நூல் விமர்சனம்: திராவிட மாடல் (2021)


குரல்: தோழர் பீமன்

என்.ராகுல்

தமிழில்: அபிநவ் சூர்யா

இந்த புத்தகத்தின் ஆய்வு, இன்று ஆய்வு வட்டங்களில் தமிழகத்தின் மக்கள் நல மற்றும் ஜனரஞ்சக அரசியலின் நிர்ணய காரணிகள் குறித்து நிலவும் பரவலான விளக்கங்களை எதிர்க்கும்படியான வாதங்களை முன்வைக்கிறது. இந்த விளக்கங்கள் இரு வகையான ஜனரஞ்சகவாதத்தை சுற்றியே உள்ளன – பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, சற்றே மேல் தட்டுகளில் உள்ள, குறிப்பாக இடைநிலை சாதியினரை முன் நிறுத்தும் “உரிமை கோரும்” ஜனரஞ்சகவாதம், மற்றும் இந்த “உரிமை கோரும்” ஜனரஞ்சகவாதத்தால் பயன் அடையாத சாதி-வர்க்கங்களை உள்ளடக்கிய “இரட்சிப்பாளர்” ஜனரஞ்சகவாதம்.

திராவிட அரசியல் நோக்கிய மற்றொரு விமர்சனம் அதை “மேல்தட்டுக்கு குவியல்; ஆனால் ஏழைகளுக்கு நலத்திட்டம்” என வரையறுக்கிறது. ஆனால் இப்புத்தகத்தின் ஆசிரியர்கள், பெரும்பாலான ஆய்வுகள் தமிழகத்தின் நலத்திட்டம் மற்றும் மூலதன குவியல் இடையேயான தொடர்பை புரிந்துகொள்ளவில்லை என வாதிடுகின்றனர். பொருளாதார மற்றும் சமூக, இரு தளங்களிலும் ஜனநாயகத்துவம் நடந்திருப்பதாகவும், இந்த இரண்டிற்குமான தொடர்பு திராவிட கோட்பாட்டிலிருந்து எழுவதாகவும் இவர்கள் வாதிடுகின்றனர்.

“அவர்களின் (திராவிட இயக்கங்களின்) அணிதிரட்டல் சாதி-அடிப்படையிலான சமூக அநீதியின் வடிவத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. சாதிவாரி இட ஒதுக்கீடு மூலம் சமூக நீதியை வெல்வது, தொழில்துறை திறன் பெருக்கல் பண்பின் மீதான நம்பிக்கை, வலுவான மாநில சுயாட்சியின் அவசியம்,  அனைவரையும் உள்ளடக்கிய நவீனத்துவத்தை கட்டமைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதே “திராவிட பொது புத்தி”” என ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

நரேந்திர சுப்பிரமணியம் போன்ற ஆய்வாளர்களின் திராவிட அரசியலுக்கான “இரு வகை ஜனரஞ்சகவாதம்” என்ற  விளக்கத்திற்கு மாற்றை இவர்கள் முன் வைக்கும் பொழுதும், நிலவும் பிரபல ஆய்வுகள் திராவிட கட்சிகள் மற்றும் இயக்கத்தை “இடதுசாரி ஜனரஞ்சகவாதம்” என வரையறுப்பதோடு இவர்களும் ஒத்து போகின்றனர்.

“பலதரப்பட்ட கோரிக்கைகள் இடையே சமத்தன்மையை உருவாக்குவதன் மூலம் அரசியல் ஒருங்கிணைப்பை கட்டமைப்பது, ஓரளவு நுணுக்கமான கோரிக்கைகளை கைவிட்டு, நுணுக்கங்களுக்கு இடையேயான பொதுத்தன்மை மற்றும்  சமத்தன்மையை முன் நிறுத்துவது, புதிதாய் எழும் கோரிக்கைகள் மற்றும் முரண்பாடுகளை உள்ளடக்கிக் கொள்வது” என்பதே இடதுசாரி ஜனரஞ்சகவாதம் என்கின்றனர்.

திராவிட தமிழியம் என்ற அடையாளத்தின் கீழான பிரபல ஒருங்கிணைப்பானது உள்-வகுப்புக்களான ஆதி-திராவிடர்கள், சூத்திரர்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், விவசாய மற்றும் ஆலை தொழிலாளர்கள், சிறு விவசாயிகள், பெண்கள் போன்றோரின் நுணுக்கமான கோரிக்கைகளை உள்வாங்கிக்கொண்டு, அவற்றையெல்லாம் மேல் சாதியினருக்கும், தேசிய அளவில் அரசியல்-பொருளாதார சக்தி படைத்தோருக்கும் எதிரான ஒரு தமிழ்/திராவிட அரசியல் கட்டமைப்பிற்குள் கொண்டு வந்ததாக இவர்கள் வாதிடுகின்றனர்.

நீதிக்கட்சி காலத்திலிருந்து இந்த இயக்கத்தின் தாக்கத்தை விவரிக்கின்றனர். காமராஜர் காலத்தில் கூட ஏற்பட்ட முன்னேற்றங்கள் திராவிட அரசியலின் அழுத்தத்தின் விளைவே என வாதிடுகின்றனர். ஆனால் இப்படிப்பட்ட ஜனரஞ்சக அரசியலின் பின்னடைவுகளை இவர்கள் உணராமல் இல்லை. இப்படிப்பட்ட அரசியலால் ஒரு சிலரை விட வேறு சிலர் மட்டுமே பயன் பெற வாய்ப்புண்டு. மேலும் இது நிரந்தரமாக மக்களை “நாங்கள்” “நீங்கள்” என பிரித்து, வலதுசாரி அரசியல் பயன்படுத்திக்கொள்ள வழி வகுக்கலாம்.

இப்புத்தக ஆசிரியர்கள் தமிழக  ஜனரஞ்சகவாதத்தின் இரு அம்சங்களை கண்டறிகின்றனர் – சமூக ஜனரஞ்சகவாதம் மற்றும் பொருளாதார ஜனரஞ்சகவாதம். நீண்ட காலத்தில் நவீன வளர்ச்சிகள் மற்றும் பொது சொத்துக்கள் அனைவரும் பெறுவதை உறுதி செய்வது சமூக ஜனரஞ்சகவாதம். இக்காலத்தில் “அளித்தல்” வகையிலான, குறிப்பாக சில முக்கிய சமூக குழுக்களை நோக்கிய பொருளாதார முன்னெடுப்புகள் பொருளாதார ஜனரஞ்சகவாதம்.

இந்த இரு ஜனரஞ்சகவாதத்தையும் மாநிலத்தில் நிறுவனத்துவம் ஆக்கியதன் காரணமாக மூன்று தளங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக வாதிடுகின்றனர் – 1) சமூக-பொருளாதார கட்டமைப்பில் முதலீடு செய்ததன் விளைவாக அடித்தளம் உருவாக்கியது 2) அரசாங்கத்துறை, நவீன பொருளாதாரம் போன்ற மாநில கட்டமைப்புகளை ஜனநாயகத்துவமாக்கியது 3) கனவு கண்டு, அதை அடையக்கூடிய நம்பிக்கையுள்ள மக்களை உருவாக்கியது.

அரசியல் ரீதியில் திமுக சமூக ஜனரஞ்சக அரசியலின் பிரதிநிதியாகவும், அதிமுக பொருளாதார ஜனரஞ்சக அரசியலின் பிரதிநிதியாகவும் இருந்தாலும், இதில் கலவைகளும் உள்ளன என கூறுகின்றனர். மேலும் தேசிய, சர்வதேச தளத்தில் சமூக ஜனரஞ்சக அரசியலின் வறட்சியின் காரணமாகவே, பொருளாதார ஜனரஞ்சக அரசியலின் மேல் மேலும் அழுத்தம் அதிகரிப்பதாக வாதிடுகின்றனர்.

இந்த நூல் குறிப்பாக சமூக பொருளாதார நலத்திட்டங்களால் உந்தப்படும் தமிழகத்தின் திராவிட வளர்ச்சி முன்மாதிரியை குஜராத், மகாராஷ்ட்ரா மாநிலங்களில் பின்பற்றப்படும் வளர்ச்சிப் பாதைக்கு எதிராக முன் நிறுத்துகிறது. வரும் பகுதிகளில் இந்த நூலின் விமர்சனப் பார்வையை முன் வைக்கிறேன்.

கல்வி:

துவக்கநிலை, இடைநிலை, மேல்நிலை கல்வியில் மற்ற மாநிலங்களை விட ஒப்பீட்டளவிலான சாதனைகளை ஆசிரியர்கள் விவரிக்கின்றனர். மற்ற மாநிலங்களை விட பிற்படுத்தப்பட்ட/தாழத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்தை அழுத்தமாக விவரிக்கின்றனர்.  இருபதாம் நூற்றாண்டில் துவங்கிய கடைநிலை சாதியினரின் ஒருங்கிணைப்பே இந்த வளர்ச்சியின் ஆணிவேராக கண்டறிகின்றனர். மாணவர் சேர்க்கை, கட்டமைப்பு போன்ற பல தளங்களில் சிறந்து விளங்கும்போதும், கல்வியின் தரத்தில் கவலைகள் இருப்பதை ஆசிரியர்கள் அங்கீகரிக்கின்றனர்.

தமிழக கல்வியில் அதீத தனியார்மயத்தை பற்றி பேசும் பொழுது, மத்திய அரசின் நிர்ப்பந்தத்தால்தான் மாநில அரசு தனியார்மயப் படுத்தியது போல குறிப்பிடுகின்றனர். ஆனால் வரலாறு முழுவதிலும் இரண்டு திராவிட கட்சிகளும் மத்திய அரசில் கூட்டணி பங்கு வகித்ததை இது மறைக்கிறது. மேலும் இரண்டு திராவிட கட்சிகளும் தனியார் கல்வி “பிரபு”-க்களோடு கை கோர்த்துக் கொண்டதையும், நிலங்களை மலிவு விலையில் விற்றதையும், அதன் மூலமான நிதியை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதையும் மறந்துவிட்டனர்.

மேலும் கட்டுமான தளத்தில், பெரும்பாலும் 1970களில் துவங்கப்பட்டு அரசால் நடத்தப்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும்  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் வகுப்பினருக்கான பல விடுதிகள் பற்றி குறிப்பிடுகின்றனர். ஆனால் இந்த விடுதிகளின் வாழ்விட தரத்தைப் பற்றியோ, பல சமயங்களில் கவனிப்பின்மை மற்றும் பராமரிப்பின்மை காரணத்தால் நலிந்து, போராட்டங்களுக்கு காரணமாகி உள்ள நிலை பற்றியோ பேசவில்லை. இதே போன்ற விமர்சனம் துவக்க நிலை பள்ளிகள் கட்டமைப்பு குறித்தும் கூட வைக்கலாம். ஏனெனில் ஆசிரியர்கள் அளித்துள்ள தரவுகளை வைத்தே பார்த்தால் கூட, பொதுக் கல்விக்கு கட்டமைப்பு வழங்குவதில் தமிழகத்தை விட குஜராத் சற்றே நன்றாகக் கூட செயல்படுகிறது.

ஜனநாயகத்துவமாக்கப்பட்ட சுகாதாரம்:

சுகாதாரத் துறையிலும், பொது கட்டமைப்பு மற்றும் பிரதிநிதித்துவம் மூலம் தமிழகம் முக்கிய முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆரம்பநிலை மற்றும் நோய் தடுப்பு சுகாதாரம் குறித்த தரவுகள் ஒரு புறம் கேரளாவை விட தமிழகம் பின் தங்கி இருப்பதை காட்டினாலும், மறு புறம் இதர மாநிலங்கள் தமிழகத்தை விட பல மடங்கு பின் தங்கி இருப்பதை காட்டுகிறது. ஆனால் இந்த சாதனைகளுக்கு சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்குவதை விட, இருக்கும் வளங்களை திறம்பட பயன்படுத்தியதே  காரணம் என நூல் ஆசிரியர்கள் வாதிடுகின்றனர்.

அரசு கல்லூரி மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் மருத்துவ துறையின் முதுகலை படிப்பில் உள்ள இட ஒதுக்கீடு மூலம் சுகாதாரத் துறை, அரசுப்பணி கட்டமைப்பு ஆகியவை ஜனநாயகத்துவம் ஆக்கப்பட்டிருப்பதை ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்கள் பொது சுகாதார கட்டமைப்பில் மூன்று ஆண்டுகள் கண்டிப்பாக பணி புரிய வேண்டும். 

சுகாதாரத் துறை அரசுப்பணி கட்டமைப்பு ஜனநாயகத்துவம் ஆக்கப்பட்டிருப்பதன் விளைவாக விளிம்பு நிலை மக்களிடையே நம்பிக்கை பெருகி, மருத்துவ சேவையை நாடுவது அதிகரித்திருப்பதை குறிப்பிடுகின்றனர். கிராமப்புற செவிலியர் ஊக்கத் திட்டமும் குறிப்பிடப்படுகிறது. நிரந்தர பொது சுகாதார துறை உருவாக்கப்பட்டது பற்றியும், முற்போக்கான மருந்து கொள்கை பற்றியும் குறிப்பிடப்படுகிறது.

கல்வி தரவுகள் போலவே, சுகாதார துறை தரவுகளையும் ஆராயும் தேவை உள்ளது. குறிப்பாக ஆரம்ப சுகாதார மையங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ள தரவுகள். பிரசவ அறை உள்ள மையங்கள் (95.4), இரண்டு மருத்துவர்கள் உள்ள மையங்கள் (73.5%), 24 மணி நேரமும் செயல்படும் மையங்கள் (89.3%) விகிதம் எல்லாம் தேசிய அளவை (69%, 26.9%, 39.2%)  விட மிக அதிகமாக உள்ளது என்றாலும், இந்த தரவுகளை சந்தேகத்துடனே தான் பார்க்க வேண்டி உள்ளது.

மேலும் இந்த மையங்களின் சேவை அளிக்கும் திறனையும் கேள்விக்குள்ளாக்க வேண்டி உள்ளது. கோவிட்-19 தொற்று காலத்தில் உண்மை எண்ணிக்கையை விட மிகக் குறைந்த தொற்று எண்ணிக்கை மட்டுமே கணக்கில் காட்டப்பட்டது என்ற உண்மை, இந்த வாதங்கள் மேல் சந்தேகத்தை எழுப்புகின்றன. வெறும் சுகாதார மையங்களை துவங்காமல், அதற்கு கட்டமைப்பு மற்றும் பணியாட்களை அளித்துள்ளதாக ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் திராவிட ஆட்சி வரலாறு முழுமையிலும், “ஜனநாயகத்துவப் படுத்துதல்” என்பது இடைநிலை அரசியல் செயல்பாட்டாளர்கள் மூலமும், நலிவான அதிகாரப் பகிர்வு கொண்ட அரசுப் பணி கட்டமைப்பு மூலமும், கள அளவில் ஒருங்கிணைந்த அரசியல் முன்னெடுப்புகள் மிக நலிவாக உள்ள சூழலிலும் தான் செயல்பட்டு வந்துள்ளது என்பதை மறக்கக் கூடாது. இப்படிப்பட்ட கட்டமைப்பானது தினசரி தேவைகளுக்கு எந்த அளவிற்கு திறம்பட செயல்படுகிறது என்பதை மேலும் ஆய்வு செய்து தான் கண்டறிய வேண்டும்.

ஊரக உற்பத்தி உறவுகளில் மாற்றம்:

இதர பகுதிகள் போல் இல்லாமல், ஊரக பகுதி வளர்ச்சிக்கு நீதிக் கட்சியையோ, பெரியார் இயக்கத்தையோ கூட காரணியாக குறிப்பிடவில்லை. திமுக ஆட்சிக்கு முன்பு 1952ல் திராவிட விவசாய தொழிலாளர் சங்கம் துவங்கப்பட்டது மட்டுமே குறிப்பிடத்தக்க முயற்சியாகும். முனைவர் ஜெயரஞ்சன் அவர்களின் ஆய்வை தழுவி, திராவிட ஆட்சியின் கீழ் நில உறவுகள் கடைநிலை சாதியினர், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு சாதகமாக மாறியுள்ளதாக வாதிடுகின்றனர். குறிப்பாக, 1969இல் இயற்றப்பட்ட விவசாய குத்தகைதாரர்  உரிமை சட்டம் மூலம் அருகாமையில் வசிப்போரின் வாய்வழி சாட்சியம் மூலம் குத்தகைதாரர் உரிமை சட்டமானதையும், மற்றும் 1971இல் இயற்றப்பட்ட வீட்டுமனை பட்டா வழங்கும் சட்டம் குறித்தும் குறிப்பிடுகின்றனர்.

மேலும் ஜெயரஞ்சன்-நாராயணன் ஆய்வை தழுவி, தமிழகத்தில் பாரம்பரிய கிராம அரசு அதிகாரிகளை ஒழித்து, சாதி-வாரி இட ஒதுக்கீடு மூலம் தேர்வாகும் அதிகாரிகளை நியமித்ததனால் குத்தகைதாரர்கள் உரிமை கோரி அரசு அலுவலகங்களை நாடுவது ஜனநாயகத்துவப் படுத்தப்பட்டதாகவும், மேலும் அரசியல் அதிகாரம் மூலம் நிலத்தின் மீதான அதிகாரம் உறுதி அடைந்ததாகவும் வாதிடப்படுகிறது.

ஊரக தொழிலாளர்கள் வேளாண் பணி தவிர இதர பணிகளில் ஈடுபடும் விதம் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மிக அதிகமாக இருப்பது முன்னேற்றத்தின் சின்னமாக முன் நிறுத்தப்படுகிறது. மேலும் பொது விநியோக (நியாய விலை) கட்டமைப்பு மூலம் மக்களின் அன்றாட தேவைகள் திறம்பட பூர்த்தி செய்யப்பட்டதை அழுத்தமாக குறிப்பிடுகின்றனர். இவை பட்டியல் சமூகத்தினருக்கும் சம நீதி பெற்று தந்திருப்பதை குறிப்பிடுகின்றனர்.

ஆனால் திராவிட ஆட்சியில் தலித் மக்களுக்கு எவ்வளவு நிலம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடாமல், இதற்கும் திராவிட நவீனத்துவத்திற்கும் தொடர்பு இல்லை என கோரப்படுகிறது. பெரும்பாலும் விவசாய தொழிலாளர்களாக இருந்த தலித் மக்களை விட, பெரும்பாலும் குத்தகைதாரர்களாக இருந்த பிற்படுத்தப்பட்ட சாதி மக்களே நில முன்னெடுப்புகள் மூலம் பெரிதும் பயன் பெற்றதை ஆசிரியர்கள் குறிப்பிடவில்லை.

ஜெயரஞ்சன் ஆய்வில் கூட, காவிரி டெல்டா பகுதியில் அரசு அதிகாரிகளால் வழிநடத்தப்பட்ட குத்தகைதாரர் சீர்திருத்தத்தால் தலித் மக்கள் பெரிதும் பயன் பெறவில்லை என குறிப்பிடுகிறார். தமிழகத்தின் இதர பகுதிகளில் நில உறவுகள், மேல்மட்ட பிற்படுத்தப்பட்ட சாதியினர், இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர் மற்றும் தலித்களின் பங்கு ஆகியவற்றை ஆய்வு செய்தால் திராவிட ஆட்சி “இடதுசாரி ஜனரஞ்சக” ஆட்சியா என ஆசிரியர்கள் சோதிக்கலாம்.

உண்மையில் திராவிட இயக்கம் புரட்சிகர கோரிக்கைகளுக்கு செவிசாயக்கும் இடதுசாரி ஜனரஞ்சக இயக்கம் எனில் கீழவெண்மணி தலித் விவசாய தொழிலாளர் கோரிக்கைக்கு திறம்பட செயல்பட்டிருக்கும். ஆனால் அதன் “சீர்திருத்த” திட்டத்தில் தலித் மக்களுக்கு கடைசி இடமே.

ஆனால் பேரா. விஜயபாஸ்கரே 2018இல் எழுதிய கட்டுரையில், தமிழக அரசானது தொழில் மூலதனம் மற்றும் சூதாடும் நில வியாபார மூலதனத்திற்கு தன் ஆதரவை மடை மாற்றி, முனைப்புடன் வேளாண் பொருளாதாரத்தை அழிக்கும் அரசு என குறிப்பிட்டார். தலித் மக்களில் ஒரு சிறு பகுதியினர் விளைச்சல்தாரர்கள் ஆகியுள்ளது “ஜனநாயகத்துவம் “என கோருவது தமிழகத்தில் சிறு-குறு விவசாயம் என்பது லாபமாற்ற, கடனில் மூழ்கடிக்கும் தொழிலாக மாறியதை கணக்கில் கொள்ளாத வெற்று வாதமாகும்.

தமிழகத்தின் நிலமின்மை சூழலை விவாதிக்காமல் இருப்பதன் மூலம், ஆசிரியர்கள், ஊரக தொழிலாளர்கள் மட்டுமல்லாமல், ஏதுமின்றி தவிக்கும் நகர்ப்புற இடம்பெயர் தொழிலாளர்களின் அவல நிலையையும் மறைக்கின்றனர்.

மூலதன திரட்சி

2019இல் ஹாரிஸ்-வயட் ஆய்வில் திராவிட அரசியல் நலத்திட்டத்தில் கவனம் செலுத்தி மூலதன திரட்சியை மேல்தட்டு மக்களிடம் விட்டுவிட்டதாக குறிப்பிடுவதற்கு எதிராக ஆசிரியர்கள் வாதிடுகின்றனர். அரசு தலையீடும், அரசியல் ஒருங்கிணைப்பும் மூலதன திரட்சியை ஜனநாயகத்துவப்படுத்தி இருப்பதாக வாதிடுகின்றனர்.

இதில் அவர்கள் மூன்று வழிமுறைகளை கண்டறிகின்றனர் – 1) தொழில்துறை திறன் பெருக்கல் பண்பு பரவலாதல் மற்றும் தொழில்துறை வளர்ச்சியே சமூக கட்டமைப்புகளை உடைக்கும் வழி என்ற நம்பிக்கை 2) சமூக மற்றும் கள கட்டமைப்புகளில் முதலீடு 3) தொழில்/சேவை துறை  வளர்ச்சி நோக்கிய முனைப்பான கொள்கைகள்.

தமிழக தொழில் நிறுவனங்கள் குஜராத்/ மகாராஷ்ட்ரா ஒப்பிடுகையில் பல்வேறு இடங்களிலும், பலதரப்பட்ட துறைகளிலும் பரந்து விரிந்து இருப்பதை குறிப்பிடுகின்றனர். இது தமிழக தொழில் வளர்ச்சியானது எந்திர சார்பை விட மனித உழைப்பு சார்ந்ததாக இருப்பதை காட்டுகிறது. கட்டமைப்பு வசதிகள், குறிப்பாக சாலைகள், பொது போக்குவரத்து, மின் ஆற்றல் (குறிப்பாக புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றல்) போன்றவற்றில் தமிழகம் அடைந்த முன்னேற்றங்களை விவரிக்கின்றனர்.

சாதிவாரி நிறுவன உடமை தமிழகத்தில், குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் பரந்துபட்டு இருப்பது குறிப்பிடப்படுகிறது. 100 தொழிலாளர் மேல் உள்ள ஆலைகளின் உடமையாளர்களில் தமிழகத்தில் 68% பிற்படுத்தப்பட்டோர். இது குஜராத் (11%), மகாராஷ்ட்ரா(8%)-வை விட பன்மடங்கு அதிகம். ஆனால் தலித் வகுப்பினர் மத்தியில் உடமை தமிழகம் (5.8%) குஜராத் (6%) இரண்டிலும் மிகக் குறைவாக உள்ளது. மகாராஷ்ட்ராவில் சற்றே அதிகம் (12.1%).

DICCI தொழிலதிபர் கூட்டமைப்பின்படி தமிழகத்தில் தான் தலித் தொழில் முனைவோர் விகிதம் மிக அதிகம் என ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இது தாராளமயமாக்கல் காலத்தின் பின் நிகழ்ந்த வளர்ச்சியாக இருக்கக் கூடும். தரவுகள் அளிக்காமல், ஓரு சில ஆதாரங்கள் மூலம், பாரம்பரியமாக வர்த்தகத்தில் ஈடுபடாத இடைநிலை சாதியினர் பலர் தொழில் துறையில் தடம் பதிப்பதாக ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். 

ஆனால் இந்த பகுதியில் ஆசிரியர்களின் ஆய்வு முறையில் ஒரு பெரும் சிக்கல் காணப்படுகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் காந்திய வழி கிராமப்புற தொழில்களுக்காக குரல் கொடுத்ததாகவும், நீதிக் கட்சி மற்றும் பிராமணர் அல்லாதோர் இயக்கமே தொழில் பயிற்சி மற்றும் தொழில்மயமாக்கலுக்கு வாதிட்டதாகவும் குறிப்பிடுகின்றனர். ஆனால் இதை உறுதி செய்ய மேலும் ஆதாரங்கள் வேண்டும். ஏனெனில் காங்கிரஸ் சொல்வதற்கும் செய்வதற்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளது. மேலும் மேல்தட்டு சாதி தொழிலதிபர்கள் மட்டுமன்றி, நாடார் தொழிலதிபர்கள் கூட காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்துள்ளனர். குறிப்பாக காங்கிரஸ் காந்தியிசம் மேலோங்கி இருந்த குஜராத்-மகாராஷ்ட்ராவில் தொழில் துறை வளர்ச்சி காங்கிரஸ் செயல்பாட்டை தெளிவாக காட்டுகிறது. மேலும் தமிழகத்தில் மூலதன குவியலை வெகுவாக ஆதரித்த ராஜாஜி தான் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கட்சியை வழி நடத்தியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 நகர்ப்புற உழைப்பு

நகர்ப்புற உழைப்பு பற்றிய பகுதி நகர்ப்புற உழைப்புச் சந்தையில் நேர்ந்த அமைப்புசார் மாற்றங்கள் மற்றும் உடன் நிகழ்ந்த வறுமை ஒழிப்பு பற்றி தெளிவாக விவரிக்கின்றது. பெண்கள் உழைப்புச் சந்தையில் பங்கேற்கும் விகிதம், வேலைவாய்ப்பின் திறன் ஆகியவை குஜராத்/மகாராஷ்ட்ரா மாநிலங்களை விட அதிகமாக இருப்பதை குறிப்பிடும் அதே வேளையில், முறைசாரா நிலைத்தன்மையற்ற, வேலைவாய்ப்பு ஆதிக்கம் செலுத்துவதை ஒப்புக்கொள்கிறது.1990 களுக்கு பிறகு சேவைத் துறை தனியார்மயம் விரிவடைந்து, தனியார் வேலைவாய்ப்பு அதிகரித்த போதும், உயர்கல்வியில் கடைப்பிடிக்கப்பட்ட பிரதிநிதித்துவம் தனியார் வேலைவாய்ப்பில் பரந்துபட்ட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை குறிப்பிடுகிறது. எனினும் மேல்தட்டு சாதியினர் ஆதிக்கம் தொடரவதையும் உரைக்கிறது.

தகவல் தொழிற்நுட்ப துறையின் ஒரு எடுத்துக்காட்டைக் கொண்டு, இந்த துறையில் கடைநிலை சாதியினர் பங்கேற்பு அதிகரிப்பதை விவரிக்கின்றது. இந்த துறையில் தலித் மக்கள் நிலை குறித்து பெரிதும் பேசாத போதும், இந்நிலை மிக மோசமாக இருக்க வாய்ப்பில்லை என வாதிடப்படுகிறது.

தொழிற்சங்கங்களின் பங்கெடுப்பு, மற்றும் அவர்களுக்கு செவி கொடுக்கும் அரசின் தன்மையையும் ஆசிரியர்கள் விவரிக்கின்றனர். தொழிற்சங்க தலைவர்களுடனான நேர்காணல் மூலம், தொழிலாளர்கள் நிர்வாகத்தை ஆலையில் எதிர்கொள்வதை விட, அரசிடம் கோரிக்கை வைப்பதையும், மூலதனத்தை நீதிமன்றத்தில் எதிர்ப்பதையுமே விரும்புவது தெரிகிறது. தொழில் தகராறு சட்டத்தில் உட்பிரிவு 10B-ஐ தமிழக அரசு சேர்த்துள்ளதன் மூலம் தொழில் தகராறுகளில் அரசு தற்காலிக நிவாரணம் அளிக்கவும், குறிப்பாக சூழ்நிலை நிவர்த்தி அடையும் வரை தொழிலாளர்களுக்கு நிவாரண ஆதரவு வழங்கவும் அரசிற்கு அதிகாரம் அளிக்கிறது.

மேலும் ஆலைகளில் கூலியில்லா பயிற்சியாளர்களை நியமிப்பதை கட்டுப்படுத்தும் சட்டமும் இயற்றப்பட்டுள்ளது. தொழில் தகராறுகளில் நிஜத்தில் அரசு எவ்வாறு நடந்து கொண்டுள்ளது என்பதை மேலும் ஆய்வு செய்தால் தான் தொழிலாளர்-முதலாளி உறவில் தமிழக அரசின் பங்கு முழுமையாக புரியும். 

எனினும் இங்கு ஆசிரியர்கள் தமிழகத்தில் LPF தொழிற்சங்கத்தை இடதுசாரி தொழிற்சங்கங்களுடன் சேர்த்து அதன் பங்கை கள்ளத்தனமாக மிகைப்படுத்தி காட்டுகின்றனர். இடதுசாரி தொழிற்சங்ககள் திராவிட ஆட்சி காலத்தில் சமரசமின்றி பல போர்க்குணம் மிக்க போராட்டங்களை முன்னெடுத்தும், அதனால் திராவிட கட்சிகளுடனான கூட்டணியை முறித்துக் கொண்டும் போராடியதை போதுமான அளவு குறிப்பிடவில்லை. தேர்தல் வெற்றியை பொறுத்தே திமுக-அதிமுக தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கை மாறும் என்பதையும் விட்டு விட்டனர்.

அரசு இந்த துறையில் தலையிடுவது சிரமமாக கருதுவதால், வேலையிடத்தின் வெளியே மக்கள் நலத்திட்டங்களில் கவனம் செலுத்துவதாக வாதிடுகின்றனர். 1975இல் திமுக ஆட்சியில் முறைசாரா தொழிலாளர் குறித்த ஒரு குழு அமைத்த பின் முறைசாரா தொழிலாளர்களுக்கு நல்வாழ்வு ஆணையம் துவங்கப்பட்டது குறித்தும், பல்வேறு நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது குறித்தும் விவரிக்கின்றனர்.

ஆனால் இந்த நலத்திட்டங்கள் எல்லாம் திராவிட இயக்கத்தின் குறிப்பட்ட பாணி ஒருங்கிணைப்பால் தான் சாத்தியமானது என வாதிடுகின்றனர். பாரம்பரிய இடதுசாரி கட்சிகள், தொழிற்சங்கங்களின் “அரசியல்” இடதுசாரி அணிதிரட்டலுக்கு மாறாக, அனைத்து ஏழை மக்கள் இடையே ஒற்றுமை பாராட்டும் திராவிட இயக்கத்தின் “சமூக” இடதுசாரி அணிதிரட்டல் தான் இதைச் சாத்தியமாக்கியதாக வாதிடுகின்றனர்.

ஆனால் பணியிட நடைமுறைகள் பற்றி அசிரியர்கள் பேசவில்லை. “சுமங்கலி” தொழிலாளர் என்ற பெயரில் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் போன்ற மேற்கு மாவட்டங்களில் பெண்கள் பின்னலாடை ஆலைகளில் பணியமர்த்தப்படுவது குறித்து பேசவில்லை. புறநகர், ஊரக பகுதிகளில் பணியமர்த்தப்படும் இளம் பெண்கள் இந்த வேலை முறை மூலம் கடுமையாக சுரண்டப்படுவதோடு, கொத்தடிமை போன்ற நிலையில் வாழ்கின்றனர்.

இந்த முறை குறித்த தரவுகள் பல ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் வெளி கொண்டுவரப்பட்டாலும், இதில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அளவிடும் வழிகள் ஏதும் இல்லை. இத்துறையில் இது போன்ற விமர்சனங்கள் எழும்போது நிறுவனங்கள் சில ஆலைகளில் மாற்றங்கள் செய்து, NGO-க்கள் பார்வையிட அனுமதித்தாலும், உண்மை நிலையை விமர்சிக்க பொதுமக்களுக்கோ தொழிற்சங்கங்களுக்கோ வழிகள் இல்லை.

மேற்கு மாவட்டங்கள் மற்றும் இருளர் சமூகம் மத்தியில் பல பன்னாட்டு ஆய்வாளர்களின் ஆய்வு, பல அடிமை நிலை போன்ற, கொடுமையான கொத்தடிமை நிலை போன்று கூட, தமிழக பணியிடங்களில் நிலவும் அவல நிலை வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் திராவிட ஆட்சி காலத்தில், மனிதக் கழிவை மனிதனே அள்ளும் அவல நிலையில் தமிழகமே பெரும்பாலும் மோசமான நிலையில் இருப்பதை ஆசிரியர்கள் மறக்கின்றனர்.

மேலும் “குடிசை மாற்று” குறித்த வாதங்களும் சிக்கலானவையே. பெரும்பாலும் இந்த மக்கள் சுகாதாரமற்ற, கால்வாய்க்கு அருகாமை இடங்களுக்கோ, பொது கட்டுமான வசதியின்றி நகரின் விளிம்பு பகுதிகளுக்கோ மற்றப்படுவது தொடர் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்த புத்தகத்தில் ஆசிரியர்கள் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தின் சாதனைகளை குறிப்பிடும் அதே வேளையில், இந்த அரசியல்-பொருளாதார பாதையின் குறைபாடுகளை முன்வைக்கவும் தவறவில்லை. புத்தகத்தின் கடைசி பகுதியில் திராவிட முன்மாதிரியின் பிழைகள், குறைபாடுகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் விவாதிக்கப்படுகிறது.

கல்வியின் தரம் தாழ்ந்து இருப்பதன் காரணத்தால் குறைந்த ஊதியம் ஈட்டும் வேலைவாய்ப்புகளே கிடைத்து, இதனால் ஊதிய ஏற்றத்தாழ்வு அதிகரித்து, வருமான ஏற்றத்தாழ்வை கூர்மை படுத்துவதை அங்கீகரிக்கின்றனர். மேலும் தனியார் கல்வி, மருத்துவ சேவைகள் மக்களின் கைக்காசை கரைப்பதையும், கடனில் ஆழ்த்துவதையும் குறிப்பிடுகின்றனர்.சுகாதார துறையில், NEET முறை புகுத்தல் அரசு பள்ளி மாணவர்களை விளிம்பு நிலைக்கு தள்ளும் ஆபத்தை குறிப்பிடுகின்றனர்.

உழைப்பு உறவுகளை பொறுத்த வரையில், வேளாண்மைக்கு வெளியே உள்ள கணிசமான அளவு வேலைவாய்ப்பு மோசமான தரத்தில் இருப்பதையும், பணியிடத்தில் பாலின  பாகுபாடு திகழ்வதையும் ஒப்புக்கொள்கின்றனர்.

தமிழக ஊரக பகுதிகளில் பொருளாதார ஏற்றத்தாழ்வு குறைந்தாலும், நகர்ப்புற பகுதிகள் சாதிய பாகுபாடுகளை மறு புதுப்பிப்பு செய்வதை பற்றி கூறுகின்றனர். இதற்கு இரண்டு காரணங்களை கண்டறிகின்றனர் – சேவைத்துறையில் கல்வியின் தரம் குறைவாக இருப்பது மற்றும் மேல் தட்டு சாதியினர் வாய்ப்புகளை “பதுக்கி” வைத்துக்கொள்வது. மேலும் பட்டதாரிகள் மத்தியில் வேலையின்மை அதிகரிப்பது குறித்தும் குறிப்பிடுகின்றனர்.

மேலும் ஊழல், மணல் சுரண்டும் மற்றும் நில-கட்டட தொழில்களில் ஈடுபடும் ரவுடி கும்பல்களின் அரசியல் நிதி போன்றவற்றின் தாக்கத்தையும் ஆசிரியர்கள் உணர்கின்றனர். ஆனால் முக்கியமாக, பொருளாதாரத்தில் “உபரி தொழிலாளர்கள்” காலப்போக்கில் வளரும் தொழில் துறையில் உள் வாங்கிக்கொள்ளப்படுவார்கள் என்ற அனுமானத்துடன் தமிழகம் முன்னெடுக்கும் வளர்ச்சிப் பாதை நிறைவேறாமலே போக வாய்ப்புள்ளதையும் ஆசிரியர்கள் அங்கீகரிக்கின்றனர்.

இறுதியாக

நரேந்திரா சுப்பிரமணியம் அவர்களின் திராவிட ஆட்சி கால ஜனநாயகம் குறித்த புத்தகத்திற்கு பிறகு, இப்புத்தகம் திராவிட நலத்திட்டம், அரசியல் குறித்த ஒரு முக்கியமான முன்னெடுப்பு. பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட சாதியினரை அடிப்படையாகக் கொண்ட அணிதிரட்டல், சமூக-பொருளாதார வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்தல்,  குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை உறுதி செய்தல் ஆகியவை முதலாளித்துவ திரட்சி முறைக்குள்ளும் சாத்தியம் என வாதிடுகிறது.

வளர்ச்சி குறித்த ஆய்வில் இந்த புத்தகம் பல விவாதங்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த புத்தகத்தின் ஆய்வில் பல குறைபாடுகள் இருப்பது இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

நூறு ஆண்டு கால திராவிட அரசியலையும், சமகால தாக்கத்தையும் ஒரு இயக்கத்தின் கீழ் இந்த புத்தகம் அளிக்கின்றது. இதன் மூலம் தமிழகம் கடந்த பத்து ஆண்டுகளில் அடைந்த முன்னேற்றம் அனைத்திற்கும் மொத்த திராவிட இயக்க வரலாற்றையும் காரணி ஆக்குகின்றது. ஆனால், சமூக மாற்றத்தை கொள்கையாக கொண்ட திராவிட இயக்கம், பரந்துபட்ட நில சீர்திருத்தத்திற்கு பல முறை வாக்குறுதி அளித்த போதும் அதை நிறைவேற்றாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

நில சீர்திருத்தம் வெறும் இடதுசாரி புரட்சிகர செயல்பாடு அல்ல. பல கிழக்கு, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இது செயல் படுத்தப்பட்டுள்ளது. சொத்து அடிப்படையிலான ஏற்றத்தாழ்வை சாதிய பாகுபாட்டின் முக்கிய அம்சமாக திராவிட இயக்கம் கருதவில்லை என வாதிட முடியாது. அவர்கள் கருதாததால் சொத்துடமை தமிழகத்தில் சமூக அதிகாரத்தை நிர்ணயிப்பது பொய்யாகி விடாது.

இந்த புத்தகத்தின் தரவுகளின்படி கூட, 1990களுக்கு முன்பிருந்தே பல குறியீடுகளில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் 1990களுக்கு பின்னர் மாநிலத்தின் வளர்ச்சி வேறு பரிமாணத்தை அடைந்தது. இங்கு தான் அந்த கால கட்டத்தின் அரசியல் நிதர்சனத்தை ஆராய வேண்டும். 1990-கள் துவக்கம் முதல் மத்திய பகுதி வரை இந்த இரு கட்சிகளின் தலைவர்களின் நாணயம் கேள்விக்கு ஆளானது. ராஜீவ் காந்தி மரணத்தின் பின் திமுக நம்பகத்தன்மையை இழக்க, ஊழல் மற்றும் சுயநலத்தின் சின்னமானார் ஜெயலலிதா.

1996 தேர்தலுக்கு முன் ஜெயலலிதா அவர்கள் பெரும் ஊழல் வழக்கில் சிக்கிய போதும், கலைஞர் அவர்கள் மக்களின் ஆதரவை வென்றெடுக்க ரஜினிகாந்த் துணை தேவையாக இருந்தது. 2000களில் திமுக மீது ஊழல் வழக்குகளும், வளர்ச்சி திட்டங்களில் உள்ளூர் திமுக பிரமுகர்கள் கொள்ளை அடித்த குற்றச்சாட்டுகளும் எழுந்தன. “பொருளாதார” ஜனரஞ்சக அதிமுக தான் 20ஆம் நூற்றாண்டின் திராவிட காலத்தின் பெரும் பகுதியை ஆண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலதன திரட்சியில் இதர இரண்டு மாநிலங்களை விட தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர்-தாழ்த்தப்பட்டோர் முன்னேறி உள்ளதாக சொல்லும் வாதமும் ஆராய வேண்டி உள்ளது. “மராத்தா” மற்றும் “படேல்” வகுப்பினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதில் குளறுபடி உள்ளதால், அவர்களை புறந்தள்ளி இந்த தரவை பார்க்க முடியாது.

இதே போல் “கவுண்டர்” போல சில சாதிகள் தமிழக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதும் குளறுபடி உண்டாக்குகிறது. ஆனால் இதுவும் கூட முழு உண்மையை கூறாது. எண்ணிக்கை அளவில் குறைவாக உள்ள பிற்படுத்தப்பட்ட-தாழ்த்தப்பட்ட சாதியினர் எவ்வளவு முன்னேறி உள்ளனர் என ஆய்வு செய்தால் தான் மனிதத்தன்மையாற்ற சாதிய உறவுகளை மாற்ற எடுக்கப்பட்ட முனைப்பான முன்னெடுப்புகள் தெரிய வரும்.

அப்படிப்பட்ட ஆய்வு தான் ஒடுக்கப்பட்ட சாதியினர் நோக்கிய திராவிட அரசுகளின் நடவடிக்கைகள் கடைநிலையில் இருந்து வந்த அழுத்தத்தால் நேர்ந்ததா இல்லை “இடைநிலை”, மேல்மட்ட சாதியினர் மேலே செல்லும் விருப்பத்தால் நேர்ந்ததா என தெரியவரும். இல்லையென்றால் திராவிட இயக்கமானது பிரிவினைவாத கோஷங்களுடன் வந்த சிறு முதலாளிகளின் இயக்கமாக வந்து, பின் நவீன தாராளமய ஆட்சியாக மாறி, அதன் அதிகாரத்தை தக்க வைக்க நலத்திட்டங்களையும், 90 கள்-2000-களில் கிடைத்த கூட்டணி தேர்தல் அரசியலின் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்ட இயக்கம் எனவே வரையறுக்க முடியும்.

முக்கியமாக, நவீன தாராளமய காலத்தில் ஏற்பட்ட பல நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிகளின் மொத்த திராவிட அரசியலை சுட்டிக் காட்டியதே இந்த புத்தகத்தின் மீதான மிகப்பெரும் விமர்சனம்.இரு கட்சிகளுமே மாநிலத்தின் முதலாளி-அரசியல்வாதிகளின் நலனை முன்னெடுத்து செல்லும் வாகனங்கள் என்பதை மக்கள் உணர்வது அவசியம்.

குறிப்பாக இட ஒதுக்கீடு 69%-ற்கு நீட்டிக்கப்பட்ட பின் இட ஒதுக்கீடு அரசியல் வறட்சி அடைந்த காலத்தில் இது முற்றிலும் உண்மை. மேலும் தலித் மக்கள் வாழ்நிலை முன்னேற்றங்களுக்கு மாநில அரசியலில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களும் காரணம். இந்த காலம் “கனவு காணக் கூடிய” காலமாக மட்டும் இல்லாமல், திராவிட கட்சிகளுடன் “பேரம் பேசக் கூடிய” காலமாகவும் இருந்தது.

திராவிட அரசியல் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு சமமாக தலித் மக்களை பாவித்தது என ஆசிரியர்கள் விடாப்பிடியாக கூறுகின்றனர். ஆக, தலித் மக்கள் மீதான அநீதியை விவரிக்கையில், தலித் மக்களால் இவை அநீதியாக பாவிக்கப்பட்டதாக விவரிக்கின்றனர். இது குறித்த விமர்சனத்தை நாம் கூறியுள்ளளோம்.

பெரும்பாலும் தலித் மக்கள் இரண்டில் ஒரு கட்சியுடன் (பெரும்பாலும் குறைந்தபட்ச திராவிடமாக இருக்கும் அதிமுக) தங்களை இணைத்துக் கொண்டதால், திராவிட ஆட்சி “இடதுசாரி ஜனரஞ்சக” தன்மையை அடைந்ததாக ஆசிரியர்கள் அனுமானித்துக் கொள்கின்றனர். தமிழக அரசு நிச்சயம் ஜனரஞ்சகவாத அரசு தான். ஆனால் “இடதுசாரி” என வரையறுக்க கோஷங்கள் மட்டுமின்றி செயலிலும் நிறுவ வேண்டும். 1980-90 களில் ஆய்வாளர்கள் திராவிடம் தலித் மக்களுக்கு எதிரானது என வாதிட்டதை எதிர்க்க இங்கு ஆசிரியர்கள் வெறும் தலித் விடுதலைக்கு ஆதரவாக பெரியார் சொன்ன கூற்றுக்களை மேற்கோள் காட்டுகின்றனர். தலித் மக்கள் தேவையை பூர்த்தி செய்வதில் குறைகள் இருந்தால் அதற்கு மத்திய-மாநில உறவுகளும், நவீன தாராளமயமும் தான் காரணம் என்கின்றனர். ஆனால் திராவிட அரசியல் தலித் மக்களை சமமாக பாவித்தது என காட்ட எந்த ஆதாரமும் இல்லை என்பது தான் உண்மை.

மேலும் உண்மையிலேயே திமுக 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் “இடது ஜனரஞ்சக” அரசியல் தான் கட்டி அமைத்ததென்றால், எம். ஜி. ஆர் அதீத அநியாயம் இழைத்த பின்னும் “ஜனம்” திமுக-வை ஏன் ஆட்சி பொறுப்பிலிருந்து பெரும்பாலும் வெளியே வைத்தது என்ற கேள்வியும் எழுகிறது. எம். ஜி. ஆர் காலத்தில் எதிர்க்கட்சியான திமுக தன் “இடதுசாரி” பண்பை எவ்வாறு வெளிப்படுத்தியது?

திராவிட பொதுபுத்தி என்பது அரசியலின் பொதுவான அம்சங்கள் தான், தனி கட்சிகளின் பண்புகள் அல்ல என்று சொல்லி ஆசிரியர்கள் தப்பித்து கொள்ள முடியும். ஆனால் இந்த புத்தகத்தில் பெரும்பாலும் திமுக-வை “சமூக இடது ஜனரஞ்சக” கட்சியாக காட்டவே ஆசிரியர்கள் பெரிதும் முயற்சி செய்துள்ளனர்.  ஆனால் இதே பாணியில் அணுகி அவர்களோ, நாமோ நிச்சயம் அதிமுக-வை  “பொருளாதார இடது ஜனரஞ்சக” கட்சியாக பாவிக்கவே மாட்டோம்.

நூலின் பெயர்: திராவிட   முன்மாதிரி (2021)

எழுதியோர்: கலையரசன், விஜயபாஸ்கர்

(கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக வெளியீடு)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s