கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் (1)

 

(முற்போக்காளர்களும்,பொதுவான வாசகர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தை ஆழமாக அறிந்து கொள்வதற்கு ஏற்றவாறு பல கோணங்களில் விளக்குவதற்காக இந்தத் தொடர் துவங்கப்படுகிறது. -ஆசிரியர் குழு )

ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு “திட்டம்” என்று அழைக்கப்படும்  ஆவணம் மிக அவசியமானது.திட்டம் இல்லாமல் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி இயங்க முடியாது.(இந்தியாவில் துவக்க காலங்களில் திட்டம் இல்லாமல் கம்யூனிஸ்ட் கட்சி இயங்கியது உண்மையே.ஆனால் அந்த சூழல் வித்தியாசமானது.) கம்யூனிஸ்ட் கட்சி தான் அடைய வேண்டிய தொலைநோக்கு இலக்கு குறித்து தனது திட்டத்தில் விளக்குகிறது.எனவே கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்களில் அடிப்படையானது கட்சித் திட்டம்.

பொதுவாக தங்களது இலக்கு அல்லது இலட்சியம் பற்றி பல கட்சிகள் அவ்வப்போது பேசுவதுண்டு.”சமுத்துவ சமுதாயம் அமைப்பதே எங்கள் குறிக்கோள் என்று கடந்த காலங்களில் அதிமுக,திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் சொல்வதுண்டு.சமத்துவம்,சமநீதி,என்றெல்லாம் அவ்வபோது தங்களுக்கு தோன்றுவதை பல கட்சிகள் கோஷங்களாக முழங்குவார்கள்.தங்களது சுய நலத்திற்காகவும், வாக்கு வங்கி அரசியலுக்காகவும் இது போன்ற கவர்ச்சிகரமான கோஷங்களை அவர்கள் எழுப்புவார்கள்.அவர்களது பேச்சுக்கும், செயல்பாடுகளுக்கும் தொடர்பு இருக்காது.ஆனால்,”திட்டம்”என்று ஏற்றுக் கொண்டதை நடைமுறை  வாழ்க்கையில் சாதித்திட இடைவிடாது முயற்சிக்கும் கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது.

திட்டம் – கட்சியின் உயிர்நாடி

கட்சி திட்டம் உருவாக்குவதில் ரஷிய அனுபவத்தை இங்கு குறிப்பிடுவது உதவியாக இருக்கும்.1898-ஆம் ஆண்டு ரஷிய சமூக ஜனநாயக கட்சி எனும் பெயரில் ரஷியாவில் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படத்  துவங்கியது.ஒரு திட்டம் கட்சிக்கு தேவை என்று லெனின் கருதினார்.ஆனால் பலர் இக்கருத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை.கட்சித் திட்டம் உருவாக்குவதற்கான காலம் இன்னும் கனியவில்லை என்றும்,தற்போது உள்ளூர் அமைப்புக்களை உருவாக்குவதும் கட்சி கொள்கைகள் மற்றும் தத்துவம் குறித்த எழுத்துக்களை அதிக அளவில் உருவாக்கி, மக்களிடையே பிரச்சாரம் செய்வதும்தான் முக்கிய பணி  என்று பலர் வாதிட்டனர்.

மனம் போன போக்கில் சில செயல்பாடுகளில் ஈடுபடுவது சரியானதல்ல என்றும் ,ஒரு திட்டம் அடிப்படையில் கட்சி ஸ்தாபனத்தை ஒன்றுபடுத்த வேண்டும் என்றும் லெனின் அழுத்தமாக  வாதிட்டார்.நமது கிளர்ச்சி நடவடிக்கைகளுக்கு ஒருங்கிணைப்பு தேவை;அவற்றை விரிவாக்கவும்,வலுவாக்கிடவும் வேண்டும்;தனித்தனியான,அவ்வப்போது எழும் அன்றாட கோரிக்கைகளுக்காக மட்டும் துண்டுதுண்டான இயக்கங்களை நடத்துவதற்கு பதிலாக, சமூக ஜனநாயகக் கட்சியின் அடிப்படை இலட்சியங்களுக்கான ஒன்றிணைந்த இயக்கம் என்ற உயரத்திற்கு கட்சி செல்ல வேண்டும்;அதற்கு,கட்சித் திட்டம் தேவை என்பதனை லெனின் வலியுறுத்தினார்.

1899 -ஆம் ஆண்டு “கட்சித் திட்டத்தின் நகல் என்ற கட்டுரையில் வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளர்களிடமும் அறிவுஜீவிகளிடமும்,கட்சியின் தொடர்புகளை தரமிக்கதாக உயர்த்தி,கட்சியின் செயல்பாடுகளை அதிகரித்திட, ஒரு திட்டம் தேவை  என்று வலியுறுத்தினார்,லெனின்.அத்துடன்,கட்சித் திட்டம் கொண்டிருக்க வேண்டிய அம்சங்கள்   என்ன என்பதை அக்கட்டுரையில் லெனின் விளக்கினார். லெனின் சிறையில் இருந்த 1895-96 -ஆம் ஆண்டுகளிலிலிருந்தே  கட்சித் திட்டம் தொடர்பான பிரச்னைகளை ஆய்வு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இதனையொட்டிய  அவரது எழுத்துக்கள் கட்சித் திட்டம் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் உயிர்நாடியான   ஒன்று என்பதை உணர்த்துகிறது.

புரட்சி எனும் கருத்தாக்கம்

கட்சி திட்டம் புரட்சியை நோக்கமாகக் கொண்டது.புரட்சி என்பதற்கு அரிஸ்டாட்டில் துவங்கி ஏராளமான அறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.வெறும் ஆட்சி மாற்றங்களை புரட்சியாகக் கருத முடியாது.மனித வரலாற்றில் வேறுபட்ட சித்தாந்தங்கள் அடிப்படையிலும் வன்முறை வழிமுறையிலும் பல அடிப்படையான மாறுதல்களை பல புரட்சிகள் நிகழ்த்தியுள்ளன.சமுகம்,பொருளாதாரம்,அரசியல்,பண்பாடு என பல துறைகளில் ஆழமான மாற்றங்களை புரட்சிகள் உருவாக்கியுள்ளன.

அடிப்படையான அதிகார மாற்றம்,ஆட்சி அமைப்பு முறையிலான மாற்றம் உள்ளிட்ட பல மாற்றங்கள் உருவாக்கி,முற்றிலும் புதிய பாதையில் நாட்டைக் கொண்டு செல்வதுதான் புரட்சியாக கருதப்படும்.அது வரை ஆண்டு கொண்டிருந்த அதிகார கூட்டத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து இந்த மாற்றங்களை கொண்டு வருகின்றனர்.எனவே மக்களின் பங்குதான் புரட்சியில் முக்கியமானது.

கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் குறிப்பிட்ட நாட்டில் அடைய வேண்டிய புரட்சி இலக்கினை தெளிவாக வரையறுக்கிறது.உழைக்கும் வர்க்கங்களின் உழைப்பைச் சுரண்டி தங்களது சொத்துடைமை சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருக்கும் சொத்துடைமை வர்க்கங்கலின் சமூக அரசியல் மேலாதிக்கத்திற்கு புரட்சி முற்றுப்புள்ளி வைக்கிறது.   முதலாளிகள்,நிலப்பிரபுக்கள்,அந்நிய நாட்டு மூலதன வர்க்கங்களின் கருவியாக விளங்கும்  அரசு அதிகாரத்தினை வீழ்த்தி, தொழிலாளி விவாசாயி மற்றும் உழைக்கும் வர்க்கங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதனை  புரட்சி சாதிக்கிறது.

இதுதான்  தொலைநோக்கு  இலக்கு. இந்த அதிகார மாற்றமே உண்மையான புரட்சி.இந்த புரட்சியை சாதிக்க,உழைக்கும் வர்க்கங்களை திரட்டுவதற்கு கட்சி மேற்கொள்ளும் வியூகம் கட்சித் திட்டத்தில் விளக்கமாக விரித்துக் கூறப்படுகிறது.தற்போதைய அரசு, அதன் வர்க்க குணம்,அதன் பலம்,பலவீனம்  குறித்து கட்சித் திட்டம் விளக்குகிறது. புரட்சியில் தொழிலாளி வர்க்கம் வகிக்கும் பங்கு, தொழிலாளி வர்க்கத்துடன்  விவசாயப்  பிரிவினர் இணைந்து உருவாக்கும் வர்க்கக் கூட்டணி,புரட்சியில் கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம் போன்ற பல மிக அடிப்படையான அம்சங்களை கொண்டதாக கட்சித் திட்டம் அமைகிறது.இந்த இலக்கணங்கள்  அனைத்தையும் கொண்டதாக மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் அமைந்துள்ளது. புரட்சி இலக்கினை எட்டும் காலம் வரை இது நீடிக்கக்கூடியது.

மார்க்சிஸ்ட் கட்சியின் கட்சியின் திட்டம்

இந்திய விடுதலைப் போராட்ட காலத்திலிருந்தே சோசலிச இலட்சியம் பலரது சிந்தனையை ஈர்த்தது. நிலம், தொழில் உள்ளிட்ட உற்பத்திக்கான ஆதாரங்கள் அனைத்தும் தனியுடைமையாக இருக்கும்  நிலை மாறிடவும்,ஒரு சிறு கூட்டம் சொத்துகுவியல்,, மூலதனக் குவியலை இடையறாது மேற்கொள்ள ,அரசு துணை நிற்க்கும் நிலை, மாறிட வேண்டுமென்பதும்  அன்றைய சோஷலிஸக் கனவாக இருந்தது. சோசலிசம் மலருவதற்கான முக்கிய கட்டமாக மக்கள் ஜனநாயக அரசு அமைய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் கூறுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்),1964-ஆம் ஆண்டு தனது திட்டத்தை உருவாக்கி உலகுக்கு அறிவித்தது.புதிய சூழலுக்கு ஏற்ப தனது திட்டத்தை 2002-ஆம் ஆண்டு மேம்படுத்தியது.

மார்க்சிஸ்ட் கட்சியின் கட்சியின் திட்டம் தனது இலக்கைப் பற்றி கீழ்க்கண்டவாறு வரையறுத்துள்ளது.

“8.1 மக்கள் ஜனநாயகத்தை நிறுவுவதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)தனது புரட்சிகரத் திட்டத்தை இந்திய மக்கள் முன் வைக்கிறது. சோசலிசத்திற்கும்,சுரண்டலற்ற சமூகத்தை நோக்கி முன்னேறுவதற்கும் மக்கள் ஜனநாயகப் புரட்சியானது வழிவகுக்கும். இந்திய மக்களை விடுதலை செய்யும் இத்தகைய புரட்சிக்கு விவசாயிகளுடன் கூட்டணி அமைத்து தொழிலாளி வர்க்கம் தலைமை தாங்கும்.உழைக்கும் மக்களின் முன்னணிப் படையான கம்யூனிஸ்ட் கட்சியானது,ஏகாதிபத்தியம், ஏகபோக முதலாளித் துவம், நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றிற்கு எதிராக நடத்தப்படும் போர்க்குணமிக்க போராட்டங்களுக்கு தலைமைதாங்க வேண்டி யுள்ளது.மார்க்சிய – லெனினியக் கோட்பாடுகளை நமது நாட்டில் நிலவும் நிலைமைகளுக்கு ஏற்ப திட்டவட்டமான வகையில் பயன்படுத்துவதன்மூலம் அரசியல், தத்துவார்த்த,பொருளாதார, சமூக, பண்பாடு என்கிற அனைத்து முனைகளிலும் நாம் வெற்றிகாணும்வரை நீண்ட நெடிய போராட்டங்களைக் கட்சி நடத்தவேண்டியுள்ளது.”

தெளிவான இந்த இலட்சியத்தோடு மார்க்சிஸ்ட் கட்சி கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றது.

ஆழமான பொருள் பொதிந்த சொற்றொடர்கள் இழையோடும் ஆவணம் இது. கருத்துச்செறிவு என்பதற்கான இலக்கணமாகத் திகழும் சிறு நூல் இது.இதனை ஒருமுறை வாசித்தால் போதுமானதல்ல. பன்முறை வாசிப்பது அவசியம். ஏனென்றால், அரை நூற்றாண்டு மக்கள் போராட்டங்களில் கிடைத்த பழுத்த அனுபவங்கள்,  மார்க்சியத்தில் தேர்ச்சி பெற்ற மாமேதைகளின் கனல் தெறித்த உட்கட்சி விவாதங்களில் வந்தடைந்த நிர்ணயிப்புக்கள் ஆகியன அனைத்தும் உள்ளடங்கிய நூல் இது. பல மணி நேரங்கள் இந்நூலோடு இணைந்திருப்பது புரட்சி இலட்சியத்தின் மீதான நமது உள்ள உறுதியை வலுப்படுத்தும்.

(தொடரும்)

புரட்சிகர எழுச்சிக்கான புறச்சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அகக்காரணிகளை வலுப்படுத்திடுவோம்

ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சி 2012 டிசம்பர் 15-16 தேதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சர்வதேச சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம்-இன்றும் நாளையும் என்ற தலைப்பில் இச்சந்திப்பு நடைபெற்றது. இதன் மீது தங்கள் கட்சியின் நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு உலகில் தெரிவு செய்யப்பட்ட சில கம்யூனிஸ்ட் கட்சிகள் அழைக்கப்பட்டிருந்தன. உலக நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில்  உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிரச்சனைகளும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளும் குறித்து விவாதிப்பதற்காக இச்சந்திப்பு நடைபெறுவதாக ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சியால் மிகவும் ஐயந்திரிபறத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசு உதயமானதின் 90 ஆவது ஆண்டு விழாவும் (சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசு 1922 டிசம்பரில் உதயமானது.) இதனுடன் சேர்ந்து கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளில் முக்கியமானவை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி, கியூபா கம்யூனிஸ்ட் கட்சி, பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி, போர்த்துக்கீஸ் கம்யூனிஸ்ட் கட்சி, கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி, உக்ரேன் கம்யூனிஸ்ட் கட்சி, பொஹிமியா மற்றும் மொராவியா கம்யூனிஸ்ட் கட்சி, லெபனீஸ் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் ரஷ்யன் சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சியும்  (சிபிஆர்எப்-CPRF-Communist Party of Russia Federation) ஆகும்.

ரஷ்யாவில் சமீபத்தில் நடைபெற்றத் தேர்தல்களில் ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சி கணிசமான அளவிற்கு முன்னேறியுள்ள பின்னணியில் இச்சந்திப்பு நடைபெற்றது. நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் 20 விழுக்காடு வாக்குகளை ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சி பெற்று, டூமா என்கிற ரஷ்ய நாடாளுமன்றத்தின் மக்களவையில் தன்னுடைய பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக் கொண்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் உள்ள 30 நாடாளுமன்ற நிலைக் குழுக்களில் ஆறு நிலைக்குழுவின் தலைமைப் பொறுப்பிற்கு சிபிஆர்எப் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சந்திப்பினைத் தொடங்கி வைத்த ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுத் தலைவரான கெனடி ஜுகா னோவ், மாஸ்கோவில் நீண்ட காலத்திற்குப் பின்னர் உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சந்திப்பு நடைபெறுவதாகக் குறிப்பிட்டார். மேலும் இந்த ஆண்டானது, சோவியத் யூனியன் உதயமான 90 ஆம் ஆண்டுடன், இரண்டாவது உலக யுத்தத்தில் திருப்பு முனையாக அமைந்த, ஹிட்லரின் பாசிஸ்ட் ராணுவம் நிர்மூலமாக்கப்பட்டு, 27 ஜெனரல்களுடன் மூன்று லட்சம் பாசிஸ்ட் படையினர் சரண் அடைந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்டாலின்கிராடு வெற்றியின் 70 ஆம் ஆண்டு தினமுமாகும்.  இதன் பின்னர், பாசிஸ்ட் படையினர் பின்வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்த மூன்றாண்டுகளில், பெர்லினில் ஹிட்லரின் தலைமையகமான ரெய்ச்ஸ்டாக்கில் செங்கொடியை உயர்த்தியதை அடுத்து அவர்கள் முழுமையாக முறியடிக்கப்பட்ட செய்தி உலகுக்குப் பறைசாட்டப்பட்டது.

ஜுகானோவ் பேசுகையில், உலகப் பொருளாதார நெருக்கடி குறித்தும் வரவிருக்கும் காலங்களில் அது மேலும் மோசமாகும் என்றும் தெரிவித்தார். இந்த வட்டமேசை சந்திப்பில் பங்கேற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்தும் பொதுவாக இரு அம்சங்களில் ஒத்துப்போகின்றன என்று அவர் தெரிவித்தார். அதாவது,  அனைத்துக் கட்சிகளும் மார்க்சிசம்-லெனினிசத்தில் நம்பிக்கை கொண்டுள்ளவை என்பதோடு, முதலாளித்துவத்தைத் தூக்கி எறிந்து, சோசலிசத்தை நிறுவி உண்மையான மனிதகுல விடுதலையை எய்துவதன் மூலம் மட்டுமே தற்போதுள்ள முதலாளித்துவ நெருக்கடிக்குத் தீர்வு காண முடியும் என்பதிலும் நம்பிக்கை கொண்டவைகளாகும் என்றும் அவர் தெரிவித்தார்.  அதன் அடிப்படையில், எதிர்காலத்தில் புதியதொரு சோசலிச சமுதாயத்தைக் கட்டிட,  வரலாற்றிலிருந்தும் அதன் அனுபவங்களிலிருந்தும்  நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  சீத்தாராம் யெச்சூரி இச்சந்திப்பில் பங்கேற்று உரை நிகழ்த்தினார். இச்சந்திப்பில் ஒவ்வொரு கட்சி சார்பாகவும் இரு சுற்றுக்கள் பேசுவதற்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டது.  முதல் சுற்றில் ஒவ்வொரு வருக்கும் இருபது நிமிடங்கள் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. முதல் சுற்றில் அனைவரும் பேசிய பின்னர் அவர்கள் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் இரண்டாவது சுற்றில் அனைவரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தார்கள். சர்வதேச நிலை குறித்து அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாடுகளையும் அனைத்துக் கட்சியினரும் புரிந்துகொள்ள விவாதங்கள் உதவின. அதேபோன்று தங்கள் நாடுகளில் தாங்கள் மேற்கொண்டு வரும் உத்திகள் மற்றும் போராட்டங்கள் குறித்தும் அனைவரும் விளக்கினார்கள்.

இக்கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:

இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  ஜுகானோவ் கூறியதைப் போல, உண்மையில் நீண்ட காலத்திற்குப் பின் நாம் மாஸ்கோவில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.  கம்யூனிஸ்ட் கட்சிகளின் இதுபோன்றதொரு கூட்டத்தில் நான் 1987 இல், சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மாபெரும் அக்டோபர் புரட்சியின் 70 ஆம் ஆண்டு தினத்தில் கலந்து கொண்டேன். அதன் பின் நடைபெற்ற நிகழ்வுகள் சோவியத் யூனியன் தகர்விற்கும், எதிர்ப்புரட்சி வெற்றி பெறவும் இட்டுச் சென்றதை நாம் அனைவரும் அறிவோம்.

தாங்கள் விடுத்திருந்த அழைப்பில், அனைத்துக் கட்சியினரும் சுதந்திரமாகத் தங்கள் கருத்துக்களைக் கூறலாம் என்று ஐயந்திரிபறக் குறிப்பிட்டிருந்ததால் நான் என் உரையைத் தயார் செய்து எடுத்து வரவில்லை. அதற்காக மொழிமாற்றுநர்கள் அருள்கூர்ந்து என்னை மன்னித்தருள வேண்டுகிறேன். ஜுகானோவ்  கூறிய கருத்துக்களின் மீது ஒருசிலவற்றை மட்டும் கூற விரும்புகிறேன். அவர் கூறியதைப் போல, வரலாற்றின் அனுபவங்களிலிருந்து முறையாகப் படிப்பினைகளை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசில் சோசலிசம் வீழ்ச்சியடைந்தது குறித்து உலகில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளில் பல,  தங்களுக்குள் பகுப்பாய் வினைச் செய்து, சொந்த முடிவுகளுக்கு வந்துள்ளன.

1992 ஜனவரியில் நடைபெற்ற எங்கள் கட்சியின் 14 ஆவது கட்சிக் காங்கிரசில் எங்கள் பகுப்பாய்வினை நாங்களும் செய்திருக்கிறோம்.  ஆயினும் இதன் ஒரு பகுதியாக இருந்த ரஷ்யக் கம்யூனிஸ்ட்டுகள் இதுகுறித்து அலசி ஆராய்ந்து ஒரு மதிப்பீட்டிற்கு வரும் வரை, நாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் அனைத்தும் முழுமையடைந்தது என்றோ போதுமானதென்றோ இயற்கையான முறையில் சொல்ல முடியாது. கடந்த இருபதாண்டு காலமாக அத்தகையதொரு மதிப்பீட்டினை உங்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆயினும் துரதிர்ஷ்டவசமாக  அத்தகையதொரு ஆய்வு தங்களிடமிருந்து  இதுவரை வரவில்லை. இப்போதாவது ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சி   இந்த இடைவெளியை – மிக முக்கியமான இந்த இடைவெளியை – நிரப்பிட முன்வரும் என்று நாங்கள் நம்புகிறோம். அவ்வாறு அது மேற்கொள்ளும் ஆய்வு சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசில் சோசலிசத்தின் எழுபதாண்டு கால அனுபவங்களை முறையாகப் புரிந்து கொள்ளவும் மதிப்பீடு செய்யவும் உதவிடும். மனிதகுல வரலாற்றில் முதன்முறையாக  மனிதனை மனிதன் சுரண்டுவதற்கு முற்றுப்புள்ளி வைத்து ஒரு சோசலிச சமூகத்தை உருவாக்கிய காலம் அது, பாசிசத்தின் தோல்விக்கு அதனுடைய பங்களிப்பு, அதனைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளிலிருந்து காலனியாதிக்கங்கள் முடிவுக்கு வந்தமை, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மிகவும் குறுகிய காலத்திலேயே வலுவானதொரு அரணாக மாறியது அனைத்தும் இக்காலகட்டத்தில் தான் நடைபெற்றது. இவ்வளர்ச்சிப் போக்குகள் அனைத்தும் இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியவைகளாகும். எதிர்கால மனிதகுல நாகரிகத்தினை வடிவமைத் திட்டவைகளாகும். ஆயினும் துரதிர்ஷ்டவசமாக இவை அனைத்தும் இப்போது  கடந்த காலமாகிப்போனது. கடந்த கால அனுபவங்களிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் ஐந்து அம்சங்களை நான் முன்வைக்க விரும்புகிறேன்.

முதலாவது, மார்க்சிசத்தின் சாராம்சம், லெனின் கூறியதைப் போன்று துல்லியமான நிலைமைகளிலிருந்து துல்லியமான பகுப்பாய்வினை மேற் கொள்ளவேண்டும் (‘concrete analysis of concrete conditions’) என்பதில் அடங்கியிருக்கிறது என்கிற உண்மை இந்த அனுபவங்களிலிருந்து உறுதியாகி இருக்கிறது.

இரண்டாவதாக, சோவியத் யூனியன் தகர்வு எந்த விதத்திலும் மார்க்சிச-லெனினிசத்தின் ஆக்கபூர்வமான அறிவியலை மறுதலித்திடவில்லை. அதேபோன்று சோசலிச சமுதாயத்தை அமைத்திட வேண்டும் என்கிற மனிதகுலத்தின் தூண்டுதலையும் அது மறுதலித்திடவில்லை.

மூன்றாவதாக, நாம் முன்பு தவறாகக் கருதிக் கொண்டிருந்ததைப் போன்று, முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறிச் செல்லும் இடைப்பட்ட காலம் அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. இது, வர்க்கப் போராட்டம் உக்கிரமாக நடைபெற்ற, ஏற்றத் தாழ்வுகளும், முன்னோக்கிச் செல்லுதலும் அதே போன்று பின்னோக்கிச் செல்லுதலும் மாறி மாறி நடைபெற்ற காலமுமாகும். இருபதாம் நூற்றாண்டு முன்னோக்கிச் சென்ற காலமாக இருந்த அதே சமயத்தில், நூற்றாண்டு முடியும் தருவாயிலும், இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பின்னோக்கிச் செல்லும் காலமாக இருந்தது.

நான்காவதாக, முதலாளித்துவம் என்பது அது என்னதான் கடும் நெருக்கடிக்கு உள்ளான போதிலும் தானாக நிர்மூலமாகிவிடாது. இறுதியாக, வரலாற்றின் குறிப்பிட்ட எந்தக் காலத்திலும், முன்னேறிவரும் சோசலிச சக்திகளின் இடைமாற்றக் காலத்தின் போது, அடிப்படைத் தீர்மானிக்கும் சக்தி, வர்க்க சக்திகளின் சமநிலை வலிமையை சரியாக மதிப்பீடு செய்வதையும் மற்றும் துல்லியமான முறையில் அரசியல் கொள்கைகளை உருவாக்குவதையும் சார்ந்தே இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில், இத்தகைய வர்க்க சக்திகளின் சமநிலை வலிமை  ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாகவே இருக்கிறது.

தற்போதைய அரசியல் நிலைமை

தற்போதைய அரசியல் நிலைமை குறித்து ஆறு அம்சங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.

முதலாவதாக, இன்றைய நிலைமைகளைப் பயன்படுத்திக் கொண்டு, ஏகாதிபத்தியம்  உலகின் மீது தன்னுடைய ஒரு துருவக் கோட்பாட்டை அரக்கத்தனமாகத் திணித்திட விரும்புகிறது. பொருளாதாரம், அரசியல், ராணுவம், சமூகம், கலாச்சாரம் என்று அனைத்துத் துறைகளிலும் அவ்வாறு திணித்திட வேண்டும் என்று அது விரும்புகிறது.

இரண்டாவதாக இது சர்வதேச நிதி மூலதனத்தின் தலைமையின் கீழ் உலக மூலதனமானது பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு உச்சபட்ச லாபம் (profit maximization) என்கிற தன்னுடைய கருணையற்ற குறிக்கோளை அடைந்திட நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கும் காலமாகும். ஆயினும், சர்வதேச நிதிமூலதனத்தின்  வெளிப்பாடு   ஏகாதிபத்தியம் தொடர்பாக லெனினது புரிதலை எந்த விதத்திலும் மறுதலித்திடவில்லை. தொழில் துறையினருக்கும் வங்கிகள் மூலதனத்திற்கும் இடையிலான பிணைப்பு நிதி ஆதிக்கத்திற்கு இட்டுச் செல்லும் (nexus between industrial and banking capital leading to financial oligarchies) என்கிற லெனினது புரிதல் எவ்விதத்திலும் மறுதலிக்கப்படவில்லை.  உச்சபட்ச லாபம் என்கிற தங்கள் வெறியைத் தீர்த்துக் கொள்வதற்காக உலகையே தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர அவர்கள் முயன்று கொண்டே இருப்பார்கள்.  ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகள் தவிர்க்க முடியாத வகையில் யுத்தங்களுக்கு இட்டுச் செல்கின்றன. லெனின் ஏகாதிபத்தியம் தொடர்பாகக் கூறிய கருத்துக்கள் அவ்வாறு அவர் கூறி பத்தாண்டுகள் முடிவதற்கு முன்னாலேயே முதல் உலகப் போர் எழுந்ததன் மூலம் மெய்ப்பிக்கப்பட்டது. இது இரண்டாம் உலகப் போரின் மூலம் மீளவும் உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வாறு ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல்களை உள்நாட்டு யுத்தமாக – அதாவது ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் ஒரு வர்க்கப் போராக  மாற்றி அதனுடைய சங்கிலியில் எங்கு பலவீனமான கொக்கி இருக்கிறதோ அதனை உடைத்தெறிய வேண்டும் என்கிற லெனினது புரட்சிகர தந்திரோபாய புரிதலையும்  மிகச்சரி என்று மீளவும் உறுதிப்படுத்தி இருக்கிறது.  ரஷ்யப் புரட்சி லெனினது இந்தப் புரிதலை மிகவும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியது.

இன்றைய தினம், சர்வதேச நிதி மூலதனம் என்பது குறிப்பிட்ட ஒரு ஏகாதிபத்திய மையத்தில் மட்டும் சுருங்கிக் கொண்டிருக்கவில்லை. மாறாக அது உலகம் முழுதும்  உச்சபட்ச லாபம் என்கிற குறிக்கோளை எய்திட வேண்டும் என்ற வெறித்தன்மையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் இன்றைய தினம் மறுதலிக்கப்பட்டிருக்கிறதா? இல்லை. மாறாக,  அதிகரித்துக் கொண்டிருக்கும் உலக முதலாளித்துவம் ஏகாதிபத்தியக் காலகட்டத்தில்  நிதிமூல தனத்தால் ஆதிக்கம் செலுத்தப்படும், தொழில்துறை, வணிகத்துறை போன்ற மற்ற அனைத்து வகையான மூலதனங்களும் அதன் வலைக்குள் சிக்கிக் கொள்ளும் மற்றும் அதன் தலைமையின் கீழ் கொண்டு வரப்படும் என்கிற ஏகாதிபத்தியம் குறித்த லெனினது கணிப்பினை மிகச்சரி என்று இன்றைய நிகழ்ச்சிப் போக்குகள் மெய்ப்பித்திருக்கின்றன. இன்றைய தினம் லெனின் சொல்லி வைத்தாற் போன்று இவை மிகவும் சரியாக நடந்து கொண்டிருக்கின்றன. லெனின்,  அவருடைய கால கட்டத்திலிருந்த துல்லியமான நிலைமைகளை மிகவும் துல்லியமாகப் பரிசீலித்து ஏகாதிபத்தியம் குறித்த  அவரது புரிதலை பிரயோகித்து, ரஷ்யப் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். அந்தக் காலகட்டம்தான் இன்றைய தினம் மாறியிருக்கிறதேயொழிய, லெனினது பகுப்பாய்வு அல்ல.

மூன்றாவதாக, இன்றைய தினம் சர்வதேச நிதி மூலதனத்தின் உலகளாவிய ஆதிக்கம் சுரண்டலை மேலும் பல்வேறு துறைகளுக்கு விரிவுபடுத்தியிருக்கிறது. சுகாதாரம், கல்வி, மின்சாரம் போன்று எண்ணற்ற துறைகள் அதன் கொள்ளை லாப வேட்டைக்கு இன்றைய தினம் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நான்காவதாக,  கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்பதையேக் குறியாகக் கொண்ட  அதனுடைய தங்குதடையற்ற சுரண்டல்தான் இன்றைய உலகப் பொருளாதார நெருக்கடிக்கு முதற்காரணமாகும். இந்நெருக்கடி இன்றைய தினம் அதன் ஐந்தாவது கட்டத்தில் இருக்கிறது. உலக மக்களில் பெரும்பான்மையோரின் வாங்கும் சக்தி குறைந்ததன் காரணமாகவே கூர்மையான வீழ்ச்சியுடன் இது தொடங்கியது. அதீத உற்பத்தி நெருக்கடியை எதிர்பார்த்து உலக முதலாளித்துவம் அதிலிருந்து மீண்டுவிட வேண்டும் என்பதற்காக மக்களுக்கு மிக எளிதான விதத்தில் கடன்கள் அளிக்க முன்வந்தன. இவ்வாறு கடன் வாங்கிய மக்கள் அதனைச் செலவழிப்பதன் மூலம் தாங்கள் பெறும் கொள்ளை லாபம் தொடரும் என்று அது கருதியது. ஆனால் கடன் வாங்கிய மக்கள், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து நெருக்கடியின் மூன்றாவது கட்டம் ஏற்பட்டது. அது, 2008 ஆம் ஆண்டைய உலக நிதி மந்தநிலைக்கு (global financial meltdown) இட்டுச் சென்றது. இந்நெருக்கடியிலிருந்து மீள வேண்டும் என்பதற்காக வளர்ந்த நாடுகள் என்று கூறப்படும் முதலாளித்துவ நாடுகள் தங்கள் நாடுகளில் உள்ள முதலாளிகளுக்கும், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய அளவில் நிவாரணங்கள் (urge bail-out packages) வழங்கின. இவ்வாறு கார்ப்பரேட் திவால் நிலைமைகள் அந்தந்த நாடுகளின் அரசுகளின் திவால் நிலைமைகளாக மாற்றப்பட்டதை அடுத்து நெருக்கடியின் நான்காவது கட்டம் ஏற்பட்டது. பின்னர் முதலாளித்துவ நாடுகள் தங்கள் திவால் நிலைமையைச் சமாளிப்பதற்காகத் தாங்கள் தங்கள் நாட்டு மக்களுக்கு அளித்து வந்த சமூகநலத் திட்டங்கள் அனைத்தையும் வெட்டிச் சுருக்கின. இது நெருக்கடியின் ஐந்தாவது கட்டமாகும்.

அரசுகளின் இந்நடவடிக்கைகளினால் மக்களின் வாங்கும் சக்தி மீண்டும் குறிப்பிடத்தக்க அளவிற்கு வெட்டிக் குறைக்கப்பட்டது. இது நெருக்கடியின் ஆறாவது கட்டத்திற்கு இட்டுச் செல்வதற்கான காரணங்களாகும். எனவேதான் வரவிருக்கும் ஆண்டு மிகவும் மோசமாக இருக்கும் என்று ஜுகானோவ் கூறியதை நானும் ஒப்புக் கொள்கிறேன். உண்மையில், 2014 ஆம் ஆண்டும் இந்த ஆண்டை விட மேலும் மோசமாக இருக்கும் என்று அவர் கூறியதை விரிவுபடுத்தி நான் கூற விரும்புகிறேன். ஏனெனில் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தாங்கள் வாங்கியுள்ள அபரிமிதமான கடன்களை மீண்டும் செலுத்த முடியா நிலை ஏற்பட்டு அவை மீண்டும் திவால் நிலைக்கு வரும்போது நிலைமைகள் மிகவும் மோசமாக இருக்கும். இந்நெருக்கடி தீர முதலாளித்துவ அமைப்பினால் விடை காண முடியாது. அதனுடைய அரசியல் மாற்றான, சோசலிசத்தால் மட்டுமே அதற்கு விடை காண முடியும்.

ஐந்தாவதாக, உலகம் முழுதும் முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் எதிர்ப்பு அலைகள். லத்தீன் அமெரிக்க நாடுகள் ஓர் உத்வேகமூட்டும் உதாரணமாக முன்னிற்கின்றன. ஆயினும், இங்கும் கூட, சோசலிச கியூபாவைத் தவிர மற்ற நாடுகள் அனைத்தும் முதலாளித்துவ அமைப்பிற்குள்ளாகவே நவீன தாராளமயத்திற்கு மாற்றினை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நாடுகளில் நடைபெறும் போராட்டங்கள் முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்றினை அளிக்கக் கூடிய விதத்தில் முன்னேறும் என்று நாம் நம்புவோமாக.

பிரதான கடமை

இறுதியாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகம் முழுதும் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வரும் எதிர்ப்பலைகளை ஒருங்கிணைத்திட வேண்டியது அவசியமாகும். உலகப் பொருளாதார நெருக்கடிக்கும் நவீன தாராளமயத்திற்கும் எதிராக உலகளாவிய வகையில் எதிர்ப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஏகாதி பத்தியம் கட்டவிழ்த்துவிட்டுள்ள யுத்தங்களுக்கு எதிராகவும் உலக அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூமி வெப்பமயமாதல் (climate change) போன்றவற்றிற்கு எதிராகவும் உலகளாவிய வகையில் எதிர்ப்புகள் நடைபெற்று வருகின்றன. இவை அனைத்தும். உலகளாவிய வகையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமாக  ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.   இவ்வியக்கத்தின் அச்சாணியாக கம்யூனிஸ்ட்டுகள் நிற்க வேண்டும்.

இதனை எப்படிச் செய்யப் போகிறோம் என்பதே இன்றைய தினம் நம்முன் விவாதத்திற்கு வந்துள்ள முக்கிய அம்சம். இங்கு பங்கேற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒவ்வொன்றுமே  தங்கள் தங்கள் நாடுகளில் உள்ள வர்க்க சக்திகளின் சேர்மானங்களை புரட்சிகரமான முறையில் மாற்றி இருக்கின்றன என்பதில் ஐயமில்லை. புறச்சூழல் தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்பை புரட்சிகரமாகத் தூக்கி எறியக் கூடிய அளவிற்கு  மிகவும் கனிந்துள்ளது என்ற போதிலும், லெனினிஸ்ட் அகக்காரணி, அதாவது மார்க்சிச-லெனினிசத்தின் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கக் கட்சிகளின் தலைமையின் கீழ் சுரண்டப்படும் அனைத்துப் பிரிவினரின் வர்க்கப் போராட்டங்களின் வலு,  பலவீனமாகவே  இருப்பது தொடர் கிறது.  தற்போதுள்ள அகக்காரணி,  புறச்சூழலை ஒரு புரட்சிகரமான எழுச்சிக்குப் பயன்படுத்தக் கூடிய அளவில் சக்திபடைத்ததாக இல்லை. அவ்வாறு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இங்கு கூடியுள்ள அனைத்து நாடுகளி லும் இருந்து வந்துள்ள அனைத்துக் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் முன் உள்ள பிரதானக் கடமையாகும்.

இந்தியாவில் எங்களுடைய அனுபவங்கள் என்ன என்பது குறித்து சுருக்கமாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் உள்ள இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் நடைபெற்ற மத்திய அரசாங்கத்தின் மூலம் தங்களுடைய நிகழ்ச்சி நிரலை அமல்படுத்திட அனுமதிக்காது என்பதைப் புரிந்து கொண்ட ஏகாதிபத்தியமும் இந்திய ஆளும் வர்க்கங்களும் இடதுசாரி சக்திகள் வலுவாகவுள்ள இடங்களில் அதனைப் பலவீனமாக்குவதற்காகவும் அதனைத் தாக்குவதற்காகவும் ஒன்று சேர்ந்தன. இவர்களின் அரசியல் கூட்டணி மாமேதைகளான காரல் மார்க்சும் பிரடெரிக் ஏங்கல்சும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் முதல் வரிகளில் கூறியுள்ள வாசகங்களை நினைவூட்டும் விதத்தில், இடது சாரிகளின் கோட்டையாகத் திகழ்ந்த மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டனர். இம்மாநிலத்தில் கடந்த முப்பதாண்டுகளாக  தொடர்ந்து ஏழு தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியிலிருந்தோம். 2009 இல் நடைபெற்ற பொதுத் தேர்தல்களுக்குப் பின் 600-க்கும் மேற்பட்ட நம் தோழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் நம்மீது தொடுத்துள்ள தாக்குதல்களை எதிர்த்து வரும் அதே சமயத்தில், நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்களைக் கூர்மைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இத்தகைய பகுதிப் போராட்டங்களின் மூலமாகத்தான் வலுவான வர்க்கப் போராட்டங்களைக் கட்டிட முடியும். எங்களுடைய அனுபவத்தில், இவ்வாறான போராட்டங்கள் மூலமாகவே, அகக்காரணியை  வலுப்படுத்திட முடியும் என்று கருதுகிறோம். இதே போன்று மற்ற தோழர்களின் கருத்துக்களையும் அவர்கள் பெற்ற படிப்பினைகளையும் தெரிந்து கொள்வதில் ஆவலாக இருக்கிறேன்.

இறுதியாக, இந்த ஆண்டு மாஸ்கோ மிகவும் குளிராக இருக்கிறது. இத்தகைய கடும் குளிர் காலத்தின்போது தான் லெனின் தலைமையில் அக்டோபர் புரட்சி மகத்தான வெற்றி பெற்றது என்கிற உண்மையும், இதேபோன்ற நிலைமைகளின் கீழ்தான் ஸ்டாலின் தலைமையில் பாசிசம் முறியடிக்கப்பட்டது  என்கிற உண்மையும் நம் அனைவருக்கும் உத்வேகம் ஊட்டக் கூடிய மூலக் கூறுகளாகும்.   தத்துவார்த்த உறுதியுடன் தீர்மானகரமான முறையில் செயல்பட்டால் அனைத்து விதமான தடைகளையும் தகர்த்தெறிந்து புரட்சிகர இயக்கம் முன்னேற முடியும் என்பதனை இவை நமக்கு எப்போதும் நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன.  இதுவரை என் உரையைக் கவனமாகக் கேட்ட உங்கள் அனைவருக்கும் நன்றி தோழர்களே.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

(தமிழில்: ச.வீரமணி)