மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


மார்க்சை பயில்வது என்பது என்ன?


ஜி ஜின்பிங்

தமிழில்: முனைவர் சந்திரகுரு

(மார்க்ஸ் பிறந்த நாள் இருநூற்றாண்டு விழாவை ஒட்டி மக்கள் சீனத்தின் குடியரசுத்தலைவர் ஜி ஜின்பிங் ஆற்றிய உரையின் பகுதிகள்)

உயர்ந்த இலட்சியங்களைப் பேணுவதாகவும், மனிதகுலத்தின் விடுதலைக்கான போராட்டத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டதுமாக அமைந்தது மார்க்சினுடைய வாழ்க்கை. “தொழிலைத் தேர்ந்தெடுப்பது குறித்து இளைஞர் ஒருவரின் சிந்தனைகள்” என்ற தலைப்பில் உயர்நிலைப் பள்ளி இறுதித் தேர்விற்கான கட்டுரை ஒன்றை 1835ஆம் ஆண்டில் 17 வயதான மார்க்ஸ் எழுதியிருந்தார். அதில் “நாம் அனைவரும் மனிதகுலத்திற்குத் தேவையான அனைத்தையும் செய்கின்ற வகையில் பொருத்தமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வோம் என்றால், எந்தவொரு சுமையும் நம்மைப் பணியவைக்க முடியாது. ஏனெனில் அவையனைத்தும் அனைவருக்கும் நன்மையளிக்கின்ற வகையில் நாம் செய்கின்ற தியாகங்களாக இருக்கின்றன. எனவே நமக்கு கிடைக்கின்ற அந்த மகிழ்ச்சியானது மிகக் குறுகிய, வரையறைக்குட்பட்ட, சுயநலம் சார்ந்த மகிழ்ச்சியாக இல்லாமல், கோடிக்கணக்கானவர்களுக்குச் சொந்தமானதாக இருக்கும். நமது செயல்கள் எந்தவித ஆரவாரமுமின்றி அமைதியானவையாக, ஆனாலும் நிரந்தரமாக நீடித்திருப்பவையாக, நமது சாம்பல் மீது மேன்மக்கள் கண்ணீரைச் சிந்துகின்ற வகையில் இருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார். அவரின் கரடுமுரடான வாழ்க்கைப் பயணத்தில், வறுமையையும், நோய்களையும் மார்க்ஸ் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆயினும், அவர் இறுதிவரை உறுதியாகப் போராடி, தான் கொண்டிருந்த லட்சியங்களில் இருந்து சிறிதும் விலகாமல், மனிதகுலத்தின் விடுதலைக்கான உயர்ந்த லட்சியத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட, பெருமை மிகுந்த வாழ்வை வாழ்ந்து காட்டினார்.

மகத்தான தத்துவம் உதயம்:

மார்க்சுடைய பெயரால் அழைக்கப்படும் தத்துவமான மார்க்சியம், அவர் நமக்கு விட்டுச் சென்ற மிக மதிப்பு வாய்ந்த, செல்வாக்குமிக்க மரபியமாகும். சூரியனைப் போல் தகதகக்கும் இக்கோட்பாடு மனித சமூகத்திற்கு அதன் வரலாற்றின் போக்கை எடுத்துக் காட்டி, அதன் விடுதலைக்கான பாதையை மினுமினுக்கச் செய்கிறது.

விமர்சனம் என்ற ஆயுதத்தை, எவ்விதத்திலும், ஆயுதத்தைக் கொண்ட விமர்சனத்தினால் மாற்றீடு செய்ய முடியாது. பெளதீக சக்தியை எதிர்கொண்டு வீழ்த்துவது பெளதீக சக்தியால்தான் சாத்தியம்; ஆனால், ஒரு தத்துவக் கருத்தும் கூட வெகுமக்களை இறுகப் பற்றியவுடன் பொருளாயத வலிமையாக மாறிவிடும்.” என்று ஒருமுறை மார்க்ஸ் குறிப்பிட்ட கருத்து பிரபலமானது. தத்துவம், அரசியல், பொருளாதாரம், விஞ்ஞான சோசலிசம் என்று தலையாய மூன்று பகுதிகளை மார்க்சியம் கொண்டுள்ளது. அவற்றைத் தனித்தனியே பார்த்தால், ஜெர்மானிய தத்துவம், பிரிட்டிஷ் அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சு கற்பனாவாத சோசலிசம் ஆகியவற்றிலிருந்து அவை தோன்றியுள்ளன. இருந்த போதிலும் மார்க்சியத்திற்குள் இவற்றை இறுதியாக மாற்றியமைத்ததற்கான அடிப்படைக் காரணங்களாக மார்க்ஸ் கொண்டிருந்த ஆழமான அவதானிப்புகள், அவர் வாழ்ந்த காலத்திலும், மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கான வடிவம் குறித்த அவரது ஆழ்ந்த அறிவிலும் வேர்கொண்டிருந்தன. “உலகத்தையே மாற்றும் வகையில் கண்டறியப்பட்ட கருத்துக்களையோ, உருவாக்கப்பட்ட கொள்கைகளையோ அடிப்படையாகக் கொண்டடு அமைதவை அல்ல கம்யூனிஸ்டுகள் மேற்கொள்ளும் கோட்பாட்டு முடிவுகள். பொதுவான வார்த்தைகளில் சொன்னால், அவை நம் கண்களுக்கு முன் நடந்துகொண்டிருக்கும் வரலாற்று இயக்கத்திலிருந்து, வர்க்கப் போராட்டத்திலிருந்து எழுகின்ற வர்க்க உறவு நிலைமைகளில் இருந்தே அந்த முடிவுகளை வந்தடைகிறார்கள்.

மனித குல வரலாற்றின் நெடிய போக்கை கணக்கில் கொண்டால் மட்டுமே, நம்மால் வரலாற்று இயக்கப் போக்குகளின் சாரத்தையும், சமகால வளர்ச்சிகளின் திசைப்போக்குகளையும் குறித்த பார்வையை வந்தடைய முடியும். மார்க்சின் அறிவியல்பூர்வமான ஆய்வுகள் பற்றிக் கூறும் போது, “மனித சமுதாயம் உருவாக்கிய எதனையும் மறுதலிக்காமல், அவையனைத்தையும் நன்கு ஆய்ந்தறிந்து அவர் விமர்சனப்பூர்வமாக மாற்றியமைத்தார். அவற்றை மறுபரிசீலனை செய்தார், விமர்சனத்திற்கு உள்ளாக்கினார், மனித சிந்தனையை உருவாக்கிய தொழிலாளி வர்க்க இயக்கத்தின் மீது அதனை உறுதி செய்தார்., முதலாளித்துவ வரையறைகளால் சூழப்பட்ட அல்லது முதலாளித்துவ முடிவுகளால் பிணைக்கப்பட்டுள்ள மக்களால் வந்தடைய முடியாத தீர்மானங்களை அவர் வரையறுத்தார்” என்று குறிப்பிடுகிறார் லெனின். மார்க்சின் சிந்தனைகள் உருவான காலத்திலிருந்தே, கால நிலைமைகளை மாற்றியமைக்கவும் தொடங்கின; அவரின் கருத்துக்களும், கோட்பாடுகளும்

அறிவியல் ரீதியிலான தத்துவம்:

மார்க்சியம் என்பது ஒரு அறிவியல் கோட்பாடாக இருக்கின்றது. அது மனித சமுதாயத்தின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட கட்டமைப்பை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. தன்னுடைய விஞ்ஞான சோஷலிசம் குறித்த கருத்துக்களை மார்க்ஸ்  உருவாக்கிய காலத்திற்கு வெகு முன்பிருந்தே இருந்து வந்த கற்பனாவாத சோசலிஸ்டுகள் சமுதாயத்தைப் பீடித்திருக்கும் துன்பங்களைக் கண்டு துயரம் அடைபவர்களாக, மிகச்சிறந்த சமுதாயம் குறித்த நல்ல பல கருத்துக்களைக் கொண்டவர்களாக இருந்தாலும், சமுதாயத்தின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டமைப்புகளை புரிந்து கொண்டவர்களாக அவர்கள் இல்லாததால், தங்களுடைய கொள்கைகளை அடைவதற்கான சிறந்த வழி எதுவும் அவர்களுக்கு கிட்டவில்லை. இதன் விளைவாக, சமுதாய வளர்ச்சியின் மீது உண்மையான தாக்கத்தை அவர்கள் கொண்டிருந்த கருத்துக்களால் ஏற்படுத்த இயலவில்லை. வரலாற்றுச் சிறப்புமிக்க பொருள்முதல்வாதம்,  உபரி மதிப்பு குறித்த கோட்பாடு போன்ற மார்க்சிடமிருந்து உருவான கருத்துக்கள் மனித சமுதாயத்தின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட பொதுவான கட்டமைப்புகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தன. முதலாளித்துவ நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகின்ற குறிப்பிட்ட விதிகளை அவை வெளிப்படுத்தின. தேவை என்ற உலகில் இருந்து சுதந்திரம் என்ற உலகை நோக்கி மனிதகுலம் நகர்வதற்கு இத்தகைய கண்டுபிடிப்புகள் வழிவகுத்தன. மேலும் மனிதகுலம் தனக்கான  சுதந்திரம் மற்றும் விடுதலையை உணர்ந்து கொள்வதற்கான பாதையில் ஒளிபாய்ச்சுபவையாகயும் அவை இருந்தன. .

மார்க்சியம் என்பது மக்கள் சார்ந்த கோட்பாடாக இருக்கிறது. தங்களுடைய சுயமரியாதையை மக்கள் அடையும் வகையில் முதன்முறையாக உருவாக்கப்பட்ட சிந்தனையாக அது இருந்தது. மிகப் பரந்ததாக, ஆழ்ந்ததாக மார்க்சியம் இருந்த போதிலும், மனிதகுல விடுதலைக்கான குறிக்கோள் என்று அதனை ஒரே வாக்கியத்தில் மிகச் சுருக்கமாக நம்மால் கூற முடியும். சமுதாயத்தில் மேலாதிக்கம் கொண்ட கோட்பாடுகளாக, மார்க்சின் காலத்திற்கு முன்னால் இருந்த கோட்பாடுகள் அனைத்தும் ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்கின்ற வகையிலேயே இருந்தன. ஆனால் மார்க்சியம்தான் மக்களுடைய பார்வையில் மனிதகுலத்திற்கான சுதந்திரம் மற்றும் விடுதலைக்கான வழியைத் தேடுகின்ற முதல் கோட்பாடாக இருந்தது. எந்த அடக்குமுறையோ அல்லது சுரண்டலோ இல்லாத, மக்கள் அனைவரும் சமமாகவும் சுதந்திரமாகவும் வாழ்கின்ற சிறந்த சமுதாயத்தை இறுதியில் உருவாக்குவதற்கான வழியைத் தெளிவுபடுத்திக் காட்டுவதற்கான அறிவியல் கோட்பாடுகளை மார்க்சியம் பயன்படுத்துகிறது, மக்கள் மத்தியில் நன்கு வேரூன்றியுள்ளதால், மார்க்சியத்தின் செல்வாக்கானது காலம் மற்றும் எல்லைகளைத் தாண்டியதாக இருக்கிறது. வரலாற்றை முன்னெடுத்துச் செல்லுகின்ற பாதையே மனிதகுலத்திற்கான சரியான பாதை என்பதை மார்க்சியம் தெளிவுபடுத்துகிறது.

நடைமுறைக்கு வழிகாட்டி:

மார்க்சியம் என்பது ஒரு நடைமுறைக் கோட்பாடாக இருக்கிறது. தங்கள் செயல்களின் வழியாக உலகை மாற்றுவதை நோக்கி மக்களை அது வழிநடத்துகிறது. “சமூக வாழ்க்கை அனைத்தும் அவசியமான வகையில் நடைமுறைக்கானதாக உள்ளது”, மேலும்

“தத்துவஞானிகள் இந்த உலகை பல்வேறு வழிகளில் விளக்கியுள்ளனர்; ஆனால் அதனை மாற்ற வேண்டியதுதான் முக்கியம்”

என்கிறார். இருத்தலையும், நடைமுறையையும் உள்ளடக்கியிருப்பதே மார்க்சியத்தின் பண்பாகும், அதன் நடைமுறைத்தன்மையே மார்க்சிய கோட்பாட்டை மற்ற கோட்பாடுகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. படிப்போடு தன்னை ஒடுக்கிக் கொள்ளும் புலமை என்றில்லாமல், மார்க்சியமானது வரலாற்றில் மக்களுடைய பங்கில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்டதாக இருக்கிறது. மனிதகுலத்தின் விடுதலையை முன்னெடுப்பதற்கான நடைமுறையில்தான் மார்க்சியம் உருவானது, தெளிவானது, மேம்பாடடைந்தது. அது இந்த உலகத்தைப் புரிந்து கொள்ளவும், மாற்றியமைக்கவும் மக்களுக்கு உள்ளூக்கம் தருகின்ற ஆற்றல் மிகுந்ததாக இருக்கிறது.

மார்க்சியம் எல்லையற்று, தொடர்ந்து வளர்கின்ற தத்துவமாக இருக்கின்றது. எப்போதும் காலத்தை முந்தி நிற்கிறது. மார்க்சியம் என்பது வறட்டுச் சூத்திரமல்ல என்றும், அது நடைமுறை மாற்றங்களின் ஊடாக வளர்க்கப்படுகிற, செயல்முறைகளுக்கு வழிகாட்டியாக இருக்கிறது என்றும் திரும்பத் திரும்ப மக்களிடம் மார்க்ஸ் அறிவுறுத்தி வந்தார். மார்க்சிய தத்துவ வளர்ச்சியின் வரலாறானது காலம், நடைமுறை மற்றும் அறிதல் ஆகியவற்றின் மாற்றங்களுக்கிணங்க, மார்க்ஸ், ஏங்கெல்ஸ் மற்றும் அவர்களைப் பின்தொடர்ந்து வந்தவர்களால் தொடர்ந்து முன்னேற்றப்பட்ட ஒன்றேயாகும். இந்த வரலாறு, மனிதகுlலத்தின் கலாச்சார மற்றும் அறிவுசார் சாதனைகள் அனைத்தையும் தன்னகத்தே எடுத்துக் கொண்டு தொடர்ந்து தன்னைத் தெளிவுபடுத்திக் கொள்கிற வரலாறாகும். எனவேதான், மார்க்சியம்  தன்னுடைய கவர்ச்சிகரமான இளமைத்தன்மையை தக்கவைத்துக் கொண்டு சமகால வளர்ச்சிப் போக்குகளில் புதிய பிரச்சனைகளை ஆராய்வதுடன், மனிதகுலத்தை எதிர்கொள்கின்ற புதிய சவால்களுக்கு பதிலளிப்பதாகவும் இருக்கிறது.

தத்துவார்த்தக்கருவி:

“அறிவியலின் உச்சாணிக் கொம்பில் ஏற விரும்புகின்ற ஒரு நாடு, தத்துவார்த்த சிந்தனைகள் எதுவுமின்றி அதனை அடைய முடியாது” என்று ஏங்கெல்ஸ் ஒரு முறை கூறினார். சீனர்களாகிய நாம் தேச மறுசீரமைப்பை அடைய வேண்டுமென்றால், அதேபோன்று தத்துவார்த்த சிந்தனைகள் எதுவுமின்றி அடைய முடியாது. மார்க்சியம் என்பது நமது கட்சிக்கும், தேசத்துக்கும் வழிகாட்டுகின்ற கோட்பாடாக இருக்கிறது. இந்த உலகைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கும், அதன் அடிப்படை வடிவங்களைப் புரிந்து கொள்வதற்கும், அதன் உண்மையை அறிந்து கொள்வதற்கும், மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும் நாம் பயன்படுத்துகின்ற வெல்ல முடியாத, மிகச் சிறந்த கோட்பாட்டுக் கருவியாக மார்க்சியம் இருக்கிறது. 

மார்க்சியக் கருத்துக்களும், கோட்பாடுகளும் மிகப் பரந்து, ஆழமானவையாக இருக்கின்றன, திரும்பத் திரும்ப படித்தாலும் கூட அவை எக்காலத்திற்கும் பொருந்தும் வகையிலேயே இருக்கின்றன. இந்தப் புதிய யுகத்தில், மார்க்சைப் படிக்க வேண்டிய தேவை சீனக் கம்யூனிஸ்டுகளுக்கு இன்னும் இருக்கிறது. மார்க்சியத்தைப் பயில்வதோடு, அதை நடைமுறையிலும் நாம் கடைப்பிடிக்க  வேண்டியிருக்கிறது. அதன் மூலம், இந்தப் புதிய யுகத்தில் இன்னும் உறுதியான நம்பிக்கையுடனும், ஞானத்துடனும் சீன சோசலிசத்தை நாம் நிலைநிறுத்தி மேம்படுத்த முடியும்.  

மனித சமூக மேம்பாடு:

மார்க்சைப் பயில்வதற்கு, மனித சமுதாயத்தின் வளர்ச்சிக் கட்டங்கள் குறித்த மார்க்சின் சிந்தனையை கற்று, கடைப்பிடிப்பது அவசியம்.  மனித சமுதாயம் இறுதியில் கம்யூனிசத்தை நோக்கியே நகரும் என்பதை தன்னுடைய ஆய்வுகளின் மூலம் மார்க்ஸ் வெளிப்படுத்தினார். எதிர்காலச் சமுதாயத்தில் “ஒவ்வொருத்தருக்குமான முன்னேற்றமே அனைவருக்குமான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்கிற வகையில் நாம் இணைந்திருக்க வேண்டும்” என்பதை உறுதியாக நம்பிய மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோர், “பாட்டாளி வர்க்கத்திற்கு இழப்பதற்கு அடிமைச் சங்கிலிகளைத் தவிர வேறெதுவும் இல்லை. அவர்கள் வெற்றி காண வேண்டிய உலகம் இருக்கிறது.” என்று கூறினர். தங்கள் மீதும், சமுதாயத்தின் மீதும், மனித வளர்ச்சியின் மீதும் ஆளுமை கொண்டவர்களாக மக்கள் மாறிய பிறகு வரலாற்றின் அலை முன்னோக்கி மட்டுமே நகரும் என்றும், நடப்பில் உள்ள நிலைமைகளின் தொடர்ச்சியான மாற்றங்களின் மூலம் உணரக்கூடியதாக கம்யூனிச லட்சியம்   இருக்கும் என்றும் மார்க்ஸ் உறுதியுடன் நம்பினார். கம்யூனிஸ்டுகளின் தடுமாற்றமில்லாத லட்சியங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கான தத்துவார்த்த அடித்தளத்தை மார்க்சியம் நிலைநிறுத்துகிறது. உலகளாவிய கண்ணோட்டங்கள், இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஆகியவற்றின் ஆய்வு நெறிமுறைகள் குறித்த திறம் நம்மிடம் அவசியம் இருக்க வேண்டும். கம்யூனிசத்தை உணர்ந்து கொள்வது என்பது ஒவ்வொரு அடியாக இலக்கை நோக்கி நாம் எடுத்து வைக்கின்ற வரலாற்றுச் செயல்முறை என்பதை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் இணைந்து முன்னெடுக்கும் லட்சியமான சீன சோஷலிசம் மற்றும் தற்போது நாம் ஈடுபட்டிருக்கும் முயற்சிகள் ஆகியவற்றை கம்யூனிசத்தின் உன்னத லட்சியத்துடன் ஒருங்கிணைக்க வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. சீன சோசலிசத்தின் பாதை, கோட்பாடு, அமைப்பு, கலாச்சாரம் ஆகியவற்றின் மீது முழு நம்பிக்கையுடன் நாம் இருக்க வேண்டும். சீனக் கம்யூனிஸ்டுகளின் கருத்தியல்கள், நம்பிக்கைகளுடன் நம்மைப் பிணைத்துக் கொள்ள வேண்டும். மார்க்சைப் போல நாம் இருக்க வேண்டும். நமது வாழ்நாள் முழுவதும் கம்யூனிசத்திற்காகப் போராட வேண்டும்.

மக்களுடைய நிலைப்பாட்டை உயர்த்திப்பிடிக்கும் வகையில் மார்க்சின் சிந்தனையை கற்று, கடைப்பிடிப்பது, மார்க்சைப் பயில அவசியமாகும். மக்களுடன் நெருக்கமான உறவைப் பேணுவது மார்க்சியத்தின் தனித்துவமான தன்மையாக இருக்கிறது. மார்க்சின் கூற்றுப்படி, வெகுமக்களின்  செயல்பாடுகளே வரலாற்றுச் செயல்பாடுகளாகும். தங்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்கு மக்களைத் தயார்ப்படுத்துவதையே, மார்க்சின் வாழ்க்கையைப் பின்தொடர்கிற ஒருவர் அறிகிறார். நமது அடிப்படையான நிலைப்பாடு என்பது மக்களுக்கானது என்பதையும், மக்களுடைய நல்வாழ்வுக்காகப் போராடுவதே நமது அடிப்படையான பணி என்பதையும் நாம் எப்போதும் உறுதிசெய்துகொண்டே இருக்க வேண்டும். மக்கள் அனைவருக்காகவும் முழுமனதுடன் பணி புரிவது என்ற நமது அடிப்படைக் கொள்கைக்கு உறுதுணையாக இருந்து வெகுஜன வழியை நாம் முன்னெடுக்க வேண்டும். மக்களுடைய பிரதான நிலைப்பாடுகளையும், அவர்களின் படைப்பாற்றலையும் நாம் மதிக்க வேண்டும். அவர்களோடு எப்போதும் நெருக்கமான உறவை நாம் வைத்திருக்க வேண்டும். துளைக்க இயலாத பெருஞ்சுவருக்குள் நமது பலத்தை வழிநடத்த வேண்டும். வரலாற்றை முன்னகர்த்தும் வகையில் மக்களை ஒன்றிணைத்து, அவர்களுக்குத் தலைமையேற்று வழிநடத்த வேண்டும். இது வரலாற்றின் வளர்ச்சிக் கட்டங்களுக்கு இசைவான தேர்வாக அவசியம் இருக்கவேண்டும் என்பதுடன், நமது சொந்த முயற்சியில், நம்முடைய நோக்கங்களுக்கு உண்மையாக இருக்கின்ற வகையில், கம்யூனிஸ்டுகள் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பாகவும் இருக்கிறது.

உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி:

மார்க்சைப் பயில்வதற்கு, உற்பத்தி சக்திகள் மற்றும் உறவுகள் குறித்த மார்க்சின் சிந்தனையை கற்று, கடைப்பிடிப்பது அவசியமாகின்றன. உற்பத்தியின் பொருளுயாத சக்திகளே எல்லா சமூக நிலைமைகளுக்குமான பொருளியல் முன்நிபந்தனைகளை உருவாக்குகின்றது, மேலும் குறிப்பிட்ட கட்டத்தில் அடைந்துள்ள உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு ஏற்ப நிலவும் உற்பத்தி உறவுகளின் ஒட்டுமொத்தமே ஒரு சமூகத்தின் பொருளாதார அடித்தளமாக பார்க்கப்படுகிறது. உற்பத்தி சக்திகளே ஒரு சமுதாயத்தை முன்னேற்றும் ஆற்றல் வாய்ந்த, புரட்சிகரமான காரணிகளாக இருக்கின்றன. “மனிதர்களுக்கு பெருமளவில் கிடைக்கும் இந்த உற்பத்தி சக்திகள் சமுதாயத்தின் இயல்பை நிர்ணயிக்கின்ற ஆற்றலைக் கொண்டுள்ளன”. உற்பத்தி சக்திகளுக்கும், அவற்றின் உறவுகளுக்கும் இடையிலான மற்றும் பொருளாதார அடித்தளத்திற்கும், பெரிய கட்டுமானங்களுக்கும் இடையிலான பரஸ்பரத் தொடர்புகளும், கட்டுப்பாடுகளுமே சமுதாய வளர்ச்சியை முழுமையாக நிர்வகிக்கின்றன. தேசிய உற்பத்தி சக்திகளைக் கட்டவிழ்த்து விடுவதும் வளர்த்தெடுப்பதும் சோசலிசத்தின் அடிப்படைக் கடமைகளாகும். இதுகுறித்து தொடர்ந்து ஆராய்வதும், கடினமாக உழைப்பதும் சீனக் கம்யூனிஸ்டுகள் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கின்றது. சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதில் இருந்து, குறிப்பாக சீர்திருத்தங்கள் மற்றும் சந்தையைத் திறந்து வைத்ததில் இருந்து, தேசிய உற்பத்தி சக்திகளை கட்டவிழ்த்து, வளர்ச்சி காண்பதில் உறுதியான வழிகளில் மக்களை வழிநடத்தியதன் மூலம், மேற்குலக நாடுகள் பல நூற்றாண்டுகள் எடுத்துக் கொண்டதற்கு மாறாக 70 ஆண்டுகளுக்குள்ளாகவே நமது கட்சி சாதித்திருக்கிறது. இதன் மூலம் ஏற்பட்ட நமது நாட்டின் அதிவேக உயர்வு நம்மை உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக மாற்றியிருக்கிறது.

மக்கள் ஜனநாயகம்:

மார்க்சைப் பயில்வதற்கு, மக்கள் ஜனநாயகம் குறித்த மார்க்சின் சிந்தனையை கற்பதும், கடைப்பிடிப்பதும் அவசியம். “பாட்டாளி வர்க்க இயக்கம் என்பது தன்னறிவு கொண்ட, மிகப்பெரும்பான்மையினரின் நலனைப் பாதுகாக்கும், மிகப்பெரும்பான்மையினரின் விடுதலைக்கான இயக்கமாகும்”, “பாட்டாளி வர்க்கம் ஆட்சிக்கு வரும் போது, பழைய அரசு இயந்திரத்தைக் கொண்டே நிர்வகிக்க முடியாது” என்றும், “முந்தைய அரச அதிகாரம் தகர்க்கப்பட வேண்டும்… அதற்குப் பதிலாக புதிய, உண்மையான ஜனநாயக ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டும்” என்றும் மார்க்சும், எங்கல்சும் குறிப்பிட்டுள்ளனர். அரச அமைப்புகள் பொதுமக்களைக் கட்டுப்படுத்துவதிலிருந்து மாறி அவர்களுக்கு சேவை செய்பவையாக, மக்களின் மேலாண்மையை ஏற்றுக் கொள்பவையாக இருக்க வேண்டும். அரசியல் வளர்ச்சியில் சோசலிசப்பாதையை சீன குணாதிசயங்களுடன் நாம் தொடர்ந்து தக்க வைத்திருக்க வேண்டும். கட்சித் தலைமையோடு சுமூகமாக ஒருங்கிணைந்திருப்பதை உறுதி செய்து, மக்களைக் கொண்டு நாட்டை வழிநடத்துவது மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றிற்கு உறுதியளித்து சீனாவின் சோசலிச ஜனநாயக முன்னேற்றத்திற்கான வழியினை வகுக்க வேண்டும். மக்களைக் கொண்டு நாட்டை வழிநடத்துவதற்கான நிறுவன அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். சீனாவின் ஆட்சி முறை, திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதை விரைவுபடுத்த வேண்டும். மக்களின் உற்சாகம், முன்முயற்சி, படைப்பாற்றல் ஆகியவற்றிற்கான முழு சுதந்திரத்தை வழங்கி மக்கள் ஜனநாயகத்தை முழுமையாக உறுதியாகத் திறம்படச் செயல்படுத்த வேண்டும்.

கலாச்சார மேம்பாடு:

மார்க்சைப் பயில்வதற்கு, கலாச்சார மேம்பாடு குறித்த மார்க்சிய சிந்தனைகளைக் கற்றலும், பின்பற்றுதலும் அவசியமாகும். வேறுபட்ட பொருளாதார சூழல் மற்றும் சமுதாய நிலைமைகளின் காரணமாக மக்களிடயே வேறுபட்ட கருத்துக்களும், கலாச்சாரங்களும் உருவாகும் என மார்க்ஸ் நம்பினார். இவ்வாறு கருத்துக்களையும், கலாச்சாரங்களையும் பொருளாதார அடித்தளமே தீர்மானிக்கிறதென்றாலும் அவையும் எதிர்வினை செய்கின்றன.  வளர்ச்சியடைந்த கருத்துகளும், கலாச்சாரமும் வெகுமக்களால் ஏற்கப்பட்டவுடன், தவிர்க்க முடியாத பெளதீக சக்தியாக மாற்றம் பெறுகின்றன. நேர்மாறான விதத்தில்,  காலம் கடந்த அல்லது தவறான கருத்துக்களை கைவிடாமல் தொடர்ந்தால் அவை சமூக முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாகின்றன. தத்துவ விழிப்புணர்வும், பண்பாட்டு உறுதியும் தேச முன்னேற்றத்திற்கான சக்திகளாகும்; மேம்பட்ட மதிப்பீடுகளும், சிந்தனைச் சுதந்திரமும் ஒரு சமூகத்தின் மூலாதாரங்களாகும். ஒரு தேசத்தின் மையச் சிந்தனையை வடிவமைப்பதாகவும், மாற்றியமைப்பதாகவும் இருக்கிறது. சீன நிலைமைகளோடு ஒன்றிச் செயல்படும் அதே சமயம் நாம் நவீனமயம், உலக நிலைமைகள் மற்றும் எதிர்காலத்தையும் தழுவுகிற தேவை நம் தேசத்தின் முன் உள்ளது. மார்க்சியமே நம்மை வழிநடத்துகின்ற சிந்தனை என்ற நிலைப்பாட்டை நாம் உறுதிப்படுத்த வேண்டும். மேம்பட்ட சோசலிசக் கலாச்சாரத்தை வளர்த்து, சோசலிசக் கலாச்சார, ஒழுக்க நெறிகளை கடைப்பிடிப்பதை வலுப்படுத்த வேண்டும். சமுதாய வளர்ச்சியின் அனைத்துப் பகுதிகளும் முக்கியமான சோசலிச விழுமியங்களால்  ஊக்குவிக்கப்பட்டுள்ளனவா என்பதையும், நம்முடைய சிறந்த பாரம்பரியக் கலாச்சாரத்தின் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் மற்றும் புதுமையான வளர்ச்சிக்கு அவை ஊக்கமளிக்கின்றனவா என்பதையும் நாம் கண்டறிந்து கொள்ள வேண்டும். தங்களுடைய அரசியல் விழிப்புணர்வு மற்றும் தார்மீக மதிப்பீடுகளை நமது மக்கள் உயர்த்திக் கொள்ள உதவுவதோடு, நேர்த்தியான கலாச்சாரத்தை அவர்கள் பாராட்டுவதற்கும் நாம் உதவ வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், நம்மால் சீனக் கலாச்சாரத்திற்கு புத்துணர்வை அளிக்க முடியும்.

சமூக வளர்ச்சிக்கு மார்க்சியம்:

மார்க்சைப் பயில்வதற்கு, சமூக வளர்ச்சி குறித்த மார்க்சிய சிந்தனைகளைக் கற்றலும், நடைமுறைப்படுத்தலும் அவசியம். எதிர்காலச் சமூகத்தில் “உற்பத்தி என்பது, அனைவருக்கும் செல்வத்தை வழங்கிடும் நோக்கில் கணக்கிடப்பட்ட ஒன்றாக இருக்கும்” என்றும் “அனைவருக்குமானவற்றை அனுபவித்திட அனைவரும் பங்கேற்பது” அதன் வெளிப்பாடாக இருக்கும் என்றும் மார்க்சும் ஏங்கல்ஸும் கூறினர். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, கோதா வேலைத் திட்டம் குறித்த திறனாய்வு, மூலதனம் மற்றும் பிற மார்க்சின் படைப்புகளின் மீது ஏங்கெல்ஸ் தொடர்ந்து தனது கருத்துக்களை வெளியிட்டார். “ஆரோக்கியமான, பயனுள்ள வேலை, போதுமான செல்வம், ஓய்வு, உண்மையான, முழுமையான சுதந்திரம் ஆகியவற்றை அனைவருக்கும் தருவதாக சோசலிசத்தின் கீழ் உள்ள சமூகம் இருக்க வேண்டும்”. நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு மக்கள் விரும்புகிறார்கள், அவர்கள் அதனை அடைவதற்கு உதவுவதை நம் இலக்காகக் கொள்ள வேண்டும். மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சிக்கான தத்துவத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டும், மக்கள் முன் இருக்கின்ற மிக முக்கியமான உடனடிப் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். மக்களுக்கான பாதுகாப்பான வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்தி தொடர்ந்து மேம்படுத்த வேண்டும். அனைவருக்குமான சமூகம், சமூக நீதியுடைய சமூகம் என்பனவற்றை முன்நிறுத்தி, உயர்தரத்திலான குழந்தைப் பராமரிப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ சேவைகள், முதியோர் பராமரிப்பு, வீட்டு வசதி, சமூக உதவி ஆகியவற்றைப் பெறுவதற்கான உத்தரவாதத்தை ஏற்படுத்த வேண்டும். சீர்திருத்தங்களாலும், சமூக மேம்பாட்டினாலும் கிடைக்கும் பலன்கள் அனைத்து மக்களையும் நியாயமான வழியில் சென்றடைவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், முழுமையான மனித வளர்ச்சியை ஊக்குவித்து, அனைவராலும் வளமையைப் பகிர்ந்து கொள்ள முடியும்.

மனிதர்களும் இயற்கையும்:

மார்க்சைப் பயில்வதற்கு, இயற்கைக்கும் மக்களுக்கும் இடையிலான உறவைப் பற்றிய மார்க்சிய சிந்தனைகளை கற்பதும், பின்பற்றுதலும் தேவைப்படுகின்றன. “இயற்கையின் மூலமே மனிதன் உயிர் வாழ்கிறான்” என்பதை மார்க்ஸ்  உணர்ந்திருந்தார். மனிதன் உயிர் வாழ்வதற்குத் தேவையான வளமான மண், ஆறுகள், ஏரிகள், மீன் வளம் மிகுந்த கடல்கள் என்று அனைத்தையும் கொண்டிருக்கும் இயற்கை, உற்பத்திக்குத் தேவையான ஆதாரங்களையும் மனிதனுக்கு வழங்குகிறது. மனிதர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான சூழலைக் கொண்டதாக இயற்கை உலகம் இருக்கிறது. மனிதர்களாகிய நாம் இயற்கையோடு இயைந்து உற்பத்தி செய்ய, வாழ, வளர்ச்சி அடைய முடிந்தால், இயற்கை என்பது நமக்குத் தேவையான அனைத்தையும் கொடையாக வழங்கும். இருப்பினும், மனிதன் தன்னுடைய அறிவினாலும், கண்டறியும் மேதைமையாலும் இயற்கையின் ஆற்றலைக் கட்டுப்படுத்தும் போது, இயற்கை அவனைத் தாக்குகிறது”. இயற்கையே அனைத்து உயிர்களுக்கும் தாய்.  மனிதகுலமும், இயற்கையும் இணைந்து ஒரு உயிரியல் சமூகமாக இருக்கின்றன. மனித இனம் இயற்கையைப் போற்றி, அதன் வழிகளைப் பிந்தொடர்ந்து, அதனைப் பாதுகாக்க வேண்டும். மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை நாம் உறுதி செய்ய வேண்டும், தெளிவான நீர்நிலைகளும், பசுமையான மலைகளும் விலைமதிப்பற்ற சொத்துக்கள் என்பதை உறுதியாக உணர்ந்து, உளப்பூர்வமாக இந்தப் புரிதல் மீது நாம் செயல்பட வேண்டும். சுற்றுச்சூழல் பண்பாட்டைக் கட்டமைத்து, அழகானதொரு சீனாவை உருவாக்குவதற்காக சமுதாயத்தின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், தெளிவான நீர்நிலைகள், பசுமையான மலைப் பகுதிகளில் வாழும் மக்கள் இயற்கை, வாழ்க்கை, இருத்தல் ஆகியவற்றின் அழகை ரசிப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அதிகமான உற்பத்தி, உயர்வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் ஆகியவற்றைக் கொண்ட நீடித்த வளர்ச்சி மாதிரி ஒன்றை நாம் மேற்கொள்ள வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சி:

மார்க்சிய அரசியல் கட்சியை வளர்ப்பதற்கான மார்க்சிய சிந்தனைகளைக் கற்றலும், கடைப்பிடித்தலும் மார்க்சைப் பயில்வதற்கு அவசியமாகும். “முதலாளி வர்க்கத்திற்கு எதிரான போராட்ட உழைக்கும் வர்க்கத்தின் போராட்டமானது பல்வேறு வளர்ச்சிக்கட்டங்களை கடந்து செல்ல வேண்டியுள்ளது, எல்லாச் சூழலிலும், எல்லாவிடத்திலும் அந்த இயக்கத்தின் நலனை ஒட்டுமொத்தமாக பிரதிபலிக்கின்றனர்” என்பதை மார்க்ஸ் விளக்கியுள்ளார், “பாட்டாளி வர்க்கத்தின் ஒட்டுமொத்த நலன் அல்லாமல் தனிப்பட்ட விருப்பங்கள் ஏதுமில்லை”, இது தவிர “மிகப்பெரும்பான்மையானவர்களின் நலனுக்காக”, ஒரு கம்யூனிச சமுதாயத்தை உருவாக்குவதற்காக போராடவும் அவசியம் உள்ளது. “கட்சியின் இயக்கத்தின் அளவுமட்டத்தைக் கொண்டு ஒட்டுமொத்த உலகிற்கும் முன்னுதாரணங்களை” ஒரு கம்யூனிஸ்ட் கட்சி நிச்சயம் உருவாக்க வேண்டும். எப்போதும் மக்களுடன் இணைந்து நின்று அவர்களின் நலன்களுக்காக போராடுவதாக இருப்பதே, மார்க்சிய அரசியல் கட்சிக்கும் மற்ற அரசியல் கட்சிகளுக்கும் இடையேயான அடிப்படை வேறுபாடாக இருக்கிறது. நமது போராட்டங்கள், திட்டங்கள், நோக்கங்கள், கனவுகளை ஒருங்கிணைத்து, அரசியல் நேர்மையை நிலைநிறுத்துவதன் அவசியத்தை உணர்ந்து, பெருமளவில் சிந்தித்து, தலைமையைப் பின்பற்றி அதனோடு நம்மை நேர்நிறுத்திக் கொள்ள வேண்டும். கட்சியின் மீது முழுமையான, கண்டிப்பான ஆளுமையை முன்னெடுத்துச் செல்ல நாம் தொடர்ந்து போராட வேண்டும். அரசியல் ரீதியாக கட்சியைப் பலப்படுத்தவும், ஒட்டுமொத்த கட்சித் தலைமையை பலப்படுத்தவும், மத்திய குழு மற்றும் அதன் மையப்படுத்தப்பட்ட, ஐக்கியப்பட்ட தலைமையின் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். உண்மையை முன்னிறுத்தி, தவறுகளைச் சரிசெய்து கொள்கிற கம்யூனிஸ்ட்களின் அரசியல் தன்மையை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நமது மக்களின் ஆதரவை முழுமையாகப் பெற்றதாக, தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்வதற்கான தைரியம் மிக்கதாக, அனைத்து சவால்களையும் எதிர் கொள்ளும் திறன் கொண்டதாக, அனைத்து காலகட்டத்திலும் முன்னணியில் இருக்கின்ற துடிப்பான மார்க்சிய ஆளும் கட்சியாக கட்சியைக் கட்டியமைக்க வேண்டும்.

புதியன படைப்பாக்கம்:

அறிவியல் கோட்பாடுகளை அணுகுவதற்கு அறிவியல் அணுகுமுறை தேவைப்படுகிறது. “மார்க்சின் ஒட்டுமொத்த சிந்தனைகளும் ஒரு வழிகாட்டுத் தொகுப்பாக, வழிமுறையாக அமைந்திருக்கவில்லை. முன்பே தயாரிக்கப்பட்ட சூத்திரங்களை அதிலிருந்து பெற முடியாது, கூடுதலாக ஆய்ந்து அறிவதற்கோ, ஆய்வுக்கான வழிமுறையைப் பெறுவதற்கோ உதவுகிறவை அல்ல” என்று தன்னுடைய ஆழ்ந்த கருத்துக்களை ஏங்கெல்ஸ் ஒருமுறை வெளியிட்டார், அவர் மேலும் குறிப்பிடுகையில், கோட்பாடுகள் எனப்படுபவை “வரலாற்று விளைபொருள்களாக இருப்பதால், அவை வெவ்வேறு காலங்களில் வேறுபட்ட வடிவங்களைக் கொண்டிருக்கின்றன. எனவே அவற்றின் உள்ளடக்கங்களும் மிகவும் மாறுபட்டவையாகவே இருக்கின்றன.” என்றார். விஞ்ஞான சோசலிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நம்மால் நிராகரிக்க முடியாது. ஒருவேளை அவ்வாறு நிராகரித்து ஒதுக்கிவிட்டால், சோசலிசம் என்பதே காணாமல் போய் விடும். அதே நேரத்தில், விஞ்ஞான சோஷலிசம் என்பது மாறாத கொள்கை அல்ல. வெறுமனே நமது வரலாற்றையும் கலாச்சாரத்தையும் தொடருகின்ற வகையில் பிரதியெடுக்கின்ற வகையிலோ அல்லது வெறுமனே இயந்திரத்தனமாக மரபுவழியிலான  மார்க்சிய ஆசிரியர்களின் கருத்துக்களைப் பயன்படுத்துகின்ற வடிவத்திலோ, அல்லது பிற நாடுகளில் சோசலிசம் நடைமுறைப்படுத்தப்படுவதை மறுபதிப்பு செய்வதாகவோ அல்லது வெளிநாட்டில் இருந்து வருகின்ற நவீனமயமாக்கலின் போலியாகவோ சீனாவில் நடைபெற்றிருக்கும் மிகப் பெரிய சமூக உருமாற்றம் என்பது இருக்கவில்லை. சோசலிசம் என்பதற்கு மரபுசார்ந்த, மாறுபடாத வடிவம் என்பது பொருளல்ல. நாட்டின் குறிப்பிட்ட சூழல், வரலாறு, கலாச்சார மரபுகள், சமகாலத் தேவைகள் ஆகியவற்றோடு, விஞ்ஞான சோசலிசத்தின் அடிப்படைக் கொள்கைகளை நெருக்கமாக இணைப்பதன் மூலமாகவும் சோசலிச நடைமுறைகளை பரிசீலித்து, ஆய்வு செய்து தொடர்ந்து முன்னெடுப்பதாலும் மட்டுமே, அதன் செயல்திட்டம் சாத்தியமாகும்.

இந்தக் கோட்பாட்டின் வலிமை என்பது அதனைத் தொடர்ச்சியாக புத்தாக்கம் செய்வதிலேயே இருக்கிறது. மார்க்சியத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியை ஊக்கப்படுத்துவது சீன கம்யூனிஸ்டுகளின் புனிதமான கடமையாக இருக்கிறது. சமகால சீனாவிலிருந்து பெறப்பட்ட ஏராளமான, எழுச்சி தருகின்ற அனுபவங்களைப் பயன்படுத்துவதன் மூலமாகவும், மனிதகுலத்தின் அனைத்து நாகரிகங்கள் குறித்த பரந்த உலகளாவிய பார்வையைப் பயன்படுத்தியும் இந்த உலகைப் பற்றிய ரகசியங்களை அறிந்து கொள்ளவும், அதன் தலைமையை நாம் ஏற்கவும் மார்க்சியத்தைக் கடைப்பிடிப்பதற்கான உறுதியுடன் தொடர்ந்து நாம் இருக்க வேண்டும். நம்மை நாமே விஞ்சுகிற வகையில் தொடர்ச்சியாக நம்மை புதுப்பித்துக் கொண்டு, நமது முன்னேற்றத்திற்காக மற்றவர்களின் பலங்களிலிருந்து பரவலாக கற்றுக் கொள்கின்ற வேளையில் நமது அடித்தளங்களைத் தொடர்ந்து பாதுகாப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இறுதியாக, கம்யூனிஸ்ட் கட்சியின் ஆளுமை, சோசலிச வளர்ச்சி, மனித சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சி, இந்த 21ஆம் நூற்றாண்டில், இன்றைய சீனாவில் மார்க்சியத்தின் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துதல் போன்றவற்றிற்கு  உள்ளீடாய் இருக்கின்ற விதிகளைப் பற்றி நமது புரிதலை விரிவாக்கிக் கொள்ள வேண்டும்.

தோழர்களே,

மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய சிந்தனையாளருக்கு மரியாதை செலுத்துவதற்கும், மார்க்சியத்தின் அறிவியல்பூர்வ உண்மை மீது நமக்கிருக்கும் உறுதியான நம்பிக்கையைத் தெரிவிப்பதற்கும் மார்க்சை நாம் இன்று நினைவு கூர்கிறோம்.

“இதுவரை நடந்திராத மிகப்பெரிய பிரம்மாண்டமான புரட்சி, பிரம்மாண்ட புரட்சிக்கான வாய்ப்பு, நமது பொருள்வாதக் கருத்தை விரிவாக்கி தொடர்வதற்கும், தற்போதைய காலகட்டத்தில் அதனைப் பயன்படுத்துவதற்குமான வாய்ப்பை, நமக்கு அளித்திருக்கிறது.” என்று ஏங்கெல்ஸ் ஒருமுறை கூறினார். நமக்கு முன்பாக இருக்கின்ற பாதையில் மார்க்சியத்தை நாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மனித சமுதாயத்திற்காக மார்க்சும் ஏங்கல்ஸும் எதிர்பார்த்தவற்றை சீனா முழுமைக்கும் என்றும் நிரந்தரமாக இருப்பதாக விரிவுபடுத்தி அனைவரும் வியக்கத்தக்க எதிர்காலத்தை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

(பெய்ஜிங், மே 4, 2018)



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: