தூணிலும் இருப்பாரா?

ம. சிங்காரவேலர்

தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்  என்று பிரகலாதன் சரித்திரமொன்றைக் கட்டி விட்டார்கள். இது சர்வ வியாபி என்ற கடவுளின் லட்சணத்தைக் குறிக்கும் கதையாகும். வான நூலின் படி பிரபஞ்சமெங்கும் வியாபித்துள்ளவை தூசும், தும்புமே. இதனைக் கடவுளென்பதில் அர்த்தமில்லை. ஆதலின், கண்டவரையில், கடவுள் சர்வ வியாபி என்று சொல்ல யாதொரு நியாயமுமில்லை. வேதாந்திகள் சொல்லும் சத்து, சித்து, ஆனந்தமும் பிரபஞ்சத்தில் காணோம். அங்கு மிங்கும் ஓடுங்கிரணங்களும் (Radiation), தூசும் (Dust), பரமாணுக்களும் (Electrons and Protons) இருப்பதாக யூகையேயொழிய நிலைத் திருக்கும் சத்தாகிலும், அறியும் சித்தாகிலும், உணர்வாகிய ஆனந்தமும், மனிதனுடைய எண்ணத்தின் அதாவது வார்த்தை அல்லது சொற்கள் அன்னியில் வேறு தனிது இருப்பதாக யூகிக்க இடமே இல்லை. உலகில் பரவியுள்ள பற்பல தத்துவஞானங்களெனக் கூறும் (Philosophies) வார்த்தைகள் யாவும் கற்பனைகளாக முடிகின்றபடியால், எதையும் அனுபவமாகப் பார்க்க முடியவில்லை.

அந்தந்த தத்துவப் பொருள்களெனப்படும் சொற்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசப்பட்டே இருக்கின்றன. கடவுளைப் பற்றிப் பேசும் ஞானிகளும், பக்தர்களும் யானையைக் கண்ட குருடர் களைப் போல் பேசுகின்றார்கள். யானையைக் கண்ட குருடர்களா கிலும் ஏதோ ஒரு மிருகத்தைக் கண்டு தங்கள் அனுபவத்திற்குத் தக்கவாறு சொல்லுகின்றார்கள். ஆனால், ஞானிகளோவெனில், யாதொன்றையும் பார்க்காமலேயே வாய்க்கு வந்தவாறு சொற்களைக் கட்டி விடுகிறார்கள். கடவுள், ஆன்மா, பிரம்மன், சிவன், விஷ்ணு முதலிய முப்பத்து முக்கோடி தெய்வங்களும், நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகளும், கின்னரர், கிம்புருடர், அஷ்டபாலர் முதலிய உபதெய்வங்களும், இருளவன், வீரன், சுரியன், காட்டேரி, பெத்தண்ணன், மாரி, முனியன், சங்கிலி, பாவாடை, குழி இரிசி முதலிய பேய், பிசாசுகளும், நாம் தொட்டிலில் பழகிய சில வார்த்தைகளைக் கொண்டு வயது வந்த பிறகு கட்டிய கற்பனை வார்த்தைகளேயாகும்.  (கடவுளும், பிரபஞ்சமும் என்ற நூலில்)

மருளா? மயக்கமா?

ம. சிங்காரவேலர்

5.10.2006 -ம் தேதியிட்ட தினத்தந்தியில் தேர்தலில் வெற்றி பெற பில்லி சூன்யம் வைத்ததாகச் செய்தி வந்துள்ளது. விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறியும், நம்மூர் பக்கம் அந்த ஞானம் தலைவைத்துக் கூட படுக்கவில்லை என்பதை இச்செய்தி நமக்கு உணர்த்துகிறது. போன நூற்றாண்டில் இந்த மூட நம்பிக்கையை எதிர்த்து முதலில் போர்க் கொடி உயர்த்தியவர் சிங்காரவேலர். அரது கட்டுரையை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

சிலர், சூன்யம் வைத்தாகச் சொல்லும் சில கேஸ்களைத் தாமே கண்டதாகவும், மந்திரத்தால் அந்தக் கேஸ்கள் குணப்பட்டதாகவும், தமது அனுபவத்ல் சூன்யத்தை நம்புவதாகவும், அதன் விஷயமாக இரண்டொரு கேஸ் விவரங்களையும் கூறி, அவை எவ்விதம் நடந்திருக்கக் கூடுமென வினவுகின்றார்கள். இத்தியாதி புராதன நம்பிக்கை விஷயமாக நாம் ஒன்று கவனிக்கவேண்டும். தகுந்த விசாரணையின்றி, ஆராய்ச்சியின்றிக் கண்டதையெல்லாம், கேட்டதையெல்லாம் நம்ப வேண்டுமானால், எதையும் சூன்யம், மந்திரம் முதலிய சமாதானமெல்லாம் நிகழும் சம்பவங்களைத் தீர விசாரித் தறியாமல், கொடுக்கும் வியாக்கியானங்களே. தும்முவதால், போன காரியம் கெட்டுவிட்டது, அவன் கண் பட்டதால், நோய் வந்தது,  நரி முகத்தில் விழித்தபடியால் காரியம் குணமாயிற்று என்ற இத்தகைய மூட நம்பிக்கைகளை, நடந்த விஷயத்திற்கும், கொடுக்கும் சமாதானத் திற்கும், என்ன சம்பந்தம் என்ற மனப்பான்மையை வளர்ப்பதில்லை. வேடர்கள், நாளொன்றுக்கு அநேக நரிகளைப் பார்க்கின்றார்கள், அவர்களுக்குப் போதுமான உணவு கிடைப்பதில்லை. போகும் வழியில் சளி பிடித்தவன், ஆயிரந்தடவை தும்முகின்றான். அதனால் அதனைக் கேட்டோர் காரியங்கள் கெட்டுவிட்டதாகத் தெரியவில்லை. கோர்ட்டில் ஜட்ஜூகளை வசியம் செய்ய, மந்திரித்த குங்குமத்தை நெற்றியில் அணிந்து செல்கின்றனர். அவர்கள் கேஸ்கள் சாதாரணமாக ஜெயித்தாகத் தெரியவில்லை. கிருத்திகை அமாவா சையில் படுத்தால், தேரார் என்றும் வழங்குகின்றார்கள்.

ஆனால், மருத்துவமனையில் அந்நாள்களில், நோய் அதிகரிப்பதாகத் தெரியவில்லை. ஆனால், பலர் இத்தியாதி சம்பவங்களில் நம்பிக்கை வைத்து தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றார்கள். இவைகளால் என்ன தெரிய வருகின்றதென்றால், சாதாரணமாக, சொன்னதையும், கேட்டதையும் நம்புவதே, நமது பழக்கமாய் விட்டது. இதேமாதிரி, பலர் சோதிடத்தையும் நம்புகிறார்கள். கிரகங் களால் நமது வாழ்வு பாதிக்கப்படுகிறதாகச் சிலர் சொல்வதை நாம் நம்புகின்றோம். கோடான கோடி மைல் தூரத்தில் இருக்கும் கிரகங்களுக்கும் நமக்குமென்ன சம்பந்தம்? என்பதை விளக்கிக் காட்டுவார் ஒருவருமில்லை.

சூன்யத்தால், அது நடந்தது, இது நடந்தது  என்று சொல்வதெல்லாம் நடந்த சம்பவங்களுக்கு நாம் கொடுக்கும் சமாதானங்களாகும். இந்தச் சமாதானங்கள், சரியானவையா அல்லது கேள்விப் பேச்சா என்பதைத்தான், நிச்சயப்படுத்தவேண்டும். தொந்தரவு படும் பெண்ணின் தாலி, கழுத்திலிருந்து காணாமலும், திரும்பக் காணப்பட்டதாகவும் வைத்துக் கொள்வோம். இதன் காரணமென்ன? சாமான்ய ஜனங்கள் சூன்யத்தால் இந்தவிதமாகச் சம்பவிக்கிறது என்று சொல்லுகின்றார்கள். இது சரியான காரணமா வென்பதுதான் கேள்வி. அந்தப் பெண்ணின் சேலை திடீரெனத் தீப்பற்றிக் கொள்கிறதாம். கை வைக்கும் பண்டங்களில் மலம் தோன்றுகின்றனவாம்! இருக்கலாம். ஆனால், அதன் காரணமென்ன? மந்திரத்தாலா, அல்லது நாம் பொறுமையுடன் கவனிக்காத தோஷத்தால் இவ்வித சமாதானத்தைக் கொடுக்கின்றோம்.

கோபத்தில் தாலியைக் கழற்றியெறியும் பெண்கள் அநேகரைப் பார்த்தும் இருக்கின்றோம். இந்தப் பெண்கள் சூன்யத்தால் செய்கின்றார்களென்றாகிலும், பேய் பிடித்துச் செய்கின்றார்களென் றாகிலும், யாரும் சொல்வதில்லை. சில வியாதியுடையவர்கள், தங்கள் சேலையைக் கொளுத்திக் கொள்கின்றார்கள். மன வெறுப்பாலும் இந்தக் காரியத்தைச் செய்கின்றார்கள். பைத்தியம் முதலிய மன வெறுப்பால் தன் மலத்தைக் கையாளும் நோயாளியைப் பார்த்து மிருக்கின்றோம். இந்தக் கேஸ்களில், பில்லி சூன்யமென்றும் யாரும் நம்புவதில்லை. சாதாரணமாகக் கோபத்தாலோ மன வெறுப்பாலோ, மன மாறுதலால் நிகழ்வதாக நிர்ணயிக்கின்றோம். நாம் பார்த்த காரியங்கள் ஜன்னி நோயால் நேருவது சகஜம். இவைகளைவிட ஆச்சரியமான காரியங்கள், ஜன்னி நோயால் பீடிக்கப்பட்டோர் செய்கின்றார்கள். குழந்தைகள், மலத்தைப் பூசிக்கொள்வதை அறிவின்மையால் என்று சொல்லுகின்றோம். ஆனால், அறிவை இழந்த முதியோர் செய்தால், அதை சூன்யத்தால் என்கின்றோம். ஏனெனில், குழந்தைகள் செய்வது தினக்காட்சி, முதியோர் செய்வது அபூர்வம்!!! நரம்பைப் பற்றிய வியாதி மிகுதியும் பெண்களுக்கு வருவதுண்டு. அந்தவேளையில் பல அசிங்கத்தனமான காரியங் களைச் செய்வார்கள். தங்கள் புடவையைக் கழற்றி எறிந்துவிடுவார் கள். கொளுத்திக் கொள்வார்கள். தங்கள் எச்சில், மலம் முதலிய வஸ்துகளை, வீசி எறிவார்கள். கண்டபடி எல்லாம் பேசுவார்கள். நரம்புபற்றிய வியாதி மருத்துவமனைகளில், இவர்கள் கோரா மையைக் காணலாம். இதற்கு வைத்திய வல்லுநர்களால்தான் சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். இந்த நோய்களுக்கு மருத்துவமனைகளில், மந்திரங்கள் செய்வதில்லை.

மணி மந்திரங்கள், அறியாதாரிடத்தும், அநாகரீகரிடத்மே காணலாம். இத்தியாதி நடவடிக்கைகளை வைத்தியர்களைக் கொண்டு பார்வையிட்டுச் சிகிச்சை செய்வதுதான் புத்திசாலித் தனமாகும். இல்லாவிடில் கெட்டிக்கார லாயர்களை வைத்துக் கேசை நடத்தாமல் நெற்றியில் மந்திரித்த குங்குமட்தை இட்டுக் கொண்டு ஜட்ஜூ முன் காட்டுவதையொக்கும். ஒரு காலட்தில் குளிர் சுரமும், அம்மையும் பேதியும், மாரியாத்தா தெய்வங்களால் உண்டாவதாக எண்ணி இருந்தோம். இன்றைக்கும் பல கோடி பாமர மக்கள் நமது நாட்டில் தேவதைகளால் இத்தியாதி வியாதிகள் நிகழ்வதாக எண்ணி மஞ்சள் துண்டும், குங்குமம், மஞ்சளும் அணிகின்றார்கள். இந்த அறியாமையால் லட்சம் லட்சமாக நமது நாட்டு மக்களை இழக்கின்றோம். ஆதலின் அறியாத பெண்கள் செய்வதையும் மோச மந்திரக்காரர் சொல்வதையும் நம்பாமல் தக்க வைத்தியரைக் கொண்டு அவர்களைப் பார்வையிடச் செய்து தெரிந்து கொண்டால் நலமாகும். சிறுவன் திரேகத்தினுள் பல ஊசிகள் இருந்ததாகக் கண்ட காட்சியில் விசேடம் ஒன்றும் நமக்குத் தோன்றவில்லை, ஊசிகள் செத்துப்போன சதையில் அந்த சிறுவனுக்குத் தெரியாமலே பொத்துக் கொண்டிருக்கலாம். சில காலத்திற்குப் பிறகு அந்த இடத்தில் ஏதோ காரணத்தால் ரத்தம் பரவவும் ஊசியின் உணர்ச்சி உண்டாயிருக்கலாம். எப்படியெனில் குளோராபாரம் முதலிய உணர்வை நீக்கும் வஸ்துக்களைக் கொண்டு அச்சமயம் நோய் தெரியாமல் செய்வதுபோல, அச்சிறுவனுக்கு விளையாடுங் காலத்தி லோ அல்லது தேக உறுப்பு உணர்ச்சியற்ற இடத்திலோ, அந்த ஊசிகள் பொத்து இருக்கலாம். பிறகு நோய் தொடுத்திருக்கலாம். இவைகளில் அபூர்வமொன்றுமில்லை.

மருத்துவமனையில் தீராமல், மந்திரக்காரனால் தீர்ந்தது என்று சொல்வதில் யாதொன்றும் விசேஷமில்லை. மருத்துவமனையில் எல்லா வியாதிகளும் தீரும் என்பதொன்றுமில்லை. மருத்துவமனை சிகிச்சையால் தீர்த்துக் கொண்டு வந்திருக்கலாம். வீட்டுக்கு வந்த பிறகு, பூரணமாகக் குணமடைந்திருக்கலாம். இந்தத் தருவாயில், மந்திரத்தை மந்திரக்காரன் செய்திருக்கலாம். பிந்தி வந்தவனுக்குக் கிடைத்து நல்ல பெயர்!!!

பில்லி, சூன்யம், ஏவல், முனி அறைதல், அண்ணமார், கன்னிமார், சேட்டை, காற்று, கறுப்பண்ணன் என்று வழங்கும் சொற்கள் எந்தப் பொருளைக் குறிப்பதாகச் சொல்கின்றவர்களுக்கே தெரியாது. இவை எதுவும் நிச்சயிக்காத சொற்கள். இன்ன காரண மென்று விளங்காத நோய்களுக்கும், செயல்களுக்கும், இந்தச் சொற்களை காரணமாக உபயோகிக்கின்றார்கள். இந்தச் சொற் களைக் கேட்ட மாத்திரத்தில், நடுக்கமுறுகிறார்கள். ஆனால், அவ் வார்த்தைகள் இன்னவை என்று யாரும் பார்த்திலர். அதற்கு ஆடும், கோழியும், முயல் காதும், ஓணானும் தலைச்சன் குழந்தை, கை, கால் விரலும், மஞ்சளும், குங்குமமும் நால் வழிகூடும் இடமும், சுடுகாடும், புறக்கடையும் இன்னும் பல சம்பந்தமில்லா மந்திர தந்திரங்களும் பரிகாரங்களென வழங்குகிறார்கள். இத்தியாதி பித்தலாட்டங்களால் பாமர மக்கள் மயங்கித் தங்கள் பிள்ளைகளைச் சரியான சிகிச்சையின்றிச் சாக வைக்கின்றார்கள். இந்தச் சமூக மோசங்களைத் தடுப்பதற்கு வைத்திய ஞானம் பாமர மக்களுக்குப் பரவச் செய்யவேண்டும். இரண்டாவது ராஜாங்கத்ர் மத நடுநிலை என்ற பாசாங்கை விட்டுவிட்டு, பில்லி, சூன்யமென்று ஏமாற்றுகின்றவர் களைத் தண்டிக்கச் சட்ட விதிகள் செய்யவும் வேண்டும்.

நன்றி : விடுதலை

சிருஷ்டி வரலாறு!

ம. சிங்காரவேலர்

இன்றைய உலகம் எப்படி சிருஷ்டிக்கப்பட்டதென்றும், இவ்வுலகிலுள்ள பொருட்கள் எவ்வாறு உற்பத்தியாயிற்று என்பதைக் குறித்தும் இன்று மக்களுள் பலவிதமான அபிப்பிராய பேதங்கள் நிலவி வருகின்றன. இவற்றுள் இரண்டு விதமான அபிப்பிராய பேதங்கள் குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டில் ஒன்று, சென்ற பல ஆண்டுகளாக மக்களால் நம்பி அனுசரிக்கப்பட்டு வந்ததும், உலகிலுள்ள பல மதத்தின் கொள்கைகளைத் தழுவி அனுசரித்து வந்ததும், பைபிளின் ஆதியாகமத்தில் குறிப்பிட்டுள்ளதுமான உலக சிருஷ்டி கதையாகும். இரண்டாவது, சென்ற நூற்றாண்டிற்குள் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதும், சென்ற பல நூற்றாண்டுகளில் பல அறிஞர்களின் சிந்தனைக்கு ஆக்கமளித்தது மான பரிணாமத் தத்துவமாகும். இவ்விரண்டு தத்துவங்களில் எது மக்களது அறிவிற்கும், அனுபவத்திற்கும் பொருத்தமானது என்பதை உலக மக்கள் பரிசீலனை செய்ய வேண்டுகிறோம்.

உலகிலுள்ள ஒவ்வொரு வர்க்கத்தினருக்கும் அவர்களால் கற்பிக்கப்பட்டஒவ்வொரு சிருஷ்டிக் கதைகள் உண்டு. மனிதன் தனது அநாகரிகமான வாழ்க்கையின்றும், அடிமைத்தனத்தின்றும், விலக ஆரம்பிக்கவே அவன் தன்னைச் சுற்றியுள்ள பிரபஞ்சத்தையும், அதிலுள்ள பொருள்கள் உற்பத்தியைக் குறித்தும் சிந்திக்கத் தொடங்கினான். நான் எங்கிருந்து இவ்வுலகில் பிறந்தேன்? இவ்வுலகம் எப்படி உற்பத்தியாயிற்று? இவ்வுலகில் காணப்படும் பொருட்கள் எப்படி உற்பத்தியாயின? இவைகளைப் போன்ற வினாக்களை அவர்கள் கேட்க ஆரம்பித்தார்கள். மின்னல், ஒளி, பூகம்பம் போன்ற பல இயற்கை, செயற்கைகளைக் குறித்து குழந்தைகள் அதன் காரணத்தைத் தெரிந்து கொள்ள முயற்சித்து ஒன்றும் கிடைக்காமற் போகவே சில கட்டுக்கதைகளை இவற்றின் காரணமாகக் கூறுவதைப்போல், அநாகரிக வாழ்க்கையில் வாழ்ந்து வந்த மக்களுக்கு, தங்களைச் சுற்றியுள்ள பொருட்களின் உற்பத்தி வரலாற்றைக் கூறத் தெரியாமல் போகவே அவற்றிற்கு இணையாக சில கட்டுக்கதைகளை ஒவ்வொரு வர்க்கத்தினரின் தன்மைக்கு ஏற்றவாறு கற்பிக்கப்பட்டிருந்த போதிலும், இக்கற்பனைக் கதைகள் அனைத்தும் தங்களது சில மதப்புத்தகங்களில் இடம் பெற்றிருக் கின்றன. இன்னும் மத நூல்களில்லாத ஒரு சில வகுப்பினர்களும், மதக் கோட்பாடு புத்தகங்களில் காணப்படக் கூடிய வகையில் அவர்களது கற்பனைகள் இல்லாவிடினும், அவர்களும் பல விநோதமான கட்டுக்கதைகளை வழங்கி வருகின்றனர். இப்படி அநேகர் நம்பி வரும்படியான சிருஷ்டிக் கதைகள் சிலவற்றைக் கவனிப்போம்.

சர் ஜான் லூபக் என்ற அறிவியல் அறிஞர் பின்வருமாறு கூறுகிறார் : வட ஆப்பிரிக்காவில் சிங்கா (Singa) என்றோர் சிறு ஊர் இருக்கிறது. அவ்வூர் அரசியை ஒரு பாதிரியார் இவ்வுலகம் எப்படி சிருஷ்டிக்கப்பட்டது? என்று வினவினார். எவ்வித அச்சமுமின்றி அவ்வரசி இவ்வூரை எமது மூதாதையர் சிருஷ்டித்தனர் என்று பதிலுரைத்தாள். வேறு சிலர் இவ்வுலகம், அவற்றிலுள்ள வஸ்துக்களும் இவ்வுலகில் தானாகவே உற்பத்தியாயிற்று என்று நினைத்து வருகின்றனர். எல்லா வஸ்துக்களும் ஜலத்தினின்றும் உற்பத்தியாயிற்று என்ற எண்ணம் புராதான மக்களுள் நிலவி வந்தது. அமெரிக்காவிலுள்ள சீப்வா இந்தியர்கள் (Chippewa Indians) இவ்வுலகம் முழுதும் முதலில் ஒரு ஜலக்கோளமாக இருந்ததென்றும், அதினின்றும் அபாரசக்தி இவ்வுலகை இத்தன்மையில் நிர்ணயித்த தென்றும் கருதி வருகின்றனர். மிங்கோஸ் (Mingos), ஆட்டாவாஸ் (Ottawas) போன்றவர்களுடைய சிருஷ்டிக்கதை வரலாறும் மிகவும் விசித்திரமானது. யாரோ ஒரு அமானுஷிக மனிதன் மேற்குறிப் பட்ட ஜலக்கோளத்தில் மூழ்கி ஒரு மணல் தரியை எடுத்து வந்ததாகவும், அதினின்றும் இவ்வுலகம் சிருஷ்டி பெற்றதென்றும் கருதி வந்திருக்கின்றனர். ஆனால், இவர்கள் கூறும்படியான அமானுஷிக மனிதன் எவ்வாறு உற்பத்தி பெற்றான்? என்பதைக் குறித்து அவர்கள் கூறுவதில்லை.

பூமியின் உற்பவம் ஓர் அணுத்தன்மையினின்றானது என்ற வாதமும் பல ஆண்டுகளுக்கு முன் நிலை பெற்று வந்தது. இந்த வாதம் ஒரு விதத்தில்லாவிடினும் மற்றபடி பலவாறு பின்லாண்ட், போலினீஷ், சைனா, பினீஷா, ஈஜிப்த், இந்தியா போன்ற நாடுகளிலும் பிரச்சாரத்திலிருந்து வந்தது. பினீஷர்கள் முட்டையிலுள்ள மஞ்சள் பாகம் பூமியாகவும், அதைச் சுற்றியுள்ள வெள்ளைப் பாகம் சமுத்திரமாகவும் ஏற்பட்டது என்று இன்றும் கருதி வருகின்றனர். ஒரு வகையில் இந் நம்பிக்கைகளுடன் ஒத்துக் கொள்ளக் கூடிய ஒரு கற்பனைக் கதை இந்துக்களின் புராண வரலாற்றில் கூறுவதாவது: பரப்பிரம்மமான கடவுள் தமது ஏதோ ஒரு எண்ணத்தால் முதலில் ஒரு ஜலக் கோளத்தை சிருஷ்டித்தார். அந்த ஜலக்கோள மத்தியில் அவர் ஒரு விதையை விதைத்தார். அவ்விதை காலப்போக்கில் ஒரு பொன்முட்டையாக மாறிற்று. அம்முட்டையில் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மன் உருவெடுத்து இவ்வுலகை சிருஷ்டித்தார்.

ஸ்காண்டிநேவியன் (அதாவது நார்வே, ஸ்வீடன், டென்மார்க் நாடுகள்) தேசத்து சிருஷ்டி வரலாற்றுப்படி முதன் முதலில் ஒன்றுமில்லாத இடத்தில் ஒரு கோடு உற்பத்தியாயிற்று. அக்கோட்டின் தென்பாகம் அதன் சுவாலையாகவும், வடபாகம் ஒளியமாக மஞ்சள் வர்ணமும் ஏற்பட்டது. இவ்விரண்டின் சேர்க்கைப் பலனாக யாமிர் (Yamir) என்ற அரக்கன் தோன்றினான். அவரின் வாழ்க்கை முடிந்ததும் அவரது உயிரற்ற பிண உடலினின்றும் சுவர்க்கமும், பூமியும் உற்பத்தியாயிற்று. கிரீக்கர்களும் இவ்வகையிலேயே நம்பி வருகிறார்களெனினும் சிறிது மாறுபட்ட எண்ணங்களை உடையவர்களாக இருக்கிறார்கள்.

பெர்ஷியர்களின் மத நூலான சென்ட் அவெஸ்டா (Zend Avesta) என்ற நூலில் சிருஷ்டியைக் குறித்து கூறுவதாவது: சுயமானதோர் பராசக்தி முதலில் ஆர்மெண்ட் (Ormund) பிரகாசத்தின் தேவன், அஹ்ரிமன் (Ahrumn)  இருளின் தேவன் என்று இரு தேவர்களை சிருஷ்டித்ததாகவும், அவற்றுள் ஆர்மெண்ட் பூமியையும், சுவர்க்கத்தையும், அவற்றிலுள்ள ஜீவராசிகள் அனைத்தையும் ஆறு தினங்களுள் சிருஷ்டித்ததாகவும், அவற்றுள் மனிதனது சிருஷ்டியே இறுதி சிருஷ்டியெனவும் கருதி கூறி வருகின்றனர். பைபிளிலுள்ள சிருஷ்டி முறை மிக பிரசித்தமானது. முதல் நாள் கடவுள் வெளிச்சத்தை சிருஷ்டித்து இரவு, பகலை ஏற்படுத்தினார். இரண்டாம் நாள் பூமியையும், அதற்கு இணை பெற்றுள்ள ஜலகோளத்தையும் ஏற்படுத்தி மேற்கூரையை (ஆகாசத்தை) சிருஷ்டித்தார். இந்த மேற்கூரைகள் நினைக்கும் போது வருஷ மழை பெய்வதாக திறக்கக் கூடிய ஜன்னல்களும் இருக்கின்றனவாம்! மூன்றாம் நாள் பூமியின் பல பாகங்களிலிருந்த மூலத்தையெல்லாம் ஒன்றுபடுத்தி கடலை சிருஷ்டித்ததுடன், பூமியில் விருக்ஷங்களை உற்பத்தி செய்தார். நான்காம் நான் சூரிய சந்திராதிகளை சிருஷ்டித்தார். ஐந்தாம் நாள் கடலில் மீனையும், ஆகாயத்தில் பறவைகளையும் சிருஷ்டித்தார். முடிவாக பூமியில் ஊர்வன, நகருவனவைகளையும், நான்கு கால் மிருகங்களையும், முடிவாக தமது சொந்த உருவத்தில் மனிதனையும் சிருஷ்டித்தார். சிருஷ்டி உற்பத்தியால் களைத்து சோர்வுற்ற கடவுள் ஏழாம் நாள் ஓய்வெடுத்துக் கொண்டார்.

உலகில் சிருஷ்டியை குறித்து நினைத்து வரும் சில எண்ணங் களே நாம் மேற்குறிப்பிட்டவைகளாகும். ஆனால் இவைகளி னின்றும் பொதுவாக ஒரு விஷயத்தை நாம் காண்கிறோம். அதாவது மனித சிருஷ்டிக்கு முன்னதாகவே கடவுள் உலக சிருஷ்டியை நடத்தினார் என்பதாகும். அப்படியானால் இந்த சிருஷ்டித் தன்மைகளெல்லாம் பிறகு சிருஷ்டிக்கப்பட்ட மனித னுக்கு எவ்வாறு தெரியலாயிற்று என்ற நியாயமானதோர் வினாவைக் கேட்கக் கடமைப்பட்டுள்ளோம். அதற்கு கூறக்கூடிய ஒரே ஒரு பதில், ஆதிமனிதர்களுள் எவரிடத்தில் ஒருவரிடத்திலாவது கடவுள் தமது சிருஷ்டி வரலாற்றைக் கூறியிருக்க வேண்டும் என்பதாகும். இப்படி வெளிப்படுத்தித்தான் மத நூற்களில் வெளியான இரகசியம் எனக் கூறுகின்றனர்.

ஏற்க முடியாததும், முன்னுக்குப் பின் முரணான பல தத்துவங்களும் இவற்றுள் மலிந்திருப்பதைக் காணலாம். நாளுக்கு நாள் வாழ்க்கையில் பெருகி வருகின்ற விஞ்ஞானத்தின் ஞானச் சுடரின் வாயிலாக இச்சிருஷ்டி வரலாற்றை பரிசீலனை செய்து பார்க்கையில் மேன்மைப்பட்டதெனப் புகழப்படும் பைபிளில் வெளிச்சத்தை சிருஷ்டி செய்த பின்னர் தான் சூரியனை சிருஷ்டி செய்ததாக காணக்கிடக்கின்றது. வெளிச்சத்திற்கு துணைக் கருவியான பொருளின்றி எப்படி பிரகாசம் ஏற்படும்? சூரியன் உண்டாவதற்கு முன்னதாகவே இரவு, பகல் சிருஷ்டிக்கப்பட்டதாம். எப்படி? இவைகளெல்லாம் எவ்வளவு பொருத்தமில்லா கூற்றுகள் என்பதை பச்சிளங் குழந்தை கூட உணரத்தக்க நிலைமையில் இன்று காலப்போக்கு மாறி வருகின்றது. சூரிய சிருஷ்டிக்கு முன்னதாகவே விருஷங்களை சிருஷ்டித்ததாக காணப்படுகிறது. பூமியைவிட வெகுகாலத்திற்கு முன்னதாகவே சூரியன் உற்பத்தியாயிற்று என்றும், சூரியன் ஒரு பாகமே பூமியென்றும் நாம் விஞ்ஞானத்தைப் படிக்கும் போது, மதம் நமக்கு முட்டுக்கட்டையான விஷயங்களைக் கற்பிக்கிறது. நக்ஷத்திரங்களில் பெரும்பான்மையும் பூமியைவிட பெரிதென்றும், அவற்றுள் சிலதினுடைய ஒளி பூமியில் வந்து சேர வெகுகாலத்திற்கு முன்பே நக்ஷத்திரங்கள் உண்டாயிற்றென்றும் விஞ்ஞான சாஸ்திரம் பொருத்தமான ஆதாரங்களுடன் கூறுகையில், மத நூற்களில் பூமி சிருஷ்டிக்கப்பட்ட பின்னர் தான், நக்ஷத்திரங்களைக் கடவுள் சிருஷ்டித்ததாகக் கூறப்படுகிறது. இப்படி ஒத்துப்பார்க்கையில் இம் மதக் கோட்பாடுகளெல்லாம் முற்றிலும் முரணானவைகள் என விளங்கும்.

பூமியின் வயதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் மத நூற்கள் கூறுவதைப்போல் ஆறாயிரம் வருடங்களுக்கு முன் பார்க்க வேண்டுமென்று கூறுவது போதாதென்றும், அவற்றைப் போன்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே கவனிக்க வேண்டுமென்றும், விஞ்ஞானம் நமக்கு ஞாபகப்படுத்துகின்றது. சூரியனுடன் பூமியை ஒத்துப்பார்க்கையில் பூமி மிகவும் வயது குறைந்த ஒரு கிரகமாகும். பூமியில் கரி (Coal) உண்டாவதற்கு குறைந்தது 60 லட்ச வருடம் வேண்டும் என்று புரபசர் ஹக்ஸிலி (Prfo.Huxley) கணித்திருக்கிறார். அதைப்போன்றே சுண்ணாம்பினுடைய (Chalk) ரூபி கரணத்திற்கும், இத்தனை வருடங்கள் வேண்டியிருக்கிறது. பூமுகத்திற்கும் (பூமி) உயிர் ஏற்பட்டு அறுபது கோடி வருடங்களாயிற்று என்று சர்.ஆரசிபால்ட் கீயச் (Sir Archibald Geikie) என்ற விஞ்ஞானி கூறுகிறார். உலக விவகார அகராதியின் (Encyclopaedia Britannia) இறுதிப் பதிப்பில், பூமிக்கு குறைந்தது நூறுகோடி வருடம் பருவமுண்டெனக் கூறியிருக்கிறது. இவைகளெல்லாம் மத நூற்களிலுள்ள சிருஷ்டி கதைகளைப் போன்றவையன்று. மத நூற்களிலுள்ள விஷயங்களுக்கும், விஞ்ஞான ஆய்ச்சிக்கும் ஒருவித ஒற்றுமையே இருக்காது. பழைய சிருஷ்டி கட்டுக்கதைகளை எதிர்ப்பதற்கும், நவீன விஞ்ஞான முற்போக்கைப் பெருக்குவதற்கும், விஞ்ஞான பரிணாம ஆராய்ச்சி நடத்தினவர் டார்வின் என்ற அறிஞராவார். சென்ற 75 வருடத்திற்கு முன்புதான், அவர் தமது பரிணாம சித்தாந்தத்தை (Evolution Theory) வெளிப்படுத்தினார். அது மதக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது. அதனால் கிருஸ்துவ புரோகித வர்க்கம் டார்வினுக்கு எதிராகப் போரைத் துவக்கினர். ஆனால், மதக் கோட்பாட்டுகளின் படி, பூமித்தட்டை (Flat) எனக் கூறின. மத சாஸ்திரத்தை பொய்யெனக் கூறிய அறிஞர் கலிலியோவை தண்டித்து சிறைப்படுத்தியதைப் போல், டார்வினை செய்ய இன்றைய புதுஉலகம் அனுமதிக்கவில்லை.

புதுஉலகம்
ஆகஸ்ட் 1935

கடவுள் சிருஷ்டியா?

ம. சிங்காரவேலர்

தென்னிந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட் தோழர் ம.சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டில் தலைமையேற்றவர்; கான்பூர் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்; விஞ்ஞானப் பார்வையை தமிழ்மக்கள் பெறுவதற்காக ஏராளமான கட்டுரைகளை சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே எழுதியவர். புராணங்களையும், இதிகாசங்களையும் விமர்சித்தால் போதாது, விஞ்ஞான பார்வை மக்கள் பெறும்போதுதான் அறியாமை இருள் அகலும் என்று உறுதி காட்டியவர்; 71 ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எழுதிய கட்டுரையை மார்க்சிஸ்ட் வாசகர்களுக்கு அளிக்கிறோம்.

– ஆசிரியர்

டார்வின் பரிணாம சித்தாந்தமும், ஸர். அம்பிரோர பிலமிங் (பிளெமிங்) விஞ்ஞானியும், ஸர். அம்பிரோர பிலமிங் என்பவர் ஒரு பிரபல விஞ்ஞானி. இவர் தனது விஞ்ஞான புலமைக்காக அநேக பிரபல பரிசுகள் பெற்றவர். இவரது சிறந்த வல்லமையை முக்கியமாக ஆகாய தந்தி விஷயமாக காட்டியுள்ளார். இவருக்கு அநேகமாக ஆயிரம் டாலர் மதிப்புள்ள பரிசு இரண்டு இவருடைய சாமார்த் தியத் திற்காக கிடைக்கப் பெற்றுள்ளது. இந்தியாதி சிறப்பு வாய்ந்த விஞ்ஞானி.

மத அனுகூலமாக டார்வின் சித்தாந்தங்களில் முதன்மையான மனித உற்பவ சித்தாந்தத்தைத் தாக்கிப் பேசினார். அதற்கு விடையாக உயிர் மெஞ்ஞானங்களில் சிறந்தவராகிய ஸர்.ஆர்தர் கீத் பதில் எழுதிய காலத்தில் பலமாக கண்டுபிடித்துள்ளார் ஸர். அம்பிரோர.

பைபிளில் கூறியுள்ள படி, கடவுள் மனிதனை தன் உருவத்தைப் போல சிருஷ்டி செய்ததாக சொல்லி இருப்பது உண்மை என்றும், டார்வின் சித்தாந்தப்படி ஆதி குரங்கு வடிவமே மனிதனாக மாறி இருக்க முடியாது என்றும் கூறுகின்றோம்.

இந்தப் பிரபல தர்க்க வாதத்தில் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், மனிதன் 6000 வருஷங்களுக்கு முன் கடவுளால் மண்ணைக் கொண்டு சிருஷ்டிக்கப் பட்டானா? அல்லது 6 கோடி வருஷங்களாக சிறு மிருகங்களிலிருந்து உருவம் மாறி வந்தானா என்பதுதான்.

மனிதன் கடவுள் உருவத்தைப் போல் சிருஷ்டிக்கப்பட்டவ னென்றால், கடவுள் உருவம் சைவக் காரன் முகத்தைப் போன் றாகிலும் அல்லது பாபிரி முகத்தைப் போன்றாகிலும் அல்லது தமிழ் நாட்டுத் திராவிடன் முகத்தைப் போன்றாகிலும் அல்லது அய்ரோப்பியன் முகத்தைப் போன்றாகிலும் பெற்றிருந்தாரா என்று கேட்கின்றோம்.

இவ்விதம் வித்தியாசம் கொண்ட முகங்களைப் போல் ஆதிமனிதனைப் படைக்கவில்லை என்றால், இவ்வித வித்தியா சங்கள் பிறகு ஏற்பட்டிருக்க வேண்டும்.

பிறகு ஏற்பட்ட வித்தியாசங்கள் மக்களுக்குள் இயற்கை யாகத்தான் எழுந்திருக்கவேண்டும். இவ்வித வித்தியாசங்கள் பூர்வ மனித விஞ்ஞானிகள் சொல்வது போல சுமார் 5 அல்லது 6 லட்ச வருஷங்களாக இயற்கையாக உண்டாயிருக்குமானால், ஏன் அய்ந்து அல்லது ஆறு கோடி வருஷங்களுள் ஆதி மனிதன், ஆதி மிருகமொன்றிலிருந்து இயற்கையாகவே மாறி வந்திருக்கலாகாது?

இது நிற்க, கடவுள் உருவத்தைப் போல் சிருஷ்டிக்கப்பட்ட மனிதன் தனது தாய் கர்ப்பத்தில் வளரும் போது அய்ந்து ஆறு வாரம் கருவில் வாலொன்றை, கை, கால்கள் தோன்றுவதற்கு முன் காட்டிக் கொண்டு வருவானேன்?

கடவுள் சிருஷ்டி என்றால், அவர் உருவத்திற்கு ஒரு காலத்தில் வாலொன்று இருத்தல் வேண்டுமென்றோ?

இந்த சிருஷ்டி சித்தாந்தத்தின் ஆபாசத்தை மதாபிமானிகள் ஏன் கவனிப்பதில்லை? ஆசை வெட்கம் அறியாது என்ற ஒரு முதியோர் வாக்கியம் உண்டு. தங்கள் வைராக்கியத்தால் மதரதர்கள் தங்கள் சிருஷ்டி சித்தாந்தத்தின் ஆபாசங்களுக்கு தங்கள் கண்களை மூடிக் கொள்ளுகிறார்கள். தங்கள் மதங்களின் ஆபாசங்களுக்குத் தங்கள் கண்களை மூடிக் கொள்ளாமல் விழித்துப் பார்ப்பார் களாகில் உலகம் எவ்வளவோ சீரடைந்துவிடும் என்று பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த

பேரறிவாளர் ம. சிங்கார வேலர் கூறிய கருத்துக்களை இன்று வரை கிறிஸ்தவ மதத்தினரால் மறுக்க முடியில்லையே? ஏன்?

நன்றி: புது உலகம் ஏடு மே 1935