மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


வ.உ.சி: ஏகாதிபத்திய எதிர்ப்பும் சமூக நீதிக்கான குரலும்


கே. பாலகிருஷ்ணன்

நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முத்திரை பதித்தவர் வ.உ.சி. பிரிட்டிஷ் ஆட்சிக்கு  எதிராக விடுதலைப் போராட்டத்தை முதன்முதலில் மக்கள் இயக்கமாக மாற்றியவர். மனு கொடுத்து மன்றாடும் இயக்கமாக காங்கிரஸ் இருந்து வந்த நிலையில் வெள்ளை கம்பனிகளுக்கு போட்டியாக மக்கள் ஆதரவோடு கப்பலோட்டிய தமிழன்.  தொழிலாளர்கள், உழைப்பாளர்கள், கொத்தடிமைகள் என்ற நிலையை மாற்றி பிரிட்டிஷ் எஜமானர்களுக்கு எதிராக நெஞ்சை நிமிர்த்தி போராட வைத்தவர். பிரிட்டிஷ் புகுத்திய ஆங்கில மோகத்திற்கு எதிராக விடுதலை இயக்கத்தில் மக்களை தமிழ் வழி நின்று திரட்டியவர். சாதி அபிமானம், மத அபிமானம் ஆகியவை மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகளே என புதிய வெளிச்சத்தை பாய்ச்சியவர். அவ்வாறு பிரிட்டிஷ் பேயாட்சியை எதிர்த்து தனித்த அடையாளங்களோடு விடுதலை போராட்டப் பயணத்தை மேற்கொண்ட பெருமை கொண்டவர் வ.உ.சி.

..சி யின் எலும்பும் ராஜ துவேசத்தை ஊட்டும்

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் எந்த அளவு இவர் மீது கோபம் கொண்டிருந்தார்கள் என்பதற்கு அவருக்கு திருநெல்வேலி நீதிமன்ற நீதிபதி பின்ஹே வழங்கிய தீர்ப்புரையை படித்தாலே புரியும்.

“சிதம்பரம் பிள்ளை மேன்மை தாங்கிய மன்னர் பிரானது பிரஜைகளில் இரு வர்க்கத்தாரிடையே (ஆங்கிலேயர்,  இந்தியர்) பகைமையையும், வெறுப்பையும் ஊட்டுபவர். அவர் வெறுக்கத்தக்க ராஜதுரோகி. அவருடைய எலும்புகள் கூட சாவுக்குப் பின் ராஜ துவேசத்தை ஊட்டும்”.

அவருக்கு வழங்கிய தண்டனையும் அளவுக்கு அதிகமானதாகும். ராஜதுரோக குற்றச்சாட்டுக்கு  20  ஆண்டுகள், சுப்பிரமணிய சிவாவுக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்ததற்காக மேலும்  20  ஆண்டுகள்,  மொத்தத்தில் இரட்டை ஆயுள் தண்டனைகள். இத்தண்டனையை ஒன்றன்பின் ஒன்றாக 40 ஆண்டுகள் அனுபவிக்க வேண்டுமென அந்த நீதிபதி தீர்ப்பு எழுதினார்.  

இந்த தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது தண்டனை  6  ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஆனாலும் வ.உ.சி ஒரு ராஜதுரோகி என்ற நீதிபதி பின்ஹேவின் கருத்தில் நாங்களும் உடன்படுகிறோம் என நீதிபதிகள் தங்கள் தீர்ப்புரையில் குறிப்பிட்டனர்.

சிறைக் கொடுமை

வ.உ.சி.யையும், சுப்பிரமணிய சிவாவையும் அந்தமான் சிறைக்கு அனுப்ப உத்தரவிட்டனர். ஆனால் அந்தமான் சிறையில் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருந்த காரணத்தினால் அவரை முதலில் கோவை சிறையிலும், பிறகு கண்ணனூர் சிறையிலும் அடைத்தனர். கோவை சிறையில் இவருக்கு இழைக்கப்பட்ட கொடுமை வேறு எந்த அரசியல் கைதிக்கும் இழைக்கப்பட்டதாக கூற முடியாது. எருதுகள் கட்டி இழுக்க வேண்டிய செக்கை, சுட்டெரிக்கும் வெயிலில்  இவரது தோளிலே கட்டி இழுக்க வைத்ததும், அவர் தட்டு தடுமாறி கீழே விழுந்த போதும், அவரை சவுக்கால் அடித்தும் கொடுமைபடுத்தியுள்ளனர். வ.உ.சி.யின் மீதான கொடுமை தாங்காமல் சிறை அதிகாரிகளுக்கே தெரியாமல் சக கைதிகள் செக்கை இழுத்துச் செல்ல உதவுவார்களாம். இன்றைக்கும் கோவை சிறைச்சாலையில் வ.உ.சி. கட்டி இழுத்த அந்த செக்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இவ்வளவு பெரிய செக்கை இழுக்குமாறு வ.உ.சி.யை சித்தரவதை செய்த கொடுமையை எண்ணி அதிர்ச்சியடைவர்.

ஒரு வழக்கறிஞர்; விடுதலைக்குப் போராடக் கூடிய ஒரு அரசியல் போராளி; ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவர்; தமிழ் இலக்கியத்தில் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர் என அனைத்தையும் காலில் போட்டு மிதித்து விட்டு வ.உ.சி க்கு சொல்ல முடியாத கொடுமைகள் இழைக்கப்பட்டன. வ.உ.சி.க்கு இழைக்கப்பட்ட கொடுமையானது, அவர் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் என்பது மட்டுமல்ல; மாறாக, இந்திய விடுதலை குறித்து அவர் கொண்டிருந்த மாறுபட்ட அணுகுமுறையும் காரணமாகும்.

இளமை பருவத்தில் நீதிக்கான குரல்

பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து 18ஆம் நூற்றாண்டு தொடக்கத்திலேயே தென்னகத்தில் பெரும் கிளர்ச்சிகளும் போராட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பிரிட்டிஷாரைப் எதிர்த்த போராட்டத்தில் பாஞ்சாலக் குறிச்சியில் வீரபாண்டிய கட்டப்பொம்மன் கைது செய்யப்பட்டு தூக்கிலடப்பட்டார்.  ஊமத்துரையும்,  சிவகங்கையில் மருது சகோதரர்கள், திண்டுக்கல்லில் கோபால் நாயக்கர்,  கோயம்புத்தூரில் கான்கிசா கான்,  மலபாரில் கேரள வர்மன் இப்படி பலரும் இணைந்து பிரிட்டிஷ் அரசை எதிர்த்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி போராட்டத்திற்கு திட்டமிட்டனர். இத்திட்டத்தை அறிந்த பிரிட்டிஷ் ராணுவத்தினர் அதை முறியடித்து கலகப் படை வீரர்கள் அத்தனை பேரையும் கைது செய்து கொடூர அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டனர். மருதுபாண்டியர்,  வெள்ள மருது ஆகியோரை திருப்பத்தூரில் தூக்கிலிட்டனர். அதே தேதியில் மருதுபாண்டியரின் மகன்கள் சிவத்தம்பி,  சிவஞானம், வெள்ளமருதுவின் மகன்கள் கருத்தம்பி,  குட்டித்தம்பி, முத்துச்சாமி,  ராமநாதபுரம் மன்னர் முத்துக்கருப்ப தேவர் ஆகிய அனைவரும் தூக்கிலிடப்பட்டனர். தாத்தாக்கள், மகன்கள், பேரன்கள் என வித்தியாசமில்லாமல் கைது செய்த அனைவரையும் பிரிட்டிஷார் கூட்டம் கூட்டமாக தூக்கிலேற்றினார்கள். மருதுபாண்டியரின் தலை துண்டிக்கப்பட்டு காளையார் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவருடைய உடல் திருப்பத்தூரில் புதைக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்த இத்தகைய போராட்டங்கள் கொடூரமாக அடக்கப்பட்டாலும், பல நூற்றுக்கணக்கான பேர் தூக்கிலிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டாலும், மக்கள் மத்தியில் இவர்களின் தியாகம் வீரகாவியங்களாக பேசப்பட்டு வந்தன. இவர்களைப் பற்றிய நாட்டுப்புற பாடல்கள், கதைகள் கிராமங்கள் தோறும் பாடப்பட்டு வந்தன. இத்தகைய பாடல்களை கூட பாடக் கூடாது என்ற பிரிட்டிஷாரின் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை.

இந்த தியாக வடுக்கள் நிறைந்திருந்த அந்த பகுதியில்தான்  1872ஆம் ஆண்டும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி வ.உ.சி ஒட்டப்பிடாரத்தில் பிறந்தார். இளம் பருவம் முதலேயே இந்த வீர காவியங்கள் அவரது சிந்தனையில் ஆழமாக பதிந்தன. பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரி படிப்பை முடித்து அரசு வேலையில் சேர்ந்த வ.உ.சி க்கு அரசு அலுவலகத்தில் பணிபுரிவதில் ஆர்வமில்லை. பிறகு வழக்கறிஞர் படிப்பு முடித்து வழக்கறிஞராக பணியாற்றினார். வழக்கறிஞராக பணியாற்றும்போது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு இலவசமாகவே வாதாடினார். தவறு செய்யும் அரசு அதிகாரிகள், நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட யாரானாலும் அவர்களை எதிர்த்து வழக்கு தொடுத்து அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தார். அதேபோல ஜமீன்தார்கள், பண்ணையார்கள், போலீசார் ஆகியோர் சாதாரண ஏழை விவசாயிகள் மீது தொடுத்து வந்த தாக்குதல்களை எதிர்த்து, தாக்கியவர்கள் மீது வழக்கு தொடுத்து அவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தந்தார். பொதுமக்களிடம் லஞ்ச லாவண்யத்தில் ஈடுபட்ட துணை நீதிபதிகள் மீது வழக்காடி அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தது போன்ற காரணங்களால் வ.உ.சி.யினுடைய செல்வாக்கு மக்கள் மத்தியில் உயர்ந்தது. ஏழைகள், அடித்தட்டு மக்கள், விவசாயக் கூலிகள், பணக்காரர்களால் பாதிக்கப்பட்டவர்கள் வ.உ.சி.யை நாடிவந்து தங்களுக்கு நியாயம் கேட்கும் நிலை உருவானது. அதிகாரிகள், நீதிபதிகள், காவல்துறையினர் இவர் மீது கடும் கோபம் கொண்டிருந்தனர்.

ஏழை மக்களுக்காக குரலெழுப்பிய வ.உ.சி. படிப்படியாக பிரிட்டிஷ் ஆட்சி ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து குரல் கொடுக்க முன்வந்தார். அதன்மூலம் பிரிட்டிஷ் ஆட்சியை ஒழித்துக் கட்டுவதன் மூலமே மக்களுக்கு அமைதியான நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க முடியும் என்ற முடிவுக்கு வந்து தேசிய இயக்கத்தில் கலந்து கொள்ள முடிவெடுத்தார்.

மூன்று கோட்பாடுகள்

வ.உ.சி மூன்று முக்கியமான கோட்பாடுகளை வலியுறுத்தி வந்தார். அதாவது கூட்டுறவு இயக்கம்,  சுதேசி இயக்கம்,  தொழிலாளர் இயக்கம் என்ற இந்த மூன்றையும் முன்னிறுத்தினார். தூத்துக்குடியில் சுதேசி பண்டக சாலை ஒன்றை அமைத்து சுதேசிப் பொருட்களை வாங்கி விற்கும் பணியை தொடங்கி வைத்தார். சுதேசி நூற்பாலை ஒன்றை கட்டி அதை செயல்படுத்தினார். சென்னை விவசாய சங்கம் என்ற அமைப்பை துவக்கினார். இவருடைய மொத்த நோக்கமும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு மாற்றாக சுதேசிப் பொருளாதாரத்தை பலப்படுத்திட வேண்டுமென்பதே. தொழிலாளர்கள், விவசாயிகள் வாழ்வு மேம்படுவது,  மாணவர்களுக்கு சுதேசி கல்வியை போதிப்பது,  தரிசு நிலங்களை விலைக்கு வாங்கி விவசாயிகளையும்,  தொழிலாளர்களையம் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயத்தை மேம்படுத்துவது என்ற கொள்கையை பிரகடனப்படுத்தினார்.

ஏற்றுமதி, இறக்குமதி கப்பல் போக்குவரத்து முழுவதும் பிரிட்டிஷ் கைவசமே இருந்தது. சில சுதேசி கம்பெனிகள் கப்பல்களை இயக்கினாலும் பிரிட்டிஷ் கம்பெனிகளோடு போட்டி போட முடியாமல் அது தள்ளாடிக் கொண்டிருந்தன. பிரிட்டிஷ் கம்பெனிகள்தான் இந்தியா, இலங்கை, ரங்கூன்,  மலேசியா போன்ற நாடுகளுக்கு பொருட்கள் மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்வது, கொண்டு வருவது என்ற வியாபாரத்தை நடத்தி கொள்ளை லாபம் ஈட்டி வந்தனர். பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேசன் கம்பெனிக்கு போட்டியாக,  சுதேசி நேவிகேசன் கம்பெனி என்ற கம்பெனியை வ.உ.சி துவக்கினார். வாடகைக்கு கப்பல் எடுத்து ஓட்டி நடத்த முடியாது என்கிற அடிப்படையில் கப்பல்களை விலைக்கு வாங்கி சொந்தமாக இயக்க முடிவு செய்தார். இந்த கம்பெனிக்கான பங்குதாரர்களை சேர்ப்பதற்கு நாடு முழுவதும் பயணம் செய்து பங்குகளை சேர்த்தார். இவ்வாறு இந்த பங்குகளை சேர்க்க பம்பாய் நகரத்தில் அவர் தங்கியிருந்த போது அவரது மூத்த மகன் உலகநாதன் உடல் நலமின்றி மரணமடைந்தார். அவரது இறுதி நிகழ்ச்சிக்கு கூட வரமுடியாமல் சுதேசி நேவிகேசன் கம்பெனிக்கு பங்குகளை திரட்டும் பணியில் முழு வீச்சுடன் ஈடுபட்டிருந்தார். இந்த கம்பெனியில் இயக்குநர்களாக 15பேர் இருந்தார்கள்.

சுதேசி கப்பல் இயக்குவது பொதுமக்கள் மற்றும் பயணிகள், வியாபாரிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பிரிட்டிஷ் கம்பெனியின் கட்டணத்தை விட அதிக கட்டணம் கொடுத்து சுதேசி கப்பலில் பயணிப்பதை அனைவரும் பெருமையாக கருதினார்கள். சுதேசி கப்பல் வெற்றிகரமாக இயங்குவது நாடு முழுவதும் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. இதுகுறித்து திலகர் வ.உ.சிதம்பரம்பிள்ளை சுதேசி கப்பல் இயக்குவது, சுதேசி இயக்கத்திற்கு அவர் செய்துள்ள பெரும் பணி என பாராட்டினார். எங்கள் சாம்ராஜ்யத்தில் சூரியன் மறையாது எனக் கொக்கரித்த பிரிட்டிஷ் முதலாளிகளை எதிர்த்து சுதேசி கப்பல் இயக்கியது எண்ணிப் பார்க்க முடியாத இமாலய சாதனையாகும். சுதேசி கம்பெனி இயங்குவது பிரிட்டிஷ் கம்பெனிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. நாளடைவில் ஒவ்வொரு மாதமும் இக்கம்பெனிகளுக்கு பெரும் நட்டம் ஏற்படும் என்கிற நிலை உருவானது. எனவே பிரிட்டிஷ் கம்பெனி கப்பல் உரிமையாளர்கள் சுதேசி கப்பலை முடக்கி விட வேண்டும்;  இதற்கு பொறுப்பாக இருக்கிற வ.உ.சி. யை மிரட்டி பணியவைப்பது; பணியாவிட்டால் சிறைக்கு அனுப்பிட வேண்டும் என அனைத்து முயற்சிகளிலும் வரிந்து கட்டி செயல்பட்டனர். தங்கள் கப்பல் மீது சுதேசி கப்பல் மோதி விட்டது என பொய்ப்புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இத்தகைய சதிகளை எல்லாம் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, மக்களின் ஆதரவோடு வ.உ.சி முறியடித்தார். பிரிட்டிஷாரின் இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களின் ஆதரவு வ.உ.சி.க்கு இருந்தபோதும் சுதேசி கம்பெனியின் பங்குதாரர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டது. இவர்களைப் பொறுத்தவரை லாபமே குறி. சுதேசி உணர்வை பயன்படுத்தி லாபமடைய வேண்டுமென்பதே இவர்களுடைய அடிப்படையான எண்ணம்.

எனவே, பிரிட்டிஷாரின் நெருக்கடிகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வ.உ.சி.யை கம்பெனி நடவடிக்கைகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென வற்புறுத்தினார்கள். ஆனால் வ.உ.சி.யோ சுதேசி கப்பல் கம்பெனி நடத்துவதை ஏகாதிபத்திய எதிர்ப்பின் பகுதியாகவே மேற்கொண்டிருந்தார். எனவே, இவர்களின் நிர்ப்பந்தத்திற்கு ஆரம்பத்தில் அடிபணிய மறுத்த வ.உ.சி. வேறு வழியின்றி நாடு முழுவதும் இரவு – பகலாக அலைந்து கண்ணின் இமை போல காத்து உருவாக்கிய சுதேசி கம்பெனியிலிருந்து கடைசியாக வெளியேறினார்.

பாரதி – வ..சி. இரட்டையர்கள்

பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயரும், வ.உ.சி. யின் தந்தை உலகநாதப் பிள்ளையும் எட்டையபுரம் சமஸ்தானத்தில் ஒரே காலத்தில் பணியாற்றியுள்ளனர். குடும்ப ரீதியாக இவர்களுக்குள் நெருக்கம் இருந்தாலும் பாரதியும் – வ.உ.சியும் சொந்த ஊரில் சந்தித்துக் கொள்ளவில்லை.  1906ஆம் ஆண்டுவாக்கில் சென்னைக்கு சென்ற வ.உ.சி  “இந்தியா” என்ற பத்திரிகையின் அலுவலகத்திற்கு சென்ற போதுதான் பாரதியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் இருவரோடு மண்டையம் திருமாலாச்சாரி, சீனிவாச ராகவாச்சாரியார் ஆகியோர் நெருங்கி பழகியதன் விளைவாக நாளடைவில் வ.உ.சி. தேசிய இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடலானார். இவர்களது முயற்சியில் சென்னை ஜன சங்கம் என்ற தேசாபிமானச் சங்கம் அமைக்கப்பட்டது. பின்னர் தூத்துக்குடி திரும்பிய வ.உ.சி. சுதேசி இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடலானார்.

1907ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மாநாடு சூரத் நகரில் நடைபெறவிருந்தது. இதற்கு முன்னர் கல்கத்தாவில் நடந்த மாநாட்டிலேயே காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அது மோதலாக உருவாகியிருந்தது. தீவிரவாதிகள் எனவும், மிதவாதிகள் எனவும் காங்கிரஸ் தலைவருக்குள் இரண்டு பிரிவு உருவாகியிருந்தது. லால் – பால் – லால் என்று அழைக்கப்பட்ட லாலா லஜபதிராய், பால கங்காதர திலகர்,  பிபன் சந்திரபால் ஆகியோர் தீவிரவாதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டார்கள்.

அதாவது,  இவர்கள் சுதேசி, சுயராஜ்ஜிய சுதந்திரத்திற்கு இந்தியா போராட வேண்டுமென்றனர். இன்னொரு பிரிவுக்கு தலைவராக இருந்த திரசா மேத்தா, கோபால கிருஷ்ண கோகுலே, ராஷ் பிகாரி போஸ், சுரேந்திரநாத் பானர்ஜி ஆகியோர் மிதவாதக் கருத்துக்களை கொண்டிருந்தனர்.

காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட இருவேறுபட்ட கருத்துக்களுக்கு இந்திய சமூகத்தில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களும் முக்கியமான காரணமாகும். ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்டபோது ‘மேன்மை தங்கிய’ பிரிட்டிஷ் அரசுக்கு மனு கொடுத்து மன்றாடும் இயக்கமாகவே துவக்கப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் முதலாளிகள் தங்களது மூலதனத்தை கொண்டு இந்திய மக்களை சுரண்டிய போதிலும் உள்நாட்டில் ஒரு வலுவான முதலாளித்துவம் வளராமல் பார்த்துக் கொண்டார்கள். அவ்வாறு உள்நாட்டு முதலாளித்துவம் வளருமானால் அது தங்களை எதிர்த்து குரல் கொடுக்க முனையும் என்பதை சரியாகவே கணித்து எச்சரிக்கையோடு இருந்தனர். ஆனாலும் பிரிட்டிஷ் குடையின் நிழலிலேயே உள்நாட்டு முதலாளித்துவம் படிப்படியாக வளர்ந்ததும், உலக அளவில் பல நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் இந்தியாவில் புதியதொரு சூழ்நிலையை உருவாக்கின. அதாவது, உள்நாட்டு முதலாளிகள் மனு கொடுத்து மன்றாடினால் மட்டும் தங்களை வளர்த்துக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்தனர். இத்தகைய புதிய வளர்ச்சிப் போக்குகளின் விளைவாக சுயராஜ்ஜியம், சுதேசி பொருட்கள் விற்பனை, அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு போன்ற கோஷங்கள் எழுந்தன. இத்தகைய கோஷங்களை திலகர் தலைமையிலான தீவிரவாதக்குழு எழுப்பிய நிலையில் மக்களது பேராதரவு இவருக்கு பின்னால் திரண்டது. எனவே கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டின்போது தீவிரவாதக்குழுவின் தலைவராக இருந்த திலகரை தலைவராக்க வேண்டுமென பரவலான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மிதவாதக்குழுவினர் சமரச ஏற்பாட்டின் மூலம் இதை முறியடித்தனர். இந்த நிலையில் 1907ஆம் ஆண்டு சூரத் நகரில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டில் அவர் தலைமை பொறுப்பு ஏற்க வேண்டுமென்ற குரல்கள் நாடு முழுவதும் வலுவடைந்திருந்தது. சென்னையிலிருந்த பாரதிக்கும் இந்த கருத்து ஆழமாக இருந்தது.

சுயராஜ்ஜியத்துக்கான செயல்திட்டம்

பாரதி – வஉசி தலைமையில் சூரத் மாநாட்டிற்கு ஏராளமானோர் சென்றார்கள். நாடு முழுவதிலுமிருந்து வந்தவர்கள் மாநாட்டு அரங்கில் கூடியபோது, மாநாடு துவங்கிய உடனேயே தலைவர் தேர்தலில் கடும் மோதல் ஏற்பட்டது. மிதவாத குழுவினர் ஏற்பாடு செய்திருந்த குண்டர்கள் தாக்குதலால் கூட்டம் தொடர முடியாமல் மாநாடு கலைந்தது. அதனை தொடர்ந்து அடுத்த நாள் அரவிந்தர் தலைமையில் நடந்த தேசியவாதிகள் மாநாட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்குமான பொறுப்பாளர்கள் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி வங்கத்துக்கு – அரவிந்தர்,  மராட்டியத்திற்கு திலகர், சென்னை மாகாணத்திற்கு வ.உ.சி பொறுப்பாளர்களாக தீர்மானிக்கப்பட்டார்கள். ஆரம்ப முதலே சுதேசி, சுயராஜ்ஜிய கோட்பாடுகளோடு திலகரின் ஆதரவாளராக இருந்த வ.உ.சி சுயராஜ்ஜியத்தில் தமிழ்நாட்டுக்கு பொறுப்பாளராக தீர்மானிக்கப்பட்டது இயற்கையானதே.

சென்னை திரும்பிய வ.உ.சி.யும்,  பாரதியும் சுயராஜ்ஜியத்துக்கான செயல்திட்டத்தினை நிறைவேற்றினார்கள். சென்னையை தொடர்ந்து வ.உ.சி தூத்துக்குடி சென்று தனது பணிகளை துவக்கினார். சுயராஜ்ஜிய ஆட்சிக்கு முதல் வழி கடல் வாணிபத்தை கைப்பற்ற வேண்டும். வெள்ளையர்களின் கம்பெனிகளை திவாலாக்க வேண்டும் என்ற நோக்கோடு துவக்கப்பட்டதே சுதேசி நேவிகேசன் கம்பெனி.

வங்காளப் பிரிவினையை எதிர்த்து போராடியதால் கைது செய்யப்பட்ட பிபின் சந்திரபால் விடுதலையானதைக்  கொண்டாட வேண்டுமென திலகர் அறைகூவல் விடுத்தார். பல நகரங்களில் சிறப்பாக கொண்டாட வ.உ.சி ஏற்பாடு செய்தார். திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவில் வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும் கலந்து கொண்டு உரையாற்றினர். மக்கள் எழுச்சியுடன் திரண்டனர். ஏகாதிபத்திய எதிர்ப்பு கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. வெள்ளையர்களையும் அவர்களது எடுபிடிகளையும் மக்கள் புறக்கணித்தார்கள். மக்களின் உணர்ச்சி கண்டு நடுங்கிய பிரிட்டிஷ் அதிகாரிகள் வ.உ.சி.யையும் – சிவாவையும் மிரட்டி பணிய வைக்கப் பார்த்தார்கள். மார்ச் 9ஆம் தேதி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என மாஜிஸ்திரேட் எழுதி கொடுக்க வற்புறுத்தினார். இருவரும் மறுத்து விட்டனர். இருவரையும் அழைத்து மாவட்ட கலெக்டர் விஞ்ச் மிரட்டிய விபரங்களை பாரதியார் பாடல்கள் மூலம் பதிவு செய்துள்ளார். அப்பாடல்களில் கலெக்டர் எவ்வாறு மிரட்டினார்; அதற்கு வ.உ.சி. எவ்வாறு எதிர்குரல் கொடுத்தார் என்பதையும் வடித்துள்ளார். 

தனது மிரட்டலுக்கு பணிய மறுக்கும் இருவரையும் ஓராண்டு பாளை சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிடுகிறார். செய்தியறிந்து நெல்லை நகரமே போர்க்களமாகிறது. மக்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்கள், பலர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். ஆஷ் என்ற உதவி கலெக்டரை துப்பாக்கியால் சுட்டு ஒரு இளைஞன் உள்பட 4 பேர் மரணமடைந்து விடுகிறார்கள். போலீசார் மீது மக்கள் நடத்திய எதிர்தாக்குதலில் கலெக்டர் விஞ்சுக்கு மண்டை உடைந்தது.

இந்த கலகத்துக்கு தலைமை தாங்கியதாக காரணம் கூறியே வ.உ.சி – சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில்தான் வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இத்தண்டனை என்பது இந்த சம்பவத்தை கணக்கில் கெண்டு கொடுக்கப்பட்டவையல்ல. வெள்ளயர்களை எதிர்த்து கப்பல் ஓட்டியது; மக்கள் திரள் போராட்டங்களை உருவாக்கியது போன்ற பழைய காழ்ப்புணர்ச்சிகளின் தொகுப்பாகவே இத்தண்டனை அமைந்திருந்தது.

சிறையிலிருந்து விடுதலையான வ.உ.சி சென்னைக்கு வந்தார். குடும்பத்தை நடத்துவதற்கு வியாபாரத்தில் ஈடுபட்டார். ஆனால் அதில் உரிய பலன் ஏற்படவில்லை. சிறை தண்டனை பெற்றதால் வழக்கறிஞராக பணியாற்றும் உரிமை பறிக்கப்பட்டிருந்தது. நீண்ட போராட்டத்திற்கு பின்னர் அந்த உரிமை அவருக்கு வழங்கப்பட்டு மீண்டும் தூத்துக்குடியில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார். சிறந்த தேச பக்தராகவும், இந்திய விடுதலைக்கு அளப்பரிய தியாகத்தை செய்த வ.உ.சி. தனது கடைசி நாட்களில் மிகுந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தார் என்பது வேதனை மிக்கதாகும்.

வ.உ.சி. சிறந்த இலக்கியவாதியுமாவார். தனது சுய சரித்திரத்தை செய்யுள் வடிவில் எழுதியதில் வ.உ.சி.யே முதலும் கடைசியுமாவார். சிறைத் தண்டனையின்போதும் அதற்கு பின்னரும் இலக்கிய பணியில் தனது கவனத்தை செலுத்தினார். தமிழ்நாட்டில் விடுதலை இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு எளிய தமிழை பயன்படுத்தினார். மேடைப் பேச்சு என்பதை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். பிரிட்டிஷ் அரசு ஆங்கில கல்வி மூலம் ஆங்கில மோகத்தை புகுத்தியது. ஆங்கில மோகமும் சமஸ்கிருத மோகமும் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தாய்மொழி தமிழுக்கு உத்வேகம் அளித்தவர் வ.உ.சி. எழுதுவன எல்லாம் எளிய நடையில் இருத்தல் வேண்டும். மக்களுக்கு அர்த்தமாகும் இலக்கியத்திலேதான் உயிர் உண்டு என வலியுறுத்தினார். திருக்குறளின் அறத்துப் பாலுக்கு விளக்க உரை எழுதியுள்ளார். முழு திருக்குறளுக்கும் விளக்கவுரை எழுத வேண்டுமென்ற  அவரது ஆசை நிறைவேறவில்லை.

தொழிலாளர் இயக்கத்தில் வ..சி

திருநெல்வேலி பாபநாசத்தில் ஹார்வி என்ற பிரிட்டிஷ் கம்பெனி நூற்பாலை இயக்கி வந்தது. அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடியில் கோரல் மில் (பவள ஆலை) என்ற நூற்பாலையை உருவாக்கியிருந்தார்கள். இந்த தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்பட்டு வந்தனர். 10 வயது, 12 வயது சிறுவர்கள் கூட ஈவு இரக்கமின்றி சுரண்டப்பட்டனர். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைக்க வேண்டும். இடையில் ஓய்வெடுக்கவோ, விடுமுறை எடுக்கவோ கூடாது என்கிற காட்டுத் தர்பார். இந்தக் கொடுமையான தொழிலாளர் சுரண்டலை கண்ட வ.உ.சி கோரல் தொழிலாளர்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட வற்புறுத்தினார். வ.உ.சி.யின் அறைகூவலுக்கேற்ப தொழிலாளர்களும், 1908ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பிரிட்டிஷ் நிர்வாகம் 144 தடையுத்தரவு போட்டு தொழிலாளர்களை நூற்றுக்கணக்கில் கைது செய்து சிறையில் அடைத்தது. குண்டர்களை ஏவி தொழிலாளர்களை தாக்கியது. மில் நிர்வாகமும், காவல்துறையும் தொடுத்த அனைத்து தாக்குதல்களையும் எதிர்த்து தொழிலாளர்கள் உறுதியாகப் போராடினார்கள். தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்குச் சென்று வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும்,  பவானந்த ஐயங்காரும் கூட்டங்களை நடத்தி தொழிலாளர்களை உற்சாகப்படுத்தினர். தொழிலாளர்களின் உறுதியை கண்ட நிர்வாகம் 10 நாட்களுக்குப் பிறகு தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு போராட்டம் முடிவுக்கு வந்தது. இது உரிமைக்கு போராடும் அனைத்துப் பகுதி மக்கள் மத்தியிலும் பெரும் எழுச்சியை பெற்றது. இது தொழிலாளர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்தது. இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கிய வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகியோர் மீது தொழிலாளர்கள் நம்பிக்கை பல மடங்கு உயர்ந்தது.

இந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய வ.உ.சி.யை தொழிலாளர்களும், மக்களும் தங்களது தலைவராக ஏற்றுக் கொண்டாடினார்கள். பிரிட்டிஷ் எஜமானர்களை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியது புதிய வரலாறாகும். தொழிலாளர்கள் போராட்டம் தொழிற்சங்க ,இயக்கம் என்று எதுவும் கேள்விப்படாத நேரத்தில் எத்தனை கொடுமைகள் நடந்தாலும் அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டும என்பதே பிரிட்டிஷாரின் விதி. அந்த விதியை மாற்றி எழுதியவர் வ.உ.சி.

தேசிய நோக்கும் சமூக சமத்துவப் பார்வையும்

ஆரம்பத்திலிருந்தே தேச விடுதலைப் போராட்டத்தில் காங்கிரசின் அணுகுமுறையில் மாறுபட்ட கருத்து கொண்டிருந்தார். சூரத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு பின்னர் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காங்கிரசிலிருந்து விலகியே இருந்தார். அதேசமயம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். அவரது வாக்குமூலத்தின்படியே திலகர்,  லாலா லஜபதிராய்,  அரவிந்தர் உள்ளிட்ட தலைவர்களோடு நெருக்கமாக இருந்து பூரண சுயராஜ்யத்திற்கு உறுதியாக குரல் கொடுத்தார். அவர் வாழ்ந்த காலத்தில் சாதி மத சனாதான கருத்துக்கள் கோலோச்சி இருந்த நிலையில் சாதியும் மதமும் மக்கள் ஒற்றுமையை சீர்குலைத்து சுதேசி சிந்தனையை பாழ்படுத்தி விடுமென முழக்கமிட்டவர்.

தேசிய தலைவர்கள் பிராமணர், பிராமணர் அல்லாதோர் பிரச்சினையை பேச மறுத்த காலத்தில், தேசிய சிந்தனையில் வ.உ.சி தீவிரமாக இருந்தபோதும் இப்பிரச்சனை சமூகத்தில் நிலவிவருவதை சுட்டிக் காட்டி அதற்கு தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தினார்.   தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆட்சி ஏற்பட்டு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளிக்கும் இட ஒதுக்கீட்டு கொள்கையை செயல்படுத்தினார்கள். நீதிக்கட்சியோடு எந்த தொடர்பையும் கொண்டிராத வ.உ.சி. தமிழகத்தில் நிலவும் பிராமணர், பிராமணரல்லாதோர் பிரச்சனைக்கு தீர்வு காண அரசு உத்தியோகத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் செயல்படுத்திட வேண்டுமென வற்புறுத்தினார்.

தேசிய சிந்தனையோடு பல்வேறு போராட்டங்களை வ.உ.சி. முன்னெடுத்தார். அதேநேரம் சாதி மத சிக்கல்கள் குறித்தும், சமூக சமத்துவத்திற்காகவும் குரல் கொடுத்தார். இவர் வாழ்ந்தபோதும்  இவர் மறைந்த பிறகும் இவரது அளப்பரிய தியாகத்தை காங்கரஸ் கட்சி அங்கீகரிக்க மறுத்துவிட்டது. ஆனால் மக்கள் என்றென்றும் அவரை நினைவில் வைத்து போற்றுகின்றனர். ஏகாதிபத்திய எதிர்ப்பின் அடையாளமாகவும் தொழிலாளி வர்க்கத்தை திரட்டுவதற்கான வடிவமாகவும் வ.உ.சி திகழ்கிறார்.



Leave a comment