மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


மார்க்சிய தத்துவ போராட்டத்தை முன்னெடுக்கும் வழிமுறைகள் !


குரல்: பூங்கொடி மதியரசு

(கொல்கத்தா பிளீனம் ஆவணத்தில் இருந்து)

மக்களிடத்தில் அரசியல் தத்துவார்த்த இயக்கம் நடத்துவது மிகவும் முக்கியமானதாகும். கட்சி உறுப்பினர்களின் தத்துவார்த்த புரிதலை உயர்த்துவது அணிகளுக்கு ஊக்கம் கொடுத்து கட்சிக்கு வலிவும் பொலிவும் கொடுக்கும்.

  • கட்சி உறுப்பினர்களின் தத்துவார்த்த மட்டத்தை உயர்த்துவது என்பது தத்துவார்த்தப் பணியின் மற்றொரு அம்சமாகும். அதற்குக் கட்சிக்குள்ளும், கட்சி பிராக்சன் மூலம் வெகுஜனஅமைப்புக்குள்ளும் தத்துவார்த்த கல்வி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
  • கட்சியும் வெகுஜன அமைப்புகளும் நடத்தும் இயக்கங்கள், போராட்டங்களுக்குள் ஈர்க்கப்படும் மக்களிடமும் நமது தத்துவார்த்த போராட்டத்தை நடத்த வேண்டும். அவ்வாறே அவர்களை நம் கட்சியின் உணர்வுப்பூர்வமான ஆதரவாளர்களாக மாற்ற முடியும்.
  • நவீன தாராளமயம் என்பது பொருளாதாரக் கொள்கை தளத்தில் மட்டும் நிலவுவது அல்ல; அது அனைத்து சமூக, பண்பாட்டுத் தளங்களிலும் விரவி நிற்கும் முதலாளித்துவ வர்க்கக் கண்ணோட்டம் ஆகும். ஆகவே, நவீன தாராளமய கொள்கைகளின் மூலம் வெளிப்படும் முதலாளித்துவ தத்துவங்களை எதிர்த்து தொடர்ந்த போராட்டங்களை நடத்த வேண்டும்.
  • சமூகத்தில் தற்போது ஆழமாகப் பதிந்து கொண்டிருக்கிற ‘இந்துத்துவா’ மற்றும் இதர பல வகுப்புவாத வடிவங்களை எதிர்த்தும் தத்துவார்த்த போராட்டம் நடத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. சாதி வேற்றுமை, பிரதேச வெறி, பிரிவினைவாதப் போக்குகளை வளர்த்தெடுக்கும் குறுகிய அடையாள, குறுங்குழுவாதத் தத்துவங்களை எதிர்த்தும் தத்துவார்த்த போராட்டத்தை நடத்த வேண்டும்.
  • கட்சியின் அணிகள், தத்துவார்த்த பிரச்சனைகளை முழுமையாக உள்வாங்கி அந்தப் போராட்டத்தை மக்களிடையே முன்னெடுத்துச் செல்லும் தகுதியினை அளிப்பதாக கட்சிக் கல்வி இருக்க வேண்டும்.
  • கிளர்ச்சி – பிரச்சாரக் குழு, கட்சி கல்விக் குழு, கட்சி இதழ் மற்றும் பிரசுரங்களுக்கான குழு ஆகியவை தங்கள் பணிகளை ஒருங்கிணைத்து தத்துவார்த்த போராட்டத்திற்குப் பங்காற்ற வேண்டும்.
  • கட்சி அணிகள், ஒரு பக்கம் கிளர்ச்சிக்கும் பிரச்சாரத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டினையும் மறுபக்கத்தில் தத்துவார்த்த போராட்டத்திற்கும், பிரச்சார இயக்கத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டினையும் புரிந்து கொள்ளுமாறு பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

இளைய தலைமுறையினை ஈர்த்தெடுக்கும் வகையில் சோசலிச கண்ணோட்டம் குறித்த பிரச்சாரம் இருக்க வேண்டும். துணைக்குழுக்களும், பிராக்சன் கமிட்டிகளும் தத்துவார்த்த கல்வி குறித்து திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.

  • இந்திய சூழலில் எப்படி சோசலிச சமூகம் உருவாக முடியும் என்பதை படைப்பாற்றலுடன் விளக்கிட வேண்டும். இளைய தலைமுறையினைக் கவர்ந்திட சோசலிச அமைப்பு பற்றிய பார்வையினை இன்றைய இந்திய சூழலில் விளக்கிச் சொல்வது மிக முக்கியமான பணியாகும்.

நிரந்தர பள்ளி. கட்சிக் கல்வி குறித்து ஆண்டு திட்டம் மாநிலங்களில் உருவாக்க வேண்டும். அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் குறைந்த பட்சம் 4 தலைப்புகளில் வகுப்பு. வகுப்பெடுக்கும் முறை, பாடத்திட்டங்களின் தரத்தை உயர்த்துவது ஆகியன வேண்டும்.

  • ஒரு மத்திய ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கப்பட வேண்டும். அது இந்திய சமூகத்தின் பல்வேறு அம்சங்களை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்து, கட்சிப்பணிகளுக்கு தத்துவார்த்த ரீதியான ஆதரவு பலத்தை அளிக்கும்.
  • கட்சி பல்வேறு மட்டங்களில் அறிவியலாளர்கள், பண்பாட்டுத் தளங்களில் செயலாற்றுவோர் மற்றும் முற்போக்கான கண்ணோட்டத்துடன் செயல்படுவோர் ஆகியோருடன் இணைந்து செயலாற்ற வகை செய்யும் அமைப்புகளை உருவாக்க வேண்டும்.
  • அனைத்து மட்டங்களிலும் கட்சி உறுப்பினர்களுக்குக் கட்சி கல்வி அளிப்பது ஸ்தாபன பணியுடன் ஒன்றிணைந்த கடமையாகும். உறுப்பினர்களின் தத்துவார்த்த-அரசியல் மட்டத்தை உயர்த்துவது என்பது எந்த அளவிற்கு அவர்கள் ஸ்தாபன நடவடிக்கைகள் மற்றும் வெகுமக்கள் போராட்டங்கள் ஆகியவற்றின் அனுபவங்களை உள்வாங்கிக் கொள்கின்றனர் என்பதை சார்ந்துள்ளது. இதில், கட்சி கல்வியின் தரம் முக்கியமான காரணம்.
  • கட்சியின் அனைத்து மட்டங்களிலும் ஊழியர்களுக்குக் கட்சி கல்வி முறையாகவும் திட்டமிட்டதாகவும் இருக்கவேண்டும்.
  • அனைத்து கட்சி உறுப்பினர்களையும் கட்சி கல்வி சென்றடையும் வகையில் குறைந்தபட்சம் நான்கு தலைப்புகளில்

1) கட்சி திட்டம்

2) மார்க்சீய தத்துவம்

3) அரசியல் பொருளாதாரம்

4) கட்சி அமைப்புச்சட்டம் மற்றும் ஸ்தாபனம்

கட்சி அரசியல் கல்வி தரப்பட வேண்டும்.

  • பல இடங்களில் கட்சி கல்வி அதிகபட்சமாக ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் நிலையில், படிப்பு வட்டங்களை முறைசார் கட்சிக் கல்விக்கு வலுசேர்க்கும் விதத்தில் பயன்படுத்தலாம்.
  • பயிற்றுவிப்பு முறைகளை மேம்படுத்துவது ஒரு பொது தேவையாக உள்ளது. குழு விவாதங்கள், பரஸ்பர கருத்து பரிமாற்றங்கள், காணொளி – கேட்பொலி முறைகள், பவர்பாய்ன்ட் பயன்படுத்தும் உரைகள் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
  • பாடத்திட்டத்தை வடிவமைக்கும்பொழுது வர்க்கம், சாதி மற்றும் சமூக ஒடுக்குமுறை சார்ந்த பிரச்சினைகள், ஆணாதிக்க முறைமை, பாலின ஒடுக்குமுறை ஆகியவை தொடர்பான பாடங்கள் இருப்பது அவசியம்.

வகுப்புவாத, பிற்போக்கு, பழமைவாத சக்திகளை எதிர்கொள்ள பண்பாட்டு அமைப்புகள், மேடைகளை உருவாக்கி பல்வேறு நீரோட்டததில் உள்ள கலைஞர்களையும், பண்பாட்டுத்துறை பிரமுகர்களையும் அந்த மேடைகளில் ஒருங்கிணைக்க வேண்டும்; புதிய தாராளமய, கார்ப்பரேட் முன்வைக்கும் பண்பாட்டு விழுமியங்களுக்கு மாற்று ஒன்றினை முன்வைக்க வேண்டும்.

  • எழுத்தாளர்கள், கலைஞர்கள், பண்பாட்டு தளத்தில் பணியாற்றுபவர்கள் ஆகியோரை ஒருங்கிணைக்கும் பண்பாட்டு அமைப்புகளை, மேடைகளை வளர்த்தெடுக்க வேண்டும். வகுப்புவாத, பிற்போக்குத்தனமான, பழமைவாத சக்திகளைப் பண்பாட்டுரீதியில் எதிர்கொள்ளும் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்; அதேசமயம் புதிய தாராளமயம், கார்ப்பரேட் முன்வைக்கும் பண்பாட்டு மதிப்பீடுகளுக்கு எதிரான மாற்று ஒன்றினையும் நமது பண்பாட்டு அரங்கம் முன்வைக்க வேண்டும்.

‘இந்துத்துவா’ மற்றும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக தத்துவார்த்த, பண்பாட்டு, சமூக தளங்களில் நமது போராட்டத்தை நடத்த வேண்டும். வகுப்புவாதத்துக்கு எதிராகக் கூட்டு மேடைகளை அமைக்க வேண்டும். கட்சியின் அறிவு வளங்களை பயன்படுத்தி வகுப்புவாதத்திற்கு எதிரான இயக்கத்திற்கான அரசியல் – தத்துவார்த்த கருத்துதாள்களை வெளியிட வேண்டும். ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிகளுக்கு மாற்றாக, மதச்சார்பற்ற மழலையர் பள்ளி, இதர பள்ளிகளை அமைக்க வேண்டும்.

  • (1) இந்துத்வா மற்றும் ஏனைய வகுப்புவாத சக்திகளின் பிற்போக்கு, பிரிவினை கொள்கைகளைத் தோலுரிக்கும் சித்தாந்த, அரசியல் பிரச்சார கருத்து தாள்கள் பொது மக்களை ஈர்க்கும் நடையில் தயாரிக்கப்பட வேண்டும். அறிவுஜீவிகள், வரலாற்றாசிரியர்கள், கலாச்சார நிபுணர்கள் ஆகியோரை வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான சித்தாந்தப் போராட்டத்தில் ஈடுபடுத்த கட்சியின் அறிவு வளங்கள், ஆராய்ச்சி மையங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
  • (2) கல்வித்துறையில் பள்ளி பருவத்துக்கு முந்தைய கல்வி நிலையான மழலையர்பள்ளிகளிலும், பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் உதவியுடன் முன்முயற்சிகளை எடுக்க வேண்டும்.
  • (3) கட்சியும், தொழிற்சங்கங்களும் தொழிலாளி வர்க்கத்திடையேயும், அவர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளிலும் சமூக, கலாச்சார நிகழ்ச்சிகள் மூலமாக மதச்சார்பற்ற, அறிவியல் அணுகுமுறைகளை வளர்த்தெடுக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
  • (4) வகுப்புவாத சக்திகள் ஆபத்தான, சாதிய ரீதியான, பிற்போக்குத் தனமான மதிப்பீடுகளை சமூகத்தில் புகட்டுவதற்கு எதிராக கலாச்சார மற்றும் அறிவியல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்கள் அறிவியல் இயக்கத்தின் பணிகள் இந்த நோக்கத்திற்காகமுடுக்கி விடப்பட வேண்டும்.
  • (5) ஆதிவாசி, தலித் பிரிவினரிடம் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் நடத்தும் பன்முகப்பட்ட செயல்களை முறியடிக்க, அப்பகுதியினரிடம் கட்சியின் ஸ்தாபன பணிகளை வளர்த்தெடுக்க வேண்டும்.

பண்பாட்டு அரங்கின் பகுதியாக கட்சியும், வெகுஜன அரங்கங்களும் பண்பாட்டு மேடைகளை அமைக்க வேண்டும். தொழிலாளர் வாழ்விடங்களில் தொழிற்சங்கங்கள் பண்பாட்டு, சமூக நல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவ முகாம், உடல்நலம் பேணும் மையங்கள், பயிற்சி மையங்கள், சுகாதாரப்  பணிகள், முதியோர் இல்லம் அமைத்தல் போன்றவற்றைக் கையிலெடுத்து செயலாற்ற வேண்டும்.

சமூக பிரச்சனைகளுக்காக விரிந்த அளவிலான பிரச்சாரம் மற்றும் இயக்கங்களை கட்சி கையிலெடுப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

  • கட்சி முற்போக்கான மதச்சார்பற்ற விழுமியங்களையும், பண்பாட்டு படைப்புகளையும் பாதுகாப்பதற்காக விரிவான அடிப்படையில் பண்பாட்டு மேடைகளை உருவாக்க வேண்டும். தொழிலாளி வர்க்கக் குடியிருப்புப் பகுதிகளில் பண்பாட்டு, சமூக நடவடிக்கைகளைத் தொழிற்சங்கங்கள் மேற்கொள்ள வேண்டும். சமூக அமைப்புகளும், பகுதி சார்ந்த அமைப்புகளும் பண்பாட்டு நடவடிக்கைகளுக்காகத் தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும்.
  • கட்சியும், வெகுஜனஅமைப்புகளும் உடல்நலம் பேணும் மையங்கள், கல்வி பயிற்சி மையங்கள், படிப்பகங்கள், நிவாரண நடவடிக்கைகள் போன்ற சமூக சேவைக்கான நடவடிக்கைகளைக் கையிலெடுக்க வேண்டும்.
  • பாலியல் ஒடுக்குமுறை, சாதிய ஒடுக்குமுறை, தலித்-ஆதிவாசிகளின் உரிமைகள், சிறுபான்மை மக்களின் பிரச்சனைகள் ஆகியவற்றைக் கட்சி நேரடியாகக் கையிலெடுக்க வேண்டும்.
  • சமூக, பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது கட்சியின் அரசியல் மேடை மற்றும் ஜனநாயக இயக்கத்தின் பகுதியாக இருத்தல் வேண்டும்.
  • கேரளாவில் மாநிலம் முழுமையும் எடுத்த நோயாளிகளின் இறுதிக் கால பராமரிப்பு வலி நிவாரண நடவடிக்கைகள், கழிவுப் பொருட்களை கையாளும் திட்டங்கள், இயற்கை முறை காய்கறி பயிர் செய்தல் ஆகிய செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. தெலுங்கானா மாநிலம் மூன்று மருத்துவமனைகள், பழங்குடி மக்கள் பகுதியில் மருத்துவமுகாம்கள், பொது மருத்துவ பெயர் கொண்ட மருந்து விற்பனை நிலையம் ஆகியவற்றை நடத்தி வருகின்றன.
  • மக்களை பாதிக்கும் பல சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சனைகள் உள்ளன; அவைகளை நாம் கையிலெடுக்க வேண்டும். சமூக நல நடவடிக்கைகள் அல்லது செயல்பாடுகள் கட்சி, வெகுஜனஅரங்குகளின் வேலை திட்டங்களின் பகுதியாக இருக்க வேண்டும்;

கட்சியின் வாரப் பத்திரிகைகள், புத்தகங்களின் (தினசரிகள் மட்டுமின்றி) வடிவமைப்பையும், உள்ளடக்கத்தையும் உயர்த்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கட்சியின் அனைத்துப் பத்திரிகைகளும்இணையதளத்தில் ஏற்றப்பட வேண்டும். பிரதான வணிக ஊடக செய்திகளை எதிர்கொள்ள வல்ல ஊடகக் குழுவை மாநிலக் குழுக்கள் வைத்திருக்க வேண்டும்.

  • நம் இதழ்கள் அரசிதழ்கள் போல் தகவல்களை மட்டும் உள்ளடக்கி வந்தால் போதும் எனக் கருதப்படுகிறது. தொழில் நுணுக்க வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றங்கள் வந்திருக்கும் சூழலில் நாம் வெளியிடும் இதழ்கள் படிப்போருக்குத் தோற்றப் பொலிவுடன் ஆவலைத் தூண்டும் வகையில் கொண்டு வர இயலும். மேலும், நமது பத்திரிகைகள் அனைத்தும் ஆன்-லைன்வடிவத்திலும் (இணைய தளம் மூலம் படிப்பது) போக வேண்டும்.
  • தொலைக்காட்சி, அச்சு ஊடகங்களில்கார்ப்பரேட் ஊடகம் ஆதிக்கம் செலுத்துகிறது. அது சக்தி வாய்ந்த செல்வாக்கை செலுத்துவதுடன் பரந்த அளவில் மக்கள் பகுதியினை சென்றடைகிறது.அந்த பிரதான ஊடகங்களில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • தத்துவார்த்த இதழான‘மார்க்சிஸ்ட்’ (ஆங்கிலம்) தொடர்ந்து முறையாக வெளி வந்து கொண்டிருக்கிறது. மாநிலங்களிலும் தத்துவ இதழ்கள் வெளியாகின்றன. தத்துவார்த்த போராட்டத்தின் முக்கியத்துவம் கருதி இவ்விதழ்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்.

சமூக ஊடகங்களை உபயோகிப்போரின் வலுவான இணைப்பை உருவாக்க வேண்டும்.

  • சமூக ஊடகம் நாம் மக்களிடம் ஆற்றும் பணிக்கு மாற்றாக இருக்க முடியாது; ஆனால் நாம் மக்களுக்கு கொண்டு செல்லும் அரசியல், தத்துவார்த்த கருத்துக்களுக்கு வலு கூட்டி பரவலாக எடுத்துச்செல்ல உதவுகிறது.


Leave a comment