சர்வதேச மகளிர் தினம் பற்றி அலெக்சாண்ட்ரா கொலந்தாய்

[ரஷ்யாவில் முதன்முதலாக 1913ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று (பழைய நாட்காட்டி அடிப்படையில் பிப்ரவரி 23) உழைக்கும் மகளிரின் சர்வதேச ஒற்றுமையின் வெளிப்பாடாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வை முன்னிட்டு கொண்டாட்டத்திற்கு ஒருவார காலத்திற்கு முன்பு அலெக்சாண்ட்ரா கொலந்தாயின் இக்கட்டுரை ரஷ்ய போல்ஷ்விக் கட்சியின் இதழான பிராவ்தாவில் வெளியானது. அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தியும், பிரச்சாரங்களை முன் வைத்தும், உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையிலும், உழைக்கும் மகளிரின் உணர்வு நிலையை உயர்த்தும் நோக்குடனும் புனித பீட்டர்ஸ்பர்க் நகரில் இத்தினம் கொண்டாடப்பட்டது.]


மகளிர் தினம் என்பது என்ன? அப்படியான ஒரு தினம் அவசியம்தானா? பெண்களுக்கு வாக்குரிமை கேட்டுப் போராடுபவர்களுக்கும் பெண்ணியவாதிகளுக்கும் முதலாளித்துவ வர்க்கத்தைச் சார்ந்த பெண்களுக்கும் கொடுக்கப்படும் சலுகைதானே அது? அது தொழிலாளி வர்க்க இயக்கத்தின் ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிக்காதா? இப்படியான கேள்விகளை இப்போதும் ரஷ்யாவில் கேட்க முடிகிறது. இக்கேள்விகளுக்கான தெளிவான பதிலை  வாழ்க்கை நமக்கு முன்பே வழங்கியுள்ளது.


மகளிர் தினம் என்பது உழைக்கும் மகளிர் இயக்கத்தின் வலுவான, நீளமான சங்கிலியின் இணைப்புக் கண்ணியாகும். ஒவ்வொரு ஆண்டும் உழைக்கும் மகளிரின் திரட்டப்பட்ட அணி வளர்ந்து வருகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்சங்கங்களில் உழைக்கும் மகளிர் சிறு எண்ணிக்கையில்தான் இருந்தனர். தொழிலாளர் கட்சியிலும் மிகச் சில பெண்களே இருந்தனர். தற்போது பிரிட்டனில் 2,92,000 பெண்கள் தொழிற்சங்கங்களில் உள்ளனர். ஜெர்மனியில் 2,00,000 பேர் தொழிற்சங்கங்களிலும், 1,50,000 பேர்  தொழிலாளர் கட்சியிலும் உள்ளனர். ஆஸ்திரியாவில் 47,000 பேர் தொழிற்சங்கத்திலும், 20,000 பேர் கட்சியிலும் உள்ளனர்.


இத்தாலி, ஹங்கேரி, டென்மார்க், ஸ்வீடன், நார்வே, சுவிட்சர்லாண்ட் என எங்கும் உழைக்கும் மகளிர் தங்களை தாங்களே அணிதிரட்டி வருகின்றனர். சோஷலிச பெண்கள் படையில் சுமார் பத்து லட்சம் பேர் உள்ளனர்.  இது ஒரு சக்திமிக்க படையாகும். விலைவாசி உயர்வு, குழந்தை தொழிலாளர்கள், மகப்பேறு காப்பீடு, உழைக்கும் மகளிரைக் காப்பதற்கான சட்டம் என எல்லாம் கேள்விக்குள்ளாகும் இன்றைய நிலையில், உலகின் சக்திவாய்ந்த உழைக்கும் மகளிரைத் திரட்டுவதில் ஏற்பட்டுள்ள உயர்வு கவனிக்கத்தக்கதாகும்.


மூலதனத்திற்கு எதிரான போராட்டத்தின் சுமையை தாங்கள் மட்டுமே சுமக்க வேண்டுமென்று ஆண் தொழிலாளர்கள் நினைப்பதும், பெண்களின் உதவியில்லாமல் இந்த ‘பழைய உலகின்’ மீது தலையீடு செய்ய வேண்டும் என்று அவர்கள் கருதிய காலமும் இருந்தது. தங்களது கணவன, தந்தையோ வேலையிழந்த சூழலில், தவிர்க்க முடியாத காரணங்களால், பெண்கள் உழைக்கும் மகளிராக உழைப்புச் சந்தைக்கு வருகின்றனர். பெண்களை வர்க்க உணர்வு அடையவிடாமல் தடுப்பதன் மூலமாகவே தங்களின் சுயநலனை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை ஆண் தொழிலாளர்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.


எந்த அளவிற்கு வர்க்க உணர்வு பெற்ற போராளிகள் அதிகரிக்கின்றனரோ அந்த அளவிற்கு வெற்றிக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. குடும்பம், சமூகம், அரசு என எங்கும் அதிகாரம் மறுக்கப்பட்ட நிலையில், அடுப்படியில் அமர வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் என்ன அளவிலான உணர்வைப் பெற்றிருக்க முடியும்? அவர்களுக்கென்று ‘சொந்த சிந்தனை’ எதுவுமின்றி, அவர்களது கணவனோ, தந்தையோ சொல்வதைக் கேட்டு, அதற்கேற்ற வகையில் கீழ்ப்படிந்து செயல்படுவதே அவர்களுக்கு வழக்கமாகிவிடுகிறது. எவ்வித உரிமைகளுமின்றி பின்தங்கிய நிலையில் பெண்களை வதைப்பதும், அவர்களை அலட்சியமாகவும் அடிமை போலவும் நடத்துவது உழைக்கும் வர்க்கத்திற்கு எவ்வித பலனையும் தராது. இன்னும் சொல்வதெனில் அது வர்க்க நலன்களுக்கு எதிரானதாகும். அதேநேரம் பெண் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை இயக்கத்திற்குள் எவ்வாறு இணைப்பது? எனும் கேள்வியும் எழுகிறது.


வெளிநாடுகளில் உள்ள சமூக ஜனநாயகவாதிகளால் உடனடியாக இதற்கான தீர்வினை கண்டடைய முடியவில்லை. அங்கு தொழிலாளர் இயக்கங்களில் பெண் தொழிலாளர்கள் இணைவதற்கான வாசல்கள் திறந்திருந்தபோதும் மிகச்சிலரே அதில் சேர்ந்துள்ளனர். ஏனெனில், தொழிலாளி வர்க்கத்தில் உள்ள பெண் தொழிலாளர்களே சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் கடுமையான இழப்புகளைச் சந்திக்கிறார்கள் என்கிற புரிதலை உழைக்கும் வர்க்கம் அங்குப் பெறவில்லை. நூற்றாண்டுகளுக்கு மேலாகப் பெண்களை அடித்துத் துன்புறுத்துவது, அச்சுறுத்துவது என்பது நிகழ்ந்து வருகிறது. எனவே, அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையிலும், அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியிலும் பேசி, அவர்களை மன ரீதியாகவும் இதய பூர்வமாகவும் இணைக்கும் வகையிலான சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

சுரண்டல் நிறைந்த, உரிமைகளற்ற இந்த உலகில் தொழிலாளர்கள் உடனடியாக சில முன்முயற்சிகளை வரவேற்க மாட்டார்கள். பெண்கள் உழைப்பை விற்பவர் என்கிற முறையில் (பொருளாதார ரீதியாக) சுரண்டப்படுவதோடு, தாய், பெண் என்கிற வகையில் (சமூக ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும்) ஒடுக்கப்படுகிறார்கள். உழைக்கும் மக்களின் சோஷலிஸ்ட் கட்சி இவற்றை  புரிந்து கொண்டுள்ளது. உழைப்பாளி என்ற வகையிலும் தாய், பெண் எனப் பெண்கள் ஒடுக்கப்படும் அனைத்து நிலைகளிலும், மிகத்துணிவோடு அவர்களுக்கு ஆதரவாக சோஷலிஸ்ட் கட்சி நிற்கிறது.


பெண்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்கு! பெண் தொழிலாளர்களுக்குச் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடு! தாய் மற்றும் குழந்தைகளுக்குக் காப்பீடு வழங்கு! என்பன உள்ளிட்ட பெண்களுக்கு ஆதரவான கோரிக்கைகளை அனைத்து நாடுகளிலும் சோஷலிஸ்டுகள் முன்வைக்கின்றனர். தொழிலாளர்களின் கட்சி மிகத்தெளிவாக இக்கோரிக்கைகளை முன்னெடுத்தது. அதேபோல், பெண் தொழிலாளர்களும் மிகுந்த விருப்பத்துடன் கட்சியில் இணைந்தனர். பெண்களுக்கான தனித்துவமான, அத்தியாவசியமான கோரிக்கைகளை முன்னெடுப்பதில் தொழிலாளர்களின் கட்சியே முதன்மை பாத்திரம் வகிக்கிறது என்றும் வரவேற்றனர். உழைக்கும் மகளிர் தங்களை அமைப்பாக ஒருங்கிணைத்துக் கொண்டதும், அதன்மூலம் வர்க்க உணர்வு பெற்றதுமே, இந்த இலக்குகளைத் தெளிவுபடுத்துவதற்கான மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

சோஷலிச இயக்கத்தின்பால் உழைக்கும் மகளிரை ஈர்க்கும் கடினமான பணி தற்போது நம்முன் உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் பெண்களுக்கான செயற்குழு மற்றும் தலைமைக் குழுக்கள் உள்ளன. இக்குழுக்கள் அரசியல் உணர்வு பெறாத பெண்கள் மத்தியில் பணியாற்றி, அவர்களை அணி திரட்டி, அவர்கள் மத்தியில் வர்க்க உணர்வை வளர்க்கின்றனர். பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்சனைகளையும் அடையாளம் காண்கின்றனர். விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், குடியிருப்புகளை மேம்படுத்துவதற்கான கோரிக்கைகளை முன்வைத்தும், பெண்களுக்கான அரசியல் உரிமைகளுக்காகவும், பெண் தொழிலாளர்களுக்கான சட்ட பாதுகாப்பிற்காகவும், பாலூட்டும் தாய்மார்களுக்கான உணவு மற்றும் பாதுகாப்பிற்காகவும், குழந்தை இறப்பு மற்றும் விபச்சாரத்திற்கு எதிரான பிரச்சாரம் என்பன உள்ளிட்டவற்றை அவர்கள் முன்னெடுக்கின்றனர்.


கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் பொதுவான வர்க்க நலன்களுக்காகப் போராடுவதோடு, தாய், குடும்பத் தலைவி, பெண் என்கிற வகையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், அவர்களுக்கான தேவைகளையும், பெண் தொழிலாளர்கள் முன்வைக்கின்றனர். கட்சியும், இக்கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துப் போராடுகிறது. பொதுவான தொழிலாளர் நல அம்சங்களின் ஒருபகுதியே  உழைக்கும் மகளிரின் இக்கோரிக்கைகளுமாகும். மகளிர் தினத்தன்று தங்களுக்கு மறுக்கப்பட்டுள்ள உரிமைகளை வென்றெடுக்க அணி திரட்டப்பட்ட பெண்கள் போராடுகின்றனர்.

எதற்காகப் பெண் தொழிலாளர்களைத் தனியாக அணிதிரட்ட வேண்டும்? தொழிலாளி வர்க்கத்தைச் சார்ந்த பெண்களுக்கு தனியான துண்டுப் பிரசுரங்கள், கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை ஏன் நடத்த வேண்டும்? இது இறுதியில் முதலாளித்துவ பெண்ணியவாதமாகவோ, முதலாளித்துவ ஜனநாயகம் முன்வைக்கும் வெறும் வாக்குரிமைக்கான விஷயமாகவோ ஆகிவிடாதா? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். வாக்குரிமைக்கான போராட்டத்தை மட்டும் முன்வைக்கும் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும், தீவிரமான சோஷலிச பெண் இயக்கத்திற்குமான வித்தியாசத்தை அறியாதவர்கள்தான் இப்படியான கேள்விகளை எழுப்புவர்.


முதலாளித்துவ சமூக அமைப்பில் அவர்களின் தந்தையும், கணவரும் மற்றும் சகோதரர்களும் பெறும் உரிமைகளை தாங்களும் அடைவது மட்டுமே முதலாளித்துவ பெண்ணியவாதிகளின் இலக்காகும். பிறப்பின் அடிப்படையிலோ, செல்வ வளத்தின் அடிப்படையிலோ நிலவும் அனைத்து சலுகைகளையும் ஒழிப்பதே உழைக்கும் மகளிரின் இலக்காகும். தங்களை ஆளுகைக்கு உட்படுத்துவது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், உழைக்கும் மகளிர் அதை எதிர்ப்பதில் எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை. ஏனெனில், ஒரு தொழிலாளி என்கிற வகையில் இந்நிலையை அவர் மிக எளிதில் அடைகிறார்.


எங்கும் எப்போதும் முதலாளித்துவ பெண்ணியவாதிகள் சம உரிமை என்று கோருகின்றனர். உழைக்கும் மகளிரோ, ஆண், பெண் என அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை கோருகிறோம். அதே நேரம் குடிமக்கள், தொழிலாளி என்பதாக மட்டுமல்லாமல், பெண்கள் தாய்மார்களாகவும் உள்ளனர் என்பதை நாங்கள் மறப்பதற்கில்லை. ஒரு தாய் என்கிற வகையில் எதிர்காலத்திற்கான தலைமுறையை உருவாக்குபவர்கள் பெண்கள்தான். எனவே, அரசும் சமூகமும் அவர்களையும், அவர்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளையும், பாதுகாப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்கிறோம்.


முதலாளித்துவ பெண்ணியவாதிகள் அரசியல் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்றனர். உழைக்கும் மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் இவ்வுலக அமைப்பிற்குள்ளேயே அவர்கள் வசதியாக செயல்படுவதற்கான சூழலையே அவர்கள் முன்வைக்கும் அரசியல் உரிமைகள் கூறுகின்றன. (உழைக்கும் மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் இவ்வுலக அமைப்பையே தூக்கியெறிந்துவிட்டு) உழைக்கும் மக்களின் அரசைப் படைக்கும் மிகக் கடினமான பாதையை உள்ளடக்கியதே உழைக்கும் மகளிர் முன்வைக்கும் அரசியல் உரிமையாகும்.


உழைக்கும் மகளிருக்கும் முதலாளித்துவ வாக்குரிமையை மட்டும் கோருவோருக்குமான பாதைகள் வெவ்வேறானவை. வாழ்க்கை அவர்களுக்கிடையில் அவர்களின் இலக்குகளை தீர்மானிப்பதில் ஒரு பெரிய வித்தியாசத்தைக் கொடுத்துள்ளது. எஜமானருக்கும் சேவகனுக்கும் இருப்பது போன்ற ஒரு முரண்பாடு, முதலாளித்துவ பெண்ணுரிமையாளர்களுக்கும், உழைக்கும் மகளிருக்குமிடையே உள்ளது. இவர்களுக்கிடையில் எவ்வித தொடர்போ, சமரசமோ இல்லை. எனவே, உழைக்கும் வர்க்க பெண்களுக்கான சிறப்பு மாநாடு குறித்தோ, தனியான மகளிர் தினம் குறித்தோ, ஆண் தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.
ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கான போராட்டத்தில் பங்கேற்கச் செய்வதற்கான உணர்வினை பெண் தொழிலாளர்கள் மத்தியில் உருவாக்குவதே உழைக்கும் வர்க்க பெண்கள் மத்தியில் ஆற்ற வேண்டிய தனித்துவமான பணியாகும். மகளிர் தினம், பெண் தொழிலாளர்கள் மத்தியில் நிதானமாகவும், அதேநேரம் கவனமாகவும், ஒரு சுய விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்துகிறது. அது தொழிலாளி வர்க்கத்தை பிரிக்கவில்லை; மாறாக ஒன்றிணைக்கிறது.


உழைக்கும் மகளிர், வர்க்க விடுதலைக்கான போராட்டத்தோடு பெண் விடுதலை என்பதையும் இணைத்து  மகளிர் தினக் கொண்டாட்டத்தில் இணைய வேண்டும்.

தமிழில்: ச. லெனின்

பிப்ரவரி  1913, லெக்சாண்ட்ரா கொலந்தாய், தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள், முன்னேற்றப் பதிப்பகம்,1984 மற்றும் marxist.org (2000)

முதலில் வெளியானது: பிராவ்தா,  No. 40(244), 17 பிப்ரவரி 1913, புனித பீட்டர்ஸ்பர்க்



திராவிட மாடல் நூல்: தொடரும் விவாதம்

பேரா. வி. முருகன்

 “ திராவிட மாடல்-தமிழ்நாட்டின் அரசியல் பொருளாதரத்திற்கான ஒரு விளக்கம்” என்ற புத்தகத்தை  கேம்ப்ரிரிட்ஜ் பல்கலைக் கழக பிரஸ் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது. திரு கலையரசன் அவர்களும் திரு விஜய பாஸ்கரும் இதன் ஆசிரியர்கள். பொருளாதாரம், அரசியல் அறிவியல் மற்றும் சமூகவியல் ஆகிய துறைகளில் சிறந்த ஆராய்ச்சி வல்லுனர்கள் என்று அறியப்படுபவர்கள்.

இந்தப் புத்தகம் அரசியல் அறிவியல்(Political Science) மற்றும் சமூகவியல் (Sociology) துறையில் உள்ள ஆராய்ச்சி வல்லுனர்களுக்காக எழுதப்பட்ட ஓர் ஆராய்ச்சி நூல்.

அமெரிக்காவில் உள்ள பிரௌன் பல்கலைக் கழகத்தில் உள்ள Watson Institute for International and Public Affairs என்ற துறையின் சார்பாக இந்தப் புத்தகத்தைப் பற்றிய விவாதம் நடந்தது. அதை பாட்ரிக் ஹெல்லர்  தலைமை தாங்கி நடத்தினார்.  புத்தகத்தின் ஆசிரியர்கள் என்ற முறையில் விஜய பாஸ்கரும் கலையரசனும் கலந்து கொண்டார்கள். அந்த விவாதத்தில் பார்த்தா சாட்டர்ஜி, ரீனா அகர்வாலா, பார்பரா ஹாரிஸ் ஒய்ட் போன்ற அறிஞர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

இவர்கள் அனைவரும் சமூகவியல் வல்லுனர்கள். மார்க்சீயம் நன்கு தெரிந்தவர்கள். ஆனாலும் அவர்கள் மார்க்சீய சிந்தனையாளர்கள் அல்ல. அவர்கள் முற்போக்கு சிந்தனையாளர்கள். அதனால் இந்த நூலைப் பற்றிய அவர்களது விமர்சனங்கள் மார்க்சிய பார்வையில் சொல்லப்பட்டவை அல்ல. இந்த விவாதம் முற்றிலும் சமூகவியல் பார்வையில் நடந்தவை. அவர்கள் அனைவரும் இந்தியாவில் கள ஆய்வு செய்த அனுபவம் உள்ளவர்கள்.  உதாரணத்திற்கு பாட்ரிக் ஹெல்லர் கேரளத்தைப் பற்றி நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்பவர்.

இந்தத் தொகுப்பிற்குள் போகும் முன் ஒரு குறிப்பைத் தர வேண்டும். இதில் பல சொல்லாடல்கள் வருகின்றன. Hegemony, Historic block என்ற சொல்லாடல்கள் கி்ராம்ஸி சொல்லும் கருத்துக்கள். Model, Solidarity, Status based inequality, Populism, Social Popular, Economic Popular போன்ற சொல்லாடல்கள் நமக்குப் பரிச்சயமானவைதான். ஆனாலும் இங்கு சமூகவியலுக்குரிய கலைச் சொற்கள் என்ற அர்த்தத்தில் இவை பயன்படுத்தப் பட்டுள்ளன. இந்தியாவைப் பற்றி பேசும் போது Status based inequality என்பது ஜாதீய அமைப்பின் காரணமாக எழும் ஏற்றத்தாழ்வுகளைக் குறிக்கிறது. Model என்ற சொல் நமக்கு மிகவும் பரிச்சயமான சொல். ஆனாலும் சமூகவியலில் இன்னும் நுணுக்கமான விஷயங்களோடு தொடர்புடையவை.  பாட்ரிக் ஹெல்லர் மற்றும் பார்பரா ஹாரிஸ் வொய்ட் ஆகிய இருவரும் திராவிட மாடல் என்ற சொல்லாடலில் வரும் மாடல் என்ற கருத்தை மறுக்கிறார்கள். அதன் பொருள் சமூகவியலுக்குரிய கலைச்சொல்லாக மாடல் என்ற சொல்லைப் பார்க்கும்போது திராவிட மாடல் என்ற சொல்லாடலில் அது பொருந்தாது என்பதாகும்.  

 Solidarity என்பது பல வேறுபாடுகளைத் தாண்டி சில அடையாளங்களின் அடிப்படையில் ஒரு அணியாகத் திரள்வது. பிராம்மண எதிர்ப்பு, இந்தி/ சமஸ்கிருத எதிர்ப்பு போன்ற அடையாளங்களின் அடிப்படயில் இங்கு ஒன்று திரள்வது.  தங்களுடையேயுள்ள முரண்பாடுகளைக் கடந்து ஒரே அணியில் திரள்வது. உதாரணத்திற்கு,  பிராமாணரல்லாத முதலாளிகளும் தொழிலாளர்களும் ஒரே அணியில் திரள்வது. முதலாளிகளால் பாதிக்கப்பட்டாலும்  முதலாளிகளோடு போவதற்கு  தொழிலாளர்கள் இசைவு தெரிவிப்பது.  கலையரசனும் விஜய பாஸ்கரும் இந்த சொல்லைப் பயன்படுத்தவில்லை. அவர்கள் கிராம்ஸியின் Historic Block சொற்களைத்தான் பயன்படுத்துகின்றனர்.

 இணைய தளத்தில் இவற்றைப் பற்றி தேடினால் சமூகவியல் துறையிலேயே இந்தக் கலைச்சொற்களைப் பற்றிய ஒருமித்த கருத்துக்கள் இல்லை. இது இயற்பியல், உயிரியல் போன்ற இயற்கை அறிவியலுக்கு மாறானது.

இந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்தி அதன் நோக்கம், அவர்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட பொருள், அவர்களது ஆய்வு முறைகள், அவர்களுடைய ஆய்வு முடிவுகள் ஆகியவற்றை சுருக்கமாக வழங்கினார்கள்.

ஆசிரியர்கள் வழங்கிய அறிமுகம்.

  1. உலகில்  சில பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் அதே வேளையில் மனித வளத்தில் வளர்ச்சியில்லை. அதே போல் மனித வளர்ச்சி ஏற்படும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதில்லை. இது ஏன்?
  2. ஒரு சமூகத்தில் சமூக அந்தஸ்துகள் (இந்தியாவில் இது ஜாதிய அமைப்பைக் குறிக்கிறது) காரணமாக ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து வெற்றி பெரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதில்லை. அதே போல் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் நாடுகளில் சமூக அந்தஸ்துகள் (இந்தியாவில் இது ஜாதிய அமைப்பைக் குறிக்கிறது) காரணமாக ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவதில்லை. இது ஏன்?

இந்த நிலைதான், பொதுவாக,  பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகளில் உள்ளது.  அரசியல் அறிவியலில் மற்றும் சமூகவியலிலும் இந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடும் வகையில் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறுகின்றன.  அதில் ஒரு பகுதியாகத்தான் இந்தத் புத்தகத்தையும் பார்க்க வேண்டும்.

 இந்தப் புத்தகத்தில் வலியுறுத்தப்படும் முக்கியமான கருத்து:   தமிழ் நாட்டில் பொருளாதார வளர்ச்சி, மனித வளத்தில் வளர்ச்சி, (சமூக அந்தஸ்துகள் காரணமாக) ஜாதிய அமைப்பு காரணமாக ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி ஆகிய மூன்று விஷயங்களையும் தமிழ்நாட்டில்   திராவிட  இயக்கம்  சாதித்துள்ளது. இதையே திராவிட மாடல் என்று இந்நூலின் ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.  (இதன் பொருள் திராவிட மாடல் என்ற ஒரு மாடல் இருக்கிறது என்றும், அது  மற்ற மாடல்களில் இருந்து வேறுபடுகின்றது  என்றும் கூறுவதாகும்) இந்த மாடலை மற்ற தென் உலக நாடுகளிலும் செயல் படுத்தலாம்..

(தென் உலக நாடுகள் என்பது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தெற்கே உள்ள நாடுகள் என்பவையாகும். மூன்றாவது உலக நாடுகள் என்று எடுத்துக் கொள்ளலாம்)

இதுதான் இந்த புத்தகத்தின் சாராம்சம்.

அரசியல் அறிவியல் என்ற துறைக்குரிய ஆய்வு என்ற முறையில் இதற்கு முதலில்  செய்ய வேண்டியது:  தமிழ் நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதையும்,   மனித வளத்தில்  வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதையும், ஜாதீய அமைப்பின் காரணமாக இருந்த ஏற்றத் தாழ்வுகள் குறைந்துள்ளன என்பதையும், போதிய தரவுகள் மூலம் நிறுவதல் செய்ய வேண்டும் . அப்படி தமிழ்நாட்டில் நடந்துள்ளது என்று தரவுகளைக் கொடுத்து நிரூபிக்க முயற்சித்துள்ளார்கள்.

 இரண்டாவதாக, எப்படி இது நடந்தது என்பதற்கான விளக்கத்தை தர வேண்டும்.  அவர்கள் தரும் விளக்கத்தின்படி, திராவிட மாடல் என்ற ஒன்று உள்ளது என்றும், அதன் மூலம் இந்த சாதனைகள் நடந்துள்ளன என்றும் வாதிடுகிறார்கள்.

மூன்றாவதாக, இந்த மாடலில் உள்ள குறைகள், அதன் வரம்புகள் இது எதிர்காலத்தில் எப்படி மேற்கொண்டு செல்லக்கூடும்  என்று சொல்கிறார்கள். அவர்களின் வாதங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

தமிழ்நாட்டில்  எழுந்த ஒரு தனித்துவம் வாய்ந்த சமூக நீதி பற்றிய கருத்தோட்டம் இந்த வளர்ச்சிப் பாதைக்கான முக்கியமான காரணமாகும்.  இது சில அடையாளங்களை அடி்ப்படையாகக் கொண்டு இயங்கிய இயக்கத்தில் இருந்து அரசியல் இயக்கமாக மாற உதவியது. 

 பலவித வேறுபாடுகள் கொண்ட கீழ்நிலை ஜாதிகளில் உள்ள அனைவரையும் சமஸ்கிருதத்தை மையமாகக் கொண்ட உயரடுக்கினரை எதிர்த்து,  கிராம்ஸி கூறும் historic block என்ற கருத்தாக்கத்தின் கீழ், ஒரு அணியாக  திரட்டப்பட்டதுதான் தமிழ்நாட்டின் வெற்றிக்கு முக்கியமான காரணம். தேர்தலுக்கு அப்பாற்பட்டு சமூக அமைப்பு விமர்சிக்கப் பட்டது.  திட்டமிட்டு  தொடர்ந்து நடத்தப்பட்ட அரசு தலையீடுகள் மூலம் ஜாதியின் அடிப்படியில் அமைந்த தொழில் உறவுகள் தகர்க்கப்பட்டதாக உரையில் சொல்லப்பட்டது.

கல்வி, சுகாதாரம், மூலதனம் மற்றும் உழைப்பாளர்கள் ஆகிய நான்கு தளங்களில் தமிழ்நாட்டில் நடந்தவைகளைப் பற்றி சுருக்கமாக ஆசிரியர்களின் உரையில் கூறப்பட்டது.

தேசிய அளவில் கல்வி உயரடுக்கினரை மையப்படுத்தி வளர்ந்தது. அதனால் பள்ளிக் கல்விக்குப் பதிலாக உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் தமில்நாட்டில், இதற்கு மாறாக, பள்ளிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் உயர்கல்வி விரிவாக்கப்பட்டது. இடஒதுக்கீடு மூலமாக உயரடுக்கினருக்கு பாரபட்சமாக இருந்த கல்வியை ஜனநாயகப்படுத்தியது.

 சுகாதாரத்தில் வலுவான ஆரம்ப சுகாதார அமைப்புகள் செயல்பட்டன என்று சுட்டிக் காட்டப் பட்டது.

ஜாதிய அமைப்பின் காரணமாக பிறப்பின் அடிப்படையாலே சிலர் முதலாளிகளாகவும் சிலர் தொழிலாளர்களாகவும் உருவாகிய சூழ்நிலையில், உற்பத்தி தொழில்துறையின் வளர்ச்சியின் மூலம்தான் சமூகநீதி கிடைக்கும் என்று கணிக்கப்பட்டது. ஜாதிகளின் அடிப்படையில் அமையும் தொழில் வளர்ச்சி, நவீனத்துவத்தை தராது என்று கணிக்கப்பட்டது. கிராமங்களில் இருந்து நகர்ப்புறத்திற்கு மக்கள் புலம்பெயர்வது ஊக்குவிக்கப்பட்டது.  

மூலதனத் திரட்டலுக்கு எதிராக இல்லாமல், மூலதனக் குவியல் ஊக்குவிக்கப்பட்டது மூலதனக் குவியல் தொடர்ந்து நடந்தது. மூலதனக் குவியல் ஜனநாயகப்படுத்தப் பட்டது. தாழ்த்தப் பட்ட ஜாதியினரும் மூலதனக்குவியலில் பங்கேற்றனர். இந்தியாவில் உள்ள பட்டியல் இனத்தைச் சேர்ந்த தொழில்முனைவர்களில் நான்கில் ஒரு பங்கினர் தமிழ்நாட்டில் உள்ளார்கள் என்று சுட்டிக் காட்டப்பட்டது.

பணியிடங்களில் உழைப்பவர்களின்  நிலை சரியாக இல்லாவிட்டாலும், பணியிடங்களுக்கு வெளியே அரசு செய்த பல பொதுநலத்திட்டங்கள் ( உதாரணத்திற்கு பொது விநியோக அமைப்பு) மூலமாக அவர்கள் வாழ்வு மேம்படுத்தப்பட்டது. மொத்தத்தில், இதை இடது பாப்புலிசம் என்று  ஆசிரியர்கள் கூறினார்கள்.

உரையாடலில் கலந்துகொண்ட ஆய்வாளர்களின் கருத்தை சுருக்கமாக காண்போம்.

பார்த்தா சாட்டர்ஜி:

இந்தப் புத்தகம் முக்கியமாக சொல்வது பாபுலிஸம் வளர்ச்சியைக் கொடுக்கும் என்பதாகும். பல மாடல்கள் உள்ளன. இதோடு  திராவிட மாடல் என்று மற்றொரு மாடல் உள்ளது என்று இந்தப் புத்தகம் கூறுகிறது. மற்ற இடங்களில் இதை செயல் படுத்தலாம் என்று கூறுகிறார்கள்.  பண்பாட்டுத் துறைகளில்  நடக்கும் சில இயக்கங்களை அடித்தளமாக கொண்டு ஏற்படும் வளர்ச்சிப் போக்கு சில ஜனநாயக விளைவுகளை தர வாய்ப்புகள் உண்டு என்று இந்தப் புத்தகம் கூறுகிறது.

 இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டிருப்பவைகளின் அர்த்தம் என்ன? சொத்துடைமைகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளுக்குப் பதிலாக சமூக அந்தஸ்த்துகளில் ( இங்கு ஜாதி அடிப்படையில்)  உள்ள ஏற்றத்தாழ்வுகளை முக்கியமானவையாக எடுத்துக்கொள்வது விளிம்புநிலை மக்களுக்கு வளர்ச்சியை தரும். ஐரோப்பாவில் உள்ள அனைவருக்குமான பொதுநலத்திட்டங்களுக்குப் பதிலாக, குறிப்பிட்ட பகுதி மக்களை மையப்படுத்தி பொது நலத்திட்டங்களை அமுல்படுத்தலாம்.

 திராவிடம் மற்றும் தமிழர்களின் கலாசாரம் என்ற அடிப்படையிலும், பிரமாணியம் மற்றும் சமஸ்கிருதம் ஆகியவற்றை உள்ளடக்கிய கலசாரம் என்ற அடிப்படையிலும், சமுதாயம் இரண்டாக  எதிரெதிராகப் பிளவுபட்டுள்ளது. இந்த  எதிர்நிலை பொதுவான இயல்பறிவாக ( Dravidan common sense) உருவாகிவிட்டது. வளர்ச்சிக்கான செயல்திட்டம் இந்த எதிர்நிலைகளின் அடிப்படையில் கட்டப்படுகிறது. முடிவில், இதை இடது பாப்புலிசம் என்று கூறுகிறார்கள்.

 இது எப்படி இடது பாப்புலிசம் ஆகும்? (பார்த்தா சாட்டர்ஜியின் கேள்வி) கம்யூனிஸ்டுகள் மூலதன திரட்டலை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இங்கு தரப்படும்  மொத்த வாதமும் மூலதனத் திரட்டலுக்கு வசதி செய்து தருவோம் என்பதுதான். நிலச்சீர்திருத்திற்குப் பதிலாக கல்வியை அனைவரும் அடையக்கூடியதாக்குவது என்பதும், ஜாதி  அமைப்பின் காரணமாக எழும் ஏற்றத்தாழ்வுகளைத் தாக்குவது என்பதும் செய்தால் போதும். மற்ற ஏற்றதாழ்வுகளும் மற்ற பிரச்சனைகளும் அப்படியே இருக்கும். தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்திற்கு அப்பால் வெளியே அவர்களுக்கு தேவையான அளவிற்கு தகுந்தாற் போல் அரசு சில திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு  உதவுவது. இது மேற்கு வங்ககத்தயோ அல்லது கேரளாவையோ போன்றதல்ல. அந்த மாடல்களில் நிலச்சீர்திருத்தின் மூலம் உற்பத்தி பொருளாதாரத்தை மாற்றுவது. ஆனால் இவர்கள்  வேறு திசையினைக் காட்டுகிறார்கள்.  இந்த மாடலின் வரம்புகள் என்ன? எந்த அளவிற்கு மற்ற இடங்களில் இந்த மாடலை அமுல்படுத்த முடியும்? அவர்களே இந்த மாடலின் வரம்புகளையும், அது எதிர்காலத்தில் செல்லக் கூடிய சாத்தியக்கூறுகளையும்  இந்தப் புத்தகத்தில் விவாதித்துள்ளார்கள்.

அதிமுக பிரிந்து வந்த பிறகு அவர்கள் மதத்தையும் கலாச்சாரத்தையும்  விமர்சிக்கும் பகுத்தறிவு இயக்கத்தை கைவிட்டார்கள். இது பற்றிய விவாதம் இந்தப் புத்தகத்தில் இல்லை. இறுதியான கேள்வி: கலாச்சாரத்தை அடிப்படையாக இந்தப் பரிசோதனை தீர்ந்து விட்டதா? திராவிட மாடலில்  வளர்ச்சி தொடருமா?

ஒவ்வொரு இடத்திற்குத் தகுந்தாற் போல் வளர்ச்சி தரும் மாடல் இருக்க வேண்டும். அது அந்த இடத்தின் கலாச்சாரத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதுதான்,  இந்தப் புத்தகம் தரும் பாடம்.

ரீனா அகர்வாலா:

திராவிட மாடல் என்று ஏதோ ஒன்று இருக்கக் கூடும் என்று நினத்தாலும், இந்தப் புத்தகத்தை படித்து முடித்த பிறகு, திராவிட மாடல் என்றால் என்ன என்று  புரியவில்லை. தமிழ்நாட்டில் மேலிருந்து நடந்ததிற்கும்,  கீழிருந்து நடந்ததிற்கும், மாறி மாறி இந்தப் புத்தகம் விவாதிக்கிறது. மேலிருந்து அரசு செய்த தலையீடுகள் மிகவும் பாராட்டப்படுகிறது.  தலைவர்கள் தந்த சில கருத்துக்கள், பல்வேறு நலவாரியங்களை அமைத்தது;  இட ஒதுக்கீட்டில்  செய்தது; சுகாதாரத்தில் செயல்பட்டது; அடிப்படை கட்டமைப்பினை நன்கு உருவாக்கியது போன்ற விஷயங்கள் அதிகமாகப் பாராட்டப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் விளிம்பு நிலை மக்களுக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளன என்பதை ரீனா அகர்வாலா ஒப்புக் கொள்கிறார். ஆனால் தமிழ்நாட்டின் பாப்புலிஸம் இந்தப் புத்தகத்தில் பாராட்டப்படும் அளவைப் பார்க்கும்போது, அது என்ன அப்படிப்பட்ட பாப்புலிஸம் என்று கேட்கத் தோன்றுகிறது. நிச்சயமாக அது கம்யூனிசம் இல்லை. புத்தகத்தின் ஆசிரியர்கள்  மூலதனத்தை தாக்க மறுக்கிறார்கள் என்பதை ரீனா அகர்வாலா சுட்டிக் காண்பிக்கிறார்.   இது ஒரு வகையான சமூக ஜனநாயகம்தானே.  ஆனாலும் தமிழ்நாட்டின் பாப்புலிசம் சமூக ஜனநாயகமில்லை என்று  கூறப்பட்டுள்ளது. . அது எப்படி? இன்றிருக்கும் பிரச்சனைகளுக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கும், எந்த சமூகக் கட்டமைப்புகள் காரணமோ, அந்த கட்டமைப்புகளை மாற்ற முயற்சிக்காமல், அவற்றிற்குள்ளேயே செயல்படுவதுதான் அனைத்து சமூக ஜனநாயகங்களுக்கும் பொதுவானது.  கருணாநிதியின் ஆட்சியில்  தொழிலாளர்கள் மீது  தி,மு.க, அடக்குமுறையை ஏவி விட்ட வரலாறு உள்ளது என்று ரீனா அகர்வாலா சுட்டிக் காண்பிக்கிறார்.

 தமிழ்நாட்டில் எப்படி பாப்புலிசம் அமுல்படுத்தப் பட்டது? அரசியல் தலைவர்கள் எதற்காக ஜாதிய அமைப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு   விடுதலை பெற்று தர வேண்டும்? தேர்தலில் வெற்றி பெறுவதுதான் முக்கியமான தூண்டுகோலாக இருக்க வேண்டும். அ.தி.மு.க வை  பாப்புலிச அரசு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அது ஏன்? சொல்லப் போனால் இரு இயக்கங்களும், போட்டி போட்டுக் கொண்டு, பாப்புலிசத்தை அமுல் படுத்தின. தேர்தலின் பங்களிப்பை ஆசிரியர்கள்  குறைத்து மதிப்பிடுகிறார்கள். அதற்குப் பதிலாக, பல்வேறு பிரிவினரின் பிரதிநிதிகளும் அரசில் பங்கெடுப்பதன் மூலம் பாப்புலிசம் அமுல்படுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால்  அடையாள பிரதிநிதித்துவ மாடலில் இருந்து திராவிட மாடல் எப்படி வேறுபடுகிறது?

 தமிழ் நாட்டின் பாப்புலிசத்தின் மற்றொரு அம்சம், கீழிருந்து நடக்கும் இயக்கம் ஆகும்.. சமூக நீதியின் எந்த அம்சம்  தமிழ்நாட்டின் பாபுலிசத்திற்கு முக்கிய பங்களித்துள்ளது? வர்க்க ரீதியான முரண்பாடுகளைத் தாண்டி, அனைத்து வர்க்கங்களின் இசைவை, சில அடையாளங்களின் அடிப்படையில் உள்ள, கூட்டொருமைப்பாடு ( solidarity) வழியாகப்  பெறுவது அவசியமானது என்று வாதிடப்படுவது  போல் தெரிகிறது. வளர்ச்சிக்கு கூட்டொருமைப்பாடு முக்கியமானதா? வர்க்கரீதியாக ஒன்றிணப்பதை விட ஜாதிய ரீதியாக ஒன்றிணப்பது முக்கியமான யுக்தியா?

நவீன கல்வியை எல்லோருக்கும் வழங்குவதும், அரசு வேலைகளில் அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதும், நிலசீர்திருத்தத்தை விட முக்கியமானது என்று கூறப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில் சரியாக இல்லாததை, பணியிடங்களுக்கு அப்பால் வெளியில் வலுவான நலத்திட்டங்கள் மூலம் தொழிலாளர்களின் வாழ்வு மேம்படுத்தப்பட்டுள்ளது என்று  கூறப்பட்டுள்ளது..

 இந்த மாடல் மற்ற இடங்களில் பின்பற்ற முடியுமா? அப்படி பின்பற்ற வேண்டுமா?

பார்பரா ஹாரிஸ் ஒயிட்:

 இந்தப் புத்தகம் எழுப்பும் மையக் கருத்து:  கலாசாரம் எப்படி ஒரு சமுதாயத்தின் பொருளாதாரத்தை பாதிக்கும்?  அரசியல் ரீதியாக  கடுமையாக உழைத்து பிராமணர்கள் அல்லாதவர்களால் ஒரு சமூகத் தொகுதி (block) உருவாக்கப்பட்டது. ஒரு கருத்தியலின் ஆதிக்கம் (hegemony) மூலம் பொருளாதார  மேம்பாடும், அரசு தலையீடுகள் மூலம் மூலதன திரட்டலையும், அமைப்பு ரீதியான மாற்றங்களையும் அடைய முடியும் என்று இந்தப் புத்தகம் கூறுகிறது. கீழ்நிலைப்படியில் உள்ள ஜாதியினரிடம்   ஏற்படும் மூலதனம் திரட்டல் மூலம் சமுதாய அமைப்பில் மாற்றங்கள் ஏற்படும்.  தொழிலாளர்களின் போராட்டங்கள் பொருளாதார வளர்ச்சியை நிர்மாணிக்கும் இயந்திரம் என்ற கருத்து திட்டமிட்டு மறைக்கப்பட்டு அதற்குப் பதிலாக திராவிடக் கூட்டணியைப் மையப்படுத்திய விளக்கத்தை  முன்னிலைப்படுத்தப்படுகிறது.

பாப்புலிசம் சிறு உற்பத்தியை (petty production) ஊகுவிக்கிறது. அது மூலதன திரட்டலையும் உருவாக்குகிறது. முதலாளித்துவத்தால் பாதிக்கப்படுவோருக்கு ஏதோ ஒரு வகையில் நிவாரணத்தைக் கொடுத்து முதலாளித்துவத்திற்கு ஆதரவு கொடுகிறது. உரிமைகளின் அடிப்படையில் உருவாகும் பாப்புலிசமும், அரசின் தலையீட்டால் உருவாகும் பாப்புலிசமும்,  முற்போக்கான இடது பாப்புலிசத்தைக் கொடுக்கிறது என்று புத்தகம் சொல்கிறது. தமிழ்நாட்டில் நிலவும் ஊழலோடு திராவிட மாடல் எப்படி இணைந்து இருக்க முடியும்? 

பாட்ரிக் ஹெல்லர்:

இது ஒரு மாடல் அல்ல. இது ஒரு வளர்ச்சிப் பாதை. இதில் வேறு எங்கும் காணமுடியாது என்று சொல்லக்கூடிய தனித்துவம் இல்லை. இது போன்று பல இடங்களில் நடந்துள்ளது. குறிப்பாக, பிரேசிலுக்கும் தமிழ்நாட்டிற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. பிராமணர் அல்லாதவர்களிடம் உள்ள வர்க்கங்களிடம் உள்ள முரண்பாடுகளைத் தாண்டி  கலாச்சாரத்தின் ஒரு சமூகத் தொகுதி கட்டப்பட்டுள்ளது. இதே யுக்தியை வலதுசாரிகளும் செய்ய முடியும்.

இந்த நான்கு அறிஞர்களும் சமூக அறிவியலின்படி இந்தப் புத்தகத்தை விமர்சித்துள்ளார்கள்.  மிக விரிவான முறையில் எல்லாத் துறைகளிலும் கொடுக்கப் பட்டுள்ள தரவுகளுக்காக இந்த புத்தகத்தை அனைவரும் பாராட்டியுள்ளனர். தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியும் மனித வள வளர்ச்சியும் நடந்துள்ளது என்று இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதை இவர்கள் யாரும் மறுக்கவில்லை.   இந்த புத்தகம் மிக சாதுரியத்துடன் எழுதப்பட்ட புத்தகம் என்றுதான் நான் கருதுகிறேன். இது ஒரு வகையில்  அரசியல் அறிவியல்( political science) மற்றும் சமூகவியல் (sociology) வல்லுனர்களுகாக எழுதப்பட்ட ஆராய்ச்சி என்ற தோற்றமளிக்கிறது. அதே சமயத்தில் தி.மு.க. விற்கு  அரசியல் ரீதியாக நல்ல லாபம் தரும் நூலாகவும் அமைந்துள்ளது. அவர்களின் பிராச்சாரத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிராசாதம். குறிப்பாக முதலாளித்துவத்தின் வளர்ச்சியை, சாதனையாக, கருத்தியல் ரீதியாக காட்டும் நூல். இடதுசாரி சித்தாந்தத்திற்கு மாற்றாக, இது திராவிட மாடலை முன்னிறுத்துகிறது.

மதங்களும், அரசியலும் – ம.சிங்காரவேலர்

(நூல்: நாம் செய்யவேண்டியது என்ன? ம.சிங்காரவேலர், பாரதி புத்தகாலயம்)

  • ம.சிங்காரவேலர்

பூர்வ காலம் தொடங்கி அந்தந்த காலத்து அரசியல்கள் மதங்களை ஆதரித்து வந்திருக்கின்றன. மதங்கள் பரவியதற்கும் அரசியலே காரணம். “அரசன் எவ்வழியோ அவ்வழியே குடிகள்” என்ற முதுமொழி மதங்களுக்கும், அரசுகளுக்கும் உள்ள சம்பந்தத்தை விளக்குகின்றது. இதனை ஆதி சாஸ்த்திர ஆராய்ச்சி மூலமாக நிரூபிப்போம். காட்டுமிராண்டி, (Savages) மந்திரக் காரன்தான், தலைவனாக மதிக்கப்பட்டிருந்தான். மந்திர தந்திரத்தில் வல்லவனே, நாகரிகமில்லாத காலங்களில், அரசனாகவும், சேனைத் தலைவனாகவும், ஆதிக்கமுடையவனாகவும், அந்தந்த ஊர் அரசியல் நிர்வாகங்களை நடத்தி வந்தான். இந்தக் காட்டு மிராண்டிப் பழக்கம், இன்றைக்கும் நமது நாட்டை ஆளும் (இங்கிலாந்து ப-ர்) அரசர்கள் முடியில், ‘டையு ஏ மாந் துருவர்’ (Diew et Mon Droit), அதாவது கடவுளும் என்னுடைய ஆட்சியும் என்று எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்.

பண்டைக்கால அரசுகள் யாவும், கடவுளருளால் அல்லது ஆக்கினையால் பெறப்பட்டதென்பதே, அரசியல் திட்டத்தில் முதன்மையான சித்தாந்தம். மத்தியகாலத்தில் (Middle ages) பல அரசர்கள் தங்களுடைய ஆட்சியைக் கடவுளுடைய ஆட்சி என்றே வாதித்து வந்தனர். பதினான்காம் லூயி (Loui the fourteenth) பிரஞ்சு சேதத்தைக் கடவுள் உத்திரவு பெற்று அரசு புரிவதாகத் தன் பிரஜைகளுக்குத் தெரிவித்து வந்தான். ஜார் (Zar) சக்கரவர்த்திகள், ரஷ்யாவில் தாம் சிறிய பிதாவென (The Little Father) அழைக்கப்பட்டு அதாவது, பரலோகத்தில் உள்ள கடவுள் பெரிய பிதாவென்றும், தாம் சிறிய பிதாவெனவும் வழங்கி வந்தனர்.

ஆங்கில தேசத்தை ஆண்டுவந்த பிரஞ்சு அரசர்கள் யாவரும் தாங்களும் கடவுளும் ஒன்றெனவே எண்ணும்படி அரசு புரிந்து வந்தனர். கிருத்து மார்க்கம் ஏற்பட்டது முதல் ஸெயிண்ட் பீட்டர் (Saint Peter) முதல்  இவ்வுலகை அரசு புரிந்த போப்புகள் (Popes) எல்லோரும். இவ்வுலகை ஆளும் கடவுளென்றே எண்ணி வந்திருக்கின்றனர். ஆட்சி ஹோலி ஸீ (Holy Sea) என்றே அழைக்கப்பட்டு வருகின்றது. பல நூற்றாண்டுகளாக, ரோமபுரியில் (Rome) போப் அவர்களே, பல சிற்றரசுகளை நியமிக்கவும், தள்ளவும், ஆதிக்கம் பெற்றிருந்தார். இன்றைக்கும், போப்புக்கும், முஸ்ஸோலினிக்கும் உண்டாயிருக்கும் வித்தியாசங்கள், இந்த ஆட்சி முறையைக் குறித்ததென அறிக.

கிறிஸ்துவ நாடுகளில், அரசர்களுக்கு முடி சூட்டுகின்றவர்கள், மதக்குருக்களே. சீமையில், (இங்கிலாந்தில்) மன்னர்களுக்கு முடி சூட்டுகின்றவர்கள், காண்டர்பரி ஆர்ச்பிஷப்புகளே. ஐரோப்பா தேசங்களில் பல ஊர்களில் அரசு மத ஆட்சியிலிருந்து விலக்கப் பட்ட போதிலும் (Separation of Church & State) அந்தரங்கமாக, மதத்தின் ஆதிக்கத்தை ஆதரிக்கும் பல கோடி பிரஜைகள் இருந்து வருகின்றார்கள்.

நமது இந்திய நாட்டிலும், இந்து சுயேச்சை மன்னர்கள், பிராமண செல்வாக்கை ஆதரித்து வந்தமையால்தான், இன்றைக்கும் இந்து மதம், பிராமண ஆதிக்கத்திற்குட்பட்டிருக்கின்றது. பண்டைக் கால முதல், மதகுருக்களே, அரசாங்கங்களில் மந்திரிகளாக இருந்து வந்திருக்கின்றனர். பாரத, ராமாயண காலங்களில், பிராமணர்களாகிய மகரிஷிகள், அரசியலில், எவ்வளவு செல்வாக்கைப் பெற்றிருந்தார்கள் என்பதை எளிதில் அளந்து பார்க்கலாம்.

அந்தக் காலத்துப் பிராமண ரிஷிகளின் செல்வாக்கை அறிந்து கெள்ள வேண்டுமென்போர், அயோத்தி நகரத்தில், தரசரத சக்கரவர்த்தியின் ராஜ சபையில், ரிஷிகள் வசித்திருந்த ஆதிக்கத்தைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். பிராமண ரிஷிகளுக்கு, நமது நாட்டு அரசர்கள் அடிமைகளாகவே இருந்து வந்தனர். இந்தக் காட்சியை இன்றைக்கும், திருவாங்கூரிலும், சையாமிலும் (Siam) கண்காட்சியாகப் பார்க்கலாம். சரித்திர காலம் (Historic Period) முதல் அரசன் எந்த மதத்தைத் தழுவி வந்தானோ, அந்த மதத்தையே அவன் குடிகளும் ஆதரித்து வந்திருக்கின்றனர்.

2000 வருஷங்களுக்கு முந்தி நமது இந்தியாவில் அசோகச் சக்கரவர்த்தி, புத்தமதத்தைத் தழுவிய பிறகே, புத்த மதம் நாடு முழுமையும் பரவ ஆரம்பித்தது. 1500 வருஷங்களுக்கு முந்தி, ரோம புரியில் அரசாண்ட கான்ஸ்டான்டைன் (Constantine) சக்கரவர்த்தி கிருஸ்தவ மதத்தைக் கையாண்ட பிறகே, அம்மதம் ஐரோப்பா தேசங்களில் பரவி ஆதிக்கம் பெற்றது. இந்தியாவில் மகமதிய மதமும், கிறிஸ்துவ மதமும் பரவியுள்ளதற்குக் காரணம் அந்தந்த மதத்தைத் தழுவிய அரசுகள் நமது நாட்டை ஆண்டு வந்தமையால் என அறிக.

அரசியலில் இருந்து, மதச் செல்வாக்கை ஒழித்துள்ள ஊர்களில், மதம் ஆதரிக்கப்பட்டிருப்பதற்குக் காரணமென்ன வெனில் அரசு புரிந்து வரும் தலைவர்கள் மதப் பற்றுடையவர்களாதலால் நாஸ்திகம் பரவ இடமில்லாமலிருந்து வருகிறது. இஸ்பெயின் (Spain) தேசத்தில் மதஸ்தாபனங்களை அரசாங்கம் தலைவர்கள் சொத்துக்கு ஆசைப்பட்டார்களேயொழிய, மூடநம் கைப்பற்றியும், மதம் நிலைத்தே வருகின்றது. அங்கு தற்கால அரசியல் பிக்கைகளைப் போக்க முயற்சித்தார் ஒருவருமில்லை. பிரான்ஸ் (France) தேசத்திலும் பாதிரிமார்களை ஊரை விட்டுத் துரத்தவும், அவர்கள் கற்பனைகளை, மனிதர்களின் உள்ளத்திலிருந்து துரத்தவும் பிரயாசைப்பட்டார் யாருமிலர். இதுதான் உலகிலிருந்து மதத்தைப் போக்குவதற்குள்ள கஷ்டம்.

அரசியலை நடத்துகின்றவர்களுக்கு மதங்களை ஆதரிப்பதற்கு ஒரு பெருத்த காரணமுண்டு. மதங்களை அனுசரிப்பது, ஒரு பெரிய பொருளாதாரச் செல்வாக்கை அளிக்கின்றது. அரசியலில் செல்வாக்குடையவர்கள் யாவரும், பொருளாதாரச் செல்வாக்கைப் பெற்றுள்ளவர்கள். இவர்களை ஆதரிப்பவர்களில், பெரும்பான்மையோர், மதப்பற்றுடையவர்கள். இவர்களுடைய ஆதரவின்றி, அரசியல் அதிகாரிகளுக்கு ஆதிக்கம் வலுத்துவராது. ஆதலின் அரசியல் அதிகாரிகளுக்கு மதக்கற்பனைகளே, ஆதரவாக இருந்து வருகின்றன.

மதங்களை அரசியல் அதிகாரிகள் ஆதரிப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மதப்பற்றுடையோருக்குப் பகுத்தறிவு அதிக மிராது. இவர்கள் தங்கள் பகுத்தறிவைப் பூரணமாக உபயோகிப்பார்களானால், அதிகாரிகளுடைய சூழ்ச்சிகளை வெகுசுலபமாக அறிந்துகொள்ளலாம். பாமர ஜனங்கள் அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் வரை, அவர்கள் மூடத்தனத்தைக் கொண்டு அதிகாரிகள், தங்கள் ஆதிக்கத்தை நிலைக்க வைத்துக் கொள்ள இடமுண்டு. இதன் நிமித்தமாகவே, அதிகாரிகள் மதஸ்தர்களைப் பற்றித் தெளிவுபெறச் செய்ய இடம் கொடுப்பதில்லை.

உலகம் மூடத்தனத்தில் இருந்தால்தான், கொள்ளைக்காரர்களுக்கு லாபம். மூடத்தனத்தை ஆதரித்துவரும் ஸ்தாபனங்களில் மதம் முக்கியமானது. இதனைத் தழுவியும், ஆதரித்தும், வந்தால்தான், மூடத்தனம், உலகில் தழைத்தோங்கும். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அதிகாரிகள் தங்கள் ஆதிக்கத்தையும், செல்வாக்கையும் பெருக்கிக் கொள்ள முடியும். இந்தப் பொருளாதார அனுகூலத்திற்காகவே, அதிகாரிகள் “மத நடுநிலைமை” என்றும் மத விஷயத்தில் பிரவேசிப்பதில்லை என்றும் இன்னும் பல சாக்குப் போக்குகளைச் சொல்லிக் கொண்டு நாளைக் கழிப்பதென அறிக. அந்தந்த அரசாங்க ஆதரவாலேயே, அந்தந்த மதங்கள் அந்தந்த ஊர்களில் நிலைத்து வருகின்றன. முற்காலத்தைப் போல அரசுகள் மதங்களை வெளிமுகமாக ஆதரிக்காவிடினும், “மதநடுநிலைமை” என்ற கற்பனையை சிருஷ்டித்துக் கொண்டு, அதன் நிழலில் இருந்து கொண்டு, மதங்களை ஆதரித்து வருகின்றன.

மதங்கள், மதகுருமார்களுக்கும், அவர்களை அடுத்தோருக்கும், பல விதத்தில் அவர்கள் ஜீவனத்திற்கு அனுகூலமாகவே இருந்து வருகின்றன. அரசு செலுத்தும் அதிகாரிகளுக்கு அரசு புரிவதால் எவ்வளவு செல்வாக்கு கிடைக்கின்றனவோ அவ்வளவு செல்வாக்கும், ஆதிக்கமும், மதகுருமார்களுக்கு மதப்பற்றால் உண்டாகின்றன.

நமது தேசத்தில் மத ஆதரவில் பிழைத்து வரும் மடாதிபதிகள் எத்தனை? குருக்கள் எத்தனை? பூசாரிகள் எத்தனை? மந்திரத்தந்திரக் காரர்கள் எத்தனை? பண்டாரங்கள் எத்தனை? சோம்பித்திரியும் சந்நியாசிகள் எத்தனை? பைராகிகள் எத்தனை? பிச்சைக்காரர்கள் எத்தனை? இவர்கள் ஒருபக்கமிருக்க கோயில் ஸ்தாபனங்களாலும், மதஸ்தாபனங்களாலும், பிழைப்போர் எத்தனை? தர்மகர்த்தர்கள் எத்தனை? கோவில் சிப்பந்திகள் எத்தனை? மேளக்காரர், புஷ்பக்காரர், வாண வேடிக்கைக்காரர், பால்காரர், தயிர்க்காரர், பழக்காரர் எத்தனை? இதுவும் போதாமல் வாகனங்கள் செய்வோர் எத்தனை? குடைகள் செய்வோர் எத்தனை? கோவில் மராமத்து செய்வோர் எத்தனை? புதிய கோவில்களும், சமாதிகளும் கட்டுவோர் எத்தனை?

நமது தேச முழுமையும் பழைய கோவில்கள் இடிய, இடிய புதுக்கோவில்கள் கட்டப்பட்டே வருகின்றன! மதத்தால் பிழைக்கும் நமது நாட்டுப் பிரஜைகள் ஒரு கோடிக்குமேல் இருக்கலாம். இதுவும் போதாதென நமது காருண்ய அரசாங்கத்தார், மதஸ்தாபன கமிட்டி (Religious Endowment Board) ஒன்றை ஏற்படுத்தி அதனால் பல பேருக்குப் பிழைப்புத் தேடி வைத்துளர். இதற்கு நமது மாகாண ஜஸ்டிஸ் கட்சியார் புண்ணியங்கட்டிக் கொண்டார்கள்!!

இவ்வளவுபேர் நமது நாட்டு மக்கள் நமது மதங்களால் ஜீவித்து வருகின்றனர். இவர்கள் எல்லோரும் இந்து மார்க்கத்தினர். கிறிஸ்துவ மார்க்கத்தை எடுத்துக் கொண்டாலும், மகமதிய மார்க்கத்தை எடுத்துக் கொண்டாலும், இவ்விரு மதங்களால் பிழைத்து வரும் மக்கள் எத்தனை? கத்தோலியர் கூட்டத்தில் எத்தனை பேர் ஆணும், பெண்ணும் மாதாகோவில் மூலமாகவும், கன்னி மடங்கள் மூலமாகவும் ஜீவித்து வருகிறார்கள்? பிராடஸ் டண்ட் (Protestant), மார்க்கத்தில் எவ்வளவு பிஷப்புகள் (Bishops), ஆர்ச்பிஷப்புகள் (Archbishops), டீகன்ஸ் (Deacons), சாப்டர்ஸ் (Chapters), எல்டர்ஸ் (Elders or Presbyters) முதலியவர்கள், முகமதிய மார்க்கத்திலும் மௌலிகளும், மெளலானாக்களும் காஜிகளும் நிறைந்துள்ள பத்திலொரு பங்கும் மதங்களால் ஜீவனம் புரிந்து வருவதாக மொத்தத்தில் உலகிலுள்ள 170, 180 கோடி ஜனங்களில் எடுத்துக் கொள்ளலாம்!

இவ்வளவு பேரும் கற்பனையை வளர்த்தும், ஆதரித்தும், கோடான கோடி மாந்தர்கள் மூடபழக்கத்தில் ஜீவனத்தை நடத்தி வருகின்றார்கள் என்றால் மதங்கள் மிகவும் தலைமுறையாக ஆழ்ந்து கிடந்துவர தங்கள் பொருளாதார நன்மையாக இருந்து வருகின்றதென்று சமுதாயிகள் அதாவது சமதர்மவாதிகள் சொல்வது எவ்வளவு பொருத்தமுள்ளது என்பதை நினைக்க வேண்டி இருக்கின்றதென்பதைப் பாருங்கள்? இவ்வளவு ஆதிக்கத்தையும், செல்வாக்கையும், ஜீவஉபாயத்தையும், மதங்கள் கோடான கோடி மக்களுக்கும் அளிப்பதென்றால் மதங்களை ஒழிப்பது லேசான காரியமாகுமா?

இவ்வளவும் எந்தக்காரியத்திற்கென்றால், அவித்தை அதாவது மூடதனத்தை (Ignorance) வளர்க்கவும், பகுத்தறிவைக் கொல்லவும் என அறிக. இவ்வளவு அனர்த்தத்திற்கும், உலக அரசுகள் சாட்சி நின்று கொண்டு “மதநடு நிலைமை” என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு ஆஷாடபூபதி வேஷம் பூண்டு நிலைத்து வருகின்றன. இந்தப் பல்லவியைத்தான் நமது தேச காங்கிரசும் அதன் அதிபதியாகிய காந்தியாரும் பாடுகின்றார்கள். இனியும் பாடவும் போகின்றார்கள்.

மதங்கள் மூடத்தனத்தை வளர்ப்பதென்றால் இவ்வளவு செல்வாக்கும் அதற்கு எப்படி வந்ததென்று கேட்கலாம்? சிலருக்கு ஜீவன உபாயமும், செல்வாக்கும் ஆதிக்கமும் இருத்தலால் மதம் மூடத்தனத்தை வளர்த்து வந்த போதிலும் அழியாமலிருந்து வருகின்றன என்று அறியலாம்.

ஆதி மதங்களை உண்டாக்கிய மந்திரக்காரனே அரசனாக வாவது அல்லது தலைவனாகவாவவது இருந்து வந்தான். அவன் அதிகார ஸ்தாபனத்தில் வந்த சிற்றரசுகளும், பேரரசுகளும், தாங்களே உலகக் கடவுளென (Gods on Earth)வும் எண்ணி வந்திருக் கின்றனர். இருபதாம் நூற்றாண்டிலும் பல அரசர்கள் மதகுருமார்களிடமிருந்தே தங்கள் கிரீடத்தைப் பெருகின்றார்கள். மகுடாபிஷேகங்களில் பிராமணர்களே நமது நாட்டு அரசர்களின் மகுடத்தை ஆசிர்வதித்து அரசன் தலையில் வைக்கிறார்கள். கீரிடத்தை வைக்கும் போதெல்லாம் கிரீடம் தங்களுடையதென்றே சொல்லி அரசன் முடியில் வைக்கின்றார்கள். இன்னும் நாடுகளில் பிராமணர்களுக்கே சில அரசர்கள் அடிமைகளெனவே நடந்து கொள்கின்றார்கள்.

இன்றைக்கும் அரசன் எந்த மதத்தைச் சேர்ந்தவனோ அந்த மதத்தையே அவனது குடிகளும் அனுசரித்துள்ளார். ஐரோப்பா தேசம் முழுமையும், (ரஷ்யாவைத் தவிர) கிறிஸ்து மத அரசர்களா ஓர் தலைவர்களாலும் (Presidents) ஆளப்பட்டு வருகின்றது. ஆதலின் பெரும்பான்மையான ஐரோப்பியரும், கிறிஸ்துவர்களே. மதங்ளால் மதகுருமார்களுக்கும், மடாதிபதிகளுக்கும், மகந்துகளுக்கும் ஜீவனமூண்டு.

கோயில்களாலும் அவைகளால் நடக்கும் உற்சவங்களாலும் அனேக கோடி மக்கள் பிழைத்து வருகின்றார்கள். அவர்களை நோக்கி மதங்களை ஒழியுங்களென்றால் இலேசில் ஒழிப்பார்களா? மதங்கள் மனிதருடைய மூடத்தனத்தை வளர்க்கின்றமையால் மூடத்தனத்தைக் கொண்டு பாமர மக்களைப் பல அரசர்கள் ஆண்டு வரச் சந்தர்ப்பம் நேரிடுகின்றபடியால் அரசுகளும் மதத்தை ஆதரித்து வருகின்றன.

இத்தியாதி ஆதாரங்களைக் கொண்டு பலப்படுத்தியிருக்கும் மதங்களை ஒழிக்க வேண்டுமென்றால் இலேசில் ஆகும் காரியமா? இதனை நமது சுயமரியாதைத் தலைவர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். 100 வருஷங்களாக மெஞ்ஞானமும், பகுத்தறிவு சங்கங்களும் ஆங்கில நாடுகளில் உழைத்து வந்தும் மதக்கற்பனைகள் பெரும்பான்மையோரிடமிருந்து ஒழியவில்லை என்றால் நமது நாட்டில் வைரம் பெற்றிருக்கும் மூடமதங்களைச் சுலபத்தில் ஒழிக்க முடியுமா வெனச் சிந்திக்க வேண்டும்.

இந்த முக்கிய பிரச்சனையைச் சரித்திர மூலமாகவும், நியாய மூலமாகவும் விசாரித்து அறிந்த முடிவு என்னவெனில், அரசுகள் மதப்பற்றை ஆதரிக்கும்வரை மதங்கள் நமது நாட்டை விட்டு ஒழிவது முடியாத காரியமே. நாஸ்திகம் தழைக்க வேண்டுமானால், அரசும் நாஸ்திகத்தைத் தழுவ வேண்டும். இரண்டாவது அப்படி அரசியலை நாஸ்திகமாக மாற்றிக் கொண்டாலும் தற்காலம் வாழும் மக்கள் பெரும்பான்மையோர் நாஸ்திகமாவது கஷ்டம். ஆனால் நமது நோக்கத்தை நமது குழந்தைகள்பால் செலுத்த வேண்டும்.

இனிவரும் சந்ததியாரை நாஸ்திகத்தில் வளர்க்க வேண்டும். அதற்கு நமது வீடுகளிலும், நமது பள்ளிக் கூடங்களிலும், நமது கல்விச் சாலைகளிலும் மூடத்தனத்தை உண்டாக்கும் மதத்தை நீக்கி, நாஸ்திகம் என்று சொல்லப்படும். சமதர்மக் கொள்கைகளைக் கற்பிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம்தான் வருங்காலத்தி லாவது நமது மக்களைச் சமதர்மக் கொள்கையுடைய பிரஜைக ளாக்கச் செய்ய முடியும்.

(குடியரசு, 28.02.1932)

’புதிய’ இந்தியாவின்அரசியல்சாசனம்

  • உ. வாசுகி

இந்தியாவின் அரசியல் சாசனம், அரசியல் நிர்ணய சபையில் நிறைவேற்றப் பட்டதிலிருந்தே, அதனுடனான ஆர்.எஸ்.எஸ்.சின் ஒவ்வாமை, பல விதங்களில் ,வெளிப்படுத்தப்பட்டுள்ளது.  ”இதில் நம்முடையது என்று சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது?’ என்ற கேள்வியிலிருந்து, ”மனுவின் கோட்பாடுகளை விட சிறந்த சட்டம் எதுவும் இல்லை” என்ற வாக்குமூலம் வரை அனைத்துமே ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான ஆர்கனைசர் தலையங்கத்தில் பிரசுரிக்கப்பட்டது. ‘நம்முடையது’ என்று அவர்கள் சொல்லும்போது, அரசியல் சாசனத்தில் இருப்பது வேறு யாருடையதோ என்று பொருள்.  அதாவது ஜனநாயகம், மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் உள்ளிட்ட கூட்டாட்சி கோட்பாடு, சம நீதி, சமூக நீதி, அறிவியல் கண்ணோட்டம், கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் எதுவுமே நம்முடையது இல்லை என்பது அவர்கள் வாதம். இந்துத்துவ ராஷ்டிரம் வந்தால், இவை எதுவுமே இருக்காது என்றுதான் இந்த வாதத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் அடிப்படை நிலைபாடான இந்துத்துவ ராஷ்டிரம் அமைவதை குறிக்கோளாக வைத்தே, ஆர்.எஸ்.எஸ். – பாஜக அரசு ஒவ்வொரு நகர்வையும் மேற்கொண்டு வருகிறது.

இந்துத்துவ நகல் அரசியல் சாசனம்:

சில மாதங்களுக்கு முன், வாரணாசியில் 30க்கும் மேற்பட்ட இந்து மத சாதுக்கள், இந்துத்துவ ராஜ்யத்தின் அரசியல் சாசனம் எப்படி இருக்கும் என்ற நகலை வெளியிட்டனர். இது நாள் வரை, ஆர்.எஸ்.எஸ்.சோ, பாஜகவோ, இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறவில்லை. இந்திய தலைநகர் வாரணாசி என்றும், நாடாளுமன்றம் மக்கள் பிரதிநிதிகளின் மன்றம் அல்ல; மத பிரதிநிதிகளின் மன்றம் என்றும் வரைவு அறிக்கை கூறுகிறது. இசுலாமியர்களும், கிறித்துவர்களும் இந்தியாவின் குடிமக்களாகத் தொடரலாம்; ஆனால் ஓட்டுரிமை இருக்காது என்பது அதில் ஒன்று. அண்மையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ஆர்கனைசர், பஞ்சஜன்யா இதழ்களுக்கு அளித்த பேட்டியிலும் இது பிரதிபலிக்கிறது.   “இசுலாமியர்கள் இங்கு இருந்தாலும் இருக்கலாம். அவர்களின் முன்னோர்கள் இடத்துக்குப் போவதென்றாலும் போகலாம். இங்கு இருக்க வேண்டும் என்றால், அவர்களின் உயர்வு மனப்பான்மையைக் கைவிட வேண்டும். இந்துக்கள் 1000 ஆண்டுகளாக அந்நிய சதிகளை முறியடிக்க ஒரு யுத்தம் நடத்தி வருகின்றனர். யுத்தத்தில், ஆக்ரோஷமாக இருப்பது இயல்பானது” என்ற அவரின் பேச்சு, சிறுபான்மையினர் மீதான சங் அமைப்பின் நிலைபாட்டைத் தெளிவுபடுத்துவது மட்டுமல்ல; வன்முறையைத் தூண்டுவதாகவும் அமைந்திருக்கிறது. அடுத்து, நீதி பரிபாலன முறை, இந்துத்துவ ராஷ்டிரத்தில் திரேதா யுகம், துவாபர யுகத்தில் பின்பற்றப்பட்ட முறையாக இருக்கும் என அந்த நகலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.  சமத்துவ அடிப்படையில் உருவாக்கப்பட்ட பல சட்டங்கள், சங் அமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏதுவாக இல்லை. பல சுற்று விவாதித்து, மக்கள் பிரதிநிதிகளால் இயற்றப்பட்ட சட்டங்கள், திருத்தங்கள், இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் உட்பட நிராகரிக்கப்படும்.  இத்தகைய யுகங்கள், இந்து மத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டவை. எனவே, மத அடிப்படையிலான அசமத்துவ கோட்பாடுகள் இவற்றில் பிரதிபலிக்கும். சிறுபான்மையினரை இரண்டாம் நிலையில் நிறுத்துவது மட்டுமல்ல; பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் போன்ற பிரிவுகளுக்கும் சமநீதி இல்லை. இந்த வரைவு அறிக்கையின் மைய அம்சம், வருண அமைப்பின் அடிப்படையில்தான் அரசு நிர்வாகம் இயங்கும் எனக் கூறுகிறது. வருண, சாதிய கட்டமைப்பு வலுப்படுத்தப்படும் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. தோழர் பிரகாஷ் கராத், இந்துத்துவ ராஷ்டிரத்தைப் பற்றிக்  கூறும்போது,  அரசு நிர்வாகத்தை மதத் தலைவர்கள் நடத்துவதுதான் இந்துத்துவ ராஷ்டிரம் என இதனை எளிமையாகப் புரிந்து கொண்டு விடக்கூடாது; உள்ளடக்கம் அதை விட ஆழமானது, ஒட்டு மொத்தக் கட்டமைப்பும் அசமத்துவ அடிப்படையில், இந்துத்துவா என்கிற அரசியல் திட்டத்தின் அடிப்படையில், நிர்மாணிக்கப்படும் என்று சுட்டிக் காட்டினார். இந்த நிகழ்ச்சி நிரலுக்கு, இன்றைய அரசியல் சாசனம் பெரிதும் எதிராக இருப்பதால், அதனை சீர்குலைத்து, பிற்போக்கான மாற்று கதையாடலை முன்னிறுத்தும் ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது.

இரண்டும் ஒன்றல்ல:

அதன் ஒரு பகுதியாகவே ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு என்று பட்டியல் நீள்கிறது. இந்தியா முழுவதும் காவல்துறையின் சீருடை ஒரே மாதிரி இருக்க வேண்டும் என பிரதமர் சமீபத்தில் முன்மொழிந்தது இதற்கு ஒரு உதாரணம். காவல்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் இந்த முன்மொழிவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் எடுக்கும் சில நடவடிக்கைகள், கடந்த கால அரசாங்கமும் எடுத்ததாகக் கூட இருக்கலாம். ஆனால், இரண்டும் ஒன்றல்ல.  வகுப்புவாத சித்தாந்தத்தைப் பின்பற்றும் ஒரு கட்சி, ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு, இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறது என்ற வேறுபாடு முக்கியமானது.  இந்தி திணிக்கப்படுவதும், சமஸ்கிருதம் போற்றப்படுவதும், இந்தியாவின் பன்மைத்துவத்தை சிதைக்கும் நோக்கம் கொண்டது. தேசிய புலனாய்வு முகமை, மாநில காவல்துறையின் எல்லையை மீறி நேரடியாகத் தலையிடலாம் என்பது, இசுலாமியர்களை அல்லது அரசியல் எதிரிகளைத் தீவிரவாதிகளாக முத்திரை குத்தும் வாய்ப்பை ஒன்றிய அரசின் கைவசம் வைக்கும் முடிவு.  இந்த வரிசையில்தான் ஆளுநரின் அதிகார மீறல் பிரச்னையும் வருகிறது.

அரசியல் ஆயுதமாக ஆளுநர்

தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, பஞ்சாப், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட  மாநில அரசாங்கத்துக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இதனால் ஒன்றிய அரசுக்குக் கிடைக்கும் குறுகிய அரசியல் ஆதாயம் மட்டும் பகிரங்கமாகக் கண்ணுக்குத் தெரியலாம். ஆனால், விளைவு அது மட்டுமல்ல; பாஜக அல்லாத மாநில அரசுகளை செயல்பட விடாமல் தடுக்கும் அரசியல் நோக்கமும் இதில் உண்டு. அரசியல் சாசனம் கூறும் அதிகார வரம்பு மீறல், கூட்டாட்சி கோட்பாடு சிதைக்கப்படுதல் போன்ற விளைவுகளுடன்,  அனைத்து அதிகாரங்களையும் மையத்தில் குவிப்பது என்கிற ஆர்.எஸ்.எஸ். நோக்கத்தை ஒட்டியே இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகிறது. சகல அதிகாரமும் பெற்ற ஒன்றிய அரசாங்கமாக இருந்தால்தான், எதிர்ப்புகளை நசுக்கி,  இந்துத்துவ நிகழ்ச்சி நிரலையும், கார்ப்பரேட் ஆதரவு நிகழ்ச்சி நிரலையும், சுயசார்பு அற்ற அயல்துறை கொள்கையையும் துரிதமாக நடத்தி செல்ல முடியும்.

எதேச்சாதிகார பாதை

பாஜக அல்லாத மாநில அரசுகளை முடக்க ஆர்.எஸ்.எஸ். பாஜக எடுக்கும் முயற்சிகள் பலவிதம். மத்திய புலனாய்வு பிரிவு, அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை போன்றவற்றைக் காட்டி அச்சுறுத்தி எதிர்க்கட்சிகளைப் பணிய வைப்பது, பல நூறு கோடிகள் கொடுத்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் ஏற்பாடு, தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாட்டை முடக்கி, தேர்தல்களில் பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளுக்கு பிரச்னைகளை ஏற்படுத்துவது, நீதித்துறையிலும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த பிடிப்புள்ளவர்களை ஊடுருவ வைப்பது எனப் பல வடிவங்களில் இவை வருகின்றன. ஊடக சுதந்திரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தி, பெரும்பாலான ஊடகங்களைத் தம் ஊதுகுழலாக்கி வைத்திருப்பதும் இதில் உள்ளடங்கும். வரி வருவாய் உட்பட நிதி பகிர்வு விஷயத்தில் மாநில அரசுகளைத் திணற வைப்பது, மாநில அரசுகளின் நல திட்டங்களை இலவசம் என்று முடக்க முயற்சிப்பது போன்ற நடவடிக்கைகள் இக்காலத்தில் அதிகம் முன்னுக்கு வருகின்றன.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்கள் சுட்டிக்காட்டுவது போல, பாஜக அரசாங்கம் கார்ப்பரேட் ஆதரவு மதவெறி கொள்கைகளை அமல்படுத்தி, இந்துத்துவ ராஷ்டிரத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்றால், எதேச்சாதிகார பாதையில் செல்லத்தான் வேண்டும். ஜனநாயகமும், சுதந்திரமும், கருத்து வேறுபாடுகளும், எதிர்க்கட்சிகளும், பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களும். மக்கள் தம் விருப்பப்படி வாக்களிப்பதும் அவர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும்.

இதில் முக்கியமானது, மக்களின் சிந்தனைகளைக் கட்டுப்படுத்துவது என்பதாகும். அனைத்துக்கும் ஒரு தர்க்க நியாயம் இருக்க வேண்டும் என்பதை மறுதலிப்பது, கருத்து சுதச்திரத்தை முடக்குவது, ஊடகங்களைத் தம் கைப்பாவையாக வைத்திருக்கும் முயற்சி, பிபிசி ஆவண படத்துக்குத் தடை, சமூக ஊடகங்கள் மீது நிர்ப்பந்தம், வெறுப்பு அரசியல் பேச்சுக்கள் போன்றவற்றைக் கூறலாம். உயர்கல்வி துறை, குறிப்பாக பல்கலைக்கழக வளாகங்கள், மாணவர்களின் சுதந்திர சிந்தனையை ஊக்குவிக்கக் கூடிய இடங்களாகும். ஆளுநர் என்பவர், பல்கலைக்கழக  வேந்தர் என்பதைப் பயன்படுத்தி, சங் சிந்தனையாளர்களைத் துணை வேந்தர்களாக நியமித்து ஊடுருவது என்பதும், சுதந்திர சிந்தனையை சீர்குலைக்கும் போக்காகும். தேசிய கல்வி கொள்கை முழுக்க முழுக்க, சங் சிந்தனை கூடாரமாகக் கல்வி நிலையங்களை மாற்றும் போக்கே.

ஆளுநரின் பங்கு பாத்திரம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் அணுகுமுறையை இந்தப் பின்புலத்தில் பார்ப்பதே பொருத்தமாக இருக்கும். அதிகார வரம்பு தெரியாமல் அவர் செயல்படவில்லை. தெரிந்தே அதை மீறுகிறார். அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணி அது.  டாக்டர் அம்பேத்கர் அவர்கள், ஆளுநருக்கு என்று எந்த வேலையும் இல்லை; அரசியல் சாசனம் வரையறுத்துள்ள கடமைகள்தான் உண்டு என சுட்டிக் காட்டுகிறார். சர்க்காரியா கமிஷன், ஆளுநர் என்பவர் தீவிர அரசியலிலிருந்து விலகி நிற்பவராகவும், தீவிர அரசியல் தொடர்புகள் இல்லாதவராகவும் இருக்க வேண்டும் என விளக்குகிறது. எனவே, தம் சொந்த அரசியல் – சித்தாந்த கருத்துக்களை வெளிப்படுத்த அவருக்கு அதிகாரம் இல்லை என்பது தெளிவு. தமிழ்நாடு சட்டமன்றத்தில் அவர் வாசிக்க மறுத்த பகுதிகள் முழுவதும் சங் சித்தாந்தத்துக்கு எதிரானவை.

மத்திய – மாநில உறவுகள் சீரமைப்புக்காக உருவாக்கப்பட்ட பல கமிஷன்கள், ஆளுநர் குறித்து பரிந்துரைகளை முன்வைத்துள்ளன. உதாரணமாக, சர்க்காரியா கமிஷன் (1983), ஆளுநரை அகற்றும் போது, மாநில அரசுடன் கலந்து பேச வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.  நிர்வாக சீர்திருத்த கமிஷன் (1969) அரசியல் சார்பு தன்மை இல்லாத ஒருவரையே ஆளுநராக நியமிக்க வேண்டும் என்கிறது. பூஞ்ச்சி கமிஷன் (2007). ஆளுநர்களை அகற்ற (இம்பீச்மெண்ட்) மாநில அரசுக்கு சட்ட ரீதியான அதிகாரம் வேண்டும்.; ஆளுநர் நியமனத்தில் மாநில முதலமைச்சரின் கருத்து கணக்கில் எடுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

இத்தகைய சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சிவதாசன், ஆளுநரின் அதிகாரங்களை இன்னும் ஸ்தூலமாக வரையறுக்கக் கூடிய அரசியல் சாசன திருத்தம் (பிரிவு 153ஐ திருத்துவது சம்பந்தமாக) கோரி தனிநபர் மசோதாவை சமீபத்தில் முன்மொழிந்துளார். மாநில முதலமைச்சரிடம் 3 பெயர்களைப் பெற்று, அதில் ஒன்றைப் பரிசீலிக்கலாம என்ற ஆலோசனையை முன்வைத்துள்ளார். காலனிய ஆதிக்கத்தின்போது ஆளுநர்கள், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பிரதிநிதியாக இருந்தது போன்ற அணுகுமுறை ஜனநாயக கட்டமைப்பில் பொருந்தாது என்ற அவரது வாதம்  சரியானது. மார்க்சிஸ்ட் கட்சி, ஆளுநரின் அவசியத்தைப் பற்றிக் கேள்வி எழுப்புவதோடு, மேலிருந்து நியமிக்கப்படுபவராக ஆளுநர் இருக்கக் கூடாது என்று கூறுகிறது.

நீதிபதிகள் நியமனம்

இதனை ஒட்டியே நீதிபதிகள் நியமனம் குறித்த சர்ச்சையைப் பார்க்க வேண்டும். ஒன்றிய சட்ட அமைச்சர் கிரேன் ரிஜிஜு,  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு, ஒன்றிய அரசின் பிரதிநிதியை உள்ளடக்கிய தேடுதல் குழுவை நியமிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். ஏற்கனவே, அரசியல் சாசன பிரிவுகளின் சாராம்சம், அரசாங்கமே நீதிபதிகளை நியமிக்கக் கூறுகிறது என்றும், இந்த முடிவை எடுக்காவிட்டால், நீதிபதிகளின் காலி இடங்கள் நீடிக்கும் என்றும் அச்சுறுத்தும் விதத்தில் கூறி வந்தார். தற்போது உச்சநீதிமன்றத்தில் மட்டுமல்ல,  உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் ஒன்றிய அரசாங்கம் தலையிடும் வாய்ப்பை உருவாக்க முனைகிறார்.

குடியரசு துணை தலைவர், இப்பிரச்னையில், கேசவானந்த பாரதி வழக்கில், அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சங்களை (basic tenets of constitution) வரையறுத்து, சட்டங்கள் இதற்கு உட்பட்டே இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை கேள்விக்கு உள்ளாக்குகிறார். குடியரசு துணைத் தலைவர் பதவியும் அரசியல் சாசன அடிப்படையில் அமைந்ததாகும். தம் விருப்பம் போல் கருத்துக்களைக் கூற முடியாது.   நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பயன்படுத்தி, அரசியல் சாசனத்தை மீறியும் கூட எவ்வித சட்டத்தையும் இயற்றும் அதிகாரம் வேண்டும் என்பதே இதன் உட்பொருள்.

நீதிபதிகளே நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் முறையின் மாற்றங்கள் வேண்டும் என்பது உண்மைதான். நீதிபதிகள் நியமனம், இடமாற்றம், நீக்கம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கவனிக்கக் கூடிய, சார்புத்தன்மை அற்ற  கமிஷன் வேண்டும் என்பது அவசியம்தான். ஆனால், கொலிஜியத்தின் கோளாறுகளை முன்வைத்து, அந்த இடத்தில், ஒன்றிய அரசே அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஏற்பாட்டைக் கொண்டு வர, ஒன்றிய அரசு முனைவதை அனுமதிக்கக் கூடாது. பாஜக அரசின் இந்த முயற்சி, நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடும் போக்கு மட்டுமல்ல; தம் சித்தாந்த அடிப்படையில் தீர்ப்புகளை வழங்க வைக்கும் ஆபத்தும் மிக அதிகமாகத் தெரிகிறது. மோடியும், மோகன் பகவத்தும் முன்வைக்கும் கருத்துக்கள் எல்லாம் தீர்ப்புகளாகி விட்டால், இந்திய குடியரசின் குணாம்சம் முற்றிலும் மாற்றப்படும். எனவே, ஒன்றிய அரசின் நகர்வுகளை, ஒவ்வொன்றாகத் தனித்து பார்ப்பதை விட, ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் இந்துத்துவா என்கிற அரசியல் திட்டத்தின் வெவ்வேறு அம்சங்கள் என்ற ஒட்டு மொத்த பார்வையுடன் அணுகுவதும், பல்வேறு அரசியல் கட்சிகள், பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களை ஒருங்கிணைப்பதும், மக்கள் மத்தியில் இதனை அம்பலப்படுத்துவதும் நமக்கு முன் உள்ள மிக முக்கிய கடமையாகும்.

புரட்சிக்கு ஒரு நாள் முன்பாக லெனின் எழுதிய கடிதம்!

வி.இ.லெனின்

தமிழில்: அபிநவ் சூர்யா

[ரஷ்யாவில் நடைபெற்ற பிப்ரவரி புரட்சிக்குப் பின் எட்டு மாதங்களில் லெனினின் எழுத்துகள் அனைத்துமே புரட்சியின் பாதையில் போல்ஷ்விக் புரட்சியாளர்களிடையே நிலவிய சித்தாந்த குழப்பங்களை, தயக்கங்களை நீக்கும் வகையில் இருந்தன.

கீழ் காணும் கடிதம் லெனின் அவர்கள் அக்டோபர் புரட்சிக்கு ஒரு நாள் முன்பு மத்திய குழு உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம் ஆகும். இதில் அவர், வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களை புரட்சியாளர்கள் உணராமல், மக்களின் புரட்சிகர உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் போவது எவ்வாறு மாபெரும் குற்றமாக விளையும் என்பதை விளக்குகிறார்.

ரஷ்ய புரட்சி அரங்கேறிய தேதி, தற்போது புழக்கத்தில் உள்ள ஜார்ஜியன் நாள்காட்டி முறைப்படி நவம்பர் 7 ஆகும். ஆனால் 1917 ஆம் ஆண்டில்,  ரஷ்யாவில் ஜூலியன் நாள்காட்டி முறை பழக்கத்தில் இருந்து. அது ஜார்ஜியன் நாள்காட்டி முறையை விட 13 நாட்கள் பின் தங்கியது. அதன்படி புரட்சி அரங்கேறிய தேதி அக்டோபர் 25. அதனால் இந்த கடிதத்தில் தேதிகள்  “அக்டோபர்” மாதத்தில் என குறிப்பிடப்பட்டுள்ளன. – ஆசிரியர் குழு]

தோழர்களே,

நான் 24ஆம் தேதி மாலையில் இவ்வரிகளை எழுதுகிறேன். மிக மிக முக்கியமான நிலமையை எட்டியுள்ளோம். இப்போது எழுச்சியை தாமதிப்பது என்பது மிகவும் ஆபத்தாக விளையும் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

அனைத்துமே ஒரு நூல் இழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதை தோழர்கள் உணர என் மொத்த சக்திகளையும் கொண்டு வற்புறுத்துகிறேன்; எந்த சம்மேளனங்களோ, மாநாடுகளோ (சோவியத் மாநாடு உட்பட) தீர்க்க முடியாத பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். இவை மக்களால், ஜன சக்தியால், ஆயுதம் தாங்கிய மக்களின் போராட்டத்தால் மட்டுமே தீர்க்க முடியும்.

“கோர்னிலோவ்”களின்[1] முதலாளித்துவ சர்வாதிகார தாக்குதல்களும், வெர்கோவ்ஸ்க்கி[2] நீக்கப்பட்டுள்ளதும், நாம் தாமதிக்க முடியாது என்பதை காட்டுகிறது. எந்த நிலையிலும், இன்று மாலையே, இன்று இரவே, நாம் முதலில் இராணுவ அதிகாரிகளின் ஆயுதங்களை பறிமுதல் செய்து (அவர்கள் தடுத்தால், அவர்களை வீழ்த்தி), இந்த அரசாங்கத்தை கைது செய்து, முன்னேற வேண்டும்.

நாம் காத்திருக்க கூடாது! நாம் அனைத்தையும் இழக்கக் கூடும்!

உடனடியாக அதிகாரத்தை கைப்பற்றுவதன் பலனானது மக்களுக்கானதாய் (மாநாடு அல்ல. மக்களுக்கு. குறிப்பாக முதலில் இராணுவ வீரர்களுக்கும்[3] மற்றும் உழவர்களுக்கும்), இந்த கோர்னிலோவிய அரசாங்கத்திடம் இருந்து அவர்களை காப்பதாய் இருக்கும். இந்த அரசாங்கம்தான் வெர்கோவ்ஸ்க்கியை வெளியேற்றி, இரண்டாம் கோர்னிலோவ் சதியை[4] வடிவமைத்தது.

யார் அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும்?

இந்த கேள்வி இப்போது முக்கியம் இல்லை. வேண்டுமென்றால், புரட்சிகர இராணுவக் குழு எடுக்கட்டும். இல்லையென்றால், மக்களின் நலனை பாராட்டும் உண்மையான பிரதிநிதிகளுக்கு, (உடனடியாக அமைதிக்கான முன்மொழிவு மேற்கொண்டு) இராணுவ வீரர்களின் நலனை காப்பவர்களுக்கு, (உடனடியாக நிலக்கிழார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, தனிச்சொத்தை ஒழிக்கும்) உழவர்களின் நலனை காப்பவர்களுக்கு, பட்டினியில் வாடுபவர்களின் நலனை காப்பவர்களுக்கு மட்டுமே அதிகாரத்தை விட்டுத் தருவோம் எனக் கூறும் “ஏதோ ஒரு நிறுவனம்” அதிகாரத்தை கையிலெடுக்கட்டும்.

அனைத்து இராணுவ அமைப்புகளும், அனைத்து சேனைகளும், எல்லா படைகளும் உடனடியாக திரட்டப்பட்டு, அவர்களின் பிரதிநிதிகளை புரட்சிகர இராணுவ குழுக்களுக்கும், போல்ஷ்விக்களின் மத்தியக் குழுக்கும் அனுப்பி, எந்த நிலையிலும் 25ஆம் தேதி வரை கெரென்ஸ்க்கி[5] மற்றும் அவர் கூட்டாளிகள் கையில் அதிகாரத்தை விட்டு வைக்கக் கூடாது என்ற பிரத்தியேக கோரிக்கையை வைக்க வேண்டும். இந்த விஷயம் இன்று மாலையே, இன்று இரவே, உடனடியாக முடிவு செய்யப்பட வேண்டும்.

இன்று வெற்றி பெறும் சாத்தியம் இருக்கையில் (இன்று வெற்றி நிச்சயம்), நாளை பெருமளவில் இழக்க, உண்மையில் அனைத்தையும் இழக்க வாய்ப்பு இருக்கையில், மேலும் தாமதித்தால், வரலாறு புரட்சியாளர்களை மன்னிக்காது.

இன்று நாம் அதிகாரத்தை கைப்பற்றுவது சோவியத்களுக்கு[6] எதிராக அல்ல, அவர்களின் சார்பாக.

எழுச்சியின் பிரதான பணியே அதிகாரத்தை கைப்பற்றுவதுதான்; கைப்பற்றிய பின், எழுச்சியின் அரசியல் கடமை குறித்த தெளிவு கிடைக்கும்.

அக்டோபர் 25ஆம் தேதியின் ஊசலாடும் வாக்களிப்பிற்காக காத்திருப்பது என்பது வெறும் ஒரு சடங்காகவோ, அல்லது அபாயகரமாகவோ கூட முடியக் கூடும். இந்த மாதிரியான கேள்விகளுக்கு முடிவை வாக்களிப்பு மூலம் அல்லாமல், வன்முறை மூலம் தீர்மானிக்க, கடமையும் உரிமையும் மக்களுக்கு உண்டு. புரட்சியின் மிக முக்கியமான தருணங்களில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளுக்காக, மிகச் சிறந்த பிரதிநிதிகளுக்காகவும் காத்திருக்காமல், பிரதிநிதிகளுக்கு வழிகாட்டுதல் கொடுக்கும் கடமையும், உரிமையும் கூட மக்களுக்கு உண்டு.

அனைத்து புரட்சிகளின் வரலாறும் இதை நிறுவி உள்ளது; புரட்சியை காப்பாற்றுவதும், அமைதிக்கான வாய்ப்பை உருவாக்குவதும், பெட்ரோகார்ட் நகரத்தை காப்பாற்றுவதும், பஞ்சத்திலிருந்து காப்பாற்றுவதும், உழவர்கள் நில உரிமை பெறுவதும் தங்களை சார்ந்தே உள்ளது என புரட்சியாளர்கள் அறிந்திருந்தும், இந்த வாய்ப்பை தவற விட்டால், அது அளவற்ற பெரும் குற்றமாக விளையும்.

இந்த அரசாங்கம் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது. எந்த நிலையிலும், அதற்கு இறுதி அடி கொடுக்கப்பட்டே ஆக வேண்டும்.

செயல்பாடுகளை மேலும் தாமதிப்பது அபாயகரமாக ஆகிவிடும்.

*

குறிப்புகள்:

[1] இராணுவ தளபதி கோர்னிலோவ் தலைமையிலான பிற்போக்கு அமைப்பு

[2] கோர்னிலோவை எதிர்த்த அமைச்சர்

[3] முதலாம் உலகப் போரில் அவதிப்பட்டு வந்த ரஷ்ய இராணுவம் மற்றும் சாதாரண சிப்பாய்கள்

[4] ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் இராணுவ ஆட்சியை நிறுவும் முயற்சி

[5] பிப்ரவரி புரட்சிக்குப் பிந்தைய  முதலாளித்துவ அரசின் தலைவர்

[6] தொழிலாளர் கமிட்டிகள்

கீழவெண்மணித் தீயும் கூலிப் போராட்டமும்

கோ. வீரய்யன்

1968 டிசம்பர் 25ம் தேதி இரவு மிராசுதார்களால் கீழவெண்மணி விவசாயத் தொழிலாளர்களின் தெரு நெருப்பு வைத்து கொளுத்தப்பட்டது. ஆண்கள் துப்பாக்கிக் குண்டுகளால் தாக்கப்பட்டார்கள். இதைக் கண்டு அஞ்சிய பெண்களும் பிள்ளைகளும் சில வயது முதிர்ந்த ஆண்களும் ஓடி ஒளிந்த சிறுகுடிசை எரித்து சாம்பலாக்கப்பட்டது. அதில் 44 உயிர்கள் எரிந்து சாம்பலாயின. இந்த தீயின் வெளிச்சத்தில்தான் தமிழக அரசுக்கு கண் திறந்தது. திரு. கணபதியாப்பிள்ளை ஒரு நபர் கமிஷன் அறிவிக்கப்பட்டது. கமிஷன் விசாரணை செய்து அறிக்கை கொடுக்கும்வரை இந்த ஆண்டு சம்பா அறுவடைக்கு கூலி உடன்பாடு இல்லை என்றால், இந்த அடக்குமுறை கொலை வெறித்தாக்குதல் – குடும்பத்தோடு எரிப்பது, இதையெல்லாம் கண்டு அஞ்சி அடங்கிவிட மாட்டோம், வயல்கரையில் கூலி உயர்வுப் போராட்டம் நடந்தே தீரும் என்று விவசாயத் தொழிலாளர்களின் இயக்கம் அறிவித்தது.

தஞ்சை ஒப்பந்தம்: 1969 ஜனவரி 16ஆம் தேதி தஞ்சையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஒரு முத்தரப்பு மாநாடு கூடி, கமிஷன் இருப்பதால் இந்தச் சம்பா அறுவடைக்கு மட்டும் அறுவடை கூலி கலத்திற்கு,

4 லிட்டர் இருக்கும் இடத்தில் நாலரை லிட்டர்
நாலரை லிட்டர் இருக்கும் இடத்தில் 5 லிட்டர்
5 லிட்டர் இருக்கும் இடத்தில் ஐந்தரை லிட்டர்
ஐந்தரை லிட்டர் இருக்கும் இடத்தில் 5 ¾ லிட்டர்
5 ¾ லிட்டர் இருக்கும் இடத்தில் ஆறு லிட்டர்
6 லிட்டர் இருக்கும் இடத்தில் 6 லிட்டர் மட்டுமே.

உள்ளூர் ஆட்களுக்கு வேலை கொடுக்கப்படவேண்டும் என்றும், இது இந்த ஒரு ஆண்டு அறுவடைக்கு மட்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இருதரப்பு விசாரணைகளையும் முடித்து கணபதியாப் பிள்ளை கமிஷன் கொடுத்த அறிக்கை, உள்ளூர் ஆட்களுக்கு வேலையும் ஒரே வித கூலியும் என்ற கோரிக்கையில் இருக்கும் நியாயத்தை மறுக்க இயலாது என்று கூறியது. வெளியாள் இறக்குமதிதான் பிரச்சனைகளுக்குக் காரணம் என்றும் கூறியது. ஒரு கடைநிலை ஊழியன் பெறும் ஊதியம்கூட ஒரு விவசாயத் தொழிலாளிக்கு வழங்கப்படாவிட்டால் அவன் எப்படி வாழ முடியும் என்ற கேள்வியையும் எழுப்பி, கீழ்க்கண்டவாறு கூலி வழங்க கமிஷன் சிபாரிசு செய்தது.

சாகுபடி காலத்தில் ஆண்களுக்கு தினக்கூலி 6 லிட்டர் நெல் ரூ 1.50 அல்லது 3. 00 ரூபாய். பெண்களுக்கு 5 லிட்டர் நெல் 50 காசுகள், அல்லது 1. 75 ரூபாய் என்றும், அறுவடையில் ஒன்பதில் ஒரு பங்கு (54 லிட்டரில் 6 லிட்டர்) என்றும், இந்தக்கூலி விகிதம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படவேண்டும் என்றும் அறிக்கை அறிவித்தது. அதை அரசு ஏற்று இதுவும் கீழ்த்தஞ்சைக்கு மட்டும்தான் அமுலாகும் என்று அறிவித்தது.

1969-இல் அறிவிக்கப்பட்ட சட்டம் 3. 8. 72 உடன் முடிவதால் அரசு மறுபரிசீலனை செய்து, மூன்று ஆண்டுகளில் ஏறியிருக்கும் விலைவாசி உயர்விற்கு ஏற்ப கூலி உயர்வு வழங்கப்படவேண்டும் என்று கோரப்பட்டது. அதற்கான இயக்கங்கள் நடத்தப்பட்டன. இருந்தும் அரசு 1.8 72 -இல் ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு அதே கூலி நீடிக்கும் என்று அறிவித்தது. இதை ஏற்க மறுத்து, போராட்டம் நீடித்தது. 3.8.72-இல் 2 இலட்சம் தொழிலாளர்கள் பொதுவேலை நிறுத்தம் செய்தார்கள். தொடர்ந்து 10 நாட்கள் போராட்டம் நீடித்தது. 1000க்கும் அதிகமானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பிறகு 13. 8. 72-இல் விவசாய அமைச்சர் திரு. மன்னை நாராயணசாமி அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கே.ஏ. நம்பியார் தலைமையில் தஞ்சையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.

அதன்படி, நெல்லும் பணமும் என்ற சட்டத்தில் உள்ள கூலி அப்படியே இருக்கும். பணமாக கொடுப்பவர்கள் ஆண்களுக்கு 70 காசுகளும், பெண்களுக்கு 20 காசுகளும் உயர்த்தித் தரவேண்டும் என்று ஒப்பந்தமானது.

இதுவரை இல்லாத அளவு மேலத்தஞ்சைக்கும் ஆண்களுக்கு ரூ 3.50, பெண்களுக்கு ரூ 2.25 என்று மாவட்ட ஆட்சித்தலைவரால் அவார்டாக அறிவிக்கப்பட்டது. இதுவும் ஒரு ஆண்டுக்கும் மட்டும் என்றும், அதற்குள் ஒரு கமிஷன் நியமிக்க அரசுக்குச் சிபாரிசு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கீழத்தஞ்சையை நீக்கிவிட்டு தமிழகம் முழுவதற்கும் ஒரு கூலி கமிஷன் போடப்பட்டது அதில் விவசாயத் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் எவரும் இல்லை. எனவே அந்தக் கமிஷனை புறக்கணிப்பதென விவசாயத் தொழிலாளர் சங்கம் முடிவு செய்தது. அந்தக் கமிஷன் சிபாரிசு செய்த அடிப்படையில் தமிழகம் முழுவதும் (கீழத்தஞ்சை தவிர) ஆண்களுக்கு தினச்கூலி ரூ 3.00: பெண்களுக்கு 0.75 சிறுவர்களுக்கு ரூ 1.25 என்று அறிவிக்கப்பட்டது. அதுவும் அமுல் நடத்தப்படவில்லை.

மீண்டும் தஞ்சை ஒப்பந்தம்: 1973இல் தஞ்சைமாவட்ட ஆட்சித்தலைவர் திரு. கே.ஏ. நம்பியார் தலைமையில் முத்தரப்பு மாநாடு கூடியது. அதில் கீழத்தஞ்சையில் மட்டும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தலா 15 காசுகள் மட்டுமே கூலி உயர்வு தர இயலும் என்று மிராசுதார்கள் கூறிவிட்டார்கள். இதை அனைத்து சங்கங்களும் ஏற்றுகொண்டுவிட்டன. நமது சங்கம் மட்டும் ஏற்கவில்லை.

1974- இல் ஒரு கூலி ஒப்பந்தக் கூட்டம் தஞ்சையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ராமதாஸ் தலைமையில் கூடியது. அதில், தினக்கூலி ஆண்களுக்கு 6 லிட்டர் நெல்லுடன் ரூ 2.75; அல்லது பணமாகக் கொடுத்தால் ரூ 6.0, பெண்களுக்கு 5 லிட்டர் நெல்லுடன் ரூ. 1.50 அல்லது பணமாக கொடுத்தால் ரூ. 4.00; அறுவடை கூலி ஒன்பதில் ஒன்று என்று முன்பு உள்ளது போலவே இருக்கும் என்று ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்தக் கூலியையே பிறகு நியமிக்கப்பட்ட திரு வி. கார்த்திகேயன் அவர்களின் கமிஷனும் சிபாரிசு செய்தது. அதே போல் தமிழகம் முழுவதற்குமாக நியமிக்கப்பட்ட திரு. சீனிவாசன் கமிஷன் தினக்கூலி ஆண்களுக்கு ரூ 5/- என்றும், பெண்களுக்கு ரூ 2.75 என்றும் சிபாரிசு செய்தது. இந்த இரு சிபாரிசுகளும் 1975இல் சட்டமாயின.

1967ஆம் ஆண்டு மன்னை ஒப்பந்தம் கீழ்த்தஞ்சைக்கு மட்டும் என்று அறிவிக்கப்பட்ட பிறகு, அடுத்து ஒவ்வொரு முறையும் முத்தரப்பு மாநாடு கூடும்போதும் மாவட்டம் முழுவதற்கும் ஒரு ஒப்பந்தம் வேண்டும் என்று விவசாயத் தொழிலாளர் இயக்கத்தால் வற்புறுத்தப்பட்டது. கூலி கோரி பாபனாசம், குடந்தை, தஞ்சை வட்டங்களில் இயக்கங்களும் நடத்தப்பட்டன.

1972-ஆம் ஆண்டு கண்டமங்கலம் கூலி உயர்வு இயக்கம் பலமானதாக மாறியது. அதனால் விவசாயத் தொழிலாளர்கள், மிராசுதார்கள் தஞ்சை தாசில்தார் தலைமையில் கூடி ஒரு கூலி உடன்பாடு ஏற்பட்டது. அதுதான் பிறகு 1.8.72இல் கூடிய முத்தரப்பு மாநாட்டில் மேலத்தஞ்சை முழுவதற்குமான கூலி அவார்டாக, ஆட்சித்தலைவரால் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கிராமம் கிராமமாக கூலி உயர்வுக்கான இயக்கங்கள் துவங்கின. அங்கு கூலி உயர்வுடன் மட்டுமல்லாமல், அரசின் தரிசு நிலங்கள் பெறும் இயக்கமாகவும், மிராசுதார்களிடம் கூலியும், அரசிடம் நிலமும் கோரும் இயக்கமாக பரவியது. இதன் வளர்ச்சியில் வழக்கம்போல் அடக்குமுறை உபயோகப்படுத்தப்பட்டது. இதில் ஒரத்தூர் நிலத்திற்கு நடைபெற்ற இயக்கம் குறிப்பிடத்தக்கது. அவசரகால நிலையில் அதை உபயோகப்படுத்திக் கொண்டிருந்த விவசாயத் தொழிலாளர்களிடமிருந்து பறித்துவிட சகல முயற்சிகளும் செய்யப்பட்டது. என்றாலும், அந்த நிலம் விவசாயத் தொழிலாளர்களால் பாதுகாக்கப்பட்டது.

திருவையாறு வட்டம் காருகுடி கிராமத்தில் விவசாயத் தொழிலாளர்கள் சுடுகாட்டிற்கு இடம் கேட்டு நடத்திய இயக்கமும், சுடுகாட்டிற்கு இடம் கிடைக்காத நிலையில், காவிரி ஆற்றிலேயே எங்கள் குடும்பங்களில் யாரும் இறந்தால் அந்த பிணத்தை வைத்து எரிப்போம் என்று கூறியது மட்டுமல்ல; அவசர காலத்தில் 1976இல் ஒரு பிணம் காவிரி ஆற்றில் வைத்து எரிக்கப்பட்டது. இதன் பிறகுதான் அங்கு சுடுகாட்டிற்கு இடம் கொடுக்கப்பட்டது.

இந்த இயக்க வளர செங்கொடி இயக்கம்தான் காரணம் என்றும், அதற்கு அதன் தலைவர் தியாகி என். வெங்கடாசலம்தான் காரணம் என்றும் எதிரிகள் குறிவைத்தார்கள்; கூடினார்கள்; திட்டமிட்டார்கள்; மொட்டைக் கடிதம் எழுதினார்கள். அதன் பிறகு, 1977 செப்டம்பர் 21ஆம் தேதி இரவு 8 மணி வாக்கில் சோழகம்பட்டி ரயில்வே நிலையத்திலிருந்து இறங்கி தனியே செல்லும்போது தோழர் என் வெங்கடாசலத்தை கடத்திக்கொண்டு போய் கொலை செய்து, எரித்துச் சாம்பலாக்கிவிட்டார்கள். அதிலும் அவரை கொலை செய்தவர்கள் யார் என்று கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. திறமைமிக்க தமிழக காவல்துறைக்கு தியாகி என். வெங்கடாசலத்தை கடத்திச்சென்று கொலை செய்தவர்கள் யார் என்று இன்னும் கூறும் திறமை ஏற்படவில்லை என்று வைத்திருக்கிறார்கள்.

ஜாதிய சமூகக் கொடுமைகளை எதிர்த்து, மிதிபட்டு, அடித்தட்டில் கிடந்த மக்களை விடுவித்து, மனிதனாக்கி, பண்ணையாளும் ஊராட்சித் தலைவனாக வர முடியும் என்று உயர்த்தி, ஒரு சமூகம் மதிக்க வேண்டிய, மதிக்கக்கூடிய, மனிதனாக உயர்த்தியிருக்கிறது செங்கொடி. இயக்கம் இருக்கும் எந்த கிராமத்திலும் ஜாதியின் பெயரால் ஏழைகள் மீது யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது என்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது.

கூலிக்கு நடத்தும் இயக்கத்துடன் உபரி நிலம், தரிசு நிலம், பினாமி நிலம் ஆகிய அனைத்திலும் கூலிக்காரர்களை நிலசொந்தக்காரர்களாக்கவும் போராடி வருகிறது. பலரை நிலச் சொந்தக்காரர்களாகவும் ஆக்கியிருக்கிறது.

1974ஆம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டம் 1977இல் முடிந்து விட்டது. மேலும் ஒரு ஆண்டும் சென்றுவிட்டது. இந்தச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று இயக்கம் கோரியது. 1978 தஞ்சையில் கூடிய முத்தரப்பு மாநாடு எந்த முடிவும் மேற்கொள்ளாமல் கலைந்தது.

பிறகு கமிஷன்கள் அமைக்கக் கோரி இயக்கத்தை நடத்தியது. அதன்படி கீழத்தஞ்சைக்கு மட்டும் திரு. எஸ். ராமச்சந்திரன் கமிஷனும், கீழத்தஞ்சை நீங்கலாக தமிழகம் முழுவதற்கும் திரு. கே திரவியம் கமிஷனும் அமைக்கப்பட்டது. அவர்கள் சிபாரிசு செய்தபடி,
கீழத்தஞ்சையில் ஆண்களுக்கு தினக்கூலி 7 லிட்டர் நெல்லுடன் ரூ 2.80 அல்லது ரூ 7.20, பெண்களுக்கு தினக்கூலி 6 லிட்டர் நெல்லுடன்
1.80 அல்லது ரூ 5.60 என்று நியாயக் கூலிச்சட்டமும், கீழத்தஞ்சை தவிர்த்த தமிழகம் முழுவதற்கும் ஆண்களுக்கு ரூ 7.00 பெண்களுக்கு ரூ 5. 00 என்றும், அறுவடை கூலி எட்டில் ஒரு பங்கு என்று குறைந்த பட்சக் கூலிச்சட்டமும் திருத்தப்பட்டது. 1980-இல் நியாயக் கூலிச்சட்டம் திருத்தப்பட்டு, பணக் கூலியில் தலா 60 காசுகள் உயர்த்தப்பட்டிருக்கிறது.

1980இல் நியாய கூலிச்சட்டப்படி கீழத்தஞ்சையில் ஆண்களுக்கு தினக்கூலி 7 லிட்டர் நெல்லுடன் 2.80 அல்லது 7.80. பெண்களுக்கு 6 லிட்டர் நெல்லுடன் ரூ 1.80 அல்லது ரூ 6.20. அறுவடை கூலி ஒன்பதில் ஒன்று.

குறைந்தபட்சக் கூலிச் சட்டப்படி, கீழத்தஞ்சை தவிர, தமிழகம் முழுவதும் ஆண்களுக்கு தினக்கூலி ரூ. 7, பெண்களுக்கு தினக்கூலி ரூ 5, சிறுவர்களுக்கு ரூ 4. அறுவடையில் எட்டில் ஒரு பங்கு. வேலை நேரம் 7 மணி என்ற இரண்டு கூலிச்சட்டங்கள் இன்று தமிழகத்தில் அமுலில் உள்ளது. 1943இல் துவங்கி 1980 வரை விவசாயத் தொழிலாளர்களுக்காகப் போராடிய, போராடி வருகிற இயக்கம் என்று முத்திரை பதித்திருக்கிறது விவசாயத்தொழிலாளர் சங்கம்.

நன்றி:  விவசாய சங்கத்தின் வீர வரலாறு – கோ. வீரய்யன் (1981, கார்க்கி நூலகம் வெளியீடு)

19 ஆம் நூற்றாண்டு தென் தமிழக சமூக இயக்கம்

பேரா.  கா. அ. மணிக்குமார்

தற்கால தமிழகத்தில் சமூக எழுச்சி, சாதி எதிர்ப்பு இயக்கங்கள் எப்போதும் ஈ.வெ.ரா.  பெரியார், திராவிட இயக்கங்களாலேயே நடந்ததாகக் கருதப்படுகின்றன. துவக்க காலத்திய சாதிக் கட்டமைப்பு, சமூக ஏற்ற தாழ்வுகளுக்கு எதிரான போராட்டங்களில்  தீவிர பங்களிப்பு செய்த தனிநபர்கள், அமைப்புகளின் பெயர்கள் பொது விவாதத்தில் இடம் பெறாமல் போய் விட்டது.  மக்களைக் கவர்ந்த ஒரு பிரசித்தி பெற்ற தலைவரின் தலைமையில் இல்லாத கூட்டு இயக்கங்கள் பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டனவாகவே உள்ளன. நாடார்கள் (சாணார்கள் என்றும் அழைக்கப்பட்டனர்) ஒரு சமூக பிரிவு என்ற வகையில் திராவிட இயக்கங்கள், ஈ.வெ.ரா பெரியாரின் காலத்திற்கு முன்பே, தென் தமிழகத்தில் பல சமூக எழுச்சி இயக்கங்களை நடத்தியுள்ளனர்.  சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக அவர்களின் முதல் எதிர்ப்பு இயக்கம் என்பது கிறித்தவ மதத்தை தழுவுதல் என்ற வகையில் அமைந்தது. இந்த மத மாற்றம் அவர்களுக்கு ஆங்கில கல்வி கற்கவும், அதன் மூலம் சமுதாயத்தில் அங்கீகாரம், அதிகாரம் பெற பயன்பட்டது. இதில் ஐரோப்பிய கிறிஸ்தவ மிஷினரிகளின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. மதமாற்ற முறையை தேர்வு செய்யாதவர்கள், பின்னர் சிறு வியாபாரம், வணிகத்தில் ஈடுபட்டு, தங்களுக்கென்று சுதந்திரமான வாழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டனர்.

ஐரோப்பிய வர்த்தகர்களின் நம்பிக்கை, நன்மதிப்பைப் பெற்ற நாடார் மக்கள், அவர்களின் அனுசரணையோடு பணப்பயிர்கள் பயிரிடுவது, பஞ்சு, புகையிலை வர்த்தக தரகுப் பணிகளில் ஈடுபட்டு, பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்தனர்.  இவர்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்ட முன்னேற்றம், பண்பாடு, கலாச்சார ரீதியான மேம்பாட்டிற்கான எதிர்பார்ப்பை அவர்களிடையே ஏற்படுத்தியது. அக்காலத்தில் நிலவிய சமூக சூழலில், பின்தங்கிய பிரிவினராக இருந்த நாடார் சமுதாய மக்கள் எப்படி தங்கள் அபிலாசைகளை வெளிப்படுத்தினார்கள் என்பதையும், சமூக அமைப்பில் இருந்த ஏற்றத் தாழ்வுகளை எப்படி எதிர்த்து நின்றார்கள் என்பதையும் இக்கட்டுரை விவாதிக்கிறது.

1

“ஒர் சமூக இயக்கம் என்பது ஒரு பொதுவான நலனை முன்னிறுத்தி, இலக்கை அடைவதற்காக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வெளியே எடுக்கும் கூட்டு முயற்சி” என்று வரையறுக்கப்படுகிறது. “சூழலியலும் – சமூகமும்: ஓர் அறிமுகம்”  என்ற நூலின் ஆசிரியர் லூக் மார்டெல் இன் கருத்துப்படி, இதில் மூன்று அம்சங்கள் உள்ளன :

  • 1.  சமூக இயக்கம் ஒரு பொது நலனை முன்னிறுத்தி, இலக்கை வென்றிட, கூட்டு இயக்கதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது.
  • 2.  இது ஒர் சமூகப் பொது நலனை அடிப்படையாகக் கொண்டது.
  • 3.  இது அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு வெளியே தன் அரசியல், பண்பாட்டு இலக்குகளை அடைய தொடர் நடவடிக்கை எடுக்கும்.

            இந்த விளக்கம் தங்கள் குடியுரிமையை வலியுறுத்தி தென் தமிழகத்தில் நாடார்கள் நடத்திய இயக்கங்களுக்கு சரியாக பொருந்துவதாக உள்ளது.

உயர் சாதி என்று சொல்லப்பட்வர்களால் அடக்குமுறையையும், துன்பங்களையும் அனுபவித்து வந்த நாடார் சமுதாய மக்களிடையே, கிறிஸ்தவ மிஷினரிகள் சாதிய அமைப்பின் மீது ஏற்படுத்திய தாக்குதல்கள், கிறிஸ்தவ மதத்தை பரப்ப அவர்கள் எடுத்த முயற்சிகள் மிகச் சரியாக செயல்பட்டது.  1797ஆம் ஆண்டு கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய நாடார் சமூகத்தை சார்ந்த சுந்தரம் என்ற டேவிட், திருச்சபையின் உபதேசியராக நியமனம் செய்யப்பட்ட பிறகு, திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாடார் சமுதாய மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறியதை காண முடிந்தது.   அப்போது திருநெல்வேலி மாவட்ட முதலூரில் (தற்போது முதலூர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது), முதல் கிறிஸ்தவ நாடார் குடியிருப்பு ஏற்படுத்திய பிறகு (1799), 40 ஆண்டுகள் கழித்து கால்டுவெல் திருநெல்வேலி வந்தார். 1841ஆம் ஆண்டின் இறுதியில் கால்டுவெல் திருநெல்வேலிக்கு வந்த போது, திருநெல்வேலி மாவட்டத்தில் 40,000 நாடார்  கிறிஸ்தவர்கள்  இருந்தார்கள். கால்டுவெல் திருநெல்வேலி மாவட்டத்தில் நாடார் மக்களோடு 30 ஆண்டுகள் இணைந்து பணிபுரிந்தார்.

விசித்திரம் என்னவென்றால், நாடார் சமுதாயத்தைப் பற்றி கால்டுவெல்-இன் கருத்திற்கு ஆட்சேபணை தெரிவித்தவர்கள் நாடார் சமுதாயத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களே. கால்டுவெல் எழுதிய “திருநெல்வேலி சாணார்கள்” என்ற நூலில் அவர் எழுதிய குறிப்பைப் பார்த்தால் இந்த ஆட்சேபணைக்கான காரணம் வெளிப்படையாக தெரியும். அந்த குறிப்பில் கால்டுவெல், “…மேற்கிந்திய தீவுகளில் வசிக்கும் விடுதலை பெற்ற அடிமைகளை சாணார் இன மக்களோடு ஒப்பீடு செய்தவர்கள், அறிவுத்திறமை, தேக பலம், சுறுசுறுப்பில் நீக்ரோக்கள் சாணார் மக்களை விட உயர்ந்தவர்களாக உள்ளனர் என்று கருதுகின்றனர்…  காலனி நாடுகளில் உடல் உழைப்புப் பணிகளில்  ஈடுபட்டுள்ள கடை நிலையில் உள்ள இந்துக்களை விட, நீக்ரோக்கள் மேம்பட்ட நிலையில் இருப்பதைப் பார்க்கும் போது, ஒரு இனத்தின் உடல் வலிமைக்கும், மனத்திண்மையை மேம்படுத்தும் திறமைக்கும்  பொதுவானதோர் சம்பந்தம் இருக்கிறது என்ற  கருத்து சரியானதென நிருபணமாகிறது” என்றார்.

    நாடார் சமுதாய மக்களை பிற தாழ்த்தப்பட்ட சாதி மக்களோடு ஒப்பீடு செய்த கால்டுவெல் “மேற்குக் கரையோர அடிமைகள் அல்லது மலைப்பகுதியை சார்ந்த அடிமைகளின் அறிவுத்திறன் பற்றி நான் முழுமையாக அறிந்திருக்கவில்லை. ஆனால் சமூக படிநிலையில் மேல் நிலையில் உள்ள சாதிகள் தொடங்கி கீழ் நிலையில் உள்ள சாதிகள் வரை பார்த்தால், சாணார் சமுதாய மக்களின் பயம் கலந்த, குழப்பமான மனநிலையை வேறு யாரோடும் ஒப்பீடு செய்ய முடியாது என்பதில் உறுதியாக உள்ளேன்” … சாணார் மக்களைவிட உயர்சாதி மக்களோடு தங்களுடைய அன்றாட தொடர்புகளை கூடுதல் நெருக்கத்துடன் கொண்டுள்ள பறையர் இன மக்களின் அறிவுத்திறன் கூடியுள்ளது. அவர்களின் பேச்சு மற்றும் உச்சரிப்புத்திறன் கூட துல்லியம் அடைந்துள்ளது” என முடிக்கிறார்.

 நாடார் மக்களின் குணம், சரீரம், அறிவாற்றல் பற்றி கால்டுவெல்-இன் வரையறையை வெறும் பிதற்றல்கள் என்று தற்கால ஆய்வாளர்கள் கண்டித்து நிராகரிக்கின்றனர். கால்டுவெல்-இன் இந்த கருத்து “வெள்ளையர்கள்தான் உயர்ந்தவர்கள்” என்ற காலனி ஆதிக்க கருத்தோட்டத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டது.  ஏனென்றால் அதே நேரத்தில் கிறிஸ்தவ பாதிரியார்கள் எடுத்துக்  கொண்ட முயற்சியின் விளைவாக நாடார் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை விவரிக்கும் கால்டுவெல், நாடார்களை பண்படுத்தி நாகரீகமாக்க எடுத்த முயற்சிகள் வெற்றிபெற்றது போல் “சாணார் இன மக்களின் பூர்வீக நிலைமை எப்படி இருந்திருந்தாலும் இப்போது தென் இந்தியாவில் உள்ள முற்போக்கான பூர்வ குடிமக்கள் மற்றும் சாதிகளில், இவர்கள் மிக உயர்ந்த இடத்தை பிடித்துள்ளார்கள் என்று நான் கருதுகிறேன்” என்று சொல்கிறார்.

சில குறிப்பிட்ட நாடார்களின் எதிர்ப்புகள் மட்டுமல்லாது, கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய நாடார்களில் அருமைநாயகம் என்ற சட்டாம்பிள்ளையின் தலைமையில் ஒரு நாடார் பிரிவினர் கால்டுவெல் சொன்னது தவறு என்று நிரூபித்தனர். சரிசம வாய்ப்பு கிடைத்தால் எவ்வளவு ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தாலும் சமூகத்தில் சிறப்பான அந்தஸ்துகளில் பரிணமிக்க முடியும் என்பதற்கு அருமை நாயகம் ஒரு உதாரணம். அருமை நாயகம் ஒரு சிறந்த அறிவாளி. அவர் ஆங்கிலம், சமஸ்கிருதம், ஹீப்ரு, லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தார். அவர் மேற்கத்திய கிறிஸ்தவத்தை விமர்சனம் செய்தார். நாசரேத்தில் விவிலிய சேவையில் சுமார் 20 ஆண்டுகள் பணியாற்றிய அருள்திரு A.F. கேமியரர் என்ற பாதிரியாரின் அதிகாரத்திற்கு அடிபணிய மறுத்தார். அருமைநாயகம் அவர் வகித்த பொறுப்பிலிருந்து திருச்சபையால் நீக்கப்பட்ட பின்னர், பிரகாசபுரத்தில் (தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது) “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இந்து தேவாலயத்தை” தொடங்கினார். இந்த புதிய அமைப்பில் உடனடியாக சுமார் 2,500 பேர் உறுப்பினராக இணைந்தனர்.

நாடார் சமுதாய மக்கள் இலங்கையிலிருந்து வந்தவர்கள் என்று கால்டுவெல் மேலும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்தார். திருநெல்வேலி மாவட்டத்தின் பூர்வீக குடிமக்கள் பற்றி விவாதிக்கும் போது, அவர் பின் வருமாறு எழுதுகிறார்: “பிராமணர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்று சொல்லப்படுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நாயக்கர்களும், பிற தெலுங்கு சாதி மக்களும் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. அதுபோல வெள்ளாளர்கள் சோழ நாட்டிலிருந்தும், சாணார்கள் இலங்கையிலிருந்தும் வந்தவர்கள் என்றும் பொதுவாக கருதப்படுகிறது.” 

இது எந்தவித ஆதாரமும் இல்லாத வெற்று அறிக்கை. ஈழவர்கள் (அவர்கள் பெயர் குறிப்பிடுவது போல்) இலங்கையிலிருந்து கேரளாவிற்கு வந்தவர்கள். வடக்கு கேரளாவில் உள்ள ஈழவர்கள் “தீயர்கள்” என்று அழைக்கப்பட்டனர். வரலாற்று ஆசிரியர் K.M. பணிக்கர்   “நாடார்கள் பாலிநேச பூர்வீகக் குடியினர். இவர்கள் பாரம்பரியமாக தென்னை மரம் வளர்த்தல், மரம் வெட்டுதலை தொழிலாக கொண்டவர்கள்” என்கிறார்.  ஈழவ மக்களைப் போன்று, பனை மரத்திலிருந்து கள் இறக்கும் தொழில் திருநெல்வேலியில் உள்ள சாணார்கள் செய்து வந்ததால், அவர்களும் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் என்ற முடிவுக்கு கால்டுவெல் வந்திருக்கலாம். பின்னாளில் மாவட்டக் குறிப்புகள் தயாரித்த அதிகாரிகள் உட்பட அனைத்து  ஆய்வாளர்களும் கால்டுவெல் எழுதிய “திருநெல்வேலி மாவட்ட வரலாற்றை” முழுமையான பரிசீலனைக்கு உட்படுத்தாமல் தங்களுக்குகந்தவாறு பயன்படுத்திக் கொண்டனர்.

இலங்கையின் வரலாற்றை முழுமையாக அறிந்த ஒரு நபர், சாணார்கள் இலங்கையிலிருந்து வந்தவர்கள் என்ற கால்டுவெல்-இன் கருத்தை ஏற்று கொள்ள மாட்டார்கள்.  மானுடவியலாளர்களிடையேயான ஒருமித்த கருத்து என்னவென்றால், ஆரியர்களின் வருகைக்கு முன்பே இலங்கையில் உள்ள பூர்வ குடிமக்களான வேடர்கள், நாகர்கள், மற்றும் யாக்கர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். ஆரியர்களின் குடியேற்றம் என்று சொல்லப்பட்டது பெரும்பாலும் கி.பி. 4ஆம் அல்லது 5 ஆம் நூற்றாண்டில் கலிங்க நாட்டிலிருந்து விஜயன் என்ற அரசனின் வருகையை யொட்டி நடந்திருக்க வேண்டும் என்று கருதலாம். அதிலிருந்து இலங்கையோடு உள்ள எல்லா வித நடவடிக்கைகளும் தென் இந்தியாவிலிருந்தே நடந்து வந்துள்ளது.

இலங்கையை தமிழ்நாட்டிலிருந்து பிரிக்கும் கடல் பகுதி 20 மைல் தூரம் மட்டுமே என்பதால், தமிழ்நாட்டின் பல பகுதியிலிருந்து மக்கள் புலம் பெயரவும், இலங்கையின் வட பகுதியில் உள்ள பூர்வகுடி மக்களோடு கலந்து வாழவும் செய்தனர். மகாபலிபுரம் ஒரு துறைமுகமாக செழித்து விளங்கியுள்ளது என்றும், பல்லவர்கள் காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே கடல் வணிகம், கடற்பயணம் தழைத்தோங்கியிருந்திருந்தது என்றும் வரலாற்று அறிஞர் K. K. பிள்ளை எழுதுகிறார். தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு பெருமளவு மக்கள் பயணம் செய்தது, தொடர்புகள் ஏற்பட்டது இக்கால கட்டத்திலிருந்து தொடங்கியிருக்கலாம். 16வது நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து சென்ற சுமார் 40 சாதி மக்கள் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் குடியேறியுள்ளனர். அப்படி குடியேறியவர்களில் பிராமணர்கள், வெள்ளாளர்கள் தவிர செட்டியார்கள், அகமுடையார், மறவர்கள், மீனவர்கள், வன்னியர்கள், ஆசாரிகள், தச்சர்கள், வண்ணார்கள், சவரத்தொழிலாளர்கள் ஆகியோர் முக்கியமானவர்கள்.  பிற சாதிகளான வெள்ளாளர்கள், மறவர்கள், செட்டியார்கள் போன்று நாடார்கள், சாணார்கள் பற்றி இலங்கையின் வரலாற்றுக் குறிப்புகளில் தகவல்கள் ஏதும் கிடையாது. தற்போது இலங்கையில் உள்ள கள் இறக்கும் தொழிலாளர்கள் “துருவர்கள்” என்றே அழைக்கப்படுகிறார்கள்.

ஒரு காலத்தில் நாடார் மக்கள் பிறர் பொறாமைப்படும் அளவிலான இடத்தில் இருந்துள்ளார்கள் என்றும், அவர்கள் பாண்டிய மன்னர்களை எதிர்த்து நிற்கும் அளவிற்கு வலிமையாக இருந்துள்ளார்கள் என்றும் வாய் மொழி வரலாறு ஒன்று கூறுகிறது. அவர்களின் தகுதிக்கு மீறிய அகந்தையால் வெறுப்படைந்த ஒரு பாண்டிய மன்னர், நாடார் இன மக்களை தண்டிக்கும் வகையில், அவர்களை திருநெல்வேலி மாவட்டத்திற்குள் உள்ள வறண்ட, சாகுபடிக்கு உதவாத தரிசு நிலப்பகுதியில் வாழ வேண்டும் என்று உத்தரவிட்டு, அவர்களை அப்பகுதிக்குள் கட்டுப்படுத்தி வைத்தார். இருந்தாலும், தங்கள் கடின உழைப்பினால், தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமாக காணப்படும் பனை மரங்களை வளர்த்து, பனை பொருட்கள் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து முன்னேறினர்.

நாடார் இன மக்களின் காவல் தெய்வங்கள் பெரும்பாலும் திருநெல்வேலி மாவட்டத்தின் பத்ரகாளி (பத்ர என்றால் பனை ஓலை), வேறு பட்ட வடிவங்களை கொண்ட அய்யனார் போன்ற தெய்வங்களாகும். நாடார்களின் பூர்வீகம்  திருநெல்வேலி மாவட்டம் என்று உரிமை கொண்டாடுவதற்கு இது உதவுகிறது.  நாடார் மக்கள் கொற்கையை (கடல் கொண்டு அழிந்ததால் அதன் முக்கியத்துவத்தை இழந்த ஊர்) தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்களின் சந்ததியினர் என்ற ஓர் கருத்தும் நிலவுகிறது. பிரச்சனை என்னவென்றால், பிற தாழ்த்தப்பட்ட சாதி மக்களைப் போலவே, நாடார் மக்களுக்கும் தங்கள் பூர்வீகத்தைப் பற்றி அறிய எழுத்து வடிவிலான ஆதாரப்பூர்வமான ஆவணங்கள் ஏதும் இல்லை. நாடார்களின் பூர்வீகம் எதுவாயினும், யதார்த்த நிலை என்பது, அவர்கள் மிக ஏழ் நிலையில் இருந்துள்ளார்கள். மேலும் ஆங்கிலேயர் ஆட்சியின்போது தீண்டப்படாத சாதிகளில் ஒன்றாகவே நாடார் சாதி இருந்துள்ளது.            

2

சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்து வெளியேறி, அடுத்த கட்ட உயர்நிலைக்கு முன்னேற தங்களை ஆரியர்கள், சத்திரியர்கள் என கூறிக்கொண்டு சமஸ்கிருதப் பாதையில் செல்ல கட்டுக்கதைகளையும், புராணக் கதைகளையும் கற்பனையாக இட்டுக்கட்டி கூறுதல் என்பது எல்லா தீண்டத்தகாத சாதிகளாகக்  கருத்தப்பட்டவர்களின்  உரிய குணமாக இருந்து வந்துள்ளது.  இந்த பரிதாபப்படக்கூடியக் பைத்தியத்திற்கு நாடார்களும் விதிவிலக்கல்ல. நாடார் சமுதாயத்தில் பொருளாதாரத்தில் முன்னேறிய ஒரு பகுதியினர், 19ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்திலிருந்து இதனை எவ்வித தொய்வும் இன்றி செய்து வந்துள்ளனர்.

கமுதி ஆலய நுழைவு வழக்கில் பிரதிவாதிகளான நாடார்கள் கொடுத்த வாக்குமூலத்தில் அவர்கள் பரம்பரையாக இராணுவ வம்சாவழி வந்தவர்கள் என்று உரிமை கோரியுள்ளனர்.  மதராஸ் உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய இரண்டு ஆங்கிலேய நீதிபதிகள், “வழக்கில் பிரதிவாதிகள் வாதிடுவது போன்று, அவர்கள் சத்திரியர்கள் அல்லது இந்து மதத்தை சார்ந்த இராணுவ வம்சாவழி வந்தவர்கள் என்றோ, அல்லது பாண்டியர், சேரர், சோழ அரசர்களின் வம்சாவழி வந்தவர்கள் என்பதற்கோ எந்தவித ஆதாரமும் இல்லை. அப்படி இருப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் இருந்தது என்று கூட சொல்ல முடியவில்லை. சாணார்கள் இப்படி அரசகுலம், இராணுவ பரம்பரையோடு தங்களை தொடர்பு படுத்தி வீணாக, பொய்யாக, உரிமை கோர எடுத்த முயற்சி பரிகசிக்க வேண்டிய ஒன்று” என்று நாடார்கள் மீது எந்தவித பரிவுமின்றி கூறியுள்ளனர்.

1908ஆம் ஆண்டு சங்கரலிங்க நாடார் vs. ராஜராஜேஷ்வர துரை கமுதி ஆலய நுழைவு வழக்கில், மதராஸ் உயர்நீதிமன்றம் “சாணார்கள் கோயிலுக்குள் சென்றது என்பது, “சிவ வழிபாடு செய்யும் இந்துக்களின் மதக் கொள்கைக்கு எதிராகவும், கடவுளை வழிபடும் சாதி இந்துக்கள் கடைபிடிக்கும் பழக்க வழக்கம், உணர்வுகளுக்கு எதிராகவும் அமைந்துள்ளது” என்று கூறி மேல் முறையீடு செய்த நாடார் மனுதாரர்கள் கோயிலை சுத்தப்படுத்துவதற்கு ரூ. 500 அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால் நாடார்கள் இந்த பிரச்சனையை இத்தோடு விட்டு விடவில்லை.

பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த இந்து நாடார்கள், பத்தொன்பதாம் நாற்றாண்டின் பிற்பகுதியில் சமூக தளத்தில் தங்கள் உரிமைகளை வலியுறுத்த முயன்றபோது, பல கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தினர். இது மேல் சாதி மக்களோடு மோதலுக்கு இட்டுச் சென்றது. சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து அவர்கள் கோயில்களுக்குள் நுழைய முற்பட்ட போது அவர்களின் போராடும் குணம், ஒற்றுமை தெளிவாக வெளிப்பட்டது.  1872இல் திருச்செந்தூர், 1874இல் மதுரை, 1876இல் திருத்தங்கல், 1897இல் கமுதி, உச்சகட்டமாக 1899இல் சிவகாசியில் என ஆலய நுழைவுப் போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன. அந்த நாட்களில் நாடார் மக்களின் மனநிலையை தெரிந்து கொள்ளும் விதமாக, 1899ஆம் ஆண்டு நடந்த சிவகாசி கலவரம் பற்றிய சிறு குறிப்பு இங்கே கொடுப்பது பொருத்தமாகும்.

சிவகாசியில் வணிகம் மற்றும் வியாபாரம் சிறிது சிறிதாக முஸ்லீம்கள் கையிலிருந்து நாடார்கள் கைகளுக்கு மாறியது. இந்த வியாபார போட்டியின் காரணமாக முஸ்லீம்களுக்கும் நாடார்களுக்குமிடையே பகைமை இருந்து வந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி கால் பகுதியில் – 1876 முதல் 1878 வரையான தாது வருடப்பஞ்சம் குறிப்பிடத்தக்க ஒன்று – அடிக்கடி பஞ்சம் ஏற்பட்டது. விவசாயத்தை நம்பியிருந்த சாதி என்ற வகையில் தேவர் சமூகத்தினர் (முக்குலத்தோர்: கள்ளர், மறவர், அகமுடையார்) பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டனர்.  அதே நேரம், வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நாடார் சமுதாயத்தினர் உணவு தானியங்கள் பற்றாக்குறையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அதிக அளவில் லாபம் சம்பாதித்தனர். இதனால் இந்த கால கட்டத்தில் இவர்களுக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டு, இரு சமுதாயத்தினரிடையேயான உறவு மோசமடைந்தது.

நாடார்கள் கோயில் நுழைவில் தங்கள் உரிமையை வலியுறுத்துவதும், அதுவரை உயர் சாதி இந்துக்கள் சமூகத்தில் அனுபவித்து வந்த சில சலுகைகளை கேட்பதும், பிற இந்து ஆதிக்க சாதியினருக்கு நாடார் மக்கள் மீது மனக்கசப்பை ஏற்படுத்தியிருந்தது. இவையெல்லாம் சேர்ந்து “சிவகாசி அழிவிற்கு” அடிப்படையான காரணமாக அமைந்தது.

1895ஆம் ஆண்டு சிவகாசி நாடார்கள் ஊரில் உள்ள கைலாசநாதர் கோயில் அறங்காவலர்களாக நாடார்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியபோது பிரச்சனை வெடிக்கத் தொடங்கியது. நாடார்களுக்கு சிவகாசியின் புறநகர் பகுதியில் மாரியம்மன், பத்ரகாளியம்மன் கோயில்கள் இருந்தன. கைலாசநாதர் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படாததால் அவர்கள் இந்த இரண்டு கோயில்களையும் கட்டியிருந்தனர்.  இந்த கோயில்களில் வள்ளுவர் சாதியை சார்ந்த “பண்டாரம்” எனப்படுபவர்கள் பூஜை செய்து வந்தனர். 1897ஆம் ஆண்டு நாடார்கள் சிதம்பரத்திலிருந்து பிராமண புரோகிதர்களை வரவழைத்து இந்த கோயில்களில் பூஜை செய்தனர்.  மேலும் பிராமண புரோகிதர்கள் வசதி படைத்த நாடார்கள் வீடுகளுக்கு சென்று சடங்குகளும், பூஜைகளும் செய்தனர்.  இது சாதி இந்துக்களை கூடுதலாக கோபமடையச் செய்தது. 1898ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி, நாடார்கள் கோயில் கதவை உடைத்துக் கொண்டு கைலாசநாதர் கோயிலுக்குள் நுழைந்தனர். இத் தகவல் பரவியதும், கோபத்தின் உச்சிக்கு சென்ற சாதி இந்துக்கள், பத்ரகாளி அம்மன் கோயில் வளாகத்தில் இருந்த தோட்டத்திற்கு நெருப்பு வைத்தனர். இந்த மோதலில் ஒன்பது நாடார்கள் கைது செய்யப்பட்டு சாட்சியங்கள் முறையாக இல்லாததால் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

1899ஆம் ஆண்டு நாடார் சமுதாய மக்களின் சேமிப்பு கிடங்கிகளை தேவர் சமுதாயத்தை சேர்ந்த சிலர் தீ வைத்து கொளுத்தியதால் சிவகாசி சாதி கலவரம் வெடித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாடார்கள் தேவர் சமுதாய மக்களின் குடியிருப்புகளை தாக்கினர். இதன் விளைவாக தேவர்-நாடார் மக்களிடையே மூர்க்கத்தனமான மோதல் வெடித்தது. திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த கார்டோசன் என்பவர் தன் போலீஸ் படையோடு கலவரப் பகுதிக்கு விரைந்து கலவரத்தை கட்டுப்படுத்தினார். அவர் 15 சுற்று துப்பாக்கிச் சூடு நடத்தி எச்சரிக்கை செய்த பின்னரே கலவரக்காரர்கள் கலைந்து சென்றனர். ஆனால், தேவர் சமுகத்தினர் சமாதானம் அடையவில்லை. அவர்கள் இந்த சம்பவத்திற்கு பழிவாங்க வேண்டும் என்று திட்டமிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தின் வடக்குப் பகுதியிலிருந்தும், ராமநாதபுரத்தின் கிழக்குப் பகுதியிலும் உள்ள பல கிராமங்களிலிருந்தும் தேவர் சமுதாய மக்களை திரட்டினர்.

பிராமணர்கள், பிள்ளைமார்கள், மறவர் சமுதாய ஜமீன்தார்கள் ஆதரவோடு, அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் அப்போதிருந்த பள்ளர் சமுதாய விவசாயத்தொழிலாளர்கள், முஸ்லீம்கள் என சுமார் 5000 பேர் 1899ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் நாள்  சிவகாசியில் உள்ள நாடார் மக்களின் வீடுகளைத் தாக்கி அவர்களின் உடமைகளை சூறையாடினர். பின்னர் அவர்கள் சிவகாசியைச் சுற்றியுள்ள 150 கிராமங்களை தாக்கி கொள்ளையடித்தனர். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் இறந்தனர். காயம்பட்ட மூன்று பேர் பின்னர் இறந்தனர். அவர்களில் ஒருவர் பெண். சிவகாசி நாடார்கள் “இந்த தாக்குதலில் தாங்கள் ரூ. 43,000 மதிப்புள்ள பொருட்களை இழந்தோம்” என்று அரசாங்கத்திற்கு கடிதம் அனுப்பினர் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த “தானே” என்ற அதிகாரி கூறியுள்ளார். இந்த தாக்குதலில் சிவகாசிப் பகுதியில் மொத்தம் 4,000 வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன என மற்றொரு புள்ளிவிவரம்  கூறுகிறது. மொத்தம் கைது செய்யப்பட்ட 1958 பேரில், 552 பேர் குற்றவாளி என தண்டிக்கப்பட்டனர். ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

3

நாடார் மக்களின் சமூக இயக்கத்தை விவரிக்கும் போது தென் திருவிதாங்கூர் பகுதியில் (தற்போது கன்யாகுமரி மாவட்டம்) நடந்த முக்கியமான சாதி எதிர்ப்பு எழுச்சியை நாம் தவிர்க்க முடியாது. அங்கு தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டவர்கள் நடத்தப்பட்ட விதம் மிகவும் கொடூரமானது. ஜேம்ஸ் போர்ப்ஸ் எழுதிய “கீழ்த் திசை நாடுகளின் நினைவுகுறிப்புகள்” என்ற புத்தகத்தில் அவர்  எடுத்துக்காட்டியுள்ள கொடுமையான நிகழ்ச்சிகள் கூர்ந்து கவனிக்கத் தக்கது:

“தங்களின் உடற் காற்றினால் சுற்றுப்புற சூழல் மாசுபடுவதிலிருந்து தவிர்ப்பதற்காக, தீண்டத்தகாதவர்கள் தாங்களாகவே குழிக்குள் மறைந்து கொள்ள வேண்டும்; அல்லது மரங்களின் மேல் ஏறி தங்களை மறைத்து கொள்ள வேண்டும்.  நாயர் சாதியை சார்ந்த ஒருவர் எதேச்சையாக இவர்களில் ஒருவரை சாலையில் சந்தித்தால், எவ்வித பச்சாதபமும் இல்லாமல் கொடூர மிருகத்தை கொல்வது போல் வாளால் வெட்டி கொன்று விடுவார்.  பசுவை விற்பவர் அல்லது அதை இறைச்சிக்கு விற்பவர் கொலை செய்யப்படுவார். 1772ஆம் ஆண்டு ஐரோப்பியர் ஒருவருக்கு மாடு ஒன்றை விற்பனை செய்த ஒருவர் உயிரோடு எரிக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்கள் தங்கள் மார்பை மூடக்கூடாது. அரச குடும்பத்தை சார்ந்த ஒருவரின் முன்னால் நிற்கும் போது, மேலாடையுடன் காணப்பட்ட பெண்களின் மார்பகங்கள் வெட்டி எறியப்படும்”

“சாதிய ஒடுக்குமுறையின் கொடுமை எந்த அளவிற்கு இருந்தது என்பதற்கு கேரளா சிறந்த உதாரணமாக இருந்தது. அங்கு தீண்டத்தகாதவர்களை, உயர் சாதியினர் பார்வையிலிருந்து விலகி இருக்க வேண்டிய தூரத்தை வைத்து தீண்டாமை தரவாரியாக பிரிக்கப்பட்டிருந்தது” என்று வரலாற்றறிஞர் K.M. பணிக்கர் குறிப்பிடுகிறார். 1809ஆம் ஆண்டு மைலாடியில் இலண்டன் மெஷினரி சபை (LMS) தொடங்கப்பட்டதிலிருந்து, கிறிஸ்தவ மிஷினரிகள் ஒடுக்கப்பட்ட மக்களை குறிவைத்து மதமாற்றம்  செய்தனர். அருள்திரு. T. ரிங்கல்டாப் என்ற பாதிரியார் முதலில் ஒரு கணிசமான அளவிற்கு தாழ்த்தப்பட்ட சாதியினரை (குறிப்பாக நாடார், ஈழவர்களை) வெற்றிகரமாக மதமாற்றம் செய்தார். அவர் 1813இல் LMS சபையில் 600 கிறிஸ்தவர்கள் இருந்தனர் என்கிறார்.  கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறியவர்களின் மனநிலை, பழக்க வழக்கங்களை மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக, கிறிஸ்தவ மிஷினரிகள் ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் பள்ளிக் கூடங்கள் தொடங்கினர். இந்த பள்ளிக்கூடங்களில் பெண்களின் தனித்திறமையை வளர்க்கும் வகையில் தையல், எம்பிராய்டரிங் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. கிறிஸ்தவ மிஷினரிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், அப்போதைய திவான் மற்றும் திருவிதாங்கூர் சமஸ்தான பிரிட்டீஷ் பிரதிநிதியுமான கர்னல் ஜான் மன்றோவின் ஆதரவுடன் 1814ஆம் ஆண்டு கிறிஸ்தவ நாடார் பெண்கள் மட்டும் குட்டையான கை வைத்த தொள தொளப்பான மேல்சட்டை அணிய அனுமதிக்கப்பட்டனர்.

அரசாங்கத்தின் உத்தரவு இருந்தபோதும், பிற நாயர் சாதி பெண்களைப் போல கிறிஸ்தவ நாடார் பெண்கள் பொது இடங்களில் மேல் சட்டை அணிந்து தோன்றினால், அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு தாக்குதலுக்கும் உள்ளானார்கள். பெண் மிஷினரிகள் வடிவமைத்த பெண்களுக்கான மேல் சட்டையும் கிறிஸ்தவ நாடார் பெண்களுக்கு பிடித்தமானதாக இருக்கவில்லை. எனவே, கிறிஸ்தவ நாடார் பெண்கள் – ஆண்கள் போராட்ட நடவடிக்கையில் இறங்கினர். இதற்கிடையே, இப்பிரச்சனையில் நீதிமன்றத்தின் தலையீடு கோரி உள்ளூர் நீதிமன்றத்தையும் அவர்கள் அணுகினர்.

1823ஆம் ஆண்டு போராட்டம் நடத்திய கிறிஸ்தவ நாடார் பெண்களுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இருந்தாலும் கண்ணியமான உடை அணியும் நாடார் பெண்கள், உயர்சாதி என்று சொல்லப்பட்டவர்களால் தெருக்களிலும், பொது வெளியிலும் துன்புறுத்தப்படுவது தொடர்ந்தது. கிறிஸ்தவ மிஷினரிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக, 1829ஆம் ஆண்டு இறுதியில் திருவிதாங்கூர் அரசு, கிறிஸ்தவ நாடார் பெண்கள் மேல்சட்டை அணிய அனுமதியளித்து உத்தரவிட்டது.  ஆனால் நீதிமன்ற தீர்ப்போ, அல்லது திருவிதாங்கூர் அரசின் அறிவிப்போ, இந்து நாடார் பெண்களுக்கு பொருந்தவில்லை. இந்து நாடார் பெண்களின் பிரச்சனை அடுத்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு வைகுண்டசாமி அவர்களால் எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.

முத்துக்குட்டி என்ற வைகுண்டசாமி தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட மக்களுக்கு உதவி செய்து அவர்களின் அடிமை விலங்கை உடைத்தெறிய வேண்டும் என்ற நோக்கத்தோடு அம்மக்களை ஒருங்கிணைத்தார். 1830களின் மத்தியில் வைகுண்டர் நடத்திய இயக்கங்கள் மற்றும் அவர் உருவாக்கிய அய்யா வழி என்ற புதிய மதக்கோட்பாடு கிறிஸ்தவ மிஷினரிகளின் மதமாற்ற முயற்சிகளை எதிர்த்து வந்த நாடார் மக்களை, குறிப்பாக வசதி படைத்த தென் திருவிதாங்கோடு பகுதியை சார்ந்த நாடார்களை வெகுவாக ஈர்த்தது. மேலும் வைகுண்டர், ஒடுக்கப்பட்ட மக்கள் நாகரீக, நவீன பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வைகுண்டரின் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக அவர் தன் கொள்கைகளையும், கருத்துக்களையும் பின்பற்றும் பெண்களை மேல்சட்டை அணியும்படி உபதேசித்தார். வைகுண்டர் மேற்கத்திய கிறிஸ்தவக் கலாச்சாரத்தை கடைபிடிக்கிறார் என்று மேல் சாதி இந்துக்கள் அவர் மீது குற்றம் சாட்டினர். அதே போல, கிறிஸ்தவ மிஷினரிகள் வைகுண்டர் மீதும், அவர் தொடங்கிய புதிய மத வழிமுறை பற்றியும் கேலியும் கிண்டலும் செய்தனர். எதிர்ப்புகள் இருந்தாலும், வைகுண்டசாமி அதிகப்படியான நாடார் இன மக்களை தன் வயப்படுத்தினார். இது தென் திருவிதாங்கூர் பகுதிகளில் கிறிஸ்தவ மதத்தை மேலும் பரப்புவதற்கு பெரும் முட்டு கட்டையாக இருந்தது.

1851ஆம் ஆண்டு வைகுண்டர் இறந்த போதிலும், அவரின் ஆவி கிறிஸ்தவ மிஷினரிகளை தொடர்ந்து மிரளச்செய்தது என்ற நம்பிக்கை நிலவியது. அவர் இறந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு 1864ஆம் ஆண்டு நாகர்கோவில் கிறிஸ்தவ மிஷினரி மாவட்டத்திலிருந்து கொடுத்த அறிக்கையில் “வைகுண்டரின் கொள்கையை பின்பற்றுபவர்கள் முன் நாட்களில் உயிர்த்தெழுதல் கோட்பாடு பற்றி தெரியாதவர்களாக இருந்தனர். ஆனால் இப்போது அவர்கள் “முத்துக்குட்டி மீண்டும் வருவார். மரணமடைந்த அவரின் பக்தர்களை உயிர்த்தெழச் செய்து, அவர்களை சொர்க்கத்திற்கு அழைத்து செல்வார் என்று சொல்கிறார்கள்” என்று சொல்லப்பட்டுள்ளது.  அதற்கு பத்தாண்டுகளுக்கு பிறகும் கூட, வைகுண்டசாமி  எதிப்பு இயக்கத்தின் தாக்கம் தொடர்ந்து இருந்ததாக மிஷினரிகள் உணர்ந்தார்கள். 1874இல் நாகர்கோவில் கிறிஸ்தவ மிஷினரி மாவட்டம் கொடுத்த அறிக்கையை மீண்டும் இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.  அந்த அறிக்கை இவ்வாறு சொல்கிறது: “சாத்தானின் தந்திரமான சூழ்ச்சியினால், இந்த பகுதியில் நமது முன்னேற்றம் பெருமளவு தடைபட்டுள்ளது. இச் சூழ்ச்சியை முறியடிக்க நாம் இடைவிடாது போராட வேண்டும். நம்முடைய ஆயுதம் பலம் வாய்ந்தது… நம் பக்கம் உண்மை உள்ளது. இதற்கு எதிராக “முத்துக்குட்டியிசமோ “அல்லது வேறு ஏதோ நரகத்தின் வாசலோ” ஒன்றும் செய்து விட முடியாது. நமக்கு தேவையானது எல்லாம், கிறிஸ்தவ தேவாலயங்களில் அதிகமான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதே. கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது, முத்துகுட்டி எந்த தளத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்பட்டாரோ, இன்றும் கிறிஸ்துவிடமிருந்து கைப்பற்ற முயற்சிக்கிறாரோ, அந்த தளத்திலிருந்து அவமானப்பட்டு இழிவடைந்து ஒதுங்கிவிடுவார் “.

வைகுண்ட சாமியைப் பற்றி கிறிஸ்தவ தேவாலயங்களின் ஆவணங்களில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை பார்க்கும் போது, வைகுண்டரின் இயக்கம், அவர் இறந்த பின்பு கூட எந்த அளவிற்கு துடிப்பாக இருந்தது என்பது விளங்கும்.

கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் தான், தோள் சீலைப் போராட்டம் தீவிரமடைந்தது. 1858ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பிரிட்டீஷ் மகாராணியின் அறிவிப்பு பின்வருமாறு கூறியது: ” பிரிட்டீஷ் அரசு தன் விருப்பத்தின் பேரில் மகிழ்ச்சியோடு இதை அறிவிக்கிறது…அவரவர்களுடைய மத நம்பிக்கை அல்லது மத பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பதால் யாரும் அவமானப்படுத்தப்படவோ, வெறுப்புடன் நடத்தப்படவோ கூடாது. யாருக்கும் கூடுதல் சலுகை காட்டக் கூடாது. எந்தவித பாகுபாடும் இன்றி சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்”.

நாடார்கள், அப்போதய திவான் மாதவராவ்- ஐ சந்தித்து மகாராணியின் உத்தரவை அமுல்படுத்த அவர் தலையீட வேண்டும் என்று மனு கொடுத்தனர்.  இதற்குப் பதிலடியாக திருவிதாங்கூர் அரசு மனுதாரர்கள் மீது போலீஸ் அடக்குமுறையை ஏவியது. இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு பிறகு, நாடார்கள் இந்த பிரச்சனையில் ஒரு இறுதி கட்ட நடவடிக்கை எடுக்கத் துணிந்தனர். இந்து, கிறிஸ்தவ நாடார்கள் இணைந்து போராட முடிவு செய்தனர். மத நம்பிக்கையை விட சாதிப்பற்று மேலோங்கி இருந்ததால், நாடார் பெண்கள் மேல் சட்டை அணியும் உரிமைக்கான போராட்டத்தில் அய்யாவழி இயக்கத்தில் தீவிரமாக இருந்தவர்கள் கூட கிறிஸ்தவ நாடார்களுடன் இணைந்து போராடுவதில் எவ்வித தயக்கமும் காட்டவில்லை.

பெரும்பான்மையான இந்து நாடார்கள் “அய்யா வழி”யை  பின்பற்றுபவர்களாக இருந்தனர். தங்களுடைய நீண்ட காலப் போராட்டத்தில் கிறிஸ்தவ நாடார்கள் கலந்து கொள்ளாமல் இருந்ததால் வெறுப்படைந்த இந்து நாடார்கள் இந்த இயக்கத்தில் கிறிஸ்தவ மிஷினரிகளின் தலையீட்டை எதிர்த்தனர். ஆகவே, கிறிஸ்தவ மிஷினரிகள் இதற்கு மறைமுக ஆதரவு மட்டுமே கொடுத்தனர். நாடார் பெண்கள் மேல்சட்டை அணிய உரிமை கோரிய போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது.  இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஒன்றுபட்டு நடத்திய உறுதியான போராட்டத்தினால், 1859ஆம் ஆண்டு பிரிட்டீஷ் அரசு ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த பிரகடனம் பின் வருமாறு சொல்கிறது: “அனைத்து பிரிவைச் சார்ந்த சாணார் இனப் பெண்கள் பிற கிறிஸ்தவ சாணார் இனப் பெண்களைப் போல் மேல் சட்டை அணிவதற்கோ அல்லது கோரா துணியிலான உடை அணிவதற்கோ அல்லது மீனவ இனப் பெண்கள் அணிவது போல் கோரா துணியை சுற்றிக் கொள்வதற்கோ அல்லது வேறு வடிவத்தில் மார்புப் பகுதியை மறைத்துக் கொள்வதற்கோ எந்தவித ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அவர்கள் உயர்சாதி பெண்கள் அணிவது போல் உடை அணியக்கூடாது “.

4

நாடார்களின் சமூக இயக்கம் நடந்து கொண்டிருந்தாலும், அடுத்த பத்தாண்டுகளில் ஈ. வெ. ரா பெரியாரின் சுயமரியாதை இயக்கம், மகாத்மா காந்தியின் ஆதரவோடு இந்திய தேசிய காங்கிரஸ் நடத்திய ஆலய நுழைவுப் போராட்டங்களுக்குப் பின்னர்தான் தென்தமிழ் நாட்டில் நாடார்கள் கோயிலில் நுழையும் கோரிக்கை நிறைவேறியது. காங்கிரஸ் கட்சி முன்னெடுத்த முயற்சிகள், நிறைவேற்றிய தீர்மானங்கள் இறுதியில் நடைமுறைக்கு வந்தன. குருவாயூர் ஆலய நுழைவு போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய ராஜாஜி மதராஸ் ராஜதானிக்கு பிரதம மந்திரியாக இருந்த போது, 1939ஆம் ஆண்டு அவர் தலைமையிலான மந்திரிசபையில் “ஆலய நுழைவு உரிமை மற்றும் இழப்பீடு சட்டம்” இயற்றப்பட்டது.

கல்வி மற்றும் வியாபாரம் மூலமாக சமூகத்தில் அந்தஸ்து பெற்ற நாடார் சமூகத்தினர், தற்போது கல்வி, சமூக, பொருளாதார தளத்தில் வளர்ச்சியடைந்திருப்பது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டினால் அல்ல. அரசாங்கத்தின் ஆதரவை மட்டும் நம்பி இருக்காது, கல்வி கற்பதன் மூலம் சுயசார்பு நிலையை அடைந்து, ஒரு சுதந்திரமான வாழ்நிலையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நாடார் சங்கம் விரும்பியது. 1913இல் நாடார் என்ற பெயர் பிற்படுத்தப்பட்ட சாதி பட்டியலில் இடம் பெற்றிருந்தது. பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்த ஒரு பகுதி நாடார்கள் (அவர்கள் நாடார் மகாஜன சங்கத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்களாக இருந்தனர்) நாடார் சாதி பெயரை பிற்படுத்தப்பட்ட சாதி பட்டியலிருந்து எடுக்க வேண்டும் என்று1917இல் வலியுறுத்தினர்.

1921 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, தங்கள் சாதிப் பெயரை நாடார் சத்திரியர் என்று பதிவு செய்வதில் நாடார் மகாஜன சங்கம் வெற்றி கண்டது. சென்னை மாகாணத்தின் முதன்மை செயலாளராக இருந்த G.T. போக் என்பவர் “1911இல் சாணார் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டவர்கள் தற்போது “நாடார்” என பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது சென்னை மாகாண அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் செய்யப்பட்டுள்ளது. நாடார் சமுதாயத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அரசு ஆவணங்களில் “சாணார்” என்ற வார்த்தை இனி பயன்படுத்தக் கூடாது” என்று பதிவு செய்துள்ளார்.  நாடார்களும் விரைவில் தங்கள் முட்டாள் தனத்தை உணர்ந்து சென்னை மாகாண அரசாங்கத்திடம், நாடார் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று 1935, 1940, 1950ஆம் ஆண்டுகளில் கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்த கோரிக்கை 1957இல் தான் நிறைவேறியது. 

தமிழில் – ஆர்.எஸ். துரைராஜ்

(Article published in Social Scientist, March-April, 2022)

‘சுரங்கம்’ நாவல்: ஒரு ஆய்வு !

  • இரா. குமரகுருபரன்

(நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள், சங்கமாக இணைந்து எழுச்சியுற்ற கதைக் கருவைக் கொண்ட முதல் நாவல் சுரங்கம் ஆகும். சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி எழுதிய இந்த நாவலை பற்றி சர்வதேச தமிழ் ஆய்விதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் சுருக்கம் – ஆசிரியர் குழு)

இந்தியாவின் நிலக்கரிச் சுரங்கத் தொழில் 1774-ஆவது ஆண்டில் தனியாரால் தொடங்கப்பட்டது, உலகிலேயே துரிதமாகச் செயல்படும் சுரங்கங்களில் இரண்டாவது இடம் இந்தியாவிற்கே. உலகின் மிகப்பெரும் பத்து சுரங்க விபத்துகளில் இரண்டு இந்தியாவில் நிகழ்ந்துள்ளன.

தன்பாத் (ஜார்கண்ட்) தோரி நிலக்கரிச் சுரங்கத்தில் 28 மே 1965-ஆம் ஆண்டு நிகழ்ந்த தீ விபத்தைத் தொடர்ந்து சுரங்கம் வெடித்துச்சிதறி 268 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்தச் சுரங்கம் தனியாரான ராஜா ராம்கருக்குச் சொந்தமானது.  இந்த விபத்தின் எதிர்வினையாக, தனியார் நிலக்கரிச் சுரங்கங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற தொழிலாளர்களின் போராட்டங்கள் வலுத்தன.  இந்நிலையில், மத்திய அரசு 1971-72 ஆம் ஆண்டில் சுரங்கங்களை நாட்டுடைமை ஆக்கியது. உலோகவியல் நிலக்கரிச் சுரங்க தேசியமயமாக்கல் சட்டம் 1972 நிலக்கரிச் சுரங்கம் (தேசியமயமாக்கல்) சட்டம் 1973 ஆகியன நிறைவேற்றப்பட்டன.

அடுத்ததாக. 27 டிசம்பர், 1975 சாஸ்நளா (ஜார்கண்ட்) நிலக்கரிச் சுரங்கம் வெடித்து அதன் உடனடி விளைவாக 32,000 கியூபிக் மில்லியன் தண்ணீர் உட்புகுந்த வெள்ளப்பெருக்கில் 383 சுரங்கத் தொழிலாளர்கள் (இதில் 130 பேர் ஒப்பந்த ஊழியர்கள்) சிக்கிப் புதைந்து மாண்டனர். இந்தச் சுரங்கம் பொதுத்துறை இஸ்கோவுக்குச் சொந்தமானது. இந்த நிறுவனம் உலகத்தரத்தில் உள்ளதாகச் சொல்லித் தப்பித்ததை எதிர்த்து வழக்கு நடைபெற்றது. நாற்பது ஆண்டுகள் கழித்து 2012 ல் விபத்து குறித்த தீர்ப்பு வெளியானது. கவனக்குறைவினால் நடைபெற்ற விபத்து என்று குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு ஓராண்டுச் சிறையும் ஆளுக்கு ரூபாய் 5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி

சரஸ்வதி’ சிற்றிதழ் தொடங்கிய காலம் முதலாகவே 1950களிலிருந்து சிறுகதைகளையும் கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதி வந்தவர் கு.சி. பா. என்று அழைக்கப்படும் எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதி ஆவார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த அனுபவம் மிக்கவர்.

ஜனசக்தி, தீக்கதிர் முதலான நாளிதழ்களிலும் தாமரை, செம்மலர், சிகரம் முதலான மாத இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளியாகி வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இவர் எழுதிய ‘சங்கம்’ புதினம் 1985 இலக்கியச் சிந்தனை விருது பெற்றது. “செம்மலர் மாத இதழில் இவர் எழுதிய தாகம், சங்கம், சர்க்கரை உள்ளிட்ட படைப்புகள் தொடராக வெளிவந்தன. தாகம், சங்கம், சர்க்கரை, பவளாயி. தலைமுறை மாற்றம் முதலான நாவல்கள் ஆங்கிலம், இந்தி, வங்காளி, குஜராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஃபிரெஞ்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘சுரங்கம்’ நாவல் உபாலி நாணயக்காரவின் மொழிபெயர்ப்பில் சிங்கள மொழியில் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது

‘சுரங்கம்’ நாவலின் பின்புலம்

மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புரமோத் தாஸ்குப்தா மையத்தில் கு.சி.பா. 1998 ஆம் ஆண்டு தங்கியிருந்தபோது, அசன்சால் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரான பிகாஸ் சௌதரியைச் சந்தித்தார். அவரது வேண்டுகோளை ஏற்று அவரது தொகுதியில் அமைந்துள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றி நாவல் எழுதும் முயற்சியைத் தொடங்கினார்.

பிகாஸ் சௌதரியின் வழிகாட்டலில் தன்பாத், ஜாரியா, அசன்சால் பகுதிகளிலுள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களிடையே தங்கி எண்ணூறு அடி முதல் ஆயிரத்து நூறு அடி ஆழம் வரை கொண்ட சுரங்கங்களுக்குள் சென்று, தொழில் நுணுக்கங்களையும், தொழிலாளர்கள் படும் சிரமங்களையும், வேதனைகளையும் கற்றறிந்து மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளருமான தமது நண்பர் கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி துணையுடன் வங்காளி, இந்தித் தொழிலாளர்களிடம் பேசிப்பழகி விவாதித்து, அவர்களின் வாழ்க்கைப்பாடுகளை அறிந்து, புதினமாகப் படைத்துள்ளார்.

“மனித வாழ்வின் சிரமங்களும் பிரச்சினைகளும் எங்கும் ஒரேவகைப்பட்டதானதால் மனிதர்களைப் புரிந்து கொள்வதிலான தடைகள் இடையூறுகளாக அமையவில்லை என்பது சாதகமான விஷயம். இருப்பினும் அம் மக்களின் முழு ஆன்மாவையும் தரிசிப்பதென்பது சாத்தியமற்ற விஷயம். அம் மனிதர்களுடன் கைபிடித்து, அம்மனிதர்களுக்குள் உருவாகும் அகமனப் போராட்டத்தை வெளிப்படுத்துவதும் கடினமான ஒன்று. இச் சிரமங்களுக்கு மத்தியில்தான் அவர்களின் கரங்களைப் பற்றவும் ஆன்மாவை தரிசிக்கவும் முயன்றிருக்கிறேன்” என்று மிகுந்த தன்னடக்கத்துடன் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

‘சுரங்கம்’ கதைச் சுருக்கம்

வேலை, கூலி, உயிர்ப் பாதுகாப்பு என எந்த உத்தரவாதமும் அற்ற நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள், இழப்பதற்கு ஏதுமின்றி. தங்களது உழைப்புச்சக்தியை முதலாளிகளின் லாபத்திற்காக மட்டுமே விரயப்படுத்தி உழல்கின்றனர் முதலாளிமார்களின் கஜானாவை நிரப்புகிறார்கள். சிறு சிறு தவறுகளைச் சொல்லி நியாயமான கூலியையும் சுரண்டிக் கொழுக்கிறார்கள் மேலதிகாரிகள். இதைக் களைவதற்காக போராடத் தங்களுள் ஒருவனான பிகாஸ் சௌதரியிடம் தலைமைப்பண்பு இருப்பதை மக்கள் சோதனைக்காலங்களில் உணர்கிறார்கள். பிகாஸ் குண்டர்களால் தாக்கப்படுகிறான். போராட்டம் தொடர்கிறது. பண்ணையடிமைகளாக இருந்தபோதிருந்து தொடரும் அச்சம் போராட்டப்பாதை ஊடாகக் குறுக்கிட்டுத் தடைசெய்கிறது.

எப்படியாவது காலம் மாறிவிடும்; காளி கண்திறப்பாள் என்ற நம்பிக்கையுடன் இருந்த பல தொழிலாளர்கள் இப்போது நிலைமையை உணர்ந்து தொழிற்சங்க உணர்வோடு வேலைநிறுத்தத்தில் இறங்கி, நிலக்கரிச் சுரங்கத் தொழில் நாட்டு உடைமை ஆக்கப்பட வேண்டுமென அணிதிரள்கிறார்கள். சுரங்கம் அமைக்கத் தங்களது விளைச்சல் நிலங்களை இழப்பீடு ஏதுமற்று விட்டுக்கொடுத்து எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகளையும் தனி அமைப்பின் கீழ் இணைத்துக்கொண்டு போராட்டம் நடத்த அறைகூவல் விடுக்கிறார் பிகாஸ். மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம், உண்ணாவிரதம், முற்றுகை, சிறை என்று பலவழிகளில் போராட்டப்பாதை தீர்மானிக்கப்படுகிறது.

இப்படி ஒருவாறாக, நிலக்கரிச் சுரங்கம் நாட்டுடைமையாக்கப்பட்டு விட்டது. ஆனால், முதலாளி அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக, அரசுத் தலைமைப் பொறுப்பு, தனி அமைச்சர், பெர்சனல் மேனேஜர், ஜெனரல் மேனேஜர் என்று நிர்வாக அமைப்பின் பெயர்களில் மட்டுமே மாற்றம். கூலி கூடினாலும், நிலக்கரி வெட்டி எடுப்பதில் அதே நடைமுறையான முறையற்ற சுரண்டல் தொடர்கிறது. தொழிற்சங்கத்தலைவராக பிகாஸ் பலமுறை எச்சரித்தும் சுரங்கக் கட்டமைப்பு சரிசெய்யப்படாத நிலையில், நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக விபத்து நேர்ந்து, பல தொழிலாளர்கள் பலியாகின்றனர். சகலபகுதித் தொழிலாளர்களும் உயிர் நீத்தோரின் நினைவாகத் திரண்டெழுப்பிய அஞ்சலி கீதம் எதிர்கால சமத்துவ வளவாழ்வுக்கான எழுச்சி கீதமாகிறது.

யதார்த்த சூழல் சித்திரிப்பு

மனிதர்கள், கறையான் புற்றுப் போன்ற குடிசைகளில் குடும்பம் நடத்துகின்றனர். கறையான் புற்றுக்கு பாம்புகள் வருவது வழக்கம்தானே? விஷப்பாம்புக்கடிக்கு இரையாகும் மக்களும் உண்டு. பன்றிகள், நாய்கள் படுத்த கெட்ட வாடை பகலில் உட்கார உதவும் கயிற்றுக் கட்டில், இரவில் குழந்தைகளிடமிருந்து கணவன் மனைவியின் அந்தரங்கம் காக்கும் தடுப்புச்சுவராக எழுந்து நிற்கும். ஆறுமணிக்கு காலைச்சங்கு ஒலித்ததும் கூண்டிலிருந்து சர்க்கஸ் வளையத்துக்குள் நுழையும் மிருகங்களைப்போல் சுரங்கத்துக்குள் நுழையும் தொழிலாளர்கள் கறையான் புற்றிலிருந்து ஈசல்கள் இறக்கை முளைத்துப் பறப்பது போல லிப்டிலிருந்து வெளியேறுகிறார்கள். மேல்பகுதி இயந்திரக் கொட்டகையில் ‘பிட் பாட்டத்தில்’ (உள் அடித்தளம்; இருப்பவர்களுக்குக் கேட்குமாறு மின்சார மணியொலிப்பு பணிநேரம் முடிவடைவதைத் தெரிவிப்பதும் விளக்கையும் ஹெல்மெட்டையும் தொப்பியையும் காவலாளியிடம் ஒப்படைத்துக் கையெழுத்திட்டு தொழிலாளர்கள் கீழிருந்து மேலாக வெளியேறுவதும் அடுத்த ‘ஷிப்ட் தொழிலாளர்கள் மேலிருந்து கீழிறங்கி அவசர அவசரமாக உள்வேலைக்கான உடைகளை மாற்றிக் கொண்டு கேப் லேம்ப்’ அறைக்குச் செல்வதும், ஹெல்மெட்-ஹெட்லைட்-பேட்டரி அணிகலன்களை இடுப்பில் இறுக்கமாகக் கட்டிக் கொள்வதும் எந்திரத்தனமாக நடைபெறுகின்றன.

தண்டா (மூங்கில் கழி கொண்டு சுவற்றைத் தட்டிப்பார்த்து சுவர்க்கூரை வலுவை சோதிப்பது, ‘சேப்டி லேம்ப்’ மூலம் மீதேன் கேஸ், கார்பன்-டை- ஆக்ஸைடு கசிவு சோதிப்பது மைனிங் சர்தார் கடமை. நீர்க்கசிவு உடைப்பு சோதனை, நீர் எந்திரம் செயல்பாட்டைக் கண்காணிப்பது ‘பம்ப் கலாசி யின் பணி, நிலக்கரிப் படிவத்தை லேசான வெடிவைத்துத் தகர்க்கும் டிரில்லர்’ உடைபட்ட கரியை வெட்டிக் குவிப்பவர், அதை இரும்புத் தொட்டியில் அள்ளிப்போட்டுப் பாரம் ஏற்றுபவர்கள் என்று மூவகைப் பிரிவினர் இங்கு உடலுழைப்புத் தொழிலாளர்கள்.

கிணற்றுத்துளை வழி மேல்தளத்திலிருந்து இறங்கிவரும் மின்சார ஏணி, குடைவுச்சுவர் வழி ஒழுகும் நீர், மேற்கூரை இற்றுவிழும் ஓட்டை ஏணி, ஏணியின் துரு வாடை, கிரீசின் எண்ணெய் கமறல் ஏற்படுத்தும் குமட்டல் வாடை இருளில் ஏணி செல்லும்போது கூரையிலும் சுவர்களிலும் புரண்டோடும் ஊற்றுவெள்ளம். சுவர்ப்பக்கவாட்டு வாய்க்காலில் மழைவெள்ள இரைச்சல், ராட்சத மின் எந்திரங்கள் பள்ளங்களில் சேகரமான நீரை உறிஞ்சி தாரையாகக்கொட்டுவது, ஏணியிலிருந்து இறங்கிய தொழிலாளர்கள் ஒரேசமயத்தில் தங்களது ஹெல்மெட்கள் மூலம் இயக்கும் பேட்டரி வெளிச்சம் குறுக்களவு பதிமூன்று அடி – உயரம் ஒன்பது அடியுள்ள குடைவுப்பாதைகள், ஐம்பது அடி தடிமனான கிளைக் குடைவுத் தூண்கள் கரிப்படிவம் வரையிலான தோண்டுமிட எல்லைகள் என்ற சித்திரிப்புகள் யதார்த்தமான சுரங்கப்பாதைக்குள் திகிலுடன் நம்மைப் பயணிக்க வைப்பன.

கதை மாந்தர்கள்

பிகாஸ் சௌதரி

கதை எழுதத் தூண்டிய பிகாஸ் சௌதரியின் சொந்த தொழிற்சங்க வாழ்க்கை காரணமாக, நாயகன் பெயரும் பிகாஸ் சௌதரியாகவே அமைந்துவிட்டது. அரசியல் தொழிற்சங்க வாழ்க்கைக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டதால் நிஜ மனிதர் தோழர் பிகாஸ் சௌதரி இறுதி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் பிகாஸ் சௌதரி குறித்த நாடாளுமன்ற இணையதள விவரக்குறிப்பு இதை உறுதிப்படுத்துகிறது மேற்கு வங்க மாநில சிபிஐ எம் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், மேற்கு வங்க மாநில இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) மாநில செயற்குழு உறுப்பினராகவும், நான்கு முறை மேற்கு வங்க சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருமுறை நாடாளுமன்ற அவை உறுப்பினராகவும். மத்திய அரசின் நிலக்கரித்துறை தொடர்பான ஆலோசனைக் குழுக்களிலும் உறுப்பினராக இடம்பெற்றவர். புதின நாயகனும் இவரைப்போலவே தொழிற்சங்கவாதி; மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர். தத்துவப் பார்வையும் அரசியல் வழிகாட்டுதலும் தீர்மானம் மேற்கொள்வதில் தெளிந்த ஞானமும் பெறவேண்டும். அத்தோடு நிறையப் படிக்க வேண்டும் என எண்ணினான். அன்றாட உழைக்கும் மக்கள் நடத்தும் கோரிக்கைகளுக்கான போராட்டத்தையும் அரசியல் பொருளாதார. நடவடிக்கைகளையும் கற்றுத்தெளிவடைய ‘கணசக்தி’ பத்திரிகையைத் தற்பொழுது முறையாகப் படிக்க ஆரம்பித்தான். “கணசக்தி” என்பது மேற்கு வங்க மாநிலத்தின் சிபிஐ (எம்) கட்சி வெளியிட்டுவரும் வங்காள நாளிதழ் ஆகும்.

ஜமுனா குமாரி

பிகாஸ் பெற்றோர் இருவரும் காலமான பின்னர் தாய் ஸ்தானத்திலிருந்து வளர்த்துப் படிக்சு வைத்த பிகாஸின் அக்கா தம்பிக்குத் திருமணம் செய்து குடியும் குடித்தனமுமானால் வாழ்க்கை முன்னேறிவிடும் என்று நம்புபவள். ஒவ்வொரு முறையும் சுரங்கத்தில் தொழிற்சங்கத்தின் வேலை நிறுத்தம், மறியல் நடக்கும் போதும் நிர்வாகம், காவல்துறையின் தாக்குதலுக்கு ஆளாகும் பிகாஸ், துர்காதேவி அருளால் உயிருக்கு ஆபத்தில்லாமல் தப்பிப்பதாக’ நம்பும் ஜமுனா குமாரி தம்பியின் சமூக வாழ்க்கைக்குத் தடை செய்யவில்லை. எனவே தம்பியின் தொழிற்சங்க சமூக வாழ்வு இடையறாது தொடர்கிறது.

சகுந்தலா தேவி

வஞ்சகனான சுரங்க முதலாளி திவாரியின் மனைவி சகுந்தலா தேவி ’கருணைமிக்க சூழல் கைதி’ பூர்வீக கிராம வாழ்க்கையை ஏக்கத்துடன் அசைபோடுபவள். ஏழையான தன் பெற்றோருடன் உறவு அறுபடக் காரணம் கணவனின் ‘ திடீர் ‘ பணக்கார புத்தியும், பணக்கார ஒழுக்கக்கேடும் என்பதை நன்குணர்ந்தவள். அமைச்சர் பெருமக்கள் உள்ளிட்ட சமூக உயர்வட்டாரம்’ பங்கேற்கும் தமது மகளின் ஆடம்பரத் திருமண நிச்சயதார்த்தத்தில் தன் பெற்றோர் பங்கேற்பது இழிவு எனக் கணவன் கருதவே மனவேதனை கொள்கிறாள். அவனைப்பழிக்கிறாள். அவ்வப்போது பல பெண்களுடன் பாலியல் சகவாசம் வைத்திருக்கும் தன் கணவனை அறிவாள். தட்டிக்கேட்டு தனது மணவாழ்வு முறிந்துபட்டால் வரும் வலியை உணரக்கூடியவள் என்பதால், எதிர்க்க இயலாது அமைதி காக்கிறாள். ஆனால் தன்னையொத்த

சீமாட்டிகளைப் போல, கணவனின் ஒழுக்கக்கேட்டிற்குத் துணை போகும் பாத்திரமல்ல. பொதுவாக வில்லன் என்றாலே அவன் மனைவியும் அப்படித்தான் என்று சித்திரிக்கும் இலக்கிய பாத்திரங்களைப் போலல்லாதது சகுந்தலாதேவியின் பாத்திரப்படைப்பு.

கதையில் இடம்பெறும் அங்கத காட்சிகள் சமூக அழுக்குகள் அலசப்படும் இடமாக அமைகின்றன.

மாண்பற்ற முதலாளித்துவம்

ஒருமுறை சுரங்கத்தினுள் சிறுவெடி வைத்துக் கரிப்படிவத்தைப் பிளந்தெடுக்கத் துளையிடும்பொழுது தண்ணீர் பீய்ச்சியடிக்கத் துவங்கி விட்டது. அதை உடனடியாக அடைத்து விடும் முயற்சியில் ஈடுபடாவிட்டால் பெரிய விரிசல் ஏற்பட்டு நீர்ப்பிரவாகம் எடுத்து விடும். உள்ளே உள்ள அத்தனை பேர்களுக்கும் ஆபத்து ஏற்படும். இந்நிலையில் ஒரு தொழிலாளி தன் முதுகை அத்துவாரத்தின் மீது சாய்த்து தன் பலங்கொண்ட மட்டும் அமுக்கி நின்று கொண்டான். தொழிலாளர்கள் முட்டுப்பலகையை எடுத்தோடி வந்தனர். உடன் புதிய நெருக்கடி ஒன்று உருவாகிவிட்டது. அவன் அமுக்கிக் கொண்டிருந்த துவார வடும்பை ஒட்டி தண்ணீர் பீய்ச்சியடிக்கத் துவங்கிவிட்டது. அவன் நகர்ந்து ஒதுங்கினால் போதும், சுவரில் பெரும்பிளவு உருவாகிவிடும் இதையுணர்ந்த பொறியாளர் உடன் ஆபத்தைத் தடுக்க அமுக்கிக் கொண்டிருந்த தொழிலாளி மீதே பலகைகளை அழுத்தி முட்டடிக்க உத்தரவிட்டான். சிலுவையில் அறையப்பட்ட ஏசுவைப் போல உயிரோடு அத்தொழிலாளி சுவற்றில் அறையப்பட்டான் தன் சக தொழிலாளியின் உடல் மீது மனதைக் கல்லாக்கிக் கொண்டு மற்றவர்கள் அவ்வேலையைச் செய்து முடித்தனர். அவர்களால் மறுத்துப் பேசமுடியாத நிலை. சுரங்கப் பாதுகாப்புக்காகவும் தன் சக தொழிலாளர்களின் உயிருக்காகவும் அவன் தவிர்க்க முடியாமல் தன் உயிரைத் தியாகம் செய்தான். அந்த கொடும் நிர்ப்பந்தத்தால் விளைந்த தியாகம், நிர்வாகத்தால் சர்வ சாதாரணமாக கடந்து செல்லப்படுகிறது.

சோசலிச எதார்த்தவாதம்

எஸ். தோதாத்ரி சோசலிச எதார்த்தவாதத்தின் அடிப்படைகள் எனும் தமது நூலில் அதன் பண்புகளைக் கீழ்க்காணுமாறு கூறுவார். “உலக இலக்கிய அரங்கில் யதார்த்தவாதம் வளர்த்து வைத்திருந்த விதிமுறைகளை அடியொற்றியே சோசலிச எதார்த்தவாதம் எழுந்தது; எதார்த்தவாதத்தில் காணப்படும் சமூக ஆய்வு முறை வகைப்பாடான பாத்திரப்படைப்பு. சமூகத்தைப் புறவயமாக (objective) ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவை இதிலும் தொடருகின்றன. சமூக விமரிசனமும் ஆழமாக இடம் பெறுகிறது. இவற்றிற்கெல்லாம் மேலாக சோசலிச எதார்த்தவாதத்தில் வேறு சில புதிய அம்சங்களும் இடம்பெறுகின்றன. உழைப்பு மனிதனது வாழ்வின் அடிப்படை என்ற நோக்கம் இந்த இலக்கியங்களில் காணப்படுகிறது சமூகம் இயங்கியல் பொருள்முதல்வாத முறையில் ஆய்வு செய்யப்படுகிறது. வர்க்கப் போராட்டத்தின் தன்மை சித்தரிக்கப்படுகிறது. உழைப்பவனைச் சார்ந்து நிற்கும் போக்கு காணப்படுகிறது. இதனையொட்டிய வரலாற்று உணர்வும் மனிதநேயமும் சமூக உணர்வும் மற்ற இலக்கியங்களில் காணமுடியாத அளவிற்கு இந்தவகை இலக்கியங்களில் மிகவும் விரிவாக இடம்பெற்றுள்ளன.

வரலாற்றுச் சூழமைவு

சுரங்கம் புதினம் முழுவதுமாக தொழிலையும் தொழிற்சங்கத்தையும் வளர்ப்பதாகவும், படிப்படியாக சமூக மாற்றம் கோரியுமாக வளர்கிறது. ஒடுக்கப்பட்ட முதல் போராட்டத்தில் சுரங்க முதலாளிகளின் கூலிப்படைகளால் தாக்கப்பட்டு அதிலிருந்து பாடம் கற்றுத் தெளிகிறான் பிகாஸ்.  சகதொழிலாளிகளிடமிருந்து எழுச்சி பெறும் ஒரு தலைமைப் பண்பாளனை அடையாளம் கண்டடைந்து, மேலும் போராட்டத்திற்கு ஊக்குவிக்கிறது தொழிலாளி வர்க்கம். எதார்த்தமான சூழலுடன் கிளர்ச்சிப் பிரச்சாரம் இணையவே கூடுதல் வலு கிடைக்கிறது. போராட்டம் வெற்றிபெறுகிறது. சூழல் கனியவே, சுரங்கத்தொழில் பொதுத்துறை வசமாகிறது,

கொள்ளை லாபமீட்டும் முதலாளித்துவ அமைப்பின் மீதான உரையாடல் தொழிலாளர்கள் மத்தியிலும் விவசாயிகள் மத்தியிலும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் தோற்றுவிக்கிறது. தனியார் நிலக்கரிச் சுரங்கம் தோண்ட இழப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நிலம் தந்து ஏமாந்த விவசாயிகளையும் போராட்டத்தில் இணைப்பதன் தேவையை உணர்த்தும் தொழிற்சங்கத்தலைவர். வர்க்க சமரசமின்றிப் போராடும் தலைமையின் அவசியம் உள்ளிட்ட அம்சங்கள் சமூக விமர்சனமாக விவாதங்களில் இடம் பெறுவதோடு முரண்பாடுகளை கூர்மைப்படுத்துகின்றன.

சுரண்டலின் உச்சம்

கூலியைக் கூட ஏமாற்றிப் பிடித்தம் செய்து சுரண்டுவது முதலாளித்துவ நடைமுறை கந்துவட்டிக்காரர்களும் சாராயக்கடைக்காரர்களும் முதலாளிகளுக்கு மறைமுகமாக சேவைபுரிவது முதலாளித்துவ சுதந்திரத்தில் அனுமதிக்கப்படுகிறது. நியாயமான கூலிகேட்டு அணிதிரளாமல் பார்த்துக் கொள்வதில் இது முதலாளிகளுக்கு உதவுகிறது. சாராயம், கந்துவட்டியில் அவதியுறும் தொழிலாளர் வர்க்கம் இற்று அழிவதை முதலாளி வர்க்கம் வெறுமனே வேடிக்கை பார்க்கிறது. தன்னுயிரைத் திரணமாக மதித்து வளமான எதிர்காலத்திற்காக உழைப்பவர்கள் ஒருமுறையே சாகிறார்கள்; அடிமைகள் அன்றாடம் சாகின்றனர் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.

வர்க்கப் போராட்ட பார்வை நாவலின் ஆதாரமாக ஓடுகிறது.  தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளர்கள் மீண்டும் பிகாஸ் சௌதரி தலைமையில் அணிதிரள்கிறார்கள் வர்க்கப் போராட்ட எதிர்ப்பைத் தாங்கிக்கொள்ள இயலாத நிர்வாகம், தொழிலாளர்களை உளவறிய முயல்வதையும், திரள விடாமல் தடுக்க எடுக்கும் முயற்சிகளையும் அலட்சியப்படுத்திவிட்டு முன்னேறுகிறது தொழிலாளி வர்க்கம்.

வர்க்கப் போராட்டம்

‘சுரங்கம்’ புதினம் முழுவதுமே அனுபவ ரீதியான படிப்பினைகளைக் கற்றுக் கொண்டு தொழிலாளி வர்க்கம் முன்னேறியதைக் காணலாம். நிலக்கரிச் சுரங்க நாட்டுடைமை எவ்வாறு நிறைவேறியது? ஒன்றுபட்ட தொழிலாளர்கள் விவசாயிகளின் உருக்குப்போன்ற ஒற்றுமையினால் தான். அளவில் ஏற்படும் மாற்றம் குணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதேபோலக் குணத்தில் ஏற்படும் மாற்றம் அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். குறைந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை முதலாளிகளுக்குச் சாதகமே. கூடுதல் எண்ணிக்கை இதர பகுதி தொழிலாளர்களையும் வேலை இழப்பு அச்சத்திலிருந்து விடுவிக்கிறது. ‘ஒற்றுமைக்கான போராட்டம், போராட்டத்திற்கான ஒற்றுமை என்பதை தொழிற்சங்க இயக்கம் இயங்கியல் அடிப்படையில் அணுகுவதால் முதல் தோல்வியிலிருந்து பெறும் படிப்பினை படிநிலைகளில் வெற்றியடைவதில் முடிகிறது.

முடிவுரை

நாவலின் காலகட்டம் 1975 வரைக்குமானது என்று ஆசிரியர் கு.சி.பா., நாவலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். எண்ணற்ற போராட்டங்கள் மூலம் தனியாரிடமிருந்து பொதுத்துறைக்கு சுரங்கத்தொழில் மாறியது. இருந்தபின்னும் சுரண்டல் முறை தொடர்கிறது சுரங்கத் தொழில் இப்போது மாஃபியாக்களின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. கொள்ளை லாபம் ஈட்டும் சுரங்கத்தொழில் மீண்டும் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. 1972- 73 ஆம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்ட சுரங்கத்தொழில் சட்டங்கள், மார்ச் 2015 ஆம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டு மீண்டும் தனியாருக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.

கரியற்ற சக்கையான சுரங்கங்கள் கைவிடப்பட்டு வேறு இடங்களை நாடுவதற்கு ஒப்பாக தொழிலாளர்களும் சக்கையானபின் தூக்கி வீசப்படுகிறார்கள். மீண்டும் பொதுத்துறைக்கு மாற்றப்பட்டு சுரண்டல் முறைக்கு முடிவுகட்டும் வரை விடியல் இல்லை. உலகமயமாக்கல் காலகட்டத்தில் ‘மீண்டும் லாபம், அதிக லாபம் மட்டுமே குறிக்கோள்’ எனும் சுரண்டல் புதுப்புது வடிவங்களில் உருவாகிறது.

சுரங்கம் நாவலில்,“தன்பாத் சுரங்கத்தில் ஒரு தொழிலாளி பிறருக்காக எப்படி தன்னைத்தானே உயிர்ப்பலி கொடுத்துக் கொண்டான்? என்ற தொழிலாளர்களின் அடிமனதில் உறைந்துவிட்ட சித்திரம் வீரயுக எழுச்சிப்பாடலாக ஒலிக்கும். பிகாஸ் விகாஸ் என்னும் வங்கமொழிப் பதத்திற்கு ‘வெளிச்சம்’, ‘பிரகாசம்’, ‘வளர்ச்சி’ என பல பொருள் உண்டு.  சுரங்க வாயிலில் வெளிச்சம் பரவி, நிரந்தர விடியல் காணும் இந்த புதினத்தின் வெற்றியையும் அவ்வாறே சொல்லலாம். வேற்று மொழி பேசும் மக்கள் வாழும் பகுதியில் செய்யப்பட்ட கள ஆய்வில் விளைந்த இந்த நாவல், தமிழில் வெளியானது. பல்வேறு வட்டார மொழிகளில் வெளியாகி உணர்வூட்டுகிறது. அதில்தான் அதன் வெற்றி அடங்கியுள்ளது.

முற்றுகையின் கீழ் இந்திய ஜனநாயகம்…

  • பிரகாஷ் காரத்

இந்திய மக்களாகிய நாம் நமது தேசத்தின் 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வேளையில், விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்பும் கூட, இந்திய நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகம் நடைமுறையில் இருக்கிறது என்பது நமது சாதனைகளுள் ஒன்றாகும். இதற்கு முழுமுதற் காரணம், 1950 ஆம் வருடம் நாம் ஏற்றுக் கொண்ட இந்திய அரசியல் அமைப்பு சட்டமும் அதன் பலனாக இந்திய மக்கள் அனைவரின் குரல்களும் அரசியலில் ஒலித்துக்  கொண்டிருப்பதும்தான். இன்றைக்கு இந்திய மக்கள் எழுப்பும் இந்த குரல், இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் எழுப்பப்பட்ட குரல்களின் எதிரொலி என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

இந்திய நாட்டில், முதலாளித்துவ சக்திகளின் குறுகிய பார்வை போன்ற கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் கூட, சுதந்திரம் பெற்று ஏழு பத்தாண்டுகள் கடந்த பின்னரும், நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது உயிர்ப்புடன் இருக்கிறது. இவ்வளவு காலம் நாடாளுமன்ற ஜனநாயகம் நிலைத்திருப்பதற்கு முக்கிய காரணம், இந்திய மக்களும், ஜனநாயக சக்திகளும் இணைந்து நடத்திய போராட்டங்கள்தான்.

எனினும், நாம் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் இருண்டதாக தெரிகிறது. நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பும், இந்திய அரசியல் அமைப்பு நமக்கு கட்டமைத்து கொடுத்திருக்கிற ஜனநாயகத்தை பாதுகாத்திடும் அடித்தளங்களும் மிகத் தீவிரமான தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. இன்றைக்கு முழு அளவிலான சர்வாதிகார போக்கு என்பது தலைதூக்கி வருகிறது. இது இந்திய நாட்டின் ஜனநாயகம் வழங்கியுள்ள அரசு நிறுவனங்கள்  அமைப்புகளின் அதிகாரங்களை குறைத்துவிட்டதால், இந்திய நாட்டின் ஆட்சி அதிகாரம், நீதிமன்றம் மற்றும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான சமநிலையை பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

முழு அளவிலான சர்வாதிகாரத்தனம்..

கூடுதலான நாடாளுமன்ற உறுப்பினர்களோடு, 2019ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., ஒரு கட்சி சர்வாதிகாரத்தை கட்டமைப்பதற்கான இலக்கினை தனக்குத் தானே நிர்ணயித்துக் கொண்டுள்ளது. பா.ஜ.க.வின் இந்த நிர்ணயிப்பிற்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் நின்று கடுமையான எதிர்த்தாக்குதலை நடத்திட வேண்டும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒடுக்குவது, எதிர்க்கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலங்களில், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சிக் கவிழ்ப்பை செய்வது, மத்திய அரசின் சிபிஐ, வருமானவரி, அமலாக்கத்துறை போன்ற   அமைப்புகளை தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் மீதும், எதிர்க்கட்சி தலைவர்கள் மீதும்  தாக்குதலுக்கு பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது சர்வாதிகார பா.ஜ.க. அரசு.

நாடாளுமன்றத்தின் மாண்புகளை குறைப்பது, நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீரழிப்பது என்பது  மோடியின் இரண்டாவது ஆட்சியில் மிகவும் தீவிரத்தன்மையோடு உள்ளது. இந்திய நாடாளுமன்றம் கடந்த 2021 ஆம் ஆண்டில் மொத்தத்தில் 50 நாட்களுக்கும் குறைவாகவே நடைபெற்றுள்ளது. எந்தவொரு மசோதா மீதும் விவாதங்கள் என்பது நடப்பதில்லை; எதிர்க்கட்சிகளுக்கு விவாதங்களுக்கான நேரம் என்பது ஒதுக்கப்படுவது கிட்டத்தட்ட இல்லை என்ற அளவில்தான் உள்ளது. அதே போல், எந்தவொரு மசோதாவும் ஆய்விற்கு உட்படுத்துவது என்பதும் இல்லை. கடந்த UPA ஆட்சியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 60 முதல் 70 சதவீத மசோதாக்கள், நாடாளுமன்ற நிலைக்குழு அல்லது தேர்வுக்குழுக்களுக்கு அனுப்பப்பட்டன. ஆனால் இந்த சதவீதம் பா.ஜ.க. வின் முதலாம் ஆட்சியில் 23 சதமாகவும், இரண்டாவது ஆட்சியில் 13 சதமாகவும் குறைந்து விட்டன. இவற்றோடு இணைந்து, எதிர்க்கட்சிகள் பிரச்னைகளை எழுப்புவதற்கும், ஓட்டெடுப்பு கோருவதற்கும் நாடாளுமன்றத்தில் மறுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மசோதாக்களை பண மசோதாக்களாக (Money Bill) கொண்டு வந்து, ராஜ்ய சபையின் மாண்புகளை தரம் தாழ்த்தி விட்டது மோடி அரசு.

பா.ஜ.க. அரசின் சர்வாதிகாரப் போக்கு, இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள பொது மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமக்களின் சுதந்திரம் ஆகியவற்றை காலில் போட்டு மிதிப்பது என்கிற இடத்திற்கு ஆட்சியாளர்களை இட்டுச் சென்றுள்ளன.

எதிர்ப்புக் குரல்களை குற்றவாளிகளாக சித்தரித்து தண்டிப்பது, குடிமக்களின் உரிமைகளை நசுக்குவது என்பது சர்வாதிகார மோடி ஆட்சியின் முத்திரையாக மாறிவிட்டது. கொடூரமான சட்டங்களான உவாபா (UAPA)  போன்றவற்றின் மூலம் எதிர்ப்பு குரல்களை நசுக்கும் போக்கு வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது. 2014 முதல் 2020 ஆம் வருடங்களுக்கு இடையிலான ஆறு வருட காலத்தில் 690 குற்ற வழக்குகள் இந்திய நாட்டு மக்களின் மீது போடப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் வாயிலாக 10,552 பேர் கைது செய்யப்பட்டுள்ள கொடூரம் நிகழ்ந்துள்ளது. அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அரசியல் செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள் என அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பீமா கோரேகான் வழக்கில் 16க்கும் மேற்பட்ட சமூக செயல்பாட்டாளர்கள், அறிவு ஜீவிகள் கைது செய்யப்பட்டு சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் மூன்று வருட காலமாக அடைக்கப்பட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றம் தனது சுயேச்சையான செயல்பாட்டை நிறுத்திவிட்டு அதிகாரிகளின் கைப்பவைகளாக செயல்பட ஆரம்பிப்பதுதான் சர்வாதிகார ஆட்சியின் மோசமான அம்சம். உச்சநீதிமன்றம் ஒரு நிர்வாக நீதிமன்றமாக செயல்படத் துவங்கியுள்ளது. சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளான ஜாக்கியா ஜாஃப்ரி வழக்கிலும், பண மோசடி வழக்குகளில் அமலாக்கப் பிரிவின் அதிகார வரம்பு பற்றிய வழக்கிலும் உச்ச நீதி மன்றம் குடிமக்களின் உரிமைகள் மீது நிர்வாகத் தாக்குதல்கள் நடத்தியிருப்பதை காண முடியும்.

75 ஆண்டுகால இந்திய வரலாற்றை பார்க்கையில், 1975ஆம் வருடம் ஜூன் மாதம் இந்திராகாந்தி  ஆட்சி காலத்தில், இந்திய ஜனநாயகத்திற்கு நெருக்கடி நிலை என்கிற பெயரில் மிகப் பெரிய தாக்குதல் ஏற்பட்டது. ஆனால் அது 20 மாத காலம் மட்டுமே நீடித்தது.  அந்த காலகட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிவில் உரிமைகள் பறிக்கப்பட்டு, அனைத்து பத்திரிக்கைகளும் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டன. அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால் இன்றைக்கு ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலானது, எமர்ஜென்சி காலத்தை விட மிகவும் தீவிரமானது; விரிவானது. குடியாட்சி என்கிற தத்துவத்தின் முக்கியமான அம்சங்களான மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி இரண்டையும் துண்டித்து வருகிறது.

ஏன் இந்த கொடூர வடிவிலான சர்வாதிகாரம் இந்திய நாட்டின் ஜனநாயகத்தை முடக்கத் துடிக்கிறது? இது ஏதோ பிறழ்வோ அல்லது தற்செயலாக ஏற்பட்ட விபத்தோ அல்ல. இது தனிநபர் சர்வாதிகாரப் போக்கு என்றும் நாம் குறிப்பிட முடியாது. இத்தகைய சர்வாதிகாரம் கருக்கொள்வதற்கு பல்வேறு பாசிச சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட்டுள்ளன என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அரசியல் ஜனநாயகம் குறித்து அம்பேத்கர் …

இந்திய நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தினை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நேரத்தில், டாக்டர். அம்பேத்கர் அவர்கள் கூறியதை தற்போது நினைவு கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. பொருளாதார சமத்துவமும், சமூக நீதியும் வெற்றி பெறாமல் அரசியல் சுதந்திரம் என்பது வெற்றி பெறாது என்று கூறினார். இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் மேல்பூச்சாக மட்டுமே உள்ளது; அது ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமானது என்றும் அம்பேத்கர் எச்சரித்தார்.

இவ்வளவு காலமும், தேர்தல் ஜனநாயகம் நடைமுறையில் இருந்தாலும், பொருளாதார மற்றும் சமூக ஜனநாயகம் தோற்றுப் போயுள்ளது. ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுத்த முதலாளித்துவ பாதை இவற்றையெல்லாம் சீரழித்துவிட்டதோடு, பிராந்திய அளவிலான வேற்றுமைகளையும் அதிகரித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகாலமாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வரும் புதிய தாராளமயக் கொள்கைகள், பொருளாதார அசமத்துவத்தை மேலும் மேலும் விரிவுபடுத்தி, இந்திய நாட்டின் வளங்களை எல்லாம் ஒரு சிலரின் கைகளில் கொண்டு சேர்த்திருக்கிறது. மற்றொரு புறம் முதலாளித்துவ வர்க்கம், நிலப்பிரபுக்களிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, சாதிய ஒடுக்குமுறைகளை களைவது போன்ற ஒரு நாடகத்தை மட்டுமே நிகழ்த்தியுள்ளனர்.

அம்பேத்கர் அவர்கள் அரசியல் ஜனநாயகத்திற்கும், பொருளாதார மற்றும் சமூக நிலைமையில் விரிவடைந்து வரும் சமத்துவமற்ற போக்கிற்கும் உள்ள முரண்பாட்டினை முன் கூட்டியே உணர்ந்து சொல்லியிருக்கிறார்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அம்பேத்கரின் இந்த பகுப்பாய்வும், இந்தியாவில் மார்க்சிஸ்டுகள் சொல்லி வரும் கருத்துக்களும் இணையானதாக உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கத்திலிருந்தே சொல்லி வருவது என்னவென்றால், சமூக மற்றும் விவசாய உறவுகளில் ஜனநாயகப் பூர்வமான மாற்றத்தை  முழுமையாக கொண்டு வராமல் முதலாளித்துவ வளர்ச்சியே சாத்தியமில்லை என்பதுதான். நவீன தாராளமயக் கொள்கைகளும், இந்துத்துவா சர்வாதிகாரமும் கைகோர்த்து பவனி வரும்போது, சமூக மற்றும் பொருளாதார நீதி என்பது முற்றிலும் தோல்வியுறும். இது முற்றிலும் ஜனநாயகத்தை வேரறுத்து சர்வாதிகாரத்தை வளர்ந்துவிடும்.

ஜனநாயகத்தை கட்டுப்படுத்தும் புதிய தாராளமயம்…

புதிய தாராளமயக் கொள்கைகள் ஜனநாயகத்தின் மாண்புகளை குறைத்தும் கட்டுப்படுத்தியும் வருகின்றது. குடிமக்கள் மற்றும் அவர்களது உரிமைகளை விட சந்தை தான் முக்கியமானது என்று வற்புறுத்துகிறது. நிதி மூலதனம் அரசியல் அமைப்பிற்குள் ஊடுருவி விட்டது. அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் பெரும் மூலதனத்திற்கு கீழ்ப்படிந்து கிடக்கின்றன.  இந்தப் போக்கு நாடாளுமன்ற அமைப்பையே சீரழிக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் இதைத்தான் சொல்கிறது: “நாடாளுமன்ற அமைப்புகளுக்கும், ஜனநாயகத்திற்கும் ஆபத்து என்பது ஒருபோதும் தொழிலாளி வர்க்கத்தால் அல்லது அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த அரசியல் கட்சிகளாலும் ஏற்படாது. ஆனால் அந்த ஆபத்து சுரண்டும் வர்க்கத்தால் மட்டுமே ஏற்படும். முதலாளித்துவ சுரண்டும் வர்க்கம்தான் நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் இருந்து கொண்டு, அவர்களின் குறுகிய லாபத்திற்காக நாடாளுமன்ற அமைப்பையே சிதைக்கிறார்கள்.

2014 ஆம் ஆண்டில் இந்துத்துவா சக்திகளின் வளர்ச்சியும், பா.ஜ.க. தனிக்கட்சியாக ஆட்சி அமைத்ததும் ஒரு முக்கிய மாற்றத்தை இந்திய அரசியலில் கொண்டு வந்தது. ஆர்.எஸ்.எஸ். என்கிற மதவாத சக்திகளால் தூண்டப்பட்ட ஒரு அரசியல் கட்சி அதை பயன்படுத்திக் கொண்டு நாட்டின் ஆட்சியைப் பிடிக்கிறது. இந்த அரசு, ஜனநாயகம் என்பதையே இழிவாக பார்க்கும், இந்துத்துவா சித்தாந்தத்தை புகுத்தி, இந்து ராஷ்ட்ரம் அமைத்திட துடிக்கிறது. இந்து ராஷ்ட்ரம் என்பது சிறுபான்மையினருக்கு சாம் அந்தஸ்தும், சம உரிமைகளையும் மறுக்கின்ற ஒரு கொள்கையாகும்.

இந்துத்துவா கொள்கைகளுக்கு ஆதரவாக அரசின் சட்டங்களையும், இந்து தீவிரவாத அமைப்புகளின் சிறுபான்மையினருக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிறுபான்மையினர் என்றால், குறிப்பாக இஸ்லாமிய மக்களை குறி வைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அவர்களை தொடர்ந்து அச்சத்திலும், வன்முறையிலும் வைத்திருக்கின்றன மத வாத அரசுகள். குறிப்பாக, பா.ஜ.க. ஆட்சி புரியும் உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில் இஸ்லாமிய மக்கள் அனுதினமும் துன்புறுத்தப்படுகிறார்கள் அல்லது அச்சுறுத்தப்படுகிறார்கள்.

இந்துத்துவா-கார்ப்பரேட் கூட்டணி…

சர்வாதிகாரம் என்பது கார்ப்பரேட் மற்றும் இந்துத்துவா சக்திகளினால் நெய் ஊற்றி வளர்க்கப்படும் பெரு நெருப்பாகும். இரு தீய சக்திகளுக்கும் நவீன தாராளமயக் கொள்கைகளை முன்னெடுப்பது என்பது அடிப்படை தேவைகளாகும். அதற்கு உயர்ந்தபட்ச சர்வாதிகாரம் என்பது தேவைப்படுகிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான அனைத்து சட்டங்களையும் வெட்டிச் சுருக்கி நான்கு தொழிலாளர் விதிகளாக (four labour codes) மாற்றி அமைத்தது ஆகும்.

அரசியல் அமைப்பு என்கிற போர்வைக்குள் இருந்து கொண்டு, ஜனநாயகத்தின் அத்தனை தூண்களையும் தகர்க்கும் வேலையை இந்த கூட்டணி செய்து கொண்டிருக்கிறது. சர்வாதிகாரம் என்பது அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படாமல், சமூகம் மற்றும் பண்பாட்டுத் தளங்களில் வளர்த்தெடுக்கப் படுகிறது. பசு மாடுகளை கொல்லத்தடை, மாட்டிறைச்சி உண்பதற்குத் தடை, ஒழுக்க காவலர்களாக மாறுதல், கலைஞர்களை எழுத்தாளர்களை கட்டுப்படுத்துவது, – இவையெல்லாம் சர்வாதிகாரத்தின் கூறுகளாக நாம் தினம் தினம் காண்கிறோம்.

ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போர்…

ஆகவே, இந்திய நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த பின்பு, இந்திய நாட்டின் ஜனநாயகம் என்பது மோசமான திருப்புமுனையில் உள்ளது. மோடி அரசால் பின்பற்றப்படும் இந்த சர்வாதிகாரம் இந்திய ஜனநாயக மாண்புகளுக்கும் குடிமக்களின் உரிமைகளுக்கும் எதிரானது. அது நாட்டின் சமத்துவம் கூட்டாட்சித் தத்துவங்களின் மீதான தீவிர தாக்குதல்களை செய்து வருகிறது. வரும் காலங்களில் அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத, இன, மொழி பேதமின்றி இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக போர் புரிய வேண்டும். அப்படி ஜனநாயகத்தை காக்கும் போராட்டம் என்பது நவீன தாராளமய கொள்கைகளுக்கும், இந்துத்துவா சக்திகளுக்கும் எதிரான போர் என்பதை உணர்ந்து போரிட வேண்டும்.

தொழிலாளர் வர்க்கத்தைப் பொறுத்த மட்டில், ஜனநாயக உரிமை என்பது மிகவும் அடிப்படையான தேவையாகும். ரோசா லக்சம்பர்க் சொல்வது போல், முதலாளித்துவ சாதிகளுக்கு ஜனநாயகம் என்பது தேவையற்றது மட்டுமல்லாமல் தொந்தரவானதும் கூட; ஆனால் அதுவே, தொழிலாளி வர்க்கத்திற்கு மிகவும் முக்கியமானது மட்டுமல்லாமல் தவிர்க்க முடியாததும் கூட. ஏனென்றால் முதலாளித்துவ பூர்ஷ்வா சக்திகளை அழித்துவிட்டு, சமத்துவ சமூக மாற்றத்தினை முன்னெடுப்பதற்கு ஜனநாயகம் என்பது சக்கரங்களாகவும், அதிர்வு தாங்கிகளாகவும் உள்ளது. அது இன்றியமையாதது; ஏனெனில் அதில் மட்டுமே, ஜனநாயகத்திற்கான போராட்டத்தில், பாட்டாளி வர்க்கம் அதன் வர்க்க நலன்கள் மற்றும் அதன் வரலாற்றுப் பணியை உணர்ந்து கொள்ள முடியும்.

இடதுசாரிகள் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கும், இந்துத்துவா சக்திகளுக்கும் முற்றிலும் எதிரானது என்ற நிலையில், நாட்டிலுள்ள அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளை ஓரணியில் இணைத்து ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. முன்னெடுக்கும் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடுவதற்கு முன்முயற்சி எடுக்க  வேண்டும்.

தமிழில்: வெ. ராகுல்ஜி

திராவிட இயக்கம்: மாற்றைத் தேடும் மறு வாசிப்பு !

  • என்.குணசேகரன்

( ‘திராவிட இயக்கம் ஒரு மறுவாசிப்பு’ நூலில் இருந்து சில பகுதிகள் இங்கே தரப்படுகின்றன…)

திராவிட இயக்கம், தமிழகத்தில் உருவான மாபெரும் மக்கள் இயக்கம் என்பதை யாராலும் மறுக்க இயலாது. கடந்த அரை நூற்றாண்டாக, தமிழ்நாட்டின் அரசியலில் திராவிட இயக்கப் பிரிவுகளே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன.

திராவிட இயக்கத்தின் இன்றைய நிலை குறித்து, பகுத்தறிந்து சிந்திப்பவர்கள் அந்த இயக்கங்களின் எதிர்காலம் குறித்த பல கேள்விகளை எதிர்கொள்கின்றனர். அதில் “திராவிட இயக்கம்  நெருக்கடியில் இருக்கிறதா” என்கிற கேள்வியும் ஒன்று. “அப்படி எந்த நெருக்கடியும் இல்லை” என திராவிட இயக்க ஆதரவாளர்கள் அதனை அவசரமாக மறுக்கலாம். தற்போது “திராவிட மாடல்” என்று முன்வைத்து இன்றும் ‘திராவிடக் கருத்தியல்’ வலுவாக உள்ளதாக முன்னிறுத்தப்படுகிறது.

இதற்கு நேர்மாறாக, வேறு சிலர், திராவிட இயக்கத்திற்கு முடிவு வந்துவிட்டது என்கிறார்கள். அவர்கள் தமிழகத்தில் தற்போது வெற்றிடம் நிலவுவதாகவும், அதனை தாங்கள் நிரப்பப் போவதாகவும் சொல்கிறார்கள். தமிழக பாஜக தலைவர்கள் அந்த இடத்தை பிடிப்போம் என்று தொடர்ந்து பேசி வருகின்றனர்.

உண்மையில், தமிழக அரசியலில் வெற்றிடம் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. திமுக, அதிமுக அல்லாத சில கட்சிகள். அரசியலில் ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றனர் என்பதற்காக திராவிட இயக்கம் நெருக்கடியில் உள்ளது என்ற முடிவுக்கு வர இயலாது. அதே போன்று, ஜெயலலிதா, கருணாநிதி போன்ற, தலைவர்கள் திராவிட  அரசியல் களத்தில் இல்லாததால் அந்த இயக்கம் நெருக்கடியில் இருக்கிறது  என்று சொல்கிற கருத்தும் சரியானதல்ல. எனினும், எதற்காக நெருக்கடியில் திராவிட இயக்கம் இருப்பதாகக் கருத வேண்டியுள்ளது? 

தமிழகத்தின் சமுகத் தேவைகளிலிருந்து திராவிட இயக்கத்தினர் முன்வைத்த இலக்குகளை அவர்களால் தொடர முடியவில்லை என்பது வரலாற்று உண்மை. இனி அவர்களால் அவற்றை சாதிக்க முடியுமா என்ற அவநம்பிக்கையும் தற்போது ஏற்பட்டுள்ளது. இது அந்த இயக்கம் எதிர்கொள்ளும் முக்கிய நெருக்கடியாகும்.

முன்னிறுத்திய இலக்குகள் எங்கே?

திராவிட இயக்கம் தன்னை பல வகையில் அடையாளப் படுத்தி வந்துள்ளது. பகுத்தறிவுக்கான பாசறை, சமூக நீதி, பிற்பட்டோருக்கான இயக்கம், பெண் விடுதலை, தமிழுக்காக உயிர் கொடுக்கும் இயக்கம் என, தன் அடையாளங்களை வெறும் முழக்கங்களாக மட்டும் வைத்துக்கொள்ளாமல், அவற்றை பயன்படுத்தி வெகு மக்களை தனது செல்வாக்குத் தளத்தில் கொண்டு வந்தது. ஆனால் இன்று மேற்சொன்ன அடையாளங்களில் காலூன்ற இயலாத நிலையில் உள்ளது. அதனால்தான், திராவிட இயக்கம் நெருக்கடியில் உள்ளது எனும் மதிப்பீடு முன்வருகிறது.

எடுத்துக்காட்டாக, 1957-ம் ஆண்டில் திமுக சந்தித்த முதல் தேர்தலிலேயே மத்திய மாநில உறவுகளை சீரமைக்க திமுக வலியுறுத்தியது. அப்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“இன்றைய அமைப்பில்   அதிகாரங்களும் வருவாயும் மத்திய ஆட்சிக்கே பெரிதும் அளிக்கப்பட்டுள்ளன மாநில அரசு வருவாயை பெருக்கிக் கொள்ள வழியில்லை சாதாரண பிரச்சினைகளில்கூட முடிவெடுக்கும் உரிமை மாநில அரசுகளிடம் இல்லை. மாநிலங்களின் அதிகார வரம்பும் வரிவிதிப்பும் உரிமைகளும் அதிகரிக்கப்பட்டு மத்திய அரசுக்கான அதிகார வரம்பும் வரிவிதிப்பு உரிமைகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.”

கடந்த பல ஆண்டுகளாகவே இந்த நிலையை திராவிட இயக்கங்கள் வலியுறுத்தவில்லை. திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது, அல்லது அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது பெயரளவுக்கு இதனை பேசியிருக்கக்கூடும். சமீபத்திய காலங்களில் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், மத்திய, மாநில அரசாங்கங்களுக் கிடையேயான அதிகாரங்கள் ஜனநாயக அடிப்படையில் மாற்றி அமைக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு தொடர்ச்சியான அழுத்தம் கொடுக்க இயலாத நிலையில்தான் திராவிட இயக்கம் இருந்து வந்துள்ளது.

இதற்கு காரணம் என்ன? மாநில உரிமைகளை மறுத்து வந்துள்ள, பாஜக,காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளோடும் அவ்வப்போது அரசியல் தேவைக்காக இரண்டு கழகங்களும் கூட்டணி கண்டு வந்துள்ளன. இந்தக் கட்டாயமும்  எதற்காக என்பதை ஆழமாக அறிந்திட வேண்டும்.

பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்க, மக்கள் வழ்வாதாரங்களை பறிக்கிற கொள்கை கொண்டவை. மாநில மட்டத்தில், இந்த கொள்கை வழித்தடத்தில் இரண்டு கழகங்களும் 1990-ம் ஆண்டுகளிலிருந்து பயணித்து வருகின்றன. இதன் எதிரொலியாகவே, மாநில நலன் சார்ந்த உரிமைகளை அடக்கி வாசிக்கும் நிலைக்கு திராவிட இயக்கங்கள் தள்ளப்பட்டு விட்டன. இவ்வாறு ஒவ்வொரு இலக்கும் கைவிடப்பட்டது.

திராவிட இயக்கத்தின் எதிர்காலம் 

திராவிட இயக்கம் என்றும் நிலைத்திருக்கும் என்றும் அது மக்கள் ஆதரவோடு நீடிக்கும் என்று பலர் நினைக்கலாம். திராவிட இயக்கப் பற்றாளர்கள் எந்த நெருக்கடி வந்தாலும் அவற்றை முறியடித்து முன்னேறுவோம் என முழங்கிடலாம். ஆனால், ஒரு வரலாற்றுப் போக்கினை நாம் மறந்துவிடக்கூடாது. எந்தக் கருத்தியலும், அது சார்ந்த இயக்கங்களும் வரலாற்றில் ஒரே வடிவத்தில் மாறுதலுக்கு உட்படாமல் நீடித்ததில்லை.

எடுத்துக்காட்டாக, இங்கிலாந்தில் 1838 முதல்  1857 -ம் ஆண்டு வரை பெரும் மக்கள் இயக்கமாக செயல்பட்ட மக்கள் சாசன இயக்கம். வாக்குரிமை உள்ளிட்ட அரசியல் சீர்திருத்தக் கோரிக்கைகளை முன்வைத்து எழுந்த இயக்கம் அது. ஆனால், துவங்கிய பத்தாண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து வரலாற்றில் ஏற்பட்ட மாற்றங்களின் ஊடாக, அந்த இயக்கத்தின் தேவை மழுங்கி, பின்னர் அது மறைந்தது.

இதனை குறிப்பிடுவதால் அந்த இயக்கம் எதையும் சாதிக்கவில்லை என்று கருதக்கூடாது. எந்த இயக்கமாக இருந்தாலும் அதன் எதார்த்தத் தேவை முடிந்த பிறகு மறைந்து போவது இயல்பானது. இடையில் அந்த இயக்கம் தன்னை இருத்திக் கொள்வதற்கு பல மாற்றங்களை தனக்குள் ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கக்கூடும். இந்த வரலாற்றுப் போக்கிற்கு  உலக இயக்கங்கள் அனைத்தும் ஆட்பட்டிருக்கின்றன. எனவே, இதற்கு திராவிட இயக்கமும் விதிவிலக்கல்ல.

திராவிட இயக்கத்திலேயே உருவான பல கிளை இயக்கங்கள் மறைந்து போய்விட்டன. அண்ணா அவர்களோடு திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி திராவிட முன்னேற்ற கழகம் உருவாக்கியவர்களில் முக்கியமானவர், ஈ.வி.கே.சம்பத். அவர், திமுகவிலிருந்து பிரிந்து, “தமிழ் தேசியக் கட்சி” துவங்கினார். பிறகு அவர் காங்கிரசில் சேர்ந்தார். அவர் அமைத்த கட்சி அத்துடன் மறைந்து போனது. இவையெல்லாம் குறுகிய கால நிகழ்வுகள். சமூக இயக்கத்தின் தேவையை நிறைவேற்ற பயன்படாதபோது, இயக்கங்களும், அவை பேசிய கருத்து நிலைப்பாடுகளும் நிலைத்து நிற்கும் என்று கூற இயலாது.

திராவிட இயக்கம் துவங்கிய காலத்திலிருந்து இது போன்ற பல வகையான மாற்றங்களை சந்தித்து வந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவராக விளங்கிய மறைந்த முரசொலி மாறன், “திராவிட இயக்கத்தின் தலைமகன்” என்று நீதிக்கட்சியைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். 1916-ம் ஆண்டு நவம்பர் 20 அன்று தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனும் பெயரில் தனி அரசியல் கட்சி துவங்கப்பட்டது. அதுவே பிறகு நீதிக்கட்சி என அழைக்கப்பட்டது. இதிலிருந்துதான் திராவிடர் கழகமும், பிறகு திராவிட முன்னேற்றக் கழகமும் தோன்றின. 

எந்த இயக்கமும் திடீரென அழிந்து போகாது. ஆனால் ஒரு இயக்கம் தோன்றி, வளர்ந்து, வலுப்பெற்று வந்ததற்கான நிலைமைகள் மாறுகிற போது, அந்த இயக்கத்தின் இருப்பும்,அதன் தேவையும் கேள்விக்குறியாகிறது. இதனால் அது மீள முடியாத நெருக்கடியில சிக்குண்டு தவிக்கும் நிலை ஏற்படுகிறது.            திராவிட இயக்கத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி அதன் வரலாற்று வளர்ச்சியில் அடங்கியுள்ளது. எனவே அந்த இயக்கத்தின் வரலாறு குறித்த மறு வாசிப்பு, தேவைப்படுகிறது.

            இந்த மறுவாசிப்பு, ஆராய்ச்சி ஆர்வத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி அல்ல. நீண்ட கால நோக்கில் மாற்று வாய்ப்பு என்ன என்பதை அறிவதும், அதை நோக்கி தமிழகத்தை கொண்டு செல்லவுமே, இந்த மறுவாசிப்பு தேவை.

  •  

நீதிக்கட்சி செய்தது என்ன?

நீதிக்கட்சி தலைமையிலான  ஆட்சிகள் அவர்களது முக்கிய நோக்கமான பிராமணரல்லாதோர் அரசுப் பணிகளுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தை ஓரளவு  நிறைவேற்றிக் கொண்டது. இதற்காக, பிற்பட்டோருக்கு அரசுப்பணிகளில் இடஒதுக்கீடு அளிக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற அரசாணையை நீதிக்கட்சி அரசாங்கம்  கொண்டு வந்தது. இது ஒரு முக்கியமான சமூதாய நடவடிக்கையாக அமைந்தது. சமூக ரீதியில் காலம் காலமாக பின்னுக்குத் தள்ளப்பட்ட மக்களை முன்னுக்கு கொண்டு வருவதற்கு இட ஒதுக்கீடு முறை அவசியம் என்ற ஒரு  கோட்பாட்டை மைசூர் சமஸ்தானம் 1918ல் அறிமுகப் படுத்தியது. அதற்கு பிறகு சென்னை மாகாணத்தில் அறிமுகம் செய்த பெருமை நீதிக்கட்சி அரசாங்கத்தையே சாரும்.

நீதிக்கட்சி அரசு மேலும்  சில சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை கொண்டு வந்தது. தேவதாசி முறை என்றழைக்கப்பட்டு வந்த பெண்களை இழிவுபடுத்தும் ஒரு வழக்கத்தை ஒழித்தது. பெண்கள் சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு தடையாக இருந்த ஆங்கிலேய அரசின் சட்டத்தை மாற்றி அவர்கள் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட உறுதி செய்தது. இது போன்று கல்வியிலும் சில முற்போக்கான நடவடிக்கைகளை  அந்த அரசாங்கங்கள் கொண்டு வந்தன. அந்தக் காலத்திய சூழலில் இவை அனைத்தும் வரவேற்கத்தக்க, முற்போக்கு  நடவடிக்கைகள் என்பதனை மறுக்க இயலாது.

சுயமரியாதை இயக்கம் !

சுயமரியாதை  இயக்கத்தின் பிரச்சாரத்திற்கு அதன்  அமைப்பு ரீதியான வளர்ச்சி உதவிகரமாக அமைந்தது. குடி அரசு இதழில் வெளிவந்த விவரங்கள் அடிப்படையில் பார்த்தால் சுயமரியாதை  இயக்கத்தின் கிளைகள் கிராமப்புறங்களிலும் பரவி இருந்தன. அந்த இயக்கம் துவக்கப்பட்ட ஓராண்டிற்குள் தஞ்சை, கோவை, இராமநாதபுரம், தென்னாற்காடு, வடாற்காடு, நெல்லை மாவட்டங்களில் 60 கிளைகள் செயல்படத் துவங்கின. அடுத்த ஏழாண்டுகளில் 117 கிளைகளுடன்  10,000 உறுப்பினர்கள் செயல்படுகிற இயக்கமாக வளர்ந்தது. 

சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாடு அன்றாட வாழ்க்கையின் அனைத்துத் தளங்களையும் தழுவியது. குறிப்பாக குடும்ப வாழ்க்கையில் உறைந்திருக்கும்  சாதி மத வெளிப்பாடுகளில் அது தலையிட்டது. அந்த தலையீடுகளில் முக்கியமானது சுயமரியாதை திருமணங்கள்.

            சுயமரியாதை திருமணம் என்பது குடும்பம், உள்ளூர் சமூகத்தை பிற்போக்குத் தனங்களிலிருந்து மீட்கும் முயற்சியாக விளங்கியது. இயக்கம் துவங்கிய  முப்பது வருடங்களில் அனைத்து தமிழக மாவட்டங்களிலும் சாதி மறுப்பு, பிராமணிய  சடங்குகள் மறுப்பு, புரோகிதர் மற்றும் சமஸ்கிருத மந்திரங்கள் தவிர்த்த சுயமரியாதை திருமணங்கள் நடந்துள்ளன.

            குடும்பம் என்பதை சுயமரியாதைக் குறிக்கோள்களை அடைவதற்கான போராட்டக் களமாக சுயமரியாதை இயக்கம் பயன்படுத்தியது, இது அந்த இயக்கத்தின் மகத்துவமாகத் திகழ்கிறது.

சாதியக் கண்ணோட்டம், மூட நம்பிக்கைகள், பெண்ணடிமைத்தனம், பிற்போக்கான மத சடங்குகள், தீண்டாமை  போன்றவை அன்று தமிழ்க சமூகத்தில்  மண்டிக் கிடந்தன.இவற்றை எதிர்த்த கலகக் குரல்களும் அவ்வப்போது எழுந்துள்ளன. இப்படிப்பட்ட    சமூக முரண்பாடுகளைத் தீர்த்திட  முற்போக்கு கருத்தாக்கங்களை முன்கொண்டு சென்ற  இயக்கமாக  சுயமரியாதை இயக்கம் திகழ்ந்தது. தனது குறிக்கோள்களை எட்டும் பயணத்தின் போது, சுயமரியாதை இயக்கம் அன்றைய காங்கிரசோடும், நீதிக்கட்சியோடும் முரண்பாடு கண்டது.

சுயமரியாதை இயக்கம் சாதித்தவை குறித்து சரியாக மதிப்பிட வேண்டும். இதற்கு பெரியாரின் கீழ்கண்ட வழிகாட்டுதலையே கையாள வேண்டும் :

“எந்த அபிப்பிராயத்தையும் அதனால் ஏற்படும் பலனைக் கொண்டுதான் மதிக்க வேண்டுமே யொழிய வார்த்தை இனிப்பைக் கொண்டும், அழகைக் கொண்டும், செல்வாக்கைக் கொண்டும் மதிப்பது அறிவுடைமை ஆகாது.”

இந்த கோணத்தில் அதனை ஆராய்வதுதான் பலன் தரும்.மாறாக, சுயமரியாதை இயக்கத்தை விமர்சனமற்று போற்றுவது அதனை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுக்க உதவிடாது.

ஒரு மனிதர் சுயமரியாதையுடன் கூடிய வாழ்வினை நடத்த வேண்டுமெனில் அவர்  சுய காலில் நிற்பதற்கான பொருளாதார பலம் பெற வேண்டும்.சுயமரியாதை  இயக்கத்தின் செயல்பாட்டில்  பொருளாதார விடுதலைக்கான கடமைகள் வரையறுக்கப் படவில்லை.இது அந்த இயக்கத்தின்  முக்கிய குறைபாடு. பொருளாதார விடுதலைப்  பார்வையை இணைத்திட கம்யூனிஸ்ட் தலைவர்களான சிங்காரவேலர், ஜீவானந்தம்  போன்றோர் முயற்சிகள் மேற்கொண்டனர்.

1930 ஆம் ஆண்டுகளில் “….ஆங்கிலேய ஆட்சியாக இருந்தாலும், இந்தியர்களால் ஆளப்படும் ஆட்சியாக இருந்தாலும், அது உடைமை வர்க்கங்களின் ஆட்சியாக இருந்தால் அகற்றப்பட வேண்டும்..” பெரியார் அதனை தெளிவாகவே குறிப்பிட்டார் “மகாராஜாக்கள், ஜமீன்தார்கள், முதலாளிமார்கள், ஆதிக்கம் கொண்ட ஆட்சியை அழிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். அப்படிப்பட்ட ஆட்சி பிரிட்டிசாரால் நடத்தப்படுவதானாலும் சரி, இந்தியரால் நடத்தப்படுவதானாலும் சரி, மற்றவரால் நடத்தப்படுவதானாலும் சரி, நமக்கு அதைப் பற்றி கவலையில்லை; அடியோடு ஒழிக்க வேண்டியதுதான் கடமையாகும்;(குடி அரசு;1933)” இந்த சமதர்ம இலட்சிய முழக்கம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது. இது  சில ஆண்டுகளிலேயே நிகழ்ந்ததுதான் வேடிக்கையான வேதனை.

  •  

அண்ணாவின் சில சாதனைகள்

மாநிலத்தின் பெயர் மாற்றம். 1968 ஆம் ஆண்டு மதராஸ் மாகாணம் என்று இருந்த பெயரை தமிழ்நாடு என்று மாற்றியது அண்ணா ஆட்சி. இது முக்கியமான நடவடிக்கை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தமிழக வரலாற்றுப் பரம்பர்யத்தின் முக்கியத்துவத்தை  வெளிப்படுத்துவதாகவும் தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாகவும்  இது அமைந்தது.

கடந்த காலத்தில் திராவிட இயக்கத்தினர்  பேசி வந்த இன மேன்மைவாத கருத்தியலுக்கு ஏற்ற நடவடிக்கையாகவும் அது இருந்தது. இதனை அன்றும் இன்றும் சாதனையாக முன்னிறுத்தி அரசியல் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ளும் பணியை மிகச் சிறப்பாகவே திமுக தலைவர்கள் செய்து வந்துள்ளனர். குறிப்பாக, இந்தித் திணிப்பு  எதிர்ப்புப் போராட்டத்தில் அவர்களிடம் நெருங்கிய இளைய தலைமுறையை உணர்வூட்டி உற்சாகம் கொள்ளச் செய்திட இது போன்ற நடவடிக்கைகள் அவர்களுக்கு கைகொடுத்தது..

இரண்டு ஆண்டுக்காலம் மட்டுமே இருந்த அண்ணா தலைமையிலான ஆட்சியால், என்ன சாதிக்க முடியும் என்ற கேள்வி எழுப்பப்படலாம். ஆனால், எதிர்கால, மாற்றுக்  கொள்கைக்கான  பாதையில் செல்ல, துவக்கம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதும் முக்கியமானது.

சுயமரியாதைத் திருமண முறைக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கியதும், விதவை மணம் புரிந்தோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை, இரு மொழிக் கொள்கையைக் அமலாக்கியது போன்றவை  அண்ணாவின் ஆட்சி மேற்கொண்ட முக்கியமான நடவடிக்கைகள். இவை தமிழக சமூகத்தை ஜனநாயகப்படுத்தும் கடமையில் முக்கிய மைல்கற்களாகத் திகழ்கின்றன.

அரசியல் களத்தில் தனிப்பட்ட மனிதர்களின் குணநலன்கள் மாற்றங்களை நிகழ்த்துவதில்லை. எனினும், அண்ணா நேர்மை, எளிய வாழ்க்கை, அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, மாற்றுக் கட்சியினரையும் மதித்துப் போற்றும்  பாங்கு, என சிறந்த  பல பண்புகளை கொண்டவராக வாழ்ந்தார். கலை, இலக்கியம் என பல துறைகளில் பன்முகத்திறமைகள் கொண்டவராகவும் அவர் வாழ்ந்தார்.

  •  

மாற்றுக்கான தேடல்: 

ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சியை மக்கள் அடுத்த தேர்தலில் தோற்கடிப்பதுண்டு. ஆளுகிற கட்சி தனது கொள்கைகளால்  மக்கள் அதிருப்திக்கு ஆளாகி, தேர்தலில் தோல்வியை சந்திக்கிறது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர்  மறைவுக்குப் பிறகு, 1989-லிருந்தே திமுக, அதிமுக என ஆட்சிகள் மாறி மாறி அமையும் நிலை ஏற்பட்டிருந்தது. மக்கள் நலனைப் பாதுகாக்கும் கொள்கையுடன்,மக்கள் நம்பிக்கை பெற்ற மாற்று வலுவாக உருவாகாததால்  இந்த நிலை தொடர்ந்தது.1991-2011 வரை நடந்த சட்டமன்ற தேர்தல்களில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவும் கருணாநிதி தலைமையிலான திமுகவும் மாறி மாறி ஆட்சி அமைத்தன. 

 ஆனால்,இந்த நிலை 2016 தேர்தலில் மாறியது. 2011 முதல் ஐந்தாண்டு காலம் ஆட்சியிலிருந்த அதிமுக 2016 தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.அப்படியானால் 2011-2016 ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவின் ஆட்சி மக்கள் வாழ்வை மேம்படுத்திய ஆட்சியாக இருந்ததா? திராவிட இயக்க சித்தாந்த அடிப்படையில் நடத்தப்பட்ட ஆட்சியாக ஜெயலலிதா ஆட்சி இருந்ததா?

தேர்தல் பிரச்சாரத்தில் திராவிடம்

 இதற்கான விடைகளை 2016-ல் நடந்த தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே நடந்த தேர்தல் பிரச்சாரத்திலேயே அறிய முடியும்,இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜெயலலிதாவிற்கு வயது 68.தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதா அந்த ஆண்டிலேயே காலமானார்.ஆட்சியை மீண்டும் பிடிப்பதற்கு  2016-தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்ட கருணாநிதிக்கு வயது 92.இரு தரப்பிலும் ஊழல் உள்ளிட்ட   குற்றச்சாட்டுக்கள் வழக்கம் போல் முன்வைக்கப்பட்டன.

 திருவாரூர் கூட்டத்தில் பேசிய கருணாநிதி “ஊழலில் யாருமே ஜெயலலிதாவை மிஞ்ச முடியாது;அவரைப் போல் தவறுகள் செய்தவர்களும் யாருமில்லை;சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு ஆட்சி செய்கிறார்;இந்த சர்வாதிகார ஆட்சியை வீழ்த்துவதுதான் நமது கடமை”என்று பேசினார்.  அதே நேரத்தில் திராவிடம் பற்றி சொல்லாமல் விடுபடக் கூடாது என்பதற்கு “திராவிட ஆட்சி அமைந்தால்தான் திராவிட மக்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும்” என்றார் கருணாநிதி. ஜெயலலிதா ஆட்சி ஆரிய ஆட்சி என்று பொருள் கொள்ளத்தக்க வகையில் இந்த கருத்தை பிரச்சாரத்தில் சொல்லிவைத்தார்,கருணாநிதி.திராவிட ஆட்சியின் கொள்கைகள் என்ன, அந்த ஆட்சி அடித்தட்டு மக்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த என்ன செய்யும் என்பதைப் பற்றியெல்லாம்  திமுக பிரச்சாரத்தில் எதுவுமில்லை.அதிமுகவை பொறுத்தவரை திராவிடம் என்ற சொல் கூட பிரச்சாரத்தில் இடம் பெறவில்லை.

 தேர்தலில் திமுகவின் பிரச்சாரத்தை ஜெயலலிதா வழக்கமான பாணியில் எதிர்கொண்டார்.திமுகவின் வாரிசு அரசியல், 2ஜி ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட ஊழல்கள், மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட மதுரை தினகரன் அலுவலகத்தின் மீதான தாக்குதல், கடந்த திமுக ஆட்சிகளின் போது நடந்த தொடர் குற்றங்கள்,நில மோசடிகள் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை திமுக மீது சுமத்தி ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார்.  

 பண விநியோகம் இந்த தேர்தலில் பெரும் பங்கு வகித்ததை ஊடகங்கள் வெளிப்படுத்தின.தேர்தல் பிரச்சாரத்தின் போதே இதை உணர்ந்த கருணாநிதி கடலூர் கூட்டத்தில் “அதிமுக உங்களுக்கு ஒட்டு போட பணம் கொடுத்தால் நீங்கள் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்,அந்தப் பணம் கொள்ளையடித்த பணம்…” என்றார் .   

 அதிமுக 2011-2016 ஆட்சிக்காலத்தில் பல நலத் திட்டங்களை அமலாக்கிய போதும்,ஏராளமான தவறுகளையும் செய்தது.  2015-ஆம் ஆண்டு கனமழை வெள்ளம் மக்களை பாதித்தபோது அதிமுக அரசாங்கம் மக்களை பாதுகாக்கவும்,முறையான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளாததும் மாபெரும் தவறு.சென்னை உள்ளிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் 400-க்கும் மேற்பட்டோர் இதில் உயிரிழந்தனர்.இப்படிப்பட்ட மெத்தனப்போக்கு அதிமுக ஆட்சியில் இருந்த போதிலும்  அதிமுக 2016 தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

  •  

இந்துத்துவ சக்திகளுடன் 

1996-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தது. நான்காவது முறையாக கருணாநிதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.2001-வரை ஆட்சியிலிருந்த திமுகவின் ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட முக்கியமான ஒரு திருப்பம் பாஜகவுடன் திமுக ஏற்படுத்திக் கொண்ட உறவு.

 அதுமட்டுமல்லாது,1999- ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான ஒன்றிய அரசில் திமுக பங்கேற்றது. ஒரு இந்துத்துவ கட்சியின் ஆட்சியில் பகுத்தறிவு நெறியில் வந்த கட்சி கூட்டு சேர்ந்து ஆட்சியில் பங்கேற்றது, திராவிட இயக்க வரலாற்றில் ஒரு கொள்கை சறுக்கலாக அமைந்தது. 

 ஏற்கனவே அதிமுக இந்த சந்தர்ப்பவாதத்தை 1998-ஆம் ஆண்டு துவக்கி வைத்தது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக,பாஜகவோடு கூட்டு சேர்ந்தது. இதுவும் மிகப்பெரும் சந்தர்ப்பவாத செயல்பாடாக திராவிட இயக்க கொள்கைகள் மீது பற்று கொண்டவர்கள் கருதினார்கள். 

 ஆனால்,இதுபோன்ற அரசியல் முடிவுகள் தலைமை எடுக்கிற போது கட்சியின் தொண்டர்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்கிறார்கள்? திராவிட அடிப்படைகளையே புறந்தள்ளி விட்டு முற்றிலும் சந்தர்ப்பவாத நிலை எடுக்கிற தலைமையின் முடிவிற்கு கட்சி அணிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ?கட்சியின் தொண்டர்கள் இவற்றை ஜீரணித்துக் கொண்டு எப்படி கடந்து போனார்கள் ?இக்கேள்விகளை திராவிட இயக்க வரலாறு எழுதிய பலர்  கண்டுகொள்ளவில்லை. 

 பாஜகவோடு கூட்டு சேர்ந்தது தவறு என்று ஜெயலலிதா இறந்த பிறகும் கூட சொல்வதற்கு அதிமுகவில் யாரும் முன்வரவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில்,நீண்டகாலம் அதிமுக தலைவராகவும்,அமைச்சராகவும் இருந்த கடம்பூர் ராஜு பேசினார்:

“1998- ஆம் ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி வகுப்புவாத கட்சி என்று கருதப்பட்டது.ஜெயலலிதா முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்காக பாஜகவை ஆதரித்தார்.அன்றைக்கு அதிமுக ஆதரவு இல்லாமல் போயிருந்தால், பாஜக மத்தியில் அதிகாரத்திற்கு வந்திருக்க முடியாது'” என்று மிகவும் பெருமையாக கடம்பூர் ராஜு பேசினார்.(DTNEXT,ஜனவரி 22,2018)

 பின்னாளில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்தது தவறு என்ற தொனியில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் பல சந்தர்ப்பங்களில் பேசினாலும், 1998,1999- ஆம் ஆண்டுகளில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்தது, தமிழகத்தில் பாஜக உள்ளே நுழைய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியது. ஒரு பகுதியினர் மத்தியில் பாஜகவும் ‘ஒரு நல்ல கட்சி;அதனுடைய தலைவர்களும் நல்ல தலைவர்கள்’ என்கிற ஒரு கருத்தினை உருவாக்குவதற்கு திராவிட கட்சிகள் அவர்களோடு சேர்ந்தது உதவியது.

 இன்றுவரை இந்துத்துவ சித்தாந்தத்தை தமிழ் அடையாளத்துடன் இணைத்துக்கொண்டு தமிழக மக்கள் மனதில் பதியவைக்க சங்கப்  பரிவாரங்கள் முயற்சித்து வருகின்றனர். இதற்கு களம் அமைத்து கொடுத்தது 90-களில் திமுக, அதிமுகவிற்கு ஏற்பட்ட கொள்கை சறுக்கல்கள். 

 2001-ல் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு இந்துக்களின் ஆதரவைப் பெறுவதற்கு சங்கப் பரிவாரங்களின் உத்தியை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக முயற்சித்தது. கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம், கோவில்களில் ஆடு, மாடு, கோழிகளைப் பலியிடத் தடைச் சட்டம் ஆகியவற்றை ஜெயலலிதா கொண்டுவந்தார். பெரியார் தலைமையிலான திராவிட இயக்கம் அன்று மேற்கொண்ட பகுத்தறிவு, மத நல்லிணக்க கருத்துக்களை கைவிட்டு விட்டோம் என்று பறை சாற்றும் வகையில் இந்த நடவடிக்கைகள் இருந்தன.

திமுகவும் 2001-தேர்தலில் பாஜகவுடன் கூட்டு வைத்துக்கொண்டு 21 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட வைத்து,நான்கு தொகுதிகளில் அவர்களை  வெற்றி பெற வைத்தது.திமுக,அதிமுக கட்சிகளால் கிடைத்த அரசியல் அங்கீகாரத்தை வைத்து வகுப்புவாத விஷத்தை தமிழகத்தில் இந்துத்துவா சக்திகள் பரப்பி வருகின்றனர்.

 பெண்கள்,பட்டியலின மக்கள்,சிறுபான்மையினர்,பிற்பட்டோர் என நாட்டின் பெரும்பான்மை மக்களை இரண்டாந்தர குடிமக்களாக்கிடஆர்எஸ்எஸ்  அமைப்பு முயன்று  வருகிறது,இந்த நோக்கத்தை நிறைவேற்ற  இந்து மதத்தினரிடம் இந்து தேசியம் என்ற மத ரீதியிலான உணர்வை தூண்டி,இந்து மத வெறியை ஒருங்கிணைக்க முயற்சிக்கின்றனர்.இதற்கு ஆரிய இனம் என்ற கருத்தையும் ஆரிய இனம் மேலானது என்ற பொய்மையையும் கட்டமைக்க தொடர்ந்து முயன்று வருகின்றனர்.ஆரியர் என்ற தனித்த நிலப்பரப்பு கொண்ட இனம் என்பது இருந்ததில்லை.ஆரிய என்ற மொழிவகை சார்ந்த நாடோடி மக்கள் குழுக்கள் தான் இடம் பெயர்ந்து வந்துள்ளனர்.அவர்களை உயரிய வேத  நாகரிகம் கொண்டவர்கள் என சித்தரித்து மிக பிற்போக்கான பிராம்மணிய  கருத்தியலை பரப்பி  வருகின்றனர்.

  •  

 கடந்த நூற்றாண்டில் சமூக,அரசியல்,நிர்வாக மேலாதிக்கத்தில் இருந்த பிராமணர்கள் இந்த ஆரிய இன மேலாண்மை கருத்தினை ஏற்று, அதனை பரப்பி வந்தனர்.இதற்கு எதிர்வினையாக எழுந்த பிராமணரல்லாதார் இயக்கம் திராவிட இன மேலாண்மை  பேசியது. மொழி.பண்பாடு,நிலப்பரப்பு சார்ந்த தமிழர்கள் ஒரு இனம் என்று பார்க்கிற பார்வையில் பொருள் உண்டு, ஆனால் விந்திய மலைக்கு அப்பால் உள்ள மக்களை ஒரே இனமாக பார்ப்பதற்கு அடிப்படை ஏதுமில்லை. கடந்த கால இந்த சர்ச்சையை மீண்டும் புத்துயிரூட்டி தங்களது சமூகப் பிளவு நோக்கங்களை நிறைவேற்ற தமிழக ஆளுநர் ரவியை சங்கப் பரிவாரங்கள் பயன்படுத்த முனைந்து வருகின்றனர்.இந்து மத உணர்வை,மதவெறியாக  வளர்ப்பதற்கு கடும் முயற்சிகளை பல தளங்களில் சங்கப் பரிவரங்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்,திராவிட இயக்கங்கள் கடந்த கால தவறுகளை செய்திடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 திராவிட இயக்கக் கொள்கைகளில் பல சமூகசீர்திருத்தத்தை அடிப்டையாகக் கொண்டவை.மதத்தின் பெயரால் பிற்பட்ட பட்டியலின மக்களை ஒதுக்கிடும் பிற்போக்குத்தனங்களை திராவிட இயக்கம் எதிர்த்து மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.ஆனால் எந்த ஒரு முற்போக்கு  கொள்கையும், சமூக சீர்திருத்த இலட்சியமும் ஒரு ஜனநாயக அமைப்பு இல்லாமல் சாத்தியமில்லை. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக திராவிட இயக்கங்களில் அப்படிப்பட்ட நிலை இல்லை.

 எதேச்சாதிகார நடைமுறைகளோடு உருவாக்கப்பட்ட கட்சி கட்டமைப்புடன்  கொள்கைகளை நடைமுறைப் படுத்த முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. சாதி ஒழிப்பு,சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத ஒரு சமூகம் படைப்பதற்கான இலட்சிய நோக்கு, பகுத்தறிவு பார்வை கொண்ட மக்கள் போன்ற குறிக்கோளை அடைய தலைமைக்கு ராஜ பக்தியுடன் செயலாற்றும் கட்சி அமைப்பினால் சாத்தியமில்லை; இது கொள்கைகள் மீது அர்ப்பணிப்பு கொண்ட இலட்சக்கணக்கான தொண்டர்கள் தங்களது தனித்தன்மை குறைந்திடாமல் செயலாற்றக் கூடிய ஒரு பெரும் இயக்கத்தினால்தான் அது  சாத்தியமாகும். குறிக்கோள்கள்,இலட்சியங்கள் மீது தான் விசுவாசம் இருக்க வேண்டுமே தவிர தனிநபர்களுக்கு விசுவாசம் காட்டுகிற அரசியல் நாகரீகம், கடந்தகால நிலப்பிரபுத்துவ பண்பாடாகும்.இதிலிருந்து தமிழகம்  மீள வேண்டும்.

அண்மைக் கால நிகழ்வுகள்

 ஜெயலலிதா மறைவு நிகழ்ந்ததும் அதிமுகவில் சசிகலா,தினகரன், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் என அதிகார மையங்களுக்குள் நடந்த அதிகாரப் போட்டி,கருணாநிதி மறைவு ஏற்படுத்திய தாக்கம்,2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தது என இவை  அனைத்தும் அண்மைய நிகழ்வுகள்.இவை பற்றி சரியான மதிப்பீடு செய்ய சிறிது காலம் தேவைப்படலாம்.

 ஆனால் 2011-2021 வரையிலான பத்தாண்டு அதிமுக ஆட்சி  குறிப்பிடத்தக்க மாறுதல்கள் எதையும் நிகழ்த்தவில்லை.இந்தக் காலம் முழுவதும் தொழிலாளர்,விவசாயிகள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கங்களின் போராட்டங்கள் ஓய்ந்திடாமல் தொடர்ந்து நிகழ்ந்தன.இதுவே மக்களுக்கு விரோதமான நவீன தாராளமய ஆட்சியே பத்தாண்டுகள் தொடந்தது என்பதற்கான சான்று.

 துவக்க காலங்களில் அண்ணா முன்வைத்த முழக்கமான “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்ற இலட்சியம் கானல் நீராகவே நீடித்தது.ஜெயலலிதா,கருணாநிதி ஆகிய இருவரும் மறைந்த போதிலும் அவர்கள் வெகு மக்கள் வாக்கு வங்கியை தக்க வைப்பதற்கு பின்பற்றிய தவறான அரசியல் வழிமுறைகள் அறவே ஒழிக்கப்படுமா?அவர்கள் காலத்தில் திராவிட கருத்தியலின் சாதகமான அம்சங்களை நீர்த்துப் போக வைத்த அந்த தவறுகள் களையப்படுமா?இவை அனைத்தும் தற்போது முன்னிற்கும் முக்கிய கேள்விகள்.

 கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தின் நடுத்தர வர்க்க மக்கள் அரசியல் ரீதியாக பல மாறுதல்களுக்கு உட்பட்டு வந்துள்ளனர்.அதிமுக,திமுக இரு கட்சிகளும் தனியார்மய தாராளமய கொள்கைகளை பின்பற்றிய நிலையில் சமூக அக்கறை குறைந்து அதீத நுகர்வு கலாச்சாரம்,சுயநலம் அதிகரித்துள்ளது.திராவிட இயக்க ஆரம்ப காலங்களில் அந்த இயக்க வளர்ச்சிக்கு ஆதரவு தளமாக  இருந்த நடுத்தர வர்க்கப் பிரிவினர் இன்று இந்துத்துவ வகையிலான ஆன்மிக நாட்டம் கொண்டவர்களாக மாறுவது பெரிய பின்னடைவு.இதற்கும் திராவிட கட்சிகள் பொறுப்பேற்க வேண்டும்.

 வர்ணாசிரமம், சாதிய ஒடுக்குமுறை,தீண்டாமை  உள்ளிட்ட சமூக கொடுமைகளை களைவதற்கு திராவிட இயக்க முன்னோடிகள் கொண்டிருந்த உறுதிப்பாடு தற்போதைய திராவிட கட்சிகளிடம் இருக்கிறதா?பெண்ணடிமைத்தனம் ஒழித்திட சுயமரியாதை-சமத்துவ இயக்கம் கொண்டிருந்த அக்கறை திராவிட கட்சிகளிடம் இருக்கிறதா? இவ்வாறு இன்றைய நிலைப்பற்றி அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.

தொடரும் மக்களின் தேடல் 

திராவிட இயக்கம் பல உருமாற்றங்களை சந்தித்து தற்போதைய கட்டத்திற்கு வந்துள்ளது.

  • அரசு நிர்வாகம் மற்றும் கல்வித்துறைகளில் பிராமண மேலாதிக்கத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் எழுந்த நீதிக்கட்சி,
  • சமூக தளத்தில் அந்த மேலாதிக்கத்தை ஒழிக்க எழுந்த பகுத்தறிவு-சுயமரியாதை இயக்கம்,
  • அரசியல் தளத்தில் நுழைந்து, மாநில அதிகாரத்தைக் கொண்டு பிற்பட்டோர் நலன் காக்க அரசியல் இயக்கமாக வடிவெடுத்த திமுக,
  • அதிகாரப் போட்டி முன்னுக்கு வந்த நிலையில் போட்டியாளராக நுழைந்த அதிமுக
  • அதிகாரத்திற்கான போட்டாபோட்டியில் வெகு மக்கள் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள சாதாரண மக்களுக்கான ஏராளமான  நல திட்டங்கள்
  • பணபலம்,அதிகார பலம் கொண்டு தேர்தல் வெற்றியே இலட்சியம் என செயல்படுவது.

இவ்வாறான வளர்ச்சியில்தான் தற்போதைய கட்டத்திற்கு திராவிட இயக்கம் வந்துள்ளது. இந்த நீண்ட வரலாற்றில், திராவிட இயக்க இலக்குகளாக முன்வைக்கப்பட்ட இலக்குகள் அனைத்தையும் அடைவதற்கான எதிர்காலப்பார்வை முனை மழுங்கிப் போனது;பதவி,அதிகாரம்,சுயநலம் முக்கியமானதாக முன்னிற்கிறது.

 மக்களும் இந்த உண்மைகளை உணர்ந்து வந்துள்ளனர்.1970-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதி காலத்திலிருந்தே சமத்துவம், சுயமரியாதை உள்ளிட்ட கொள்கைகளுக்கு திராவிட கட்சிகள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதை மக்கள் உணரத் துவங்கினர்.இதனால்தான் 1989 முதல் தேர்தல்களில்  அதிமுக,திமுக என  மாறி மாறி மக்கள் தேர்வு செய்தனர். ‘எது குறைந்த தீமை’ என்ற முனையிலிருந்து தங்கள் தேர்வை அமைத்துக் கொண்டு வந்துள்ளனர். எந்த கட்சி தேவை என்பதை விட எது தேவையில்லை என்று மக்கள் முடிவெடுத்து வந்துள்ளனர்.மக்களுக்கான உண்மையான மாற்று தேவை என்கிற தேடலின் வெளிப்பாடாகவே இந்த எதிர்மறையான தேர்வு நிகழ்ந்து வந்துள்ளது.மக்களின் இந்த தேடல் தொடரும். 

 துவக்க காலத்திலிருந்தே ஒரு அடிப்படையான,ஆழமான குறைபாடு திராவிட கட்சிகளிடம் இருந்து  வந்துள்ளது.இந்திய அளவில் பெரும் கார்ப்பரேட்,நிலவுடைமை சக்திகள் மற்றும் பன்னாட்டு பெரு மூலதன சக்திகளே மத்திய அதிகாரத்தில் இருந்து வந்துள்ளன.அடித்தட்டு மக்களை வாட்டிவதைக்கும் இந்த சக்திகளை எதிர்கொள்வதற்கு,எதிர்ப்பு இயக்கத்தை வலுப்படுத்துவதற்கான உறுதியான திட்டம் திராவிட இயக்க கட்சிகளிடம் இல்லை.மாறாக அவர்களோடு சமரசம் செய்து கொள்வது,அந்த சக்திகளின் ஒரு பிரிவாக உள்ள பிரதேச,மாநில ,பெரிய முதலாளிகள் மற்றும் நிலவுடைமை சக்திகளின் பிரதிநிதிகளாக செயல்படுவது என்ற பாதையில்தான் திராவிட கட்சிகள் பயணித்து வருகின்றன.

 தற்போது திராவிட மாடல் என்று பெரிதாக பேசப்பட்டாலும் மேற்கண்ட குறைபாடு உள்ளவரை பெரிய மாற்றம் எதுவும் திராவிட கட்சிகளிடம் ஏற்படாது.தமிழகத்தில் பெருவாரியான உழைக்கும் மக்கள் தங்களுக்கான மாற்றை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை.இதற்கு தமிழகத்தில் உள்ள ஜனநாயக இடதுசாரி சக்திகள் சரியான திட்டத்தையும் வியுகத்தையும் உருவாக்கிட வேண்டும்.திராவிட இயக்கம் செய்த சில சாதகமான பணிகளையும் துடைத்தெறிய ஆர்எஸ்எஸ்-பாஜக சக்திகள் முயற்சிக்கிற இன்றைய சூழலில் இது அவசியம்.