மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைக்கான போராடமே முதன்மையானது


பிருந்தா காரத்

(நம் தமிழ் ”மார்க்சிஸட்” இதழுக்காக தோழர் பிருந்தா காரத் அளித்த பிரத்யேக பேட்டி)

மத்திய ஆட்சியில் பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் தொடர்வதோடு, சமூகத்தை மத ரீதியாக பிரித்து, தங்கள் அமைப்பை விரிவுபடுத்தியும் வருகிறது. இந்நிலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எவ்வாறு பார்க்கிறது? எவ்வாறு இவர்களை எதிர்கொண்டு, அவர்களின் விரிவாக்கத்தை தடுத்து நிறுத்துவது?

மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பி.ஜே.பி –  ஆர்.எஸ்.எஸ் தனது இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை அனைத்து வகையிலும் உந்தித் தள்ளுகிறது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலையும், அதன் அடுத்தடுத்த நிகழ்வுகளையும், துல்லியத் தாக்குதல் என்பதாகவும் பயன்படுத்திக் கொண்டது. அதை தனது ஆதாயத்திற்காக தவறாகவும் பயன்படுத்தியது. இதன் மூலம் அரசும், அதனை ஆட்சி செய்யும் கட்சியும் கலவையாக தேசியவாத உணர்வை கதையாடி தேர்தலில் கூடுதல் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றனர்.

இன்று எந்த ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு  பி.ஜே.பி ஆட்சி பொறுப்பிற்கு வந்ததோ,அந்த பெரும்பான்மையை பயன்படுத்தியே நாடாளுமன்றத்தின் ஜனநாயக அமைப்பை குழிதோண்டி புதைக்கின்றனர். ஆனபோதும், இந்த வளர்ச்சிப்போக்கில் வேறு ஒரு உண்மை உள்ளது என்பதை கம்யூனிஸ்டாகிய நாம் அங்கீகரிக்க வேண்டும்.  பி.ஜே.பி யின் கோரிக்கைகளுக்கு பின்னால் இந்திய ஆளும் வர்க்கத்தின் அபரிமிதமான ஆதரவு உள்ளது என்பதாகும். அந்நிய மூலதனத்துடன் கைகோர்த்துள்ள இந்திய பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்படும் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கூட்டே இந்த ஆளும் வர்க்கமாகும். இன்று பி.ஜே.பி தான் இந்திய ஆளும் வர்க்கத்தின் ஆகப்பெரிய கட்சியாக வளர்ந்துள்ளது.

தற்போதைய நிலையை ஆராய்வதற்கான முக்கியமான அம்சமாக இது அமைகிறது. தேசிய அளவில் பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளே ஆளும் வர்க்கத்தின் இரண்டு கட்சிகளாகும். நவ தாராளமயம் சார்ந்த குணாதிசயங்களிலும் செயல்பாடுகள் மற்றும் உறுதிப்பாட்டிலும் இரண்டு கட்சிகளிடையேயும் எவ்வித வேறுபாடும் கிடையாது. நாடாளுமன்றத்தில் அதீத பலம் பொருந்திய கட்சியாக பி.ஜே.பி தற்போது இருப்பதால் அது நவதாராளமயக் கொள்கையை மிக கடுமையாக அமலாக்குகிறது. தொழிலாளர்களுக்கு எதிரான தொழிலாளர் சட்டங்களை உருவாக்கியதிலும், விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கும் நோக்கோடு கொண்டுவரப்பட்டு, மத்திய அரசால் திரும்பப்பெறப்பட்ட விவசாய சட்டங்களிலும், குறைந்த விலையில் பொது சொத்துக்களை கார்ப்பரேட்டுகள் சூறையாட வழி செய்ததிலும், லாபத்தில் இயங்கும் பொதுத் துறைகளை தனியாருக்கு குறைந்த விலைக்கு தாரைவார்ப்பதிலும் நாம் அரசின் கடுமையான நவ தாராளமய அமலாக்கத்தை பார்க்க முடியும். சலுகைசார் முதலாளித்துவத்தை பாதுகாக்கவும் வளர்த்தெடுக்கவும் இந்த அரசு வெளிப்படையாகவே செயலாற்றுகிறது. ஆளும் வர்க்கத்தினருக்கு சாதகமான அரசின் கொள்கை முடிவுகளின்படி  கார்ப்பரேட்டுகள் ஆதாயம் அடைவதோடு கூடுதல் சலுகைகளையும் பெறுகின்றனர். அதீதமான சொத்துக் குவிப்பு மற்றும் சாதனை படைக்கும் லாபத்தை ஈட்டி அதானி பணக்காரர்களின் முன்னணி பட்டியலில் இடம்பிடித்தது நிச்சயமாக எதேச்சையான ஒன்றல்ல.

வர்க்கப் பார்வையில் கூறுவதென்றால், பெருமுதலாளிகள் உடனான இந்த நட்புறவு என்பது மற்ற வர்க்கங்களுக்கிடையே ஒரு மோதலை இதன் மூலம் ஏற்படுத்துகிறது. உதாரணமாக, கொரோனா காலத்தில் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் எதிர்கொண்ட நஷ்டத்தின் போது கடுமையான பாகுபாட்டை உணர்ந்தனர். பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி அமலாக்கம் ஆகியவை அவர்களின் சிக்கலை மேலும் அதிகப்படுத்தியது. கார்ப்பரேட்டுகளின் கைகளுக்கு விவசாயத்தை கையளிக்கும் முடிவுக்கு எதிராக, கிராமப்புற இந்தியாவில் பல்வேறு தரப்பட்ட விவசாய பகுதியினரிடையே ஒரு ஒற்றுமை உருவாகியது. உழைக்கும் வர்க்கம் இக்காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆதிக்க போக்குகள் மற்றும் நிலமற்றவர்களின் உயர்வால் கிராமப்புற உழைக்கும் வர்க்கத்தினரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

வர்க்க சக்திகளின் ஒருங்கிணைவை புரிந்துகொள்ள முயற்சிப்பதோடு, முரண்பாடுகளையும் வித்தியாசங்களையும் பயன்படுத்தி போராட்டங்கள் மூலம் சுரண்டப்படும் வர்க்கங்களிடையே ஐக்கியத்தை உருவாக்கி, சமூக மாற்றத்திற்கான திட்டத்தை வலுப்படுத்த வேண்டும். இதற்கு இந்த அனைத்து பிரச்சினைகளிலும் கட்சி ஊக்கத்துடன் தலையிட்டு வர்க்க வெகுஜன அமைப்பை வலுப்படுத்த வேண்டும்.  அதன் மூலம் ஆளும் அரசின் கொள்கைகளால் கடுமையான பாதிப்புக்கு உள்ளான வர்க்கத்தினரிடையேயும் இதர பகுதியினரிடையேயும்  விரிவாக சென்றடைவது.

அதே நேரம், சங்பரிவார் கூட்டத்தினால் வழி நடத்தப்படும் மத்திய அரசின் பெரும்பான்மைவாதத்தை முதன்மைப்படுத்துவதையும், அரசியல் அமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ள மதச்சார்பின்மை மீதான கடுமையான தாக்குதல்களையும் எதிர்த்த போராட்டத்தினை அதே அளவிளான  முக்கியத்துவத்துடன் நாம் முன்னெடுக்க வேண்டும். இந்த அரசுக்கு மதச்சார்பின்மை என்பது தவறான வார்த்தையாக உள்ளது. சங்பரிவாரின் இந்துத்துவ நோக்குடன் மூழ்கடிக்கப்படாத எந்த ஒரு சுயேட்சையான அமைப்பும் தற்போது இல்லை. நீதித்துறை, தேர்தல் ஆணையம், நாடாளுமன்ற விதிகள் மற்றும் நடைமுறைகள், அரசியல் அமைப்பு சட்டத்தின்படியாக இல்லாமல் சங்பரிவாரின் இந்து ராஷ்ட்ராவின் மீது பற்று கொண்ட கொள்கை சார்பின் அடிப்படையில் சுயேச்சையான அமைப்புகளில் பணியமர்த்தப்படுவது என இது நீளும். 

உயர் கல்வி நிறுவனங்களும் இத்தகைய கடுமையான தாக்குதலை எதிர்கொண்டது. உயர்கல்வி நிறுவனங்களின் உயர் பொறுப்பில் தகுதியற்றவர்களை அமர்த்துவது, பாடதிட்டத்தில் வரலாற்று நோக்கை மறுத்து, அறிவியல் ரீதியான ஆய்விற்கு பதிலாக தெளிவின்மையையும் மாயைகளை கொண்டு நிரப்புவது நடந்துள்ளது. மதச்சார்பின்மையும் ஜனநாயகமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். தேசத்தின் முக்கியமான இந்த இரு தூண்களும் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளது. ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுமாயின் எவ்வாறு மதச்சார்பின்மை சாத்தியமாகும்? மதச்சார்பின்மையின் மாண்புகள் அல்லாத மதக் கோட்பாடுகளை அடிப்படையாக கொண்ட தேசத்தை எவ்வாறு ஜனநாயகம் உள்ள நாடு என்று கொள்ள முடியும்? சங் பரிவார் முன்னிறுத்தும்  சித்தாந்தம் என்பது மனுஸ்மிருதியின் அடிப்படையில் சாதிய ஆணாதிக்க கருத்தாக்கத்தை ஆழமாக கொண்டதாகும். சமூக சீர்திருத்தம் என்பது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி க்கு சாபம் போன்றதாகும். சாதியத்திற்கு எதிராகவும், சாதிய அமைப்பு முறைக்கு எதிராகவும் ஆணாதிக்கத்திற்கு எதிராகவும்  போராடுவது என்பது சங்பரிவார் கூட்டத்தின் சித்தாந்தத்தின் மீது தொடுக்கும் கடும் தாக்குதல் ஆகும்.

பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ். முன்னிறுத்துவது குறித்த விரிவான புரிதலின் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) செயல்படுகிறது.  தேசத்தின் மீதுள்ள இந்த மோசமான அபாயத்தை எதிர்த்து போராடி வீழ்த்திட வேண்டும். நமது சொந்த மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து, நவதாராளமயத்திற்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைப்பதோடு, ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையை பாதுகாப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமாகத்தான் இது சாத்தியமாகும்.

நவ தாராளமயம் மற்றும் இந்துத்துவ சித்தாந்தத்தை ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. சக்திகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், இதற்கு முன்னதாகவும் பலமுறை விவாதிக்கப்பட்டது போல், இதற்கு எதிரான ஒன்றுபட்ட அணியை கட்டுவது சாத்தியமா? அனைத்து எதிர்கட்சிகளையும் ஒரே மேடையில் அணி சேர்ப்பது சாத்தியமா?

அனைவரையும் ஒரே அணியில் திரட்டுவதற்கு பல முன்மாதிரிகள் உள்ளன. சுரண்டப்படும் மற்றும் ஒடுக்கப்படும் சக்திகளை ஓரணியில் திரட்டுவதே மிகவும் முக்கியமான திரட்டுதலாகும்.

அரசியல் கட்சியை பொறுத்தவரை வலுவான இடதுசாரி அணியை கட்டுவதே முதன்மையான முன்னுரிமையாகும்.  இது ஒன்றும் எளிதான காரியமல்ல. நாம் அறிந்தது போல் பல்வேறு விஷயங்களில் இவற்றுக்கிடையே வேறுபாடுகள் உண்டு. உதாரணமாக, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியும் பார்வர்ட் பிளாக் கட்சியும் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கின்றனர். அதேநேரம் வங்கத்தில் இடது ஜனநாயக அணியில் உள்ளனர். சிபிஐ(எம்.எல்) கட்சி வங்கத்தில் சிபிஐ(எம்) ஊழியர்கள் திரிணாமுல் கட்சியினரால் தாக்கப்படுவதை கண்டிப்பதில்லை. கடந்த தேர்தலில் திரிணாமுல் கட்சியை எதிர்த்து போட்டியிடவும் இல்லை. ஆனபோதும் நாம் இடதுசாரிகளின் ஒற்றுமையை வலுப்படுத்த முயற்சிக்க வேண்டும். அதுவே இதர சக்தியினரை நம்மோடு அணிசேர வழி செய்யும்.

பி.ஜே.பி. க்கு எதிரான இதர கட்சிகளை கொண்ட அணியை பொறுத்தவரை, அகநிலை விருப்பம் மட்டும் அதை சாத்தியப்படுத்த விடாது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இம்முழக்கத்தை எப்போதும் வைக்கவில்லை. ஏனெனில் அது சாத்தியமில்லை என்பதை அனுபவம் காட்டியுள்ளது. உதாரணமாக, நவதாராளமயத்தை ஆதரிக்கும் கட்சிகளை கொண்ட ஒரு நிரந்தரமான அனைத்துக் கட்சி அணியை நாம் உருவாக்க முடியுமா? நம் அடிப்படை வர்க்கத்தினரின் உரிமைக்காக நாம் போராட வேண்டியுள்ளது. தற்போது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி  மட்டுமே தேசிய அளவில் உள்ளது. ஆனபோதும் அதனால் தன்னை விரிவுபடுத்திக் கொள்ள முடியவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஐ பொருத்தவரை நாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அங்கத்தினர் அல்ல. பி.ஜே.பி க்கு எதிரான பொதுவான விஷயங்களில்  அதனுடன் ஒத்துழைத்துள்ளோம். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் பெரிய அளவில் பலவீனம் அடைந்துள்ளது. அதன் பல தலைவர்கள் பிஜேபி யுடன் இணைந்துள்ளனர். மற்ற கட்சிகளை அணி சேர்க்கும் நிலையிலும் காங்கிரஸ் இல்லை. பல மாநிலங்களில் பிராந்திய கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு கடும் இழப்பை ஏற்படுத்தியே தங்களை நிலைப் படுத்தியுள்ளனர். தமிழ்நாடு மற்றும் பீஹார் மாநிலங்களில் பிராந்திய கட்சிகளான திமுக மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள் ஆகிய கட்சிகளுடன் உள்ள சிறிய கட்சியாகவே தன்னை ஆக்கிக்கொண்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் கூட்டப்பட்ட கூட்டங்களில் அதற்கு வெளியே உள்ள தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் ஆம் அத்மி கட்சி ஆகியவை அழைக்கப்படவும் இல்லை; அவற்றிற்கும் இதில் பங்கேற்கும் விருப்பமும் இல்லை. மேலும், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் அவை நவதாராளமயத்தையே அமலாக்குகிறது. இது பிஜேபி க்கு எதிரான கொள்கை ரீதியான மாற்றை உருவாக்குவதை பலவீனப்படுத்துகிறது. மேலும் பிஜேபி முன்னிலைப்படுத்தும் மதவாதத்தை எதிர்த்து போராடவும் அது முன்வருவதில்லை. பல நேரங்களில் அதன் மீது மிதமான அல்லது சமரச போக்கையே கையாள்கிறது.

பிரச்சனைகளின் அடிப்படையில் இந்த அனைத்து கட்சிகளுடனும் நாம் ஒரு ஒற்றுமையை கட்டியமைக்க தொடர்ந்து முயற்சித்துள்ளோம். உதாரணமாக, கூட்டாட்சிக்கு எதிரான மோடி அரசின் நிலைப்பாட்டை எதிர்த்த போராட்டத்தில், ஆளும் மாநில கட்சிகளிடையே ஒரு இணக்கதை ஏற்படுத்துவது சாத்தியப்பட்டது. கேரள இடது ஜனநாயக அணி இதில் தீவிரமான பங்காற்றியது. அதேபோல் விவசாய இயக்கங்கள் அழைப்பு விடுத்த தேசிய அளவிலான பந்திற்கு ஆதரவாக கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. பி.ஜே.பி யின் விவசாய விரோத கொள்கைகளுக்கு எதிராக தன்னிச்சையாக கள அளவில் இணக்கம் ஏற்பட்டது. நாடாளுமன்றத்தின் ஜனநாயக முறையை தகர்த்து அரசு நிறைவேற்ற முனைந்த சட்டங்களை எதிர்த்த போராட்டத்தில் நாடாளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சிகளிடையே ஒரு இணக்கம் ஏற்பட்டது. இவை எல்லாம் ஒரு சாதகமான வளர்ச்சி போக்குகள் மட்டுமே. இவற்றை அனைத்து கட்சிகளின் அரசியல் கூட்டணி என்பதோடு இணைத்துக் குழப்பிக்கொள்ளக்கூடாது.

வலுவான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இடது அணி மட்டுமே பி.ஜே.பி க்கு எதிரான விரிவான அணிதிரட்டலை சாத்தியமாக்கும் என்பதை அனுபவங்கள் எடுத்துக்காட்டுகிறது. விரிவான ஒற்றுமையை கட்டியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தன்னை வலுவாக கட்டியமைக்க வேண்டும். தற்போதைய நிலையில் அரசியல் ரீதியான தலையீடுகளை மேற்கொள்ளும் பலம் நமது கட்சிக்கு வெகுவாக சரிந்துள்ளது. எனவே, வர்க்க , வெகுஜன இயக்கங்களை கட்டி எழுப்புவதன் மூலம் வலுவான வெகுஜன கட்சியை கட்டியமைக்கும் பணியே அடிப்படையில் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

வலது திருப்பம் நிலவும் இன்றைய சூழலில் நாம் எவ்வாறு இடது ஜனநாயக அணியை சாத்தியப்படுத்த போகிறோம்?

இடது ஜனநாயக முன்னணி பற்றி சிலரிடம் ஒரு தவறான புரிதல் உள்ளது. அது ஒரு பிரச்சார முழக்கம் என்று கருதுகின்றனர்; இடது ஜனநாயக முன்னணி தற்போது போராடி, கட்டவேண்டிய ஒரு அணி என்று அவர்கள் பார்ப்பதில்லை. இது கட்சியின் புரிதலுக்கு மாறானது.

இடது ஜனநாயக முன்னணி என்பது அரசியல் கட்சிகள் மட்டும் என்கிற எல்லைக்கு உட்பட்டது அல்ல; மாறாக, முற்போக்கு சமூக சக்திகள், இயக்கங்கள், அறிவு ஜீவிகள்,தொழில்துறையின் தொழில்நுட்பத்திறன் கொண்டோர்(professionals) ஆகியோரை திரட்டுவதற்கான ஒரு மேடை.அந்த மேடை ஒரு மாற்று திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவின் எதிர்காலம் பற்றிய எதிர்காலப் பார்வை கொண்டது.

இது மிக முக்கியமான உடனடி கடமை.இது நேர்மறையான திட்டங்கள் அடிப்படையில் விரிவான மக்கள் திரளை அணி சேர்க்கும் கடமையாகும். இது வெறும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி க்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல. அந்தப் போராட்டம் மாற்று எதிர்காலப் பார்வை (vision )யுடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படவேண்டும். சங் பரிவார் சக்திகளின் கீழ் வலதுசாரிகள் அணிதிரட்டப்படுவதை முறியடிக்க, மாற்றுத் திட்டத்தின் அடிப்படையில், சமூக மற்றும் அரசியல் சக்திகளை திரட்டிட வேண்டும். அத்தகைய சக்திகள், குழுக்கள்,கட்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தந்த மாநில அளவிலான நிலைமைகளை சரியாக ஆய்வு செய்து, அவர்களை கண்டறிந்து, இடது ஜனநாயக அணி நிறுவிட பணியாற்ற வேண்டும்.

தமிழில் – ச.லெனின்



Leave a comment