிவங்களில்  இவை வெளிப்படுகின்றன. 1)நவீன தாராளமய கொள்கைகள் தீவிர கடைப்பிடிப்பு; இதன் மூலம் மக்களின் மீது பல்முனை தாக்குதல்கள்; 2)இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக சட்டத்தை அச்சுறுத்தக் கூடிய ஆர்.எஸ்.எஸ்.சின் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை அமலாக்க தொடர் முயற்சி; இதன் விளைவாக தலித், இசுலாமியர்கள் மீது கடும் தாக்குதல்கள்; பாசிசத் தன்மை கொண்ட போக்குகள் முன்னெழுவது;  3)அமெரிக்காவுடன் கேந்திர கூட்டை வலுப்படுத்தி அதன் இளைய பங்காளி என்ற பாத்திரத்தை வகிப்பது; 4)நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசன அமைப்புகள், ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றை சீர்குலைத்து, எதேச்சாதிகாரத்தைக் கட்டமைப்பது.

பாஜகவை எதிர்ப்பது என்பது, மேற்கூறிய சித்தாந்தத்தையும், நவீன தாராளமய கொள்கைகளையும், எதேச்சாதிகார போக்குகளையும், அமெரிக்காவுடனான இளைய பங்காளி நிலைபாட்டையும்  எதிர்ப்பதாகும். மாற்று என்பது, இவற்றிலிருந்து தெளிவாக வேறுபட்ட மாற்று.

அதிகரிக்கும் பொருளாதார பயங்கரவாதம்:

ஜி.எஸ்.டி., உயர்பண மதிப்பு நீக்க நடவடிக்கைகள் முறை சாரா தொழிலாளியின் வாழ்க்கையையும், சிறு குறு தொழில்களையும் சிதைத்துள்ளன. தனியார்மயம் தீவிரமடைந்துள்ளது.  அந்நிய நேரடி மூலதனம் நுழையாத துறையே இல்லை எனலாம். பெருமுதலாளிகளுக்குப் பெருமளவில் வராக் கடன் கொடுப்பதன் மூலம்  பொதுத்துறை வங்கிகள் சூறையாடப்படுகின்றன. மோடி அரசின் மிகப்பெரும் தோல்வி வேலை வாய்ப்பு துறையில் தான் எனக் கூறமுடியும். 2017ம் ஆண்டு ஜனவரி-ஏப்ரல் வரையிலான காலத்தில் இருக்கும் பணி இடங்களில் சுமார் 15 லட்சம் பணியிடங்கள் பறிக்கப்பட்டன. வேளாண் நெருக்கடி கூர்மையாக முன்னுக்கு வந்திருக்கிறது. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி விளை பொருளுக்கு நியாயமான விலை வழங்கப் படவில்லை. ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்குள்ளேயே இது சாத்தியமில்லை என உச்சநீதிமன்ற வழக்கு ஒன்றில் அஃபிடவிட் தாக்கல் செய்து விட்டது அரசு. சர்வ தேச கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் வரிகளைக் குறைக்காமல் மக்களைப் பிழிந்து கொண்டுள்ளது. இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க, சுற்றுச்சூழல் குறித்துக் கவலையின்றி லாப வேட்டை ஆடுவதை அனுமதிக்கும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கை பளிச்சென புலப்பட்டது. பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கியதன் மூலம் பல சேதாரங்கள் ஏற்பட்டுள்ளன. உணவு, ஊதியம் பாதிப்புடன் சேர்த்து, அது குடிமக்கள் மீது அரசு கண்காணிப்பை வலுப்படுத்துகிறது. ஊரக வேலை உறுதி சட்டம் ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிகழ்ச்சி போக்குகள் பரவலான பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் ஏழை குடும்பங்கள் மீதான சுமை பன்மடங்கு அதிகரித்துள்ளது. தொழிலாளர்  நல சட்டங்கள் திருத்தப்பட்டு, முதலாளிகளுக்கு வாழ்க்கை சுலபமாகவும், உழைப்பாளிகளின் வாழ்க்கை வாழ்வதற்கே தகுதியற்றதாகவும் மாறிப்போயிருக்கிறது. ஊதிய விகிதங்கள் குறித்தும், தொழில் உறவு குறித்தும் வரையறைகள் பாதகமாக மாற்றப்படும் ஏற்பாடு நடக்கிறது. இதனால் சங்கம் வைக்கும் உரிமை, கூட்டு பேர உரிமை, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் அடையாளம் இல்லாமல் ஆக்கப்படும். பெண் தொழிலாளார்களின் பெரும் எண்ணிக்கையில் பணி புரியும் ஸ்கீம் என சொல்லப்படும் அரசின் திட்டங்கள் தனியார்மயமாவதன் மூலம், ஏற்கனவே மோசமாக உள்ள அவர்களின் பணி நிலை மேலும் மோசமடையும்.

பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை, பெண் குறித்த பிற்போக்கு பார்வை, மூட நம்பிக்கைகள் அதிகரித்துள்ளன. ஏழை, தலித், பழங்குடியின பெண்களின் நிலை கவலைக்கிடம். என்ன படிப்பது, என்ன உடுத்துவது, யாருடன் நட்பாக இருப்பது, யாரை நேசிப்பது என்று அனைத்தும் (பசு குண்டர்கள் போல) அரசு ஊக்குவிக்கும் ரவுடி படைகளால் கண்காணிக்கப்பட்டு தாக்குதல் நடைபெறுகிறது. 2015-2017 வரையிலான கால கட்டத்தில் தலித்துகள் மீதான வன்கொடுமைகள் தொடர்ந்து உயர்ந்து வந்துள்ளன. சிறுபான்மை மக்கள் மீது கடும் தாக்குதல்கள் ஏவி விடப்பட்டுள்ளன. அறிவார்ந்த முறையில் எதிர் வாதம் செய்வோர் கொலை செய்யப்பட்டு, கருத்து சுதந்திரம் முடக்கப்படுகிறது. பாசிசத் தன்மை கொண்ட இத்தகைய நடவடிக்கைகள் திட்டமிட்டு நடப்பதைக் கடந்த 3 ஆண்டுகளில் பார்த்து வருகிறோம்.

வகுப்புவாத மயமாகும் சூழல்:

கல்வி, பண்பாட்டு நிறுவனங்கள் வகுப்புவாதமயமாக்கப்பட்டுள்ளன. உயர் கல்வி நிறுவனங்களில், ஆராய்ச்சி மையங்களில், வரலாற்று கழகங்களில் ஆர்.எஸ்.எஸ். நபர்கள் பதவி அமர்த்தப்பட்டுள்ளனர். பாடத்திட்டங்களில் அறிவியல் கண்ணோட்டம் அகற்றப் படுகிறது. மதச்சார்பின்மை தகர்க்கப்படுகிறது.

கூட்டாட்சி தத்துவம் குழி தோண்டி புதைக்கப்படுகிறது. மாநில  உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்படுகின்றன. சட்ட திருத்தங்கள் மூலமும், தேர்தல் பத்திரங்கள் மூலமும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்குத் தரும் நன்கொடையின் உச்சவரம்பு அகற்றப்பட்டு, யார் வாங்குகிறார்கள், யார் கொடுக்கிறார்கள் என்ற விவரங்களும் தேவையற்றதாக்கப்பட்டு விட்டன. இது உயர்மட்ட ஊழலுக்குத் தான் தோதாகும்.

எதிர்ப்பு இயக்கங்கள்:

இவற்றையெல்லாம் இந்திய தொழிற்சங்க இயக்கங்களும், விவசாய இயக்கங்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டோ, சகித்துக் கொண்டோ இல்லை. கடுமையாக எதிர்ப்பு இயக்கங்களை நடத்தியிருக்கின்றன. கூட்டு போராட்டங்களாகப் பல நடைபெற்றுள்ளன. இவற்றை எல்லாம் அரசியல் தீர்மானம் பட்டியல் போட்டுக் காட்டுகிறது. பெருமை தரும் இயக்கங்கள் இவை. தன்னெழுச்சி போராட்டங்களும் பரவலாக நடந்து வருகின்றன. எதிர்ப்பு இயக்கங்கள் மோடி அரசின் மீதான பல பகுதி மக்களின் அதிருப்தியைக் காட்டுகின்றன. ஆளும் வர்க்கங்களுக்கும் தொழிலாளர் விவசாய பகுதிகளுக்கும் இடையிலான முரண்பாடு வளர்ந்து வருவதையே இது காட்டுகிறது. நமது தலையீடு பல்வேறு பகுதி மக்களை அணி திரட்டிப்  போராட்ட களத்தில் நிறுத்துவதாக அமைய வேண்டும். அமைப்பு முறைமையானது, பெருமுதலாளி – நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கும் சூழலில், பல வடிவங்களில் எதேச்சாதிகாரம் வெளிப்படும். எனவே, போராட்டங்கள் பெருமுதலாளி-நிலப்பிரபுத்துவ வர்க்கங்களை பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் திட்டமிடப்பட வேண்டும்.

இந்தப் பின்னணியில் என்ன அரசியல் உத்தியைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான் மையமான கேள்வி. மேற்கூறியவைகளைப் பார்க்கும் போது, ஆட்சியிலிருந்து பாஜக அரசை அகற்றுவது என்பதே பிரதான அரசியல் கடமையாக முன்னுக்கு வருகிறது. கட்சி திட்டமும், பாஜகவை சாதாரண பெருமுதலாளித்துவ கட்சியாகப் பார்க்கவில்லை. பாசிச தன்மையுள்ள ஆர்.எஸ்.எஸ்., பாஜகவை வழி நடத்துவதால் அதற்குரிய குணாம்சத்துடன் அது இருப்பதை கவனிக்க வேண்டும். 29 மாநிலங்களில் 21-ல் தனியாகவோ, அல்லது கூட்டணியாகவோ அக்கட்சி ஆட்சியில் இருக்கிறது. மக்களவையில் அறுதிப் பெரும்பான்மை, மாநிலங்களவையில் தனிப்பெரும் கட்சி. குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் இருவருமே முதன் முறையாக ஆர்.எஸ்.எஸ். நபர்கள்.

கட்சிகள் குறித்த நிர்ணயிப்பு:

பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றும் பணியை எப்படி செய்வது என்ற முடிவுக்குப் போவதற்கு முன்னால், இதர கட்சிகள் குறித்த நிர்ணயிப்பை கவனிக்க வேண்டும். காங்கிரசைப் பொறுத்த வரை, பாஜகவின் அதே வர்க்கத் தன்மை கொண்டது. ஆளும் வர்க்கத்தின் பிரதான பிரதிநிதி என்ற தன் இடத்தை பாஜகவிடம் இழந்திருக்கிறது. அதன் அரசியல் செல்வாக்கு தேய்ந்து வருகிறது. மதச்சார்பற்ற கட்சியாக இருந்தாலும், மத வெறி நடவடிக்கைகளை நீடித்த முறையில் எதிர்த்துப் போராடும் திராணியற்றதாக இருக்கிறது. நவீன தாராளமயத்தின் முன்னோடி. அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு சாய்மானமான அயல்துறை கொள்கையை உருவாக்கியது. பிரதான எதிர்க்கட்சி என்ற பாத்திரத்திலும் அக்கொள்கைகளை ஆதரித்தே வருகிறது. இக்கொள்கைகள் கறாராக எதிர்க்கப்பட வேண்டும்.

கட்சி திட்டம், மக்கள் ஜனநாயக புரட்சியை ஏகபோக எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஏகாதிபத்திய எதிர்ப்பு தன்மை கொண்டதாக முன்வைத்து, பெருமுதலாளித்துவத்தையும், அதன் முன்னணி அரசியல் பிரதிநிதிகளையும் தீர்மானகரமாக எதிர்த்துப் போராடாமல் இக்கடமைகளை நிறைவேற்ற முடியாது என்று சுட்டிக்காட்டுகிறது. பாஜக, காங்கிரஸ் இரண்டுமே பெருமுதலாளித்துவத்தின் முன்னணி பிரதிநிதிகள். எனவே, கறாராக எதிர்த்துப் போராட வேண்டிய காங்கிரசுடன் ஐக்கிய முன்னணி வைக்கும் எவ்வித உத்திக்கும் இடமில்லை. அதே சமயம், வீழ்த்த வேண்டிய முதன்மை சக்தியாக பாஜகவே இருக்கிறது. எனவே, பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளையும் சம அபாயங்களாகப் பார்க்க முடியாது.

மாநில முதலாளித்துவ கட்சிகளின் மாறுபட்ட பாத்திரத்தை 21வது மாநாட்டு அரசியல் உத்தி பரிசீலனையிலேயே பார்த்தோம். மாநில முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் நலனைப் பிரதிபலிக்கும் இக்கட்சிகளின் நவீன தாராளமயம் குறித்த அணுகுமுறை அவர்களின் வர்க்க நலன் சார்ந்த பார்வையுடனேயே இருக்கின்றன. காங்கிரஸ், பாஜக இரண்டில் எதனோடு வேண்டுமானாலும் மத்தியில் கூட்டணியில் அமரும் அரசியல் சந்தர்ப்பவாதம் இவற்றுக்கு உண்டு. சில மாநில முதலாளித்துவ கட்சிகள் பாஜகவுடனும், சில அதனுடன் இல்லாமலும், ஏற்கனவே இருந்து இப்போது இல்லாமலும், ஏற்கனவே கூட்டணியில் இல்லாத, ஆனால் இப்போது இருக்கும் கட்சிகள் என ரகம் ரகமாய் உண்டு. சாத்தியமாகும் இடங்களில் பாஜகவுடன் இல்லாத கட்சிகளுடன், மக்கள் பிரச்சனைகள், வகுப்புவாத எதிர்ப்பு, ஜனநாயக உரிமைகள் பறிப்பு போன்ற அம்சங்களில் கூட்டு இயக்கங்களுக்குத் திட்டமிடலாம்.

ஒரு மாநிலத்தில் இயங்கும் மாநில முதலாளித்துவ கட்சியின் கொள்கைகள், பாத்திரம் இவற்றைப் பொறுத்து இவற்றுடனான நமது அணுகுமுறை அமைய வேண்டும். கட்சியின் நலன் மற்றும் இடது ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க உதவுவதாக இந்த அணுகுமுறை இருக்க வேண்டும். இது மாநிலங்களுக்கே பொருந்தும். இவற்றுடன் அகில இந்திய அளவிலான கூட்டணிக்கு சாத்தியமில்லை.

இடதுசாரி சக்திகள்:

நமது இடதுசாரி தளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது மிக முக்கியமானது. இடதுசாரிகளின் ஆட்சியில் இருக்கும் கேரளா, ஆட்சியில் இருந்த மேற்கு வங்கம், திரிபுராவில் ஆர்.எஸ்.எஸ்/பாஜகவின் கொலை வெறித்தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறோம். மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரசின் வன்கொடுமைகள் வேறு. கேரள அரசு, இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவில் பல மக்கள் நல திட்டங்களைக் கொண்டு வந்து நடைமுறையாக்கி வருவது பெருமைக்குரியது. இவற்றைப் பாதுகாப்பதுடன், நாடு முழுவதும் நம் கட்சியின் சொந்த பலத்தை அதிகரிப்பதே இடதுசாரி ஒற்றுமையைக் கட்டவும், இடது ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கவும் உதவும். ஆர்.எஸ்.எஸ்./பாஜகவின் தாக்குதல்களைக் களத்திலும், சித்தாந்த ரீதியாகவும் எவ்வித சமரசமும் இன்றி எதிர்ப்பவர்கள் நாம் என்பதால் குறி வைத்துத் தாக்கப்படுகிறோம். மக்கள் மத்தியில் நாம் வேரூன்றி நிற்கும் போதுதான், எதிர்ப்புகளைப் பரவலாக்கும் போது தான் தாக்குதலை திறனுடன் எதிர்கொள்ள முடியும்.

இடது ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன், இடதுசாரி கட்சிகளின் வர்க்க – வெகுஜன அமைப்புகளை இணைத்த மேடையை உருவாக்கியிருக்கிறோம். இவற்றுடன் மக்கள் அமைப்புகள், அறிவுஜீவிகளை ஒருங்கிணைக்க வேண்டும். மாநில அளவிலும் முயற்சிகள் செய்ய வேண்டும். கூட்டு மேடைகளை பலப்படுத்த வேண்டும். போராட்டங்களை பெரும் வீச்சோடு கட்டவிழ்த்து விட வேண்டும். மாற்றுத் திட்டத்தின் அடிப்படையில் இவற்றை செய்ய வேண்டும் எனக் கூறும் அரசியல் தீர்மானம், அத்திட்டத்தின் சுருக்கத்தையும் அளித்துள்ளது. கடந்த காலத்தில் பிரச்சார முழக்கமாக இருந்த நிலையிலிருந்து நடைமுறை சாத்தியம் மிக்கதாக, நமது அன்றாட நடவடிக்கைகள் இந்த நோக்கத்துடன் அமைவதாக இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டுகிறது.

அரசியல் உத்தி:

இந்தச் சூழலில், அரசியல் திசைவழி 10 அம்சங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை அணிதிரட்டி, பாஜகவையும், அதன் கூட்டாளிகளையும் தோற்கடிப்பதே பிரதான கடமை. ஆனால் காங்கிரசுடன் அரசியல் கூட்டணி வைக்காமல் இதை செய்ய வேண்டும் என்று தீர்மானம் கூறுகிறது. மத்திய குழுவின் சிறுபான்மை தரப்பு வாதங்களை முன்வைக்க வாய்ப்பு கொடுக்கப்பட்ட பின்னர், விவாதங்களைக் கேட்டு, வழிகாட்டும் குழு (அரசியல் தலைமை குழு)  காங்கிரசுடன் எவ்வித புரிந்துணர்வோ, தேர்தல் கூட்டணியோ இருக்கக் கூடாது என்ற வழிகாட்டுதலை நீக்கி விட்டு, காங்கிரசுடன் அரசியல் கூட்டணி கூடாது என்ற வழிகாட்டுதலை இணைத்திருக்கிறது. காங்கிரசுடன் ஏன் ஐக்கிய முன்னணி உத்திக்கு இடமில்லை என்பது ஏற்கனவே விளக்கப்பட்டிருக்கிறது.

புரிந்துணர்வு என்பது ஏன் அகற்றப்பட்டது அப்படியானால், காங்கிரசுடன் புரிந்துணர்வு இருக்கலாமா என்ற கேள்வியும் எழும். புரிந்துணர்வு இருக்கலாம்; ஆனால் அதன் வரையறை என்ன என்பதை தீர்மானம் விளக்குகிறது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளுடனும் பிரச்னைகளின் அடிப்படையில் புரிந்துணர்வு இருக்கலாம். நாடாளுமன்றத்துக்கு வெளியே, மதவெறிக்கு எதிராக பரந்து பட்ட மக்களை ஒருங்கிணைக்க மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைக்கலாம். காங்கிரஸ், மற்றுமுள்ள முதலாளித்துவ கட்சிகளுக்குப் பின்னால் இருக்கும் மக்களை ஈர்க்கும்படியாக வர்க்க வெகுஜன அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைகளை வளர்த்தெடுக்க வேண்டும்.

எல்லாம் சரி. தேர்தலில் என்ன செய்யப் போகிறோம்? எப்படி பாஜகவைத் தோற்கடிக்க போகிறோம்? தேர்தல் உத்தி என்பது அரசியல் நடைமுறை உத்திக்கு உட்பட்டதாகவே இருக்கும். இரண்டும் இரு வேறு திசைகளில் பயணிக்க முடியாது. எனவே தேர்தல் நேரத்தில், மேற்கூறிய நடைமுறை உத்திக்கு உட்பட்டு, பாஜக எதிர்ப்பு வாக்குகளை ஒருமுகப்படுத்திக் குவிப்பதற்கு ஏற்ற தேர்தல் உத்தி பொருத்தமாக உருவாக்கப்படும். நோக்கம் ஒன்று என்றாலும் மாநிலத்துக்கு மாநிலம்  பாஜகவின் நிலை என்ன, அதனுடன் யார் இருக்கிறார்கள், எதிர் பக்கம் எந்தெந்த மாநில முதலாளித்துவ  கட்சி இருக்கிறது, அவர்களின் பங்குபாத்திரம் அம்மாநிலத்தில் அந்த குறிப்பிட்ட காலத்தில் என்னவாக இருந்திருக்கிறது என அனைத்தையும் கணக்கில் எடுத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. சம்பந்தப்பட்ட கட்சி, இடதுசாரிகளுடன் உடன்பாடு வைக்க விரும்புகிறதா என்பதும் ஓர் அம்சம். சென்ற மக்களவை தேர்தலில் பல மாநிலங்களில் முதலாளித்துவ கட்சிகள் அவ்வாறு முன்வரவில்லை என்பதையும் பார்த்தோம். காங்கிரசும் பாஜகவும் மட்டுமே பிரதானமாகக் களத்தில் இருக்கும் மாநிலங்களில் கடந்த காலங்களில், பாஜகவைத் தோற்கடிப்போம் என்ற முழக்கத்துடன் நாம் பணியாற்றியிருக்கிறோம். அது உட்பட தேர்தல் உத்தி உருவாக்கப்படும் போது பரிசீலிக்கப்படும்.

கடந்த கால அரசியல் நடைமுறை உத்திகளைப் பரிசீலித்து விசாகப்பட்டினம் அகில இந்திய மாநாட்டில் முன்வைத்த அரசியல் நடைமுறை உத்தி தொடர்கிறது. இது இடது ஜனநாயக அணியைக் கட்டுவதை முக்கிய கடமையாக வரையறுத்துள்ளது. எனவே, இடது ஜனநாயக திட்டத்தின் அடிப்படையில், அனைத்துப் பகுதி உழைப்பாளி மக்களும் வேலை, நிலம், உணவு, ஊதியம் குறித்த கோரிக்கைகளை முன்வைத்து அணி திரட்டப்பட வேண்டும். தன்னெழுச்சி போராட்டங்களிலும் நிச்சயம் தலையிட வேண்டும். அதே போல கோட்பாட்டு அளவில் அரசியல், சமூக, பண்பாட்டு, தத்துவார்த்த தளங்களில் மதவெறியை எதிர்ப்பது மட்டுமல்ல; ஸ்தல அளவில், மக்கள் ஒற்றுமையை உறுதி செய்து, வகுப்புவாத சக்திகளை எதிர்த்து நிற்க வேண்டும். இதில் அழுத்தம் இருக்க வேண்டும் என்று தீர்மானம் பதிவு செய்கிறது. பெண்கள், தலித், பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் காவலராகக் கட்சி இருக்க வேண்டும். இதற்காகப் பரந்த ஒற்றுமையைக் கட்ட வேண்டும். ஜனநாயகம், படைப்புரிமை, கல்வியாளர்களின் சுதந்திரம் எதேச்சாதிகார முறையிலும், பாசிச தன்மை கொண்ட வடிவங்களிலும் தாக்குதலுக்கு உள்ளாகும்போது உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் என்பன போன்ற கடமைகளைத் தீர்மானம் வரையறுக்கிறது.

பொதுவானதைக் குறிப்பானதுடன் இணை என்கிறார் மாவோ. இல்லையெனில், தீர்மானம், மாநாட்டு மேசையுடன் நின்று விடும் என்றும் எச்சரிக்கிறார். அரசியல் தீர்மானத்தின் ஒட்டு மொத்த அம்சங்களை உள்வாங்கி, மாவட்டத்தில்/பகுதியில்/அரங்கத்தில் இக்கடமைகளை எவ்வாறு நடைமுறையாக்குவது என்பதிலேயே முழு கவனம் தேவைப்படுகிறது. அதற்கு ஸ்தாபனமே பேராயுதம். அதனையும் கூர்மைப்படுத்தி முன்னேறுவோம்.

பகுதிக் குழு, இடைக்குழு உறுப்பினர்களின் செயல்பாடு எப்படி அமைய வேண்டும்?

மார்க்சிஸ்ட் கட்சியின் பகுதிக் குழு, இடைக்குழு உறுப்பினர்களின் செயல்பாடு எந்த அடிப்படையில் அமைய வேண்டும்?

ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்களுடன் உயிரோட்டமான தொடர்போடு இயங்குவது மிக மிக அத்தியாவிசயமான ஒன்றாகும். அதன் அவசியத்தை மார்க்சிய முன்னோடிகள் பல முறை வலியுறுத்தியுள்ளனர். மக்களோடு இருப்பதன் பொருள், பொது நீரோட்டத்தில் கரைந்து போவது அல்ல.திட்டவட்டமான சூழல்களுக்கு ஏற்ப மார்க்சியத் தீர்வுகளுக்கு வந்தடைவது முக்கியம். ஆனால்,  தர்க்க அடிப்படையில் வந்தடையும் தீர்வுகளை நடைமுறைப்படுத்தி அதன் அனுபவத்தில் கற்க வேண்டும். அனுபவத்தில் கிடைத்த பாடத்தை வைத்து மீண்டும் நம் தத்துவப் புரிதலை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இதைத்தான் ‘உயிரோட்டமான’ தொடர்பு என்கிறோம். இது இதயத்திற்கும் இரத்த நாளங்களுக்கும் இடையிலுள்ள தொடர்பைப் போன்றது. இது மூளைக்கும், மெல்லிய நரம்புத்தொடருக்கும் இடையிலான தொடர்பைப் போன்றது. கட்சியின் அனைத்து மட்டத்திற்கும் மேற்சொன்ன புரிதல் மிக அவசியம்.

உள்ளூர் அளவிலான கிளைகளுக்கு பகுதிக் குழுயே வழிகாட்டுகிறது. குழுகளின் செயல்பாடுகளைக் குறித்து பேசும்போது தோழர் மாவோ, ‘படைப் பிரிவு’ என்று குறிப்பிடுகிறார். அதன் தலைவரும் உறுப்பினர்களும் எத்தகைய உறுதியோடும், திறனோடும் செயல்பட வேண்டும் என்பதற்காக இந்த உதாரணத்தைக் குறிப்பிடும் அவர், குழு முடிவுகள் எடுக்கும்போது ஜனநாயகமும், செயல்படும்போது  பெரும்பான்மை முடிவுக்கு சிறுபான்மை கட்டுப்படும் ஒழுங்கும் மிக முக்கியம் என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை.

தமிழ்நாட்டில் 480 இடைக்குழுக்களில் 4738 குழு உறுப்பினர்கள் உள்ளனர். இடைக்குழு செயல்பாடுகளை, திருநெல்வேலி ப்ளீனம் ஆய்வு செய்தது. கட்சி இடைக்குழு உறுப்பினர்களுக்கு கட்சித் திட்டம் மற்றும் அமைப்புச் சட்டத்தைக் குறித்து கற்றுக்கொடுக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. குழு செயலாளர்களும், முழு நேர ஊழியர்களும் புதிய சிந்தனைகளுடன், பரிசோதனை முறைகளைப் பயன்படுத்தி இடைக்குழு செயல்பாடுகளை முன்னேற்ற வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியது. தமிழகத்தில்  உயிரோட்டமான கட்சியை வளர்த்தெடுக்க இவை மிக அவசியமான கடமைகள்.

நவ தாராளமயக் கொள்கைகள் தொடர்ந்து அமலாக்கப்பட்டுவருவதன் விளைவாக பல மாற்றங்கள் நிகழ்ந்திருகின்றன. கிராமப்புறங்களில் நிலப்பிரபுத்துவ – பணக்கார வர்க்கங்களின் கூட்டு உருவாகியுள்ளது. அவர்களால் சிறு குறு விவசாயிகளும், கிராமப்புற தொழிலாளர்களும் உழைப்பாளிகளும் சுரண்டப்படுகின்றனர். உள்ளூர் அளவில் இந்த மாற்றங்களை உணர்வதற்கான முயற்சிகளை நாம் செய்திருக்கிறோமா? உள்ளூரில் இந்த முரண்பாடுகள் எப்படி வெளிப்படுகின்றன என்ற விவாதங்கள் குழு அளவில் நடத்தப்பட்டுள்ளனவா?

முரண்பாடுகள் பல வடிவங்களில் வெளிப்படலாம். கந்துவட்டிச் சுரண்டலாக இருக்கலாம், கூட்டுறவு அமைப்புகளில் அதிகாரத்தைக் கைப்பற்றி மேற்கொள்ளும் முறைகேடுகளாக இருக்கலாம், சிறு குறு விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களாக இருக்கலாம். இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு கோரி போராடுவது மட்டுமல்ல. நாம் அவற்றின் பின் உள்ள வர்க்க – சமூக அரசியலை விவாதித்தோமா? போராட்ட முழக்கங்கள் நாம் திரட்டும் மக்களிடையே வர்க்க – சமூக (சாதி, பாலினம்) ஒடுக்குமுறைகளை எதிர்க்கும் உணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்தனவா? நம் அரசியலை நோக்கி மக்களை ஈர்க்க அது பயன்பட்டதா? என்ற கேள்விகளையும் ஒரு உள்ளூர் குழுயே கூடுதலாக விவாதிக்க வேண்டும். சரியான புரிதல் கிளைகளுக்கு ஏற்படுத்தும் வகையில் வழிகாட்ட வேண்டும்.

மேல் குழு முடிவுகளையும் ‘அறிக்கைகளையும்’ மக்கள் மொழியில், மக்களின் அன்றாட சிக்கல்களோடு இணைத்து முன்னெடுத்துச் செல்லவேண்டியது இடைக்குழுக்களின் அதிமுக்கியப் பணியாகும்.

நமது பிரச்சாரத்தை நோக்கி ஈர்க்கப்ப்படும் மக்களை பொருத்தமான வெகுஜன அமைப்புகளில் திரட்டுவது, நிதியாதாரத்தை திட்டமிட்டு பலப்படுத்துவதும் குழுகளின் முக்கியத்துவம் வாய்ந்த பணிகளாகும். குழுகளின் விவாதங்கள், செயலுக்கான உந்துதலைக் கொடுப்பதாக அமையவேண்டும்.

கல்கத்தாவில் நடைபெற்ற ஸ்தாபன ப்ளீனம், “கூட்டு செயல்பாடு, தனி நபர் பொறுப்பு, முறையான கண்காணிப்பு என்ற ஸ்தாபன கோட்பாட்டை, கட்சியின் அனைத்து மட்டங்களிலும் உறுதியாக அமல்படுத்துவது; தனி நபர் பொறுப்புகள் நிறைவேற்றப் பட்ட விதம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசீலனை செய்வது” என்ற கடமையை வகுத்துள்ளது. இவ்வகையில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு முறை குழுக் கூட்டத்திற்கு அழைக்கும்போதும், பங்கேற்கும்போதும் பணிகளைக் குறித்த பரிசீலனை மனதில் ஓடுகிறதா? அடுத்து என்ன, விவாதத்திற்கான நிகழ்ச்சி நிரலில் புதிதாக என்ன சேர்க்க வேண்டும்? புதிதாக எழுந்திருக்கும் வாய்ப்புகள் என்ன? நாம் செயல்படும் பகுதியில் உழைக்கும் வர்க்கத்தைத் திரட்ட பரிசீலிக்க வேண்டிய புதிய சிக்கல்கள் என்ன? இந்தக் கேள்விகளெல்லாம் மனதில் ஓடுகிறதா? எனப் பார்க்க வேண்டும்.

ஒரு குழு உறுப்பினர் கட்சி திட்டத்தை முறையாக உள்வாங்கிக் கொள்வதுடன், அமைப்புச் சட்ட விதிகள், கம்யூனிஸ்ட் நெறிமுறைகளில் உறுதியோடு நின்றுகொண்டு செயலாற்ற வேண்டும்  – மேற்சொன்ன கேள்விகளுக்கு பதில் தேட வேண்டும். தத்துவ விவாதங்களையும், அரசியல் விவாதங்களையும் குழுகளில் இடம்பெறச் செய்ய வேண்டும். மார்க்சிய வாசகர் வட்டங்களைப் போன்ற ஏற்பாடுகளில் பங்கேற்க வேண்டும். செயல்பாடுகளுடன் இணைத்து தத்துவச் சர்ச்சைகளுக்கு பதில் தேட வேண்டும். கற்கவும், கற்பிக்கவும் வேண்டும்.

பெண்களையும், இளைஞர்களையும் கூடுதலாக இணைக்க வேண்டும் என ப்ளீனம் வழிகாட்டியிருக்கிறது. திட்டமிட்டு பயிற்றுவித்து இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். எனவே நாம் மேற்சொன்ன வகையில் குழு செயல்பாடுகளை அமைத்துக்கொள்வது மிக மிக அத்தியாவிசயமான ஒன்றாகும்.

 

கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடுகள் அவ்வளவு அவசியமான பணியா?

கேள்வி: மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை மாநாடுகள் தற்போது நடந்து வருகின்றன. இது அவசியமான பணியா?முதலாளித்துவக் கட்சிகளில் இது போன்ற எதுவும் நடப்பதில்லையே?

கம்யூனிஸ்ட்   கட்சியில்  கிளை மாநாடுகள்  மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்றன. இது மிக முக்கியத்துவம் வாய்ந்த பணி.

2018 ஏப்ரலில் கட்சிக் காங்கிரஸ் எனப்படும் இந்திய அளவிலான மாநாடு நடைபெற உள்ளது. முன்னதாக ,கிளையிலிருந்து துவங்கி , மாநில மட்டம் வரை  மாநாடுகள்  நடத்திட கட்சியின் மத்தியக்குழு முடிவு செய்துள்ளது.

மாநாடு எனும்போது,சாதாரணமாக வழக்கில் இருக்கும் புரிதலி்ருந்து மாறுபட்ட பொருள் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உண்டு.

கடந்த மாநாட்டிற்குப் பிறகு, கட்சி மேற்கொண்ட செயல்பாடுகள் அனைத்தையும் அசை போடும் வாய்ப்பாக மாநாட்டு நிகழ்வு இருக்கும்.ஆனால், நடந்ததை நினைவுபடுத்திக் கொள்வது, அற்ப சந்தோஷத்திற்காக அல்ல.
உழைக்கும் மக்களை முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக ஒன்றுபடுத்துவது என்பது கட்சியின் அயராத போராட்டப்பணியாக அமைந்துள்ளது. இதில் மூன்று ஆண்டுக் கால முன்னேற்றம் என்ன என்பதை அறிவதுதான் கிளை மாநாட்டில் முக்கிய விவாதமாக அமையும். தொழிலாளிகள்,விவசாயிகள் உள்ளிட்ட வர்க்கப் பிரிவினரோடு கட்சி எப்படி உறவு கொண்டு, அவர்களிடம் ஆளும் அரசுகளுக்கு எதிரான உணர்வையும், இடதுசாரி மாற்று உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது என்பது மாநாட்டின் முக்கிய கேள்வி.
தங்களது பகுதி மக்களிடையே சாதிய, மதவாத  அடிப்படையில் எழுகிற சிந்தனைகளையும், இயக்கங்களையும் கட்சி எப்படி எதிர்கொண்டது என்று பரிசீலிக்கிற பணியும் மாநாட்டிற்கு உண்டு.
மக்களின் சமுக, பொருளாதார வாழ்வில் அரசு கொள்கைகளால் அவர்கள் பாதிக்கப்பட்டபோது கட்சி எப்படி களத்தில் அவர்களைத் திரட்டியது, உள்ளூர் பிரச்சினைகளுக்கான முன்முயற்சிகள், போராட்டங்கள் என அனைத்தும் மாநாட்டில் விவாதிக்கப்படுகின்றன.
இவற்றை எல்லாம் விவாதித்து, எதிர்கால செயல்பாட்டுக்கு அனைத்து உறுப்பினர்களும் ஏற்கிற முடிவுகள் எடுக்கப்படும்.
வெகு மக்களை திரட்டும் புரட்சிக் கட்சியாக……
கொல்கத்தாவில் கட்சி நடத்திய பிளீனம் எனப்படும் சிறப்பு மாநாட்டில் புரட்சிகர கட்சி என்ற வகையில் வெகுமக்கள் பாதையில் முன்னேற வேண்டுமென முடிவு எடுக்கப்பட்டது. மேற்கண்டவாறு விவாதம் மாநாட்டில் நடைபெறுகிறபோது, வெகுமக்களைத் திரட்டும் பாதையில், புரட்சிக் கட்சி செயல்பட்டிருக்கிறதா என்பதை புரிந்து கொள்ள முடியும்.
கம்யூனிஸ்ட்கள் தங்கள் குறைகளை மூடி மறைப்பதில்லை. மூன்றாண்டுகால செயல்பாட்டில் உள்ள குறைகள் கண்டறியப்பட்டு அவற்றைக் களைவதற்கான திட்டங்கள், வரும் காலங்களில்  புதிய உத்வேகத்தோடும், எழுச்சியோடும் பணியாற்றுவதற்கான வழிகள் ஆகியன அனைத்தையும் மாநாடு கண்டறியும்.
கம்யூனிஸ்ட் அல்லாத இதர கட்சிகளில் இந்த நடைமுறை இல்லை. திமுக, அதிமுக போன்ற கட்சிகளும் உள்ளூர் மக்கள் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள பல வழிகளில் முயற்சிக்கின்றனர். ஆனால் அதற்கான நோக்கம், சுயநலம் சார்ந்தது. பணம், பதவி, அந்தஸ்து  ஆகியவற்றை அடையவும், தேர்தல் ஆதாயம் அடையவும் அவர்கள் மக்களிடம் பணியாற்றுகின்றனர்; மக்களை திசை திருப்புகின்றனர்.
கம்யூனிஸ்ட்களுக்கு முதலாளித்துவ அமைப்பின் சுரண்டல் கொடுமையிலிருந்து மக்கள் விடுதலை அடைய வேண்டும் என்ற நோக்கம் உள்ளது. அது மட்டுமல்லாது, பாட்டாளி வர்க்கங்களே அதிகாரத்திற்கு வர வேண்டுமென்ற புரட்சி இலட்சியமும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு.
இதனால்தான் கட்சி உறுப்பினர் அனைவரும் கிளை மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டுமென்றும் கடந்த கால வேலைகள் பற்றிய நிறை குறைகளை விவாதிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தப்படுகிறது. மாற்று சமுதாயத்தை மக்கள் படைக்கிறார்கள்; ஆனால் மக்களைத் திரட்டி அவர்களை புரட்சிகரமாற்றத்திற்கு தயார் செய்யும் கடமை  ஒவ்வொரு கட்சி உறுப்பினருக்கும் உண்டு. அத்துடன் நடந்த பணிகள் பற்றி விமர்சிக்கும் ஜனநாயக உரிமையும் அவர்களுக்கு உண்டு. இது போன்ற உரிமைகள், கடமைகள் எதுவும் முதலாளித்துவக் கட்சிகளில் இருப்பதில்லை.
கட்சியின் பிளீனம் மாதாமாதம் கிளைக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றும், அவற்றில் உறுப்பினர் கலந்து கொள்வது அவரது அடிப்படைக்  கடமைகளில் ஒன்று என்றும் வலியுறுத்தப்படுகிறது. இதன் உள்ளார்ந்த பொருள் என்ன? முதலாளித்துவ கட்சியின் தலைமைதான் அக்கட்சியில் அதிகாரம் படைத்தது. மாறாக, கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை கூட்டங்களில்  உறுப்பினர் முழுமையாக கலந்து கொளவது என்பதற்கு மேலான நோக்கம் உண்டு.
அந்தப் பகுதி உழைக்கும் மக்களைத் திரட்டுவதற்கு தனது கருத்துக்களை கிளையில் பகிர்ந்து கொள்வதையும், முடிவுகள் எடுப்பதில் தனது பங்களிப்பையும் அவர் உறுதிப்படுத்துகிறார். கம்யூனிஸ்ட் கட்சியில்தான்  உண்மையான ஜனநாயகம் நிலவுகிறது என்பதன் அடையாளமாக  கட்சியின் மாநாட்டு நடைமுறைகள் அமைந்துள்ளன.
மக்கள் மனதை மாற்ற…..
கிளையின் இடையறாத அன்றாடப்பணிகளில் ஒன்று மக்கள் மனதை மாற்றுவதற்கான பிரச்சாரம். முதலாளித்துவ ஊடகப் பிரச்சாரம் ஆளும் வர்க்க கொள்கைகளை நியாயப்படுத்துவதாக அமைந்துள்ளது. அதே போன்று, ஆளும் அரசுகளை விமர்சனம் செய்யும் சக்திகளும் சரியான தேர்வை மக்களுக்கு தெரிவிக்காமல், திசை திருப்ப பிரச்சாரம் செய்கின்றனர்.
மாறாக, வர்க்க ரீதியில் ஒற்றுமை கட்டி புரட்சிகர இலக்கை நோக்கிச் செல்வதற்கு கட்சிக்கிளை மக்களிடம் அன்றாட உரையாடல், பிரசுரங்கள், பத்திரிகை விற்பனை வழியாக பிரச்சாரம் செய்ய வேண்டும். ஒவ்வொரு கிளையும் ஓராண்டு தீக்கதிர் சந்தாவை கிளை மாநாடு நடைபெறுகிறபோது அளிக்க வேண்டும். மார்க்சிஸ்ட் இதழ் இந்த பிரச்சாரத்திற்கு உதவியாக இருக்கிறது. இவை போன்ற செயல்பாடுகளும் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
ஆக, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் மாநாடு என்பது கட்சி வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம்.

திருப்புமுனை மாநாடு பி. ராமச்சந்திரன் (feb 2008)

6வது கட்சி காங்கிரஸ் பற்றி சில விவரங்கள் முந்தைய
கட்டுரைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அந்த
மாநாட்டினுடைய பின்னணியில் இருந்து வந்த ஆழமான அரசியல் பாகுபாடுகள் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன். எந்த அளவிற்கு இந்த வேற்றுமைகள் கட்சியை பாதித்தது அல்லது கட்சி காங்கிரஸ் விவாதங்களை பாதித்தது என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்வை குறிப்பிட விரும்புகிறேன்.
இரண்டு, மூன்று அரசியல் நகல் தீர்மானங்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டபோதிலும், மாநாட்டின் இறுதியில் தீர்மான வடிவில் எந்த முடிவினையும் மாநாடு எடுக்கவில்லை. மாநாட்டில் அரசியல் நிர்ணயிப்புகள், கருத்துகள், நடைமுறை தந்திரங்கள், தத்துவார்த் பிரச்சனைகள் போன்றவற்றில் எல்லாம் பல கருத்துக்கள் மோதின. எந்த தலைவருடைய அல்லது எந்தப் பிரிவினருடைய நகலையோ, நிர்ணயிப்புகளையோ வாக்கெடுப்பு மூலமாக முடிவு செய்ய முடியாத அளவிற்கு கருத்து மோதல்கள் இருந்தன.
சாதாரணமாக, ஒரு கட்சி மாநாட்டில் நிறைவாக வாக்கெடுப்பு மூலம் அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்படும். ஆழமான வேற்றுமைகள் காரணமாக, வாக்கெடுப்பு மூலமாக எந்த நகல் அறிக்கையும் மாநாடு ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு இக்கட்டான நிலை இந்த மாநாட்டில் ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையில் கட்சியில் அனைவரையும் கட்டுப்படுத்தக்கூடிய முடிவுதான் என்ன? என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கிய நிர்ணயிப்புகளை ஆய்ந்து, பொதுச் செயலாளர் தோழர் அஜய்கோஷ் எந்த பிரிவும் மறுக்காத கருத்துக்களை தொகுத்து தொகுப்புரையை வழங்கினார். அந்த தொகுப்புரையில் பல கருத்துக்கள் ஏற்புடையதாக இருந்தன. அதன் காரணமாக, மாநாட்டின் முடிவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படா விட்டாலும், பொதுவாக அஜய்கோஷின் சொற்பொழிவை ஆதாரமாகக் கொண்டு, கட்சிப் பணிகளை செய்வது என்ற ‘சமரசம்’ ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்த விசித்திரமான முடிவானது, உடனடியாக உதவிகரமாக இருந்தபோதிலும், கட்சியிலிருந்த ஆழமான கருத்து வேற்றுமை களை தீர்ப்பதற்கு உதவிடவில்லை. உண்மையைக் கூறப்போனால், அரசியல் குழப்பமும் மேலும் தீவிரமடைந்தது என்றே கூறவேண்டும்.
ஆக, ஆறாவது கட்சி காங்கிரசிற்கு பிறகு, கட்சிக்குள் தென் பட்ட அனைத்து வேற்றுமைகளும் தீவிரமடைந்து உட்கட்சி நிலைமை மிகவும் சிக்கலாகிவிட்டது.
இந்த உட்கட்சி நெருக்கடியானது கட்சி வாழ்க்கையை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் மோசமான நிலைமைகளை ஏற்படுத்தியது. கட்சியின் செயல்பாடும் ஒற்றுமையும் பாதித்தன.
இந்தியாவில் புரட்சிகரமான இயக்கத்தின் பாதை எது என்பதைப் பற்றி கூர்மையான கருத்து வேற்றுமைகள் வளர்ந்தன. ஆளும் வர்க்கத்துடன் அவர்களின் ஆட்சியுடன் சமரசமாக சென்று முன்னேறுவது என்ற ஒரு பாதைக்குதான் தேசிய ஜனநாயக பாதையென்று பெயரிடப்பட்டது. மாறாக, தொழிலாளி வர்க்கத் தலைமையில் மக்கள் ஜனநாயக பாதைதான் அடிப்படையான முன்னேற்றத்திற்கு பாதை என்ற கருத்தும் வலுவாக மோதின.
இதேபோல் பெரு முதலாளித்துவத்தின் தலைமையிலான ஆளும் வர்க்கத்தின்பாலும், அதன் கட்சியின் பாலும் அனுஷ்டிக்க வேண்டிய நடைமுறை தந்திரத்தைப் பற்றியும் ஆழமான வேற்றுமைகள் வளர்ந்து வந்தன.
இது எத்தகைய வடிவங்களில் இக்கருத்து வேற்றுமைகள் தோன்றின என்ற விவரங்களுக்கு இங்கு செல்லவில்லை.
இன்னும் மிகப்பெரிய ஒரு பிரச்சினை கட்சிக்குள் பெரும் சர்ச்சைகளுக்கும் கருத்து வேற்றுமைகளுக்கும் வழிவகுத்தது. இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினை மிகவும் மோசமான சூழ்நிலையை அடைந்து கட்சியின் மொத்த நிலைபாட்டினையே விவாதத்திற்கு இட்டுச் சென்றது. சமாதானமான முறையில் பேச்சுவார்த்தை மூலமாக எல்லைப் பிரச்சினையில் என்ற நிலைபாட்டினை கட்சியின் ஒரு சாரார் ஒருமையாக கடைப்பிடித்த நேரத்தில் எல்லைப் பிரச்சினையை ஆளும் கட்சியின் நிலை பாட்டினை முழுமையாக ஆதரிப்பது என்ற ஒரு கொள்கையை பிற்காலத்தில் வலதுசாரிகள் என்று அறியப்பட்டவர்கள் முன்வைத்தனர். இதுவும், ஒரு பெரும் கருத்து வேற்றுமைக்கு அடிகோலியது.
கட்சியில் தோன்றிய தத்துவார்த்த, அரசியல் நடைமுறை வேற்றுமைகளுக்கு மிகப்பெரிய ஒரு காரமணாக உருவானது. உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் வலுவாக தோன்றி பரவிய தத்துவார்த்த கருத்து வேற்றுமைகளால் உலகம் தழுவிய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையில் கருத்து வேற்றுமைகள் ஆழமாக பரவியதை தீர்ப்பதற்கு கட்சிகளெல்லாம் கூட்டாக, சில முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், நாளடைவில் கருத்து மோதல்கள் பெரிய அளவில் தீவிரமடைந்ததுதான் உண்மை. சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் தோன்றிய கருத்து மோதல்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலும் அணிகளிடமும் பிரபலிக்கத்தான் செய்தன. பொதுவான கருத்து வேற்றுமைகள் மட்டுமின்றி, கம்யூனிஸ்ட் நாடுகளுக்கு இடையிலான உறவுகளும் சீர்குலைந்து விட்ட ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான பல கட்சிகளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடுகளை பொதுவாக ஆதரித்த சில கட்சிகளும் இருந்தது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒற்றுமை பெருமளவில் சிதைந்துபோகும் ஒரு நிலைமையும் இருந்தது.
மூன்றாவது, இந்த வேற்றுமைகளெல்லாம் தீவிரமடைந்து வந்ததின் காரணமாக கட்சியின் செயல் ஒற்றுமையில் தோழமை உணர்வும் படிப்படியாக சிதைந்து வந்தன. பல்வேறு இடங்களிலும், அரங்கங்களிலும் கட்சித் தோழர்கள் ஒற்றுமையின்றி செயல் பட்டது மட்டுமல்ல; தனிப்பிரிவுகளாகவே செயல்பாட்டிலும், நடைமுறை வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும் வகையில் பணி யாற்றினர். சுருங்கக்கூறின் அரசியலைச் சார்ந்த ஆழமான கோஷ்டி களாக, கட்சி சிதறுண்டு போகும் நிலைமையை எட்டி விட்டது.
முரண்பாடுகள் தத்துவப் பிரச்சினைகளோடு நிற்காமல் நடைமுறைப் பிரச்சினைகளிலும் இருந்தன புகுந்தன. ஸ்தாபன செயல்பாடுகளின் தவறுகள் காரணமாகவும், ஒரு கட்சியாக செயல்பட முடியாத அளவிற்கு எதார்த்த நிலைமைகள் உருவெடுத்து விட்டது.
இதைக் கண்டு கவலை அடைந்த கட்சி தலைமையிலும், அணிகளிலும் உள்ள தோழர்கள் நிலைமை சீர்படுத்துவதற்காக இரண்டு முகாம்களுக்கிடையில் பலமுறை பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு தீர்வுகாண்பதற்கான முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்தன.
வெளிநடப்பு
1964இல் மார்ச் – ஏப்ரல் மாத வாக்கில் கடுமையான பல ஸ்தாபன பிரச்சினைகளை, குறிப்பாக, தலைமையின் தவறான பல செயல்களை கண்டிக்கும் வகையில், கட்சியின் இடதுசாரி பிரிவுத் தோழர்கள் மிகவும் ஆழமான விவாதங்களை தேசிய கவுன்சில் கூட்டத்தில் எழுப்பினர். அவற்றின் மீது சூடான விவாதங்கள் நடைபெற்றன. தலைமையின் கட்சி விரோத போக்குகளின் விவாதத்திற்கு கொண்டு வந்தபோது, தலைமையிலிருப்பவர்கள் முற்றிலும் உட்கட்சி ஜனநாயகத்திற்கு புறம்பான முறையில் நடந்து கொண்டதினால், நிலைமை கடுமையாகி தேசிய கவுன்சிலில், ‘இடதுசாரி கருத்துக் களை’ ஆதரிக்கும் 32 தோழர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். (1964 ஏப்ரல் 14 அன்று)
இதைத் தொடர்ந்து கட்சி உடைந்து போகும் ஒரு சூழ்நிலையை தவிர்ப்பதற்கான பெருமளவில் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. ஆயினும், அவை தோல்வியடைந்தன. ஏறத்தாழ கட்சி அமைப்புகள் இரண்டு பிரிவுகளாக செயல்படும் நிலையும் உருவாயிற்று.
இத்தகைய பின்னணியில் வலதுசாரி சந்தர்ப்பவாத அரசிய லையும், நடைமுறையையும், பின்பற்றி வந்த பிரிவினர் எல்லா மட்டங்களிலும் போட்டி அமைப்புகளை ஏற்படுத்தி ஒரு முழு பிளவிற்கு கட்சியை இட்டுச் சென்றனர்.
‘இடதுசாரி’ கருத்துக்களை முன்வைத்த தோழர்கள் முன்வைத்த சமரச, ஒற்றுமைக்கான யோசனைகள் நிராகரிக்கப் பட்டு, கட்சி முழுமையான அளவில் பிளவுபடும் நிலைமை எதார்த்தமாகிவிட்டது.
இந்த பின்னணியில் தேசிய கவுன்சிலில் இருந்து வெளிநடப்பு செய்த 32 தோழர்கள் கட்சியை காப்பாற்றும் நோக்கத்துடன் புரட்சி இயக்கத்திற்கு விசுவாசமான தோழர்களின் கருத்துக்களை கேட்டறி வதற்கும், நிலைமைக்கேற்ற முடிவுகளை மேற்கொள்வதற்குமாக இந்தியா முழுவதும் உள்ள கட்சியின் முக்கிய தலைவர்களையும், பொறுப்பாளர்களையும் ஒரு அகில இந்திய கூட்டத்திற்கு அழைத்தனர். இக்கூட்டம் ஆந்திராவில் உள்ள தெனாலி என்னும் இடத்தில் 1964இல் ஜூலை 7லிருந்து 11ஆம் தேதி வரை நடைபெற்றது. நாடுமுழுவதும் இருந்து 146 முக்கியத் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். பிற்காலத்தில், சி.பி.எம்.இன் தலைவர்களாக பிரபலமான தலைவர்கள் அனைவரும் இம் மாநாட்டில் பங்கேற்றனர்.
கம்யூனிஸ்ட் இயக்கத்தை அதன் புரட்சிகரமான தன்மையுடன் கட்டி வளர்த்து புரட்சி சக்திகளை ஆக்கமும் – ஊக்கமும் அளிக்கும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று தெனாலி மாநாடு அறைகூவல் விடுத்தது.
கடைசி நிமிடத்தில் கூட, கம்யூனிஸ்ட் ஒற்றுமையை மீண்டும் ஏற்படுத்த பல ஆக்கப்பூர்வமான யோசனைகளையும் இம்மாநாடு முன்வைத்தது. ஆயினும், வலதுசாரித் தலைவர்கள் அவற்றை முற்றிலுமாக நிராகரித்தனர். கட்சியை அதனுடைய முழு பலத்துடனும், புரட்சிகரமான உள்ளடக்கத்துடனும் புனரமைத்து முன்னேற வேண்டுமென்று தெனாலி மாநாடு இறுதியில் முடிவு செய்தது.
7வது கட்சி காங்கிரஸ்
தெனாலி மாநாட்டின் வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த அறை கூவலின் அடிப்படையில் 1964 அக்டோபர் 31ஆம் தேதியிலிருந்து நவம்பர் 7 வரை கட்சியின் 7வது காங்கிரஸ் கொல்கத்தாவில் நடைபெற்றது. தெனாலி மாநாட்டில் கல்கத்தா மாநாட்டின் ஒரு முக்கியத் தீர்மானம் திருத்தல்வாதம் எவ்வாறு கட்சியின் புரட்சிகர மான தன்மையை இழக்கச் செய்தது என்பதை சுட்டிக்காட்டி கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பதாகையை உயர்த்திப் பிடிக்க இந்த மாநாடு உறுதி பூண்டது.
அதன்படி, கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரினை பயன்படுத்து வதற்கும் அதன் உண்மையான உள்ளடக்கத்தை உயர்த்திப் பிடிப்ப தற்குமான மாபெரும் புரட்சிகரமான கடமையை நிறைவேற்று வதற்கு கல்கத்தாவில் நடைபெற்ற மாநாடு, கட்சியின் 7வது காங்கிரசாக ஏற்றுக் கொள்வது என்று பறைசாற்றியது.
இவ்வாறு, கம்யூனிஸ்ட் இயக்கம் தோன்றிய காலத்திலிருந்து வழி, வழியாக வந்த உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி புதிய பொலிவுடனும், கருத்தொற்றுமையுடனும் செயல்பட தொடங் கியது 7வது மாநாட்டிலிருந்து. (1964 அக்டோபர் 31 தேதியிலிருந்து நவம்பர் 7ஆம் தேதி வரை கொல்கத்தாவில் நடந்தேறியது.)
அடக்குமுறையுடன் துவக்கம்
7வது மாநாடு கூடியதற்கு இரண்டு நாள் முன்னதாக காங்கிரஸ் ஆட்சியாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான ஒரு பெரிய தாக்குதலைத் தொடுத்தது என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. மேற்குவங்காளத்தில், மாநிலத் தலைவர்களில் பல முக்கிய மானவர்கள் இரவோடு, இரவாக ஆட்சியாளர்களால், கைது செய்யப்பட்டனர். பிரமோத்தாஸ் குப்தா, முசாபர் அகமது போன்ற புரட்சி இயக்கத்தின் முன்னணி தலைவர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்தான் அக்டோபர் 31ஆம் தேதி மாநாடு துவங்கியது. (பிற்காலத்தில், ஏறத்தாழ ஆறு, ஏழு ஆண்டுகள் வரை கம்யூனிஸ்ட் கட்சி சந்திக்க வேண்டியிருந்த மூர்க்கத்தனமான தாக்குதலின் தொடக்கமாகவே இது அமைந்தது.) அந்த முறையில் அது ஒரு தெளிவானதொரு எச்சரிக்கையாகவும் இருந்தது. தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்ட நிலையில்கூட மாநாட்டின் பணிகளை முறையே நடந்தேறின.
கட்சி திட்டம்
இம்மாநாடு, ஒரு தீர்மானத்தின்படி —- 7வது காங்கிரசின் அறைகூவல் என்ற தீர்மானத்தின் வாயிலாக, இந்த மாநாட்டிலிருந்து உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியாகவும் தற்சமயம் புனரமைக்கப் பட்ட கட்சியாகும் என உரக்க பிரகடனம் செய்தது.
இந்த மாநாட்டில் மொத்தம், இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட்டுகளாக பதிவு செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தினர்களில் 60 சதவீதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர் என்பது மேற்குறிப்பிட்ட பிரகடனத்திற்கு வலுவை அளித்து. (422 பிரதிநிதிகள் 100442 உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இந்த எண்ணிக்கையானது மொத்தம் கட்சி உறுப்பினர்களில் 60 சதவிகிதத்தில் பிரதிநிதிகளாக இருந்தனர்.)
மாநாட்டில் அடக்குமுறை கண்டனத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. எல்லாவிதமான அடக்குமுறைகளையும் உறுதியுடன் சந்திப்பதற்கு கம்யூனிஸ்ட்டுகள் ஆயத்தமாக இருப்பதை மாநாட்டின் தீர்மானம் உறுதிப்படுத்தியது.
அத்துடன், கட்சிக்கு மூலாதாரமாக இருக்க வேண்டிய “கட்சித் திட்டத்தின்” நகல் மீதான விவாதத்தை முக்கிய கடமையாக மாநாடு மேற்கொண்டது. கட்சியின் இந்தியாவின் நிலைமைக்கேற்ப ஒரு திட்டம் வேண்டுமென்ற எண்ணம் துவக்கத்திலிருந்து வலுவாக பரவியிருந்தது. ஆயினும், ஆழமான கருத்து வேற்றுமைகள் காரணமாக இதை நிறைவு செய்ய முடியவில்லை.
கருத்தாழமிக்க சர்ச்சைகள் மூலம் இறுதியில் 7வது காங்கிரஸ் கட்சியின் திட்டத்தினை ஏற்றுக் கொண்டதானது கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஒரு தத்துவார்த்த – அரசியல் திருப்புமுனையை குறிப்பிட்டது என்றே கூறவேண்டும்.
அத்துடன், 1950 டிசம்பரில் கொல்த்தாவில் நடைபெற்ற இரகசிய கட்சி மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘கட்சியின் கொள்கை அறிக்கை’ என்ற ஆவணத்தையும் மாநாடு அங்கீகாரம் செய்தது.
இம்மாநாட்டில் அடிப்படை விஷயங்கள் மட்டுமின்றி நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்த உடனடி அரசியலைப் பார்வை பற்றி ஒரு முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடிப்படையான அரசியல் மாற்றங்களுக்காக அயராது பாடுபடும் அதே நேரத்தில், நடைமுறை அரசியலில் கம்யூனிஸ்ட் இயக்கம் மிகத் தீவிரமாக ஈடுபட வேண்டுமென்ற அறைகூவல் மிகவும் முக்கியமாக இருந்தது. உடனடியாக சந்திக்க வேண்டிய கேரள மாநில சட்டமன்றத் தேர்தலையும் கட்சி கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. நடைமுறை தந்திரங்களைப்போல் கட்சியின் கடமைகள் என்ற தீர்மான வாயில்களாக கட்சிக்கு வழிகாட்டியது.
இந்திய அரசியலில், காங்கிரஸ் கட்சியின் எதேச்சதிகார பெரு முதலாளி வர்க்க அரசியலை எதிர்த்து அனைத்து இடதுசாரி ஜனநாயக சக்திகள் ஒன்றுபடுத்தும் வகையில் கட்சி முன்னணி பாத்திரத்தை வகுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியது. இத்தீர்மானமானது அடுத்து சில வருடங்களில் இந்திய அரசியலில் இடதுசாரி ஜனநாயக சக்திகளின் வேகமான முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது என்பதே சந்தகமின்றி கூறலாம்.
மாநாடு துவங்கியவுடன் ஆளும் வர்க்கம் தொடுத்த கொடூரமான அடுக்குமுறையை சந்தித்து உறுதியாக கம்யூனிஸ்ட் கட்சி முன்னேறியது. இந்திய அரசியலில் கட்சியின், கட்சித் தோழர்களின், ஆதரவாளர்களின் தியாக முத்திரை கல்கத்தா மாநாட்டிற்கு பின் ஆழமாக பதித்ததன் விளைவாக சி.பி.எம். என்ற நாமம் நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் பரவி இன்று சி.பி.எம். ஒரு முக்கிய அரசியல் சக்தியாக விளங்குகிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இந்த முன்னேற்றத்திற்கெல்லாம் தொடர்ந்து நடைபெற்ற கட்சி காங்கிரசுகளும், அவற்றின் மூலமாக வெளிப்பட்ட கருத்தொற்றுமையும், ஸ்தாபன உறுதிப்பாடும் பெருமளவில் உதவி செய்தது 7வது கட்சி காங்கிரசுக்கு பின் கட்சி மார்க்சிசத்தினுடைய பாதையில் பெரிய அளவில் தத்துவார்த்த – நடைமுறை – பணிகளை செய்து முன்னேறியுள்ளது. 8வது காங்கிரசிலிருந்து 19வது காங்கிரஸ் வரை உள்ள நீண்ட காலகட்டத்தில் நடந்த மாநாடுகளைப் பற்றி நாம் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய புரிதல் கட்சியின் கருத்தொற்று மையையும், போராட்ட குணத்தையும் வலுப்படுத்துவதற்கான ஒரு பெரிய ஆயுதமாகும் என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் (1)

 

(முற்போக்காளர்களும்,பொதுவான வாசகர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தை ஆழமாக அறிந்து கொள்வதற்கு ஏற்றவாறு பல கோணங்களில் விளக்குவதற்காக இந்தத் தொடர் துவங்கப்படுகிறது. -ஆசிரியர் குழு )

ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு “திட்டம்” என்று அழைக்கப்படும்  ஆவணம் மிக அவசியமானது.திட்டம் இல்லாமல் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி இயங்க முடியாது.(இந்தியாவில் துவக்க காலங்களில் திட்டம் இல்லாமல் கம்யூனிஸ்ட் கட்சி இயங்கியது உண்மையே.ஆனால் அந்த சூழல் வித்தியாசமானது.) கம்யூனிஸ்ட் கட்சி தான் அடைய வேண்டிய தொலைநோக்கு இலக்கு குறித்து தனது திட்டத்தில் விளக்குகிறது.எனவே கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்களில் அடிப்படையானது கட்சித் திட்டம்.

பொதுவாக தங்களது இலக்கு அல்லது இலட்சியம் பற்றி பல கட்சிகள் அவ்வப்போது பேசுவதுண்டு.”சமுத்துவ சமுதாயம் அமைப்பதே எங்கள் குறிக்கோள் என்று கடந்த காலங்களில் அதிமுக,திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் சொல்வதுண்டு.சமத்துவம்,சமநீதி,என்றெல்லாம் அவ்வபோது தங்களுக்கு தோன்றுவதை பல கட்சிகள் கோஷங்களாக முழங்குவார்கள்.தங்களது சுய நலத்திற்காகவும், வாக்கு வங்கி அரசியலுக்காகவும் இது போன்ற கவர்ச்சிகரமான கோஷங்களை அவர்கள் எழுப்புவார்கள்.அவர்களது பேச்சுக்கும், செயல்பாடுகளுக்கும் தொடர்பு இருக்காது.ஆனால்,”திட்டம்”என்று ஏற்றுக் கொண்டதை நடைமுறை  வாழ்க்கையில் சாதித்திட இடைவிடாது முயற்சிக்கும் கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது.

திட்டம் – கட்சியின் உயிர்நாடி

கட்சி திட்டம் உருவாக்குவதில் ரஷிய அனுபவத்தை இங்கு குறிப்பிடுவது உதவியாக இருக்கும்.1898-ஆம் ஆண்டு ரஷிய சமூக ஜனநாயக கட்சி எனும் பெயரில் ரஷியாவில் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படத்  துவங்கியது.ஒரு திட்டம் கட்சிக்கு தேவை என்று லெனின் கருதினார்.ஆனால் பலர் இக்கருத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை.கட்சித் திட்டம் உருவாக்குவதற்கான காலம் இன்னும் கனியவில்லை என்றும்,தற்போது உள்ளூர் அமைப்புக்களை உருவாக்குவதும் கட்சி கொள்கைகள் மற்றும் தத்துவம் குறித்த எழுத்துக்களை அதிக அளவில் உருவாக்கி, மக்களிடையே பிரச்சாரம் செய்வதும்தான் முக்கிய பணி  என்று பலர் வாதிட்டனர்.

மனம் போன போக்கில் சில செயல்பாடுகளில் ஈடுபடுவது சரியானதல்ல என்றும் ,ஒரு திட்டம் அடிப்படையில் கட்சி ஸ்தாபனத்தை ஒன்றுபடுத்த வேண்டும் என்றும் லெனின் அழுத்தமாக  வாதிட்டார்.நமது கிளர்ச்சி நடவடிக்கைகளுக்கு ஒருங்கிணைப்பு தேவை;அவற்றை விரிவாக்கவும்,வலுவாக்கிடவும் வேண்டும்;தனித்தனியான,அவ்வப்போது எழும் அன்றாட கோரிக்கைகளுக்காக மட்டும் துண்டுதுண்டான இயக்கங்களை நடத்துவதற்கு பதிலாக, சமூக ஜனநாயகக் கட்சியின் அடிப்படை இலட்சியங்களுக்கான ஒன்றிணைந்த இயக்கம் என்ற உயரத்திற்கு கட்சி செல்ல வேண்டும்;அதற்கு,கட்சித் திட்டம் தேவை என்பதனை லெனின் வலியுறுத்தினார்.

1899 -ஆம் ஆண்டு “கட்சித் திட்டத்தின் நகல் என்ற கட்டுரையில் வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளர்களிடமும் அறிவுஜீவிகளிடமும்,கட்சியின் தொடர்புகளை தரமிக்கதாக உயர்த்தி,கட்சியின் செயல்பாடுகளை அதிகரித்திட, ஒரு திட்டம் தேவை  என்று வலியுறுத்தினார்,லெனின்.அத்துடன்,கட்சித் திட்டம் கொண்டிருக்க வேண்டிய அம்சங்கள்   என்ன என்பதை அக்கட்டுரையில் லெனின் விளக்கினார். லெனின் சிறையில் இருந்த 1895-96 -ஆம் ஆண்டுகளிலிலிருந்தே  கட்சித் திட்டம் தொடர்பான பிரச்னைகளை ஆய்வு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இதனையொட்டிய  அவரது எழுத்துக்கள் கட்சித் திட்டம் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் உயிர்நாடியான   ஒன்று என்பதை உணர்த்துகிறது.

புரட்சி எனும் கருத்தாக்கம்

கட்சி திட்டம் புரட்சியை நோக்கமாகக் கொண்டது.புரட்சி என்பதற்கு அரிஸ்டாட்டில் துவங்கி ஏராளமான அறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.வெறும் ஆட்சி மாற்றங்களை புரட்சியாகக் கருத முடியாது.மனித வரலாற்றில் வேறுபட்ட சித்தாந்தங்கள் அடிப்படையிலும் வன்முறை வழிமுறையிலும் பல அடிப்படையான மாறுதல்களை பல புரட்சிகள் நிகழ்த்தியுள்ளன.சமுகம்,பொருளாதாரம்,அரசியல்,பண்பாடு என பல துறைகளில் ஆழமான மாற்றங்களை புரட்சிகள் உருவாக்கியுள்ளன.

அடிப்படையான அதிகார மாற்றம்,ஆட்சி அமைப்பு முறையிலான மாற்றம் உள்ளிட்ட பல மாற்றங்கள் உருவாக்கி,முற்றிலும் புதிய பாதையில் நாட்டைக் கொண்டு செல்வதுதான் புரட்சியாக கருதப்படும்.அது வரை ஆண்டு கொண்டிருந்த அதிகார கூட்டத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து இந்த மாற்றங்களை கொண்டு வருகின்றனர்.எனவே மக்களின் பங்குதான் புரட்சியில் முக்கியமானது.

கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் குறிப்பிட்ட நாட்டில் அடைய வேண்டிய புரட்சி இலக்கினை தெளிவாக வரையறுக்கிறது.உழைக்கும் வர்க்கங்களின் உழைப்பைச் சுரண்டி தங்களது சொத்துடைமை சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருக்கும் சொத்துடைமை வர்க்கங்கலின் சமூக அரசியல் மேலாதிக்கத்திற்கு புரட்சி முற்றுப்புள்ளி வைக்கிறது.   முதலாளிகள்,நிலப்பிரபுக்கள்,அந்நிய நாட்டு மூலதன வர்க்கங்களின் கருவியாக விளங்கும்  அரசு அதிகாரத்தினை வீழ்த்தி, தொழிலாளி விவாசாயி மற்றும் உழைக்கும் வர்க்கங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதனை  புரட்சி சாதிக்கிறது.

இதுதான்  தொலைநோக்கு  இலக்கு. இந்த அதிகார மாற்றமே உண்மையான புரட்சி.இந்த புரட்சியை சாதிக்க,உழைக்கும் வர்க்கங்களை திரட்டுவதற்கு கட்சி மேற்கொள்ளும் வியூகம் கட்சித் திட்டத்தில் விளக்கமாக விரித்துக் கூறப்படுகிறது.தற்போதைய அரசு, அதன் வர்க்க குணம்,அதன் பலம்,பலவீனம்  குறித்து கட்சித் திட்டம் விளக்குகிறது. புரட்சியில் தொழிலாளி வர்க்கம் வகிக்கும் பங்கு, தொழிலாளி வர்க்கத்துடன்  விவசாயப்  பிரிவினர் இணைந்து உருவாக்கும் வர்க்கக் கூட்டணி,புரட்சியில் கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம் போன்ற பல மிக அடிப்படையான அம்சங்களை கொண்டதாக கட்சித் திட்டம் அமைகிறது.இந்த இலக்கணங்கள்  அனைத்தையும் கொண்டதாக மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் அமைந்துள்ளது. புரட்சி இலக்கினை எட்டும் காலம் வரை இது நீடிக்கக்கூடியது.

மார்க்சிஸ்ட் கட்சியின் கட்சியின் திட்டம்

இந்திய விடுதலைப் போராட்ட காலத்திலிருந்தே சோசலிச இலட்சியம் பலரது சிந்தனையை ஈர்த்தது. நிலம், தொழில் உள்ளிட்ட உற்பத்திக்கான ஆதாரங்கள் அனைத்தும் தனியுடைமையாக இருக்கும்  நிலை மாறிடவும்,ஒரு சிறு கூட்டம் சொத்துகுவியல்,, மூலதனக் குவியலை இடையறாது மேற்கொள்ள ,அரசு துணை நிற்க்கும் நிலை, மாறிட வேண்டுமென்பதும்  அன்றைய சோஷலிஸக் கனவாக இருந்தது. சோசலிசம் மலருவதற்கான முக்கிய கட்டமாக மக்கள் ஜனநாயக அரசு அமைய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் கூறுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்),1964-ஆம் ஆண்டு தனது திட்டத்தை உருவாக்கி உலகுக்கு அறிவித்தது.புதிய சூழலுக்கு ஏற்ப தனது திட்டத்தை 2002-ஆம் ஆண்டு மேம்படுத்தியது.

மார்க்சிஸ்ட் கட்சியின் கட்சியின் திட்டம் தனது இலக்கைப் பற்றி கீழ்க்கண்டவாறு வரையறுத்துள்ளது.

“8.1 மக்கள் ஜனநாயகத்தை நிறுவுவதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)தனது புரட்சிகரத் திட்டத்தை இந்திய மக்கள் முன் வைக்கிறது. சோசலிசத்திற்கும்,சுரண்டலற்ற சமூகத்தை நோக்கி முன்னேறுவதற்கும் மக்கள் ஜனநாயகப் புரட்சியானது வழிவகுக்கும். இந்திய மக்களை விடுதலை செய்யும் இத்தகைய புரட்சிக்கு விவசாயிகளுடன் கூட்டணி அமைத்து தொழிலாளி வர்க்கம் தலைமை தாங்கும்.உழைக்கும் மக்களின் முன்னணிப் படையான கம்யூனிஸ்ட் கட்சியானது,ஏகாதிபத்தியம், ஏகபோக முதலாளித் துவம், நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றிற்கு எதிராக நடத்தப்படும் போர்க்குணமிக்க போராட்டங்களுக்கு தலைமைதாங்க வேண்டி யுள்ளது.மார்க்சிய – லெனினியக் கோட்பாடுகளை நமது நாட்டில் நிலவும் நிலைமைகளுக்கு ஏற்ப திட்டவட்டமான வகையில் பயன்படுத்துவதன்மூலம் அரசியல், தத்துவார்த்த,பொருளாதார, சமூக, பண்பாடு என்கிற அனைத்து முனைகளிலும் நாம் வெற்றிகாணும்வரை நீண்ட நெடிய போராட்டங்களைக் கட்சி நடத்தவேண்டியுள்ளது.”

தெளிவான இந்த இலட்சியத்தோடு மார்க்சிஸ்ட் கட்சி கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றது.

ஆழமான பொருள் பொதிந்த சொற்றொடர்கள் இழையோடும் ஆவணம் இது. கருத்துச்செறிவு என்பதற்கான இலக்கணமாகத் திகழும் சிறு நூல் இது.இதனை ஒருமுறை வாசித்தால் போதுமானதல்ல. பன்முறை வாசிப்பது அவசியம். ஏனென்றால், அரை நூற்றாண்டு மக்கள் போராட்டங்களில் கிடைத்த பழுத்த அனுபவங்கள்,  மார்க்சியத்தில் தேர்ச்சி பெற்ற மாமேதைகளின் கனல் தெறித்த உட்கட்சி விவாதங்களில் வந்தடைந்த நிர்ணயிப்புக்கள் ஆகியன அனைத்தும் உள்ளடங்கிய நூல் இது. பல மணி நேரங்கள் இந்நூலோடு இணைந்திருப்பது புரட்சி இலட்சியத்தின் மீதான நமது உள்ள உறுதியை வலுப்படுத்தும்.

(தொடரும்)

கொல்கத்தா ப்ளீனம் (சிறப்பு மாநாடு) தீர்மானம் முழுமை

கொல்கத்தா, டிசம்பர் 27-31, 2015

21வது கட்சி காங்கிரசின் முடிவின் படி நடைபெற்ற ஸ்தாபனம் குறித்த பிளீனம்:

கீழ்க்கண்டவற்றை நடத்திடத் தீர்மானிக்கிறது:

தற்போதுள்ள சவால்களை சந்திக்கும் தன்மையுடன் கட்சி ஸ்தாபன செயல்திறன்களை வலுப்படுத்தி, முறைப்படுத்துவது; இந்திய மக்கள் மத்தியில், மக்கள் ஜனநாயக அணியின் முன்னோடியான இடதுஜனநாயக அணியைக் கட்டுவதற்கு சாதகமாக வர்க்க சமன்பாட்டை மாற்றும் நோக்கத்துடன் உருவாக்கப் பட்ட அரசியல் நடைமுறை உத்திக்கு இசைந்தாற் போல், பிரம்மாண்டமான வெகுஜன போராட்டங்களைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம், கட்சியின் சொந்த பலத்தை அதிகரிப்பது; இதன் மூலம் மக்கள் ஜனநாயக புரட்சி என்ற இலக்கை நோக்கி முன்னேறுவது

கீழ்க்கண்டவற்றை அடிக்கோடிட்டு காட்டுகிறது:

மேற்கூறிய புரட்சிகர கடமைகளை நிறைவேற்றி, அனைத்து சுரண்டப்படும் வர்க்கங்களையும் அணி திரட்டும் தொழிலாளி வர்க்க அரசியல் கட்சியாக மேலெழ அவசியமான ஸ்தாபன திறன்களைப் பெருமளவில் கண்டிப்பாக வளர்த்திட வேண்டும்.

  • ஏனெனில் முதலாளித்துவத்தின் கீழ் எவ்வளவு சீர்திருத்தங்கள் செய்தாலும் அதிகரிக்கும் சுரண்டலிலிருந்து மக்களை விடுவிக்க முடியாது என்பதையே உலக பொருளாதார நெருக்கடியின் யதார்த்த சூழல் காட்டுகிறது. சோஷலிசம் என்கிற அரசியல் மாற்றின் மூலமே இது சாத்தியம்
  • ஏனெனில் மக்களின் உள்ளார்ந்த திறமைகளை அவர்களை உணர செய்து, ஒரு மேம்பட்ட இந்தியாவை அதன் அடிப்படையில் உருவாக்க வல்ல மாற்றுக் கொள்கையைத் தம் வசம் வைத்திருக்கும் அரசியல் கட்சியாக நாம் இருக்கிறோம்.
  • ஏனெனில் இந்தியாவின் இளைஞர் சமூகத்துக்கு ஒரு சிறந்த எதிர்காலம் குறித்த தீர்க்கமான நோக்கை வழங்குகிற அரசியல் கட்சி நாம். அவர்களுக்குத் தரமான கல்வி, ஆரோக்கியம், வேலை வாய்ப்பு அளிப்பதற்காக நமது நாட்டின் வளங்களைப் பயன்படுத்தும் மாற்றுப்பாதையை முன்வைக்கும் கட்சியாக நாம் இருக்கிறோம்.
  • ஏனெனில் வெறி பிடித்த, சகிப்புத் தன்மையற்ற பாசிஸ இந்து ராஜ்யத்தை திணிக்க முற்படும் ஆர்.எஸ்.எஸ்./பா.ஜ.க.வின் திட்டங்களை முறியடித்து, மத அடிப்படையில் மக்களைக் கூறு போடும் முயற்சிகளைக் கூர்மை படுத்துவதை எதிர்த்து, பன்முகக் கலாச்சாரம், மொழி, மதம், இனங்களைப் பின்பற்றும் மக்களின் ஒற்றுமைக்காக வாதாடுகிற, போராடுகிற நிலை மாறாத அரசியல் சக்தியாக நாம் இருக்கிறோம்.
  • ஏனெனில் அனைத்து வித அடிப்படைவாதம், பயங்கரவாதத்தை உறுதியுடன் எதிர்க்கும் கட்சியாக நாம் இருக்கிறோம். பெரும்பான்மை மதவாதமும், சிறுபான்மை அடிப்படைவாதமும் ஒன்றை ஒன்று வலுப்படுத்துகின்றன.
  • ஏனெனில், சாதிய அடிப்படையிலான தீண்டாமை, அனைத்து வித பாகுபாடுகள் மற்றும் பல வகை சமூக ஒடுக்குமுறைகளை சமரசமின்றி எதிர்க்கும் கட்சியாக நாம் இருக்கிறோம்.
  • ஊழல் மற்றும் தார்மீக சீரழிவுகளை எதிர்த்துப் போராடும் மிக உயர்ந்த அரசியல் நெறிகளைத் தடுமாற்றமின்றி உயர்த்திப் பிடிக்கும் கட்சியாக நாம் இருக்கிறோம்.

 

எத்தகைய திட்டவட்ட சூழலில் இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதைக் கீழ்க்கண்ட விதத்தில் கணக்கில் எடுக்கிறது:

  • சோவியத் ஒன்றியமும், கிழக்கு ஐரோப்பிய சோஷலிச ஆட்சி அமைப்புகளும் சிதறுண்டு போன நிலையில், சர்வ தேச அரசியல் சக்திகளின் சேர்க்கை ஏகாதிபத்தியத்துக்கு சாதகமாக மாறிவிட்ட பாதகமான சூழ்நிலை
  • சர்வதேச நிதி மூலதனத்தின் தலைமையில் ஏகாதிபத்திய உலகமயத்தை கெட்டிப்படுத்த நடந்து கொண்டிருக்கிற முயற்சிகள்
  • இதனுடன் இணைந்த நடவடிக்கையாக மக்களை, குறிப்பாக வளர்ந்து வரும் சுரண்டப்படும் வர்க்கங்களை அரசியலற்றதாக ஆக்குவதற்காக அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு, சுற்றுச்சூழல் என்று அனைத்து தளங்களிலும் முன்னெடுக்கப் படும் கம்யூனிச எதிர்ப்பு, பிற்போக்கு சித்தாந்த தாக்குதல்
  • பல்வேறு நாடுகளிலும் இதற்கு எதிராக நடக்கும் மக்கள் போராட்டங்கள், ஆனாலும் மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக வர்க்க ரீதியான தாக்குதலை எழுப்பி, சோஷலிச அரசியல் மாற்றை முன்னிருத்தும் நிலை எட்டாத சூழல்
  • இந்திய ஆளும் வர்க்கம் நவீன தாராளமயத்தைத் தழுவி, இந்தியாவை ஏகாதிபத்தியத்தின் கீழ்நிலை கூட்டாளியாக ஆக்குவதற்கு எடுக்கும் முயற்சிகள்
  • இவற்றின் காரணமாக சமூகத்தில் உருவான கட்டமைப்பு மாற்றங்களானது வேறுபட்ட வர்க்கங்களின் மீது ஏற்படுத்தும் வெவ்வேறான தாக்கங்கள்; அவற்றை எதிர்கொள்ளத் தேவையான வர்க்க போராட்டங்களைக் கூர்மைப்படுத்த நமது ஸ்தாபன செயல்முறையில் மாற்றங்கள் நிகழ வேண்டிய சூழல்
  • மத்திய அரசைக் கைப்பற்றி அரசு அதிகாரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் வகுப்புவாத சக்திகள் இந்திய அரசியல் அமைப்பின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளத்தைத் தகர்த்து, அந்த இடத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்தியலான இந்து ராஜ்யத்தை நிறுவ எடுக்கும் முயற்சிகள்
  • கடும் நவீன தாராளமய நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றி, இந்திய மக்கள் மீதான சுரண்டலை தீவிரப்படுத்துவதுடன், வெறி பிடித்த வகுப்புவாதம், அதிக அளவிலான சர்வாதிகாரம் கடைப்பிடிக்கப் படும் சூழல்
  • நமது வலுவான தளங்கள் மீது, குறிப்பாக மேற்கு வங்கத்தின் மீது வலதுசாரி பிற்போக்கு சக்திகள் ஒன்று சேர்ந்து நடத்தும் திட்டமிட்ட தாக்குதல்கள், அரசியல் பயங்கரவாதம், அச்சுறுத்தல் நடவடிக்கைகள்; இவற்றை முறியடித்து மீண்டெழும் வகையில் நமது ஸ்தாபனத்தை வலுப்படுத்தும் தேவை உள்ள நிலை
  • நமது ஸ்தாபன பலவீனங்களை சரி செய்ய, குறிப்பாக கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளில் ஏற்பட்டுள்ள சரிவு/தேக்கம், ஏற்றத்தாழ்வான உறுப்பினர் கலவை, தேர்தல் பலத்தில் ஏற்பட்டுள்ள கூர்மையான வீழ்ச்சியை சரி செய்ய வேண்டிய அவசர தேவை

1978ல் சால்கியா பிளீனம் நடந்த போது, கட்சி தனது அரசியல் செல்வாக்கில் ஏறுமுகமாக இருந்தது. ஆனால் தற்போது, அரசியல் செல்வாக்கு வீழ்ச்சி அடைந்துள்ள மோசமான சூழலில் இருக்கிறோம். இத்தகைய சூழலில்,

அவசரமாகத் தேவைப்படுவது:

  • மாஸ் லைனைக் கடைப்பிடித்து நமது சொந்த பலத்தையும், தலையீடு செய்யும் திறனையும் துரிதமாக அதிகரிப்பது; இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்தி இடது ஜனநாயக அணியைக் கட்டுவது; இதனைத் தேர்தல் அணியாக மட்டுமின்றி, பிற்போக்கான ஆளும் வர்க்கங்களைத் தனிமைப்படுத்தி, அரசியல் பொருளாதார மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய சக்திகளின் போராட்ட அணியாக உருவாக்குவது
  • ஒற்றுமை-போராட்டம் என்கிற இரட்டை கடமைகளை நிறைவேற்றும் நோக்குடன் ஐக்கிய முன்னணி உத்தியைத் திறமையாக செயல்படுத்துவது; இதன் மூலம் முதலாளித்துவ கட்சிகளது செல்வாக்கின் பின்னுள்ள சுரண்டப்படும் வர்க்கப் பகுதிகளை அணுக வகை செய்யும் விதத்தில் கூட்டு இயக்கங்களை உருவாக்குவது
  • அரசியல் சூழலில் உருவாகும் துரித மாற்றங்களை எதிர்கொள்ள, அரசியல் நடைமுறை உத்திக்கு ஏற்ற விதத்தில் நெகிழ்வான உத்தியைக் கடைப்பிடிப்பது
  • சமூக இயக்கங்கள், மக்கள் திரட்டல்கள், பிரச்னை அடிப்படையிலான இயக்கங்களுடன் கூட்டு மேடைகளை நிறுவுவது
  • இடது ஜனநாயக அணியைக் கட்டுவது என்பதை முதன்மை இடத்தில் வைத்து, அதற்குப் பொருந்துவதாகத் தேர்தல் உத்தியை உருவாக்குவது
  • கீழ்க்கண்ட அடிப்படையில் வர்க்க வெகுஜன போராட்டங்களை வலுப்படுத்துவது:
  • நிலப்பிரபு–கிராமப்புற பணக்காரர் அணி சேர்க்கைக்கு எதிராக விவசாய தொழிலாளிகள், ஏழை விவசாயிகள், நடுத்தர விவசாயிகள், விவசாயம் அல்லாத இதர துறைகளில் உள்ள கிராமப்புற தொழிலாளர்கள், கை வினைஞர்கள், இதர கிராமப்புற ஏழை பிரிவினரை இணைத்த பரந்த அணியை அமைப்பது
  • முக்கிய மற்றும் கேந்திர தொழிற்சாலைகளிலுள்ள தொழிலாளர்களைத் திரட்டுவது; அமைப்பு சார் மற்றும் அமைப்பு சாரா துறைகளில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களை அணி திரட்டுவது; நமது தொழிற்சங்கங்கள், இளைஞர், பெண்கள் அமைப்புகள் ஒருங்கிணைந்து பகுதி(ஏரியா) வாரி அமைப்புகளை உருவாக்குவது
  • கிராமப்புற ஏழைகளை குடியிருப்பு/ஸ்தல மட்டங்களில் திரட்டுவது; தொழில்வாரி கமிட்டிகளை குடியிருப்பு/அருகமை/ஸ்தல மட்டத்தில் உருவாக்குவது
  • குடிமக்கள் மன்றம், கலாச்சார அமைப்புகள்/மேடைகள் உள்ளிட்டு மத்தியதர வர்க்கத்தின் வாழ்க்கை மற்றும் பணியுடன் தொடர்புடைய அமைப்புகளை உருவாக்கி, அவர்கள் மத்தியில் நமது பணியினை, குறிப்பாக தத்துவார்த்த பணியினை, அறிவியல் கண்ணோட்டத்தை வலுப்படுத்துவது. குடியிருப்பு சங்கங்கள், ஓய்வுபெற்றோர் சங்கங்கள், தொழில்முறை/சார்ந்த அமைப்புகளின் நமது பணியை வலுப்படுத்துவது

இக்கடமைகளை நிறைவேற்ற கீழ்க்கண்டவை தேவை:

  • கட்சி மையத்தை அவசரமாக வலுப்படுத்த வேண்டும்:
  • மையத்தில் அரசியல் தலைமை குழு உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பு, கூட்டு செயல்பாடு, தனி நபர் பொறுப்பை உறுதி செய்வது
  • மாநிலங்களில் நடக்கும் இயக்கங்கள், போராட்டங்கள், பிரச்சாரங்களில் அகில இந்திய தலைவர்களின் பங்கேற்பை அதிகரிப்பது
  • ஸ்தாபன முடிவுகளைக் கண்காணித்து, தேவையை ஒட்டித் தலையீடு செய்வது
  • வர்க்க வெகுஜன அமைப்புகளின் வேலை பரிசீலனையைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் மத்திய குழுவில் செய்வது
  • கட்சிக் கல்வியை நிரந்தர அடிப்படையில் கொண்டு செல்வது; அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் சுய கல்விக்கு முயற்சிக்க ஊக்கப் படுத்துவது; விரைவில் உருவாக இருக்கிற சுர்ஜித் பவனில் கட்சிப் பள்ளியை நிறுவுவது,
  • பல்வேறு துறைகளை இயக்கக் கூடிய திறன் பெற்ற ஊழியர்களை அடையாளம் கண்டு அங்கே அமர்த்துவது
  • முன்னுரிமை மாநிலங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது; இந்தி பேசும் மாநிலக் குழுக்களின் தேவைகளைத் துரிதமாக பூர்த்தி செய்வது
  • நாடாளுமன்றப் பணிகளையும், வெளியே களத்தில் செய்ய வேண்டிய பணிகளையும் திறமையாக இணைப்பது
  • உலக ஏகாதிபத்தியம், அதன் முகமைகள் மற்றும் உள்நாட்டுப் பிற்போக்கு சக்திகளின் கம்யூனிச, மார்க்சீய எதிர்ப்பு சித்தாந்த தாக்குதலை எதிர்த்துப் போரிடுவது
  • வகுப்புவாத சக்திகளின் தத்துவார்த்த தாக்குதலை எதிர்கொள்ள:
  • இலக்கியவாதிகள், விஞ்ஞானிகள், வரலாற்றியலாளர்கள், கலாச்சார தளத்தில் இயங்கும் பிரமுகர்கள் மற்றும் இதர பகுதி அறிவு ஜீவிகளைத் திரட்டுவது
  • மதச்சார்பின்மை மற்றும் அறிவியல் கண்ணோட்டத்தைப் பிரச்சாரம் செய்ய சமூக, கலாச்சார நடவடிக்கைகளை உருவாக்குவது குறித்து சிறப்பு கவனம் செலுத்துவது; ஆசிரியர் அமைப்புகள், சமூக அமைப்புகளை ஈடுபடுத்தி மழலையர் பள்ளி மற்றும் பொதுவான பள்ளிகள் மட்டத்தில் இதற்கான முன்முயற்சி எடுப்பது
  • சுரண்டப்படும் வர்க்கங்கள், தலித், ஆதிவாசி மக்கள் மத்தியில் வகுப்புவாதக் கருத்தியலின் செல்வாக்கு ஊடுருவதைத் தடுக்க சிறப்பு நடவடிக்கைகளை வடிவமைப்பது
  • முற்போக்கு மற்றும் மதச்சார்பின்மை கருத்துக்களையும், கலாச்சார படைப்புகளையும் கொண்டு செல்ல பரந்த கலாச்சார மேடைகளை உருவாக்குவது
  • சுகாதார மையங்கள், கல்வி மையங்கள், வாசிப்பு மன்றங்கள், நிவாரண பணிகள் போன்ற சமூக நல நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வது
  • மக்களுக்கான அறிவியலையும், கலை இலக்கிய நடவடிக்கைகளையும் வலுப்படுத்துவது

இக்கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்ற:

  • கட்சி உறுப்பினர்களின் தரத்தைக் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மூலம் பெருமளவு மேம்படுத்துவது:
  • கட்சி உறுப்பினர் சேர்ப்பை உறுதியற்ற, தளர்வான தன்மையில் செய்வதற்கு முற்றுப்புள்ளி வைப்பது; மக்களுக்கான போராட்டங்களில் துடிப்புடன் இறங்குபவர்களை அடையாளம் கண்டு, துணை குழுக்கள் மூலம் அவர்களைக் கட்சிக்குள் கொண்டு வருவது; கட்சி அமைப்புச் சட்டம் கூறியுள்ள 5 அம்ச அளவுகோலின் அடிப்படையில் உறுப்பினர்களைப் புதுப்பிப்பது
  • துணை குழுக்களை முறையாக செயல்படுத்துவது; அவர்கள் பரீட்சார்த்த உறுப்பினர்களாகத் தயாராகும் விதத்தில் மார்க்சீய லெனினீயத்தை போதிப்பது
  • வர்க்க வெகு ஜன அமைப்புகளில் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஈடுபடுவதை உறுதி செய்வது
  • கமிட்டிகளில், குறிப்பாக உயர்நிலை கமிட்டிகளில் வர்க்க மற்றும் சமூக சேர்க்கையை மேம்படுத்துவது
  • அடுத்த 3 ஆண்டுகளில் கட்சியில் பெண்களின் எண்ணிக்கை 25 சதவீதத்தை எட்டக் கூடிய விதத்தில் அதிகரிப்பதை உறுதி செய்வது
  • இளைஞர்களை ஈர்க்கக் கூடிய விதத்தில் கட்சியின் நிகழ்ச்சிகளையும், நடவடிக்கைகளையும் தகவமைத்து, கட்சியில் இளைஞர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிப்பதை உறுதி செய்வது
  • முறையான ஊழியர் கொள்கையை உருவாக்கி, இளம் தோழர்களை அடையாளம் கண்டு பொறுப்புகளுக்கு உயர்த்துவது ; தோழர்கள் குறித்த மதிப்பீட்டைக் கூட்டாக உருவாக்கி அதன் அடிப்படையில் பணிகளை ஒதுக்கீடு செய்வது
  • புரட்சிகர மாற்றத்துக்காக தியாக சமர் புரிந்து, சித்தாந்த பிடிப்பின் அடையாளமாகத் திகழும் விதத்தில் முழு நேர ஊழியர்களை வளர்ப்பது
  • முழுநேர ஊழியர்களுக்கு முறையான ஊதிய விகிதத்தை உறுதி செய்வது; மாதம் தோறும் அதை வழங்குவது
  • நிர்ணயிக்கப் பட்டுள்ள லெவி தொகை அளிக்கப்படுவதைக் கறாராக அமல்படுத்துவது
  • கட்சிக்கான நிதி தேவையைப் பூர்த்தி செய்ய பிரதான நிதி ஆதாரமாக முறையான வெகுஜன வசூலை நடத்துவது; கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளின் வரவு செலவு கணக்கினை அனைத்து மட்டங்களிலும் சீராகப் பராமரிப்பது

 

  • துடிப்பான ஜனநாயக மத்தியத்துவத்தை உறுதி செய்வது:
  • கிளைகள் முறையாகக் கூடி, செயல்படுவதை உறுதி செய்வது; கிளை செயலாளர்களை வளர்த்தெடுப்பதும், பயிற்றுவிப்பதும் இதற்குத் தேவை. மக்களுடன் உயிரோட்டமான தொடர்புகளைப் பராமரிக்க கிளைகளின் திறமையான செயல்பாடு மிகவும் அவசியம்.
  • அனைத்து மட்டக் கட்சி கமிட்டிகளின் செயல்பாட்டை மேம்படுத்துவது
  • கூட்டு செயல்பாடு தனி நபர் பொறுப்பு முறையான கண்காணிப்பு என்ற ஸ்தாபன கோட்பாட்டை, கட்சியின் அனைத்து மட்டங்களிலும் கறாராக அமல்படுத்துவது; தனி நபர் பொறுப்புகள் நிறைவேற்றப் பட்ட விதம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசீலனை செய்வது
  • விமர்சனம் சுய விமர்சனம் என்ற ஆயுதத்தைக் கூர்மைப்படுத்துவது
  • கீழ்மட்ட கமிட்டிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களிடமிருந்து வரும் கருத்துக்களைத் தலைமை கவனித்து, காதுகொடுத்துக் கேட்டு உட்கட்சி ஜனநாயகத்தை வலுப்படுத்துவது
  • பிரதேசவாதம், அகநிலைவாதம், தாராளவாதம், குழுவாதம் போன்ற தவறான போக்குகளை எதிர்ப்பது; நாடாளுமன்றவாதத் திரிபுகளை எதிர்த்துப் போரிடுவது
  • வருடாந்திர உறுப்பினர் பதிவு புதுப்பிப்புடன் சேர்த்து நெறிப்படுத்தும் இயக்கத்தை நடத்துவது, அதனைப் பரிசீலனைக்கு உட்படுத்துவது

 

  • சக்திவாய்ந்த வெகுஜன அமைப்புகளைக் கட்டுவது:
  • வெகுஜன அமைப்புகளின் பலத்தையும் செல்வாக்கையும் விரிவுபடுத்துவது
  • ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள மத்தியக் குழு ஆவணங்களைக் கறாராக அமல்படுத்துவதன் மூலம், வெகுஜன அமைப்புகளின் சுயேச்சையான, ஜனநாயக செயல்பாட்டை மேலும் பலப்படுத்துவது
  • வெகுஜன அமைப்புகளின் அகில இந்திய மையங்களை வலுப்படுத்துவது
  • வெகுஜன அமைப்புகளின் கிளைகளை உருவாக்கவும், செயல்படுத்தவும் கவனம் செலுத்துவது
  • வெகுஜன அமைப்புகளுக்கான சப் கமிட்டி/பிராக்‌ஷன்களை அமைக்காத மாநிலங்கள் அதனை உடனடியாக செய்வது
  • அரங்கில் கட்சி கட்டும் கவனத்துடன் சப் கமிட்டி, பிராக்‌ஷன் கமிட்டிகளின் பொருத்தமான, சீரான செயல்பாட்டை உறுதிப்படுத்துவது

 

  • சமூக பிரச்னைகளை எடுப்பது:
  • பாலின ஒடுக்குமுறைக்கும், தலித், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், மதவழி சிறுபான்மையினர் மீதான பாகுபாடுகளுக்கும் எதிரான போராட்டங்களை, ஒட்டுமொத்தக் கட்சியும் உறுதியாக நடத்துவது
  • தலித், பழங்குடியினர், மதவழி சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகளின் பிரச்னைகளை எடுப்பதற்காக நாம் உருவாக்கியிருக்கும் அமைப்புகள், மேடைகளின் செயல்திறனை மேம்படுத்துவது
  • இந்தியாவில் வர்க்கப் போராட்டத்தின் முன்னேற்றத்தைத் தாங்கி நிற்கிற இரண்டு கால்களைப் போன்ற பொருளாதார சுரண்டல்-சமூக ஒடுக்குமுறை ஆகியவற்றை ஒரே நேரத்தில் கையில் எடுப்பது

 

  • நமது செல்வாக்கை விரிவுபடுத்துவது:
  • பலவீனமான மாநிலங்களில் குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் கட்சி ஸ்தாபனத்தையும், இயக்கங்களையும் பலப்படுத்துவது
  • ஏற்கனவே நாம் நிகழ்த்தி வரும் கலாச்சார நடவடிக்கைகளை வலுப்படுத்தி, புதிய பகுதிகளில் கலை குழுக்களை உருவாக்கி பண்பாட்டுத்துறையில் தலையீடுகளை அதிகரிப்பது
  • முன்னுரிமை மாநிலங்கள் பட்டியலைத் திருத்தி அமைப்பது; ஒவ்வொரு மாநிலத்திலும் முன்னுரிமை பகுதிகள், முன்னுரிமை அமைப்புகளை வரையறை செய்து, அவற்றின் வளர்ச்சிக்கு முறையான கவனம் செலுத்துவது
  • உள்ளூர் மக்களை பாதிக்கும் பிரச்னைகளின் மீது தொடர்ந்த விடாப்பிடியான ஸ்தல போராட்டங்களைக் கட்டி அமைக்க ஏற்ற விதத்தில் ஸ்தல கட்சி கமிட்டிகளின் ஆற்றலை மேம்படுத்துவது
  • நாடாளுமன்றம் மற்றும் இதர தேர்ந்தெடுக்கப் படும் பொறுப்புகள் உள்ள அமைப்புகளில் செயல்படும் கட்சி கமிட்டிகளை வலுப்படுத்துவது; அத்தகைய அமைப்புகளில், களத்தில் நடக்கும் போராட்டங்களைப் பிரதிபலிக்கக் கூடிய விதத்தில் திறமையான தலையீடுகள் நடப்பதை உறுதிப்படுத்துவது
  • கட்சி வகுப்புகளை சீராக நடத்துவது; மையப்படுத்தப் பட்ட பாடத்திட்டத்தையும், அத்துடன் அவசியமான சுய கல்விக்கான பட்டியலையும் உருவாக்குவது
  • கட்சி பத்திரிகைகள், வெளியீடுகளைப் பெருமளவு செம்மைப் படுத்துவது; வடிவத்தையும், உள்ளடக்கத்தையும் மேம்படுத்துவது
  • கட்சியின் நிலைபாடுகளையும், கண்ணோட்டத்தையும், கருத்துக்களையும் கூடுதலான மக்கள் பகுதியினரிடம் கொண்டு சேர்க்கும் சக்தி வாய்ந்த கருவியான சமூக ஊடகத்தின் மீது முறையான கவனம் செலுத்தி அத்தளத்தில் தலையீடுகளை உருவாக்குவது

எனவே அவசியம் கீழ்க்கண்டவற்றை நாம் செய்ய வேண்டும்:

  • பிரம்மாண்டமான, வீரியம்மிக்க வர்க்க, வெகுஜன போராட்டங்களைக் கட்டவிழ்த்து விடும் சக்தியைப் பெறுவதற்கு மக்களுடனான நமது இணைப்பை பலப்படுத்துவது
  • இந்த உயிரோட்டமான இணைப்பை நிறுவிட, கட்சியின் மாஸ் லைனை உருவாக்கித் திறமையாக செயல்படுத்துவது
  • சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் அனைத்து கிராமப்புற மக்கள் பகுதியினரின் போராட்ட ஒற்றுமையையும் கட்டி, ஜனநாயகப் புரட்சியின் அச்சாணியான விவசாய புரட்சியை முன்னேற்றும் பணியில் கவனத்தைக் குவிப்பது
  • தொழிலாளி விவசாயி கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவது
  • பிரதானமாக, கீழ்க்கண்டவற்றின் மீது கவனம் செலுத்திட வேண்டும்:
  • இடது ஜனநாயக சக்திகளை அணி திரட்டவும், கட்சியின் செல்வாக்கை விஸ்தரிக்கவும் பொருளாதார, சமூகப்பிரச்னைகளில் வர்க்க வெகுஜன போராட்டங்களைக் கட்டமைப்பது
  • மாஸ் லைனைக் கடைப்பிடித்து மக்களுடன் உயிரோட்டமான தொடர்பினை நிறுவுவது
  • உயர்ந்த தரத்துடன் கூடிய உறுப்பினர்கள் கொண்ட புரட்சிகரக் கட்சியைக் கட்டுவதற்காக ஸ்தாபனத்தை செம்மைப்படுத்துவது
  • கட்சியின் பால் இளைஞர்களை ஈர்த்திட சிறப்பு முயற்சிகளை செய்வது
  • வகுப்புவாதம், நவீன தாராளமயம் மற்றும் பிற்போக்கு சித்தாந்தங்களை எதிர்த்து தத்துவார்த்த போராட்டம் நடத்துவது

கட்சியின் அகில இந்திய மையம் துவங்கி இக்கடமைகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் செய்யப் பட வேண்டும். மாநிலக் குழுக்களும் குறிப்பிட்ட காலத்தில் இக்கடமைகளை நிறைவேற்ற ஸ்தூலமாகத் திட்டமிட்டு, ஒரு வருட காலத்தில் பரிசீலிக்க வேண்டும்.

சிபிஐ(எம்) – இந்திய மக்களின் புரட்சிகர கட்சி

கட்சி உருவகப்படுத்தும் காட்சி உயிர் பெற, நமது ஸ்தாபன செயல் திறன்களைப் மிகப் பெருமளவு வலுப்படுத்திக் கொள்வது தேவைப்படுகிறது.

ஒரு புரட்சிகர கட்சி என்ற முறையில், இந்திய விடுதலைக்கான, சோஷலிச மாற்றுக்கான கட்சியின் பெருமை மிகு போராட்ட மரபின் வாரிசுகளாக விளங்குகிறோம். சர்வ தேச, உள்நாட்டு புரட்சிகர இயக்கத்தின் தத்துவார்த்த, ஸ்தாபன திரிபுகளை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற பாரம்பர்யத்தையும் சுவீகரித்துள்ளோம்.

மார்க்சீய லெனினீய புரட்சிகர உள்ளடக்கத்தைப் பற்றி நின்று, அனைத்து மார்க்சீய விரோத தத்துவங்களையும், கம்யூனிச இயக்கத்துக்குள் எழுந்த இடது அதிதீவிரவாதம், வலது திருத்தல்வாதத்தினையும் எதிர்த்துப் போராடி, தாம் வழி நடத்தும் மக்கள் போராட்டங்களின் பலத்தின் அடிப்படையில் இந்தியாவில் வலுவான கம்யூனிச சக்தியாக சிபிஐ(எம்) முன்னெழுந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான தோழர்களின் அரும்பெரும் தியாகம், அர்ப்பணிப்பின் மூலமாகவே இது சாத்தியமாகியிருக்கிறது.

சுரண்டுகிற ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக, சுரண்டப்படும் அனைத்து வர்க்கங்களை சேர்ந்த மக்கள் திரள் கிளர்ந்தெழாமல் சமூக மாற்றம் சாத்தியமில்லை என்பது மட்டுமல்ல, மாற்றம் குறித்து நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. இறுதியில் சீர்தூக்கிப் பார்த்தால், மக்கள் தான் வரலாற்றைப் படைக்கிறார்கள். புரட்சிகர வரலாறும் இதற்கு விதிவிலக்கல்ல. மக்களின் பேரெழுச்சியின் முன்னணி படையாக, புரட்சிகர கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி முன்னெழ வேண்டும். இது நமது வரலாற்றுப் பொறுப்பு.

இப்பொறுப்பை நிறைவேற்றுவதை நோக்கி முன்னேறும் உறுதியை, இந்த பிளீனத்தில் இரண்டு மடங்காக்குவோம்.

அகில இந்திய வெகுஜன தளத்துடன் வலுவான சிபிஐ(எம்) உருவாவதை நோக்கி முன்னேறுவோம்

மாஸ் லைனைப் பின்பற்றும் புரட்சிகர கட்சியாக இயங்குவதை நோக்கி முன்னேறுவோம்.

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக … 7 வது ஆசிய பசிபிக் பிராந்திய கியூப ஆதரவு மாநாடு …

எஸ்.நூர்முகம்மது

சோசலிச கியூபாவில் புரட்சி வெற்றி பெற்று பிடல் காஸ்ட்ரோ தலைமையில் சோசலிச ஆட்சி அமைந்த நாளிலிருந்து அதை நிலைகுலையச் செய்யவும், சோசலிச ஆட்சிக்கு முடிவு கட்டவும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் அடிவருடிகளும் கொடுத்து வரும் நெருக்கடிகளும், அதனால் கியூபா மக்கள் அனுபவித்து வரும் துயரங்களும் சொல்லி மாளாதவை. ஆனால் அத்தனை சதிவலைகளையும் எதிர்த்து நின்று,உலக அளவில் சோசலிச சக்திகளுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளையும் கடந்து சோசலிச அமைப்பைக் காப்பதில் கியூபா உறுதியுடன் நிற்கிறது. பிடல் காஸ்ட்ரோ தலைமையிலிருந்த போதும், அவர் தானாக முன்வந்து பதவி விலகிய பின்னர் ராவுல் காஸ்ட் ரோ தலைமையிலும் கியூபா என்னும் அந்த சின்னஞ்சிறு தேசம் அளவிலும், மக்கள் தொகையிலும், பொருளாதார வல்லமையிலும், படை மற்றும் ஆயுத பலத்திலும் தன்னை விட பல மடங்கு பலசாலியான அமெரிக்காவை எதிர்த்து நின்று கொண்டிருப்பது ஒரு தத்துவம் கவ்வி பிடிக்கும் போது அது பௌதிக சக்தியாக உருவெடுக்கிறது என்ற மார்க்சிய நிலைபாட்டை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

சோசலிசத்தில் பற்றுறுதி கொண்ட கியூபா

லத்தீன் அமெரிக்க நாடுகளில் கியூபாவைத் தொடர்ந்து கம்யூனிச அரசுகள் அமைந்து, முதலாளித்துவம் துடைத்தெறியப்பட்டுவிடும் என்று அச்சமுற்ற அமெரிக்கா அந்த சின்னஞ்சிறு நாட்டின் மீது 1962 ல் பொருளாதார மற்றும் வர்த்தக தடைகளை சுமத்தியது. சர்வதேச செலாவணியாக டாலரை பயன்படுத்த தடை என்பது மட்டுமல்ல அமெரிக்க நிறுவனங்கள் எதுவும் கியூபாவுடன் எத்தகைய வர்த்தக உறவையும் வைத்துக் கொள்ளவும் தடை விதித்தது. இதன் மூலமாக சின்னஞ்சிறு கியூபாவை கழுத்தை நெரித்து சரணடைய வைத்து விடலாம் என்ற திட்டத்துடன் அது செயல்பட்டது. இதனால் கியூப நாடும், அதன் மக்களும் கடுமையான துன்ப துயரங்களுக்கு ஆளாயினர். அத்தியவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள் உட்பட எல்லா பொருட்களும் கியூபாவை சென்றடைய இயலாத நிலை. வெறும் சர்க்கரை உற்பத்தி மூலமே தனது தேவைகளை பூர்த்தி செய்ய இயலாததால் மற்ற பொருட்களை எல்லாம் இறக்குமதி செய்யும் நிலையிலிருந்த கியூபா அப்போதைய சோவியத் ஒன்றியத்தின் உதவிக்கரங்களால் சமாளித்து வந்தது. ஆனால் 1990 ல் சோவியத் நாட்டில் சோசலிசத்திற்கு பின்னடைவு ஏற்பட்டு மீண்டும் முதலாளித்துவ ஆட்சிக்கு ரஷ்ய நாடு சென்ற பின்னால் கியூபா மிகவும் சிரமத்தை சந்திக்க நேர்ந்தது. கையறு நிலையில் கியூபா நின்ற போது கூட அந்த சின்னஞ்சிறு நாடு தோழர் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் சோசலிசத்தினைக் கைவிட மாட்டோம் என்று உலகறிய சூளுரைத்தது.

அமெரிக்காவின் தடைகளை மீறி

ஐக்கிய நாடுகள் சபையில் ஒவ்வொரு ஆண்டும் கியூபா மீதான தடையை கைவிட வேண்டுமென்ற தீர்மானம் வந்த போதெல்லாம் உலக நாடுகள் ஒட்டுமொத்தமாக அதை ஆதரித்து வாக்களித்தன. அமெரிக்காவும், அதன் கைப்பாவையான இஸ்ரேலும் தான் அதற்கு எதிரான நிலைபாட்டை எடுத்தன. இருந்தும் ஜனநாயகம் குறித்து வாய்கிழிய பேசும் அமெரிக்கா அதனை ஏற்க மறுத்தே வந்தது. இத்தகைய மிக மோசமான நிலையில் கூட கியூப சோசலிச அரசின் சாதனைகள் உலக நாடுகளை ஆச்சரியப் பட வைத்தன. இலவச கல்வி கொடுப்பதிலும், இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பதிலும் அந்நாடு உலகத்துக்கே முன் மாதிரியாகத் திகழ்கிறது. கியூப ஒருமைப்பாடு மாநாட்டில் பேசிய ஜப்பானைச் சார்ந்த பிரதிநிதி தான் மருத்துவத்தில் எம்.டி. பட்டம் பெற கியூபா சென்று படித்ததாகவும், அந்த 7 ஆண்டு கல்வியின் போது தன்னிடம் கல்வி கட்டணமாகவோ, தங்குமிட வாடகையாகவோ ஒரு காசு கூட பெறப்படவில்லை என்பது மட்டுமல்ல தனக்கு இலவச உணவும் வழங்கியது கியூபா என்ற போது மாநாடே ஆச்சரியப்பட்டது. தான் மட்டுமல்ல உலகம் முழுவதும் இருந்து இது போல் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கியூபாவில் இலவச மருத்துவக் கல்வி பெறுவதாக அவர் குறிப்பிட்டபோது இன்றைய சூழலில் உலக நாடுகளில் மருத்துவ கல்வி வர்த்தக சரக்காக மாறியுள்ளநிலையில் கியூபா தனது நாட்டு மாணவர்களுக்கு மட்டுமன்றி வெளிநாட்டு மாணவர்களுக்கும் கூட இலவச கல்வி அளிப்பது ஆச்சரியப்பட வைத்தது. உலகத்தையே அச்சுறுத்திய எபோலா நோய் தாக்கிய போது அந்நாடுகளுக்கு தனது மருத்துவர்களை விரைந்து அனுப்பி மிகவும் பாதகமான சூழலில் கூட அதனால் பாதிக்கபட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்து வரலாறு படைத்த நாடு அது. ஹோன்டுராஸ் நாட்டில் கியூபாசெய்து வரும் மருத்துவப் பணிகளை உலகமே வியந்து பார்க்கிறது. நேபாளம் உட்பட இயற்கை பேரழிவால் பாதிக்கப்படும் நாடுகளுக்கெல்லாம் தனது மீட்பு மற்றும் சேவை குழுக்களை அனுப்பி கைமாறு கருதாமல் மனித சமூகத்திற்கு பணியாற்றும் பெருமையை உலகிற்கு உணர்த்தியது. இந்நிலையில் தான் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் 2014 டிசம்பர் 17 ல் அமெரிக்க அரசுக்கும் , கியூப அரசுக்கும் இடையே முழுமையான ராஜதந்திர உறவுகளை மீள புதுப்பிப்பதற்கும், இரு நாடுகளும் தங்களது தூதரகங்களை திறக்கவும் ஒப்பந்தம் உருவாயிற்று. கியூபாவை பயங்கரவாதத்தை உருவாக்கும் நாடுகளில் ஒன்று என்ற அமெரிக்காவின் பட்டியலிலிருந்து நீக்கிவடுவதாகவும் அமெரிக்கா அறிவித்தது. கியூபாவின் நீண்ட கால போராட்டத்தின் பலனாக அமெரிக்கா தனது கியூப எதிர்ப்பு நிலையை மாற்றிக் கொள்ளவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது கியுபாவிற்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றி எனலாம்.

சோசலிச கட்டுமானத்தில் கண்ட சாதனைகள்

அமெரிக்காவின் தடைகளால் கியூபாவின் வளர்ச்சிக்குப் பாதகமான நிலைகள் இருந்தாலும் கியூபா சோசலிச பாதையில் உறுதியாக நின்று கொண்டே பல சாதனைகளைப் படைத்துள்ளது. உலகத்தில் சோசலிசத்திற்கு பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் கூட கியூபா சோசலிசத்தினை வலுப்படுத்தியுள்ளது. அங்கு சோசலிசம் தொடர்ச்சியானதாகவும், பின் தள்ள முடியதாததாகவும் வலுவான நிலையில் உள்ளது.உற்பத்தி கருவிகள் சோசலிச சமூகத்திற்கு உரிமையானவை என்பதும், சொத்துரிமை சோசலிச அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சோசலிச சமூக அமைப்பிலேயே நாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2010 முதல் 4.2 பில்லியன் டாலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அங்கு வந்துள்ளன. எண்ணை வளத்தில் 27 சதவீதமும், சுற்றுலாத்துறையில் 16சதவிகிதமும், தகவல் தொடர்பில் 15 சதவிகிதமும், சுரங்கத் தொழிலில் 10 சதவிகிதமும், மது மற்றும் புகையிலை துறையில் 15 சதவிகிதமும் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. 206 றிறுவனங்கள் அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. 72 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. 2014 ல் புதிய பொருளாதார மூலதன சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதன் மூலமாக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வருடத்திற்கு 2 முதல் 2.5 பில்லியன் டாலர்கள் வெளிநாட்டு முதலீடு கியூபாவிற்கு வந்துள்ளது.வேலையின்மை 2.3 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. சிசு மரணம் 1000 க்கு 4.2 என்ற நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு சராசரி ஆயுள் 78.45 வயதாகும். அதிலும் பெண்களின் சராசரி ஆயுள் 80.02 என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. 60 வயதை தாண்டியவர்கள் மக்கள் தொகையில் 18.3 சதவிகிதம். வளர்ச்சி விகிதம் 2009 ல் 1.4 சதவிகிதமாக இருந்தது 2015 ல் 4 சதவிகிதமாக உள்ளது. இத்தகைய விபரங்கள் அனைத்தும் நம்மை ஆச்சரியப்பட வைக்கும் . அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர் கொண்டு சோசலிச கட்டுமானத்திற்குள் இத்தகைய சாதனைகளை கியூபா படைத்துள்ளது என்பது வார்த்தைகளால் மட்டும் பாராட்டக்கூடியவையல்ல.

கியூபாவின் 5 நாயகர்கள்

ஜெரார்டோ ஹெர்னன்டஸ், ரமான் லெபானினோ, ஆன்டோனியோ குயரரோரோட்ரிக்ஸ், பெர்னான்டோ கோன்சலஸ், ரீன் கோன்சலஸ் ஆகியோர் கியூபாவின் 5 நாயகர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். 1998 ல் கியூபாவைச் சார்ந்த அவர்கள் அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாநிலத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அமெரிக்க மண்ணிலிருந்து கொணடு கியூபாவிற்கு எதிராக கொலை வெறி தாக்குதல் உட்பட சதி திட்டங்களையும், செயல்களையும் வடிவமைத்துக் கொண்டிருந்த ஆயுதம் தாங்கிய கியூப எதிர் புரட்சி அமைப்புகளின் திட்டங்களையும், செயல்களையும் சேகரித்து கியூப அரசுக்கு அளித்துக் கொண்டிருந்தனர். அந்த சக்திகள் நீண்ட காலமாக கியூபாவினருக்கு எதிராகவும், கியூப புரட்சியின் ஆதரவாளர்களுக்கு எதிராகவும் குண்டு வீச்சு, கொலைகள் மற்றும் தாக்குதல்களை 50 ஆண்டுகளுக்கு மேலாக கியுபாவிலும், ஏனைய சில நாடுகளிலும் செய்து கொண்டிருந்தனர். 1950 லிருந்து சுமார் 3500 ஆண், பெண் ,குழந்தைகள் என கியூப மக்கள் அமெரிக்காவிலிருந்து திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதல்களால் கொல்லப்பட்டனர். எனவே தான் இத்தகைய தாக்குதல்களைத் தடுக்கும் பொருட்டு இத்தகைய கியுப எதிர்ப்பு சக்திகளின் கொலைகாரத் திட்டங்களை சேகரித்து அவற்றை கியூபா அரசுக்கு அனுப்பி வைப்பதே இவர்களது பணியாகும். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு,சித்திரவதைக் கூடங்களில் வைக்கப்பட்டு பல்வேறு கடுமையான சித்தரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டும் இவர்களிடமிருந்து எந்த ரகசியத்தையும் அமெரிக்க படையினரால் வெளிக் கொணரவோ, இவர்களது உறுதியை சிர்குலைக்கவோ முடியவில்லை. எனவே இவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி போலியான விசாரணை நடத்தி இவர்களுக்கு ஆயுள் தண்டனை உட்பட பல கடும் தண்டனைகளை வழங்கி சிறையில் அiட்த்தனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்றும் தொடர்ந்து கியூப அரசு போராடியது மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள கியுப ஆதரவு அமைப்புகள் தொடர்ந்து அமெரிக்க அரசை வற்புறுத்தி வந்தன. அதற்கான பல இயக்கங்கள் உலகின் எல்ல முனைகiளிலும் நடைபெற்றன. இந்நிலையில் தான் அமெரிக்காவுக்கும், கியூபாவிற்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ஒட்டி 16 ஆண்டுகள சிறைவாசத்துககுப் பின்னர் இவ்ர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களது விடுதலையை கியூபாவிற்கு கிடைத்த பெரிய வெற்றியாக கியூப மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கியூப ஆதரவு 7 வது ஆசிய பசிபிக் பிராந்திய மாநாடு

அமெரிக்காவின் மனித சமூகத்திற்கு எதிரான தாக்குதலான பொருளாதார தடைகளால் பாதிக்கப்பட்ட கியூபாவிற்கு ஆதரவாக சர்வதேச அளவிலும், ஆசிய பசிபிக் பிராந்திய அளவிலும் கியூப ஒருமைப்பாட்டு அமைப்புகள் உள்ளன. அவை கியூபாவிற்கு எதிரான மனிதாபிமானமற்ற அமெரிக்க பொருளாதார தடைகளுக்கு எதராக மக்கள் கருத்தை திரட்டவும், அமெரிக்க அரசு தடைகளை கைவிட நிர்ப்பந்தம் கொடுக்கவும் முற்போக்கு சக்திகளால் உருவாக்கப்பட்டுள்ளன. ஆசிய பசிபிக் பிராந்திய 7 வது மாநாடு வியட்நாம் தலைநகர் ஹனாயில் 2015 செப்டம்பர் 8,9 தேதிகளில் நடைபெற்றது. அமெரிக்காவிற்கு எதிராக கொரில்லா யுத்தம் நடத்தி வெற்றி கண்டு, சோசலிச அரசை ஸ்தாபித்தது மட்டுமல்ல இன்றைய பாதகமான சூழலில் கூட சோசலிச கட்டமைப்பிற்குள் மகத்தான வளர்ச்சியினை ஈட்டி வரும் வியட்நாம் சோசலிச குடியரசில் இந்த மாநாடு நடந்த்து மிகவும் பொருத்தமானதாகும். கொரில்லா யுத்தத்தின் மூலம் அமெரிக்க கைப்பாவை அரசை வென்று, சோசலிச அரசை உருவாக்கி அமெரிக்காவின் பொருளாரத் தடை உட்பட அனைத்து தாக்குதல்களையும் வெற்றிகரமாகத் தாக்குப் பிடித்து, சோசலிச கட்டமைப்பிற்குள் வளர்ச்சிகளைக் கண்டு கொண்டிருக்கும் கியூபாவிற்கான ஒருமைப்பாட்டு வியாட்நாம் மண்ணிலிருந்து தெரிவிக்கப்பட்டது முக்கியமானது.

இந்த மாநாட்டில் 18 நாடுகளிலிருந்து 220 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து 30 பிரதிநிதிகள். அதில் சி.பி.ஐ.(எம்) சார்பில் 20 பிரதிநிதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. வியட்நாம் சோசலிச குடியரசின் நட்புக்கழகத்தின் தலைவர் வூ சுவான் ஹாங், வியட்நாம் சோசலிச குடியரசின் நாடாளுமன்ற துணைத் தலைவரும், கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினருமான குயன் தி கிம் ஞான், மக்கள் கியூபா ஒற்றுமை இன்ஸ்டிடியூட்டின் தலைவர் கெனியா சர்ரானோ பியூக், கியூபாவின் 5 நாயகர்களில் ஒருவரான ஆன்டனியோ குவேரரோரொட்ரிக்ஸ், சிறி லங்கா கியுப நட்புக்கழகத்தின் தலைவர் பாசுதேவா ஆகியோர் தலைமைக்குழுவாக இருந்து வழி நடத்தினர்.

வூ சுவான் ஹாங் பேசும் போது 55 ஆண்டுகளாக கியூப மக்கள் அமெரிக்காவின் பொருளாதார, வர்த்தக தடைகளால் கடும் துன்ப துயரத்துக்கு உள்ளாகி வருகின்றனர். கியூப புரட்சியை பாதுகாக்க உலகம் முழுமையும் உள்ள முற்போக்கு எண்ணம் கொண்ட மக்கள் போராடி வருகின்றனர்.தடைகளையும் மீறி கியூபா சோசலிசத்தின் ஒரு புதிய முன்மாதிரியை உருவாக்கி சாதனைகள் பல படைத்துள்ளது. கியூப மக்கள் அமெரிக்க தடைகளுக்கு எதிராக போராடியும், ராஜிய ரீதியான முயற்சிகளை மேற் கொண்டும் வருகின்றனர். அதில் நல்ல முன்னேற்றத்தையும் பெறறுள்ளனர். கியூப மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அனைவரும் குரலெழுப்ப வேண்டும் என்றார்.வியட்நாம் கம்யுனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் குயன் தி கிம் பேசும் போது இந்தஆண்டு வியட்நாம் நாட்டின் விடுதலை பிரகடனம் செய்யப்பட்டதன் 70 வது ஆண்டை கொண்டாடி வரும் வேளையில் சோசலிச கியூபாவிற்கு ஆதரவான இந்த மாநாடு ஹனாயில் நடைபெறுகிறது என்று குறிப்பட்டார். கியூபா ஒருமைப்பாட்டு இயக்கம் வலுவடைந்து வருவதாகவும், அதன் விளைவு தான் ஒபாமா – ராவுல் காஸ்ட்ரோ சந்திப்பை ஒட்டி இரு நாடுகளுக்கும் இடையே ராஜிய உறவுகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்றும், இது ஒருமைப்பாட்டு இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் கூறனார். இது கியூபாவிற்கு எதிரான அமெரிக்காவின் கொள்கைக்கு கிடைத்த தோல்வி என்றும் குறிப்பிட்டார். கியூபா தனது கொள்கைகளை சமசரசம் செய்யாமலேயே தனது இறையாண்மையை விட்டுக் கொடுக்காமலேயே இந்த வெற்றியைப் பெற்றுள்ளது. வியட்நாமில் 50000 கியூப வல்லுநர்கள் பணியில் உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

கியூப நட்புக்கழகத்தின் தலைவர் கெனியா சிரானோ பியூக் பேசும் போது 1959 ல் கியூபா துவங்கிய போராட்டம் தொடர்கிறது. கியூபா வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது. கியூபாவின் சர்வதேச பங்களிப்பு அதிகரித்து வருகிறது.அமெரிக்க சிறைகளில் அடைபட்டு கிடந்த 5 கியூப நாயகர்கள் விடுதலை பெற்றது மிகப் பெரிய வெற்றி. 50 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க கியூப உறவு ஏற்பட்டுள்ளது இரண்டு நாடுகளுக்கும் பயனளிக்கக் கூடியது. அதே சமயம் கியூபா மீதான பொருளாதாரத் தடைகள் தொடர்கின்றன. அவற்றை கைவிடக் கோரும் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். உலக அளவில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அமைதிக்கான நமது போராட்டம் தொடர வேண்டும் என்றார்.

கியூப நாயகர்களில் ஒருவரான ஆன்டனியோ க்வேரோ ரோட்ரிக்ஸ் பேசும் போது இது மிகுந்த உணர்ச்சி மயமான கணம் என்றார். தனது 16 ஆண்டு கால அமெரிக்க சிறைவாசம் குறித்து விவரித்தார். நாங்கள் அல்ல நாயகர்கள். உலகில் ஏராளமான நாயகர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் ஹோசிமின் என்றார்.

பின்னர் பல நாடுகளின் பிரதிநிதிகள் பேசினர். இந்திய பிரதிநிதியாகச் சென்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் அருண்குமார் பேசும் போது பொருளாதார தடையால் கடும் பாதிப்பிற்கு உள்ளான நேரத்தில் கியூபாவிற்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஒரு கப்பல் நிறைய கோதுமை, உருளை கிழங்கு, பென்சில்கள், நோட்டு புத்தகங்கள் போன்ற பொருட்கள் அனுப்பப்பட்டதை நினைவு கூர்ந்தார்.

  1. கியூபாவின் வளர்ச்சிக்கு முக்கிய தடையாகவுள்ள வணிக, பொருளாதார தடைகளை நீக்க கோரும் அமைப்புகளிடையே ஒற்றுமையும் நட்புறவும் 2. கியுப சமூக, அரசியல், பொருளாதார வாழ்வின் யதார்த்தத்தை ஊடகங்கள் வழியாக பரவச் செய்வதன் மூலம் கியூப ஒருமைப்பாட்டு இயக்கத்தை வலுப்படுத்துதல் என்ற இரண்டு சிறப்பு அமர்வுகள் நடைபெற்று கருத்துக்கள் பரிமாறப்பட்டன. பின்னர் அது தொகுத்து வழங்கப்பட்டது.

ஹனாய் பிரகடனம்

இறுதியாக ஹனாய் பிரகடனம் வெளியிடப்பட்டு அது ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

  1. சர்வ தேச சட்டங்களுக்கு எதிரான சட்டவிரோத பொருளாதார, வர்த்தக, நிதி தடைகளை விதிக்கும் அமெரிக்க நடவடிக்கைகளை நிராகரிப்போம். கியுப மக்களை ஆதரிப்போம்.மனதாபிமானமற்ற தடைகளை நீக்க கோருகிறோம்.
  2. கியூப அமெரிக்க ராஜிய உறவுகளை புதுப்பிப்பது, தூதரகங்களை இரண்டு நாட்டிலும் திறப்பது என்ற ராவுல் காஸ்ட்ரோ – பாரக் ஒபாமா ஆகியோரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்புகளை வரவேற்கிறோம். இது கியூப மக்களின் எதிர்ப்பு இயக்கங்களுக்கும், அவர்களது புரட்சிகரமான போராட்டங்களுக்கும், சர்வதேச ஆதரவுக்கும் கிடைத்த வெற்றியாகும். கியூபாவை சர்வதேச பயங்கரவாதச் செயல்களை தூண்டும் நாடுகள் பட்டியிலிலிருந்து நீக்கிய ஒபாமாவின் அறிவிப்பை வரவேற்கிறோம்.
  3. கியூப இறையாண்மையை மீறி சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு கப்பற்படை தளம் அமைக்கப்பட்டுள்ள குவான்டனாமா பகுதியை மீண்டும் கியூபாவிடம் ஒப்படைக்க கோருகிறோம்.கியூபா குறித்த பொய்யான தகவல்களை தகர்த்து அதன் பொருளாதார சமூக வளர்ச்சி குறித்த செய்திகளை பரப்புவோம்.
  4. கியூப மக்களின் முழு சுதந்திரம், இறையாண்மை, சுயநிர்ணயம், அவர்களது உள் விவகாரங்களில் தலையிடாமை போன்ற உரிமைகளை காப்போம்.கியூபா ஒருமைப்பாட்டு பணிகளைத் தொடர்வோம்.

இந்த மாநாடு மிகவும் வெற்றிகரமாக நடைபெற்ற மாநாடு என்பது மட்டுமல்ல, சோசலிச கியூபாவிற்கு மட்டுமன்றி உலகம் முழுவதும் சோசலிசத்திறகு வலுவும், நம்பிக்கையும் ஏற்படுத்துகின்ற மாநாடாகவும் அமைந்தது என்றால் மிகையல்ல.

இடது ஜனநாயக அணி பற்றி ஜலந்தர் மாநாடு குறிப்பிட்டதற்கும், தற்போது குறிப்பிடுவதற்கும் என்ன வித்தியாசம்?

இடது ஜனநாயக அணிக்கான பொருத்தப் பாடு இன்றைக்கும் இருக்கிறது என்பது தான் கவனிக்க வேண்டிய அம்சம். மார்க்சிஸ்ட் கட்சி உருவானதிலிருந்து, தொடர்ந்த மாநாடுகளில் காங்கிரசின் ஒரு கட்சி ஏகபோகத்தை எதிர்த்து, அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று திரள வேண்டும் என்ற அறைகூவலை விடுத்துக் கொண்டே இருந்தது. 9வது மாநாட்டுத் தீர்மானம், ”அரசியல் தத்துவார்த்த நெருக்குதல்களினால், வழக்கமான இடதுசாரி ஜனநாயகக் கட்சிகளும், குழுக்களும் 1959ம் ஆண்டிலிருந்தே காங்கிரஸ் எதிர்ப்பு ஜனநாயக முன்னணிகளில் இருந்து விலக ஆரம்பித்தன. 1969ல் வலது கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரசுடன் இணைந்து நின்றது என்றால், சோஷலிஸ்ட் கட்சியோ மகா கூட்டணியுடன் கூட்டு சேர்ந்து இடதுசாரி ஒற்றுமையினை உருக்குலைக்கும் பணியினைப் பூர்த்தி செய்தது” என சுட்டிக் காட்டுகிறது. எனவே, 1970களின் துவக்கத்திலிருந்தே இடதுசாரி கட்சிகளை ஒற்றுமைப்படுத்தும் பணிக்கும் கட்சி முக்கியத்துவம் அளித்துக் கொண்டிருந்தது. ஏனெனில் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளுக்கு முற்றிலும் மாறுபட்ட பொருளாதார திட்டம் இடதுசாரிகளிடமே இருந்தது. அவசர கால நிலையின் போது இடதுசாரி சக்திகளை ஒன்று படுத்துவதும், ஜனநாயகத்துக்கான சக்திகளைப் பரந்த அளவிலே திரட்டுவதும் இரண்டுமே முன்னுக்கு வந்த கடமைகளாக இருந்தன.

1978 ஜலந்தர் மாநாட்டின் அரசியல் தீர்மானம், அரசியல் நிலைமை சாதகமாக இருந்த போதிலும், வர்க்க சக்திகளின் பலாபலன்கள் பலவீனமாக இருப்பதைக் கட்சி மறக்கக் கூடாது. 1971ஆம் ஆண்டைப் போலவே சமீபத்திய தேர்தலிலும் காங்கிரஸ்-ஜனதா ஆகிய இரண்டு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ குழுக்களைச் சுற்றியே தான் மக்கள் பிரிந்து நின்றார்கள். நமது பல்வேறு போராட்டங்களும், நடவடிக்கைகளும் கட்சியின் செல்வாக்கையும், அரசியல் அந்தஸ்தையும் அதிகரித்துள்ளன. ஆனால், வர்க்க சக்திகளின் பலாபலத்தில் மாற்றத்தை ஏற்படுத்த இது போதாது. போராட்டங்களின் போக்கிலே, இந்த வர்க்கங்களின் பலாபலத்தை மாற்றுவதில் நமது வெற்றியைப் பொறுத்தே மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான நமது போராட்டமே இருக்கிறது என்று பரிசீலிக்கிறது.

அதாவது, முதலாளித்துவ கட்சிகளுக்குப் பின்னால் உள்ள வெகுஜனப் பகுதி, அக்கட்சிகளை விட்டு மாற்றுத் தலைமையின் பின் அணி திரளவில்லை. எனவே அச்சக்திகளை எதிர்த்து, ஒரே மாற்றாக உள்ள இடதுசாரி ஜனநாயக சக்திகளின் அணியை உருவாக்க வேண்டும். மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்களில் வர்க்க சக்திகளின் சேர்க்கை நாம் தலைமை தாங்கி நடத்தும் அணிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஏற்பட்டது. கேரளாவில் நமது அணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான அணிக்கும் இடையே வர்க்க சக்திகளின் சேர்மானம் இருந்தது. மற்ற மாநிலங்களில் நிலைமை இவ்வாறாக இருக்கவில்லை. இது குணரீதியான வேறுபாடாகும். இந்தியாவெங்கும் இத்தகைய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த அறைகூவல் 10வது மாநாட்டில் அளிக்கப் பட்டது.

அன்றைக்கு ஒரு வடிவத்தில் முதலாளித்துவம் நெருக்கடிக்கு உள்ளாகி இருந்தது என்றால், இன்றைக்கு அது வேறு பல வடிவங்களில் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. அன்று ஆளும் வர்க்கத்துக்குத் தேவை என்ற அடிப்படையில் காங்கிரசின் சர்வாதிகாரம் கோலோச்சியது என்றால், இன்றைக்கு அதே அடிப்படையில் பா.ஜ.க.வின் சர்வாதிகாரப் போக்குகளும், கூடுதலாக மத வெறி நடவடிக்கைகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அன்று காங்கிரஸ் – ஜனதாவின் பின் தேசிய அளவில் வெகுமக்கள் பிரிந்து நின்றார்கள் என்றால், இன்று காங்கிரஸ்-பா.ஜ.க. மற்றும் மாநில முதலாளித்துவ கட்சிகளின் பின் பிரிந்து நிற்கின்றனர். 90களிலிருந்து ஏகாதிபத்தியத்தின் தற்கால முகமான நவீன தாராளமயக் கொள்கைகள் தம் பங்குக்கு மக்களின் வாழ்நிலையை சீர்குலைத்துக் கொண்டிருக்கின்றன. மொத்தத்தில், இவற்றை எதிர்த்த நமது போராட்டங்கள் அதிகரித்தாலும் கூட,   வர்க்க சேர்க்கையில் நமக்கு சாதகமாக இன்னும் மாற்றம் ஏற்படாத சூழல் தொடர்கிறது. நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளில் பலம் சரிந்துள்ளது. அன்றைக்கு குணரீதியாக மாறுபட்ட நிலை இருந்த மேற்கு வங்கம், கேரளா, திரிபுராவைத் தாண்டி, ஓர் நீண்ட இடைவெளியில் வேறு எங்கும் இடது ஜனநாயக அணி உருவாக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப் படவில்லை. எனவே, அன்றைய காலத்தை விட, மேற்கூறிய நிலைமைகள், இடது ஜனநாயக அணியை உருவாக்குவதை சிக்கலாக்கி இருக்கின்றன. அதே சமயம் அதன் தேவையை அதிகப்படுத்தியும், அவசரப்படுத்தியும் உள்ளன என்பதே உண்மை.