வடகொரியாவின் அணுச்சோதனை!

பலமிக்க அமெரிக்காவின் ராணுவத்தளம் மற்றும் ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் சுற்றி வளைத்து பொருளாதார, ராணுவ தாக்குதல் நடத்துகிற சூழல் வடகொரியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இதனால், கடந்த அக்டோபர் 9 ம் தேதியன்று வடகொரியா அணுச் சோதனையை நடத்தியது. இந்தச் சோதனை உலகின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

முனனாள் சோவியத் யூனியனோடு வடகொரியா போட்டுள்ள ஒப்பந்தத்தில் அணு ஆயுத தயாரிப்பு முயற்சிகளை மேற்கொள்ள மாட்டோம் என்று உறுதியளித்திருந்தது. இது மீறப்பட்டுள்ள நிலையில் வடகொரியாவின் நட்பு நாடான சீனாவும் இச்சோதனை யை கண்டிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தொழிலாளி வர்க்க நாடுகள் உலக ஒப்பந்தங்களை ஏற்று நடப்பது தான் கடந்த கால வரலாறு. ஏராளமான பிராந்திய மோதல்கள், கருத்து மோதல்கள் நிரம்பிய பகுதியாக இந்த வடகிழக்கு ஆசியா உள்ளது. இந்நிலையில் மேலும் அணு ஆயுதங்கள் அதிகரிப்பது ஆபத்தானது. அந்த வகையில் வடகொரிய அணுச் சோதனை கவலைக்குரிய நிகழ்வு; மிகவும் துரதிருஷ்டமான விளைவு.

அணு ஒப்பந்தங்கள் அணு ஆயுதங்களைக் குறைத்ததா?

அணு ஆயுதம் பயன்படுத்துவது குற்றம் என்பது சர்வதேச சட்டமாக ஆக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்களை ஒழிக்க அரசுகள் பல்வேறு பேச்சுவார்த்தைகளில் இறங்கின. நாட்டாமை செய்து உலகைச் சுரண்டி வரும் ஏகாதி பத்தியங்கள் இருக்கும் வரை, அணு ஆயுதங்களற்ற உலகம் சாத்தியமாகுமா? ஏகாதிபத்தியங்கள் தங்களது பொருளாதாரச் சுரண்டல் மேலாதிக்கத்தை மற்ற நாடுகள் மீது நிலை நிறுத்த, நிச்சயமாக ஆயுதங்கள் தேவை. அதிலும் சாதாரண ஆயுதங்களை விட பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் தேவை. இதற்கு அவர்களுக்கு சரியான வழி, அணு ஆயுதத் தயாரிப்பு தான்.

இந்த எண்ணத்தின் அடிப்படையில் தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அணு ஆயுதங்களை விடாப்பிடியாக, உலக மக்களின் விருப்பத்திற்கு விரோதமாக தங்களிடம் சேர்த்து வைத்துள்ளன.

அமெரிக்காவும், சோவியத் யூனியனும் அணு ஆயுத குறைப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தின.  தற்போது அணு ஆயுதம் வைத்திருப்போர் வைத்திருக்கட்டும். ஆனால், புதிதாக யாரும் தயாரிக்க வேண்டியதில்லை என்கிற நிலைபாட்டில் போடப்பட்ட ஒப்பந்தம்  அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் (NPT – Non – Proliferation Treaty). இந்த நிலைபாட்டை இந்தியா உள்ளிட்ட நாடுகள் மிகச் சரியாகவே எதிர்த்தன. பாரபட்சமான ஒப்பந்தம் என்றும், முற்றாக அணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டுமே தவிர அணு ஆயுதம் கொண்ட நாடு,  அணு ஆயுதமில்லாத நாடு என்று இருவகையாகப் பிரித்து ஒரு அணுகு முறையை உருவாக்கிடக் கூடாது என்று இந்தியா கருதியது. இதனால் இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

ஆக, இன்றைய உலகில் ஒப்பந்தங்கள் பல உருவானாலும், அணு ஆயுதங்களை ஒழிப்போம் என்ற முழக்கங்கள் விடாது ஒலித்தாலும், கொடூரங்களை நிகழ்த்தக் கூடிய அணு ஆயுதங்கள் இன்று உலகில் பலரிடம் உள்ளன என்பதே உண்மை.

உலகத்திற்கே ஆபத்தா?

இந்தப் பின்னணியில் வடகொரியா நடத்திய சோதனை பெரும் அச்சுறுத்தல் என்று பூதாகரமாக சித்தரிக்கப்படுகிறது. வட கொரியா அணுச்சோதனை செய்ததால் உலகமே இன்று ஆபத்தில் மூழ்கி இருப்பது போன்று பேசப்படுகிறது.

வடகொரிய அணுச்சோதனை, அளவுக்கு அதிகமாக ஊதிவிடப்படுகிறது. ஆனாலும், இந்தச் சோதனை பல எதிர் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தென்கிழக்கு ஆசிய மக்களுக்குப் பாதகமான பல நிகழ்வுப் போக்குகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.

முதன்மையாக, அணு ஆயுதங்களற்ற உலகை உருவாக்க விழையும் லட்சியத்திற்கு வடகொரியச் சோதனை ஊறு விளைவித்துள்ளது. வடகொரியச் சோதனையின் விளைவாக பதட்டம் அதிகரித்துள்ளது. கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் நாடுகள் அச் சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. ஆனால், இதற்கு வடகொரியாவை மட்டுமே குறைசொல்ல முடியுமா? இந்த நிலைமைகளுக்கு உண்மையில் யார் காரணம்? நிச்சயமாக, அமெரிக்காவின் அடாவடித்தனமான ஆதிக்கப் போக்குதான், அடிப்படைக் காரணம். கொரியத் தீபகற்பத்தில் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அமெரிக்காவே முக்கிய காரணம்.

தீமைகளின் அச்சு – புஷ்ஷா? வடகொரியாவா?

2002 ம் ஆண்டு தீமைகளின் அச்சு என்று புஷ் குறிப்பிட்ட நாடுகள் இராக், இரான், வடகொரியா ஆகியன. பிறகு இராக் போருக்குப் பிறகு, சதாம் உசேனை வீழ்த்திய பிறகு, இராக்கினை அந்த பட்டியலிலிருந்து எடுத்துவிட்டனர். அதற்குப் பதிலாக சிரியாவை 2005 ம் ஆண்டிலிருந்து இணைத்து விட்டனர். ஆக, தீமைகளின் அச்சு நாடுகள் என்ற கொள்கை தொடருகிறது. இந்தக் கொள்கை அடிப்படையிலான ஆத்திரமூட்டல் மோதல் நடவடிக்கைகளை புஷ் நிர்வாகம் செய்து வந்துள்ளது. உலக வரலாற்றில் இல்லாத ஒரு அரக்கத்தனமான கொள்கையை புஷ் நிர்வாகம் தனது வெளியுறவு கொள்கையாக அறிவித்தது.

ஒரு நாடு தன்னைத் தாக்க முனைந்தால், பதிலடியாக யுத்தத்தில் இறங்குவதுதான் நாடுகளின் இயல்பான செயல்பாடாக இருந்து வந்துள்ளது. இதற்கு மாறாக ஒரு நாடு தன்னை தாக்கவில்லை என்றாலும் கூட, அது தாக்கக்கூடும் என்று முடிவுக்கு வந்து அந்த நாட்டின் மீது தாக்குதல் தொடுப்பது என்ற வித்தியாசமான கொள்கையை புஷ் அறிவித்தார்.  இதற்குப் பெயர் “Pre Emptive War” என்பது.

இத்தகைய போர்களை தூண்டுகிற, அழிவை ஆராதிக்கிற கொள்கையை அதிபர் புஷ், துணை அதிபர் டிக் செனேய் ஆகியோர் கொண்ட வெறிக்கூட்டம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.

இதன் விளைவாக பல நாடுகள் நிரந்தர அச்சுறுத்தலுக்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அடிபணியாத நாடுகள் மீது யுத்தம் நடத்தினர். இந்த நிலைதான் வடகொரியா தன்னை ஆயுத பாணியாக்கிக் கொள்ள காரணமாக அமைந்தது. தற்கால உலக அரசியல் உறவுகளை ஆய்வு செய்யும் எந்த ஒரு மாணவனும் இதனை ஏற்றுக் கொள்வான்.

புஷ் கூட்டம் வடகொரியாவை மட்டும் தீமைகளின் அச்சு என்று குறிப்பிட்டதோடு நிற்கவில்லை. அந்த நாட்டின் அதிபரான கிம் – ஜாங் – இல் லின் மீது பொய்யான அவதூறுகளைப் பொழிந்து வருகின்றனர். அவரை சுகவாசி, மனநோயாளி, ஆடம்பரப் பொருளின் பிரியர் என்றெல்லாம் தூற்றுகின்றனர். புஷ்கூட அவரை குள்ளன் என்றும், அதிக செல்லம் கொடுத்ததால் கெட்டுப் போன குழந்தை என்றெல்லாம் தரம் தாழ்ந்து வர்ணித்துள்ளார்.

உண்மையில், ஆசியாவிற்கு அணு ஆயுத ஆபத்து வடகொரியாவினால் மட்டும் ஏற்படவில்லை. அமெரிக்கா அவ்வப்போது இரான் மூலம் ஆசியாவிற்கு ஆபத்து, லிபியாவினால் அணு ஆபத்து, ஈராக்கினால் ஆபத்து என்று சொல்லியே ஆசியாக் கண்டத்தில் தனது தலையீட்டையும், செல்வாக்கையும் அதிகரித்து வந்துள்ளது. ஆனால், வேடிக்கை என்னவென்றால், இதுவரை அணு ஆயுதத்தைப் பயன்படுத்தி அப்பாவி மக்களை அழித்த ஒரே நாடு அமெரிக்காதான். ஆபத்து எனில், அது அமெரிக்காவினால் தான் ஆசியாவிற்கு ஏற்படும்.

வடகொரியச் சோதனை பற்றி பெரும் கூச்சல் எழுப்பு கிறவர்கள் அமெரிக்கா தான் உலகிலேயே அதிக அணுச்சோதனை செய்த  நாடு என்பதை மறக்க, மறைக்கப் பார்க்கின்றனர். அது மட்டுமல்லாது, ஆசியாவில் வடகொரியாவை விட இஸ்ரேல் மூலம் தான் அதிக அணு ஆபத்து உள்ளது. ஏனெனில் 200 க்கும் மேற்பட்ட பயங்கரமான அணு ஆயுதங்களைக் கொண்ட நாடு இஸ்ரேல். கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களுக்கு இடமில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். கொரிய தீபகற்பம் அணு ஆயுதங்களின் களமாக மாறுவது, தென் கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் மட்டுமல்ல, ஆசியக் கண்டத்தின் பாதுகாப்பிற்கே ஆபத்தானது.

இதை வடகொரியா உணர்ந்திருக்கிறது. முற்றிலும் அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான பேச்சுவார்த்தை அவசியம் என்ற கொள்கை நிலைபாட்டிலிருந்து தான் இப்பிரச்சனையை வடகொரியா அணுகுகிறது. இதனை பாரபட்சமின்றி சிந்திக்கும் ஆய்வாளர்கள் ஒத்துக் கொள்கின்றனர்.

பேச்சுவார்த்தையை வெறுத்து ஒதுக்கும் புஷ்

2002 ம் ஆண்டு தீமைகளின் அச்சு நாடு என்று வடகொரியாவைக் குறிப்பிட்ட பிறகு பேச்சுவார்த்தைக்கான கதவுகளை மூடினார் புஷ். அது மட்டுமல்லாது ஆத்திரமூட்டல் நடவடிக்கைகள் வேகம் பெற்றன. அமெரிக்கா, வடகொரியாவை ஆக்கிரமித்து, அச்சுறுத்தி வருகிற வரலாறு 1950 லிருந்து நடைபெற்று வருகிறது. எனினும், புஷ் நிர்வாகத்தின் கீழ் போர் வெறி அதிகரித்தது. இன்றைக்கும் கூட 40000 அமெரிக்கத் துருப்புகள் தென் கொரிய எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. அணு ஆயுதங்களும் தென்கொரியாவிடம் உள்ளன. தொடர்ந்து அமெரிக்க – தென் கொரிய கூட்டு ராணுவப் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.

புஷ் நிர்வாகத்தின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் உலகம் முழுவதும் கண்டனத்திற்கு ஆளாயின. இதைவிட முக்கியமானது, அமெரிக்காவிலேயே புஷ் நிர்வாகத்தின் அடாவடித்தனத்தை எதிர்த்துக் கண்டனக் குரல்கள் கடுமையாக எழுந்தன. அமெரிக்க அச்சுறுத்தலின் தன்மையை முழுவதும் உணர்ந்த பல ஆய்வாளர்கள் வடகொரியாவிற்கு வேறு வழியில்லாத சூழலில் வடகொரியா செய்தது நியாயமானது என வாதிடுகின்றனர்.

இடதுசாரி சிந்தனையாளரான நோம் சாம்ஸ்கி கூறினார்: அந்த பிராந்தியத்தில் அமெரிக்கா ஏராளமான அணு ஆயுதங்களை குவித்துள்ளது. இதனால் வடகொரியா அச்சுறுத் தலுக்கு ஆளாகியுள்ளது. எனவே, வடகொரியா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்றார் அவர்.

முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், ஒரு நாட்டோடு பிரச்சனை இருக்கிறதென்றால், பேச்சுவார்த்தை நடத்திடாமல் இருப்பது முட்டாள்தனம் என்று புஷ்ஷைக் கண்டித்தார். ஜனநாயகக் கட்சியின் வளர்ந்து வரும் செல்வாக்கு மிக்க தலைவரான செனட்டர் பராக் ஓபமா (Barack Obama of Illinois) கூறினார்.

பனிப்போர் தீவிரமாக இருந்த காலத்தில் கூட-  அமெரிக்காவின் ஒவ்வொரு நகரத்தையும் குறிவைத்து அணு ஏவுகணைகள் நிறுத்தப்பட்ட சூழலிலும் கூட, வெள்ளை மாளிகைக்கும், கிரெம்ளினுக்கும் நேரடித் தொடர்பு இருந்தது எனக் குறிப்பிட்டு வடகொரியாவோடு புஷ் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தாமல் இருக்கின்ற மூடத்தனத்தையும் எதிர்த்துள்ளார்.

எந்த முரண்பாடான பிரச்சனைகளையும் சுமுகமாக முடிக்காமல், பேச்சுவார்த்தையை அறவே வெறுக்கிற போக்கும், தான் சொல்வதையே மற்ற நாடுகள் ஏற்க வேண்டுமென்ற ஜனநாயக விரோதத் தன்மையும் கொண்டதாக புஷ் கூட்டம் இருந்து வந்துள்ளது.

இதோ அதற்கு ஓர் உதாரணம்.

சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜார்ஜ் புஷ்ஷிடம் பத்திரிக்கையாளர்கள் ஒரு கேள்வி கேட்டனர். அண்டை நாடுகளான இரானும், சிரியாவும் இராக்கில் அமைதி திரும்ப ஒத்துக்கொண்டால், அவர்களோடு சேர்ந்து செயல்பட அமெரிக்கா தயாராக இருக்கிறதா? இராக்கில் தற்போதுள்ள நிலையில் அண்டை நாடுகளின் ஒத்துழைப்பை, அறிவுள்ள யாரும் நிராகரிக்க மாட்டார்கள். ஆனால் புஷ் என்ன கூறினார்?

இந்தக் கேள்விக்குப் புஷ் கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்.

இரானும், சிரியாவும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இராக்கிற்கு அவர்கள் உதவ வேண்டுமென்று உலகம் எதிர் பார்க்கிறது. இப்படி ஆணவத்தோடு கூறிவிட்டு, சரமாரியாக பல நிபந்தனைகளைப் போட்டு, தொடர்பில்லாத பல பிரச்சனைகளை இத்துடன் இணைக்கிறார் புஷ்.

இரானியர்கள் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரிப்பதை நிறுத்த வேண்டும். அப்படிச் செய்தால் தான் அமெரிக்க வெளியுறவு அதிகாரிகள் அவர்களோடு பேசுவார்கள். பிறகு, அமெரிக்காவின் கடைக்கண் பார்வை கிடைக்க வேண்டுமென்றால், சிரியா என்னென்ன செய்ய வேண்டு மென்ற ஒரு பெரிய பட்டியலை புஷ் தெரிவித்தார். அத்துடன் லெபனான் அரசு இஸ்ரேல் தனது பிணைக் கைதிகளை திரும்பப் பெற ஹமாசினை நிர்பந்தப்படுத்த வேண்டும். ஹமாஸ், ஹிஸ்புல்லா இயக்கங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு எதிராக சதி செய்வதை கைவிட வேண்டும். என்றெல்லாம் புஷ் அடுக்குகிறார். இப்படிப்பட்ட போக்கு, எந்த உலகப் பிரச்சனையையாவது தீர்த்திட உதவிடுமா? சட்டாம் பிள்ளைத் தனம், அதிகார ஆணவம் எல்லாம் சேர்ந்து இன்று உலகின் பல நாடுகளில் மோசமான விளைவுகளை உருவாக்கியுள்ளது. இதுவே அணு ஆயுதங்களைத் தயாரித்தால்தான் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற துரதிருஷ்டமான முடிவுக்கு வடகொரியாவைத் தள்ளியது.

வடகொரிய அணுப் பிரச்சனையைத் தீர்க்க ஆறு நாடுகள் கொண்ட ஒரு அமைப்பு நிறுவப்பட்டது. சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, ரஷ்யா, வடகொரியா என்ற ஆறு நாடுகள் கொண்ட அமைப்பில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன. பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகள் மீதான தொடர் நடவடிக்கைகள் இல்லை. உதாரணமாக 1994ம் ஆண்டு அமெரிக்கா அங்கீகரிக்கப் பட்ட வரையறை என்ற ஒப்பந்தத்தில் வடகொரியாவுடன் சேர்ந்து கையெழுத்திட்டது.

இதன்படி வடகொரியாவின் அணு கிராபைட் உலைகளுக்கு மாற்றாக லைட் வாட்டர் (Light Water) உலைகளை நிறுவ அமெரிக்கா ஒத்துக் கொண்டது. அதாவது, அணுசக்தி மூலம் மின் , எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள வடகொரியாவிற்கு அமெரிக்கா உதவிட வேண்டுமென்றும், பதிலாக வடகொரியா அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சிகளை கைவிடுவது எனவும் முடிவாக்கப்பட்டது. ஆனால், தான் ஏற்றுக் கொண்ட  எந்த வாக்குறுதியையும், அமெரிக்கா நடைமுறைப்படுத்தவில்லை. இவை அனைத்தும் சேர்ந்துதான் தற்போதைய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அச்சுறுத்தல் வரலாறு

அணு ஆயுத மிரட்டல் என்ற பாணத்தை வடகொரியா இப்போதுதான் கையிலெடுத்திருக்கிறது. ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அமெரிக்கா செய்து வருகிறது. கொரியப் போர் நடந்து கொண்டிருந்த போது அன்றைய அமெரிக்க அதிபர் ட்ரூமென்னை ஒரு பத்திரிகை நிருபர், நீங்கள் இந்த யுத்தத்தில் அணு குண்டை பயன்படுத்துவீர்களா? என்று கேட்டனர். அதற்கு ட்ரூமென், எங்களிடம் இருக்கும் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்துவோம் என்றார். இப்படி அவர் பதிலளிக்கும் போது ஹிரோஷிமா, நாகாசாகி அழிவு ஏற்பட்டு ஐந்து ஆண்டு காலம்தான் முடிந்திருக்கிறது.

இதே போன்று 1953ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர் இவ்வாறு கூறினார். வடகொரியா சரியாக நடந்து கொள்ளவில்லை என்றால், ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு உள்ள கட்டுப்பாடுகள் அனைத்தையும் அகற்றுவோம் என்றார்.

இதைவிட அதிர்ச்சியான ஒரு தகவல் தற்போது வெளி வந்துள்ளது. பின்கஸ் என்ற பத்திரிக்கையாளர் வாஷிங்டன் போஸ்டில் எழுதியுள்ளார். 1957ஆம் ஆண்டு முதல் இரண்டு கொரியாவையும் பிரிக்கும் இடத்தில் அணு ஆயுத வல்லமை கொண்ட ஏவுகணைகளை அமெரிக்கா நீண்ட காலமாக நிறுத்தியிருந்தது. கடுமையான நிர்ப்பந்தத்திற்குப் பிறகு 1970ஆம் ஆண்டில் தான் அதிபர் ஜிம்மி கார்ட்டர் அதனை விலக்கிக் கொண்டனர்.

ஆக, வடகொரியா அமெரிக்காவின் அரை நூற்றாண்டு அச்சுறுத்தலுக்கு ஆளான நாடு. இந்த வரலாறு தெரியாதவர்கள்தான் இன்று வடகொரிய அணுச் சோதனை மனித குலத்துக்கே அழிவு என்று எழுதி வருகின்றனர். வடகொரியா, அணு ஆயுத முயற்சிகளை கைவிட வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து இருந்திட முடியாது. ஆனால் இதற்கு அமெரிக்காவின் அச்சுறுத்தல் ஆரவாரங்கள் முற்றாக கைவிடப்பட வேண்டும்.

தென்கொரியா மூலம் அச்சுறுத்தல்

தென் கொரியாவில், அமெரிக்க தலையீட்டிற்கு எதிராக பெரும் போராட்டம் நடைபெறுகிறது. அங்கு அமெரிக்கா தனது ராணுவ தளத்தை விரிவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

தென்கொரியாவில் வலுவான ராணுவ தளம் என்பது வெறும் வடகொரியாவை மிரட்டுவதற்கு மட்டுமல்ல; அமெரிக்காவிற்கு பெரும் சவாலாகவும், உலகப் பொருளாதாரத்தில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் சீனாவின் ஆதிக்கம் வளராமல் தடுப்பதற்கும் வலுவான ராணுவ தளம் தென் கொரியாவில் இருப்பது அவசியம் என அமெரிக்கா கருதுகிறது.
ஏற்கெனவே வலுவான தளம் இருந்த போதிலும், மேலும் அதனை விரிவுபடுத்தி விரிவாக்கிட அமெரிக்கா முயற்சித்து வருகின்றது.

இதற்கென அங்குள்ள விவசாயிகளின் நிலங்களை அபகரிக்க முயற்சிகள் நடந்தது. உடனே விவசாயிகள் ஆர்ப்பரித்து எழுந்து போராட்டத்தில் குதித்தனர். கடந்த ஜூலை மாதம் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் மேற்கொண்டனர்.

ஏற்கனவே உலக வர்த்தக நிறுவனம் மூலம் தென்கொரிய விவசாயிகளை அமெரிக்கா பழிவாங்கி வருகின்றது. இதனை யொட்டி பிரம்மாண்டமான போராட்டங்களும் நடைபெற்றன. தற்போது அமெரிக்க ராணுவதள விரிவாக்கம் கூடாது என்ற கோரிக்கையை எதிர்த்தும் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்தியாவின் கண்டனம்

இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வடகொரியா அணுச் சோதனையை கண்டித்து கடுமையான அறிக்கையை வெளியிட்டனர். இந்தச் சோதனை மூலம் வடகொரியா உலகிற்கு அளித்த வாக்குறுதிகளை மீறி விட்டதாக கண்டித்தார்.

1994ஆம் ஆண்டே அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொண்டதாக வடகொரியா அறிவித்து விட்ட நிலையில், அணுச் சோதனை செய்வதன் மூலம் எந்த ஒப்பந்த வாக்குறுதிகளையும் அது மீறவில்லை. எனவே, இந்தியா இவ்வாறு கண்டிப்பது அர்த்தமற்றதாகும்.

வடகொரியாவின் அணுச்சோதனையை இந்தியா கண்டிப்பது வேடிக்கையானது. இரண்டு முறை அணு வெடிச் சோதனை நடத்திய நாடு இந்தியா. இந்திய நாட்டு மக்களிடம் நீண்ட காலமாக அணு ஆயுதமற்ற உலகம் என்ற லட்சியத்திற்கு பெரும் ஆதரவு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் தான் அணு ஆயுதத் தயாரிப்பு சோதனையில் ஈடுபடுத்திக் கொண்டவர்கள் இந்திய ஆட்சியாளர்கள். எனவே, இந்தியாவிற்கு வடகொரியச் சோதனையை கண்டிக்க என்ன உரிமை இருக்கிறது? அமெரிக்கா கண்டிப்பதால், தானும் கண்டிக்க வேண்டும் என்று முனைகிறது இந்திய ஆளும் வர்க்கம்.

இந்திய ஆட்சியாளர்களுக்கு உள்ள பயம் என்னவென்றால், வடகொரிய சோதனை ஏற்படுத்தியுள்ள ஆரவாரத்தில், இந்திய – அமெரிக்க அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா கை கழுவி விட்டால் என்ன செய்வது என்பதுதான். இதனால்தான் அவசர அவசரமாக வடகொரியாவை கண்டித்தனர்.

பிறகு, அமெரிக்க ஆதரவு செயலாளர் நிக்கோலஸ் பார்ன்ஸ் இந்தியா, பாகிஸ்தான் செய்த அணுச் சோதனைகளோடு, வடகொரியச் சோதனையை ஒப்பிட முடியாது என்ற தத்துவ முத்தினை உதிர்த்தார். இது எப்படி என்றெல்லாம் தலையை பிய்த்து கொள்ளாமல் இந்திய அரசு நிம்மதிப் பெரு மூச்சு விட்டது.

தீர்வு என்ன?

அக்டோபர் 14ஆம் தேதி ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் 1718 எண் கொண்ட தீர்மானத்தை நிறைவேற்றியது. இதன்படி எல்லா அரசாங்கங்களும் வடகொரியாவுடன் ஏவுகணை உள்ளிட்ட பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை வாங்குவதோ, விற்பதோ கூடாது. அதே போன்று சில பொருட்களின் வர்த்தகமும் தடை செய்யப்பட்டது. இப்படிப்பட்ட தடைகள் பிரச்சனையை தீர்க்கப் போவதில்லை. மாறாக, பதட்டத்தை மேலும் அதிகரிக்கவே செய்திடும்.

அமெரிக்கப் பத்திரிக்கைகளும், ஆளுகிற வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் வடகொரியா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், ராணுவத் தலையீடு உடன் தேவை என்றும் போர் வெறியோடு கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர்.

வடகொரியாவுடன் கடந்த பல ஆண்டுகளாக நெருக்கமாக இருந்து வந்துள்ளது சீனா. எனவே, சீனா அமைதியாக இருக்கக் கூடாது; வடகொரியாவிற்கு அனுப்புகிற உணவு, மருந்து சப்ளை எல்லாவற்றையும் நிறுத்திட வேண்டுமென கூக்குரலிட்டனர் அமெரிக்கர்கள். இதே போன்று தான் இராக் மீது 1980 களில் உணவு மருந்து சப்ளைக்கு ஐ.நா. சபை மூலம் தடை விதித்தது அமெரிக்கா. அதனால் சொல்லொண்ணாக் கொடுமையை இராக்கின் சாதாரண பொதுமக்கள் அனுபவித்தனர். 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் உணவின்றி, பட்டினியால் மடிந்து போயினர்.

இதே போன்ற கொடூரம், வடகொரியாவிலும் நிகழ வேண்டும் என்பது புஷ் கூட்டத்தினரின் ஆசை. ஆகையால், அவர்கள் சீனா விடம் நிர்பந்தம் செய்கின்றனர்.  ஆனால், சீனா அறிவுப் பூர்வமாகச் செயல்பட்டது.

முதலில் வடகொரியாவின் அணுச் சோதனையை கண்டித் தனர்.  பிறகு ஐ.நா. சபையில் கடும் பொருளாதாரத் தடையை விதிக்க அமெரிக்கா முயற்சித்த போது, அதைச் சீனா ஏற்றுக் கொள்ளவில்லை. இதர வீட்டோ நாடுகளைச் சேர்த்துக் கொண்டு இதை எதிர்த்தது. குறிப்பாக, ரஷ்யாவோடு கைகோர்த்து அமெரிக்க முயற்சியை தடுத்து நிறுத்தியது.

பிறகு அணு ஆயுத மூலப் பொருட்களுக்கும், சில குறிப்பிட்ட பொருட்களுக்கும் தடை என்று ஐ.நா. சபையில் முடிவு எடுக்கப்பட்டது. வடகொரியாவுடன் பேச்சுவார்த்தையைத் தொடருவது எனும் வகையில் சீன வெளியுறவு அமைச்சர் வடகொரியா சென்றார். வடகொரிய அதிபர் கிம் – ஜாங் – இல் லுடன் பேச்சுவார்த்தை நடத்தியது சீனக்குழு. தொடர்ந்து பலமுறை இத்தகைய தொடர்பு களை சீனா வடகொரியாவுடன் ஏற்படுத்திக் கொண்டது.

கடைசியாக, சீனாவின் கடும் முயற்சிக்கு வெற்றி கிட்டியது. வடகொரியா ஆறு நாடுகள் சேர்ந்து நடத்தி வந்த பேச்சுவார்த்தை தொடருவதற்கும் அதில் தாங்கள் கலந்து கொள்வதற்கும் சம்மதித்தது.

இந்தப் பிரச்சனைக்கு மிரட்டல், யுத்தம் ஆகிய வழிமுறை களைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டு மென்பது தான் ஜனநாயக எண்ணம் கொண்டோர் அனைவரின் விருப்பம். இந்தக் கோட்பாடே சிறந்தது என்பதற்கான எடுத்துக் காட்டாக, சீனாவின் முன்முயற்சியும், அதற்கான வெற்றியும் சான்றாக அமைந்தன.