மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் : பகுதி 2 (சுருக்கம் மற்றும் ஒலி நூல்)


பிரெடெரிக் எங்கெல்ஸ்

நூல் வாங்குவதற்கு: Buy NOW

இரண்டாம் பகுதி சுருக்கம்

தமிழில்: சிவலிங்கம்

பகுதி 2

[இயக்கவியலும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்]

… பண்டைய கிரேக்கத் தத்துவ அறிஞர்கள் அனைவரும் பிறப்பிலேயே இயல்பான இயக்கவியல்வாதிகளாய் இருந்தனர். இவர்கள் அனைவருள்ளும் பல்துறை அறிவுசான்றவரான அரிஸ்டாட்டில் (Aristotle) இயக்கவியல் சிந்தனையின் மிகமிகத் தலையாய வடிவங்களை ஏற்கெனவே பகுத்தாய்ந்திருந்தார். இதற்கு மாறாகப் [பிற்காலத்தைய] புதிய ஜெர்மன் தத்துவமானது, முக்கியமாய் ஆங்கிலச் செல்வாக்கின் விளைவாக, பகுத்தாய்வுப் போக்கில் இயக்க மறுப்பியல் முறை என்று சொல்லப்படும்  போக்குடன் மென்மேலும் இறுக்கமாக ஒன்றிவிட்டது. …

பொதுவாக இயற்கையையோ, மனிதகுலத்தின் வரலாற்றையோ, நம் சொந்த அறிவுசார் செயல்பாட்டையோ கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும்போது, … அனைத்துமே இயங்கிக்கொண்டும், மாறிக்கொண்டும், தோன்றிக்கொண்டும், அழிந்துகொண்டும் இருக்கக் காண்கிறோம். …

இயக்க மறுப்பியல்வாதிக்கு, பொருள்களும் அவற்றின் மனப் பிரதிபலிப்புகளும், கருத்துகளும் தனித்தனியானவை; அவற்றை ஒன்றின்பின் ஒன்றாகவும் ஒன்றை மற்றொன்றோடு தொடர்புபடுத்தாமலும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். …

முதல்பார்வையில் இந்தச் சிந்தனைப் பாங்கு மிகவும் அறிவார்ந்ததாகவே நமக்குத் தோன்றுகிறது. ஏனெனில், இது மேம்பட்ட பொதுப்புத்தி என்று சொல்லப்படும் சிந்தனைப் பாங்காகும். இந்த மேம்பட்ட பொதுப் புத்தியானது, அதற்குரிய நான்கு சுவர்களின் எளிய ஆட்சி எல்லைக்குள் இருக்கும்போது மதிக்கத் தக்கதாகத் திகழ்கிறது. ஆராய்ச்சி என்னும் பரந்த உலகினுள், ஆபத்தான பயணத்தில் அடியெடுத்து வைக்கும்போது, அது விந்தைமிகு அபாயங்களை நேரடியாய் எதிர்கொள்கிறது.

… தனித்தனிப் பொருள்களில் ஆழ்ந்து கவனம் செலுத்துகையில், அவற்றுக்கு இடையேயான தொடர்பினை அது மறந்துவிடுகிறது. அப்பொருள்களின் இருத்தலில் கவனம் செலுத்துகையில், அந்த இருத்தலின் தொடக்கத்தையும் முடிவையும் மறந்துவிடுகிறது. அவற்றின் ஓய்வில் கவனம் செலுத்துகையில் அவற்றின் இயக்கத்தை மறந்துவிடுகிறது. மரங்களைப் பார்க்கும் அது காட்டினைப் பார்க்க முடியவில்லை. [தனிக் கூறுகளை மட்டும் பார்த்து, ஒட்டுமொத்த முழுமையைப் பார்க்கத் தவறுகிறது].

… எடுத்துக்காட்டாக, ஒரு விலங்கு உயிரோடு இருக்கிறதா இல்லையா என்று நம்மால் நிச்சயமாகச் சொல்ல முடியும். ஆனால், நெருங்கிச் சென்று ஆய்கையில், பல சூழ்நிலைகளில் இது மிகவும் சிக்கலான கேள்வியாய் இருக்கக் காண்கிறோம். சட்ட வல்லுநர்கள் இதை நன்கு அறிவர். தாயின் கருப்பையிலிருக்கும் சிசுவைக் கொல்லுதல் எந்த வரம்புக்கு அப்பால் கொலைக்குற்றம் ஆகிறது என்று … எவ்வளவுதான் தங்கள் மூளையைக் கசக்கிப் பார்த்தும் பலனில்லை. மரணம் நிகழும் தருணத்தை ஐயமின்றித் தீர்மானிப்பதும் இதேபோல இயலாதது. …

மேலும், நெருங்கிச் சென்று கூர்ந்து ஆராய்கையில் ஒரு முரண்நிலையின் இரு துருவங்களும், எடுத்துக்காட்டாக, நேர்நிலையும் எதிர்நிலையும், அவை எந்த அளவுக்கு எதிரெதிராய் இருக்கின்றனவோ அந்த அளவுக்குப் பிரிக்க முடியாதனவாகவும் இருப்பதைக் காண்கிறோம். அவற்றுக்கிடையே எவ்வளவுதான் எதிர்ப்பு இருந்தபோதிலும், அவை பரஸ்பரம் [ஒன்றுள் ஒன்று] ஊடுருவக் காண்கிறோம். அதே முறையில், காரணம், விளைவு ஆகிய கருத்தாக்கங்கள் தனிப்பட்ட நிகழ்வுகளுக்குப் பயன்படுத்துகையில் மட்டுமே உண்மையாய் [காரணம் காரணமாகவும், விளைவு விளைவாகவும்] இருக்கக் காண்கிறோம். இந்தத் தனிப்பட்ட நிகழ்வுகளை, அவை பிரபஞ்ச முழுமையுடன் கொண்டுள்ள பொதுத் தொடர்பில் வைத்துப் பரிசீலிக்கத் தொடங்கியதுமே, காரணமும் விளைவும் ஒன்றுக்குள் ஒன்று ஊடுவக் காண்கிறோம். …

இயக்கவியலானது, பொருள்களையும் அவற்றின் உருவகிப்புகளையும், அதாவது கருத்துகளையும், அவற்றின் அத்தியாவசியத் தொடர்பிலும், தொடரிணைப்பிலும், இயக்கத்திலும், தொடக்கத்திலும் முடிவிலும் உய்த்துணர்ந்து புரிந்து கொள்கிறது. …

இயற்கைதான் இயக்கவியலுக்கான நிரூபணம். நவீன விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை, நாளுக்குநாள் மென்மேலும் அதிகரித்துவரும் மிக வளமான விவரப் பொருள்களைக் கொண்டு அது இந்த நிரூபணத்தை நிலைநாட்டியுள்ளது…

டார்வின் (Darwin) பெயரைக் குறிப்பிட்டாக வேண்டும். அனைத்து வாழும் உயிரினங்களும், தாவரங்களும், விலங்குகளும், மனிதனும்கூட, கோடிக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் பரிணாம நிகழ்முறையின் விளைவுகளே என்று நிரூபித்ததன் மூலம், இயற்கையைப் பற்றிய இயக்க மறுப்பியலான கருத்துருவுக்கு டார்வின் அதிவலுவான அடி கொடுத்தார்.

… சூரியனும் அதன் அனைத்து கோள்களும் சுழலும் முகில்படலப் பொருண்மையிலிருந்து உருவாயின என்பது கான்ட் தந்த தீர்வாகும். அதே வேளையில், சூரிய மண்டலம் இவ்வாறுதான் தோன்றியது என்ற இந்தக் கருத்திலிருந்தே, வருங்காலத்தில்  அதன் அழிவும் தவிர்க்க முடியாது பின்தொடரும் என்கிற முடிவுக்கு அவர் வந்தடைந்தார். கான்ட்டின் கொள்கை முடிவை, அரை நூற்றாண்டுக்குப் பிறகு, லாப்லாஸ் (Laplace) கணித வழியில் நிலைநாட்டினார்…

இந்தப் புதிய ஜெர்மன் தத்துவம் ஹெகலியத் தத்துவ அமைப்பில் உச்சத்தைத் தொட்டது….

இந்த நோக்குநிலையிலிருந்து பார்க்கையில் மனிதகுலத்தின் வரலாறு என்பது, … மனிதனுடைய பரிணாம வளர்ச்சியின் நிகழ்முறையாகவே தோன்றியது. இந்த நிகழ்முறையின் படிப்படியான முன்னேற்றப் பயணத்தை, வளைந்து நெளிந்து செல்லும் அதன் வழிநெடுகப் பின்தொடர்வதும், தற்செயலானவையாய்த் தோற்றமளிக்கும் அதன் அனைத்து நிகழ்வுகளின் ஊடாகவும் இழையோடும் உள்ளார்ந்த விதியைப் புலப்படுத்துவதும்தான் இப்போது அறிவாளர்களின் பணியாய் இருந்தது.

ஹெகலிய [தத்துவ] அமைப்புமுறை, தான் முன்வைத்த பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்பது இங்கு முக்கியமன்று. இந்தப் பிரச்சினையை முன்வைத்தது என்பதுதான் அதன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பாகும்.

… ஜெர்மன் கருத்துமுதல்வாதத்தில் இருந்த இந்த அடிப்படை முரண்பாடு பற்றிய புரிதல், தவிர்க்க முடியாதபடி பொருள்முதல்வாதத்துக்குத் திரும்பவும் இட்டுச் சென்றது. [ஆனால்] வெறும் இயக்க மறுப்பியலான, 18-ஆம் நூற்றாண்டுக்கே உரிய எந்திரத்தனமான பொருள்முதல்வாதத்துக்கு அல்ல … [புதிதாகப்] பிறந்துகொண்டும், [இறந்து] அழிந்து கொண்டும் உள்ளன. [2] ஒட்டுமொத்த இயற்கை, திரும்பத் திரும்ப நிகழும் சுழல்வட்டப் பாதையில் இயங்குவதாய் இன்னமும் சொல்ல வேண்டியிருப்பினும், இந்தச் சுழல்கள் வரம்பிலாப் பெரும் பரிமாணங்களைப் பெற்றுவிடுகின்றன. இரண்டு கூறுகளிலும் நவீனப் பொருள்முதல்வாதம் சாராம்சத்தில் இயக்கவியல் தன்மை கொண்டதாகும். …

கடந்தகால வரலாறு அனைத்தையும் ஒரு புதிய ஆய்வுக்கு உட்படுத்துவதை இந்தப் புதிய உண்மைகள் கட்டாயமாக்கின. அதன்பிறகே பின்வரும் உண்மைகள் கண்டறியப்பட்டன:

கடந்தகால வரலாறு அனைத்தும், அதன் புராதன கட்டங்களைத் தவிர்த்து, வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே இருந்துள்ளது;

சமுதாயத்தின் இந்தப் போரிடும் வர்க்கங்கள் எப்போதுமே, உற்பத்தி முறைகள், பரிவர்த்தனை முறைகளின் படைப்புகளே. சுருங்கக் கூறின், அந்தந்தக் காலகட்டத்தில் நிலவும் பொருளாதார நிலைமைகளின் படைப்புகளே.

சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்புதான் எப்போதுமே மெய்யான அடித்தளத்தை அமைக்கிறது. இதிலிருந்து தொடங்கினால் மட்டுமே, குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தின் நீதி, அரசியல் சார்ந்த  நிறுவனங்கள், அவற்றுடன் மதம், தத்துவம் சார்ந்த கருத்துகள், பிற கருத்துகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய [சமுதாயத்தின்] மேற்கட்டுமானம் முழுமைக்கும் நாம் முடிவான விளக்கம் காண முடியும்.

… இதுநாள்வரை செய்ததுபோல், மனிதனின் உணர்வைக் கொண்டு அவனுடைய இருப்பை விளக்குவதற்குப் பதிலாக, மனிதனின் இருப்பைக் கொண்டு அவனுடைய உணர்வை விளக்குவதற்கு ஒரு வழிமுறை கண்டறியப்பட்டது.

அக்காலம் முதற்கொண்டு, இனிமேலும் சோசலிசம் என்பது ஏதோவோர் அறிவுசான்ற மூளையின் தற்செயலான கண்டுபிடிப்பாய் இருக்கவில்லை. வரலாற்று ரீதியாக வளர்ச்சிபெற்ற இரு வர்க்கங்களான பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையே நிகழும் போராட்டத்தின் தவிர்க்க முடியாத விளைவாய் உள்ளது. …

வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தாக்கம், உபரி மதிப்பு மூலமாக முதலாளித்துவ முறையிலான உற்பத்தி பற்றிய ரகசியத்தின் வெளிப்பாடு ஆகிய மாபெரும் இரு கண்டுபிடிப்புகளுக்காக நாம் மார்க்சுக்குக் கடமைப்பட்டுள்ளோம். இந்தக் கண்டுபிடிப்புகளின் விளைவாக, சோசலிசம் ஒரு விஞ்ஞானம் ஆகியது. அதன் விவரங்கள், உறவுகள் அனைத்தையும் வகுத்தமைப்பதுதான் அடுத்த பணியாய் இருந்தது.

பகுதி 2 (இயக்கவியலும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்)

குரல்: உ.வாசுகி


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: