இந்துத்துவா வகுப்புவாத சக்திகளையும், ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தையும் எதிர்கொள்ள, அரசியல் தளத்திலும், சித்தாந்த தளத்திலும், சமூக மற்றும் பண்பாட்டு தளத்திலும் திட்டவட்டமான அணுகுமுறைகளை உருவாக்கி முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். இது நம்முடைய முக்கிய நிகழ்ச்சி நிரலாக உள்ளது.
வகுப்புவாத சக்திகளை எதிர்கொள்வது பற்றி, கடந்த காலத்தில் எடுத்த முடிவுகள் இப்போது போதுமானதாக இல்லை. முந்தைய நிலையில், வகுப்புவாத சக்திகள் சில பிரிவினை திட்டங்களை முன்னெடுத்து இந்து மக்களின் ஆதரவை பெற முயல்வதுடன், சிறுபான்மையினருக்கு எதிரான திட்டங்களை முன்னெடுப்பார்கள். ஆனால் இப்போது இந்துத்துவா வகுப்புவாத சக்திகள் அரசு அதிகாரத்துடன் இயங்குகிறார்கள். இது கடந்த கால சூழலில் இருந்து மாறுபட்டது. இப்போதைய புதிய நிலைமைகளை பயன்படுத்தி, குடியரசின் தன்மையையே மாற்றியமைத்து, அரசியல் சாசனத்தை மாற்றியமைத்து, ‘இந்து ராஷ்ட்டிராவை’ நோக்கி செயல்பட்டு வருகிறார்கள். ஆதரவுத் தளத்தை விரிவாக்கிட, முந்தைய காலத்தில் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இருந்து இது மாறுபட்டது ஆகும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அடிப்படையான இலக்குகளை நிறைவேற்றக்கூடிய போக்கினை நாம் எதிர்கொண்டு வீழ்த்த வேண்டியுள்ளது.
பாஜக எப்படிப்பட்ட கட்சி ?
மேம்படுத்தப்பட்ட நம்முடைய கட்சி திட்டம், பாரதிய ஜனதா கட்சியை பிற முதலாளித்துவ கட்சிகளைப் போன்ற இன்னொரு சாதாரண முதலாளித்துவக் கட்சியாக பார்க்கவில்லை. பாஜகவை உருவாக்கியதும், வளர்த்தெடுப்பதும் பாசிச வகைப்பட்ட தத்துவத்தால் வழிநடத்தப்படும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமாகும். அவர்கள் அதிகாரத்திற்கு வரும்போது, அரசு இயந்திரத்தை பயன்படுத்தி ‘இந்து ராஷ்ட்டிராவை’ நோக்கிய பயணத்தை வேகப்படுத்த முயற்சிப்பார்கள் என்று நம் திட்டத்திலேயே குறிப்பிட்டுள்ளோம். 2000 ஆண்டில் நமது கட்சி திட்டத்தை மேம்படுத்திய போது வாஜ்பாய் அரசாங்கம் இருந்தது.
‘இந்து ராஷ்ட்டிரா’ என்பது இந்து ராஜ்ஜியம் அல்ல. அதாவது அது மத தலைவர்களின் ஆட்சி அல்ல. (ஈரான் நாட்டில் நடப்பதை மத தலைவர்களின் ஆட்சி எனலாம், அதனை ஒத்த ஆட்சியாக இது இருக்காது). ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆட்சி என்பதுதான் ‘இந்து ராஷ்ட்டிரா’ என்பதன் பொருள் ஆகும். ஏற்கனவே அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்ட பின்னணியில் ‘இந்து ராஷ்டிரத்தைக்’ கட்டமைக்கும் பணியும் ஏற்கனவே துவங்கி விட்டது. பாஜக மக்களவையில் பெரும்பான்மை பெற்றுள்ளது. அரசமைப்பின் அடிப்படையான சில அம்சங்களையும், குணாம்சத்தையும் மாற்றியமைக்க முயல்கிறது. நீதித்துறையினுடைய தன்மையையும், அதிகார வர்க்கத்தின் தன்மையையும், ராணுவத்தின் தன்மையையும் மாற்றியமைக்க முயல்கிறார்கள்.
அக்னிபத் திட்டத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அந்த திட்டத்தின் நோக்கம் என்ன?. ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முறையை அரசியல் அடிப்படையிலானதாக திட்டமிட்ட விதத்தில் மாற்றியமைப்பதுதான் அதன் நோக்கம். இவ்வகையில் அவர்கள் ராணுவத்தில் ஆள் எடுக்கும் தன்மையையே மாற்றியமைக்க முயற்சிக்கிறார்கள்.
பரந்துபட்ட உத்தி அவசியம்
எனவே இதுதான் இப்போதைய நிலை என்கிறபோது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை தேர்தல் களத்தில் மட்டும் நடத்தினால் போதாது என்பதை உணர முடியும். தேர்தல் கால உத்திகள் மட்டும் பலன் கொடுக்காது. அவர்கள் தேர்தல் களத்திலும், அரசியல் தளத்திலும் மட்டுமே செயல்படுவதில்லை. தங்களை கலாச்சார அமைப்பு என்று கூறிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ், இந்திய குடியரசின் பண்பு நலன்களை மாற்றியமைப்பதையே இலக்காக கொண்டு செயல்படுவதை ஒட்டுமொத்தமாக கணக்கில் எடுத்து, அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான உத்தியோடு செயல்பட வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ்/பாஜக அமைப்புகளால், இந்திய தேசியம் என்ற பெயரில் இந்து பெரும்பான்மை வகுப்புவாதத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்துள்ளது. 23 வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானத்தில் இதை நாம் குறிப்பிட்டுள்ளோம். மக்களின் மனங்களில் தாக்கம் ஏற்படுத்தி, கருத்தை மாற்றியமைக்க அவர்களால் முடிந்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் வாழும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சாதாரண மக்களின் மனங்களில் தம் கருத்துக்களை ஆழமாக பதித்துள்ளார்கள். அவர்கள் மட்டுமே உண்மையான தேசியவாதிகள் என்றும், தேசத்தின் மீது அக்கறை கொண்ட சக்திகள் என்றும் பதிய வைத்துள்ளார்கள்.
இந்துக்கள் வலுவடைந்தால்தான் தேசம் வலுப்படும் என்கிறார்கள். இந்த வாதத்தின் மற்றொரு பகுதி இஸ்லாமியர்கள் இந்த தேசத்தை பலவீனமாக்குகிறார்கள் என்பதாகும். இந்துக்கள் என்றால் ’நாம்’, இஸ்லாமியர்கள் என்றால் ’அவர்கள்’. ‘நாம்’ – எதிர் – ‘அவர்கள்’ என்ற உணர்வினை உருவாக்கியுள்ளார்கள். இது கணிசமான மக்களை சென்று சேர்ந்திருக்கிறது.
குறிப்பாக உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இதுதான் நிலைமை. பாஜகவை மக்கள் வலுவான தேசியவாத சக்தியாக பார்ப்பதுடன், பெரும்பான்மை மக்களுக்கு நல்லது செய்வதற்கே அவர்கள் இருப்பதாக பார்க்கிறார்கள். இந்த சூழலை எவ்வாறு எதிர்கொள்வது?
கடந்த 21, 22 மற்றும் 23 மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்திலும், அரசியல் ஸ்தாபன அறிக்கையிலும் ‘இந்துத்துவாவை எதிர்கொள்வது’ என்ற தலைப்பிலான பகுதி இடம்பெற்று வந்துள்ளது. கடந்த காலங்களில் நாம் பொதுவாக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போராடியிருக்கிறோம். பல மாநிலங்களில் இதர முதலாளித்துவக் கட்சிகளை எதிர்த்துப் போராடியிருக்கிறோம். ஆனால் இது அதிலிருந்து வேறுபட்ட ஒன்றாகும். அதனால்தான் நமது தீர்மானங்களில் தனியாக குறிப்பிட வேண்டி வந்தது.
எனவே 2015ஆம் ஆண்டில் இருந்து தனித்துவமாக, இதுபோல சில திட்டவட்டமான உத்திகளை உருவாக்க முயற்சிக்கிறோம். அரசியல் செயல்பாடுகளிலும், கருத்தியல் செயல்பாடுகளிலும் இந்துத்துவா சக்திகளை எதிர்கொள்ளும் விதத்தில் பணிகளை திட்டமிட்டு முன்னெடுக்க கட்சியை தயார்ப்படுத்த வேண்டியுள்ளது. பல தளங்களிலும் நாம் கால் பதிக்க வேண்டியுள்ளது என்பதை கட்சி அணிகளுக்கு உணர்த்திட வேண்டும்.
கட்சியும், பல்வேறு வர்க்க வெகுஜன அரங்கங்களும், தமது வேலை பாணியை மாற்றியமைக்க வேண்டும். கருத்தியல் தளத்திலும், சமூக – பண்பாட்டுத் தளத்திலும், கல்வித் தளத்திலும் பணிகளை திட்டமிட வேண்டும். கடந்த காலத்தில் இந்த பணிகளை பொதுவாக அலட்சியப்படுத்தியே வந்திருக்கிறோம். கட்சி சில முழக்கங்களை முன்னெடுக்கும், தேர்தலை எதிர்கொள்ளும், வர்க்க – வெகுஜன அமைப்புகள் சில முழக்கங்களை முன்னெடுப்பார்கள், போராட்டங்களை நடத்துவார்கள்.
கருத்தியல் தளத்தில் கட்சி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக பேசிவந்திருக்கிறோம். ஆனால் இதுவரை அதில் என்ன செய்திருக்கிறோம்? பொதுவாக நம்முடைய கட்சி தொழிலாளி வர்க்க கட்சியாகும். நம்முடைய கட்சியினுடைய கருத்தியல் என்பது தொழிலாளி வர்க்க கருத்தியலே. ஆனால் மும்பை, தில்லி போன்ற பெருநகரங்களில் வாழும் தொழிலாளர்களோடு பேசினால் அவர்களில் கணிசமானோர் பின்பற்றும் சித்தாந்தம் இந்துத்துவா சித்தாந்தமாக உள்ளது. இந்துத்துவாவை பின்பற்றிக் கொண்டே சிலர் நம்முடைய சங்கங்களிலும் இருப்பார்கள். அதுதான் இப்போதைய சூழல்.
எனவே கருத்தியல் தளத்தில் நடத்த வேண்டிய போராட்டத்தில் நாம் முன்னேற வேண்டியுள்ளது. தொழிற்சங்கம் மட்டுமே இந்த போராட்டத்தை முன்னெடுத்திருக்க முடியாது. கட்சிக்கு தான் அதில் கூடுதலான பங்கு உள்ளது. எனவே அரசியல் தளத்தில் மட்டுமல்லாது, கருத்தியல் மற்றும் சமூக தளத்திலும் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.
சில மாநிலங்கள் இந்த சூழலில் விதிவிலக்காக அமைந்துள்ளன. தமிழ்நாட்டினை உதாரணமாக பார்க்கலாம். தமிழ் நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புகள் பிரதான இடத்தில் இல்லை. ஆனாலும் அவர்கள் வளர முயற்சிக்கிறார்கள். இன்றுள்ள நிலைமையை கணக்கில் எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டிலோ, ஆந்திராவிலோ, கேரளத்திலோ ஆர்.எஸ்.எஸ் அமைப்பினுடைய செல்வாக்கிற்கு மக்கள் உட்பட மாட்டார்கள் என்ற நினைப்பில் இருந்துவிடக் கூடாது. ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் அவர்கள் கணிசமான செல்வாக்கை பெற்றுள்ளார்கள். பிரதான சக்தியாக உள்ளார்கள். தெலங்கானாவிலும் சில முன்னேற்றங்களை அடைந்துள்ளார்கள். தமிழ் நாட்டில் ஒரு பெரிய சக்தியாக வளர்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்று அவர்களுக்கு தெரியும். அதற்கு இந்த மாநிலத்தின் அரசியல், கருத்தியல், சமூக சூழல் ஒரு காரணமாக உள்ளது. திராவிட சித்தாந்தம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை சொல்லலாம். ஆனாலும் அவர்கள் இந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், தமது குறைபாடுகளை மீறி முன்னேறுவதற்கும் பல தளங்களிலும் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
பட்டியல் இனத்தின் மீது குறி !
ஆர்.எஸ்.எஸ் என்றால் ”உயர்” சாதி அமைப்பு எனபலர் நினைக்கிறார்கள். ஆம் அவர்கள் சிந்தனை, கருத்தியல் இரண்டிலும் நிச்சயமாக “உயர்” சாதி ஆதிக்க கருத்தியல் கொண்டவர்கள்தான். ஆனால் ”உயர்” சாதியினரை மட்டும் கொண்ட கட்சியாக மட்டுமே அவர்கள் இல்லை.
உத்திரப்பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் ஓபிசி யை சேர்ந்த பெரும்பகுதியினர் பாஜக ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். அதே போல் தலித் மக்களில் குறைந்த பட்சம் 50 சதவிகிதம் பாஜக ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். இது எப்படி சாத்தியமானது?. முன்பு ”உயர்” சாதியினர் கட்சியாக பார்க்கப்பட்ட கட்சி, இன்றைக்கு ஓபிசி, எஸ்சி /எஸ்டி மத்தியிலும் வளர்ந்திருக்கிறது என்றால் இது எப்படி நடந்தது? அவர்கள் குறிப்பாக சில சாதிகளைக் குறிவைத்து தங்களுடைய பணிகளைச் செய்தார்கள். அனைத்து இந்து மக்களின் பிரச்சனைகளையும் எடுப்பவர்களாக, அவர்களுக்கான கட்சியாகவும் தங்களை அடையாளப்பட வைப்பதற்கான முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
கடந்த காலத்தில் ஆர்எஸ்எஸ் உருவாக்கிய அரசியல் கட்சி யான ஜன சங்கத்தை பனியா கட்சி என்று சொல்வதுண்டு, அதற்குப் பிறகு பாஜக உருவான பின்பும் தொடக்க கட்டத்தில் அவர்களை பனியா கட்சி என்றே குறிப்பிடப்பட்டு வந்தது.
பனியா என்பது வடமாநிலத்தில் உள்ள ஒரு குறிப்பட்ட சமூகம். குறிப்பாக வியாபாரிகள் வணிகர்கள்; அவர்கள் ஜெயின் அல்லது குப்தாக்களாக இருக்கலாம். மார்வாடிகளாக இருக்கலாம். ஒரு வியாபாரம் செய்யக்கூடிய சமூகம். அவர்கள் மத்தியில் பாஜக வலுவாக இருந்தது. எனவே பாஜக அல்லது அதற்கு முன்னதாக ஜனசங்கத்தினுடைய வளர்ச்சி என்பது நகர்ப்புறங்களைச் சார்ந்து இருந்தது. ஆனால் இன்றைக்கு உத்தரப்பிரதேசத்தில் பட்டியலினத்துக்கான தொகுதிகளில் பெரும்பான்மையான தொகுதிகளில் அவர்கள் வெற்றிபெற முடிகிறது.
மாயாவதியினுடைய பகுஜன் சமாஜ் கட்சி இருக்கிறது என்பது உண்மைதான். அந்த கட்சி யார் மத்தியில் இருக்கிறது என்று சொன்னால், பட்டியல் சாதிகளில் உள்ள குறிப்பிட்ட துணை சாதி மத்தியில்தான் அவர்கள் ஆழமாக இருக்கின்றனர். பட்டியல் இனத்தின் இதர துணை சாதிகளுக்குள் பாஜக ஏகமாக வளர்ந்துள்ளது. பட்டியல்/பழங்குடி பிரிவினரை அவர்கள் குறிவைக்கிறார்கள்.
கடந்த 30, 40 ஆண்டுகளாகவே ஆர்எஸ்எஸ் பழங்குடியினர் மத்தியில் ஆழமாக வேலை செய்து வந்தது. ஒரு நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில்தான் அவர்கள் பணியாற்றி வந்தார்கள். இவர்களின் ஊடுருவலை நாம் கவனித்து நோக்க வேண்டும்.
பாஜக என்பது நால் வருணத்தில் நம்பிக்கை உள்ள கட்சிதான், மதவாதத்தைப் பின்பற்றுகிற கட்சிதான். இருந்தாலும் அவர்களுடைய அரசியல் நோக்கத்திற்காக அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் தேவை அவர்களுக்கு இருக்கிறது. அதனை முயற்சிக்கிறார்கள்.
தெரிந்த பல அமைப்புகள் ஆர்எஸ்எஸ் அமைப்புகளாக இருக்கும். இந்து முன்னணி போல சிலதை சொல்லலாம். ஆனால், தெரியாமல் பல்வேறு அமைப்புகள், என்ஜிஓ-கள் ஆர்எஸ்எஸ் வழிகாட்டி நடத்தக்கூடிய அமைப்புகளாக இருப்பார்கள். குறிப்பாக இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் அவர்களுக்கு நிதி என்பது ஒரு பிரச்சனையாக இல்லை.
கேரளாவில் பழங்குடியின மக்கள் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 2 சதவிகிதம் கூட இருக்க மாட்டார்கள். ஆனாலும் ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் செயல்படக்கூடிய பெரும்பகுதி என்ஜிஓ கள் செயல்படும் பகுதி பழங்குடியின மக்கள் பகுதிதான். எனவே ஆர்எஸ்எஸ் நடவடிக்கைளுடைய எல்லை என்ன ?ஆழம் என்ன ? அதனுடைய தன்மை என்ன? வகைகள் என்ன ? என்பதை சரியாக புரிந்துகொண்டு எதிர்க்க வேண்டும்.
கருத்தியல் நடவடிக்கைகள்
இதற்கான திட்டத்தை உருவாக்குவதற்கான பரந்த வழிகாட்டுதல், 23 வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் ஸ்தாபன அறிக்கையில் தெளிவாக தரப்பட்டுள்ளது. அதில் முதல் விசயம், கருத்தியல் நடவடிக்கைகள் ஆகும். இந்துத்துவ வகுப்புவாத கருத்தியலை வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளுக்கான ஏராளமான விபரங்களை கொண்ட பிரசுரங்கள், வகுப்பு குறிப்புகள், பிரச்சார கருவிகளை, சமூக வலைத்தள உள்ளடக்கங்களை உருவாக்க வேண்டும். இவற்றை உள்ளூர் மட்டத்திலேயே சுலபமாக செய்துவிட முடியாது. கட்சியின் மத்தியக்குழுவும், மாநிலக்குழுவும் இணைந்து குறிப்பிட்ட காலவரையறைக்குள் இதனை முடிக்க வேண்டும். சமூக வலைத்தளத்தையும் வலுப்படுத்தி கருத்தியல் பிரச்சார நோக்கில் பயன்படுத்த வேண்டும்.
இரண்டாவது விசயம், கட்சி மக்களோடு உயிரோட்டமான தொடர்பில், இரண்டற கலந்திருக்க வேண்டும் என்கிற மாஸ்லைன் கடைப்பிடிப்பது. மக்கள் மத்தியில் நம்முடைய தலையீடுகளும், பணிகளும் விரிவாக நடக்க வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். இது கட்சிக்கும், வெகுஜன அமைப்புகளுக்கும் பொருந்தும். மக்களோடு உயிர்ப்பான ஒரு தொடர்பில் இருக்க வேண்டும் என்பது கொல்கத்தா பிளீனத்தில் இருந்தே சொல்லப்படுகிறது. மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு என்று சொல்வதன் மற்றொரு அம்சம், பல்வேறு நல நடவடிக்கைகளை, சமூக சேவை நடவடிக்கைகளை முன்னெடுப்பது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இது போன்ற பணிகளை மேற்கொள்கிறார்கள். நாம் கட்சியாகவும், வர்க்க வெகுஜன அமைப்புகளின் வழியாகவும் இதனைச் செய்ய வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கல்வி தளத்தில் செயல்படுகிறது. அவர்களை போல ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்களை நாம் நடத்த முடியாது. ஒன்றிரண்டு நடத்தலாம். ஆனால் இளைஞர், மாணவர் அமைப்புகள் கல்வி தளத்தில் பங்களிக்க முடியும். உதாரணமாக மாலை நேர கல்வி (டியூசன்) மையங்கள் நடத்தலாம். தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் நடத்தலாம். படிப்பு வட்டங்கள், நூலகங்களை நடத்த முடியும்.
அதே போல, பண்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். பண்பாட்டு நடவடிக்கை என்றாலே கலைக்குழு அமைப்பு, பாடல்குழு, வீதிநாடகக்குழு என்பது மட்டுந்தான் நினைவில் வருகிறது. அந்த பணிகள் இன்னும் பரந்து பட்டதாக இருக்க வேண்டும். நமக்கு அப்பாற்பட்ட மக்களை ஈடுபடுத்தகூடிய விதமான நடவடிக்கைகளாக செய்ய வேண்டும். உதாரணமாக புத்தகத் திருவிழாக்களை சொல்லலாம். மாணவ/மாணவியருக்கான பேச்சு போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடத்தலாம். இந்த நடவடிக்கைகளை கட்சியாக மட்டும் நடத்த முடியாது. வர்க்க வெகுஜன அமைப்புகளும் செய்ய வேண்டும். குறிப்பாக தொழிற்சங்கள் சில முயற்சி எடுத்து, தொழிலாளர் வாழும் பகுதிகளில் பண்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.
அடுத்து வளர்த்தெடுக்க வேண்டியது பாலர் சங்கம், சில மாநாடுகளாகவே நாம் பாலர் சங்கம் பற்றி பேசுகிறோம். இந்த விசயத்தில் தீவிர முன்முயற்சி ஏதும் இல்லை. அதனால்தான் பாலர் சங்கத்தை உருவாக்குவதை மாநாட்டின் கடமையாகவே நாம் வரையறுத்திருக்கிறோம். கேரளாவில் இவ்விசயத்தில் நமக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. ஒரு பரந்த அமைப்பாக பாலர் சங்கத்தை கட்டமைத்திருக்கிறார்கள். பாலர் சங்கத்தை உருவாக்கும் போது, கட்சி ஏற்கனவே கணிசமாக இருக்கும் பகுதி, செல்வாக்கு இருக்கும் பகுதியில் தொடங்கினால், இதர பகுதிகளுக்கும் விரிவாக்க முடியும் என்பது கேரள அனுபவம்.
மத விழாக்கள்
கோவில் திருவிழாக்களிலும், மத விழாக்களிலும் பங்கெடுத்தல் அடுத்து வருகிறது. பொதுவாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கோவில்களை, மத நம்பிக்கைகளை பயன்படுத்துகிறார்கள். கோவில் என்று சொல்லும் போது மதம் சார்ந்த நடவடிக்கைகள் இருக்கும். அடுத்து கோவில் திருவிழாக்கள் என்று சொல்லும் போது அது மதம் சார்ந்த நடடிவடிக்கையாக மட்டும் இல்லாமல் ஒரு சமூகம் சார்ந்த நடவடிக்கையாகவும் இருக்கும் ஏரளாமான மக்களுடைய பங்கேற்பும் இருக்கும். நாம் சமூகம் சார்ந்த நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க முடியாது.
திருவிழாக்களை நாம் முற்றிலும் நிராகரித்துவிட முடியாது. ஆனால் எந்த திருவிழாவில் பங்கேற்பது. எந்த அளவில் பங்கேற்பது என்பது பற்றி ஓரே சீரான முடிவினை மேற்கொள்ள முடியாது. ஒவ்வொரு திருவிழாவின் தன்மையை பொருத்து முடிவு செய்ய வேண்டும். சில திருவிழாக்கள் முழுக்க முழுக்க மதம் சார்ந்த நடவடிக்கையாக மட்டும் இருக்கும். அதில் சமூக ரீதியான பங்கேற்பு பெரியதாக இருக்காது. எனவே ஒவ்வொரு திருவிழாக்களின் தன்மையை கணக்கில் எடுத்து உள்ளூர் மட்டத்தில் முடிவு எடுக்க வேண்டும்.
கோயில்களுக்கும் சமூக வாழ்க்கையில் பாத்திரம் உள்ளது. அவைகளை ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்புகள் கையகப்படுத்துகிறார்கள். இந்துத்துவா நடவடிகைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். நாம் அதனை அப்படியே தங்குதடையில்லாமல் அனுமதிக்க முடியாது. எனவே கோயில் நிர்வாகத்தில் நாமும் தலையிட வேண்டும். அதற்காக கட்சியின் முக்கிய ஊழியர்கள் அதனை செய்ய முடியாது. கட்சி ஆதரவாளர்கள், மதச்சார்பற்ற மனநிலை கொண்ட நம்பிக்கையாளர்கள் அதில் இணைந்திட முடியும். இது அத்தனை எளிதாக இருக்காது. ஆனால் நாம் இதன் மூலமே கோயில்களை ஆர்.எஸ்.எஸ் செயல்பாட்டுக்கான களமாக மாறாமல் தடுக்க முடியும்.
விளையாட்டு விழாக்கள், யோகா பயிற்சி போன்ற வேறு பல சமூகம் சார்ந்த நடவடிக்கைகளும் அவசியமே.
பொதுவாகவே மக்கள் மத்தியில் மத உணர்வு அதிகரித்துள்ளது. (மதவாதத்தை குறிப்பிடவில்லை). கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள் மத்தியிலும் மத உணர்வு கூடுதலாகியுள்ளது. மதத்திற்கு எதிரான போராட்டத்தை நாம் நடத்துவதில்லை. அதற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. மதவாத சக்திகள், மதவெறி சக்திகளை எதிர்த்த போராட்டத்திற்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறோம்.
நேரடியாக மதத்தை விமர்சிக்காத அதே சமயத்தில் அறிவியல் ரீதியான கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும், அதே போல முற்போக்கான சிந்தனைகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மூடநம்பிக்கைகளையும், பழமைவாதத்தையும் எதிர்த்து பிரச்சாரம் செய்ய வேண்டும். இதுபோன்ற முயற்சியின் மூலம் சமூகத்தை அறிவியல் பாதையில், முற்போக்கு பாதையில் செலுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
சிறுபான்மை வகுப்புவாதம்
ஆர்எஸ்எஸ் இந்துத்துவச் சக்திகள் வளர்கிறார்கள். அந்த வளர்ச்சி மட்டும் தனியாக நடப்பதில்லை. இன்னொரு பக்கம் இஸ்லாமிய மத அடிப்படை வாதிகளும் வளர்கிறார்கள். அதிலிருந்தும் ஆர்.எஸ்.எஸ் பலனடைகிறது. 1990 களில் கோவையில் என்ன நடந்தது என்பதைப் பார்த்தோம்.
பொதுவாக நாடு முழுவதுமே இஸ்லாமிய மக்கள் மிக மோசமான தாக்குதலுக்கு ஆளாகிவருகிறார்கள். குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் இரண்டாம்தர குடிமக்களாக வேகமாக மாற்றப்பட்டு வருகிறார்கள். எல்லாக் குடிமக்களுக்கும் உரிய அடிப்படையான உரிமைகள் கூட இஸ்லாமிய மக்களுக்குமறுக்கப் படுகின்றன. எனவே இந்த மாநிலங்களில் இஸ்லாமிய மக்கள் விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளப்படுகிறார்கள். அந்த மாதிரியான சூழலில் அவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாத, தீவிரவாத அமைப்புகள் பக்கம் திரும்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
குறிப்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அதனுடைய அரசியல் கட்சியான எஸ்டிபிஐ, அதைப்போல ஜமாத்-இ-இஸ்லாமி அதனுடைய அரசியல் கட்சியான வெல்பேர் பார்ட்டி போன்றவற்றை நோக்கி ஒரு பகுதி சிறுபான்மையினர் திரும்ப வாய்ப்பு இருக்கிறது.
தீவிரவாத போக்குகள் சிறுபான்மை மக்கள் மத்தியிலிருந்து வந்தாலும் அதை கடுமையாக எதிர்க்க வேண்டும். இந்துத்துவ சக்திகளை எதிர்த்து விட்டு, சிறுபான்மை தீவிரவாதத்தை எதிர்க்கவில்லை என்று சொன்னால், சாதாரண மக்களுக்கு நம் மீது நம்பகத்தன்மை வராது. அது ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு சாதகமாகிவிடும். நம்முடைய நோக்கம் அனைத்து மதங்களையும் சார்ந்த மக்களை ஒரே அணியில் இணைத்து மதவெறிக்கு எதிரான, மதவாதத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான நடவடிக்கைகளை உள்ளூர் அளவில் திட்டமிட்டு, திட்டவட்டமாக முன்னெடுக்க வேண்டும். மாநில அளவிலும், அகில இந்திய அளவிலும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நாடும், நாட்டு மக்களும் எதிர்கொள்ளும் தீவிர அபாயத்திற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.
இதுநாள் வரையில் நிலவி வந்துள்ள சமுதாயத்தின் வரலாறு அனைத்தும் [2] வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்.
சுதந்திரமானவனும் அடிமையும், உயர்குலச் சீமானும் (patrician) பாமரக் குடிமகனும் (plebeian), நிலப்பிரபுவும் பண்ணையடிமையும், கைவினைக் குழும எஜமானும்[3] (guild-master) கைவினைப் பணியாளனும் (journeyman), சுருங்கக் கூறின், ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும் ஒருவருக்கொருவர் தீராப் பகைமை கொண்டிருந்தனர். சில நேரம் மறைவாகவும், சில நேரம் வெளிப்படையாகவும், இடையறாத போராட்டத்தை நடத்தி வந்தனர். ஒவ்வொரு முறையும் இந்தப் போராட்டம், சமுதாயம் முழுவதையும் புரட்சிகரமாக மாற்றியமைப்பதிலோ அல்லது போராடும் வர்க்கங்களின் பொதுவான அழிவிலோதான் முடிந்திருக்கிறது.
வரலாற்றின் தொடக்ககாலச் சகாப்தங்களில், அனேகமாக எங்கும், பல்வேறு அடுக்குகள் கொண்ட, சிக்கலான ஒரு சமுதாய ஏற்பாட்டைக் காண்கிறோம். சமூக அந்தஸ்தில் பல்வேறு படிநிலை அமைப்புகள் இருக்கக் காண்கிறோம். பண்டைய ரோமாபுரியில் உயர்குலச் சீமான்கள், வீர மறவர்கள், பாமரக் குடிமக்கள், அடிமைகள் எனவும், மத்திய காலத்தில் நிலப்பிரபுக்கள், மானியக்காரர்கள் (vassals), கைவினைக் குழும எஜமானர்கள், கைவினைப் பணியாளர்கள், பயிற்சிப் பணியாளர்கள், பண்மையடிமைகள் எனவும் பல்வேறு வர்க்கப் பிரிவினர் இருக்கக் காண்கிறோம். மேலும், அனேகமாக இந்த வர்க்கங்கள் அனைத்திலும் ஒன்றன்கீழ் ஒன்றான உட்பிரிவுகள் இருந்ததையும் காண முடிகிறது.
நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் அழிவிலிருந்து முளைத்தெழுந்துள்ள நவீன முதலாளித்துவ சமுதாயம் வர்க்கப் பகைமைகளை ஒழித்துவிடவில்லை. ஆனால், பழையவற்றுக்குப் பதிலாகப் புதிய வர்க்கங்களையும், புதிய ஒடுக்குமுறை நிலைமைகளையும், புதிய போராட்ட வடிவங்களையும் உருவாக்கி வைத்துள்ளது.
எனினும், நமது சகாப்தமான முதலாளித்துவ வர்க்கச் சகாப்தம் ஒரு தனித்த பண்பியல்பைக் கொண்டுள்ளது: வர்க்கப் பகைமைகளை அது எளிமைப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த சமுதாயமும், இருபெரும் பகை முகாம்களாக, ஒன்றையொன்று நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் வர்க்கங்களாக, [அதாவது] முதலாளித்துவ வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்னும் இருபெரும் வர்க்கங்களாக மேலும் மேலும் பிளவுபட்டு வருகிறது.
ஆதி நகரங்களின் சுதந்திரமான நகரத்தார், மத்திய காலத்துப் பண்ணையடிமைகளிலிருந்து உதித்தெழுந்தார்கள். இந்த நகரத்தாரிலிருந்தே முதலாளித்துவ வர்க்கத்தின் தொடக்கக் கூறுகள் வளர்ந்தன.
அமெரிக்காவைக் கண்டுபிடித்ததும், நன்னம்பிக்கை முனையைச் சுற்றிச் செல்லும் கடல்வழி அறியப்பட்டதும், வளர்ந்துவந்த முதலாளித்துவ வர்க்கத்துக்குப் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டன. கிழக்கிந்திய, சீனச் சந்தைகள், அமெரிக்கக் காலனியாக்கம், காலனிகளுடனான வர்த்தகம், பரிவர்த்தனைச் சாதனங்களிலும் பொதுவாகச் சரக்குகளிலும் ஏற்பட்ட பெருக்கம் – ஆகிய இவையெல்லாம், வணிகத்துக்கும் கப்பல் போக்குவரத்துக்கும் தொழில்துறைக்கும் இதற்குமுன் என்றும் கண்டிராத அளவுக்கு உத்வேகம் ஊட்டின. தள்ளாடிக் கொண்டிருந்த நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் புரட்சிகரக் கூறின் அதிவிரைவான வளர்ச்சிக்கும் அதன்மூலம் தூண்டுதல் அளித்தன.
நிலப்பிரபுத்துவம் சார்ந்த தொழில்முறையின்கீழ், தொழில்துறை உற்பத்தியானது, குறிப்பிட்டோர் மட்டுமே அங்கம் வகிக்கும் கைவினைக் குழுமங்களின் ஏகபோகமாக இருந்தது. இத்தகைய தொழில்முறையினால், தற்போதைய சூழலில், புதிய சந்தைகளின் வளர்ந்துவரும் தேவைகளை முன்புபோல் நிறைவேற்ற இயலவில்லை. அதன் இடத்தில் பட்டறைத் தொழில்முறை வந்தது. பட்டறைத் தொழில்சார்ந்த நடுத்தர வர்க்கம் கைவினைக் குழும எஜமானர்களைப் புறந்தள்ளியது. வெவ்வேறு கூட்டாண்மைக் கைவினைக் குழுமங்களுக்கு இடையே நிலவிய உழைப்புப் பிரிவினை, ஒவ்வொரு தனித்த பட்டறையிலும் ஏற்பட்ட உழைப்புப் பிரிவினைக்கு முன்னே மறைந்தொழிந்தது.
இதற்கிடையே, சந்தைகள் மேலும் மேலும் விரிவடைந்து கொண்டே இருந்தன. தேவையோ மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. பட்டறைத் தொழில்முறையுங்கூட இப்போது ஈடுகட்ட இயலாமல் போனது. இந்தச் சூழ்நிலையில்தான் நீராவியும் எந்திரங்களும் தொழில்துறை உற்பத்தியைப் புரட்சிகரமானதாய் ஆக்கின. பட்டறைத் தொழில்முறையின் இடத்தைப் பிரம்மாண்ட நவீனத் தொழில்துறை பிடித்துக் கொண்டது. பட்டறைத் தொழில்சார்ந்த நடுத்தர வர்க்கத்தாரின் இடத்தில் கோடீஸ்வரத் தொழிலதிபர்கள், ஒட்டுமொத்தத் தொழில்துறைப் படையணிகளின் தலைவர்கள், அதாவது நவீன முதலாளித்துவ வர்க்கத்தினர் உருவாயினர்.
நவீனத் தொழில்துறை உலகச் சந்தையை நிறுவியுள்ளது. அமெரிக்காவைக் கண்டுபிடித்த செயல் இதற்குப் பாதையமைத்துக் கொடுத்தது. உலகச் சந்தையானது, வர்த்தகத்துக்கும், கப்பல் போக்குவரத்துக்கும், தரைவழித் தகவல் தொடர்புக்கும் அளப்பரும் வளர்ச்சியை அளித்தது. இந்த வளர்ச்சி தன் பங்குக்குத் தொழில்துறையின் விரிவாக்கத்துக்கு வித்திட்டது. தொழில்துறை, வர்த்தகம், கப்பல் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகியவை எந்த அளவுக்கு விரிவடைந்தனவோ அதே அளவுக்கு முதலாளித்துவ வர்க்கமும் வளர்ச்சியடைந்தது. அது தன்னுடைய மூலதனத்தைப் பெருக்கியது. மத்திய காலம் விட்டுச் சென்றிருந்த ஒவ்வொரு வர்க்கத்தையும் பின்னிலைக்குத் தள்ளியது.
இவ்வாறு, நவீன முதலாளித்துவ வர்க்கம் என்பதே, நீண்டதொரு வளர்ச்சிப் போக்கின் உடன்விளைவு – உற்பத்தி முறைகளிலும் பரிவர்த்தனை முறைகளிலும் தொடர்ச்சியாக நிகழ்ந்த புரட்சிகளின் உடன்விளைவு – என்பதை நாம் காண்கிறோம்.
முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சியில் ஒவ்வொரு படிநிலையிலும் அவ்வளர்ச்சிக்கு ஏற்ப அவ்வர்க்கத்தின் அரசியல் முன்னேற்றமும் சேர்ந்தே வந்தது. நிலப்பிரபுத்துவச் சீமான்களின் ஆதிக்கத்தின்கீழ் அது ஓர் ஒடுக்கப்பட்ட வர்க்கமாக இருந்தது; மத்திய காலக் கம்யூனிலோ[4] ஆயுதமேந்திய, சுயாட்சி நடத்தும் சங்கமாக இருந்தது; இங்கே (இத்தாலியிலும் ஜெர்மனியிலும் காணப்பட்டது போல) சுதந்திரமான நகர்ப்புறக் குடியரசாகவும், அங்கே (ஃபிரான்சில் காணப்பட்டது போல) வரி செலுத்தும் மூன்றாவது வகையின[5] (third estate) மக்கள் குழுவாகவும் விளங்கியது. அதன்பின்னர் பட்டறைத் தொழில் மேலோங்கிய காலகட்டத்தில், பிரபுத்துவச் சீமான்களுக்கு எதிரான ஈடுகட்டும் சக்தியாக இருந்துகொண்டு, அரை நிலப்பிரபுத்துவ முடியாட்சிக்கு அல்லது ஏதேச்சதிகார முடியாட்சிக்குச் சேவை செய்தது. பொதுவாகப் பார்த்தால், உண்மையில் மாபெரும் முடியாட்சிகளின் ஆதாரத் தூணாக விளங்கியது. முடிவாக, முதலாளித்துவ வர்க்கம், நவீனத் தொழில்துறையும் உலகச் சந்தையும் நிறுவப்பட்ட பின்னர், நவீன காலப் பிரதிநிதித்துவ அரசமைப்பில் ஏகபோக அரசியல் ஆதிக்கத்தைத் தனக்கென வென்று கொண்டது. நவீன கால அரசின் நிர்வாக அமைப்பானது, ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தின் பொது விவகாரங்களை நிர்வகிப்பதற்கான ஒரு குழுவே அன்றி வேறல்ல.
முதலாளித்துவ வர்க்கம் வரலாற்று ரீதியாக, மிகவும் புரட்சிகரமான பாத்திரம் வகித்துள்ளது.
எங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் மேலாதிக்கம் பெற்றதோ, அங்கெல்லாம் அது அனைத்து நிலப்பிரபுத்துவ உறவுகளுக்கும், தந்தைவழிச் சமுதாய உறவுகளுக்கும், பழம் மரபுவழி உறவுகளுக்கும் முடிவு கட்டியது. “இயற்கையாகவே தன்னைவிட மேலானவர்களிடம்” மனிதன் கட்டுண்டு கிடக்கும்படி செய்த, வெவ்வேறு வகைப்பட்ட நிலப்பிரபுத்துவத் தளைகளை ஈவிரக்கமின்றி அறுத்தெறிந்தது. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே அப்பட்டமான சுயநலம் தவிர, பரிவு உணர்ச்சியற்ற “பணப் பட்டுவாடா” தவிர, வேறெந்த உறவும் இல்லாமல் செய்துவிட்டது. மத உணர்ச்சி வேகம், பேராண்மையின் வீராவேசம், அற்பவாதிகளின் (philistines) உணர்ச்சிவயம் ஆகியவற்றால் ஏற்படும் அதி தெய்வீக ஆனந்தப் பரவசங்களைச் சுயநலச் சூழ்ச்சி என்னும் உறைபனி நீரில் மூழ்கடித்துவிட்டது. மனித மாண்பினைப் பரிவர்த்தனை மதிப்பாக மாற்றிவிட்டது. துறக்கவொண்ணாத, சாசனப்படுத்தப்பட்ட, எண்ணற்ற சுதந்திரங்களுக்குப் பதிலாக, கட்டற்ற வர்த்தகம் என்னும் ஒரேவொரு நியாயமற்ற சுதந்திரத்தை உருவாக்கி வைத்துள்ளது. சுருங்கச் சொல்லின், மத, அரசியல் பிரமைகள் திரையிட்டு மறைத்திருந்த சுரண்டலுக்குப் பதிலாக, அப்பட்டமான, வெட்கமற்ற, நேரடியான, கொடூரமான சுரண்டலை [முதலாளித்துவ வர்க்கம்] ஏற்படுத்தியுள்ளது.
இதுநாள் வரையில், மரியாதைக்கு உரியதாக இருந்த, பயபக்தியுடன் பார்க்கப்பட்டு வந்த, வாழ்க்கைத் தொழில் ஒவ்வொன்றையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துவிட்டது. அது, மருத்துவரையும் வழக்குரைஞரையும், மதகுருவையும் கவிஞரையும், விஞ்ஞானியையும் தன்னிடம் ஊதியம் பெறும் கூலி-உழைப்பாளர்களாய் ஆக்கிவிட்டது.
முதலாளித்துவ வர்க்கம், குடும்பத்திடமிருந்து அதன் உணர்ச்சிபூர்வ உறவுத்திரையைக் கிழித்தெறிந்துவிட்டது. குடும்ப உறவை வெறும் பண உறவாகக் குறுக்கிவிட்டது.
பிற்போக்காளர்கள் மிகவும் போற்றிப் பாராட்டும் மத்திய காலத்துச் செயல்வீரப் பகட்டுத்தனம், எவ்வாறு சோம்பல் நிறைந்த செயலின்மையை உற்ற துணையாக்கி உறவாடிக் கிடந்தது என்பதை முதலாளித்துவ வர்க்கம் அம்பலப்படுத்திவிட்டது. மனிதனின் செயல்பாடு என்னவெல்லாம் சாதிக்க வல்லது என்பதை முதன்முதலாக எடுத்துக் காட்டியது முதலாளித்துவ வர்க்கம்தான். எகிப்தியப் பிரமிடுகளையும், ரோமானிய மூடு கால்வாய்களையும், கோதிக் தேவாலயங்களையும் பெரிதும் மிஞ்சக்கூடிய அதிசயங்களை அது சாதித்துக் காட்டியுள்ளது. முற்காலத்தில் நிகழ்ந்த தேசங்களின் பெருந்திரளான குடிபெயர்வுகளையும், சிலுவைப் போர்களையும்[6] மிகச் சாதாரணமாகத் தோன்றச் செய்யும் மாபெரும் படையெடுப்புகளை அது நிகழ்த்தியுள்ளது.
உற்பத்திக் கருவிகளையும், அதன்மூலம் உற்பத்தி உறவுகளையும், அவற்றோடு கூடவே ஒட்டுமொத்தச் சமுதாய உறவுகளையும் இடையறாது புரட்சிகரமாக மாற்றி அமைத்திடாமல் முதலாளித்துவ வர்க்கம் உயிர்வாழ முடியாது. இதற்கு மாறாக, பழைய உற்பத்தி முறைகளை மாற்றமில்லா வடிவில் அப்படியே பாதுகாத்துக் கொள்வதுதான் முந்தைய தொழில்துறை வர்க்கங்கள் அனைத்துக்கும் வாழ்வுக்குரிய முதல் நிபந்தனையாக இருந்தது. உற்பத்தியை இடையறாது புரட்சிகரமாக மாற்றியமைத்தலும், சமூக நிலைமைகள் அனைத்திலும் இடையறாத குழப்பமும், முடிவே இல்லாத நிச்சயமற்ற நிலைமையும், கொந்தளிப்புமே முதலாளித்துவ சகாப்தத்தை அதற்கு முந்தைய சகாப்தங்கள் அனைத்திலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. நிலைத்த, இறுகிப்போன எல்லா உறவுகளும், அவற்றுடன் இணைந்துள்ள பயபக்தி மிக்க பண்டைய தப்பெண்ணங்களும் கருத்துகளும் துடைத்தெறியப்படுகின்றன. புதிதாக உருவானவை அனைத்தும் நிலைத்துக் கெட்டியாகும் முன்பே காலாவதி ஆகிவிடுகின்றன. திடமானவை அனைத்தும் கரைந்து காற்றிலே கலக்கின்றன, புனிதமானவை யாவும் புனிதம் கெடுக்கப்படுகின்றன. இறுதியாக, மனிதன் தன் வாழ்க்கையின் எதார்த்த நிலைமைகளையும், சக மனிதர்களுடன் தனக்குள்ள உறவுகளையும் தெளிந்த அறிவுடன் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறான்.
முதலாளித்துவத்தின் உற்பத்திப் பொருள்களுக்குத் தொடர்ந்து விரிவடைந்து செல்லும் சந்தை தேவைப்படுகிறது. இத்தேவை முதலாளித்துவ வர்க்கத்தைப் புவியின் பரப்பு முழுவதும் விரட்டியடிக்கிறது. அது எல்லா இடங்களுக்கும் சென்று கூடு கட்டிக்கொள்ள வேண்டும்; எல்லா இடங்களிலும் குடியேற வேண்டும்; எல்லா இடங்களிலும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டே ஆக வேண்டும்.
உலகச் சந்தையை நன்கு பயன்படுத்திக் கொள்வதன் மூலம் முதலாளித்துவ வர்க்கம் ஒவ்வொரு நாட்டிலும் பொருள் உற்பத்திக்கும் நுகர்வுக்கும் ஓர் உலகத் தன்மையை (cosmopolitan character) அளித்துள்ளது. பிற்போக்காளர்கள் கடுங்கோபம் கொள்ளும் வகையில், [ஒவ்வொரு நாட்டிலும்] தொழில்துறை எழும்பி நின்றுள்ள அதன் தேசிய அடித்தளத்தை அகற்றிவிட்டது. நெடுங்காலமாக நிலைபெற்றிருந்த தேசியத் தொழில்கள் யாவும் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகின்றன. புதிய தொழில்களால் அவை ஒழித்துக்கட்டப்படுகின்றன. இந்தப் புதிய தொழில்களை நிறுவுவது, நாகரிகமடைந்த நாடுகள் அனைத்துக்கும் வாழ்வா சாவா என்னும் பிரச்சினையாகி விடுகிறது. இந்தப் புதிய தொழில்கள் முந்தைய தொழில்களைப்போல் உள்நாட்டு மூலப் பொருள்களைப் பயன்படுத்துவதில்லை. இவற்றுக்கான மூலப் பொருள்கள் தொலைதூரப் பிரதேசங்களிலிருந்து தருவிக்கப்படுகின்றன. இவற்றின் உற்பத்திப் பொருள்கள் உள்நாட்டில் மட்டுமன்றி, உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நுகரப்படுகின்றன. உள்நாட்டு உற்பத்திப் பொருள்களால் நிறைவு செய்யப்பட்ட பழைய தேவைகளின் இடத்தில் புதிய தேவைகள் எழுந்துள்ளதைக் காண்கிறோம். அவற்றை நிறைவு செய்யத் தொலைதூர நாடுகளிலும் பிரதேசங்களிலும் உற்பத்தியாகும் பொருள்கள் தேவைப்படுகின்றன. தேசங்களும் வட்டாரங்களும் தனித்தொதுங்கி நின்றும், தன்னிறைவு கண்டும் இருந்த நிலை மாறி, ஒவ்வொரு திசையிலும் பரஸ்பரப் பிணைப்பும், தேசங்களுக்கிடையே ஒன்றையொன்று சார்ந்து நிற்கும் உலகளாவிய சார்புத் தன்மையும் நிலவக் காண்கிறோம். நுகர்பொருள் உற்பத்தியில் எப்படியோ அறிவுசார் உற்பத்தியிலும் அதே நிலைதான். தனித்தனி நாடுகளின் அறிவுசார் படைப்பாக்கங்கள் அனைத்து நாடுகளின் பொதுச் சொத்தாகின்றன. தேசிய ஒருதலைப்பட்சப் பார்வையும் குறுகிய மனப்பான்மையும் மேலும் மேலும் சாத்தியமின்றிப் போகின்றன. எண்ணற்ற தேசிய, வட்டார இலக்கியங்களிலிருந்து ஓர் உலக இலக்கியம் உதயமாகிறது.
அனைத்து உற்பத்திக் கருவிகளின் அதிவேக மேம்பாட்டின் மூலமும், தகவல்தொடர்புச் சாதனங்களின் பிரம்மாண்ட முன்னேற்றத்தின் மூலமும் முதலாளித்துவ வர்க்கம் அனைத்துத் தேசங்களையும், மிகவும் அநாகரிகக் கட்டத்தில் இருக்கும் தேசங்களையும்கூட, நாகரிக வட்டத்துக்குள் இழுக்கிறது. முதலாளித்துவ வர்க்கம் தன்னுடைய சரக்குகளின் மலிவான விலைகள் என்னும் வலிமை மிக்க பீரங்கிகளைக் கொண்டு, சீன மதிலையொத்த தடைச்சுவர்களை எல்லாம் தகர்த்தெறிகின்றது. அதன்மூலம், அநாகரிக மக்களுக்கு அந்நியர்பால் உள்ள முரட்டுப் பிடிவாதமான வெறுப்பைக் கைவிட்டுப் பணிந்துபோகக் கட்டாயப்படுத்துகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையை ஏற்காவிடில் அழிய நேருமென்ற அச்சத்தின் காரணமாக அனைத்துத் தேசங்களும் அம்முறையைத் தழுவிட நிர்ப்பந்திக்கிறது. அனைத்து தேசங்களையும் நாகரிகம் என்று தான் கருதுவதை ஏற்கும்படி, அதாவது, அவை தாமாகவே முதலாளித்துவமாக மாறும்படி கட்டாயப்படுத்துகிறது. சுருங்கக் கூறின், தன்னுடைய பிரதிபிம்பமான ஓர் உலகைப் படைக்கிறது.
முதலாளித்துவ வர்க்கம் நாட்டுப்புறத்தை நகரங்களின் ஆட்சிக்கு உட்படுத்திவிட்டது. மாபெரும் நகரங்களை உருவாக்கியுள்ளது. நாட்டுப்புற மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் நகர்ப்புற மக்கள்தொகையைப் பெருமளவு அதிகரிக்கச் செய்துள்ளது. இவ்வாறாக, மக்கள்தொகையில் கணிசமான ஒரு பகுதியினரைக் கிராம வாழ்க்கையின் தனிமைப்பாட்டிலிருந்து மீட்டுள்ளது. நாட்டுப்புறம் நகரங்களைச் சார்ந்திருக்குமாறு செய்துள்ளதைப் போன்றே, அநாகரிக நிலையிலும் அரை-நாகரிக நிலையிலுமுள்ள நாடுகள் நாகரிக நாடுகளைச் சார்ந்திருக்குமாறும், விவசாயிகளின் நாடுகள் முதலாளித்துவ நாடுகளைச் சார்ந்திருக்குமாறும், கிழக்கு நாடுகள் மேற்கு நாடுகளைச் சார்ந்திருக்குமாறும் செய்துள்ளது.
மக்கள்தொகையும், உற்பத்திச் சாதனங்களும், சொத்துகளும் சிதறுண்டு கிடக்கும் நிலையை முதலாளித்துவ வர்க்கம் மேலும் மேலும் ஒழித்துக்கொண்டே வருகிறது. மக்கள் தொகையை ஆங்காங்கே குவித்து வைத்துள்ளது. உற்பத்திச் சாதனங்களை மையப்படுத்தியுள்ளது. சொத்துகளை ஒருசிலர் கையில் குவிய வைத்துள்ளது. இதன் தவிர்க்கவியலாத விளைவு அரசியல் அதிகாரம் மையப்படுதலாகும். தமக்கென தனியான நலன்கள், சட்டங்கள், அரசாங்கங்கள், வரிவிதிப்பு முறைகளைக் கொண்ட, சுயேச்சையான அல்லது தளர்ந்த இணைப்புக் கொண்டிருந்த மாநிலங்கள், ஒரே அரசாங்கம், ஒரே சட்டத் தொகுப்பு, ஒரே தேசிய வர்க்க நலன், ஒரே தேச எல்லை, ஒரே சுங்கவரி முறைகொண்ட ஒரே தேசமாக ஒன்றிணைந்துவிட்டன.
முதலாளித்துவ வர்க்கம் நூறாண்டுகள்கூட ஆகாத அதன் ஆட்சிக் காலத்தில், இதற்கு முந்தைய தலைமுறைகள் அனைத்தும் சேர்ந்து உருவாக்கியவற்றைக் காட்டிலும் மிகப்பெரிய அளவில் மிகப் பிரம்மாண்டமான உற்பத்திச் சக்திகளை உருவாக்கி வைத்துள்ளது. இயற்கையின் சக்திகளை மனிதனுக்கு அடிபணியச் செய்தல், எந்திர சாதனங்கள், தொழில்துறைக்கும் விவசாயத்துக்கும் இரசாயனத்தைப் பயன்படுத்தல், நீராவிக் கப்பல் போக்குவரத்து, ரயில் பாதைகள், மின்சாரத் தந்தி, கண்டங்கள் முழுவதையும் திருத்திச் சாகுபடிக்குத் தகவமைத்தல், கால்வாய்கள் வெட்டி நதிகளைப் பயன்படுத்தல், மனிதனின் காலடி படாத இடங்களிலும் மாயவித்தைபோல் பெருந்திரளான மக்களைக் குடியேற்றுவித்தல் – இத்தகைய உற்பத்திச் சக்திகள் சமூக உழைப்பின் மடியில் துயில் கொண்டிருக்குமென இதற்கு முந்தைய நூற்றாண்டு கற்பனையாவது செய்திருக்குமா?
ஆக, நாம் காண்பது என்னவெனில்: முதலாளித்துவ வர்க்கம் தன்னைக் கட்டி அமைத்துக்கொள்ள அடித்தளமாக இருந்த உற்பத்திச் சாதனங்களும், பரிவர்த்தனைச் சாதனங்களும் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் உருவாக்கப்பட்டவை. இந்த உற்பத்திச் சாதனங்கள், பரிவர்த்தனைச் சாதனங்களுடைய வளர்ச்சியின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில், நிலப்பிரபுத்துவ சமுதாயம் எத்தகைய சமூக நிலைமைகளின்கீழ் உற்பத்தியும் பரிவர்த்தனையும் செய்து வந்ததோ அந்தச் சமூக நிலைமைகளும், விவசாயத்திலும் பட்டறைத் தொழிலிலும் நிலவிய நிலப்பிரபுத்துவ ஒழுங்கமைப்பும், சுருங்கக் கூறின், நிலப்பிரபுத்துவச் சொத்துடைமை உறவுகள், ஏற்கெனவே வளர்ச்சிபெற்றுவிட்ட உற்பத்திச் சக்திகளுக்கு இப்போது இணக்கமின்றிப் போயின. அவை, [உற்பத்தியைக் கட்டிப்போடும்] கால் விலங்குகளாய் ஆயின. அந்த விலங்குகளை உடைத்தெறிய வேண்டியிருந்தது; அவை உடைத்தெறியப்பட்டன.
அவற்றின் இடத்தில் கட்டற்ற போட்டியும், அதனுடன் கூடவே அதற்கு ஏற்றாற் போன்ற சமூக, அரசியல் அமைப்புச் சட்டமும், முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார, அரசியல் ஆதிக்கமும் வந்து அமர்ந்து கொண்டன.
இதேபோன்ற ஓர் இயக்கம் [இப்போது] நம் கண்ணெதிரே நடைபெற்று வருகிறது. தனக்கே உரிய உற்பத்தி உறவுகளையும், பரிவர்த்தனை உறவுகளையும் சொத்துடைமை உறவுகளையும் கொண்டுள்ள நவீன முதலாளித்துவ சமுதாயம் – இவ்வளவு பிரம்மாண்ட உற்பத்திச் சாதனங்களையும் பரிவர்த்தனைச் சாதனங்களையும் மாயவித்தைபோல் தோற்றுவித்துள்ள இந்த முதலாளித்துவ சமுதாயம் – தனது மந்திரத்தின் வலிமையால் பாதாள உலகிலிருந்து தட்டியெழுப்பி வந்த சக்திகளை இனிமேலும் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் மந்திரவாதியின் நிலையில் இருக்கிறது. கடந்த சில பத்தாண்டுகளின் தொழில்துறை, வணிகம் ஆகியவற்றின் வரலாறானது, நவீன உற்பத்தி உறவுகளுக்கு எதிராகவும், முதலாளித்துவ வர்க்கமும் அதன் ஆட்சியதிகாரமும் நிலவுதற்கு அடிப்படையாக விளங்கும் சொத்துடைமை உறவுகளுக்கு எதிராகவும் நவீன உற்பத்திச் சக்திகள் நடத்தும் கலகத்தின் வரலாறே ஆகும். இதனை உறுதிப்படுத்த, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் வணிக நெருக்கடிகளைக் குறிப்பிட்டாலே போதும். இந்த நெருக்கடிகள் ஒவ்வொரு முறை வரும்போதும் முன்னைவிட அச்சமூட்டும் வகையில், ஒட்டுமொத்த முதலாளித்துவ சமுதாயத்தின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்குகின்றன. இந்த நெருக்கடிகளின்போது, இருப்பிலுள்ள உற்பத்திப் பொருள்களின் பெரும்பகுதி மட்டுமன்றி, ஏற்கெனவே உருவாக்கப்பட்ட உற்பத்திச் சக்திகளில் ஒரு பெரும்பகுதியும் தொடர்ந்து அழிக்கப்படுகிறது. இதற்கு முந்தைய சகாப்தங்கள் அனைத்திலும் அபத்தமானதாகக் கருதப்பட்டிருக்கும் ஒரு கொள்ளை நோய் – தேவைக்கு அதிகமான உற்பத்தி என்னும் கொள்ளை நோய் – இந்த நெருக்கடிகளின்போது தொற்றுகிறது. சமுதாயம், தான் திடீரெனெத் தற்காலிக அநாகரிக நிலைக்குப் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளதைக் காண்கிறது. ஏதோ ஒரு பெரும் பஞ்சம் அல்லது உலகளாவிய ஒரு சர்வநாசப் போர் ஏற்பட்டு வாழ்வாதாரப் பொருள்கள் அனைத்தின் வினியோகமும் நிறுத்தப்பட்டதுபோல் தோன்றுகிறது; தொழிலும் வணிகமும் அழிக்கப்பட்டுவிட்டதாகத் தோன்றுகிறது. ஏன் இப்படி? காரணம், இங்கே மிதமிஞ்சிய நாகரிகம், மிதமிஞ்சிய வாழ்வாதாரப் பொருள்கள், மிதமிஞ்சிய தொழில்கள், மிதமிஞ்சிய வணிகம் இருப்பதுதான். சமுதாயத்தின் வசமுள்ள உற்பத்திச் சக்திகள், முதலாளித்துவச் சொத்துடைமை உறவுகளின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல இனிமேலும் உதவப் போவதில்லை. மாறாக, அந்த உறவுகளை மீறி உற்பத்திச் சக்திகள் வலிமை மிக்கவை ஆகிவிட்டன. முதலாளித்துவ உடைமை உறவுகள், உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்குத் தளைகளாகிவிட்டன. உற்பத்திச் சக்திகள் இந்தத் தளைகளைக் தகர்த்தெறியத் தொடங்கியதுமே அவை முதலாளித்துவ சமுதாயம் முழுமையிலும் குழப்பம் விளைவிக்கின்றன; முதலாளித்துவச் சொத்துடைமை நிலவுதற்கே ஆபத்தை ஏற்படுத்துகின்றன. தாம் உற்பத்தி செய்யும் செல்வத்தைத் தம்முள் இருத்தி வைக்க இடம் போதாத அளவுக்கு, முதலாளித்துவ சமுதாய உறவுகள் மிகவும் குறுகலாக இருக்கின்றன. முதலாளித்துவ வர்க்கம் இந்த நெருக்கடிகளை எவ்வாறு சமாளிக்கிறது? ஒருபுறம், உற்பத்திச் சக்திகளில் பெரும்பகுதியை வலிந்து அழிப்பதன் மூலமும், மறுபுறம் புதிய சந்தைகளை வென்றெடுப்பதன் மூலமும், பழைய சந்தைகளை இன்னும் ஒட்டச் சுரண்டுவதன் மூலமும் இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கிறது. அதாவது, மேலும் விரிவான, மேலும் நாசகரமான, நெருக்கடிகளுக்கு வழி வகுப்பதன் மூலமும், நெருக்கடிகளை முன்தடுப்பதற்கான வழிமுறைகளைக் குறைப்பதன் மூலமும் இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கிறது.
எந்த ஆயுதங்களைக் கொண்டு முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தித் தரைமட்டம் ஆக்கியதோ, அதே ஆயுதங்கள் இப்போது முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகத் திருப்பப்படுகின்றன.
ஆனால், முதலாளித்துவ வர்க்கம் தனக்கே அழிவைத் தரப்போகும் ஆயுதங்களை மட்டும் வார்த்தெடுக்கவில்லை; அந்த ஆயுதங்களைக் கையாளப்போகும் மனிதர்களையும், அதாவது நவீனத் தொழிலாளி வர்க்கமாகிய பட்டாளிகளையும் உருவாக்கி உலவவிட்டுள்ளது.
முதலாளித்துவ வர்க்கம், அதாவது மூலதனம் எந்த அளவுக்கு வளர்கிறதோ, அதே அளவுக்கு நவீனத் தொழிலாளி வர்க்கமாகிய பாட்டாளி வர்க்கமும் வளர்கிறது. இந்த வர்க்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமக்கு வேலை கிடைக்கும் வரைதான் வாழ முடியும்; இவர்களின் உழைப்பு மூலதனத்தைப் பெருக்கும் வரைதான் இவர்களுக்கு வேலையும் கிடைக்கும். தம்மைத்தாமே கொஞ்சம் கொஞ்சமாக விலைக்கு விற்றாக வேண்டிய நிலையிலுள்ள இந்தத் தொழிலாளர்கள், ஏனைய பிற வணிகப் பண்டத்தைப் போன்று ஒரு சரக்காகவே இருக்கிறார்கள். அதன் விளைவாக, வணிகப் போட்டியின் அனைத்து வகையான சாதக பாதகங்களுக்கும், சந்தையின் ஏற்ற இறக்கங்கள் அனைத்துக்கும் இலக்காகிறார்கள்.
பரந்த அளவில் எந்திரங்களின் பயன்பாடு, உழைப்புப் பிரிவினை ஆகியவற்றின் காரணமாக, பாட்டாளிகளின் வேலையானது அதன் தனித்தன்மை முழுவதையும் இழந்துவிட்டது. அதன் விளைவாக, தொழிலாளிக்குத் தன் வேலை மீதிருந்த ஈர்ப்பு முழுவதும் இல்லாமல் போனது. அவர் எந்திரத்தில் பொருத்தப்பட்ட ஒரு துணையுறுப்பாய் ஆகிவிடுகிறார். அவருடைய வேலையைச் செய்ய அவருக்குத் தேவைப்படுவதெல்லாம் மிகவும் எளிமையான, மிகவும் சலிப்பூட்டும்படியான, மிகவும் எளிதாகக் கற்றுக் கொள்ளக்கூடிய சாமர்த்தியம் மட்டுமே. எனவே, ஒரு தொழிலாளியின் உற்பத்திச் செலவு என்பது, அனேகமாக முற்றிலும் அவருடைய பராமரிப்புக்காகவும், அவருடைய இன விருத்திக்காகவும், அவருக்குத் தேவைப்படுகின்ற பிழைப்புச் சாதனங்களின் அளவுக்குக் குறுகிவிடுகிறது. ஆனால், ஒரு சரக்கின் விலையானது, ஆகவே உழைப்பின் விலையானது[7], அதன் உற்பத்திச் செலவுக்குச் சமம் ஆகும். எனவே, வேலையின் வெறுப்பூட்டும் தன்மை அதிகரிக்கும் அளவுக்குக் கூலி குறைகிறது. அதுமட்டுமல்ல, எந்திரங்களின் பயன்பாடும், உழைப்புப் பிரிவினையும் எந்த அளவுக்கு அதிகரிக்கின்றனவோ, அந்த அளவுக்கு வேலைப் பளுவும் அதிகரிக்கிறது. வேலை நேரத்தை நீட்டிப்பதன் மூலமோ, குறிப்பிட்ட நேரத்தில் வாங்கப்படும் வேலையைக் கூடுதலாக்குவதன் மூலமோ, அல்லது எந்திரங்களின் வேகத்தை அதிகரிப்பதன் மூலமோ, இன்னபிற வழிகளிலோ இது நடந்தேறுகிறது.
நவீனத் தொழில்துறையானது, தந்தைவழிக் குடும்ப எஜமானனின் மிகச்சிறிய தொழிற்கூடத்தைத் தொழில் முதலாளியின் மிகப்பெரிய தொழிற்சாலையாக மாற்றியுள்ளது. தொழிற்சாலையினுள் குவிக்கப்பட்டுள்ள திரளான தொழிலாளர்கள் படைவீரர்களைப்போல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளனர். தொழில்துறை ராணுவத்தின் படைவீரர்கள் என்ற முறையில் இவர்கள், அதிகாரிகளையும் அணித்தலைவர்களையும் கொண்ட, ஒரு துல்லியமான படிநிலை அமைப்பினுடைய அதிகாரத்தின்கீழ் வைக்கப்படுகிறார்கள். இவர்கள் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் முதலாளித்துவ அரசுக்கும் அடிமைகளாக இருப்பது மட்டுமின்றி, நாள்தோறும், மணிதோறும் எந்திரத்தாலும், மேலாளர்களாலும், அனைத்துக்கும் மேலாகத் தனிப்பட்ட முதலாளித்துவத் தொழிலதிபராலும் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். லாபமே தன் இறுதி லட்சியம், குறிக்கோள் என இந்தக் கொடுங்கோன்மை, எந்த அளவுக்கு அதிக வெளிப்படையாகப் பிரகடனம் செய்கிறதோ, அந்த அளவுக்கு அது மேலும் அற்பமானதாக, மேலும் வெறுக்கத்தக்கதாக, மேலும் கசப்பூட்டுவதாக இருக்கிறது.
உடலுழைப்புக்கான திறமையும் உடல்வலிமையும் எந்த அளவுக்குக் குறைவாகத் தேவைப்படுகின்றதோ, அதாவது நவீனத் தொழில்துறை எந்த அளவுக்கு மேலும் மேலும் வளர்ச்சி பெறுகின்றதோ, அந்த அளவுக்கு மேலும் மேலும் ஆண்களின் உழைப்புப் பெண்களின் உழைப்பால் அகற்றப்படுகிறது. தொழிலாளி வர்க்கத்துக்கு வயது வேறுபாடும், ஆண், பெண் என்கிற பால் வேறுபாடும் இனிமேல் எவ்விதத் தனித்த சமூக முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கவில்லை. அனைவருமே உழைப்புக் கருவிகள்தாம். அவர்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஆகும் செலவு மட்டும் அவர்களின் வயதுக்கும் பாலினத்துக்கும் தக்கவாறு அதிகமாகவோ குறைவாகவோ இருக்கிறது.
ஆலை முதலாளியால் குறிப்பிட்ட மணிநேரம் சுரண்டப்பட்ட தொழிலாளி, முடிவில் தன் கூலியைப் பணமாகப் பெற்றுக் கொண்ட மறுகணம், முதலாளித்துவ வர்க்கத்தின் பிற பகுதியினரான வீட்டுச் சொந்தக்காரர், கடைக்காரர், அடகுக்காரர், இன்ன பிறரரிடம் அகப்பட்டுக் கொள்கிறார்.
நடுத்தர வர்க்கத்தின் கீழ்த்தட்டுகளைச் சேர்ந்தவர்களான சிறிய வியாபாரிகள், கடைக்காரர்கள், பொதுவாகப் பகுதிநேரத் தொழில்புரிவோர், கைவினைஞர்கள், விவசாயிகள் இவர்கள் அனைவரும் படிப்படியாகத் தாழ்வுற்றுப் பாட்டாளி வர்க்கத்தில் கலந்துவிடுகின்றனர். அவர்களின் சொற்ப மூலதனம் நவீனத் தொழில்துறையின் வீச்சுக்கு ஈடுகொடுத்துத் தொழில்நடத்தப் போதாமல், பெரிய முதலாளிகளுடனான போட்டியில் மூழ்கிப் போய்விடுவது ஒருபாதிக் காரணமாகும். அவர்களுடைய தனிச்சிறப்பான திறமைகள் புதிய உற்பத்தி முறைகளால் மதிப்பற்றதாகிவிடுவது மறுபாதிக் காரணமாகும். இவ்வாறாக, மக்கள் தொகையின் அனைத்து வர்க்கங்களிடமிருந்தும் பாட்டாளி வர்க்கத்துக்கு ஆட்கள் சேர்கின்றனர்.
பாட்டாளி வர்க்கம் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களைக் கடந்து செல்கிறது. பிறந்தவுடனே அது முதலாளித்துவ வர்க்கத்துடனான தனது போராட்டத்தைத் தொடங்கிவிடுகிறது. முதலாவதாக, தனித்தனித் தொழிலாளர்களும், அடுத்து ஒரு தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்களும், பிறகு ஒரு வட்டாரத்தில் ஒரு தொழிற்பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களும், தம்மை நேரடியாகச் சுரண்டும் தனித்தனி முதலாளிகளுக்கு எதிராக இந்தப் போராட்டத்தை நடத்துகின்றனர். தொழிலாளர்கள், முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுக்கு எதிராகத் தங்களின் தாக்குதல்களைத் தொடுக்கவில்லை. உற்பத்திக் கருவிகளை எதிர்த்தே தாக்குதல் தொடுக்கின்றனர். அவர்களின் உழைப்போடு போட்டியிடும் இறக்குமதிப் பொருள்களை அவர்கள் அழிக்கின்றனர்; எந்திரங்களைச் சுக்கு நூறாக உடைத்தெறிகின்றனர்; தொழிற்சாலைகளைத் தீவைத்துக் கொளுத்துகின்றனர்; மறைந்துபோய்விட்ட, மத்திய காலத்துத் தொழிலாளியின் அந்தஸ்தைப் பலவந்தமாக மீட்டமைக்க முயல்கின்றனர்.
இந்தக் கட்டத்தில் தொழிலாளர்கள், இன்னமும் நாடு முழுமையும் சிதறிக் கிடக்கின்ற, தமக்குள்ளே ஒத்திசைவில்லாத ஒரு கூட்டமாகவே உள்ளனர். அவர்களுக்கிடையே நிலவும் பரஸ்பரப் போட்டியால் பிளவுபட்டுள்ளனர். அவர்கள் எங்காவது மிகவும் கட்டுக்கோப்பான அமைப்புகளில் ஒன்றுபட்டுள்ளார்கள் எனில், அந்த ஒற்றுமை இன்னமும்கூட அவர்கள் தாமாக முன்வந்து ஒன்றுபட்டதன் விளைவாக இல்லாமல், முதலாளித்துவ வர்க்கத்தின் ஒற்றுமையால் ஏற்பட்ட விளைவாகவே உள்ளது. முதலாளித்துவ வர்க்கம் தன் சொந்த அரசியல் லட்சியங்களை அடையும் பொருட்டு, ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கத்தைக் களத்தில் இறக்கும் கட்டாயத்துக்கு ஆளாகிறது. மேலும், சிறிது காலத்துக்கு அவ்வாறு செய்யவும் அதனால் முடிகிறது. எனவே, இந்தக் கட்டத்தில் பாட்டாளிகள் அவர்களின் பகைவர்களோடு போராடவில்லை; பகைவர்களின் பகைவர்களாகிய எதேச்சாதிகார முடியாட்சியின் மிச்சமீதங்கள், நிலவுடைமையாளர்கள், தொழில்துறை சாராத முதலாளிகள், குட்டி முதலாளிகள் ஆகியோரை எதிர்த்துத்தான் போராடுகின்றனர். இவ்வாறாக, வரலாற்று ரீதியான இயக்கம் முழுமையும் முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளில் குவிந்துள்ளது. இவ்வகையில் பெறப்படும் ஒவ்வொரு வெற்றியும் முதலாளித்துவ வர்க்கத்துக்கே வெற்றியாக அமைகிறது.
ஆனால், தொழில்துறையின் வளர்ச்சியைத் தொடர்ந்து, தொழிலாளி வர்க்கம் எண்ணிக்கையில் அதிகமாவது மட்டுமின்றி, பெருந்திரள்களாகவும் குவிக்கப்படுகிறது; அதன் வலிமை வளர்கிறது; அந்த வலிமையை அது அதிகம் உணரவும் செய்கிறது. எந்த அளவுக்கு எந்திர சாதனங்கள் உழைப்பின் பாகுபாடுகள் அனைத்தையும் துடைத்தொழித்து, அனேகமாக எல்லா இடங்களிலும் கூலி விகிதங்களை ஒரேமாதிரிக் கீழ்மட்டத்துக்குக் குறைக்கிறதோ, அந்த அளவுக்குப் பாட்டாளி வர்க்க அணிகளுக்குள்ளே பல்வேறு நலன்களும், வாழ்க்கை நிலைமைகளும், மேலும் மேலும் சமன் ஆக்கப்படுகின்றன. முதலாளித்துவ வர்க்கத்தாரிடையே வளர்ந்துவரும் போட்டியும், அதன் விளைவாக எழுகின்ற வணிக நெருக்கடிகளும் தொழிலாளர்களின் கூலிகளை எப்போதும் ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாக்குகின்றன. தொடர்ந்து அதிவேக வளர்ச்சி காணும் எந்திர சாதனங்களின் முடிவுறாத மேம்பாடு, அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேலும் மேலும் நிலையற்றதாக்குகிறது. தனிப்பட்ட தொழிலாளர்களுக்கும் தனிப்பட்ட முதலாளிகளுக்கும் இடையேயான மோதல்கள், மேலும் மேலும் இரு வர்க்கங்களுக்கு இடையிலான மோதல்களின் தன்மையைப் பெறுகின்றன. உடனே தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு எதிராகக் கூட்டமைப்புகளை (தொழிற் சங்கங்களை) அமைத்துக் கொள்ளத் தொடங்குகின்றனர். கூலிகளின் விகிதத்தைக் [குறைந்து போகாமல்] தக்கவைத்துக்கொள்ள அவர்கள் ஒன்று சேர்கிறார்கள். அவ்வப்போது மூளும் இந்தக் கிளர்ச்சிகளுக்கு முன்னேற்பாடு செய்து கொள்ளும் பொருட்டு, நிரந்தரமான சங்கங்களை நிறுவிக் கொள்கின்றனர். இங்கும் அங்கும் [சில இடங்களில்] இந்தப் போராட்டம் கலகங்களாக வெடிக்கிறது.
அவ்வப்போது சில வேளைகளில் தொழிலாளர்கள் வெற்றி பெறுகின்றனர். ஆனாலும் அது தற்காலிக வெற்றியே. அவர்களுடைய போராட்டங்களின் மெய்யான பலன் அவற்றின் உடனடி விளைவில் அடங்கியிருக்கவில்லை. எப்போதும் விரிவடைந்து செல்லும் தொழிலாளர்களின் ஒற்றுமையில் அடங்கியுள்ளது. நவீனத் தொழில்துறை உருவாக்கியுள்ள மேம்பட்ட தகவல்தொடர்புச் சாதனங்கள் இந்த ஒற்றுமைக்குத் துணைபுரிகின்றன. வெவ்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ள இவை உதவுகின்றன. ஒரே தன்மை கொண்ட, எண்ணற்ற வட்டாரப் போராட்டங்கள் அனைத்தையும் வர்க்கங்களுக்கு இடையேயான ஒரே தேசியப் போராட்டமாக மையப்படுத்த இந்தத் தொடர்புதான் தேவையாய் இருந்தது. ஆனால், ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஓர் அரசியல் போராட்டமே ஆகும். மத்திய காலத்து நகரத்தார், அவர்களுடைய படுமோசமான சாலைகளின் துணைகொண்டு, எந்த ஒற்றுமையைச் சாதிக்கப் பலநூறு ஆண்டுகள் தேவைப்பட்டனவோ அந்த ஒற்றுமையை, நவீனப் பாட்டாளிகள் ரயில்பாதைகளின் துணைகொண்டு ஒருசில ஆண்டுகளிலேயே சாதித்துவிட்டனர்.
தங்களை ஒரு வர்க்கமாகவும், அதன்மூலம் ஓர் அரசியல் கட்சியாகவும் ஆக்கிக் கொள்ளும் பாட்டாளிகளின் இந்த ஒழுங்கமைப்பானது, தொழிலாளர்களுக்கு உள்ளேயே நிகழும் போட்டியின் காரணமாகத் தொடர்ந்து சீர்குலைந்து வருகிறது. எனினும், பாட்டாளிகளின் இந்த ஒழுங்கமைப்பு முன்னிலும் வலிமை மிக்கதாக, உறுதி மிக்கதாக, சக்தி மிக்கதாக மீண்டும் வீறுகொண்டு எழுகிறது. இது முதலாளித்துவ வர்க்கத்தின் மத்தியிலேயே நிலவும் பிளவுகளைப் பயன்படுத்தித் தொழிலாளர்களின் குறிப்பிட்ட நலன்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கக் கட்டாயப்படுத்துகிறது. இவ்வாறுதான் இங்கிலாந்தில் பத்து மணிநேர வேலைநாள் மசோதா சட்டமாக்கப்பட்டது.
மொத்தமாகப் பார்க்குமிடத்து, பழைய சமுதாயத்தின் வர்க்கங்களுக்கு இடையே நிகழும் மோதல்கள், பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சிப் போக்குக்குப் பல வழிகளிலும் உதவுகின்றன. முதலாளித்துவ வர்க்கம் இடையறாத ஒரு போராட்டத்தில் சிக்கிக் கொண்டுள்ளது. முதலில் பிரபுக்குலத்துடன் போராட வேண்டியிருந்தது. அதன்பிறகு, முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்த சில பகுதிகளின் நலன்கள் தொழில்துறை முன்னேற்றத்துக்கு எதிராகிவிடும்போது, அந்தப் பகுதிகளுடன் போராட வேண்டியுள்ளது. எந்தக் காலத்திலும் அன்னிய நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்துடன் அது போராட வேண்டியுள்ளது. இந்தப் போராட்டங்கள் அனைத்திலும் முதலாளித்துவ வர்க்கம், பாட்டாளி வர்க்கத்துக்கு வேண்டுகோள் விடுக்கவும், அதன் உதவியை நாடவும், அப்படியே அதனை அரசியல் அரங்குக்கு இழுத்துவரவும் வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறது. ஆக, முதலாளித்துவ வர்க்கமே, பாட்டாளி வர்க்கத்துக்குத் தன் சொந்த அரசியல் கல்வியின் கூறுகளையும், பொதுக் கல்வியின் கூறுகளையும் வழங்குகிறது. வேறு சொற்களில் கூறுவதெனில், முதலாளித்துவத்தோடு போரிடுவதற்கான ஆயுதங்களைப் பாட்டாளி வர்க்கத்துக்கு முதலாளித்துவமே வழங்குகிறது.
மேலும், நாம் ஏற்கெனவே அறிந்தபடி, தொழில்துறை முன்னேற்றத்தின் விளைவாக ஆளும் வர்க்கங்களில் பல பிரிவுகள் முழுமையாகப் பாட்டாளி வர்க்கத்துக்குள் தள்ளப்படுகின்றன. அல்லது, குறைந்தபட்சம் அவற்றின் வாழ்வாதார நிலைமைகள் ஆபத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன. இந்தப் பிரிவுகளும் பாட்டாளி வர்க்கத்தின் ஞானோதயத்துக்கும் முன்னேற்றத்துக்குமான பல புத்தம் புதிய கூறுகளை வழங்குகின்றன.
இறுதியாக, வர்க்கப் போராட்டம் தீர்மானகரமான நிலையை நெருங்கும் நேரத்தில், ஆளும் வர்க்கத்தினுள்ளே, சொல்லப்போனால் பழைய சமுதாயம் முழுமையினுள்ளும், நடைபெறுகின்ற கரைந்துபோகும் நிகழ்முறையானது, வெகு உக்கிரமான, பகிரங்கமான நிலையை எட்டுகிறது. ஆளும் வர்க்கத்தின் ஒரு சிறு பிரிவு தன்னைத் தனியே துண்டித்துக் கொண்டு, எதிர்காலத்தைத் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் புரட்சிகர வர்க்கத்துடன் சேர்ந்து கொள்கிறது. ஆக, முந்தைய காலகட்டத்தில், எவ்வாறு பிரபுக்களில் ஒரு பிரிவு முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கம் சென்றதோ, அதேபோல இப்போது முதலாளித்துவ வர்க்கத்தின் ஒருபகுதி பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் செல்கிறது. அதிலும் குறிப்பாக முதலாளித்துவச் சித்தாந்தவாதிகளுள், வரலாற்று இயக்கத்தின் முழுப் பரிமாணத்தையும் தத்துவ ரீதியில் புரிந்துகொள்ளும் அளவுக்குத் தம்மை உயர்த்திக்கொண்ட ஒரு பிரிவினர் பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் செல்கின்றனர்.
இன்றைக்கு முதலாளித்துவ வர்க்கத்தை நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் வர்க்கங்கள் அனைத்திலும் பாட்டாளி வர்க்கம் ஒன்று மட்டுமே உண்மையில் புரட்சிகரமான வர்க்கமாகும். பிற வர்க்கங்கள் நவீனத் தொழில்துறையின் முன்னே சிதைவுற்று முடிவில் மறைந்து போகின்றன. பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் நவீனத் தொழில்துறையின் தனிச்சிறப்பான, சாரமான விளைபொருளாகும்.
அடித்தட்டு நடுத்தர வர்க்கத்தினர், [அதாவது] சிறு உற்பத்தியாளர், கடைக்காரர், கைவினைஞர், விவசாயி இவர்கள் அனைவரும், நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியாகத் தம் இருப்பை அழிவிலிருந்து காத்துக் கொள்ள முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். எனவே, இவர்கள் பழமைவாதிகளே அன்றிப் புரட்சிகரமானவர் அல்லர். மேலும் இவர்கள் வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னோக்கிச் செலுத்த முயல்வதால், இவர்கள் பிற்போக்காளரும் ஆவர். இவர்கள் ஏதோ தற்செயலாகப் புரட்சிகரமாக இருக்கிறார்கள் எனில், அவ்வாறு இருப்பதற்கு இவர்கள் பாட்டாளி வர்க்கமாக மாறிவிடும் தறுவாயில் உள்ளனர் என்பது மட்டுமே காரணம் ஆகும். இவ்வாறாக, இவர்கள் தம்முடைய நிகழ்கால நலன்களை அல்ல, எதிர்கால நலன்களையே பாதுகாத்துக் கொள்கின்றனர். இவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் கருத்துநிலையில் தம்மை வைத்துக்கொள்ளும் பொருட்டு, தமது சொந்தக் கருத்துநிலையையே கைவிடுகின்றனர்.
பழைய சமுதாயத்தின் மிகமிக அடிமட்ட அடுக்குகளிலிருந்து தூக்கி எறியப்பட்டுச் செயலற்று அழுகிக் கொண்டிருக்கும் சமூகக் கழிவாகிய “ஆபத்தான வர்க்கம்” இங்குமங்கும் ஒருசில இடங்களில் பாட்டாளி வர்க்கப் புரட்சியால் இயக்கத்துக்குள் இழுக்கப்படலாம். எனினும், அந்த வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள், பிற்போக்குச் சூழ்ச்சியின் லஞ்சம் பெற்ற கைக்கூலியாகச் செயலாற்றவே அதனைப் பெரிதும் தயார் செய்கின்றன.
ஏற்கெனவே பாட்டாளி வர்க்க வாழ்க்கை நிலைமைகளில், பழைய சமுதாயத்தின் ஒட்டுமொத்த வாழ்க்கை நிலைமைகள் அனேகமாகப் புதையுண்டு போயின. பாட்டாளிக்குச் சொத்துக் கிடையாது; மனைவி மக்களிடம் அவனுக்குள்ள உறவுக்கும், முதலாளித்துவக் குடும்ப உறவுகளுக்கும் இடையே பொதுவான கூறுகள் எதுவும் இனிமேல் இல்லை. ஃபிரான்சில் இருப்பது போலவே, இங்கிலாந்திலும், ஜெர்மனியில் இருப்பது போலவே, அமெரிக்காவிலும், நவீனத் தொழில்துறை உழைப்பும், மூலதனத்துக்குக் கீழ்ப்படும் நவீன கால அடிமைத்தனமும், பாட்டாளியிடமிருந்து தேசியப் பண்பின் அனைத்து அடையாளங்களையும் துடைத்தெறிந்துவிட்டன. சட்டம், ஒழுக்கநெறி, மதம் என்றெல்லாம் பாட்டாளிக்கு எத்தனை முதலாளித்துவத் தப்பெண்ணங்கள் உள்ளனவோ அத்தனை முதலாளித்துவ நலன்கள் அவற்றின் பின்னால் பதுங்கி மறைந்து கொண்டுள்ளன.
மேலாதிக்கம் பெற்ற முந்தைய வர்க்கங்கள் யாவும், [உற்பத்திப் பொருள்களைக்] கைவசப்படுத்தலில் தம்முடைய நிபந்தனைகளுக்கு ஒட்டுமொத்தச் சமுதாயத்தையும் உட்படுத்துவதன் மூலம், அவை ஏற்கெனவே பெற்றிருந்த அந்தஸ்துக்கு அரண் அமைத்துக்கொள்ள முற்பட்டன. ஆனால், பாட்டாளிகள் அவர்களுக்கே உரிய முந்தைய கைவசப்படுத்தும் முறையையும், அதன்மூலம் முந்தைய பிற கைவசப்படுத்தும் முறைகள் அனைத்தையும் ஒழித்திடாமல், சமுதாயத்தின் உற்பத்திச் சக்திகளுக்கு எஜமானர்கள் ஆக முடியாது. அவர்கள் பாதுகாத்து வைக்கவும் அரணமைத்துக் கொள்ளவும் சொந்தமாக ஏதும் பெற்றிருக்கவில்லை. தனிநபர் சொத்துடைமைக்கான முந்தைய பாதுகாப்புகளையும், அதன் காப்புறுதிகளையும் தகர்த்தெறிவதே பாட்டாளிகளின் லட்சியப் பணியாகும்.
இதற்குமுன் நடைபெற்ற வரலாற்று ரீதியான இயக்கங்கள் அனைத்தும் சிறுபான்மையினரின் இயக்கங்களாகவோ, அல்லது சிறுபான்மையினரின் நலனுக்கான இயக்கங்களாகவோ இருந்தன. ஆனால் பாட்டாளி வர்க்க இயக்கமோ மிகப் பெரும்பான்மையினர் பங்குபெறும், மிகப் பெரும்பான்மையினரின் நலனுக்காக நடக்கும், தன்னுணர்வுடன் கூடிய சுயேச்சையான இயக்கமாகும். இன்றைய நமது சமுதாயத்தின் மிகக் கீழான அடுக்காகவுள்ள பாட்டாளி வர்க்கம், அதிகாரப்பூர்வ சமுதாயத்தின் மேல்தட்டு அடுக்குகள் முழுவதையும் விண்ணில் தூக்கி வீசி எறியாமல், தன்னால் [சிறிதும்] எழுச்சிபெற இயலாது; தன்னை உயர்த்திக் கொள்ளவும் முடியாது.
முதலாளித்துவ வர்க்கத்துடன் பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டம், உள்ளடக்கத்தில் இல்லாவிட்டாலும், வடிவத்திலேனும், முதலில் அதுவொரு தேசியப் போராட்டமாகவே இருக்கிறது. சொல்லப் போனால், ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வர்க்கமும் முதலில் தன் நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்துடன் கணக்குத் தீர்த்தாக வேண்டும்.
பாட்டாளி வர்க்க வளர்ச்சியின் மிகப் பொதுவான கட்டங்களைச் சித்தரிக்கும்போது, தற்போதைய சமுதாயத்தின் உள்ளேயே ஏறக்குறையத் திரைமறைவாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை, அது வெளிப்படையான புரட்சியாக வெடிக்கும் கட்டம்வரையில் – முதலாளித்துவ வர்க்கத்தைப் பலவந்தமாக வீழ்த்துவதானது, பாட்டாளி வர்க்க ஆட்சியதிகாரத்துக்கு அடித்தளம் இட்டுத்தரும் கட்டம்வரையில் – நாங்கள் வரைந்து காட்டியுள்ளோம்.
இதுநாள் வரையில் ஒவ்வொரு சமூக அமைப்புமுறையும், நாம் ஏற்கெனவே பார்த்தவாறு, ஒடுக்கும் வர்க்கத்துக்கும் ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும் இடையிலான பகைமையையே அடித்தளமாகக் கொண்டிருந்தது. ஆனால், ஒரு வர்க்கத்தை ஒடுக்க வேண்டுமானால், அந்த வர்க்கம் குறைந்தபட்சம் அதன் அடிமை நிலையிலாவது தொடர்ந்து நீடித்திருப்பதற்குரிய சில நிபந்தனைகளை அதற்கு உத்தரவாதம் செய்திட வேண்டும். நிலப்பிரபுத்துவ எதேச்சாதிகார ஒடுக்குமுறையின்கீழ், குட்டி முதலாளித்துவப் பிரிவினர் ஒருவாறு முதலாளியாக வளர முடிந்தது. அதுபோலவே, பண்ணையடிமை முறை நிலவிய காலத்தில் பண்ணையடிமை, நகரத்தார் சமூக உறுப்பினனாகத் தன்னை உயர்த்திக் கொண்டான். இதற்கு மாறாக, [இன்றைய] நவீன காலத்துத் தொழிலாளி, தொழில்துறையின் முன்னேற்றத்தோடு கூடவே தானும் முன்னேறுவதற்குப் பதிலாக, தன் சொந்த வர்க்கம் நிலவுதற்குரிய [வாழ்வாதார] நிலைமைகளுக்கும் கீழே மேலும் மேலும் தாழ்ந்து போகிறான். அவன் பரம ஏழை ஆகிறான். பரம ஏழ்மை மக்கள்தொகையையும் செல்வத்தையும்விட அதிவேகமாக வளர்கிறது. இங்குதான் ஒன்று தெளிவாகிறது – முதலாளித்துவ வர்க்கம் இனிமேலும் சமுதாயத்தில் ஆளும் வர்க்கமாக நீடிக்கவும், தான் நிலவுதற்குரிய நிலைமைகளை அனைத்துக்கும் மேலான சட்டவிதியாகச் சமுதாயத்தின் மீது திணிக்கவும் தகுதியற்றதாய் உள்ளது. முதலாளித்துவ வர்க்கம் ஆட்சியதிகாரம் செலுத்தவும் தகுதியற்றுவிட்டது. ஏனெனில், அதன் அடிமையானவன், அவனுடைய அடிமை நிலையிலேயே தொடர்ந்து வாழ்வதற்குக்கூட வகைசெய்ய வக்கில்லை. மேலும், அவனிடமிருந்து [அவன் உழைப்பின் மூலம்] தான் வாழ்வாதாரங்களைப் பெறுவதற்குப் பதிலாக, அவனுக்கு வாழ்வாதாரங்களை வழங்கியாக வேண்டிய நிலைக்கு, அவன் தாழ்ந்து போவதை அதனால் தடுக்க முடியவில்லை என்பதும் காரணமாகும். சமுதாயம் இனிமேலும் இந்த முதலாளித்துவ வர்க்கத்தின்கீழ் வாழ முடியாது. வேறு சொற்களில் கூறுவதெனில், முதலாளித்துவ வர்க்கம் நிலவுவது இனிமேலும் சமுதாயத்துக்கு ஒவ்வாததாகிவிட்டது.
முதலாளித்துவ வர்க்கம் நிலவுவதற்கும் ஆதிக்கம் செலுத்துவதற்கும் இன்றியமையாத நிபந்தனை, மூலதனம் உருவாதலும் வளர்ந்து பெருகுதலும் ஆகும். மூலதனத்துக்கு இன்றியமையாத நிபந்தனை கூலி உழைப்பாகும். கூலி உழைப்போ முற்றிலும் தொழிலாளர்களுக்கு இடையிலான போட்டியை மட்டுமே சார்ந்துள்ளது. முதலாளித்துவ வர்க்கம் அனிச்சையாக வளர்த்தெடுக்கும் தொழில்துறையின் முன்னேற்றமானது, அத்தகைய போட்டியின் காரணமாக தொழிலாளர்களிடையே ஏற்படும் தனிமைப்பாட்டை, அவர்கள் [சங்க அமைப்பில்] ஒன்றுசேர்தலின் காரணமாக ஏற்படும் புரட்சிகரப் பிணைப்பின் மூலம் நீக்குகிறது. எனவே, நவீனத் தொழில்துறையின் வளர்ச்சியானது, எந்த அடிப்படையில் முதலாளித்துவ வர்க்கம், பொருள்களை உற்பத்தி செய்தும் கைவசப்படுத்தியும் வருகிறதோ, அந்த அடிப்படைக்கே உலை வைக்கிறது. ஆக, முதலாளித்துவ வர்க்கம் அனைத்துக்கும் மேலாகத் தனக்குச் சவக்குழி தோண்டுவோரையே உற்பத்தி செய்கிறது. முதலாளித்துவ வர்க்கத்தின் வீழ்ச்சியும், பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் சம அளவில் தவிர்க்கவியலாதவை ஆகும்.
[1] முதலாளித்துவ வர்க்கம் (Bourgeoisie) என்பது [இன்றைய] நவீன முதலாளிகளின் வர்க்கத்தைக் குறிக்கிறது. இந்த வர்க்கத்தினர் சமூக உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர்கள்; கூலி உழைப்பாளிகளை வேலைக்கு அமர்த்திக் கொள்கிறவர்கள். பாட்டாளி வர்க்கம் (Proletariat) என்பது [இன்றைய] நவீனக் கூலித் தொழிலாளர்களின் வர்க்கத்தைக் குறிக்கிறது. இந்த வர்க்கத்தினர் தமக்கெனச் சொந்தமாக உற்பத்திச் சாதனங்கள் ஏதும் இல்லாதவர்கள்; வாழ்க்கையை நடத்துவதற்காகத் தம் உழைப்புச் சக்தியை விற்க வேண்டிய நிலைக்குத் தாழ்த்தப்பட்டிருப்பவர்கள். [1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு எங்கெல்ஸ் எழுதிய குறிப்பு.]
[2] அதாவது, எழுதப்பட்ட வரலாறு அனைத்தும் என்று பொருள். வரலாற்றுக்கு முந்தைய சமுதாயம் பற்றி, அதாவது, எழுத்தில் பதிவாகியுள்ள வரலாற்றுக்கு முன்பு நிலவிய சமூக ஒழுங்கமைப்பு பற்றி, 1847-இல் அனேகமாக எதுவுமே அறியப்படவில்லை. அதன்பிறகு, ஹாக்ஸ்தவுசென்* (Haxthusen) ருஷ்யாவில் நிலம் பொது உடைமையாக இருப்பதைக் கண்டுபிடித்தார். டியூட்டானிய (Teutonic) இனங்கள் அனைத்தும், அத்தகைய நிலப் பொது உடைமையைச் சமூக அடித்தளமாகக் கொண்டுதான் வரலாற்றில் தம் வாழ்வைத் தொடங்கின என்று மவுரர் # (Maurer) நிரூபித்தார். இந்தியாவிலிருந்து அயர்லாந்துவரை எங்குமே [நிலத்தைப் பொது உடைமையாகக் கொண்ட] கிராமச் சமூகங்கள் (Village Communities) சமுதாயத்தின் புராதன வடிவமாக இருக்கின்றன அல்லது இருந்துள்ளன என்பது காலப்போக்கில் அறியப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்புகளுக்கு எல்லாம் மகுடம் சூட்டியதுபோல, கணம் (gens) என்னும் [இனக்குழு] அமைப்பின் உண்மையான தன்மையையும், பூர்வகுடியோடு (tribe) அதற்குள்ள உறவையும் கண்டுபிடித்து, இந்தப் புராதனக் கம்யூனிச சமுதாயத்தின் உள்ளமைப்பை அதன் முன்மாதிரியான வடிவத்தில் மார்கன்@ (Morgan) வெட்ட வெளிச்சமாக்கினார். இந்தப் புராதனச் சமூகங்கள் சிதைந்தழிந்தவுடன், சமுதாயம் தனித்தனியான, பகைமை பாராட்டும் வர்க்கங்களாக, முடிவில் பிளவுபடத் தொடங்குகிறது. “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” (இரண்டாம் பதிப்பு, ஷ்டுட்கார்ட், 1886) என்னும் நூலில் [புராதனச் சமூகங்கள் சிதைந்தழிந்த] இந்த நிகழ்முறையைத் தொடக்கத்திலிருந்து மீண்டும் வரைந்து காட்ட நான் முயன்றுள்ளேன். [1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு எங்கெல்ஸ் எழுதிய குறிப்பு.]
* [ஹாக்ஸ்தவுசென் (Haxthausen, 1792-1866): ஆகுஸ்த் ஹாக்ஸ்தவுசென் என்பது இவரது முழுப்பெயர். பிரஸ்ஸியாவைச் சேர்ந்த பிரபு, எழுத்தாளர். அரசாங்க அதிகாரியாகச் செயல்பட்டவர். ருஷ்யாவின் நிலவுடைமை உறவுகளில் கிராமச் சமுதாய அமைப்பின் மீத மிச்சங்களை விளக்கி ஒரு நூல் எழுதியுள்ளார்.]
# [ மவுரர் (Maurer, 1790-1872): கியோர்க் லுத்விக் மவுரர் என்பது இவரது முழுப்பெயர். பெயர்பெற்ற ஜெர்மன் வரலாற்று அறிஞர். முதலாளித்துவக் கருத்தோட்டம் கொண்டவர். தொன்மைக்கால, இடைக்கால ஜெர்மனியின் சமூக அமைப்பை ஆராய்ந்தவர். ]
@ [மார்கன் (Morgan, 1818-1881): லூயிஸ் ஹென்றி மார்கன் என்பது இவரது முழுப்பெயர். அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். பெயர்பெற்ற இனப்பரப்பு விளக்கவியல் அறிஞர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர். தொடக்க காலச் சமூகம் பற்றிய வரலாற்று ஆசிரியர். இயல்பான பொருள்முதல்வாதி.]
[3] [கைவினைக் குழும எஜமான் (guild-master), அதாவது, கைவினைக் குழுமத்தின் முழு உறுப்பினன், கைவினைக் குழுமத்துக்கு உட்பட்ட உறுப்பினர் இல்லத்தின் எஜமான், கைவினைக் குழுமத்தின் தலைவன் அல்ல. [1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு எங்கெல்ஸ் எழுதிய குறிப்பு.]
[4] “கம்யூன்” என்பது ஃபிரான்சில் புதிதாக உருவாகி வந்த நகரங்களுக்கு இடப்பட்ட பெயராகும். நிலப்பிரபுத்துவச் சீமான்களிடமிருந்தும் எஜமானர்களிடமிருந்தும், “மூன்றாவது வகையினம்” (Third Estate) என்ற முறையில் வட்டார சுயாட்சியையும், அரசியல் உரிமைகளையும் வென்றெடுப்பதற்கு முன்பே, அந்நகரங்கள் இப்பெயரை ஏற்றன. பொதுவாகக் கூறுவதெனில், முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இங்கிலாந்தும், அவ்வர்க்கத்தின் அரசியல் வளர்ச்சிக்கு ஃபிரான்சும், மாதிரி நாடுகளாக இந்த அறிக்கையில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. [1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு எங்கெல்ஸ் எழுதிய குறிப்பு.]
இத்தாலி, ஃபிரான்சு ஆகிய நாடுகளின் நகரவாசிகள், அவர்களின் நிலப்பிரபுத்துவச் சீமான்களிடமிருந்து சுயாட்சிக்கான தொடக்க உரிமைகளை விலைகொடுத்து அல்லது போராடிப் பெற்ற பிறகு, தங்களின் நகர்ப்புற சமூகங்களுக்கு [“கம்யூன்” என்னும்] இப்பெயரை இட்டுக் கொண்டனர். [1890-ஆம் ஆண்டின் ஜெர்மானியப் பதிப்புக்கு எங்கெல்ஸ் எழுதிய குறிப்பு.]
[5] [மூன்றாவது வகையினம் (The Third Estate): முடியாட்சி மன்னர் காலத்தில் ஃபிரெஞ்சு அரசியல் களத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த சொல்லாக்கம். சமூகம் மூன்று வகையினமாகப் பிரிக்கப்பட்டது. முதலாவது வகையினம் (The First Estate) மத குருமார்களையும் (Clergy), இரண்டாவது வகையினம் (The Second Estate) பிரபுக்களையும் (Nobility) கொண்டது. மூன்றாவது வகையினம் சாதரணப் பொதுமக்களைக் (Commoners) கொண்டது. முடிமன்னர் எந்த வகையினத்திலும் சேராதவர். மூன்று வகையினத்துக்கும் அப்பாற்பட்டவர். மூன்றாவது வகையினம் முதலாளிகள், விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர் ஆகிய அனைவரையும் உள்ளடக்கியது. இவர்கள் அனைவருக்கும் உரிய பொதுவான தன்மை என்னவெனில், இவர்கள் பெருஞ்செல்வம் படைத்தவர்கள் அல்ல. ஆனாலும், மற்ற இரு வகையினத்தவருக்கும் கடுமையான வரிப்பணம் செலுத்த வேண்டும்.]
[6] [சிலுவைப் போர்கள்: 11-13 ஆம் நூற்றாண்டுகளில் மேற்கு ஐரோப்பிய நிலப்பிரபுக்களும், உயர்குடி வீரர்களும் கிழக்கு நாடுகள் மீது நடத்திய இராணுவ- காலனி பிடிக்கும் படையெடுப்புகளைக் குறிக்கிறது. ஜெரூசலத்திலும், பிற “புனிதத் தலங்களிலும்” உள்ள கிறிஸ்துவப் புனித சின்னங்களை முஸ்லிம்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்டல் என்னும் மதப் பதாகையின்கீழ் இந்தப் படையெடுப்புகள் நடத்தப்பட்டன.]
[7] [உழைப்பின் விலை: மார்க்ஸ், எங்கெல்ஸ் பின்னாளில் எழுதிய நூல்களில், “உழைப்பின் மதிப்பு”, “உழைப்பின் விலை” என்னும் சொல்தொடர்களுக்குப் பதிலாக, மிகவும் துல்லியமான “உழைப்புச் சக்தியின் மதிப்பு”, “உழைப்புச் சக்தியின் விலை” என்னும் சொல்தொடர்களைப் பயன்படுத்தியுள்ளனர்.]
உலகெங்கிலும் உள்ள தொழிலாளர் வர்க்கம், வாழ்வின் நாள்தோறுமான
மூலதனத்தின் தாக்குதலையும், அரசியல் ரீதியான ஏகாதிபத்திய தாக்குதலையும் தீவிரமான வர்க்க
போராட்டத்தால் எதிர்கொண்ட வளமான அனுபவத்துடன் இந்த மே தினத்தை – சர்வதேச தொழிலாளர்
தினத்தை – மிகுந்த உற்சாகத்துடனும், வர்க்க பெருமிதத்துடனும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
ஏகாதிபத்திய
தாக்குதலும், உலகளாவிய எதிர்ப்பும்:
முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியின் பின்புலத்தில்
,சிஐடியு 2018 நவம்பரிலேயே கீழ்வருமாறு குறித்து வைத்தது:
“அரசியல், பொருளாதார ,மற்றும் ராணுவ முனைகள் என அனைத்திலும்
ஏகாதிபத்தியத்திய சக்திகளின் மேலாதிக்க தலையீடு அதிகமான ஆக்கிரமிப்பு பரிமாணத்தை அடைந்துள்ளது.
வளரும் நாடுகளின் சந்தையையும், இயற்கை வளங்கள் அதிகமான பகுதிகளையும் தனது மேலாதிக்கத்தின்
கீழ் தக்க வைத்து, விரிவுபடுத்துவதே அதன் நோக்கம். மிகவும் குறைவாக இருப்பினும், ஏகாதிபத்திய
சக்திகளுக்கு இடையேயான முரண்பாடு மெல்ல தலைதூக்குகிறது அதேசமயம், வளரும் நாடுகள் தங்களின்
சந்தையை, இயற்கை வளத்தை, மற்றும் பொருளாதாரத்தை பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டிட அனுமதிப்பதின்
வாயிலாக, அந்த நாடுகளின் தேசீய நலனை சரணடைய செய்ய ஏகாதிபத்திய சக்திகள் பல வழிகளில்
அவற்றிற்கு அழுத்தம் தருகின்றன.”
அதன் விளைவாக, லாபத்தை அதிகரிக்க உழைப்பாளர் மீதான
தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது .நவீன தாராளமயக் கொள்கைகளை கடைப்பிடிக்கும் அனேக வளர்ந்த,
வளரும் நாடுகள் அதிகளவில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்வது, தொழிலாளர்களின் உரிமைகளை
குறைப்பது, பொதுசேவைகளை நீக்குவது, விலைகளை உயர்த்துவது போன்றவற்றை அமுல் படுத்துகின்றன.
பெட்ரோலிய பொருளிற்கான அதிக வரி உயர்வை எதிர்த்து
சென்ற ஆண்டு நவம்பரில், பிரான்சில் துவங்கிய தொழிலாளார் வர்க்கத்தின் போராட்டமான “எல்லோ வெஸ்ட் “’இயக்கம் (மஞ்சள் மேலங்கி இயக்கம்—அதில் ஈடுபடுபவர்கள் மஞ்சள்
மேலங்கி அணிந்திருப்பர்) இன்னும் தொடர்கிறது
இதனால், குறைந்தபட்ச ஊதியத்தில் 100 யூரோ அதிகரிக்கவும்,
குறைந்த ஊதிய ஓய்வூதியதாரர்களுக்கும், ஊழியர்களின் கூடுதல் கால ஊதியம், போனஸ் ஆகியவற்றிற்கும்,
திட்டமிட்ட வரி உயர்வினை கை விடவும், வலதுசாரி மக்ரோன் அரசு நிர்பந்திக்கப்பட்டது.
ஐரோப்பாவிலேயே சிறந்ததான, பிரான்ஸ் தேசீய ரெயில்வேயை தனியார் மயமாக்குவதற்கும், ஊழியர்களின்
பணிநிலைகளில் மாற்றம் கொணர்வற்கும், ஊழியர் எண்ணிக்கை குறைப்பிற்கு எதிராகவும் பிரான்சின்
ரெயிவே தொழிலாளார்கள் ஏற்கனவே போராட்டத்தில் உள்ளனர்.
“ஓய்வூதிய சீர்திருத்தம்”என்று பெயரில் வருவதை ரஷ்ய
தொழிலாளர்கள் எதிர்த்து போராடி வருகின்றனர்; கிரீஸில், சிரிஸா அரசின் சிக்கன கொள்கைகளுக்கு
எதிராக, வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் தொழிலளர் வர்க்கம் ஈடுபட்டு வருகிறது.
ருமேனியாவில், குறைந்தபட்ச கூலியையும், ஜெர்மனியில் ஊதிய உயர்வையும் கோரி வருகிறார்கள்.
பயணிகள் பாதுகாப்பை அச்சுறுத்துவதும், 6000 நடத்துனர் பணிகளை நீக்கிட வழி வகை செய்யும்
‘ஓட்டுனர் மட்டும்’ என்ற முறையில் ரயில் இயக்குவதை விரிவாக்குவதற்கு எதிராக வட இங்கிலாந்தில்
ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். பணிநிலைகளின் மீதான தாக்குதலுக்கு
எதிராக சுவிட்சர்லாந்து கட்டுமான தொழிலாளர்கள் பணிமுடக்கம் செய்தனர். மேம்பட்ட ஊதியத்திற்காகவும்,
பணிநிலைமைகளுக்காகவும் போராடி வருகின்றனர். பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல்,
ஸ்பெயின் ஆகிய ஐந்து நாடுகளின் ஐரோப்பிய விமான பணியாளர்கள் மேம்பட்ட பணிநிலைமைகளுக்காக
போராடினர். கல்விக்கான அதிக நிதி ஒதுக்கீடு, ஊதிய உயர்வு ஆகியவை கோரி போராடிய அமெரிக்க
ஆசிரியர்களின் போராட்டம், அந்த நாட்டின் பல மாநிலங்களுக்கு பரவியது. அதே போன்ற கோரிக்கைகளுக்காக,
அர்ஜெண்டினா, இங்கிலாந்து, மற்றும் ஈரான் ஆசிரியர்கள் போராடுகின்றனர். நெகிழி தொழிற்சாலை
தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், தீயணைப்பு வீரர்கள், முனிசிபல் தொழிலாளர்கள்
உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பல்வேறுபட்ட தொழிலாளர்கள் ஊதியம் மற்றும் மேம்பட்ட பணிநிலைமைகளுக்காக
வேலை நிறுத்தம் செய்தனர். குறைந்த பட்ச ஊதிய விகித்ததை உயர்த்த வேண்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஒரு லட்சம் ஊழியர்கள்
அணிவகுத்தனர்.
வேளாண் வர்த்தக பெரு நிறுவனங்களின் கொள்கைகளை விவசாயிகளும்
பல நாடுகளில் எதிர்த்தனர். ஏகாதிபத்தியம் ஏற்பாடு செய்யும் உள் நாட்டு போர் மற்றும்
அரசியல் ஆதாயத்திற்கெதிராக உழைக்கும் மக்கள் தெருக்களுக்கு வரத் துவங்கி விட்டனர்.
ஜனாதிபதி லூலாவின் விடுதலை வேண்டி நடந்த பெரும் ஆர்ப்பாடங்களை பிரேசில் கண்டது. அது
போலவே, மதுரோ அரசிற்கு ஆதரவாக வெனிசுலாவின் உழைக்கும் வர்க்கம் வெளி வந்தது.
இந்தியாவில்:
எதேச்சதிகார,வகுப்புவாத நரேந்திர மோடி அரசின் முன்னெப்போதையும்
இல்லாத தாக்குதல்களை இந்தியத் தொழிலாளி வர்க்கம் கண்டது. பொறுப்பேற்ற ஐந்தே நாட்களுக்குள்ளாக
மோடி அரசு பயிற்சி பருவ ஊழியர்களை எந்த வரையரையுமின்றி பணியாற்றும் வகையில் பயிற்சி
பருவ (Apprenticeship Act) சட்டத்தினை திருத்தியது.பாராளுமன்ற் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு
சில நாட்கள் முன்னர், குறைந்தபட்ச ஊதியத்தை குறைக்க முயற்சித்தது, பெரு நிறுவனங்கள்
‘எளிதாக தொழில் செய்ய’ என்ற பெயரில், இந்திய தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற உரிமைகளை
‘ இல்லாதாக்கிட மோடி ஆட்சி தீவிரமாக முயற்சித்தது.
முதலாளிகளுக்கு சலுகையாக, படிவ சமர்பிப்பு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம், தொழிற்சாலை
சட்டம் ஆகியவை திருத்தப்பட்டன. ”குறிப்பிட்ட கால பணி” என ( ஒப்பந்த தொழிலாளர் முறை
போன்ற ஒன்று) ஒரு ஆணை நிர்வாக ஆண வழி நிறைவேற்றப்பட்டது., வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர்
காப்புறுதி திட்டம் போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்கள் பல வழி முறைகளில் தகர்க்கப்பட்டன,
உற்பத்தி திறன் பல மடங்கு அதிகரித்த பொழுதே,உண்மை
ஊதியம் குறைந்தது. மதிப்பு உருவாக்க செலவில் ஊதியத்தின் பங்கு 9 சதவீதமாகக் குறைந்தது.
அதே சமயம் லாபத்தின் பங்கு 60 சதவீதமாக உயர்ந்து அசைந்து கொண்டிருந்தது. சர்வ தேச தொழிலாளர்
அமைப்பின் இந்திய ஊதிய அறிக்கை 2018 ன் படி நாட்டில் 82 சதவீத ஆண் தொழிலாளர்களும்
92 சதவீத பெண் தொழிலாளர்களும் மாதத்திற்கு ரூ.10000/= ற்கும் குறைவாக ஊதியம் பெறுகிறார்கள்..
இந்தியாவில், 67 சதவீத வீடுகள் மாத ஊதியம் ரூ 10000/= ற்கும் குறைவாக உள்ளதென கூறியதாக
அஸிம் பிரேம்ஜி பல்கலை கழக அறிக்கை 2018 சொல்கிறது. 2015-16 வரை மொத்த தொழிலாளார்களில்
46 சதவீதமான 57 சதவீத சுய தொழில் புரிவோர்
மாதந்தோறும் ரூ 7000/= மும், மொத்த தொழிலாளார்களில் 50 சதவீதமான பேர் வெறும் ரூ
5000/= மாதம் பெறுவதாக தொழிலாளர் செயலகம் அறிவிக்கிறது. இதெல்லாம் சராசரி எண்களே. பெரும்பான்மை
உழைக்கும் பணியாளர் திரளிற்கு உண்மை ஊதியம் மிகவும் கீழே இருக்கும். அதுவும் தொடர்ச்சியாக
ஒவ்வொரு மாதமும் கிடைக்காது. அதே சமயம் முதலாளிகளுக்கு வரி தள்ளுபடிகளும், விலக்குகளும்
ஒவ்வொரு வருடமும் ரூ 5 இலட்சத்திற்கும் மேலாக கிடைக்கிறது. மேலும் பெரு நிறுவனங்களின்
வரி செலுத்தாத தொகை மட்டும் ரூ 7.31 இலட்சம் கோடி. (2016-17).
கிராமப்புற தபால்காரர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள்,
ரெயில் ஓட்டுனர்கள், பாதுகாப்பு துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், ஒப்பந்த,
வெளி நிறுவன ஊழியர்கள், பி எஸ் என் எல் ஊழியர்கள், சாலை போக்குவரத்து தொழிலாளர்கள்,
மின் ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா(ASHA-அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள்)
மற்றும் மதிய உணவு ஊழியர்கள், துப்புரவு மற்றும் முனிசிபல் தொழிலாளர்கள், மருந்து மற்றும்
விற்பனை பிரதிநிதிகள், பன்னாட்டு நிறுவனங்களின் நவீன ஆட்டோமொபைல் உற்பத்தியில் வேலை
செய்யும் தொழிலாளர் உள்ளிட்ட ஆலைத்தொழிலாளர்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள், ஏன், தகவல்
தொழில் நுட்ப ஊழியர்கள் உட்பட அனைவரும் அவரவர் கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் இறங்கினர்.
இந்த துறைகள் பலவற்றில் தொழிலாளார்களின் முழு பங்களிப்போடு வேலை நிறுத்தம் முழுமையாக
நடைபெற்றது. ஓய்வூதிய திட்டங்களின் மீதான தாக்குதலால் ஓய்வூதியதாரர்களும் அதனை எதிர்த்து போராட்டத்திற்கு
வந்து கொண்டிருக்கின்றனர்.
அண்மையில் நடந்த அனைத்து போராட்டங்களிலும், பெண் தொழிலாளர்களின்
பெரும் பங்களிப்பும், அணி சேர்க்கையும், அவர்களின் தலைமைப்பண்பும் முக்கிய அம்சமாகும்.
பிரச்சனை சார்ந்த போராட்டங்களில் முன்னெப்போதும் இல்லாத ஒற்றுமையை இக்காலத்தில் காண
முடிந்தது. இத்தகைய தாக்குதல்களுக்கெதிராக, 20 கோடி தொழிலாளர்களுக்கு மேல் பங்கேற்ற,
2 செப்டம்பர் 2015, 2 செப்டம்பர் 2016 மற்றும் 8, 9 ஜனவரி 2019 உள்ளிட்ட பொது வேலை
நிறுத்தத்தில் பி எம் எஸ் நீங்கலாக மற்ற அனைத்து மத்திய தொழிற்சங்கங்களுடான ஒற்றுமை
பலப்படுத்தப்பட்டது.
விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வாலிபர், மாணாவர்,
மாதர், தலித், பழங்குடியினர் என சமுதாயத்தின் பல்வேறுபட்ட பகுதியினரும் அரசாங்கத்தின்
கொள்கைகளுக்கெதிராக போராடினர்
வளர்ந்துவரும்
தொழிலாளர்-விவசாயி ஒற்றுமை: இந்தியாவில்
தொழிலாளார் வர்க்க இயக்கங்கள் பிரச்சனைகளை கையிலெடுப்பதில் மேன்மேலும் பக்குவமடைவதோடு,
விவசாயிகளின் போராட்டங்களோடு இணைந்து கொள்கின்றன என்பது தற்போதைய இயக்கங்களின் குறிப்பிடத்தக்க
அம்சமாகும். 2015 பொது வேலை நிறுத்த கோரிக்கைகளில் எழுப்பப்பட்ட முக்கிய கோரிக்கைகளில்
நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை ஒன்றாகும். தொழிற்சங்க இயக்கம் தீவிரமாக விவசாயிகளின்
நலன்களை ஆதரித்தது. 9 ஆகஸ்ட் 2018 சிறை நிரப்பும் போராட்டம்,14, ஆகஸ்ட் சமுஹிக் ஜாக்ரண்,(
கூட்டான விழிப்புணார்வு), மற்றும் சரித்திர முக்கியத்துவமான 5 செப்டம்பர் 2018 மஸ்தூர்
கிஸான் சங்கர்ஷ் பேரணி (தொழிலாளர் விவசாயி போராட்ட திரளணி) ஆகியவற்றில் அமைப்பு ரீதியாக
மேலிருந்து கீழ் வரை படிப்படியாக திரட்ட அ இ வி சங்கம் மற்றும் அ இ வி தொ சங்கம் ஆகியவற்றுடன்
இணைந்து தொழிலாளர் விவசாயிகள் கூட்டணி என்ற திசையில் உருவாக்க சி ஐ டி யூ முன்முயற்சி எடுத்தது. விவசாயிகளின்
போராட்டங்கள் சி ஐ டி யூ வினால் முழுமையாக ஆதரிக்கப்பட்டன. மத்திய தொழிற்சங்கங்களால்
ஏற்று கொள்ளப்பட்ட தொழிலாளர் கோரிக்கை சாசனம், அனைத்து மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்கியதாகும்.
பல்வேறு பட்ட மக்களின் தொடர்ச்சியான இயக்கங்கள்தான்,
வர்க்க அமைப்புக்களின் பலமான அடித்தளத்துடன், வர்க்க, வெகுஜன, சமூக அமைப்புக்களின்
கூட்டு மேடையாக ஜன் ஏக்தா, ஜன் அதிகார் அந்தோலன் (மக்கள் ஓற்றுமை மக்கள் அதிகாரம் இயக்கம்)
அமைய உதவியது. நாட்டின் உழைக்கும் மக்களின்
சில முக்கிய பிரச்சனைகளை நடை பெற்று கொண்டிருக்கும்
பாராளுமன்ற தேர்தலில் பிரதான அரசியல் விவாதமாக்கியது இந்த இயக்கங்களின் பலனே ஆகும்..
முன்னோக்கிய பாதை:
நவீன தாராளமயமாக்கலின் தோற்றுவாய்க்குப் பின், முதன்
முறையாக அரசியலும், அடிப்படை வர்க்கங்களான தொழிலாளர் வர்க்கம், விவசாயத் தொழிலாளர்
மற்றும் ஏழை விவசாயிகளின் இயக்கங்களும் மையப்புள்ளியாக வெளிப்பட்டுள்ளன. வாலிபர், மாணாவர்,
மாதர், சூழலியலாளர்கள், தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர், அனைத்து ஒதுக்கப்பட்ட
பிரிவினர்களின் முற்போக்கு சமூக இயக்கங்கள் இந்த நீரோட்டத்தில் இணைகிண்றனர்.
ஆயினும், சி ஐ டி யூ வின் செயற்குழு சுட்டிக்காட்டுவது
வருமாறு: “ நவீன தாராளமய முதலாளித்துவ ஒழுங்குமுறை அமைப்பின் உள்ளார்ந்த நெருக்கடியானது,
பல நாடுகளில், தீவிர வலதுசாரி சக்திகள் அரசியல் அரங்கில் தலை தூக்கும் நிகழ்வோடு சேர்ந்தே
நடக்கிறது. நவீன தாராளமய கொள்கைகளின் தாக்கம் மக்களின் வாழ்வில் மற்றும் வாழ்வாதாரத்தில்
ஏற்படுத்தும் பிரச்சனைகளினால் அவர்களின் மத்தியில் வளர்ந்து வரும் அதிருப்தியை, அமைதியின்மையை
வலதுசாரி சக்திகள் தங்களின் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த முடிகிறது. உழைக்கும்
மக்களின் பரந்துபட்ட போராட்டங்கள் நடந்த போதிலும், பல நாடுகளில் வலதுசாரிகள் தலை தூக்க
காரணம், சமூக ஜனநாயகவாதிகளின் துரோகங்களும் மற்றும் மாற்று பொருளாதார முறையை தராத,
தொடர்சியாக வர்க்க பார்வையோடான போராட்டங்களாய் அவற்றை கொண்டு செல்லாத பலகீனப்பட்டுள்ள
இடதுசாரிகளின் தோல்வி அல்லது இரு போக்குகளுமேயாகும்.
அரசியல் அரங்கில் இந்தியாவும் வலது மாற்றத்தை எதிர்
கொண்டு வருகிறது. நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக இழை தீவிரமான தாக்குதலுக்குள்ளாகிறது.
பாஜக மட்டுமல்ல, இடதுசாரிகள் தவிர்த்த மற்றெல்லா முக்கிய அரசியல் கட்சிகளும் நவீன தாராளமயக்
கொள்கைகளுக்காக வாதிடுபவர்களே. அரசியல் விவாதத்தில் சில அடிப்படை பிரச்சனைகளை வர்க்க,
வெகுஜன இயக்கங்கள் கொண்டு வரமுடிந்தாலும், தேர்தலிற்கு பின்னர் கூட உழைக்கும் மக்களுக்கு
ஆதரவாக அரசின் கொள்கைகளில் அதிக மாற்றமிருக்கப் போவதில்லை. மாறாக, முதலாளித்துவ அமைப்பின்
உள்ளார்ந்த நெருக்கடி இன்னும் தீவிரமாவதால், உழைப்பவர் மீதான தாக்குதலும் மிக அதிகமாகப்
போகிறது.
எவ்வாறு உழைக்கும் மக்களின் போராட்டங்களை முன்னெடுப்பது மற்றும் அதனை பலப்படுத்துவது என்பதும், ஜனநாயகத்தை காத்திடவும், அவ்வப்போது அரசை மாற்றுவது மட்டுமேயின்றி கொள்கைகளில் மாற்றம் கொணர அவ்வாறான போராட்டங்களை எப்படி அரசியல் சக்தியாக மாற்றுவது என்பதும்தான் தொழிற்சங்க இயக்கத்தின் முன்னால் உள்ள சவாலாகும். பரந்து விரிந்த பலமான தொழிற்சங்க இயக்க அடித்தளம் இவ்வாறன இயக்கத்திற்கு அஸ்திவாரமாகும். விவசாயிகளின் இயக்கம் இணைவதால் இந்த வர்க்க அணி சேர்க்கை, பொருளாதார தாக்குதலுக்கு எதிரான அடித்தளமாக மட்டுமில்லாமல், கிராமப்புறங்களின் சமூக ஒடுக்குமுறை, மற்றும் வகுப்புவாத பிரிவினை அரசியலிற்கு எதிரான சக்தியாகவும் விளங்கும். வரும் நாட்களில், தாக்குதலுக்கு எதிரான, மக்களுக்கான மாற்றை முன்னெடுப்பதாக, அனைத்து வகையான சுரண்டலுக்கும் முடிவுகட்டி, எழும் இந்தியாவை வடிவமைப்பதில் வர்க்க அரசியல் ஒர் தீர்மானகரமான பங்கினை வகித்திடும்..
கதை: ஒரு மலை இருந்தது. அந்த மலைக்கு மேல் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் ஒரு ஏரி இருந்தது. மக்கள் தினமும் அந்த ஏரிக்குத் தண்ணீர் எடுக்கச் செல்வார்கள். ஒரு முறை சென்று வர 30 நிமிடம் ஆகும். ஊரில் இருந்த ஒருவன் யோசித்தான், சில வருடங்கள் கஷ்டப்பட்டு மலையைக் குடைந்து நீரை கிராமத்தின் பக்கம் திருப்ப ஒரு சுரங்கம் தோண்டினான். இப்பொழுது நீர் கிராமத்துக்கு அருகில் ஒரு வெட்டவெளியில் குளமாக்கியது. பிறகு பெருகி ஒடி புது நீரோடை உண்டானது. சுரங்கம் வெட்டியவன் நீரை விற்க அனுமதி வாங்கினான். நீரின் விலையை எப்படி நிர்ணயிப்பது? அதற்காக அவன் ஒரு கணக்கு போட்டான். ஒரு முறை தண்ணீர் எடுத்துவர 30 நிமிடம் ஆகும். ஒருமுறைக்கு இரு குடங்கள் தண்ணீர் எடுத்துவர முடியும். ஆக 15 நிமிடம் ஒரு குடத்திற்கு.
ஒரு மனிதனின் சராசரி வருமானம் 8 மணி நேர உழைப்பிற்கு 160 ரூபாய். அதாவது மணிக்கு 20 ரூபாய். 15 நிமிட நேரத்திற்கு 5 ரூபாய். ஆக நீரின் தற்போதைய விலை ஒரு குடம் 5 ரூபாய். எனவே தன்னுடைய குளத்திலிருந்து எடுக்கும் நீர் குடம் 3 மூன்று ரூபாய் என நிர்ணயித்தான்.
மக்களும் அவனின் விளம்பரத்தில் மயங்கி குடம் 3 ரூபாய்க்கு வாங்கத் தொடங்கினர். இதைக் கண்ட இன்னொருவனுக்குத் தானும் ஒரு சுரங்கம் வெட்டவேண்டும் எனத் தோன்றியது. அவன் இன்னும் கொஞ்சம் தாழ்வாக வரும்படிக்கு தன் சுரங்கத்தை வெட்டி நீரை கிராமத்தின் இன்னொரு பக்கம் சேமித்தான். அவன் குடம் நீர் இரண்டு ரூபாய்க்கு விற்கத் தொடங்கினான். அதனால் முதலாமவனும் விலையைக் குறைக்க வேண்டியதாயிற்று. இதில் நல்ல இலாபம் இருப்பதைக் கொண்ட இன்னும் சிலர் சுரங்கம் வெட்ட முனையவே… முதலில் தொழில் ஆரம்பித்த முதலாளிகள் அதற்குத் தடை கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.
ஏரியின் நீரை கிராமத்திற்குக் கொண்டுவர முதலில் முயன்றதால் ஏரி நீர் முழுக்கத் தங்களுக்கே சொந்தம் என்று அவர்கள் வாதாடினர். தங்களின் முயற்சியால் கிராமம் செழித்தது. கிராமம் முன்னேறியது. மக்களுக்கு எவ்வளவு இலாபம் கிட்டியது எனக் கணக்கு காட்டினார். ஒரு குடம் தண்ணீருக்குக் கிராமத்திற்கு மூன்று ரூபாய் மிச்சமானது. ஆகவே இத்தனை ஆண்டுகளில் கிராமத்திற்கு எவ்வளவு சேமிப்பை வழங்கி இருக்கிறோம் எனப் பட்டியலிட்டுக் காட்டினர்.
மனம் திருப்தியடைந்த நீதிபதியும் ஏரியின் நீர் முழுதும் அவர்களுக்கே உரியது என்றும், வேறு யாரும் சுரங்கம் தோண்டக் கூடாது என்றும் தீர்ப்பு வழங்கினார். அது மடுமில்லாமல், இவர்கள் செய்யும் தொழில் பொது நலம் சார்ந்தது என்பதால் அதற்கு வரி விலக்கும் கிடைத்தது. இதுதாங்க முதலாளித்துவம்.
இந்தக் கதையில் வந்துள்ள விளக்கம் சரியான ஒன்றா?
– ராமன் குட்டி, திருப்பூர்.
விளக்கம்:மேற்சொன்ன கதை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. எளிமைப்படுத்தியதில் பல உண்மைகள் விடுபட்டுள்ளன. பொதுச் சொத்தாக உள்ள தண்ணீர் விற்பனைப் பண்டமாக மாற்றப்படுவதை நாம் நடைமுறையில் கண்டுள்ளோம். பல பொதுக் குடிநீர் திட்டங்களும் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. இத்தகைய திட்டங்களால் மக்களின் அலைச்சல் குறைந்து பலன் கிடைப்பதைப் பார்க்கிறோம். மனிதனின் இயல்பே தான் சந்திக்கும் சிக்கல்களுக்குப் புதுமையான தீர்வுகளை நாடுவதுதான்.
மலைக்கு மேல் உள்ள ஏரியில் இருந்து நடந்து சென்று தண்ணீர் எடுக்கும் பலருக்கும் சுரங்கம் வெட்டும் எண்ணம் தோன்றும். செயலாக்குவற்கான மூலதனத்தை யார் செலுத்துகிறாரோ அவர்தான் முதலாளியாகிறார். ஒருவரால் சுரங்கம் வெட்ட முடியாது, அதற்கான தொழிலாளர்களை அமைதி வேலை வாங்குகிறார். சுரங்கம் வெட்டவும், பராமக்கவும் செலுத்தப்படும் உழைப்பும், அதற்கு நியாயமான கூலி என்ன வழங்கப்பட்டது என்பதும் கதையில் இல்லை.
தேவைகளை நிறைவேற்றுவது என்ற அடிப்படையில் முதலாளித்துவத்தின் பங்கை யாரும் மறுப்பதில்லை. ஆனால், உற்பத்திப் பொருளின் விலை நிர்ணயிக்கப்படுவது மேற்சொன்ன அடிப்படையில்தானா?
தண்ணீர் என்ற பொதுவான வளத்தை விற்பனைச் சரக்காக ஆக்கினால் என்ன நடக்கும் என்பதை ஒரு நடைமுறை உதாரணத்தோடும் பார்க்கலாம். 2006-ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாகத் தனியார் முதலீட்டோடு அமலுக்கு வந்தது திருப்பூர் மூன்றாவது குடிநீர் திட்டம். கிராமப்புற மக்களுக்கு 1,000 லிட்டர் தண்ணீர் ரூ.3; நகர்ப்புற மக்களுக்கு ரூ.4.50 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டது. பத்தாண்டுகளில் இந்தக் குடிநீர் கட்டணம் ரூ.21 ஆக உயர்ந்துள்ளது. அதில் ரூ.7.50 மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசு ரூ.13.50 கொடுக்கின்றன. அரசு செயல்படுத்தும் குடிநீர் திட்டங்களில் கட்டணம் உயரவில்லை என்பதையும் இணைத்து நோக்கினால் மேற்சொன்ன கதை தவறவிட்டுள்ள உண்மைகள் புரிபடும்.
– காஞ்சிபுரம் வாசகர் வட்டம்
ஒரு சமூகம் எந்தக் கட்டத்தில் உள்ளதென்பதை அங்குப் பிரதானமாக நிலவும் உற்பத்தி முறையே தீர்மானிக்கிறது. முதலாளித்துவச் சமூகத்தில் பெரும்பகுதி உற்பத்தி ஆற்றலையும், உற்பத்திக் கருவிகளையும் கொண்ட முதலாளி வர்க்கம் ஆளும் வர்க்கமாக உள்ளது. உற்பத்திக் கருவிகள் உடைமையாக இல்லாத தொழிலாளிவர்க்கம் சுரண்டலுக்கு ஆட்படுகிறது. இந்தக் கட்டம் பற்றிக் காரல் மார்க்ஸ் “வர்க்கப் பகைமைகளை அது (முதலாளித்துவச் சமூகம்) எளிமைப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த சமுதாயமும், இருபெரும் பகை முகாம்களாக, ஒன்றையொன்று நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் – முதலாளித்துவ வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்னும் – இருபெரும் வர்க்கங்களாக, மேலும் மேலும் பிளவுபட்டு வருகிறது.” என்கிறார்.
வர்க்கப் புரட்சி வெற்றியடைந்தவுடன் முதலாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்திலிருந்து வீழ்த்தப்படுகிறது. ஆனால் முந்தைய சமூகத்தில் நிலவிய நிலைமைகளை மாற்றாமல், முன்னேறிய சமூகத்தை ஏற்படுத்த முடியாது. முதலாளித்துவச் சமூகத்தால் வடிவமைக்கப்பட்ட தனி மனித சிந்தனை, கலை, கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், நிர்வாக முறை என அனைத்தும் தொடர்கின்றன. “இந்த நிலைமைகளைப் புரட்சிகரமாக மாற்றியமைப்பதற்குப் பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசை நிறுவுதல் அவசியம்” எனக் குறிப்பிடுகிறார் மார்க்ஸ். இவ்வாறு அரசு அமைக்கப்பட்டவுடன் அந்தச் சமூகம் சோசலிசக் கட்டத்தை எட்டுகிறது. முழுமையான சோசலிச அமைப்பை எட்டுவது நேர் பாதை அல்ல. ஏற்ற இறக்கங்கள் நிறைந்த பல நிலைப் போராட்டங்கள் தேவைப்படுகின்றன.
சோசலிச சமூகம் மனித வரலாற்றின் முக்கிய நவீன உற்பத்தியமைப்பாகும். உற்பத்திக் கருவிகள் சமூகத்தின் சொத்தாக்கப்படுவதுடன், பெரும்பான்மைப் பாட்டாளிகளுக்கான ஜனநாயகத்தை உறுதி செய்கிறது. லாப வெறிக்கு மாறாக மனித சமூகத் தேவை அடிப்படையில் செயல்பட்டு இயற்கையை, சூழலைப் பாதுகாக்கிறது.
தன்னுடைய அரசும் புரட்சியும் நூலில் இதுபற்றிய விவாதத்தை விளக்குகிறார் வி.இ.லெனின், அரசியல் மாறுதலுக்கான ‘முதல் நிலை கம்யூனிச’ (அல்லது) சோசலிசக் காலகட்டத்தில் உற்பத்தி ஆற்றல்கள் சமூக உடைமையாக இருக்கும், உற்பத்தியில் விளைவதும் சமூகத்திற்கே சொந்தமாக அமைந்திடும். முதலாளி வர்க்கத்தை அரசு அதிகாரத்திலிருந்து அகற்றி, உற்பத்திச் ஆற்றல்களை வளர்த்தெடுக்கும் இந்தக் காலகட்டம் சோசலிச சமூகம் எனப்படுகிறது. ‘சக்திக்கேற்ற உழைப்பு, உழைப்புக்கேற்ற ஊதியம்’ என்ற லட்சியத்தை எட்டுவதில், ஒவ்வொரு நாடும், தன் சொந்த தேசிய நிலைமைகள், உற்பத்தி ஆற்றல்களின் வளர்ச்சி, உலக நிலைமைகளைக் கணக்கிட்டு பாதை வகுத்து நகர்கிறது.
உலகம் பல நாடுகளாகப் பிரிந்திருக்கும் சூழ்நிலையில், பின் தங்கிய நாடுகளிலேயே சோசலிசப் புரட்சிகள் வெற்றியடைந்துள்ளன. பின்னடைவுகளையும் சந்தித்துள்ளன. அந்த அனுபவங்களை உள்வாங்கியே தற்கால உத்திகள் வகுக்கப்படுகின்றன.
மக்கள் சீனம் சோசலிச கட்டத்தின் ஆரம்ப நிலையில் உள்ளதாகவே குறிப்பிடுகிறது. சோசலிசத்துக்கும், முதலாளித்துவத்துக்குமான முரண்பாடு முக்கியமாக அமைந்துள்ள நிலையில் – முதலாளித்துவ நெருக்கடிகளை, சோசலிசப் புரட்சிக்கான வாய்ப்பாக மாற்றியமைப்பதே இன்றைய அவசியக் கடமையாகும். முதலாளித்துவ அரசாட்சியை வீழ்த்திய பிறகுதான் சோசலிசத்தைக் கட்டமைப்பது பற்றிய சோதனைக்கான அவசியம் எழுகிறது.
சமீப காலத்தில் சர்வதேச அரங்கில் நடைபெற்ற நிகழ்வுகள் ஏராளமாய் இருந்தபோதிலும் அவற்றில் ஏகாதிபத்தியத்தின் தலையீடு என்ற அம்சம் முக்கியமானது சுதந்திர பாலஸ்தீனம் மீது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தாக்குதல்கள், ஈராக் மற்றும் சிரியாவை மையமாக வைத்து செயல்பட்டு வரும் உலகின் புதிய பயங்கரவாத சக்தியாக வளர்ந்துள்ள ஐஎஸ் எனும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு ஷியா, குர்து மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினர் மீது தொடுத்து வரும் தாக்குதல்களும் உக்ரைனில் கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே நீடித்து வரும் உள்நாட்டு குழப்பமும், பூதாகரமாக முன்நிற்கிறது. அதனைச் சார்ந்து ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளாக ரஷ்யாவிற்கும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களிடையே நிலவிவந்த முரண்பாடுகள் முன்னுக்கு வந்துள்ளது. மேலும், அவை ஒரு மோதல் போக்கிற்கு இட்டுச் செல்லும் அளவிற்கு தீவிரமடைந்துள்ளதும் முக்கியமானவையாகக் குறிப்பிடலாம்.
மேற்குறிப்பிட்ட மூன்று நிகழ்வுகளில் ஒன்றில் இஸ்ரேலின் ஜியோனிச இனவெறிக் கொள்கையின் மூலம் ஏகாதிபத்தியம் நேரடியாக தனது கோர முகத்தை வெளிக்காட்டுகிறது என்றால், ஐஎஸ்; பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித் தனமான செயல்பாடுகளின் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னை மறைமுகமாக வெளிக்காட்டிக் கொள்கிறது என்பதே உண்மை. ஆனால் உக்ரைன் விவகாரம் இதிலிருந்து மாறுபட்டது. அதாவது உக்ரைனைச் சார்ந்து இன்று கிழக்கு ஐரோப்பாவில் நடக்கும் நிகழ்வுகள் நிதிமூலதன உலகின் வளர்ச்சிப் போக்கில் ஏற்படும் மாற்றங்களையும், அதன் விளைவாக முதலாளித்துவ முகாமிற்கு உள்ளேயே ஏகாதிபத்தியம் தனது பரமவைரியைச் சந்திக்க வேண்டிய நிலையும் இன்று ஏற்பட்டுள்ளது. ஆனால் முன்பு சோசலிச சோவியத் யூனியனாக இருந்த இடத்தில் தற்போது முதலாளித்துவ ரஷ்யாவை அது எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதுதான் அதிலுள்ள அடிப்படையான வேறுபாடாகும்.
உக்ரைன் விவகாரம் குறித்து ஏராளமானக் கட்டுரைகள் சமீபத்தில் வெளிவந்துள்ளன. இரண்டு வகையில் விவாதிக்கின்றனர். ஒன்று இப்பிரச்சனையில் கிரீமியாவை ரஷ்யா பொது வாக்கெடுப்பு நடத்தி தன்னுடன் சேர்த்துக் கொண்டதை மையமாகக் கொண்டது. ரஷ்யாவை விமர்சித்தும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாகவும் அல்லது ரஷ்யா மற்றும் மேற்கத்திய சக்திகளை இணையாக பாவித்தும், கருத்துக்களை முன்வைக்கின்ற ஒரு பிரிவினர், இதில் மற்றொரு பிரிவினர் உக்ரைன் விவகாரத்தை மார்க்சிய – லெனினியக் கண்ணோட்டத்துடன் அணுகுபவர்கள்.
பேரா. அய்ஜாஸ் அகமது உக்ரைன் விவகாரத்தின் மையப்புள்ளி எது என்பதை விளக்கிடும் வகையில் தனது கட்டுரையில் விவரித்துள்ள பகுதி முந்தைய பனிப்போரின் மையப் புள்ளியாக முரண்பாடுகள் கொண்ட இரண்டு சமூக அமைப்புகளின் செயல்பாடுகள் இருந்தன. சோவியத் யூனியன் சிதைந்த பிறகு அது முடிவுக்கு வந்தது. இன்று நாம் காணும் பனிப்போர் நிலைக்கு அப்படி ஒரு அம்சம் இருப்பதாகக் கூற முடியாது. ஏனெனில் ரஷ்யா சோவியத் யூனியன் அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.
அய்ஜாஸ் அகமது இக்கட்டுரையில் இன்றைய முதலாளித்துவ ரஷ்யா ஏகாதிபத்தியங்களோடு முரண்பாடு கொண்டுள்ளதையும், அது ஒரு மோதல் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என்பதையும் அதற்கான அரசியல் பொருளாதாரம் மற்றும் பூகோள ரீதியான காரணங்களை வரலாற்று ரீதியாக விளக்கியுள்ளார். உக்ரைன் விவகாரம் குறித்து இக்கட்டுரை போதுமான ஒளியைப் பாய்ச்சியுள்ளது என்றே குறிப்பிடலாம்.
அதேபோல் இப்பிரச்சனை குறித்து பிரபாத் பட்நாயக் கூறுவதைக் காண்போம். உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவிற்கும், மேற்கத்திய வல்லரசுகளுக்கும் முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உலகப் பொருளாதாரத்தின் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்.
டாலர் என்ற ரிசர்வ் நாணயம் (உலக பொது நாணயம்) இல்லாமலேயே நாடுகளுக்கு இடையில் பரஸ்பரம் வர்த்தகம் செய்து கொள்வதே அவரது திட்டம். எந்தெந்த நாடுகளெல்லாம் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு ஆளாகி உள்ளனவோ அல்லது அவற்றை எதிர்த்து துணிந்து நிற்கின்றனவோ அவற்றோடு அத்தகைய இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்வதற்கு தயாராகி வருகிறது. அத்தகைய ஒப்பந்தங்களில் பணப்பட்டுவாடா அமெரிக்க டாலரில் இருக்காது. மாறாக இருதரப்பு வர்த்தக நாடுகளின் நாணயங்களிலேயே இருக்கும் எனக் கூறியதோடு, ரஷ்ய அதிபர் புடினின்; அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து அவசரப்பட்டு நாம் எந்த முடிவிற்கும் வந்துவிடக் கூடாது. ரஷ்ய செல்வந்தர்கள் மேற்கத்திய வங்கிகளில் அநேகமாக டாலர் வடிவிலேயே சொத்துக்களை வைத்துள்ளனர். டாலரைத் தவிர்க்கும் முயற்சியினை ரஷ்யக் கார்ப்பரேட் முதலாளிகள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அத்தகைய வர்க்க எதிர்ப்பினை புடின் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். என்னதான் அமெரிக்க எதிர்ப்பு கொண்டதாக இருந்தாலும், புடின் ரஷ்யாவும், சோவியத் யூனியனும் ஒன்றல்ல, நாளைக்கே புடின் மேற்கத்திய நாடுகளிடம் சரணடைந்து டாலர் தவிர்ப்பு நடவடிக்கையினைக் கைவிட்டாலும் அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய ரஷ்யாவின் நடவடிக்கை பற்றிய பிரபாத் பட்நாயக் கருத்துக்களிலும், அய்ஜாஸ் அகமதுவின் கட்டுரையிலும் ஒரே குரலைக் காண்கிறோம்.
எப்படியிருப்பினும் இவ்விரண்டு விளக்கங்களும் இதுவரை வெளிவந்துள்ள கட்டுரைகளிலேயே உக்ரைன் விவகாரம் குறித்த முழுமையான ஒருங்கிணைந்த பார்வையைத் தருகிறது என்றே சொல்ல வேண்டும்.
ஆனாலும் இப்பிரச்சனை குறித்தும் இதன் மூலமாக குறிப்பிட்டுள்ள உயர் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளுக்குள் நிலவும் பகைமை குறித்தும் இன்னும் நாம் தெளிவுபெற வேண்டிய கேள்விகள் எஞ்சி இருக்கவே செய்கின்றன… அவை ரஷ்யாவில் முதலாளித்துவ வளர்ச்சியின் தற்போதைய கட்டமென்ன? முதலாளித்துவ ரஷ்யா ஏன் உயர் வளர்ச்சியடைந்த பிற முதலாளித்துவ நாடுகளோடு ஒத்திசைந்த போக்கை கடைபிடிப்பதற்கு மாறாக மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டும்? ரஷ்யாவிற்கும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாட்டில் உக்ரைன் வகிக்கும் பாத்திரமென்ன? கிரீமியாவை ரஷ்யா சேர்த்துக் கொண்டது ஆக்கிரமிப்பாகுமா? மேலும் புடினின் டாலர் தவிர்ப்பு நடவடிக்கையினை ரஷ்ய கார்ப்பரேட் முதலாளிகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றால் புடினின் நடவடிக்கைக்குப் பின்னால் ரஷ்யாவின் எந்த எந்த வர்க்கத்தின் நலன் ஒளிந்துள்ளது? டாலர் தவிர்ப்பு நடவடிக்கை பலதுருவ உலகிற்கு வலுசேர்க்குமா? டாலர் தவிர்ப்பு நடவடிக்கை ரஷ்யாவிற்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையேயான முரண்பாட்டின் மையமான அம்சமாகுமா? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை காண்பதன் மூலமே இந்நிகழ்வுப் போக்கின் ஸ்தூலமான அம்சங்கள் குறித்து நாம் தெளிவு பெற முடியும்.
ரஷ்யாவிற்கும், ஏகாதிபத்திய நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடு உக்ரைன் விவகாரத்தைச் சார்ந்து ரஷ்யாவிற்கும், பிற ஏகாதிபத்திய நாடுகளுக்கும் இன்று ஏற்பட்டுள்ள மோதல் சரியாகச் சொல்வதென்றால் ஜி-8 என்று ஏற்கனவே இருந்த உயர்வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பில் ரஷ்யாவிற்கும் இக்கூட்டமைப்பில் உள்ள இதர உறுப்பு நாடுகளாகிய அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், கனடா, இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடே ஆகும். கடந்த 10 ஆண்டுகளாகவே நிலவி வந்த இம்முரண்பாடு தீவிரமடைந்துள்ளதன் வெளிப்பாடே உக்ரைன் விவகாரமாகும். இப்பிரச்சனையில் ஜி-8 கூட்டமைப்பிலிருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்டு தற்சமயம் ரஷ்யாவிற்கு எதிராக பிற உறுப்பு நாடுகளடங்கிய ஜி-7 கூட் டமைப்பு அணி சேர்த்துள்ளது.
அப்படியானால் ரஷ்யாவைத் தவிர்த்த ஜி-7ல் உள்ள உறுப்பு நாடுகளிடையே முரண்பாடுகளோ, மோதலோ இல்லை என்று அர்த்தமல்ல. மேற்கண்ட நாடுகளுக்கு இடையேயான நலன்களும், பகைமையும் அக்கம், பக்கமாக நிலவவே செய்கின்றன. அவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. மூன்றாம் உலக நாடுகளின் மீது பொருளாதார நிர்பந்தங்களை திணிப்பதில் ஒன்றுபடுவதும், தங்களின் தேச நலன்களை பாதுகாக்க அவைகள் முரண்பட்டு நிற்பதும் உண்டு. ஆனால், மோதல் போக்கை தவிர்த்துவிடுகின்றன.
இங்கிலாந்திலிருந்து வெளியாகும் பில்லியனர்கள் குறித்த வெல்த் பத்திரிக்கை 2013ம் ஆண்டு உலக பில்லியனர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி உலகில் மொத்தம் 2170 பில்லியனர்கள் வசிக்கிறார்கள் என்றும், இதில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரம் 96 பில்லியனர்களைக் கொண்டு முதலிடத்தை பிடித்துள்ளது எனவும், 75 பில்லியனர்களைக் கொண்டு ஹாங்காங் இரண்டாவது இடத்தையும், 74 பில்லியனர்களைக் கொண்டு மாஸ்கோ மூன்றாவது இடத்தையும், 67 பில்லியனர்களைக் கொண்டு லண்டன் நகரம் நான்காம் இடத்தையும், 30 பில்லியனர்களைக் கொண்டு மும்பை 5வது இடத்தையும் பிடித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பில்லியனர்கள் வசிக்கும் நாடுகள் பட்டியலைப் பார்த்தோமானால் அமெரிக்கா முதலிடத்தைப் பெற்றுள்ளது. அங்கு 515 பில்லியனர்கள் வசிக்கிறார்கள். சீனா 157 பில்லியனர்களைக் கொண்டு 2வது இடத்தையும், ஜெர்மனி 148 பில்லியனர்களைக் கொண்டு 3வது இடத்தையும், இங்கிலாந்து 135 பில்லியனர்களைக் கொண்டு 4வது இடத்தையும், ரஷ்யா 108 பில்லியனர்களைக் கொண்டு 5வது இடத்தையும், இந்தியா 103 பில்லியனர்களைக் கொண்டு 6வது இடத்தையும் பிடித்துள்ளது.
மேற்கண்ட பில்லியனர்கள் பட்டியலில் முதல் ஐந்து நகரங்கள் பட்டியலில் 2011ல் இரண்டாவது மற்றும் ஐந்தாவது இடத்தை வகித்த ஜப்பான் மற்றும் பிரான்சின் நகரங்கள் ஒன்றுகூட இடம் பிடிக்கவில்லை என்பதும், அதேநேரத்தில் முதலாளித்துவ ரஷ்யாவின் மாஸ்கோ 4வது இடத்தைப் பிடித்துள்ளதும், அதேபோல் அதிகளவு பில்லியனர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலிலும் முதல் ஐந்து இடங்களில் ஜப்பான், பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்திய நாடுகள் இடம் பெறாத நிலையில், ரஷ்யா 5வது இடத்தை பிடித்துள்ளது என்பதும் கவனத்திற்கு உரியது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் வரிசையில் ஐரோப்பாவின் வலிமை வாய்ந்த பொருளாதார சக்திகளான ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு ரஷ்யா முன்னணி இடத்திற்கு வந்துள்ளது என்பதும், கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் ரஷ்யாவின் பொருளாதார வலிமை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு சவால்விடும் வகையில் வளர்ந்து வருகிறது என்பதும் சொல்லாமலே விளங்கும்.
உக்ரைன் வகிக்கும் பாத்திரம்…
முந்தைய சோவியத் ஒன்றியத்தின் இரண்டாவது பெரிய குடியரசாக உக்ரைன் திகழ்ந்தது மட்டுமல்லாமல் அதன் பொருளாதார வளர்ச்சிக்கும் மிகப்பெரும் பங்களிப்புச் செய்துள்ளது. குறிப்பாக அன்றைய சோவியத் ரஷ்யாவின் மொத்த வார்ப்பிரும்பு உருக்கு உற்பத்தியில் உக்ரைன் 5ல் 2 பங்கும், இரும்பு தாதுக்களில் 2ல் 1 பங்குக்கு அதிகமாக உலோக இயந்திரங்களும், 3ல் 1 பங்கு ரசாயன இயந்திரங்களும் பங்களிப்பாகத் தந்துள்ளது. டிராக்டர்கள், எஸ்கலேட்டர்கள் ஆகியவற்றிலும் மற்ற இயந்திரக் கட்டுமானப் பொருட்களிலும் கணிசமான பகுதியையும், உணவுப் பொருள்களில் பலவற்றையும், தருவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. உணவுப் பொருள் மையமாக விளங்கியதுடன் லட்சக் கணக்கான டன் தானியங்களும், காய்கறி உற்பத்தியில் 3ல் 1 பங்கும், சூரிய காந்தியில் 5ல் 1 பங்கும், சர்க்கரை வள்ளிக் கிழங்கு தேவையில் பாதியும், கால்நடை வளர்ப்பு தரும் அடிப்படை பொருட்களான வெண்ணெய், நெய், பாலாடைக் கட்டி போன்றவற்றில் 5ல் 1 பங்கும் உக்ரைன் தனது பங்களிப்பாகச் செய்துள்ளது.
இது தவிர இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் ஆக்கிரமிப்பால் ஏராளமான சேதத்தை உக்ரைன் சந்தித்தது. பாசிச ஆக்கிரமிப்புக் காலத்தில் உக்ரைனுக்கு நேர்ந்த நேரடியான பொருள் வகைச் சேதங்கள் சோவியத் யூனியனைத் தவிர மற்ற ஹிட்லர் எதிர்ப்பு நாடுகள் அனைத்தும் அடைந்த சேதங்களில் 4ல் 3 பங்குக்கும் அதிகமாகும்.
இத்தகைய ஏராளமான இயற்கை மற்றும் தாது வளம் கொண்ட உக்ரைன் மூன்று பொருளாதார பிரதேசங்களையும் கொண்டுள்ளது. அதில் டௌன்த்ஸ்க் – தினீப்பர் பொருளாதாரப் பிரதேசம் பிரதான தொழில்துறையாகவும் மற்றும் வளர்ச்சியடைந்த விவசாய பிரதேசமாகவும் உள்ளது. தென்மேற்கு பொருளாதாரப் பிரதேசத்தின் பிரமாண்டமான தொழில் மையமாக தலைநகரம் கீவ் உள்ளது. இது தவிர தீவிரமான விவசாயத்துடன் நவீன தொழில்துறை தெற்கு பிரதேசத்தின் பொருளாதார அடித்தளமாக இருக்கின்றது. மேலும், ரஷ்யாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள கிரீமியா பிற பகுதிகளோடு ஒப்பிடும்போது வளர்ந்துவரும் தொழில்துறை பிரதேசம் எனலாம். அதேபோல் இங்குள்ள செவஸ்டோபோல் துறைமுகம் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. இங்கு நாம் அழுத்தம் கொடுக்க விரும்புவது கிரீமியாவில் ரஷ்ய மொழி பேசும் தேசிய இனத்தவரின் பொருளாதார நலன்கள் அதாவது தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகள் ரஷ்யாவிலிருந்து உக்ரைன் – கிரீமியா – வழியாக எடுத்துச் செல்லப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயு சேமிப்புக் கிடங்குகளைச் சார்ந்து நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன என்பதாகும். எனவேதான் கிரீமியாவை பொதுவாக்கெடுப்பு நடத்தியபோது ரஷ்யாவுடன் இணைந்திட கிரீமியர்கள் விரும்பியது தாங்கள் ரஷ்யர்கள் என்ற தேசியப் பெருமிதத்தினால் மட்டுமல்ல, அவர்களது வாழ்வாதாரத்தை உறுதி செய்திடும் பொருளாதாரக் காரணிகள்தான் அதற்கான அடிப்படைக் காரணமாகும்.
உக்ரைன் விவகாரத்தில் எரிவாயுவின் பரிமாணம்
இன்றைய நிலையில் ரஷ்யாவிற்கும், ஐரோப்பாவுக்கும் இடையேயான எரிசக்தியை எடுத்துச் செல்லும் பிரதான வழித்தடமாக உக்ரைன் விளங்குகிறது. ஐரோப்பா தனக்குத் தேவையான எரிவாயுவில் 30 சதவீதத்தை ரஷ்யாவிடமிருந்தே பெற்றுக் கொள்கிறது. ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவிற்கு எடுத்துச் செல்லப்படும் எரிவாயுவில் பாதிக்கும் மேல் உக்ரைன் வழியாகவே எடுத்துச் செல்லப்பட்டதோடு தொடர்ந்து எரிவாயுவை கொண்டு செல்வதற்கான பைப்லைன் அமைக்கும் பணிகளை ரஷ்யா மேற்கொண்டு வந்தது.
தவிர உக்ரைனும் எரிசக்தியில் இயற்கை எரிவாயுவைச் சார்ந்துள்ள நாடாகும். மொத்த எரிசக்தி தேவையில் 40 சதவீதம் எரிவாயுவின் பங்களிப்பாக உள்ளது. அதில் உள்நாட்டுக்குத் தேவைப்படும் எரிவாயுவின் 60 சதமானத்தை ரஷ்யாவிடமிருந்தே பெற்றுக் கொள்கிறது. இது மட்டுமல்லாமல் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெ யில் பெரும்பகுதியையும் உக்ரைனுக்கு ரஷ்யா அளித்துவந்ததோடு அதனை சர்வதே சந்தை விலையில் பாதி விலைக்கு தொடர்ந்து அளித்து வந்துள்ளது. மேலும் எண்ணெய் வர்த்தகம் நிறுத்தப்பட்ட காலம் வரையில் அதற்கு 400 கோடி டாலர்பெறுமான எரிவாயுவைக் கட னாகத் தந்துள்ளது.
இது தவிர ஐரோப்பாவில் உள்ள வலிமை வாய்ந்த பொருளாதார சக்திகள் கணிசமான அளவுக்கு ரஷ்யாவிடமிருந்து எரிவாயுவைப் பெறுகின்ற அதேநேரத்தில் குறிப்பாக ஸ்லோவிக் குடியரசு மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகள் உக்ரைன் வழியாக ரஷ்யா அளிக்கும் எண்ணெயையே பெரும்பாலும் சார்ந்துள்ளன. மொத்தத்தில் ரஷ்யாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் எரிவாயுவின் 90 சதவீதம் ஐரோப்பிய நாடுகளுக்கே எடுத்துச் செல்லப்படுகின்றன. அதேபோல் ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெயில் 80 சதவீதத்தை ஐரோப்பாவே பெற்றுக் கொள்கின்றது. எரிவாயு மற்றும் எண்ணெய் ஏற்றுமதி மூலமாகக் கிடைக்கும் வருவாய் மட்டும் ரஷ்யாவின் பட்ஜெட்டில் 50 சதவீதத் தைப் பூர்த்தி செய்கிறது.
ஆகவே, மேற்கண்ட எரிசக்தி வர்த்தக நடவடிக்கைக்கு ஏதேனும் ஊறு ஏற்பட்டால் அதன் காரணமாக ஐரோப்பிய பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையான மூலப்பொருள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும். உக்ரைன் தேசமோ மூலப்பொருள் தட்டுப்பாட்டோடு சேர்ந்து வருவாய் இழப்பையும், ரஷ்யாவைப் பொருத்தமட்டிலும் கணிசமான வருவாய் இழப்பையும் சந்திக்க நேரிடும். ஆனாலும்கூட இதுபற்றி இங்குள்ள அரசுகள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அதற்கு மாறாக அவை ஒன்றுக்கொன்று பொருளாதாரத் தடை விதித்து போட்டிபோட்டு பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இதுகுறித்து தீக்கதிரில் வெளிவந்துள்ள சில விபரங்களைப் பார்ப்போம்.
பறிபோகும் மேற்குலகின் நலன்கள்…!
மேற்கண்ட நாடுகளிடையே உருவான மோதல் போக்கின் காரணமாக ரஷ்யா மீது முதலில் ஜி-7 கூட்டமைப்பில் உள்ள கனடாவும், பின்னர் அதனைத் தொடர்ந்து அமெரிக்காவும் தனித்தனியே பொருளாதாரத் தடை விதித்தன. பின்னர் ஜி-7 நாடுகள் கூட்டாக ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடை விதித்தன. உக்ரைனில் புதிதாக அதிபர் பொறுப்பேற்றுள்ள பெட் ரோபுரோஷென்கோ எடுத்த முதல் நடவடிக்கையே ரஷ்யாவுடனான பொருளாதார ஒப்பந்தத்தை தடை செய்ததுதான். இதற்கு பதிலடியாக ரஷ்யாவும் முதலில் உன்ரைனுக்கான எரிவாயு சப்ளையை நிறுத்தி வைத்ததுடன் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு ரஷ்யா தடை விதித்தது. இந்த அறிவிப்பால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அடங்கியுள்ள நாடுகள் உள்ளிட்டவைகள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. ஏனெனில் மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் பெரும்பாலானவை ரஷ்யாவில்தான் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இந்தத் தடையின் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக பிரான்ஸ் நாடு பெரும் இழப்பை சந்திக்கும் எனக் கருதப்படுகிறது. இது தவிர நெதர்லாந்து, ஜெர்மனி மற்றும் போலந்து உள்ளிட்ட நாடுகள் அதிக வருவாய் இழப்பைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஸ்பெயின் நாடு கடந்த 2012ம் ஆண்டு மட்டும் சுமார் 1 லட்சம் டன் அளவிற்கான பழங்களை ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்திருந்தது. இவற்றை இனி ரஷ்யா இறக்குமதி செய்யாததால் ஏற்கனவே பெரும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும் ஸ்பெயின் நாடு மேலும் அதிக சுமையை தாங்க வேண்டியது வரும். இதேபோல் கடந்தாண்டு மட்டும் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்களை அமெரிக்க கப்பல்கள் மூலம் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்திருந்தது. இந்த தடையின் மூலம் அமெரிக்கா மேற்குறிப்பிட்ட வருவாயை இழக்க வேண்டிய திருக்கும்.
அதேநேரம் இந்தத் தடையின் மூலம் தங்களது நாட்டில் ஏற்பட உள்ள உணவுப் பொருட்களின் பற்றாக்குறையை சமாளிக்கும் விதத்தில் பிரேசில், ஈக்வெடார், சிலி மற்றும் அர்ஜென்டினா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்திட ரஷ்யா முடிவெடுத்துள்ளதன் மூலம், அந்நாடுகளுடனான ரஷ்யாவின் வர்த்தக பரிமாற்றத்தின் அளவு பெருமளவு அதிகரிக்கக் கூடும் என தெரிகிறது.
இதுமட்டுமின்றி ஏற்கனவே பேராசிரியர் பிரபாத் பட்நாயக் தெரிவித்திருந்த படி டாலரின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் இழப்பைச் சரிகட்டவும் ரஷ்யா எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக செப்டம்பர்-10, 2014 (400 பில்லியன் டாலர் மதிப்பிலான) எரிவாயு விநியோக ஒப்பந்தத்தை சீனாவுடன் மேற்கொண்டுள்ளது. இதன்படி ரஷ்யா மற்றும் சீனா நாடுகளுக்கிடையே நடைபெறும் வர்த்தகப் பரிமாற்றங்களின்போது அந்தந்த நாடுகளின் பணத்தையே இருதரப்பு பரிமாற்ற நாணயமாக பயன்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி அதேநாளில் ஈரானுடனும் தொழில் வர்த்தகத்தை பெருக்கிக் கொள்ள ரஷ்யா புதிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி தங்களது சொந்த நாணயத்தில் வர்த்தகம் செய்து கொள்வதென இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் ஈரானின் அணு செறிவூட்டல் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி மாஸ்கோ ஆசிய வங்கி டெக்ரானைச் சார்ந்த நிறுவனங்கள், தற்காப்பு கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்புகள், ஏற்றுமதி நிறுவனங்கள், ஆயில் நிறுவனங்கள், விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் 6 வங்கிகளுக்கும், சில தனிநபர்களுக்கும் தடைவிதிப்பதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக மிக சமீபத்திய நிகழ்வாக ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜிலாவ்ரோவ் வெளியிட்டுள்ள அறிக்கை இந்நிகழ்வுப் போக்கின் திசைவழியை உணர்த்துவதாக உள்ளது. அதாவது 20.10.14 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளில் ரஷ்யாவுக்கு எவ்வித நெருக்கடியும் ஏற்படவில்லை. பொருளாதார தடைகளால் ரஷ்யா கொள்கைகளை மாற்ற முடியாது என்பதை அவர்கள் உணர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி அமெரிக்கா தனது கைவசம் உள்ள எரிவாயுவை சந்தைப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால் அது அவ்வளவு சுலபமாக ஈடேறக் கூடிய காரியமல்ல. இதுகுறித்து சிவில்ஸ் பீடியா இதழில் வந்துள்ள கட்டுரை முக்கியச் செய்தியாகும்.
தற்போதைய சூழலில் ரஷ்யாவின் எரிவாயு நிறுத்தத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை நிரந்தரமாக சமாளித்திட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு மாற்று வழி கண்டாக வேண்டும். அதற்குள்ள ஒரே வழி அமெரிக்காவிடமிருந்து எல்.என்.ஜி எனப்படும் நீர்ம எரிவாயுவைப் பெறுவதுதான். ஆனால், அமெரிக்காவிலிருந்து எரிவாயுவை சப்ளை மற்றும் ஏற்றுமதி செய்வதற்கான வசதி வாய்ப்புகள் இல்லை என்பதோடு, இத்தகைய நீர்ம எரிவாயுவை அமெரிக்க அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் பரிவர்த்தனை செய்திட முன்வராது. அதேநேரத்தில் அங்குள்ள தனியார் எண்ணெய் ஏகபோக நிறுவனங்களே ஈடுபடக் கூடும். அவ்வாறு அவை ஈடுபடும்பட்சத்தில் எண்ணெய் விலை சர்வதேச சந்தையை விடக் கூடுதலாகவோ, ஆசிய சந்தைக்கு இணையானதாகவோ அல்லது உச்சபட்ச விலையைக் கொண்டதாகவோ இருக்கும். இது உக்ரைனின் அடிப்படை பிரச்சனையான எண்ணெய் கடன் நெருக்கடியினை தீர்த்திட உதவாது.
இதன் மூலம் ரஷ்யாவிற்கும், ஜி-7 நாடுகளுக்கும் இடையிலான முரண்பாட்டின் தூண்டு விசை மட்டுமே உக்ரைன் விவகாரம் என்பது தெளிவாகிறது.
முரண்பாட்டின் மையமான அம்சம்…
ரஷ்யாவில் இன்று ஏற்பட்டுள்ள நிதி மூலதன வளர்ச்சியானது எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் அரசு ஏகபோகத்துடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இதன் செல்வாக்கை தக்கவைத்துக் கொள்வதோடு, உலக அளவில் ஆதிக்கம் விரிவடைய வேண்டுமானால் ரஷ்யா ஒரு பலமான பொருளாதாரக் கூட்டமைப்பாக தன்னை பலப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதோடுகூட மூலப்பொருள் மண்டிக்கிடக்கும் மத்திய கிழக்கு, மேற்கு ஆசியா, கிழக்கு ஐரோப்பாவை மையமாகக் கொண்ட தனது செல்வாக்கு மண்டலத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை நிலவுவதும் அவசியமாகும்.
ரஷ்ய அதிபர் புடின் யூரேசியன் யூனியன் என்ற பொருளாதாரக் கூட்டமைப்பை உருவாக்கிடவும். அதில் உக்ரைன் முக்கிய உறுப்பு நாடாக அங்கம் வகிக்க வேண்டும் என்பதற்கான திட்டத்தை வகுத்தார். அதன்படி மே-29, 2014 அன்று கஜகஸ்தான் தலைநகரம் அஸ்தானாவில் உடன்படிக்கையும் ஏற்பட்டது. அதன்படி ரஷ்யா, கஜகஸ்தான் மற்றும் பெலாரஸ் ஆகிய மூன்று நாடுகள் யூரேசியன் உறுப்பு நாடுகளாகும். இதில்தான் நான்காவது உறுப்பு நாடாக உக்ரைனை சேர அவர் வலியுறுத்தினார். இந்தப் புதிய பொருளாதாரக் கூட்டமைப்பை பற்றி புடின் வர்ணிக்கும் போது 170 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட பிரம்மாண்டமான, சக்திமிக்க பொருளாதார வளர்ச்சியின் பூகோள ஈர்ப்பு மையம் எனக் குறிப்பிட்டார்.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கையானது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சவால்விடும் பொருளாதாரக் கூட்டமைப்பாக விளங்குவதோடு, வளைகுடா பகுதியில் எண்ணெய் வளத்தை முற்றிலுமாகக் கொள்ளையிடும் கனவோடு கால்பதித்துள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நகக்கண்களில் ஊசியையும் ஏற்றியுள்ளது. எனவேதான் உக்ரைனில் ஜி-7 நாடுகள் தலையிட்டு விக்டர்யானு கோவிச்சை வெளியேற்றிவிட்டு புதிய அதிபராக வலது பிற்போக்குவாதிகளின் ஆதரவுடன் பெட் ரோபுரோஷென்கோவை அதிபராகக் கொண்டு வந்துள்ளனர். அதிபராக பொறுப்பேற்றவுடன் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பொருளாதார ஒப்பந்தம் செய்து கொள்ளச் செய்ததோடு, ஐரோப்பிய யூனியனில் உறுப்பு நாடாக இணைவதற்கான ஒப்பந்தத்தில் ஜுன் 27, 2014 அன்று கையெழுத்திடவும் செய்தார்.
இப்பிரச்சனை அய்ஜாஸ் அகமது கூறியதுபோல் முந்தைய பனிப்போர் காலத்தை நினைவூட்டும் அளவுக்கு இட்டுச் சென்றுள்ளது. ஒருபுறம் ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் நேட்டோ உறுப்பு நாடுகளைச் சார்ந்த 5000 ராணுவ வீரர்களும், பீரங்கி வாகனங்களும் மற்றும் போர் விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளனவென்றால், மறுபுறம் ரஷ்யா அணுஆயுத பரிசோதனையை மேற்கொண்டுள்ளது. இதுதவிர அமெரிக்கா நார்வேயின் மலைக்குகைகளில் பீரங்கி உள்ளிட்ட ராணுவ கவச வாகனங்களை நிறுத்தியுள்ளது. இது ஒருபுறமிருக்க உக்ரைனில் ஏற்கனவே அரசுக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதியில் உள்ளவர்களை உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்திக் கொன்று வருகிறது. இதில் கவனத்தை ஈர்க்கும் முக்கியமான அம்சம் உக்ரைன் ராணுவ வீரர்கள் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களை தாக்குதல் தொடுக்க மறுத்து ரஷ்யாவிற்குள் தஞ்சமடைந்து வருகின்றனர். தற்சமயம் உள்நாட்டில் ஆயுதம் ஏந்தி அரசு தரப்பில் நின்று சண்டையிடுபவர்கள் நியோ பாசிஸ்டுகள் மற்றும் வலதுசாரி பிற்போக்கு மற்றும் ஸ்வபோடா கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் மூலம்தான் விக்டர் யானுகோவிச்சை ஆட்சிக் கவிழ்ப்பு செய்துவிட்டு பெட்ரோபுரோஷென்கோ மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் அதிபரானார். எப்படியிருப்பினும் ராணுவ நிலைமைகளிலும் தற்சமயம் உள்நாட்டிலும், உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ரஷ்ய மொழி பேசுபவர்களிடமும் ரஷ்யாவுக்கான ஆதரவு நிலையே நிலவுகிறது. எனவே மேற்கத்திய நாடுகள் போரை தவிர்ப்பதையே விரும்புகின்றன.
தற்சமயம் இருதரப்பிலும் முழுமையான போரைத் தவிர்ப்பதற்கான எண்ணம் மேலோங்கியிருந்த போதிலும் இது நீண்ட காலத்திற்கு நீடிக்குமா? என்பது சந்தேகமே… ஏனெனில் இன்றைய ரஷ்யா முதலாளித்துவ அரசாக இருந்தாலும் அது ஒரு ஏகாதிபத்தியம் அல்ல… அதேநேரத்தில் ஜி-7 நாடுகள் அனைத்தும் ஏகாதிபத்தியங்களாகத் திகழ்கின்றன. அவற்றின் நிதிமூலதன நலன்கள் எண்ணெய் மற்றும் ராணுவ தொழில்துறையுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. எப்போதெல்லாம் நிதிமூலதனம் நெருக்கடியைச் சந்திக்கிறதோ அதனை இறுதியாக யுத்தத்தின் மூலமாகவே தீர்த்திட முயலும் என்பது ஏகாதிபத்தியங்களின் கடந்தகால வரலாறு.
இன்று ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள நிதிமூலதன வளர்ச்சியானது அதனை ஒரு பலம் வாய்ந்த பொருளாதார சக்தியாக மாறுவதையும், அதன் மூலம் அதன் செல்வாக்கு உலகெங்கும் பரவிட ஏதுவாகவே டாலர் தவிர்ப்பு நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. எனவே, இறுதியாக நாம் தெரிவிக்க விரும்புவது, இன்றைய தினம் அமெரிக்க ஏகாதிபத்தியம் தலைமை தாங்கும் நிதிமூலதன உலகின் நலன்களுக்கு எதிரான மற்றும் சவால்விடும் ஒரு புதிய சக்தியை அதன் முதலாளித்துவ கட்டமைப்பிற்குள்ளேயே சந்திக்க வேண்டிய நிலை அதற்கு ஏற்பட்டுள்ளது. இதன் போக்கு எதிர்காலத்தில் முதலாளித்துவ உலகிற்கு யார் தலைமை தாங்குவது என்ற நிலைக்கும்கூட இட்டுச் செல்லலாம்…!
ஆதார நூல்கள் மற்றும் கட்டுரைகள்
ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம் உலக நாடுகளில் பொருளாதார அரசியல் பூகோளம் உலகமயமாக்கமும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும்
1848ல் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்ற முழக்கத்தோடு கம்யூனிஸ்ட் இயக்கம் லன்டனில் பிறந்தது. அன்றிலிருந்து அதன் இயக்கமும் பரவலும் நித்திய கண்டம் பூர்ண ஆயுசு என்றே இருந்து வருகிறது. உண்மையில் அது சர்ச்சைகளால், சர்ச்சைகளுக்கிடையே, சர்ச்சைகளின் வழியே, சர்ச்சைகளைத் தேடி வளர்கிற சமூக விஞ்ஞானம் ஆகும். அது திண்ணை வேதாந்தமல்ல. யாரோ ஒருவர் தவமிருந்து கண்டதல்ல. அது உழைப்பாளி மக்களின் நடைமுறைகளையும் கருத்தோட்டங்களையும் கூட்டு செயல்பாட்டையும் கொண்ட அனுபவ விஞ்ஞானமாகும். அது நடைமுறையால் வளர்கிற விஞ்ஞானமாகும்.
இந்த சமூக விஞ்ஞானத்திற்கு அடிப்படை போட்டவர்களை பாராட்டவே மார்க்சிசம்-லெனின்னிசம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ஆசான்கள் எழுத்துக்கள் அனைத்துமே அவர்கள் காலம் வரை திரண்ட அறிவுச் செல்வத்தையும் எதார்த்த வாழ்க்கையையும் ஒப்பிட்டு எங்கு பொருந்துகிறது. எங்கு பொருந்தாமல் போகிறது என்பதில் தொடங்கி அடுத்தகட்ட மாற்றம் எதுவாக இருக்க வேண்டுமெனத் தேடுவதில் முடிவன.
எனவே, மார்க்சிசம்-லெனினிசம் என்பது அவர்கள் சொல்லியது, செய்தது மட்டுமல்ல. ஒவ்வொரு நாட்டின் மார்க்சிசம்-லெனினிச அணுகுமுறையில் செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அனுபவங்களும் மார்க்சிசம்-லெனினிசம் என்ற சமூக விஞ்ஞானத்தின் பகுதியாகும். தவறுகளிலிருந்து பாடம் பெறுவதின் மூலமே மார்க்சிசம்-லெனினிசம் வளர்கிறது என்பதையே வரலாறு காட்டுகிறது. மார்க்சிசம்-லெனினிசத்தைத் தாக்குகிற எதிரிகள் கூட கம்யூனிஸ்ட்டுகளின் தவறுகளை காட்டி கத்துவார்களே தவிர அதன் சாரத்தில் கை வைப்பதில்லை. அதனுடைய 167 ஆண்டு வரலாறு ஒன்றைக் காட்டுகிறது. மார்க்சிசம் – லெனினிசம் என்ற சமூக விஞ்ஞானம் போல் வேகமாக வளர்ந்த விஞ்ஞானம் வேறு எதுவுமில்லை. அதுமட்டுமல்ல அந்த வரலாறு கம்யூனிச இயக்கத்தின் தவறுகளால் விழுந்து அதனை திருத்தி எழும் ஆற்றலை பறைசாற்றுகிறது.
அதன் வரலாறும் உழைப்பாளி மக்களின் போராட்ட வரலாறும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். இருவருமே அடக்குமுறைகளையும் ஏமாற்றுக்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. இருவருமே தவறுகளை திருத்தியே முன்னேற வேண்டியிருக்கிறது. தவறுகளை சரியாக கணிக்கவில்லையானால் அதுவே இயக்கத்தை முடக்கி விடுகிறது. உழைப்பாளி மக்களின் அணுகுமுறையில் குறைகள் இருந்தாலும் மார்க்சிச இயக்கம் தளர்வுறும், மார்க்சிசத்தை ஏற்றுக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் தவறு செய்தாலும் உழைப்பாளி மக்களின் போராட்டம் வலுவிழக்கும்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் தனது தவறுகளால் வீழ்ந்தாலும் அதனை திருத்தி எவ்வாறு எழுகிறது என்பதை சுருக்கமாகக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அடக்குமுறைக்கும் அவதூறுக்கும் ஆட்படுவதால் ஏற்படும் பின்னடைவோடு அந்தந்த காலத்தில் கம்யூனிஸ்ட்டு கட்சிகளின் பல ரகமான தவறுகளால் வலு இழக்க நேரிடுகிறது.
அத்தகைய தருணங்களில் தவறுகளை கண்டுபிடிப்பதிலும் சரியான கோட்பாட்டை உருவாக்குகிற முயற்சியிலும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஈடுபடுவதை மார்க்ஸ் காலத்திலிருந்து தொடர்வதை காணலாம். 1942ல் மாசேதுங் கட்சி உறுப்பினர்களிடையே பேசுகிற பொழுது குறிப்பிட்டதைக் கவனியுங்கள்: “இன்றும் நம்மில் சில பேர் மார்க்சிசம்-லெனினிசம் ஒரு ரெடிமேடு மருந்து. அதுமட்டும் கிடைத்துவிட்டால் சிரமப்படாமல் எல்லா நோய்களையும் குணப்படுத்திவிடலாம் என்று கருதுகின்றனர். மார்க்சிசம்-லெனினிசத்தை ஒரு வேதம்போல் கருதுகின்றவர்களின் இத்தகைய குழந்தைத்தனமான குருட்டு நம்பிக்கையுள்ளவர்களிடம் உனது வேதத்தால் எந்த பலனும் இல்லை என்று வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். கண்ணியமற்ற மொழியிலே சொல்லவதென்றால் உனது வேதம் மனித மலத்தைவிட கேவலமானது. அதுவாவது நாயிக்கு உணவாகும். நாயின் விட்டையோ வயலுக்கு உரமாகும். உனது வேதம் நாயிக்கும் உணவாகாது. வயலுக்கும் உரமாகாது, எதுக்கும் பயன்படாது” என்றார் (Mao Tse-tung, Feb., 1, 1942 in Stuart Schram, The Political Thought of Mao Tse-tung)
மார்க்சிசத்தை ஒரு மதமார்க்கமாக ஆக்குவதை தவறான போக்கு என்பதை மாவோ மட்டுமல்ல. இதேபோல் லெனினும் மார்க்சிசத்தை வேதாந்தமாக ஆக்குவோரை கடுமையாகத் தாக்கி எழுதியுள்ளார். லெனின் தான் தவறுகளை வகைப்படுத்தி அதன் அடிப்படைகளையும் அதை எதிர்த்த போரை எப்படி நடத்துவது என்பதை முன்மொழிந்தார். சரியான கருத்திற்கான போராட்டம் தத்துவார்த்தப் போராட்டத்தோடு நின்றுவிடுவதில்லை. தப்பைக் கண்டுபிடிக்க அது முதன்மையாகவுமில்லை. தெளிவினைப் பெறவும் நடைமுறையோடு பொறுத்தவும் அது அவசியமாகிறது. நடைமுறையில் ஒரு கருத்தை அன்றாடப் பிரச்சனைகளை தீர்க்க ஈடுபடுத்தும் பொழுதுதான் அது சரியா தவறா என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.
தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதின் மூலமே மார்க்சிசம்-லெனிசம் கற்கப்படுகிறது. எனவே, தவறாகிவிடுமோ என்று தயங்காதீர். ஒரே தவறை திரும்பத் திரும்பச் செய்யாதீர் என்பதுதான் மார்க்சிசம்-லெனினிசம் கற்க ஒரே வழி.
மார்க்சிசம்-லெனினிசம் எவ்வாறு உருவாகிறது? சரியான கருத்து எப்படி உருவாகிறது? மாவோ மேலும் சொல்கிறார்.
“எங்கிருந்து சரியான கருத்து வருகிறது. வானத்திலிருந்து விழுமா? தீடீரென மனதிலே உதிக்குமா?
இல்லை. அது சமூக நடைமுறையால் பெறப்படுகிறது. பொருளுற்பத்திக்கான போராட்டம், வர்க்கப் போராட்டம், விஞ்ஞான சோதனை, இவைகளினால் பெறப்படுகிறது.
முன்னேறிய வர்க்கத்தின் இந்த சரியான கருத்து ஒரு முறை மக்களை ஈர்க்குமானால் இந்தக் கருத்து பௌதீக சக்தியாகி சமூகத்தை மாற்றும் உலகையே மாற்றிவிடும்” என்கிறார்.
மாவோ, மேலும் கூறுகிறார்;
“கட்சி உறுப்பினர்களுக்கு ஞானத்தைப் பெறுதல் பற்றிய இயக்கவியல் பொருள் முதல்வாதக் கோட்பாட்டைக் கற்றுக் கொடுப்பது அவசியம். அந்தக் கோட்பாடு அவர்களது சிந்தனை முறையை சரியானதாக ஆக்க உதவிடும்.
தேடுதல் திறமையை வளர்க்கும். அனுபவங்களைத் தொகுக்கும் ஆற்றல் மேன்மைப்படும். கஷ்டங்களை வெல்ல கற்றுக் கொடுக்கும். பணிகளை திறமையாக செய்ய பயிற்சியளிக்கும்” என்கிறார்.
ஞானம் பற்றிய மார்க்சிய கோட்பாடு
அது என்ன? ஞானம் பற்றிய மார்க்சிய கோட்பாடு 1330 குறளையும் ஒப்புவிப்பதோ பொருள் கூறுவதோ ஞானமாகிவிடாது. வள்ளுவர் காலத்திய சமூக வாழ்வு, குடும்ப உறவு, அரசியல், பொருள் உற்பத்திகள் அவைகளை உருவாக்கும் சமூக உறவு சொற்களின் உள்ளடக்கம். சொல் நயம் (வள்ளுவர் காலத்தில் காமம் என்ற சொல்லின் பொருள் வேறு. இன்று அதன் பொருள் வேறு இந்த மாற்றம் எதனால் ஏற்பட்டது) தத்துவ ஞானம். அவைகளில் நீடித்து எவைகள் உள்ளன. அவைகளில் பேணவேண்டியது எவைகள். களைய வேண்டியவைகள் எவைகள். இவைகளைத் தேடினால் அது மார்க்சிய-லெனினிய ஞான கோட்பாட்டை குறளுக்கு பொறுத்துவதாகும். அதாவது ஒரு தகவலை அதற்கும் மற்றதிற்கும் உள்ள தொடர்பு அதன் வரலாறு இவைகளை தேடுவதே மார்க்சிசம்-லெனினிய ஞான கோட்படாகும்.
தவறுகளும் பாடங்களும்
இந்த ஞானம் இருந்தாலும் நடைமுறையில் தவறுகள் நேராமல் சரியான கோட்பாடு உருவாவதில்லை. அதைப் பெறுவதே ஒரு போராட்டமாகிவிடுகிறது. அவ்வாறு கோட்பாட்டுத் தவறுகளை சரிசெய்யும் போராட்டக் காலங்களில் என்ன நடக்கிறது?
பல ரகமான தவறான கருத்துக்களுக்கெதிராக போராட்டம் உருவாகிறது. அந்த தவறான கருத்திற்கும் மார்க்சிசத்திற்கும் உள்ள உறவினையும் வரையறை செய்ய நேரிடுகிறது. இந்தப் போராட்டம் வனாந்திரத்திலோ, நடுக்கடலிலோ நடைபெறவில்லை. எதார்த்த அரசியல் சமூக நிலவரங்களை பரிசீலிப்பதிலும், வளர்ச்சிப் போக்கை எப்படி மாற்றுவது என்பதிலும் கருத்து மோதல் உருவாகி போராட்டமாகிவிடுகிறது. மார்க்சிசத்தை ஏற்றுக் கொள்பவர்களே பல கோஷ்டிகளாகப் பிரிந்து தங்களது கருத்துதான் சரி என்று நிலைநாட்ட முயற்சிக்கின்றனர். சித்தாந்தப் போர் மூள்கிறது. இதனால் தெளிவு பெறலாமே தங்களது கருத்து சரியா? தவறா? என்பதைக் கண்டுகொள்ள இயலாது. அந்த கருத்தின் அடிப்படையில் செயல்படும் பொழுதும் பிரச்சனைகளுக்கு அதனடிப்படையில் தீர்க்க முயற்சிக்கிற பொழுதும் தவறு எது? சரி எது? என்பது துலங்குகிறது. இவ்வாறு தவறான கருத்துக்களை நீக்கி முழுமையை நோக்கி மார்க்சிசம்-லெனினிசம் நடைபோடுகிறது.
உதாரணமாக 1960களில் சோவியத் படை செக்கோஸ்லோவிக்கியாவில் புகுந்தவுடன் கம்யூனிஸ்டுகள் கருத்து வேறுபட்டனர். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி, சீன கம்யூனிஸ்ட் கட்சி, ஐரோப்பிய கம்யூனிஸ்டு கட்சிகள் அவரவர் கருத்துக்களை முன்நிறுத்தினர். மூன்று விதமான கருத்துக்கள் மோதின. சோவியத் புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களில் ஒன்று வறட்டு தத்துவக் கோட்பாட்டுத் தவறுகள் அறவே ஒழியாவிட்டாலும் குறைந்துபோனது.
உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தை பின்னுக்கு தள்ளிய தவறு எது? என்று உடனடியாகக் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் சோவியத் கட்சியின் தலைமை முன்மொழிந்த முதலாளித்துவமற்ற பாதை என்ற கோட்பாடுதான் வலது திரிபுகளுக்கு அடிப்படையாக அமைந்தது. உலக நிலைமைகளின் வளர்ச்சிப்போக்கு காட்டிவிட்டது.
லெனின் காலத்தில் இரண்டு விதமான தவறுகளும் நேர்ந்து இயக்கத்தை ஸ்தம்பிக்க வைத்தன. வறட்டு தத்துவ அடிப்படை கொண்டவைகள் மற்றது வர்க்க சமரசப்போக்கு. இப்பொழுது மேலை நாடுகளில் கம்யூனிஸ்ட்டுகள் வறட்டு தத்துவ தவறுகள் செய்வது குறைந்துவிட்டது. வர்க்க சமரசக் கோட்பாட்டால் எழும் தவறுகள் அதிகமாகிவிட்டன. பின்தங்கிய நாடுகளில் இந்த இரண்டு வகையான தவறுகளும் நேருகிற சூழ்நிலை உள்ளது.
சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம்
20 நூற்றாண்டின் மத்தியில் வர்க்க சமரசக் கோட்பாடால் தவறு செய்வதை எதிர்த்து கொள்கைப் போரை துவக்கியது. இந்த கொள்கைப் போரை எதிரிகள் மார்க்சிசத்தின் அழிவை உறுதி செய்யும் போராட்டமாக சித்தரித்தனர். இந்த கருத்து மோதலினால் சில தவறான கருத்துக்கள் எடுபட்டனவே தவிர மார்க்சிசம்-லெனினிசம் அழியவில்லை. வர்க்க சமரசக் கோட்பாட்டை முன்நிறுத்திய யூரோ கம்யூனிசம் காணாமல் போய்விட்டது. கடுகு சிறுத்தாலும் காரம் போகவில்லை என்பது போல மார்க்சிசம்-லெனினிசம் அதன் சக்தியை இழக்கவில்லை. எதை வைத்து இது கூறப்படுகிறது என கேட்கலாம்.
முதலாளித்துவப் பிரச்சாரக் கருவிகள் இன்றும் மார்க்சிசத்தை தாக்கிக் கொண்டே இருப்பதையும் கம்யூனிஸ்ட்டுகளின் தவறுகளை காட்டி அதுதான் மார்க்சிசம் என்றும் ஊளையிடுவதும் எதைக் காட்டுகிறது. அதன் உயிர்த்தெழும் ஆற்றலைக் காட்டவில்லையா. உழைப்பு கோட்பாட்டையும், வர்க்கப் பிரிவினைகளையும் முன் மொழிந்த ஆடம்ஸ்மித்தையும், டேவிட் ரிக்கார்டோவையும் மறந்துபோனது போல் ஏன் இவர்களால் மார்க்சை மறக்க முடியவில்லை?
முதலாளி வர்க்க அரசியல்வாதிகளால் வர்க்கப் போராட்டங்களை முடிவிற்கு ஏன் கொண்டுவர முடியவில்லை?
பாட்டாளி வர்க்கத்தை அரசியலிலிருந்து ஒதுக்குகிற முயற்சி தற்காலிகமானது என்பதை உணரப்போய்த்தானே பாட்டாளி மக்களை மார்க்சிசமும் பக்கம் போகாமல் தடுக்க கம்யூனிஸ்டுகள் மீது அவதூறுகளைப் பொழிகின்றனர். வரலாற்றையே புளுகுமூட்டைகளாக ஆக்குகின்றனர்.
சீனாவில் மார்க்சிசம் வழிகாட்டவில்லை முதலாளித்துவமே வழிகாட்டுவதாக கூறுகிறவர்கள் அந்த முதலாளித்துவம் ஏன் இந்தியாவில் பொருளாதாரத்தை வளர்க்கவில்லை? ஏன் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் நெருக்கடியைக் கொண்டு வருகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சி கூறுவதென்ன. எங்களுக்கு வழிகாட்டி மார்க்சிசம்-லெனினிசமும் எங்களது அனுபவமாகும். அதனால் எங்களது தவறுகளிலிருந்து பாடம் கற்கும் ஆற்றலை நாங்கள் இழக்கவில்லை என்று கூறுவதைப் பார்க்கலாம்.
இந்திய கம்யூனிஸ்ட்டுகளும் திரிபுகளும்
இன்று இந்தியாவில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு கம்யூனிஸ்ட் அல்லாத நல்லெண்ணம் கொண்டோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. சொத்துடைமை கோட்பாட்டில் மாறுபட்டு கருதுவோரும்கூட அரசியலை சொத்துகுவிக்கப் பயன்படுத்துவதை ஏற்பதில்லை. அவர்களும் இந்த பின்னடைவு அரசியலதிகாரத்தைச் சொத்துகுவிக்கப் பயன்படுத்தும் திருடர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் என்று அஞ்சுகின்றனர். சொத்துகுவிக்கும் ஆசையில் பொருளாதார நெருக்கடியைக் கொண்டுவருவதை விரும்பாதவர்களும் அரசியலில் நேர்மையை விரும்புவோர்களும் இந்த பின்னடைவு ஆபத்து என்றே கருதுகின்றனர். அதையும்விட உலக கம்யூனிஸ்ட் இயக்கமே கவலை கொள்கிறது. இந்த கவலைக்கு அடிப்படை உண்டு.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தலைதூக்கிய வலதுசாரி திருத்தல்வாதத்தையும், மக்கள் ஈடுபடாத ஆயுதக்குழு மனப்பான்மை கோட்பாடான இடது திருத்தல்வாதத்தையும் எதிர்த்து திறமையாக போராடுவதில் மார்க்சிஸ்ட் கட்சி முத்திரை பதித்தது. பூர்சுவா கைக்கூலிகள் இந்த இரண்டு தவறுகளையும் காட்டி மார்க்சிசத்தை இழிவுபடுத்த எடுத்த முயற்சிகளை மார்க்சிஸ்ட் கட்சி செயல்களால் முறியடித்தது. வெகுஜன அமைப்புகளின் இயக்கத்தின் மூலமே அரசியலில் சமூக வாழ்வில் சோசலிச லட்சியத்தை அடைய முடியும். சுரண்டலற்ற பொருளாதார உறவை உருவாக்க முடியும் என்ற மார்க்சிச-லெனினிச கோட்பாட்டை மார்க்சிஸ்ட் கட்சி உயர்த்திப் பிடித்தது. இப்பொழுதும் இனியும் வெகுஜன அமைப்புகளின் இயக்கத்தையே உயிர்நாடியாக கருதுகிறது.
வலது திரிபு நாடு விடுதலையான பிறகு நேரு தலைமையில் உருவான அரசு முழங்கிய ஆவடி சோசலிசம் மக்களை மயக்கிய காலம். அரசு பொதுத்துறையை வளர்த்தது. அதேவேளையில் பெருமுதலாளிகளை கொழுக்க வைக்க பல சலுகைகள், மான்யங்கள் வழங்கியது. தெலங்கானா பகுதியில் கம்யூனிஸ்டுகள் உதவியுடன் விவசாய சங்கம் நிலப்பிரபுக்களின் நிலத்தை விவசாயிகளுக்கு பிரித்து கொடுத்த விதம் நாடு முழுவதும் உழுபவனுக்கு நிலம் என்ற போராட்டம் வெடிக்க வைத்தது. குத்தகை விவசாயிகள் வீறுகொண்டு எழுந்தனர். அதனை அடக்குமுறையால் நேரு அரசு ஒடுக்கியது. நிலப்பிரபுக்களின் உரிமையை பாதுகாக்கும் முறையில் நிலஉடைமை சட்டத்தை கொண்டு வந்தது.
அன்று நேரு அரசிற்கு ஆதரவாக இருப்பது சோசலிசத்திற்கு அடிப்படை போட தேவையான தொழில் வளர்ச்சிக்கு அவசியம் என்ற கருத்து தலைதூக்கியது. நேரு அரசிற்கு ஆதரவு என்ற பெயரில் வர்க்க சமரசம் கூடாது, மக்களின் இயக்கத்தின் மூலம் மொழிவழி மாநிலம் அமைந்ததுபோல் வர்க்கப் போராட்டத்தின் (அதாவது வெகுஜன அமைப்புகளின் இயக்கத்தின்) மூலம் இந்த அரசை பணிய வைக்க முடியும் என்ற கருத்து வர்க்க சமரசக் கருத்தோடு மோதியது. அன்று உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் வலது திரிபு அணுகுமுறையை ஆபத்து என்று ஏற்றுக் கொண்ட சோவியத் கட்சியே நடைமுறையில் அந்த திரிபிற்கு வக்காலத்து வாங்கி புதிதாக விடுதலை அடைந்த நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் இயக்கங்களை நிலைகுலையச் செய்தது.
அன்று அரபு நாடுகளிலும். ஆசியாவிலும் சோவியத் புரட்சிக்குப் பிறகு பிறந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் சொந்த அனுபவத்தின் மூலம் பாடம் கற்க இயலாமல் போனதற்கு சோவியத் கட்சியின் நடைமுறை பெரிதும் காரணமாக இருந்தது. ஆசியாவில் வியட்நாம் கம்யூனிஸ்ட் இயக்கமும், இந்தியாவில் மார்க்சிஸ்ட் இயக்கமும் வலது திருத்தல்வாதத்திற்கு பலியாகாமல் சொந்த அனுபவங்களால் பாடம் கற்கும் ஆற்றலோடு மிஞ்சின. பல நாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்கம் சுருங்கின. இன்று நிலைமை வேறு.
முதலாளித்துவம் உருவாக்கும் நெருக்கடிகள் இன்று உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தை மார்க்சிச-லெனினிச வழியில் சரியான கோட்பாட்டை தேட வைத்துள்ளது. இந்தியாவிலும் இதே நெருக்கடி இருப்பதைக் காண்கிறோம். தொழில் வளர்ச்சிக்கு இடிமுழக்கம் செய்யும் அந்நிய முதலீட்டின் போலித்தனத்தை ஸ்ரீபெரும்புதூர் தொழில் வளாகம் காட்டிக் கொண்டே இருக்கிறது. பால் விலை உயர்வு விவசாயியின் வாழ்க்கை தரத்தை ஒரு மில்லி மீட்டர் கூட உயர்த்தப் போவதில்லை என்பது தெரிவிக்கிறது. மாட்டுத் தீவன விலையாகவும், மாடு வாங்க வாங்கிய கடனுக்கு வட்டியாகவும் அந்த உயர்வு போய்விடும்.
முன்நாட்களில் அன்ஸ்கில்டு லேபர்தான் காசுவலாக இருந்தது. இன்று நிர்வாகிகளைத் தவிர பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், என்ஜினியர்கள் எல்லாமே காண்ட்ராக்ட் காசுவுல் லேபர் ஆக்கப்படுகின்றனர். உழைக்கும் விவசாயிகளின் வறுமையும், அறிவாற்றலையும், உடல் உழைப்பையும் சார்ந்து நிற்கும் பெரும் திரள் மக்களின் உத்தரவாதமற்ற வேலை வாய்ப்புக்களும், இவைகளெல்லாம் சமூக கொந்தளிப்பின் காரணிகளாக ஆகிவருகின்றன. இத்தகைய சூழலில் பூர்சுவா கருத்தோட்டங்கள் பாட்டாளி வர்க்கத்தை பிளவுபடுத்தியிருப்பதை காண்கிறோம். வர்க்கப் பார்வையற்ற அரசியலின் ஆபத்தை உணர்த்த வேண்டியிருக்கிறது. மார்க்சிசம் கற்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. மார்க்சிச-லெனினிச அணுகுமுறையை பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட இயக்கத்தோடு அனுபவப் படிப்பிணையாக இணைக்க வேண்டியிருக்கிறது.
வலது, இடது திரிபுகளை கடந்து வந்த மார்க்சிஸ்ட் இயக்கம் இந்தப் பணியை செய்ய உறுதி பூண்டுள்ளது. ஏற்பட்ட பின்னடைவையும் சரி செய்யும். நம் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நல்ல உள்ளங்களுக்கு சொல்வோம்.
எங்களது வழிகாட்டி மார்க்சிசம்-லெனினிசமும் எங்களது அனுபவமாகும். எங்களுக்கு தவறுகளை திருத்தி முன்னேறும் ஆற்றலுண்டு. இந்திய பாட்டாளி வர்க்கத்தின் துணையோடு விவசாயி, பாட்டாளி ஒற்றுமையைக் கட்டி அரசியலில் நேர்மையையும் ஆட்சியில் ஜனநாயகத்தையும் பொருளாதாரத்தில் மக்கள் வாழ்வையும் பாதுகாக்கும் படையாக திகழ்வோம்.
சீதாராம் யெச்சூரி (பின்வருவது, ஜன 31 மற்றும் பிப் 1, 2009 அன்று வயநாட்டில் நடைபெற்ற விச, விதொச சங்கங்களின் தேசிய அளவிலான கருத்தரங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீதாராம் எச்சூரி ஆற்றிய தொகுப்புரையில் இருந்து எடுக்கப்பட்ட பகுதிகள்)
இந்த சந்திப்பின் போது மிகச் ஈர்கத்தக்க உரைகளையும், விவாதங்களையும் நாம் கேட்டோம். அதே சமயம், இந்த பிரச்சனையில் இன்னும் நிறைய கருத்துக்களை விவாதிக்க வேண்டியிருக்கிறது. அந்த விவாதம் நம்மை இன்னும் மிகத் தெளிவாக்கும் என்று நம்புகிறேன்.
நாம் இப்போது பேசுகிற நான்கு முரண்பாடுகளை பற்றி கட்சிக்குள் பெரிய அளவிலான விவாதங்களை நடத்திய பிறகு மிகத் தெளிவான ஒரு முடிவுக்கும் வந்தோம். அவை நான்கும் அடிப்படையான முரண்பாடுகள், முதன்மையானவையும் கூட. எதுவும் தாழ்ந்ததோ, உயர்ந்ததோ கிடையாது. ஆனாலும் இந்த நான்கிலும் ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையேயான முரண்பாட்டை மையமான முரண்பாடாக நாம் பார்க்கிறோம், ஏனெனில் அந்த முரண்பாட்டிற்கான தீர்வு உலகம் ஏகாதிபத்தியத்தில் இருந்து சோசலிசத்தை நோக்கி மாற்றுவதைப் பொறுத்தே இருக்கிறது. எனவே இந்த காலகட்டத்திற்கான மையமான முரண்பாடாக உள்ளது, அதே சமயம் இந்த நான்கு முரண்பாடுகளில் (மையமான முரண்பாடு உட்பட) எதுவும் எந்த நேரத்திலும் முன்னுக்கு வரலாம்.
ஒருவேளை அமெரிக்கா நாளை கியூபாவை ஆக்கிரமிக்க முற்பட்டால் ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையேயான முரண்பாடு மையமான முரண்பாடாக மட்டுமல்லாமல் முன்னுக்கும் வந்துவிடும். எனவே மையமான முரண்பாடும், முன்னுக்கு வந்த முரண்பாடும் இங்கே இருக்கிறது ஆனால் நான்கு முரண்பாடுகளுமே முக்கியமானதும், அடிப்படையானதும் ஆகும். அவைகளுக்குள் எந்த வித்தியாசமும் இல்லை. மற்றும், இந்த நிலையில், நான்கு அடிப்படை முரண்பாடுகளில், ஏகாதிபத்தியத்திற்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான முரண்பாடு தீவிரமடைவதாக கட்சியின் பதினேழாவது மாநாட்டில் இருந்து நாம் சொல்லி வருகிறோம். இதுவரையில், அது முன்னுக்கு வந்து முற்றி குவிமையமாக வளர்ந்துவிட்டதாக நாம் சொல்லவில்லை ஆனால் நான்கு முரண்பாடுகளில் ஏதேனும் ஒன்று குவிமைய முரண்பாடாக வளரக்கூடியது ஏகாதிபத்தியத்திற்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான முரண்பாடுதான். இதுதான் நமது கட்சியின் நிலை.
குவிமைய முரண்பாடு மிக முக்கியமானது. ஏன்? ஏனெனில் இத்தகைய முரண்பாடு தீர்க்கப்படுகிற வழிமுறையைப் பொறுத்தே, உலகில் சோசலிசத்தை நோக்கிய மாற்றம் அமைகிறது. வியட்நாம் யுத்த சமயத்தில், ஏகாதிபத்தியத்திற்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான முரண்பாடு முன்னுக்கு வந்திருந்த போது, அந்த யுத்தத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தோல்வியைச் சந்தித்தது. அபோது நாம் ஏகாதிபத்தியத்தை நேருக்கு நேர் சந்திப்பதில் உலக அளவில் சோசலிசம் தன்னை வலிமைப் படுத்திக் கொண்ட விதத்தின் மூலம் முன்னணியான முரண்பாடு தீர்கப்பட்டதாகச் சொன்னோம். இன்றைக்கு இந்த முரண்பாடு முன்னுக்கு வந்த முரண்பாடாகும் நிலைக்கு வளர்ந்துவிட்டதா? என்றுகேட்டால் இதைப் பொறுத்தமட்டில் இப்போதைய முரண்பாட்டை நாம் இன்னும் இன்றைய முன்னணி முரண்பாடாக கொள்ளவில்லை. ஆனால் கண்டிப்பாக இந்த முரண்பாடுதான் தீவிரமடையும் முரண்பாடாக இருக்கிறது.
நெருக்கடி ஒரு வாய்ப்பை தருகிறது:
முக்கியமான பிரச்சனைக்கு வருகிறேன், இந்தக் கருத்தரங்கம் நடந்துகொண்டிருக்கிற நாளில், தற்போதைய சர்வதேச சூழலில் கவனிக்கப்படவேண்டியவை குறித்து அறிவதற்காகவே இந்த அரங்கம் கூட்டபட்டிருப்பதாக நினைக்கிறேன். ஏன் இன்று நாம் அனைவரும் குறிப்பிட்ட ஓர் இடத்தில் கூடி இந்தப் பிரச்சனையைப் பற்றி விவாதிக்கிறோம்?. சோவியத் மற்றும் ஐரோப்பிய சோசலிசக் குடியரசுகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, சர்வதேச அளவில் வர்க்க சக்திகளின் சேர்மானத்தில் ஏகாதிபத்தியம் பலமடைவதாகவும், சோசலிசம் பலவீனமடைந்திருப்பதாகவும் நாம் ஒரு முடிவிற்கு வந்ததிற்கு பிறகு இவ்வாறு விவாதிப்பது இதுவே முதல் முறை. இந்த இடைப்பட்ட காலத்தில், இடதுசாரி இயக்கங்களால், இடதுசாரி வெகுஜன அமைப்புகள் மற்றும் உலக கம்யூனிஸ்டுகளால் நடத்தப்பட்ட போராட்டங்கள் பெரும்பாலும் தற்காப்பு போராட்டங்களாக இருந்தன. ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவம் ஆகியவற்றின் தாக்குதல்களில் இருந்து நமது உரிமைகளைக் காத்துக் கொள்வதற்கான போராட்டங்களாக அவை இருந்தன. சோசலிசம் பலவீனமடைந்த போது, நாம் பல நூறு ஆண்டுகால போராட்டங்களின் காரணமாகப் பெற்ற உரிமைகளாவது காப்பாற்றிக் கொள்ள முயலுகிறோம். எனவே அந்த நேரத்திலும் தற்போதும் நமது நோக்கம் என்பது பெரும்பாலும் இருக்கிற உரிமைகளை காத்துக் கொள்வதற்கான தற்காப்பு போராட்டங்கள்தான். அதுபோலவே உற்று கவனித்தால் நமது நாட்டில் நடந்துகொண்டிருப்பதும் அதுதான் என்பது புலப்படும். நமது போராட்டங்கள் எல்லாமே நம்மிடம் இருப்பதை காப்பாற்றவும், மேலும் சுரண்டாமல் காத்துக் கொள்வதாகவும்தான் இருந்தது.
ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள உலக நெருக்கடி என்பது முதலாளித்துவ நெருக்கடி வரலாற்றிலேயே மிக மோசமானது ஆகும். சேர்த்து நமது தற்காப்பு போராட்டத்தை முதலாளித்துவத்தின் ஆட்சிக்கு எதிரான தாக்குதல் போராட்டமாக மாற்றுவதற்கான வாய்ப்பு இன்று உருவாகியுள்ளது. முதலாளித்துவத்தின் ஆட்சி அதன் மிக மோசமான நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. ஆனால் துரதிஷ்டவசமாக அரசியல் மட்டத்தை பொறுத்தமட்டில் மாற்று சக்தி (சோசலிச அரசியல் மாற்று) இப்போதைய முதலாளித்துவ நெருக்கடி நிலையை புரட்சிகரமான சூழலாக மாற்ற போதுமான பலம் பெற்றதாக இல்லை. அப்படி இருந்திருந்தால், இந்த நெருக்கடி புரட்சிகர சக்திகள் முன்னேறுவதற்கான மிகச்சிறந்த வாய்ப்பாக இருந்திருக்கும். சில லத்தீன் அமெரிக்க நாடுகளில் இது நிகழலாம் என்று எதிர்பார்க்கலாம் அப்படி நடந்தால் அது நல்லதே. ஆனால், இந்தியாவில் இருக்கும் நம்மைப் பொறுத்தமட்டில், நெருக்கடி நிலையை புரட்சிகர சூழலாக மாற்றக் கூடிய வர்க்க சக்திகளின் செர்மானத்தை நாம் இன்னும் அடையவில்லை. இப்போது கிடைத்திருக்கிற வாய்ப்பில் நாம் முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான தாக்குதல் போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். நம்முடைய உரிமைகளை தற்காத்துக் கொள்கிற தற்காப்பு போராட்டத்தை நாம் விட்டுவிட வேண்டும் என்பதில்லை, எப்போதும் போல அவை முக்கியமானவை. நம்முடைய தற்காப்பு போராட்டங்களை வலிமைப்படுத்துவதால் மட்டுமே நம்மால் தாக்குதலை நோக்கி செல்லமுடியும் என்ற உண்மையை நான் கவனத்திலிருந்து அகற்றவில்லை.
இப்பொழுது, தாக்குதலை நோக்கிய மாற்றத்தை நாம் எப்படி சாதிக்கப்போகிறோம்? அதுதான் இன்றைய நிகழ்ச்சிநிரலின் மிக முக்கியமான புள்ளி. இந்நிலையில், தற்போதைய உலக சூழலை , பேராசிரியர் பிரபாத் பட்நாயக் மிகச் சரியாக சுட்டிக் காட்டியிருக்கிறார். அநாகரீக முறையிலான மூலதன திரட்சி தீவிரமடைகிறது. இந்த சூழலில், புதிய தாராளவாத நிர்வாகங்கள் கூட தன்னை மாற்றத்திற்கு உட்படுத்திக் கொள்ளலாம். உலக முதலாளித்துவம், கண்டிப்பாக, இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு ஒன்றுமே நடக்காததைப் போல தன்னுடைய பழைய நிலைக்கே திரும்ப முடியாது. இறுதியாக இங்கே பல மாற்றங்கள் நிகழும். உலக முதலாளித்துவம் பழைய பெரிய நெருக்கடிக்குப் பிறகு எழுந்ததைப் போல் சுதாரித்து எழலாம். என்ன மாற்றம் ஏற்படும்? அது எப்படி மீண்டும் வரும்? எப்படி எழுந்து நிற்கும்? என்பதல்ல நாம் கவனிக்க வேண்டியது.
அநாகரீகமான முறையில் மூலதனத்தை திரட்டுவது தீவிரமடைந்து முதலாளித்துவம் சுதாரித்து எழலாம். இது பற்றி மார்க்ஸ் கூறியதை மனதில் கொள்வோம். ஒவ்வொரு நெருக்கடியும் புரட்சிகர சூழலே அது புரட்சிகர மாற்றத்தை கொண்டு வர இயலாமல் போனதால் முதலாளித்துவம் மீள்கிறது. முன்னை விட பலமாக எழுகிறது என்கிறார் மார்க்ஸ். தனது ஆதிக்கம் நீடிக்க அவசியமான வர்க்க சமநிலையை நிலைநாட்டிட உற்பத்தி சக்திகளை பெருமளவில் அழித்துவிடுகிறது.
இந்த வர்க்க சமநிலை உடையுமானால், அந்த வேளையில் புரட்சிகர சூழல் உருவாகிறது. இப்பொழுது அதற்கு சாதகமான வர்க்க சமநிலையை முதலாளித்துவம் இழந்து நிற்கிறது. நெருக்கடியிலிருந்து மீளுகிற ஆக்கத்தால் மூன்றாம் உலக நாடுகளை, சுரண்டுவது தீவிரப்படுவதை தவிர்க்கவே முடியாது. இதனை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையை சந்திப்பது மட்டுமல்ல, முதலாளித்துவத்தின் தாக்குதலில் இருந்து தற்காக்கும் போராட்டத்திலிருந்து மாறி, முதலாளித்துவத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் போராட்டமாக மாற்ற முயல வேண்டும்.
தீர்மானிக்கும் தொழிலாளர் – விவசாயி கூட்டணி:
தற்காப்பு நிலையிலிருந்து தாக்குதல் நிலைக்கு மாற மையமானது எதுவோ அதில் கவனம் வேண்டும். அந்த மையம் என்பது தொழிலாளி- விவசாயி கூட்டு ஆகும். மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவதின் மூலமே முன்னெடுத்துச் செல்வதுதான். முதலாளித்துவத்தின் அதிகாரத்திற்கு எதிரான போராட்டங்களின் இயல்பை தற்காப்பு நிலையில் இருந்து தாக்குதல் நிலைக்கு மாற்ற முடியும். இப்போது நம்முடைய திட்டத்தின்படி மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மைய அச்சு விவசாயிகள் புரட்சியே. விவசாயிகள் புரட்சி நடக்காமல் நம்மால் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் போர்த் தந்திரத்தை நிறைவேற்ற முடியாது. அப்படி, விவசாயப் புரட்சியே மைய அச்சாக இருக்கும்போது. இந்த மைய அச்சை மக்கள் ஜனநாயகப் புரட்சியை சாதிக்கும் படி எப்படி வளர்க்கிறோம் என்பதும் முக்கியமாகும். தொழிலாளி வர்க்கத்திற்கு – இடையே உறவுப்பாலம் எப்படி அமைக்கிறோம் என்பதும். இந்தப் போராட்டங்களை வலிமைப் படுத்த முடிவதற்கான ஒரே திட்டமாகும். தொழிலாளர் – விவசாயி கூட்டமைப்பை கட்டமைப்பதற்கான ஒரே கருவியாகும். இந்தியாவின் தனித்துவம் மிக்க புறச்சூழலியே இவை நடக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
அந்நிய நிதி மூலதனத்துடன் தனது கூட்டை வலிமைப் படுத்திக் கொண்டிருக்கிற பெருமுதலாளிகளால் வழிநடத்தப்படுகிற முதலாளி-நிலப்பிரபுக்கள் வர்கங்களின் அதிகாரத்திற்கான கருவியாகவே நாம் இந்திய அரசை காண்கிறோம். இந்திய முதலாளி வர்கம் ஏன் நிலப்பிரபுக்களுடனான கூட்டை உருவாகியது? இது விருப்பத்தினால் நேர்ந்ததல்ல. எந்த ஒரு முதலாளியும் நிலப்பிரபுவோடு ஆளும் வர்கமாக கூட்டு சேர்வதை விரும்பமாட்டான். பெருமுதலாளிகளிடம் அதிகாரம் சென்ற தனித்துவம் மிக்க சூழலில் இந்திய முதலாளிகள் நிலப் பிரபுக்களோடு கூட்டணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள். வர்கத்தின் அதிகாரத்தை நீடிப்பதற்கு, அதோடு நம்மை தடுப்பதற்கு, முற்போக்கு புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சியை தடுப்பதற்கு அவர்களுக்கு நிலப்பிரபுக்களின் கூட்டணி தேவைப்படுகிறது. ஆளும் வர்கமாக இந்திய பெரு முதலாளிகள் நிலப்பிரபுக்களோடு கூட்டு சேர்ந்த போது இந்த மாற்றமும் சேர்ந்தே வந்தது. நாம் இதை 1964 இல் இருந்து சொல்லுகிறோம். இப்பொழுது நாம் வரலாற்றை திரும்பிப் பார்த்தால். பெரு முதலாளிகள் அந்நிய நிதி மூலதனத்துடனான கூட்டணியை அதிகரித்திருப்பது கண்கூடாக நிரூபணமாகியுள்ளது. இன்றைய பெரு முதலாளிகள் அந்நிய நிதி மூலதனத்தின் நேரடிக் கூட்டாளிகள். ஒரு வேளை சிறிய கூட்டாளியாக இருக்கலாம். அது என்னவாகவும் இருக்கட்டும், இந்த உலகில் திறந்திவிடப்பட்டிருக்கும் ஒட்டு மொத்த தாராளவாதத் தாக்குதலில் அதுவும் ஒரு கூட்டாளி.
முதலாளிகள் தங்கள் அதிகாரத்திற்கான கூட்டில் இருந்து நிலப்பிரபுக்களை தூக்கி எறிந்துவிடவில்லை என்பதை நாம் நினைவில் நிறுத்துவது அவசியம். அந்த அளவில் இது ஒட்டுமொத்த விவசாய துறையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் திரும்பியிருக்கும் காலமல்ல. இப்போது நாம் செய்ய வேண்டியது என்னவெனில், நமது கட்சித் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள மக்கள் ஜனநாயக முன்னணி குறித்த நிலைப்பாட்டின் படி, நிலப்பிரபுக்கள் அல்லாதவர்களுக்கு இடையேயான ஒற்றுமையை வளர்ப்பதே. ஆனால் இது நாம் எவ்வாறு நமக்குள்ளான பலத்தை அதிகரிக்கிறோம் என்பதைப் பொறுத்தே அமையும். அதாவது விவசாயத் தொழிலாளி மற்றும் ஏழை விவசாயி கூட்டணி. இந்த இரண்டு வர்கங்களின் பலம் அதிகரிக்கும் பொழுது நிலப்பிரபுகள் அல்லாத விவசாயிகள் நம்மோடு நடைபோடுவார்கள்.
ஆனால் இந்தச் சூழலில் நமது போராட்டங்களை அதிகரிப்பதற்கான வழிமுறை, அதாவது அடிப்படை தூண்டுகோல் கிராமப்புற இந்தியாவின் சுரண்டலுக்கு உள்ளாகும் பிரிவினரின் போராட்டங்களை – சிறு விவசாயிகளை மற்றும் விவசாயக் கூலிகளின் போராட்டங்களை – முன்னெடுப்பதாகவே அமைய வேண்டும். அதுவே இன்றைய உலக மற்றும் உள்நாட்டு சூழலில், நம் நாட்டின் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான முதன்மையான தளத்திற்கு வருகிறது. இதுதான் இன்றைய பிரச்சனையின் மையம். மின்சாரம் முதல் எரிபொருள் வரை , தண்ணீர் முதல் நிலச் சீர்திருத்தம் வரையிலான அத்தனை கோரிக்கைகளிலும் – இந்த எல்லாவற்றின் மீதுமான போராட்டங்களை ஊக்கப்படுத்தவும் அதிகரிக்கவும் வேண்டும்.
இடது முன்னணி அரசுகளும் போர்த் தந்திரம் குறித்த கேள்விகளும்:
அதில் வேறு சில பிரச்சனைகள் இருக்கின்றன. நம் மனதில் நினைக்கிறபடி போராட்டங்களை முன்னெடுக்க முடியாது. நாட்டில் நடக்கிற அரசியல் போராட்டத்தையும் நாம் கணக்கிலெடுக்க வேண்டும். அரசாங்கம், ஜனநாயக தேர்தல் நடைமுறைகளில் நாட்டின் முக்கிய இடதுசாரி சக்தி பிரதான பங்காற்றும் இடங்களில் இப்படி நடக்கிறது. மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான நமது போராட்டங்களுக்கு புறக்காவளாக நாம் இடது முன்னணி அரசுகளைக் கொண்டுளோம். இன்று மக்களின் விருப்பங்களை பாதுகாக்க இடது முன்னணி அரசுகள் இயன்ற அளவு முயற்சிக்கிறது. ஆளும் வர்கங்களுக்கு எதிரான நமது வர்க்கப் போராட்டங்களை அதிகரிக்க அந்த அரசுகளின் வலிமை மிக முக்கியமானது. ஆனால், நம் வலிமையைக் குறைப்பதற்காக ஆளும் வர்கங்கள் தம்மால் இயன்ற எல்லா கருவிகளையும் இடது முன்னணி அரசுகளுக்கு எதிராக பயன்படுத்தும்.1980 களில் 12 வது கட்சி மாநாட்டில் இதுகுறித்து நாம் விவாதித்தோம். தனியார் மூலதனத்தின் ஆதரவை பெறுவது குறித்த விவாதத்தில் தோழர் பி.டி.ரணதிவே என்ன கூறினார்?. மேற்கு வங்கத்தில் தொழில் மயத்திற்கு அரசு ஆதரவளிப்பது என்பது, இடதுசாரிகள் அந்த மாநிலத்தை ஆளும் வரை அங்கே எந்தவித வளர்ச்சியும் துவக்கப்படாது என்று பிரச்சாரம் செய்வதன் மூலம் மாநிலத்தில் நமக்கு ஆதரவான மக்கள் சக்தியை பலவீனப்படுத்த ஆளும்வர்கங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு எதிரான வர்க்க போராட்ட உணர்வின் வெளிப்பாடே என்று தோழர் பிடிஆர் சொன்னார்.
ஏற்கனவே சிக்கலாகத் தெரிகிற இந்த அரசியல் சவாலை எப்படி எதிர்கொள்வது?. நடந்திருக்கும் விசயங்களில் ஏற்படும் பொருளாதார ரீதியான மாற்றங்களை புரிந்துகொள்வது மட்டுமல்லாமல் அரசியலில் நம்மை தனிமைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறபொழுது, நம்மை வீழ்த்தவும் பலவீனப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறபொழுது, அந்த சூழலில் என்ன விதமான எதிர்வினை ஆற்றுகிறோம் என்பதும் முக்கியமானதாகும். எனவே மிகச்சரியாக அதுதான் மேற்குவங்கம் அமுல்படுத்தியுள்ள தொழில்மய கொள்கையை நோக்கி இறுதியாக நம்மை இழுத்துச் சென்றது. ஆம். விவசாயிகளுக்கு எதிரான அநாகரீக மூலதனத் திரட்டலை வலிமைப்படுத்துகிற தற்போதைய தாராளவாத அரசின் கீழ் விவசாயிகள் அடைகிற பாதிப்புகளும் பெரும் மக்கள் போராட்டத்தை ஒருங்கிணைப்பதற்கான முக்கிய இடத்திற்கு வருகின்றன.
அதே நேரத்தில் இடது முன்னணி அரசுகள் இருக்கிற இடங்களில் – அவர்களால் தொழில்மயம் செய்யவும், முன்னேறவும் முடிகிறதோ இல்லையோ – நமக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் இடையிலான அரசியல் போராட்டத்திற்கான கருவியாக அவை இருக்கின்றன. அந்த சூழலில் தெளிவாகவே சில நேரங்களில் நேர் எதிரான பிரச்சனைகளான மேற்சொன்ன இரண்டையும் எப்படி சந்திப்பது?. இப்போது அங்கே தொழில்மயம் செய்வதே பிரச்சனையாகியுள்ளது. சொல்லுங்கள், இடது முன்னணி ஆளும் மாநிலங்கள் நிலங்களை கையகப்படுத்துகிறது. இப்போது இது சரியானதா? அது என்ன காரணத்திற்காக செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து சரியானதாகிறது. அல்லது பழையபடியே இருப்பதாக வைத்துக்கொள்வோம். விவசாயப்பன்னைகளை நாம் கைவைக்கவில்லை. அது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கட்டும் என விட்டுவிடுவோம். நாம் அதனை முன்னேற்றவில்லை. தொடர்ந்து வருகிற தேர்தலில் நாம் தோற்று விடுவோம். பிறகு நமது போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கு பதில் நமது தளங்களை காப்பாற்றிக் கொள்ளவே போராடும் சூழலுக்கு தள்ளப்படுவோம். கடந்த கால அரை-பாசிச பயங்கரவாதத்தின் போது நடைபெற்றதைப் ரத்த வெறிபிடித்த வர்க்கப் போரை நோக்கி நாம் தள்ளப்படுவோம்.
நமது புரட்சிகரத் தன்மையை இழக்காமல் இந்த இரண்டையும் ஒருங்கிணைப்பது எப்படி? அங்கேதான் நடைமுறை அரசியல் தளத்திற்கு வருகிறது. நாம் அந்த சிக்கலை தீர்க்க வேண்டும். சிங்கூர் மற்றும் நந்திகிராமில் அவ்வாறான சிக்கல்களை நாம் பெற்றோம். இப்போது அவற்றை எதிர்கொள்கிறோம். இதுபோன்ற மாற்றங்கள் நடைபெருகிறபோது இந்திய அரசமைப்பில் எந்த ஒரு மாநில அரசும் மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட கொள்கைகளை மாற்றம் செய்ய முடியாது என்பதை நாம் புரிந்திருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.
இந்த கட்டுக்குள் நாம் செயல்பட வேண்டும். அப்படி செயல்படுகிறபோது தொழில்மயம் நடைமுறைக்கு வந்தாலும் விவசாயி வர்க்கத்தை காப்பாற்றுவோம் என்கிற கோசத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். நாம் விவசாயிகளை எப்படி காப்பாற்றப் போகிறோம், விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக தொழிலாளர்களும் போராடுகிற போது நாம் விவசாயி வர்க்கத்தை முக்கிய இடத்திற்கு கொண்டுவந்து விவசாயி-தொழிலாளி கூட்டணியை எப்படி வலிமைப்படுத்தப் போகிறோம். மாநிலத்தை தொழில் மயப்படுத்துவதற்கான நமது தந்திரம், விவசாயி தொழிலாளி கூட்டணியை வலிமைப்படுத்தி மக்கள் ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்கிற நமது போர்த்திட்டத்திற்கு எதிராக அமைய முடியாது. நாம் இந்தத் தந்திரங்களை எப்படி செயல்படுத்துகிறோம் என்பதே பிரச்சனையாகிறது. அதைத்தான் நாம் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறோம், அதாவது நம்மை இணைத்துக் கொண்டுள்ளோம்.
சிங்கூரில் கையகப் படுத்தப்பட்ட ஆயிரம் ஏக்கர் நிலத்திற்காக 12,000 த்திற்கும் அதிகமானோர் நஷ்ட ஈடு பெற்றனர். இதன் அர்த்தம் என்ன? ஒரு ஏக்கர் நிலத்தில் 12 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த நிலையில் யாரேனும் சொல்லிக் கொள்கிற வகையில் பிழைக்க முடியுமா?. அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க தொழில்மயத்தை தவிர வேறு என்ன வாய்ப்பு இருக்கிறது?.
ஆனால் தொழில்மயப்படுத்தும்போதும், நிலங்களை கையகப் படுத்தும்போதும். தாராளவாதத்தின் ஆரம்பகால மூலதனத் திரட்டலை வலிமைப்படுத்துகிற கட்சியாக நாம் இருக்க முடியாது. ஆனால், அதேநேரத்தில், இன்றைய முதலாளித்துவத்திற்கும், தாராள வாதத்திற்கும் எதிரான நமது போராட்டங்களை வலிமைபடுத்திக் கொண்டே எந்த வழிகளில் இந்த சூழலை கையாளுவது? அந்த வழிமுறையில்தான் நாம் நட்ட ஈட்டின் அளவையும், மறு-பயிற்சி, இன்னும் சிங்கூரில் செய்யப்பட்ட மற்ற பல விசயங்களையும் தீர்மானித்து செயல்பட்டளிம். எனவே இந்த பிரச்சனைகள் வரும், நாம் எதிர்கொள்ள வேண்டும். ஆனால் நாம் மையாமான திசை என்ன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நமது செயல் தந்திரங்கள் நமது போர் திட்டத்தை முன்னேற்றும் வகையில் பின்னிப் பிணைந்திருக்க வேண்டும் பலவீனப்படுத்திவிடக் கூடாது. மற்றும் இந்த அசாதாரண சூழலிலும் இந்த அளவுகோல் நம்மிடம் இருந்தால், அந்தத் தந்திரங்களை நம்மால் செயல்படுத்த முடியும்.
மக்கள் போராட்டங்களை வலிமைப்படுத்துவோம்:
இந்த சூழலின் மிகப்பெரிய கேள்வி, அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் முன்னாள் இருக்கும் மிக முக்கியமான கேள்வி, மக்கள் ஜனநாயகப் புரட்சியை வலிமைப்படுத்துவதற்கான ஆயுதமாக விவசாயிகள், மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் போராட்டங்களை வலிமைப்படுத்தி அவர்களை கட்டமைப்பதற்கான பிரச்சனை எது என்பதுதான் என நினைக்கிறேன்.
அது பெரும் மக்கள் போராட்டங்களின் மூலமே சாத்தியமாகும். இறுதியாக நாம் பல பத்தாண்டுகளாக பெற்றிருக்காத வாய்ப்புகளை இப்போது பெற்றிருக்கிறோம். எனவே தொடர்ந்து தற்காப்பு இயல்பில் நமது உரிமைகளை காப்பதற்காக நடைபெற்று வந்த போராட்டங்களை மூலதனத்தின் அதிகாரத்திற்கு எதிரான தாக்குதலாக இப்போது மாற்ற வேண்டுமென நினைக்கிறேன். இந்தியத் தன்மையில் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்ட பிரச்சனைகளின் மீது கிராமப்புற மக்கள் போராட்டங்களை ஒரு கிளர்ச்சியாக நடத்த வேண்டும் என்பதே இதன் அர்த்தம். – சில இடங்களில் அது மின்சாரமாக இருக்கும், சில இடங்களில் அது தண்ணீர், சில இடங்களில் வேறு பல பிரச்சனைகள். ஆனால் எல்லா பிரச்சனைகளின் அடிப்படையாக விச மற்றும் விதொச அதன் தந்திரங்களை செயல்படுத்தி, எல்லாப் பிரச்சனைகளையும் பேராசிரியர் பிரபாத் பட்னாக்கை சரியாக குறிப்பிட்டு காட்டிய, விவசாயிகள்-தொழிலாளி கூட்டணியை மையப்படுத்தி நகர்த்தவேண்டும். அனால், அக்டளிபர் புரட்சியின் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டத்தில் லெனின் சொன்னதையும் நினைவில் வையுங்கள். அங்கே தொழிலாளர்-விவசாயி கூட்டணி வாழ்க! என்று பெரிய வாழ்த்து தட்டிகள் இருந்தன. அதைக் கண்ட லெனின் அவர்களை கண்டித்தார். சோசலிச புரட்சிக்கு பிறகும், தொழிலாளிகள்-விவசாயிகள் கூட்டணி வாழ்க என்று சொன்னால் அங்கே சோசலிசமே இருக்காது, சிறு விவசாயிகள் கிராமப்புற தொழிலாளி வர்கமாக மாற்றப்பட வேண்டும் . அது வேறு பிரச்சனை, புரட்சியின் வரையில் தொழிலாளர்கள் விவசாயிகள் கூட்டணியே நமக்கான கருவி.
எனவே நிச்சயம் இந்தக் கருத்தரங்கின் மையமான செய்தியாக இன்று கிடைத்திருக்கும் வாய்ப்பை பற்றிக் கொள்வோம் என்பதே அமையும் என்று நினைக்கிறேன். வலிமை மிக்க மக்கள் இயக்கங்களை கட்டமைப்போம். அதோ அங்கே தோழர் ஆம்ரா ராம் முன்னேறுகிறார். அவர் ராஜஸ்தான் போராட்டங்களின் காரணமாக சட்டப் பேரவைத் தேர்தல்களில் மூன்று உறுப்பினர் இடங்களை பெற்றிருக்கிறார். நான் அவரிடம் நகைச்சுவையாக கூறினேன், மூன்று சீட்டுகளை பெற்றிருக்கும் நிங்கள் இதோடு தன்னிறைவு பெற்று பாஸ் பொத்தானை அழுத்திவிட முடியாது. ஒருவேளை நீங்கள் பாஸ் அத்தனை அமுக்கினால் பிறகு இருக்கிற மூன்றும் போய்விடும். இங்கெ இரக்கமற்ற இரண்டே வாய்ப்புகள்தான் இருக்கின்றன, ஒன்று நாம் முன்னேற வேண்டும், அல்லது உங்கள் எதிரி முன்னேறவேண்டும். வெற்றிடம் என்பது இல்லை. கண்டிப்பாக நாம் முன்னேற வேண்டும். இந்த கருத்தரங்கை தொடர்ந்து நமது வெகுஜன அமைப்புகள் மேற்ச்சொன்ன போர்த்தந்திரங்களை செயல்படுத்த வேண்டும்.
அமெரிக்க நாட்டுப் பொருளாதாரப் பேராசிரியர் ஜான் கென்னத் கால்பிரெயித் சில மாதங்களுக்கு முன் காலமானார். அவருக்கு வயது 98. இந்தியா உட்பட உலக நாடுகளின் பத்திரிக்கைகள் அவருக்கு புகழாரம் சூட்டி அஞ்சலி செலுத்தின. பொருளாதாரத்துறையில் அவரது பங்களிப்பை நினைவு கூர்ந்தன. 1961 முதல் 63 வரை அவர் அமெரிக்க தூதுவராக இந்தியாவில் பணிபுரிந்ததை இந்தியப் பத்திரிக்கைகள் நினைவு கூர்ந்தன.
அவர் விட்டுச் சென்ற எழுத்துக்களைக் கவனித்தால் அரசியலிலும், பொருளாதாரத் துறையிலும் இடித்துரைக்கும் ஒரு நண்பரை இழந்துவிட்டோம் என்ற எண்ணம் மனதிலே நிழலாடும். 98 வயது வரை வாழ்ந்த அவர் 70 ஆண்டுகளாக பொருளாதார யுக்திகளின் சமூக விளைவுகளை நுணுகி ஆய்வு செய்தார். அவர் பொருளாதாரத் துறை சார்ந்த 31 நூல்கள் எழுதியுள்ளார். அவர் எழுதிய முதல் புத்தகம் அமெரிக்க முதலாளித்துவம் (அமெரிக்கன் காப்பிட்டலிசம்) என்ற நூல். இந்த நூல் அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார யுக்திகளின் (எகனாமிக் டெக்னிக்ஸ்) செயல் திறனை பாராட்டி எழுதிய விமர்சன நூலாகும். அவர் எழுதிய கடைசி புத்தகம் பழியற்ற ஏமாற்றுப் பொருளாதாரம் (எகனாமிக்ஸ், ஆஃப் இன்னொசென்ட் ஃபிராடு) என்ற 62 பக்கங்களே கொண்ட சிறிய நூலாகும். இது அமெரிக்க நவீன முதலாளித்துவப் பொருளாதார ஏமாற்றுகளை எடுத்துக் காட்டியது. சொல்லாடல் மூலம் எவ்வாறு ஏமாற்றுக்களை மக்கள் தலையில் கட்டுகிறார்கள். எதார்த்தத்தை ஏற்க தடுக்கப்படுகிறார்கள் என்பதை இப்புத்தகம் காட்டுகிறது.
அமெரிக்க பொருளாதார யுக்திகள் என்பது எதார்த்தங் களை மறைக்க உருவான ஏமாற்று வித்தைகளே என்பதை எழுத ஒரு அமெரிக்க குடிமகனுக்கு மிகுந்த நேர்மையுடன், துணிச்சலும் வேண்டும். அமெரிக்க பண்பாட்டின் துரோகி, கம்யூனிஸ்ட் என்றெல்லாம் முத்திரை குத்தி வேட்டை யாடப்படுவதை தாங்கும் இதயம் கொண்டிருக்க வேண்டும். (அமெரிக்காவில், கம்யூனிசம் என்றால் கேவலமானது. அதே போல் காப்பிட்டலிசம், முனாப்பொலி போன்ற சொற்களும் அருவருப்பானது.)
அமெரிக்காவில் பிறப்பது என்பதே ஒரு அபூர்வமான வாய்ப்பாகும். செல்வம் திரட்ட ஏழு கடல்களையும் தாண்டி அக்கிரமங்கள் செய்யும், ஒரு தாதா வீட்டில் பிறப்பதற்கு ஒப்பாகும் என்று ஒரு நிருபர் எழுதியது முற்றிலும் சரி. ஒரு சராசரி அமெரிக்கனுக்கு மற்றவர்களைவிட கூடுதல் சுதந்திரமுண்டு, வளமான வாழ்வு உண்டு, செல்வம் திரட்ட ஏராளமான வாய்ப்புகளும் உண்டு.
இந்த வளங்களும், வாய்ப்புக்களும், தொழில் நிறுவனங்களின் சிறப்பிற்கும் அடிப்படை அமெரிக்க அரசாங்கத்தின் செயல்கள் மூலம் உலக நாடுகளைச் சுரண்டியும், ராணுவத்தை அனுப்பி மக்களைப் பெரும் திரளாகக் கொன்றும், கடன் வலைகளை விரித்தும் உருவாக்கப்படுகிறது என்பதை சராசரி அமெரிக்கனால் உணரவே இயலாது. (எருதின் நோயை காக்கை அறியாது என்பது போல் தான்) பங்குச்சந்தை சரிந்தால் பதறுவான்; பக்கத்து நாட்டிலும், தூர தேசத்திலும், அமெரிக்க ராணுவ நடவடிக் கைகளால் லட்சக் கணக்கானோர் சாய்ந்தால் கை தட்டுவான். இதனை சுதந்திரத்தையும், மனித உரிமையையும், இன்பத்தைத் தேடும் உரிமையையும் காக்கும் சேவையாக கருதுவான். அமெரிக்க அரசியலமைப்பும் பிடிபடாத ஒன்றாகும். ஒரு நபரின் எதேச்சதி காரத்தை உத்தரவாதப்படுத்த, மிகவும் சிக்கலான, மர்மங்கள் நிறைந்த வாக்களிப்பு முறை இங்கு உள்ளது. இங்கே ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்த பின் முனகிக் கொண்டே அந்த நபரின் எதேச்சதிகாரத்தை மக்கள் சகித்துக் கொள்வர். அவர்கள் வெளியிடுகிற கருத்துக் கணிப்புகள் மூலம் இதனை நாம் உணரலாம்.
உலகளவில் மிகப்பெரும் பணக்காரர்கள் வாழுமிடம் அமெரிக்கா; அதே நேரம் மிக அதிகமானவர்கள் சிறையிலே வாழ்வதும் அங்கு தான். கருப்பு அமெரிக்கர்களில் 20 வயதிற்கு உட்பட்ட சிறார்களில் 12 சதம் பேர் சிறையிலே வாழ்வதாக அரசே புள்ளி விபரம் தருகிறது. ஸ்டான்லிடூக்கி வில்லியம்ஸ் எழுதிய சிறைவாழ்க்கை என்ற 80 பக்க புத்தகம் வறுமையில் உழலும் அமெரிக்க சிறார்கள், சிறை வாழ்வை சொர்க்கமாகக் கருதி குற்றங்கள் புரிவதும் மன உளச்சலில் அவதிப்படுவதையும் படம் பிடித்துக் காட்டுகிறது.
சிறுவன் டூக்கி வில்லியம்ஸ் தெருச் சண்டையில் நடந்த கொலைக்காக 1981 ல் மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான். இச்சிறுவன் சிறையிலிருந்து எழுதியவைகள் மக்கள் மனதைத் தொட்ட இலக்கியமாகிவிடுகிறது. சிறை வாழ்க்கை என்ற புத்தகத்தை அமெரிக்கப்பள்ளிகளில் பாடநூலாக ஆக்கப்படுகிறது. உள்நாட்டுக் கலவரங்களைத் தடுக்கும் மாமருந்தாக இப்புத்தகத்தை அறிவுலகம் பார்த்தது. நோபிள் பரிசு பெற்ற ஆன்றோர்கள், டூக்கி வில்லியம்சிற்கு நோபிள் பரிசு வழங்க சிபாரிசு செய்கின்றனர்.
அமெரிக்க அரசு சிறுவனை தூக்கிலிடவுமில்லை, மன்னித்து விடுவிக்கவுமில்லை. 25 ஆண்டுகள் கடந்த பிறகு 2006ம் ஆண்டில் கலிபோர்னிய கவர்னர் டூக்கி வில்லியத்திற்கு மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடுகிறார். உலகமே கண்டிக்கத்தக்க மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
அமெரிக்க அரசியலிலும், பொருளாதாரத்திலும் நுழைந்துள்ள பம்மாத்துக்களை சரியாகப் புரிய வேண்டுமானால், கால்பிரெயித்தின் விமர்சனத்தையும் அமெரிக்காவில் வறுமையில் குற்றம் புரிய தள்ளப்படும் சிறார்களின் வாழ்க்கையையும் இணைத்துப் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும்.
ஜான்கென்னத் கால்பிரெயித் முதலாளித்துவத்தை விமர்சித்தது போல், சோசலிசத்தையும் கடுமையாக விமர்சித்தார்.
முதலாளித்துவத்தில் மனிதனை மனிதன் சுரண்டுகிறான் என்றால் கம்யூனிசத்தில் அதுவே தலைமாறி நடக்கிறது என்று நையாண்டி செய்தார். அவரது கருத்துப்படி பொருளாதார யுக்திகள் என்பது முதலாளித்துவத்திற்கும், சோசலிசத்திற்கும் பொதுவானது ஆகும். எனவே இரண்டிலும் சுரண்டல் இருப்பதாக விமர்சித்தார்.
இவரது எழுத்துக்களில் எதார்த்தத்தைத் தேடும், நேர்மை இருந்ததால், கம்யூனிச சிந்தனை உலகம் இவரது விமர்சனங்களைக் கூர்ந்து கவனித்தது. மாஸ்கோ பல்கலைக்கழகம் இவரைக் கவுரவித்தது. சீனப் பல்கலைக் கழகமும் இவரைப் பாராட்டியது.
கற்பனா சோசலிச வாதங்களால் உருவாகும் பிரமைகளை உடைப்பதற்கு இவரது விமர்சனங்கள் உதவும் என்று கம்யூனிச சிந்தனை உலகம் கருதியே இவரைப் பாராட்டியது.
ஆனால், அமெரிக்க முதலாளித்துவ சிந்தனை உலகம் இவரது எழுத்துக்களை உதாசீனப்படுத்தியது. கடுமையாக இவரை முத்திரை குத்தி தாக்கியது.
பணக்காரனுக்கு பணத்தைப் பெருக்கும் சுதந்திரத்தை பாதுகாத்தால் தான் அது பொங்கி வழிந்து ஏழைகளுக்கு போய்ச் சேரும் என்பது அமெரிக்க முதலாளித்துவத்தின் நம்பிக்கையாகும். இதனைப் பொருளாதார நிபுணர்கள் கீழே கசியும் (டிரிக்கிள் டவுன் தியரி) கோட்பாடு என்று அழைப்பர். இந்தக் கோட்பாட்டை கால்பிரெயித் கடுமையாக விமர்சித்தார்.
குதிரைக்கு போதுமான அளவு ஓட்ஸ் தானியத்தை ஊட்டி விட்டால் அது குடல் வழியாக கடந்து வெளியேறும் பொழுது சில தானியங்கள் குருவிகளுக்கு உணவாகக் கிடைக்கும் என்று எள்ளி நகையாடினார். அதாவது குதிரைக்கு அதிகமாக ஊட்டினால் அதுபோடும் சாணிமூலம் குருவிகளுக்கு கிடைத்துவிடும் என்பது போல் கீழே கசியும் கோட்பாடு உள்ளது என்று விமர்சித்தார். பணக்காரனின் பணப்பெருக்கம் ஏழைகளுக்கு நல்லது என்பது ஒரு ஏமாற்று என்று சுட்டிக்காட்டினார்.
முதலாளித்துவம் வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்குவதின் மூலம் மனித உழைப்பை வீணடிக்கிறது என்பது இவரது இன்னொரு விமர்சனம்.
மேற்கைவிட கம்யூனிஸ்ட்டுகள் எப்படியோ மனித உழைப்பை திறமையாகப் பயன்படுத்துகின்றனர் என்று எழுதினார். இத்தகைய அமெரிக்கப் பேராசிரியரின் கடைசிப் புத்தகத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவது அவசியம். 62 பக்கங்களே கொண்ட எகனாமிக்ஸ் ஆஃப் இன்னொசென்ட் ஃபிராடு என்ற நூலைத் தமிழில் வெளியிட முன்வருவோர், தமிழர்களின் சிந்தனை விரிவாக்கத்திற்கு உதவி புரிந்தவராக உயர்ந்து நிற்பர்.
வறுமை, வேலையின்மை, யுத்தம் ஆகியவைகள் பொருளாதார யுக்திகளின் விளைவு என்பதை அறியவும், தலைவிதி நம் கையில் இல்லை வேறு வழியில்லை என்ற மூடநம்பிக்கைகளில் இருந்து விடுபடவும், இந்த சிறிய புத்தகம் அதன் வழியில் உதவுகிறது. அரசியலிலும், பொருளாதாரத்திலும் எதுசரி, எது பயனுள்ளது என்பதை அலசிட ஒருவரது புத்தியை இந்தச் சிறிய புத்தகம் தீட்டி விடுகிறது. அமெரிக்க முதலாளித்துவத்தின் ஏகபோக தன்மை யையையும், ஆதிக்கத்தனத்தையும், ஏமாற்றுக்களையும் நேர்மை யுடன் இப்புத்தகம் சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்க பொருளாதார யுக்திகளே சிறந்தது என்று கருதுகிற அரசியல்வாதிகளும், பொருளாதார நிபுணர்களும் படிக்க இந்தப் புத்தகத்தை சிபாரிசு செய்யலாம். அந்நிய மூலதனத்தை கும்பிடும் மூடத்தனத்திலிருந்து கரைசேர இந்த நூல் அவர்களுக்கு உதவும்.
துவக்கம்
இந்த நூலின் துவக்கத்திலேயே அமெரிக்காவின் இன்றைய நிலையை குறிப்பிடுகிறார்.
அமெரிக்க அரசியலிலும், பொருளாதாரத்திலும் எதார்த்தம் என்பது முன்னுக்கு வருவதில்லை. பாக்ஷனும், பண ஆசையும் எதார்த்தங்களை பார்க்க விடுவதில்லை . இதன் விளைவாக அமெரிக்கப் பொருளாதாரத்தில் பல ஏமாற்றுக்கள் புகுந்து விட்டன. இந்த ஏமாற்றுக்களை யாரோ திட்டமிட்டு புகுத்துவதாகக் கருதிவிடக் கூடாது. யார்மீதும் பழிபோட முடியாத ஏமாற்றுக்கள் என்கிறார். அதாவது இன்னொசென்ட் ஃபிராடு என்று கூறுவதற்கான காரணங்களையும் குறிப்பிடுகிறார். 70 ஆண்டுகள் பொருளாதாரத் துறையோடு சம்பந்தப்பட்ட துறைகளிலே பணிபுரிய நேர்ந்ததால் ஒன்றைக் கற்றுக் கொண்டதாகவும் கூறுகிறார். ஒருவன் சரியாகவும், பயனுள்ளதாகவும் இருக்க வேண்டுமானால் எதார்த்தம் என்பது பொது ஞானத்திலிருந்து விலகிக் கொண்டே போகிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது பொது அறிவு என்று நாம் ஏற்றுக்கொண்டது வேறு; எதார்த்தம் வேறு என்பதை உணராமல் மரபு வழி ஞானமே சரியாக இருக்கும் என்று கருதி அணுகுகிற பொழுது ஏமாற்றுக்கள் புகுந்துவிடுவதை உணரமுடியாது என்கிறார். இந்த முன்னுரையோடு ஏமாற்றுக்களை ஒவ்வொன்றாக அடுக்குகிறார்.
ஏமாற்று – 1
அமெரிக்க பொருள் உற்பத்தி முறையை, பொருளாதார நிபுணர்களும், அரசியல்வாதிகளும், பேராசிரியர்களும் சந்தை முறை அமைப்பு என்று புதிதாக பெயர் சூட்டியுள்ளனர். முதலாளித்துவம் என்ற சொல் அமெரிக்க மக்களிடையே, வரலாற்றை நினைவூட்டி அருவருப்பை தூண்டுவதால், இந்தப் பெயர் மாற்றம் புகுத்தப்பட்டது. இந்தப் புதிய பெயர் பண்பான சொல்லாக இருக்கலாம். ஆனால், பொருளற்ற சொல்மட்டுமல்ல; எதார்த்தத்தைப் பிரதிபலிக்க வில்லை என்கிறார்.
சந்தை என்பது கி.மு. 8 ம் நூற்றாண்டிலேயே மானுட சமூகம் கண்டுவிட்ட ஒன்று. என்று நாணயம் தோன்றியதோ அன்றே சந்தை அமைப்பும் தோன்றிவிட்டது. அமெரிக்காவில் முதலாளித்துவம் தோன்றிய பொழுதே ஏகபோகமாகிட அக்கிரமமான வழிகளை முதலாளிகள் பின்பற்றியதால் முதலாளித்துவம், ஏகபோக முதலாளித்துவம் போன்ற சொற்கள் மக்களிடையே எதிர்ப்பைக் கிளப்பின. 19ம் நூற்றாண்டில் முதலாளித்துவ உற்பத்தி முறையின் தோற்றத்தை ஆராய்ந்த மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரும் தங்களது ஆற்றல் மிகு உரைநடையால் புரட்சிகள் வெடிக்கும் என்றனர். அவர்கள் கூறியது போல் ரஷ்யாவில் தொழிலாளி வர்க்கம் புரட்சி செய்தது. ஆனால் ஐரோப்பாவில் முதலாளித்துவத்தை நீக்கி விட்டு, தாராளவாத சமூக ஜனநாயகம் பிறந்தது. அமெரிக்காவில், ஏகபோகமாவதைத் தடுக்கும் சட்டங்கள் வர சமூக முரண்பாடுகள் உதவின. ஆனால் காலப்போக்கில் அமெரிக்க பொருளாதாரம் என்பது ஏகபோக முதலாளித்துவமாக ஆகிவிட்டது. இந்த எதார்த் தத்தை மறைக்கவே சந்தை முறை என்ற சொல் புகுந்தது. இது ஒரு ஏமாற்று.
ஏமாற்று – 2
முன்காலத்தில் அமெரிக்காவில் ஒரு தொழிலின் முதலாளியே எல்லா முடிவுகளையும் எடுப்பார். ஆனால் இன்று அப்படி அல்ல. முதலீட்டாளர்களிடமிருந்து அதாவது பெரிய தொழில் நிறுவனத்தின் பங்குதாரர்களிடமிருந்து அதிகாரம் கை தேர்ந்த நிறுவன அதிகாரிகளிடம் கைமாறுகிறது என்பது ஒரு புரியாத புதிர் ஆகும். பாக்ஷனும், பண ஆசையும், பங்குதாரர்களை எதார்த்தங்களை பார்க்க விடாமல் தடுப்பது ஒரு பக்கம். மறுபக்கம், விளம்பர யுக்திகளின் மூலம், பல்வேறு குறியீட்டெண்களை ஜோடித்து, தொழில் ஆரோக்கியம், லாபம் குவிக்கும் திறன் ஆகியவை பற்றி எதார்த்தத்திற்கு புறம்பாக ஒரு சித்திரம், தொழில் நிறுவன அதிகாரிகளால் காட்டப்படுகிறது. அமெரிக்காவில் அநேகமாக எல்லாத் தொழில்களும், ஏகபோகங்களாகிவிட்டன. அதிகார வர்க்கமே எல்லா முடிவுகளையும் எடுக்கிறது. இது அடுத்த ஏமாற்று.
ஏமாற்று – 3
அமெரிக்க முதலாளித்துவத்தின் ஏகபோக தன்மையையும், அதிகாரவர்க்க நிர்வாக முறையையும் மறைக்க இன்னொரு ஏமாற்று புகுத்தப்படுகிறது. அதுதான் நுகர்வோர் ஆதிபத்தியம். அமெரிக்க சந்தையை ஆட்டுவிப்பது நுகர்வோர்கள் தான் என்ற பம்மாத்து புகுந்த மர்மத்தை மரபுவழி ஞானத்தால் உணர இயலாது.
பகாசூர நிறுவனங்களின் விளம்பர யுக்திகள் மூலம் நுகர்வோர்கள் எதை விரும்ப வேண்டும் என்பது தீர்மானிக்கப் படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், நுகர்வோர் ஆதிபத்தியம் என்பது ஏகபோக முதலாளித்துவத்தின் கேடுகெட்ட அம்சங்களை மறைக்க புகுந்த ஏமாற்று ஆகும். சந்தையை நுகர்வோர் தான் தீர்மானிக்கின்றார்கள் என்பது அமெரிக்காவில் எங்கும் பரவி இருக்கும் ஒரு ஏமாற்று என்கிறார் கால் பிரெயித்.
ஏமாற்று – 4
மானுட வளர்ச்சியின் எந்த அம்சத்தையும் பிரதிபலிக்காத சில குறியீட்டெண்கள், முன்னேற்றத்தை காட்ட முன்வைக்கப்படுகிறது. அதில் ஒன்றுதான் தேச மொத்த வருவாய் அதிகரிப்பு என்ற பொருளாதார வளர்ச்சியை காட்டும் சதவீத குறியீட்டெண்ணாகும். பகாசூர நிறுவனங்கள் திட்டமிட்டு உருவாக்கப்படும் பொருட் களின் மதிப்பே, தேச மொத்த வருவாயாக காட்டப் படுகிறது. இந்த குறியீட்டெண் ஒரு சமுதாயத்தில் ஏற்பட்டு வரும் கலை, இலக்கிய விஞ்ஞான வளர்ச்சியை காட்டாது. பிரிட்டனில் தேச மொத்த வருவாய் வளர்ச்சி விகிதம் குறைவாக இருந்த காலத்தில் தான், சிறந்த இலக்கியங்கள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் வேகமாக வளர்ந்தன. தேச மொத்த வருவாய் குறியீட்டெண்ணை வைத்து தேசத்தில் ஆற்றலை அளப்பது என்பது ஒரு மாபெரும் ஏமாற்று ஆகும்.
ஏமாற்று – 5
உழைப்பு என்பது மானுட சமூகத்தின் செல்வ ஆதாரத்தின் அடிப்படை; ஆனால், உழைப்பை பற்றிய ஒரு ஏமாற்று இங்கே நிலவுகிறது.
ஆற்றல் உள்ளவர்கள், ஆற்றல் இல்லாதவர்கள் என்ற ஏமாற்றைப் புகுத்துகிறது. உழைப்பை வெறுப்பவர்கள், உழைப்பே இன்பமென கருதுபவர்கள் என்று சமூகமே பிளவுபட்டு இருப்பதாக ஒரு தோற்றத்தை இந்த ஏமாற்று புகுத்திவிடுகிறது.
ஏழைகள் வேலையை சுமையாகக் கருதுகிறார்கள் என்ற பார்வையையும் இந்த ஏமாற்று புகுத்திவிடுகிறது.
கொழுத்த சம்பளமும், உல்லாச வாழ்விற்குத் தேவையான போகப் பொருட்களும், விடுமுறையும் சிலருக்கு வேலை என்பது இன்பமாக ஆக்கப்படுகிறது. குறைவான சம்பளமும், ஓய்வு பெற முடியாத சூழலும், வேலைப்பளுவும் உள்ளவர்களுக்கு அது சுமையாக ஆகிவிடுகிறது.
இந்த உண்மைகளை மறைக்கும் ஏமாற்று இங்கே புகுத்தப்பட்டுள்ளது.
பணக்காரன் உல்லாசமாக இருக்கப் பிறந்தவன் என்றும், ஏழைகள் வேலைப்பளுவைச் சுமக்கப் பிறந்தவர்கள் என்றும் இருக்கும் எதார்த்தத்தை இந்த ஏமாற்று மறைத்து விடுகிறது.
ஏமாற்று – 6
அமெரிக்காவில் முதலாளித்துவம், அதிகாரவர்க்கத்தனம் போன்ற சொற்களைப் பொருளாதார நிபுணர்கள் அகராதி யிலிருந்தும், பாடப்புத்தகங்களிலிருந்தும் நீக்கிவிட்டனர். ஒரு பகாசூர நிறுவனத்தின் நிர்வாகிகளே எல்லாவற்றையும் ஆட்டிப்படைக்கிறார்கள்; இந்த அதிகார வர்க்க ஆதிக்கத்தை மறைக்க ஒரு புதிய சொல்லைப் புகுத்திவிட்டனர். அதுதான் நிர்வாக ஆற்றல் என்ற சொல். இதன் மூலம், அதிகார வர்க்க நிர்வாக முறைக்கு ஆபத்தில்லாமல் ஆக்கிவிட்டனர்.
ஏமாற்று – 7
அமெரிக்கப் பொருள் உற்பத்தியில் தனியார் துறை, பொதுத்துறை என்பது இன்னொரு ஏமாற்றாகும். இங்கே பொதுத்துறையையும், தனியார் துறையையும் ஒரே அதிகார வர்க்கம் தான் நிர்வகிக்கிறது. ஆட்டுவிக்கிறது. ஒரு பகாசூர நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்தவர், மக்கனமாரா. இவர், அமெரிக்க ராணுவத்துறைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். அதே அமெரிக்க அரசின் உயர் பதவியிலிருக்கும் அதிகாரிகள், தனியார்துறை நிறுவனங்களின் நிர்வாகியாகப் போய்விடுவதும் நடக்கிறது. ஆயுதங்கள் செய்யும் பகாசூர தனியார் நிறுவனங்களின் அதிகாரிகளும், அமெரிக்க அரசாங்கத்தின் தலைமை நிர்வாகிகளும், இடம் மாறுவதைப் பார்த்தால் பொதுத்துறை, தனியார் துறை என்று இரண்டு பிரிவு இருப்பதாகத் தோற்றமளித்தாலும் அதிகாரிகளை இடம்மாறி பதவிகளில் அமர்வது என்பது இரண்டும் வேறல்ல என்பதை காட்டிக் கொடுத்து விடுகிறது.
பண உலக ஏமாற்று
வங்கிகள், பங்குச்சந்தை, மியூட்சுவல் பண்ட், பண நிர்வாக ஆலோசனைகள், வழிகாட்டல் ஆகியவைகளை கொண்டது தான் பண உலகம். அமெரிக்க சமூகமே அங்கீகரிக்கும் ஏமாற்று இங்கே உள்ளது.
இந்த உலகில் தகவல்கள் என்பது மிகுந்த கட்டுப்பாட்டில் உள்ளது. பல தகவல்களை தெரியாதவைகள் என்று பட்டியல் தான் போட முடியும். பொதுவாக, எப்பொழுது பொருளாதாரம் நல்ல நிலையிலிருக்கும், எப்பொழுது அதற்கு கெட்டகாலம் வரும் என்று யாராலும் முன் கூட்டியே கூற இயலாது. அரசு, பெரிய நிறுவனங்கள், பெரும் புள்ளிகள் ஆகியோரது நிர்ணயிக்க இயலாத செயல் களாலும், யுத்தம், அமைதி போன்ற உலகளவு விவகாரங்களாலும், பொருளாதாரத்தின் திசை நிர்ணயிக்கப்படுகிறது. புதிய தொழில் நுட்பங்கள், நுகர்வோரின் மனோபாவங்கள், ஏற்றுமதி, இறக்குமதி, முதலீடுகளின் நடமாட்டம் இத்தியாதிகளாலும் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆக ஏராளமான தெரியாதவைகள் என்ற காரணிகளால் பொருளாதாரம் ஆட்டுவிக்கப்படுவதால், இந்த தெரியாதவைகளை ஆருடம் கூறுவதே ஒரு லாபகரமான தொழிலாகிவிட்டது. இந்த பண உலக ஏமாற்று என்பது அலாதியானது.
கவுரவமிக்க ஏமாற்று
நவீனப் பொருளாதாரம் என்பது முன்கூட்டியே அறிய இயலாத பல அம்சங்களைக் கொண்டதாகும். அமோக உற்பத்தி, பணவீக்கம், பங்குச்சந்தை குமிழி, உற்பத்தி படுத்துவிடுவது, வேலை இல்லாத் திண்டாட்டம், வருமானக் குறைவு, விலைகள் நிலையாக இருப்பது, விலைகள் இறக்கை கட்டிப் பறப்பது, முன்கூட்டியே அறிய இயலாத தன்மைகளைக் கொண்டது. இத்தகைய நிலையற்ற பொருளாதாரத்தை சரிசெய்ய, அமெரிக்க ரிசர்வ் வங்கி எடுக்கிற நடவடிக்கைகள் ஏமாற்றைப் புகுத்திவிடுகிறது. தேக்கம் ஏற்படுகிற பொழுது வட்டியைக் குறைப்பதும், உற்பத்தி பெருகுகிற பொழுது பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டியை கூட்டுவதும் ஒரு ஏமாற்று வேலையாகும். வட்டி குறைவு என்பதால் யாரும் கடன் வாங்குவதில்லை. பணம் பண்ண முடியும் என்றால், எவ்வளவு வட்டியானாலும் கடன் வாங்கிவிடுவர்.
உண்மையில் அமெரிக்கப் பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மையை, அமெரிக்க ரிசர்வ் வங்கி சரி செய்கிறது என்பது ஒரு ஏமாற்றே. உண்மையில், நிச்சயமற்ற தன்மையின் காரணங்களை ரிசர்வ் வங்கி களையவில்லை. எதார்த்தம் என்ன வெனில், தொழில் நிறுவன அமைப்பு மூலம் பொருள் உற்பத்தி என்பது நிச்சயமற்ற தன்மையை அதன் வழியில் உருவாக்குகிறது. அமெரிக்க பங்குச்சந்தை முறையும், நிறுவன முறையும், பொருள் உற்பத்தியில் நிச்சயமற்ற தன்மையைப் புகுத்துகிறது. அதைச் சரி செய்யாமல், ரிசர்வ் வங்கி ஏமாற்றை புகுத்துகிறது என்கிறார் கால்பிரெயித்.
புத்தகத்தின் பெயர்: Economics of Innocent Fraud ஆசிரியர் : John Kenneth Galbraith
இவ்வாறு அமெரிக்கப் பொருளாதாரத்தில் புகுந்துள்ள ஏமாற்றுகளை அம்பலப்படுத்தும் இந்த சிறிய புத்தகம் நம்மைச் சிந்திக்கத் தூண்டும் சில வரிகளுடன் முடிகிறது. முன்னேற்றம் பற்றி பெருமைப்படுகிறோம். இதை எழுதுகிற பொழுது பிரிட்டனும், அமெரிக்காவும் ஈராக் யுத்த கசப்புகளை அனுபவிக்கின்றனர். இளம் வயதினரையும், ஆண், பெண், குழந்தைகள் அனைவரையும் கசாப்பு செய்கிறோம். மானுட முன்னேற்றம் என்பது கற்பனை செய்ய முடியாத கொடுமை களாலும், சாவுகளாலும் நிரம்பியுள்ளது.
வாசகர்களை விட்டு பிரிகிற பொழுது வருந்தத்தக்க ஒரு உண்மையைச் சொல்கிறேன். நமது நாகரீகம் வெகுவாக முன்னேறியுள்ளது. உடல் ஆரோக்கிய பராமரிப்பு, கலை, விஞ்ஞானம், முன்னேற்றம் எல்லோருக்கும் கிடைக்காத, பொருளாதார வசதி, இவைகளைத் தந்துள்ளது. ஆனால், அதே நேரம் ஆயுத உற்பத்தி என்பது சிறப்பு அந்தஸ்து பெற்று மிரட்டலையும், யுத்தத்தையும் எதார்த்த மாக்கிவிட்டது. பெரும் திரளாக மக்களைக் கொல்வது என்பது நாகரீகத்தின் உச்சபட்ச வெற்றியாக ஆகிவிட்டது என்று முடிக்கிறார். அமெரிக்க நவீன பொருளாதாரத்தின் பம்மாத்துக்களை இச்சிறிய புத்தகம் நன்றாகவே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.