மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


#RedBooksDay2022 : செயலுக்கான நோக்கத்தை தெளிவுபடுத்திய விஞ்ஞான சோசலிசம்


ஆசாத்

(தமிழ்நாட்டில் சிவப்பு புத்தக தின கொண்டாட்டத்திற்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள ‘கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும்’ நூலை வாசிக்க உதவியாக மார்க்சிஸ்ட் இதழில் இந்த கட்டுரையை வெளியிடுகிறோம்.)

”பகுத்தறிவின் தீர்ப்பு மேடை முன்னே தன் இருப்பை நியாயப்படுத்தியாக வேண்டும்; அல்லது இல்லாது ஒழிந்தாக வேண்டும். பகுத்தறிவுக்கு உகந்தது என்கின்ற ஒன்றே அனைத்துக்கும் அளவுகோல் ஆயிற்று”

18 ஆம் நூற்றாண்டின் போது வளர்ச்சி பெற்றுவந்த பிரெஞ்சு தத்துவத்தின் வளர்ச்சி குறித்து பேசும்போது எங்கெல்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார். நவீன அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகளின் வழிவந்த பகுத்தறிவின் வரலாற்று வளர்ச்சிப்போக்கில் கருத்துமுதல்வாதத்தின் வாதங்கள் நிற்கமுடியாமல் காணாமல் போனது.

“புதிய சூழலின் நிலைமைகள், முந்தைய நிலைமைகளுடன் ஒப்பிடுகையில், போதுமான அளவு பகுத்தறிவுக்கு உகந்ததாக இருந்த போதிலும், எந்த வகையிலும் முற்றிலும் பகுத்தறிவுக்கு உகந்த ஒன்றாக இல்லை.” பகுத்தறிவின் ஆட்சி என்று முதலாளித்துவம் கூறியது, முதலாளித்துவ வர்க்கம் மிகைப்படுத்திக் கூறிக்கொண்ட ஆட்சியே அன்றி வேறொன்றுமில்லை. நித்தியமான நீதி என்று அவர்கள் கூறியது முதலாளித்துவத்தின் நீதியே ஆகும். சமத்துவம் என்பதும் சட்டத்தின் முன்பான குறுகிய முதலாளித்துவ சமத்துவமாகவே இருந்தது.

“நவீன தொழில் துறை ஒருபுறம் மோதல்களை வளர்க்கிறது. உற்பத்தி முறையில் ஒரு புரட்சியையும், உற்பத்தி முறையின் முதலாளித்துவ தன்மைக்கு முடிவு கட்டுவதையும் அவசியமாக்கும் மோதல்களை வளர்க்கிறது.”
முதலாளித்துவத்தின் வளர்ச்சி தவிர்க்க முடியாத வகையில் பாட்டாளிகளின் எண்ணிக்கையையும் உயர்த்தியது. பாட்டாளிகளான உழைக்கும் மக்களும் அவர்களின் உழைப்பு சக்தியும் இல்லாமல் முதலாளித்துவம் நிலவ முடியாது. தொழிலாளர்களின் உழைப்பின் பலனை கொண்டு வளர்ச்சி பெற்ற முதலாளித்துவம், உழைக்கும் அம்மக்களுக்கு வறுமை மற்றும் துயரத்தையும் சமூகத்தின் வாழ்க்கை நிலைமையாக மாற்றியது. “பாட்டாளி வர்க்கமானது, ‘ஏதும் இல்லாத’ இந்தச் சாதாரண மக்களிடமிருந்து, அப்போதுதான் முதன் முதலாக ஒரு புதிய வர்க்கத்தின் உட்கருவாய் தானாகவே பரிணமித்தது. இன்னமும் சுயேச்சையான அரசியல் நடவடிக்கைக்கு சற்றும் திறனற்றிருந்த அவ்வர்க்கம் ஒடுக்கப்பட்ட, துயருறும் பகுதியாகவே தோற்றமளித்தது.

இந்த வரலாற்று சூழலே சோசலிசம் குறித்த துவக்ககால சிந்தனையை கொண்டவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தியது. ”முதலாளித்துவ முறையிலான உற்பத்தியின் முதிர்ச்சியுறாத நிலைமைகளுக்கும், முதிர்ச்சியுறாத வர்க்க நிலைமைகளுக்கும் ஒத்திசைவாக முதிர்ச்சியுறாத கொள்கைகளே முன்வைக்கப்பட்டன. சமூகப் பிரச்சினைகளுக்குரிய தீர்வினை, வளர்ச்சியுறாத பொருளாதார நிலைமைகளில் இன்னமும் மறைந்துகிடந்த அந்தத் தீர்வினை, கற்பனாவாதிகள் மனித மூளையிலிருந்து உருவாக்க முயன்றனர்.”

சான் சிமோன், பூரியே, ஓவன் ஆகியோரை அக்காலத்திய மூன்று மிகப்பெரிய கற்பனாவாதிகள் என்கிறார் எங்கெல்ஸ். மனிதனின் சிந்தனையில் உதித்த கடவுள் எனும் கருத்தே உலகை படைத்தது எனும் கருத்துமுதல்வாதத்தைபோல், இந்த கற்பனாவாதிகள் சமூக வளர்ச்சியின் அடிப்படைகளை கருத்தில் கொள்ளாமல் மனித மூளையின் சிந்தனையைக் கொண்டே அவற்றை கண்டறிய முனைந்தனர். முரண்பாட்டிற்குள் ஒற்றுமை என்கிற வகையில் “வரலாற்று ரீதியான வளர்ச்சியின் விளைவாய் தோன்றிய பாட்டாளி வர்க்கத்தினுடைய நலன்களின் பரதிநிதியாக (கற்பனாவதிகள்) தோன்றவில்லை.” அனைத்து மனிதர்களும் வேலை செய்ய வேண்டும். பயங்கர ஆட்சி உடைமையற்ற சாதாரண மக்களின் ஆட்சியே. அரசியல் என்பது உற்பத்தியைப் பற்றிய விஞ்ஞானமாகும். அரசியலானது பொருளாதாரத்தால் முழு அளவுக்கு உட்கவரப்பட்டுவிடும். என்கிற சான் சிமோனின் கருத்து, பொருளாதார நிலைமைகளே அரசியல் நிறுவனங்களின் அடித்தளம் என்கிற அரசியல் அறிவு கரு வடிவில்தான் இருந்தது என்பதை எடுத்துரைத்தது.
கடைசி முடிவாக பூமி அழிந்துபோகும் என்னும் கருத்தை இயற்கை விஞ்ஞானத்தில் எவ்வாறு கான்ட் புகுத்தினாரோ, அதேபோல், மனிதகுலத்தின் இறுதி அழிவெனும் கருத்தை வரலாற்று விஞ்ஞானத்தில் பூரியே புகுத்தினார்.

எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் எடுத்துக்காட்டான முன்மாதிரி பரிசோதனைகள் மூலம் அந்த அமைப்புகளை வெளியிலிருந்து சமுதாயத்தின் மீது திணிப்பது அவசியம் என கற்பனாவாதிகள் கருதினர். அந்த வகையில் ஓவன் சில முயற்சிகளை தான் சார்ந்த நிறுவனத்தில் செய்து வெற்றி கண்டார். தொழிலாளர்களின் வேலை நேரத்தை குறைப்பது, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது என பலவற்றை செய்தார். ஆனபோதும் நிறுவனத்தின் வளர்ச்சி வெற்றிகரமாக இருந்ததை நிரூபித்தார். ஆனால், இம்மக்கள் (அவரது நிறுவனத்தில் பணியாற்றியவர்கள்) என் தயவில் அடிமைகளாகவே இருந்தனர்” என்கிறார் ஓவன். ஏனெனில் “தன்னுடைய தொழிலாளர்களுக்கு வழங்கியிருந்த வாழ்க்கை நிலைமைகள் ஒப்பீட்டளவில் அனுகூலமானவை என்றாலும், அவர்களின் பண்பியல்பும், அறிவுத்திறனும் அனைத்துத் திசைகளிலும் நியாயமான வளர்ச்சிபெற அனுமதிக்கும் நிலைக்கு இன்னமும் எட்டாத தொலைவிலேயே இருந்தன. அவர்களுடைய வினையாற்றல்கள் அனைத்தையும் சுதந்திரமாக செயல்படுத்த மிகவும் குறைவான வாய்ப்புகளை வழங்கும் வாழ்க்கை நிலைமைகளே இருந்தன.

” புறச்சூழலே ஒரு முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தவல்லதே அன்றி, அது வெளியிலிருந்து திட்டமிட்டு புகுத்தப்படுவதன் மூலம் சாத்தியப்படுத்தக் கூடியதல்ல. “சோசலிசத்தை ஒரு விஞ்ஞானமாக்க முதலில் அதை கற்பனை அல்லாத ஓர் உண்மையான அடித்தளத்தின் மீது இருத்த வேண்டியிருந்தது” கற்பனை அல்லாத ஓர் உண்மையின் அடித்தளத்தின் மீது சோசலிசத்தை இருத்த மார்க்சின் இரண்டு கண்டுபிடிப்புகளே வழி செய்தன. “வரலாறு பற்றிய பொருள் முதல்வாதக் கருத்துரு, உபரி மதிப்பு மூலமாக முதலாளித்துவ முறையிலான உற்பத்தி பற்றிய இரகசியத்தை வெளிப்படுத்தியது” எனும் மார்க்சின் இவ்விரண்டு கண்டுபிடிப்புகளுமே விஞ்ஞான சோசலிசத்தின் அடித்தளமாகியது.

இயற்கை அறிவியலையும் சமூக அறிவியலையும் இணைத்த, இயக்கவியல் வரலாற்றுப் பொருள் முதல்வாத நோக்குகொண்ட ஒரு தனிச்சிறப்புமிக்க பார்வையுடன் விஞ்ஞான சோசலிசம் வளர்ச்சி பெற்றது. இயற்கை அறிவியலிலும் சமூக அறிவியலிலும் கிடைக்கப்பெற்ற புதிய தரவுகளும் புதிய கண்டுபிடிப்புகளும் இவற்றை சாத்தியப்படுத்தியது. நவீன தொழில் வளர்ச்சி வர்க்கப் பிரிவினையை கூர்மைப்படுத்தியது. மேலும் வர்க்கங்களுக்கிடையேயான நட்பையும் முரணையும் மேலும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. முந்தைய சிந்தனை போக்குகள் எல்லாம் அதற்கே உரிய குறுகிய இயக்க மறுப்பியல் தன்மையை கெண்டிருந்தன. அவற்றின் “அறிவுணர்வானது அதற்குரிய நான்கு சுவர்களின் எளிய ஆட்சி எல்லைக்குள் இருக்கும்போது மதிக்கத் தக்கதாக திகழ்ந்தது. (இயற்கை அறிவியலின் வள்ர்ச்சியின்போது) ஆராய்ச்சி என்னும் பரந்த உலகினுள் ஆபத்தான பயணத்தில் அடியெடுத்து வைக்கும்போது, அது விந்தைமிகு அபாயங்களை நேரடியாக எதிர்கொண்டது.”

“மனிதனின் உணர்வைக் கொண்டு அவனுடைய இருப்பை விளக்குவதற்குப் பதிலாக, மனிதனின் இருப்பை கொண்டு அவனுடைய உணர்வை விளக்குவதற்கான வழிமுறை கண்டறியப்பட்டது.“ சோசலிசம் என்பது வரலாற்று ரீதியாக வளர்ச்சி பெற்ற இரு வர்க்கங்களான பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்கும் இடையே நிகழும் போராட்டத்தின் தவிர்க்க முடியாத நிகழ்வு என்று நிறுவப்பட்டது. இதற்கு முந்தைய சோசலிச கருத்துரு இந்த இயக்கவியல் வரலாற்று பொருள்முதல்வாதப் பார்வை அற்றதாக இருந்தது.

முந்தைய சோசலிச கருத்துரு “முதலாளித்துவ உற்பத்தி முறையையும் அதன் பின்விளைவுகளையும் கண்டித்தது உண்மைதான்.’‘ ஆனால், அவை எந்த வகையில் தீயவையாக உள்ளது? அத்தீமை எதன் பொருட்டு, எதன் அடிப்படையில் நடைபெறுகிறது? என்பதை விளக்க அதனால் முடியவில்லை. அதன் முழுவடிவத்தை விளக்கிட முடியாமல் அது தீயவை என நிராகரிக்க மட்டுமே அதனால் முடிந்தது. “முதலாளித்துவத்தில் தவிர்க்க முடியாதபடி தொழிலாளி வர்க்கம் சுரண்டப்படுவதை எந்த அளவுக்கு முந்தைய சோசலிசம் வெளிப்படையாக கண்டித்ததோ, அந்த அளவுக்குத் தெளிவாக இந்தச் சுரண்டல் எதில் அடங்கியிருந்தது, அது எவ்வாறு தோன்றியது என்பதை அதனால் விளக்கிட முடியவில்லை.

இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் “(1) முதலாளித்துவ உற்பத்தி முறையை அதன் வரலாற்றுத் தொடர்பில் விளக்கி, ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தில் அது தவிர்க்க முடியாதது என்பதை எடுத்துரைப்பதோடு, அதன் காரணமாக நிகழும் தவிர்க்க முடியாதபடியான அதன் வீழ்ச்சியையும் எடுத்துரைப்பது (2) இதுநாள்வரை இரகசியமாக இருந்து வந்த, முதலாளித்துவத்தின் சாராம்சத் தன்மையை தோலுரித்துக் காட்டுவதும், அவசியமாக இருந்தது.” உபரி மதிப்பை மார்க்ஸ் கண்டுணர்ந்ததன் மூலம் இது நிறைவேற்றப்பட்டது.

“ஊதியம் தரப்படாத உழைப்பை உறிஞ்சிக் கொள்வதுதான் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும், அதன்கீழ் தொழிலாளி சுரண்டப்படுவதற்கும் அடிப்படையாக அமைகிறதென்று எடுத்துக்காட்டப்பட்டது.” அந்த வகையில், இயக்கவியல் வரலாற்று பொருள்முதல்வாத கருத்துரு மற்றும் உபரி மதிப்பை கண்டறிந்து முதலாளித்துவ உற்பத்தியின் ரகசியத்தை மார்க்ஸ் கண்டறிந்ததின் மூலம் சோசலிசம் விஞ்ஞானமானது என்கிறார் எங்கெல்ஸ்.

விஞ்ஞான சோசலிசம்

“சமூக மாற்றங்களுக்கும் அரசியல் புரட்சிகளுக்குமான முடிவான காரணங்களை, உற்பத்தி, விநியோக முறைகளில் ஏற்படும் மாற்றங்களில் கண்டறிய முயல வேண்டுமே அல்லாது, மனிதர்களின் சிந்தனைகளிலோ, நித்தியமான உண்மை, நித்தியமான நீதி குறித்த மனிதனுடைய முன்னிலும் சிறப்பான உள்ளுணர்வுகளிலோ அல்ல. அத்தகைய காரணங்களை அந்தந்தக் குறிப்பிட்ட சகாப்தத்தின் பொருளாதார அமைப்புமுறையில் கண்டறிய முயல வேண்டுமே அல்லாது தத்துவத்தில் அல்ல.” சோசலிசம் என்பது மனிதர்களின் சிந்தனையில் திடீரென முகிழ்ந்த ஒன்றல்ல. “எதார்த்தத்தில் நிலவும் (வர்க்கங்களுக்கு இடையேயான) மோதலினால் சிந்தனையில் ஏற்படும் எதிர்வினையே அன்றி வேறல்ல. இம்மோதலால் நேரடியாக பாதிக்கப்படும் வர்க்கமாகிய தொழிலாளி வர்க்கத்தின் மனங்களில் ஏற்படும் இயல்பான பிரதிபலிப்பே சோசலிசமாகும்.”

“மூலதனத் திரட்சிக்கு இணையாகத் துயரமும் திரண்டு பெருகுவதை இந்த விதி உறுதி செய்கிறது. எனவே, ஒரு முனையில் செல்வம் திரள்வதும் எதிர்முனையில் மூலதனத்தின் வடிவில் தன் சொந்தப் பொருளை உற்பத்தி செய்யும் வர்க்கம் துயரமும், உழைப்பின் வேதனையும் அடிமைத்தனமும் அறியாமையும் கொடுமையும் மனச் சீரழிவும் திரண்டு பெருகுவதை குறிக்கிறது.“ (மூலதனம்)

முதலாளித்துவ அமைப்பு முறையில், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாகவும் கூடுதலான உழைப்புச் சுரண்டலின் காரணமாகவும் உற்பத்தி அதிகரிக்கிறது. உற்பத்தி அதிகரிக்கிறது என்றால் சுரண்டலின் அளவும் அதிகரித்துள்ளது என்பதே அதன் உள்ளீடு. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியே உற்பத்தியின் அளவை உயர்த்துகிறது. நவீன தொழில் நுட்ப வளர்ச்சியால் கிடைக்கப்பெறும் இயந்திரங்களோடு நவீன பாட்டாளிகளின் மேம்பட்ட உழைப்பு சக்தியின் பங்களிப்புமே உற்பத்தியை அதிகரித்துள்ளது. உற்பத்தி அதிகரிக்கும் அதே நேரம் தொழிலாளி அதிக அளவில் சுரண்டப்படுவதும் நிகழ்கிறது. உழைப்புக்கேற்ற கூலி கிடைக்கப்பெறாமல் அவர்களின் வாங்கும் சக்தி குறைகிறது. வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது. கிராக்கி வீழ்ச்சி அடைகிறது. இதன் விளைவே உற்பத்தியாகியுள்ள அதிகமான பொருட்கள் சந்தையில் தேங்குகிறது. தொடர்ந்து வர்க்கங்களுக்கிடையே ஏற்படும் மோதலை தணிக்க ஆளும் வர்க்கத்தின் சார்பில் அரசு நிற்கிறது. “இறுதியில், முதலாளித்துவச் சமுதாயத்தின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக உற்பத்தியின் நெறியாண்மையை அரசு மேற்கொள்ள வேண்டியிருக்கும்.’‘

புரட்சியின் மூலம் “பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு உற்பத்திச் சாதனங்களை அரசின் உடைமையாக மாற்றுகிறது. இதைச் செய்வதன் மூலம், அது பாட்டாளி வர்க்கம் என்ற தன் வர்க்க நிலைக்கே முடிவு கட்டுகிறது. அனைத்து வர்க்க வேறுபாடுகளுக்கும் வர்க்க பகைமைகளுக்கும் முடிவுகட்டுகிறது. அரசு அரசாக இருக்கும் நிலைக்கும் முடிவு கட்டுகிறது.”அரசு ஒழிக்கப்படுவதில்லை. அது உலர்ந்து உதிர்ந்துவிடுகிறது என்கிறார் எங்கெல்ஸ்.

“தற்போது ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு இந்த நிலைமைகளைப் பற்றியும், அது நிறைவேற்றப் பணிக்கப்பட்டுள்ள மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த செயலின் நோக்கத்தைப் பற்றியும், முழுமையான அறிவை ஊட்ட வேண்டும். இதுவே பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தத்துவார்த்த வெளிப்பாடான விஞ்ஞான சோசலிசத்தின் பணியாகும்” என்கிற வாக்கியத்துடன் இந்நூலை எங்கெல்ஸ் நிறைவு செய்கிறார். இந்த இறுதி வரிகளை பற்றிக் கொண்டு உழைக்கும் வர்க்கத்தை அணிதிரட்டும் கடமையை நிறைவேற்றுவதே சிவப்பு புத்தக தினத்தின் குறியிலக்காகும்.



Leave a comment