இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்திய தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி படை. நமது கட்சி உட்பட, உலகம் முழுவதும் உள்ள மார்க்சிய – லெனினிய கட்சியின் உயிர் வாழ்க்கைக்கும், அதன் அடிப்படையான செயல்பாடுகளுக்கும் அடித்தளமாக விளங்குவது உட்கட்சி ஜனநாயகமே! இத்தகைய ஜனநாயக அடித்தளத்திற்கு உயிராதாரமாக விளங்குவது ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடு. கட்சியின் ஸ்தாபன ரீதியான செயல் பாட்டிற்கு மைய சிந்தனையாக விளங்குவதே ஜனநாயக மத்தியத் துவம். இக்கோட்பாட்டைப் பற்றி கூறும்போது, ஜனநாயகத்தின் மிக உயர்ந்த அம்சமாக வர்ணிக்கப்படுகிறது; கூட்டுத் தலைமை, கூட்டுச் சிந்தனை, கூட்டுச் செயல்பாடு என இதன் பரிமாணம் விரிந்து – பரந்துச் செல்கிறது. சுருக்கமாக, செயலில் ஒற்றுமை, விமர்சனச் சுதந்திரம் என்பது இதன் முக்கியக் கருவாகும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் அமைப்புச் சட்டத்தில் 13 வது பிரிவு, ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடு குறித்து விரிவாக விளக்குகிறது. இந்தப் பிரிவில் அமைந்துள்ள வழிகாட் டலின் அடிப்படையில்தான், நமது கட்சியின் கிளை முதல் மத்தியக்குழு வரை உள்ள ஸ்தாபன செயல்பாடுகள் அமைந்துள்ளது. ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டின் முக்கியத்துவம் குறித்து கட்சியின் 17 வது மற்றும் 18 வது அகில இந்திய மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டு, வழிகாட்டப்பட்டுள்ளது.
ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டின் உருவாக்கம்
தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர அரசியல் ஸ்தாபனத்தின் வழிகாட்டியாக திகழும் லெனின், இக்கோட்பாட்டை உருவாக்கு வதில் முன்னணியில் நின்றார். இக்கோட்பாட்டையும், புரட்சிகர கட்சி அமைப்பு விதிகளையும் உருவாக்குவதற்காக, ரஷ்ய சமூக ஜனநாயக கட்சிக்குள் பொருளாதாரவாதிகள், பண்டிஸ்டுகள் மற்றும் கட்சிக்குள் ஒளிந்து கொண்டிருந்த பல்வேறு சந்தர்ப்பவா திகளுடன் பல்லாண்டுகாலம் பெரும் விவாதங்கள் நடைபெற்றது. இவைகள் குறித்து லெனின் அக்காலத்தில் நடைபெற்ற விவாதங் களைத் தொகுத்து, ஓரடி முன்னால் ஈரடி பின்னால், என்ன செய்ய வேண்டும் போன்ற புத்தகங்களில் விரிவாக விளக்கியுள்ளார். இக்கோட்பாடு குறித்து லெனின் கூறும் போது,
கட்சிக்குள் ஒற்றுமையையும், கட்டுப்பாட்டையும் உறுதிப் படுத்தவல்ல ஜனநாயக மத்தியத்துவக்கோட்பாடுகளே கட்சி அமைப்பிலும் செயல்பாட்டிலும் ஏற்கத்தக்க கொள்கை என்று உறுதியாக வாதிட்டார். ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் கட்சிக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். அதுபோன்றே கட்சி தமது ஒவ்வொரு உறுப்பினருக்கும் பதில் சொல்லக் கடமைப் பட்டது (லெனின் போராட்ட வாழ்க்கையில் சில ஏடுகள், யூரி அக்சுயுதின் – பக்கம் 28)
இதேபோல், சீனப் புரட்சியின் போது மாவோ ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டிற்கு பெரும் அழுத்தம் கொடுத்தார். கட்சி மாநாடுகளில் இதன் முக்கியத்துவத்தை விளக்கி நீண்ட உரையாற்றியி ருக்கிறார். குறிப்பாக, ஜனநாயக மத்தியத்துவத்தில் முதன்மையா னதும், அடிப்படையானதும் ஜனநாயகம் என்றும், அதைத் தொடர்ந்தே மத்தியத்துவம் என்று விளக்கியுள்ளார். கட்சிக்குள் உண்மையான ஜனநாயகம் நிலவவில்லையென்றால் மத்தியத்துவம் என்பது உண்மையாக இருக்க முடியாது என்று கூறுவதோடு, கட்சிக்குள் விமர்சனம் – சுயவிமர்சனத்தை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக மத்தியத்துவம் நிலவ வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
ஜனநாயகத்தின் உயிர் நாடி
ஜனநாயகம் என்று சொல்லும் போது அதனை வெறும் எண்ணிக்கை விளையாட்டு என்று கூறுவார்கள். இதில் எண்ணிக் கையை வைத்தே வெற்றி, தோல்விகள் அளவிடப்படுகிறது. ஆனால், புரட்சிகர தொழிலாளி வர்க்க அரசியல் கட்சியில், ஜனநாயகம் என்பதற்கு, எண்ணிக்கை என்பதற்கும் மேலான அந்தஸ்து வழங்கப்படுகிறது. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட கொள்கை விஷயத்தில் (தத்துவார்த்த, அரசியல் மற்றும் ஸ்தாபனம் சம்பந்தப்பட்ட) கட்சிக்குள் கமிட்டிகள் அல்லது மாநாடுகளில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களும் தீவிரமான விவாதத்தை நடத்துவதற்கு முழுமையான சுதந்திரம் அனுமதிக்கப்படுகிறது. அவர்கள் தங்களுக்குள் இருக்கும் பலவித கருத்துக்களை பகிரங்கமாக எடுத்து வைக்க அனுமதிக்கப்படுகின்றனர். அதே சமயம், அந்த குறிப்பிட்ட கொள்கை விஷயத்தில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு, பெரும்பான்மையானவர்களின் கருத்துக்கள் ஏற்கப்பட்டு, அதுவே கட்சியின் கொள்கையாக அறிவிக்கப்படுகிறது. அத்தகைய கொள்கையை சிறுபான்மை கருத்துடைய உறுப்பினர்கள் அனைவரும் முழுமையாக ஏற்றுக் கொண்டு அமலாக்கிட வேண்டும். இங்கே ஒரு கொள்கை உருவாக்கத்தில் பலவிதமான கருத்துக்கள் பகிரங்கமாக விவாதிக்கப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு பின்னர் எடுக்கப்படும் முடிவு கட்சியின் அதிகாரப்பூர்வமான முழுமையான முடிவாகிறது. இத்தகைய முடிவுகள் மாநாட்டிலோ அல்லது மேல் கமிட்டியிலோ எடுக்கப்பட்டால் கீழ் கமிட்டியில் உள்ள அனைத்து உறுப்பினர் களும் அதற்கு கட்டுப்பட்டவர்கள். அதனை முழுமையாக அமலாக்க கடமைப்பட்டவர்கள். இங்குதான் மத்தியத்துவம் வருகிறது. மத்தியத்துவம் என்று சொல்லும் போது மனிதனின் உடல் முழுவதும் ஒருங்கே இணைந்து செயல்படுவது போல், கட்சி முழுவதும் கருத்து வித்தியாசமின்றி கொள்கையை கடைபிடிப்ப தோடு, அதனை முழுமையாக செயல்படுத்திட வேண்டும். இதனைத்தான் லெனின், செயலில் ஒற்றுமை, விமர்சனச் சுதந்திரம் என வர்ணிக்கிறார்.
குறிப்பாக நமது கட்சியின் அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்படும் அரசியல் – ஸ்தாபனத் தீர்மானங்கள் அனைத்தும், மாநாட்டிற்கு முன் அதற்கான நகல் தயாரிக்கப்பட்டு அனைத்து கிளைகளுக்கும் சுற்றுக்கு விடப்படுகிறது. இத்தகைய விவாதத்தில் கட்சியின் அனைத்து மட்ட உறுப்பினர்களும் சுதந்திரமாக விவாதிப்பதற்கும், அதன் மீது கருத்து சொல்வதற்கும் அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு வரக்கூடிய கருத்துக்களையும், மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் பரிசீலித்து பின்னர் மாநாட்டில் அரசியல் – ஸ்தாபன தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. இவ்வாறு நிறைவேற்றப்படும் அரசியல் – ஸ்தாபனத் தீர்மானங்கள் அடுத்து வரக்கூடிய மாநாடுகள் வரை கட்சியின் வழிகாட்டும் நெறியாக கடைபிடிக்கப்படுகிறது. ஜனநாயக ரீதியாக மேற்கொள்ளப்படும் இத்தகைய கூட்டு முடிவுகளை, கட்சியின் மேல் கமிட்டி ஒருங்கே அமலாக்கிட வேண்டும். இதில் கறாரான மத்தியத்துவத்தை கட்சி கமிட்டிகள் கடைபிடிக்க வேண்டும். அதாவது, மாநாட்டு முடிவுகளில் இருந்து மாறுபட்டு நிற்பதையோ, அல்லது செயல்படுத்துவதையோ அனுமதிக்கக் கூடாது. இதுதான் மத்தியத்துவத்தின் மிக முக்கியமான அம்சமாகும்.
அதேபோல், கட்சியின் அனைத்து மட்டத்திற்குமான கமிட்டிகள் மாநாடுகளிலேயே தேர்ந்தெடுக்கப்படுகிறது. கட்சி கமிட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் பட்டியல் பகிரங்க மாக மாநாடுகளில் முன்வைக்கப்பட்டு, அதில் போட்டியிருந்தால் அதனை அனுமதித்து, ஜனநாயக ரீதியாக தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்படுகிறது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் கமிட்டிகள் அடுத்த மாநாடு வரை கட்சியின் கொள்கைகளை அமலாக்குவதற்கு தலைமை தாங்கும். கட்சி கமிட்டிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தங்களை கூட்டுச் செயல்பாட்டிற்கு உட்படுத்திக் கொண்டு, கட்சியை ஜனநாயக ரீதியாக வழிநடத்திச் செல்ல வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் கட்சி உறுப்பினர்கள் கட்சியின் கொள்கைகளை அமலாக்குவதற்கும், ஜனநாயக ரீதியாக கட்சியின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் கடமைப்பட்டவர்கள்.
மத்தியத்துவம்
மத்தியத்துவம் என்று சொல்லும் போது, புரட்சிகர அரசியல் கட்சியின் திட்டம், தத்துவார்த்தம் மற்றும் கொள்கைகளில் மேலிருந்து கீழ் வரை ஒரே நூலில் கட்டப்பட்டது போல், கட்சி முழுமைக்கும் சிந்தனையில் மத்தியத்துவம் நிலவ வேண்டும். நம்முடைய தத்துவார்த்த அடித்தளமே கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் பேராயுதமாகும். புரட்சிகர அரசியல் கட்சிக்கு தலைமை தாங்கும் தோழர்களை ஜனநாயக ரீதியாக கீழிருந்து தேர்ந்தெடுக்கிறோம். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் தலைமை கூட்டுத் தலைமை – கூட்டுச் செயல்பாடு – தனிநபர் பொறுப்பு என்ற உன்னதமான கடமைகளை உள்ளடக்கியது. எனவே, கட்சித் தலைமை ஜனநாயக ரீதியாக விவாதித்து எடுக்கும் முடிவுகளுக்கு நம்மை நாம் உட்படுத்திக்கொள்வதோடு, அவற்றை செயலாக்கி டவும் வேண்டும். இத்தயை அமலாக்கத்தில் மத்தியத்துவம் நிலவ வேண்டும். சுருக்கமாக சொல்வதென்றால் ஜனநாயகத்தின் அடிப்படையில் மத்தியத்துவப்படுத்தப் பட்டதும், மத்தியத் துவப்படுத்தப்பட்ட வழிகாட்டுதலில் உள்ள ஜனநாயகமும் இணைந்து இயங்க வேண்டும் என மாவோ விளக்குகிறார். ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டின் இத்தகைய உயிரோட்டமான அம்சங்களை தொழிலாளி வர்க்க கட்சி பற்றிக் கொள்ள வேண்டும்.
விமர்சனம் – சுய விமர்சனம்
ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டின் மற்றொரு முக்கியமான அம்சம் விமர்சனம் – சுயவிமர்சனம். இது குறித்து நமது கட்சியின் 13 வது பிரிவு 2 – ஈ கீழ்க்கண்டவாறு வலியுறுத்துகிறது.
மேலிருந்து கீழ் வரை எல்லா மட்டங்களிலும் விமர்சனத்தையும், சுய விமர்சனத்தையும் குறிப்பாக கீழிருந்து வரும் விமர்சனத்தை ஊக்குவிக்க வேண்டும் இது குறித்து லெனின், விவாதிப்பதற்கும், விமர்சிப்பதற்குமான சுதந்திரம் இல்லாத செயல் ஒற்றுமை என்பதை பாட்டாளி வர்க்கம் ஏற்றுக் கொள்வதில்லை என வலியுறுத்துகிறார்.
(லெ.தொ.நூ. 11.320)
கட்சி கமிட்டிகள் மற்றும் கிளைகளின் செயல்பாட்டிற்கும் உயிரோட்டமான ஒற்றுமைக்கும் அடிப்படையாக அமைவது விமர்சனம் – சுயவிமர்சனம். உறுப்பினர்களின் ஜனநாயக ரீதியான செயல்பாட்டை உத்திரவாதப்படுத்துவதற்கும், நம்பிக்கைபூர்வமான – இணக்கமான செயல்பாட்டை உருவாக்குவதற்கும் கமிட்டிகளில் மனம் திறந்த விமர்சனத்திற்கும், சுய விமர்சனத்திற்கும் இடமளிக்க வேண்டும். அதே சமயம், விமர்சிப்பது என்ற பெயரில் சக தோழர்களின் மனதை அல்லது செயல்பாட்டை ஊனப்படுத்துவதாக அமையக்கூடாது. மேலும் தலைமை தாங்கும் தோழர்கள், வரக்கூடிய விமர்சனங்களுக்கு பக்குவமாக காதுகொடுத்து கேட்பதோடு, பதிலுக்கு, பதில் என்ற பாணியில் எதிரும், புதிருமாக விமர்சிக்கக்கூடாது. மாறாக அவர்களது சந்தேகங்களுக்கும், கருத்துக்களுக்கும், கட்சி நிலையில் நின்று விளக்கமளிக்க வேண்டும். கமிட்டிகளில் முழுமையான விமர்சனத்தை சுதந்திரமாக அனுமதிப்பதும், சுயவிமர்சனத்தை ஊக்குவிப்பதுமே கருத்து வித்தியாசங்கள், முரண்பாடுகள் களையப்பட்டு செயல்பாட்டில் ஒருமித்த செயல் ஒற்றுமை ஏற்படும். மேலும். கட்சி கமிட்டிக்குள் சுதந்திரமான விமர்சனத்தை மேற்கொள்ளத் தவறுவது, கட்சிக்கு தலைமை தாங்குபவர்களை அதிகாரவர்க்க நிலைக்கு இட்டுச் செல்ல வழிவகுக்கும். கட்சிக்குள் விவாதிக்க வேண்டிய விஷயத்தை அங்கே விவாதிக்காமல், வெளியில் விவாதிப்பது, விமர்சிப்பது போன்ற செயல்கள் கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்துவதில் போய் முடியும். மேலும், கட்சி கமிட்டிகள் கீழிருந்து வரும் விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு, தங்களது தவறுகளையும் திருத்திக் கொள்வதற்கு தயங்கக்கூடாது. இது குறித்து லெனின் இவ்வாறு விளக்குகிறார்.
ஒரு தவறை வெளிப்படையாக ஒப்புக் கொள்வது அதைச் செய்வதற்குக் காரணமாக இருந்த நிலைமைகளைப் பகுப்பாய்வு செய்வது, அதைச் சரி செய்வதற்கான வழிமுறைகளைத் தீர ஆராய்வது – இவையெல்லாம் ஒரு தீவிரமான கட்சிக்குரிய அடையாளமாகும் (லெ. தொ. நூ. 31.57)
விமர்சனம் – சுயவிமர்சனத்தை எதிர்கொள்ளும் போது கம்யூனிஸ்ட் டுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து மாவோ கூறியதை பார்ப்போம். எது சரியானதோ அதனை உடனடியாக பற்றிக் கொள்ளவும், எந்த நேரத்திலும் தவறுகளை திருத்திக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். மேலும், எது சரி, எது தவறு – நாம் மக்களுக்குள்ளே இருக்கும் முரண் பாடுகளுக்கிடையேதான் வேலை செய்கிறோம். இந்த முரண்பாடுகளை தீர்க்க திட்டுவது, தாக்குவது அல்லது கத்தி, துப்பாக்கியை எடுப்பதன் மூலம் அல்ல; இதற்கு இருக்கும் ஒரே வழி விவாதித்தல், விமர்சிப்பது, சுயவிமர்சனம் செய்வது, காரணத்தை அறிவது. அதன் மூலம் மட்டுமே முரண்பாடுகளை தீர்க்க முடியும். சுருக்கமாக, ஜனநாயக வழியில் தீர்க்க முயல வேண்டும் அத்துடன், கட்சிக்கு உள்ளும், வெளியிலும் முழுமையான ஜனநாயக நெறியை கைக்கொள்ள வேண்டும். இதன் அர்த்தம் நேர்மையான ஜனநாயக மத்தியத்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும், விமர்சனம் – சுயவிமர்சனம் குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் முக்கிய பாத்திரத்தை வகித்த லீயூ சோஷி அதன் முக்கியத்துவத்தை மிக விரிவாக விளக்குகிறார்.
மக்கள் பிரச்சினைகளை புரிந்துகொள்வதில்லை. அவர்களுக்கு பிரச்சினைகளை எப்படி விளக்குவது என்று தெரியாது. அதே சமயம் அவர்களின் அனுபவத்தில் கற்றதை வைத்து பல்வேறு கருத்துக் களை வெளிப்படுத்துவார்கள். இத்தகைய சூழலில், ஜனநாயகம் நிலவவில்லையென்றால், அவர்கள் தங்களுக்கு இருக்கும் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு முன்வர மாட்டார்கள். ஆகவே நாம் ஜனநாயகம் என்ற உயிர்நாதத்தை எப்போதும் கைக்கொள்ள வேண்டும்.
கட்சி கமிட்டிகளில் விமர்சனம் – சுயவிமர்சனத்தின் மூலம் மட்டுமே சிறந்த கருத்துக்களை கண்டெடுக்க முடியும். இதுதான் கூட்டுத் தலைமைக்கும், கூட்டுச் செயல்பாட்டுக்கும் அடிப்படையாக அமையும். எனவே ஜனநாயக மத்தியத்துவத்தின் இத்தகைய உயிரம் சத்தை கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் கைக்கொள்ள வேண்டும்.
ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டின் முக்கிய அம்சமான விமர்சனம் – சுயவிமர்சனம் என்ற கலையை கம்யூனிஸ்ட்டுகளாகிய நாம் நன்கு பயில்வதோடு, கமிட்டிகளில் அதனை சிறப்பாக அமலாக்கிடவேண்டும். குறிப்பாக இதன் மூலமே ஒரு ஆரோக்கியமான – ஜனநாயக ரீதியான அமைப்பினை வளர்த்தெடுக்க முடியும்.
நெறிப்படுத்தும் இயக்கம்
கட்சிக்குள் எழும் பல்வேறு விதமான தவறான போக்குகள் மற்றும் சிந்தனைகளுக்கு எதிராக நெறிப்படுத்தும் இயக்கத்தை தொடர்ந்து நடத்திட வேண்டும். குறிப்பாக அதிகாரவர்க்கப்போக்கு, தன்னிச்சைப்போக்கு, கோஷ்டிமனப்பான்மை மற்றும் கம்யூனிச விரோத சிந்தனைகளுக்கு எதிராக இத்தகைய இயக்கத்தை நாம் நடத்திச் செல்ல வேண்டும். ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டை சரியாகக் கையாளாததால் ஏற்படும் கோளாறுகளே மேற்கண்ட சீரழிவு அம்சங்கள். எனவே, கட்சி உறுப்பினர்களுக்கு ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடு குறித்தும், கம்யூனிச நெறிமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்தும் தொடர்ச்சியாக பயிற்றுவிக்க வேண்டும். இத்தகைய போராட்டத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சி 1942 – 45 காலகட்டங்களில் தீவிரமாக நடத்தியது. இது குறித்து மாவோ கூறும் போது, இது ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு, தீவிரமான தேடுதலைக் கொண்டது. தவறிழைப்பவர்கள் யாராக இருந்தாலும், அதிலிருந்து கற்றுக் கொண்டு தவறுகளை திருத்திக் கொள்ளவும், சரியான திசைவழியை நோக்கிச் செல்லவும், ஒவ்வொருவரும் தங்கள் தவறுகளை சரி செய்துக்கொள்ளவும் உதவின.
மேலும், ஒற்றுமை – விமர்சனம் – ஒற்றுமை என்ற கோட்பாட்டை அடிப்படையாக வைத்து இது நடத்தப்பட்டது. இத்தகைய நெறிப்படுத்தும் இயக்கம் கட்சி முழுமைக்கும் உள்ள தோழர்களுக்கு பேருதவியாக இருந்ததோடு, ஜனநாயக புரட்சியை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது, கட்சியின் நிலைபாடு களையும், கொள்கைகளையும் சரியான முறையில் புரிந்து கொள்வதற்கு நெறிப்படுத்தும் இயக்கம் பயன்பட்டது.
நம்முடைய கட்சியின் 17 வது அகில இந்திய மாநாடு, நமது கட்சிக்குள்ளும் ஒரு நெறிப்படுத்தும் இயக்கத்தை தீவிரமாக நடத்திட வேண்டும் என்று பணித்தது. அதன் விளைவாக 1996 இல் மத்தியக்குழு நெறிப்படுத்தும் இயக்கத்திற்கான ஒரு ஆவணத்தை தயாரித்து நிறைவேற்றியது. அதன் முக்கியத்துவத்தை மத்தியக்குழு இவ்வாறு சுட்டிக் காட்டுகிறது.
கட்சியின் புரட்சிகரத் தன்மையைப் பலப்படுத்தவும், புதுத் தெம்பூட்டவும் நாம் தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த இயக்கத்தின் முக்கியத்துவத்தை மத்தியக்குழு கோடிட்டுக்காட்டியது. இந்த உணர்வோடுதான் இந்த இயக்கம் மேற்கொள்ளப்பட வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் ஆற்றல்மிகு படைக்கலனாகக் கட்சியை வடிவமைப்பதற்கும், கட்சி ஒற்றுமையை பலப்படுத்துவதற்குமான பரந்த நோக்கத்திற்காக, பலவீனங் களையும், தவறுகளையும் கண்டறிந்து களைய வேண்டும். இந்த இயக்கத்தின் இலக்கு இதுதான் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்; கட்சிக்குள் பழி தீர்த்துக் கொள்வதற்கோ, புழுதிவாரி இறைப்பதற்கோ இதைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.
மேலும், இந்த நெறிப்படுத்தும் ஆவணத்தில் ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டினை நிலை நிறுத்தவும், கட்சிக்குள் ஊடுருவியுள்ள தறவான போக்குகளுக்கு எதிராகப் போராடுவதோடு, அவற்றை நெறிப்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது.
பல்வேறு மட்டங்களில் கூட்டுச் செயல்பாடு இருப்பதில்லை. மாறாக, கோஷ்டிப் போக்கு, பதவிமோகப் போக்கு, தன்னிச்சைப் போக்கு ஆகிய ஆரோக்கியமற்ற போக்குகள் கவலையளிக்கும் விதத்தில் வளர்ந்துள்ளன.
மேலும், நெறிப்படுத்தும் இயக்கத்தை மேலேயிருந்து, தலைமை தாங்கும் குழுக்களிலிருந்து தொடங்கப்படவேண்டும் என நெறிப்படுத்தும் ஆவணம் நமக்கு வழிகாட்டுகிறது.
நம்முடைய கட்சியின் 18வது அகில இந்திய மாநாடு, ஜனநாயக மத்தியத்துவ செயல்பாடு என்பது தொடர்ச்சியான முறையில் நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று என்பதால் அது குறித்து அவ்வப்போது பரிசீலனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேற்கண்ட அம்சங்களைக் கணக்கில் கொண்டு, கம்யூனிச நெறிமுறைகளைப் பாதுகாப்பதற்கும், கட்சிக் கிளைகள் மற்றும் கமிட்டிச் செயல்பாடுகளில் ஜனநாயக மத்தியத்துவத்தில் ஏற்படும் ஊனங்களை சரிப்படுத்துவதற்குமான போராட்டத்தில் கம்யூனிஸ்ட் டுகளாகிய நாம் தொடர்ச்சியாக கவனம் செலுத்த வேண்டும்.
கட்சிக் கல்வியும் ஜனநாயக மத்தியத்துவமும்
கட்சிக்குள் உயிரோட்டமான ஜனநாயகத்தை நிலைநாட்டிட வேண்டும் என்றால், கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் ஸ்தா பனம் சம்பந்தப்பட்ட கட்சிக் கல்வியை தொடர்ந்து அளிக்க வேண்டும். புதிதாக வரக்கூடிய உறுப்பினர்களுக்கு கட்சியின் விதிமுறைகள் மற்றும் ஜனநாயக நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை அளிப்பதன் மூலம்தான் அவர்கள் செயல்படும் கமிட்டிகளில் ஆரோக்கியமான, ஜனநாயகப்பூர்வமான பங் களிப்பை ஆற்ற முடியும். இது குறித்து நம்முடைய கட்சியின் 18 வது அகில இந்திய மாநாட்டு அரசியல் – ஸ்தாபன அறிக்கை கீழ்க்கண்ட வாறு சுட்டிக்காட்டியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபனக் கோட்பாடுகளை செயல்படுத்த புதிய கட்சி உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படவில்லை. புதிய கட்சி உறுப்பினர்களை பயிற்றுவிப்பதில் தொடர்ந்து காணப் படும் பலவீனமே தவறான ஸ்தாபன நடைமுறைகளுக்கும், ஜனநாயக மத்தியத்துவம் மீறப்படுவதற்குமான முக்கிய காரண மாகும். அதேபோல் மாவோ, ஜனநாயக மத்தியத்துவம் குறித்த கட்சிக் கல்வியின் அவசியம் குறித்து இவ்வாறு விளக்குகிறார்.
ஜனநாயகம் பற்றிய கல்வி கட்சிக்குள் நடத்தப்பட வேண்டும். இதன் மூலம், ஜனநாயக வாழ்வு என்பதன் பொருளை, ஜனநாயகத்துக்கும், மத்தியத்துவத்துக்கும் இடையே உள்ள உறவுக்குரிய பொருளை, எந்த முறையில் ஜனநாயக மத்தியத்துவம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை உறுப்பினர்கள் அறிந்து கொள்ள முடியும். இவ்வழியில்தான் நம்மால் உண்மையிலேயே கட்சிக்குள் ஜனநாய கத்தை விரிவுபடுத்த முடியும். அதே சமயம் கட்டுப்பாட்டைச் சீர்குலைக்கும் அதிதீவிர ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் தவிர்க்கவும் முடியும் (மா.தொ.நூ. 2.205)
கிளைச் செயல்பாடும் – அதிகார வர்க்கப் போக்கும்
கட்சிக் கிளைகளே கட்சியின் ஆதாரத் தூண்களாகும். கட்சியின் உயிரோட்டமான வாழ்க்கைக்கு அடிப்படையாக இருப்பது கட்சிக் கிளைகளின் ஆரோக்கியமான செயல்பாடுகளே. வெகுஜனங்க ளோடு உயிரோட்டமான தொடர்புடைய கட்சி கிளைகளுக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் அரசியல் ஆர்வத்தை வளர்ப்பதற்கும் சுதந்திரமான செயல்பாட்டுக்கும் வழிகாட்ட வேண்டும். மேலும், கிளைக் கூட்டங்களில் தோழமைப்பூர்வமான, மனம் திறந்த முறையிலான கலந்துரையாடலை உருவாக்கிட வேண்டும். கீழ்மட்ட அளவில் ஜனநாயக ரீதியான செயல்பாட்டுக்கும், விமர்சன சுதந்திரத்திற்கும் உத்தரவாதப்படுத்தவேண்டும். மேலும், உயிரோட் டமான கிளைச் செயல்பாடுகளே அதிகாரவர்க்கம் மற்றும் தன்னிச்சைப் போக்குகளுக்கு எதிரான அச்சாணியாகும். இதுமட்டுமின்றி கிளைக் கூட்டங்களில் மேல் கமிட்டி முடிவுகள் மீது சுதந்திரமாக கருத்துச் சொல்வதற்கும், விவாதிப்பதற்கும் வாய்ப்பளிக்க வேண்டும். கிளையிலிருந்து வரும் விமர்சனங்களுக்கு மதிப்பளிப்பதோடு, இதுபோன்ற முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும். மேலும் கட்சிக் கமிட்டிகள், கிளை கூடுதவதற்கும், விவாதிப்பதற்கும், சுயேச்சையான செயல்பாடுகளுக்கும் முக்கியத் துவம் அளித்து வழிகாட்ட வேண்டும். இத்தகைய ஆரோக்கியமான செயல்பாடுகளே நம்முடைய கட்சியை அதிகாரவர்க்கப் போக்கிற்கு இட்டுச் செல்லும் ஆபத்திலிருந்து காப்பாற்றும். இது குறித்து நமது கட்சியின் 17 வது அகில இந்திய மாநாடு கீழ்க்கண்டவாறு எச்சரிக்கிறது.
கட்சிக் கிளைகள் முறையாக செயல்படாத நிலையிலும், பெருமளவிலான கட்சி உறுப்பினர்கள் தங்களது குறைந்தபட்ச பொறுப்புகளை நிறைவேற்றாத நிலையிலும், ஜனநாயக மத்தியத் துவம் என்பது ஆரோக்கியமானதாக இருக்க முடியாது. இத்தகைய சூழல், தனிநபர் வாதம், அதிகார வர்க்க மனோபாவம், கோஷ்டி மனோபாவம் ஆகியவை வளர்வதற்கு வாய்ப்பாக உள்ளது.
கட்சிக் கமிட்டிகளுக்கு தலைமை தாங்கும் தோழர்களை உயர் பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கும் போது, கட்சியில் அவர்களது அனுபவம், பயிற்சி போன்றவற்றை கணக்கில் கொண்டே மேல் கமிட்டிகளுக்கு உயர்த்த வேண்டும். பயிற்சி பெறாத ஊழியர்களை உயர் பொறுப்புகளுக்கு உயர்த்தும் போது, ஜனநாயக நடைமுறைக்கு மரணக்குழி தோண்டப்படுகிறது. அதாவது, கீழிருந்து வரும் விமர்சனங்களை சரியாக கையாளுவதற்கும், அவர்களது சந்தேகங் கள் மற்றும் நடைமுறை வேலைகளில் வழிகாட்டுவதற்கும் சரியான பயிற்சி பெறவில்லையென்றால், கூட்டுச் செயல்பாடு, கூட்டு விவாதம், விமர்சனம் – சுயவிமர்சனம் போன்றவை பின்னுக்குத் தள்ளப்பட்டு அத்தகைய தோழர்கள் தன்னிச்சைப்போக்கு மற்றும் அதிகார வர்க்க மனோபாவத்திற்குள் தள்ளப்படுகின்றனர். இது குறித்தும் நம்முடைய 17 வது அகில இந்திய மாநாடு பின்வருமாறு எச்சரிக்கிறது.
சில இடங்களில் தகுதியற்ற நபர்களை கட்சியில் சேர்த்து, தங்களது கோஷ்டியினர் பலத்தை அதிகப்படுத்தும் போக்கு உள்ளது. கோஷ்டிப் பூசலில் ஒரு சில இடங்களில் ஆதரவினைப் பெறும் பொருட்டு, ஒரு சில தோழர்கள் செய்யும் தவறுகளை கண்டு கொள்வதே கிடையாது. ஒரு சில இடங்களில் கட்சி கமிட்டிகளே கோஷ்டியாக பிளவுபட்டு இருக்கிறது.
கட்சியின் உயிரோட்டமான செயல்பாட்டிற்கும் – ஜனநாயகப் பூர்வமான நீரோட்டத்திற்கும், ஜனநாயக மத்தியத்துவக் கோட் பாட்டை முழுமையாக அமலாக்குவதற்கு கிளைச் செயல்பாடுகளை முழுமையாக்குவதற்கும் உத்திரவாதப்படுத்திட வேண்டும். கட்சிக் கிளைகளில் பரஸ்பர புரிதல் அடிப்படையில் விவாதிப்பது, கட்சிக் கிளைச் செயல்பாட்டில் திறனை வளர்த்துக் கொள்ளவும், அடுத்தடுத்து வேலைகளில் உயிரோட்டமாக ஈடுபடுவதற்கும் இட்டுச் செல்லும். அதேபோல், கட்சிப் பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கும்போது உரிய பயிற்சி பெற்ற, தகுதியான தோழர்களை தயங்காமல் பொறுப்புகளுக்குக் கொண்டு வரவேண்டும்.
இதுமட்டுமின்றி, நமது கட்சிக்குள் இளம் தோழர்களை பொறுப்புகளுக்கு கொண்டு வருவது குறித்து செப்டம்பர் 2006இல் நடைபெற்ற நம்முடைய மத்தியக்குழுத் தீர்மானம் மிகத் தெளிவான வழிகாட்டலை அளித்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அனைத்து மட்டங்களிலும் அதிக அளவில் இளம் ஊழியர்களை கட்சிக்குள் கொண்டுவர வேண்டும். குறிப்பிட்ட பணிகளை அவர்களுக்கு ஒதுக்கி, அவர்களின் பணிகளை முறைப்படுத்த வேண்டும். அவர்களின் திறமையினை அளவுகோளாகக் கொண்டு, அவர்களை மேல்மட்டத்துக்கு உயர்த்த வேண்டும். அடிப்படை வர்க்கங்கள், மாதர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகிய பிரிவினர் மத்தியிலிருந்து ஊழியர்களை கொண்டு வர போதிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இறுதியாக, மார்க்சிய – லெனினிய அடிப்படையில், ஒரு புரட்சிகர வெகுஜன கட்சியை கட்டுவதன் மூலம், நாம் நிச்சயித்துள்ள மக்கள் ஜனநாயக புரட்சியை நிறைவேற்றுவதற்கு, ஆரோக்கியமான – உயிரோட்டமான கட்சி செயல்பாட்டிற்கு உத்திரவாதப்படுத்த வேண்டும். இத்தகைய கட்சி செயல்பாட்டை உத்திரவாதப்படுத்து வதற்கு உட்கட்சி ஜனநாயகமான, ஜனநாயக மத்தியத்துவக் கோட் பாட்டை அதன் சரியான அளவில் புரிந்து கொண்டு, ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் அதனை அமலாக்கிடவும், செயல்படுத்தவும் விடாப்பிடியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இது குறித்த விழிப்புணர்வை அனைத்து மட்டத்திலும் துவக்கிட வேண்டும். கூட்டுச் சிந்தனை, கூட்டுச் செயல்பாட்டை உத்திரவாதப்படுத்தும், ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டை வளர்த்தெடுப்பதும், வளப்படுத்துவதும் கம்யூனிஸ்ட்டுகளின் கைகளிலேயே உள்ளது.
உதவிய நூல்கள்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அமைப்புச் சட்டம்
- லெனின் போராட்ட வாழ்க்கையில் சில ஏடுகள், யூரி அக்சுயுதின்
- மாசேதுங் தொகுப்பு நூல், பிரிவு 8, பீகிங் ரிவியூ – 1978.
- கட்சி குறித்து, லீயூ சோஷி
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), நெறிப்படுத்தும் ஆவணம் – 1996.
- மார்க்ஸ் முதல் மாசேதுங்வரை, ஜார்ஜ் தாம்ஸன், விடியல் பதிப்பகம்.
- கம்யூனிஸ்ட் கட்சியும் ஸ்தாபனமும், அனில் பிஸ்வாஸ், பாரதி புத்தகாலயம்.
- அரசியல் நிகழ்வுகளும், ஸ்தாபன கடமைகளும், சி.பி.ஐ.(எம்), மத்தியக்குழுத் தீர்மானம், செப்டம்பர் 2006.
- Wikipedia
Leave a Reply