மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


’நான் என்றும் மக்கள் ஊழியனே’ – ஏ.கே.கோபாலன்


தோழர் ஏ.கே. கோபாலனின் தியாக வாழ்வை நினைவு கூரும் வகையில் ’நான் என்றும் மக்கள் ஊழியனே’ என்ற அவரது சுயசரிதை நூலில் இருந்து சில பகுதிகள்.

தோழர் ஏ கே கோபாலன் இவ்வாறு நினைவு கூர்ந்தார்: “சுதந்திரம் கிடைத்த இரவான, ஆகஸ்ட் 14, 1947 அன்று கண்ணனூரின் பெரிய சிறைச்சாலையில், நான் தனிமைச் சிறையில் இருந்தேன். தடுப்புக் காவல் கைதிகள் வேறு யாரும் இல்லை.  இரவில் என்னால் தூங்க முடியவில்லை. சிறையின் நான்கு மூலைகளிலிருந்தும் ‘ஜே’ என்ற முழக்கம் கேட்டுக் கொண்டிருந்தது. ‘மகாத்மா காந்தி கி ஜே’, ‘பாரத் மாதா கி ஜே’ என்ற முழக்கங்களின் எதிரொலி சிறை முழுவதும் எதிரொலித்தது.  சூரிய உதயத்திற்குப் பிறகு வரும் கொண்டாட்டத்திற்காக நாடு முழுவதும் காத்துக் கொண்டிருந்தது. அவர்களில் எத்தனை பேர் இத்தருணத்திற்காக பல வருடங்களாக காத்திருந்து போராடினார்கள். அத்தகைய போராட்டத்தில் தங்களுக்கான அனைத்தையும் அவர்கள்  தியாகம் செய்திருக்கிறார்கள்.  நான் ஒருசேர மகிழ்ச்சி மற்றும் துக்கத்தின் உணர்வு வயப்பட்டிருந்தேன். எனது இளமைக்காலம் முழுவதையும் தியாகம் செய்து, இன்னமும் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருப்பதற்கான இலக்கு நிறைவேறியதில் மகிழ்ச்சி அடைந்தேன்.  ஆனால் நான் இப்போதும் கூட கைதியாக சிறையில் இருந்தேன்.  நான் இந்தியர்களால் – காங்கிரஸ் அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்டேன், ஆங்கிலேயர்களால் அல்ல. 1927ல் இருந்து காங்கிரஸ் குறித்த நினைவுகள் என் மனதில் ஓடின.  கேரளாவின் காங்கிரஸ் இயக்கத்தில் நான் ஆற்றிய பங்கை நினைத்து பெருமைப்பட்டேன். சில காலம் கேரள காங்கிரஸின் செயலாளராகவும், அதன் தலைவராகவும், நீண்ட காலம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராகவும் இருந்த ஒருவர், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை சிறையில் கொண்டாடினார்!”

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி ஜனநாயக இயக்கத்தின், தலைமை சிற்பிகளில் ஒருவரான தோழர் ஏ.கே. கோபாலன், ஒரு பன்முக ஆளுமையாக விளங்கினார். அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர்; சமூக சீர்திருத்தவாதி; தொழிலாளர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராடியவர்; ஒரு சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்; வலிமைமிக்க சொற்பொழிவாளர்; தொலைநோக்கு பார்வையுடையவர். எல்லாவற்றிற்கும் மேலாக, சிறந்த மனிதப் பண்புகளின் உருவகமாகவும்,  வெகுமக்களுக்கான மனிதராகவும் அவர் திகழ்ந்தார்.

கோபாலன் ஆசிரியராக பணிபுரிந்த ஆரம்ப காலத்தில், மகாத்மா காந்தியின் தலைமையில் இந்திய அரசியல் சூழல் சூடுபிடிக்கத் துவங்கியது.  உண்மையில், கோபாலன் மாணவராக இருந்தபோதே, பல்வேறு பொது நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1920களின் பிற்பகுதியில், அவர் காதி குறித்த செய்திகளைப் பரப்புவதிலும், வெளிநாட்டு ஆடைகள் மற்றும் பொருட்களைப் புறக்கணிக்க மக்களை தூண்டுவதிலும் தீவிரமாக ஈடுபட்டார்.  விடுமுறை நாட்களில், காதி மற்றும் சுதேசிப் பொருட்களை ஊக்குவிக்க கிராமங்களுக்குச் சென்றார். கிலாபத் இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கேற்றார்.

அவரது வார்த்தைகளில் கூறுவதானால்: “1928 ம் ஆண்டு முதல் காதி குறித்த பிரச்சாரம் மற்றும் அன்னிய துணிகளை புறக்கணிக்க மக்களைத் தூண்டுவதிலும் ஆர்வம் காட்டினேன். விடுமுறை நாட்களில் காதி மற்றும் ‘சுதேசி’ பொருட்களை பரப்புவதற்காக கிராமங்களுக்குச் செல்வேன்.  நடுத்தரக் குடும்பங்களில் இராட்டையை அறிமுகம் செய்து, நூல் நூற்பு செய்து தலைமையகத்துக்கு அனுப்பி வந்தேன்.  போராட்டம் இல்லாமல் சுதந்திரம் சாத்தியமற்றது என்பதும், போராட்டம் எப்போது வந்தாலும்  தயாராக இருக்க வேண்டும் என்பதும் எனக்கு தெளிவாகத் தெரிந்தது.  இருப்பினும், இது எளிதான காரியம் அல்ல என்றும் எனக்குத் தெரியும். நான் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலைக்கு எதிராக கிளர்ச்சி செய்யாமல் அது சாத்தியமில்லை என்றும் உணர்ந்தேன்.”

ஏ கே ஜியால் பரிந்துரைக்கப்பட்ட அன்னியத் துணி புறக்கணிப்பு மற்றும் சுதேசி பிரச்சாரம் என்ற இரட்டைக் யோசனைகள், மனு கொடுப்பதை விட அமைதியான எதிர்ப்பின் பெரு மதிப்புக் கொண்ட  பயனுள்ள ஆயுதங்களாக முக்கியத்துவம் பெற்றது.  இது மக்களின் அரசியல் உணர்வை பெருமளவில் தட்டி எழுப்பியதோடு, தேசியவாத உணர்வுக்கு ஒரு புதிய உறுதியான வடிவத்தை அளித்தது. சுதேசி பிரச்சாரம் மற்றும் அன்னிய பொருட்கள் புறக்கணிப்பு ஆகியவை தந்த உணர்ச்சிகள், மக்களிடையே தேசபக்தியை பெரிய அளவில் தூண்டியது. 1930 ஆம் ஆண்டில் தேசம் கொதி நிலையில் இருந்தது.

ஏ.கே.ஜி தனது சுயசரிதையில் எழுதியுள்ளபடி: “இந்தியா முழுவதும் வீசிய ஒரு வலிமையான புரட்சிக் காற்றின் நடுவே நான் இருந்தேன்.  இளைஞர் கழகங்கள், தொழிலாளர் சங்கங்கள், புரட்சிகர அமைப்புகள், பகத்சிங் போன்ற புரட்சியாளர்களின் செயல்பாடுகள், வேலைநிறுத்தங்கள் போன்றவை அனைத்தும் என் இதயத்தில் அனுதாப அதிர்வலைகளை எழுப்பின.  எப்பொழுதாவது மட்டும் பொதுச் சேவையில் ஈடுபடுவது என்பதை  விட்டுவிட்டு … எனது முழு நேரத்தையும் நாட்டுக்கு சேவை செய்ய அர்ப்பணிக்க வேண்டும் என்ற வலுவான உந்துதல் என்னுள் இருந்தது.  எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கும், என்னைச் சுற்றி நடந்த கொந்தளிப்பான நிகழ்வுகளுக்கும் இடையே ஒரு தீவிரமான போராட்டம் தொடங்கியது. 1930 க்கு முன்பு, என்னைத் தொந்தரவு செய்த முரண்பட்ட சிந்தனைகளின் மோதல் இதுவாகும்.”

1930 ஆம் ஆண்டு, கோழிக்கோடில் இருந்து பைய்யனூர் வரை, திரு கே. கேளப்பன் தலைமையில் நடந்த ஒரு நீண்ட பிரச்சாரப் பயணத்தை வரவேற்க ஏற்பாடு செய்வதில் கோபாலன் முன்னணியில் இருந்தார். அதனைத் தொடர்ந்து, தனது ஆசிரியர் பணியை ராஜினாமா செய்துவிட்டு, சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்கேற்க, கோழிக்கோடு சென்ற  கோபாலன் கைது செய்யப்பட்டு கண்ணூர் மத்திய சிறையிலும், பின்னர் வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டார். காந்தி-இர்வின் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஏ.கே.ஜி.யும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.  அதன்பிறகு சுமார் ஆறு மாதங்கள் வயநாடு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியை அமைப்பதில் பணியாற்றினார்.

 தீண்டாமை மற்றும் பிற சமூகத் தீமைகளுக்கு எதிராக மக்களைத் திரட்டினார்.  உண்மையில் ஆங்கிலேயர்கள் தீண்டாமை எனும் ஜனநாயகமற்ற, சமூகப் படிநிலையை மேலும் வலுப்படுத்தியதாக அவர் எண்ணினார். ஏகாதிபத்திய சக்திகள், இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை நிலைநிறுத்த அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில், மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்று முயன்றன.  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை தாங்கிப் பிடித்த அஸ்திவாரங்களும், அந்நிய ஆட்சியாளர்கள் தீவிரமாக ஊக்குவித்து வந்தவைகளுமான மக்களிடையே ஒற்றுமையின்மை, பரஸ்பர அவநம்பிக்கை,  சமூகங்கள் மற்றும் சாதிகளுக்கு இடையிலான பகை, இவைகளை நன்கு உணர்ந்த ஏ.கே.ஜி, தீண்டாமை மற்றும் பிற சமூகத் தீமைகளுக்கு எதிரான போராட்டத்தை நடத்தினார்.

அவரது முயற்சியின் பேரில், கேரளப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி 1931-ல், குருவாயூர் கோயில் நுழைவு சத்தியாகிரகம் குறித்த தீர்மானத்தை நிறைவேற்றியது. குருவாயூர் கோயிலுக்குள் நுழையும் பொதுப் பாதையிலும், பிரதான  தெய்வம் இருக்கும் பிரகாரத்திலும், பட்டியல் சாதியை சேர்ந்த மக்கள் நடக்க அனுமதிக்கப்படவில்லை.  கோபாலனும், பட்டியல் சாதி இளைஞர்களும்  ஒரு பேரணி நடத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் பேரணிப் போராட்டத்திற்கு தானே முன்வந்து தலைமைதாங்கிச் சென்றார். குருவாயூர் சத்தியாகிரகம் இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்ததோடு, விரைவில் இவ்வியக்கத்தின் எதிரொலிகள் நாடெங்கும் கேட்கத் துவங்கின. மக்கள் இந்த இயக்கத்தில் தனி ஆர்வம் காட்டத் தொடங்கினர்.  இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காக, ஜனவரி 1932 இல் கோபாலன் கைது செய்யப்பட்டு, கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார். ஆனாலும் இயக்கம் தடையின்றித் தொடர்ந்தது.

ஏ,கே.ஜியின் சொந்த வார்த்தைகளில் கூறுவதானால்: ”பேரணியில் கலந்து கொண்ட பட்டியலின இளைஞர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். இனியும் அவர்கள், ‘நெல் நாற்றுகளுக்கு அடியில் வளரும் புல்’ இல்லை என்று பெருமிதம் கொண்டனர்.  பல நூற்றாண்டுகளாக காலடியில் நசுக்கப்பட்ட ஒரு சமூகப் பிரிவின் பிரதிநிதிகளாக, தீய, துர்நாற்றம் வீசும் சமூகத்தை மாற்றி, அதன் இடத்தில் ஒரு அழகான புதிய சமூக ஒழுங்கை உருவாக்குவதற்கான புனிதப் போராட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பைப் பற்றி அவர்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தனர்.  பட்டியலின மக்கள் காடுகளைச் சேர்ந்த மிருகங்கள் அல்ல என்பதை மற்றவர்களுக்குக் காட்ட ஒரு வாய்ப்பு கிடைத்ததில் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.”

இந்த இரண்டாவது சிறைவாசம் மிகவும் வித்தியாசமானது. அதிகாரிகள் மிகவும் மிருகத்தனமாக இருந்ததோடு, கைதிகளை அடித்து உதைப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.  ஆனால் ஏ.கே.ஜி பல புரட்சியாளர்களைச் சந்தித்து ரஷ்யப் புரட்சியின் தாக்கங்கள் உட்பட பல அரசியல் பிரச்சினைகளை விவாதித்ததும் இதே சிறைத் தண்டனைக் காலத்தில்தான்.  கண்ணனூர் சிறையில் “எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம்” அவர்தான் என கருதப்பட்ட ஏ.கே.ஜி, விரைவில் கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் முதலில் சித்த சுவாதீனமில்லாத கைதிகளுடன் அடைத்து வைக்கப்பட்டார்.  அது குறித்து அவர் நினைவு கூரும்போது: “நான் அந்த இடத்தைப் பார்த்த தருணத்தில் கண்களில் நீர் வர அதிர்ச்சியில் மூழ்கிப் போனேன். ஆம். அதிகார வர்க்கத்தின் கண்களுக்கு நான் ஒரு பைத்தியக்காரனாக இருந்தேன்.  தான் பிறந்த நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபடுவது ஏகாதிபத்தியவாதிகளின் பார்வையில் பைத்தியக்காரத்தனமாக இருக்கலாம். பைத்தியக்காரத்தனத்தில் பல வகைகள் உள்ளன. நான் ஒரு ‘அரசியல் பைத்தியம்’ என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்.  உலகில் அடக்குமுறைகள் இருக்கும் வரை இந்தப் பைத்தியக்காரத்தனம் மறையாமல் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.”  ஆறு நாட்கள் நீடித்த உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பிறகு,  இறுதியாக அவர் வேறு அறைக்கு மாற்றப்பட்டார்.

சிறையில் இருந்த ஆறுமாதங்களில், சொல்ல முடியாத கொடுமைகள் அவரை உடல் ரீதியாக சிதைத்ததேயன்றி, உணர்வுரீதியாக இல்லை. அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்ற அறிவுரையை பொறுமையின்றி ஒதுக்கித் தள்ளினார்.  அவர் பின்னர் எழுதியது போல், “ஓய்வு! என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. சுதந்திரத்துக்காக அர்ப்பணிப்புடன் போராடியவன் என்ற முறையில், நாடு முழுவதும் தடியடி சத்தம் எதிரொலிக்கும் போது, ஆயிரக்கணக்கான மக்கள் போர்க்களத்தில் நுழையும் போது, உறுதியான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, நான் எப்படி ஓய்வை நினைத்துப் பார்க்க முடியும்?”

சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் குருவாயூர் திரும்பினார். பின்னர், திருவிதாங்கூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு கண்ணூர் மற்றும் பெல்லாரி சிறைகளில் அடைக்கப்பட்டார்.  விடுதலையானதும், சமூக சமத்துவத்திற்காக அயராத பாடுபட்டவரான, ஏ.கே.ஜி அனைத்து விதமான அநீதிக்கும் எதிராக இடைவிடாமல் போராடும் போராளியாக இருந்தார்.  சமூக சமத்துவத்திற்காகவும், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினருக்கு அவர்களின் பல நூற்றாண்டுகள் பழமையான துன்பங்களை சமாளிக்க, முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

1934-ல் கேரளாவில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உருவானபோது, அந்தக் கட்சியின் தீவிர உறுப்பினரானார் கோபாலன். அதே ஆண்டில், கேரள மாகாண காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகவும் ஆனார்.  ஏ.கே.ஜி அக்காலத்தின் முக்கிய பிரச்சனைகளாக வறுமை, பசி மற்றும் வேலையின்மை இருப்பதை உணர்ந்தார். மக்கள் மத்தியில் ஒரு பொதுவான விரக்தி இருந்தது. புதிய சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்கின்ற ஆர்வம் இளைஞர்களிடையே இருந்தது.  1936 ஆம் ஆண்டில், கோபாலன் தனது சகாக்களுடன் சேர்ந்து, உண்ணாவிரத ஊர்வலம் மற்றும் வேலையின்மைக்கு எதிரான நெடும் பயணத்தை நடத்த முடிவு செய்தார். அந்த நெடும்பயணம் 966 கிலோமீட்டர்கள் நடந்து கடந்து, இறுதியாக மெட்ராஸை அடைந்தது.  வேலையற்றோர் மற்றும் பசியால் வாடும் இளைஞர்களின் இந்த நெடும் பயணத்தை கண்ணூரில் இருந்து மெட்ராஸ் வரை நடத்தியதற்காக, ஏ.கே.ஜிக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் தொழிலாளர்களை ஒன்று திரட்டுவதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளத் தொடங்கினார்.

ஏ.கே.ஜி கூறுகிறார், “1938 வரை, நான் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றினேன். அவர்களின் போராட்டங்களில் பங்கேற்றேன்.  அவர்களைப் பற்றியும் அவர்களின் பிரச்சினைகளைப் பற்றியும் கூடுதலாக அறிய முடிந்தது. நாட்டின் உட்பகுதி விவசாயிகளின் பரிதாபகரமான நிலைமைகளைக் கவனித்தேன்.  தன் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்துச் சம்பாதித்த அனைத்தையும், நில உரிமையாளருக்கு வழங்கும் ஏழை விவசாயிகளிடம் வர்க்க உணர்வைத் தூண்டுவது மிகவும் எளிதானது என்பதை நான் கண்டு கொண்டேன்.  அவர்கள் பல நூற்றாண்டுகளாக துன்புறுத்தலுக்கு ஆளானதால், சுதந்திரத்தின் அர்த்தம் அவர்களுக்குத் தெரியாது. ஒற்றுமையான நடவடிக்கைகளின் மூலம் தங்களின் துயரம் விலகக் கண்டபோது, அவர்கள் புதிய சுயமரியாதை பெற்றதோடு, தங்களின் அடக்குமுறையாளர்களுக்கு இனியும் பயப்பட மாட்டார்கள்.”

முந்தைய திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் வரலாற்றில் 1938 ஆம் ஆண்டு மிகவும் முக்கியமானது. அந்த ஆண்டு, ஏ.கே.ஜி அரசின் அடக்குமுறைக்குப் பொறுப்பேற்கக் கோரி புகழ்பெற்ற திருவிதாங்கூர் பிரச்சாரப் பயணத்தை வழிநடத்தி, ஜூலை 1938 இல் அலுவாவில் கைது செய்யப்பட்டார்.  1939 ஆம் ஆண்டு பினராயில் நடந்த காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் கூட்டத்தில், ஏ.கே.ஜி, தோழர்கள் பி.கிருஷ்ணபிள்ளை மற்றும் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.  அக் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு அங்கமாக சோசலிஸ்ட் கட்சி செயல்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.  இதனால் தலைமறைவாக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஏ.கே.ஜி தனது சுயசரிதையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஒரு சத்தியாகிரகியாக இருந்து, பின்னர் சோசலிஸ்ட் மற்றும் அர்ப்பணிப்புள்ள மக்கள் ஊழியராக மாறியபின், சிறைவாசத்திற்கு எப்போதும் தயாராக இருந்த நான், தலைமறைவு வாழ்க்கைக்கு மாற வேண்டியிருந்தது. நான் ரகசியமாக வேலையில் ஈடுபடுபவன் அல்ல.  அதுவரை நான் எப்போதும் பொதுமக்களின் பார்வையிலேயே பணியாற்றி வந்தேன்.” ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியில், தலைமறைவாக இருந்து வேலைகள் செய்வதைக் கற்றுக்கொண்டார்.  “பொதுமக்கள் பார்வையில் இருந்து விலக்கி எங்களை சிறையில் அடைப்பது ஏகாதிபத்தியத்தின் தேவையாக இருந்தது; கைது செய்வதைத் தவிர்ப்பதும், வேலை செய்வதும் எங்களுடைய தேவையாக இருந்தது. எனவே, தலைமறைவாக வேலை செய்வதே, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு போராட்டமாக நான் கண்டேன்.”

மார்ச் 24, 1941 இல் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் உள்ள தடுப்புக் காவல் முகாமுக்கு அனுப்பப்படும் வரை ஓராண்டுக்கும் மேலாக அவர் தலைமறைவாக இருந்தார்.  இங்கிருந்து தான் ஏ.கே.ஜி தனது புகழ்பெற்ற  தப்பியோட்டத்தை நிகழ்த்திக் காட்டினார். பல சிறைத் தண்டனைகளில் மிக மோசமான கொடுமைகளை அனுபவித்த ஏ.கே.ஜி, கடைசியில் முதல் வகுப்பு கைதிகளுக்கு அளிக்கப்பட்ட ஆடம்பரமான வசதிகளிலிருந்து வெளிவர சிறை உடைப்பை நாடியது நகைமுரணானது.

சுதந்திரப் போராட்டம் ஒரு தீர்க்கமான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஏ.கே.ஜி சிறையை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைத்தார். 1941 செப்டம்பர் 25, அன்று இரவு, ஏ.கே.ஜி மற்றும் இருவர் தங்கள் சிறை அறையின்  சுவரில் துளையிட்டு தப்பித்தனர்.  வெளியில் வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் அவர் இறுதியாக கேரளாவை அடைந்தார். இ.எம்.எஸ் உட்பட பல தலைவர்கள் சிறையிலிருந்து விரைவில் விடுவிக்கப்பட்டாலும், ஏ.கே.ஜி மீதான குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற காவல்துறை மறுத்து விட்டது.  கேரளாவில் இருப்பது பாதுகாப்பற்றதாக இருந்ததால், அவர் வட இந்தியாவில் கான்பூருக்குச் சென்றார். அங்கு பல்வேறு வேலைகளைச் செய்தபடி தலைமறைவு கம்யூனிஸ்ட் கட்சிப் பணிகளையும் தொடர்ந்தார்.

அதிகாரத்தை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் மும்முரமாக இருந்தபோது, போருக்குப் பிந்தைய காலத்தில் இந்தியா முழுவதும் வெகுமக்கள் போராட்டங்கள் வெடித்தன.  ஏ.கே.ஜி, புன்னப்புரா-வயலார் போராட்டம், பீடித் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், சிராக்கல்லில் நடந்த விவசாயிகள் கிளர்ச்சி என அனைத்துப் போராட்டங்களிலும் தீவிரமாக பங்கேற்றார்.  மலபாரில் நடந்த போராட்டத்தை ஒடுக்கவும், தலைவர்களைக் கைது செய்யவும் மெட்ராஸிலிருந்த பிரகாசம் தலைமையிலான அரசு தன்னால் இயன்றதனைத்தையும் செய்தது.

சுதந்திர தினத்தன்று, மெட்ராஸ் அரசு ஏ.கே.ஜி. தவிர அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தது. ஆனால் ஏ.கே.ஜி. தைரியமான போராட்டத்தால் பெற்ற சுதந்திரத்தை கொண்டாட முடியாமல் சிறைக்குள் தனிமையில் இருந்தார்.

இருப்பினும் அவர் சிறைக்குள் சுதந்திர தினத்தைக் கொண்டாடினார். மறுநாள் காலை, தன்னுடன் வைத்திருந்த தேசியக் கொடியை ஏந்தியவாறு சிறை வளாகம் முழுவதும் நடந்தார்.  அனைத்து கைதிகளும் கூடியிருக்க, சிறைக் கூடத்தின் கூரையில் கொடி ஏற்றப்பட்டது. ஏ.கே.ஜி கூடியிருந்த கைதிகளிடம் சுதந்திரத்தின் மேன்மை குறித்துப் பேசினார்.  மேலும் தனது வாழ்நாள் முழுவதும், ஏ.கே.கோபாலன் தனது இளமைப் பருவத்தில் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு உண்மையாக இருந்தார், மக்கள் நலனுக்காக எங்கும் எப்போதும் போராடினார்.



Leave a comment