மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


புனையப்படும் பொய் ‘வரலாறு’!


பேரா. ஆதித்ய முகர்ஜி

(பாசிச தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ் தன்னுடைய அரசியலுக்கு வசதியாக இந்திய வரலாற்றை சிதைத்து பொய்களை வரலாறாக புனையும் முயற்சியினை அம்பலப்படுத்தும் கட்டுரை)

‘வரலாறு‘ என்பதையே முழுவதுமாகத் திரித்து, அதை மக்களிடையே ‘வெறுப்பு மனப்பான்மை‘யை வளர்த்தெடுக்கும் ஒரு கருவியாகச் சிலர் பயன்படுத்தி வருவதை, இந்தியா, பதைபதைப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.  நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த விடுதலை இயக்கம் இந்திய தேசம் குறித்து கொண்டிருந்த ஒளிமிகுந்த கனவுகளைச் சிதைத்துச் சீரழிப்பதற்கும், 1947இல் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று, நம் நாடு ஒரு ‘ஜனநாயகக் குடியரசாக‘ மலர்ந்ததன் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்வதற்கும், மிகவும் இழிவான முறையில் ‘வரலாறு‘ பயன்படுத்தப்படுகிறது.  இத்தகைய போக்குகளின் காரணமாக, இந்திய நாட்டின் பெருமைக்குரிய பண்புநலன்களும், இந்தியாவின் எதிர்காலமுமே கேள்விக்குறியாய் மாறி நிற்கிறது.

காலனி ஆதிக்க கண்ணோட்டம்

காலனியாட்சி முடிவுக்கு வந்த 20ஆம் நூற்றாண்டின் மையப்பகுதி வரை, வரலாற்றியல் கல்வியில் அதன் ஆதிக்கமும், ஆளுமையும் நீடித்தது.

இந்தப் பின்னணியிலேயே, காலனியாதிக்கத்தின் கண்ணோட்டத்திலிருந்து இந்திய வரலாறு எழுதப்பட்டது என்பதையும், இந்திய சமூகத்தில் பிளவையும், பிரிவினையையும் உருவாக்கி வளர்த்திடும் விதத்திலும், காலனியாட்சியை ஆதரித்து நியாயப்படுத்தும் தன்மையிலும் வரலாற்றியல் வடிக்கப்பட்டது என்பதையும் இத்தருணத்தில் நாம் உணர வேண்டியது அவசியம்.

இந்தியாவில் இன்று தங்களுக்குத் தாங்களே ‘உண்மையான தேசியவாதிகள்‘ என்று வேடமிட்டுக் கொண்டு, மக்களிடையே மத அடிப்படையில் வெறுப்புணர்வைத் தூவி, பிரிவினையைத் தூண்டும் பாசிச சக்திகள், மேற்சொன்ன ‘காலனித்துவ விளக்கத்தைத்‘ தான், தங்களுக்குச் சாதகமான முறையில் பயன்படுத்திக் கொள்கின்றன.  இந்தியாவில் வாழும் பல கோடிக்கணக்கான சிறுபான்மை மக்களின் நலன்களைப் புறக்கணிப்பதற்கும், ஜனநாயக பூர்வமான  உரிமைகளை நசுக்குவதற்கும் பாசிச ஆட்சியாளர்கள் மேற்கூறிய காலனித்துவ விளக்கத்தைக் கையிலெடுத்துக் கொள்கின்றன.  இந்தச் சூழலில், இந்திய வரலாற்றின் காலனித்துவ விளக்கம் என்ன என்பதைச் சுருக்கமான முறையில் நாம் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

தொழிற்புரட்சியின் பயனாக 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், உலகின் முதலாவது தொழில்வள நாடாக பிரிட்டன் உருவானது.  அதன் நீட்சியாக, காலனியாதிக்கத்தின் இரண்டாவது நிலையான, ‘தொழில் மூலதன காலகட்டமும்‘ (1813 – 1858) துவங்கியது.  அத்தருணத்தில், இந்தியாவின் பொருள் உற்பத்தி முறைகள், மிகவும் பழமையானதாக, காட்டுமிராண்டித் தனமாக இருப்பதாகவும், அது உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்றும் ஒரு வாதம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் முன்வைக்கப்பட்டது.  மிக வேகமாக வளர்ந்து வரும் பிரிட்டன் பொருளாதாரத்திற்கு அனுகூலமாக இருந்து உதவிடும் வகையில், இந்தியா தன்னுடன் இணைக்கப்பட வேண்டும் என்று பிரிட்டன் முடிவுசெய்தது…

இந்தக் காலகட்டத்தில்தான், இந்தியாவின் சரித்திரத்தை எழுத முற்பட்ட பிரிட்டிஷ் வரலாற்றியலாளர்கள், வகுப்புவாத அடிப்படையில், இந்தியாவில் முதலில் ‘இந்து ஆட்சி‘யும், தொடர்ந்து ‘முஸ்லிம் ஆட்சி‘யும் நடைபெற்றதாக முழுவதும் பிழையாக வரையறுத்த விபரீதம் நிகழ்ந்தது.  பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர்கள் ஒருபடி மேலே போய், “இடைக்காலத்தில் இந்தியாவில் நடைபெற்ற முஸ்லிம் ‘கொடுங்கோலாட்சி‘யை அகற்றி, இந்தியாவுக்குப் பல நன்மைகளை பிரிட்டிஷ் ஆட்சி செய்து வருவதாகவும்” விளக்கம் கூறத் தலைப்பட்டனர்.  (அவர்கள் இவ்விடத்தில் ‘கிறிஸ்தவ ஆட்சி‘ என்று குறிப்பிடாமல் ‘பிரிட்டிஷ் ஆட்சி‘ என்று குறிப்பிட்டதும் கூர்ந்து கவனிக்கத் தக்கது). கிட்டத்தட்ட 19-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரையிலும் மேற்சொன்ன கருத்தோட்டமே மேலாதிக்கம் செலுத்தி வந்தது.

நிதி மூலதன காலகட்டம்

காலனியாதிக்கத்தின் மூன்றாம் நிலையான ‘நிதி மூலதன’ காலகட்டத்திற்குள் 19ஆம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில் பிரிட்டன் அடியெடுத்து வைத்த போது, உலகின் பல நாடுகள், குறிப்பாக மேற்கத்திய நாடுகள், விரைவான தொழில்மயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன.  இதையடுத்து, காலனியாதிக்கத்தை விரிவுபடுத்துவது, ஏற்கனவே தங்கள் ஆளுகையில் உள்ள காலனிய நாடுகளில் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது ஆகிய அம்சங்களில் பிரிட்டன் உள்ளிட்ட ஆதிக்க நாடுகள் அக்கறை செலுத்த ஆரம்பித்தன.  புதுப்புது நாடுகளைத் தங்களது காலனியாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதில் இந்த நாடுகளிடையே கடுமையான போராட்டமும், போட்டியும் நிலவியது.  தமது நாடுகளில் புதிதாக நிறுவப்பெற்ற தொழிற்சாலைகளுக்கு கச்சாப் பொருள்கள் கிடைக்கச் செய்வதற்கும், ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்வதற்கான சந்தையை விரிவுபடுத்துவதற்கும் இந்த நாடுகளுக்கு, காலனி விரிவாக்கம் என்பது அவசியமான ஒன்றாக ஆகியிருந்தது. 

காலனியாதிக்கம் இரண்டாம் நிலையிலிருந்து மூன்றாம் நிலைக்குச் சென்ற சூழலில் நிகழ்ந்த அணுகுமுறை மாற்றத்தைத் தோழர் வி.ஐ. லெனின் மிக எளிதாக விளக்கியுள்ளார். “அந்நிய மூலதனம் என்கிற புதிய அம்சம் வர்த்தக பரிமாற்றத்திற்குள் புகுந்துள்ள நிலையில், இதுகாறும் விற்பனையாளர், வாங்குபவர் என்றிருக்கும் உறவைவிட, இனி கடன் கொடுப்பவர், கடன் பெறுபவர் என்கிற உறவு நிலைக்குக் கூடுதல் முக்கியத்துவம் கிட்ட வாய்ப்புள்ளது” என்பது அவரது கூற்று.

நிதி மூலதன நுழைவின் இன்னொரு முகமாக, ‘காலனிய நாட்டினர் தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்வது’ என்கிற வாதம் மறைந்துபோய், ‘காலனி தேசத்து மக்கள் சுய ஆட்சி என்பதற்கு எந்தக் காலத்திலும் தகுதியற்றவர்கள்‘ என்ற கூக்குரல் வேகமாகக் கேட்க ஆரம்பித்தது. ‘என்றேனும் ஒரு நாள், ஆட்சி நிர்வாகத்தை இந்தியர்களிடம் ஒப்படைத்துவிட்டு பிரிட்டிஷார் வெளியேறுவார்கள்‘ என்கிற நம்பிக்கைக்கும் பேச்சுக்கும் எள்ளளவும் இடமில்லை என்பதாக ஆட்சியாளர்களின் எண்ணப்போக்கு அழுத்தம் திருத்தமாக வெளிப்பட்டது.  அப்போது பம்பாய் மாகாணத்தின் ஆளுநராக இருந்த சர் ரிச்சர்டு டெம்பிள், “இங்கிலாந்து, இந்தியாவைத் தனது முழு ஆளுகைக்குள்ளாகவே எப்போதும் வைத்திருக்க வேண்டும்.  ஏனெனில், ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நிரந்தரமாக நீடித்து நிலைத்திருக்கும்‘ என்கிற உறுதிமொழியுடன் கணிசமான அளவு மூலதனம் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது,” என்று 1880ஆம் ஆண்டில் எழுதிய குறிப்பு ஒன்றில் கூறியுள்ளார். 

காலனிய ஆய்வாளர்களின் தவறான கூற்று

இந்திய வரலாறு குறித்த காலனிய / வகுப்புவாத விளக்கவுரை, இந்து-முஸ்லிம் மோதல் காரணமாக நேரிட்ட ‘மனவேதனைகள்‘ குறித்து மீண்டும் மீண்டும் உரையாடலை மேற்கொள்கிறது.  பிரபல இந்து கருத்தியலாளரான கே.எம். முன்ஷி, 1951இல் சமர்ப்பித்த ஆய்வறிக்கையொன்றில், தற்போது ஆஃப்கானிஸ்தானத்தில் உள்ள கஜினி பகுதியின் சுல்தானாக விளங்கிய மன்னன் முகம்மது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1026இல் நடத்திய படையெடுப்பில் சோமநாதர் ஆலயம் தாக்குதலுக்குள்ளானது குறித்த தனது தரவுகளை வெளியிட்டுள்ளார். இந்தப் படையெடுப்பின்போது, சோமநாதர் கோயில் தாக்கப்பட்டது, “ஒரு தேசியப் பேரழிவாக, மறக்கவியலாத மாறாத வடுவாக, இந்துக்களின் மனதில் பதிந்துவிட்டது” என்று முன்ஷி குறிப்பிடுகிறார். இதன் மூலம் 19ஆம் நூற்றாண்டில் காலனியாட்சி உருவாக்கிய கருத்தாக்கத்தையே முன்ஷியும் எதிரொலிக்கிறார். ஆனால், 1026இல் இந்துக்களின் மனதிற்கு ஏற்பட்டுவிட்ட ‘காயங்களுக்குப்‘ பழி தீர்த்திடும் வகையில் எதிர்வினை ஆற்றிட வேண்டும் என்கிற பேச்சும் வாதமும், 800 வருடங்கள் கடந்து, 1843இல் தான் எழுப்பப்படுகிறது.  பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினரால் இப்பிரச்னை எழுப்பப்படுகிறது. 

இவ்வாறாக, 19ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்படுகிற ‘காலனிய வரலாற்றாய்வு‘, இந்தியாவில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையே பல நூற்றாண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருவது போன்ற ஒரு சித்திரத்தைத் தீட்ட முனைந்துள்ளது. இதையொட்டியே, இந்து, முஸ்லிம் என இரு தேசக் கோட்பாட்டை உருவாக்கி, இருவரும் தனித்தனி தேசங்கள் என வரையறை செய்தது.  ஆனால் புகழ்பெற்ற வரலாற்றியல் அறிஞர் ரொமிலா தாப்பர், காலனிய ஆய்வாளர்களின் மேற்சொன்ன அத்தனை கூற்றுகளையும் வன்மையாக மறுப்பதோடு, தகுந்த ஆதாரங்களுடன் தனது கருத்தாக்கங்களை முன்வைக்கிறார்.  பண்டைய நாட்களிலும், இடைப்பட்ட காலத்திலும் உலகெங்கிலும் படையெடுப்புகளின்போது, அதன் ஒரு பகுதியாக, மத வழிபாட்டுத் தலங்களைத் தாக்குவதும், அவற்றிலிருந்து மதிப்பு வாய்ந்த, விலையுயர்ந்த பொருள்களைக் கொள்ளையடிப்பதும், மத வேறுபாடுகள் கடந்து, எல்லா நாடுகளிலும், எல்லாக் காலங்களிலும் நடந்து வந்துள்ள நிகழ்வே என்பதை எடுத்துரைக்கும் பேராசிரியர் ரொமிலா தாப்பர், 1026ஆம் வருடத்திய தாக்குதலும் அவ்வாறான ஒன்றே என  விளக்குகிறார்.  150 வருடங்கள் கழித்து, ஒரு இந்து மன்னனால் சோமநாதபுரம் ஆலயம் புதுப்பித்துக் கட்டப்படுகிறது.  இதையொட்டிக் கிடைத்துள்ள பதிவுகளில், கஜினி முகம்மதுவால் சோமநாதர் ஆலயம் தாக்கப்பட்டது பற்றிய எந்தவிதக் குறிப்பும் இல்லை.  250 வருடங்களுக்குப் பிறகு, சோமநாதர் கோயிலுக்குச் சொந்தமான ஒரு இடத்தில் இஸ்லாமிய வணிகர் ஒருவரால் மசூதி ஒன்று கட்டப்படுகிறது.  அப்பகுதியை ஆளும் இந்து மன்னர், உள்ளுர் வணிகர்கள், ஆலயத்தில் பூசை செய்வோர் என அனைவரிடமும் முறையான அனுமதியைப் பெற்று, மசூதி எழுப்பப்பட்டது.    இந்த இந்துக்களின் உள்ளங்களில் மேலே குறிப்பிட்ட வடுக்களும், வேதனைகளும் பதிந்து கிடந்ததாகச் செய்தி ஏதுமில்லை. அப்படி எதுவும் இந்துக்களின் நினைவுகளில் நிழலாடவில்லை. அத்தகைய ‘நினைவுகள்‘, காலனிய ஆட்சிக் காலத்தில்தான், மத/வகுப்புவாதக் கண்ணோட்டத்தில் உருவாக்கம் பெற்று பரவலாக எடுத்துச் செல்லப்பட்டன என்பதை ரொமிலா தாப்பர் அறுதியிட்டு விளக்குகிறார்.

சரியான முறையில் தொகுக்கப்பட்ட இந்திய வரலாறு

இந்திய தேசத்தின் விடுதலைக்குப் பிறகே, இந்தியாவின் வரலாற்றைச் சரியான முறையில் கொண்டு செல்வதற்கான களம் ஓரளவு கிட்டியது.  காலனிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட இந்திய வரலாற்றின் குறைபாடுகளையும், குளறுபடிகளையும் அகற்றி, இந்தியக் கண்ணோட்டத்தில் தேசத்தின் சரித்திரத்தைப் புரிந்து கொள்வதற்கும், பண்டைய நாட்களிலிருந்து தற்காலம் வரையிலுமான இந்திய சமூகக் கட்டமைப்பு, அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அளவீடுகளை அறிந்து கொள்வதற்கும் உதவிடும் வகையில் தலைசிறந்த வரலாற்றியல் வல்லுநர்களை வைத்து ஆய்வுகளை மேற்கொள்வதற்கு வழிபிறந்தது.  1960-களிலும், 1970-களிலும் இந்தியாவின் பெருமைமிக்க பல்கலைக் கழகங்களிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் இதற்கான பணிகள் முறைப்படி துவங்கின.

இந்திய வரலாற்றின் நுணுக்கங்களைச் சரியான கோணத்தில் இந்திய பள்ளிக் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் 1960-களில்  தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்தின் சார்பில் சில முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  உலக அளவில் அங்கீகாரம் பெற்ற தலைசிறந்த வரலாற்றியல் கல்வியாளர்களான ரொமிலா தாப்பர், பிபின் சந்திரா, ஆர்.எஸ். சர்மா, சதீஷ் சந்திரா போன்றோர், தமது சமூகக் கடமையின் ஒரு பகுதியாக, தங்கள் பொன்னான நேரத்தைச் செலவிட்டு, பள்ளிக் குழந்தைகளுக்கான பாடப் புத்தகங்களைத் தயார் செய்து கொடுத்தனர்.  எடுத்துக் காட்டாக, 6ஆம் வகுப்பில் பயிலும் 11 வயது சிறார்களுக்கான பாடப்புத்தகத்தை ரொமிலா தாப்பர் தயாரித்து வழங்கினார்.  நானறிந்த வரையில் உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு முக்கியத்துவத்துடன், இத்தனை பெரிய அளவில் கல்விசார்ந்த இத்தகைய பணி அரசின் சார்பில் மேற்கொள்ளப்படவில்லை.  இதன் விளைவாக மிக அருமையான பாடப் புத்தகத் திரட்டுகள் பள்ளி மாணவர்களுக்கு வசப்பட்டன.  50ஆண்டுகள் கடந்து இன்றும் அவை கல்வி வளாகங்களில் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. 

ஆர்எஸ்எஸ் ன் மனப்போக்கு ஒரு பாசிச மனப்போக்கு

அறிவியல்பூர்வமான, மதச்சார்பற்ற கல்விக்கு, வகுப்புவாதக் கண்ணோட்டத்துடனான எதிர்ப்பும், தாக்குதலும் துவக்கத்திலிருந்தே ஆர்எஸ்எஸ் அமைப்பிடமிருந்து வந்து கொண்டிருந்தது.  ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங் எனப்படுகிற ஆர்எஸ்எஸ் அமைப்பு, ஒரு தனியார் இராணுவம் போலச் செயல்படுவதையும், ஹிட்லர் காலத்திய ஜெர்மனியின் நாஜிக்கள் போன்று அவர்களது பயிற்சிகள் அமைந்திருப்பதையும் குறித்து ஜவஹர்லால் நேரு ஆரம்ப நாட்களிலேயே எச்சரிக்கை விடுத்தார்.  ‘ஆர்எஸ்எஸ்இன் மனப்போக்கு ஒரு பாசிச மனப்போக்கு‘ என்று தனது மதிப்பீட்டை நேரு வெளிப்படையாகவே தெரிவித்தார். 

மகாத்மா காந்தியின் படுகொலையையடுத்து, துணைப்பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் சர்தார் பட்டேலின் முழு சம்மதத்துடன், ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டு, அதன் 25,000 செயல்பாட்டாளர்களும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.  ஆனால் தடை விலக்கிக் கொள்ளப்பட்டு, அனைவரும் விடுதலையானதும், ஆர்எஸ்எஸ் அமைப்பு, கருத்தியல் ரீதியான தன்னுடைய தாக்குதலை தேசத்தின் மீது தொடுக்க ஆரம்பித்தது.  இதன் பின்விளைவுகளை நன்கு உணர்ந்திருந்த நேரு, ஆர்எஸ்எஸ் இன் அபாயகரமான செயல்முறைகள் பற்றிய தனது ஆதங்கத்தையும், எச்சரிக்கையையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார்.  அதையொட்டி அனைத்து மாகாண முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தில்தான் “ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் முழுமையான மனப்போக்கும், பாசிச மனப்போக்கே” என்றும், ‘அவர்களது நடவடிக்கைகள் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டும் ‘ என்றும் நேரு குறிப்பிட்டார். இத்தாலி நாட்டின் புகழ்பெற்ற அறிஞர் மார்சியா கசோலரி தனது ஆழமான ஆய்வுகள் மற்றும் நேரடி கள விசாரணைகள் மூலம், “ஆர்எஸ்எஸ் தலைவர்கள் உள்ளிட்ட இந்து வகுப்புவாதச் சிந்தனையாளர்கள் அனைவரும் இத்தாலி மற்றும் ஜெர்மனியில்அரங்கேற்றப்பட்ட பாசிச மாடல் நடவடிக்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, அதைப் பாராட்டிக் கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள்” என்றும், “இவர்களது முக்கியத் தலைவரான பி.எஸ். மூஞ்சே, இத்தாலிக்கு நேரடியாகவே வருகை புரிந்து, சர்வாதிகாரி முசோலினியைச் சந்தித்து, அவரது அறிவுரையையும், ஆலோசனையையும் பெற்றவர்” என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மதவாத பாடத்திட்டம்

‘அரசியலில் நாங்கள் ஒருபோதும் ஈடுபட மாட்டோம்’ என்று எழுத்துபூர்வமாக வழங்கப்பட்ட உறுதிமொழியின் அடிப்படையில்தான் ஆர்எஸ்எஸ் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. அதையடுத்து தாங்கள் ஒரு ‘கலாச்சார அமைப்பு‘ தான் என்று ஆர்எஸ்எஸ் மீண்டும் மீண்டும் கூறிக் கொள்கிறது.  ஆனால் இன்னொருபுறம், பிரிவினையைத் தூண்டி வெறுப்பினை உமிழும் தனது மோசமான கருத்தியலைப் பிஞ்சு உள்ளங்களின் நெஞ்சிலே பரப்பி, பதியச் செய்திடும் நோக்கத்துடன் ‘சரஸ்வதி சிசு மந்திர்‘ என்கிற பெயரில் நாடு முழுவதும் பல்லாயிரக் கணக்கான கல்வி நிறுவனங்களைத் துவக்கி ஆர்எஸ்எஸ் நிர்வகித்து வருகிறது.  இத்தகைய தன்மையில் முதலாவது பள்ளி 1952இல் ஆர்எஸ்எஸ்-ன் அன்றைய தலைவர் எம்.எஸ். கோல்வால்கர் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது.  (கோல்வால்கரின் விநோதமான வரலாற்று மற்றும் புவியியல் ஞானம், பல நேரங்களில் பரிகசிப்புக்கு ஆளானதுண்டு.  “ஆரியர்கள் வட துருவத்திலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் என்று சொல்ப்படுகிறது. இருக்கக் கூடும். ஆனால் உண்மையில் வட துருவமானது அப்போது இந்தியாவில்தான் இருந்தது. இன்றைய பீகார் மற்றும் ஒரிசா பகுதிகளில் தான் வட துருவம் நிலை கொண்டிருந்தது.  பின்னர் ஆரியர்கள் இங்கேயே தங்கிவிட, வட துருவம் மட்டும் இடம் பெயர்ந்து, இப்போதுள்ள இடத்திற்குச் சென்று விட்டது” என்பது கோல்வால்கரின் புகழ்பெற்ற வாதம்). 

ஆண்டுகள் செல்லச்செல்ல, ஆர்எஸ்எஸ்இன் வலைப்பின்னலும் அதிகரித்தே வந்துள்ளது.  1977இல் 500 என்றிருந்த ஆர்எஸ்எஸ் பள்ளிகளின் எண்ணிக்கை, 1993-94இல் 6,000 ஆகவும், 1999இல் 14,000 ஆகவும் உயர்ந்துவிட்டது.  இந்தப் பள்ளிகளின் மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் வகுப்புவாதக் கருத்தியல் இளம் மாணவச் செல்வங்களின் மூளைக்குள் பலவந்தமாகத் திணிக்கப்படுகிறது.  இந்தப் பள்ளிகளையும் தாண்டி, உ.பி., குஜராத், ம.பி., கர்நாடகம் உள்ளிட்ட பிஜேபி ஆளும் பல மாநிலங்களில் அரசுப் பள்ளிகள் வாயிலாகவும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் புகுத்தப்படுகிறது.

ஆர்எஸ்எஸ் பள்ளிகளில் 9 வயதும், 10 வயதும் உடைய நான்காம்/ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வரலாற்றுப் புத்தகத்தில், “இந்தியாவுக்குள் நுழைந்து இஸ்லாமியப் படையெடுப்பாளர்கள், ஒரு கையில் வாளும், இன்னொரு கையில் குரானும் கொண்டு வந்தார்கள்”, “நான்கு திசைகளிலும் படையெடுத்துச் சென்ற அவர்கள், எதிரில் வருகிற எல்லோரையும் கொல்வது, வழிபாட்டுத் தலங்களை இடிப்பது, பல்கலைக் கழகங்களைத் தகர்ப்பது, நூல் நிலையங்களைக் கொளுத்துவது, பிற மதங்களின் புனித நூல்களை எரிப்பது, தாய்மார்களையும், சகோதரிகளையும் மானபங்கப் படுத்துவது என அத்தனை கொடூரச் செயல்களிலும் ஈடுபட்டனர்“, “நீதி, நியாயம், கருணை போன்றவையெல்லாம் அவர்கள் அறியாதவை“ என்று இஸ்லாம் வளர்ச்சி குறித்த பாடத்தில் இடம் பெற்றுள்ளது.

(இந்து வகுப்புவாதக் கும்பலால் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதையும், புனே நகரில் பந்தார்கர் நூலகம் அடித்து நொறுக்கப்பட்டதையும், 2002இல் குஜராத்தில் தாய்மார்களும், சகோதரிகளும் பாலியல் வன்கொடுமைக்குள்ளானதையும் நாம் மறந்துவிட வேண்டும்).

ஆர்எஸ்எஸ்இன் இன்னொரு வெளியீடு, கிறிஸ்தவர்களை தேசவிரோதிகளாகவும், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிப்பவர்களாகவும் சித்தரிக்கிறது.  “கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்கள் செய்த சதித் திட்டத்தின் காரணமாகவே இந்திய நாடு துண்டாடப்பட்டது“, “கிறிஸ்தவ மிஷினரிகள் நாகாலாந்து, மேகாலயா, அருணாசலப் பிரதேசம், பீகார், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் தேசவிரோதக் கருத்துக்களைப் பரப்பி வருகின்றன. இவர்களால் இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் அபாயம் நேரிட்டுள்ளது“ என்று மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.

குஜராத்தின் பள்ளிப் பாடப் புத்தகத்தில் ஹிட்லருக்குப் புகழ்மாலை சூட்டப்படுகிறது.  இன்னொரு நூலில், மெக்கா மசூதியின் மையப்பகுதியில் உள்ள காபா கட்டிடம், சிவலிங்கமாகச் சித்தரிக்கப்படுகிறது. டில்லியின் முதலாவது முஸ்லிம் ஆட்சியாளரான குத்புதீனால் 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது குதுப்மினார். ஆனால் இது 4ஆம் நூற்றாண்டில், சமுத்திரகுப்தரால் எழுப்பப்பட்ட ‘விஷ்ணு ஸ்தம்பம்’ என்று கற்பிக்கப் படுகிறது. வகுப்புவாதக் கண்ணோட்டத்துடன், முற்றிலும் உண்மைக்கு மாறான செய்திகள் ஆர்எஸ்எஸ் பள்ளிகளுக்கும் அப்பால் நாடு முழுவதும் எடுத்துச் செல்லப்படுகின்றன.  

ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்துத்துவ அகராதியின்படி, இந்தியாவைப் பொறுத்தமட்டிலும் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் ‘வெளியாட்கள்‘ ஆவர்.  இந்திய நாட்டின் மீதான அவர்களுடைய பற்றும், விசுவாசமும் கேள்விக்குரியது.  இந்துக்களின் ‘புண்ணிய பூமி‘ இந்தியாவிலேயே உள்ளது.  ஆனால் இஸ்லாமியர்களுக்கு அரேபியாவின் மெக்காவிலும், கிறிஸ்தவர்களுக்கு பாலஸ்தீனத்தின் ஜெருசலேமிலும் இருக்கிறது.  ஆக, இந்துக்கள் மட்டுமே ‘இந்திய தேசம்‘ என்கிற அடையாளத்துக்குச் சொந்தம் கொண்டவர்கள்  என்பதுதான் ஆர்எஸ்எஸ்-இன் நிலைபாடு. 

பார்த்த மாத்திரத்திலேயே பரிகாசத்துக்குரிய இத்தகைய விளக்கவுரையின் மூலமாகத்தான், முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் அந்நியப்படுத்தி, அவர்களை ‘வேறானவர்கள் (Others)‘ என்று வகைப்படுத்துகிறது ஆர்எஸ்எஸ்.  இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இந்தியாவின் குடியுரிமை மறுக்கப்பட வேண்டும் என்பதே இதன் உள்ளடக்கம். 

ஒரு வாதத்திற்கு ஆர்எஸ்எஸ்-இன் மேற்கூறிய ‘விளக்கம்‘ ஏற்றுக் கொள்ளப்படுமானால், ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ஏன் ஆசியாவிலேயே தென் கொரியாவிலும் வாழ்ந்து வரும் கிறிஸ்தவ சமூகத்தினர், தத்தம் நாடுகளில் குடியுரிமை கோர முடியாது – காரணம் அவர்களது புண்ணிய பூமி பாலஸ்தீனத்தில் இருக்கிறது.

2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பிஜேபி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன், கல்வி நிலையங்களைக் காவிமயப் படுத்தும் ஆர்எஸ்எஸ்-இன் முயற்சிக்குப் புதிய வலு கிட்ட ஆரம்பித்தது.  2019-இல் பிஜேபி கட்சி நாடாளுமன்றத்தில் தானே அறுதிப் பெரும்பான்மையை அடைந்துவிட்டதால், கூட்டணிக் கட்சிகளுடனான கலந்தாலோசனை போன்ற எந்தவித நிர்ப்பந்தமும் இன்றி, ஆட்சியதிகாரத்தைத் தனது விருப்பம் போல் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பும் வந்து சேர்ந்தது.

கல்விப் புலத்தில் வகுப்புவாத சக்திகள்

மாணவர்களுக்குப் புதிதாகப் புகுத்தப்பட்டுள்ள வரலாற்றுப் பாடத் திட்டம், தேசத்தந்தை மகாத்மா காந்தி ஒரு இந்து தீவிரவாதியால் படுகொலை செய்யப்பட்ட உண்மை நிகழ்வை உரைக்க மறுக்கிறது.  இந்திய தேசிய இயக்கத்தில் முன்னணிப் பங்கு வகித்த மாபெரும் தலைவர்கள் பற்றிய பாடத்தில், நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பிரிட்டிஷாருடன் 30 வருடங்களுக்கு மேலாக வீரச் சமர் புரிந்து, அதில் முழுவதுமாக 9 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, அரும் பாடுபட்ட மகத்தான தலைவர் ஜவஹர்லால் நேரு பற்றிய சிறு குறிப்பு கூட  இடம் பெறவில்லை.

ஆனால் நேருவைப் பற்றிய எதிர்மறையான குறிப்பு மட்டும் பாடத் திட்டம் முழுவதும் பரவிக் கிடக்கிறது.  இந்திய தேசம் சந்தித்த அத்தனை பிரச்னைகளுக்கும் முழுமுதற் காரணம் நேருவும், அவர் பின்பற்றிய கொள்கைகளும்தான் என்று வன்மையாகச் சாடும் இந்த வரலாற்றுப் பாடத் திட்டம், போகிற போக்கில், முழுவதும் கற்பனையான கற்பிதமாகக் கூறப்படுகிற, நேருவின் மூதாதையர்களின் முஸ்லிம் (!) மதச் சார்பு பற்றியும் பேசுகிறது.  (பிஜேபி-யின் தலைவர் ஒருவர், ஆர்எஸ்எஸ் அமைப்பின் வார இதழில், ‘காந்தியைக் கொன்ற கோட்சே, நேருவையும் சுட்டுத் தள்ளியிருக்க வேண்டும்‘ என்று வெளிப்படையாக எழுதியிருந்ததை இவ்விடத்தில் நினைவுபடுத்த வேண்டியுள்ளது). 

கல்விப் புலத்தில் வகுப்புவாத சக்திகள் ஆக்ரோஷமாக நடத்துகிற கருத்தியல் ரீதியான தாக்குதலானது, தேசத்தின் வரலாற்றைத் தங்கள் விருப்பம் போல திரித்துக் கூறுவது என்பதையும் கடந்து, பொது வெளியில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.  அது, இடைவிடாத தொடர் பிரசாரங்கள் மூலம், பழங்கால புராணக் கதைகள் குறித்த மாயத் தோற்றத்தையும், போலி பெருமித உணர்வையும் பெரும்பான்மை சமூக மக்களின் மனதில் பதியவிடுகிறது.  பின்னர் அதே பெரும்பான்மையினருக்கு, சிறுபான்மை மக்களிடமிருந்து அச்சுறுத்தலும், ஆபத்தும் ஏற்படப் போவதாக ஒரு பொய்யான பிம்பத்தைக் கட்டமைக்க எத்தனிக்கிறது.  இதன் மூலம் பெரும்பான்மை மக்களின் மனதில் அச்சவுணர்வை ஏற்படுத்தி, அதன் மூலம் நிரந்தரமாக அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிக்கிறது.  உலகின் பல பகுதிகளிலும், தனது மேலாதிக்கத்தைத் திணிக்க முற்படும் பாசிச சக்திகள், இது போன்ற அணுகுமுறையையே பின்பற்றுகின்றன என யேல் பல்கலைக் கழகத்தின் தத்துவவியல் பேராசிரியர் ஜாசன் ஸ்டான்லி எடுத்துக் காட்டுகளுடன் விளக்கியுள்ளார்.

பொய்யான பிம்பத்தைக் கட்டமைத்தல்

ஒருசில உதாரணங்களை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.  இன்றைய பிரதமர், 2014ஆம் ஆண்டு தான் பதவியேற்ற சில மாதங்களில் மும்பையில் கலந்துகொண்ட நிகழ்ச்சியொன்றில், புராணக் கதைகளில் கூறப்படும் புனைவுகளை வரலாற்றுடன் அப்பட்டமாக இணைத்து, உரை நிகழ்த்தினார்.  விநாயகப் பெருமானின் கதையானது, ‘இந்தியாவில் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே பிளாஸ்டிக் சர்ஜரி நடத்தப்பட்டதற்கான‘ சான்று என பிரதமர்  முழங்கினார்.  இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் மிகவும் பிரபலமான மருத்துவர்களும், திரை நட்சத்திரங்களும், வர்த்தகத்தில் சாதனை படைத்து வரும் பெரிய வணிகர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத் தக்கது.  இது போன்றே, மேற்கு வங்க மாநில மேனாள் ஆளுநரும், தற்போதைய குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர், 2020 ஜனவரியில் கொல்கத்தாவில் நடைபெற்ற அறிவியல், பொறியியல் கண்காட்சியைத் துவக்கி வைத்து ஆற்றிய உரையில், ‘மகாபாரதத்தின் முக்கிய வீரனான அர்ஜுனன், நியூக்ளியர் சக்தி படைத்த அம்புகளைக் கொண்டே போரில் எதிரிகளை வீழ்த்தினான்‘ என்று குறிப்பிட்டுள்ளார்.  ஆர்எஸ்எஸ் அமைப்பின் அன்றைய தலைவரான  சர்சங்சலாக் கே.எஸ்.சுதர்சன்,‘பரத்வாஜ முனிவரும், போஜ ராஜனும், புதிய விமானங்கள் வடிவமைப்பது பற்றி மட்டுமல்ல; அவற்றில் ஒவ்வொரு விமானத்தையும் எவ்வளவு உயரத்தில் பறக்கவிடுவது என்பது பற்றியும், அதில் எழும் பிரச்னைகளை எவ்வாறு சரிசெய்வது என்பது பற்றியும் கூட விரிவான உரையாடல் நடத்தியதாகக் கூறியுள்ளார்.

இவ்வாறு ‘இந்துக்கள்‘ கடந்த காலங்களில் ‘அளப்பரிய சாதனைகளைப்‘ படைத்திருந்தாலும், இன்று அவர்கள் மிகுந்த சோதனைகளைச் சந்தித்து வருகிறார்கள் என்கிற கற்பிதம் வகுப்புவாத சக்திகளால் தொடர்ந்து உருவாக்கப்படுகிறது.  கடந்த நூற்றாண்டுகளில் முஸ்லிம்களால் இந்துக்கள் என்னென்ன ‘சித்திரவதைகளை‘ அனுபவித்தார்கள் என்று மீண்டும் மீண்டும் மக்களுக்கு ‘நினைவூட்டப்‘ படுகிறது.  தேசத்தின் தலைநகர் புது டில்லியிலிருந்து மிக அருகாமையில் இருக்கும் ஹரியானா மாநிலத்தின் கிராமப்புறங்களில் ஒரு கதை சொல்லப்படுவதை நானே பலமுறை கேட்டுள்ளேன்.  முகலாய மன்னன் அவுரங்கசீப்பிடம் தினந்தோறும் இரவில் கணிசமான எண்ணிக்கையில், உயர்சாதியினர் அணிந்து கொள்ளும் பூணூல் சரடுகளைக் கொண்டுவந்து காட்டிய பிறகு தான் உறங்கச் செல்வானாம்.  நிறைய இந்துக்கள் கொல்லப்பட்டனர் அல்லது மதம் மாற்றப்பட்டனர் என்ற செய்தியைக் கேட்ட பிறகுதான் அவனுக்குத் தூக்கம் வருமாம்.  நான் வரலாற்றுப் பாடம் கற்பிக்கும் பணியில் உள்ளவன் என்பதைத் தெரிவித்தவுடன், என்னிடம் இந்த ‘வரலாறு’ உடனடியாகச் சொல்லப்படுகிறது.

பிஜேபி அரசு புது டில்லியின் ஒரு சாலைக்கு இடப்பட்டிருந்த அவுரங்கசீப்பின் பெயரை அகற்றியதை, தனது வீரச் செயலாகப் பெரிதும் விளம்பரப்படுத்திக் கொண்டது.  வலிமைமிக்க உள்துறை அமைச்சர் பதவியைத் தன் வசம் வைத்திருக்கும் திருவாளர் அமித் ஷா, இந்தியாவுக்குள் வங்கதேச முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் தினந்தோறும் ‘ஊடுருவிக் கொண்டிருப்பதாகவும்‘, நாட்டின் பல பகுதிகளிலும் ‘கறையான்கள் போலப் பரவி‘, அவர்கள் நடமாடிக் கொண்டிருப்பதாகவும், அவர்களால் நாட்டின் பாதுகாப்புக்கே பெரும் அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும் அடிக்கடி ‘எச்சரிக்கை‘ விடுத்து வருகிறார். முஸ்லிம்களால் இந்துக்களுக்கும், இந்தியாவுக்கும் ஆபத்து காத்திருக்கிறது என்பது போன்ற ஒரு தோற்றம், நாடு முழுவதும் நெருப்பாகப் பற்றிப் பரவச் செய்யப்படுகிறது. இந்துக்களுக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் ஒன்றுசேர்ந்து வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள் என பல முனைகளிலிருந்தும் பிரசாரம் மேற்கொள்ளப் படுகிறது.  இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக, முஸ்லிம்கள் தங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள ‘பலதார மண முறை‘யைப் பயன்படுத்திக் கொண்டு, மிகவும் அதிகமான எண்ணிக்கையில் பெருகி வருவதாகவும், வெகு விரைவில் நாட்டின் மக்கள் தொகையில் இந்துக்களைப் பின்னுக்குத் தள்ளி முஸ்லிம்கள் முந்திச் சென்று, பெரும்பான்மையை எட்டி விடுவார்கள் என்றும் ஒரு கருத்து உரத்த குரலில் முன்வைக்கப்படுகிறது.  தேசத்தின் அத்தனை தரவுகளையும், பல்வேறு புள்ளி விவரங்களையும், மக்கள் தொகை கணக்கீடுகளையும் மூடி மறைத்து, முழுவதும் பொய்யான ஒரு வாதம், மிகவும் திட்டமிட்டு உலவ விடப்படுகிறது. இத்தகைய ஒரு வாதத்தை வைத்துக் கொண்டு, உத்தரப்பிரதேசத்தில் ‘மக்கள் தொகை கட்டுப்பாடு மசோதா‘ ஒன்று நிறைவேற்றப்பட்டு, அதிக குழந்தைகள் உள்ள ஏழை இஸ்லாமியர் குடும்பங்கள் தண்டனைக்குள்ளாக்கப்படும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. 

பாசிசச் சிந்தனையாளர்கள் பின்பற்றும் இன்னொரு பொதுவான வழிமுறை, பெரும்பான்மை சமூகத்தவரிடம், பாலியல்  ரீதியாக அவர்களுக்குப் பெரும் இடர்ப்பாடுகள் இருப்பதாக அச்சமூட்டுவது.  இதன் ஒரு வடிவமாகவே, அப்பாவி இந்துப் பெண்களை இஸ்லாமிய இளைஞர்கள் காதல் என்ற பெயரில் குறி வைப்பதாகவும், அவர்களைக் கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொள்வதாகவும் ஓயாத பிரசாரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது.  ‘லவ் ஜிகாத்‘ என்று வர்ணிக்கப்படுகிற இந்தக் ‘குற்றத்தை‘ தடுத்து நிறுத்துவதற்கென்று, பிஜேபி ஆளும் மாநிலங்களில் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.  இது மட்டுமன்றி, காலனிய ஆட்சிக் காலத்திய தேசத் துரோகச் சட்டம், சமீப ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட ‘உபா‘ சட்டம் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்தி, ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் கயவர்களாகவும், கிரிமினல் குற்றவாளிகளாகவும் சித்தரிக்கும் கவலைக்குரிய போக்கு அதிகரித்துள்ளது. 

சிறுபான்மை சமூகத்தினர் மீதான பொதுவெளி தாக்குதல்களும், ஏன் கும்பல் படுகொலைகளும் சமீப ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்துள்ளன.  அரசு நிர்வாகம் இத்தகைய கொடூர நிகழ்வுகளைக் கண்டும் காணாமல் கடந்து செல்கிறது.  அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறை, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2021-ஆம் வருடத்திற்கான தனது ஆண்டறிக்கையில், சர்வதேச அளவிலான மத சுதந்திரம் பற்றிய குறிப்பில், ‘இந்தியாவில் சிறுபான்மை சமூகத்தினர் தாக்குதலுக்குள்ளாவது, படுகொலை செய்யப்படுவது,  அச்சுறுத்தல்களுக்கு ஆளாவது போன்ற கொடுமைகள் ஆண்டு முழுவதும் அரங்கேறி வந்துள்ளன‘ என்று தெரிவித்துள்ளது.

அயோத்தியில் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி, அது தான் இந்து கடவுள் இராமர் பிறந்த இடம் என்று வலதுசாரி வகுப்புவாத சக்திகள் நடத்திய பிரசாரத்தின் பின்னணியில் 1992-இல் இடித்துத் தள்ளப்பட்டது. தற்போது அங்கே கட்டப்பட்டு வரும் மிகப் பெரிய இராமர் கோயிலுக்கு 2021-இல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.  இதே போன்ற பிரச்னைகள் வேறு இடங்களை மையமாக வைத்து தற்போது மீண்டும்  எழுப்பப்படுகிறது.  1991-ஆம் வருடம் இந்திய நாடாளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றிய வழிபாட்டுத் தலங்கள் சட்டம், அனைத்து இறை வழிபாட்டு இடங்களும் நாடு விடுதலையடைந்த 1947 ஆகஸ்ட் 15 தேதியில் இருந்த நிலையில் அவ்வாறே பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும் என்று தெளிவாக வரையறுத்துள்ளது.  ஆனால் அந்தச் சட்டத்தை முழுவதுமாக அவமதிக்கும் வகையில், மதுராவில் ஷாகி இத்கா மசூதியைக் குறிவைத்து, கிருஷ்ண ஜன்மஸ்தான் பிரச்னை எழுப்பப் படுகிறது.  அதே போல, வாரணாசியின் ஞானவாபி மசூதியின் நீரூற்றுப் பகுதியில் சிவலிங்கம் இருப்பதாகவும், அங்கு வழிபாடு நடத்த அனுமதியளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படுகிறது. 

உண்மைகளை மறைத்தல்

மேற்கூறிய மூன்று இடங்களிலும் இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டு அவற்றின் மீது மசூதிகள் எழுப்பப்பட்டதாகவும், இதுபோல் நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட மசூதிகள் கட்டப்பட்டதாகவும், வரலாற்றில் நிகழ்ந்துவிட்ட தவறுகள் சரிசெய்யப்பட வேண்டும் என்றும், இந்து மதத்தின் பெருமை நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், அதுவே இந்துக்களின் மனதில் உள்ள காயங்களுக்கு மருந்தாக அமைந்திடும் என்றும், ஆர்எஸ்எஸ்-இன் தீய பிரசாரம் உரத்த குரலில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இவற்றின் உள்ளே ஒளிந்திருக்கும் உண்மை திட்டமிட்டு மறைக்கப்படுகிறது.  அயோத்தி, மதுரா, காசி ஆகிய மூன்று நகர்களிலுமே, பல நூற்றாண்டுகளாக, தலைமுறை தலைமுறையாக இந்துக்களும், இஸ்லாமியர்களும் அமைதியாகவும், இணக்கமாகவும், பரஸ்பர புரிதலுடன் தோளோடு தோள் நின்று வாழ்ந்து வந்துள்ளனர்.  அவரவர் கடவுளுக்குப் படைக்கப்படும் பிரசாத காணிக்கைகளைப் பகிர்ந்து பரிமாறிக் கொள்ளும் தன்மையில் மக்களிடையே நல்லெண்ணமும், ஒன்றுபட்ட உணர்வும் பன்னெடுங்காலமாக இருந்து வந்துள்ளது.

இந்த ஒற்றுமைச் சூழலை உடைத்திடும் விதமாகவே, இந்துக்களுக்கு வலி, வேதனை, மாறாத வடு, மனதில் காயம், துயர நினைவுகள் என்று பல கற்பனைகள் உள்நோக்கத்துடன் உருவகம் பெற்றுள்ளன.  காலனிய ஆட்சியில் இந்திய சமூகத்தை இரு கூறாக்கி எதிரெதிர் திசையில் நிறுத்துவதற்கு சோமநாதர் ஆலயம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை முன்னரே பார்த்தோம்.  இத்தகைய முயற்சிகளின் ஊடாகவே அரசியல் களத்தில் ‘பெரும்பான்மை‘ வாதம் முன்னிறுத்தப்படுகிறது. உ.பி. முதல்வர் உள்பட பிஜேபி-யின் முன்னணித் தலைவர்கள், ‘80 : 20‘ என்று பேசி, இந்து வாக்குகளை ஒருங்கிணைக்க யத்தனிப்பதும் கவனிக்கத் தக்கது.

இந்திய பண்பாட்டின் அடிப்படையான பொது பாரம்பரியக் கூறுகளை மறுதலித்து, இஸ்லாமிய எதிர்ப்புணர்வை வலியப் புகுத்திடும் தன்மையில் தேசத்தின் வரலாற்றைத் திரித்துக் கூறுவதும், கடைந்தெடுத்த பொய்களுக்கு மெய்யான தோற்றம் தருவதும் வகுப்புவாத சக்திகளின் இன்றைய நடைமுறையாய் மாறியுள்ளது.  முகலாயர் ஆட்சியின் முக்கிய நிகழ்வுகளும், சாதனைகளும் கூட சர்ச்சையாக்கப்படுகின்றன. மாமன்னர் ஷாஜகானால் கட்டப்பெற்ற, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மகால், அதன் எழில்மிகு கட்டிடக் கலைக்கும், நிபுணத்துவம் நிறைந்த வடிவமைப்பிற்கும் பெயர் பெற்றது.  ஆனால் தாஜ் மகால் ஒரு இந்து மன்னரால் கட்டப்பட்ட  இந்து கோயில் என்றும், அதன் பெயர் ‘தேஜோ மகால்‘ என்றும் ஒரு புதிய விவாதம் கிளப்பி விடப்படுகிறது. இத்தகைய சர்ச்சைக்குரல் அறுபதாண்டுகளுக்கு முன்பே, 1960-களில் ‘விநோதமாகச் சிந்திக்கும் விந்தை மனிதர்‘ புருஷோத்தம் நாகேஷ் ஓக் என்பவரிடமிருந்து எழுந்தது.  அபத்தமாகக் கருதப்படும் இவரது விவாதம் இதோடு முடியவில்லை.  பகவான் கிருஷ்ணரின் போதனைகளை உரைக்கும் ‘கிருஷ்ண நீதி‘ என்பதிலிருந்து தான் ‘கிறிஸ்தவ மதம்‘ உதித்தது என்றும், இந்து மதத்தில் துறவிகளின் வாழ்விடமாக சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் ‘வாதிகா‘ என்ற வார்த்தையிலிருந்துதான் ‘வாடிகன்‘ நகருக்குப் பெயரிடப்பட்டது என்றும், மெக்காவின் ‘காபா‘ சிவலிங்கத்தின் வடிவம் என்றும் அவர் அடுக்கிக் கொண்டே போகிறார்.  பல பத்தாண்டுகளாக இவரது மேற்கூறிய சர்ச்சைக் கருத்துக்கள், மனப்பிறழ்வு கொண்ட ஒருவரிடமிருந்து வெளிப்படுகிற, ஓரங்கட்டப்பட வேண்டிய உளறல்கள் என்றே எள்ளி நகையாடப்பட்டன.  ஆனால் இன்று, ‘ஓரங்கட்டப்பட்ட‘ இந்தக் கருத்துக்களுக்கு உயரிய இடம் வழங்கப்பட்டு, அதை விமர்சிப்பவர்கள் தேசவிரோதிகளாகவும், இடதுசாரி-மதச்சார்பற்ற சிந்தனையை முன்னிறுத்தி, இந்து உணர்வுகளை உதாசீனம் செய்பவர்களாகவும், முஸ்லிம்களையும், ஏனைய சிறுபான்மையினரையும் தாஜா செய்து திருப்திப்படுத்துவதற்காக, இந்துக்களை அவமதிப்பவர்களாகவும் முத்திரையிடப்படுகின்றனர்.

“அண்மைக் காலங்களில் இந்து வகுப்புவாதப் பேச்சாளர்கள், வட இந்தியாவின் பல பகுதிகளிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக விஷத்தைக் கக்கி வெறுப்பூட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்” என்று தி எகானமிஸ்ட் ஏடு அக்கறையுடன் அம்பலப்படுத்துகிறது.  ‘முஸ்லிம்களைக் கூண்டோடு நாட்டைவிட்டு வெளியேற்றுவோம்‘, ‘முஸ்லிம் பெண்களைக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவோம்‘ என்றெல்லாம் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் இவர்கள் கொக்கரிப்பது வாடிக்கையாகி வருகிறது. பீகார் மாநில பிஜேபி தலைவர்களுள் ஒருவரான ஹரிபூஷன் தாகுர் பச்சல், கடந்த மே 7 அன்று ஒரு பேரணியில், ‘இந்து பண்டிகைகளில் இராவணனின் கொடும்பாவி எரிக்கப்படுவதைப் போல, இஸ்லாமியர்கள் அனைவரும் உயிரோடு கொழுத்தப்பட வேண்டும்‘ என்று பேசினார்.  வெளிப்படையாகவே வன்முறையைத் தூண்டும் தங்களுடைய வார்த்தை விளையாட்டுகள் மீது ஆளும் அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்பதை நன்கு அறிந்த இந்த இந்துத்துவ வெறியர்கள், ‘இந்துக்கள் அனைவருக்கும் ஆயுதங்கள்  அளிக்கப்பட வேண்டும்‘ என்றும், ‘இந்தியாவின் நன்மைக்காக, இஸ்லாமியர்கள் மீது ஒரு இனப்படுகொலை நடத்தப்பட வேண்டும்‘ என்றும் பகிரங்கமாக அறைகூவல் விடுத்து, பொது வெளியில் முழங்கி வருகிறார்கள். 

சிறுபான்மையினர் எதிர்ப்பு மனநிலை

ஒரு தேசத்தின் உருவாக்கம் என்பது, படிப்படியாக நடைபெறும் வரலாற்று நிகழ்வு.  ஆட்சிக் கட்டிலில் இருப்பவர்களின் ஆணைகளைக் கொண்டோ, நிரந்தரமாக வரையப்பட்ட விதிகளைக் கொண்டோ அது நடைபெற இயலாது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.  தேச வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் திடீர் திருப்பங்களும் மாற்றங்களும் தவிர்க்க இயலாதவை.  1990-களில் யுகோஸ்லேவியா மறைந்து புது நாடுகள் உருவானதும், 1971-இல் நமக்கு மிக அருகே, பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்கதேசம் பிறந்ததும்,  தேசங்களின் வரலாற்றுத் திருப்பங்களுக்கான சமீபத்திய எடுத்துக் காட்டுகளாக உள்ளன.  14-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடைபெற்ற சண்டையில் துருக்கிய முஸ்லிம்கள் வெற்றி பெற்று, செர்பிய கிறிஸ்தவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.  அந்தப் போரின் ‘வலி மிகுந்த நினைவுகள்‘, 600 வருடங்கள் கடந்தபின், பழிதீர்க்கும் மனநிலையோடு மீண்டும் மீண்டும் பேசப்பட்டதால், 1995-இல் யுகோஸ்லேவியாவின் ஸ்ரெப்ரீனிகா பகுதியில், 8,000-க்கும் மேற்பட்ட போஸ்னிய முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்பகுதியில் ஐந்து நூற்றாண்டுகளாக இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இணக்கமான சூழலில் அமைதியாகவே வாழ்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்தியாவில் ‘இஸ்லாமியக் கொடுங்கோன்மை‘ என்ற பெயரில் ‘நினைவுகளை வன்முறைப்படுத்தும்‘ போக்கு நீடித்தால், யுகோஸ்லேவியாவின் கதியே இங்கும் நிகழும் என்று கூறினால் அது நிச்சயம் மிகையல்ல.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த தலைசிறந்த அறிஞரான மிச்சேல் குக்லெயில்மோ, இந்தியாவில் அண்மைக் காலமாக வகுப்புவாத சக்திகள் வலுப்பெற்று, இந்தியாவை மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்ற தன்மையிலிருந்து, ‘இந்து ராஷ்டிரமாக‘ மாற்றிட, அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதை, போதிய ஆதாரங்களுடன் உறுதிபட எடுத்துரைத்துள்ளார்.  ஆட்சியாளர்கள் ஆணவத்தோடு தங்கள் வழிமுறைகளைச் செயல்படுத்தும் விதம், இந்தியாவில் ஜனநாயகம் நீடிக்குமா? என்று கேள்வியெழுப்பும் சூழலைக் கொணர்ந்து நிறுத்தியுள்ளது.  ஸ்வீடன் நாட்டின் வீ-டெம் இன்ஸ்டிடியூட்,  அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஃப்ரீடம் ஹவுஸ் நிறுவனம், தி எகானமிஸ்ட் ஏட்டின் அறிவுத்திறன் பிரிவு ஆகிய அனைத்து ஆய்வு அமைப்புகளும், இன்றைய இந்தியாவை ஒரு முழுமையான ஜனநாயக நாடாக ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. இந்தியாவில் ‘ஜனநாயகப் பின்னடைவு‘ நிகழ்ந்து வருவதாக அறுதியிட்டுக் கூறும் இந்த சர்வதேச அமைப்புகள், இந்தியாவின் இன்றைய யதார்த்த நிலையை , ‘ஓரளவே சுதந்திரமான ஜனநாயகம்‘, ‘குறைபாடுமிக்க ஜனநாயகம்‘, ‘தேர்தல்வழி சர்வாதிகாரம்‘ என்று அடையாளப்படுத்துகின்றன. 

இவ்வாறு இந்தியா தரமிறக்கம் செய்யப்பட்டிருப்பதற்கு, இன்றைய ஒன்றிய அரசு திட்டமிட்டு பரவச் செய்யும் ‘சிறுபான்மையினர் எதிர்ப்பு மனநிலை‘ மற்றும் அதையொட்டி நிறைவேற்றப்பட்ட சட்டங்கள், மனித உரிமை மீறல் சம்பவங்கள், குறைந்து வரும் கருத்துச் சுதந்திரம், ஒடுக்குமுறைக்கு ஆளாகும் ஊடக சுதந்திரம், சிவில் சமூகத்தின் தேக்க நிலை  போன்றவையே பிரதான காரணங்களாகக் கூறப்படுகின்றன.

ஆக்கபூர்வமான முயற்சிகள் தேவை

அண்மைக்காலமாக, வரலாற்றை அப்படியே திரித்துக் கூறுவதும், உண்மைக்குச் சிறிதும் தொடர்பில்லாத அப்பட்டமான பொய்களைப் பெருமளவில் உற்பத்தி செய்து, அவற்றையும் வரலாறு என்றே அடையாளப்படுத்துவதும் அனைவரையும் அச்சம் கொள்ளச் செய்யும் விதத்தில் மிக வேகமாக நடந்தேறி வருகிறது.  இருப்பினும், இவற்றுக்கான தகுந்த எதிர்வினையும், இத்தகைய போக்குகளைத் தடுப்பதற்குரிய ஆவேசமான செயல்பாடும் போதுமான வேகம் பெறாமல், தேவைப்படுகிற அழுத்தமும் இல்லாமல் முடங்கிக் கிடப்பது போலத் தெரிகிறது.  1999-2005இல் பாசிச சக்திகளைத் தடுப்பதற்கான போராட்டம் பலம் வாய்ந்ததாக இருந்தது.  1977-79 வருடங்களிலோ, வகுப்புவாத சக்திகளின் தீய முயற்சிகளை முளையிலேயே கிள்ளி எறியும் அளவுக்கு எதிர்ப்புக் குரல் ஓங்கி ஒலித்தது.  ஆனால் இன்று எதிர்ப்பியக்கம் ஆமை வேகத்தில் நடைபெறுவதும், பொது வெளியில் பலத்த மௌனம் நிலவி வருவதும் உண்மையிலேயே ஆழ்ந்த கவலைக்குரிய அம்சம்…

இவ்வாறாக, இடர்கள் நிறைந்த ஒரு காலச் சூழலில், ஒரு சிலர் முன்வந்து உண்மையான வரலாற்றை எழுதித் தொகுக்க முன்வருவதால் மட்டும், வரலாற்றியல் மீதான தாக்குதல்களை எதிர்கொள்ள இயலாது.  சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் ஆளுமை செலுத்தக் கூடிய, உறுதிமிக்க அரசியல் தலையீடுகளே இன்று உடனடித் தேவையாக உள்ளன. 

நாட்டின் பல பகுதிகளிலும் தன்னெழுச்சியாக நடைபெற்று வருகிற போராட்ட, பிரசார இயக்கங்கள் வருங்காலத்தின் மீதான நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சுகின்றன.  கணிசமான எண்ணிக்கையிலான மதிப்புவாய்ந்த மூத்த குடிமக்கள், முக்கியப் பதவிகளை வகித்த முன்னாள் அரசு உயரதிகாரிகள், இராணுவத்தில் உயர்நிலை பொறுப்புகளை ஏற்றுப் பணியாற்றியவர்கள், அயல்நாட்டுத் தூதர்களாகவும், இன்ன பிற துறை தலைவர்களாகவும் செயல்பட்ட வல்லுநர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள ஊடிளேவவைரவiடியேட ஊடினேரஉவ ழுசடிரயீ அமைப்பு, ஜனநாயக வழிமுறைகளைப் புறக்கணித்தும், அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து வழுவியும் ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சிப்பதோடு, அதற்கு எதிரான பரப்புரைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.  இதுபோன்றே, அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது துணிவுடன் இயங்கும் செய்தி ஏடுகள், சுதந்திரமான ஊடக நிறுவனங்கள், உண்மையை உரக்கப் பேசும் பத்திரிகையாளர்கள், அறிவார்ந்த சமூகத்தின் பிரதிநிதிகளாக விளங்கும் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், முற்போக்குக் கலைஞர்கள், மனித உரிமைப் போராளிகள், சரித்திரத் தேர்ச்சி கொண்ட வரலாற்றியல் அறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என அனைவரும் படைவரிசையாய் நின்று, தேசத்தின் ஜனநாயக மரபுகளைக் காக்கவும், கூட்டாட்சி தத்துவத்துடன் அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்தவும் ஓங்கிக் குரல் எழுப்பி பாடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய ஆக்கபூர்வமான முயற்சிகள் மூலம், இந்திய வரலாறு சிதைக்கப்படுகிற கொடுமை தடுத்து நிறுத்தப்பட்டு, உண்மை வரலாறு நிலைபெற வேண்டும்.  ஜனநாயகம் வெற்றிகண்டு சாதனை படைக்க வேண்டும்.

(ஆங்கில மார்க்சிஸ்ட் (ஜனவரி – ஜூன் 2022) இதழில் வெளியானது.)

தமிழில்: கடம்பவன மன்னன்



Leave a comment