மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


உக்ரைன் போர்: மானுடத்தின் புறந்தள்ளப்பட்ட சிக்கல்கள் !


விஜய் பிரசாத்

திடுக்கிடும் தலைப்புடன் ஒரு புதிய செய்தி வெளியாகிறது. ஆயுதங்களுக்காக உலகம் மேற்கொள்ளும் ஆண்டு செலவுத்தொகை  2 லட்சம் கோடி டாலர்களை கடந்துள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. பட்டியலில் அடுத்து உள்ள பத்து நாடுகளின் ஒட்டுமொத்த செலவீனத்தை விட அமெரிக்காவின் செலவீனம் அதிகமாக இருக்கிறது. அமெரிக்காவின் உளவுத்துறை செலவீனங்களையும், அணு ஆயுத பராமரிப்பு செலவீனங்களையும் சேர்த்து கணக்கிட்டால் வரும் தொகை மட்டுமே 1 லட்சம் கோடி டாலர்களை கடக்கும். இது மிக மிக அதிகமான தொகை ஆகும். மனித உழைப்பையும் அறிவையும் வீணடிக்கும் கடும் செயல்.

இன்னொரு செய்தி. சட்டவிரோத வரி ஏய்ப்புக்கு வழிவகுக்கும் நாடுகளில் குவிந்திருக்கும் செல்வத்தின் மதிப்பு 37 லட்சம் கோடி டாலர்களை கடந்திருப்பதாக ஒரு கணிப்பு வெளியாகியுள்ளது. பெரும் செல்வந்தர்கள், மனித வளத்தை சூறையாடிச் சேர்த்த செல்வம் இப்படிப்பட்ட நாடுகளில் பணமாகவும், தங்கமாகவும், வைப்பு நிதியாகவும் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் மொத்த தொகையில் ஒரு சிறு பகுதி மட்டுமே. மேற்சொன்ன கணிப்பில் நிலம், விலை உயர்ந்த கலை பொருட்கள், நகைகள் போன்றவை உள்ளடங்காது. அவற்றையும் சேர்த்தால், கையளவு மனிதர்களிடம் குவிந்துள்ள செல்வத்தின் அளவு மிகக் கொடுமையானது. உலகின் முதல் 22 செல்வந்தர்கள் கையில் உள்ள சமூக வளத்தின் மதிப்பு, ஆப்ரிக்காவில் மொத்தம் உள்ள 3.25 கோடி பெண்களிடம் உள்ள ஒட்டுமொத்த செல்வத்தை விட அதிகம் ஆகும்.

உலகில் நிலவும் ஏழ்மை, பட்டினி மற்றும் எழுத்தறிவின்மை போன்ற சிக்கல்களுடைய அவல நிலைமை குறித்தும்,  கால நிலை மாற்ற பிரச்சனையால் எழும் அதிபயங்கர தாக்கங்கள் குறித்தும் தொடர்ந்து அறிக்கைகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக செலவிடப்பட வேண்டிய நம்முடைய சமூக வளத்தின் பெரும் பகுதியை, ஆயுதங்களை குவிக்க செலவிடுவதுடன், வெளிநாடுகளில் பதுக்கியும் வைக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் 17 நிலைத்த நீண்டகால வளர்ச்சிக் குறிக்கோள்களை – பட்டினியை ஒழித்து அமைதியை நிலைநாட்டும் இலக்கினை – எட்டுவதற்கு ஆண்டுக்கு 2.5 லட்சம் கோடி டாலர்கள் செலவிட வேண்டியுள்ளது.  இப்போது இந்த குறிக்கோள்களை எட்டுவதற்கு மிகச் சிறிய தொகை மட்டுமே செலவிடப்படுகிறது. பெருந்தொற்றுக் காலத்திலும், அதன் பிறகு அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக் காலத்திலும், இந்த செலவினங்களில் மென்மேலும் வெட்டு ஏற்படும். நாம் இந்தக் குறிக்கோள்களை விட்டு மென்மேலும் விலகிச் செல்வோம்.  மானுடத்தின் மிக முக்கியமான சிக்கலான பட்டினியை ஒழிக்கும் பாதையில் நாம் நெடுந்தொலைவு செல்லவேண்டியுள்ளது. (மக்கள் சீனம் தவிர. அங்கு 2021இல் கடும் ஏழ்மை ஒழிக்கப்பட்டுவிட்டது). உலக மக்களில் 300 கோடிபேர் ஏதோ ஒரு வித பட்டினியால் அவதிப்படுவதாக கணிக்கப்படுகிறது.

விடுதலைக்கு பதிலாக ஆதிக்கம்

மானுடத்தின் இந்த சிக்கல்களை தீர்க்கும் உலகு தழுவிய ஒரு சமூக – அரசியல் திட்டத்தை உருவாக்குவதற்கு பதிலாக, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளான ஜி7 நாடுகளும், தங்களின் உலக ஆதிக்கத்தை நீடிப்பதற்கான உத்தியை நோக்கியே செல்கின்றன. சோவியத் ஒன்றியமும், கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளும் வீழ்ந்த 1991 ஆம் ஆண்டுக்கு பின், மூன்றாம் உலக நாடுகள் கடன் வலையில் சிக்க வைக்கப்பட்டதில் இருந்து இந்த ஆதிக்க போக்கு  தொடங்கியது. இந்த ஆதிக்கம் கால வரம்பின்றித் தொடரும் என்றும், அமெரிக்காவுக்கு எதிரான ஒரு அணியின் வரலாறு முடிந்து போனது என்றும், அமெரிக்க அறிவுஜீவிகள் மார் தட்டினார்கள். ஆனால் அமெரிக்காவும், ஜி7 நாடுகளும் “உலக பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற பெயரில் எல்லை மீறி சென்றதாலும், (குறிப்பாக சட்டவிரோதமாக ஈராக் மீது 2003இல் போர் தொடுத்தது)  2007-08இல் ஏற்பட்ட பெரும் பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும், அந்நாடுகளின் ஆதிக்கம் நிலை குலைய துவங்கியது.

அமெரிக்கா மற்றும் ஜி7 நாடுகளில் வறண்டு போன வங்கி அமைப்பிற்கு நிதியளிக்க இந்தியா, சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளை அணுகின. அதனால், ஜி7 கூட்டமைப்பை மூடிவிட்டு, உலகளாவிய சட்ட-திட்டங்களை தீர்மானிப்பதை ஜி20 என்ற கூட்டமைப்பின் கீழ் கொண்டு வந்து, அதில் நிதி அளிக்கும் இந்த புதிய நாடுகளையும் சேர்க்க உறுதி அளித்தது. ஆனால் மேற்கத்திய வங்கிகள் மீண்டு வந்த பின்னர், ஜி20 ஒதுக்கப்பட்டு,  முந்தைய ஜி 7   ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. இதர சக்திகளை எதிரியாக பார்க்காமல், மானுட சிக்கல்களை தீர்ப்பதில் கூட்டாளியாக பார்க்கலாம் என்ற முன்மொழிவை ஏற்க அமெரிக்கா மறுத்தது. இந்த கூட்டு சக்தியாக ஜி 20 அமைப்பில்  பங்கு வகித்த சில நாடுகள் சேர்ந்து  BRICS (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா) கூட்டமைப்பு 2009 இல் துவங்கப்பட்டது. இந்நாடுகள் ஒன்றிணைந்து, மேற்கத்திய நாடுகளால் கட்டுப்படுத்தப்படாத, ஐ.எம்.எஃப்-பின் சிக்கன அஜெண்டாவிற்கு அப்பாற்பட்ட, வளர்ச்சி திட்டங்களுக்கு வழி வகுக்கும் நிறுவன அமைப்பை ஏற்படுத்த முன் வந்தன.

BRICS கூட்டமைப்பு துவங்கப்படுவதற்கு முன், ரஷ்யாவின் விளாடிமிர் புதின் (அதுவரை பல விஷயங்களில் மேற்கத்திய நாடுகளுடன் நெருங்கி இருந்தார்)  முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்று ஒரு முக்கிய உரையாற்றினார்.  “ஒரு துருவ உலகம் என்றால் என்ன?” என புதின் கேட்டார். “இந்த வார்த்தையை எவ்வளவு அழகு படுத்தி காட்டினாலும், அதன் அர்த்தம் ஒரே அதிகார புள்ளி, ஒரே ஒரு ஆதிக்க மையம் மற்றும் ஒற்றை ஆண்டான்” என்பதுதான். அந்த ஒற்றை அதிகார புள்ளி என்பது அமெரிக்காவையே குறிக்கிறது என்று அனைவரும் அறிந்திருந்தனர். மேற்கத்திய நாடுகளின் “சர்வதேச உறவுகளில் அதீதமாக பயன்படுத்தப்படும் கட்டுக்கடங்காத தாக்குதல் ” குறித்து புதின் கடுமையாக விமர்சித்தார். மேலும் “சர்வதேச சட்டம்” மேற்கத்திய நாடுகளை அவை மேற்கொள்ளும் போர் குற்றங்களிலிருந்து பாதுகாப்பதை குறிப்பிட்டார். “யாரும் பாதுகாப்பாக உணர்வதில்லை. ஏனெனில் யாரும் சர்வதேச சட்டம் தங்களை பாதுக்காக்கும் அரண் என்பதாக உணரவில்லை. இப்படிப்பட்ட சூழல் ஆயுத குவியலை ஊக்குவிப்பதில் ஆச்சரியம் இல்லை”. அமெரிக்கா ஐரோப்பாவை சுற்றி ஏவுகணை வளையத்தை உருவாக்குவதை நிறுத்திவிட்டு, 2002இல் அது கைவிட்டுவிட்ட “அணு ஆயுத ஏவுகணைக்கு எதிரான ஒப்பந்த”-த்திற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என புதின் குறிப்பிட்டார். அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்த முன்மொழிவை ஏற்க மறுத்தார்.

அச்சுறுத்தல்கள்

21ஆம் நூற்றாண்டில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டனர். லிபியாவின் மீது 2011 ஆம் ஆண்டு நேட்டோ முன்னெடுத்த தாக்குதல் மேற்கத்திய நாடுகள் தம் ஆதிக்கத்தை நிலைநாட்ட எடுத்த முன்னெடுப்புகளுக்கான குறியீடாக அமைந்தது. இதுவே தெற்கு சீன கடல் பகுதி முதல் கரீபிய கடல் பகுதி வரை உலகளாவிய நேட்டோ ஆதிக்கம் தொடர்பான வாதங்களுக்கு  முன்னோட்டமாக அமைந்தது. 30 நாடுகள் மீதான பொருளாதார தடை விதிப்பு மூலம் அமெரிக்காவையும், அதன் கூட்டாளி நாடுகளையும் எதிர்ப்பவர்களை ஒழுங்கு படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது மட்டுமல்லாமல் ஐ.எம்.எஃப் அமைப்பின் புதுப்பிக்கப்பட்ட சிக்கன திட்டத்தின் காரணமாக, பல ஏழை நாடுகள் கொரோனா காலத்தில் கூட, தங்களுக்கு கடன் கொடுத்த செல்வச் செழிப்பு மிக்கவர்களுக்கு வழங்க வேண்டியிருந்த பணம், தங்கள் நாட்டு மக்களை காக்க சுகாதாரத்திற்கு மேற்கொண்ட செலவினை விடவும் அதிகம்.

2018இல் “தீவிரவாதத்திற்கு எதிரான போர்” நிறைவுற்றதாக அமெரிக்கா அறிவித்தது, அதன் தேச பாதுகாப்பு உத்தியில், சீனாவும் ரஷ்யாவும் அடைந்துவரும் எழுச்சியே மிகப்பெரும் ஆபத்தாக குறிப்பிட்டது. அமெரிக்கா பாதுகாப்பு செயலாளர் ஜிம் மாட்டிஸ் அமெரிக்காவை “நெருங்கி வரும் எதிரி நாடுகளை” கட்டுப்படுத்துவது என்று வெளிப்படையாகவே பேசினார். சீனா மற்றும் ரஷ்யாவை இவ்வாறு தம் எதிரி நாடுகளாக குறிப்பிட்ட அவர், அமெரிக்காவின் மொத்த ஆதிக்கத்தையும் பயன்படுத்தி இந்நாடுகளை அடிபணிய வைப்பது என்று பேசினார். ஐரோப்பா மற்றும் ஆசியாவை சுற்றி அமெரிக்காவின் பல ராணுவ தளங்கள் (மொத்தம் 800) உள்ளதோடு, ஜெர்மனி முதல் ஜப்பான் வரை ரஷ்யா மற்றும் சீனாவை முன் நின்று தாக்கும் பல கூட்டாளி நாடுகளை அமெரிக்கா கொண்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் கடற்படைகள், “பயணிப்பதற்கான சுதந்திரம்” என்ற பெயரில் ரஷ்யா (ஆர்டிக் பகுதி) மற்றும் சீனாவிற்கு (தெற்கு சீன கடல் பகுதி) எதிராக மிக அச்சுறுத்தலான படைப் பயிற்சிகளில் ஈடுபட்டன. இப்படிப்பட்ட செயல்பாடுகளோடு, 2014 ஆம் ஆண்டில் அமெரிக்கா உக்ரைன் நாட்டின் அரசியலில் தலையிட்டதும், 2015இல் தைவானிற்கு பெருமளவு ஆயுதங்கள் அளித்ததும், ரஷ்யாவையும், சீனாவையும் மேலும் மிரட்டுவதாக அமைந்தது. மேலும் 2018இல் அமெரிக்கா தன்னிச்சையாக “இடைநிலை தூர அணு-ஆயுத சக்திகள்” ஒப்பந்தத்திலிருந்து விலகியதன் காரணமாக, சர்வதேச அணு-ஆயுத கட்டுப்பாட்டு கட்டமைப்பை நலியச் செய்தது. ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் எதிரான போர்க்கள அணு ஆயுத உத்தியை அமெரிக்கா வகுத்துவருகிறது என்பதுதான் இந்த பின்வாங்கலின் வெளிப்பாடு.

அமெரிக்காவின் தேச பாதுகாப்பு உக்தியில் சீனாவையும், ரஷ்யாவையும் கட்டுப்படுத்துவது பற்றி குறிப்பிட்டிருப்பதும், “இடைநிலை தூர அணு-ஆயுத சக்திகள்” ஒப்பந்தத்திலிருந்து விலகியதும், ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும்  அமெரிக்காவால் உள்ள அச்சுறுத்தல் கற்பனையானது அல்ல என்பதை தெளிவாக்குகிறது. இதுவரை, ஆசிய பகுதியில் அமெரிக்காவின் நட்பு நாடுகளான தென் கொரியாவும், ஆஸ்திரேலியாவும்  இடைநிலை தூர அணு-ஆயுதங்களை அனுமதிக்க தயாராக இல்லை. ஆனால் குவாம் மற்றும் ஒக்கினாவா-வில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் ஆயுதங்களை குவிக்க வாய்ப்பு உண்டு. பல ஆண்டுகளாக இவ்வாறு கட்டமைக்கப்பட்டு வரும்  அமெரிக்க அச்சுறுத்தலை ரஷ்யா உணர்ந்ததன் விளைவாகவே உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை முன்னெடுக்கிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்ந்தாலும், இல்லாவிட்டாலும் அமெரிக்கா உக்ரேனில் அணு ஆயுதங்களை குவிக்க வாய்ப்பு உள்ளது என்ற கவலை எழுந்துள்ளது.

உக்ரைனில் நடந்துவரும் போர் பற்றிய வாதங்களுக்கு பின் ஒரு முக்கியமான கேள்வி உள்ளது: இயற்கையாகவே  யூரேசியா (ஆசிய-கிழக்கு ஐரோப்பிய) நாடுகள் நெருங்கி வரும் போக்கை அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் அனுமதிக்குமா? இல்லையேல் இதை தடுக்க ஐரோப்பிய மற்றும் சில ஆசிய நாடுகளில் தலையிடும் முயற்சிகளை தொடருமா? ஐரோப்பிய நாடுகளை ஆங்கிலேய-அமெரிக்க-ஆர்டிக் கூட்டமைப்பினுள் கொண்டு வந்து, ஐரோப்பிய-ஆசிய நாடுகள் இணைப்பை, குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனா உடனான இணைப்பை தடுக்கும் அமெரிக்காவின் முயற்சியும் உக்ரைன் மீதான போரில் ஒரு பங்கு ஆற்றியுள்ளது என்பதை நிராகரிக்கவே முடியாது.

இந்த நிலையில் மானுடத்தின் மிக முக்கிய சிக்கல்கள் கண்டுகொள்ளப் படாமல் போகின்றன. பட்டினியும் போர்களும் பூமியை வாட்டுகின்றன. அன்றாட வாழ்வின் நிதர்சன பிரச்சனைகளை தீர்ப்பதற்காகச் செல்ல வேண்டிய சமூக வளங்களோ, ராணுவ ஆதிக்கத்திலும் போர்களிலும் வீணடிக்கப் படுகின்றன.

தமிழில்: அபிநவ் சூர்யா



Leave a comment