இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை (1926)

(1926 இல் கவுகாத்தியில் நடைபெற இருந்த அகில இந்திய தேசிய காங்கிரஸின் வருடாந்திர கூட்டதில் விவாதிக்குமாறு கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சமர்ப்பித்த அறிக்கையின் சுருக்கமான வடிவத்தை தமிழில் தந்துள்ளோம். இதில் இடம்பெற்றுள்ள பல கோரிக்கைகளை 1930 இல் கட்சி ஏற்றுக் கொண்ட செயல் திட்டத்தில் இணைத்துக் கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கது.)

வகுப்புவாத மோதல்கள்

கடந்த சில ஆண்டுகளாக நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கும் வகுப்புவாத மோதல்களால் பலருக்கும் அவநம்பிக்கை ஏற்பட்டிருக்கும். நிச்சயமாக அது அவநம்பிக்கை தரக்கூடிய ஒரு அம்சம்தான். என்றாலும் கூட, ஒரு மக்கள் கட்சி அதற்குத் தீர்வு காணும். உயர் வர்க்கங்கள் உரிமைகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் போராடும் அதே நேரத்தில், இந்து-முஸ்லீம் ஆகிய இந்த இரு பிரிவுகளையும் சேர்ந்த பெருந்திரளான மக்களிடையே மிக முக்கியமானதொரு விஷயம் பொதுவானதாக இருக்கிறது. அதுவே சுரண்டல். இந்து-முஸ்லீம் தொழிலாளர்கள் ஒரே தொழிற்சாலை கூரையின் கீழ் வேர்வை சிந்தப் பாடுபடுகின்றனர். இந்து –முஸ்லீம் விவசாயிகள் கொளுத்தும் வெய்யிலில் நிலத்தில் பாடுபடுகின்றனர். அதே நேரத்தில் இந்த இரு பிரிவினருமே சமமான அளவில் நிலப்பிரபுக்களாலும், கந்துவட்டிக்காரர்களாலும் ஏகாதிபத்தியத்தின் ஏஜெண்டுகளாலும் கொள்ளையடிக்கப்படுகின்றனர். அவரது முதலாளி அதே மதத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக ஒரு முஸ்லீம் தொழிலாளிக்கு நல்ல ஊதியம் வழங்குவதில்லை. அதைப் போலவே,  ஓர் இந்து நிலப்பிரபு முஸ்லீம் குத்தகை விவசாயியை விட குறைவான குத்தகையை இந்து விவசாயியிடம் இருந்து பெறுவதில்லை. (குட்டி அறிவுஜீவிகள், சிறு வியாபாரிகள், கைவினைஞர்கள் போன்ற) சுரண்டலுக்கு ஆளாகும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் இதே விதி பொருந்தும்.

ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 98 சதவீதம்பேர் சுரண்டல் என்ற ஒற்றைச் சரடால் பிணைக்கப்பட்டிருக்கும் நிலையில் இத்தகைய வகுப்புவாத மோதல்களில் ஈடுபடுவதற்கு எந்தவிதக் காரணமும் இல்லை. பொருளாதார நலன்களைப் பற்றிய உணர்வு ஏற்படுவதற்கு அவர்களுக்கு உதவுங்கள்;  பொதுவான எதிரியை எதிர்த்துப் போராட துணிவுமிக்க ஒரு தலைமையை அவர்களுக்கு வழங்குங்கள். அப்போது இத்தகைய வகுப்புவாத மோதல்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கும் சதிகாரக் கொள்கையின் அடித்தளம் உடைத்தெறியப்படும். இது ஒரே நாளில் நடந்து விடாது என்பது உண்மையே. எனினும், தேசியவாத இயக்கத்திற்குள் புகுந்து அதன் உயிரோட்டமான உறுப்புகளை அரித்துக் கொண்டிருக்கும் வகுப்புவாதம் என்ற புற்றுநோய்க்கு இதைத் தவிர வேறெந்த மருந்தும் இல்லை.

தேசியவாத இயக்கத்தின் சரிவுதான் வகுப்புவாத மோதலுக்கான உந்துதலை அளித்திருக்கிறது. தீவிரமான வெகுஜன நடவடிக்கை என்ற திட்டத்துடன் தேசியவாத இயக்கத்தை சீரமைத்தோம் எனில், அதுவே இத்தகைய உந்துதலை அப்புறப்படுத்தி விடும். அரசியல் உணர்வை உருவாக்குவதற்குப் பதிலாக ஒத்துழையாமை இயக்கமும், கிலாஃபத் கிளர்ச்சியும் மதவாத வெறித்தனத்தை விரைவுபடுத்தியுள்ளன. தேசியவாத இயக்கத்தை உறுதியானதொரு மதசார்பற்ற அடித்தளத்தில் நிலைநிறுத்துவதன் மூலம் இந்த மாபெரும் தவறினை திருத்திக் கொள்ள வேண்டும். உடனடி பொருளாதார கோரிக்கைகளுக்கான முழக்கங்களுடன், தேசியவாதம் என்ற பதாகையின்கீழ், பெருந்திரளான மக்கள் அணிதிரட்டப்பட வேண்டும். நிலக் குத்தகை, நில வாடகை, கந்துவட்டிக்காரர்களின் கொடும் வட்டி, விலைவாசி, ஊதியம், வேலைநிலைமைகள், தொடக்கக் கல்வி ஆகியவையே கிளர்ச்சியின் முக்கிய அம்சங்களாக இருக்க வேண்டும். மக்களின் வாழ்க்கையை மிகப் பெருமளவிற்குப் பாதிக்கின்ற இந்த ஒவ்வொரு அம்சத்தின் மீதும், அதன் வழியாகப் பெறவிருக்கும் நலனுக்கான அடையாளத்தை மிகத் தெளிவாகவும் எளிதாகவும் நம்மால் உணர்த்தவும் முடியும். எனவே, இவ்வகையிலான கிளர்ச்சியானது தேசிய இயக்கத்திற்கான உறுதியான அடித்தளத்தை வளர்த்தெடுக்கும் அதே நேரத்தில் வகுப்புவாத நெருக்கடிக்கு எதிரான பாதுகாப்பான உறுதிமொழியையும் வழங்குவதாக இருக்கும்.

எனினும் ஜனநாயகரீதியான குறிக்கோள்கள் தேசிய சிறுபான்மையினரின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதில்லை. இந்தியாவிலுள்ள இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நிலவும் பரஸ்பர அவநம்பிக்கை ஒரு வரலாற்றுரீதியான பின்னணியைக் கொண்டதாகும். எனவே, இந்த வகுப்புவாதப் பிரச்சனையை தேசிய சிறுபான்மையினர் என்றதொரு பிரச்சனையாகத்தான் அணுக வேண்டும். தேசிய சிறுபான்மையினரின் நலன்கள் தேசியவாத மேடையின் முக்கியமான தளங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். இந்தப் பாதுகாப்பினை தேசியவாத இயக்கம் தரத் தவறுமானால், அதைத் தருவதற்கான வாய்ப்பும், அதன் மூலம் நாடு முழுவதிலும் நேர்க்கோடாக ஒரு பிளவை ஏற்படுத்தும் வசதியும் ஏகாதிபத்தியத்திற்குக் கிடைக்கும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட பிரபலமான இந்து தேசியத் தலைவர்களின் நடத்தையும் அறிவிப்புகளும் முஸ்லீம்களிடையே சந்தேகம் எழுவதற்குப் போதுமான காரணங்களைத் தருகின்றன. மறுபுறத்தில், முஸ்லீம் தலைவர்களில் ஒரு பிரிவினரின் தாய்நாட்டை மீறிய தேசப் பற்று என்பது இந்து பிற்போக்குவாதிகளின் ஊறுவிளைவிக்கும் பிரச்சாரத்திற்குத் தூண்டுகோலாக அமைந்து விடுகிறது. இந்த இரண்டு பிரிவுகளிலுமே அதீதமான போக்கு என்பது தவிர்க்கப்பட வேண்டும். வகுப்புவாதத்திற்கு எதிரான நிச்சயமான காப்புறுதி என்பது பெருந்திரளான மக்களை அவர்களது பொருளாதார நலன்களின் அடிப்படையில் அணிதிரட்டுவதே ஆகும். இந்த வர்க்க ரீதியான எல்லைகள் வகுப்புவாத அடிப்படையில் பெரும்பாலான நேரங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள மேலெழுந்தவாரியான பிரிவினைகளை மிக ஆழமாகவே தாண்டிச் செல்வதாக அமைகின்றன.

தேசிய நலனும் வர்க்க நலனும்

தொடர்ந்து வெடித்து வரும் வகுப்புவாத மோதல்கள் தேசிய இயக்கத்திற்கு பெருமளவிற்கு ஊறு விளைவிப்பதாக அமைகின்றன. எனினும் இந்த இயக்கத்தின் இப்போதைய சீரழிவு தேசியவாத அணிகளுக்கு உள்ளே வர்க்க நலன்களின் அடிப்படையில் உருவாகும் மோதல்களின் காரணமாகவே உருவானதாகும். வேறெந்த நாட்டிலும் உள்ள முதலாளித்துவ சமூகத்தைப் போலவே இந்திய சமூகமும் வர்க்கங்களாகப் பிளவுபட்டுள்ளது.

இந்திய சமூகத்தின் பல்வேறு வர்க்கங்களுடனான பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் உறவு என்பது ஒரே மாதிரியானதாக இருப்பதில்லை. இந்த நாடு அந்நிய சக்தி ஒன்றினால் ஒடுக்கப்படுகிறது; சுரண்டப்படுகிறது. எனினும் இந்த ஒடுக்குமுறையின் அழுத்தமானது இந்திய மக்களின் அனைத்துப் பிரிவினரின் மீதும் சமமாக விழுவதில்லை. அதன் குறிக்கோள் என்பது அனைத்து மக்களையும் சுரண்ட வேண்டும் என்பதுதான். ஆனால் அந்தச் சுரண்டல் தங்கள் உழைக்கும் சக்தியைக் கொண்டு செல்வத்தை உருவாக்கும் வர்க்கங்களின் மீது மட்டுமே விழுகிறது. நாட்டின் 98 சதவீதம் பேராக உள்ள தொழிலாளர்களும் விவசாயிகளுமே உள்ளனர். இந்திய சமூகத்தின் உயர் வர்க்கத்தினருக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான சச்சரவு என்பது அடிக்கும் கொள்ளையை எப்படிப் பிரித்துக் கொள்வது என்பதில்தான்.

உள்ளூரில் உள்ள நிலப்பிரபுக்களும் முதலாளிகளும் உற்பத்தி செய்யும் உழைக்கும் மக்களை நம்பியே உயிர் வாழ்கின்றனர். எனினும், ஏகாதிபத்தியத்தின் ஏகபோகக் கொள்கையானது தங்குதடையற்ற பொருளாதார வளர்ச்சி அடைவதற்கு அவர்களை அனுமதிப்பதில்லை. அவ்வாறு இருந்தால் தொழிலாளி வர்க்கத்தைச் சுரண்டும் தங்கள் திறனை அவர்களால் மேலும் அதிகரித்துக் கொள்ள முடியும். இந்திய தொழிலாளிகளும் விவசாயிகளும் உற்பத்தி செய்கின்ற மதிப்பில் பெரும்பகுதி ஏகாதிபத்தியத்தின் சட்டைப் பைகளை மேலும் ஊதிப் பெரிதாக்குகிறது. இந்திய முதலாளிகள் பெயரளவிற்கு இடைத்தரகருக்கான பங்கைப் பெறுவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். காலப்போக்கில் கொள்ளையில் கிடைக்கும் இந்தச் சிறிய பங்கைக் கண்டு அவர்கள் அதிருப்தி அடைகின்றனர். இறுதியில், இந்திய மக்களின் உழைப்புச் சக்தியின் ஆதாரம் முழுவதன் மீதான முன்னுரிமையை, அதிகரித்துக் கொண்டே போகும் பங்கைத்தான் அவர்கள் கோருகின்றனர்.

எனினும், ஏகாதிபத்தியத்தின் ஏகபோகத்திற்கு சவால் விடாமல் நாட்டை தங்களது ஆளுகைக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற தங்கள் ஆசைகளை இந்திய முதலாளிகளால் நிறைவேற்றிக் கொள்ள முடியாது. மேலும் இதை அவர்களால் தானாகவே செய்துவிடவும் முடியாது. அனைத்து மக்களின் புரட்சிகரமான நடவடிக்கை மூலமாக அல்லாமல் அந்நிய மேலாதிக்கத்திலிருந்து இந்தியா தன்னை விடுவித்துக் கொண்டுவிட முடியாது. எனினும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வெகுமக்களின் எழுச்சி என்பது தேசிய முதலாளிகளின் மனக்குறைகளால் உருவானது. அதற்கேயுரிய காரணங்கள் அந்த எழுச்சிக்கு உண்டு. பெருந்திரளான மக்கள் சுரண்டலுக்கு எதிராகக் கிளர்ந்தெழுகின்றனர். அதன் காரணமாகவே, நாட்டின் ஒரே எஜமானனாக, ஆட்சியாளராக இருக்க வேண்டும் என்று விரும்புகிற தேசிய முதலாளிகள் நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற ஏகாதிபத்தியத்திற்கு மிக மோசமான அச்சுறுத்தலை தரக்கூடிய வலிமை வாய்ந்த ஒரே ஆயுதத்தைப் பயன்படுத்தத் துணிவதில்லை. இவ்வகையில் தேசிய நலன்கள் – அதாவது 98 சதவீதம் பேரின் நலன்கள் – வர்க்க நலன்களுக்காக பலி கொடுக்கப்படுகின்றன. நாட்டின் மீதான முழுமையான ஆளுமையை பெறுவதற்கான அதன் முயற்சி, மிகுந்த சேதாரத்தை ஏற்படுத்தும் அபாயத்தையும் உள்ளடக்கியுள்ளது என்ற நிலையில் தேசிய முதலாளிகள் கூட்டாகச் சேர்ந்து இந்திய மக்களை சுரண்டுவதற்காக ஏகாதிபத்தியத்துடன் கூட்டணி ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

குறிப்பிட்டதொரு உள்நாட்டு அம்சத்தின் உதவியின்றி எந்தவொரு அந்நிய சக்தியுமே ஒரு நாட்டை நீண்ட நாட்களுக்கு ஆட்சி செய்ய முடியாது. நிலையானதொரு அரசுக்கு ஒரு சமூக அடிப்படை இருக்க வேண்டும். (முதல்) உலகப் போர் வரையிலான காலத்தில் இரண்டு வகையான சமூக அம்சங்கள் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசுக்கு உதவி செய்து வந்தன. அவையே நிலப்பிரபுத்துவ வர்க்கமும் விவசாயிகளும் ஆகும். இந்த இரண்டு பிரிவினருமே மக்கள் தொகையில் பெரும்பான்மையினராக உள்ளனர். இவ்வகையில் ஏகாதிபத்தியத்திற்கு உறுதியானதொரு அடித்தளம் இருந்தது.

எனினும் இந்த இரு சமூக சக்திகளுமே ஒரே மாதிரியான வகையில் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவு தரவில்லை. நிலப்பிரபுத்துவ வர்க்கம் சாதகமான, உணர்வுபூர்வமான ஆதரவை வழங்கி வந்த அதே நேரத்தில், விவசாயிகள் அவர்களது செயலூக்கமற்ற விசுவாசத்தின் காரணமாக உணர்வுபூர்வமற்ற ஆதரவை வழங்கி வந்தனர். உலகப் போருக்குப் பின்பு நிலைமை மாறிவிட்டது. விவசாயிகளின் செயலூக்கமற்ற விசுவாசம் சீர்குலைந்தது. அதற்குப் பதிலாக அவர்களின் கோபக் கனல் மிக்க கொந்தளிப்பு அவ்வப்போது எழத் தொடங்கியது. இதன் விளைவாக ஏகாதிபத்தியத்தின் அடித்தளம் இப்போது மிக மோசமான வகையில் கலகலக்கத் தொடங்கியது. அதனை சமப்படுத்துவதற்கு புதியதொரு கூட்டாளியை அது கண்டெடுக்க வேண்டியதாயிற்று.

அந்தப் புதிய கூட்டாளிதான் (வங்கியாளர்கள், வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள், உயரதிகாரிகள் மற்றும் இந்த வர்க்கத்தினரோடு நெருங்கிய தொடர்புடைய தொழில்முறை நிபுணர்கள் ஆகியோரை உள்ளடக்கிய) தேசிய முதலாளி வர்க்கம் ஆகும். உலகப் போருக்குப் பிந்தைய வருடங்களில் தேசிய இயக்கம் ஒரு புரட்சியை நோக்கி மிக வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. இதன் மோசமான விளைவுகளைக் கண்டு தேசிய முதலாளிகள் அஞ்சினர். பாதுகாப்பானதொரு வழியில் பயணம் செய்வதென்று அவர்கள் தீர்மானித்தனர். இவ்வகையில் இந்திய மக்களை சுரண்டுவதில் ஏகாதிபத்தியத்தின் இளைய கூட்டாளி என்ற அந்தஸ்தை ஏற்றுக் கொள்ள அவர்கள் முன்வந்தனர்.

முதலாளி வர்க்கத்தின் இந்தக் கட்சி மாறல் தேசிய இயக்கத்திலும் அதன் அடையாளத்தை விட்டுச் சென்றது. சமரசமும் சரணாகதியுமே கொள்கையாக மாறின. வர்க்க நலன்கள் என்ற பலிபீடத்தில் மக்களை பலி கொடுப்பது என்பது 1922ஆம் ஆண்டிலிருந்தே படிப்படியாக நடைபெற்று வருகிறது. கூடவிருக்கின்ற புதிய சட்டமன்றமும் கவுன்சிலும் இதன் இறுதிக் கட்டமாக அமைகிறது. அது எத்தகைய வடிவத்தை மேற்கொள்ள இருக்கிறது என்பது முக்கியமில்லை. ஆனால் அடிப்படையில் முதலாளித்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உண்மையான எதிர்ப்புகள் அனைத்தையும் கைவிட்டுவிட்டு, ‘நாகரீகமாகவோ’ அல்லது ‘பதில் நடவடிக்கையாகவோ’ பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைக்கும்.

என்ன செய்ய வேண்டும்?

எவ்வாறாயினும், ஏகாதிபத்தியத்திற்கும் உள்நாட்டு முதலாளித்துவத்திற்கும் இடையிலான பகைமையின் சமரசம் ஒரு தேசியப் புரட்சிக்கான அடிப்படைக் காரணத்தை அகற்றிவிடாது. இந்திய மக்களுக்கு விடுதலையின் அவசியம் தேசியவாத முதலாளித்துவ பிரிவின் நலன்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. ஏகாதிபத்தியத்துக்கும் உள்நாட்டு முதலாளித்துவத்துக்கும் இடையேயான ஒப்பந்தம் இந்திய மக்களை அரசியல் ஆதிக்கம் மற்றும் பொருளாதாரச் சுரண்டலில் இருந்து விடுவிப்பதில்லை. கிட்டத்தட்ட 98 சதவீத மக்கள் இன்னமும் அரசியல் உரிமைகள் இல்லாமல்தான் உள்ளனர். ஏகாதிபத்தியம் தனது பங்கைக் குறைத்துக் கொள்வதன்மூலம் உள்நாட்டு முதலாளித்துவத்திற்குப் பொருளாதாரச் சலுகைகளை வழங்குவதில்லை. மாறாக, உழைக்கும் மக்கள் ஏகாதிபத்தியத்திற்காக செய்யும் உற்பத்திக்கும் மேலாக உள்நாட்டு முதலாளித்துவத்திற்கான மதிப்பை உற்பத்தி செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டு, அதன்மூலம் உழைக்கும் மக்களின் சுரண்டலை மேலும் அதிகரிக்கும். இந்த நிலையில், தேசிய விடுதலைக்கான போராட்டத்தைத் தொடர வேண்டியது அவசியமாகும். தேசியவாத இயக்கம் என்பது பெரும்பான்மையான மக்களின் நலன்களைப் பிரதிபலிக்கும் வேலைத்திட்டத்துடன் கூடிய வெகுஜன இயக்கமாக இருக்கவேண்டும். இயக்கத்தின் வேலைத்திட்டம் சுயராஜ்யத் திட்டத்தில் இருந்ததைப் போன்ற குழப்பம் மற்றும் தெளிவின்மை ஆகியவற்றிலிருந்து விடுபட்டதாகவும் இருக்க வேண்டும்.

குறிப்பாக, விவசாயப் பிரச்சினையில் தேசியவாத இயக்கத்தின் நிலைப்பாடு தெளிவாக இருக்கவேண்டும். மக்கள்தொகையில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் விவசாயிகள். இந்திய சமூகத்தின் தற்போதைய நிலையில் இது மிக முக்கியமான பொருளாதார காரணியாகும். தேசிய விடுதலைக்கான இயக்கத்தில் அது உறுதியான பங்கை வகிக்கும். விவசாயிகளுக்கான போராட்டம் என்பது தேசியவாத இயக்கத்தின் முக்கிய பணிகளில் ஒன்றாக இருக்க வேண்டும். விவசாயிகளின் நம்பிக்கையை மீண்டும் பெற ஏகாதிபத்தியம் சாமர்த்தியமாக முயற்சிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில், பல மாகாணங்களில் நில உரிமையாளர் வர்க்கத்தின்மீது குத்தகை சீர்திருத்தச் சட்டங்களை அது கட்டாயப்படுத்தியுள்ளது. இது 1919-21இல் கடுமையான விவசாயக் குழப்பங்களால் உருவான ஆபத்தான சூழ்நிலையை கையில் எடுக்க உதவியது. விவசாயிகளின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சியின் அடுத்தகட்டமாக, விவசாயத்திற்கான அரச ஆணையம் இருந்தது. இந்த நகர்வுகள் அனைத்திற்கும் பின்னால் உள்ள உள்நோக்கம் விவசாயிகளுக்கு உதவுவது அல்ல; மாறாக அவர்களை ஏமாற்றுவதுதான் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்தியாவில் இருந்து ஏகாதிபத்தியம் எடுத்துச் செல்லும் இலாபத்தின் முக்கிய ஆதாரமாக விவசாயிகள் மீதான மிருகத்தனமான  சுரண்டல் அமைகிறது. ஏகாதிபத்தியத்தின் மோசமான திட்டங்களை முறியடிக்கவும், விவசாயிகளின் நம்பிக்கையை மீளப் பெறவும் தேசியவாத இயக்கம் ஒரு தீவிரமான விவசாயத் திட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் அரசாங்கத்தால் முன்மொழியப்படும் சீர்திருத்த நடவடிக்கைகளின் உள்நோக்கத்தையும் அம்பலப்படுத்த வேண்டும்.

1923 தேர்தலுக்கு முன்னதாக சுயராஜ்ய கட்சி வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது:

“குத்தகைதாரருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக கட்சி நிற்கிறது என்பது உண்மைதான்; எனினும் அது நிலஉரிமையாளருக்கு ஏதேனும் அநீதி விளைவிப்பதாக இருந்தால், அந்த நீதியின் தரம் மோசமாக இருக்கும்.”

தேசியவாத இயக்கம் விவசாயிகளின் தீவிர ஆதரவைப் பெற விரும்பினால், இந்த மேற்கோளில் வெளிப்படுத்தப்பட்ட பிற்போக்குத்தனமான கண்ணோட்டத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். நிலவுடைமை பெற்றவர்களின் வாக்குக்காக மீன்பிடிக்கும் கட்சிக்கு இத்தகைய வேலைத்திட்டம் அவசியம்; ஆனால் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் மக்களை வழிநடத்த முன்மொழியும் ஒரு கட்சிக்கு இது நிச்சயமாக தீங்கு விளைவிக்கும். நிலவுடைமையாளர்களின் சலுகைகள் நிரம்பிய நிலையைத் தொடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தால், விவசாயிகளுக்கு அநீதியை மட்டுமே இழைக்க முடியும். நிலவுடைமை வர்க்கம் என்பது விவசாயிகளின் இரத்தத்தை உறிஞ்சும் ஒரு சமூக ஒட்டுண்ணி. மேலும், கிட்டத்தட்ட நாட்டில் பாதியில் உள்ள நிலங்களுக்கு அரசாங்கமே நிலப்பிரபுவாக உள்ளது. நீதியின் சாரம் அங்கேயும் பொருந்துவதாக வேண்டும். எனவே, விவசாயிகளைப் பற்றிய சுயராஜ்யத் திட்டம் ஒட்டுண்ணி நிலஉரிமையாளர்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு வரம்பற்ற வாழ்வாதாரத்தை அளிப்பதாகவும் இருக்கிறது. தேசியவாத இயக்கத்தின் விவசாய வேலைத்திட்டம் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதாக இருக்கவேண்டும். விவசாயிகளைச் சுரண்டும் அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முகவர்களுக்கு எதிராக இரக்கமின்றி அது இயங்க வேண்டும்.

தேசியவாத இயக்கத்தின் திட்டம்

தேசிய விடுதலைக்கான இயக்கம் ஒரு மக்கள் கட்சியால் மட்டுமே தலைமை தாங்கப்பட்டு வெற்றிபெற முடியும். தெளிவாக வரையறுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின்படி செயல்படும் ஒரு கட்சியால் அது வழிநடத்தப்படாவிட்டால், தேசிய விடுதலை இயக்கம் ஒரு சுக்கான் இல்லாத கப்பலைப் போல தத்தளிக்கும். தேசிய விடுதலை இயக்கத்தின் நோக்கம் என்ன என்பதை பல ஆண்டுகளாகவே இந்தத் தலைவர்கள் நாட்டுக்கு சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுயராஜ்யம் என்பது தேசவிடுதலை என்பதைத் தவிர மற்ற எல்லாமாகவும் விளக்கப்பட்டுள்ளது. அதன் நோக்கம் தேசத்தின் விடுதலையைப் பெறவேண்டும் என்பதாக இல்லாமல் இருக்குமானால், அத்தகைய தேசிய இயக்கம் அதன் உண்மையான பொருளை இழந்துவிடும். இதற்கு சட்டபூர்வமான அல்லது அரசியல்சட்ட ரீதியான விளக்கம் எதுவும் தேவைப்படாது.

இதன் பொருள் என்னவெனில், தனக்கே உரிய அரசாங்கத்தை நிறுவவும், அரசியல்ரீதியான, பொருளாதாரரீதியான, கலாச்சார ரீதியான என்பது போன்ற தனது காரியங்களை தானே பார்த்துக் கொள்ளவும் ஆன சுதந்திரம் என்பதே ஆகும். தேசியவாத வேலைத்திட்டத்தின் இந்த அடிப்படையான அம்சம் இதுவரை தெள்ளத்தெளிவாக நாட்டின்முன் வைக்கப்படவில்லை. தேசியவாத இயக்கத்தை மறுசீரமைப்பதற்கான முதல் செயலாக இது செய்யப்பட வேண்டும். எந்த நிபந்தனைகளின்கீழ் தேசியவாதிகள் பதவி ஏற்க வேண்டும் என்ற சர்ச்சையானது இந்த முக்கிய பிரச்சினையை குழப்பிவிடக் கூடாது. இன்று இருக்கும் அனைத்து தேசியவாத கட்சிகளும் ஆதிக்கத்திற்கு உட்பட்ட அந்தஸ்து என்ற திட்டத்தில் உறுதியாக உள்ளன. அதையும்கூட உடனடியாகத் தரவேண்டும் என்றுகூட அவை கோரவில்லை. தற்போதைய மக்கள் பிரதிநிதித்துவம்அற்ற சட்டமன்றத்திற்கு ஓரளவிற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு மிகவும் தீவிரமான சில பிரிவினரை திருப்திப்படுத்துவதாகவும்கூட இருக்கக்கூடும். இது தேசவிடுதலைக்கான போராட்டம் அல்ல. மாறாக, அது ஒரு கேலிக்கூத்தே ஆகும். அப்பட்டமான தேசத்துரோகம் என்றுகூடக் கூறலாம்.

மக்களுக்கு முழுமையான சுதந்திரம், அதுவும் நிபந்தனையற்ற சுதந்திரம் இருக்க வேண்டும். இந்த சுதந்திரத்தைக் கோருவதற்கும் அதற்காகப் போராடுவதற்கும் என ஒரு மக்கள் கட்சி இருக்க வேண்டும்.

மேம்பட்ட ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு குடியரசு வகைப்பட்ட அரசை நிறுவுவது என்பதே தேசவிடுதலையின் உறுதியான வடிவமாகும்.

வயதுவந்தோர் அனைவரின் (ஆண் – பெண் உள்ளிட்டு) வாக்குரிமையால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தேசிய சட்டமன்றம் மக்களின் உயர்ந்தபட்ச அமைப்பாக இருக்கும்; சாதி, வர்க்கரீதியான சிறப்புச் சலுகைகள் அனைத்தும் ஒழிக்கப்படும். நாடு முற்றிலுமாக ஜனநாயகப்படுத்தப்படும்.

இந்த தேசிய விடுதலையானது மக்களுக்கு மேலும் உறுதியான வசதிகளைத் தருவதாக இருக்க வேண்டும். அதாவது அவர்களின் உடனடியான பொருளாதாரக் குறைகளை நீக்குவதாக, உயர்ந்ததொரு வாழ்க்கைத்தரத்திற்கு உத்தரவாதம் அளிப்பதாக இருக்க வேண்டும். தேசவிடுதலையானது கீழ்க்கண்ட குறிக்கோளை நிறுவுவதாக அமைய வேண்டும்: நிலம் என்பது உழவர்களுக்கு மட்டுமே சொந்தமானது. நிலத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஆடம்பரமாக வாழும் ஒட்டுண்ணி வர்க்கங்கள் தங்கள் நலன்களை இழக்க நேரிடும். நிலவுடைமை வர்க்கத்தின் பாக்கெட்டுகளை வீங்கவைத்துக் கொண்டிருந்த பெரும்தொகைகள் இப்போது விவசாயிகளை, அவர்களின் சுமைகளிலிருந்து விடுவிப்பதாக இருக்கும். நிலவாடகையானது அனைத்துவகையிலும் குறைக்கப்படும். பொருளாதார ரீதியாக கட்டுப்படியாகாத நிலங்களை வைத்துக்கொண்டு பரிதாபகரமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவரும் ஏழை விவசாயிகளுக்கு நிலவாடகையிலிருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படும். கடன் கொடுப்பவர்களின் அத்துமீறலில் இருந்து விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள். தேசிய அரசாங்கம் விரிவான விவசாயக் கடன்கள் மூலம் விவசாயிகளுக்கு உதவும். விவசாயத்தில் இயந்திரங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமும், இலவச ஆரம்பக்கல்வி மூலமாகவும் விவசாயிகளின் கலாச்சார நிலை உயர்த்தப்படும்.

தேசிய அரசாங்கம் தொழில்துறை தொழிலாளர்களுக்கு எட்டுமணிநேர வேலை மற்றும் குறைந்தபட்ச வாழ்க்கை ஊதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கும். நாகரீகமான வேலைநிலைமைகள் மற்றும் வீட்டுவசதி குறித்து சட்டம் இயற்றப்படும். வேலையில்லாத தொழிலாளர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்கும்.

ரயில்வே, நீர்வழிகள், தந்தி போன்ற பொதுப்பயன்பாடுகள் தேசத்தின் சொத்தாக இருக்கும். அவை தனிப்பட்ட லாபத்திற்காக அல்லாமல், பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவே இயக்கப்படும்.

தொழிலாளர்கள் (விவசாயிகளும்) ஒன்றிணைவதற்கான முழு சுதந்திரமும், தங்கள் நலன்களைக் காத்துக்கொள்வதற்காக வேலைநிறுத்த உரிமையையும் பெறுவார்கள்.

மதம் மற்றும் வழிபாடுகளில் முழுமையான சுதந்திரம் இருக்கும். தேசிய இன மற்றும் மதரீதியிலான சிறுபான்மையினர் சுயாட்சி உரிமையை அனுபவிப்பார்கள்.

பெரும்பான்மையான மக்களை ஒருங்கிணைத்து, தவிர்க்கமுடியாத வகையில் அவர்களை செயலில் ஈடுபடுத்தும் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் இவை. (முதலாளித்துவ மற்றும் நிலஉடைமை வர்க்கங்களின் நலன்களைப் பாதுகாத்தல்) என்ற முதலாளித்துவ தேசியவாதத்தின் வேலைத்திட்டம் நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளது. முதலாளித்துவத்தின் துரோகத்தையும் தயக்கத்தையும் பொருட்படுத்தாமல் நாடு தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு விடுதலையை நோக்கி நகர வேண்டும். பாசாங்குத்தனமான முதலாளித்துவ அரசியல்வாதிகளின் செல்வாக்கிலிருந்து தேசிய காங்கிரஸ் விடுவிக்கப்பட வேண்டும். சுதந்திரத்திற்காக நேர்மையாகவும் தைரியமாகவும் போராடத் தயாராக இருப்பவர்களே மக்களின் குரலை எதிரொலிக்கும் பேச்சாளர்களாக மாறவேண்டும். தேசவிடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்பும் கட்சி, வாக்காளர்களில் சில அதிர்ஷ்டசாலிகளை அல்ல; வாக்குரிமையற்ற பெரும்பான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் கட்சியாக மாற வேண்டும். தற்போது கவுன்சிலின் மாமன்றம் மக்கள் கட்சியின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தவே விழைகிறது. அது மேலும் பரந்த செயல்பாட்டுக் களங்களை கண்டறிய வேண்டியது அவசியமாகும். தேசிய விடுதலை, அனைத்து வகையிலும் தேசிய வாழ்க்கையை முழுமையாக ஜனநாயகப்படுத்துவது – இதுதான் தேசியவாத மேடையின் அடிப்படையான தூண்கள். இந்தத் திட்டத்தை வென்றடைவதற்கான போர் முழக்கம் இதுதான்: ”நிலம்- உணவு- கல்வி.”

தமிழில் : வீ. பா. கணேசன்

மார்க்சிஸ்ட் (ஆங்கிலம்) , Download தொகுதி 36, இதழ் 3-4, ஜூலை-டிசம்பர் 2021 இல் வெளியானது. (சுருக்கப்பட்டது)

லத்தீன் அமெரிக்கா: இடதுசாரிகள், முற்போக்குவாதிகள் வெற்றி பெறுவது எப்படி?

அருண் குமார்

உலகின் மிகவும் சமத்துவமற்ற சமூகங்களில் ஒன்று, லத்தீன் அமெரிக்கா. இங்கு நிலவும் ஏற்றத்தாழ்வுகளுக்கு வரலாற்று காரணங்களும் உள்ளன, அரசியல் செயல்பாடுகள், பொருளாதாரக் கொள்கைகள் ஆகிய காரணங்களும் உள்ளன.

அமெரிக்க சமூகவியல் ஆய்வு குறிப்புகள் (தொகுதி 71, 2006), லத்தீன் அமெரிக்காவில் நிலவும் அரசியலுக்கும் ஏற்றத்தாழ்விற்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கி இவ்வாறு குறிப்பிட்டது: “நில உடைமை மற்றும் அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் நிலவும் ஏற்றத்தாழ்வு, காலனிய அமைப்பில் இருந்து தோற்றமெடுத்தவை. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபிய பகுதிகளில் நிலவும் ஏற்றத்தாழ்வின் ஆழமான வேர்கள் தத்துவார்த்த ரீதியான விளக்கங்களின் மையமாக அமைந்துள்ளன. சுதந்திரத்திற்குப் பிறகு, சொத்துக்கள் மற்றும் வருமானத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு அரசியல் செல்வாக்கில் ஏற்றத்தாழ்வை மேலும் வலுப்படுத்தியது. இதனால் அரசியல் நிறுவனங்கள் மற்றும் கொள்கைகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வின் விஷச் சுழலை அது நிலைநிறுத்தியது.”

நீடித்த காலனிய ஆட்சிக் காலம், ஜனநாயகம் இன்மை, கணிசமான காலத்திற்கு தன்னலக் குழுக்களின் ஆட்சி என இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கான வரலாற்றுரீதியான காரணிகளைக் குறிப்பிட்டு, அது மேலும் கூறுகிறது: “லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதி நாடுகளில் நீண்ட காலமாகவே பெரும் நில உடமையாளர்கள் மலிவான மிகப்பெரும் தொழிலாளர் சக்தியை சார்ந்து இருந்தனர். லத்தீன் அமெரிக்காவிற்கு வெளியே உள்ள சமூகங்கள் உட்பட, தேசியப் பொருளாதாரத்தில் பெரும் நில உடமையாளர்கள் முக்கியப் பங்காற்றினர். ஜனநாயகத்தின் உறுதியான மற்றும் பயனுள்ள எதிரிகளாகவும் அவர்கள் இருந்தனர் (மூர், 1966; ருஸ்கிமீயர், ஸ்டீபன்ஸ் மற்றும் ஸ்டீபன்ஸ் 1992). நில விநியோகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு விவசாயத் துறையில் வருமான ஏற்றத்தாழ்வில் நேரடியான தாக்கம் செலுத்துகிறது.

மேலும், அதிக எண்ணிக்கையிலான தனித்திறமையற்ற புலம்பெயர்ந்தோர் மூலம், நகர்ப்புறத் துறையில் வருமான ஏற்றத்தாழ்வின் மீது இது நீடித்த, மறைமுக விளைவினைக் கொண்டிருக்கிறது. நகரங்களில் உள்ள வேலையில்லாதவர்களின் பட்டாளத்தைப் பெருக்குகிறது. இதனால் கீழ்மட்டத்தில் ஊதியம் குறைகிறது. லத்தீன் அமெரிக்கா வரலாற்று ரீதியாக நில விநியோகத்தில் மிக அதீதமான ஏற்றத்தாழ்வைக் கொண்டுள்ளது. மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் அசாதாரணமான அதீத வருமான ஏற்றத்தாழ்விற்கு இது காரணமாகிறது.

நவதாராளவாத பொருளாதார தத்துவம் தீவிரமாக அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்ட உலகின் முதல் பகுதியும் லத்தீன் அமெரிக்காதான். இப்பகுதிக்கு அருகாமையில் இருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் , இந்நாடுகளின் சமூக, பொருளாதார, அரசியல் நடைமுறைகளில் மீண்டும் மீண்டும் தலையிட்டு, அதன் பொருளாதார நெருக்கடிகளுக்கும் பங்களித்தது. சர்வாதிகார ஆட்சிகள் மற்றும் வலதுசாரி சர்வாதிகார ஆட்சிகளின் நீடித்த ஆட்சியையும் அமெரிக்கா ஊக்குவித்தது. இது ஜனநாயகம் மற்றும் மக்களின் உரிமைகள் மீதான தாக்குதலுக்கு எப்போதும் வழிவகுத்தது.

20 ஆம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டில் இருந்து, மக்கள் எதிர்ப்புகள் மற்றும் சமூக இயக்கங்களின் வளர்ச்சியுடன் இவை அனைத்தும் மாறத் தொடங்கின. இத்தகைய எதிர்ப்புகள் மற்றும் இயக்கங்களின் அலையில், சர்வாதிகாரம், பாரம்பரிய அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு மாற்றாக, இடதுசாரி மற்றும் முற்போக்கு சக்திகள் எழுந்தன. அவர்கள் மக்கள் தேர்தல்களில் வெற்றி பெற்று, அரசாங்க அதிகாரத்தைப் பயன்படுத்தி மாற்றுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தத் தொடங்கினர்.

ஒரு விஷயத்தை இங்கே வலியுறுத்துவது அவசியம் என்று கருதுகிறேன். இந்த இடதுசாரி, முற்போக்கு சக்திகளில் பெரும்பாலானவை, புதிய தாராளவாத, சர்வாதிகார ஆட்சி மாதிரியை விமர்சிப்பது, மாற்று வழிகளை வழங்குவது என்பதோடு தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டன. அவர்களில் ஹ்யூகோ சாவேஸைப் போன்ற மிகச் சிலரே, முதலாளித்துவத்திற்கு மாற்றாக சோசலிசத்தை நிறுவும் (பொலிவேரிய சோசலிச மாதிரி அல்லது 21 ஆம் நூற்றாண்டு சோசலிசம் பற்றிய அவரது கருத்தாக்கத்தில் உள்ளார்ந்த தத்துவ மற்றும் நடைமுறை வரம்புகள் எதுவாக இருந்தாலும்) ஒரு முறையான மாற்றத்தைப் பற்றி சிந்தித்தார்கள். இதைக் கொண்டு, இந்த இடதுசாரி, முற்போக்கு அரசாங்கங்கள் செய்த சாதனைகளைப் பார்த்து நாம் பாராமுகமாக இருக்கக் கூடாது.

அரசியல் மற்றும் பொருளாதாரம்:

1990களின் பத்தாண்டுகள், சர்வாதிகாரம் மற்றும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான அவர்களின் தொடர்ச்சியான போராட்டங்களின் மூலம் இடதுசாரி மற்றும் முற்போக்கு இயக்கங்களின் மறுமலர்ச்சியைக் கண்டது. ஜனநாயகத்தை வலுப்படுத்துதல் மற்றும் மக்களின் உரிமைகள் ஆகிய இரு முக்கியமான முழக்கங்கள் அவர்களின் எழுச்சிக்கு பங்களித்தன. இந்த முழக்கம் மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்துடன் இணைந்தது. உதாரணமாக, வெனிசுலாவில், 1989இல், கராகசோவில் ஒரு பெரிய போராட்டம் நடந்தது. அங்கு புதிய தாராளமயக் கொள்கைகளை எதிர்த்துப் போராடிய நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் அப்போதைய ஆட்சியால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த அடக்குமுறை புதிய தாராளமயக் கொள்கைகளை பின்பற்றும் அரசாங்கத்தின் எதேச்சாதிகாரத் தன்மையை அம்பலப்படுத்தியது. சாவேஸ் மற்றும் இடதுசாரிகள், முற்போக்கு சக்திகள் தங்கள் இயக்கத்தை உருவாக்கி, அரசாங்கத்திற்கு எதிராக இந்த அதிருப்தியை உருவாக்கினர்.

சாவேஸ் கூறியது போல்: “கரகாசோ பொலிவேரியன் புரட்சியின் இயந்திரத்தை பற்றவைத்த தீப்பொறி”. இந்த அனுபவத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் ஒரு முக்கியமான பாடம் என்னவென்றால், அரசியலை (அதிகாரத்துவம்) பொருளாதாரத்துடன் (நவ தாராளமயம்) இணைத்து அதை ஒரு மாற்று அரசியல் சக்தியாக வெளிப்படுத்துவது முக்கியம். லத்தீன் அமெரிக்காவில் உள்ள இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் இந்த உறவை நன்கு புரிந்து கொண்டனர். அவர்கள் தங்கள் நிறுவன அமைப்புகளுக்குள்ளும் சமூகத்திலும் பங்கேற்பு ஜனநாயகத்தைப் பற்றிப் பேசி தங்கள் இயக்கங்களை உணர்வுபூர்வமாகக் கட்டமைத்தனர்.

1990 களின் பிற்பகுதியில் சாவேஸ் தொடங்கி, பிரேசிலில் லூலா, பொலிவியாவில் மொரேல்ஸ், ஈக்வடாரில் கொரியா, அர்ஜென்டினாவில் கிர்ச்னர்ஸ் (நெஸ்டர் மற்றும் கிறிஸ்டியானா இருவரும்) வரை அதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பல இடது, முற்போக்கு அரசாங்கங்கள் மேற்கொண்ட முதல் நடவடிக்கைகளில் ஒன்று முடிவெடுக்கும் செயல்பாட்டில் மக்கள் பங்கேற்பினை அவர்கள் உறுதி செய்தே ஆகும். அவர்கள் அந்தந்த நாடுகளில் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்த முயன்றனர்; மேலும் வெனிசுலாவில் உள்ள சமூக கவுன்சில்கள் போன்ற மாற்று ஜனநாயக கட்டமைப்புகளையும் அவர்கள் உருவாக்கினர்.

வெனிசுலா முழுவதும் 200-400 குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரக்கணக்கான சமூக கவுன்சில்கள் உருவாக்கப்பட்டன. அவை ஒவ்வொன்றுக்கும் உள்கட்டமைப்பு மற்றும் சமூகத் திட்டங்களை மேம்படுத்த 60,000 அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டன. அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கு எது தேவை என்பதைத் தீர்மானித்து, திட்டங்களை வடிவமைத்து இந்தப் பணத்தைச் செலவழித்தனர். அனைத்து முடிவுகளும் அந்த சமூகத்தின் குடிமக்களின் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டன.

கட்டுமானம், எரிவாயு விநியோகம், பொதுப் போக்குவரத்து மற்றும் சிமெண்ட் தூண்கள் உற்பத்தி போன்ற துறைகளில் சமூக கவுன்சில்களின் அதிகார வரம்பிற்குள் சமூக உற்பத்தி நிறுவனங்களை உருவாக்குவதை சாவேஸ் ஊக்குவித்தார். மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவச வீட்டுத் திட்டத்திற்கான பயனாளிகளைத் தீர்மானிக்கவும், (பதுக்கல் மற்றும் பணவீக்கத்தை நிறுத்தும் நோக்கத்துடன்) சூப்பர் ஸ்டோர்களில் விலைகளை ஒழுங்குபடுத்துவதற்கும்  இந்த கவுன்சில்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

இத்தகைய ஜனநாயகரீதியான வெளிகளைப் பயன்படுத்துவதன் மூலம் இடதுசாரி மற்றும் முற்போக்கு சக்திகள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்தது. எனினும் ஜனநாயகம் மட்டும் போதாது. மக்களின் பொருளாதார நிலை மேம்படுவதற்கும் அது துணையாக இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட ஆய்வு இவ்வாறு சுட்டிக் காட்டியது: “நீண்ட ஜனநாயக ஆட்சி காலம் வசதியற்றவர்களின் நலன்கள் குறித்துப் பேசுவதற்கு அனுமதிக்கிறது. ஜனநாயகம் இந்த நலன்கள் குறித்துப் பேசப்படும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்காது என்பதைப் போலவே அவை பாதுகாக்கப்படும் என்றும் உத்தரவாதம் அளிக்காது. இடதுசாரிக் கட்சிகள் மூலம் வசதியற்றவர்களின் நலன்களை வெளிப்படுத்துவது – இடதுசாரி கட்சிகள் சட்டமியற்றும் செல்வாக்கை அடைய போதுமான அளவுக்கு வலுவாக வளர்ந்தால் – சமூகப் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான செலவினங்கள் உட்பட ஏற்றத்தாழ்வைக் குறைக்க முழு அளவிலான கொள்கைகளை வடிவமைக்க முடியும்.

சமூக நல நடவடிக்கைகள்:

இந்த புரிதலானது ஆளும் வர்க்கங்கள் பின்பற்றி வரும் நவதாராளவாத கொள்கைகளுக்கு மாற்று பார்வையை இடதுசாரி மற்றும் முற்போக்கு சக்திகள் முன்னிறுத்துவதற்கு வழிகாட்டியது.

வெனிசுலாவில், 2002 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு சாவேஸ் மீண்டும் ஆட்சியைப் பொறுப்பேற்றவுடன், ‘இயக்கங்கள்’ என அழைக்கப்படும் பல சமூக நலத் திட்டங்களைத் தொடங்கினார். 2003 ஆம் ஆண்டு கியூபாவின் உதவியுடன், மக்களுக்கு, குறிப்பாக குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு, இலவச மருத்துவ சேவையை வழங்குவதற்காக, 2003ஆம் ஆண்டில், அத்தகைய முதல் பணியான பரியோ அடெண்ட்ரோ (Barrio Adentro) தொடங்கப்பட்டது.

கல்வியின் நோக்கம் இலவச கல்வியை வழங்குவதாக மாறியது. இலவச எழுத்தறிவு வகுப்புகளுக்கு மிஷன் ராபின்சன், உயர்நிலைப் பள்ளிக் கல்விக்கான மிஷன் ரிபாஸ் மற்றும் பல்கலைக்கழக கல்விக்கான மிஷன் சுக்ரே என்பதாக இயக்கங்கள் உருவாயின. அதிகாரத்துவப் போக்கு மற்றும் விதிமுறைகளியே மூழ்கிக் கிடக்கும் போக்கு (ரெட் டேபிசம்) மிகக் குறைந்த அளவிலேயே இருந்ததால், இவற்றில் பல இயக்கங்கள் மிகவும் வெற்றிகரமானதாக இருந்தன. மேலும், மக்களின் பங்கேற்பு மற்றும் ஆர்வத்தின் காரணமாக இந்த இயக்கங்களின் உண்மையான நோக்கங்கள் விரிவடைந்தன. பரியோ அடெண்ட்ரோ ஆரம்ப சுகாதாரத்தை வழங்குவது போலவே,  நோய்களைக் கண்டறியும் மையங்கள் மற்றும் சிறப்பு மருத்துவமனை  ஆகியவற்றையும் உள்ளடக்கியது. இவை, இந்த திட்டங்களின் மீதான மக்கள் ஈடுபாட்டை மேலும் அதிகரித்தன. அதே நேரத்தில் அவர்களுக்கு பெரும் நன்மையையும் அளித்தன.

சாவேஸ் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பத்தாண்டிற்குள் இத்தகைய கொள்கைகளின் விளைவாக, வறுமையில் வாடும் மக்கள் எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது. மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், தீவிர வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கையில் 72 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டது. ஏனெனில், ஒவ்வொரு நபருக்கான சமூகச் செலவும் மூன்று மடங்கிற்கும் அதிகமானது; மேலும் ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும், ஒதுக்கீட்டில் பாதியளவு சமூகச் செலவு மற்றும் வறுமைக் குறைப்புக்கு சென்றது.

மேலும், சிசு மற்றும் குழந்தை இறப்பு விகிதங்கள் மூன்றில் ஒரு பங்கு குறைந்தது. பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் பாதிக்கு மேல் குறைந்துள்ளது. சராசரி கலோரி உட்கொள்ளல் அதிகரித்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் இறப்புகள் பாதிக்கு மேல் குறைந்துள்ளன. லத்தீன் அமெரிக்காவில் கல்வியறிவின்மையை முற்றிலுமாக ஒழித்த இரண்டாவது நாடாக வெனிசுலா ஆனது. இந்தப் பத்தாண்டில் மாணவர் சேர்க்கை விகிதம் 138 சதவீதம் அதிகரித்து உயர்கல்வித் துறையில் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் நன்கு தெரியக்கூடிய வகையில் பயன்கள் ஏற்பட்டன.

பணக்காரர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்ட சலுகையாக இதுவரை இருந்த கல்வி, அனைவரும் இலவசமாக அணுகக் கூடிய உரிமையாக மாற்றப்பட்டது. வேலையின்மை வீழ்ச்சியடைந்தது.  ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் முறையான துறையில் பணியமர்த்தப்பட்டனர்.  குறைந்தபட்ச ஊதியம் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்தது. இது முழு லத்தீன் அமெரிக்க கண்டத்திலும் பார்க்க மிக அதிகமானதாக இருந்தது. இந்தப் பத்தாண்டில் முதியோர் மற்றும் ஊனமுற்றோர் நலத்திட்டங்களின் வரம்பு இரண்டு மடங்காக அதிகரித்தது. இதுவரை வேலை செய்யாத மூத்த குடிமக்கள், பாதுகாப்பற்ற பெண்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு குறைந்தபட்ச ஊதியத்தில் 60-80 சதவீதம் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. 61 வயதுக்கு மேற்பட்ட இல்லத்தரசிகள், ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, முழுமையான ஓய்வூதியம் பெற்றனர்.

பிரேசிலில், 2003இல் முதல் தொழிலாளர் ஜனாதிபதி லூலா பதவிக்கு வந்த பிறகு,   அரசு நிர்வாகம் மக்களை உள்ளடக்கிய திட்டங்களால் குறிக்கப்படுவதாக அமைந்தது. மற்ற சமூக ஆதாயங்களுக்கிடையில் – வறுமையை 37.5 சதவீதத்திலிருந்து 20.9 சதவீதமாகக் குறைத்தது. மேலும் தீவிர வறுமை 13.2 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. இது நடுத்தர வர்க்கத்தின் தரவரிசையை (மக்கள் தொகையில் 38 சதவீதத்திலிருந்து 53 சதவீதமாக) உயர்த்தியது. இறுதியாக, பல லட்சக்கணக்கான பிரேசிலியர்களின் வருமானத்தை அதிகரித்தது.

ஆயிரக்கணக்கான குடும்பங்கள் முதல் முறையாக நுகர்வோர் சந்தைகளை அணுகும் வாய்ப்பினைப் பெற்றனர். லூலா அரசு ஏழைகளுக்கான வீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக மின்ஹா ​​காசா, மின்ஹா ​​விடா (எனது வீடு, எனது இல்லம்) என்ற திட்டம் அறிமுகமானது. அதேபோல், கல்வியறிவின்மையை ஒழிப்பதற்கான கொள்கைகளை லூலா செயல்படுத்தினார். பள்ளிகளில் குழந்தைகளின் வருகையுடன் உணவு மானியங்களை இணைத்தார். கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் மூலம், இந்த சேவைகளில் அரசாங்க சேவைகளின் தரம் மேம்படுத்தப்பட்டது. தேவையான ஆலோசனைகளையும் நிபுணர்களையும் வழங்குவதன் மூலம் கியூபா இந்த நடவடிக்கைகளுக்கு உதவியது.

பொலிவியாவில், மொரேல்ஸ் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, இதே போன்ற நலத்திட்டங்கள் பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டன. இப்போது அது உலகளாவிய அளவில் இலவச சுகாதாரப் பாதுகாப்பு, இலவச கல்வி மற்றும் ஓய்வூதிய பலன்களை வழங்கும் நாடாக மாறியுள்ளது. முழு லத்தீன் அமெரிக்க கண்டத்திலும் முழுமையான கல்வியறிவு பெற்ற மூன்றாவது நாடாக பொலிவியா ஆனது. பொலிவியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தேவையின் அடிப்படையில் அரசுப் பத்திரங்களைப் பெறுகிறார்கள். மேலும் இவை குழந்தைகளை பள்ளியில் இருக்க வைத்தன; பெரியவர்களின் துன்பங்களைத் தணித்தன; மேலும் குழந்தை இறப்பை பாதியாகக் குறைத்தன. சமையல் எரிவாயு, மின்சாரம், இணையம், குழாய் நீர், மற்றும் தேவைப்படுபவர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் வீடுகளை அரசு மானியம் வழங்குகிறது. இவற்றின் மூலம் வறுமை பாதிக்கு மேல் குறைக்கப்பட்டுள்ளது.

இயற்கை வளங்கள் மற்றும் கேந்திரமான நிறுவனங்களின் தேசியமயம் மற்றும் ஏழையான பெரும்பான்மையினரின் தேவைகளுக்கு சேவை செய்ய இந்த அபகரிக்கப்பட்ட நிறுவனங்களின் இலாபங்களை முதலீடு செய்வது ஆகியவற்றின் காரணமாக இந்த நடவடிக்கைகள் சாத்தியமானது.  மொரேல்ஸ் தலைமையிலான கட்சியான MAS, இந்த அரைக்கோளப் பகுதியில் ஏழ்மையிலிருந்து விடுபட்ட நாடுகளில் ஒன்றாக பொலிவியாவை மாற்றியுள்ளது. மேலும் சமத்துவமான வருமானம் கொண்ட முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாகவும் அதை மாற்றியுள்ளது.

இங்கே, சிலி உதாரணத்தை மேற்கோள் காட்டுவது சரியாக இருக்கக்கூடும். 2011இல் கல்வியை தனியார்மயமாக்குவதற்கு எதிராகவும், கல்விக் கட்டண உயர்வைக் கண்டித்தும் மாணவர்களின் போராட்டத்திலிருந்து தொடங்கி, மெட்ரோ ரயில் கட்டண உயர்வை எதிர்த்து சமீபத்தில் நடந்த (2019-2020) போராட்டம் வரை, மாற்று நிர்வாகத் தத்துவத்தின் அவசியத்தைப் பிரச்சாரம் செய்ய மக்கள் அணிதிரட்டல்கள் பயன்படுத்தப்பட்டன. அரசாங்கம் தமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதோடு மட்டுப்படுத்தாமல், அவர்கள் புதிய தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை ஒருமுகப்படுத்தி, அவற்றை ரத்து செய்யக் கோரினர். பினோசே சர்வாதிகார காலத்தில் உருவாக்கப்பட்ட சிலியின் அரசியலமைப்பின் மூலமே இத்தகைய கொள்கைகள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டதை அவர்கள் கண்டறிந்தனர்.

அனைவருக்கும் சுகாதாரம், இலவச பொதுக் கல்வி, அனைவருக்கும் அரசு வழங்கும் ஓய்வூதியத் திட்டங்கள் ஆகியவற்றுக்கான மக்கள் கிளர்ச்சிகளின் மீது அரசியலமைப்பின் வரம்புகளுடன் மாநில அரசு கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறை தோல்வியுற்றது. இந்தப் பிரச்சாரத்தில் ஆயுதம் ஏந்திய அவர்கள், அரசியலமைப்பை மாற்றி எழுதுவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரினர். பெரும்பான்மையான மக்கள் (கிட்டத்தட்ட 71 சதவீதம்) புதிய அரசியலமைப்பிற்கு வாக்களித்தனர்.

அப்போதைய பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்க அரசாங்கம் விரும்பிய போது, ​​அவர்கள் புதிய அரசியலமைப்பு சபையை தெரிவு செய்வதற்கான கோரிக்கையை முன்வைத்து வெற்றிபெற்றனர். 155 உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் நவதாராளவாத எதிர்ப்புக் கொள்கைகளுக்கான மேடையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை, புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணியை (மே 7) சமீபத்தில் முடித்திருக்கிறது. எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகளை சரிசெய்ய இப்போது ஒரு ‘இணக்கக் குழு’வால் அது சரிபார்க்கப்பட்டு வருகிறது. இந்த முழு செயல்முறையையும் இரண்டு மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு புதிய அரசியல் அமைப்பு குறித்து மீண்டும் மக்கள் முன் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

மாணவர்கள், தொழிற்சங்கங்கள், பெண்கள் இயக்கங்கள், கம்யூனிஸ்டுகள், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பழங்குடியின குழுக்களுடன் சேர்ந்து இந்த முழு செயல்முறையிலும் முக்கிய பங்கு வகித்தன. அவர்களின் விடாமுயற்சியின் காரணமாக, 1973இல் சால்வடார் அலெண்டேவுக்கு எதிரான ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, முதல்முறையாக சிலியின் அதிபராக அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி அரசு, புதிய அரசியலமைப்பில் இடம் பெறும் என்ற நம்பிக்கையுடன், அதன் மாற்றுக் கொள்கைகளை செயல்படுத்துவதாக உறுதியளித்தது.

இன்னும் செயலாக்கப்படாத வரைவு அரசியலமைப்பு பொதுத் தளத்தில் இப்போது கிடைக்கிறது. அனைவருக்கும் ‘ஊட்டச்சத்தான, முழுமையான மற்றும் கலாச்சார ரீதியாக பொருத்தமான உணவு’ மற்றும் ‘விளையாட்டு மற்றும் உடல் செயல்பாடு’ ஆகியவற்றுக்கான உரிமை ஆகியவை அதில் உள்ளன. அதிக அதிகாரம் கொண்ட பகுதிகளைக் கொண்ட, பரவலாக்கப்பட்ட ஓர் அரசை இது பரிந்துரைக்கிறது. இது சிலி மக்களின் பன்முகத்தன்மையை அங்கீகரிக்கிறது. பழங்குடியினரின் பல்வேறு பேச்சு மொழிகளை சிலியின் அதிகாரப்பூர்வ மொழிகளாக அங்கீகரிக்கிறது.  மனுக்கள் மூலம் தேசிய அளவிலான, பகுதியளவிலான மற்றும் உள்ளூர் மட்டங்களில் குடிமக்களின் முன்முயற்சிகளுக்கு அரசியலமைப்பு இடம் அளிக்கிறது. 3 சதவீத மக்கள் ஒரு சட்டத்தை முன்மொழிந்தால், அதன்மீது ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படும். மேலும் 5 சதவீத மக்கள் சேர்ந்து வாக்களித்து ஒரு சட்டத்தை நிராகரிக்கக் கோரலாம். அனைத்து மக்கள் பிரதிநிதித்துவக் கூட்டங்களும் ஆண்-பெண் சமத்துவத்தைக் கொண்டிருக்குமாறும் இது அறிவுறுத்துகிறது. பாலின வன்முறைகள் ஒழிக்கப்பட வேண்டும்; பாலின, இனப்பெருக்க உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும்; கண்ணியமான மரணத்திற்கான உரிமை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ளது.

இயற்கையை மதிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்று இந்த அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. இது, மனிதர்களுக்கு நீர் உபயோகத்தில் முதல் முன்னுரிமையை அளிக்கிறது.  இரண்டாவதாக, நீர்நிலைகளின் சுற்றுச்சூழல் பராமரிப்புக்கும், அதன் பிறகு வணிக நோக்கங்களுக்காக இல்லாத தனியாருக்கும் பயன்பாட்டு உரிமை கிடைக்கிறது. இந்த அரசியலமைப்பு காலநிலை மாற்றத்தை அங்கீகரிப்பதோடு, செயல்படுவதற்கும் ஆற்றல் மாற்றத்திற்கும் பொறுப்பாக விளங்குகிறது. கலாச்சார, வரலாற்று மற்றும் புவி பற்றிய பார்வை ஆகியவற்றுக்கான பழங்குடியின மக்களின் அமைப்புகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு சமத்துவமும், சமவாய்ப்பும் வழங்கப்படுகின்றன. நிலங்கள், பிரதேசங்கள் மற்றும் வளங்களுக்கான மக்களின் உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பழங்குடி மக்களிடமிருந்து நிலத்தை அபகரித்த வரலாற்று செயல்முறை ஒப்புக் கொள்ளப்பட்டு, அதன் மறுசீரமைப்புக்கும் முன்மொழியப்பட்டது.

அரசியலமைப்பானது சிலியை ஒரு துணைநிலை மாநிலம் என்பதிலிருந்து சமூக மற்றும் ஜனநாயக சட்டத்திற்கான (மனித உரிமைகள், சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி, வேலைநிறுத்தம் மற்றும் வேறுபல உரிமைகளுக்கு அரசு உத்தரவாதம் அளிக்கின்ற) ஒரு மாநிலமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நீதி, ஜனநாயகம், உணவு, இறையாண்மை ஆகியவற்றுக்கும் உத்தரவாதம் அளிக்கிறது.

சிலியின் அரசியலமைப்பு என்பது சிலி நாட்டு மக்களின் உள்நாட்டு அனுபவங்களிலிருந்து மட்டுமல்ல; இடதுசாரி மற்றும் முற்போக்கு சக்திகளால் ஆளப்படும் லத்தீன் அமெரிக்காவின் பல்வேறு நாடுகளின் மக்களின் அனுபவங்களிலிருந்தும் உருவானது. உதாரணமாக, மொரேல்ஸ் பல பிரச்சனைகளை எதிர்கொண்டார். மாற்றுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் இருந்து வலதுசாரி கட்சிகள் மற்றும் ஆளும் வர்க்கங்களால் அவர் தடுக்கப்பட்டார். அவருக்கு பணம் மறுக்கப்பட்டது; எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை தேசியமயமாக்குவதிலிருந்து தடுத்து நிறுத்தப்பட்டார். இந்தத் தடைகளை முறியடிக்க, அவர் அரசியலமைப்பை மீண்டும் எழுத முனைந்தார். எண்ணெய் மற்றும் எரிவாயு கையிருப்புக்களை தேசியமயமாக்கும் சட்டங்களை இயற்றவும், அனைத்து பொலிவியர்களும் இயற்கை வளங்களின் மீது சமமான உரிமையை கொண்டிருப்பதை உறுதிசெய்யும் வகையில் பல செயல்களை மேற்கொள்ளவும் உதவியது. ஒரு புதிய அரசியலமைப்பின் மூலம் மட்டுமே, அவர் மத சுதந்திரம் மற்றும் தேவாலயத்தை அரசிலிருந்து பிரிக்கவும், கல்வி, சமூக பாதுகாப்பு மற்றும் நிலத்திற்கான உரிமைகளை உறுதிப்படுத்தவும் முடியும்.

இதேபோல், வெனிசுலாவின் பொலிவேரியன் அரசியலமைப்பு சாவேஸின் கீழ் தொழிலாளர் கூட்டுறவுகளை உருவாக்குவதற்கும், சில தொழில்களில் முடிவெடுக்கும் செயல்முறைகளில் அவர்களின் தலையீட்டிற்கும் அனுமதி அளித்தது. அத்தகைய தொழிலாளர்களின் கூட்டுறவுகள், அவை வலுவாக இருந்த இடங்களிலெல்லாம் லாபத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த முறையில் மக்கள் சக்தி பயன்படுத்தப்பட்டது.

முடிவுரை:

ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல், இத்தகைய சாதகமான பலன்கள் இருந்தபோதிலும், இந்த இடதுசாரி மற்றும் முற்போக்கு அரசாங்கங்கள் சில வரம்புகளுக்கு உட்பட்டிருந்தன என்பதை மீண்டும் வலியுறுத்த வேண்டும். அவர்கள் நடத்திய பொதுநல அரசு பெரிய அளவில் மறுபகிர்வு செய்தது என்பது உண்மைதான். எனினும் முதலாளித்துவ அமைப்பில் உள்ள உள்ளார்ந்த வரம்புகள் காரணமாக, அவர்களால் சுரண்டல் முறையை முழுமையாக மாற்றவோ அல்லது அரசு இயந்திரத்தின் மீதான ஆளும் வர்க்கங்களின் கட்டுப்பாட்டைக் குறைக்கவோ முடியவில்லை. பெரும்பாலும் தேர்தல்களில் (ஈக்வடார் மற்றும் பிரேசில் போன்ற) கட்சிகள் சந்திக்கும் தோல்விகளிலும், ஆட்சிக் கவிழ்ப்புகளைத் தடுக்கத் தவறியதிலும் (ஹோண்டுராஸ், பொலிவியா) இந்த வரம்பு பிரதிபலிக்கிறது. இருப்பினும், நிகழ்வுகள் சுட்டிக்காட்டுவது போல், இந்த பின்னடைவுகள் நிரந்தரமாகவில்லை. பிரேசிலில் இடதுசாரி சக்திகள் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளன. இதேபோல், பொலிவியாவில், ஒரு வருடத்திற்குள், அவர்களால் ஆட்சி கவிழ்ப்பை முறியடித்து, மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடிந்தது.

சிபிஐ(எம்) இன் 20வது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சில தத்துவார்த்த பிரச்சினைகளுக்கான தீர்மானம் இந்த வரம்புகளை சுட்டிக்காட்டி கூறியது: “இந்த அரசாங்கங்கள் ஒரு சோசலிச மாற்றை அமைக்கவில்லை என்றாலும், அவை ‘அகநிலை காரணி’யை வளர்ப்பதற்கான போராட்டத்தில் சாதகமான முன்னேற்றங்களை எடுத்துக் கூறுவதாக அமைகின்றன. ஏகாதிபத்தியம் மற்றும் நவ-தாராளவாத முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு தீர்க்கமான சவாலை எழுப்ப முடியும். இந்த அரசுகளின் வெற்றியானது ‘அரசியலுக்குக் கட்டளையிடுவதற்கு’ அவர்கள் எவ்வாறு உறுதியுடன் செயற்படுகிறார்கள் என்பதையும், ‘அரசியலே அவர்களின் பொருளாதாரக் கொள்கைகளை தீர்மானிக்கிறது’ என்பதை உறுதி செய்வதிலும் அடங்கியுள்ளது என்றும் தீர்மானம் கூறியது.

விஞ்ஞான சோசலிசத்தின் உயரிய சித்தாந்தத்தால் வழிநடத்தப்படும் ஒரு வலுவான தொழிலாள வர்க்க இயக்கம் மட்டுமே அரசியலுக்குக் கட்டளையிடும் நிலைக்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என்பதை வரலாற்று அனுபவம் நமக்குக் கற்பிக்கிறது. மேலும் அது உழைக்கும் பிரிவுகளுடன் உள்ளார்ந்த முறையில் இணைக்கப்பட்டு, மக்கள் சார்பான பொருளாதாரக் கொள்கைகளைத் தீர்மானிக்க அவர்களை வழிநடத்த வேண்டும்.

தமிழில்: வீ. பா. கணேசன்

(கட்டுரையாளர், சி.பி.ஐ(எம்) மத்தியக்குழு உறுப்பினர்)

இந்திய வரலாற்றில் இஸ்லாம்

ரொமிலா தாப்பார்

பேட்டி கண்டோர்: ஜிப்சன் ஜான் – ஜிதேஷ், பி.எம்.

நன்றி: ஃப்ரண்ட்லைன்

கேள்வி: இந்திய வரலாற்றில் இஸ்லாமிய மதத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

இஸ்லாமிய தன்மை  குறிப்பிடத்தக்க ஒன்றா அல்லது பெயரளவிற்கானதா என்பதை எல்லாம் பொருட்படுத்தாமல், இஸ்லாமியத்தோடு  தொடர்புடைய அனைத்தையும் முஸ்லிம் என்பதாக அழைக்கும் பழக்கம் நமக்கு உள்ளது. ஆக்கிரமிப்பதற்காக இந்தியாவுக்குள் வந்தவர்கள் என்று ‘முஸ்லிம்களை’ ஒரே மாதிரியாக கருதிக் கொண்டு  இஸ்லாத்தை ஒரு மதமாக நாம் கருதுகிறோம். இதற்கு முன் என்ன நடந்தது என்பதை விளக்குவதற்கு “முஸ்லீம் படையெடுப்பாளர்கள்” மூலம் பெற்ற விளைவு பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. ஆனால் உண்மையில் இந்தியாவிற்குள் வந்த மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட சில வழிகளில்தான் இஸ்லாம் இந்தியாவிற்குள் வந்தது. அதைக் கொண்டுவந்தவர்கள் உலகின் வெவ்வேறு பகுதிகள் மற்றும் சமூகங்களிலிருந்து வந்தவர்கள் என்பது மட்டுமின்றி, அவர்கள் பின்பற்றிய மதத்தின் பதிப்புகளும் வேறுபட்டவையாக இருந்தன. எனவே, இந்தியாவில் இஸ்லாத்தின் பல்வேறு வகைகள் நடைமுறையில் இருந்தன. சிலர் தங்களுக்கு கற்பிக்கப்பட்ட இஸ்லாத்துடன் நெருக்கமாக இருந்தனர். ஆனால் பலர் இந்து நம்பிக்கை மற்றும் நடைமுறையின் சில பிரிவுகள் போன்ற உள்ளூர் மதங்களிலிருந்து கடன் வாங்கிக் கொண்டனர்.

இன்று நாம் பயன்படுத்தும் இந்த வார்த்தையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்னவென்றால், காலனி ஆதிக்கத்திற்கு முந்தைய காலத்தில், சமஸ்கிருதத்தில் உள்ள இந்திய ஆதாரங்களும் பிராந்திய மொழிகளும் “முஸ்லிம்களை” குறிப்பிடும்போது இஸ்லாத்துடன் இணைக்கப்பட்ட சொற்களை எப்போதாவதுதான் பயன்படுத்துகின்றன. அவற்றில் குறிப்பிடப்படும் மக்கள் இனத்தின் வரலாற்று தொடர்ச்சியைக் குறிக்கும் சொற்களால் அழைக்கப்படுகிறார்களே அன்றி,  அவர்களின் மதத்தால் அல்ல. இவ்வாறு இந்தியாவிற்குள் வந்த குழுக்கள் எவ்வாறு உணரப்பட்டன என்பது பற்றி இது நிறைய கூறுகிறது. இஸ்லாம் இந்தியாவுக்கு வந்த சில வழிகளாவன:

  • அ. எட்டாவது நூற்றாண்டில் அரேபியர்கள் சிந்து பகுதியின் மீதும், பதினோராவது நூற்றாண்டில் துருக்கியர்களும் ஆப்கானியர்களும் வட மேற்கு பகுதியின் மீதும், வடக்குப் பகுதியின் மீதும் படையெடுத்தனர் எனில், பதினாறாம் நூற்றாண்டில் முகலாயர்கள்  வட இந்தியா முழுவதையும் தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்தனர்.
  • ஆ. இந்தியத் துணைக் கண்டத்தின் பிற பகுதிகளில், இந்தத் தொடர்புகள் வேறு வழியில் வந்தன. அரேபியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து வந்த அரேபியர்களின் சமூகங்கள் எட்டாம் நூற்றாண்டிலிருந்து (அல்லது அதற்கு முன்னதாகவும் கூட) மேற்கு இந்தியாவுடன் வர்த்தகம் செய்து வந்தன. மேலும் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து மேற்கு இந்தியாவின் கரையோரங்களில் அவர்கள் குடியேறினர். இது உள்ளூர் சமூகங்களுக்கும் குடியேறிய அராபியர்களுக்கும் இடையே உருவான தொடர்புகளில் இருந்து பல்வேறு மதக் குழுக்கள் உருவாகவும் வழிவகுத்தது. போஹ்ராஸ், கோஜாஸ், நவாயத் மற்றும் மாபில்லாஸ் போன்ற பிரிவினர் இவ்வாறு மாற்றம் பெற்றவர்கள் ஆவர்.

இதேபோல், ஆப்கான் மற்றும் துருக்கி நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்து வட இந்தியாவுடன் வர்த்தகம் செய்தபடியே அந்த பகுதிகளில் வந்து குடியேறினர்.

  • இ. பணம் ஒன்றையே இலக்காகக் கொண்ட போர்வீரர்களும் இந்தப் பகுதிகளில் இருந்து இந்திய அரசர்களின் ராணுவங்களில் சேர்ந்து கொண்டனர். இந்த ராணுவங்களில் சிலவற்றுக்கு அரசர்களும் வேறு சிலவற்றுக்கு சுல்தான்களும் தலைமை தாங்கினர். கி.பி. ஆயிரம் ஆண்டு காலத்திய ராணுவங்களில் இதுபோன்ற அபிசீனிய, எத்தியோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றிய குறிப்புகள் உள்ளன.

அதேபோன்று அல்-இந்த் பகுதியிலிருந்தும் படைவீரர்கள் பணத்திற்காக ஆப்கானிய, துருக்கிய ராணுவப் படைகளில் பணிபுரிந்துள்ளனர். கஜினி நகரத்தைச் சேர்ந்த முகமதுவின் மிகுந்த நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்த திலக், அல்-இந்த் பகுதியைச் சேர்ந்த படைவீரர்களைக் கொண்ட மிகப்பெரும் படையணியுடன் அவருக்காகப் போர் செய்திருக்கிறார். அந்நாட்களில் நாடுகளின் எல்லைகள் பெருமளவிற்குத் திறந்தே இருந்தமையால் எல்லைகளைத் தாண்டி பல்வேறு தொழில்களையும் மேற்கொள்ள ஆட்களை வேலைக்கு எடுக்க முடிந்தது.

  • ஈ. இஸ்லாம் மதத்தினைப் பரப்புவதற்கான மிகப்பெரும் பிரச்சாரக் குழுக்கள் என்பது சுஃபிக்கள் என்று அழைக்கப்பட்டவர்களைக் கொண்டதாகவே இருந்தன. இவர்களில் சிலர் பாரசீகத்திலிருந்து வந்தவர்கள் எனில், மிகப் பலர் மத்திய ஆசியப் பகுதியில் இருந்து வந்தவர்கள். இஸ்லாம் மதத்தினை சேர்ந்த இவர்களது மத வடிவங்கள் அரேபியர்களின் இஸ்லாம் மதத்தைப் போன்றதாக இருக்கவில்லை. இவ்வாறு இந்தியாவிற்கு வந்த சுஃபிக்களில் சிலர் ஓரளவிற்குப் பழமைவாதிகளாக இருந்தபோதிலும், மற்றவர்கள் தங்களது மதத்தை உள்ளூர் மதங்களோடு கலக்கச் செய்தனர். அவர்களது இத்தகைய செயல்களை கட்டுப்பெட்டியான முஸ்லீம் மதகுருக்கள் ஒப்புக் கொள்ள மறுத்தனர்.

இவர்களை சுட்டிக் காட்டுகின்ற சமஸ்கிருத நூல் ஆதாரங்களில் இருந்தே இஸ்லாம் மதத்தில் நிலவிய இத்தகைய வேறுபாடுகளை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. அவர்களது மதத்தின் பெயரால் அவர்களை சுட்டிக் காட்டுவதென்பது மிகவும் அபூர்வமாகவே உள்ளது. பெரும்பாலான நேரங்களில் அவர்களுக்கான சுட்டுப் பெயர் என்பது முந்தைய காலத்திய மேற்கு மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்களை அடையாளப்படுத்திக் கூறப்பட்ட பெயர்களாகவே இருந்தன. இவ்வகையில் மேற்கிலிருந்து வந்தவர்கள் யவனர்கள் என்று அழைக்கப்பட்டனர். இதே பெயர்தான் கிரேக்கர்களைக் குறிப்பிடவும், நவீன காலத்தில் பிரிட்டிஷ் நாட்டவர்களைக் குறிப்பிடவும் பயன்படுத்தப்பட்டது. துருக்கியர்களைக் குறிப்பிட டுருஷ்காக்கள் என்ற பெயரும், ஆஃப்கானியர்களை குறிப்பிட ஷாகாக்கள் என்ற பெயரும் பயன்பட்டன. பண்டைய காலத்தில் குறிப்பிடப்பட்ட ஷாகாக்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் ஆவர். சமஸ்கிருத குறிப்பேடுகளில் துக்ளக் வம்சத்தினர் ஷாகாக்கள் என்றே குறிப்பிடப்படுகின்றனர். டுருஷ்கா என்பது துருக்கி என்பதற்கான சமஸ்கிருதச் சொல்லாகும். குஷாணர்கள் என்பதைப் போன்று மத்திய ஆசியாவிலிருந்து வந்த மக்களைக் குறிப்பிட முன்னாளில் இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டது. மதத்தினால் ஏற்பட்ட வேறுபாடுகள் பெரும்பாலான நேரங்களில் அடையாளமாக இருக்கவில்லை என்றே தோன்றுகிறது. பூகோள அமைப்பும், இன அடையாளமுமே இந்தச் சுட்டுப் பெயரில் முக்கியமான அம்சங்களாக இருந்தன.

மதரீதியான சகிப்புத் தன்மை

பொதுவாகவே மத ரீதியான சகிப்புத்தன்மை என்பதே இந்திய நாகரீகத்தின் தனித்ததொரு அடையாளம் என்று போற்றப்படுகிறது. டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் இந்தக் கருத்தை பெரிதும் முன்னெடுத்துச் செல்பவர்களாக இருந்தனர். இத்தகைய மதரீதியான சகிப்புத் தன்மை என்பது இந்திய வகைப்பட்ட மதச்சார்பின்மையே என்று விளக்கம் கூறுவது அல்லது அதற்குச் சமமானது என்றும் கூறப்படுகிறது. இந்த ஆய்வுப் பொருட்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? அந்தக் கருத்துக்கள் எந்த அளவிற்குப் பொருத்தமுடையவை?

மதச்சார்பின்மை மற்றும் மத சகிப்புத்தன்மை ஆகியவை முற்றிலும் வேறுபட்டவை. மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களின் சகவாழ்வு, ஒரு சமூகத்தில் உள்ள அனைத்து மதங்களின் சமத்துவம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, எந்தவொரு மதத்திற்கும் அன்றைய மக்கள் சமூகத்தின் சட்டங்கள் மற்றும் அதன் அரசியல் ஆகியவற்றுக்கு இடையிலான தூரத்தை பராமரித்தல் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. எனவே மதச்சார்பின்மை  என்பதும் மத சகிப்புத்தன்மை என்பதும் ஒன்றாக இருக்க முடியாது. அதுவும் போக, மத சகிப்புத்தன்மை என்பது இந்திய நாகரிகத்தின் ஒரு அடையாளமாகவும் இருந்ததில்லை. பண்டைய காலங்களிலிருந்தே சகிப்பின்மைக்கு போதுமான வரலாற்று சான்றுகள் உள்ளன. ஒவ்வொரு மதத்தின் வரலாற்றிலும் இதேதான் நடக்கிறது. உதாரணமாக, பவுத்த மதம், வேறு எந்த மதத்தையும் விட அகிம்சை குறித்த போதனைகளில் மிகவும் வலுவான முத்திரையைக் கொண்டுள்ளது. எனினும், அது ஆதிக்கம் செலுத்தும் மதமாக இருக்கும் சமூகங்களில், வன்முறையிலிருந்து அது விடுபடவில்லை. ஒரு மதத்தில் கற்பிக்கப்படுவதும், உண்மையில் கடைப்பிடிக்கப்படுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டியதில்லை.

எனவே, ஒன்றுக்கு மேற்பட்ட மதங்கள் இருந்தால், சில பரஸ்பர கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த கருத்து வேறுபாடு சில நேரங்களில் இறையியலுடன்  மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மற்ற நேரங்களில் அது வன்முறையாக இருக்கக்கூடிய எதிர்ப்பு வடிவத்தை எடுக்கும்.  இந்திய வரலாற்றின் ஆரம்ப கால நூல்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வன்முறையை பாரம்பரியமாக கையாளுவது மற்றும் மதரீதியான வேறுபாடுகளைக் குறிக்கிறது, உதாரணமாக, சைவர்களுக்கும் கடவுள் மறுப்பு மதங்களான பவுத்தர்கள், சமணர்களுக்கு இடையிலான வேறுபாடுகள் சில சமயங்களில் வன்முறையாக வெடித்ததைக் கூறலாம். இத்தகைய வேறுபாடுகள் எழக் கூடும்தான். ஏனெனில் அரசரின் ஆதரவைப் பெறுவதற்கு அவற்றுக்கு இடையே ஒரு போட்டி உள்ளது. அதிலும் குறிப்பாக அரசர்கள் வழங்கும் பகட்டான நன்கொடைகளுக்காக. மேலும் அதிக எண்ணிக்கையில் தம்மைப் பின்தொடர்பவர்களைப் பெறுவதற்கான முயற்சிகளிலிருந்தும் போட்டி வரலாம். இது இந்தியாவுக்கு மட்டுமல்ல; ஒவ்வொரு சிக்கலான சமூகத்திற்கும் இது பொருந்தும்.

சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பான ஏழு தளங்களில் சுமார் 4,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட பீங்கான் பாத்திரங்களில் கால்நடை மற்றும் எருமை இறைச்சி உள்ளிட்ட விலங்கு பொருட்களின் எச்சங்கள் இருப்பதை ஒரு புதிய ஆய்வு சமீபத்தில் கண்டறிந்துள்ளது. மொத்தத்தில் மாட்டிறைச்சியை தடைசெய்யும் மசோதாவை கர்நாடக அரசு நிறைவேற்றும் நேரத்தில் இந்த கண்டுபிடிப்பு வெளிப்பட்டுள்ளது. ஒரு வரலாற்றாசிரியராக இந்த  ஆய்வையும் இந்த சட்டத்தையும் நீங்கள் எவ்வாறு  பார்க்கிறீர்கள்?

இந்த ஆய்வு குறித்த விவரங்களை நான் பார்க்கவில்லை. எனவே இது குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. செய்திகளில் வரும் விஷயங்களின் நம்பகத்தன்மை குறித்து ஒருவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த செய்தி அகழ்வாராய்ச்சிகளிலிருந்து பெற்றதாக இருக்கக்கூடும். எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அத்தகைய ஆதாரத்தை முதலில் தொழில்முறை ரீதியான தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆராய வேண்டும். மேலும் அதைப் பற்றி விவாதிக்கவும் கருத்துத் தெரிவிக்கவும் முன்பாக அவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டிய தேவை உள்ளது.

இந்திய சமூகம் ஒருபோதும் மாறாத, தேக்கமான ஒரு சமூகமாக இருந்ததில்லை; இப்போதும் அப்படி இல்லை. 4,600 ஆண்டு காலத்தில், நம்பிக்கை மற்றும் சமூக  நடைமுறையில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று நாம் எப்படி இருக்கிறோம், நாம் எதை செயல்படுத்துகிறோம் என்பதெல்லாம் இந்த மாற்றங்களிலிருந்து உருவானதே ஆகும். ஆகவே, நமது நல்வாழ்வை உறுதி செய்யும் என்று நாம் நம்புகின்ற விதிகளுக்கு இணங்க விரும்பினால், ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, தொலைதூர கடந்த காலத்திலிருந்தோ அல்லது சமீபத்திய கடந்த காலத்திலிருந்தோ  சட்டபூர்வமான தன்மையை நாம் தேடிக் கொண்டிருக்க மாட்டோம். இப்போது நாம் என்ன செய்கிறோம் என்பதற்கான அனுமதியைப் பெற ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பார்க்க வேண்டுமா என்பதுதான் கேள்வி. இது நிச்சயமாக தேவைப்படவில்லை. சமூகம் முன்னேறுவதற்கு மாற்றம் என்பது அடிப்படை. ஒவ்வொரு சமூகமும் அதன் விதிகளை தேவைப்படும்போதெல்லாம் மாற்றிக் கொள்கிறது. சமூக மாற்றம்  என்ற ஒன்று இருந்தால், அதற்கேற்ப சமூக விதிகளும் மாறியே ஆக வேண்டும்.

குறிப்பாக சமூகத்தின் சமூக ரீதியான வரிசைப்படுத்தலில் பதிவு செய்யப்பட்டுள்ள மாற்றங்களில் காணப்படுகிறது. எனவே, பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் ஓபிசிக்கள் [பிற பிற்படுத்தப்பட்டோர்] ஆகிய பிரிவினருக்கு சமூகத்தில் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை இன்று எழுகிறது. அவர்கள் முழு உரிமைகளைக் கொண்ட, சுதந்திரமான  குடிமக்கள். இந்நிலையில் மனு தர்ம சாஸ்திரத்தால் அவர்களுக்கு விதிக்கப்பட்டபடி கீழ்ப்படிதல் மற்றும் ஒடுக்குமுறை என்பது  தொடர்ந்து நீடிக்க முடியாது.

இதைப் போலவே, உணவுப் பழக்கவழக்கங்களைப் பற்றிய விதிகளும் கூட அவற்றுக்குக் கீழ்ப்படியுமாறு கோரப்படும் நபர்களுடன் விவாதிக்கப்பட வேண்டும்.  கடந்த காலங்களில் இவை இருந்திருக்கலாம் என்று வெறுமனே கூறி அவர்கள் மீது இதைச் சுமத்த முடியாது. கடந்த கால ஆதாரங்கள்படி மக்கள் கால்நடை-இறைச்சி சாப்பிட்டதற்கான சான்றுகள் உள்ளன. நடப்புக் காலத்தில் இது தடை செய்யப்பட வேண்டுமானால், அதற்கான வாதம் என்பது கடந்த காலத்தில் சாப்பிடவில்லை என்பதைத் தவிர வேறு ஒன்றாகவும் இருக்க வேண்டும். ஆட்சி செய்யவும் பொதுமக்களின் கருத்தின்படியும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பல்வேறு கூட்டங்களிலும் இத்தகைய தடைகள் குறித்த பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆகியவை முழுமையாக விவாதிக்கப்பட வேண்டும்.

அது நிரூபிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் சரி, அல்லது கருதப்படுகின்ற ஒன்றாக இருந்தாலும் சரி, தொலைதூர கடந்த காலத்திலிருந்து வருவதாக நம்பப்படும் ஒரு பாரம்பரியம் என்பது நிகழ்காலத்தில் புதிய ஒரு விதியை விதிக்க யாருக்கும் தானாகவே உரிமை வழங்கி விடாது. பாரம்பரியம் என்பது தொடர்ந்து கண்டுபிடிக்கப்படும் ஒன்று எனவும், அவை கடந்த காலத்திலிருந்து வந்தவை போல முன்வைக்கப்படுகின்றன என வரலாற்றாசிரியர்கள் வாதிட்டு வந்துள்ளனர். ஆனால் கண்டுபிடிப்பு என்பது தற்காலத்தின் தேவைகளிலிருந்து பெறப்பட்டது; மேலும் அதை நியாயப்படுத்தவும் பயன்படுகிறது.

இங்கே அடிப்படை கேள்வி என்னவென்றால், தற்போது விதிக்கப்பட்டுள்ள விதியானது ஒரு சமகால அரசியல் கொள்கையின் தேவைகளிலிருந்து எழுகிறதா? அல்லது அதை  பாரம்பரியம் என்று நம்பும் மக்கள் சிலர் கடைப்பிடிக்கும் உணர்வுகளின் பிரதிபலிப்பா? அனைத்து குடிமக்களின் நலனையும் உறுதி செய்யும் சூழலில் தற்போதைய கருத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதே அரசாங்கம். அதேபோல், இவ்வாறு விதிக்கப்படுபவர்களுக்கு அந்த விதிகளைப் பற்றி விவாதிக்க, உரிமை உண்டு. அதை நிராகரிப்பது என்று அவர்கள் முடிவு செய்தால் அவ்வாறே அது நிராகரிக்கப்பட வேண்டும். ஒரு ஜனநாயகம் செயல்படுவதற்கு இத்தகைய செயல்முறை மிகவும் அத்தியாவசியமானதும் கூட.

ஆரியர்களின் தோற்றம் என்பது இந்திய வரலாற்றில் விவாதத்திற்குரிய மிக முக்கியமானதொரு கேள்வி. உங்களைப் போன்ற வரலாற்றாசிரியர்கள் மத்திய ஆசிய பிராந்தியத்திலிருந்து ஆரியர்கள் இந்தியாவுக்கு குடிபெயர்ந்ததை சுட்டிக்காட்டுகின்றனர். இது ஆரியர்கள் இந்தியாவிலேயே பூர்வீகமாகத் தோன்றினார்கள் என்ற கோட்பாட்டை நிராகரிக்கிறது. சமீபத்திய டி.என்.ஏ ஆய்வுகள்  இடப்பெயர்வு குறித்த உங்களது கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்துகின்றன. இத்தகையதொரு சூழலில், உங்கள் கருத்துப்படி, ஆரம்பகால இந்தியர்கள் என்று யாரைக் குறிப்பிட முடியும்?

கடந்த 5000 ஆண்டு காலமாக உள்ள, மொழியியல், தொல்பொருள் மற்றும் மரபணு போன்ற எங்களிடம் உள்ள சான்றுகளின் அடிப்படையில் ஆராயும்போது, ​​ஆரம்பகால இந்தியர்கள் என்பவர்கள்  கலவையான, ஒரு சில மரபணு குழுக்களை அதிகம் கொண்டு உருவான ஒரு மக்கள்தொகையினர் என்பது தெளிவாகிறது. தொடக்க கால கலாச்சாரங்கள் பலவற்றுக்கும் இந்த அம்சம் பொதுவானதாகும். கலாச்சாரங்களின் முன்னேற்றத்திற்கு மக்கள், வெவ்வேறு மக்களுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்கள், தொழில்கள், மொழிகள், வாழ்க்கை முறைகள், நம்பிக்கை அமைப்புகள் போன்ற பல காரணிகளின் பரஸ்பர தொடர்பு தேவைப்படுகிறது. தனித்துவமானதொரு மக்கள் கூட்டத்தோடு தொடர்புடைய அதிநவீன கலாச்சாரங்கள் மற்றும் நாகரிகங்கள் மூலமே  தனித்துவமானதொரு கலாச்சாரமும் நாகரீகமும் தோன்றியது என்று வற்புறுத்த முயல்வதை ஒரு கனவு என்றே சித்தரிக்க முடியும்!

தமிழில்: வீ.பா.கணேசன்

கலாச்சார அரங்கில் கம்யூனிஸ்டுகளின் கடமைகள் !

(2017 அக்டோபர் 14-16 தேதிகளில் நடைபெற்ற கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த ஆவணம் இன்றைய தருணத்தில் மிகுந்த கவனம் பெறத்தக்க ஒன்றாக அமைகிறது.  எனவே அதன் முக்கியத்துவம் கருதி இதனை தொடராக வெளியிட முடிவு செய்துள்ளோம். – ஆசிரியர் குழு)

மனித இனம் தனது சமூக வாழ்வின் அனைத்து வெளிப்பாடுகளையும் உள்ளடக்கி வெளிப்படுத்துகின்ற ஒரு களமாக கலாச்சாரம் விளங்குகிறது. இசை, நடனம், ஓவியம், சிற்பம், இலக்கியம் போன்ற பல்வேறு வடிவங்களின் வழியாக கலாபூர்வமாக வெளிப்படுத்தும் ஒன்றாக மட்டுமே அது இருப்பதில்லை. இத்தகைய கலாபூர்வமான வெளிப்பாடுகளோடு கூடவே நடத்தை, கருத்து வெளியீடு, அங்க அசைவுகள் போன்ற முழுமையான வாழ்க்கையை வெளிப்படுத்துவதாகவும் கலாச்சாரம் விளங்குகிறது. எனவே, கலாச்சார அரங்கில் நமது தலையீடுகள்  மனித விடுதலைக்கான போரில் வெற்றி பெறுவதையும், மனிதர்களால் மனிதர்கள் சுரண்டப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருவதையும் நோக்கமாகக் கொண்டு எல்லா நேரங்களிலும் கருத்துப் போராட்டத்தில் நாம் இணைவதையே குறிப்பிடுகிறது.

  1. சர்வதேச அளவிலும் சரி, உள்நாட்டு அளவிலும் சரி, தற்போதைய வர்க்க சக்திகளின் பலாபலன் வலதுசாரி அரசியலுக்குச் சாதகமானதாகவே நகர்ந்துள்ளது. தங்களது விடுதலைக்காகப் போராடுகின்ற மக்கள், இடதுசாரி அரசியல் மற்றும் அனைத்து வடிவங்களிலும் முற்போக்கான, ஜனநாயகரீதியான, மதசார்பற்ற சக்திகள் ஆகியோருக்கு எதிராக மிகக் கடுமையான தத்துவார்த்த தாக்குதலையும் அது கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

1.3 சர்வதேச அளவில், உலக முதலாளித்துவத்தின் தற்போதைய தொடரும் நெருக்கடி, புதிய   தாராளவாதத்தின் செல்லுபடியாகும் வெற்றியை முற்றிலும் மறுதலிக்கிறது. இது தீவிரமான முதலாளித்துவ சுரண்டலுக்கான வேறொரு பெயரைத் தவிர வேறில்லை. எனினும், உலகளாவிய முதலாளித்துவம், தனது அதிகபட்ச இலாபத்தைப் பாதுகாப்பதற்காகவே, இந்தப் பாதையைத் தொடர்கிறது. இரக்கமற்ற வகையிலும், கண்மூடித்தனமாகவும் மனித மற்றும் இயற்கை வளங்களை சுரண்டுவதன் மூலம் கொடூரமான ‘புராதன (மூலதன) சேகரிப்பு’ என்ற செயல்முறையை அது தீவிரப்படுத்துகிறது. இது புதிய தாராளவாதத்திற்கு எதிராக வளர்ந்து வருகின்ற, முதலாளித்துவ அமைப்பிற்கே சவால் விடுமளவிற்கு திறமை வாய்ந்த, மக்களின் அதிருப்தியை சீர்குலைக்க வடிவமைக்கப்பட்ட ஒரு கருத்தியல்-கலாச்சார கட்டமைப்பை நிறுவுவதன் அடிப்படையில்  ஒரு வலதுசாரி அரசியலை நோக்கி மாறுவதை அவசியமாக்குகிறது. இவ்வாறான கட்டமைப்பிற்கு இனம், மதம், சாதி, நிறம் அல்லது மக்களைப் பிளவுபடுத்தும் வேறு எந்தவொரு அம்சத்தின் அடிப்படையிலும் வெறுப்பினை பரப்ப வேண்டியுள்ளது. இதன் விளைவாக ஏற்படும் சகிப்பின்மை, வெறுப்பு, இனவெறி போன்றவை கலாச்சாரத்தில் பிரதிபலிக்கின்றன. இது வலதுசாரி அரசியலின் ‘கலாச்சாரத்தை’ தோற்கடிக்க நாம் அணி சேர வேண்டிய கலாச்சார முன்னணியின் கருத்துப் போர் ஆகும்.

  1. தற்போதைய ஆர் எஸ் எஸ்/பாஜக தலைமையின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய அரசு இந்திய அரசியலில் தெள்ளத்தெளிவானதொரு வலதுசாரி மாற்றத்தை நிறுவனமயமாக்கி வருகிறது. இவ்வகையில் புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளும் ஊக்கம்பெற்றதொரு வகுப்புவாத ஒரு துருவ முனைப்பும் ஒன்றிணைந்து முழுமையானதொரு தாக்குதலை மேற்கொள்கின்றன.  கருத்தியல்ரீதியாக, இந்தியாவின் செறிவுமிக்க, ஒத்திசைவுமிக்க நாகரீக வரலாற்றின் இடத்தில் இந்துப் புராணங்கள், இந்து தத்துவத்துடன் கூடிய இந்திய தத்துவார்த்த பாரம்பரியங்களை நிலைநிறுத்துவதே இதன் நோக்கமாகும். நாட்டின் விடுதலைக்காக நாட்டு மக்கள் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் மூலமாக உருவான நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள நவீன இந்தியாவின் அடித்தளங்களை இது முற்றிலும் மறுதலிப்பதாக உள்ளது. புரட்சிகரமானதொரு மாற்றம் என்ற தங்களது இலக்கை வென்றடைவதை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தியாவின் வர்க்கப் போராட்டங்களின் அடித்தளமாக விளங்கும் நவீன இந்திய குடியரசினை இத்தகைய செயல்பாடுகள் நிலைகுலையச் செய்ய முயற்சிக்கின்றன.

இவ்வகையில் கலாச்சார அரங்கில் நடத்தப்படும் போராட்டங்கள் நமது காலத்தின் ஸ்தூலமான நிலைமைகளில் இந்தியாவில் நடத்தப்படும் வர்க்கப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் உள்ளடங்கியதொரு பகுதியாகவே அமைகின்றன. நமது இந்த ஆய்வின் இறுதியில் நமக்குத் தேவைப்படுவதெல்லாம் சமூக மாற்றத்திற்கான புரட்சிகர ஆயுதத்தை மேலும் கூர்மைப்படுத்துவதும், வலுப்படுத்துவதுமே ஆகும். ”கொள்கையின் கடமையும், அறிவியலின் நோக்கமும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் உண்மையான போராட்டத்திற்குச் செய்யப்படும் ஓர் உதவி என்று இங்கு வரையறுக்கப்படுவது உண்மையல்லவா?” என்று லெனின் கேட்டார். (லெனின் தொகுப்பு நூல்கள், தொகுதி 1, பக். 327-8) ‘கொள்கை’, ‘அறிவியல்’ ஆகிய இரண்டுமே கலாச்சாரத்தைப் புரிந்து கொள்வதன் ஒரு பகுதியாகவே அமைகின்றன.

1.5  மார்க்ஸ்-எங்கெல்ஸ் கூறினர்: “ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களே ஆட்சி செய்யும் கருத்துக்களாக இருக்கின்றன. அதாவது சமூகத்தின் பொருளாயத சக்தியை ஆளுகின்ற வர்க்கமே அதே நேரத்தில் அறிவுபூர்வமாக ஆளும் சக்தியாகவும் விளங்குகிறது. பொருள் உற்பத்திக்கான கருவிகளை தன் வசம் வைத்திருக்கும் வர்க்கமே மனதின் மூலமாக உற்பத்தி செய்வதையும் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் மனதின் மூலமாக உற்பத்தி செய்வதற்கான வழிவகை இல்லாதவர்களின் கருத்துக்களையும் அது தனது ஆளுகைக்குள் எடுத்துக் கொள்கிறது. ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றவற்றோடு கூடவே உணர்வையும், அதன் வழியாக சிந்தனையையும் கொண்டவர்களாக இருக்கின்றனர். எனவே ஒரு வர்க்கமாக அவர்கள் ஆட்சி செய்வதோடு, வரலாற்று ரீதியான ஒரு காலகட்டத்தின் பரப்பையும் வீச்சையும் அவர்களே தீர்மானிக்கின்றனர். இதை அவர்கள் முழுமையான வகையில் செய்கின்றனர் என்பதும் கூட தெள்ளத் தெளிவானது. எனவே மற்ற விஷயங்களோடு கூடவே அவர்கள் சிந்தனையாளர்களாக, கருத்துக்களின் உற்பத்தியாளர்களாக ஆட்சி செய்வதோடு, தங்களது காலத்திற்கான கருத்துக்களை உற்பத்தி செய்து பரப்புவதையும் ஒழுங்குபடுத்துகின்றனர். இவ்வகையில் அவர்களது கருத்துக்களே அந்த காலகட்டத்தினுடைய ஆளும் கருத்துக்களாக இருக்கின்றன. (ஜெர்மானிய தத்துவம், மாஸ்கோ, 1976, பக். 67. இங்கு வலியுறுத்தப்படும் கருத்து தனித்துக் காண்பிக்கப்பட்டுள்ளது)

1.6  ஆளும் வர்க்கங்களினது கருத்துக்களின் இந்த மேலாதிக்கமானது அரசினால் மட்டுமே அமலாக்கப்படுவதில்லை என்பதையும் அண்டோனியோ கிராம்சி விளக்குகிறார். இந்த வகையில் அரசு என்பது கோட்டைக்கு முன்னால் உள்ள ஓர் ’அகழி’ மட்டுமே. அதற்குப் பின்னால் ‘வலுவான கோட்டையும் கொத்தளங்களும்’ உள்ளன. அதாவது ஆளும் வர்க்கங்களின் மேலாதிக்கத்திற்கு உதவுகின்ற கலாச்சார நிறுவனங்களின் வலைப்பின்னலும் மதிப்பீடுகளுமே இந்தக் கோட்டையும் கொத்தளங்களும் ஆகும்.

1.7  சமூக உறவுகளின் மிகச் சிக்கலான வலைப்பின்னல், அதனைத் தொடர்ந்த சமூக கட்டமைப்புகள் ஆகியவற்றின் மூலம் இந்த மேலாதிக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களின் மேலாதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் மதிப்பீடுகளையும் கருத்தாக்கங்களையும் வடிவமைப்பதில் குடும்பம், இனக்குழு, சாதி, மதம், அவற்றின் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை தொடர்ந்து பங்களித்து வருகின்றன. இத்தகையதொரு செயல்முறையில் அவர்கள் ‘(அனைவருக்கும்) பொதுவான ஒரு கலாச்சாரம்’ என்ற மாயையை உருவாக்குகின்றனர். இந்தப் ‘பொதுக் கலாச்சாரம்’ என்பது ’இயல்பான அறிவு’ என்ற பெயரில் வர்க்க மேலாதிக்கம் பெற்ற மதிப்பீடுகளை குறிப்பிட்ட வகையில் பரவச் செய்வது என்பதைத் தவிர வேறில்லை.

1.8 கலாச்சார அரங்கில் நமது தலையீடு என்பது புரட்சிகர வர்க்கங்களால் தானாகவே ஊக்குவிக்க முடியாத, அந்தக் காலப்பகுதியின் கலாச்சாரம், மொழி, உணர்வுகள், அனுபவங்கள் ஆகியவற்றின் மூலம் புரட்சிகர இயக்கத்திற்கு ஊக்கமளிப்பதாகவே இருக்க வேண்டும். உற்பத்தி உறவுகள் மட்டுமின்றி, அரசு (அரசியல் சமூகம்), மக்கள் சமூகம் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ‘புதியதொரு கலாச்சாரத்தை’ உருவாக்குவது புரட்சிகரமான மாற்றத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அவசியமாகும். சமூகத்தின் மீதான மேலாதிக்கத்திற்கு எதிரான இத்தகைய உணர்வை உருவாக்குவதும் அவசியமாகும். கலாச்சார அரங்கில் உள்ள நமது செயல்பாட்டாளர்கள் நடைமுறை வாழ்க்கையில் தீவிரமாகப் பங்கேற்கும் அதே நேரத்தில் தற்போது நிலவும் சமூக உறவுகளை பலவீனப்படுத்த இத்தகைய மாற்று மேலாதிக்கத்தை உருவாக்க வேண்டும். இவையே கருத்துக்களை உருவாக்குவதற்கான அத்தியாவசிய அம்சங்களாக அமைகின்றன. மார்க்ஸ் ஒரு முறை கூறியது போல “ மக்களின் மனதைக் கவ்விப் பிடித்தவுடனேயே அவை ஒரு பொருளாயத சக்தியாக மாறிவிடுகின்றன.”  (கார்ல் மார்க்ஸ்- ப்ரெடரிக் எங்கெல்ஸ், தொகுப்பு நூல்கள், தொகுதி 3, பக். 182)

1.9 ஆளும் வர்க்கங்களின் ஒட்டுமொத்த மேலாதிக்கத்தையும் குறிக்கும் அறிகுறி என்ற வகையில் கலாச்சாரமானது இயல்பாகவே அறிவுஜீவிகளின் வளர்ச்சிக்கான களமாக அமைகிறது. இவ்வகையில் அவர்கள் உருவாக்கும் இந்த மேலாதிக்கத்திற்கான மாற்று என்பது மனித இருப்பு, மனித சாரம் ஆகியவற்றை முழுமையாக உள்வாங்கிய ஒன்றாகவும் அமைகிறது.

உணர்ச்சிமிக்க ஒப்புதல், உணர்வுகள், நடத்தை, இன்பம், எழில்மிகு உருவாக்கங்களின் பல்வேறு தோற்றங்கள் ஆகியவற்றின் மூலம் இயற்கையோடும், சக மனிதர்களோடுமான ஊடாடலின் விளைவாக ஏற்படும் மனிதர்களின் மனநிறைவு பல்வேறு வகையில் வெளிப்படுகின்றது. ‘மாற்று கலாச்சாரத்தின்’ உள்ளார்ந்த அம்சங்களை முன்வைப்பதன் மூலம் ஆளும் வர்க்கத்தின் மேலாதிக்கத்தால் உருவாக்கப்பட்ட  அறிவார்ந்த ‘நோக்கங்களை’ மறுப்பதை உள்ளடக்கியதாகவும் இந்த மனநிறைவின் பல்வேறு வகைகள் அமைகின்றன. இதன் மூலம் மேலாதிக்கத்திற்கான மாற்று கட்டமைப்புகளை கலாச்சார செயல்பாட்டாளர்கள் உருவாக்குகின்றனர்.

இத்தகைய ஒப்புதல்களின் முழுமையான தன்மை, அதாவது மனிதர்களின் மன நிறைவு குறித்த பல்வேறு வகைகளின் முழுமையான தன்மை, படைப்புச் செயலின் அனைத்து வடிவங்களிலும் வெளிப்படுகிறது. அதன் மூலமாக, புரட்சிகர இயக்கத்தின் ‘மாற்று கலாச்சாரம்’ என்று நாம் அழைக்கக் கூடிய ஒன்றை வடிவமைக்கிறது.

1.10  இத்தகைய கலாச்சாரமானது எப்போதும் இருப்பின் பொருளாயத நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும். உற்பத்தி, நுகர்வு ஆகியவை பற்றி எழுதுகையில் மார்க்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ”உற்பத்தியானது தேவைக்கு உகந்த வகையில் ஒரு பொருளை வழங்குவது மட்டுமின்றி, பொருளுக்கான தேவையையும் வழங்குகிறது. நுகர்வானது அதன் இயற்கையான செப்பமிடாத நிலை மற்றும் உடனடித் தன்மை ஆகிய தொடக்க நிலையில் இருந்து வெளிப்படும்போது – அது இந்த நிலையிலேயே நீடிக்குமானால், உற்பத்தியே அசைவற்றுப் போகுமானால் இத்தகைய நிலை ஏற்படும் – அந்தப் பொருளினால் உந்தப்பட்டதாக மாறிவிடுகிறது. நுகர்வானது ஒரு பொருளுக்கான தேவையை உணர்வதென்ற வகையில் அதன் உள்ளுணர்வால் உருவாக்கப்படுவதாகும். மற்றெந்தப் பொருளைப் போலவே கலையின் நோக்கமும் கலையை உணர்கின்ற, அதன் அழகை அனுபவிக்கின்ற மக்களை உருவாக்குவதாகும்.  இவ்வாறு உற்பத்தி என்பது மக்களுக்கான ஒரு பொருளை உருவாக்குவது மட்டுமல்ல; ஒரு பொருளுக்கான மக்களை உருவாக்கவும் செய்கிறது. இவ்வகையில் உற்பத்தியானது (1) அதற்கான பொருளை உருவாக்குவதன் மூலமும் (2) நுகர்வுத் தன்மையை தீர்மானிப்பதன் மூலமும் (3) நுகர்வோர் அதன் தேவையை உணர்ந்த வகையில் தொடக்கத்தில் நோக்கங்களாக முன்வைக்கப்பட்டு பின்பு பொருட்களாக உருவாக்குவதன் மூலமும் நுகர்வை உருவாக்குகிறது. இவ்வாறு அது நுகர்விற்கான பொருளையும், நுகர்வுத்தன்மையையும், நுகர்விற்கான நோக்கத்தையும் உருவாக்குகிறது.” (க்ரண்ட்ரைஸ், பக். 92) பொருள் உற்பத்தியைப் போன்றே அறிவுசார் உற்பத்திக்கும் இது பொருந்துவதாகும்.

1.11 ஆளும் வர்க்கக் கலாச்சார மேலாதிக்கத் தளத்தில் உருவாக்கப்படும் மிகப்பெரும் விஷயங்களிடையே, வெளிப்படையாக தோற்றமளிக்காவிடினும், இந்திய அரசியலில் இந்த வலதுசாரி மாற்றத்திற்கான, ‘இந்துத்துவா’ கலாச்சார அம்சங்களைக் கொண்ட பொருட்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இன்றைய இந்தியப் பின்னணியில் இது நம் கவனத்திற்கு உரியதாகும்.

1.12  நவீனமும் நவீனத் தன்மையும்: சமத்துவ உணர்வு, மற்றவர்கள் மீதான கரிசனம் ஆகியவை நவீன சமூகத்தில் கலாச்சாரத்தினை வரையறுக்கும் ஒரு பண்பாகக் கருதப்படுகிறது. எனினும் ஒரு நவீன சமூகத்தில் உண்மையில் அனைவரும் சமமானவர்களாக இருப்பதில்லை. இருந்தபோதிலும், மக்களிடையே பல்வேறு வகையான வேற்றுமைகள் நிலவிய போதிலும், சமத்துவத்திற்கான ஓர் அடிக்கோடு இருக்க வேண்டும் என்று நவீன சமூகம் கோருகிறது. இதன் மூலம் மக்கள் கண்ணியத்தோடு வாழ முடியும் என்பதோடு, தங்களது இருப்பு நிலைகளை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் உண்மையாகவே பயன்படுத்திக் கொள்ள முடியும். சமத்துவத்தின் இந்த அடித்தளத்தின்மீதுதான் இதர வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் சேர்த்துக் கொள்ளப்பட முடியும். எனினும் இத்தகைய அடிப்படையான சமத்துவத்திற்காக எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது. ஏனெனில், நவீன சமூகங்களில் இதன் அடிப்படையிலேயே குடியுரிமை என்பது கோரப்படுகிறது. நிலப்பிரபுத்துவ அமைப்பில் அரசர்களும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்த மக்களும் இருந்தார்களே தவிர, குடிமக்கள் இருக்கவில்லை.

‘மேற்கத்திய மயமாக்கல்’ என்பதற்குப் பதிலாக, ‘மேற்கத்திய நச்சுமயமாக்கல்’ என்றதொரு சொற்றொடரை ஈரானைச் சேர்ந்த ஓர் அறிவுஜீவி உருவாக்கினார். புகழ்பெற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் ஆடம்பர ஆடை, மிக முன்னேறிய கருவிகள் ஆகியவற்றை பணக்காரர்கள் மற்றவர்களுக்கு முன்பாக காட்டிக் கொண்டிருப்பதைக் குறிக்கும் வகையிலேயே அவர் அதைக் குறிப்பிட்டார். இந்தியாவைப் பொறுத்த வரையில் இதை நவீனம், நவீனத்தன்மை என்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாம். சமீப காலத்தில் உருவாக்கப்பட்ட பொருட்கள், கருவிகள் ஆகியவற்றை நுகர்வோருக்காக காட்சிப்படுத்துவதில் அதீத ஆர்வம் காட்டுவது நவீனத்திற்கு இணையானதாகக் கருதப்படுகிறது. ஜி-20 நாடுகள் கூட்டத்தின் உயர்ந்த மேடைகளில் அமர்ந்து உலக வல்லரசு நாடுகளின் தலைவர்களின் தோள்களை உரசுவதே ‘பொருளாதாரத்தில் உயர்ந்து வரும் நாடு’ என்ற இந்தியாவின் முத்திரையாக இது மாறியுள்ளது. இந்திய மண்ணில் எப்போதுமே காலடி எடுத்து வைத்திராத வெளிநாடுவாழ் இந்தியர்கள் உள்ளிட்டு, நமது சமூகத்தின் மிக ‘நவீனமான’ பிரிவினர் எவ்வாறு தங்களது உட்பிரிவு சாதியிலேயே மணப்பெண்/ மணமகன் வேண்டும் என்று கோரி வருகிறார்கள் என்பதையும் திருமணம் தொடர்பான விளம்பரங்களை மேலோட்டமாகப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். இது நவீன நச்சுத் தன்மையின் கலாச்சாரமே தவிர நவீனம் அல்ல. வலதுசாரி அரசியலை நோக்கிய இந்த மாற்றத்தை இது மிக அழகாக மறைக்கிறது.

நவீனத்தை நோக்கிய இந்தியாவின் பயணமானது சாதி அடிப்படையிலான சமூக ஒடுக்குமுறை, ஆணாதிக்க சமூக அமைப்பு, வன்முறை கொண்டு சாதியை நிலைநிறுத்தும் காப் பஞ்சாயத்துகள், மதரீதியான சிறுபான்மையினரை சமமற்ற வகையில் நடத்துவது போன்ற கடந்தகால சமூக நிறுவனங்களின் கொடுமைகள் தொடர்ந்து நீடித்து நிற்கும் தன்மையாலேயே அவை தடுத்து நிறுத்தப்படுவதில்லை. நவீன தாராளவாத  நுகர்வுக் கலாச்சாரம், பெண்களை மனிதர்களாக மதிக்காமல் அவர்களை காட்சிப் பொருளாக, அடக்கி ஆளப்பட வேண்டியவர்களாக, சுரண்டப்பட வேண்டியவர்களாக நடத்துவது ஆகியவற்றின் மூலம் இவை நிலைநிறுத்தப்படுவதோடு, மூடி மறைக்கவும் படுகிறது. நமது தேர்தல் அமைப்பில் உள்ளார்ந்த வகையில் பொதிந்து கிடக்கும் பரவலான சந்தர்ப்பவாதத்தின் மூலமாகவும் இது மேலும் வலுப்படுத்தப்படுகிறது. தேர்தல் வெற்றிகளுக்காக நமது சமூக அமைப்பில் நிலவும் இத்தகைய அநீதியான, சமத்துவமற்ற அம்சங்கள் அனைத்தும் புத்துயிர் ஊட்டப்படுகின்றன. இவ்வாறு நவீனமான, நாகரீகமான ஆடைகளை அணிந்தபடி, மிக நவீனமான கருவிகளை கையில் ஏந்தியபடி நம்மிடையே உலாவரும் நபர்கள் நவீன ஜனநாயகத்திற்கு முற்றிலும் பொருத்தமற்றது என தூக்கியெறிய வேண்டிய இந்த நடைமுறைகள் அனைத்திலும் ஈடுபட்டு வருவது எவ்வகையிலும் முரண்பட்ட ஒன்றாகவே தோன்றுகிறது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உறுதியளித்துள்ளபடி சாதி, மதம் அல்லது பாலினம் என்ற எவ்வித வேறுபாடுமின்றி, அனைத்துக் குடிமக்களுக்கும் சம உரிமை என்பதாகவே நவீனத்துவம் வரையறுக்கப்படுகிறது. இவ்வகையில் புரட்சிகர இயக்கத்தின் மேலாதிக்கத்திற்கான மாற்றை நிலைநிறுத்துவதற்குத் தவிர்க்கவியலாத ஒரு கலாச்சார கூறாகவும் அது அமைகிறது.

1.13 கலாச்சார தொழில்: இந்த நவீன தாராளவாத சீர்திருத்தங்கள் செல்வம் மற்றும் சொத்துக்களின் மிகப்பெரும் செறிவோடு கூடவே ஒரு கலாச்சார தொழிலின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது. உலகளவில், தகவல், தகவல்தொடர்பு, பொழுதுபோக்கு ஆகிய பெருநிறுவனங்களின் இணைப்பானது ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கான பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பெரும்பகுதியை கட்டுப்படுத்தி, உலகளாவிய தனித்ததொரு கலாச்சார சந்தையாக உலகத்தை மாற்றுவதற்கும் முயற்சிக்கிறது.

இத்தகையதொரு செயல்முறையை விரும்புகின்ற கலாச்சார மேலாதிக்கமானது மக்களின் ரசனையை ஒரே மாதிரியானதாக உருவாக்க வேண்டியதன் தேவையையும் வெளிப்படுத்துகிறது. இந்த ரசனையானது எந்த அளவிற்கு ஒரே மாதிரியானதாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு பெருமளவிலான மக்களுக்கான கலாச்சார பொருட்களை இயந்திரகதியாக மறு உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பங்களை வளர்த்தெடுப்பதும் எளிதாகிறது. மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலும் கல்வியறிவின்மை பரவலாக இருந்தபோதிலும் வால்ட் டிஸ்னியின் கார்ட்டூன் சித்திரங்கள் குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமான ஒன்றாக இருக்கின்றன. (ஆப்ரிக்காவின் சஹாரா உட்புற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இதை உறுதி செய்துள்ளன) வர்க்க மேலாதிக்கம் என்ற கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, நவீன தாராளவாதத்தின் கலாச்சாரமானது அன்றாட வாழ்க்கையின் உண்மையான நிலைமைகளில் இருந்து மக்களை பிரித்து வைக்க முயல்கிறது. கலாச்சாரமானது இங்கு அழகியலைக் கோருவதாக இல்லாமல், வறுமை, துயரம் ஆகிய பிரச்சனைகளில் இருந்து மக்களை திசைதிருப்புவதாக, மடைமாற்றுவதாகவே செயல்படுகிறது.

இதன் விளைவாக, தங்களது இந்த துன்பகரமான வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கான போராட்டத்தை மக்கள் மேற்கொள்வதற்கான உந்துதலை சீர்குலைக்கவே அது முயற்சிக்கிறது. மைக்கேல் பாரெண்டி கூறுகிறார்: “ நமது கலாச்சாரத்தின் பெரும்பகுதியானது ‘மக்கள் கலாச்சாரம்’, ‘பிரபலமான கலாச்சாரம்’ என்று மிகப் பொருத்தமாகவே இப்போது பெயரிடப்பட்டுள்ளது. மிகப்பெரும் நிறுவனங்களுக்குச் சொந்தமான, அவற்றால் நடத்தப்படுகின்ற ‘ஊடக கலாச்சார’த்தின் முக்கிய நோக்கம் என்பது செல்வத்தைப் பெருக்குவது, தங்களது உரிமையாளர்களை பாதுகாக்கும் வகையில் உலகத்தை நிலைநிறுத்துவது என்பதே ஆகும். இவர்களின் நோக்கம், பயன் மதிப்பு என்பதற்கு பதிலாக பரிமாற்ற மதிப்பாகவும், சமூக ரீதியான படைப்பூக்கம் என்பதற்கு பதிலாக சமூகக் கட்டுப்பாடு என்பதாகவே இருக்கிறது. வாழ்க்கையின் பெரும் யதார்த்தங்கள் குறித்து சிந்திப்பதில் இருந்து நம்மை திசைதிருப்பும் வகையிலேயே பெரும்பாலான வெகுஜன கலாச்சாரம் என்பது ஒழுங்கபடுத்தப்பட்டுள்ளது. உடனடி தேவையான, ஊட்டமளிக்கக் கூடிய விஷயங்களை ஒதுக்கித் தள்ளுவதாகவே பொழுதுபோக்கு கலாச்சாரத்தின் வீக்கமும் குப்பைகளும் உள்ளன. மக்களின் அடிமட்ட ரசனையை தொடர்ந்து தூண்டி விடுவதன் மூலம், பரபரப்பு மிக்க வெகுஜன கலாச்சாரமானது பொதுமக்களின் ரசனையை மேலும் கீழிறக்கி விடுகிறது.  இதன் விளைவாக, மக்களின் ரசனையானது கலாச்சார ரீதியான குப்பைகள், பெரும் பரபரப்பு, அதிர்ச்சியூட்டும்படியான, மிக கவர்ச்சிகரமான, மிகுந்த வன்முறை நிரம்பிய, உடனடியாக உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய, பெரும்பாலும் மேம்போக்கான விஷயங்களையே முன்வைக்க விரும்புவதாகவும் மாறியுள்ளது.

”இத்தகைய விஷயங்கள்தான் பெரும்பாலான நேரங்களில் அதன் உண்மையான தத்துவார்த்த உள்ளடக்கமாக இருக்கின்றன. அதன் நோக்கம் அரசியல்நோக்கம் அற்றதாக இருந்தபோதிலும் கூட, பொழுதுபோக்கு கலாச்சாரமானது ( உண்மையில் அது பொழுதுபோக்குத் தொழிலே ஆகும்) அதன் தாக்கத்தில் அரசியல்தன்மை கொண்டதாகவும், கீழ்த்தரமான பாலியல் மதிப்பீடுகள், இனவெறி, நுகர்வுக் கலாச்சாரம், எதேச்சாதிகார உணர்வு கொண்ட, ராணுவ வெறிபிடித்த, ஏகாதிபத்தியத் தன்மை கொண்ட சித்திரங்களையும் மதிப்பீடுகளையுமே பிரச்சாரம் செய்கிறது.” ( மன்த்லி ரிவ்யூ, பிப்ரவரி 1999)

1.14  இவ்வகையில் நவீன தாராளவாதமும் வகுப்புவாதமும் உள்நாட்டளவில் பொது ரசனையை ஒரே மாதிரியாக மாற்ற முயல்கின்றன. கலாச்சார மேலாதிக்கத்தை வலுப்படுத்தவும், அதீதமான லாபத்தை ஈட்டவும் நவீன தாராளவாதம் செயல்படுகிறது. இதனோடு கூடவே, ஆர் எஸ் எஸ் ஸின் இலக்கான ‘இந்து ராஷ்ட்ரா’ என்ற மிக மோசமான, சகிப்புத்தன்மையற்றதொரு பாசிஸ அரசை நிறுவுவதற்கான பாதையை வகுப்புவாதம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ’ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே கலாச்சாரம்’ என்ற அதன் கோஷமானது இந்தியாவின் வளமான, செறிவான பன்முகக் கலாச்சாரத்தின் அடிப்படைகளையே  மறுதலித்து, இத்தகைய ஒருமுகப்படுத்தலின் மூலமே உண்மையான அந்தஸ்தையும் பொருளையும் அடைய முடியும். மேலும் புதிய தாராளவாதம், வகுப்புவாதம் ஆகிய இரண்டுமே அன்றாடப் பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவும், அதிலும் முக்கியமாக, தற்போது நிலவுகின்ற சுரண்டல்மிக்க அமைப்பிற்கு எதிரான அவர்களது போராட்டத்தை பலவீனப்படுத்தவுமே முயல்கின்றன.

1.15 இவ்வகையில் தொழிலாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களின் ‘மாற்று மேலாதிக்கத்தை’ நிறுவுவதற்கான போராட்டங்களுக்கு மக்கள் பிரச்சனைகளுக்கான கலாச்சார நிகழ்ச்சிநிரலை மீண்டும் கொண்டுவர வேண்டிய தேவை உள்ளது. இவற்றை நமது பார்வையிலிருந்து மறைத்து, அழிப்பதே புதிய தாராளவாதம் மற்றும் வகுப்புவாத கலாச்சாரத்தின் அடிப்படை இயல்பாக உள்ளது. இதுவே கலாச்சார அரங்கில் நமது கடமைகளின் அடிப்படையான நோக்கமாக அமையும்.

4.1. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கட்சி உறுப்பினர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வரும் கலாச்சாரக் குழுக்கள், அரங்கங்கள், மேடைகள், சங்கங்கள் ஆகியவை தங்களது செயல்பாடுகளில் மிக விரிவான அளவில் கலைஞர்களையும், கலாச்சார செயல்பாட்டாளர்களையும், அறிவுஜீவிகளையும் ஈடுபடுத்த வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளில் படைப்பூக்கமும், தனிச்சிறப்பான தன்மையும் ஈர்த்தெடுக்கப்பட வேண்டும். இதற்கான நமது அணுகுமுறை என்பது விரிவானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், பாரபட்சமற்றதாகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட,  ஜனநாயக ரீதியான, முற்போக்கான, மதசார்பற்ற மதிப்பீடுகளின் மீது பற்றுறுதி கொண்டுள்ள கலைஞர்கள் அல்லது அறிவுஜீவிகளுக்கு கலாச்சார செயல்பாடுகளில் பங்கேற்க நமது மேடையில் விரிவான அளவில் இடம் தர வேண்டியதும் அவசியமாகும். நம்மோடு இணைந்து செயல்படும் கலாச்சார அமைப்புகளின் தலைமைப் பொறுப்புகளில் கட்சி சார்பற்ற கலைஞர்களை உணர்வுபூர்வமாக ஊக்கப்படுத்த வேண்டும்.

4.2.  வெகுஜன, வர்க்க அமைப்புகள் ஜனநாயகபூர்வமாகவும், சுயேச்சையாகவும் செயல்படுவதன் முக்கியத்துவத்தை சால்கியா, கொல்கத்தா பிளீனங்கள் வலியுறுத்தி வந்துள்ளன. கலாச்சார அமைப்புகளின் விஷயத்தில் இந்த அம்சம் மேலும் முக்கியமான ஒன்றாக இருப்பதோடு, அவற்றுக்கு கணிசமான அளவிற்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும். இந்தக் கலாச்சார அமைப்புகளை கட்சியோடு ஒட்டிக் கொண்டிருக்கும் உறுப்புகளாகப் பார்க்கலாகாது. கட்சி முழுமையும், அதைப் போன்றே  அதன் வர்க்க, வெகுஜன அமைப்புகளும் சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் கலாச்சார ரீதியான தலையீட்டினை அங்கீகரிப்பதன் மூலமே, இந்த விஷயத்தில் சரியானதொரு அணுகுமுறையை உருவாக்க முடியும். கலாச்சார அமைப்புகளுக்கு உள்ளேயும் கூட சுதந்திரமான, விமர்சனபூர்வமான சிந்தனைக்கு ஊக்கம் தருவதை உறுதிப்படுத்த வேண்டும். இதை உறுதிப்படுத்துவதன் மூலம் மட்டுமே கலாச்சாரத் தளத்தில் இளமையான, புதுமையான தலைமையை நம்மால் வளர்த்தெடுக்க முடியும். அமைப்பின் அனைத்து மட்டங்களிலும் சிறுபான்மையினர் உள்ளிட்டு, தலித்கள், பழங்குடிகள் மற்றும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள, நலிந்த குழுக்களையும் இனங்களையும் சேர்ந்த கலைஞர்கள், பெண்கள் ஆகியோர் தீவிரமாகச் செயல்படுவதற்கு ஊக்கம் அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு தலைமைப் பொறுப்புகளும் வழங்கப்பட வேண்டும்.

4.3. கலாச்சாரம் என்பது கலாச்சார அமைப்புகள் மட்டுமே செயல்படுகின்ற ஒரு களம் அல்ல. கட்சி உறுப்பினர்கள் வேலை செய்யும் வெகுஜன, வர்க்க அரங்கங்களும் கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் விரிவான கலாச்சார சமூகத்தை ஈடுபடுத்துவது முக்கியம். எனினும், அவர்கள் எதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதிலும், நமது  பிரச்சாரங்களில் அவர்களை கவர்ந்திழுக்க முயற்சிக்கும்போது அவர்கள் எந்த நடவடிக்கைகளில் சிறந்தவர்கள் என்பதை அளவிடுவதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல், இந்த ஈடுபாடு தேர்தல் அரசியலுக்கு மட்டுமே ஆனதாகவும் மட்டுப்படுத்தப்படக்கூடாது. சாத்தியமான இடங்களில், வகுப்புவாத அல்லது சமூக விரோதக் குழுக்களால் ஆதிக்கம் செலுத்தப்படாத, தற்போது செயல்பட்டு வரும் கலாச்சார அமைப்புகளில் நமது தோழர்கள் நுழைந்து பணியாற்ற வேண்டும். இது அவர்களுக்கு ஒரு முற்போக்கான, மதச்சார்பற்ற, ஜனநாயக பூர்வமான திசைவழியை  காட்ட முயற்சிப்பதாக அமையும்.

4.4. ஒரு கலைஞரின் அகநிலைப்பட்ட, தனிப்பட்ட பார்வைகள் குறித்த நமது எதிர்வினையை அந்தக் கலைஞரது படைப்பு குறித்த புறநிலை மதிப்பீட்டில் இருந்து நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். நமது செயல்பாட்டாளர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதன் மூலமும், சமூகத்தில் நடக்கும் பல்வேறு வகையான கலாச்சார முயற்சிகளில் ஈடுபடுவதன் மூலமும் மட்டுமே, நமது இலக்கை நோக்கி நகர்வதற்கு எது உதவக்கூடும் என்பதை வரையறுக்கவும், மதிப்பீடு செய்யவும் முடியும். கருத்து சுதந்திரம், முற்போக்கான முயற்சிகளை அனுமதிக்கும் ஆக்கபூர்வமான மற்றும் தகவல் தொடர்பு தளங்களை நாம் இப்போது எங்கே காண முடியும்? இலாப நோக்கத்தினால் அல்லது சமூக/மத பழமைவாதத்தினால் இவை எங்கே முழுமையாக உள்வாங்கப்பட்டு சிதைக்கப்பட்டன? நமது போராட்டங்களை வலுப்படுத்தும் ஆதாரங்களுக்கான இந்தத் தேடலில் கடுமையான முன்முடிபுகளால் நாம் கட்டுண்டு விடமுடியாது. எனினும் நாம் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில்தான் இந்தச் சோதனை அமைய வேண்டும்.

4.5. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மதச்சார்பற்ற, ஜனநாயக பூர்வமான கலாச்சார அமைப்புகள் பல  உள்ளன. ஒரு மாநிலத்திற்கு உள்ளேயும் கூட, நம்மிடம் பல முற்போக்கான, மதச்சார்பற்ற கலாச்சார அமைப்புகள், தனிநபர்கள் ஆகியோர் பல்வேறு கலை வடிவங்களில் செயல்பட்டு வருகின்றனர். அதில் நமது கட்சி உறுப்பினர்களும் கூட தீவிரமாகச் செயல்பட்டு வரலாம். நம்மால் முடிந்தவரை இவற்றோடு மிகப்பெரிய ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை உருவாக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். இந்த நோக்கத்திற்காக, கலாச்சார மாநாடுகள் அல்லது கூட்டங்கள், திருவிழாக்கள், பட்டறைகள், கருத்தரங்குகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்கான சாத்தியக் கூறுகளையும் நாம் ஆராய வேண்டும். மாநிலங்களுக்கு இடையேயான சமூக ஊடகக் குழுக்கள் இருப்பதற்கான சாத்தியத்தையும் நாம் ஆராய வேண்டும். உடனடி பிரச்சினைகளுக்கும், குறிப்பாக தணிக்கை மற்றும் கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல்களின் போது விரைவாகவும், ஒருங்கிணைந்த முறையிலும் பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ள இது உதவும்.

5.0 மேலே விவரிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த அணுகுமுறையோடு கூடவே, கலாச்சார அரங்கில் நம் முன்னே உள்ள முக்கிய பணிகளாவன:

5.1. தொடர்ச்சியான சுய ஆய்வு மற்றும் சுயவிமர்சனம் மூலம் நமது நடத்தை, தினசரி நடைமுறைகளில் ஒரு தரத்தை முன்னிறுத்துவது என்பது, கிராமப்புற, நகர்ப்புற இந்தியாவின் உழைக்கும் மக்களை உள்ளடக்கிய நமது அடிப்படை வர்க்கத்தினருடன் தகவல் தொடர்பு கொள்ளவும் அவர்களின் நம்பிக்கையை வெல்லவும் உதவும்.

5.2 வெறுமனே அது ஒரு ‘கலை’ என்பதாக அல்லாமல், மாறாக மக்களின் ‘வாழ்ந்த வாழ்க்கை’ என்ற வகையில் கலாச்சாரத் துறையினை அதன் முழுமைத் தன்மையோடு காண வேண்டும். நமது பேச்சு முறை, நம் உணவின் சுவைகள், நம் ஆடைகளின் நிறங்கள் மற்றும் அவை வெட்டப்படும் முறை மற்றும் வேறு பல விஷயங்களும் மக்களின் சாதாரண, அன்றாட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி வடிவமைந்ததாக இந்தக் கலாச்சார காரணிகள் அமைகின்றன. இந்த காரணத்தினாலேதான், கலாச்சார ரீதியான தலையீடுகளில் இருந்து நம் கவனத்தை மாற்ற வேண்டும். அதாவது, ஒரு கருத்தினை வெளிப்படுத்தவும், கலாச்சாரத்தில் தலையீடுகளை மேற்கொள்ளவும், இசைக்கருவியைப் பயன்படுத்தும் ஒரு கலைஞர் கலையை ‘பயன்’படுத்துகிறார். அதாவது, அன்றாட வாழ்வில், நடைமுறையில் முற்போக்கான, மதச்சார்பற்ற, ஜனநாயக கருத்துக்களை  வடிவமைக்க வேண்டும். அன்றாட வாழ்க்கையிலும் சமூகத்திலும் அமைப்புகளிலும் குடும்பத்திலும் அவை எவ்வாறு ஒழுங்கமைக்கப்படுகிறது என்பதன் மூலமாகவும் இவை வெளிப்படுகின்றன.

5.3. மதச்சார்பற்ற ஜனநாயக கலாச்சார மரபுகளுக்கான சமூக களத்தை நாம் மீட்டெடுக்க வேண்டுமெனில், நம் நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தும்  மேலாதிக்கங்களை எதிர்த்த முற்போக்கு சிந்தனை போக்குகள், காலனியத்திற்கு எதிரான சிந்தனை மரபுகள், இவற்றோடு கூடவே மக்களுக்கு உயிரோட்டமான வகையில் செய்திகளை எடுத்துச் செல்லும் செவ்வியல், நவீன, நாட்டுப்புற கலை வடிவங்களை உருவாக்குவோரைப் பற்றியும், மார்க்சிய சிந்தனையின் வரலாறு மற்றும் சோஷலிசத்தை நோக்கி முன்னேறும் புரட்சிகர இயக்கங்கள் ஆகியவை பற்றியும் அறிந்தவர்களாகவும் நாம் இருக்க வேண்டும். கூடவே, இந்த அறிவை பயன்படுத்திய வகையில் கலாச்சாரத்தில் ஓர் இறை தத்துவம், எதேச்சாதிகாரப் போக்கு, குழுவாதப் போக்கு ஆகியவற்றையும் எதிர்த்துப் போராட வேண்டும்.

5.4. கலாச்சார தேசியம் என்ற பெயரிலோ அல்லது ‘மத ரீதியான உணர்வு’ என்ற பெயரிலோ அல்லது ‘சாதிய உயர்தன்மை’ என்ற பெயரிலோ வகுப்புவாத சக்திகள் முன்வைக்கின்ற  சகிப்புத்தன்மையற்ற அனைத்து வடிவங்களையும் எதிர்த்துப் போராட வேண்டும். மக்களின் கலாச்சார நடைமுறைகளில் மொழிரீதியான, இனரீதியான, பிராந்திய அடிப்படையிலான  பன்முகத்தன்மையை அங்கீகரித்து ஊக்குவிக்க வேண்டும். இத்தகைய மாறுபட்ட சிந்தனையை கடைப்பிடிப்பவர்களிடையே நல்ல தொடர்புகளையும் கருத்துப் பரிமாற்றங்களையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய பன்முகத் தன்மை கொண்ட பாரம்பரியங்களை பிரதிபலிக்கும் சிந்தனையாளர்கள், கலைஞர்கள் ஆகியோர் மீதான தாக்குதல்கள் எழும்போது அவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும்.

5.5. பழமைவாதம், மதவெறி, மூடநம்பிக்கை, பகுத்தறிவின்மை ஆகியவற்றை எதிர்ப்பது; பொதுக் கல்வி முறை, அறிவியல், அறிவு சார்ந்த, கலாச்சார நிறுவனங்களின் சுயாட்சி ஆகியவற்றைப் பாதுகாப்பது; உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் மீதான தாக்குதல்களை எதிர்ப்பது; நமது வரலாறு மற்றும் சுதந்திரப் போராட்டத்தின் பகுத்தறிவு, ஒத்திசைவு மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியின் மதச்சார்பற்ற மரபுகளை பாதுகாப்பது.

5.6. உணர்வுபூர்வமான உதவி,   ஆழமான மக்களின் ஆழமான நம்பிக்கைக்கான தேவையை, பல்வேறு மதங்களைச் சேர்ந்த  ‘மத’ நிறுவனங்களும் ஆன்மீகத் தலைவர்களும்  தங்களது பெரும் வணிக நலன்களுக்காக, பகுத்தறிவின்மை, மூடநம்பிக்கை பிரச்சாரம் போன்றவற்றைப் பயன்படுத்துவதோடு, அவர்களைப் பின்பற்றுபவர்களிடையே பிரிவினைவாத உணர்வு,  வகுப்புவாதம் ஆகியவற்றையும் விதைக்கின்றனர். இந்நிலையில் மக்களின் துன்பங்களுக்குக் காரணமாக உள்ள பரந்துபட்ட சுரண்டலுக்கு எதிராகவும் கிளர்ந்தெழுவது.

5.7. பல வழிபாட்டுத் தலங்களிலும் வகுப்புவாத, தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு நடைபெறும் திருவிழா செயல்பாடுகள் மீது மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கமுடைய வகுப்புவாத பிளவுப் பிரச்சாரம் ஆதிக்கம் செலுத்துகிறது. ஒவ்வொரு இடத்திலும் நிலவும் ஸ்தூலமான சூழ்நிலையைப் பொறுத்து, நமது செயல்பாட்டாளர்களின் தலையீட்டின் மூலம் சாத்தியமான அளவில் இதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

5.8. பொருளாதார ரீதியிலான சுரண்டல் மட்டுமின்றி, சாதி, பாலினம் போன்றவற்றின் அடிப்படையிலான சமூகச் சுரண்டலுக்கும் இடமில்லாத, மனித சமுதாயத்தின் சமத்துவமான எதிர்காலத்தை எதிர்நோக்கிய, ஆக்கப்பூர்வமான முயற்சிகளை ஆதரித்து நிற்பது.

5.9. உழைக்கும் மக்களின் பாரம்பரிய கலை வடிவங்களை ஆதரித்து நிற்பது; (பொம்மலாட்டக்காரர்கள், சுருள் சீலைகளில் கதைகளை ஓவியமாக வழங்கும் ஓவிய கலைஞர்கள், கிராமப்புற,  நகர்ப்புற தெரு கலைஞர்கள், கிராமப்புற உடற்பயிற்சி வல்லுநர்கள் போன்ற) இந்த கலை வடிவங்களின் கண்ணியம் மற்றும் அவற்றின் மதிப்பை மக்கள் சமூகம் அங்கீகரிப்பதற்காக உழைப்பது; இவற்றில் பல கலை வடிவங்களும், மக்களின் சொந்த படைப்பாற்றலை உள்ளடக்கியதாக இருப்பதோடு, அவர்களுக்கு வாழ்வாதாரத்தையும் வழங்குகின்றன. இந்தக் கலைகள் இப்போது பெரிய மத நிறுவனங்கள்/பெரிய வணிக நிறுவனங்களால் முழுமையாக உள்வாங்கப்பட்டு வருகின்றன; அல்லது அழிக்கப்படுகின்றன. இதனால் அவர்களின் உண்மையான பயிற்சியாளர்கள், புரவலர்கள், பயனாளிகள், நுகர்வோர் ஆகிய உழைக்கும் மக்கள் கலாச்சார இடைவெளியை எதிர்கொள்கின்றனர்; இந்த கலைஞர்கள் தங்கள் படைப்பாற்றலுடன் மக்களுக்கு சேவை செய்யும் வகையில் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

5.10. (பொருளாதார, அரசியல், சாதி அடிப்படையிலான, பாலின அடிப்படையிலான, சிறுபான்மையினருக்கு எதிரானவை போன்ற) குறிப்பான அடக்குமுறை அல்லது அநீதியான  நிகழ்வுகளுக்கு எதிராக (அறிவுஜீவிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், சமூக ஊடக பயனர்கள் போன்ற) கலாச்சார சக்திகளை அணிதிரட்டுவது. இதன் மூலம் அவர்கள் மக்களையும் சமுதாயத்தையும் பாதுகாப்பதில் தங்கள் சிறப்புத் திறன்களை புதுமையான, ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்தலாம்.

5.11. கட்டற்ற நுகர்ச்சி, தனிப்பட்ட மகிழ்ச்சியை மட்டுமே விரும்புவதைத் தூண்டி கலாச்சார மதிப்புகளை பண்டமாக்குவதை எதிர்ப்பது; பண்டமாக்கல் என்பது இன்று அனைத்து கலாச்சார தயாரிப்புகளும் சந்தையின் மூலம் மத்தியஸ்தம் செய்யப்பட வேண்டும் என்பது மட்டுமல்லாமல், பெருநிறுவன மூலதனமானது அதன் பார்வையில் எந்த சந்தை மதிப்பையும்,  அந்தப் பொருட்களை உற்பத்தி செய்பவர்களின், அதாவது, கலைஞர்கள், ஆசிரியர்கள், நிகழ்த்துக் கலைஞர்கள் ஆகியோரின், படைப்பாற்றலின் மீதும், அது போன்ற அனைத்து பொருட்களின் மீதும், தனது முழுமையான உரிமையை நிலைநாட்ட முயல்கிறது. பெருநிறுவனத்தால் நடத்தப்படும் உலகளாவிய கலாச்சார சந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப அடிமைத்தனத்துடன் அடிபணியச் செய்கிறது. இது கலைஞர்கள் மற்றும் கலாச்சாரத்தின் உண்மையான களஞ்சியங்களான மக்களின் முக்கிய மன திறன்களை அழிக்கிறது; அனைத்து வகையிலும் இதை எதிர்க்க வேண்டும்.

5.12. தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய அச்சு மற்றும் ஒலி-ஒளி ஊடக உலகத்திற்குள்ளான இடத்தை மக்களுக்காக மீட்டெடுக்கப் போராடுவது; மின்னணு ஊடகத்தின் மீது பெருநிறுவன மூலதனத்தின் பிடிப்பு வலுவாக இருக்கும் நிலையில், இத்தகைய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் பயன்கள் மக்களுக்கு மறுதலிக்கப்படுகின்றன. இதன் விளைவாக அற்பமான, பொருளற்ற செய்திகள், உண்மை நிகழ்வுகள் என்ற பெயரால் நடைபெறும் கேவலமான, மேம்போக்கான நிகழ்ச்சிகள், பிற்போக்குத்தனமான, ஆணாதிக்க, பெண் வெறுப்பு மிக்க காட்சித் தொடர்கள் மற்றும் இதுபோன்ற மின்னணு பொருட்கள் கட்டற்ற விளம்பரங்களால் பின்னிப் பிணைந்து மக்களின் மீது மேலாதிக்கம் செலுத்த வழியேற்படுகிறது. இணையவழி வெளியீடுகள், சமூக ஊடகங்கள், ஆவணப்படங்கள், மக்கள் வானொலி போன்ற, மக்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும் சில இடங்களை மீட்டெடுப்பது இத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக்கூடிய சில வழிகள் ஆகும்; இந்தத் துறைகளில் திறமையுள்ளவர்கள் இந்த வழியில் திட்டமிட வேண்டும் என்பதோடு அவர்கள் முறையாக ஊக்குவிக்கப்படவும் வேண்டும்.

5.13. குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்களைப் பாதுகாக்க முன் நிற்க வேண்டும்.  இதன் மூலம் தனித்திறன்மிக்க படைப்பு திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை அவர்கள் பெற முடியும். இக்காலத்தின் இரக்கமற்ற போட்டி, நுகர்வோர் மதிப்புகள் அல்லது வெறுப்புக் கலாச்சாரம் மற்றும் பரஸ்பர அழிவு உணர்வு ஆகியவற்றால் அவர்களின் விருப்பங்கள் விழுங்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவர்களின் கல்வி உரிமைகள் மற்றும் மிகவும் மேம்பட்ட அறிவுக்கான உரிமைகள் வலியுறுத்தப்பட வேண்டும்; கல்வி நிறுவனங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் நமது சிறப்பான அறிவுத் திறன்,  ஆக்கப்பூர்வமான மரபுகள் ஆகியவற்றுடன் அவர்கள் தொடர்பு கொள்ள பல வகையிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

5.14. பல்வேறு  வகையான தீவிரவாத, மதவெறி,  பயங்கரவாத அமைப்புகளும் சித்தாந்தங்களும் வளர்ந்து வருகின்ற, வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற ஓர் உலகில் நாம் வாழ்கிறோம். உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் அதிக அளவிலான சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்ல இது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. சாத்தியமான இடங்களில், சிறப்பு அதிகாரங்களும் அரசால் கைக்கொள்ளப்படுகின்றன. பல நேரங்களில், தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் இத்தகைய நடவடிக்கைகளை ஆதரிக்குமாறு பொது மக்கள் தூண்டப்படுகிறார்கள்; அல்லது வற்புறுத்தப்படுகிறார்கள். எங்கெல்லாம் எதேச்சாதிகார அரசால்  மீறப்படுகிறதோ அங்கெல்லாம் மக்கள் உரிமைகள், ஜனநாயக மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்க நாம் முன்நிற்கிறோம்; பொதுமக்களுக்கு எதிராக இராணுவம், துணை இராணுவப் படைகளைப் பயன்படுத்துவதை நாம் எதிர்க்கிறோம்; மாறுபட்ட கருத்துக்களை ஒடுக்குவதற்கு  தடையற்ற அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் அரசுக்கு வழங்கும் கொடுங்கோன்மை சட்டங்களையும் நாம் எதிர்க்கிறோம்.

5.15. மேற்கண்ட கடமைகளை நிறைவேற்ற, ஒவ்வொரு மட்டத்திலும் கலாச்சார முன்னணியில் உள்ள பணிகளில் கட்சி மேலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்; குறிப்பிட்ட கால வரம்பிற்குள் இலக்குகள் எட்டப்படுவதற்கு உகந்த வகையில் ஒவ்வொரு மட்டத்திலும் தகுதியான ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

5.16. பாடல் குழுக்கள், வீதி நாடகக் குழுக்கள் போன்ற கலாச்சாரப் பிரிவுகளை உருவாக்க வெகுஜன அமைப்புகள், ஆசிரியர்கள், சேவை நிறுவனங்கள், திட்டத் தொழிலாளர்கள் போன்ற இதர வகைப்பட்ட ஊழியர்களின் அமைப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதோடு, அவை முறையாக வழிநடத்தப்பட வேண்டும். கலாச்சார அரங்கின் பணியை கைவிட்டு விடக்கூடாது என்பதோடு, அந்தப் பணி கலாச்சார அரங்கிலுள்ள ஆர்வலர்களுக்கு மட்டுமேயான ஒரு பணி என்பதாகப் பிரித்துப் பார்க்கவும் கூடாது.

5.17. கலாச்சார, கல்வி மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளின் மூலம் ஜனநாயக, மதச்சார்பற்ற, முற்போக்கு எண்ணங்களை வளர்த்தெடுக்க அக்கம்பக்கத்தில் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு ‘பாலவேதி’ அல்லது ‘பாலர் சங்கம்’ போன்ற அமைப்புகளை உருவாக்க உதவ வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்கனவே வெற்றிகரமாக செயல்படும் இடங்களில், அவற்றை மேலும் விரிவுபடுத்தவும் ஒருங்கிணைக்கவும் உதவ வேண்டும்.

5.18. இத்தகைய கலாச்சார அரங்க நடவடிக்கைகள் எதுவும் இல்லாத மாநிலங்களில், இந்தப் போதாமையை சரிசெய்யும் வகையில் திட்டமிட்ட நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும்.

5.19. (அ) பல்வேறு மட்டங்களிலும் செயல்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தவும், (ஆ) எதிர்கால திட்டங்கள், படைப்பூக்க ரீதியான தலையீடுகள் ஆகியவற்றுக்கு பொதுவான வழிகாட்டுதலை வழங்கவும், படைப்புத் திறன் மிக்க கலை-கலாச்சார செயல்பாட்டாளர்கள் பங்கேற்கும் வகையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் கலாச்சார மாநாடுகள் நடத்தப்பட வேண்டும்.

5.20. இந்த அரங்கின் முன்னேயுள்ள கடமைகள் குறித்த இந்த ஆவணத்தில் கூறப்பட்டவை அனைத்தும் குறிப்பிட்ட கால வரம்பில் பல்வேறு மட்டங்களிலும் எந்த அளவிற்கு அமலாக்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்யும் வகையில் தொடர்ந்து முறையாகப் பரிசீலனை மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழில்: வீ. பா. கணேசன்

ஜவஹர்லால் நேரு: அனைத்திற்கும் மேலாக, மதச்சார்பற்றவர் …

பிரகாஷ் காரத்

ஒரு விடுதலைப் போராட்ட வீரராக, இந்திய முதலாளித்துவ வளர்ச்சியின் சிற்பியாக, உலக அரங்கில் இந்தியாவின் நலனை முன்னிறுத்தி செயல்பட்ட தலைவரான ஜவகர்லால் நேரு வலதுசாரி பிற்போக்கு வாதத்தை இறுதிவரை எதிர்த்துப் போராடியவர். அவரது மதசார்பற்ற கண்ணோட்டத்தை இன்றைக்கும் நினைவுகூர்ந்து முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதை வலியுறுத்தி ஜவகர்லால் நேருவின் 125வது பிறந்தநாளை ஒட்டி ஃப்ரண்ட்லைன் இதழின் 2014 டிசம்பர் 12 பதிப்பில் தோழர் பிரகாஷ் காரத் எழுதியிருந்த கட்டுரையின் முக்கியத்துவம் கருதி இப்போது தமிழில் வெளியாகிறது. – ஆசிரியர் குழு

ஜவகர்லால் நேருவின் 125வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் பின்னணியில், நேருவின் பாதை, பாரம்பரியம் ஆகியவை குறித்தும் இன்றைய காலகட்டத்தில் அவற்றின் பொருள் எத்தகையதாக அமைகிறது என்பது குறித்துமான விவாதம் இப்போது மீண்டும் எழுந்துள்ளது. நேரு முன்வைத்த தொலைநோக்கு, குறிக்கோள்கள் ஆகியவற்றுக்கு நேரெதிர் நிலைபாட்டிலுள்ள பாரதிய ஜனதா கட்சி ஓர் ஆளும் கட்சி என்ற வகையில் தலைமை வகிக்கும் நரேந்திர மோடியின் அரசு தரும் முரண்பட்ட சித்திரமானது இந்தக் கேள்வியை மேலும் கூர்மையாக்குகிறது.

இடதுசாரிகளை, குறிப்பாக கம்யூனிஸ்டுகளை பொறுத்தவரையில் நேருவின் தொலைநோக்கும் அவரது பணியும் கம்யூனிஸ்டுகளின் சொந்த வரலாறு, அவர்களது தத்துவார்த்த வளர்ச்சி ஆகியவற்றோடு ஓரளவிற்குப் பின்னிப் பிணைந்ததாகவே உள்ளன. நாட்டின் விடுதலைக்கான தேசிய இயக்கம் நடைபெற்ற காலத்தில் நேருவிற்கும் இடதுசாரிகளுக்கும் இடையே பெருமளவிலான ஒற்றுமை நிலவியது எனில், விடுதலை பெற்ற இந்தியாவில் நேருவின் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வந்த ஆண்டுகளில் அதிகமான அளவில் இடைவெளிகளும் மோதல்களும் நிலவின.

நேரு மறைந்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நேருவின் காலம் குறித்த இடதுசாரிகளின் புரிதல் என்பது மிகப்பெருமளவில் சமநிலையான, நாகரீகமான ஒரு வடிவத்தை பெற்றதாக உள்ளது.

இந்திய விடுதலைப் போராட்டத்தை தலைமைதாங்கி நடத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் மிகவும் அறிவுச்செறிவு மிக்க தலைவராக நேரு விளங்கினார். அவ்வகையில் அவரது தலைமுறையைச் சேர்ந்த பலரையும் கடந்தவராகவும் அவர் இருந்தார். மதச்சார்பின்மை, ஜனநாயகம், அறிவியல்பூர்வமான உணர்வு ஆகியவற்றை ஆதரிப்பவராகவும் நேரு இருந்தார். மகாத்மா காந்தியைச் சுற்றியிருந்த பழமைவாத, மீட்சிவாத தலைவர்கள் பலரின் கருத்துக்களுக்கு இவை முற்றிலும் முரணானவையாக இருந்தன. நேருவின் இத்தகைய நவீனமான, முதலாளித்துவ ஜனநாயகபூர்வமான அணுகுமுறையானது தேசவிடுதலைப் போராட்டத்தில் அவரை தனித்துவமானதொரு ஆளுமை கொண்டவராக ஆக்கியது.

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து முழுமையான விடுதலை என்ற கோஷத்தை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளப் போராடியவர் நேருதான். 1927ஆம் ஆண்டில் மதராஸில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் இதற்கான ஒரு தீர்மானத்தையும் அவர் முன்வைத்தார். எனினும் காந்திஜியின் வற்புறுத்தலால் நேருவின் தீர்மானம் மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதன்பிறகு 1929ஆம் ஆண்டில்தான் காங்கிரஸ் கட்சி முழுமையான விடுதலை என்ற கோஷத்தை ஏற்றுக் கொண்டது. 1921ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலேயே கம்யூனிஸ்டுகள் இந்தக் கோரிக்கையை எழுப்பியிருந்தனர். அப்போதும் கூட காந்திஜி அதை நிராகரித்தார். தொழிலாளர்-விவசாயிகளின் வெகுஜன அமைப்புகள் காங்கிரஸுடன் நேரடியாக இணைக்கப்பட வேண்டும் என்றும் நேரு விரும்பினார். எனினும் கட்சித் தலைமையை  இதை ஏற்றுக் கொள்ளச் செய்வதில் அவர் தோல்வியுற்றார்.

1936ஆம் ஆண்டில் நேரு தலைமைப் பொறுப்பில் இருந்தபோது லக்னோவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு சோஷலிசத்திற்காகப் பேசியது. ஐரோப்பாவிலும் உலகத்திலும் தலைதூக்கி வந்த பாசிஸம் குறித்தும் அதனால் ஏற்படப் போகும் அபாயங்கள் குறித்தும் அறிந்தவராகவும் நேரு இருந்தார். இந்தக் காலப்பகுதியில்தான் காங்கிரஸிற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த இடதுசாரிகள் நேருவுடன் மிக நெருக்கமாகச் செயல்பட்டு வந்தனர்.

எனினும் காந்திஜியின் மிகவும் நம்பகமான சீடராகவும் நேரு இருந்தார். தேசவிடுதலை இயக்கத்தின் வர்க்கத் தலைமையின் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்காக காந்திஜியின் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களுக்கு அதன் ஒவ்வொரு கட்டத்திலுமே நேரு அடிபணிந்தார். காந்திக்கு அடுத்தபடியாக மக்களால் பெரிதும் போற்றப்பட்ட தலைவராகவும் நேரு இருந்தார். காந்திஜியின் வாரிசு என்றும், அவருக்குப் பின்னால் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருப்பவர் என்றும் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டவராகவும் அவர் இருந்தார்.

முக்கியமாக, நேருவின் சோஷலிசம் என்பது அடிப்படையில் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரானது என்பதையும் தேச விடுதலை இயக்கத்திற்குள் பெருந்திரளான மக்களை கொண்டுவருவதற்கான ஒரு வழியாகவுமே அவர் அதைப் பயன்படுத்தினார் என்பதையும் தொடக்கத்திலேயே கம்யூனிஸ்டுகள் புரிந்து வைத்திருந்தனர். பிரதமராக ஆன பிறகு, நேரு சோஷலிசத்திலிருந்து விலகி, சமூக ஜனநாயகத்தின் பக்கம் நகர்ந்து சென்றார். இருந்தபோதிலும், 1955ஆம் ஆண்டில் சென்னை ஆவடியில் நடைபெற்ற அகில இந்திய  காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘சோஷலிச வகைப்பட்ட சமூகம்’ என்பது வலதுசாரி சக்திகளையும் கம்யூனிஸ்டுகளையும் எதிர்த்துப் போராடுவதற்கான ஓர் ஆயுதமாகவே பயன்பட்டது. 1955ஆம் ஆண்டில் ஆந்திராவில் நடைபெற்ற தேர்தல்களிலும், 1957இல் கேரளாவில் நடைபெற்ற தேர்தல்களிலும் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடிக்க நேருவின் ‘சோஷலிச’ மேடை பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

முதலாளித்துவ வளர்ச்சி

துவக்க கட்டத்திற்குப் பிறகு, பொருளாதார வளர்ச்சிக்கு உதவி செய்ய நேருவின் பார்வை மேற்கு நாடுகளை நோக்கியிருந்தது. எனினும் சுயேச்சையான, முன்மாதிரியுடன் கூடிய வளர்ச்சியுடன் இந்தியா தலையெடுக்க மேற்கத்திய நாடுகள் உதவி செய்யாது என்பதையும் பின்னர் அவர் உணர்ந்தார். எனவே முதலாளித்துவ வளர்ச்சிக்கான அடித்தளத்தை நிறுவுவதற்கு முதலாளித்துவ வர்க்கத்திற்கு தேவைப்படுகின்ற பொதுத்துறையை வளர்த்தெடுப்பதிலும் அதற்கான திட்டமிடுதலிலும் நேரு இறங்கினார். பொதுத்துறையை வளர்த்தெடுப்பதற்கு சோவியத் யூனியனிடமிருந்து உதவி பெறப்பட்டது. பெருநகர மூலதனத்திலிருந்து ஓரளவிற்கு சுதந்திரமானதாக, அரசின் உந்துதலின் மூலமான முதலாளித்துவ வளர்ச்சியாக அது இருந்தது என்பதே இதன் பொருள். முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு சில பிரிவுகள் நேருவின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும் ஒட்டுமொத்தத்தில் இது முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்கு ஏற்றதாகவே இருந்தது. இவ்வாறு நேருவிய வகைப்பட்ட பாதையானது சர்வதேச மூலதனத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிய வேண்டிய தேவையில்லாத, ஒரு வகைப்பட்ட முதலாளித்துவ வளர்ச்சிக்கான பாதையை உருவாக்கியது.

அதேநேரத்தில் நிலச் சீர்திருத்தங்களை  மேற்கொள்ளாமல், நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்து கொண்டு, அதே நேரத்தில் ஏகபோக மூலதனத்திற்கும் ஊட்டம் கொடுத்து முதலாளித்துவத்தை வளர்த்தெடுத்ததானது முரண்பாடுகளின் வளர்ச்சிக்கும் வழிவகுத்தது. இதைத் தொடர்ந்த காலப்பகுதியில் சுயேச்சையான வளர்ச்சிக்கான எந்தவிதமான வாய்ப்பையும் இது வலுவிழக்கச் செய்ததோடு, சர்வதேச நிதி மூலதனத்துடன் ஒன்றிணைவதற்கும், அதன் மூலம் ஏற்படும் விளைவுகளுக்கும் வழியேற்படுத்தித் தந்தது. நேருவிய காலத்தின் மிகப் பெரிய துரோகம் என்பது நிலச் சீர்திருத்தத்தை மேற்கொள்வது என்ற அதன் உறுதிமொழியினை நிறைவேற்ற மறுத்ததே ஆகும். நேரு அரசினால் முன்வைக்கப்பட்ட இந்த வகைப்பட்ட முதலாளித்துவ வளர்ச்சியை கம்யூனிஸ்டுகள் எதிர்த்தது மட்டுமின்றி, இதுவே சோஷலிசப் பாதை என்ற அதன் தம்பட்டத்தையும் முற்றிலுமாக நிராகரித்தனர்.

வெளியுறவுக் கொள்கை

எனினும் 1950களின் நடுப்பகுதியில் நேரு அரசு இடதுசாரி பாதையை நோக்கி மாறியதாகத் தோற்றம் அளித்தது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஆவடி மாநாடு  ‘சோஷலிச வகைப்பட்ட’ சமூகத்திற்காகப் பாடுபடப் போவதாக அறிவித்தது. (1956-61க்கான) இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் தொழில் மயமாக்கலுக்கும் பொதுத்துறைக்கும் உத்வேகம் அளித்தது. தொடக்க ஆண்டுகளில் மேற்கு நாடுகளை சார்ந்திருந்த நிலைக்குப் பிறகு, அணிசேரா கொள்கை என்ற புதியதொரு பாதையை நோக்கி நேரு வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைத்தார். இந்தக் கொள்கை சர்வதேச அமைதிக்காகவும் தேச விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவாகவும் தீவிரமாக பாடுபட்டது. இந்தக் கொள்கையிலிருந்து விலகி நின்ற சில தருணங்கள் இருந்தபோதிலும், அதிகமான செயல்திறனையும், ஓரளவிற்கு சுயாட்சியையும் கொண்டு பெருமளவிற்கு இந்திய அரசின் நலன்களுக்கு உகந்ததாக நேரு காலத்திய வெளியுறவுக் கொள்கை இருந்தது. சீனாவுடன் எல்லை மோதல் உருவான காலம் வரை இந்த நிலை நீடித்தது.

நேரு மேற்கொண்ட இத்தகைய நடவடிக்கைகள் அனைத்துமே இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளேயும், இடதுசாரிகளுக்கு உள்ளேயும் மாறுபட்ட கருத்துக்கள் தோன்ற வழிவகுத்தன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த ஒரு பிரிவினர் முற்போக்கான வெளியுறவுக் கொள்கையை உள்நாட்டுக் கொள்கையுடன் பொருத்தி வைத்து, காங்கிரஸ் கட்சியுடன் ஓர் ஐக்கிய முன்னணியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரினர். நேரு பின்பற்றிய பாதையை எவ்வித விமர்சனமுமின்றி அப்படியே ஏற்றுக் கொள்வது என்பதே இந்தக் கோரிக்கையின் உள்ளீடான அம்சமாகும். 1956ஆம் ஆண்டு பாலக்காடு நகரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நான்காவது காங்கிரஸில் இந்தப் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது. பிரதிநிதிகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்த நிலைபாட்டை ஆதரித்த போதிலும் காங்கிரஸ் உடனான ஐக்கிய முன்னணி என்ற கருத்துருவை கட்சி காங்கிரஸ் நிராகரித்தது. 1964ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவுக்கான விதை அப்போதுதான் தூவப்பட்டது.

1930களில் சோஷலிசத்தை ஆதரித்துப் பேசி வந்த நேரு முதலாளித்துவம் குறித்த சமூக-ஜனநாயக அணுகுமுறைக்கு நெருக்கமாக நகர்ந்து சென்றார். அரசு ஆதரவு பெற்ற முதலாளித்துவம் என்ற இந்த வடிவமானது மூலதனக் குவிப்புக்கு வழிவகுத்து, பெருநிறுவன குடும்பங்கள் உயிர்த்தெழவும் வழியேற்படுத்தியது. ‘விஞ்ஞான சோஷலிசம்’ என்பதிலிருந்து மேலும் மேலும் விலகிப்போன நேரு, அதை வறட்டுத்தனமான ஒரு தத்துவமாகவும் கண்டார். மேலும் சோவியத் யூனியனில் இருந்தது போன்ற ஒரு சோஷலிச அமைப்பில் வன்முறையும் வற்புறுத்தலும் உள்ளார்ந்த அம்சமாக விளங்குகின்றன என்றும் அவர் குறை கூறினார்.

பிந்தைய காலப்பகுதியில் முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அமைப்பின் உள்ளீடாக அமைந்த அனைத்துக் குறைபாடுகளையும் வெளிப்படுத்துவதாகவே நேருவின் தலைமையிலான அரசு இருந்தது. ஆளும் காங்கிரஸ் மேலும் மேலும் ஊழல் மிக்கதாக, விடுதலைப் போராட்டத்தின்போது நிலவிய சமூக, அரசியல் குறிக்கோள் அனைத்தையும் கைவிட்டதாக மாறியது. நேருவிற்குப் பிறகு காங்கிரஸில் சீரழிவு மேலும் துரிதமாக ஆனதோடு, நேரு காலத்திய நேர்மறை அம்சங்கள் அனைத்தும் ஒதுக்கப்பட்டன. புதிய தாராளவாதப் பாதையை நோக்கிய அதன் சரிவு தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது.

நேரு காலத்திய வளர்ச்சிப் பாதை குறித்த இடதுசாரிகளின் விமர்சனங்கள் இருந்தபோதிலும், நவீன இந்தியாவை உருவாக்குவதில் நேருவின் இரண்டு உயிரோட்டமான பங்களிப்புகள் இருந்தன. தேசிய இயக்கத்தில் மதச் சார்பின்மை குறித்த ஆழமான, தீவிரமான உறுதிப்பாடு வேறு எந்த தலைவருக்கும் அவரைப் போன்று இருக்கவில்லை. இந்திய அரசின் மதசார்பற்ற திசைவழியை நிறுவுவதில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு பொறுப்பேற்றது மிக முக்கியமான பங்கினை வகித்தது. நாட்டுப் பிரிவினைக்குப் பிறகு டெல்லியில் கலவரங்கள் வெடித்து, முஸ்லீம்களின் மீதான தாக்குதல்கள் நிகழ்ந்தபோது, கலவரக்காரர்களை தடுத்து நிறுத்தவும், முஸ்லீம்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவும் நேரு கலவரம் நடந்து வந்த இடங்களுக்கு நேரடியாகச்  சென்றார். வல்லபாய் பட்டேல், ராஜேந்திர பிரசாத் மற்றும் இதர காங்கிரஸ் தலைவர்கள் நேருவின் இச்செயலை வெறுத்ததோடு, அதை ஏற்றுக் கொள்ளவும் மறுத்தனர். இத்தகைய பாதுகாப்போ, சிறப்பு நடவடிக்கைகளோ எடுக்கப்படக் கூடாது என்றுதான் அவர்கள் கருதினர்.

இத்தகையதொரு தருணத்தில்தான் பெரும்பான்மையினரின் வகுப்புவாதம் “தேசியவாதம் ஆக தனது தோற்றத்தை வைத்துக் கொள்ளும் அதே நேரத்தில் சிறுபான்மையினரின் வகுப்புவாதம் அது எப்படி இருக்கிறதோ அதே வகையில் அடையாளம் காணப்படும்” என்று மிகுந்த தீர்க்க தரிசனத்துடன் நேரு எச்சரித்தார். நாட்டு விடுதலைக்குப் பிந்தைய தொடக்க ஆண்டுகளில் அரசு அமைப்பு மற்றும் அரசியல் ஆகிய துறைகளில் மதசார்பற்ற குறிக்கோளை நிறுவுவதற்காக நேரு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இடைவிடாது போராட வேண்டியிருந்தது. 1950ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக புருஷோத்தம் தாஸ் தாண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டபோது காங்கிரஸுக்குள் இருந்த இந்து பாரம்பரியவாதிகளுடனான நேருவின் இந்தப் போராட்டங்கள் உச்சநிலையை எட்டின. வகுப்புவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலும், மதசார்பற்ற ஓர் அரசை நிறுவுவதிலும் நேருவைப் போல் தெளிவான சிந்தனை, உறுதி ஆகியவற்றைக் கொண்ட வேறு எந்த காங்கிரஸ் தலைவரும் இல்லை.

1948ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக ஆன, எளிதில் அமைதிப்படுத்தி விட முடியாத வகையில் நேரு அரசின் எதிரியாக விளங்கிய பி.டி. ரணதிவே 1989ஆம் ஆண்டில் நேருவின் பிறந்ததின நூற்றாண்டு தருணத்தில் நேருவைப் பற்றிய மிகச் சிறப்பான மதிப்பீட்டை செய்திருந்தார். அப்போது அவர் எழுதியிருந்தார்: “ஆழமான மதசார்பற்ற கண்ணோட்டம், ஜனநாயகம் குறித்த நவீன கருத்தாக்கம் ஆகியவற்றைக் கொண்டிருந்த நேருவிற்குப் பதிலாக வேறு எவராவது அரசுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தால் நாட்டின் விடுதலையே அபாயத்திற்கு ஆளாகியிருக்கும்”. மேலும் “மீட்சி வாத பாரம்பரியத்தை மறுதலித்து, மதசார்பற்ற, நவீன ஜனநாயக மதிப்பீடுகளின் அடிப்படையில் மக்களை அணிதிரட்டியதில் நேருவின் தனித்துவமான பங்களிப்பை குறைத்து எடைபோட்டு விடக் கூடாது” என்றும் அவர் சுட்டிக் காட்டினார். (பி.டி. ரணதிவே, ஜவகர்லால் நேரு: ஒரு நூற்றாண்டு மதிப்பீடு, மார்க்சிஸ்ட் (ஆங்கிலம்) ஜூலை-டிசம்பர் 1989)

அதற்குள் பல்வேறு விதமான குறைபாடுகள் இருந்தபோதிலும் நாடாளுமன்ற ஜனநாயகம் நாட்டில் வேரூன்றுவதை உறுதிப்படுத்தியதில் தனிப்பட்ட பொறுப்பு நேருவிற்கே உரியது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கருடன் இணைந்து இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஜனநாயக ரீதியான கட்டமைப்பினை உருவாக்குவதற்குக் காரணமாகவும் அவர் திகழ்ந்தார். இருந்தபோதிலும், நேருவின் ஜனநாயக ரீதியான சாதனையிலும் மிகப்பெரும் களங்கம் ஒன்றும் இருந்தது. கேரளாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசின் அரசியல் ரீதியான அச்சுறுத்தலை எதிர்கொண்டபோது தனது கட்சியின் அழுத்தத்திற்கு அடிபணிந்த அவர் 1959இல் இ எம் எஸ் நம்பூதிரிபாட் தலைமையிலான அரசை கலைத்தார். இங்கும் கூட வர்க்க நலனே அவரது ஜனநாயக உணர்வுகளை மீறியதாக இருந்தது.

பாஜக- ஆர் எஸ் எஸ் ஆகியவற்றின் பிரதிநிதியாக விளங்கும் மத்திய அரசின் தற்போதைய ஆளும் கூட்டணி நேருவின் பாரம்பரியத்திற்கு முற்றிலும் மாறான ஒரு கருத்தாக்கத்தின் பிரதிநிதியாகவே இருக்கிறது. நேருவிற்கும் இந்தக் கூட்டணிக்குமான வேறுபாடு மிகப் பெரியது. மதசார்பற்ற அடித்தளத்தின்மீது ஒரு தேசியவாத உணர்வை கட்டியமைக்க இந்தியாவின் முதல் பிரதமர் தீவிரமாக முயற்சி செய்தாரெனில், தற்போதைய பிரதமர் தான் ஒரு இந்து தேசியவாதி என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்பவர். மக்களிடையே அறிவியல் பூர்வமான உணர்வை வளர்த்தெடுக்க நேரு தீவிரமாக பாடுபட்டு வந்தார் எனில், வேதகாலத்திலேயே அறிவியல் உருவாகி நன்கு வளர்ந்திருந்தது; மகாபாரத காலத்திலேயே மரபணு அறிவியல் இருந்தது; மாற்று அறுவை சிகிச்சை மூலம் உருவானவரே விநாயகர் எனப்படும் பிள்ளையார் என்பது போன்ற ஆர் எஸ் எஸ் அமைப்பின் புராணக் கதையை பரப்புபவராக நரேந்திர மோடி இருக்கிறார். இப்போது  மதசார்பற்ற மதிப்பீடுகள் குறுகிய, பிரிவினை நோக்கம் கொண்ட இந்துத்துவா தத்துவத்திற்கு விரோதமான சமூக, கலாச்சார கருத்தாக்கங்கள் அனைத்தின்மீதும் முழு அளவிலான தாக்குதல்தான்  நடந்து வருகிறது.

மதசார்பற்றதொரு அரசுக்கான நேருவின் தொலைநோக்கும் ஜனநாயக பூர்வமான வழிகளின் மூலம் அத்தகைய ஓர் அமைப்பை உருவாக்குவதற்கான அவரது முயற்சிகளும் என்றும் நிலைத்து நிற்கும் அவரது பாரம்பரியங்களாகத் திகழ்கின்றன. இவை அனைத்துமே இப்போது நேருவின் மிகப் பழைய எதிரிகளான இந்துத்துவ வாதிகளிடமிருந்து மோசமான தாக்குதலுக்கு  ஆளாகியுள்ளது. நேருவின் இந்தப் பாரம்பரியம்தான் நாம் பாதுகாத்து, வளர்த்தெடுக்க வேண்டிய ஒன்றாகும்.

தமிழில்: வீ. பா. கணேசன்                                                                  நன்றி:  ஃப்ரண்ட்லைன்

சிங்காரவேலரும் இந்திய கம்யூனிசத்தின் தோற்றமும்

பி. கோவிந்தபிள்ளை, ஏகேஜி ஆராய்ச்சி & கல்வி மையம்

தமிழில்: வீ.பா.கணேசன்

சிங்காரவேலர் இந்தியத் தொழிலாளி வர்க்க இயக்கத்தில், மார்க்சிய – லெனினிய இயக்கத்தில், என்றும் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் நட்சத்திரம் என்றே கூறலாம். அவர் 1860-ம் ஆண்டு பிப்ரவரி, 18-ம் தேதியன்று பிறந்தார். சிங்காரவேலரின் வாழ்விலும், சிந்தனையிலும், அவரது பங்களிப்பிலும் ஆதிக்கம் செலுத்திய கருத்துக்களை உருவாக்கிய கார்ல் மார்க்ஸ், சிந்திப்பதை இறுதியாக நிறுத்திக் கொள்வதற்கு 23 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்தவர். இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்து, நாசிசத்தையும் பாசிசத்தையும் சோசலிச – ஜனநாயக சக்திகள் வெற்றி கொள்வதைக் கண்ட பின்பு 1946 பிப்ரவரி 11-ம் நாள் அவர் தன் மூச்சை நிறுத்திக் கொண்டார்.

அதாவது மனிதகுலத்தில் மூன்றில் ஒரு பகுதி மக்களிடையே கார்ல் மார்க்ஸ்  (1818 – 1883), பிரடெரிக் எங்கெல்ஸ் (1820 -1895) ஆகியோரின் காலத்தால் என்றும் அழியாத கருத்துக்கள் உருவாகி, வெற்றியை நோக்கி நடைபோட்ட காலத்தில் சிங்காரவேலர் வாழ்ந்தார் என்று கூறுவது பொருத்தமாக அமையும். சிங்காரவேலர் மறைந்த இரண்டு ஆண்டுகளுக்குள் அதாவது 1948ஆம் ஆண்டிற்குள், இரண்டாம் உலகப்போர் முடிவிற்கு வந்து, 1947 ஆகஸ்ட் 15-ம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றதும், சீனாவில் புரட்சி வெற்றி பெற்றதுமான நிகழ்ச்சிகள் நடந்தேறின. சிங்காரவேலர் போராடிய லட்சியங்கள், அதற்காக அவர் அடைந்த துயரங்கள் ஆகியவை நிறைவேறியதை சுட்டிக்காட்டுவதாகவும் அவை அமைந்தன. மேலும் அவரது தீர்க்க தரிசனம் என்பது அரசியல் விடுதலைக்கு அப்பால் சோசலிசத்தையும், கம்யூனிசத்தையும் நோக்கியதாக அமைந்தன. தென் இந்தியாவில் மார்க்சிய – லெனினிய இயக்கத்தின் முதல் முன்னோடியாக அவர் விளங்கியதோடு, அதிலிருந்து அவர் பெற்ற அனுபவங்களை இந்தியாவில் மார்க்சிய – லெனினிய இகக்கம் தோன்றுவதற்கும் அர்ப்பணித்தார். சிங்காரவேலருக்கு முன்பாகக் கம்யூனிச இயக்கத்தின் வரலாறு மற்றும் தோற்றம் குறித்து ஒரு பார்வையை மேற்கொள்வது பொருத்தமாக இருக்கம்.

சிங்காரவேலருக்கு முன் இந்திய கம்யூனிசத்தின்  தோற்றம்

கம்யூனிச சித்தாந்தத்தின் அடிநாதமாக விளங்கும் சமத்துவம், மனிதநேயம் என்பவை மனித சமூகத்தின் தோற்றத்தைப் போன்றே மிகப் பழமையானவையே ஆகும். குறிப்பாக வர்க்க பேதமற்ற புராதன கம்யூனிச சமுதாயம்  உடைந்து நொறுங்கிய பிறகு இதுதான் நிலைமை. மார்க்ஸூம் எங்கல்ஸூம் தங்களது ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யில் புராதன சமூக வரலாற்றினைத் தொடர்ந்த காலத்தில் வரலாறு என்பது ‘வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்’ என்று சுட்டிக் காட்டியதோடு, வர்க்கங்கள் தோன்றியது குறித்த விஞ்ஞான பூர்வமான பார்வையை அவர்கள் முன்வைத்து, மேம்படுத்தப்பட்ட உற்பத்தி முறையுடன் கூடவே ஏற்பட்ட மனித குல முன்னேற்றம் என்பதும், அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழலின் மீது மனிதர்களின் ஆதிக்கமும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு கட்டத்தைக் குறிப்பிடுவது ஆகும் என்றும் எடுத்துக் கூறினர். இந்த முன்னேற்றமானது சமத்துவமற்ற நிலையையும், சுரண்டலையும், பெரும்பாலோர் துன்புறுவதையும் அதிகரிப்பதாகவே அமைந்தது. எனவே அடித்தட்டு மக்கள் காணாமல் போன புராதன சமூகத்தை நினைத்து ஏங்கி நின்றது என்பது இயற்கையான ஒன்றே ஆகும். கம்யூனிசத்தின் வித்துக்கள் அடங்கிய இந்தச் சமூகம் குறித்த புராதன கதைகளுக்கும், நாட்டுப்புறப் பாடல்களுக்கும் வழிவகுப்பதாகவும் இந்த ஏக்கம் அமைந்திருந்தது. உலகளாவிய இத்தன்மையில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரிடையே வளர்ந்து மேலோங்கி நின்ற இத்தகைய கருத்துகள் முதலில் வெளிப்படையாகத் தென்படாமல் போனபோதிலும், காலப்போக்கில் படிப்படியாக மேல் தட்டு வர்க்கத்தினரின் புராணங்கள், இலக்கியங்கள், எழுத்துகள், ஆகியவற்றிலும் இடம் பெறத் துவங்கின.

மேற்கத்திய நாடுகளில் தொழில்மயமான சமூகத்திலிருந்தே சோசலிசம், கம்யூனிசம் போன்ற நவீன கருத்துக்கள் தோன்றின என்பதை ஒப்புக்கொண்ட பி.சி.ஜோஷி, கே.தாமோதரன் ஆகியோர் நமது புராதனகால கதைகளில் இக்கருத்துக்கள் வடிவமற்ற, புராதன வடிவங்களில் தென்படுகின்றன என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் கூறுவதாவது:

கிறித்துவ சகாப்தம் துவங்குவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சமூகமானது நான்கு வர்ணங்களாகப் பிரிக்கப்பட்டபோதே இந்தியாவில் மனிதநேயம் என்பது நிலவி வந்தது என்பது ஒன்றும் விசித்திரமான விசயமல்ல. ரிக்வேதத்தின் பின்னாளைய கவிஞர்களில் சிலரும், உபநிடதங்களை உருவாக்கிய தத்துவஞானிகளில் முன்னோடிகள் சிலரும் புராதன காலத்தில் மேய்ச்சலை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்த பழங்குடி சமூகத்தினரின் ஒற்றுமை சிதைந்து போனது கண்டு தங்களது கவலையை வெளிப்படுத்தியதோடு, மக்களிடையே அதிகரித்து வரும் சமத்துவமற்ற தன்மைக்கு எதிராகவும் தங்களது குரலை எழுப்பியுள்ளனர். மனிதகுலத்தின் ஒன்றுபட்ட தன்மை, ஒற்றுமை ஆகிய குறிக்கோள்களை முன்னிறுத்திய அவர்கள் அன்பையும் கருணையையும், நீதியையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தினர். காலப்போக்கில் இவைதான் மதரீதியான வாழ்க்கையின் அடிப்படை அம்சங்களாக மாறின. தங்களது சொந்த நலன்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, மக்களின் மனங்களை ஆட்டிப் படைப்பதற்குச் சுரண்டும் வர்க்கங்கள் மதத்தைப் பயன்படுத்திக் கொண்ட அதே நேரத்தில், ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகத்தில் நிலவும் அநீதி, சமத்துவமற்ற தன்மை ஆகியவற்றுக்கு எதிராக மதத்தைப் பயன்படுத்தினர். நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும், மனித நேயத்திற்காகவுமான போராட்டங்கள் மத்திய காலத்திலிருந்து நவீன சகாப்தம் வரையில் மதத்தின் பெயரால் தொடர்ந்து நடைபெற்றே வந்தன. உதாரணமாக, 16 மற்றும் 17-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கபீர், சைதன்யர், குரு நானக் போன்ற பக்தி இயக்கத்தைச் சேர்ந்த துறவிகள் சாதி அடிப்படையிலான, மத அடிப்படையிலான வேறுபாடுகளுக்கு எதிராகப் போராடியதோடு ‘மனிதர்கள் அனைவருமே கடவுளின் குழந்தைகளே!’ என்ற கோசத்தின் கீழ் மனிதர்கள் அனைவருக்கிடையேயும் சமத்தும் தேவை என்று போராடி வந்தனர்.

                     (மார்க்ஸ் இந்தியாவிற்கு வருகிறார் – முன்னுரை – 1975)

நிலப்பிரபுத்துவ உறவுகளை மாற்றியமைத்து, அதனிடத்தில் வந்தமர்ந்த நவீனத்துவமும் முதலாளித்துவமும் தான் இந்தியாவில் 19-ம் நூற்றாண்டில் மறுமலர்ச்சிக் காலம் என்று பின்னாளில் குறிப்பிடப்பட்ட எழுச்சிக்கு வழிவகுத்தன. மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பல்வேறு கருத்துக்களுமே,  மறுமலர்ச்சி காலத்தில் உருவான பல்வேறு கருத்துக்களுமே, கம்யூனிச தத்துவத்திற்கான விதைகளைக் கொண்டதாகவே இருந்தன. மறுமலர்ச்சி காலத் தலைவர்கள் சில பண்டைய இந்தியாவின் புராதன கதைகளிலிருந்து உத்வேகம் பெற்ற அதே நேரத்தில் வேறு சிலர் தங்களது மனித நேய கருத்துக்களை மேற்கத்திய நாடுகளை சேர்ந்த தீவிர ஜனநாயகவாதிகள் மற்றும் சோசலிஸ்டுகளிடமிருந்தும் பெற்றனர்.

இந்திய மறுலர்ச்சி இயக்கத்தின் தந்தை என்று கருதப்படும் ராஜா ராம் மோகன் ராய்(1772 – 1833) 1789-ம் ஆண்டில் ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற முதலாளித்துவப் புரட்சியினால் பெரிதும் கவரப்பட்டவராக இருந்தார். எனினும் அவரது கூர்மையான அறிவும் மனித நேயமும் முதலாளித்துவ ஜனநாயகத்தையும் தாண்டி சோசலிச கருத்துக்களின் மீதும் அவரை ஆர்வம் கொள்ளச் செய்தது. அதன் விளைவாகத்தான் 1833-இல் அவர் பிரிட்டனுக்கு சென்றிருந்தபோது கற்பனாவாத சோசலிஸ்டான ராபர் ஓவன் -ஐ (1771 – 1858) சந்தித்தார். தூரதிர்ஷ்டவசமாக இந்தச் சந்திப்பிற்குப் பிறகு உடனேயே அவர் உயிர் நீத்ததன் விளைவாக ஓவன் பற்றியோ அவரது கருத்துக்கள் பற்றியோ எந்தவிதமான கருத்துக்களையும் அவர் விட்டுச் செல்லவில்லை.

சோசலிச கருத்துக்களைப்  பாராட்டிப் பேசிய மற்றொரு புகழ் பெற்ற வங்காளி “வந்தே மாதரம்” கவிதையை எழுதிய நாவலாசிரியர்  பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா (1838 – 94) ஆவார்.

இவை அனைத்தையும் விட புகழ்மிக்க வார்த்தைகளாக அமைந்தது சுவாமி விவேகானந்தரின் (1863 – 1902) பட்டவர்த்தமான அறிவிப்பே ஆகும். 1888-ம் ஆண்டில் அவர் இவ்வாறு கூறியிருந்தார்: “அது ஒரு சிறந்த அமைப்பு என்பதனால் மட்டுமே நான் ஒரு சோசலிஸ்ட் என்று அறிவித்துக் கொள்ளவில்லை. ஒன்றுமே இல்லாமல் இருப்பதை விட அரை வயிற்றுக் கஞ்சி எவ்வளவோ மேல்”

                                                 (தொகுப்பு நூல்கள் – தொகுதி 6 பக். 381-82)

ஒரு கருத்து என்ற வகையில் சோசலிசத்தை ஏற்றுக்கொள்வதற்கும், அதற்கு விளக்கம் கூறுவதற்கும் விவேகானந்தருக்கு அவருக்கேயுரிய காரணங்கள் இருக்கலாம். நாம் அவற்றை ஏற்றுக் கொள்ளவும் செய்யலாம்; அல்லது மறுக்கவும் செய்யலாம். அது ஒரு பொருட்டல்ல. இதில் குறிப்பிடத்தக்க உண்மை என்னவெனில் அந்த நாட்களில் கிடைத்த அறிவை வைத்துக் கொண்டு, வரலாறு குறித்த விவேகானந்தரின் விளக்கங்களையும் வைத்துப் பார்க்கையில் சோசலிசம் குறித்து அவர் புரிந்து கொண்டிருக்கிறார் என்பது தெரிய வருகிறது. முதலாளித்துவ ஜனநாயகத்தின் பலவீனங்களை, குறைந்தபட்சம் அதை நாம் அடைவதற்கு முன்பாகவே, புரிந்து கொள்வதில் தனது காலத்தையும் விஞ்சியவராக அவர் விளங்குகிறார். அடுத்து வித்தியாசமான ஒன்றாக விளங்குவது என்னவெனில் அவர் சொல்வது நிச்சயமாக சரியாக இல்லை என்றபோதிலும் கூட, இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தைத் பொருத்திப் பார்க்க மேற்கொண்ட அவரது முயற்சி ஆகும்.

அவர் இவ்வாறு எழுதியிருந்தார்: “எனினும் ஒரு காலம் வரும். அப்போது சூத்திரர்களின் வர்க்கம், அவர்களது சூத்திரத் தன்மை உடனேயே எழுச்சி பெறுவார்கள். இப்போது வைசியர்கள் அல்லது கூசத்திரியர்களின் பிரத்தியேகமான குணங்களைப் பெற்று பெரிய மனிதர்களாக சூத்திரர்கள் தற்போது மாறி வருகிறார்களே அதைப்போன்று அல்ல; மாறாக, ஒவ்வொரு நாட்டிலுமுள்ள சூத்திரர்கள் அவர்களுக்கே உரிய சூத்திர தன்மையுடனும், பழக்கவழக்கங்களுடன் வைசிரியர்களாகவோ அல்லது சத்திரியர்களாகவோ மாறாமல், சூத்திரர்களாகவே இருந்து – ஒவ்வொரு சமூகத்திலும் மேலாதிக்கத்தைப் பெறுவார்கள். இந்தப் புதிய சக்தி தோன்றுவதற்கான முதல் வெளிச்சம் ஏற்கனவே மேற்கத்திய உலகத்தின் மீது மெதுவாகக் கவியத் தொடங்கிவிட்டது. இந்தப் புத்தம் புதிய அம்சத்தின் இறுதி வடிவம் எப்படி பிரதிபலிக்கக் கூடும் என்று சிந்தனை உடையோர் இப்போதே யோசிக்கத் துவங்கி விட்டனர். இதைத் தொடர்ந்து வரவிருக்கின்ற சமூகப் புரட்சிக்கு சோசலிசம், அராஜக வாதம், நிகிலிசம் போன்ற இதரப் பிரிவுகளும் முன்னணிப் படைகளாக விளங்கப் போகின்றன.

                                                     (தொகுப்பு நூல்கள் – தொகுதி 4 – பக் 467 -68)

முதலாவது அகிலமும் இந்தியாவும்

இத்தகைய தனிப்பட்ட கருத்துகள் மற்றும் பிரதிபலிப்புகளைவிட மிக முக்கியமானதாக அமைவது 1864-இல் கல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தீவிரவாதக் குழு கார்ல் மார்க்சை தொடர்பு கொண்டு, அவர் தோற்றுவித்த சர்வதேச உழைக்கும் மக்கள் கழகத்தில் (முதலாவது அகிலம்) சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று விண்ணப்பம் செய்ததாகும். துரதிர்ஷ்டவசமாக இக்குழுவின் பெயரோ, அதன் தன்மையோ முற்றிலுமாகத் தெரியவராமலே போய்விட்டது. 1871-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு நடவடிக்கைகள் குறித்த பத்திரிக்கைச் செய்தியில் இருந்துதான் இது குறித்த தகவலை நம்மால் பெற முடிகிறது. இந்தப் பொதுக்குழுதான் பாரீஸ்கம்யூன் வீழ்ச்சி அடைந்தது குறித்து விவாதித்தது; அது குறித்து மார்க்ஸ் உருவாக்கிய புகழ்பெற்ற ஆவணத்தை ஏற்றுக் கொண்டது என்று புரிந்து கொள்ள முடிகிறது. 1871 ஆகஸ்ட் 19-ம் தேதிய ‘ஈஸ்டர்ன் போஸ்ட்’ என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த இடதுசாரி சார்பு பத்திரிக்கைதான் கல்கத்தா குழுவினரின் கடிதம் குறித்து தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தது. அதன் ஒரு பகுதி கீழ் வருமாறு:

“மக்களிடையே கடுமையான அதிருப்தி நிலவுகிறது. பிரிட்டிஷ் அரசாங்கமானது முற்றிலுமாக வெறுக்கப்பட்டு வருகிறது. வரி விதிப்பானது அபரிமிதமாக இருப்பதோடு அத்தகைய வருவாயில் பெரும்பகுதி அதிகாரவர்க்கம் என்ற செலவுமிக்க அமைப்பை நிலைநாட்டுவதற்கே உறிஞ்சப்பட்டு விடுகிறது. மற்ற இடங்களில் நடப்பதைப் போலவே, (மிக மோசமான நிலையில் உள்ள) செல்வத்தை உருவாக்கும் தொழிலாளர்களின் நிலைக்கு முற்றிலும் நேர்விரோதமான முறையில் ஆளும் வர்க்கங்களின் ஆடம்பரச் செலவுகள் அச்செல்வத்தை வீணடிக்கின்றன. இதற்கென ஒரு பிரிவு மட்டும் துவக்கப்படுமேயானால், அகிலத்தின் குறிக்கோள்கள் பெரும்பகுதி மக்களை இந்த அமைப்பிற்குள் கொண்டு வரும் வாய்ப்பும் இருக்கிறது.”

கல்கத்தா தோழர்களின் கோரிக்கையை அகிலத்தின் பொதுக்குழு மிகுந்த கவனத்துடன், தீவிரமாகப் பரிசீலித்தது என்பதை இக்கூட்ட நடவடிக்கைகளிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியாவில் தொழிலாளர்களை எவ்வாறு அணி திரட்ட வேண்டும் என்பது குறித்தும், தத்துவார்த்த கல்வியின் அவசியம் குறித்துமான வழிகாட்டுதல்களுடன் பொதுக்குழு கல்கத்தா தோழர்களுக்குப் பதிலளித்திருந்தது. இந்தக் குழுவைப் பற்றி மேலும் அதிகமான விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும், கம்யூனிச கருத்துக்கள் மட்டுமின்றி, ஐரோப்பாவில் அக்கருத்தை வெற்றி பெறச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஸ்தாபன ரீதியான நடவடிக்கைகளும்கூட இந்தியாவில் இருந்த தீவிரவாத குழுவினருக்குத் தெரிய வந்திருந்தது என்பது தெளிவாகிறது.

ஹர் தயாள் – பிள்ளை – பட்டேல்

பல்வேறு இந்தியர்களின் இது போன்ற கருத்துக்களையும் எடுத்துக் கூறி விட முடியும். ஆனால் மார்க்ஸ் பற்றியும் சோசலிசத்தைப் பற்றியும் இந்தியாவில் முழுமையாக எடுத்துக் கூற 1912-ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருந்தது. முதலில் அவ்வாறு எழுதியவர் மகத்தான புரட்சிகர தேசியவாதியான லாலா ஹர் தயாள் (1884 – 1939) ஆவார். அந்நாட்களில் மிகவும் செல்வாக்குப் பெற்ற மாத இதழான ‘மாடர்ன் ரிவ்யூ’வின் 1912 மார்ச் இதழில் அவர் கார்ல் மார்க்ஸ் மற்றும் அவரது கருத்துக்கள் குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதினார். அவரது கட்டுரையின் தலைப்பு “கார்ல் மார்க்ஸ் நவீன யுக ரிஷி”.

ஒரு இந்தியனால், ஒரு இந்திய இதழில் மார்க்ஸ் பற்றி எழுதப்பட்ட கட்டுரை என்பது ஹர் தயாளுடையதுதான் எனில் ஸ்வதேசாபிமானி கே.ராமகிருஷ்ண பிள்ளை (1878 – 1916)யின் மார்க்ஸின் சுயசரிதைதான், இந்திய மொழி ஒன்றில் வெளியான சுயசரிதை ஆகும். இந்த இரண்டையும் மேலோட்டமாகப் படிக்கும்போது ராமகிருஷ்ண பிள்ளை தனது நூலை லாலா ஹர் தயாளின் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கினார் என்பது தெரியவரும். ஏனெனில் ஹர் தாயாளின் கட்டுரை மார்ச் மாதத்தில் வெளிவந்த அதே நேரத்தில், பிள்ளையின் நூல் ஆகஸ்ட் மாதத்தில் வெளியானது. ஹர் தயாளின் கட்டுரை தலைப்பான கார்ல் மார்க்ஸ், “நவீன யுக ரிஷி” என்று கூறியது போல அவரது கட்டுரையானது கதாநாயகரான கார்ல் மார்க்ஸின் தனிப்பட்ட மேன்மையையும், அவரது துயரங்களையும் தியாகங்களையும் எடுத்துக் கூறுவதாக அமைந்தது என்றே கூறலாம். மார்க்ஸின் தத்துவம் மற்றும் கண்ணோட்டம் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் ஹர் தயாளுக்கு பலவகையான கருத்து வேறுபாடுகள் இருந்தன. மேலும் பி.சி.ஜோஷி சுட்டிக் காட்டுவது போன்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று, மார்க்சியவாதிகள் பலரையும் சந்தித்து, மார்க்ஸ் மற்றும் மார்க்சியம் குறித்த பல நூல்களையும் படிப்பதற்கான வாய்ப்புகள் அவருக்கு இருந்த போதிலும், மார்க்சியம் குறித்த அவரது புரிதல் என்பது குறைபாடு உடையதாகவே இருந்தது. இதற்கு மாறாகக் திருவாங்கூர் மகாராஜாவின் ஊழல் மற்றும் உறவினர்களைச் செழிப்பாக்கும் போக்குகளை எவ்வித அச்சமுமின்றிச் சுட்டிக் காட்டியதன் விளைவாகத் திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்தே வெளியேற்றப்பட்ட ஸ்வதேசாபிமான ராமகிருஷ்ண பிள்ளையோ இந்தியாவிற்கு வெளியே எங்கும் சென்றவரல்லர்.

மகாராஜாவையும் அவரது அடிவருடிகளையும் கோப்படுத்திய செய்தித்தாளின் பெயர்தான் ஸ்வதேசாபிமானி. அதே பெயரால்தான் அவரும் அழைக்கப்பட்டார். மார்க்சிய கருத்துக்களின் செறிவான கருத்தையும், மார்க்ஸின் முக்கியமான நூல்களையும் சுட்டிக்காட்டுவதாக ராமகிருஷ்ண பிள்ளையின் நூல் அமைந்திருந்தது. சமஸ்தானத்திலிருந்து அவர் வெளியேற்றப்படுவதற்கு முன்பு தனது பத்திரிக்கையில் எழுதிய கட்டுரைகளிலும், வேறு சில பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளிலும்கூட சோசலிசத்தை விளக்கும் வகையிலும் அதை நியாயப்படுத்தியுமே எழுதி வந்தார், போதிய தகவல்கள் கிடைக்காததால் இக்கட்டுரைகளில் ஒரு சில குறைகளைக் கண்டுபிடிக்க முடியுமே தவிர, ராமகிருஷ்ண பிள்ளை – சோசலிசத்தை ஏற்றுக் கொண்டு அதை ஆதரிப்பவராகவே செயல்பட்டார். இவை அனைத்துமே மகத்தான அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி வெற்றி பெறுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்தவை என்பதை நினைவில் கொள்ளும்போது இந்த இரு பெரும் மனிதர்களின் நினைவைப் போற்றுவது மிகவும் பொருந்தமானதே ஆகும்.

மார்க்ஸ் குறித்த ஆய்வுகளில் ஹர் தயாள் மற்றும் ராமகிருஷ்ண பிள்ளை ஆகியோருக்குப் பிறகு முயற்சி செய்தவர் குஜராத்தைச் சேர்ந்த அம்பாலால் பட்டேல் ஆவார். அவர் 1916-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், அதாவது அக்டோபர் புரட்சிக்கு சரியாக ஓர் ஆண்டிற்கு முன்னால் ‘நவஜீவன் மற்றும் சத்யா’ என்ற குஜராத்தி மொழி இதழில் மார்க்ஸ் மற்றும் மார்க்சியம் குறித்து கட்டுரை ஒன்றை எழுதினார். இக்கட்டுரையில் மார்க்ஸ் – எங்கெல்ஸ் ஆகியோரின் புகழ்பெற்ற அறைகூவலான ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்: நீங்கள் இழப்பதற்கு அடிமைச் சங்கிலிகளைத் தவிர வேறெதுவும் இல்லை: ஆனால் வெல்வதற்கோ ஒரு பொன்னுலகம் உண்டு!’ என்பது பிரதானமாக எடுத்துக் காட்டப்பட்டிருந்தது. இக்கட்டுரையின் முன்னுரையில் அவர் எழுதியிருந்தார்:

“1847-ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் அறிக்கை அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு ஏழை மக்களை சுரண்டுவதை நியாயப்படுத்துவதற்கான தத்துவஞானிகளின் முயற்சிகள் வீணாகத்தான் போயின”

(குறிப்பு: கம்யூனிஸ்ட் அறிக்கை 1848ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட போதிலும், அதற்கு ஓர் ஆண்டிற்கு முன்பே அது எழுதி முடிக்கப்பட்டிருந்தது)

புரட்சிக்குப் பிறகு

1917-ம் ஆண்டின் மகத்தான அக்டோபர் புரட்சிக்குப் பிறகு இத்தகைய சோசலிச, கம்யூனிச கருத்துக்களை மேலும் வலுவாகப் பரவத்துவங்கின. ‘ஆதி பராசக்தி’ போன்ற பாரம்பரியமான கருத்துக்களைப் பயன்படுத்தியபோதிலும், தமிழ்மொழியின் நவீனயுக கவிஞர்களில் மகத்தானவரான சுப்ரமணிய பாரதி இப்புரட்சியை வரவேற்று – போற்றி கவிதை பாடினார். விடுதலைப் போராட்டத்திலும், பகுத்தறிவு இயக்கத்திலும் அப்போது தீவிரமாக ஈடுபட்டு வந்த பெரியார் ஈ.வே.ரா கூட சோசலிசம், புரட்சி ஆகியவற்றைப் பிரச்சாரம் செய்பவராக மாறினார். இவர்கள் இருவருமே சிங்காரவேலரின் நெருங்கிய நண்பர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

அதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிங்காரவேலர் விடுதலை இயக்கத்தில் செயல்பட்டு வந்தார். சூரத் நகரில் (1907) நடைபெற்ற இந்தியத் தேசிய காங்கிரஸின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாட்டிலும் அவர் பங்கேற்றார். இந்த மாநாட்டில்தான் காங்கிரஸ் மிதவாதிகள், தீவிரவாதிகள் என்ற இரு குழுக்களாகப் பிளவுபட்டது. மிதவாதிகளின் குழுவிற்குக் கோபாலகிருஷ்ண கோகலே, சர் ஃபிரோஸ் ஷா மேத்தா மற்றும் பலர் தலைவர்களாக இருந்தனர். தீவிரவாதிகள் குழுவிற்குப் பால் -லால் – பால் என்றறியப்பட்ட முப்பெரும் தலைவர்கள், அதாவது பாலகங்காதர திலகர். லாலா லஜபதி ராய், பிபின் சந்திர பால் ஆகியோர் தலைவர்களாக இருந்தனர். இயற்கையாகவே சிங்காரவேலர் இந்தத் தீவிரவாதிகளின் குழுவைச் சார்ந்தவராகவே இருந்தார். பிரிட்டிஷ் ஆட்சியாளர் பாலகங்காதர திலகரை அன்றைய பர்மாவில் (இப்போது மியான்மார்) இருந்த மாண்டலே சிறையில் நாடு கடத்தியபோது, மும்பை மற்றும் தூத்துக்குடி நகர்களில் இருந்த தொழிலாளர்கள் திலகர் கைது செய்யப்பட்டதையும் நாடு கடத்தப்பட்டதையும் எதிர்த்து ஓர் அரசியல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் சிங்காரவேலரை பின்பற்றியவர்கள்தான் இந்த வேலைநிறுத்தத்தை முன்நின்று நடத்தினார்கள். வி.ஐ.லெனின், தொழிலாளர்களின் இத்தகைய அரசியல் நடவடிக்கையானது இந்தியத் தொழிலாளி வர்க்கம் முதிர்ச்சி அடைந்து வருகிறது என்பதையே சுட்டிக்காட்டுகிறது என்று குறிப்பிட்டார்.

அக்டோபர் புரட்சியினால் உற்சாகம் பெற்று, 1919-ம் ஆண்டில் மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம் உருவாக்கப்பட்டதைக் தொடர்ந்து, மற்ற இடங்களைப் போலவே இந்தியாவிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதற்கான முயற்சிகள் துவங்கின. இந்தத் துவக்க கால முயற்சிகளில் குறிப்பிடத்தக்க இரண்டு முயற்சிகள் என்பது சோவியத் ஒன்றியத்தின் தென் பகுதியில் இருந்த தாஷ்கெண்ட்டிலும் மற்றொன்று கான்பூரிலும் மேற்கொள்ளப்பட்டது. தாஷ்கெண்ட் நகரில் மேற்கொள்ளப்ட்ட முயற்சி வி.ஐ.லெனின் மற்றும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் தூண்டுதலுக்கு இணங்க செயல்பட்ட எம்.என்.ராயினால் வழிகாட்டப்பட்டதாகும். இந்தியாவில் தொழிலாளி வர்க்கத்தையும், விவசாய இயக்கத்தையும் வளர்த்தெடுப்பது பற்றிய பிரச்சனையில் எம்.என்.ராய் சிங்காரவேலருடன் தொடர்ந்து கடிதங்கள் மூலம் கருத்துப் பரிமாற்றம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தாஷ்கெண்ட் மாநாட்டில் பங்கேற்ற முக்கியத் தலைவர்களில் ஒருவரான அபானி முகர்ஜி நேரடியாகச் சென்னைக்கு வந்து சிங்காரவேலரைச் சந்தித்து கம்யூனிஸ்ட் அகிலத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும் இந்தியாவில் அதன் செயல்பாடு குறித்தும் ஆலோசனை நடத்தினார். இந்தக் காலப்பகுதியில் சிங்காரவேலர் தேசிய இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார் என்பதும், 1922-இல் கயாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். பின்னாளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்களில் ஒருவராக உருப்பெற்ற எஸ்.ஏ.டாங்கேயை அவர் இந்தக் கயா மாநாட்டில்தான் சந்தித்தார்.

அவருடனும் மாநாட்டு பிரதிநிதிகளாக வந்திருந்த இதர கம்யூனிஸ்டுகள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோருடன் இணைந்து அந்த கயா காங்கிரஸில் இந்தியத் தேசிய காங்கிரஸை மேலும் தீவிரமானதொரு  அமைப்பாக மாற்றும் முயற்சியாக அணிதிரட்டப்பட்டதொரு முகாமை சிங்காரவேலர் உருவாக்கினார்.  ‘முழுமையான விடுதலை’ என்பதே அதன் இலட்சியம் என்று காங்கிரஸ் ஏற்றுக்கொள்வதை வற்புறுத்தும் வகையில் இந்த மாநாட்டில் இக்குழுவினர் பிரசுரங்களையும் விநியோகித்தனர். இந்த விசயத்தைப் பொறுத்தவரையில் அப்போது காங்கிரஸ் கிட்டத்தட்ட நடுக்கத்துடனேயேதான் இருந்தது. மாண்டேகு – செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் மற்றும் பிரிட்டனின் தலைமையின் கீழ் மேலாதிக்கமான இடம் என்ற விசயங்களுக்கு இடையே அன்றைய காங்கிரஸ் இயக்கம் ஊசலாடிக் கொண்டிருந்தது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்த தாஷ்கெண்ட் மாநாட்டிற்குப் பிறகு, அதன் நடவடிக்கைகள் முழுவேகத்தில் செயல்படத் துவங்கின, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ‘வேன்கார்ட்’ (முன்னணிப்படை) என்ற இதழ் வெளிநாட்டில் அச்சிடப்பட்டு இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக விநியோகிக்கப்பட்டது. என்.என்.ராயின் நூலான ‘மாற்றத்தை நோக்கி இந்தியா’ என்ற நூல் முதல்முறையாக இந்தியப் பின்னணியில் மார்க்சிய – லெனினிய கோட்பாடுகளைச் செயல்படுத்த முற்பட்டது. மகத்தான தோழரான முசாபர் அகமது, ஷெளகத் உஸ்மானி, நளினி குப்தா, அபானி முகர்ஜி போன்றவர்கள் தாஷ்கெண்ட் மாநாட்டின் அறைகூவலை ஏற்று, கல்கத்தா, சென்னை, மும்பை போன்ற பல்வேறு நகரங்களிலும் சட்டவிரோதமான ஆரம்பக் கட்சிக் கிளைகளை உருவாக்கினர். 1920-ம் ஆண்டில் இந்தியத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் முதல் அகில இந்திய அமைப்பான அகில இந்தியத் தொழிற் சங்க காங்கிரஸ் உருவாக்கப்பட்டது.

சிங்காரவேலரின் இந்துஸ்தான் லோபர் – இசான் கட்சி 1923-ம் ஆண்டில் பேரணி ஒன்றை நடத்தி பொதுக்கூட்டத்தையும் நடத்தி, மே தினத்தைக் கடைப்பிடித்த முதல் இந்தியத் தொழிற்சங்கமாகும்

என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும். லேபர் – கிசான் கெஜட் என்று ஆங்கில இருவார இதழையும் தொழிலாளர் என்ற வார இதழையும் அவர் நடத்தத் துவங்கினார். வலுவான சோசலிச உணர்வு கொண்ட தீவிர காங்கிரஸ்காரர் என்று சிங்காரவேலர் ஏற்கனவே நன்கு அறிமுகமாகியிருந்தார். அநேகமாக 1925-ம் ஆண்டில் கான்பூரில் நடைபெற்ற கம்யூனிஸ்டுகளின் அகில இந்திய மாநாட்டிற்கு அவர் தலைமை வகித்தபோதுதான் ஒரு கம்யூனிஸ்ட் ஆக ‘ஞான ஸ்நானம்’ பெற்றார் என்றும் கூடக் குறிப்பிடலாம். எஸ்.ஏ.டாங்கேயுடன் இந்தக் கான்பூர் மாநாட்டை ஏற்பாடு செய்தவர்கள், அதில் பங்கேற்றவர்கள் ஆகியோருக்கு எதிராகப் பிரிட்டிஷ் அரசாங்கம் வழக்கு ஒன்றையும் ஜோடித்தது. சிங்காரவேலரும் கைது செய்யப்பட்டதோடு, வன்முறையின் மூலம் பிரிட்டிஷ் அரசை தூக்கி ஏறிய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

இந்த மாநாட்டை நடத்துவதற்கு முன்முயற்சி எடுத்த சத்ய பக்த விளக்கியதைப் போல கான்பூர் மாநாட்டின் முக்கிய நோக்கம் என்பது இந்தியாவிலுள்ள பல்வேறு கம்யூனிஸ்ட் குழுக்களையும் ஒன்றுபடுத்தி, அவைகளை ஒன்றுபட்டதொரு கட்சியாக மாற்றுவது என்பதே ஆகும். பிரிட்டனில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த புகழ் பெற்ற சக்லத் வாலா இந்த மாநாட்டிற்குத் தலைமை ஏற்று நடத்துவதாக இருந்தது. இந்த மாநாட்டிற்கான அழைப்பிதழ் பலருக்கும் அனுப்பப்பட்டிருந்தது. மாபெரும் தோழரான முசாபர் அகமது அப்போது உத்திரப்பிரதேச மாநிலம் அல்மோராவில் சிகிச்சை முடிந்து ஓய்வு பெற்று வந்ததால் பங்கேற்க முடியவில்லை. எனினும் இந்த மாநாட்டிற்கு தனது ஆதரவு உண்டு என்பதைத் தெரிவிக்கும் வகையில் நன்கொடையாக அவர் ரூ.30 அனுப்பியிருந்தார். அந்த நாட்களில் அது மிகப் பெரிய தொகையாகும். வரவேற்புக் குழுவின் தலைவராக ஹசரத் மோகானி இருந்தார். தவிர்க்க இயலாத காரணகங்களால் சக்லத் வாலா இந்த மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை. எனினும் வாழ்த்துச் செய்தியையும் தனது ஆதரவினையும் அவர் அனுப்பியிருந்தார். அவர் பங்கேற்காத நிலையில் மாநாட்டிற்குத் தலைமை ஏற்கச் சிங்காரவேலர் தேந்தெடுக்கப்பட்டார். 1925-ம் ஆண்டு டிசம்பர் 26 முதல் 28 வரை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் தலைமை உரையில் சிங்காரவேலர் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று துணிவுடன் அறிவித்தார். நாம் ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று, இந்த மாநாட்டை நடத்துவதற்கு முன்முயற்சி எடுத்த சத்ய பக்த், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்ட கருத்துக்களுடன் மாறுபட்டு நின்ற நிலையில் மாநாட்டை விட்டு மட்டுமின்றி கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்தே வெளியேறினார்.

தாஷ்கெண்ட் மாநாட்டிற்குப் பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது அணி திரட்டும் முயற்சியாகக் கான்பூர் மாநாடு விளங்கியது. ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் இந்தப் கான்பூர் மாநாட்டினை முன்முயற்சி எடுத்து நடத்தியது சத்ய பக்த் என்ற துணிச்சலான பத்திரிக்கையாளர் ஆவார். நாணயமானவராக இருந்த போதிலும் மார்க்ஸிய – லெனினிய தத்துவம் மற்றும் நடைமுறையில அனுபவம் மிக்கவராக அவர் விளங்கவில்லை. எஸ்.ஏ. டாங்கேயின் முதல் நூலான ‘காந்தியும் லெனினும்’ என்ற நூலைப் பார்க்கும்போது, அவரது தத்துவார்த்த நிலைப்பாடும்கூட தெளிவாக இருக்கவில்லை என்பது தெரியவருகிறது. அவர் நடத்தி வந்த ‘சோசலிஸ்ட்’ இதழ் இந்தியாவில் தொழிலாளி வர்க்க இயக்க வளர்ச்சியின் வரலாற்றில் ஓர் அங்கமாக இடம் பெற்ற போதிலும், காந்தியம், சோசலிசம் ஆகியவற்றின் குழப்பமான கலவையாகவே இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். கான்பூர் மாநாடு தான் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் துவக்க காங்கிரஸ் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இன்று கூறி வருகிறது. தாஷ்கெண்ட் நகரில் நடைபெற்ற மாநாட்டைப் போல் இல்லாமல், கான்பூர் மாநாடு இந்திய மண்ணிலேயே நடைபெற்றது என்பதுதான் அவர்களது வாதம். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ கம்யூனிஸ்ட் அகிலத்தால் நேரடியாக ஏற்பாடு செய்யப்பட்டு தாஷ்கெண்ட் நகரில் நடைபெற்ற மாநாடுதான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் துவக்க காங்கிரஸ் என்று வலியுறுத்துகிறது.

தோழர் முசாபர் அகமது எழுதிய ‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் தோற்றமும்’ என்ற நூல் இது குறித்த நிலைபாட்டைத் தெளிவாக விளக்குவதோடு. தாஷ்கெண்ட் மாநாட்டிற்கான தனது ஆதரவை பலப்படுத்தியது. இன்றைய நோக்கத்திற்கு இந்த சச்சரவிற்குள் இதற்கு மேலும் நாம் போக வேண்டிய அவசியமில்லை. இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியில் கான்பூர் மாநாடு நிச்சயமாக ஒரு மைல்கல் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

இப்போது நாம் சற்றே பின்னோக்கி போய் சமூக சீர்திருத்தவாதியாகவும், தீவிர காங்கிரஸ்காரருமாக இருந்த சிங்காரவேலர் முழுமையானதொரு கம்யூனிஸ்டாக உருப்பெற்றதற்கான காரணங்கள் என்ன என்பதைச் சற்றே காணலாம்.

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்

சிங்காரவேலரின் குடும்பம் பிற்படுத்தப்பட்ட மீனவர் சமூகத்தைச் சேர்ந்ததாகும். மிகக் கடுமையான தொழிலைச் செய்து வந்து போதிலும் மீனவர்களுக்கு அவர்களது தேவைக்கு ஏற்ற வருமானம் கிடைப்பதில்லை. கடற்கரையில் குடிசைகளுக்கிடையே சுகாதாரமில்லாத, மிக மோசமான சூழ்நிலையில், வழக்கமான கல்வியோ, மரியாதைமிக்க குடியுரிமையோ இல்லாதவர்களாகவே அவர்கள் வசித்து வந்தனர். இச்சமூகத்தினை சேர்ந்த மற்றவர்களைவிட ஓரளவிற்கு மேம்பட்ட நிலையில் சிங்காரவேலரின் பெற்றோர் இருந்தபோதிலும், சாதிய புறக்கணிப்பு மற்றும் ஒடுக்குமுறை என்ற தளையிலிருந்து அவர்களால் விடுபட இயலவில்லை. வறுமையிலும், சகதியிலும் வாழ்ந்து வந்த ஒடுக்கப்பட்ட மக்களிடையே உருவான சிங்காரவேலர், தனது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சந்தித்த ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு சிறுவயதிலேயே உணர்வு தூண்டப்பட்டவராக இருந்தார். சென்னையின் புகழ்பெற்ற கல்லூரிகளில் பட்டம் பெற்று. வளமான வருமானம் தரும் வக்கீல் தொழிலில் இறங்கிய போதும் நிலைமைகள் அவரைத் தொடர்ந்து வாட்டிக் கொண்டேதான் இருந்தன. எனவே சமூக சேவை நடவடிக்கைகளிலும் அவர் இறங்கினார். இத்தகைய அனுபவங்கள்தான் தேசிய விடுதலைப் போராட்டத்தை நோக்கி அவரை கவர்ந்திழுக்க உதவின என்றும் உறுதியாகக் கூறலாம்.

அங்கும்கூட நாம் ஏற்கனவே பார்த்ததுபோல் மிதவாதிகளை விட, தீவிரவாத பிரிவினருடன் தான்அவர் தன்னை இணைத்துக் கொண்டார். மிதவாதிகள், தீவிரவாதிகள் என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து 1907-ம் ஆண்டு சூரத் நகரில் நடைபெற்ற இந்தியத் தேசிய காங்கிரஸ் மாநாட்டில் அவர் பங்கேற்றார் என்பதையும் நாம் ஏற்கனவே பார்த்தோம். அதே ஆண்டில்தான் முறையான பயிற்சிக்குப் பிறகு சிங்காரவேலர்  சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சபையில் வழக்கறிஞராக தன்னைப் பதிவு செய்து கொண்டார். இந்த நீதிமன்றங்களும், அதில் செயல்பட்டு வந்த வழக்கறிஞர்களின் வெற்றி என்பதும் சட்ட வழிமுறைகளின் நுணுக்கமான தன்மைகள் மட்டுமின்றி பெரும்பாலான மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் அவர்களின் போராட்டங்களும் அடங்கியதே ஆகும். எனினும் பணத்தையும் பதவியையும் மட்டுமே நோக்கமாக கொண்ட வழக்கறிஞர்களின் கண்களில் இதுபோன்ற விசயங்கள் தென்படுவதில்லை. ஆனால் சிங்காரவேலரோ மிகவும் வித்தியாசமானதொரு சூழ்நிலையில் வளர்ந்து வந்தவர். இவை அனைத்துமே அவரது இளம் பருவத்தில் உருப்பெற்ற கருத்துக்கள், அனுபவங்கள் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதாகவே அமைந்தன. பொதுவாகவே வழக்கறிஞர்கள் தம்மிடம் முதலில் வருபவருக்குச் சார்பாகவே வழக்குகளை, அவரது வாடிக்கையாளர் குற்றவாளியா அல்லது பாதிக்கப்பட்டவரா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், ஏற்றுக் கொள்வது வழக்கம். ஆனால் அப்போதுதான் வழக்கறிஞர் தொழிலில் இறங்கிய சிங்காரவேலரோ எந்தவொரு சூழ்நிலையிலும் அடக்கு முறையாளர்கள், பேராசைக்காரர்கள் ஆகியோரின் சார்பாக எப்போதும் வழக்காடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சிங்காரவேலர் ஒரு கம்யூனிஸ்டாக உருவாவதற்கு இரண்டாவது தீர்மானகரமான அம்சமாக விளங்கியது அவரது ஆழ்ந்த புலனறிவே ஆகும். ஆங்கிலம், தமிழ் மொழிகளைத் தவிர, இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் அவருக்குப் பட்டறிவு இருந்தது. இத்தகைய பன்மொழிப் புலமையானது அவரது கற்றலை விரிவுபடுத்தியதோடு, ஆழ்ந்த அறிவையும் ஏற்படுத்தித்தந்தது.

பல்வேறு வகையிலும் 1902-ம் ஆண்டு இங்கிலாந்திற்குச் சிங்காரவேலர்  மேற்கொண்ட பயணம் மகத்தான அனுபவமாக அமைந்தது என்றே கூறலாம். அந்தநேரத்தில்தான் மகத்தான சோசலிஸ்ட் பேச்சாளரும் அமைப்பாளருமான கெர் ஹார்டியின் தலைமையின் கீழ் புதியதாக உருவாக்கப்பட்டிருந்த தொழிலாளர் கட்சி பிரிட்டிஷ் அரசியலின் வடிவத்தை மாற்றியமைத்துக் கொண்டிருந்தது. உயிரோட்டமான சோசலிஸ்ட் தத்துவம் நடைமுறை என்ற பாரம்பரியத்தை உருவாக்கி விட்டுச் சென்ற ஃபிரடெரிக் எங்கெல்ஸ் மறைந்து ஏழு ஆண்டுகளே ஆகியிருந்தது. இவையனைத்துமே இந்தியாவிலிருந்து வந்திருந்த அந்த இளைஞரின் மீது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின.

அவர் இங்கிலாந்தில் இருந்தபோது மற்றுமொரு முக்கியமான சம்பவமும் நடைபெற்றது. அதுதான் உலக புத்த மதத்தவரின் மாநாடாகும். இந்த மாநாட்டிலும் சிங்காரவேலர் பங்கேற்றார். கிட்டத்தட்ட புத்த மதத்திற்கு அவர் மாறி விட்டார் என்றே கூறிவிடலாம். சாதிய முறைக்கு எதிரான, பிராமணிய பலியிடல், சடங்கு முறைகள் ஆகியவற்றிற்கு எதிரான கௌதமபுத்தரின் கருத்துக்கள் ஏற்கனவே துடிதுடித்துக் கொண்டிருந்த இளம் புரட்சியாளரின் இதயத்திலும், மனத்திலும் அலைமோதிக் கொண்டிருந்த கருத்துக்களே ஆகும்.

இந்தியாவிற்குத் திரும்பி வந்த அவர், மகா போதி சமூகத்தின் மாநாடு நடைபெற உதவி செய்ததோடு அதில் பங்கேற்கவும் செய்தார். அந்த நேரத்தில்தான் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கோயில்களில் நுழைய மட்டுமல்ல; பொது வீதிகளில் நடக்கவும், பொதுக் கிணறுகளைப் பயன்படுத்தவும் தடுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினர் சாதிய மேலாதிக்கத்திலிருந்து விடுபடும் வகையில் புத்தமதத்திற்கு மாறி விடலாமா என்று விவாதித்துக் கொண்டிருந்தனர். இறுதியில் 20ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்தான் தலித்துகள் பெருமளவில் புத்தமதத்திற்கு மாறுவதற்கு ஏற்பாடு செய்தார். இவ்வாறு மதம் மாறியவர்கள் புதிய புத்த மதத்தவராகக் கருதப்பட்டனர். எனவே சிங்காரவேலரை, அவரது முப்பதாவது வயதிலேயே, புதிய புத்த மதத்தவராக அழைப்பதும் தவறாகாது.

காங்கிரஸ் அரசியலின் கடுமையான பாதை

1919-ம் ஆண்டில் நிகழ்ந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவமும், இந்தியத் தேசிய காங்கிரஸில் மகாத்மா காந்தியின் நுழைவும், இந்தியத் தேசிய விடுதலை இயக்கத்தின் வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளாக அமைகின்றன. பஞ்சாபில் ஜாலியன் வாலா பாக் படுகொலை சம்பவமானது படுமோசமான ரௌலட் சட்டத்தை எதிர்த்து இந்திய மக்கள் கிளர்ந்தெழுந்ததற்கு பழி வாங்கும் படலமாக அமைந்தது. அந்நிய ஆட்சியாளர்கள் மக்களின் குரல்வளையை நெறித்து அரசியல் ரீதியாக அவர்கள் கிளர்ந்தெழாத வண்ணம் செய்வதற்காக பயன்படுத்திய வரன்முறை ஏதுமற்ற சட்டம்தான் ரௌலட் சட்டம். ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்களின் அதிருப்தியை விடுதலைப் போராட்டத்தில் அவர்கள் அணிதிரளும் வகையில் காந்தி மிகவும் புத்திக் கூர்மையுடன், பிரிட்டிஷ் நிறுவனங்கள் ஆகியவற்றைப் புறக்கணிப்பது மது விற்பனையைத் தடுப்பது, அனைத்து அரசு அலுவலகங்கள், அவற்றின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முழுமையாக மறுப்பது போன்றவைதான் அவரது போராட்ட வடிவங்களாக இருந்தன. இவை அனைத்தையும் அஹிம்சை முறையிலான சத்தியாக்கிரக இயக்கம் என்று அவர் அழைத்தார். 1922-ம் ஆண்டில் இந்தப் போராட்டம் உச்சகட்டத்திற்குச் சென்ற நேரத்தில், பீஹாரில் சௌரி சௌரா என்ற கிராமத்து மக்கள், காவல் நிலையத்தைத் தாக்கி வன்முறையில் இறங்கினார்கள் என்று கூறி, சக ஊழியர்கள் எவரையும் கலந்து ஆலோசிக்காமலேயே காந்தி இந்தப் போராட்டத்தை வாபஸ் வாங்கினார்.

காந்திஜியின் இந்த நடவடிக்கையானது பொதுவாக மக்களையும், குறிப்பாக இளைஞர்களையும் அவநம்பிக்கை கொள்ள வைத்தது. மோதிலால்நேரு, சித்தரஞ்சன் தாஸ் போன்ற மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒரு குழுவை உருவாக்கி அதற்கு ஸ்வராஜ்ய கட்சி என்று பெயரிட்டு அரசியல்  சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப நடப்போம் என்றும் அறிவித்தனர். மேல் தட்டில் இருந்த தலைவர்களில் சி.ராஜகோபாலாச்சாரி, ராஜேந்திர பிராசாத், வல்லபாய் பட்டேல் போன்ற மற்றொரு பிரிவினர், காந்திய வழிமுறையையே பின்பற்றுவது என முடிவெடுத்தனர். இவர்கள் மாற்றத்தை விரும்பாதவர்கள் என்று அழைக்கப்பட்டனர். எனினும் இந்த மாற்றத்தை விரும்பாதவர்களிடம் காதி நூல் நூற்பது, ஹரிஜன மேம்பாடு, மதுவிலக்கு போன்ற திட்டங்கள் மட்டுமே கைவசம் இருந்தன. அதாவது கிட்டத்தட்ட தீவிரமான அரசியல் பணிகளிலிருந்து விலகி நிற்பது என்பதாகவே இருந்தது.

காந்திஜியின் எதேச்சாதிகாரமான, முன்யோசனையில்லாத நடவடிக்கையின் விளைவாக ஏற்பட்ட பெரும் இடைவெளியில் கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள், பகத்சிங் போன்ற தீவிர இளைஞர் குழுக்கள் போன்ற அமைப்புகள் தோன்ற வழி கிடைத்தது. முசாபர் அகமது, சிங்காரவேலர்  எஸ்.ஏடாங்கே போன்றவர்கள் ஊசலாடிக் கொண்டிருந்த சோசலிஸ்டுகளையோ, அல்லது பகத்சிங் போன்றவர்கள் தனி நபர் வீரச் செயல் போன்ற வன்முறை நடவடிக்கைகளையோ பின்பற்ற மறுத்தனர். கான்பூர் மாநாட்டிற்குப் பிறகு சிங்காரவேலர்  உள்ளிட்ட கம்யூனிஸ்டுகள் நாட்டின் பல பகுதிகளிலும் சட்டபூர்வமாகச் செயல்படுவதற்காகத் தொழிலாளர் மற்றும் விவசாயக் கட்சியை உருவாக்கினர்.

சிங்காரவேலரின், சாதிக்கு எதிரான உறுதியான நிலைபாடும், இந்துச் சடங்குகள், அவர்களது மனுஸ்மிருதி போன்ற நூல்களின் மீதான அவரது வெறுப்பும்தான் ஈ.வே.ராமசாமி நாயக்கர் மற்றும் அவரது சுயமரியாதைக் கட்சியுடன் நெருக்கமாக அவரைச் செயல்பட வைத்தது எனலாம். 1925-ம் ஆண்டு வாக்கிலேயே ஈ.வே.ரா., காங்கிரஸின் மீதும் அதன் மேல்சாதி தலைமையின் மீதும், நம்பிக்கை இழந்திருந்தார். சுயமரியாதைக் கட்சியின் முக்கிய நோக்கம் என்பது சாதி அடக்குமுறை அமைப்பை எதிர்த்துப் போராடுவதே ஆகும். இந்து மதச் சடங்குகள், புராண ரீதியான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை எதிர்ப்பதும் இதன் ஒரு பகுதியாகவே இருந்தது. ராமாயணத்தில் வரும் ஸ்ரீராமனை வழிபடுவதற்குப் பதிலாக ராவணனின் சிறப்பான குண நலன்களையும், அறிவுத் திறனையும், ஈ.வே.ரா. போற்றிப் புகழ்ந்தார். அவரது பகுத்தறிவு வாதம் என்பது மார்க்ஸின் இயக்கவியல் பொருள் முதல்வாதத்திலிருந்து ஒரு சில விசயங்களில் வேறுபட்டதாக இருந்தபோதிலும் சிங்காரவேலர் அதனால் கவரப்பட்டார். அதேநேரத்தில் ஈ.வே.ரா.வின் அதீதமான பேச்சுக்களையும் அவர் விமர்சித்தார். ஈ.வே.ரா.நடத்தி வந்த “குடியரசு” இதழிலும் அவர் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்தார்.

1925-ம் ஆண்டில் சுயமரியாதைக் கட்சி தோன்றுவதற்கு முன்னரே, 1916-ம் ஆண்டில் நீதிக்கட்சி தோன்றியது. ஈ.வெ.ராமசாமி நாயக்கர், 1934-ம் ஆண்டு முதல் நீதிக்கட்சியுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தார். அதுவே பின்னாளில் திராவிடக் கழகமாக உருப்பெற்றது. ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் குறித்து சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் கொண்டிருந்த பாராமுகமான போக்கினைச் சிங்காரவேலர் அங்கீகரிக்கவில்லை. எனவேதான் சுயமரியாதை சோசலிஸ்ட் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிக்கு அவர் ஆதரவளித்தார். இந்த இயக்கமானது கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரானதோ அல்லது அதற்கு இணையானதோ அல்ல. எனவேதான் அவரறிந்திருந்த மூத்த கம்யூனிஸ்டுகளில் ஒருவரான எஸ்..ஏ.டாங்கேவை 1936-ம் ஆண்டு நடைபெற்ற சுயமரியாதை சோசலிஸ்டுகளின் மாநாட்டை துவக்கி வைக்க அழைத்தார்.

சௌரி சௌரா சம்பவத்திற்குப் பிறகு பெற்ற அடிகளிலிருந்து மெதுவாக விடுதலை பெற்று, உறுதியுடன் புத்தெழுச்சி பெற்றதாக இந்திய அரசியல் சூழ்நிலை நிலவியது. சைமன் தலைமையில் அனைத்து உறுப்பினர்களும் வெள்ளையர்களே ஆன கமிசன் இந்தியாவிற்கு வருகை தர நியமிக்கப்பட்டதை அறிந்து இந்திய மக்கள் மிகுந்த கோபமுற்றனர். இந்தக் கமிசன் இந்தியத் தலைவர்களுடன் பேசி, இந்தியாவின் எதிர்கால அரசியல் அமைப்புச் சட்டம் குறித்து பரிந்துரைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சைமன் கமிசன் இந்தியாவில் சென்ற இடங்களில் எல்லாம் புறக்கணிக்கப்பட்தோடு வலுவான எதிர்ப்பையும் சந்திக்க நேரிட்டது.

1928-ம் ஆண்டில் டாக்டர் அன்சாரி தலைமையில் காங்கிரஸ் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் பங்கேற்ற முதல் காங்கிரஸ் மாநாடும் இதுவேயாகும். தனது தந்தை மோதிலால் நேருவுடன் சோவியத் யூனியனுக்குச் சென்று திரும்பியிருந்த இளைஞரான ஜவகர்லால் நேருவும் இந்தச் சென்னை மாநாட்டில் பங்கேற்றதோடு, முழுமையான விடுதலையே காங்கிரஸ் இலக்கு என்ற தீர்மானத்தையும் முன்மொழிந்தார். அவரது இந்த முயற்சியை அவரது தந்தையும் மாகத்மா காந்தியும் கூட எதிர்த்தனர் என்பதோடு அதீதமானதொரு நடவடிக்கை இது என்றும் கருதினர். எனினும் அத்தீர்மானம் மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதை அடுத்து வந்த 1929-ம் ஆண்டானது இந்தியாவிற்கு மட்டுமல்ல; உலகம் முழுவதற்குமே மிகவும் முக்கியமானதொரு ஆண்டாகத் திகழ்ந்தது. இந்த 1929-ம் ஆண்டில்தான் அமெரிக்காவிலும், இதர மேற்கந்திய முதலாளித்துவ நாடுகளிலும் ‘மாபெரும் பொருளாதார வீழ்ச்சி’ வெடித்தெழுந்தது. இது இந்தியா உள்ளிட்டு முதலாளித்துவ உலகம் முழுவதிலும் மிக மோசமான விளைவுகளை ஏற்ழுடுத்தின.

1930-ம் ஆண்டில் உப்பு ‘சத்தியாக்கிரம்’ ‘தண்டி   யாத்திரை’ என்ற வடிவங்களில் அடுத்த சுற்று ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தினை மகாத்மா காந்தி துவங்கினார். இதே நேரத்தில்தான் பகத்சிங்கும் அவரது தோழர்களும் பிரிட்டிஷ் ஆட்சியைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கினர். பிரிட்டிஷ் படையைச் சேர்ந்த ஜெனரல் டயர் மாபெரும் தேசியத் தலைவரான லாலா லஜபதிராய் அவர்களின் மீது தாக்குதல் தொடுக்க, படுகாயமுற்ற அவர் சில நாட்களில் உயிரிழந்தார். இந்த ஜெனரல் டயரை சுட்டுக் கொல்ல முயன்ற பகத்சிங் பின்பு தூக்கிலிடப்பட்டார்.

1929-ம் ஆண்டில் நிகழ்ந்த மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்கநிகழ்ச்சி என்பது மீரட் சதி வழக்கு ஆகும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர் – விவசாய கட்சியின் செயல்வீரர்கள் கைது செய்யப்பட்டடனர். சட்டபூர்வமானதொரு அரசைத் தூக்கியெறிய சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

1934ஆம் ஆண்டில் மத்திய கமிட்டி ஒன்றை உருவாக்கித் தங்களைச் சீரமைத்துக் கொண்னட கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்காலத் தலைவர்களின் பெரும்பாலோர் இந்த மீரட் சதி வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிலிப் ஸ்பராட், பென் பிராட்லி, ஹட்சின்சன் உள்ளிட்டு பி.சி.ஜோஷி, ஜி.அதிகாரி, எஸ்.ஏ.டாங்கே, எஸ்.எஸ்.மிராஜ்கர் மற்றும் பலர் இச்சதிவழக்கில் குற்றவாளிகளாக இருந்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களோ புரட்சிகரக் கருத்துக்களை பிரச்சாரம் செய்யவும், கம்யூனிஸ்ட்டுகளின் செயல் திட்டத்தை விளக்குவதற்குமான ஒரு மேடையாகவே இந்த நீதிமன்றத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். கம்யூனிச தத்துவம் குறித்த நூல்கள் அப்போது தடை செய்யப்பட்டு, கிடைக்காத நிலையில், இந்த நீதிமன்ற நடவடிக்கைகளின்மூலம் மக்கள் மார்க்சியம் பற்றியும், சோசலிசம் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது. அன்றைய நாளிதழ்களும் இந்த வாதங்களை விரிவாக வெளியிட்டன. ரயில்வே வேலைநிறுத்தம் ஒன்றிற்காகச் சிங்காரவேலர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் மீரட் சதி வழக்கில் அவர் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை.

18 மாத சிறைவாசத்திற்குப் பிறகு அவர் 1930-ம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 70. அவரால் பயிற்றுவிக்கப்பட்ட தலைவர்கள் ஏற்கனவே இயக்கத்தை வலுப்படுத்தி, போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருந்தனர். வயதும், முதுமையும், உடல் நலக்குறைவும் இருந்தபோதிலும் அவர் ஓய்வு பெற விரும்பினாரில்லை. தனது நடவடிக்கைகளையும் எழுத்துப் பணிகளையும் அவர் தொடர்ந்து செய்து கொண்டேதான் இருந்தார்.

1933-ம் ஆண்டில் மீரட் சதி வழக்கில் தண்டனை பெற்ற தோழர்கள் ஒருவர் பின் ஒருவராக விடுதலை பெற்றனர். அவர்கள் ஒன்றுகூடி கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கத் தலைப்பட்டார்கள். ஏற்கனவே குறிப்பிட்டது போல 1934-ம் ஆண்டில் ஒரு மத்திய தலைமை உருவாக்கப்பட்டது. மீரட் குழுவில் வயதில் மிகவும் இளைஞராக இருந்த தோழர் பி.சி. ஜோஷி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஆனார். உண்மையில் டாக்டர். கங்காதர் அதிகாரிதான் அந்தப் பொறுப்பிற்கு வருவதாக இருந்தது. எனினும் அந்த நேரத்தில் அவர் விடுதலை செய்யப்படாமல் இருந்தததால் தோழர் ஜோஷியிடம் பொறுப்பு வழங்கப்பட்டது. அதிகாரி  சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகும் கூட ஜோஷி தொடர்ந்து பொதுச் செயலாளராகத் தொடர்ந்தார். 1948-ம் ஆண்டில்தான் அவருக்குப் பதிலாகத் தோழர் பி.டிரணதிவே அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

1934-ம் ஆண்டிலிருந்துதான் “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி” அந்நிய ஆட்சியாளர்களின் அனைத்து விதமான அடக்குமுறைகள், தாக்குதல்கள் ஆகியவற்றை மீறி முதிர்ச்சி அடைந்தது. எனினும் 1942-ம் ஆண்டு வரை கட்சி சட்டவிரோதமான ஒன்றாகவே இருந்தது.

1934-ம் ஆண்டில் மத்திய தலைமை ஒன்றின் மூலம் மறுசீரமைப்புச் செய்ததன் மூலம் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புகழ்மிகு அத்தியாயம் துவங்கியது. இந்தத் துவக்கத்தில் தோழர் சிங்காரவேலரின் பங்களிப்பு தீர்மானகரமானதாகவும், மகத்தானதாகவும் இருந்தது. இதில் அவரது பங்களிப்பு குறித்து அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய கே.முருகேசன், சி.எஸ்.சுப்பிரமணியம் ஆகியோர் கீழ்கண்டவாறு குறிப்பிட்டனர்:

“….. அவரது இந்த உண்மைத் தன்மையுடன் வெளிப்படையான பேச்சும் அவருக்கு எந்த வகையிலும் பெரிய அளவில் ஊறு எதையும் விளைத்துவிடவில்லை. ஏனெனில் அவர் காங்கிரஸ் கட்சிக்குள்ளே இருந்தாலும் சரி, வெளியே இருந்தாலும் சரி, சுயமரியானை இயக்கத்திற்கு உள்ளே இருந்தாலும் சரி, வெளியே அவர் ஊசலாட்டமில்லாததொரு கம்யூனிஸ்ட் என்பதை வெளிப்படுத்துகிறது. தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறிக் கொள்ள அவர் எப்போதுமே பயந்தவரல்ல; அதுவும் அப்போதிருந்த ஏகாதிபத்திய ஆட்சியாளர்களும் அவர்களது பிரச்சாரமும் கம்யூனிசம் என்பது ஏதோ பயங்கரமானது போன்று சித்தரிக்கத் தயங்கியதே இல்லை. அப்போதுதான் விழிப்புணர்வு பெற்றிருந்த தேசியவாதிகளின் மனங்களில் கம்யூனிசத்தோடோ அல்லது கம்யூனிஸ்டுகளுடனோ தொடர்பு கொள்வது என்பது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கருத்தை உண்டாக்கி இருந்தனர். அல்லது அவ்வாறு உண்டாக்க முயற்சி செய்தனர். தொடர்ந்து உறுதியாகத் தன்னை ஒரு கம்யூனிஸ்டு என்ற நிலையெடுத்து அதைத் தொடர்ந்து கடைப்பிடித்தும் வந்ததானது கம்யூனிசம் என்ற தத்துவத்திற்கு ஆதரவாக எத்தகைய வீரமான, துணிச்சலான, வீரராக சிங்காரவேலு இருந்தார் என்பதையே எடுத்துக் காட்டுகிறது”

             (சிங்காரவேலு – தென் இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் –        பி.பி.எச்.   புதுதில்லி 1975)

நன்றி: சிங்காரவேலர் நினைவு அறக்கட்டளை

உள்ளிருந்தே கைப்பற்றப்பட்ட அரசு அய்ஜாஸ் அகமத் – உடன் ஓர் உரையாடல்

ஜிப்ஸன் ஜான், ஜிதேஷ், எ.எம்

தமிழில்: வீ.பா. கணேசன்

இந்தியாவைச் சேர்ந்த மார்க்சிய சிந்தனையாளரான அய்ஜாஸ் அகமத் நவீன வரலாறு, அரசியல், கலாச்சாரம் ஆகியவை குறித்த கொள்கைகளுக்கான நிபுணராக சர்வதேச அளவில் புகழ்பெற்றவர். இந்தியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் பல்கலைக் கழகங்களில் பேராசிரியராக பணியாற்றிய அவர், தற்போது இர்வைன் பகுதியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஒப்பியல் இலக்கியத் துறையில் மதிப்புமிகு பேராசிரியராக விமர்சனக் கொள்கையை பயிற்றுவித்து வருகிறார்.

இந்துத்துவ வகுப்புவாதம், பாசிஸம், மதச்சார்பபின்மை, இந்தியப் பின்னணியில் இடதுசாரிகளின் எதிர்காலத்திற்கான வாய்ப்புகள் குறித்த கேள்விகளே இந்தப் பேட்டியில் பெரும் பகுதியாக எழுப்பப்பட்டன. மற்ற பகுதிகளில் உலகமயமாக்கல், உலகளாவிய அளவில் இடதுசாரிகளுக்கான வாய்ப்புகள், அண்டோனியோ க்ராம்சியின் சிந்தனைகளை சரியாகவும், தவறாகவும் பயன்படுத்துவது, இன்றைய சூழலில் கார்ல் மார்க்சின் சிந்தனைகளின் பொருத்தப்பாடு ஆகியவை குறித்த தனது கருத்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன்பாக இந்தப் பேட்டி நடத்தப்பட்டு, தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் மேம்படுத்தப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ்-ம் பாஜக உள்ளிட்ட அதன் பரிவாரங்களும் மிகவும் தனித்துவமான முறையில் பாசிஸ தன்மைகளை வெளிப்படுத்துகின்றன எனவும் அய்ஜாஸ் அகமத் வாதிடுகிறார். எனினும் இந்தியாவின் தாராளவாத நிறுவனங்கள் தற்போது வெற்றுக் கூடுகளாக மாறிவிட்டபோதிலும், இந்திய அரசு இன்னமும் தாராளவாத முறைமையின் அடிப்படையில்தான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தனித்துவமான தத்துவார்த்த நிலைபாட்டின் அடிப்படையில்தான் இந்தக் கருத்தாக்கத்தை அவர் முன்வைக்கிறார்.

ஜனநாயகத்திற்கும் தாராளவாதத்திற்கும் இடையில் அடிப்படையான முரண்பாடு நிலவுகிறது என்றும் அய்ஜாஸ் அகமத் நம்புகிறார். எனினும் அதீத வலதுசாரிகளுக்கும் அரசின் தாராளவாத நிறுவன வடிவத்திற்கும் இடையே அத்தகைய முரண்பாடு எதுவும் நிலவவில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார். இத்தகைய தாராளவாதம்தான் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தி அதீத வலதுசாரிகளை வலுப்படுத்துகிறது. எனவேதான் அமெரிக்கா, இஸ்ரேல், துருக்கி, இந்தியா போன்ற பலவகையான உலக நாடுகளிலும் அதீத வலதுசாரி சக்திகள் தாராளவாத நிறுவனங்களின் மூலமாக ஆட்சி செலுத்தவும் முடிகிறது.

பாசிஸம் குறித்த கேள்வியை இருவேறுபட்ட சிந்தனைச் சட்டகத்தில் இருந்து பார்க்க வேண்டும் என்றும், பெரும்பாலான நேரங்களில் இந்தச் சட்டகங்கள் ஒன்றோடு ஒன்று குழப்பிக் கொள்ளப்படுகின்றன என்றும் அவர் நம்புகிறார். அவற்றில் ஒரு சிந்தனைச் சட்டகத்தில் இருந்து பார்க்கும்போது ஏகாதிபத்திய சகாப்தம் முழுவதிலும் முதலாளித்துவ அரசியலின் அனைத்து வடிவங்களிலுமே பாசிஸம் என்ற போக்கு நிரந்தரமான உள்ளீடாக இருந்து வருவதைக் காண முடியும். உதாரணமாக, தாராளவாத/ நவதாராளவாத முதலாளித்துவத்தின் ஆட்சியில் பாசிஸ போக்குகளை வெளிப்படுத்தி வரும் எண்ணற்ற அரசியல் கட்சிகள் ஐரோப்பா கண்டம் முழுவதிலுமே மிக இயல்பாக செயல்பட்டு வருவதைக் காண முடியும்.

எனினும் மேலே சொல்லப்பட்ட சிந்தனைச் சட்டகத்தின் குறுகிய பார்வையில் பார்க்கும்போது போர்களுக்கு இடையிலான காலப்பகுதியில், பிரத்தியேகமான சூழ்நிலைகளில், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் முழுமையான பாசிஸ அரசுகளும் இயக்கங்களும் எழுச்சி பெற்றன. இதற்கு அந்த நாடுகளில் நிலவிய வர்க்க சக்திகளின் பலாபலன் அத்தகையதாக இருந்தது. மூலதனத்தின் ஆட்சியை அச்சுறுத்தி வந்த மிக வலுவான புரட்சிகரமான தொழிலாளி வர்க்க இயக்கங்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட, அரசின் தாராளவாத வடிவத்தை அகற்ற வேண்டியது அவசியமாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலத்தில் வேறெந்த காலகட்டத்தையும் விட இன்று தொழிலாளி வர்க்க இயக்கங்கள் மிகவும் பலவீனமானவையாக உள்ள நிலையில் ஒரு பாசிஸ ஒழுங்குமுறை தேவையற்றதாக உள்ளது. இத்தகைய சூழலில் நரக வேதனையைத் தழுவியபடி அதீத வலதுசாரிகளும் தாராளவாத அமைப்புகளும் ஒன்றாக இருக்க முடியும்.

கேள்வி: மே 2019 தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் மக்களின் ஒப்புதலைப் பெற்றிருக்கிறார். அவர் திரும்பவும் ஆட்சிக்கு வந்திருப்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியுடன் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான முக்கிய அம்சங்கள் என்ன? ஆர்.எஸ்.எஸ்.-பாஜகவின் இரண்டாவது முறை ஆட்சியின் கீழ் இந்தியாவின் எதிர்காலம் எத்தகையதாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

நரேந்திர மோடியின் தலைமையில் நிச்சயமாக பாஜக மிகப்பெரும் தேர்தல் வெற்றியைப் பெற்றுள்ளது. ‘மக்கள் தீர்ப்பு’ என்று இதைச் சொல்லமுடியுமா என்பதும் கூட சந்தேகத்திற்குரிய ஒன்றுதான். மக்கள் தங்கள் தீர்ப்பைச் சொல்லவேண்டுமானால், உண்மைகளின் அடிப்படையிலான, அறிவுபூர்வமான, அரசியல் விவாதம் மக்களுக்குத் தேவைப்படுகிறது. அதைப் போன்றே எதிர்க்கட்சிகள் தங்களது மாற்றுக் கொள்கைகளை மக்களிடையே தெளிவாக எடுத்துரைப்பதற்கான அமைதியான, தெளிவான சூழலும் தேவைப்படுகிறது. அரசியல் கட்சிகள் உண்மைகளின் அடிப்படையில் அறிவுபூர்வமான மாற்றுக் கருத்துக்களை முன்வைக்க முடிந்தாலும் கூட, அவை மக்களிடம் சென்று சேரும் வாய்ப்பு இன்று இல்லை. ஏனெனில், இந்திய பெரு நிறுவனங்களின் பிடியிலுள்ள ஊடகமானது கிட்டத்தட்ட சங் பரிவார இயந்திரத்தோடு ஐக்கியமான ஒன்றாக மாறிவிட்டதோடு, உண்மைகளையும் கொள்கைகளையும் எவ்வித மாச்சரியமும் இன்றி வெளியிடுவது; மக்கள் நலனுக்கு உகந்த வகையில் செயல்படுவது என்ற தனது தொழில்முறை உறுதிப்பாட்டை இழந்துபோனதாகவும் மாறியுள்ளது. மக்கள் தங்கள் தீர்ப்பைத் தர முடிகின்ற ஜனநாயக பூர்வமான செயல்பாட்டிற்கு இதில் தொடர்புடைய, அனைத்து அமைப்புகளும், குறிப்பாக தேர்தல் ஆணையம், உயர்மட்ட நீதித்துறை, சட்டத்தை அமலாக்கும் அமைப்புகள் போன்றவை, நீதிநெறி முறைகளை, அரசியல் அமைப்புச் சட்ட மற்றும் சட்டரீதியான நெறிமுறைகளை, கறாராகக் கடைப்பிடிப்பனவாக இருக்க வேண்டும். ஆனால் நிலைமை அவ்வாறு இல்லை என்பது தான் உண்மை. இந்திய அரசியல் தளம் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் ஜனநாயக நெறிமுறைகளை மிகுந்த உறுதியோடு கடைப்பிடித்த ஒரு காலமும் இருந்தது. எனினும் அத்தகைய மக்கள் திரள் கடந்த சில தசாப்தங்களாக இந்தியாவில் பெரும் போராட்டத்தை நடத்தி வருவதோடு, ஆண்டுகள் செல்லச் செல்ல மேலும் மேலும் அதிகமான வகையில் ஊழல்மிக்கதாக மாறி வருகிறது. “ஊழல் மிக்கதாக” என்பதை தேர்தலில் மிகப் பிரம்மாண்டமான வகையில் பணத்தைப் பயன்படுத்துவது என்ற பொருளில் மட்டுமே நான் குறிப்பிடவில்லை; தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் அது மிக முக்கியமான ஓர் அம்சமாக இருக்கிறது என்பதும் உண்மை தான். எனினும் ஜனநாயகச் செயல்பாடு என்ற குறிப்பிடக்கூடிய செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த சீரழிவையே நான் அவ்விதம் குறிப்பிடுகிறேன். 2019 தேர்தல் முடிவுகள் தேர்தல் வெற்றியின் அளவுக்கும் ஜனநாயக ரீதியான அடிப்படை நெறிமுறைகள் என்பதற்கும் இடையேயான உறவுகள் முற்றிலுமாக மறைந்து போன ஒரு கட்டத்தை நாம் எட்டியிருக்கிறோம் என்பதை எடுத்துக் காட்டுவதாகவே தோன்றுகிறது.

மிகுந்த ஆச்சரியமூட்டும் வகையில் இந்திய அரசியல் அமெரிக்க மயமாகியுள்ளது. ஒரு புறத்தில் வழிகாட்டியும் பாதுகாவலருமாகத் தோற்றமளிக்கும் மகத்தான தலைவர் என்ற பிம்பம் உருவாக்கப்படுவதும் மறுபுறத்தில் அச்சத்தையும் பதற்றத்தையும் திட்டமிட்டு உருவாக்குவதும் வழக்கமானதொரு விஷயமாக மாறியிருக்கிறது. அரசியல் என்பது இப்போது இடைவெளியற்ற வகையில் தொலைக்காட்சி நிலையங் களாலும், கருத்துக் கணிப்புகளாலும், பிரம்மாண்டமான பிரச்சாரங்களாலும் பெருநிறுவனங்கள் பல ஆயிரம் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழிக்கும் ஒரு விஷயமாக மாறிப் போயிருக்கிறது. இந்தப்பணத்தில் பெரும்பகுதி ரகசியமானது மட்டுமின்றி அடையாளம் காண முடியாத ஒன்றாகவும் இருக்கிறது. அமித் ஷா உள்துறை அமைச்சராக உள்ள நிலையில் குடிமக்கள், குடிமக்கள் அல்லாதவர்கள் குறித்த பதற்றமான சூழ்நிலை அதிகரித்துக் கொண்டே போவது அமெரிக்காவிற்குள் நுழையும் பொருளாதார ரீதியான அகதிகள் குறித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் இனவாத, கிட்டத்தட்ட இனவெறித்தனமான கொள்கைகளின் நகலாகவே தென்படுகிறது. இவை அனைத்தையுமே சங் பரிவாரங்கள் மூன்று வேறுபாடுகளுடன் அமெரிக்காவிடமிருந்து கற்றுக் கொண்டவைதான்: வெட்டவெளிச்சமான பதற்றச் சூழ்நிலையை உருவாக்குவது என்பதுதான் இந்தியாவிலுள்ள அனைத்துத் தொலைக்காட்சிகளின் விதிமுறையாக இருந்து வருகிறது; 2019-ம் ஆண்டில் பாஜகவின் செயல்பாட்டை வேகப்படுத்த உதவிய பணத்திற்கான ஆதாரத்தை கண்டுபிடிக்க முடியாது என்பதோடு அமெரிக்காவில் இவ்வாறு தேர்தலில் செலவழிக்கப்படும் தொகையை விட அது மிக அதிகமாகவே உள்ளது; நீதித்துறையினால் தண்டிக்கப்படுவோம் என்ற பயமேதுமின்றி, தீவிரமாகவும், இடைவிடாத வகையிலும் சங் பரிவாரம் தொடர்ந்து கட்டவிழ்த்து விடும் வன்முறை ட்ரம்ப்பின் மூர்க்கத்தனத்தை விடப் பல மடங்கு அதிகமாகும்.

“2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினவா?” என்று கேட்டால், ஆம், 2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகளைப் போலவே இந்தத் தேர்தலும் எனக்கு வியப்பை அளித்தது. அன்றாட தேர்தல் அரசியலில் நான் அதிக கவனம் செலுத்துபவன் அல்ல. எந்தவொரு தேர்தலிலும் எனது தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் என்பது இடதுசாரிகள், தாராளத்தன்மை கொண்ட இடதுசாரிகள் போன்ற எனக்கு வேண்டியவர்களிடமிருந்து பெற்ற அந்த மதிப்பீடுகள் என்னவென்று தெரியுமா? இருதரப்பினருமே மிகக் குறைந்த வித்தியாசத்தில்தான் வெற்றி பெறுவார்கள்; ஒரு வேளை தொங்கு பாராளுமன்றமாகவும் கூட அது இருக்கலாம். உடனடி எதிர்பார்ப்புகளில் இருந்து நான் விடுபட்ட உடனேயே கட்டமைப்பு குறித்த எனது ஆய்வின் அடிப்படை ஆதாரத்தை நோக்கி நான் திரும்பிச் சென்றேன். மதச்சார்பின்மை எப்போதுமே சிறுபான்மை நிலைபாடு கொண்டதுதான் மதச்சார்பின்மைக்கான உண்மையான பற்றுறுதி என்பது இந்திய சமூகத்திலும் அரசியலிலும் எப்போதுமே சிறுபான்மை நிலைபாட்டைக் கொண்டிருப்பதுதான் என்பதையும் இந்திய சமூகமானது எந்த அளவிற்கு இந்துமயமாக மாறியுள்ளது என்பதையும், எவ்வாறு வகுப்புவாத வன்முறையானது எப்போதுமே பாஜக மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு தேர்தலில் பெருமளவிற்குப் பலனளிக்க வழிவகுக்கிறது என்பதையும், இந்திய அரசின் முக்கியமான, தேர்தல் ஆணையம், உயர்மட்ட நீதித் துறை ஆகியவை உள்ளிட்ட, நிறுவனங்கள் அனைத்தும் மிக அதிகமான அளவிற்கு பாஜகவின் நலன்களுக்கு சேவை செய்வதாக மாறியுள்ளன என்பதையும் நான் எப்போதுமே வலியுறுத்தி வந்துள்ளேன். 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு பெருமளவிலான போக்குகள் குறித்து மேலும் அதிகமான கருத்தோட்டங்களை உள்ளடக்கி 2015-ம் ஆண்டில் நான் எழுதிய கட்டுரையை சோஷலிஸ்ட் ரிஜிஸ்டர் இதழ் 2016-ம் ஆண்டில் வெளியிட்டது. அந்தக் கட்டுரை பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மறுபிரசுரம் செய்யப்பட்டது. இப்போது ஜூன் 7, 2019 தேதியிட்ட ஃப்ரண்ட்லைன் இதழிலும் “இந்தியா: தாராளவாத ஜனநாயகமும் அதிதீவிர வலதுசாரிப் போக்கும்” என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இந்திய அரசியலின் முக்கியமான அம்சங்கள் என்று நான் சுட்டிக் காட்டியிருந்தவை மேலும் தீவிரமாகியுள்ளன என்பதையே இப்போது நடக்கும் நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

தேர்தலில் ஒருபுறத்தில் காங்கிரஸிற்கு ஏற்பட்ட பின்னடைவும், மறுபுறத்தில் இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட சரிவும் மக்களவையில் பாஜகவிற்கு கிடைத்த பெரும்பான்மையைப் போன்றே முக்கியமானது என்று அந்த நேரத்தில் நான் குறிப்பிட்டிருந்தேன். தேர்தல்கள் நடப்பதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பாகவே முதலாளித்துவ பெரும்புள்ளிகளின் முழுமையான ஆதரவை பெற்றிருந்த முதல் இந்தியப் பிரதமராகவும் மோடி இருந்தார் என்பதையும் நான் சுட்டிக் காட்டியிருந்தேன். அமெரிக்காவை முன்மாதிரியாகக் கொண்டு இந்திய அரசியலை அதிபர் வகைப்பட்டதாக அவர் கட்டாயமாக மாற்றவில்லை என்ற போதிலும் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது அதிபர் தேர்தலுக்காக செலவிட்ட தொகைக்கு இணையான தொகையை மோடி செலவழித்தார் என்பதும் முக்கியமானது.

அரசியலை ஆழமாக உற்று நோக்குபவர்கள் கூட இதில் கவனிக்காமல் விட்ட ஒரு விஷயம் என்னவெனில் இந்தத் தேர்தலுக்காக அவர் திரட்டிய பணமும், பெரு நிறுவனங்களிடமிருந்து எதிர்காலத்தில் திரட்ட அவர் திட்டமிட்டிருந்த தொகையும் கணிசமான அளவிற்கு ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிஷத், ஏன் பாஜகவிடமிருந்தும் கூட சுய உரிமை பெற்றவராக அவரை மாற்றியிருந்தது என்பதே ஆகும். ஏனெனில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரங்களுக்காக ஆர் எஸ் எஸ் அமைப்பு வழங்கிவரும் தொண்டர்களின் விசுவாசத்தை விலைக்கு வாங்கப் போதுமான பணம் அவரிடம் இப்போது இருக்கிறது. அப்படி இருக்கையில் பாஜகவின் இடைநிலை செயல்பாட்டாளர்களையும் கூட அவரால் எளிதாக விலைக்கு வாங்கிவிட முடியும். தங்களுக்கே ஆன தனி ஒரு உலகத்தை உருவாக்கிக் கொண்டுள்ள மோடி-ஷா இரட்டையரின் தோற்கடிக்க இயலாத தன்மைக்கு அவர்களிடம் இப்போது இருக்கும் அபரிமிதமான செல்வமும் கூட ஒரு விதத்தில் காரணமாகும்.

தாராளவாத நிறுவன கட்டமைப்புகளின் இருப்பை ஆர் எஸ் எஸ் அங்கீகரித்த போதிலும் அரசின் நிறுவனங்களை உள்ளிருந்தே கைப்பற்றி நீண்ட கால அரசை அமைக்கப் போராடுவது என்ற நடைமுறை உத்தியை மேற்கொண்டுள்ளது என்று மிகவும் விரிவாகவே நான் வாதிட்டு வந்திருக்கிறேன். 1960களில் இடதுசாரிகளின் புகழ்பெற்ற கோஷத்தை நினைவுபடுத்தும் வகையில் “நிறுவனங்களின் ஊடாக நீண்ட பயணம்” என்றும் கூட நான் அதைக் குறிப்பிட்டிருக்கிறேன். விரிவான அளவில் பார்க்கும்போது அதீத வலதுசாரிகளின் திட்டங்களுக்கும் தாராளவாத நிறுவன கட்டமைப்புகளுக்கும் இடையே அடிப்படையான முரண்பாடுகள் எதுவும் இல்லை. இந்த நிறுவனங்களை ஆர் எஸ் எஸ் கையிலெடுத்து அவற்றின் மூலம் ஆட்சி செலுத்த முடியும் என்றும் கூட நான் வாதிட்டிருக்கிறேன். எனது முந்தைய ஆய்வில் உள்ள இத்தகைய கருத்தாக்கங்கள் பலவற்றையும் கையிலெடுத்துக் கொண்டு இப்போதிருக்கும் நிலையைப் பற்றிய ஆய்வை நாம் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றே நான் கருதுகிறேன். உதாரணமாக, பல்வேறு வகைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் மோசடிகளின் அளவு குறித்தோ அல்லது இந்திய அரசின் ஒவ்வொரு முக்கிய நிறுவனமும் எந்தவகையிலும் ரகசியம் வெளியே கசிந்துவிடாதபடிக்கு பாதுகாக்க பாஜக/ஆர் எஸ் எஸ் உடன் கூட்டாகச் செயல்படுவது குறித்தோ நான் வியப்படையவே இல்லை. ஏனெனில் அரசானது பெருமளவிற்கு உள்ளிருந்தே கைப்பற்றப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.

கசப்பான யதார்த்தங்கள்

இதுபற்றி மேலும் ஆழமான ஆய்விற்கு நாம் காத்திருக்கத்தான் வேண்டும். என்றாலும் ஒரு சில கசப்பான விஷயங்களை சொல்லியாக வேண்டும். முதலாவதாக, பாரதீய ஜனதா கட்சி உண்மையிலேயே ஒரு தேசிய கட்சியாக இப்போது உருவெடுத்திருக்கிறது. இந்த கட்டமைப்பின் நிலையான மையமாக மோடி-ஷா கூட்டணி இருக்கிறது.

இரண்டாவதாக, தனது சொந்த பிரிவின் நலன்களை, பெருநிறுவனங்களின் நலன்களை எல்லாம் மீறி மதச் சார்பின்மைக்காக கூட்டாகப் போராட வேண்டிய தேவை இருக்கும் நேரத்தில் இடதுசாரிகளைத் தவிர, வேறெந்த அரசியல் கட்சியுமே, காங்கிரஸ் உள்ளிட்டு, அதற்குத் தயாராக இல்லை. இத்தகைய அங்கீகரிப்பின் விளைவு என்னவெனில் இடதுசாரிகள் நம்பிக்கையோடு இணைந்து செயல்படுவதற்குரிய “மதசார்பற்ற கட்சிகள்’ என்ற எதுவுமே இல்லை என்பதுதான். அவர்கள் ஒவ்வொருவருக்குமே மதச்சார்பின்மை என்பது வசதிக்கேற்ற ஒரு விஷயம் மட்டுமே. இந்த விஷயத்தில் இடதுசாரிகள் மிகவும் முழுமையான வகையில் தனிமைப்பட்டுள்ளனர்.

மூன்றாவதாக, காங்கிரஸின் சரிவு என்பது உறுதியானது; அது மீண்டும் உயிர்பெற்று வர வேண்டுமெனில் மிகப்பெரும் மாற்றங்களை அது செய்ய வேண்டும். ஆனால் அதற்கான அறிகுறிகள் எதுவுமே கண்ணில் தென்படவில்லை.

நான்காவதாக, உத்திரப் பிரதேச மாநிலத்தில் சாதிய அரசியலின் இரண்டு மிகப்பெரும் அடையாளங்களாக இருக்கும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் கூட்டு வலிமையை உடைத்தெறியும் அளவிற்கு மதரீதியான வெறிக்கூச்சல் மற்றும் சமூக நெறியாள்மை ஆகிய கூட்டணியின் அரசியல் வலுவாக உள்ளது என்பதையே உத்திரப் பிரதேச மாநில நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன. தொடர்ச்சியான சலுகைகளின் மூலம் சாதிய முரண்பாடுகளை பெருமளவிலான இந்து அமைப்பிற்குள்ளேயே கட்டுப்படுத்தி வைத்து விட வேண்டும் என்பதே காந்தியில் இருந்து ஆர் எஸ் எஸ் வரையிலானவர்களின் கனவாக இருந்து வந்துள்ளது. ஒரு வகையில் சொல்வதென்றால் மேல் மட்ட, அடிமட்ட சாதிகள் சகவாழ்வு வாழ்வதற்கு ஒரு நடு சாதிக்கான தீர்வுதான் அது. இந்த விஷயத்தில் குஜராத் மாநிலத்தில் இருந்து நாட்டின் வடகிழக்குப்பகுதி வரையில் ஆர் எஸ் எஸ் பெற்றிருக்கும் பல வெற்றிகளில் மிக சமீப காலத்திய வெற்றியாகவே உத்திரப் பிரதேச தேர்தல் முடிவுகள் அமைகின்றன. சாதிப் பிரச்சனை ஏதாவதொரு வகையில் இந்துத்துவா திட்டத்தை வீழ்த்தி விடும் என்ற நமது ஆழ்ந்த நம்பிக்கையை நாம் மீண்டும் ஆழமாக மறுபரிசீலனை செய்யவேண்டியது அவசியம்.

இறுதியாக, விடுதலை, சீரமைப்பு ஆகியவற்றுக்கான அரசியலுக்கான எந்தவொரு வாய்ப்புக்கும் தொலைதூர நோக்கிலிருந்து பார்க்கும்போது மேற்கு வங்கத்தில் இடதுசாரி நோக்கங்கொண்ட வெகுஜன வாக்குகளின் சரிவு, அவற்றில் பெரும்பங்கு பாஜக நோக்கித் திரும்பியிருக்கக் கூடும் என்ற கருத்தில் உள்ள உண்மை ஆகியவை 2019-ம் ஆண்டின் மிகவும் கவலை தரத்தக்க நிகழ்வாகவே அமைகிறது. தாராளவாத அரசியலின் கொடுமைகளும் ஏமாற்றுக்களும் இந்த உலகின் பாவப்பட்ட மக்களை எந்த அளவிற்கு திசை திருப்ப முடியும் என்பதற்கு இது முதல் முறை உதாரணமும் அல்ல; அவ்வாறு நடைபெற்ற முதல் இடமாகவும் மேற்கு வங்க மாநிலம் இருக்கவில்லை திர்ணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக போன்ற இழிசெயல்புரியும் அரசியல் சக்திகளின் மோதல்களுக்கு நடுவே சிக்கும்போது அன்றாட பொருளாயத அவலங்களை எதிர்கொள்ளவே தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும் நிராதரவான, நம்பிக்கை இழந்து போன, துயரத்தில் மூழ்கிப் போன மக்கள் என்னதான் செய்வார்கள்? தாராளவாத அரசியலின் சிதிலங்களில் மிகவும் தனிமைப்பட்டிருக்கும் இடதுசாரிகள் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கே போராட வேண்டியிருக்கும் என்று தேர்தலுக்கு முன்பாகவே நான் கூறியிருந்தேன். இப்போது தேர்தல் முடிவுகள் வந்தபிறகு, நிலைமை அதை விட மிகுந்த கவலைக்குரியதாகவே மாறியுள்ளது.

இடதுசாரிகளின் பங்கு

இவ்வாறு குறிப்பிட்ட நிலையில், இந்தியாவில் உள்ள இடதுசாரிகள் குறித்து மூன்று விஷயங்களை நான் வலியுறுத்த விரும்புகிறேன். ஒன்று வேறு எந்தவொரு கட்சியுடனும் ஒப்பிடமுடியாத வகையில் பரந்த அரசியல் அனுபவமும் ஆழ்ந்த ஸ்தாபனமும் அவர்களிடம் இருக்கிறது. இடதுசாரிகளின் பின்னடைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை சமூக ரீதியான இயக்கங்களும், அரசுமுறை சாரா அமைப்புகளும், அங்குமிங்குமாக செயல்பட்டு வரும் சிறு குழுக்களும் நிரப்பி விடக் கூடும் என்று யாரும் நினைத்தால் அத்தகைய ஒரு நிகழ்வு நடக்கவே நடக்காது. இரண்டாவதாக, ஏழைகளின், ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தின் பார்வையில் இருந்து தெளிவான நோக்கும், சமூகம் குறித்த முழுமையான புரிதலும் உள்ள ஒரே சக்தியாக இடதுசாரிகள் மட்டுமே உள்ளனர். அறிவுலகத்திலும் கலாபூர்வமான வாழ்க்கையிலும் இந்தியாவில் உள்ள இடதுசாரிகளின் இருப்பு மிகவும் அபரிமிதமான ஒன்றாகும். வேறு எந்தவொரு அரசியல் சக்தியும் இந்த விஷயத்தில் அதன் அருகில் கூட வரமுடியாது. மறுகட்டமைப்பைத் தொடங்குவதற்குத் தேவையான பேராற்றல் மிக்க துணிவு இப்போது அதற்குத் தேவைப்பட்ட போதிலும், தேவையான அடிப்படையான வள ஆதாரங்கள் இன்னமும் அதனிடம் இருக்கவே செய்கின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளில்நடைபெற்ற அனைத்திற்கு பிறகு 2019தேர்தலின் முடிவுகள் பற்றி வியப்படைவதற்கு அடிப்படையில் எதுவுமில்லை; அடுத்த ஐந்து ஆண்டுகள் இதை விட மோசமாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் கூட நாம் வியப்படைய வேண்டிய அவசியமில்லை. நமது நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தைத் தொடங்கி வைத்த யுகம் இப்போது முடிவடைந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. இருந்தாலும், மிக விரிவான வகையில் சேதமாகிவிட்ட ஒரு நாட்டையே நமது இளைஞர்கள் இப்போது பெறவிருக்கிறார்கள். அதை மீண்டும் புனரமைப்பதைத் தவிர வேறெந்த வழியும் அவர்களுக்கு இல்லை; அதையும் கூட அவர்கள் கீழே இருந்துதான் தொடங்க வேண்டியிருக்கிறது.

நன்றி: ஃப்ரண்ட்லைன்

அடுத்த இதழில்: இந்துத்வாவின் தாக்குதல்கள்