மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


பாசிசத்தை வீழ்த்துவது வரலாற்றுக் கடமை – பிரபாத் பட்நாயக்


  • பேரா.  பிரபாத் பட்நாயக்

(மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க நாளிதழ் கணசக்திக்கு பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக் அளித்த நேர்காணல்)

சக்தி –  75 ஆண்டு கால சுதந்திரத்திற்கு பிறகும் தேசத்தின் வளத்தில்  அசமத்துவமும் வேலையின்மையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. மக்கள் தொகையின் பெரும்பகுதியினருக்கு வேலைவாய்ப்பும். வருவாயும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இவற்றை பார்க்கும்போது இந்தியாவானது மக்கள் நல அரசாக  நீடித்திருக்க முடியுமா?

பிரபாத் பட்நாயக் – மக்கள் நல அரசு பற்றிய அர்த்தத்தை மிகச் சரியான முறையில் பரிசீலித்தால் இந்தியா ஒருபோதும் மக்கள் நல அரசாக இருந்ததில்லை. மக்கள் நல அரசானது ஒரு குறிப்பிட்ட பகுதியினரைச் சார்ந்தவர்களுக்கு என்பதற்கு பதிலாக அனைவருக்குமான  அரசாக அது செயல்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொருவருடைய சிற்சில குறைந்தபட்ச உத்திரவாதத்தையாவது செய்து தர முயற்சித்திருக்க வேண்டும். ஆனால் இந்தியாவின் விசயத்தில் இது  ஒருபோதும் நடக்கவில்லை. நாட்டின் உணவு பாதுகாப்பை உத்திரவாதப்படுத்துவதற்காக பொதுவிநியோக முறை கொண்டுவரப்பட்டது. ஒருசில மாநில அரசுகளே கிராமப்புறங்களில் ரேசன்கடைகளுக்கு நிதியளித்தன. தற்போது திட்டத்தில் பொது விநியோகம் என வார்த்தை இருந்தபோதிலும் உண்மையில் அவ்வாறு இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளின்படி மக்கள் நல அரசு அமைப்பின் நடைமுறையானது மாநில அரசின்  கொள்கை வழிகாட்டுதல்களின் கீழ் செயல்படுத்த வேண்டும். ஆனால் இதை எந்த நீதி மன்றமும் அமுலாக்குவதற்கான உத்திரவுகளை பிறப்பிக்க முடியாது. எனவே மாநில அரசுகள் இதை கறாராக பின்பற்றுவதில்லை.

இந்தியா ஒரு மக்கள் நல அரசாக செயல்பட வேண்டும் என்பதை துவக்கத்திலிருந்தே இந்திய அரசியலமைப்பின் இலக்காக இருந்தது என்பதே உண்மையாகும். இந்த இலக்கு தற்போது வெளிப்படையாகவே கைவிடப்பட்டுவிட்டது. இல்லையென்றால், பெருமுதலாளிகளுக்கு வரிச்சலுகைகளை அளித்து உதவி செய்வதை அரசால் தன்னெழுச்சியாக செய்திருக்க முடியாது. நல அரசு கொள்கையை கைவிடுவது என்பது நவீன தாராளமயத்தின் கொள்கையின் ஒரு பகுதியாகும். இது பல்வேறு தளங்களில் வெளிப்படுத்துகிறது.  உதாரணமாக உணவுப் பொருட்களை பொது விநியோக முறையில் வழங்குவது திரும்ப பெற்றதும், கல்வியை நுகர்வு பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டதுமாகும். இதனால் பெரும்பான்மையான மக்கள் உணவு மற்றும் கல்வியை பெறமுடியாதவர்களாக்கப்பட்டனர். இது பொது சுகாதார மருத்துவத்தையும் பலவீனப்படுத்தி வருகிறது. இது போன்ற பல உதாரணங்களை சொல்ல முடியும்.

சுதந்திரத்திற்கு பிறகு என்றுமில்லாத நிலையில்  வேலையின்மை விகிதம் மிக உச்ச அளவில் உள்ளது. வேலையில்லாதவர்களுக்கான உதவி கூட தேசிய அளவில் ஒரு பொது வடிவம் இல்லை. கடந்த நூற்றாண்டுகளை விட தற்போது நாட்டின் அசமத்துவம் தீவிரமடைந்துள்ளது. பொருளாதார நிபுணர்கள் பிக்கட்டி மற்றும் கான்சல் ஆகியோரின் கூற்றுப்படி மக்கள் தொகையின் பெரும்பகுதியினர் மத்தியில் ஊட்டச்சத்து குறைந்து வருகிறது. பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு  கடுமையான விளைவுகள் அதிகரித்து வருகிறது என்பதை அனுபவம் உணர்த்துகிறது. இத்தகைய போக்குகள் நவீன தாராளமய  காலத்தில் தான் சரிந்து  வருகிறது என்பதை வெளிப்படுத்துகின்றன.

கணசக்தி – நவீன தாராளமயக் கொள்கைகள் அமுலாக்க துவங்கி 30 ஆண்டுகள் கழிந்து விட்டன. இந்த கொள்கையின் மிக முக்கியமான விளைவு எது? தற்போதைய தருணத்தில் இந்த கொள்கை முற்றிலுமாக தோல்வியடைநதுவிட்டது என்று நம்மால் கூறமுடியுமா?

பி.ப – இந்தியாவின் நவீன தாராளமயத்தினை இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம். ஒன்று அதிகமான பொருளாதார வளர்ச்சி விகிதம் மற்றது நவீன தாராளமயத்தினால் துவங்கிய பொருளாதார நெருக்கடி. பின்னர் வந்த நெருக்கடி உலகளாவிய அளவில் பரவியது. இவ்விரண்டு பகுதிகளுக்கும் இடையே கோடு பிரிக்கலாம். அமெரிக்காவில்  வெடித்து கிளம்பிய வீட்டுக் கடன் நெருக்கடியும்  அதன் பிறகு இரண்டாவது ஐ.மு.கூட்டணி அரசின் கால கட்டம் ( 2009-2014). இந்திய தன்மையில் நெருக்கடிகள் சிறிது காலம் தாழ்த்தி துவங்கின.

உண்மையில் நவீன தாராளமயத்தின் துவக்க காலத்தில் வளர்ச்சி விகிதம் அதிகரித்தபோதிலும் கூட அதைப்போலவே  மொத்த வறுமை விகிதமும் அதிகரித்தது. 

இந்தியாவின் கிராமப்புறத்தில் ஒருவர் தினசரி 2200 கலோரிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்  என்ற  வறுமையை வரையறைக்குட்படுத்தப்பட்ட அளவிளை எடுத்துக்கொள்ள முடியாத மக்கள் தொகை 1993-94இல் 58 சதவிகித இருந்தது 2011-12ஆம் ஆண்டில் 68 சதவிகிதமாக உயர்ந்தது. நகர்புறத்தில் 2100 கலோரிகளை எட்டமுடியாதவர்கள் இதே காலத்தில் 57 சதவிதகத்திலிருந்து 65 சதவிகிதமாக அதிகரித்தது.

எவ்வாறாயினும், நவீன தாராளமயக் கொள்கைகளின் நெருக்கடிகளும் தேக்கநிலையும் உழைக்கும் மக்கள் பிரிவினரை மிகக் கடுமையாக தாக்கியது. 2017-18ஆம் ஆண்டின் தேசிய மாதிரி ஆய்வு அறிக்கையினை மோடி அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்திருந்ததிலிருந்தே மோசமான நிலைமையினை உணர்ந்து கொள்ள முடியும்.  இவைகளை  மறைப்பதற்காக தேசிய மாதிரி ஆய்வு துறையையே மூடிவிடவும் கூட மோடி அரசு முடிவெடுத்தது. மேற்படி அறிக்கை கசிந்த நிலையில் அதன் விபரப்படி இந்திய கிராமப்புற உண்மையான தனி நபர் நுகர்வு சக்தி 2011-12க்கும் 2017-18ஆம் ஆண்டுகளுக்கு இடையே 9 சதவிகிதம் குறைந்துவிட்டது. இது ஒட்டு மொத்த சராசரியாகும். உழைக்கும் மக்களின் நிலைமையை ஒப்பிடும்போது மிகவும் மோசமாக உள்ளது. பெருந்தொற்றுக் காலமும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட உலகளாவிய பணவீக்கமும் சேர்ந்து இந்த நிலைமையை மேலும் கடுமையாக்கியுள்ளது.

பெருந்தொற்று மற்றும் உக்ரைன் போர் பாதிப்பிலிருந்து உலக முதலாளித்துவம் மீண்டு வந்தபோதிலும், நவீன தாராளமயத்தின் நீண்ட கால கட்டமைப்பு நெருக்கடியானது ஏற்கனவே 2019-20க்குமுன்னரே வெளிப்படுத்திவிட்டது; அது தற்போதும் நீடிக்கிறது. நவீன தாராளமயத்தின் நெருக்கடியை எதிர்கொள்ள முதலாளிகளுக்கு சலுகைளை வாரி வழங்குவதன் மூலம் அவர்கள் அதை தொழிற்துறையில்  முதலீடு செய்வதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கும். அதன் விளைவாக வேலைவாய்ப்யை அதிகரிக்க செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் முயற்சிக்கிறது. ஆனால்  நெருக்கடியான காலங்களில் சந்தை முதலாளிகள் எந்தவொன்றிலும் முதலீடு செய்ய மாட்டார்கள். எனவே நெருக்கடி மேலும் ஆழமாகி வருகிறது என்பதே உண்மை. நவீன தாராளமயம் நீடிக்கும் வரை மக்களின் சமூக பொருளாதார நிலைமைகளும்  தொடர்ந்து மோசமடைந்து வரும். எவ்வளவு விரைவாக இந்த கொள்கையிலிருந்து நாடு  வெளியேறுவதுதான் ஒரே வழி.

கணசக்தி – இந்திய பொருளாதாரத்தில் எந்த ஒரு துறை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று உங்களிடத்தில் கேட்டால் நீங்கள் எந்த ஒன்றை தேர்வு செய்வீர்கள்?

பி.ப – நவீன தாராளமயத்தின் மிகப்பெரிய பிரச்சனை குறிப்பாக சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் நேரடியாக உழைப்பை செலுத்திடும் விவசாயத்தின் மீதான  அதன் தாக்குதல் தான். தாராளமயம் உருவானது முதல் அது பெரும் முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிதி மூலதனத்தின் கூட்டணியால்  வழிநடத்தப்படுகிறது. அது விவசாயிகளை சார்ந்து உள்ள உழைப்பை செலுத்திடும் விவசாயத்திற்கான ஆதரவினை திரும்ப பெற்றது. உண்மையில் உணவுப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையினை ஒழித்துக்கட்டுவதற்காக எடுத்த முயற்சியானது மேடி அரசின் இறுதிக்கட்ட நடவடிக்கையாயாகும். விவசாயிகளும் எழுச்சிமிக்க போராட்டத்தின் காரணமாக தற்காலிகமாக பின்வாங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் ஆபத்து நீடிக்கிறது.

அரசாங்கம் விவசாய பொருளாதாரத்துறைக்கான தனது ஆதரவினை குறைப்பதன் விளைவாக விவசாயிகளின் லாபத்தை தடுத்துவிடும். மேலும் அரசாங்கம் முதலீடுகளை குவிப்பததற்கு  முதன்மையானது என சொல்லி  இந்த துறையில் பெரும் பெரு நிறுவனங்களை அனுமதிக்க ஊக்கப்படுத்துகிறது. தற்போதைய விவசாயத்துறையின் நெருக்கடிக்கான காரணங்களின் பின்னணி இதுவே. நாட்டின் விடுதலைக்கு பிறகு என்றுமில்லாத நிலையில் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதும் இந்த நெருக்கடியின் விளைவுகளால் தான். பெருந்திரளான விவசாயிகள் வேலை தேடி கிராமப்புறங்களிலிருநது நகரங்களை நோக்கி இடம்பெயர்கிறார்கள் இங்கு ஏற்கனவே உள்ள வேலையில்லா தொழிலாளர்களோடு சேர்ந்து  வேலையின்மை மேலும் அதிகரிக்கிறது.  இதுவும் நெருக்கடியின் மற்றொரு பகுதியாக மாறுகிறது. வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்து வேலைக்கான ஆட்கள் எண்ணிக்கையைக் காட்டிலும் வேலை தேடுவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் விவசாயிகள் என்று வகைப்படுத்துவோர் எண்ணிக்கை 1991 மற்றும் 2001 ஆகிய இரு கணக்கெடுப்பிற்கு இடையில் ஒன்றரை கோடி விவசாயிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

விவசாயிகளின் வறுமையானது அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களின் பேரம் பேசும் சக்தியை வலுவிழக்க செய்வதோடு,  மக்கள் தொகையில்  மொத்த வறுமையும் உயருகிறது. நவீன தாராளமய முதலாளித்துவத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க குணமும், அதன்  மையமான கருவும்   இதுதான். இந்தியா போன்ற ஒரு நாட்டில் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு விவசாயம் உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்பதுதான் வளர்ச்சிக்கான  மிக முக்கியமான திறவுகோல் . மேலும்  அது விவசாய தொழிலாளர்களின் சூழ்நிலைமையோடு மிக நெருக்கமான உறவுகளை கொண்டுள்ளது. நவீன தாராளமயம் விவசாயத் தொழிலாளர்களின்  வாழ்வாதாரத்தினை கேள்விக்குறிக்கு தள்ளியுள்ளது.

கணசக்தி – இந்திய கார்ப்பரேட் துறை இந்து அடிப்படைவாத தத்துவத்தின் அபாயத்தினை உணர்ந்துள்ள போதிலும் கூட அதற்கு சிறியதாகவே அல்லது அதிகமாகவே ஆதரவு தெரிவிக்கிறது.இது ஏன் நிகழ்கிறது? இந்திய பெரு முதலாளிகள் தங்களின் கலாச்சார, தத்துவார்த்த கொள்கையினை மாற்றிக்கொண்டார்களா?

பி.ப – இல்லை. இந்திய பெரும் முதலாளிகள் தங்களின் கலாச்சார தத்துவார்த்த கொள்கைககளை  இதுபோல மாற்றிக் கொள்ளவில்லை. பன்னாட்டு  நிதி மூலதனம் மற்றும் உள்ளுர் பெரும் முதலாளிகள் கீழிருந்து வரும் மாற்றங்களின்போது அவர்கள் அச்சப்படுவது சாத்தியம். இது  நவீன தாராளமய நெருக்கடியின் விளைவாகும். நவீன தாராளமயத்தின் முதற்கட்ட காலத்தின்போது பொருளாதார வளர்ச்சி அதிகரித்து இருந்தபோதே வரி சலுகை உள்ளிட்டவை மூலம் உழைக்கும் வெகுமக்களுக்கு ஆதரவை பெற முயற்சித்தது.  இதன் மூலமாக நவீன தாராளயமத்திற்கு எதிரான எதிர்ப்பினை எவ்வாறு  தவிர்க்கவும் அல்லது தள்ளிப்போடவும் என்பதற்கான நோக்கமாக  அது   இருந்தபோதிலும் உழைக்கும் மக்களின் துயரம் நீடித்தது. இது நவீன தாராளமயத்தின் ஆதரவு அமைப்பு முறையின் ஒரு பகுதியாகும். ஆனால் நெருக்கடியை நோக்கி வந்தடைந்தபோது இந்த ஆதரவு அமைப்பு முறை ஒழிந்து போனது. எந்த மட்டத்திலும்  வளர்ச்சியில்லை என்ற நிலைமையில், ஆதரவு முறை ஒன்றுமில்லை என்றாகிவிட்டது. இந்த சூழ்நிலையில் நவீன தாராளமயத்திற்கு ஒரு புதிய ஆதரவு அமைப்பு முறை தேவையாகிறது. நவீன பாசிசமே அதன் ஆதரவு அமைப்பு. இது நவீன தாராளமய மற்றும் நவீன பாசிச கூட்டணிக்கு கொண்டு சென்றது. இந்தியாவில் இது கார்ப்பரேட் மற்றும் இந்துத்துவ சக்திகளின் கூட்டணியாக உருவாகியது. இந்த கூட்டணி நவீன தாராளமய முதலாளித்துவம்  நீடித்திருக்க உதவி செய்ய முயற்சிக்கிறது. இந்த கூட்டணி கதையை மாற்றியமைத்து  சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெறுப்பு உணர்வை உருவாக்குவதன் மூலமாக, உழைக்கும் மக்கள் தங்களின் வாழ்நிலை பாதிப்பிற்கு எதிரான நியாயமான உணர்வுகள் திசைதிருப்பப்படுகிறது.   இது நவீன தாராளமயத்திற்கு இருவழிகளில் துணைபோகிறது. இது உழைக்கும் வர்க்கத்தை பிளவுபடுத்துகிறது. மேலும் அவர்களின் வாழ்வாதார பிரச்சனைகளிலிருநது மத ரீ தியான பிரச்சனைகளுக்கு திசைதிருப்புகிறது. இந்த கார்ப்பரேட் –  இந்துத்துவ கூட்டணி  பாசிசத்தின் ஒரு ஆயுதமாகும்.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் 7வது மாநாட்டில் பேசிய ஜார்ஜ் டிமிட்ரோவ் முதலாளித்துவத்தின் நெருக்கடியான காலத்தில் தான் பாசிசம் உருவாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.1930களில் ஏற்பட்ட பெரும் மந்தநிலையே இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும். தற்போதைய நவீன தாராளமயத்தின் நெருக்கடியும் அதைப்போன்றே நவீன பாசிசம் உருவாக காரணமாகியுள்ளது. மேலும் 1930களில் உருவான  பாசிசம் போலவே தற்போதைய நவீன பாசிசமும் உலகம் முழுவதும் உருவாகியுள்ளது. எனவே இது இந்தியாவிற்கு மட்டும் கட்டப்பட்டதாக இல்லை என்பது குறிப்பிட வேண்டியதாகும்.

எவ்வாறாயினும் 1903களின் நிலைமைக்கும் இன்றைய நிலைமைக்கும் வித்தியாசம் உள்ளது. 1930களில் பாசிசம் தன்னுடைய போர் நடவடிக்கைகளுக்கு ஏராளமான ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்காக  அரசாங்கங்கள் பெருமளவு செலவு செய்ததன் மூலமாக  முதலாளித்துவதை நெருக்கடியிலிருந்து காப்பாற்றியது  இந்த கூடுதல் செலவுகளுக்கு நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களை பெற்றன. ஆனால் தற்போது அரசாங்கங்களால் கூடுதல் செலவிற்கு கடன்களை பெற முடியாது. இது கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. ஏனென்றால் அளவுக்கதிகமான நிதிப்பற்றாக்குறைப் போக்கினை நிதி மூலதனம் அனுமதிப்பதில்லை. மேலும் நிதி மூலதனமானது ஒரு சர்வதேசமயமானது. ஆனால் அரசுகள் ஒரு நாட்டிற்கு உட்பட்டது. எனவே நிதிமூலதனம் நாட்டை விட்டு வெளியேறாத வகையில் அரசாங்கம் சலுகைகளை அளிக்க முயற்சிக்க வேண்டும். அதேசமயம் அதிகப்படியான உபரி மதிப்பால் குவிந்துள்ள செல்வத்திற்கு எதிராக கூடுதல் வரி விதித்து கஜானாவிற்கு வருவாய் ஈட்டலாம் என்பதும் நவீன தாராளமயத்தில் அரசுகளால் முடியாது.  இதற்கு பதிலாக, அரசுகள் தங்களின் செலவுகளை ஈடுசெய்ய உழைக்கும் மக்கள் மீதே வரிகளை சுமத்த முயற்சிக்கின்றன. ஆனால் உண்மையில் இத்தகைய கூடுதல் வரிகள் மூலமாக மொத்த வருவாய் அளவை உயர்த்த முடியாது. ஏனென்றால் உழைக்கும் மக்கள் தங்களின் வருவாயின் பெரும்பகுதியை அடிப்படை வாழ்க்கைத் தேவைகளுக்காகவே செலவிட வேண்டியுள்ளது. எனவே பழைய பாசிச அரசு பாணியில்  தற்போதைய நெருக்கடியிலிருந்து முதலாளித்துவத்தை மீட்க முடியாது.இதுவே 20ஆம் நூற்றாண்டு  பாசிசத்திற்கும் இன்றைய  நவீன பாசிசத்திற்குமான வித்தியாசம் என்பதோடு இது நவீன பாசிசத்தின் ஒரு பலவீனமுமாகும்.

கணசக்தி – கார்ப்பரேட்-இந்துத்துவா கூட்டணியால் இந்தியா பாசிசத்தை நோக்கி நகரும் என்று நீங்கள் கருதுகிறீர்களா? அவ்வாறெனில் இந்திய பாசிசத்திற்கான பண்புகள் எவ்வாறு இருக்கும்?

 1930கள் போன்று இல்லாமல்  தற்போதைய சூழ்நிலை வித்தியாசமாக உள்ளது. இன்றைய பாசிசம் 1930களின் பாசிசத்தை நகல் எடுத்தாற்போல் இருக்காது. இருப்பினும், பாசிசத்திற்கான அத்தனை பொதுவான பண்புகளும் இந்தியாவில் ஏற்கனவே இருந்து வருகிறது. உதாரணமாக, பெரும் வர்த்தக மற்றும் பாசிச கட்சிக்கு இடையேயான கூட்டணி, அச்சத்திற்கு இடமளிக்கும் வகையில்,  சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்ம பிரச்சாரங்களும் அவர்களை  குறிவைத்து பாசிச சக்திகளின் வன்முறை கும்பல்களும் அரசாங்கத்தால் தொடுக்கப்படும் அரசியல் ரீதியான துன்புறுத்தல்களும்  சர்வாதிகார அரசை போன்ற அடிப்படையில்தான் இருந்து வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இத்தகைய சர்வாதிகார அரசிற்கு எதிராக குரல் கொடுக்கும் அறிவுஜிவிகள், சமூக இயக்கங்கங்களுக்கு எதிராக பரவலான அடக்குமுறைகளும் வன்முறைகளும் ஏவப்படுகின்றன. இவையெல்லாம் தன்னுடைய அரசியல் பலத்தை இழந்து விடுவோம் என்ற அச்சத்திலிருந்து பாசிச அரசால்  மேற்கொள்ளப்படுகிறது. எனினும்  இன்றைய பாசிசமாகட்டும் அல்லது நவீன பாசிசமாகட்டும், அவை ஜனநாய கட்டமைப்புக்குள் செயல்படுவதற்கு தள்ளப்படுகின்றன. எனவே நவீன பாசிசமானது ஜனநாயகத்தை அழித்தொழிக்கும் வேலையை செய்து கொண்டே, அதை பாதுகாப்பது போன்ற தோற்றத்தினையும் மேற்கொள்கிறது. அது எப்போதும் ஜனநாயகத்தை பற்றி பாசாங்குத்தனமாக நடந்து கொள்ளும். இன்றைய பாசிசம் ஒரு கபட வேடம் பூண்டுள்ளது என்பதே இதன் பொருள். எனவே இன்றைய கார்ப்பரேட்- இந்துத்துவ கூட்டணியானது பாசிசத்தை நோக்கி செல்லும் என்பதை நம்மால் சொல்ல முடியாது. இந்த கூட்டணி மாறுவேடம் தரித்த பாசிசமாகும். இது ஒரு சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. அதுவரை வேடம் தரித்தும், அதற்கு பின்னர் ஒளிவு மறைவின்றியும் நேரடியான நடவடிக்கையில் இறங்கும்.

ஜனநாயக  முகமூடி அணிவது என்பது இந்திய பாசிசத்தின் ஒரு குணாம்சம் என்று மட்டும் என்றிருப்பது ஒரு தனித்துவம் இல்லையென்றாலும், அதன் முக்கிய பண்புகளில் ஒன்று மற்றவர்கள் என வரையறுத்த மத அடையாளத்தைப் பயன்படுத்துவதாகும். இந்த மற்றவர்கள் இந்தியாவின் மதச் சிறுபான்மையோர் ஆவர். இது மற்ற நாடுகளில் இனம், தேசியம் போன்ற இதர அடையாளங்களை வைத்து மற்றவர்கள் என்று அடையாளப்படுத்தப்படுவார்கள். இந்தியாவில்  மதத்தையே அடிப்படைவாதமாக பயன்படுத்தப்படுகிறது.

பாசிசம் தோற்கடிக்கப்படவும்   ஜனநாயகத்தையும்  மீட்டெடுக்கவும் உழைக்கும் மக்களின் பொருளாதார நிவாரண நடவடிக்கைகளை மீட்டெடுக்க வேண்டும் என்றால்  இடதுசாரிகளின் பலத்தை அதிகப்படுத்த வேண்டும். நவீன தாராளமயத்திலிருந்து வெளியேறவும், நவீன பாசிசத்தையும்  தோற்கடிக்கவுமான ஒரே வழி இடதுசாரிகள் பலமடைவதுதான்.  பாசிசத்திற்கு எதிரான  சக்திகள்  ஒரே மேடையில் ஒன்றிணைக்கப்பட வேண்டும். இதற்காக இடதுசாரிகள் விரிவான மக்கள் இயக்கத்தை கட்டமைக்க வேண்டும்.  இதே இடதுசாரி சக்திகளால்தான் கடந்த நூற்றாண்டில் பாசிசம் தோற்கடிக்கப்பட்டது. இத்தகைய வரலாற்றுக்  கடமையினை இப்போதும் முன்னெடுத்துச் செல்வோம்.

தமிழில்:  எஸ்.ஏ.மாணிக்கம் –  நன்றி – மன்த்லி ரெவ்யூ  இணைய தளம்



Leave a comment