மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


சமுதாய மாற்றம் பற்றிய மார்க்சீய சித்தாந்தத்தில் தத்துவம் வகிக்கும் பங்கு


பி. டி. ரணதிவே

(இக்கட்டுரை, மார்க்ஸ் நினைவுநாள் நூற்றாண்டை ஒட்டி பி.டி.ரணதிவே எழுதிய கட்டுரையின் சுறுக்கம்)

மார்க்ஸ் மறைவின் நினைவு நூற்றாண்டைக் கொண்டாடும் இவ்வேளையில் மற்றொரு பேரறிஞரான பிரடரிக் எங்கல்சுடன் இணைந்து மார்க்ஸ் உருவாக்கித்தந்த தத்துவம் தொடர்ந்து வெற்றிகரமாக முன்னேறி வருவதைக் காண்கிறோம். சமுதாய வளர்ச்சி மற்றும் மாற்றங்கள் பற்றிய மார்க்சிய சித்தாந்தம் இறந்த காலத்தைப் பற்றி புரிந்துகொள்வதற்கு மட்டுமல்ல, சமுதாய மாற்றத்தின் விதிகளுக்கு உட்பட்டு உணர்வுப் பூர்வமாக வரலாற்றை உருவாக்குவதற்கு இன்று மக்களுக்குத் துணை நிற்கிறது.

வரலாறெங்கும் காணக்கிடைக்கும் புரட்சிகளிலேயே சோசலிசப் புரட்சிதான் முதன் முதல் உணர்வுபூர்வமாக நடத்தப்பட்ட புரட்சியாகும். அதாவது புரட்சியின் முன்னணி சக்திகள் தங்களது குறிக்கோள்களையும் லட்சியங்களையும் முழுவதுமாக உணர்ந்து செயல்பட்டு உருவாக்கிய புரட்சியாகும்.

அனைத்து சகாப்தங்களிலும் மனித குல நடவடிக்கைகளின் மீது செல்வாக்கு வகிக்கின்ற தத்துவ ஞானம், மதம், பாரம்பரியங்கள் முதலிய அம்சங்களை வரலாறு பற்றிய பொருள்முதல்வாதம் கவனிக்காமல் புறக்கணித்துவிட்டதென பொருள்முதல்வாதத்தின் எதிரிகள் குற்றஞ்சாட்டுவதுண்டு. இத்தகைய கண்டனம் சரியானதல்ல. ஏனென்றால் மார்க்சிய மூலவர்கள் தங்களது தத்துவத்தை விளக்கமாகக் கூறும்போது, மேற்சொன்ன தத்துவங்களின் செல்வாக்கைப் பற்றி கவனிக்க என்றுமே தவறியதில்லை.

உற்பத்தி உறவுமுறைகளில் மாறுதல் ஏற்பட்டவுடன், மனிதகுலம் ஒரு தத்துவத்திலிருந்து மற்றொரு தத்துவத்திற்கு தானாகவே தாவிக் குதித்துவிடும் என அவர்கள் கருதியிருந்தார்களேயானால் , பழைய தத்துவ அரசியல் அமைப்புகள் புதியவற்றிற்கு எளிதில் வழிவிட்டு ஒதுங்கிவிடும் என அவர்கள் கருதியிருந்தார்களேயானால் பழைமையான கருத்துகளை எதிர்த்து ஒரு தத்துவப் போராட்டத்தை நடத்தியிருக்க மாட்டார்கள். முதலாளித்துவ அரசைத் தூக்கியெறிவதற்கும், பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசை உருவாக்கும் வகையிலும் தொழிலாளி வர்க்கத்திற்கு ஒரு அரசியல் ஸ்தாபனம் வேண்டும் என விரும்பியிருக்க மாட்டார்கள்.

மேலோங்கிவரும் புதிய உறவுகளை எதிர்ப்பதில் பழைய தத்துவங்கள் போன்ற மேல்கட்டுமானங்களின் முனைப்பான பாத்திரம் பற்றி அவர்கள் முழுவதுமான விளக்கியிருக்கிறார்கள். ஏற்கனவே வழக்கத்திலிருக்கும் தத்துவங்களையும் ஆதிக்கம் புரியும் அரசியல் அதிகாரத்தையும் எதிர்த்துப் போராடுவது தவிர்க்க முடியாதது. ஏனெனில் புதிய மாற்றங்களினால் பழைய ஆதிக்க வர்க்கங்களின் நலன்கள் பாதிக்கப்படுகின்றன. ஆகவே அவர்களது தத்துவங்களை எதிர்ப்பது அவசியமாகிறது.

மாற்றத்தை ஏற்படுத்துவதிலும், பழைய அமைப்பை எதிர்த்துப் போராடுவதிலும் அக்கறை கொண்ட மக்கள் தங்களது பழைய கருத்துகளை உடனடியாகக் கைவிட்டுவிடுவதில்லை. இதன் காரணமாக பிற்போக்குத்தனமான திசை திருப்பும் தத்துவங்களுக்கு அவர்கள் இரையாகின்றனர். இதனால் சமுதாயப் போராட்டத்தை ஒருமுகப்படுத்துவதில் தடையும் தாமதமும் ஏற்படுகின்றன.

ஆதிக்கச் சக்திகளின் சமுதாய உணர்வு என்பது சக்தியற்று நிற்கும் உணர்வு அல்ல. வளர்ந்துவரும் மாற்றங்களைக் கண்டு அது அமைதியாக இருப்பதில்லை. புதிய மாற்றங்களை எதிர்த்துப் போராடவரும்; புதுமையான சமுதாய உணர்வுகள் தோன்றும்போது அவைகளை முழுமையாக முறியடிக்க முன்வரும்.

இந்தியா சுதந்திரமடைந்து முப்பத்தைந்து ஆண்டுகள் ஆகிய பின்னரும், சில தவிர்க்க முடியாத பொருளாதார விளைவுகள் ஏற்பட்டுவிட்ட பின்னரும், மதவெறி, சாதி வெறி, தேசிய ஒற்றுமை உணர்வின்மை இவையெல்லாம் குறைவதற்கு பதிலாக அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.

இது ஏன் என்று பலருக்கு குழப்பமாகவே இருக்கிறது. விடுதலைப் போராட்டம் நடைபெற்ற நீண்ட நெடிய காலத்தில் முற்போக்கு சக்திகள் அன்று நடத்திய போராட்டங்களை மீண்டும் புதிதாக நடத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வர்க்கப் போராட்டமோ, மார்க்சியமோ இந்திய சூழ்நிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை எனவும், சாதி, மத உணர்வுகள் என்றும்போல் தொடர்ந்து வலுவாக இருந்துவருகின்றன எனவும் சிலர் வாதிடுகின்றனர். முந்தைய காலங்களில் இவர்கள் ஒரு வாதத்தை எழுப்புவதுண்டு இந்தியாவின் ஆன்மீகப் பின்னணியும் பாரம்பரியங்களும் மேற்கத்திய பொருள்முதல்வாதக் கண்ணோட்டங்களினால் எக்காலத்திலும் பாதிக்கப்பட மாட்டா என்ற கருத்தைக் கொண்டிருந்தனர்.

பொருளாதார வளர்ச்சிதான் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் உந்து சக்தி:

1892 ஆம் ஆண்டு “கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும்’ என்ற தனது ஆங்கில நூலுக்கு எங்கல்ஸ் ஒரு முன்னுரை எழுதினார். அதில் பின்வருமாறு கூறுகிறார். “நான் வரலாற்றுப் பூர்வமான பொருள் முதல்வாதம் என்ற சொற்களை ஆங்கிலத்திலும் இதர மொழிகளிலும் பயன்படுத்தும்போது, பிரிட்டிசாரின் மரியாதைக்கு, மதிப்புக்கொடுக்கும் மனப்பாங்கு அதிர்ச்சியடையாது என நம்புகிறேன்” இந்த சொற்றொடரை நான் எதற்காக பயன்படுத்துகிறேன்?

வரலாற்றில் நிகழும் அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளுக்கும் உந்து சக்தியாகத் திகழ்வது இறுதியான ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சிதான். இந்த மாறுதலுக்குக் காரணமான உந்து சக்தி என்பதைக் குறிப்பிடவே பயன்படுத்துகிறேன். உற்பத்தி முறையிலும் பொருட்களின் பரிவர்த்தனையிலும் மாறுதல் ஏற்படுவதும் அதன் விளைவாக சமூக அமைப்பானது தெளிவான, வர்க்கங்களாகப் பிளவுபடுவதும், அதன் விளைவாக ஒன்றுக்கு மற்றொன்று எதிராக வர்க்கப் போராட்டங்களில் ஈடுபடுவதும்தான் வரலாற்றில் நிகழும் அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளுக்கும் முக்கியக் காரணங்களாகத் திகழ்கின்றன என்பதைக் குறிப்பிடவே மேற்கூறிய சொற்றொடரைப் பயன்படுத்துகிறேன்” (வரலாற்று ரீதியான பொருள்முதல்வாதம்)

பொருளதார அடிப்படைதான் இறுதியாக நிர்ணயிக்கின்ற சக்தி என்ற கருத்தை வலியுறுத்தும் எங்கல்ஸ், அதே வேளையில் பொருளாதார அடிப்படை அல்லாமல் வேறு சில அம்சங்களுக்கு பங்கே இல்லை எனப் பொருள்கொள்ளக் கூடாது எனவும் விளக்குகிறார். சி. ஸ்மித் என்பவருக்கு 1990 ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தில் ‘பொருளாதார அமைப்புதான் அடிப்படைக்  காரணம்’ என்றாளும் கூட தத்துவங்களும் (சமூக அமைப்பின் மீது) தங்களது செல்வாக்கைச் செலுத்துகின்றன என்பதை மறுக்க முடியாது. தத்துவங்களின் விளைவு இரண்டாம்பட்சமே என்பது வேறு விசயம். இந்த உண்மையை இந்த மனிதர் இன்றும் அறிந்திருக்கவில்லையென்றால், அவர் எழுதும் விசயங்களைப் பற்றியும் அவர் புரிந்துகொண்டிருக்க முடியாது’ எனக் குறிப்பிடுகிறார்.

ஜே.ப்ளோக் என்பவருக்கு தான் எழுதிய கடிதத்தில் (செப்டம்பர் 1890) நாங்கள் இதைப்பற்றி மேலும் விளக்கும் வகையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின்படி யதார்த்த வாழ்வின் உற்பத்தியும் மறு உற்பத்தியுமே இறுதியாக வரலாற்றை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குகின்றன. மார்க்சோ, நானோ இதற்கு மேல் எதையும் வலியுறுத்திச் சொன்னதில்லை. ஆகவே பொருளாதார அம்சம் மட்டுமே நிர்ணயிக்கும் சக்தி கொண்டது என எவராவது திருத்துக் கூறுவார்களேயானால் அது அர்த்தமற்ற பிதற்றல் என்றே கொள்ள வேண்டும். பொருளாதாரச் சூழல் என்பது அடிப்படை – ஆனால் அதன் மேல்கட்டுமானத்தில் உள்ள பல்வேறு அம்சங்களும் இதில் பங்கு வகிக்கின்றன. வர்க்கப் போராட்டத்தின் அரசியல் வடிவங்கள் மற்றும் அதன் விளைவுகள், உதாரணமாக வெற்றிபெறும் வர்க்கப் போராட்டத்திற்குப் பின் உருவாகின்ற அரசியல் சாசன சட்டங்கள் நீதி நிர்வாக முறைகள், இந்தப் போராட்டத்தில் நேரடியாக பங்கேற்பவர்களின் மனதில் அரசியல் நீதி, தத்துவஞானம், மதம் ஆகிய அம்சங்களின் மற்றும் இத்தகைய அம்சங்களின் மற்றும் இத்தகைய அம்சங்களை உள்ளடக்கிய பொதுவான தத்துவங்களின் பிரதிபலிப்புகள் ஆகிய அனைத்துமே வரலாற்றில் நிகழும் போராட்டங்களின் வளர்ச்சிப் போக்கில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இன்னும் சொல்லப்போனால், இந்த அம்சங்கள் பல நேரங்களில் போராட்டங்களின் வடிவத்தை தீர்மானிப்பதில் அதிக செல்வாக்கு வகிக்கின்றன. இத்தகைய பல்வேறு அம்சங்கள்: ஒன்றுக்கொன்று பாதிப்புகளை உண்டாக்குகின்றன. அதனூடே பல தற்செயல் நிகழ்ச்சிகள் நிகழ்வதும் உண்டு . இந்த தற்செயல் நிகழ்ச்சிகளுக்கான தொடர்பு என்ன என்பது நிரூபிக்கப்பட முடியாமல் இருக்கலாம். அதன் விளைவாக அவை கணக்கிலெடுத்துக் கொள்ளத் தேவையில்லாத ஒன்றாகவும் இருக்கலாம். எனினும் இறுதியாக வரலாற்றை நிர்ணயிக்கும் சக்தி, பொருளாதார இயக்கம் தேவையான ஒன்றாக தன்னை ஊர்ஜிதம் செய்துகொள்கின்றது. இப்படிப்பட்ட சிக்கலான தன்மை, இந்த தத்துவ அணுகுமுறையை ஒவ்வொரு காலகட்டத்திற்கும் பொருத்திப் பார்க்கும்போது தோன்றத்தான் செய்யும். இப்படிப்பட்டதொரு எதார்த்த அணுகுமுறை இல்லையென்றால், வரலாற்றைப் பற்றிய ஒரு ஞானம் சாதாரண பெருக்கல் வாய்ப்பாடு போல சுலபமானதாகக் கருத இடமளிக்கும்”

ஜோசப் ப்ளோக் எழுப்பி கேள்விக்கே எங்கல்ஸ் மேற்கண்டவாறு கூறினார். அந்தக் கேள்வி என்ன? வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின் படி, வரலாற்றை நிர்ணயிக்கும் அம்சம் யதார்த்த வாழ்வில் நிகழும் உற்பத்தியும் மறு உற்பத்தியும் என்று கூறுகிறீர்கள். அப்படியானால், இதை எப்படி புரிந்துகொள்வது? பொருளாதார உறவுகள் மட்டுமே சமூக வாழ்வில் அம்சமாகிவிடுமா? அல்லது தாங்களாகவே செயல்படுகிற மற்ற உறவுகளுக்கு பொருளாதார உறவுகள் ஓரளவு அடிப்படையாக அமைகின்றனவா? வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் முழுக்க முழுக்க அரசியல் வம்சாவளி ஆட்சி தவிர தனிநபர் நலன்கள் கூட பாத்திரம் வகித்ததில்லையா?” என்ற ப்ளோக்கின் இந்தக் கேள்வியைக் குறிப்பிட்டு எங்கல்ஸ் ஸ்மித்துக்கு எழுதிய கடிதத்தில் (அக்டோபர் 1980) பின்வருமாறு குறிப்பிடுகிறார்; “பொருளாதார இயக்கத்தின் அரசியல் பிரதிபலிப்புகள் முதலிய ஒவ்வொரு எதிர் விளைவும் அந்த இயக்கத்தையும் பாதிக்கும் என்பதையும் நாம் மறுக்கிறோம் என ப்ளோக் நினைப்பாரேயானால் அவர் சுழற்காற்றாடி எந்திர மில்லில் சிக்கிக் கொண்டு தவிக்கிறார் என்றுதான் பொருள்”

பொருளாதார மாற்றங்களுக்கு எதிரான அரசுகள் சிதறும்

மார்க்சும் எங்கல்சும் தங்களது காலத்திய நிகழ்ச்சிப் போக்குகளையும், இறந்த காலத்தையும் பற்றி ஆய்வு செய்யும்போது, பொருளாதார அம்சத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த அதே வேளையில் மற்ற அனைத்து அம்சங்களையும் கணக்கில் கொண்டே ஆய்வு செய்தனர், இறந்தகாலத்தை பற்றி ஆய்வுசெய்யும்போது, வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் ஒரு கட்டத்தில் ஏற்பட்ட அரசு பிற்கால வரலாற்றில் அது வகித்த பாத்திரம் பற்றியெல்லாம் அவர்கள் கணக்கிலெடுத்துக் கொள்ளத் தவறவில்லை. அரசு அதை ஊக்குவித்துச் சென்றதுமுண்டு அல்லது அத்தகைய பொருளாதார மாற்றங்களுக்கு எதிராக செயல்பட்டதும் உண்டு. எதிராகச் செயல்படும் நேரங்களில் அரசு துண்டுதுண்டாக நொறுங்கிவிடும், பொருளாதார மாற்றம் ஒரு குறிப்பிட்ட திசையில் செல்வதைத் தடுத்து, வேறு ஒரு பாதையில் செல்லவைக்கும் பணியையும் அரசு மேற்கொள்வதுண்டு. இவைகளைப் பற்றியெல்லாம் மார்க்சும் எங்கல்சும் கவனிக்கத் தவறவில்லை.

1894 ஆம் ஆண்டு டபிள்யூ, போர்ஜியஸ் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் எங்கல்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “அரசியல், சடம், தத்துவம், மதம், இலக்கியம், கலை முதலியவற்றின் வளர்ச்சிக்கு பொருளாதார வளர்ச்சியே அடிப்படையாகும். ஆனால் இவையனைத்தும் ஒன்றின் மீது ஒன்றும் பொருளாதார அடிப்படையின் மீதும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. பொருளாதாரச் சூழ்நிலை மட்டும்தான் காரணமாகவும் தனித்துச் செயல்படக்கூடியதாகவும் இருக்கிறது. மற்ற அனைத்தும் அதற்கு உட்பட்டு இணைந்து செல்லக் கூடியதாகவே இருக்கும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். மாறாக, பல்வேறு அம்சங்களின் பரஸ்பர நிகழ்வுகளுக்கு அடிப்படைப் பொருளாதாரத் தேவையேயாகும். அந்தத் தேவைதான் இறுதியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. அரசை எடுத்துக்கொள்வோமானால், அதனுடைய நடவடிக்கைகளுக்கு ஒரு பொருளாதார விளைவு உண்டு. தற்காப்பு வரிகளை விதிப்பது, சுதந்திரமான வணிகத்தை அனுமதிப்பது நல்லதாகவோ அல்லது மோசமானதாகவோ வரைமுறைகள் கொ?ண்டிருப்பது இவையெல்லாமே பொருளாதாரத்தின் மீது செல்வாக்கு செலுத்துகிற அம்சங்களே.

அரசியல், தத்துவம், ஆதிக்கம் செலுத்தினாலும் இறுதியாக நிர்ணயிப்பது

1648 லிருந்து 1830 வரை, ஜெர்மனியில் ஒருவகையான அரசு இருந்தது, மத சம்பந்தமான விசயங்களில் அதீதமான பயபக்தி அதீதமான ஆன்மீக ஒழுக்கம், அரசர்களுக்கும், பிரபுக்களுக்கும் அடிபணிந்து நடக்க வேண்டும் என்று அரசு செய்துவந்த போதனைகளுக்கு பொருளாதார விளைவுகள் இல்லாமலில்லை. பொருளாதார முன்னேற்றம் ஏற்பட தடையாக இல்லாமல் இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம். இதற்கு அடுத்தாற்போல் நடந்த புரட்சிப் போராட்டங்கள் நெப்போலியன் படையெடுப்புகள் நிகழும்வரை மேற்கூறிய நிலைமை நீடித்தது. அந்த நிலைமை நாட்டுக்கு ஏற்படுத்திய துயரம் கொடுமையானதாகும். இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவு, ஒரு பொருளாதார  வளர்ச்சிப் போக்கு நிகழ்ந்துவிட்டவுடனேயே சிலர் தங்கள் வசதிக்கு நினைத்துக்கொள்வதைப் போல உடனடியாக சமூக மேல்கட்டுமானத்தில் மாறுதல்களைச் செய்துவிடுவதில்லை. மனிதர்கள்தான் வரலாற்றைப் படைக்கின்றனர்; ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில்தான் அவ்வாறு செய்கின்றனர்; அந்தக் குறிப்பிட்ட சூழ்நிலைக்கு ஏற்கனவே இருந்து வரும் உறவுகளுக்குள் பிரதானமாக பொருளாதார உறவுகளே அடிப்படையாக அமைகின்றன. அரசியல் மற்றும் தத்துவம் போன்ற மற்ற உறவுகள் பொருளாதார உறவுகளின் மீது எவ்வளவு ஆதிக்கம் செலுத்தியபோதும், பொருளாதார உறவே இறுதியாக நிர்ணயிக்கும் அம்சமாக இருக்கிறது. அதன் அடிப்படையில்தான் விசயங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்”

(மார்க்ஸ் எங்கல்ஸ் கடிதங்களின் திரட்டு, புத்தகம்)

சமுதாய வாழ்வில் பொருளாதார அம்சங்கள் வகிக்கும் நிர்ணயமான பங்கின் முக்கியத்துவத்தை யாரும் ஒப்புக்கொள்ளாத காலத்தில் மார்க்சும், எங்கல்சும் அவைகளை வலியுறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனால்தான் குழப்பம் உண்டாயிற்று என்று சிலர், பொருளாதார அம்சத்திற்கு தேவைக்கு மீறிய அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்தக் குழப்பத்திற்கு மார்க்சும், நானும் ஓரளவுக்குப் பொறுப்பேற்க வேண்டும். எங்கள் எதிர்ப்பாளர்கள் எங்களது முக்கியமான சித்தாந்தத்தை மறுக்கும்போது நாங்கள் அதை வலியுறுத்திக் கூற வேண்டியிருந்தது. மற்ற அம்சங்களுக்கும் அவைகளுக்கு உரித்தான அளவில் முக்கியத்துவம் அளித்து விளக்குவதற்கு எங்களுக்கு எப்போதும் நேரமோ சந்தர்ப்பமோ, இடமோ வாய்க்கவில்லை. அதே நேரத்தில் வரலாற்றின் ஒரு பகுதியை விளக்க முற்படும்போது தத்துவத்தை நடைமுறைக்கு பொருத்திப்பார்க்கும்போது அது முற்றிலும் வேறான விசயமாக உள்ளது. அந்த விசயத்தில், தவறு எதையும் அனுமதிக்க முடியாது” என்று கூறுகிறார்.

தனிநபர் பக்தி வகித்த பாத்திரம்:

இது உண்மைதான். மார்க்சும், எங்கல்சும் எழுதிய ஒவ்வொரு விசயத்திலும் பொருளாதார  அம்சம் சமூக வாழ்வி நிர்ணயிக்கும் தன்மை வாய்ந்தது என்று வலியுறுத்திக் கூறும் அதே நேரத்தில் மற்ற அம்சங்களைப் பற்றியும் லூயி போனபார்ட்டின் 18 ஆம் புருமர் என்ற நூலைப் பற்றிக் குறிப்பிடும் எங்கல்ஸ், சமகால நிகழ்ச்சிகளை புரிந்துகொள்வதற்காக தத்துவத்தைப் பயன்படுத்தும் முறைக்கு அந்நூல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறுகிறார்.

இந்த நூலில் வரலாற்றின் ஒரு காலகட்டத்தை மதிப்பிடும்போது பொருளாதார அம்சங்களுடன் அரசியல் மற்றும் தத்துவ அம்சங்களையும் கணக்கிலெடுத்துக்கொள்ளும் மார்க்ஸ், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் பாதிப்பை விளைவிக்கும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பங்கு பற்றியும் அலசி ஆராய்கிறார். விவசாயிகள் லூயி போனபார்ட் என்பவனை சர்வாதிகாரியாக பதவியில் அமர்த்தியதற்கு ஆதரவளித்தனர். நெப்போலியன் மீது அவர்கள் கொண்டிருந்த தனிநபர் பக்தி எத்தகைய செல்வாக்கை வகித்தது என்பது பற்றி மார்க்ஸ் விளக்குகிறார்: “நெப்போலியன் என்ற பெயர் கொண்டவனால்தான் தாங்கள் இழந்துவிட பெருமையை தங்களுக்கு மீட்டுத்தர முடியும் என்பது பிரெஞ்சு விவசாயிகளின் மனதில் வரலாற்றுப் பாரம்பரியம் ஏற்படுத்தியிருந்த ஒரு நம்பிக்கையாகும் (பழைய) நெப்போலியனின் (குடும்பப்) பெயரான போனபார்ட் என்ற பெயரைக் கொண்ட ஒருவன்தான்  அதைச் செய்ய முடியும் என்று தங்களது நம்பிக்கையின்படி மக்கள் அவனை பிரெஞ்சு சக்கரவர்த்தியாக (லூயி போனபார்ட்டை) ஆக்குகின்றார்கள். மருமகனின் (முந்தைய நெப்போலியன் போனப்பார்ட்டின் மருமகன்) விருப்பம் நிறைவுபெறக் காரணம், அந்தக் கருத்து பிரெஞ்சு மக்களில் மிகப்பெருமளவு வர்க்கங்களின் குறிப்பிட்ட கருத்துடன் ஒத்திருந்ததே” என மார்க்ஸ் குறிப்பிடுகிறார். இவ்வாறு பொருளாதார வளர்ச்சிப் போக்கினால் கட்டவிழ்த்து விருப்பப்படும் சமுதாய மாறுதலில் மேல் கட்டுமானமாக உள்ள அம்சங்கள் மனிதர்களின் அந்தந்தக் காலத்திய உணர்வுகளிலும் பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன என்பதை மார்க்சியம் அங்கீகரிக்கிறது. அதே சமயத்தில் எவ்வாறு மனிதர்களின் உணர்வுகளும், சித்தாந்தங்களும் பொருளாதார அம்சங்களுக்குத் தக்கவாறு மாறுகின்றன என்பதை மார்க்சியம் சரியாகவே கணித்துள்ளது.

சட்டங்களைப் பற்றிய பார்வை:

ஒரு சமுதாய அமைப்பின் சட்டங்களைப் பற்றிக் குறிப்பிடும் எங்கல்ஸ் பின்வருமாறு கூறுகிறார்: ஒரு நவீன அரசமைப்பில், சட்டம் என்பது பொதுவான பொருளாதார சூழ்நிலைக்கும், அதன் வெளிப்பாடுகளுக்கும் பொருந்துவதாக அமைய வேண்டும். அது மட்டுமல்ல, அந்தச் சட்டத்தில் முன்னுக்குப் பின் முரணில்லாத வகையில் உள்ளார்ந்த இசைவும் இருக்க வேண்டும். அதாவது உள் முரண்பாடுகளின் காரணமாக சட்டம் தன்னையே மறுத்துவிடக் கூடாது. இதை நிறைவேற்ற முயலும்போது பொருளாதாரத் தேவைக்கு சரியான பிரதிநிதித்துவத்தை சட்டம் வழங்குவதற்கு மேலும் மேலும் பாதிப்பு ஏற்படுகிறது. சட்டங்கள் என்பவை ஆதிக்க வர்க்கங்களின் அப்பட்டமான கலப்பற்ற எண்ணங்களை, விருப்பங்களை பிரதிபலிப்பது மிகவும் அபூர்வம். அப்படிச் செய்தால் மனித உரிமை பற்றிய பார்வையை அது பாதித்துவிடுமல்லவா? புனிதமான நெப்போலியனிய சட்டக் கோட்பாடுகளில் கூட 1792-1796 காலத்திய புரட்சிகர பூர்ஷ்வாக்கள் மனித உரிமைபற்றி நெடுங்காலமாகக் கொண்டிருந்த கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மனித உரிமையைப் பற்றிய கருத்தை சட்டக் கோட்பாடுகளாக மாற்றிய பின்னர், பாட்டாளி வர்க்கத்தின் சக்தி வளர்ந்தோங்கியதன் விளைவாக மனித உரிமை பற்றிய அக்கருத்தை தினமும் பலவாறாக மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. முதலில் பொருளாதார உறவுகளை சட்டக் கோட்பாடுகளாக மாற்றும்போது ஏற்படும் முரண்பாடுகளைக் களைந்து ஒரு இசைவான அமைப்பாக சடங்களை மாற்றும் முயற்சி நடைபெறுகிறது. அதன் பிறகு தொடர்ந்து நிகழும் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தும் நிர்ப்பந்தங்கள், சட்ட அமைப்பின் மீது செலுத்தும் செல்வாக்கு ஆகியவற்றின் காரணமாக ஏற்கனவே உருவாக்கப்பட்ட சட்டங்கள் அடிக்கடி மீறப்படுகின்றன. இது சட்டங்கள் பற்றிய வளர்ச்சிப் போக்கின் நிலைமையாகும். (மார்க்ஸ் – எங்கல்ஸ் கடிதங்கள்)

முழுக்க முழுக்க சட்டத்தின் எல்லைக்குள் நின்று பேசுவதாகவும், காரணத்திலிருந்துதான் விளைவுகளை ஆராயும் முறையிலேயே செயல்படுவதாகவும் சில சட்ட அறிஞர்கள் கற்பனை செய்துகொள்கின்றனர். இது உண்மையல்ல. சட்ட அறிஞர்களின் மூளைக்குள் உதிக்கும் ஒரு தலைகீழ் பார்வை என்று எங்கல்ஸ் குறிப்பிடுகிறார். இந்தத் தலைகீழ் வடிவத்தைத்தான் நாம் தத்துவக் கண்ணோட்டம் என அழைக்கிறோம். இத்தகைய கண்ணோட்டம் பொருளாதார அடிப்படையின் மீதும் செல்வாக்கைச் செலுத்த முடியும். சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் சில மாற்றங்களையும் ஏற்படுத்தக் கூடிய. இதற்கு ஒரு எடுத்துக்காட்டை எங்கல்ஸ் தருகிறார். பாரம்பரிய உரிமை என்பதற்கு அடிப்படையாக அமைவது பொருளாதாரம்தான். குடும்பத்தைப் பற்றிய வளர்ச்சி மட்டம் எங்கும் ஒரே மாதிரி இருக்கும்போது இது சரியானதே ஆனால், இங்கிலாந்திற்கும், பிரான்சிற்கும் இதே விசயத்தில் வேறுபாடுகள் உள்ளன. இங்கிலாந்தில் ‘உயில்’ எழுதுபவர்களுக்கு அபரிமிதமான சுதந்திரம் உண்டு ஆனால் பிரான்சில் ‘உயில்’ எழுதுவதற்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் அடிப்படை என்ன? இவற்றிற்கெல்லாம் முக்கியமான காரணங்கள் பொருளாதாரக் காரணங்களே தவிர வேறில்லை. காரணம் சொத்துரிமையை விநியோகம் செய்வதன் தேவை இந்த இரு தேசங்களிலும் இருவேறுவிதமான செல்வாக்குகள் செலுத்துகின்றன.

மனம் சிந்தனை பற்றி :
பொருளாதார நடவடிக்கைகளுக்கு நேரடியாகத் தொடர்பில்லாத மனம், சிந்தனை பற்றிய தத்துவங்களின் அடிப்படையே வேறு. அவை இறந்த காலத்தினாலேயே அதிக ஆதிக்கம் செலுத்தப்படுபவை. இறந்த காலத்தின் அறிவு அல்லது அறியாமையின் குவியலே அவை. நிகழ்காலம், இறந்த காலத்தை சிறிது மாற்றி புதிய வடிவில் அவர்களை வேரூன்றச்செய்கிறது. மதம், தத்துவஞானம் ஆகியவற்றில் வரலாற்றுக்கு முந்திய காலத்திய சிந்தனைகளின் பாதிப்பு உண்டு. உதாரணமாக, மனிதன் தன்னைப்பற்றியும் , இயற்கையைப் பற்றியும் கொண்டிருந்த பண்டைக்காலத்திய தவறான எண்ணப்போக்குகளின் பாதிப்பும் இருக்கும்.
“என்னைப் பொறுத்தவரை, இந்தத் துறைகளிலும் கூட, பொருளாதார வளர்ச்சியே இறுதியாக மேலாதிக்கம் செலுத்தக்கூடியது என்பது நிலைநிறுத்தப்பட்ட உண்மை. ஆனால் இந்தக் குறிப்பிட்ட துறைகளின் சில நிபந்தனைகளுக்குட்பட்டுத்தான் அந்த உண்மை செயல்படுகிறது. உதாரணமாக தத்துவஞானத்தை எடுத்துக் கொள்ளுங்கள். முந்தைய தலைமுறையினர் அளித்திருக்கும் தத்துவஞான விஷயங்களின் மீது பொருளாதார செல்வாக்கு செயல்படுகிறது (இது பொதுவாக அரசியல் வெளிப்பாடு போன்றவை மூலமாக செயல்படுகிறது). இங்கு பொருளாதாரம் புதிதாக எதையும் படைப்பதில்லை. ஆனால் ஏற்கனவே நடைமுறையிலிருக்கும் சிந்தனைப் போக்கில் மாறுதல் செய்து வளர்ச்சி பெறச் செய்கிறது. இதுவுங்கூட பெரும் பகுதி மறைமுகமாகவே நடைபெறுகிறது. ஏனெனில் அரசியல் சட்ட தார்மீ்க தாக்கமே தத்துவஞானத்தின் மீது நேரடியான செல்வாக்கைச் செலுத்துகின்றன.”(மார்க்ஸ்-எங்கெல்ஸ் கடிதங்கள் பக்கம்–401)

மதங்களின் மீது செல்வாக்கு

பொருளாதார நடவடிக்கையினின்றும் வேறுபட்டது என்று ஒதுக்கி வைக்கப்படும், மதமானது பல்வேறு வரலாற்று கால கட்டங்களையும் தாண்டி ஜீவிக்கிறது. ஆனால் அது பல்வேறு பட்ட காலங்களில் பல்வேறுவிதமான, வர்க்க எஜமானர்களுக்கு சேவை செய்திருக்கிறது. மதம் என்பது மிகப் புராதனமான ஆதிசமுதாய காலங்களில் தோன்றியதாகும். ஒவ்வொரு தத்துவமும், அது தோன்றிய பிறகு, அந்தந்த காலங்களில் உருவாகி வளரும் எண்ணங்களின் சூழ்நிலையில் வளர்கிறது: அந்த எண்ணங்களை மேலும் வளர்க்கிறது. அப்படிச் செய்யாவிட்டால் அது ஒரு தத்துவமாகவே இருக்க முடியாது. அந்தச் சிந்தனைகள், எண்ணங்கள் சுதந்திரமான தன்மையைப் பெற்று அதற்கே உரித்தான வழிமுறைகளின்படி சுதந்திரமாக வளர்கின்றன. எங்கெல்ஸ்(பஃவர்பாக்-எங்கெல்ஸ்) இந்த இடத்தில் எங்கெல்ஸ் கிறித்துவ மதம், நிலப்பிரபுத்துவத்தின் மறுபதிப்பான மத ஸ்தாபனமாக வளர்ந்தது எனக் குறிப்பிடுகிறார். மத்திய காலத்தில் இந்த வளர்ச்சியை அடுத்து கிறிஸ்தவ மதமும் நிலப்பிரபுத்துவம் போன்ற ஒரு அதிகார அமைப்பு முறையை ஏற்படுத்திக் கொண்டது. இந்தக் கட்டத்தில்தான் முதலாளி வர்க்கம் என்பது தோன்றுகிறது. இந்த புதிய சூழ்நிலைக்குத் தக்கவாறு மதத்திலும் மாறுதல் ஏற்படுகிறது. கத்தோலிக்க மதத்திற்கு எதிராக புராட்டஸ்டெண்ட் மதம் என ஒன்று தோன்றுகிறது. உழைக்கும் மக்களின் புரட்சிகரமான எதிர்ப்பும் இத்துடன் தோன்றுகிறது “மக்களின் உணர்ச்சிகளுக்கு மற்ற எதையும் விட மதம் அதிகம் தீனி போடுகிறது. அவர்களின் நலன்களை மதப் போர்வையுடன் பிரதிபலிக்கிறது. மேலும் வளர்ச்சிக்கு உதவிகரமாக இத்தகைய மாற்றம் ஏற்படுகிறது. எவ்வளவு முயன்ற போதிலும் புராட்டஸ்டெண்ட் மதத்தை அது தோன்றிய காலத்தில் கொன்றுவிட முடியவில்லை. காரணம் புராட்டஸ்டெண்ட் மதமானது வளர்ந்து வந்த முதலாளித்துவ நலன்களைப் பிரதிபலித்தது.”
மதம் சம்பந்தமான தத்துவம் மேலும் வளர்கிறது…ஆனால் அதனுடைய புதிய பதிப்புகள் பல்வேறு வர்க்கங்களின்  பல்வேறு சமுதாயங்களின் நலன்களை பிரதிபலிக்கின்றன. மாற்றமடையாத மதம் தனது எஜமானர்களையே மாற்றிக்கொண்டது.
போப்பாண்டவரும், கிறிஸ்துவ மத ஆலயங்களும் வாழ்க்கையில் தலையிடுகின்றன. கத்தோலிக்கர்களுக்கும், புராட்டஸ்டெண்டினருக்கும் இடையே யுத்தங்கள் நிகழ்கின்றன. இவை அனைத்தும் சமுதாய அரங்கில் தோன்றிவிட்ட புதிய உணர்வும், புதிய தத்துவமும் செயலூக்கமான பங்கை வகிக்கின்றன என்பதையே காட்டுகின்றன.
இந்தியாவில் மதவாதமும் வகுப்புவாதமும் நீடிக்க காரணம் என்ன?

இந்தியாவில் இப்போது இருந்து வரும் அரசியல் மேல் கட்டுமானமும், உணர்வுகளும் அதாவது மதவாத, சாதீய உணர்வுகளும் மாற்றங்களை முறியடித்து, முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதில் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றன. தேசிய உணர்வுகளை ஒன்றுபடுத்தி, ஏகாதிபத்தியத்தை முறியடித்த சக்திகள், நாடு விடுதலையடைந்து கடந்த முப்பதாண்டுகளாக சுதந்திரமாக இயங்கிவரும் இக்காலத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டதுபோல் தோன்றுகிறது.

ஏன் இந்த நிலைமை : சந்தேகமில்லாமல், கடந்த நூறு ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு பல பொருளாதாரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. மன்னர் சமஸ்தானங்கள் ஒழிக்கப்பட்டுவிட்டன. தொழிலுற்பத்தி அளவு உயர்ந்திருக்கிறது. கிராமங்கள் தனிமைப்பட்டுக்கிடந்த நிலைமை மாற்றப்பட்டுள்ளது. அவைகளும் முதலாளித்துவ சந்தைக்குள் திணிக்கப்பட்டுவிட்டன. சாலைகளும் இரயில் போக்குவரத்தும் இத்தகைய நிலையை உறுதிப்படுத்தியிருக்கின்றன.

இவையனைத்தையும் மீறி, மத, வகுப்பு, சாதீய உணர்வுகள் வளர்வதுபோல் தோன்றுகின்றன. ஜோதிடர்கள், கைரேகை நிபுணர்கள், சாயிபாபாக்கள் ஆகியோருடைய வியாபாரம் செழித்தோங்கி வருகிறது. கேரளாவிலும், வேறு பல இடங்களிலும் புதிய கடவுள்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் அருளை வேண்டி பல்லாயிரக்கணக்கில் மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். வரலாற்றைப் பற்றிய பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில், இந்தியா மட்டும் விதிவிலக்கா… இந்தியாவின் மதவாதத்திலும், வகுப்புவாதத்திலும், சாதிய உணர்வுகளுக்குள்ளும், வளர்ந்து வரும் பொருளாதார மாற்றங்கள் உட்புகுந்து பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லையா..

பாரம்பரியமான சக்திகளின் புதிய தாக்குதல்களையும் மீறி மற்ற சக்திகள் – அவை இன்னும் பலவீனமாக இருந்தாலும் கூட – எதிர்த்துப் போராடுகின்றன என்பதை முதலில் உணர்ந்து கொள்ளவேண்டும்.

இரண்டு கேள்விகளுக்கு இப்போது பதில் கூறியாக வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களது பொதுவான துன்ப துயரங்கள் அதிகரித்துக் கொண்டே செல்லும்போது தங்களது ஒற்றுமையையும் போராட்டத்தையும் சீர்குலைக்கின்ற பிற்போக்குத்தனமான உணர்வுகளுக்கு ஏன் இரையாகிறார்கள்.

மனித சமுதாய அமைப்புகளில் தீவிரமான, புரட்சிகரமான மாற்றங்கள் தோன்றி மதம், வகுப்புவாதம் ஆகியவற்றின் தத்துவங்களை நேருக்கு நேர் சந்திக்கின்றன. இதன் விளைவு என்ன. இந்த மதவாத தத்துவங்களுககு ஆதாரமானவற்றை தகர்த்தெறிய வேண்டுமல்லவா. இந்தியாவில் நிகழ்ந்ததென்ன. இந்தியாவில் புரட்சிகரமான மாற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை. மாறாக ஒரு சமரசமேற்பட்டுள்ளது. இந்திய. கிராமப்புற சமுதாய அமைப்புடன் ஒரு சமரச ஏற்பாடே நிகழ்ந்துள்ளது.

இயற்கை வழங்கும் மழையையும், தற்போதுள்ள விற்பனை சந்தையின் வேடிக்கை வினோதங்களையும், வியாபாரிகளின் நேர்மையின்மையையும், அரசாங்கக் கொள்முதல் அமைப்புகளையும், நம்பி வாழவேண்டிய நிலையிலுள்ள சிறிய பொருளுற்பத்தி முறை, நவீன உழைப்புச் சந்தைக்குள் நுழைந்து நவீன தொழிலாளி வர்க்கமாக மாறமுடியாத நிலையில் சிக்கித் தவிக்கும் பெரும்பான்மையான நிலமற்ற விவசாயிகள் ஆகிய இந்த நிலைமை தான் மதவாத, ஜாதி,வகுப்பு உணர்வுகளுக்கு ஊற்றுக் கண்களாய் விளங்குகின்றன.

கிராமப்புறங்களில் நிலப்பிரபுத்துவ, அரைநிலப்பிரபுத்துவ உறவுகள் நீடிப்பதும் ஒரு சிலர் கையில் நிலம் குவிந்திருப்பதும் அதிபயங்கரமான குத்தகை முறைகள், கந்துவட்டி முறைகளும் கொத்தடிமை முறையும், நிலமற்றவர்களின் நிலப்பசியும் இவையனைத்தும் நெடுங்காலத்திய சாதிப் பிரிவினை அமைப்புக்குள் இருப்பதால் மேற்கூறிய மதவாதமும், வகுப்புவாதமும் நீடிப்பதற்கு காரணமாக இருக்கின்றன.

மதவாதம், சாதீய முறைகள் அனைத்துமே முந்தைய காலத்துப் பரம்பரைச் சொத்து ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய தேசீய இயக்கமும், இதை எதிர்க்கவில்லை. மாறாக, பிறபோக்குத்தனமான இந்த சக்திகளுடன் ஒவ்வொரு கட்டத்திலும் தேசீய இயக்கம் சமரசம் செய்து கொண்டே வந்தது. விடுதலைப் போராட்ட காலத்தில் நிலப்பிரபுத்துவ சக்திகளுடன் முன்னணி தேசீய பூர்ஷ்வா தலைமை செய்து கொண்ட சமரசத்தின் நேரடி விளைவே அது.

பூர்ஷ்வா தலைமையின் கீழ் நடைபெற்ற விடுதலை இயக்கம் பழம்பெருமையைக் கூறியே மக்களது கவனத்தைக் கவருவதையே சார்ந்து நின்றது: பழங்கால பெருமைகளைப் பேசியது. பழங்கால மதப் பழக்க வழக்கங்களையும் தத்துவங்களையும், தத்துவ ஞானங்களையும் ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டது.

காலஞ்சென்ற பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான ரஜனி பாமி தத் இந்த பழம் பெருமை பேச்சுக்களின் குணாம்சங்களைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்: ” முடை நாற்றமடிக்கும் மோசமான நிலை, அழிந்து வரும் தத்துவங்கள், நொறுங்கி விட்ட கிராம அமைப்பின் சிதிலமடைந்த அடையாளச் சின்னங்கள்: மறைந்துவிட்ட நாகரீகத்தின் அலங்கார அரண்மனைகளின் மிச்சமீதிகள் இவைதான் அன்றிருந்த நிலை. இந்த நிலையிலிருந்துதான் இந்துக் கலாச்சாரம் பற்றிப் பேசி – ஒரு பொற்கனவை உருவாக்கி அதை தங்களது எதிர்கால லட்சியமாக முன் வைத்தார்கள். வழிகாட்டும் ஒளிவிளக்காகவும் ஏற்றிப் போற்றினர். பிரிட்டிஷ் பூர்ஷ்வா கலாச்சாரமும் தத்துவமும், இந்தியாவிற்குள் வெள்ளமெனப் பிரவேசித்த நிலையில், அவை இந்திய பூர்ஷ்வாக்களையும், அறிவாளிகளையும், கவ்விப் பிடித்த நிலையில் புனரமைப்புச் செய்யப்பட்ட இந்து தத்துவத்தை ஓரளவு கேடயமாகக் கொள்வதற்கு இந்திய விடுதலை இயக்கத் தலைமை முயன்றது. ஆனால் இந்தியாவின் யதார்த்தமான வாழ்க்கை நிலைமைகளில், அந்தத் தத்துவம் நிலைத்திருப்பதற்கு இயற்கையான ஆதாரம் ஏதுமில்லை. இந்தக் கொள்கையின் தீவிர பக்தர்கள் புதிதாக இந்தியாவுக்குள் வந்த சமுதாய, விஞ்ஞான முன்னேற்றங்கள் அனைத்தையுமே, ஆக்கிரமிப்பாளர்களின் கலாச்சாரம் என வர்ணிக்கத் தலைப்பட்டனர். பழங்கால, வழக்கொழிந்துவிட்ட பாரம்பரியங்களையும், தவறான பாரம்பரியங்களையும் சலுகைகளையும், மதவாத பிற்போக்குத்தனத்தையும் பக்தி சிரத்தையுடன் போற்றி புகழ்ந்தனர்.”

பாமி தத் இவ்வாறு குறிப்பிட்டிருப்பது முழுவதையும் சரியென்று கூறமுடியாது: யதார்த்தமான நிலைமையின் ஒரு பகுதியை மட்டுமே அவர் குறிப்பிடுகிறார். ஏனெனில் தேசீய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக பழைய நாகரீகத்தைப் பற்றிக் கூறி மக்களைத் திரட்டுவது ஒரு பகுதியாக அன்று அமைந்தது. அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் சுயமரியாதை உணர்வுகளைத் தட்டி எழுப்புவதற்கு அது பயன்பட்டது. “அழிந்துவிட்ட தலைமுறைகள் அனைத்தின் பாரம்பரியமும், வாழும் தலைமுறையின் மூளையில் அச்சுறுத்தும் கனவுகளாகக் கனத்துக் கொண்டிருக்கும். மக்கள் தங்களையோ அல்லது தங்களது விஷயங்களையோ பரட்சிகரமான மாற்றத்திற்கு ஆட்படுத்த விரும்பும் காலங்களில் எப்போதுமே இருந்திராத ஒன்றை உருவாக்க முயலும்போதும். குறிப்பாக புரட்சிகரமான நெருக்கடி நிலவும் காலங்களில், தங்களது பணியை நிறைவேற்றிக் கொள்ள இறந்த காலத்தின் ஆவிகளை வேகமாக வரவழைத்துக்கொண்டு இறந்த காலத்திலுள்ள பெயர்கள், போர்க்கோஷங்கள், உடைகள் ஆகியவற்றையும் கடன் வாங்கிக் கொள்கின்றனர். உலக வரலாற்றில் ஒரு புதிய காட்சியை உருவாக்குவதற்காகவே காலத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தோற்றத்தையும், கடன் வாங்கப்பட்ட மொழியையும் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதே மாதிரி தான் கிறிஸ்தவ மதத்தை எதிர்ப்பதற்கு அதற்குள்ளேயே புராட்டஸ்டெண்ட் மதத்தின் தலைவராகத் தோன்றிய மார்ட்டின் லூதர் ஒரு தேவதூதன் என்ற முகமூடியை தரித்துக் கொண்டு போராட்டக் களத்தில் இறங்கினார்” என்று மார்க்ஸ் சரியாகவே குறிப்பிட்டார். (மார்க்ஸ் பதினெட்டாவது புருமர்.)

இந்தியாவை பொறுத்தவரை, நிகழ்காலத்திற்கு தேவையான ஊக்கத்தை பெறுவதற்காகவே, பழங்காலத்தைப் பயன்படுத்திக்கொண்டார்கள் என சாதாரணமாக கூறிவிடமுடியாது. ஜனநாயக விரோதமான சாதி  அமைப்புடன் சமரசம் செய்துகொள்வதற்காகவும், மத வாத பிற்போக்குத்தனங்களுடன் சமரசம் செய்துகொள்வதற்காகவுமே இந்தப் பண்டை கால பெருமை பேச்சு  பயன்படுத்தப்பட்டன. அன்று பாட்டாளி வர்கம் பலவீனமாக இருந்ததால், வளர்ந்துக்கு கொண்டிருந்த பூர்ஷ்வா வர்க்கம் தேசிய இயக்கத்தின் தலைமைப் பாத்திரத்தை கையிலெடுத்துக் கொண்டது. அந்த   பூர்ஷ்வா தலைமை தொடக்கத்திலிருந்தே நில உடைமையாளர்களுடனும் கண்மூடித்தனமான மதத்தையும் சாதியையும் வளர்க்கின்ற கிராமப்புற அமைப்பு முழுவதுடனும்  சமரசம் செய்துகொள்வதில் அக்கறை காட்டியது.

மதவாதம்,  வகுப்புவாதம், ஜாதியம் ஆகியவற்றைத் தொடரச்செய்வது இந்த சமரசங்களுக்குள் ஆழமாகப் பதிந்திருந்தது, அத்தகைய தொடர்ச்சியான சமரசமும், அந்தச் சமரசத்தின் பின்னணியில் அனுஷ்டிக்கப்பட்ட  முதலாளித்துவப்  பாதையின் விளைவே ஆகும். அதனால்தான், அடுத்தடுத்து பல ஐந்தாண்டுத்  திட்டங்கள் வெற்றியடைந்த பின்னருங்கூட, இறந்த காலத்தின் இத்தகைய அச்சுறுத்தும் கனவுகளை தவிர்க்க இயலவில்லை அது தொடர்ந்து நாட்டின் ஒற்றுமையை அரித்து வருகிறது.

மதத்தத்துவங்களை முறியடிக்கும் எதிர் சக்தி
பொருள் முதல்வாத தத்துவமே!

வகுப்புவாதம், மதப்பிரிவினைவாதம், சாதிய வாதம் இவையனைத்தும் நமது நாடு ஒரு நவீன தேசமாக வளர்ச்சியடைவதை தடுத்து நிறுத்துகின்றன. மக்களின் சமத்துவத்திற்கு, மற்ற  அனைத்தையும் நாட்டு விசுவாசத்திற்கு கீழே தள்ளி, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் விசுவாசமாக இருக்கவேண்டும் என்ற நிலைமைக்கு இவை தடையாக நிற்கின்றன. ஒரு தேசீய முதலாளித்துவச் சந்தையின் மூலம் ஒன்றுபட்ட நவீன பூர்ஷ்வா தேசம் உருவாக வேண்டுமானால், முதலாளித்துவத்திற்கு முந்தய பிரிவினைத்  தத்துவங்கள்  அனைத்தையும் நமது தேவைகளின் அடிப்படையில் முறியடிப்பதன் மூலம் தான் செய்ய முடியும்.

ஐரோப்பாவில், வளர்ச்சி பெற்று வந்த பூர்ஷ்வாக்கள் நிலப்பிரபுத்துவ தத்துவங்களை தோற்கடித்தனர். அதற்காக அவர்கள் ரோமன் கத்தோலிக்க மதத்துடன் போராடினர்.ஆனால் அது மட்டும் போதவில்லை, கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கத்தையும் நிலப்பிரபுத்துவ சக்திகளின்

அதிகாரத்தையும் உடைத்தெறிந்தனர். ஆட்சியாளர்களின் பொருளாதார, அரசியல் அதிகாரங்களையும் தகர்த்தெறிந்தனர். இங்கிலாந்தில் செய்தது போல் அதிகாரமில்லாத அரசனை உருவாக்கினார். இருந்த போதிலும் முன்னேற்றம் அடைந்த முதலாளித்துவ சமுதாயங்களில் மதமும் அதன் செல்வாக்கும் முற்றும் மறந்துவிடவில்லை. உண்மையில், இவை நவீன பொருள் உற்பத்தியாளர்களின் புதிய சமுதாயத்திற்கு பொருந்துகின்ற வகையில் ஒரு புதிய மதம் தோன்றியது. ஸ்தூலமற்ற மனிதன் என்ற தத்துவத்தின் அடிப்படையில், குறிப்பாக பூர்ஷ்வா வளர்ச்சிக்கேற்றாற்போல் தன்னை மாற்றிக் கொண்ட கிறிஸ்துவ மதம் புராட்டஸ்டண்ட் மதமாக

உருவெடுத்தது. ஆனால், புதிய சமூதாயத்தின் தேவைகளுக்கேற்ப செயல்பட நேர்ந்தது. சில சமயங்களில்,பூர்ஷ்வா சமுதாயத்திற்கான போராட்டத்தில், மதங்களின் அடிப்படைத் தத்துவங்களுக்கே பொருள்முதல்வாதத்  தத்துவம் நேரடிச் சவாலாய் அமைந்தது .

இது ஏன் நடைபெற்றதென்றால், அரசியால் அதிகாரத்தை அடைவதற்காகவும்,  நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களை தூக்கியெறிவதற்காகவும், நிலப்பிரபுக்களின் பொருளாதார அதிகார தளங்களையும் அந்த அதிகாரங்களுக்கு உயிரூட்டி வந்த தத்துவ மேல்கட்டுமானங்களையும் உடைத்தெறிவதற்காக வளர்ந்து வரும் பூர்ஷ்வாக்கள் ஜீவமரணம் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. இவ்வாறு எதிர்க்கப்பட  வேண்டி வந்த தத்துவங்களில் ரோமன் கத்தோலிக்க மதத்தின் தத்துவமும் ஒன்று.

இந்திய நிலைமை

இந்தியாவிலும், புதிதாக விடுதலையடைந்த நாடுகளிலும் நிலைமை அப்படியல்ல. பிரிவினை என்னும் பிரச்னை மதத்தினால் ஊக்குவிக்கப்பட்டு, நமது தேசிய போராட்டம் நடந்த காலம் முழுவதும் தொடர்ந்தது. இறுதியில் பிரிவினைக்கே இட்டு சென்றது. இதை நமது நாட்டில் கண்டோம். அது  மீண்டும் இன்று தலை தூக்கி, நாட்டின் ஒற்றுமைக்கே சவால் விடுகிறது.

பூர்ஷ்வாக்களின் தலைமையில் விடுதலைப் போராட்டம் நடைபெறும்போது நிலவிய ஒரு வினோதமான சூழ்நிலையே இதற்கு காரணம். தங்களின் தேவைகளின் அடிப்படையில் இந்திய பூர்ஷ்வாக்கள் ஒரு வர்க்கமாக உருவெடுத்து வந்த சமயத்தில், இந்தியாவிலிருந்த நிலப்பிரபுத்துவ ஆட்சி அதிகாரம் பிரிட்டிஷ்காரர்களால் ஏற்கனவே நொறுக்கப்பட்டது. அதே சமயத்தில் இந்திய பூர்ஷ்வாக்கள்  அதிகாரத்திற்காக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராட வேண்டி இருந்தது. இவ்வாறு  பூர்ஷ்வா வர்க்கம் தனது வாழ்விற்காகவே, நிலப்பிரபுத்துவ அரசையோ அல்லது அவர்களது தத்துவத்தையோ எதிர்த்துப் போராட வேண்டிய தேவை ஏற்படவில்லை.

அது மட்டுமல்ல, ஒருசமயம்  இந்திய பூர்ஷ்வா வர்க்கம் ஏகாதிபத்தியத்தின்

உப விளைபொருளாகவே தோன்றியது என்று கூறப்பட்டது. தரகு முதலாளி வர்க்கம், வர்த்தகர்கள், வணிகர்கள், வியாபாரம் மற்றும் லேவாதேவியில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆகியவர்களிடையே இருந்து  தோன்றியதே இந்திய பூர்ஷ்வா வர்க்கம். நெடுங்காலமாக இவர்கள் தங்களது நிலப்பிரபுத்துவச்  சுரண்டல் முறைகளை மாற்றிக் கொள்ளாமலேயே, இந்தியப் பூர்ஷ்வாக்களின் பங்காளிகளாய் இருந்தனர்.

ஐரோப்பாவில் பூர்ஷ்வா வர்க்கம் தொழில் உடைமையாளர்களிடமிருந்தும் பொருள் உற்பத்தியாளர்களிடமிருந்தும் தோன்றியது. ஆனால் இந்தியாவில் விவசாயம் சம்மந்தப்பட்டவர்களுடனும் இந்திய பூர்ஷ்வா வர்க்கத்திற்கு ஆரம்பத்திலிருந்தே தொடர்பிருந்தது வந்தது. வர்த்தக பகுதியிலிருந்து வந்தவர்கள், நிலப்பிரபுத்துவ  சுரண்டல்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள், நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களை அதிகாரத்திலிருந்து தூக்கியெறியும்

கடமையை செய்யாதவர்கள் ஆகியோரே இந்திய பூர்ஷ்வாக்கள். ஆகவே அவர்களுக்கு நிலப்புரட்சி தேவைப்படவில்லை. நிலப்புரட்சி பற்றி அவர்கள் அஞ்சினார்கள். உண்மையில், ஏகாதிபதியத்தியதை எதிர்த்த போராட்டத்தில், அவர்கள் நிலப்பிரபுக்களின் ஆதரவை நம்பியிருந்தனர். சமஸ்தானங்களில் மன்னராட்சிமுறையை ஒழிப்பதற்கு காங்கிரஸ் இறுதிவரை எதிர்ப்பு தெரிவித்தது  தெரிந்ததே. நிர்பந்தம் ஏற்பட்ட பின்னர்தான் அதை ஏற்றுக்கொண்டது. நிலப்பிரபுக்களுக்கான விவசாயிகளின் கோரிக்கைகள் காங்கிரஸின் திட்டத்தில் என்றுமே இடம் பெற்றதில்லை.

இது இரண்டு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.  தடுத்து நிறுத்தப்பட்டது ஒன்று. மற்றொன்று முதலாளித்துவத்திற்கு முந்தய கால தத்துவங்களான இந்து மதம், சாதி, வகுப்பு வாதம் ஆகிய அனைத்தும் பெருமளவிற்கு அப்படியே நிலைத்து நின்றன.

இந்ததியாவில் சாதி அமைப்பு தோற்றம் எப்படியிருந்த போதிலும், இஸ்லாம் மதம் தோன்றிய காலத்தில் அது ஒரு புரட்சிகரமான பாத்திரம் வகித்த போதிலும், இன்று நிலப்பிரபுத்துவ விவசாய உறவுகள் நீடிப்பதின் காரணமாகவும், விரிந்த அளவில் தொழில் வளர்ச்சி ஏற்படாததன் காரணமாகவும், மதப்பிரிவினை வாதங்களின் உண்மையான பாத்திரம் பற்றி மக்களுக்கு புரியாததன் காரணமாகவும், சாதி வெறியும், இந்து- முஸ்லீம் பிரிவினைகளும் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன.

இதன் விளைவாக, மதத்தையும், முதலாளித்துவத்திற்கு முந்தைய காலத்திய தத்துவங்களையும் எதிர்த்துப் போராடுவதற்கு, இந்திய பூர்ஷ்வா வர்க்கத்திற்கு தேவை ஏதும் ஏற்படுவதில்லை.

மேற்கத்திய  நாடுகளில் நிகழ்ந்தது போன்று, ஒரு புதிய மதத்தை உருவாக்க வேண்டும் என்ற அவசியம் அவர்களுக்கு தோன்றவில்லை.

இந்து மதத்தில்  ” சமூக சீர்திருத்தம் ” “இந்து-முஸ்லீம் ஒற்றுமை ஓங்குக” என்ற கோஷங்களுடன் அவர்கள் திருப்தியடைந்துவிடுகின்றனர். பின்வரும் வாசகங்கள் இதனைச் சரியாக விளக்கும் என நினைக்கிறேன் :

“இந்தியாவிலுள்ள- இஸ்லாம், புத்தமதம் அனைத்திற்கும் மேலாக இந்துமதம் ஆகிய எந்த மதத்தின் நடைமுறையிலும், ஒரு தீவிரமான பூர்ஷ்வா சீர்த்திருத்தம் ஏற்படவில்லை. இதன் பொருள் என்ன? புதிதாக தோன்றியுள்ள நிலைமையில், அதாவது வர்க்க முரண்பாடுகள், தொழில் ஏகபோக முதலாளித்துவ குறுக்கீட்டால் தீவிரப்படுத்தப்பட்ட சூழ்நிலையில், பாரம்பரியமாக உள்ள முதலாளித்துவத்திற்கு முந்திய வகுப்புவாத உணர்வுகள் சிறு உற்பத்தியாளர் பிரிவிலிருந்தே   இந்த புதிய மாற்றங்களுக்கு எதிரானதாகத் தோன்றுகின்றன.”

மேலேகூறியதன் கடைசி வார்த்தைகள் ஜாதிய வகுப்புவாத சச்சரவுகள் தோன்றி அதிகரித்து வருவதை சரியாக விளக்குகின்றன.

பழங்காலத்தை புதுப்பிப்பதில் நம்பிக்கை கொண்ட இந்திய தேசிய விடுதலைப் போராட்டத் தலைமையினர், மக்களின் மதநம்பிக்கைகளை அரவணைத்துச் செல்வது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் சரியான ஆயுதமாக பயன்படும் என நினைத்தனர். அவர்கள் நினைத்ததெல்லாம் பல்வேறு மதநம்பிக்கை கொண்ட மக்கள் ஒருவருக்கொருவர் எதிராக மோதிக் கொள்ளக்கூடாது என்பதுதான். மதங்கள் அனைத்தையுமே, விமர்சனம் செய்யக்கூடாத புனிதமான விஷயங்களாக மதிக்கவேண்டும் என அவர்கள் விரும்பினர். ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது என்ற நவீனமான நோக்கத்திற்காக மதங்களுடன் செய்து கொண்ட சமரசம் இது.

இந்த சமரசத்தால் விடுதலைப் போராட்டம் நடந்த குறுகியகாலத்தில் பலன் கிடைத்தபோதிலும், அது அழிவிலே முடிந்தது.

கிலாஃபத் இயக்கமும் அதன் பின்விளைவும்

தங்களது ஆளும் உரிமையை மறுத்து தங்களது ஆட்சி அதிகாரத்தை பிரிட்டிஷ்காரர்கள் பறித்துக் கொண்டதாக வைதீகமான முஸ்லீம்கள் கருதினர். கல்விமுறை உள்ளிட்ட மேற்கத்திய நாகரீகமானது பாவம் என்றும், முஸ்லீம் விரோதத் தன்மை கொண்டது என்றும், காந்தி கண்டனம் செய்வதற்கு முன்பாகவே, கிறிஸ்தவ மதத்தை எதிர்க்க வேண்டும் என்ற கருத்துடன் தங்களது இஸ்லாமிய பாரம்பரியங்களை முஸ்லீம்கள் எண்ணிப் பார்க்கத் தொடங்கினர். ஜனநாயகக் கோட்பாடுகள், சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு அந்த வகுப்பினர் நவீனப்படுத்தப்படுவதும் மிகக் குறைந்த வேகத்திலேயே நடைபெற்றது.

சேவ்ரீஸ் ஒப்பந்தத்தின் மூலம் முஸ்லீம் பேரரசான துருக்கிக்கு பிரிட்டிஷ் ஆட்சி இழைத்த அநீதியை எதிர்த்து நடைபெற்றதுதான் கிலாஃபத் இயக்கம். முதல் உலகப்போருக்குப் பின்னர் முஸ்லீம் மக்களிடையே இருந்த அதிருப்தியை ஒருமுகப்படுத்துவதற்கு அந்த இயக்கம் பயன்பட்டது. துருக்கி மக்களின் உரிமைகள் மீறப்படுவதை எதிர்த்து மட்டும் நடைபெற்ற இயக்கமல்ல அது: இஸ்லாம் மதத்தின் ஆன்மீகத்தலைவர் என்ற முறையில் தனது அலுவல்களை மேற்கொள்ளும் வகையில் கலீஃபாவுக்கு (துருக்கி அரசர்) அரசு அதிகாரத்தை மீட்டுத் தரவேண்டும் என்பதும் அந்த இயக்கத்தின் கோரிக்கையாகும். இதில் முஸ்லீம் மத உணர்வுகள் மேலோங்கியிருந்த போதிலும், ஒத்துழையாமை இயக்கம் என்ற இந்திய தேசியப் போராட்டத்தில் இந்த கிலாஃபத் இயக்கமும் இணைந்தது. காந்தியும், தேசீய காங்கிரசும் இந்த கிலாஃபத் இயக்கத்திற்கு ஆதரவளித்தனர். அதன் மூலம், முன்னெப்போதும் கண்டிராத அளவில் இந்திய மக்களின் ஒற்றுமையை உருவாக்கியதன் மூலமாக 1857-ல் நடந்த விடுதலைப் போராட்ட நாட்களை பிரிட்டிஷாருக்கு நினைவுபடுத்தி, அவர்களை குலைநடுங்க வைக்க முடிந்தது.

சுயராஜ்யம் என்றால் முழுமையான சுதந்திரம் என்றே பொருள் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முதலில் எழுப்பியவர்கள் கிலாஃபத் தலைவர்களே. 1921-ல் அகமதாபாத்தில் நடைபெற்ற தேசீயகாங்கிரசின் கூட்டத்தில்தான் மௌலானா அஸ்ரத் மொகானி என்பவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். இந்த கோரிக்கைக்கு ஏற்பட்ட எதிர்ப்புக்கு தலைமை வகித்தவர்தான் காந்திஜி.

அதேபோன்று, 1919–ம் ஆண்டிலேயே முஸ்லீம்கள் எவரும் இந்திய ராணுவத்தில் சேரக்கூடாது என முஸ்லீம்லீக் தனது அமிர்தசரஸ் கூட்டத்தில் அறைகூவல் விட்டது.

“இந்தியாவின் நலன்களையும், முஸ்லீம்களின் நலன்களையும் கவனத்தில் கொண்டு நோக்கும்போது, ‘சுயராஜ்யம்’ என்ற தனது முழக்கத்திற்கு  பதிலாக, “முழு சுதந்திரம்” (பூர்ணசுயராஜ்யம்) என்ற முழக்கத்தை காங்கிரஸ் உருவாக்க வேண்டும்” என 1922 ஜூன் மாதம், லக்னோவில் கிலாஃபத் இயக்கமும், ஜமாதி-எ-உல்-உலீமாவும் இணைந்து நடத்திய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதியநிலைமை

இந்த காலத்தில்தான் இந்தியாவிலிருந்த பாரம்பரியங்களும், பரம்பரையான பிளவுகளும் உடைத்து நொறுக்கப்பட்டன. இந்திய அரசாங்கத்தின் வெளியீடு ஒன்று (1919-20-ம்ஆண்டுகளில் இந்தியா என்ற வெளியீட்டில்) பின்வருமாறு குறிப்பிடுகிறது:

“என்றுமில்லாத அளவுக்கு இந்து-முஸ்லீம் சகோதரத்துவம் ஏற்பட்டது. பொதுவான பரபரப்பான சூழ்நிலையில் குறிப்பிட்டுக் கூறவேண்டிய ஒரு அம்சம் என்னவெனில், தலைவர்களிடம் ஏற்பட்ட ஒற்றுமை, ஒரு தேசியமேடை அமைப்பதற்கு உதவிகரமான, நீண்டகாலமாக சிந்திக்கப்பட்ட, ஒரு திட்டமாக அது அமைந்தது. பொதுமக்களிடம் பரபரப்பு ஏற்பட்டிருந்தநிலையில் கீழ்நிலையிலிருந்த வர்க்கங்கள் கூட தங்களது வேறுபாடுகளை முதல்தடவையாக மறந்துவிடுவதற்கு சம்மதித்தனர். மிக அபூர்வமான இந்து-முஸ்லீம் சகோதரத்துவக் கட்சிகள் நாட்டில் ஏற்பட்டன. இந்துக்கள் முஸ்லீம்கள் கைகளிலிருந்தும், முஸ்லீம்கள் இந்துக்களின் கைகளிலிருந்து பகிரங்கமாக தண்ணீர் வாங்கி அருந்தினர். ஊர்வலங்களில் முழங்கிய கோஷங்களிலும், பதாகைகளிலும் “இந்து-முஸ்லீம் ஒற்றுமை” என்பது தாரகமந்திரமாக மாறியது. மசூதிகளின் மேடைகளிலிருந்து உரையாற்ற இந்துமதத்தைச் சார்ந்த தலைவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.”

இந்த சமயத்தில்தான் விவசாயிகள் பகிரங்கமாக நிலச்சுவான்தார்களை எதிர்த்து போராடினர். இந்த போராட்டத்தை காங்கிரஸ் காரியக்கமிட்டி பர்தோலி கூட்டத் தீர்மானத்தின்மூலம் வாபஸ் வாங்கியது. இவ்வாறு வாபஸ் வாங்கியது, போராடிய மக்களிடையே சோர்வை உண்டாக்கி இந்து-முஸ்லீம் வகுப்புகளைச் சார்ந்த விவசாயிகள் என்ற வகையில் ஒன்றுபட்டு நிலப்பிரபுகளுக்கு எதிராக ஒற்றுமையாக போராடியதை தடுத்து விட்டது. இந்து முஸ்லீம் ஒற்றுமை நிலப்பிரபுகளுக்கு எதிராக வளர்வதைத் தடுத்துவிட்டது. இந்த சமயத்தில் துருக்கியில் காலிப் பதவியிறக்கம் செய்யப்பட்டார். இது கிலாஃபத் இயக்கத்தின் உற்சாகத்தை குறைத்து விட்டது. கிலாஃபத் இயக்கத்தின் முக்கியமான கோஷத்திற்கு மதிப்பில்லாமல் போய்விட்டதால் காங்கிரசிடமிருந்தும், பொதுவான போராட்டங்களிலிருந்தும் முஸ்லீம் மக்கள் விலகிச் சென்றனர். அதற்குப்பின் தேசீயப் பேரெழுச்சிகளில் அவ்வளவு பெரிய அளவில் அவர்கள் கலந்துகொள்ளவேயில்லை. இதற்குப் பிறகு, பொதுவான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திலிருந்து அவர்களை பிரித்துவைக்கும் வகையில் அவர்களது முஸ்லீம் மத உணர்வுகள் நவீன சுயநலசக்திகளுக்கு பயன்பட்டது.
இவ்வாறு சிறுபான்மை மதத்தினருக்கு வேண்டுகோள் விடுவது, அவர்களை தேசீய இயக்கத்தில் சேர்த்துக் கொள்வது என்ற போக்கு தேசிய இயக்கத்திற்கு பாதகமாக முடிந்தது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், முஸ்லீம் நிலப்பிரபுக்களும் 1920–ம் ஆண்டு நிகழ்ச்சிகள் மீண்டும் இந்து-முஸ்லீம் ஒற்றுமை ஏற்பட்டுவிடாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டனர். மக்களிடம் மதவெறி பரப்பப்பட்டது. ஆனால் அதன் உண்மையான உள்ளடக்கம் என்னவென்றால் ஆளும் ஏகாதிபத்தியத்தின் நலன்கள் உள்ளிட்ட அக்காலத்திய சுயநல சக்திகளின் அனைத்து நலன்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதே.

சிறுபான்மையோர் பிரிந்துசென்று விட்டனர்; அது நாட்டுப் பிரிவினையில் போய்முடிந்ததென்று கூறப்படுவதன் பின்னால் உள்ள நவீன வர்க்கநலன்களை பற்றி ரஜனி பாமி தத் மிகத் தெளிவாகவே விளக்குகிறார். “பம்பாய், கல்கத்தா, சென்னை ஆகிய பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில்,  வடக்கில் முஸ்லீம்கள் சிறுபான்மையாக இருக்கும் பகுதிகளைவிட மிக முன்னதாகவே, வர்த்தகம், வணிகம், கல்வி ஆகியவற்றின் வளர்ச்சி தொடங்கிவிட்டது. இந்திய பூர்ஷ்வா வர்க்கம் தோன்றியதையடுத்து, இரண்டு பகுதியினருக்கிடையே இருந்த போட்டி மிக எளிதாக வகுப்புவாத உணர்வுகளாக மாறியது. முஸ்லீம் மேல்தட்டு மக்களில் பெரும்பான்மையோர் பெரிய நிலப்பிரபுக்களே. வளர்ந்துவரும் தொழில் முதலாளிகளைக் கண்டு அவர்கள் அதிருப்தியடைந்தனர். அந்த முதலாளிகளின் முன்னேற்றத்தை, இந்து பனியாக்களின் முன்னேற்றமாகவே அவர்கள் கருதினர்’ என்று பாமி தத் குறிப்பிடுகிறார்.

மதப் பிரச்சனையில் காங்கிரஸ் இயக்கத்தின் முரண்பாடுகள்.

பிற்காலத்தில் ஏற்பட்ட சிறுபான்மையோர் பிரிவினைவாதம் வர்க்க நலன்களில் ஏற்பட்ட மோதல்களின் நேரடி விளைவேயாகும். (முஸ்லீம்) நிலப்பிரபுக்கள் பூர்ஷ்வாக்களின் முன்னேற்றத்திற்காக முஸ்லீம் மக்களைத் திரட்டியதன் விளைவே இந்து ஆதிக்க எதிர்ப்பு உணர்வாக பிரதிபலித்தது. வர்க்க ரீதியான மோதல்களுக்கு மதவேறுபாடுகளினால் ஏற்பட்ட வகுப்புச்சண்டை என்ற போர்வை போர்த்தப்பட்டது.

காங்கிரஸ் தலைவர்களின் தேசீயம் ஐயத்திற்கிடமில்லாமல் இந்துமதக் கோட்பாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தது. இதுவும் ஒரு சாதாரண முஸ்லீமைப் பொறுத்தவரை நிலைமையை மேலும் சிக்கலாகியது.

சாதி உணர்வுகள் நிலைத்து நிற்பதும் அதைப் போன்ற காரணங்களினால்தான். விவசாயப் புரட்சி (நிலச் சீர்திருத்தம்) நடத்தப்படவில்லை; முன்னணி பூர்ஷ்வா வர்க்கமும், நிலப்பிரபுத்துவ வர்க்கமும் இணைந்து நின்று பண்டைய பெருமைவாத உணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்; இந்துமதத்தில் சமூக சீர்திருத்தம் செய்யப்படவில்லை. ஏறக்குறைய உயர்சாதிகளிருந்தே வருகின்ற பூர்ஷ்வா அறிவாளர்கள் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் பற்றிய பிரச்சனையை எடுத்துக் கொள்வதையே விரும்பவில்லை. அப்படிச் செய்தால், அது அரசியலில் மதத்தைக் கலப்பதாக அமையும் என கூறுகின்றனர். அதனால்தான், முந்தைய காலத்திய சாதி எதிர்ப்பு இயக்கங்களும், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களின் நியாயமான எதிர்ப்பியங்கங்களும், காங்கிரசிடமிருந்து தனித்து நின்றே வளர்ந்தன.

சாதி எதிர்ப்பு இயக்கங்களும், தங்களது போராட்டத்தை விவசாய உற்பத்தி உறவுகளை மாற்றுவதற்கான போராட்டத்துடன் இணைத்துக் கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களினின்றும் கூட அவை தம்மை விலக்கிக் கொண்டன.

சாதி அமைப்புடன் சமரசம் செய்துகொண்டு அதைப் பாதுகாப்பது என்ற தத்துவத்தின் பிரதிநிதி வேறுயாருமல்ல; காந்திஜியே அதைச் செய்தார். தனது முதல் ஒத்துழையாமை இயக்கத்தின்போது, ஒரு புனித போரின் போர்வீரன்போல் தீண்டாமையை எதிர்த்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் மகாத்மா என்பதால், அவரைப் பற்றி இப்படிக் கூறுவது விநோதமாயிருக்கும்.

ஆரம்ப காலத்தில், பிரிட்டிஷாருக்கெதிரான போராட்டத்தில் ஒரு தேசிய பேரெழுச்சி தேவைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையே அது. இவ்வாறு அவர் கிளர்ச்சிப் போராட்டத்தை நடத்தியபின்பு, இந்து மக்கள் தங்களிடையே சமூக சீர்திருத்தம் செய்துகொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளுடன் தனது இயக்கத்தை முடித்துக் கொண்டார். நில உறவுகளை மாற்றுவதற்கான போராட்டத்திலிருந்தும் தனது இயக்கத்தை விலக்கியே வைத்தார். அதைத் தவிர வர்ணாஸ்ரம தர்மம் என்ற தத்துவத்தையும் அவர் நியாயப்படுத்தினார். “தீண்டாமையை நாம் ஒழிக்கவில்லை என்றால், பூமியின் பரப்பிலிருந்து நாம் ஒழிக்கப்பட்டு விடுவோம். ….எண்ணிலடங்கா சாதிகள் தேவையற்ற, இயற்கைக்கு விரோதமான வளர்ச்சித் தோற்றங்கள்;  அதேவேளையில் நான்கு வர்ணங்கள் மிகவும் அடிப்படையானவை; இயல்பானவை; தேவையானவை. சக்தியையும், பொருளாதாரத்தையும் சீரான நிலையில் பாதுகாப்பது என்ற இயற்கையின் விதியை வர்ணங்கள் நிறைவு செய்கின்றன. சுயகலாச்சாரத்தின் வேறுபட்ட அமைப்புகளின் வகைப்படுதலே அது.  ஸ்திரத் தன்மைக்கும், சுபிட்சத்திற்கும் மிகவும் சிறப்பான முறையிலான அனுசரணையான ஏற்பாடு அது. ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைமுறையை உருவாக்க அது முயல்கிறது. ஒரு குறிப்பிட்ட குடும்பம் எந்த ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்தது என்ற பிரச்னையில், சில அறிஞர்கள் தம் மனம்போன போக்கில், ஒருதலைப்பட்சமாக தீர்ப்பளிப்பதை அது அனுமதிப்பதில்லை. பாரம்பரியம் என்ற கோட்பாட்டில் அது நம்பிக்கை கொள்கிறது. ஒரு குறிப்பிட்ட நபரோ அல்லது குடும்பமோ தங்களது நல்வாழ்விற்காக தங்களது வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்திருப்பினுங்கூட தொடர்ந்து பழைய குழுவிலேயே இருக்கவேண்டியிருப்பதை, ஒரு கலாச்சார அமைப்பு என்ற அதை ஒரு அநீதியாக வர்ணாஸ்ரம தர்மம் கருதுவதில்லை.”

இதைவிட ஒரு அனுசரணையான அமைப்பை கற்பனை செய்வது கடினம். சாதி என்றால் அதற்கு உயர்வு தாழ்வு என்று ஏதுமில்லை. வேறுபட்ட கண்ணோட்டத்தையும், அதற்கிசைந்த வாழ்க்கை முறையையும் அது அங்கீகரிக்கிறது,  அவ்வளவுதான்” ( தான் எழுதிய ‘ இந்தியாவில் சாதியின் சவால்’ என்ற நூலில் மேற்கண்ட காந்தியின் வாசகங்களை ஜெகஜீவன் ராம் மேற்கோள் காட்டியிருக்கிறார்.)

ஜவகர்லால் நேரு முற்போக்கான, மதசார்பற்ற கண்ணோட்டம் கொண்டவராகயிருந்தாலும்கூட,  காந்தியக் கண்ணோட்டம்தான் காங்கிரஸ் தலைவர்களிடமும் ஊழியர்களிடமும் ஆதிக்கம் வகித்தது. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணியிலிருந்த பூர்ஷ்வாக்களின் வர்க்கத் தேவைகளை அது சரியாக பிரதிநித்துவப்படுத்தியது. ‘முதலிலும், முடிவிலும் தேசமே’ என தேசியத் தலைவர்கள் முழங்கியதென்னவோ உண்மைதான். ஆனால் சாதியைக் கடைப்பிடிப்பதில் அவர்கள் காந்தியின் கண்ணோட்டத்தையே நடைமுறைப்படுத்தினர்.

அரசியல் சாசனத்தின்படி சட்டத்தின் முன் அனைத்துக் குடிமக்களும் சமம் என பூர்ஷ்வா தலைவர்கள் கூறினார்கள். ஆனால் அது ஒரு சம்பிரதாயமான அறிவிப்புதான். யதார்த்த வாழ்வில், பல்வேறு சாதிகளிடையே சமத்துவம் என்பது இல்லை.

சுதந்திரத்திற்குப் பின் வளர்ந்து வரும் சாதி, மத உணர்வு

சுதந்திற்குப்பின் அண்மைக் காலங்களில், இந்தச் சாதி உணர்வு வளர்ச்சி பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது. தேர்தல்களிலும், சில சலுகைகளை பெறுவதிலும், அமைச்சரவைகளில் இடம்பிடிப்பதிலும் இது அப்பட்டமாக பயன்படுத்தப்படுகிறது. ஆளுங்கட்சிகூட, தேர்தல்களில், வாக்குகளை சேகரிப்பதற்கு, அமைச்சரவை அமைப்பதற்கு இதைக் கையாளுகின்றது. ஜனநாயகப் போராட்டங்களிலும், வர்க்கப் போராட்டங்களிலும் சாதி என்ற மேல்கட்டுமானமும், சாதி உணர்வுகளும் ஊடுருவியிருக்கின்றது என்பது தெளிவானதாகும். மற்ற பிரிவினை சக்திகளுக்கு உதவுவதில், முனைப்பாக நிற்கும் சக்திகளில் இதுவும் ஒன்று.

தீங்கு விளைவிக்கும் இந்த சாதிய செல்வாக்கு, உயர்சாதிகளிலும், நல்ல நிலைமையிலிருக்கும் சாதிகளில் மட்டுமே இருப்பதாகக் கூறமுடியாது. இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களும், அரசியல் எழுச்சிகளும், சாதியின் பொருளாதார அடிப்படை மீது மிகக் குறைவான பாதிப்பையே ஏற்படுத்தியிருக்கின்றன. பாதிப்பு எந்த அளவிற்கு குறைவானதென்றால் தீண்டப்படாத மக்கள் தங்களுக்குள்ளேயே சாதிக் கண்ணோட்டங்கள் காரணமாக பாதிக்கப்படுகின்றனர். ‘இந்தியாவில் சாதியின் சவால்’ என்னும் தனது புத்தகத்தில் ஜெகஜீவன் ராம் கூறுகிறார்; “இந்த (சாதி) அமைப்பின் விளைவுகள் எந்த அளவுக்கு தீங்கு பயப்பதாயும், எங்கும் வியாபித்திருப்பதாயும் இருக்கிறதென்றால், பிற்படுத்தப்பட்ட மக்களே பெரும்பான்மையாக இருக்கும் இந்த நாட்டின் மக்கள், சாதி விலங்குகளை உடைத்தெறிவதற்கு பதிலாக, உயர்சாதிகளின் பழக்க வழக்கங்களை பழகிக் கொள்வதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர்.

தீண்டப்படாத மக்கள் தங்களுக்குள்ளேயே தீண்டாமையை அனுஷ்டிக்கிறார்கள் என்ற வியத்தகு நிலைக்கு சென்றிருக்கிறார்கள் என்றால் பிராமணர்களை இவர்கள் மிகவும் உளப்பூர்வமாக பின்பற்றுகிறார்கள், ஆனால் மோசமாகப் பின்பற்றுகிறார்கள் என்றுதான் பொருள்கொள்ள முடியும்.”

யதார்த்தத்தில், தீண்டப்படாத மக்கள் மத்தியில் சாதியின் பிடிப்பையே இது வெளிப்படுத்துகிறது. இது பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருவதும் அவர்களுக்கெதிரான கொடுமைகளுக்குப் பின்னும் அவர்களால் உடைத்தெறிய முடியாததுமான அந்த தத்துவம் அவர்களையே கவ்விப் பிடித்திருக்கிறது. ஆளும் பகுதியினரின் தத்துவம் ஒடுக்கப்பட்டவர்கள்மீது இவ்வாறுதான் தொடர்ந்து ஆதிக்கம் வகித்து வருகிறது. இந்த சாதியத் தத்துவம் பாட்டாளிகளின் வர்க்கப் போராட்டங்களிலும் சமத்துவம்கோரி தீண்டப்படாதவர்களும் மற்றவர்களும் நடத்தும் போராட்டங்களிலும் முனைப்பாக ஊடுருவி அப்போராட்டங்களை சீர்குலைக்கிறது. ஆளுகின்ற இரண்டு பிரிவினரின் வர்க்கக் கூட்டின் விளைவாக தோன்றிய இன்றைய சாதிய உணர்வு, அந்த வர்க்கங்களின் தேவைகளுக்கு சேவைசெய்து வருகிறது.

சாதி, மத வாதத்தைஎதிர்த்துப் போராடும் சக்திகள்

ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல், சாதியையும், வகுப்புவாதத்தையும் எதிர்த்துப் போராடும் சக்திகளும் களத்திலிருக்கின்றன. சாதி, மத வேறுபாடுகளின்றி பொதுவான போராட்டங்களில் மக்களை ஒன்றுபடுத்தும் சக்திகளாக அவை செயல்படுகின்றன. வெகுஜன ஸ்தாபனங்களும், இடதுசாரிக் கட்சிகளும் சேர்ந்து எடுக்கும் வெகுஜன கூட்டு நடவடிக்கைகள், மக்களை தெளிவுபடுத்துகின்ற வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்ற இடதுசாரிக் கட்சிகளும் நடத்துகின்ற தத்துவ, அரசியல் பிரச்சாரங்கள், இரண்டரை லட்சம் பம்பாய் பஞ்சாலை தொழிலார்களின் வேலைநிறுத்தம் போன்ற உழைக்கும் வர்க்கத்தின் நீண்ட நெடிய போராட்டங்கள் எல்லாம் புதிய உணர்வுகளை உருவாக்குகிற சக்திகளின் நடவடிக்கைகளாகும். பொதுவான போராட்டத்திற்கான அவசியத்தின் அடிப்படையில்தான் இந்த புதிய உணர்வு உருவாகிறது. ஆனால் முதலில் வருவது நடைமுறை செயல். அதன் பின்னர்தான் பேச்சும் உணர்வும். இந்த போராட்டங்களின் அனுபவம் என்ன? மக்களது உணர்வில் உடனடியான மாற்றத்தை ஏற்படுத்தி விடுவதில்லை. திடீர் குமுறல்கள், பின்னடைவுகள் ஆகியவற்றுடன் சேர்த்து வரும் இந்த வளர்ச்சிப்போக்கு மெள்ளமெள்ளத்தான் முன்னேற்றமடையும். சூழ்நிலையில் ஏற்பட்டு வரும் மாற்றத்தையும், சாதிஎதிர்ப்பு மோதல்கள் வளர்ந்து வருவதையும், அந்தப் போராட்டம் வர்க்கப் போராட்டத்துடன் இணைவதையும் வெளிப்படுத்துகின்ற மற்றொரு அறிகுறியாக கிராமப்புறங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அது தற்போது நிலப்பிரபுகளுக்கு (மேல்ஜாதியைச் சேர்ந்த நிலப்பிரபுக்களுக்கு) எதிராக விவசாயத் தொழிலாளர்களின் நேரடிப் போராட்டமாக உருவெடுத்து வருகிறது.

தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்ந்து குனிந்து கொடுத்துக் கொண்டிருப்பதை விரும்பவில்லை. அவர்களும் எதிர் நடவடிக்கைகளில் இறங்கத் தொடங்கிவிட்டனர். அத்தகைய நடவடிக்கைகள்மீது பூர்ஷ்வா-நிலப்பிரபுத்துவ ஆட்சி அதிகாரம் இரக்கமற்ற முறையில் அடக்குமுறையை ஏவிவிடுகிறது. பொருளாதார நெருக்கடியும், வறுமையும் மக்கள் மத்தியில் ஒரு புதிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. மக்கள் தங்களது ஜனநாயகப் போராட்டங்களை பாரம்பரியமான முறையில் (சாதி முதலிய முறைகளில்) வெளிப்படுத்தி வருகின்றனர். இதை சாதி உணர்வு என்று கருதக் கூடாது; மாறாக, இது சாதிக்கு எதிரான போராட்டமே.

மதவெறி கட்சிகளின் அழிவு வேலையும் அரசின் அலட்சியப் போக்கும்

இஸ்லாமிய அடிப்படைவாத உணர்வுகளும், முஸ்லீம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன. தற்போதைய சூழ்நிலையினுடைய வர்க்கசக்திகளின் செயல்பாடுகளினுடைய தர்க்கரீதியான தொடர்விளைவே இது. மேற்குஆசிய நாடுகளில், முற்போக்கு ஜனநாயக பாட்டாளி வர்க்கச் சக்திகளை எதிர்த்து போராடுவதற்கும், ஏகாதிபத்தியத்திற்கு வால்பிடிக்கின்ற பிற்போக்கு ஆட்சியாளர்களை பதவியிலமர்த்துவதற்கும் இஸ்லாமிய அடிப்படைவாதம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் வறுமையினால் பாதிக்கப்பட்டும், ஓரவஞ்சனை செய்யப்பட்டும்,   இரண்டாந்திர குடிமகனாக நடத்தப்பட்டு வரும் முஸ்லீம்களின் செவிகளில் இது தேனாக பாய்கிறது. வறுமையில் சிக்கித் தவிக்கும் மற்ற மக்களுடன் துன்பங்களை பகிர்ந்து கொள்ளும் உணர்வுக்கு மாறாக, அரசாங்கத்திலிருக்கும் தலைவர்கள் வேறு மத நம்பிக்கை கொண்டவர்கள் என்பதால் அவர்களால் அநீதி இழைக்கப்படுகிறது என்ற வகையில் உணர்வுகள் உருவாகின்றன. பொதுவான ஜனநாயகப் போராட்டம் மற்றும் வர்க்கப் போராட்டத்தினின்று முஸ்லீம் மக்களை விலைக்கு வைக்கவும், தேசீய உணர்வுகளுக்கு ஊறுவிளைவிக்கவும் தேசீய ஒற்றுமை உணர்வை அரிக்கச் செய்யவும், மதத் தத்துவம் இப்போது முனைப்பாக தலையிடுகிறது. சிறுபான்மையினருக்கு, அதாவது, மதம், கலாச்சாரம் முதலானவற்றின் அடிப்படையிலான சிறுபான்மையினருக்கு ஒரு பூர்ஷ்வா-நிலப்பிரபுத்துவ ஆட்சி நீதி வழங்கிட முடியாது. இந்தியாவை போன்ற புதிதாக விடுதலையடைந்த ஒரு நாட்டில், முதலாளித்துவத்திற்கு முந்தைய தத்துவங்கள் மக்களின் உணர்வுகளில் ஆதிக்கம் புரியும் நிலையில், மதச் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுகின்றனர். நாட்டின் ஒற்றுமையை உருக்குலைத்து ஏகாதியத்திற்கு உதவும் வகையில் மக்களை ஒருவருக்கொருவர் எதிர்த்து மோதவைப்பதற்கு, பகைமை உணர்வுகளை மதவெறியர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில், சிறுபான்மை பிரிவினைவாதம் என்பது சில கற்பனையான மனக்குறைகளின் அடிப்படையில் தோன்றியவை. ஆனால் இன்று அவை நியாயமான மனக்குறைகளாகும். ஜனநாயக உரிமைகள் மீறப்படுவதால் ஏற்படும் உண்மையான குறைபாடுகளாகும். . ஆனால், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், வகுப்புவாதிகளும், அதை மதவாத, வகுப்புவாத பிரச்சினையாக  மாற்றி விட்டனர். மனக் குறைபாடுகள் ஏதுமில்லாமலேயே ஒரு பிரிவினைவாதக் கண்ணோட்டம் உண்டென்றால், அது ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான இந்து வகுப்புவாதம்தான். பகைமைகளை தூண்டி விடுவதற்காக வேண்டுமென்றே கிளப்பிவிடும் வாதம் அதனுடையது.

இந்து வகுப்புவாதப் பிரச்சாரத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் இரையாகின்றனர் என்றால், ஆளும் வர்க்கங்கள் இந்த நாட்டிற்கு விளைத்திருக்கும் தீமையின் அளவையே, இந்த நிலைமை எடுத்துக்காட்டுகிறது. இந்துமத வழிபாடான பசு-பாதுகாப்பு என்பது நாட்டின் அரசியல்சாசனத்தில் அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளில் ஒன்றாக இடம் பெற்றிருப்பதின்மூலம், இந்துமத வைதீகத்திற்கு எத்தகைய சலுகை வழங்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவு.

தேசீயஒற்றுமை என்ற அஸ்திவாரத்தைக் கட்டுவதற்காக, எந்தெந்த தத்துவங்களையும் கண்ணோட்டச் செல்வாக்குகளையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள் எதிர்த்துப் போராடினவோ, அவையெல்லாம் இன்று நிலைத்து நிற்கின்றன. பூர்ஷ்வா நிலப்பிரபுத்துவக் கூட்டணிக்குள் இருந்துவரும் உள்ளார்ந்த சமரசம், தீவிர நிலச்சீர்திருத்தங்கள் செய்ய மறுப்பது, தொழில்வளர்ச்சியில் மந்தப்போக்கு ஆகிய அனைத்தும் ஒன்று சேர்ந்துதான் அவற்றை அவ்வாறு நிலைபெறச் செய்திருக்கின்றன. இன்று அதே செல்வாக்குகள் மேலும் உயரச் செல்லுவதற்காக போராடுகின்றன. பிரிவினை கோரிக்கைகளுக்கு வழிகோலும் சீர்குலைவு சக்திகளிடமிருந்து புதிய சவால்கள் தோன்றியிருக்கின்றன. பல்வேறு மொழி பேசும் மக்களை ஒன்றாக இணைந்து இருக்கச் செய்து மொழி வழி தேசிய ஒற்றுமை காப்பது அவசியம். இதை இந்த பூர்ஷ்வா-நிலபிரபுத்துவ ஆட்சியால் செய்ய இயலவில்லை என்பதையே அஸ்ஸாமும், காலிஸ்தானும் மீண்டும் உணர்த்தியிருக்கின்றன. இந்தியாவை துண்டாடும் அமெரிக்காவின் திட்டம் மேற்கூறிய தத்துவங்கள் செய்துவருகின்ற சீர்குலைவு வேலைகளை ஆதாரமாக கொண்டிருக்கிறது.

“பல ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளில் பரம்பரையான வகுப்புவாதம், இனம், சாதி, இடம், குழு, அரை-நிலப்பிரபுத்துவ மதவெறித்துவம் ஆகியவையெல்லாம், ‘எஜமானர்களாகவும்’, வர்த்தகர்களாகவும், மாற விரும்புகின்ற சிறிய உடைமையாளர்களின் தினசரி வாழ்க்கையின் தத்துவங்களாக இருக்கின்றன. அதனால்தான் அவர்கள் பழங்குடிஇனம், சாதி, மதம், தார்மீக முறைகள் ஆகியவற்றைப் பின்பற்றி வருகின்றனர். இவையனைத்தையும் வரலாறு விரும்புகின்ற வேகத்தில் மாற்றிவிட்டு அந்த இடத்தில் தூய்மையான மதச்சார்பின்மை தத்துவத்தையும், ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசீயத்தையும் உருவாக்கிவிடுவது என்பது அவ்வளவு எளிதான காரியமா? சாதாரணமாக அது முடியாது” என்று கூறுகிறார்கள். இப்படிக் கூறுவது சரியாக இருக்குமா? இது ஓரளவு உண்மைதான். ஆனால் பிரச்சனை என்னவென்றால், இந்த உணர்வுக்கு வெகுமுன்பாகவே நடைமுறை தேவை செயல்தான் முதலில் தோன்ற வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இத்தகைய முயற்சி ஏற்கனவே இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது. வகுப்புவாதம், சாதி, மதம் முதலான சீர்குலைவு சக்திகளின் அபாயத்தை குறைத்து மதிப்பிடுவது கூடாது. இதை எதிர்க்கின்ற சக்திகளின் பலவீனம் பற்றி, குறிப்பாக தொழிலாளி வர்க்கத்தின் உணர்வு பற்றி ஏற்கனவே குறிப்பிட்டாகிவிட்டது.

இடதுசாரி கட்சிகளின் முன்னுள்ள பிரதான கடமைகள்

ஆனால், இந்தியாவில் இன்று மோசமாகிவரும் பொருளாதார நெருக்கடி, விவசாயிகள் மொத்தமாக வறுமைக்குள் தள்ளப்படுவது, தொடர்ந்து விலைவாசிஉயர்வும் அதன் விளைவுகளும், சட்டம் ஒழுங்கும் சீர்குலைந்து சரிந்து வருவது ஆகிய இவையனைத்தும் மக்களை போராடத் தூண்டியிருக்கின்றன. அத்துடன்கூடவே, அவர்களது சாதி, மத உணர்வுகள், மூடநம்பிக்கைகள் தொடர்கின்றன. நடைமுறையில், இந்த பலவீனங்களையும் மீறி ஆளுங்கட்சிகளை அவர்கள் ஆட்சியிலிருந்து இறக்கி விடுகின்றனர்; இ.காங்கிரசை தோற்கடிக்க லட்சக்கணக்கில் அணிதிரளுகின்றனர்; நம்பிக்கைத் துரோகம் செய்த கட்சிகளை விரட்டி விடுகின்றனர்; ஒருதடவை ஆட்சியில் அமர்த்திவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமைதாங்கும் இடதுசாரிகட்சிகளிடம் நம்பிக்கையை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளுகின்றனர்.

இதுவெல்லாம் ஒரு ஆரம்ப முயற்சிதான்.  மக்களது இந்தப் பரிசோதனைகளிலிருந்து, தவறுகளிலிருந்து அனுபவம் பெற்று வருகின்றனர். லெனின் கூறியதுபோல், மக்களுக்குக் கிடைக்கும் உண்மையான போதனையை, புரட்சிகரமான போராட்டங்களிலிருந்து பிரித்துவிட முடியாது. இந்த போராட்டங்களின் அனுபவம்தான் அவர்களது உணர்வுகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. விவசாயிகள் மத்தியில் வளர்ந்துவரும் அதிருப்தி, பெரிய போராட்டங்கள் அண்மையில் வெடிக்கவிருக்கின்றன என்பதையே காட்டுகிறது. அவர்களுக்கு ஒரு சரியான வழிகாட்டுவது இன்று இடதுசாரி ஜனநாயக சக்திகளுக்கும், தொழிலாளி வர்க்கத்திற்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் முன்பாக இருக்கும் மிகப் பெரிய கடமையாகும். இதற்கு தொழிலாளி வர்க்கம் தன் நடவடிக்கைகள் மூலம் பக்கபலமாக நின்று நாட்டுமக்கள் உணர்வுநிலைகளில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

அதேவேளையில், தொழிலாளி வர்க்க இயக்கமும், கம்யூனிஸ்ட் இயக்கமும் தங்களிடம் தொடர்ந்து இருந்துவரும் பலவீனங்களைக் களைய வேண்டும்; சமுதாயப் போராட்டங்களிலும், பொதுவான இயக்கங்களிலும் ஆளும் வர்க்கங்களின் தத்துவம் தலையிட்டு சீர்குலைத்து வருகிறது. மற்ற போராட்டங்களை நடத்தும்போதே ஒரு தத்துவப் போராட்டத்தையும் சேர்த்து நடத்துவதன் மூலமே பிற்போக்கு சக்திகளின் தலையீட்டையும், சீர்குலைவுகளையும் முறியடிக்க முடியும். மக்களுடைய நடைமுறை நடவடிக்கைகளுடன் தத்துவப் போராட்டங்களும் ஒன்றிணைக்கப்பட வேண்டும். இந்தக் கடமையை நிறைவேற்றுவதிலும், மதத்தைப் பற்றியும் இந்தியாவில் அதனுடைய பிற்போக்குத் தனமான சமுதாய வெளிப்பாடுகள் பற்றியும் பொருள்முதல்வாத அடிப்படையில் விமர்சனம் செய்வதிலும், கம்யூனிஸ்ட் இயக்கமும், இடதுசாரி இயக்கமும் இன்னமும் பலவீனமாகவே உள்ளன. பூர்ஷ்வா தலைமை இந்த கடமையை நிறைவேற்றவில்லை. தொழிலாளி வர்க்கமும் அந்த கடமையை புறக்கணித்துவிட்டது. பிற்போக்குத் தனமான தத்துவங்களின் அடிப்படைக் கோட்பாடுகளின்மீது நேரடியாகத் தாக்குதல் தொடுக்காமல், பிரச்சனைகள் தோன்றும்போதுமட்டும் சில தந்திரோபாய அணுகுமுறைகளை மேற்கொள்வதன் காரணமாக, நடைமுறையில், குழப்பமும் சந்தர்ப்பவாதமும்தான் உருவாகின்றன. இந்த பலவீனம் களையப்பட வேண்டும்.

மக்கள்மீது ஆதிக்கம் வகிக்கின்ற மதம், சாதி, வகுப்புவாதம் ஆகிய தத்துவங்கள் மற்ற இடங்களைப் போலவே, இந்தியாவிலும் பொருளாதார வளர்ச்சியின் பாதிப்பிற்கு உட்படுபவைதான். இந்திய சமுதாயத்தில் புரட்சிகரமான மாற்றம் ஏதும் உருவாகாத நிலையில், அந்தத் தத்துவங்களுக்கு உயிரூட்டுகின்ற சமுதாய சூழ்நிலைகள் தொடர்ந்து நீடிக்கின்றன. ஆகவே அத்தத்துவங்களும் ஒரு புதிய மாறுபட்ட வடிவில் தொடர்ந்து செயல்படுகின்றன. தற்போதைய காலகட்டத்தில் இன்றுள்ள பூர்ஷ்வா நிலப்பிரபுத்துவ ஆட்சி ஆளும் வர்க்கங்களின் தேவைகளுக்கே சேவைசெய்கின்றன. இந்நாட்டின் ஒற்றுமையை உருக்குலைக்க நினைக்கும் ஏகாதிபத்தியத்தின் சதிக்கும் இந்தப் போக்கு துணைபுரிகிறது.

மக்களிடையே ஜனநாயகப் புரட்சி நலன்களுக்கு உதவுகின்ற தத்துவங்களின் முனைப்பான தலையீட்டின் மூலம்தான், பிற்போக்குத் தத்துவங்களின் தலையீட்டை முறியடிக்க முடியும்.

பூர்ஷ்வா நிலப்பிரபுத்துவக் கட்சிகள் எதுவும் இந்தத் தத்துவப் போராட்டத்தில் அக்கறை காட்டுவதில்லை. ஜனநாயக, தொழிலாளி வர்க்க சக்திகள் வெகுஜனப் போராட்டங்களை நடத்தும்போது, ஒரு திட்டமிட்ட தத்துவத் தாக்குதலையும் நடத்தியாக வேண்டும்.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: