சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் விழுந்து எழும் ஆற்றல்!

1848ல் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்ற முழக்கத்தோடு கம்யூனிஸ்ட் இயக்கம் லன்டனில் பிறந்தது. அன்றிலிருந்து அதன் இயக்கமும் பரவலும் நித்திய கண்டம் பூர்ண ஆயுசு என்றே இருந்து வருகிறது. உண்மையில் அது சர்ச்சைகளால், சர்ச்சைகளுக்கிடையே, சர்ச்சைகளின் வழியே, சர்ச்சைகளைத் தேடி வளர்கிற சமூக விஞ்ஞானம் ஆகும். அது திண்ணை வேதாந்தமல்ல. யாரோ ஒருவர் தவமிருந்து கண்டதல்ல. அது உழைப்பாளி மக்களின் நடைமுறைகளையும் கருத்தோட்டங்களையும் கூட்டு செயல்பாட்டையும் கொண்ட அனுபவ விஞ்ஞானமாகும். அது நடைமுறையால் வளர்கிற விஞ்ஞானமாகும்.

இந்த சமூக விஞ்ஞானத்திற்கு அடிப்படை போட்டவர்களை பாராட்டவே மார்க்சிசம்-லெனின்னிசம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ஆசான்கள் எழுத்துக்கள் அனைத்துமே அவர்கள் காலம் வரை திரண்ட அறிவுச் செல்வத்தையும் எதார்த்த வாழ்க்கையையும் ஒப்பிட்டு எங்கு பொருந்துகிறது. எங்கு பொருந்தாமல் போகிறது என்பதில் தொடங்கி அடுத்தகட்ட மாற்றம் எதுவாக இருக்க வேண்டுமெனத் தேடுவதில் முடிவன.

எனவே, மார்க்சிசம்-லெனினிசம் என்பது அவர்கள் சொல்லியது, செய்தது மட்டுமல்ல. ஒவ்வொரு நாட்டின் மார்க்சிசம்-லெனினிச அணுகுமுறையில் செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அனுபவங்களும் மார்க்சிசம்-லெனினிசம் என்ற சமூக விஞ்ஞானத்தின் பகுதியாகும். தவறுகளிலிருந்து பாடம் பெறுவதின் மூலமே மார்க்சிசம்-லெனினிசம் வளர்கிறது என்பதையே வரலாறு காட்டுகிறது. மார்க்சிசம்-லெனினிசத்தைத் தாக்குகிற எதிரிகள் கூட கம்யூனிஸ்ட்டுகளின் தவறுகளை காட்டி கத்துவார்களே தவிர அதன் சாரத்தில் கை வைப்பதில்லை. அதனுடைய 167 ஆண்டு வரலாறு ஒன்றைக் காட்டுகிறது. மார்க்சிசம் – லெனினிசம் என்ற சமூக விஞ்ஞானம் போல் வேகமாக வளர்ந்த விஞ்ஞானம் வேறு எதுவுமில்லை. அதுமட்டுமல்ல அந்த வரலாறு கம்யூனிச இயக்கத்தின் தவறுகளால் விழுந்து அதனை திருத்தி எழும் ஆற்றலை பறைசாற்றுகிறது.

அதன் வரலாறும் உழைப்பாளி மக்களின் போராட்ட வரலாறும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். இருவருமே அடக்குமுறைகளையும் ஏமாற்றுக்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. இருவருமே தவறுகளை திருத்தியே முன்னேற வேண்டியிருக்கிறது. தவறுகளை சரியாக கணிக்கவில்லையானால் அதுவே இயக்கத்தை முடக்கி விடுகிறது. உழைப்பாளி மக்களின் அணுகுமுறையில் குறைகள் இருந்தாலும் மார்க்சிச இயக்கம் தளர்வுறும், மார்க்சிசத்தை ஏற்றுக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் தவறு செய்தாலும் உழைப்பாளி மக்களின் போராட்டம் வலுவிழக்கும்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் தனது தவறுகளால் வீழ்ந்தாலும் அதனை திருத்தி எவ்வாறு எழுகிறது என்பதை சுருக்கமாகக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அடக்குமுறைக்கும் அவதூறுக்கும் ஆட்படுவதால் ஏற்படும் பின்னடைவோடு அந்தந்த காலத்தில் கம்யூனிஸ்ட்டு கட்சிகளின் பல ரகமான தவறுகளால் வலு இழக்க நேரிடுகிறது.

அத்தகைய தருணங்களில் தவறுகளை கண்டுபிடிப்பதிலும் சரியான கோட்பாட்டை உருவாக்குகிற முயற்சியிலும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஈடுபடுவதை மார்க்ஸ் காலத்திலிருந்து தொடர்வதை காணலாம். 1942ல் மாசேதுங் கட்சி உறுப்பினர்களிடையே பேசுகிற பொழுது குறிப்பிட்டதைக் கவனியுங்கள்: “இன்றும் நம்மில் சில பேர் மார்க்சிசம்-லெனினிசம் ஒரு ரெடிமேடு மருந்து. அதுமட்டும் கிடைத்துவிட்டால் சிரமப்படாமல் எல்லா நோய்களையும் குணப்படுத்திவிடலாம் என்று கருதுகின்றனர். மார்க்சிசம்-லெனினிசத்தை ஒரு வேதம்போல் கருதுகின்றவர்களின் இத்தகைய குழந்தைத்தனமான குருட்டு நம்பிக்கையுள்ளவர்களிடம் உனது வேதத்தால் எந்த பலனும் இல்லை என்று வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். கண்ணியமற்ற மொழியிலே சொல்லவதென்றால் உனது வேதம் மனித மலத்தைவிட கேவலமானது. அதுவாவது நாயிக்கு உணவாகும். நாயின் விட்டையோ வயலுக்கு உரமாகும். உனது வேதம் நாயிக்கும் உணவாகாது. வயலுக்கும் உரமாகாது, எதுக்கும் பயன்படாது” என்றார் (Mao Tse-tung, Feb., 1, 1942 in Stuart Schram, The Political Thought of Mao Tse-tung)

மார்க்சிசத்தை ஒரு மதமார்க்கமாக ஆக்குவதை தவறான போக்கு என்பதை மாவோ மட்டுமல்ல. இதேபோல் லெனினும் மார்க்சிசத்தை வேதாந்தமாக ஆக்குவோரை கடுமையாகத் தாக்கி எழுதியுள்ளார். லெனின் தான் தவறுகளை வகைப்படுத்தி அதன் அடிப்படைகளையும் அதை எதிர்த்த போரை எப்படி நடத்துவது என்பதை முன்மொழிந்தார். சரியான கருத்திற்கான போராட்டம் தத்துவார்த்தப் போராட்டத்தோடு நின்றுவிடுவதில்லை. தப்பைக் கண்டுபிடிக்க அது முதன்மையாகவுமில்லை. தெளிவினைப் பெறவும் நடைமுறையோடு பொறுத்தவும் அது அவசியமாகிறது. நடைமுறையில் ஒரு கருத்தை அன்றாடப் பிரச்சனைகளை தீர்க்க ஈடுபடுத்தும் பொழுதுதான் அது சரியா தவறா என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.

தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதின் மூலமே மார்க்சிசம்-லெனிசம் கற்கப்படுகிறது. எனவே, தவறாகிவிடுமோ என்று தயங்காதீர். ஒரே தவறை திரும்பத் திரும்பச் செய்யாதீர் என்பதுதான் மார்க்சிசம்-லெனினிசம் கற்க ஒரே வழி.

மார்க்சிசம்-லெனினிசம் எவ்வாறு உருவாகிறது? சரியான கருத்து எப்படி உருவாகிறது? மாவோ மேலும் சொல்கிறார்.

“எங்கிருந்து சரியான கருத்து வருகிறது. வானத்திலிருந்து விழுமா? தீடீரென மனதிலே உதிக்குமா?

இல்லை. அது சமூக நடைமுறையால் பெறப்படுகிறது. பொருளுற்பத்திக்கான போராட்டம், வர்க்கப் போராட்டம், விஞ்ஞான சோதனை, இவைகளினால் பெறப்படுகிறது.

முன்னேறிய வர்க்கத்தின் இந்த சரியான கருத்து ஒரு முறை மக்களை ஈர்க்குமானால் இந்தக் கருத்து பௌதீக சக்தியாகி சமூகத்தை மாற்றும் உலகையே மாற்றிவிடும்” என்கிறார்.

மாவோ, மேலும் கூறுகிறார்;

“கட்சி உறுப்பினர்களுக்கு ஞானத்தைப் பெறுதல் பற்றிய இயக்கவியல் பொருள் முதல்வாதக் கோட்பாட்டைக் கற்றுக் கொடுப்பது அவசியம். அந்தக் கோட்பாடு அவர்களது சிந்தனை முறையை சரியானதாக ஆக்க உதவிடும்.

தேடுதல் திறமையை வளர்க்கும். அனுபவங்களைத் தொகுக்கும் ஆற்றல் மேன்மைப்படும். கஷ்டங்களை வெல்ல கற்றுக் கொடுக்கும். பணிகளை திறமையாக செய்ய பயிற்சியளிக்கும்” என்கிறார்.

ஞானம் பற்றிய மார்க்சிய கோட்பாடு

அது என்ன? ஞானம் பற்றிய மார்க்சிய கோட்பாடு 1330 குறளையும் ஒப்புவிப்பதோ பொருள் கூறுவதோ ஞானமாகிவிடாது. வள்ளுவர் காலத்திய சமூக வாழ்வு, குடும்ப உறவு, அரசியல், பொருள் உற்பத்திகள் அவைகளை உருவாக்கும் சமூக உறவு சொற்களின் உள்ளடக்கம். சொல் நயம் (வள்ளுவர் காலத்தில் காமம் என்ற சொல்லின் பொருள் வேறு. இன்று அதன் பொருள் வேறு இந்த மாற்றம் எதனால் ஏற்பட்டது) தத்துவ ஞானம். அவைகளில் நீடித்து எவைகள் உள்ளன. அவைகளில் பேணவேண்டியது எவைகள். களைய வேண்டியவைகள் எவைகள். இவைகளைத் தேடினால் அது மார்க்சிய-லெனினிய ஞான கோட்பாட்டை குறளுக்கு பொறுத்துவதாகும். அதாவது ஒரு தகவலை அதற்கும் மற்றதிற்கும் உள்ள தொடர்பு அதன் வரலாறு இவைகளை தேடுவதே மார்க்சிசம்-லெனினிய ஞான கோட்படாகும்.

தவறுகளும் பாடங்களும்

இந்த ஞானம் இருந்தாலும் நடைமுறையில் தவறுகள் நேராமல் சரியான கோட்பாடு உருவாவதில்லை. அதைப் பெறுவதே ஒரு போராட்டமாகிவிடுகிறது. அவ்வாறு கோட்பாட்டுத் தவறுகளை சரிசெய்யும் போராட்டக் காலங்களில் என்ன நடக்கிறது?

பல ரகமான தவறான கருத்துக்களுக்கெதிராக போராட்டம் உருவாகிறது. அந்த தவறான கருத்திற்கும் மார்க்சிசத்திற்கும் உள்ள உறவினையும் வரையறை செய்ய நேரிடுகிறது. இந்தப் போராட்டம் வனாந்திரத்திலோ, நடுக்கடலிலோ நடைபெறவில்லை. எதார்த்த அரசியல் சமூக நிலவரங்களை பரிசீலிப்பதிலும், வளர்ச்சிப் போக்கை எப்படி மாற்றுவது என்பதிலும் கருத்து மோதல் உருவாகி போராட்டமாகிவிடுகிறது. மார்க்சிசத்தை ஏற்றுக் கொள்பவர்களே பல கோஷ்டிகளாகப் பிரிந்து தங்களது கருத்துதான் சரி என்று நிலைநாட்ட முயற்சிக்கின்றனர். சித்தாந்தப் போர் மூள்கிறது. இதனால் தெளிவு பெறலாமே தங்களது கருத்து சரியா? தவறா? என்பதைக் கண்டுகொள்ள இயலாது. அந்த கருத்தின் அடிப்படையில் செயல்படும் பொழுதும் பிரச்சனைகளுக்கு அதனடிப்படையில் தீர்க்க முயற்சிக்கிற பொழுதும் தவறு எது? சரி எது? என்பது துலங்குகிறது. இவ்வாறு தவறான கருத்துக்களை நீக்கி முழுமையை நோக்கி மார்க்சிசம்-லெனினிசம் நடைபோடுகிறது.

உதாரணமாக 1960களில் சோவியத் படை செக்கோஸ்லோவிக்கியாவில் புகுந்தவுடன் கம்யூனிஸ்டுகள் கருத்து வேறுபட்டனர். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி, சீன கம்யூனிஸ்ட் கட்சி, ஐரோப்பிய கம்யூனிஸ்டு கட்சிகள் அவரவர் கருத்துக்களை முன்நிறுத்தினர். மூன்று விதமான கருத்துக்கள் மோதின. சோவியத் புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களில் ஒன்று வறட்டு தத்துவக் கோட்பாட்டுத் தவறுகள் அறவே ஒழியாவிட்டாலும் குறைந்துபோனது.

உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தை பின்னுக்கு தள்ளிய தவறு எது? என்று உடனடியாகக் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் சோவியத் கட்சியின் தலைமை முன்மொழிந்த முதலாளித்துவமற்ற பாதை என்ற கோட்பாடுதான் வலது திரிபுகளுக்கு அடிப்படையாக அமைந்தது. உலக நிலைமைகளின் வளர்ச்சிப்போக்கு காட்டிவிட்டது.

லெனின் காலத்தில் இரண்டு விதமான தவறுகளும் நேர்ந்து இயக்கத்தை ஸ்தம்பிக்க வைத்தன. வறட்டு தத்துவ அடிப்படை கொண்டவைகள் மற்றது வர்க்க சமரசப்போக்கு. இப்பொழுது மேலை நாடுகளில் கம்யூனிஸ்ட்டுகள் வறட்டு தத்துவ தவறுகள் செய்வது குறைந்துவிட்டது. வர்க்க சமரசக் கோட்பாட்டால் எழும் தவறுகள் அதிகமாகிவிட்டன. பின்தங்கிய நாடுகளில் இந்த இரண்டு வகையான தவறுகளும் நேருகிற சூழ்நிலை உள்ளது.

சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம்

20 நூற்றாண்டின் மத்தியில் வர்க்க சமரசக் கோட்பாடால் தவறு செய்வதை எதிர்த்து கொள்கைப் போரை துவக்கியது. இந்த கொள்கைப் போரை எதிரிகள் மார்க்சிசத்தின் அழிவை உறுதி செய்யும் போராட்டமாக சித்தரித்தனர். இந்த கருத்து மோதலினால் சில தவறான கருத்துக்கள் எடுபட்டனவே தவிர மார்க்சிசம்-லெனினிசம் அழியவில்லை. வர்க்க சமரசக் கோட்பாட்டை முன்நிறுத்திய யூரோ கம்யூனிசம் காணாமல் போய்விட்டது. கடுகு சிறுத்தாலும் காரம் போகவில்லை என்பது போல மார்க்சிசம்-லெனினிசம் அதன் சக்தியை இழக்கவில்லை. எதை வைத்து இது கூறப்படுகிறது என கேட்கலாம்.

முதலாளித்துவப் பிரச்சாரக் கருவிகள் இன்றும் மார்க்சிசத்தை தாக்கிக் கொண்டே இருப்பதையும் கம்யூனிஸ்ட்டுகளின் தவறுகளை காட்டி அதுதான் மார்க்சிசம் என்றும் ஊளையிடுவதும் எதைக் காட்டுகிறது. அதன் உயிர்த்தெழும் ஆற்றலைக் காட்டவில்லையா. உழைப்பு கோட்பாட்டையும், வர்க்கப் பிரிவினைகளையும் முன் மொழிந்த ஆடம்ஸ்மித்தையும், டேவிட் ரிக்கார்டோவையும் மறந்துபோனது போல் ஏன் இவர்களால் மார்க்சை மறக்க முடியவில்லை?

முதலாளி வர்க்க அரசியல்வாதிகளால் வர்க்கப் போராட்டங்களை முடிவிற்கு ஏன் கொண்டுவர முடியவில்லை?

பாட்டாளி வர்க்கத்தை அரசியலிலிருந்து ஒதுக்குகிற முயற்சி தற்காலிகமானது என்பதை உணரப்போய்த்தானே பாட்டாளி மக்களை மார்க்சிசமும் பக்கம் போகாமல் தடுக்க கம்யூனிஸ்டுகள் மீது அவதூறுகளைப் பொழிகின்றனர். வரலாற்றையே புளுகுமூட்டைகளாக ஆக்குகின்றனர்.

சீனாவில் மார்க்சிசம் வழிகாட்டவில்லை முதலாளித்துவமே வழிகாட்டுவதாக கூறுகிறவர்கள் அந்த முதலாளித்துவம் ஏன் இந்தியாவில் பொருளாதாரத்தை வளர்க்கவில்லை? ஏன் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் நெருக்கடியைக் கொண்டு வருகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சி கூறுவதென்ன. எங்களுக்கு வழிகாட்டி மார்க்சிசம்-லெனினிசமும் எங்களது அனுபவமாகும். அதனால் எங்களது தவறுகளிலிருந்து பாடம் கற்கும் ஆற்றலை நாங்கள் இழக்கவில்லை என்று கூறுவதைப் பார்க்கலாம்.

இந்திய கம்யூனிஸ்ட்டுகளும் திரிபுகளும்

இன்று இந்தியாவில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு கம்யூனிஸ்ட் அல்லாத நல்லெண்ணம் கொண்டோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. சொத்துடைமை கோட்பாட்டில் மாறுபட்டு கருதுவோரும்கூட அரசியலை சொத்துகுவிக்கப் பயன்படுத்துவதை ஏற்பதில்லை. அவர்களும் இந்த பின்னடைவு அரசியலதிகாரத்தைச் சொத்துகுவிக்கப் பயன்படுத்தும் திருடர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் என்று அஞ்சுகின்றனர். சொத்துகுவிக்கும் ஆசையில் பொருளாதார நெருக்கடியைக் கொண்டுவருவதை விரும்பாதவர்களும் அரசியலில் நேர்மையை விரும்புவோர்களும் இந்த பின்னடைவு ஆபத்து என்றே கருதுகின்றனர். அதையும்விட உலக கம்யூனிஸ்ட் இயக்கமே கவலை கொள்கிறது. இந்த கவலைக்கு அடிப்படை உண்டு.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தலைதூக்கிய வலதுசாரி திருத்தல்வாதத்தையும், மக்கள் ஈடுபடாத ஆயுதக்குழு மனப்பான்மை கோட்பாடான இடது திருத்தல்வாதத்தையும் எதிர்த்து திறமையாக போராடுவதில் மார்க்சிஸ்ட் கட்சி முத்திரை பதித்தது. பூர்சுவா கைக்கூலிகள் இந்த இரண்டு தவறுகளையும் காட்டி மார்க்சிசத்தை இழிவுபடுத்த எடுத்த முயற்சிகளை மார்க்சிஸ்ட் கட்சி செயல்களால் முறியடித்தது. வெகுஜன அமைப்புகளின் இயக்கத்தின் மூலமே அரசியலில் சமூக வாழ்வில் சோசலிச லட்சியத்தை அடைய முடியும். சுரண்டலற்ற பொருளாதார உறவை உருவாக்க முடியும் என்ற மார்க்சிச-லெனினிச கோட்பாட்டை மார்க்சிஸ்ட் கட்சி உயர்த்திப் பிடித்தது. இப்பொழுதும் இனியும் வெகுஜன அமைப்புகளின் இயக்கத்தையே உயிர்நாடியாக கருதுகிறது.

வலது திரிபு நாடு விடுதலையான பிறகு நேரு தலைமையில் உருவான அரசு முழங்கிய ஆவடி சோசலிசம் மக்களை மயக்கிய காலம். அரசு பொதுத்துறையை வளர்த்தது. அதேவேளையில் பெருமுதலாளிகளை கொழுக்க வைக்க பல சலுகைகள், மான்யங்கள் வழங்கியது. தெலங்கானா பகுதியில் கம்யூனிஸ்டுகள் உதவியுடன் விவசாய சங்கம் நிலப்பிரபுக்களின் நிலத்தை விவசாயிகளுக்கு பிரித்து கொடுத்த விதம் நாடு முழுவதும் உழுபவனுக்கு நிலம் என்ற போராட்டம் வெடிக்க வைத்தது. குத்தகை விவசாயிகள் வீறுகொண்டு எழுந்தனர். அதனை அடக்குமுறையால் நேரு அரசு ஒடுக்கியது. நிலப்பிரபுக்களின் உரிமையை பாதுகாக்கும் முறையில் நிலஉடைமை சட்டத்தை கொண்டு வந்தது.

அன்று நேரு அரசிற்கு ஆதரவாக இருப்பது சோசலிசத்திற்கு அடிப்படை போட தேவையான தொழில் வளர்ச்சிக்கு அவசியம் என்ற கருத்து தலைதூக்கியது. நேரு அரசிற்கு ஆதரவு என்ற பெயரில் வர்க்க சமரசம் கூடாது, மக்களின் இயக்கத்தின் மூலம் மொழிவழி மாநிலம் அமைந்ததுபோல் வர்க்கப் போராட்டத்தின் (அதாவது வெகுஜன அமைப்புகளின் இயக்கத்தின்) மூலம் இந்த அரசை பணிய வைக்க முடியும் என்ற கருத்து வர்க்க சமரசக் கருத்தோடு மோதியது. அன்று உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் வலது திரிபு அணுகுமுறையை ஆபத்து என்று ஏற்றுக் கொண்ட சோவியத் கட்சியே நடைமுறையில் அந்த திரிபிற்கு வக்காலத்து வாங்கி புதிதாக விடுதலை அடைந்த நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் இயக்கங்களை நிலைகுலையச் செய்தது.

அன்று அரபு நாடுகளிலும். ஆசியாவிலும் சோவியத் புரட்சிக்குப் பிறகு பிறந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் சொந்த அனுபவத்தின் மூலம் பாடம் கற்க இயலாமல் போனதற்கு சோவியத் கட்சியின் நடைமுறை பெரிதும் காரணமாக இருந்தது. ஆசியாவில் வியட்நாம் கம்யூனிஸ்ட் இயக்கமும், இந்தியாவில் மார்க்சிஸ்ட் இயக்கமும் வலது திருத்தல்வாதத்திற்கு பலியாகாமல் சொந்த அனுபவங்களால் பாடம் கற்கும் ஆற்றலோடு மிஞ்சின. பல நாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்கம் சுருங்கின. இன்று நிலைமை வேறு.

முதலாளித்துவம் உருவாக்கும் நெருக்கடிகள் இன்று உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தை மார்க்சிச-லெனினிச வழியில் சரியான கோட்பாட்டை தேட வைத்துள்ளது. இந்தியாவிலும் இதே நெருக்கடி இருப்பதைக் காண்கிறோம். தொழில் வளர்ச்சிக்கு இடிமுழக்கம் செய்யும் அந்நிய முதலீட்டின் போலித்தனத்தை ஸ்ரீபெரும்புதூர் தொழில் வளாகம் காட்டிக் கொண்டே இருக்கிறது. பால் விலை உயர்வு விவசாயியின் வாழ்க்கை தரத்தை ஒரு மில்லி மீட்டர் கூட உயர்த்தப் போவதில்லை என்பது தெரிவிக்கிறது. மாட்டுத் தீவன விலையாகவும், மாடு வாங்க வாங்கிய கடனுக்கு வட்டியாகவும் அந்த உயர்வு போய்விடும்.

முன்நாட்களில் அன்ஸ்கில்டு லேபர்தான் காசுவலாக இருந்தது. இன்று நிர்வாகிகளைத் தவிர பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், என்ஜினியர்கள் எல்லாமே காண்ட்ராக்ட் காசுவுல் லேபர் ஆக்கப்படுகின்றனர். உழைக்கும் விவசாயிகளின் வறுமையும், அறிவாற்றலையும், உடல் உழைப்பையும் சார்ந்து நிற்கும் பெரும் திரள் மக்களின் உத்தரவாதமற்ற வேலை வாய்ப்புக்களும், இவைகளெல்லாம் சமூக கொந்தளிப்பின் காரணிகளாக ஆகிவருகின்றன. இத்தகைய சூழலில் பூர்சுவா கருத்தோட்டங்கள் பாட்டாளி வர்க்கத்தை பிளவுபடுத்தியிருப்பதை காண்கிறோம். வர்க்கப் பார்வையற்ற அரசியலின் ஆபத்தை உணர்த்த வேண்டியிருக்கிறது. மார்க்சிசம் கற்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. மார்க்சிச-லெனினிச அணுகுமுறையை பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட இயக்கத்தோடு அனுபவப் படிப்பிணையாக இணைக்க வேண்டியிருக்கிறது.

வலது, இடது திரிபுகளை கடந்து வந்த மார்க்சிஸ்ட் இயக்கம் இந்தப் பணியை செய்ய உறுதி பூண்டுள்ளது. ஏற்பட்ட பின்னடைவையும் சரி செய்யும். நம் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நல்ல உள்ளங்களுக்கு சொல்வோம்.

எங்களது வழிகாட்டி மார்க்சிசம்-லெனினிசமும் எங்களது அனுபவமாகும். எங்களுக்கு தவறுகளை திருத்தி முன்னேறும் ஆற்றலுண்டு. இந்திய பாட்டாளி வர்க்கத்தின் துணையோடு விவசாயி, பாட்டாளி ஒற்றுமையைக் கட்டி அரசியலில் நேர்மையையும் ஆட்சியில் ஜனநாயகத்தையும் பொருளாதாரத்தில் மக்கள் வாழ்வையும் பாதுகாக்கும் படையாக திகழ்வோம்.

உலகமயமாகும் நிலச்சீர்திருத்த அரசியல்!

உலகமயம் இது பன்னாட்டு பெருவணிக நிறுவனங்களின் கோஷம். ஏகாதிபத்திய நவீன சுரண்டலின் புதிய வடிவம். உலக மக்கள் வெறுக்கும் விரிவாக்கம்; இந்த ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக உலகளவில் தொழிலாளர்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும், இடதுசாரி – ஜனநாயக அமைப்புகளும் போராட்ட இயக்கங்களை கட்டியெழுப்பி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உலக சமூக மாமன்றம் போன்ற அமைப்புகள் விரிந்த சங்கிலி இணைப்புகளை உருவாக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. 1848-இல் உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று மார்க்சும் – ஏங்கெல்சும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் முன்வைத்த முழக்கம் இன்று நிஜமாகி வருகிறது.

ஏகாதிபத்திய – முதலாளித்துவ சக்திகள் தொழில்நுட்ப ரீதியிலும், அறிவியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஈபிள் கோபுரம் அளவிற்கு சாதனைகளை நிகழ்த்தியிருந்தாலும், உலக மக்களின் வறுமையை அவர்களால் தீர்க்க முடியவில்லை. மாறாக உலக மக்களை வறுமையின் புதைக்குழிகளுக்கே தள்ளி வருகின்றன. குறிப்பாக கிராமப்புற விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மிகக் கொடூரமான சுரண்டலுக்கு உள்ளாவதோடு, பட்டினிச் சாவுகளுக்கும், தற்கொலைகளுக்கும் இட்டுச் செல்லக்கூடிய அளவிற்கு அவர்களது வாழ்நிலை மிகவும் சீரழிந்து வருகிறது.

இந்த பின்னணியில்தான் இந்தியா உட்பட, லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டு வரும் இடதுசாரிகளின் எழுச்சி விவசாயிகள் – தொழிலாளர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அதோடு வெனிசுலா, பிரேசில், பொலிவியாவில் நடைபெற்று வரும் இடதுசாரி அரசுகளின் நிலச்சீர்திருத்த இயக்கம் விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டி வருகிறது.

இந்தியாவில் இடதுசாரி அரசுகளான கேரளம், மேற்குவங்கம், திரிபுராவில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்தத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழகத்திலும் நிலச்சீர்திருத்தம் ஒரு அரசியல் கோஷமாக முன்னுக்கு வந்துள்ளது.

உலகிலேயே முதன் முதலில் நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நாடு சோசலிச சோவியத் யூனியன் தான்; தற்போது நடைபெற்று வரும் இந்த இயக்கங்களுக்கு முன்னோடி என்பதை நாம் இங்கே நினைவுகூர்ந்திட வேண்டும். சீனா, வடகொரியா, வியட்நாம் உட்பட சோசலிச நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் இன்றைக்கு விரிவடைந்து தென்னாப்பிரிக்கா, தென்கொரியா உட்பட பல்வேறு நாடுகளில் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக நிலச் சீர்திருத்தம் என்பது உலகளவில் அரசியல் கோஷமாக உலக மக்கள் விரும்புகிற உலகமயமாகி வருகிறது.

உலக உழைப்பாளி மக்களின் வறுமைக்கு அடிப்படையாக அமைந்திருப்பது உற்பத்தி கருவிகள் சுரண்டும் வர்க்கங்களின் கைகளில் குவிந்திருப்பதுதான். அதிலும் குறிப்பாக கிராமப்புற நிலவுடைமை இன்றைக்கும் பெரும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளிலும், நிலப்பிரபுக்களின் கைகளிலும்தான் குவிந்திருக்கிறது. இந்த உற்பத்தி கருவிகளிலும், உற்பத்தி உறவுகளிலும் அடிப் படையான மாற்றத்தை ஏற்படுத்திடாமல் கிராமப்புற வறுமைக்கு தீர்வு காண முடியாது.

உலக விவசாயிகளின் நிலை

உலக மக்கள் தொகையில் சரி பாதி பேர் விவசாயத்தையே நம்பியுள்ளனர். 45 சதவீத மக்களது வாழ்க்கை விவசாயத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. அவர்களது வாழ்நிலை, வருமானம், பாதுகாப்பு என அனைத்தும் விவசாயத்தைச் சார்ந்தேயுள்ளது.

இவர்களது வாழ்க்கை பாதுகாப்பிற்கு மையக் கேள்வியாக இருப்பது நிலம். குறிப்பாக வளரும் நாடுகளில் உள்ள 50 கோடி மக்களுக்கு நிலமோ அல்லது நிலத்தின் மீதான உறவோயின்றி, விவசாயத் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இதில் மிகக் குறைந்த பகுதியினர்தான் குத்தகை விவசாயிகளாக உள்ளனர். இவர்கள் நிலவுடைமையாளர்களால் கடுமையாக சுரண்டப் படுவதோடு, கந்துவட்டி, குறைந்தகூலி, ஆண்டுமுழுவதும் சீரான வேலையின்மை, அதிகமான நிலவாடகை என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக விவசாயிகள் அதிகமாக உள்ள நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேஷியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, கொலம்பியா மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் உள்ள கிராமப்புற மக்கள் கடுமையான வறுமைக்கு ஆளாகியுள்ளனர்; சுகாதாரம், கல்வி, வீடு மற்றும் அடிப்படைத் தேவைகள்கூட கிடைக்காத பகுதியினராக திகழ்கின்றனர்.

அதேசமயம், சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான முன்னாள் சோசலிச நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்தத்தால் 58 கோடி மக்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். சீனா, வடகொரியா, வியட்நாம், கியூபா உட்பட சோசலிச நாடுகளில் நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு கிராமப்புற பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன. இந்தியாவிலும் மேற்குவங்கம், கேரளம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் நிகழ்த்தப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கைகயால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம், வாங்கும் சக்தி, உள்ளாட்சி நிர்வாகத்தில் பங்கேற்பு என பன்முனைகளில் ஜனநாயக ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று கிராமப்புற வளர்ச்சி நிறுவனத்தின், 21 ஆம் நூற்றாண்டில் நிலச்சீர்திருத்தம் என்ற ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

பிரேசில் விவசாயிகள் எழுச்சியும் நில மீட்பும்

உலகில் வளம் பொருந்திய நாடுகளில் ஒன்று பிரேசில், ஆனால், அதே அளவிற்கு வறுமையையும் கொண்டுள்ளது; இந்த நாட்டின் வளங்களை சுரண்டிச் செல்வதிலும், அதற்கேற்ப பொம்மை ஆட்சியாளர்களை அமர்த்துவதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைங்கரியம் உண்டு. குறிப்பாக பிரேசிலில் உள்ள மூன்றில் இரண்டு பகுதி விவசாய நிலங்கள், வெறும் மூன்று சதவீதம் பேருக்கு சொந்தமானது. அதிலும் குறிப்பாக 1.6 சதவீதம் பேரிடம் பிரேசிலின் 46.8 சதவீத விவசாய நிலங்கள் குவிந்திருக்கிறது. இவர்களின் கையில்தான் மொத்த விவசாயமும் – விவசாய கொள்கையை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்கின்றனர். இந்த நவீன விவசாய பண்ணைகளில் 2.5 கோடி மக்கள் தங்களது வாழ்க்கைக்காக விவசாயம் சார்ந்த வேலைகளையே நம்பியிருக்கின்றனர். நிலமற்ற விவசாயிகளாக – அத்துகூலிக்கு வேலை செய்யும் ஆட்களாக, வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களாக, சத்தற்ற நடைபிணங்களாக ஆக்கியது கடந்தகால ஆட்சியாளர்களின் கொள்கைகள்.

வெளிச்சத்தை கொண்டு வந்த விவசாய இயக்கம்

1984இல் துவங்கப்பட்ட கிராமப்புற நிலமற்ற விவசாயிகள் இயக்கத்தில் (ஆளுகூ-ஆடிஎஅநவேடி னடிளகூசயயெடாயனடிசநள சுரசயளை ளுநஅ கூநசசய  ஞடிசவரபரநளந – டுயனேடநளள றுடிசமநசள ஆடிஎநஅநவே)  1.5 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். எம்.எஸ்.டி. என்று அழைக்கப்படும் கிராமப்புற நிலமற்ற விவசாயிகள் இயக்கத்தில், 10 முதல் 15 குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ஒரு கிளையாக செயல்பட்டு வருகின்றனர். இந்த கிளைகளில் இருந்து மேல் கமிட்டிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு உறுப்பினர்களை தேர்வு செய்கின்றனர். இந்த இயக்கத்தில் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த இயக்கம் பிரேசில் முழுவதும் உள்ள 27 மாநிலங்களில் 23 மாநிலங்களில் தங்களது கிளைகளை விழுதுகளாக ஆழப்பதித்திருக்கிறது.

2003 ஆம் ஆண்டு லூலா தலைமையில் அமைந்த இடதுசாரி அரசாங்கம் கிராமப்புற நிலமற்ற விவசாயிகள் இயக்கத்திற்கு பெரும் ஆதர்ச சக்தியாக திகழ்கிறது. கடந்த 20 ஆண்டு காலமாக  அவர்கள் நடத்தி வரும் நிலமீட்பு போராட்டம், லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள நிலமற்ற விவசாயிகளுக்கு ஒரு முன்னுதாரனமாக திகழ்கிறது. இந்த இயக்கம் கிராமப்புற மக்களின் ஆத்மாவாக, நம்பிக்கை நட்சத்திரமாக செயல்படுவதோடு, மிக அதிக அளவிலான விவசாயிகளைக் கொண்ட பேரியக்கமாக செயல்பட்டு வருகிறது.

நிலமற்ற கிராமப்புற விவசாயிகள் இயக்கத்தின் அடிப்படை நோக்கமே வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பது, ஜீரோ வேலையில்லாத் திண்டாட்டம் என்பதுதான். அத்துடன் செல்வத்தை பகிர்வது, சமூக நீதி, சம உரிமை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து செயல்படுகிறது.

பிரேசிலில் உள்ள மொத்த விவசாய நிலத்தில் 60 சதவீத விவசாய நிலம் தரிசு நிலம். இத்தகைய தரிசு நிலத்தை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கக் கோரி நடத்திய விவசாயிகளின் வீரஞ்செறிந் போராட்டத்தின் மூலமாக, இதுவரை இரண்டரை லட்சம் குடும்பங்களுக்கு 15 மில்லியன் ஏக்கர் (1.5 கோடி ஏக்கர்) நிலம் கிடைத்துள்ளது. இந்த போராட்டத்தின் போது பல இடங்களில் நில முதலாளிகளின் தாக்குதல்களுக்கு 2000-த்துக்கும் மேற்பட்ட எம்.எஸ்.டி. ஊழியர்கள் பலியாகியுள்ளனர்.

விவசாயிகள் இயக்கம் நிலமீட்பு போராட்டத்தை மட்டும் நடத்துவதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மீட்கப்பட்ட நிலத்தில் வர்த்தக பயிர்*களை தவிர்த்து, மாற்று கொள்கைகளை உருவாக்கி, புதிய விவசாய கலாச்சாரத்தை உருவாக்கி, செயல்படுத்தி வருகிறது. விவசாயம் உணவுப் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்துவதோடு, வேலையின்மைக்கு முற்றுப் புள்ளி வைப்பதாகவும் அமைய வேண்டும் என்ற நோக்கோடும், பொருளாதார தேவைகளை உயர்த்துவதாகவும், அவர்களது வறுமைக்கு தீர்வு காண்பதாகவும் இருக்க வேண்டும் என்ற முனைப்போடு எம்.எஸ்.டி. செயல்பட்டு வருகிறது. இதற்காக 60 உணவு கூட்டுறவு அமைப்புகளையும், சிறிய விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளையும் உருவாக்கி, உணவுக்கும் – வேலைக்கும் உத்திரவாதத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

இது தவிர, கிராமப்புற விவசாய மக்களிடையே உள்ள எழுத்தறிவின்மையை போக்குவதற்கு எழுத்தறிவு இயக்கத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட எம்.எஸ்.டி. ஊழியர்கள் எழுத்தறிவு இயக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2002 – 2005 கால கட்டத்தில் மட்டும் 56,000 கிராமப்புற மக்களுக்கு கல்வியறிவை புகட்டியுள்ளனர். அதேபோல் 1000க்கும் மேற்பட்ட ஆரம்ப பள்ளிகளையும் இந்த இயக்கம் நடத்தி வருகிறது.  இதில் 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், 50,000 குழந்தைகளும் பயின்று வருகின்றனர்.

இவ்வாறான விழிப்புணர்வின் மூலம் போராட்டத்தின் வாயிலாக பெற்ற நிலத்தை தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், உணவு பாதுகாப்பையும், உணவுத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ளவும், குடும்ப பாதுகாப்பையும், பொருளாதார மேம்பாட்டையும் உத்திரவாதப்படுத்திக் கொள்ள இத்தகைய செயல்பாடு பயன்படுகிறது.

சமீபத்தில் பிரேசில் தலைநகரில் நடத்தப்பட்ட பிரம் மாண்டமான இயக்கத்தில் பல்லாயிரக்கணக்கான எம்.எஸ்.டி. ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர். லூலா தேர்தல் காலத்தில் நான்கு லட்சம் குடும்பங்களுக்கு நில விநியோகம் செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தற்போதைய வேகம் போதாது என்று எம்.எஸ்.டி. இயக்கம் விமர்சிக்கிறது. அதே சமயம் லூலா மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும், லூலா எங்கள் இயக்கத்தில் ஒருவர்; அவர் தங்களது நண்பர் என்றும் எம்.எஸ்.டி. இயக்கம் நம்பிக்கை கொள்கிறது.

பிரேசில் பிரம்மாண்டமான நிலவளத்தை கொண்டிருந் தாலும், அதனுடைய உணவுத் தேவைக்கு இறக்குமதியையே நம்பியிருக்கிறது. ஒரு நாட்டில் அதிகமான நிலம் இருப்பதால் மட்டும் அங்குள்ள விவசாயிகளுக்கும், மக்களுக்கும் உணவு கிடைக்கும் என்பதற்கு உத்திரவாதமில்லை. அந்நாட்டு அரசுகள் பின்பற்றும் கொள்கை, குறிப்பாக நிலவுடைமையாளர்கள் – பண்ணைகள் தங்களது நிலங்களில் உணவுப் பயிர்களுக்கு பதிலாக வர்த்தகப் பயிர்களையே விளைவிக்கின்றனர். மறுபுறத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு போதுமான கூலி கிடைக்காமல் வறுமையின் சுழலுக்குள் சிக்கி, சின்னாபின்னமாவதுதான் நடக்கிறது.

நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் என்பது, அந்த விவசாயிகளின் வாழ்க்கையில் தன்னம்பிக்கை ஏற்படுத்துவதோடு, அவர்களது உணவுக்கான உத்திரவாதத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது. அந்த அடிப்படையில் தற்போது பிரேசிலில் நடந்துவரும் நிலமற்ற கிராமப்புற விவசாயிகள் இயக்கம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள விவசாயிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.

நிலச்சீர்திருத்தம் வெனிசுலா காட்டும் பாதை

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ்வது கியூபாவும் – பிடலும். லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்க சுரண்டலுக்கு எதிராக சிங்கத்தின் கர்ஜனையோடு பிடலுடன் கைகோர்த்திருப்பவர் வெனிசுலா அதிபர் யூகோ சாவேஸ். உலக எண்ணெய் வளத்தில் 5-வது இடத்தை வகிப்பது வெனிசுலா.

வெனிசுலா பெட்ரோலிய ஏற்றுமதியில் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. அமெரிக்கா தன்னுடைய எண்ணெய் தேவையில் 25 சதவீதத்தை வெனிசுலாவில் இருந்து பெற்றுக் கொள்கிறது. வெனிசுலாவின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான இடத்தை வகிப்பது அதன் எண்ணெய் உற்பத்தியே; 80 சதவீத வருமானம் இதனை நம்பியே உள்ளது. அமெரிக்கா வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை கொள்ளைக் கொண்டதோடு, தனது நவீன காலனியாக பயன்படுத்தி வந்தது. சாவேஸ் ஆட்சிப் பொறுப் பேற்றதும், வெனிசுலாவின் எண்ணெய் வயல்களை அரசுடைமை யாக்கி, அமெரிக்க நிறுவனங்களின் சுரண்டலுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

1999 இல் ஆட்சிக்கு வந்த சாவேஸ் நிலச் சீர்திருத்தம்தான் எனது அரசின் முக்கிய இலக்கு என்று அறிவித்தார். விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பிற்கு அவர்களுக்கான நிலவுரிமையை உத்திரவாதப்படுத்துவதே எனது நோக்கம் என்று பிரகடனப் படுத்தினார். அத்தோடு நிற்காமல், வெனிசுலாவின் அரசியல் சாசனத்தையும் திருத்தியமைத்தார் சாவேஸ்.

அதிபர் சாவேசின் புரட்சிகர நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாத ஏகாதிபத்திய ஆளும் வர்க்கம், சாவேசை ஆட்சியில் இருந்து கவிழ்ப்பதற்கு பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டு மூக்கை உடைத்துக் கொண்டது. ஓராண்டுக்கு முன் கிறித்துவ மதப் பிரசங்கம் செய்யும் பாதிரியார், சாவேசை கொல்ல வேண்டும் என்று வெளிப்படையாக மதப் பிரசங்கத்திலேயே அறிவித்தார் ஏகாதிபத்திய சுரண்டும் வர்க்கம் சாவேஸ் அரசை கவிழ்ப்பதற்கு எத்தகைய சீரழிந்த நடவடிக்கைகளை கைக்கொள்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.

வெனிசுலாவில் உள்ள மொத்த விவசாய நிலத்தில் 75 சதவீத நிலம் 5 சதவீதத்தினர் கையில் உள்ளது. இத்தகைய நில முதலைகள் ஒவ்வொருவரிடமும் 1000 ஹெக்டேர்களுக்கு மேல் நிலம் குவிந்துள்ளது. இங்கும் பிரசிலில் நடைபெற்றது போல் பருத்தி, சோயா, கோக்கோ போன்ற வர்த்தகப் பயிர் விளைச்சல்தான். மறுபுறம் ஐந்தில் மூன்று பங்கு விவசாயிகள் நிலமற்ற கூலி விவசாயிகளாக உள்ளனர். மேலும் லத்தீன் அமெரிக்க நாடு களிலேயே கிராமப்புற மக்கள் தொகை குறைவாக கொண்ட நாடு வெனிசுலாதான். கடந்த 35 ஆண்டு காலமாக கிராமப்புறத்தில் இருந்த மக்கள் நிலங்களில் இருந்து விரட்டப்பட்டு, நகரங்களில் குவிந்துள்ளனர்.

1960-களில் 35 சதவீதமாக இருந்த கிராமப்புற மக்கள் தொகை படிப்படியாக குறைந்து 1990-களில் 12 சதவீதத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது 2000 ஆம் ஆண்டில் 8 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. வர்த்தகப்பயிர் உற்பத்தி மற்றும் நவீன விவசாய கருவிகளை கையாள்வதன் மூலமும், கிராமப்புற விவசாய மக்கள் முதலாளித்துவ ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளின் விளைவாக எப்படி நிலத்தில் இருந்து அகற்றப்படுகிறார்கள் என்பதற்கு வெனிசுலா சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. வெனிசுலாவின் விவசாய உற்பத்தி அதன் மொத்த ஜி.டி.பி.யில் வெறும் 6 சதவீதம் மட்டுமே. மொத்தத்தில் வெனிசுலா தன்னுடைய உணவுத் தேவைக்கு 88 சதவீதம் இறக்குமதியையே நம்பியுள்ளது.

ஒரு பக்கத்தில் வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை சுரண்டுவதும், மற்றொரு புறத்தில் தங்களது விளை பொருட்களை வெனிசுலா தலையில் கட்டுவதுமாக இருபுற சுரண்டலை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மேற்கொண்டு வந்தனர்.

கிராமத்திற்கு திரும்புவோம்!

சாவேஸ் ஆட்சிக்கு வந்ததும் கிராமத்திற்கு திரும்புவோம் என்ற முழக்கத்தை முன்வைத்தார். இதன் மூலம் பெரும் நிலப் பண்ணைகளை வைத்திருப்பவர்களுக்கு எதிரான போராட்டம் வெனிசுலாவில் தீவிரமடைந்தது. 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் உழலும் வெனிசுலாவில் 75 சதவீத விவசாய நிலங்கள் 5 சதவீத நிலவுடைமையாளர்கள் வசம் இருந்தது. இதில் எஸ்டேட் என்று அழைக்கக்கூடிய 44 நவீன விவசாய பண்ணை களை நடத்தும் முதலாளிகளிடம் மட்டும் 6,20,000 ஏக்கர் நிலங்கள் குவிந்திருக்கிறது. இந்த நிலக்குவியல்தான் வெனிசுலாவின் அரசியல் அதிகார மையமாக இருக்கிறது. இந்த நிலக்குவியலை தகர்க்கும் உளியாக செயல்படுகிறார் சாவேஸ்.

சாவேஸ் ஆட்சிக்கு வந்தவுடன், அரசியல் சட்டத்தை திருத்தியதோடு, நிலவுடைமை குறித்த சட்டத்தையும் திருத்தி அமைத்தார். இதன் மூலம் தரிசு நிலங்களை கைப்பற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் வெகுவேகமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

18 வயதில் இருந்து 35 வயதுக்கு உட்பட்டவர்கள் குடும்பத் தலைவரோ அல்லது தனி நபரோ நிலம் வேண்டி அரசுக்கு விண்ணப்பித்தால், அவர்களுக்கு உரிய நிலம் அளிக்கப்படும். அவருக்கு கிடைக்கும் நிலத்தில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து விவசாயம் செய்து வந்தால், அந்த நிலம் அவருக்கு முழு உரிமையாக்கப்படும். அதே சமயம் அத்தகைய நிலத்தை யாருக்கும் விற்கவோ, அதேபோல் வேறு நிலங்களை வாங்கவோ சட்டத்தில் இடமில்லை. 2003ஆம் ஆண்டு 60,000 நிலமற்ற விவசாய குடும்பங்களுக்கு 5.5. மில்லியன் ஏக்கர் (55 லட்சம் ஏக்கர்) நிலத்தை விநியோகம் செய்து, அந்த மக்களுக்கு சட்ட உத்திரவாதம் வழங்கியுள்ளது வெனிசுலா அரசு. இந்த ஆண்டில் அரசின் இலக்கு 3.5 மில்லியன் ஏக்கர் நிலத்தை விநியோகிப்பது என்பதுதான்; அரசின் உறுதியான நடவடிக்கையால் இலக்கையும் மிஞ்சியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2004ஆம் ஆண்டு மட்டும் 1.5 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் 1,30,000 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6,50,000 பேர் பயனடைந்துள்ளனர் என்று வெனிசுலா நிலவிநியோக புள்ளி விவரம் கூறுகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பத் திற்கும் 11.5 ஹெக்டேர் நிலம் கிடைத்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 2 மில்லியன் ஹெக்டேர் அளவுக்கு விநியோகிக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

இத்தகைய நிலவிநியோக நடவடிக்கையால், கிராமப் புறங்களில் நிலவுடைமை வர்க்கங்கள் நடத்திய தாக்குதல்களில், வன்முறைச் சம்பவங்களில் 150க்கும் மேற்பட்ட விவசாய இயக்கத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். வெனிசுலாவில் முதலாளித் துவ ஆட்சியாளர்கள் கிராமப்புற விவசாயிகளை நிலத்தைவிட்டு விரட்டியுள்ளதால், அங்கே விவசாயிகள் இயக்கம் என்பது கூடுதல் வலுப்பெறாத நிலையுள்ளது. பலமான விவசாயிகள் இயக்கம் வெனிசுலாவில் இருந்திருக்குமேயானால், சாவேசின் புரட்சிகர நடவடிக்கை மேலும் வெகுவேகமாக செயல்படுத்துவதற்கு உத்வேகமாக அமையும்.

வெனிசுலாவில் நடைபெறும் நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்ட  பிரேசில் நிலமற்றோர் இயக்கத் தலைவர் ஜோஹோ பெட்ரன் கூறுகையில், நான் காதுகளில் கேட்பதை விட கண்களில் பார்ப்பது அதிகம் என்று புகழ்ந்துரைத்துள்ளார்.

நிலச் சீர்திருத்தம் பொலிவேரியன் பாதை

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அலை வேகமாக சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது. புரட்சி வீரன் சேகுவேரா சுடப்பட்ட மண்ணில் இன்றைக்கு இடதுசாரி சிந்தனை கொண்ட ஈவோ மொரேல்ஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஈவோ மொரோல்ஸ் மற்றொரு சாவேசாக உருவெடுத்து வருகிறார். பிடல், சாவேஸ், மொரோல்ஸ் கூட்டு ஏகாதிபத்திய அமெரிக்காவின் அடிவயிற்றை கலக்கிக் கொண்டிருக்கிறது.

இவர் ஆட்சிக்கு வந்தவுடன் எடுத்த முதல் நடவடிக்கையே பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவை அரசுடைமையாக்கியதுதான். பொலிவியாவில் நிலவுடைமை மிக வித்தியாசமானது. அங்கே இரண்டு விதமான நிவுடைமை நிலவுகிறது. ஒன்று மினிபன்டாஸ் என்று அழைக்கக்கூடிய விவசாய நிலம் மேற்கு பகுதியிலும், லாட்டிபண்டாஸ் என்று அழைக்கக்கூடிய தொழிற்சாலை நிலங்கள் கிழக்குப் பகுதியிலுமாக பிரிக்கப்பட்டு ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.

இங்கும், விவசாய நிலங்களில் ஏகாதிபத்திய வர்த்தகப் பயிர்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாயம் என்றாலே அது உள்நாட்டு மக்களின் தேவைக்கு என்பது மாறி, அது ஏற்றுமதி செய்வதற்கு என்ற நிலையினை தோற்றுவித்துள்ளது ஏகாதிபத்திய கட்டமைப்பு.

சின்னஞ்சிறு பொலிவியாவில் 35 லட்சம் கிராமப்புற மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். இதில் 40 சதவிகித விவசாயிகள் கடுமையான வறுமையில் உழல்வதாக கூறப்படுகிறது. இவர்களது ஆண்டு வருமானம் வெறும் 600 டாலர் மட்டுமே. அதாவது, ஒரு நாளைக்கு இரண்டு டாலருக்கும் குறைவு.

பொலிவியாவில் எழுந்த நிலத்துக்கான இயக்கம்

பிரேசிலிய அனுபவத்தைத் பின்பற்றி பொலிவியன் நிலமற்றோர் இயக்கம் இன்றைக்கு வெகு வேகமாக பரவி வருகிறது. பொலிவியாவில் உள்ள தரிசு நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையோடு இந்த இயக்கம் செயல் பட்டு வருகிறது.  இந்த இயக்கத்தின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத முதலாளித்துவ நில பண்ணை முதலாளிகள் நூற்றுக்கணக்கான ஊழியர்களை கொலை செய்து வருகின்றனர்.

இந்த நிலப் பண்ணைகள் குறித்து கூறும் போது பரான்கோ மார்னிக்கோவ் என்ற ஒரே ஒரு நிறுவனம் மட்டும் 14,000 ஹெக்டேர் நிலத்தை தன் வசம் வைத்துள்ளது. இதிலிருந்து அங்குள்ள பண்ணைகளின் ஆதிக்கத்தை அறியலாம். இதேபோல் 100 குடும்பங்கள் மட்டும் 25 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை தன்வசம் வைத்துக் கொண்டுள்ளது.

அதே சமயம் 2 மில்லியன் மக்கள் (20 லட்சம் பேர்) தங்கள் வசம் வெறும் 5 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை மட்டுமே வைத்துள்ளனர்.

மொரேல்ஸ் அரசு நிலச்சீர்திருத்த நடவடிக்கையை நிறைவேற்றுவதற்கு முதல் கட்டமாக அரசியல் சட்டத்தில் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. முதல் கட்டமாக பொலிவியாவில் உள்ள 4.5 மில்லியன் ஹெக்டேர் நிலங்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொலிவிய அரசின் நில விநியோகத் திட்டத்தை எப்படியும் தடுத்துவிட வேண்டும் என்ற நோக்கோடு நிலமுதலைகள் நில பாதுகாப்பு கமிட்டி அமைத்துள்ளனர். இவர்கள் நிலமற்ற விவசாயிகளுக்கு எதிராக வன்முறைத் தாக்குதல்களைத் தொடுப் பதற்கும் தயாராகி வருகின்றனர்.

மொரேல்ஸ் அடிப்படையில் கோக்கோ பயிரிடும் விவசாயிகள் இயக்கத்தின் தலைவர். மேலும், அவரது இயக்கமான சோசலிசத்தை நோக்கி (ஆடிஎநஅநவே வடிறயசன ளுடிஉயைடளைஅ  – ஆடிஎஅநைவேடி யட ளுடிஉயைடளைஅடி, ஆஹளு) என்ற கட்சியும் நிலச் சீர்திருத் தத்தை உறுதியாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. முதற் கட்டமாக தரிசு நிலங்களை நிலமற்ற விவசாயி களுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கை துவங்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அலை வீசுவதோடு, கிராமப்புற மக்களின் விடிவெள்ளியாக திகழ்கிறது. இந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் நிலச்சீர்திருத்த நடவடிக்கை, லத்தீன் அமெரிக்கா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. இது எதிர்காலத்தில் அந்த கண்டம் முழுவதையுமே மாற்றியமைக்கும் நடவடிக்கைக்கு கொண்டுச் செல்லும். உலகம் முழுவதும் இருக்கும் உழைப்பாளி மக்களுக்கும், இடதுசாரி எண்ணம் கொண்டவர்களுக்கும் லத்தீன் அமெரிக்காவில் நடைபெறும் மாற்றங்கள் ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துவ தோடு, அந்தந்த நாடுகளில் ஒரு இடதுசாரி, சோசலிச எண்ணத்தை கட்டமைப்பதில் மேலும் புது உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் தற்கொலையும், வங்க பஞ்சமும்

இந்தியாவின் ஆத்மா கிராமப்புறத்தில் உள்ளது. இந்தியா பெரும் விவசாய நாடுகளில் ஒன்று. 70 சதவீத மக்கள் கிராமப்புறத்தை நம்பியே உள்ளனர். உலகமயமாக்கல், உலக வர்த்தக அமைப்பு டனான ஒப்பந்தம் போன்ற புதிய பொருளாதார கொள்கைகளால், இந்தியாவின் விவசாய கொள்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த கொள்கைகள் யாரை வாழ்விப்பதற்காக என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. பசுமைப்புரட்சி கண்ட இந்தியா என்று பீற்றிக் கொண்ட நாட்டில்தான் தற்போது உலகிலேயே விவசாயிகள் தற்கொலை அதிகமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மகாராஷ்டிரத்தில் உள்ள விதர்பா மாவட்டத்திற்கு சென்று 3750 கோடி அளவிலான நிவாரணங்களை வழங்கியுள்ளார். பரிதாபம் என்னவென்றால், பிரதமர் ஒருபுறம் நிவாரணங்களை வழங்கிக் கொண்டிருக்கும் போதே, தற்கொலைகளும் சமகாலத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது தான். மகாராஷ்டிரம், ஆந்திரா, கர்நாடகம், கேரளம், பஞ்சாப் என பல மாநிலங்களில் ஆண்டுக்கு 4000 விவசாயிகள் தற்கொலைக்கு உள்ளாகின்றனர். இந்த எண்ணிக்கை இதைவிட அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏன் இந்த நிலைமை?

இந்திய ஆட்சியாளர்கள் கடந்த 20 ஆண்டு காலமாக அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளின் செல்லப்பிள்ளையாக மாறியதும், உலக வர்த்தக அமைப்பு மற்றும் உலகவங்கியின் கட்டளைக்கு அடிபணிந்து பன்னாட்டு முதலாளிகளுக்கு சேவகம் செய்யும் கொள்கையை கடைப்பிடித்ததன் விளைவுதான் இன்றைக்கு இந்திய விவசாயிகளை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளது. ஏற்றுமதியை நோக்கமாக கொண்ட வர்த்தக பயிர் (பருத்தி, சோயா…) உற்பத்தியில் ஈடுபடுமாறு விவசாயிகளை ஆசை காட்டி மோசம் செய்ததோடு, உள்நாட்டில் உற்பத்தியாகும் 800க்கும் மேற்பட்ட விவசாய பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதித்தது போன்ற தவறான விவசாய கொள்கைகளால் இந்திய விவசாயிகள் ஓட்டாண்டியாக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மான்சாண்டோ என்கிற பன்னாட்டு நிறுவனங்களின் போல்கார்ட் பருத்தி விதைகளை பயன்படுத்தி பருத்தி விவசாயத்தில் ஈடுபட்டதும், உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததும், உரவிலை உயர்வு, மின்சார கட்டணம், தண்ணீரின்மை, கடன் சுமை, கந்து வட்டி என்று தொடர் சங்கிலியாக பருத்தி விவசாயிகள் கட்டுண்டு கிடக்கின்றனர். இதிலிருந்து மீள்வது எப்படி என்று வழி தெரியாத விவசாயிகள் தங்களுக்கான விடுதலை ஆயுதமாக தற்கொலையை தேர்ந் தெடுக்கின்றனர்.

1987 இல் ஆந்திராவில் மட்டும் 0.4 மில்லியன் ஹெக்டேரில் பருத்தி விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. 2005இல் இது 1.2 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு விரிவடைந்துள்ளது. அதாவது, வர்த்தகப் பயிர் உற்பத்தி எந்த அளவிற்கு விவசாயிகளை பொறியில் சிக்க வைத்துள்ளது என்பதை இந்த விவரம் காட்டுகிறது. மேலும் வர்த்தகப் பயிர் உற்பத்தியில் ஈடுபட்ட நிலங்கள் தற்போது வேறு எந்தவிதமான பாரம்பரிய நெல், கோதுமை போன்ற உணவுப் பயிர்களை உற்பத்தி செய்ய முடியாத சூழலுக்கு தள்ளியுள்ளது. பணப் பயிர் (வர்த்தகப் பயிர்) என்ற சொல்லே ஒரு ஏமாற்றுதான். முதலாளித்துவ அரசியல்வாதிகள்தான் இந்த சொல்லை வைத்து விவசாயிகளை ஏமாற்றுகிறார்கள். உணவுப் பாதுகாப்பு குறித்த உணர்வற்ற சுரண்டும் கூட்டத்திற்கு, விவசாயிகளை சுரண்ட இந்த ஏமாற்றுச் சொல் பயன்படுகிறது.

மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளையும் மிஞ்சும் வகையில் மன்மோகன் சிங் அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, அந்நிய நாட்டில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய நாட்டிற்குள் விவசாயம் செய்துக் கொள்வதற்கு 100 சதவீதம் அனுமதிக்கப்போவதாக அறிவித்துள்ளது. உள்நாட்டு நவீன பண்ணையார்களை சமாளிப்பதற்கே கடினமாக உள்ள சூழ்நிலையில், விவசாயத்தில் அந்நியரை அனுமதிப்பது என்பது இந்திய நாடே தற்கொலைப் பாதைக்கு செல்வதற்கு ஒப்பாகும். நிலவிநியோகம் குறித்து அதிகமான விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் நேரத்தில் கார்ப்பரேட் விவசாய முதலாளிகள் இந்திய கிராமப்புறத்தில் உள்ள ஒட்டுமொத்த நிலத்தையும் சுரண்டிச் செல்வதற்குத்தான் இந்த அறிவிப்பு பயன்படும்.

இறக்குமதியாகும் உணவு தானியம்

தற்போது மத்தியில் உள்ள மன்மோகன் சிங் அரசு 5 லட்சம் டன் கோதுமையை ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.  இந்த உணவு தானிய இறக்குமதி குறித்து ஆட்சியாளர்கள் பல்வேறு நொண்டிச்சாக்குகளை கூறி வருகின்றனர். அதாவது, நம்முடைய உணவு தானிய கையிருப்பை சமப்படுத்துவதாக கூறுகின்றனர். அதுவும் இறக்குமதி செய்யப்பட்டுள்ள கோதுமையில் பூச்சுக் கொல்லி மருந்துகள் சாதாரண அளவைவிட கூடுதலாக இருப்பதாக நாடாளுமன்றத்திலேயே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட கிராமப்புறத்தை கொண்ட ஒரு நாட்டில் தானிய இறக்குமதி என்ற கொள்கை எதை நோக்கிச் செல்லும் என்பதே நமது கேள்வி! நமது விவசாயம் திவாலாகி வருவதையும், உட்டோ (WTO) உடன்பாட்டின் அடிப்படையில் விவசாய பொருட்களை இறக்குமதி செய்யவும், நமது மார்க்கெட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விடும் மோசமான போக்கைத்தான் இது வெளிப்படுத்துகிறது. மேலும் நமது நாட்டு விளை பொருளான பருப்பு போன்றவற்றின் ஏற்றுமதிக்கு தடை விதித்து வருவதையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.

விவசாயத்துறையில் அந்நியர்களை ஈடுபட அனுமதித்தால் நம்நாட்டில் உற்பத்தி செய்து, அதை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து, அங்கிருந்து நாம் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். இத்தகைய ஆபத்துக்களை நமது பொருளாதார புலி சிதம்பரம் வகையறாக்களுக்கு தெரியாததல்ல; எல்லாம் ஏகாதிபத்திய – உலகவங்கியின் அடிமைத்தன விசுவாசம்தான் இத்தகைய செயல்பாடுகளில் அவர்களை தீவிரமாக ஈடுபடத் தூண்டுகிறது.

கடந்த வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 6 லட்சம் டன் உணவு தானியம் கையிருப்பில் உள்ளதாக கூறிக் கொண்டு, இது நம்முடைய கையிருப்பு தேவையை விட அதிகமாக இருக்கிறது என்று கூறி, பொது விநியோகத்திற்கு வழங்கப்படும் தொகையை விட மிகக் குறைவான அளவுக்கு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.

24 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள நம் நாட்டில், ஒரு புறத்தில் பட்டினிச் சாவுகளும், விவசாயிகள் தற்கொலைகளும் நடைபெற்று வருவது மத்திய அரசு கடைப் பிடிக்கும் புதிய விவசாய கொள்கை நம் மக்களை வாழ்விக்காது என்பதை பட்டவர்த்தனமாக உணர்த்துகிறது.

வங்கப் பஞ்சம் படிப்பினை!

பிரிட்டிஷ் இந்தியாவில் 1943 இல் வங்கத்தில் ஏற்பட்ட கடுமையான பஞ்சமும், அதனால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறப்புக்கும் யார் காரணம்? இதன் மூலம் இந்திய அரசு பெற்ற அனுபவம் என்ன? இது குறித்து ஜவஹர்லால் நேரு, தன்னுடைய கண்டுணர்ந்த இந்தியாவில் எழுதியவற்றை பார்ப்போம்:

அதிகாரிகளின் தொலைநோக்கின்மையும், அலட்சிய மனோபாவமும் போரின் பின் விளைவும்தான் இப்பஞ்சத் திற்கு காரணம். சாதாரணமான அறிவுடையவர்களாலேயே பஞ்சத்தின் அறிகுறியைக் கணிக்க முடிந்தது. உணவு நிலையைச் சரிவரக் கையாண்டிருந்தால், இத்தகைய பஞ்சத்தைத் தவிர்த்திருக்க முடியும். போரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டிலும், போரால் விளையும் இத்தகைய பொருளாதார சிக்கலை, போர் தொடங்கும் முன்னரே கணித்துத் தயார் நிலையில் இருந்திருக்கிறார்கள். இந்தியாவில் போர் தொடங்கி மூன்றரை ஆண்டுகள் கழித்தே உணவுத்துறை  துவக்கப்பட்டது.

மேலும், இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை 40 லட்சம் டன் என்று கணிக்கப்பட்ட சூழ்நிலையில், பிரிட்டிஷ் – இந்திய அரசு 10 லட்சம் டன் உணவுதானியத்தை ஏற்றுமதி செய்தது. விலை யேற்றம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக ஏறிக் கொண்டே சென்றது. மக்களின் வாங்கும் சக்தி முற்றிலும் பறிக்கப்பட்டு, உணவுக்காக கடுமையாக சுரண்டப்பட்டனர். பசியும், பட்டினியுமாக கிடந்த மக்கள் வாழ வழித்தெரியாமல் கடுமையான நோய்களுக்கு ஆளாகி, எலும்பு கூடுகளாய் – நடைபிணங்களாய் மாறி தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களை பலிகொண்டது வங்கப் பஞ்சம். ஒரு புறம் எந்த உணவுப் பொருட்களும் கிடைக்காததால் பஞ்சம் வந்ததோ, அந்த பொருட்களை விற்பனை செய்ததால் கிடைத்த கொள்ளை லாபத்தில் ஆளும் வர்க்கம் சுகம் கண்டு கொண்டிருந்தனர்.!

வங்கப் பஞ்சம் குறித்தும், அதனுடைய கொடுமைகள் குறித்தும், மக்களது துன்ப – துயரங்களை விளக்கியும் பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் நாவலைப் படித்தால் அதன் முழுமையான பரிணாமத்தை உணர முடியும்.

மொத்தத்தில் அரசுகளின் தவறான உணவுக் கொள்கையும், விவசாய கொள்கையும் மக்களை பசி – பட்டினிச் சாவுகளுக்கு கொண்டுச் செல்லும் என்பதைத்தான் வங்கப் பஞ்சம் உணர்த்து கிறது. இதன் பின்னணியில் தற்போது இந்திய அரசின் செயல் பாடுகளை ஒப்பு நோக்கும் போது, இந்திய அரசின் விவசாய கொள்கை எதை நோக்கிச் செல்கிறது என்பதை உணரலாம்.

தற்போது மேற்குவங்கத்தில் இந்த பஞ்சத்தின் அனுபவங்களை உணர்ந்த இடதுசாரி அரசு செய்த நிலச்சீர்திருத்தத்தின் விளைவாக 14 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் விநியோகிக்கப்பட்டு 26 லட்சம் நிலமற்ற விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதில் 56 சதவீதம் பேர் தலித் மற்றும் பழங்குடியின மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக மேற்கொள்ளப்பட்ட நில விநியோகத்தில் மேற்குவங்கத்தில் மட்டும் வழங்கப்பட்டது  20 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக மேற்கு வங்கத்தில் உணவு உற்பத்தி மிக கணிசமான அளவுக்கு பெருகி யிருக்கிறது. இதேபோல் கேரளத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கையும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது.

தமிழகத்தில் நில விநியோகம்

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தனது தேர்தல் அறிக்கையில் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை இரண்டு ஏக்கர் விதம் 26 லட்சம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. திமுக அரசின் நில விநியோக அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இந்த நில விநியோக நடவடிக்கையை வெற்றி பெறச் செய்வதில் மார்க்சிஸ்ட்டுகளுக்கு மிக முக்கியமான பங்குள்ளது. கிராமப்புறத்தில் உள்ள நிலமற்ற விவசாய தொழிலாளர்களை அணிதிரட்டி, அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்களை அடையாளம் காணுவதோடு, அதற்காக எழுச்சிமிக்க வலுவான விவசாய இயக்கத்தை நடத்துவதன் மூலம்தான் இந்த நில விநியோக நடவடிக்கையை வெற்றிகரமாக பூர்த்தி செய்ய முடியும்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அம்மையார் ஜெயலலிதா இந்த 55 லட்சம் ஏக்கர் நிலத்தை பெரும் கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு தாரைவார்க்க திட்டமிட்டிருந்தார். ஆனால், இப்போது கூறுகிறார் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் தமிழகத்தில் இல்லவே இல்லையென்று. ஜெயலலிதாக்களின் விசுவாசம் நிலமற்ற கூலி விவசாயிகள் மீதல்ல; கார்ப்பரேட் பண்ணைகளிடத்தில்தான்.

மேலும், தமிழகத்தில் நிலச்சீர்திருத்த சட்டத்தை அமலாக்குவதில் திமுக அரசு உரிய – தீவிர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதைத்தான் இடதுசாரிகளும், மக்களும் விரும்புகின்றனர். நிலச்சீர்திருத்த சட்ட அமலாக்கம் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 26வது மாநில மாநாடு முன்வைத்த அறிக்கையில் உள்ள பகுதியை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

தமிழகத்தில் நிலச்சீர்திருத்த சட்டம் என்பது முற்றிலும் முடமாக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. உச்சவரம்பு சட்டத்தின் மூலம் 20 லட்சம் ஏக்கர் நிலம் உபரியாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சட்டம் நிறைவேற்றப்பட்டு 40 ஆண்டுகளுக்கு பின்னரும் கையகப்படுத்தியுள்ள நிலம் 1.9 லட்சம் ஏக்கர் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

அதே போல்,

தலித் மக்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட சுமார் 3 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் அம்மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டு பலருடைய அனுபவத்தில் உள்ளது. இந்நிலங்களை மீட்டு தலித்துக்கள் வசம் ஒப்படைக்க சட்டரீதியான தடைகள் ஏதுமில்லை

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மேற்கண்ட கூற்று, தமிழக நிலச்சீர்திருத்தத்தில் செய்ய வேண்டிய இலக்கினை மிகச் சரியாக சுட்டிக்காட்டியுள்ளது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளபடி 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலத்தை விநியோகிப்பதோடு நிற்காமல், நில உச்சவரம்பு சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்து, நிலச்சீர்திருத்த நோக்கிலான நிலஉச்சரம்பை கொண்டு வரவேண்டும்.

காமராஜர் ஆட்சிகாலத்தில் 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்று இருந்ததை கலைஞர் ஆட்சிக்காலத்தில் 15 ஸ்டாண்டர்டு ஏக்கராக மாற்றப்பட்டது. இருப்பினும் இந்த உச்சவரம்பு சட்டத்தில் நிலவுடை மையாளர்களது நிலங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களின் பெயர்களிலும், பினாமிகள் பெயர்களிலும் மாற்றம் செய்யப்பட்டு அனுபவித்து வரப்படுகிறது. அதோடு விவசாய நிலங்கள் கரும்பு விளைச்சல் நிலம், பழத்தோட்டங்கள், பால்பண்ணைகள், டிரஸ்டுகள், தர்ம ஸ்தாபனங்கள் என்று பல்வேறு வடிவங்களில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி அனுபவித்து வருகின்றனர். இதனாலேயே இந்தச் சட்டம் உச்சரம்பா, மிச்ச வரம்பா என்ற கேலிக்கும் இட்டுச் சென்றது. எனவே கடந்தகால அனுபவத்தை கணக்கில்கொண்டு  நிலஉச்சவரம்பு சட்டத்தை முழுமையாக அமலாக்கி நிலமற்ற விவசாய தொழிலாளர்களது வாழ்வில் அடிப்படையான மாற்றத்தை கொண்டுவருவதன் மூலம் தமிழக வரலாற்றில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்திட முடியும். இத்தகைய அடிப்படையான விஷயங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரி – ஜனநாயக சக்திகளும் களத்தில் உறுதியாக துணை நிற்கும்.

நிலம் – உணவு – வேலைக்கான இயக்கம்

ஜூன் 8 – 10, 2006 நடந்து முடிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி ஆகஸ்ட் மாதத்தில் உணவு – நிலம் – வேலை என்ற மூன்று முழக்கத்தை முன்வைத்து நாடு தழுவிய இயக்கம் நடத்துவதற்கு அறைகூவல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிலச்சீர்திருத்த நடவடிக்கை என்பது கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பு, உணவு தேவை போன்றவற்றை பூர்த்தி செய்யும் இணைப்பு சங்கிலியாக செயல்படும் மிக முக்கியமான நடவடிக்கை! லத்தீன் அமெரிக்காவில் நடைபெறும் நிலச்சீர்திருத்த நடவடிக்கையும், இந்தியாவில் மேற்குவங்கம் – கேரளத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கையும் நாடு முழுவதும் உள்ள விவசாய தொழிலாளர் களுக்கும், கிராமப்புற விவசாயிகளுக்கும் நம்பிக்கையூட்டும் நிகழ்வாகும்.

நிலச்சீர்திருத்தம் உலக அரசியல் அரங்கின் முக்கிய அஜண்டாவாக மாறி வருவதைத்தான் மேற்கண்ட லத்தீன் அமெரிக்க அனுபவங்கள் உணர்த்துகின்றன. இந்திய அரசியலிலும் நிலச்சீர்திருத்த முழக்கத்தை ஒரு பௌதீக சக்தியாக மாற்றுவது மார்க்சிஸ்ட்டுகளின் வரலாற்று கடமையாகிறது.

தகவல் ஆதாரம்

http://www.landaction.org
http://en.wikipedia.org/wiki/Landless_Workers%27_Movement
http://www.pbs.org/frontlineworld/rough/2005/12/brazil_cutting.html#
http://news.bbc.co.uk/1/hi/world/americas/4550855.stm
http://www.zmag.org/weluser.htm
http://www.venezuelanalysis.com

Rural Development Institute, Land Reform in the 21st Century
http://www.rdiland.org

நிலப்பிரபுத்துவத்தை ஒழிக்க நாம் காட்டும் பாதை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியீடு – 1974.

வேலை உறுதி சட்டமும் – மார்க்சிஸ்ட்டுகளும்!

நாடு முழுவதும் 200 மாவட்டங்கள், தமிழகத்தில் 6 மாவட்டங்கள் என தற்போது தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டம் (2005) அமுலாக்கப்பட்டு வருகிறது. கிராம அளவில் பணிகள் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேலை உறுதி சட்டம் வழங்கும் உரிமைகள், சட்டத்தின் பல முக்கிய அம்சங்கள் ஆகியவற்றை விளக்கி மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரட் விரிவான கட்டுரை எழுதியுள்ளார். (பார்க்க தீக்கதிர் 7.3.2006) இக்கட்டுரை களப்பணியாற்ற ஒரு சுருக்கமான கையேடாகவும் உதவிடும்.

கீழ்வரும் கட்டுரை, களத்தில் பணியாற்றும் மார்க்சிஸ்டுகள் பார்வையில் இச்சட்டத்தின் பயன்பாடு குறித்து சில கருத்துக்களை முன்வைக்கிறது.

தமிழகத்தில் செயலாற்றிட …

தற்போது தமிழகத்தில் சட்டம் பற்றிய மக்களின் விழிப்புணர்வு இல்லாதது, அதிகார வர்க்கத்தின் இயல்பான மெத்தனம், போன்றவற்றால் இன்னும் சட்ட அமலாக்கம் சரியான முறையில் நடைபெறவில்லை. முறைகேடுகள், ஊழல், விவசாயிகளுக்கு சட்டத்தின் பலன் சென்றடையாமல் இருக்க  சூழ்ச்சிகள் என அனைத்துக் கேடுகளும் அரங்கேறிவருகின்றன. மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் ஜனநாயக இயக்கங்களும் இவற்றில் தீவிரமாக தலையிட வேண்டியது அவசியமாகிறது.

விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய இந்த ஆறு மாவட்டங்களும் கிராமப்புற பின்னணி கொண்டவை. கிராமப்புற மக்களின் எண்ணிக்கையும் அதிகம்.

2001 மக்கள் தொகை கணக்குப்படி கீழ்க்கண்டவாறு இந்த மாவட்டங்களில் கிராமப்புற ஜனத்தொகை உள்ளது.

மாவட்டம் வட்டம் கிராமப் பஞ்சாயத்து கிராம மக்கள் தொகை எஸ்.சி/எஸ்.டி
திருவண்ணாமலை 18 860 17,81,304 26.65 %
விழுப்புரம் 22 1104 25,17,447 31.12 %
சிவகங்கை 12 431 8,26,427 18.92 %
கடலூர் 13 681 15,27,936 33.67 %
திண்டுக்கல் 14 306 12,46,956 21.99 %
நாகபட்டிணம் 11 434 11,57,714 34.13%

* இத்துடன் சிறப்பு ஊராட்சிகளையும் சேர்க்க வேண்டும்

மாவட்டங்களில் உள்ள இந்த கிராமங்களில் அதிக அளவில் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வறுமை வாழ்க்கை நடத்தும் இந்தக் குடும்பங்களுக்கு இந்தச் சட்டம் ஓரளவு நிவாரணம் அளிக்கிறது.

ஆக, ஒரு விரிந்த செயல்படு தளம் மார்க்சிஸ்ட்டுகளுக்காகவும், ஜனநாயக சக்திகளுக்காகவும் காத்திருக்கிறது. இந்த அரிய வாய்ப்பை இந்தச்சட்டம் நல்கி உள்ளது.

உலகமயத்திற்கு ஒரு வேகத்தடை

வேலை உறுதி சட்டம் குறைந்த பட்ச கூலி ரூ.60/- வழங்க வேண்டுமென நிர்ணயித்துள்ளது. இதற்கு அதிகமாக, ஏற்கனவே கூலி நிர்ணயித் துள்ள மாநிலங்களில் அந்தக் கூலியே வழங்க வேண்டு மென்கிறது சட்டம். இதற்கு குறைவாக சட்டக்கூலி நிர்ணயித்துள்ள மாநிலங் களில் ரூ.60/- வழங்க வேண்டுமென்றும் சட்டம் கூறுகிறது.

தமிழகத்தில் ஏற்கெனவே அரசு, சட்டக் கூலியாக ரூ.80/- நிர்ணயித் துள்ளது. எனவே இங்கு ரூ.80/- வழங்கப்பட வேண்டும்.

இந்தத் தொகை 100 நாள் வேலை என்ற அடிப்படையில் பார்த்தால்  மிகவும் குறைவாகத் தோன்றலாம். ஆனால், இன்றைய நிலையில் குடும்பங்களை வாட்டி வதைக்கும் வறுமை, வேலையின்மை, பசி, பட்டினிக்கொடுமைகளை கண்ணுறும் போது ரூ.8000/- எனும் வருமானம் ஓரளவு வறுமையின் கடுமையைக் குறைத்திடும். நிச்சயம் இத்தொகை, கிராமக்குடும்பங்களில் வாங்கும் சக்தியை அதிகரிக்கச் செய்திடும்.

இது, கிராமக் குடும்பங்கள் தங்களது வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிட உதவிடும். பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் இவ்வாறு பொருட்கள் வாங்கும் நிலை ஏற்பட்டால், உள்நாட்டு உற்பத்தி பெருகும். உள்நாட்டு பெருளாதாரம் மீண்டும் புத்துயிர் பெறும்.

இங்குதான் இந்த சட்டத்தின் அரசியல் முக்கியத்துவம் உள்ளது.

இன்று நமது பொருளாதாரத்தில் உள்நாட்டு சந்தையை ஒடுக்கி, உலகச் சந்தையோடு இணைக்கும் முயற்சி நடக்கிறது. உலகமயம் எனும் பெயரால் உலக பன்னாட்டு நிதி மூலதனம் உடனடி லாபம் பெற உலகம் முழுவதும் அலைபாய்கிறது. ஆனால், விரிவான உள்நாட்டு சந்தை, வலுவான உள்நாட்டு உற்பத்தி எனும் வகையில் இந்தியா நடைபோடத் துவங்கினால், உலக மூலதனத்தின் வளர்ச்சி தடைபடும். அது மட்டுமல்லாது, சாதாரண ஏழை மனிதனுக்கு தேவையான பொருள்கள் உற்பத்தி வளருவதை உலக மூலதனம் விரும்பாது. நாட்டில் உள்ள 30 கோடி நடுத்தர வர்க்க மற்றும் மேட்டுக்குடி மக்களின் ஆடம்பரப் பொருட்களின் சந்தையில் அதிக லாபம் பெறுவதற்குத் தான் உலக மூலதனமும், பன்னாட்டுக்கம்பெனிகளும் துடிக்கின்றனர். அவர்களுக்கு சாதரண மனிதர்களின் தேவைக்கான சந்தை வளருவது பிடிக்காது.

எனவே, வேலை உறுதி சட்டம் என்பது ஒரு எதிர் நீச்சல் போர். உலகமயம் பயணம் செய்துவரும் சுரண்டல் பாதைக்கு இது ஒரு வலுவான வேகத்தடை.

மத்திய அரசோடு மோதல்

இதை உணர்ந்து தான் இந்திய ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் முதலாளித்துவ சக்திகள் இந்த சட்டத்தை பயனற்ற சட்டமாக மாற்றிட பல முயற்சிகளை மேற்கொண்டனர்.

கிராமத்தில் பயனாளிக் குடும்பங்களை தேர்வு செய்வதில் அனைத்துக் குடும்பங்களையும் தேர்வு செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வாதிட்டது. ஆனால், முதலாளித்துவ சக்திகள் இதனை விரும்பவில்லை. வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர் களுக்கு மட்டும் என்று நிர்ணயிக்கலாம் என்றார்கள்.

இது ஒரு ஏமாற்று வித்தை என்பதை பொது விநியோக முறையில் அவர்கள் செய்த கோளாறுகளே சான்று. இந்த அனுபவத்தை உணர்ந்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைமை வறுமைக்கோடு வைத்து பிரிப்பதை வலுவாக எதிர்த்துப்போராடியும், இறுதியில் அனைத்து கிராமக்குடும்பங்களுக்கும் 100 நாள் வேலை என்பதனை சட்டத்தில் கொண்டு வருவதில் மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது.

அதே போன்று கூலி நிர்ணயத்திலும் முதலாளித்துவ சக்திகள் சூழ்ச்சி செய்தனர். கூலி நிர்ணயம் வேண்டாம் என்பதிலிருந்து துவங்கி, ரூ.60/- க்கு குறைவான கூலி நிர்ணயம் செய்துள்ள மாநிலங்களில் அந்தக்கூலியே இருக்கலாம் என்பது வரை பல ஏமாற்றுக் கருத்துக்களைத் தெரிவித்தனர். இதிலும் மார்க்சிஸ்ட் கட்சி உறுதியுடன் இருந்தது. அதனால்தான் கூலி நிர்ணயத்திலும் உழைப்பாளி மக்களுக்குச் சாதகமான ஒரு ஷரத்தை சட்டத்தில் சேர்க்க முடிந்தது.

ஆக, இந்த சட்டம் உருவாவதற்கே ஒரு நீண்ட நெடிய வர்க்கப்போராட்டம் நடைபெற்றுள்ளது.

திட்டம் அல்ல; சட்டம்

முதலாளித்துவ அரசுகள் பல நேரங்களில் மக்களின் நலன் காக்கும் திட்டங்களை கொண்டு வருவதுண்டு. பகட்டாக விளம்பரம் செய்து வறுமை ஒழிப்பு, வேலையின்மை ஒழிப்பு என கோஷங்களை முழங்கி இந்தத் திட்டங்களைக் கொண்டு வருகின்றனர்.

அவர்கள் அவ்வபோது இவற்றைக் கொண்டு வருவதற்கான முக்கிய காரணம் மக்களின் நிர்ப்பந்தமே. ஜனநாயக இயக்கங்களின் போராட்டங்களால் மக்கள் தங்களது தேவைகளுக்காக ஆட்சி யாளர்களை நிர்பந்திப்பதும், மக்களின் வாக்குரிமைக்குப் பயந்து ஆட்சியாளர்கள் திட்டங்களைக் கொண்டு வருவது கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது.

ஆனால், பசப்பு வார்த்தைகளால் பேசப்படும் இந்த திட்டங்கள் எல்லாம்  நடைமுறையில் வெற்று வார்த்தை ஜாலங்களாக பரிணமித்து மக்களுக்கு குறைவான நிவாரணத்தையே அளிக்கின்றன.

இந்த வரலாற்றில் தற்போது வந்துள்ள வேலை உறுதி சட்டம் ஒரு திருப்பு முனையாக விளங்குகிறது. முதலில் இது திட்டம் அல்ல. ஒரு சட்டம் எனும் வகையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டள்ளது. அதனால், ஆட்சி யாளர்களும், அதிகார வர்க்கமும் இதனை அமுலாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதை அமுலாக்காவிடில், அவர்கள் சட்டவிரோதச் செயலை செய்வதாகவே கருதப்படும். இந்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாநில அரசும் அமுலாக்குவதற்கான திட்டங்கள், விதிகள் உருவாக்க வேண்டும்.

வேலை அடிப்படை உரிமையாகிறது

சட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம், இந்தச்சட்டம் வேலை கிடைப்பதை அடிப்படை உரிமையாக்குகிறது. தற்போது கிராமப்புற குடும்பங்களுக் குத்தான் என்றாலும், வேலை அடிப்படை உரிமை என்ற இலட்சியப் போராட்டத்தின் ஒரு பகுதி வெற்றியாகவே இது திகழ்கிறது.

இந்தச்சட்டம் அமுலாகிற இந்தக் காலகட்டத்தில் இது மக்களின் உரிமைக்கான ஜனநாயக உணர்வையும், விழிப்புணர்வையும் உயர்த்திடும். கோடானுகோடி விவசாயக் குடும்பங்கள் சமூகத்தில் தங்களது பங்கினை உரிமை என்ற உணர்வோடு பெறுவதற்கு தயாராவது ஒரு மாபெரும் சமூகப் புரட்சிக்கான விதை. மக்கள் ஜனநாயகப் புரட்சியை நோக்கமாகக் கொண்ட மார்க்சிஸ்ட் கட்சி இந்த நீண்டகால நோக்கோடு தான் இந்த சட்டம் ஏற்படும் சமூக நிகழ்வைப் பார்க்கிறது. இந்த அரசியல் பார்வையோடு தான் மார்க்சிஸ்ட்டுகள களத்தில் இந்த சட்டத்தையொட்டி செயல்படுவர்.

மக்களிடம் ஏற்படும் இந்த அரசியல் உணர்வு படிப்படியாக வளர்த்திட மார்க்சிஸ்ட்டுகள் முயற்சிப்பார்கள். 100 நாட்கள் வேலை உரிமை என்பதில் தற்போது துவங்கினாலும், ஆண்டு முழுவதும் நல்வாழ்க்கை அளிக்கும் நிரந்தரமான வேலை, அதையொட்டிய வர்க்க ரீதியான மாறுதல்கள் என படிப்படியாக மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான வர்க்கப் போராட்டத்தை மார்க்சிஸ்ட்டுகள் நடத்திட முனைவார்கள். ஆக, இந்தச்சட்டம் கிராமப்புறங்களில் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் கருவியாக மார்க்சிஸ்ட்டுகளால் பயன்படுத்த இயலும். ஆனால், இந்த நீண்டகால அரசியல் பார்வையோடு மார்க்சிஸ்ட்டுகள் இதைப் பயன்படுத்த வில்லை எனில், நாம் பெரும் தவறு புரிந்தவர்கள் ஆவோம். ஒரு நல்வாய்ப்பை இழந்த வரலாற்றுக் குற்றத்திற்கு ஆளாகிவிடுவோம்.

முதலாளித்துவ அரசின் சட்டம் பயன்படுமா?

இங்கு மற்றொரு கேள்வியும் எழுகிறது. ஒரு முதலாளித்துவ அரசு கொண்டு வரும் சட்டம் எப்படி மக்களுக்குப் பயன்படும்? எவ்வாறு வர்க்கப் போராட்த்தை தீவிரப்படுத்திட உதவிடும்?

முதலாளித்துவ அரசின் சட்டங்கள் உண்மையில் முதலாளித்துவ வர்க்க சக்திகளின் நலன்களை பாதுகாப்பதாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும், முதலாளித்துவ ஜனநாயகம் மக்களுக்கு வழங்கும் உரிமைகளைப் பயன்படுத்தி, மக்களின் ஜனநாயக உணர்வு மட்டம் வளர்ச்சி பெறுவதையொட்டி, பல சந்தர்ப்பங்களில் முதலாளித்துவ அரசும் மக்கள் நலனுக்கான சட்டங்களைக் கொண்டு வருகின்றது.

இப்படிக் கொண்டு வந்த பிறகு இந்தச்சட்டங்கள் வெறும் காகிதத்தை அலங்கரிக்கும் அலங்கார வார்த்தைகளாக மட்டும்  இருக்கும்படிசெய்துவிடுவார்கள், முதலாளித்துவ ஆட்சியாளர்கள். எனினும் சட்டம் வழங்கும் வாய்ப்பை பயன்படுத்தி மக்களின் உரிமைக்குரலை ஒலிக்கவும், மக்கள் போராட்டங்களுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்வதும் மார்க்சிஸ்ட்டுகள் எல்லா நாடுகளிலும் கடைபிடிக்கிற நடைமுறை தந்திரம்.

முதலாளித்துவ, ஏகாதிபத்திய அரசு பொய்க் குற்றச்சாட்டுகளை ஜோடித்து, சதி வழக்குகள் தொடுக்கிற போது, கம்யூனிஸ்ட்டுகள் முதலாளித்துவ சட்டங்களை சாதகமாகப் பயன்படுத்தி, முதலா ளித்துவ நீதி மன்றத்தில் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்த வரலாறுகளை நாடு கண்டுள்ளது. உலகில் பல இடங்களில் இத்தகைய நடைமுறைத் தந்திரத்தை கம்யூனிஸ்ட்டுகள் கடைபிடித் துள்ளனர்.

மார்க்சிஸ்ட் தலைமையிலான மாநில அரசு  – அனுபவம்

அதே போன்று, இன்று மார்க்சிஸ்ட்டுகள் தலைமை தாங்கி நடத்தி வரும் மாநில அரசுகளும், இதற்கோர் சிறந்த எடுத்தக்காட்டாக அமைகிறது.

முதலாளித்துவ அரசியல் சட்டத்தின் வரம்புக்குட்பட்டுதான் மாநில அரசுகள் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் மேற்கு வங்கம், திரிபுராவில் நடைபெறுகிறது. கேரளாவிலும் முன்பு நடைபெற்றது.

முதலாளித்துவ சமூக சட்ட வரையறை இருந்த போதிலும், மாநில அரசுக்கென்று உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி மக்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம் வழங்கும் பணியை மார்க்சிஸ்ட்டுகளால் சிறந்த முறையில் நிறைவேற்ற முடிந்துள்ளது. அதே நேரத்தில் மேலும், மேலும் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் கருவிகளாக மார்க்சிஸ்ட் கட்சி இந்த மாநில அரசுகளை பயன்படுத்துகிறது.

இந்த அரசுகளை ஒடுக்கவும், கவிழ்க்கவும் தொடர்ந்து ஆட்சியாளர்கள் முயற்சி செய்து கொண்டிருந்தாலும், அடிப்படை வர்க்கங்களான விவசாயி வர்க்கமும், தொழிலாளர் உழைப்பாளி வர்க்கங்களும் இந்த அரசுகளை பாதுகாக்கும் இரும்புக் கோட்டை களாகத் திகழ்கின்றனர். இந்த அடிப்படையில் வேலை உறுதி சட்டத்தையும் நாம் அணுகிட வேண்டும்.

மார்க்சிஸ்ட் கட்சி நிர்பந்தத்தினால் முதலாளித்துவ அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம், மக்களுக்கு நிவாரணம் அளிக்கவும் நாம் பயன்படுத்தலாம். அதே நேரத்தில் நமது செல்வாக்கையும், தொடர்புகளையும் விரிவுபடுத்தி, கிராமப்புறங்களில் நமது அடிப்படை வர்க்கங்களை அரசியல் உணர்வூட்டி வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தவும் பயன்படுத்திடவும் வேண்டும்.

தற்போது அமுலாகி வரும் 200 மாவட்டங்களோடு சேர்த்து, அனைத்து மாவட்டங்களிலும் இந்த சட்டம் அமுலாகிடவும், மேலும் நகர்ப்புறங்களுக்கு விரிவுபடுத்திட, போராட்டத்தை நடத்திடவும்  இந்த அனுபவம் உதவிடும். குடும்பம் ஒரு அலகாக…

தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டம்  மூன்று முக்கிய சக்திகளைப் பிரதானப்படுத்துகிறது. ஒன்று, வட்டார நிர்வாகம், இரண்டாவதாக, கிராமப்பஞ்சாயத்து, மூன்றாவதாக, கிராமத்தில் வசிக்கும் குடும்பம்.

மார்க்சிஸ்ட்டுகள் இந்த சட்டத்தில் உறுதியாக தலையிட வேண்டுமெனில் கிராமத்தில் உள்ள விவசாயத் தொழிலாளர் குடும்பங்களோடு இடையறாத தொடர்புகளை ஏற்படுத்திட வேண்டும். குடும்பம் என்பது அடிப்படை அலகாக சட்டமே கருதுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் பயிற்சியற்ற உடலுழைப்பை செலுத்த வாய்ப்புள்ள வேலைகளைச் செய்வதற்கான மனுக்கள் தயாரிப்பது, வேலை அட்டை பெற செய்வது, முறையாக 100 நாட்கள் வேலை பெறச் செய்வது, எல்லாவற்றுக்கும் மேலாக ரூ.80/- என்ற கூலியை முறையாக அவர்களைப் பெறவைப்பது என்று பல வகையில் குடும்பங்களோடு உரையாட பெரும் வாய்ப்பை இந்த சட்டம் ஏற்படுத்துகிறது.

குடும்பம் என்ற வகையிலான தொடர்பு பெரும் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்த வல்லது. வர்க்கப் போராட்ட உணர்வு, அரசியல் உரிமைக்கான உணர்வை ஏற்படுத்தி, ஒரு புரட்சிகர பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்த இது வித்திடுகிறது.

குடும்பம் என்கிற தளத்தில் மார்க்சிஸ்ட்டுகள் சரியான முறையில் செயலாற்றிடும் போது முற்போக்கான பண்பாட்டு மாற்றம் நிகழ்ந்திட அது வழிவகுக்கும்.
அதேபோன்று கிராமப்பஞ்சாயத்திற்கு பெரும் பொறுப்பினை இந்த சட்டம் வழங்குகிறது. இந்த வாய்ப்புகளை வேறு யாரையும் விட மார்க்சிஸ்ட்டுகள் சிறந்த முறையில் பயன்படுத்திட இயலும்.

மக்களுக்கு வல்லமை ஏற்படுத்திட…

இதுகாறும் வந்த திட்டங்கள் அதிக முறைகேடுகளுக்கும், மக்களின் பங்கேற்பைத் தடுப்பதற்கும் ஏற்றவாறு இருந்துள்ளன. ஒரு புறம் அதிகார வர்க்கமும், ஆளுங்கட்சி அரசியல்வாதிகள், காண்டி ராக்டர்கள் அரசுப்பணத்தை கொள்ளையடிக்க வகை செய்வதாக அமைந்துள்ளன. இதில் மக்கள் தட்டிக்கேட்பதற்கு வாய்ப்பு அதிகம் இல்லை. என்ன நடக்கிறது என்பதையும் மக்கள் அறிந்து கொள்ள வாய்ப்பில்லை.

பல திட்டங்கள் – வறுமை ஒழிப்பு, வறட்சி, வெள்ளத் தடுப்பு, வேலை வாய்ப்பு திட்டங்கள் அனைத்தும் மக்களின் வாழ்க்கை இன்ல்களை மூலதனமாகக் கொண்டு ஆளுவோர் வசதி வாழ்க்கை பெற வழி வகுத்துள்ளன.

ஓரு கட்டத்தில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி நூறு காசுகள் திட்டத்திற்கு செலவழித்ல், கடை கோடி மட்டத்தில் இருக்கும் ஏழை மக்களுக்கு 1 பைசா சென்றடைகிறது என சொல்ல வேண்டியதாயிற்று. இந்த நிலைக்கு அவரது கட்சிக்காரர்களே பெருமளவு காரணமாக இருந்த போதிலும், அவரால் பட்டவர்த்தனமான உண்மையை ஒத்துக்கொள்ளாமல் இருக்க இயலவில்லை.

வேலை வாய்ப்பு உறுதி சட்டத்தின் சிறப்பு இதில்தான் அடங்கி யுள்ளது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. முதலாளித்துவ கட்சிகளின் ஆட்சியாளர்கள் எந்த சட்டத்திலும் முறைகேடுகள் செய்திடும் வல்லமை கொண்டவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அனால், இந்தச் சட்டம் கிராமத்தை மையமாகக் கொண்டு சமூகச் சொத்துக்களை ஏற்படுத்தும்  வேலைகளை மேற்கொள்ளுகிறது. அத்துடன் கிராமப் பஞ்சா யத்துக்கு அதிக அதிகாரம் வழங்குகிறது. இதனால் என்ன வேலை நடக்கிறது என்பதும், அதில் உள்ளடங்கிய விஷயங்களை தெரிந்து கொள்ளவும் வாய்ப்புக்கள் ஏராளமாக உள்ளன.  இத்துடன் தகவல் அறியும் உரிமை சட்டமும் இந்த வாய்ப்பை நல்குகிறது. இந்த வாய்ப்புகள், உரிமைகள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட கிராமத்து மக்களுக்கு புரியவைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினாலே, அவர்களே ஊழல் முறைகேடுகளைத் தடுக்கும் சக்தியைப் பெறுவார்கள், இது மேலும் அவர்களது ஜனநாயக உணர்வை வலுப்படுத்தி மார்க்சிய இயக்கம் வளர வழிவகுக்கும்.

ஊழல் பற்றி தெளிவான புரிதல் மார்க்சிஸ்ட்களுகுக உண்டு. ஊழலுக்கு ஊற்றுக்கண் மூலதனம் ஆட்சி புரியும் இந்த சமூக அமைப்பே. முதலாளித்துவ மூலதனம் வளருவதற்கு  உழைப்பாளரின் உழைப்புச் சுரண்டல் பிரதான கருவி. அத்துடன் முறைகேடுகள், ஊழல்கள், படுகொலைகள், அராஜகங்கள் என பல உபகருவிகளும் மூலதன வளர்ச்சிக்கு முதலாளித்துவ அமைப்பில் துணை புரிகின்றன.

ஆனால், ஒவ்வொரு ஊழல் நடவடிக்கை நடைபெறுகிற போதும், இந்த சமூக அமைப்பு மாறினால் சரியாகிவிடும் என்று அமைதி காப்பவர்கள் அல்ல மார்க்சிஸ்ட்டுகள்.  உடன் தலையிடுவதும், ஊழல் புரிந்தோரை அம்பலப்படுத்தி தண்டனைக்குள்ளாக்குவதும் மார்க்சிஸ்ட்டுகள் செய்திடும் முக்கியப் பணி.

அதே நேரத்தில், அவ்வப்போது பரபரப்புச் செய்திகளையும், அறிக்கைகளையும் வெளியிடும் புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் போன்று மார்க்சிஸ்ட்டுகள் செயல்படக்கூடாது. பத்திரிக்கை உலகத்தில் ஊழலைக் கொண்டு வரும் அதே நேரத்தில், மக்களைத் திரட்டிடும் பணியில் தான் தீவிர கவனத்தை மார்க்சிஸ்ட்டுகள் செலுத்திட வேண்டியுள்ளது.

இதற்கு பதிலாக, எங்கே ஓடி ஊழலை கண்டறிந்து, மாவட்ட, மாநில தலைநகரங்களில் இயக்கம் நடத்துவதோ, மீடியா பரபரப்புக்களுக்கு தீனி போடுவதோ ஒரு நாள் பணியாக முடிந்துவிடுமே தவிர, நீண்டகால மக்கள் இயக்க வளர்ச்சிக்கு உதவிடாது.

எனவே, கிராம அளவில் மக்களிடம் உரையாடி அவர்களை வல்லமை (Empowerment) படைத்தவர்களாக மாற்றும் வேலையே மார்க்சிஸ்ட்டுகளின் பணி. அதுவே, இந்தச்சட்டம் முறையாக அமுலாகவும், வெற்றி பெறவும் வர்க்கப் போராட்டம் வளரவும் உதவிடும்.